காலை 5:30 மணி. ஜோசப் தான் பயணித்த புறநகர் இரயிலில் குளிர் காற்று பலமாக வீசியதால் உடலில் சற்றே நடுக்கம் ஏற்படுவதை உணர்ந்தார். 25 ஆண்டுகளாக, அதிகாலையில் வேலைக்குச் செல்ல, பழகிப்போன காற்று என்றாலும், வயதாக, வயதாக உடம்பில் மாற்றங்கள். அவருக்கு ஓட்டுநர் வேலை. அந்த வாரம், சென்னையிலிருந்து பாண்டிச்சேரிக்கு, பாயிண்ட்-டு-பாயிண்ட் பேருந்தை ஓட்டுவதற்காக வீட்டிலிருந்து பேருந்து நிலையம்வரை இரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார்.
தனது
அருகில் ஒரு வாலிபப் பையன் அமர்ந்து இருந்தான். காதில் ஹெட்போன்களைச் சொருகி, தனது
ஸ்மார்ட்போனில் பாடல்களைக் கேட்டு இலயித்து இருந்தான். இரயிலின் இரைச்சல் தவிர்க்கவும்,
மிக முக்கியமாகத் தனது தலையில் ஓடும் எண்ணங்களை அமைதிப்படுத்தவும், தனக்கும் ஒரு ஸ்மார்ட்போன்
இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஜோசப் நினைத்தாலும்,
அவரது மனம் அதற்கு ஒருநாளும் அனுமதி கொடுத்ததில்லை. அவர் தான் பயன்படுத்திய தனது பழைய பொத்தான் கைப்பேசியைத் தன் சட்டைப் பையிலிருந்து
எடுத்துப் பார்த்தார். அது தன் வயதைப் போலவே தேய்ந்து போயிருந்தது. ‘0’ பொத்தான் கிட்டத்தட்ட
தேய்ந்து கீழே விழும் நிலையில் இருப்பதைக் கவனித்தார். கடந்த பத்து ஆண்டுகளாக அந்தத் தொலைப்பேசி தனக்கு எவ்வளவு உண்மையாக
இருந்திருக்கிறது என்று பெருமைப்பட்டுக் கொண்டார்.
இரயிலிலிருந்து
இறங்கிய பிறகு, ஜோசப் டிப்போவிற்கு நடந்து
சென்று, தனது பேருந்தில் ஏறி, தலையிலும் முதுகிலும் வலி நிவாரணி மருந்தைத் தடவினார். வயதாக வேலை செய்ய
மனம் விரும்பினாலும், உடல் ஒத்துழைக்க மறுக்கிறதே! வெயில், மழை என்ஜின் வெப்பம் என எல்லாச்
சூழலிலும், உழைத்துத் தேய்ந்துபோன உடம்பு அல்லவா!
ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டு, தனது ஷிப்ட்டைத் தொடங்கினார். உடம்பில் சோர்வு; ஆனால்,
வீட்டில் உள்ள தனது மூன்று மகள்களைக் கரையேத்தணுமே! படிப்பு, திருமணம் எனச் செலவுகள்
ஏராளம் இருக்கிறதே! தன் மூன்று மகள்களையும் நினைத்தவுடன், உடல் பலவீனம் கரைந்து, பேருந்து நான்காம் கியரில் நிதானமாக வேகம் எடுத்தது. அவர்கள் மேல் அவ்வளவு பாசம்.
இரவு
வீட்டிற்கு வந்தபோது இரண்டாவது மகள், “அப்பா, எனக்கு IT கம்பெனியில்
வேலை கிடைச்சிடுச்சு” என்றாள். அதைக் கேட்டு அவர் மகிழ்ந்தவர், “சந்தோசம்டா” என்றார். எல்லாரும்
மகிழ்ச்சியடைந்தனர். மூத்தவள் யு.பி.எஸ்.சி. தேர்வுகளுக்குத் தயாராகி வந்தாள். ஆனால்,
தன் வாழ்க்கையில் கடினமான பாதையைத் தேர்ந்தெடுத்து
விட்டோமோ எனத் திடீரென்று அவளுக்குள் ஒரு சிந்தனை. ஆனாலும் ஒரு கணம் சகோதரியின் பயணம்
இப்படி எளிதாக அமைந்துவிட்டதே என்று மகிழ்ந்தாள்.
இரவு
உணவின்போது இரண்டாம் மகள் தனது சம்பள விவரங்களைப்
பகிர்ந்துகொண்டாள். ‘முதல் வேலையில் இவ்வளவு சம்பளமா?’ எனக் கேட்டு அம்மா வியந்தாள்.
விளையாட்டாகத் தன் தந்தையைக் கிண்டல் செய்த மகள், “ஒரு மாதத்தில் நான் சம்பாதிக்கும்
அளவுக்கு, அப்பா ஐந்து மாதங்கள் வேலை செய்ய வேண்டும்” என்று
கூறிச் சிரித்தாள். உணர்ச்சியற்ற இந்தக் கருத்துக்கு அவளுடைய அம்மா உடனே அவளைக்
கண்டித்தாள்; ஆனால், ஜோசப் அதை எளிதாக எடுத்துக்கொண்டு, “ஏன் அவளைத் திட்டுற?” என மனைவியிடம்
கூறினார். மூத்தவள் தன் தந்தையின் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தைக் கவனித்து, அவரைக்
கவலையுடன் பார்த்தாள். தன் தந்தை இந்தக் குடும்பத்திற்காக எவ்வளவு தியாகம் செய்திருக்கிறார்
என்பதை அவள் புரிந்து இருந்தாள்.
இரண்டாவது
மகள் அதோடு நிற்கவில்லை. “அப்பா, நீங்க ரொம்பவே உழைச்சிருக்கீங்க, ஆனா உங்க வேலையில
எந்த முன்னேற்றமும் இல்லை. வாழ்க்கையில சாதிக்கக் கஷ்டப்பட்டு உழைப்பது எவ்வளவு முக்கியம்னு
உங்க வாழ்க்கை சொல்லுது. ஆனா இப்ப எல்லாம் கஷ்டப்பட்டு உழைக்கிறது முக்கியம் இல்லைப்பா.
