‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும்
தெய்வத்துள்
வைக்கப் படும்’
(குறள் 50)
என்ற
தெய்வப் புலவர் திருவள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப, மண்ணுலகில் ஒரு புனிதமான வாழ்வை வாழ்ந்து முடித்திருக்கிறார் குழித்துறை மறைமாவட்டத்தின் முதல் ஆயர் மேதகு ஜெரோம்தாஸ் வறுவேல் ச.ச. அவர்கள்.
“ஆண்டவரே என் ஆயர்”
(திருப்பாடல் 23:1) என்னும் திருவிவிலிய விருதுவாக்கைத் தனது வாழ்வின் உயிர்நாடியாகக் கொண்டு, 74 ஆண்டுகள் ஒரு மேய்ப்பனாக, தந்தையாக, தோழனாக, வழிகாட்டியாகத் திகழ்ந்த அந்த உன்னத ஆன்மா மார்ச் 24, 2026 அன்று இறைவனடி சேர்ந்தது. இது தமிழ்நாடு திரு அவைக்கும் குறிப்பாக, குமரி மண்ணுக்கும் ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.
எளிமையின் சிகரம்...
ஆயர்
ஜெரோம்தாஸ் அவர்களின் ஆளுமையைக் குறிக்க ஒரே சொல் போதுமானதென்றால் அது ‘எளிமை.’ எளிய தோற்றம், எந்நேரமும் மாறாத இனிய புன்முறுவல், யாரையும் அரவணைக்கும் கனிவான உள்ளம் என அவர் ஒரு
நடமாடும் மனித நேயமாகத் திகழ்ந்தவர். அதேவேளையில், ஆழ்ந்த ஞானம் கொண்ட ஒரு கற்றறிந்த மாமேதை.
உரோமை
மாநகரின் புகழ்பெற்ற சலேசியப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்று, கல்வியியல் துறையில் சிறந்து விளங்கியவர். அவரது அறிவாற்றல் வெறும் ஏட்டுச் சுரைக்காயாக இல்லாமல், அடித்தட்டு மக்களின் வாழ்வியல் மாற்றத்திற்கான கருவியாகவே எப்போதும் பயன்பட்டது.
தொன்போஸ்கோவின்
வழியில்
இளையோரின்
தோழர்...
புனித
ஜான்போஸ்கோவின் வழியில் பயணித்த ஒரு சலேசியத் துறவியாக, இளையோர் மற்றும் குரு மாணவர்களின் வளர்ச்சியில் அவர் காட்டிய ஆர்வம் அளப்பரியது. ஏழைகளின் கல்விக்காகத் தன்னை அர்ப்பணித்த அவர், இளையோர் மத்தியில் புதிய சமுதாயத்தைப் படைக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி, அவர்களின் திறமைகளையும் வளங்களையும் ஒன்றிணைத்துச் செயல்பட எப்போதும்
இளையோருக்கு அறைகூவல் விடுத்தவர்.
குழித்துறையின்
முதல்
சிற்பி...
2014-ஆம் ஆண்டு
கோட்டாறு மறைமாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு, புதிதாக உருவாக்கப்பட்ட குழித்துறை மறைமாவட்டத்தின் முதல் ஆயராகப் பொறுப்பேற்றபோது, அவர் முன்னால் நின்ற சவால்கள் சாதாரணமானவை அல்ல; பொருளாதாரப் பின்தங்கிய நிலை, நிர்வாகக் கட்டமைப்பு உருவாக்கம், ஆன்மிக ஒருங்கிணைப்பு எனப் பல்முனைப் போராட்டங்களை அவர் முன்மதியோடு கையாண்டார்.
ஒரு
புதிய மறைமாவட்டத்திற்குத் தேவையான வலுவான அடித்தளத்தை அமைத்த பெருமை அவரையே சாரும். வெறும் ஐந்து ஆண்டுகளே (2015-2020) அவர் முழுமையாகப் பணியாற்றினாலும், அந்தக் குறுகிய காலத்திற்குள் வரலாற்றுச் சுவடுகளில் தனது பணியை ஆழமாகப் பதிவு செய்தவர். இறைமக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தி, மேய்ப்புப்பணியைத் துரிதப்படுத்திய அவரது செயல்பாடுகள் போற்றத்தக்கதே!
வாழ்வும் இறைப்பணியும்...
1951-ஆம் ஆண்டு,
அக்டோபர் 21 அன்று கன்னியாகுமரி மாவட்டம் படுவூரில் பிறந்த ஆயர் ஜெரோம்தாஸ், தனது இளம் வயதிலேயே இறைப்பணிக்காகத் தன்னை அர்ப்பணித்தவர். நாகர்கோவில் கார்மல் பள்ளியில் பள்ளிப்படிப்பையும், ஸ்காட் கிறித்தவக் கல்லூரியில் புகுமுக வகுப்பையும் முடித்து, பின்னர் சலேசியச் சபையில் இணைந்தார்.
சென்னை
- பூந்தமல்லி திரு இருதயக் குருமடம், கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரி, உரோமை - சலேசியப் பாப்பிறைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் குருத்துவப் பயிற்சி பெற்று, 1985 - ஆம் ஆண்டு, ஜூன் 2 அன்று வத்திக்கானில் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களால் அருள்பணியாளராக அருள்பொழிவு செய்யப்பட்டவர். 2014-ஆம் ஆண்டு, டிசம்பர் 22 அன்று குழித்துறை மறைமாவட்டத்தின் முதல் ஆயராகத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நியமிக்கப்பட்டு,
2015, பிப்ரவரி
24 அன்று ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
2020-ஆம் ஆண்டு உடல் நலக் குறைவு காரணமாகத் தனது 68-வது வயதிலேயே விருப்ப ஓய்வு பெற்றார்.
மறையாத நினைவுகள்...
பணியில்
இருந்தபோதும், ஓய்வு பெற்ற பின்பும் அவர் கொண்ட ‘தாழ்ச்சி’
என்னும் விழுமியம் அவரை உயர்ந்த இடத்திற்கு எடுத்துச் சென்றது. கடந்த சில காலங்களாக சென்னை சேத்துப்பட்டில் உள்ள ‘ஏழைகளின் சிறிய அருள்சகோதரிகள்’ இல்லத்தில்
தங்கி சிகிச்சை பெற்று வந்த அவர், ஓர் எளிய துறவியாகவே தனது இறுதி மூச்சைச் சுவாசித்தார்.
அவரது
மறைவுச் செய்தி கேட்டு தமிழ்நாட்டின் பல்வேறு மறைமாவட்ட ஆயர்களும் இறைமக்களும் திரண்டு வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தியது, அவர் திரட்டி வைத்திருந்த ‘அன்பு’ என்னும் சொத்திற்குச் சான்றாகும். குழித்துறை பேராலயத்தில் 25-03-2026 அன்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகையில் ஒரு சகாப்தம் முடிவுக்கு வருகிறது.
ஆயர்
ஜெரோம்தாஸ் அவர்கள் விட்டுச் சென்ற எளிமை, தாழ்ச்சி மற்றும் அர்ப்பணிப்புள்ள மறைப்பணி என்னும் சுடரை நாம் ஏந்திச் செல்வதே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும். மண்ணில் வாழ்வாங்கு வாழ்ந்த அந்த உன்னத மேய்ப்பரின் ஆன்மா, விண்ணகத் தந்தையின் முடிவில்லா ஒளியில் இளைப்பாற உருக்கமாக வேண்டுவோம்.
