news
ஞாயிறு தோழன்
பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறு (12-04-2026) இறை இரக்கத்தின் ஞாயிறு - திப 2:42-47; 1பேது 1:3-9; யோவா 20:19-31

திருப்பலி முன்னுரை

பாஸ்கா காலத்தின் இரண்டாம் வாரமான இன்று, இறை இரக்கத்தின் ஞாயிறைக் கொண்டாடுகின்றோம். நாம் வாழ்வதும் இருப்பதும் இயங்குவதும் இறைவனின் இரக்கத்தினால்தான். இயேசுவின் கரம் வல்லமையின் கரம்; அணைக்கும் கரம்; அற்புதங்கள் செய்யும் கரம்; நிறைவாழ்வு நோக்கி வழிநடத்தும் கரம்; எத்தீங்கும் அணுகாது பாதுகாக்கும் கரம்சுமைகளிலிருந்து தூக்கிவிடும் கரம். எனவே, நமது வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் இரக்கமே உருவான இயேசுவின் கரங்களைப் பிடித்துக்கொண்டு பயணிப்போம். மனிதர் தரமுடியாத அமைதியையும் மகிழ்ச்சியையும் ஆற்றலையும் தரக்கூடிய இரக்கம் நிறைந்த இயேசுவின் இதயத்தில் தஞ்சம் தேடுவோம்.

கடவுள் இரக்கம் காட்டுவதாலேயே எல்லாம் ஆகிறது. நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் தந்தை இரக்கம் நிறைந்த கடவுள். மனிதருடைய விருப்பத்தினாலோ, ஆற்றலினாலோ இந்த உலகம் இயங்குவதில்லை; மாறாக, இறைவனின் இரக்கத்தினால் மட்டுமே இந்த உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது. இறைவனின் இரக்கத்தை தோமா அனுபவித்ததால்தான்நீரே என் ஆண்டவர்; நீரே என் கடவுள்என்று அறிக்கையிட்டார்உயிர்த்த இயேசுவின் பிள்ளைகளாகிய நாமும் இறைவனின் இரக்கத்தை நம் வாழ்வு முழுவதும் உணர்ந்து அவரில் நம்பிக்கை கொண்டு வாழவும், இதயத்தில் இரக்கமும், கண்களில் கருணையும் கொண்டு இயேசுவின் சீடத்துவப் பணியைச் சிறப்பாகச் செய்து இறையாட்சியைக் கட்டியெழுப்பத் தேவையான ஞானத்தையும், தாராள உள்ளத்தையும் தரவேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

இன்றைய முதல் வாசகமானது தொடக்கத் திரு அவையில் நம்பிக்கை கொண்டோரின் வாழ்க்கை முறையின் அமைப்பைப் பற்றிக் கூறுகிறது. இறைவேண்டலிலும் நட்புறவிலும் பகிர்ந்துகொள்வதிலும் இறைவன்மீது கொண்ட நம்பிக்கையிலும் கடவுளைப் போற்றுவதிலும் மற்றவர்களை மதிப்பதிலும் அனைத்தும் அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்ற நல்லெண்ணத்திலும் சிறந்து விளங்கிய தொடக்கத் திரு அவையின் கிறித்தவர்களைப்போல நாமும் வாழ அழைப்பு விடுக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

கிறித்தவர்களாகிய நாம் பெற்றுக்கொண்ட அழைப்பினையும், அழைப்பிற்கேற்ற பொறுப்பினையும் உணர்ந்து வாழ அழைக்கப்படுகிறோம். இயேசுவின் அன்பை, பாசத்தை, உடனிருப்பை, இரக்கத்தை, வல்லமையை, அரவணைப்பை, மீட்பை அன்றாடம் அனுபவித்து, அதை அனைத்து மக்களுக்கும் அறிவிக்கவும், இயேசுவின் மீது கொண்டுள்ள நம்பிக்கையில் ஆழப்படவும் அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

