news
சிறுகதை
அண்ணாச்சி கடை (சிறுகதை)

என் வீட்டு அருகாமையில் ஓரிரு சின்னச் சின்ன மளிகைக் கடைகள் மட்டுமே உள்ளன. யாராவது விருந்தினர்கள் வீட்டிற்கு வந்துவிட்டால் அவசரத்திற்குப் பொருள்கள் வாங்கவேண்டும் என்றால் அருகில் இருக்கும் ஒரு சின்னக் கடைக்குச் சென்று பொருள்கள் வாங்கி வருவேன். அதுதான் அண்ணாச்சி கடை. காலை நேரங்களில் நடை பயணம் செல்லும்போது, அந்தக் கடையில் மனைவி கேட்ட பொருள்களை வாங்கி வருவேன். காலையில் பால் போடும் தம்பி, போடாமல் சில நேரங்களில் தவறிவிட்டால், உடனே நடந்து சென்று அந்தக் கடையில் பால் வாங்கி வருவேன்.

அந்தக் கடைக்காரர் ஒரு நல்ல மனிதர். கடைக்குச் செல்லும்போதெல்லாம் சிரித்த முகத்துடன் பேசுவார். மிகவும் தன்மையான மனிதர். சில நேரங்களில் நாம் வாங்கச் சென்ற பொருள் அங்கே இருக்காது. ‘இல்லைஎன்று சொல்லாமல், தன்மையோடு பேசி, ‘இந்தப் பொருளை  நாளைக்கு வாங்கி வைக்கிறேன்என மலர்ந்த பூவைப்போல புன்னகையோடு சொல்வார்.

அவருக்கு இரண்டு அழகான குழந்தைகள். ஒரு பையன், ஒரு பொண்ணு. சில நேரங்களில் அந்த இரு குழந்தைகளும் அவரோடு கடையில் இருப்பதை நான் பார்ப்பதுண்டு. “பசங்க என்ன படிக்கிறாங்க?” எனக் கேட்டேன். “பையன் ஏழாவது படிக்கிறான். பொண்ணு ஐந்தாவது படிக்கிறாள்என்றார். “நன்றாகப் படிக்கிறாங்களா?” எனக் கேட்டேன். ‘ஆம்என்று தலையசைத்தார். தொடர்ந்துநாங்க தான் படிக்கலை. இப்படிச் சின்னக் கடையை வச்சுக்கிட்டு, வர்ற கொஞ்ச வருமானத்தில் கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கோம்; பிள்ளைகளாவது நல்லாப் படிச்சு வாழ்க்கையில் முன்னேறணும், நல்லா சம்பாதிக்கணும். அதான் சார் எங்க ஆசைஎன்றார். “ஆமா, ஆமா... நல்ல படிக்க வையுங்கஎன்றேன்.

ஆமா, இந்தக் கடையில் எல்லாச் செலவும் போக எவ்வளவு நிக்கும்?” என்று கேட்டேன். “என்ன சார், மிஞ்சி மிஞ்சிப் போனா எல்லாச் செலவும் போக ஒரு நாளைக்கு ரூபாய் 600-லிருந்து 700 ரூபாய் தான் மிஞ்சும். அதை வைச்சு இந்தப் பிள்ளைகளைப் படிக்க வைச்சு கரையேத்தணும்என்றார்சொல்லும் போது அவரது விழிகள் இலையில் விழுந்த நீர்த்துளி போல தத்தளித்ததை என்னால் காண முடிந்தது. “கவலைப்படாதீங்க! எல்லாம் நல்லதே நடக்கும்என அவருக்கு ஆறுதல் வார்த்தையைச் சொல்லிவிட்டு, கடின இதயத்தோடு நகர்ந்தேன். அன்றிலிருந்து எனக்கும், அந்தக் கடைக்கும் ஒருவிதமான அன்பின் பிணைப்பு! எப்போதெல்லாம் என் மனைவி வீட்டுச்சாமான்கள் வாங்கச் சொல்லும் போது, அந்தக் கடைக்குச் சென்று வாங்கி வருவேன். சில நேரம் நடந்து போவேன். சில நேரம் என்னுடைய ஒரு பழைய இருசக்கர வாகனத்தில் சென்று வாங்கி வருவேன்.

அப்படியே போய் வாங்கி வந்தாலும், சில நேரங்களில் சில பொருள்கள் அந்தக் கடையில் இருக்காது. வெறுங்கையோடு திரும்பி வருவேன்வீட்டை நெருங்க, நெருங்க கால்கள் தடுமாறும். “ஐயோ, என் மனைவியிடம் இன்னைக்கு என்ன வாங்கிக் கட்டிகொள்ளப் போறேனோ தெரியலையேஎன மனத்திலே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வீட்டிற்குள் வருவேன். கடைக்காரர் சொல்வது போலவே, “அந்தப் பொருள் இருக்கு, இந்தப் பொருள் இல்லை. நாளைக்கு வந்துடுமாம்எனச் சொல்லி சமாளிப்பேன். “பக்கத்தில் ஒரு நல்ல கடை கூட இல்லை. இங்கே வந்து வீடு கட்றீங்க? ஆத்திர அவசரத்துக்குச் சாமான் வாங்கணும்னா என்ன பண்றது? என வீடு கட்டும்போதே சொன்னேன். நான் சொன்னதைக் கேட்டீங்களா?” எனச் சூடான எண்ணெயில் பொரியும் அப்பளத்தைப் போல பொரிந்து தள்ளுவாள்.

