“வாங்க
யாழினி, உட்காருங்க” என்றார்
இஸ்மாயில்.
“டாக்டர்
சார், இப்ப என்னோட பெர்சனல் விசயமாய் பேச வந்திருக்கேன். ஃப்ரியா இருக்கீங்களா, பேசலாமா?” என்றாள் சிரித்தபடி யாழினி.
“தாராளமாய்ப்
பேசலாம். அன்னைக்கி கிரீன் பார்க்கிலே பெர்த்டே பங்சன் நல்லா இருந்தது. அதுக்குப் பிறகு இப்பதானே பேசுறோம்”
என்றார் இஸ்மாயில்.
“தேங்க்ஸ்
டாக்டர். இப்ப நான் என்னோட திருமணம் பத்தி சொல்லப் போறேன். நீங்கதான் இதைக் கலந்துபேசி முடிச்சு வைக்கணும்”
என்றாள் யாழினி.
“தாராளமாய்ச்
சொல்லுங்க யாழினி. என்னால் முடிந்த உதவியைப் பண்றேன். அதிலென்ன உங்களுக்குச் சந்தேகம்?” என்றார் டாக்டர் இஸ்மாயில்.
“நான்
முதல் முதலிலே டாக்டர் சேவியரைப் பார்த்ததும், அவருடைய மனைவி அமெரிக்காவில் இறந்தது கேட்டு அவர்மேல் பரிதாபம் ஏற்பட்டது...” என்று ஆரம்பித்தாள் யாழினி.
“அப்படியா
யாழினி! யாருக்கும் சேவியரைப் பார்த்தால் அப்படித்தான் தோணும்” என்று சிரித்தார் இஸ்மாயில்.
“அதன்
பிறகு அவருடைய வீட்டிற்குச் சென்ற பிறகு மேலும் மனத்தில் இரக்கமும் கவலையும் ஏற்பட்டன”
என்றாள் யாழினி.
“பாவம்!
அவனோட வாழ்வில் இப்படி நடந்திருக்கக்கூடாது. படிக்கும்போதே ரொம்ப நல்லாப் படிப்பான். எல்லாரோடும் நல்லா அன்பாய்ப் பழகுவான். என்ன செய்ய... விதியை மாற்ற முடியாதே!” என்றார் டாக்டர் இஸ்மாயில்.
“அது
உண்மைதான். வாழ்க்கையில் இப்படி நடந்தால் வெறுப்பும் விரக்தியும் அதிகம் ஏற்பட்டு விடும். ஆனால், அது இல்லாமல் சேவியர் சுறுசுறுப்பாய் வேலை செய்கிறார். பேஷண்டுகளிடம் அன்பாய் பழகிக் கவனித்துக்கொள்கிறார். இது எனக்கு வியப்பாய் இருந்தது”
என்றாள் யாழினி.
“வெரிகுட்
யாழினி! எனக்கு அவன் ஆத்மார்த்தமான நல்ல நண்பன். சாதி, மதமெல்லாம் தாண்டி நாங்க தொடர்ந்து பாசமுடன் பழகி நட்புடன் வாழ்ந்து வருகின்றோம். இது பலருக்கு ஆச்சரியமாகவும் இருக்கும்; சிலருக்கு வெறுப்பாகவும் இருக்கும்”
என்று சிரித்தார் இஸ்மாயில்.
“இதே
நிலைதான் எனக்கும் ஏற்பட்டது. பரிவு, கவலை, இரக்கம் என்பது மாறி, சேவியர் மேல் எனக்கு அன்பு ஏற்பட்டது. இதுபற்றி நான் பல நாள்கள் யோசித்து,
பிறகுதான் ஒரு முடிவுக்கு வந்திருக்கேன்” என்றாள்
யாழினி.
“என்ன
முடிவெடுத்திருக்கீங்க
யாழினி?” என்று சிரித்தபடி கேட்டார் டாக்டர் இஸ்மாயில்.
“டாக்டர்
சேவியரைக் கல்யாணம் பண்ணிக்கிறதுன்னு நான் முடிவு பண்ணிட்டேன் டாக்டர்” என்று சிரித்தாள் யாழினி.
“நல்ல முடிவு
யாழினி. ஒரு நல்லவரை கல்யாணம் பண்றதுக்கு என்னோட வாழ்த்துகள். ஆனால், இது சாத்தியமாகுமா? உங்க வீட்லே சம்மதிப்பாங்களா டாக்டர்” என்றார் சிரித்தபடி இஸ்மாயில்.
“அதுக்குத்தான்
உங்ககிட்ட சொல்றேன். நீங்கதான் டாக்டர் சேவியர்கிட்டே பேசணும். அவரோட வீட்லே பிரச்சினை இல்லே. ஆனால், எங்க வீட்லே எதிர்ப்பாங்க. அவங்கள்ட்டே நீங்க பேசித்தான் சம்மதிக்க வைக்கணும்”
என்றாள் யாழினி.
“வெரிகுட்
ஐடியா! நானும் பாத்திமாவும் உங்க வீட்லேபோய் கன்வின்ஸ் பண்றோம். அவங்க என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்” என்றார்
இஸ்மாயில்.
“நீங்க
விவரத்தைப் பேசி, எப்படியாவது அவங்களை ஒத்துக்க வையுங்க. என் அம்மாவைப் பற்றி பிரச்சினை இல்லே! அப்பாதான் சாதி, மதம்னு சொல்லிக் குதிப்பார்” என்றாள்
யாழினி.
