slider slider slider
நம் வாழ்வு
நம் வாழ்வு இதழின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்
நம் வாழ்வு
நம் வாழ்வு - நல்லவர்களின் நாடித்துடிப்பு
நம் வாழ்வு
நல்லவர்களின் நாடித்துடிப்பு
அண்மைச் செய்திகள்
ஆகஸ்டு 10 கறுப்பு நாள்
சிறப்புக்கட்டுரை
ஆகஸ்டு 10 கறுப்பு நாள்

தமிழ்நாடு கத்தோலிக்கத் திரு அவையில்  ஆகஸ்டு 10 அன்று தலித் கிறித்தவர்களின் நீண்டகால உரிமை கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் கறுப்பு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

இது ஒருநாள் அடையாள நிகழ்வாக மட்டும் முடிவடைந்துவிடக் கூடாது. இந்திய அரசமைப்பு உறுதி செய்துள்ள சமத்துவம், சமூகநீதி, மனித மாண்பு மற்றும் சமமான வாய்ப்புக்கான உரிமையை நடைமுறைப்படுத்தும் நீண்டகால மக்கள் இயக்கமாக இது வளரவேண்டும்.

கடந்த பல ஆண்டுகளாகத் தலித் கிறித்தவர்கள் எதிர்கொள்ளும் இடஒதுக்கீட்டு மறுப்பு, கல்வி வாய்ப்புகளில் உள்ள ஏற்றத்தாழ்வு, வேலை வாய்ப்புப் பின்தங்கல் மற்றும் சமூக அநீதிகள் குறித்து எண்ணற்ற கருத்தரங்குகள், தீர்மானங்கள், உண்ணாவிரதங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால், அவை பெரும்பாலும் ஒருநாள் நிகழ்வுகளாகவே முடிந்துவிட்டன. இனி அந்த அணுகுமுறை மாறவேண்டும். இந்தப் போராட்டம்ஒருநாள் கண்டனம்என்பதிலிருந்துதொடர்ச்சியான கொள்கை மாற்ற இயக்கம்என்ற புதிய கட்டத்திற்கு நகரவேண்டும்.

கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 2014-ஆம் ஆண்டு மாநிலத்தில் மொத்த MBBS இடங்கள் சுமார் 5,850 மட்டுமே இருந்த நிலையில், புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டதன் மூலம் இன்று சுமார் 14,000 MBBS இடங்கள் உள்ளன. ஒரே கட்டமாக 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டிருப்பது இந்திய அளவிலும் குறிப்பிடத்தக்க சாதனையாகும். இதன் காரணமாக மருத்துவக் கல்வி வாய்ப்புகள் பல மடங்கு அதிகரித்துள்ளன.

தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69% இடஒதுக்கீட்டுக் கொள்கை காரணமாக ஆதிதிராவிடர் (SC/SCA) மாணவர்களுக்கு ஆண்டுதோறும் குறிப்பிடத்தக்க அளவில் மருத்துவக் கல்வி வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. அரசு மருத்துவக் கல்லூரிகளின் மாநில ஒதுக்கீட்டு இடங்களில் மட்டுமே ஆண்டுதோறும் 850-க்கும் மேற்பட்ட MBBS இடங்கள் SC/SCA மாணவர்களுக்குக் கிடைக்கின்றன. இதனுடன், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்களும் அவர்களுக்குக் கூடுதல் வாய்ப்புகளை வழங்குகின்றன. மேலும், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்திய 7.5% உள் ஒதுக்கீடு கல்வி வரலாற்றில் மிக முக்கியமான சமூகநீதித் திட்டமாக மாறியுள்ளது. 2025-26 கல்வியாண்டில் இந்த உள் ஒதுக்கீட்டின் மூலம் சுமார் 650 அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்வியில் சேரும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். இந்தத் திட்டம் முதல் தலைமுறை பட்டதாரிகள் உருவாகவும், கிராமப்புற மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களின் வாழ்க்கைத் தரம் உயரவும் முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