ஸ்மார்ட்டா இருக்கணும்ப்பா. சீக்கிரம் நிறைய காசு சம்பாதிக்கணும்” என மகிழ்ச்சியின் உச்சத்தில் வார்த்தைகளை அள்ளி வீசிக்
கொண்டிருந்தாள்.
இந்தமுறை
அவரால் அவளது வார்த்தைகளைத் தாங்கிக்கவே முடியவில்லை. அவள் கூறிய வார்த்தைகள் அவரைக்
கூனிக் குறுக வைத்தன. ‘இவ்வளவு வருஷமா இரவும் பகலும் கஷ்டப்பட்டு உழைச்சு என்ன
பயன்? காலம் முழுவதும் ஒரே வேலை’ என மனசுக்குள்ளயே சொல்லிக் கொண்டார்.
‘இப்பவெல்லாம் கடின வேலை முக்கியம் இல்லைப்பா. ஸ்மார்ட்டா இருக்கணும்ப்பா’ என மகள் கூறினது அவர் காதில் ஒலித்துகொண்டே இருந்தது. நீண்ட நேர வேலை, களைப்பு, உடல் வலி... அவரைப் படுக்கைக்கு
அழைத்துச் செல்ல, அதே சிந்தனையோடு கண்ணயர்ந்து
உறங்கினார்.
மறுநாள்
காலை மூத்த மகள் விழித்தெழுந்து, அப்பா வேலைக்குப் போயிட்டாரான்னு பார்க்கச் சென்றாள்.
ஆனால், அவர் இன்னும் படுத்திருப்பதைக் கவனித்தாள்.
அவரை நோக்கி நடந்து வந்தப்போ மேஜையில மோதி தடுமாற
அவருடைய பழைய பட்டன் போன் தரையில் விழ,
போன்ல இருந்த ‘0’ பட்டன் கழண்டு கீழே விழுந்தது. அதைக் கையில்
எடுத்துவிட்டு, “அப்பா எழுந்திரிங்கப்பா, வேலைக்கு போகணும்ல” என அப்பாவை எழுப்பினாள். அவர் எழுந்திருக்கவே இல்லை.
மூத்த
மகள் உறைந்துபோய் நின்றாள். இந்த முறை அவள் மீண்டும் சத்தமாக “அப்பா!” என்று கூப்பிட்டாள்.
ஆனால், எந்தப் பதிலும் இல்லை. சத்தம் கேட்டு அம்மாவும், மற்ற இரண்டு மகள்களும் ஓடிவர,
அவர் அசையாமல் படுத்திருப்பதைக் கண்டு உறைந்தார்கள். அவரோடு போட்டிப் போட்டு உழைத்த
அவரது மூச்சுக்காற்றும் அவரோடு சேர்ந்து நிரந்தரமாக உறங்கிப்போயிருந்தது. குடும்பம் உடைந்து போயிருந்தது.
குற்ற உணர்ச்சியில் மூழ்கியிருந்த இரண்டாவது மகளால் அழுகையை நிறுத்தவே முடியவில்லை.
முந்தைய இரவில் அவள் பேசிய வார்த்தைகள் அவள் மனத்தில் எதிரொலித்தன.
எல்லாக்
காரியங்களும் முடிந்தன. இரண்டாவது மகள் குற்ற
உணர்வோடு தன் அப்பாவின் அறைக்குச் சென்று, அவரது படுக்கையைக் கைகளால் மென்மையாகத் தடவி,
அப்பா இருப்பதைப் போல நினைத்து “அப்பா” என்று அழைத்தாள். ஒரு பழைய டைரி
அவர் தலையணைக்கு அடியில் இருப்பதைக் கண்டாள். அதைத் திறந்தாள். அதில் பில்கள்,
குடும்பக் கணக்குகள் மற்றும் மூன்று மகள்களுக்கும் திருமணச் செலவுக்காக அவர் முன்பே
திட்டமிட்டுப் போடப்பட்ட சிட் ஃபண்ட் விவரங்கள், அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க
வாங்கி வைத்திருக்கும் தங்க பத்திரங்களின் விவரங்கள், தனது தாய்க்கு மருத்துவக் காப்பீடு,
வைப்பு நிதியின் வட்டியில் மாதாந்திர தனிப்பட்ட
உதவித்தொகை போன்ற பல விவரங்கள். படித்த அவள் முகத்தில் இருந்து வழிந்த கண்ணீர் டைரியின் பக்கங்களை நனைத்தது. அதை தன் மார்பில்
வைத்து அணைத்துக்கொண்டு விம்மி விம்மி அழுதாள்.
வீட்டின்
காலிங் பெல் ஒலித்தது. அறையை விட்டு வெளியே வந்தாள். அலுவலகத்திலிருந்து அப்பாவுடைய
நண்பர் வந்திருந்தார். அம்மாவிடம் காசோலை ஒன்றைக்
கொடுத்து, “இது ஜோசப் போட்டிருந்த அவரது உயிர்
காப்பீட்டிலிருந்து பெற்ற பணம். நான் இறந்த பிறகு இந்தப் பணத்தை வாங்கி வீட்டில் கொடுத்துடு
நண்பா என
என்னிடம் கூறியிருந்தார். தங்கமான மனுஷன்மா! குடும்பம்தான் எப்போதுமே அவரது
சிந்தனைம்மா. அனாவசியமான செலவு எதையும் செய்ய மாட்டார். தன் குடும்பத்துக்காகச் சேமிப்பு,
சேமிப்பு. அதுதான் எப்போதுமே அவரது சிந்தனை. உங்களுக்காக ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்துச் செய்தார். அவரு
இறக்கலம்மா. நீங்க சிரமப்படக்கூடாதுன்னு எல்லாத்தையும்
உங்களுக்காகச் செய்து வைத்திருக்கிறார். அவரது
நினைவுகள் உங்களோடு எப்போதும் இருக்கும்படி
செய்துவிட்டு போயிருக்கிறார்” எனக் கூறிவிட்டு சென்றார்.
இதைக்
கேட்ட இரண்டாவது மகள் தன் கையில் வைத்திருந்த அழுக்கடைந்து, ஆங்காங்கே கிழிந்து போயிருந்த
அந்த அப்பாவின் டைரியைக் கட்டி அணைத்துக்கொண்டு
ஓடி அப்பாவின் அறைக்குள் போய் கதவைத் தாளிட்டு
‘ஓ’வெனக் கதறி அழுதாள். “அப்பா, என்னை மன்னிச்சுடுங்க அப்பா.
