slider slider slider
நம் வாழ்வு
நம் வாழ்வு இதழின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்
நம் வாழ்வு
நம் வாழ்வு - நல்லவர்களின் நாடித்துடிப்பு
நம் வாழ்வு
நல்லவர்களின் நாடித்துடிப்பு
அண்மைச் செய்திகள்
பூமிப் பந்தின் புழுதி துடைப்போம்!
கவிதை
பூமிப் பந்தின் புழுதி துடைப்போம்!

காற்றின் முகத்தில் கரிபூசி விட்டாய்!

பருகத் துடிப்பது

அமுத மழையா? அமிலத்துளியா?

ஓசோன் பேர்வையில்

ஓட்டைகள் துளைத்து

சூரியச் சூட்டைச் சுவிகரித்த நீ

தென்றலின் முத்தத்தில்

தேன் சுவைப்பாயோ?

 

மேகக் குடங்களைப்

பூமிக்குச் சுமந்து வரும்

தாவரக் கரங்களைத் தரைமட்டமாக்கி விட்டாயே!

சோலைவனங்களையெல்லாம் சூனியமாக்கிவிட்டு

பாலைவனங்களிலா

பல்லுயிர் பெருக்குவாய்?

 

குருவியின் குரல்வளை நெரித்துவிட்டாய்!

அருவியின் அருமை

குலைத்து விட்டாய்!

மலைகளின் பெருமையைச் சிதைத்து விட்டாய்!

நதிகளின் பயணம் தடுத்துவிட்டாய்!

 

பின்னர் உயிரின் வனப்பை

எந்த ஓவியத்தில் இரசித்து விடப்போகிறாய்?

குளத்தின் வயிற்றில் விசம்;

நிலத்தின் வளத்தில் கசம்;

அழிவின் வசம் உலகில் நிசம்!

 

உயிரினங்களைப் பயிரினங்களைக்

கொலை செய்துவிட்டு நீங்கள்

கொண்டாடப் போவது யாரை?

சுகம் தரும் காட்டையா?

இல்லை சுடுகாட்டையா?

இயற்கை செத்து எதற்குச் சொத்து?

 

குடும்ப உறவுகளைக்

கூகுளில் தொலைத்துவிட்டு

அவர்கள் கல்லறைக்குள் புகுந்த

பின்பா கன்னத்தோடு கன்னம் உரசி

கருணை காட்டப் போகிறீர்கள்?

 

அலைப்பேசியில்

நேரத்தைப் புதைத்துவிட்டு

கடைசியில் கட்டியிருக்கும்

கடிகார முள்களையா

கடிந்து கொள்ளப்போகிறீர்கள்?

 

கல் ஆனாலும் கணவன்

புல் ஆனாலும் புருஷன்

ஆக மொத்தம்

போதையிலே கணவன்

வீதியிலே குடும்பம்

தாலியில்லா மனைவி

நாதியில்லாக் குழந்தை

தோள் கொடுப்பான் தோழன்

அதுவன்றோ பழமொழி!

 

மைக்கில் மட்டும் பெண்ணியம்

மற்றபடி எங்கே கண்ணியம்?

கருப்பையில்

நெருப்பைக் கொட்டியவன்

வெறுப்பை உமிழ்ந்து

பொறுப்பை மறந்து

இணைப்பை மாற்றுவது

விடுதலைக் காதலா?

தறுதலைக் காதலா?

 

குளத்தில் வழுக்கி விழுந்தால்

தண்ணீரில் பாசமாம்!

குடும்பத்தில் தடுக்கி விழுவதென்னவோ

நாள்தோறும் தாய்ப் பாசம்தானே!

 

தாயிற் சிறந்த கோயிலுமில்லை

சேய்களின் மனத்தில் ஈரமுமில்லை!

உற்றார் துரத்திய

பெற்றோர் ரோட்டில்!

தந்தை சொல் மிக்க

மந்திரம் இல்லை இன்றோ!

 

மைந்தனின் சிந்தையில்

தந்தையே இல்லை எனில்

நாளைய பூமி நலம் பெற வழி?

உறவின் சிறப்பையும்

உலகின் வனப்பையும்

யாவரும் சேர்ந்து

அழகுறச் செய்வோமே!

கிழிசலை நெய்வோமே!

புத்தம் புது பூமி புறப்பட்டு வரும்!

பெண்ணே பேசும் தெய்வம்!
கவிதை
பெண்ணே பேசும் தெய்வம்!

பெண்மை என்பது பேசுந்தெய்வம்

உண்மை இதனை உணருக நன்கு

ஆண்மை பெண்மை ஆண்டவன் படைப்பு

பேணுதல் என்பது பெண்மையின் சிறப்பு

ஆணின் வெற்றிக்கு அடிப்படை அவளே

வானினும் உயர்ந்தது வஞ்சியவர் பெருமை

தேனினும் இனிக்கும் தெளிவுறு சொல்லால்

ஊனில் வளர்த்து உயிரினைப் பேணும்

பெண்மை ஓங்கிட பேரினம் வளரும்

கண்ணினும் இனிய கற்பினைப் பேணுவாள்

மண்ணில் அன்னையாய் அவளே திகழ்வாள்!

மாதொரு பாகனாய் மகேசன் காட்டும்

தீதிலா வடிவத் திருவுரு பெண்ணே!

கோதிலா அன்பினைக் குறைவிலாது தனித்து

மேதினி யதனில் மேன்மைகள் சேர்ப்பாள்

கனிவுடன் பேசி காதலை வளர்ப்பாள்

கருவினில் சுமந்து கண்ணெனப் போற்றுவாள்!

தாய்ப் பாலொடு தமிழ்ப்பால் ஊட்டுவாள்

நோயில் படுத்தால் நொந்தே போவாள்

உயிரினைத் தந்தும் உலகினைப் புரப்பாள்!

