news
இந்திய செய்திகள்
மனிதநேயத்துடன் எழுதும் படைப்புகளே காலம் கடந்தும் நிற்கும்

புத்தகங்களைத் தொடர்ந்து வாசிப்பவர்கள் நீண்ட காலம் சுவாசித்து வாழ்பவர்களாக இருப்பார்கள். படைப்பாளிகள் தான் வாழும் காலத்தில் சமுதாயத்தின் கலாச்சார பண்பாட்டை உயர்த்தி பிடிக்கும் வகையில் படைப்புகளை வழங்க வேண்டும். அத்தகைய எழுத்தாளர்களே உயர்ந்த படைப்பாளிகளாகக் கருதப்படுவர். மனிதநேயத்துடன் எழுதுபவர்களே வரலாற்றில் இடம்பிடிக்கவும் முடியும். அத்தகைய படைப்புகளே காலம் கடந்தும் நிற்கும்.”

- தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் 

news
இந்திய செய்திகள்
டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக இரத்து செய்ய வேண்டும்

மத்திய அரசு டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக இரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றினாலும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து தடை செய்ய வேண்டும்; இத்திட்டத்தைத் தடை செய்யாவிட்டால் அடுத்தக் கட்ட போராட்டத்தை முன்னெடுப்போம். தமிழகம் ஜல்லிக்கட்டு போராட்டம் போல் மற்றொரு போராட்டத்தைச் சந்திக்க வேண்டி இருக்கும்.”

- பி.ஆர். பாண்டியன், தமிழ்நாடு விவசாய சங்கத் தலைவர்

news
இந்திய செய்திகள்
சிறுபான்மை வழிபாட்டுத் தளங்களை மாநில அரசு கட்டுப்படுத்த முயற்சி

மகாராஷ்டிரா மாநிலத்தில் அனைத்து மதங்களின் வழிப்பாட்டுத் தளங்களையும் அரசின் கட்டுப்பாட்டுக்குள்ளாக்கும் அரசின் புதிய முன்மொழிவுக்குக் கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியாஸ் மற்றும் கிறித்தவத் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்கள். இந்தப் புதிய முன்மொழிவானது இந்திய அரசு கிறித்தவ வழிபாட்டுத் தளங்கள் மற்றும் சொத்துகளை மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள்ளாக்கும் முயற்சியாகும். இந்தத் திட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டம் கொடுத்த மதச் சுதந்திரத்திற்கு முரணானது என்று தெரிவித்தார் கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியாஸ். இந்த முன்மொழிவு பற்றி மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் தலைவர் இராகுல் நார்வேகார் கூறும்போது, “இந்தியாவின் பல்துறை அமைப்பு அனைத்து மதங்களையும் சமமாகக் கையாள வேண்டும்என்று கூறினார். ஆனால், கிறித்தவத் தலைவர்கள் இந்தப் புதிய முன்மொழிவை நிராகரித்தனர்; இது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்றும் தெரிவித்தார்கள்.

news
இந்திய செய்திகள்
இறைவனில் இணைந்த இறையியலாளருக்கு இதய அஞ்சலி!

இறையியலாளர் முதுமுனைவர் தந்தை பெலிக்ஸ் வில்பிரட் அவர்கள் இந்தியத் தலத்திரு அவையில் உலகறிந்த 21 -ஆம் நூற்றாண்டின் சிறந்த இறையியலாளர். இவர் பழகுவதற்கு இனியவர்; மிகுந்த தன்னடக்கம் நிறைந்தவர்; பன்மொழி வித்தகர்; சிறந்த படைப்பாளி; மேற்கத்திய மொழிகளில் புலமை பெற்றவர்.

திருச்சி புனித பவுல் குருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியைத் தொடங்கிய இவர்உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் கற்பித்து, இறையியல் துறையில் பல ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியவர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் கிறிஸ்தியல் துறையின் பேராசிரியராக, துறைத் தலைவராகப் பணியாற்றி, பல முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டியவர். வத்திக்கானின் அகில உலக இறையியல் பணிக்குழுவின் உறுப்பினராக இருந்தவர். ஆசிய ஆயர் பேரவையின் இறையியல் பணிக்குழுவின் நிர்வாகச் செயலராகப் பணியாற்றியவர். ஆசியத் திரு அவையில் உள்ள இறையியலாளர்களுள் மிக முக்கியமான ஒருவராக இருந்த இவர், திரு அவையின் உலகளாவிய எண்ணங்களைப் பிரதிபலிக்கக்கூடியவராகவும் அதைச் சீர்தூக்கிப் பார்க்கக் கூடியவராகவும் தனது பங்களிப்பை முழுமையாக வழங்கியவர்.

