slider slider slider
நம் வாழ்வு
நம் வாழ்வு இதழின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்
நம் வாழ்வு
நம் வாழ்வு - நல்லவர்களின் நாடித்துடிப்பு
நம் வாழ்வு
நல்லவர்களின் நாடித்துடிப்பு
அண்மைச் செய்திகள்
பிறந்த நாளுக்கு அழைப்பு - காவல் அன்னை 17  (தொடர் கதை)
சிறுகதை
பிறந்த நாளுக்கு அழைப்பு - காவல் அன்னை 17 (தொடர் கதை)

டாக்டர் சேவியர், அண்ணா பூங்காவில் நடைப் பயிற்சியில் நடந்து கொண்டிருந்தார். சில நாள்கள் இப்படிக் காலையில் நடப்பதுண்டு. அப்போது டாக்டர் யாழினியின் தந்தை கருணாகரன் நடந்து வந்தார்.

வாங்க டாக்டர் வாங்க, என்ன இப்படி பார்க்கிற்கு வந்திருக்கீங்க?” என்றார் சிரித்தபடி கருணாகரன்.

வாரத்தில் ஓரிரு நாள்கள் வருவதுண்டு. மற்றபடி இப்படி வர நேரம் கிடைப்பதில்லைஎன்றார் சேவியர்.

நான் தினமும் வந்திருவேன். வயசாயிருச்சில டாக்டர். இப்படி நடந்தால் நல்லதுன்னு வந்திருவேன். உங்களைப் பார்த்ததில் ரெட்டிப்பு சந்தோசம்என்றார் கருணாகரன்.

என்ன ரெட்டிப்பு சந்தோசம்?” என்று கேட்டார் சேவியர்.

வேற ஒண்ணுமில்லே, என்னோட பையன் அமெரிக்காவிலிருந்து வந்திருக்கான். அவனோட பேரு முத்தரசன்என்றார் கருணாகரன்.

அப்படியா! யாழினிக்குத் தம்பி இருக்கிறதாச் சொன்னதில்லையே?” என்றார் சேவியர்.

இவன் கலிபோர்னியாவில் சாப்ட்வேர் இன்ஜினியராய் வேலை செய்றான். வருசத்திற்கு ஒரு தடவ வந்து இருபதுநாள் இருந்திட்டுப் போவான்என்றார் கருணாகரன்.

ரொம்ப சந்தோசம். ஒரு நாளைக்குச் சந்திக்கிறேன்என்றார் சேவியர்.

அதைத்தான் இப்பச் சொல்ல வந்தேன். இவனுக்குக் கல்யாணம் முடிக்க பெண் பார்த்துக்கிட்டு இருக்கோம். இன்னும் முடிவாகலேஎன்றார் கருணாகரன்.

நல்லது. காலாகாலத்தில் கல்யாணம் முடிங்க. இல்லைன்னா அங்கேயே யாரையாவது லவ் பண்ணி கட்டிடப் போறார். அப்புறம் உங்களுக்குக் கல்யாண வேலை இல்லாமல் போய்விடும்என்று சிரித்தார் சேவியர்.

இப்ப நான் சொல்ல வந்தது, நாளைக்கு யாழினிக்கு பிறந்த நாள். இதைகிரீன் பார்க்ஹோட்டலில் நடத்தலாம்னு இருக்கோம். வேற ஒண்ணுமில்லே. மதியம் ஒரு விருந்துதான். நீங்க உங்க அம்மா, தங்கச்சியோட கட்டாயம் வரணும்என்றார் சேவியர்.

கட்டாயம்  வர்ரோம். நாளை லீவ் நாள்தானேஎன்றார் சேவியர்.

டாக்டர் இஸ்மாயில் குடும்பத்தையும் யாழினிட்டே கூப்பிடச் சொன்னேன். அவங்களும் வருவாங்கஎன்றார் கருணாகரன்.

