slider slider slider
நம் வாழ்வு
நம் வாழ்வு இதழின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்
நம் வாழ்வு
நம் வாழ்வு - நல்லவர்களின் நாடித்துடிப்பு
நம் வாழ்வு
நல்லவர்களின் நாடித்துடிப்பு
அண்மைச் செய்திகள்
எண்ணிமத் (Digital) தொழில்நுட்ப உலகில் அச்சு இதழியலின் சவால்களும் சாத்தியங்களும்! (நவம்பர் 16 தேசிய பத்திரிகை தினம் சிறப்புக் கட்டுரை)
சிறப்புக்கட்டுரை
எண்ணிமத் (Digital) தொழில்நுட்ப உலகில் அச்சு இதழியலின் சவால்களும் சாத்தியங்களும்! (நவம்பர் 16 தேசிய பத்திரிகை தினம் சிறப்புக் கட்டுரை)

இன்றைய சூழலில், பொதுவாக ஊடகத்துறையின் செயல்பாடுகள் வியப்பூட்டுகின்றன. நமது கிறித்தவ அச்சு ஊடகவியலாளர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைக் கண்டு பெரிதும் பூரிப்படைகிறேன். அவர்களின் கூர்மையான எழுத்துகள், அசைக்க முடியாத உறுதிப்பாடு மற்றும் உண்மைக்கான அச்சமற்ற அர்ப்பணிப்பு ஆகியவை போற்றத்தக்கவை. உண்மை பெரும்பாலும் மறைக்கப்படும்- மறுக்கப்படும் காலத்தில், அவர்களின் சிறப்புக்குரிய பணிகள் நமது முன்னேற்றத்திற்கான பாதையை ஒளிரச் செய்கின்றன.

ஒரு பத்திரிகையாளரின் செயல்பாடுகள் எப்படி இருக்கவேண்டும் என்று குறிப்பிடும் நமது தேசப் பிதா மகாத்மா காந்தி, “ஒரு பத்திரிகையாளரின் குறிப்பிடத்தக்க செயல்பாடுகள் நாட்டின் அன்றாடச் சூழல்களைப் படித்து, உறுதியான மனத்துடன்திட்டவட்டமான அச்சமற்ற வெளிப்பாட்டை வழங்கக்கூடியதாக இருக்கவேண்டும்என்று கூறினார். இக்காலத்தில் அதன் கூடுதல் பொறுப்பு என்பது, உண்மையின் குரலை உருவகப்படுத்தவும், குரலற்றவர்களின் குரல்களைப் பதிவுசெய்யவும், தளராத நேர்மை மற்றும் துணிவுடன் மனசாட்சியை வெளிப்படுத்தவும் அழைக்கப்பட்ட இன்றைய கிறித்தவப் பத்திரிகையாளர்களில் ஆழமாக எதிரொலிக்கிறது. அவர்கள் அரசியல் அழுத்தங்களின் கொந்தளிப்பான நீரோட்டத்தில் பயணிக்க வேண்டும்; தவறான புனைக்கதைகளை எதிர்க்க வேண்டும்; எதார்த்தத்தைச் சிதைக்க முயலும் மறைமுக நிகழ்வுகளுக்கும் செயல்திட்டங்களுக்கும் எதிராக உறுதியுடன் நிற்கவேண்டும்.

இந்திய அச்சு ஊடகத்துறை, எதிர்காலத்தின் முன்னோட்டமாக அதன் புனிதமான பணிக்கும், பத்திரிகை சுதந்திரத்தின் மீதான அதிகரித்துவரும் அச்சுறுத்துதலுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் இடையில் தன் இருத்தலை எண்பித்துக்கொண்டிருக்கிறது. நீதி மற்றும் உண்மையை நிலைநிறுத்த வேண்டிய கட்டாயம், சக்திவாய்ந்த அரசியல் தாக்கங்களின் அழுத்தம் மற்றும் சுதந்திரமான வெளிப்பாட்டின் அரசியலமைப்பு உத்தரவாதம் ஆகியவற்றுக்கு இடையேயான பதற்றத்தை இது அன்றாடம் எதிர்கொள்கிறது. அச்சு ஊடகம் எதிர்கொள்ளும் சவால்கள் இதற்குமுன் ஒருபோதும் இவ்வளவு சிக்கலானதாகவும் பன்முனைத் தாக்குதல் கொண்டதாகவும் இருந்ததில்லை.

