news
கவிதை
தவக்காலம் ஆண்டவர் அருள்பொழியும் காலம்!

ஆண்டவர் அருள்பொழியும் காலம் அதுவே தவக்காலம்!

மாண்பினை நாம்பெறும் காலம் மீட்பரே அருளிய காலம்!

உன்னத மாந்தராய் வாழ ஒறுத்தலைப் புரிந்திடும் காலம்!

விண்ணக வாழ்வினில் செல்ல மன்னிப்பு ஏற்றிடும் காலம்!

 

பல்வகை திறனிருந்தாலும் உள்ளத்தை உருக்கிடவேண்டும்!

நல்லிசை போல் நாம் வாழ நம்மையே உணர்ந்திடவேண்டும்!

பாவத்தின் கவர்ச்சியைவெல்ல பரமனில் இணைந்திடவேண்டும்!

சாபத்தின் மோகத்தைக் கொல்ல திருநூல் செபம் செய்யவேண்டும்!

 

ஒப்புரவாவோம் நாமே; எப்பிழை பொறுப்போம் தாமே!

தப்பறை கொள்கைகள் தீங்கே; இப்புவிவாழ்வோம் பாங்கே!

ஒப்புயர்வற்ற மறையை உயிரென எண்ணி வளர்ப்போம்!

இப்புவிவாழ் எளியோர் ஏற்றம்பெற்றிட உழைப்போம்!

 

தனக்கென வாழ்ந்திட வேண்டாம்;

                         பிறர்க்கென வாழ்ந்திட பார்ப்போம்!

பிணக்குகள் வழக்குகள் தவிர்ப்போம்; பிழைகளை,

                         குறைகளைப் பொறுப்போம்!

நாற்பது நாள்களும் இணைவோம்; நல்லறம் புரிந்திட நினைப்போம்!

பயனுள்ளதில் படிப்பதை நிலைப்போம்;

வாழ்வதில் கொடுத்து மகிழ்வோம்!

news
கவிதை
இலக்கியத் தமிழே வணக்கம்!

எழுத்துகளின் அழுத்தங்களினால்

செழித்து நிற்பவை செந்தமிழ் இலக்கியம்- தமிழன்னை

கழுத்து மாலைப் பொன்னின் மணிகளாய் 

கறுத்துப் போகாது மிளிர்பவை இலக்கியம்!

பழுத்த பண்பாடு, வரலாறு, கலாச்சாரம்

அனைத்து நிலைகளை விளக்கிடும் இலக்கியம்!

ஒழித்துப் போட ஒருபகை வரினும்

உயிர்த்தே நிற்பவை நம் தமிழ் இலக்கியம்!

               

வாழ்க்கையின் பல்வேறு கூறுகளனைத்தையும்

வழுவாது வடித்து அளிப்பவை இலக்கியம்!

வாழ்வாங்கு வாழ்ந்தோர் பெருமையால் நமக்கு

வழிகாட்ட எழுதப் பட்டவை இலக்கியம்!

வீழ்வேது நம் தாய்மொழிக்கென்றே

வீரமுடன் மார்தட்டிச் சொல்வது இலக்கியம்!

வீரமும் காதலும் விளைந்த வரலாற்றை

வெளிச்சமிட்டுக் காட்டிடும் இலக்கியம்!   

 

முன்னோர்கள் வாழ்ந்த வரலாறு அறியலாம்-அவர்

முழுமூச்சாய் உயர்ந்த பின்னணி அறியலாம்

நடையுடை பாவனை நாகரிகம் அறியலாம்

நல்மனத்தோரவர் நற்குணம் அறியலாம்

அன்னார் பெற்ற அதிசயங்கள் அறியலாம்

ஆற்றலோ டவற்றில் மீண்டதை அறியலாம்

எந்நாளும் நம் தாய்த் தமிழ் மண்ணுக்கு

எப்படிப் புகழ் சேர்ந்ததென அறியலாம்

     

சங்க இலக்கியமும் நீதி இலக்கியமும்

பழங்கால இலக்கியப் பெருமையைக் கூட்டும்

பக்தி காப்பியம் உரைநடை புராணம்

தல புராணம் மற்றும் இசுலாமிய இலக்கியம்  

இடைக்கால இலக்கியப் பட்டியல் காட்டும்

கிறித்தவ இலக்கியம் புதினம் கட்டுரை

சிறுகதை புதுக்கவிதைகளோடு

ஆராய்ச்சிக் கட்டுரைகள் இக்கால ஏற்றம்!

