இந்திய அரசு பண மோசடிக் குற்றங்களை அந்நியச் செலாவணிச் சட்ட விரோதப் பண பரிமாற்றங்களைக் கண்டறிய 1956, மே 11 அன்று ஒரு புதிய புலனாய்வு அமைப்பை உருவாக்கியது. அமலாக்கத்துறை எனும் அத்துறை தப்பியோடிய குற்றவாளிகளைத் தேடும் பணியையும் செய்தது. இன்று அமலாக்கத்துறை ஆளும் பா.ச.க.வின் அரசியல் மிரட்டலுக்குப் பயன்படுத்தும் துறையாக உருமாறியிருப்பது பெரும் அவலம்.
பா.ச.க. ஆட்சிக்கு
முன் 262 அதிகாரிகள் இருந்த அமலாக்கத்துறை, இன்று 3000 அதிகாரிகளோடு ஊழல் மிகுந்த, அதிகாரம் குவிந்த, காவிச் சாயம் பூசப்பட்ட அடியாள் அமைப்பாக மாறிவிட்டது. அமலாக்கத்துறை ஊழல் மிகுந்த எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை வெளுக்கும் பா.ச.க.
வாஷிங்மிசினுக்கு மிரட்டியே ஆள்பிடிக்கிறது. ஆளும் பா.ச.க.வின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்குத் துணைபோகிறது என்பதே நிகழ்காலக் குற்றச்சாட்டு.
நிதி
அமைச்சகத்தின் வருவாய்த் துறைக்கு உள்பட்ட அமலாக்கத்துறைக்குத் தேசத்தின் முக்கிய நகரங்களில் 10 மண்டல அலுவலகங்கள் உள்ளன. இத்துடன் 11 துணை இயக்குநர் அலுவலகங்களும் உள்ளன. அமலாக்கத்துறையில் பணியாற்றும் 70 விழுக்காடு அதிகாரிகள் இந்திய வருவாய் சேவை, இந்திய நிர்வாகச் சேவை, இந்திய காவல் சேவை, மத்திய சுங்கக் காவல்துறை மற்றும் வங்கித்துறை சார்ந்த அதிகாரிகள். இவர்கள் கடந்த பத்தாண்டுகளில் அரசியல்வாதிகள்மீது பதிந்த வழக்குகள் 193. தண்டனை வாங்கிக் கொடுத்த வழக்குகள் இரண்டு மட்டுமே. அமலாக்கத்துறை பதிந்த பண மோசடி வழக்குகள்
5422. நிரூபிக்கப்பட்டுச் சிறைக்குச்
சென்றவர்கள் 23 பேர்
மட்டுமே. அவர்களது வழக்கு வெற்றி விழுக்காடு 0.5 விழுக்காடு மட்டுமே. அந்நியச் செலாவணி மோசடிக் குற்றவாளிகளான குஜராத் தொழில் அதிபர்களை அமலாக்கத்துறை வெளிநாடுகளுக்குக் காலம் கடத்தியே தப்பவிட்டதாக ஐயம் உண்டு. ஆனால், அமலாக்கத்துறை எதிர்க்கட்சி
அரசியல்வாதிகள்மீது வேகம் காட்டுகிறது.
தில்லி
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு 2021-2022 காலத்திற்கு உள்பட்டது. தில்லி அரசு மதுபான வணிகத்திலிருந்து விலகிச் சில்லறை மதுபான விற்பனைக்கு உரிமை வழங்கியது. இதில் அமலாக்கத்துறை கோடிக்கணக்கான ரூபாய் சட்ட விரோதப் பணப்பரிமாற்றம் நடந்தது என வழக்குப் பதிந்தது.
அன்றைய தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அன்றைய தெலுங்கானா முதல்வர் க. சந்திர சேகரின் மகள்
கவிதா வரை கைது நடவடிக்கை நீண்டது. வழக்கு எந்நிலை எனிலும், ஆட்சி மாற்றங்கள் தில்லியிலும், தெலுங்கானாவிலும் நடந்தது. அதன் அடிதொட்டுத் தமிழ்நாட்டிலும் இதேபோன்ற காட்சியை அமலாக்கத்துறை அரங்கேற்றியது.
ஜி.எஸ்.டி. வரிமாற்றத்திற்குப் பின் மாநில அரசுகளுக்கு மது விற்பனை, பத்திரப் பதிவு, வாகன எரிபொருள் என்பவையே பிரதான வரி வருவாயாகும். தமிழ்நாடு அரசு நடத்தும் மதுபான விற்பனை நிறுவனம், தமிழ்நாடு மாநிலச் சந்தைப்படுத்தும் கழகம் (டாஸ்மாக்) என்பதாகும். அதன் சில்லறை விற்பனையில் 2017 முதல் 2024 வரை முறைகேடுகள் நடந்ததாகத் தமிழ்நாடு காவல் துறையால் 41 முதல் 46 வரை குற்றப்பதிவிற்கான முதல் தகவல் அறிக்கைகள் பதியப்பட்டன. இவற்றில் 6 முதல் 7 வழக்குகள் தவிர அனைத்து வழக்குகளும் அ.தி.மு.க.-வின் ஆட்சிக்காலத்தில்
நடந்தவை.
இது
குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி ஒன்றுக்கு முன்னாள் கலால்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கேட்டார்: “எந்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் அமலாக்கத்துறை உள் வருகிறது?”
குற்றம்
நடந்த இடங்களைக் குறிவைக்காமல், அமலாக்கத்துறை டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் முதற்கொண்டு, டாஸ்மாக்
அதிகாரிகளைக் குறிவைத்துப் பெரும் ரெய்டு நடத்துகிறார்கள். கடந்த வாரத்திலேயே தமிழ்நாடு துணை முதல்வர், ஏன் தமிழ்நாடு முதல்வர்கூட அமலாக்கத்துறையால் கைது செய்யப்படலாம் என்ற வதந்தி காவி ஊடகங்களால் திட்டமிட்டுப் பரப்பப்பட்டன. ரெய்டு நடக்கும்போதே அன்றைய தமிழ்நாடு பா.ச.க.
தலைவர் அண்ணாமலை ‘ரூபாய் 1000 கோடி ஊழல்’ எனக் கொளுத்திப் போடுகிறார். அடுத்த நாள் அமலாக்கத்துறையும் ‘தமிழ்நாட்டில் ரூபாய் 1000 கோடி ஊழல் நடந்துள்ளது’ என
அறிக்கை தருகிறது. புது தில்லியிலும் இதே ரூபாய் 1000 கோடி மதுபானக் கொள்கை ஊழல் என்றே அமலாக்கத்துறை அரசியல் சார்ந்த ஆட்டத்தைத் தொடங்கியது என்பது நினைவுகூரத்தக்கது.
தமிழ்நாடு
அரசும், டாஸ்மாக் நிறுவனமும் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்றனர். தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்
அமர்வுமுன் வழக்கு செல்கிறது. வழக்கிற்கு இடைக்காலத் தடை வழங்கிய தலைமை நீதிபதி அமலாக்கத்துறையை நோக்கிக் கேட்கிறார்: “அமலாக்கத்துறை இவ்வழக்கில் கையில் எடுத்த மூல வழக்கு எது? தனி மனிதக் குற்றங்களுக்காக, ஏன் ஓர் அரசு நிறுவனத்தின்மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமென்ன?” எனக் கேட்டு, “இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது”
என்கிறார். இவை அனைத்து வரம்புகளையும் மீறியது எனவும் கண்டிக்கிறார்.
வழக்கில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், “டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களின் தொலைப்பேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாகவும், உயர் அதிகாரிகளின் அலைப்பேசிகள் குளோனிங் செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். “இது அமலாக்கத்துறை தன்னிச்சையோடு செயல்பட்டுத் தனிமனிதச் சுதந்திரத்தைப் பறிக்கிற செயல்” என வாதிட்டார். அமலாக்கத்துறைக்கு
எல்லை மீறுவது தினப்படி நடவடிக்கை. பொறியில் மாட்டிய பின் விழிப்பது கைவந்த கலை.
திண்டுக்கல்
அரசு மருத்துவரிடம் முடிந்த சொத்துக்குவிப்பு வழக்கை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி பிரதமர் அலுவலகம் மீண்டும் விசாரிக்கச் சொல்கிறது. விசாரணை வேண்டாம் எனில், ரூ. 51 இலட்சம் தர வேண்டும் எனக்
கூறி, ரூ. 20 இலட்சம் முதல் தவணைப் பெற்றார். இரண்டாம் தவணை ரூ. 20 இலட்சம் பெற்றபோது காரில் தப்பி ஓடி, துரத்திப் பிடிபட்டார். இவ்வாறு பெறப்பட்ட பணம், சக அதிகாரிகள் முதல்
உயர் அதிகாரிகள் வரை பகிர்ந்து கொள்ளப்படுகிறது என்ற தகவல் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதில் மதுரை அமலாக்கத்துறையின் அலுவலகம், தமிழ்நாடு இலஞ்ச ஒழிப்புத்துறை காவல் அதிகாரிகளால் சோதனை இடப்பட்டது. ஏன்... கிரிக்கெட் மேட்ச் பிக்சிங் வழக்கில், அமலாக்கத்துறையின் இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டதும் கடந்தகாலப்
பதிவு.
