slider slider slider
நம் வாழ்வு
நம் வாழ்வு இதழின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்
நம் வாழ்வு
நம் வாழ்வு - நல்லவர்களின் நாடித்துடிப்பு
நம் வாழ்வு
நல்லவர்களின் நாடித்துடிப்பு
அண்மைச் செய்திகள்
அம்பேத்கரின் ஆன்மிகத் தேடல்
ஆன்மிகம்
அம்பேத்கரின் ஆன்மிகத் தேடல்

ஆன்மிகம் என்பது...

ஏப்ரல் 14-ஆம் நாள் மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாளைக் கொண்டாடுகின்றோம். அம்பேத்கர் பிறப்பால் ஓர் இந்துவாக இருந்தாலும், வாழ்நாள் முழுவதும் அவரது ஆன்மிகம் ஒரு தேடல் இறையனுபவமாகவே இருந்தது.

மனித வாழ்வு பல பரிமாணங்களைக் கொண்டது. உடல், கலாச்சாரம், மனம், மதம், சமுதாயம் என்ற பல பரிமாணங்களை உள்ளடக்கியது. அதில் ஆன்மிகப் பரிமாணமானது அனைத்துப் பரிமாணங்களின் மையமாக அமைந்து, அவனது வாழ்வைப் பொருளுள்ளதாக்குகிறது.

ஆன்மிகம் என்பது ஒரு மனிதன் தன் வாழ்வின் நிறைவையும் இறைமையையும் அடைந்திட, அவன் பின்பற்றும் சமயத்தில் தான் தேர்ந்தெடுக்கும் நோக்கமும் (VISION), அதை அடைந்திட அவர் கையாளும் வாழ்க்கைமுறைகளும் (WAY OF LIFE) ஆகும். இதனால் ஆன்மிகமானது அவரது வாழ்விற்கு நிறைவான அர்த்தத்தை அளித்து, அவரது வாழ்வைப் பொருளுள்ளதாக்கி, இறைமைக்கும் இறவாமைக்கும் இட்டுச்செல்லும் ஒரு முக்கியப் பரிமாணம் ஆகும்.

ஆன்மிகம் என்பது ஒரு மனிதனுக்குத் தேடல் அனுபவமாகவே அமையவேண்டும். இத்தேடல் மனித வாழ்வின் தனித்துவத்திற்கும், ஆளுமை வளர்ச்சிக்கும் அடிப்படையும் ஆணிவேருமாய் அமைகிறது. மனித வாழ்வின் அறநெறிக் கட்டாயமும் ஆகும்.

அம்பேத்கரின் இலக்கு (VISION)

அம்பேத்கரின் இலக்கு சுதந்திரம் (LIBERITY), சமத்துவம் (EQUALITY), சகோதரத்துவம் (FRATERNITY) ஆகும். சுதந்திரம் என்பது, ஒரு மனிதன் தன்னையும் பிறரையும் வாழவைக்கும் செயல்களை எவ்விதத் தடையுமின்றிச் செய்திட உரிமையைச் சுட்டிக்காட்டுகிறது. சமத்துவம் என்பது, மனிதப் படைப்பில் எவ்வித ஏற்றத் தாழ்வுகளும் இல்லாது, சமத்துவ உறவுடன் வாழ்ந்திடும் சமூக அமைப்பாகும். சகோதரத்துவம் என்பது, பாதிக்கப்பட்ட மனிதர்மீது சக மனிதன் கொண்டுள்ள அர்ப்பணமுள்ள செயல்பாடுகளைக் கொண்ட சமூகத்தைக் குறிக்கிறது. மொத்தத்தில், ஒரு சமூகத்தில் மனிதராகப் பிறந்த அனைவரும்  மாண்புடைய மனிதர்களாகத் திகழ்ந்து, இறைமையை உணர்வதே அவரது இலக்காகும். அம்பேத்கரின் வாழ்க்கை முறையினை அவரது கொள்கை வாக்கியமானகற்பி, போராடு, ஒன்றுசேர்என்பது எடுத்துரைக்கிறது.  