வளர்ந்து வரும் தளங்கள்

தொழில்நுட்பக் கண்டு பிடிப்புகளின் இடைவிடாத வேகத்தால் உந்தப்பட்டு, ஊடகத்துறை பெரும் அதிர்வுக்குரிய மாற்றத்திற்கு இன்று உட்பட்டிருக்கிறது. ஒரு காலத்தில் செய்தி பரவலின் அடிநாதமாக, மூலைக் கல்லாக விளங்கிய அச்சு ஊடகம், இன்று தொழில்நுட்பச் சமூக ஊடகங்களின் உடனடித்தன்மையுடன் போராடுகிறது. டிஜிட்டல் தளங்கள், சமூக ஊடகங்கள், யூடியூப் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவை ஒரு காலத்தில் அச்சு ஊடகத்தின் தொட்டுணரக்கூடிய பக்கங்களுக்கு விருப்பம் கொண்டிருந்த வாசகர்களின் எண்ணங்களை இன்று ஆழமாக மறுவடிவமைத்துள்ளன. இந்தியாவில், கடந்த பத்தாண்டுகளில் டிஜிட்டல் ஊடக நுகர்வில் பெரும் அசாதாரண எழுச்சி ஏற்பட்டுள்ளது; குறிப்பாக, இளையோர் இனி காலைச் செய்தித்தாளுக்காகக் காத்திருக்காமல், ‘ஆன்லைன்செய்திகளின் வேகமான நீரோட்டத்தில் பயணிக்கிறார்கள். இந்தகைய எண்ணிமத் தொழில்நுட்ப உலகில் அச்சு ஊடகங்கள் தொடர்ந்து தாக்குப்பிடிக்க  முடியுமா? என்னும் அடிப்படைக் கேள்வியும் இங்கு எழுகிறது.

கிறித்தவப் பத்திரிகையாளர்கள் நவீனத் தொழில்நுட்பங்களைத் தழுவிக்கொண்டு, கால நீரோட்டத்துடன் தங்களைத் தகவமைத்துக்கொள்வதன் மூலம் இந்தச் சவால்களை எதிர்கொள்ள முன்வர வேண்டும். திரு அவையின் நீடித்த பலம், அதன் சமூக ஒற்றுமையின் மரபில் உள்ளது. அதாவது, ஞானத்தைப் பகிர்ந்துகொள்வதிலும், ஒருவருக்கொருவர் ஆதரவு வழங்குவதிலும் கற்றுக்கொள்வதிலும் உறுதி கொண்டிருக்கிறது. மேலும், நாம் இயேசுவின் சீடர்களாக, ‘உலகின் ஒளியாக (மத் 5:14) வாழ அழைக்கப்படுகிறோம். “என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே!” (திபா 119:105) எனும் இறைவார்த்தையால் வழிநடத்தப்பட்டு, இந்தக் குழப்பமான காலங்களில் தெளிவுடனும் உன்னத நோக்கத்துடனும் பயணிக்க நாம் துணிவுடன் இருக்க வேண்டும்.

வளர்ந்து வரும் எதார்த்தங்கள்

இந்தியாவில் பத்திரிகையின் நெறிமுறைகள் முன்பில்லாத வேகத்தில் தற்போது மாறி வருகின்றன; கிறித்தவப் பத்திரிகையாளர்களை வலிமையான சவால்களுடன் அவை எதிர்கொள்கின்றன.

கேள்விக்குள்ளாகும் பத்திரிகைச் சுதந்திரம்: நுட்பமான அழுத்தங்கள், வளர்ந்து வரும் ஊடகக் கொள்கைகள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட விதிமுறைகளால் பத்திரிகைச் சுதந்திரத்தின் புனிதத் தன்மை பெருமளவில் பாதிக்கப்படுகிறது. ஆதாரமற்றக் குற்றச்சாட்டுகள் மற்றும் சிறைவாசத்தை எதிர்கொள்ளும் பத்திரிகையாளர்கள், அவர்கள்மீது தொடுக்கப்படும் வன்முறைகள்  உண்மைக்குச் சான்று பகர்பவர்களிடையே அச்சத்தையும் நிலையற்றத்தன்மையையும் ஏற்படுத்துகின்றன.

