news
உலக செய்திகள்
260 பேரைப் பலிகொண்ட தற்கொலைப்படை தாக்குதல்! - சிறப்பு வழக்கறிஞரை நியமிக்கக் கோரியது இலங்கைத் திரு அவை!

இலங்கையில் 2019-ஆம் ஆண்டு தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் சுமார் 260 பேர் உயிரிழந்த நிலையில், இத்தனை ஆண்டுகள் கடந்தும் நியாயம் கிடைக்கவில்லை எனவும், இதனை விசாரிக்க, சிறப்பு வழக்கறிஞரை நியமிக்கக் கோரியும் அந்நாட்டுத் திரு அவை சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம், நீர்கொழும்பில் உள்ள புனித செபஸ்தியார் ஆலயம், மட்டக்களப்பில் உள்ள சியோன் ஆலயம் மற்றும் மூன்று சொகுசு விடுதிகள் மீதும் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட சுமார் 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் நீதியை எதிர்பார்த்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களும், கத்தோலிக்கத் திரு அவையும், இந்த நாடும் காத்திருக்கிறது. ஏனெனில், தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம். இந்த வழக்கின் விசாரணைக்குச் சிறப்பு வழக்கறிஞரை நியமிக்கவேண்டும் எனவும், உயிரிழந்த மக்களுக்கு நியாயம் கிடைக்க கத்தோலிக்கத் திரு அவை தொடர்ந்து போராடும் எனவும் ரோஹன் சில்வா தெரிவித்துள்ளார்.

news
உலக செய்திகள்
சிறுமலரின் சிறு வழி! (வாழ்த்துச் செய்தி)

சிறுமலர் தெரேசா அவர்கள் புனிதராக்கப்பட்டு நூற்றாண்டு நிறைவடையும் இந்த மகிழ்ச்சிகரமான தருணத்தில், அவர் உலகிற்கு வெளிப்படுத்திய புனிதத்திற்கான, ஆழமான ஆனால் எளிமையான பாதையை - ‘சிறுவழியைநாம் நினைவுகூர்கிறோம்.

ஒரு நூற்றாண்டு கடந்தாலும், சிறுமலர் தெரேசா அவர்களின் அன்பின் நறுமணம் உலகம் முழுவதும் பரவிக்கொண்டே இருக்கிறது. அன்றாட வாழ்வின் மறைமுகமான தருணங்களில்தான் புனிதம் மலர்கிறது என்பதை அவர் கற்றுக்கொடுத்தார். மென்மையான சிரிப்பில், பொறுமையான வார்த்தையில், அமைதியான செபத்தில், ஒவ்வொரு செயலின் பின்புலத்தில் உள்ள அன்பான எண்ணத்தில் புனிதம் மலர்கிறது.

அவர் உலகத்தின் பார்வையில் மகத்தான, வெளிப்படையாகப் பெரிய வீரச் செயல்களைச் செய்யவில்லை; ஆனால், கடவுளுடனான ஆழமான உறவுக்கு ஒரு புரட்சிகரமான, எல்லாரும் அணுகக்கூடிய புதிய பாதையை வெளிப்படுத்தினார். புனிதம் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கே உரியது அல்ல; மாறாக, ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்ட அழைப்பு! நம் அன்றாட வாழ்வின் சிறு சிறு நிகழ்வுகளில் நிறைவேற்றக்கூடியது என்று அவர் நமக்குக் கற்றுக்கொடுத்தார்.

இன்று மகத்தான செயல்கள் மற்றும் சிக்கலான சவால்களால் மூழ்கியிருக்கும் இவ்வுலகில், புனித சிறுமலர் தெரேசாவின் செய்தி நம் ஒவ்வொருவருக்கும் குணமளிக்கும் மருந்தும் வழிகாட்டும் விளக்குமாகும். இந்தச்சிறு வழிகள்மூலமே கடவுளையும் அயலாரையும் நேசிக்க வேண்டும் என்று இறைவன் நமக்குக் கொடுத்த அழைப்பை நாம் உண்மையிலேயே வாழ முடியும். நமது சாதாரண வாழ்க்கையை அசாதாரண பக்திச் செயல்களாக மாற்றமுடியும்.

