‘வரலாற்றிற்கு நாம் செய்யும் பெரிய சேவை என்பது, கடந்த கால நிகழ்வுகளைத் (வரலாற்று உண்மைகளை) திருப்பி எழுதுதல் அல்ல; வரலாற்று நிகழ்வுகளிலிருந்து தாழ்மையோடு கற்றுக் கொள்ளலே’ (‘தி இந்து’ - ஏப் 15, 2025).
அண்மையில்
‘நம்மை ஆள்வதற்கே உதித்தன’ என்று பிதற்றித் திரியும் கட்சிகளின் தேர்தல் காலக் கூத்துகள், உலக அரசியல் எங்குமே சந்தித்திராத பெரும் கூத்தாகும்.
நாகரிக
அரசியலின் சிந்தனையின் விளைவாக உருவான சனநாயகம் எனும் மிகப்பெரிய மானுட மதிப்பீடு மலிவான, தரம்தாழ்ந்த கட்சிகளால் சிதைக்கப்பட்டுவரும் நிலையில், மனச்சாட்சிமிக்க எவருமே கவலைகொள்ளாதிருக்க முடியாது. வள்ளுவர் காட்டும் கயமையின் இலக்கணத்தை வழுவாது காத்து நிற்கும் கூட்டம் மக்களுக்காகப் பேசுவதாகவும், ஊழலை ஒழிக்கப் போவதாகவும் உரத்தக் குரலில் பேசிவருகின்ற காட்சிகள் பொய்மையின் உச்சக்கட்டம்.
அரசியல்
செயற்பாடு, அரசியல் தந்திரம் மற்றும் யுக்தி என்பனவெல்லாம் அரசியல் உலகு சந்தித்து வரும் நிதர்சனங்கள்தாம். யுக்திகளும் இலக்கை அடைய கைகொள்ளும் முயற்சிகளும் நூறு விழுக்காடு அறவழியில்தான் நடத்திப்பெற வேண்டும் என்று எவரும் இன்று எதிர்பார்ப்பதில்லை. இத்தகைய ஓர் அறமழிந்த சோகத்தை நாம் கண்கூடாகக் காண்கின்ற நிலையில், இப்போக்கும் கடந்துபோகும் என்ற பொய்யான நம்பிக்கையைக் கடந்து சென்றிடலாமா? நாளும் ஆளும் பொறுப்பை ஏற்க விருப்பவர்களின் இந்த அநாகரிகச் செயல்களை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்? எதிர்கொள்வதும் எதிர்வினையாற்றுவதும் மானுடருக்கான இயல்பான கடமையென்பது உண்மையானால், குடிமக்கள் எப்படி எதிர்வினை ஆற்றப் போகின்றனர்? குடிமக்களுள் ஒரு பகுதியினரான, மதச்சிறுபான்மையினருள் ஒரு பிரிவினரான கிறித்தவர்கள் எப்படி எதிர்கொள்ளப் போகின்றனர்? அறமிழந்த இவ்வகை அரசியல் நடவடிக்கைகளைக் கண்டும் காணாதிருத்தல் மிகப்பெரிய பாவமில்லையா?
தேர்தலுக்கு
இன்னும் ஓராண்டு காலம் இருக்கும் வேளையில், பொறுமை இழந்து எதிர்க்கட்சித் தலைவர் புதுதில்லி விரைகிறார். இந்திய நாட்டின் உள்துறை அமைச்சர் சென்னை விரைகிறார். எதிர்க்கட்சித் தலைவர்
வீட்டின் விருந்தோம்பலில் மகிழ்கிறார். ஐந்து நட்சத்திர விடுதியில் கூட்டணியை அறிவிக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் கைகட்டி, வாய்பொத்தி நிற்கிறார். இவர்களுக்கு இந்த அவசரம் ஏன்? பகை, பிளவு, எதேச்சதிகாரம் எனும் கேடுகளின் விளை நிலமாம் இச்சக்திகள் காட்டும் வேகத்திற்கு எப்படி ஈடு கொடுக்கப்போகிறோம்? எப்படி எதிர்வினையாற்றப் போகிறோம்?
இயல்பும் முரணும்
கட்சிகள்
வெறும் பெயர்கள் அல்ல; கட்சிகள் சனநாயகத்தின் கொடை. கருத்துச் சுதந்திரம் இதன் உள்ளடக்கம். பன்மையைப் போற்றும் சனநாயகம் கருத்துரிமையை மதிப்பதால், ‘கருத்து’ எனும் உள்ளடக்கத்தைக் கொண்ட கட்சிகளை ஏற்கிறது. முரண்பட்ட கட்சிகள் இயங்கலாம் என்ற அடிப்படை உரிமை கட்சிகளுக்கு உண்டு. ஒரே கொள்கைகொண்ட கட்சிகள் இருக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது சனநாயகம் அல்ல; ஒரே தேசம், ஒரே தேர்தல், ஒரே பண்பாடு என்பதை நாம் ஏற்றுக்கொள்வதனால், ஒரே கொள்கையுடைய ஒரே கட்சிதான் இருக்கமுடியும் என்பதனையும் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தால் இந்த நிலைமைக்கு என்ன பெயர்?
இன்றைய நிலை
என்ன?
