news
ஞாயிறு தோழன்
ஆண்டின் பொதுக்காலம் 17-ஆம் ஞாயிறு (26-07-2026) 1அர 3:5,7-12; உரோ 8:28-30; மத் 13:44-52

திருப்பலி முன்னுரை

கடவுள் என்ற மிகப்பெரிய புதையலைத் தேடி ஞாயிறு திருப்பலிக்கு வருகை புரிந்திருக்கும் கடவுளின் பிள்ளைகளாகிய உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம். கடவுள் பரிசாகக் கொடுத்த இந்த வாழ்க்கையைத் தரிசாகப் போட்டுவிடாமல், பலமடங்கு பலன் கொடுத்து வாழ ஆண்டின் பொதுக்காலம் 17 - ஆம் ஞாயிறு நமக்கு அழைப்பு விடுக்கிறது.

உலகச் செல்வங்களாகிய பணம், பட்டம், பேராசை இவற்றைச் சேமிப்பதிலேயே நாள்களை நகர்த்தி, வாழ்க்கை என்ற புதையலை அனுபவிக்காமலேயே சென்றுவிடுகின்றோம். இறைவன் நமக்குக் கொடுத்த பெற்றோர், மனைவி, குழந்தை, உறவினர், நண்பர் போன்ற புதையல்களை அன்பால், பண்பால், பாசத்தால் அரவணைப்போம். இறையாட்சியின் மதிப்பீடுகளை அடையாளம் கண்டு, அவற்றைப் பெறுவதற்கும் விதைப்பதற்கும் தியாகம் செய்யவும், நமது மனத்தைப் பண்படுத்தவும், ஞானத்துடன் செயல்படவும் முன் வருவோம்.

நமது மனமாகிய வலையில் விழும் வெறுப்பு, பாகுபாடு, தன்னலம், பொய், திருட்டு, வஞ்சகம், கோபம், குடி, ஆணவம் போன்றகெட்ட மீன்களைஅகற்றிவிட்டு பரிவு, கருணை, இரக்கம், அன்பு, மனிதநேயம், நல்லிணக்கம், சேவை போன்ற நல்ல மீன்களைச் சேர்த்துக் கொள்வோம்இதயம் என்ற நிலத்தில் இறைவார்த்தை என்ற விதையை அனுதினமும் விதைத்து நற்செய்தியின் தூதுவர்களாக வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசக முன்னுரை

ஆண்டவர் சாலமோனிடம்உனக்கு என்ன வரம் வேண்டும்?’ என்று கேட்டபோது, சாலமோன் பொன்னோ பொருளோ கேட்கவில்லை; மாறாக, நன்மை-தீமைகளைப் பகுத்தறியும் ஞானத்தை மட்டும் கேட்கின்றார். ஆண்டவரிடம் ஆயிரக்கணக்கான தேவைகளை அடுக்கிக்கொண்டே செல்லும் நமக்கு, ஞானத்தின் அவசியத்தைக் கூறும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

நம் திட்டங்கள் வேறு; ஆண்டவரின் திட்டங்கள் வேறு. ஆண்டவரால் அழைக்கப்பட்டவர்களுக்கு அவரின் துணை எப்போதும் உண்டு. தாம் அழைத்தவர்களை எத்தீங்கும் அணுகாது உடன் பயணிக்கின்றார். அவரின் திட்டத்திற்குப் பணிந்து வாழும் அவருடைய பிள்ளைகளுக்குத் தமது மாட்சிமையில் பங்கு கொடுப்பார் என்று கூறி ஆண்டவரின் அன்பில் நிலைத்து வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்

