(சென்ற வார தொடர்ச்சி)
திருத்தந்தையும் உரோமைத்
தலைமைச் செயலகமும்
அனைத்து
நம்பிக்கையாளர்களின் கூட்டியக்கம், ஆயர்களின் குழுமப் பண்பு என்பன ஆக்கம்பெற திருத்தந்தையின்
முதன்மை அவசியம். இதனால் “கூட்டியக்கம், குழுமப் பண்பு, முதன்மை என்பன ஒன்றுடன் ஒன்று
தொடர்புடையன” (முஅ 13a). அனைத்துக்
கிறித்தவர்களின் ஒன்றிப்பை வளர்ப்பது திருத்தந்தையின் பணியினுடைய இன்றியமையாத ஒரு கூறு.
திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் வெளியிட்ட ‘அவர்கள் ஒன்றாய் இருக்க’ எனும் சுற்றுமடலில் அவர் விடுத்த அழைப்பிற்குப் பெறப்பட்ட
பதில்களும், கிறித்தவ ஒன்றிப்பு உரையாடல்களில் எட்டப்பட்ட முடிவுகளும் திருத்தந்தையின்
முதன்மை, ஆயர்களின் குழுமப் பண்பு, அனைத்து நம்பிக்கையாளர்களின் கூட்டியக்கம் என்பனவற்றையும்,
அவற்றிற்கு இடையே உள்ள உறவையும் பற்றிய பொதுவான புரிதலை உருவாக்க உதவக்கூடியவை.
உரோமைத்
தலைமைச் செயலகத்தின் சீரமைப்பு, கத்தோலிக்கத் திரு அவையின் கூட்டியக்கப் பயணத்திற்கு
இன்றியமையாதது. அது திருத்தந்தைக்கும் ஆயர்களுக்கும் குறுக்கே நிற்பது அல்ல; மாறாக,
அது இருவரும் தங்களுக்கே உரிய பணிகளை ஆற்ற உதவுவது ஆகும். அது ஒன்றித்த வாழ்வையும்,
நலமான அதிகாரப் பரவலாக்கலையும் வளர்க்க வேண்டும். உரோமைப் பேராயங்கள் தலத்திரு அவைகளுடனும்
தங்களுக்கு இடையிலும் உள்ள உறவை மேம்படுத்துவதும்
அவசியம்.
செயல்படுத்தச் சில பரிந்துரைகள்
1.
பின்வருவனவற்றின் இறையியல் அடிப்படையும் சட்ட வரையறைகளும் தெளிவுபடுத்தப்பட வேண்டும்;
அ. ஆயர் பொறுப்பைப் பகிர்தல் மற்றும் கூட்டுப்பொறுப்பு என்பவற்றின் அளவும் வகைகளும்;
ஆ. ஆயர்களது குழுமப் பண்பிற்கும் அவர்கள் தங்கள் இறையியல் மற்றும் அருள்பணிசார்ந்த
மாற்றுக்கருத்துகளை வெளியிடுதல் என்பனவற்றிற்கும் இடையிலான தொடர்பு; இ. இளையோரையும்
வலுவற்றோரையும் பாதுகாக்கவும், அத்தகையோர் மீதான சீண்டல்கள் பற்றி நீதிமுறையிலான நடவடிக்கைகளை
மேற்கொள்ளவும் மற்றொரு தனிக்குழுவைத் திரு அவைச் சட்டப்படி ஏற்படுத்துவது பொருத்தமானதாக
இருக்கும்.
2.
தணிக்கைப் பண்பாடு என்பது கூட்டுப்பொறுப்பை வளர்க்கவும், முறைகேடுகளைத் தடுக்கவும்
உதவுவது. இது கூட்டியக்கத் திரு அவைக்கு இன்றியமையாதது. இதனால் ஆயர் பணியின் செயலாக்கத்தையும்
குறிப்பாக, அதிகாரத்தை அவர் கையாளும் முறை, மறைமாவட்டச் சொத்துகளைச் சார்ந்த அவரது
பொருளாதார நிர்வாகம், பங்கேற்பு அமைப்புகளின் செயல்பாடு, பல்வகை முறைகேடுகளைத் தடுத்தல்
என்பனவற்றையும் அவ்வப்போது மதிப்பீட்டாய்வு செய்வதற்கான அமைப்புகளும் செயல்முறைகளும்
வரையறுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
3.
ஆயர் பேரவை, மறைமாவட்ட அருள்பணிப் பேரவை என்பனவற்றைக் கட்டாயமாக்குவதும், மறைமாவட்டப்
பங்கேற்பு அமைப்புகள் தங்களது கூட்டுப்பொறுப்பை அதிக நன்முறையில் செயல்படுத்துவதும்
உறுதி செய்யப்படவேண்டும். தேவைப்படின் இது சட்டமுறையானது என ஆக்கப்படலாம்.
4.
ஆயர் பணிக்கான ஆள்களைத் தேர்வு செய்யும் முறையில் திருத்தந்தையின் தூதுவரின் அதிகாரமும்,
ஆயர் பேரவையின் பங்கேற்பும் சமன் செய்யப்படவேண்டும். மேலும், அப்பணிக்கெனத் தேர்வு
செய்யப்படுவதற்கு ஒருவரிடம் இருக்கவேண்டிய
தகுதிக் கூறுகளை மறு ஆய்வு செய்தல் அவசியம்.
அதற்கான கலந்தாய்வில் இன்னும் அதிக எண்ணிக்கையில் பொதுநிலையினரையும் துறவியரையும்
ஈடுபடுத்தும் வகையில் அதை விரிவாக்கம் செய்யவும்வேண்டும்.
5.
சகோதர உறவு, ஒன்றிற்கு ஒன்று ஆதரவு, வெளிப்படைத்தன்மை, பரந்துபட்ட கலந்துரையாடல் என்பனவற்றின்
வழியாகப் பல்வேறு நிலப்பகுதிகளில் உள்ள திரு அவைகளின் குழுமப் பண்பு வெளிப்படுகிறது.
அதனை உறுதிசெய்யும் வகையில் உயர் மறைமாவட்டம்
மற்றும் மாநில அளவிலான அமைப்புகளின் செயல்பாட்டை
மறு ஆய்வு செய்வது, அவற்றை வலுப்படுத்துவது அவசியம்.
6.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் ஆயர்களின் உரோமை வருகை (Ad Limina Visit)
தலத்திரு அவைகளின் ஆயர்களுக்கும் உரோமை ஆயருக்கும் அவருடன் நெருங்கி ஒத்துழைக்கும்
வத்திக்கான் தலைமைச் செயலகத்திற்கும் உள்ள உறவின் உச்ச நிகழ்வாகும். “ஒன்றிப்புறவையும்
குழுமப் பண்பையும் கூட்டியக்கத்தின் உண்மையான செயலாக்கத்தையும் வளர்க்கும் வகையில்
ஒருவர் ஒருவருடனான திறந்த பரிமாற்றத்திற்கு வாய்ப்பாக அது திகழும் நோக்கில், அதன் நடைமுறை
மறு ஆய்வு செய்யப்படவேண்டும்” (முஅ 13g).
7.
உரோமைத் தலைமைச் செயலகப் பேராயங்கள் திரு அவையின் கூட்டியக்கப் பண்பைக் கருத்தில் கொண்டு
ஆயர்களுடன் கலந்துரையாடலை வளர்க்கவேண்டும். சூழமைவுகளின் பன்மைநிலையைக் கவனத்தில் கொண்டு
தலத்திரு அவைகளின் குரல்களை அவை இன்னும் அதிகக் கருத்துடன் கேட்க வேண்டும் (முஅ 13h).
8.
திருத்தந்தையின் பணிக்கு உதவுகின்ற வகையில் கர்தினால்களின் ஆலோசனைக் குழுவின் செயல்பாடு
கூட்டியியக்க உணர்வுடன் வலுவாக்கப்படவேண்டும் (முஅ 13j).
9.
