news
கவிதை
மரியின் மகிழ்வான மே மாதமே அருள் தருக!

அம்மா உன்னை நினைத்து மகிழ்ந்திட தந்திட்டாய்

தயங்காமல் தரணிக்கு ஆறுதலை அளித்திட்டாய்

அருளும் ஆசிரும் நிறைவாய் பெற்றிடுவோம் இம்மாதம்!

 

அன்னையே உந்தன் செபமாலை நாள்தோறும் செய்திட

அழைத்திட்டாய் எம்மை இந்த அருள் மாதத்தில்

ஆசையாய் குடும்பத்தோடு கூடிடுவோம் ஆலயத்தில்!

 

பல வண்ணப் பூக்களால் அலங்கரித்தல் அழகாமே!

அழகோவியமே உந்தன் கருணை மட்டும் போதும் அம்மா!

பாடிப்பாடி புகழந்தேத்திட எம்மை அழைத்தாயே!

 

கருணை உந்தன் பார்வை பட்டால் போதுமம்மா

காலமெல்லாம் நின் பணி கிடைத்தலே சுகமம்மா

கால தேவனே உன் கட்டளையைக் கேட்கலாம்!

 

தாயே உன்னைப் புகழ்ந்து பாடிட தந்தாயே

இந்த முழு மாதத்தையும் உன் கருணையால் நிறைத்தாயே

நாள்தோறும் அலங்கரித்திடுவோம் செபமாலையால்!

 

நாதனின் தாயேஆகட்டும்என்றவளே அம்மா!

உன் முகம் பார்த்தால் கவலைகள் காணாதம்மா!

உம் முன் முழந்தாளிட்டால் முழுப்பயனும் எமதம்மா!

 

தாயே இந்த மாதம் எங்களின் வசந்தகாலம் அம்மா

கூடி வருவோம் குதூகலத்தோடு ஆடிப்பாடிடுவோம்

உந்தன் ஆணையாம் செபமாலையை ஏந்திடுவோம்!

 

வாழ்வில் வசந்தங்கள் தந்திட்ட தாயே

வாயார உம்மைப் போற்றி நன்றி நவிலும் மாதமம்மா

நீயின்றி எங்களுக்குத் தஞ்சம் யாரம்மா!

 

எமக்காகத் திருமகனை அளித்திட்ட தாயே

எங்களின் எல்லாமுமான அழகு அன்னையே

குடும்பமாய் கூடி வந்திட்டோம் உம்மை வணங்க!

news
கவிதை
தித்திக்கும் திருப்பாடல்

நற்பேறுபெற்றவர் யார்? (திபா 1:1)

அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்;

பாவிகளின் தீயவழி நில்லாதவர்;

இகழ்வாரின்

குழுவினில் அமராதவர்!

 

அன்புத் தந்தையே,

நற்பேறு பெற்றவராகிடவேண்டும்

மூன்று நிபந்தனைகள்!

ஊதாரி மகனோ,

பொல்லாரின் சொல்லின்படி நடந்தான்,

பாவிகளின் தீயவழி நின்றான்,

இகழ்வாரின் குழுவில் அமர்ந்தான், நடந்தான், நின்றான், அமர்ந்தான்.

முடிவு பன்றிக் கூடாரமாயிற்று! (லூக் 15: 13-16)

 

மூன்று ஆலோசனைகள் பொன்னானவை;

நல்லாரின் சொல்படி நடக்கவேண்டும்,

நடப்பதற்கான அடிச்சுவடுகளை

இயேசு விட்டுச் சென்றுள்ளார் (1 பேது 2:21).

மறு கிறிஸ்துவாக

வாழ்ந்த புனிதர்கள்

(கலா 2:20, எபி 13:7)

வாழ்வின் நிறைவை

மகுடமாய்த் தந்துள்ளனர்

(1கொரி 11:1; பிலி 3:17).