இருந்தாலும்கூட அந்தக் கடையை விடுவதில்லை. அவ்வப்போது தேவைப்படும்போது பொருள்கள் வாங்கி வருவேன். கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், நான் பொருள்கள் வாங்குவதன் மூலம் அண்ணாச்சிக்குச் சின்ன வருமானம் என்று மனசுக்குள் ஒரு சந்தோசம்.

அன்று பால் பையன் வீட்டில் பால் போடவில்லை. காலையில் எழுந்ததும் காபி சாப்பிடவில்லை என்றால் என் மனைவி ருத்ரதாண்டவம் ஆடி விடுவாள். அவள் எழுவதற்கு முன்பே அண்ணாச்சி கடைக்குச் சென்றேன். “அண்ணாச்சி, பால் ஒரு பாக்கெட் கொடுங்கஎன்றேன். ”இன்னைக்குப் பால் வண்டி வரலே. பால் வண்டி  ரிப்பேர்  என்றார். “மற்றொரு வண்டி வரும். வந்தபின் உங்களுக்குப் போன் பண்றேன்என்று வழக்கமான பாணியில் பதில் சொன்னார். “எனக்குத்தானே தெரியும் என் வேதனைஎன்று மனத்தில் நினைத்து கொண்டு, இன்னைக்குக் காலையிலேயே நமக்கு வேட்டுதான் எனக் கடந்து வந்து கொண்டிருந்தேன்.

வருகிற வழியில் நண்பர் ஒருவர்என்ன சார், வாக்கிங் போறீங்களா? காபி குடிச்சிட்டீங்களா?” எனக் கேட்க, “இன்னும் சாப்பிடல சார். பால் வாங்கப் போனேன். பால் வண்டி இன்னும் வரலையாம். அதான் திரும்பி வந்திட்டேன்எனக் கூறினேன். “அப்படியா? அதுக்கு ஏன் கவலைப்படுறீங்க? அதுக்குதான் இப்ப ஒரு செயலி, அதான் ஓர் ஆஃப்  வந்திருச்சே! அந்த ஆஃப் மூலமா ஆர்டர் பண்ணினா பத்து நிமிடத்தில் நீங்கள் ஆர்டர் செய்த பொருள்கள் உங்க வீட்டுக்கே வந்துடும். அப்புறம் ஏன் கவலைப்படுறீங்க? அந்த ஆஃப்- உங்க போன்ல டவுன்லோடு பண்ணுங்க, ஆர்டர் பண்ணுங்கஎன்றார். “அப்படியா, இந்தா இப்பவே டவுன்லோடு பண்ணி முதல்ல பால் ஆர்டர் பண்ணி, என் மனைவியைச் சந்தோஷப்படுத்தணும்என்று மனசில் சொல்லி, அந்த ஆஃப்- டவுன்லோடு செய்து, பால் ஆர்டர் பண்ணினேன். பத்தே நிமிடத்தில் பால் வீடு வந்து சேர்ந்தது. வாங்கி என் மனைவியிடம், வெற்றிப் புன்னகையோடு கொடுத்தேன்.

யாரோ வந்து பால் கொடுத்துட்டுப் போறாங்க. யார் அது?” எனக் கேட்டாள். “உன் பிரச்சினைக்கு முடிவு வந்துருச்சு. உனக்கு அவசரத்துக்கு என்ன பொருள் வேண்டுமானாலும், நீ இனிமேல் என்னை எதிர்பார்க்க வேண்டாம். இந்த ஆஃப்- உன் மொபைல்ல டவுன்லோடு பண்ணியிருக்கிறேன். நீயே ஆர்டர் பண்ணி வாங்கிக்கொள்ளலாம்எனக் கூறினேன். அவளும் கொஞ்சம் கொஞ்சமாக ஆர்டர் செய்து வாங்கப் பழகிவிட்டாள்.

இப்போது என் மனைவி என்னைப் பொருள் வாங்கி வரச்சொல்லி அதிகமாகத் தொந்தரவு செய்வதில்லை. எனக்கு வாக்கிங் போவதும் குறைந்து போனது. இருசக்கர வாகனமும் எடுக்க வாய்ப்பில்லாமல் முடங்கிப்போனது. அண்ணாச்சி கடைக்குச் செல்ல வேண்டிய அவசியமும் இல்லாமல் போனது.

இரண்டு வாரங்கள் கழிந்தன. அலுவலகம் செல்லும்போது, வழக்கம்போல அண்ணாச்சி கடையைப் பார்த்தேன். அவர் கடை பூட்டி இருந்தது. ஒரு வாரம், இரண்டு  வாரம் கடந்தது, அண்ணாச்சி கடை திறக்கவே இல்லை. ஒருநாள்ஏன் கடையைத் திறக்கவில்லை?” எனத் தெரிந்துகொள்ள அவர் கடைக்குச் சென்றேன். அவர் வெளியே நின்று கொண்டிருந்தார்.

என்ன அண்ணாச்சி, கடையே திறக்கல?” எனக் கேட்டேன்.

