news
சிறப்புக்கட்டுரை
இந்திய சனநாயகத்தினைப் பலவீனமாக்கும் அரசுகள்

ஏழைகளிடமிருந்து கல்வியைப் பறிப்பது, வளர்ச்சி என்ற பெயரில் விவசாயிகளிடமிருந்து வேளாண் நிலங்களைப் பறிப்பது, அடர்ந்த காடுகளில் பல தலைமுறைகளாக வாழும் மலைவாழ் மக்களிடமிருந்து அவர்கள் வாழ்விடங்களைப் பறிப்பது, துறைமுகங்களின் விரிவாக்கம் என்ற பெயரில் கடற்கரையில் வாழும் மீனவர்களின் உறைவிடங்களைப் பறிப்பது, பொதுத்துறை வங்கிகளில் இருக்கும் ஏழை மற்றும் நடுத்தட்டு மக்களின் சேமிப்பு நிதிகளைப் பறித்து, பெரும் கார்ப்பரேட் முதலாளிகளுக்குக் கடன்களாக அள்ளிக்கொடுத்துவிட்டு பின்னர் தள்ளுபடி செய்வது, தேசத்தின் விலை மதிக்க முடியாத இயற்கை வளங்களைப் பறித்து, பன்னாட்டு கம்பெனிகள் வரை முறையில்லாமல் கொள்ளையடிக்க அனுமதிப்பது, பட்டியல் இன, பழங்குடி, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை இன மக்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய அதிகார மையங்களிலிருந்து அவர்களை விலக்கி வைப்பது, மாநில அரசுகளின் உரிமைகளைப் பறித்து அவைகளைச் செயல்படவிடாமல் முடக்குவது... என்று ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு வகையில் இந்திய சனநாயகத்தினைப் பலவீனமாக்கும் மோடி அரசும், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா...வினரும்  தற்போது பாராளுமன்ற சனநாயகத்தின் அடிமடியிலேயே கைவைக்கத் துவங்கியுள்ளனர்.

இந்த ஆண்டு 2025 - ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நூற்றாண்டு. சனநாயகம், சோசலிசம், மதச்சார்பின்மை, தனிமனித அடிப்படை உரிமைகள் போன்ற நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் விழுமியங்களை அவர்கள் என்றும் ஏற்றுக்கொண்டதில்லை. அவை ஐரோப்பிய கலாச்சாரக் கூறுகள் என்றும், நம் மண்ணுக்கும், நமது கலாச்சாரத்திற்கும் அந்நியமானவைகள் என்பதுதான் அவர்களது நிலைப்பாடு. மனுதர்மம் மட்டுமே நமது அரசியல் சட்டமாக இருக்கவேண்டும் என்பதே அவர்களது சித்தாந்தம். பெரும்பான்மையான இந்திய மக்கள் நமது அரசியல் சட்டத்தை இழக்க விரும்பமாட்டார்கள் என்பதைப் புரிந்துகொண்ட அவர்கள், தங்களுடைய முயற்சியில் வெற்றியடைய புதிய வியூகங்களை வகுத்துள்ளனர்.

இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கித் தந்த நமது பிதாமகர்கள் எதிர்காலத்தில் இப்படிப்பட்ட அச்சுறுத்தல்கள் ஏற்படக்கூடும் என்பதை எதிர்நோக்கியே, அரசியல் சட்டத்தைப் பாதுகாக்க அரசியல் சட்ட நிறுவனங்களை உருவாக்கினர். நாடாளுமன்றம், சட்டமன்றம், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள்,  வரையறுக்கப்பட்ட அரசு நிர்வாகம், தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகார வரம்புக்குள் சுதந்திரமாகச் செயல்படும் மாநில அரசுகள் என்ற பல நிறுவனங்களைக் கட்டமைத்து அவைகளைச் செழுமைப்படுத்தியிருந்தனர்.

பாராளுமன்ற சனநாயகத்தின் ஊற்றுக்கண்நேர்மையான, சுதந்திரமான தேர்தல்என்பதில் தெளிவாக இருந்த நமது முன்னோர்கள், அதற்கான தேர்தல் ஆணையத்தினை உருவாக்கினர். அரசியல் சட்டத்தின் பிரிவு 324 தேர்தல்களை நடத்துவதற்கும், வாக்காளர் பட்டியல்களைத் தயார் செய்வதற்குமான முழுமையான அதிகாரத்தைத் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கியுள்ளது. 18 வயது நிறைவடைந்த இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமையினைப் பிரிவு 326 உறுதி செய்கின்றது. சாதி, மதம், மொழி, மாநிலம், ஆண்-பெண், படித்தவர்-படிக்காதவர், ஏழை-பணக்காரர் என்ற எந்த வேறுபாடுகளும் இல்லாமல்அனைவருக்கும் வாக்குரிமைஎன்பது சுதந்திரம் நம் நாட்டு மக்களுக்குத் தந்த மிகப்பெரும் கொடை. குறிப்பாக, விளிம்புநிலை மற்றும் அடித்தட்டு மக்களின் குரலுக்கு நமது அதிகார வர்க்கம் இன்று செவிசாய்க்கிறது என்றால் அவர்கள் கைகளில் இருக்கும் வாக்குச்சீட்டுகளின் வலிமைதான். ஆதிக்கச்சாதியினரின் கைகளிலிருந்த அரசியல் அதிகாரம் சாமானியர்களின் கைகளுக்கு மாறியதற்கான மிகப்பெரும் காரணம் அனைவருக்கும் வழங்கப்பட்ட வாக்குரிமையே!

இட ஒதுக்கீடு, அடிப்படை உரிமைகள், பட்டியல் இன, பழங்குடி மற்றும் சிறுபான்மையினர் உரிமைகளைப் பாதுகாக்கும் சிறப்புச் சட்டங்கள் மற்றும் சமூகநீதிக்கான முன்னெடுப்புகள் அனைத்தும் இன்று நடைமுறையில் இருப்பதற்கு அடிப்படையான காரணம், அனைவருக்கமான வாக்குரிமையேவலதுசாரி மதவாதப் பாசிச சக்திகளுக்குஅனைவருக்கும் வாக்குரிமைஎன்பதில் என்றும் உடன்பாடு இருந்ததில்லை. கல்வி அறிவு இல்லாத நாட்டில் எல்லாருக்கும் வாக்குரிமை கொடுத்தால் தேசம் சீரழிந்துவிடும் என்று கூக்குரலிட்டுப் பார்த்தனர். ஆனால், நமது முதல் பிரதமர் நேரு உள்ளடக்கிய தலைவர்கள்அனைவருக்கும் வாக்குரிமைஎன்பதில் மிகவும் உறுதியாக இருந்ததினால் எல்லாருக்கும் வாக்குரிமை சாத்தியமாயிற்று.

சுதந்திரமாகவும் நேர்மையாகவும் தேர்தல் நடத்தினால், ஆட்சியையும் அதிகாரத்தையும் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள முடியாது என்பதை நன்குணர்ந்தஅவர்கள்சுதந்திரம் நமக்கு வழங்கிய அனைத்து உரிமைளையும் ஒவ்வொன்றாகப் பறித்ததுபோல நம்மிடம் இருக்கும் வாக்களிக்கும் உரிமையினையும் பறிக்கச் சதிவலை விரித்துள்ளனர்தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்யும் அதிகாரம் பெற்ற குழுவிலிருந்து உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாக ஓர் ஒன்றிய கேபினட் அமைச்சர் என்ற அடிப்படையில் அமித்ஷாவைப் பிரதமர் மோடி நியமித்துக் கொண்டார். இருவரும் சேர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் இராகுல்காந்தியின் ஆட்சேபனைகளையும் மீறி, தங்களுக்கு வேண்டிய அதிகாரிகளைத் தேர்தல் ஆணையர்களாக நியமித்துக்கொண்டனர்.