பரபரப்பின் எழுச்சி: பரபரப்பான செய்தி, உண்மையற்றத் தரவுகளை (Fake News) வெளியிடுதல் மற்றும் புனையப்பட்ட கதைகள், உண்மையான அச்சுப் பத்திரிகையின் அளவிடப்பட்ட பரவலை விட, ஆபத்தான வேகத்தில் பரவுகின்றன. இந்தச் சிதைவு உண்மையான செய்தி வெளியிடுதலின் நம்பகத் தன்மையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.

வாசகர் எண்ணிக்கையில் மாற்றம்: எண்ணிமத் தொழில்நுட்பத் தளங்கள் மற்றும் AI-ஆல் இயக்கப்படும் செய்திகளின் ஆதிக்கம், விளிம்புநிலை மற்றும் படிப்பறிவற்றவர்களுக்குக் கூட அணுகக்கூடியது; இது அச்சு ஊடக வாசகர்களின் எண்ணிக்கையில் பெரிய சரிவை ஏற்படுத்தியுள்ளது; இது பாரம்பரிய ஊடகங்களுக்குப் பெரும் சவாலாக அமைகிறது.

சிறுபான்மையினரின் அடையாளங்கள்: கிறித்தவச் சமூகங்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் அடிக்கடி சிதைந்த சித்தரிப்புகள் மற்றும் மிகைப்படுத்தப்பட்ட கதைகளுக்கு ஆளாகின்றனர்; இது தவறான எண்ணத்தையும் உண்மைக்குப்  புறம்பான தகவல்களையும் தருகிறது.

கிறித்தவ வெளியீடுகளில் நிதி நெருக்கடி: சிறிய அளவிலான கிறித்தவ வெளியீடுகள், குறைந்துவரும் விளம்பர வருவாயுடன் போராடுகின்றன. மேலும்அவை வரையறுக்கப்பட்ட ஊழியர்கள், காலங்கடந்த பழைய  தொழில்நுட்பம் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட விநியோக வலையமைப்புகளுடன் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

வெளிப்புற அழுத்தங்கள்: கிறித்தவப் பத்திரிகையாளர்கள் பெரும்பாலும் அரசியல்-சமூக அழுத்தங்களால் தங்கள் நம்பிக்கை, சிறுபான்மை உரிமைகள் அல்லது சமூக நீதி பற்றிய செய்திகளை மென்மையாக்குவதற்கான வெளிப்படையான சவால்களையும் ஆளும் அரசியல் கட்சிகளால்-பெரும்பான்மையினரால் எதிர்கொள்கின்றனர்; இது நேர்மையுடன் அறிக்கையிடுவதற்கான அவர்களின் உறுதிப்பாட்டைச் சோதிக்கிறது.

இத்தகைய  கடினமான எதிர்மறைச் சூழலில், கிறித்தவப் பத்திரிகையாளர்கள் அசைக்க முடியாத உண்மை, அச்சமற்ற நம்பிக்கை மற்றும் நீதிக்கான ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் அறிக்கையிடுவதற்கான புனிதமான கொள்கைகளைக்  கொண்டுள்ளனர். மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்தியது போல, தவறான முன்னெண்ணம், வெறுப்பு ஆகியவற்றின் கட்டுகளிலிருந்து தகவல்தொடர்புகளை நாம் இன்று விடுவிக்கவேண்டும்; பிளவுபடுத்தும் சொல்லாட்சிகளைப் புறந்தள்ளுவதன் மூலம் இரக்கத்தில் வேரூன்றிய உரையாடலை நாம் வளர்க்க முடியும்; எப்போதும் மாறிக்கொண்டிருக்கும் உலகில் உண்மையின் கலங்கரை விளக்கங்களாகவும் நல்லிணக்கத்தின் முகவர்களாகவும் இருக்கவேண்டும்