கேரளாவில்
முந்திரி வியாபாரியைப் பண மோசடி வழக்கில்
கைது செய்யாமல் இருக்க ரூபாய் இரண்டு கோடி கேட்ட கொச்சி அமலாக்கத்துறை உதவி இயக்குநர் சேகர் குமாரும், இராஜஸ்தானில் சிட் பண்டு (chit fund) விவகாரத்தில் ரூபாய்
15 இலட்சம் கேட்ட இரண்டு அமலாக்கத்துறை அதிகாரிகளும், அமலாக்கத்துறையின் ‘இலட்சணமான’
முகமாக இருக்கிறார்கள். அமலாக்கத்துறை எவ்வளவு வெளிப்பட்டாலும், தன் தன்மை மாறாமல் ஆளும் காவி பா.ச.க.விற்குச் சேவகம் செய்வதில் குறியாக உள்ளது. உயர் நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை குட்டுப்பட்டாலும் வலிப்பதில்லை.
முன்னாள்
தில்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது மற்றும் பிணையின்போது அமலாக்கத்துறைக்கு நீதித்துறை
காட்டிய கடுமை, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் நிலமோசடி தொடர்பான பண மோசடி வழக்கு...
எனப் பல வழக்குகள் உதாரணங்கள்.
அமலாக்கத்துறை
நீதிமன்றத்தில் எத்தனை அடி
வாங்கினாலும், எவ்வளவு
அடித்தாலும், தாங்கும் வலுகொண்டதாக உள்ளது. அமலாக்கத்துறை ஆளுங்கட்சியின் அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாமல், தன்னாட்சிப் பெற்ற சுயாட்சி அமைப்பாகத் தன்னை வடிவமைத்தால், மக்களிடையே மதிப்புப் பெறும்.
ஒரு பூதம் இரத்தவெள்ளத்தில் மிதக்கிறது. வன்முறைகள்வழி வலுத்த உயிர்ப்பலிகள் கேட்கிறது. அது பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களிலும் உருமாறுகிறது. மதப்பயங்கரவாதம், கருத்தியல் பயங்கரவாதம், அரசியல் பயங்கரவாதம் என்பவை வடிவுமாறி அரசப் பயங்கரவாதமாக உச்சம் பெறுகிறது. இதன் உள்ளடக்கம் மதவாத, தேசியவாத, இனவாத, மொழிவாத காவி அரசப் பயங்கரவாதமாகும்.
சுதந்திர
இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தேசவிரோத அமைப்பென மூன்று முறை தடை செய்யப்பட்டது. அதன் அரசியல் பிரிவான பா.ச.க.
ஆட்சிக்கு வந்தபின் அரசப் பயங்கரவாதத்தைக் கையில் எடுக்கின்றனர். இந்திய வரலாற்றில் காந்தியைக் கொன்ற கோட்சே சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி எனக் கூறப்படுகிறார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு குஜராத் மாநிலம் எப்பொழுதுமே சோதனைக்களம்தான். 2001-ஆம் ஆண்டு குஜராத் தேர்தலில் பா.ச.க.
ஆட்சியைப் பிடிக்கிறது. குஜராத் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாத நரேந்திர மோடி முதல்வராகத் தேர்வு செய்யப்படுகிறார். அவர் ஆறு மாதங்களில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் மட்டுமே குஜராத்தில் முதல்வராகத் தொடர முடியும். செல்வாக்கு
மிக்க பட்டேல் சமூக மக்கள், மோடியின் வெற்றியைத் தடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கின்றனர். மோடியின் வெற்றி கேள்விக்குறியான பின் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு காவி அரசப் பயங்கரவாதத்தைக் கையில் எடுக்கிறது.
கரசேவகர்கள்
பயணித்த இரயில் பெட்டிகள் கோத்ரா எனும் இடத்தில் தீ வைக்கப்படுகிறது. தீ வைத்தவர்கள்
இசுலாமியர்கள் என்ற கட்டுக்கதை பரப்பப்படுகிறது. காவல்துறை துணையோடு மத வெறியர்கள் இசுலாமியர்களைத்
தாக்கத் தொடங்குகிறார்கள். 10,000 பிணங்களின் மேல் மோடி வெற்றி பெறுகிறார்.
அரசப்
பயங்கரவாதம் என்பது மாநில அரசால் சொந்த மக்கள்மீதே கட்டவிழ்த்துவிடும் தீவிரவாத நடவடிக்கையாகும். அங்கு மக்கள் வாழ்வாதாரங்களை, வீடுகளை, உடைமைகளை இழக்கிறார்கள். அன்றைய பிரதமர் வாஜ்பாய் முகாமில் தஞ்சமடைந்துள்ள மக்களைச் சந்திக்கிறார். மக்கள் கண்ணீரோடு நடந்த உண்மைகளைக் கூறுகிறார்கள். வாஜ்பாய் கோத்ரா சம்பவத்திற்கு வெட்கித் தலைகுனிவதாக வருத்தம் தெரிவித்தார். அதனால் வாஜ்பாய் ‘தவறான கட்சியில் உள்ள நல்ல மனிதர்’ என வர்ணிக்கப்பட்டார். கோத்ரா சம்பவம்
குறித்து இரானா அயூப் என்பவர் எழுதிய ‘குஜராத் கோப்புகள்’
என்ற புத்தகம் நடந்த உண்மையை, காவிப் பயங்கரவாதத்தை வெளிக்கொணர்கிறது. குஜராத்தைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், தில்லி என பா.ச.க.வின் நச்சுக்
கரங்கள் விரிகின்றன. அரசப் பயங்கரவாதம் தொடர்கின்றது.
பா.ச.க.வில்
ஆர்.எஸ்.எஸ். சார்ந்தவர்கள் “மோடியைவிட உ.பி. முதல்வர்
யோகி பிரதமராக வந்திருந்தால் சிறப்பாக இருக்கும்”
எனக் கனவு காண்கிறார்கள். மெல்லக் காரணம் கேட்டால் ‘புல்டோசர் பாபா’ யோகி ஆதித்யநாத், அரசை எதிர்ப்பவர்கள், விமர்சிப்பவர்கள் என யாரை அடையாளம்
காண்கிறாரோ, அவர் வீட்டிற்கு அடுத்தநாள் புல்டோசர் அனுப்புவார், வீடு இடித்துத் தரைமட்டமாக்கப்படும். அதில் சிறுபான்மை இசுலாமியர்களே அவரது குறி என்பதும் கண்கூடு. 2024, நவம்பரில் உச்ச நீதிமன்றம் யோகியின் உத்தரப்பிரதேச அரசிற்குக் கண்டனம் தெரிவித்து, சட்டத்தின் ஆட்சி நடத்திட உத்தரவிட்டது. புல்டோசர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.
உத்தரப்பிரதேச
அரசியலுக்கு முற்றிலும் மாறுபட்டது மணிப்பூர். அங்குக் கலவரக்காரர்களுக்குக் காவல்துறை பாதுகாப்பாய் நின்றதும், தேவாலயங்கள் இடிக்கப்பட்டபோது வேடிக்கைப் பார்த்ததும் விழிகாண் பதிவுகள். வன்முறைக் கும்பல்கள் வைத்திருந்த ஆயுதங்கள் எவ்வாறு? எவ்வழி வந்தது? என்ற கேள்விகளும் உண்டு. மணிப்பூரில் அரசு இயந்திரம் முடங்கிக் கிடந்ததும், பிரதமர் நேரில் செல்லத் தயங்குவதும் ஆயிரமாயிரம் ஐயங்களை எழுப்புகிறது. 2020-இல் தில்லியின் வடக்குப் பகுதிகளில் கலவரம் வெடிக்கிறது. இசுலாமிய மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். அதன் விளைவு 2024-இல் தில்லியின் ஆட்சியைப் பா.ச.க.
கைப்பற்றுகிறது.
‘யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே’ என்ற பழமொழிக்கேற்ப ‘தேர்தல் வரும் பின்னே, பல கலவரங்கள் எழும்
முன்னே’ என்பது
பா.ச.க.வின்
தந்திரமாக இருக்கக்கூடுமோ என்பது சாமானியர்களுக்குச் சந்தேகமாக எழுகிறது. 2019-ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன் இந்திய இராணுவ வாகனங்கள்மீது நடைபெற்ற புல்வாமா தற்கொலை படைத் தாக்குதலை பா.ச.க. தேர்தல்
பிரச்சாரமாக்கி வாக்குச் சேகரித்தது. இது குறித்த உண்மை நிகழ்வுகளை அம்மாநில ஆளுநரே பின்னாள்களில் வெளிக்கொணர்ந்தார். அவர் “2019 மக்களவைத் தேர்தல்கள், இறந்த நமது வீரர்களின் உடல்மீது நடத்தப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டிருந்தால் அன்றைய உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டியிருக்கும்” என்றார்.
நடைபெறவுள்ள பீகார் தேர்தலை முன்னிட்டே பஹல்காம் சம்பவங்கள் என்ற விமர்சனங்களும் உண்டு. இவ்விரு சம்பவங்களிலும் எழுப்பப்படும் விடைதெரியா வினாக்களே இதற்கான முழுச்சான்றாகும். பா.ச.க.வின் அரசியல் பார்வை கலவரங்களில், பயங்கரவாதங்களில் வாக்குப் பெறுவது என்பதே அடிப்படை நோக்கமாகும்.
தமிழ்நாட்டிலும்
பா.ச.க. தன்
தடம்பதிக்கக் கலவரங்களைத் தூண்டுகிறது. மைக்கேல்பட்டியில் மதமாற்றம் என அண்ணாமலை முதல்
அவரது தொண்டர்கள் வரை குதித்தார்கள். திருவண்ணாமலையில் இராணுவ வீரரும் அவர் மனைவியும் மதக்கலவரத்தைத் தூண்ட பேசிய பேச்சுகள், குரல் பதிவுகள் வெட்ட வெளிச்சமாகியது. குழாயடிச் சண்டையை மேடை போட்டு ‘துப்பாக்கி வழங்குவேன்’ எனக்
குதித்த முன்னாள் தென்காசி இராணுவ வீரர், மன்னிப்புக் கேட்டு மன்றாடிக் கதறி அழுததும் நடந்தது. ஒவ்வொரு பெரிய வழிபாட்டுத் தலங்களிலும், அவினாசி, சென்னிமலை என பா.ச.க. போட்ட உரிமை
மீட்புக் கபடத்தன நாடகங்களும்
புஸ்வாணமாகியது.