நல்ல மனச்சான்றின் வழியாக

தூய ஆவியார் போதிக்கிறார்.

இதுதான் வழி;

இதிலேயே நடந்து செல்  (எசா 30:21)

போதகராக அறிவுறுத்துகிறார்!

நன்றி தந்தையே!

 

தூயோரின் நல்வழியில்

நிற்கவேண்டும்.

பாவத்திற்கு எதிரான

நல்லாருடன்

நீதி, சமத்துவத்திற்குச் சார்பான

போராளிகளுடன் சாதி, மதம்,

இனம், மொழி கடந்து (யாக் 4:7)

குரல் கொடுப்பவருடன்

நிற்கவேண்டும் (எசா 1:16-19).

நற்செய்தியாக வாழ்பவருடன்

கரம் கோர்க்கவேண்டும்.

கரங்களை இணைப்பதற்காக

நன்றி தந்தையே!

 

இறைப்புகழ் மனிதரோடு

அமரவேண்டும்.

முணுமுணுப்பவர்களிடமோ

அவநம்பிக்கை மனிதரிடமோ

தோழமை கூடவே கூடாது.

அது தொற்றுநோய்

எம்மைத் தீண்டவிடக்கூடாது.

என்ன நேரிடினும் நன்றி

(1தெச 5:18) என்று எப்போதும்

இறைப்புகழ் பாடுபவர்

தோழர்களாகிட

வேண்டும் (திபா 34:1-5).

தூய தோழர்களைத்

தருவதற்காக

நன்றி தந்தையே! (திபா 119:63).

 

யாரோடு நடக்க, நிற்க,

அமரவேண்டும்?

புரிந்து கொண்டோம் தந்தையே!

உலகம் பாவத்துள் கிடக்கிறது (தொநூ 6:5).

உலகில் வாழ்ந்தாலும்

யாம் உலகத்திற்குரியவரல்லர் (யோவா 17:16).

விண்ணில் உம்மோடு

இருப்பவர்கள் (எபே 2:6).

விண்ணக வாசனையுடன்

வாழ்ந்திட வரம் தாரும்

தந்தையே!

news
கவிதை
கவிதைச் சாரல்

புன்னகை

நேர்மறை உணர்வின்

ஆயுதம்!

கோபம்

எதிர்மறை உணர்வின்

ஆரம்பம்!

உணர்வுகளின்

கூட்டுப் பலனே

ஆரோக்கியமான

உள்ளத்தின்

மொத்த எடை!

 

நீண்ட நாள்

புறக்கணிப்பும்

நெடுநாள்

உதாசீனங்களும்

மன்னிக்கப்படுவதில்லை!

வாழ்நாள் மன்னிப்பும்

நெடுநாள்

ஏற்புடைமையும்

என்றுமே

மறக்கப்படுவதில்லை!

 

வாழ்க்கை வசந்தம் தர

மறக்கும் போதெல்லாம்

ஏதோ ஒரு வானம்

நம்மீது நிழலிட்டு

நம்மைப் பதப்படுத்தித்தான்

போகிறது!

 

ஏழை வீட்டுக்

கூரையில் கரைகிறது காகம்!

உறவினர் வருகை

அங்கே இருக்காது

என்பதெல்லாம் காகத்திற்குத்

தெரியாதுதானே!

 

உடைத்து நொறுக்கப்பட

வேண்டிய பிம்பங்களே

முகங்கள்!

அதிலென்ன

பெருமையோ?

சிறுமையோ?

அகமோ?

ஆணவமோ?

ஆற்றுவாரில்லை!

ஆதலின்... கேளுங்கள்!

முகங்கள் முகவரியல்ல!

 

அடைக்க முடியாத

இரு கடன்கள்!

அம்மாவின்

பாசக்கடன்!

அப்பாவின்

வளர்த்த கடன்!

இறுதி வரைக்

கடன் உண்டு!

