slider slider slider
நம் வாழ்வு
நம் வாழ்வு இதழின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்
நம் வாழ்வு
நம் வாழ்வு - நல்லவர்களின் நாடித்துடிப்பு
நம் வாழ்வு
நல்லவர்களின் நாடித்துடிப்பு
அண்மைச் செய்திகள்
விறகுகளாய் எரிக்கப்படும் வீணைகள் (ஜூலை 26: உலக தாத்தா-பாட்டியர் தினம்)
சிறப்புக்கட்டுரை
விறகுகளாய் எரிக்கப்படும் வீணைகள் (ஜூலை 26: உலக தாத்தா-பாட்டியர் தினம்)

பயன்படுத்திவிட்டு வீசி எறிந்திடுஎனும் கோட்பாடு இன்று ஏறக்குறைய உலகத்தின் வாழ்வியல் நடைமுறை என்றாகிவிட்டது. ஒரு பொருளோ, மனிதரோ பயன்படுகிற வரைதான் முக்கியம் என்பதை ஏற்கவேண்டிய கட்டாயத்திற்குக் காலம் நம்மைக் கொண்டு வந்துவிட்டது. எப்போது ஒரு பொருளோ, மனிதரோ நமக்கு இனி பயனில்லை என உணரும்போது தூக்கி எறிந்துவிட எவ்விதத் தயக்கமும் மனிதருக்கு ஏற்படுவதில்லை.

நவீன உலகின் தொழில்நுட்பமும், சமூக ஊடகங்களும் வாழ்க்கை முறைகளும் உறவு, மதிப்பீடு, அறம், ஒழுக்கம், நன்றியுணர்வு, வாழ்வியல் மாண்பு, மனிதநேயம், இயற்கை நேசம் என நீள்கிற மானுடக்கூறுகளை அழித்து, ஒழித்து வருகின்றன. அதன் விளைவாக, மனிதரை அதுவும் குறிப்பாக, வயது மூப்பின் காரணமாக உடல் நலிவுற்ற மூத்த குடிமக்களை முற்றிலும் புறக்கணிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. தன்னைப் பெற்றவர்கள், தனக்கு உயர்நிலையைத் தந்தவர்கள், வசதியான வாழ்வுக்கு வழிவகை செய்தவர்கள், தம் தியாகத்தால் நம்மை ஆளாக்கி வளர்த்தவர்கள் என யாராக இருந்தாலும் அவர்கள் முதுமையை அடையும்போது அவர்களை மூலையிலே முடக்கிப்போடுவது வேதனை நிறைந்த உண்மைகளாய் வீட்டுக்கு வீடு தலை நீட்டுகிறது.

குடும்பம் மனித வாழ்வின் நாற்றங்கால்; அடிப்படை விழுமியங்கள் கட்டமைக்கப்படும் அன்புப் பாசறையே குடும்பம்! சமூகத்தின் முதல் அணுக்கலம் என்றும் மனுக்குலத்தின் மூல மற்றும் அடிப்படைப் பள்ளி என்றும் குடும்பத்தை வரையறுக்கிறார் திருத்தந்தை லியோ. குடும்பத்தைவீட்டுத் திரு அவைஎனக் குறிப்பிடும் திருத்தந்தை லியோ, வீட்டில் மேசையில் உணவு பகிரப்படுவதுபோல நம்பிக்கை தலைமுறை தலைமுறையாகக் கைமாற்றப்படுகிறது எனப் பாரம்பரியக் கத்தோலிக்கக் கோட்பாட்டை நிலைநிறுத்துவதோடு, குடும்பத்தில் தாய்-தந்தையர் ஓரங்கட்டப்படுவதை எடுத்துரைத்து, பெற்றோர் எனும் புனித நிலைக்குக் கண்ணியத்தை மீட்டெடுக்கும் சமூகக் கொள்கைக்கு அழைப்பு விடுக்கிறார்.

திருத்தந்தை லியோ மூத்த குடிமக்கள் மற்றும் முதுமையின் மதிப்பு குறித்த ஆவணங்களையும் ஆண்டு உரைகளையும் வழங்கியுள்ளார். மூத்த குடிமக்களைவாழ்க்கை ஆசிரியர்கள்எனக் குறிப்பிட்டு, அவர்கள் திரு அவையின் சிறப்பு ஆசிர் என வர்ணிக்கிறார். தாத்தா, பாட்டி மற்றும் மூத்த குடிமக்கள் உலக தினத்தில் கண்ணியம், சமூகம் மற்றும் தனிமையை எதிர்த்துப் போராடுதல் ஆகிய கருப்பொருள்களில் கவனம் செலுத்தி, வருடக் கொண்டாட்டங்களில் மூத்த குடிமக்களைப் போற்றி செய்திகள் வெளியிட்டு வருகிறார். திருத்தந்தை பிரான்சிஸ் எழுதியஅமோரிஸ் லேத்தியாஎனும்அன்பின் மகிழ்ச்சிதிருமடல் வழியாகக் குடும்ப வாழ்க்கை குறித்த விரிவான வழிகாட்டுதலை வழங்குகிறார். இறுக்கமான விதிகளை விடுத்து, இரக்கமும் கருணையும் கொண்ட குடும்பங்களைக் கட்டிக்காப்பதே திரு அவையின் முக்கியப் பணி என வலியுறுத்துகிறார்.