நம்பிக்கையாளர் மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர், அருள்பணியாளர், துறவியர், பொதுநிலையினர் அனைவரும் உம் உயிர்ப்பின் மாட்சியையும் மகிழ்ச்சியையும் அமைதியையும் முழுமையாகப் பெற்று, தோமாவைப்  போன்று துணிவுடன் அறிவிக்கத் தேவையான ஆற்றலைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. இரக்கத்தின் ஆணடவரே! உமது இரக்கத்தால் வாழ்ந்து கொண்டிருக்கும் நாங்கள் அனைவரும் இரக்கமுள்ள மனிதர்களாக வாழவும், எங்களது சொற்களாலும் செயல்களாலும் வாழ்க்கையாலும் அமைதியை விதைக்கவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. ஞானத்தின் ஊற்றான ஆண்டவரே! எம் நாட்டு மக்கள் அனைவரும் நடைபெற இருக்கின்ற தேர்தலில் மக்கள்மீதும் நாட்டின்மீதும் உண்மையான அக்கறை கொண்ட தலைவர்களைத் தேர்ந்தெடுக்கவும், மனசாட்சியின் குரலுக்குச் செவிகொடுத்து, பொறுப்புணர்வோடு செயல்படவும் தேவையான ஞானத்தை எம் மக்களுக்குத் தந்து வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. ஆற்றலின் ஊற்றான எம் இறைவா! எம் நாட்டிலுள்ள இளையோர் அனைவரும் பெற்றோரின் சுமையைக் குறைப்பவர்களாக வாழவும், நல்ல மதிப்பீடுகளில் வளரவும், அறிவியல் உலகில் ஆண்டவரைத் தேடிச் செல்லவும் தேவையான ஞானத்தைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
ஆண்டவருடைய உயிர்ப்பின் பெருவிழா (05-04-2026) திப 10:34,37-43; கொலோ 3:1-4; யோவா 20:1-9

திருப்பலி முன்னுரை

உயிர்த்த இயேசு கொண்டு வந்த அமைதியைப் பெற்று, நற்செய்தியின் தூதுவர்களாக வாழ உயிர்ப்புப் பெருவிழா நமக்கு அழைப்பு விடுக்கிறது. ‘சென்றார், கண்டார், நம்பினார்-இந்த மூன்று வார்த்தைகளும் இன்றைய நற்செய்தியின் மையமாக அமைகின்றன. சீடர் ஆர்வத்தோடும் அச்சத்தோடும் இயேசுவைத் தேடிச் சென்றபோது அவர்களுக்குக் காட்டப்பட்டது வெறுமையான கல்லறை. ஆனால், அக்கல்லறையில் இயேசு விட்டுச் சென்ற அந்தத் துணிகள் அவர்களுக்குச் சான்றாக அமைந்தன. அதைப் பார்த்த பிறகு அவர்கள் கண்டார்கள், நம்பினார்கள் என்பதை நற்செய்தி நமக்குத் தெளிவுபடுத்துகிறது.

கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்தான் கிறித்தவத்தின் தொடக்கமாக இருக்கிறது. கிறிஸ்து உயிர்த்தெழவில்லை என்றால், கிறித்தவ நம்பிக்கை இல்லாமல் போயிருக்கும். வாழ்வின் வெறுமைகளை எல்லாம் நிரப்புகிறவர் இயேசு மட்டுமே. உயிர்த்த ஆண்டவர் நம்முடைய வாழ்வில் உள்ள வெறுமைகளை எல்லாம் தம்முடைய அருள்வரங்களால் நிரப்பி அமைதியை அருள்வார். உயிர்த்த ஆண்டவரின் மக்களாகிய நாம் அவர் கொண்டு வந்த அமைதியை அனுபவித்து, உடன் வாழும் சகோதர-சகோதரிகளின் வாழ்வில் அமைதியை ஏற்படுத்துவோம்.

