news
ஞாயிறு தோழன்
தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு (01-03-2026) தொநூ 12:1-4; 2திமொ 1:8-10; மத் 17:1-9

திருப்பலி முன்னுரை

இறையாட்சியைக் கட்டியெழுப்பி, கடவுளை மாட்சிப்படுத்த தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு நமக்கு அழைப்பு விடுக்கிறது. தோற்ற மாற்ற நிகழ்வு நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பணிவாழ்வின் ஒரு திருப்புமுனை நிகழ்வாகும். தாம் இறைமகனாய் இருந்தபோதும் துன்பங்களை அனுபவித்துத்தான் மீட்பை அளிக்கவேண்டும் என்பதை அவர்தம் உருமாற்றத்தின் வழியாகக் கற்பிக்கிறார்.

தோற்ற மாற்ற நிகழ்வு இயேசுவின் சீடர்களைச் சிலுவை நிகழ்வுக்குத் தயார்செய்து, உயிர்ப்பின் மாட்சியை முன்கூட்டியே உணரவைக்கிறது. சிலுவைக்குப் பின் நிச்சயம் மாட்சி உள்ளது என்ற நம்பிக்கையை ஊட்டி, துன்பத்தை எதிர்கொள்ளப் பக்குவப்படுத்துகிறது. இயேசுவின் சீடர்களாக வாழ அழைக்கப்பட்ட நாமும் துன்பங்களில் துவண்டு போகாமல் இறைவனுக்குச் சான்றுபகர்வோம்.

விஞ்ஞானத்தை மட்டும் நம்பி, மெய்ஞானமாகிய கடவுளின் குரலுக்குச் செவிகொடுக்காமல் மனிதத்தைச் சிதைத்துக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் மனசாட்சியின் குரலுக்குச் செவிகொடுத்து, சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் விதைத்து, கிறிஸ்துவின் மதிப்பீடுகளை எவருக்கும் அஞ்சாமல் துணிவுடன் வாழ்க்கையால் எடுத்துச்சொல்வோம். அப்போது கடவுள் நம்மைப் பார்த்து, “இவரே என் அன்பார்ந்த மகன் (மகள்)” என்று சொல்லி பூரிப்படைவார். நற்செயல்கள் வழியாக நல்லவராம் இயேசுவை அறிவித்து, ஆண்டவரின் ஆசிபெற்ற மக்களாக வாழ்ந்திட வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசக முன்னுரை

ஆபிரகாம் கடவுளின் அழைப்பை ஏற்று, தன் சொந்த நாடு மற்றும் குடும்பம் அனைத்தையும் துறந்து ஆண்டவர் பணித்தவாறு செல்கிறார். ஆண்டவர் அவருக்கு ஏராளமான ஆசிகளை வழங்குகிறார். ஆபிரகாமைப்போல நாமும் இறைவனின் கட்டளைகளை ஏற்று மாற்றத்தை நோக்கிப் பயணிக்கும்போது இறைவனின் ஆசியால் நிரப்பப்படுவோம் எனக் கூறும் இன்றைய முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

இயேசு கிறிஸ்து வழியாகக் கடவுள் நம்மை மீட்டுள்ளார். சாவை அழித்து நிலை வாழ்வை வழங்கியுள்ளார். இயேசுவின் இரத்தத்தால் வாழ்வைப் பெற்றுக்கொண்ட நாம் அனைவரும், நமது சொற்களாலும் செயல்களாலும் நற்செய்தியை அறிவிக்கவும், துன்பங்களின் மத்தியிலும் துணிவுடன் இறையாட்சியைக் கட்டியெழுப்பவும் அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. நம்பிக்கையின் ஆண்டவரே! உலகெங்கும் நற்செய்தியின் பொருட்டு துன்பங்களையும் இழப்புகளையும் எதிர்கொள்ளும் திரு அவையின் பணியாளர்கள் அனைவரும் துன்பத்தால் துவண்டுபோகாமல், உம்மில் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ தேவையான அருள்வரங்களைத் தந்து  காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. உடன்வாழும் ஆண்டவரே! நீர் வாக்களித்த நாட்டையும் வாழ்வையும் அடைவதற்கு ஆபிரகாம் கொண்டிருந்த பொறுமையையும் நம்பிக்கையையும் நாங்களும் பின் பற்றி, வாழ்வில் மாற்றத்தை நோக்கி நம்பிக்கையோடு பயணிக்கவும், தளராத சாட்சிய வாழ்வு வாழவும் வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. பாதுகாக்கும் ஆண்டவரே! அரசுப் பொதுத்தேர்வினை எழுதவிருக்கும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ-மாணவியர் ஆர்வத்தோடு படித்து, ஞானத்தோடு தேர்வு எழுதி, நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி அடையவும், எதிர்காலம் சிறப்பானதாக அமைந்திடவும் வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. உடன் பயணிக்கும் ஆண்டவரே! தவக் காலத்தில் உம்மோடு பயணிக்கும் நாங்கள் அனைவரும் எங்களுடன் வாழும் சகோதர-சகோதரிகளின் துன்பத்தில் துணையாக இருந்து, மற்றவர்களின் மனக்காயத்திற்கு மருந்திடத் தேவையான நல்மனத்தை எங்கள் அனைவருக்கும் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
தவக்காலத்தின் முதல் ஞாயிறு (22-02-2026) தொநூ 2:7-9,3:1-7; உரோ 5:12-19; மத் 4:1-11

