news
கவிதை
வாழ்வுக்கான பேரணி

பேரணி இது பேரணி

வாழ்வுக்கான பேரணியில்

வாழ்வியலைப் போற்றி

வாஞ்சையுடன் நடந்திடுவோம்!

சூது நிறைந்தே சூழ்ந்தாலும்

சூழ்ச்சி வெல்ல அணி செய்வோமே!

கருக்கலைப்பு என்னும்

காலக் கொடுமையை உணர்த்தியே

காரிருளை அகற்றியே ஒளியில் மிளிர

அறத்தை விதைத்து வாழ்ந்திடுவோமே!

அன்பினைச் சுவைக்க

ஏங்கும் இதயங்களுக்கு

அரணாய் என்றும் நின்றிடுவோமே!

இறை நம்பிக்கையே

நம் கொடியாகப் பறக்கட்டுமே!

பகையறுக்கும் நற்குணமே

நம் படையாக நடைபோடட்டுமே!

உலகநீதியில் நில்லாது இறைநீதியில்

நிமிர்ந்தென்றும் நடந்திடுவோமே!

உயிரை மறுக்கும் ஒவ்வொரு செயலும்

வாழ்வின் வேதனை என்றே

கூக்குரலிடுவோமே!

உயிரை மதித்து வாழ்வில் சிறக்கும்

மனங்களாலே வானரசின்

விதைகளை விதைப்போமே!

இறைவன் தந்த இவ்வாழ்வில்

இருட்டு எண்ணங்கள்

இல்லாமல்

இனிதே செல்வோமே!

வாழ்வுக்கான பேரணியில்

வாகை காணவே

நடைபோடுவோமே!

news
கவிதை
சமர்ப்பணம்

கருவறையைக் கல்லறையாக்கிய தாய்மார்களுக்கு இக்கவிதை ஒரு சமர்ப்பணம்!

கருவாய் உருகொடுத்தவளே!

என்னைக் கழுவித் தூக்கி எறியத் துணிந்தாள்,

பலரின் வற்புறுத்தலால் நீயும் என்னை

வேண்டாம் என்றாயே ஏன்?

என் சின்ன இதயம் எப்போது

தன் துடிப்பை நிறுத்தும்

எனத் துடித்தாய் ஏன்?

என்னை அனுப்பியவரிடம்

நான் கூக்குரலிட்டேன்.

யாரோ செய்த தவறுக்கு

எனக்கு ஏன் இந்த நிலைமை?

கண்மை இட்டு அலங்கரிக்க

வேண்டிய என்னை

நீயும் அலங்கரித்தாய் சவப்பெட்டியில்!

காரணமின்றிக் கலைந்து போனேன்

உருவில்லாமல்...!

மீண்டும் ஜென்மம் என்று ஒன்று இருந்தால்

என்னிடம் வா தாயே,

உன்னைப் போல் இல்லாமல்!

என் கருவறையில் உனக்கு உருகொடுத்து

இவ்வுலகிற்கு உன்னைப்

பரிசாய் தருவேன்!

news
கவிதை
வல்ல தேவன் அழைக்கின்றார்!

வழியும்  உண்மையும்  நானென்றே

                வல்ல  இயேசு  மொழிந்தாரே!

வழியின்  துணையாய்  இறைச்சொற்கள்

                விழிபோல்  நம்மைக்  காத்திடுதே!

 

பாவ  இருளில்  வாழ்வோர்க்குப்

                பரமன்  அருளைப்  பகிர்வதற்கும்

காவல்  தூதர்  பணியாற்ற

                காக்கும்  இளையோர்  வருவீரே!

 

திராட்சைக்  கொடியாய்  வாழ்ந்திங்கே

                தேவன்  கனியைச்  சுவைப்பதற்குத்

திரட்டித்  தரவே  இளையோரே

                திரண்டு  வாரீர்  பணியாற்ற!

 

இறைவன்  பணியை  ஆர்வமுடன்

                இமைபோல்  நாளும்  வளர்த்திடவும்

துறவு  வாழ்வின்  சபைகளிலே

                தொடர்ந்து  பணியை  ஆற்றிடலாம்!

 

அழியா  இல்லம்  விண்ணகத்தை

                அடையும்  வழிகள்  இவையென்றே

வழியைக்  காட்ட  இளையோரை

                வருக  என்றே  அழைக்கின்றோம்!

 

கல்வி  மற்றும்  மருத்துவத்தைக்

                கடவுள்  பணியாய்ச்  செய்வோமே!

