news
ஞாயிறு தோழன்
மே 31, 2026 மூவொரு கடவுள் பெருவிழா - விப 34:4-6,8-9; 2கொரி 13:11-13; யோவா 3:16-18

திருப்பலி முன்னுரை

அன்பான இறை மக்களே! இன்று நமது தாயாம் திரு அவை ஒரே சித்தம், ஒரே ஞானம், ஒரே வல்லமை கொண்ட மூவோர் இறைவனின் பெருவிழாவைக் கொண்டாடி, உறவில் நிலைத்திருக்க நமக்கு அழைப்பு விடுக்கிறது. அறிவியல் அறிவுக்கு எட்டாத ஆனால், ஆன்மிகத்தால் உணரக்கூடிய உன்னத மறைபொருள் இந்த மூவோர் இறைவன்.

படைக்கும் தந்தை, திருமகன் வழியாகத் தூய ஆவியின் நிறைவில் இப்பூமியைப் படைத்துப் பராமரித்து வருகிறார். தந்தையின் திருவுளத்திற்குப் பணிந்து மண்ணிற்கு வந்த திருமகன் இயேசு, நமக்காக வாழ்ந்து, துயருற்று, மரித்து மீண்டும் உயிர்த்தெழுந்து, தூய ஆவியானவரின் அருளை நமக்குத் தேடித்தந்தார். தொடக்கம் முதல் அசைவாடிக் கொண்டிருக்கும் அந்தத் தூய ஆவியானவர், திருத்தூதர்களுக்குத் துணையாளராகி, இன்றும் திரு அவையின் உயிராற்றலாக விளங்குகிறார்.

புனித சியன்னா கத்தரின், “முடிவில்லா மூவோர் இறைவா! கடலின் ஆழத்தைப் போல் நீர் புரிந்துகொள்ள இயலா மறைபொருள்என்று வியக்கிறார். ஆம், மூவோர் இறைவனை முழுமையாகப் புரிந்துகொள்ள இயலாவிட்டாலும், அவரின் உடனிருப்பை நம்மால் உணர முடியும். எங்கே ஒற்றுமையும் மன்னிப்பும் இருக்கிறதோ, எங்கே சமத்துவமும் மனத் தூய்மையும் நிலவுகிறதோ, எங்கே உண்மையான அன்பு இருக்கிறதோ அங்கே மூவோர் இறைவன் வாழ்கிறார். நமது உள்ளமும் இல்லமும் மூவோர் இறைவன் தங்கும் ஆலயமாக அமைந்திடவும், இறையுறவிலும் மனித உறவிலும் நாம் நாளும் வளர்ந்திடவும் தேவையான வரம் வேண்டி, இந்தத் திருப்பலியில் பக்தி உணர்வோடு இணைவோம்.

முதல் வாசக முன்னுரை

இறைவன் தம்மையே வெளிப்படுத்தும் உன்னத நிகழ்வை இன்றைய முதல் வாசகம் விவரிக்கிறது. சீனாய் மலையில் மோசேவுக்குத் திருக்காட்சி அளிக்கும் ஆண்டவர் தம்மைஇரக்கமும் கனிவும் கொண்டவர்; சினம் கொள்ளத் தயங்குபவர்; பேரன்பும் உண்மையும் மிக்கவர்என்று அறிமுகப்படுத்துகிறார். இஸ்ரயேல் மக்களைத் தமது உரிமைச் சொத்தாக ஏற்றுக்கொண்ட இறைவனின் அளப்பரிய அன்பைப் பறைசாற்றும் இவ்வாசகத்திற்குப் பக்தி உணர்வோடு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

புனித பவுலடியார் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்தின் நிறைவுப் பகுதி இன்று நமக்கு வாசிக்கப்படுகிறது. கிறிஸ்துவில் நாம் மகிழ்ச்சியோடு வாழவும், நம்மைச் சீர்படுத்திக்கொண்டு அமைதியையும் ஒற்றுமையையும் வளர்க்கவும் அவர் நமக்கு அழைப்புவிடுக்கிறார். “ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும், கடவுளின் அன்பும், தூய ஆவியின் உறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாகஎன்ற உன்னத வாழ்த்தின் வழியாக, மூவோர் இறைவனின் ஆசிரைப் பெற்றுத் தரும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