ஆயர் பேரவைகளின் கோட்பாடு மற்றும் விதிமுறை சார்ந்த அதிகாரத்தைத் தெளிவாக வரையறுத்தல்
அவசியம். ஒரே நம்பிக்கையின் உண்மையான படிப்பினையைத் தத்தம் சூழமைவுக்குப் பொருத்தமானதும்
பண்பாட்டுக்கு ஏற்றதுமான முறையிலும் வெளிப்படுத்தும் திருவழிபாடு, மறைக்கல்வி, விதிமுறைகள்,
அருள்பணி இறையியல், அருள்வாழ்வு என்பனவற்றின் வடிவங்களைக் கண்டறிய அவற்றின் குழுமச்
செயல்பாடு உதவ முடியும் (2-ஆம் வத். நற்செய்திப் பணி 22).
10. ஆயர் பேரவைகளால் எடுக்கப்பட்ட முடிவுகளை ஒவ்வோர் ஆயரும் தமது மறைமாவட்டத்தில் நடைமுறைப்படுத்துவது உறுதிசெய்யப்பட வேண்டும்.
(தொடரும்)
‘ஏழைகளுக்கு முன்னுரிமை’ அல்லது ‘ஏழைகள் மட்டில் தனிப்பட்ட அக்கறை’ என்ற சொல்லாடல் கொலம்பியா நாட்டில் உள்ள மெடலினில் (1968), பின்பு மெக்சிகோ நாட்டு ‘புவேப்லா’ நகரில் (1979) நடந்த இலத்தீன் அமெரிக்க ஆயர்கள் பேரவை கூட்டங்களில் பிறந்தது. விடுதலை இறையியலின் மையக் கருத்து இப்பேரவைகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்பு திரு அவைப் படிப்பினையிலும் இது அதிகாரப்பூர்வமாக இடம்பெற்றது.
ஏழைகளுக்கு
முன்னுரிமை என்பது, மற்றவர்களை ஒதுக்குவதல்ல; மாறாக, கடவுளின் இதயத்தில் சமுதாயத்தால் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டவர்களுக்கு ஒரு சிறப்பான இடம் உண்டு என்பதுதான் இதன் பொருள்.
பழைய
ஏற்பாட்டில் கடவுள் ஏழைகளின் கூக்குரலைக் கேட்டு அவர்களை விடுவிப்பவராகத் தம்மை வெளிப்படுத்துகிறார். கடவுளின் இச்செயலே அவரது பெயர்போல ஆனது. “இந்த ஏழை கூவி அழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; எல்லா நெருக்கடியினின்றும் அவர் அவனை விடுவித்துக் காத்தார்”
(திபா 34:6).
ஏழைகளின்
புகலிடம் கடவுள். குறிப்பாக, இறைவாக்கினர்கள் ஆமோஸ், எசாயா வழியாக ஏழைகளுக்கும் பலவீனர்களுக்கும்
எதிராக இழைக்கப்படும் அநீதிகளைக் கடவுள் மிகவே கடிந்து கொள்கிறார். ஏழைகளை ஒடுக்குபவர்கள் கடவுளுக்கு ஏற்புடைய வழிபாடு செய்ய இயலாது என்கிறார்கள் இறைவாக்கினர்கள்.
இயேசு - ஓர்
ஏழை
மெசியா!
கடவுள்
ஏழைகளின் சார்பானவர் என்பது நாசரேத்தூர் மெசியாவில் நிறைவு பெறுகிறது. இயேசு ஏழைகளுக்குச் சார்பானவர் மட்டுமல்லர்; ஏழைகளது வாழ்வைப் பகிர்ந்துகொண்டு, ஏழையாகவே வாழ்ந்தவர்.
இயேசு
மனுவுருவானதில் தம்மை ஏழையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று, மனித உருவில் தோன்றியவர் (பிலிப் 2:7). அவரின் ஏழ்மை ஆழமானது, வேரோட்டமானது. இந்த ஏழ்மையின் வழி தந்தையின் நிபந்தனையற்ற அன்பை அவர் நமக்கு வெளிப்படுத்தினார் (1யோவா 4:9). இவ்வாறு அவரது ஏழ்மையில் நாம் செல்வராகும்படிச் செய்தார் (2கொரி 8:9).
இயேசு
பிறப்பதற்குச் சத்திரத்தில் இடம் கிடைக்கவில்லை (லூக் 2:7). அவரைக் காப்பாற்ற அவரது பெற்றோர் எகிப்துக்கு ஓட வேண்டியதிருந்தது (மத் 2:13-15). நாசரேத்து தொழுகைக் கூடத்தில் தமது பணித்திட்டத்தை அறிவித்தபோதே அவர் புறக்கணிக்கப்பட்டு, ஊருக்கு வெளியே துரத்தப்பட்டார் (லூக்கா 4:14-30).
இயேசு
எளிய கைவினையராகத் தச்சுத் தொழில் செய்தார் (மாற் 6:3). அவர் கோவிலில் அர்ப்பணிக்கப்பட்டபோது, ஏழைகளின் காணிக்கையான இரண்டு மாடப்புறாக்களை அவரின் பெற்றோர் கொடுத்தனர் (லூக் 2:22-24). அவருக்குத் தலைசாய்க்க இடமின்றி, நாடோடிப் போதகராக வாழ்ந்தார் (மத் 8:20; லூக் 9:58).
இறுதியாக,
சமூகத்தால் நிராகரிக்கப்பட்டு, எருசலேம் நகருக்கு வெளியே எல்லாராலும் கைவிடப்பட்ட ஏழையைப்போல, சிலுவையில் அறையப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவ்வாறு இயேசு ஓர் ஏழை மெசியாவாக வாழ்ந்தவர் மட்டுமல்லர், ஏழைகளுக்காக வாழ்ந்த மெசியாவும் கூட. திரு அவை இயேசுவைப் போல (பேறுபெற்ற) ஏழைகளின் திரு அவை!
இன்று
பல ஏழைகள் பிச்சையெடுத்து வாழ நிர்ப்பந்தப்படுத்தப்படுகிறார்கள்.
இது ஒரு சமூக அவமானம். ஏழ்மையும் வியாதியும் பாவத்தின் விளைவு என்பதை இயேசு மறுக்கிறார்.
ஏழைகளுக்குக்
கடவுள் முன்னுரிமை கொடுப்பதை, அவர்களுக்குத் தனிப்பட்ட அக்கறை காட்டுவதைத் திருவிவிலியம் மிகத் தெளிவாகக் எடுத்துரைக்கிறது. ‘ஆனால், ஏன் அநேகர் இதைப் புரிந்துகொள்ளாமல் புறக்கணிக்கிறார்கள்?’ என்ற கேள்வியை எழுப்புகிறார் திருத்தந்தை லியோ.
இணைச்சட்டம்
6:5 என்பது பழைய ஏற்பாட்டு நம்பிக்கை அறிக்கை. இதன் விளக்கத்தை லேவியர் 19:18 பகுதியைக் கொண்டு இயேசு விளக்குகிறார். ‘கடவுள் மீதுள்ள நம்பிக்கை என்பதன் பொருள், அடுத்திருப்பவர் மீது அன்புகூர்வது’ (மாற்கு
12:29-31) என்கிறார்.
இறை-மனித அன்பு என்பதை ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரிக்க முடியாது (Inseparable). ஆனால்,
ஒவ்வொன்றும் தனித்துவமானது (மத் 25:40).
பிறருக்கு
விருந்து கொடுக்கும்போது, கைம்மாறு செய்ய தங்களிடம் ஒன்றுமில்லாத ஏழைகள் உடல் - கால் ஊனமுற்றோர், பார்வையற்றோரை அழைத்தால் விருந்து கொடுப்பவருக்குக் கைம்மாறு கிடைக்கும் (லூக் 14:12-14). இத்தகையவர்களைப் ‘பேறுபெற்றோர்’ என்கிறார்
இயேசு.
மக்கள்
அனைவருக்குமான தீர்ப்பிலும் (மத் 25: 31-46) ‘என் தந்தையின் ஆசி பெற்றவர்களே!’ என இத்தகையவர்களை அரசர்
விளிக்கிறார் (மத் 25:34).
இது
நம் கவனத்திற்குரியது. எந்த விளக்கமும் தேவைப்படாத தெளிவான புரிதல் இது. எந்தப் புனிதமும் இதைத் தவிர்த்துப் புரிந்துகொள்ள முடியாது.
