news
ஞாயிறு தோழன்
ஜூலை 12, 2026 ஆண்டின் பொதுக்காலம் 15-ஆம் ஞாயிறு - எசா 55:10-11; உரோ 8:18-23; மத் 13:1-23

திருப்பலி முன்னுரை

ஆண்டின் பொதுக்காலம் 15-ஆம் ஞாயிறு, நம் உள்ளம் என்னும் நிலத்தை அன்பு, இரக்கம், மன்னிப்பு, பரிவு, மனிதநேயம் என்னும் நல்விதைகளால் பண்படுத்திப் பன்மடங்கு பயன் கொடுக்க நமக்கு அழைப்புவிடுக்கின்றது.

இறைவன் விதைப்பவராக இருந்து, ஒவ்வொரு நாளும் வார்த்தையின் வழியாக நம்மோடு பேசிக்கொண்டிருக்கிறார். நாம் இறைவார்த்தையைக் கேட்டும் புரிந்துகொள்ளாமல் புறக்கணித்து, வழியோரம் விதைக்கப்பட்ட விதைகளைப் போன்று தீயோனின் தூண்டுதலால் வார்த்தையை மறந்து விடுகின்றோமா

கடினமான உள்ளம் கொண்டு ஆழமான நம்பிக்கையின்றிப் பாறையின்மீது விழுந்து பயன் கொடுக்காமல் மடிந்த விதைகளைப் போன்று கடின இதயத்துடன் வாழ்கின்றோமா? உலகக் கவலை, செல்வ மோகம், போட்டி மனப்பான்மை போன்றவற்றால் நெருக்கப்பட்டு, முட்செடியில் விழுந்த விதைகளைப் போன்று பயனளிக்காது மறைந்து விடுகின்றோமா? எனச் சிந்திப்போம்.

ஆண்டவர் தம் வார்த்தைகளைத் தாராளமாக நமக்குத் தருகின்றார். நாம் எந்த அளவுக்குத் தகுதியுள்ள இதயத்தோடு செவிமடுக்கிறோம் என்பதிலேயே நம் ஆன்மிக வளர்ச்சி அடங்கியுள்ளது. எனவே, நம் இதயம் இறைவார்த்தையை ஏற்கும் பக்குவமான நல்ல நிலமாக மாறி, நூறு மடங்கு நற்பயன் கொடுக்க இணைந்து வரம் வேண்டுவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசக முன்னுரை

ஆண்டவர் வாக்கு மாறாதவர். அவரது வார்த்தைகள் வல்லமைமிக்கவை. விதைகள் எவ்வாறு முளைத்துப் பயன்கொடுத்துப் பலரை வாழவைக்கின்றதோ, அதேபோன்று நாமும் இறைவனின் வல்லமைமிக்க வார்த்தைகளை உள்ளம் எனும் நிலத்தில் விதைத்து, பல மடங்கு விளைச்சலைக் கொடுக்க அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.  

இரண்டாம் வாசக முன்னுரை

தூய பவுல் நமக்குக் கிடைக்கவிருக்கும் மேலான மாட்சிமையைப் பற்றி எடுத்துரைக்கிறார். மனிதர் உயர்வடையும்போது மனிதர் மட்டுமல்ல, ஒட்டுமொத்தப் படைப்பும் உயர்வடைகிறது. அதற்காகவே, மனிதரோடு சேர்ந்த படைப்பும் பேறுகால வேதனையுறுகிறது என்பதை விளக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