நாடு முழுவதும் உள்ள அதிகார வர்க்கத்தில் தங்களது கருத்தியலுக்குச் சார்பாக இருக்கும் அதிகாரிகளையும், தாங்கள் விரும்புகின்ற எதனையும் செய்யத் துணிந்த அதிகாரிகளையும் அடையாளம் கண்டு, அவர்களைத் தேர்தல் ஆணையத்தில் பணியமர்த்தியுள்ளதால் தற்போது தேர்தல் ஆணையம் தேசிய சனநாயகக் கூட்டணியின் ஓர் அங்கமாகவே மாறிவிட்டதோ என்று நடுநிலையாளர்கள் கருதும் அளவுக்கு, அதன் நடவடிக்கைகள் ஒருதலைப்பட்சமாக அமைந்துள்ளன.

தேர்தல் அட்டவணையினை பா...வின் மற்றும் பிரதமரின் வசதிக்கேற்ப தயாரிப்பதும், தேர்தல் பிரச்சாரங்களின்போது பிரதமர், அமித்ஷா மற்றும் பா... கூட்டணித் தலைவர்களின் தேர்தல் விதிமுறைகள் மீறுதல்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும், பா...வுக்கு ஆதரவான அதிகாரிகளைத் தேர்தல் அலுவலர்களாக நியமிப்பதும், எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் மாநிலத் தலைமைச் செயலர், காவல்துறைத் தலைவர் போன்ற முக்கியமான பணியிடங்களில் இருக்கின்ற அதிகாரிகளை மாற்றிவிட்டு, தங்கள் சொல்படி மட்டுமே செயல்படும் அதிகாரிகளை நியமிப்பதும், ஆளும் கட்சி வெளியிடும்விதிகளை மீறும் விளம்பரங்களைஅனுமதிப்பதும், தேர்தல் பிரச்சாரம் துவங்கிய பின்னர் சி.பி.., வருவாய் புலனாய்வுத்துறை, வருமான வரித்துறை போன்ற ஒன்றிய அரசுத்துறை அதிகாரிகளை எதிர்க்கட்சி வேட்பாளர்கள் வீடுகளிலும் அலுவலகங்களிலும் சோதனை என்கிற பெயரிலும், விசாரணை என்ற பெயரிலும் அவர்களைத் தேர்தல் பிரச்சாரம் செய்யவிடாமல் தடுப்பதை அனுமதிப்பது என்று தேர்தல் ஆணையம் கடந்த காலங்களில் செய்த மற்றும் செய்யத் தவறிய முறைகேடுகளைப் பட்டியலிட்டுக் கொண்டே இருக்கலாம்.

இந்தத் தவறுகளின் உச்சத்தைத்தான் அரியானாவிலும் மகாராஷ்டிராவிலும் சந்தித்தோம். பதிவு செய்யப்பட்டதாகத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட வாக்குகளுக்கும், இறுதியாக எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் உள்ள மிகப்பெரிய இடைவெளிகள், வாக்குப்பதிவின் கடைசி மணித் துளிகளில் அதிசயிக்கத்தக்க வகையில் பதிவாகும் இலட்சக்கணக்கான வாக்குகள், அனைத்துமே கணினிமயமாக்கப்பட்டபோதும் வாக்குப்பதிவின் இறுதி நிலவரங்களை வெளியிடுவதில் உள்ள முரண்பாடுகளும், விளக்கவே முடியாத காலதாமதங்களும் பல நியாயமான சந்தேகங்களையும் யூகங்களையும் எழுப்புகின்றன. இந்தச் சந்தேகங்களைத் தெளிவுபடுத்தக்கூடிய வாக்குச்சாவடிகளில் நடந்த வாக்குப்பதிவுகளின் வீடியோ பதிவுகளை யாருக்கும் தரக்கூடாது என்று அவசரம் அவசரமாக விதிகளைத் திருத்துவதும், நாற்பத்தைந்து நாள்களுக்குமேல் அவைகளை அழித்துவிடவேண்டும் என்று உத்தரவிடுவதும், தேர்தல் ஆணையம் எதையோ மறைக்க முற்படுகிறது என்ற நியாயமான சந்தேகத்தை மேலும் உறுதிப்படுத்துகின்றன.

அரியானா மற்றும் மகாராஷ்டிராவில் வாக்காளர் பட்டியலில் இருக்கும் பெரும் பிழைகளும் முரண்பாடுகளும், தேர்தல் நடத்தும் முறைகளும், அதனை நடத்துகின்ற முகமைகளும் அடியிலிருந்து அழுகத் துவங்கி விட்டன என்பதைத் தெளிவாகத் தெரிவிக்கின்றன. இம் மாநிலங்களில் சில மாதங்களுக்கு முன்னர் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில்இந்தியாகூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்ற தொகுதிகளில் புதிதாகச் சேர்க்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை நம்மை அதிர்ச்சியடையச் செய்கிறது. 100 சதுர அடி வீட்டில் 150 வாக்காளர்கள் வசிப்பதாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் அக்கிரமத்தைத் தேர்தல் ஆணையம் நியாயப்படுத்துவதை எப்படி ஏற்க முடியும்?

சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற பா... கூட்டணி வேட்பாளர்களில் அநேகர் புதிதாகச் சேர்க்கப்பட்ட வாக்குகளின் காரணமாகவே வெற்றி பெற்றிருப்பது மற்றுமொரு விபரீதம். இதற்கான விளக்கங்களை திரு. இராகுல்காந்தியும் மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களும் தேர்தல் ஆணையத்திடம் கேட்டால், அதற்குப் பதில் சொல்வதற்குப் பதிலாக அந்தத் தலைவர்களையும், அவர்களது இயக்கங்களையும் மூன்றாம்தர மொழியில் விமர்சிப்பது ஓர் அரசியல் சட்ட நிறுவனம் (Constitutional Institution) செய்யக்கூடிய செயலா? என்பதையும் நாட்டு மக்கள் சிந்திக்கவேண்டும். பாராளுமன்ற சனநாயகத்தின் அடிநாதமாக இருக்கின்ற தேர்தல்களை நடத்தும் முறைகளிலும், அதனை நடத்துகின்ற ஆணையத்திலும் தொடர்ந்து நடைபெற்றுவரும் முறைகேடுகளையும் நிர்வாகச் சீர்கேடுகளையும் தேசிய ஊடகங்களும் நீதிமன்றங்களும் கண்டும் காணாததுபோல இருப்பது, தவறு செய்கின்றவர்களுக்கு மேலும் தைரியத்தைக் கொடுத்துள்ளதோ என்று நாம் அஞ்சுகிறோம்.

‘SIR’ (Special Intensive Revision) என்றழைக்கப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு நடவடிக்கை என்ற பெயரில், பீகாரில் இலட்சக்கணக்கான ஏழை, எளிய பட்டியல் இன, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் மற்றும் புலம்பெயர்ந்துள்ள தொழிலாளர்களின் வாக்குரிமைகளைப் பறிப்பதற்கு ஒரு பெரும் அநியாயத்தைத் தேர்தல் ஆணையம் அரங்கேற்றி வருகின்றது. 2003-ஆம் ஆண்டுக்குப் பின்னர் வாக்காளர்களாகப் பதிவு செய்து, இறுதிசெய்யப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்கள் அனைவரும் தங்களை இந்தியர்கள் என்று நிரூபிப்பதற்கான சில ஆவணங்களை ஜூலை 25-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும்; அப்படித் தாக்கல் செய்யாதவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான படிவங்களைத் தேர்தல் ஆணையம் அச்சிட்டு வெளியிட்டுள்ளது. இந்தப் படிவங்களைப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் இதற்காக நியமிக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்; அவைகளைச் சரிபார்த்து சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் அதிகாரம் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் ஓர் இலட்சத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

