slider slider slider
நம் வாழ்வு
நம் வாழ்வு இதழின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்
நம் வாழ்வு
நம் வாழ்வு - நல்லவர்களின் நாடித்துடிப்பு
நம் வாழ்வு
நல்லவர்களின் நாடித்துடிப்பு
அண்மைச் செய்திகள்
பிப்ரவரி 15, 2026 ஆண்டின் பொதுக்காலம் 6-ஆம் ஞாயிறு சீஞா 15:15-20; 1கொரி 2:6-10; மத் 5:17-37 - தெளிந்த இதயம்... தேர்ந்தெடுக்கும் தெய்வீகம்!
ஞாயிறு மறையுரை
பிப்ரவரி 15, 2026 ஆண்டின் பொதுக்காலம் 6-ஆம் ஞாயிறு சீஞா 15:15-20; 1கொரி 2:6-10; மத் 5:17-37 - தெளிந்த இதயம்... தேர்ந்தெடுக்கும் தெய்வீகம்!

கடவுள் மனிதரைப் படைத்தபோது, அவர்களுக்கு முழுமையான சுதந்திரத்தைக் கொடுத்தார். ஆனால், அந்தச் சுதந்திரம் என்பது நாம் விரும்புவதை எல்லாம் செய்வதல்ல; மாறாக, எது சரியானது என்பதைத் தேர்ந்தெடுப்பது. இதயம் என்பது வெறும் உணர்ச்சிகளின் இருப்பிடம் மட்டுமல்ல, அது ஒரு மனிதனின் தீர்மானங்கள் பிறக்கும் இடம். நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் முதலில் நம் இதயத்தில் ஓர் எண்ணமாகவோ அல்லது ஒரு தீர்மானமாகவோதான் பிறக்கிறது. நம் இதயத்தைத் தூய்மைப்படுத்தும்போது, நாம் எடுக்கும் ஒவ்வொரு சின்னஞ்சிறு முடிவும் கடவுளுக்கு உகந்ததெய்வீகத் தேர்வாகமாறும்.

இன்று நாம் ஆண்டின் பொதுக்காலம் 6-ஆம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாடுகிறோம். இன்றைய வாசகங்கள் நாம் கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவருக்கு உகந்த வழியைத் தேர்ந்துகொள்ளவேண்டுமென அழைப்புவிடுக்கின்றன.

இன்றைய முதல் வாசகத்தில், ‘உனக்கு முன் வாழ்வும் சாவும் - அதாவது, ‘நன்மையும் தீமையும் வைக்கப்பட்டுள்ளனஎன்கிறார் சீராக்கின் ஞான நூல் ஆசிரியர். ஒவ்வொருவருக்கும் நல்லது - கெட்டதைத் தேர்ந்தெடுக்கும் உரிமை - அதாவது விருப்புரிமை அருளப்பட்டுள்ளது. இதனால் ஆசிருக்கும் அழிவிற்கும் அவரவர்தான் பொறுப்பு என்று சீராக் நூல் விளக்குகிறது.

கடவுளின் கட்டளையைக் கடைப்பிடிப்பது அல்லது விட்டுவிடுவது ஒருவரின் விருப்பத்தைப் பொறுத்தது அல்லது அவரவரின் தெரிவைப் பொறுத்தது. கடவுள் அடிமையான நேர்மையாளர்களை அல்ல; சுதந்திரமான நேர்மையாளர்களையே விரும்புகிறார். “மனிதர்முன் வாழ்வும் சாவும் வைக்கப்பட்டுளளன; உனக்கு விருப்பமானதை எடுத்துக்கொள் (சீஞா 15:15,16) என்னும் இந்த வரி இணைச் சட்ட நூலில் மோசே வாழ்வையும் சாவையும் தெரிவுகளாக முன்வைப்பதை நினைவூட்டுகிறது (இச 30:19-20).