மெல்லிய குரலில், “ஏதோ ஓர் ஆஃப் வந்திருக்காம், ஆர்டர் பண்ணுனா பத்து நிமிசத்தில வீட்டுக்கே பொருளைக் கொண்டு வந்து கொடுத்துடுவாங்களாம். நம்ம கடைக்கு வந்து பொருள் வாங்கிக் கொண்டிருந்த பல பேர் இப்ப அது மூலமா வாங்க ஆரம்பிச்சுட்டாங்க. அப்புறம் என்ன, நம்ம கடையில வியாபாரம் குறைஞ்சு போச்சு. கடையை மூடிட்டேன், வேறு ஏதாவது கூலி வேலை பார்த்துதான் இனிமே பிழைக்கணும். எப்படி என் பிள்ளைகளைப் படிக்க வைச்சு, பெரிய ஆளாக்கப் போறேன்னு தெரியலைஎனக் கண் கலங்கி, மனசு உடைஞ்சுக் கூறினார். அதைக் கேட்டு என் மனம் கனத்துப்போனது.

இன்னும் கொஞ்சத் தூரம் தள்ளி, மற்றொரு கடை வைத்திருக்கும் கணவனை இழந்த, பிள்ளைகள் இல்லாத ஒரு மூதாட்டியின் கடையைப் பார்த்தேன். ‘அந்தக் கடைக்கு என்ன ஆகுமோ! இதே நிலை வந்துவிடுமோ! வந்தால் அந்த மூதாட்டியின் தின வாழ்க்கை என்ன ஆகும்?’ எனக் கலங்கி, சிந்தித்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தேன். வீட்டை அடைந்ததும் என் மனைவியிடம் எல்லாவற்றையும்  கனத்த இதயத்துடன் பகிர்ந்தேன். அண்ணாச்சி கடைக்கும், எனக்கும் இருந்த அந்த உறவு, காட்சியளித்து மறைந்துபோகும் வானவில்லைப்போல ஆனது. டெக்னாலஜியின் இரசிக்கக்கூடிய முகம் ஒரு புறம்; கொடூர முகம் மற்றொருபுறம். ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கியதில் எனக்கும் ஒரு பங்கு உண்டு என்ற ஒரு குற்ற உணர்வு என் மனத்தை நெருடியது. படிக்கின்ற அண்ணாச்சியின் இரு குழந்தைகளின் முகம் என் கண்முன் வந்து வந்து போனது.

என் மனைவியை அழைத்தேன். “இனிமேல் நான் வீட்டில் இல்லாதபோது மட்டும் இந்த ஆஃப்பைப்  பயன்படுத்து. ஏதாவது பொருள் வாங்க வேண்டும் என்றால் என்னிடம் சொல்லு. பாட்டி கடை இருக்கிறது. அங்கே நான் சென்று வாங்கி வருகிறேன். நான் வீட்டில் இல்லாதபோது  மட்டும் இந்த ஆஃப்பைப்  பயன்படுத்துஎனக் கூறி, “இப்ப ஏதாவது வாங்க வேண்டுமா சொல்லு, நான் போய் வாங்கி வருகிறேன்என்று கேட்டு, பாட்டி கடைக்குச் சென்று பொருள் வாங்கி வந்து கொடுத்தேன். மனசுக்குள் சின்ன ஆறுதல்.

வந்ததும் தூசி மண்டிக் கிடந்த என் இருசக்கர வாகனத்தைத் துடைத்து, ஒரு மெக்கானிக்கை வரச்சொல்லி சரிசெய்தேன். இப்போது வண்டி ஈசியாகஸ்டார்ட்செய்தது. பாட்டி கடைக்குச் செல்ல வண்டியும் ரெடி ஆயிடுச்சு. மனசுக்குள் சற்று நிம்மதி.

அடுத்த நாள் அதிகாலை அலுவலகத்துக்குக்  கிளம்பினேன். போற வழியில் அந்தப் பாட்டி கடையைப் பார்த்தேன். அந்தக் கடை திறந்திருந்தது. காருக்குள் AC காற்று என் மனத்தைக் கொஞ்சம் குளிரவைத்தது.

எழுத்தில் இன்னும் வளர உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது. வாட்ஸ் ஆப் எண் -   9047078487.

news
சிறுகதை
திருமண வலியுறுத்தல் (காவல் அன்னை – 07)

 ஏப்பா சேவியர், எப்படியாவது இந்தக் குழந்தைக்காகவாவது நீ கல்யாணம் முடிக்கணும்லஎன்றாள் தாய்.

ஆமாண்ணே, அண்ணி இறந்த கவலையிலேயே காலம் கடந்திருச்சு. இனியாவது ஒரு பெண்ணைப் பார்த்து கல்யாணம் முடிச்சுக்கிறதுதான் நல்லதுஎன்றாள் தங்கை அமலி.

இப்ப அதைப்பத்தி நான் யோசிக்க முடியாதும்மா. எனக்கு மருத்துவப் பணியைச் செய்யவே நேரம் பத்தலே. காலையிலே சர்ச்சுக்குப் போய் பாத்திமா மாதாவைக் கும்பிட்டுட்டு வாரேன். வந்து குளிச்சு சாப்பிட்டுட்டு, கொஞ்சம் நேரம்தான் ஓய்வு. கீழே பேஷண்ட் வந்திட்றாங்க. அவங்களைப் பார்த்திட்டு நுங்கம்பாக்கம் போகணும். மதியம் சாப்பிட்டு கொஞ்சம் ரெஸ்ட், பிறகு ஆஸ்பத்திரி, திரும்பி வந்து கிளினிக் வேலை. இப்படி இருக்கும்போது எப்படிக் கல்யாணம் பத்தி யோசிக்கிறது?” என்றார் சேவியர்.