நீங்கதாப்பா ஸ்மார்ட்! எப்போதும் சூப்பர் ஸ்மார்ட்பா! திரும்பி உயிரோட வாங்கப்பா. நான்
உங்களைக் கட்டி பிடிச்சு ‘நீங்க ஸ்மார்ட்’னு
சொல்லணும்பா” என்று கதறிய அவள் கூக்குரல் விண்ணை எட்டியது.
தேய்ந்து
போன, அந்தப் பழைய பொத்தான் போன் அவரது அறையின் மேசையில் ஓர் அழகான கதாபாத்திரமாய்,
அவர் பெருமை சொல்லும் காட்சிப் பொருளாய் அலங்கரித்துக்
கொண்டிருந்தது.
“என்ன யாழினி, இவ்வளவு லேட்டா வாரே, எங்கே நீ போயிட்டு வாரே?” என்றார் தந்தை கருணாகரன்.
“ஆமா யாழினி, நீ பாட்டுக்கு ஊர்
சுத்திட்டு வாறியா?” என்றாள் தாய் இந்திரா.
“ஏன், நான் டாக்டர், பல கிளினிக் போவேன்’ என்றாள்
யாழினி.
“இப்ப எங்கே போயிட்டு வாரே?” என்றார் தந்தை.
“டாக்டர் சேவியரோட கிளினிக் போயிட்டு வாரேன்.”
“சேவியரோட கிளினிக் போனியா? அவரோட வீட்டிற்குப் போனியா? அதை இப்பச் சொல்லு!” என்றார் தந்தை.
“அவரோட கிளினிக் போயிட்டு, அப்படியே மாடியிலே அவங்க வீட்டிற்கும் போயிட்டுத்தான் வரேன்” என்றாள் சிரித்தபடி யாழினி.
“ஏன் அவங்க வீட்டிற்குப் போறே? சேவியர் மனைவியைப் பறிகொடுத்த டாக்டர். அவரை ஆஸ்பத்திரியில் பார்த்த! அப்புறம் எதுக்காக வீட்டிற்குப் போகணும்?” என்றார் தந்தை.
“அவரோட கிளினிக்கில் இரண்டு கேன்சர் பேசண்ட் வந்திருக்கிறதாகக் கிளினிக் ரிஷப்சனிஸ்ட் போன் பண்ணினாள். அதனால் அங்கே போய் பார்த்து பேஷண்டுகளைச் செக் அப் பண்ணி மாத்திரை மருந்து எழுதிக் குடுத்துட்டு வாரேன்” என்றாள் யாழினி.
“ஏன் அவங்களை உங்க ஆஸ்பத்திரிக்கு வரச் சொல்ல வேண்டியதுதானே?” என்றார் தந்தை.
“அப்படியெல்லாம் பேஷண்டை அலைய வைக்க முடியாதுப்பா. உங்களுக்கு இப்ப என்ன பிரச்சினை? அதை வெளிப்படையாப் பேசுங்க” என்றாள் யாழினி.
“ஏங்க, டாக்டர்னா பல கிளினிக் போயிட்டு
வருவாங்க. இதைப் போய் பெரிசா கிண்டி கிழங்கெடுக்குறீங்களே? பாவம் மகள் வேலை முடிஞ்சு களைப்பாய் வந்திருக்காள். நீ போய் ரெஸ்ட்
எடும்மா யாழினி, இந்த மனுஷன் எதையாவது குழப்புவார், அதைப் பற்றிக் கவலைப்படாதே” என்றாள்
தாய் இந்திரா.
யாழினி
வீட்டின் உள் அறைக்குள் நுழைந்துவிட்டாள்.
“ஏய் அறிவில்லாதவளே, யாழினி அந்த டாக்டர் வீட்டுக்கு அடிக்கடிப் போவாள் போலத் தெரியுது. நாம் சொல்ற பையனை விட்டுட்டு யாழினி பாதை மாறி போயிறக் கூடாதுன்னுதான் நான் இப்படிப் பேசினேன்”
என்றார் கருணாகரன்.
“பாதை மாறிப்போனால் நாம் திசை திருப்பி கொண்டாருவோம். இதுக்கெதுக்கு வீண் வாதம்? சும்மா உங்க வேலையைப் பாருங்க, போய் ஒரு டம்ளரில் விஸ்கியை ஊத்தி உள்ளே தள்ளிட்டு சாப்பிட்டுப் படுங்க” என்று சிரித்தாள் இந்திரா.
“இப்படி என்னைப் படுக்கப்போட்டே உன்னோட காரியத்தை முடிச்சிருவியே. எப்படியும் யாழினி என்னோட தங்கை மகனைக் கட்டித்தான் தீரனும். நான் இதிலே பின்வாங்க மாட்டேன் இந்திரா” என்று பேசினார் கருணாகரன்.
“காலம் போகப் போக எது நடக்கும்னு நாம் சொல்ல முடியாது. யாழினிக்கு யார்னு அந்தப் படைச்சவன் எழுதி இருப்பான். அதுதான் நடக்கும். வீணாய் வம்பு பண்ணாதே, போய் பேசாமல் படு’ என்றாள் இந்திரா.
‘ஒரு முடிவுக்கும் நீ ஒத்துவர மாட்டியே
இந்திரா. என்னோட தங்கை மகனைக் கட்டலைன்னா, உன் அண்ணன் பையனைக் கட்டிவை. அவனும் நிறைய படிச்சு பெரிய வேலையில் இருக்கான்ல’ என்றார்
கருணாகரன்.
“அதெல்லாம் யாழினிட்டே எடுபடாது. அவன் காலேஜ்லே வேலை செய்றான். ஏதோ புரபசர் வேலை பார்க்கிறதாச் சொல்றாங்க. டாக்டர் போயி அவனைக் கட்டுவாளா? கொஞ்சமாய் மூளையைப் பயன்படுத்தி யோசிய்யா. சும்மா கண்டதைப் போட்டு குழப்பி, என்னையும் குழப்பிவிடாதே” என்றாள்
இந்திரா.
