news
ஞாயிறு தோழன்
சனவரி 18, 2026, பொதுக்காலத்தின் 2-ஆம் வாரம் எசா 49:3,5-6; 1கொரி 1:1-3; யோவா 1:29-34

திருப்பலி முன்னுரை

இயேசுவை அனுபவிக்கவும் அறிவிக்கவும் ஆண்டின் பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு நமக்கு அழைப்பு விடுக்கிறது. திருமுழுக்கு யோவான் இயேசுவைப் பற்றி அறிவிக்க அனுப்பப்பட்டவர்; தான் கருவறையில் இருக்கும்போதே கடவுளின் மகனைக் கண்டு மகிழ்ந்தவர்; தான் அனுபவித்த இயேசுவை இந்த அகிலமும் அனுபவிக்கச் செய்தவர்.

இந்த உலகின் மீட்பர், நம்மைப் பாவத்திலிருந்து மீட்க வந்த  ஆட்டுக்குட்டி, இறைமகன், தூய ஆவி நிரம்பப் பெற்றவர்என்று திருமுழுக்கு யோவான்  இயேசுவைப் பற்றி பறைசாற்றுகின்றார். திருமுழுக்கு பெற்ற நாமும் இயேசுவைப் பற்றி அறிவிக்க அழைப்புப் பெற்றுள்ளோம். அருளடையாளங்கள், திருப்பலி, நற்கருணை, இறைவார்த்தை இவற்றின் வழியாக அன்றாடம் இயேசுவை அனுபவிக்கிறோம். நாம் அனுபவித்த இயேசுவை நமது வாழ்க்கையால் இவ்வுலகிற்கு அறிவிப்போம். இயேசு என்ற ஒப்பற்ற செல்வத்தைத் தேடிக் கண்டடைய ஒவ்வொரு நாளும் முயற்சியெடுப்போம். நாம் வாழும் சமுதாயத்தில் அனைவரிலும் அனைத்திலும் இயேசுவைக் காண்போம். வாழ்வும் வல்லமையும் ஆற்றலும் மீட்பும்  கொடுக்கவல்ல இயேசுவின் திருப்பெயர் வெற்றிபெற அன்றாடம் உழைப்போம். திருமுழுக்கு யோவானைப் போன்று இயேசுவை அறிவிக்கும் உயிருள்ள சாட்சிகளாய் வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

கடவுள் தம்முடைய பணிக்காகக் கருப்பையிலே நம் அனைவரையும் தேர்ந்துகொண்டார். அவரது பிள்ளைகள் என்ற உரிமையை நமக்கு வழங்கினார். அவரது ஊழியர்களாகிய நாம்  இறைவனை விட்டு விலகாதிருக்கவும், நம்முடைய துன்ப வேளைகளில் இறைவன் உடனிருக்கிறார் என்ற நம்பிக்கையில் வாழவும், கடவுளின் பார்வையில் மதிப்புப் பெற்ற மக்களாக வாழவும் அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

நாம் இயேசு கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டுள்ளோம், இயேசுவின் சாயலை நாம் பெற்றுள்ளோம்.    இயேசுவின் பெயரை நினைத்தவர்கள், அறிக்கையிட்டவர்கள் அனைவரும் அமைதியைப் பெற்றுக்கொன்டார்கள்எல்லா நேரத்திலும் வாழ்க்கையாலும் வார்த்தையாலும் இயேசுவை அறிவித்து, அவரது அருளையும் அமைதியையும் பெற்று மகிழ்ச்சியோடு வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. ‘நீயே ஆசியாக விளங்குவாய்என்று மொழிந்த ஆண்டவரே! எம் திரு அவைக்கு ஆசியாக நீர் கொடுத்த திரு அவைத் தலைவர்கள் உமது பணியை இக்காலச் சூழலுக்கேற்ப ஞானத்தோடும் ஆற்றலோடும் செய்வதற்குத் தேவையான அருள்வரங்களைத் தந்து காத்து வழிநடத்த வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. கண்மணி போல் எம்மைக் காக்கும் ஆண்டவரே! உமது பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் அன்றாடம் நீர் எமக்குச் செய்து வருகின்ற அனைத்து நன்மைகளுக்கும் நன்றி கூறும் நல்ல மக்களாக வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. ‘நீ என் ஊழியன்என்று மொழிந்த ஆண்டவரே, உமது ஊழியர்களாகிய நாங்கள் இறைவார்த்தையை அன்றாடம் படித்து அதன்படி வாழவும், எங்களது வாழ்க்கையால் உம்மை அறிவிக்கவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. எம்மைப் பாதுகாக்கும் ஆண்டவரே, எம் குடும்பத்திற்கு ஆசியாக நீர் கொடுத்த குழந்தைகளைத் திரு அவை காட்டுகின்ற நெறிகளில் நாங்கள் வளர்க்கவும்கிறித்தவ நம்பிக்கையில் நாங்கள் வாழ்ந்து வழிகாட்டவும் தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
சனவரி 11, 2026, பொதுக்காலத்தின் முதல் வாரம் (ஆண்டவருடைய திருமுழுக்கு) - எசா 42:1-4,6-7; திப 10:34-38; மத் 3:13-17