நம்பிக்கையாளர் மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர், அருள்பணியாளர், துறவறத்தார், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் இறையாட்சியின் மதிப்பீடுகளை வாழ்க்கையால் அறிவிக்கவும், நம்பிக்கையின் ஒளியில் மக்களை வழிநடத்தவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. நீதியின் தேவனே! எம் நாட்டை ஆளும் தலைவர்கள், மக்கள் வளமோடும் அமைதியோடும் வாழ்வதற்கான சட்டங்களைக் கொண்டுவரத் தேவையான ஞானத்தை எம் நாட்டு தலைவர்களுக்குத் தந்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. கருணையின் ஊற்றே எம் இறைவா! நாங்கள் அனைவரும் அன்பு, மன்னிப்பு, ஏற்பு, விட்டுக் கொடுத்தல் போன்ற பண்புகளில் ஒவ்வொரு நாளும் வளர்ந்து வாழும் இடத்தைச் சொர்க்கமாக்க வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. பாதுகாக்கும் பரம்பொருளே எம் இறைவா! எம் நாட்டில் உள்ள இளையோர் அனைவரும் இறைநம்பிக்கையில் வேரூன்றவும், உலகப் போக்கின்படி செல்லாமல் இறைவார்த்தையை அனுதினமும் வாசித்து அதன்படி வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
ஆண்டின் பொதுக்காலம் 16-ஆம் ஞாயிறு (19-07-2026) சாஞா 12:13,16-19; உரோ 8:26-27; மத் 13:24-43

திருப்பலி முன்னுரை

நம் ஆண்டவராகிய இயேசு இந்த உலகை ஒரு வயலாகவும், நம்மை அதில் விதைக்கப்பட்ட விதைகளாகவும் உருவகப்படுத்துகிறார். இந்த உலகத்தில் நன்மை என்று ஒன்று இருந்தால், தீமை என்ற ஒன்றும் இருக்கத்தான் செய்கிறது. நல்ல விதையாகிய கோதுமையைக் கடவுள் விதைக்கிறார். ஆனால், நாம் ஆன்மிகத் தளர்ச்சியில் விழ நேரிடும்பொழுது பகைவன் வந்து களைகள் என்னும் நச்சுப் புற்களை விதைத்துவிட்டுப் போகிறான்.

இன்று நம்முடைய சமூகத்தில் அன்பு இருக்கும் இடத்தில் வஞ்சகமும், உண்மை இருக்கும் இடத்தில் போலித்தனமும் கோதுமையும் களையையும் போல ஒன்றாகவே வளர்ந்து கொண்டிருக்கின்றன. நாம் வெளித்தோற்றத்திற்காக நல்லவர்களாக வாழ்ந்தாலும், நம்முடைய சிந்தனையும் செயலும் நாம் செய்யும் நன்மைகளாகிய கனிகள் மூலமே நாம் யார் என்பது உலகிற்குத் தெரியும். களைகளைப் பற்றி அதிகம் கவலைப்படுவதைவிட, நாம் எப்படி இறையாட்சிக்கேற்ற மக்களாக வாழ்கிறோம் என்பதில் கவனம் செலுத்துவோம்.

நம்மைச் சுற்றிலும் தீமை மிகுந்து இருந்தாலும், நாம் நன்மையின் சாட்சிகளாய், கோதுமை மணிகளாய் வாழ கடவுளின் துணை வேண்டுவோம். நம்முடைய வாழ்க்கையாலும் வார்த்தையாலும் இறையரசின் மதிப்பீடுகளை விதைத்து, நூறு மடங்கு பலன் கொடுத்து வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசக முன்னுரை

கடவுள் எல்லாவற்றையும் ஆள்கின்ற ஆற்றல் கொண்டவராக இருந்தாலும், நம்மைத் தண்டிப்பதில் அவசரப்படுவதில்லை. மாறாக, தம் ஆற்றலை மன்னிப்பதில், தண்டியாமல் காலம் தாழ்த்துவதில் காட்டுகிறார். தம் குழந்தைகளிடம் கனிவோடும் நீடிய பொறுமையோடும் நடந்துகொள்கிறார். இத்தகைய இறைச்சிந்தனைகளை நாமும் கடைப்பிடிக்க அருள்வேண்டி இவ்வாசகத்திற்குக் கவனமுடன் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

