slider slider slider
நம் வாழ்வு
நம் வாழ்வு இதழின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்
நம் வாழ்வு
நம் வாழ்வு - நல்லவர்களின் நாடித்துடிப்பு
நம் வாழ்வு
நல்லவர்களின் நாடித்துடிப்பு
அண்மைச் செய்திகள்
திரைகளுக்கும் சமூகத்திற்கும் இடையே இன்றைய இளைய தலைமுறை
சிறப்புக்கட்டுரை
திரைகளுக்கும் சமூகத்திற்கும் இடையே இன்றைய இளைய தலைமுறை

இன்றைய காலச் சூழலுக்கு ஏற்றவாறு இளையோரை உருவாக்குவது குறித்து மேய்ப்புப்பணிச் சிந்தனை

அன்பார்ந்த குருக்களே, துறவிகளே மற்றும் சகோதர சகோதரிகளே!

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும் அமைதியும் உங்களுடன் இருப்பதாக!

ஒவ்வொரு தலைமுறையும் தனக்கே உரிய போராட்டங்களையும் சோதனைகளையும் எதிர்கொள்கிறது. ஆனால், இன்றைய இளைஞர்கள் சந்திக்கும் சவாலானது மனித வரலாற்றிலேயே இதுவரை எண்ணிப் பார்த்திராத ஒன்றாகும். இதற்கு முன்பு எந்தவொரு தலைமுறையும் இந்த அளவிற்குத் தொழில்நுட்பத்தோடு இணைந்தும், அதே நேரத்தில் இவ்வளவு தனிமையோடும் வாழ்ந்ததில்லை. இத்தலைமுறைக்குத் தகவல்கள் நிறைந்திருந்தாலும் ஆழமான சிந்தனையின்றித் தவிக்கிறது. வெளித்தோற்றத்தில்  வீரியமிக்கதாகத் தோன்றினாலும், அகத்தில் பலவீனமான நிலையில் உள்ளது. நவீனத் திரைகளான திரைப்படம், கைப்பேசி, சமூக ஊடகங்கள் அல்லது எண்ம (டிஜிட்டல்) பொழுதுபோக்குகள் என எதுவாக இருந்தாலும்அவை கண்ணுக்குத் தெரியாத வகுப்பறையாகவும், அமைதியான பேச்சாளராகவும், உணர்வுகளை வடிவமைக்கும் கலைஞனாகவும், கலாச்சாரத்தைத் தீர்மானிக்கும் சர்வாதிகாரியாகவும் இன்று மாறியுள்ளது.

இன்றைய இளம் மனங்களுக்குத் தொடர்ச்சியாக ஊட்டப்படுவது ஞானம் அல்ல; மாறாக, சலனங்களும் தூண்டுதல்களுமே. உண்மை அல்ல; வெறும் பிம்பங்களே. பகுத்தறியும் திறன் அல்ல; மாறாக, உணர்ச்சிப்பூர்வமான தூண்டல்களே! திரை என்பது ஒரு புதிய அதிகார மையமாக உருவெடுத்துள்ளது. அதுவே ஆசைகளை வடிவமைக்கிறது, அடையாளங்களைக் கட்டமைக்கிறது, இலக்குகளை உற்பத்தி செய்கிறது, மேலும், ஒழுக்கநெறி உணர்வுகளையும், அவர்களின் தலைமைத்துவத்தையும் கூடத் தீர்மானிக்கிறது.

இன்றைய இளைஞர்களில் பெரும்பாலோர் எதார்த்தத்தை நேரடியாக எதிர்கொள்வதில்லை; மாறாக, திரைகளின் வழியேதான் அதனை அனுபவிக்கிறார்கள். வாழ்க்கை என்பதே பிம்பங்கள், தற்காலப் போக்குகள் (trends), இணையத்தில் பரவும் தற்காலிக உணர்வுகள், சினிமா கற்பனைகள் மற்றும் எண்மத் தொழில்நுட்ப அங்கீகாரங்கள் ஆகியவற்றின் மூலமாகவே அவர்களுக்குக் கடத்தப்படுகிறது. இதன் விளைவாக, அன்றாட வாழ்க்கையின் இயல்பான போராட்டங்களான கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, ஒழுக்கம், பொறுமை, நிராகரிப்பு மற்றும் பொறுப்பேற்பு போன்றவற்றை எதிர்கொள்ளும் துணிவைப் பலர் மெல்ல இழந்து வருகின்றனர்.