புனித தெரேசா தன்னை ஒரு சிறு குழந்தையாகக் கருதினார். எனவே, அவளால் தனியாகச் செங்குத்தான படிக்கட்டுகளில் ஏற முடியாது என்பதை உணர்ந்து, அவள் இயேசுவின் கரங்களை மின்தூக்கியாக (Lift) தேர்ந்தெடுத்தாள். இந்த ஆழமான எளிமை, கடவுளின் அன்பு நம்மை உயர்த்தும் என்ற நம்பிக்கையுடன், நமது சிறுமையையும் பலவீனத்தையும் ஏற்றுக்கொள்ள நம்மை ஊக்குவிக்கிறது.

இந்தச் சிறந்த புனிதரிடமிருந்து நாம் அனைவரும் நமது சிறுமையைத் தழுவிக்கொள்ளவும், கடவுளின் மாறாத அன்பில் முழுமையாக நம்பிக்கை கொள்ளவும், புனிதத்திற்கான பாதையில் நடக்கவும் கற்றுக்கொள்வோம்.

news
உலக செய்திகள்
சிறிய மலர்களாகச் செல்லும் இடமெல்லாம் மலர்ந்திடுவோம்! (வாழ்த்துச் செய்தி)

குழந்தை இயேசுவின் தெரேசாவிற்குப் புனிதர் பட்டம் வழங்கப்பட்டதற்கான நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் இவ்வேளையில், அவர் பின்பற்றிய தனிச் சிறப்புமிக்க வாழ்க்கைமுறை மற்றும்  போதனைகள் நமக்குப் பல கோட்பாடுகளை நினைவுபடுத்துகிறது. லிசியாஸின் புனித தெரேசா தனது ஆழ்ந்த நம்பிக்கை மற்றும் ஆன்மிகம் சார்ந்த எளிமையான, அதேநேரத்தில் எல்லாரும் பின்பற்றக்கூடிய சக்திவாய்ந்த விசுவாச வாழ்க்கை வாழ்வதற்கான அணுகுமுறை மூலம் உலகில் ஓர் அழியாத முத்திரையைப் பதித்துள்ளார். அவரது சிறிய வழிமுறைகள்கூட உலகத்தில் உள்ள எண்ணற்ற மக்கள் தொடர்ந்து பின்பற்றுவதற்கு உதவியாக இருந்திருக்கிறது. வேகமாக வளர்ந்து வரும் இன்றைய உலகில், மனிதன் தன் வாழ்க்கைப் பயணத்தில் பலதரப்பட்ட இடர்களில் சிக்கி மீளமுடியாமல் தவிக்கின்றான். மனிதன் பெரிய சாதனைகளைச் சாதிக்க வேண்டும் என்பதற்காகச் சிறுசிறு அர்த்தமுள்ள மகிழ்ச்சி தரக்கூடியச் செயல்களில் கவனம் செலுத்துவதையும் தவிர்க்கின்றான். நாம் செய்யும் சிறு சிறு அன்பான நற்செயல்கள் மூலம், நாம் பேசும் அன்பான வார்த்தைகள் மூலம், நாம் கேட்கும் நற்காரியங்கள் மூலம், நாம் வாழும் வாழ்க்கையையும் நம்மைச் சுற்றியுள்ள உலகத்தையும் மாற்றும் சக்தியாக இவை விளங்கும் என்பதை நமக்குச் சிறுமலர் நினைவூட்டுகின்றார்.