மதுரை
திருப்பரங்குன்றத்தில்
‘மலை எங்களது’ என்ற வெற்றுவாதத்தை உயர் நீதிமன்றம் பொட்டில் அடித்து நிறுத்தியது. “திருப்பரங்குன்ற மக்கள் சகோதர-சகோதரிகளாக வாழ்கிறார்கள். அவர்களிடம் எந்தப் பிரிவினையும் இல்லை. அது சார்ந்த எந்தப் போராட்டத்திற்கும் அனுமதி இல்லை” என
ஆணி அடித்துவிட்டது. மதுரை ஆதினம் பா.ச.க.
ஆதரவு பேச்சிலிருந்து, ஒரு படி மேலே சென்று ‘எனது உயிருக்கு ஆபத்து’ எனப் பரபரப்புக் கூட்டினார். சாதாரண கார் விபத்தைத் தன்னைக் கொல்ல சதி என்றார். தமிழ்நாடு காவல்துறை விபத்துக் குறித்த வீடியோ காட்சிகளை வெளியிட்டது. ஆதினம் அமைதியானார். அதில் அதிக வேகமாகச் சென்றது ஆதினத்தின் கார் என அடையாளம் காணப்பட்டது.
இதுபோன்ற
பல குற்றச்சாட்டுகள் இனி அதிகமாகலாம். தமிழ்நாடு அரசு தன் புலனாய்வு அமைப்பு கள்வழி இவர்களைக் கண்காணிக்க வேண்டும். பொது அமைதிக்கு உத்தரவாதம் தர வேண்டும்.
தமிழ்நாடு
சட்டமன்றத் தேர்தலுக்கு ஓராண்டே இருப்பதால் பா.ச.க.
எந்த நேரத்திலும் புதிய வழியில் மதக்கலவரங்களை முன்னெடுக்கும் என்பது எச்சரிக்கை கூடிய அறிவிப்பு. சிறுபான்மை மக்கள் விழிப்பாக இருப்பதும், மத, இனக் கலவரங்களை அடையாளம்
காண்பதும், காவல் மற்றும் நீதிமன்றங்கள் வழி நியாயம் பெறுவதும் காலக் கட்டாயமாகும்.
‘மனிதன் ஓர் அரசியல் பிராணி’ என்று கூறுவார் கிரேக்கத் தத்துவயியல் ஞானி அரிஸ்டாட்டில். ஆனால், அரசியல் தேவையா? ‘அரசியலில் நம்மால் என்ன செய்ய இயலும்? அரசியல் ஒரு சாக்கடை. அதில் என்னைப் புதைத்துக்கொள்ள வேண்டுமா?’ என்ற கேள்விகள் கிறித்தவ மக்களிடையே ஒருபுறம் எழுவது உண்டு. அப்படியென்றால், மனிதருக்கு அரசியல் தேவையில்லையா? கிரேக்கத் தத்துவ ஞானி தன் வார்த்தைகளின் அர்த்தத்தைச் சற்று அழுத்தி உச்சரிக்கையில், “அரசியல் வேண்டாம். சமூகம் வேண்டாம் என்பவர் கடவுளாக இருக்கவேண்டும். இல்லையென்றால் மிருகமாக இருக்க வேண்டும்” என்று கூறுகிறார்.
மனிதர்
தன்னிச்சையாகச் செயல்படும் பிராணி அல்லர்; பிறரைச் சார்ந்து வாழக்கூடியவர். ஒரு சமூகத்தைச் சார்ந்து வாழக்கூடியவர். ஆக, அரசியல் வேண்டாம், அரசியல் ஒரு பாவம் என்ற கருத்துகளைத் தன்னுள்ளே திணித்து வாழ்வது அறியாமையின் உச்சம் ஆகும். இந்தச் சமூகத்தில் அரசியல் யாருக்கும் ஒரு விருப்பத்தேர்வாகக் கொடுக்கப்படவில்லை.
அரசியல்
பற்றி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “அரசியல்-தொண்டு பணியின் உயர்ந்த நிலை” என்று பதிவு செய்கிறார். இளைஞர்களிடம் “அரசியல் சாக்கடை அல்ல, புனிதமான பணி, இளைஞர் இயேசுவின் பணி” என்றும் சுட்டிக்காட்டுகின்றார். இயேசு மண்ணுலகில் அரசராக, தலைவராகப் பணியாற்றினார். அவர் பதவியில், பணத்தில், மோகத்தில் அல்ல; மாறாக, பாவத்தில் விழுந்து கிடந்த, வாழ்வில் வலுவிழந்த, ஆட்சிக்கு அடிமைகளாக்கப்பட்ட, அரை நிர்வாணமாக்கப்பட்ட, சமூகத்தில் ஓரம் தள்ளப்பட்ட மக்களுக்குப் பணி செய்வதை அரசியலாகக் கொண்டார்.
அரசியல்
என்றால் என்ன? அரசியல் தனிமனித மதிப்பை, பணவீக்கத்தை, அதிகார நாற்காலியை, இனம் சார்ந்த சார்பு நிலைகளைக் கொள்வது அல்ல; திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ‘அனைவரும் உடன்பிறந்தோர்’ என்ற
சுற்றுமடலில், “அனைவரும் உடன்பிறந்த சகோதர, சகோதரிகள். நமது பணி பொதுப்பணி, அனைவரையும் சார்ந்த அனைவருக்குமான பணியாக இருக்கவேண்டும். அரசியல், பொதுநன்மைக்காக உழைக்கும் பணி, பிறரின் விருட்சத்திற்காகத் தன்னை உருக்கும் பணி” என்கிறார். ஒரு மனிதன்தான் உலகமா? ஒரு மனிதன் தன்னைச் சமூகத்தோடு பிணைத்து, சமூகப் பணிகளில் உட்புகுத்துகின்றபோது அவன் உலகம் ஆகிறான்.
ஏன்
அரசியல் வேண்டும்? அரசியலில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ளாமல் இருப்பது, நமது உரிமையை இழிவுபடுத்துவது. மனிதன் பேச வேண்டிய இடத்தில் தன் வார்த்தைகளை வர்ணிக்கவில்லையென்றால், அவன் தன்னைத் தீவிரவாதத்திற்குச் சமப்படுத்திக் கொள்வதாகும். நாம் அரசியலில் பங்கேற்கவில்லை என்றால், நமது சுதந்திரங்களை நம்மிடமிருந்து பறிகொடுப்பதாகும். நீதியான சமூகத்தை வளர்ச்சி நிலைக்கு எடுத்துச்செல்ல அரசியலில் நம்மைக் கையளிப்பது மிக அவசியம். இதற்கு இயேசு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார். இயேசு எப்பொழுதும் மக்கள் மத்தியில் வாழ்ந்தார். அவர் தம்மை இனம் கடந்து தேடலில் அடையாளப்படுத்திக்கொண்டார்.
அவர்தம் குருதியைத் தமக்காக, இனத்திற்காக, மதத்திற்காகச் சிந்தவில்லை; மாறாக, மானுட மனத்திற்காகச் சிந்தினார். இயேசுவின் ஆட்சிப் பணி, அரசியல் பணி மதம் சார்ந்த கொள்கை அல்ல; மாறாக, மனம் சார்ந்த கொள்கையாக இருந்தது. ஆகவேதான், இயேசு ‘கடவுளுக்குரியதைக் கடவுளுக்கும், சீசருக்குரியதைச் சீசருக்கும்...’ என்று தம்மை மனுக்குலத்தின் பங்காளியாக அடையாளப்படுத்தினார்.
2026-இல் தமிழ்நாட்டில்
‘யார் தலைமை?’ என்பதில் அனைவருக்கும் ஆவல். ஆனால், அதில் தனது உரிமையை நிறைவேற்ற வேண்டும் என்பதில் அச்சம், எதிர்மறை எண்ணங்கள், இனம்சார் கொள்கைகள் நம்மை இறுகப் பற்றிக் கொண்டிருக்கிறது. அரசியலில் நான் என்ன செய்யப் போகிறேன் என்பதை விடுத்து, என்னால் முடிந்ததை ஏன் நான் செய்யவில்லை? என்ற எண்ணத்தைக் கொள்வோம். ஒரு சமூகம் வளர்ச்சிபெற வேண்டும்; நீதி அனைவருக்கும் சமம் என்பது மெய்ப்பிக்கப்பட வேண்டுமென்றால், அரசியல் களம் அறத்தின் களமாக உருவெடுக்க வேண்டும். அறம் அன்பையும் அமைதியையும் இந்நாட்டிற்கும் வீட்டிற்கும் அளிக்கும் அமுத சுரபி ஆகும்.
நாம் வெளியில் செல்வதென்றால் வானிலையை அறிந்துகொண்டு செல்வது இயல்பு. இப்போது காலநிலை பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இந்த இரண்டிற்கும் என்ன வேறுபாடென்ற குழப்பமும் நம்மில் நிலவுகிறது.
