news
இந்திய செய்திகள்
கிறிஸ்துமஸ் கொண்டாடத் தடை

சத்தீஸ்கரின் பழங்குடிக் கிறித்தவர்கள் இந்து மதத்திற்குத் திரும்ப வேண்டுமென இந்து அமைப்புகள் மிரட்டல் விடுத்ததுடன், கிறிஸ்துமஸ் விழாவும் கொண்டாடக் கூடாது என்று எச்சரித்துள்ளன. டிசம்பர் 24 அன்று அங்கு கிறித்தவர்கள் மீது தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளன. காவல்துறையினர் இது குறித்து விசாரித்து, கிறித்தவர்களுக்கு எதிரான குற்றங்களைப் பதிவு செய்துள்ளன. கடந்த ஒன்பது மாதங்களில் சத்தீஸ்கரில் கிறித்தவர்களுக்கு எதிராக 127 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

news
இந்திய செய்திகள்
வெற்றிகரமான, மகிழ்ச்சியான மனிதராக உருவாக நற்சிந்தனை அவசியம்

மரக்கன்றுகள் வளர்த்தல், பறவைகளுக்கு இரை வைத்தல் உள்ளிட்ட கல்விக்கு அப்பாற்பட்ட அறம் சார்ந்த செயல்களில் குழந்தைகள் ஈடுபட வேண்டும். விபத்தில் சிக்கிய ஒருவருக்கு உதவக்கூட மனமில்லாமல் அதைக் கடந்து போகிறோம். நேர்மறை எண்ணங்கள் மக்களிடம் குறைந்துகொண்டே வருகின்றன. ஒருவர் வெற்றிகரமான, மகிழ்ச்சியான மனிதராக உருவாக, நற்சிந்தனை மிகவும் அவசியமாகும். நற்சிந்தனை கொண்ட மாணவர்கள் நிறைய பேர் உருவாக வேண்டும்.”

- திருமதி. கி. சாந்தி, தருமபுரி மாவட்ட ஆட்சியர்

news
இந்திய செய்திகள்
மனநலப் பாதிப்பு தனி மனிதப் பிரச்சினையா?

வளரிளம் பருவம் என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையில் முக்கியமான, இன்றியமையாத வளர்ச்சிக் கட்டம். ஒருவர் தனது சமூகத்திறன், உணர்வு ரீதியான புரிதல், மீளும் திறன் (Resilience) ஆகியவற்றை வளர்த்துக் கொள்ளக்கூடிய முக்கியமான பருவமும் இதுதான். ஆரோக்கியமான தூக்கம், சீரான உடற்பயிற்சி, சக மனிதர்களை உணர்வுபூர்வமாகப் புரிந்துகொள்ளுதல், பிரச்சினைகளைச் சமாளிக்கும் திறன் போன்ற ஆரோக்கியமான மனநலப் பழக்கங்கள் இந்தப் பருவத்தில்தான் வளர்த்தெடுக்கப்படுகின்றன.”

- டாக்டர் கார்த்திக் தெய்வநாயகம்

news
இந்திய செய்திகள்
எப்படி மொழிபெயர்ப்பது

ஒவ்வொரு சொல்லிலும் ஒரு வரலாறு வாழ்கிறது; ஒரு பண்பாடு வாழ்கிறது; ஒரு கனவு வாழ்கிறது. ஒவ்வொரு சொல்லிலும் அந்தச் சொல் தோன்றிய நிலத்தின் மண் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அந்த மண்ணின் ஒரு துளியைக்கூடச் சிந்தாமல் சிதறாமல், அப்படியே அள்ளி மற்றொரு நிலத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டும். ஒரு மனத்தில் இருந்து மற்றொரு மனத்துக்கு, ஒரு பண்பாட்டில் இருந்து மற்றொரு பண்பாட்டுக்கு, ஒரு வரலாற்றில் இருந்து மற்றொரு வரலாற்றுக்கு, ஓர் உலகில் இருந்து மற்றோர் உலகுக்கு. அதே அழகு, அதே கனம், அதே வாசம், அதே உணர்வு, அதே மகிழ்ச்சி, அதே துக்கம், அதே ஏக்கம், அதே வலி ஓர் இதயத்திலிருந்து மற்றோர் இதயத்துக்குச் சென்றாக வேண்டும். நேர்மையாகவும் அழகாகவும் பார்க்க மிக எளிதாகத் தோன்றினாலும் ஒவ்வொரு சொல்லும் கனமானது. அந்தக் கனத்தைச் சுமந்துசெல்லும் வலுவை ஒரு மொழிபெயர்ப்பாளர் பெற வேண்டும்.”

- திரு. .கே. இராமானுஜன், மொழியியல் அறிஞர், ஆய்வாளர், பேராசிரியர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்

news
இந்திய செய்திகள்
‘சவால்களைத் துணிவுடனும் ஞானத்துடனும் எதிர்கொண்டவர்!’