அன்பு
செயலற்ற நம்பிக்கை, செத்த நம்பிக்கை என்கிறார் யாக்கோபு (2:14-17). ஏழைத் தொழிலாளிக்குக் கொடுக்காத கூலி கடவுளை நோக்கிக் கூக்குரலிடுகிறது (யாக் 5:3-5).
‘தேவையில் உழல்வதைக் கண்டு பரிவு காட்டாதவரிடம் கடவுளின் அன்பு எப்படி நிலைத்திருக்க முடியும்?’ எனக் கேட்கிறார் அன்புச் சீடர் யோவான் (1யோவா 3:17).
“முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர்”
(2கொரி 9:7) என்கிறார் பவுல்.
“ஏழைகளுக்கு இரங்கி உதவி செய்கிறவர், ஆண்டவருக்குக் கடன் கொடுக்கிறார். அவர் ஏழைகளுக்குக் கொடுத்ததை ஆண்டவர் திருப்பித் தந்து விடுவார்”
(நீமொ 19:17). “நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்” (லூக்
6:38).
உண்மையிலேயே திருவருகைக் காலம் அருள்மிகு காலம். கிறிஸ்து பிறப்பு விழாவை மிகவும் அர்த்தமுள்ள வகையில் கொண்டாடிட இந்தத் திருவருகைக் காலம் உதவியாக இருக்கிறது. இயேசு கிறிஸ்துவின் வழியாக அருளும் உண்மையும் நமக்கு வழங்கப்பட்டன (யோவா 1:16-17). மேலும், மானிட மகனின் இரண்டாம் வருகையை நமக்கு நினைவுபடுத்துகின்ற காலமாகவும் இருக்கின்றது. ‘வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார்’ என்ற மாபெரும் நிகழ்வைக் கிறிஸ்து பிறப்பு விழாவாகக் கொண்டாட இருக்கிறோம்.
திருவருகைக்
காலத்தின் நான்கு வாரங்களையும் ‘எதிர்நோக்கு, அமைதி, மகிழ்ச்சி, அன்பு’ எனும் கருப்பொருள்களால் அணிசெய்து, இக்காலத்தின் ஆழமான பொருளுக்குத் திரு அவை நம்மை அழைத்துச்செல்கிறது. டிசம்பர் 17-லிருந்து கிறிஸ்து பிறப்பு விழாவின் நவநாள்களைத் தொடங்குகின்றோம். இந்த நவநாள்களிலே இயேசுவின் பிறப்போடு நெருக்கமாக இருக்கின்ற நிகழ்வுகளை நற்செய்தியாகத் திருவிருந்து கொண்டாட்டங்களிலே திரு அவை நமக்கு வழங்குகின்றது.
அன்னை
மரியாவை இந்த நாள்களிலே நினைத்துப் பெருமைப்படுகின்றோம். இயேசுவின் வளர்ப்புத் தந்தை யோசேப்பையும், இறைவனுடைய திருவுளத்தை நிறைவேற்றிய அவருடைய அர்ப்பண வாழ்வையும் நினைவு கூர்கின்றோம். இயேசுவின் வழியாகத் தொடர்ந்து நிகழ்ந்திடும் மீட்பின் வரலாற்றிலே இவர்கள் எவ்வளவு முக்கியமான பங்களித்திருக்கிறார்கள் என்பதை நினைத்து ஆண்டவருக்கு நன்றிகூறி, அவர்களோடு இணைந்து கிறிஸ்துவின் பிறப்பிற்காக நம்மையே தயாரித்துக் கொண்டிருக்கிறோம்.
மீட்பின்
வரலாற்றிலே பெண்களின் பங்களிப்பை இன்னும் குறிப்பாக, கன்னிமை குன்றாத நிலையிலே கடவுளின் தாயாக மரியா வாழ்ந்திட அழைக்கப்பட்டதால் அவரும், அவருடைய துணைவருமான யோசேப்பும் அனுபவித்த அவமானங்கள், அவதூறுகள், வேதனைகள், தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு ஓரங்கட்டப்பட்ட அனுபவங்கள் போன்றவற்றை நினைவுகூரப் பெரும்பாலும் தவறி விடுகின்றோம். இயேசுவின் மனுவுரு எடுத்தலின் இந்த இரண்டு முக்கியச் சவால்களையும் பார்வைகளையும் நாம் சிந்திக்க அழைக்கப்படுகிறோம்.
மீட்பின் வரலாற்றில்
இடம்பெறும்
பெண்கள்
லூக்கா
நற்செய்தியில் இயேசுவினுடைய தலைமுறைப் பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கிறது
(3:22-38). இது முழுக்க ‘ஆண் மையம்’ நிறைந்த ஒன்றாக இருக்கிறது. ஆனால், மத்தேயு நற்செய்தியில் கொடுக்கப்பட்டுள்ள தலைமுறைப் பட்டியலிலே (1:1-16) தாமார், இராகாபு, உரியாவின் மனைவி பத்சேபா, ரூத், மரியா போன்ற ஐந்து பெண்கள் இடம் பெறுகிறார்கள். இவர்களில் தாமாரும் மரியாவும்தான் இஸ்ரயேல் இனத்தைச் சார்ந்தவர்கள். மாறாக, இராகாபு (கனானியப் பெண்), பத்சேபா (இத்தியப் பெண்), ரூத் (மோவாபியப் பெண்) இவர்கள் எல்லாரும் இஸ்ரயேல் இனத்தைச் சாராத பிற இனத்துப் பெண்களாக உள்ளனர். இப்பெண்களும் இந்தத் தலைமுறைப் பட்டியலில் இடம்பெற்றிருப்பது, வரவிருக்கின்ற மீட்பராகிய இயேசு எல்லாருக்கும் மீட்பர் என்பதை அறிவிப்பதாக இருக்கின்றது.
இயேசு
யூதர்களுக்காக மட்டும் அனுப்பப்பட்டவர் அல்லர்; அவருடைய பிறப்பானது எல்லா மக்களையும் இனங்களையும் நாடுகளையும் அரவணைக்கின்ற பிறப்பாக அமையப்போகின்றது என்பதற்கு முன்னடையாளமே இஸ்ரயேல் அல்லாத பெண்களும் இயேசுவின் தலைமுறைப் பட்டியலில் இடம் பெற்றிருப்பது.
தாழ்த்தப்பட்டோரை
உயர்த்திடும்
இயேசுவின்
தலைமுறைப்
பட்டியல்
மத்தேயுவின்
தலைமுறைப் பட்டியலிலே பதிவு செய்யப்பட்டுள்ள ஐந்து பெண்களும் இஸ்ரயேல் சமுதாயத்திலே தரக்குறைவாகப் பார்க்கப்பட்டவர்கள்.
• யூதாவின் மருமகளான தாமார், யூதாவின் வம்சாவளியில் வாழ்வதற்குத் தனக்கு உரிமை இருக்கின்றது என்பதை நிரூபிக்க தன் மாமனார் யூதாவோடு உடலுறவு கொண்டு குழந்தை
பெற்றெடுத்தார்.
• இராகாபு எனும் பெண்மணி விலைமாதாக இருந்தார். ஆனால், எரிக்கோவை வேவுபார்க்கச் சென்ற இஸ்ரயேலரை இவர் காப்பாற்றியதால் இன்று இஸ்ரயேல் சமுதாயத்திலும் இறைவனால்
போற்றப்படுகின்ற பெண்மணியாகின்றார்.
• பத்சேபா எனும் இத்திய இனப்பெண் தாவீதின் காமவேட்கைக்கு முதலில் பலியானாலும், பிறகு முறையாகத் தாவீது அரசனின் மனைவியாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர். சாலமோனைப் பெற்றெடுக்கும் பேறுபெறுகின்றார்.
• மோவாபு நாட்டைச் சேர்ந்த ரூத் என்பவர் இஸ்ரயேலரான போவாசின் மனைவியாகி இஸ்ரயேல் குடிமகளாக மாறுகின்றார்.
• திருமணம் ஆவதற்கு முன்பே கருவுற்றிருந்ததால் மரியாவும் மரியாதை குறைவாகப் பார்க்கப்பட்ட பெண்மணி ஆவார்.
