news
உலக செய்திகள்
சஹேல் பகுதியில் அமைதி நிலவ திருத்தந்தை வேண்டுகோள்!

ஆப்பிரிக்காவின் சஹேல் (Sahel) பகுதியில் அதிகரித்து வரும் வன்முறைகளைக் கண்டு கவலையடைந்துள்ள திருத்தந்தை லியோ, அங்கு அமைதி மற்றும் வளர்ச்சியை ஏற்படுத்த உலக நாடுகள் ஒன்றிணையவேண்டுமென அறைகூவல் விடுத்துள்ளார். சாட் (Chad) மற்றும் மாலி (Mali) நாடுகளில் அண்மையில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து, தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ள திருத்தந்தை, இத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்காக இறைவேண்டல் செய்ததுடன், வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள அந்த அன்பிற்குரிய நிலத்தில் உடனடியாக அமைதி திரும்பவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். அண்மைக்காலமாக அல்-கொய்தாவுடன் தொடர்புடைய குழுக்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால், அப்பாவி மக்கள் பெருமளவில் உயிரிழந்து வருகின்றனர். இராணுவப் புரட்சிகள் மற்றும் பொருளாதார வீழ்ச்சி இப்பகுதியின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ள சூழலில், வன்முறையைக் கைவிட்டு நிலையான வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கவேண்டும் என்பதே திருத்தந்தையின் முதன்மையான வேண்டுகோளாக உள்ளது.

news
உலக செய்திகள்
அணு ஆயுத ஒழிப்பே நிலையான அமைதிக்கு வழி!

அணு ஆயுதங்களை முற்றிலுமாக ஒழிப்பதே உலகளாவிய பாதுகாப்பு மற்றும் நிலையான அமைதிக்கு இருக்கும் ஒரே வழி என்று .நா.விலுள்ள வத்திக்கானின் நிரந்தரத் தூதுக்குழு வலியுறுத்தியுள்ளது. நியூயார்க்கில் நடைபெற்று வரும் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின் (NPT) 11-வது ஆய்வு மாநாட்டில் வத்திக்கான் தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறது. அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தில் (TPNW) இன்னும் இணையாத நாடுகள் உடனடியாக அதில் இணையவேண்டும் என்று திருப்பீடம் அழைப்பு விடுத்துள்ளது. அணு ஆயுதப் பயன்பாடு என்பது எல்லைகளையும் தலைமுறைகளையும் தாண்டிய பேரழிவை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது. பயத்தை அடிப்படையாகக் கொண்ட பாதுகாப்பு முறை ஒருபோதும் நிரந்தர அமைதியைத் தராது. அணு ஆயுத அமைப்புகளில் செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்படுவதைக் கண்டித்த வத்திக்கான், வெளிப்படையான தகவல் தொடர்பு மற்றும் அணு ஆயுத ஒழிப்புக்கான உறுதியான நடவடிக்கைகளே இன்றைய உலகிற்குத் தேவை என்றும் வலியுறுத்தியுள்ளது.

news
உலக செய்திகள்
“உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கில் அமைதி நிலவட்டும்” - திருத்தந்தை லியோ

ஆப்பிரிக்கத் திருத்தூதுப் பயணத்தின் ஒரு பகுதியாக அங்கோலாவிற்கு வருகை தந்துள்ள திருத்தந்தை லியோ, உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச்சூழலை முடிவுக்குக் கொண்டுவர உலக நாடுகளுக்கு அறைகூவல் விடுத்துள்ளார். அங்கோலாவின் லுவாண்டா நகரில் நடைபெற்ற திருப்பலிக்குப் பிறகுரெஜினா செலி (Regina Coeli) உரையாற்றிய அவர், உலக நாடுகள் அமைதிக்கான முயற்சிகளை முன்னெடுக்கவேண்டுமென வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் மீது அண்மையில் தீவிரப்படுத்தப்பட்டுள்ள தாக்குதல்கள் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்தத் திருத்தந்தை, “ஆயுதங்கள் மௌனமாகட்டும், பேச்சு வார்த்தைக்கான பாதைகள் திறக்கப்படட்டும்என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இஸ்ரேல், லெபனான் இடையே எட்டப்பட்டுள்ள 10 நாள் போர்நிறுத்த ஒப்பந்தத்தைநம்பிக்கையின் அடையாளம்என்று அவர் வர்ணித்துள்ளார். “துன்பப்படுபவர்களின் அழுகுரலை நாம் அலட்சியப்படுத்தக்கூடாது; நம்பிக்கையின் ஒளி அனைவரின் வாழ்விலும் வீசவேண்டும்என்றும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

news
உலக செய்திகள்
“நான் அரசியல்வாதி அல்ல; நற்செய்தியைப் பேசுபவன்”- அமெரிக்க அதிபருக்குத் திருத்தந்தை பதிலடி!

