slider slider slider
நம் வாழ்வு
நம் வாழ்வு இதழின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்
நம் வாழ்வு
நம் வாழ்வு - நல்லவர்களின் நாடித்துடிப்பு
நம் வாழ்வு
நல்லவர்களின் நாடித்துடிப்பு
அண்மைச் செய்திகள்
போனில் Full Charge ஆனா, வாழ்க்கை... Low Battery...
சிறப்புக்கட்டுரை
போனில் Full Charge ஆனா, வாழ்க்கை... Low Battery...

இரவு 1.30 மணி. அறையின் விளக்கு அணைந்துவிட்டது. ஆனால், இன்னும் ஒரு வெளிச்சம் மட்டும் முகத்தில் விழுகிறது - அது மொபைல் திரையின் வெளிச்சம். கண்கள் சோர்ந்திருக்கின்றன. மனம் எதையோ சுமந்து கொண்டிருக்கிறது. ஆனால், விரல்கள் மட்டும் தொடர்ந்து Scroll செய்து கொண்டிருக்கின்றன.

ஒரு Reel; மற்றொரு Video; சில Memes; சில Status updates. அப்படியே நேரம் நகர்கிறது. ஆனால், வாழ்க்கை மட்டும் எங்கோ நின்றுபோன மாதிரி தோன்றுகிறது.

இன்று மனிதன் தொழில்நுட்பத்தில் வளர்ந்திருக்கிறான். ஆனால், பல நேரங்களில் இதயத்தில் வெறுமையாகிவிட்டான். மனிதன் இயந்திரங்களோடு இணைந்தான்; ஆனால், இதயங்களோடு இணைவதை இழந்துவிட்டான்.

இன்று பலரின் அலைப்பேசியில் 100% சார்ஜ் இருக்கிறது. ஆனால், மனத்தில் உற்சாகம் இல்லை; உறவுகளில் உயிர் இல்லை; செபத்தில் ஆழம் இல்லை; வாழ்க்கையில் அமைதி இல்லை.

காலையில் கண் திறந்தவுடன் முதலில் பார்க்கப்படுவது இறைவனின் முகமல்ல;… Notification Screen. ‘யாராவது message பண்ணிருக்காங்களா?’ ‘என் போஸ்டுக்கு எத்தனை லைக் வந்திருக்கு?’, ‘அவன் ஆன்லைன்ல இருக்கானா?’....  இப்படித் தொடங்கும் நாள், அதே Screen வெளிச்சத்தோடு இரவிலும் முடிகிறது. ஆனால், அந்த Screen வெளிச்சத்தால் உள்ளத்தின் இருளை அகற்ற முடியவில்லை.

வரலாற்றில் என்றுமில்லாதவாறு நாம் தொடர்புகளின் உச்சத்தில் இருக்கிறோம்; இருப்பினும், இதுவரை இல்லாதவாறு தனிமையின் ஆழத்திலும் வீழ்ந்திருக்கிறோம்என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

முன்பு மனிதர்கள் தனிமையில் இறைவனைத் தேடினார்கள். இன்று தனிமையில் போனைத் தேடுகிறார்கள். சில நிமிடங்கள் அமைதியாக உட்காருவதற்கே இந்தத் தலைமுறை பயப்படத் தொடங்கிவிட்டது. ஏனெனில், அமைதியில்தான் உள்ளத்தின் உண்மையான சத்தங்கள் கேட்கத் தொடங்குகின்றன.

நான் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறேனா? என்னை யாராவது உண்மையாகப்  புரிந்துகொள்கிறார்களா? நான் சோர்ந்து போய்விட்டேனா? என் வாழ்க்கை எதற்காக ஓடிக்கொண்டிருக்கிறதுஇந்தக் கேள்விகளிலிருந்து தப்பிக்கத்தான் நாம் மீண்டும் போன் திரைக்குள் ஓடிவிடுகிறோம்.

அமைதியாக இருந்து நான் இறைவன் என்பதை அறிந்துகொள்ளுங்கள் (திபா 46:10),

இன்று பல உறவுகள் அருகில் இருப்பது போலத் தெரிகிறது. ஆனால், உண்மையில் மனிதர்கள் ஒருவரிடமிருந்து ஒருவர் தொலைந்து கொண்டிருக்கிறார்கள். ஒரே வீட்டில் நான்கு பேர் இருந்தாலும், நான்கு பேரின் கண்களும் நான்கு போன் திரைகளில்தான் இருக்கின்றன.

சாப்பிடும்போது, பயணத்தில், தூங்குவதற்கு முன், செப நேரத்திலும் கூட இறைவனுடன் பேச நேரமில்லை; ஆனால், தெரியாத மனிதர்களின் வாழ்க்கையை Scroll செய்ய நேரம் இருக்கிறது. இந்த உலகம் நமக்கு Connection கொடுத்தது; ஆனால், அமைதியை எடுத்துக்கொண்டது.