திருப்பலி முன்னுரை

இயேசுவின் திருமுழுக்குப் பெருவிழாவைக் கொண்டாடும் இன்று, திருமுழுக்கின் முக்கியத்துவத்தையும் மகத்துவத்தையும் அறிந்துகொள்ள அன்னையாம் திரு அவை நமக்கு அழைப்புவிடுக்கிறது. இயேசுவின் திருமுழுக்கு மூவொரு இறைவனின் பிரசன்னத்தை நமக்கு வெளிப்படுத்துகிறது. “என் அன்பார்ந்த மைந்தர் இவரேஎன்ற தந்தையாகிய இறைவனின் வார்த்தையும், புறா வடிவில் தூய ஆவியின் வருகையும் இயேசுவின் இறைச்சாயலை நமக்கு உறுதிப்படுத்துகிறது. இயேசுவின் திருமுழுக்கு அவரது பணிவாழ்வுக்குத் தொடக்கமாக அமைந்தது. திருமுழுக்குப் பெற்றபின் இயேசு அளப்பரிய பணிகளைச் செய்து, உயிரையும் கொடுத்து இந்த மனுக்குலத்தை மீட்டார். திருமுழுக்கு நம் வாழ்வின் அடித்தளம்; நாம் தூய ஆவியில் வாழ்வதற்கான நுழைவாயில். இதுவே நம்மை இறைவனின் பிள்ளையாக மாற்றுகிறது; திரு அவையில் நம்மை இணைத்து, அதன் பணிப்பொறுப்பை நமக்குத் தருகிறது. திருமுழுக்கு என்னும் அருளடையாளம் இறைவார்த்தைக்குச் சான்றுபகர நமக்கு அழைப்புவிடுக்கிறது. எனவே, திருமுழுக்கின் வழியாக இறைச்சாயலையும் இயேசுவின் உடனிருப்பையும் தூய ஆவியின் ஆற்றலையும் பெற்றுக்கொண்ட நாம், இயேசுவுக்குச் சான்றுபகரவும், நாம் பெற்றுள்ள திருமுழுக்கின் மகத்துவத்தை அறிந்து, கொடுத்த வாக்குறுதியைக் கடைப்பிடித்து வாழவும்  நாம் கிறிஸ்துவை நமது வாழ்க்கையால் அறிவிக்கவும் வரம்வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

இறைவனின் பணியை ஆற்றலுடன் செய்ய நாம் தொடங்கும்போது அவர் நம் கைகளைப் பற்றிப் பிடித்து நம்மைப் பாதுகாப்பார், நாம் செல்லும் இடமெல்லாம் ஒளியாக இருந்து வழிநடத்துவார், பல வல்ல செயல்கள் நம் வழியாக நிகழ்த்துவார். எனவே, இறைவார்த்தை காட்டுகின்ற நெறிகளில் நடந்து, கடவுளின் கண்களுக்குப் பேறுபெற்ற மக்களாக வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

திருமுழுக்கின் வழியாக நாம் தூய ஆவியின் வல்லமையைப் பெறுகின்றோம். தூய ஆவியார் நமக்கு நன்மை-தீமைகளைப் பகுத்தறியும் ஆற்றலைத் தருகின்றார். இறையாட்சிப் பணியைச் செய்வதற்குப் புதிய உத்வேகத்தைத் தருகின்றார். திருமுழுக்குப் பெற்றுள்ள நாமும் இயேசுவைப் போன்று  இச்சமூகத்தில் நல்லவற்றை மட்டும் விதைத்து, பலன் கொடுத்து வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.  