உரோமையருக்கு எழுதிய இத்திருமுகப் பகுதி நம்முடைய பலவீனமான செப வாழ்க்கைக்குப் புத்துயிர் ஊட்டும் உன்னதமானதொரு செய்தியைத் தருகிறது. பல நேரங்களில் நாம் எப்படி, எதற்காகச் செபிக்கவேண்டும் என்று தெரியாமல் திகைத்து நிற்கும் வேளையில், தூய ஆவியானவரே நம்முடைய பலவீனங்களில் நமக்குத் துணைசெய்கிறார் என்று தூய பவுலடியார் நினைவூட்டுகிறார். இறைநம்பிக்கையில் நாளும் வளர அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

நம்பிக்கையாளர் மன்றாட்டுகள்

1. எல்லாம் வல்ல இறைவா! எம் திருத்தந்தை, ஆயர், அருள்பணியாளர், துறவியர் மற்றும் உலகமெங்கும் உள்ள உமது பணியாளர் அனைவரும் நீர் வழங்கும் இறைவார்த்தையை மக்களுக்கு உண்மையோடும் தாகத்தோடும் அறிவிக்கத் தேவையான தூய ஆவியின் கொடைகளையும் வரங்களையும் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. அன்பின் இறைவா! எங்கள் நாட்டை ஆளும் தலைவர்கள் மற்றும் உலகத் தலைவர்கள் அனைவரும் சுயநலமின்றி நீதியோடும் நேர்மையோடும் செயல்படவும், ஏழை எளிய மக்களின் தேவைகளை உணர்ந்து அமைதியானதோர் ஆட்சியை நடத்தவும் நல்ல ஞானத்தைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. இரக்கமுள்ள இறைவா! நோய்களினாலும் வறுமையினாலும் மனக்கவலைகளினாலும் தவித்து வரும் உமது குழந்தைகள் அனைவரையும் உம் சிலுவை நிழலில் தேற்றியருளும். உமது ஆறுதல் தரும் வார்த்தைகள் அவர்களுக்குப் புது நம்பிக்கையையும் அமைதியையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. குடும்பங்களின் நற்பாதுகாவலே எம் இறைவா! இத்திருப்பலியில் கூடிச் செபிக்கும் நாங்கள் அனைவரும் வெறும் இறைவார்த்தையைக் கேட்பவர்களாக மட்டும் நின்றுவிடாமல், அதன்படி வாழும் சாட்சிகளாய் மாறவும், எங்கள் குடும்பங்களில் அன்பும் அமைதியும் நிலைத்திருக்கவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
ஜூலை 12, 2026 ஆண்டின் பொதுக்காலம் 15-ஆம் ஞாயிறு - எசா 55:10-11; உரோ 8:18-23; மத் 13:1-23

திருப்பலி முன்னுரை

ஆண்டின் பொதுக்காலம் 15-ஆம் ஞாயிறு, நம் உள்ளம் என்னும் நிலத்தை அன்பு, இரக்கம், மன்னிப்பு, பரிவு, மனிதநேயம் என்னும் நல்விதைகளால் பண்படுத்திப் பன்மடங்கு பயன் கொடுக்க நமக்கு அழைப்புவிடுக்கின்றது.

இறைவன் விதைப்பவராக இருந்து, ஒவ்வொரு நாளும் வார்த்தையின் வழியாக நம்மோடு பேசிக்கொண்டிருக்கிறார். நாம் இறைவார்த்தையைக் கேட்டும் புரிந்துகொள்ளாமல் புறக்கணித்து, வழியோரம் விதைக்கப்பட்ட விதைகளைப் போன்று தீயோனின் தூண்டுதலால் வார்த்தையை மறந்து விடுகின்றோமா

கடினமான உள்ளம் கொண்டு ஆழமான நம்பிக்கையின்றிப் பாறையின்மீது விழுந்து பயன் கொடுக்காமல் மடிந்த விதைகளைப் போன்று கடின இதயத்துடன் வாழ்கின்றோமா? உலகக் கவலை, செல்வ மோகம், போட்டி மனப்பான்மை போன்றவற்றால் நெருக்கப்பட்டு, முட்செடியில் விழுந்த விதைகளைப் போன்று பயனளிக்காது மறைந்து விடுகின்றோமா? எனச் சிந்திப்போம்.