கற்பி (EDUCATE)

 கற்பிஎன்று சொல்லும்போது, நாம் நன்றாகக் கற்க வேண்டும். இரண்டாவதாக, கல்வி மறுக்கப்பட்ட மக்கள் கற்பிக்க உழைத்திடவேண்டும். அம்பேத்கரைப் பொறுத்தமட்டில், நன்கு படித்துப் பட்டங்கள் பெற்று, ‘தான் உண்டு, தன் குடும்பம் உண்டுஎன்று குறுகிய வட்டத்தில் வாழ்ந்து, எவ்விதச் சமுதாய அக்கறையுமின்றி இருப்போரைமூளை பெருத்தவர் (LEARNED) என்பார். உண்மையான அறிவுஜீவி (INTELLECTUALS), இச்சமுதாயம் சீரடையத் தன்னை அர்ப்பணிக்கும் உயர்ந்தோர் ஆவார். ஆக, தான் கற்றக் கல்வியால் பாதிக்கப்பட்ட சமுதாயம் மாண்புடைய மனிதர்களாக வாழ்ந்திட தன்னையே அர்ப்பணிக்கும் வாழ்க்கை முறையாகும்.

போராடு (AGITATE)

பாதிக்கப்பட்டவர்களுக்குச் சலுகைகளை நாய்களுக்குப் போடும் எண்ணமும் அதை விரும்பி ஏற்கும் மனப்போக்கும் தன்மானத்திற்கு எதிரானது என்பார். “சிறுத்தைகளையா கோவில்களில் பலியிடுகின்றனர்? ஆடுகளைத்தானே! எனவே, சிறுத்தைகளாகக் கிளர்ந்து எழவேண்டும்என்பார். சாய்கின்ற பக்கம் சாய்ந்திடும் செம்மறி ஆடுகளைப் போல் மானங்கெட்டு வாழ்வதைவிட, தன்மானத்திற்காய் ஒரு நிமிடம் போராடி அமரர் ஆவதே மேல் என்பார். இதில் மேலோங்குவது வரையறையற்ற உணர்ச்சிகள் அல்ல; மனித மாண்புடைய உணர்வுகளின் மேலாண்மை என்பார்.

ஒன்றுசேர் (ORGANIZE)

தலித் மக்கள் துண்டாடப்பட்டு, பல பிரிவுகளாக இருப்பதைக் கண்டார் அம்பேத்கர். தன் மக்கள் ஓரணியில் திரண்டு ஒன்றுபட விரும்பினார். மற்ற சாதியினர் ஒன்றுதிரள்வது அநீதி நிறைந்த சாதியத்தை வலுப்படுத்தவே. அது சமூகப் பாவம் ஆகும். ஆனால், தலித் மக்கள் சாதியத்தை ஒழித்து மனித மாண்பிற்காகப் போராடுவது, தெய்வீகமாகும் என்பதை உணர்ந்திருந்தார். ‘ஒன்றுசேர்என்பது மனித மாண்பிற்காகப் போராட ஒன்று சேரும் குழுமத்தைக் குறிக்கிறது.           

தொடர் தேடலே ஆழமான, அர்த்தமுள்ள ஆன்மிகம்

ஆன்மிகத் தேடல் என்பது மதம் போதிக்கும் அனைத்துக் கருத்துகளையும் குருட்டுத்தனமாக ஏற்றுக்கொள்வதில் அல்ல; அது தொடர் தேடலாக அமையவேண்டும் என்பார். இயேசு யூத மதத்தில் பிறந்தவராக இருந்தாலும், அப்படியே யூத மதக் கருத்துகளை ஏற்றுக்கொண்டவர் அல்லர்; தமக்குப் பொருள்ளதாகக் கண்டதைத்  தெளிந்து தேர்ந்து தம் வயப்படுத்திநமக்கு இறையாட்சியின் மதிப்பீடுகளாகத் தந்துள்ளார். அம்பேத்கரின் ஆன்மிகத் தேடல், சமுதாயத்தால் பாதிக்கப்பட்ட அனுபவத்திலும் மனித மாண்பிலும்  தொடங்குகிறது. எனவே, 1935-ஆம் ஆண்டு அக்டோபர் 13-ஆம் தேதி  “நான் பிறப்பால் இந்துவாக இருந்தாலும், ஓர் இந்துவாக இறக்கப் போவதில்லைஎன்று கூறினார். கிறித்தவச் சமயத்தைத் தான் விரும்புவதாகப் பல முறை குறிப்பிட்டுள்ளார். தனக்குப் பிடித்த ஆளுமைகளாகப் புத்தரையும் இயேசுவையும் கூறியுள்ளார் (ஜோலாப் பூர் மாநாடு). கிறித்தவர்கள் இயேசுவின் போதனைகள்படி வாழ்வதில்லை என்றார். ஆனால், இயேசுவின் இறைமைத்தன்மையை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

