slider slider slider
நம் வாழ்வு
நம் வாழ்வு இதழின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்
நம் வாழ்வு
நம் வாழ்வு - நல்லவர்களின் நாடித்துடிப்பு
நம் வாழ்வு
நல்லவர்களின் நாடித்துடிப்பு
அண்மைச் செய்திகள்
கரையைத் தேடும் ஓடங்கள்
சிறப்புக்கட்டுரை
கரையைத் தேடும் ஓடங்கள்

மனித மனம், நீர்க்குமிழி போன்றது. ஆகவே அது எளிதில் உடைந்துவிடுகிறது. உடைந்த மனத்தின் வலிகள் கவிதை வரிகளாகின்றன:

எதிரில் வந்தால்..

எவரையும்,

ஞாபகம் வரக் கூடாது.

அந்த அளவிற்கு..

மறக்கவேண்டும்.

மனிதர்களை...’

இந்திய அளவில் 153 மில்லியன் மூத்த குடிமக்களின் அழுகுரல் இவ்வாறே ஒலிக்கிறதுஇந்திய மக்களின் 10 விழுக்காட்டினரான மூத்தோரின்  குரலைப் புறந்தள்ள இயலாது. 2036-இல் மூத்தோர் எண்ணிக்கை 20 விழுக்காடாக உயரும் எனப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் தற்போதே 20 விழுக்காடு மூத்த குடிமக்கள் உள்ளனர். உலகில் முதலிடமாக மோனேகா நாட்டில் 37%, இரண்டாவதாக ஜப்பான் நாட்டில் 30% மூத்த குடிமக்கள் வாழ்கிறார்கள்.

மூத்தோரின்  பின்னணியில்...

மயக்கமா கலக்கமா?

மனத்திலே குழப்பமா?

வாழ்க்கையில் நடுக்கமா?’

என்ற பாடல் வரிகள், நடுக்கமாக ஒலிக்கின்றன.

எமது கல்லூரிப் பேராசிரியர் 44 ஆண்டுகளுக்கு முன் எம்மிடம் பகிர்ந்த  தகவல்கள் நினைவிலாடுகின்றன. தேசியத் தலைவர் ஒருவரை அவர் குறிப்பிடுகிறார். அந்தத் தலைவர் நாடாளுமன்றம், சட்டமன்றம் என இரண்டிலும் போட்டியிடுவார். வேட்பு மனுதாக்கல் செய்துவிட்டு, பிரச்சாரம் செய்யமாட்டார், வாக்கு கேட்கமாட்டார். ஆனால், அவர் போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் பிரமாண்ட வெற்றி பெறுவார். அவ்வளவு மக்கள் செல்வாக்கு மிக்கவர்.

மூத்த தலைவரான அவர், தன் கடைசி ஆறு ஆண்டுகளில் மனிதர்கள் எவரையும் சந்திக்காமல் தனிமையில் வாழ்ந்தார். அவர் இறந்த அன்று எனது பேராசிரியர் கண்ணாரக் கண்டதைக் கூறுகிறார்: “அன்றைய ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் அழுது புலம்பி, தலைவிரிகோலமாய், பைத்தியம்  பிடித்தவர்கள் போல அலறி தெருக்களில் ஓடுவதைப் பார்த்தேன்.” இதுதான் மனித வாழ்க்கை. அந்த மாமனிதரின் வாழ்நாள்களின் இறுதிக் காலத்தில் தனிமையில் வாழ்ந்தார் என்பதே வரலாறு.

பல வேளைகளில், கோவை மாநகரின் செல்வச் செழிப்பிற்குக் காரணமான ஒரு வகுப்பு, பெரும் குடிமக்களைப் பத்திரிகைகளில் பெருந் தொழில் அதிபர்களாக வர்ணிக்கப்பட்ட பெருமக்களை அவர்களது வீட்டு முற்றங்களில் தனியே அமர்ந்திருக்கப் பார்த்திருக்கிறேன். ‘அவரா இவர்?’ என அதிசயம் அடைந்துள்ளேன். சில வேளைகளில், அவர்களிடம் பேசியிருக்கிறேன். ஒருமுறை ஒருவரது மகன் கூறினார்: “தம்பி, அப்பா வள... வளன்னு பேசுவார், தப்பா எடுத்துக்காதீங்கஎன்றார்.

நான் வெளியே வந்து காரில் செல்லும்போது அவரிடம் திருப்பிக் கூறினேன்: “அண்ணா, இந்த கோயம்புத்தூரில் எல்லா பெரிய கம்பெனி பாகப்பிரிப்பிற்கும் பஞ்சாயத்து பேசியவருக்கும் பேச ஆள் இல்லாத நிலையா?” என்றேன்.

கிராமப்புறங்களில் இந்நிலைக்கு மாறுபட்ட  நிலையைக் காண்கிறோம். கிராமத் திண்ணைகளிலும் கிராமச் சத்திரங்களிலும் சிலுவைத் திட்டுகளிலும் ஆலய மண்டபங்களிலும் வயது வித்தியாசமின்றி மூத்தோரை முன்னிலையில்  வைத்து, ஊர் சபை நடப்பதை ஆச்சரியமுடன் பார்க்கிறோம். கிராமத்தில் மூத்தோரும் இளையோரும்  எந்தவித அழுத்தங்களும் இல்லாமல் மக்களுடன் கலந்திருப்பது வியப்பிற்குரிய வாழ்வியல்  நடைமுறையாகும். ஊருக்குப் புதிதாகச் செல்லும் நம்மை மூத்தோர் எளிதில் எதிர்கொள்தல், எளிதில் பேசுதல், பழகுதல் நடைமுறைக் கிராமம் சார்ந்த சமூக அமைப்பாகும்.

