slider slider slider
நம் வாழ்வு
நம் வாழ்வு இதழின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்
நம் வாழ்வு
நம் வாழ்வு - நல்லவர்களின் நாடித்துடிப்பு
நம் வாழ்வு
நல்லவர்களின் நாடித்துடிப்பு
அண்மைச் செய்திகள்
மெக்காலே - சனாதனக் கல்விக்கு அடித்த சம்மட்டி அடி! (சென்ற இதழ் தொடர்ச்சி)
சிறப்புக்கட்டுரை
மெக்காலே - சனாதனக் கல்விக்கு அடித்த சம்மட்டி அடி! (சென்ற இதழ் தொடர்ச்சி)

மெக்காலே பாரதத்தின் பாரம்பரியக் கல்வி அறிவையும் வேதமரபுகளையும் பாழாக்கிவிட்டார், ஆங்கிலத்தைத் திணித்துவிட்டார், குருகுலம் என்ற அற்புதமான கல்வி அமைப்பைச் சிதைத்து அடிமைச் சிந்தனையை விதைத்துவிட்டார் என்பதே மெக்காலேயின்மீது இந்துத்துவக் கருத்தியலாளர்கள் வைக்கும் முக்கியக் குற்றச்சாட்டு. மெக்காலே கல்வியின் நோக்கமே இந்தியர்களை மொழிபெயர்ப்பாளர்களாக உருவாக்கி, சிந்தனை ரீதியான அடிமைகளாக அவர்களை உருவாக்கும் நோக்கம் கொண்டதாகும் என்பதுதான் அவர்கள் தரப்பில் முதன்மையாக முன்வைக்கப்படும் வாதமாகும். அதற்கு ஆதரவாக அவர்கள் காட்டும் மெக்காலேயின் குறிப்புகளில் காணப்படும் மேற்கோள் இதுதான்:

நாம் ஆண்டு கொண்டிருக்கும் பல கோடி மக்களுக்கும் நமக்கும் இடையில் மொழிபெயர்ப்பாளராக இருக்கும் ஒரு வகுப்பினரை உருவாக்குவதே இப்போது நம்மால் செய்யக்கூடிய சிறந்த செயலாகும். அவர்கள் இரத்தத்தாலும் நிறத்தாலும் இந்தியர்களாக இருப்பார்கள்; ஆனால், சுவைகளால் அவர்கள் ஆங்கிலேயர்களாக இருக்கவேண்டும்  (We must at present do our best to form a class who may be interpreters between us and the millions whom we govern, a class of persons Indian in blood and colour but English in taste).

ஆனால், அவர்கள் காட்டும் இந்த மேற்கோள் முழுமையானதல்ல; பாதி உண்மையை மட்டுமே பேசி, முழு உண்மையை மறைக்கும் அவர்கள் அதன்மூலமாக வரலாற்றைச் சிதைக்க நினைக்கிறார்கள். அந்த மேற்கோளில் மீதிப்பாதியையும் நாம் அறியவேண்டும்.

அவர்கள் சொல்லாமல் மறைத்தது இதுதான்: “இந்த நாட்டுத் தாய்மொழிகளைச் செழுமைப்படுத்தி அவர்களுக்குக் கையளிப்போம். மேல்நாட்டு பெயரிடும் முறைகளிலிருந்து அறிவியல் சொற்களைக் கடன்பெற்று நாம் இம்மக்களுக்கு வழங்கும் போது, அது அவர்களின் மொழிகளில் ஊடக வளமான அறிவைக் கொண்டு சேர்க்கும். அது உறுதியாக மாறும். படிப்படியாக மாபெரும் மக்கள்திரளுக்கு அறிவைக் கொண்டு செலுத்தும் பொருத்தமான வாகனமாக அதை அவர்கள் பயன்படுத்தட்டும் (To that class we may leave it to refine  the vernacular dialects of our country to enrich those dialects with the terms of science borrowed from the Western nomenclature and to render them by degrees fit vehicles for conveying knowledge to the great mass of the population). அதாவது, இந்திய மக்களின் தாய்மொழிகளை ஆங்கிலத்தைக் கொண்டு அறிவியல் மொழியாகவும் மேலைநாட்டு அறிவுசெறிந்த மொழியாகவும் மாற்றியமைக்கவேண்டும் என்பதே மெக்காலேயின் விருப்பமாக இருந்துள்ளது.