சீராக் குறிப்பிடும் நீரும் நெருப்பும் மிக முக்கியமான உருவகங்கள். ஒன்று, இதமான தன்மையையும்; மற்றொன்று, வெம்மையான தன்மையையும் காட்டுகின்றன. சீராக் இதனை இரண்டு எதிர்கருத்துப் பதங்களாக ஒப்பிடுகிறார். நீர் பாதுகாப்பான உருவகமாகவும் அல்லது ஆசிருக்கான உருவகமாகவும், நெருப்பு பாதுகாப்பற்ற உருவகமாகவும் அல்லது தண்டனைக்கான உருவகமாகவும் பாவிக்கப்பட்டுள்ளன. நீரா? நெருப்பா? எதைக் கைநீட்டி எடுப்பது? வாழ்வா? சாவா? எதை விரும்புவது? என்ற கேள்விகளை முன்வைக்கிறார் சீராக். எவரும் சாவை விரும்புவதில்லை. வாழ்வையே அனைவரும் விரும்புகின்றோம். இங்கு சீராக் கூறும் வாழ்வு எப்படிப்பட்டது? வெறுமனே மூச்சுவிடுவதும், இதயம் துடிப்பதும் அல்லது உடல் சார்ந்த செயல்கள் வாழ்வு என்றாகி விடுமா? இவை வெறும் உடல் இயக்கம் மட்டுமே. வாழ்வு என்பது தெரிவுகள் சார்ந்ததுஇறைவன் மீது பற்றுக்கொண்டு, அவர் வழி நடப்பதே வாழ்வு. “மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது (லூக் 12:15) என்பது இயேசுவின் படிப்பினை. இங்கே இறைவாக்கினர் சீராக், வாழ்வையும் சாவையும் நம்முன் வைக்கும்போது, இறைவனின் வழி நாம் வாழ்கிறோமா? என்ற கேள்வியை நம்மில் எழுப்புகிறார். வாழ்விற்கும் சாவிற்கும் பொறுப்பாளிகள் மனிதர்களே என்பது இங்கே புலப்படுகிறது. வாழ்வையும் சாவையும் மனிதரின் விருப்பம் இல்லாமல் கடவுளே தீர்மானிக்கிறார் என்ற கூற்று தவறானது.

யூத மக்கள் இறைவனின் வழி வாழ்வது என்பதை இறைச் சட்டங்களின்படி, அதாவது மோசே தந்த சட்டங்களின்படி வாழ்வது என்ற அளவில் மட்டுமே நினைத்துப் பார்த்தனர். இஸ்ரயேல் மதத்தலைவர்கள் சட்டத்தை ஒருகணக்குப் புத்தகமாகமாற்றியிருந்தார்கள். ‘இதைச் செய்தால் பாவம், அதைச் செய்தால் புண்ணியம்என்ற சுயநலக் கணக்குகளே அவர்களிடம் மேலோங்கியிருந்தன. சட்டத்தின் நோக்கம்மனிதனைப் புனிதப்படுத்துவதுஎன்பதை மறந்து, சட்டத்தை வைத்துமனிதனை ஒடுக்குவதுஎன்பதில் அவர்கள் குறியாக இருந்தனர். சட்டத்தைப் பின்பற்றுவது என்பது ஏதோ ஒரு கடமையை நிறைவேற்றிவிட்டு, ‘நான் நேர்மையானவன்என்று தம்பட்டம் அடிப்பதல்ல; அது இதயத்திலிருந்து வரும் அர்ப்பணிப்பு. “சட்டம் என்பது அன்பின் வெளிப்பாடாக இருக்கவேண்டும். அன்பு இல்லாத சட்டம் வெறும் அடிமைத்தனம்என்றார் புனித இரண்டாம் ஜான்பால். இதைத்தான் இயேசு தம் மலைப்பொழிவில் மட்டுமல்ல, தம் வாழ்நாள் முழுவதும் தெளிவுபடுத்தினார்.

