அது ஒரு காட்சி அல்ல; ஓர் உணர்வு!
அது
ஒரு பார்வையல்ல; ஒரு மூச்சு!
தெருவோரத்தில்
வாழும் ஒவ்வொருவரும் ஒரு கதையோடு மட்டுமல்ல, கண்ணீரோடும் நிறைந்திருக்கிறார்கள். சாலையோரத்தில் விற்கும் பழக்கடைகளின் பின்னால் ஒரு வாழ்க்கை நிற்கிறதென்பதை உணராமல், அதை வாடையோடு மோதுகிறது மனிதகுலம். வலி அனைவருக்கும் பொதுவானது. பிறக்கும் குழந்தை முதல் இறக்கும் முதியவர் வரை. ஏன்?
புனித
அகுஸ்தின் இவ்வாறு கூறுவார்: “இயேசு பாவம் ஒன்றைத் தவிர மனிதரைப்போல் எல்லா வலிகளையும் தம் வாழ்வில் கொண்டிருந்தார்.”
வலி
வர்ணிக்க முடியாத சுனைநீராகப் பலரின் வாழ்வில் சுரந்துகொண்டே இருக்கிறது. வலியை வெளிக்கொணர்கிறது ஒரு கூட்டம். வலியை உள்நிறுத்தி உந்துகட்டையாக வாழ்வை நகர்த்திச் செல்கிறது மற்றொரு கூட்டம். வலி எவருக்கும் விதி விலக்கு அல்ல; பணம் இருப்பவர்கள் வலிக்குப் பதம் பார்க்கிறார்கள். மற்றவர்கள் பாதைக்காகத் தடம் பார்க்கிறார்கள்.
திருச்சியை
நெருங்கும் நெடுஞ்சாலையில், தூசி பறக்கும் ஒரு சாலையோரத்தில் தனியாக ஒரு பழக்கடை. அதன் அருகில் நிழலுக்காய் மாட்டியுள்ள பிளாஸ்டிக் தண்டு. அதன் கீழ் அமர்ந்திருக்கும் ஒரு முகம். அது முகம் அல்ல... ஒரு கதைக் கட்டம்!
‘என் பெயர் மாரியம்மா...’ என்று மௌனமாகக் கூறினார். “இது என் வாழ்வாதாரம். நான் தினமும் காலை 6 மணிக்குப் பழங்களை வாங்கி வருவேன். இங்கேயே வைத்து விற்கிறேன். அதிகம் விற்க முடியவில்லை என்றாலும், வாடிக்கையாளர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கையில் வழியோரத்தில் காத்திருப்பேன்.”
முடிவிலாக்
காத்திருப்பும், வாடிக்கையாளர் வருகிறாரோ என்ற ஆவலும், விற்பனை ஆகாத பழங்கள் சுருங்கும் வேதனையும், அவளது கண்களில் தெரிந்தது.
வாடிய
வாழ்வின் வாசல்,
அதுவே
வழியோரத்தில் பழம் விற்கும்
அம்மாவின்
கைகளில் - வாடுகிறது.
பூக்கள்போல
பழங்கள்...
வாடாதது
மட்டும் அவளது - நம்பிக்கையே!
ஒரு
வாடிக்கையாளர் வந்தால் போதும்,
அவள்
பிள்ளையின் வயிறு பசியறியும்!
யாரும்
பார்க்கவில்லை அவளது கண்ணீரை,
ஆனால், பார்த்தோம் பழங்களில் மட்டும் - விலையை!
- ஷெபி ஆர்லின் உணர்ச்சிக் கவிகள்
வழியோரங்களில்
வாழும் இவர்களுக்கு வீடு என்பது மழையில்லாத ஒரு மூலை. உணவு என்பது ஒருவன் கொடுத்தால் கிடைக்கும் பாக்கியம். அவர்கள் வாழ்வில் ‘இனிமேல் என்ன?’ என்ற கேள்விக்குப் பதில் தெரியாது. அவர்கள் வாழும் நாள்கள், நம் காலணிகள் கீழ் அழியும் ஓர் உறவுமில்லா மண்ணாகவே இருக்கிறது.
சென்னை-விழுப்புரம் சாலையில் ஒரு பாட்டி பழங்கள் விற்றுக்கொண்டிருந்தார். ஒருநாள் அவரிடம் ஒரு சிறுமி வந்து, “பாட்டி, எனக்கு ரொம்பப் பசிக்குது. ஒரு பழம் குடுக்கலாமா?” என்று கேட்டார். அவரிடம் இருந்த இறுதி மூன்று பழங்களில் ஒன்றை எந்தவொரு முறுவலுமின்றி அந்தச் சிறுமிக்குக் கொடுத்தார்.
நானும்
அங்கே இருந்தேன். “பாட்டி, உங்களுக்கே விற்று வாழவேண்டிய நிலை இருக்கும்போது ஏன் இவ்வாறு?” என்று கேட்டேன். அவர் கூறினார்: “என் குழந்தைப் பருவத்தில் யாரும் எனக்குச் செய்யாத உதவியை இப்போது ஒரு பசிக்கு நான்தான் செய்யவேண்டும். அதிலே அளவு மிகுந்த சந்தோஷமிருக்குப்பா” என்றார்.
இந்த வார்த்தைகள் என் உள்ளத்தை நசுக்கின. அவர் விற்றது பழம் மட்டுமல்ல... மனிதத்துவமும் கூட!
வழியோரமாய்
ஒரு வலி; அது நாம் காணும் சாதாரண வாழ்க்கை அல்ல; அது சக்கரங்கள் ஓடும் நெடுஞ்சாலையின் ஓசையில் ஒளிந்திருக்கும் சத்தமற்ற கதைகள். நாம் பார்வையிட்டாலும் உணராத உண்மைகள்.
ஒரு
பழம் விற்கும் அம்மாவின் புன்னகையில், ஒரு கண்ணீர் இருக்கிறது. ஒரு சாலையோரத் தந்தையின் கண்களில், ஒரு கனவு களங்கமாய் காணப்படுகிறது. நாம் ஒரு நாளாவது அவர்களிடம் நின்று ஒரு பழம் வாங்கினாலோ, ஒரு பசிக்கு உணவு கொடுத்தாலோ, ஒரு குழந்தைக்கு ஒரு புத்தகம் கொடுத்தாலோ, அந்த வழியோர வலிக்குள் சிறு நிழல் கொடுக்க முடியும்.
நாம்
அவர்களுக்கு வாடிக்கையல்ல; வாழ்வாக இருக்கலாம். வழியோரமாய் நின்ற அந்த வலிக்கு நாம் ஒரு சந்தோசமான வழி தேடலாம், மகிழ்ச்சியான தடம் பதிக்கலாம்.
“வாழ்க்கையில் இப்படி ஒரு சந்தர்ப்பம் வந்திருக்கவே கூடாது என்று தோன்றுகிறது. பல இழப்புகளையும் ஏமாற்றங்களையும் நான் சந்தித்திருக்கிறேன். ஆனால், என் 76-வது வயதில் எதிர்கொள்கின்ற இந்தப் பிரிதல் அப்படியோர் இரணத்தை மனத்திலே ஏற்படுத்துகிறது.
என்
மகள் திருமணம் செய்துகொண்டு, சென்றபோதுகூட இத்தனை வேதனையை நான் அடைந்ததில்லை. ஒருநாள் மகனும் மருமகளும் ‘வெளிநாடு செல்கிறோம்’ என்று
என்னிடம் தயக்கத்தோடு வந்து நின்றபோது, ‘சந்தோசமா போங்க’ என்று வாழ்த்திதான் அனுப்பினேன். வயோதிக நிலையில் மனைவி கனகமும் நானும் தனிமையில் இருந்தபொழுதுகளில் ஒருநாள்கூட இவ்வளவிற்கு மனம் வருந்தியதில்லை.
‘வீட்டுல ஒரு நாய் இருந்தா உங்களுக்குக் கொஞ்சம் நேரம் போகும்; கொஞ்சம் பாதுகாப்பாகவும் இருக்கும்’
என்று விருந்துக்கு வந்த என் மகள் ஒரு நாய்க்குட்டி கொடுத்துவிட்டுப் போனாள். தொடக்கத்தில் ‘நம்மையே நாம் பார்த்துக்கொள்ள முடியவில்லை; இதில் நாய் வேற?’ என்றுதான் எண்ணினேன்.
