slider slider slider
நம் வாழ்வு
நம் வாழ்வு இதழின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்
நம் வாழ்வு
நம் வாழ்வு - நல்லவர்களின் நாடித்துடிப்பு
நம் வாழ்வு
நல்லவர்களின் நாடித்துடிப்பு
அண்மைச் செய்திகள்
மார்ச் 01, 2026, தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு - தொநூ 12:1-4; 2திமொ 1:8-10; மத் 17:1-9 (மாற்றம் காண அழைக்கும் மலைப்பயணம்)
ஞாயிறு மறையுரை
மார்ச் 01, 2026, தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு - தொநூ 12:1-4; 2திமொ 1:8-10; மத் 17:1-9 (மாற்றம் காண அழைக்கும் மலைப்பயணம்)

தவக்காலத்தின் உயிர்நாடியாக விளங்கும் மாற்றம், மனமாற்றம், உருமாற்றம் ஆகிய உயரிய சிந்தனைகளை அசைபோட இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்புவிடுக்கிறது. கடந்த ஞாயிறன்று பாலைநிலத்தில் சோதனைகளைச் சந்தித்து, உருக்குலைந்த நிலையில் நின்ற இயேசுவைச் சந்தித்த நாம், இன்று தாபோர் மலையில் மாட்சிமையுடன் உருமாறி நிற்கும் இயேசுவைச் சந்திக்கிறோம்.

பாலைநிலத்தில் நாற்பது நாள்கள் நோன்பிருந்த இயேசுவிடம், ‘அதிகாரம் மற்றும் செல்வாக்குபோன்ற குறுக்கு வழிகள் மூலம் தம்மை எளிதாக உருமாற்றிக்கொள்ள முடியும் என ஆசை காட்டிய அலகையின் மாய வழிகளை மறுத்த இயேசு, பாடுகள் மற்றும் மரணம் என்ற இடர்ப்பாடுகள் நிறைந்த பாதையின் வழியாகவே உண்மையான மாட்சி பிறக்கும் என்பதைத் தெளிவுபடுத்தினார் (மத் 16:25). இயேசுவின் இந்த அறிவிப்பால் அதிர்ச்சியடைந்து, மனந்தளர்ந்து போயிருந்த சீடர்களுக்கு நம்பிக்கை ஊட்டவும், ‘சிலுவைப்பாதையே சீடத்துவத்தின் வழிஎன்பதை உறுதிப்படுத்தவும் நிகழும் மாபெரும் அடையாளமே இன்றைய நற்செய்தியில் நாம் காணும் இயேசுவின் தோற்ற மாற்றம்.

மாற்றம் என்பது இயற்கையின் விதி மட்டுமல்ல, அது இறைவனின் விருப்பமும்கூட. மாற்றம் எப்போதும் ஒரு வலியோடுதான் தொடங்குகிறது. நமக்குப் பழகிப்போன வசதியான வாழ்வை விட்டு வெளியேறுவது கடினம் என்பதால், நாம் மாற்றத்தை எதிர்கொள்ளத் தயங்குகிறோம். மாற்றம் என்பது தேக்கநிலையை உடைத்து வளர்ச்சியை நோக்கிச் செல்லும் ஒரு பயணம். இது வெறும் வெளிப்புற அலங்காரம் அல்ல; அது உட்புற உருமாற்றம். இன்றைய வாசகங்கள் நமக்கு ஒருமலைப்பயணத்தைமுன் வைக்கின்றன. மலை என்பது இறைவன் வாழும் இடம்; மலையுச்சி என்பது இறைவனைச் சந்திக்கும் இடம். அங்கே பழைய இயல்புகள் களைந்து, புதிய மனிதராக நாம் உருமாற அழைக்கப்படுகிறோம்.