வல்ல  தேவன்  அழைக்கின்றார்

                வாரீர்  மேய்ப்புப்  பணியாற்ற!

news
கவிதை
மரியின் மகிழ்வான மே மாதமே அருள் தருக!

அம்மா உன்னை நினைத்து மகிழ்ந்திட தந்திட்டாய்

தயங்காமல் தரணிக்கு ஆறுதலை அளித்திட்டாய்

அருளும் ஆசிரும் நிறைவாய் பெற்றிடுவோம் இம்மாதம்!

 

அன்னையே உந்தன் செபமாலை நாள்தோறும் செய்திட

அழைத்திட்டாய் எம்மை இந்த அருள் மாதத்தில்

ஆசையாய் குடும்பத்தோடு கூடிடுவோம் ஆலயத்தில்!

 

பல வண்ணப் பூக்களால் அலங்கரித்தல் அழகாமே!

அழகோவியமே உந்தன் கருணை மட்டும் போதும் அம்மா!

பாடிப்பாடி புகழந்தேத்திட எம்மை அழைத்தாயே!

 

கருணை உந்தன் பார்வை பட்டால் போதுமம்மா

காலமெல்லாம் நின் பணி கிடைத்தலே சுகமம்மா

கால தேவனே உன் கட்டளையைக் கேட்கலாம்!

 

தாயே உன்னைப் புகழ்ந்து பாடிட தந்தாயே

இந்த முழு மாதத்தையும் உன் கருணையால் நிறைத்தாயே

நாள்தோறும் அலங்கரித்திடுவோம் செபமாலையால்!

 

நாதனின் தாயேஆகட்டும்என்றவளே அம்மா!

உன் முகம் பார்த்தால் கவலைகள் காணாதம்மா!

உம் முன் முழந்தாளிட்டால் முழுப்பயனும் எமதம்மா!

 

தாயே இந்த மாதம் எங்களின் வசந்தகாலம் அம்மா

கூடி வருவோம் குதூகலத்தோடு ஆடிப்பாடிடுவோம்

உந்தன் ஆணையாம் செபமாலையை ஏந்திடுவோம்!

 

வாழ்வில் வசந்தங்கள் தந்திட்ட தாயே

வாயார உம்மைப் போற்றி நன்றி நவிலும் மாதமம்மா

நீயின்றி எங்களுக்குத் தஞ்சம் யாரம்மா!

 

எமக்காகத் திருமகனை அளித்திட்ட தாயே

எங்களின் எல்லாமுமான அழகு அன்னையே

குடும்பமாய் கூடி வந்திட்டோம் உம்மை வணங்க!

news
கவிதை
தித்திக்கும் திருப்பாடல்

நற்பேறுபெற்றவர் யார்? (திபா 1:1)

அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்;

பாவிகளின் தீயவழி நில்லாதவர்;

இகழ்வாரின்

குழுவினில் அமராதவர்!

 

அன்புத் தந்தையே,

நற்பேறு பெற்றவராகிடவேண்டும்

மூன்று நிபந்தனைகள்!

ஊதாரி மகனோ,

பொல்லாரின் சொல்லின்படி நடந்தான்,

பாவிகளின் தீயவழி நின்றான்,

இகழ்வாரின் குழுவில் அமர்ந்தான், நடந்தான், நின்றான், அமர்ந்தான்.

முடிவு பன்றிக் கூடாரமாயிற்று! (லூக் 15: 13-16)

 

மூன்று ஆலோசனைகள் பொன்னானவை;

நல்லாரின் சொல்படி நடக்கவேண்டும்,

நடப்பதற்கான அடிச்சுவடுகளை

இயேசு விட்டுச் சென்றுள்ளார் (1 பேது 2:21).

மறு கிறிஸ்துவாக

வாழ்ந்த புனிதர்கள்

(கலா 2:20, எபி 13:7)

வாழ்வின் நிறைவை

மகுடமாய்த் தந்துள்ளனர்

(1கொரி 11:1; பிலி 3:17).

நல்ல மனச்சான்றின் வழியாக

தூய ஆவியார் போதிக்கிறார்.

இதுதான் வழி;

இதிலேயே நடந்து செல்  (எசா 30:21)

போதகராக அறிவுறுத்துகிறார்!

நன்றி தந்தையே!

 

தூயோரின் நல்வழியில்

நிற்கவேண்டும்.

