news
கவிதை
பாளம் பாளமான நே பா ள ம்

சகதியும் அவதியும் நிறைந்த நேபாளம்!

அழுகையும் ஓலமும் கலந்த நேபாளம்!

அப்பாவி உயிர்களின் கண்ணீரில்

நனைந்து கிடக்கும் நேபாளம்!

இயற்கையின் சீற்றமா?

மனிதனின் அலட்சியமா?

ஆட்சியாளரின் தவறா?

அல்லது காலத்தின் கொடுமையா?

இந்தக் கண்ணீர் கதைக்கு

யார் காரணம்?

இயற்கையின் சீற்றம் என்றால்...

ஏன் திடீரென இப்படிச்

சீறிக் கொண்டிருக்கிறது?

ஓசோன் படலத்தில்

ஓட்டை விழுந்ததும்

இயற்கையின் சீற்றமா?

எல்லைகளில் கம்பீரமாய் நின்ற

பனிப்பாறைகள் உருகுவதும்

இயற்கையின் சீற்றமா?

பசுமை போர்த்திய

இயற்கைக் காட்சிகள்

அலங்கோலமாய் மாறுவதும்

இயற்கையின் சீற்றமா?

இல்லை... இல்லை...

மனிதா! உனது சுயநலமே

உன்னைக் காயப்படுத்துகிறது!

மனிதா! உனது ஆத்திரமும் ஆணவமும் உன்னையே

வாரிச் சுருட்டுகிறது!

அளவுக்கு மீறிய சுயநல ஆசைகள்...

கொஞ்சம் கூட வலிக்காத

சொகுசு வாழ்க்கைக்கான

முடிவில்லாத வேட்கைகள்...

சுரண்டிச் சுரண்டி...எடுத்து எடுத்து...

பூமியையே கரியாக்குகின்ற

படாடோப வாழ்க்கைகள்...

அடுத்த தலைமுறைக்குக் கூட

மிச்சம் வைக்காமல்

இயற்கையைச் சுரண்டும்

அதிகார வெறிகள்...

கொஞ்சம் கூட யோசிக்காமல்

காடுகளை அழித்து,

மலைகளை உடைத்து,

ஆறுகளை அடைத்து,

பூமியின் மார்பையே கிழிக்கும்

அத்துமீறல்கள்...

இயற்கைக் காற்றைத் தடுத்து

குளிரூட்டிய அறையில்

வாழும் மனிதா! நீ குளிர்கிறாய்!

உன் உலகம் தகிக்கிறது

மாசு குறைவான மின்  வாகனத்தில்

உலவுவதாகக் கனவு! ஐயோ பாவம்!

எங்கோ டன் கணக்கில்

நிலக்கரி எரிந்து புகையாய்

போய்க்கொண்டிருக்கிறது

பின்னர் நாம் கேட்கிறோம்...

ஏன் இந்த வெள்ளம்?

ஏன் இந்த நிலச்சரிவு?

ஏன் இந்த அழிவு?

இயற்கை பழிவாங்கவில்லை மனிதா... நீ செய்த காயங்களுக்கு

இயற்கை பதில் சொல்லிக் கொண்டிருக்கிறது!

இன்று நேபாளம் அழுகிறது...

நாளை யார் அழுவார்கள்?

இன்று பூமி பிளந்திருக்கிறது...

நாளை நம் வாழ்வும் பிளந்தால்?

இயற்கையைக் காப்போம்!

இயற்கையோடு வாழ்வோம்!

அடுத்த தலைமுறைக்காக

இந்தப் பூமியை மிச்சம் வைப்போம்!

பாளம் பாளமான நேபாளம்

நமக்குச் சொல்லும் பாடம் இதுவே...

பூமியை அழித்தால்,

அழிவது பூமி மட்டுமல்ல...

மனித இனமுமே!

news
கவிதை
குருவே உம்மைத் தொழுதே பணிந்தோம்! (செப்டம்பர் 05)

ஆசிரியப் பெருமக்களுக்கு இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!

அறிவின் விளக்கே ஆசிரியப் பெருமானே!

வழிகாட்டும் தெய்வமே தியாக உருவமே!