 

எழுத்துகளெல்லாம் தொகுக்கப்பட்டு

எழுத்துக் கலையால் இலக்கியமாயிற்று

எடுத்துப் படிக்கும் நூல்களுக்குள்ளே

இழந்திடும் மனத்தினால் இரசனை கூடிற்று

அலுத்துப்போன தொலைக்காட்சித் தொடர்களால்

அன்றாட மணித்துளிகள் வீணாய்ப் போயிற்று    

அறிவும் ஆன்மிகமும் வளர்த்த நூல்களே

ஆன்றோர்கள் தோன்ற அடித்தளமாயிற்று!

news
கவிதை
அன்னையின் தியாகம் தந்த தெளிவு!

இல்லத்திலிருந்து இறைவனுக்காய்

அன்னையின் - அழைப்பின் பயணம்.

ஓர்  இல்லத்தின் அமைதியில்

அவள் வாழ்வு தொடங்கியது.

அன்பும் பொறுப்பும் அன்றாட  வாழ்வின்

மொழியாயிருந்தது. உறவுகள் சூழ்ந்த

வாழ்க்கை, கனவுகள் கைப்பிடித்த பாதை,

பெண்மையின் முழுமை இல்லறத்தில்

மலர்ந்த நாள்கள்! ஆனால்,

அந்த அமைதிக்குள் மற்றொரு குரல் ஒலித்தது.

உலகத்தின் குரல் அல்ல;

இதயத்தின் ஆழத்தில் வந்த அழைப்பு!

இறைவன் மெதுவாகக் கேட்டார்

நீ என்னை முழுமையாய் அன்பு செய்கிறாயா?’

அந்தக் கேள்வி அவள் ஆன்மாவை உலுக்கியது.

விட்டு விடுதல் எளிதல்ல,

பிரிவுகள் கண்ணீரைத் தந்தன. ஆனாலும்,

அவள் தேர்ந்தது பாதுகாப்பை அல்ல

- விசுவாசத்தை! தெரிந்த பாதையை அல்ல -

இறைவன் காட்டிய வழியை!

துணிந்து கூறினாள், அந்தத் தைரியமானஆம்!’

அந்தஆம்ஒரு வரலாற்றின் தொடக்கமானது.

இல்லற வாழ்வைத் தாண்டி

துறவின் வாசலுக்குள் நுழைந்தாள்,

அனைத்தையும் விட்டாள்.

ஆனால், அடையாளம் கண்டாள்.

உலக அன்பை விட்டு

இறைவன் அன்பை அணைத்தாள்,

ஒருவருக்காய் வாழ்ந்தவள்

திக்கற்றவர்களுக்காய் அனைத்தும் ஆனாள்.

அவள் துறவு தப்பிச் சென்ற ஓட்டமல்ல;

அது முழுமையான அர்ப்பணம்.

முழு மனத்துடன் எடுத்த முடிவு!

அன்னையே! உன் பயணம் சொல்கிறது...

அழைப்பு எங்கும் வரலாம்,

அதை ஏற்கத் தைரியம் வேண்டும்;

உன் தியாகத்தின் சாட்சியம்

என் பாதையை ஒளிரச் செய்யட்டும்!

news
கவிதை
அணையா விளக்கே அன்னை எலிஸ்வாவே!

கேரள மண்ணில் உதித்த கார்முகிலாம் ஒளிவிளக்கே!

கார்மல் சபையின் சிறந்த  முத்தே  மங்கா விளக்கே!

புனித தெரேசாவின்  கார்மலின் முதல் விளக்கே!

தொம்மனில் தோன்றிய முத்தான மணி விளக்கே!

இறையன்பை இதயத்தில் ஏந்திய காரிகை நீ!

ஈசன் வழியில் நிலையாய் அர்ப்பணித்த உயிர் நீ!

அன்பின் வழியே அவனியில் காட்டிய அருள் நீ!

CTC-சபையைத் தரணிக்குத் தந்த காரிகை நீ!

செபத்தைச் சபையின் மூச்சாக்கிய முகிலே!

சேவையை உலகில் சாட்சியாக்கிய முகிலே!

தாழ்மையில்  உருவெடுத்த தன்னிகரில்லா முகிலே!

தியாகமதைத் தீர்க்கமாய் வாழ்வாக்கிய முகிலே!

பெண் கல்விக்கு வித்திட்ட வித்தகியேசுடர் விளக்கே!

பின்னடைந்தோர் உயர்வடைய விடியலான அருள் விளக்கே!

இரக்கமும் எளிமையும் செறிந்த அருள் விளக்கே!

இடரிலும் அஞ்சா நெஞ்சம்  கொண்ட சுடர் விளக்கே!

அருளாளர்  அன்னை எலிஸ்வா தாயே!

புனித நிலைக்கு உயர்ந்திட வேண்டுகிறோம் யாமே!