சரி, நான் பாத்திமா சர்ச் பாதரைப் பார்க்கப் போகணும், வரட்டுமா?” என்று விடைபெற்றார் சேவியர்.

வாங்க டாக்டர், என்ன விசேசம்? எப்படி இருக்கீங்க?” என்றார் பாதர் அந்தோணிசாமி.

பாதர், இந்தச் செக்கை வெச்சுக்கோங்க. சர்ச் காரியத்திற்குப் பயன்படுத்திக்கோங்கஎன்று ஒரு செக்கை நீட்டினார் சேவியர்.

பரவாயில்லை டாக்டர். மாதா மாதம் பதிமூன்றாம் தேதி மாதாவுக்குச் சிறப்பு நவநாள் நடத்தி மக்க ளுக்கு மதிய விருந்து தருவோம். அதற்கு இதைப் பயன்படுத்துறேன்என்று சிரித்தார் அந்தோணிசாமி.

அப்போது அருகிலுள்ள பாத்திமா மேல்நிலைப் பள்ளி தலைமைச் சகோதரி ப்ளோரா வந்தார்.

வணக்கம் டாக்டர்! எங்களோட பள்ளியிலே ஒரு நாள் மருத்துவக் கேம்ப் நடத்தணும். எங்க மாணவிகளைச் செக்கப் பண்ணி மருந்து மாத்திரை குடுக்கணும்என்றார்.

ஒருநாள் எங்க ஆஸ்பத்திரிக்கு வந்து டாக்டர் இஸ்மாயிலைப் பார்த்துச் சொல்லுங்க. கட்டாயம் ஏற்பாடு செய்வார்என்றார் சேவியர்.

நீங்க தூத்துக்குடியாமே! நானும் தூத்துக்குடி அருள்தாஸ்புரம்தான்என்றார் சிஸ்டர் புளோரா.

ரொம்ப சந்தோசம் சிஸ்டர்என்றார் சேவியர்.

நான் சிவகங்கை பகுதிக்காரன். காளையார் கோவில் அருகே உள்ள சூசையப்பர் பட்டணம் என் ஊர். நான் பூந்தமல்லியில் படித்தபோது சென்னை டையசிஸ்க்கு வந்துவிட்டேன்என்று சிரித்தார் அந்தோணி.

ரொம்ப நன்றி பாதர். நான் கிளம்புறேன்என்று புறப்பட்டார் டாக்டர் சேவியர்.        

(தொடரும்)

இறைவாக்கினரின் அரசியல் ஈடுபாட்டு வழியில் கிறித்தவர்கள் (கிறித்தவரின் அரசியல் ஈடுபாடு - 3)
ஆன்மிகம்
இறைவாக்கினரின் அரசியல் ஈடுபாட்டு வழியில் கிறித்தவர்கள் (கிறித்தவரின் அரசியல் ஈடுபாடு - 3)

அநியாயத்தையும் அதர்மத்தையும் பிடுங்கி எறியவும் தகர்க்கவும், சுரண்டலையும் மனிதத்தைக் கேவலப்படுத்தும் அனைத்தையும் அழிக்கவும் தகர்க்கவும், மறுபடியும் கடவுளின் உடன்படிக்கைச் சமுதாயத்தைக் கட்டவும் நடவும் இஸ்ரயேல் இறைவாக்கினர்கள் கடவுளின் குரலாக, தூதர்களாகத் தீவிரமாகச் செயல்பட்டார்கள். யாவே இறைவனின் அரசியல் ஆக்கப்பணியைப்போல, இறைவாக்கினரும் மக்களை உடன்படிக்கைச் சமுதாயத்தில் ஆற்றல் படைத்தவர்களாக மாற்றிட, அரசியல் ஆக்கப்பணியில் ஈடுபட்டார்கள். இறைவாக்கினருடைய நிலைப்பாடும், கடவுளுடைய திருவுளத்தின் அறிவிப்பும் அரசியலாக்கத்தின் வெளிப்பாடுகளாக இருப்பதை இறைவாக்கினர்களில் காண்கிறோம்.