இன்றைய நற்செய்தியில் இயேசுவின் தோற்ற மாற்றத்தைக் கொண்டாடும் நாம், முதல் வாசகத்தில் ஆபிரகாமின் வாழ்விலும் ஒரு பெரும் மாற்றத்தைக் காண்கிறோம். பொதுவாக, இளம்வயதில் மாற்றங்களைச் சந்திப்பது எளிது. ஆனால், வேரூன்றிப் போன முதுமையில் மாற்றங்களை ஏற்பது என்பது பெரும் மனப் போராட்டம். ஆபிரகாம் தன் ஊரைவிட்டுப் புறப்பட ஆண்டவர் அழைத்தபோது அவருக்கு வயது எழுபத்தைந்து. வாழ்க்கையின் அந்திமத்தில், ஓய்வெடுக்க வேண்டிய வயதில், பழகிய இடங்களை விட்டுவிட்டு முன்பின் தெரியாத நாட்டிற்குப் போகச் சொல்வது ஒரு மனிதருக்கு எத்தகைய தயக்கத்தை உருவாக்கியிருக்கும்? இன்றைய உலகிலும், முதிர்ந்த வயதில் புதிய சூழல்களுக்குத் தள்ளப்படும் முதியவர்களின் மனவலியை ஆபிரகாமின் இந்தத் தொடக்ககாலப் போராட்டம் நமக்கு நினைவூட்டுகிறது.

வாழ்க்கை என்பது ஒரு வசதியான இடத்தில் தங்குவதல்ல; மாறாக, இறைவனுக்காகத் தொடர்ந்து நகர்வது. ஆண்டவர் ஆபிரகாமிடம் மூன்று கடினமான தியாகங்களைக் கேட்கிறார்: ) தன் நாடு, ) தன் இனம், ) தன் தந்தை வீடு. நாடு ஒருவரின் பாதுகாப்பையும் பற்றையும், இனம் ஒருவரின் சுற்றத்தாரையும் உறவையும், தந்தை வீடு ஒருவரின் அடையாளத்தையும் உரிமையையும் குறிக்கின்றது. ஆபிரகாமின் காலத்தில் மட்டுமல்ல, இன்றும் இந்த மூன்றும்தான் ஒரு மனிதரின் முகவரி. ஒருவரின் உரிமைகளும் உறவுகளும் இதைக்கொண்டே அளவிடப்படுகின்றன. ஆபிரகாமுக்குக் கடவுள் வழங்கிய கட்டளைகள் கடினமாக இருந்தபோதிலும், அவரது ஆழமான கடவுள் அனுபவம், தெரியாத பாதையிலும் அவரைத் துணிவுடன் நடக்க வைத்தது.

ஆபிரகாம் தனது அடையாளங்களை, முகவரியை இழந்தார்; இறைவனின் அடையாளமாக, முகவரியாக மாறினார். ஆபிரகாம் எதை இழந்தாரோ, அதைவிடப் பன்மடங்கு மேலானவற்றை ஆண்டவர் அவருக்கு வாக்களிக்கிறார். ஆபிரகாமின் கீழ்ப்படிதலால் அவர் நான்கு ஆசிகளைப் பெறுகின்றார். அவை: ) பெரிய இனம், ) ஆசி, ) சிறப்புற்ற பெயர், ) நீயே ஆசி. நாம் இறைவனுக்காக நம்மையே இழக்க முன்வரும்போது நாம் கேட்காமலேயே பன்மடங்கு பேறுபலன்களைப் பெறமுடியும் என்பதை ஆபிரகாம் நமக்கு நினைவூட்டுகின்றார். “நீயே ஆசியாக விளங்குவாய் (தொநூ 12:2) என்பது திருவிவிலியத்திலேயே மிகவும் தனித்துவமான ஓர் அழைப்பு. ஆபிரகாம் ஆசியைப் பெறுபவர் மட்டுமல்லர், அவர் ஆசியாகவே மாறுகிறார்.