“எக்கேடும் கெட்டுப் போங்க, நான் போய் படுக்கிறேன்” என்று
கோபமாய் போனார் கருணாகரன்.
“வாங்க வாங்க... எல்லாரும் வாங்க” என்று அன்போடு வரவேற்றார் ஆல்பர்ட்.
“பரவாயில்லே தம்பி, எங்க வீட்டை நல்லா சுத்தம் பண்ணி வெச்சிருக்கீங்க” என்றாள்
அருளம்மா.
“மாமா, நீங்க செய்த உதவி பெரிசு! வீடு ஆளில்லாமல் மோசமாய்க் கிடந்திருக்கும். நீங்களும் அத்தையும் இந்த வீட்டை ஒழுங்குபடுத்தி, நாங்க வந்து தங்குவதற்கு ஏற்றதாய் சரிபண்ணிட்டீங்க” என்றாள்
அமலி.
“ரொம்ப தேங்க்ஸ் மாமா, அத்தை” என்றார் சேவியர். ஆல்பர்ட்டின் மகளும் மகனும் மிகவும் பணிவோடு தோஸ்திரம் சொல்லிக்கொண்டனர்.
“அக்கா, நீங்க இருக்கிற நாளிலே எங்க வீட்லே தான் நீங்க சாப்பிடணும்” என்றார்
ஆல்பர்ட்.
“எதுக்குத் தம்பி கஷ்டம். ஏதாவது சாப்பிட சமைச்சுக்கிறோம்” என்று
சிரித்தாள் அருளம்மா.
“நாங்க என்ன நாத்தனாரே, உங்களுக்கு வேண்டாதவங்களா? அதெல்லாம் சொல்லப்படாது. வேளா வேளக்கி எங்க வீட்லேதான் நீங்க சாப்பிடணும்” என்றாள்
ஆல்பர்ட் மனைவி விக்டோரியா.
“சேவியருக்கு மட்டும் சாப்பாட்டை இங்கே கொண்டு வந்து தாரோம். நீங்க ரெண்டு பேரும் எங்க வீட்லே வந்து சாப்பிட்டுக்கங்க” என்றார்
ஆல்பர்ட்.
“சரி தம்பி, உங்க ஆசையை நான் கெடுக்க விரும்பலை. சேவியருக்கு மட்டும் இங்க கொண்டு வந்து வச்சுருங்க, நாங்க ரெண்டு பேரும் உங்க வீட்ல சாப்பிட்டு இருக்கோம். சரிதானே நாத்தனாரே...” என்றாள் அருளம்மா
“நாளைக்குப் பனிமய மாதா தங்கத்தேர் சுத்தி வரும், எல்லாரும் கோவிலுக்குப் போவோம், பூசைப் பார்ப்போம். இதுதானே நம்முடைய கடமை” என்றார் ஆல்பர்ட்
“பனிமய மாதானா சேவியருக்கு உசுரு! சின்னப் பிள்ளையிலிருந்து பீடச்சிறுவனாக இருந்தார்லே” என்றாள்
அருளம்மா.
“ரொம்ப சரியா சொன்னீங்க அக்கா! அதோட இன்னைக்குச் சாயந்தரம் நம்ப தெருவிலே ஒரு பெண்ணுக்கு மாப்பிள்ளை பாக்குறாங்க. அந்தப் பெண்ணை நீங்க வந்து ஓர் எட்டு பார்த்துவிட்டால் நல்லது” என்றார் ஆல்பர்ட்.
“உங்க விருப்பப்படி போவோம்” என்றார் அருளம்மா.
“ஏன்மா, நம்ம வந்திருக்கிறது பனிமய மாதாவோட தேர்த் திருவிழாவுக்குத்தானே? இப்ப போய் பெண்ணைப் பார்க்கிறோம். அது என்ன, எனக்குச் சரியா படலை” என்றார் டாக்டர் சேவியர்.
“இதனால என்ன இருக்கு டாக்டர்! நான் உங்களைப் பத்திச் சொல்லி வச்சிருக்கேன். எல்லா விவரத்தையும் கேட்டவங்க, ரொம்ப எதிர்பார்த்து காத்து இருக்காங்க. இப்பப் பாக்குறது தப்பில்ல, பிடிச்சா சொல்லுங்க... முடிப்போம். இல்லனா விட்ரலாம்”
என்றாள் மாமா.
“பெண் என்ன படிச்சிருக்குத் தம்பி?” என்றாள் அருளம்மா.
“எம்.எஸ்.சி., பி.எட். படிச்சிட்டு
நம்ம செயிண்ட் மேரிஸ் காலேஜ்ல வேலை செய்யுது, உங்க குடும்பத்தைப் பத்தி அவங்களுக்கு நல்லாவே தெரியும் அக்கா” என்றான் ஆல்பர்ட்
“நான் வரலை அம்மா, தங்கச்சியைப் பார்க்கச் சொல்லுங்க”
என்றார் டாக்டர் சேவியர்.
“தங்கத் தேர தரிசித்த பிறகு பெண்ணைப் பார்க்கலாம்ல? இதுல என்ன இருக்கு” என்றாள் தாய்.
“சரிம்மா... உங்க விருப்பப்படி பார்ப்போம்... சரி தானே!” என்றார் அமைதியாய் சேவியர்.
மறுநாள் மாதா
கோவில் திருப்பலியைக் கண்ட பிறகு, அவர்கள் தங்கத்தேர் வலம் வந்ததைத் தரிசித்தார்கள். பிறகு ஆல்பர்ட் சென்னை வீட்டில் போய் பேராசிரியரான பெண்ணைப் பார்த்தார்கள். பெண்ணின் பெயர் சந்திரமேரி. அவள் அழகாக இருந்தாள். அருளம்மாவுக்கும் அமலிக்கும் பிடித்துப் போய்விட்டது.
“சென்னைக்குப்போன பிறகு நாங்கள் தம்பிக்கு விவரத்தைத் தெரிவிக்கிறோம்” என்றாள்
அருளம்மா!
(தொடரும்)
“என்ன மிஸ் யாழினி, அந்தக் கேன்சர் பேஷண்ட் விசயமாய் எங்கிட்டேயே சொல்லி இருக்கலாமே?” என்றார் சகாதேவன்.
