news
ஞாயிறு தோழன்
பொதுக்காலம் 25-ஆம் ஞாயிறு (20.09.2026) எசா 55:6-9; பிலிப் 1:20-24,27: மத் 20:1-16

திருப்பலி முன்னுரை

இறைவனின் அளவற்ற இரக்கத்தையும், தாராள உள்ளத்தையும் பற்றி சிந்திக்க ஆண்டின் பொதுக்காலம் 25-ஆம் ஞாயிறு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இன்றைய நற்செய்தியில் திராட்சைத் தோட்ட உரிமையாளர் அதிகாலையில் வேலைக்கு வந்தவர்களுக்கும், மாலையில் ஒரு மணிநேரம் மட்டுமே வேலை செய்தவருக்கும் சமமாக ஒரு தெனாரியம் கொடுக்கிறார். மனிதநீதி, வேலையின் அளவிற்கு ஏற்ப கூலி என்று கணக்கிடுகிறது. ஆனால், இறைவனின் நீதியோ ஒவ்வொருவரின் தேவையை நிறைவு செய்யும் அளவற்ற அன்பு கொண்டது. இறைவனின் இரக்கம் அனைத்து உயிர்களையும் தாங்கி நிற்கும் பேரன்பின் வடிவம்; இவ்வுலகத்தை இயக்கும் பேராற்றல். எனவே, மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்த்துப் பொறாமைப்படாமல், மற்றவர்களின் வளர்ச்சியை விமர்சிக்காமல்  இறைவனின்  தாராளக் கொடையை நன்றியோடு நினைப்போம். நாம் எப்போதும் இறைவனின் இரக்கத்தின் நிழலில் வாழ்கிறோம் என்பதை மனத்தில் இருத்துவோம். பிறருக்குக் கிடைக்கும் ஆசிகளையும், இறைவனின் இரக்கத்தையும் கண்டு மகிழமுடியாத இதயமே ஆன்மிக வறுமையின் அடையாளம். பிறரின் ஆசிகளையும் வளர்ச்சியையும் கண்டு மகிழும் தாராள உள்ளத்தை நமக்குத்தர மன்றாடுவோம். பிறரோடு ஒப்பிட்டுப் பார்க்கும் குணத்தைத் தவிர்த்து, இறைவனின் இரக்கம் எப்போதும் நம்முடன் இருப்பதற்காய் நன்றி கூறுவோம். அளவிடமுடியாத பெருங்கடல் போன்ற கடவுளின் இரக்கத்தால்  வாழும் நாம் இந்த உலகம் என்னும் இறைவனின் திராட்சைத் தோட்டத்தில் மகிழ்வோடு பணிசெய்து, பன்மடங்கு பலன் கொடுக்க வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

ஆண்டவரைக் கண்டுகொள்ளக்கூடிய வாய்ப்புள்ள காலத்திலேயே அவரைத் தேடவும், அவர் அருகில் இருக்கும்போதே அவரை நோக்கிக் கூப்பிடவும் இறைவாக்கினர் எசாயா நமக்கு அழைப்புவிடுக்கிறார். நமது தீய சிந்தனைகளையும் செயல்களையும் விட்டுவிலகி, ஆண்டவரிடம் திரும்பி வரும்போது நம்மை மன்னிக்கக்  காத்துக் கொண்டிருக்கிறார் என்ற நம்பிக்கைச் செய்தியைக் கொடுக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

வாழ்வது கிறிஸ்து; சாவது ஆதாயம்என்ற உறுதியான நம்பிக்கையோடு, தான் வாழ்ந்தாலும் இறந்தாலும் கிறிஸ்துவின் மாட்சி விளங்குவதே தனது ஒரே விருப்பம் என்கிறார் பவுலடியார். கிறிஸ்துவோடு இணைந்து வாழும்போது உறவுகள் வளரும், மகிழ்ச்சி பெருகும், துன்பங்கள் குறையும். எனவே, நாம் ஒருவர் மற்றவருக்கு நம்பிக்கையின் தூதுவராக வாழவும், நல்மதிப்பீடுகளை வாழ்க்கையால் விதைக்கவும் அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