2024-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற உலக ஆயர் மாமன்ற முதல் அமர்வின் முடிவுகளை ஆராயும் இறையியல் வல்லுநர் குழுவில் தமிழ்நாடு திரு அவை சார்பாகப் பங்கெடுத்து, திரு அவைக்குப் பெருமை சேர்த்தவர். உலக ஆயர் மாமன்றத்தால் வெளியிடப்பட்டுள்ள தயாரிப்பு ஏட்டின் (Preparatory Document) வரைவைத் தயாரிக்கும் நிபுணர் குழுவிலும் இவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

இத்தகைய சிறப்புப் பெற்ற பேராசிரியர் முதுமுனைவர் தந்தை பெலிக்ஸ் வில்பிரட் அவர்கள் தற்போது சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் ஆசிய பன்முகக் கலாச்சார மையத்தை (Asian Centre for Cross Cultural Studies) நிறுவி, அதன் இயக்குநராகவும், ஆசிய கிறித்தவத்தின் உலகளாவிய இதழின் (International Journal of Asian Christianity) முதன்மை ஆசிரியராகவும் இருந்து, இறையியலாக்கப் பணிகளை முன்னெடுத்து வருகிறார். இவரின் திடீர் மறைவு, தமிழ்நாடு திரு அவைக்கு மட்டுமல்ல, இந்திய, ஆசிய, உலகத் திரு அவைக்கே பேரிழப்பு. இவரின் மறைவில் துயறுரும் குடும்பத்தினர், குழித்துறை-கோட்டாறு மறைமாவட்டத்தினர் அனைவருக்கும் தமிழ்நாடு ஆயர் பேரவை ஆழ்ந்த இரங்கலையும் இறைவேண்டலையும் தெரிவித்துக்கொள்கிறது. அன்னாரின் ஆன்மா இறைவனில் என்றும் அமைதி பெறட்டும்.

+ ஜார்ஜ் அந்தோணிசாமி

பேராயர், சென்னை-மயிலை உயர் மறைமாவட்டம்

தலைவர், தமிழ்நாடு ஆயர் பேரவை (TNBC)

துணைத் தலைவர்- இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவை (CCBI)

news
இந்திய செய்திகள்
குழந்தைகள் மீதான இந்திய அரசின் புதிய உத்தரவிற்குக் கிறித்தவர்கள் எதிர்ப்பு!

மத்தியப்பிரதேசத்தில் கிறித்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில், மத்தியப்பிரதேச குழந்தைகள் உரிமைகள் ஆணையம் பள்ளி நிகழ்வுகளில் பங்கேற்க குழந்தைகளுக்குப் பெற்றோர்களிடமிருந்து எழுத்துப்பூர்வ அனுமதி பெறக் கோரியுள்ள உத்தரவு கிறித்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடுபவர்களை நேரடியாகக் குறிவைக்கும் நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. ஜபல்பூரின் மறைமாவட்டக் கல்வியாளர் அருள்பணியாளர் தங்கச்சன் ஜோஸ், இந்த உத்தரவு நேரடியாகக் கல்வி மையங்களைத் தாக்கும் முயற்சியெனக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த உத்தரவு 2023 -ஆம் ஆண்டிலும் பிறப்பிக்கப்பட்டது, அதன்படி கிறிஸ்துமஸ் நிகழ்வுகளில் மாணவர்களைப் பங்கேற்க அனுமதிக்க பெற்றோரிடமிருந்து முன் அனுமதி பெற வேண்டும் என்று கூறப்படுகிறது.

news
இந்திய செய்திகள்
ஒடிசா கிறித்தவர்களுக்கு எதிரான வன்முறை!

டிசம்பர் 27 அன்று ஒடிசா மாநிலத்தில் கோபிந்த சிங் என்பவர் தனது வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை நடத்திக்கொண்டிருந்தபோது, சில நபர்கள் வந்துமதமாற்றம் நடைபெறுகின்றதுஎன்று தவறாகச் குற்றஞ்சாட்டி அங்கிருந்தோரைத் தாக்கியுள்ளனர். கிறித்தவர்களுக்கு எதிராக நிகழ்ந்த இந்த வன்முறை நிகழ்வு பலரையும் கவலை அடையச் செய்துள்ளது, இது நாட்டின் அரசியலமைப்பின்படி உறுதி செய்யப்பட்ட மதச் சுதந்திரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.  இதனால் கிறித்தவர்களின் பாதுகாப்பு மற்றும் மதச் சுதந்திரம் குறித்து கவலை தெரிவித்து, உள்ளாட்சி அதிகாரிகள் மற்றும் மதத் தலைவர்கள் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.