ஆங்கில அரசால் கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ள பணத்தில் அனைத்து இந்தியர்களுக்கும் கல்வி அளிப்பதும், ஆங்கிலத்தில் உள்ள நூல்கள் அனைத்தையும் உள்ளூர் மொழிகளில் மொழிபெயர்ப்பதும் கடினமான செயலாக இருந்த காரணத்தினால், ஆங்கிலேயர்களுக்கு இந்திய மொழிகளைப் புரிந்துகொள்ளவும், ஆளும் தங்களின் நோக்கங்களை மக்களிடம் அவர்களது மொழியிலேயே கொண்டு செல்லவும் தகுதியான ஆள்கள் உடனடியாகத் தேவைப்பட்டனர். இதனால் இந்தியாவில் உள்ள ஒருசிலருக்கு முதலில் ஆங்கிலத்தைக் கற்றுக் கொடுத்து, அவர்கள் மூலம் ஆங்கிலத்தில் உள்ள நூல்கள் எல்லாவற்றையும் இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கச் செய்வதும், அவற்றை இந்தியர் அனைவரிடமும் கொண்டுசெல்வதும் மெக்காலேயின் செயல்திட்டமாக இருந்தது என்பதை நாம் உணரவேண்டும். “மெக்காலேதான் இந்திய மொழிகளை அழித்தார். அவர்தான் இந்தியர்களை அடிமைகளாக உருவாக்க முனைந்தார்என்ற வாதத்தில் சற்றும் உண்மை இல்லை என்பது மெக்காலே கூறியிருப்பதிலிருந்து புரியும்.

மெக்காலேயின் கல்விக்கொள்கை இந்தியாவின் பாரம்பரியமான கலாச்சார அறிவைப் பாழாக்கிவிட்டது என்பதுதான் அடுத்து இந்துத்துவச் சக்திகள் முன்வைக்கும் குற்றச்சாட்டு. இதில் உண்மை உள்ளதா? என்பதனைப் பார்க்கவேண்டும். மெக்காலே இந்த மண்ணில் காலெடுத்து வைத்த நாள்களில் இந்தியாவில் இருந்த சமூகச் சூழலை ஓரளவு அறிந்துகொண்டால் அந்த விவாதம் எவ்வளவு தூரம் வலுவற்றது என்பது புரியவரும்.

மெக்காலே இந்தியாவிற்கு வந்த நாள்கள் இந்தியச் சமூகம் அறிவியலிலும் தொழில்நுட்பங்களிலும் மிகவும் பின்தங்கியிருந்த ஒரு காலகட்டம். பிரிட்டிசார் வழங்கிய நிதி உதவியின் மூலமாக நடத்தப்பட்ட வேதபாடசாலைகளையும் மதரசாக்களையும் பார்த்துவிட்டு மெக்காலே கவர்னர் ஜெனரலுக்கு எழுதிய குறிப்புகளைப் பற்றி நாம் அறிவது அவசியம். அவர் இவ்வாறு எழுதுகிறார்:

இங்கிலாந்தில் உள்ள ஓர் இலாடக்காரன் கூட ஒப்புக்கொள்ள மறுக்கும் மருத்துவமுறைகளும், இங்கிலாந்தில் உள்ள பாடசாலைகளில் படிக்கும் சின்னஞ்சிறிய சிறுமியருக்கும் நகைப்பை உண்டாக்கும் விபரீதமான வானசாஸ்திரங்களும், முப்பது அடி உயரமுள்ள அரசர்கள் 60,000 ஆண்டுகள் ஆண்ட வரலாறுகளைக் கொண்ட சரித்திரமும், பாற்கடலும் நெய்க்கடலும் கொண்ட பூகோள சாஸ்திரமும் இங்குக் கற்பிக்கப்படுகின்றன. கற்பித்தல் என்பது அரசாங்கத்தின் கடமையாகாது என்றும், ஒரு கழுதையைத் தொட்டுவிட்டால் எத்தனை தரம் குளிக்கவேண்டும், எந்த மந்திரம் சொல்லி புனிதப் படுத்திக்கொள்ளவேண்டும் என்றும், ஓர் ஆட்டைக் கொன்ற பாவத்திற்குப் பரிகாரமாக எந்த வேதத்தை எவ்வளவு பாராயணம் செய்யவேண்டும் என்றும் இந்திய மக்கள் தெரிந்துகொள்வதற்காக நாம் அரசு வரிப்பணத்தில் கலாசாலைகள் நடத்துவது மாணவர்களின் இளமையை வீணாக்கும் நடவடிக்கையாகும். இப்படிப் பலவாறான முரண்பாடுகளுடன் இந்தியாவில் நிலவிவரும் சமஸ்கிருத கல்விமுறை என்பது திட்டமிட்டு, இந்தியாவை இருளில் வைக்க சிறப்பாகத் திட்டமிடப்பட்ட முறையாகும் (the Sanskrit system of education would be the best calculated to keep the country in darkness) என்பதைக் கவர்னர் ஜெனரல் பார்வைக்குக் கொண்டு சென்றார் மெக்காலே.