2003-ஆம் ஆண்டுக்குப் பின்னர் பதிவு செய்துள்ள இந்த வாக்காளர்கள் இதுவரை ஐந்து பொதுத்தேர்தல்களில் வாக்களித்துள்ளனர். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் வாக்களித்துள்ளனர். இந்த ஆண்டு சனவரி மாதத்தில் நடந்த வாக்காளர் சீர்திருத்தப்பட்டியல் தயாரிக்கப்பட்டபோதும் சரிபார்க்கப்பட்டு, வெளியிடப்பட்டுள்ள சீர்திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளனர். தேர்தல் ஆணையம் இவர்களிடம் கேட்கும் ஆவணங்கள் எதுவும் இவர்களில் பலரிடம் இருப்பதற்கு வாய்ப்பில்லை. ஜூன் மாதம் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்  வாக்காளர்கள் தாங்கள் இந்த நாட்டின் குடிமக்கள் என்பதை நிரூபணம் செய்வதற்குத் தாக்கல் செய்யக்கூடிய பதினோர் ஆவணங்களைப் பட்டியலிட்டுள்ளது. பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், 12-வது வகுப்பு சான்றிதழ், சாதிச்சான்றிதழ், சொத்துரிமைக்கான பத்திரங்கள்... என்று நீள்கின்ற பட்டியலில் சாமானிய அடித்தட்டு மக்களிடம் இருக்கும் ஆதார் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவைகள் இடம்பெறவில்லை என்பதுதான் பெரும் துரதிருஷ்டம்! மேலும், இவர்களிடம் இல்லாத இந்த ஆவணங்களை முப்பது நாள்களுக்குள் பெற்று தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டுள்ள தேர்தல் ஆணையத்திற்கு, பீகார் அரசு இயந்திரம் எவ்வளவு வேகமாக வேலைசெய்யும் என்று தெரியாதா?

தேர்தல் ஆணையத்தின் தற்போதைய உத்தரவுக்கிணங்க பெரும்பாலான இந்த வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் அவர்களது ஆதார் எண்களோடு இணைக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையம் வழங்கிய வாக்காளர் அடையாள அட்டையைத் தேர்தல் ஆணையமே ஏற்க மாட்டோம் என்று சொல்வதற்குத் தேர்தல் ஆணையம் வெட்கப்பட வேண்டாமா?

இந்தியாவில் பெரும்பாலான புலம்பெயர் தொழிலாளர்கள் பீகாரைச் சேர்ந்தவர்களே! அவர்களுக்கும், அவர்களது சொந்த மண்ணுக்கும் இருக்கும் ஒரே தொடர்பு இந்த வாக்களிக்கும் உரிமை மட்டுமே! இவர்களில் அநேகருக்கு அவர்களது வாக்களிக்கும் உரிமைகளைப் பறிப்பதற்கு இப்படி ஒரு சதி நடப்பதே தெரியாது. தெரிந்தாலும் பெரும் பொருள் செலவு செய்து பீகாருக்குப் பயணித்து மீண்டும் தொழில் செய்யும் மாநிலங்களுக்குத் திரும்பத் தேவைப்படும் பொருளாதார வசதி அவர்களிடம் இல்லை. அவர்களது அரை வேட்டியையும் அவிழ்த்து, சொந்த மண்ணில் அரசியல் உரிமைகளற்ற நிர்வாண மனிதர்களாக ஆக்கும் இக்கொடுமையினை உச்ச நீதிமன்றம் தடுக்குமா? என்பதைப் பார்க்க பதற்றத்துடன் காத்திருக்கின்றோம்.

வாக்காளர் பட்டியலைச் சீராய்வு செய்கிறோம் என்று சொல்லிக்கொண்டு குடியுரிமைப் பட்டியலைத் தயார் செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு உண்டா? இந்தச் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு, எவ்வித முன்தயாரிப்பும் இன்றி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைக் கலந்து ஆலோசிக்காமல் அரைவேக்காட்டுத்தனமாக அவசரம் அவசரமாக நடத்தப்படுவதை நடுநிலையாளர்கள் அனைவரும் ஊடகங்களும் கடுமையாகக் கண்டித்துள்ளனர். இதற்காக நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி அலுவலர்கள் மட்டும்தான் தேர்தல் ஆணையத்தின் படிவங்களை விநியோகிக்க வேண்டும் என்றும், பூர்த்தி செய்யப்பட்டப் படிவங்களை அவர்கள் மட்டுமே பெறவேண்டும் என்ற விதிகள் எங்கேயும் பின்பற்றப்படவில்லை என்று கூறுகிறார்கள். உள்ளூர் ஊராட்சி மற்றும் நகராட்சி மன்றங்களின் சுகாதாரப் பணியாளர்களே இப்பணிகளைச் செய்வதாகத் தெரிகிறது. அவர்களுக்கு எவ்விதமான முறையான பயிற்சிகளும் அளிக்கப்படவில்லை. காய்கறிக் கடைகளில் அச்சடிக்கப்பட்ட பாரங்கள் நூற்றுக்கணக்கில் குவிந்து கிடப்பதை ஒரு தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களைப் பெற்றுக்கொண்டதற்கு எவ்வித அத்தாட்சியும் வழங்குவதில்லை. இலட்சக்கணக்கான வாக்காளர்கள் தங்களது வாக்குரிமைகளை இழக்கப்போவது உறுதி.

தேர்தல் ஆணையம் நடத்தும் இந்தச் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு காரணமாக வாக்குரிமையினை இழக்கப்போகின்ற பெரும்பாலோர் அடித்தட்டு மற்றும் விளிம்புநிலை மக்களே! பட்டியல் இன மக்களும், சிறுபான்மை மக்களும் சொத்துப் பத்திரங்களுக்கு எங்கு போவார்கள்? புலம்பெயர்ந்த தொழிலாளர்களுள் பெரும்பான்மையினர் பிற்படுத்தப்பட்ட மக்களே! வாக்காளர் பட்டியல் சீராய்வு என்பது இவர்களிடமிருந்து வாக்குரிமைகளைப் பறிக்கும் சதி என்று இப்போது புரிகிறதா?

வாக்குரிமை இல்லாத எனக்கு இந்த நாட்டில் இனிமேல் என்ன இருக்கிறது?” என்று அங்கலாய்க்கின்ற மக்கள் இந்தத் தேசத்தின் இறையாண்மைக்கு எதிரான எவ்வளவு பெரிய ஆபத்து என்பதைத் தேர்தல் ஆணையம் உணர்வதாகத் தெரியவில்லை.

தேர்தலின் மீதும் தேர்தல் ஆணையத்தின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை உள்ளவரைதான் சனநாயகம் வாழும். ஆட்சியில் உள்ளவர்கள் தவறு செய்தால் தேர்தல் மூலம் நீதி வழங்கலாம். ஆனால், தேர்தல் முறைகளே தவறும்போது நியாயம் கிடைப்பது எங்கே? கவிஞன் பாடினான்: ‘மங்கை சூதானால் கங்கையில் குளிக்கலாம்! கங்கையே சூதானால் எங்கே போவது?’ என்று! இந்த வரிகள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க இயலவில்லை.

news
சிறப்புக்கட்டுரை
நிரந்தரமா சுதந்திரம்?

வேற்றுமையில் ஒற்றுமைகாணும் இந்தியத் தாய்த் திருநாடு பல்வேறு விழாக்களை ஒற்றுமையுடன் கொண்டாடுகின்றது. அவற்றுள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது அதனுடைய சுதந்திர தினம்.