இன்றைய நற்செய்தியில் இயேசு, “உங்கள் முற்காலத்தவருக்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் (மத் 5:21,27,33) என்று சட்டத்தைத் தாண்டிய ஒரு மேலான வாழ்வுக்கு நம்மை அழைக்கிறார். “கொலை செய்யாதே, விபச்சாரம் செய்யாதே, பொய்யாணை இடாதேபோன்ற வெளிப்படையான சட்டங்களைக் கடந்து, இதயம் எனும் ஆழமான பகுதிக்குச் செல்கிறார். அன்பு, நீதி, இரக்கம் போன்ற மனிதநேயக் குணங்களைக் கொண்டிருந்தால்தான் சட்டம் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்ற புதிய வழியில் சிந்திக்க இயேசு அழைக்கிறார். சட்டங்களை வெறும் சடங்காக நிறைவேற்றாமல், அச்சட்டங்களின் பின்னணியில் உள்ள முதன்மையைக் கண்டுபிடித்து, அதை நிறைவேற்ற வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துகிறார்.

பழைய சட்டத்தின்படிகொலைஎன்பது ஒரு குற்றவியல் செயலாகப் பார்க்கப்பட்டது. ஆனால், இயேசுவின் பார்வையில், ஒருவனை மனதால் வெறுப்பதும், சினம் கொள்வதும், ‘அறிவிலியேஎனத் திட்டுவதும் கூட ஒருவகை கொலைதான். காயின் தன் சகோதரன் ஆபேலைக் கொன்ற வரலாற்றின் முதல் கொலைக்குக் காரணம் சினம், வெறுப்பு, பகையே. மனித உறவுகளை முறித்துப் பகைமையை உருவாக்கும் வன்சொற்களும்கூட குற்றங்களே. ஆகவே, உறவுகளில் விரிசல் விழும்போது இருண்ட இதயத்தோடு இறைவனை வழிபட முடியாது. முதலில், வாழ்க்கையில் நல்ல மனித உறவுகளை ஏற்படுத்திக்கொண்ட பிறகுதான் கடவுளுடன் நாம் சரியான உறவை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்கிறார் இயேசு.

இரண்டாவதாக, இயேசு, விபச்சாரம் செய்வது மட்டும் குற்றமன்று; இத்தகைய பாவச்செயலுக்குத் தூண்டும் இச்சைகளை அகற்றுவதிலும் தீவிரமான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்கிறார். விபச்சாரம் என்பது உடலில் நடக்கும் ஒரு செயல் மட்டுமல்ல; அது பார்வையில் தொடங்கும் ஒரு கறை. பார்வை தெளிவாக இருந்தால் ஒழிய, உள்ளம் தூய்மை அடையாது. பெண்களை மதிப்பதும் மனைவியைச் சுயநலத்திற்காக மட்டும் பயன்படுத்தாமல் நடத்துவதும் ஒவ்வோர் ஆண்மகனும் கற்றுக்கொள்ளவேண்டும்.

மூன்றாவதாக, ‘பொய்யாணை இடாதேஎன்ற சட்டத்தைத் திருத்தி, ‘ஆணையிடவே வேண்டாம்என்று இயேசு அறிவுறுத்துகிறார். ஏனெனில், கடவுளின் பெயரையோ, விண்ணையோ, மண்ணையோ சாட்சியாக இழுப்பது ஒருவிதமானஆன்மிக மிரட்டல்.’ அது நாம் கடவுளுக்கு ஏற்படுத்தும் இழுக்கு. அது மட்டுமன்று, மனித உறவுகளுக்கும் ஏற்படுத்தும் இழுக்குதான். ஏன் மக்கள் ஆணையிடுகின்றனர்? தங்கள் பேச்சின் மீது நம்பிக்கை இல்லாததால் தான். எவரொருவர் உண்மையாக வாழ்கிறாரோ அவருக்குச் சத்தியம் என்ற கூடுதல் பாதுகாப்புத் தேவைப்படாது. அவரது வார்த்தையே ஒரு புனிதமான சட்டமாக மாறும்.