ஆண்டவர் தம் வார்த்தைகளைத் தாராளமாக நமக்குத் தருகின்றார். நாம் எந்த அளவுக்குத் தகுதியுள்ள இதயத்தோடு செவிமடுக்கிறோம் என்பதிலேயே நம் ஆன்மிக வளர்ச்சி அடங்கியுள்ளது. எனவே, நம் இதயம் இறைவார்த்தையை ஏற்கும் பக்குவமான நல்ல நிலமாக மாறி, நூறு மடங்கு நற்பயன் கொடுக்க இணைந்து வரம் வேண்டுவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசக முன்னுரை

ஆண்டவர் வாக்கு மாறாதவர். அவரது வார்த்தைகள் வல்லமைமிக்கவை. விதைகள் எவ்வாறு முளைத்துப் பயன்கொடுத்துப் பலரை வாழவைக்கின்றதோ, அதேபோன்று நாமும் இறைவனின் வல்லமைமிக்க வார்த்தைகளை உள்ளம் எனும் நிலத்தில் விதைத்து, பல மடங்கு விளைச்சலைக் கொடுக்க அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.  

இரண்டாம் வாசக முன்னுரை

தூய பவுல் நமக்குக் கிடைக்கவிருக்கும் மேலான மாட்சிமையைப் பற்றி எடுத்துரைக்கிறார். மனிதர் உயர்வடையும்போது மனிதர் மட்டுமல்ல, ஒட்டுமொத்தப் படைப்பும் உயர்வடைகிறது. அதற்காகவே, மனிதரோடு சேர்ந்த படைப்பும் பேறுகால வேதனையுறுகிறது என்பதை விளக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

நம்பிக்கையாளர் மன்றாட்டுகள்

1. கருணையே உருவான இறைவா! திரு அவையை வழிநடத்தி வரும் எம் திருத்தந்தை, ஆயர், அருள்பணியாளர், துறவியர் அனைவரும் இறையாட்சியின் மதிப்பீடுகளின்படி வாழவும் பிறரை வாழத்தூண்டவும் அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. பேரன்பு கொண்ட ஆண்டவரே! எம் நாட்டை ஆளும் தலைவர்கள் அனைவரும் நாட்டின் வளங்களையும் மக்களையும் பாதுகாக்கவும், அனைத்து மக்களும் நலமோடும் வாழ்வதற்கு ஏதுவான திட்டங்களைத் தீட்டவும் தேவையான ஞானத்தை அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. நன்மைகளின் நாயகனே இறைவா! எம் குடும்பங்கள் அனைத்தும் இறைவார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் அவ்வார்த்தைகளின் படி வாழ்ந்து சிறந்த கிறித்தவக் குடும்பமாகத் திகழவும், ஞாயிறு திருப்பலியில் முழுமையாகப் பங்கெடுக்கவும் அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. இரக்கத்தின் ஊற்றே இறைவா! உமது சாயலில் படைக்கப்பட்ட நாங்கள் எங்களால் இயன்ற அளவு மற்றவருக்கு உதவவும், ஏழையர், முதியோர் மட்டில் இரக்கம் கொண்டு உதவி செய்திடவும், எமது வாழ்க்கையால் உம்மைப் பிரதிபலிக்கவும் அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
ஆண்டின் பொதுக்காலம் 14-ஆம் ஞாயிறு (05-07-2026) செக் 9:9-10; உரோ 8:9,11-13; மத் 11:25-30