மனித மாண்பே இறைமைக்கு அடித்தளம்

1956-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ஆம் நாள் நாக்பூரில், பௌத்த மதமே தனக்கும், தன் மக்களுக்கும் சரியான ஆன்மிகப் பாதைக்கு இட்டுச் செல்லும் என்று உணர்ந்து, 22 உறுதிமொழிகளுடன் போதிசத்துவர் ஆனார். பௌத்த மதத்தை அப்படியே அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மாறாக, புத்தரைக் கடவுளாகப் பார்க்கும் மாகாயானம் மற்றும் ஹீனயானம் அல்லாமல், தனது தேடல் அனுபவத்தின் மூலம் நவயான பௌத்தம்  (NEO – BUDDHISM) என்ற புதிய பௌத்த மதத்தை ஏற்றுக்கொண்டார். ‘நவஎன்றால்புதியஎன்றும், ‘யானம்என்றால்ஆன்மிகத்தைப் பின்பற்றும் முறைஎன்றும் பொருளாகும். தானும், தன் மக்களும் மனித மாண்பை அடைவதன் வழியாக, இறைமையையும் இறவாமையையும் அவர்கள் அனுபவிக்க முடியும் என்றார்.

சிந்திக்க... செயல்பட...

நாம் பிறப்பால் ஒரு சமயத்தைப் பின்பற்றினாலும், ஆன்மிகத் தேடலின் மூலம்  நமது இலக்கையும் வாழ்க்கை முறையையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல்அதன் அடிப்படை உண்மையைத் தேடி, நமக்குப் பொருளுள்ளதாக மாற்றி, அவற்றைத் தம்வயப்படுத்திப் பின்பற்றும் போது, உண்மையான தெய்வீகத்தையும் இறைமையையும் நாம் அடைய முடியும். இதுவே ஒரு மானிட அறிவுஜீவியின் ஆளுமையையும் தனித்துவத்தையும் சிறப்படையச் செய்கிறது.

உயிர்ப்பின் சாட்சிகளாய்...
ஆன்மிகம்
உயிர்ப்பின் சாட்சிகளாய்...

இத்தாலியின் போலோக்னா நகரைச் சேர்ந்த ஓர் இளம் மாணவர், புனித பக்கீத்தாவிடம் ஒரு கேள்வியை எழுப்பினார். “உங்களைக் கடத்தி சித்திரவதை செய்தவர்களை மீண்டும் சந்தித்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?”

நான் அவர்களைச் சந்தித்தால் அவர்கள் காலில் விழுந்து முத்தமிடுவேன்; ஏனெனில், அவர்கள் என்னைச் சாட்டையால் அடித்ததன் விளைவாகப் பெற்ற 144 தழும்புகள் இல்லையென்றால், இன்று நான் ஒரு கிறித்தவளாகவும் இறைப்பணியாளராகவும் மற்றும் துறவியாகவும் இருந்திருக்க முடியாது.”

இயேசுவோடு வாழ்ந்த திருத்தொண்டர்களைப் போலவும், எண்ணற்ற புனிதர்கள் சொல்லொண்ணாத் துயரத்தை ஏற்று இறைவனுக்குச் சாட்சிய வாழ்வு வாழ்ந்தனர். கிறித்தவ வாழ்வு என்பது வெறும் சடங்குகளின் தொகுப்பல்ல; நம் வாழ்வில் அர்த்தம் தரும் பயணமாகும். கிறிஸ்துவில் வைத்திருக்கும் நம்பிக்கை அவரின் பாடுகளில் அல்ல; உயிர்ப்பில்தான் உள்ளது. நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் ஆண்டவரின் உயிர்ப்புப் பெருவிழா நம் ஆன்மிகப்  பயணத்திற்கு ஒரு புதிய விடியலைத் தருகிறது.

அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சி சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தனர். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, ‘உங்களுக்கு அமைதி உரித்தாகுக!’ என்று வாழ்த்தினார். இவ்வாறு சொல்லிய பின் அவர்தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டனர். இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, ‘உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்என்றார். இதைச் சொன்ன பின் அவர் அவர்கள் மேல் ஊதி, “தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள் (யோவா 20:19-21) என்றார்.

கல்லறையின் இருளை வென்ற உயிர்த்த ஆண்டவரைச் சந்தித்த பிறகுதான் திருத்தூதர்கள் தூய ஆவியின் ஆற்றலைப் பெற்று, உலகெங்கும் நற்செய்தியை அறிவிக்கப் புறப்பட்டனர். அவர்களின் வாழ்க்கை முறையை இன்றைய சூழலில் நாம் எவ்வாறு பின்பற்றலாம்?

1. திருத்தூதர்களின் அடையாளம்

திருத்தூதர் (அப்போஸ்தல்லோஸ்) என்ற கிரேக்கச் சொல்லுக்குஅனுப்பப்பட்டவர்கள்என்று பொருள். திருத்தூதர்கள் இயேசுவின் போதனையை வெறும் தகவல்களாகப் பறைசாற்றவில்லை; மாறாக, உயிர்த்த ஆண்டவரின் ஆற்றலைப் பெற்று அவரது நற்செய்தியைத் தங்களின் இரத்தச்சாட்சியால் அறிவித்தனர். உயிர்த்த ஆண்டவரைச் சந்தித்தபின் இவர்கள் வீதிக்குச் சென்று துணிவுடன் உயிர்த்த ஆண்டவரிடமிருந்து பெற்ற அனுபவத்தைப் பற்றிப் பேசத் தொடங்கினர். இந்தத் துணிவுதான் ஒரு நற்செய்திப் பணியாளரின் முதன்மைப் பண்பாகும்.

அஞ்சாதீர்கள்என்ற ஆண்டவரின் வார்த்தையே அவர்களின் ஆன்மப் பலமானது. “தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லை வரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள் (திப 1:8). இது மனித பலத்தால் அல்ல; இறைவனின் ஆற்றலால் நிகழ்ந்தது.

2. ஏழு திருத்தொண்டர்களின் பணிகளும் மற்றும் சாட்சிய வாழ்வும்:

1. தூய ஸ்தேவான்:  இவரே திரு அவையின் முதல் இரத்தச்சாட்சியாவார். இறைநம்பிக்கையின் முதல் மறைச்சாட்சியாளர். ஏழு திருத்தொண்டர்களில் முதன்மையான ஸ்தேவான், தூய ஆவியாலும் இறைநம்பிக்கையாலும் நிறைந்தவர். பந்திகளில் உணவு பரிமாறும்டயகோனியாஎனும் தாழ்மையான பணியைச் செய்த அதேவேளையில், இறை வல்லமையால் மக்களிடையே பெரும் அரும் அடையாளங்களையும் செய்தார். மறைநூல் அறிஞர்களும் மூப்பர்களும் அச்சுறுத்தியபோது அஞ்சாமல், நற்செய்தியைத் துணிச்சலுடன் அறிவித்தார்.

2. பிலிப்பு: பிலிப்பு ஒரு சிறந்த நற்செய்தி அறிவிப்பாளராக விளங்கினார். சமாரியா நகருக்குச் சென்று அங்குள்ள மக்களுக்குக் கிறிஸ்துவைப் பற்றி அறிவித்ததோடு, தூய ஆவியாரின் தூண்டுதலால் எத்தியோப்பிய அரச சபையின் அதிகாரிக்குத் திருவிவிலியத்தை விளக்கி அவருக்குத் திருமுழுக்குக் கொடுத்தார். இதன்மூலம் நற்செய்திப் பணி என்பது எல்லா இனத்தவருக்கும் உரியது என்பதைத் தனது வாழ்வால் நிலைநாட்டினார்.