அச்சுப் பத்திரிகையின் நீடித்த பலங்கள்

எண்ணிமத் தொழில்நுட்ப ஊடகங்களின் அதி மிக வளர்ச்சியால்  ஆதிக்கம் செலுத்தும் காலகட்டத்தில், அச்சு ஊடகம் அதன் தனித்துவமான, ஈடு செய்ய முடியாத தாக்கத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள முயல்கிறது. கவனமாக எழுதப் பட்ட, திருத்தப்பட்ட மற்றும் வெளியிடப்பட்ட கட்டுரையின் நம்பகத்தன்மை, ஒரு சமூக ஊடக இடுகை / ‘டுவீட்களின் விரைவான தன்னிச்சையான தன்மையைவிட மிக உயர்ந்த ஆற்றலைக் கொண்டுள்ளது என்பதை உலகம் அறிந்துகொள்ளவேண்டும். உறுதியான பதிவுகளாகப் பாதுகாக்கப்படும் செய் தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகள், வரலாற்றின் ஒரு பகுதியாக மாறி, எதிர்காலச் சந்ததியினருக்கு இன்றைய காலத்தின் உண்மையின் தரவுகளைப் பதிவு செய்கின்றன என்பதை நாம் உணரவேண்டும்.

எனவே, அச்சுப் பத்திரிகையின் மரபை நிலைநிறுத்துவதற்கான நமது உறுதிப்பாட்டில் உறுதியாக இருப்போம். எண்ணிம உலகத்தில் சவால்கள் இருந்தபோதிலும், இந்த முக்கியமான ஊடகத்தைப் பாதுகாத்து, அதைப் பின்தொடர்பவர்களுக்கு நேர்மையுடன் என்றும் வழங்க நாம் முற்படுவோம்.

மொழியாக்கம்அருள்முனைவர் செ. இராஜசேகரன்

நவம்பர் 16, 2025, ஆண்டின் பொதுக்காலம் 33-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) மலா 4:1-2; 2தெச 3:7-12; லூக் 21:5-19 - நமது மேய்ப்புப்பணியின் இதயம் வறியோர்
ஞாயிறு மறையுரை
நவம்பர் 16, 2025, ஆண்டின் பொதுக்காலம் 33-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) மலா 4:1-2; 2தெச 3:7-12; லூக் 21:5-19 - நமது மேய்ப்புப்பணியின் இதயம் வறியோர்

திருவழிபாட்டு ஆண்டின் இறுதி ஞாயிறை நாம் நெருங்கி வந்துள்ளோம். அடுத்த ஞாயிறு கிறிஸ்து அரசர் பெருவிழா. அதற்கடுத்த ஞாயிறு, திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறுடன் அடுத்த திருவழிபாட்டு ஆண்டை ஆரம்பிக்க இருக்கின்றோம். சென்ற ஆண்டு இந்தத் திருவழிபாட்டு ஆண்டை நாம் தொடங்கியபோது, நமக்குத் தரப்பட்ட திருவிவிலிய வாசகம் லூக்கா நற்செய்தி 21-ஆம் பிரிவிலிருந்து எடுக்கப்பட்டது. திருவழிபாட்டு ஆண்டின் இறுதி ஞாயிறான இன்று மீண்டும் லூக்கா நற்செய்தி 21-ஆம் பிரிவிலிருந்து வாசகம் தரப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முழுவதும் ஞாயிறு திருப்பலிகளில் லூக்கா நற்செய்தியின் பகுதிகள் வழியாக இறைவன் நமக்களித்த மேலான எண்ணங்களுக்காக அவருக்கு நன்றி கூறுவோம்.

ஆண்டின் 33-ஆம் ஞாயிறான இன்றைய நாளின் சிறப்பு என்னவெனில், இன்று நாம்நீரே என் நம்பிக்கைஎன்ற திபா 71:5 வரிகளைக் கருப்பொருளாகக் கொண்டு, ஒன்பதாவது உலக வறியோர் தினத்தைக் கொண்டாடுகின்றோம். இந்நாளில், நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள வாசகங்கள் இறுதி நாள்களைப் பற்றிச் சிந்திக்க நம்மை அழைக்கின்றன.

வாழ்வின் இறுதிநாள் எப்போது நிகழும்? எப்படி நிகழும்? இப்போதே நிகழுமா?’ எனும் கேள்விகளுக்குத் தந்தையைத் தவிர வேறு எவருக்கும் விடை தெரியாது. ஆனால், அந்த இறுதிக் காலத்தைச் சந்திக்க நாம் தயாராக இருக்கவேண்டும் என்பதே இன்றைய வழிபாடு நமக்கு விடுக்கும் அழைப்பு.