திருப்பலி முன்னுரை

குழந்தை மனம் கொண்டு அனைவரோடும் நல்லுறவுடன் வாழ்ந்து விண்ணகத்தின் முன்சுவையை இம்மண்ணகத்தில் சுவைத்து நிறைவோடு வாழ ஆண்டின் பொதுக்காலம் 14-ஆம் ஞாயிறு நமக்கு அழைப்புவிடுக்கிறது. இன்றைய நற்செய்தியில் இயேசுசுமை சுமந்து சோர்ந்திருப்போர்களே எல்லாரும் என்னிடம் வாருங்கள்என்று வாஞ்சையோடு அழைக்கிறார். விண்ணரசின் மறைபொருள்கள் ஞானிகளுக்கும், தங்களை அறிஞர்கள் என்று நினைத்துக் கொள்பவர்களுக்கும் வெளிப்படுத்தப்படவில்லை; மாறாக, தூய்மையான உள்ளம் கொண்ட குழந்தைகளுக்கே வெளிப்படுத்தப்படுகிறது

இயேசு கனிவும் மனத்தாழ்மையும் உடையவர். அவரது கட்டளைகள் அன்பை அடித்தளமாகக் கொண்டவை. தாழ்மையும் சாந்தமும் நிறைந்த இயேசுவின் இதயம்போல் நம் இதயம் மாறும் போது, நம் ஆன்மாவிற்கு உண்மையான அமைதியும் இளைப்பாறுதலும் கிடைக்கும். இயேசு நம்மிடம் எதிர்பார்ப்பது வெளிப்படையான பெரிய சாதனைகள் அல்ல; மாறாக, நம்பிக்கை யுடனும் தாழ்மையுடனும் அவரிடம் திரும்பி வரும் ஒரு திறந்த இதயத்தையே  எதிர்பார்க்கிறார். நம் சுமைகளைத் தனியாகச் சுமந்து மன பாரத்தோடு வாழாமல் நற்கருணைநாதரின் பாதத்தில் இறக்கிவைப்போம்அவரிடம் மட்டுமே உண்மையான இளைப்பாறுதல் உண்டு என்பதை உணர்வோம். இயேசுவின் பேரன்பைச் சுவைத்து, அவரின் கட்டளைகளில் நிலைத்து, அவரது வார்த்தையில் நம்பிக்கை கொண்டு வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்

முதல் வாசக முன்னுரை

இறைவாக்கினர் செக்கரியா வழியாக ஆண்டவர் நமக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியைத் தருகிறார். உலக அரசர்களைப் போல அதிகாரத்தோடும் ஆயுதங்களோடும் ஆட்சி செய்யாத ஒரு புதிய அரசைப் பற்றியும், அவரது அமைதியின் ஆட்சியைப் பற்றியும் எடுத்துரைக்கின்றார். இறையாட்சியின் மகத்துவத்தை எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

திருத்தூதர் பவுல், கிறித்தவர்களாகிய நாம் உடலின் இச்சைகளின்படி வாழாமல், தூய ஆவியாரின் வழிநடத்துதலின்படி வாழ அழைக்கிறார்கிறிஸ்துவை உயிர்தெழச்செய்த அதே தூய ஆவி நமக்குள்ளும் குடியிருக்கிறார். எனவே, அந்த ஆவியானவரின் துணைகொண்டு நம் உடலையும் உள்ளத்தையும் மாசின்றிக் காத்து, புனிதத்தோடு வாழ அழைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