மன்றாட்டுகள்

1. ‘நீரே என் அன்பார்ந்த மைந்தர்என்று கூறிய ஆண்டவரே! உமது பணிக்காக நீர் தேர்ந்துகொண்ட திரு அவைத் தலைவர்கள் அனைவரும் உம் வார்த்தையை வாழ்வாக்கவும், காலத்திற்கேற்ப விழிப்புடன் பணி செய்யத் தேவையான ஆற்றலையும் சக்தியையும் கொடுத்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. ‘என் அருள் உனக்குப் போதும்என்று கூறிய ஆண்டவரே! திருமுக்குப் பெற்ற நாங்கள்  இயேசுவை அறிவதில், அன்பு செய்வதில் கருத்துடன் செயல்படவும், கிறிஸ்துவின் மதிப்பீடுகளின்படி நாளும் வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. ‘நீ எனக்கே சொந்தம்என்று கூறிய ஆண்டவரே! எம் மறைமாவட்டத்திலும், பங்கிலுமுள்ள அனைத்துக் குடும்பங்களும் தங்களுடைய வாழ்க்கையால் கிறிஸ்துவுக்குச்  சான்றுபகரவும், ஆசிபெற்ற மக்கள் என்பதைச் சொல்லிலும் செயலிலும் வெளிப்படுத்தவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. ஆண்டவரே! எம் பங்கிலுள்ள குழந்தைகள் அனைவரும் சிறுவயதிலேயே இயேசுவைப் பற்றி அறிவதிலும், இறைவார்த்தையைப் படிப்பதில் சிறந்திடவும், திருவழிபாட்டு நிகழ்வுகளின் மகத்துவத்தை அறிந்து ஈடுபாட்டுடன் பங்கேற்கவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை  மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
சனவரி 04, 2026, ஆண்டவருடைய திருக்காட்சிப் பெருவிழா - எசா 60:1-6; எபே 3:2-3, 5-6; மத் 2:1-12

திருப்பலி முன்னுரை

ஆண்டவராகிய இயேசுவைக் கண்டுகொள்ளவும், அவரது உடனிருப்பை உணர்ந்து வாழவும் திருக்காட்சிப் பெருவிழா நமக்கு அழைப்பு விடுக்கிறது. திருக்காட்சி என்றால், ‘வெளிப்படுத்துதல்என்று பொருள். இயேசு ஒரு தனிமனிதகுலத்திற்கோ அல்லது நாட்டிற்கோ சொந்தமானவர் அல்லர்; மாறாக, உலகிற்கே சொந்தமானவர் என்ற உயர்ந்த, உன்னதக் கருத்தை உணர்த்துவதுதான் இந்தத் திருக்காட்சிப் பெருவிழா!

இயேசுவின் பிறப்பானது இடையர்களுக்கும் ஞானிகளுக்கும் ஏரோது மற்றும் மறைநூல் வல்லுநர்களுக்கும் வெளிப்படுத்தப்பட்டது. எனினும், எளிமையின் வடிவான இடையர்களும், அறிவாற்றல் மிகுந்திருப்பினும் பல ஆயிரம் மைல்கள் கடந்து வந்த ஞானிகளும் இயேசுவைக் கண்டு மகிழும் பேறுபெற்றனர். அம்மகிழ்ச்சியினை விண்மீன் காட்டும் பாதையில் சென்று அறிவித்தனர்.

இயேசுவைப் பார்க்க வேண்டும் என்ற தீராத வேட்கையால் விண்மீனைத் தொடர்ந்து சென்ற ஞானிகளைப் போன்று நாமும் அன்றாடம் இயேசுவை நற்செயல்கள் வழியாகக் கண்டுகொள்ள முற்படுவோம். நம்முடைய வாழ்க்கையாலும் வார்த்தையாலும் இயேசுவை அன்றாடம் திருக்காட்சிப்படுத்துவோம். கடவுள் அனைவருக்கும் சொந்தமானவர் என்பதை உலகுக்கு உரக்க அறிவிப்போம் என்ற உறுதித்தன்மையோடு வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

