news
சிறப்புக்கட்டுரை
என் உள்ளத்தை உரசிய அன்னையின் ஏழ்மை

நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க                                                                                                                  நல்லார்சொற் கேட்பதுவும் நன்றே-நல்லார்                                                                                                                     குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோ(டு)                                                                                                                  இணங்கி இருப்பதுவும் நன்று

என்ற சான்றோரின் கூற்றிற்கிணங்க எம் சபை நிறுவுநர் அன்னை ஸ்கொலாஸ்டிக்காவை 1973-ஆம் ஆண்டிலிருந்து நான் பார்ப்பதற்கும், அவர் சொல் கேட்பதற்கும், அவருடன் இரண்டு ஆண்டுகள் வாழ்வதற்கும் கிடைத்த வாய்ப்பை இறைவன் எனக்களித்த பெரும்பேறு என்றே கூறுவேன்.

அன்னையைப் பார்த்தால் அவர்களின் கண்களில் கருணை, சொல்லில் இனிமை, செயலில் நன்மை, வாழ்வில் எல்லாம் இறைச்செயல் மிளிர்ந்ததைப் பார்க்க முடிந்ததுஅன்னை அவர்கள் ஆதரவற்ற அனைவரையும் (முதியோர், விதவைகள், ஏழைகள், மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றியோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், கைவிடப்பட்ட குழந்தைகள்) அன்புடன் அரவணைத்ததைப் பார்த்தேன். பாசத்தோடு பராமரித்ததைக் கண்டேன்அவர்கள் அனைவரிலும் இறைவனைப் பார்த்ததை உணர்ந்தேன்இத்தகைய அன்னையின் வாழ்வில் என் உள்ளத்தை உரசியது அன்னையின் ஏழ்மை!

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து செல்வராயிருந்தும் உங்களுக்காக ஏழையானார்; அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார்(2கொரி 8:9). இறைவன் நாம் வளமாக மகிழ்வாக வாழும் பொருட்டு அவர் ஏழையாகப் பிறந்தார்; ஏழையாக வாழ்ந்தார்; ஏழையாக இறந்தார். அதுபோன்று இயேசுவின் அடியாராகிய நம் அன்னை ஸ்கொலாஸ்டிக்காவும் செல்வச்செழிப்பு நிறைந்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும், அவர்கள் ஆரம்பித்த இயேசுவின் திரு இருதய சபையின் இலக்கு மக்களுக்காக, அவர்களின் நல்வாழ்விற்காகத் தன்னை ஏழ்மையாக்கிக்கொண்டார்.

நான் 1973-ஆம் ஆண்டு எம் துறவற சபையில் நுழைந்தேன். முதல் இரண்டு வருடங்கள் அன்னை ஸ்கொலாஸ்டிக்காவோடு அழகப்பபுரம் இல்லத்தில் வாழும் பேறுகிடைத்ததுஅந்நாள்களில் அதிகாலை 5 மணி திருப்பலிக்கு 4.30 மணிக்குப் புறப்பட்டு அன்னை அவர்களோடு சேர்ந்து போவோம்ஒருநாள் திருப்பலி முடிந்து வரும்போது அன்னையின் கால்களில் வெவ்வேறான காலணிகளைப் போட்டிருந்ததைப் பார்த்து என் மனம் வெகுவாகப் பாதித்தது. ஒருவேளை அதிகாலையில் புறப்பட்டதால் தெரியாமல் போட்டு வந்தார்களோ? என நினைத்தேன்இல்லத்திற்குள் வந்ததும் அன்னையிடம் கேட்டேன்: “ஏன் அம்மா, இப்படி இரண்டு கால்களிலும் வேறு வேறு செருப்பு போட்டிருக்கிறீர்கள்?” என்று. அதற்கு அவர்கள் கூறிய பதில்: “தாயி, ஒரு செருப்பு தேய்ந்து அறுந்துவிட்டது; ஒன்று நன்றாக இருக்கிறது. வேறொரு சோடியில் அடுத்த காலுக்குரிய செருப்பு நன்றாக இருந்தது; எனவே, அதை எடுத்துப் போட்டுக் கொண்டேன்.” அவர்களது பதிலும் செயலும் என் உள்ளத்தை உரசியது. அந்தக் காலணிகளைப் போட்டுக்கொண்டுதான் பள்ளிக்கூடம் செல்வார்கள்பங்கு ஆலயத்திற்குத் திருப்பலிக்கும் செல்வார்கள். அன்னையின் இத்தகைய ஏழ்மையை, பற்றற்ற தன்மையைப் பார்த்து வியந்தேன்.

இன்னும் அன்னை அவர்கள் நான்கு அல்லது ஐந்து ஆடைகள்தான் வைத்திருப்பார்கள்அவர்கள் தன் ஆடைகளை மிகச் சுத்தமாக உடுத்துவார்கள். ஆனால், அவர்கள் உடுத்தும் ஆடையில் வேறு துணிகளைக் கொண்ட ஒட்டுகளையும், கிழிந்த இடத்தை நூலால் தைத்திருக்கும் தையல்களையும் பார்த்து மனம் நெகிழ்ந்திருக்கிறேன். அவர்கள் உடுத்தும் ஆடை முழுமையாகக் கிழிந்துவிட்டால் அதைத் துவலையாகவோ, தலையணை உறையாகவோ அல்லது கைக்குட்டையாகவோ பயன்படுத்துவதைப் பார்த்து வியந்து மகிழ்ந்திருக்கிறேன். துறவறப் பயிற்சி பெறும் எங்களைப் பார்த்து அன்னை அவர்கள், “தாயி, தேவைக்கு மிஞ்சிய எந்தப் பொருளும் கன்னியாஸ்திரிகளிடம் இருக்கக்கூடாது; எந்தப் பொருளையும் வீணாக்கக் கூடாது; வீணாகப் போகிறதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதே பாவம்என்று அடிக்கடிக் கூறுவார்கள்

அன்னை சொல்வதைப் போன்று அவர்கள் தன் வாழ்வில், தனக்கென்று எந்தப் பொருளையும் வைத்திருந்தவர் அல்லர்; தான் உடுத்தும் ஆடையும், கால்களுக்கு அணியும் செருப்பும், வெயில்-மழைக்குப் பயன்படுத்தும் ஒரு குடை யும், பயணத்திற்குப் பயன்படுத்தும் ஒரு சிறு பையும், ஒரு சிறு பெட்டி (சூட்கேஸ்) மட்டுமே அவரது உடைமையாக வைத்திருந்தார்கள். ஒருநாள் பயணம் சென்றால் தன்னிடம் உள்ள சிறு பையை எடுத்துச்செல்வார்கள். வேறு இல்லங்களுக்குச் சில நாள்கள் தங்குவதற்காகச் சென்றால், தனக்குரிய ஆடை, மற்றப் பொருள்களை அட்டைப் பெட்டியில் வைத்து எடுத்துச்செல்வார்கள். சபையின் முக்கியமான பத்திரங்கள், ஆயர் மற்றும் குருக்களின் கடிதங்கள் மட்டும் சிறிய கைப்பெட்டியில் வைத்திருப்பார்கள்.

அதுபோன்றுதான் உணவிலும் அப்படி ஓர் ஏழ்மையைப் பார்க்க முடிந்தது. அந்த நாள்களிலே  காலை உணவு மரவள்ளிக்கிழங்கு அல்லது கோதுமை, சோளம் போன்ற உணவுதான்அன்னையும் அதே உணவைத்தான் சாப்பிடுவார். அன்னை அவர்கள் ஒவ்வொரு நாளும் ஆஸ்துமா நோயால் அதிகம் துன்பப்படுவார். அதனால் அவருக்குச் சில நாள்களில் முட்டை அல்லது பால் கொடுத்தால் அதைப் பலவீனமாக இருக்கும் சிறு குழந்தைகளுக்குக் கொண்டு போய் கொடுப்பார்கள். சகோதரிகள், “ஏன் அம்மா இப்படிச் செய்கிறீர்கள்?”  என்று கேட்டால், “இப்போது என்னைவிட அதிகம் தேவை இந்தப் பிள்ளைகளுக்குத்தான் தாயி! நாம் பத்து பேர் சோறாகச் சாப்பிடுவதை இருபது பேருக்குக் கஞ்சியாகக் கொடுத்து நாம் சாப்பிடுவது சிறந்ததுஎன்பார்கள். ஏழைகளின் நிறைவில், மகிழ்வில் இறைவனைக் கண்டவர் நம் அன்னை அவர்கள்.

அம்மாவின் வாழ்வில் எங்கும் ஏழ்மை, எதிலும் ஏழ்மையைப் பார்க்க முடிந்ததுநான் அம்மாவோடு வாழ்ந்தபோது அம்மாவும், சகோ. மார்கிரெட், சகோ. ஆக்னஸ் ஆகிய மூன்று பேரும் ஒரே அறையில் தங்கியிருந்தார்கள். அதன் அளவு ஒரு வகுப்பறையை இரண்டாகப் பிரித்து, பாதியில் செபிப்பதற்கான ஆலயம். மறுபாதியை இரண்டு அறைகளாகப் பிரித்து ஓர் அறையில் அம்மாவும், மற்ற இரண்டு சகோதரிகளும்; மறு அறையில் நாங்கள் 12 பேர் பெட்டி, படுக்கை மட்டும் வைப்பதற்கான அறையாய் இருந்தது. இரவு நாங்கள் தூங்குவது பள்ளிக்கூட வகுப்பறையில். அம்மா, சகோ. மார்கிரெட் தூங்குவது சிறு பிள்ளைகள் தூங்கும் இடத்தில்அங்கு இரவு பிள்ளைகளின் அழுகைச்சத்தம், சிறு பிள்ளைகள் இரவு படுக்கையில் சிறுநீர் கழித்தல் ஆகியவற்றின் மத்தியில்தான் அம்மா ஆஸ்துமா நோயின் வேதனையிலும் பிள்ளைகளோடு தூங்குவார்கள். தாயில்லாத பிள்ளைகளுக்கு ஏழ்மையான சூழலிலும் தாயாக உடனிருந்து, கண்விழித்துக் காத்துப் பராமரித்து வந்தார்கள். அன்னையின் ஏழ்மையான இத்தகைய வாழ்வு என்னை மட்டுமல்ல, அவர்களோடு வாழ்ந்த அனைவரையும் தொட்டது.