இன்று
இந்நாட்டை ஆளும் மதவாதப் பாரதிய சனதா கட்சி ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பின் அரசியல் முன்னணியென்பதை அனைவரும் அறிவர். ஆர்.எஸ்.எஸ். முன்னெடுக்கின்ற வலுவான சித்தாந்தங்களை மக்களிடம் எடுத்துச்செல்லும் ஒரு கருவியே இன்றைய ஆளுங்கட்சி; இது இந்து தேசத்தை உருவாக்க இந்துத்துவத்தைக் கேடயமாகக்கொண்ட கட்சி. இக்கொள்கைகளை உயிர்க் கொள்கையாகக்கொண்ட இக்கட்சி, சித்தாந்த வலுவுடைய இக்கட்சி, எந்தச் சூழலிலும் தன் கொள்கையைச் சமரசம் செய்வதே இல்லை. சனநாயகம், சமயச்சார்பின்மை, சமத்துவம் என்பன இக்கட்சியின் பொருந்தாக்கொள்கைகள். சனநாயகத்தின் அடிப்படைப் பண்புகளுக்கு எதிரான இக்கட்சி, சனநாயகம் தரும் தேர்தலை மிகச் சாதுரியமாகக் கையிலெடுத்து, மதவழி மக்களை ஓர்மைப்படுத்தி ஆட்சியைக் கைப்பற்றி வருவதோடு, தொடர்ந்து மக்களை மயக்கி ஆட்சியையும் நடத்தி வருகிறது.
வர்ண
தர்மத்தின் சாதிபேதத்தை ஒழித்து, சமதர்மத்தைப் பேணக் குரல் கொடுத்த பெரியாரின் திராவிடம் தீர்க்கமான கோட்பாட்டை அல்லது சித்தாந்தத்தைக் கொண்டது.
ஒன்று
மனுவாதி பேசுவது’ மற்றொன்று சமூக நீதி பேசுவது. இரண்டும் முரண்பட்டவை. இவைகளுள் சமரசம் செய்துகொண்டு தேர்தலில் போட்டியிட்டால், அது இயல்பான கூட்டணியா? கள்ளக் கூட்டணியா? இது முரணா? இயல்பா?
இக்கள்ளக்
கூட்டணியில் சவாரி செய்த அவப் பெயர் இன்றைய திராவிட மாடல் ஆட்சிக்குத் தலைமை ஏற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் உண்டு. திராவிடச் சித்தாந்தத்தை உரக்கப் பேசும் தி.மு.க.
தேசிய சனநாயக முன்னணியோடு ‘கூட்டணி’ என்ற பொய்மையில் வாழ்ந்த காலமும் உண்டு. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின்போது பாரதிய சனதாவோடு பொருந்தாக் கூட்டணி அமைத்து, தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் தாமரையை அறிமுகப்படுத்திய பெருமை கலைஞருக்கும் உண்டு.
எதிர்கொள்ளும்
பேரபாயம்
இந்திய
சனநாயகம் அல்லது இந்திய சனநாயகக் குடியரசு மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டிய அவலத்தில் உள்ளது.
இந்தியா
எனும் ஓர் உபகண்டம், இதன் உண்மையான பன்முகப் பண்புகளைக் காத்திட துணை நிற்கும் சனநாயகம் எனும் வலுவான தூண் இன்றைய ஆட்சியாளர்களின் பாசிசப் போக்கினால் தகர்ந்து போய்விடுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது. சனநாயக இந்தியாவா? சனநாயகத்தை அப்புறப்படுத்தும் எதேச்சதிகார அரசா? என்ற கேள்வி எழும் பேரபாயச் சூழலில் நாடு நிற்கிறது.
சனநாயகம்
எனும் மாபெரும் மானுட மதிப்பீட்டைத் தாங்கி நிற்கும் இந்திய அரசமைப்புச் சட்டங்கள், படிப்படியாகத் துகில் உரியப்பட்டு வருவதை இந்நாட்டுக் குடிமக்கள் மகாபாரதத் துரியோதனக் கூட்டத்தினரைப் போல் காணாதிருக்கின்றனரா? அல்லது கண்டும் செயல்படும் ஆற்றலின்றி இருக்கின்றனரா?
என்ன
நடக்கிறது? நாட்டின் ஒருமை, ஒற்றுமை, இறையாண்மை என்பனபற்றியெல்லாம் எந்தத் தெளிவும் பெற இயலா மக்கள் ஒருபக்கம்; மறுபக்கம் பொய்யான சொல்லாடல்களை நம்பி ஏமாந்து போகும் மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதி; ஏமாற்றத்தையும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் நிலை வேறு. அண்மையில் தமிழ்நாட்டு கட்சிகள் முன்னெடுத்திருக்கும் கூட்டணி முடிவுகள் மிகப்பெரிய ஆபத்தைத் தருவன. திராவிடத் தமிழ்நாட்டில் பா.ச.க.வோடு கூட்டணியென்பது ‘முரணான’ கூட்டணியாகத்தான் இருக்க முடியுமென்பதே உண்மையாயிருக்க, இக்கூட்டணியை ‘இயல்பான’ கூட்டணியென்று அ.தி.மு.க.வும் பாரதிய
சனதாவும் அறிவிக்கின்றன என்பதுதான் இங்கு வேடிக்கை.
‘இயல்பான கூட்டணி’ என்ற சொல்லாடல் தமிழ்நாட்டுத் தேர்தல் கூட்டணி வரலாற்றுக்குப் புதிதல்ல. தமிழகத்தை ஆண்ட ஜெயலலிதா அம்மையார் ‘மோடியா? லேடியா?’ என்ற தேர்தல் முழக்கமாக ஓங்கி ஒலித்தாலும், அம்மையார் பாரதிய சனதாவின் அடிப்படைக் கொள்கைகளோடு முரண்பட்டவர் அல்லர். அம்மையார் தீவிர இந்து மத பக்தர் என்பதால்
நாம் இம்முடிவுக்கு வரவில்லை. இராமசென்ம பூமியில் இராமருக்கான கோவில் விவகாரத்தில் இவர் காட்டிய சார்புநிலை, கோவில் கட்ட கரசேவகர் மூலம் செங்கற்களை அனுப்பி வைத்த முறை, இராமருக்கான கோவிலைக் கட்டி எழுப்புவதற்கான முடிவை நியாயப்படுத்திய முறை என்பவையெல்லாம் இவரின் மதச்சார்பை மட்டுமல்ல, அரசியல் சார்பையும் வெளிப்படையாகவே காட்டின.