மாற்றங்கள் என்பவை உடனடியாக, வியத்தகு முறையில், உணர்ச்சிப்பூர்வமாக மட்டுமே நிகழும் என்ற ஆபத்தான மாயை நம் இளைஞர்களிடையே பரவி வருகிறது. திரைப்படங்கள் நாயகத்தனமான குறுக்கு வழிகளை நல்வாக்காகக் காட்டுகின்றன. சமூக ஊடகங்கள் உழைப்பற்ற அங்கீகாரத்தை அள்ளித் தருகின்றன. எண்மத் தொழில்நுட்பக் கலாச்சாரம் என்பது நற்பண்பை விடத் தோற்றத்திற்கும், நிதானமான சிந்தனையைவிட உடனடி எதிர்வினைக்கும், நேர்மைத்தனத்தை விடப் புகழுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. இதனால், சகிப்புத்தன்மையைவிடத் தப்பித்தலையும், வாழ்வின் சாரத்தைவிடத் தற்காலிகச் சலனங்களையும், நற்பண்பைவிடத் தன்னை வெளிப்படுத்துவதையும் மட்டுமே முதன்மையாகத் தேடும் ஒரு தலைமுறை உருவாகி வருகிறது. “நீங்கள் இந்த உலகத்தின் போக்கின்படி ஒழுகாதீர்கள்; மாறாக, உங்கள் மனம் புதுப்பிக்கப்பெற்று மாற்றம் அடையுங்கள் (உரோ 12:2) என்று பல நூற்றாண்டுகளுக்கு முன்பே புனித பவுல் நம்மை எச்சரித்துள்ளார். இன்று நாம் சந்திக்கும் நெருக்கடியும் முற்றிலும் இதுவே; சிந்தனைகள் இங்குப் புதுப்பிக்கப்படுவதில்லை; அவை நிரலாக்கம் (programmed) செய்யப்படுகின்றன.

சமூகத்தின் உணர்ச்சிமயமாக்கல்

திரைக் கலாச்சாரத்தின் மிகக் கடுமையான ஆபத்துகளில் ஒன்று, பொது வாழ்க்கையை உணர்ச்சிமயமாக்குவதாகும். உணர்ச்சிகளைத் தூண்டும் பிரச்சினைகள், வியத்தகு கதையாடல்கள், இணையத்தில் பிரபலமாகும் ஹேஷ்டேக்குகள் (hashtags), சினிமா முழக்கங்கள் மற்றும் கூட்டு உத்வேகம் ஆகியவற்றால் இளைஞர் மிக எளிதாகத் திரட்டப்படுகிறார்கள். ஆனால், அவர்களின் நீண்ட கால எதிர்காலம், சமூக நீதி, கல்வி, சுற்றுச்சூழல், மொழி, கலாச்சாரம், ஒழுக்க விழுமியங்கள் மற்றும் நாகரிகப் பாரம்பரியம் ஆகியவற்றைப் பாதிக்கும் ஆழமான பிரச்சினைகள் எழும்போது இதேபோன்ற ஆற்றல் பெரும்பாலும் காணப்படுவதில்லை. இது, எதிர்வினை ஆற்றக்கூடிய  ஆனால், நிதானமாகச் சிந்திக்காத; கூட்டமாகக் கூடக்கூடிய ஆனால், ஒருங்கமையாத; போராடக்கூடிய ஆனால், விடாமுயற்சியுடன் நிலைத்திருக்காத ஒரு சமூகத்தையே உருவாக்குகிறது.