அடைத்திடக்

கடமை உண்டு!

 

கண்ணீரின்

கனத்தையும்

செந்நீரின்

இரணத்தையும்

அறிந்தவர்

கடவுள்.

கண்ணீரைக்

கணக்கில்

கொண்டு

தோள் பையில்

சேர்த்து வைத்துக்

கைம்மாறு

செய்பவர்

உன்னைக்

கைவிடுவாரோ?

 

இன்னும்

கடக்க வேண்டிய

தூரம்

ஏராளம்

என்று சொல்லி

மனத்தைத் 

தேற்றிக்கொண்டே

விடைபெறுகின்றன

அன்றைய

தொல்லைகள்!

அன்றைய

தொல்லை

அன்றைக்குப்

போதும்!

 

உனக்காகவே

வாழ்கிறேன்

என்பது

அன்பின் உச்சம்!

உங்களால்தான்

வாழ்கிறேன்

என்பது 

தர்மத்தின் உச்சம்!

முந்தையது

கொல்லும்!

பிந்தையது

வெல்லும்!

news
கவிதை
கவிதை சாரல்

சில உறவுகள்!

மழைத்துளி செடிக்கு என்றும்

பாரமாய் இருந்ததில்லை!

பனிக்கட்டியாய்

மாறாதிருக்கும் வரை...!

அடம்பிடிக்கும் மனம்!

மரத்திலிருந்து சரிந்த

இலையை நினைத்து                   

என்றும் மரம் வருந்தியதில்லை!

புதுத்தளிரை நினைத்தே

அது மகிழ்கிறது.

ஆனால், மனத்திலிருந்து விழுந்த          

அன்பை மட்டும்

ஏன் விட்டுக்கொடுக்க

மனம் விரும்பவில்லை?

விழுந்ததுதான்

வேண்டும் என்று      

அடம்பிடிக்கும் மனத்திடம்

அது முடியாத காரியம்

என்று எப்படிப்

புரிய வைப்பேனோ?

என்றும் சுமைதாங்கியாய்!

கல்லெறியப்பட்ட

என் மனம் என்ற குளம்

தெளிகிறதே எனச்

சில வினாடிகள் மகிழ்ந்தேன்!

எல்லாம் சில காலமே

என்பதுபோல்...

ஆழம் சென்ற

கல்லின் கனம்

என்னைச் சுமைதாங்கி ஆக்கிவிட்டது!

ஒற்றை வழிப்பாதையின் ஓரவஞ்சனையா?

செல்கிறவனுக்கு

இடமுண்டு

முன் வருகிறவனுக்குக் காத்திருப்பு

யார்மீது தவறு?

செல்கிறவன் மீதா?

முன் வருகிறவன்மீதா?

அல்லது ஒற்றைப்

பாதையின் மீதா?

எல்லாம் நேரத்தின் விதி

பொறுமையில்

கடந்து செல்வோம்!

பிரியாவிடை

விடைபெறுகிறேன்...

விடைபெறுகிறேன்

எனத் தலையசைத்துப்

பிரியாவிடை கொடுக்கிறது

ஒவ்வொரு பின்னோக்கிச்

செல்லும் மரமும்

முன்னோக்கிச் செல்லும்

பயணியைப் பார்த்து...!

உள்ள முதிர்ச்சி

அன்றிலாய் அவளுடன் சுற்றிய

எண்ணங்கள் அன்று!

தன்னந்தனித் தென்னையாய்

எதையும் சமாளிக்கும்

இறுகிய உள்ளத்துடன் இன்று!

கவிதை

அந்த அழகான வார்த்தைகள்

உள்ளத்தில் பிறந்து

உணர்வினுள் கலந்து

உயிர் கொண்டு

உருவம் கண்டு

உனைச் சேர

நான் எடுக்கும் பாடுகள்

என்றும் சுகமே!