நித்திய இளைப்பாற்றியை
இவருக்குத்
தந்தருளும்
ஆண்டவரே!
முடிவில்லா
ஒளி
இவர்மேல்
ஒளிரட்டும்!
முதன்மை ஆசிரியர்
மொழியின் சிறப்பு
வடிவைப்
பெற்று ஒரு மொழி பேசுவதற்கு மட்டுமல்லாமல் கலாச்சாரம், சரித்திரம், உலகப் பார்வை ஆகியவற்றை வெளிப்படுத்தும் மனித இனத்தின் அடையாளமாகவும், சுற்றியுள்ள உலகை அறிந்துகொள்ளவும், அனுபவங்களைப் பகிரவும், மனத்தின் நிலைக்கண்ணாடியாகவும் மொழியே திகழ்கிறது.
மொழியின்
பிறப்பு ஒரு புதிராகயிருந்தாலும், வரலாற்றில் மனித அறிவையும் கலாச்சாரத்தையும் நாகரிகங்களையும் பற்றி வருங்காலச் சந்ததியினர் அறிந்திட எழுத்து வடிவைப் பெற்று ஒரு பொக்கிஷம் போன்று விளங்குவது இதன் தனிச்சிறப்பு. ஏறக்குறைய கி.மு. 3400-இல்
மனித வரலாற்றில், சுமேரியர் எழுத்து முறையைக் கண்டறிந்து அறிவைப் பதிவுசெய்யும் வழியைக் காட்டினர். கி.பி. 15-ஆம்
நூற்றாண்டில் கூட்டன்பெர்க் என்பவர் அச்சு இயந்திரத்தை உருவாக்கி, பதிவு வடிவிலிருந்த அறிவை மக்களிடையே சென்றடைய வழிவகுத்தார். சென்ற நூற்றாண்டின் இறுதியில் உதித்த இணையதளம் (internet) உலகையே
ஒன்றிணைத்தது மட்டுமல்லாமல், பதில்பேசி (chatGPT)
போன்ற பேசும் இயந்திரங்களுக்கு அடித்தளமாகவும் அமைந்தது.
மொழிகள்
இன்று
உலகில் ஏறக்குறைய 7000 மொழிகள் இருப்பதாக உலகமொழி கலைக்களஞ்சியம் (Ethnologue) கூறுகிறது.
இவ்வாறு ஆயிரக்கணக்கான மொழிகள் இருந்தாலும், உலகில் பாதி மக்கள்தொகையினருக்குமேல் 23
மொழிகளைப் பேசுகின்றனர் என்பதுதான் இன்றைய நிலை. இவைகளில், இந்நூற்றாண்டின் இறுதிக்குள் ஏறக்குறைய 50% மொழிகள்
மறைந்துவிடலாம் என்கிறது ஐ.நா.வின்
பிரிவான யுனெஸ்கோ.
கடந்த
ஐம்பது ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் 250 மொழிகள் அழிந்து போனதாக இந்திய மக்கள் மொழி ஆய்வுக் கழகம் (Peoples’ Linguistic survey of India) கூறுகிறது. வரலாற்றில் மொழிகள் ஏதோ ஒரு காரணத்திற்காக மறைவது இயல்பு; ஆனால், அதன் வேகம் இன்று அதிகம் இருப்பதாக உணரப்படுகிறது.
அழிந்துவிட்ட,
வழக்கொழிந்த,
அச்சுறுத்தப்படும்
மொழிகள்
வழக்கிலிருந்த
ஒரு மொழியைப் பேசுபவர் ஒருவருமில்லாத நிலை அல்லது அம்மொழியைச் சொந்த மொழியாகப் பேசப்படாமலிருப்பது அல்லது அம்மொழியினரின் வாரிசுகள் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லாமலிருப்பது போன்ற காரணங்களால் அம்மொழி அழிந்துவிட்ட (Extinct) மொழி
வரிசையில் உதாரணமாக, பழங்கால சுமேரியம் இன்று சொந்த மொழியாகப் பேச ஒருவரும் இல்லாத நிலையில் அம்மொழி அழிந்த மொழியாகிறது. ஒரு மொழி அந்தச் சமுதாயத்தினரால் பேசப்படாமல், ஆனால் ஒருசில காரணங்களுக்காக மட்டும் அல்லது குறிப்பிட்ட தேவைக்காக, உம்: இலத்தீன் மொழி போன்று உபயோகத்திலிருந்தால், அம்மொழி வழக்கொழிந்த மொழியாகிறது (Dead).
ஒரு
மொழியை நன்கு பேசுபவர்கள் இல்லாமலிருந்தாலும், தங்கள் சமுதாயத் தேவைகளுக்கும், அடையாளத்திற்கென்றிருப்பதைச்
செயலிழந்த (Dormant) வகையைச்
சார்ந்ததென்று கருதப்படுகிறது. சொந்தமாக ஒரு மொழியைப் பேச உள்ளூர் வாசிகளில்லாமல் அல்லது அவர்கள் வேறு ஆதிக்கம் செலுத்தும் (dominant) மொழிக்கு மாறிடும் சூழலில் அச்சுறுத்தப்படும் (Endangered) மொழியாகக்
கருதப்படுகிறது. உம்: வட மற்றும் தென்
அமெரிக்க உள்ளூர் (Indigenous) பெரும்பான்மை
மொழிகள் அனைத்தும் இவ்வகையைச் சார்ந்தவை.
பிராந்திய மொழிகளின்
எதிர்காலம்
வரலாற்றில்
மொழிகள் பல காரணங்களால் அச்சுறுத்தப்பட்டு,
பாதிப்படைந்து, வழக்கொழிந்த மொழிகளாகின. ஆனால், இன்று உலகமயமாதல், இடம்பெயர்தல், மொழியை ஒழித்தல் (linguicide) போன்ற
காரணங்கள், இதன் வேகத்தை முடுக்கிவிட்டிருப்பதாகத் தெரிகிறது. பல மில்லியன் ஆண்டுகளாக
மனித இனத்தின் பழக்கவழக்கங்கள், மருத்துவமுறைகள், பழங்கால வானிலைத் தகவல் முறை என்பவைகளைப் பிரதிபலிக்கும் இவ்வற்புதக் களஞ்சியம், தலைமுறை தலைமுறையாக மனித இனத்தின் புதையல்களாக விளங்குகின்றன.
மொழி
வழக்கொழிந்தால், அம்மொழியின் சொற்களை மட்டும் இழப்பதில்லை; அம்மொழியினரின் கலாச்சார, வரலாறு, பாரம்பரிய அறிவுசார் பொக்கிஷங்கள் என்று அவர்களின் ஒட்டுமொத்த அடையாளமும் இழக்கப்படுகிறது. அண்மை ஆண்டுகளாக உலகளவில் ஆட்சியாளர்களின் கலோனிய (colonial mindset) மனநிலை, அதாவது
பெரும்பான்மையினரின் மொழியைக் கல்வி, அலுவல் மொழிப் பிரிவுகளில் விரிவுபடுத்தல், தேசியமொழி, பிற மொழிகளுக்குப் பாரபட்ச உரிமை போன்ற காரணங்களால் உள்ளூர் மொழி அழிவிற்கு வழிவகுப்பதைக் காண்கிறோம்.