எனவே, இயேசு இன்று நம்மிடம் எதிர்பார்ப்பது, மறைநூல் அறிஞர்களையும் பரிசேயர்களையும் விட மேலான ஒரு நெறியைத்தான். நம் கோபம், நம் பார்வையில் உள்ள அசுத்தம், நம் பேச்சில் உள்ள வன்முறை என அனைத்தையும் சீர்தூக்கிப் பார்க்கச் சொல்கிறார். “பலிபீடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வரும்போது, உன் சகோதரர் மீது உனக்கு மனத்தாங்கல் இருப்பது நினைவுக்கு வந்தால், அங்கேயே காணிக்கையை வைத்துவிட்டு முதலில் போய் அவரோடு ஒப்புரவாகுஎன்று இயேசு கட்டளையிடுகிறார். இயேசு தரும் இடுக்கண் வழி அவர் போதிக்கும் இறைஞானமே. இது அன்பிற்கும் மன்னிப்பிற்கும் ஒன்றிப்பிற்கும் ஆதரவானது. ஆகவே, மனிதர் தெரிவு செய்ய வேண்டியது உலக ஞானத்தை அல்ல; மாறாக, இறைஞானத்தையே. இந்த இறைஞானம் வேறொன்றுமில்லை, அது சிலுவையின் ஞானமே என்கிறார் பவுல். எனவே, நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் இறைவனின் ஞானத்தினால் வழிநடத்தப்படட்டும்.

நிறைவாக, இறைவனின் சட்டங்கள் நம்மை ஒடுக்குவதற்காக அல்ல; நம்மை உயர்த்துவதற்காகவே கொடுக்கப்பட்டுள்ளன என்பதை இன்று நாம் உணர்வோம். அன்பினால் தூண்டப்பட்டு நம் இதயங்களைத் தூய்மைப்படுத்துவோம். நம் உறவுகள், பார்வைகள் மற்றும் பேச்சுகள் அனைத்திலும் சட்டத்தின் ஆன்மாவான அன்பைப் பொதித்து வைப்போம். நம் வாழ்வின் ஒவ்வொரு தேர்வையும் அன்பின் அடிப்படையில் எடுப்போம். அவ்வாறு தெளிந்த இதயத்தோடு நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் நம்மை மண்ணுலக மனிதர்களிலிருந்து விண்ணுலகின் தெய்வீகப் பிள்ளைகளாக மாற்றும் பேரொளியாக அமையட்டும்.

ஆண்டின் பொதுக்காலம் 6-ஆம் ஞாயிறு (15-02-2026) சீஞா 15:15-20; 1கொரி 2:6-10; மத் 5:17-37
ஞாயிறு தோழன்
ஆண்டின் பொதுக்காலம் 6-ஆம் ஞாயிறு (15-02-2026) சீஞா 15:15-20; 1கொரி 2:6-10; மத் 5:17-37

திருப்பலி முன்னுரை 

இன்று மனிதநேயத்தோடு மனிதர்களை மனிதர்களாக மதித்து அன்பு, நீதி, இரக்கம் போன்ற மனிதநேயப் பண்புகளைப் பின்பற்றி, உறவோடும் நிறைவோடும் வாழ ஆண்டின் பொதுக்காலம் 6-ஆம் ஞாயிறு நமக்கு அழைப்புவிடுக்கிறது.

சட்டங்கள் மனிதத்தைச் சிதைக்காமல் காப்பதாக அமையவேண்டும். பக்குவமான பண்பட்ட வார்த்தைகளைப் பேசி உடன்வாழும் சகோதர- சகோதரிகளை அன்பு செய்து வாழவும், அனைவரோடும் நல்லுறவுடன் வாழ்ந்து இறையாட்சியைக் கட்டியெழுப்பவும், சொல்வீரர்களாக அல்லாமல் செயல் வீரர்களாக வாழவும், மற்றவர்களின் சுமைகளைத் தாங்கும் உண்மை உறவாகப் பயணிக்கவும், ‘எல்லாம் இறைவனின் அதிமிக மகிமைக்காகஎன உழைக்கவும், அனைத்தையும் நல்லது எனக் காணவும், எதன்மீதும் ஆணையிடாமல் வாழவும் இயேசு இன்று நம்மை அழைக்கிறார்.