நம்பிக்கையாளர் மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! எம் திரு அவைத் தலைவர்கள் கிறிஸ்துவை மட்டுமே தங்கள் வாழ்வின் மையமாகக் கொண்டு வாழவும், தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களிடம் இரக்கத்தோடும் அன்போடும் இருக்கவும், தங்களை அழைத்த ஆண்டவர் கைவிடமாட்டார் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து தொய்வின்றிப் பயணிக்கவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. பாசமுள்ள ஆண்டவரே! உமது பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் தீய வழிகளை விட்டுவிலகி உமது மதிப்பீடுகளின் வழியில் வாழவும், மற்றவர்களின் வளர்ச்சியில் மகிழ்ந்திருக்கவும், உடன் வாழும் சகோதர, சகோதரிகளோடு அமைதியோடு வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. இரக்கத்தின் ஆண்டவரே, எம் பங்கில் உள்ள குடும்பங்களில் அன்பு, மன்னிப்பு, பகிர்வு, விட்டுக்கொடுத்தல் போன்ற மதிப்பீடுகள் வளரவும், தீராத நோய்கள் விலகிடவும், அருள்செல்வம், பொருள்செல்வம் பெருகிடவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. வல்லமையின் ஆண்டவரே! எம் பங்கிலுள்ள குழந்தைகள் படிப்பிலும் பக்தியிலும் வளர்ந்திடவும், திருப்பலி, மறைக்கல்வி, பீடச்சிறுவர்கள் பணி  போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கவும், கடவுளைப் பற்றிய அறிவில் வளரவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
பொதுக்காலம் 24-ஆம் ஞாயிறு (13.09.2026) சீராக் 27:30, 28:7; உரோ 14:7-9; மத் 18:21-35

திருப்பலி முன்னுரை

அறிவியல் உலகில் மெய்ஞானமாகிய இறைவனைத் தேடி, ஞாயிறு திருப்பலிக்கு வருகை புரிந்திருக்கும் உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றோம். இன்றைய நற்செய்தியானது அளவின்றி மன்னிக்கவும், நல்லுறவுடன் வாழவும் நமக்கு அழைப்புவிடுக்கிறது. பகை எப்போதுமே நமக்குப் பாதிப்பைத்தான் ஏற்படுத்துகிறது. இரக்கமற்ற பணியாளனின் உவமை, இறைவன் நம்மீது கொண்டுள்ள பேரிரக்கத்தையும் பேரன்பையும் எடுத்துரைக்கின்றது. ஆயிரம் தவறுகள் செய்து, தேடிவரும்போதெல்லாம் அணைக்கின்ற இறைவனின் இரக்கத்திற்காக நன்றி கூறுவோம். நம்மிடம் உள்ள பகை, வன்மம், கசப்புணர்வு, மன்னிக்க முடியாத மனநிலை அனைத்தையும் ஆண்டவரிடம் ஒப்படைத்து விடுவோம். கடவுள் நம்மை நிபந்தனையில்லாமல் மன்னித்து ஏற்றுக்கொள்வதுபோல, நாமும் உடன் வாழும் சகோதர-சகோதரிகள் நமக்கு எதிராகச் செய்யும் குற்றங்களை நிபந்தனையின்றி மன்னிப்போம்.

மன்னிப்பு என்பது பிறருக்கு நாம் செய்யும் தயவு அல்ல; மாறாக, நம் மனத்தை கோபம், கசப்பு என்ற சிறைகளிலிருந்து விடுவிக்கும் திறவுகோல். மன்னிக்கும் மனம் இறைவனின் அமைதியைச் சுவைக்கிறது. மன்னிப்பு கடந்த காலத்தை மாற்றாது; ஆனால், அது எதிர்காலத்தை வெளிச்சமாக மாற்றும். மன்னிப்பு என்பது ஒரு தற்காலிகச் செயலல்ல; அது நாம் நாள்தோறும் வாழவேண்டிய கிறித்தவ வாழ்க்கை முறை. எனவே, மன்னிப்பை அனைவருக்கும் கொடுத்து, மகிழ்வோடு வாழ வரம்வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்