திரு அவையின் முதன்மைக் கரிசனையாக மூத்த குடிமக்களைப் போற்றி வந்தாலும், குடும்ப வாழ்வின் நலிவு அத்தனை வாழ்வியல் அறங்களையும் பின்னடைய வைக்கிறது. கூட்டுக் குடும்பங்களின் வீழ்ச்சி ஒட்டுமொத்த மானுட உறவுகளுக்கே உலை வைத்துவிட்டது. திருமணம் எனும் உயரிய அருளடையாளத்தால் இணைக்கப்பட்டு, புனித உடன்படிக்கையாக அமையவேண்டிய இல்லற வாழ்வு, இன்று பல சவால்களைச் சந்திக்கிறது. திருமண உறவை மீறிய சேர்ந்து வாழ்தல் கலாச்சாரம், மாற்று இணையரோடு வாழ்தல், ஒரே பாலினச் சேர்க்கை, திருமணப் பந்தத்தை முறித்தல் போன்ற இல்லறத்திற்கு உலை வைக்கும் காரணிகள் குடும்ப வாழ்வைச் சிதைப்பதோடு, மூத்தோரையும் பெற்றோரையும் மாண்புடன் பேணுதல்வேண்டும் என்கிற மானுட அறத்தைக் குழிதோண்டிப் புதைத்து விடுகிறது.

கூட்டுக் குடும்ப வாழ்வை முடிவுக்குக் கொண்டு வந்த அன்றே, மூத்த குடிமக்களைப் பேண வேண்டும் என்னும் அன்புக் கடமை முடிவுக்கு வந்துவிட்டது. முன்காலத்தில் தாத்தா-பாட்டி, அம்மா-அப்பா, பிள்ளைகள்-பேரப்பிள்ளைகள் என மேன்மைமிக்க உறவு முறைகள் குடும்பத்தை அலங்கரித்தன. கணவன்-மனைவியிடையே குடும்பத்தில் விரிசல்கள் தொடங்கும்போதே குடும்பத்திலிருக்கும் மூத்தவர்கள் தலையிட்டு அதனைக் கச்சிதமாகத் தீர்த்து வைப்பதுண்டு. வக்கீல்கள், வழக்கு, நீதிமன்றம், விவாகரத்து எனும் தளங்களுக்குக் குடும்ப வாழ்க்கை சென்றதில்லை. குடும்பத்தில் மூத்தவர்களின் அறிவுரைகளும் கண்டிப்பும் உறவுகளை வலுப்படுத்தின. பிள்ளைகளைப் பராமரிக்க வாடகை மனிதர்களை அமர்த்தியோ, மழலைப் பள்ளிகளில் குழந்தைகளைச் சிறைவைக்க வேண்டிய அவசியமோ ஏற்படவில்லை. தாத்தா-பாட்டியரின் பாசமிகு பராமரிப்பில் வளர்ந்த குழந்தைகள் ஆரோக்கியமான குடும்பத்தைக் கட்டிக் காத்து வந்தார்கள். தாத்தா-பாட்டி கதைகள், வைத்தியங்கள், பராமரிப்புகள் இன்று காணாமல் போய்விட்டன.

தாத்தா-பாட்டியரின் இடங்களை இன்று தொலைக்காட்சிப் பெட்டியும் கைப்பேசியும் பிடித்துக்கொண்டன. பாட்டி வைத்தியம் இருந்த இடத்தை மாத்திரை, மருந்துப் பெட்டிகள் ஆக்கிரமித்துக்கொண்டன. உறவுகள் உடைந்து விடாமல் சேர்த்துவைக்க இவர்கள் இல்லாததால் தம்பதியரைப் பிரித்து வைக்க வக்கீல்களும் நீதிமன்றங்களும் வந்துவிட்டன.

வீடுகளில் எஞ்சியிருக்கிற மூத்தவர்கள் பேணப்படும் நிலை மிகவும் கவலைக்குரியது. ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்களாவது மாதத்தின் தொடக்கத்தில் பணத்திற்காகச் சிறிதளவு பராமரிக்கப்படுகிறார்கள். எந்த வருமானமும் இன்றி தங்கள் உடைமைகளை எல்லாம் சிந்திக்காமல் பிள்ளைகளுக்குக் கொடுத்துவிட்டுப் பிச்சைக்காரர்களாகத் தன்மானம் இழந்து வீடுகளில் சித்திரவதைகளைத் தினம் தினம் அனுபவிக்கும் அபலைகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல் உயிரோடு வீடுகளில் கல்லறை வாழ்க்கை நடத்தும் பெரியவர்களின் நிலையைக்  கவனத்தில் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.