(தொடரும்)
இதமான மாலை நேரம். சூரியன் தனது பொற்கதிர்களை மெதுவாக மடக்கிக்கொண்டு, வானத்தின் மேற்குக் கரையில் விடைபெறும் ஓவியத்தை வரைந்து கொண்டிருந்தான்.
வழக்கம்போல
மாலை நடைப்பயணத்தின் இடைவெளியில் இரயில் நிலைய பிளாட்பாரத்தின் இருக்கையில் அமர்ந்தேன்.
வேலையில் இருந்து ஓய்வு பெற்றாச்சு. பொழுது
போகவேண்டும் அல்லவா!
இரயில்
நிலைய பிளாட்பாரத்தின் இருக்கையில் அமரும் அந்தச் சில நிமிடங்கள் எனக்குப் பொக்கிசமானவை!
அங்கே நடந்து செல்லும் மனிதர்கள், அவர்கள் பேசும் வார்த்தைகள், சிரிப்புகள், அவசரங்கள்
எல்லாவற்றையும் அமைதியாக இரசிப்பேன். சில நேரங்களில் அவை எனக்குப் பாடங்களாகவும், சில
நேரங்களில் புதிய உத்வேகமாகவும் மாறிவிடும்.
அப்போது
சென்னை முதல் மதுரை நோக்கி ‘வந்தே பாரத்’ இரயில் கம்பீரமாக வந்து நின்றது. ‘நான்தான்
மற்ற இரயில்களை ஒப்பிடும்போது இப்போது அதிவேக இரயில்’ என்ற
பெருமிதம் அதன் தோற்றத்திலேயே தெரிந்தது. சன்னல் வழியே பயணிகளின் முகங்களைப் பார்த்துக்
கொண்டிருந்தேன். சில முகங்களில் உற்சாகம், சில முகங்களில் சோர்வு, சில முகங்களில் எதிர்பார்ப்பு,
சிரிப்பு, விளையாட்டு.
இரயில்
புறப்படுவதற்கான நேரம் வந்தது. ஒரு நீண்ட ஹார்ன் ஒலியுடன் ‘வந்தே பாரத்’ எனக்கு ‘டாட்டா’ காட்டுவதுபோல
மெல்ல நகரத் தொடங்கியது.
‘தினமும்
இத்தனை ஆயிரம் மனிதர்களின் உணர்வுகளையும் கனவுகளையும் கண்ணீரையும் சுமந்து செல்கிறாயே...
உனக்குச் சுமையாக இல்லையா?’ என்று மனத்திற்குள் இரயிலிடம் கேட்டேன். அது பதில் சொல்லாமல்
தூரத்தில் மறைந்தது. சில நிமிடங்களில் சென்னை எழும்பூர் செல்லும் ‘செங்கோட்டை எக்ஸ்பிரஸ்’ முதல் நடைமேடையில் வந்து சேர்ந்தது. நான் அமர்ந்திருந்த
இடத்திற்கு எதிரே முதல் வகுப்புப் பெட்டி நின்றது. அப்போது ஓர் இளைஞன் அவசரமாகப் பெட்டியிலிருந்து
இறங்கினான். முப்பது வயது இருக்கும். சுருட்டை முடி. காதில் ஹெட்போன். டி-ஷர்ட், டிரௌசர்.
ஏதோ ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்க்கும் இளைஞன்
போலத் தோன்றினான்.
ஒரு
தண்ணீர் பாட்டில் வாங்கியவன், யாரையோ எதிர்பார்த்து நின்றான். அவனுடைய முகத்தில் அவசரம்
தெரிந்தது. கைப்பேசியை எடுத்துப் பேசினான். ‘சீக்கிரம் வாங்கப்பா... வண்டி கிளம்பப்
போகுது!’ இரண்டு நிமிடங்கள் கழித்து மீண்டும் அழைத்தான். ‘எங்க இருக்கீங்க? இன்னும்
இரண்டு நிமிடத்துல இரயில் கிளம்பிடும்!’ அவன்
கண்கள் இரு திசைகளிலும் பதற்றமாக ஓடின. அப்போது
தூரத்தில் இருந்து ஒரு ஸ்விக்கி டெலிவரி பாய் மூச்சிரைக்க ஓடிவந்தான். வயது இருபத்திரண்டு
இருக்கும். “சார், நீங்கதானே?” என்று பெயரை உறுதி செய்துவிட்டு உணவுப் பொதியைக் கையில்
கொடுத்தான்.
ஆர்டரைப்
பெற்றுக்கொண்ட இளைஞன் நிம்மதியாகப் பெட்டிக்குள் ஏறிச்சென்றான். ஆனால், டெலிவரி பையனின்
மூச்சிரைப்பு மட்டும் அடங்கவில்லை. அவன் என் அருகில் வந்து அமர்ந்தான். அவனைப் பார்த்தவுடனே
எனக்கே மூச்சு முட்டியது. ‘தண்ணீர் குடிக்கிறாயா?’ என்று என் பாட்டிலை நீட்டினேன்.
நன்றியுடன் வாங்கிக் குடித்தான். சிறிது நேரம்
கழித்து கேட்டேன். “என்ன ஆச்சு?”
“மொத்தம்
ஐந்து டெலிவரி சார். முதல் இரயில் பெட்டியில்
இருந்து இறுதிப் பெட்டிவரை செல்ல வேண்டும். நீண்ட தூரம். வண்டி கிளம்புறதுக்கு முன்னாடி
எல்லாத்தையும் கொடுக்கணும். ஓடினாத்தான் முடியும்.” மூச்சிரைத்துக் கொண்டிருந்தான்.