இந்தியா சுதந்திரம் பெற்றதா? அல்லது சுதந்திரமானது இந்தியாவுக்கு அளிக்கப்பட்டதா?’ என்ற கேள்வியே உலக அரங்கில் இன்னும் விவாதப் பொருளாக இருக்கின்றது. பிபின் சந்திரா போன்ற இந்திய வரலாற்று ஆசிரியர்கள் இந்திய மக்களின் கடும் போராட்டத்தாலும் ஒப்புயர்வற்ற தியாகத்தாலும் இந்தியா சுதந்திரம் அடைந்தது என்று கூறுகின்றனர். மறுபுறம் சர்ச்சில் மற்றும் ஜூடித் எம். புரோன் போன்ற ஆங்கிலேயர்கள் பிரித்தானிய அரசு உலகப் போரால் பலவீனம் அடைந்ததன் விளைவாக இந்தியாவுக்குச் சுதந்திரம் அளிக்கப்பட்டது என்று இந்திய விடுதலைப் போராட்டத்தின் வலியின் வடுக்களை மறைக்க முயற்சி செய்கின்றனர். இதில் யாருடைய கூற்று உண்மை? என்று பதிலளிக்க வேண்டிய கடமை இந்தியர்கள் அனைவருக்கும் உண்டு. இதே கேள்வியைத்தான் பாரதியும்என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?’ என்ற வரிகளின் மூலம் கேட்கின்றார். நாடு சுதந்திரம் பெற்றாலும், நாட்டு மக்களிடம் நிலவும் அடிமை மனப்பான்மையிலிருந்து இன்னும் இந்தியர்கள் சுதந்திரம் பெறவில்லை.

இந்தியா சுதந்திரம் பெற்றது; இந்தியர்கள் சுதந்திரம் பெற்றார்களா?’ என்ற கேள்வியை புதுமைப்பித்தன் போன்ற எழுத்தாளர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே எழுப்பியுள்ளனர். இதை மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் கொண்டே அளவிட முடியும். மக்களின் தற்போதைய வாழ்க்கைத் தரத்தைச் சுதந்திரத்திற்கு முந்தைய நிலையுடன் ஒப்பிட்டு ஆய்ந்தறிவது தவறான அணுகுமுறையாகும். ஏனெனில், பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் இந்தியாவானது பிரித்தானியாவின் ஒரு காலனி நாடு. இதன் காரணமாக இந்தியர்கள் இழிவாக நடத்தப்பட்டார்கள். அவர்களுக்கான கடமைகளைப் பெருக்கி, உரிமைகளை நசுக்கியது பிரித்தானிய அரசு. ஆனால், தற்பொழுது இந்தியா ஒரு சனநாயக நாடு. சனநாயக நாட்டில் மக்களே மன்னர்கள். எனவே, இந்திய சனநாயகத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கான அடிப்படை உரிமைகளையும் தேவைகளையும் உறுதிசெய்ய வேண்டியது அரசின் கடமை. இதுவே சுதந்திர நாட்டின் இயல்பான நிலையாகும். இவ்வியல்பான நிலை தவறும்பொழுதெல்லாம், இந்தியக் குடிமகனின் சுதந்திரம் பறிக்கப்படுகின்றது. பல நேரங்களில் வாழ்வாதாரமும், சில வேளைகளில் தனிமனித வாழ்வுமே பறிக்கப்படுகின்றது. சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகள் கடந்தும் இன்னும் சுதந்திரத்தை முழுமையாகச் சுவாசிக்காத இனக்குழுக்கள் இம்மண்ணில் உள்ளன.

பிரித்தானிய அரசிடமிருந்து பெற்ற விடுதலையானது ஊழல், மதக்கலவரங்கள், இன மோதல்கள், சாதியப் பாகுபாடுகள், வாரிசு அரசுகள் மற்றும் பிற்போக்குச் சிந்தனைகள் போன்ற பல கதவுகளுக்குப் பின் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றது. அக்கதவுகளின் சாவியைச் சிலர் திருடி வைத்துக் கொண்டு, அவர்கள் மட்டுமே சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர். மற்றவர்கள் அனைவரும் சுரண்டப்படுகின்றனர். அனைவருக்கும் பொருந்தும் வகையில் அம்பேத்கர் வடித்த சட்டப் புத்தகத்தின் முகவுரையில் உள்ளஇந்தியர்களாகிய நாம்என்ற பதம் இன்று அனைத்து இந்தியர்களையும் குறிப்பதில்லை; பணம் மற்றும் அதிகாரத்தைக் கொண்ட உயர் வகுப்பு இந்தியர்களை மட்டுமே குறிக்கின்றது.

நள்ளிரவில் மின்னிடும் நகையுடன் பெண்கள் பாதுகாப்பாய் வலம் வரும் நாளே இந்திய விடுதலை நாளென்று காந்தியடிகள் குறிப்பிட்டுள்ளார். ஆனால், நண்பகலில் அபயா போன்ற பெண்கள் பாதுகாப்பாக நடந்து செல்ல முடியாத நிலையில் இந்தியா உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் இராமர், ஒடிசாவில் ஜகநாதர், மேற்குவங்கத்தில் காளி மற்றும் தமிழ்நாட்டில் முருகர் என்று கடவுள்களின் உரிமையைக் காக்க மனிதர்களை ஒன்றிணைக்கின்றனர். இது பக்தியின் வெளிப்பாடாக இருந்தால் பாராட்டுக்குரியது. ஆனால், இது சிறுபான்மைச் சமூகத்திற்கு எதிராகப் பெரும்பான்மை சமூகத்தின் மனத்தில் பகையை உண்டாக்கும் முயற்சியாகும்.

பெரும்பான்மை மக்களின் கடவுள்களுக்கும் உரிமைக்கும் வாழ்வுக்கும் சிறுபான்மை இன மக்களால் பிரச்சினை என்ற நாசிச மற்றும் பாசிச அரசின் கொள்கைகளை இந்திய மண்ணில் தொடர்ந்து விதைக்கின்றனர். இதன்மூலம் பெரும்பான்மை மக்கள் அனுபவிக்கும் பொருளாதாரச் சுமையை மறக்கடித்து, அவர்களைச் சிறுபான்மையினரின் பக்கம் திருப்பி விடுகின்றனர். இதைத்தான் இலங்கையில் சிங்கள அரசு செய்தது. இன்று இலங்கையின் நிலை அதல பாதாளத்தில் உள்ளது. எனவே, நாட்டின் பொருளாதாரச் சுமையைப் பெரும்பான்மை இந்துகளும் மற்றும் சிறுபான்மையினரும் சேர்ந்து சுமக்கின்றனர் என்ற தெளிவை இந்தியர்கள் அனைவரும் பெற வேண்டும். ஏனெனில், வெகுசன மக்களை மதத்தின் பக்கம் திருப்பி விட்டு விட்டு, நாட்டின் செல்வங்களைப் பெரும் முதலைகளும் ஊழல் எலிகளும் சுரண்டுகின்றன.

நாடு முழுவதும் ஏறக்குறைய 6,900 ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 361 வழக்குகள் 20 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. ஜெர்மனியின்டிரான்ஸ்பரன்சி இன்டர் நேஷனல்என்ற தனியார் நிறுவனம் வெளியிட்ட ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 180 நாடுகளில், 96-வது இடத்தில் உள்ளது. வங்கி முறைகேடுகளின் மொத்த மதிப்பு 36,014 கோடி என்று கணக்கிடப்படுகின்றது. இவை மட்டுமே நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1-1.5 விழுக்காடு இருக்கும். நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்கள் அரசுக்கு ஜி.எஸ்.டி. செலுத்துவதற்காகவே சம்பாதிக்க வேண்டிய நிலையில் இருக்கும் பொழுதுஇந்தியாவின் 40 விழுக்காடு வளங்களை வெறும் 1 விழுக்காடு நபர்கள் வசப்படுத்தி வைத்துள்ளனர். இவர்கள் ஈட்டும் வருவாயை இந்தியாவின் வருவாயாக ஆவணப்படுத்தி, இந்தியாவை உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக முழங்குகின்றனர். மொத்தத்தில், இந்தியாவில் பணம் உள்ளது; ஆனால், அனைத்து இந்தியர்களிடமும் இல்லை

இந்தியாவின் உற்பத்தித் திறன் ஒரு மூலையில் அதிகரிக்கும் பொழுது, மக்களின் வாங்கும் திறன் குறைந்து கொண்டிருக்கின்றது. இதன்மூலம் இந்தியா பெரும் பொருளாதார நெருக்கடியை விரைவில் சந்திக்க உள்ளது. உடலின் அனைத்து உறுப்புகளும் சீராக வளர்ச்சியடைய வேண்டும். அப்படி இல்லாமல் உடலின் ஒரு பாகம் மட்டும் வளர்ந்ததென்றால் அது வீக்கம், நோய். இந்தியாவும் ஏழை மற்றும் பணக்காரர்களுக்கிடையேயான பெரும் பொருளாதார இடைவெளி என்ற நோயால் அவதிப்படும் அபாயத்தில் உள்ளது.