நாசரேத்தூர் இயேசுவின் ஏழ்மையைப் பின்பற்றி வாழ வந்திருக்கும் நாம், நம் அர்ப்பண வாழ்வில் ஏழ்மையை எப்படி மதிக்கிறோம்? கடைப்பிடிக்கிறோம்? எனச் சுய ஆய்வு செய்வோம். துறவு வாழ்வின் உரைகல் எனப் போற்றப்படுவது, வலியை ஏற்கும் ஏழ்மையாகும். நம் வாழ்வில் ஏழ்மையை விரும்பி ஏற்று வாழ்ந்தோம் என்றால், அர்ப்பண வாழ்வில் கற்பையும் கீழ்ப்படிதலையும் சிறப்பாக வாழமுடியும். எனவே, நாசரேத்தூர் இயேசுவை முழுக்க முழுக்கப் பின்பற்றி வாழ்ந்த நம் அன்னை ஸ்கொலாஸ்டிக்காவின் ஏழ்மை வாழ்வைப் பின்பற்றி வாழ்வோம், இறைவனில் மகிழ்வோம்.

(குறிப்பு: இக்கட்டுரை விளம்பரப் பகுதியின் கீழ் இடம்பெற்றுள்ளது)

news
சிறப்புக்கட்டுரை
நம்பிக்கை மனத்தைச் சார்ந்தது! (உளவியல் பார்வையில் நம்பிக்கை)

நட்ட நடுராத்திரி. ஊரே உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில் உச்சக் குரலில் கூரையைப் பிய்க்கும் அளவில்கீங்....கீங்...கீங்...’ என்று அலறும் பச்சிளம் குழந்தை. உறக்கத்தின் உச்சத்திலிருந்த அந்தத் தாய் முதல் சத்தத்திலேயே விழித்து, ஏதோ அப்போதுதான் முதல் முறையாக குழந்தை அழுவதைக் கேட்பதுபோல பரபரப்போடு எழுந்து, குழந்தையை ஆரத்தழுவி, ‘கண்ணே மணியேஎன்று முத்தமிட்டு, குழந்தையின் தேவையைப் பூர்த்தி செய்யும் தாய் ஒருபுறம்.

இதே நிகழ்ச்சி மற்றொரு வீட்டிலும் அரங்கேறியதுகீங்....கீங்...கீங்...’ என்று அலறல். கேட்டும் கேட்காததுபோலதூங்கு, தூங்குஎன்ற கோபக்குரலில் தட்ட, இன்னும்கீங்...கீங்..கீங்...’ என்று குழந்தை உரக்கக் கத்த, எரிச்சலோடும் வெறுப்போடும் கோபக்கணைகளோடும், ‘சனியன் தூங்க விடாது; ஏன்தான் இப்படி இரவில் கத்துதோ? எனக்குன்னு வந்து வாய்ச்சதுஎன்று வேண்டா வெறுப்போடு குழந்தையைத் தூங்க வைத்த அந்தத் தாயின் கைகளில் இருக்கும் வேகம், தூக்குவதில் இருக்கும் சலிப்பு, அரவணைப்பில் இருக்கும் அவசரம். இந்த அனுபவம் தொடரும்போது...?

இந்த இரண்டு குழந்தைகளில் எந்தக் குழந்தை ஆரோக்கியமான குழந்தையாக வளரும் என எண்ணுகிறீர்கள்? முதல் குழந்தைதான் எனச் சொல்வீர்கள். அது சரியே. அந்த முதல் குழந்தை வளர வளர அந்தத் தாயின்மேல் நம்பிக்கையை வளர்த்துக்கொள்கிறது. ‘என் தேவைகளைச் சந்திக்க ஒருவர் உண்டு; அவர் என் தாய்; அவரே என் தாய்; நான் அழைத்தவுடன் அவள் ஓடி வருவாள்; எனக்காக எதையும் செய்வாள்; நான் பயப்படும்போது எனக்குத் துணையாவாள்; அவளின் மடிதான் உலகம்; அவளின் அரவணைப்பே சுகம்; அவளின் குரல் கேட்கக் கேட்கத் தெவிட்டாத இன்பம்.’

இந்த உணர்வுகளோடு வளரும் குழந்தைக்குப் பாதுகாப்பான, சுதந்திரமான குடும்பச் சூழலை அமைத்துத் தருகிறது. இது மன வளர்ச்சிக்கும் உடல் வளர்ச்சிக்கும் ஆன்ம வளர்ச்சிக்கும் இன்றியமையாதது. இந்தப் பாதுகாப்பான சூழலே தன்னம்பிக்கையையும் ஆளுமையையும் சுய மதிப்பையும் வளர்க்கின்றது.

இந்தக் குழந்தை தாய் அருகில் இருந்தாலும், தொலைவில் சென்றாலும், வெளியே போனாலும், உள்ளும் புறமும் நம்பிக்கையையும் பக்குவத்தையும் பெற்ற குழந்தையாய் வளரும். தேவையின்றி அழவோ, அடம்பிடிக்கவோ செய்யாமல் தன்னுடைய விளையாட்டைத் தொடரும். தன் தாயிடம் நம்பிக்கையை வளர்த்துக் கொண்ட குழந்தை, இப்போது தன் உறவு வட்டத்தைப் பெரிதாக்கிக் கொள்கிறது. தந்தை, உடன் பிறப்புகள், உடனிருக்கும் மற்றவர்கள் இவ்வாறு எல்லாரிடமும் தன் நம்பிக்கை வளையத்தை விரிவுபடுத்தியும் உறுதிப்படுத்தியும் கொள்கிறது. குடும்பத்திற்கு வெளியே உள்ள உறவுகளோடும், புதிய மனிதர்களோடும் தன்னுடைய வட்டத்தை இன்னும் விரிவாக்கிக் கொண்டே போகின்றது. இவை அனைத்தும் பிறந்த முதல் மூன்று வயதிற்குள் நடந்து முடியும்.

உறவு மற்றும் உலக அனுபவம்

இப்படித் தன்னைச் சுற்றியுள்ள உலகம் நம்பிக்கை தருவதாகவும் அன்புள்ளதாகவும் அரவணைப்பதாகவும் ஆதரிப்பதாகவும் தட்டிக் கொடுப்பதாகவும், அந்தக் குழந்தை உணர்கிறது. அதுவே அந்தக் குழந்தையின் நம்பிக்கையாக மாறுகிறது. அந்தக் குழந்தை பார்க்கின்ற மனிதர்கள், சமூகம், சுற்றம், உலகம், சிந்தனை, செயல், எண்ணம் எல்லாம் நேர்மறையாகவே அமையும்.

மாவிதையை விதைத்தால் மாமரம்தான் வளரும். ‘தாயைப்போலப் பிள்ளைஎன்பார்கள். இந்தக் குழந்தை எப்படித் தாயைப் போல மாறுகிறது? நேர்மறை உணர்வுகளோடு வாழும் ஒரு தாய், அதே உணர்வுகளை அந்தக் குழந்தைக்கு ஊட்டுகிறாள். அந்தக் குழந்தையும் நேர்மறை உணர்வுகளை உள்வாங்கி நிறைவோடும் ஆரோக்கியத்தோடும் மகிழ்வோடும் வளரும். தாயிடம் கொண்ட நம்பிக்கை தனிமனித நம்பிக்கையாக உருவாகி, குடும்ப நம்பிக்கையாக மாறி, சமூக நம்பிக்கையாக வளர்ந்து, உலக நம்பிக்கையாகப் பரிணமிக்கும். இதுவே இறைநம்பிக்கைக்கு முதல் படியாக விளங்கும்.

இறைநம்பிக்கை என்பது ஒரு பரிணாம வளர்ச்சி. திடீரென்று முளைத்துக் கிளம்புவது அல்ல; அது விதைக்கப்படுகின்றது, வளர்க்கப்படுகின்றது, உருவாக்கப்படுகின்றது, நெறிப்படுத்தப்படுகின்றது. தாயிடமிருந்து கிடைக்கும் முதல் நம்பிக்கை அனுபவமே இறைநம்பிக்கைக்கு வித்தாக அமைகின்றது. எனவே, மனித வாழ்வில் நமக்குக் கிடைக்கும் அந்த முதல் நேர்மறை அனுபவமே நம்முடைய நம்பிக்கை வாழ்வுக்கு அடித்தளமாக அமைகின்றது. ‘எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான், இந்த மண்ணில் பிறக்கையிலே; அது நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலேஎன்ற ஆழமான வளர்ச்சி உளவியல் தத்துவத்தை அன்றே பாடிவிட்டார் ஒரு கவிஞர்.