இப்படிப்பட்டப்
பெண்மணிகளை மூதாதையர் தலைமுறைப் பட்டியலிலே இணைத்திருப்பது யூதச் சமுதாயத்திற்கு வியப்பாகவும் இடறலாகவும் இருந்திருக்கும். ஆனால், அடக்குமுறைப் பார்வையோடும் அவமானப்படுத்தும் பார்வையோடும் செயல்படும் தூய்மை-தீட்டு எனும் கருத்தியலை உள்வாங்கிய யூதச் சமுதாயத்திற்கு இது ஒரு சவால்.
மீட்பின்
வரலாற்றிலே பெண்களும் குறிப்பாக, ஒடுக்கப்பட்ட பெண்களும் முன்னிலைப்படுத்தப்படுவது, எல்லாரும் சமத்துவத்திலும் மாண்பிலும் சகோதரத்துவத்திலும் வாழ்ந்திட அழைக்கப்பட்ட சமுதாயத்தினர் என்பதை உறுதி செய்வதாக உள்ளது.
அன்னை மரியா
அனுபவித்த
அவமானம்
இஸ்ரயேலின்
சமய-பண்பாட்டு பின்புலத்தில் திருமண ஒப்பந்தம் என்பது சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. ஏன், திருமணத்திற்கு இணையாகவே பார்க்கப்பட்டது. இவ்வாறு திருமண ஒப்பந்தத்திற்கு உள்ளாகி இருக்கும் ஒரு பெண் திருமணத்திற்கு முன்பாகவே அவருக்கு ஒப்பந்தமாக இருந்த ஒருவரோடோ அல்லது வேறு வழியிலோ அவர் கருவுற்றிருந்தால் அது விபச்சாரமாகப் பார்க்கப்பட்டது. இதற்காக அப்பெண்ணைக் கல்லால் எறிந்து கொல்லக்கூடிய ஒழுங்குமுறையையும் இஸ்ரயேல் சமுதாயம் பின்பற்றியது.
மரியா
எலிசபெத்தோடு மூன்று மாதங்கள் தங்கி விட்டு வீடு திரும்பியதாக லூக்கா நற்செய்தியாளர் பதிவு செய்கிறார் (1:56). தூய ஆவியாரின் வல்லமையால் கடவுளின் தாயாகும் நற்செய்தியைக் கபிரியேல் தூதர் மரியாவுக்கு அறிவித்த நாளிலிருந்தே இயேசுவைக் கருத்தாங்கினார்.
திருமணத்திற்கு
முன்பே மரியா கருவுற்று இருப்பதைக் கண்ட நாசரேத் ஊர் மக்கள் கட்டாயம் அன்னை மரியாவை மிகவும் கேவலமாகப் பார்த்து, அவர்மேல் அவதூறு கூறி... ஏன் அவரைக் கல்லால் எரிந்து கொல்வதற்கும் முயன்றிருப்பார்கள். அவதூறு, அவமானம், மிகவும் தரக்குறைவாகப் பார்த்த பார்வைகள், சமூக ஒதுக்குமுறை, அநியாயமான குற்றச்சாட்டு போன்றவற்றால் அன்னை மரியா சொல்லொண்ணா வேதனையையும் துயரத்தையும் அனுபவித்திருப்பார். ஆனால், கடவுளுடைய திருவுளத்தை நிறைவேற்றுவதற்காக இவற்றையெல்லாம் மிகவும் துணிவோடு அன்னை மரியா ஏற்றுக்கொண்டார். மரியா, என்று இயேசுவைத் தன்னுடைய கருவறையில் சுமக்கத் தொடங்கினாரோ, அன்றிலிருந்து இயேசுவோடு இணைந்த அவரது கல்வாரிப் பயணமும் தொடங்கிவிட்டது.
மரியா-யோசேப்பின்
கல்வாரிப்
பயணம்
திருமணத்திற்கு
முன்பே கருவுற்றிருக்கும் ஒரு பெண்ணைத் தன்னுடைய மனைவியாக ஏற்றுக்கொள்ள முன்வந்த யோசேப்புவையும் அந்த நாசரேத்தூரார் கட்டாயம் மிகவும் கேவலமாகப் பார்த்து, அவமானப்படுத்தி அவதூறு கூறியிருப்பார்கள். ஆனால், யோசேப்பும் இயேசுவினுடைய வளர்ப்புத் தந்தையாகத் தான் தேர்ந்தெடுக்கப்பட்டதை நன்றியோடு நினைவுகூர்ந்து, கடவுளுடைய திருவுளத்தை நிறைவேற்றிட மரியாவை மனைவியாக ஏற்றுக்கொள்வதோடு மட்டுமல்லாது, அவரை அன்போடு பாதுகாத்திட, வழிநடத்திட முன்வருகிறார்.
கடவுளின்
மகனுக்கு அன்னையாக மாறிட அழைப்பு வந்த நேரத்திலிருந்தும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாக வாழ அழைக்கப்பட்ட நேரத்திலிருந்தும் இயேசுவினுடைய சிலுவை வழியிலே நடக்க இருவரும் துணிந்திருக்கிறார்கள். துன்புறும் மெசியாவாக வாழப்போகின்ற இயேசுவோடு தங்களுடைய சிலுவைப் பயணத்தையும் முன்னெடுத்திட துணிச்சலோடும் நம்பிக்கையோடும் முன்வருகிறார்கள் மரியாவும் யோசேப்பும்.
நமது கவனத்தை
ஈர்க்க
வேண்டிய
திருப்பார்வைகள்
மீட்புத்
திட்டத்திலே பெண்களுக்கும் பங்கேற்பு உண்டு என்பதையும், கடவுள் மகனின் தாயாக வாழ அழைக்கப்பட்டதால், இயேசுவின் வளர்ப்புத் தந்தையாக வாழ தேர்ந்துகொள்ளப்பட்டதால் மரியாவும் யோசேப்பும் வேதனைகளையும் அவதூறுகளையும் அவமானங்களையும் சமூக ஒதுக்குமுறைகளையும் சந்தித்தனர் என்னும் இந்த இரண்டு பார்வைகளுமே இயேசுவின் மனுவுருவெடுத்தலில் இரண்டறக் கலந்த பார்வைகளாக உள்ளன.
• திருவருகைக் காலத்தில் இந்த இரண்டு பார்வைகளிலும் நாம் வளர்ந்தோமென்றால், கிறிஸ்து பிறப்பு விழா கொண்டாட்டமானது நாம் எல்லாரும் எதிர்நோக்கோடும் நம்பிக்கையிலும் துணிவோடும் நம் அன்னை மரியா-புனித யோசேப்பு இவர்களோடு பயணிக்க உதவியாக இருக்கும். கருவுற்றதிலிருந்து பலவகையான துன்பங்களையும் வேதனைகளையும்... ஏன் ஒருசில சமயங்களில் சமூக அவமான முத்திரை பதிக்கப்பட்ட நிலையில் வாழ்கின்ற பெண்களையும் மதிக்க நாம் அழைக்கப்படுகின்றோம்.
• இன்னும் குறிப்பாக, பேறுகால வேதனையுற்று ஓர் உயிரை இந்த உலகிற்குக் கொண்டுவரும் ஒவ்வொரு பெண்மணியையும் நாம் மதிப்போடும் மாண்போடும் நடத்துவோம்.
• ஒவ்வொரு கணவரும் தன்னுடைய மனைவியை ஏற்றுக்கொண்டு, மதிப்போடு நடத்தி, அவரோடு நம்பிக்கையுடன் பயணிக்க அன்னை மரியாவும், புனித யோசேப்பும் வழிகாட்டிகளாக இருக்கிறார்கள்.
• நம் வாழ்வில் அன்றாடம் சந்திக்கின்ற துன்பங்களையும் துயரங்களையும் போராட்டங்களையும் சிக்கல்களையும் மனுவுரு எடுத்த இயேசுவின் பயணத்தோடு இணைத்துக் கொண்டு, துணிவும் நம்பிக்கையும் நிறைந்த மரியாவோடும் யோசேப்போடும் தொடர்ந்து பயணிக்க அழைக்கப்படுகிறோம்.