வாலாட்டி
நன்றியுணர்வை வெளிப்படுத்துவதில், சொன்னதைச் செய்ததில், பாதுகாப்பதில், பாசத்தை வெளிப்படுத்துவதில், கொடுப்பதைக் குறை சொல்லாமல் சாப்பிடுவதில் என்
பிள்ளைகளைவிட மேல் என்றுதான் சொல்வேன்.
நான்
தூரமாக வரும்போதே கேட் பக்கத்தில் ஓடிவந்து அணைத்துக்கொள்கிறது. யாராவது வந்தால் குரைத்தே சிக்னல் தருகிறது. என்னோடு விளையாடுகிறது. ‘வாக்’ போகிறது. பேப்பர் படிக்கும்போது பக்கத்திலேயே பேசாமல் படுத்துக்கொள்கிறது. என்னதான் என்னோடு இருந்தாலும், ஒருநாள் கூட வீட்டுக்குள் வந்ததில்லை. அந்தக் கட்டுப்பாட்டையும் அது தெரிந்து வைத்திருந்தது.
சென்ற
வாரம் திங்கள்கிழமை பாத்ரூமில் கால் வழுக்கி கீழே விழுந்துவிட்டேன். காலில் சுளுக்கு. எழுந்து நடக்க முடியவில்லை. டாக்டர் கண்டிப்பாக ரெஸ்ட் எடுக்கச் சொல்லிவிட்டார். என் மகள் ‘அப்பா! அம்மாவும் நீங்களும் கொஞ்சம் நாள் என்கூட வந்திருங்க. கால் சரியான பிறகு வீட்டுக்குப் போகலாம்’ என்றாள். என்னைப் பார்த்துக்கொள்கிற நிலையில் என் மனைவியும் இல்லை. அதனால் அவள் கூறியது சரியாகத்தான் பட்டது. ஆனால், நாயை என்ன செய்வது? என்பது பெரும் விவாதமாகவே இருந்தது. மகள் வீட்டுக்குக் கொண்டு போகலாமென்றால், ஏற்கெனவே அங்கு இரண்டு பெரிய நாய்கள் உள்ளன. கடித்தே இதனைக் கொன்றுபோடும். யாரிடமாவது கொடுத்துவிட லாமா? என்று மனைவி கேட்டாள். நம் காலடியிலேயே கிடந்தது மற்றொருவரின் காலடியைச் சுற்றி வருவதைப் பார்க்க எப்படி மனம் வரும்? ‘சாப்பாட்டில் விசம் கலந்து கொடுத்துவிட்டுக் குளத்துக் கரையில் கொண்டுபோய் விட்டுவிட வேண்டியதுதானே?’ என்றான் நலம் விசாரிக்க வந்த பக்கத்து வீட்டுக்காரன்.
‘இவர்களுக்கெல்லாம் எப்படிதான் இப்படிப் பேசமுடிகிறதோ?’ என்றிருந்தது. இந்த நாயை என்னதான் செய்வதென்று அறியாது நான் தவித்து உட்கார்ந்திருந்தபோது, என் வீட்டுக்குள் முதல்முறையாக வந்து என் காலடியில் படுத்துக்கொண்டது. அது ‘என்னை எங்கேயும் அனுப்பிவிடாதே’ என்று
சொல்வது போலிருந்தது. முதியவர்களை முதியோர் இல்லம் அனுப்புவதைப்போல, என் நாயைக் கடைசியாக நானே என் நண்பர் ஒருவரிடம் கனத்த இதயத்தோடு கொடுத்தனுப்பினேன்.
ஒருநாள்
நான் என் மகள் வீட்டில் இருக்கையில் என் நண்பன் மகன் போனில், ‘அங்கிள்! நீங்க கொடுத்த நாய் எங்கேயோ ஓடிப்போச்சு’ என்றான்.
அன்றைய நாள் மழை நாளில் கரைபுரண்டோடும் காட்டாற்று வெள்ளம்போல என் உயிர் அடித்துச் செல்லப்பட்டதை முதன்முதலில் உணர்ந்தேன். என் நாயைத் தேடிச்செல்ல எனக்கு வலுவில்லை. எனினும், என் நாய் என்னை ஒரு நாள் தேடிவரும் என்னும் நம்பிக்கையில் காத்துக்கிடக்கிறேன்.”
முதியவர்
தன்னோடு இருந்த நாய் இல்லாமல் வாழ முடியாத சூழல் உருவானதைப்போல, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தாமல் இனி வாழவே முடியாது என்று எண்ணத் தோன்றுகிறது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் கல்வி, மருத்துவம், ஊடகம், கட்டுமானம், அறிவியல் என்று எல்லாத் துறைகளிலும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. இதனால், இத் துறைகளில் பணி செய்கின்ற பலரும் தங்கள் பணியை இழக்கின்ற அபாயச்சூழல் நிலவுவதை உணர்கின்றனர்.
1930-ஆம் ஆண்டு
ஜான் மேனார்ட் கேய்னஸ் (John Maynard Keynes) ‘தொழில்நுட்ப
வேலையின்மைக் கோட்பாடு’
(Technological Unemploy ment
Theory) எனும்
கோட்பாட்டை முன்மொழிந்தார். அக்கோட்பாட்டின் அடிப்படைக்கூறு என்னவெனில் ‘தொழில்நுட்ப மாற்றம் வேலையிழப்புக்கு வழிவகுக்கும்’ என்பதாகும்.
சிலர் இக்கோட்பாட்டைக் காலாவதியானது என்று விமர்சிப்பதும் உண்டு.
எந்தவொரு
தொழில்நுட்ப வளர்ச்சியும் இரண்டு விதமான மாற்றங்களை ஏற்படுத்தலாம்: 1. தொழிலாளர்கள் முன்பு செய்த பணியிலிருந்து விடுவிக்கப்படுவர் அல்லது இடம்பெயர்வர் (Displacement Effect). 2. தொழில்நுட்ப
வளர்ச்சியினால் எழும் தேவையின் அடிப்படையில் வேலைவாய்ப்பு கூடும் (Productivity Effect).
அண்மையில்
வெளியிடப்பட்ட ‘எதிர்கால வேலைவாய்ப்புக்கான அறிக்கை’
(Future of Jobs Report) 2020-இன்
அடிப்படையில் 2025-ஆம் ஆண்டிற்குள் 85 மில்லியன் பணியிடங்கள் காலியாகும் என்றும், 97 மில்லியன் பணியிடங்கள் புதிதாக உருவாகும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
உலகத்தில்
எது மாறுகிறதோ இல்லையோ தொழில்நுட்பம் மாறிக்கொண்டே இருக்கின்றது. மாறிவரும் தொழில்நுட்பச் சூழலில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடும், அதன் பரவலாக்கமும் தவிர்க்க முடியாததாக இருக்கின்றது. எனவே, வேலையிழப்பு அதிகமாக ஏற்படும் என்பது எவ்வளவு உண்மையோ, அதேபோன்று புதிய வேலை வாய்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரிக்கும்.
செயற்கை
நுண்ணறிவு நம் வேலைகளை எடுத்துக்கொண்டாலும், வேறு புதிய வேலை வாய்ப்புக்கான தளங்களை உருவாக்கித் தருகிறது. இவ்வேலைவாய்ப்புச் சூழலை எவ்வாறு நமதாக்கப் போகிறோம்? என்பதுதான் நம்முன் வைக்கப்படுகின்ற கேள்வி.
இன்றைய
சூழலில் ஏ.ஐ. தொழில்நுட்பம்
தெரியாத ஆசிரியர், ஏ.ஐ. தெரிந்த
ஆசிரியரிடம் தன் வேலையை இழப்பார். ஏ.ஐ. தொழில்நுட்பம்
தெரியாத ஊடகவியலாளர், ஏ.ஐ. தெரிந்த
ஊடகவியலாளரிடம் தன் வேலையை இழப்பார். ஏ.ஐ. தொழில்நுட்பம்
தெரியாத ஐ.டி. பணியாளர்
ஏ.ஐ. தெரிந்த மற்றுமோர்
ஐ.டி. பணியாளரிடம் தன் வேலையைப் பறிகொடுப்பார். எனவே, காலத்திற்கேற்ப நம் அறிவையும், நம் திறனையும் வளர்த்துக்கொள்வது (Upskilling) மிகவும்
முக்கியமானது. இல்லையேல் வேலையில்லாப் பட்டதாரி பட்டியலில் நம் பெயரும் இடம்பெற்று நம் வாழ்க்கையே நாய் பிழைப்பாக மாறக்கூடும்.