“உன்
பெயர் என்ன?”
“ராஜா.”
“படிச்சிருக்கியா?”
அவன்
உடனே பதில் சொல்லவில்லை. அவனது கண்கள் தூரத்தில் ஏதோ ஒன்றைத் தேடின. அந்தச் சில நொடிகளில்
அவன் மனம் தனது கிராமத்திற்கே சென்று வந்ததுபோல இருந்தது.
கூலி
வேலை செய்யும் அப்பா, அம்மா. ஒரே தங்கை. ‘என் மகன் நல்லாப் படிச்சு முன்னுக்கு வரணும்’ என்று கனவு கண்ட பெற்றோர். ஆனால், ராஜாவுக்குப் படிப்பு
சரியாக அமையவில்லை. சூழ்நிலை, நண்பர்கள், வயதின் அறியாமை, பெற்றோரின் ‘படி... படி’ என்ற நச்சரிப்பு.
வீட்டில்
இருக்கவே பிடிக்கவில்லை. நிம்மதியும் இல்லை. பத்தாம் வகுப்பைத் தாண்டியவுடன் வீட்டை
விட்டு வெளியேறினேன். சென்னை நகரம் நிம்மதி கொடுக்கும் என ஓடிவந்தேன். சென்னையில் பல
வேலைகள். கிளீனர், ஹோட்டல் சர்வர்... இப்படிப் பல. பல தோல்விகள், பல ஏமாற்றங்கள்... அந்த நினைவுகளிலிருந்து மீண்டவன் மெதுவாகப் பேசத்
தொடங்கினான்.
“இப்போ
டிப்ளமோ இன்ஜினியரிங் கரஸ்பாண்டன்ஸ் படிச்சுக்கிட்டு இருக்கேன் சார்.”
“அப்புறம்
ஏன் இந்த வேலை?”
அவன்
சிரித்தான். “சாப்பிட, படிக்க பணம் வேணுமே சார்! படிக்கிற வயசுல படிக்கலை சார். வீட்டை
விட்டு ஓடி வந்துட்டேன். இப்பதான் படிப்போட அருமை புரியுது. வாழ்க்கையில் ரொம்ப அடிபட்டுட்டேன்.
படிப்பு ரொம்ப முக்கியம் சார். படிக்கணும்னு முடிவு எடுத்தேன். ஸ்விக்கி பார்ட் டைம்.
இப்போ என்னைப்போலப் படிக்கணும்னு நினைக்கிற நட்பு வட்டம் ஒரே ரூம்ல தங்கி இருக்கோம்.”
சில
நொடிகள் அமைதி. பிறகு அவன் சொன்ன வார்த்தைகள் என்னை ஆழமாகத் தொட்டன.
“ஸ்விக்கி
பாயா நான் தினமும் நிறையப் பேரை சந்திக்கிறேன் சார். அவுங்க பெரும்பாலானவங்க நல்லாப்
படிச்சு நல்ல வேலையில இருக்கிறவங்க. படிச்சவங்க. பெரிய அபார்ட்மெண்ட்ல இருக்காங்க.
வேலை பார்க்குறது பெரிய பெரிய ஆபீஸ் கட்டடங்கள். வசதியான வாழ்க்கை. அவங்களோட வசதியைக்
கண்டு எனக்குப் பொறாமை இல்ல சார். வசதியான வாழ்க்கைக்குப் பணம் வேணும் சார். அது மரியாதை,
அங்கீகாரம். அதற்குப் படிப்பு, உழைப்பு ரெண்டும் ரொம்ப முக்கியம். ஒவ்வோர் உணவுப் பொட்டலங்களைக்
கொடுக்கும்போது சந்திக்கிற மனிதர்கள் எனக்குச் சொல்லிக்கொடுக்கிற பாடம் இதுதான். அதுவே
எனக்கு உத்வேகம். அவங்களோட நம்பிக்கை, அவங்களோட மெச்சூரிட்டி, அவங்களோட மனவுறுதி. அதுதான்
சார் என்னைக் கவருது. அதுவே என் இலக்கை நோக்கி ஓடச்சொல்லுது.”
அவன்
கண்களில் ஓர் ஒளி தெரிந்தது. “அவங்கதான் சார் என் மோட்டிவேஷன்; அவங்கதான் என் கனவுகளுக்குச்
சிறகுகள்; நானும் நல்லா படிச்சு, ஒருநாள் கான்ஃபிடன்ட் ஆன மனுஷனா நிற்கணும் சார். கண்டிப்பா
படிச்சு முடிப்பேன்.”
அந்த
வார்த்தைகளில் சந்தேகமில்லை. உறுதி மட்டுமே இருந்தது. அப்போது அவனது கைப்பேசி ஒலித்தது.
“அடுத்த ஆர்டர் வந்துருச்சு சார்.”
எழுந்து
நின்றான். “நான் கிளம்புறேன்.” சொல்லிவிட்டு வேகமாக நடந்து சென்றான். அவன் சென்ற பாதையை நான் நீண்ட நேரம் பார்த்துக்
கொண்டிருந்தேன். அவன் ஒரு புள்ளியாய் மாறி என் இதயத்திற்குள் மறைந்தான். எனக்குள் ஓர்
உணர்வு எழுந்தது. அது ஒரு சாதாரண இளைஞன் நடந்து சென்ற பாதை அல்ல; ஒரு கனவு நடந்துசென்ற
பாதை; ஓர் எதிர்காலம் நடந்துசென்ற பாதை; ஒரு வெற்றி நடந்துசென்ற பாதை.