கவர்னர் ஜெனரல் இந்திய மாணவர்களுக்கு வழங்கிய மானியத்தில், மெக்காலே வருவதற்கு முன்னர் இந்திய மாணவர்களுக்கு வழங்கப்படுவதற்காக சமஸ்கிருதத்திலும் அரபியிலும் பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் அச்சிடப்பட்டனஅதனை மாணவர்கள் யாரும் வாங்க முன்வராததால் அப்புத்தகங்கள்  அரசின் கிட்டங்கிகளில் கரையான் அரித்துக் கேட்பாரற்றுக் கிடந்தன. ஆனால், ஆங்கிலப் பாடப்புத்தகங்கள் சில ஆயிரங்களே அச்சிடப்பட்டிருந்தாலும், அவை அனைத்தையும் மாணவர்கள் விரும்பி வாங்கிச் சென்றதால் உடனடியாக விற்றுத்தீர்ந்தன. அதனால் அரசுக்குச் சில ஆயிரம் ரூபாய்கள் இலாபம் கிடைத்தன. இதை ஆங்கிலேய அரசுக்குச் சுட்டிக்காட்டிய மெக்காலே, ‘அரபியும் சமஸ்கிருதமும் பெரும்பாலான இந்தியர்களுக்கு அந்நிய மொழிகள்தாம்என்றும், ‘அவைகளைப் படிப்பதைவிட ஆங்கிலம் கற்றால் எதிர்காலத்தில் இந்தியா ஓர் அறிவுசார்ந்த நாடாக உருவாகும்என்றும் கவர்னர் ஜெனரலிடம் வலியுறுத்தினார்.

ஆங்கிலம் கற்றதால் இரஷ்யா எப்படி விஞ்ஞானத்தில் வளர்ந்தது? என்று எடுத்துரைத்தார் மெக்காலே. மெக்காலேயின் நிலைப்பாட்டில் இருந்த நியாயங்களை ஏற்றுக்கொண்ட கவர்னர் ஜெனரல், மெக்காலேவை உடனடியாக அரசின் கல்விக் குழுவிற்குத் தலைவராக நியமித்து, அரசின் கல்வி மானியம் முழுவதும் அரசின் பாடத்திட்டங்களைப் பயிற்றுவிக்கும் பள்ளிகளுக்கு மட்டுமே செலவிடப்படும் என்றும், சமஸ்கிருத வேதபாடசாலைகளுக்கும் மதரசாக்களுக்கும் வழங்கப்பட்டு வந்த மானியங்களையும் உடனடியாக நிறுத்தி உத்தரவிட்டார்.

மெக்காலேயின் இந்த நடவடிக்கைகளை அப்போதிருந்த மதவாதிகள் எதிர்த்தார்கள். தங்களது மதங்களுக்கு எதிராக நடத்தப்படும் சதி என்று கூக்குரலிட்டனர். ஆங்கிலேயர்களும் எதிர்த்தார்கள். இந்தியர்களுக்கு ஆங்கிலம் சொல்லிக்கொடுப்பதால் அவர்கள் உலக அறிவு பெற்றவர்களாக மாறி, ஒரு கட்டத்தில் நம்மையே எதிர்ப்பார்கள் என்று பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் மெக்காலேவுக்குக் கண்டனம் தெரிவித்தனர். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத மெக்காலே சிறப்பான பாடத்திட்டத்தைத் தயாரித்து, கல்வியை அனைத்துத் தரப்பினருக்கும் கொண்டு சேர்ப்பதில் உறுதியாக இருந்தார். சில கல்வி நிலையங்களில் நடந்த கிறித்தவ மதப் பிரச்சாரங்களைக் கடுமையாகக் கண்டித்து, அக்கல்வி நிறுவனங்களுக்கு அரசு மானியத்தை நிறுத்தினார். இந்திய நீதிமன்றங்களில் நடைமுறையில் இருந்த மனுதர்மம் மற்றும் ஷரியத் சட்டங்களுக்கு மாற்றாக இந்தியக் குற்றவியல் சட்டத்தைத் தயாரித்துக் கொடுத்தார்.

மெக்காலே அன்று வைத்த புள்ளிகள் இன்று அழகான கோலமாக விரிந்துள்ளது. நமது பிரதமருக்கு இதையெல்லாம் நினைவூட்டும் கடமை நமக்கு உண்டல்லவா!

“இயேசுவின் பணியை முழுமையாக்க அழைப்பு!” - பொதுநிலையினர் ஞாயிறு (18.01.2026)
ஆன்மிகம்
“இயேசுவின் பணியை முழுமையாக்க அழைப்பு!” - பொதுநிலையினர் ஞாயிறு (18.01.2026)

இயேசு கிறிஸ்துவில் அன்பார்ந்தவர்களே,

இந்தியப் பொதுநிலையினரின் பாதுகாவலர் புனித தேவசகாயம்என்று நமது திருத்தந்தை அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளதால் அவரது விழாவைத் (ஜனவரி 14) தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமையை (18.01.2026) நாம் பொதுநிலையினர் ஞாயிறாகச் சிறப்பிக்கிறோம்.

புனித தேவசகாயம்

இன்றைய குழித்துறை மறைமாவட்டத்தில் உள்ள நட்டாலம் என்ற இடத்தில் 1713, ஏப்ரல் 25-ஆம் நாள் வாசுதேவன் நம்பூதிரி, தேவகியம்மை ஆகியோருக்கு மகனாக நமது புனிதர் பிறந்தார். கல்வி மற்றும் கலைகளில் தேர்ச்சி பெற்றுத் திருவிதாங்கூர் அரசின் நிதிக் காப்பாளர் என்ற உயர் பொறுப்பைப் பெற்றார். குளச்சல் போரில் சிறைப்பிடிக்கப்பட்ட டச்சுத் தளபதி இஸ்தாக்கியுஸ் டிலனாய் என்பவர் இவருக்கு இயேசு கிறிஸ்துவை அறிமுகப்படுத்தினார். இயேசுவை மீட்பராக ஏற்றுக்கொண்டு 14.05.1745-இல் வடக்கன்குளத்தில் அருள்பணி. ஜோவான்னிபத்தீஸ்தா புத்தார் என்பவரிடம் திருமுழுக்குப் பெற்றார்.