இறுதியாக,
கடவுளுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதில் துன்பத்தைக் கண்ட மரியா-யோசேப்பு இவர்களுடைய பரிந்து பேசுதலிலே இந்த கிறிஸ்து பிறப்பு விழாவை அர்த்தமுள்ள வகையில் கொண்டாடிட தொடர்ந்து தயாரிப்போம்.
ஆன்மிகமும் அரசியலும்
காலத்தின்
வேகத்தில் எண்ணிம உலகின் மாயத்தில் இரண்டிற்கும் சற்று அலட்சியமாக மனிதன் பயணிக்க தொடங்கிவிட்டான் என்பதே இரு சொற்றொடர்களுக்கும் அச்சாணியாகத் திகழ்கிறது.
பனி
பொழிய, குளிர்காற்று சருமத்தை வருட அனைவர் மனத்திலும் ஒரு புத்துணர்ச்சி. பெரு மகிழ்ச்சி! காரணம், கிறிஸ்து பிறப்புக் கொண்டாட்டம். அதேவேளையில், சிலர் காலத்தைத் தனதாக்க, பலர் வேதனையை அனுபவிக்க நெருங்கி வந்து கொண்டிருக்கிறது தேர்தல்.
தித்திக்கும்
தேன்போல சிலருக்கு இனித்தாலும் ‘ஐயோ தெரிந்தே அரளிக்காயைச் சுவைப்பதா?’ என்பதுபோல் சிந்தனைகள் சிதறிக்கொண்டிருக்கின்றன. ஆக, கிறிஸ்து பிறப்புக் கொண்டாட்டம் தொடங்கியது என்று மகிழ்வதா? இல்லை,
வாக்காளர் பட்டியல் சிறப்புச் சீர்திருத்தம் கண்டு கலங்குவதா?
“வாக்கு மனிதரானார்” (யோவா
1:14) - இது கிறித்தவ இறையியலின் இதயத் துடிப்பு “மனிதன் வாக்கானான்!” - இது மனித அரசியலின் ஆழமான உண்மை.
“வாக்கு மனிதரானார், நம்மிடையே குடிகொண்டார்” என்ற
வரி கடவுள் நிலையான அன்பால் மனித வரலாற்றிற்குள் நுழைந்து அன்பு, மீட்பு, ஒற்றுமை ஆகியவற்றின் மூலம் சமூகத்தை மாற்றிய புரட்சியை ஆழமாக வெளிப்படுத்துகிறது. இது ஒரு சாதாரண அறிக்கை அல்ல; மனிதகுலத்தின் மதிப்பை உயர்த்தும் இறையியலின் அடிப்படை நோக்கம். ஆனால், இன்றைய உலகில் குறிப்பாக, அரசியல் வர்ணனையில் ‘வாக்கு’ வெற்றிக்கான ஓர் எண், ஒரு கணக்குத்தொகை, ஓர் அதிகாரக் கருவியாக மட்டுமே பார்க்கப்படுகிறது. ஒரே ஒரு வாக்கு என்பதில் ‘ஒரு மனிதன், ஓர் உயிர், ஒரு மதிப்பு’ என்பது மறந்துவிடப்படுகிறது. அதிகாரத்தைப் பிடிக்க, பகையை உருவாக்க வாக்கு பயன்படுகிறது.
“அரசியல் வாக்கு பகையின் கதவைத் திறக்கும் போது, இறைவனின் வாக்கு அமைதியின் கதவைத் திறக்கிறது.”
‘வாக்கு மனிதரானார்’- அன்பு
மனிதகுலத்தைக் காப்பாற்ற வந்தது; ஆனால், மனிதன் வாக்கின் அடிமையானான் - இன்று ஒரு நாள் வாக்கிற்காக மனிதன் தனது சுயமரியாதையையும் அடிப்படை மதிப்புகளையும் இழக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறான். புனிதமான பொறுப்பாக இருந்த வாக்கு, இன்று பல இடங்களில் சந்தைப்பொருளாக
மாறிவிட்டது என்பது சமூகத்தின் வேதனையான சாயல்.
ஆபிரகாம்
லிங்கன் எச்சரிப்பதுபோல, “ஒரு மனிதனின் வாக்கை விலைக்கு வாங்க முடிந்தால், அந்தச் சமூகத்தை அடிமைப்படுத்த முடியும்.” வாக்கு
ஒரு செல்வம்; அதைப் பாதுகாப்பது ஒவ்வொருவரின் புனிதக் கடமை. ஒரு காலத்தில் அரசியல் ஒரு தியாகமாக இருந்தது; ஆனால், இன்று அது பலருக்கும் முதலீடாக மாறிவருகிறது. முன்பு மக்கள் தங்கள் நலனுக்காகத் தலைவர்களை உருவாக்கினார்கள்; இன்று சிலர் தங்கள் நலனுக்காக வாக்காளர்களையே உருவாக்க முயல்கின்றனர். “நீ உனக்கான அரசியலைப்
பேசவில்லையெனில், நீ வெறுக்கும் அரசியலால்
ஆளப்படுவாய்” என்கிறார்
லெனின்.
நேற்று
வாக்கு ஓர் உண்மை; இன்று வாக்கு ஓர் உதவி! திருத்தந்தை பிரான்சிஸ் கூறுவது போல, “அரசியல் என்பது அன்பின் உயர்ந்த வடிவம்; அன்பு இல்லாத இடத்தில் அதிகாரம் அடக்குமுறையிலும் அடிமைத்தனத்திலும் மாறுகிறது.”
மனிதனைச்
சுதந்திரமாகப் படைத்த இறைவன், அந்தச் சுதந்திரத்தைப் பாதுகாக்க நமக்குக் கொடுத்த கருவிதான் வாக்கு. ஆனால், அதைத் தவறாகப் பயன்படுத்தும்போது, சுதந்திரமே சங்கிலிகளாகி விடுகிறது. ஆகவே,
நம்முடைய வாக்கின் புனிதத்தையும் பொறுப்பையும் விழிப்புடன் காக்க வேண்டும்.
வாக்கு
மனிதரானது - மனிதனை அடிமைத்தனத்திலிருந்து மீட்க; ஆனால், மனிதன் வாக்காகும்போது, தன்னைத்தானே மீண்டும் அடிமைத்தனத்திற்கு ஒப்படைக்கிறான்.
ஆகவே,
நடந்தவையாக இருக்கட்டும். இனிமேலும் நமக்குக் கொடுக்கப்பட்ட வாக்கை அறிவுடனும் ஆழ்ந்த பொறுப்புடனும் கையாள்வோம்.
புனிதத்துவத்தில் மரியாவைப் பாதுகாப்பதற்காக இளம்வயதில் அவருக்கு வழங்கப்பட்ட சிறப்புச் சலுகையானது நம்பிக்கை மற்றும் அன்பில் அவரின் மிகப்பெரும் வளர்ச்சியைக் காட்டுகின்றது.
1. அமல
உற்பவக் கோட்பாட்டு வரையறையானது அவர் ‘முதல் பாவத்திலிருந்து பாதுகாக்கப்பட்டதிலிருந்து’ மரியாவின்
தொடக்கக் காலம் பற்றி மட்டுமே நேரடியான அக்கறையோடு அணுகுகின்றது. இவ்வாறு, திருத்தந்தையின் ஆசிரியமானது பல நூற்றாண்டுகளாகப் பிரச்சினைக்குள்ளாகியிருந்த முதல் பாவத்திலிருந்து மரியா பாதுகாக்கப்பட்டது பற்றிய உண்மையை
மட்டுமே வரையறுக்க விரும்பியதேயன்றி, ஆண்டவருடைய கன்னித்தாயின் என்றென்றைக்குமான புனிதத்துவம் பற்றி வரையறுப்பதில் அக்கறை கொள்ளவில்லை.
இந்த
உண்மையானது கிறித்தவ மக்கள் மத்தியில் ஏற்கெனவே ஏற்றுக் கொள்ளப்பட்டதொன்றாக இருந்தது. இது மரியா முதல் பாவத்திலிருந்து விலக்கிவைக்கப்பட்டவராக
மட்டுமல்லாமல், சூழ்நிலை சார்ந்த பாவத்திலிருந்தும் பாதுகாக்கப்பட்டார். மேலும், இவரின் தொடக்கப் புனிதத்துவ வாழ்வு முழுவதையுமே புனிதத்துவத்தால் நிரப்புவதற்காக அவருக்குக் கொடுக்கப்பட்டது என்பதற்குச் சான்றுபகர்கிறது.