பெருநகரங்கில் இருந்ததுபோல, எல்லா சிறு நகரங்களும் நகரமயத்தில் மாறிவிட்டன. மனிதர்கள் தனித்தனி தீவுகளில் வாழ்கிறார்கள். நாகரிகம் என்ற பெயரில் ஒருவரையொருவர் அறிந்துகொள்ளவோ, புரிந்து வாழவோ விரும்புவதில்லை.

ஒரு நாளில் மும்பை மாநகரில் ஒரு புகழ்பெற்ற அடுக்கு மாடிக் குடியிருப்பில் இவ்வாறான உரையாடலைக் கேட்டேன். அடுத்த வீட்டுப் பெண்மணி ஓராண்டுக்குப் பின் பக்கத்து வீட்டிற்கு ஏதோ தகவல் அளிக்க வருகிறார். அவர் சென்ற பின் அக்குடும்பத் தலைவியும் குடும்பத் தலைவரும், ‘வந்தது பக்கத்து வீட்டுப் பெண்ணா? அல்லது அவரது அம்மாவா?’ என ஐயப்பட்டார்கள். நாம் கேட்டோம், “ஒரு வருடமாக உங்களுக்குப் பக்கத்து வீட்டில் யாரைத் தெரியும்?” என்றோம். அவர்கள் கூறிய பதில்: “அந்த வீட்டுத் தாத்தாவை மட்டும் தெரியும்.”

நாமே 25 வருடங்களுக்கு முன் தெருவில் வசிப்போர் அனைவரையும் அறிவோம். இன்று நாம் பக்கத்து வீட்டு மனிதர்களைக் காணும்போது சிறு புன்னகையால் கடப்பது பழக்கமாகிவிட்டது. வீட்டுப் புதுப்பித்தலில், இடிபட்ட எம் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து, ஆயிரமாயிரம் கதைகள் பேசிய எம் தெருப் பெண்கள் என் அம்மாவைப் போலவே மாயமாகி விட்டார்கள், மறைந்துவிட்டார்கள்.

ஒரு காலத்தில் எம் தெருவில் 100 வீடுகள், ஒரே குடும்பமாக உண்டு, உறங்கி, திருவிழாக்கள் கொண்டாடிய வசந்த காலங்கள் எங்கேயெனக் கண்ணீரோடு தேடுகிறேன். காலங்கள் ஓடுவதில்லை, பறக்கின்றன. மனிதர்கள் சமூக அமைப்பில் இருந்து விலகிவிட்டார்கள். குடும்பங்கள் என்ற எல்லைக்குள், ஒரு  வட் டத்தில் அடைந்துவிட்டார்கள்.

காலத்தே மனம் சக மனிதர்களைத் தேடுகிறதுபொருள் தேடிய, செல்வம் தேடிய, புகழ் தேடிய பயணம் வயது மூப்பால் தடையாகிறது. மனம் அமைதியைத் தேடுகிறது. அமைதியில் பெற்ற ஆற்றலை முதிய மனம் மறுக்கிறது. மனிதர்களின் அரவணைப்பை, அன்பை, ஆறுதல் வார்த்தைகளை, ஆழமான, கனிவான உரையாடல்களை விரும்புகிறது.

எல்லா முதுமையின் கேள்விகளுக்கும் பதில் திருவிவிலியத்தில் புதைந்து விரிகிறது. காலங்கள் குறித்த சபை உரையாளரின்  நிலையாமை, இயலாமை குறித்து  நினைவிற்கு வருவது தவிர்க்க இயலாத ஒன்றாகும்.

அன்பிற்கு ஒரு காலம்

வெறுப்பிற்கு ஒரு காலம்

போருக்கு ஒரு காலம்

அமைதிக்கு ஒரு காலம்!’

தினமும் நடைப்பயிற்சியின் போது அரண்மனை போன்ற வீடுகளின் முன் ஒரு முதியவரையோ, மூதாட்டியையோ பல வீடுகளில் காண்கிறேன். அவர்கள் எந்தவிதச் சலனமுமின்றி வெறுமையாகப் பொதுவில் கண்களை மூடி சலனமின்றி அமர்ந்திருப்பதைக் காண்கிறேன். பல வேளைகளில், அவர்களது சிரிப்பு, அவர்களது குரல் எப்படி இருக்குமென யோசித்திருக்கிறேன். அவர்கள் சக மனிதர்களின் முகம்கூட காண மறுக்கிறார்கள். விழிக்கு விழி பார்ப்பதைத் தவிர்க்கிறார்கள்.

பல வருடங்களாக இவ்வாறான இருபதிற்கும் உள்பட்ட மூத்த குடிமக்களைப் பார்க்கின்றேன். அதில் சிலரைச் சோகமுடன் காண்கிறேன். ஒரேயொரு பெரியவர் மட்டும் புன்னகை செய்து தலையாட்டுவதைத் தினமும் இரசிக்கிறேன். அவர் அங்கு அமர்ந்திருக்காத நாள்களில், மறுமுறை பார்க்கும் வரை யாரிடம் அவரைப் பற்றிக் கேட்பது எனப் பதற்றப்படுகிறேன்.

மூத்த குடிமக்களுக்காகசுமைதாங்கிதிரைப்படத்தில் கவிப்பேரரசு கண்ணதாசன் அவர்களின்  பாடல் வரிகளைச் சமர்ப்பிக்கிறேன். இது என் மனம் படும் பாடுகளையும் சேர்த்து மூத்தோருக்கு ஆறுதலாகதேற்றுதலாக, அரவணைப்பாக அமையும் எனக் கருதுகிறேன்.