திருப்பலி முன்னுரை

இறை இயேசுவின் துணையோடு சோதனைகளை வெற்றிகொள்ள தவக்காலத்தின் முதல் ஞாயிறு நமக்கு அழைப்பு விடுக்கிறது. “சோதனையின்றி சாதனை இல்லை; வேதனையின்றி உயர்வு இல்லை; இறைவனை நம்பும் மானிடர் மட்டும் சோதனைகளைக் கடந்து சாதனை படைப்பர்என்ற கூற்றிற்கிணங்க, சோதனைகள் அனைவருடைய வாழ்விலும் வரும்; ஆனால், அவற்றை எதிர்கொள்வதற்கு ஆழமான இறைநம்பிக்கை அவசியம்.

நம் முதல் பெற்றோரைச் சோதித்த அலகை, இன்றைய நற்செய்தியில் இயேசுவையே சோதிக்கிறது. இயேசுவைப் பாலைநிலத்திற்குச் சோதனைகள், துன்பங்கள், துயரங்கள், இக்கட்டுகள், கவலைகள், வேதனைகள்  இவற்றில் இறைவனை இறுகப் பற்றிக்கொள்ளவும், இயேசுவின் வழியில் சோதனைகளை எதிர்கொள்ளவும்  அழைக்கிறது. நம்மை மீட்க பல துன்பங்களை அனுபவித்து, தமது உயிரையும் கொடுத்த இயேசுவின் மீது நம் கண்களைப் பதிய வைத்து, சாட்சிய வாழ்வு வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசக முன்னுரை

கடவுள் அனைத்தையும் சிறப்பாகப் படைத்து, நன்மை-தீமைகளைப் பகுத்தறியும் ஆற்றலை நமக்குத் தந்துள்ளார். ஆனால், நாம் நுகர்வுக் கலாச்சாரம், பேராசை, அதிகாரப்போக்கு, உலக மயம், இவற்றில் சிக்குண்டு கடவுளைப் பிரிந்து வாழ்கின்றோம். அழிவுக்கு அழைத்துச்செல்லும் பாவத்தை விடுத்து, இறைவனின் பிள்ளைகளாக இறை உறவில் நிலைத்து வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகம் ஆதாமின் கீழ்ப்படியாமையால் நுழைந்த பாவத்தைப் பற்றியும், இயேசுவின் கீழ்ப்படிதலால் வந்த மீட்பைப் பற்றியும் எடுத்துரைக்கின்றது. கடவுளுக்குக் கீழ்ப்படியவில்லை என்றால் வருவது சாவு எனவும் கீழ்ப்படிதலால் வருவது வாழ்வு எனவும், ஆன்மிக வாழ்வைப் புடமிட்டுக் காட்டுகிறது. ஆண்டவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, அவரின் மக்களாக வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! உமது மறையுடலாம் திரு அவையை வழிநடத்தும் திரு அவைத் தலைவர்கள் அனைவரும் தங்கள் பயணத்தில் சந்திக்கும் அனைத்து சவால்களையும் எதிர்ப்புகளையும் உம் துணையோடு கடந்திடத் தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. அன்பின் இறைவா! இத்தவக்காலத்தில் பாவத்திலிருந்து விலகி அருள்வாழ்வில் நிலைக்கவும், உமது பேரன்பை அனுதினமும் சுவைக்கவும், அனைத்துச் சோதனைகளையும் உம் அருளால் கடந்திடவும் தேவையான ஞானத்தை எமக்குத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. அன்பின் இறைவா! உமக்கு நேரிட்ட அனைத்துச் சோதனைகளையும் வென்று இறைத்திருவுளத்தை நிறைவேற்றியதுபோல, நாங்களும் எங்கள் வாழ்க்கையில் வரும் துன்பங்களை உமது உடனிருப்பால் வென்றிடத் தேவையான அருள்வரங்களைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. அன்பின் இறைவா! உமது பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் உலகச் செல்வங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆன்மிகச் செல்வங்களுக்குக் கொடுக்கவும், பகையை மறந்து அனைவரோடும் நல்லுறவோடு வாழத் தேவையான நல்மனத்தைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
ஆண்டின் பொதுக்காலம் 6-ஆம் ஞாயிறு (15-02-2026) சீஞா 15:15-20; 1கொரி 2:6-10; மத் 5:17-37