“இல்லை டாக்டர், நீங்க நேரில் சொன்னால் வருத்தப்படுவீங்க. நீங்க இங்கே என்னைவிட சீனியர் டாக்டர். அது மட்டுமில்லே... டாக்டர் இஸ்மாயிலுக்கு மிகவும் நெருக்கமானவர். அதனால்தான், நான் டாக்டர் சேவியரிடம் டிஸ்கஸ் பண்ணினேன்”
என்றாள் யாழினி.
‘சேவியர் என்னைக் கூப்பிட்டு இதுபற்றி பேசினார். நானும் நீங்க இப்ப சொன்னதைத்தான் அவர்ட்டே சொன்னேன்’
என்றார் சகாதேவன்.
“நீங்க நரம்பியல் மருத்துவர், நான் கேன்சர் ஸ்பெசலிஸ்ட். அப்ப கேன்சர் பேஷண்ட் பற்றி இந்த மருத்துவமனையில் நான்தானே முடிவெடுக்கணும். இதுதானே நார்மல் டூட்டி” என்றாள் யாழினி.
“அதனால்தான் நீங்க ஹீமோதெரபி கொடுத்தபோது நான் அப்படியே விட்டுட்டேன். நமக்குள்ளே ஒத்துப்போறதுதானே எதிர்காலத்துக்கு நல்லது” என்று சிரித்தார் டாக்டர் சகாதேவன்.
“இதிலே எந்த மாறுபாடும் கிடையாது டாக்டர். நான் என் கடமையைச் செய்றேன், அவ்வளவுதான்” என்று
சிரித்தாள் யாழினி.
“அதை விடுங்க, இந்த பிரபாகரன் பேஷண்டுக்கு நெற்றியிலே நரம்பு விட்ருச்சு; அதை நீங்க பார்க்கிறதாச் சொன்னாங்க. அவருக்கு என்ன மாதிரி ட்ரீட்மெண்ட் குடுக்குறீங்க?” என்றார் சிரித்தபடி.
“டாக்டர் இஸ்மாயில்தான் அதைக் கவனமாய்ப் பார்க்கச் சொன்னார். நெற்றியிலே இருக்கிற பிரிஞ்ச நரம்பைச் சேர்க்கிறதுக்கான மருந்தைக் குளுக்கோசில் ஏத்துறோம். அதற்கான மெடிசனைச் சாப்பிடச் சொல்றோம்”
என்றாள் யாழினி.
“கரெக்ட் யாழினி. வெரிகுட்! நீங்க சரியா அந்தப் பேஷண்டைப் பார்க்குறீங்க. இதிலே நரம்பு ரெண்டும் சேருவதற்கான டெவலப்மெண்ட் இருக்கா?” என்றார் சகாதேவன்.
“நிச்சயம் இருக்கு டாக்டர்! முன்பைவிட இப்ப ரெண்டு நரம்பும் நெருங்கி வருது. ஒன் வீக்ல கட்டாயம் சேருவதற்கான நல்ல சான்ஸ் இருக்கு” என்றாள் யாழினி.
“உங்களுடைய அணுகுமுறை எனக்குப் பிடிச்சிருக்கு. நாம் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு செயல்பட்டால் பேஷண்ட்களுக்கு நல்ல குணம் கிடைக்கும், இல்லையா யாழினி” என்று சிரித்தார் சகாதேவன்.
“எங்கே சார், நமக்கு ஓய்வு இருக்கு? தொடர்ந்து பேஷண்ட்களைப் பார்த்துக்கிட்டே இருக்கோம்! இதிலே ஹார்ட் ஸ்பெசலிஸ்ட் டாக்டர் சுகுமார் அடிக்கடி பெங்களூரு போயிட்றார். அவங்களையும், இஸ்மாயில் என்னைப் பார்க்கச் சொல்லி விடுகிறார். எப்படியோ நாள்கள் பரபரப்பாய் போகிறது” என்று சிரித்தாள் யாழினி.
“ஒருநாள் எங்க வீட்டுக்கு நீங்க வரணும். எங்க அம்மா, அப்பா உங்களைப் பார்த்துப் பேச விரும்புறாங்க” என்றார்
சகாதேவன்.
“உங்க வீடு எங்கே டாக்டர்”?
என்றாள் யாழினி.
“நான் சாந்தோமில் இருக்கேன்”
என்றார் சகாதேவன்.
“என்னோட வீடு ட்ரஸ்ட்புரத்தில் இருக்கு. இங்கே இருந்து அவ்வளவு தூரம் வர வாய்ப்பில்லை டாக்டர்” என்றாள்
யாழினி.
“உங்க வீட்டு முகவரி சொல்லுங்க. அவங்களை உங்க வீட்டுக்கு வந்து பார்க்கச் சொல்றேன். ஒரு சண்டேயில வருவாங்க”
என்று புன்னகைத்தார் சகாதேவன்.
‘எதற்கு வரச்சொல்கிறார்? இவரின் பெற்றோர்கள் ஏன் வீட்டிற்கு வரவேண்டும்?’ யாழினி மனதிற்குள் சரியான பதில் கிடைத்துவிட்டது.
என் வீட்டு அருகாமையில் ஓரிரு சின்னச் சின்ன மளிகைக் கடைகள் மட்டுமே உள்ளன. யாராவது விருந்தினர்கள் வீட்டிற்கு வந்துவிட்டால் அவசரத்திற்குப் பொருள்கள் வாங்கவேண்டும் என்றால் அருகில் இருக்கும் ஒரு சின்னக் கடைக்குச் சென்று பொருள்கள் வாங்கி வருவேன். அதுதான் அண்ணாச்சி கடை. காலை நேரங்களில் நடை பயணம் செல்லும்போது, அந்தக் கடையில் மனைவி கேட்ட பொருள்களை வாங்கி வருவேன். காலையில் பால் போடும் தம்பி, போடாமல் சில நேரங்களில் தவறிவிட்டால், உடனே நடந்து சென்று அந்தக் கடையில் பால் வாங்கி வருவேன்.
அந்தக்
கடைக்காரர் ஒரு நல்ல மனிதர். கடைக்குச் செல்லும்போதெல்லாம் சிரித்த முகத்துடன் பேசுவார். மிகவும் தன்மையான மனிதர். சில நேரங்களில் நாம் வாங்கச் சென்ற பொருள் அங்கே இருக்காது. ‘இல்லை’ என்று சொல்லாமல், தன்மையோடு பேசி, ‘இந்தப் பொருளை நாளைக்கு
வாங்கி வைக்கிறேன்’ என
மலர்ந்த பூவைப்போல புன்னகையோடு சொல்வார்.