வாழ்க்கை என்றால்

ஆயிரம் இருக்கும்.

வாசல்தோறும்

வேதனை இருக்கும்.

வந்த துன்பம் எதுவென்றாலும்...

வாடி நின்றால்

ஓடுவது இல்லை!’

பிறகு என்னதான் செய்ய முடியும்? பாடல் வரிகளே பதில் சொல்கின்றன.

எதையும் தாங்கும்

இதயம் இருந்தால்

இறுதி வரை

அமைதி இருக்கும்.’

அமைதியை வைத்து என்ன செய்ய முடியும்? அமைதியை எப்படித் தேடுவது?

நாளைய பொழுதை

இறைவனுக்கு அளித்து...

நடக்கும் வாழ்வில்

அமைதியைத் தேடு!’

திமாகி நக்சல்கள்: மோடியின் புதிய நாமகரணம்
சிறப்புக்கட்டுரை
திமாகி நக்சல்கள்: மோடியின் புதிய நாமகரணம்

அண்மையில் புதுதில்லி செங்கோட்டையில் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி அவரின் அரசு, ஆயுதம் தாங்கிய நக்சல்களை ஒழித்துவிட்டதாகவும்; ஆனால், ‘திமாகிநக்சல்கள் இன்னும் அழிக்கப்பட வேண்டியுள்ளது எனவும் அறிவித்தது (‘திமாகிஎன்றால் ‘Brainy’  மூளையுள்ளோர் என்று பொருளாம்!)

திமாகிகள் மிக ஆபத்தானவர்கள்! முந்தைய அரசுகள் இவர்களை அரசின் ஆலோசகர்களாக நியமித்திருந்தனர். இப்போது  இதேதிமாகிகள்இன்று இந்தியச் சமூகத்தைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்கின்றனர். இந்திய இளைஞர்களை வளர்ச்சி நோக்கில் செல்லும் இந்தியாவிலிருந்து திசை மாற்றி அழைத்துச் செல்கின்றனர். இந்தியக் குடிமக்கள் இச்சக்திகளை அடையாளம் கண்டு (Identity) கொள்வதோடு, தனிமைப்படுத்தவும் (Isolate) வேண்டும்

(தி இந்து, ஆகஸ்டு 31, 2026 - கவிதா கிருஷ்ணன்).

(நம் வாழ்வின் வாசகர்கள் மேலே குறிப்பிடப்பட்ட கட்டுரையைப் படிக்கவேண்டும் என்பது என் விருப்பம்)

பிரதமர் மோடியின் பொறுப்பில் 2014-இல் விடப்பட்ட இந்திய அரசு குடிமக்களை ஏமாற்றி வழங்கப்பட்ட அரசு; குடிமக்களை மூளைச்சலவை செய்து திணிக்கப்பட்ட அரசு; சனநாயக நெறிகளைத் துளிகூட நம்பாத ஒரு குழுவிடம் ஏமாற்றப்பட்ட, குடிமக்களால் தரப்பட்ட அரசு!

கண்ணீர் விட்டு வளர்த்த சுதந்திரப் பயிரை, சுதந்திரம் அளித்த அரசியல் விடுதலையைஇந்தியச் சமூகம் காலங்காலமாய் கட்டிக் காத்த வர்ண பேதத்தை, வர்ண பேதத்தைத் தர்மமாக்கப் பேணி வந்த சூழ்ச்சியை நிர்மூலமாக்க எழுந்த இந்திய அரசமைப்பை ஒற்றைத் தேர்தல் மூலம் நிர்மூலமாக்கிய சங்கப் பரிவாரங்களின் பிளவுவாதக் கருத்தியலைக் கேள்வி கேளாமல் ஏற்றுக்கொண்டு, இன்றும் தொடர் ஆட்சிசெய்து வருகைக்குத் துணை நிற்பவர்கள்தேச பக்தர்கள்.’ இத்தேசபக்தர்களுக்கு எதிரானோர் அனைவரும் சில ஆண்டுகளுக்கு முன் நகர்ப்புற நக்சல்களாயினர் (Urban naxals).

இன்று நகர்ப்புற நக்சல்களுக்குப் புது நாமம் சூட்டப்பட்டுள்ளது. இவர்கள்திமாகிநக்சல்கள்! ‘வளர்ச்சிஎன்ற பெயரில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரக் கட்டமைப்பைக் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைத்த பெருமைமிகு இவ்வரசின் போக்கைக் கேள்விக்குள்ளாக்குவோர் நக்சல்களாம்! இவர்கள் நகர்ப்புற நக்சல்கள்; இப்பொழுது திமாகி நக்சல்கள்! குடிமக்கள் வெறும் வாக்களிக்கும் இயந்திரமல்ல; இவர்களுக்கு மூளையுண்டு என்று அங்கீகரித்த மோடிக்கு நன்றி கூறுவோம்.

இந்தியா அறிவித்த மதச்சார்பின்மை புதைக்கப்பட்டபோது, மதம் சார்ந்த பிற்போக்கு அரசியலுக்கு இராமர் கோவில் மூலம்நியாயம்தரப்பட்டபோது, பண்டித நேரு காக்க முயன்ற சமயச் சார்பின்மையின் அடித்தளம் தகர்க்கப்பட்ட போதெல்லாம் மௌனித்து நின்றோர்தேசபக்தர்கள்!’ கேள்வி கேட்டவர் பலரல்லர்; ஒரு சிலர்தாம்! அவர்கள் நகர்ப்புற நக்சல்கள்! இல்லையெனில் திமாகி நக்சல்கள்!