நவீன வாழ்க்கையின் சிக்கல்களை நாம் கடந்து செல்லும்போது புனித தெரேசாவின் சிறிய சிறிய வாழ்க்கை முறைகள் நமக்கு மன அமைதியையும் இரக்கத்தையும் மற்றும் நம்பிக்கையின் பாதையையும் காட்டுகிறது. ஒவ்வொரு சிறு இரக்கக்குணமும், ஒவ்வொரு சிறிய அன்பான வெளிப்பாடும், ஒவ்வொரு முறையும் மற்றவரை மன்னிக்கும் குணமும் இறைவனுக்குத் தரப்படுகின்ற மகிமையாக வெளிப்படுகிறது. இது இறைவன் நம்மில் வாழ்கின்றார் என்ற தெய்வீக உணர்வை வெளிப்படுத்துகிறது. திருத்தந்தை பிரான்சிஸ், “நாம் செய்யும் சிறிய சிறிய செயல்களும் அன்பின் மகத்துவமாக மாறும்என்று கூறுகிறார்.

புனிதராகப் பட்டம் பெற்ற குழந்தை இயேசுவின் நூற்றாண்டு விழாவை நினைவுகூரும் இவ்வேளையில், மறுபடியும் அவரது அடிச்சுவட்டில் நடக்க நம்மையே நாம் அர்ப்பணித்துக்கொள்வோம். கடவுளை மகிமைப்படுத்தும் வகையில் அவருடைய சிறிய வழிமுறைகளை நம் அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்க நம்மையே நாம் இணைத்துக்கொள்வோம். இவ்வாறு செய்வதன்மூலம் நம் தனிப்பட்ட மகிழ்ச்சியையும் நிறைவையும் காண்பது மட்டுமல்லாமல், உலகில் கடவுளின் அன்பையும் அமைதியையும் வெளிப்படுத்தும் கருவியாக மாறுகிறோம். குழந்தை இயேசுவின் சிறுமலர் தெரேசாவின் மரபு நம்மையும் நம் வாழ்க்கை முறைகளையும், கடவுளின் மகிமைக்காகவும் அன்புக்காகவும் வாழத் தொடர்ந்து நம்மைத் தூண்டட்டும். அவர் பின்பற்றிய அன்பு, எளிமை மற்றும் நம்பிக்கை எனும் பண்புகளைப் பரப்பத் தொடர்பாளர்களாக நம்மையே நாம் மாற்றி, அவரின் சிறிய மலர்களாக நாம் செல்லும் இடமெல்லாம் மலர்ந்திடுவோம்!

குழந்தை இயேசுவின் புனித தெரேசாவின் புனிதர் பட்டமளிப்பு நூற்றாண்டு விழாவை நினைவுகூரும் இத்தருணத்தில் இவ்வழகானநினைவு மலர்உருவாக அர்ப்பணிப்போடு அயராது உழைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகின்றேன். உங்களின் சிறந்த படைப்பாற்றல், அதற்காக நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சி அனைத்தும் இவற்றைப் படிக்கின்றவர்களுக்கு ஒரு பொக்கிஷமாகவும், பக்தியை வெளிப்படுத்தும் உந்துசக்தியாகவும் அமையும்இறுதியாக, இந்த நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்திற்கு உங்களின் மேலான ஒத்துழைப்பிற்கு எங்களின் இதயம் நிறைந்த நன்றி. இறைவன் உங்களை ஆசிர்வதிப்பாராக!

news
உலக செய்திகள்
மறைந்து மலர்ந்து, மணம்பரப்பும் சிறுமலர் தெரேசா (வாழ்த்துச் செய்தி)

சேர் என ஆன்மாக்களைச் சேர்த்து,

மகிழ் என மனங்களை மயங்கவைத்து,

பெருவழியில்லாமல் சிறுவழி தொடர்ந்த

சிறுமலர் தெரேசாவின் நூற்றாண்டு விழா!