மாலை
இரவாக மாறியது. இரயில் நிலைய விளக்குகள் ஒன்றன்பின் ஒன்றாக ஒளிரத் தொடங்கின. அந்த ஒளிகளைப்
பார்த்தபோது எனக்கு ராஜாவின் மனத்தில் எரிந்துகொண்டிருந்த தீபமே நினைவுக்கு வந்தது.
அந்தத் தீபம் அணையாது. ஏனெனில், அது வெறும் வெளிச்சமல்ல... ஒரு மனிதனின் எதிர்காலத்தை
நோக்கிப் பறக்கத் தயாராக இருக்கும் கனவுகளின் சிறகுகள்!
சகாதேவன் ராஜினாமா!
“ஏப்பா இப்படிப் பண்ணினீங்க? இது நாகரிகமான காரியமா? இப்ப போலிஸ் அது இதுன்னு தேவையா?” என்றான் சகாதேவன்.
“இதை உனக்காகத்தானே செய்தேன். நீதானே யாழினி சேவியரைக் கட்டப்போறாள்னு சொன்னே! அப்ப சேவியரை முடிச்சிறலாம்னு பார்த்தோம்” என்றார்
கலையரசன் சிரித்தபடி,
“இது முறையற்ற காரியம்ப்பா! யாழினியைப் பேசி முடிக்கிறதுதான் நல்லதுன்னு சொன்னேன். இந்த டாக்டர் சேவியரைக் கவனிச்சுக்கிறவா சொன்னேன்?” என்றான் சகாதேவன் கோபமாக.
“ஏப்பா, உன்னோட நல்லதுக்குத்தானே அப்பா இதைச் செய்தார்”
என்றாள் தாய் சுந்தரி.
“என்னோட நல்லது எதும்மா? கூட வேலை செய்ற டாக்டரைக் காரை மோதி அடிச்சுக் காலி பண்றதா நல்லது? இது காட்டுமிராண்டித்தனம். சூப்பிரண்டெண்ட் ஆபிஸ்ல இருந்து இஸ்மாயில்ட்டே தினமும் பேசிக்கிட்டிருக்காங்க” என்றான்
சகாதேவன்.
“பேசி என்ன செய்ய? அதெல்லாம் ஒண்ணும் கிழிக்க முடியாது. மேலே இருந்து போலிசுக்கு நெருக்கடி கொடுத்தாச்சு” என்றார்
கலையரசன்.
“நீங்க அரசியல்வாதின்னு தப்பிச்சிறலாம். ஆனால், உங்க பையன் நான்தான்னு தெரியாமலா போகும்?” என்றான் சகாதேவன்.
“நீதானே யாழினியை எப்படியும் கட்டியாகணும்னு ஒத்தக்கால்லே நின்னே! உனக்காகத்தான், அவளை உனக்குக் கட்டத்தான் இடையிலே இருந்தவனைத் தேடிப் பார்த்து அடிச்சாங்க. அவன் தப்பிச்சிட்டான்போல” என்றாள்
தாய் சுந்தரி.
“இதனால் எனக்குக் கெட்ட பெயர் மட்டுமில்லே! ஆஸ்பத்திரியில் கூட இருக்கிற டாக்டர்கள் என்னைச் சுத்தமாக மதிக்கமாட்டாங்க தெரியுமா?” என்றான் கோபமாக சகாதேவன்.
“அதுக்கு என்ன செய்றது? நடந்தது நடந்திருச்சு. அடுத்த காரியத்தை இப்பப் பேசு” என்றாள் தாய் சுந்தரி.
“நாங்கதான் வேற பெண்ணைச் சொன்னோம்ல. பேசாமல் சம்மதிச்சிருந்தால் இந்தக் குழப்பம் நடந்திருக்காதே” என்றார்
கலையரசன்.
“இப்பச் சொல்லு. இந்த மூணுல ஒண்ணைக் கட்டி வைக்கிறோம்” என்று
படத்தை நீட்டினாள் சுந்தரி.
“இதிலே இந்த மலர்விழியைக் கட்டிவையுங்க. இவள் இப்ப அப்பல்லோவில் வேலை செய்றாள். இவள் என்கூட வேலை பார்த்தவள்தான். எனக்கு நல்லாத் தெரிஞ்சவள். நீங்க பேசி முடிவு பண்ணி, கல்யாண வேலையைப் பாருங்க” என்றான் எரிச்சலுடன் சகாதேவன்.
“அப்படிச் சொல்லு சிங்கக்குட்டி. பிரச்சினை இப்ப முடிஞ்சு போச்சு. உனக்கு அடுத்த மாதம் மலர்விழியோட கல்யாணம் சிறப்பா நடக்கும்”
என்றாள் சுந்தரி.
“நான் இப்ப என்னோட வேலையை ராஜினாமா செய்திட்டு வேற ஆஸ்பத்திரியில் சேர்ந்திடுவேன். இந்த சேவியர் மேட்டரை இப்படியே வெளியே தெரியாமல் முடிக்கப் பாருங்க. வீணான கெட்ட பெயர் எனக்கு வேண்டாம்”
என்றான் சகாதேவன்.
“நீ கவலைப்படாதே. எல்லாத்தையும்
எங்களோட கட்சி மந்திரிகள் பார்த்து சரி பண்ணிடுவாங்க” என்றார்
கலையரசன்.
(தொடரும்)
“ஏண்டா தங்கமுத்து, உனக்குக் கல்யாணம் முடிச்சுருவோம்டா” என்றாள் அம்மா அருளாயி.