ஆபிரகாமின்புறப்பாடும்இன்றைய நற்செய்தியில் இயேசுவின்தோற்ற மாற்றமும்வெவ்வேறு காலங்களில் நடந்தாலும், இவை இரண்டும்இழத்தல் மற்றும் பெறுதல்என்ற ஒரே நேர்க்கோட்டில் இணைகின்றன. ஆபிரகாம் தன் வசதிகளைத் துறந்து, ஒரு தெரியாத நிலத்தை நோக்கிப் பயணிக்கத் துணிந்தபோதுதான் ஒரு பெரிய இனத்தின் தந்தையாக உருமாறினார். அதுபோலவே, இயேசுவும் பாடுகள் மற்றும் சிலுவை மரணம் என்ற வேதனை நிறைந்த பாதையை ஏற்கத் துணிந்தபோதுதான், தாபோர் மலையில் ஒளிமயமாக உருமாறினார். ஆபிரகாம் தன்அடையாளங்களைஇழந்தார். இயேசு தம்உயிரையேஇழந்தார். தன்னிலை மாறத் துணியாத எவரும், தெய்வீக ஒளியைப் பிரதிபலிக்க முடியாது. ஆபிரகாம் ஆசியாக மாறியது போல, நாமும் சிலுவையைச் சுமக்கத் துணிந்தால் மட்டுமே, மாட்சிமையின் ஒளியாக உருமாற முடியும் என்பதே இன்றைய நாள் நமக்கு உணர்த்தும் ஒருவரிச் செய்தி.

இன்று ஆசி மற்றும் பாடுகள் ஆகியவற்றிற்கு இடையே உள்ள முரணான உறவே கிறித்தவ வாழ்வின் மிகப்பெரிய சவால். நாம் ஆசியை விரும்புகிறோம்; ஆனால், அதை நோக்கிய கடினமான பயணத்தைத் (சிலுவையை) தவிர்க்க நினைக்கிறோம். இந்த மனப்போராட்டத்தைச் சீடர்களின் வாழ்விலும் வார்த்தையிலும் தெளிவாக அவதானிக்க முடிகிறது. இயேசு தம் சாவைப் பற்றி முதன்முறை முன்னறிவித்தபோது (மத் 16:21) சீடர்கள் அதிர்ச்சியடைந்தனர். குறிப்பாக, பேதுருஆண்டவரே, இது வேண்டாம்; இப்படி உமக்கு நடக்கவே கூடாது (16:22) என்றார். பேதுரு இன்பமான, பாதுகாப்பான சூழலிலேயே தங்கிவிட விரும்பினார் (17:4). கீழே காத்திருக்கும் சிலுவை, பாடுகள் மற்றும் மரணத்தைச் சந்திக்க அவர் அஞ்சினார். அவர்களுக்கு மெசியா என்பவர்வெற்றி வீரராகமட்டுமே தெரிந்தார்; ‘துன்புறும் ஊழியனாகதெரியவில்லை. அவர்கள்மாட்சிமைஇயேசுவை விரும்பினார்கள்; ‘உருகுலைந்தஇயேசுவை அல்ல.

நம்முடைய இயல்பும் சீடர்களின் மனநிலையை வெளிப்படுத்துவதை உணரலாம். ஆசிகள் கிடைக்கும்போது அவ்விடத்திலேயே தங்கிவிடத் துடிக்கும் நாம், அந்த ஆசியைப் பெறுவதற்காகக் கடக்க வேண்டிய போராட்டங்களைக் கண்டு பின்வாங்குகிறோம். இழப்பு இல்லாமல் ஆசி இல்லை. ஆபிரகாம் ஆசியாக மாறியது, அவர் தன் நாடு, இனம், தந்தை வீடு என்ற தன் முழு முகவரியையும் இழந்ததினால் கிடைத்த பேறு! கைகள் காலியாக இருந்தால்தானே புதிய பரிசைப் பெறமுடியும்!