ஏ.ஐ.
மொழி
வளர்ச்சிக்கு
உதவுமா?
இன்று
நாம் ஒரு பெரிய உலகக் கிராமத்தில் (Global village)
வசிக்கிறோம் என்ற சூழலில், ஒருவரோடொருவர் தொடர்பு அத்தியாவசியமாகிவிட்டது. ஏ.ஐ. உலக
நாடுகளின் எல்லைகளைக் கடந்து, தரவுகள் வடிவில் ஊடுருவும் திறன் பெற்றது. ஏ.ஐ. மந்தமான
அல்லது முணுமுணுப்பு (grunt) வேலைகளைத் தவிர்க்கும் ஆற்றலாகவும், மொழி-இலக்கணம், சொல்வளம் என்பவைகளை அறியும் ஆற்றல் கருவியாக இருப்பதும் அதன் சிறப்பு. இருந்தாலும், நுணுக்கம் (nuance), கலாச்சாரம், தொடர்பு என்பவைகளில் மனிதரின் கவனமும் ஈடுபாடும் தேவையென்பதால், மனிதத்துவப் புரிதலுடனான அணுகுமுறைதான் மக்களை இணைக்கும் பாலமாக விளங்குமென்பதில் சந்தேகமில்லை. பாரம்பரிய மொழி கற்றலென்பது புத்தகம், வகுப்பறை, பாடத்திட்டம் என்ற வளையத்திலிருந்தது தொடர்கிறது.
இன்று
நாம் எவ்வாறு கற்கிறோம்? பணி செய்கிறோம்? தொடர்பு கொள்கிறோம்? என்பதை ஏ.ஐ. தொழில்நுட்பம்
மாற்றியமைத்து வருகிறது. வேலைவாய்ப்பு என்பது உலகளாவியதாகிவிட்டது. ஒருவரின் தகுதியோடு, உலகக் கலாச்சாரச் சூழலுடன் ஒன்றிணைந்து பணியாற்றுவதும் தேவை என்றாகிவிட்டது. மொழி கற்றல் ஒருவரை உலகளாவிய வேலைத் தகுதிக்குத் தயார்படுத்திக்கொள்ள உதவுகிறது என்ற கதவைத் திறந்ததினால், ஏ.ஐ. கருவிகள்
(tools) ஒருவரின் பணிக்கேற்ப பிற மொழி கற்றலுக்கும் உதவியாக உள்ளன.
இன்று
உலகில் பல்லாயிரக்கணக்கான மொழிகள் இருந்தாலும், 100 மொழிகளில் மட்டுமே பயிற்சியளிக்கப்பட்ட ஏ.ஐ. கதைப்பான்கள்
(chatbots) உள்ளன. (கதைப்பான் என்பது மனித உரை அல்லது குரலை மொழி ஆய்வு-கற்கும் இயந்திரச் செயலிகள் மூலம் புரிந்து பதிலளிக்கும் மென்பொருள்). கதைப்பான்களில், ஆங்கில-மொழி கதைப்பான் மாடல்களே முதலிடத்தில் உள்ளன என்கிறது உலகப் பொருளாதாரக் கழக அறிக்கை (world economic forum). இது
பிற உலக மொழிகளுக்குச் சாதகமாக அமையுமா? அல்லது பெரும்பான்மையினரின் மொழி - கதைப்பான்களின் ஆதிக்கத்திற்குச் சிறுபான்மையினரின் மொழிகள் ஈடு கொடுக்க முடியுமா? என்ற நிலையையும் உருவாக்குகிறது.
சுருக்கமாக,
நாம் ஏ.ஐ. கருவிகளுடன்
(AI-Tools) கைகோர்த்துச்
செல்லும் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கிவிட்டோம். மொழி, இன்றைய தொழில்நுட்ப வேகத்தோடு ஈடுகொடுத்து ஓடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. வணிகம், போர் முனை, நிதி, மருத்துவம், போக்குவரத்து என்ற பல துறைகளில் ஏ.ஐ. ஆதிக்கம் செலுத்தும்
வேகத்தில், பெரும்பான்மையினரின் மொழிகளுக்குச் சிறுபான்மையினரின் மொழிகள் பலிகடாக்களாகிவிடுமோ? என்ற அச்சத்தைக் களைய வேண்டிய தேவை உள்ளது.
வாக்கு அரசியல் என்பது அடிப்படை அறமற்றது; தரம் தாழ்ந்தது; எதிரையும் புதிரையும் இணைத்து வைப்பது; எலியும் பூனையும் கூட்டணி அமைப்பது; பழம் நழுவித்தேன் கலந்த பாலில் விழுவது; வல்லவர்கள் வாகை சூடத் துணை நிற்பது; நல்லவர்களைத் தோல்வியில் தள்ளுவது.
தோழர்
நல்லகண்ணு இருமுறை சட்டமன்றத் தேர்தலிலும், ஒருமுறை நாடாளுமன்றத் தேர்தலிலும் தோற்றுப் போனார். இதைத் தேர்தல் அரசியலின் அழிச்சாட்டியம் என வருணிக்கலாம்.
‘இங்கு யார் அடுத்த முதல்வர்?’ என்ற அதிரடி ஆட்டமே நடக்கிறது. அரசியலில் நியாயத் தர்மங்களுக்கு இடமில்லை, நல்லவர்களுக்கு வாழ்வில்லை.
தமிழ்நாடு
தேர்தல் களத்தில் மதச்சார்பற்ற அணி எனப்படும் தி.மு.க.
கூட்டணி ‘ஆட்சியில் பங்கு இல்லை; அதிகாரத்தில் பங்கு இல்லை’ என அழுத்தமாகக் கூறிவிட்டது.
மு.க. ஸ்டாலினே மீண்டும்
முதல்வர் என்கிறது.
என்.டி.ஏ. கூட்டணியில்
எடப்பாடி பழனிச்சாமி, ‘நான்தான் முதல்வர்’
என மார் தட்டுகிறார். அமித்ஷா, மோடி வகையறாக்களோ ‘என்.டி.ஏ. ஆட்சி’ என்கிறார்கள்.
மூன்றாவது அணியின் நடிகர் விஜய் அவர்களோ தான் முதல்வராகிவிட்ட எண்ணத்தில் காலம் தள்ளுகிறார். நான்காவது அணியோ என்றும்போல் தனித்தே நிற்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களோ எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி தலைக்கொள்ளியோ அதை எடுத்துத் தலையில் சொறிந்து கொண்டு காலங்காலமாகக் கதறி அழுகிறார்கள்.
தமிழ்நாடு
வாக்காளர்கள் விழிப்புணர்வு கொண்டவர்களா? என்பதே கேள்விக்குறி. ஏ.ஐ. தொழில்நுட்பம்
என்ற புதிய விஞ்ஞானத்தை மெச்சிக்கொள்கிறோம். இக்காலத்தில் மக்களோ உதயசூரியன், இரட்டை இலை, கை எனப் பரம்பரை
வாக்காளர் மனப்பான்மையில் இருக்கிறார்கள். கடந்தகாலத் தேர்தல் முடிவுகள் இந்த ‘சின்ன வாக்களிப்பு’ பிம்பத்தையே பிரதிபலிக்கிறது.