“போம்மா, நான் காவல்துறையில சேர்ந்த பிறகுதான் கல்யாணம் பண்ணுவேன்”
என்றான் தங்கமுத்து.
“உன்னோடு படித்த அந்த ரெஜினா உனக்காகவே காத்துக்கிட்டிருக்கிறதா அவளோட அப்பன் இராயப்பன் சொல்லுறாரே?” என்றாள் அருளாயி.
“அவர் சொன்னா நான் கட்டிக்கிடணுமா? எனக்குனு ஒரு மரியாதை இல்லையா?” என்றான் தங்கமுத்து.
“கல்யாணம் முடிச்சிட்டு அப்புறம் வேலைக்குப் போ. அவுங்ககிட்ட நிறையப் பணம் இருக்குல. அதைவச்சு அனுபவிடா. ஒரே பொண்ணுதானேடா இராயப்பனுக்கு. அதை விட்டுறக்கூடாதுடா” என்றாள்
தாய்.
“சும்மா புலம்பாதே. உனக்கு நான் சொல்லுறது இதுதான்...
வேற வேலை இருந்தா போய்ப்பாரு” என்றான்
தங்கமுத்து எரிச்சலாக.
“உங்கப்பன் குடிச்சுக் குடிச்சு காசைப்பூரா அழிச்சிட்டுப் போயிட்டான். உன்னையும், உன் தம்பி ஜெயராசையும் ஏதோ சிரமப்பட்டுப் படிக்க வச்சேன். இப்ப இப்படி அடங்காம பேசுறே...” என்றாள் கவலையுடன் அருளாயி.
அப்போது
ஜெயராஜ் வீட்டிற்குள் நுழைந்தான்.
“வாடா தம்பி. எங்கே போயிட்டு வர்ற...?” என்றான் அண்ணன் தங்கமுத்து.
“கோவில்ல தியானம் இருந்தது. அதுக்குப் போயிட்டு இப்பதான் வர்றேன்” என்றான் ஜெயராஜ்.
“அதெல்லாம் சரிதான்டா. இப்படி மரியாயின் சேனை, அன்பியக் கூட்டம், தியானம், திரு இருதய செபக்கூட்டமுன்னு போகவேண்டியதுதான். அதே நேரம் நான் ஒருத்தி தனியாகக் கிடக்குறேனு நெனச்சியா?” என்றாள் தாய்.
“ஏன் நீ சிரமப்படுறே? சாப்பிட்டுத்
தூங்க வேண்டியதுதானே?” என்றான் ஜெயராஜ் தன் அம்மாவிடம் ஆறுதலாக.
“அது சரி, எப்பத்தான்டா இந்த வீட்டுக்கு மருமகள் வர்றது? நானே இப்படிச் சமைச்சு இராப்பகலா துன்பப்படுறது? அதை யோசிக்க மாட்டீங்களாடா? இப்படியே நான் பரலோகம் போயிட்டா, உங்க கல்யாணத்தை யாருடா முடிச்சு வைப்பாங்க?” என்றாள் அருளாயி.
“நீ நம்ம சாமியார்
ஜோசப்கிட்டே சொன்னியாமே? அவரும் அடிக்கடி என்கிட்டே கேட்டுக்கிட்டேதான் இருக்காரு”
என்றான் ஜெயராஜ்.
“நம்ம இராயப்பன் மகள் ரெடியா இருக்கு, நீ சரின்னு சொன்னா
பேசி முடிச்சிடலாம்” என்றாள்
தாய்.
“அண்ணன் இருக்கும்போது எனக்குப் போயி ஏம்மா? நல்லாவா இருக்கும்?” என்றான்.
“டேய், அவனைப் பத்தி பேசாதே. அவரு வேலைக்குப் போன அப்புறம்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லிட்டாரு. நீ சரின்னு சொல்லு...”
என்றாள் தாய்.
“சரிம்மா, எனக்கென்னு சொல்லிட்டில்ல; பேசி முடி. சீக்கிரம் கல்யாணச் சாப்பாடு போடுவோம்”
என்றான் ஜெயராஜ்.
“டேய் தம்பி, உனக்கு யோகம்தான்டா” என
அண்ணன் தங்கமுத்து சொன்னதும் எல்லாரும் சிரித்து மகிழ்ந்தனர்.
அடுத்த
சில நாள்களில் இராயப்பன் வீட்டில் பேச்சு நடத்தப்பட்டது. ரெஜினாவுக்கும் ஜெயராஜூக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அருளாயியின் மனம் மகிழ்ச்சியில் மலர்ந்தது. வீட்டில் நீண்ட நாள்களுக்குப் பிறகு மகிழ்ச்சி குடிகொண்டது.
ஆனால்,
தங்கமுத்துவின் உள்ளத்தில் ஏதோ ஓர் அமைதியின்மை இருந்தது: ‘எனக்காகக் காத்திருந்தவள், இன்று தம்பிக்கு மனைவியாகிறாளே’ என்ற
எண்ணம் அவனைத் துளைத்தது. ஆனால், அதை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. ஒருநாள் இரவு வீட்டின் முன் அமர்ந்து கொண்டிருந்த தங்கமுத்துவிடம் ஜெயராஜ் மெதுவாகக் கேட்டான்:
“அண்ணா,… உனக்கு மனசுக்குள் ஏதாவது வருத்தமா?”
சில
நிமிடங்கள் மௌனமாக இருந்த தங்கமுத்து சிரித்தபடி சொன்னான்: “இல்லடா,… நான் வாழ்க்கையை வேலைக்குப் போன பிறகுதான் ஆரம்பிக்கணும்னு நினைச்சேன். ஆனா வாழ்க்கை யாருக்காகவும் காத்திருக்காதுபோல.”