நம்பிக்கையாளர் மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், பணியாளர்கள் அனைவரும் உம் தெய்வீக ஒன்றிப்பில் நிலைத்திருந்து, மக்களை நற்செய்தி வழியில் வழிநடத்தத் தேவையான வரங்களைத் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. உறவுகளின் ஊற்றே இறைவா! நாங்கள் உலகப் பற்றுகளைவிட உறவுகளுக்கு முதலிடம் கொடுக்க வும், முதியோரைப் போற்றிப் பாதுகாக்கும் நல் மனத்தைப் பெற்றிடவும் வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. அமைதியின் தேவனே! நாடுகளுக்கிடையே நிலவும் போர் மற்றும் வன்முறைகள் ஒழிந்து, மக்கள் சகோதரத்துவத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. ஞானத்தின் உறைவிடமே! புதிய கல்வியாண்டைத் தொடங்கும் எம் மாணவர்கள் அறிவிலும் ஒழுக்கத்திலும் வளர்ந்து, வாழ்வின் சவால்களில் வெற்றிபெற ஆசியளிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
மே 24, 2026 தூய ஆவியார் பெருவிழா - திப 2:1-11; 1கொரி 12:3-7,12-13; யோவா 20:19-23

திருப்பலி முன்னுரை

தூய ஆவியார் திருத்தூதர்கள் மேல் இறங்கி வந்ததைப் பெந்தகோஸ்து பெருவிழாவாகக் கொண்டாடுகின்றோம். தூய ஆவியின் வல்லமையைப் பெற்று துணிவோடும் ஞானத்தோடும் நற்செய்தியை அறிவிக்க பெந்தகோஸ்து பெருவிழா நமக்கு அழைப்புவிடுக்கிறது. இன்றைய நாள் ஆண்டவர் இயேசு தம் சீடர்களுக்கு அளித்த வாக்குறுதி நிறைவேறிய நாளாகும்அச்சத்திலும் குழப்பத்திலும் இருந்த திருத்தூதர்கள்மேல் இறங்கிய தூய ஆவியார் அவர்களை உறுதியும் ஞானமும் நிறைந்த சாட்சிகளாக மாற்றினார்.

அதே தூய ஆவி இன்றும் நம்முடைய வாழ்விலும் செயல்பட்டு, அன்பிலும் அமைதியிலும் நம்பிக்கையிலும் நம்மை வளரச் செய்கிறார் என்பதை உணர்வோம். தூய ஆவி நம் மனங்களில் அமைதியை அருள்பவராகவும், துயர நேரங்களில் ஆறுதல் அளிப்பவராகவும், குழப்ப நேரங்களில் ஞானத்தை அருள்பவராகவும், நம்முடைய வாழ்க்கைப் பயணத்தில் சாட்சிய வாழ்வு வாழ துணிவு அளிப்பவராகவும் இருக்கின்றார்

நமது வாழ்வில் அச்சம், கலக்கம், பயம் இவையெல்லாம் நீங்கப்பெற்று உறுதியோடும் துணிவோடும் வாழக்கூடிய அருளைத்தர நெருப்பு நா வடிவில் இறங்கி வரும் தூய ஆவியார் நமக்கு மூச்சுக்காற்றாய் இருந்து நம்மை இயக்குகிறார். இத்தகு மகத்துவமிக்க, வல்லமை நிறைந்த  தூய ஆவியின் குரலுக்குச் செவிகொடுத்து, தூய மக்களாய் வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசக முன்னுரை

சீடர்கள் இயேசு இறந்தபின் அச்சத்தோடும் கலக்கத்தோடும் அன்னை மரியாவோடு மேலறையில் ஒன்றாய் குழுமி இருந்த வேளையில், அவர்கள் அனைவரையும் ஆட்கொண்ட தூய ஆவியார் பல்வேறு மொழிகளில் பேசும் ஆற்றலையும், நற்செய்தியை விளக்கிக் கூறும் ஞானத்தையும், துணிவோடு எடுத்துரைக்கும் வல்லமையையும் வழங்குகிறார். நாமும் தூய ஆவியாரால் ஆட்கொள்ளப்பட்டவர்களாக வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்