முதல் வாசகம் முன்னுரை

இன்றைய முதல் வாசகம் மன்னிப்பின் அவசியத்தைப் பற்றித் தெளிவாகக் கூறுகிறது. கோபமும் சினமும் வெறுக்கத்தக்கவை என்றும், அவற்றைப் பிடித்து வைத்திருப்பவர் ஆண்டவரிடமிருந்து தண்டனையைப் பெறுவார் என்றும் எச்சரிக்கிறது. பல ஆண்டுகள்  பகையோடு வாழும் உறவுகளை மன்னித்து, ஆண்டவரின் அருளைப் பெற்று வளமோடு வாழ அழைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற அனைத்திலும் ஆண்டவரின் திருவுளத்தை நாட வேண்டும். நமது செயல்கள் அனைத்தும் நமது  பெயருக்காக, புகழுக்காக அல்ல; மாறாக, ஆண்டவரின் விருப்பதிற்கு உகந்ததாக இருக்க வேண்டும். நமது சுயநலத்தை விடுத்து, ஒவ்வொரு நிமிடத்தையும் இறையாட்சிப் பணிக்காகப் பயன்படுத்தி, கடவுளின் அன்பில் நிலைத்திருக்க அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

நம்பிக்கையாளர் மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! எம் திரு அவைத் தலைவர்கள் இறைவனின் எல்லையற்ற இரக்கத்தையும், அளவற்ற மன்னிப்பையும் தங்கள் வாழ்க்கையால் போதிக்கவும், மக்களை நற்செய்தியின் ஒளியில் கட்டியெழுப்பவும் தேவையான அருள்வரங்களைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. எழுபதுமுறை மன்னிக்கவேண்டுமென்று மொழிந்த எம் இறைவா! மன்னிக்காத உள்ளத்தோடு உம்மை உட்கொண்ட நேரங்களுக்காக மன்னிப்பு வேண்டுகின்றோம். எங்கள் உள்ளங்களில் உள்ள கோபம், வெறுப்பு, பழிவாங்கும் குணம் அனைத்தையும் விடுத்து, மனப்பூர்வமாக மன்னித்து அமைதியோடு வாழ வரம்தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

3. கடவுளுக்கு உகந்தவர்களாய் வாழ அழைப்பு விடுக்கும் இறைவா! எங்களது பேராசையாலும், பாவ வாழ்க்கையாலும் உம்மிடமிருந்து விலகி இந்த உலகப்போக்கின்படி வாழாமல், உமது திருவுளத்தை நிறைவேற்றுவதில் முனைப்புடன் செயல்பட வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடு கின்றோம்.

4. தேடிவரும் போதெல்லாம் அரவணைக்கும் இறைவா! எங்கள் குடும்பங்களில் உண்மையான அன்பும், விட்டுக் கொடுக்கும் மனப்பக்குவமும் வளர்ந்திடவும், நிறை-குறையோடு அனைவரையும் அன்புசெய்து வாழவும் தேவையான மனப்பக்குவத்தை எங்கள் அனைவருக்கும் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
பொதுக்காலம் 23-ஆம் ஞாயிறு (06-09-2026) எசே 33:7-9; உரோ 13:8-10; மத் 18:15-20

திருப்பலி முன்னுரை

சகோதரத்துவத்தில் நிலைத்திருக்கவும், கூடி செபிக்கவும் ஆண்டின் பொதுக்காலம் 23-ஆம் ஞாயிறு நமக்கு அழைப்புவிடுக்கிறது. இன்றைய நற்செய்தியில் இயேசு கிறிஸ்து, கிறித்தவச் சமூகத்தில் நிலவவேண்டிய அன்பு, மன்னிப்பு, சகோதரத்துவம் போன்ற மதிப்பீடுகளின் முக்கியத்துவத்தைப் பற்றியும், கூட்டுச் செபத்தின் வல்லமையைப் பற்றியும் கூறுகின்றார். மற்றவர்களைக் காயப்படுத்துவதையோ, பழிவாங்குவதையோ, ஏளனமாகப் பேசுவதையோ தவிர்த்து, தவறுகளை அன்போடும் கரிசனையோடும் சுட்டிக்காட்டி, சகோதர உறவில் நிலைத்து வாழ இயேசு அறிவுறுத்துகிறார். பிணக்குகள் இன்றி இணக்கத்தோடு வாழும்போது, கடவுள் நம் மத்தியில் இருப்பார். அவரது வல்லமை நம்மில் செயல்படும் என்பதையும் நற்செய்தி எடுத்துரைக்கிறது. “உங்கள் சகோதர சகோதரிகளுள்...” என்று இயேசு தொடங்கும்போதே, நாம் மனத்தாங்கல் கொள்ளும் எவரும் நமது அந்நியர் அல்லர்; மாறாக, நாம் அன்பு செய்யவேண்டிய சகோதர-சகோதரிகள் என்ற உண்மையை இயேசு விளக்குகிறார்.