வானிலை
என்பது ஒரு நேரத்தில், நாளில், ஓரிடத்தில் நிலவும் இயற்கைச் சூழல். இது வெப்ப நிலை, மேகமூட்டம், வறட்சி, சூரிய ஒளி, காற்று, மழை, பனி இவற்றின் அளவினைக் குறிக்கிறது. சில இடங்களில் நிமிடத்திற்கு நிமிடம், மணிக்கு மணி, வானிலை மாறுபடுவதைக் காண்கிறோம். வானிலை மாற்றத்தை அடிக்கடி அறியலாம். வானிலையைக் கணித்து வானிலை மையம் முன்னறிவிக்கிறது. தனியார் வானிலை இயக்கங்களும் செயல்படுகின்றன. சில நேரங்களில் வெப்ப நிலையின் அளவை ‘இன்று வெப்பம் உச்சமாக இருக்கிறது’ என்று
கூறுவதைக் கேட்டிருக்கிறோம். இது வானிலைப் பதிவுகளைக் குறித்துச் சொல்லப்படுவது. ஏனென்றால், வானிலை மாற்றத்தைக் கணிப்பதற்கு முந்தைய வானிலை அளவுகளை அறிந்திருக்க வேண்டும்.
இன்றளவில்
வானிலை முன்கணிப்பு மக்கள் உயிர்ச்சேதம், பொருளிழப்புகளைத் தவிர்க்கவும், வணிகச் செயல்பாடுகளை ஒழுங்குசெய்யவும், பிரயாணங்களை உறுதிப்படுத்தவும் தேவையானதாக அமைந்து விட்டது. இந்நாள்களில் இயல்பாக ஏற்படும் கணிக்கமுடியாத வானிலை மாற்றங்களை எதிர்கொள்ளவும் அதற்கு நாம் தயார்படுத்திக் கொண்டும் வருகிறோம். காலநிலை என்பது நீண்ட இடைவெளியின் அடிப்படையில், ஆராய்ச்சிகள் மூலம் சராசரி வானிலை மாற்றங்களின் அளவைக் குறிப்பதாகும். காலநிலை
மாற்றம் ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு வடிவில் உருவெடுக்கும் நாள்களில் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கடந்த 50 ஆண்டுகளில் காலநிலை மாற்றங்கள் இடத்திற்கு இடம் மாறுபட்டும் அதிகரித்தும் வருவதைக் காண்கிறோம்.
காலநிலை
என்பது ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தின் நீண்ட இடைவெளியில் நிலவும் சராசரி வானிலை மற்றும் நிகழும் மாற்றத்தையும் குறிக்கிறது. வானிலைக்கும் காலநிலைக்கும் உலக வெப்பமயமாதல் காரணமாயிருந்தாலும், அடிப்படையில் மக்கள்பெருக்கமும் அதன் விளைவாக உருவெடுத்த தேவைகளும் என்பதை மறுக்க முடியாது. உலகளவில் இன்று காலநிலை மாற்றத்தைப் பற்றிய முக்கியத்துவம் அனைத்துத் துறைகளிலும் உணரப்படுகிறது.
வேளாண்துறை,
விமானப் போக்குவரத்து, கடல் சார்ந்த மற்றும் கப்பல் போக்குவரத்து, மின்விநியோகம், தரைவழிப் போக்குவரத்து, பொழுதுபோக்கு, வேளாண்மை, பங்குச் சந்தை என்று எண்ணற்ற துறைகளில் அன்றாட வாழ்வு முறைக்கும் காலநிலை கணிப்பு அவசியம் என்றாகிவிட்டது.
எரிமலை,
பூகம்பம், சுனாமி - வானிலை எரிமலைச் சீற்றம், பூகம்பம், சுனாமி என்பவை பொதுவாக மனிதக் கட்டுப்பாட்டிற்குள் வராத இயற்கைப் பேரழிவுகள் என்றுகூட சொல்லலாம். இவையும் சில வேளைகளில் வானிலை மாற்றத்திற்குக் காரணமாய் அமைந்திருப்பதாக அறியப்படுகிறது.
எரிமலைச்
சீற்றத்தின் காரணமாக வரலாற்றில் வானிலை பாதிப்படைந்ததற்கு 1991-ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் mount pinatubo வெடித்த எரிமலை
நிகழ்வு குறிப்பிடப்படுகிறது. இதன் காரணமாக இயல்புக்கு மாறாக உலகமெங்கும் குளிர்ந்த நிலை, அதனைத் தொடர்ந்து பல மாற்றங்கள் நிலவியதைக்
காணமுடிந்ததாக தரவுகள் உள்ளன.
கி.மு. 4-ஆம் நூற்றாண்டில் இதேபோன்று காற்றின் அழுத்தத்தினால் பூகம்பம் உண்டானதென்று அறியப்படுகிறது. ‘சுனாமி’ என்பது எதிர்பாரா ‘கடல் பொங்குதல்’
உலகில் பல இடங்களில் உருவாகும்
இயற்கைச் சீற்றங்களில் ஒன்று. இவற்றில் பெரும்பாலான சுனாமிகள் கடல் தரைமட்டத்திலும், அதனை ஒட்டிய பகுதிகளிலும் உருவாகும் பூகம்பங்களால் ஏற்படுவதாகும். எல்லாப் பூகம்பங்களும் சுனாமிக்குக் காரணமாய் அமைவதில்லை. மண்சரிவு, எரிமலை வெடிப்பு, எரிகற்கள், வால் நட்சத்திரப் பாதிப்பு என்ற காரணங்களாலும் உருவாகும் இந்தச் சுனாமியின் பின் காற்றழுத்தமும் பேரலைகளும் உருவாகிறது. இவை அதிவேக காற்றினால் (windstorms) ஏற்படுகிறதென்றும் அறியப்படுகிறது.
காற்றழுத்தமும்
வானிலையும் சேர்ந்து சுனாமிக்குக் காரணமாய் அமைவதை ‘மெடோ சுனாமி’
(meteotsunamis) என்றழைக்கப்படுகிறது. உதாரணமாக, 13.6.2013-இல் வடகிழக்கு அமெரிக்காவில் நியூஜெர்ஸி மாகாணத்தில் இவ்வகை மெடோ சுனாமி ஏற்பட்டது. இவ்வாறு எரிமலை, பூகம்பம், சுனாமி என்பவை திடீரென்று நிகழ்வதும் வானிலை பாதிப்படைவதற்குத் தொடர்புடையதாகப் பார்க்கப்படுகிறது.
முன்கணிப்பும்
ஏ.ஐ.
தொழில்நுட்பமும் (AI forecast)
வரலாற்றில்
விஞ்ஞானம் பல துறைகளில் மனிதனோடு
துணை நின்றதும் காலத்திற்கேற்ப மாற்றியமைத்து அரணாக இருப்பதையும் அறிவோம். அவற்றில் ஒன்று காலநிலை விஞ்ஞானம் என்பதும், ‘இயற்கையைக் கணிப்பதில் இத்தனை முன்னேற்றமா?’ என்று வியக்கும் நாள்களில் இன்று வாழ்கிறோம். பாரம்பரியமாக நம்பியிருந்த வழிமுறைகளை விட்டு, மிகவும் உயர்தரத் தொழில்நுட்ப உபகரணங்களுடன், அல்கோரித நுட்பமும், செயற்கைக்கோள்கள் இயக்கமும் சேர்ந்து வெளிமண்டலச் சூழலைத் துல்லியமாகக் கணிக்கும் திறன் நடைமுறையில் இன்று இருக்கிறது.
20-ஆம்
நூற்றாண்டிலிருந்து கணினியின் மூலம், கணித அடிப்படையில் வெளிமண்டல
மாற்றங்களை ஆய்வது பயன்பாட்டிலிருந்தது. இதில் காலநிலை முன்கணிப்பு முக்கியமான ஒன்று. கடந்த 100 ஆண்டுகளில் உலகில் பல பகுதிகளிலிருந்து பலதரப்பட்ட முக்கிய
வானிலைத் தரவுகள் கிடைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த ஏராளமான வானிலைத் தரவுகளை, மேம்படுத்தப்பட்ட கணினிகளும்கூட (Super computers)
கையாள முடியாத நிலையில், இப்போது விஞ்ஞான வளர்ச்சியின் மூலம் புதிய தொழில்நுட்பங்கள் வழியாகத் துரிதமாகவும் துல்லியமாகவும் அறியும் முறைகளுக்குத் தகுந்த ஆயுதமாக இருப்பது ஏ.ஐ.
மனிதர்களின்
ஆற்றலுக்கு ஒத்த வேலைகளைச் செய்யவும், சிக்கல்களைத் தீர்க்கவும், சாயல்களைக் கண்டறியவும் கணினியின் மேம்படுத்தப்பட்ட திறனைப்பெற்று ஏ.ஐ. விளங்குகிறது.
ஏ.ஐ. தொழில்நுட்பம் என்பது
கற்கும் இயந்திரம் மற்றும் இயந்திரச் சிந்தனை என்று இரண்டு பிரிவுகளை உள்ளடக்கியது. ஏ.ஐ. தொழில்நுட்பம்
தரவுகளைக்கொண்டு கற்கும் இயந்திரம் (மெஷின் லர்னிங் ஆடு) - அல்கோரிதம் அடிப்படையில் கற்று, தொடர்ந்து மேம்படுத்தி முன்கணித்துச் செயல்படுத்தவும் மாடல்களை உருவாக்கும் திறன் படைத்தது. மெஷின் லர்னிங்கின் துணைப்பிரிவான இயந்திரச் சிந்தனை செயற்கை நரம்புவலை (artificial neural networks) முறையில்
மனித மூளை இயங்குவதைப் போன்று இயந்திரங்கள் தானாகச் சிக்கலான செய்திகளைக் கையாளவும் ஆய்ந்தறியும் ஆற்றல் பெற்ற தொழில்நுட்பம் (எகா: ஓட்டுநரில்லாத மோட்டார் வாகனம்).