இந்த மனமாற்றத்தால் உயர்குலத்தோர் நம் புனிதரை எதிர்த்தனர். துன்பங்கள், வேதனைகள் அனைத்தையும் துணிவுடன் எதிர்கொண்டு, நம்பிக்கை வாழ்வில் தளராதிருந்தார். 11 மாதங்கள் சிறைவாசம், உடலில் கரும்புள்ளி - செம்புள்ளி, எருக்கம் பூமாலை, சுண்ணாம்புச் சூளையின் கடும் நெருப்பு, அடி, உதைகள் எதுவும் இவரது நம்பிக்கையைத் தகர்க்கவில்லை.

நம்பிக்கை வாழ்வின் சிகரம் தொட்ட இந்த மாமனிதர் 1752, ஜனவரி 14-ஆம் நாள் கோட்டாறு மறைமாவட்டம் காற்றாடிமலை என்ற ஆரல்வாய் மொழியில் சுட்டுக் கொல்லப்பட்டார். நம் மறைச்சாட்சிக்கு 26.06.2012 அன்று  அருளாளர் பட்டமும், 15.05.2022 அன்று புனிதர் பட்டமும் அளிக்கப்பட்டன. 16.07.2025 அன்று இந்திய பொதுநிலையினரின் பாதுகாவலராக அறிவிக்கப்பட்டார்.

பொதுநிலையினர் ஞாயிறு - 2026

புனித தேவசகாயத்தின் நம்பிக்கை வாழ்வுப் பின்னணியில் இந்த ஆண்டின் பொதுநிலையினர் ஞாயிறு திருப்பலிக் கொண்டாட்டத்திற்குஇயேசுவின் பணியை முழுமையாக்க அழைப்பு (Call to Fulfil the Mission of Jesus) என்ற பொருத்தமான மையச்சிந்தனையை ஆயர் பேரவை நமக்குத் தந்துள்ளது.

போதிக்கும் பணி, புனிதப்படுத்தும் பணி, வழிநடத்தும் பணி ஆகிய இயேசுவின் முப்பெரும் பணிகளில், நம்பிக்கையாளர்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் பங்கு உள்ளது. இப்பணிகளில் பங்கேற்கவும் பங்களிக்கவும் திருமுழுக்குப் பெற்ற நாம் இறைவனால் அழைக்கப்படுகிறோம்.

நடந்து முடிந்த உலக ஆயர்கள் மாமன்றம் (2021-2023) கூட்டியக்கத் திரு அவையாக, நமது உறவு ஒன்றிப்பு மற்றும் பங்கேற்பின் வழி, நற்செய்திப் பணியாற்ற நமக்கு அழைப்பு விடுத்துள்ளதை நாம் அறிவோம். தொடர்ந்து நாம் கொண்டாடிய யூபிலி 2025 இணைந்து பயணிக்க, இணைந்து செவிசாய்க்க, இணைந்து கற்றுக்கொள்ள நமக்கு அழைப்பு விடுத்தது.

இயேசுவின் பணி

உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள் (மாற் 16:15) என்று தம் சீடர்களிடம் கூறிய இயேசு, தமது பணிவாழ்வின் தொடக்கத்தில் தம்முடைய பணிக் கொள்கையை எல்லாருக்கும் அறிவித்தார். “ஏழைகளுக்கு நற்செய்தி, சிறைப்பட்டோருக்கு விடுதலை, பார்வையற்றோர் பார்வைப் பெறுதல், ஒடுக்கப்பட்டோருக்கு விடுதலை (லூக் 4:18) என்பனவற்றைத் தமது பணி இலக்குகளாகப் பிரகடனப்படுத்தினார்.

தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார், பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார் (லூக் 1:53) என்ற அன்னை மரியாவின் பாடலிலும் இந்தஏழைகள் சார்புநிலைவெளிப்படுவதைப் பார்க்கிறோம்.

திரு அவையின் படிப்பினை

யூபிலி 2025’ கொண்டாட்டத்திற்காக மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் 07.05.2024 அன்று வெளியிட்டஎதிர்நோக்கு ஏமாற்றம் தராது (Spes Non Confundit) (உரோ 5:5) எனும் ஆணை மடலில்திரு அவையின் கரிசனம்பற்றி பின்வருமாறு தெரிவித்துள்ளதைப் பார்க்கிறோம்:

ஏழைகளையும் வறியோராக்கப்பட்டவர்களையும் நாம் அன்றாடம் சந்திக்கிறோம் (எண்-15).

பசி என்பது ஓர் இடறல்; மானுட உடலில் காணப்படும் ஆறாத புண் (எண்-16).