அரசர்களைத் தேர்ந்தெடுத்து திருப்பொழிவு செய்த இறைவாக்கினர்கள்

கடவுளின் கட்டளைக்கு ஏற்ப இறைவாக்கினர்கள் அரசர்களைத் தேர்ந்தெடுத்துத் திருப்பொழிவு செய்தார்கள். சாமுவேல் இறைவாக்கினர் சவுல் என்பவரை இஸ்ரயேலின் முதல் அரசராக ஏற்படுத்தியபோது அவர் கூறியது: “ஆண்டவர் உன்னை மக்களின் அரசராகத் திருப்பொழிவு செய்து இருக்கிறார் (1சாமு 10:1). எல்லாருக்கும் அரசராக இருக்கின்ற கடவுள் இந்தப் பெரிய பொறுப்பை மனிதருக்கும் கொடுத்து தமது சார்பாக ஆட்சி நடத்த அழைப்பு விடுக்கிறார்.

சவுல் அரசன் கடவுளுடைய வழிகளைப் பின்பற்றாமல் சென்றபோது, அவனை ஆண்டவர் ஒதுக்கி விடுகிறார். எபிரோன் மக்களால் தாவீது கடவுளின் அரசராகத் திருப்பொழிவு செய்யப்படுகிறார் (2சாமு 2:4). அரசரைத் திருப்பொழிவு செய்யும் அரசியல் அதிகாரத்தைக் கடவுள் மக்களுக்கும் கொடுக்கிறார். அரசரைத் தேர்ந்து கொள்கின்ற உரிமையைக் கடவுள் சனநாயகப்படுத்திடும் அரசியலாக்கப் பணியில் ஈடுபடுகிறார். எனவே, அரசரை நியமிக்கும் பணியை இறைவாக்கினர்களுக்கும் மக்களுக்கும் கொடுப்பதன் வழியாக, மக்களுக்கும் இறைவாக்கினர்களுக்கும் அரசரைத் தேர்ந்து கொள்ளும் அரசியலாக்க அதிகாரத்தைத் தருகின்றார். அரசரைத் திருப்பொழிவு செய்யும் பழக்கம் சாலமோன் இறந்த பிறகும் தொடர்ந்தது (1சாமு 11:29-32).

அரசியல் ஆட்சியாளர்களை வழிநடத்தும் இறைவாக்கினர்கள்

யாவே இறைவனின் அறிவுரையால் இறைவாக்கினர்கள் அரசர்களை வழிநடத்தினார்கள். சிரியா நாட்டு அரசன் இஸ்ரயேலைத் தாக்க முயற்சித்தபோது, பெயர் இல்லாத ஓர் இறைவாக்கினர் ஆகாபுக்கு அறிவுரை கூறி, இஸ்ரயேலைக் காப்பாற்றும் வழியைக் காண்பித்தார் (1அர 20:1-22). ஆகாப் கடவுளுடைய அறிவுரையை மீறினான் என்றால், அவன் அழிக்கப்படுவான் என்று இறைவாக்கினர் மீக்கா அறிவித்தார் (1அர 22:1-40).

இறைவாக்கினர் எலிசா அரசியல் இராணுவக் காரியங்களில் நேரடியாக ஈடுபட்டார் (2அர 3:4-27). இஸ்ரயேல் உடன்படிக்கையை மறுபடியும் புதுப்பிப்பதற்கு யோசியா, குல்தா என்ற இறைவாக்கினரைக் கலந்து ஆலோசித்தார் (2அர 22:8-20). இறைவாக்கினர்கள் அரசு அதிகாரத்திலே நேரடியாகப் பங்கு பெற்று, அரசர்களையும் ஆட்சியாளர்களையும் கடவுளுடைய ஒளியில் வழிநடத்தினர்நீதியுள்ள அரசை உருவாக்கவேண்டும் என இறைவாக்கு உரைத்தனர். எனவே, அவர்களுடைய இறைவாக்குப் பணி அரசியலாக்க ஈடுபாடு நிறைந்ததாக இருந்தது.

ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் எச்சரிக்கை மணியடித்த இறைவாக்கினர்கள்

காலப்போக்கில் இஸ்ரயேல் வரலாற்றில் முடியாட்சி என்பது அநியாய அராஜகச் சுரண்டல் ஆட்சியாக மாறியது. எனவே, இறைவாக்கினர்கள் அரசர்களும் மக்களும் செய்கின்ற அநியாயங்களைச் சுட்டிக்காட்டவும், அவர்களது  உடன்படிக்கை மீறல்களைத் தட்டிக்கேட்கவும் செய்தனர். அவர்களை மறுபடியும் உடன்படிக்கை வாழ்விற்கு அழைக்கவும் செய்தனர்.

நாபோத் என்பவரின் திராட்சைத் தோட்டத்தைத் தனது பேராசையால் அபகரித்த ஆகாப் மன்னனை எலியா இறைவாக்கினர் எச்சரித்துத் தீர்ப்பு வழங்கினார் ((1அர 21:19).  தனது அரசு அதிகாரத்தைத் தனது சுயநலத்திற்காகப் பயன்படுத்தி, உரியாவின் மனைவி பத்சேபாவை அபகரித்ததோடு மட்டுமில்லாமல், அவருடைய கணவரையும் கொலை செய்த தாவீது, நாத்தான் இறைவாக்கினரால் எச்சரிக்கப்படுகிறார் (2சாமு 11:1-12).

இறைவாக்கினர்கள் அரசர்களுக்கு அரசியல் ஆலோசகர்களாக, அறிவிப்பாளர்களாகச் செயல்பட்டனர். அநியாயம் செய்கின்ற மக்களையும் இறைவாக்கினர்கள் எச்சரித்து வழிநடத்தத் தவறவில்லை. யாவே கடவுளின் வழிபாட்டை மறுதலித்துவிட்டு, வேற்றுத் தெய்வ வழிபாடுகளை மேற்கொண்டவரையும் (எரே 10, எசா 44),  ஏழைகளைச் சுரண்டியவர்களையும் (ஆமோ 2:6-9), ஆடம்பரமான அர்த்தமற்ற திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களையும் (எசா 1:10-16, ஆமோ 5:21-23) நீதி மறுக்கப்படுவதையும் குறிப்பாக, ஏழைகள் ஒடுக்கப்படுவதையும் உரக்கச் சொல்லி எச்சரித்தார்கள். நீதிக்கும் நேர்மைக்கும் உரிய வாழ்வு வாழ இறைவாக்கினர்கள் இஸ்ரயேலரை மறுபடியும் சமத்துவம் நிறைந்த உடன்படிக்கைச் சமுதாயமாக மாறிடப் பணி செய்தார்கள்.

மக்களை ஆட்சி செய்த அவர்களே மக்களின் ஆற்றல் பறிக்கப்பட்டு ஒடுக்கப்படுவதற்குக் காரணமாக இருந்தபோது, இறைவாக்கினர்கள் அவர்களை எச்சரித்ததோடு மட்டுமல்லாமல், கடவுளுடைய தீர்ப்பினையும் துணிச்சலோடு எதிரொலித்தார்கள். கடவுள் எவ்வாறு மக்களை ஆட்சி செய்கிறாரோ, அவ்வாறே ஆட்சி செய்ய மன்னர்களுக்கும் அறைகூவல் விடுத்தார்கள். மக்களும் கடவுளுக்குரிய நம்பிக்கையில் தவறியபோது, அவர்களும் எச்சரிக்கப்பட்டு, பலவகையான தண்டனைகளால் புதுப்பிக்கப்பட்டு உடன்படிக்கையின் மக்களாக மாற்றிட இறைவாக்கினர்கள் உழைத்தார்கள். இவையெல்லாம் இஸ்ரயேலர் ஆற்றல் பெற்றவர்களாக வாழ வேண்டும் எனும் அரசியல் ஈடுபாட்டின் செயல்பாடாக இருக்கின்றது.