ஏ.ஐ.யும்
வானிலைத்
தரவுகளும்
தரவுகள்
ஆய்வின் மூலம் இந்நாள்களில் முன்பு போலில்லாமல், அதிநவீன முறைகளைக்கொண்டு ஏ.ஐ. உதவியுடன்
துல்லியமாகக் காலநிலை முன்கணிக்கப்படுகிறது. செயற்கைக்கோள்கள், ரேடார், சென்சார்ஸ், காலநிலையங்கள் / மையங்கள், கடல் சார்ந்த கருவிகள் (Ocean buoys)
வழியாகத் தேவையான காலநிலைத் தரவுகள் கிடைக்கின்றன.
இத்தரவுகளை
ஏ.ஐ. கற்கும் இயந்திரம்
(மெஷின் லர்னிங்- ஆடு) ஆய்ந்து புயல் உருவாகுதல், அதன் பாதை முதற்கொண்டு அனைத்துக் காலநிலை மாற்றங்களையும் உடனுக்குடன் கணிக்கும் திறன் பெற்றுள்ளது. வானிலைத் தரவுகளை ஒருங்கிணைத்துப் புதிய காலநிலை மாடல்களைத் துல்லியமாகவும் துரிதமாகவும் உருவாக்க ஏ.ஐ. பயன்படுகிறது.
விமானப் போக்குவரத்து மற்றும் அன்றாடத் தேவைகளுக்கு ஏற்ப ரேடார், சென்சார்ஸ், செயற்கைக்கோள்கள் மூலம் பெற்றத் தரவுகள் வாயிலாக எச்சரிக்கை செய்திகளைக் கொடுக்கவும் ஏ.ஐ. உதவுகிறது.
இதுவரை
சேகரித்த தரவுகளைக்கொண்டு, நிறுவனங்களுக்குத் தேவையான வானிலை முன்கணிப்பு மற்றும் அறிக்கைகளைத் தயாரித்துக் கொடுப்பது; குறிப்பாக விவசாயம், விமானத்துறை, அரசுக்கு வெள்ள எச்சரிக்கை போன்று பலதரப்பட்ட வானிலை அறிக்கைகளைக் கொடுக்க ஏ.ஐ. பயன்படுகிறது.
பூகம்பங்கள்,
சுனாமி, புயல், அடைமழை, வறட்சி என்ற மாறுபட்ட காலநிலையில் வாழும் நமக்குத் துரித வானிலைத் தகவல்கள் தேவையாக உள்ளது. அரசு, நிறுவனங்கள் பயன்பாட்டிற்கும், வானிலை ஆய்வறிக்கைகள் தயாரிக்கவும் செயல்படுத்தவும் மேம்படுத்தவும் ஆராய்ச்சி செய்யவும் எதிர்கால காலநிலைகளை முன்கணிக்கவும் ஏ.ஐ. பெரிதும்
பயன்படுகிறது.
இராபின்சன் காலை பத்து மணிக்குதான் பழைய கால கூட்சு இரயில் வண்டிபோல புகையைக் கக்கிக்கொண்டே ஆபிசுக்கு வந்தான். ‘நீ ஆபிசுக்கு ஏன் லேட்டா வர?’ என்றும் ‘ஏன் புகை பிடிக்குற?’ என்றும் அவனிடம் யாரும் கேட்டதே கிடையாது. கேட்டாலும் விளைவு ஒன்றும் இல்லை. உள்ளூர் பி.இ. பட்டதாரி என்ற திமிர் அவனிடம் இருக்கத்தான் செய்தது. அது மட்டுமல்ல, இராபின்சன் இல்லையென்றால் சில வேலைகள் அங்கு நடக்காது. முப்பந்தல், ஆரல்வாய்மொழி, அஞ்சு கிராமம், காவல்கிணறு என்று எந்தக் காற்றாடியாலை எங்கு இருக்கிறது? அவை யாருக்கெல்லாம் சொந்தமானது? அதன் பிரச்சினைகளை எப்படிச் சரிசெய்வது? என்பதும் அவனுக்குதான் அத்துப்படி. எனவே ‘எல்.ஜி. விண்ட்மில் டெக்’ நிறுவனத்தினர் அவனிடம் குறைகள் பல இருந்தாலும், மான் தன் கொம்புகளின் வளர்ச்சியையும், அதன் கனத்தையும் பொறுத்துக்கொள்வதுபோல அவனையும் பொறுத்துக்கொண்டிருந்தனர். இராபின்சன் தன் அலுவலக அறைக்குள்போய் இருக்கையில் அமர்ந்ததுதான் மிச்சம், “இராபின்சன் சார்! இன்னைக்கு அஞ்சு கிராமம் பகுதியில ஒரு விண்ட்மில் லீப் இன்ஸ்டாலேசன். தீபக் சார் உங்கள அங்கே போகச்சொன்னார். ரொட்டேட்டர்ல பிராப்ளமாம்.” எக்சிகியூட்டிவ் மேனேஜர் இரங்கராஜன் சீனியர் என்றாலும் இராபின்சன்கிட்ட பேசும்போது மட்டும் கொஞ்சம் பார்த்தே பேசுவார். “ஆமா! நேற்று கனகராஜ் சார் கேன்டில் பண்ணினாருனு சொன்னாங்களே? என்னாச்சு?”
“சார்! யாரு போனாலும் உங்களபோல வருமா? அவரால பிராப்ளத்த சார்ட் அவுட் பண்ண முடியல. இந்த ஆபீசுல உங்களபோல யாரு இருக்கா சொல்லுங்க?” எக்சிகியூடிவ் மேனேஜர் இரங்கராஜன் இராபின்சனைக் கொஞ்ச நேரம் காற்றில் பஞ்சாய் மிதக்க வைத்தார். போதைப் பட்டியலில் புகழ்ச்சி இடம்பெறவில்லையென்றாலும், அது தரும் கிறக்கம் மதுவைவிட அதிகம்தான் போலும். இதற்குப் பிறகு இராபின்சன் எப்போது இருக்கையிலிருந்து எழுந்தான்? எப்போது கிளம்பிப் போனான்? என்று யாருக்கும் தெரியாது. அடுத்த நொடியே அவன் இன்ஸ்டாலேசன் ஸ்பாட் அஞ்சு கிராமத்தில் இருந்தான்.
முந்தைய
கருவேல மரக்காடுகள் இன்று காற்றாலைக் காடுகளாக மாறியிருந்தன. பனை மரங்கள் முளைத்திருந்த இடங்களில் காற்றாலைகள் வானுயர முளைத்திருந்தன. தோவாளையில் இராபின்சன் இன்ஜினியரிங் காலேஜ் படிக்கும்போது தினமும் காலை 4 மணிக்கே எழுந்து தாய் இராணியோடு முப்பந்தலிலிருந்த தங்கள் சாமந்திப்பூ தோட்டத்திற்குப் போய்விடுவார்கள். அதிகாலையிலேயே சாமந்திப்பூ பறித்து, தோவாளைச் சந்தைக்குச் சைக்கிளிலேயே கொண்டுபோய் சேர்க்க வேண்டும். பூ சாகுபடியிலே தன்
தாய்க்கு ஒத்தாசையாக இருப்பான். சாமந்திப்பூ சாகுபடியில் குண்டு மல்லி சாகுபடிபோல அதிக வருமானம் ஈட்ட முடியாது என்றாலும், இராணிக்குச் சாமந்திப்பூ சாகுபடி ஏதோ பிடித்திருந்தது.
காலப்போக்கில்
முப்பந்தலிலிருந்த சாமந்திப்பூ தோட்டத்தை இராபின்சன் கல்லூரிப் படிப்பிற்காகக் காற்றாலை கம்பெனிக்காரர்களுக்கு விற்கவேண்டிய சூழல் உருவானது. இராணி இறந்தபோது இராபின்சன் அவள் உடலைச் சாமந்திப்பூ மலர்களாலேயே அலங்கரித்திருந்தான். அழகாகக் கட்டப்பட்டிருந்த அவள் கல்லறையில் துளசி மாடம்போல ஒரு சாமந்திப்பூ மாடம் கட்டியிருந்தான். இராணி இறந்து ஆண்டுகள் ஐந்தானாலும் தன் தாயை நினைக்கும்போதெல்லாம் சாமந்திப்பூ வாசமும் சேர்ந்தே வந்தது.
“சார் நல்ல வேளை வந்தீங்க. நீங்க இல்லாம நம்ம கம்பெனியில ஒண்ணும் ஓடாதுபோல.” பீல்டு
இன்ஜினியர் கனகராஜ் பேசும்போது மட்டும் அவர் வார்த்தைகளில் முள்கள் முளைத்திருந்தாலும் ‘புகழ்தல்’
வாடை அதில் இருந்ததால் இராபின்சனுக்கு அது முத்தங்களாகவே தெரிந்தது.
வானுயர
வளர்ந்திருந்தது கற்றாடி. செக்ன் அறைக்குள் இராபின்சன் நுழைந்ததும் காற்றுக்கு வழிவிட்டு நிற்கும் நாணல்கள்போல அங்கிருந்த ஆப்பரேட்டர்கள் வழிவிட்டு நின்றனர். இராபின்சன் சில விவரங்களைக் கேட்டறிந்தான். சில மாற்றங்களைச் செய்ய வலியுறுத்தினான். அவன் கட்டளையிடுவதைப் பார்க்கவே பிரமிப்பாய் இருந்தது. அவனுடைய வார்த்தைகளில் சிறுதுளி திமிரும் அவனுடைய உடல் மொழியில் கடலளவு திமிரும் தெரிந்தது. ‘எனக்கு எல்லாம் தெரியும்’
என்ற எண்ணமும் அவன் தலைமுடியைப்போல சிலிர்த்துக் கொண்டுதான் நின்றது.
