slider slider slider
நம் வாழ்வு
நம் வாழ்வு இதழின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்
நம் வாழ்வு
நம் வாழ்வு - நல்லவர்களின் நாடித்துடிப்பு
நம் வாழ்வு
நல்லவர்களின் நாடித்துடிப்பு
அண்மைச் செய்திகள்
கல்விக்குள்ளே காவி... காவிக்குள்ளே கார்ப்பரேட்!
தலையங்கம்
கல்விக்குள்ளே காவி... காவிக்குள்ளே கார்ப்பரேட்!

ஒரு தலைமுறையின் வகுப்பறையில் நிலவும் கல்விக் கொள்கையே அடுத்த தலைமுறையின் அரசின் இயக்கக் கொள்கையாக மாறும்என்கிறார் ஆபிரகாம் லிங்கன். அவ்வாறே, இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த அரசியல் தலைவரும், இந்து-இசுலாமியர்  ஒற்றுமையை வலியுறுத்திய வருமான மௌலானா அபுல்கலாம் ஆசாத், “ஒரு தேசத்தின் சுதந்திரம் என்பது, கற்கும் சுதந்திரத்திலிருந்தே தொடங்குகிறதுஎன்கிறார். இக்கூற்று முற்றிலும் உண்மையே!

ஒரு நாட்டின் ஆன்மாவும், அதன் எதிர்காலப் பாதையும் அந்த நாடு தன் குடிமக்களுக்கு வழங்கும் கல்வியில்தான் வடிவமைக்கப்படுகின்றன. கல்வி என்பது வெறும் எழுத்தறிவோ, வேலைவாய்ப்பிற்கான தகுதியோ மட்டுமல்ல; மாறாக, அது அச்சமூகத்தின் விடுதலைக்கான ஆயுதம், பகுத்தறிவின் ஊற்றுக்கண். எனவேதான், “உலகை மாற்றுவதற்கு நீங்கள் பயன்படுத்தக்கூடிய மிகச் சக்திவாய்ந்த ஆயுதம் கல்வியேஎன்றார் நெல்சன் மண்டேலா.

இந்தியத் திருநாடு பன்முகத்தன்மையையும், பல்வேறு மொழி-கலாச்சாரக் கூறுகளையும் கொண்ட ஒரு கூட்டாட்சிக் கட்டமைப்பு. இத்தகைய சூழலில் கல்வி என்பது அனைவருக்குமான பொதுநலப் பொருளாக, சமூகநீதியின் சாரம் கொண்டதாக இருக்கவேண்டும் என்பதே நம் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய மாமேதைகளின் தொலைநோக்குப் பார்வை. ஆனால், தற்போதைய இந்திய உயர்கல்வித்துறை, வரலாறு காணாத ஒரு பேராபத்தின் விளிம்பில் வந்து நிற்கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த உயர்கல்விக் கட்டமைப்பையும் சிதைத்து, மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, ஒற்றை அதிகாரத்துவக் குடையின்கீழ் கொண்டுவரும் நோக்குடன், நாடாளுமன்றத்தின் இந்த 2026 மழைக்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படவிருக்கிறது, ‘விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்தான் (VBSA - Viksit Bharat Shiksha Adhisthan Bill, 2025) எனும் சட்ட முன்வரைவு.

ஏற்கெனவே மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு, கூட்டு நாடாளுமன்றக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட இந்தச் சட்ட முன்வரைவு, எதிர்வரும்  கூட்டத்தொடரில் சட்டமாக்கப்பட்டால், அது இந்திய உயர்கல்வியின் சவப்பெட்டியில் அடிக்கப்படும் கடைசி ஆணியாக அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