ஆனால், இந்த வளர்ச்சியின் முழுப் பலனும் மதம் மாறிய தலித் கிறித்தவர்களுக்குக் கிடைப்பதில்லை. சமூக, பொருளாதார மற்றும் கல்வி ரீதியாக ஆதிதிராவிட இந்து மாணவர்களுக்கு ஒப்பான நிலையிலேயே வாழ்ந்தாலும், கிறித்தவ மதத்திற்கு மாறிய தலித் சமூகத்தினர் தற்போதைய 1950 குடியரசுத்தலைவர் ஆணையின் காரணமாக ஆதி திராவிடர் (SC)   இடஒதுக்கீட்டைப் பெற முடியாத நிலை தொடர்கிறது. இதன் விளைவாக அவர்கள் மத்திய அரசின் SC இடஒதுக்கீடு, பல்வேறு கல்விச் சலுகைகள் மற்றும் வேலைவாய்ப்புகளில் இருந்து விலக்கப்படுகின்றனர். இதுவே சமூகநீதிக்கான மிகப்பெரிய முரண்பாடாகும்.

அது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் பெரும்பாலான தலித் கிறித்தவ மாணவர்கள் அரசு உதவி பெறும் கிறித்தவப் பள்ளிகளில் கல்வி பயில்கின்றனர். ஆனால், தற்போது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் 7.5% உள் ஒதுக்கீட்டின் பயன், அதே பொருளாதார மற்றும் சமூகப் பின்னணியைக் கொண்ட அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்குக் கிடைப்பதில்லை. இதன் விளைவாக, ஒரே கிராமத்தில் வாழும், ஒரே குடும்ப வருமானம் கொண்ட, ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்களில் ஒருவர் அரசுப் பள்ளியில் படித்ததால் மருத்துவக் கல்வி வாய்ப்பைப் பெறுகிறார்; மற்றொருவர் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்ததால் அந்த வாய்ப்பை இழக்கிறார். இந்த வேறுபாடு சமூக நீதியின் அடிப்படை நோக்கத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது.

ஒரு குடும்பத்தில் முதல் தலைமுறை மருத்துவர், பொறியாளர், ஆசிரியர் அல்லது அரசு அதிகாரி உருவாகும்போது, அந்த மாற்றம் அந்த ஒரே நபரிடம் முடிவதில்லை. அந்தக் குடும்பத்தின் பொருளாதார நிலை, அடுத்த தலைமுறையின் கல்வி, பெண்களின் முன்னேற்றம், சுகாதார விழிப்புணர்வு மற்றும் சமூக மரியாதை ஆகிய அனைத்திலும் அதன் தாக்கம் பிரதிபலிக்கிறது. எனவே, தலித் கிறித்தவர்களின் இடஒதுக்கீட்டு உரிமை என்பது வேலை வாய்ப்பிற்கான கோரிக்கை மட்டுமல்ல; அது பல தலைமுறைகளை முன்னேற்றும் சமூக முதலீடு.

இந்திய அரசமைப்பின் 14-வது பிரிவு, சட்டத்தின் முன் சமத்துவத்தை உறுதி செய்கிறது. 15-வது பிரிவு, சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்கான சிறப்பு நடவடிக்கைகளை அனுமதிக்கிறது. 16-வது பிரிவு, அரசு வேலை வாய்ப்புகளில் சமமான வாய்ப்பை உறுதி செய்கிறது. பிரிவு 21A, கல்வி உரிமையை வலியுறுத்துகிறது. பிரிவு 46, வழிகாட்டும் கொள்கை சமூக மற்றும் கல்வி ரீதியாகப் பின்தங்கிய மக்களின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிப்பது அரசின் கடமை என்று தெளிவாகக் கூறுகிறது. எனவே, தலித் கிறித்தவர்களின் உரிமை கோரிக்கை அரசமைப்பின் அடிப்படை நோக்கங்களோடு ஒத்துப்போகும் ஒரு சமூகநீதி கோரிக்கையாகும்.

இன்றைய காலகட்டத்தில் எந்த உரிமைப் போராட்டமும் உணர்ச்சியின் அடிப்படையில் மட்டும் வெற்றிபெற முடியாது. மக்கள்தொகை, கல்வி நிலை, பள்ளி இடைநிற்றல், உயர்கல்வி சேர்க்கை, மருத்துவக் கல்வி வாய்ப்புகள், வேலைவாய்ப்பு, வறுமை, நிலமின்மை மற்றும் அரசின் நலத்திட்டங்களைப் பெறும் நிலை போன்ற அனைத்துத் தரவுகளையும் அறிவியல் முறையில் சேகரித்து வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். இத்தகைய தரவுகள் நீதிமன்றங்களிலும், நாடாளுமன்ற விவாதங்களிலும் மற்றும் அரசின் கொள்கை முடிவுகளிலும் வலுவான ஆதாரங்களாக அமையும்.