3. புரக்கோரோ: புரக்கோரோ திருத்தூதர்களால் வழங்கப்பட்ட நிர்வாகப் பணிகளை மிகவும் செம்மையாகவும் நேர்த்தியாகவும் செய்தவர். திரு அவை பாரம்பரியத்தின்படி, இவர் திருத்தூதர் யோவானின் உதவியாளராக இருந்து அவருக்குப் பணிவிடை செய்தார். பிற்காலத்தில் நிக்கோமீடியா பகுதியின் ஆயராகப் பொறுப்பேற்று, அங்கிருந்த மக்களுக்கு இறைவார்த்தையை அறிவித்தார்.

4.நிக்கானோர்: தொடக்கத் திரு அவையில் எபிரேய மற்றும் கிரேக்க மொழி பேசும் இறை நம்பிக்கையாளர்களிடையே நிலவிய பிரிவினைகளைத் தீர்ப்பதில் நிக்கானோர் முக்கியப் பங்காற்றினார். உணவுப் பங்கீட்டில் கிரேக்கக் கைம்பெண்கள் புறக்கணிக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த இவர், ஏழை விதவைகளுக்குத் தேவையான உதவிகளை முன்னின்று அளித்தார். ஸ்தேவான் கொல்லப்பட்ட அதே நாளில், இவரும் கிறிஸ்துவின் மீதிருந்த பற்றுறுதிக்காகத் தனது உயிரைத் தியாகம் செய்து இரத்தச்சாட்சியானார்.

5. தீமோன்: திரு அவையில் ஒழுங்குமுறையைப் பராமரிப்பதிலும், பந்திகளில் அனைவருக்கும் சமமான உணவு கிடைப்பதை உறுதி செய்வதிலும் தீமோன் கடுமையாகவே உழைத்தவர். பிற்காலத்தில் பெரோயா பகுதியின் ஆயராக நியமிக்கப்பட்ட இவர், அங்கு நற்செய்திப் பணிகளை விரிவுபடுத்தினார். கிறிஸ்துவின் மதிப்பீடுகளைப் பரப்பியதற்காகப் பல சித்திரவதைகளையும் துன்பங்களையும் அனுபவித்தபோதிலும், இறுதிவரை இறைநம்பிக்கையில் உறுதியாக இருந்து உயிர் துறந்தார்.

6. பார்மனா: திருத்தூதர்களுக்குப் பணிவிடை செய்வதிலும், நம்பிக்கையாளர்களின் அன்றாடத் தேவைகளைக் கவனிப்பதிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர். எளிய பணிகளின் வழியாகவும் இறைவனுக்கு மகிமை சேர்க்க முடியும் என்பதை இவர் உலகுக்குக் காட்டினார். பிலிப்பி நகரில் நற்செய்தி அறிவிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இறை நம்பிக்கைக்காகத் தனது உயிரைத் தியாகம் செய்தார்.

7. நிக்கொலா: அந்தியோக்கியாவைச் சேர்ந்த நிக்கொலா, பிற இனத்தைச் சார்ந்தவராக இருந்து யூத மதத்தைத் தழுவி, பின்னர் கிறித்தவத்திற்கு மாறியவர். கிரேக்க மொழி பேசும் பிற இனத்தவர்களிடையே நற்செய்தியை அறிவித்தார். திரு அவையின் நிர்வாகப் பணிகளைத் துல்லியமாகவும் நேர்மையாகவும் கையாண்ட இவர், நற்செய்திப் பணி என்பது அனைத்துப் பின்னணி கொண்டவர்களையும் உள்ளடக்கியது என்பதைத் தனது இறைப் பணியின் மூலம் உறுதி செய்தார்.