மரியாவிடம் பாவமோ, மற்ற
குறை
பாடோ
இருந்ததாகக்
கருத
முடியாது!
2. திரு
அவையானது மரியாவைப் புனிதை என்றும், பாவத்திலிருந்தும் ஒழுக்கக் குறைபாட்டிலிருந்தும் விடுவிக்கப்பட்டவர் என்றும் தொடர்ந்து கருதி வந்துள்ளது. இந்த ஆழமான நம்பிக்கையைத் திரிதெந்து திருச்சங்கமானது, “திரு அவையானது கன்னி மரியாவின் விசயத்தில் வைத்திருக்கின்ற நிலைப்பாட்டைப் போன்று, அவர் சிறப்பானதொரு சலுகையைப் பெற்றிருந்தாலன்றி, அவரின்
வாழ்வு முழுவதும், அது மன்னிக்கத்தக்க பாவமாக இருந்தாலன்றி, எல்லா பாவத்தையும் தவிர்க்க முடியாது”
என்ற கருத்தை வலியுறுத்தி
அதையே தனது நிலைப்பாடாக வெளிப்படுத்துகின்றது (DS 1573). கடவுளின்
அருளினால் உருமாற்றப்பட்டுப் புதுப்பிக்கப்பட்ட கிறித்தவன் கூட பாவம் செய்வதற்கான சந்தர்ப்ப சூழல்களிலிருந்து தப்பித்ததில்லை. திரிதெந்து திருச்சங்கம் கூறுகின்றவாறு, பாவத்திலிருந்து தடுக்கக்கூடிய அந்தச் சிறப்புப் பண்பு உறுதியளித்தாலன்றி, கடவுளின் அருளானது
ஒருவருடைய வாழ்வு முழுவதும் அவரின் எல்லாப் பாவங்களிலிருந்தும் அவரைப் பாதுகாக்காது. மரியாவைப் பொறுத்தவரை இதுதான் நிகழ்ந்தது.
திரிதெந்து
திருச்சங்கமானது இந்தச் சிறப்புச் சலுகையை வரையறுக்கவில்லை. ஆனால், திரு அவையானது அதைத் தெளிவாக உறுதிப்படுத்துவதாகக் கூறுகிறது. இதற்கு ‘Tenet’ என்ற இலத்தீன்
வார்த்தையைத் திருச்சங்கம் பயன்படுத்துகிறது. அதாவது, திருச்சங்கம் உறுதியாக இதை நம்புகிறது என்பதே இதன் பொருளாகும். இந்த உண்மையை வெறுமனே ஒரு பக்தி சார்ந்த நம்பிக்கை அல்லது கருத்து என்று புறக்கணிப்பதைத் தாண்டி, அதன் தன்மையை கடவுளுடைய மக்களின் நம்பிக்கையில் பொதிந்திருக்கின்ற ஓர் உறுதியான கோட்பாடாக உறுதிப்படுத்துகின்றது. மேலும்,
இந்த நிலைப்பாடு இயேசுவின் பிறப்பில் வானதூதரால் மரியாவுக்கு வழங்கப்பட்ட
அருளை அடிப்படையாகக் கொண்ட
ஒன்றாகும். “அருள் நிறைந்தவரே” (kecharitoméne)
என்று மரியாவை அழைப்பதன் வழியாக, வானதூதர் அவரை என்றைக்குமானதொரு நிறைவினாலும் புனிதத்துவத்தின் முழுமையினாலும் நிரப்பப்பட்ட, பாவத்தின் நிழலோ ஒழுக்க அல்லது ஆன்மிகக் குறைபாடோ இல்லாதவொரு பெண்ணாக அங்கீகரிக்கின்றார்.
3. மரியாவின்
முழுமையான புனிதத்துவம் பற்றி நிறைவில்லாத எண்ணங்களைக் கொண்ட அநேக ஆரம்பகாலத் திரு அவைத் தந்தையர்கள் (Fathers of the Church) முழுமையற்றத்தன்மையையும்
ஒழுக்கக் குறைபாடுகளையும் அவர் கொண்டிருந்ததாகக் கற்பித்தார்கள். இதே நிலைப்பாட்டை ஒருசில அண்மைக்காலத்து ஆசிரியர்களும் கொண்டிருந்தனர். இருப்பினும், மீட்பரின் தாய்க்குப் பாவத்தையோ அல்லது ஒழுக்கக் குறையையோ சுட்டிக்காட்டுவதற்கு அவர்கள் மேற்கோள்காட்டிய திருவிவிலிய வாசகங்கள் அவர்களின் கருத்துகளை நியாயப்படுத்துவதற்கான எந்தவோர் அடிப்படைக் காரணத்தையும் கொடுக்கவில்லை.
பன்னிரண்டு
வயதில் தமது தாய்க்கான இயேசுவின் பதில்: “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?” (லூக் 2:49). இயேசுவின் இக்கேள்வியானது சில வேளைகளில் மறைமுகமானதொரு கண்டனமாகவே விளக்கப்பட்டது. இருப்பினும்,
இந்த நிகழ்வு பற்றிய கவனமானதொரு வாசிப்பானது, இயேசுவின் தாயும் அவரின் வளர்ப்புத் தந்தையான யோசேப்புவும் அவரைத் தேடுவதற்கான கடமை அவர்களுக்கு இருந்ததால் அச்செயலுக்காக அவர் அவர்களைக் கண்டிக்கவில்லை.
கவலையோடு
கூடிய ஒரு தேடலுக்குப் பிறகு இயேசுவிடம் வந்த மரியா, அவரின் செயலைப்பற்றி ‘ஏன்?’ என்ற ஒரு கேள்வியை மட்டுமே கேட்கின்றார்: “மகனே, ஏன் இப்படிச் செய்தாய்?” (லூக் 2:48). இந்தக் கேள்விக்கு இயேசு தமது எதிர்ப்பையோ, கண்டனத்தையோ தெரிவிக்காமல், இறைமகன் என்பதன் மறைபொருளைச் சுட்டிக்காட்டி, ‘ஏன்?’ என்ற மற்றோர் எதிர் கேள்வியைத்தான் கேட்கின்றார்.
கானாவூர்
திருமண நிகழ்வில் அவர் பேசிய, “அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே!” (யோவா
2:4) என்கின்ற அவரின் வார்த்தைகளும் கண்டனத்திற்குரியவைகளாக விளக்கமளிக்கப்பட முடியாது. திராட்சை இரசம் தீர்ந்ததினால் மணமக்களுக்கு ஏற்பட்ட சிரமத்தைக் கண்டு மரியா எளிய உள்ளத்தோடும், அந்தப் பிரச்சினையை அவரிடம் ஒப்படைத்தும் இயேசுவிடம் பேசுகின்றார். ஒரு மீட்பர் என்கிற வகையில் தமது தந்தையின் விருப்பத்திற்கு மட்டுமே கீழ்ப்படிய வேண்டும் என்பதை அறிந்திருந்தும், அவருடைய தாயின் உள்ளார்ந்த வேண்டுதலை அவர் நிறைவேற்றுகின்றார். எல்லாவற்றிற்கும் மேலாக, கன்னி மரியாவின் நம்பிக்கையை அவர் நிறைவேற்றுகின்றார். இவ்வகையில் அவரின் மகிமையை வெளிப்படுத்தும் விதமாக, தமது முதல் புதுமையைச் செய்கின்றார்.
