news
உலக செய்திகள்
இசுலாமியர் மத்தியில் 30 ஆண்டுகள்! - “அந்நியனாக நான் ஒருபோதும் உணர்ந்ததில்லை”- தந்தை மாதேஜ்!

துர்க்மெனிஸ்தானில் சுமார் 30 ஆண்டுகள் கத்தோலிக்க மறைப்பணியாளராகப் பணியாற்றிய தந்தை ஆண்ட்ரசே மாதேஜ் OMI, மரியாதை மற்றும் அமைதியின் அடிப்படையில் அனைத்து மக்களுடனும் நல்லுறவை வளர்ப்பதே தனது முக்கிய இலக்காக இருந்தது என்று தெரிவித்துள்ளார். 1990-களின் இறுதியில் அவர் அங்குச் சென்றபோது கத்தோலிக்கத் திரு அவைக்கான பெரிய கட்டமைப்புகள் எதுவுமில்லை. இசுலாமியர் பெரும்பான்மையாக வாழும் சமூகத்தில், எளிய முறையில் மக்களைச் சந்தித்து, ஒன்றாகத் தேநீர் அருந்தி, நற்செய்தியைப் பகிர்ந்து சமூகத்தை உருவாக்கத் தொடங்கினார். 2000-ஆம் ஆண்டு உயிர்ப்புப் பெருவிழாவின் போது முதல் திருமுழுக்கு வழிபாடுகள் நடைபெற்றன. கிறித்தவ-இசுலாமிய மதத்தர்க்கங்களில் ஈடுபடாமல், அவர்களின் திருமணங்கள் மற்றும் இறுதிச்சடங்குகளில் கலந்துகொண்டு, அன்றாட வாழ்வில் அன்பைப் பகிர்வதையே அவர் தனது பணியாகக் கொண்டிருந்தார். “கிறிஸ்து வருகை தரும் இடத்தில், அவருடன் அன்பும் வருகிறதுஎன்று கூறும் அவர், பெரிய பிரகடனங்களை விட எளிய மனிதச் சந்திப்புகளே அமைதியை உருவாக்குகின்றன என்றார். தனது 30 ஆண்டுகால அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, கிறித்தவரும் இசுலாமியரும் வாசிக்கும் வகையில் The Lamb’ என்ற நூலை எழுதவிருப்பதாகவும் தந்தை மாதேஜ் குறிப்பிட்டுள்ளார்.

news
உலக செய்திகள்
நாடுகளுக்கிடையே உரையாடலின் நோக்கம் அமைதியை உருவாக்குவதே!

மாஸ்கோவிற்கான தனது பயணத்தை நிறைவு செய்து உரோமை திரும்பிய வத்திக்கானின் வெளியுறவுச் செயலர் பேராயர் பால் ரிச்சர்ட் காலகர், “அமைதி மட்டுமே அனைத்து மோதல்களுக்கும் ஒரே தீர்வாகும்என்று தெரிவித்துள்ளார். இரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனைகளுக்குப் பிறகு உரையாற்றிய அவர், உக்ரைன்-இரஷ்யப் போருக்கு நாடுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைகள் மூலமே முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று வலியுறுத்தியுள்ளார். வத்திக்கான் நேரடியாகத் தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்காவிட்டாலும், இரு நாடுகளிடையே இணக்கமான பேச்சுவார்த்தைக்கான சூழலை உருவாக்கத் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிடுள்ளார். மேலும், போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்கும்கத்தோலிக்கத் தொண்டுப் பணிகளைபலப்படுத்துவதே வத்திக்கானின் முதன்மை இலக்கு என்று குறிப்பிட்ட அவர், இரஷ்யாவிலுள்ள கத்தோலிக்கச் சமூகங்களைச் சந்தித்து, “சமூகத்தில் அமைதியை உருவாக்கும் தூதுவர்களாக நீங்கள் செயல்பட்டு வருகிறீர்கள்எனப் பாராட்டியுள்ளார். அவ்வாறே, உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கிறித்தவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்தும் கலந்துரையாடியதாகத் தெரிவித்துள்ளார்.

news
உலக செய்திகள்
‘நீரைப் பாதுகாப்போம்’

செப்டம்பர் 1-ஆம் நாள்படைப்பைப் பராமரிப்பதற்கான 11-வது உலக இறைவேண்டல் நாளைமுன்னிட்டு, உலகெங்கிலும் உள்ள கிறித்தவர்கள் ஒன்றிணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீர் வளத்தைப் பாதுகாப்பதற்காக, சிறப்பு இறைவேண்டல் செய்யவேண்டும் என்று திருத்தந்தை லியோ அறிவித்துள்ளார். ‘திருத்தந்தையின் உலகளாவிய இறைவேண்டல் வலைப்பின்னல்வெளியிட்ட காணொளிச் செய்தியில் உரையாற்றிய அவர், “தண்ணீர் எல்லைகளற்ற உரிமையாகும்; அது அனைவருக்கும் உரிய பொதுவான கொடைஎன்று வலியுறுத்தியுள்ளார். நீரை வணிகப் பொருளாக மாற்றுவதற்கும், விரையம் செய்வதற்கும் கண்டனம் தெரிவித்த திருத்தந்தை, சுத்தமான குடிநீருக்காக மைல் கணக்கில் நடந்து செல்லும் ஏழை எளிய மக்களின் துயரங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார். தண்ணீரை வீணாக்காமல் எளிமையான வாழ்முறையைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொண்ட அவர், ஏற்றத்தாழ்வுகளின்றி அனைவரும் அச்சமின்றித் தண்ணீரைக் குடிக்கும் உரிமையைப் பாதுகாக்க அழைப்பு விடுத்துள்ளார். மேலும், குழாய் கசிவுகளைச் சரிசெய்தல், நீரைக் குறைவாகப் பயன்படுத்துதல் மற்றும் நீர்நிலைகளை மாசடையாமல் தடுத்தல் போன்ற தனிநபர் பொறுப்புகளையும் முன்னெடுக்குமாறு திருத்தந்தை லியோ கேட்டுக்கொண்டுள்ளார். அக்டோபர் 4-இல் வரும் புனித பிரான்சிஸ் அசிசியாரின் திருவிழா வரை தொடரும் இக்காலகட்டத்தில், காலநிலை மாற்றத்தின் பேரழிவுகளிலிருந்து நமது பொதுவான இல்லமாகிய பூமியைப் பாதுகாக்கத் திரு அவை அழைப்பு விடுத்துள்ளது.