அவர்
ஆட்சியின்போது தலைநகர் டில்லியில் நடந்த தேசிய ஒருமைப்பாட்டுக் கூட்டமொன்றில், “சிறுபான்மையினருக்கு அளிக்கப்பெறும் உரிமைகள் பெரும்பான்மையினரின் பாதுகாப்பைப் பாதிக்கக்கூடாது” என்ற
இவரின் கருத்து இந்திய மதப் பெரும்பான்மை மதவாதிகளின் போக்கைப் பிரதிபலிக்கவில்லையா? தமிழ்நாட்டில் இவர் அறிமுகப்படுத்திய மதமாற்றுத் தடைச்சட்டம் இவரின் முகவரியை மிகத் தெளிவாகவே காட்டியது. சுருங்கக் கூறினால், அம்மையார் பா.ச.க.வோடு தேர்தல் கூட்டணி கொள்ளாவிட்டாலும், பா.ச.க.வின் உள்ளார்ந்த மதவாதத்திற்கு முற்றிலும் முரண்பட்டவர் அல்லர் என்பதே உண்மை.
தான்
சார்ந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பூர்வாசிரமக் கோட்பாடுகளுக்கும், இவருக்கும் எத்தகைய தொடர்பும் கிடையாது. இவருக்கு முந்தைய முதல்வர் எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்களின் நீண்டகாலத் திராவிட இயக்கத் தொடர்பின் சாயல் இவர் ஆட்சியின் எப்பகுதியிலும் வெளிப்பட்டதாகவே தெரியவில்லை. திராவிடத்தின் சமூகநீதிக் கொள்கைக்கு முற்றிலும் முரணாக, பொருளாதார அடிப்படையிலான கொள்கையைத் தமிழ்நாட்டில் முன்னெடுத்து, மக்கள் கொடுத்த தேர்தல் தோல்வியால் பின்வாங்கியவர் எம்.ஜி. இராமச்சந்திரன். அ.தி.மு.க. முன்னோடிகளின் கொள்கை
பின்னணி இப்படியிருக்க, இன்றைய எடப்பாடியார் எப்படி முரணான முடிவுகளை எடுக்கமுடியும்? அ.தி.மு.க.வின் இன்றைய
பாரதிய சனதாவுடனான கூட்டணியில் புதுமை எதுவுமில்லை. பாரதிய சனதா தன் கொள்கைகளை என்றுமே எங்குமே மறைத்ததில்லை. இன்று பாகிஸ்தானுக்கு எதிராக முன்னெடுக்கும் ‘சிந்தூர்’
போர் நடவடிக்கையின் ஒவ்வொரு பகுதியிலும் இந்தியப் பெரும்பான்மைவாதச் சாயலைப் பார்க்க முடியும்.
நாம் எங்கே
இருக்கிறோம்?
மதவாதிகள்,
அன்றைய இந்துத்துவப் பெரும்பான்மைவாதிகள் எதையெல்லாம்
கொள்கையாக வகுத்தனரோ, அவை எல்லாவற்றையும் இன்று நிறைவேற்றி வருவதைப் பார்க்கிறோம். அரசின் அனைத்துக் கொள்கை முடிவுகளும் இந்திய சனநாயகத்திற்கும் அரசமைப்புக்கும் எதிரானவை என்றாலும், ஆட்சி அதிகாரம் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதைத்தான் பார்க்கிறோம்.
அ.தி.மு.க.,
பாரதிய சனதாவின் எந்தக் கொள்கை முடிவுகளையும் எதிர்த்ததில்லை. எனவேதான்,
இடையில் முறிந்தது போன்று காட்டப்பெற்ற உறவு, மீண்டும் துளிர்த்தமைக்குக் காரணம் இதுவே. இவ்விரு கட்சிகளும் உறவுகொண்டதை விமர்சித்த தமிழ்நாடு முதல்வருக்கு எடப்பாடியார் அளித்த பதிலை நாம் நினைவுகொள்ளல் அவசியம். “நாங்கள் எவருடனும் கூட்டணி வைக்கமுடியும். ஏன் முதல்வர் பதறுகிறார்?”
எடப்பாடியார்
பதில் மிக ஆழமானது, அ.தி.மு.க.வின் இலட்சக்கணக்கான
தொண்டர்களுக்கு இப்பதில் தரும் செய்தி என்ன? அ.தி.மு.க.வின் இந்நிலைப்பாடு
தமிழ்ச் சமூகத்திற்குத் தரும் செய்தி என்ன?
கட்சித்
தலைவர்களின் போக்கு சுயநலப் போக்கில் அமைந்திருக்கலாம். தி.மு.க.
அரசை வீழ்த்த நினைக்கும் தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி எடுக்கும் நிலைப்பாடு அல்ல; பாரதிய சனதா என்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் முன்னணியின் கருத்தியல், தமிழ்நாடெங்கும் பரவிக் கிடக்கும் கட்சித் தொண்டர்களை ஈர்க்கும் கருத்தாக மாறுகையில் பின்விளைவை, அபாயத்தை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம்?
கறுத்துத் திரண்ட பகைமேகங்கள் கலையத் துவங்கியுள்ளன. பீரங்கிகளும் ட்ரோன்களும், நாடுவிட்டு நாடு தாவும் ஏவுகணைகளும் அவைகளை இயக்கிய இராணுவமும் தங்களது செயல்பாடுகளை நிறுத்தியுள்ளன. நம் எல்லைப்புற மாநிலங்களில் வாழும் பொதுமக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவதை நம்மால் கேட்க முடிகிறது.