4. பின்பு
மரியாவும், அவரின் உறவினர்களும் இயேசுவினுடைய பொதுவாழ்வின் தொடக்கத்தில் அவர் கூறிய வார்த்தைகளுக்குச் சிலர் எதிர்மறை விளக்கங்களைக் கொடுத்தனர். அவரிடம், “உம் தாயும் சகோதரர்களும் உம்மைப் பார்க்க விரும்பி வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள்” என்று
ஒருவர் கூறியபோது, இயேசுவின் பதிலைத் தொடர்புபடுத்தி,
தூய லூக்கா நற்செய்தியாளர் நமக்கு அதற்கான விளக்கத்தை அறிந்துகொள்வதற்கான திறவுகோலைத்
தருகின்றார். அதாவது, இது அவரின் சகோதரர்களைக் குறிக்கும் ஒரு தொடர் என்பதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, மரியாவின் உள்மன உணர்வுகளை அடிப்படையாக வைத்து நாம் அதைப் புரிந்துகொள்ள வேண்டும் (ஒப்பிடுக. யோவா 7:5). அவர்களுக்கு இயேசு, “இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும், என் சகோதரர்களும் ஆவார்கள்” (லூக்
8:21) என்று பதிலளித்தார். இயேசுவின் பிறப்பு அறிவிப்பில் லூக்கா நற்செய்தியாளர் மரியா எவ்வாறு உண்மையில் கடவுளின் வார்த்தையைக் கேட்பதிலும் தாராள
மனத்திலும் முன்மாதிரியாக இருந்தார் என்பதைக் காட்டுகின்றார். இத்தகைய
விளக்கமளிக்கையில், அந்நிகழ்வில் தன்னுடைய சொந்தவாழ்வில் கடவுளின் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றிய மரியாவுக்கு ஒரு மிகப்பெரும் புகழ்ச்சியைத் தருகின்றது. இயேசுவின்
வார்த்தைகளானது சகோதரர்களைக் குறிப்பதற்கு எதிரானதாக இருந்தாலும், அவை உடலளவில் மட்டுமல்லாமல், ஆன்மிக அளவிலும் வாழ்ந்த மரியாவினுடைய தாய்மையின் மாண்பு மற்றும் கடவுளின் வார்த்தையை நிறைவேற்றுவதில் அவரிடமிருந்த
நம்பகத்தன்மையையும் புகழ்ந்து பேசுகின்றன.
மறைமுகமான
இந்தப் புகழ்ச்சியின் வழியாக, இயேசு ஒரு தனிப்பட்ட விளக்கமளிக்கும் முறையைப் (Particular method) பயன்படுத்துகிறார்:
இயேசு மரியாவின் நடத்தையில் உள்ளதொரு பெருந்தன்மை பற்றிப் பொதுவானதொரு விளக்கமளிக்கிறார். மேலும், புனிதத்திற்கான வழிமுறையில் மனுக்குலத்தோடு மரியாவுக்குள்ள நெருக்கத்தையும் உடனிருப்பையும் தெளிவாகக் காட்டுகின்றார்.
இறுதியாக,
இயேசுவின் தாயைப் ‘பேறுபெற்றவர்’ என்று
அழைத்த அந்தப் பெண்ணுக்கான தமது பதிலாக அமைந்த “இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறு பெற்றோர்” (லூக்
11:28) என்ற வார்த்தைகள் மரியாவின் தனித்தன்மையைச் சந்தேகிக்காமல், கடவுளின் வார்த்தையை நிறைவேற்றுவதில் அவரிடமிருந்த நம்பத்தன்மையைக் காட்டுகின்றது: திரு அவையும் இதை நன்கு புரிந்துகொண்டு, மரியாவைப் பெருமைப்படுத்தும்
திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களில் இந்த இறைவார்த்தையை வைத்திருக்கின்றது. உண்மையில் அந்த நற்செய்தி வாசகமானது அவரின் தாயினுடைய ஆசிர்வதிக்கபட்ட நிலையானது கடவுளோடு அவருக்கிருந்த நெருக்கமான உறவு மற்றும் கடவுளின் வார்த்தைக்கான அவரின் முழுமையான அர்ப்பணத்தில் இருப்பதை மிகத் தெளிவாக நமக்கு எடுத்துரைக்கின்றது.
மரியா முற்றிலும்
கடவுளுக்குரியவராக
இருந்தார்!
5. ‘முற்றிலும் புனிதமான’ மரியாவுக்கு
கடவுள் வழங்கிய சிறப்புச் சலுகையானது அவர் வாழ்வில், அருளால் நிகழ்த்தப்பட்ட மாட்சியைப் போற்றுவதற்கு நம்மை வழிநடத்துகிறது. மேலும், இது மரியா எப்பொழுதும் முற்றிலும் கடவுளுக்குரியவர் என்றும், அந்த நிலையானது எந்தவொரு குறையும் இல்லாத நிலையில் கடவுளுடனான முழுமையான இணக்க நிலையில் எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதையும் நமக்கு நினைவூட்டுகின்றது.
ஆகவே,
அவரின் பூவுலக வாழ்வானது நம்பிக்கை, எதிர்நோக்கு மற்றும் அன்பில் நீடித்த மற்றும் உயர்ந்ததொரு வளர்ச்சியால் குறிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு, இறை இரக்கத்தின் பிரதிபலிப்பாக, புனிதத்துவத்தின் மற்றும் நற்செய்தியின் முழுமையினுடைய உயர்ந்த மற்றும் உறுதியான வழிகாட்டியாக மரியா இருந்தார்.
மூலம்:
John Paul II, Mary was free from all personal sin, in
L’Osservatore Romaoo, Weekly Edition in English, 26
Jube 1996, p. 11.
ஆயர்கள் திருத்தூதர்களின் வழித்தோன்றல்கள் என்பது இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கப் படிப்பினை. அவர்கள் தலத் திரு அவை மற்றும் உலகத் திரு அவையின் ஒன்றிப்புறவிற்காகப் பணியாற்றுபவர்கள். தமது பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட இறைமக்கள், அருள்பணியாளர் குழுமம், திருத்தொண்டர்கள், துறவியர், ஏனைய ஆயர்கள், உரேமை ஆயராகிய திருத்தந்தை என்போருடன் கொண்டுள்ள உறவுப் பின்னலில்தான் ஆயரது பணிபுரிந்து கொள்ளப்படவேண்டும். ஆயருடைய இவ்வுறவுகள் அனைத்தின் முதன்மையான நோக்கு மறைத்தூதுப் பணியே.
தமது
தலத் திரு அவையில் நற்செய்தி அறிவிப்பு, திருவழிபாடு என்பனவற்றின் முதல் பொறுப்பு ஆயருடையதே. அவரே அதனை வழிநடத்துபவர்; ஏழைகளுக்கான அருள்பணியையும், வலுவற்றோருக்குப் பாதுகாப்பு வழங்குவதையும் அவர் ஊக்குவிப்பவர். இருப்பினும், “ஆயராகத் திருநிலைப்பாடு பெற்றுள்ளவருக்குத் தரப்பட்டுள்ள சிறப்பு உரிமைகளும் கடமைகளும் அவர் அவற்றைத் தனித்து நிறைவேற்றவேண்டும் என்பதற்காக அல்ல”
(இஅ 69); மாறாக, அவர் பெற்றுள்ள அருளும் அழைப்பும் தனி ஆள்கள் மற்றும் குழுமங்கள்மீது தூய ஆவியார் பொழிந்துள்ள கொடைகளை இனங்கண்டு, ஏற்று, குழும ஒன்றிப்பில் இணைப்பதற்காகவே! “அவர் அருள்பணியாளர்கள் மற்றும் திருத்தொண்டர்களுடன் தாம் கொண்டுள்ள பொது அருளடையாளப் பிணைப்பை வெளிப்படுத்தும் முறையில் அவர்களுடன் இணைந்தே இதைச் செயல்படுத்துகிறார்” (இஅ
69). “இப்பணியை அவர் கூட்டுப்பொறுப்புடன் கூடிய ஆளுகை, இறைமக்களுக்குச் செவிகொடுத்துப் போதித்தல், மனத்தாழ்மையோடும் மனமாற்றத்தோடும் புனிதப்படுத்தல் மற்றும் திருவழிபாடு கொண்டாடுதல் என்பவை வழியாகக் கூட்டியக்க முறையில் நிறைவேற்றுகிறார்” (முஅ
11b).