நம் சமூகத்தில் வாழும் அனைத்து மனிதர்களுடனும் நல்லுறவுடன் வாழ்வோம். மற்றவர்களோடு நாம் கொண்டுள்ள அன்பும் அமைதியும் நட்புறவுமே நமது ஆன்மிக வாழ்க்கையின் அடிப்படையாக உள்ளது. உண்மை ஆன்மிகம் என்பது சகோதரத்துவத்தில்தான் செழித்து வளர்கிறது. எனவே, பகையை விடுத்து, அனைத்து மக்களையும் உடன்பிறப்புகளாக ஏற்று வாழ்வோம். உடன்வாழும் சகோதர-சகோதரிகளை நிறை-குறையோடு ஏற்று, அன்பைப் பகிர்ந்து, உறவில் மகிழ்ந்து வளமோடு வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில் இறைவன், இறைவாக்கினர் எசேக்கியேலைத் தம் மக்களின்காவலராகநியமிக்கிறார். தவறு செய்கிற ஒருவரை எச்சரித்து, நல்வழிப்படுத்த வேண்டிய ஆன்மிகப் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உண்டு என்பதை இப்பகுதி சுட்டிக்காட்டுகிறது. தீயோரை அவர்களின் தீய வழியிலிருந்து எச்சரிக்கத் தவறினால் அவர்களின் அழிவுக்கு நாமும் பொறுப்பாளியாவோம் எனக் கூறி பிறரின் ஆன்மிக நலனில் அக்கறை கொண்டு வாழ அழைக்கும் இறைவார்த்தைக்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் கிறித்தவ வாழ்வின் மையமானஅன்பைஅனைவரும் செய்யவேண்டிய ஒரே கடனாக முன்வைக்கிறார். அன்பு என்னும் ஒரே கடனைத் தவிர, வேறு எந்தக் கடனும் நம்மிடம் இருக்கக் கூடாது என்ற அழைப்பினை ஏற்று, வாழ்வின் எல்லாச் சூழ்நிலைகளிலும் அன்பை அனைவருக்கும் வழங்கி, அன்பின் சீடர்களாக வாழ அழைக்கும் இறைவார்த்தைக்குச் செவிமடுப்போம்.

நம்பிக்கையாளர் மன்றாட்டுகள்

1. ‘நானே நல்ல ஆயன்என்று மொழிந்ந ஆண்டவரே! எம் திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள் அனைவரும் சகோதரத்துவத்தையும் அன்பையும் மன்னிப்பையும் இம்மண்ணில் கட்டியெழுப்பவும், மக்களின் குறிப்பறிந்து செயல்படும் நல்ல மேய்ப்பர்களாக வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. வழிகாட்டும் நாயகனே இறைவா! எங்கள் நாட்டுத் தலைவர்கள் சுயநலமின்றி மக்களின் நலனில் அக்கறைகொண்டு வாழவும், ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நீதியான சட்டங்களை இயற்றவும், நாட்டின் அமைதிக்காக உழைக்கவும் தேவையான ஞானத்தைத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. அன்பின் ஆண்டவரே! உமது பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் கசப்புணர்வுகள் நீங்கி, ஒருவரையொருவர் ஏற்று நல்லுறவுடன் வாழவும், மற்றவர்கள் செய்யும் தவறுகளை மென்மையான வார்த்தைகளால் சுட்டிக்காட்டவும், அனைவரையும் சகோதர-சகோதரிகளாக ஏற்று அன்பு செய்து வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. ‘கைவிட மாட்டேன்என்று கூறிய ஆண்டவரே! மனக்கவலையினாலும் தீராத நோயினாலும் புரிந்துகொள்ளாமையாலும் துன்பப்படும் எம் சகோதர-சகோதரிகளுக்கு உடல் ஆரோக்கியத்தையும் மனபலத்தையும் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
பொதுக்காலம் 22-ஆம் ஞாயிறு (30-08-2026) - எரே 20:7-9; உரோ 12:1-2; மத் 16:21-27

