news
இந்திய செய்திகள்
உயர் கல்வி பயிலும் மாணவர்கள் அறிவாற்றலுடன், இதரத் திறமைகளையும் மேம்படுத்தி கொள்ள வேண்டும்

தற்போது நாட்டில் உள்ள 45 ஆயிரம் கல்லூரிகள் மற்றும் 1,200 பல்கலைக்கழகங்கள் மூலம் ஆண்டுக்கு 4.3 கோடி பேர் உயர் கல்வி படித்து வருகின்றனர். இவர்களில் சுமார் 6 லட்சம் பேர் கணினி அறிவியல் கல்வி பயில்கின்றனர். அகில இந்திய அளவில் தற்போது 28.3 சதவிகிதமாக இருக்கும் உயர் கல்வி பெறுவோர் எண்ணிக்கையை, அடுத்த 11 ஆண்டுகளில் 50 சதவிகிதமாக உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உயர் கல்வி பெறுவோர் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வரும் நிலையில், திறமை மிகுந்தவர்களுக்குதான் வேலைவாய்ப்பு கிடைக்கும். எனவே, வேலைவாய்ப்பைப் பெறவும், கிடைத்த வேலைவாய்ப்பைத் தக்கவைத்துக் கொள்ளவும் உயர் கல்வி பயிலும் மாணவர்கள் அறிவாற்றலுடன், இதரத் திறமைகளையும் மேம்படுத்தி கொள்ள வேண்டும்.”

- திரு. டி.ஜி. சீதாராம், இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் தலைவர்

news
இந்திய செய்திகள்
மழலைக் கல்வி தொடங்கும்போதே குழந்தைகளுக்குத் தமிழ்மொழி மீதான பற்றை ஏற்படுத்த வேண்டும்

எதிர்காலத்தில் தமிழ் நிலைநாட்டப்பட வேண்டுமானால் அது நம் குழந்தைகளின் கைகளில்தான் உள்ளது. மழலைக் கல்வி தொடங்கும்போதே, அவர்களுக்குத் தமிழ்ச் சொற்களை அறிமுகம் செய்து தமிழ்மொழி மீதான பற்றை ஏற்படுத்த வேண்டும்.”

- திருமதி. இரா. மனோன்மணி, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் துணை இயக்குநர்

news
இந்திய செய்திகள்
ஆரோக்கியத்தைத் தரும் உணவு உற்பத்தி அமைப்பை உருவாக்க வேண்டும்

உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் உணவு உற்பத்தி அமைப்பை உருவாக்க வேண்டிய தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பூமியைச் சுற்றி அதிகரிக்கும் சுற்றுச்சூழல் ஆபத்துகளும் அதன் அத்தியாவசியத்தை நமக்கு வலியுறுத்துகின்றன. பூமியையும், சுற்றுச்சூழலையும் உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க உயிர் சக்தி வேளாண்மை இன்றியமையாதது. இயற்கை வேளாண்மை, உயிர் சக்தி விவசாய முறைகள் சிறு விவசாயிகளுக்கும் எதிர்காலச் சந்ததியினருக்கும் நன்மை தரும். இதில் கடைப்பிடிக்கப்படும் உத்திகள் சுற்றுச்சூழல் பாதிப்புகளில் இருந்து நம்மை மீட்கின்றன. நவீன வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகிய இரண்டையும் சமநிலையுடன் நீண்டகாலத்துக்கு முன்னெடுக்க வேண்டும்.”

- திரு. ஹெச்.கே. பாட்டீல், கர்நாடக சுற்றுலாத் துறை அமைச்சர்

news
இந்திய செய்திகள்
முற்போக்குச் சிந்தனைகொண்ட நாட்டை உருவாக்க வேண்டும்

இந்திய மக்கள் தொகையில் 24 சதவிகிதம் பேர் 14 வயதுக்கு உள்பட்டவர்களாகவும், 50 சதவிகிதம் 25 வயதுக்கு உள்பட்டவர்களாகவும் உள்ளனர். இவர்களின் கையில்தான் நம் நாட்டின் எதிர்காலம் உள்ளது. தன்னம்பிக்கை மற்றும் முற்போக்குச் சிந்தனை உள்ள இளைஞர்களால் மட்டுமே முற்போக்குச் சிந்தனைகொண்ட நாட்டை உருவாக்க முடியும். காலத்துக்கு ஏற்ப நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, மாணவர்களின் திறனை ஆசிரியர்கள் மேம்படுத்த வேண்டும். ஒரு சிறந்த கட்டடம் மற்றும் தொழில்நுட்ப வசதியால் மட்டுமே சிறந்த மாணவர்களை ஒரு பள்ளியால் உருவாக்க முடியாது. திறன்மிக்க ஆசிரியர்களால்தான் சிறந்த மாணவர்களை உருவாக்க முடியும்.”

- திரு. ராம்நாத் கோவிந்த், முன்னாள் குடியரசுத் தலைவர்

news
இந்திய செய்திகள்
சட்டம் படித்தவர்கள் மக்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்

மாணவர்களின் கல்வி சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். தொடர்ந்து கற்றல் என்பது சட்டத்துறையில் மிகவும் அவசியம். சட்ட மேதை அம்பேத்கர் தனது வாழ்க்கையைச் சமூகநீதி, சமத்துவத்துக்காக அர்ப்பணித்தார். குறிப்பாக, சட்ட உதவியை நாட இயலாதவர்களுக்கு நீதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டிருந்தார். சட்டம் படித்த வழக்கறிஞர்கள் அதைப் பின்பற்றி, மக்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அது மட்டுமின்றி, சமூகப் பிரச்சினைகள், மனித உரிமை மீறல்களைக் காத்தல், பாலின வேறுபாடுகளைக் களைதல் என அனைத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.”

- திரு. கிருஷ்ணகுமார், உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி

news
இந்திய செய்திகள்
இந்தியாவிலிருந்து புதிய கர்தினால்!

கேரளாவின் சங்கனாச் சேரி சீரோ-மலபார் உயர் மறைமாவட்டத்தைச் சேர்ந்த பேரருள்தந்தை ஜார்ஜ் ஜேக்கப் கூவாகாட் (51) அவர்கள் கர்தினாலாக உயர்த்தப்பட்டிருக்கிறார். இவர் ஆகஸ்டு 11, 1973 அன்று கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிறந்தவர். ஜூலை 24, 2004 அன்று  குருவாகத் திருநிலைப் படுத்தப்பட்டார். தென் கொரியா (2009-2012), ஈரான் (2012-2014) ஆகிய நாடுகளில் தூதரகத்தின் செயலாளர் உள்பட பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றினார். பின்னர் கோஸ்டாரிகா (2014-2018), வெனிசுலா (2018-2020) ஆகிய நாடுகளில் துறவிகளின் ஆலோசகரானார். 2020-ஆம் ஆண்டில் உலகெங்கிலும் திருத்தந்தையின் பயணங்களை ஒருங்கிணைப்பதிலும் நிர்வகிப்பதிலும் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.