நம்பிக்கையாளர் மன்றாட்டுகள்

1. கருணையே உருவான இறைவா! திரு அவையை வழிநடத்தி வரும் எம் திருத்தந்தை, ஆயர், அருள்பணியாளர், துறவியர் அனைவரும் இறையாட்சியின் மதிப்பீடுகளின்படி வாழவும் பிறரை வாழத்தூண்டவும் அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. பேரன்பு கொண்ட ஆண்டவரே! எம் நாட்டை ஆளும் தலைவர்கள் அனைவரும் நாட்டின் வளங்களையும் மக்களையும் பாதுகாக்கவும், அனைத்து மக்களும் நலமோடும் வாழ்வதற்கு ஏதுவான திட்டங்களைத் தீட்டவும் தேவையான ஞானத்தை அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. நன்மைகளின் நாயகனே இறைவா! எம் குடும்பங்கள் அனைத்தும் இறைவார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் அவ்வார்த்தைகளின் படி வாழ்ந்து சிறந்த கிறித்தவக் குடும்பமாகத் திகழவும், ஞாயிறு திருப்பலியில் முழுமையாகப் பங்கெடுக்கவும் அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. இரக்கத்தின் ஊற்றே இறைவா! உமது சாயலில் படைக்கப்பட்ட நாங்கள் எங்களால் இயன்ற அளவு மற்றவருக்கு உதவவும், ஏழையர், முதியோர் மட்டில் இரக்கம் கொண்டு உதவி செய்திடவும், எமது வாழ்க்கையால் உம்மைப் பிரதிபலிக்கவும் அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
ஆண்டின் பொதுக்காலம் 14-ஆம் ஞாயிறு (05-07-2026) செக் 9:9-10; உரோ 8:9,11-13; மத் 11:25-30

திருப்பலி முன்னுரை

குழந்தை மனம் கொண்டு அனைவரோடும் நல்லுறவுடன் வாழ்ந்து விண்ணகத்தின் முன்சுவையை இம்மண்ணகத்தில் சுவைத்து நிறைவோடு வாழ ஆண்டின் பொதுக்காலம் 14-ஆம் ஞாயிறு நமக்கு அழைப்புவிடுக்கிறது. இன்றைய நற்செய்தியில் இயேசுசுமை சுமந்து சோர்ந்திருப்போர்களே எல்லாரும் என்னிடம் வாருங்கள்என்று வாஞ்சையோடு அழைக்கிறார். விண்ணரசின் மறைபொருள்கள் ஞானிகளுக்கும், தங்களை அறிஞர்கள் என்று நினைத்துக் கொள்பவர்களுக்கும் வெளிப்படுத்தப்படவில்லை; மாறாக, தூய்மையான உள்ளம் கொண்ட குழந்தைகளுக்கே வெளிப்படுத்தப்படுகிறது

இயேசு கனிவும் மனத்தாழ்மையும் உடையவர். அவரது கட்டளைகள் அன்பை அடித்தளமாகக் கொண்டவை. தாழ்மையும் சாந்தமும் நிறைந்த இயேசுவின் இதயம்போல் நம் இதயம் மாறும் போது, நம் ஆன்மாவிற்கு உண்மையான அமைதியும் இளைப்பாறுதலும் கிடைக்கும். இயேசு நம்மிடம் எதிர்பார்ப்பது வெளிப்படையான பெரிய சாதனைகள் அல்ல; மாறாக, நம்பிக்கை யுடனும் தாழ்மையுடனும் அவரிடம் திரும்பி வரும் ஒரு திறந்த இதயத்தையே  எதிர்பார்க்கிறார். நம் சுமைகளைத் தனியாகச் சுமந்து மன பாரத்தோடு வாழாமல் நற்கருணைநாதரின் பாதத்தில் இறக்கிவைப்போம்அவரிடம் மட்டுமே உண்மையான இளைப்பாறுதல் உண்டு என்பதை உணர்வோம். இயேசுவின் பேரன்பைச் சுவைத்து, அவரின் கட்டளைகளில் நிலைத்து, அவரது வார்த்தையில் நம்பிக்கை கொண்டு வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்

முதல் வாசக முன்னுரை

இறைவாக்கினர் செக்கரியா வழியாக ஆண்டவர் நமக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியைத் தருகிறார். உலக அரசர்களைப் போல அதிகாரத்தோடும் ஆயுதங்களோடும் ஆட்சி செய்யாத ஒரு புதிய அரசைப் பற்றியும், அவரது அமைதியின் ஆட்சியைப் பற்றியும் எடுத்துரைக்கின்றார். இறையாட்சியின் மகத்துவத்தை எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