திருப்பலி முன்னுரை

இயேசுவின் பெயரால், அவருடைய சீடர்களாய் வாழவேண்டும் என்ற ஆவலுடன் மகிழ்வோடு கூடிவந்துள்ள இறைமக்களாகிய உங்கள்  அனைவரையும் ஞாயிறு திருவழிபாட்டிற்கு வாஞ்சையோடு வரவேற்கின்றோம். இன்றைய நற்செய்தி வழியே, கிறிஸ்துவைப் பின்பற்றுவது என்பது  சிலுவையைச் சுமக்கும் தியாகப் பயணம் என்பதை இறைமகன் நமக்கு நினைவூட்டுகிறார். இயேசு தாம் எருசலேமுக்குச் சென்று துன்பங்கள் பல பட்டு, கொல்லப்பட்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழவேண்டும் என்பதைத் தம் சீடர்களுக்கு வெளிப்படையாகக் கூறுகின்றார்.

உண்மையான சீடத்துவம் என்பது சுகமான பாதையில் செல்வதல்ல; துன்பங்கள் வந்தவுடன் படைத்த ஆண்டவரையே வெறுப்பதல்ல; இழப்புகளைச் சந்தித்தவுடன் கடவுளைச் சந்திக்க ஆலயமே செல்லாமல் இருப்பதல்ல; மாறாக, இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றுவதற்காகத் தன் விருப்பங்களையும் சுயநலத்தையும் துறப்பதாகும். உலக இன்பங்களைப் பெற நினைத்து ஆன்மாவை இழப்பதைவிட, இறைவனுக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்து நிலைவாழ்வை அடைய முயற்சிப்பதே சிறந்தது. சிலுவைகள் அவமானங்கள் அல்ல; மாறாக, மக்கள் பணியில் நமக்குக் கிடைக்கும் மகுடங்கள். எனவேதன்னலம் கடந்து இறைவனின் திருவுளம் நாடி, பொது நலனோடு மக்கள் பணியாற்றி, இயேசுவின் உண்மைச்சீடர்களாய் வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எரேமியா, இறைப்பணியில் தான் சந்திக்கும் போராட்டங்களையும், உள்ளக் குமுறல்களையும், மக்கள் செய்த ஏளனத்தையும் ஆண்டவரிடம் வெளிப்படையாக எடுத்துரைக்கிறார். ஆனாலும், இதயத்தில் பற்றி எரியும் இறைவார்த்தையைத் தீவிரமாக அறிவிக்கின்றார். நாமும் எதிர்ப்புகள் வந்தாலும் எரேமியாவைப் போன்று கடவுளின் வார்த்தையைத்  துணிவோடும் ஆர்வத்தோடும்  பறைசாற்ற அருள்வேண்டி இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

நம் உடலையும் உள்ளத்தையும் அன்றாடச் செயல்பாடுகளையும் தூய மனத்தோடு இறைவனுக்குக் காணிக்கையாக்குவதே நாம் செலுத்தும் உண்மையான வழிபாடு ஆகும். இந்த உலகத்தின் சுயநலப் போக்குகளுக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்ளாமல், இறைவனின் திருவுளத்தை அறிந்துகொண்டு, நம் எண்ணங்களையும், சிந்தனைகளையும் புதுப்பித்து, இறைவனுக்கு உகந்த தூய பலியாக நம்மையே கொடுக்க அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