இயேசுவைத் தேடிச்சென்று, அவரைக் கண்டு, அவரை அனுபவித்து, இந்த அகிலத்திற்கே இயேசுவைப் பறைசாற்றிய சீடரைப் போல் நாமும் நற்செய்தியை வாழ்க்கையால் விதைப்போம். நமது பாவ வாழ்க்கையை விட்டொழித்து, நமக்காக உயிர்த்தெழுந்த இயேசுவோடு நாமும் உயிர்ப்போம். அவரோடு அவரில் அவருக்காக வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

இயேசு சென்ற இடமெல்லாம் நன்மையை மட்டுமே செய்தார். அலகையின் கொடுமையை அகற்றி வல்லமையோடு செயல்பட்டார். அவருடைய பிள்ளைகளாகிய நாமும் அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்து வாழவும், அனைவரையும் ஏற்றுக்கொள்ளும் தாராள மனதும், அனைவருக்கும் தஞ்சம் கொடுக்கும் நல்ல இதயமும் கொண்டு உயிர்த்த இயேசுவின் உயிருள்ள சாட்சிகளாய் வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

இந்த உலகில் உள்ள அனைவரும் வாழ்வுபெற வேண்டும் என்பதற்காகக் கிறிஸ்து பலியானார். தமது உயிர்ப்பின் வழியாக நமக்கு அமைதியையும் உடனிருப்பையும் தருகின்றார். பொய்மை மலிந்து கிடக்கும் இந்த உலகில் உண்மையோடு வாழவும், நீதி தழைத்தோங்கவும், உண்மைக் கடவுளாகிய இயேசுவின் வழியில் அச்சமின்றிப் பயணிக்கவும் அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

நம்பிக்கையாளர் மன்றாட்டுகள்

1. ‘பணிவிடை புரியவே வந்தேன்என்று கூறிய இறைவா! திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவறத்தார், பொதுநிலையினர் அனைவரும் உடல்-உள்ள-ஆன்ம நலன் பெற்று மகிழ்ச்சியோடு இறையரசின் மதிப்பீடுகளை விதைக்கத் தேவையான அருள்வரங்களைத் தந்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. ‘நான் உங்களோடு இருக்கிறேன்என்று கூறிய ஆண்டவரே! எம் நாட்டையும் மக்களையும் பேணிக்காக்கும் தலைவரை நாங்கள் அனைவரும் தேர்ந்தெடுக்கவும், வரும் தேர்தலில் பொறுப்போடு நாங்கள் செயல்படவும் தேவையான ஞானத்தையும் விழிப்புணர்வையும் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. ‘உங்களுக்கு அமைதி உரித்தாகுகஎன்று மொழிந்த ஆண்டவரே! நீர் எங்களுக்கு உமது உயிர்ப்பின் வழியாகக் கொடுத்த அமைதியை அனுபவித்து வாழவும், உடன் வாழும் அனைவருக்கும் அமைதியைக் கொடுத்திடவும், உறவுகளை வளர்த்திடவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. எம்மோடு வாழும் ஆண்டவரே! ‘கிறித்தவர்கள்என்ற முகவரியைப் பெற்ற நாங்கள் அனைவரும் அன்பு, மன்னிப்பு, விட்டுக்கொடுத்தல், உண்மை, நீதி போன்ற விழுமியங்களை நாங்கள் வாழும் சமூகத்தில் விதைத்திடவும், இறைநம்பிக்கையில் நிலைத்து நற்செய்தியின் தூதுவர்களாக வாழ்ந்திடவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு (29-03-2026) எசா 50:4-7; பிலி 2:6-11; லூக் 22:14-23:56

திருப்பலி முன்னுரை

இயேசுவோடு பயணிக்கஆண்டவருடைய திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு நமக்கு அழைப்பு விடுக்கிறது. மூன்றாண்டுப் பணிகளின் இறுதியில் இயேசு எருசலேம் நோக்கிப் பவனி செல்கின்றார். இது அவரது இறுதிப் பயணம் என்பது அவருக்குத் தெளிவாகவே தெரிந்திருந்தது. அவரது போதனை, புதுமை, பிறரன்புச் செயல்கள், எளியோர் சார்பு, ஆதிக்கத்தை எதிர்த்தல், அடிமை வாழ்வை ஒழித்தல்வேறுபாடுகளை வேரறுத்தல் இவற்றை எல்லாம் பார்த்து மலைத்துப் போன மக்கள் இயேசுவை அரசராகக் கண்டு எதிர்கொண்டுஓசன்னாஎன்று ஆரவாரமிட்டனர்.