நெப்போலியன் போனபார்டே ஐரோப்பா முழுவதையும் ஆள்வதற்குக் கனா கண்டார். யுத்த வெறியில் கண்ட களங்கள் எல்லாம் வெற்றி வாகை! இரத்தவெறி ஏறியது. நெப்போலியனுக்கு வாட்டர் லூவில் நடந்த போர் சறுக்கலைத் தந்தது. அவர் தோல்வி எனும் காடியை ருசித்தார்; அது கசந்தது. மாவீரன் நெப்போலியன் தோற்றுப்போனார். தமிழ்நாடு தேர்தல் களம் என்பது பா.ச.க.வைப் பொறுத்தவரை நெப்போலியனின் வாட்டர்லூ போன்றதே.
தமிழ்நாட்டில்
பா.ச.க. எதிர்ப்பு
என்ற புயல் வீசுகிறது. மக்களின் பொதுக்கருத்தாக்கம் என்பது வளர்ச்சி மற்றும் வளர்ச்சி சார்ந்த சமூக நீதி, வாழ்வாதாரப் பாதுகாப்பு, பொது அமைதி, மதநல்லிணக்கம் என்பதே. அது தமிழ்ச் சமூகத்தை அறம் சார்ந்த தார்மீகக் கோட்டில், கோட்பாட்டில் இணைக்கிறது. தமிழ்நாட்டு மக்களை முன்னேற்றப் பாதைக்குத் தொடர்ந்து அழைத்துச் செல்கிறது. தமிழ்நாட்டு மக்கள் சகோதர-சகோதரிகளாக அன்பு வாழ்வு, அறவாழ்வு வாழ்கிறார்கள். இதற்கு நேர்மாறாக பா.ச.க.வோ இந்து மதம்
சார்ந்த உணர்ச்சிகளால் மக்களை அணிதிரட்ட முயல்கிறது. இந்து மத வெறியைத் தூண்டுகிறது.
மணிப்பூர்
பற்றி எரிகிறது. அங்கு இனக் கலவரம் 2023, மே முதல் இரண்டு
ஆண்டுகளாக நடக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுகிறார்கள். அரசு நிர்வாகம் செயலற்றுக் கிடக்கிறது, அதைக் கட்டுப்படுத்த வேண்டிய உள்துறை அமைச்சர் மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு எனும் மாநிலத் தேர்தல்களில் முழு கவனம் செலுத்துகிறார். ஆர்.எஸ். எஸ். வழிகாட்டுதலில், 2031-தமிழ்நாட்டில் பா.ச.க.
ஆட்சி என்ற இலக்கில் செயல் திட்டங்களை வழிநடத்துகிறார். திருப்பரங்குன்றத்தில் மக்கள் மத நல்லிணக்கத்தோடு வாழ்கிறார்கள்; ஆனால்,
உயர் நீதிமன்றத் தீர்ப்பை மதியாமல் மதுரையில் முருகன் மாநாடு நடத்த முனைகிறார்.
தமிழ்நாட்டின்
பொது அமைதியைச் சீர்குலைக்கும் செயலுக்கு உள்துறை அமைச்சரே தன் கட்சி நிர்வாகிகளோடு மட்டுமல்ல, அனைத்து இந்துத்துவா அமைப்புகளோடும் ஆலோசனை நடத்துகிறார். ‘முருகன் மலையா? சிக்கந்தர் மலையா?’ எனக் கொளுத்திப் போடுகிறார்கள். மதுரை மண் அரசியல் என்பது உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்திற்காக எம்.ஜி.ஆர் அவர்களை
அசைத்துப் பார்த்தது. இந்தியாவின் இரும்பு மங்கை எனும், இந்திரா காந்தி அவர்களைக் கறுப்புக்கொடி போராட்டத்தால் கலங்க வைத்தது. தமிழ்நாட்டு மக்கள் கல்வியறிவு பெற்றவர்கள், அரசியல் விழிப்புணர்வு கொண்டவர்கள் என்பதே தமிழ்நாட்டுக் கள நிலவரம். அ.தி.மு.க.வோ ஏதோ கட்டாயத்தால்
பா.ச.க.வோடு
கூட்டணி என அறிவித்துவிட்டது. பா.ச.க. தமிழ்நாட்டிலும் ஒன்றிய அரசுபோல
என்.டி.ஏ. கூட்டணி
அரசு என்கிறது. ஆனால், எடப்பாடியோ “இல்லை, அ.தி.மு.க. ஆட்சிதான்” என்கிறார். வெற்றி வாய்ப்புகள் இல்லாத நிலையில், ‘எவர் ஆட்சி?’ என்ற விவாதம் நடக்கிறது. பா.ம.க.,
தே.மு.தி.க.
போன்ற கட்சிகள் தன் பேர வலிமையை வலுப்படுத்த ‘நாங்கள் கூட்டணிக் குறித்து முடிவு செய்யவில்லை’ எனப்
பா.ச.க.வுக்கே
போக்குக் காட்டுகிறார்கள்.
கடந்த
காலங்களில் நடைபெற்ற பாராளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் இவர்கள் எவருமே கூட்டணியில் இருந்தாலும், மோடி படம் போட்டு ஓட்டுக் கேட்கவில்லை. பா.ச.க.
தலைவர்கள் எவரையும் தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைக்கவில்லை. கூட்டணித் தலைவர்கள் ‘பா.ச.க.
மூத்த தலைவர்கள் தங்கள் தொகுதிக்குப் பிரச்சாரத்திற்கு வந்து விடுவார்களோ?’ எனப் பயந்தார்கள். பா.ச.க.
தமிழ்நாட்டு மக்கள் வெறுக்கும் கட்சி என அறிந்தாலும், ஏதோ
அச்சுறுத்தல், சுயநலம் காரணமாகத் தேர்தல்
கூட்டு வைக்கிறார்கள். தமிழ்நாடு மக்களின் பொதுக் கருத்திற்கு எதிராக நிற்கிறார்கள். சிறுபான்மையோர் நலன் என்பதில் கபட வேடம் தரிக்கிறார்கள்.
பா.ச.க. அரசியல்,
பொருளாதாரம், மதம் சார்ந்த நம்பிக்கையில் தன் தாய்வீடான ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தில் நிற்கிறது. பா.ச.க.வின் கூட்டணிக் கட்சிகள் அதற்கு எதிர்மறைக்கொள்கை கொண்டவர்களாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். இவர்கள் மக்களை ஒன்றும் தெரியாதவர்கள் என்று எண்ணுகிறார்கள். இது கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எல்லாக் கதவுகளைத் திறந்த எம்.ஜி.ஆர். மாளிகைச் சொந்தங்களுக்கு நினைவு
இருக்கலாம். யூடியூப் சேனல்களில் தினம் பேசுகிற எமது பத்திரிகை நண்பர் காட்டமாகக் கூறினார்: “அந்தக் காலத்தில் அவ்வழிச் சென்ற நான்கு கால் பிராணிகள்கூட உள்ளே இழுத்துவிடுவார்கள் என்ற பயத்தில் வழிமாறிப் போனதாம்.” அட, நடிகர் மன்சூர் அலிகான்கூட கூட்டணிப் பேச்சு வார்த்தை நடத்தி வெற்றி காண இயலவில்லை. அது கட்சியின் கொள்கைகள் நீர்த்துப்போனதன் விளைவு.
அரசியல்வாதிகள்
கெட்ட பின் ஞானம் பெறுவார்கள்; மாற்றுத் தேடுவார்கள். எடப்பாடி பழனிச் சாமியும் அப்படியே. எஸ்.டி.பி.ஐ.