இரண்டாம் வாசக முன்னுரை

திருமுழுக்குப் பெற்ற நாம் அனைவரும் தூய ஆவியைப் பெற்றதால்தான்இயேசுவே ஆண்டவர்என வாயார முழக்கமிடுகிறோம், அவரை அறிவிக்கிறோம். தூய ஆவியோ ஒன்றுதான், ஆனால், அதன் கனிகள், கொடைகள் பலவகைப்பட்டவை. தூய ஆவியின் வரங்களைப் பெற்றவர்கள் பொதுநன்மைக்காக உழைக்கவேண்டும் எனும் அழைப்பை விடுக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

நம்பிக்கையாளர் மன்றாட்டுகள்

1. தூய ஆவியை எமக்களித்த இறைவா! திரு அவையின் தலைவர்கள் அனைவரும் தூய ஆவியின் துணையால் தீமைகளை எரித்திடும் சுடராகவும், இருளை அகற்றி ஒளியைக் கொடுக்கும் தீபமாகவும் திகழ்ந்திட அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. வானகக் கொடைகளை வழங்கிவரும் எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் தூய ஆவியை எழுந்தருளச் செய்து, சமுதாயத்தில் நற்செய்தியின் தூதுவர்களாக வாழத் தேவையான  கொடைகளையும் வரங்களையும் தந்து வழிநடத்த வேண்டுமென்று  இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. அருள்கொடை வள்ளலே எம் இறைவா! புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம் நாட்டுத் தலைவர்கள் நாட்டு மக்களைப் பாதுகாக்கவும், பிளவுகளை அகற்றி சமத்துவத்தை ஏற்படுத்தவும், ஊழலற்ற ஆட்சியை வழங்கிடவும் தேவையான ஞானத்தைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. தூய ஆவியை எமக்களித்த இறைவா! எம் பங்கிலுள்ள இளைஞர், இளம் பெண்களுக்கு ஆசியளியும். அவர்கள் நன்மை தீமைகளைப் பகுத்தறியும் ஆற்றலைப் பெற்றிடவும், உலகப் போக்கின்படி செல்லாமல், உண்மை நெறியில் நடக்கவும் தேவையான வரங்களைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
ஆண்டவருடைய விண்ணேற்றப் பெருவிழா (17-05-2026) திப 1:1-11; எபே 1:17-23; மத் 28:16-20

திருப்பலி முன்னுரை

ஆண்டவர்மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையில் நிலைத்திருக்க, ஆண்டவருடைய விண்ணேற்றப் பெருவிழா நமக்கு அழைப்பு விடுக்கிறது. விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்த இறைவன் மீண்டும் விண்ணுக்கே திரும்புகிறார். ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்த பின்பு நாற்பது நாள்கள் தம்முடைய சீடர்களைத் தயார்படுத்துகிறார்; அவர்களை உருவாக்குகிறார்; திடப்படுத்துகிறார்; உறுதிப்படுத்துகிறார்; தூய ஆவியின் வல்லமையைப் பற்றி எடுத்துரைக்கின்றார்இவை அனைத்தையும் செய்துவிட்டு தம்முடைய சீடர்களிடமிருந்து பிரியாவிடை பெற்று விண்ணகம் செல்கின்றார்.

சீடர்கள் வானத்தை அண்ணாந்துப் பார்த்துக்கொண்டிருந்தபோது, ‘கவலைப்படாதீர்கள்! நான் மீண்டும் வருவேன். நான் வருவதற்கு முன்பாக உங்களோடு உடனிருக்க தூய ஆவியார் வருவார். அவர் உங்களை உண்மையை நோக்கி வழிநடத்துவார்என்று கூறுகின்றார். உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தி அறிவிக்கும் ஆற்றலைக் கொடுத்துச் செல்கின்றார்திருமுழுக்கின் வழியாக இந்த மகத்தான ஆற்றலைப் பெற்ற இயேசுவின் சீடர்களாகிய நாம் துணிவுடன் நற்செய்தியை அறிவிப்போம். இயேசு என்ற ஒப்பற்ற பெயரின் மகத்துவத்தை இந்த உலகம் அறியச் செய்வோம். “உலக முடிவுவரை நான் எந்நாளும் உங்களுடன் இருக்கிறேன்என்று மொழிந்த வாக்குமாறாத தெய்வத்தின் உடனிருப்பை உணர்வோம். திருத்தூதர்களைப்போல இயேசுவை அறிந்து அனுபவித்து அறிவித்துச் சாட்சிய வாழ்வு வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசக முன்னுரை

இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழாவைக் கொண்டாடும் நாம் மண்ணுலகைச் சார்ந்தவற்றை நாடாமல் விண்ணுலகைச் சார்ந்தவற்றை விரும்பித் தேடுவோம். இயேசு நமக்கு விட்டுச்சென்ற அன்பு, அமைதி, சமத்துவம், சகோதரத்துவம் போன்ற மதிப்பீடுகளை நமதாக்குவோம். இயேசுவோடு வாழவும், அவரது உடனிருப்பில் நிலைக்கவும் அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

இயேசு விண்ணேற்றம் அடையும் முன் தம்முடைய சீடர்களைப் பணிவாழ்வுக்குத் தயார்படுத்துகின்றார். தேர்ந்து தெளியும் ஆற்றலையும், பகுத்தறியும் ஞானத்தையும், உறுதியோடு பணிசெய்வதற்கு ஆற்றலையும் தரும் தூய ஆவியை வாக்களித்ததை உறுதிப்படுத்துகின்றார். நம்மோடு பயணித்து, உத்வேகம் தந்து வழிநடத்தும் தூய ஆவியின் குரலுக்குச் செவிகொடுத்து வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

நம்பிக்கையாளர் மன்றாட்டுகள்

1. அன்புத் தந்தையே இறைவா! உமது இறையரசுப் பணியைச் செய்வதற்காக நீரே தேர்ந்துகொண்ட எம் திருத்தந்தை, ஆயர்கள், அருள்பணியாளர், துறவியர் அனைவரும் காலத்தின் அறிகுறிகளுக்கேற்ப கருத்தாய் பணி செய்வதற்குத் தேவையான ஞானத்தையும், உடல் மற்றும் மனநலனையும் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. பாசமுள்ள ஆண்டவரே! விண்ணேற்றப் பெருவிழாவைக் கொண்டாடும் நாங்கள் அனைவரும் எங்களுடைய வாழ்க்கையாலும் வார்த்தையாலும் நாங்கள் வாழ்கின்ற சமுதாயத்தை விண்ணகமாக மாற்றவும், நம்பிக்கையின் தூதுவர்களாக வாழவும் தேவையான வரத்தை எமக்குத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. அமைதியின் ஆண்டவரே! உலகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற போர், தீவிரவாதம் அனைத்தும் ஒழிந்து அமைதி ஏற்படவும், நாங்கள் யாரையும் அடிமைப்படுத்தாமல் அனைவருக்கும் மதிப்புகொடுத்து, சமத்துவமான சமுதாயத்தை அமைக்கவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. உன்னதரான ஆண்டவரே! திரு அவையின் தூண்களாக இருக்கும் எம் இளையோர் உலகப் போக்கின்படி வாழாமல்மனசாட்சியின் குரலுக்குச் செவிகொடுத்து வாழவும், உம்மீதான நம்பிக்கையில் வளரவும், நல்மதிப்பீடுகளை இவ்வுலகில் விதைத்திடவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
மே 10, 2026, பாஸ்கா கால 6 - ஆம் ஞாயிறு - திப 8:5-8,14-17; 1பேது 3:15-18; யோவா 14:15-21