இரண்டாம் நிகழ்வில் வந்த குழந்தையின் நிலை என்னவென்று பார்ப்போம். அந்தத் தாயின் எரிச்சலுக்கும் கோபத்திற்கும் வெறுப்பிற்கும் ஆளான அந்தக் குழந்தை எதிர்மறை உணர்வுகளைத் தாயிடமிருந்து உள்வாங்கிக்கொள்கிறது. அதே உணர்வுகளோடு வளர்ந்து தன்னுடைய தந்தை, உடன்பிறப்புகள், சுற்றம், சமூகம், உலகம், இறைவன் என்று எல்லாரும் கெட்டவர்களாக, தனக்குத் தீங்கு விளைவிப்பவர்களாக அந்தக் குழந்தையின் கண்களுக்குத் தென்படும். இந்தக் குழந்தை அவநம்பிக்கை என்ற அனுபவத்தை முதன்முதலில் அந்தத் தாயிடமிருந்து பெற்றுக் கொண்டு, அதே அவநம்பிக்கை அனுபவத்தை உலகமும் இறைவனும் தருவதாக உணர்கின்றது.

ஒரு மனித வளர்ச்சிக்கு இரண்டு முக்கியக் காரணிகள் உள்ளன. ஒன்று, ‘இயற்கை; மற்றொன்று, ‘வாழும் சூழல்.’ இவை இரண்டும் நம்பிக்கை வாழ்விற்கு இன்றியமையாதவை. இயற்கை என்று கூறுகின்றபோது பெற்றோர்களின் அன்புறவினால் வெளிப்படும் உயிர் அணுக்கள் குழந்தையின் உருவாக்கத்திற்கு மூலதனமாக மாறுகின்றது. எனவேதான் பெற்றோரின் சாயல், நிறம், உருவம், உடலமைப்பு, குணாதிசயங்கள் இவற்றை உள்ளடக்கி குழந்தை உருவாகின்றது. ‘அவள் மூக்கும் முழியும் அப்படியே அவள் அப்பனை உரித்து வைத்திருக்கிறாள்என்ற கூற்று உறுதியாகின்றது. அதுபோல நீரிழிவு நோய், இதய நோய்கள், மன நோய்கள், நரம்பு சம்பந்தமான நோய்கள் எனப் பலவும் மரபணுக்களின் தாக்கமே. இதைப் பெற்றோர் தங்களின் எதிர்கால வாரிசுகளுக்கு வாரி வழங்கும் வாரிசுச் சொத்தாக மாறுகின்றது. இது இயற்கையின் நியதியாக விளங்குகின்றது.

வாழும் சூழல் மனிதனால் ஏற்படுத்தப்படுகின்றது. எனவே, மனிதன் அதை மாற்றியமைக்க முடியும். பெற்றோர், நண்பர், வீடு, சுற்றம் என நம்மைப் புடைசூழ இருப்பவர்கள் முறைப்படுத்தும் காரணிகளாக அமைந்துவிடுகின்றது. எடுத்துக்காட்டாக, ஆலயத்தின் பக்கத்திலே வாழும் ஒருவர் அல்லது நம்பிக்கை நிறைந்த பெற்றோருக்குப் பிறந்த ஒருவர் அல்லது மரணப் படுக்கையிலிருந்து மீண்டு புத்துணர்வோடு ஆன்மிக ஆழத்திற்குச் சென்ற ஒருவர் அல்லது சிக்கலும் சவாலும் நிறைந்த ஒரு வாழ்க்கைச் சூழலில் இறைவனை அடைக்கலமாகக் கொண்டு, தான் வேண்டியதைப் பெற்றுக் கொண்ட ஒருவர் எனப் பல்வேறு சமூக, குடும்பச் சூழல்களில் ஒருவரின் நம்பிக்கை உறுதி செய்யப்படுகின்றது.

கலப்புத் திருமணத்தில் வேறு சமயத்தைச் சார்ந்த தந்தை, தாய்க்குப் பிறக்கும் குழந்தை, புத்தி தெரிந்த பிறகு ஒருவித குழப்பச் சூழலுக்கு விடப்படலாம். எந்தச் சமயத்தைப் பின்பற்றுவது அல்லது பெற்றோர் குழந்தையை எந்தச் சமய முறையில் வளர்ப்பது என்ற முடிவை எடுக்காமலேயே வளரும். அந்தக் குழந்தை குழப்பச் சூழலில் வளரும். இந்த வாழும் சூழல் ஒருவித சமயச் சலிப்பை உண்டாக்கலாம்.

கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்என்ற முதுமொழியைக் கேட்டிருப்போம். பல்வேறு குடும்பச் சூழல்களால் ஒரு குக்கிராமத்திற்குக் குடிபோகும் ஒரு பக்தியுள்ள குடும்பம், வழிபாட்டிற்கு அல்லது ஆலயத்திற்கோ செல்ல இயலாத ஒரு சூழலில், நாள்பட நாள்பட அவர்களிடம் நம்பிக்கையில் தொய்வு காணப்படலாம். காலப்போக்கில் அந்தக் குடும்பத்தில் வளரும் குழந்தைக்குப் பக்தியும் நம்பிக்கையும் இயல்பாக வருவதில்லை. மேலும், மறையறிவு, சமய நெறிமுறைகள், வேத நூல், சமயக் கோட்பாடுகள் இவற்றில் உள்ள ஈடுபாடும் பங்கேற்பும் மிகக் குறைவாக இருக்க வாய்ப்பு உண்டு.

போர்வீரராகவோ, விமானப் பணியாளராகவோ, ஆழ்கடலில் மீன் பிடிப்பவராகவோ, வெளிநாட்டில் உழைப்பவராகவோ, சுரங்கத் தொழிலாளியாகவோ, கப்பல் பணியாளராகவோ, தீயணைப்பு வீரராகவோ மற்றும் பல்வேறு அபாயகரமான பணிகளில் ஈடுபடும் ஒருவர், பணி முடித்து வீடு திரும்பும் வரை உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் வீட்டைக் கடந்து, கரையைக் கடந்து, உறவுகளைக் கடந்துச் செல்லும்போது அவர் எண்ணத்தில் மேலோங்கி இருப்பதெல்லாம், மீண்டும் கரை சேரும் வரை தன் உறவுகளை இறைவன் காத்திடவேண்டும் என்ற எதார்த்தமான, ஆழமான இறைநம்பிக்கையோடு பயணத்தைத் தொடங்குகிறார்.

இவ்வாறு நாம் வாழும் மற்றும் வளரும் பல்வேறு சமய, சமூகச் சூழல்கள் நம்மை நெறிப்படுத்தி, பக்குவப்படுத்தி நம்முடைய நம்பிக்கை வாழ்வையும், கடவுள்மீது உள்ள இறைநம்பிக்கையையும் உறுதிப்படுத்துகின்றது. ஆக, மனித வளர்ச்சிக்கு முக்கியக் காரணிகளான இயற்கையும் வாழும் சூழலும் நம்முடைய நம்பிக்கை வாழ்வுக்கும் வடிவம் தருகின்றது.

news
சிறப்புக்கட்டுரை
மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவு (வலையும் வாழ்வும் – 47)

“என்னங்க! ரெடியாயிட்டீங்களா? காப்பித் தண்ணி வேணும்னா போட்டுத்தரவா?”

தன் மகளோடு படுத்திருந்த வசந்தி தூக்கக் கலக்கத்தோடு பால்வெட்டுத் தொழிலுக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த பாலனிடம் சோம்பல் முறித்துக்கொண்டே கேட்டாள்.

பதிலேதும் சொல்லாமல் தலையில் கட்டிப் பயன்படுத்தும் பேட்டரி லைட்டையும் இரப்பர் மர வெட்டுக்கத்தியையும் எடுத்துக்கொண்டு வெளியே புறப்பட்டான் ரவிபாலன்.

ஊரில் எல்லாரும் அவனை ‘பாலன் என்றே கூப்பிடுவர். இரப்பர் மரத்திலிருந்து பாலெடுக்கச் சூரியன் உதிக்கும் முன்பே செல்லவேண்டும். அப்படி அதிகாலையிலேயே சென்றால்தான் வெட்டுவதற்குப் பதமாகவும், மரத்தில் அதிக பாலும் இருக்கும். பாலனுக்குச் சொந்த இரப்பர் மரங்கள் கிடையாது. செல்லத்துரையின் பொட்டல்விளையில்தான் அவனுக்கு வேலை. ஓர் இரப்பர் மரத்தைக் கீறவும், பால் சேகரிக்கவும் சேர்த்து ஐந்து ரூபாய் கிடைக்கும். ஒருநாளில் குறிப்பாக, காலையில் மட்டும் முந்நூறு மரங்களைக் கீறி இரப்பர் பால் சேகரிப்பான். சேகரித்துப் பதப்படுத்திய இரப்பர் சீட்டை இயந்திரத்தில் அடித்தெடுத்துக் கொடுக்க ஒரு சீட்டுக்கு மூன்று ரூபாய் என்று பாலனுக்குக் கொஞ்சம் வருமானம் வரும். ஆனாலும், காலைப் பனியில் கண்ணாடி விரியன் பாம்புகளுக்கிடையில் வேலை பார்ப்பது அவனுக்கு முதலில் கொஞ்சம் திகிலாகத்தான் இருந்தது. பிறகு அதுவே பழக்கமாகிவிட்டது.

ரவிபாலன் இரப்பர் மரத்தின் பட்டையைக் கீறிப் பாலெடுக்கும் அந்த இலாவகமே பார்ப்பதற்கு அழகாக இருக்கும். வேறு எங்கும் மரத்தில் காயம் ஏற்படாதவாறும், அதற்கு வலி தெரியாமலிருப்பதற்கும் இரப்பர் மரங்களோடு பேசிக்கொண்டே தோலுரிப்பான். அதைப் பார்ப்பதற்கு ஒரு தாய் குழந்தைகளோடு கொஞ்சி மகிழ்வது போலிருக்கும்.

அதிகாலையில் மூன்றரை மணிக்கு இரப்பர் பாலெடுக்கப் போனவன், வழக்கம்போல காலையில் ஒன்பதரைக்குதான் வந்தான்.