மாநாட்டில் பேசுகிறார்:
“எதிர்வரும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்
தேர்தல்களில் பா.ச.க.வுடன் கூட்டணி இல்லை எனத் திட்டவட்டமாக அறிவிக்கிறேன். சூழ்நிலை காரணமாகப் பா.ச.க.வோடு கூட்டணி வைத்தோம். அவர்களின் கொள்கை சரியில்லாததால் வெளியே வந்தோம்” என்றார். அ.தி.முக.வின் முக்கியத் தலைவர்கள் பலரும் அ.தி.மு.க. தொடர்ந்து தோல்வி
அடைய பா.ச.க.
கூட்டணிதான் காரணம் எனக் குற்றச்சாட்டுகளைப் பொதுவெளியில் தெரிவித்தனர். முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரோ, “நான் என் தொகுதியில் முடிசூடா மன்னனாக இருந்தேன்; பா.ச.க.
கூட்டணியால் சிறுபான்மையோர் வாக்குகள் கிடைக்காத காரணத்தால் தோற்றுப் போனேன்” என்றார்.
அ.தி.மு.க.
2025-ஆம் ஆண்டு தொடக்கத்தில் கூட்டணிக் கணக்குகளைப் போட்டது. பா.ச.க.
வோடு கூட்டுச் சேர்ந்தால் இரண்டு கூட்டல் இரண்டு நான்கு அல்ல; அது இருக்கும் வாக்குகளுக்குப் பங்கமாகி, சிறுபான்மையோர் வாக்குகளைப் பெற முடியாமல், அது கழிவில் முடியும் என நம்பினர். எடப்பாடி
உள்பட்ட இரண்டாம் கட்டத் தலைவர்கள் “எக்காலத்திலும் பா.ச.க.வோடு கூட்டணி இல்லை” என்ற உறுதியில் நின்றனர். பா.ச.க.
வழக்கம்போல சாம, பேத, தண்டத்தைக் கையில் எடுத்து, எடப்பாடியாரை மிரட்டி தில்லி அழைத்தது. ‘பா.ச.க.-அ.தி.முக.
கூட்டணி’ என
அறிவித்தது. பா.ச.க.-அ.தி.மு.க. கூட்டணி அறிவிப்போடு
நிற்கிறது. இரு கட்சியினரும் இணைந்து போராட்டங்களோ, தேர்தல் பணிகளோ செய்யாமல் தேங்கிக் கிடக்கின்றனர்.
அ.தி.முக.விற்குப்
பா.ச.க. அழிக்கிற
மாநிலக் கட்சிகளின் பட்டியலில் நாமும் ஒன்றாகி
விடுவோமோ என்ற பெரும் பயம் ஒன்று உண்டு. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், பா.ச.க.,
அ.தி.மு.க.
பொருந்தாக் கூட்டணி தோல்வியைத் தழுவும். அது கூடா நட்பின் பின்விளைவையே பிரதிபலிக்கும். தேர்தல் தோல்வியைத் தவிர்க்க, பா.ச.க.
மதம் சார்ந்த, மொழி சார்ந்த, சாதியக் கலவரங்களை முன்னெடுக்கலாம் என்பது சாமானியர்களின் கருத்து. இது அவர்கள்
தன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அவர்களுக்குச் சொல்லித் தந்த அடிப்படை பாலப் பாடமாகும். தமிழ்நாடு அரசு தனது உளவு அமைப்புகள் வழி விழிப்புணர்வாகச் செயல்படவேண்டும் என்பது வேண்டுகோள் மட்டுமல்ல, அதில் சிறுபான்மையோரின் பாதுகாப்பும் உள்ளடங்கி உள்ளது.
இந்திய இந்துத்துவர்கள் பேசும் தேசியம், ‘இந்து தேசியம்’ என்று அழைக்கப்பட்டாலும், உண்மையில் இந்து தேசியமே இவர்களின் இந்திய தேசியம்! இவர்கள் வலிந்து பேசும் தேசியம் எல்லாரையும் உள்ளடக்கிய தேசியமாக இருக்க முடியாது. இந்தியா என்ற ஒரு நாடு ஆங்கிலேயர் ஆட்சியின்போது அரசியல் ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்ட (integrated) ஒன்று என்பதும், இந்நாடு கலாச்சார ரீதியாகப் பன்முகத் தன்மையுடையது என்பதும் உண்மையாயிருக்க, ஒரு குறிப்பிட்ட சமயத்தின் அடிப்படையிலான தேசியம், உள்ளடங்கிய தேசியமாக இருத்தல் எப்படிச் சாத்தியம்?
உண்மையான
தேசிய உணர்வு எல்லைகளைக் கடந்த ஒன்று. இந்துத்துவர் பேசும் ‘இந்து தேசியம்’ அல்லது கலாச்சாரத் தேசியம் அப்படியல்ல. பெரும்பான்மை மத அடிப்படையில் கட்டமைக்கப்பட்டு,
சிறுபான்மையினர் மத அடையாளங்கள் ஒதுக்கப்பட்டு
ஓரங்கட்டப்படலால், இத்தேசியம் மக்களை உள்ளடக்குவது அல்ல; இத்தேசியம்
சமூகத்தின் ஒருசாராரை ஒதுக்குவது. ‘ஒற்றுமை’ என்னும் பெயரில், ‘உள்ளடக்குவது’ என்னும்
பெயரில் பிரிவினையை வளர்க்கும் இவர்களின் அரசியலை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
‘ஒற்றுமை’ என்ற கோஷத்தை மக்கள் முன்பு வைக்கும் இந்துத் தேசியர்களின் உள்நோக்கம் ஒற்றுமையல்ல, பிரிவினையே! கடந்த ஆண்டு நடந்து முடிந்த மராட்டிய மாநிலத்திற்கான தேர்தல் பாரதிய சனதா கட்சி எதிர்பாராத அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கண்டபோது, இவ்வெற்றிக்கான காரணத்தைப் பாரதிய சனதாவினர் கூறியதை ஊடகவழி அறிந்தபோது வியப்பளித்தது. ‘இந்தியா’ கூட்டணியின் இந்து மதம் பற்றிய பொய்யான பிரிவினை பற்றிய பிரச்சினைதான் மக்கள் மத்தியில் எதிர்க்கட்சியினர் மீது அவநம்பிக்கையை உருவாக்கியுள்ளது. அது என்ன பிரிவினை பற்றிய பிரச்சினை?
இந்து
மதம் சார்ந்த அரசியலை முன்னெடுப்போர் எப்போதுமே இந்து மதம் பேசும் சாதியத்தை எதிர்ப்பதில்லை. பிறப்பின் அடிப்படையிலான சாதிப்பிளவைத் தர்மமாகக் கருதும் இவர்கள், சாதி உருவாக்கிய ஏற்றத்தாழ்வைச் சமூகநீதியின் அடிப்படையில், இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நிவர்த்திக்க முயன்ற அரசமைப்பையும் இந்துத்துவ அரசியலார் ஏற்றதில்லை. மண்டல் குழு பரிந்துரையைப் பெரிய அளவில் எதிர்த்து அரசியல் செய்தவர்கள் இவர்கள். சாதிய ஏற்றத்தாழ்வையும், சாதியப் பாகுபாட்டையும் கடுமையாக எதிர்த்த அம்பேத்கரையும், தந்தை பெரியாரையும், பிற சாதி ஒழிப்புப் போராளிகளையும் பிரிவினைவாதிகளாகவே இவர்கள் கருதினர்.
சாதி
ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களுக்கான நீதி கிடைக்கும் வகையில் எதிர்க்கட்சியினர் முன்வைத்த சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புக் கோரிக்கையை ‘இந்துகளைப் பிளவுபடுத்த முன்னெடுக்கப்பட்ட சதி’ என்கிற பிரச்சாரம் மக்களிடம் சரியாகச் சென்றதால், ‘இந்துகளின் ஒற்றுமையைக் குலைத்தோர்க்கு மக்கள் தோல்வியைக் கொடுத்தனர்’ என்றனர்
சனாதனிகள். அதாவது, உண்மையாகவே பிளவுபடுத்தும் சாதிய ஏற்றத்தாழ்வைச் சமன் செய்யும் நோக்கில் எதிர்க்கட்சிகள் வைத்த கோரிக்கை இவர்கள் பார்வையில் பிரிவினை! சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இவர்கள் பார்வையில் பிரிவினை! ஆனால், சாதியப் பிளவுகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் பாகுபாட்டினையும் அப்படியே ஏற்றுக்கொண்டால் ஒற்றுமை (unity). பிரிவினை, ஒற்றுமை எனும் நிலைப்பாடுகள் ஒவ்வொன்றும் தேவைக்கேற்ப, நம் வசதிக்கேற்பப் பயன்படுத்திக்கொள்ளும் வினோதப்போக்கினை இவர்களின் அரசியல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கவனிப்போர் அறியலாம்.