திருப்பலி முன்னுரை

இறைவனின் அன்பில் நிலைத்திருந்து கனி கொடுக்கப் பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறு நமக்கு அழைப்புவிடுக்கிறது. இறைவனை அன்பு செய்பவர்களால் மனிதர்களை அன்பு செய்யாமல் இருக்கமுடியாது. அன்பையும் கடவுளையும் பிரித்துப் பார்க்க இயலாது. அன்புள்ளவர்கள் அனைத்திலும் கடவுளைக் காண்கிறார்கள். அன்புதான் கடவுள். கடவுள்தான் அன்பு! “அன்பு செய்யுங்கள், பிறகு அனைத்தையும் செய்யுங்கள்என்கிறார் புனித அகுஸ்தினார். நாம் செய்வது அனைத்தையும் அன்போடு செய்வோம். கடவுள் யாரையும் திக்கற்றவர்களாக விட்டுவிடுவதில்லை; அவர் நல்லோர் மேலும், தீயோர் மேலும் அன்பை அளவில்லாமல் பொழிகிறார். இறைவன் தகுதியானவர்களைத் தெரிவு செய்வதில்லை; தாம் தெரிந்து கொண்டவர்களைத் தகுதிப்படுத்துகிறார். அனைத்து நிலைகளிலும் அவர்களை அன்பால் அரவணைக்கின்றார். இறைவனின் சாயலைப் பெற்றுள்ள நாம், உடன்வாழும் சகோதர-சகோதரிகளில் கடவுளைக் காண்போம். அன்பு செய்யும் உள்ளம் ஆண்டவர் வாழும் இல்லம்; அன்பு நிறைந்த உள்ளத்தில் ஆவியானவர் தங்குவார்.

இந்த உலகத்தில் மக்கள் பணத்திற்காக அல்ல; மாறாக, உண்மையான அன்பிற்காகவே ஏங்குகின்றனர். பணக்காரர், பதவியில் உள்ளோர் என்று ஆதாயத்தை நோக்கி அன்பு செய்யாமல், இல்லாதவர்களையும் கைவிடப்பட்டவர்களையும், வீதியை வீடாகக் கொண்டவர்களையும், கந்தலாடை உடையவர்களையும், உறவுக்காக ஏங்குபவர்களையும், தனித்துவிடப்பட்டவர்களையும் தேடிச்சென்று அன்பு செய்வோம்; மறு கிறிஸ்துவாக மாறுவோம். நம்மீது கொண்ட அன்பினால் உயிரைக் கொடுத்து உலகை மீட்ட இயேசுவின் அன்பைப் பிரதிபலிக்கும் அன்பின் தூதுவர்களாக வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.  

முதல் வாசக முன்னுரை

திரு அவையின் தொடக்கக் காலங்களில் திருத்தூதர்களின் நற்செய்திப் பணியினால் மகிழ்ச்சி உண்டாயிற்று. தீய ஆவிகள் விலகி ஓடின; நோயுற்றோர் நலம் பெற்றனர்; இறந்தவர் உயிர்ப்பெற்று எழுந்தனர். திருத்தூதர்கள் தூய ஆவியின் துணையோடு அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்தனர். திருத்தூதர்களால் இறையாட்சி வளர்ந்தது. தூய ஆவியின் குரலுக்குச் செவிகொடுத்து வாழ்ந்திட அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

கிறிஸ்து இயேசுவைத் தலைவராகக் கொண்டுள்ள நாம், அவரைப் பற்றி அறிவிப்பதில் கருத்தாக இருக்க வேண்டும். எத்தகைய துன்பம் வந்தாலும் இயேசுவின் மதிப்பீடுகளினின்று விலகக்கூடாது என்பதை புனித பேதுரு, “தீமை செய்து துன்புறுவதைவிட, நன்மை செய்து துன்புறுவதே மேல்என்கிறார்தீமையை விலக்கி நன்மை செய்து வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

நம்பிக்கையாளர் மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! எம் திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர், அருள்பணியாளர், துறவியர், பொதுநிலையினர் அனைவரும் உயிர்த்த இயேசுவின் சாட்சிகளாய் வாழ்ந்திடவும், கிறிஸ்துவின் மதிப்பீடுகளுக்கு ஏற்ப இறைச்சமூகத்தைக் கட்டியெழுப்பவும் தேவையான அருள்வரங்களைத் தந்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. ஏழைகளின் துணையாளரே எம் இறைவா! எம் நாட்டில் திணிக்கப்படும் பொருளாதார நெருக்கடிகள், வரிவிதிப்பு, விலைவாசி உயர்வு இவற்றால் துன்பப்படும் எம் சகோதர-சகோதரிகள் அனைவருக்கும் வாழ்வாதாரங்கள் கிடைக்கப் பெற்று, மகிழ்ச்சியோடு வாழ தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. ‘குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள்என்று மொழிந்த இறைவா! எம் குடும்பங்களுக்கு ஆசிராக வழங்கிய எம் குழந்தைகளை இறைநம்பிக்கையில்  வளர்க்கவும், தூய வாழ்வுக்கான சிந்தனைகளைக் கொடுத்திடவும், தேவையான ஞானத்தைப் பெற்றோராகிய எமக்குத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