திருப்பலி முன்னுரை 

இன்று மனிதநேயத்தோடு மனிதர்களை மனிதர்களாக மதித்து அன்பு, நீதி, இரக்கம் போன்ற மனிதநேயப் பண்புகளைப் பின்பற்றி, உறவோடும் நிறைவோடும் வாழ ஆண்டின் பொதுக்காலம் 6-ஆம் ஞாயிறு நமக்கு அழைப்புவிடுக்கிறது.

சட்டங்கள் மனிதத்தைச் சிதைக்காமல் காப்பதாக அமையவேண்டும். பக்குவமான பண்பட்ட வார்த்தைகளைப் பேசி உடன்வாழும் சகோதர- சகோதரிகளை அன்பு செய்து வாழவும், அனைவரோடும் நல்லுறவுடன் வாழ்ந்து இறையாட்சியைக் கட்டியெழுப்பவும், சொல்வீரர்களாக அல்லாமல் செயல் வீரர்களாக வாழவும், மற்றவர்களின் சுமைகளைத் தாங்கும் உண்மை உறவாகப் பயணிக்கவும், ‘எல்லாம் இறைவனின் அதிமிக மகிமைக்காகஎன உழைக்கவும், அனைத்தையும் நல்லது எனக் காணவும், எதன்மீதும் ஆணையிடாமல் வாழவும் இயேசு இன்று நம்மை அழைக்கிறார்.

எனவே, நமது சிந்தனையை, நடத்தையை, பார்வையை மறு ஆய்வு செய்து நமது வாழ்விலும் மனத்திலும் மாற்றங்களைக் கொண்டு வருவோம். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் வாழும் இறைவனைக் கண்டுகொள்வோம். இன்று அன்புக்காக, அமைதிக்காக, ஆறுதலுக்காக, அரவணைப்பிற்காக, நல்வார்த்தைக்காகக் காத்திருக்கும் சகோதர- சகோதரிகளுக்கு இறைவன் கொடுத்த அற்புதமான வாழ்க்கையைப் பகிர்ந்துகொடுப்போம். இயேசு விரும்பும் சமுதாயத்தை உருவாக்க வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்

முதல் வாசகம் முன்னுரை

நாம் என்னவாக இருக்கின்றோமோ, அது கடவுள் நமக்குக் கொடுத்த கொடை! நாம் என்னவாக மாறுகின்றோமோ, அது கடவுளுக்கு நாம் கொடுக்கும் கொடை! நல்லதைச் சிந்தித்து, நலமான வார்த்தைகளைப் பேசி, அனைவரையும் நேசித்து, உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஞானத்தோடு வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