3. நம்பிக்கைக்கொண்டோரின் வாழ்வுமுறை

திருத்தூதர்கள் தங்களின் சிந்தனையாலும் செயலாலும் ஒன்றிணைந்த வாழ்வை வாழ்ந்தனர். இதுவே பல்வேறு சமூகக் காரணங்களால் பிரிந்து கிடக்கும் உலகிற்குத் திருத்தூதர்கள் தந்த சிறந்த எடுத்துக்காட்டாகும். சுயநலத்தைத் துறந்து, தங்களுக்குள் இருந்தவற்றைத் தாராளமாகப் பகிர்ந்து கொண்டனர். ‘எனதுஎன்பதுநமதுஎன்று மாறிய போது, அங்கே வறுமை நீங்கி இறையாட்சி புலர்ந்தது. தனிமனித ஆதிக்கத்தைவிட பொதுநலமே மேலானது என்பதை அவர்கள் உலகிற்குக் கற்பித்தனர். திருத்தூதர்கள் எத்தகைய துன்பத்திலும் இறைவார்த்தையை விட்டுக்கொடுக்கவில்லை. சோதனைகளை வேதனைகளாகப் பார்க்காமல், இறைவனுக்கு ஆற்றும் தொண்டாகப் பார்த்தனர்.

4. இன்றைய சூழலில் திருத்தூதுப் பணி

திருத்தந்தை பிரான்சிஸ், “நற்செய்தி அறிவிப்பு என்பது ஒரு நுகர்வுப் பொருள் அல்ல; அது ஒரு கொண்டாட்டம்என்று கூறுகிறார். நற்செய்தி அறிவிப்பவர் முகத்தில் மகிழ்ச்சி இருக்கவேண்டும். உயிர்த்த ஆண்டவரைச் சுமப்பவர்கள் ஒருபோதும் விரக்தியில் மூழ்கமுடியாது. சோகமான முகம் நற்செய்தியின் வீரியத்தைக் குறைத்துவிடும். நற்செய்தி ஒருவரைப் பயமுறுத்துவதற்கு அல்ல; மாறாக, இறைவனின் பேரன்பால் அவரை மாற்றியமைக்கவே அறிவிக்கப்படுகிறது.

மக்களின் காயங்களைக் குணப்படுத்துவது உடல் ரீதியான நோய்களைத் தாண்டி, மனக்காயங்களை ஆற்றும் மருந்தாக நற்செய்தி இருக்க வேண்டும். உலகம் அன்பிற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறது. அந்த ஏக்கத்தைப் பூர்த்தி செய்வதே நற்செய்திப் பணியாகும். நம் வாழ்வு மக்களை நோக்கி புறப்பட்டுச் செல்லும் திரு அவையாக மாறி, இறைவன் தரும் மகிழ்ச்சியை விதைக்கவேண்டும். நம் பணி தேங்கி நிற்கும் குட்டையைப் போல இல்லாமல், ஓடும் நதிபோல நற்செய்தியை எல்லா இடங்களுக்கும் கொண்டு செல்லவேண்டும். இப்படிப்பட்ட  நற்செய்திப் பணியை ஆற்றிடத் திரு அவை நம்மை அழைக்கிறது.

உயிர்ப்புப் பெருவிழா நமக்கு விடுக்கும் அழைப்பு இதுவே. உயிர்த்த ஆண்டவர் நம்மீது அருள்பொழியும் ஆவியைப் பெற்று, திருத்தூதர்களைப் போல நாமும் நம் அச்சத்தைத் துறப்போம். நாம் ஒவ்வொருவரும் தனித்துவமான சமூக அடையாளங்களைப் பெற்றிருந்தாலும், கிறிஸ்துவின் அன்பில் நாம் அனைவரும் ஒன்றாக வாழ அழைக்கப்படுகிறோம். “ஆண்டவருடைய ஆவி என்மேல் உள்ளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும், ஆண்டவர் அருள் தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார் (லூக் 4:16-18) என்பதற்கிணங்க, திருத்தொண்டர்கள் வழியில் பிறரன்புப் பணியிலும், மனவுறுதியோடு நற்செய்தியை அறிவிப்போம்.

எனவே, நாம் சொல்லால் மட்டும் நற்செய்தியை அறிவிப்பவர்களாக இல்லாமல், நம்முடைய அறச்செயல்களால் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும். இருள் சூழ்ந்த இந்த உலகிற்கு நாம் வெறும் விளக்குகள் அல்ல; உயிர்த்த இயேசு கிறிஸ்துவின் அணையாத சுடர்களாவோம். ஏனெனில், உயிர்த்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே நம் ஆற்றல். அவரின் நற்செய்தியே நம் வாழ்வு!

பேரொளியின் ஒளியாக!
ஆன்மிகம்
பேரொளியின் ஒளியாக!