பூமியின் வளங்கள் ஒருசிலருக்கு மட்டுமல்ல; எல்லாருக்கும் உரியன (எண்-16).

காலத்தின் அறிகுறிகளில் எதிர்நோக்கைக் கண்டறிய அழைக்கப்படுகிறோம் (எண்-7).

திருத்தந்தை பிரான்சிஸைத் தொடர்ந்து கடந்த ஆண்டில் இறைவனின் கொடையாக நமக்குத் தரப்பட்டுள்ள புதிய திருத்தந்தை லியோ 09.10.2025 அன்று வெளியிட்டநான் உன்னை அன்பு செய்கிறேன் (Dilexi Te) எனும் அறிவுரை மடலில், ஏழைகள் பற்றியும், மனித மாண்பு பற்றியும், இயேசுவின் சீடர்களான நம்பிக்கையாளர்களின் பார்வையும் பணியும் எவ்விதம் அமையவேண்டும் என்ற வழிகாட்டுதல்களைத் தந்துள்ளார்.

ஏழைகள், துன்புறுவோர், புலம்பெயர்ந்தோர், விளிம்புநிலை மக்கள் சார்பாகத் திரு அவை நிலைப்பாடு (Option) எடுக்கவேண்டும்.

ஏழைகள்தான் திரு அவையின் இதயம்!’

ஏழைகளுக்கான பணி வெறும் இரக்கப்பணியல்ல; மாறாக, அது சமூக மாற்றத்திற்கான பணியாகும்.

துன்புறுவோர், நலிந்தோர், ஏழைகள் மீதான அன்பே, கடவுள் மீதான நம்பிக்கை. எனவே, நாம் ஏழைகள் சார்பான நிலைப்பாடு (Preferential option for poor) எடுக்கவேண்டும்.

சர்வாதிகாரப் பொருளாதாரம் (Dictatorship of Economy) பற்றியும் எச்சரிக்கை செய்கிறார்.

சமூத்தின் கடைநிலையில் உள்ளவர்களுடன் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டதாக இயேசுவை இந்த ஏடு விவரிக்கிறது. எனவே, ‘ஏழைகள் மீதான அக்கறையே நம் சீடத்துவத்தின் அடையாளம்என்று நமக்கான எதிர்காலச் செய்நெறியைத் திருத்தந்தை வரையறுக்கிறார்.

சங்க ஏடுகளும், திரு அவைச் சட்டமும் நினைவூட்டும் நமது கடமைகள்

பல்வேறு நேர்மறை அம்சங்கள் இருப்பினும், நாம் காணும் இந்தியச் சூழல் பெருமளவில் அச்சமூட்டுவதாகவும் அபாயகரமானதாகவும் உள்ளது என்பதே உண்மை. இந்நிலையில், சங்க ஏடுகளும், திரு அவைச் சட்டமும் நமக்கு உணர்த்தும் கடமைகளாவன:

இரண்டாம் வத்திக்கான் சங்கம் முடிந்து 60 ஆண்டுகள் நிறைவுறும் வேளையில், இறை மக்களாகிய நாம் அனைத்துச் சூழமைவுகளிலும் மனிதச் சமுதாயத்தின் நடுவில் இயேசுவின் சாட்சிகளாக இருக்க அழைக்கப்பட்டவர்கள் (இன்றைய உலகில் திருஅவை - எண்: 43).

நற்செய்தி எல்லா மக்களையும் சென்றடைய உழைத்தல் (திரு அவைச் சட்டம்:211).

ஏழைகளுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முன்னுரிமை அளித்தல் (திருப்பணியாளர்களின் வாழ்வும் பணியும் GT600T:6).

மனித அமைப்புகள் எல்லாவிதச் சமூக-அரசியல் அடிமைத்தனங்களுக்கும் எதிராக ஊக்கமுடன் போராடவேண்டும் (இன்றைய உலகில் திரு அவை - எண்:29).

உலகை ஊடுருவி, சமுதாயத்தைப் புதுப்பித்து, அதைப் புனிதப்படுத்தி உருமாற்றுவது பொதுநிலையினர் பெற்றுள்ள தனிவரம் (பொது நிலையினரின் திருத்தூதுப் பணி எண்:2).

நமக்கான அழைப்பு

இன்றைய நற்செய்தி வாசகத்தில்இயேசு தூய ஆவியாரால் திருமுழுக்குக் கொடுப்பவர்என்ற நம்பிக்கையை திருமுழுக்கு யோவான் வெளிப்படுத்துகிறார். திருமுழுக்குப் பெற்ற நம்பிக்கையாளர்களாகிய நாம், கிறிஸ்துவுக்கு அர்ப்பணிக்கப்பெற்று, தூய ஆவியாரால் அருள் பொழிவு செய்யப்பட்டவர்கள். இயேசுவின் இலட்சியத்தையும் மதிப்பீடுகளையும் நமதாக்கி, ஏழைகள் மற்றும் விளிம்பு நிலை மக்களுக்காகத் திருத்தூதுப் பணியாற்ற அழைப்புப் பெற்றவர்கள். இது தொடர்பாகத் தனது மடலில் திருத்தந்தை லியோ பரிந்துரைக்கும் கீழ்க்காணும் சிலவற்றை முன்னெடுக்க முயற்சிப்போம்:

ஏழைகள் மீதான அன்பின் வழியாக உலகைப் புதுப்பித்தல்.