திருத்தூதர் பவுல், கிறித்தவர்களாகிய நாம் உடலின் இச்சைகளின்படி வாழாமல், தூய ஆவியாரின் வழிநடத்துதலின்படி வாழ அழைக்கிறார்கிறிஸ்துவை உயிர்தெழச்செய்த அதே தூய ஆவி நமக்குள்ளும் குடியிருக்கிறார். எனவே, அந்த ஆவியானவரின் துணைகொண்டு நம் உடலையும் உள்ளத்தையும் மாசின்றிக் காத்து, புனிதத்தோடு வாழ அழைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

நம்பிக்கையாளர் மன்றாட்டுகள்

1. அன்பான ஆண்டவரே! எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், அருள்பணியாளர்கள் மற்றும் துறவியர் அனைவரும் கிறிஸ்துவைப் போன்று கனிவும் மனத்தாழ்மையும் பெறவும், மக்களின் சுமைகளைத் தாங்கிப் பணியாற்றத் தேவையான தூய ஆவியாரின் கொடைகளைத் தலைவர்களுக்குத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. அன்பான தேவனே! உலகத் தலைவர்கள் வன்முறையையும் போர்க்கருவிகளையும் ஒழித்து, செக்கரியா இறைவாக்கினரின் வாக்குப்படி அதிகாரப் போக்கைக் கைவிடவும், ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும், உலக அமைதிக்காகவும் நீதியோடு உழைக்கவும் அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. ஆறுதலின் தெய்வமே! நோய், கடன், குடும்பப் பிரச்சினைகள் மற்றும் மன அழுத்தத்தால் சோர்ந்துபோய் இளைப்பாறுதல் தேடும் உமது பிள்ளைகள்என்னிடம் வாருங்கள்என்ற உமது குரலைக் கேட்டு, நற்கருணை நாதராகிய உம்மில் உண்மையான அமைதியைப் பெற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. எம் இறைவா! எங்கள் குடும்பப் பிள்ளைகளும் இளைஞர்களும் உலகப் பெருமைகளாலும் நுகர்வுக் கலாச்சாரத்தாலும் சீரழியாமல், தூய ஆவியாரின் துணையோடு தீமைகளைக் களைந்து, கிறிஸ்துவோடு இணைந்து தூய்மையான வாழ்வு வாழ வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
ஆண்டின் பொதுக்காலம் 13-ஆம் ஞாயிறு (28-06-2026) 2அர 4:8-11,14-16; உரோ 6:3-4,8-11; மத் 10:37-42

திருப்பலி முன்னுரை

இயேசுவின் சீடர்களாய் வாழ்ந்து நற்செய்தியைப் பறைசாற்ற, ஆண்டின் பொதுக்காலம் 13-ஆம் ஞாயிறு நமக்கு அழைப்புவிடுக்கிறது. திருமுழுக்குப் பெற்ற எல்லாருமே இயேசுவின் சீடத்துவத்தில் பங்குபெறுகிறார்கள். தங்கள் வாழ்வில் எல்லாவற்றையும்விட இயேசுவுக்கும் அவரது மதிப்பீடுகளுக்கும் முன்னுரிமை அளிப்பவர்களே அவரின் உண்மையான சீடராக மாறுகின்றனர். தன்னலத்தை மையப்படுத்தி பணம், பட்டம், பதவி, செல்வத்தில் தங்கள் கவனத்தைக் குவிப்பவர்கள் இயேசுவின் சீடராய் இருக்கமுடியாது.