இப்படி மக்களை மதங்கள் மற்றும் இனக் கலவரங்களில் மூழ்க வைத்து, நாட்டின் மொத்த வளங்களும் சுரண்டப்படுகின்றன. சுதந்திரம் பெற்ற இந்தியாவின் வளமானது பணக்காரர்களுக்குத் தாரைவார்க்கப்படுகின்றது. இந்தியாவின் கடன் சுமை, வரி என்ற பெயரில் பாமர மக்களின் முதுகில் ஏற்றப்படுகின்றது

இப்படிப் பொருளாதாரச் சுரண்டல் ஒருபுறம் இருக்க, மறுபுறம் இருப்பவருக்கு ஒரு சட்டம், இல்லாதவர்களுக்கு ஒரு சட்டம் என்று நீதியைத் தேவைக்கு ஏற்றார்போல் மாற்றுகின்றனர். இதற்கு ஏதுவாக, அரசியலமைப்புச் சட்டத்தையே மாற்ற முயற்சிக்கின்றனர். செயற்கையாகக் கலவரங்களை ஏற்படுத்துகின்றனர். ஏற்கெனவே, நிகழும் கலவரங்களில் தொடர்ந்து எண்ணெய் ஊற்றுகின்றனர். இதற்கு இன்றும் தொடரும் மணிப்பூர் கலவரமே எடுத்துக்காட்டாகும். ‘ஆப்ரேஷன் சிந்தூர்என்று மார்தட்டிக்கொள்ளும் இவர்கள், உள்நாட்டுப் பிரச்சினைகளைப் பிறருக்குத் தெரியாமல் தவறான தரவுகளைக் கொண்டு மறைக்க முயற்சிக்கின்றனர். இதையெல்லாம் எதிர்த்துக் கேள்வி கேட்க வேண்டிய மாநில அரசுகளை, வருமானவரித்துறையின் மூலம் தொடர்ந்து பதற்றத்தில் வைத்திருக்கின்றனர்.

எப்பொழுது நாட்டு மக்களின் நலன் பின்னுக்குத் தள்ளப்பட்டு ஆட்சியாளர்கள் மற்றும் பணம் படைத்தவர்களின் நலன் முன்னிறுத்தப்படுகின்றதோ, அப்பொழுது அந்நாட்டு மக்கள் தங்களின் சுதந்திரத்தை இழக்கின்றார்கள். இந்த அடிமை முறையிலிருந்து விடுபட இந்தியர்கள் அனைவரும் தங்கள் கடமையைச் சரிவரச் செய்ய வேண்டும்.

வரி செலுத்துவதுபோல், வாக்கையும் சரியாகச் செலுத்தவேண்டும். சரியான முறையில் சரியானவர்களுக்கு வாக்களித்தால் மட்டுமே, குறைவான வரி என்பது இந்தியாவில் சாத்தியமாகும். நாட்டை ஆட்சி செய்வதற்காகத் தேர்தல் என்ற நிலை மாறி, அரசியல் விளையாட்டுகளின் முதல் புள்ளியாகத் தேர்தல் மாறிவிட்டது. இதற்கு இந்தியர் அனைவரும் காரணம் என்று உணர வேண்டும். அரிஸ்டாட்டில்குடியரசுஎன்ற தன் படைப்பில் கூறுவது போல்குறைந்த தீமையைத் தேர்ந்தெடுக்காமல், நிறைந்த அறிவுடன், பிறர்நலச் சேவைக் கண்ணோட்டத்துடன் தேர்தலில் நிற்கும் இளைஞர்களுக்கும், கட்சிசாரா தன்னார்வத் தொண்டர்களுக்கும் வாக்களிக்கவேண்டும். இனி வரப்போகும் அனைத்துத் தேர்தல்களிலும் அறிவாளிகளுக்கும் சிந்தனையாளர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

முழுச்சுதந்திரமே இலக்குஎன்று இச்சுதந்திர தின நாளில் முடிவெடுப்போம். இந்தியர்கள் அனைவரும் தாய்த்திருநாட்டின் மன்னர்கள் ஆவர். தன்னுடைய சகமனிதன் துயருறும்பொழுது, ஒவ்வொரு மன்னரும் அதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும். மணிப்பூரில், காஷ்மீரில், சாத்தான் குளத்தில் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகள் பற்றியெரியும் பொழுது, இந்தியர்கள் அனைவரும் கொதித்தெழ வேண்டும். ஏனெனில், அதேநிலை நமக்கு நாளை வரலாம்; அப்பொழுது, நமக்காகக் குரல் கொடுக்க அவர்கள் வேண்டும்.

மதவாதம், ஊழல், சாதி பாகுபாடு, வாரிசு அரசியல் மற்றும் சினிமா மோகம் என்ற பாதையில் பயணிக்கும் இந்திய அரசியலை முற்போக்குப் பாதையில் கொண்டுசெல்ல வேண்டியது இந்தியர்களுடைய கடமையாகும். ஒவ்வோர் இந்தியனும் அரசியல் போக்கை அறிந்து, விவாதித்து அதைச் செயல்படுத்தவேண்டும். நல்லது செய்பவர்கள் இந்த அரசியல் கோமாளிகளால் மறைக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்களைக் கண்டறிந்து அரியணை ஏற்ற வேண்டும். அதற்கு இந்தியாவில் உள்ள இன, மொழி, மத, சாதி ஏற்றத்தாழ்வுகளைக் களைய வேண்டும். ஏனெனில், இந்தியர்கள் அனைவரும் பொருளாதார ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் வஞ்சிக்கப்படுகின்றனர் என்ற விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். இப்புரட்சிகள் நிகழ்ந்தால்இந்தியா தானாக முன்னேற்றம் அடையும். இந்தியர்களும் முழு சுதந்திரம் அடைவார்கள். இந்திய இளைஞர்கள் தங்கள் கையில் இணையம் மட்டுமல்ல, இந்தியாவும் உள்ளது என்று உணர வேண்டும்.

இளைஞர்கள் அரசியல் பயின்று, அரசியல் பாடமெடுக்கத் தொடங்கும் நாளில், இந்தியாவின் சுதந்திரம் நிரந்தரமாகும். அதுவரை...?

news
சிறப்புக்கட்டுரை
சிறைக் கைதிகளின் குரலைக் கேட்போம்!

தமிழ்நாடு ஆயர் பேரவையின் சிறைப்பணியானது சிறைக்கைதிகளுக்கும், அவர்களின் குடும்பம் மற்றும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கும் மறுவாழ்வு மற்றும் அவர்களின் நலனுக்காக உழைக்கும் தேசிய தன்னார்வ இயக்கமாகும். இது இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவையால் யூபிலி 2000-ஆம் ஆண்டில் இந்தியச் சிறைப்பணியாக அங்கீகரிக்கப்பட்டது.