news
உலக செய்திகள்
“போர் ஒருபோதும் தீர்வைத் தராது”- ஆயர் பாவ்லோ மார்ட்டினெல்லி திட்டவட்டம்!

மத்தியக் கிழக்கில் போரும் பதற்றமும் நீடித்து வரும் நிலையில், “ஆயுதங்கள் ஒருபோதும் தீர்வை ஏற்படுத்தாதுஎன்று தெற்கு அரேபியாவின் திருத்தூது நிர்வாகி ஆயர் பாவ்லோ மார்ட்டினெல்லி வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இப்பகுதியில் வாழும் 10 இலட்சத்திற்கும் அதிகமான கத்தோலிக்கக் கிறித்தவர்கள், தற்போதைய அமெரிக்க-ஈரான் போர்ச் சூழலிலும் திரு அவைக்குத் தங்களின் ஆதரவையும் செபத்தையும் வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார். சவால்கள் நிறைந்த இக்காலத்தில் மக்கள் ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டு, இறைவேண்டலில் இணைந்து சிறப்பான சாட்சியமளித்து வருகின்றனர் என்றார். ரிமினி மாநாட்டில் திருத்தந்தை லியோவின் உரையின்படிஆயுதங்களற்ற அமைதிஎன்பது மிகவும் அவசியமானது என்று தெரிவித்தார். சொற்களையும், மனங்களையும், நாடுகளையும் ஆயுதங்களற்றதாக மாற்றுவதும், பொறுமையுடன் கூடிய உரையாடலை முன்னெடுப்பதுமே அமைதியான சகவாழ்விற்கான ஒரே வழி என்றும் ஆயர் மார்ட்டினெல்லி உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

news
உலக செய்திகள்
காங்கோவில் எபோலா பாதிப்பு: உலக நாடுகளின் உதவிக்குத் திருத்தந்தை வேண்டுகோள்!

காங்கோ ஜனநாயகக் குடியரசில் தீவிரமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட உலக நாடுகள் உடனடியாக முன்வரவேண்டும் என்று திருத்தந்தை லியோ கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், “காங்கோவில் பரவி பல உயிர்களைப் பலிவாங்கி வரும் எபோலா தொற்றைக் கட்டுப்படுத்த, உள்ளூர் சமூகங்களை உள்ளடக்கிய உலகளாவிய தடுப்பு நடவடிக்கைகள் அவசியம்என்று வலியுறுத்தியுள்ளார். இதுவரை 5,300-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2,500-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். தடுப்பூசி விநியோகம் நடைபெற்று வந்தாலும், அப்பகுதியில் நிலவும் ஆயுத மோதல்கள் நிவாரணப் பணிகளுக்குப் பெரும் சவாலாக உள்ளன. மேலும், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின்சாம்போயே(Zamboyé) பகுதியில் உள்ள தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்த நிகழ்விற்கும் திருத்தந்தை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறிய அவர், சுரங்கப் பணிகளில் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

news
உலக செய்திகள்
“இடம்பெயர்ந்த குழந்தைகளின் கதறல் இறைவனை அடைகிறது” - திருத்தந்தை

2026, செப்டம்பர் 27 அன்று கத்தோலிக்கத் திரு அவையால் கொண்டாடப்படவுள்ள 112-வதுஉலக இடம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் தினத்தைமுன்னிட்டு திருத்தந்தை லியோ தனது சிறப்புச் செய்தியை வெளியிட்டுள்ளார். “இந்தச் சிறுவர்களில் ஒருவரையாவது...” என்ற மத்தேயு நற்செய்தி வசனத்தின் அடிப்படையில் இச்செய்தி அமைக்கப்பட்டுள்ளது. “உலகளாவிய இடம்பெயர்தலில் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களாகச் சிறுவர்களே உள்ளனர்என்று கவலை தெரிவித்துள்ள திருத்தந்தை, “பெற்றோரை இழந்து, வன்முறைகளைக் கண்டு, குடும்பத்தை விட்டுப் பிரிந்து வாழும் அகதிச் சிறுவர்களின் மனித கண்ணியம் பல வழிகளில் மிதிக்கப்படுகிறதுஎன்றும் குறிப்பிட்டுள்ளார். “புலம்பெயர்ந்த குழந்தைகளின் கதறல் இன்று இறைவனைச் சென்றடைகிறது; இத்தகைய துயரங்களைக் கண்டு நாம் அமைதியாகவோ அல்லது பழகிப்போனவர்களாகவோ இருந்துவிடக் கூடாது. ஒவ்வொரு புலம்பெயர்ந்த சிறுவரையும் வெறும் புள்ளிவிவரமாகப் பார்க்காமல், அவர்களுக்குப் பாதுகாப்பு, கல்வி மற்றும் வாழ்வுரிமையை வழங்கவேண்டும்எனக் கேட்டுக்கொண்டார்.