வேலைன்னாக்கா அப்படித்தாம்பா! நாங்களெல்லாம் தூத்துக்குடியில் பஸ் ஏறி கிராமங்களில் போய் வாத்தியார் வேலை பார்த்திட்டு திரும்பலையா? வாழ்க்கையிலே டாக்டர் வேலைங்கிறது உயிர்காக்கும் வேலைதானே?” என்றாள் தாய் அருளம்மா.

வேலையோட வேலையா ஒரு பெண்ணைப் பாருண்ணே! இல்லைன்னா தூத்துக்குடியில் நம்ப சொந்தக்காரப் பெண்ணைக் கூடப் பார்க்கலாம்லஎன்றாள் தங்கை.

சேவியர், உனக்குக் கல்யாணம் முடிஞ்சபிறகு, உன்னோட தங்கச்சிக்குக் கல்யாணம் முடிக்கணும். அது வேற இருக்கு. எல்லாத்தையும் மனசுல வெச்சு யோசிச்சுச் சீக்கிரமாய் முடிவெடுஎன்றாள் தாய் கவலையுடன்.

பார்ப்போம்மா. அவசரப்படாமல் நல்ல பெண் அமையுதான்னு பார்ப்போம். இருக்கிற நெருக்கடி நேரத்தில் நான் இதுக்காக அலைய முடியாது. நீங்கதான் போய் பார்க்கணும். நான் காலையில் அண்ணா பார்க்கில் வாக்கிங் போகக்கூட நேரம் இல்லாமல் திண்டாடுறேன்என்றார் சேவியர்.

அப்பொழுது தூத்துக்குடியிலிருந்து அருளம்மாவின் தம்பி வந்தார்.

வாப்பா ஆல்பர்ட், எப்படி இருக்கீங்க? வீட்லே எல்லாரும் சௌக்கியம்தானே?” என்றாள் அருளம்மா.

எல்லாரும் சௌக்கியம்தான் அக்கா! இங்கே என் சம்சாரத்தோட தம்பி வீட்டிலே கல்யாணம், அதுக்காக நேத்து வந்தேன். அப்படியே ஓர் எட்டு உங்களைப் பார்த்திட்டுப் போகலாம்னு இங்கே வந்தேன்என்றார் ஆல்பர்ட்.

தம்பி ஆஸ்பத்திரிக்குக் கிளம்புது. உட்காருங்க சாப்பிட்டுட்டு பேசலாம்என்றாள் அருளம்மா.

அதுசரி, சேவியர் போகட்டும். அவரோட கல்யாணம் பத்தி என்ன முடிவிலே இருக்கீங்க? பேசாமல் இருந்தா நாள் அப்படியே இருக்குமா... ஓடுதில்ல?” என்றார் ஆல்பர்ட்.

பார்க்கணும் தம்பி, சேவியர்ட்டே சொல்லிக்கிட்டே இருக்கோம். அதோட இவளுக்கொரு பையனையும் பார்க்கணும்என்றாள் அருளம்மா.

எல்லாம் டீச்சராத்தான் கேட்கிறானுங்க. இது என்ன முடிச்சிருக்கு?” என்றார் ஆல்பர்ட்.

பி.. முடிச்சிருக்காள். கரெஸ்பாண்டன்டில் பி.எட். படிக்கிறாள். இப்ப பரீட்சை முடிஞ்சிரும்என்றாள் அருளம்மா.

அப்ப பிரச்சினை இல்லே! பி.எட். டீச்சர்னா நான் நீன்னு போட்டிப் போட்டு வருவானுங்க. நம்ப தெருவிலேயே பசங்க இருக்கானுங்கஎன்று சிரித்தார் ஆல்பர்ட்.

அப்ப சாப்பிடுங்கஎன்றாள் அமலி.

(தொடரும்)

news
சிறுகதை
இடைவிடாத மருத்துவப் பணி - காவல் அன்னை (தொடர் கதை – 06)

டாக்டர், அந்தச் செல்வமரிக்கு ஹீமோதெரபி கொடுக்கணும்னு எழுதிவெச்சேன். நம்ம சகாதேவன் டாக்டர் வந்துஅது வேண்டாம், அடையாறுக்கு ரெகமண்ட் பண்ணி அனுப்பிச்சிருங்கன்னு சொல்றார். என்ன செய்யலாம்?” என்று கேட்டாள் யாழினி.

ஏன், நீங்கதானே இங்கே கேன்சர் டாக்டர். அதிலே ஏன் அவர் தலையிடுறார்னு தெரியலையே யாழினிஎன்று கேட்டார் சேவியர்.

அதுதான் எனக்கும் புரியலே! கேன்சர் கட்டி ஆப்பரேஷன் பண்ணி எடுத்தாச்சு. நம்ம இப்ப ஹீமோதெரபி போட்டால்தானே அது சரியாகும். இப்படியே எப்படி அனுப்புறது?” என்று கேட்டாள் யாழினி.