தேசியக் கல்விக் கொள்கையின் (NEP 2020) சட்டப்பூர்வ வடிவமாகத் திகழும் இந்தச் சட்ட முன்வரைவு, இந்திய உயர்கல்வியின் பன்முகத்தன்மையை முற்றிலும் ஒழித்து, ஒற்றைப் புள்ளியில் மையப்படுத்தப்பட்ட நிர்வாக முறையை உருவாக்க முயல்கிறது. இது சட்டமாக நடைமுறைக்கு வந்தால், பல ஆண்டுகளாக இந்தியக் கல்வியின் தூண்களாக விளங்கிய பல்கலைக்கழக மானியக் குழு (UGC - University Grants Commission), அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE - All India Council for Technical Education), தேசிய ஆசிரியர் கல்விக் குழு (NCTE - National Council for Teacher Education) போன்ற அமைப்புகள் கலைக்கப்பட்டு, அவற்றின் சட்டங்கள் நீக்கப்படும். இவற்றிற்குப் பதிலாகவிக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்தான்என்ற ஒற்றை உச்ச ஒழுங்குமுறை ஆணையம் நிறுவப்படும்.

சட்டம் மற்றும் மருத்துவக் கல்விக்கு மட்டும் தற்காலிகமாக இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும், அவற்றிக்கும் இதேபோன்ற தனித்தனி மையப்படுத்தப்பட்ட சட்டங்கள் உருவாக்கப்பட உள்ளன. மேலும், இந்த ஆணையத்தின் கீழ், பொதுவான நிர்வாகக் கட்டுப்பாடுகளை மேற்கொள்ளும் ஒழுங்குமுறை மன்றம் (Regulatory Council), கல்வி நிறுவனங்களின் தரமதிப்பீடு மற்றும் அங்கீகாரத்தைக் கண்காணிக்கும் அங்கீகார மன்றம் (Accreditation Council)), கல்வித் தரங்களைத் தீர்மானிக்கும் தர நிலைகள் மன்றம் (Standards Council) என மூன்று முக்கிய மன்றங்கள் செயல்படும் எனவும் வரையறுக்கப்பட்டுள்ளது.

இதுவரை இருந்த பல்கலைக்கழக மானியக் குழு (UGC) கல்வி நிறுவனங்களைக் கண்காணிப்பதோடு மட்டுமல்லாமல், அவற்றிக்கான நிதி மற்றும் மானியங்களை வழங்கும் தன்னாட்சி அதிகாரத்தையும் பெற்றிருந்தது. கல்வி நிறுவனங்களின் நிதித் தேவைகளை அறிந்து, அரசியல் சார்பின்றித் தன்னாட்சியுடன் நிதி ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் அதற்குச் சட்டப்பூர்வமாக வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தப் புதிய சட்ட முன்வரைவின்படி, அமையவிருக்கும் புதிய ஆணையத்திற்கோ அல்லது அதன்கீழ் இயங்கும் மன்றங்களுக்கோ எவ்வித நிதி அதிகாரமும் கிடையாது. கல்வி நிறுவனங்களுக்கான மானியங்களை வழங்கும் முழுப் பொறுப்பும் நேரடியாக ஒன்றியக் கல்வி அமைச்சகத்தின் வசம் ஒப்படைக்கப்பட உள்ளது.

ஆகவே, கல்விக்கான நிதி ஒதுக்கீடு என்பது இனி தகுதிகளின் அடிப்படையில் நடக்காது; மாறாக, அது அதிகாரத்துவத்தின் தன்னிச்சையான முடிவாகவும், ஆளும் கட்சியின் அரசியல் கணக்கீடுகளுக்கு உட்பட்டதாகவும் மாறும்.