இன்றைய முதல் வாசகம் ஆண்டவரின் நாளைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. ஆண்டவரின் நாள் என்பது கடவுளின் வருகையைப் பற்றிய இஸ்ரயேல் மக்களின் நம்பிக்கையாகும். இறைவாக்கினர் எசாயாவும்ஆண்டவரின் நாளை (13:9) பற்றிக் குறிப்பிடும்போது, அது பாவிகளை முற்றிலும் அழித்துவிடும் நாளாக இருக்கும் என்று கூறுகிறார். ஆண்டவர் வரும் அந்த நாளில் நீதி, நேர்மை, உண்மை, நன்மையைக் கடைப்பிடித்து ஒழுகுகின்றவர்கள் கடவுளிடம் நல்ல கைம்மாறு பெறுகின்றனர். எவரெல்லாம் இம் மதிப்பீடுகளைக் கைவிட்டுத் தீயநெறியில் வாழ்கின்றார்களோ, அவர்கள் தண்டனைத் தீர்ப்பிற்கு உள்ளாவர் என மலாக்கி கடுமையாகச் சாடுகிறார் (4:1).

இன்றைய நற்செய்தியிலும் ஆண்டவரின் நாளான அவரது இரண்டாவது வருகையைப் பற்றியும், உலகத்தின் இறுதி நாளைப் பற்றியும் லூக்கா விவரிக்கின்றார். இந்தப் பகுதி ஆண்டவரின் நாள், எருசலேம் அழிவு, இயேசுவின் இரண்டாம் வருகை, வரவிருக்கும் மறைத்துன்பங்கள், உறுதியான இறைநம்பிக்கை, மறுவாழ்வு என, பல கருத்துகள் பின்னிப்பிணைந்து இருக்கின்றன. எனினும், உலக முடிவையும், இயேசுவின் இரண்டாம் வருகையையும் அச்சத்துடன் நோக்காமல் நமது கடமைகளை நிறைவேற்றி, கிறிஸ்துமீது கொண்டுள்ள நம்பிக்கையில் நிலைத்திருந்ததால் ஆண்டவர் வருகையின்போது, நாம் நமது வாழ்வைக் காத்துக்கொள்வோம் என்பதே இன்றைய ஞாயிறு நமக்கு வழங்கும் செய்தி.

இன்றைய நற்செய்தியின் துவக்க வரிகளில் கவின்மிகு கற்களாலும் நேர்ச்சைப் பொருள்களாலும் அழகுபடுத்தப்பட்டிருக்கும் கோவில்கல்லின்மேல் கல் இராதபடி இடிந்து தரைமட்டமாகும்என இயேசு எடுத்துரைக்கிறார். இயேசு கூறிய இந்தக் கோவிலின் பின்னணித் தகவல்களை அறிந்துகொள்ளலாம்.

முதலில், கடவுளுக்கென்று ஓர் ஆலயம் எழுப்ப பேரரசரான தாவீது விரும்பினார். ஆனால், அது அவரால் இயலாமற்போயிற்று. அவரது மகனான சாலமோன் மன்னரால் கி.மு. 950-களில் ஆண்டவருக்கென்று அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த ஓர் ஆலயம் கட்டியெழுப்பப்பட்டது. சாலமோன் கட்டிய ஆலயத்தைக் கி.மு. 587-இல் பாபிலோனிய மன்னன் நெபுகத் நேசர் இடித்துத் தரைமட்டமாக்கினார் (2அர 25). ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு பாபிலோனிய அரசு வீழ்ச்சி கண்டது. பாரசீக மன்னர் சைரஸ் (கி.மு. 538) இஸ்ரயேலருக்கு விடுதலை அளித்தார். யூதர்களுக்கு விடுதலை அளித்த பாரசீகர்கள், எருசலேம் தேவாலயத்தைக் கட்டவும் உதவிசெய்தனர். எஸ்ரா, நெகேமியா தலைமையில் ஏறக்குறைய 20 ஆண்டுகள் கழித்து அதே இடத்தில் ஆலயம் கட்டியெழுப்பப்பட்டது (எஸ்ரா 3:3; சீஞா 49:13).