வயது முதிர்வால் ஏற்பட்ட முதுமை, பார்வை மங்கி, செவி மந்தமாகி நிரந்தர நோயாளராகிவிட்ட நிலையில், மூத்த குடிமக்கள் படும்பாடு பரிதாபமானது. தங்கள் உழைப்பால் நிலம் வாங்கி, பட்டினி கிடந்து கட்டிய வீட்டில் அவர்களுக்கு இடம் தரப்படுவதில்லை. வயதான பெற்றோரை வீட்டுக்கு வெளியே குடிசை அமைத்துக் குடி வைத்திருக்கிற பிள்ளையர் தங்களின் எதிர்காலத்தைத் தெரிந்திருப்பதில்லை. இறந்த காலத்தில் இவர்களை வளர்த்திட இன்றைய முதியவர்கள் செய்த தியாகத்தையும் நிகழ்காலத்தில் நினைப்பதில்லை. பேரப்பிள்ளைகளாக உறவு பாராட்ட வேண்டிய குழந்தையரை முதியோரிடமிருந்து பிரித்து வைப்பதையும், அவர்களைப் பற்றி குழந்தையரிடம் தவறாகச் சொல்லித் தந்து இழிவுபடுத்துவதையும் சில இளம்பெற்றோர் இயல்பாகச் செய்து வருகின்றனர். பழுத்த ஓலையைப் பரிகசிக்கும் இந்தப் பச்சை ஓலையின் நிலை, நாளை பரிதாபம் எனும் எதார்த்தத்தை ஏனோ உணராமல் போகிறார்கள்.

மூத்த குடிமக்களின் நிலைமையைச் சாதகமாக்கிக் கொண்டு அவர்களின் ஓய்வூதியம், அரசு தரும் உதவிகள், அவர்களின் சேமிப்பு ஆகியவற்றைப் பிடுங்கும் ஈனச் செயல்களிலும் சில குடும்பத்தினர் ஈடுபடுவதுண்டு. முதியோரின் உடல் நலிவைப் பயன்படுத்தி, அவர்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தாக்கும் நிகழ்வுகளும் சில வீடுகளில் நடப்பதுண்டு. மூத்த குடிமக்களைச் சுமையாகக் கருதிக்கொண்டு அவர்களுக்கு உணவைத் தராமல், உடல்நலம் பராமரிக்காமல், தூய்மையான ஆடைகளைத் தராமல் கொடுமைப்படுத்தும் கூட்டத்திற்குச் சட்டத்தின் மூலம் தண்டனை பெற்றுத் தரவேண்டியது இன்றைய தேவையாகும்.

படுக்கை நோயாளராக இருக்கும் மூத்த குடிமக்களைப் பராமரிப்பதில் சவால்கள் உள்ளன. ஆயினும், அவர்கள் மனிதர்கள், நமக்கு உடல் தந்து வாழ்வு தந்த நமது உதிரத்தின் உதிரம் என்கிற உறவு உந்துதல் இருந்தால் மட்டுமே அவர்களைக் கரிசனையோடு கவனிக்க முடியும். மொத்தத்தில், மூத்த குடிமக்களின் உடைமைகளை மொத்தமாகக் கபளீகரம் செய்துகொள்கிற அவர்களின் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் அவர்களை மனிதராகக் கருத மனமில்லாமல் போவது ஏன்? இவர்கள் வீணைகள்; எரிக்கப்படுகிற விறகுகள் அல்ல என்பதை உணரவேண்டும்.    

வீடுகளில் இருக்கும் மூத்த குடிமக்கள் வீட்டிற்குப் பாரங்கள் அல்ல; வீட்டின் விளக்குகள். அவர்கள் ஒரு காலத்தில் ஆற்றல்மிகு ஆளுமைகளாக இருந்தவர்கள். தங்கள் உழைப்பாலும் முயற்சியாலும் தியாகத்தோடு குடும்பத்தை நிலைநிறுத்தியவர்கள். நாம் இன்று காணும் உயரங்களுக்கு அன்றைக்குத் துயரங்களைச் சுமந்தவர்கள். இவர்கள் எதற்கும் உதவாதவர்கள் என்று ஊரைக் கூட்டி ஊளையிடுகிறவர்கள், அவர்கள் போட்ட உணவுப் பிச்சையாலும், கல்விப் பிச்சையாலும் கரையேறியவர்களே! இன்று இவர்களின் பெயருக்குப் பின்னால் அலங்காரமாய் அமர்ந்திருக்கும் பல்கலைக்கழகத்தின் பட்டங்கள் அவர்களின் வியர்வைத் துளிகளின் மொழிபெயர்ப்பு. குடியிருக்கும் கோபுர வீடுகள் அவர்களின் கண்ணீரும் செந்நீரும் கலந்த கலவை. அவர்களின் முகத்தில் இயற்கை வரைந்திருக்கின்ற நெற்றிச் சுருக்கம் இன்றைய தலைமுறையின் முகவரி.