அரசியல் ஈடுபாட்டிற்கான கடவுளின் அழைப்பு கிறித்தவத்தின் அழைப்பு

இன்றைய கிறித்தவமும் இந்த இறைவாக்குப் பணியைத் தொடர அழைக்கப்படுகிறது. இஸ்ரயேல் இறைவாக்கினரோடும், இறைவாக்கினர்களுக்கெல்லாம் மேலான இறைவாக்கினரான இயேசுவோடும் இணைந்து செயல்பட்டு, இறையாட்சிச் சமூகத்தைக் கடவுளின் சமூகமாகக் கட்டி எழுப்பி, எல்லாரையும் ஆற்றல் படைத்தவர்களாக மாற்றிட அழைக்கப்படுகிறார்கள்.

இந்த மாற்றம் வெறும் செபத்தாலும் தவத்தாலும் நடந்துவிடாது. மாறாக, அவற்றோடு தீர்க்கமான, தெளிவான அரசியல் ஈடுபாட்டோடு இந்திய அரசமைப்புச் சாசனம் காட்டுகின்ற விழுமியங்களைத் தூக்கிப் பிடித்து வாழ்வதால் நிகழும்.

அநீதிக்கும் அதர்மத்திற்கும் எதிராகக் குரல் கொடுத்து, நம் நாட்டிலே நீதியும் சுதந்திரமும் விடுதலையும் சகோதரத்துவமும் மலர்ந்திட கிறித்தவர்கள் இறைவாக்கினர் குரலாகச் செயல்பட வேண்டும்.

நமது சனநாயக உரிமையை எந்த அரசியல் ஆட்சியும் நம்மிடமிருந்து அபகரிக்க அனுமதிக்கக் கூடாது. எனவே, நம்முடைய குடியுரிமை உரிமைகளையும், இந்திய அரசமைப்புச் சாசன விழுமியங்களையும் கட்டிக் காத்திட நமது அரசியல் ஈடுபாடு கட்டாயம் தேவை.

திருத்தந்தை பிரான்சிஸ் கூறியதுபோல, “உங்களுடைய சக குடிமக்களின் மாண்பையும் உரிமையையும் பாதுகாத்திட அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்; பொதுப்பணிக்காக அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்இதுதான் அரசியல் ஈடுபாட்டின் முக்கிய நோக்கம்.”

Ai உலகில் மக்களாட்சி (உலகம் உன் கையில்! – 20)
சிறப்புக்கட்டுரை
Ai உலகில் மக்களாட்சி (உலகம் உன் கையில்! – 20)

ஒரு கணிப்பு என்னவென்றால், 2030-க்குள், ஏறக்குறைய 75% மக்கள், சீனாவில் தயாரித்து உலகெங்கிலும் வினியோகிக்கப்பட்டு வரும் .. கண்காணிப்பு அமைப்புக்கு (Surveillance) அடிமைகளாகிவிடுவர் என்பது. இக்கருவி உலகின் ஒவ்வொரு குடிமகனின் அனைத்து அசைவுகளையும் 24 மணி நேரமும் கண்காணிக்கும் திறன் பெற்றது. இதற்குடிஜிட்டல் சர்வாதிகாரம்  (Digital Authoritarianism)  என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பொதுவாக, தொழில்நுட்பம் என்பது அதனை எவ்வாறு பயன்படுத்துகிறோம் மற்றும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது. இது ஒன்றை மேம்படுத்தவும் அல்லது பலவீனப்படுத்தவும் கூடிய திறனையும் கொண்ட தொழில்நுட்பம், மக்களாட்சி முறைக்கு எவ்வாறு ஏற்புடையதாய் இருக்கிறதென்பதைச் சற்று ஆராய்வோம்.