ஏற்கெனவே தேசியக் கல்விக் கொள்கையையும், இந்திப் பயிற்றுமொழியையும் முழுமையாக ஏற்காத மாநிலங்களுக்குப் பள்ளிக் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை ஒன்றிய பா... அரசு வழங்க மறுக்கிறது. இனிவரும் காலங்களில், உயர்கல்வியிலும் மாநிலப் பல்கலைக்கழகங்கள் ஒன்றிய அரசின் கொள்கைகளுக்குப் பணிந்து போனால் மட்டுமே நிதி கிடைக்கும் என்ற நிலை உருவாகும். இது மறைமுகமாக இந்தித் திணிப்பிற்கும், ஒன்றிய அரசின் கொள்கைத் திணிப்பிற்கும் வழிவகுக்கும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, கல்வி என்பது மத்திய-மாநில அரசுகளின் கூட்டுப் பொறுப்பானஒத்திசைவுப் பட்டியலில் (Concurrent List) உள்ளது. ஆனால், இந்தச் சட்ட முன்வரைவு மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது. இவ்வாணையத்தின் அமைப்பு முறையைக் கண்டாலே இதன் பின்னணியில் உள்ள அதிகாரக் குவியல் நமக்குத் தெளிவாகப் புரியும். இந்த ஆணையம் ஒரு தலைவரையும், 12 உறுப்பினர்களையும் கொண்டிருக்கும். இதில் வேடிக்கை என்னவென்றால், நாட்டின் உயர்கல்வியைத் தீர்மானிக்கும் இந்த அமைப்பில் ஒட்டுமொத்த இந்தியாவிலிருந்தும் இரண்டே இரண்டு ஆசிரியப் பிரதிநிதிகள் மட்டுமே இடம்பெறுவர். அவர்களும்கூட மாநில உயர்கல்வி நிறுவனங்களிலிருந்து ஒன்றிய அரசால் நேரடியாக நியமிக்கப்படுபவர்களாகவே இருப்பர்.

ஒன்றிய அரசின் உயர்கல்விச் செயலாளர் மற்றும் ஐந்துநிபுணர்கள்என 12-இல் 10 உறுப்பினர்கள் ஒன்றிய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருப்பார்கள். மூன்று மன்றங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டாலும், அவர்கள் ஒன்றிய அரசின் பரிந்துரையின் பேரிலேயே தேர்ந்தெடுக்கப்படுவர். மாநில அரசுகளின் பிரதிநிதித்துவம் என்பது வெறும் ஓராண்டு காலத்திற்கு, அதுவும் சுழற்சி முறையில் மட்டுமே வழங்கப்படும். இது மாநிலப் பல்கலைக்கழகங்களின் தன்னாட்சியைப் பறித்து, அவற்றைப் பிரதமர் அலுவலகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லும் சதியாகும்.

இந்தியாவின் உயர்கல்வி என்பது பல நூற்றாண்டு காலக் கல்வி மறுப்புக்கு எதிராக, சமூகநீதிப் போராட்டங்களின் வாயிலாகப் பெறப்பட்ட இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் மூலம் அடித்தட்டு மக்களுக்குக் கிட்டிய உன்னதக் கொடையாகும். ஆனால், இந்த உச்ச ஆணையத்தின் கட்டமைப்பில் சமூக நீதிக்கான எந்தவோர் உத்தரவாதமும் இல்லை.

ஆணையத்தின் நியமனங்களில் பட்டியல் சாதிகள் (SC), பட்டியல் பழங்குடிகள் (ST), பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் (OBC), பெண்கள், சிறுபான்மையினர், மாற்றுப்பாலினத்தவர்கள் அல்லது மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு எந்தவொரு சட்டப்பூர்வப் பிரதிநிதித்துவமும் வழங்கப்படவில்லை.

பன்முகத்தன்மை கொண்ட ஒரு தேசத்தின் கல்வி அமைப்பில், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் குரல் ஒலிக்காவிடில், அது மீண்டும் கல்வியை ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களுக்கானதாக மாற்றிவிடும். ‘ஒரே அளவு அனைவருக்கும்என்ற இவர்களின் அணுகுமுறை, கிராமப்புற மற்றும் பின்தங்கிய சமூக மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை முற்றிலுமாக முடக்கிவிடும்.