செருபாபேல் கட்டிய இரண்டாம் ஆலயம் (எஸ்ரா 4:3) அதன் அழகிலும் மேன்மையிலும் முதலாவது ஆலயத்திற்குக் குறைவாகவே இருந்தது (ஆகா 2:1-3). எனவே, 500 ஆண்டுகளுக்குப் பிறகு, கி.பி. 2020-இல் பெரிய ஏரோது இந்தக் கோவிலைப் புனரமைப்பு செய்து எழில்மிகு கற்களைக் கொண்டும், பொன்-வெள்ளிப் பொருள்களாலும் பேரரசன் சாலமோன் கட்டிய முதல் ஆலயத்திற்கு இணையான ஆலயத்தைக் கட்டினான். இந்த ஆலயத்தின் அழிவைப்பற்றிதான் இயேசு முன்கூட்டியே அறிவிக்கிறார். இயேசு கூறியதுபோலவே, கி.பி.70-இல் எருசலேம் ஆலயம் உரோமைப் படைகளால் தாக்கி அழிக்கப்பட்டது. அந்த ஆலயத்தின் ஒரு தடுப்புச்சுவர் மட்டும்தான் இன்று எஞ்சியிருக்கிறது. அதனைத்தான் யூதர்கள்கண்ணீர் சுவர்என்றழைக்கிறார்கள். அழிக்கப்பட்ட ஆலயத்தை மறுபடியும் கட்டியெழுப்ப முடியாததை நினைத்து, இந்தச் சுவர்களில் யூதர்கள் மோதி கண்ணீர் வடித்துச் செபிக்கின்றனர்.

யூதர்கள் பொறுத்தவரை எருசலேம் ஆலயத்தைத் தங்கள் இதயமாகக் கருதினர். இக்கோவில் அவர்களின் இறையுணர்வுகளின் மகத்தான அடையாளம். ஆண்டுதோறும் ஒருமுறையேனும் இவ்வாலயம் சென்று பலி ஒப்புக்கொடுப்பதும், காணிக்கை செலுத்துவதும் பெரும் சட்டமாக யூதர்கள் கருதினர். இவ்வளவு சிறப்புமிக்க ஆலயத்தில் பல்வேறு முறை கேடுகளும் நேர்மையற்ற செயல்களும் நடைபெற்றதைக்கண்டு சாட்டைப் பின்னி அவர் ஆலயத்தைத் தூய்மைப்படுத்தினார் (லூக் 19:45-46). கடவுளின் ஆலயமே கள்வர் குகையாக, சந்தைக்கூடமாக மாறிப்போனது. எனவேதான், யூதர்களின் நம்பிக்கையின் அடையாளமாக விளங்கிய எருசலேம் ஆலயம் இடிபடும் என அவ்வாலயத்தின் அழிவு பற்றி முன்னறிவிக்கிறார் இயேசு.

இயேசுவின் முன்னறிவிப்பு இன்று நமக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. உள்ளக் கோவில்தான் இறைவன் இல்லம். இறைவன் தந்த ஆலயமே நம் உள்ளம் (1கொரி 3:16-17). யூதர்கள் ஆலயத்தைத் தாண்டிக் கடவுளின் பிரசன்னத்தை எவரிலும் எதிலும் காணத் தயாராக இல்லை. இம் மனநிலையில்தான் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? உள்ளம் எனும் ஆலயத்தில் புனிதம் காக்கத் தவறிவிட்டால் அங்கு இறைப்பிரசன்னத்திற்கு ஏது வழி? எனவே, நமது நம்பிக்கை ஆலயத்தையும், ஆண்டவரின் சாயலாகப் படைக்கப்பட்ட மனிதரையும் கடவுள் வாழும் கோவிலாகப் பார்க்க அழைக்கிறது இன்றைய நற்செய்தி.