நான் ஆண்டவருக்கு முற்றும் உரிமையானவள். அவருக்கு மகிழ்ச்சி கொடுக்கக்கூடிய ஒரு விளையாட்டுப் பொருளாய் இருந்து, இறை விருப்பத்தை அன்பினால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்பதை இறைவார்த்தைப் பின்னணியில் வாழ்ந்து காட்டியவர் சிறுமலர் தெரேசா. இறைவன் அன்பாக இருக்கிறார்; அன்பின் முழுவடிவமாக இருக்கிறார் எனத் தன் இதயத் துடிப்பிலும் பேச்சிலும் மூச்சிலும் இறைவனை அன்பால் அனுபவித்தவர்.

மண்ணகத்தில் நன்மைகள் செய்து விண்ணகத்தை இரசித்தவர்!

மதிநுட்பமுள்ள அன்பு மகளாய் எழுந்து நின்று, அன்பினால் அனைத்தையும் வென்று, ‘விண்ணிலிருந்து மலர் மாரிப் பொழிவேன்என்று ஓங்கி ஒலித்த வார்த்தையே இன்று செயல்வடிவம் பெற்றுக்கொண்டே இருக்கிறது. நதியானது ஓரிடத்தில் ஊற்றெடுத்துப் பல பாதைகளில், பல வேகங்களில், பல கோணங்களில், காடு மேடு கடந்து, கடலோடு சேர்ந்து எழுச்சி காண்பதுபோல, மனத்தை எளிமையாலும் செபங்களாலும் முழு இறைநம்பிக்கையாலும் நனைத்து, விண்ணக வீட்டை எட்டிப்பிடித்தவர் பிரான்ஸ் நாட்டின் சின்ன ராணி! இன்று 21-ஆம் நூற்றாண்டு புனிதையாக இளையோர் மனத்தில் எழுச்சியூட்டிக் கொண்டிருக்கிறார்.

ஒளிநிறைந்த அருள்விளக்கு உன்னதத்தில்!

தெரேசா கூறுவார், “நான் தூய திரு அவையின் குழந்தை. நான் செல்வத்தையோ, பெயரையோ, புகழையோ கேட்கவில்லை; என் அன்னையாம் திரு அவையின் முகத்திலிருந்து வெளிப்படும் ஒளியின் பிரதிபலிப்பாகவே என் மகிமை இருக்கும். தாயாம் திரு அவையின் அருள்கொடைகளின் வாய்க்காலாக இருக்க விரும்புகிறேன்.” கார்மேல் மடத்தின் நான்கு சுவருக்குள் அடைக்கப்பட்டு, சாதாரணமான வாழ்வு வாழ்ந்த நம் சிறுமலர் சகோதரி ஏற்படுத்திய இந்தத் தாக்கம் நம்மை எழுச்சிகொள்ளச் செய்கிறது.

தெரேசா பொதுவாழ்வை விட்டு விலகாமல் தன் பணியை மிகவும் பெருந்தன்மையுடனும் உறுதியுடனும் நிறைவேற்றினார். அதனால் அவர் வீரமிக்க ஒரு துறவற வாழ்வை வாழ்ந்து மறைந்தவர் என்று திருத்தந்தை 11-ஆம் பத்திநாதர் கூறுகிறார். தெரேசா அன்பின் சிறுவழியைப் பின்பற்ற நம்மை அழைக்கிறார். அமைதியையும் நட்பையும் விதைக்கும் ஒரு புன்னகையாக அல்லது ஓர் அன்பு செயல் நம்மை விட்டு நழுவிச்செல்லாமல் பார்த்துக்கொள்ள அழைக்கிறார். ஒரு மறைபரப்புப் பணியாளராக வாழ்ந்து, மறைச்சாட்சியாக உயிர் துறக்கும் கனவுகளுடன் வாழ்ந்த இளம்பெண் தெரேசா, நம் துறவற இல்லங்களில் மேற்சொல்லும் செபங்கள் வழியாக அந்தக் கனவுகளை நிறைவேற்ற முடியும் என்பதை இயேசு தனக்கு உணர்த்தினார் என்று தனது குறிப்பேட்டில் பதிவு செய்துள்ளார்.