நம்பிக்கையாளர் மன்றாட்டுகள்

1. ‘துணிவோடிருங்கள்என்று மொழிந்த ஆண்டவரே! எம் திரு அவைத் தலைவர்கள் அனைவரும் எரேமியாவைப் போன்று உலகச் சவால்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் அஞ்சாமல், உம்முடைய நற்செய்தியைத் துணிவோடு பறைசாற்றத் தேவையான தூய ஆவியின் ஆற்றலையும் அருள்வரங்களையும் தந்து காத்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. வல்லமை மிகுந்த ஆண்டவரே! எம் நாட்டுத் தலைவர்கள் தன்னலமற்ற சேவை மனப்பான்மையோடும், ஏழை எளிய மக்களின் நலனை முதன்மைப்படுத்தும் நீதியான சிந்தனையோடும் செயல்படவும், நாட்டை அமைதியான முறையில் வழிநடத்தவும் தேவையான ஞானத்தைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. ‘அஞ்சாதே! நான் உன்னோடுஎன்று மொழிந்த ஆண்டவரே! உம் மக்களாகிய நாங்கள் அனைவரும் நோய், வறுமை, அவமானம், இழப்புகள், குடும்பச் சிக்கல்கள் போன்ற சிலுவைகளால் சோர்ந்து விடாமல், எங்கள்மேல் கவலை கொண்டுள்ள உம்மில் நம்பிக்கை கொண்டு வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. நலம் நல்கும் ஆண்டவரே! எமது நாட்டிலும் பங்கிலும் குடும்பத்திலும் தீராத நோய்களினால் துன்பப்படும் எம் சகோதர-சகோதரிகளை நீர் ஆசிர்வதித்து, நோயிலிருந்து முழுமையான விடுதலையைத் தந்து காத்திடவும், உயிர்க்கொல்லி நோய், தொற்றுநோய், புற்றுநோய் அனைத்திலுமிருந்தும் எங்கள் அனைவரையும் பாதுகாத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
பொதுக்காலம் 21-ஆம் ஞாயிறு - எசா 22:19-23; உரோ 11: 33-36; மத் 16: 13-20 (23.08.2026)

திருப்பலி முன்னுரை

அன்புச் சகோதர - சகோதரிகளே! வாழும் கடவுளின் மகனாகிய இயேசுவின் பெயரால் உங்களை ஞாயிறு வழிபாட்டிற்கு அன்போடு அழைக்கிறோம். “நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?” என்ற இயேசுவின் கேள்விக்கு, “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்என பேதுரு துணிவோடு அறிக்கையிட்டார். பேதுருவைப்போல இயேசுவை நம் வாழ்வின் தெய்வமாக அறிக்கையிடும் நம்பிக்கைத் துணிவு நம்மிடம் உள்ளதா? என இன்று சிந்திப்போம்.

இறுதிமூச்சுவரை இயேசுவுக்குச் சான்று பகர்ந்ததால் பேதுரு திரு அவையின் முதல் தலைவரானார். “உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்என்ற திருவிவிலிய வார்த்தைக்கேற்ப, நற்கருணையில் இயேசுவை உட்கொள்ளும் நாம் அவரை நம் வாழ்வாலும் அறிவிக்கவேண்டும். உண்மைக்குச் சான்று பகர்ந்து உயிரைக் கையளித்த அருள்சகோதரி இராணி மரியா, அருள்பணியாளர் ஸ்டேன் சுவாமி ஆகியோரின் தியாக வாழ்வு நம் நம்பிக்கைப் பயணத்திற்குச் சிறந்த வழிகாட்டியாகும்.

வாழ்க்கையில் புயல்களும் சவால்களும் வந்தாலும், கிறிஸ்து என்னும் பாறைமீது கட்டப்பட்ட நாம், நம்பிக்கையில் தளர்ச்சியடையாமல் வாழ்வோம். திரு அவையின் உறுப்பினர்களாக அதில் மகிழ்ச்சியோடு பணியாற்றவும், எண்ம உலகில் உண்மையான ஞானமாகிய ஆண்டவரை உணர்ந்து சான்று பகரவும் தேவையான வரங்களைக் கேட்டு, இத்திருப்பலியில் பக்தியோடு இணைவோம்.