பிளவுகளைக் குணப்படுத்தும் இரக்கம் மற்றும் உரையாடல்.

ஏழைகளில் இயேசுவைச் சந்தித்தல்.

வீடுகளில் / குடும்பங்களில் அன்பு மற்றும் விருந்தோம்பல்.

துன்பப்படுவோருக்கான பரிந்துரை மன்றாட்டுகள்.

தேவையிலிருப்போருடன் நேரத்தையும் அக்கறையையும் பகிர்தல்.

சமூக நீதி மற்றும் ஒற்றுமையை ஊக்குவித்தல்.

இறைவனின் அன்பும் நீதியும் நிறைந்த இறையாட்சியைக் கட்டமைத்தல்.

அருள்பணி. மரிய மிக்கேல், செயலர், தமிழ்நாடு பொதுநிலையினர் பணிக்குழு

மேதகு ஆயர் சகாயராஜ், தலைவர், தமிழ்நாடு பொதுநிலையினர் பணிக்குழு

சனவரி 18, 2026 ஆண்டின் பொதுக்காலம் 2-ஆம் ஞாயிறு - எசா 49:3,5-6; 1கொரி 1:1-3; யோவா 1:29-34 (ஆட்டுக்குட்டியாக நமக்கு அறிமுகமாகும் கடவுள்!)
ஞாயிறு மறையுரை
சனவரி 18, 2026 ஆண்டின் பொதுக்காலம் 2-ஆம் ஞாயிறு - எசா 49:3,5-6; 1கொரி 1:1-3; யோவா 1:29-34 (ஆட்டுக்குட்டியாக நமக்கு அறிமுகமாகும் கடவுள்!)

இந்தச் சமூகத்தில் ஒருவர், பொதுவாக அவரின் அடையாளங்கள், பண்பு, குடும்பப் பின்னணி இவற்றின் மூலமாக அறிமுகமாகிறார். சில வேளைகளில் ஒரு மனிதரை நாம் அறிமுகப்படுத்தும்போது அவருடைய அதிகாரம், பதவி, வலிமை, சாதனை இவற்றைக் கூறி அறிமுகப்படுத்துகிறோம். ஆனால், கடவுள் தம்மை மனிதகுலத்திற்கு வெளிப்படுத்திய விதம் முற்றிலும் மாறுபட்டது. இயேசுவைத் திருமுழுக்கு யோவான் அறிமுகப்படுத்தும்போது, “இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி!” (யோவா 1:29) என்று அறிமுகப்படுத்துகிறார். இங்கே இயேசு ஓர் அரசராக அல்ல; ஒரு போர்வீரராக அல்ல; மாறாக, பலியிடப்படும் செம்மறியாக நமக்கு அறிமுகப்படுத்தப்படுகிறார். இதுவே, கிறித்தவ நம்பிக்கையின் மைய உண்மை.

கடந்த இரு வாரங்களாக, ஆண்டவருடைய திருக்காட்சி மற்றும் ஆண்டவருடைய திருமுழுக்கு ஆகிய இரு நிகழ்வுகள் வழியே நமக்கு அறிமுகமான இயேசு, இன்றுஉலகத்தின் பாவத்தைப் போக்கும் செம்மறியாகஅறிமுகமாகிறார். இந்த அறிமுகம் யோவான் நற்செய்தியில் மட்டும் பதிவாகியுள்ளது.

இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், “இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்எனச் சுட்டிக்காட்டுகிறார்.  ‘ஆட்டுக்குட்டிஎன்ற சொல்லில் பலியாகுதல், பாவங்களைச் சுமத்தல், விருந்தில் உணவாகுதல் போன்ற எண்ணங்கள் வெளிப்படுகின்றன. இவை மூன்றும் இயேசுவுக்கு மிகவும் பொருந்திப்போவதை அறியமுடிகிறது. திருமுழுக்கு யோவான் சுட்டிக்காட்டியஇதோ! கடவுளின் ஆட்டுக்குட்டிஎன்ற கூற்று மாசுமரு வற்றதாய் மீட்புக்காக இரத்தம் சிந்திய (விப 12:5) ஆட்டினை நினைவூட்டுகிறதுஆட்டுக்குட்டி, செம்மறியாட்டுக்குட்டி என்பது யோவான் நற் செய்தியில் ஒரு முக்கியமான அடையாளம். ‘கடவுளின் ஆட்டுக்குட்டிஎன்பதைப் பலவிதமாகப் புரிந்துகொள்ளலாம். இச்சொற்றொடருக்கு இருவேறு பொருள்கள் உள்ளன: 1. ஆட்டுக்குட்டி, 2. இறைவனின் ஊழியன்.

இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டிஎன்பதை இஸ்ரயேல் மக்களின் மீட்புக்குக் காரணமாய் இருந்த மாசுமருவற்றதாக, மீட்புக்காக இரத்தம் சிந்திய பாஸ்கா ஆடாக (விப 12:5,46; யோவா 19:36; 1பேது 1:8,18,19; திவெ 5:9), மனிதகுலத்தின் பாவங்களைச் சுமந்து நகருக்குப் புறம்பே துரத்தப்பட்டுக் கொல்லப்படும் (லேவி 16:20) பாவப் பரிகார ஆடாக (தொநூ 9:6; எபி 9:6), மக்கபேயர் காலத்திலிருந்தே கொம்புடன் தோன்றும் ஆடு வெற்றியின் சின்னமாகக் கருதப்பட்டது போன்று, இயேசுவும்இதோ இறைவனின் வெற்றிஎனும் பொருளில் திருவெளிப்பாட்டு ஆடாக (திவெ 7:17; 17:14) அல்லது ஒவ்வொரு நாளும் திருப்பீடத்தில் பலியிடப்படும் ஆட்டுக்குட்டியாகப் புரிந்துகொள்ளலாம்

இதோ! இறைவனின் ஆட்டுக்குட்டிஎன்பதைஇதோ! இறைவனின் ஊழியன்என்றும் சில திருவிவிலிய அறிஞர்கள் மொழிபெயர்க்கின்றனர். இறை ஊழியர் கொடுமையாக நடத்தப்பட்டார்; இழுத்துச் செல்லப்பட்டார்; கைது செய்யப்பட்டார்; செம்மறிபோல் வாய் திறக்கவில்லை (எசா 53:7). இறை ஊழியர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; துன்பங்களைச் சுமந்துகொண்டார்; நம் குற்றங்களுக்காகக் காயப்பட்டார், தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார் (எசா 53:4,5) எனும் கூற்றுகள் இயேசுவுக்கு முற்றிலும் பொருந்திப் போகிறது. எனவேதான், திருமுழுக்கு யோவான் இயேசுவைஉலகத்தின் பாவங்களைப் போக்கும் செம்மறிஎன அறிமுகப்படுத்துகிறார்.

இன்றைய முதல் வாசகம் உலகிற்கு மீட்பைக் கொண்டுவந்த கடவுளின் ஊழியர் (கடவுளின் ஆட்டுக்குட்டி) இயேசுவே என்பதைச் சுட்டிக்காட்டும் ஒரு பாடலாக அமைகிறது. இவ்வாசகப் பகுதி இரண்டாவதுஆண்டவரின் ஊழியர் பாடல்என அறியப்படுகிறது. இப்பாடல்இஸ்ரயேலைஆண்டவரின் ஊழியராகக் காட்டுகிறது (49:3). இந்த இஸ்ரயேல் என்போர் ஆண்டவர்மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு வாழ்ந்த இஸ்ரயேலரைக் குறிக்கலாம். இருப்பினும், இப்பாடலின் கருத்துகள் இயேசுவோடு ஒன்றிப் போவதைப் பார்க்கமுடிகிறது. ‘இயேசுவே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி (லூக் 2:32); அவர் தம்மையே வெறுமையாக்கி, கடவுளால் மாட்சிப்படுத்தப்பட்ட கீழ்ப்படிதலுள்ள ஊழியர் (பிலி 2:8). இவ்வாறு இயேசு ஓர் உண்மையான இறை ஊழியராக வெளிப்படுகிறார். சிதறிக் கிடக்கும் (எசா 49:5) இஸ்ரயேல் மக்கள்மீது இரக்கம் கொண்டு ஆண்டவர் அவர்களை ஒன்றாகக் கூட்டிச் சேர்ப்பார்; அவர்கள்மீது கொண்டுள்ள அன்பை அவர் சிதறுண்டு கிடக்கும் மக்களை ஒன்றுசேர்ப்பதிலும், எதிரிகளை வென்று அவர்களுக்கு விடுதலை வழங்குவதிலும், அவர்களுக்குப் புதுவாழ்வு அளிப்பதிலும் வெளிப்படுத்துவார். அவரே முன்னின்று அதைச் செய்வார் என்ற உண்மையை இது கூறுகிறது.

இன்றைய முதல் வாசகமும் நற்செய்தி வாசகமும்இயேசுவே இறை ஊழியர்-கடவுளின் ஆட்டுக்குட்டிஎன அறிவிக்கும் வேளையில், இன்றைய இரண்டாம் வாசகத்தில், திருத்தூதர் பவுல் கடவுளின் ஆட்டுக்குட்டியாம் இயேசுவைஅனைவருக்கும் ஆண்டவர்என உறுதிப்பட அறிக்கையிடுகின்றார். மேலும், இயேசுவின் திருத்தூதனாகத் தன்னை அடையாளப்படுத்தும் பவுல், அவருடைய பதிலாளாக இருந்து அவரை அறிக்கையிடுவதும் சான்று பகர்வதும் ஒவ்வோர் ஊழியருடைய கடமையாக இருக்கிறது எனப் பணிக்கிறார்.