மதம் பிடித்த மனிதன்

வாங்க ஓடிடலாம்

மதம் பிடித்த மனுஷன் வரான்!

அவனிடம் மதி இல்லாததால்

மதம் ஆளுகிறதா?

அல்லது மதம் நிறைந்ததால்

மதி மறைந்ததா?

சிலருக்கு அப்படி...

சிலருக்கு இப்படி...

சரி.  உங்களுக்கு எப்படி?

இயற்கைத் தெய்வம்

மாதங்கள் பல

நேர்ச்சை இருந்து

தலைமுடியை ஈந்து

மொட்டையுடன்

காட்சியளிக்கும் ஒவ்வோர்

இலையுதிர்கால மரமும்

இயற்கையைத்

தெய்வமாக்கியதன்

சாட்சியே!                           

news
கவிதை
உழைக்கும் கரங்கள் உயர்ந்திடுமே!

உழைக்கும் கரங்கள் உயர்ந்திடுமே!

உயர்ந்த சிகரம் அடைந்திடுமே!

பிழைக்கும் வழியைக் கண்டிடுமே!

பிறரை வியக்க வைத்திடுமே!

 

தொழிலைக் கற்றுத் தெளிந்தாலே

தொல்லை இல்லை வாழ்வினிலே!

அழியும் வழியின் பயணங்கள்

அகன்று போகும் உழைத்தாலே!

 

கல்வி என்றும் வழிகாட்டும்

கலங்கரை விளக்கு மறவாதீர்!

எல்லை இல்லா உழைப்பாலே

எழுச்சிப் பெற்று உயர்ந்திடலாம்!

 

வேலை வாய்ப்பை உருவாக்க

வளரும் திட்டம் பலவேண்டும்!

ஆலைத் தொழில்கள் வளர்ந்தாலே

அதிக வருவாய் வந்திடுமே!

 

இயற்கை யோடு வாழ்வதற்கு

இயன்ற மட்டும் இணைவீரே!

செயற்கை நுண்ணறி வெல்லாமே

சிறந்து விளங்குது இன்றைக்கு!

 

வளரும் புதிய தொழில்நுட்பம்

வாழ்வில் என்றும் வழிகாட்டும்!

தழைக்கும் மானுட வாழ்வியலைத்

தரணி வியக்க உழைப்பீரே!

 

கல்லு டைக்கும் தொழிலாளி

கழனியில் உழைக்கும் விவசாயி

வல்ல செயல்கள் புரிகின்ற

விஞ்ஞா னியரும் உழைப்போரே!

 

உழைப்பைச் சுரண்டும் கார்ப்பரேட்டு

உலகம் சூழ்ந்த நிலையாச்சு!

உழைக்கும் பொதுத்துறை பற்பலவும்,

உறிஞ்சும் தனியார் வசமாச்சு!

 

ஆள்வோர் போடும் திட்டங்கள்

அறிவு நிறைந்த இளையோர்க்கு

தோள்கொ டுக்கும் விதத்தினிலே

துலங்க வேண்டும் அறிவீரே!

 

கணினி மற்றும் வலைத் தளங்கள்

காணும் வளர்ச்சி எப்போதும்

துணையாய் நின்று இளையோர்க்குத்

தந்திடு மாநல் வாய்ப்புகளை?

 

வியர்வை சிந்தி உழைப்போர்க்கு

வீழ்ச்சி நேரா விதத்தினிலே

உயர்வை உறுதி செய்கின்ற

உயர்ந்த சட்டம் வந்திடுமா?

 

மண்ணில் உழைத்து மகிழ்கின்ற

மக்கள் வாழ்வு வளமாக

எண்ணும் அரசு எந்நாளும்

ஏற்றம் பெற்று நின்றிடுமே!

news
கவிதை
கவிதை கீற்றுகள்

நெகிழ்ச்சி!