முதல் வாசக முன்னுரை

கடவுளின் அழைப்பு மகத்துவமானது. தாம் தேர்ந்துகொண்டவர்களைப் பாதுகாத்து உயர்த்தும் ஆண்டவர், அவர்களுக்குத் தம் வல்லமையை அளிக்கிறார். “ஆண்டவர் தம் வழிகளை நமக்கு அறிவிப்பார்என்னும் இறைவாக்கிற்கேற்ப, அவரது இறைப் பராமரிப்பை உணர்ந்து வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகம் கடவுளின் எல்லையற்ற ஞானத்தையும் இரக்கத்தின் ஆழத்தையும் போற்றுகிறது. “ஆண்டவரை அண்டி வாழ்பவர் கைவிடப்படுவதில்லைஎன்பதை உணர்ந்து, மனித சிந்தனைக்கு அப்பாற்பட்ட அவர்தம் திட்டத்திற்குப் பணிந்து வாழ அழைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

நம்பிக்கையாளர் மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! எம் திரு அவைத் தலைவர்கள் அனைவரும் கால மாற்றத்திற்கேற்ப ஞானத்துடனும் விவேகத்துடனும் பணியாற்றவும், தனிமை, நோய், புரிந்துகொள்ளாமை போன்ற தருணங்களில் உம் பிரசன்னத்தில் திடம் கொள்ளவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. உடன் வாழும் இறைவா! வாழ்வின் சோதனைகளில் நீர் எங்களோடு இருக்கின்றீர் என்ற உறுதியான நம்பிக்கையோடு வாழவும், வாழும் கடவுளின் மகனாகிய உம்மை எங்களது அன்றாட வாழ்வால் சான்றுபகர்ந்து அறிவிக்கவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. வழிகாட்டும் இறைவா! எம் நாட்டுத் தலைவர்கள் மக்கள் நலனில் அக்கறையோடும், நாட்டின் வளங்களைப் பாதுகாக்கும் பொறுப்புணர்வோடும் உண்மையிலும் நேர்மையிலும் வழிநடத்தத் தேவையான அருள்வரங்களைத் தந்து காத்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. ஞானத்தின் ஊற்றே இறைவா! எம் குடும்பங்களிலும் பங்கிலும் உள்ள குழந்தைகள் அனைவரும் இறைநம்பிக்கையிலும் ஒழுக்கத்திலும் கல்வியிலும் சிறந்து விளங்கி, பெற்றோரை மதித்து நடக்கும் நல்ல பண்பை வளர்த்துக்கொள்ளத் தேவையான ஞானத்தைத் தந்து காத்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
பொதுக்காலம் 20-ஆம் ஞாயிறு (16.08.2026) எசா 56:1,6-7; உரோ 11:13-15;29-32; மத் 15:21-28

திருப்பலி முன்னுரை

எல்லையில்லாத வரங்களையும், அளவில்லாத நலன்களையும் கொடுத்து நம் அனைவரையும் அற்புதமாக வழிநடத்திவரும் இயேசுவின் பெயரால் உங்களைத் திருவழிபாட்டிற்கு மகிழ்வோடு வரவேற்கிறோம்கடுகளவு நம்பிக்கை கடலளவு நன்மை பயக்கும் என்பதை இன்றைய நற்செய்தி நமக்குத் தெரியப்படுத்துகிறது. சில நேரங்களில் நாம் கேட்பது கிடைக்காவிட்டால் நம்பிக்கையில் தளர்ந்துவிடுகின்றோம். கடவுள் நமது தேவையறிந்து தக்க நேரத்தில் தரமானதைத் தருவார் என்ற நம்பிக்கையில் நிலைத்திருக்க அருள் வேண்டுவோம். கானானியப் பெண்ணைப் போன்று விடாமுயற்சியுடன் மண்டியிட்டுஆண்டவரே எனக்கு உதவும்என்று  இயேசுவைசிக்கெனபிடித்துக்கொள்வோம். அவநம்பிக்கை மனநிலையைக் கடந்து, ஆண்டவரிடம் முழுமையாகச் சரணடைவோம்மனத்தில் சந்தேகமின்றி இயேசுவால் அன்றி வேறு எவராலும் குணப்படுத்த முடியாது என்ற கானானியப் பெண்ணின் மனநிலையை நமதாக்குவோம். ‘நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்என்று இயேசு இன்று நம்மைப் பார்த்துக் கூறுகின்றார். நல்லதையே நினைப்போம்; நல்லதையே விதைப்போம்; நல்லதை மட்டுமே நாடுவோம்நொடிப்பொழுதும் கைவிடாது காத்துவரும் இயேசுவிடம் தஞ்சமாவோம். உயிரைக் கொடுத்து திருமறையை வளர்த்த இயேசுவின் சீடர்களிடம்  விளங்கிய ஆழமான நம்பிக்கை நம்மிலும் வளர்ந்திட இணைந்து செபிப்போம் இத்திருப்பலியில்.