திராவிடமும் பிரிவினையும்
அண்மையில்
நடிகர் கமல்ஹாசனின் ‘தமிழிலிருந்து கன்னடம் பிறந்தது’
என்று பேசிய பேச்சொன்று பெரும் சர்ச்சையானது. கன்னட நடிகர் திரு. சிவராஜ்குமார் முன்னிலையில், கமல் அவர்கள் எந்தவித உள்நோக்கமுமின்றி வெளியிட்ட இக் கருத்தைக் கன்னட மொழிக்கெதிரான மிகப்பெரிய அவமதிப்பான கருத்தாக எடுத்துக்கொண்டு வேகமாக எதிர்வினையாற்றினர். கர்நாடக மாநிலத்தின் முதல்வர் சித்தராமையா, ‘கமல்ஹாசனுக்கு வரலாறு தெரியாது’
என்றார். தமிழிலிருந்து கன்னடம் பிறந்ததாகக் கூறிய கமலின் திரைப்படம், கர்நாடகாவில் திரையிடப்படவில்லை. கர்நாடக உயர் நீதிமன்றமும் கமல்ஹாசனை மன்னிப்புக் கோரக் கேட்டுக்கொண்டது. இவர்களுக்கெல்லாம் மேலாக, கர்நாடகத்தின் பா.ச.க.
தலைவர்கள் கமலின் இக்கருத்துக்கு எதிராகத் திரண்டெழுந்தனர். இந்தியப் பண்பின் ‘ஒருமை’ பற்றி எப்போதும் பேசும் பாரதிய சனதா, கன்னடத்தை அவமதித்ததாக ஏன் பேசவேண்டும்?
“இந்தியக் கலாச்சாரம் தனித்த பண்புடையது; இப்பண்புகள் ஒன்றையொன்று சார்ந்தவை. இந்திய மொழிகள் வெவ்வேறு வகையாகப் பேசப்பட்டாலும், இம்மொழிகள் அடிப்படையில் ஒன்று” என்பார் கோல்வால்கர். அனைத்து மொழிகளுக்கும் அடிப்படை ஒற்றுமைக்கூறுகள் உள்ளன என்று கூறும் இந்த ‘ஒற்றைக் கலாச்சாரக் காவலர்கள்’
கமல் அவர்களின் மொழி பற்றிய கூற்றுக்கு ஏன் கடுமையான எதிர்வினை ஆற்றவேண்டும்? இந்த ஒரு மொழி, ஒரு கலாச்சாரக் காவலர்கள் கமல் கருத்தை மதித்திருக்க அல்லவா வேண்டும்!
‘மொழியால் பிரிவினை பேசுவோர்’
என்று நாளும் நம்மீது பழிதூற்றும் மதவாதிகள், கன்னட மொழியை இகழ்ந்ததாகக் கன்னட மொழிவெறியர்களோடு அணிசேர்ந்து கூச்சல் போடுவது போலித்தனமில்லையா? இரு மாநில மொழிகளுக்கிடையே எழும் முரண்கள் அல்லது மோதல்கள் ‘ஒரே தேசம்’ எனும் கருத்தியலுக்கு முரண் சேர்ப்பது என்ற கருத்தை மறந்துவிட்டார்களா? இக்கூச்சல் இவர்கள் முன்வைக்கும் இந்திய ஒருமைக்கு, ஒற்றுமைக்கு எதிரானது அல்லவா?
‘இந்திய மொழிகளுக்கெல்லாம் சமஸ்கிருதமே தாய்மொழி’
என்றும், இம்மொழி தேவபாஷை என்றும் கூறி வந்த வடவர்க்கு, கால்டுவெல் கண்ட திராவிடம், திராவிட மொழிகளின் தனித்த பண்பு, திராவிட மொழிகளுள் சீரிளமை குன்றாமல் தனித்தியங்கும் தன்மை தமிழுக்கு உண்டு என்று வரையறுத்ததால், கால்டுவெல் இன்றைய இந்துத்துவக் கருத்தியலாளர்க்குப் பிரிவினைவாதியாகக் கருதப்பட்டார். கால்டுவெல் உருவாக்கிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் கால்டுவெல்லின் அறிவுப் பார்வையின் விளைவு. அன்றைய கோல்வால்கரிலிருந்து இன்றைய ஆர்.என். இரவி வரை திராவிடத்தைக் கண்ட கால்டுவெல் பிரிவினைவாதி. ஆரியம் வேறு, திராவிடம் வேறு. இரண்டும் வெவ்வேறு மொழிக்குடும்பங்கள். தனது நீண்ட நெடிய ஆய்வில் இதைக் கண்ட கால்டுவெல் பிரிவினை வாதியாகச் சித்தரிக்கப்படுகிறார். ‘ஒருமை’ பேசும் இந்துத்துவர்கள், கால்டுவெல் பேசும் உண்மையைப் ‘பிரிவினை’
என்கின்றனர். தமிழ், கன்னடம் எனும் குடும்ப மொழிகளின் தொடர்பை மகிழ்வோடு பேசும்போது, பிரிவினைக் கோஷமிடுகின்றனர். தமிழின் பெருமையை ‘வியந்து போற்றும்’
பிரதமர் மோடி, தமிழ்-கன்னட மொழிப் பிரச்சினையைக் கண்டுகொள்வதில்லை.
‘எல்லாருக்குமான நாடு’,
‘எல்லாருக்குமான வளர்ச்சி’
என்று நாவளவில் பேசிக்கொண்டு, நாளும் நடத்தும் பகையரசியலில் மத ரீதியான ஓர்மை
(Polarism) இருக்கிறதே
தவிர, ஒற்றுமைக்கான அல்லது உள்ளடக்குதலுக்கான எந்த முயற்சியும் இல்லை. உத்தரப்பிரதேச முதல்வர் அம்மாநிலத் தேர்தலின்போது ‘எண்பதுக்கும் - இருபதுக்குமான போட்டியில் வெல்லப்போவது யார்?’ என்று சவால் விட்டார். இச்சவாலில் இவர் யாரை ஓர்மைப்படுத்தினார்? யாரை ஒதுக்கிக்காட்டினார்?
தீவிரவாதத்தை
ஆதரிக்கும் நாடாகப் பாகிஸ்தானைத் தொடர்ந்து காட்டிவரும் இந்திய அரசு, பாகிஸ்தான் என்ற நிலப்பரப்பையும், அதனை ஆள்வோரை மட்டுமே எதிரிகளாகக் காட்டுவதோடு, இந்தியாவில் ஏற்கெனவே கட்டமைக்கப்பட்ட இசுலாமியர் எதிர்ப்பை உறுதிப்படுத்தத்தான் பாகிஸ்தானுக்கு எதிரான கோஷம் என்பதையும் மறந்துவிடல் கூடாது. ஒரு பகை நாட்டைக் கட்டமைக்கும்போது, ஏற்கெனவே கட்டமைத்த பகைச்சமூகமே இங்கு முதன்மை பெறுதலை மறந்துவிடல் கூடாது.