இன்றைய இரண்டாம் வாசகத்தில், திருத்தூதர் பவுல் திமொத்தேயுவிடம் முன்வைக்கும் அழைப்பும்நற்செய்தியின் பொருட்டுத் துன்பத்தில் என்னுடன் பங்குகொள் (திமொ 1:8) என்பதே. துன்பத்தை ஒரு சுமையாகப் பார்க்காமல், ‘கடவுளின் வல்லமைவெளிப்படும் களமாகப் பார்க்க நம்மை அழைக்கிறார். பவுல் குறிப்பிடுவது போல, கிறிஸ்து சாவு என்ற அதிகாரத்தை அழித்துவிட்டு, நற்செய்தியின் வழியாக வாழ்வையும் அழியாமையையும் ஒளிர்வித்தார். அந்த ஒளியைப் பிரதிபலிக்க வேண்டுமென்றால், நாம் கிறிஸ்துவின் துன்பத்திலும் பங்குகொள்ளவேண்டும். துன்பத்தில் பங்கெடுப்பது என்பது முடங்கிப்போவதல்ல; மாறாக, ஆபிரகாமைப் போலப் புறப்படுவதும், சீடர்களைப் போலப் பாதுகாப்பான கூடாரங்களை விட்டு வெளியேறுவதும், பவுலைப் போல நற்செய்திக்காகத் தியாகங்களைச் செய்வதும் ஆகும்.

இன்றைய இந்த மலைப்பயணம் நமது வாழ்விற்கான மூன்று மாபெரும் உண்மைகளை உணர்த்துகின்றன: ஒன்று, துணிந்து புறப்படுவோம். ‘வயதாகிவிட்டது, சூழல் சரியில்லைஎன்ற சாக்குகளைத் தவிர்த்து, இறைவனின் அழைப்பு வரும்போது மாற்றத்தை நோக்கி முதலடியை எடுத்து வைப்போம். நமது இதமான சூழலை (comfort zone) விட்டு வெளியேறும் அந்தப் புள்ளியில்தான் இறைவனின் ஆசி தொடங்குகிறது.

இரண்டாவது, கூடாரம் அமைக்காதிருப்போம். வாழ்வின் தற்காலிக வெற்றிகளிலோ, வசதிகளிலோ திருப்தி அடைந்து அங்கேயே தங்கிவிடாமல், ஆன்மிக வாழ்வு என்பது ஓர் இடைவிடாத பயணம் என்பதை உணர்வோம். மலையுச்சியில் பெற்ற ஒளியை மக்களிடம் கொண்டு செல்ல, மீண்டும் சமவெளிக்கு இறங்கி வந்து பணியாற்றுவதே உண்மையான சீடத்துவம்.

மூன்றாவது, துன்பத்தை ஒளியாக்குவோம். துன்பத்தைக் கண்டு அஞ்சாமல், நற்செய்திக்காக நாம் ஏற்கும் அவமானங்களையும் தியாகங்களையும் மனமுவந்து ஏற்போம். சிலுவையின் நிழலில் உறுதியாக நின்றால் மட்டுமே மாட்சியின் ஒளியைக் காண முடியும். ஆபிரகாமின் மாற்றமும், இயேசுவின் மாட்சியும், பவுலின் மன உறுதியும் நம்மை வழிநடத்தட்டும்.

தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு (01-03-2026) தொநூ 12:1-4; 2திமொ 1:8-10; மத் 17:1-9
ஞாயிறு தோழன்
தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு (01-03-2026) தொநூ 12:1-4; 2திமொ 1:8-10; மத் 17:1-9

திருப்பலி முன்னுரை

இறையாட்சியைக் கட்டியெழுப்பி, கடவுளை மாட்சிப்படுத்த தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு நமக்கு அழைப்பு விடுக்கிறது. தோற்ற மாற்ற நிகழ்வு நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பணிவாழ்வின் ஒரு திருப்புமுனை நிகழ்வாகும். தாம் இறைமகனாய் இருந்தபோதும் துன்பங்களை அனுபவித்துத்தான் மீட்பை அளிக்கவேண்டும் என்பதை அவர்தம் உருமாற்றத்தின் வழியாகக் கற்பிக்கிறார்.