விதிவிலக்காக, தமிழ்நாட்டு மக்கள் சிலர் ‘மாற்றத்திற்கு எங்கள் வாக்கு’ என்கிறார்கள். அவர்களுக்காக 2016-இல் அப்படி அமைக்கப்பட்ட மக்கள்நலக் கூட்டணி பெரும் தோல்வியைச் சந்தித்தது. மாற்றத்திற்கான கூட்டணி வெற்றி பெற்றிருந்தால், பத்து ஆண்டுகளுக்கு முன்பே நடிகர் விஜயகாந்த் முதல்வராகி இருப்பார்.
அண்மையில்
ஓர் இளம்பெண் கூறுகிறார்: “எங்கள் முதல்வர் வேட்பாளருக்கு அழகு, நடிப்பு, நடனம் தெரியும்.” மற்றோர் இளைஞரோ, “எங்கள் முதல்வர் வேட்பாளரைப் போலப் பிற முதல்வர் வேட்பாளர்களுக்கு மேடைப்பேச்சு பேசவருமா?” எனக் கேட்கிறார். இவர்கள் குறிப்பின் அடிப்படையில் பார்த்தால், நடிகர் சிவாஜி கணேசன் முதல்வராகி ஐம்பது வருடங்களாகி இருக்கவேண்டும். வைகோ முதல்வராகி 25 ஆண்டுகள் காலம் கனிந்திருக்கலாம்.
தமிழ்நாட்டுத்
தேர்தல் காலத்தில் பெரும் பிரச்சினையே ‘கூட்டணி வென்றால் யார் முதல்வராவது?’ என்பதே. இதில் மக்கள் பிரச்சினைகள் பின்தள்ளப்படுகின்றன.
பருவகாலம்
போலவே தமிழ்நாட்டுத் தேர்தல் களம் அனலாகித் தகிக்கிறது. பத்திரிகைச் செய்திகள் கூறுகிறது: ‘காவேரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அரசு திட்ட அறிக்கை தயாரிக்கிறது.’ ஒன்றிய அரசின் ஒப்புதலுக்கு முன்வைக்க காய்களை நகர்த்துகிறது.
உலகளாவிய
கீழ்மடை பாசன நீர் பயனாளர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கிறது. தமிழ்நாட்டில் மாநிலக் கட்சிகளின் முதுகில் ஏறி சவாரி செய்கிற தேசியக் கட்சிகள், தமிழ்நாட்டு விவசாயிகளின் காவிரி நீர் உரிமையைக் கிஞ்சித்தும் கண் காண்பதில்லை, நியாயமாக நடப்பதில்லை. கர்நாடகாவின் வாக்கு அரசியலுக்கு காவிரிப் பாசன விவசாயிகளைப் பலி தருகிறார்கள். கூட்டணி, சீட், அதிகாரம் என்பதில் அடாவடி செய்கிறார்கள். வாக்கு அரசியலே பிரதானம் என்கிறார்கள். காவிரி மட்டுமல்ல, கேரள அரசோடு முல்லைப் பெரியாரில் இழுபறி நீடிக்கிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள். தேர்தல் காலத்தே நதிநீர் தாவாக்கள், தீர்வுகள் குறித்துப் பேசப்படவேண்டும்.
தேசிய
அளவில், நீண்ட காலமாகத் தீர்க்கப்படாத தமிழ்நாட்டுப் பிரச்சினைகள் குறித்து தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து குரல் எழுப்பவேண்டும். தங்கள் பார்வையை, தீர்வுகளை முன்னெடுக்க கருத்தாக்கங்களைத் தேர்தல் காலத்தே உருவாக்கலாம். இந்தி மொழித்திணிப்பு, நீட் தேர்வு விலக்கு, கச்சத்தீவு, மாநிலங்களின் உரிமை பறிப்பு, நிதிப் பகிர்வில் மாநிலங்களிடையே காட்டப்படும் பாரபட்சம் என்பது அடிக்கோடிட்ட, அடிப்படை முன்னெடுப்புகள் எனலாம்.
ஒன்றிய
அரசு மாநில அரசுகளை, உள்ளாட்சி அமைப்புகள் போல நடத்தும் அடிமைத்தனத்திற்கு, அடாவடிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். எங்கும் எதிலும் உரிய பிரதிநிதித்துவம் கட்டாயம் எனலாம்.
தேசத்தில்
ஐம்பது விழுக்காடு உள்ள பெண்களுக்கு, அவர்களின் விழுக்காட்டு அளவிற்கு இடஒதுக்கீடு இல்லை.
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைப் பா.ச.க.
கிடப்பில் போட்டுவிட்டது. பா.ச.க.வின் தாய் வீடான ஆர்.எஸ்.எஸ். பெண்களின் உரிமைகளை மறுக்கிற அடிப்படைவாத அமைப்பாகும்.
ஆர்.எஸ்.எஸ். சிறுபான்மை மக்களை இரண்டாந்தரக் குடிமக்களாகக் கருதுகிறது. ஆகவே சிறுபான்மை மக்களுக்கும் போதிய பிரதிநிதித்துவம் இல்லை.
தமிழ்நாட்டில்
சிறுபான்மையோர் 15 முதல் 20 விழுக்காடு என்கிறது புள்ளிவிவரம். தமிழ்நாட்டுத் தேர்தல் களத்தில் நான்கு இசுலாமிய அமைப்புகள் தி.மு.க.வின் கூட்டணியில் உள்ளன. இதைச் சமன் செய்ய தென் மாவட்டங்களில் பெரும்பான்மையாக
உள்ள ஒரு குறிப்பிட்ட சாதியின் நான்கு கட்சிகளை அ.தி.முக.வின் என்.டி.ஏ. கூட்டணி
சேர்த்துள்ளது. இது சாதிவாரியான வாக்குகளைப் பெற உதித்த திட்டமாகும். இந்த அடிப்படையில்தான் பா.ம.க.
கட்சிக்கு அதிகச் சீட்டும், மருத்துவர் அன்புமணிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் என்.டி.ஏ. கூட்டணியால்
வழங்கப்பட்டது. இதேபோல, சாதிக் கட்சிகளுக்கு, அதிக சீட் வழங்கி வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர் மு. கருணாநிதி என வரலாறு பாடம்
போதிக்கிறது. ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், திராவிட முதல்வர்களால் தமிழ்நாடு வளர்ந்தது என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்.
தமிழ்நாடு
தன்னிறைவு பெற்ற மாநிலமாக வருணிக்கப்படுகிறது. மாநில மக்களின் தனிநபர் வருவாய் உயர்ந்துவிட்டது. கல்வி, சுகாதாரம், பெண்களின் வேலைவாய்ப்பு எனப் பெருமை பேசப்படுகிறது. தமிழ் மக்கள் முழு நிறைவு பெறவில்லை. விவசாயிகள் பருவ மாற்றப் பாதிப்பில், விவசாயத்தில் நட்டம் அடைகிறார்கள். விவசாய விளைப்பொருள்களுக்குரிய விலை இல்லை. நெசவுத் தொழில் அழிந்துவிட்டது. மீன்பிடித் தொழில் எல்லை தாண்டிய பிரச்சினைகளால் வாழ்வா? சாவா? என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறது. தமிழ்நாட்டில் சிறு-குறு தொழில்கள் பாதியளவு அழிந்துவிட்டதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மாற்றுத் திட்டங்கள் தேடப்படவேண்டும்.