அண்மையில்
நடைபெற்ற ‘சிந்தூர்’
ஆப்ரேஷனின் உள்ளடக்கம், இந்துப் பெண்களின் திலகம் அழிக்கப்பட்டது எனக் காட்டுவதோடு, இசுலாமியரைக்
குற்றவாளிகளாக்குவதே அவர்களின் உள்நோக்கம் என்பதையும் மறந்துவிடக்கூடாது. மதப் பெரும்பான்மையினரை ஓர்மைப்படுத்துதல், மத ரீதியாக மக்களை
ஒன்றுபடுத்துதல் என்பது நோக்கமாக இருந்தால் வரவேற்கலாம். இந்த நோக்கம் எல்லா மதத்தினருக்கும் உகந்ததே. மத ரீதியாக அம்
மதம் சார்ந்தோரை, அரசதிகாரத்தைக் கைப்பற்றுதலுக்காகச் செய்யப்படுமாயின் இதன் பெயர் ஒற்றுமை அல்ல. பெரும்பான்மை மதம் சார்ந்தோரை ஒருங்கிணைத்து அரசியல் ஆதாயம் தேடுவது. இதைத்தான் மதவாத அரசியல் என்கிறோம்.
‘ஒரே தேசம், ஒரே கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே தேர்தல்’ - இது இந்தியாவெங்கும் ஓங்கி ஒலிக்கும் ‘ஒற்றை’ முழக்கம்!
‘ஒரே’ அல்லது ‘ஓர்’ அல்லது ‘ஒன்று’ என்பது ஒரு வசீகரமான சொல் என்பதில் ஐயமில்லை. எங்கும் நிறைந்த பரம்பொருளை ‘ஒருவன்’ என்கிறோம். ‘ஒன்று’ என்ற சொல்லுக்கு ‘உயர்வு’ அல்லது ‘ஒப்பற்ற’ என்ற பொருள்களும் உள்ளன. ‘இந்தியா’ எனும் நாடு ஒன்று; அதன் மக்கள் ஒன்று; புவிப் பரப்பு ஒன்று. இவ்வொன்றின் உள்ளடங்கிய பொருள் பல சிறப்புகளை உள்ளடக்கியதால்
மக்களைக் குறிப்பாக, குடிமக்களை எளிதாக ஈர்க்க முடிகிறது.
ஒருவன்,
ஒன்று, ஒற்றை என்ற சொற்கள் வெறும் எண்கள் மட்டுமல்ல; இந்தச் சொற்களின் பின்னே ஒரு கலாச்சாரம் இருப்பதையும், இதன் பின்னே ஓர் அரசியல் இருப்பதையும் காணமுடியும். இந்தப் பின்னணியையும் கண்டுகொள்ள முடியாதவர்கள், கண்டுகொள்ளும் ஆற்றல் பெற்ற வகையில் இவ்வழகிய சொல்லை அறிமுகம் செய்கிறவர்கள் பார்த்துக்கொள்கின்றனர். ஒன்று என்ற சொல் இரண்டினை மறுப்பது; இரண்டு என்பது மற்றொன்றின் இருப்பை ஏற்பது! எளிமையாகக் கூறுவதானால் அல்லது இன்றைய அரசியல் வழக்கில் கூறுவதானால் பன்மையை மறுப்பது!
ஒருமை
அல்லது பன்மை என்பது வெறும் சொற்கள் அல்ல; பன்மை என்ற சொல் மற்றொன்றை ஏற்பது. இன்னொன்றை ஏற்பதில் சமூக உணர்வு இருக்கிறது. ஒற்றையில் அல்லது ஒன்றில் தொக்கி நிற்கும் பண்பு எது?
ஒற்றை,
ஒன்று என்பது எதேச்சதிகாரத்தின் வடிவம். ‘நான்’
(I am) எனும்
இச்சொல்லில் ‘நாம்’ இல்லை. ‘நாம்’ என்ற சொல் உள்ளடங்கும் சொல். நாம் என்ற சொல் அனைவரையும் உள்ளடக்கியது என்பதுபோல், ஒன்றைத் தவிர்த்து இரண்டு என்ற சொல்லிலும் உள்ளடங்கும் சொல்லிலும் உள்ளடங்கிய பண்பு (Inclusiveness) உண்டு.
‘ஒன்று’ என்பது சனநாயகத்திற்கு முரணானது. ‘நான்’ என்ற சொல்லில், ‘நான்’ என்ற சொல் உள்ளடக்கும் ஒற்றையில், பன்மை இல்லாதபோது அங்குச் சனநாயகம் இல்லை.
‘சனநாயகம்’
என்றால் என்ன?
சனநாயகம்
ஒற்றையை ஏற்பதல்ல; சனநாயகம் பன்மையை மதிப்பது. பன்மைச் சமூகங்களின் சமப் பங்கேற்பை மதிப்பது. சமம் என்பது, சமத்துவம் என்பது இதன் உயரிய விழுமியம். பன்மைச் சமூகங்களின் மாண்பு சனநாயகத்திலும்தான் மிளிர்கிறது. பன்மைச் சமூகத்தின் மாண்பு அல்லது மரியாதை அதன் பன்முகப் பண்பைப் போற்றுதலில்தான் உள்ளது. இன்றைய இந்திய ஒன்றிய அரசு, மக்கள் முன்பு வைக்கும் ‘ஒற்றை’ அல்லது ‘ஒரு’ அல்லது ‘ஒன்று’ எனும் பெருமுழக்கத்தின் உள்ளடக்கம் சனநாயக மறுப்பு என்பதனைப் புரிந்திருக்கிறோமா?
ஒற்றையும் ஒற்றுமையும்
‘ஒற்றை’ ஒற்றுமையை உருவாக்க முடியாது. பன்மையைப் போற்றலில் ஒற்றுமையை உருவாக்க முடியுமே தவிர, பன்மையை மறுத்த சமூகம் ஒற்றுமையை உருவாக்காது. எனவேதான் ‘வேற்றுமையுள் ஒற்றுமை’ என்கிறோம். ஒரு சமூகம் எப்போதுமே ஒற்றைச் சமூகமாக இருக்க முடியாது. சமூகத்தின் அழகே அதன் பன்மைக்குணம்தான். பன்மைச் சமூகங்கள் தம் தனித்த அடையாளங்களைக் காக்கின்ற உரிமை பெறுகின்றபோது, நிலவும் சமூகங்களுக்கிடையே சமத்துவத்தைப் பேணும்போது இச்சமூகங்களிடையே சுமூக உறவும் உரையாடலும் நிகழும்போது உண்மையான ஒற்றுமை ஏற்படும்.
பன்மைச்
சமூகங்கள் தம் பன்முகப்பண்பை மதிக்கும் உரிமைகள் உத்தரவாதப்படுத்தப் பெறுகின்றபோதுதான் ஒற்றுமை உருவாகும். இவ்வொற்றுமை உரிமைப் பாதுகாப்பில், சமூகங்களின் மாண்பினை அங்கீகரிக்கும் தன்மையில் உள்ளது. இந்நோக்கில் கட்டப்படும் ஒற்றுமை நிலையானது, உண்மையானது. ஒற்றுமை (Unity) என்பது
ஒரு மதிப்பீடு. மாந்தர்தம் உயர் மதிப்பீடு! ஒற்றுமை வெறுமையில் உதிப்பதல்ல; ஒற்றுமை நிதர்சனத்தின் ஊற்றுக்கண்!
இன்றைய
ஒன்றிய அரசின் ‘ஒற்றை’ எனும் கொள்கை ஒற்றுமையை உருவாக்குவதுதான் என்று கூறிக்கொண்டாலும், இவர்கள் நோக்கம் ‘ஒற்றுமை’ எனும் பொய்யான முழக்கத்தின் பெயரால், ஒற்றுமையைச் சிதைத்து, பகையை வளர்த்து, சமூகத்தின் அமைதியைக் கெடுப்பதே ஆகும். வெறும் வெற்று முழக்கங்களால் பன்மைச்சமூகங்களின் சமப் பங்கேற்பில் பன்முகச் சமூகங்களின் சனநாயக உறுதியேற்பில்தான் ஒற்றுமை உருவாகும்.
வேறுபாடு
என்பது சமூகத்தின் இயல்பான பண்பு. வேறுபாடுகள் உடைய சமூகம் அல்லது வேற்றுமை நிலவும் சமூகங்கள்தாம் பன்மைச் சமூகமாக இருக்கமுடியும். வேற்றுமையை இயல்பாகக் கருதும்போது, வேறுபாடுகள் இயல்பானவை என்று ஏற்றுக்கொள்கின்றபோது, வேறுபாடுகளின் அடிப்படையில் பாகுபாட்டிற்கு இடமில்லை. ஐக்கிய நாட்டு அவையின் அரிய முழக்கங்களில் ஒன்றான ‘வேற்றுமையைப் பாதுகாப்போம்’ (Protect diversity),
‘பாகுபாட்டைத் துறப்போம்’
(Eliminate Discrimination) என்ற
முழக்கம் மக்களின் பெருமுழக்கமாக மாற வேண்டும்.