‘ஓ.கே! நவ்
சுவிட்ச் ஆன்’ என்றான். சுவிட்ச் ஆன் செய்யப்பட்டது. இயங்காமலிருந்த ரொட்டேட்டர் இயங்கத் தொடங்கியது. விண்ட்மில் காற்றாடி சுற்றத்தொடங்கியது. இராபின்சன் கண்ணிலே பெருமை கறுப்புப்பந்தாகத் திரண்டிருந்தது. அங்கிருந்தோர் அனைவரும் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். அந்த ஆரவாரச்சத்தத்திற்கு நடுவே மெதுவாக ஓடிய ரொட்டேட்டர் கொஞ்சநேரத்தில் கட்டுப்பாடற்றுப் பேயாய் சுழன்று சில நொடிப்பொழுதிலே நெடுக வளர்ந்திருந்த விண்ட்மில் காற்றாடி கழுத்தொடிந்து விழுந்தது. சில வினாடிகள் எங்கும் மௌனம் மட்டுமே பேசிக்கொண்டிருந்தது.
அன்று
இராபின்சன் சோகத்தில் ஊர் திரும்புகை யில் பல நாள்களுக்குப் பிறகு
அவன் தாய் இராணியின் ஞாபகமும் சாமந்திப்பூ வாசமும் அவன் கூடவே வீடு வந்தது. காற்றாலை காற்றாடி சுழற்சி கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்போது மட்டுமே அதன் பயன்பாடு மனிதகுலத்திற்குத் தேவையானதாக இருக்கும். இக்கதையில் கட்டுப்பாடு என்பது மனிதனுக்கும் வேண்டும்; மனிதன் உருவாக்குகின்ற தொழில்நுட்பத்திற்கும் வேண்டும் என்ற புரிதலை நாம் உணரமுடியும். செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பம் கட்டுப்பாடற்ற அசுர வேகத்தில் வளர்ந்து வரும் இச்சூழலில் கட்டுப்பாடு என்பது வரையறை செய்யப்படவேண்டும்.
இந்தியாவில்
பெரும்பாலான குற்றங்களுக்கான தண்டனை ‘இந்தியத் தண்டனை சட்டம் 1860’-இன் அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றன. இந்த டிஜிட்டல் உலகிலே நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சைபர் குற்றங்களைத் தடுக்கவும் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கவும் ‘தகவல் தொழில்நுட்பச் சட்டம் - 2000’ மற்றும் ‘தகவல் தொழில்நுட்பத் திருத்தச் சட்டம் - 2008’ வழிவகை செய்கின்றன. சைபர் குற்றங்களால் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றவர்கள் ஏழைகளும் பெண்களும்
குழந்தைகளுமாகவே இருக்கின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு உலக நாடுகள் தகவல் மற்றும் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
2016-ஆம் ஆண்டு
அமெரிக்கா முதன் முதலில் செயற்கை நுண்ணறிவு அறிக்கையை வெளியிட்டது. அதனைத்தொடர்ந்து 2017-இல் பிரான்சு, இங்கிலாந்து, சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் தங்கள் நாடுகளில் செயற்கை நுண்ணறிவுக்கான திட்ட அறிக்கையை வெளியிட்டன. ஜூன் 2018-ஆம் ஆண்டு இந்திய ‘நிதி ஆயோக் கமிஷன்’ (NITI Aayog) செயற்கை
நுண்ணறிவிற்கான திட்ட அறிக்கையை வெளியிட்டது.
2020-இல் செயற்கை
நுண்ணறிவு பற்றிய அறநெறிப் பார்வையை ‘செயற்கை நுண்ணறிவு நெறிமுறைகளுக்கான உரோமின் அழைப்பு’
(Rome call for AI Ethics) என்ற
தலைப்பில் வத்திக்கான் வெளியிட்ட அறிநெறிப் புரிதல் உலகளாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 2024-இல் இத்தாலியில் நடந்த ஜி-7 நாடுகளுக்கான உச்சி மாநாட்டில் செயற்கை நுண்ணறிவு மற்றும் அதன் சவால்களைப்பற்றி உலகத் தலைவர்கள் விவாதித்தார்கள். 2025-இல் பாரிஸ் நகரில் உலகத் தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப அறிஞர்கள் ஒன்றுகூடி செயற்கை நுண்ணறிவு பற்றிய திட்டங்களையும், அவை கட்டுப்பாடோடு பயன்படுத்தப்பட வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினர்.
எத்தனை
அறிக்கைகள் மற்றும் விவாதங்கள் நாடளவிலும் உலகளவிலும் நடந்தாலும், செயற்கை நுண்ணறிவிற்கான உலகளாவியச் சட்டம் (AI Act) இன்னும் முழுமையாக வெளிவரவில்லை என்பது கவலையளிக்கின்றது. இதற்கிடையில் முதல்முறையாக ‘ஐரோப்பிய செயற்கை நுண்ணறிவுச் சட்டம்’
(European Union AI Act) 2025-இல்
பல கட்டத் திருத்தங்களோடு வெளியிடப்பட்டுள்ளது.
எத்தனை
சட்டங்களும் சட்டத்திருத்தங்களும் வந்தாலும் சட்ட ஓட்டைகளிலிருந்து தப்பித்துச் செல்லும் முதலைகள் இருக்கத்தான் செய்கின்றன. சட்டம் சில வேளைகளில் சிலந்தி வலையாக இருந்து சிறு பூச்சிகளைச் சிக்கவைத்து, பெரும் வண்டுகளை விட்டுவிடுகின்றது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகின்றன. ‘திருடனாகப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’
என்பர். சட்டங்களும் கட்டுப்பாடுகளும் ஆயிரம் இருந்தாலும், தனிமனித ஒழுக்கமும் செயற்கை நுண்ணறிவைப் பற்றிய விழிப்புணர்வும் இன்று காலத்தின் கட்டாயம்.
நமது செயல்களே நமது அழிவுக்குக் காரணமாக இருந்தால், அதனை நமது கிராமங்களில் ‘சொந்தச் செலவில் சூனியம் வைத்துக்கொள்வது’ என்று கூறுவார்கள். இன்றைய அமெரிக்காவைப் பார்த்தால் அப்படித்தான் கூறத் தோன்றுகிறது.
அமெரிக்கா
ஒரு மாபெரும் நாடு. உலகின் மிகப்பெரிய பொருளாதாரம். உலகின் மிக சக்தி வாய்ந்த இராணுவம். அதன் அறிவியல் தொழில்நுட்பத்தையும் விஞ்ஞான ஆற்றலையும் தவிர்த்து உலகம் இயங்கமுடியாது என்று சொல்லும் அளவுக்கு அறிவுசார் சொத்துகளைத் தன்னகத்தே கொட்டி வைத்திருக்கும் நாடு. பண்பட்ட சனநாயக நாடுகளின் பட்டியலில் மூத்த முன்னோடி நாடு. இவ்வாறு அதன் பெருமைகளைக் கூறிக்கொண்டே போகலாம்.
ஏறத்தாழ
முந்நூறு ஆண்டுகளாகச் சிறுகச் சிறுகச் சேர்த்த இப்பெருமைகளையெல்லாம், ஒரு தவறான நபரைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் அமெரிக்க மக்கள் வேகமாக இழந்து வருகின்றார்கள்.
சனநாயகத்
தேர்தல்கள் மூலம் பாசிஸ்டுகள் ஆட்சிக்கு வருவது எவ்வளவு ஆபத்தானது என்பதை ஒவ்வொரு நாளும் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிரூபித்துக் காட்டுகிறார். ஒரு வீட்டில் பிடித்த தீ ஊரையே அழிப்பதுபோல,
அமெரிக்காவைப் பிடித்த இந்தக் காட்டுத் தீ உலகின் அத்தனை
நாடுகளின் உயிர்களையும் வாங்குகிறது. ‘டிரம்ப் மனநிலை பிறழ்ந்துவிட்டாரா?’ என்று சந்தேகிக்கும் அளவுக்கு விபரீதமான பல முடிவுகளை வேகமாக
எடுத்து வருகிறார். அவரின் பதவிக் காலம் நான்கு ஆண்டுகள்தான் என்றாலும், அவர் எடுத்துக் கொண்டிருக்கின்ற பல நடவடிக்கைகள் அமெரிக்காவின்
எதிர்காலத்தை நிரந்தரமாகப் பாதிக்கும்.
அமெரிக்காவில்
நடப்பதைப் பற்றியும், அதன் அதிபர் டிரம்ப்பின் கோமாளித்தனமான நடவடிக்கைகள் பற்றியும், அமெரிக்கரை அடுத்து அதிகம் கவலைப்பட வேண்டியவர்கள் நாம்தாம். இதைத்தான் பொருளாதார நிபுணர்கள் “அமெரிக்க டாலருக்குச் சளி பிடித்தால், இந்திய ரூபாய்க்குக் காய்ச்சல் வரும்“ என்று கூறுவார்கள். உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்ற அணுகுமுறைகளைக் கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து பதவியேற்ற அரசுகள் அனைத்தும் பின்பற்றி வந்ததால், நமது பொருளாதாரக் கட்டுமானங்கள் அனைத்தும் அமெரிக்காவைச் சார்ந்தே நிற்கின்றன. நமது அந்நியச் செலாவணி முழுவதும் அமெரிக்க டாலர்களிலேயே சேமிக்கப்படுகின்றன. அமெரிக்காவின் பொருளாதாரத்தில் இந்தியக் குடியேறிகளின் பங்கு மகத்தானது. அமெரிக்க அரசியல், சமூகம், பொருளாதாரம் என்ற அமெரிக்க நாட்டின் அத்தனை பரிணாமங்களிலும் இந்திய வம்சாவளியினரின் இருப்பும் பங்களிப்பும் வேறு எந்த நாட்டினருக்கும் இல்லை. இந்த உறவுகளில் பிரதமர் மோடி தனது தனிப்பட்ட முத்திரையைப் பதிக்க நினைத்தார். டிரம்ப் கடந்தமுறை அதிபராக இருந்தபோது அவரைத் தனது ‘தனிப்பட்ட நண்பராக’ சர்வதேசத் தளத்தில் அடையாளப்படுத்தினார்.