இறைத்தந்தையின் பேரன்பில் நம்பிக்கை கொண்டு வாழ, வழிகாட்டும் ஒளியாக ஒளிரும் இயேசு ஆண்டவர், அக ஒளியாக உறைந்து நம்மில் அருள் ஒளி பொழிகின்றார். அவரது வழிநடத்துதலில் செய்யும் நற்செயல்கள் நம்மைப்  பேறுபெற்றவர்களாக உருவாக்கும். சுடரொளியாக நாம்  உரையாடி உறவாடும் அனைவரும் ஒளியின் மக்களாக விளங்குவர். இறைத் தந்தையின் பேரன்பில் நம்பிக்கைகொண்டு அவரை மாட்சிப்படுத்துவர்.  உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க! அப்பொழுது, அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு, உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள் (மத் 5:16) என்று இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளுக்கு உயிர் கொடுக்கும் அருளைப் பெற்றுக்கொள்கின்றோம்.

நம்பிக்கையாளர்கள் நிலைவாழ்வை நோக்கிப் பயணிக்கும் எதிர்நோக்கின் திருப்பயணிகளாக வாழ வல்லமை பெற்றுக்கொள்கின்றோம். இவ்வாறு நாம் நற்செயல் புரிந்து வாழும்படி கடவுள் முன்கூட்டியே ஏற்பாடு செய்திருக்கிறார் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். “ஏனெனில், நாம் நற்செயல் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாகப் படைக்கப்பட்டிருக்கிறோம். இவ்வாறு நாம் நற்செயல் புரிந்து வாழும்படி கடவுள் முன்கூட்டியே ஏற்பாடு செய்திருக்கிறார்...” (எபே 2:10) என்பதையும் நாம் நினைவில்கொள்ளவேண்டும்.

நமக்காக ஏற்பாடு செய்துவிட்டு ஒதுங்கி நிற்பவர் அல்லர் நம் ஆண்டவர். நம் உடனிருந்து அவரே செயலாற்றுகின்றார். அவரின்றி நாமாக எதுவும் செய்ய இயலாது என்பதை, தூய பவுலடியார் பிலிப்பியருக்கு எழுதிய திருமடலில் மிகச் சிறப்பாக உணர்த்துகின்றார்: “கடவுளே உங்களுள் செயலாற்றுகின்றார்; அவரே தம் திருவுளப்படி நீங்கள் செயல்படுவதற்கான விருப்பத்தையும் ஆற்றலையும் தருகிறார் (பிலி 2:13). நமக்கு நன்மை மட்டுமே செய்யும் நல்ல ஆண்டவர், நாமும் பிறருக்கு நன்மை செய்வதில் ஆர்வம் கொண்டு, அன்பு உறவை வளர்க்க நம்மைத் தூண்டுவதோடு, தம் அளப்பரிய அருளால் நிரப்பிச் செயல்படுகின்றார். அக ஒளியால் நிரப்பப்பட்ட அனைவரும் ஒளியின் மக்களாக, அன்புறவில் இயேசுவின் சீடர்களாக நிறைவுடன் வாழ முடியும். இது அனுபவத்தில் நாம் உணர்ந்து, அனுபவித்த பேருண்மை.

2026, பிப்ரவரி மாதம் 2-ஆம் நாள், ஆண்டவரைக் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தல்  விழா. 11 மணிக்கு ஓர் அடக்கத் திருப்பலியில்  கலந்துகொள்ளும் கட்டாயம் ஏற்பட்டது. இருப்பினும், திருவிழா திருப்பலியில் கலந்துகொள்ளும் ஆர்வத்துடன் பங்கேற்ற பின், உரிய இடத்தில் அடக்கத் திருப்பலியில் கலந்துகொள்ள விரைந்தேன். பேருந்து கால தாமதமாகப் புறப்பட்டது. பேருந்தில் என்னுடன் பயணம் செய்த ஒரு தாய் தன் வேதனை நிறைந்த வாழ்வினை விவரித்துக் கொண்டிருந்தார். அவரிடம் மன்னிப்பின் மாண்பினையும், நன்றியுடன் செபிப்பதன் மகத்துவத்தையும்  எடுத்துரைத்தேன். இது ஒரு நற்செய்தி அறிவிக்கும் வாய்ப்பாக அமைந்தது.