அவருக்கு
இரண்டு அழகான குழந்தைகள். ஒரு பையன், ஒரு பொண்ணு. சில நேரங்களில் அந்த இரு குழந்தைகளும் அவரோடு கடையில் இருப்பதை நான் பார்ப்பதுண்டு. “பசங்க என்ன படிக்கிறாங்க?” எனக் கேட்டேன். “பையன் ஏழாவது படிக்கிறான். பொண்ணு ஐந்தாவது படிக்கிறாள்” என்றார்.
“நன்றாகப் படிக்கிறாங்களா?” எனக் கேட்டேன். ‘ஆம்’ என்று தலையசைத்தார். தொடர்ந்து “நாங்க தான் படிக்கலை. இப்படிச் சின்னக் கடையை வச்சுக்கிட்டு, வர்ற கொஞ்ச வருமானத்தில் கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கோம்; பிள்ளைகளாவது நல்லாப் படிச்சு வாழ்க்கையில் முன்னேறணும், நல்லா சம்பாதிக்கணும். அதான் சார் எங்க ஆசை” என்றார். “ஆமா, ஆமா... நல்ல படிக்க வையுங்க” என்றேன்.
“ஆமா, இந்தக் கடையில் எல்லாச் செலவும் போக எவ்வளவு நிக்கும்?” என்று கேட்டேன். “என்ன சார், மிஞ்சி மிஞ்சிப் போனா எல்லாச் செலவும் போக ஒரு நாளைக்கு ரூபாய் 600-லிருந்து 700 ரூபாய் தான் மிஞ்சும். அதை வைச்சு இந்தப் பிள்ளைகளைப் படிக்க வைச்சு கரையேத்தணும்” என்றார். சொல்லும்
போது அவரது விழிகள் இலையில் விழுந்த நீர்த்துளி போல தத்தளித்ததை என்னால் காண முடிந்தது. “கவலைப்படாதீங்க! எல்லாம் நல்லதே நடக்கும்”
என அவருக்கு ஆறுதல் வார்த்தையைச் சொல்லிவிட்டு, கடின இதயத்தோடு நகர்ந்தேன். அன்றிலிருந்து எனக்கும், அந்தக் கடைக்கும் ஒருவிதமான அன்பின் பிணைப்பு! எப்போதெல்லாம் என் மனைவி வீட்டுச்சாமான்கள் வாங்கச் சொல்லும் போது, அந்தக் கடைக்குச் சென்று வாங்கி வருவேன். சில நேரம் நடந்து போவேன். சில நேரம் என்னுடைய ஒரு பழைய இருசக்கர வாகனத்தில் சென்று வாங்கி வருவேன்.
அப்படியே
போய் வாங்கி வந்தாலும், சில நேரங்களில் சில பொருள்கள் அந்தக் கடையில் இருக்காது. வெறுங்கையோடு திரும்பி வருவேன். வீட்டை
நெருங்க, நெருங்க கால்கள் தடுமாறும். “ஐயோ, என் மனைவியிடம் இன்னைக்கு என்ன வாங்கிக் கட்டிகொள்ளப் போறேனோ தெரியலையே”
என மனத்திலே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வீட்டிற்குள் வருவேன். கடைக்காரர் சொல்வது போலவே, “அந்தப் பொருள் இருக்கு, இந்தப் பொருள் இல்லை. நாளைக்கு வந்துடுமாம்” எனச்
சொல்லி சமாளிப்பேன். “பக்கத்தில் ஒரு நல்ல கடை கூட இல்லை. இங்கே வந்து வீடு கட்றீங்க? ஆத்திர அவசரத்துக்குச் சாமான் வாங்கணும்னா என்ன பண்றது? என வீடு கட்டும்போதே
சொன்னேன். நான் சொன்னதைக் கேட்டீங்களா?” எனச் சூடான எண்ணெயில் பொரியும் அப்பளத்தைப் போல பொரிந்து தள்ளுவாள்.
இருந்தாலும்கூட
அந்தக் கடையை விடுவதில்லை. அவ்வப்போது தேவைப்படும்போது பொருள்கள் வாங்கி வருவேன். கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், நான் பொருள்கள் வாங்குவதன் மூலம் அண்ணாச்சிக்குச் சின்ன வருமானம் என்று மனசுக்குள் ஒரு சந்தோசம்.
அன்று
பால் பையன் வீட்டில் பால் போடவில்லை. காலையில் எழுந்ததும் காபி சாப்பிடவில்லை என்றால் என் மனைவி ருத்ரதாண்டவம் ஆடி விடுவாள். அவள் எழுவதற்கு முன்பே அண்ணாச்சி கடைக்குச் சென்றேன். “அண்ணாச்சி, பால் ஒரு பாக்கெட் கொடுங்க” என்றேன். ”இன்னைக்குப் பால் வண்டி வரலே. பால் வண்டி ரிப்பேர்” என்றார். “மற்றொரு வண்டி வரும். வந்தபின் உங்களுக்குப் போன் பண்றேன்” என்று வழக்கமான பாணியில் பதில் சொன்னார். “எனக்குத்தானே தெரியும் என் வேதனை” என்று மனத்தில் நினைத்து கொண்டு, இன்னைக்குக் காலையிலேயே நமக்கு வேட்டுதான் எனக் கடந்து வந்து கொண்டிருந்தேன்.
வருகிற
வழியில் நண்பர் ஒருவர் “என்ன சார், வாக்கிங் போறீங்களா? காபி குடிச்சிட்டீங்களா?” எனக் கேட்க, “இன்னும் சாப்பிடல சார். பால் வாங்கப் போனேன். பால் வண்டி இன்னும் வரலையாம். அதான் திரும்பி வந்திட்டேன்” எனக்
கூறினேன். “அப்படியா? அதுக்கு ஏன் கவலைப்படுறீங்க? அதுக்குதான் இப்ப ஒரு செயலி, அதான் ஓர் ஆஃப் வந்திருச்சே!