இப்பவனியில் பயன்படுத்தும் குருத்து, கழுதைகள், ‘ஓசன்னாஆரவாரம் ஆகியவை யூதர்கள் பார்வையில் வெற்றியின் சின்னமாக இருப்பினும் இப்பவனி பாடுகளின் பயணம் என்பதை இயேசு முழுமையாக அறிந்தே நடந்தார். மக்கள் மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கே என்பதும், தந்தையின் விருப்பம் அதுவே என்றும் அறிந்தவராய்  பவனியில் வந்தார். போற்றுதலும் தூற்றுதலும் மத்தியில் துணிந்து தீர்க்கமுடன் இயேசு பயணித்ததை நம் மனத்தில் நிறுத்தி, நாமும் நம் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்வோம். நமது வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் இயேசு நம்மோடு பயணிக்கிறார் என்ற நம்பிக்கையோடு இயேசுவோடு பயணிப்போம்.

முதல் வாசக முன்னுரை

துன்பங்கள், அவமானங்கள், இழப்புகள், தோல்விகள், சுகவீனங்கள், துயரங்கள் வரும்போது  ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார் என்ற ஆழமான நம்பிக்கையில் அனைத்தையும் எதிர்கொள்ளவேண்டும். ஆண்டவர் அவருடைய ஊழியர்களாகிய நமக்குத் துணையாக இருக்கிறார், நாம் அவமானம் அடைய மாட்டோம் என்று கூறி, ஆண்டவரின் உடனிருப்பை  உணர்ந்து வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

நம்முடைய வாழ்க்கையில்நான், ‘எனது, பணம், பட்டம், பதவி, இனம் எனப் பலவற்றைப் பற்றிக்கொண்டு உலகப் போக்கின்படி நம்மைப் பெரியவர்கள் எனக் காட்டிக்கொள்ள பெரும் முயற்சி எடுக்கிறோம். ஆனால், இறைமகனான இயேசு இந்த உலகில் எதையும் பற்றிக்கொண்டு வாழாமல், இறைவனின் விருப்பம் நிறைவேற்ற சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்குத் தம்மையே தாழ்த்திக் கொண்டார் என்று கூறி, தாழ்ச்சி என்ற புண்ணியத்தில் வளர அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

நம்பிக்கையாளர் மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! எம் திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், அருள்பணியாளர்கள், பொதுநிலையினர் அனைவரும் இந்த அறிவியல் உலகில் ஞானத்தோடு உமது பணியை ஆற்றிடத் தேவையான உடல் மற்றும் மன வலிமையைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. பாசமுள்ள ஆண்டவரே! இப்புனித வார நாள்களில் நாங்கள் எங்கள் பாவங்களையும் பலவீனத்தையும் குற்றங்குறைகளையும் களைந்து உம்மை அணுகி வரவும், தேவையில் இருப்போரைத் தேடிச்சென்று உதவிடவும் தேவையான உள்ளத்தெளிவைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. கருணையுள்ள ஆண்டவரே! எம்மீது கொண்ட பாசத்தால் பல அவமானங்களையும் பாடுகளையும் அனுபவித்தீர் என்று உணரும் நாங்கள், நீர் எமக்குக் கற்றுக்கொடுத்த அன்பு, தாழ்ச்சி, மன்னிப்பு, இரக்கம் போன்ற மதிப்பீடுகளை வாழ்வாக்கி, உம்மையே பற்றிக் கொண்டு வாழ வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. உடன் வாழும் ஆண்டவரே! நாடுகளுக்கு இடையே நடந்து கொண்டிருக்கும் போர்கள் முற்றுப் பெறவும், அமைதி நிலவிடவும், மக்களைப் பிரிக்கும் ஆற்றல்கள் ஒழிந்திடவும், பயங்கரவாதங்கள் அழிந்திடவும், நீர் கொண்டு வந்த அமைதி எங்கும் நிலவிடவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு (22-03-2026) எசே 37:12-14; உரோ 8:8-11 யோவா 11:1-45