ஏப்ரல்
மாதம் 22-இல் தொடங்கி மே மாதம் 7-இல்
உச்சத்தைத் தொட்ட சில இந்தியக் காட்சி ஊடகங்களின் ‘கூச்சல்’ இன்னும் ஓய்ந்தபாடில்லை. இரண்டு நாடுகளிலும் ஏதுமறியாத அப்பாவி பொதுமக்களின் பேரிழப்புகளுக்கும் பெரும் துன்பங்களுக்கும் காரணமாக இருக்கும் ஒரு யுத்தத்தை ஐ.பி.எல்.
கிரிக்கெட் போட்டியைப்போல வணிகப்படுத்தி வியாபாரம் செய்த அவர்கள் எப்போது திருந்துவார்கள் என்று நமக்குத் தெரியவில்லை. செய்திகளைச் சுவைப்படச் சொல்ல சிறிது ‘மசாலா’ தேவை என்பதை நம்மால் புரிய முடிகிறது; ஆனால், செய்தி முழுவதுமே ‘மசாலா’ என்றால் அதனை எப்படி ஏற்றுக்கொள்வது? ‘தேசிய ஊடகங்கள்’
என்று தங்களைப் பெருமையோடு அழைத்துக்கொள்ளும் சில பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட காட்சிகளுக்கும் (Visuals), களத்தில்
நடந்தவைகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை உண்மை கண்டறியும் பல நடுநிலை ஊடகங்கள்
வலுவான ஆதாரங்களோடு நிரூபித்துள்ளன. அவற்றை மற்றுமொரு சந்தர்ப்பத்தில் விரிவாக அலசுவோம்.
முதலில்,
நமது இராணுவத்தின் முப்படைகளுக்கு நமது மனம் நிறைந்த பாராட்டுகளும் நன்றிகளும்! ‘சிந்தூர் நடவடிக்கைகள்’ தொடங்கிய
நாளில் இருந்து, முடிந்த நிமிடம் வரை பாகிஸ்தான் அரசையும், அவர்களது இராணுவத்தையும், தீவிரவாதக் குழுக்களையும் கலங்கடிக்கச்செய்து அவர்களை நிலைகுலையச் செய்த நம் இராணுவத்தினரின் வீரதீர சாகசங்களை எப்படிப் பாராட்டினாலும் தகும்! எதிரியின் அடிமடியிலேயே கைவைத்து, தங்களது அசைக்கமுடியாத, வலிமையான யுத்த ஏற்பாடுகள் என்று அவர்கள் எண்ணிக்கொண்டிருந்த இடங்களுக்குள் எல்லாம் எளிதாக நுழைந்து எதிரிகளின் உயிர்த்தளங்களைச் சில நிமிடங்களிலேயே நிர்மூலமாக்கும் நமது இராணுவத்தின் நவீன தொழில்நுட்ப வசதிகளையும், அவைகளை மிகவும் இலாவகமாகக் கையாளும் நமது வீரர்களின் திறமைகளையும் துணிச்சலையும் பார்த்து, பாகிஸ்தான் மட்டுமல்ல, உலக நாடுகளே பிரமிப்படைந்துள்ளன. நமக்குச் சேதங்களே இல்லை என்பது அல்ல; யுத்தக் களத்தில் சேதம் இல்லாமல் இருப்பது எப்படிச் சாத்தியம்?
‘சிந்தூர்’
இராணுவ நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட செலவுகளும் இழப்புகளும் ரூபாய் 50,000 கோடி என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. இராணுவ நடவடிக்கைகளின்போது உயிரிழந்த வீரர்களுக்கும், பாகிஸ்தான் இராணுவத்தின் முறையற்ற தாக்குதலால் உயிரிழந்த பொதுமக்களுக்கும் நமது வீர வணக்கம்!
‘போர்’ என்று அறிவிக்கப்படாத இந்த இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதை நாம் வரவேற்கிறோம். பாகிஸ்தானின் எல்லை தாண்டும் பயங்கரவாத நடவடிக்கைகளும், அவர்களோடு நாம் யுத்தம் நடத்துவதும் இது ஒன்றும் முதல்முறையல்ல. ஒவ்வொரு முறையும் நம்மோடு மோதுவதும், மோதித் தோற்றபின் அவமானப்படுவதும் பாகிஸ்தானுக்குப் புதிதல்ல. நமது கடந்தகால அனுபவங்களை நினைவில் கொண்டு, புதிய சூழ்நிலைகளின் கட்டாயங்களை உள்வாங்கி, எதிர்காலத்தில் இப்படிப்பட்ட அத்துமீறல்களை முழுமையாகத் தவிர்க்கும் அணுகுமுறைகளின் அடிப்படையில் ‘சிந்தூர்’
இராணுவ நடவடிக்கைகளை நாம் நிறுத்தியுள்ளோமா? என்கிற கேள்வியினைப் பல புவிசார் அரசியல்
நோக்கர்கள் முன்வைத்துள்ளனர்.
1965-இல் நாம்
யுத்தத்தை நிறுத்தியதும் அயூப்கான் அரசு கவிழ்ந்தது. 1971-இல் நம் யுத்தம் முடிந்தபோது பாகிஸ்தானை இரண்டாக உடைத்து, அதன் பூகோளத்தையே மாற்றி அமைத்தார் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி. 1999-இல் யுத்தம் முடிந்தபோது பாகிஸ்தானை அமெரிக்கா உள்பட உலக நாடுகளால் ‘இரவுடிகளின் தேசம்’
(Rogue State) என்றழைக்கப்பட்டு,
கார்க்கிலில் இருந்து நமது இராணுவத்தால் பாகிஸ்தான் படைகள் அவமானத்துடன் வெளியேற்றப்பட்டன. இம்முறை நமது இராணுவம் வெற்றி முகத்தில் இருந்தபோது, வரலாற்றில் என்றும் இல்லாத அளவுக்குப் பாகிஸ்தான் பலவீனப்பட்டு நிற்கின்றபோது, இனிமேல் அவர்கள் விரும்பினாலும் எல்லை தாண்டும் பயங்கரவாதத்தில் ஒருநாளும் ஈடுபட முடியாத ஓர் ஏற்பாட்டை உருவாக்கும் சாத்தியம் இருந்த வேளையில், அந்த வாய்ப்பினைத் தவறவிட்டுவிட்டோமோ என்ற வினாவை என்னால் தவிர்க்க இயலவில்லை.