இருள்நீக்கும் ஜோதியே இறைவனின் வடிவமே!

அன்பின் நிறைவே அருளின் நிறைகுடமே!

இனிதாய் கற்பித்து இதயம் தொடுபவரே!

இயலாக் கனவினையும் நனவாக்கும் நாயகரே!

கிரியா ஊக்கியாய் இயங்கும் ஆற்றலே!

பிரியா உறவை வணைத்த ஏந்தலே!

விலைகொடா இலக்குகளை எட்டிட வைப்பவரே!

சொற்களால் போற்ற இயலா மேன்மையரே!

வாழ்நாள் முழுதும் வழிகாட்டும் தீபமே!

பாரும் போற்றும் தியாகத்தின் உருவே!

உயரிய அறிவினை உவப்பாய் தருபவரே!

ஞானப் பாலினை நயம்பட புகட்டுபவரே!

வாழ்வின் மதிப்பை வளமாய் சேர்ப்பவரே!

நற்பண்பு விதைகளை நெஞ்சில் விதைப்பவரே!

ஒழுக்கமும் சீர்மையும் உணர்த்தும் வழிகாட்டியே!

சீரிய குணங்களைச் செதுக்கும் சிற்பியே!

அர்ப்பணிப்பு சேவைக்கு அகிலமே போற்றுமே!

ஈடில்லாத் தியாகத்தை இதயமே வணங்குமே!

பயிலும் பாடத்தைப் பண்புடன் நடத்துபவரே!

ஆர்வத் தீயை அகத்தில் மூட்டுபவரே!

நாளுமே வளர நன்மையைக் கற்பிப்பவரே!

பள்ளிப் பயணத்தைப் பரவச மாக்குபவரே!

சலிப்பில்லா முகத்தால் புன்னகை தருபவரே!

மனத்தின் சுமையினை மகிழ்வாய் மாற்றுபவரே!

வெற்றிப் பாதையை வெளிச்சம் காட்டுபவரே!

குருவே உம்மைத் தொழுதே பணிந்தோம்!

news
கவிதை
மனிதம் மேம்பட...

படைப்பின் சிகரம் மனிதம் - அதன்

மாண்பை மதித்தல் புனிதம்

உணர மறுத்தல் அநீதம் - என்றும்

மலர் வைத்தல் அதீதம் (மேன்மை)

 

குடும்பம் என்பது கதம்பம் - முறையே

தொடுத்தால் இன்பம் ததும்பும்.

காலம் கடந்தால் வெதும்பும்- அன்பு

கனிந்தால் உறவுகள் அரும்பும்.

 

மக்கள் செல்வம் பேறு - வேண்டாமென

மறுத்தல் பெரும் தீது

ஆணும் பெண்ணம் ஈடு-பாலினம்

பகுத்தல் சமூகக் கேடு.

 

உயர்ந்தவர் தாழ்ந்தவர் உண்டோ? - ஆறு

அறிவவன் மானிடப் பண்போ?

இம்மதம் அம்மதம் எனினும் - இறையுள்

சங்கமம் அல்லாத ஒன்றோ?

 

உறவுகள் மேம்படவேண்டும்- வேண்டாப்

பிளவுகள் தீப்படவேண்டும்.

அனைவரும் நலம்படவேண்டும் - சுயநல

அழுக்குகள் கழிபடவேண்டும்.

 

சேர்ந்து வாழ்தல் நன்று - ஆதலின்

சோதரம் பேணுவோம் நின்று.

செயற்கை நீக்கம் கண்டு - பயனுறு

இயற்கையை மீட்போம் வென்று!

news
கவிதை
வாழ்வுக்கான பேரணி

பேரணி இது பேரணி

வாழ்வுக்கான பேரணியில்

வாழ்வியலைப் போற்றி

வாஞ்சையுடன் நடந்திடுவோம்!

சூது நிறைந்தே சூழ்ந்தாலும்

சூழ்ச்சி வெல்ல அணி செய்வோமே!

கருக்கலைப்பு என்னும்

காலக் கொடுமையை உணர்த்தியே

காரிருளை அகற்றியே ஒளியில் மிளிர

அறத்தை விதைத்து வாழ்ந்திடுவோமே!