இன்று இந்திய உயர்கல்வித்துறை சந்தித்து வரும் வினாத்தாள் கசிவுகள், முறைகேடுகள், தேர்வு குளறுபடிகள் அனைத்தும் நோயின் வெளிப்புற அறிகுறிகள் மட்டுமே. ‘தேசியக் கல்விக் கொள்கை 2020’ என்பதே அந்த நோய். ஏற்கெனவே நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் சி.யு..டி. (CUET) எனப்படும் பொதுப் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு முறையால் சீரழிந்துள்ளதுடன், தாமதமான சேர்க்கைகள், காலியாகக் கிடக்கும் பல்லாயிரக்கணக்கான இடங்கள், மதிப்பில்லாத நான்கு ஆண்டு இளங்கலைப் படிப்புகள், தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான ஆசிரியர் நியமனங்கள் என உயர்கல்வித்துறை திணறி வருகிறது. இத்தகைய சூழலில், கல்வியை முழுமையாக ஆர்.எஸ்.எஸ். கொள்கையின்படி மறுவார்ப்பு செய்வதற்கும், கார்ப்பரேட் மயமாக்குவதற்கும் ஏதுவாகவே திருமதி. நிர்மலா சீதாராமன் கல்வி அமைச்சராக்கப்பட்டுள்ளாரோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஒரு புத்தகத்தின் உள்ளடக்கம் கல்வியின் ஆற்றலைக் கொண்டுள்ளது; அந்த ஆற்றலைக் கொண்டுதான் நாம் நம்முடைய எதிர்காலத்தை வடிவமைக்க முடியும்என்கிறார் மலாலா யூசுப்சாய். ஆகவே, கல்வி என்பது ஒரு சந்தைப் பண்டமல்ல; மாறாக, அது பொதுச்சமூகத்திற்கான ஆற்றல். ‘விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்தான் (VBSA) மசோதா என்பது இந்திய உயர்கல்வியைக் கார்ப்பரேட் மயமாக்கல் மற்றும் காவிமயமாக்கலை நோக்கிய பேராபத்திற்கு இட்டுச்செல்லும் ஒரு கருவியாகும்.

தற்போது இந்த மசோதா கூட்டு நாடாளுமன்றக் குழுவின் பரிசீலனையில் இருப்பதால் ஆசிரியர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் குறிப்பாக, மாநில அரசுகள் உடனடியாகத் தலையிடவேண்டும். கல்வியின் தன்னாட்சியைக் காக்கவும், கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநிறுத்தவும் இந்தச் சட்ட வரைவுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் வலுவான எதிர்ப்புக் குரலைப் பதிவுசெய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இல்லையேல், இந்தியாவின் உயர்கல்வி எதிர்காலச் சந்ததியினரின் சிந்தனைத் திறனை முடக்கும் பேராபத்தாக அமையும் என்பது திண்ணம்!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்

காசா பேரழிவு; புனித பூமியைத் தனித்து விடாதீர்கள்!
உலக செய்திகள்
காசா பேரழிவு; புனித பூமியைத் தனித்து விடாதீர்கள்!

ஜெருசலேமின் இலத்தீன் மறைமுதுவர் கர்தினால் பியர்பாட்டிஸ்டா பிட்சாபாலா, இத்தாலியின் புகழ்பெற்றலைம்ஸ்இதழின் அமைதிக்கான விருதைப் பெற்றுக்கொண்ட பின் காசாவின் கொடூரமான உண்மைகளை விவரித்தார். அண்மையில் காசாவிற்கு சென்ற கர்தினால், “காசா முற்றிலும் பேரழிவைச் சந்தித்துள்ளது; மக்கள் சாக்கடைகளுக்கும் கழிவுகளுக்கும் நடுவே கூடாரங்களில் வாழ்கின்றனர். ஊடகங்கள் காட்டாத ஆகப்பெரும் கொடூரம் அங்கு வீசும் துர்நாற்றமும், பசியால் குழந்தைகளைக் கடித்துக் குதறும் எலிகளின் தொல்லையும்தான்என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