ஆட்சியும் - அதிகாரக் குவியலும்

அனைத்து மக்களும் வெளிப்படையாகச் செய்திகளைப் பெறுவதும் பகிர்வதுமே மக்களாட்சி முறைக்கு அடித்தளமாக அமைகிறது. சமூக ஊடகங்கள் தவறான செய்திகளைப் பெரிய அளவில் (Mass) அவிழ்த்து விடுவதென்பது இதன் அடித்தளத்தை அசைக்குமென்பதும், நம்பத்தகுந்த செய்திகளை மக்கள் எளிதில் பெற இயலாமையும் மக்களாட்சி முறைக்கு ஆபத்தாக அமையும் என்கிறார் ஓர் ஆய்வாளார்.

சுதந்திரமும் நியாயமான (Free and Fair) தேர்தல்களை நடத்துவதாகக் காணப்பட்டாலும் வாக்காளர்கள் அரசு இயந்திரங்களுடன் போட்டியிட இயலாமலாகிவிடுவது நடைமுறை. ஆட்சி முறையில், அரசு இயந்திரங்கள் மூலம் கண்காணிப்பு நடைமுறையிலிருக்கும் நிலையில், தனிமனித உரிமை, சிறுபான்மையினரின் கருத்துச் சுதந்திரம் என்பவைகளுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் நடு நிலை வகிக்க இயலுமா? என்கிற அச்சமும் உள்ளது.

சமூக ஊடகங்களும் - அரசியலும்

இன்று உலகளவில் வெகுசிலரே தொழில்நுட்பத்தை வழிநடத்துகின்றனரென்ற நிலை கேட்பதற்கு வியப்பாக இருக்கலாம். கூகுள், முகநூல், அமேசான் மற்றும் சில தொழில்நுட்ப நிறுவனங்கள் இன்று வியப்பூட்டும்-மேட்டுக்குடியினருக்கான பரப்புரை (elite-propaganda) மற்றும் ஏற்க இயலாத செய்திகள் மூலம் கலாச்சாரத்தைச் சுற்றி வளைத்துக் குடியாட்சிமுறை தளர்விற்குப் பங்களிப்பதாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ..யின்போலியின் போலி காணொளிகள்  (Deep Fake-videos) மேலும் வலுசேர்த்து நாளுக்கு நாள் அதிகரித்தும் வருகின்றன.

யூடியூப்மற்றும்டுவிட்டர்போன்ற வலையமைப்புகளும் தங்கள் வருவாய்த் திரட்டும் போட்டியில் சளைக்காமல் ஓடும் நிலையில், அரசியல்வாதிகள் தங்கள் விளம்பரத்திற்கும் பிரபலமாவதற்கும் பக்கபலமாக விளங்கும் இவற்றைக் குறித்துக் கண்டும் காணாமலிருப்பது, இதற்கான ஒழுங்கு வரையறைபின் வரிசையிலிருப்பதாகவே பார்க்கப்படுகிறது. பொதுவாக ..யும், இயந்திரச் செயலாற்றல் சார்ந்த தொழில்நுட்பக் கட்டுப்பாடும், முழுமையாக அவற்றை உருவாக்கியவர்களிடமே இருப்பதாலும், இவை முழுமையான வெளிப்படைத்தன்மை பெற்றவையென்று கூறமுடியாது. தொழில்நுட்ப வளங்களை உடையவர்கள் மக்களை வசப்படுத்தும் திறனையும் பெறுகிறார்கள் என்பது இயல்பு. முன்பு ஒருநாள், குடியாட்சி முறைக்குத் தூண்களென்று கருதப்பட்ட ஒருசில நாடுகளை இன்று டிஜிட்டல் தொழில்நுட்பம் அசைக்கும் நிலையிலிருப்பதையும் பார்க்கிறோம்.