அன்பினைச் சுவைக்க

ஏங்கும் இதயங்களுக்கு

அரணாய் என்றும் நின்றிடுவோமே!

இறை நம்பிக்கையே

நம் கொடியாகப் பறக்கட்டுமே!

பகையறுக்கும் நற்குணமே

நம் படையாக நடைபோடட்டுமே!

உலகநீதியில் நில்லாது இறைநீதியில்

நிமிர்ந்தென்றும் நடந்திடுவோமே!

உயிரை மறுக்கும் ஒவ்வொரு செயலும்

வாழ்வின் வேதனை என்றே

கூக்குரலிடுவோமே!

உயிரை மதித்து வாழ்வில் சிறக்கும்

மனங்களாலே வானரசின்

விதைகளை விதைப்போமே!

இறைவன் தந்த இவ்வாழ்வில்

இருட்டு எண்ணங்கள்

இல்லாமல்

இனிதே செல்வோமே!

வாழ்வுக்கான பேரணியில்

வாகை காணவே

நடைபோடுவோமே!

news
கவிதை
சமர்ப்பணம்

கருவறையைக் கல்லறையாக்கிய தாய்மார்களுக்கு இக்கவிதை ஒரு சமர்ப்பணம்!

கருவாய் உருகொடுத்தவளே!

என்னைக் கழுவித் தூக்கி எறியத் துணிந்தாள்,

பலரின் வற்புறுத்தலால் நீயும் என்னை

வேண்டாம் என்றாயே ஏன்?

என் சின்ன இதயம் எப்போது

தன் துடிப்பை நிறுத்தும்

எனத் துடித்தாய் ஏன்?

என்னை அனுப்பியவரிடம்

நான் கூக்குரலிட்டேன்.

யாரோ செய்த தவறுக்கு

எனக்கு ஏன் இந்த நிலைமை?

கண்மை இட்டு அலங்கரிக்க

வேண்டிய என்னை

நீயும் அலங்கரித்தாய் சவப்பெட்டியில்!

காரணமின்றிக் கலைந்து போனேன்

உருவில்லாமல்...!

மீண்டும் ஜென்மம் என்று ஒன்று இருந்தால்

என்னிடம் வா தாயே,

உன்னைப் போல் இல்லாமல்!

என் கருவறையில் உனக்கு உருகொடுத்து

இவ்வுலகிற்கு உன்னைப்

பரிசாய் தருவேன்!

news
கவிதை
வல்ல தேவன் அழைக்கின்றார்!

வழியும்  உண்மையும்  நானென்றே

                வல்ல  இயேசு  மொழிந்தாரே!

வழியின்  துணையாய்  இறைச்சொற்கள்

                விழிபோல்  நம்மைக்  காத்திடுதே!

 

பாவ  இருளில்  வாழ்வோர்க்குப்

                பரமன்  அருளைப்  பகிர்வதற்கும்

காவல்  தூதர்  பணியாற்ற

                காக்கும்  இளையோர்  வருவீரே!

 

திராட்சைக்  கொடியாய்  வாழ்ந்திங்கே

                தேவன்  கனியைச்  சுவைப்பதற்குத்

திரட்டித்  தரவே  இளையோரே

                திரண்டு  வாரீர்  பணியாற்ற!

 

இறைவன்  பணியை  ஆர்வமுடன்

                இமைபோல்  நாளும்  வளர்த்திடவும்

துறவு  வாழ்வின்  சபைகளிலே

                தொடர்ந்து  பணியை  ஆற்றிடலாம்!

 

அழியா  இல்லம்  விண்ணகத்தை

                அடையும்  வழிகள்  இவையென்றே

வழியைக்  காட்ட  இளையோரை

                வருக  என்றே  அழைக்கின்றோம்!

 

கல்வி  மற்றும்  மருத்துவத்தைக்

                கடவுள்  பணியாய்ச்  செய்வோமே!

வல்ல  தேவன்  அழைக்கின்றார்

                வாரீர்  மேய்ப்புப்  பணியாற்ற!