கடைசி காலத்தில்

அழுவதற்கு மட்டுமே

அவகாசம்

கொடுத்த மகன்

சில நேரங்களில்

சிரித்தபடியே காட்சிதரும்

தாய்-தந்தையின்

பிளாஸ்டிக் மாலை மாட்டிய

புகைப்படத்தைப் பார்த்து

நெகிழ்ந்துதான் போகிறான்

மனைவிக்குத் தெரியாமல்!

 

பக்தி!

அந்திமாலை நேரம்

ஆலய மணி ஒலித்தது

அடித்துப் புரண்டு

எழுந்தேன்

ஆடைகள் மாற்றினேன்

ஆறு மணிக்கெல்லாம்

ஆலயத்தில்

இருக்கவேண்டும்

அங்கே என் காதலி

எனக்காகக்

காத்துக்கொண்டிருப்பாள்!

 

உள்ளேன் ஐயா!

பல்லு வெளக்கி

குளிக்க வைத்து

தயார்படுத்தினாள் அம்மா!

ஸ்கூலுக்குப் போக

வேணாமா?

சீக்கிரம் கௌம்பு

அவசரப்படுத்தினார் அப்பா!

தூக்குச்சட்டிய

தேய்ச்சுக்கழுவி

கையில் திணித்தாள்

விவரம்புரியாத தங்கை!

சத்துணவு மிஞ்சிச்சின்னா

சாயங்காலம்

கொண்டுவாண்ணே

சாப்பிடுவோம்!’

 

சுமை!

பிறக்கும்முன்

வயிற்றில் சுமந்த

அம்மாவும்,

பிறந்த பின்

தோளில் சுமந்த

அப்பாவும்

பிள்ளையிடம் சொல்லி

வைத்திருந்தார்கள்

சுமை

சுகமாயிருந்ததென்று!

வளர்ந்தவுடன்

அக்குழந்தை

யாரிடம் சொல்வான்

முதுகு வலிக்கிறதென்று

புத்தகப்பையைச்

சுமக்கிறபோதெல்லாம்!

 

ஞானோதயம்!

வயதான காலத்தில்

பிள்ளைகள் காப்பாற்றுவார்கள்

என நம்பி நம்பி வாலிப வயதில்

ஓய்வின்றி உழைத்து உழைத்து

சொத்துகள் சேர்த்து

இறுதியில் அனைத்தையும்

பறித்துக்கொண்டு அவர்களாலேயே

துரத்தப்பட்ட தந்தை

இப்போதுதான் தனக்காகவும்

தன் வயதான மனைவிக்காகவும்

கொஞ்சமான சொத்தைப்

பெற்றுத் தர ஆண்டவனைத்

தேடிக்கொண்டிருக்கிறார்

ஆறடி நிலத்திற்காக!

 

முதல் சம்பளம்!

காலையில் எழுப்பி

மூஞ்சிக் கழுவி

குளிக்க வச்சு, டிபன் ஊட்டி

சாப்பாடு கட்டி, ஷூ மாட்டி

பள்ளிக்கு அனுப்பிய

தெரசா பாட்டிக்கும்,

அடாது மழை பெய்தாலும்

விடாது என்னைப்

பள்ளிக்குக் கூட்டிப்போய்

பத்திரமாய்க் கூட்டி வந்த

ஆட்டோ தாத்தா

ஆறுமுக ஐயாவுக்கும்,

மதிய உணவு வேளையில்

பிரியாணிச் சோறு

பகிர்ந்து உண்ட

பள்ளித் தோழன்

ஜமால் பயலுக்கும்,

மாலை வேளையில்

வீடு திரும்பியதும்

வயது பார்க்காமல்

என்னுடன் கிட்டி

விளையாடிய

எதிர் வீட்டு

சந்திரன் மாமாவுக்கும்

மறக்காமல் பரிசுப்பொருள்

வாங்கி வைத்திருக்கிறேன்

இன்று எனது

முதல் சம்பளம்!