ஒளியாக இருந்து நம்மை அன்றாடம் வழிநடத்தும் ஆண்டவருடைய மாட்சி நம்மேல் உதித்துள்ளது. அன்பு, மன்னிப்பு, இரக்கம், பொறுமை, விட்டுக்கொடுத்தல், நிறைகுறையோடு ஏற்றுக்கொள்ளுதல், சமத்துவம் போன்ற மதிப்பீடுகளில் வாழ்ந்து ஒளியாம் இறைவனை இவ்வையகத்தில் ஒளிர்விக்கவும், ஒளியின் மக்களாக வாழவும் அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

இறைவாக்கினரும் திருத்தூதரும் தூய ஆவியின் துணையால் இயேசுவை அறிந்து அன்பு செய்து இம்மண்ணகத்தில்  நற்செய்தி அறிவித்ததுபோல், நாமும் தூய ஆவியின் துணையோடு நற்செய்தி அறிவிக்கவும், பிளவுகளைக் களைந்து கிறிஸ்து என்ற உடலின் உறுப்புகளாய் சமத்துவத்தோடு வாழவும் அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. ‘எழு! ஒளி வீசுஎன்று கூறிய ஆண்டவரே! எம் திரு அவைத் தலைவர்கள் ஒளியின் பாதையில் நடந்து அன்றாடம் தங்களுக்கு வருகின்ற இன்னல்கள், இடையூறுகள், சோர்வுகள் அனைத்திலும் அழைத்தவர் உடனிருக்கிறார் என்ற நம்பிக்கையில் வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. எமக்காக மனுவுரு எடுத்த ஆண்டவரே! திருக்காட்சிப் பெருவிழாவைக் கொண்டாடும் நாங்கள் அனைவரும் எங்களுடைய சொற்களாலும் சிந்தனையாலும் நல்ல செயல்களாலும் இயேசுவைத் திருக்காட்சிப்படுத்த வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. ‘நான் உங்களோடு இருக்கின்றேன்என்று கூறிய ஆண்டவரே! உமது பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் தூய உள்ளமும் எளிமையான வாழ்வும், அனைவரையும் ஏற்றுக்கொள்ளும் பரந்த இதயமும் கொண்டு இந்த உலகில் நூறு மடங்கு பலன் கொடுத்து வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. ‘கலங்காதே, நான் உன்னோடுஎன்று கூறிய ஆண்டவரே! ஞானிகள்  உம்மைக் கண்டவுடன் தன்னிலையிலிருந்து இறங்கி நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கியது போன்று நாங்களும்நான், ‘எனதுஎன்பதிலிருந்து இறங்கி, தூய உள்ளத்துடன் உம்மை வணங்கி ஆராதிக்க வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
சனவரி 01, 2026, புனித மரியா கடவுளின் தாய் - எண் 6: 22-27; கலா 4: 4-7; லூக் 2: 16-21

திருப்பலி முன்னுரை

இறை இயேசுவில் அன்புள்ள சகோதர-சகோதரிகளே! 2025-ஆம் ஆண்டு முழுவதும் நாம் பெற்றுக்கொண்ட நன்மைகளுக்கு நன்றிகூறி, 2026-ஆம் ஆண்டு மகிழ்வின் ஆண்டாக அமையும் என்ற நம்பிக்கையோடு உங்களை வாழ்த்தி திருப்பலிக்கு அன்போடு அழைக்கிறோம்அன்னையாம் திரு அவை இன்றுஅன்னை மரியா கடவுளின் தாய்என்ற விழாவைக் கொண்டாடி மகிழ நமக்கு அழைப்புவிடுக்கிறது.

அன்னை மரியா அருள் மிகப்பெற்றவர்; அழகு நிறைந்தவர்; இயேசுவைத் தம் கருவில் சுமந்த நற்கருணைப் பேழை; வாழ்வோர் அனைவரின் தாய்; மீட்பு வரலாற்றின் உன்னத உயிர்! இம்மாபெரும் தாயின் அரவணைப்பு ஆண்டு முழுவதும் தொடர அன்னையின் பரிந்துரையை நாடுவோம். இப்புத்தாண்டில் இரட்டிப்பான அருள்வரங்களைப் பெற்று நலமோடு வாழ நம்பிக்கையோடு இறைவனை வேண்டுவோம்.