தோற்ற மாற்ற நிகழ்வு இயேசுவின் சீடர்களைச் சிலுவை நிகழ்வுக்குத் தயார்செய்து, உயிர்ப்பின் மாட்சியை முன்கூட்டியே உணரவைக்கிறது. சிலுவைக்குப் பின் நிச்சயம் மாட்சி உள்ளது என்ற நம்பிக்கையை ஊட்டி, துன்பத்தை எதிர்கொள்ளப் பக்குவப்படுத்துகிறது. இயேசுவின் சீடர்களாக வாழ அழைக்கப்பட்ட நாமும் துன்பங்களில் துவண்டு போகாமல் இறைவனுக்குச் சான்றுபகர்வோம்.

விஞ்ஞானத்தை மட்டும் நம்பி, மெய்ஞானமாகிய கடவுளின் குரலுக்குச் செவிகொடுக்காமல் மனிதத்தைச் சிதைத்துக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் மனசாட்சியின் குரலுக்குச் செவிகொடுத்து, சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் விதைத்து, கிறிஸ்துவின் மதிப்பீடுகளை எவருக்கும் அஞ்சாமல் துணிவுடன் வாழ்க்கையால் எடுத்துச்சொல்வோம். அப்போது கடவுள் நம்மைப் பார்த்து, “இவரே என் அன்பார்ந்த மகன் (மகள்)” என்று சொல்லி பூரிப்படைவார். நற்செயல்கள் வழியாக நல்லவராம் இயேசுவை அறிவித்து, ஆண்டவரின் ஆசிபெற்ற மக்களாக வாழ்ந்திட வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசக முன்னுரை

ஆபிரகாம் கடவுளின் அழைப்பை ஏற்று, தன் சொந்த நாடு மற்றும் குடும்பம் அனைத்தையும் துறந்து ஆண்டவர் பணித்தவாறு செல்கிறார். ஆண்டவர் அவருக்கு ஏராளமான ஆசிகளை வழங்குகிறார். ஆபிரகாமைப்போல நாமும் இறைவனின் கட்டளைகளை ஏற்று மாற்றத்தை நோக்கிப் பயணிக்கும்போது இறைவனின் ஆசியால் நிரப்பப்படுவோம் எனக் கூறும் இன்றைய முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

இயேசு கிறிஸ்து வழியாகக் கடவுள் நம்மை மீட்டுள்ளார். சாவை அழித்து நிலை வாழ்வை வழங்கியுள்ளார். இயேசுவின் இரத்தத்தால் வாழ்வைப் பெற்றுக்கொண்ட நாம் அனைவரும், நமது சொற்களாலும் செயல்களாலும் நற்செய்தியை அறிவிக்கவும், துன்பங்களின் மத்தியிலும் துணிவுடன் இறையாட்சியைக் கட்டியெழுப்பவும் அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. நம்பிக்கையின் ஆண்டவரே! உலகெங்கும் நற்செய்தியின் பொருட்டு துன்பங்களையும் இழப்புகளையும் எதிர்கொள்ளும் திரு அவையின் பணியாளர்கள் அனைவரும் துன்பத்தால் துவண்டுபோகாமல், உம்மில் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ தேவையான அருள்வரங்களைத் தந்து  காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. உடன்வாழும் ஆண்டவரே! நீர் வாக்களித்த நாட்டையும் வாழ்வையும் அடைவதற்கு ஆபிரகாம் கொண்டிருந்த பொறுமையையும் நம்பிக்கையையும் நாங்களும் பின் பற்றி, வாழ்வில் மாற்றத்தை நோக்கி நம்பிக்கையோடு பயணிக்கவும், தளராத சாட்சிய வாழ்வு வாழவும் வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. பாதுகாக்கும் ஆண்டவரே! அரசுப் பொதுத்தேர்வினை எழுதவிருக்கும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ-மாணவியர் ஆர்வத்தோடு படித்து, ஞானத்தோடு தேர்வு எழுதி, நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி அடையவும், எதிர்காலம் சிறப்பானதாக அமைந்திடவும் வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. உடன் பயணிக்கும் ஆண்டவரே! தவக் காலத்தில் உம்மோடு பயணிக்கும் நாங்கள் அனைவரும் எங்களுடன் வாழும் சகோதர-சகோதரிகளின் துன்பத்தில் துணையாக இருந்து, மற்றவர்களின் மனக்காயத்திற்கு மருந்திடத் தேவையான நல்மனத்தை எங்கள் அனைவருக்கும் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