பன்னாட்டு
பெரு நிறுவனங்களின் ஆதிக்கம், சுற்றுச்சூழல் பாதிப்பு என தமிழ்நாடு வளர்ச்சிக்கான
சவால்கள் பல்லாயிரம். இவை தேர்தல் காலத்தில், தேர்தல் களத்தில் பேசப்படவேண்டும். ஆனால், புதிய கலாச்சாரமாக முதல்வர் பதவி வகித்த ஒருவர், நான்காம் தரப் பேச்சாளர்போல ஊருக்கு ஊர் தரம் தாழ்ந்து பேசுகிற அநாகரிகம் நடக்கிறது. பா.ச.க.வோடு கூட்டணி சேர்ந்த அ.தி.மு.க. சேர்க்கையே இதன்
திசை வழியாகும்.
தேர்தல்
காலத்தே தமிழ்நாட்டு மக்களின் வாழ்வுரிமை, மொழியுரிமை, கலை-பண்பாட்டுக் காப்புரிமை என்ற நகர்வுகளில் ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறவேண்டும். விழிப்புணர்வு பெறும் வாக்காளரே தமக்கான நல்லாட்சிக்கு வாக்களிக்க இயலும்.
நாம்
மண்சார்ந்த, தமிழ் மரபு சார்ந்த, மொழி சார்ந்த விவாதங்களில் விழிப்புணர்வு பெறுவோம். நல்லாட்சி அமைய வாக்களிப்போம்.-
மறைந்த அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய நூலொன்றின் பெயர்தான் ‘நீதி தேவன் மயக்கம்.’ நாட்டில் மக்கள் வாழும் பொதுவெளியில் வளர்க்கப்படும் நம்பிக்கைகளை, புனைவுகளை (Myths) நாட்டின் கலாச்சாரமாகக் கட்டமைத்து, கேள்விக்கு உட்படுத்தாமல் ‘தர்மம்’ என்று ஏற்க வைத்துவிடும் போக்கினை ஏற்போர் பலர் உளரெனினும், எப்போதோ சிலர் கேள்விக்குள்ளாக்கியதும் உண்டு. கேள்வி கேட்போரை, மரபுகளை, புனைவுகளை, விமர்சனத்துக்குள்ளாக்குவோரைக் கலகக்காரர்கள் என்று அழைக்கப்பெறலும் உண்டு. இக்கலகக்காரர்களை எப்போதும், எல்லாச் சமூகமும் கொண்டாடியது இல்லை; பழிக்கப்பெறும் இவர்கள் சரித்திரத்திலிருந்து ஒதுக்கப்பெறுவதும் உண்டு. மறக்கப்பெறுவதும் சாத்தியமே. எனினும், இவர்கள் உண்மையின் பக்கமே நின்றனர் என்பதனை வரலாறு நிரூபித்து வந்துள்ளது.
தமிழ்ச்சமூகம்
போற்றிய இராமாயணத்தை அண்ணா விமர்சித்தார். இராமாயணத்தைக் கொளுத்தச் சொன்னார் தந்தை பெரியார். நீதியின் காவலனாகக் கருதப்பட்ட இராமன்,
வாலியை மறைந்து நின்று கொன்றமையை ‘அறமற்ற செயல்’ என்று
இகழ்ந்தார் அண்ணா. இராவணனால் சிறைப்பிடிக்கப்பட்ட சீதையை அக்னி பிரவேசம் செய்யச் செய்ததோடு, குழந்தைகளோடு வனவாசம் செய்ய இராமன் அனுப்பிய இயல்பை ‘என்ன வகை நீதி?’ என்று நீதிதேவனிடம் நீதி கேட்டார் அண்ணா.
அண்ணா
எழுதிய நாடக நூலான இந்நூல் அவர் காலத்தில் புதுமையானது. நீதி தேவன் அமர்ந்திருந்த நீதி அவையில், இராமனைக் குற்றவாளியாக நிறுத்தி இக்கேள்விகளைக் கேட்பார் அண்ணா. இம்மாதிரியான கேள்விக்கணைகளை எழுப்பும் வகையிலான உரிமை மதிக்கப்பட்டிருந்தது என்ற உண்மையையும் நாம் மறந்துவிடலாகாது. இராமனைக் கேள்வி கேட்போர் அல்லது விமர்சிப்போர் இன்று தேசத்தை விமர்சிப்போர் மட்டுமல்ல; நாட்டுப்பற்றே இல்லாதோர் என்றும், ‘நகர்ப்புற நக்சல்கள்’
என்றும் வர்ணிக்கப் பெறுவர் என்ற உண்மைநிலை இன்றைய நிலை.
தொன்மையென்றும்,
பாரம்பரியம் என்றும், மாறா தர்மம் என்றும், ஏன் ‘சனாதனம்’
(Eternity) என்றும்
போற்றப்பட்ட, தூக்கிச் சுமக்கப்பட்ட நம்பிக்கைகளை எப்போதும் ஒருசிலரால் விமர்சிக்கப்படுவதும் உண்மையை ஏற்பதும் அதே வேளை மறுப்பதுவும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன.
ஏனிந்த முன்னுரை?
அண்மையில்
நடந்த அல்லது நடைபெறுகின்ற நம் அரசியல் தலைவர்கள் தொடர்பான சில அறநெறி நிகழ்வுகள் இக்கட்டுரையை எழுதக் காரணமாய் அமைந்தன. சமூக அரசியல் களம் கண்ட எவரும் பொதுவெளியில் விமர்சிக்கப்படுவது எதார்த்தம். எக்கட்சியும் எக்கொள்கையும் கொண்டவராயினும், தனிமனித அறநெறி வாழ்வியல் விமர்சிக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல; ஆயினும், தலைவர்கள் எனத் தன்னை முன்னிறுத்துபவர்கள் முன்வைக்கும் எடுத்துக்காட்டான வாழ்வியல் சமூகத்திற்கும் தங்கள் கட்சிக்கும், அத்தலைமையை ஏற்கும் நாட்டிற்கும் மிகவும் முக்கியம்.
இன்றைய
அரசியல் களத்தில் சில கட்சித் தலைவர்களைத் தொடர்புபடுத்திப் பெண்ணிய விமர்சனம், பாலியல் குற்றச்சாட்டு, குடும்ப அறநெறி தவறிய சூழல் எனச் செய்திகள் அன்றாடங்காட்சியாவது இன்றைய-நாளைய தலைமைத் துவத்தின் அறநெறி மதிப்பீட்டைக் கேள்விக்குள்ளாக்குவதோடு, இளைய தலைமுறையினரிடத்தில் தவறான மதிப்பீடுகளைக் கட்டமைக்கிறதே என்பதுதான் எமது ஆதங்கம்.