மேலும், “போர் நிறுத்தத்திற்குப் பின்னும் நிலைமை சீரடையவில்லைஎனக் குறிப்பிட்ட அவர், பள்ளி மேசைகள், பேனாக்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் ஜன்னல் கண்ணாடிகள் கூடஇராணுவப் பயன்பாட்டுப் பொருள்கள்எனக் கூறி இஸ்ரேலால் தடை செய்யப்படுவதாகச் சாடினார். மேற்குக்கரையில் பாலஸ்தீனியர்களுக்கு எவ்வித சட்டப் பாதுகாப்பும் இல்லை. இஸ்ரேலிய குடியேறிகளின் வன்முறைகள் அநாகரிகமாக அதிகரித்துள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முன் அக்டோபர் 7 அன்று நடந்தேறிய தாக்குதல் யூதர்களின் மனத்தில் ஆழமாகப் பதிந்துள்ளதால் தற்போதைய சூழல் சிக்கலாக இருக்கிறது. ஆனாலும், அமைதிக்கான உரையாடல்களும் பரஸ்பர புரிதலும் அவசியம். புனித பூமியைத் தனித்துவிடாமல், விளிம்புநிலை மக்களின் வாழ்வுரிமையைக் காக்க உலக நாடுகளும் ஊடகங்களும் தொடர்ந்து குரல் கொடுக்கவேண்டும்என்று கர்தினால் பிட்சாபாலா உலக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெற்றிக்காக அல்ல; வளர்ச்சிக்காக! இறை வளர்ப்பின் பாதையில் ஒரு சிறு பயணம்
ஆன்மிகம்
வெற்றிக்காக அல்ல; வளர்ச்சிக்காக! இறை வளர்ப்பின் பாதையில் ஒரு சிறு பயணம்

வெற்றிஎன்ற ஒரு வார்த்தையைக் கேட்டாலே போதும்; நம் கண்முன் பளிங்கு தட்டுகளும், கைத்தட்டல்களும், முதலிடப் பட்டியல்களும் வந்து நிற்கின்றன. பள்ளியில் முதல் மதிப்பெண், அலுவலகத்தில் பதவி உயர்வு, வீட்டில்எல்லாம் சரியாக நடந்ததுஎன்ற திருப்தி... இவை எல்லாமே நம் வாழ்வின் இலக்காகிவிட்டன. ஆனால், ஒரு மென்மையான கேள்வி நம் இதயத்தின் கதவைத் தட்டுகிறது. இறைவன் நம்மிடம் கேட்பது: ‘நீ வென்றாயா?’ அல்லதுநீ வளர்ந்தாயா?’

திருவிவிலியம் முழுவதும் ஓர் உண்மை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி நிற்கிறது. கடவுள் முடிவை அல்ல; பயணத்தைக் கொண்டாடுகிறார். அவர் கிரீடத்தைத் தேடுவதில்லை, வேரைத் தேடுகிறார்.

திருத்தூதர் பவுல் கொரிந்து சபையாருக்கு எழுதிய கடிதத்தில் ஓர் எளிய, ஆனால் ஆழமான ஒப்புமையைப் பயன்படுத்துகிறார்: “நான் நட்டேன்; அப்பொல்லோ நீர் பாய்ச்சினார்; கடவுளே விளையச் செய்தார். நடுகிறவருக்கும் பெருமை இல்லை; நீர் பாய்ச்சுபவருக்கும் பெருமை இல்லை; விளையச் செய்யும் கடவுளுக்கே பெருமை (1கொரி 3:6-7).

இதைவிட நம் தலைப்பிற்குப் பொருத்தமான திருவிவிலிய வரி வேறு ஏதேனும் இருக்குமா? வெற்றியை அளவிடுவது நாம் அல்ல; விதையை நாம் இடலாம், நீரை நாம் ஊற்றலாம்... ஆனால், வளர்ச்சி கடவுளின் கையில்தான் இருக்கிறது.