இந்தியா-அமெரிக்கா என்ற இரண்டு சனநாயகங்களின் உறவாக இருந்ததை மோடி - டிரம்ப் ஆகிய இரண்டு தனிப்பட்ட தலைவர்களின் நட்பின் அடிப்படையில் மாற்றியமைத்தார். இந்திய இராஜதந்திர நிபுணர்கள் இதுவரை அறிந்திராத வகையில் ஓர் இந்தியப் பிரதமர், ஓர் அமெரிக்க
அதிபர் தேர்தலில் வேட்பாளருக்காக அமெரிக்க மண்ணில் வாக்கு கேட்டது அதுவே முதல் முறை. அதற்குக் கைமாறாக டிரம்பும் இந்தியா வந்து பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் மோடியைத் தனிப்பட்ட முறையில் புகழ்ந்து தள்ளினார். இந்த அடிப்படையில் இந்த முறை நடந்த அதிபர் தேர்தலில், பெரும்பாலும் சனநாயகக் கட்சியின் ஆதரவாளர்களாக இருந்த இந்திய வம்சாவளி வாக்காளர்கள் டிரம்புக்கு ஆதரவாகக் குடியரசுக் கட்சிக்கு வாக்களித்தனர்.
இந்தத்
தேர்தல் பிரச்சாரத்தை பா.ச.க.வின் அயலக அணியைச் சார்ந்தவர்களே முன்னின்று நடத்தினர். வாக்களித்ததோடு மட்டுமல்லாமல் கணிசமான தேர்தல் நிதியையும் வழங்கினர். டிரம்ப் அதிபரானால் மோடியைக் கேட்காமல் எதுவும் செய்யமாட்டார் என்றும், இந்தியர்களின் குடியேற்றப் பிரச்சினைகளில் டிரம்ப் தங்களுக்கு மிகவும் சார்பாக இருப்பார் என்ற பிரச்சாரத்தையும் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களில் பெரும்பாலோர் நம்பினர். பிரதமர் மோடியின் நண்பர்களான இந்தியாவின் பெரும் தொழிலதிபர்களான அதானியும், அம்பானியும் டிரம்ப்போடு மிகவும் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்திக்கொண்டனர். அவரது பதவியேற்பு விழாவிற்கு டிரம்ப்பின் தனிப்பட்ட விருந்தினர்களாக அவர்கள் இருவரும் அழைக்கப்பட்டு, விழா அரங்கின் முன்வரிசையில் இருவரும் அமர்ந்திருந்ததை நாடே பார்த்தது.
டிரம்ப்பின்
வெற்றியைக் கொண்டாடும் வகையில் தனது கார்ப்பரேட் குழுமம் அமெரிக்காவில் இருபதாயிரம் கோடி அமெரிக்க டாலரை முதலீடு செய்யும் என்று கவுதம் அதானி பகிரங்கமாக அறிவித்தார். இப்படிப் பல முனைகளில் அமெரிக்காவோடு
பல நெருக்கங்களை உருவாக்கிக் கொண்டதால் நமது வெளியுறவுக் கொள்கை அமெரிக்காவை மட்டுமே சார்ந்திருந்தது. பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் கட்டவிழ்த்துவிட்டிருக்கும்
கொலைவெறித் தாக்குதல்களை எதிர்த்துக்கூட நம்மால் ஐக்கிய நாடுகள் சபையில் வாக்களிக்க முடியவில்லை. சர்வதேச அரங்கில் இந்தியா என்றுமே நியாயத்தின் பக்கம்தான் நிற்கும் என்று இந்தியாவின் மேல் இருந்த நம்பகத் தன்மையையும் இழந்து வருகிறோம். இவ்வளவும் நடந்து முடிந்தபிறகு நமது சிரசில் ஏறி வலுவாக அமர்ந்து கொண்டு நமது செவியைக் கடிக்க ஆரம்பித்துள்ளார் டிரம்ப். ‘வலிக்கிறது’ என்று
கூறி அழக் கூட வெட்கப்பட்டு, முக்காடு போட்டு முனங்கிக் கொண்டிருக்கிறது மோடி அரசு.
கத்தாரில்
நடந்த அரசுமுறை விருந்தின்போது ‘ஆப்பிள்’ நிறுவனத்தின் அதிபரைப் பார்த்துப் பகிரங் கமாக “ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்வதை நிறுத்த வேண்டும்”
என்றும், “இந்தியா வில் உற்பத்தி செய்யும் ஆப்பிள் போன்களை அமெரிக்காவில் விற்க அனுமதிக்க முடியாது”
என்றும், “அப்படி விற்றால் 25% அதிகமாகத்
தண்டவரி கட்ட வேண்டும்”
என்றும் எச்சரித்தார். இதைப்பார்த்து உணர்ச்சிவசப்பட்ட பா.ச.க.
நாடாளுமன்ற உறுப்பினரும், திரைப்பட நடிகையுமான கங்கனா இரனாவத், டிரம்ப் இப்படி அறிவித்ததற்கான காரணம் அவர் சர்வதேச அரங்கில் தன்னைவிட மிகவும் பிரபலமாக இருக்கும் மோடியைப் பார்த்துப் பொறாமைப்பட்டதால்தான் என்று ‘X’ தளத்தில்
பதிவு செய்தார். டிரம்ப்பின் கோபத்தையும் வெறுப்பையும் எதிர்கொள்ளப் பயந்துபோன பா.ச.க.வின் தலைவர் நட்டா உடனடியாக அந்தப் பதிவை நீக்கவேண்டும் என்று உத்தரவிட்டதோடு மட்டுமல்லாமல், பா.ச.க.வில் யாரும் டிரம்புக்கு எதிராகப் பேசவோ, பதிவுகள் போடவோ கூடாது என்று தடையுத்தரவு போட்டார்.
திருடனுக்குத்
தேள் கொட்டியதுபோல, டிரம்புக்கு வாக்களித்த அமெரிக்க இந்திய வாக்காளர்கள் வாய் திறந்து ‘வலிக்கிறது’ என்று
கூறக்கூட வகையற்று நிற்கின்றனர். ஊரை விட்டு, உறவுகளை மறந்து, நாடு விட்டு, நாடு வந்து நான்கு காசு சம்பாதிப்பதற்காக அமெரிக்காவில் கடுமையாக உழைக்கும் இந்தியர்களின் அரை வேட்டியைக்கூட அவிழ்க்க வேண்டும் என்பதில் டிரம்ப் குறியாக இருக்கிறார்.
வாயைக்கட்டி,
வயிற்றைக்கட்டி நாளாய் சேர்த்த பணத்தை இந்தியாவுக்கு அனுப்ப 3.5% புதிய
வரி கட்ட வேண்டும் என்று தற்போது ஒரு சட்டம் போட்டுள்ளார். சம்பாதித்தப் பணத்திற்கு ஏற்கெனவே வருமான வரிகட்டிய பின்னர் ‘இது என்ன தண்டம்?’ என்று கேட்கக்கூட இந்திய அரசுக்குத் துணிவில்லை. அமெரிக்காவில் சுமார் 40 இலட்சம் இந்தியர்கள் கடந்த ஆண்டு ரிசர்வ் வங்கி தகவலின்படி ஆண்டொன்றுக்கு 32 பில்லியன் டாலர் பணத்தை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளனர். வரும் ஆண்டிலிருந்து ஆண்டொன்றுக்கு 1.5 பில்லியன் டாலர்களை இந்தியர்கள் வருமான வரி கட்டிய பின்னர் கூடுதலாக அமெரிக்க அரசுக்குக் கட்ட வேண்டும். அங்கே வாழ்கின்ற நம்மவர்கள் தங்களது சேமிப்புகளை இந்தியாவில் எப்படி முதலீடு செய்தாலும், அந்த முதலீட்டிற்கு 3.5% வரி
கட்டித் தீர வேண்டும். இதனால் கறுப்புச் சந்தைப் பணப் புழக்கம் அதிகமாகும்.