நீங்க டாக்டர் இஸ்மாயில்ட்டே சொல்ல வேண்டியதுதானே யாழினிஎன்றார் சேவியர்.

அது கம்ப்ளெயிண்ட் மாதிரி ஆயிரும். அதுக்குத்தான் நான் யோசிக்கிறேன் டாக்டர்என்றாள் யாழினி.

நீங்க போங்க, நான் சகாதேவனிடம் பேசி விவரம் கேட்டுச் சொல்றேன்என்றார் சேவியர்.

நர்சை அழைத்து, “டாக்டர் சகாதேவனை என் அறைக்கு வரச்சொல்என்றார் சேவியர்.

சிறிது நேரத்தில் சகாதேவன் வந்தார்.

வாங்க டாக்டர், இந்தச் செல்வமரிக்கு ஹீமோதெரபி வேண்டாம்னு சொன்னீங்களாமே, அது எதுக்காகன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?” என்று கேட்டார் சேவியர்.

சேவியர், என் படிப்பும் அனுபவமும் உங்களை விட நீண்டது. அதைவிட இங்கே நான் ஆரம்பத்திலிருந்து இருக்கேன். இதிலே என்னை நீங்க கிராஸ் பண்றது முறையற்ற செயல். பேசண்டுக்கு என்ன செய்யணும்னு எனக்குத் தெரியும்என்றார் டாக்டர் சகாதேவன்.

அப்படிச் சொல்றீங்களா! கேன்சர் டாக்டர் யாழினிதான் சொல்லிருக்காங்க, அதிலே நீங்க எப்படி கிராஸ் செக் பண்ண முடியும்?” என்றார் சேவியர்.

நான் எல்லாவற்றையும் கவனிப்பவன். அதனால் இந்த வியாதிக்கு ரேடியேஷன் வைக்க அடையாறு அனுப்பச் சொன்னேன். இது ஒண்ணும் கிராஸ் பண்ற காரியமில்ல, நீங்க இதைப் புரிஞ்சுக்கங்கஎன்று கோபத்துடன் போய்விட்டார் சகாதேவன்.

மீண்டும் நர்சை அழைத்து யாழினியை அழைத்து வரச்சொன்னார் டாக்டர் சேவியர்.

யாழினி நுழைந்ததும், “யாழினி அவர் அந்தம்மாவுக்கு ரேடியேஷன் இப்ப வைக்கணும்னு சொல்றார். அப்படியே விட்டுருங்கஎன்றார் சேவியர்.

பேஷண்டுக்கு இப்ப ரேடியேஷன் தேவையில்லை டாக்டர். தொடர்ந்து இருபத்தோரு நாளைக்கு ஒரு தடவை இந்த ஹீமோதெரபி குடுத்துதான் அந்தப் பேஷண்டுக்கு எல்லாச் செல்களோடும் கேன்சர் செல்லையும் அழிக்கணும். இதுதான் ட்ரீட்மெண்ட் முறைஎன்றாள் யாழினி.

நீங்க இதற்குச் சரியான ரிசல்ட் கிடைக்க பேசாமல் டாக்டர் இஸ்மாயிலிடம் பேசுங்க. அவர் பார்த்துக்குவார்என்றார் சேவியர்.

அவர் இசபெல்லா ஆஸ்பிட்டலில் நடக்கும் டாக்டர்ஸ் கான்பரென்ஸ்க்குப் போயிருக்கார் டாக்டர். வந்ததும் பார்த்துச் சொல்றேன். இப்ப பேஷண்டை அனுப்பாமல் நிறுத்திவைக்கிறேன்என்றாள் யாழினி.

இதுதான் சரியான முடிவு. அவர் வந்ததும் அவர்ட்டே பேசிட்டுப் பிறகு முடிவெடுங்க. அவருடைய டிசிசன்தான் இறுதி முடிவுஎன்றார் சேவியர் சிரித்தபடி.

இப்படி வேலை செய்றதுக்கு உங்க கிளினிக்கிலே கூட நான் டாக்டராக வேலை செய்யலாம்என்று சிரித்தபடி வெளியேறினாள் டாக்டர் யாழினி.  

(தொடரும்)

news
சிறுகதை
சென்னை வந்த சேவியர் (காவல் அன்னை – 05)

தனது அன்பு மனைவி ரோஸ்லின் மறைந்த பிறகு நியூயார்க்கில் இருப்பது நல்லதில்லை என்று டாக்டர் சேவியர் முடிவெடுத்தான். நீண்ட யோசனைக்குப் பிறகு, தன்னுடன் ஒரே அறையில் தங்கிப் படித்து டாக்டரான இஸ்மாயிலுடன் பேசினான் சேவியர்.

ஏன் சேவியர் இப்படி தனியா கிடந்து கஷ்டப்பட்றே? பேசாமல் குழந்தையுடன் சென்னை வா. எனது தொழிலதிபரான மாமனார் எனக்கு நுங்கம்பாக்கத்தில் ஆஸ்பத்திரியை எல்லா வசதிகளுடனும் கட்டித் தந்துள்ளார். அதில் வந்து நீ வேலை பார்என்றான் இஸ்மாயில்.

புதிதாய் வந்து உன்னுடன் வேலை பார்ப்பதில் எனக்குச் சந்தோசம் இஸ்மாயில். அதற்கேற்ற சூழ்நிலை எப்படி அமையும் என்றே யோசிக்கிறேன்என்றான் சேவியர்.