உரோமை மதங்களும் மற்றும் பல உரோமைய கடவுள்களின் வழிபாடுகளும் கொரிந்தில் காணப்பட்ட வேளையில், கொரிந்து நகரம்கடவுளின் திரு அவை (1கொரி 1:1) என்கிறார் பவுல். கொரிந்து திரு அவை கிறிஸ்துவில் புனிதமாக்கப்பட்டுள்ளது என்று வரைவிலக்கணம் கொடுக்கிறார். எனவே, திரு அவையைப் புனிதமாக்குவது எவருடைய மனித ஆற்றலாலுமல்ல; மாறாக, இயேசுவின் ஆற்றலால் என்பது இங்கே புலப்படுகிறது.

இறுதியாக, ஆட்டுக்குட்டியாக அறிமுகமாகும் கடவுள் தாழ்ச்சியின், தியாகத்தின், அன்பின் ஆட்டுக்குட்டியாகச் சான்றுபகர்ந்து வாழ நம்மை அழைக்கிறார். தன்னைவிட வேறொருவர் அதிக மதிப்புடையவர் என்று கூறுவதற்கு வார்த்தையளவில் ஒலிக்கும் தாழ்ச்சி மட்டும் போதாது; தன்னம்பிக்கையும், தன்னைப் பற்றிய தெளிவும் தேவை. இத்தகைய தெளிவும் நம்பிக்கையும் இல்லாமல் பிறரை உயர்த்திப் பேசும்போது, அதில் போலியான தாழ்ச்சி தெரியும். தான் ஏற்பாடு செய்திருந்த வழிக்குச் சொந்தக்காரர் வந்துவிட்டார் என்பதை உணர்ந்ததும், மக்களின் கவனத்தை இயேசுவின் பக்கம் திருப்பி, “இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி!” (யோவா 1:29) என்றார் திருமுழுக்கு யோவான்.

ஆட்டுக்குட்டி பலவீனத்தின் அடையாளம் போலத் தோன்றலாம்; ஆனால், அதில் மறைந்திருப்பது அன்பின் மிகப்பெரிய வலிமை. இயேசு எதிர்த்துப் போராடவில்லை, பழிவாங்கவில்லை, குரல் எழுப்பி தம்மை நிரூபிக்கவில்லை. மாறாக, அமைதியாகச் சிலுவையை ஏற்றுக்கொண்டார். நம் வாழ்க்கையில் நாம் எத்தனை முறை எதிர்ப்பதையே வலிமை என்று எண்ணுகிறோம்? பழிவாங்குவதையே நீதியாகக் கருதுகிறோம்? ஆட்டுக்குட்டியாக வந்த கடவுள் நமக்கு உணர்த்தும் முதல் பாடம்பணிவே உண்மையான வலிமைஎன்பதுதான்.

இரண்டாவதாக, இயேசுவைச் சுட்டிக்காட்டும் திருமுழுக்கு யோவான்இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர் (யோவா 1:29-30) எனக் குறிப்பிடுகிறார். அதாவது, பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரையே கொடுக்கும் செம்மறி இயேசுவே (1பேது 1:18,19). ஆட்டுக்குட்டியாம் இயேசு அனைவருக்கும் ஆண்டவர் என்பதாலே அனைத்துலகின் பாவங்களுக்கும் கழுவாய் ஆகிறார். அவர் அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டி போலும், உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர் தம் வாயைத் திறவாதிருந்தார் (எசா 53:7). ஆகவே, நாம் எந்த அளவிற்குப் பிறருக்காகத் தியாகம் செய்கிறோம்? நம் நேரம், நம் வசதி, நம் ஆறுதல் பிறரின் வாழ்க்கைக்காக உடைக்கப்படுகிறதா? ஆட்டுக்குட்டியாக நமக்கு அறிமுகமாகும் கடவுள் நமக்கு உணர்த்தும் மற்றொரு பாடம் தியாகம் என்பது தனக்காக மட்டும் வாழ்வதில் அல்ல; பிறருக்காக வாழ்வதிலும் அடங்கியுள்ளது என்பதுதான்.

மூன்றாவதாக, ஆட்டுக்குட்டியாம் இயேசு நமக்கு அன்பின் முகமாக அறிமுகமாகிறார். பிரச்சினைகளால், பல்வேறு சிக்கல்களால் கசப்புற்று வாழ்பவர்களுக்கு, “உங்களை நான் மறக்கவில்லை, உங்களை என் உள்ளங்கைகளில் பொறித்து வைத்துள்ளேன், உங்களை நான் அன்பு செய்கின்றேன் (எசா 49:15-16) என்று கூறி, அன்பின் அடையாளமாக அவர் இருக்கிறார்.

அன்பிலேதான் தாழ்ச்சியும் தியாகமும் இணைந்திருக்கிறது. ஆகவே, நாம் சுமந்து கொண்டிருக்கும் கோபம், வெறுப்பு, பழைய காயங்கள் ஆகியவற்றைக் களைந்து ஆட்டுக்குட்டியாக நம் இதயத்தில் வந்துள்ள இயேசுவுக்கு அன்பின் சாட்சிகளாக, தியாகத்தின் உருவாக, பிறர் வாழ்வில் ஓர் உந்துசக்தியாக மாறுவோம்.