இன்னைக்கு அமுதாவுக்குப் பிறந்தநாள். ஸ்கூலுக்குப் போகும்போது உங்கள கேட்டா. ஸ்கூலுக்குக் கொடுத்தனுப்ப மிட்டாய் கூட வாங்கிக் கொடுக்கல என்று ஏதேதோ சொல்லிக்கொண்டே பழங்கஞ்சியையும், கொஞ்சம் தோலுரித்த சிறு வெங்காயத்தையும் அவனுக்குக் குடிக்கக் கொடுத்தாள் வசந்தி. பாலன் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் பழங்கஞ்சியைச் சோறோடு அள்ளிக் குடித்தான்.

வசந்தி வீட்டுமுற்றத்தைப் பெருக்கிக்கொண்டே ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தாள். ஆனால், பாலன் அவற்றையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளவில்லை. வீட்டுத்திண்ணையில் வைக்கப்பட்டிருந்த பாய் ஒன்றை எடுத்துப் போட்டுக்கொண்டு விட்டத்தைப் பார்த்துப் படுத்துக்கொண்டான்.

ரவிபாலன் தன் மனைவியிடம் பேசி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. அவன் என்று இரப்பர் மரங்களோடு பேசத்தொடங்கினானோ அன்றிலிருந்து தன் மனைவியிடமோ அல்லது யாரிடமோ பேசியதில்லை. சிலர் அவனுக்கு மனப்பிராந்தி என்றனர். வேறுசிலர் அவனுக்குப் பொட்டல்விளையில் தற்கொலை செய்துகொண்ட அந்த ஊமைப்பெண் பிடித்திருக்கிறாள் என்றனர். இந்த இரண்டு ஆண்டுகளில் பல மருத்துவர்களிடம் ரவிபாலனைக் கூட்டிக்கொண்டு காட்டிவிட்டாள் வசந்தி. ஆனால், எந்தப் பயனும் இல்லை. யாரெல்லாமோ ஏதேதோ கதைகளை அவிழ்த்துவிட்டார்கள். ஆனால், உண்மையில் ரவி பாலனுக்கு என்னதான் ஆனது என்பது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

அடுத்த நாள் காலை மூன்றரை மணிக்கெல்லாம் வழக்கம்போல ரவிபாலன் கண்விழித்து இரப்பர் மரங்களோடு பேசத் தயாரானான்.

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் நாடி பிடித்து உடல்நலக் குறிப்புகளைச் சொல்லிவந்த காலம் மாறி ஸ்டெதஸ்கோப் வந்ததுபோல, இன்று டிஜிட்டல் மயமாகியிருக்கிறது மருத்துவத்துறை. உலகம் எவ்வளவுதான் ஏ.ஐ. உலகத்தில் வளர்ந்திருந்தாலும், நோய்களும் நோயாளர்களும் குறைந்தபாடில்லை.

உலகம் முழுவதும் இன்று சுமார் 43 இலட்சம் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக உலகச் சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. மருத்துவர்களுக்கான மற்றும் மருந்திற்கான தேவை 2030-இல் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் தேவை ஒருபுறமிருக்க, உலகின் பல்வேறு இடங்களில் மருத்துவம் என்பது ஏழைகளுக்கு இன்னும் எட்டாக்கனியாக உள்ளது. எனவே, இந்த இடைவெளியைத் தவிர்க்க பலரும் செயற்கை நுண்ணறிவை மருத்துவத்துறைக்குப் பரிந்துரைக்கின்றனர். மருத்துவத்துறையில் இதுவரை இல்லாத வகையில் செயற்கை நுண்ணறிவு அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றது.

பெருமளவிலான மருத்துவத்தரவுகளைச் செயற்கை நுண்ணறிவு ஆய்வு செய்யும்போது, அது நோய் மற்றும் நோயாளர்கள் பற்றிய துல்லியமான தரவுகளை முன்கூட்டியே வழங்குகிறது. இதனால் நோய் தொடக்கநிலையிலேயே கண்டறியப்படுவதால் நோய்க்கான மருத்துவச்செலவு மிகவும் குறைகிறது.

செயற்கை நுண்ணறிவு என்பது வளர்ந்துவரும் ஒரு தொழில்நுட்பம். ஆராய்ச்சிகளும் பலதரப்பட்ட ஆய்வுகளும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. எனவே, முழுமையாகச் செயற்கை நுண்ணறிவை மருத்துவர் ஒருவருக்கு இணையாகப் பார்ப்பதைத் தவிர்க்கவேண்டும். ஏனெனில், செயற்கை நுண்ணறிவு சில நேரங்களில் எவ்வித ஆதாரமும் இல்லாத தவறான தகவல்களை உண்மையானவை போல உருவாக்கலாம் அல்லது அது நாடு, இனம், நோய், பொருளாதாரம் தொடர்பான சார்புநிலை அடிப்படையில் (க்ஷயைள) பயிற்றுவிக்கப்பட்டிருக்கலாம். எனவே, முழுமையாக ஏ.ஐ. தருகின்ற தரவுகளின் அடிப்படையில் மருத்துவம் பார்ப்பது என்பது ஆபத்தை விளைவிக்கலாம்.

மருத்துவத் தகவல்கள் தொடர்பாக, செயற்கை நுண்ணறிவு மற்றும் ஏ.ஐ. பாட்களைப் பயன்படுத்தும் சூழல் ஒருபுறமிருக்க, மறுபுறம் சமூக ஊடகங்களில் செல்வாக்குச் செலுத்துவோர் (Social Media Influencers) மருத்துவக் குறிப்புகளையும், உடல்நலப் பிரச்சினைகளையும் எடைக்குறைப்புப் பற்றியும் பேசிவருவது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் தலச்சேரியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் இணையதளத்தில் பார்த்த உடல் எடையைக் குறைக்கும் முறையைப் பின்பற்றி, பல மாதங்களாக வெறும் தண்ணீரை மட்டுமே அருந்தி வந்ததால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு மருத்துவர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஊட்டச்சத்து நிபுணரின் (Certified Nutritionist) வழிகாட்டுதல் இல்லாமல் தீவிரமான உணவு முறைகளைப் பின்பற்றுவது உயிருக்கே ஆபத்தானது என்பதை நாம் உணரவேண்டும்.

மருத்துவம் பற்றிய அடிப்படைச் செய்திகளைத் தெரிந்துகொள்வதற்கு இணையம் அல்லது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தலாம். ஆனால், மருத்துவரிடம் நேரடியாக உரையாடுவதும் ஆலோசனை கேட்பதுமே நலமான வாழ்வுக்கு வழி வகுக்கும்.

news
சிறப்புக்கட்டுரை
எங்குச் செல்கிறோம்? என்ன செய்யப் போகிறோம்?

1917 - இடிபட்ட சுவர்போல் கலி வீழ்ந்ததாகப் பாரதி கொண்டாடிய நாள்; பாட்டாளி மக்களின் விடுதலை வேண்டி நடத்தப்பட்ட புரட்சிப் போரின் வெற்றி கிடைத்த தினம்; இரஷ்ய நாட்டைக் கைவசம் வைத்து, கொடுங்கோலாட்சி செய்த சார் மன்னனையும் அவன் ஆட்சிக்குத் துணை நின்ற நிலவுடைமையாளர்களையும் கவிழ்த்தொழித்த ஆண்டு; பொதுவுடைமைச் சமூகம் ஒன்று உருவாக்கப்பட்டதோடு, உலக அரங்கில் ஒரு வல்லரசாகவும் உருவாகி ஏற்றம் பெற்றது என்பதுதான் அண்மைக் காலம் வரையிலான வரலாறு.

புரட்சியில் வெற்றிகண்ட இரஷ்ய அரசுக்குப் புரட்சியாளர் லெனின் தலைமையேற்ற நிலையில், இரஷ்யப் புரட்சிக்குத் துணைநின்ற இளைஞர் அமைப்புகளின் (Youth League) பிரதிநிதிகள் சிலர் புரட்சியாளர் லெனினை அணுகி, “புரட்சி வெற்றி பெற்ற நிலையில், இனி இளைஞர் அமைப்பினரான நாங்கள் செய்ய வேண்டுவது என்ன?” என்ற கேள்வியை எழுப்பினர்லெனின் என்ன பதில் கூறினார் தெரியுமா? புரட்சிக்குத் துணை நின்ற இளைஞர் அமைப்பினருக்கு நன்றி கூறியிருக்கலாம்; வாழ்த்தும் கூறியிருக்கலாம்; இங்கே எழுதப்பெறும் இச்செய்தி இடம்பெறும்Lenin on Youthஎன்ற நூலில், கேள்வி எழுப்பிய இளைஞர்களிடம் அவர் அளித்த பதில்learn’ (‘கற்க) என்பதே.

அவ்விளைஞர்கள், ஏற்கெனவே கற்றறிந்தவர்களாகத்தான் இருந்திருக்கவேண்டும்; எனவேதான்எதைக் கற்க வேண்டும்?’ என்ற கேள்வியை எழுப்பினர். இளைஞர்களை நோக்கிகற்கஎன்று பதிலளித்த லெனின் தொடர்ந்துஇச்சமூகத்தைப் படிஎன்றார். கூடவே இச்சமூகம்  எப்படியுள்ளது என்ற விளக்கமும் தருகிறார்.

ஆட்சி செய்அல்லதுஆட்சி செய்ய வை (Rule or be ruled) எனும்திருடுஅல்லதுதிருடச் செய் (Rob or be robbed) என்பதற்கான விளக்கம் தருகிறார். இரஷ்யாவை ஆண்டு முடித்த கலி அரக்கனை வீழ்த்தி முடிக்கத் துணைநின்ற இளையோர் படைக்கு லெனின் கூறிய வழிகாட்டல் தமிழ்நாட்டின் புதிய ஆளும் தம்பிகளுக்குப் பொருந்துமா?