நன்மையானவை எவை, உண்மையானவை எவை என்பதை ஞானம் நமக்கு உணர்த்துகின்றது. இந்த ஞானத்தை நமக்குத் தருபவர் தூய ஆவியானவர். வாழ்க்கையில் அனைத்து நேரங்களிலும் தூய ஆவியின் துணையை நாடித்தேடிடவும், மறைபொருளாய் இருக்கும் இறைஞானத்தை அறிந்துகொண்டு முதிர்ச்சி பெற்ற மக்களாக வாழவும் அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! திரு அவையை வழிநடத்துகின்ற திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் உம் மதிப்பீடுகளை வாழ்க்கையால் அறிவிக்கத் தேவையான ஞானத்தைத் தந்து காத்து வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. வாழும் ஆண்டவரே! நாங்கள் அனைவரும் எங்களது வார்த்தையால் மற்றவர்களுக்கு வாழ்வு கொடுக்கவும், பிணக்குகளை எல்லாம் களைந்து அனைவரோடும் இணக்கத்தோடு வாழவும் தேவையான அருள்வரங்களைத் தந்து எம்மைக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எம் வாழ்வின் வழிகாட்டியான இறைவா! எம் நாட்டு மக்கள் அனைவரும் மக்களை மனிதநேயத்தோடு வழிநடத்தக்கூடிய தலைவர்களைத் தேர்ந்தெடுக்கவும், பணத்திற்கு விலைபோகாமல் மனசாட்சியின் குரலுக்குச் செவிகொடுத்து வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. எம்மோடு பயணிக்கும் ஆண்டவரே! எம் பங்கில் உள்ள இளையோர் உம்மீது ஆழமான நம்பிக்கையுடன் வாழவும், உலகப் பொருள்களின்மீது கொண்டுள்ள பற்றுதல்களிலிருந்து விலகி இறைவார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து தூய்மையான வாழ்வு வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
ஆண்டின் பொதுக்காலம் 5-ஆம் ஞாயிறு (08-02-2026) எசா 58:7-10; 1கொரி 2:1-5; மத் 5:13-16

திருப்பலி முன்னுரை

உலகிற்கு உப்பாகவும் ஒளியாகவும் வாழ பொதுக்காலத்தின் 5-ஆம் ஞாயிறு நமக்கு அழைப்புவிடுக்கிறது. உப்பும் ஒளியும் மற்றவருக்குப் பயன்தரும் பொருளாக இருக்கின்றன. உப்பு சுவை தருவது மட்டுமல்ல; மாறாக, பொருள்கள் கெடாமல் பாதுகாக்கும் சக்தியையும் கொண்டது. மற்றவர்கள் வாழ்வுபெற தன்னையே முழுமையாக இழக்கிறது. ‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலேஎன்கிறது பழமொழிஉப்பு உவர்ப்பற்றுப் போனால், அது வீணாகிவிடும். அதுபோலவே நமது ஆன்மிக வாழ்க்கையும் ஆழம் காணாவிட்டால் வாழ்க்கையும் உவர்ப்பற்றதாகிவிடும்நம்மைப் பார்த்து இயேசு, ‘நீங்கள் உலகிற்கு ஒளியாக இருக்கிறீர்கள்என்கிறார். ஒளி இருளை அகற்றும்; ஒளி வழியைக் காட்டும்; ஒளி இறைவனின் அடையாளம். ஒளியைப் போன்று நமது அன்புச் செயல்களால் இயேசுவைப் பிரதிபலிக்க முயற்சியெடுப்போம். உப்பைப் போன்றும் ஒளியைப்போன்றும் நமக்காக வாழாமல், பிறரின் நன்மைக்காக வாழ்வோம். நமது உடனிருப்பாலும் மென்மையான அணுகுமுறையாலும் மேன்மையான வார்த்தைகளாலும் அனைவருடைய வாழ்க்கையிலும் ஒளியேற்றுவோம். நமது பெயருக்காகவும் புகழுக்காகவும் விளம்பரத்திற்காகவும் எந்தச் செயலையும் செய்யாமல், இறைவனின் அதிமிக மகிமைக்காகச் செய்வோம். இறைவன் கொடுத்த இந்த வாழ்க்கையில் சுயநலம் களைந்து, உடன்வாழும் சகோதர-சகோதரிகளை உளமார நேசித்து, உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நம்பிக்கையின் தீபங்களாய் ஒளிர்ந்திடவும், இறைவனைச் சார்ந்து சாரமுள்ள வாழ்வு வாழவும் வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.  