பாரில் மறைந்தும் மணம் பரப்பும் சின்ன இராணியின் விழுமியங்கள் நூற்றாண்டைக் கொண்டாடும் காலகட்டத்தில், நம் கார்மேல் இல்லங்களிலும் மலரட்டும்! வளரட்டும்!  ‘இயேசு மட்டுமே என் ஒரே அன்புஎன்ற தெரேசாவின் வார்த்தை நம்மை இறையன்பில் இணைக்கட்டும்.

news
உலக செய்திகள்
எதிர்கொள்ளும்வரை எதையும் மாற்ற முடியாது!

வடக்கு அயர்லாந்தில் போர் நிறுத்தத்தின் 31-வது ஆண்டு நினைவு விழா அண்மையில் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் மாதம் பெல்ஃபாஸ்டில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் அமெரிக்க மேனாள் செனட்டர் ஜார்ஜ் ஜே. மிட்செல் ஆற்றிய உரை இந்நிகழ்வில் நினைவுகூரப்பட்டது. அமெரிக்க எழுத்தாளர் ஜேம்ஸ் பால்ட்வின் கூற்றான, “எதிர்கொள்ளும் அனைத்தையும் மாற்ற முடியாது; மேலும், அதை எதிர்கொள்ளும்வரை எதையும் மாற்ற முடியாது!” என்ற மேற்கோளுடன், “நாம் தொடர்ந்து செழிக்க வேண்டுமென்றால், எதிர்காலத்தைப் பற்றிய ஆழமான மற்றும் சரியான சிந்தனை ஏற்பட வேண்டும். நாம் எங்குச் செல்கிறோம்? எப்படி அங்குச் செல்வோம்? என்பதைப் பற்றிச் சிந்திக்கவேண்டும்; நன்றாகச் செய்தால், விளைவுகள் உலகை ஒளிரச் செய்யும். மோசமாகச் செய்தால், மீண்டும் இருள் சூழ்ந்துவிடும்என்று செனட்டர் ஜார்ஜ் ஜே. மிட்செல் கூறியது சுட்டிக்காட்டப்பட்டது.

news
உலக செய்திகள்
பாகிஸ்தான் கத்தோலிக்க ஆயர்களின் கண்டனம்!

பாகிஸ்தானில் கிறித்தவச் சிறுபான்மையினரின் பாதுகாப்பை மீண்டும் கேள்விக்குள்ளாக்கும் வகையில், இஸ்லாமாபாத் நகரில் ஜமியத் உலேமா இஸ்லாம் (JUI) கட்சியின் தலைவர் முஹம்மது 1932-ஆம் ஆண்டு கட்டப்பட்டு, அண்மையில் அரசு அதிகாரிகளால்பசுமை மண்டலத்தில் அத்துமீறி கட்டப்பட்டுள்ளதுஎன்ற காரணத்தால் இடிக்கப்பட்ட மத்னி பள்ளிவாசல் சம்பவத்தை முன்னிட்டு அவர் கருத்துத் தெரிவித்தபோது, கிறித்தவ ஆலயங்களும் சில இமாம்பார்காக்களும் (ஷியா தொழுகை மண்டபங்கள்) அத்துமீறி கட்டப்பட்டவை எனக் குற்றம்சாட்டினார். மேலும், ஆலயங்களைகுப்பைக் கிடங்குகள்என்று இழிவாகக் குறிப்பிடப்பட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெறுப்புரைக்கு பாகிஸ்தான் கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு (PCBC) மற்றும் தேசிய நீதி மற்றும் அமைதி ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் நயீம் யூசுப் கில் ஆகியோர் ஆகஸ்டு 14 அன்று கூட்டு அறிக்கை வெளியிட்டு கடுமையாகக் கண்டனம் தெரிவித்தனர்.