திருப்பலி முன்னுரை
ஆண்டின்
பொதுக்காலத்தின் 4-ஆம் ஞாயிறான இன்று இயேசு தமது மலைப்பொழிவின் வழியாக நம்மை பேறுபெற்ற
மக்களாக வாழ அழைக்கிறார். மலைப்பொழிவானது இயேசுவின் போதனைகளின் மையக்கருத்தாகவும், கிறித்தவ வாழ்வின் அடிநாதமாகவும் அமைகிறது.
‘பேறுபெற்றோர் யார்?’ என்ற கேள்வியை எழுப்பிச் சிந்திக்கும் போது, இயேசு தரும் பதிலுக்கும், இந்த உலகம் தரும் பதிலுக்கும் இடையே அதிகமான வேறுபாடுகள் உள்ளன. இன்றைய உலகமானது பணம், பதவி, பட்டம், புகழ், செல்வம் அடைந்தவர்களைத்தான் ‘பேறுபெற்றோர்’ எனக்
கருதுகிறது. இறைமகன் இயேசு ஏழைகள், துயருறுவோர், கனிவுடையோர், இரக்கமுடையோர், அமைதியை ஏற்படுத்துவோர், நீதியை நிலைநாட்டுவோர், மற்றவர்களின் துயரத்தில் ஆறுதலாக இருப்போர், எளிய மனம் படைத்தோர், துன்பங்களின் மத்தியிலும் இறைவனோடு இருப்போரே ‘பேறுபெற்றோர்’ என்கிறார்.
மலைப்பொழிவானது தூய வாழ்வு வாழ வழிகாட்டியாகவும், ஆன்மிக வாழ்வின் மையமாகவும் திகழ்கின்றது. நமது வாழ்க்கையில் அன்றாடம் நாம் கூறும் வார்த்தைகள் பிறர் வாழ்வில் மகிழ்ச்சியையும் மன அமைதியையும் கொடுப்பதாக
அமைந்திட செபிப்போம். மனிதநேயத்தோடு வாழ்ந்து இவ்வுலகில் வாழும் அனைத்து மக்களிலும் இயேசுவைக் காணவும், மகிழ்ச்சியின் நற்செய்தியாக வாழவும், வாழ்க்கையால் இயேசுவின் விழுமியங்களை விதைத்து ஆண்டவருக்குள் அகமகிழ்ந்து பேறுபெற்ற மக்களாக
வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.
முதல் வாசகம்
முன்னுரை
இன்றைய
முதல் வாசகம் நாம் ஆண்டவரைத் தேடவும், நேர்மையை நாடவும், மனத்தாழ்மையை ஆடையாக அணிந்துகொள்ளவும், நம்பிக்கையில் நிலைத்திருக்கவும், உண்மையின் வழியில் பயணிக்கவும் நமக்கு அழைப்பு விடுக்கிறது. இறைமதிப்பீடுகளின் வழியில் வாழ்ந்து, இறையொளியில் சங்கமிக்க அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசகம்
முன்னுரை
நமது
அறிவு, ஆற்றல், பட்டம், பதவி, படிப்பு, வேலை, செல்வங்கள், குடும்பம்... இந்த வாழ்க்கை அனைத்தும் இறைவன் நமக்கு இலவசமாகக் கொடுத்த கொடை. இவற்றில் ‘என்னுடையது’ என்று
பெருமைப் பாராட்ட ஒன்றுமில்லை. ஆகவே, இறைவனைக் கண்டுகொள்ளத் தேவையான ஞானத்தை முதலில் தேடவும், ஆண்டவரில் பெருமைகொள்ளவும் அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
மன்றாட்டுகள்
1. ‘திருப்பொழிவு செய்யப்பட்டவர்களை
அனைத்துத் தீங்கிலிருந்தும் விடுவித்துக் காப்பேன்’
என்று மொழிந்த ஆண்டவரே! பணிக்குருத்துவத்தையும், பொதுக் குருத்துவத்தையும் பெற்ற திருத்தந்தை முதல் பொதுநிலையினர் வரை அனைவரும் இறைத்தூதுப் பணியாளராக வாழ அழைக்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்து, இவ்வுலகில் இறையாட்சியைக் கட்டியெழுப்பத் தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. ‘நீங்களே என்
சாட்சிகள்’ என்று
மொழிந்த ஆண்டவரே! எங்கள் குடும்பங்களில் உள்ள அனைவரும் உம்மால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் என்பதை உணர்ந்தவர்களாக, அன்பின் தூதுவர்களாக இவ்வுலகில் வலம்வரத் தேவையான அருள்வரங்களை எமக்குத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. ‘நான் உங்களோடு
இருக்கின்றேன்’ என்று
மொழிந்த ஆண்டவரே! எம் நாட்டில் மக்கள் அனைவரும் வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையுடன் வாழவும், மக்களை சாதி, மதம், இனம் என்று பிரிக்கும் சக்திகள் அழிந்திடவும் தேவையான வரங்களைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. ‘நீ போகும்போதும்
வரும்போதும் காப்பேன்’
என்று மொழிந்த ஆண்டவரே! நீர் எம்முடன் பயணிக்கிறீர் என்பதை நாங்கள் உணர்ந்திடவும், ஏழை, எளிய மக்களில் உம்மைக் கண்டு பேறுபெற்ற மக்களாக வாழ்ந்திடவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.