முதல் வாசகம் முன்னுரை

கடவுள் விரும்பும் நோன்பு என்பது உணவு உண்ணாமல் இருப்பது அல்ல; மாறாக, பசித்தோருக்கு உணவிடுவதும், ஆடை இல்லாதவருக்கு ஆடை அணிவிப்பதும், வறுமையில் இருப்போருக்கு உறைவிடம் கொடுப்பதும், தேவையில் இருப்போரைத் தேடிச் சென்று உதவுவதுமே உண்மையான நோன்பு. இவ்வாறு செய்யும்போது, ஆண்டவரின் மாட்சியை நாம் காண்போம் என்று கூறும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

இன்று உலகத்தைப் பற்றியும், விஞ்ஞானத்தைப் பற்றியும், அறிவியல், பொருளாதாரம் பற்றியும் அறிந்துள்ளோம். ஆனால், மெஞ்ஞானமாகிய கடவுளைப் பற்றிய அறிவில் பின்தங்கியுள்ளோம். தூய ஆவியின் வல்லமையையும் இறைஞானத்தையும் பெற்று, கிறிஸ்து இயேசுவை அறிவதிலும் அன்புசெய்வதிலும் முனைப்போடு செயல்பட்டு, இயேசுவின் சீடர்களாக வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. ‘உலகின் ஒளி நானேஎன்று மொழிந்த ஆண்டவரே! எம் திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் உலகிற்கு உப்பாகவும் ஒளியாகவும் வாழ்ந்து, நற்செய்தியை அறிவிக்கத் தேவையான அருள்வரங்களைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. ‘நானே நல்ல ஆயன்என்று மொழிந்த ஆண்டவரே! உலகத் தலைவர்களும், நாட்டுத் தலைவர்களும் அன்பையும் அமைதியையும் இவ்வுலகில் கட்டியெழுப்பவும், மக்கள் என்ற சொத்தைப் பேணிகாக்கவும், மக்கள் நலனில் அக்கறை கொண்டு வாழவும் தேவையான ஞானத்தைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. வழியும் ஒளியுமான ஆண்டவரே! இந்த ஆண்டு அரசுப் பொதுத்தேர்வினை எழுதவிருக்கும் மாணவ-மாணவிகளை ஆசிர்வதியும். ஞானத்தோடு தேர்வு எழுதவும், கல்வித் தேர்விலும் வாழ்க்கைத் தேர்விலும் வெற்றிபெற்று வாழத் தேவையான அருள்வரங்களைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. பாதுகாக்கும் பரம்பொருளான ஆண்டவரே! எம் பங்கிலுள்ள அனைத்துக் குடும்பங்களிலும் உண்மையான அன்பும் உறவும் மலர்ந்திடவும், நற்சுகம் கிடைத்திடவும், ஒருவர் மற்றவருக்கு நம்பிக்கையின் தூதுவர்களாக வாழ்ந்திடவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
ஆண்டின் பொதுக்காலம் 4-ஆம் ஞாயிறு (01-02-2026) செப் 2:3;3:12-13; 1கொரி 1:26-31; மத் 5:1-12

திருப்பலி முன்னுரை 

ஆண்டின் பொதுக்காலத்தின் 4-ஆம் ஞாயிறான இன்று இயேசு தமது மலைப்பொழிவின் வழியாக  நம்மை  பேறுபெற்ற மக்களாக வாழ அழைக்கிறார். மலைப்பொழிவானது இயேசுவின் போதனைகளின் மையக்கருத்தாகவும், கிறித்தவ வாழ்வின் அடிநாதமாகவும் அமைகிறது.

பேறுபெற்றோர் யார்?’ என்ற கேள்வியை எழுப்பிச் சிந்திக்கும் போது, இயேசு தரும் பதிலுக்கும், இந்த உலகம் தரும் பதிலுக்கும் இடையே அதிகமான வேறுபாடுகள் உள்ளன. இன்றைய உலகமானது பணம், பதவி, பட்டம், புகழ், செல்வம் அடைந்தவர்களைத்தான்பேறுபெற்றோர்எனக் கருதுகிறது. இறைமகன் இயேசு ஏழைகள், துயருறுவோர், கனிவுடையோர், இரக்கமுடையோர், அமைதியை ஏற்படுத்துவோர், நீதியை நிலைநாட்டுவோர், மற்றவர்களின் துயரத்தில் ஆறுதலாக இருப்போர், எளிய மனம் படைத்தோர், துன்பங்களின் மத்தியிலும் இறைவனோடு இருப்போரேபேறுபெற்றோர்என்கிறார். மலைப்பொழிவானது தூய வாழ்வு வாழ வழிகாட்டியாகவும், ஆன்மிக வாழ்வின் மையமாகவும் திகழ்கின்றது. நமது வாழ்க்கையில் அன்றாடம் நாம் கூறும் வார்த்தைகள் பிறர் வாழ்வில் மகிழ்ச்சியையும் மன அமைதியையும் கொடுப்பதாக அமைந்திட செபிப்போம். மனிதநேயத்தோடு வாழ்ந்து இவ்வுலகில் வாழும் அனைத்து மக்களிலும் இயேசுவைக் காணவும், மகிழ்ச்சியின் நற்செய்தியாக வாழவும், வாழ்க்கையால் இயேசுவின் விழுமியங்களை விதைத்து ஆண்டவருக்குள் அகமகிழ்ந்து பேறுபெற்ற  மக்களாக வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