கடந்த 12 ஆண்டு மோடியின் ஒற்றைக் கருத்தியல் ஆட்சிக்காலமாக வளர்க்கப்பட்டு வரும் பொய்மைக் கருத்தியலின் சாயல் இன்னும் அழியாத நிலையில், இச்சாயல் தரும் போதை இன்னும் மாறாத நிலையில், இன்றும் தொடர்ந்து மந்தை மனநிலையில் பின்தொடர்கிறது இக்கூட்டம். இவர்கள் தேசபக்தர்கள்! மனித உரிமைகளைக் காக்க, மனித உரிமைக் காப்பு மூலம் சனநாயகத்தைக் காக்க வாழ்நாளை அர்ப்பணிக்கும் கூட்டம் இவர்களுக்குநக்சல்கள்!’

அவதூறுகளால், இழிவான பிரச்சார யுக்திகளால் - விமர்சிக்கும் சனநாயக சக்திகள் அனைவரையும் ஒதுக்கவும் ஓரங்கட்டவும் ஒடுக்கவும் முனையும் மோடி அரசின் அனைத்து நிறுவனங்களும் ஒருங்கிணைந்து அரசின் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுதல் மிகப்பெரிய பயங்கரவாதமில்லையா?

மக்களுக்குப் பதில் கூறவேண்டிய (Accountability) அரசு, தன் கடமையை மறந்தும், துறந்தும் செயல்படும்போது, பதில் கேட்டுப் போராடுவோர் நக்சல்கள் என்றால், போராடுவோரின் நியாயமான கோரிக்கைகள் எதேச்சதிகாரப்போக்கில் புறந்தள்ளப்படுகிறபோது எழுப்பப்பெறும் அபயக் குரல்களே ஆள்வோருக்கு எச்சரிக்கை மணியாக எதிரொலிக்கின்றது.

ஆள்வோர் ஏன் அலறுகின்றனர்? உண்மையைச் சந்திக்கத் தயங்குகின்றபோதெல்லாம் இவர்கள் எதிரிகளாக்கப்பெறுவோரைநக்சல்கள்என்றும், ‘தேசத்துரோகிகள்என்றும், ‘பாகிஸ்தான் ஆதரவாளர்என்றும் முத்திரை குத்தி, அவர்கள்மீது பயங்கரவாதத்தை ஏவி, அதற்கு வேறொரு பெயர் சூட்டி நாடகமாடுதலைப் பார்க்க முடிகிறது. பல்கலைக்கழகங்கள் மதவாத அரசின் கருத்துநிலை பிரச்சாரக் கருவிகளாய் மாற்றப்பட்டுவிட்ட நிலையில், புது தில்லியின் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தைக் கைவசம் எடுத்துக்கொள்ளும் முயற்சியில் போராட்டத்தை முன்னெடுத்த மாணவர்கள் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். உமர் காலித், சர்ஜில் இமாம், குல்பிஷா பாத்திமா, நாடசா நிர்வால், தேவங்கனா கவிதா என்போரெல்லாம் பயங்கரவாதிகளாக, முறையான விசாரணையின்றி இன்னும் சிறையில் வாடுகின்றனர். ‘நீட்தேர்வு முறைகேட்டைக் கண்டித்து ஜந்தர் மந்தரில் போராடிய இளைஞர்களும் இவர்களுக்குப் பயங்கரவாதிகளே.

மதவாதிகளுக்கு, மத அடிப்படைவாதம் பேசும் சனாதனிகளுக்குச் சமனற்றச் சமூக அமைப்பை எப்படியேனும் காத்துத் தீரவேண்டியதே உயிர்க் கொள்கை. அத்தகையோருக்குமாற்றம்என்ற சிற்றொலி செவிப்புலனுக்குப் பயங்கரவாதக் குரலாகத்தான் கேட்கும்.

ஐக்கிய நாட்டவையின் இனப்பாகுபாட்டு ஒழிப்பிற்கான குழு ஒன்று அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கை (‘தி இந்து, ஆகஸ்டு 26, 2026) இந்திய அரசின் முகத்திரையைக் கிழித்துள்ளது. .நா.வின் இக்குழு (UNCERD) இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய அளவிலான மனித உரிமை மீறல்களைக் கண்டு (Violations)  கவலைகொள்கிறது. சமய ரீதியான சிறுபான்மையினர், பூர்வக்குடிகள், பழங்குடிகள், பட்டியலினப் பழங்குடிகள், தலித் மக்கள் மற்றும் குடிமக்களல்லாதோர் (Non - Citizens) என்போர்மீது, சட்டத்தைப் பாதுகாப்பவர்களாலேயே நடத்தப்பட்டு வரும் மீறல்கள் கவலையளிப்பதாக அறிவித்துள்ளது. இவ்வறிக்கை வெளியிடப்பட்ட நாளன்று (ஆகஸ்டு 11-12) இந்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேஷாவும் அவையில் இருந்தார் என்பது வேடிக்கை கலந்த உண்மையே.

உலக அளவில் மனித உரிமை மீறல்களை, நலிந்தோர் மீதான பாடுபாடுகளை, ஒதுக்கலை, ஒடுக்கலை நாளும் நடத்தி வரும் மோடி அரசு, யாரைப்பயங்கரவாதிகள்என்று, ‘நக்சல்கள்என்று அடையாளப்படுத்துகிறது?