அன்றாட வாழ்வில் தன்னலத்தைக் கடந்து பிறர் நலம் பேணும் வேள்வித்தீயில் தங்களைத் தியாகம் செய்து, தன்னிடம் உள்ளதைப் பகிர்ந்து, நேர்மைக்கும் உண்மைக்கும் உயிர்கொடுத்து, தீமை செய்பவர்களை மன்னித்து, இல்லாதவர்களோடு தோழமை கொண்டு, மனசாட்சியின் குரலுக்குச் செவிகொடுத்து வாழ இன்று நாம் அழைக்கப்பட்டுள்ளோம். இன்று உறவுக்காய், தோழமைக்காய், ஆறுதலான வார்த்தைக்காய், உடனிருப்பிற்காய் ஆயிரக்கணக்கான மக்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். தேவையில் இருப்போரைத் தேடிச்சென்று நலம் கொடுத்த இயேசுவைப் போன்று, நாமும் தேவையில் உள்ளோரைத் தேடிச் சென்று உதவிடுவோம். உடன்வாழும் இறைவனை நமது நற்செயல்களால் இவ்வுலகிற்கு அறிவித்து, அவரின் அன்புச் சீடராய்  உழைக்க வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசக முன்னுரை

ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுத்து, அவரது கட்டளைகளுக்குப் பணிந்து, ஆண்டவரின் வாக்குறுதிகளை இவ்வுலகிற்கு எடுத்துக் கூறுபவர்களே இறைவாக்கினர். இறைவனின் பணியை எதற்கும் எவருக்கும் அஞ்சாமல் செய்யும்போது இறைவனே வழிநடத்துவார். செல்லும் இடமெல்லாம் தம்முடைய தூதர்களைக் கொண்டு காப்பார் என்று கூறி, இறைவனின் உடனிருப்பை உணர்ந்து வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் திருமுழுக்கின் ஆழமான அர்த்தத்தை நமக்கு விளக்குகிறார். நாம் திருமுழுக்குப் பெற்றபோது கிறிஸ்துவோடு இணைந்து அவரது சாவில் பங்கேற்றோம். எனவே, அவரோடு இணைந்து புதியதொரு வாழ்வு வாழ நாமும் உயிர்த்தெழுந்துள்ளோம். இனி நாம் பாவத்திற்கு அடிமைகளாக வாழாமல், கிறிஸ்து இயேசுவோடு இணைந்து கடவுளுக்காக வாழ அழைக்கும் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

நம்பிக்கையாளர் மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர்பொதுநிலையினர் அனைவரும் உமது மதிப்பீடுகளின்படி வாழ்ந்து, வாழ்க்கையால் உம்மை அறிவிக்கவும், இறையொளியின் பாதையில் மக்களை வழிநடத்தவும் தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. ஞானத்தின் ஊற்றே எம் இறைவா! எம் நாட்டுத் தலைவர்கள் மக்களின் தேவை அறிந்து செயல்படவும், நாட்டின் ஒற்றுமைக்காக உழைக்கவும், நாட்டு மக்களை வளர்ச்சியின் பாதையில் வழிநடத்தவும் தேவையான ஞானத்தை வழங்கி எம் நாட்டுத் தலைவர்களைக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

3. நன்மைகளின் நாயகனே எம் இறைவா! திரு இருதய ஆண்டவரின் பக்தி முயற்சிகளை மேற்கொண்டுள்ள இம்மாதத்தில், ஆண்டவர் இயேசு மற்றும் அன்னை மரியா இவர்களின் இதயங்களைப் போல் எங்கள் இதயமும் கனிவும், இரக்கமும் உடையதாக அமைய வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. பாதுகாக்கும் பரம்பொருளே! எம் பங்கிலும் குடும்பத்திலும் உள்ள குழந்தையர் அனைவரும் இளம் வயதிலேயே ஒழுக்கத்திலும், ஆன்மிகச் செயல்களிலும், மனிதநேயத்திலும் சிறந்து விளங்கவும் நாங்கள் அவர்களை இறைஞானத்தில் வளர்க்கவும் தேவையான வரங்களைத் தந்து வழிநடத்தவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
ஆண்டின் பொதுக்காலம் 12-ஆம் ஞாயிறு - எரே 20:10-13; உரோ 5:12-15; மத் 10:26-33 (21-06-2026)

திருப்பலி முன்னுரை:

இன்றைய இறைவார்த்தைகள்இறைவனை நம்புகிறவர் ஒருபோதும் கைவிடப்படமாட்டார்என்ற ஓர் ஆழமான ஆன்மிக உண்மையை எடுத்துரைக்கின்றன. தொடக்கக் காலத்தில் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு வாழ்ந்தவர்களை வேதகலாபனைக்கு ஆளாக்கிக் கொன்றனர். அப்படிப்பட்ட சூழலில் இயேசுவின் வார்த்தைகள் ஆற்றலாக இருந்ததையும் இருப்பதையும் நாம் உணரலாம். “உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம்; மாறாக, ஆன்மாவையும் உடலையும் நரகத்திற்குத் தள்ள எல்லாம் வல்ல கடவுளுக்கே அஞ்சுங்கள்என்கிறார் இயேசு.

இந்த உலகில் உண்மையாக வாழ விரும்புகிறவர்களுக்குப் பல சோதனைகள் வரலாம்; நல்லதைச் செய்தாலும் குறைகூறப்படலாம்; நீதிக்காக நின்றாலும் தனிமைப்படுத்தப்படலாம். இறைவாக்கினர் எரேமியா தன் வாழ்வில் பல துன்பங்களையும் எதிர்ப்புகளையும் சந்தித்தார். அவர் வரவிருக்கும் தண்டனையை இஸ்ரயேல் மக்களுக்கு அறிவித்து எச்சரிக்கை தந்ததால் அவரைஅழிவின் இறைவாக்கினர்என்று துன்புறுத்தினார்கள். ஆனால், இறைவனின் அழைப்புக்கு முழுமையாகத் தன்னையே அர்ப்பணித்து இறைவனைச் சார்ந்து வாழ்ந்ததால் இறைவாக்கினர் எரேமியாஆண்டவர் என்னோடு இருக்கிறார்என்ற உறுதியான நம்பிக்கையில் இறைவனுக்காக உயிரையும் கொடுக்கத் துணிந்தார்.

இறைவனின் பிள்ளைகளாகிய நாமும் நாம் வாழும் சமூகத்தில் இறையாட்சின் மதிப்பீடுகளை விதைக்க ஒவ்வொரு நாளும் முயற்சி எடுப்போம். நொடிதோறும் செடி வளர்வதுபோன்று ஒவ்வொரு நிமிடமும் இறையுறவில் வளர்ந்துஇறைவனே எனக்கு நிலையான பலம்என்ற நம்பிக்கையோடு வாழ வரம்வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்

முதல்வாசக முன்னுரை

இறைவாக்கினர் எரேமியா எதிர்ப்புகளும் துன்பங்களும் சூழ்ந்த நிலையிலும் ஆண்டவரை நம்பி நிற்கிறார். மனிதர்கள் தன்னை நிராகரித்தாலும் ஆண்டவர் தன்னோடு இருக்கிறார் என்ற உறுதியை அவர் வெளிப்படுத்துகிறார். ‘படைகளின் ஆண்டவரே! நேர்மையாளர்களைச் சோதித்து அறிபவரும் உள்ளுணர்வுகளையும் இதயச் சிந்தனைகளையும் அறிபவரும் நீரேஎன்று கூறி, உடனிருக்கும் இறைவனை உணர்ந்து வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

ஆதாமின் பாவத்தால் உலகில் பாவமும் மரணமும் வந்ததையும், இயேசு கிறிஸ்துவின் மீட்பின் மூலம் மனிதன் புதிய வாழ்வைப் பெறுகிறான் என்பதையும், குற்றத்தின் தன்மை வேறு, அருள்கொடையின் தன்மை வேறு என்பதை விளக்கிக் கூறி ஞானமுள்ளவர்களாய் வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