எங்கள் தன்னார்வத் தொண்டர்கள் ஏறக்குறைய நாடு முழுவதும் 850 பிரிவுகளில் வெவ்வேறு நிகழ்வுகளின் மூலம், குறிப்பாக ஆற்றுப்படுத்துதல், மருத்துவ முகாம், இலவசச் சட்ட உதவிகள், கலை நிகழ்ச்சிகள், உள்மனக் குணமளிக்கும் தியானங்கள், வேலை சம்பந்தமான பயிற்சி முகாம்கள்... இவற்றின் மூலமாக இந்தியாவில் உள்ள சிறைகளில் மிகவும் சீரும் சிறப்புமாகப் பணியாற்றி வருகிறார்கள்.

வெளிநாட்டுச் சிறைவாசிகள் நமது இந்தியச் சிறைகளில் மொழி அறியாது வாடிவருகின்றனர். அவர்களது குரலைக் கேட்டு, நமது தாயாம் திரு அவையின் அந்த நாட்டுத் தூதர்கள், ஆயர்கள், குருக்களைத் தொடர்புகொண்டு அவர்களது குடும்பத்தாரோடு இணைத்துவைப்பது நமது சிறப்புப் பணியாகும்.

புனித மாக்சிமில்லியன் கோல்பே தன்னுடைய துணிவான வாழ்வு முறையால் சிறைக்கைதிகளைப் பாதுகாப்பதில் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார். புனித கோல்பே இரண்டாம் உலகப் போரின் போது சிறைப்பிடிக்கப்பட்டு தீவிரக் கண்காணிப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டார். அவர் சிறைக்கைதிகளோடு இருந்தபோது தனக்காக அளிக்கப்பட்ட சிறிதளவு உணவையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டார். பலரைச் சிறப்பானதோர் ஒப்புரவு அருளடையாளம் பெற ஆயத்தம் செய்து, அவர்களுக்காகச் செபம் செய்தார். இறுதியாக, ஒரு சகோதரருக்காகத் தனது உயிரைத் தியாகம் செய்து, இன்றைய உலகில் யாரும் செய்ய இயலாத காரியத்தை அன்று செய்து முடித்தார். இந்தத் தியாக மனநிலை, பகிர்தல், தனக்கு முக்கியம் என்று கருதுகின்ற சில பொருள்கள், செபம், நேரம், பணம் மற்றும் நமது வாழ்வு ஆகியவற்றை இன்று இயேசு நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார்.

தமிழ்நாட்டில் 9 மத்தியச் சிறைச்சாலைகள், 5 பெண்கள் தனிச்சிறைச்சாலைகள், 10 மாவட்டச் சிறைச்சாலைகள், 3 திறந்தவெளி சிறைச்சாலைகள் மற்றும் கிளைச் சிறைச்சாலைகள் உள்பட 120 சிறைச்சாலைகளில் 22,631 சிறைவாசிகள் நமது வரவுக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றனர். 18 மறைமாவட்டங்களில் மறைமாவட்ட ஆயர்களது மேற்பார்வையில், சிறைவாசிகளின் குழந்தைகளுக்குக் கல்வி உதவி, சிறைவாசிகளின் குடும்பங்களுக்குப் பொருளாதார உதவி மற்றும் சிறைவாசிகளுக்கு மன ஆற்றுப்படுத்துதல் உள்ளிட்ட சேவைகள் சிறைப்பணித் தன்னார்வத் தொண்டர்கள் வழியாக நடைபெற்று வருகின்றன.

சென்னை-மயிலை உயர்மறைமாவட்டப் பேராயரின் உதவியுடன் உற்றார் உறவினர் இல்லாதவர்களுக்கு மறுவாழ்வு இல்லம் ஒன்று திருத்தணி அருகே கே.ஜி. கண்டிகை கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டுஎங்களுக்கு ஒருவருமில்லைஎன்ற சிறைவாசிகளின் மன ஏக்கத்தை மாற்றும் முயற்சியாக இந்த இல்லம் செயல்பட்டு வருகிறது.

இறுதியாக, இயேசுவின் விடுதலைப் பணியில்சிறைப்பட்டோருக்கு விடுதலைஎனும் முழக்கம் மையம் கொண்டிருந்ததுபோல, நாமும் சிறைக் கைதிகளின் குரலைக் கேட்போம்! அவர்களின் விடுதலைக்கு வழிவகை செய்வோம்!

news
சிறப்புக்கட்டுரை
சமூக நீதி வேண்டும்! - ஆகஸ்டு 10 (கறுப்பு நாள்)

சமூக, பொருளாதார, கல்வி, அரசியல், கலாச்சாரத் தளங்களில் மிகவும் பின்தங்கி பிற்பட்ட நிலையில் உள்ள மக்களுக்குச் சிறப்புச் சலுகை வழியாகத்தான் முன்னேற்றம் அடையச் செய்ய முடியும் என்பதை பிரிட்டிஷ் ஆட்சியிலும் மன்னர் ஆட்சியிலும் சுதந்திர இந்தியாவிலும் தலைவர்கள் உணர்ந்து செயல்பட்டார்கள்.

வரலாற்றில் தலித் மக்களின் சமூக, பொருளாதார, கல்வி, கலாச்சார உரிமைகள் வர்ணாசிரமத் தர்மத்தின் அடிப்படையில் மறுக்கப்பட்டது. மனித உரிமைகளைப் பிறப்போடு இணைக்கப்பட்ட சாதியின் அடிப்படையில் மறுப்பதை மனுதர்ம சாஸ்திரம் சட்டமாக்கியது. இதன் விளைவாக ஒடுக்கப்பட்ட மக்களின் அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டு அடிமைகள் ஆக்கப்பட்டனர். பிரிட்டிஷ் ஆட்சியில் சமூக நீதி அடிப்படையில் ஒதுக்கீடு வழங்குவது தொடங்கப்பட்டது.

ஆண்டுதோறும் ஆகஸ்டு 10-ஆம் நாள் கறுப்பு தினமாக அறிவிக்கப்பட்டு, தலித் கிறித்தவர்களுக்குப் பட்டியல் வகுப்பினர் உரிமைகளை ஒன்றிய அரசு வழங்க தேசிய அளவில் போராட்டங்கள் நடத்தப்படுகிறது. இவ்வாண்டும் இக்கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் தொடர்கிறது. பல்லாண்டு காலம் இந்தியக் கிறித்தவர் என்ற பிரிவில் தொடர்ந்து ஒதுக்கிட்டு உரிமைகளைப் பெற்று வந்தனர். 1950-ஆம் ஆண்டு இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 15/4 சாதியின் பெயரால் அனைத்துப் பட்டியல் சாதியினருக்கும் அளிக்கப்பட்ட ஒதுக்கீட்டு உரிமைகளைச் சமயத்தின் பெயரால் தலித் கிறித்தவர்களுக்கு மறுக்கும் 1950 சனாதிபதி ஆணையில் சனாதிபதி கையெழுத்திட்ட நாள் ஆகஸ்ட் 10-ஆம் நாள் கறுப்பு நாள் ஆகும்.