திருப்பலி முன்னுரை

அன்பார்ந்த இறைமக்களே, கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவை எதிர்நோக்கி நாம் பயணிக்கும் இந்தத் தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு திருவழிபாட்டிற்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம். இன்று, “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானேஎன்ற இயேசுவின் வார்த்தை, நம்முடைய நம்பிக்கையைப் புதுப்பித்து, பாவ வாழ்விலிருந்து எழுந்து, நிலை வாழ்வை நோக்கிப் பயணிக்க அழைப்பு விடுக்கிறது.

இலாசரின் கல்லறையை நோக்கி நடந்த இயேசு, இன்று நம் இதயக் கதவுகளைத் தட்டுகிறார். பாவம், சுயநலம் மற்றும் தீய பழக்கவழக்கங்கள் என்னும் பாறைகளால் மூடப்பட்டிருக்கும் நம் ஆன்மாவின் கல்லறைகளைத் திறக்க அவர் அழைக்கிறார். ‘வெளியே வா!’ என்ற கிறிஸ்துவின் அதிகாரமிக்க குரல், இன்று நம் வாழ்வின் தேக்க நிலையை உடைத்து, புதுவாழ்வை நோக்கிப் பயணிக்க நமக்கு அழைப்பு விடுக்கிறது.

எனவே, நாம் சாவிற்கு ஏதுவான நமது பழைய மனித இயல்புகளையும், தீய பழக்க வழக்கங்களையும் களைந்துவிட்டு, கிறிஸ்துவின் ஒளியில் புதிய படைப்புகளாக உயிர்த்தெழுவோம். நம்மிடம் உள்ள சோர்வுகள் நீங்கி, இறப்பின் அச்சத்திலிருந்து முழுமையான விடுதலை பெற்று, நிலைவாழ்வின் குழந்தைகளாக உருமாற இத்திருப்பலியில் உருக்கமாகச் செபிப்போம்.

முதல் வாசக முன்னுரை

அடிமைத்தனத்தில் உழன்ற இஸ்ரயேல் மக்களை, உலர்ந்த எலும்புகளுக்கு ஒப்பான இறந்த நிலையிலிருந்து மீட்க இறைவன் முன்வருகிறார். “உங்கள் கல்லறைகளைத் திறக்கப் போகிறேன், என் ஆவியை உங்கள்மீது பொழிவேன்என்ற இறைவாக்கினரின் ஆறுதல் மொழிகள், நமக்கும் வாழ்வின் நம்பிக்கையைத் தருகின்றன. அழிவின் விளிம்பிலும் புதிய உயிர் தரவல்ல இறைவனின் வாக்குறுதிக்கு நம்பிக்கையோடு செவிசாய்ப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

பாவத்தின் ஊற்றான ஊனியல்பிற்கு ஏற்ப வாழ்வோர் கடவுளுக்கு உகந்தவர்களாக இருக்க முடியாது என்று எச்சரிக்கும் புனித பவுல், கிறிஸ்து இயேசுவை உயிர்ப்பித்த அதே தூய ஆவியார் நம்மில் குடியிருந்தால், அவரே நம் சாவுக்குரிய உடல்களையும் உயிர்ப்பிப்பார் என்ற விடுதலையின் செய்தியை வழங்குகிறார். இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்டு, பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவோம்.