மேலே லெனின் அவர்களால் சுட்டிக் காட்டப்பட்ட சமூக அமைப்பின் உள்ளடக்கம் ஆழமானது. இன்னும் இந்தியச் சமூகம் பற்றி அறிய விரும்புவோருக்கான பாடமாக லெனின் காட்டிய இப்பகுப்பு (Analysis) பொருந்தும்.

இன்றைய தமிழ்நாட்டு இளையோர் தம் பெருவாரியான எண்ணிக்கையால் அவர்கள் விரும்பிய அரசைத் தெரிவுசெய்துள்ளனர். தெரிவு செய்யும் உரிமையை வழங்கிய சனநாயகத்தை நாம் போற்றுகின்ற வேளை, சனநாயகம் எனும் விழுமியத்தைத் தாங்கிய சனநாயக அரசைக் கொண்டு நடத்தும் சமூக-அரசியல் அறிவை இவ்விளைஞர் பெற்றவர்களா? என்ற கேள்வியைக் கட்டாயமாகக் கேட்க வேண்டியுள்ளது.

புரட்சியின் வெற்றிக்குப் பின்கூட, புரட்சிப் போரில் களமாடிய இளையோருக்குச் சமூகப் பாடம் நிகழ்த்த தேவையிருந்தபோது, ஒரு திரைக்கலைஞன் பின்னே, இரசிக மனப்பான்மையால் கூடிய ஒரு கூட்டம் தேர்தல் சனநாயக வழி ஒரு மாநில அரசை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்கப்போவது பற்றிக் கவலைகொள்ள வேண்டாமா?

இக்கும்பல் அரசியல் ரீதியாகத் தயார் செய்யப்பட்ட ஒன்றல்லஇவர்கள் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு குழுவும் அல்ல; யார் இவர்கள்? திடீரென புயலெனக் கிளர்ந்தெழுந்து தேர்தல் மூலம் அரசதிகாரக் கோட்டையைக் கைப்பற்றியுள்ளனர். யார் இவர்கள்? எங்கிருந்து வருகின்றனர்? இவர்களின் சமூக-அரசியல் பின்னணி என்ன? இவர்கள் தன்னெழுச்சியாய் திரண்டெழுந்த சுயம்புகளா? யார் இவர்கள்? எங்கிருந்து வருகின்றனர்?

அண்டை நாட்டு அனுபவங்கள்

தென்னிலங்கையில் எழுந்த இளைஞர் எழுச்சி தன்னிச்சையானது அல்ல. சிங்களப் பேரினவாதம் தமிழ்த் தேசிய இனத்தின் நியாயமான கோரிக்கைகளை நிராகரித்து வந்த நிலையில், ஆயுதம்  தாங்கிய தமிழர் போராட்டத்தை வீழ்த்தி விட்டோம் என்ற மமதையில், சிங்களப் பேரினவாதம் இன ரீதியாக ஓர்மைப்படுத்தப்பட்ட சிங்களவர்களின் ஆதரவைத் தேர்தல் மூலம் பெற்றது. தமிழ் ஈழ அழிப்பு மூலம் பெறப்பட்ட எதேச்சதிகார  அரசின் சுயரூபத்தை அறிந்துகொண்ட இளையோர் படை பேரினவாதக் காவலர்களைத் துரத்தியடித்தது.

தமிழர் அழிப்பு மூலம் தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தை அனுபவிக்கலாம் என்று நம்பியிருந்த பேரினவாதிகளைத் துரத்திய இளையோரிடம் ஒரு நோக்கம் இருந்தது. அவர்கள் இலக்கும் தெளிவாக இருந்தது. உள்நாட்டுப் போரினால் நலிவுற்றிருந்த ஒரு சிறிய இலங்கைத் தீவின் இளைஞர் படை தமிழ்நாட்டு இளையோருக்குத் தரும் செய்தி என்ன?

வங்க தேசத்தின் இளைஞர் படை என்ன செய்தது? பாகிஸ்தானின் ஒடுக்குமுறைக்கு எதிராகத் திரண்டெழுந்து, தனிநாடு காணத் தலைமையேற்றவங்க பந்துஎன்று பெருமையோடு போற்றப்பெறும் முஜிபூர் ரஹ்மான் அவர்களின் மகள் இளையோர் போராட்டத்தின் விளைவாக இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். வங்க தேசத்தின் பெரிய தலைவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளால், தண்டனை பெற்று ஒளிந்து வாழும் நிலை. திரண்டெழுந்த மக்கள் கூட்டம் புதிய அரசை புதிய தேர்தல்கள் மூலம் நிறுவியுள்ளது.

உலகின்ஒரே இந்து நாடுஎன்று இந்திய மதவாதிகளால் பாராட்டப்பெறும் நேபாள நாட்டில் மக்கள் எழுச்சியால் முடியாட்சி முடிவுக்கு வந்தது. சனநாயகப் பாதையை விரும்பிய மக்களின் ஆசைக்கேற்ப உருவான அரசுகள் மக்கள் எதிர்பார்ப்பில் தோற்றுப்போன நிலையில், நேபாள நாட்டின் இளையோர் தம் தன்னெழுச்சியால், ஆட்சியாளர்கள் துரத்தியடிக்கப்பட்டனர். இளையோர் சக்தியின் விருப்பத்திற்கேற்ப புதிய ஆட்சி அரங்கேறியுள்ளது. நேபாளம் போன்ற பின்தங்கிய நாட்டின் இளையோர் நம் நாட்டு இளையோருக்குத் தரும் பாடம் என்ன?

தமிழ்நாட்டு இளையோர், அரசியல் ஞானம் கிஞ்சித்தும் இல்லாத ஒரு திரைக்கலைஞனைத் தலைவனாக ஏற்று அணிதிரண்டுள்ளனர். அரசியல் அகற்றப்பட்ட ஒரு வெறுங்கூட்டம்மாற்றம்வேண்டி, இவரைத் தெரிவு செய்யப்போகிறதாம். ‘மாற்றம்எனும் பொருள் பொதிந்த சொல் இங்குக் கொச்சைப்படுதலையும் அதன் உள்ளடங்கிய அரசியலைப் புரியாதவர்களிடமும் சிக்கித் திணறுதலையும் பார்க்க முடிகிறது. இவர்கள் முன்வைக்கும் மாற்றம் திராவிடத்திற்கு மாற்றா? திராவிடத்தின் உள்ளடக்கமாம் சமூகநீதிக் கொள்கைகளுக்கு மாற்றாதமிழ்மொழி, தமிழ்க் கலாச்சாரம்  எனும் தனித்துவங்களுக்கு எதிரான மாற்றா?

ஒன்றிய ளும் அரசு நாளும் நடத்திக் கொண்டிருக்கும் மதவாத அரசியலுக்கு எதிராக என்ன மாற்றுக்கருத்தை நடிகரும், அவர் சகாக்களும் முன்வைத்துள்ளனர்? தன் கொள்கை எதிரியாக நீட்டி முழக்கி அறிவிக்கும் அந்த நடிகர், பா...வின் எந்த மக்கள் விரோதக் கொள்கையைத் தோலுரித்துக் காட்டினார்? பாசிசம் எனும் கொடுங்கொள்கையைபாயாசம்என்று கிண்டலடிக்கும் பாசிசத்தின் மொத்த வடிவாம் சங்கப் பரிவாரங்களின்  ஆட்சி முறையைக் கேலி செய்யாத இவர், தமிழ்நாட்டின் திராவிட முன்னேற்றக் கழக அரசினைதீய சக்திஎன்று வசைபாடும் துணிச்சல் இவருக்கு எப்படி வந்தது?

கண்முன்னே தெரியும் தி.மு.. அரசு, இவருக்குத் தீயவர்களால் ஆளப்பெறும் ஆட்சியென்றால், ஒன்றியத்தை ஆளும் பா... ஆட்சி தெய்வீக ஆட்சியா? மதத்தையும் மதக் கடவுளரையும் முன்னிறுத்தி ஆட்சி நடத்தும் பிரதமர் மோடி போலவே, நாளும் ஒரு கோவிலுக்குத் தனி விமானத்தில் பயணித்து வழிபட்டு வரும் இவரும் மத அரசியல்தானே செய்கிறார்!

எச்சரிக்கை! எச்சரிக்கை!

இந்தியாவின் சனநாயக, சமயச் சார்பற்ற அரசியலுக்கு எதிராக முற்றிலும் முரணான வகுப்புவாத அரசியலின் வளர்ச்சியை ஆய்வு செய்த வரலாற்று ஆசிரியர்கள் இதன் காரணத்தை மிகத் தெளிவாக முன்வைத்தனர். இந்திய விடுதலைக்குப் பின் உருவான இந்தியத் தேசிய காங்கிரஸ் ஆட்சி மக்களின் விருப்பங்களைச் சரியாக நிறைவு செய்யாத நிலை; மாநில அளவில் தோன்றிய பிராந்திய கட்சிகளும் போதிய பணிகளைச் செய்யாத நிலையில், சனநாயகத்தில் முக்கியப் பங்குபெறும் கட்சிகள் கொள்கைகளை இழந்து வெற்றுக்கட்சிகளான நிலையில், தேர்தல் களத்தை ஆக்கிரமித்துக் கொண்டவர்கள் அரசியல்வாதியா? அல்லது குற்றவாளிகளா? (Criminals) என்று பிரித்தறிய முடியாத நிலையில், பொதுச்சமூகம் நம்பிக்கை இழந்து, அரசியல் அகற்றப்பட்ட சூழலில் (Depolarization) நேரம் பார்த்துக் கொண்டிருந்த பெரும்பான்மை மதவாதிகள் மேற்படி கட்சி ஆட்சி முறை உருவாக்கியிருந்த அவலங்களுக்கு மருந்தாக மதவாதத்தை அல்லது வகுப்புவாதத்தை முன்வைத்த பெரும்பான்மை மதவாதிகள், மதவாதத்தை மருந்தாக்கினர். இன்றைய மதவாத அரசியலின் உச்சபட்ச வளர்ச்சியில் நம் மக்கள் இதனோடு இணைந்து வாழப் பழகிக்கொண்டனர்.