சூழ்நிலையை நாம்தான் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் சேவியர். நமக்கேற்ற சூழ்நிலை எது என்று யோசித்து முடிவெடுத்தால் வாழ்வில் நிம்மதியும் சமாதானமும் கிடைக்கும்என்றான் இஸ்மாயில்.

நீ சொல்றது சரிதான்என்றான் சேவியர்.

நாம் வாழும் சமுதாயத்தில் நல்லது செய்ய வேண்டுமென்று நினைத்தாலே சமூகத்தில் நமக்கு நல்ல சூழ்நிலை அமைந்துவிடும். பிறருக்காகப் பாடுபடும் டாக்டர்களான நமக்கு எப்போதும் நல்ல சூழ்நிலை அமையும் சேவியர். இதைத்தான் திருவிவிலியம், குரான் போன்ற வழிகாட்டும் நூல்கள் நமக்கு எடுத்துச் சொல்கின்றனஎன்றான் இஸ்மாயில்.

எனது அம்மா, தங்கையை முதலில் சென்னைக்கு வரவழைக்கணும். புதிதாக வீடு பிடித்துக் குடியேற வேண்டும்என்றான் சேவியர்.

அதைப் பற்றி நீ யோசிக்காதே! என் மனைவியும் என்னுடன்தான் இங்கே டாக்டராகப் பணியாற்றுகிறாள். அவளிடம் சொல்லிவிட்டால் எல்லாம் சிறப்பாக முடிந்துவிடும். பக்கத்தில் கோடம்பாக்கத்திலேயே உன் தம்பி, தங்கச்சி போய் வரக்கூடிய ஒரு பெரிய வீட்டைப் பிடிக்கச் சொல்லி விடுகிறேன். அருகில் உங்க சர்ச் இருக்கும்படி பார்க்கச் சொல்கிறேன்; கவலைப்படாமல் வந்து சேருஎன்றான் இஸ்மாயில்.

இஸ்மாயில் அறிவுரைப்படி தனது அம்மா, தங்கச்சியைச் சென்னைக்கு வரவழைத்தான் சேவியர். அவனும் சென்னை வந்து சேர்ந்தான். கோடம்பாக்கம் இரஜினியுடைய இராகவேந்திரா கல்யாண மண்டபத்தை அடுத்த வீதியிலே பெரிய பங்களா கிடைத்தது. கீழே கிளினிக்கையும், மேலே குடியிருக்கும் இல்லமாகவும் அமைத்துக் கொண்டார்கள்.

அருகிலே தினமும் அருளம்மா, அமலி சென்று வர கோடம்பாக்கம் பாத்திமா ஆலயம் நல்லதொரு துணையாக இவர்களுக்கு அமைந்தது.

சேவியரின் அம்மாவும் தங்கையும் குழந்தையை வளர்த்து வந்தார்கள். சேவியர் முற்பகல் 8 முதல் 10 வரை கீழே கிளினிக்கில் தேடி வரும் நோயாளிகளைப் பார்த்து விட்டு, நுங்கம்பாக்கம் செல்வான். மாலை 6 முதல் 9 வரை திரும்பவும் கிளினிக்கில் இருப்பான். தினமும் பாத்திமா ஆலயம் சென்று காலைத் திருப்பலியில் சேவியர் விசுவாசமுடன் கலந்துகொள்வான்.

அமெரிக்காவில் வாழ்ந்த வாழ்க்கையில் மறைந்த நாள்களையும் மனைவி ரோஸ்லினையும் எண்ணி சேவியர் வருந்துவதுண்டு. ஒரு கதவு மூடினால் மற்றொரு கதவு நமக்குத் திறந்து வழிகாட்டும் என்பதுபோல் இப்போது இஸ்மாயில் மூலம் சேவியருக்கு வாழ்வும் வளமும் வந்து சேர்ந்துள்ளது.

news
சிறுகதை
புதிய வாழ்வு (காவல் அன்னை (தொடர் கதை) - 04 )

தூத்துக்குடி தோமையார்புரத்தைச் சேர்ந்த குடும்பம் செபஸ்தியான் குடும்பம். இவர் தலைமையாசிரியராய் இருந்து ஓய்வு பெற்றார். தனது மகன் சேவியர், மகள் அமலியை நன்கு படிக்க வைத்தார். எதிர்பாராமல் செபஸ்தியான் ஹார்ட் அட்டாக்கில் மறைந்துவிட்டார்.

கணவர் மறைந்தபின் ஆசிரியையாய் இருந்து ஓய்வு பெற்ற மனைவி அருளம்மா பிள்ளைகளின் படிப்பில் கவனம் செலுத்தினாள்.

மகன் சேவியர் மதுரையில் படித்து டாக்டரானான். மகள் அமலி பி.. படிப்போடு நிறுத்திக்கொண்டாள்.

தனது மகன் டாக்டர் சேவியருக்குப் பெண் பார்த்தாள் அருளம்மா. தனது உறவினர் வீட்டுப்பெண் ரோஸ்லின் அமெரிக்காவில் சாஃப்ட்வேரில் பணிபுரிவதை அறிந்து, அவர்கள் வீட்டிற்குச் சென்று பெண் கேட்டாள் அருளம்மா.