எனவே, நமது சிந்தனையை, நடத்தையை, பார்வையை மறு ஆய்வு செய்து நமது வாழ்விலும் மனத்திலும் மாற்றங்களைக் கொண்டு வருவோம். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் வாழும் இறைவனைக் கண்டுகொள்வோம். இன்று அன்புக்காக, அமைதிக்காக, ஆறுதலுக்காக, அரவணைப்பிற்காக, நல்வார்த்தைக்காகக் காத்திருக்கும் சகோதர- சகோதரிகளுக்கு இறைவன் கொடுத்த அற்புதமான வாழ்க்கையைப் பகிர்ந்துகொடுப்போம். இயேசு விரும்பும் சமுதாயத்தை உருவாக்க வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்

முதல் வாசகம் முன்னுரை

நாம் என்னவாக இருக்கின்றோமோ, அது கடவுள் நமக்குக் கொடுத்த கொடை! நாம் என்னவாக மாறுகின்றோமோ, அது கடவுளுக்கு நாம் கொடுக்கும் கொடை! நல்லதைச் சிந்தித்து, நலமான வார்த்தைகளைப் பேசி, அனைவரையும் நேசித்து, உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஞானத்தோடு வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

நன்மையானவை எவை, உண்மையானவை எவை என்பதை ஞானம் நமக்கு உணர்த்துகின்றது. இந்த ஞானத்தை நமக்குத் தருபவர் தூய ஆவியானவர். வாழ்க்கையில் அனைத்து நேரங்களிலும் தூய ஆவியின் துணையை நாடித்தேடிடவும், மறைபொருளாய் இருக்கும் இறைஞானத்தை அறிந்துகொண்டு முதிர்ச்சி பெற்ற மக்களாக வாழவும் அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! திரு அவையை வழிநடத்துகின்ற திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் உம் மதிப்பீடுகளை வாழ்க்கையால் அறிவிக்கத் தேவையான ஞானத்தைத் தந்து காத்து வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. வாழும் ஆண்டவரே! நாங்கள் அனைவரும் எங்களது வார்த்தையால் மற்றவர்களுக்கு வாழ்வு கொடுக்கவும், பிணக்குகளை எல்லாம் களைந்து அனைவரோடும் இணக்கத்தோடு வாழவும் தேவையான அருள்வரங்களைத் தந்து எம்மைக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எம் வாழ்வின் வழிகாட்டியான இறைவா! எம் நாட்டு மக்கள் அனைவரும் மக்களை மனிதநேயத்தோடு வழிநடத்தக்கூடிய தலைவர்களைத் தேர்ந்தெடுக்கவும், பணத்திற்கு விலைபோகாமல் மனசாட்சியின் குரலுக்குச் செவிகொடுத்து வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. எம்மோடு பயணிக்கும் ஆண்டவரே! எம் பங்கில் உள்ள இளையோர் உம்மீது ஆழமான நம்பிக்கையுடன் வாழவும், உலகப் பொருள்களின்மீது கொண்டுள்ள பற்றுதல்களிலிருந்து விலகி இறைவார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து தூய்மையான வாழ்வு வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நாஞ்சில் நாட்டில் ‘நம் வாழ்வு’ சிறப்பு வாசகர் வட்டம் (இதழியல் இன்பவனத்தில் இரு பெரும் விழாக்கள்!)
தமிழக செய்திகள்
நாஞ்சில் நாட்டில் ‘நம் வாழ்வு’ சிறப்பு வாசகர் வட்டம் (இதழியல் இன்பவனத்தில் இரு பெரும் விழாக்கள்!)