உங்களுள் நற்செயலைத் தொடங்கியவர், இயேசு கிறிஸ்துவின் நாள்வரை அதை நிறைவுறச் செய்வார் (பிலி 1:6).

கவனியுங்கள்... ‘தொடங்கினவர்... முடிக்க வைப்பார்என்கிறது; ‘வென்றார்என்று சொல்லவில்லை. வளர்ச்சி என்பது ஒரு நிகழ்வு அல்ல; அது ஒரு தொடர்ச்சியான செயல்முறை.

மூங்கிலின் பாடம்

சீனாவில் ஒரு வகை மூங்கில் உண்டு. அதை நட்ட பின்பு நான்கு ஆண்டுகளாக மேலே எதுவும் தெரியாது. வெறும் மண் மேடு மட்டுமே. ஆனால், அந்த நான்கு வருடங்களில் அதன் வேர்கள் தரைக்கடியில் பல மீட்டர்கள் தூரம் பரவிக் கொண்டிருக்கும். ஐந்தாம் ஆண்டில் அந்த மூங்கில் ஆறே வாரங்களில் இருபது அடி உயரம் வளர்ந்து விடுகிறது. அது அதிசயமல்ல; அது தயார்நிலையின் வெளிப்பாடு.

இயேசுவும் இதையே கூறினார். கடுகு விதை ஓர் இரவில் மரமாவதில்லை. அது வளர்கிறது. மெதுவாகக் கண்ணுக்குப் புலப்படாமல்! ஆனால், உறுதியாக நீங்கள்இன்று ஒன்றும் நடக்கவில்லைஎன்று நினைக்கும் காலகட்டத்தில் இருக்கலாம். வேலை தேடிக் கிடைக்காமல், திருமணம் தாமதமாகி, கனவுகள் தொலைதூரத்தில் தெரிய, உங்களைச் சுற்றியுள்ளோர் முன்னேறிக் கொண்டிருக்க நீங்கள் நிற்காமல், அமைதியாக ஓடிக் கொண்டிருக்கலாம். கண்ணுக்குத் தெரியாத வளர்ச்சியும் வளர்ச்சியே.

யாக்கோபு தனது கடிதத்தில் ஆச்சரியமான ஓர் அறிவுரையைத் தருகிறார்: “பல்வேறு சோதனைகளில் விழும்போது, அதை மிகுந்த மகிழ்ச்சியாக எண்ணுங்கள்; ஏனெனில் சோதனை பொறுமையை உருவாக்குகிறது, பொறுமை முதிர்ச்சியை உருவாக்குகிறது (யாக் 1:2-4).

தோல்வியைக் கொண்டாடச் சொல்கிறாரா இவர்? இல்லை. தோல்வி வீணாகாது என்று கூறுகிறார். ஒவ்வொரு விழுதலும் ஒரு வாய்ப்பு; மீண்டும் எழ, இன்னும் ஆழமாக வேர் விட.

மின்விளக்கைக் கண்டுபிடிக்கும் முன் ஆயிரக்கணக்கான முறை தோற்ற தாமஸ் ஆல்வா எடிசன் ஒருமுறை கூறினார்: “நான் தோல்வியடையவில்லை; வேலை செய்யாத பத்தாயிரம் வழிகளைக் கண்டுபிடித்தேன்.” அவருக்கு வெற்றி என்பது இறுதி விளக்கு மட்டுமல்ல; ஒவ்வொரு முயற்சியும் ஒரு படிக்கல்.

ஒரு விவசாயியைப் பாருங்கள். வயலில் விதை தூவும்போது அன்றே அறுவடையை எதிர்பார்ப்பதில்லை. மண்ணை ஆழமாகக் கொத்தி, உரம் இட்டு, மழைக்காகக் காத்திருந்து, பல மாதங்கள் கடந்த பின்னரே கதிர்களைக் கொண்டாடுகிறார். அவர் வேகத்தைக் குறித்துப் புகார் செய்வதில்லை; பருவத்தை மதிக்கிறார்.