பேசும் தெய்வம்  அவள்தான் பெண்ணே!

தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு (08-03-2026) விப 17:3-7; உரோ 5:1-2,5-8; யோவா 4:5-42
ஞாயிறு தோழன்
தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு (08-03-2026) விப 17:3-7; உரோ 5:1-2,5-8; யோவா 4:5-42

திருப்பலி முன்னுரை

இறைநம்பிக்கையில் வேரூன்றி, இறையனுபவம் பெற்று வாழத் தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு நமக்கு அழைப்பு விடுக்கிறதுஇன்றைய நற்செய்தியில் கிறிஸ்து சமாரியப் பெண்ணுக்குநானே வாழ்வு தரும் தண்ணீர்என்ற உண்மையை வெளிப்படுத்துகிறார். வாழ்வு தரும் தண்ணீர் தம்மிடம்தான் உள்ளது என்பதைச் சமாரியப் பெண் வழியாக இன்று நமக்கும் உணர்த்துகின்றார்.

தண்ணீர் நமது உடல் தாகத்தைத் தணிக்கிறது. இறையனுபவம் நமது ஆன்மிகத் தாகத்தைத் தணிக்கிறது. கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப் பெற்ற இறைவனின் பிள்ளைகளாகிய நம்மிடம் அன்பிற்கான, நீதிக்கான, உண்மைக்காக, சமத்துவத்திற்கான, நேர்மைக்கான தாகம் இருக்கவேண்டும். இயேசுவின் வார்த்தையால் ஆன்மிகத் தாகம் தணியப் பெற்ற சமாரியப் பெண், இயேசு யார்? தான் யார்? தாகம் தீர்க்கும் தண்ணீர் தருபவர் யார்? என்பதை உணர்ந்து, அகவிடுதலைப் பெற்று அவரைமீட்பர்என்று மனதார அறிக்கையிடுகிறார்.

நமது நம்பிக்கை வாழ்வுக்கு உணவாக, ஆன்மிக உறவாக, நிலைவாழ்வைத் தரும் உயிருள்ள ஊற்றாக நம்மில் வாழும் இறைவனை வல்லமையோடு அறிக்கையிட வரம் வேண்டுவோம். பெண்கள் தினமாகிய இன்று அன்னையாக, மனைவியாக, சகோதரியாக, மகளாக எனப் பன்முகத்தன்மையோடு இந்த உலகத்தை ஒளிர்வித்துக் கொண்டிருக்கும் அனைத்துப் பெண்களுக்கும் இறைவன் ஆசியளிக்கவும், ஆண்-பெண் சமத்துவம் இம்மண்ணில் மலரவும் வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசக முன்னுரை

இஸ்ரயேல் மக்கள் தண்ணீருக்காக மோசேயை எதிர்த்த வேளையில், ஆண்டவர் அவர்களைத் தண்டிக்காமல் மோசேயின் வழியாக அவர்களின் தாகத்தைத் தணிக்கிறார். ஆண்டவர் அவர்கள்மீது கொண்டிருந்த இரக்கத்தால் அவர்களை அற்புதமாக வழிநடத்தி உடன் பயணிக்கிறார். ஆண்டவரின் வல்லமையையும் பேரன்பையும் அனுபவித்து வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்

இரண்டாம் வாசக முன்னுரை

கடவுளின் பிள்ளைகளாகிய நாம்நமக்காக உயிரைக் கொடுத்த இயேசுவின்மீது தளராத நம்பிக்கை கொண்டு வாழும்போதுதான் கடவுளின் மாட்சியைக் காணமுடியும்கடவுளின் பேரன்பையும், கிறிஸ்து வழியாக நாம் பெற்றுக் கொண்ட மீட்பையும், தூய ஆவியின் வல்லமையையும் உணர்ந்து நம்பிக்கையோடு வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. நிலைவாழ்வு தரும் ஊற்றாகிய ஆண்டவரே! எம் திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர், பொதுநிலையினர் அனைவரும் உமது வார்த்தையை வாழ்க்கையால் அறிவிக்கவும், இறையாட்சியின்  மதிப்பீடுகளை விதைக்கவும் வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. வாழ்வு தரும் ஊற்றாகிய ஆண்டவரே! நாங்கள் அனைவரும் பாவ வாழ்க்கையை விடுத்து தூய வாழ்வு வாழவும், பொருள் செல்வம் தேடுவதிலேயே நாள்களை நகர்த்தாமல் அருள்செல்வத்தைத் தேடிடவும், ஒப்புரவு அருளடையாளத்தால் உள்ளத்தைத் தூய்மையாக்கவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. ‘நானே நல்ல ஆயன்என்று மொழிந்த ஆண்டவரேபெண்கள் தினத்தைக் கொண்டாடும் இன்று, எமது வீட்டையும் நாட்டையும் தங்களது அன்புப் பணிகளால் வாழ்வித்துக் கொண்டிருக்கும் அனைத்துப் பெண்களின் மாண்பு பாதுகாக்கப்படவும், சமத்துவத்தோடு பெண்களை நாங்கள் நடத்தவும், பெண்களின் வாழ்வு வளம் பெறவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. ஞான வெளிச்சமான எம் இறைவா! அரசுத் தேர்வினை எழுதிக்கொண்டிருக்கும் மற்றும் எழுதச் செல்லவிருக்கும் அனைத்து மாணவ-மாணவியரும் ஞானத்தோடு தேர்வு எழுதி, கல்வித் தேர்விலும் வாழ்க்கைத் தேர்விலும் வெற்றி அடையவும், இந்நாள்களில் உடலுக்கும் உள்ளத்திற்கும் தேவையான ஆற்றலைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.