இந்தப் புத்தாண்டில் அன்னையின் வழிகாட்டுதலும் பரிந்துபேசுதலும் நிரம்பக் கிடைக்கட்டும். ஆண்டவர் எல்லாத் தீமையினின்றும் நம்மைப் பாதுகாப்பார்; அனைத்து வளங்களையும் நலன்களையும் கொடுத்து நம்முடன் பயணிப்பார் என்ற நம்பிக்கையோடு இந்த 2026-ஆம் ஆண்டு முழுவதும் ஆண்டவருக்கு உகந்தவற்றைச் செய்வோம். அன்னை மரியாவின் துணையை நாடி நாமும், நமது பங்கிலுள்ள அனைத்துக் குடும்பங்களும் வாழ வரம் வேண்டி மகிழ்வோடும் உற்சாகத்தோடும் இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

நம்மைப் பாதுகாக்கும் ஆண்டவர் இந்தப் புத்தாண்டு முழுவதும்  நமக்கு ஆசி வழங்கி நம்மைக் காப்பதாகவும்தம் திருமுகத்தை நம்மேல் ஒளிரச்செய்து, அருள் பொழிந்து, நமக்கு அமைதியைக் கொடுத்து, அனைத்து நலன்களாலும்  நிரப்புவதாகவும் வாக்குறுதி தருகிறார். வாழ்வு தரும் இறைவனின் ஆசிரைப் பெற அழைக்கும் முதல் வாசகத்திற்கு நாம் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

இந்த உலகில் வாழும் அனைவருமே கடவுளின் குழந்தைகள். ‘அப்பா தந்தையேஎன்று அழைக்கும் உரிமையையும் கடவுள் நமக்குக் கொடுத்துள்ளார். தேவையான நேரத்தில் குறிப்பறிந்து கொடுக்கும் தந்தையின் பேரன்பைச்  சுவைத்து வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிகொடுப்போம்.

மன்றாட்டுகள்.

1. ஆசியளிக்கும் ஆண்டவரே! எம் திரு அவைத் தலைவர்கள் அனைவருக்கும் நல்ல உடல் சுகத்தையும், ஆற்றலோடு பணி செய்வதற்கு மனவலிமையையும் ஞானத்தையும் தந்து காத்திடவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. வல்லவரான ஆண்டவரே! இப்புதிய ஆண்டில் உடன் வாழும் சகோதர-சகோதரிகளின் தேவையை அறிந்து உதவி செய்து ஆசியை வழங்கும் மக்களாக வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. பாதுகாக்கும் ஆண்டவரே! அன்னை மரியை எமது தாயாகக் கொண்டுள்ள நாங்கள் அனைவரும் எம் தாய் மரியைப் போன்று இறைத்திட்டத்திற்குப் பணிந்து வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. எம்முடன் வாழும் ஆண்டவரே! இப்புத்தாண்டில் நாங்கள் ஒருவர் மற்றவருக்கு ஆசி நிறைந்த மக்களாக வாழவும், எல்லாச் சூழலிலும் நீர் எங்களோடு இருக்கின்றீர் என்ற நம்பிக்கையில் வளரவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
டிசம்பர் 28, 2025, திருக்குடும்ப விழா - சீஞா 3:2-7,12-14; கொலோ 3:12-21; மத் 2:13-15,19-23

திருப்பலி முன்னுரை

இயேசுவின் அன்பும் அருளும், தூய கன்னி மரியின் எளிமையும் தாழ்ச்சியும், புனித யோசேப்பின் உழைப்பும் நேர்மையும் உங்கள் குடும்பங்களிலும் ஒளிர்ந்திட வாழ்த்தி, திருக்குடும்ப விழா திருப்பலிக்கு வாஞ்சையோடு அழைக்கிறோம்.

குடும்பம் உறவுகளின் இருப்பிடம், அன்பின் சங்கமம், நகைச்சுவை மைதானம், அறிவுப்பள்ளி, இன்பத்தோட்டம், மகிழ்ச்சியின் ஊற்று, நம்பிக்கையின் விளைநிலம், பண்புகளைக் கட்டியெழுப்பும் பல்கலைக்கழகம். குடும்பம் என்ற குட்டித் திரு அவையே திரு அவைக்கும் நாட்டிற்கும் அடித்தளமாக உள்ளதுதிருக்குடும்பத்தில் அன்னை மரியும் புனித யோசேப்பும் தங்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட இன்னல்கள், துயரங்கள், தனிமை அனைத்திலும் இறைவனின் திட்டத்தை அறிந்து அமைதியோடு வாழ்ந்தார்கள். தன்னலமற்ற அன்பையும் தன்னிகரற்ற அமைதியையும் திருக்குடும்பம் உலகில் வாழ்ந்துகாட்டியது. துன்பங்களையும் பாடுகளையும் சுமந்து இல்லறத்தின் புனிதம் காத்தது. இறுதிவரை கடவுளோடு ஒன்றித்திருந்தது. எனவேதான் திருக்குடும்பம் சிறந்த முன்மாதிரியான குடும்பம் என்று அழைக்கப்படுகிறது