தமிழ்நாடு ஆயர் பேரவையின் இரங்கல் செய்தி

முன்னாள் இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் மறைவிற்குத் தமிழ்நாடு ஆயர் பேரவையின் சார்பாக அதன் தலைவரும், சென்னை-மயிலை உயர் மறைமாவட்டப் பேராயருமான மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களின் இரங்கல் செய்தி:

அனைவருக்கும் பேரிழப்பாய் மாறிப்போன டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த வருத்தங்களை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தியப் பொருளாதாரத்தின் சிற்பிஎன்று பெருமையுடன் அழைக்கப்படும் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுடைய மறைவு இந்திய மக்களுக்கு மட்டுமல்லாது, குறிப்பிடும்படியாக, தமிழ்நாட்டு மக்கள் எல்லாருக்கும் ஒரு பேரிழப்பாகும். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் முனைவர் பட்டம் பெற்று, பொருளாதாரப் பேராசிரியராய் தன்னுடைய பணியை ஆரம்பித்த மன்மோகன் சிங் அவர்கள், பொருளாதார மேதையாய் சிறந்து விளங்கி, ஒன்றிய அரசு சார்ந்த பதவிகளை வகித்தவராய் பயணித்து, நம் நாட்டின் நிதி அமைச்சராய் (1991-1996) விளங்கி, அதன் பின்பு இந்திய நாட்டின் பிரதமராய் (2004-2014) பணியாற்றியது நம் அனைவருக்கும் பெருமை அளிக்கிறது.

நிதி நிர்வாகத்திலும் பொருளாதாரச் சீர்திருத்தத்திலும் இந்தியாவைச் சரியான பாதைக்கு அழைத்து வந்த பெருமை இவரையே சாரும். அளப்பரிய விதத்திலே அறிவார்ந்த நபராய் இருந்தாலும், அனைத்துக் காரியங்களிலும் தன்னடக்கத்தோடு நடந்து கொண்டது இவருடைய பெருந்தன்மையை எடுத்துக்காட்டுகின்றது. இந்திய நாட்டின் பிரதமராக இவர் இருந்த காலத்தில் ஏற்படுத்திய பொருளாதாரச் சீர்திருத்தம், பல ஏழை மக்களின் வாழ்வை முன்னேற்றத்தின் பாதையில் அழைத்துச் சென்றது என்பதை யாரும் மறுக்க முடியாது.

நாட்டினுடைய பல்வேறு சவால்களை இவர் அமைதியுடனும் அதேசமயத்தில், மனத்துணிவுடனும், ஞானத்துடனும் எதிர்கொண்டதற்காய் இந்திய மக்களின் நினைவில் என்றும் வாழ்வார். பலதரப்பட்ட மக்களின் அதிலும் குறிப்பாக, ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக இவர் கொணர்ந்த பல திட்டங்களில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் கிராமப்புற மக்களுக்கு மிகப்பெரும் உதவியாக இருக்கின்றது. சிறுபான்மை மக்களின் நலனிலும் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார் டாக்டர் மன்மோகன் சிங். பொதுநலனை அனைத்திற்கும் மேலாக முதன்மை நலனாய் வைத்து இவர் செயல்படுத்திய திட்டங்கள் எல்லாம் மற்றவர் நலனில் இவர் காட்டிய அக்கறையை எடுத்துரைத்தன.

இவருடைய வாழ்வும் வழிகாட்டலும் வரும் தலைமுறையினருக்கு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி உண்மைக்கும் அமைதிக்கும் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கும் அதற்கான செயல்பாட்டிற்கும் அவர்களை அழைத்துச் செல்லும் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை.

இறைவன் இவர் ஆற்றிய பணிகளுக்குப் பரிசளித்து, இவருக்கு நிலைவாழ்வைத் தந்தருள தமிழ் நாடு ஆயர் பேரவையின் சார்பாக என் இறைவேண்டல்களை உரித்தாக்குகிறேன். இவரது மறைவினால் வாடுகின்ற குடும்ப உறவுகள், நட்பின் உறவுகள் இன்னும் இவர் சார்ந்த கட்சியினுடைய உறுப்பினர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு ஆயர் பேரவையின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவர் ஏற்படுத்திய மாற்றங்கள் குளத்தில் எறியப்பட்ட கல் போன்று பல அதிர்வலைகளை ஏற்படுத்தி, இந்தியாவைப் புதிய வளர்ச்சியின் பாதையில் அழைத்துச் செல்லட்டும். அனைவருக்கும் இறைவேண்டுதலுடன் கூடிய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அன்னாரின் ஆன்மா அமைதியில் இளைப்பாறட்டும்.

மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி, பேராயர், சென்னை-மயிலை உயர் மறைமாவட்டம்

news
இந்திய செய்திகள்
ஆங்கிலோ இந்தியர்கள் பேரணி

1950-ஆம் ஆண்டு இந்தியா குடியரசு ஆனபோது ஆங்கிலோ இந்திய சமூகத்திற்கான பாராளுமன்ற இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான அரசு, 2020-ஆம் ஆண்டு இவர்களுக்கான அந்தப் பாராளுமன்ற இட ஒதுக்கீட்டை நீக்கியது. இதனால் ஆங்கிலோ இந்தியர்கள் பாராளுமன்றத்தில் அந்த இட ஒதுக்கீட்டை மீண்டும்  தர வேண்டுமென்று நவம்பர் 28-ஆம் தேதி நியூடெல்லியில், 17-க்கும் மேற்பட்ட ஆங்கிலோ இந்தியர் அமைப்புகள் இணைந்து அறவழிப் போராட்டத்தை நடத்தினார்கள்.