மக்களாட்சியும் புதிய தொழில்நுட்பங்களும்

தொழில்நுட்பம் பல தடைகளைத் தகர்த்து மக்களாட்சி அமைப்புகளையும் வழிமுறைகளையும் மேம்படுத்த உதவுகிறதென்றாலும், இவைகளின் இயல்பான வடிவமைப்புகள், அதாவது .தணிக்கை, கண்காணிப்பு போன்றவை சுதந்திர மக்களாட்சி முறைக்கு எதிர்மறையாகவே பார்க்கப்படுகின்றன. இதனால் மக்களாட்சி முறைகளை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள் மீதான நம்பகத்தன்மையை இழக்கும் நிலையும் உருவாகிறது. உலகளவில் இன்று தரவுகள் எப்போதையும் விட வலிமை பெற்றிருக்கும் நிலையில், இதனைச் சேகரிப்பதில் நிலவும் உலகளவிலானஎலிப் பந்தயம் (rat race) அனைத்து உரிமைகளையும் ஒடுக்கும் கருவியாக உருவெடுக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

முதலாளித்துவமும் மக்களாட்சியும்

உலகளவிலான ஆட்சியமைப்புகள் வலிமையான முதலாளித்துவம்தளர்ந்த குடியாட்சிமுறையைச் சார்ந்தே உள்ளதென்பதை இன்று தொழில்நுட்பத்தின் பின்னால் மனிதன் செல்வதிலிருந்தே அறிந்துகொள்கிறோம். ஆனால், தளர்ந்த முதலாளித்துவம் - வலிமையான குடியாட்சி என்று ஒரு வேளை உருவாகும் தொழில்நுட்பமுமே குடியாட்சிக்கு ஏற்புடையதாயிருக்கும் என்று கருதப்படுகிறது. இன்று நடைமுறையிலிருக்கும் பெரும்பாலான தொழில் அமைப்புகள் பல நூற்றாண்டுகளுக்கு முன் வலிமையான முதலாளித்துவ நோக்கில் உருவாக்கி இயக்கப்பட்டு வரும் மாடலமைப்பைச் சார்ந்தும், தொடர்ந்து வளர்ச்சியடைந்தும் வருகின்றன. இது மேலும் விரிவடைதல் எவ்விதத்தில் மக்களாட்சிக்கு ஏற்ப அமையும்? என்று சிந்திக்க வேண்டியுள்ளது.

தனிமனிதச் சுதந்திரமும் மக்களாட்சியும்

இன்று உலகம் தொழில்நுட்ப முதலாளித்துவத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஒருநாள் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள்மீது மட்டுமன்றி, திரளான வாடிக்கையாளர் சமூகத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், எல்லையில்லாக் கண்காணிப்பு என்பது இயல்பாகிவிடும். எனவே, தொழில்நுட்ப அடையாளப்படுத்துதல், கண்காணிப்பு அதிகரிப்பு என்பவை சமுதாயத்தில் தனிமனிதச் சுதந்திரத்திற்கான இடத்தைக் சுருக்கிவிடுவதாகப் பார்க்கப்படுகிறது.

நாம் இணையதளத்தையோ அல்லது கணினி தன்னியக்கத் தொழில்நுட்பத்தையோ அல்லது ..யோ குறைகூற முடியாது; ஆனால், இத்தொழில்நுட்பங்களைத் தங்கள் சுயநலத்திற்குச் சாதகமாக அமைத்துக்கொள்பவர்களே சமத்துவ மற்றும் சம மக்களாட்சிக் கொள்கைகளுக்கு ஆதரவாய் இல்லாமல் இருக்கிறார்கள் என்கிறார் ஓர் ஆய்வாளர்.