4. பாதுகாக்கும் ஆண்டவரே! மேல்நிலைக் கல்வியை முடித்து கல்லூரிகளுக்குச் செல்லவிருக்கும் குழந்தையரையும், படிப்பை முடித்து வேலை தேடிக்கொண்டிருக்கும் இளையோரையும், குடும்பப் பாரத்தால் படிப்பைத் தொடர முடியாமல் உள்ள இளையோரையும் ஆசியளித்து வழிநடத்திக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
மே 03, 2026 பாஸ்கா கால 5 - ஆம் ஞாயிறு - திப 6:1-7; 1பேது 2:4-9; யோவா 14:1-12

திருப்பலி முன்னுரை

வழியும் உண்மையும் வாழ்வுமாக இருக்கின்ற இறைவனோடு இணைந்து வாழ, பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறு நமக்கு அழைப்பு விடுக்கிறது. கடவுளின் பேரன்பையும் இரக்கத்தையும் சுவைத்து இறையாசியைப் பெற்றுக்கொள்ள ஆவலோடு ஞாயிறு திருப்பலிக்கு வருகை புரிந்திருக்கும் உங்கள் அனைவரையும் வாஞ்சையோடு வரவேற்கிறோம். கவலைகள், துன்பங்கள், போராட்டங்கள், வறுமை, பொருளாதாரப் பின்னடைவுகள், இழப்புகள் இவற்றால் சோர்வடைந்துள்ள நம்மைப் பார்த்து இயேசு, ‘கலங்காதீர்கள், நான் உங்களோடு இருக்கிறேன்என்று கூறுகின்றார். இயேசு பிலிப்பிடம் மட்டுமல்ல, நம்மிடமும்இவ்வுளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீங்கள் என்னை அறிந்துகொள்ளவில்லையா?’ என்று கேட்கிறார்

இமைப்பொழுதும் நம்மை விட்டு நீங்காது நம்முடன் பயணிக்கும் இயேசுவின் உடனிருப்பை உணர்ந்து அவரில் தஞ்சமாவோம். இந்த உலகம் தரமுடியாத அன்பை, அமைதியை, மகிழ்ச்சியைக் கொடுக்கக்கூடிய இயேசுவில் நம்பிக்கை கொண்டு வாழ்வோம். ஆலயத்தில் மட்டுமல்ல, உடன் வாழும் சகோதர-சகோதரிகளிடமும் இறைவனைக் காண முயற்சி செய்வோம். நம்மைச் சோர்வடையச் செய்யும் செயல்களிலிருந்து விலகி, ஆண்டவர் இயேசுவைப் பயமின்றி அணுகி வருவோம்.

வார்த்தையாலும் வாழ்க்கையாலும் நமக்கு மதிப்பீடுகளைக் கற்றுக்கொடுத்த நமது ஒரே தலைவன் இயேசுவின் வழியை நமதாக்கி வாழ்வோம். கைவிடாத இறைவனின் கரத்தைப் பற்றிக்கொண்டு மகிழ்ச்சியோடும் அமைதியோடும்  வாழ வரம்வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசக முன்னுரை

கிறித்தவர் என்ற முகவரியைப் பெற்ற நாம், இறைவார்த்தையை வாசித்து, அவற்றின்படி வாழ்ந்து, அவற்றைப் போதிப்பது நம்மேல் சுமத்தப்பட்ட கடமையாகும். கடவுளின் வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது, அற்புதங்களைச் செய்ய வல்லது என்பதை உணர்ந்த சீடர்கள், ஆர்வத்தோடும் தாகத்தோடும் இறைவார்த்தையை அறிவித்தனர். அதுபோல, இறைவார்த்தையின்மீது தாகம் கொண்டவர்களாய் வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