நம்பிக்கையாளர் மன்றாட்டுகள்

1. மன்னிப்பின் இறைவா, எம் திரு அவையின் ஆயர்கள், பணியாளர்கள், பொதுநிலையினர் அனைவரும் ஒப்புரவு அருளடையாளத்தின் வழியாகத் தங்கள் பாவக் கறைகளைக் களைந்து, மனமாற்றத்தின் வழியே இயேசுவின் உயிர்ப்பின் மகிமையில் பங்குகொள்ள அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. நீதியின் இறைவா, எம் நாட்டை ஆளும் தலைவர்கள் சுயநலப் போக்கைக் கைவிட்டு, எளிய மக்களின் கண்ணீரையும் தேவைகளையும் உணர்ந்து, நீதியோடும் நேர்மையோடும் மக்கள் பணியாற்றிடத் தேவையான நல்மனதைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. ஆற்றலின் இறைவா, இயற்கை வளங்களை நாங்கள் பேணிக் காத்திடவும், போதிய மழையினால் நீர்நிலைகள் செழித்து, விவசாயப் பெருமக்களின் வறுமை நீங்கி அனைவரும் வளமுடன் வாழவும் அருள்மாரி பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. உயிர்ப்பின் இறைவா, நோய்களாலும் வறுமையினாலும் முடங்கிக் கிடக்கும் மக்கள் அனைவரும் உம் வல்லமையுள்ள வார்த்தையால் குணம் பெற்று, இழந்த நம்பிக்கையை மீண்டும் அடைந்து புதுவாழ்வு பெற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

news
ஞாயிறு தோழன்
தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு (15-03-2026) 1சாமு 16:1,6-7,10-13; எபே 5:8-14; யோவா 9:1-41

திருப்பலி முன்னுரை

தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு, ஒளியின் மக்களாக வாழ நமக்கு அழைப்புவிடுக்கிறது. இன்றைய நற்செய்தியில் இயேசு பிறவியிலேயே பார்வையற்றவரின் புறக்கண்களையும் அகக்கண்களையும் ஒருங்கே திறந்து அவருக்குப் பார்வையையும் இறையனுபவத்தையும் கொடுக்கிறார். பார்வையற்றவர் இயேசுமீது, தான் கொண்டிருந்த நம்பிக்கையினால் முழுப்பார்வை பெறுகிறார். ஆனால், பார்வையுள்ள யூதர்கள் நம்பிக்கையின்மையால் பார்வையற்றவர்களாக மாறுகின்றனர்.

பார்வையற்றவர் கிறிஸ்துவை அறிவதிலும் நம்புவதிலும் படிப்படியாக முன்னேறி இயேசுவை மனிதராக, ஓர் இறைவாக்கினராக, கடவுளிடமிருந்து வந்தவராக நம்பி ஏற்றுக்கொள்கின்றார்; புத்தொளி பெற்றவராய் நற்செய்தியைப் பறைசாற்றுகின்றார்நமது எண்ணத்திலும் வார்த்தையிலும் வாழ்க்கையிலும் மாற்றம்பெற நமது அகக்கண்கள் திறக்கப்பட வேண்டும். வாழ்க்கையில் வருகின்ற துன்பங்களில், தோல்விகளில், தனிமையில், நோயில் இறைவனின் உடனிருப்பை உணரும் அகப்பார்வை பெற வேண்டும்இயேசுவை மட்டும் உலகின் ஒளியாக ஏற்றுக்கொண்டால், நமது இருளான வாழ்வு வெளிச்சமாக மாறும். நமது எண்ணமும் சொல்லும் செயலும் தூய்மையாக இருக்கும்போது, நமது பார்வையும் தூய்மையாக இருக்கும். நாம் அனைவரும்  இயேசு என்ற பேரொளியால் ஒளிர்விக்கப்பட்டு, ஒளியின் மக்களாக வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவர் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த தாவீதைத் தமது பணிக்காகத் தேர்ந்தெடுத்து திருப்பொழிவு செய்கின்றார். மனிதர்கள் முகத்தைப் பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார். ஆண்டவரின் பிள்ளைகளாகிய நாமும் அகத்தைக் கண்டு பழகும் அகவொளி பெற அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்