மரியாவும் யோசேப்புவும் கன்னிமை என்னும் கொடையை வாழ்ந்தார்கள் (திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி - 30)
ஆன்மிகம்
மரியாவும் யோசேப்புவும் கன்னிமை என்னும் கொடையை வாழ்ந்தார்கள் (திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி - 30)

மரியாவை ஒருகன்னியாகக்காட்டும்பொழுது நற்செய்தியாளர் லூக்கா, “அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர் (லூக் 1:27) என்று கூறுகின்றார். இந்த இரண்டு செய்திகளும் முதலில் வாசிக்கின்றவர்களுக்கு ஒன்றுக்கொன்று முரண்பட்டவைகளாகத் தோன்றலாம்.

இங்குப் பயன்படுத்தப்படும்கன்னிஎன்பதற்கான கிரேக்கச் சொல்லானது, திருமண ஒப்பந்தம் செய்த ஒரு பெண்ணின் நிலையைக் குறிக்கவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். ஆகவே, மரியா திருமண நிலையில் வாழ்கின்றார்; ஆனால், மண ஒப்பந்தம் மட்டுமே ஆனவர் (lives in the marital state, but that of betrothal). இருப்பினும், நவீன கலாச்சாரத்தில் இருப்பதைப் போலல்லாமல், பண்டைய யூதர்களின் திருமண நிச்சயதார்த்தமானது ஓர் ஒப்பந்தத்திற்காக வழங்கப்பட்டது மற்றும் பொதுவாக உறுதியான மதிப்பைக் கொண்டிருந்தது. அந்த இளைஞன் அந்தப் பெண்ணை அவரின் வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றபோதுதான் உண்மையில் திருமணம் முழு நிறைவை அடைந்தாலும் கூட, அது உண்மையில் திருமண நிலைக்கு ஒப்பந்தமானவரைத் திருமண வாழ்வுக்கு அறிமுகப்படுத்துவதாக இருந்தது.

இவ்வாறு, வானதூதர் மரியாவுக்கு இயேசுவின் பிறப்பை அறிவித்தபொழுது திருமண ஒப்பந்தமானவருக்கான நிலையை மரியா பெற்றிருந்தார். என்றைக்கும் கன்னியாக நிலைத்திருக்கும் எண்ணத்தைக் கொண்டிருந்த மரியா, ஏன் திருமண ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டார்? என்று நாம் வியப்படையலாம். இச்சிக்கலை நற்செய்தியாளர் புனித லூக்காவும் அறிந்திருந்தார். ஆனால், எந்த விளக்கத்தையும் அளிக்காமல், நிலைமையை மட்டும் குறிப்பிடுகின்றார். உண்மையில், கன்னித்தன்மையில் இருப்பதற்கான மரியாவின் எண்ணத்தை வலியுறுத்தும் நற்செய்தியாளர், அவரை யோசேப்புவின் மனைவியாகவும் காட்டுகின்றார் என்பது இரண்டு தகவல்களின் வரலாற்று நம்பகத்தன்மையின் அறிகுறியாகும்.