கடந்தகால
யுத்தங்களின்போது நமக்குக் கிடைக்காத பல அனுகூலங்களும், சாதகமான
சூழ்நிலைகளும் இம்முறை நமக்கு இருந்தன என்பதை யாரும் மறுக்க இயலாது. இம்முறை இந்தியாவின் அனைத்து அரசியல் கட்சிகளும், குடிமைச் சமூகமும் தங்களது ஒட்டுமொத்த ஆதரவினை ஒன்றிய அரசுக்கு வழங்கின. தேசத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் குறிப்பாக, இசுலாமியப் பெருங்குடி மக்களும் பயங்கரவாதத்தின் விளைநிலமாக இருக்கின்ற பாகிஸ்தான் இராணுவத்தின் விஷப்பற்களை வேரோடு பிடுங்கி எறியவேண்டும் என்பதிலே ஒன்றுபட்டு நின்றனர். இசுலாமிய நாடுகளும் பயங்கரவாதத்தினை ஒழிக்கவேண்டும் என்ற இந்திய நிலைப்பாட்டை ஒன்றுபட்டு ஆதரித்தன.
கடந்த
யுத்தங்களின்போது இந்தியாவுக்கு எதிராகப் பாகிஸ்தான் ஆதரவு நடவடிக்கைகளை எடுத்து, ஆயுதங்கள் உள்பட அனைத்து உதவிகளையும் பாகிஸ்தானுக்கு வழங்கிய அமெரிக்கா இப்போது நமது நட்பு நாடு. அதன் அதிபர் டிரம்ப் நமது பிரதமர் மோடியின் தனிப்பட்ட நண்பர்.
நமது
நாடு உலகின் வல்லரசுகளில் ஒன்று. நாம் இன்று உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரச் சந்தை. உலகில் மிக அதிகமாக நவீன ஆயுதங்களை வாங்கிக் குவிக்கும் நாடு. இவ்வளவு வசதிகள் இருந்தும், பாகிஸ்தான் எனும் பயங்கரவாத நாட்டின் முதுகெலும்பை உடைக்கவில்லையே என்ற ஆதங்கம் பெரும்பாலான இந்தியர்களுக்கு இருக்கிறது என்பதை நமது பிரதமருக்கு யார் கூறுவது?
யுத்தத்தின்
வெற்றிப்பிடி நம் கையில் இருக்கும்போது, தோல்வி பயத்தில் எதிரி துவண்டு கிடக்கும்போது ‘உன்னை மன்னித்து இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துகிறோம்’ என்று
நமது பிரதமர் அல்லவா அறிவித்திருக்க வேண்டும்! அதனை எப்படி அமெரிக்கக் குடியரசு தலைவர் அறிவிப்பது? அது நமது இறையாண்மைக்கு அவமானமல்லவா?
“இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால் உங்கள் இரண்டு நாடுகளோடும் அமெரிக்கா எவ்வித வியாபாரத் தொடர்பும் வைத்துக்கொள்ளாது’ என்று
நான் எச்சரித்தவுடன், இரண்டு
நாட்டு பிரதமர்களும் அதன் விளைவுகளைப் புரிந்துகொண்டு உடனடியாக இராணுவத் தாக்குதல்களை நிறுத்திவிட்டனர்” என்று அதிபர் டிரம்ப் பேசுவதை நமது பிரதமர் மோடி எப்படிச் சகித்துக்கொள்கிறார்? வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தன்னை ஓர் அஞ்சாநெஞ்சன் என்று வெளிப்படுத்திக்கொள்ளும் நமது பிரதமர், பலமுறை பல சர்வதேச அரங்குகளில்
டிரம்ப் இப்படித் தொடர்ந்து பேசிவருகின்றபோது அமைதி காக்கவேண்டிய அவசியம் என்ன?
நாட்டு
மக்களிடம் உரையாற்றிய பிரதமர், “நமது இராணுவத் தாக்குதல்களைச் சமாளிக்க முடியாத பாகிஸ்தான் இராணுவத் தளபதி, நமது இராணுவத் தளபதியிடம் ‘தாக்குதல்களை நிறுத்துங்கள்’ என்று
கெஞ்சிக் கேட்டார். அதனால் தாக்குதல்களை நிறுத்திவிட்டோம்” என்று
பேசினார். ஆனால்,
நமது பிரதமர் பேசுவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்னரே பாகிஸ்தான் மக்களிடம் பேசிய பாகிஸ்தான் பிரதமர்,”நாம் இந்தியாவை வென்றுவிட்டோம்; இந்த வெற்றிக்கு உதவி செய்த சீனா, அமெரிக்க அதிபர்களுக்கு நன்றி” என்று எப்படிப்
பேசினார்? நமது தாக்குதல்களைத் தாக்குப்பிடிக்க முடியாத ஒரு நாட்டின் பிரதமர் இப்படிப் பேசக்கூடுமா? இப்படி மமதையுடன் பேசும் அவர்கள் எதிர்காலங்களில் ஒழுக்கமாக இருப்பார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
பிரதமர்
இவற்றையெல்லாம் தெளிவுபடுத்த வேண்டும். பாராளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, பாராளுமன்றத்திற்கும் அதன் மூலமாக நாட்டு மக்களுக்கும் ‘சிந்தூர்’
இராணுவ நடவடிக்கைகள் மூலம் தாம் பெற்ற அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
தாக்குதலுக்குப்
பின்னரும், இராணுவ நடவடிக்கைகளுக்கு முன்னரும் ஒன்றிய அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் கலந்துகொள்ளாததைச் சாதாரணமாகப் பார்க்க முடியாது. இந்திய சனநாயகத்தில் தவிர்க்கக்கூடாத எதிர்க்கட்சிகளைச் சந்திப்பதை ஏன் அவர் தவிர்த்தார் என்பது நமக்குப் புரியவில்லை.