சிறிது தூரம் நடந்துசெல்லவேண்டும். வேகமாக நடக்கவேண்டும், ஆனால் இயலவில்லை. அந்த நிலையில் அறிமுகம் இல்லாத ஒருவர், ‘எங்கே செல்லவேண்டும்?’ என்று கேட்டார். நான்ஆனந்தா இல்லம்என்று கூறியதும், ‘நானும் அங்குதான் செல்கின்றேன்என்று பைக்கில் அழைத்துச் சென்றார். நன்றியுடன், அவர் நலனுக்காகச் செபிக்கின்றேன் என்று கூறிவிட்டு நான் விரைவாக நடந்த போது, அவர் மீண்டும் என்னிடம் வந்து தன் பிரச்சினைகளைக் கூறி செபிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

அங்கிருந்து திரும்பியபோது என் நண்பர் ஒருவர் தன் வாகனத்தில் என் இல்லம் கொண்டு வந்து சேர்த்தார். இங்கு குறிப்பிட்டுள்ள நிகழ்வுகளில் ஆண்டவரின் பேரன்பு சிறப்பாக வெளிப்பட்டதையும், என்னைத் தம் மீட்பின் கருவியாக்கி ஆண்டவரே செயலாற்றியதையும் உணர்ந்து  நன்றிப் பெருக்குடன் அவரிடம் சரணடைந்தேன். பேரொளியாம் ஆண்டவரிடம் அனைத்தையும் ஒப்படைத்துச் சரணடையும்பொழுது, அவர் அளவற்ற பேரன்பு காட்டி நம் சார்பாகச் செயலாற்றுவார்.

திபா 37:5-இல் நாம் காண்கின்றோம்: “உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு; அவரையே நம்பியிரு. அவரே உன் சார்பில் செயலாற்றுவார்.”  இந்தச் செபம் நம் வாழ்வாகும்பொழுது நாம் பேரொளியின் ஒளியாகச் சுடர்விடுவோம். தூய ஆவியாரின் வல்லமையால், இயேசுவின் நெருக்கமான தோழமையை அனுபவித்து, அவரின் அன்புச் சீடராவோம், இறைத்தந்தையை மாட்சிப்படுத்துவோம்.

இயேசுவைக் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த தின செபம்:

என்றும் வாழும் இறைவா! உம் திருமகன் இயேசு மனிதராகி இன்று ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டதை நாங்கள் நினைவுகூர்கிறோம். மரியாவும் யோசேப்பும் இயேசுவை உமக்கு அர்ப்பணித்ததுபோல, நாங்களும் இந்த நாளில் எங்கள் உள்ளம், உடல், எண்ணம், சொல், செயல் அனைத்தையும் உமக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கிறோம். நாங்கள் பாவத்தின் இருளில் வாழாமல், ஒளியின் பிள்ளைகளாக வாழவும், கிறிஸ்துவின் ஒளியை உலகிற்கு எடுத்துச்செல்லவும் வரமருளும். எங்களுடைய வாழ்வு, எங்கள் குடும்பங்கள், எங்கள் பணிகள் அனைத்தும் உமக்கு உகந்த காணிக்கையாக மாற அருள்புரியும்.

என்றும் வாழும் தந்தையே! நீர் எனக்குத் தந்த இந்த வாழ்வை மீண்டும் உமது கரங்களிலேயே அர்ப்பணிக்கிறேன். சிமியோனைப் போல நானும் இயேசுவை என் வாழ்வில் கண்டு, இறைவனின் மீட்பை உணர்ந்து, என் இறுதி மூச்சுவரை உமக்கு உண்மையுள்ளவனாக வாழ அருள் தாரும். ஆண்டவரே, இந்த நாளை உமக்கு அர்ப்பணிக்கிறேன். இந்த நாளில் நான் செய்யும் நன்மைகள், சந்திக்கப் போகும் துன்பங்கள், மகிழ்வுகள் அனைத்தையும் உமது திருப்பாதத்தில் சமர்ப்பிக்கிறேன். ஆமென்!