நம்பிக்கையாளர் மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், அருள்பணியாளர்கள் மற்றும் துறவியர் அனைவரும் துன்பங்களிலும் சோதனைகளிலும் மனந்தளராமல் இறைவனின் சாட்சிகளாய் தொடர்ந்து வாழ அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. இரக்கத்தின் இறைவா! உலக நாடுகளை ஆளும் தலைவர்கள் நீதியுடனும் அன்புடனும் மக்களை வழிநடத்தி, அமைதி மற்றும் சகோதரத்துவத்தை மக்களிடையே வளர்க்க அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. நம்பிக்கையின் ஒளியே எம் இறைவா! பயம், துன்பம், நோய் மற்றும் மனவேதனையில் வாழும் மக்கள் அனைவரும்அஞ்சாதீர்என்ற ஆண்டவரின் வார்த்தையில் நம்பிக்கைகொண்டு வாழ தேவையான சக்தியைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. நீதியின் தெய்வமே எம் இறைவா! கிறித்தவர்கள் என்ற முகவரியைப் பெற்ற நாங்கள் அனைவரும் எரேமியா இறைவாக்கினரைப் போல அச்சமின்றி ஆண்டவரைப் பற்றி எடுத்துரைக்கத் தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
ஜூன் 14, 2026 ஆண்டின் பொதுக்காலம் 11-ஆம் ஞாயிறு - விப 19:2-6; உரோ 5:6-11; மத் 9:36-10:8

திருப்பலி முன்னுரை

இயேசுவின் சீடர்களாய் இறையாட்சிப் பணியில் நம்மை இணைத்துக்கொள்ள ஆண்டின் பொதுக்காலம் 11-ஆம் ஞாயிறு நமக்கு அழைப்புவிடுக்கிறது. இன்றைய நற்செய்தியில் இயேசு, ‘அறுவடை மிகுதி, வேலையாள்களோ குறைவுஎன்று கூறி, இறையழைத்தலை நமது குடும்பங்களில் ஊக்குவிக்க அழைப்புவிடுக்கிறார்குரலற்றவரின் குரலாக, முகவரி இழந்தவர்களுக்கு முகவரி தருபவராக, பல்வேறு சமூகப் பிரச்சினைகளால் உடல், உள்ளம், மனம் மற்றும் ஆன்ம நோயினால் பாதிக்கப்பட்டு ஆறுதல் பெற ஏங்கித் தவிக்கும் உள்ளங்களின் வாழ்வின் அமைதியைத் தருபவராக வாழ இயேசு நம்மை அழைக்கிறார். அன்பை, அமைதியை, நம்பிக்கையை, சமத்துவத்தை, புத்துணர்வை இம்மண்ணில் உருவாக்க இயேசு நமது ஒத்துழைப்பைக் கேட்கின்றார்.

நமது குடும்பங்களில் உள்ள இளையோரை இறையாட்சிப் பணிக்காகத் தியாகம் செய்ய ஊக்குவிப்போம். நமது அன்பான சேவையால் ஆண்டவரைப் பின்பற்றி திருத்தூதர்கள் வரிசையில் இறையாட்சி மலர உழைக்கும் பேறுபெற்றோர் வரிசையில் இடம்பெறுவோம். அன்போடு செய்யப்படும் ஒவ்வொரு சின்னஞ்சிறிய செயலும் இறையாட்சியின் விதையாக உருவெடுத்து, சமூகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இறையாட்சிப் பணிக்கு இளையோரை அனுப்புவோம். நற்செயல்களால் இறையரசைக் கட்டியெழுப்புவோம் என்ற உறுதியான மன நிலையோடு  இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகம் இயேசு தம்முடைய சீடர்களுக்கு உண்மையான அன்பும் பணிவும் எவ்வளவு முக்கியமானவை என்பதையும், கழுகு தன் குஞ்சுகளைச் சுமப்பது போல நானும் உங்களின் பணிவாழ்வில் ஏற்படும் துன்பங்களில் உடனிருப்பேன் என்றும்கிறித்தவ வாழ்வின் மையம் சேவை மனப்பான்மையே என்றும் கூறி கடவுளின் உண்மையான பணியாளர்களாக  வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