அந்த ஆஃப் மூலமா ஆர்டர் பண்ணினா பத்து நிமிடத்தில் நீங்கள் ஆர்டர் செய்த பொருள்கள் உங்க வீட்டுக்கே வந்துடும். அப்புறம் ஏன் கவலைப்படுறீங்க? அந்த ஆஃப்-ஐ உங்க போன்ல
டவுன்லோடு பண்ணுங்க, ஆர்டர் பண்ணுங்க”
என்றார். “அப்படியா, இந்தா இப்பவே டவுன்லோடு பண்ணி முதல்ல பால் ஆர்டர் பண்ணி, என் மனைவியைச் சந்தோஷப்படுத்தணும்” என்று
மனசில் சொல்லி, அந்த ஆஃப்-ஐ டவுன்லோடு செய்து,
பால் ஆர்டர் பண்ணினேன். பத்தே நிமிடத்தில் பால் வீடு வந்து சேர்ந்தது. வாங்கி என் மனைவியிடம், வெற்றிப் புன்னகையோடு கொடுத்தேன்.
“யாரோ வந்து பால் கொடுத்துட்டுப் போறாங்க. யார் அது?” எனக் கேட்டாள். “உன் பிரச்சினைக்கு முடிவு வந்துருச்சு. உனக்கு அவசரத்துக்கு என்ன பொருள் வேண்டுமானாலும், நீ இனிமேல் என்னை
எதிர்பார்க்க வேண்டாம். இந்த ஆஃப்-ஐ உன் மொபைல்ல
டவுன்லோடு பண்ணியிருக்கிறேன். நீயே ஆர்டர் பண்ணி வாங்கிக்கொள்ளலாம்” எனக்
கூறினேன். அவளும் கொஞ்சம் கொஞ்சமாக ஆர்டர் செய்து வாங்கப் பழகிவிட்டாள்.
இப்போது
என் மனைவி என்னைப் பொருள் வாங்கி வரச்சொல்லி அதிகமாகத் தொந்தரவு செய்வதில்லை. எனக்கு வாக்கிங் போவதும் குறைந்து போனது. இருசக்கர வாகனமும் எடுக்க வாய்ப்பில்லாமல் முடங்கிப்போனது. அண்ணாச்சி கடைக்குச் செல்ல வேண்டிய அவசியமும் இல்லாமல் போனது.
இரண்டு
வாரங்கள் கழிந்தன. அலுவலகம் செல்லும்போது, வழக்கம்போல அண்ணாச்சி கடையைப் பார்த்தேன். அவர் கடை பூட்டி இருந்தது. ஒரு வாரம், இரண்டு வாரம்
கடந்தது, அண்ணாச்சி கடை திறக்கவே இல்லை. ஒருநாள் “ஏன் கடையைத் திறக்கவில்லை?” எனத் தெரிந்துகொள்ள அவர் கடைக்குச் சென்றேன். அவர் வெளியே நின்று கொண்டிருந்தார்.
“என்ன அண்ணாச்சி, கடையே திறக்கல?” எனக் கேட்டேன்.
மெல்லிய
குரலில், “ஏதோ ஓர் ஆஃப் வந்திருக்காம், ஆர்டர் பண்ணுனா பத்து நிமிசத்தில வீட்டுக்கே பொருளைக் கொண்டு வந்து கொடுத்துடுவாங்களாம். நம்ம கடைக்கு வந்து பொருள் வாங்கிக் கொண்டிருந்த பல பேர் இப்ப
அது மூலமா வாங்க ஆரம்பிச்சுட்டாங்க. அப்புறம் என்ன, நம்ம கடையில வியாபாரம் குறைஞ்சு போச்சு. கடையை மூடிட்டேன், வேறு ஏதாவது கூலி வேலை பார்த்துதான் இனிமே பிழைக்கணும். எப்படி என் பிள்ளைகளைப் படிக்க வைச்சு, பெரிய ஆளாக்கப் போறேன்னு தெரியலை” எனக் கண் கலங்கி, மனசு உடைஞ்சுக் கூறினார். அதைக் கேட்டு என் மனம் கனத்துப்போனது.
இன்னும்
கொஞ்சத் தூரம் தள்ளி, மற்றொரு கடை வைத்திருக்கும் கணவனை இழந்த, பிள்ளைகள் இல்லாத ஒரு மூதாட்டியின் கடையைப் பார்த்தேன். ‘அந்தக் கடைக்கு என்ன ஆகுமோ! இதே நிலை வந்துவிடுமோ! வந்தால் அந்த மூதாட்டியின் தின வாழ்க்கை என்ன ஆகும்?’ எனக் கலங்கி, சிந்தித்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தேன். வீட்டை அடைந்ததும் என் மனைவியிடம் எல்லாவற்றையும் கனத்த
இதயத்துடன் பகிர்ந்தேன். அண்ணாச்சி கடைக்கும், எனக்கும் இருந்த அந்த உறவு, காட்சியளித்து மறைந்துபோகும் வானவில்லைப்போல ஆனது. டெக்னாலஜியின் இரசிக்கக்கூடிய முகம் ஒரு புறம்; கொடூர முகம் மற்றொருபுறம். ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கியதில் எனக்கும் ஒரு பங்கு உண்டு என்ற ஒரு குற்ற உணர்வு என் மனத்தை நெருடியது. படிக்கின்ற அண்ணாச்சியின் இரு குழந்தைகளின் முகம் என் கண்முன் வந்து வந்து போனது.
என்
மனைவியை அழைத்தேன். “இனிமேல் நான் வீட்டில் இல்லாதபோது மட்டும் இந்த ஆஃப்பைப் பயன்படுத்து.
ஏதாவது பொருள் வாங்க வேண்டும் என்றால் என்னிடம் சொல்லு. பாட்டி கடை இருக்கிறது. அங்கே நான் சென்று வாங்கி வருகிறேன். நான் வீட்டில் இல்லாதபோது மட்டும்
இந்த ஆஃப்பைப் பயன்படுத்து” எனக்
கூறி, “இப்ப ஏதாவது வாங்க வேண்டுமா சொல்லு, நான் போய் வாங்கி வருகிறேன்”
என்று கேட்டு, பாட்டி கடைக்குச் சென்று பொருள் வாங்கி வந்து கொடுத்தேன். மனசுக்குள் சின்ன ஆறுதல்.