டிரம்ப்பின்
சிறுபிள்ளைத்தனமான தெளிவற்ற நடவடிக்கைகளால் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பயிலும் பல்லாயிரக்கணக்கான இந்திய மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
அமெரிக்காவில்
சுமார் நான்கு இலட்சம் இந்திய மாணவர்கள் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பயின்று வருகின்றனர். இவர்களுடைய
கல்வியும் எதிர்காலமும் ஒரு பெரும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளன. இவர்கள் பயிலும் பெரும் பல்கலைக் கழகங்களுக்கு அரசு மானியம் வழங்க செயல்படுத்தவே முடியாத பல நிபந்தனைகளை டிரம்ப்
அரசு விதித்துள்ளது. வெளிநாட்டு மாணவர்களின் சமூக ஊடகச் செயல்பாடுகளைத் தணிக்கை செய்து, அவைகளில் இஸ்ரேல் எதிர்ப்பு, பாலஸ்தீனிய ஆதரவு, பொதுவுடைமை சித்தாந்த ஆதரவு போன்ற பதிவுகள் இருந்தால் அவர்களை உடனடியாகப் பல்கலைக்கழகங்களில் இருந்து நீக்கிட வேண்டும் என்பதே முதல் நிபந்தனை. பல்கலைக்கழக வளாகங்களுக்குள் வெளிநாட்டு மாணவர்கள் தங்களது கல்வி சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் தவிர வேறு எவ்வித போராட்டங்களிலோ, பிரச்சாரங்களிலோ ஈடுபடக்கூடாது. அதனை அனுமதித்தால் பல்கலைக்கழகத்துக்குரிய அரசு மானியம் உள்பட அனைத்துச் சலுகைகளும் உடனடியாக நிறுத்தப்படும். இந்த நிபந்தனையை ஒத்துக்கொண்ட பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே அரசு மானியமும், வெளிநாட்டு மாணவர்களைச் சேர்க்க அனுமதியும் உண்டு என்ற உத்தரவு தற்போது நடைமுறையில் இருக்கின்றது. கொலம்பியா பல்கலைக்கழகத்திற்கு 400 மில்லியன் டாலர் மானியத்தை நிறுத்தியவுடன் பதறிப்போன பல்கலைக்கழகம் டிரம்பிடம் மண்டியிட்டுச் சரணாகதியடைந்து தங்களது 400 மில்லியன் டாலர் மானியத்தைப் பெற்றுக் கொண்டது. அதைப்போல உலகப் புகழ்பெற்ற ஹார்வர்ட் (Harvard) பல்கலைக்கழகத்தையும்
டிரம்ப் நிர்வாகம் மிரட்டியபோது பணிய மறுத்த பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு 2.2 பில்லியன் டாலர் மானியத்தை நிறுத்தியதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த வெளிநாட்டு மாணவர்களைச் சேர்க்கும் அனுமதியையும் டிரம்ப் அரசு இரத்து செய்துவிட்டது. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மொத்த மாணவர்களில் சுமார் 30% வெளிநாட்டு
மாணவர்கள்.
தற்போது
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் 147 நாடுகளைச் சார்ந்த சுமார் 7000 மாணவர்கள் படிக்கின்றனர். அதில் ஏறத்தாழ 1000 மாணவர்கள் இந்தியர்கள். பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் 57,000 டாலர்களும், முதுகலை மாணவர்கள் 77,000 டாலர்களும் கல்விக் கட்டணமாகச் செலுத்துகின்றனர். விடுதி மற்றும் உணவுக் கட்டணமாக ஆண்டொன்றுக்கு 20,000 டாலர்கள் கொடுக்கின்றனர். டிரம்பின் இந்தப் புதிய உத்தரவால் இந்த மாணவர்கள் வேறு பல்கலைக்கழகங்களில் சேர வேண்டும். அல்லது உடனடியாக நாடு திரும்ப வேண்டும். இதனால், பல்கலைக்கழகமே நிலை குலைந்து போகும். ஹார்வர்ட்
பல்கலைக்கழகம் தற்போது டிரம்ப் அரசின் தான்தோன்றித்தனமான நடவடிக்கைக்கு ஃபெடரல் கோர்ட்டில் இடைக்கால தடையுத்தரவினைப் பெற்றுள்ளது. ஆனாலும், பல வெளிநாட்டு மாணவர்கள்
தங்களது எதிர்காலத்தைப் பற்றிப் பதற்றமும் அச்சமும் அடைந்துள்ளனர். பெரும்பாலான மாணவர்கள் சீனா, கனடா, இந்தியா, தென்கொரியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சார்ந்தவர்கள். வேறு பல்கலைக்கழகத்தில் குறிப்பிட்ட காலத்திற்குள் சேரவில்லை என்றால் விசா இரத்தாகி நாடு கடத்தப்படும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுவர். இப்படி நெருக்கடியில் சிக்கியுள்ள மாணவர்களில் டென்மார்க் நாட்டின் பட்டத்து இளவரசியும் ஒருவர்.
உலகின்
சிறந்த பல்கலைக்கழகங்களாக 2000 பல்கலைக்கழகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதில் முதல் இருபது பல்கலைக்கழகங்களில் பதினாறு பல்கலைக்கழகங்கள் அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள். அந்த பதினாறு பல்கலைக்கழகங்களில் முதன்மையானது ஹார்வர்ட் பல்கலைக்கழகம். உலக நாடுகளின் பல மாபெரும் தலைவர்கள்,
குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள், நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள், நீதியரசர்கள், விஞ்ஞானிகள், சிந்தனையாளர்களை உருவாக்கிய பல்கலைக்கழகம். அதன் நிர்வாகக் குழுவில் பல மேனாள் குடியரசுத்
தலைவர்கள், மேனாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பெரும் கார்ப்பரேட் அதிபர்கள் இடம்பெற்றுள்ளனர். அவ்வளவு சிறப்புமிக்க ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கே இவ்வளவு நெருக்கடி என்றால், மற்ற அமெரிக்கக் கல்வி நிலையங்களின் எதிர்காலம் என்னவாகும்?
அமெரிக்க
நாட்டின் புகழுக்கும் செல்வாக்கிற்கும் அதன் பொருளாதார பலமும் இராணுவ பலமும் மட்டும் காரணமல்ல! அதன் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் ஒரு மிகப்பெரிய காரணம். அமெரிக்க முதலாளித்துவ சித்தாந்தங்களில் உடன்படாதவர்கள் கூட அந்தப் பல்கலைக்கழகங்களின் கல்விச் சூழலையும், கல்வியின் தரத்தையும், ஆசிரியர்களின் திறமைகளையும், மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விச் சுதந்திரத்தையும் பாராட்டத் தயங்கமாட்டார்கள். அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு அப்பல்கலைக்கழகங்களின் பங்களிப்பு மகத்தானது. இந்திய மாணவர்கள் மட்டும் ஆண்டொன்றுக்கு 9 பில்லியன் டாலரை வழங்குகின்றனர். இப்படிப்பட்ட புகழும் பாரம்பரியமும் உள்ள பல்கலைக்கழகங்களைக் குரங்கு கையில் கிடைத்த பூமாலையாகப் பிய்த்து எறிகிறார் டிரம்ப்.
‘அது ஏன்?’ என்ற கேள்வி முக்கியமானது. பல்கலைக்கழகங்கள் இடதுசாரிச் சிந்தனைகளுக்கும் சமூக நீதிக்கான முன்னெடுப்புகளுக்குமான பாசறைகளாக விளங்குகின்றன என்பது டிரம்ப் மற்றும் அவரது தீவிரக் குடியரசுக் கட்சி ஆதரவாளர்களின் நிலைப்பாடு. 2021-ஆம் ஆண்டே தற்போது துணைக் குடியரசுத் தலைவராக இருக்கும் மைக் பென்ஸ், ‘பல்கலைக்கழகங்கள் நமது எதிரிகள்’
என்று குறிப்பிட்டார். கலாச்சார வேறுபாடுகளை மதித்து ஏற்றுக்கொள்ளுதல், எல்லாரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி, அனைவருக்கும் சமவாய்ப்பு, சமூக மற்றும் பொருளாதார நீதி போன்ற விழுமியங்களை மாணவர்கள் மூலமாகச் சமூகத்தில் விதைக்கும் பணியில் பெரும் பங்கு ஆற்றுபவர்கள் பல்கலைக்கழக பேராசிரியர்கள் என்பது அவர்களுடைய கருத்து. அவர்களது பிடியிலிருந்து பல்கலைக்கழகங்களை அரசாங்கத்தின் கைகளில் முழுக்கக் கொண்டுவர வேண்டும் என்பதே அவர்களது நோக்கம். ‘பெரும்பான்மைவாத அடையாள அரசியலுக்கு’ ஆதரவானவர்கள்
கைகளில் பல்கலைக்கழகங்கள் இருக்கவேண்டும் என்பது அவர்கள் நோக்கம். இன்று நம் நாட்டிலும் இதுதானே நடக்கிறது!
நேற்றைய
தினம் டிரம்ப் அரசு மற்றுமொரு கொள்கை முடிவினை அறிவித்துள்ளது. அமெரிக்காவுக்குப் படிக்க வரும் மாணவர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளது. விசா வேண்டி மனு செய்திருக்கும் மாணவர்களின் சமூக ஊடகச் செயல்பாடுகளை முழுமையாகத் தணிக்கை செய்த பின்னரே விசா வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டுக் கல்வியின்மீது மோகம் கொண்டு அதற்காக என்ன விலையென்றாலும் கொடுப்பதற்குத் தயாராக இருக்கும் மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் யோசிக்க வேண்டும். நல்ல திறமையான மாணவர்களின் ஆராய்ச்சி மற்றும் மேற்படிப்புக்கான தரமான பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் உருவாக வேண்டும்.
எது
எப்படி இருந்தாலும் டிரம்ப்பின் பதவிக் காலத்திற்குப் பின்னர் அமெரிக்கா தன் பல பெருமைகளை இழப்பதோடு
மட்டுமல்லாமல், உலக நாடுகளின் மற்றும் மக்களின் நம்பிக்கையையும் நன்மதிப்பையும் இழப்பது உறுதி!
பாவம்...
அமெரிக்க மக்கள்! அவர்களைவிட பாவம் அமெரிக்க இந்தியக் குடியேறிகள்! சொந்தச் செலவில் தங்களுக்கே சூனியம் வைத்துக் கொண்டார்கள். வேறு என்ன சொல்வது?