நாம் இறைப்பற்று இன்றி வலுவற்று இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். நாம் கடவுளுக்குப் பகைவர்களாய் இருந்தும் அவருடைய மகன் நமக்காக உயிரைக் கொடுத்ததால் நாம் கடவுளோடு ஒப்புரவாக்கப்பட்டுள்ளோம். அவர் நமது பாவங்களைப் பாராமல் தம்முடைய இரக்கத்தால் ஒவ்வொரு நொடிப்பொழுதும் நம்மைத் தாங்கிக்கொள்வார் என்று கூறி, இறைவனின் பேரிரக்கத்தைச் சிந்திக்க அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

நம்பிக்கையாளர் மன்றாட்டுகள்

1. அழைத்தலின் அர்த்தமே எம் இறைவா! உம் பணி செய்ய உமது அழைப்பைப் பெற்ற திருத்தந்தை, ஆயர், அருள்பணியாளர், துறவியர் மற்றும் பொதுநிலையினர் அனைவருக்கும் ஆசி வழங்கும். தம் பணிவாழ்வில் வரும் எல்லா இடர்களிலும் உம் சிறகின் நிழலில் இவர்களை வைத்துப் பாதுகாக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. நன்மைகளின் நாயகனே எம் இறைவா! நாட்டு மக்களைப் பாதுகாக்க உமது திருவுளப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டுத்தலைவர்களை உம் பாதம் சமர்ப்பிக்கின்றோம். தலைவர்கள் அனைவரும் முப்பொழுதும் மக்களின் நலன்களுக்காய் உழைக்கக் கூடியவர்களாகவும், நாட்டு வளங்களைப் பாதுகாப்பவர்களாகவும், நல்லாட்சி புரிய அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. காக்கும் கடவுளே எம் இறைவா! எம் இளைஞர் தொழில்நுட்ப நுகர்வுக் கலாச்சாரத் தில் வீழ்ந்து கிடக்காமல் தன் அறிவுத்திறனை யும் ஆக்க சக்தியையும்  நாட்டின் வளர்ச்சிக்காய் பயன்படுத்தி சிறந்த இறைப்பற்று மிக்க இளைஞர்-இளம்பெண்களாக வளர அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடு கின்றோம்.

4. அழைத்தலின் நிரந்தரமே எம் இறைவா! திரு அவையை ஆன்மிக வழியிலும் இறைநெறியிலும் வழிநடத்தத் தேவையான இறை அழைத்தலை எம் குடும்பங்களில் இருந்து நீர் தேர்ந்தெடுத்துத் தரவும், எமது குழந்தையருக்கு அழைத்தலின் மகத்துவத்தை நாங்கள் எடுத்துரைக்கவும் தேவையான அருள்வரங்களைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
கிறிஸ்துவின் தூய்மைமிகு திரு உடல் திரு இரத்தப் பெருவிழா (07-06-2026) இச 8:2-3,14-16; 1கொரி 10:16-17; யோவா 6:51-58

திருப்பலி முன்னுரை

அன்பார்ந்த சகோதர-சகோதரிகளே! இன்று நம் கத்தோலிக்கத் திரு அவை, தன் மையமும் ஊற்றுமாக விளங்கும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருவுடல், திரு இரத்தப் பெருவிழாவைப் பெருமகிழ்வோடு கொண்டாடுகிறது.