இன்றைய ஆளும் கட்சியின் தலைமை அமைப்பாம் ஆர்.எஸ்.எஸ்., இன்று உலகளவில் அம்பலப்பட்டுப் போன கதையை நியூயார்க் மேயரின் ஒளிவு மறைவற்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பற்றியும், அதன் தலைவருக்குக் காட்டிய எதிர்ப்பையும் தொடர்ந்து கவனிப்போர் அறிவர். இந்தியச் சனநாயகம் மதச்சார்பற்ற குடியரசின் கொள்கைகளுக்கு முரணான ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்குவதை (Inclusion)  மறுத்து ஒதுக்கும் (Exclusionary) தன்மையுடையது என்று வெளிப்படையாகவே ஊடகவழி பேசினார் நியூயார்க் மேயர். மோகன் பாகவத் அவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்வைச் சட்ட ரீதியாகத் தடுக்கும் தன்மை இல்லையெனினும், பாகவத் சார்ந்த அமைப்பின் கொள்கையில் சனநாயகம், சமயச்சார்பின்மை இல்லை என்பதைத் தெளிவாகவே எடுத்துரைத்தார் அவர்.

நக்சல்கள் பயங்கரவாதிகளா?

இந்தியாவில் விடுதலை பெற்ற காலத்திலிருந்து ஆட்சிப் பொறுப்பேற்ற அரசுகள் உழைக்கும் மக்களின் விடியலுக்கு எதுவும் செய்யவில்லை. வர்க்க ரீதியாகப் பிளவுண்ட சமூக அமைப்பின்மீது கட்டப்பட்ட அரசு, வர்க்க ரீதியான சமூக அமைப்பை அரசின் திட்டங்களால், பொருளாதாரக் கொள்கைகளால், ஆளும் வர்க்க நலனையே அரசுகள் முன்னிறுத்தின. தேர்தல் மூலம் மக்களிடம் பொய்யான நம்பிக்கையை வளர்த்து, வர்க்க ரீதியாகப் பிளவுண்ட அமைப்பில் மக்களுக்கான மாற்றம் எதுவும் நிகழாத நிலையில், சமூக அமைப்பில் மாற்றம் வேண்டி உருவான இயக்கம்தான் வங்காள மாநிலத்தில்நக்சல்பாரிஎனும் இடத்தில் தோன்றிய நக்சல்பாரியக்கம்!

இந்த இயக்கம் சமூகத்தின் அடிப்படையை மாற்றுவதற்குப் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் துணைகொண்டு உருவானது. ‘சனநாயக அரசுஎன்ற பெயரில் மக்களை ஒடுக்கி வரும் அரசுகளைப் பயங்கரவாத அரசாகச் சித்தரித்து, ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுத்தது. இவ்விளைஞர் கூட்டம் நாடு முழுவதும் பரவியது. ஆயுதம் தாங்கிய இவ்விளைஞர்களின் போராட்ட முறை வன்முறை வடிவு கொண்டாலும்இவ்விளைஞர் எழுச்சியும், அது நாடு முழுவதும் உருவாக்கிய அதிர்வலைகளும் மிகப்பெரிது.

ஆயுதம் தாங்கி, சமூக மாற்றம் விரும்பிப் போராடிய இப்போராளிகளின் போராட்ட முறைகளில் நமக்குக் கருத்து வேறுபாடு இருக்கலாம்; ஆனால், தம்மை இழந்து, களத்தில் மடிந்த இப்போராளிகளின் கருத்தியலில், அக்கருத்தியலில் அவர்கள் கொண்ட உறுதிப்பாட்டில் நாம் வேறுபட முடியாது.

எழுபதுகளில் தொடங்கிய இப்போராட்டம், இன்றுவரை நாடு முழுவதும் பல மாநிலங்களில் செயல்படுவதும் உண்மையே. இப்போராளிகளை ஒடுக்குவதில் தொடர்ந்து வந்த அனைத்து அரசுகளுமே ஒரே நிலைப்பாட்டைத்தான் கொண்டிருந்தன. எனினும் இவ்வரசுகளின் முயற்சி முழுமையாக வெற்றி பெறாத நிலையில், இன்றைய மதவாத பா... அரசு, சட்டீஸ்கர் போன்ற சில மாநிலங்களில் வலுவாகச் செயல்பட்டு வரும் மாவோயிஸ்டுகளை முழுமையாக அழித்துவிட்டதாகச் சொல்லிக்கொள்கிறது. இக்குழுக்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாகச் சொல்லிவரும் அமித்ஷாவின் கூற்றிற்கான சரியான பதிலை வரலாறுதான் கூறவேண்டும்.

ஆயுதம் தாங்காமல், பேனா முனையால்  மாற்றம் வேண்டி போராடுவோர், நாளும் மீறப்பெறும் மனித உரிமைகளைக் காக்கும் வகையில் அரசு தரும் சட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட்டு வரும் மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள், எழுபதுகளில் உருவான இளைஞர்களின் எழுச்சியைத் தொடர்ந்து நாடு முழுவதும் உருவான பல்வேறு மக்கள் இயக்கங்கள், குடிமைச் சமூக அமைப்புகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் இயக்கங்கள், பெண்ணுரிமை அமைப்புகள் எல்லாமே வெறும் கோரிக்கைகளை முன்வைத்து மட்டும் குரல் எழுப்பாமல், சமூக சீர்திருத்தத்தோடு, சமூக மாற்று முழக்கங்களையும் முன்வைத்துப் போராடுகின்றன.