அந்த
வார்த்தைகள் ஜெயராஜின் மனத்தைத் தொட்டன. சில மாதங்களுக்குப் பிறகு தங்கமுத்துவிற்கு, காவல்துறையில் வேலை கிடைத்தது. அந்தச் செய்தி வீட்டையே மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. வேலைக்குச் சேர்ந்த முதல் மாதச் சம்பளத்தை அம்மா அருளாயியின் கையில் வைத்து, “இது நீ பட்ட வேதனைக்கான
முதல் பலன் அம்மா” என்றான் கண்கள் கலங்க.
அருளாயி
மகிழ்ச்சியுடன் மகனை அணைத்துக்கொண்டாள். அப்போது அருகில் நின்ற ஜோசப் சாமியார் சிரித்தபடி கேட்டார்:
“சரி தங்கமுத்து, இப்போ எப்ப உனக்குத் திருமணம்?”
அனைவரும்
அவனைப் பார்த்தனர். தங்கமுத்து சிரித்தபடி, “இந்தத் தடவை அம்மா பார்க்குற பொண்ணுக்கே ஓகே ஃபாதர்” என்றான். அந்த வீட்டில் மீண்டும் சிரிப்பொலி நிறைந்தது.
“சார், உங்களை அந்த அல்சர் பேஷண்ட் பாக்கணும்னு சொல்லிக்கிட்டே இருக்காங்க சார்” என்று கூறினாள் நர்ஸ்.
“இந்தா வாரேன்” என்றபடி
அந்தப் பேஷண்டிடம் போய் நின்றார் டாக்டர் சேவியர்.
“என்னம்மா, என்ன பிரச்சினை?” என்றார் சேவியர்.
“இந்த வயித்துவலி இன்னும் போகல சார். நானும் மருந்து மாத்திரை சாப்பிட்டுக்கிட்டேதான் இருக்கேன். இதுக்கு ஒரு வழிசெய்யுங்க. டாக்டர். உங்களுக்குக் கோடி புண்ணியம்”
என்றார் அந்தப் பேஷண்ட்.
“அல்சரை நீங்க சாப்பாட்டிலே கண்ட்ரோலாய் இருந்துதான் சரிபண்ண முடியும்; உடனே போற நோயில்லை இது” என்றார் சேவியர்.
“சொல்லுங்க சார்,
எப்பவும் வாய்க்கு ருசியாச் சாப்பிட ஆசைப்பட்றாங்க” என்றான்
அருகில் நின்ற மகன்.
“சாப்பிடலாம்; ஆனால், உறைப்பு இருக்கக்கூடாது. புளிப்பும் அதிகம் கூடாது. காபி, டீன்னு அடிக்கடி நீங்க குடிக்கக்கூடாது” என்றார்
சேவியர்.
“சார், இவங்க பத்து டீ குடிப்பாங்க சார்.
சொன்னாக்கா, உன் வேலையைப் பார்டாம்பாங்க” என்றான்
மகன்.
“நீங்க இளநீர், மோர் சாப்பிடலாம். மணத்தக்காளி கீரை சாப்பிடலாம். மாதுளை ஜூஸ் குடிக்கலாம். இப்படித்தான் அல்சரைக் கண்ட்ரோல் பண்ணனும். வயிறு வெறுமனே இல்லாமல் ஏதாவது பிஸ்கட் சாப்பிட்டுக்கலாம்” என்றார்
டாக்டர்.
“உங்க கிளினிக் வந்து பார்த்திட்டுத்தான் இங்கே வந்து சேர்ந்தோம் டாக்டர். வலி இன்னும் இருக்கே டாக்டர்” என்றார் பேஷண்ட்.
“ஒரு ட்ரிப் ஏத்தி, அதில் மருந்தும் போடுவோம், சரியாயிரும். சாப்பாட்டில் ரொம்ப ஜாக்கிரதையாய், நீங்க கண்ட்ரோலாய் இருந்துக்கணும். அப்பதான் இந்த வலி நிற்கும். மருந்து மாத்திரை அப்பப்ப சரி பண்ணும். நிரந்தரமாய் நோயைப் போக்காது. பார்த்துச் சாப்பிடுங்க. உங்க பையன் சொல்றதைக் கேளுங்க” என்றார் டாக்டர் சேவியர்.
“டாக்டர் உங்களைப் பெரிய டாக்டர் வரச் சொன்னார்”
என்று வந்து கூறினாள் நர்ஸ். டாக்டர் இஸ்மாயில் அறைக்குள் நுழைந்தார் சேவியர்.
“என்ன சேவியர், எப்பவும் பேஷண்ட்டோட இருந்தால் போதுமா? நம்ப சொந்தப் பிரச்சினையையும் சற்றுப் பாக்கணும்ல” என்றார்
இஸ்மாயில்.
“எந்தச் சொந்தப் பிரச்சினை இஸ்மாயில்..?” என்றார் சேவியர்.
“வேற ஒண்ணுமில்லே, உங்க தங்கச்சி கல்யாணம் பத்திதான்”
என்று சிரித்தார் இஸ்மாயில்.
“பையனைத் தேடிக்கிட்டிருக்கோம்” என்று
சிரித்தார் சேவியர்.