திருமுழுக்குப் பெற்ற நாம் அனைவருமே இயேசுவின் சீடர்கள். நற்செய்தி அறிவிப்பது நமது முதன்மையான பணியாக இருக்கவேண்டும். நமது வாழ்வுக்கு உயிருள்ள மூலைக்கல்லாக இருக்கின்ற இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டு வாழ்வோம். உயிரைக் கொடுத்து நமக்கு வாழ்வைக் கொடுத்த உத்தமர் இயேசுவின் மேன்மைமிக்க செயல்களை அறிவித்து, நற்செய்தியின் தூதுவர்களாக வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

நம்பிக்கையாளர் மன்றாட்டுகள்

1. ‘நானே நல்லாயன்என்று மொழிந்த ஆண்டவரே! எம் திரு அவைத் தலைவர்கள் அனைவரும் இந்த அறிவியல் உலகில், மெய்ஞானமாகிய உம்மைப் பற்றி ஞானத்தோடு அறிவிக்கவும், அழைத்த உம்மில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. எம்மைப் பாதுகாக்கும் ஆண்டவரே! உமது பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் எமக்கு வாழ்வு கொடுக்கும் இறைவார்த்தையை அன்றாடம் ஆர்வத்தோடு படித்து, உம்மீது கொண்டுள்ள நம்பிக்கையில் ஒவ்வொரு நாளும் வளரவும், உம்மோடு இணைந்து வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை  மன்றாடுகின்றோம்.

3. ஞானத்தின் ஊற்றாகிய இறைவா! மக்களை மதத்தின், இனத்தின் பெயரால் பிரிக்கும் சக்திகளை அழித்து, அமைதியை ஏற்படுத்தும் தலைவர்களை எம் நாட்டிற்கு நீரே தேர்ந்தெடுத்துத் தந்திடவும், தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்கள் மக்கள் என்ற சொத்தைப் பேணிக்காத்து நாட்டின் ஒற்றுமைக்காக உழைத்திடவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. பாதுகாக்கும் பரம்பொருளே எம் இறைவா! எம் நாட்டின் மிகப்பெரிய சக்தியாக விளங்கிடும் எம் இளையோர் அனைவரும், உலகப்போக்கின்படி வாழாமல் மனசாட்சியின் குரலுக்குச் செவிகொடுத்து வாழவும், நல்ல மதிப்பீடுகளில் வளர்ந்திடவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
பாஸ்கா காலத்தின் 4-ஆம் ஞாயிறு (26-04-2026) (நல்லாயன் / இறையழைத்தல் ஞாயிறு) திப 2:14,36-41; 1பேது 2:20-25; யோவா 10:1-10

திருப்பலி முன்னுரை

உயிர்த்த இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்று நாம் நல்லாயன் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். இன்றைய நாள்இறையழைத்தல் ஞாயிறுஎன்றும் அழைக்கப்படுகிறது. நல்லாயன் இயேசு ஆடுகளை அறிந்தவராக, பெயர்சொல்லி அழைப்பவராக, மேய்ச்சல் நிலத்தை நோக்கி வழிநடத்துபவராக, ஆடுகளின் தேவையறிந்து உதவி செய்பவராக, துன்பத்தில் துணையிருப்பவராக, தவறிச் செல்லும்போது தோள்மேல் தூக்கிச் செல்பவராக, அனைத்து ஆடுகளுமே முக்கியமானவை என்று தேடிச்செல்பவராக, ஆடுகள் வாழ்வுபெறும் பொருட்டுத் தம் உயிரையே கொடுப்பவராக இருக்கிறார்.

நல்லாயன் இயேசுவின் கரம்பிடித்து நாம் நடக்கும்போது நமக்குக் கவலையில்லை, கலக்கமில்லை, தனிமை இல்லை, சோர்வு இல்லை. இமைப்பொழுதும் பிரியாது நம்மோடு வாழும் நல்ல ஆயன் இயேசுவின் குரலுக்குச் செவிகொடுத்து, அவரைப் பின்தொடர்ந்து வாழ்வோம். பெற்றோர் பிள்ளையருக்கும், ஆசிரியர் மாணவருக்கும், அருள்பணியாளர் மக்களுக்கும், மக்கள் உடன்வாழும் சகோதர-சகோதரியருக்கும் வழிகாட்டும் ஆயனாக, பாதுகாக்கும் ஆயனாக வாழ முயற்சி செய்வோம்.