இன்றைய வசதியான வாழ்க்கை விருட்சத்திற்கு வேர்களாக அமைந்திருப்பது நம்மால்பயனற்றவர்கள்எனத் தூக்கி எறியப்படும் மூத்த குடிமக்களே. வேர்களை வெட்டி எறிந்துவிட்டு மரக்கிளைகளில் மகரந்தச்சேர்க்கை நடத்துகிறோம். நம்மால் புழுதியில் வீசப்படுகிற இந்தப் புல்லாங்குழல்கள் நமக்குத் தாலாட்டு பாடல் இசைத்தவை. அவர்களின் தொங்கிய தோள்களில்தான் இன்றைய இளையோருக்குத் தொட்டில் கட்டப்பட்டிருந்தது. வீடுகளில் மனிதப் பட்டியலிலிருந்து நம்மால் விலக்கி வைக்கப்பட்ட இவர்கள்தான், நாம் தொடக்கப்பள்ளிகளைத் தொடாத காலத்திற்கு முன்பிருந்தே தொடக்கப் புள்ளிகள். இவர்களின் பக்குவம் நிறைந்த பழக்கங்களும், அளப்பரிய அனுபவங்களும் அடுத்ததலைமுறைக்கான அகராதிகள். செயற்கை நுண்ணறிவைத் தாண்டிய இயற்கையின் ஞானங்கள்.

இவர்கள் கண்மூடுகிற காலம் வரை இவர்களைக் கருத்தாய் கவனித்துக்கொள்ள வேண்டியது நமது கடமையாகும். இவர்களின் வயோதிகக் காலத்தில் வயிற்றுக்கு உணவிடாமல், நோய்க்கு மருந்திடாமல், கவலையில் ஆறுதல் தராமல் அவர்களைக் கண்ணீர் சிந்த வைத்துவிட்டு, உயிர் போனபின்பு ஊரைக் கூட்டி இரங்கல் நடத்துவதும், ஆடம்பரமாய் அடக்கச்சடங்கு நடத்துவதும், பெரும்பணம் செலவழித்துப் பத்திரிகை விளம்பரம் தருவதும் போலித்தனத்தின் புதுப் பதிப்பல்லவா?

சாகும்வரை சங்கடப்படுத்திவிட்டு, இறந்த பிறகு சந்தனப் பெட்டியில் அடக்கம் செய்கிறவெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்ஊருக்கு ஊர் பெருகிவிட்டார்கள். இந்த வாசம் வீசும் இயற்கை மலர்களை வீதியில் வீசி எறிந்துவிட்டு, காகிதப் பூக்களைக் கௌரவிக்கும் போக்கு போலித்தனம் என்பதைப் புரிந்துகொள்வது எப்போது?

ஜூலை 26, 2026 ஆண்டின் பொதுக்காலம் 17-ஆம் ஞாயிறு - 1அர 3:5,7-12; உரோ 8:28-30; மத் 13:44-52 (விலையேறப்பெற்ற புதையலும் விண்ணக ஞானமும்)
ஞாயிறு மறையுரை
ஜூலை 26, 2026 ஆண்டின் பொதுக்காலம் 17-ஆம் ஞாயிறு - 1அர 3:5,7-12; உரோ 8:28-30; மத் 13:44-52 (விலையேறப்பெற்ற புதையலும் விண்ணக ஞானமும்)

நாம் வாழும் தற்கால உலகம் எதற்கோ ஓடிக்கொண்டிருக்கிறது. இலாபம், இழப்பு, வர்த்தகம், சந்தை மதிப்பு என்ற எல்லைகளுக்குள்ளேயே மனித உறவுகளும், வாழ்வின் மாண்புகளும் சுருக்கப்பட்டுவிட்டன. எல்லாவற்றிற்கும் விலை குறிக்கப்படும் இந்த நுகர்வுப் பண்பாட்டுச் சூழலில், ‘விலை மதிப்பு (Price) என்பதற்கும், ‘உள்ளார்ந்த மதிப்பு(Value) என்பதற்கும் உள்ள ஆழமான வேறுபாட்டைப் புரிந்துகொள்ள நாம் தவறிவிடுகிறோம். மனிதரைக்கூட அவர்களின் தகுதி, சாதி, பின்புலத்தை வைத்து மதிப்பிடும் ஒரு குறுகிய மனப்பான்மை நம்மைச் சூழ்ந்திருக்கிறது. இத்தகைய உலகப் போக்கிலிருந்து விடுபட்டு, நம் கண்முன்னே காணும் விலைமதிப்பில்லா இறையாட்சி எனும் புதையலையும், வாழ்வின் உன்னத முத்துகளையும் அடையாளம் காணும் ஆன்மிகப் பக்குவத்தை அடைவதே இன்றைய நாளின் முதன்மையான தேவை.