சனநாயகம், சமயச் சார்பின்மை எனும் பெரு விழுமியங்கள் இன்று மக்களிடம் பேசுபொருளாக (Discourse) இல்லை. இந்து மதம், இந்திய தேசம், இந்து  தேசியம் என்பனவே இன்றைய அரசியல் உரையாடல்கள். இன்று தமிழ்நாட்டு மண்ணில் பெருவாரியானோர் அரசியல் அகற்றப்பட்ட நிலையில் வாழும் இளையோரையும், அவர்தம் உடனடித் தலைவரையும் சங்கப் பரிவாரங்களும் கொள்கை உள்ளீடற்ற நடிகரைக் கபளீகரம் செய்து கொள்ளும் என்பதே உண்மை. சமூகத்தின் எந்தப் பகுதியினரையும் அபகரிக்கும் பண்புடைய சங்கப் பரிவாரங்கள் நடிகர் தலைவரை அபகரிக்கையில், இவர் பின்னே செல்லும் கூட்டமும் அதே வழியைத் தமதாக்கிக்கொள்ளும்.

தமிழ்நாட்டு மக்கள் தேர்தல் மூலம் பா...வை அப்புறப்படுத்தியிருக்கலாம். இந்நச்சு தமிழ்நாட்டில் ஆழமாக வேர் பதித்து வருகிறது. சங்கப் பரிவாரங்கள் மம்தாவை நன்றாகவே வீழ்த்தியுள்ளன. இந்துத்துவத்தின் மாற்றுக்கருத்தியல் என்று போற்றப்பட்ட பொதுவுடைமை வங்க மாநிலத்தில் துடைத்தெறியப்பட்டுவிட்டது.

அரசியல் அறிவு எதுவுமற்ற ஒரு கூட்டம் தமிழ்நாட்டை ஆளும் வாய்ப்பைப் பெற்றிருக்கும் நிலையில், அரசியல் அகற்றப்பட்ட இக்கூட்டம் மதவாத, பிரிவினைவாத அமைப்புகளிடமிருந்து நம்மை எப்படிக் காப்பாற்றப் போகிறது?

news
சிறப்புக்கட்டுரை
மனிதக் குரல்களையும் முகங்களையும் பாதுகாத்தல் (60-ஆம் உலகத் தகவல் தொடர்பு நாளுக்காகத் திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் செய்தி)

சென்ற இதழ் தொடர்ச்சி...

இயன்றதோர் உடன்பாடு

நம் அனைவரையும் பாதிக்கும் கண்ணுக்குப் புலப்படாத எண்ணற்ற சக்திகளுக்குப் பின்னால், ஒருசில நிறுவனங்களின் தோற்றுநர்கள் மட்டுமே ‘2025-ஆம் ஆண்டின் மனிதர்கள்என்றும், செயற்கை நுண்ணறிவின் சிற்பிகள் என்றும் அறியப்படுகின்றனர். இது மிகவும் கவலைக்குரியதாகும். ஒரு சந்தையில் மிகக் குறைவான எண்ணிக்கையிலான பெரிய நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் (oligopolistic).

இவை மட்டுமே நெறிப்பாட்டு முறைகள்மீது (Algorithms) ஆதிக்கம் செலுத்தினால், நம்மையே அறியாமல் மனித நடத்தையையும், மனித வரலாற்றையும், திரு அவையின் வரலாற்றையும் மாற்றி எழுதக்கூடிய சூழ்நிலை உருவாகலாம். இந்நிலையில், புதிய எண்ணிமக் கண்டுபிடிப்புகளை நிறுத்துவது நமது பணியல்ல; மாறாக, இவற்றின் தெளிவற்ற நிலையை அறிந்து, அவற்றைச் சரியாக வழிநடத்துவதே நமது பணியாகும். மனிதர்களின் பாதுகாப்பிற்காகக் குரலெழுப்ப வேண்டியது நம் அனைவரின் கடமை. இதனால் நமது உடன் உழைப்பாளிகளாக இந்த எண்ணிமச் சாதனங்களை ஒருங்கிணைக்க முடியும். இந்த உடன்பாடு பொறுப்புடைமை, ஒத்துழைப்பு, பயிற்சி ஆகிய மூன்று தூண்களின்மீது எழுப்பப்படுவதாகும்.

முதலில் பொறுப்புடைமை

சமுதாயத்தில் நமக்குள்ள ஈடுபாட்டிற்கேற்ப பொறுப்புணர்வு என்பது நேர்மை, வெளிப்படைத் தன்மை, மனவலிமை, தொலைநோக்குப் பார்வை, அறிவைப் பகிர்ந்துகொள்ளும் கடமையுணர்வு, தகவல் அறிந்துகொள்ளும் உரிமை ஆகியவற்றை உள்ளடக்கியது. எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதில் நமது தனிப்பட்ட பொறுப்புணர்வைத் தட்டிக்கழிக்க இயலாது என்ற பொது விதியைக் கடைப்பிடிப்பது இன்றியமையாதது.

இணையத்தின் பல்வேறு தளங்களில், அவற்றைக் கட்டுப்படுத்தும் நிலையில் இருப்பவர்கள் தங்கள் இலாபத்தை அதிகப்படுத்தும் நோக்கத்தை மட்டும் கொண்டிராமல், ஒவ்வொருவரும் தங்கள் பிள்ளைகளின் நலனைக் கருத்தில் கொள்வதுபோல, பொதுநலனைப் பேணும் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படவேண்டும். செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை உருவாக்குபவர்களும் மேம்படுத்துபவர்களும் வெளிப்படைத் தன்மையுடனும் சமூகப் பொறுப்புணர்வுடனும் செயல்பட அழைக்கப்படுகின்றனர். இதனால் தாம் உருவாக்கும் நெறிப்பாட்டு முறையின் மாதிரிகளுக்கும் அவற்றின் பயனாளிகளின் அறிவார்ந்த சம்மதத்தைப் பெற்றிருப்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருத்தல் அவசியம்.

மனித மாண்பைப் போற்றும் வகையில் நாடுகளின் சட்டமியற்றுவோரும், பன்னாட்டு ஒழுங்குமுறை அமைப்புகளும் பொறுப்புணர்வுடன் செயல்படுதல்வேண்டும். பொருத்தமான விதிமுறைசார் சட்டங்களை இயற்றுவதன் மூலம் தனி மனிதர்களைப் பாதுகாக்க இயலும். இதனால் பயனாளர்கள் தானியங்கி உரையாடிகளுடன் உணர்வுப்பூர்வமாக ஒன்றிப்போதல் தடுக்கப்படவும், உண்மைக்குப் புறம்பான தீய வழிகளில் செலுத்தும் உள்ளடக்கங்களை நெறிப்படுத்தவும் இயலும். இதனால் தவறான, ஏமாற்றும் உருவகப்படுத்துதலையும் தவிர்க்கலாம். இவ்வாறு உள்ளடக்கத்தின் உண்மைத் தன்மையைப் பாதுகாக்கலாம்.

ஊடகத் தொடர்பாடலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், சில வினாடிகள் கூடுதலாகக் கவனத்தை ஈர்க்க வடிவமைக்கப்பட்ட நெறிப்பாட்டுமுறைகள் உண்மையைத் தேடுவதையே இலக்காகக் கொண்ட தொழில்சார் மதிப்பீடுகளை விஞ்சி நிற்க அனுமதிக்க இயலாது. கிடைக்கும் வாய்ப்புகளிலெல்லாம் ஈடுபாடு கொள்வதைத் தேடாமல், ஒரு செயலைத் துல்லியமாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் செய்வதாலேயே பொதுநம்பிக்கை உருவாகும். மனிதர்கள் நேரடியாகத் தாமே உருவாக்கிய உள்ள டக்கத்தையும், செயற்கை நுண்ணறிவினால் உருவாக்கப்பட்ட அல்லது கையாளப்பட்ட உள்ளடக்கத்தையும் தெளிவாக வேறுபடுத்திக் காட்டவேண்டும். பத்திரிகையாளர் மற்றும் ஊடக உள்ளடக்கங்களை உருவாக்குவோரின் பணிகளில் படைப்பாளர் உரிமையும் இறையாண்மையும் பாதுகாக்கப்பட வேண்டும். தகவல் என்பது ஒரு பொதுச்சொத்து. ஆக்கப்பூர்வமானதும் அர்த்தமுள்ளதுமான பொதுச் சேவை, தெளிவில்லாத மழுங்கல் தளமாக (Opacity) இருக்கமுடியாது. மாறாக, மூலங்களில் வெளிப்பாட்டுத் தன்மையைக் கொண்டதாகவும் உயர்ந்த தரமுடையதாகவும், இதில் தொடர்புடைய அனைவரையும் உள்ளடக்கியதாகவும் இருத்தல்வேண்டும்.