ஆப்பிரிக்க நாடுகளுக்கான தனது திருத்தூதுப் பயணத்தின் ஒரு பகுதியாக அல்ஜீரியா நாட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருத்தந்தை லியோ, உலக அரசியல் மற்றும் அமைதி குறித்துத் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் தனக்கு எதிராக வெளியிட்ட கருத்துகள் குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த திருத்தந்தை, “நான் ஓர் அரசியல்வாதி அல்ல; அவருடன் விவாதத்தில் ஈடுபட நான் விரும்பவில்லை. போருக்கு எதிராக வலுவாகப் பேசுவதும், அமைதி, உரையாடல் மற்றும் நாடுகளுக்கிடையிலான நல்லுறவை மேம்படுத்துவதுமே எனது பணிஎன்று கூறினார்.

அமெரிக்க அதிபர் நிர்வாகத்தைக் கண்டு தனக்கு அச்சமில்லை என்று குறிப்பிட்ட திருத்தந்தை, திரு அவை எப்போதுமே அமைதியை ஏற்படுத்துபவர்களின் பக்கமே நிற்கும் என்றார்.

news
உலக செய்திகள்
“ஈரான் மக்கள் மீதான அச்சுறுத்தல் ஏற்க முடியாது” - திருத்தந்தை லியோ

ஈரான் மீதான போர் மற்றும் ஒட்டுமொத்த ஈரான் நகரத்தையே அழிப்போம்என்ற அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்குத் திருத்தந்தை லியோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காஸ்டல் காண்டால்ஃபோவில் உள்ள தனது இல்லத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய திருத்தந்தை, “ஈரான் மக்கள் மீதான அச்சுறுத்தல் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாததுஎன்று சாடியுள்ளார். ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பாக அமெரிக்கா விதித்த காலக்கெடுவும், அதைத் தொடர்ந்து விடுக்கப்பட்ட போர் மிரட்டல்களும் பெரும் கவலையளிப்பதாக அவர் தெரிவித்தார். “மீண்டும் பேச்சுவார்த்தை அமர்வுக்குத் திரும்புங்கள்; அமைதியான முறையில் தீர்வுகளைத் தேடுங்கள்என்று உலகத் தலைவர்களுக்கு அவர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த மோதலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய பொருளாதார மற்றும் எரிசக்தி நெருக்கடி வெறுப்பை மட்டுமே வளர்ப்பதாக அவர் எச்சரித்தார்.

news
உலக செய்திகள்
“நோயாளியின் நலனே உங்கள் வழிகாட்டும் நெறிமுறையாக இருக்கட்டும்”

இத்தாலியில் உள்ள தேசிய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையத்தின் உறுப்பினர்களைச் சந்தித்த திருத்தந்தை லியோ, “நோயாளியின் நலனை எப்போதும் உங்களது முதன்மையான வழிகாட்டும் நெறிமுறையாகக் கொள்ளுங்கள்என்று வலியுறுத்தியுள்ளார். இத்தாலியின் முதல் உறுப்பு தானம் நிகழ்ந்து 70 ஆண்டுகள் நிறைவடைவதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, அருளாளர் டான் கார்லோ கனோச்சி தனது இறப்பிற்குப் பின் தனது விழி வெண்படலத்தைத் தானம் செய்து இரு இளைஞர்களுக்குப் பார்வையளித்த உன்னதச் செயலை நினைவுகூர்ந்தார். “மனித உடலை வணிக மயமாக்குவதைத் தவிர்க்கவும், உறுப்பு மாற்றுச் செயல்பாடுகளில் வெளிப்படையான மற்றும் நீதியான அளவுகோல்கள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யவும் தொடர் விழிப்புணர்வு அவசியம். எல்லாவற்றையும் விலை மற்றும் இலாப நோக்கில் பார்க்கும் இக்காலத்தில், உறுப்பு தானம் என்பது கைம்மாறு கருதாத, சகோதரத்துவத்தின் அடையாளமாகத் திகழ வேண்டும்என்று திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.