பாவத்திற்கு எதிரான

நல்லாருடன்

நீதி, சமத்துவத்திற்குச் சார்பான

போராளிகளுடன் சாதி, மதம்,

இனம், மொழி கடந்து (யாக் 4:7)

குரல் கொடுப்பவருடன்

நிற்கவேண்டும் (எசா 1:16-19).

நற்செய்தியாக வாழ்பவருடன்

கரம் கோர்க்கவேண்டும்.

கரங்களை இணைப்பதற்காக

நன்றி தந்தையே!

 

இறைப்புகழ் மனிதரோடு

அமரவேண்டும்.

முணுமுணுப்பவர்களிடமோ

அவநம்பிக்கை மனிதரிடமோ

தோழமை கூடவே கூடாது.

அது தொற்றுநோய்

எம்மைத் தீண்டவிடக்கூடாது.

என்ன நேரிடினும் நன்றி

(1தெச 5:18) என்று எப்போதும்

இறைப்புகழ் பாடுபவர்

தோழர்களாகிட

வேண்டும் (திபா 34:1-5).

தூய தோழர்களைத்

தருவதற்காக

நன்றி தந்தையே! (திபா 119:63).

 

யாரோடு நடக்க, நிற்க,

அமரவேண்டும்?

புரிந்து கொண்டோம் தந்தையே!

உலகம் பாவத்துள் கிடக்கிறது (தொநூ 6:5).

உலகில் வாழ்ந்தாலும்

யாம் உலகத்திற்குரியவரல்லர் (யோவா 17:16).

விண்ணில் உம்மோடு

இருப்பவர்கள் (எபே 2:6).

விண்ணக வாசனையுடன்

வாழ்ந்திட வரம் தாரும்

தந்தையே!

news
கவிதை
கவிதைச் சாரல்

புன்னகை

நேர்மறை உணர்வின்

ஆயுதம்!

கோபம்

எதிர்மறை உணர்வின்

ஆரம்பம்!

உணர்வுகளின்

கூட்டுப் பலனே

ஆரோக்கியமான

உள்ளத்தின்

மொத்த எடை!

 

நீண்ட நாள்

புறக்கணிப்பும்

நெடுநாள்

உதாசீனங்களும்

மன்னிக்கப்படுவதில்லை!

வாழ்நாள் மன்னிப்பும்

நெடுநாள்

ஏற்புடைமையும்

என்றுமே

மறக்கப்படுவதில்லை!

 

வாழ்க்கை வசந்தம் தர

மறக்கும் போதெல்லாம்

ஏதோ ஒரு வானம்

நம்மீது நிழலிட்டு

நம்மைப் பதப்படுத்தித்தான்

போகிறது!

 

ஏழை வீட்டுக்

கூரையில் கரைகிறது காகம்!

உறவினர் வருகை

அங்கே இருக்காது

என்பதெல்லாம் காகத்திற்குத்

தெரியாதுதானே!

 

உடைத்து நொறுக்கப்பட

வேண்டிய பிம்பங்களே

முகங்கள்!

அதிலென்ன

பெருமையோ?

சிறுமையோ?

அகமோ?

ஆணவமோ?

ஆற்றுவாரில்லை!

ஆதலின்... கேளுங்கள்!

முகங்கள் முகவரியல்ல!

 

அடைக்க முடியாத

இரு கடன்கள்!

அம்மாவின்

பாசக்கடன்!

அப்பாவின்

வளர்த்த கடன்!

இறுதி வரைக்

கடன் உண்டு!

அடைத்திடக்

கடமை உண்டு!

 

கண்ணீரின்

கனத்தையும்

செந்நீரின்

இரணத்தையும்

அறிந்தவர்

கடவுள்.

கண்ணீரைக்

கணக்கில்

கொண்டு

தோள் பையில்

சேர்த்து வைத்துக்

கைம்மாறு

செய்பவர்

உன்னைக்

கைவிடுவாரோ?

 

இன்னும்

கடக்க வேண்டிய

தூரம்

ஏராளம்

என்று சொல்லி

மனத்தைத் 

தேற்றிக்கொண்டே

விடைபெறுகின்றன

அன்றைய

தொல்லைகள்!

அன்றைய

தொல்லை

அன்றைக்குப்

போதும்!

 

உனக்காகவே

வாழ்கிறேன்

என்பது

அன்பின் உச்சம்!

உங்களால்தான்

வாழ்கிறேன்

என்பது 

தர்மத்தின் உச்சம்!

முந்தையது

கொல்லும்!

பிந்தையது

வெல்லும்!