யோசேப்பு கடவுளின் மீட்புத் திட்டத்தில் உடன் உழைக்க அழைக்கப்பட்டார்

அவர்கள் திருமண ஒப்பந்தம் செய்து கொண்ட பொழுது கன்னியாக வாழ்வதற்கான திட்டம் குறித்து யோசேப்பு மற்றும் மரியாவுக்கு இடையே ஒரு புரிதல் இருந்தது என்றும் கருதலாம். மேலும், வார்த்தை மனுவுருவாதலின் மறைபொருளைக் கருத்தில் கொண்டு கன்னித்தன்மையைத் தேர்வு செய்ய மரியாவைத் தூண்டிய தூய ஆவியானவரால், குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்றதொரு குடும்ப அமைப்பில் இந்தத் தூய ஆவியானவர் வர வேண்டும் என்று விரும்பி யோசேப்பிலும் கன்னித்தன்மையின் மகத்துவத்தை ஊக்குவிக்க முடிந்திருக்கும்.

இறைத்தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி இவ்வாறு கூறுகின்றார்: “யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம்; ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியாரால்தான் (மத் 1:20). தூய ஆவியானவரின் இவ்வார்த்தைகளால், யோசேப்பு தனது திருமண வாழ்வை முற்றிலும் சிறப்பு வாய்ந்த முறையில் வாழ அழைக்கப்பட்டார் என்பதற்கான உறுதியைப் பெற்றார். இவ்வாறு, இயேசுவைப் பெற்றெடுப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மரியாவுடன்  கன்னித்தன்மையில் ஒன்றித்திருப்பதன் வழியாக, கடவுளின் மீட்புத் திட்டத்தை நிறைவேற்றுவதில் உடன் ஒத்துழைக்க யோசேப்புவையும் இறைவன் அழைக்கின்றார்

மரியாவையும் யோசேப்பையும் எந்த வகையான திருமண வாழ்வு வாழ தூய ஆவியானவர் அழைத்தார் என்பதை மீட்புத் திட்டத்தின் மற்றும் உயர்ந்ததோர் ஆன்மிகத்தின் பின்னணியில் மட்டுமே நாம் புரிந்துகொள்ள முடியும். மனுவுருவாதல் மறைபொருளின் உறுதியான செயலாக்கமானது தெய்வீகமானதொரு மகப்பேற்றை முன்னிலைப்படுத்துகின்றதொரு கன்னிப் பிறப்புக்கு அழைப்பு விடுக்கின்ற அதேநேரத்தில், அக்குழந்தையின் ஆளுமையின் இயல்பானதொரு வளர்ச்சிக்கு உதவக்கூடியதொரு குடும்பத்தை அமைக்கவும் அவர்களை அம்மறைபொருள் அழைத்தது.

மிகச் சுருக்கமாகக் கூறவேண்டுமென்றால், வார்த்தை மனுவுருவாதலின் மறைபொருளில் அவர்கள் அளித்த பங்களிப்பைக் கருத்தில் கொண்டு, யோசேப்பு மற்றும் மரியா கன்னித்தன்மை என்னும் சிறப்பு வரம் மற்றும் திருமணத்தின் கொடை ஆகிய இரண்டையும் வாழும் அருளைப் பெற்றனர். மரியா மற்றும் யோசேப்பின் கன்னி அன்பின் ஒற்றுமையானது (communion of virginal love) மனுவுருவாதல் என்னும் மறைபொருளின் உறுதியான செயலாக்கத்துடன் தொடர்புபடுத்தப்பட்டதொரு சிறப்புமிக்க நிகழ்வு என்றாலும்கூட, அது உண்மையான திருமணமாகும் (ஒப்பிடுக. மீட்பரின் தாய், எண். 7).

இரண்டாம் நூற்றாண்டிலிருந்து, யோசேப்பு மற்றும் மரியாவிற்கிடையேயான அவர்களின் மணமக்களுக்கான ஒன்றிப்பின் உயர் மறைபொருளை ஏற்றுக்கொள்வதிலிருந்த சிரமமானது சிலரை அவர் வயதில் முதியவர் என்று நினைப்பதற்கும், அவரை மரியாவின் கணவர் என்பதைவிட பாதுகாவலர் என்று கருதுவதற்கும் இட்டுச்சென்றது. இதற்கு மாறாக, அவர் அந்நேரத்தில் ஒரு வயதான மனிதர் அல்லர்; மாறாக, அவரது உள்மன நிறைவு மற்றும் இறையருளின் பலனானது மரியாவுடனான தனது திருமண உறவைக் கன்னிப் பாசத்துடன் (virginal affection) வாழ்வதற்கு இட்டுச்சென்றது என்று கருதுவதற்கான ஒரு கருத்தாக்கமாகும்.