ஓர் ஆரோக்கியமான சமூகத்திற்குக் கேள்வி கேட்கக்கூடிய, பகுத்தாயும் திறன் கொண்ட, நன்மையையும் தீமையையும் பிரித்தறியும் ஆற்றல் கொண்ட, ஆரோக்கியமாக விவாதிக்கவும் விமர்சனப் பூர்வமாகச் சிந்திக்கவும் திறன் கொண்ட இளைஞர் தேவைப்படுகிறார்கள். அதற்கு மாறாக, உணர்ச்சித் தூண்டல்களாலும் டிஜிட்டல் போக்குகளாலும் மட்டுமே இயக்கப்படும் ஒரு தலைமுறையை உருவாக்கிவிடும் அபாயத்தில் நாம் இருக்கிறோம். வாசிப்புப் பழக்கம், தத்துவார்த்தச் சிந்தனை, வரலாற்று விழிப்புணர்வு மற்றும் அறிவுசார் ஒழுக்கம் ஆகியவற்றின் வீழ்ச்சி மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. “பேதைகள் எதையும் நம்புவர்; விவேகிகளோ தங்கள் நடையின்மேல் கண்ணாயிருப்பர்என்கிறது நீதிமொழிகள் (14:15). இன்று அந்த விவேகம் மறைந்து வருகிறது; பகுத்தறியும் திறன் பலவீனமடைந்து வருகிறது; ஞானத்தின் இடத்தை ஆரவாரம் ஆக்கிரமித்துக் கொள்கிறது. பகுத்தறிவை விட உணர்ச்சிகள் ஆதிக்கம் செலுத்தும்போது, மனிதர்களைத் தங்களுக்குச் சாதகமாகத் திசை திருப்புவது எளிதாகிவிடுகிறது. ஆழமான கொள்கைகளின் இடத்தைத் தற்காலப் போக்குகள் மாற்றியமைக்கும்போது, உண்மை என்பது பலவீனமாகி விடுகிறது. கல்விக்கு மாற்றாகப் பொழுதுபோக்கு அமையும்போது, ஒட்டுமொத்த நாகரிகமே பாதிப்பிற்குள்ளாகிறது.

துன்பங்களைக் கண்டு அஞ்சும் ஒரு தலைமுறை

இன்றைய நம் இளையோர் வசதி வாய்ப்புகளில் வளர்ந்து வருகிறார்கள்; ஆனால், சவால்களைத் தாங்கும் மனவலிமையில் (resilience) பெரும்பாலும் சுருங்கிப் போகிறார்கள். எண்மத் தொழில்நுட்ப உலகம் என்பது வலிகளிலிருந்து மிக எளிதாகத் தப்பித்துக்கொள்ள அனுமதிக்கிறது. ஆனால், போராட்டங்கள் இல்லாமல் வாழ்க்கையை வாழ்ந்துவிட முடியாது.

அர்ப்பணிப்பு இல்லாமல் எந்தவொரு நாகரிகமும் கட்டியெழுப்பப்படவில்லை. ஒழுக்கநெறி இல்லாமல் எந்தவொரு புனிதரும் உருவாகவில்லை. துன்பங்களைச் சந்திக்காமல் எந்தவொரு தலைவனும் முதிர்ச்சியடையவில்லை. கிறிஸ்துவே,  “என்னைப் பின்பற்றிவர விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, நாள்தோறும் தன் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும் (லூக் 9:23) என்று முழங்கினார். இன்றைய எண்மத் தொழில்நுட்பக்  கலாச்சாரத்தில் சிலுவை என்பது நாகரிகமானதென்றாகக் கருதப்படுவதில்லை. தியாகம் என்பது பழித்துப் பேசப்படுகிறது. அர்ப்பணிப்பு என்பது அஞ்சப்படுகிறது. சகிப்புத்தன்மை என்பது தவிர்க்கப்படுகிறது. ஆனால், கடின உழைப்பையும் துன்பங்களையும் சகித்துக்கொள்ளக் கற்றுக்கொள்ளாமல், இளையோரால் பொறுப்புள்ள குடிமக்களாகவோ, நம்பிக்கையுள்ள  நம்பிக்கையாளர்களாகவோ, அர்ப்பணிப்புள்ள தம்பதியராகவோ, நேர்மையான தலைவர்களாகவோ அல்லது சமூகத்தின் இரக்கமுள்ள பணியாளர்களாகவோ மாறமுடியாது.

(தொடர்ச்சி அடுத்த இதழில்)

வல்ல தேவன் அழைக்கின்றார்!
கவிதை
வல்ல தேவன் அழைக்கின்றார்!

வழியும்  உண்மையும்  நானென்றே

                வல்ல  இயேசு  மொழிந்தாரே!

வழியின்  துணையாய்  இறைச்சொற்கள்

                விழிபோல்  நம்மைக்  காத்திடுதே!