ஆண்டின் பொதுக்காலம் 17-ஆம் ஞாயிறு திருவழிபாடு, நம்மைத் தற்காலிக இன்பங்களிலிருந்து விடுவித்து, நிலையான இறையாட்சி எனும் புதையலை நோக்கி நம் இதயங்களைத் திருப்பிட அழைப்புவிடுக்கிறது.

நாம் பல வேளைகளில் திருமுழுக்கு வழி கிறித்தவ வாழ்வு வாழ்கின்றோமே தவிர, இறையாட்சியின் உண்மையான நெறிகளின்படி வாழ்வதில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. வழிபாடுகளில் பங்கேற்பதும், திருநூல்களைக் கற்பதும், புனிதரைப் போற்றுவதும், திரு அவைச் சட்டங்களைக் கடைப்பிடிப்பதும் மட்டுமே முழுமையான கிறித்தவ வாழ்வாகிவிடாது; மாறாக, இறையாட்சியின் அருள்வாழ்வு என்பது தியாகங்களை ஏற்பதும், இலாபங்களைத் தவிர்ப்பதும், அநீதிகளுக்கு நடுவில் இழப்புகளைப் பொருள்படுத்தாமல் நீதிக்காகக் குரல் கொடுப்பதுமே ஆகும். இந்த உன்னதமான இறையாட்சி நெறியை நம் வாழ்வில் கண்டுகொள்ளவும், அதை முழுமையாகத் தழுவிக்கொள்ளவும் தேவையான தெய்வீக ஞானத்தைத் தேடுவதே இன்றைய நாளின் ஒட்டுமொத்த வழிபாட்டு அழைப்பாகும்.

இந்த உன்னத அழைப்பை ஏற்று வாழ்ந்த ஒரு வரலாற்று மாந்தராக முதல் வாசகத்தில் சாலமோன் அரசரை நாம் காண்கிறோம். இஸ்ரயேல் அரச வரலாற்றில் மிக முக்கியமான, ஒப்பற்ற அரசராகக் கருதப்படும் சாலமோன், மெய்யறிவின் அடையாளமாக விளங்குகிறார். கிபயோனில் உள்ள ஒரு தொழுகை மேட்டில் அவர் பலி ஒப்புக்கொடுக்க வந்தபோது, ஒருநாள் இரவு கடவுள் அவருக்குக் கனவில் தோன்றுகிறார். விவிலியப் பின்னணியில் கனவு என்பது இறைவனின் முக்கியமான வெளிப்பாடாகும். அப்போது, கடவுள் சாலமோனிடம்உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்கிறார். ஓர் இளம் அரசராக, தன் தந்தை தாவீதின் அடியொற்றிப் பயணிக்கும் சாலமோன், தன் தந்தைக்கும் கடவுளுக்கும் இடையிலிருந்த தூய உறவை நினைவூட்டுகிறார். தன்னை மிகச் சிறியவன் என்று தாழ்த்தி, இத்தனை பெருந்திரளான மக்களுக்குத் தீர்ப்பு வழங்க தனக்கு மெய்யறிவு தேவை என்பதை உணர்கிறார். நீண்ட ஆயுளையோ, செல்வத்தையோ, எதிரிகளின் அழிவையோ கேட்காமல், ‘நன்மை-தீமையைப் பகுத்தறியும் ஞானம் நிறைந்த இதயத்தைத் தந்தருளும்என்று அவர் மன்றாடுகிறார். இதனால் கடவுள் சாலமோன்மீது மிகுந்த பேரன்பு கொண்டவராக, அவர் வேண்டியபடியே அவருக்கு ஞானத்தை அருளி, சாலமோனைப்போலச் சிறந்த ஞானி எவரும் இருந்ததில்லை என்று கூறி புளகாங்கிதம் அடைகிறார்.