இரண்டாவது ஒத்துழைப்பு

நாம் எல்லாருமே இப்பணிகளில் ஒத்துழைக்க அழைக்கப்பட்டுள்ளோம். எண்ணிமக் கண்டுபிடிப்புகள், செயற்கை நுண்ணறிவின் நிர்வாகம் ஆகியவற்றின் சவால்களை எந்த ஒரு துறையும் தனியாகச் சமாளிக்க முடியாது. எனவே, இதற்குத் தேவையான பாதுகாப்பு வழிமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதில் பங்கேற்கும் தொழில்நுட்பக் கலைஞர்கள், சட்டமியற்றுவோர், ஊடகக் கல்வியாளர், ஆராய்ச்சியாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள், பயிற்சியாளர்கள் ஆகிய எல்லாரும் இணைந்து அறிவு சார்ந்த, பொறுப்புள்ள எண்ணிமக் குடிமக்களை உருவாக்கப் பாடுபடவேண்டும்.

மூன்றாவதாக ஊடகக் கல்வி

சிறந்த ஊடகக் கல்வி பின்வருவனவற்றை நோக்கமாகக் கொண்டிருத்தல் அவசியம்:

விமர்சன ரீதியான சிந்திக்கும் ஆற்றலை வளர்த்தல்.

உள்ளடக்கத்தின் மூலங்களின் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்துதல்.

கிடைக்கும் தகவல்களைத் தேர்ந்தெடுத்தலுக்கான உள்நோக்கங்கள் ஏதேனும் உள்ளனவா என்று அறிந்து மதிப்பீடு செய்தல்.

இதில் ஈடுபட்டுள்ள உளவியல் நுட்பங்களைப் புரிந்துகொள்ளுதல்.

நமது குடும்பங்கள், குழுக்கள், கழகங்கள், எண்ணிம ஊடகங்களைப் பயன்படுத்துவது பற்றிய பொறுப்புள்ள தகவல்தொடர்பு கலாச்சாரத்தை உருவாக்குதல்.

மேற்கூறியவற்றை அடைய நமது கல்வித் திட்டத்தில் எல்லா நிலைகளிலும் ஊடகக் கல்வி, செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி ஆகியவற்றைச் சேர்ப்பது மிகவும் அவசியமும் அவசரமுமாகும். சில பொதுநிறுவனங்கள் இதனைச் செய்துவருவது குறிப்பிடத்தக்கது. கத்தோலிக்கக் கிறித்தவர்கள் என்ற முறையில் நாம் இம்முயற்சிக்குப் பங்களிப்பது மிக முக்கியமான கடமையாகும். இதனால் தனி மனிதர்களும், குறிப்பாக இளைஞர்களும், விமர்சன உணர்வுடன் சிந்திக்கும் திறனை வளர்த்துக்கொண்டு, சுதந்திரமாக முடிவெடுக்கும் ஆற்றலில் வளரவும் இந்த ஊடகக் கல்விசார் முயற்சிகள் வாழ்நாள் முழுவதும் தொடரும் ஒரு கல்வி முன்னெடுப்பாக மாறவேண்டும்.

இப்பயிற்சிகள் வயதுவந்தோருக்கும், சமுதாயத்தின் விளிம்புநிலையில் உள்ளவர்களுக்கும் தொடர்ந்து வழங்கப்படவேண்டும். இதனால் வேகமாக வளர்ந்துவரும் தொழில்நுட்ப மாற்றங்களிலிருந்து இவர்கள் பின்தங்கிவிடாமலும் விடுபட்டுப் போகாமலும் இருக்க வாய்ப்புகள் உருவாகும்.

ஊடக அறிவு, தகவல் அறிவு மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான கல்வி ஆகியவை செயற்கை நுண்ணறிவின் செயல்பாடுகளால் மனிதர்களின் தனிப்பண்புகளைப் பிற உயிரினங்கள் அல்லது உயிரற்ற பொருள்கள்மீது சாற்றிக் கூறும் மனிதப் பண்பேற்றல் (anthropomorphizing) என்ற செயல்முறைகளுக்கு ஒத்துப்போகும் போக்கைத் தவிர்க்கப் பெரிதும் உதவும். இதனால் துல்லியமற்றதும் தவறானதுமான செயற்கை நுண்ணறிவின் செயல்பாடுகளின் மூலங்களை இனங்கண்டு, அவற்றை வெளியிலிருந்து மதிப்பீடு செய்யவும் இக்கல்விப் பெரிதும் உதவும். இவ்வாறு செயற்கை நுண்ணறிவை ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்தும் ஆற்றலைப் பெறமுடியும். இக்கல்விமுறை ஒவ்வொருவரின் சிறந்த தனியுரிமையையும், அவர்களது தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும். இதனால் ஒவ்வொருவரிலும் சிறந்த விழிப்புணர்வையும், பாதுகாப்புக்கான அளவீடுகளையும், மேல்முறையீடு செய்யும் வாய்ப்புகளையும் ஒவ்வொருவரும் அறிந்துகொள்வர்.

செயற்கை நுண்ணறிவைத் திட்டமிட்டுப் பயன்படுத்த நாம் அனைவரும் அறிந்திருப்பது அவசியம். இவ்வாறு நமது சுய உருவத்தை அதாவது, நமது முகங்களையும் குரல்களையும் பாதுகாக்க முடியும். இதனால் நமது முகங்களையும் குரல்களையும் தவறான உள்ளடக்கங்களிலிருந்தும் தவறான நடத்தையிலிருந்தும் நம்மை விடுவித்துக்கொள்ள முடியும். இவ்வாறு மனிதர்களின் அனுமதியின்றி அவர்களின் தனியுரிமையில் ஊடுருவி அவர்களின் தனித்துவத்தைச் சீர்குலைக்கும் எண்ணிம மோசடிகள், இணைய மிரட்டல்கள், போலிப் பதிவுகள் போன்றவற்றைத் தவிர்க்கலாம்.

தொழில்புரட்சிக்குப் பிறகு புதிய கண்டுபிடிப்புகளால் தோன்றிய புதிய வளர்ச்சிக்குப் பதிலளிக்க அடிப்படைக் கல்வி உதவியதுபோல, தற்போதைய எண்ணிமப் புரட்சிக்குப் பதிலளிக்க மனிதநேயக் கலாச்சாரக் கல்வியுடன், எண்ணிமக் கல்வியறிவும் தேவைப்படுகிறது. இதனால் நெறிப்பாட்டு முறைகள், நாம் உலகை எப்படிப் பார்க்கிறோம் என்பதையும், செயற்கை நுண்ணறிவுப் பணிகளை ஒருதலைப்பட்சமாகப் பார்க்கும் பண்பையும், நமது இடுகைகளில் உள்ள உள்ளடக்கங்களை எந்தத் தொழில்நுட்பம் நிர்ணயிக்கின்றது என்பதையும், செயற்கை நுண்ணறிவின் பொருளாதாரக் கொள்கைகள் என்ன என்பதையும், அவை எவ்வாறு மாறும் என்பதையும் அறிந்து செயல்பட இந்த எண்ணிம ஊடகக் கல்வி மிகவும் அவசியம்.

மக்களுக்காக நாம் மீண்டும் பேச நமக்கு முகங்களும் குரல்களும் தேவை. தொடர்பாடல் என்னும் கொடை, மனித இனத்தின் ஆழமான உண்மை என்பதைப் பேணுதல் அவசியம். எல்லாத் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளும் இதை நோக்கியே செயல்படவேண்டும். இந்தச் சிந்தனைகளை வடிவமைக்கும்போது, மேற்கூறிய இலக்குகளை அடைய உழைக்கும் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். பொதுநலனுக்காக ஊடகத்துறையில் உழைக்கும் அனைவருக்கும் ஆசி வழங்குகிறேன்.

(வத்திக்கானில் 2026 - ஆம் ஆண்டு சனவரி மாதம் 24-ஆம் நாள் சலேசு நகர் புனித பிரான்சிசின் நினைவுநாளில் திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களால் வழங்கப்பட்ட செய்தி)

news
சிறப்புக்கட்டுரை
தேர்தல் 2026: விளையாட்டுப் பிள்ளைகள்

மூத்த பத்திரிகையாளர் மணி, “சபிக்கப்பட்டவர்கள்தான் தேர்தல் முடிவுகளைப் பற்றிப் பேசுவார்கள்என்றார். நாம் சபிக்கப்பட்டவர்கள்; அதனால் தேர்தல் முடிவுகளைப் பற்றிப் பேசலாம்.

தமிழ்நாடு சிறப்பு வாய்ந்த இன வரலாறு, தாய்மொழி, தமிழ்க் கலாச்சாரம், பண்பாடு கொண்ட மாநிலம். ஆனால், அவர்கள் தேசிய நீரோட்டத்திலிருந்து விலகித் தனித்து இருக்கிறார்கள். இனமானம், மொழி, மண் பெருமை பேசுகிறார்கள். நாகரிக, கல்வி அறிவு கொண்ட தனித்த சமூகமாக உலகளவில் உயர்கிறார்கள். அவர்களைக் கட்டுக்குள், ஆரிய அடிமைத்தனத்தில் பூட்டவேண்டும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு திட்டமிடுகிறது. விளாடிமிர் லெனின், “ஒரு தேசத்தை அழிக்க விரும்பினால், முதலில் அத்தேச இளையோரின் சிந்தனைகளை அழியுங்கள்என்றார். தமிழ்நாட்டு இளையோரின் மூளையை ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டுச் சலவை செய்துவிட்டது.

2026 சட்டமன்றத் தேர்தலில் காவிகள்திராவிட எதிர்ப்பு அலைவீசியதாக மகிழ்ச்சியில் குதிக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, ‘துக்ளக்சோ, குருமூர்த்தி, ‘தினமலர்இராம. சுப்பையர் ஆகியோரை வைத்துதமிழகத்தில் மாற்றம்வேண்டும்என நச்சுப் பிரச்சாரத்தைத் தொடங்கியது. ‘தின மலர், ‘தினமணிதற்போதுதினத்தந்திவரை பொய்ச் செய்திகளைத் தினம்  மக்கள் மனத்தில் விதைத்தது. சமூக ஊடகங்கள், புகழ் பெற்றோர், நடிகர்கள் வாயிலாக நச்சுப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து செய்தது.