 

பாவ  இருளில்  வாழ்வோர்க்குப்

                பரமன்  அருளைப்  பகிர்வதற்கும்

காவல்  தூதர்  பணியாற்ற

                காக்கும்  இளையோர்  வருவீரே!

 

திராட்சைக்  கொடியாய்  வாழ்ந்திங்கே

                தேவன்  கனியைச்  சுவைப்பதற்குத்

திரட்டித்  தரவே  இளையோரே

                திரண்டு  வாரீர்  பணியாற்ற!

 

இறைவன்  பணியை  ஆர்வமுடன்

                இமைபோல்  நாளும்  வளர்த்திடவும்

துறவு  வாழ்வின்  சபைகளிலே

                தொடர்ந்து  பணியை  ஆற்றிடலாம்!

 

அழியா  இல்லம்  விண்ணகத்தை

                அடையும்  வழிகள்  இவையென்றே

வழியைக்  காட்ட  இளையோரை

                வருக  என்றே  அழைக்கின்றோம்!

 

கல்வி  மற்றும்  மருத்துவத்தைக்

                கடவுள்  பணியாய்ச்  செய்வோமே!

வல்ல  தேவன்  அழைக்கின்றார்

                வாரீர்  மேய்ப்புப்  பணியாற்ற!

ஜூன் 14, 2026 ஆண்டின் பொதுக்காலம் 11-ஆம் ஞாயிறு - விப 19:2-6; உரோ 5:6-11; மத் 9:36-10:8 (அலைக்கழிக்கப்படும் ஆடுகளும் அரவணைக்கும் ஆயனும்)
ஞாயிறு மறையுரை
ஜூன் 14, 2026 ஆண்டின் பொதுக்காலம் 11-ஆம் ஞாயிறு - விப 19:2-6; உரோ 5:6-11; மத் 9:36-10:8 (அலைக்கழிக்கப்படும் ஆடுகளும் அரவணைக்கும் ஆயனும்)

வாழ்வு என்பது கடவுள் நமக்குக் கொடுத்த உன்னதமான கொடை! ஒவ்வொரு நாளும் புதிய விடியலையும், புதிய நம்பிக்கையையும் நோக்கி நாம் மகிழ்ச்சியோடுதான் நம் பயணத்தைத் தொடங்குகிறோம். 

இன்றைய நவீன உலகம் நமக்கு அடுக்கடுக்கான வசதிகளையும், கண்ணிமைக்கும் நேரத்தில் உலகையே நம் கைகளில் காட்டும் வியத்தகு தொழில்நுட்பங்களையும் அள்ளித் தந்துள்ளது. மனித ஆற்றலும் அறிவியலும் உச்சம் தொட்டிருக்கும் ஒரு பொற்காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை. இருப்பினும், இன்றைய எதார்த்த சூழலில் இந்த அதிவேக ஓட்டத்திற்குப் பின்னால், மனித இதயம் ஏதோ ஒரு திசையறியாத் தவிப்பை எதிர்கொண்டுதான் இருக்கிறது. வழிகாட்டும் தொழில்நுட்பங்கள் பெருகிவிட்ட போதிலும், ‘அடுத்த நொடி என் வாழ்வு எங்குச் செல்லப் போகிறது?’ என்ற ஆழமான தேடல் மனித மனங்களில் கூடிக்கொண்டே போகிறது. ‘வழிகாட்டிகள்என்று தங்களை அறிவித்துக் கொள்ளும் முகமூடிகள் நம்மைச் சுற்றி ஏராளமாக இருந்தாலும், காயம்பட்ட நெஞ்சங்களைத் தேற்றி, தாங்கிப் பிடிக்கும் உண்மை மனிதரைக் காண்பது இன்று அரிதாகிவிட்டது. பல நூறு மனிதர் கூடி வாழும் கூட்ட நெரிசலிலும், தனிமையின் ஏகாந்தக் கொடுமையையும், அலைக்கழிப்பையும் பலரும் அனுபவித்து வருகிறார்கள்.