இன்றைய நாளில் திருக்குடும்பத்திடம் விளங்கிய புனிதமான அர்ப்பணமும் முழுமையான தியாகமும் ஆழமான புரிதலும் நிறைவான அன்பும் நமது குடும்பங்களிலும் நிலைத்திருக்க வரம் வேண்டி இணைந்து செபிப்போம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

தந்தை, தாய் மற்றும் பிள்ளைகளின் கடமையைப் பற்றி முதல் வாசகம் தெளிவாகக் கூறுகிறது. பெற்றோரைப் பேணிக்காப்பது நமது கடமை. பெற்றோரை மதிக்காமலும் பாதுகாக்காமலும் இருந்தால், நாம் ஆசியை இழந்துவிடுவோம் என்று கூறி பண்போடு வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

தூய ஆவியின் கனிகளான இரக்கம், கனிவு, பொறுமை மற்றும் இயேசுவின் நற்பண்புகளான அன்பு, பரிவு, நல்லெண்ணம், மனத்தாழ்மை, ஆகியவற்றால் நம்மை அணிசெய்து, குடும்பத்திலும் சமூகத்திலும் புதிய மனிதர்களாக வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! நீர் உருவாக்கிய திரு அவை என்ற குடும்பத்தின்  உறுப்பினர்களாகிய நாங்கள் அனைவரும் திரு அவை எமக்குக் காட்டுகின்ற நெறிகளில் வாழவும், எங்கள் திரு அவைத் தலைவர்களோடு இணைந்து செயல்படவும் தேவையான அருள்வரங்களை எமக்குத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. அன்பின் இறைவா! எமது குடும்பங்களில் அன்பு, அமைதி, பொறுமை போன்ற பண்புளைக் கடைப்பிடித்து, குடும்பம் என்ற குட்டித் திரு அவையைப்  பேணிப்பாதுகாக்கவும், வயது முதிர்ந்த பெற்றோரை வீட்டில் வைத்துப் பராமரிக்கவும் தேவையான நல்மனதை எமக்குத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. அன்பின் இறைவா! எமது குடும்பத்தில் பலவிதமான நோய்களால் துன்பப்படும் அனைவருக்கும் நற்சுகத்தைத் தந்து காத்திடவும், புரிதல் இல்லாமல் பிரிந்திருக்கும் குடும்பங்களில் அமைதி ஏற்படவும், குடும்பங்கள் சிறக்க தேவையான ஆசிகளைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. அன்பின் இறைவா! எம் பங்கில் உள்ள குழந்தைகள் அனைவரும் பெற்றோருக்கும், வயதில் மூத்தோருக்கும் மதிப்புக் கொடுத்து வாழவும், மெய்ஞானமாகிய கிறிஸ்துவை அறிவதிலும் அன்பு செய்வதிலும் ஆர்வம் கொள்ளவும் தேவையான மனப்பக்குவத்தை எம் குழந்தைகளுக்குத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
டிசம்பர் 25, 2025, ஆண்டவருடைய பிறப்புப் பெருவிழா - எசா 9:2-4,6-7; தீத் 2:11-14; லூக் 2:1-14