தலித் கிறித்தவர்களுக்கு மறுக்கப்படும் உரிமைகள்

அரசியல் பிரிவு 341 அளிக்கும்அரசியல் அதிகாரம் குடியரசுத் தலைவர் பட்டியலினச் சாதிகளின் பட்டியல் அளிப்பதுஎன்று உள்ளது. ஆனால், முதல் குடியரசுத் தலைவர் திரு. இராஜேந்திர பிரசாத் அத்துமீறி, அரசியல் சாசனம் அளித்த அதிகாரத்தையும் கடந்து, ஓர் அநீதியான Constitution (Scheduled Caste) Order 1950 என்ற ஆணையை வெளியிட்டார். 1950 என்ற ஆணை 3-வது பத்திஇந்து மதத்தைத் தழுவாத தாழ்த்தப்பட்டோர், பட்டியலினத்தார் (SC) என்று கருதப்படமாட்டார்என்று கூறுகிறது. இந்த ஆணை சமயத்தின் அடிப்படையில் ஷெட்யூல்டு வகுப்பைச் சார்ந்த மக்களைப் பிரித்து, இந்து மதத்தைத் தழுவாத தலித் மக்களுக்கு உரிமைகளை மறுக்கிறது. அரசியல் அமைப்புச் சட்டம் சாதி (SC) பெயரால் அளிக்கும் உரிமைகளைச் சமயத்தின் பெயரால் மறுக்கிறது. இந்த ஆணை அரசியல் நிர்ணயச் சாசன சட்டம் எண் 15/4, 46,330, 332, 341, 25 பிரிவுகளுக்கு எதிராக அமைந்துள்ளது. சமய சார்பற்றத்தன்மையை ஒழிக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவுகள் சாதியின் அடிப்படையில் அளிக்கின்ற உரிமைகளைச் சமயத்தின் பெயரால் மதம் மாறிய தலித் மக்களுக்கு இந்தக் குடியரசுத் தலைவரின் ஆணை மறுக்கிறது. இவ்வாணை திருத்தப்பட்டு, மதம் மாறிய சீக்கிய தலித் மக்களுக்கு 1956-ஆம் ஆண்டும், புத்தமத தலித் மக்களுக்கு 1990-ஆம் ஆண்டிலிருந்தும் பட்டியலின சலுகைகளையும் ஒதுக்கீட்டு உரிமைகளையும் அளிக்கிறது. ஆனால், ஒன்றிய அரசுகள் தொடர்ந்து தலித் கிறித்தவர்களுக்குச் சமூக நீதியின் அடிப்படையில் அளிக்கும் பட்டியலின (SC) உரிமைகளை மறுத்து வருகின்றன. கல்வி, வேலைவாய்ப்பு, பாராளுமன்றம், சட்டமன்றம் உள்ளாட்சி அனைத்திலும் ஒதுக்கீட்டு உரிமைகள் அளிக்கப்படுகிறது. ஆனால், பட்டியலினத்தார்க்கு அளிக்கப்படும் சமூக நீதி, மதம் மாறிய கிறித்தவப் பட்டியலினத்தார்க்கு மறுக்கப்படுகிறது.

போராட்டம்

2010, ஆகஸ்டு 10-ஆம் நாள் முதல் ஆண்டு தோறும்கறுப்பு நாள்கண்டனத்தை வெளிப்படுத்தும் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன் மூலம் தலித் கிறித்தவர்கள் சம உரிமை பெறுவதற்கான போராட்டங்களை, திட்டங்களை முன்னெடுக்கின்றது. 1992 முதற்கொண்டு நீதி ஞாயிறாகவும், 2007 முதல் தலித் விடுதலை ஞாயிறாகவும் கருத்துடன் கடைப்பிடிக்கப்பட்டது.

இப்போராட்டம் சம நீதிக்காக எடுக்கும் நெடும் போராட்டமாக உள்ளது. தேசிய அளவில், அகில இந்திய ஆயர் பேரவைத் தலித் மற்றும் பழங்குடியினர் பணிக்குழு, மாநில ஆயர்கள் பணிக்குழு, தலித் கிறித்தவ மக்கள் இயக்கங்கள் கடந்த 70 ஆண்டுகளாகப் பேரணி மாநாடு, உண்ணாவிரதம் போன்ற பல போராட்டங்களை நடத்தியுள்ளன. மத்திய-மாநில தலைவர்களிடம் கோரிக்கை மனுக்களை அளித்துள்ளன. இச்சமூக நீதி பிரச்சினை அரசிய லாக்கப்பட்டு, தலித் கிறித்தவர் உரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்றது.

கோரிக்கைகள்

ஒன்றிய அரசு மே 2007 முதல் 18 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருக்கும் இரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையான குடியரசுத் தலைவரின் ஆணை 1950 பத்தி 3 முழுவதையும் நீக்கி, SC பட்டியலில் சேர்க்க பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றவேண்டும்; 2004 முதல் 21 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கு (WP 180/2004) விசாரணைக்குப் பா... அரசு உடனே பதில் தரவேண்டும்; நீதித்துறை தலித் கிறித்தவர்களுக்குச் சமூக நீதி வழங்க வேண் டும்.

இந்த அநீதியை ஒழித்து தலித் கிறித்தவர்களுக்குச் சமூக நீதியை வழங்குவதற்காக தமிழ்நாடு அரசு, அரசினர் தலித் தீர்மானத்தை 19.04.2023 அன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றி உள்ளது. இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க அரசினர் தலித் தீர்மானத்தை நிறைவேற்றிய முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்களுக்குக் கிறித்தவச் சமூகம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. இத்தீர்மானம் நிறைவேற உதவிய அனைவருக்கும் நன்றி கூறுகிறது.

பா... கொள்கையின் அடிப்படையில் சிறுபான்மையினருக்கு உரிமைகளை முற்றிலுமாக மறுக்கிறது. ஆகவே, பா... தொடக்கத்திலிருந்தே தலித் கிறித்தவர்களுக்குச் சமூக நீதியை மறுக்கிறது. பாராளுமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் அநீதியாக எதிர்க்கிறது.

கிறித்தவச் சமூகம் தாய்த்திருநாட்டிற்கு எண்ணற்ற நன்மைகளை ஆற்றி வருகிறது. கல்விச் சேவையில் அனைவரும் பாராட்டும் வகையில் அர்ப்பணத்தோடு செயல்படுகிறது. கிறித்தவ மக்கள்தொகை 2.5% உள்ளது. அதில் தலித் கிறித்தவர் 1.5% அவர்களுக்குப் பட்டியலின அந்தஸ்து ஒதுக்கீட்டு உரிமையை அளிப்பதால் மற்றவர்களுக்கு இழப்பில்லை. ஆகவே, இவர்களுக்குச் சமூக நீதி அடிப்படையில் பட்டியலினத்தார் உரிமைகளைப் பா... மறுப்பது மாபெரும் அநீதியாகும். தமிழ்நாடு அரசின் தனித் தீர்மானம் சமூக நீதியை நிலைநாட்டும் செயலாகும்.

உச்ச நீதிமன்ற வழக்கில் நீதி கிடைக்கவும், ஒன்றிய அரசு தலித் கிறித்தவர்களைப் பட்டியலினத்தார் (Scheduled Caste) பட்டியலில் சேர்த்துச் சமூக நீதி வழங்கவும், இந்தியத் திரு அவை தேசிய அளவில் தொடர்ந்து போராட வேண்டும்.

போராடுவோம், சமூக நீதியை வென்றெடுப்போம்!

news
சிறப்புக்கட்டுரை
துன்பப்படும் தலித் கிறித்தவர்களுடன் நமது ஒற்றுமையை வெளிப்படுத்துவோம்!

கறுப்பு தினத்தை (ஆகஸ்டு 10) நினைவுகூர  தமிழ்நாடு ஆயர் பேரவையின் தலித் பணிக்குழுத் தலைவரின் சுற்றறிக்கை

அன்புக்குரியவர்களே,

பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியின மக்களின் உரிமைகளுக்கான உங்கள் ஆதரவுக்கும் ஊக்கத்திற்கும் தலித் பணிக்குழுவின் சார்பில் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

அரசியலமைப்புபட்டியல் சாதிகள் ஆணைகையெழுத்திடப்பட்டு 74 ஆண்டுகள் நிறைவடையும் இந்நாள் தலித் கிறித்தவர்களுக்கும் தலித் இஸ்லாமியர்களுக்கும் மதம் காரணமாக, பட்டியல் சாதியினராக (SC) அடையாளப்படுத்தப்படுவது அநியாயமாக மறுக்கப்பட்டதைக் குறிக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் குடிமை உரிமைகள் மனு (Civil Rights Petition) 180/2004 நிலுவையில் உள்ள போதிலும், இந்தக் கொடுமையான அநீதி தொடர்கிறது. இவ்வேதனையை வெளிப்படுத்தவும், அரசியலமைப்பு உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்படுவதைக் கண்டித்தும் அமைதியான முறையில் நாம் போராட்டம் நடத்த விரும்புகிறோம். இந்த இக்கட்டான சூழலில் அரசின் கவனத்தை ஈர்க்க கறுப்பு தின நிகழ்வுகளை ஆகஸ்டு 10, 2025 அன்று மேற்கொள்ள அன்போடு வேண்டுகிறோம்.