சாலமோன் தேடிய ஞானமும் தெய்வீக அழைப்பும் தற்செயலானவை அல்ல; மாறாக, அவை காலங்களுக்கு முன்பே இறைவனால் திட்டமிடப்பட்டவை என்பதை பவுலடியார் ஆழமாக விளக்குகிறார். கடவுளிடம் அன்புகூர்பவர்களின் நன்மைக்காகவே தூய ஆவியார் அனைத்துச் சூழல்களிலும் ஒத்துழைக்கிறார். நாம் எவருக்கும் இரண்டாந்தரமானவர் இல்லை; காலங்களுக்கு முன்பே முன் குறிக்கப்பட்டு, அழைக்கப்பட்டு, ஏற்புடையவராக்கப்பட்டவர் என்ற பேருண்மையை பவுல் பறைசாற்றுகிறார். “மனிதரின் உண்மையான மேன்மை அவரது ஆன்மிகத் தேடலில் உள்ளதுஎன்ற சிந்தனைக்கேற்ப, கிறிஸ்துவை முதன்மையாகக் கொண்ட சகோதரத்துவச் சமூகமாக மலரவும், சவால்களை எதிர்கொள்ளும் துணிவைப் பெறவும் இந்த ஆன்மிகப் புரிதல் நமக்கு எல்லையற்ற நம்பிக்கையைத் தருகிறது.

இந்தத் துணிவும் நம்பிக்கையும் எத்தகைய தியாகத்திற்கும் நம்மை இட்டுச்செல்லும் என்பதை நற்செய்தியில் இயேசு மூன்று அழகிய உவமைகள் வழியாகத் தெளிவுபடுத்துகிறார். மத்தேயு நற்செய்தியின் உவமைகளின் அதிகாரமாகிய 13-ஆம் அதிகாரத்தின் இறுதியில் புதையல், முத்து மற்றும் வலை ஆகிய உவமைகளை இயேசு கற்பிக்கிறார். இதில் புதையல் மற்றும் முத்து உவமைகள், இறையாட்சியைக் கண்டுபிடிப்பதால் ஏற்படும் பேரின்பத்தைப் பேசுவதால்இரட்டை உவமைகள்என அழைக்கப்படுகின்றன.

பழங்காலத்தில் வங்கிகள் இல்லாத சூழலில், போர்கள் மற்றும் புரட்சிக் காலங்களில் மக்கள் தங்கள் விலைமதிப்பற்ற பொருள்களை நிலத்தில் புதைத்து வைப்பது வழக்கம். அவ்வாறு புதைக்கப்பட்ட, தற்செயலாகக் கண்டெடுக்கப்படும் புதையலை ஒருவர் கண்டதும், பெரும் மகிழ்ச்சியோடு தனக்குரிய யாவற்றையும் விற்று அந்நிலத்தை வாங்கிக்கொள்கிறார். மறுபுறம், முத்தைத் தேடி அலையும் வணிகர் ஒருவர், விலைமதிப்பற்ற நல் முத்தைக் கண்டதும், தன் உடைமைகள் அனைத்தையும் விற்று அதைத் தனதாக்கிக்கொள்கிறார். புதையல் தற்செயலாகக் கிடைத்தது, முத்து தேடிக் கிடைத்தது. ஆனால், இரண்டிலும் பொதுவான கூறு என்னவென்றால், அவற்றைக் கண்டடைந்ததால் ஏற்பட்ட அளவிடற்கரிய மகிழ்ச்சியும், அதற்காக அவர்கள் செய்த முழுமையான தியாகமுமே ஆகும். இறையாட்சி என்னும் ஒப்புயர்வற்ற செல்வத்தைப் பெறுவதற்கு, நம்மிடம் உள்ள அனைத்தையும் இழக்கத் துணியும் ஒருவர், விண்ணகத்தில் என்றும் அழியாத செல்வந்தராக மாறுகிறார்.

இயேசு கூறும் வலை உவமை உலக முடிவின் இறுதித் தீர்ப்பைப் பற்றிய எச்சரிக்கையை நமக்குத் தந்தாலும், அது இறையாட்சி ஞானத்தின் ஆழமான மேன்மையை நமக்குக் கற்றுத்தருகிறது. கடலில் வீசப்படும் வலை நல்ல, கெட்ட மீன்களை வாரி வருவதுபோல, உலக முடிவில் இறைத்தூதர் நேர்மையாளர்களிடமிருந்து தீயோரைப் பிரிப்பார் என்று இயேசு விளக்குகிறார். ஆனால், இறுதித் தீர்ப்பு நாள் வரும்வரை யாரையும் தீயோராகத் தீர்ப்பிடவோ அல்லது எவரையும் வெறுத்து ஒதுக்கவோ மனிதராகிய நமக்கு எவ்வித உரிமையும் இல்லை என்பதைத் தெளிந்துணர்வதே உண்மையான மெய்யறிவு ஆகும்.