தமிழ்நாடு கத்தோலிக்கத் திரு அவையின் சமூக, அர சியல் மற்றும் ஆன்மிகக் குரலாக ஐம்பது ஆண்டுகளைக் கடந்து பீடுநடை போடும்நம் வாழ்வுவார இதழின் பொன்விழா சிறப்பு வாசகர் வட்டக் கூட்டங்கள், கன்னியாகுமரி மாவட்டத்தின் கோட்டாறு மற்றும் குழித்துறை மறைமாவட்டங்களில் சனவரி 31 மற்றும் பிப்ரவரி 01 ஆகிய இரு நாள்களில் மிகச் சிறப்பாக நடைபெற்றன. நாஞ்சில் மண்ணின் இலக்கியச் செழுமைக்குச் சான்றாக அமைந்த இவ்விழாக்களில், நூற்றுக்கும் மேற்பட்ட வாசகர்கள், எழுத்தாளர்கள், அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

கோட்டாறு மறைமாவட்டம், ஆயர் இல்ல அருள்வாழ்வு மையத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆயர் மேதகு முனைவர் நசரேன் சூசை மற்றும் குழித்துறை மறைமாவட்டம், முளகு மூடு, ஜான்பால் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் ஆயர் மேதகு முனைவர் ஆல்பர்ட் G.A. அனஸ்தாஸ் ஆகியோர் தலைமை தாங்கினர். கோட் டாறில், நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் திருமதி. மேரி பிரின்ஸி லதா அவர்களும், குழித்துறையில் பாளை, தூய சவேரியார் கல்லூரி உதவிப் பேராசிரியை திருமதி . விமலா அவர்களும் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய ஆயர் நசரேன் சூசை அவர்கள், “வாசிப்புப் பழக்கம் ஒரு மனிதனின் சிந்தனையை விரிவுபடுத்தும்; கத்தோலிக்கத் திரு அவையின் செய்திகளையும் நற்பண்புகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கநம் வாழ்வுஇதழும் இதுபோன்ற வாசகர் வட்டங்களும் பெரும் பங்காற்றுகின்றனஎன்று பாராட்டினார். ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் அவர்கள் பேசுகையில், “என்னை ஓர் எழுத்தாளனாக அறிமுகம் செய்த பெருமை நம் வாழ்வுக்கு உண்டுஎனப் பாராட்டியதோடு, “இவ்விதழ் சிறுபான்மையினரின் நம்பிக்கைத் தீபமாகத் திகழ்கிறதுஎனவும் கூறினார்.

இலக்கியப் பணிக்கு வலுசேர்க்கும் விதமாக இரண்டு முக்கிய நூல்கள் இவ்விழாவில் அறிமுகம் செய்யப்பட்டன. அருள்முனைவர் இராஜசேகரன் மற்றும் அருள்பணி. ஞானசேகரன் ஆகியோர் தொகுத்துள்ளஇதோ - மரம், செம்மறி, ஒளிஎனும் தவக்காலச் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு நூலும், முனைவர் மரிய தெரசா அவர்கள் எழுதியமனம் கொண்ட ஆற்றல்எனும் மாணவர் முன்னேற்றத்திற்கான நூலும் வெளியிடப்பட்டன.

விழாவின் சிறப்பு நிகழ்வாக, கோட்டாறு மறைமாவட்டத்தைச் சார்ந்த திரு. பிலிப் மற்றும் திருமதி. இம்மாகுலேட் பிலிப், திரு. குறும்பனை பெர்லின், திரு. ஆண்டனி கிளமெண்ட் மற்றும் குழித்துறை மறைமாவட்டத்தைச் சார்ந்த திரு. S.M. செபாஸ்டின், திரு. ஓலக்கோடு ஜான், திரு. குமரி ஆதவன் ஆகிய ஆறு பேருக்கும்நம் வாழ்வுவிருதும் பாராட்டும் வழங்கப்பட்டன. அருள்முனைவர் செ. இராஜசேகரன் அவர்களின் நெறியாள்கையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பலரும்நம் வாழ்வுஇதழின் பயன்பாடு பற்றியும், தற்போது மிகச் சிறப்பாக வெளிவருகிறது பற்றியும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். இறுதியில், துணை ஆசிரியர் அருள்பணி. ஜெ. ஞானசேகரன் அவர்கள் வந்திருந்த அனைவருக்கும் நெகிழ்ச்சியுடன் நன்றி கூறினார். தமிழகத்தின் தென் எல்லையில் நடைபெற்ற இந்த விழாக்கள் நாஞ்சில் மண்ணின் இதழியல் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைந்தன.