நாம் ஆன்லைனில் எல்லாருடனும் இணைந்து இருக்கிறோம். ஆனால், நம்முடைய உள்ளத்தோடு மட்டும் தொடர்பை இழந்துவிட்டோம். சில ஸ்டேட்டஸ்களுக்குப் பின்னால் அமைதியான குரல் இருக்கிறது. சிலஐயாம் ஃபைன்-களுக்குப் பின்னால் உடைந்த இதயங்கள் இருக்கின்றன. தொலைப்பேசியில் கேலரி நிரம்பிக்கொண்டே இருக்கிறது; ஆனால், இதயம் காலியாகிக்கொண்டே இருக்கிறது.

இன்று போனில் பேட்டரி குறைந்தால் உடனே சார்ஜரைத் தேடுகிறோம். ஆனால், வாழ்க்கை சோர்ந்துபோனால், இறைவனைத் தேட மறந்துவிடுகிறோம். உண்மையில் மனிதனின் ஆன்மாவுக்கும் ஒரு சார்ஜர் தேவை. அதுதான் செபம்! அதுதான் அன்பு! அது குடும்பத்தோடு மனம் திறந்து பேசும் சில நிமிடங்கள். அது அமைதியாக இறைவனின் முன்னால் அமர்வது. ஏனெனில், Wi-Fi சிக்னல் இல்லாமல் போன் செயல்படாததுபோல, இறைவனுடன் இணைப்பு இல்லாமல் உள்ளம் அமைதியாக இருக்காது.

ஒருநாள் முழுவதும் போனைச் சார்ஜ் செய்ய மறக்கமாட்டோம்; ஆனால், பல நாள்களாக நம் ஆன்மா Low Battery நிலையில் இருப்பதைக்கூட கவனிக்காமல் வாழ்கிறோம்.

இந்தக் கட்டுரையை வாசிக்கும் நீங்களும் சில நிமிடங்கள் உங்கள் போனை ஒதுக்கிவையுங்கள். யாருக்காவது அழைத்து, ‘நீங்கள் நலமாக இருக்கிறீர்களா?’ என்று அன்புடன் கேளுங்கள். குடும்பத்தினருடன் மனம் திறந்து பேசுங்கள். சில நிமிடங்கள் அமைதியாக இறைவனுடன் செபத்தில் இணைந்திருங்கள். ஏனெனில், உலகில் நீங்கள் ஆன்லைனில் இருப்பது முக்கியமல்ல; உங்கள் குடும்பத்திற்கும் இறைவனுக்கும் நேரம் ஒதுக்கி இருப்பதுதான் உண்மையில் முக்கியம்.

போனில் Full Charge இருந்தாலும், அன்பில்லாத வாழ்க்கை வெறுமையானதே. இறைவன் இல்லாத இதயம் எப்போதும் Low Battery நிலையில்தான் இருக்கும்.

குறளும் வாழ்வும் (வாரம் ஒரு குறள் – 05)
சிறப்புக்கட்டுரை
குறளும் வாழ்வும் (வாரம் ஒரு குறள் – 05)

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு (குறள் 5)

குறள் விளக்கம்

கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துவோரிடம், அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.

சிந்தனை

இருள், அநீதி, தீமை, துன்பம் எதுவும் இறைநம்பிக்கையாளர்களை நெருங்காது. ஏனென்றால், நல்வினை, தீவினை இரண்டும் அவர்களைப் பாதிக்காது. இருவினைகளையும் சமமாக எடுத்துக்கொள்ளும் உறுதியான மனநிலையை இறைவனடி பணிந்தவர்கள் பெற்றிருப்பர்.

புத்தர் மனிதர்களை மூன்று வகையினராகப் பிரித்தார். முதல் வகையினர் பாறையில் செதுக்கிய எழுத்துகளைப் போல அவர்கள் தங்கள் கோபத்தை வெகுநேரம் தக்கவைத்துக் கொண்டிருப்பவர்கள். இரண்டாம் வகையினர் மணலில் எழுதிய எழுத்துகளைப் போல அவர்களுக்கு விரைவில் கோபம் வரும்; சிறிது நேரத்தில் மறைந்துபோகும். மூன்றாம் வகையினர் நீரில் எழுதிய எழுத்துகளைப் போல, அவர்கள் யாருடைய பழிச்சொல்லிற்கும் வதந்திக்கும் கண்ணுறாமல் தங்கள் மனத்தையும் இதயத்தையும் எப்போதும் தூய்மையாக வைத்திருப்பவர்கள்.