இன்றைய முதல் வாசகம் நாம் ஆண்டவரைத் தேடவும், நேர்மையை நாடவும், மனத்தாழ்மையை ஆடையாக அணிந்துகொள்ளவும், நம்பிக்கையில் நிலைத்திருக்கவும், உண்மையின் வழியில் பயணிக்கவும் நமக்கு அழைப்பு விடுக்கிறது. இறைமதிப்பீடுகளின் வழியில் வாழ்ந்து, இறையொளியில் சங்கமிக்க அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

நமது அறிவு, ஆற்றல், பட்டம், பதவி, படிப்பு, வேலை, செல்வங்கள், குடும்பம்... இந்த வாழ்க்கை அனைத்தும் இறைவன் நமக்கு இலவசமாகக் கொடுத்த கொடை. இவற்றில்என்னுடையதுஎன்று பெருமைப் பாராட்ட ஒன்றுமில்லை. ஆகவே, இறைவனைக் கண்டுகொள்ளத் தேவையான ஞானத்தை முதலில் தேடவும், ஆண்டவரில் பெருமைகொள்ளவும் அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. ‘திருப்பொழிவு செய்யப்பட்டவர்களை அனைத்துத் தீங்கிலிருந்தும் விடுவித்துக் காப்பேன்என்று மொழிந்த ஆண்டவரே! பணிக்குருத்துவத்தையும், பொதுக் குருத்துவத்தையும் பெற்ற திருத்தந்தை முதல் பொதுநிலையினர் வரை அனைவரும் இறைத்தூதுப் பணியாளராக வாழ அழைக்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்து, இவ்வுலகில் இறையாட்சியைக் கட்டியெழுப்பத் தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

2. ‘நீங்களே என் சாட்சிகள்என்று மொழிந்த ஆண்டவரே! எங்கள் குடும்பங்களில் உள்ள அனைவரும் உம்மால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் என்பதை உணர்ந்தவர்களாக, அன்பின் தூதுவர்களாக இவ்வுலகில் வலம்வரத் தேவையான அருள்வரங்களை எமக்குத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. ‘நான் உங்களோடு இருக்கின்றேன்என்று மொழிந்த ஆண்டவரே! எம் நாட்டில் மக்கள் அனைவரும் வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையுடன் வாழவும், மக்களை சாதி, மதம், இனம் என்று பிரிக்கும் சக்திகள் அழிந்திடவும் தேவையான வரங்களைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. ‘நீ போகும்போதும் வரும்போதும் காப்பேன்என்று மொழிந்த ஆண்டவரே! நீர் எம்முடன் பயணிக்கிறீர் என்பதை நாங்கள் உணர்ந்திடவும், ஏழை, எளிய மக்களில் உம்மைக் கண்டு பேறுபெற்ற மக்களாக வாழ்ந்திடவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
ஆண்டின் பொதுக்காலம் 3-ஆம் ஞாயிறு (25-01-2026) எசா 9:1-4; 1கொரி 1:10-13,17; மத் 4:12-23

திருப்பலி முன்னுரை

மனம் மாற்றம் பெற்று, இயேசுவின் சீடர்களாக வாழ பொதுக் காலத்தின் மூன்றாம் ஞாயிறு நமக்கு அழைப்புவிடுக்கிறது. அழைப்பு - இது உன்னதக் கொடை; கடவுளின் கருணையால் கொடுக்கப்படும் விலைமதிக்க முடியாத பரிசு! இன்றைய நற்செய்தியில் இயேசு தமது பணிக்காகச் சீடர்களைஎன் பின்னே வாருங்கள்என்று அழைக்கிறார். இயேசுவின் அழைப்பைக் கேட்டவுடன், உலகச் செல்வங்களை உதறித் தள்ளிவிட்டு உன்னத வாழ்வுக்கு உயிர் கொடுக்க தயக்கம் சிறிதுமின்றிஆம்என்று கூறி பெற்றோர், உடன்பிறப்புகள், உறவுகள், குடும்பம், தொழில்  என அனைத்தையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்கின்றனர். நானிலம் முழுவதும் சென்று வாழ்க்கையாலும் வார்த்தையாலும் இயேசுவை அறிவித்து, இயேசுவின் பெயரால் வல்லமையான செயல்களைச் செய்து, தங்களது இன்னுயிரையும் கொடுத்து இயேசுவின் திரு நாமத்தின் மகத்துவத்தை அனைத்து மக்களும் அறியச் செய்தனர்இத்தகைய சீடத்துவ வாழ்வுக்கு இன்று இயேசு நம்மையும் அழைக்கிறார்.