இந்த ஆண்டு ஆகஸ்டு 10-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை வருகிறது. எனவே, ஒவ்வொரு பங்கு ஆலயத்திலும் முக்கியத் திருப்பலிக்குப் பிறகு நமது ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் நாம் எதிர்கொள்ளும் பாகுபாடுகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து வலியுறுத்த வேண்டுகிறோம்.

ஆகவே, அனைத்து ஆலயங்களிலும் கிறித்தவ வீடுகளிலும் கறுப்புக் கொடிகளை ஏற்ற ஏற்பாடு செய்யவும், பரந்த சமூக ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், பஞ்சாயத்துத் தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் போன்ற உள்ளூர் தலைவர்களைக் கொடி ஏற்றுவதில் பங்கேற்க அழைத்து ஊக்குவிக்கவும் வேண்டுகிறோம். அனைத்துப் பங்கு ஆலயங்கள் மற்றும் கத்தோலிக்க நிறுவனங்களில் பங்குத்தந்தைகள் அல்லது நிறுவனத் தலைவர்கள் கறுப்புக் கொடிகளை ஏற்றி இந்நிகழ்விற்கு ஆதரவு அளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், நம் போராட்டத்தின் தீவிரத்தை வலியுறுத்தும் வகையில், ஆயர் மறைமாவட்டத் தலைமையகம் அல்லது பேராலயத்தில் தனிப்பட்ட முறையில் கறுப்புக் கொடியை ஏற்றிடவும் அன்புடன் வேண்டுகிறோம். அவ்வாறே, 2025 ஆகஸ்டு 11 அன்று மறைமாவட்டப் பட்டியல் இனத்தவர்/பழங்குடியினர் ஆணையச் செயலாளர், தலித் பிரதிநிதிகளுடன், சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களைச் (MPs) சந்தித்து, தலித் கிறித்தவர்கள் மற்றும் தலித் இஸ்லாமியர்களுக்குப் பட்டியல் சாதியில் அடையாளப்படுத்துவதற்கான விரிவான பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க வேண்டுகிறோம்.

அதிகபட்சப் பங்கேற்பை உறுதிப்படுத்தும் வண்ணம், பல்வேறு குழுக்களைத் தயாரிக்கவும், அனைத்துக் குருக்கள் மற்றும் துறவறத்தார்களின் ஆதரவைப் பெறவும், பட்டியல் இனத்தவர்/பழங்குடியினர் செயலாளர் ஓர் ஆயத்தக் கூட்டத்தைச் (தலித் மற்றும் தலித் அல்லாதவர்கள் இருவர் உடனும்) சாத்தியமான இடங்களில் ஏற்பாடு செய்யவும், இந்தியக் குடியரசுத் தலைவர், பிரதமர், மாவட்ட ஆட்சியர் மற்றும் சிறுபான்மையினர் ஆணையர் ஆகியோருக்கு விரிவான மனுக்களைத் தயாரித்துச் சமர்ப்பிக்கவும் வேண்டுகிறோம். மேலும், அனைத்துக் கூட்டங்களிலும் கையெழுத்து இயக்கத்தை நடத்தவும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC) ஒதுக்கீட்டிற்குள் தலித் கிறித்தவர்களுக்கு 4.6% உள்ஒதுக்கீடு கோரும் நமது கோரிக்கைக்கு ஆதரவாக முடிந்தவரை பல கையொப்பங்களைச் சேகரிக்கவும் கேட்டுக்கொள்கிறோம்.

இறுதியாக, தலித் கிறித்தவர்கள் மற்றும் தலித் இஸ்லாமியர்களுக்குப் பட்டியல் சாதியில் அடையாளப்படுத்தப்படுவதில் மறுக்கப்படும் உரிமைகள் குறித்து, இந்திய அரசுக்கு நாம் இடைவிடாமல் நினைவூட்ட வேண்டும். இந்த முயற்சியில் உங்களது பங்களிப்பு மிகவும் முக்கியமானது. நமது உறுதியான ஆதரவையும், பட்டியல் சாதியில் பிறந்து துன்பப்படும் கிறித்தவர்களுடன் நமது ஒற்றுமையை வெளிப்படுத்தத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு குருக்கள், துறவறத்தார் மற்றும் நம்பிக்கையாளர்கள் கலந்து கொள்ள கேட்டுக்கொள்கிறோம். மக்கள் அதிக அளவில் பங்கேற்க தீவிரமாக ஊக்குவிக்குமாறும் உங்களை அன்புடன் வேண்டுகிறோம்.

news
சிறப்புக்கட்டுரை
‘சமயச் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்!’ (தமிழ்நாடு ஆயர் பேரவையின் கண்டன அறிக்கை!)

அண்மைக்காலங்களில் இந்தியாவில் மதவாதச் சக்திகளால் சிறுபான்மையினர் குறிப்பாக, கிறித்தவர்கள் துன்புறுத்தப்படுவது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்திய அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள சமயச் சுதந்திரத்தை அச்சுறுத்தும் வன்முறை, துன்புறுத்தல் மற்றும் பாகுபாடு போன்ற நிகழ்வுகள் அதிகம் பதிவாகியுள்ளன.

கடந்த ஜூலை 26-ஆம் தேதி அன்று மிகவும் கவலைக்குரிய நிகழ்வு ஒன்று சத்தீஸ்கரில் உள்ள துர்க் இரயில் நிலையத்தில் நடந்துள்ளது. மேரி இமாக்குலேட் அசிசி துறவற சபை அருள்சகோதரிகள் ப்ரீத்தி மேரி மற்றும் வந்தனா பிரான்சிஸ் ஆகிய இருவர் மீதும் கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்றக் குற்றங்கள் போலியாகச் சுமத்தப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ளனர். சாதி, சமயம் பாராமல் ஏழை, எளியவர்களுக்காக உண்மையாக உழைத்துக் கொண்டிருந்த இந்த அருள்சகோதரிகளுக்கு நேர்ந்தது சனநாயகத்திற்கு எதிரான செயல் என தமிழ்நாடு ஆயர் பேரவை வன்மையாகக் கண்டனம் தெரிவிக்கிறது.

அர்ப்பணிப்புடன் செயல்படும் மதச்சிறுபான்மையினரை அச்சுறுத்தும் செயலாக இது அமைகிறது. எனவே, ஒன்றிய அரசு உடனடியாக இதில் தலையிட்டு, அந்த இரு அருள்சகோதரிகளை எந்தவிதமான நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறது. அத்தோடு, சமயச் சுதந்திரத்திற்கான உறுதிப்பாட்டை நிலைநிறுத்தவும், தனிநபர்கள் சமய நம்பிக்கைகளுக்காக அநியாயமாகக் குற்றம் சுமத்தப்படவோ துன்புறுத்தப்படவோ கூடாது என உறுதி செய்யவும் வேண்டும். சிறுபான்மையினரைத் தவறாகக் குற்றம்சாட்டப் பயன்படுத்தக்கூடிய மாநிலச் சட்டங்களின் சீர்திருத்தங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது

பரந்த நம் இந்திய நாட்டில் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் என்பதை உணர்ந்து, வேற்றுமையில் ஒற்றுமைப் பாராட்டி, சமயச் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், இந்தியாவில் சிறுபான்மையினர் குறிப்பாக, கிறித்தவர்கள் மீதான துன்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் தமிழ்நாடு ஆயர் பேரவை ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

+ மேதகு பேராயர், ஜார்ஜ் அந்தோணிசாமி

தலைவர், தமிழ்நாடு ஆயர் பேரவை