எனவே, ஆகஸ்ட் 10 கறுப்பு நாள் வெறும் கறுப்பு ஆடை அணியும் நிகழ்வாக இருக்கக்கூடாது. தமிழ்நாட்டின் 39 மக்களவை உறுப்பினர்கள் மற்றும் 18 மாநிலங்களவை உறுப்பினர்களைச் சந்தித்து, மதம் மாறிய தலித் கிறித்தவர்களின் இடஒதுக்கீட்டு உரிமை குறித்து நாடாளுமன்றத்தில் சிறப்புக் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தவேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர், உயர்கல்வித் துறை அமைச்சர், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மற்றும் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5ரூ உள் ஒதுக்கீட்டை அதே சமூக மற்றும் பொருளாதார சூழ்நிலையில் கல்வி பயிலும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்துவதற்கான சாத்தியத்தை தமிழ்நாடு அரசு பரிசீலிக்கவேண்டும் என்று வலியுறுத்தவேண்டும். உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் விரைவாக விசாரணைக்கு வருவதற்கான சட்ட நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க வேண்டும். நீதியரசர் கே. ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான ஆணையத்திற்குத் தலித் கிறித்தவர்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலையை வெளிப்படுத்தும் ஆதாரப்பூர்வமான தரவுகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.

இதனுடன், ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் தலித் கிறித்தவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு, சமூக முன்னேற்றம் மற்றும் அரசின் நலத்திட்டங்களைப் பெறும் நிலை குறித்து ஆண்டுதோறும் ஆய்வு அறிக்கை வெளியிட வேண்டும். சட்ட நிபுணர்கள், கல்வியாளர்கள், சமூக ஆராய்ச்சியாளர்கள், பொருளாதார வல்லுநர்கள், மருத்துவர்கள் மற்றும் இளைஞர் பிரதிநிதிகள் இணைந்த நிரந்தர செயற்குழுவை உருவாக்கி, மாநில மற்றும் தேசிய அரசுகளிடம் தொடர்ச்சியான கொள்கைப் பரிந்துரைகளை முன்வைக்கவேண்டும்.

இந்தப் போராட்டம் தலித் கிறித்தவர்களின் போராட்டமாக மட்டும் இருக்கக்கூடாது. கிறிஸ்துவின் நற்செய்தி மனித சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் மனித மாண்பை வலியுறுத்துகிறது. “நீங்கள் அனைவரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள் (கலா 3:28) என்ற இறைவார்த்தை, இந்தப் போராட்டத்தின் ஆன்மிக அடித்தளமாக இருக்கவேண்டும். எனவே, கத்தோலிக்கத் திரு அவையின் அனைத்துப் பணிக்குழுக்கள், மறைமாவட்டங்கள், பங்குகள், துறவற சபைகள், கல்வி நிறுவனங்கள், இளைஞர் இயக்கங்கள், பெண்கள் இயக்கங்கள் மற்றும் பொதுநிலையினர் இந்த இயக்கத்தில் பொறுப்புடன் பங்கேற்க வேண்டும். இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் உரிமைப் போராட்டமாக அல்லாமல், சமூகநீதிக்காகக் கிறித்தவச் சமூகம் ஒன்றிணையும் இயக்கமாக மாற வேண்டும்.

இன்று நாம் கேட்பது சலுகை அல்ல; சமூக நீதியின் அடிப்படையில் கிடைக்கவேண்டிய சமமான வாய்ப்பையே. கல்வி என்பது ஒரு சமூகத்தின் எதிர்காலத்தை மாற்றும் சக்தி. அந்தக் கல்விக்கான கதவு, ஒரே சமூகப் பின்னணியைக் கொண்ட இரண்டு குழந்தைகளுக்கு, அவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதற்காக வெவ்வேறு விதமாகத் திறக்கப்படக்கூடாது.