எங்கள் செபம்  உம் பாதம் சேருமே!

அணையா விளக்காய் எம்மை வழிநடத்துமே!

news
கவிதை
கரும்பாக இனிக்கட்டும்!

சமூகத்தில் தலைவிரித்து ஆடும்

சாதி மத மோதல்கள்...

இளையோரை வலைவிரித்து நாடும்

மாயைத் தரும் பிம்பங்கள்...

சிறுவர்களைச் சீரழித்துப் பாயும்

போதை வினைக் கேடுகள்...

சமூக வலைத்தளங்களில் சீறும்

தீங்கு தரும் வன்மங்கள்...

போகியோடு எரியட்டும்! போலியாக ஒழியட்டும்!

சமத்துவம் சகோதரத்துவம் சங்கதிகள் யாவும்

வெறும் ஏட்டில் மட்டுமல்லாது - ஒவ்வொருவர்

மன வீட்டிலும் பொங்கட்டும்!

சொல் செயல் எல்லாமும்

கரும்பாக இனிக்கட்டும்!

செல்வச் செழிப்பு எல்லாம்

போதும் என நிறையட்டும்!

தை பிறந்தால் வழி பிறக்கும்

எனும் மொழி மெய்யாகட்டும்!

மொத்தத்தில் எல்லாருக்கும்

எல்லாமும் கிடைக்கட்டும்!

news
கவிதை
சென்னை – மயிலை உயர் மறைமாவட்டத்தின் முதல் பெண் ஊழியர்

திருவள்ளூர் கீழ்ச்சேரி

திசையறியா சிற்றூரில்

ஆதரவிலா மாதருக்கு

அன்புக்கரம் தந்தாயே!

வழிதெரியா மக்கட்கு

வழிகாட்ட வந்தாயே!

வாழ்வளிக்க வேண்டுகிறேன்

வரமீந்து காப்பாயே!

பெண்களுக்குக் கல்விவேண்டிப்

பெருமுயற்சி எடுத்தாயே!

பெண்கல்விபெருமைபெற

பெரும்பாடு பட்டாயே!

கைம்பெண்ணாய்இருந்ததாலே

காயங்கள் ஏற்றாயே!

ஞாலத்தில் இருள்நீக்கி

நல்விளக்காய் ஒளிர்ந்தாயே!

நினைவென்னும் மண்டபத்தில்

நித்தமும்யான் செபித்திடவே

நீண்டுவரும் தேவைகளை

நித்தியமும்                 தருவாயே!

உன்பார்வை ஒளிகண்டு

உன்னருகில் வருதற்கு

புன்சிரிப்பால் அழைப்பாயே!

புத்தொளியால் அணைப்பையே!

அம்மாவுன் நினைவிடத்தில்

அன்புமணம் வீசுதம்மா!

கருணைமிகு கண்களிலே

இரக்கவொளி பாயுதம்மா!

அருட்பார்வை நாற்புறமும்

அலையலையாய்த் தாவுதம்மா!

வறியவனாய் நிற்கின்றேன்

வாழ்வளித்துக் காப்பாயே!

அம்மாநின் அருகினிலே

ஆதரவிலாப் பிள்ளைகளை

அன்பாக அனைவரையும்

அரவணைத்து மகிழ்வாயே!

எப்பக்கம் பார்த்தாலும்

எழில்தவமும் உன்முகமே!

எந்நாளும் வருவோரை

இருக்கரத்தால் காப்பாயே

உவமையிலா நற்றாயே!

உன்னையான் போற்றுகிறேன்

கண்ணொளியால் காப்பதற்கு

கருணையொலி காட்டிடம்மா!

நன்னெறியில் நிற்பதற்கு

நாளுமுனை வேண்டுகிறேன்

நன்மைபல பலர்க்கீந்து

கண்ணிமையாய்க் காப்பாயே!

தனிமரமாய் நின்றன்று

கனிமரமாய்ச் செழித்தாயே!

பணிச்சுமையை ஏற்றவர்க்குப்

பக்கபலம் ஆனாயே!

அணிகள்பல இன்றமைய

அன்றேநீ உழைத்தாயே!

அப்பப்பா! உன்னுழைப்பால்

அகிலமெலாம் நிலைத்தாயே!

ஞானம்நிறை ஒளிநீயே!

மனவானின் குளிர்நீயே!

வானொளிரும் மதியாக

வலம் வந்த தாய்நீயே!

திக்கெட்டும் ஓங்கிநிற்கும்

தீந்தமிழின் சுவை நீயே!

தினமுன்னை வேண்டுகிறேன்

வேண்டுவரம் ஈவாயே!