இந்தத் திருவிவிலிய விழுமியங்களை இன்றைய எதார்த்தச் சூழலோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது, உலகப் புகழையும் அழியும் செல்வத்தையும் மட்டுமே தேடி அலையும் நாம், ஆன்மிகப் பார்வை குறைபாட்டால் நம் கண்முன்னே குடும்பங்களில் மறைந்து வாழும் தாத்தா-பாட்டியராகிய உன்னதப் புதையல்களையும் விலைமதிப்பற்ற முத்துகளையும் அடையாளம் காணத் தவறுகிறோம். அவர்களைப்பயன்படுத்திவிட்டுத் தூக்கியெறியும் (Use and throw) கலாச்சாரத்தில் ஊறிப்போய்விட்டோம். உண்மையில், இன்று நம் குடும்பங்களில் நாம் தொலைத்துவிட்ட, போற்றிப் பாதுகாக்கத் தவறிய உயிருள்ள அனுபவக் கருவூலங்கள் நம்முடைய தாத்தா-பாட்டியரே. இப்பேருண்மையைத் திரு அவை ஆழமாக உணர்ந்ததால்தான் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதம் 26-ஆம் தேதி இயேசுவின் தாத்தா-பாட்டியான புனிதர்கள் அன்னா மற்றும் சுவக்கீன் ஆகியோரின் நினைவு நாளையொட்டி வரும் ஞாயிறைதாத்தா-பாட்டியர்தினமாகக் கொண்டாடுகிறது. ஆகவே, இந்நாளில் நம் குடும்பத்தின் உன்னதப் புதையல்களான முதியோரைப் போற்றிப் பாதுகாத்து, நம் நெஞ்சார்ந்த அன்பையும் நன்றியையும் அவர்களுக்கு என்றும் உரித்தாக்குவோம்.

இறுதியாக, இன்றைய வழிபாடு நமக்கு உணர்த்தும் முக்கியப் பாடங்கள்: முதலாவதாக, இறையாட்சி விழுமியங்களுக்காக அனைத்தையும் இழக்கும் துணிவு நமக்குத் தேவைப்படுகிறது. புதையலையும் முத்தையும் கண்டோர் தங்கள் உடைமைகள் அனைத்தையும் விற்கத் துணிந்ததுபோல, நாமும் இறையாட்சியின் நீதிக்காகவும் உண்மைக்காகவும் நம்முடைய தற்காலிக இலாபங்களையும், சுயநல வசதிகளையும் இழக்கத் தயாராவோம்.

இரண்டாவதாக, பிறரைத் தீர்ப்பிடாமல் மன்னிக்கும் கனிவு நிறைந்த நெஞ்சத்தை நாம் வளர்க்க வேண்டும். வலை உவமை உணர்த்துவதுபோல, இறுதித் தீர்ப்பு இறைவனுக்கு மட்டுமே உரியது. அதை உணர்ந்து, பிறரின் பலவீனங்களை ஏளனம் செய்யாமல், அவர்களை அன்போடு ஏற்று, தவறும் வேளைகளில் தாராளமாக மன்னிக்கும் நற்பண்பை நம் வாழ்வில் சாட்சியமாக்குவோம்.

மூன்றாவதாக, தற்காலிக இன்பங்களைத் தாண்டிய நிலையான தேடல் நம்முடையதாக மாற வேண்டும். சாலமோன் அரசர் உலகச் செல்வங்களைக் கேளாமல் இறைஞானத்தைக் கேட்டுப் பெற்றதுபோல, நாமும் எளிதில் அழியும் உலகக் காரியங்களையும் நுகர்வுப் பண்பாட்டையும் மையமாகக் கொள்ளாமல், என்றுமே அழியாத விண்ணகப் புதையலாகிய இறைவனையே நமது முதன்மை இலக்காக்கிக் கொள்வோம்.

நிறைவாக, மறைந்துபோகும் உலகப் புகழ், செல்வங்களைத் தாண்டி, நன்மை தீமை பகுத்தறியும் இறையாட்சி எனும் ஞானத்தையும், மனிதரை இறைச்சாயலாகக் காணும் தூய கண்களையும் தர இறைவனிடம் உருக்கமாக மன்றாடுவோம். புனிதர்களான அன்னா-சுவக்கீன் திருநாளான இன்று, “உன்னை ஒருபோதும் மறக்கமாட்டேன் (எசா 49:15) என்ற இறைவாக்கிற்கு ஏற்ப, நம் சொந்தக் குடும்பங்களில் வாழும் தாத்தா-பாட்டியரை ஒப்புயர்வற்ற விண்ணகப் புதையலாகவும் விலைமதிப்பற்ற நல்முத்தாகவும் கண்டுகொள்வோம். வயதில் முதிர்ந்த நம் உன்னத உறவுகளை அன்புசெய்து போற்றிப் பாதுகாக்கத் தேவையான தியாக உள்ளத்தையும் துணிவையும் இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் எப்போதும் நிறைவாகத் தந்தருள்வாராக!