நான்கு திசையும் பாதைகள்... நன்மை என்ன தீமை என்ன அறியாத கோலங்கள்என்ற பாடல் வரிகளுக்கேற்ப நாம் அலைக்கழிக்கப்பட்டு, சோர்ந்து போயிருக்கும் இந்த எதார்த்தமான தவிப்பின் பின்னணியில்தான் இன்றைய இறைவார்த்தை நம்மை நோக்கி ஒளிர்கிறது. அரவணைக்கும் நல்ல ஆயரின் பேரன்பை நோக்கி நம்மை வழி நடத்துகிறது.

இன்று நாம் பொதுக்காலத்தின் 11-ஆம் ஞாயிறு வழிபாட்டைச் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள், தகுந்த தலைவர்  அல்லது வழிகாட்டி இல்லாத இறை மக்கள்மேல் இறைவன் கொண்டுள்ள பரிவுள்ளத்தையும், அதை வெளிப்படுத்த நமக்கு விடுக்கும் அழைப்பினையும் எடுத்துக்காட்டுகின்றன.

வாழ்வில் திசையறியாமல், பாரங்களால் அலைக்கழிக்கப்பட்டுச் சோர்ந்து போயிருக்கும் ஒவ்வொரு மனிதரையும் தேடி ஓடிவரும் ஒரு நல்ல ஆயராகக் கடவுள் வெளிப்படுகிறார். நற்செய்தி வாசகத்தின் தொடக்க வரியானதிரண்டிருந்த மக்களை அவர் கண்டபோது அவர்கள் மேல் பரிவுகொண்டார். அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப்போல அலைக்கழிக்கப்பட்டுச் சோர்ந்து காணப்பட்டார்கள் (மத் 9:36) என்பது, பழைய ஏற்பாட்டில் பாபிலோனிய நாடு கடத்தலின்போது இஸ்ரயேலர் நிலமற்று, தலைவனற்றுத் தவித்த நிலையை நினைவூட்டுகிறது.

இறைவாக்கினர் மீக்கா அன்றைய மக்களின் பரிதாப நிலையை விவரிக்கும்போது, “இஸ்ரயேலர் அனைவரும் ஆயனில்லா ஆடுகளைப்போல் மலைகளில் சிதறுண்டு கிடக்கக் கண்டேன் (1அர 22:17) என்கிறார். இவர்களின் அவலநிலையை இறைவாக்கினர் எசேக்கியேல் உருவகப்படுத்தும்போது, “ஆயன் இல்லாமையால் அவை அலைந்து திரிந்து, காட்டு விலங்குகளுக்கெல்லாம் இரையாயின. சிதறுண்டுபோன என் மந்தையைத் தேடவோ கூட்டிச் சேர்க்கவோ எவரும் இலர் (எசே 34:5-6) என்று இறைவனிடம் தன் வேதனையைப் பதிவு செய்கிறார்.

இந்தத் தவிப்புகளுக்கெல்லாம் உன்னத விடையாக அமைவதுதான் இன்றைய முதல் வாசகம். இறைவன் இஸ்ரயேல் மக்களை நோக்கி, “கழுகுகளின் இறக்கைகளின்மேல் உங்களை ஏந்தி என்னிடம் வரச்செய்தேன் (விப 19:4) என்று தமக்கே உரிய பேரன்பின் செயல்பாட்டை வெளிப்படுத்துகிறார். இஸ்ரயேல் மக்கள் பிற இனத்தாரின் தவறான மதிப்பீடுகளைப் பின்பற்றாமலும், சிலை வழிபாட்டிலும் தீயவழிகளில் வீழ்ந்துவிடாமலும், நீதியை நிலைநாட்டும் உண்மை மனிதராய் வாழவேண்டும் என்பதற்காகவே மோசே வழியாக அவர்களைத் தமதுதூய மக்களினமாககடவுள் அணைத்துக் கொள்கிறார். இதனால்தான் மோசே தன் ஆயுள் முடியும் தருவாயிலும், ஆண்டவரின் மக்கள் மேய்ப்பனில்லா ஆடுகளாய் அலைந்து திரியக்கூடாது என்ற பெருங் கவலையோடு கடவுளிடம் ஒரு நல்ல தலைவனுக்காக மன்றாடினார் (எண் 27:17).