தேசம்,
தேசப்பற்று, தேசியம் என்ற பல்வகைப் பெயர்களில் மக்களைத் திசை திருப்பிவரும் இன்றைய அரசுகள் ‘ஒற்றை’,
‘ஒருமை’, ‘ஒற்றுமை’ என்ற
கேள்விகளால் மக்களைத் திசைதிருப்பி வரும் சூழலில், இம்மாதிரியான பொய்முழக்கங்களால் மக்கள் நிலைதடுமாறி விழாமல் காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு.
ஓர்மையும் ஒற்றுமையும்
இன்றைய
இந்துத்துவ அரசியல் இந்துமத அடிப்படையில் மக்களை அணிதிரட்டி, வெறியூட்டி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளதை நாம் அறிவோம். ‘இந்து’ என்ற மத அடையாளத்தையும், ‘இந்தியா’ என்ற நாட்டு அடையாளத்தையும் வேறு வேறாகப் பார்க்கவிடாது, ஒற்றைக்குள் பார்க்கச் செய்து மக்களை மயக்கி வருகிறது. இந்து மதத்தினை விமர்சிப்பவர்களை, இந்துகளின் எதிரிகளாகப் பார்க்க மறுத்து, இந்தியாவின் எதிரிகளாகச் சித்தரிப்பதோடு, கொடிய சட்டங்களால் தண்டிக்கப்படுதலையும் காண்கிறோம்.
இந்தியக்
குடிமக்களாகிய ‘நாம்’ என்பதே அரசமைப்புச் சட்டத்தின் முகவரியாக இருக்க, குடிமக்களை மத ரீதியாக ஒன்றுபடுத்தி
அவர்களின் வாக்கைப் பெற்று ஆட்சி அதிகாரத்தைப் பிடிப்பது சனநாயகத்திற்கு எதிரானது. குடிமக்களின் தேர்வு என்பது, அவர்களின் தெரிவுசெய்யும் அதிகாரத்தில் உள்ளது. சாதி, மத, இன ரீதியாக மக்களை
ஒருங்கிணைத்து அல்லது ஓர்மைப்படுத்திப் (Polarise) பெரும்பான்மை
என்று காட்டுவது பெரும்பான்மை அல்ல; இது பெரும்பான்மைவாதம் (majoritarian). பெரும்பான்மைவாத அரசு எப்போதுமே சமத்துவ அரசாக இருக்காது. பெரும்பான்மைவாத அரசு பெரும்பான்மை அடையாளம் சார்ந்த அரசாக இருப்பதால் பன்முக அடையாளத்தை மறுக்கும். பன்முக அடையாளங்களுடைய ஏனைய சமூகங்களை ஒடுக்கும், ஒதுக்கும்.
‘தேசம்’,
‘தேச ஒற்றுமை’,
‘தேசப்பற்று’ என்று
ஓயாது பேசும் இன்றைய மதவாத அரசு மதச்சிறுபான்மையினரை ஒடுக்குவதையும், ஒதுக்கி வருவதையும் பார்க்கிறோமல்லவா! ‘உலகின் மிகப்பெரிய சனநாயக நாடு’ என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் இந்திய அரசின் ஆளும் கட்சியில் இசுலாமிய வகுப்பைச் சேர்ந்த எவரும் பிரதிநிதித்துவப்படவில்லை என்ற உண்மை அனைவரும் அறிந்த ஒன்றே! குடிமக்களின் தெரிவு செய்யும் உண்மையை முற்றிலுமாக மறுத்து, அடையாள அரசியலைக் கையிலெடுக்கும் மதவாத அரசியலில், அரசியல் அறத்தை எங்கே தேடுவது?
மதவாத
அரசியலாளர் பேசும் மத ஒற்றுமை என்பது
உள்நோக்கம் கொண்டது. இது ஒற்றுமையின்பால் கொண்ட பணியல்ல; அரசியல் ஆதாய நோக்கில் செய்யப்படும் பிரிவினை. உள்ளார்ந்த பிரிவினைக் கொள்கையை மறைக்கச் செய்யும் கபட நாடகமே ‘ஒற்றுமை’ எனும் இந்தப் பொய்முழக்கம்.
ஆகவே,
‘ஒருமை’, ‘ஓர்மை’, ‘ஒற்றுமை’ எனும்
உயரிய விழுமியங்கள் போற்றப்பெற வேண்டியன. ஆனால், இன்றைய மதவாத அரசு பகை, வெறுப்பு என்பன மூலம் பிரிவினையை வேகமாகச் சமூகத்தில் வளர்த்து வரும் போக்கை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ‘ஒருமையிலும்’, ‘ஒற்றுமையிலும்’ இன்றைய
மதவாத அரசு செய்யும் அரசியலைப் புரிந்துகொள்வோம்.
மே மாத வெயில் உச்சந்தலையைப் பிளக்க, காலில் தேய்ந்துபோன செருப்பு ஒன்றை மாட்டிக்கொண்டு, கையில் பச்சை நிறத்தில் கொடி ஒன்றைப் பிடித்தநிலையில் நின்றான் இராமச்சந்திரன். ஆறு வழிச் சாலை வழியாகப் போகின்றவர்களை ஹோட்டலுக்குச் சாப்பிட அழைப்பதுதான் அறுபது வயது இராமச்சந்திரனின் வேலை.
வேலையில்
சேர்ந்த தொடக்கத்தில் இராமச்சந்திரனுக்கு இந்த வேலை பிடிக்கவே இல்லை. “கொரோனா காய்ச்சல் வந்ததிலிருந்து வேறு எந்த வேலையையும் செய்ய முடியல; அதான் இந்த வேலைக்குச் சம்மதிச்சேன்” - ஏ.டி.எம்.மில்
செக்யூரிட்டி வேலை செய்துகொண்டிருந்த மணிகண்டனிடம் இதையே அடிக்கடிச் சொல்வார். மணிகண்டனும் அவருடைய வயதுக்காரர் என்பதால் அவர்களுக்குள் நல்ல நட்பு இருந்தது. நெற்றியில் வழியும் வியர்வையும், கடுத்துப்போகும் கால்களும், கண்டுகொள்ளாமல் செல்லும் ஓராயிரம் பார்வையும் போகப்போக இராமச்சந்திரனுக்குப் பழகிப்போயின. ஒருசிலர் மட்டும் வெயிலில் காய்ந்தச் செடிக்குக் கொஞ்சம் தண்ணீர் தெளிப்பதுபோல பாவம் பரிதாபம் பார்த்து அஞ்சோ... பத்தோ அவருக்குக் கொடுப்பார்கள். இராமச்சந்திரன் வேலை முடிந்து ஏ.டி.எம்.
வழியாக வீடு திரும்பும் நேரத்தில் தனக்குக் கிடைத்த வடை அல்லது அவித்த கடலையை மணிகண்டனிடம் பகிர்ந்துகொள்வார். இருவரும் நேரம் போவது தெரியாமலே சிறுபிள்ளைகள்போல பேசிக்கொண்டிருப்பர்.
ஒருநாள்
வழக்கம்போல இராமச்சந்திரன் ஏ.டி.எம்.
வழியாக வீடு திரும்புகையில் “டேய், இராமச்சந்திரா, எப்படிப் போகுது? உன் காட்டுல டிப்ஸ் மழைபோல”
- மணிகண்டன் நக்கலாகவே கேட்டார்.
“உனக்கென்னப்பா சூடுனா ஏசி அறையிலபோய் குந்திக்கிற. காலுல, இடுப்புல பெல்ட்டு, மிலிட்டரி சட்டை வேற... நமக்கு அப்படியா? வெயில் மழைனு பிச்சக்காரப் பொழப்புதான்” - இராமச்சந்திரனின்
பதிலில் கொஞ்சம் வலியும் கொஞ்சம் பொறாமையும் அவர் மென்று துப்பிய வெற்றிலைப் பாக்குபோல சேர்ந்தே வெளிப்பட்டன.