“எங்க வீட்டுக்குப் பக்கத்து வீட்லே ஒரு பப்ளிஷர் இருக்கார். அவர் கோயம்புத்தூர்க்காரர். அவருக்கு ஒரு பையன், ஆசிரியர் வேலை பார்க்கிறான். பெண் தேடிக்கிட்டிருக்கிறதாச் சொன்னார். அந்தப் பையனைப் பார்க்கலாமா?” என்று சிரித்தபடி கேட்டார் இஸ்மாயில்.
“தாராளமாய் பார்க்கலாம் இஸ்மாயில்... அவங்க ஆர்.சி.தானா?” என்று
கேட்டார் சேவியர்.
“அவங்க கிறித்தவங்க. சாந்தோம் சர்ச் போவாங்க” என்றார் இஸ்மாயில்.
“அப்பன்னா பார்த்துப் பேசலாம். இஸ்மாயில் ஒருநாள் வீட்டுக்கு வரச் சொல்லுங்க. அமலியை நேர்ல பார்க்கட்டும்” என்றார்
சேவியர்.
“சரி, நீங்க கிளம்புங்க டாக்டர்” என்றார் இஸ்மாயில்.
மதியம்
வீட்டிற்குப் புறப்பட்டார் சேவியர். டிரைவர் கார் ஓட்ட கார் கிழக்கிலிருந்து மேற்காக வந்து வள்ளுவர் கோட்டம் முன்னே உள்ள ரவுண்டானாவில் சிக்னலுக்காக நின்றது. டிரைவர் பச்சை லைட் வந்ததும், காரை வேகமாய் எடுத்தான். அப்போது தெற்கே இருந்து வந்த லாரி ஒன்று கார் மீது ‘டமார்’ என்று மோதி காரை புரட்டிப் போட்டுவிட்டு கணநேரத்தில் பறந்துவிட்டது. சுற்றி இருந்தவர்கள் வந்து காரிலிருந்த டாக்டர் சேவியரை வெளியே இழுத்துவிட்டனர். டிரைவரோ முன்பகுதி நசுங்கியதில் சிக்கிக்கொண்டார். உடனே ஒரு கால் டாக்ஸியை நிறுத்தி ட்ராபிக் போலிஸ் இருவரையும் மெரிட் மருத்துவமனைக்குக் கவனமாக அனுப்பிவைத்தார்.
டாக்டர்
சேவியருக்கு இது எப்படி நடந்தது என்று புரியவில்லை.
(தொடரும்)
செபா, சிவா, அப்துல் மூவரும் ஒரே கல்லூரியில் படிக்கும் மாணவர்கள். கல்லூரி விடுதியிலும் ஒரே அறையில்தான் தங்கியிருக்கிறார்கள். வெவ்வேறு குடும்பச் சூழலில் வளர்ந்தவர்களாயினும், மூவரும் நல்ல நண்பர்களாக இருந்தனர். அவர்களிடமிருந்த கருத்தொருமிப்பு அவர்களை ஒன்றிணைத்து வைத்திருந்தது.
மூவரும்
படிப்பில் அக்கறை செலுத்தினார்கள். படிப்பில் சில வேளைகளில் அவர்களுக்குள் போட்டி இருந்தது; ஆனால், பொறாமை இல்லை. பாடப் பகுதியிலோ அல்லது செயல்முறை விளக்கத்திலோ புரியாத பகுதி இருந்தால், மனமுவந்து ஒருவர் ஒருவருக்குப் புரியும்படி விளக்கி இன்பமாகக் கற்பதில் மகிழ்ச்சி கொண்டனர்.
ஒருநாள்
ஒரு பெரிய தோள் பையுடன் கல்லூரி வளாகத்திற்குள் புதிதாக ஒருவன் வந்தான். அவன் தனியாக நின்ற மாணவன் ஒருவனிடம் சென்று நயந்து பேசி, நட்பு கொண்டாடி, தான் கொண்டு வந்திருந்த ஏதேதோ பொருள்களை அவனிடம் கொடுத்துப் பார்க்கும்படி சொல்லி விளக்கம் கூறிக் கொண்டிருந்தான். அதைப் பார்த்த மற்ற மாணவர்களும் ஒருவர் ஒருவராக வந்துசேர அங்கு ஒரு கூட்டமே கூடிவிட்டது.
நண்பர்களுள்
ஒருவனான அப்துல் கூட்டத்திற்குள் சென்று என்னவென்று பார்த்தான். விற்பனையாள், தான் கொண்டு வந்த பொருள்களை எப்படியாவது மாணவர்களிடம் விற்றுவிட வேண்டுமென்ற நோக்கத்தில் இனிமையான கதைகளைப் பேசி வாங்க வைத்தான். பணம் இல்லாதவர்களிடமும், “அடுத்த வாரம் நான் வரும்போது தந்தால் போதும்; அவசரம் ஒன்றுமில்லை; இந்தப் பொருள்களின் சுவையை நீங்கள் அறியவேண்டும்” என்று
கூறி ஒருசில மாணவர்களின் கைகளில் திணித்தான்.
வாங்க
மனமில்லாமல் இருந்தவர்களும் அவனது கவர்ச்சியான பேச்சில் மயங்கி, மது உண்ட வண்டுகளைப்போலப் பொருள்களை வாங்கிச் சென்றனர். அப்துலும் சில பொருள்களை வாங்கிக் கொண்டான். ஆனாலும், அவன் மனத்தில் ஏதோ செய்யக் கூடாததைச் செய்துவிட்டதுபோல ஒரு குற்ற உணர்வுடன் வாங்கிய பொருள்களை நண்பர்களிடம் காட்டலாமா? காட்ட வேண்டாமா? என்ற போராட்டத்தில் அவற்றை மறைத்து வைத்துக் கொண்டான்.