இன்றைய நற்செய்தி இருவகை உணவுகளை நம்முன் வைக்கிறது. பழைய ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்களுக்குப் பொழியப்பட்ட மன்னா உணவு இறைப்பராமரிப்பின் அடையாளமாக இருந்தாலும், அது தற்காலிகமானது; நிலைவாழ்வைக் கொடுக்கவில்லை. ஆனால், விண்ணிலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நமக்கு நிலைவாழ்வை அளிக்கிறார். “மானிட மகனுடைய சதையை உண்டு, அவரது இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வடைய மாட்டீர்கள்என்ற இறைவார்த்தையின்படி, நற்கருணை நமக்கு மீட்பையும் பகிர்தலையும் நிலை வாழ்வையும் வழங்கும் அன்பின் அடையாளமாகத் திகழ்கிறது. நற்கருணையில் இயேசு உண்மையாகவே உயிரோடு பிரசன்னமாய் இருக்கிறார் என்பதை உணர்த்தவே பீடத்தின் அருகில் ஒளிரும் விளக்கு எப்போதும் எரிந்துகொண்டிருக்கிறது. அன்று புனிதர்கள் இந்த நற்கருணையை உள்வாங்கி, தாங்களே வாழும் நற்கருணையாய் மாறி இறைவனைப் பிரதிபலித்தார்கள். நாமும் நம் உள்ளமாகிய ஆலயத்தை ஒப்புரவு அருளடையாளத்தால் தூய்மை செய்து, தகுந்த தயாரிப்போடு இயேசுவை உட்கொள்வோம். கத்தோலிக்கக் கிறித்தவர்கள் என்பதில் பெருமைகொண்டு, உயிருள்ள இயேசுவை நம் வாழ்வில் அனுபவித்து ஆசிபெற, இத்திருப்பலியில் பக்தியோடு இணைவோம்!

முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகம் உடலுக்கு வலுவூட்டும் உணவை மட்டுமல்லாமல், ஆன்மாவிற்குத் தேவையான ஆன்மிக உணவைப் பற்றியும் பேசுகிறது. நமது உடல் நலனுக்கு அன்றாட உணவு எவ்வளவு முக்கியமோ, அதைவிட நம் ஆன்மாவின் வளர்ச்சிக்கு இறைவார்த்தை மிகவும் இன்றியமையாதது. எனவே, இறைவார்த்தையை நம் வாழ்வின் உணவாக ஏற்று, அதன் வழிநடக்க அழைப்பு விடுக்கும் இம்முதல் வாசகத்திற்குப் பக்தியோடு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

இறைவன் நமக்கு இலவசமாகக் கொடுத்த இந்த உன்னத வாழ்வில் பிளவுகள், பிரிவுகள், சுயநலக் குழு மனப்பான்மைகள் மற்றும் வேறுபாடுகள் அனைத்தையும் களைந்தெறிய இன்றைய இரண்டாம் வாசகம் நமக்கு அழைப்பு விடுக்கிறது. நாம் அனைவரும் ஒரே அப்பத்தில் பங்குபெறுவதால், கிறிஸ்துவின் பிள்ளைகளாய் ஒன்றிணைந்து, அவர் விரும்பும் ஒருமைப்பாட்டைக் காத்து, பிறரோடு இணக்கமாக வாழவேண்டும் என்று வலியுறுத்தும் இவ்வார்த்தைகளுக்குச் செவிமடுப்போம்.

நம்பிக்கையாளர் மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! எம் திரு அவைத் தலைவர்கள் அனைவரும் உயிருள்ள உம்மில் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழவும், தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மக்களை நற்செய்தி விழுமியங்களின்படி வழிநடத்தத் தேவையான ஞானத்தையும் அருள்வரங்களையும் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. நற்கருணையில் வாழும் ஆண்டவரே! எம் பங்கு மக்கள் அனைவரும் நற்கருணையின் மகத்துவத்தை உணர்ந்து, தகுந்த தயாரிப்போடு உம்மை உட்கொள்ளவும், நற்கருணை நாதரின் உயிருள்ள பிரசன்னத்தை அன்றாட வாழ்வில் கண்டுகொள்ளும் அகவொளியைத் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. நற்கருணை நாதரே! நாங்கள் அனைவரும் இந்த வழிபாட்டின் ஆசிரைப் பெற்று நம்பிக்கையோடு வாழவும், எங்கள் குடும்பங்களில் அன்பும், அமைதியும் என்றும் நிலைத்திருக்க வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. நற்கருணையில் வாழும் நல்லவரே! புற்றுநோய் மற்றும் தீராத வியாதிகளால் அவதியுறும் எம் மக்களுக்குத் தெய்வீகக் குணமளித்துத் தேற்றவும், உயிர்க்கொல்லி நோய்களிலிருந்து எம் மக்களைக் காத்து நலமளிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.