பழைய ஏற்பாட்டில் கழுகின் இறக்கைகளில் தாங்கி, மக்களைத் தூய குலமாக மாற்றிய அதே கடவுளின் கனிவான இதயம், புதிய ஏற்பாட்டில் நம் ஆண்டவர் இயேசுவின் வழியாக மனித உருவெடுத்ததை நாம் காண்கிறோம்.

இயேசு நகர்கள், சிற்றூர்கள் எல்லாம் சுற்றி வந்தார்... நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார் (மத் 9:35). இவ்வாறு இயேசு மக்களைத் தேடிச்சென்று நேரடியாகச் சந்தித்தபோதுதான் அவர்களின் துயரங்கள், வேதனைகள், ஆன்மிகப் போராட்டங்கள் மற்றும் அன்றாடத் தேவைகளை நேரில் காண்கிறார். அந்த எளிய, கதியற்ற மக்களின் வாழ்விற்குள் இயேசுவின் இதயத்தால் எளிதில் புகமுடிகிறது. அவர்கள் ஆயனற்ற ஆடுகள்போல் அலைக்கழிக்கப்படுவதை அவரால் கண்டுகொள்ள முடிகிறது.

அடுத்தவரின் துன்பத்தை அறிவது என்பது, அவர்களின் துன்பநிலைக்குள் நாமும் புகாமல் சாத்தியமில்லை. பிறரது இயலாமையை அங்கீகரிப்பதன் மறுபக்கமே அவர்களுக்காகக் களத்தில் இறங்கிச் செயலாற்றுவதுதான். இயேசுவின் பரிவுள்ளம் வெறும் பரிதாபத்தோடு நின்றுவிடாமல் உடனடியாகச் செயலாற்றுகிறது. ஆயர் இல்லா ஆடுகளைப்போல அலைக்கழிக்கப்பட்டுச் சோர்ந்து காணப்பட்ட மக்களுக்குப் பணியாற்ற ஆள்கள் தேவை என்பதை வெளிப்படையாக எடுத்துக்கூறி, பன்னிரு திருத்தூதர்களைத் தேர்ந்தெடுக்கிறார். அவர்களுக்குப் பேய்களை ஓட்டவும், நோய்களைக் குணமாக்கவும் அதிகாரமளித்து, “கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள் (மத் 10:8) என்ற கட்டளையோடு அலைக்கழிக்கப்படும் மக்களின் புதிய ஆயர்களாக அவர்களை உலகிற்குள் அனுப்புகிறார்.

புனித பவுல் இன்றைய இரண்டாம் வாசகத்தில், இந்த ஆயரின் பரிவை மனித அறிவுக்கு எட்டாத ஒரு மாபெரும் ஆன்மிக ஆழத்திற்கு எடுத்துச் செல்கிறார். நாம் தகுதியுள்ளவர்களாகவோ, தூய்மையானவர்களாகவோ இருந்தபோது கிறிஸ்து நமக்காக உயிர் கொடுக்கவில்லை; மாறாக, நாம் பாவிகளாய் திக்கற்று, கடவுளுக்கு எதிராக இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்துத் தம் பேரன்பை எண்பித்தார். புனித பவுல் கூறுவது போல, “நாம் கடவுளுக்குப் பகைவர்களாயிருந்தும், அவருடைய மகன் நமக்காக உயிரைக் கொடுத்ததால் கடவுளோடு ஒப்புரவாக்கப்பட்டுள்ளோம் (உரோ 5:10). தடம் மாறி, திசைதெரியாமல் ஓடிய மனிதகுலத்தோடு கடவுள்தாமே முன்வந்து ஒப்புரவாவது என்பது, அவரது அளவிட முடியாத பரிவிரக்கத்தின் உச்சக்கட்ட அடையாளமாகும். இந்த மீட்பின் நற்செய்தியை அலைக்கழிக்கப்படும் அகில உலகிற்கும் அறிவிக்கவே தாம் திருத்தூதராக அழைப்புப் பெற்றுள்ளதாகவும் புனித பவுல் பெருமிதத்தோடு பறைசாற்றுகிறார்.