இந்த உலக வாழ்க்கையின்மீது நாம் கொண்டுள்ள அனைத்துப் பற்றுகளையும் துறந்து, இயேசுவே எனக்கு ஆதாரம் என வாழத் தொடங்குவோம். நற்செய்தியின் தூதுவர்களாக வாழ்ந்து, இறையாட்சியின் மதிப்பீடுகளை இம்மண்ணில் விதைப்போம்இயேசு என்ற உன்னத உறவை நமதாக்கி, வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் இயேசுவின் மதிப்பீடுகளில் நிலைத்து, பல மடங்குப் பலன் கொடுத்து வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்

முதல் வாசகம் முன்னுரை

ஒளியின் பாதையில் நடக்கும் மக்களுக்கு இறைவன் மகிழ்ச்சியைத் தருவார், துன்பங்களிலிருந்து விடுதலையைக் கொடுப்பார், அழுகையை அக்களிப்பாக மாற்றி பேரானந்தத்தைச் சுவைக்கச் செய்வார் என்று கூறி, இறைவன் என்ற பேரொளியால் ஒளிர்விக்கப்பட்டு அமைதியோடு வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

இயேசுவின் சீடர்களாகிய நாம் பிரிவுகளைக் களைந்து, பிளவு மனப்பான்மையிலிருந்து விடுபட்டு, ஒரே எண்ணமும் ஒரே நோக்கமும் கொண்டு நற்செய்தியை அறிவிக்கவும், நம்மிடையே உள்ள வேற்றுமைகளைக் களைந்து இவ்வுலகில் உள்ள அனைத்து மக்களும் இயேசுவின் அன்பைச் சுவைக்க உழைக்கவும் அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. ‘என் பின்னே வாருங்கள்என்று சீடர்களை அழைத்த ஆண்டவரே! உமது பணிக்காக நீர் தேர்ந்து கொண்ட எம் திரு அவைத் தலைவர்கள் அனைவரும் அனைத்துப் பற்றுகளிலிருந்தும் விலகி உம்மீது பற்றுக் கொண்டு வாழவும், அதன் வழியில் எம்மை வழிநடத்தவும் தேவையான அருள்வரங்களைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. ‘நானே நல்ல ஆயன்என்று மொழிந்த ஆண்டவரே! எம் நாட்டில் நிலவுகின்ற பிரிவுகள், பிளவுகள், வேறுபாடுகள் அனைத்தும் மறைந்து, மக்கள் பாதுகாப்போடு வாழவும், நடைபெறவிருக்கும்  தேர்தலில் மக்களைக் காக்கும் நல்ல தலைவரைத் தேர்ந்தெடுக்கவும் தேவையான ஞானத்தை எமக்குத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. ‘நான் உங்களைக் கைவிட மாட்டேன்என்று கூறிய ஆண்டவரே! எங்கள் குடும்பங்களில் அன்பு, அமைதி, மன்னிப்பு, விட்டுக்கொடுத்தல் போன்ற மதிப்பீடுகள் வளர்ந்திடவும், ஒருவர் மற்றவருக்கு நம்பிக்கையின் தூதுவராக வாழ்ந்திடவும் தேவையான தூய மனத்தை எமக்குத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. ‘நான் உங்களோடு இருக்கிறேன்என்று கூறிய ஆண்டவரே! அழைப்பின் மகத்துவத்தையும் உன்னதத்தையும் அறிந்த நாங்கள், எமது குழந்தைகளை இறைப்பணிக்கு மனமுவந்து அனுப்பவும், இறையழைத்தலை எமது குழந்தைகளிடம் ஊக்குவிக்கவும் தேவையான நல்ல மனத்தை எமக்குத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.