இரண்டாம் வாசக முன்னுரை

இருளின் செயல்களான கோபம், மன்னிக்காமை, மனிதத்தைச் சிதைத்தல், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுதல் போன்ற இருளின் செயல்களை விட்டுவிட்டு கிறிஸ்து என்ற ஒளியால் ஒளிர்விக்கப்பட முயற்சி செய்யவேண்டும். வாழ்வில் விழிப்பாக இருந்து, கிறிஸ்துவின் ஒளியைப் பெற்று கிறிஸ்துவுக்குச் சான்றுபகர்ந்து வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள் 

1. ‘உலகின் ஒளி நானே!’ என்று மொழிந்த ஆண்டவரே! எம் திரு அவைத் தலைவர்கள் அனைவரும் வாழ்க்கைக்கு ஒளியாகவும் வழியாகவும் இருக்கும் உமது வார்த்தையை வாழ்க்கையால் போதிக்கவும், எத்தகைய சூழ்நிலையிலும் உம்மீது கொண்ட நம்பிக்கையில் தளராது வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. எம் வாழ்விற்கு ஒளியான இறைவா! இத்தவக்காலத்தில் எமது குடும்பங்கள் உம்மை அறிவதிலும் அனுபவிப்பதிலும் கருத்தாய் இருக்கவும், எம் உடன் வாழும் சகோதர-சகோதரிகளை நிறை-குறைகளோடு ஏற்றுக்கொண்டு அனைவரையும் அன்பு செய்து வாழவும் தேவையான நல் மனத்தை எமக்குத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. வார்த்தையாக இருந்து எமக்கு வழிகாட்டும் இறைவா! இத்தவக்காலத்தில் திருப்பலி, செபமாலை, நற்கருணைச் சந்திப்பு, குடும்ப செபம் என ஆன்மிகச் செல்வங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழவும், உறவுகளைச் சரிசெய்து அனைவரோடும் அமைதியாக வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. ஒளியாம் இறைவா! எம் பங்கிலும் குடும்பத்திலும், நாட்டிலும் பல்வேறு நோயினால் துன்பப்படும் அனைவருக்கும் நல்ல சுகத்தைக் கொடுத்து காத்திடவும், பல்வேறு தீராத நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களையும் உமது இரத்தத்தால் கழுவிக் காத்தருள வேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு (08-03-2026) விப 17:3-7; உரோ 5:1-2,5-8; யோவா 4:5-42

திருப்பலி முன்னுரை

இறைநம்பிக்கையில் வேரூன்றி, இறையனுபவம் பெற்று வாழத் தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு நமக்கு அழைப்பு விடுக்கிறதுஇன்றைய நற்செய்தியில் கிறிஸ்து சமாரியப் பெண்ணுக்குநானே வாழ்வு தரும் தண்ணீர்என்ற உண்மையை வெளிப்படுத்துகிறார். வாழ்வு தரும் தண்ணீர் தம்மிடம்தான் உள்ளது என்பதைச் சமாரியப் பெண் வழியாக இன்று நமக்கும் உணர்த்துகின்றார்.

தண்ணீர் நமது உடல் தாகத்தைத் தணிக்கிறது. இறையனுபவம் நமது ஆன்மிகத் தாகத்தைத் தணிக்கிறது. கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப் பெற்ற இறைவனின் பிள்ளைகளாகிய நம்மிடம் அன்பிற்கான, நீதிக்கான, உண்மைக்காக, சமத்துவத்திற்கான, நேர்மைக்கான தாகம் இருக்கவேண்டும். இயேசுவின் வார்த்தையால் ஆன்மிகத் தாகம் தணியப் பெற்ற சமாரியப் பெண், இயேசு யார்? தான் யார்? தாகம் தீர்க்கும் தண்ணீர் தருபவர் யார்? என்பதை உணர்ந்து, அகவிடுதலைப் பெற்று அவரைமீட்பர்என்று மனதார அறிக்கையிடுகிறார்.