திருத்தந்தை 13-ஆம் சிங்கராயர் யோசேப்பின் பாதுகாவலில் திரு அவை முழுவதையும் ஒப்படைத்தார்

மனுவுருவாதல் மறைபொருளில் யோசேப்புவின் ஒத்துழைப்பானது இயேசுவின் தந்தை என்கிற பங்கையும் அதனுள் அடக்குகின்றது. அவரின் இப்பணியை வானதூதர் அவருக்குக் கனவில் தோன்றி அவரை அக்குழந்தைக்குப் பெயரிட அழைக்கின்ற போது உறுதிப்படுத்துகின்றார்: “அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார்; அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர்; ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார் (மத் 1:21).

இயற்கையான முறையில் மனிதப் பிறப்பெடுப்பதைத் தவிர்க்கின்ற அதேவேளை, யோசேப்புவிற்கான தந்தை என்கிற நிலையானது உண்மையானதொன்றாக இருக்கின்றது. ஆனால், வெளிப்படையானதாக இல்லை. தந்தை (father) மற்றும் தோற்றுவித்தவர் (one who begets) என்பனவற்றை வேறுபடுத்திப் பார்க்கையில், மரியாவின்   கன்னித்தன்மை பற்றிக் கூறுகின்ற நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்டDe Margaritaஎன்கிற நூலானது இவ்வாறு கூறுகின்றது: “கணவன்-மனைவியாக  வாழ்வதற்காக மரியாவும்-யோசேப்பும் ஏற்றுக்கொண்ட கடமைகள் யோசேப்புவைத் தந்தை என அழைப்பதற்கான தகுதியை அவருக்குக் கொடுத்தது. எவ்வாறாயினும் அவர் இயேசுவைத் தோற்றுவிக்காத தந்தை ஆவார் (a father, however, who did not beget). இவ்வாறாக, மீட்பர் முழுச் சுதந்திரத்தோடு கீழ்ப்படிந்திருக்கக் காரணமான (லூக் 2:51) அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவரை வளர்ப்பதிலும் தச்சுத் தொழிலைக் கற்றுக் கொடுப்பதிலும் யோசேப்பு இயேசுவின்  தந்தை என்கிற பங்கை நிறைவேற்றினார்.

கிறித்தவர்கள் எப்பொழுதுமே யோசேப்புவை மரியாவுடனும் இயேசுவுடனும் நெருக்கமான ஒற்றுமையுடன் வாழ்ந்தவர் என்று ஒப்புக்கொண்டு மரணத்திலும் அவர்களின் பாசத்தையும் ஆறுதல் அளிக்கும் உடனிருப்பையும் அவர் அனுபவித்தார் என்கிற முடிவுக்கு வந்தனர். இந்த நிலையான பாரம்பரியத்திலிருந்து, பல இடங்களில் திருக்குடும்பத்திற்கும், மீட்பரின் பாதுகாவலரான யோசேப்புவிற்கும் ஒரு சிறப்புப் பக்தியானது வளர்ந்துள்ளது. ஆகவேதான் அனைவரும் அறிந்தவாறு, திருத்தந்தை 13-ஆம் சிங்கராயர் யோசேப்புவின்  பாதுகாவலில் திரு அவை முழுவதையும் ஒப்படைத்தார்.

மூலம்: John Paul II, Mary and Joseph lived gift of virginity, in «L’Osservatore Romano», Weekly Edition in English, 28 August 1996, p. 7.