திருத்தந்தை பிரான்சிசும் அவர் வழிவந்த திருத்தந்தை லியோவும் ஏழைகளில் கிறிஸ்துவின் முகத்தைக் காணவேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். திருத்தந்தை இந்த ஆண்டு வழங்கிய ஒன்பதாவது வறியோர் தினச் செய்தியில், வறுமையை ஏற்றுக்கொண்ட கடவுள் வறியோரின் குரல்கள், கதைகள் மற்றும் முகங்கள் வழியாக நம்மை வளப்படுத்துகின்றார் என்கிறார். மேலும் அவர், ஏழைகள் நற்செய்தியின் மையமாக இருக்கின்றார்கள், நற்செய்தி அறிவிப்பைப் பெற்றுக்கொள்ளும் முதன்மையானவர்களாக, நமது மேய்ப்புப்பணியின் இதயமாக இருக்கின்றார்கள் என்றும், அத்தகைய ஏழைகளிடமிருந்து நமது பார்வையை விலக்கிவிட வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளார். வறியோர் இறைவனின் கண்களில் விலைமதிப்பற்றவர்கள்; அவர்கள் நற்செய்தியின் வழியில் நாம் எவ்விதம் நடக்க வேண்டும் என்பதை நினைவூட்டுபவர்கள் என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இன்றைய உலகில் நடைபெறும் போர்கள் எண்ணற்ற மக்களைப் புலம்பெயரச் செய்துள்ளது; அவர்களை இல்லமற்ற வறியோராக்கியுள்ளது. இன்று உலகில் 120 கோடி மக்கள் இல்லமற்றவர்களாக இருக்கின்றனர். உலகிலுள்ள பெரும்பாலான சொத்துகள் சில நூறுபேரின் கரங்களில் இருக்கின்றன என்பதே நிதர்சன உண்மை. அநீதியே இவ்வுலகின் வறுமைக்கு அடிப்படைக் காரணம். மனித சமூகத்தில் மிகப்பெரும் ஏற்றத்தாழ்வுகளுக்குக் காரணம் தன்னலமே. அக்கறையற்று, கைகளைக் கட்டிக்கொண்டு நிற்பதோ, ‘ஒன்றும் செய்ய இயலாதுஎன்று கைகளை விரித்தபடி தன் இயலாமையை வெளிப்படுத்துவதோ ஒரு கிறித்தவரின் செயலாக இருக்கமுடியாது. தேவையில் இருப்போருடன் நாம் கொள்ளும் தொடர்பின் வழியே நமது நம்பிக்கையை வலுப்படுத்துவோம். இயேசு கிறிஸ்துவைப்போல் அயலவரை அணைக்க நாம் கரங்களை விரித்துக் காத்திருப்போம்.

இறுதிக்காலத்தின் கொடிய முடிவை உணர்ந்து ஒவ்வொருவரும் பொருளுள்ளதாக்கிக்கொள்வோம். இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் குறிப்பிடுவதுபோல, கடின உழைப்பு, நேரிய உள்ளம், நன்மை செய்வதில் தளராமனம் கொண்டவர்களாக வாழ முற்படுவோம். பணம், புகழ் என்று அழியும் சக்திகளோடு உறவு கொள்வதற்குப் பதில், மனித உறவுகள் என்ற சக்தியைத் தேடிச் செல்வோம். உறவுகளுக்கெல்லாம் சிகரமாக, இறைவனின் உறவும் நம்முடன் உள்ளதெனும் நம்பிக்கையோடு உலகப் பயணத்தை, வாழ்வின் முடிவை, உலகத்தின் முடிவை எதிர்கொள்வோம்.

ஆண்டின் பொதுக்காலம் 33 - ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு)  (16-11-2025) மலா 4:1-2; 2தெச 3:7-12; லூக் 21:5-19
ஞாயிறு தோழன்
ஆண்டின் பொதுக்காலம் 33 - ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) (16-11-2025) மலா 4:1-2; 2தெச 3:7-12; லூக் 21:5-19

திருப்பலி முன்னுரை

விழிப்பாய் இருக்கவும், இறைவன்மீது கொண்டுள்ள நம்பிக்கையில் ஆழப்படவும் பொதுக்காலத்தின் இறுதி ஞாயிறு நமக்கு அழைப்புவிடுக்கிறது. கடவுளின் பிள்ளைகளாகிய நாம் அனைவரும்  வாயில் வாய்மையும், செயலில் நேர்மையும், உள்ளத்தில் உண்மையான அன்பும், அனைத்து மக்களோடு நல்லுறவும், ஏழைகளோடு தோழமையும், வார்த்தையில் மென்மையும், மனத்தில் தூய்மையும், எண்ணத்தில் உயர்வும், கண்களில் கருணையும் கொண்டு வாழும்போது இறுதிநாளில் இறைவன் முன்னிலையில் கலக்கமின்றி மகிழ்வோடு நிற்கலாம்.