உங்க பையன் இந்தியாவில் டாக்டராக இருக்கிறார். எங்க மகள் அமெரிக்காவில் வேலை பார்க்கிறாள். இந்தச் சம்பந்தம் ஒத்து வருமாங்க?” என்றார்கள் ரோஸ்லின் பெற்றோர்கள்.

சேவியர் நல்ல குடும்பத்தைச் சேர்ந்த விசுவாசம் மிக்க பெண்ணைத்தான் விரும்புறான். மேலும் அவன் அமெரிக்காவுக்கு வேலைக்குச் சென்றுவிடுவான்என்றாள் தாய் அருளம்மா.

உங்க பையன் அமெரிக்காவுக்குப் போறதுன்னாக்க நாங்க பெண் தாரோம். ஆனால், எங்க மகள் இங்கே வர விரும்பமாட்டாள். அதைப் பார்த்துக்கங்கஎன்றார் ரோஸ்லின் தந்தை.

கட்டாயம் என் பையன் சேவியர் அமெரிக்காவுக்குப் போய்விடுவான். அவனுக்கு உங்க பெண்ணைக் கட்டாயம் பிடிக்கும். நான் படத்தைப் பார்த்திட்டேன்லஎன்றாள் அருளம்மா.

அப்படின்னா முடிச்சிருவோம். அடுத்த மாதம் எங்க மகளை வரச்சொல்றோம். நிச்சயம் பண்ணிட்டு உடனேயே கல்யாணத்தைச் சிறப்பாய் முடிச்சிருவோம்என்றார் ரோஸ்லின் தந்தை.

தூத்துக்குடி கடற்கரையில் அமைந்த பனிமய மாதா பேராலயத்தில் சிறப்பாகத் திருமணம் முடிந்தது. திருமணம் முடிந்த ஒரு வாரத்திலேயே சேவியர், ரோஸ்லின் இருவரும் அமெரிக்கா கிளம்பிவிட்டனர். அமெரிக்கா சென்றதும் நியூயார்க்கில் ஒரு மருத்துவமனையில் சேர்ந்து விட்டான் சேவியர். அங்கே இந்திய டாக்டர்களுக்கு நல்ல வரவேற்பு உண்டு என்பதால், அவனது முயற்சி நிறைவேறிற்று.

திருமணம் முடிந்த தம்பதியர் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். ரோஸ்லின் நியூயார்க்கிலிருந்து நியூ ஜெர்சிக்கு இடையே உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வந்தாள். எனவே, தினமும் காரில் வேலைக்குப் போய் திரும்பிவந்து விடுவாள். அடுத்த ஆண்டே ரோஸ்லினுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துவிட்டது.

பிறந்த குழந்தையுடன் தூத்துக்குடி வந்தார்கள் தம்பதியினர். பனிமய மாதா கோவிலில் வைத்து குழந்தைக்குவிமலாஎன்று ஞானஸ்நானப் பெயர் வைத்தார்கள்.

உறவினர்களைச் சந்தித்து விட்டு மீண்டும் அமெரிக்கா சென்றனர் சேவியர்-ரோஸ்லின் தம்பதியினர். மிகவும் மகிழ்ச்சியாக நாள்கள் கடந்தபோது, ஒருநாள் சேவியரின் செல் அலறியது.

சார், உங்க மனைவி கார் ஓட்டிச் சென்றபோது ஆக்சிடெண்டாகி ஸ்பாட்லேயே இறந்துட்டாங்க. அவங்க பின்னாடி காரில் போன ஒருவர் எங்களுக்குத் தெரிவித்தார். அதை உங்களுக்குச் சொல்கிறோம்என்று ஒரு சாஃப்ட்வேர்க்கார தமிழர் செய்தியைச் சொன்னார். டாக்டர் சேவியருக்கு இடி விழுந்தது போல் ஆகி விட்டது.

வேலைக்குப் போக வேண்டாம், வீட்டிலேயே இருந்து பிள்ளையைப் பார்ன்னு சொன்னேனே, கேட்கமாட்டேன்னுட்டாளே, எல்லாம் பணத்தாசைஎன்று அழுதான் சேவியர். தாயில்லாத சிறு குழந்தையும் அழுதது. விதியை யாரால் மாற்ற முடியும்? இறைவனின் திட்டத்தை யாராலும் மாற்ற முடியாது.

(தொடரும்)

news
சிறுகதை
நவீனத்து(த)வம்! (சிறுகதை)

நாளை ஜெபமணி அம்மாவுக்கு ஐம்பத்து ஐந்தாவது பிறந்த நாள். எவ்வளவு வேலையாக இருந்தாலும், அத்தனையையும் ஒதுக்கி வைத்து விட்டுத் தன் அம்மாவின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் பெங்களூருவிலிருந்து தங்கள் சொந்த ஊருக்கு வந்து விடுவார்கள் மகனும் மருமகளும்.

அன்றும் அப்படித்தான்! அப்போதுதான் ஊரிலிருந்து வந்திருந்த மருமகள் ஷர்மிளா, “அத்தை! எப்படி இருக்கீங்க? வயது ஏற ஏறஉங்களுக்கு இளமை திரும்புதே!… உங்கள் இளமையின் இரகசியம் என்னவோ?” என்று கேட்டுக்கொண்டேஉணவு மேசையில் தயாராக இருந்த காபியைத் தன் கணவரிடம் கொடுத்துவிட்டு, தான் மட்டும் ஃப்ளாஸ்கில் இருந்த சூடான வெந்நீரை ஒரு குவளையில் ஊற்றிக் குடிக்க ஆரம்பித்தாள்.