புத்தர் குறிப்பிடும் மூன்றாம் வகை மனிதர்கள் எப்படித் தீமையால் பாதிக்கப்படாமல் தங்கள் மனத்தைத் தூய்மையாக வைத்திருக்கிறார்களோ, அதுபோன்ற நிலையை இறைவனோடு நெருங்கிய உறவுகொண்ட உண்மையான இறையடியார் பெற்றிருப்பர். இதனைத் திருவிவிலியம்அன்பும் வாய்மையும் தீவினையைப் போக்கும்அச்சம் ஒருவரைத் தீமையினின்று விலகச் செய்யும்என்று (நீதிமொழிகள் 16:6) குறிப்பிடுகிறது.

கடவுளைத் தனது ஆதாயத்திற்காகத் தேடுவோர் பலர். இன்ப நேரங்களைவிட துன்ப நேரங்களில் மட்டுமே நிம்மதியைத் தேடி இறைச் சமூகத்தைத் தேடுகின்றனர் பலர். ஆனால், நிறை இன்பமாகிய இறைவனின் திருவடிகளை என்றும் மறவாது தேடுவோர், இவ்வுலக இன்ப-துன்பங்களால் பாதிக்கப்படுவது இல்லை.

ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் தீவினையை முற்றிலும் போக்கிவிடும்; நல்வினைகளைப் பெருக்கும். இறையடியாருடைய அன்பும் வாய்மையும் தீவினைகளைப் போக்குவதுடன், நல்வினைகளையும் பெருக்கும். எனவேதீவினை நீங்கி நல்வினை பெருக இறையடி பணிவோம்.

 

இயேசுவின் மீட்புப் பணியில் மரியாவின் பங்கு (திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி – 40)
ஆன்மிகம்
இயேசுவின் மீட்புப் பணியில் மரியாவின் பங்கு (திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி – 40)

1. “இயேசுவே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி (லூக் 2:32) என்பதை உணர்ந்த பிறகு, சிமியோன் மரியாவிடம் அந்த மீட்பராகிய இயேசு அனுபவிக்க வேண்டிய மிகப்பெரும் துயரத்தையும் அந்தத் துன்பியல் நிகழ்வில் அவரின்  (மரியாவின்) பங்களிப்பையும் முன்னறிவிக்கின்றார்.

அவரின் மீட்புப் பலி பற்றிய குறிப்பானது இயேசுவின் பிறப்பு பற்றிய அறிவிப்பு நிகழ்வின் பொழுது சுட்டிக்காட்டப்படாமல் மரியின் மகனுடைய மறையுண்மைகளை அவர் புரிந்துகொள்ள உதவிய கிட்டத்தட்ட கிறிஸ்து பிறப்பின் இரண்டாவது அறிவிப்பு (ஒப்பிடுக. மீட்பரின் தாய், எண்.16) என்று கூறப்படும் சிமியோனின் தீர்க்கத்தரிசனத்தில் வெளிப்படுத்தப்படுகின்றது

அதுவரை அங்கிருந்தவர்களிடம் பேசிக்கொண்டிருந்த சிமியோன், யோசேப்புவையும் மரியாவையும் ஆசிர்வதிக்கையில் மரியாவிடம் மட்டும் அவரது மகனின் பாடுகளை அவரும் பகிர்ந்துகொள்வார் என்று முன்னறிவிக்கின்றார். தூய ஆவியாரால் தூண்டப்பட்டு அவர் மரியாவை நோக்கி, “இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும் (லூக் 2:34-35) என்கிறார். தாய் என்கிற முறையில் மரியாவின் துன்பமானது அவரது மகனின் பாடுகளில் அதன் உச்சத்தை அடைகிறது.

2. இந்த வார்த்தைகள் மீட்பர் எதிர்கொள்ளவிருக்கும் துன்பத்தை முன்னறிவிக்கின்றன. உண்மையில் அவர் அவரது சமகாலத்தவர்களின் கடுமையான எதிர்ப்புகளை எதிர்கொள்ள முன்குறிக்கப்பட்டமுரண்பாட்டின் அடையாளம் (the sign of contradiction) ஆவார். ஆனால், கிறிஸ்துவின் துன்பத்துடன் இணைத்து மரியாவின் இதயமானது வாளால் குத்திக் கிழிக்கப்படும் என்பதைக் காட்சிப்படுத்துவதன் வழியாக அவரது மகனின் துன்பமிக்க முடிவோடு அவரின் அன்னையையும் சிமியோன் இணைக்கின்றார்.  

இவ்வாறு, மதிப்புமிக்க வயோதிகரான அவர், மீட்பர் எதிர்கொள்ளவிருக்கும் பகையை முன்கூட்டியே எதிர்பார்க்கையில், அப்பகையானது தாயின் இதயத்தில் ஏற்படுத்தவிருக்கும் எதிர்வினையையும் சுட்டிக்காட்டுகின்றார். தாயின் இந்தத் துன்பமானது மீட்புப் பலியில் அவரது மகனாகிய இயேசுவோடு இணையும் அந்தப் பாடுகளில் அதன் உச்சத்தை அடைகிறது.