பதிலுக்குப்
பதில் பேசியேதான் ஆகவேண்டுமா! சில பேச்சுகளை மனிதர்கள் காதில் வாங்காமல் கடந்துபோனால்தான் என்ன? ஆனால், இராமச்சந்திரனின் நக்கல் பேச்சைக் கேட்ட பிறகும் அவர் துப்பிய எச்சில் தன்மேலே விழுந்ததுபோல உணர்ந்த ஏ.டி.எம்.
மணிகண்டனால் கெட்ட வார்த்தை பேசாமல் இருக்க முடியவில்லை. அவனது உள்ளமும் உதடும் ஆயிரங்களில் ரூபாய் எடுக்கும்போது அலறித்துடிக்கும் எ.டி.எம்.
மெஷினைப்போல குலுங்கி அடங்கியது. அன்றிலிருந்து இரண்டு பேரும் பார்த்தாலும் பேசிக்கொள்வதில்லை. இராமச்சந்திரன் ஏ.டி.எம்.
வழியாகப் பலமுறை கடந்து சென்றாலும் அத்தனை முறையும் தன்னை முறைத்துப் பார்ப்பது போலவே மணிகண்டனுக்குத் தோன்றியது.
இராமச்சந்திரனுக்கும்
மணிகண்டனுக்குமிடையே ஆயிரம் வேறுபாடுகள் இருந்தாலும், அவர்களின் பொதுமொழி வறுமையும் முதுமையும்தான். ஒருநாள் காலை வேளையில் ஏ.டி.எம்.
மிலிருந்த பணம் திருடப்பட்டது தெரிய வந்தது. போலிஸ்காரர்கள், வியாபாரிகள் என்று பெருங்கூட்டம் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது. அவ்வழியாக வந்த இராமச்சந்திரனும் கூட்டத்தோடு வந்து நின்றுகொண்டான். சில காவலர்கள் மணிகண்டனிடம் ஏதோ திருடனிடம் விசாரிப்பதுபோல மூர்க்கமாக விசாரித்துக் கொண்டிருந்தனர். நண்பனைப்போல பேசிப் பழகியிருந்தாலும் குற்றவாளியைப் போன்று விசாரிக்கப்பட்ட மணிகண்டனை ‘இவனுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்’
என்ற கோணத்திலேயே பார்த்தான் இராமச்சந்திரன்.
தீவிர
விசாரணையிலிருந்த மணிகண்டனின் பார்வை ‘சட்’டென்று கூட்டத்தில் நின்ற இராமச்சந்திரனின் மேல் விழுந்தது. ‘நான் திருடியதாக இராமச்சந்திரன் நினைத்திருப்பானோ?’ என்று மணிகண்டன் நினைக்கையில், ‘போலீசிடம் என் பெயரைச் சொல்லி என்னை மாட்டிவிட்டாலும் விடுவான் இந்த மணிகண்டன்’
என்று நினைத்துக்கொண்டு அந்த இடத்தைவிட்டு வேகமாக நகர்ந்து சென்றான் இராமச்சந்திரன்.
வாழ்க்கையில்
ஏதோ ஒன்று இடைவெளியை உருவாக்குகிறது. ஏதோ ஒன்று இடைவெளியைப் போக்குகிறது. அந்த ஏதோ ஒன்று நாம்தான்.
பிரிவு,
பிளவு மனித உறவுகளில் மட்டுமல்ல, அது தொழில்நுட்பத்தின் பயன்பாட்டிலும் அதன் பரவலாக்கத்திலும் இருக்கிறது. இதனை ‘எண்ணிம இடைவெளி’
(Digital Divide) என்கிறோம்.
இராமச்சந்திரனும் மணிகண்டனும் அருகருகே பணி செய்து கொண்டிருந்தாலும் அவர்களுக்கிடையே இருக்கின்ற இடைவெளி அதிகமாக இருப்பதுபோல ஒரே நாட்டில் நாம் வாழ்ந்தாலும் நம்மிடையே பல்வேறு இடைவெளிகள் உள்ளன. அதில் குறிப்பிடத்தக்கது ‘எண்ணிம இடைவெளி.’ கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு கணினி (Computer), மடிக்
கணினி (Laptop), கைக்கணினி
(tablet), திறன்பேசி (Smart phone),
திறன் கடிகாரம் (Smartwatch), செவிப்பேசி
(Ear phone),
இணையம் (Internet) என்று
பலவிதமான திறன்பொருள்கள் (Gadgets) வந்தபோதும்
அது இன்னும் எல்லாருடைய பயன்பாட்டிற்கும் வந்து சேரவில்லையென்றே கூற வேண்டும்.
இந்த
‘எண்ணிம இடைவெளி’ என்பது ஏழ்மைச் சூழலினாலும், புவியியல் அமைப்பினாலும், மின்மய மாக்கலின்மையினாலும், தலைமுறை இடைவெளியினாலும், ஆண்-பெண் சமத்துவமின்மையாலும், கல்வியறிவு குறைபாடாலும் ஏற்படலாம். ஒரு சமூகத்தினுடைய வளர்ச்சியென்பது இந்த இடை வெளி குறைகிறபோது நிச்சயம் நடக்கும்.
கொரோனா
காலகட்டத்தில் வசதியான குடும்பங்களைச் சார்ந்த மாணவர்கள் எளிதாகக் கற்றுக்கொள்ள முடிந்தது. ஆனால், ஏழ்மையில் வாடிய மாணவர்கள் இணையவழிக் கல்வியின் பயன்பாட்டை முழுமையாகப் பெறமுடியவில்லை. இந்த டிஜிட்டல் இடைவெளியைச் சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம், ‘இது கல்விகற்கும் மாணவர்களுக்கு எதிரான ஓர் அடிப்படை உரிமை மீறல்’ என்று குற்றம்சாட்டியது.
‘ஆக்ஸ்பாம் இந்தியா’
(Oxfam India) என்ற
அமைப்பு 2022-ஆம் ஆண்டு நடத்திய ஆய்வின்படி இந்தியாவில் வெறும் 31 விழுக்காடு கிராமப்புற மக்களிடமும், 67 விழுக்காடு நகர்ப்புற மக்களிடமும் இணையப் பயன்பாடு உள்ளது என்பது தெரிய வருகிறது. நகர்ப்புறம் தொழில்நுட்பக் கூறுகளாலும் டிஜிட்டல்மயமாகுதலாலும் தாங்கிப் பிடிக்கப்படுகிறபோது, கிராமப்புறங்கள் இன்னும் மனிதக் கண்டுபிடிப்புகளைத் தங்களின் வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் பயன்படுத்த முடியாத சூழலை என்னவென்று கூறுவது?
இணையமும்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் இன்று கற்றோரையும் பொருள் பெற்றோரையும் இன்னும் அதிகமாக உயரச் செய்கிறதே தவிர, ஏழைகளையும் எளியவர்களையும் கண்டுகொள்ளாமலேயே இருக்கின்றது. இந்நிலை மாறி செயற்கை நுண்ணறிவும், டிஜிட்டல் கண்டுபிடிப்புகளும் மனித மாண்பைப் பேணுவதாகவும், மனித ஆற்றலை வளர்ச்சியடையச் செய்வதாகவும் இருக்கவேண்டும்.
பள்ளி-கல்லூரிகளில் டிஜிட்டல் கல்விமுறையை அறிமுகமாக்குவது, கிராமப்புறங்களில் இணையக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவது, தாய்மொழிகளில் கணினி பற்றிய பாடத் திட்டத்தை வரையறுப்பது, ‘சைபர்’ பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு பயிலரங்குகள் நடத்துவது, செயற்கை நுண்ணறிவு பற்றிய தெளிவுகளைக் கொடுப்பது போன்ற செயல்களின் வழியாக டிஜிட்டல் இடைவெளியை நம் பகுதிகளிலே இல்லாமல் செய்யலாம். மனித இடைவெளியினை இதயத்தால் இணைப்போம்! டிஜிட்டல் இடைவெளியினை இணையத்தால் இணைப்போம்!