முதல் வாசக முன்னுரை

கடவுளின் அழைப்பைப் பெற்று உண்மையை நிலைநாட்டி, ஆண்டவரின் கட்டளைகளைக் கடைப்பிடித்து, நேர்மையுடனும், இறைநம்பிக்கையுடனும்  வாழும்போது கடவுளின் உடனிருப்பு நம்மோடு இருக்கும். உள்ளம் என்னும் ஆலயத்தை ஆண்டவர் வாழும் இல்லமாக மாற்றும்போது அவருடைய இரக்கம் நம்மை வழிநடத்தும். அவரை உறுதியாகப் பற்றிக்கொள்ளும்போது அவர் அனைத்துத் தீங்கினின்றும் காத்திடுவார் என்று கூறி  இறைமதிப்பீடுகளின் வழியில் பயணிக்க அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்

இரண்டாம் வாசக முன்னுரை

கடவுள் தாம் விடுத்த அழைப்பையும், கொடுத்த அருள்கொடைகளையும் திரும்பப் பெற்றுக்கொள்வதில்லை. ஏனெனில், அவர் இரக்கமும் கனிவும் உடையவர். கடவுளின் அருள்கொடைகளான அன்பு, அமைதி, மகிழ்ச்சி, விட்டுக்கொடுத்தல், மன்னிப்பு, நம்பிக்கை இவற்றை நமது வாழ்வில் கடைப்பிடித்து, கடவுளின் ஆசிபெற்ற மக்களாக வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

நம்பிக்கையாளர் மன்றாட்டுகள்

1. நம்பிக்கையின் ஆண்டவரே! உம்மீது கொண்ட நம்பிக்கையால் உமக்காகத் தங்களையே அர்ப்பணித்த எம் திருத்தந்தை, ஆயர்கள், அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள் அனைவரும் காலத்தின் தேவைக்கேற்ப கருத்துடன் பணிசெய்திடவும், கலக்கமின்றி துணிச்சலோடு நற்செய்தியை அறிவிக்கவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. உடன் வாழும் ஆண்டவரே! உமது பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் உம்மிடமிருந்து இலவசமாகப் பெற்றுக்கொண்ட இந்த வாழ்க்கைக்காக நன்றி கூறுகின்றோம். அன்பிலும் பண்பிலும் பகிர்விலும் ஒவ்வொரு நாளும் வளர்ந்திடவும், உம்மீது கொண்ட நம்பிக்கையில் நிலைத்திடவும் தேவையான வரங்களைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. நீதியின் ஆண்டவரே! எம் நாட்டுத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நோக்கம் அறிந்து மக்கள் நலனில் அக்கறை கொண்டு வாழவும், அனைத்து வளங்களையும் கொண்ட எம்  நாட்டை வழிநடத்திடவும், மக்கள் என்ற சொத்தைக் காப்பதில் கருத்துடன் செயல்படவும் தேவையான ஞானத்தைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. எம்மோடு பயணிக்கும் ஆண்டவரே! எங்கள் பங்கில் உள்ள அனைத்துக் குடும்பங்களும் ஒற்றுமையுடன் வாழவும், அன்பியக் கூட்டங்களிலும், திருவழிபாட்டு நிகழ்வுகளிலும் ஆர்வத்தோடு நாங்கள்  பங்கேற்கவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.