வாழ்க்கை என்பது ஒருமுறைதான்; அதில் அன்பை மட்டும் அதிகமாகச் செலவு செய்வோம். மன்னிப்பைத் தேடிச்சென்று கொடுப்போம். இன்னார் என்று இல்லாமல், நாம் சந்திக்கும் அனைவருக்கும் அன்பையும் மகிழ்ச்சியையும் உடனிருப்பையும் உறவையும் கொடுக்க முன்வருவோம். குறிப்பாக, உலக வறியோர் தினத்தைக் கொண்டாடும் இந்நாளில், ஏழைகளின் முகத்தில் இறைவனைக் காண்போம்.

ஏழைகளுக்காக மன்றாடும்போதும், அவர்களுக்காகப் பிறரன்புச் செயல்களில் ஈடுபடும்போதும் நாம் கடவுளோடு ஒன்றிக்கிறோம் என்பதை உணர்ந்துகொள்வோம். ஏழைகளுக்கு உதவுவதில் முன்மாதிரியாய் இருந்து, தேவையில் இருப்போருக்கு விரைந்துசென்று உதவிய அன்னை மரியாவின் பரிந்துரையை நாடுவோம். அச்சம் தவிர்த்து இறுதிநாளில் மானிட மகனை எதிர்கொள்வோம், நம்பிக்கையோடு இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

நம்முடைய வாழ்க்கையின் இறுதிநாள்களைப் பற்றிச் சிந்திக்க இன்றைய முதல் வாசகம் நமக்கு அழைப்பு விடுக்கிறது. நம்முடைய வாழ்நாள்களில் எதை விதைக்கின்றோமோ, அதையே அறுவடை செய்வோம். சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும் மாசற்றவர்களாய் வாழ்ந்து இறையில் சங்கமிக்க இறைவார்த்தைக்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசசகம் முன்னுரை

இன்றைய வாசகத்தில் நாம் எப்படி வாழ வேண்டும்? எவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? எவ்வாறு  உழைக்க வேண்டும்? என்பதைத் தன்னுடைய வீரியமுள்ள வாழ்க்கையால் தூய பவுல் நம் உள்ளத்தில் விதைக்கிறார். மற்றவர்களுக்குச் சுமையாய் இல்லாமல், சுகம் கொடுப்பவர்களாய் வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. ‘நீயே ஆசியாய் விளங்குவாய்என்று மொழிந்த ஆண்டவரே! எம்  திரு அவைக்கு நீர் தேர்ந்தெடுத்துக் கொடுத்தத் தலைவர்கள் உமது பணியைச் சிறப்பாகச் செய்வதற்குத் தேவையான ஞானத்தையும் ஆற்றலையும் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. பாதுகாக்கும் பரம்பொருளே எம் இறைவா! உமது பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் எங்களுடைய வாழ்க்கையாலும் வார்த்தையாலும் உம்மை அறிவிக்கவும், உடன் வாழும் சகோதர- சகோதரிகளுக்கு உதவி செய்து வாழவும், தேவையான நல்மனத்தை எமக்குத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எங்களோடு வாழும் ஆண்டவரேபங்கு மக்களாகிய நாங்கள் அனைவரும் பங்கின் வளர்ச்சியில் எப்போதும் துணைநிற்கவும், இணைந்து உழைக்கவும், அனைத்தையும் கடந்து கடவுளின் பிள்ளைகள் என்ற உறவில் வாழவும், தேவையான அருள்வரங்களைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. நல்லாயனே எம் இறைவா! எம் குடும்பங்களில் உள்ள இளையோர் அனைவரும் உம் வார்த்தைகளைப் படிக்கவும், இறைநம்பிக்கையில் நாளும் வளரவும், திரு அவை காட்டுகின்ற நெறிகளில் வளரவும் தேவையான அருள்வரங்களைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஞாயிறு மறையுரை