ஆகஸ்ட் 10 கறுப்பு நாள் என்பது வெறும் கறுப்பு ஆடை அணியும் நாளாகவோ, கண்டன முழக்கங்கள் எழுப்பும் நாளாகவோ இருக்கக்கூடாது. அது தலித் கிறித்தவர்களின் உரிமைக் குரலை இந்திய நாடாளுமன்றத்திற்கும், தமிழ்நாடு சட்ட மன்றத்திற்கும், நீதித்துறைக்கும், நாட்டின் மனசாட்சிக்கும் கொண்டு செல்லும் வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாக மாறவேண்டும். இந்தப் போராட்டத்தின் வெற்றி ஒருநாள் நிகழ்வில் இல்லை; ஒரு தலைமுறையின் கல்வி வாய்ப்பை மாற்றும் சட்ட மற்றும் கொள்கை மாற்றங்களை உருவாக்குவதில்தான் உள்ளது. சமூகநீதி என்பது ஒரு கோஷமல்ல; அது ஒவ்வொரு குழந்தைக்கும் சமமான எதிர்காலத்தை உறுதி செய்யும் அரசமைப்பின் வாக்குறுதியாகும். ஆகஸ்டு 10 கறுப்பு நாள், அந்த வாக்குறுதியை நனவாக்கும் புதிய வரலாற்றின் தொடக்கமாக அமையட்டும்.

வாழ்வுக்கான பேரணி
கவிதை
வாழ்வுக்கான பேரணி

பேரணி இது பேரணி

வாழ்வுக்கான பேரணியில்

வாழ்வியலைப் போற்றி

வாஞ்சையுடன் நடந்திடுவோம்!

சூது நிறைந்தே சூழ்ந்தாலும்

சூழ்ச்சி வெல்ல அணி செய்வோமே!

கருக்கலைப்பு என்னும்

காலக் கொடுமையை உணர்த்தியே

காரிருளை அகற்றியே ஒளியில் மிளிர

அறத்தை விதைத்து வாழ்ந்திடுவோமே!

அன்பினைச் சுவைக்க

ஏங்கும் இதயங்களுக்கு

அரணாய் என்றும் நின்றிடுவோமே!

இறை நம்பிக்கையே

நம் கொடியாகப் பறக்கட்டுமே!

பகையறுக்கும் நற்குணமே

நம் படையாக நடைபோடட்டுமே!

உலகநீதியில் நில்லாது இறைநீதியில்

நிமிர்ந்தென்றும் நடந்திடுவோமே!

உயிரை மறுக்கும் ஒவ்வொரு செயலும்

வாழ்வின் வேதனை என்றே

கூக்குரலிடுவோமே!

உயிரை மதித்து வாழ்வில் சிறக்கும்

மனங்களாலே வானரசின்

விதைகளை விதைப்போமே!

இறைவன் தந்த இவ்வாழ்வில்

இருட்டு எண்ணங்கள்

இல்லாமல்

இனிதே செல்வோமே!

வாழ்வுக்கான பேரணியில்

வாகை காணவே

நடைபோடுவோமே!

“அழுகுரலைக் கேளுங்கள்; காயத்தை ஆற்றுங்கள்; நம்பிக்கையைப் புதுப்பியுங்கள்!” - சிறைப்பணி ஞாயிறு (09-08-2026)
சிறப்புக்கட்டுரை
“அழுகுரலைக் கேளுங்கள்; காயத்தை ஆற்றுங்கள்; நம்பிக்கையைப் புதுப்பியுங்கள்!” - சிறைப்பணி ஞாயிறு (09-08-2026)

தமிழ்நாடு சிறைப்பணி அமைப்பானது சிறைக்கைதிகளுக்கும், அவர்களின் குடும்பம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் மறுவாழ்வு மற்றும் அவர்களின் நலனுக்காக உழைக்கும் தேசியத் தன்னார்வ இயக்கமாகும். இது இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவையால் யூபிலி 2000-ஆம் ஆண்டில் இந்தியச் சிறைப்பணியாக அங்கீகரிக்கப்பட்டது.

நமது தன்னார்வத் தொண்டர்கள் ஏறக்குறைய நாடு முழுவதும் 850 பிரிவுகளில் வெவ்வேறு நிகழ்வுகளின் மூலம் குறிப்பாக, ஆற்றுப்படுத்துதல், மருத்துவ முகாம், இலவசச் சட்ட உதவிகள், வேலை சம்பந்தமான பயிற்சி முகாம்கள் மூலமாக இந்தியாவில் உள்ள சிறைகளில் மிகவும் தியாக உள்ளத்தோடு சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்கள். குறிப்பாக, வெளிநாட்டுச் சிறைவாசிகள் நமது இந்தியச் சிறைகளில் மொழி அறியாது வாடி வருகின்றனர். அவர்களது குரலைக் கேட்டு நமது தாயாம் திரு அவை அந்நாட்டுத் தூதர்கள், ஆயர்கள் மற்றும் அருள்பணியாளர்களைத் தொடர்பு கொண்டு அவர்களது குடும்பத்தினரோடு இணைத்து வைப்பது நமது சிறப்புப் பணியாகும்.