இத்தகைய
தலைவர்களைத் தொடர்புபடுத்தி வெளிவரும் பாலியல் புகார்களில் உண்மையே இல்லையென்று அவர்களைப் பின்தொடரும் கூட்டத்தினர் நம்புகின்றனரா? உண்மை கொஞ்சம் கூட இல்லையென்று நம்பினாலும் நம்பாவிட்டாலும் நாம் நேசிக்கும் தலைவர்மீது இவ்வாறான பழிச்சொல் வந்துவிட்டதே என்ற கவலை பக்கத்தே நிற்கும் தோழர்-தோழியர்க்கும், தூரத்தே நின்று ஊடகவழி செவிமடுப்போர்க்கும் உருவானதுபோல் தெரியவே இல்லையே! ‘நாம் மதிக்கும் தலைவர் இவரா?’ என்ற வியப்பும் கூட ஒருவர் முகத்திலும் எழவில்லையே! பல மாதங்கள் ஊடக
வழி, மேடை வழி ‘இந்நடத்தை’
பேசுபொருளான போதும், ‘அய்யோ’ என்ற கவலைக்குரலும் ஆச்சரியக்குரலும் எவருக்கும் எழவே இல்லையே! தன் தலைவனைப் பற்றிய செய்தி, அது பொய்யாகவே இருக்கட்டும், அவர்களுடைய தொண்டர்கள் மத்தியில் ஓர் அதிர்ச்சியையாவது தந்திருக்க வேண்டாமா? இந்தக் கண்டுகொள்ளாமை எந்தப் பண்பாட்டின் வெளிப்பாடு? புரியவில்லையே!
அரசியலார்க்குத்
தனிப்பட்ட வாழ்வு உண்டென்பதும், அத்தனிவாழ்வின் சுதந்திரத்தை மதிக்க வேண்டும் என்பதும் உயர்ந்த கோட்பாடுதான். ஆனால், தனிப்பட்ட வாழ்விற்கும், ஒழுக்கக் கோட்பாட்டிற்கும் தொடர்பே இல்லையென்று கூறிவிட முடியுமா? தனிநபர் சார்ந்த ஒழுக்கம் காக்கப்பெற வேண்டுவது கட்டாயமில்லையா?
தனிமனிதக்
கவர்ச்சி மற்றும் இரசிக மனப்பான்மையோடு அரசியல் வேட்கையும் இணைவது சனநாயக வீழ்ச்சியின் அச்சாரம் என்பதே உண்மையாகும். தனிநபர் துதியும் சனநாயகமும் இணைந்து செல்ல முடியாது. தனிநபர் துதி மற்றும் வழிபாட்டில் அறிவுப் பார்வை இல்லை; அறிவியல் நோக்கமற்ற குடிகளால் சனநாயகம் வளராது. எழுபத்தைந்து ஆண்டுகாலச் சனநாயக இந்தியாவில் வளர்ந்துவரும் இத்தகைய மனநிலை நம் சனநாயகப் பண்பையே கேள்விக்குள்ளாக்குவதோடு, எம்மாதிரியான சனநாயகத்தை நாம் கட்டிக்காத்து வருகிறோம் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
‘அந்தரங்கம் புனிதமானது’ என்பார்
எழுத்தாளர் செயகாந்தன். அந்தரங்கம் காக்கப்பெற வேண்டுவது அடிப்படை உரிமை. ஆனால், தனிமனித வாழ்வு மூலம் காக்கப்பெற வேண்டிய மாண்பும் மரியாதையும் காக்கப்பெறா நிலையில், பொதுவாழ்வில் தலைமை தேடி வருபவரின் ஒழுக்க விதிகளை நாம் கேள்விக்குள்ளாக்காமல் கடந்து செல்வது ‘பாவம்’ இல்லையா?
பெரும்பான்மை
மக்களின் ஒருமித்த ஓங்கு குரலில் பாவம் மரித்துப் போய்விடுமா? இது யார் வகுத்த நியதி? அய்யோ... பாவமே! இங்கு வீழ்ந்தது ஒரு தனிநபர் தலைமையல்ல; வீழ்ந்தது மாபெரும் சமூகத்தின் ஒழுக்க விதிகள். ‘ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்’ என்னும்
வள்ளுவன் வாக்கிற்கு நாம் தரும் மதிப்பு என்ன? கண்மூடித்தனமாகத் தலைமையை ஏற்றபின், தங்கள் தலைவர்களின் அனைத்து வீரசாகசங்களும் போற்றப்படுகையில், இவர்களது சுய ஒழுக்கக்கேடும் காத்தற்கரிய வாழ்வறமே என ஏற்றுக்கொள்ளும் காலம் வெகுதூரத்தில்
இல்லை என்பதுதான் இங்குப் பெரிய சோகம்.
நியாயப்படுத்தும்
வரலாறு
தமிழ்நாட்டில்
இம்மாதிரியான நிகழ்வுகள் நியாயப்படுத்தப்பட்டு வந்துள்ளன என்பதும் வரலாறு. மகாத்மா காந்தி அவர்கள் தான் சார்ந்த அனைத்து வாழ்வியல் நிலைகளிலும் ஒழுக்கம் எனும் அறத்தைப் போதித்ததோடு வாழ்ந்தும் காட்டினார். அகிம்சையை, பிரம்மச்சரியத்தை வாழ்வறமாகப் போற்றினார். இவரைத் தொடர்ந்து நாட்டின் மிகப்பெரிய தலைவர்கள் தனிவாழ்விலும் பொதுவாழ்விலும் அறம் பேணினர். லோக்நாயக் என்று அழைக்கப்பெற்ற செயப்பிரகாஷ் நாராயணன் அவர்களின் இல்லற வாழ்வுப் பற்றி எத்தனை பேர் அறிவர்? மணவாழ்விலும் பிரம்மச்சரிய விரதத்தைப் பிறழாது கடைப்பிடித்தவர்.
தமிழகத்துக்
காந்திய சீடர்கள் அப்படித்தான் வாழ்ந்தனர். பெருந்தலைவர் காமராசருக்கென்று தனிவாழ்வு எதுவுமில்லை என்பதுதான்
அவர் சிறப்பு. கதராடை அணிந்த தலைவர்கள் பலர், அடிப்படைக் காந்திய சிந்தனையில் எந்தவிதச் சமரசமுமின்றி வாழ்ந்தனர். தனிமனித வாழ்வில் எளிமையையும் தூய்மையையும் கடைப்பிடித்தனர். அண்மையில் மறைந்த தோழர் நல்லகண்ணுவின் வாழ்க்கை இதற்கு நற்சான்று.
தமிழ்நாட்டின்
திராவிடர் ஆட்சித் தலைவர்களின் போக்கில் சில ஒழுக்க அதிர்வுகள் நிகழ்ந்தன. பல்திறன் கொண்ட கலைஞரின் தனி வாழ்வு மெச்சும்படியாய் இல்லை என்பதும் கசப்பான உண்மையே. த.வெ.க.
தலைவரின் அண்மை ஒழுக்கச் சிதைவைச் சிலர் கேள்விக்குள்ளாக்கியபோது, முந்தைய தலைவர்களின் வழியைத்தான் இவர் தொடர்கிறார் என்று நியாயப்படுத்தும் கலாச்சாரமாக மாறியுள்ளமையும் அசிங்கமே.
‘திமுக அரசில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை’ என்று
கவலைப்படும் எடப்பாடியின் அ.தி.மு.க. நடத்திய ஆர்ப்பாட்டமொன்றில்
கலந்துகொண்ட மேனாள் அமைச்சர், இந்நாள் மேலவை உறுப்பினர் தமிழ்நாட்டு முதல்வரின் ‘கனவைச் சொல்லுங்கள்’ என்ற
திட்டத்தைக் கேலிசெய்யும் வகையில் ஒரு நடிகையின் பெயரைச் சொல்லி, தன் கனவு நிறைவேறுமா? என்று கேட்கும் அளவிற்கு தமிழ்நாடு அரசியல் கலாச்சாரம் தரம் தாழ்ந்து போயுள்ளது. வெட்கக்கேடு!
