புனித ஆன்ட்ரூ கிம், பால் சோங் மற்றும் அவருடைய தோழர்கள்

news-details

கொரியாவில் கிறிஸ்தவம் வளர்ந்து வந்ததற்கான நீண்ட நெடிய வரலாறெல்லாம் ஒன்றும் இல்லை. பதினாறாம் நூற்றாண்டில்தான் கிறிஸ்தவதிற்கான விதையானது அங்கே தூவப்பட்டிருக்கின்றது. அப்படியிருந்தபோதும் இன்றைக்கு அங்கே ஆழமான விசுவாசம் கொண்ட கிறிஸ்தவர்களைப் பார்க்கும்போது மிகவும் பெருமையாக இருக்கின்றது. இங்கே கொரியாவில் எப்படி கிறிஸ்தவம் வேறோன்றியது, யாரெல்லாம் அங்கே கிறிஸ்துவுக்காக தங்களுடைய இன்னுயிரைத் துறந்தார்கள் என்று பார்ப்போம்.

1592 ஆம் ஆண்டு, ஜப்பானியப் படையெடுப்பு கொரிய மண்ணில் நிகழ்ந்தபோது ஒருசில கிறிஸ்தவப் படைவீரர்கள் வழியாக கிறிஸ்தவம் அங்கே துளிர்விட்டது என்று சொல்வார்கள். இதற்குப் பிறகு 1777 ஆம் ஆண்டு சீனாவின் வழியாக கிறிஸ்தவ இலக்கியங்கள் கொரியாவிற்குக் கொண்டுவரப்பட்டு, அதன்மூலம் கொரிய நாட்டுக் கிறிஸ்தவர்கள் தங்களுடைய நம்பிக்கையில் உறுதியடைந்தார்கள். இதைத் தொடர்ந்து 1794 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து ஒரு குருவானவர் கொரிய மண்ணில் காலடி எடுத்துவைத்தபோது, ஏராளமான கிறிஸ்தவர்கள் அங்கு இருப்பது கண்டு அவர் ஆச்சரியப்பட்டுப் போனார். அவர் அவர்களுக்கு இறைவார்த்தையைப் போதித்தும் அவர்களை விசுவாசத்தில் இன்னும் உறுதிப்படுத்தியும் வந்தார். இப்படி கொரியாவில் கிறிஸ்தவம் படிப்படியாக வளரத் தொடங்கியது.

1836 ஆம் ஆண்டு, ஏராளமான மறைபோதகர்கள் கொரியாவிற்கு வந்து கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கத் தொடங்கினார்கள். இதனால் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை வேகமாக வளரத் தொடங்கியது. இதைப் பார்த்து பயந்துபோன கொரிய அரசாங்கம், ‘கிறிஸ்தவர்களை இப்படியே விட்டுவைத்தால், அவர்கள் வளர்ந்து, பெரிய இனமாக மாறிவிடுவார்கள்’ என்று சொல்லி 1839 -1867 வரையிலான காலகட்டங்களில் கிறிஸ்தவர்களைப் பிடித்து சித்ரவதை செய்து கொல்லத் தொடங்கினார்கள். இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் இறந்துபோனார்கள்.

இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் மூன்று பேர்களை நாம் இங்கே குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும். ஒருவர் ஆன்ட்ரூ கிம் என்ற குருவானவர். இவர் ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை மக்களுக்கு அறிவித்து, அவர்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்தியதால், கொடூரமாகக் கொல்லப்பட்டார். இரண்டாமவர் பால் சோங் என்ற பொதுநிலையினர். இவரும் கிறிஸ்தவம் கொரிய மண்ணில் வளர்வதற்காக கடுமையாகப் பாடுபட்டார். அதனால் கொல்லப்பட்டார். மூன்றாமவர் கொலும்பா கிம். இவரும் சிறையில் வைத்து கடுமையாக சித்ரவதை செய்யப்பட்டார். இப்படி கொரிய மண்ணில் கிறிஸ்துவுக்காக இரத்தம் சிந்தி உயிர்நீத்த மறைசாட்சிகள் ஏராளம்.

1984 ஆம் ஆண்டு, தூய திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் கொரியாவிற்குச் சென்றபோது மேலே சொல்லப்பட்ட மூன்று பேர் உட்பட 103 பேருக்கு புனிதர் பட்டம் கொடுத்து உயர்த்தினார்.