நமது நல்லாயன் இயேசுவின் குரலுக்குச் செவி கொடுத்தால் மட்டுமே நமக்கு வாழ்வு உண்டு. எனவே, ஆயனின் வார்த்தைகளுக்குச் செவி கொடுத்து நமது வாழ்க்கைப் பாதையை மாற்றுவோம். நல்லாயன் இயேசு நமக்குத் தமது வாழ்க்கையால் கற்றுக்கொடுத்த அன்பு, இரக்கம், மன்னிப்பு, நீதி, நேர்மை, சமத்துவம், சகோதரத்துவம், தியாகம் போன்ற மதிப்பீடுகளை நமதாக்கி, நல்ல ஆயன்களாக வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசக முன்னுரை

இயேசுவின் அன்பையும் உடனிருப்பையும் வார்த்தையையும் வாழ்க்கையையும் சுவைத்த பேதுரு எதற்கும், எவருக்கும் அஞ்சாது இயேசுவே கடவுளால் அனுப்பப்பட்ட மெசியா எனவும், ‘மனம் மாறி இயேசுவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள்; அப்போது தூய ஆவியால் வழிநடத்தப்படுவீர்கள்என்றும் முழக்கமிடுகிறார். எனவே, திருமுழுக்குப் பெற்ற நாமும்இயேசுவே ஆண்டவர்எனப் பறைசாற்றி நற்செய்தியின் தூதுவர்களாக வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

இயேசு சிலுவையைச் சுமந்து நமக்கு மீட்பை வழங்கினார். இயேசுவின் இரத்தத்தால் வாழ்வு பெற்ற நாம் சாதி, மதம், இனம், வேண்டியவர்-வேண்டாதவர் என்பதை விடுத்து, அனைத்து உயிர்களிலும் இறைவனின் சாயலைக் காண முயற்சி எடுப்போம். மென்மையான வார்த்தைகளைப் பேசி மேன்மையான மக்களாக வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்

நம்பிக்கையாளர் மன்றாட்டுகள்

1. ‘நல்ல ஆயன் நானே  என்று மொழிந்த ஆண்டவரே! உமது பணிக்காக நீர் தேர்ந்துகொண்ட திருத்தந்தை, ஆயர், அருள்பணியாளர், துறவியர் அனைவரும் நல்ல ஆயரான உம்மைப் பின்பற்றி, ஆடுகளின் மனநிலையை அறிந்து செயல்படவும், எடுத்துக்காட்டான வாழ்வு வாழவும் வரம்தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

2. எம்மை ஆளும் ஆண்டவரே! எம் நாட்டுத் தலைவர்கள் சொந்த ஆதாயத்தைத் தேடும் சுயநலவாதிகளாய் இல்லாமல், மக்கள் என்ற சொத்தைப் பேணிக் காக்கும் நல்ல ஆயராக வாழ்ந்திடவும், அனைத்து மக்களும் வாழ்வு பெற உழைக்கும் நல்ல தலைவரை நீரே எமக்குத் தேர்ந்தெடுத்துத் தரவும்  வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. ‘நானே வாயில்; என் வழியாய் நுழைவோருக்கு ஆபத்து இல்லைஎன்று மொழிந்த ஆண்டவரே! உமது பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் நீர் எமக்கு விட்டுச்சென்ற விழுமியங்களை வாழ்வாக்கவும், ஒருவர் மற்றவருக்கு நல்வழிகாட்டும் நல்ல ஆயராக வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. ‘வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும்பொருட்டு வந்துள்ளேன்என்று மொழிந்த ஆண்டவரே! எங்கள் குடும்பங்களில் உள்ள இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் அனைவரும் உம்மைப் பின்தொடர்ந்திடவும், இறையழைத்தலில் தாகம் கொண்டவர்களாக வாழ்ந்திடவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.