வந்ததும்
தூசி மண்டிக் கிடந்த என் இருசக்கர வாகனத்தைத் துடைத்து, ஒரு மெக்கானிக்கை வரச்சொல்லி சரிசெய்தேன். இப்போது வண்டி ஈசியாக ‘ஸ்டார்ட்’
செய்தது. பாட்டி கடைக்குச் செல்ல வண்டியும் ரெடி ஆயிடுச்சு. மனசுக்குள் சற்று நிம்மதி.
அடுத்த
நாள் அதிகாலை அலுவலகத்துக்குக் கிளம்பினேன்.
போற வழியில் அந்தப் பாட்டி கடையைப் பார்த்தேன். அந்தக் கடை திறந்திருந்தது. காருக்குள் AC காற்று
என் மனத்தைக் கொஞ்சம் குளிரவைத்தது.
எழுத்தில்
இன்னும் வளர உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது. வாட்ஸ் ஆப் எண் - 9047078487.
“ஏப்பா சேவியர், எப்படியாவது இந்தக் குழந்தைக்காகவாவது நீ கல்யாணம் முடிக்கணும்ல” என்றாள் தாய்.
“ஆமாண்ணே, அண்ணி இறந்த கவலையிலேயே காலம் கடந்திருச்சு. இனியாவது ஒரு பெண்ணைப் பார்த்து கல்யாணம் முடிச்சுக்கிறதுதான் நல்லது” என்றாள் தங்கை அமலி.
“இப்ப அதைப்பத்தி நான் யோசிக்க முடியாதும்மா. எனக்கு மருத்துவப் பணியைச் செய்யவே நேரம் பத்தலே. காலையிலே சர்ச்சுக்குப் போய் பாத்திமா மாதாவைக் கும்பிட்டுட்டு வாரேன். வந்து குளிச்சு சாப்பிட்டுட்டு, கொஞ்சம் நேரம்தான் ஓய்வு. கீழே பேஷண்ட் வந்திட்றாங்க. அவங்களைப் பார்த்திட்டு நுங்கம்பாக்கம் போகணும். மதியம் சாப்பிட்டு கொஞ்சம் ரெஸ்ட், பிறகு ஆஸ்பத்திரி, திரும்பி வந்து கிளினிக் வேலை. இப்படி இருக்கும்போது எப்படிக் கல்யாணம் பத்தி யோசிக்கிறது?” என்றார் சேவியர்.
“வேலைன்னாக்கா அப்படித்தாம்பா! நாங்களெல்லாம் தூத்துக்குடியில் பஸ் ஏறி கிராமங்களில் போய் வாத்தியார் வேலை பார்த்திட்டு திரும்பலையா? வாழ்க்கையிலே டாக்டர் வேலைங்கிறது உயிர்காக்கும் வேலைதானே?” என்றாள் தாய் அருளம்மா.
“வேலையோட வேலையா ஒரு பெண்ணைப் பாருண்ணே! இல்லைன்னா தூத்துக்குடியில் நம்ப சொந்தக்காரப் பெண்ணைக் கூடப் பார்க்கலாம்ல” என்றாள்
தங்கை.
“சேவியர், உனக்குக் கல்யாணம் முடிஞ்சபிறகு, உன்னோட தங்கச்சிக்குக் கல்யாணம் முடிக்கணும். அது வேற இருக்கு. எல்லாத்தையும் மனசுல வெச்சு யோசிச்சுச் சீக்கிரமாய் முடிவெடு”
என்றாள் தாய் கவலையுடன்.
“பார்ப்போம்மா. அவசரப்படாமல் நல்ல பெண் அமையுதான்னு பார்ப்போம். இருக்கிற நெருக்கடி நேரத்தில் நான் இதுக்காக அலைய முடியாது. நீங்கதான் போய் பார்க்கணும். நான் காலையில் அண்ணா பார்க்கில் வாக்கிங் போகக்கூட நேரம் இல்லாமல் திண்டாடுறேன்” என்றார்
சேவியர்.
அப்பொழுது
தூத்துக்குடியிலிருந்து
அருளம்மாவின் தம்பி வந்தார்.
“வாப்பா ஆல்பர்ட், எப்படி இருக்கீங்க? வீட்லே எல்லாரும் சௌக்கியம்தானே?” என்றாள் அருளம்மா.
“எல்லாரும் சௌக்கியம்தான் அக்கா! இங்கே என் சம்சாரத்தோட தம்பி வீட்டிலே கல்யாணம், அதுக்காக நேத்து வந்தேன். அப்படியே ஓர் எட்டு உங்களைப் பார்த்திட்டுப் போகலாம்னு இங்கே வந்தேன்” என்றார் ஆல்பர்ட்.
“தம்பி ஆஸ்பத்திரிக்குக் கிளம்புது. உட்காருங்க சாப்பிட்டுட்டு பேசலாம்” என்றாள் அருளம்மா.
“அதுசரி, சேவியர் போகட்டும். அவரோட கல்யாணம் பத்தி என்ன முடிவிலே இருக்கீங்க? பேசாமல் இருந்தா நாள் அப்படியே இருக்குமா... ஓடுதில்ல?” என்றார் ஆல்பர்ட்.
“பார்க்கணும் தம்பி, சேவியர்ட்டே சொல்லிக்கிட்டே இருக்கோம். அதோட இவளுக்கொரு பையனையும் பார்க்கணும்” என்றாள்
அருளம்மா.
“எல்லாம் டீச்சராத்தான் கேட்கிறானுங்க. இது என்ன முடிச்சிருக்கு?” என்றார் ஆல்பர்ட்.
“பி.ஏ. முடிச்சிருக்காள்.
கரெஸ்பாண்டன்டில் பி.எட். படிக்கிறாள்.
இப்ப பரீட்சை முடிஞ்சிரும்” என்றாள்
அருளம்மா.
“அப்ப பிரச்சினை இல்லே! பி.எட். டீச்சர்னா
நான் நீன்னு போட்டிப் போட்டு வருவானுங்க. நம்ப தெருவிலேயே பசங்க இருக்கானுங்க” என்று
சிரித்தார் ஆல்பர்ட்.
“அப்ப சாப்பிடுங்க” என்றாள்
அமலி.
(தொடரும்)