விடுதி
அறைக்குச் சென்றதும் சிவா, “நண்பா, ஏன் ஒருமாதிரியாக இருக்கிறாய்? என்ன விசயம் நடந்தது? சொல்” என்றான்.
உண்மையை
மறைக்க விரும்பாத அப்துல், தான் வாங்கிய பொருள்களை நண்பர்களிடம் காட்டினான். சிறிய சிறிய பொட்டலங்களாக இருந்த அப்பொருள்களைப் பார்த்த நண்பர்கள் வியந்து, “டேய் மச்சான், உனக்கு இது எங்கிருந்து கிடைத்தது?” என்று கேட்டார்கள்.
நடந்த
நிகழ்வுகளை ஒன்றும் விடாமல் அப்துல் கூறினான். “நண்பா, இவை எல்லாம் உண்மையிலேயே மிகவும் மோசமான போதைப் பொருள்கள். இவற்றைப் பயன்படுத்துவோரைக் கொஞ்சம் கொஞ்சமாக இது அடிமைப்படுத்தி அடியோடு அழித்துவிடும். எனவே, இவற்றை நாம் யாருமே பயன்படுத்தக்கூடாது. குழிதோண்டி புதைத்துவிட வேண்டும்”
என்றான் சிவா.
“ஏன் புதைக்கவேண்டும்? யாருக்காவது கொடுத்தால் என்ன?” என்று அந்தப் போதைப்பொருளின் கொடூரம் தெரியாமல் கேட்டான் அப்துல்.
“இது நல்ல பொருள் என்றாலோ, இதனால் யாருக்காவது நற்பயன் கிடைக்கும் என்றாலோ இதை நாம் யாருக்காவது கொடுக்கலாம். ஆனால், தீமை விளைவிக்கக்கூடிய பொருளை இலவசமாகக் கூட யாருக்கும் கொடுக்கக்கூடாது” என்றான்
செபா.
தோட்டத்தில்
ஒதுக்குப்புறமாகக் கிடந்த ஒரு குழியில் அப்பொருள்களைப் போட்டு நண்பர்கள் அதை மண்ணால் மூடிவிட்டார்கள். அதன்பின் சமாதானத்துடன் அறைக்கு வந்தனர்.
“இதுபோன்ற பொருள்களை வேறு யாராவது வாங்கினார்களா?” என்று கேட்டான் சிவா.
“ஆமாம், இன்னும் சில மாணவர்கள் வாங்கினார்கள். இதை விற்றவன் அடுத்த வாரம் வருவதாகவும் கூறினான்”
என்றான் அப்துல்.
“இப்படிப்பட்ட தீமைகளை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும். இல்லையேல் அது இளம் தலைமுறையையே வாழவிடாமல் அழித்துவிடும்” என்றான்
செபா ஆதங்கத்தோடு.
“இப்போது நாம் என்ன செய்வது?” என்று கேட்டான் அப்துல் கவலையோடு.
“இதை வாங்கியவர்களில் ஒருசிலரின் பெயர்களாவது உனக்குத் தெரியுமா?” என்று சிவா கேட்க, ‘தெரியும்’
என்று தலையசைத்தான் அப்துல்.
“அப்படியானால் நல்லது. நாம் நமது பேராசிரியரிடம் இதைச் சொல்ல வேண்டும். அவர் நமது பெயர் வெளிவராமல் வாங்கியவர்களிடம் விசாரித்து, விற்றவனையும் பிடித்துத் தண்டனை கொடுக்க ஏற்பாடு செய்வார். நாம் நமது இளம் மாணவர் சமுதாயத்தைப் பெரும் கேட்டிலிருந்து காப்பாற்றியவர்கள் ஆவோம்” என்றான் செபா.
மூவரும்
பேராசிரியரைப் பார்த்துப் போதைப் பொருள்கள் பற்றிய நிகழ்வுகளை விவரமாக எடுத்துரைத்தனர். பேராசிரியர் அவர்களைப் பாராட்டி,
“நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு’
என்ற
திருவள்ளுவரின் இனிய குறளுக்கு ஏற்ற நல்ல நண்பர்களாக விளங்குகிறீர்கள். தீமையைச் சுட்டிக்காட்டி திருத்துவதுதான் நல்ல நண்பர்களுக்கு இலக்கணம். அவ்வகையில் நல்ல நண்பர்களான உங்கள் மூவராலும் இக்கல்லூரி பெருமையடைகிறது” என
மனமார வாழ்த்தினார்.
கல்லூரிக்குள்
நுழைந்த போதை அரக்கனைத் தடுக்க அதிரடியாக நடவடிக்கைகள் எடுத்தார். சம்பந்தப்பட்ட மாணவர்கள் வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். போதைப்பொருள்களை விற்பனைக்காகக் கொண்டுவந்த ஆசாமியும் வசமாக மாட்டிக்கொண்டான்.
போதை
என்னும் படுகுழிக்குள் விழவிருந்த மாணவச் செல்வங்களும் நண்பர்களின் முன்மதியாலும், நற்குணத்தாலும் காப்பாற்றப்பட்டனர்.
கல்லூரி
ஆண்டு விழாவில் போற்றுதற்குரிய இச்செயலுக்காக செபா, சிவா, அப்துல் ஆகியோருக்குப் பாராட்டும் பரிசும் வழங்கப்பட்டன.
நண்பர்கள்
மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் ‘நண்பேன்டா’
என்று கைகளைத் தட்டிக் கொண்டனர்.