03.03.2026 - அது ஓர் அழகிய நாள்! ஈரான் நாட்டு மினாப் நகரத்தில் போர் பதற்றத்திற்கும் இடையில் வாழ்க்கையில் முன்னேறத் துள்ளிக் குதித்து வந்த குழந்தைகள்! இவர்களிலிருந்து எத்தனையோ வருங்காலத் தலைவர்கள், சமூகப் போராளிகள், நீதிமான்கள், அர்ப்பணிப்பு உள்ளம் கொண்டவர்களாக மாறவேண்டிய குழந்தைகள் இருந்திருப்பார்கள். யாரும் எதிர்பாராத ஒரு நொடியில் சீறிய அணுகுண்டால் சிதறிய இளம் மொட்டுகள்...
யாரோ
செய்த தவறுக்கு
ஏன் இன்று எண்ணற்ற இளம் இரத்தம் பூமியில் சிந்தின?
வெறும்
பொருளுக்காகவும் பதவிக்காகவும் அந்நியராய்ச் சண்டையிடுகின்றோம். கடவுள் தமது சொந்த இரத்தத்தினால் நம்மைத் தமதாக்கிக் கொண்டார் என்று திருத்தூதர் பணிகள் நூலில் (20:28) வாசிக்கின்றோம். அப்படி இருக்க நாம் அனைவரும் ஒன்றுதானே! அன்று கடவுளுக்குப் புகழ்ச்சியாகவும் நன்றியின் காணிக்கையாகவும் பலிப்பொருளாகவும் இரத்தத்தை வார்ப்பார்கள். இன்று நாம் எதற்கு இந்தப் பிஞ்சுக் குழந்தைகளின் இரத்தத்தைச் சிந்துகிறோம்?
“அவர்களின் இரத்தம் கடவுளின் பார்வையில் விலைமதிப்பற்றது” (திபா
72:14).
ஆபேலின்
இரத்தத்திற்குக் கணக்குக் கேட்ட இறைவன் இன்று இத்தனை உயிர்களுக்கும் கணக்குக் கேட்கமாட்டாரா?
இப்படிப்
பல்வேறு விதங்களில் இரத்தத் துளிகள் மண்ணில் விழுந்ததன் காரணமாகவோ திரு அவையும் புவியும் நிலைநிறுத்தப்பட்டனவோ?!
ஏழை எளியவர்களுக்காகவும், அவர்களின் உரிமைக்காகவும் அநியாயத்திற்கு எதிராகவும் குரல் கொடுத்த தன் விளைவு புனித ஆஸ்கரின் இரத்தமும் இயேசுவின் இரத்தமும் ஒன்றாய் கலந்தன. ஆம், திருப்பலி நிறைவேற்றும்போது தன்னுடைய எதிரிகளால் சுடப்பட்டு, இரத்தம் சிந்தப்பட்டுக் கொல்லப்பட்டார்.
புனித
பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்தில், “என் இரத்தத்தையே பலிப்பொருளாக வார்க்க வேண்டி இருப்பினும், அது எனக்கு மகிழ்ச்சியே” என்று
குறிப்பிடுகிறார். அதற்கு ஏற்றார்போல் புனித சார்லஸ் லுவாங்கோ இரத்தத்தைப் பலிப்பொருளாக்கினார்.
ஆப்பிரிக்காவில்
உகாண்டா நாட்டில் வாழ்ந்து வந்த ஒரு கத்தோலிக்க இளைஞர் கிறிஸ்துவை ஏற்று, ஓர் இளையோர் குழுவை உருவாக்கி மறைப்பணி செய்து வந்தார். அப்போது ஆட்சிக்கு வந்த மூவாங்கோ II என்ற
மன்னன், மக்கள் தன்னை வணங்காமல், மதிக்காமல் கிறிஸ்துவை மட்டுமே வணங்குகிறார்கள் என்று எண்ணி அச்சம் கொண்டான். மக்கள் அனைவரையும் கிறிஸ்துவை மறுதலிக்க ஆணையிட்டான். மீறியவர்களைச் சிறையில் அடைத்தான்.
1886-ஆம் ஆண்டு
புனித சார்லஸ் மற்றும் அவர்களது தோழர்களை அரசன் அழைத்து கிறிஸ்துவை மறுதலிக்க ஆணையிட்டான். அவர்களோ மறுத்தார்கள். 1886, ஜூன் 3-ஆம் தேதி அவர்களை நெருப்பிலிட்டான். கிறிஸ்துவுக்காகத் தங்கள் இரத்தத்தைப் பலிப்பொருளாக்கினர். இப்படித் திரு அவையில் எண்ணற்ற புனிதர்கள் தங்கள் இரத்தத்தை ஆண்டவருக்காக, அவரின் மாட்சிமைக்காகப் பலியாக்கினார் .
புனித
அகுஸ்தின் இவ்வாறு கூறுவார்: “இயேசுவின் இரத்தம் மனிதரைக் கடவுளுடன் மீண்டும் இணைக்கிறது.” இது ஒரு புதிய உடன்படிக்கையின் அடையாளம். அதன் வழியாய் நம் அனைவருக்கும் நிலைவாழ்வை வழங்கி உள்ளார். வரவிருந்த தீங்கு அனைத்திலும் இருந்து நம்மை மீட்டார். இத்தகைய விலைமதிப்பற்ற தூய இயேசுவின் இரத்தத்தை நாம் அனுதினமும் திருப்பலியின் வாயிலாகப் பெற்றுக்கொண்டு வருகிறோம். அவர் நமக்காக இரத்தம் சிந்தினார். நாமோ பாவத்திற்கு மேல் பாவம் செய்து பலருடைய இரத்தத்தை வாங்குகின்றோம். அமைதியில் உறையும் இறைவனைப் பல்வேறு அணுகுண்டுகளால் சிதைக்கிறோம். அவரின் இரத்தத்தின் வழியாய் நாம் ஒன்று சேர்க்கப்பட்டோம். ஆனால், இன்று மதத்தால், சாதியால், இனத்தால் பிரிந்துள்ளோம். போரினால் இறந்த உள்ளங்களுக்கு ஒரு சகோதரனாய் நமது பங்கு என்ன? இனியும் தொடர வேண்டுமா இப்போர்?
அன்று
உலக அமைதிக்காக, நம் பாவத்திற்குப் பலியாக, நம் மீட்பிற்காகச் சிலுவையில் வடிந்த இயேசுவின் இரத்தம், இன்று அர்த்தமற்றுப் போகிறது அல்லவா!
இனியும்
போர்கள் வேண்டுமா?
இரத்தம்
சிந்த வேண்டுமா?
குழந்தைகள்
துப்பாக்கிச் சூட்டினால்
மடிய
வேண்டுமா?
உலகம்
உருக்குலைய வேண்டுமா?
வேண்டாம்...
வேண்டவே வேண்டாம்...
போர்கள்
இனியும் வேண்டாம்!