இன்று நாம் வாழும் இந்தச் சமூகத்தில் ஆயரில்லா ஆடுகளைப்போல் தவிக்கும் ஆயிரமாயிரம் மக்கள்மீது பரிவிரக்கம் கொள்ளவும், அவர்களுக்காகப் பணியாற்றவும் உயிர்த்த இயேசு நம் ஒவ்வொருவரையும் அழைக்கின்றார். நம் இல்லங்களில் வாழும் குழந்தையரும் இளைஞரும் அலைக்கழிக்கப்படும் ஆடுகளாய் நம் முன்னே நிற்பதை நாம் காணவில்லையா? சமூக ஊடகங்களின் மாய உலகிற்குள் நம் சிறார் தஞ்சமடையும்போது, அங்கு அவர்களை நல்வழிப்படுத்த நல்மேய்ப்பர்கள் இல்லாததால், போலி வழிகாட்டிகளாலும், ஆபத்தான நீரோட்டங்களாலும் அலைக்கழிக்கப்பட்டு, மன அழுத்தத்திற்கும், தவறான பழக்கவழக்கங்களுக்கும் அடிமையாகி, உள்ளத்தாலும் உடலாலும் சோர்ந்து காணப்படுகின்றனர். எனவே, அலைக்கழிக்கப்படும் இந்தச் சமகால உலகிற்கு நாம் ஆற்ற வேண்டிய பணிகள்:

முதலாவதாக, நல்ல ஆயனின் முதற்பணி திசையறியாது தவிக்கும் ஆடுகளுக்குக் கனிவான வழிகாட்டுவதே ஆகும். தடம்மாறி ஓடும் நம் குழந்தையருக்கு உண்மை நெறியைக் காட்டும் நல்வழிகாட்டிகளாக நாம் மாறவேண்டும். நம்முடைய முன்மாதிரியான வாழ்வாலும், கனிவான உடனிருப்பாலும் அவர்களுக்குள் நம்பிக்கையை விதைப்பதே இன்றைய அவசரத் தேவையாக இருக்கிறது.

இரண்டாவதாக, இயேசு தம் சீடர்களுக்குத் தந்த முதல் அதிகாரம்நோய்களைக் குணமாக்குவதுஎன்பதாகும். இன்று நம்மைச் சுற்றியுள்ள உலகம் ஏமாற்றங்களாலும் புறக்கணிப்புகளாலும் உள்ளத்தில் காயப்பட்டு நிற்கும் வேளையில், அலைக்கழிக்கப்படும் பிற மனிதரைக் குற்றவாளிகளாகத் தீர்ப்பிடாமல், அவர்களின் மனக்காயங்களுக்கு அன்பெனும் அருமருந்திடும்நலமாக்கும் கருவிகளாகநாம் மாற அழைக்கப்படுகிறோம்.

மூன்றாவதாக, புனித பவுல் சுட்டிக்காட்டுவது போல, உண்மை அருள்பணி என்பது சுயநலமற்றத் தியாகத்தில் அடங்கியுள்ளது. நம் குடும்பத்தின் அமைதிக்காகவும், குழந்தையரின் உன்னதமான எதிர்காலத்திற்காகவும் நமது தேவையற்ற அகந்தை, கோபம் மற்றும் சுயநல விருப்பங்களைத் தியாகம் செய்யவேண்டும். பிறரின் வாழ்வு சிறந்து ஒளிரும் பொருட்டு, நம்முடைய நேரத்தையும் உழைப்பையும் கையளிக்க முன்வரவேண்டும்.

நிறைவாக, இன்றைய இறைவார்த்தை நமக்குத் தரும் மாபெரும் ஆறுதல்: நம்மை உற்றுநோக்கும் ஓர் ஆயர் நமக்கிருக்கிறார்; அவர் நம் தவிப்பைக் காண்கிறார்; நம்மீது பரிவு கொள்கிறார்; நம்மைத் தேடி வருகிறார். அதேவேளையில், நம்மைச் சுற்றிலும் அலைக்கழிக்கப்படும் எண்ணற்ற மனிதருக்கு நாம்உதவும் ஆயர்களாகமாறவும் அவர் நம்மைப் பணிக்கிறார். நமது பார்வைகள் பரிவிரக்கச் செயல்களாக மாறவேண்டுமெனில், நாமும் இயேசுவைப் போல நம் சமூகத்தை உற்றுநோக்கக் கற்றுக்கொள்வோம். ஆயரின் பரிவு நம் வழியாய் இந்த உலகிற்குச் சென்றடைய இறையருள் வேண்டுவோம்.