“தொகுதி
மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டுக்குப் பெரிய ஆபத்து வந்திருக்கிறது. அதாவது, இந்திய விடுதலைக்குப் பிறகு, இந்த நாட்டில் பசியும் - வறுமையும் அதிகமாக இருக்கிறது. இதைச் சரி செய்யவேண்டும் என்றால், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தவேண்டும் என்று சொன்னார்கள். அதில் இருக்கும் நியாயத்தை உணர்ந்து, நம்முடைய தமிழ்நாட்டிலும் - இன்னும் பல மாநிலங்களிலும் குடும்பக்
கட்டுப்பாடு திட்டத்தை முறையாகச் செயல்படுத்தினோம். இப்போது என்னவென்றால், உங்கள் மாநிலத்தின் மக்கள்தொகைக்கு ஏற்ற மாதிரி, தொகுதி மறுசீரமைப்புச் செய்யப் போகிறோம், உங்களுக்குக் கூடுதலாக எம்.பி. சீட் கிடைக்கும் என்று சொல்கிறார்கள். உண்மை என்னவென்றால், இதே காலகட்டத்தில், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தாமல் இருக்கும் சில மாநிலங்களுக்குத்தான், விகிதாச்சாரப்படி அதிக இடம் கிடைக்கப் போகிறது! இதனால், நாடாளுமன்றத்தில் நம்முடைய குரல் வலுவிழந்து போய்விடும். அத்தகையதொரு நிலையென்றால், டெல்லி அதிகார வர்க்கம் தமிழ்நாட்டைப் பற்றிச் சிந்திக்குமா? நமக்கு எந்தத் திட்டமாவது கிடைக்குமா? தென்னிந்தியாவிலிருந்து பிரதமர் உருவாகவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கவே முடியாது. சொந்த நாட்டிற்குள்ளேயே இரண்டாம்தரக் குடிமக்களாக மாற்றப்படும் ஒரு கொடுமையை அனுமதிக்கலாமா? இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கத்தான் உங்களை அழைக்கிறேன்.”
மாண்புமிகு மு.க.
ஸ்டாலின்,
தமிழ்நாடு
முதலமைச்சர்
“நாளை
நமக்கு எதிராக நடக்கப்போகும் அநீதிக்கு எதிரான குரலாகவும், எழுச்சி குரலாகவும் இருக்கவேண்டும். 33 விழுக்காடு பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பதை நாங்கள் என்றோ சொல்லிக்கொண்டு இருக்கிறோம். நாங்கள் எனும்போது ஒரு திராவிட கட்சி அல்ல, அத்தனை கட்சிகளும் சொல்லிக் கொண்டு இருக்கும் செய்தியை இன்றுதான் புதிய கண்டுபிடிப்பு போல் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் (மத்திய அரசு) இப்போது சொல்லும் 33 விழுக்காடு இடஒதுக்கீடு என்பது தூண்டில் முள்ளின் நுனியில் வைத்திருக்கும் சின்ன மீன். அதைக் கவ்வமாட்டோம். விவாதிப்போம்.”
திருமிகு. கமல்ஹாசன்,
தலைவர்
மக்கள்நீதி
மய்யம்
“மக்களவையில்
மாநிலங்களின் தற்போதைய விகிதாசாரப் பங்கைக் கணக்கில் கொள்ளாமல், தொகுதி மறுவரையறை நடவடிக்கையைத் தொடர மத்திய அரசு முனைப்புடன் இருப்பது, தொகுதி மறுவரையறை மசோதா 2026-இன் வரைவு அறிக்கையைப் பார்க்கும் போது தெரிகிறது. இத்தகைய நடவடிக்கை மிகுந்த அநீதியானது. ஏனெனில், 1976-ஆம் ஆண்டின் தேசிய மக்கள்தொகைக் கொள்கையை மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்படுத்திய கேரளா உள்ளிட்ட மாநிலங்களை இது தண்டிப்பதாக அமையும். மறுபுறம், மக்கள் தொகைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் பின்தங்கிய மாநிலங்கள், தங்கள் மெத்தனமான செயல்பாட்டிற்காக (கூடுதல் தொகுதிகள் மூலம்) வெகுமதி பெறுவது போல இது அமையும். கூட்டாட்சி தத்துவம் நமது அரசமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பு. மக்களாட்சியில், பிரதிநிதித்துவத்திற்கான அடிப்படை நோக்கம் வெறும் மக்கள்தொகை எண்ணிக்கையாக மட்டும் இருக்கமுடியாது. முன்மொழியப்பட்ட தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் உணர்வுகளையும் குறிப்பாக, மாநிலங்களின் உணர்வுகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, அனைவரையும் உள்ளடக்கிய ஓர் அணுகுமுறையைக் கையாள வேண்டும். இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்துடனான அணுகுமுறை என்பது மிகவும் அவசியமானது. அவசர அவசரமாகக் கொண்டுவரப்பட உள்ள ஒரு சட்டத்திருத்தத்தின் மூலம், மக்களவை இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மேற்கொள்ளப்படும் தற்போதைய முயற்சியானது, நமது அரசமைப்பு உருவாக்கத்தின் அடிப்படையாக இருந்த ‘ஒருமித்த கருத்து’ என்னும் உணர்வைச் சந்தேகத்திற்கு இடமின்றி சிதைத்துவிடும். மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தியதற்குத் தண்டனையா இது?”
மாண்புமிகு. பினராயி
விஜயன்,
கேரள முதல்வர்