எதேச்சதிகாரம் என்ற ஒற்றைமொழியில், சனாதனம் என்ற பழமைவாதக் கொள்கையை முன்வைத்து ஆட்சி நடத்திவரும் மதவாதிகளுக்கு மேலே காட்டப்பட்ட அனைத்து வகை அமைப்புகளும் அறிவுஜீவி நக்சல்பாரிகள்தாம்!

பழமைவாதிகள் - அதிலும் மத அடிப்படைவாதிகள் (Fundamentalist) எப்போதுமே மாற்றத்திற்கு எதிரிகளே! மாற்றம் வேண்டுவோர், இவர்களின் இருப்பிற்கு எதிரிகளே. இவர்கள் காட்டும் ஒற்றைவழி என்பது மாற்றத்தைக் கண்டு அஞ்சும் வழி!

பழமையும், பழமையைக் காக்க உருவாக்கப்பட்ட கருத்தியலும், மாற்றாகச் சிந்திப்போரை நவீன அரசின் பயங்கர ஆயுதங்களால் வீழ்த்த முற்படுவர்; இதன் ஒரு பகுதியேஅறிவுசார் நக்சல்என்ற புதிய நாமகரணம். எச்சரிக்கை கொள்வோம்!

பொதுக்காலம் 25-ஆம் ஞாயிறு (20.09.2026) எசா 55:6-9; பிலிப் 1:20-24,27; மத் 20:1-16 - மனிதனின் நீதியும் இறைவனின் நீதியும்
ஞாயிறு மறையுரை
பொதுக்காலம் 25-ஆம் ஞாயிறு (20.09.2026) எசா 55:6-9; பிலிப் 1:20-24,27; மத் 20:1-16 - மனிதனின் நீதியும் இறைவனின் நீதியும்

பழைய ஏற்பாட்டில் ஏழைகளையும் பாதிக்கப்பட்டவர்களையும் ஒதுக்கப்பட்டவர்களையும் பொருளாதார ரீதியாக-சமூக ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களையும் நிலமற்றவர்களையும் அதிகாரமற்றவர்களையும், தங்களுக்கென்று ஒன்றுமே இல்லாத மனிதர்களையும்அனாவிம்என்று அழைத்தார்கள். அவர்கள் அனைத்திலும் கடவுளைச் சார்ந்தவர்களாகவே இருந்தார்கள். தங்கள் வாழ்வில் கடவுளை முற்றிலும் சார்ந்து வாழும் ஏழை, எளிய, புறம்பே தள்ளப்பட்ட, முன்னுரிமை வழங்கப்படாத மக்களின் சார்பாக இறைவன் வெளிப்படுத்தும் தாராள உள்ளமும் நிலைப்பாடும் இன்றைய நற்செய்தியின் சாராம்சமாக அமைகின்றது.

கடவுளின் கருணையை, அவர் தரும் ஆசிரை நமது செயல்களினால் மட்டுமே நாம் பெறுவதில்லை. அவை அனைத்தும் கடவுளின் பராமரிப்பின் அடையாளங்கள். அவரின் ஆசிரைப் பெறுவதற்கு நாம் தகுதியற்றவர்களாக இருப்பினும், தமது மிகுந்த கருணையினாலும், தாராள உள்ளத்தினாலும் செயல்பாட்டினாலும் நம்மைத் தகுதிப்படுத்துகின்றார். மத்தேயு நற்செய்தியில் மட்டுமே திராட்சைத் தோட்ட வேலையாள்களின் உவமையை நாம் படிக்கின்றோம். இந்த உவமையில் திராட்சைத் தோட்ட உரிமையாளர் வேலையாள்களை வேலைக்கு அமர்த்த ஐந்து முறை வெளியே செல்கின்றார். இன்றைய நற்செய்தி, திராட்சைத் தோட்ட உரிமையாளர் வேலையாள்களைத் தேடிச்செல்லும் ஐந்து கால நேரங்களைக் குறிப்பிடுகின்றது அவை: விடியற்காலை, காலை ஒன்பது மணி, பன்னிரண்டு மணி, மதியம் மூன்று மணி, மாலை ஐந்து மணி.

திராட்சைத் தோட்டத்தில் பணிபுரியும் பணியாளர்கள், அதிகாலை முதல் மாலை ஆறு மணிவரை பணி செய்வார்கள். மாலையில் அவர்களுக்கு உரிய கூலி வழங்கப்படும். திராட்சைகளை அறுவடை செய்யும் காலம் கோடைகாலமாகவே அமையும். சூரியன் உதிக்கும் நேரம் முதல் அது மறையும் வரை வேலையில் ஈடுபடுவார்கள். ‘அனாவிம்(Anawim) எனப்படும் ஏழைகளுக்கு, அவர்களின் அன்றாடக் கூலி மட்டுமே குடும்பத்தின் உணவிற்கான, அடிப்படைச் செலவினங்களுக்கான ஒற்றைவழி (இச 24:15). அன்றாட வேலையில்லையென்றால் குடும்பங்கள் பசி, பட்டினியுடன் அன்றைய இரவைக் கழிக்கவேண்டும்.