ஆயர்
இறைக்குடும்பமாகிய திரு அவையில் கூட்டியக்க முறையை உயிரூட்டி இயக்குவதில் அவருடைய பணி இன்றியமையாதது. ஆயராகிய ஒருவரது பணி தெளிதேர்வு செய்வதிலும், முடிவெடுக்கும் முறைமைகளிலும் நேரடியாக அதிகம் ஈடுபட்டுள்ள சிலரது பங்களிப்பின் வழியாக நம்பிக்கையாளர்கள் எல்லாருடைய பங்கேற்பையும் போற்றி வளர்க்கிறது. மேலும், “அனைவருக்கும் கூட்டியக்கத்தின் மாதிரியாகத் திகழ ஆயர் அழைக்கப்பட்டுள்ளார். கூட்டியக்க அணுகுமுறை பற்றிய அவரது உறுதிப்பாடும், தமது அதிகாரத்தை அவர் கையாளும் முறையும் அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள், இருபால் பொதுநிலையினர், துறவியர் என்போரது கூட்டியக்கப் பங்கேற்பை ஆழமாகப் பாதிக்கும் என்பது உறுதி”
(முஅ 12உ). இதற்கு இன்றியமையாதது அவர்களை அவர் சந்திப்பது. குறிப்பாக, தமது பங்குச் சந்திப்பின்போது மக்களுக்குச் செவிமடுத்து, அவர்களுடைய தேவைகளை அவர் தெரிந்துகொள்வது முக்கியமானது. “ஆயர் தேர்வு முறையில் இறைமக்கள் குரலுக்கு அதிக இடம் தரப்படவேண்டும் என இம்மாமன்றம் விரும்புகிறது” (இஅ
70).
“ஆயர் பணிக்கு இன்றியமையாதவற்றில் அவர் அதிகக் கவனம் செலுத்துவதும் ஏனைய ஆயர்களுடனும் அருள்பணியாளர்களுடனும் உண்மையான சகோதர உறவை வளர்த்துக்கொள்வதும் அவசியம்”
(முஅ 12ந). ஏனெனில், பல ஆயர்கள் தங்கள்
மறைத்தூதுப் பணியை முழுமையாக நிறைவேற்ற முடியாத அளவிற்குத் தங்கள் மீதுள்ள எதிர்பார்ப்புகள், நிர்வாகம் மற்றும் சட்டம்சார் கடமைகள் எனும் சுமைகள் தங்களுக்கு இருப்பதாக உணர்கின்றனர். தங்களுக்குப் போதிய ஆதரவு இல்லை எனும் தனிமை உணர்வுக்கும் அவர்கள் ஆளாவது உண்டு. இதனால் ஆயர்களுக்கும் அவர்களது பணியில் ஆதரவும் தோழமையும் தேவைப்படுகின்றன. அண்டை மறைமாவட்டங்களின் ஆயர்களுக்கு இடையே சகோதரத்துவத்தை வளர்ப்பதில் பேராயரின்
பங்களிப்புப் பெரிது.
ஆயர்களுக்கும்
பணியிடை உருவாக்க முறைகள் தேவை என மாமன்ற நடைமுறையின்போது
பேசப்பட்டது. அதுபோலவே, “துணை ஆயர்களின் பணி, பதிலாள் உரிமையுடன் ஆயர் பிறரிடம் ஒப்படைக்கக்கூடிய பணிகளை விரிவாக்குதல் என்பனவற்றைத் தெளிவுபடுத்தவேண்டிய தேவையும் மாமன்றத்தின்போது எழுந்தது”
(இஅ 71).
மேலும்,
ஆயர் பற்றிய கற்பனை சார்ந்த மீஉயர் புரிதலையும், மிகுதியான எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கையாளர்கள் தவிர்ப்பது அவசியம். ஏனெனில், அவரும் வலுகுறைவுகள் உள்ளவரும்-சோதனைகளை எதிர்கொள்ளுபவரும்தான். இதனால் எல்லாருக்கும்போல் அவருக்கும் உதவி தேவைப்படுகிறது. “மறுபுறம்,
உண்மையான கூட்டியக்கத் திரு அவையில் இறைமக்கள் அனைவருடைய செயல்முறை சார்ந்த பங்கேற்பு எனும் ஆதரவு இருக்கும் போது அவரது பணி மிகவும் சிறப்புற நிகழமுடியும்” (இஅ
71). மேலும், தமது தலத் திரு அவையை வழிநடத்தும் அதேவேளையில், அதன் வரலாறு, மரபு, அருங்கொடை சார்ந்த வளங்களையும் கண்டறிந்து அவற்றைக் காத்து வளர்க்கவும் ஆயர் அழைக்கப்படுகிறார்.
திரு அவையின்
ஒன்றிப்பும்
ஆயர்
பேரவைகளும்
ஆயர்
பேரவைகள் திரு அவைகளுக்கு இடையிலான உறவு ஒன்றிப்பை வெளிப்படுத்துகின்றன; அவை அருள்பணிசார் தேவைகளுக்கு அதிக ஆற்றலுடன் பதிலிறுப்புச் செய்யவும் உதவுகின்றன. “பிணைப்புகளை ஏற்படுத்தவும், திரு அவைகளுக்கு இடையே அனுபவங்களையும் சிறந்த நடைமுறைகளையும் பகிர்வு செய்யவும் பல்வேறு பண்பாடுகளுக்கு ஏற்ப கிறித்தவ வாழ்வையும் நம்பிக்கையின் வெளிப்பாடுகளையும் தழுவியமைக்கவும் அவை அடிப்படையான கருவிகளாக விளங்குகின்றன” (இஅ
125). கூட்டியக்கத்தை
வளர்ப்பதில் அவை இறைமக்கள் அனைவரின் ஈடுபாட்டுடன் முக்கியப் பங்களிப்புச் செய்கின்றன.
மாமன்றத்திற்கு
முன்தயாரிப்பாக நடத்தப்பட்ட கண்டங்களைச் சார்ந்த ஏழு கூடுகைகளும் புதுமையானவை. அவை அவசியமானவையும் பாதுகாக்கப்பட வேண்டிய அதிகப் பயன்களை விளைவித்தவையும் ஆகும். ஒவ்வொரு பெரிய சமூக-பண்பாட்டுப் பகுதிக்கேற்ப கிறித்தவ வாழ்வை அப்பகுதி முழுவதற்கும் ஆழமாகத் தழுவியமைக்க இத்தகைய கண்டம் அளாவிய கூடுகைகள் சிறந்த வழிமுறைகளே. அவைபோலவே மாநில மற்றும் நாட்டு அளவிலான திரு அவைக் கூடுகைகளில் இறைமக்களுள் பல நிலையினரும் இணைந்து
வந்து, தெளிதேர்வு செய்வது ஆயர்கள் குழுவாக இணைந்து வந்து முடிவுகள் எடுக்க உதவுகிறது. இவ்வாறு கூட்டியக்க முறையில் திரு அவையின் பணிசார்ந்த முக்கிய முடிவுகளைச் சிலர் செய்தாலும், அதில் அனைவரும் பங்கேற்கின்றனர். இத்தகைய கூடுகைகளின் இறையியல் மற்றும் திரு அவைச் சட்டம்சார் நிலை தெளிவுபடுத்தப்படவேண்டும்.
திரு
அவையில் மிகையான மையப்படுத்தலைக் கைவிட்டு நலமான அதிகாரப் பரவலாக்கலையும், பயனுள்ள பண்பாட்டுமயமாக்கலையும் நடைமுறைப்படுத்த ஆயர் பேரவைகள் மற்றும் மாநில, மாவட்டப் பேரவைகளின்
பங்களிப்பு ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். அவ்வப்போது இத்தகைய பேரவைகளைக் கூட்டுவது திரு அவை வரலாற்றில் ஒரு கட்டாயமாகவே இருந்துள்ளது.
இன்றைய இலத்தீன் திரு அவைச் சட்டம் அதற்கு இடமும் அளித்துள்ளது (திரு அவைச் சட்டங்கள் 439-446). அவை அவ்வப்போது கூட்டப்படுவதுடன், அவற்றின் முடிவுகளுக்குத் திரு அவைத் தலைமைப்பீடம் தரும் ஏற்புமுறை சீரமைக்கப்படவேண்டும். முற்றிலும் அருள்பணி அல்லது ஒழுங்குமுறை சார்ந்த அவற்றின் முடிவுகளுக்குத் தலைமைப்பீடம் தனது மௌனத்தால் ஏற்பு
தரும் முறையை நடைமுறைப்படுத்தலாம்.
(தொடரும்)