நமது நம்பிக்கை வாழ்வுக்கு உணவாக, ஆன்மிக உறவாக, நிலைவாழ்வைத் தரும் உயிருள்ள ஊற்றாக நம்மில் வாழும் இறைவனை வல்லமையோடு அறிக்கையிட வரம் வேண்டுவோம். பெண்கள் தினமாகிய இன்று அன்னையாக, மனைவியாக, சகோதரியாக, மகளாக எனப் பன்முகத்தன்மையோடு இந்த உலகத்தை ஒளிர்வித்துக் கொண்டிருக்கும் அனைத்துப் பெண்களுக்கும் இறைவன் ஆசியளிக்கவும், ஆண்-பெண் சமத்துவம் இம்மண்ணில் மலரவும் வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசக முன்னுரை

இஸ்ரயேல் மக்கள் தண்ணீருக்காக மோசேயை எதிர்த்த வேளையில், ஆண்டவர் அவர்களைத் தண்டிக்காமல் மோசேயின் வழியாக அவர்களின் தாகத்தைத் தணிக்கிறார். ஆண்டவர் அவர்கள்மீது கொண்டிருந்த இரக்கத்தால் அவர்களை அற்புதமாக வழிநடத்தி உடன் பயணிக்கிறார். ஆண்டவரின் வல்லமையையும் பேரன்பையும் அனுபவித்து வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்

இரண்டாம் வாசக முன்னுரை

கடவுளின் பிள்ளைகளாகிய நாம்நமக்காக உயிரைக் கொடுத்த இயேசுவின்மீது தளராத நம்பிக்கை கொண்டு வாழும்போதுதான் கடவுளின் மாட்சியைக் காணமுடியும்கடவுளின் பேரன்பையும், கிறிஸ்து வழியாக நாம் பெற்றுக் கொண்ட மீட்பையும், தூய ஆவியின் வல்லமையையும் உணர்ந்து நம்பிக்கையோடு வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. நிலைவாழ்வு தரும் ஊற்றாகிய ஆண்டவரே! எம் திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர், பொதுநிலையினர் அனைவரும் உமது வார்த்தையை வாழ்க்கையால் அறிவிக்கவும், இறையாட்சியின்  மதிப்பீடுகளை விதைக்கவும் வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. வாழ்வு தரும் ஊற்றாகிய ஆண்டவரே! நாங்கள் அனைவரும் பாவ வாழ்க்கையை விடுத்து தூய வாழ்வு வாழவும், பொருள் செல்வம் தேடுவதிலேயே நாள்களை நகர்த்தாமல் அருள்செல்வத்தைத் தேடிடவும், ஒப்புரவு அருளடையாளத்தால் உள்ளத்தைத் தூய்மையாக்கவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. ‘நானே நல்ல ஆயன்என்று மொழிந்த ஆண்டவரேபெண்கள் தினத்தைக் கொண்டாடும் இன்று, எமது வீட்டையும் நாட்டையும் தங்களது அன்புப் பணிகளால் வாழ்வித்துக் கொண்டிருக்கும் அனைத்துப் பெண்களின் மாண்பு பாதுகாக்கப்படவும், சமத்துவத்தோடு பெண்களை நாங்கள் நடத்தவும், பெண்களின் வாழ்வு வளம் பெறவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. ஞான வெளிச்சமான எம் இறைவா! அரசுத் தேர்வினை எழுதிக்கொண்டிருக்கும் மற்றும் எழுதச் செல்லவிருக்கும் அனைத்து மாணவ-மாணவியரும் ஞானத்தோடு தேர்வு எழுதி, கல்வித் தேர்விலும் வாழ்க்கைத் தேர்விலும் வெற்றி அடையவும், இந்நாள்களில் உடலுக்கும் உள்ளத்திற்கும் தேவையான ஆற்றலைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.