இதைக் கவனித்த ஜெபமணி அம்மாள், “ஏம்மா ஷர்மிகாபி குடிக்கலையா?” என்றாள்.

எனக்கு வேண்டாம் அத்தைஎன்று கூறிய படியேமேசையில் இருந்த மற்றப் பாத்திரங்களின் மூடியை ஒவ்வொன்றாகத் திறந்தாள் ஷர்மி.

அத்தை, காலை டிபனுக்குத் தோசை, சட்னி, கேசரியா?” என்றாள்.

ஆமாண்டிமா! கேசரி உங்க ரெண்டு பேருக்கும் பிடித்த இனிப்பாச்சேன்னுதான்...”

சாரி அத்தை, நான் உங்ககிட்ட முதல்லயே சொல்லியிருக்கணும், மறந்துட்டேன்”… என்று சொன்ன ஷர்மி மேலும் தொடர்ந்தாள்...

அத்தை,… சென்ற மாதம் என்னைச் சிக்கன்குன்யா கடுமையாகத் தாக்கியது அல்லவா? அதன் பின்விளைவாக எனக்கு ஏற்பட்ட கை, கால், மூட்டு வலி மற்றும் ஜாயின்ட் பெயினுக்கு மருத்துவர் தொடர்ந்து சில மாதங்கள் கறி, மீன், முட்டை, கோழி போன்ற புரதச் சத்துமிக்க உணவுகளைக் கண்டிப்பாக உணவில் சேர்த்துக்கொள்ளச் சொல்லிட்டார். அதனால இது தவக்காலமாக இருந்தாலும், நான் இத்தகைய உணவுகளை ஒதுக்க முடியாமப் போயிடுச்சு! அதனால அதுக்குப் பதிலா நான் ரொம்ப விரும்பிக் குடிக்கிற காபியை நாற்பது நாள்களுக்குக் குடிக்கக்கூடாது என்றும், இனிப்பு வகைகளைத் தொடவே கூடாதுன்னும் முடிவெடுத்தேன். பிடித்ததைச் சாப்பிடாமல் ஒதுக்குவது மட்டுமல்ல தவம்! பிடிக்காததைச் சாப்பிடுவதும் தவ ஒறுத்தல்தான். அது மட்டுமல்ல அத்தை, தவக்காலச் சிலுவைப்பாதையையும் நான் முழுக்க முழந்தாள்படியிட்டே செய்து முடிப்பேன். ஆனால், இப்போது கால்மூட்டு வலியால் அமர்ந்துகொண்டே செபிக்க மனம் ஒப்பவில்லை; அதனால வெள்ளிக்கிழமை மட்டுமே செய்யுற சிலுவைப்பாதையைத் தினமும் செய்யத் தீர்மானித்திருக்கிறேன்.

அப்புறம் பொதுவா தவக்காலம் முழுவதும் நான் தவறாம காலைத் திருப்பலியில் கலந்து கொள்வது என்னோட வழக்கம்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்.… என்னோட உடம்பு பலவீனத்தால அதுவும் முடியல.…சுத்தபோசனம்,… ஒருசந்தி முழுக்க முழுக்க அனுசரிக்க முடியலை. எனவே, இதுக்கெல்லாம் பரிகாரமாதொலைக்காட்சி, சீரியல், சினிமா, பொழுதுபோக்கு எல்லாவற்றையும் கொஞ்ச நாள் ஒதுக்கி வைக்க முடிவு செஞ்சிருக்கிற காலம்தான் என்னோட தவக்காலம்.

என்னால காலைத் திருப்பலிக்குப் போக முடியலையே தவிர, தினமும் மாலைத் திருப்பலிகளில் கலந்துகொள்கிறேன். உண்ணாநோன்பு இருக்க முடிவதில்லை; அதற்குப் பதிலாக ஒரு மூட்டை அரிசியைக் கருணை இல்லத்திற்குக் கொடுத்துவிட்டேன்.

அப்புறம் மணிக்கணக்காநண்பர்களோட  அலைப்பேசியில் அரட்டை அடிக்க ரொம்பப் பிடிக்கும்;… இப்ப தேவையில்லா அரட்டைகளுக்குநோசொல்லியாச்சு!

எல்லாத்துக்கும் மேல குடும்பப் பிரச்சினையால ஐந்து வருடமா பேசாம இருந்த என் தம்பிகிட்ட நானே முன்வந்து பேசி சமாதானம் பண்ணி உறவைப் புதுப்பிச்சுகிட்டேன்என்றெல்லாம் அவள் சொல்லச் சொல்ல, எப்பொழுதுமேதன் மருமகள் ஷர்மிளாவின் நடை, உடை, பாவனைகளில் இருக்கும் நவீனத்துவத்தைக் கண்டு இரசிக்கும் ஜெபமணி அம்மாள்இப்போது அவள் ஆன்மிகத்திலிருக்கும் நவீனத்துவத்தைக் கண்டு ஆச்சரியத்தில் உறைந்து போனாள்!