நம்பிக்கையாளர் மன்றாட்டுகள்

1. அன்பான ஆண்டவரே! எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், அருள்பணியாளர்கள் மற்றும் துறவியர் அனைவரும் கிறிஸ்துவைப் போன்று கனிவும் மனத்தாழ்மையும் பெறவும், மக்களின் சுமைகளைத் தாங்கிப் பணியாற்றத் தேவையான தூய ஆவியாரின் கொடைகளைத் தலைவர்களுக்குத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. அன்பான தேவனே! உலகத் தலைவர்கள் வன்முறையையும் போர்க்கருவிகளையும் ஒழித்து, செக்கரியா இறைவாக்கினரின் வாக்குப்படி அதிகாரப் போக்கைக் கைவிடவும், ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும், உலக அமைதிக்காகவும் நீதியோடு உழைக்கவும் அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. ஆறுதலின் தெய்வமே! நோய், கடன், குடும்பப் பிரச்சினைகள் மற்றும் மன அழுத்தத்தால் சோர்ந்துபோய் இளைப்பாறுதல் தேடும் உமது பிள்ளைகள்என்னிடம் வாருங்கள்என்ற உமது குரலைக் கேட்டு, நற்கருணை நாதராகிய உம்மில் உண்மையான அமைதியைப் பெற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. எம் இறைவா! எங்கள் குடும்பப் பிள்ளைகளும் இளைஞர்களும் உலகப் பெருமைகளாலும் நுகர்வுக் கலாச்சாரத்தாலும் சீரழியாமல், தூய ஆவியாரின் துணையோடு தீமைகளைக் களைந்து, கிறிஸ்துவோடு இணைந்து தூய்மையான வாழ்வு வாழ வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
ஆண்டின் பொதுக்காலம் 13-ஆம் ஞாயிறு (28-06-2026) 2அர 4:8-11,14-16; உரோ 6:3-4,8-11; மத் 10:37-42

திருப்பலி முன்னுரை

இயேசுவின் சீடர்களாய் வாழ்ந்து நற்செய்தியைப் பறைசாற்ற, ஆண்டின் பொதுக்காலம் 13-ஆம் ஞாயிறு நமக்கு அழைப்புவிடுக்கிறது. திருமுழுக்குப் பெற்ற எல்லாருமே இயேசுவின் சீடத்துவத்தில் பங்குபெறுகிறார்கள். தங்கள் வாழ்வில் எல்லாவற்றையும்விட இயேசுவுக்கும் அவரது மதிப்பீடுகளுக்கும் முன்னுரிமை அளிப்பவர்களே அவரின் உண்மையான சீடராக மாறுகின்றனர். தன்னலத்தை மையப்படுத்தி பணம், பட்டம், பதவி, செல்வத்தில் தங்கள் கவனத்தைக் குவிப்பவர்கள் இயேசுவின் சீடராய் இருக்கமுடியாது.

அன்றாட வாழ்வில் தன்னலத்தைக் கடந்து பிறர் நலம் பேணும் வேள்வித்தீயில் தங்களைத் தியாகம் செய்து, தன்னிடம் உள்ளதைப் பகிர்ந்து, நேர்மைக்கும் உண்மைக்கும் உயிர்கொடுத்து, தீமை செய்பவர்களை மன்னித்து, இல்லாதவர்களோடு தோழமை கொண்டு, மனசாட்சியின் குரலுக்குச் செவிகொடுத்து வாழ இன்று நாம் அழைக்கப்பட்டுள்ளோம். இன்று உறவுக்காய், தோழமைக்காய், ஆறுதலான வார்த்தைக்காய், உடனிருப்பிற்காய் ஆயிரக்கணக்கான மக்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். தேவையில் இருப்போரைத் தேடிச்சென்று நலம் கொடுத்த இயேசுவைப் போன்று, நாமும் தேவையில் உள்ளோரைத் தேடிச் சென்று உதவிடுவோம். உடன்வாழும் இறைவனை நமது நற்செயல்களால் இவ்வுலகிற்கு அறிவித்து, அவரின் அன்புச் சீடராய்  உழைக்க வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசக முன்னுரை

ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுத்து, அவரது கட்டளைகளுக்குப் பணிந்து, ஆண்டவரின் வாக்குறுதிகளை இவ்வுலகிற்கு எடுத்துக் கூறுபவர்களே இறைவாக்கினர். இறைவனின் பணியை எதற்கும் எவருக்கும் அஞ்சாமல் செய்யும்போது இறைவனே வழிநடத்துவார். செல்லும் இடமெல்லாம் தம்முடைய தூதர்களைக் கொண்டு காப்பார் என்று கூறி, இறைவனின் உடனிருப்பை உணர்ந்து வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் திருமுழுக்கின் ஆழமான அர்த்தத்தை நமக்கு விளக்குகிறார். நாம் திருமுழுக்குப் பெற்றபோது கிறிஸ்துவோடு இணைந்து அவரது சாவில் பங்கேற்றோம். எனவே, அவரோடு இணைந்து புதியதொரு வாழ்வு வாழ நாமும் உயிர்த்தெழுந்துள்ளோம். இனி நாம் பாவத்திற்கு அடிமைகளாக வாழாமல், கிறிஸ்து இயேசுவோடு இணைந்து கடவுளுக்காக வாழ அழைக்கும் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

நம்பிக்கையாளர் மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர்பொதுநிலையினர் அனைவரும் உமது மதிப்பீடுகளின்படி வாழ்ந்து, வாழ்க்கையால் உம்மை அறிவிக்கவும், இறையொளியின் பாதையில் மக்களை வழிநடத்தவும் தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. ஞானத்தின் ஊற்றே எம் இறைவா! எம் நாட்டுத் தலைவர்கள் மக்களின் தேவை அறிந்து செயல்படவும், நாட்டின் ஒற்றுமைக்காக உழைக்கவும், நாட்டு மக்களை வளர்ச்சியின் பாதையில் வழிநடத்தவும் தேவையான ஞானத்தை வழங்கி எம் நாட்டுத் தலைவர்களைக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

3. நன்மைகளின் நாயகனே எம் இறைவா! திரு இருதய ஆண்டவரின் பக்தி முயற்சிகளை மேற்கொண்டுள்ள இம்மாதத்தில், ஆண்டவர் இயேசு மற்றும் அன்னை மரியா இவர்களின் இதயங்களைப் போல் எங்கள் இதயமும் கனிவும், இரக்கமும் உடையதாக அமைய வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. பாதுகாக்கும் பரம்பொருளே! எம் பங்கிலும் குடும்பத்திலும் உள்ள குழந்தையர் அனைவரும் இளம் வயதிலேயே ஒழுக்கத்திலும், ஆன்மிகச் செயல்களிலும், மனிதநேயத்திலும் சிறந்து விளங்கவும் நாங்கள் அவர்களை இறைஞானத்தில் வளர்க்கவும் தேவையான வரங்களைத் தந்து வழிநடத்தவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
ஆண்டின் பொதுக்காலம் 12-ஆம் ஞாயிறு - எரே 20:10-13; உரோ 5:12-15; மத் 10:26-33 (21-06-2026)

திருப்பலி முன்னுரை:

இன்றைய இறைவார்த்தைகள்இறைவனை நம்புகிறவர் ஒருபோதும் கைவிடப்படமாட்டார்என்ற ஓர் ஆழமான ஆன்மிக உண்மையை எடுத்துரைக்கின்றன. தொடக்கக் காலத்தில் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு வாழ்ந்தவர்களை வேதகலாபனைக்கு ஆளாக்கிக் கொன்றனர். அப்படிப்பட்ட சூழலில் இயேசுவின் வார்த்தைகள் ஆற்றலாக இருந்ததையும் இருப்பதையும் நாம் உணரலாம். “உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம்; மாறாக, ஆன்மாவையும் உடலையும் நரகத்திற்குத் தள்ள எல்லாம் வல்ல கடவுளுக்கே அஞ்சுங்கள்என்கிறார் இயேசு.