லூக்கா நற்செய்தி 2:32-இல் மேற்கோள் காட்டப்பட்டுள்ள துன்புறும் ஊழியர் பற்றிய பாடல்களை நமது மனக்கண்முன் கொண்டு வரும் பொழுது (ஒப்பிடுக: எசா 42:6; 49:6), சிமியோனின் வார்த்தைகள், “அவர் நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார் (எசா 53:5), “தம் உயிரைக் குற்ற நீக்கப் பலியாகத் தந்தார் (எசா 53:10) போன்ற தனிப்பட்ட மற்றும் ஆன்மிகத் தியாகத்தை விளக்கும் பண்டைய சடங்குமுறைகளையும் விஞ்சுகின்ற வகையில் இருக்கும் துன்புறும் ஊழியர் பற்றிய இறைவாக்கை நமக்கு நினைவூட்டுகின்றன.

துன்புறும் ஊழியரின்துக்ககரமான எதிர்காலத்திற்கும், மரியாவின் எதிர்காலத் துன்பத்திற்கும் இடையே ஒரு தனித்துவமான ஒற்றுமை இருப்பதை சிமியோனின் இறைவாக்கானது எவ்வாறு வெளிப்படுத்துகின்றது என்பதை இங்கு நாம் கவனிக்கலாம்.

3. இயேசுவை, சிமியோன்பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி (லூக் 2:32) என்று அறிவிக்கும் பொழுது, மரியாவும் யோசேப்புவும் திகைத்து நிற்கின்றனர். சிமியோனின்  வார்த்தைகளைக் கேட்ட பிறகு தன் இருதயத்தைத் துளைக்கும் வாள் பற்றிய இறைவாக்குப் பற்றி மரியா எதுவுமே சொல்லவில்லை. யோசேப்புவுடன் இணைந்து அந்தப் புரிந்துகொள்ள முடியாத இறைவாக்கு வார்த்தைகளையும் இயேசுவைக் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தலின் உண்மையான அர்த்தத்தையும் அமைதியுடன் மரியா ஏற்றுக்கொள்கின்றார்.

உண்மையில், புனித லூக்கா தனது நற்செய்தியில்அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு ஒரு சோடி மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக் குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது (லூக் 2:24) என்று குறிப்பிடுவதைப் போன்று, அதுநான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன் (மத் 11:29) என்று கூறும் இயேசுவின் பலியை முன்குறிக்கின்றது. இதில் இயேசுவின் மீட்புப் பணியில் அவரது தாயையும் இணைக்கும்உண்மையானதொரு கையளிப்பும் (லூக் 2:22) நிகழ்த்தப்பட்டது.

மரியா தனது மகனின் மீட்புப் பணியில் பங்குகொள்ள வேண்டியதாயிருந்தது...

4. சிமியோனின் இறைவாக்கைத் தொடர்ந்து இறைவாக்கினரான அன்னாவினுடனான சந்திப்பும் நிகழ்கின்றது: “அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக் குழந்தையைப் பற்றிப் பேசினார் (லூக் 2:38). “கோவிலை விட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்து (லூக் 2:37) வந்ததன் வழியாக மீட்பரின் வரவை எதிர்பார்த்திருந்த அந்த வயதான பெண்ணின் நம்பிக்கையும், இறைவாக்குரைக்கும் ஞானமும் இஸ்ரயேலின் கடவுள்மீது நம்பிக்கை வைப்பதற்குத் திருக்குடும்பத்திற்கு மேலும் ஊக்கமூட்டியது.

இந்தக் குறிப்பிட்ட தருணத்தில், அன்னாவின் செயலானது மரியாவிற்கும் யோசேப்புவிற்கும் இறைவனிடமிருந்து வந்ததோர் அடையாளமாகத் தோன்றியிருக்கும். இது நம்பிக்கையளிக்கும் ஒளியின் மற்றும் தொடர் பணியின் செய்தியாகும்.

சிமியோனின் இறைவாக்குரைக்கும் நிகழ்வு முதல், மரியா தனது வாழ்க்கையை இயேசு கிறிஸ்துவின் பாடுகள் நிறைந்த பணிவாழ்வில் மிக நெருக்கமாகவும், புரிந்துகொள்ள இயலாத வகையிலும் ஒன்றிணைக்கிறார்

இவ்வாறு, மனிதகுலத்தின் மீட்புக்காக மரியா தன் மகனின் உண்மையுள்ள உடன் உழைப்பாளராக மாற வேண்டியதாயிருந்தது.

மூலம்: John Paul II, Mary has role in Jesus’ saving mission, in «L’Osservatore Romano», Weekly Edition in English, 1 January 1997, p. 11.