திருப்பலி முன்னுரை

விண்ணகத் தேவன் மண்ணகம் இறங்கி வந்த  மாபெரும் விழா கிறிஸ்து பிறப்பு விழா! கிறிஸ்துமஸ் என்றாலே ஒருவருக்கொருவர் அன்பையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொள்ளும் விழா. பாவத்தில் வீழ்ந்துவிட்ட மானுடத்தை மீட்பதற்காக, இருளின் பிடியில் சிக்கியிருந்த உலகை ஒளியின் பாதையில் வழிநடத்துவதற்காக இறைவன் தம்முடைய ஒரே மகனை இவ்வுலகிற்குப் பரிசாகக் கொடுத்த உன்னதமான நாள். இப்பெருவிழா திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் அன்போடு வாழ்த்தி வரவேற்கின்றேன். ‘இம்மானுவேல்என்றால்கடவுள் நம்மோடுஎன்பது பொருள். இயேசு விருந்தினராக அல்லர்; மாறாக, நம்மை விட்டு எப்போதும் நீங்காத உறவாக வாழ மனிதராகப் பிறந்திருக்கிறார். அவர் வியப்புக்குரியவர். “நம் ஒவ்வொருவர் வாழ்விலும் எதிர்பாராத நேரங்களில், எதிர்பாராத நிகழ்வுகளை நிகழ்த்தி நம்மை வியப்புகளில் ஆழ்த்துபவர் நம் கடவுள்என்றார் திருத்தந்தை பிரான்சிஸ். மாட்டுத்தொழுவத்தில், கந்தைத் துணியில் விந்தையாய் பிறந்து நம் அனைவருக்கும் வாழ்வு கொடுக்கும் இயேசு பாலனுக்கு நாம் என்ன கொடுக்கப் போகின்றோம்? தம் நிலையிலிருந்து இறங்கி வந்து வாழ்வு கொடுத்த இயேசுவைப் போன்று நாமும் இறங்கி வந்து ஏழைகள், கைவிடப்பட்டடோர், தெருவோரத்தில் வாழும் நம் சகோதர-சகோதரிகள், தனிமையில் வாடுவோர், முதியோர் இல்லத்தில் வாழும் மூத்தோர் அனைவரையும் தேடிச்சென்று உதவி செய்வோம். பிறந்திருக்கும் பாலன் இயேசுவுக்கு நமது தூய்மையான வாழ்வைப் பரிசாகக் கொடுப்போம். நம்மோடு வாழ வந்திருக்கும் இயேசு பாலனோடு எப்போதும் நாம் வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்

முதல் வாசக முன்னுரை

நமக்காக ஓர் ஆண்மகவு கொடுக்கப்பட்டுள்ளது. அவர் நம் அனைவருக்கும் விடுதலையைக் கொடுப்பவராகவும் வியத்தகு ஆலோசகராகவும் வலிமை மிக்கவராகவும் அமைதியின் அரசராகவும் இருந்து நம் அனைவருக்கும் மீட்பைத் தந்து காத்திடுவார் என்ற நம்பிக்கை செய்தியைக் கூறும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

ஆண்டவரின் அருளைச் சுவைத்து, கடவுளின் திட்டத்தை அறிந்து, அவர் நமக்குக் காட்டுகின்ற நெறிகளில் நடக்கும்போது துன்பம் நம்மை நெருங்காது. தீயவை எதுவும் நம்மைத் தீண்டாது எனக் கூறி, அவர் கட்டளைகளைக் கடைப்பிடித்து, தூய்மையான மக்களாக வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிகொடுப்போம்.

மன்றாட்டுகள்

1. ‘நல்ல ஆயன் நானே  என்று மொழிந்த இறைவா! எம் திரு அவைத் தலைவர்கள் அனைவரும் உமது பிறப்பு விழா கொண்டுவந்த அன்பையும் நம்பிக்கையையும் சுவைத்து, அதை வாழ்வால் அறிவிக்கத் தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. எம்மோடு வாழ பாலனாகப் பிறந்த இறைவா! எம் பங்கில் உள்ள அனைத்துக் குடும்பங்களையும் ஆசிர்வதித்துக் காத்திடவும், நீர் கொண்டுவந்த மகிழ்வைப் பிறரோடு பகிர்ந்து வாழவும், அனைவரிலும் கடவுளைக் காணவும் தேவையான ஞானத்தை எம் அனைவருக்கும் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எமக்கு வாழ்வு கொடுக்க மனிதனாகப் பிறந்த இறைவா! எம் நாட்டில் பஞ்சம் நீங்கிடவும், நோய்கள் ஒழிந்திடவும்போர், பகை அழிந்து மக்கள் மகிழ்வோடு வாழ்ந்திடவும், எம் நாட்டில் நிலவும் பிளவுகள் அனைத்தும் நீங்கி மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்திடவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. மகிழ்ச்சியாக வந்துதித்த இறைவா! போரினால் பெற்றோரை இழந்த குழந்தைகள் அனைவரும் உம் மீது அளவுகடந்த நம்பிக்கை கொண்டு வாழவும், அவர்கள் நலனில் அக்கறை கொள்பவர்களாக நாங்கள் மாறவும் தேவையான ஞானத்தைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.