இந்த உலகில் உண்மையாக வாழ விரும்புகிறவர்களுக்குப் பல சோதனைகள் வரலாம்; நல்லதைச் செய்தாலும் குறைகூறப்படலாம்; நீதிக்காக நின்றாலும் தனிமைப்படுத்தப்படலாம். இறைவாக்கினர் எரேமியா தன் வாழ்வில் பல துன்பங்களையும் எதிர்ப்புகளையும் சந்தித்தார். அவர் வரவிருக்கும் தண்டனையை இஸ்ரயேல் மக்களுக்கு அறிவித்து எச்சரிக்கை தந்ததால் அவரைஅழிவின் இறைவாக்கினர்என்று துன்புறுத்தினார்கள். ஆனால், இறைவனின் அழைப்புக்கு முழுமையாகத் தன்னையே அர்ப்பணித்து இறைவனைச் சார்ந்து வாழ்ந்ததால் இறைவாக்கினர் எரேமியாஆண்டவர் என்னோடு இருக்கிறார்என்ற உறுதியான நம்பிக்கையில் இறைவனுக்காக உயிரையும் கொடுக்கத் துணிந்தார்.

இறைவனின் பிள்ளைகளாகிய நாமும் நாம் வாழும் சமூகத்தில் இறையாட்சின் மதிப்பீடுகளை விதைக்க ஒவ்வொரு நாளும் முயற்சி எடுப்போம். நொடிதோறும் செடி வளர்வதுபோன்று ஒவ்வொரு நிமிடமும் இறையுறவில் வளர்ந்துஇறைவனே எனக்கு நிலையான பலம்என்ற நம்பிக்கையோடு வாழ வரம்வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்

முதல்வாசக முன்னுரை

இறைவாக்கினர் எரேமியா எதிர்ப்புகளும் துன்பங்களும் சூழ்ந்த நிலையிலும் ஆண்டவரை நம்பி நிற்கிறார். மனிதர்கள் தன்னை நிராகரித்தாலும் ஆண்டவர் தன்னோடு இருக்கிறார் என்ற உறுதியை அவர் வெளிப்படுத்துகிறார். ‘படைகளின் ஆண்டவரே! நேர்மையாளர்களைச் சோதித்து அறிபவரும் உள்ளுணர்வுகளையும் இதயச் சிந்தனைகளையும் அறிபவரும் நீரேஎன்று கூறி, உடனிருக்கும் இறைவனை உணர்ந்து வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

ஆதாமின் பாவத்தால் உலகில் பாவமும் மரணமும் வந்ததையும், இயேசு கிறிஸ்துவின் மீட்பின் மூலம் மனிதன் புதிய வாழ்வைப் பெறுகிறான் என்பதையும், குற்றத்தின் தன்மை வேறு, அருள்கொடையின் தன்மை வேறு என்பதை விளக்கிக் கூறி ஞானமுள்ளவர்களாய் வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

நம்பிக்கையாளர் மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், அருள்பணியாளர்கள் மற்றும் துறவியர் அனைவரும் துன்பங்களிலும் சோதனைகளிலும் மனந்தளராமல் இறைவனின் சாட்சிகளாய் தொடர்ந்து வாழ அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. இரக்கத்தின் இறைவா! உலக நாடுகளை ஆளும் தலைவர்கள் நீதியுடனும் அன்புடனும் மக்களை வழிநடத்தி, அமைதி மற்றும் சகோதரத்துவத்தை மக்களிடையே வளர்க்க அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. நம்பிக்கையின் ஒளியே எம் இறைவா! பயம், துன்பம், நோய் மற்றும் மனவேதனையில் வாழும் மக்கள் அனைவரும்அஞ்சாதீர்என்ற ஆண்டவரின் வார்த்தையில் நம்பிக்கைகொண்டு வாழ தேவையான சக்தியைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. நீதியின் தெய்வமே எம் இறைவா! கிறித்தவர்கள் என்ற முகவரியைப் பெற்ற நாங்கள் அனைவரும் எரேமியா இறைவாக்கினரைப் போல அச்சமின்றி ஆண்டவரைப் பற்றி எடுத்துரைக்கத் தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.