புனித மாக்சிமிலியன் கோல்பே தன்னுடைய துணிவான வாழ்வு முறையால் சிறைக்கைதிகளைப் பாதுகாப்பதில் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார். புனித கோல்பே இரண்டாம் உலகப் போரின்போது சிறைபிடிக்கப்பட்டுத் தீவிர கண்காணிப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டார். இவர் சிறைக்கைதிகளோடு இருந்தபோது தனக்காக அளிக்கப்பட்ட சிறிதளவு உணவையும் மற்றவர்களோடு பகிர்ந்துகொண்டார். பலரைச் சிறப்பானதோர் ஒப்புரவு அருள்சாதனம் பெற ஆயத்தம் செய்து, அவர்களுக்காகச் செபம் செய்தார்.

இறுதியாக, ஒரு சகோதரருக்காகத் தனது உயிரைத் தியாகம் செய்து, இன்றைய உலகில் யாரும் செய்ய இயலாத செயலை அன்று செய்து முடித்தார். இந்தத் தியாக மனநிலை பகிர்தல், தனக்கு முக்கியம் என்று கருதுகின்ற சில பொருள்கள், செபம், நேரம், பணம் மற்றும் நம்வாழ்வுமுறை ஆகியவற்றை இன்று இயேசு நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார்.

தமிழ்நாட்டில் 9 மத்தியச் சிறைச்சாலைகள், 5 பெண்கள் தனிச் சிறைச்சாலைகள், 10 மாவட்டச் சிறைச்சாலைகள், 3 திறந்தவெளி சிறைச்சாலைகள் மற்றும் கிளை சிறைச்சாலைகள் உள்பட 120 சிறைச்சாலைகளில் ஏறக்குறைய 22,631 சிறைவாசிகள் நமது வரவுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றனர். 18 மறைமாவட்டங்களில் மறைமாவட்ட ஆயர்களது மேற்பார்வையில் சிறைவாசிகளின் குழந்தைகளுக்குக் கல்வி உதவி, சிறைவாசிகளின் குடும்பங்களுக்குப் பொருளாதார உதவி, வாழ்வாதார உதவி, சிறைவாசிகளுக்கு மன ஆற்றுப்படுத்துதல், சிறைப்பணி தன்னார்வத் தொண்டர்கள் வழியாக நடைபெற்று வருகிறது.

சென்னை-மயிலை உயர்மறைமாவட்டப் பேராயரின் உதவியுடன் உற்றார்-உறவினர் இல்லாதவர்களுக்கு மறுவாழ்வு இல்லம் ஒன்று திருத்தணி அருகே கே.ஜி. கண்டிகை கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டு, சிறைவாசிகள் தங்களுக்கு ஒருவருமில்லை என்ற மன ஏக்கத்தை மாற்றும் முயற்சியாக இந்த இல்லம் செயல்பட்டு வருகிறது.

மேலும், இம்மடலின் வழியாக, பேராயர்கள், ஆயர்கள், மாநிலக்குழு மற்றும் தமிழ்நாடு சிறைப்பணியின் 18 மறைமாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். தன்னார்வலர்களை ஒருங்கிணைத்தல், சிறைச்சாலை சந்திப்பில் திரு அவையின் பிரசன்னத்தைக் கொண்டுவருதல் போன்ற அவர்களது இடைவிடாத முயற்சிகள் விலைமதிப்பற்றவை.

தமிழ்நாட்டில் உள்ள எங்கள் 18 மறைமாவட்டக் குழுக்களின் அருள்பணியாளர்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினரின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் நாங்கள் உளமார அங்கீகரிக்கிறோம். மறக்கப்பட்டவர்களுடன் நடந்து, சட்ட உதவியை எளிதாக்கி, சிறை நண்பர்களின் குடும்பங்களுக்கு மன ஆலோசனை, வாழ்வாதார உதவி மற்றும் அவர்களின் பிள்ளைகளுக்குக் கல்வி உதவி என விடாமுயற்சியுடன் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களின் தன்னலமற்ற சேவை நம்பிக்கை இல்லாத இடத்தில் நம்பிக்கையைக் கொண்டு வருகிறது.