சிறுபான்மை மக்கள், திராவிடத்தின் பாதுகாப்பு அரணாக நின்றார்கள். திராவிடம் 60 ஆண்டுகள் வெல்ல முடியாத சக்தியாக எழுந்தது. நாக்பூர் பீடம்  எம்.ஜி.ஆர். அவர்களைப் போல ரஜினிகாந்த் அவர்களை முன்னிறுத்தியது. திட்டம் தோல்வியுற நடிகர் விஜய் அவர்களுக்குஒய்பிரிவு பாதுகாப்பு அளித்தது. கேட்ட விசில் சின்னம் கொடுத்தது. கரூர் பெருந்துயர சி.பி.. விசாரணைச் செய்தியினைக் கசிய விடாமல் இரகசியம் காத்தது. நடிகர் விஜய் அவர்களைச் சுற்றி வளைத்தது.

1991-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற இராஜீவ் காந்தி படுகொலையால் தி.மு.. எதிர்ப்பு அலை வீசியது. அன்று 29.9% பெற்ற தி.மு.. இரண்டு தொகுதிகளில் வென்றது. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எந்த அலையும் இல்லை. தி.மு.. கூட்டணி 31.57% வாக்குகளைப் பெற்று,  74 தொகுதிகளைப் பெற்றுள்ளது. தமிழ்நாடு தேர்தல் வரலாற்றில் முதல் முறையான தொங்கு சட்டசபை ஏற்பட்டுள்ளது. இங்கு திராவிட எதிர்ப்பு அலை வீசவில்லை. நடிகர் விஜய் ஆர்.எஸ்.எஸ். வீசிய மாயவலைக்குள் மாட்டிக்கொண்டார் என்பதே நிதர்சனம், உண்மை.

ஒரு நண்பர் முகநூலில் பதிவிடுகிறார்: ‘தமிழ்நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டு, வீடுகளும் பொதுச்சொத்துகளும் அழிந்து போனால் நமக்கு என்ன பதை பதைப்பு ஏற்படுமோ, அப்படியான பதைபதைப்புதான் இன்றைய தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது சனநாயகத்தின்மீது நம்பிக்கைகொண்ட ஒருவனாக எனக்கு ஏற்படுகிறது.” இது சரியான, ஏற்றுக்கொள்ளக்கூடிய பொதுவான உணர்வுதான்.

மாற்றம்என்ற ஒற்றை வார்த்தையைத் திரும்பத் திரும்பக் கூறி மக்கள் மனத்தில் பதிய வைத்தார்கள். ‘மாற்றம் வேண்டும்என்று கூறுபவர்களுக்கு, ‘அந்த மாற்றம் என்ன?’ என்ற அடிப்படைத் தெளிவுகூட தெரியவில்லை. அவர்களிடம் அது குறித்த சிந்தனைகள், செயல்பாடுகள் இல்லை. போகிற வாக்கில், பொத்தாம் பொதுவாக வாரிசு அரசியல், ஊழல், சட்டம்-ஒழுங்கு சரியில்லை, பெண்களுக்குப் பாதுகாப்பு  இல்லை எனத் தொடர் பிரச்சாரங்களை வைத்தார்கள். தமிழ்நாடு பிரதமர் மோடியின் மதுராந்தகப் பிரச்சார மேடையில் இருந்தோரில் பாதிக்கும் மேற்பட்டோர் (அன்புமணி ராமதாஸ், ஜி.கே. வாசன், பியூஸ் கோயல்) வாரிசு அரசியல்வாதிகள் என்பதில் மிகையில்லை.

1976-இல் தி.மு.. மீது 28  ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க சர்க்காரியா விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ‘2ஜிஅலைக்கற்றை விவகாரத்தில் ரூபாய் 1.76 இலட்சம் கோடி அரசுக்கு இழப்பு என 2010-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு, . ராஜா, கனிமொழி கைது என நீண்டது. முடிவில் சர்க்காரியாவும், நீதிபதி .வி. ஷைனியும்குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லைஎனத் தீர்ப்பு எழுதினர். இந்தியாவிலேயே பா...வுக்குப் பெருந் தலைவலியாக உள்ள தி.மு..வை மோடி, அமித்ஷா ஆகியோர் ஊழல்வாதிகள் என்கிறார்கள். விசாரணை அமைப்புகளைக் கையில் வைத்துள்ள பா... பேசுவதோடு சரி, செயலில் எதுவும் செய்வதில்லை.

சட்டம்-ஒழுங்கு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், போதைப்பொருள் நடமாட்டம், உபயோகித்தல் என்பதில் பா... ஆளும் 16  மாநிலங்களைவிட தமிழ்நாடு குறைந்த நிலையில் உள்ளது. இதை ஒன்றிய  அரசின் புள்ளி விவரங்களிலிருந்து அறியலாம். இது குறித்த பொது விவாதத்திற்கு யாரும் வரமாட்டார்கள். போகிற போக்கில் அடிப்படை ஆதாரமற்ற விவரங்களை வாரி விடுவார்கள். தி.மு.. கூட்டணிக்கு எதிராக இருந்த ஐந்து அணிகளும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கட்டுக் கதையைத் தேர்தல் களத்தில் பிரதிபலித்தார்கள்.

தமிழ்நாடு தனிநபர் வருவாய், வாழ்க்கைத் தர உயர்வு, தொழில் வளர்ச்சி, மருத்துவக் கட்டமைப்பு, பள்ளிக்கல்வி உயர்வு, உயர்கல்வி வளர்ச்சி என்பதில் வளர்ந்த நாடுகளுக்கு இணையான வளர்ச்சி திட்டமிட்டு மறைக்கப்பட்டது. மத நல்லிணக்கம், சமூக நல்லிணக்கம் என்பதில் அடங்கிய பொது அமைதி மறைக்கப்பட்டது. ‘மாற்றம்என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். தன் சித்து விளையாட்டைத் தமிழ்நாட்டில் நடத்திவிட்டது.

நடிகர் விஜய் அவர்களுக்கு வாக்களித்த பலரின் பதில் இவ்வாறாக இருந்தது:  “இவர்களே மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமாஒரு புதியவருக்கு வாக்களித்து, வாய்ப்பளித்துப் பார்ப்போம்என்கின்றனர்.

ஆட்சி அதிகாரம் என்பது சோதனை ஓட்டம் என்பதாக அவர்களின் சிந்தனை இருக்கிறது. விலைமதிப்பில்லாத வாக்கின் அருமை தெரியவில்லை. தங்கள் பிள்ளைகளைப் போலவே, பெற்றோரும் விளையாட்டுப் பிள்ளைகளாக இருக்கிறார்கள். வேட்பாளர் பெயர், ஊர், பின்னணி தெரியாது; குற்றப் பின்னணியில் .தி.மு.. கட்சிக்கு அடுத்த நிலையில் .வெ.. கட்சி வேட்பாளர்கள் இருப்பதாகத் தேர்தல் ஆணையப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளில் வாய்ப்பு கிடைக்காதவர்கள் 108 பேர் இக்கட்சியில்திடீர்வேட்பாளரானதும் காலக் கொடுமை!

தேர்தல் முடிவுகளில் சென்னை உள்பட்ட பெருநகரங்களில் .வெ.. கட்சி சிறப்பான வெற்றி பெற்றுள்ளது. கிராமப்புறத் தொகுதிகளை உள்ளடக்கிய தொகுதிகளில் தி.மு.. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. உதாரணமாக, திருப்பூர் தெற்கில் நகர்ப்புற வாக்காளர்களால் .வெ.. கட்சி ஏறக்குறைய 14,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறது. மாறாக, கிராமப்புற வாக்காளர்கள் அதிகமுள்ள திருப்பூர் வடக்கில் இக்கட்சி ஏறக்குறைய 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிகொள்கிறது. .தி.மு..வின் அசைக்க முடியாத கோட்டை செல்வி ஜெயலலிதா அவர்களும் சில  நேரங்களில் நிற்க நினைத்த வெற்றி வாய்ப்புள்ள தொகுதியில் .தி.மு. இன்று தோற்கிறது.

எந்த அலையும் வீசாத தேர்தல் என்றாலும், வாக்காளர்கள் மனநிலைமாற்றிப் பார்ப்போம்என்ற மாயநிலையில், சினிமா மோகத்தில் இருந்தது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தமிழ்நாட்டு மக்களின் தனித்த பண்பாட்டையும், சமத்துவ சமதர்ம கோட்பாட்டையும், ‘எல்லாம் அனைவருக்கும்என்ற சிந்தனையையும், மழுங்கடிக்கப் போட்ட செயல்திட்டம் பாதியளவு நிறைவேறிவிட்டது. அறிவார்ந்த சிந்தனைகளுக்குத் தேவை இல்லை. ஆக்கப்பூர்வமான விவாதங்கள் வேண்டவே வேண்டாம். கொள்கை, கோட்பாடுகள், சித்தாந்தங்கள், செயல்திட்டங்கள் எதுவுமில்லை. ஆளுமை வழிபாடு, தனிநபர் துதிபாடல், பிம்ப அரசியல், ஆர்ப்பரிப்புகள், குழு  மனப்பான்மை கொண்டாட்டங்கள் எனத் தொடர்ந்த தேர்தல் திருவிழா இது. தேர்தல் களத்தில் .வெ.. கட்சியினர் ஆடிய ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்கள் இப்புதிய முதல்வரின் ஆட்சியிலும்  தொடருமா என்பதே நம் கேள்வி.