கிறித்தவ வழிபாட்டு ஆண்டின் மிக முக்கியமான வாரமான ‘புனித வாரத்தின்’ தொடக்கமே குருத்து ஞாயிறு. தெருக்களில் குருத்தோலைகளை ஏந்தி ‘ஓசன்னா’ என்று பாடிச் செல்வது வெறும் மதச்சடங்கல்ல; அது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எருசலேம் வீதிகளில் நிகழ்ந்த ஒரு மாபெரும் அரசியல் எழுச்சியின் மறுபதிப்பு. இயேசுவின் எருசலேம் பயணம் என்பது வெறும் ஆன்மிகப் பயணம் மட்டுமல்ல; அது அதிகார மையங்களை நோக்கி விடப்பட்ட நேரடி சவால்! அது எளியவர்களின் அதிகாரம், நீதிக்கான வேட்கை மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக அமைந்த ஓர் ‘அரசியல் முன்னெடுப்பு.’
கழுதை எனும்
குறியீடு...
அக்காலத்து
அரசர்கள் போர்க்குதிரைகளின் மீது அமர்ந்து, ஆயுதப் படைகளுடன் நகருக்குள் நுழைவார்கள். அது அச்சத்தையும் ஆதிக்கத்தையும் பறைசாற்றும் நுழைவு. ஆனால், இயேசு ஒரு கழுதைக் குட்டியைத் தேர்ந்தெடுத்தார். இது ஒரு குறியீடு.
குதிரை
போரின் அடையாளம்; கழுதை அமைதியின் அடையாளம். இயேசுவின் நுழைவு வன்முறைக்கு மாற்றாக அறப்போராட்டத்தை முன் வைத்தது. இது அமைதிக்கான அரசியல். கழுதை என்பது அடித்தட்டு மக்கள் பயன்படுத்தும் விலங்கு. அது எளியவர்களின் அடையாளம். ஓர் அரசன் சாமானியர்களோடு தன்னைப் பொருத்திக்கொள்வது என்பது அன்றைய நிலப்பிரபுத்துவச் சூழலில் ஒரு புரட்சிகரமான அரசியல் செயல். இது ‘முகமற்றவர்களின் முகமாக’ அவர் மாறிய தருணம்.
உண்மைக்கும் நீதிக்குமான
பயணம்...
இயேசு
எருசலேமிற்குள் நுழைந்தது தற்காப்புக்காக அல்ல; உண்மையை உரக்கக் கூறுவதற்காக. எருசலேம் அன்றைய யூதச் சமூகத்தின் மதம் மற்றும் அரசியல் அதிகாரத்தின் மையப்புள்ளி. அங்கு நிலவிய ஊழல்களையும் ஆன்மிகச் சுரண்டல்களையும் கேள்வி கேட்கவே அவர் அங்கு சென்றார்.
இந்தப்
பயணம் நீதிக்கான பயணம். ஆலயத்திற்குள் சென்று வியாபாரிகளை விரட்டியடித்தது ஒரு மதச் சீர்திருத்தம் மட்டுமல்ல; அது ஏழை மக்களின் பொருளாதாரத்தைச் சுரண்டும் அமைப்பிற்கு எதிரான தாக்குதல். ‘குரலற்றவர்களின் குரலாக’ அவர்
ஒலித்தார். அன்றைய உரோமானிய ஆதிக்கத்திற்கும், அவர்களுக்குத் துணை நின்ற மதத் தலைவர்களுக்கும் இந்த நுழைவு ஓர் அச்சுறுத்தலாகத் தெரிந்தது. அதனால்தான் அவர்கள் அவரைக் கொல்லத் திட்டமிட்டனர்.
மனித மாண்பும்
உரிமைகளும்...
சமகால
அரசியல் சூழலில் இயேசுவின் இந்தப் பயணத்தைப் புரிந்துகொள்ள திருத்தந்தை 14-ஆம் லியோ அண்மையில் வெளியிட்ட ‘மக்களின் மாண்பு’ குறித்த செய்தியை நாம் நினைவுபடுத்த வேண்டும்: “ஒவ்வொரு மனிதனும் இறைவனின் சாயலில் படைக்கப்பட்டவன்; எனவே, அவனது உரிமைகளைப் பறிப்பதும், அவனை அடிமைப்படுத்துவதும் இறைவனுக்கு எதிரான செயல். சமூகத்தின் விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதே உண்மையான நற்செய்திப் பணி.” திருத்தந்தையின் இந்த வரிகள் குருத்து ஞாயிறின் அரசியலோடு பொருந்திப் போகின்றன. இயேசுவின் பயணம் மனித மாண்பை நிலைநாட்டும் பயணமாகும். அதிகாரம் என்பது அடக்குமுறைக்கு அல்ல; மாறாக, பலவீனமானவர்களைக் காப்பதற்கே என்பதை அவர் தமது செயல்கள் மூலம் உணர்த்தினார்.
வெறும் பார்வையாளர்களாக
அல்ல;
பங்கேற்பாளர்களாக...
இன்று
நாம் குருத்து ஞாயிறைக் கொண்டாடும்போது, வேடிக்கை பார்க்கும் ஒரு கூட்டமாக இருக்கக்கூடாது. இயேசுவோடு இணைந்து எருசலேம் வீதிகளில் பயணிக்கும் உண்மையான பங்கேற்பாளர்களாக நாம் மாறவேண்டும். இன்றைய சூழலில் எருசலேம் பயணம் என்பது, சமூகத்தில் நிலவும் சாதிய, மதவாதச் சுவர்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பது; எளியவர்களின் நிலங்கள் பறிக்கப்படும்போதும், சுற்றுச்சூழல் சீரழிக்கப்படும்போதும் நீதிக்காகப் போராடுவது; அதிகார வர்க்கத்தின் பொய்களுக்கு எதிராக உண்மையை உரக்கப் பேசுவது.
இயேசுவின்
அரசியல் என்பது ஆசனங்களைப் பிடிப்பதல்ல; மாறாக, கடைசி வரிசையில் இருப்பவனை முதல் வரிசைக்குக் கொண்டு வருவதாகும். அது ‘சகோதரத்துவத்தின்’ அரசியல்.
இன்றைய குருத்து ஞாயிறு, நமது கைகளில் இருக்கும் ஓலைகளைவிட, நமது இதயங்களில் இருக்கும் சமூக நீதி உணர்வை அதிகம் எதிர்பார்க்கிறது.
ஆகவே,
குருத்து ஞாயிறு என்பது ஒரு வெற்றியின் கொண்டாட்டம் மட்டுமல்ல; அது ஒரு தியாகத்தின் தொடக்கம். நீதிக்காகப் பேசுபவன் சிலுவையைச் சுமக்க நேரிடும் என்பதை இயேசு அறிந்திருந்தார். ஆனாலும் அவர் பின்வாங்கவில்லை. நாமும் இன்று குருத்தோலைகளை ஏந்தும்போது, ‘ஓசன்னா’ என்று முழங்கும்போது ‘இயேசுவைப்
போல நானும் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக இருப்பேன்; அநீதியைக் கண்டு அஞ்சமாட்டேன்; உண்மையான சனநாயகத்தையும், சமத்துவத்தையும் நிலைநாட்ட எனது பயணத்தைத் தொடர்வேன்’
என உறுதிமொழி எடுப்போம்.
குருத்து
ஞாயிறு என்பது வெறும் ஒருநாள் நிகழ்வல்ல; அது வாழ்நாள் முழுவதற்குமான ஒரு போராட்டத்தின் அறைகூவல்!