பணியில் அமர்த்துதல், அதிகாரப்படுத்துதல், அங்கீகாரம் அளித்தல்: இன்றைய நற்செய்தியில் மதியம் மூன்று மணி, மாலை ஐந்து மணிக்கு பணியில் அமர்த்தப்பட்டவர்களை மற்ற திராட்சைத் தோட்ட உரிமையாளர்கள் வேலைக்கு அழைக்காததால் அவர்களின் திறமை மற்றும் உழைப்பின்மீது நம்பிக்கையில்லாமல் இருந்திருக்கும். மாலை வரை வேலையின்றிக் காத்துக்கிடக்கும் அவல நிலை ஏற்பட்டிருக்கும். பலம் நிறைந்தவர்கள், திறமையானவர்கள், அனுபவமிக்கவர்கள், அறிமுகமானவர்கள் எனப் பல அளவுகோலின்படி உடனடியாக மற்றவர்கள் வேலைக்கு அழைக்கப்பட்டிருக்கலாம். மற்றவர்கள் திறமையற்றவர்களாகக் கருதப்பட்டு விடப்பட்டிருக்கலாம். திராட்சைத் தோட்ட உரிமையாளர் பிறரின் கவனங்களை ஈர்க்காத, புறக்கணிக்கப்பட்ட பணியாளர்கள் மேல் தனது கவனத்தைச் செலுத்துகின்றார். தனது திராட்சைத் தோட்டத்தைவிட இத்தகையோரின் அடிப்படைத் தேவையையும், அவர்களின் குடும்பங்களையும், பிள்ளைகளையும் மிக முக்கியமாகக் கருதினார். நாள் முழுவதும் வேலைக்கு அமர்த்தப்படாமல் நின்று காத்துக்கிடப்போரை வேலைக்கு அமர்த்தி, அவர்களுக்கு உரிய மாண்பை வழங்குகின்றார். ஒருவருக்கு வேலை வழங்குவது அவரை அங்கீகரிப்பதன் அடையாளம். ஒருவரை வேலைக்கு அமர்த்தாமல் புறக்கணிப்பது அவரது மாண்பைப் புறக்கணிப்பதற்குச் சமம்.

இரு முரண்பாடுகள்: இவ்வுவமையின் முரண்பாடான கதைக் கருவே அவர்களுக்குக் கூலி வழங்குவதில் அமைந்திருக்கிறது.  1. திராட்சைத் தோட்ட உரிமையாளர், கடைசியில் வந்தவருக்கு முதலில் கூலி வழங்கவேண்டும் என மேற்பார்வையாளரிடம் கூறுகின்றார். ஒரு மணி நேரம் மட்டும் உழைத்த- மாலை ஐந்து மணிக்கு பணிக்கு அமர்த்தப்பட்டவருக்கு, முதலில் கூலி வழங்குவது விநோதமாக உள்ளது. 2.     பன்னிரண்டு மணி நேரம் உழைத்தவருக்கும், ஒரு மணி நேரம் உழைத்தவருக்கும் ஒரு தெனாரியம் கூலி. அதிகாலை முதல் பணியாற்றிய வேலையாள்கள் முணுமுணுக்கின்றார்கள். தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக உணர்கின்றார்கள். ஆனால், தோட்ட உரிமையாளர் அவர்களுக்கு உரிய கூலியை வழங்கினாரே தவிர, அநீதி இழைக்கவில்லை; மாறாக, கடைசியாகப் பணிக்கு அமர்த்தப்பட்ட பணியாளர்களின் தேவைகளை அறிந்து கூலியை வழங்குகின்றார். கடைசியில் வந்தவர்கள்தான் அதிக தேவையில் இருந்திருக்கக் கூடும். எனவேதான் அவர்களுக்கு முதலில் கூலி வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில், அவர்கள்தான் கடைநிலையில் மறக்கப்பட்டவர்கள், கவனிப்பாரற்றுச் சந்தையில் காத்துக் கிடந்தவர்கள். கடவுளின் இறையாட்சிப் பணியில் விருப்பத்தோடு பணிசெய்யும் பொழுது, இறைவன் நமக்குக் கூலி வழங்குவதில்லை; மாறாக, கொடையை அருளாக, மழையாகப் பொழிகின்றார். அவர் தருவதில்லை; அமுக்கி, குலுக்கி, சரிந்து விழும்படியாகக் கொட்டுகின்றார்.

இறைவனின் பொருளாதாரத் தத்துவம்: கடவுளின் பெருங்கருணையை இன்றைய நற்செய்தியின் உவமை எடுத்துரைக்கின்றது. நேரத்தை அளவிட்டு, உழைப்பை மதிப்பீடு செய்து கூலி வழங்குபவரல்லர் நம் இறைவன்; மாறாக, மனிதர்கள் வாழ வேண்டும் என்பதற்காக, பல்வேறு வழிகளில் அதனை நிறைவேற்றிடத் துடிப்பவர். அவர்களால் படைக்கப்பட்ட, அவரின் சாயலாக இருக்கும் மனிதர்களாகிய நாமே அவரின் முன்னுரிமை. வர்த்தகச் சட்டமும், உலகின் அளவுகோலும் இன்றைய நற்செய்தியில் பின்னுக்குத் தள்ளப்படுகின்றது.

இறைவனின் பொருளாதாரத் தத்துவம் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது. கடவுள் நாம் நினைப்பதற்கும் சிந்திப்பதற்கும் மேலாகவே நமக்கு அருளை பொழிபவர். சந்தைவெளியின் அளவுகோலும் கணக்குகளும் இறைவனின் கணக்கினைப் புரிந்துகொள்வதில்லை. மனிதரின் தேவைகளே அவர் கண்முன் எப்பொழுதும் இருக்கின்றன. அவர் நம்மைத் தேடிவந்து, பணி அமர்த்தி வேண்டியவற்றைச் செய்யும் கடவுளாகவே உள்ளார். நாம் செய்யவேண்டியது ஒன்று மட்டுமே. அவருக்குச் செவிமடுத்து அவரின் இறையாட்சித் தோட்டத்தில், வாஞ்சையோடு பணிபுரிவோம். நமது பணிகளுக்கு உழைப்பிற்கும் மேலாகவே பல மடங்கு ஆசிரைக் காண்போம்.