ஆண்டின் பொதுக்காலம் 17-ஆம் ஞாயிறு (26-07-2026) 1அர 3:5,7-12; உரோ 8:28-30; மத் 13:44-52
ஞாயிறு தோழன்
ஆண்டின் பொதுக்காலம் 17-ஆம் ஞாயிறு (26-07-2026) 1அர 3:5,7-12; உரோ 8:28-30; மத் 13:44-52

திருப்பலி முன்னுரை

கடவுள் என்ற மிகப்பெரிய புதையலைத் தேடி ஞாயிறு திருப்பலிக்கு வருகை புரிந்திருக்கும் கடவுளின் பிள்ளைகளாகிய உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம். கடவுள் பரிசாகக் கொடுத்த இந்த வாழ்க்கையைத் தரிசாகப் போட்டுவிடாமல், பலமடங்கு பலன் கொடுத்து வாழ ஆண்டின் பொதுக்காலம் 17 - ஆம் ஞாயிறு நமக்கு அழைப்பு விடுக்கிறது.

உலகச் செல்வங்களாகிய பணம், பட்டம், பேராசை இவற்றைச் சேமிப்பதிலேயே நாள்களை நகர்த்தி, வாழ்க்கை என்ற புதையலை அனுபவிக்காமலேயே சென்றுவிடுகின்றோம். இறைவன் நமக்குக் கொடுத்த பெற்றோர், மனைவி, குழந்தை, உறவினர், நண்பர் போன்ற புதையல்களை அன்பால், பண்பால், பாசத்தால் அரவணைப்போம். இறையாட்சியின் மதிப்பீடுகளை அடையாளம் கண்டு, அவற்றைப் பெறுவதற்கும் விதைப்பதற்கும் தியாகம் செய்யவும், நமது மனத்தைப் பண்படுத்தவும், ஞானத்துடன் செயல்படவும் முன் வருவோம்.

நமது மனமாகிய வலையில் விழும் வெறுப்பு, பாகுபாடு, தன்னலம், பொய், திருட்டு, வஞ்சகம், கோபம், குடி, ஆணவம் போன்றகெட்ட மீன்களைஅகற்றிவிட்டு பரிவு, கருணை, இரக்கம், அன்பு, மனிதநேயம், நல்லிணக்கம், சேவை போன்ற நல்ல மீன்களைச் சேர்த்துக் கொள்வோம்இதயம் என்ற நிலத்தில் இறைவார்த்தை என்ற விதையை அனுதினமும் விதைத்து நற்செய்தியின் தூதுவர்களாக வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசக முன்னுரை

ஆண்டவர் சாலமோனிடம்உனக்கு என்ன வரம் வேண்டும்?’ என்று கேட்டபோது, சாலமோன் பொன்னோ பொருளோ கேட்கவில்லை; மாறாக, நன்மை-தீமைகளைப் பகுத்தறியும் ஞானத்தை மட்டும் கேட்கின்றார். ஆண்டவரிடம் ஆயிரக்கணக்கான தேவைகளை அடுக்கிக்கொண்டே செல்லும் நமக்கு, ஞானத்தின் அவசியத்தைக் கூறும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

நம் திட்டங்கள் வேறு; ஆண்டவரின் திட்டங்கள் வேறு. ஆண்டவரால் அழைக்கப்பட்டவர்களுக்கு அவரின் துணை எப்போதும் உண்டு. தாம் அழைத்தவர்களை எத்தீங்கும் அணுகாது உடன் பயணிக்கின்றார். அவரின் திட்டத்திற்குப் பணிந்து வாழும் அவருடைய பிள்ளைகளுக்குத் தமது மாட்சிமையில் பங்கு கொடுப்பார் என்று கூறி ஆண்டவரின் அன்பில் நிலைத்து வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்

நம்பிக்கையாளர் மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர், அருள்பணியாளர், துறவறத்தார், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் இறையாட்சியின் மதிப்பீடுகளை வாழ்க்கையால் அறிவிக்கவும், நம்பிக்கையின் ஒளியில் மக்களை வழிநடத்தவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. நீதியின் தேவனே! எம் நாட்டை ஆளும் தலைவர்கள், மக்கள் வளமோடும் அமைதியோடும் வாழ்வதற்கான சட்டங்களைக் கொண்டுவரத் தேவையான ஞானத்தை எம் நாட்டு தலைவர்களுக்குத் தந்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. கருணையின் ஊற்றே எம் இறைவா! நாங்கள் அனைவரும் அன்பு, மன்னிப்பு, ஏற்பு, விட்டுக் கொடுத்தல் போன்ற பண்புகளில் ஒவ்வொரு நாளும் வளர்ந்து வாழும் இடத்தைச் சொர்க்கமாக்க வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. பாதுகாக்கும் பரம்பொருளே எம் இறைவா! எம் நாட்டில் உள்ள இளையோர் அனைவரும் இறைநம்பிக்கையில் வேரூன்றவும், உலகப் போக்கின்படி செல்லாமல் இறைவார்த்தையை அனுதினமும் வாசித்து அதன்படி வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.