ஒரு தாயைப் பாருங்கள். தன் குழந்தை நடக்கக் கற்கும்போது எத்தனை முறை விழுகிறது? ஒவ்வொரு விழுதலையும் அவள் தோல்வியாகப் பார்ப்பதில்லை; வளர்ச்சியின் அடையாளமாகவே பார்க்கிறாள். குழந்தை விழுந்ததைப் பார்த்து அல்ல; மீண்டும் எழுந்து நடப்பதைப் பார்த்தே அவள் கைத்தட்டுகிறாள்.

ஒரு மாணவனைப் பாருங்கள். தேர்வில் தோற்றுவிட்டான். உலகம் அவனைதோல்வியாளன்என்று முத்திரை குத்தலாம். ஆனால், அந்தத் தோல்வி அவனுக்குக் கற்றுத் தந்த பொறுமையும் கடின உழைப்பும் தாழ்மையும் அவன் வாழ்நாள் முழுவதும் சுமக்கும் மறையாத செல்வங்கள். அடுத்தத் தேர்வில் வென்றாலும் தோற்றாலும், அவன் ஒரு பக்குவமான மனிதனாக ஏற்கெனவே வளர்ந்திருப்பான்.

அன்னை தெரேசா அடிக்கடி நினைவுபடுத்துவார்: “கடவுள் நம்மை வென்றவர்களாக இருக்கச் சொல்லவில்லை; உண்மையானவர்களாக, உண்மையான நம்பிக்கையுடன் இருக்கச் சொன்னார். வெற்றியைக் கடவுள் கணக்கிடுவதில்லை; நம்பிக்கையையே அவர் கணக்கிடுகிறார்.”

இடுக்கண் வருங்கால் நகுக அதனை

அடுத்தூர்வது அஃதொப்பது இல் (குறள் 621).

துன்பம் வரும்போது சிரியுங்கள். உங்கள் இதயத்திற்குள் உண்மையான துன்பம் இல்லை என்று அதற்குச் சொல்லுங்கள் என்பது இதன் பொருள். இது வெறும் சமாதான வார்த்தைகள் அல்ல; இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு தமிழ் ஞானி கண்டடைந்த ஆழ்ந்த உண்மை.

திருத்தூதர்  பவுல் தன் வாழ்நாளின் முதிர்ச்சியில் எழுதுகிறார்: “கடந்ததை மறந்துவிட்டு, முன்னிருப்பதைக் கண்முன் கொண்டு, பரிசுபெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன் (பிலி 3:13-14).

கவனியுங்கள்... அவர்வென்றேன்என்று சொல்லவில்லை; ‘ஓடுகிறேன்என்கிறார். அவருக்குக் கிறித்தவ வாழ்க்கை ஓர் ஓட்டப் பந்தயம்; அதுவும் முடிவை அடைவதற்காக மட்டுமல்ல, உண்மையாக ஓடுவதற்காகவே.

இன்று உங்கள் வாழ்வைத் திரும்பிப் பாருங்கள். கடந்த ஆண்டில் நீங்கள்வென்றதுஎத்தனை? ‘வளர்ந்ததுஎத்தனை? இரண்டும் ஒன்றல்ல என்பதை இன்று உணருங்கள்.

ஒரு தேர்வில் தோற்றதையோ, ஒரு வேலையில் தவறியதையோ, ஒரு திட்டம் முடியாமல் போனதையோ எண்ணி இனி வேதனைப்படாதீர்கள். அதற்குப் பதிலாக இந்தக் கேள்வியைக் கேளுங்கள்: ‘இதன் மூலம் நான் என்ன கற்றுக்கொண்டேன்? நான் எவ்வாறு வளர்ந்தேன்?’