இறைவனின் வழிமுறைகளும் எண்ணங்களும்: இன்றைய முதல் வாசகத்தில் எசாயா இறைவாக்கினர் இறைவனை வாய்ப்பு உள்ளபோதே தேடும்படிப் பணிக்கின்றார். அவரைத் தேடிச் செல்லும் பொழுது, அவரின் எண்ணங்களைப் போல நமது எண்ணங்களும் மாற்றம் பெறும் என்பதும், நமது தேவைகள் சந்திக்கப்படும் என்பதும் உறுதி. இதனையே இன்றைய பதிலுரைப்பாடல் (திபா 145:2-3,8-9, 17-18) எடுத்துரைக்கிறது.  

உலகின் நீதிக் கொள்கையும், இறைவனின் நீதிக் கொள்கையும்: உலகின் நீதிக் கொள்கை ஒவ்வொருவருக்கும் உரியது. அவரவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்னும் நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. இறைவனின் நீதிக் கொள்கையில் ஒவ்வொருவருக்கும் சிறந்ததை வழங்கவேண்டும். குறிப்பாக, கடைநிலையினயிருக்கு முன்னுரிமை என்னும் நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. கடைசியாகப் பணியமர்த்தப்பட்டவருக்கு வழங்கப்படும் கூலி மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்ட முன்னுரிமை செயலினைக் குறித்து அங்கலாய்த்துக் கொண்ட முதலில் பணியமர்த்தப்பட்ட பணியாளர்கள் அச்செயலினை வரவேற்கவில்லை. தங்களுக்கு அவர்களைவிட அதிக முன்னுரிமையும், சிறப்புக் கவனமும், கூடுதல் கூலியும் நீதியும் கிடைக்க வேண்டும் என எதிர்பார்த்தனர். இங்குத் திராட்சைத் தோட்ட உரிமையாளர் நீதியோடு கலந்த அன்பினால் செயல்படுகின்றார்.

மனித உரிமை போராட்ட வீரர் மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் வரிகள் இங்கே பொருத்தமாய் அமைகின்றது: “அன்பிற்கு எதிராக நிற்கும் அனைத்தையும் சரிசெய்வதுதான் நீதியின் உன்னத நிலை. அதுவே சிறந்த அன்பு.” இன்றைய நற்செய்தியில் இறைவன் நீதியை, இரக்கத்தினால் சுற்றி, அதில் அன்பு என்னும் நறுமணத்தை ஊற்றுகின்றார். இதுவே, இறைவனின் நீதிக் கொள்கை.

ஒளி மங்கும் வேளையில், தேடிவரும் இறைவன்: திராட்சைத் தோட்ட உரிமையாளர், ஐந்தாம் முறையாக மாலை ஐந்து மணிக்கு சந்தைவெளிக்குச் சென்று அங்குப் பணிக்காகக் காத்திருப்போரை அழைத்து, அவரது தோட்டத்தில் வேலையில் அமர்த்துகின்றார். இறைவனுக்கு எதுவும் தாமதமில்லை. மிகவும் தாமதமான நேரங்களில் கூட அவர் நம்மைத் தேடிவரத் தயங்குவதில்லை. நமது வாழ்க்கையின் கடைசி ஒளி மங்கும் வேளையிலும், இறைவன் நம்மைத் தேடி வருகின்றார். அவரது இறையாட்சியின் திராட்சைத் தோட்டத்தில் அனைவருக்கும் உரிமையும் கடமையும் உண்டு. நமது உழைப்பால், உடனிருப்பால் அதனை இன்னும் வளமையாக்குவோம். எவரும் அவரது அன்பிலிருந்து, பார்வையிலிருந்து தொலைவில் இல்லை

நம் உடன் உழைப்பாளர்களை மதிப்போம்நமது உழைப்பாளர்களை மாண்புடனும் அக்கறையுடனும், அவர்களின் தேவைகளை உணர்ந்து, குடும்பச் சூழ்நிலை அறிந்து, அவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்திட மறந்திட வேண்டாம். இறைவன் நம்மிடம் தாராள உள்ளத்தினை, அருளினை வழங்குவது போன்று, நாமும் நம் சகோதர உடன் உழைப்பாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைக் கண்முன் கொண்டு அவர்களின் தேவைக்கேற்ப தாராளமாய் வழங்குவோம். “வறியவரும், எளியவருமான கூலியாளர்கள், உன் இனத்தவராயினும் சரி, உன் நகர்வாயிலுக்குள் உள்ள அந்நியராயினும் சரி, அவரைக் கொடுமைப்படுத்தாதே. அவரது கூலியை அந்தந்த நாளில் கொடுத்து விடு. கதிரவன் மறையுமுன்னே கொடு. ஏனெனில் அவர் வறியவராய் இருப்பதால், அவரது பிழைப்பு அதில் அடங்கியுள்ளது (இச 24:14-15) என்னும் இறைவார்த்தையை நினைவில் கொள்வோம். பிழைப்பிற்காக உழைக்கும், உழைப்பாளர்களின் உயிரை உறிஞ்ச வேண்டாம். உள்ளுணர்வு கொண்டு, உளமார மதித்து, அவர்களின் உழைப்பை, உணர்வை, உயர்த்திப் பிடிப்போம்.