பகல்காம்
சம்பவங்களுக்குப் பாதுகாப்புக் குறைவின்மை ஒரு காரணம் என்பதை ஆராய்ந்து, அதற்குக் காரணமானவர்கள்மீது நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும். இரண்டாயிரம் மைல்களுக்கப்பால் இருக்கிற பயங்கரவாதிகளின்
பதுங்கிடங்களைக் கண்டு நூறு பயங்கரவாதிகளை அழித்தொழித்த நமது படைகளால், நமது நாட்டுக்குள் இருநூறு கிலோமீட்டர் தூரம் உள்ளே வந்து அப்பாவி பொதுமக்கள் இருபத்தாறு பேரைக் கொன்றுவிட்டு தங்களது வசதிப்படி தப்பிச்சென்ற பகல்காம் பயங்கரவாதிகளை இன்னும் பிடிக்க முடியவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள மனம் வருந்துகிறது. அவர்களைப் பிடித்துச் சட்டத்தின் முன்பு நிறுத்தி, நியாயம் காணும்வரை தங்கள் குடும்ப ஆண்களை இழந்த நமது பெண்கள் எப்படி அமைதியடைவர்?
பிரதமர்
உரையில் எனக்கு மிகவும் பிடித்த வாசகம் ஒன்று: “நமது ஒற்றுமையே நமது பலம்.” பிரதமரின் இந்தக் கருத்தை நான் அப்படியே வழிமொழிகிறேன். பிரதமர் போற்றும் தேச ஒற்றுமையைக் குலைக்க கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படும் தேச விரோதிகளை அடையாளம் கண்டு அவர்கள்மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, தேசத்தின் ஒற்றுமையினைப் பிரதமர் காப்பாற்ற வேண்டும்.
ஆனால்,
பிரதமர் கூறுவதை அவரது சொந்தக் கட்சியினரே பின்பற்றுவதாகத் தெரியவில்லையே! பகல்காம் சம்பவங்கள் நடந்து முடிந்தவுடன் அந்தப் பயங்கரவாதப் படுகொலைகளைத் தொடர்புபடுத்தி தேசம் முழுவதும் இசுலாமிய எதிர்ப்புணர்வினை உருவாக்குகின்ற வகையில் வலதுசாரி பாசிச மதவெறி சக்திகள் ஒரு பெரும் வெறுப்புப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டனர். பயங்கரவாதத்திற்கு மதமில்லை என்று உணராத அவர்களது வெறுப்புப் பிரச்சாரத்தை, அப்படுகொலைகளால் உறவுகளை இழந்து பாதிக்கப்பட்டவர்கள் கூட ஏற்றுக்கொள்ளவில்லை. அநியாயமான அந்த விஷமப் பிரச்சாரத்தைக் கைவிடவேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர்கள் மீதும் மிகவும் கேவலமான தாக்குதல்களை மதவெறி சக்திகள் வன்மத்துடன் தொடர்ந்தன.
கொல்லப்பட்ட
கடற்படை அதிகாரியின் மனைவி ஹிமான்ஷி அகர்வால் “இந்தத் துன்பியல் சம்பவத்திற்குக் காஷ்மீரிகளையோ, முசுலிம்களையோ குறைசொல்ல வேண்டாம்”
என்று இணையதளத்தில் தெரிவித்ததற்குப் பா.ச.க.
உள்பட பலர் அவரை மிகவும் கொச்சையாக விமர்சித்தனர். இறந்துபோன திருவனந்தபுரம் இராமச்சந்திரன் என்பவரின் மகள் திருமதி. சரத் அந்த இக்கட்டான சூழ்நிலையில் தன்னோடு இறுதிவரை நின்று உதவி செய்த இரண்டு இசுலாமியக் காஷ்மீரி இளைஞர்களைப் பார்த்து, “தந்தையை இழந்து நின்ற எனக்கு இறைவன் கொடுத்த இரண்டு சகோதரர்கள்” என்று
கூறியதையும் வலதுசாரி மதவாதச் சக்திகள் கடுமையாக, கொச்சையாக விமர்சித்தன.
பயங்கரவாதச்
சம்பவங்களுக்குத் தங்களது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளூர் மக்கள் செய்த அனைத்து உதவிகளையும் செய்திகளாக வெளியிட்ட உள்ளூர் தொலைக்காட்சிகளையும், பத்திரிகையாளர்களையும் வன்முறையாளர்கள் கடுமையாக மிரட்டினர். காஷ்மீரத்துச் சாமானிய மக்கள் - குதிரை ஓட்டுவோர், சுமை தூக்கும் கூலித் தொழிலாளர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் போன்றவர்கள் தங்களது உயிரைப் பணயம் வைத்து சுற்றுலாப் பயணிகளைப் பாதுகாத்து உதவி செய்தனர். ஆனால், தேசிய ஊடகங்கள் உள்பட பெரும்பாலான ஊடகங்கள் இந்த நல்ல செய்திகளை இருட்டடிப்பு செய்தன.
பகல்காம்
பயங்கரவாதப் படுகொலைகள் நடப்பதற்குப் பாதுகாப்புக் குறைபாடுகளும் ஒரு காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. அதற்கு யார் பொறுப்பேற்பது? என்ற கேள்வியைக் கேட்பதே தேச விரோதச் செயல் என்று அவர்கள் கொக்கரிப்பதை எப்படிப் புரிந்துகொள்வது? இதனைப் பற்றிய விவாதங்கள் பொதுத்தளத்தில் வந்துவிடக்கூடாது என்பதிலும் அவர்கள் மிகவும் கவனமாக இருக்கிறார்கள் என்பது மட்டும் நமக்குத் தெரிகிறது. இதற்காகவே இந்த வெறுப்புப் பிரச்சாரத்தை வேகப்படுத்துகிறார்கள் என்று கருதத் தோன்றுகிறது. அதற்காகச் சில நேரங்களில் அவர்கள் எல்லைகளை மீறும்போது தேசத்தின் எதிர்காலம் பற்றிய நமது கவலை அதிகமாகிறது.
நீண்ட
அனுபவம் உள்ளவரும், இராஜதந்திர நடவடிக்கைகளில் நிறைந்த அனுபவம் உள்ளவருமான நமது வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி, இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டது என்பதை அறிவித்ததற்காக அவர் மோடியின் விருப்பத்திற்கு எதிராகச் செயல்படுகிறார் என்று சமூக ஊடகங்களில் அவர்மீது பழிசுமத்தி அவரையும், வெளிநாட்டில் வாழும் அவரது மகளையும் வரைமுறையில்லாமல் திட்டித்தீர்த்த சங்கிகளின் மூர்க்கத்தனத்தைத் தடுத்து நிறுத்தி, தட்டிக்கேட்டுத் தவறிழைத்தவர்கள்மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா? ஐ.ஏ.எஸ்.
அதிகாரிகள் சங்கத்திற்கு இருந்த உணர்வுகூட ஒன்றிய அரசிடம் இல்லையே! கடைசியில் தனது சமூக ஊடகக்கணக்கையே மூடிவைப்பதைத் தவிர மிஸ்ரிக்கு வேறொன்றும் செய்ய இயலவில்லை! அதைவிடப் பெரும் கொடுமை ‘மதச்சார்பற்ற இந்திய இராணுவத்தின்’ முகமாகச்
சர்வதேச ஊடகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு இராணுவ நடவடிக்கைகளை ஒவ்வொரு நாளும் சர்வதேச ஊடகங்களுக்குச் சிறப்பாக அறிவித்துக் கொண்டிருந்த கர்னல் சோபியா குரேஷியை ‘பயங்கரவாதிகளின் சகோதரி’ என்று மத்தியப் பிரதேசத்தின் பா.ச.க.
அமைச்சர் விஜய்ஷா பகிரங்கமாக அறிவித்ததுதான். தேசம் முழுவதும் உள்ள குடிமைச் சமூகமும், உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் அவருக்குக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்த பின்னரும் பிரதமரும் பா.ச.க.வும் அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வராதது ஆச்சரியமாக இருக்கின்றது.
தேச
ஒற்றுமையின் ஆணிவேரை அழித்துவிடத் துடிக்கும் இப்படிப்பட்ட தேசவிரோதிகளின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்காமல், எப்படித் தேச ஒற்றுமையைக் காப்பது என்பதைப் பிரதமர் நமக்கு விளக்க வேண்டும். அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் அமைச்சர்களுக்கே தேச ஒற்றுமையில் நம்பிக்கை இல்லை என்றால், நாட்டின் எதிர்காலம் என்ன?
எங்கள்
பிரதமரே! எனக்கு நம்பிக்கை இல்லாத, தனது சிந்தனையில், செயல்பாட்டில், அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தாத ஒரு தத்துவத்தை நான் மற்றவர்களுக்குப் போதிப்பதால் என்ன மாற்றம் வந்துவிடும்? சொல்லுங்களேன்!
அண்மையில் இஸ்தான்புல் தொழில் பல்கலைக்கழக விஞ்ஞானி செம்ரா ஓர்கான் என்பவர் ‘ஏ.ஐ.’-யை அணுகுண்டுவிற்கு ஒப்பானது என்றும், எப்படி அணுகுண்டு அழிவிற்குக் காரணமாயிருக்கிறதோ, அதேபோன்று கடந்த காலத்தில் நன்மை பயக்கும் அணு விஞ்ஞான ஆராய்ச்சிக்கும் தூண்டுகோலாயிருந்தது. அதேபோன்று, வருங்காலத்தில், ஆக்கத்திற்கும் அழிவிற்கும் ‘ஏ.ஐ.’ காரணமாய் அமையலாமென்றும் கூறுகிறார். இவர் கணித்ததுபோன்று இன்று உலகம், மின் தட்டுப்பாட்டைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதை ஈடுகட்ட அணு மின்சக்தியை நாடும் நிலை உருவாகியுள்ளது.
காயா
என்ற விஞ்ஞானி கூறுகிறதாவது: ‘ஏ.ஐ.’-யின்
தொழில்நுட்பம் சுகாதாரம், கல்வி, நீதி போன்ற துறைகளில் பயனளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக, நீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கும் வழக்குரைஞர்களுக்கும் ‘ஏ.ஐ.’ மூலம்
வேலைப் பளு குறையும்; அதேபோன்று மருத்துவத்துறையில் புற்றுநோய் அல்லது இல்லாத (non tumorous) செல்களைத் துல்லியமாக ஆயந்தறியவும் உதவும். ஆனால், எவ்வளவு நன்மைகளிருந்தாலும், ஆயுதப் போட்டிக்கு இது காரணமாகிவிடும் என்று கூறுகிறார்.
போகும்
வேகத்தில் ‘ஏ.ஐ.’-க்கு
ஓர் ஆணையிட்டால் அதனை அப்படியே (blind folded) நடைமுறைப்படுத்தும் திறன் கொண்ட
தொழில்நுட்பங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. ‘ஏ.ஐ.’ தன்னிச்சையாக
இயங்குவதால் அது எந்த வகையில் மனித வாழ்க்கைக்கு நன்மை பயக்கும் என்று ஆராய வேண்டுமென்கிறார். ஒரு பக்கம், வேலை இழப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாகவும், இச்சூழல் குழந்தைகளின் எதிர்காலத்தை எவ்வாறு பாதிக்கும் என்பது அடுத்த பத்து ஆண்டுகளைப் பொருத்திருக்கிறது என்கிறார்.
‘நசீம் கெமல் உரெ’ என்ற விஞ்ஞானி தானியங்கி மூலம் ஓட்டுநரில்லாத வண்டிகள் (driverless vehicles) பல விரைவில் நடைமுறைக்கு
வரவிருக்கின்றன; அதன் விளைவுகளை நாம் எதிர்கொள்ளவும் ‘ஏ.ஐ.’ அல்கோரிதம்
அடிப்படையில் (possiblilties) இயங்குவதால், எதிர்பாரா விளைவுகளைச் சமாளிக்கத் தயாராக இருக்க வேண்டும் என்கிறார்.
மனிதனுக்கு இணையான
ஏ.ஐ.
(human level ai)
மனிதனுக்கு
இணையான ‘ஏ.ஐ.’ என்பது
ஓர் இயந்திரம் அல்லது பல இயந்திரங்களின் கட்டமைப்பு
(networks of machines) செய்யும் திறன் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அதாவது, மனிதர் செய்யும் வேலைகளைக் கற்பதோடு, அவற்றைச் செய்யும் திறனையும் பெற்று, இலக்குகளை ஏற்படுத்தி அதனை அடைய முனைவது. உதாரணமாக, மொழிபெயர்ப்பாளர், மருத்துவர், விளக்குபவர்/விரிவுரையாளர், ஆசிரியர், சிகிச்சையாளர், வாகன ஓட்டுநர், முதலீட்டாளர் என்ற பணிகளை ‘ஏ.ஐ.’ செய்தல்.
மற்றொன்று,
இன்றுள்ள அனைத்துத் தொழில்நுட்பத் தளங்களையும் இணைத்து (technology of wireless networking to connect the device) பயன்பாட்டினால் மாபெரும் தகவல் களஞ்சியம் (IOT (Internet Of Things) என்ற
தளமாக உருவெடுத்திருப்பது. இதன் வாயிலாக, எவ்வாறு பெருங்கடல் ஒரு திமிங்கலத்திற்கு விளையாட மகிழ்ச்சி தருகிறதோ அதேபோன்று, ‘ஏ.ஐ.’ கையாள்வதற்கு
எண்ணற்றத் தரவுகள் கிடைக்கும்; அதன்மூலம் சமுதாயம் அடையும் நன்மைகள் ஏராளம் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில், முடிவெடுப்பவர் ஞானமுள்ளவராகவோ அல்லது கனிவானவராகவோ இருக்கலாம்.
கேடுண்டாக்கும் செய்தி கேடான முடிவுகளை எடுக்க உடந்தையாய் இருக்கிறது என்பது நம் அனுபவம்.
இதற்குப்
பல உதாரணங்கள் இருக்கின்றன. ஒன்று, இவ்வளவு ஏராளமான தரவுகளிலிருந்தும் உலக வெப்பமயமாதலுக்குக் காரணமான கரியமில வாயு தொடர்ந்து வெளிப்படுத்துவதைத் தவிர்க்க ஏன் தீவிரம் காட்ட முடியவில்லை? அமெரிக்க முதலீட்டாளர் Marc Andreessen தன்னுடைய ‘6.6.23’ கட்டுரையில ‘ஏ.ஐ. மனித இனத்தின்
அனைத்துத் தேவைகளையும் தீர்த்துவிடும்’ என்றும்,
‘ஏ.ஐ.’ உலகை அழிக்காது; ஆனால், காப்பாற்றும்’ என்றும்
கூறுகிறார்.
உலகின்
புகழ்பெற்ற தத்துவ ஞானிகளும், ‘ஏ.ஐ.’ வல்லுநர்களும்
(Yoshua Bengal, Geoffrey Hinton, Sam Altman, Elon musk, Mustsfa
Suleyman) AI மனித
நாகரிகத்தை அழித்துவிடலாம் என்கின்றனர். சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள் ‘ஏ.ஐ.’ தெரிந்தோ
தெரியாமலோ மனித சமுதாயத்திற்குத் தீங்கு இழைக்கலாம் என்று (Bletchley declaration on AI) ஒரு
சாசனத்தில் கையெழுத்தும் இட்டுள்ளனர்.
மனிதர்களில்,
பேராசையும் கொடூரக்குணமும் அதிகாரத்தின் மீது மோகமும் கொண்ட சிலர் எப்போதும் இருக்கிறார்கள் என்பது வரலாறு. 1933-ஆம் ஆண்டு ஜெர்மனியில் ஹிட்லரைத் தலைவராகப் பெரும்பான்மையான மக்கள் தேர்ந்தெடுத்தனர். ஏன்? அவர்கள் மனநோயாளிகள் என்பதனாலா? மனிதனின் மனப்போக்கு தனிப்பட்ட மனநிலையினால் அல்ல; கூட்டமாகச் செயல்படுவதனால் அல்லவா!
ஏற்கெனவே
நாம் வாழும் உலகை வெப்பமயமாக்கிவிட்டோம். இன்றிருக்கும் ‘ட்ரோன்ஸ்’,
சேட்போட் மற்ற அல்கோரிதம் செயலாற்றல்கள் ஒருநாள் மனிதனின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்துக்கொண்டு, ஏன் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தாது?
இன்று
சீனாவும் அமெரிக்காவும் ‘ஏ.ஐ.’ தொழில்நுட்பப்
போட்டியில் முதன்மையிலிருந்தாலும், ஐரோப்பா, இந்தியா, பிரேசில், இரஷ்யா என்று பல நாடுகள் தங்களுக்கென்று
தனி டிஜிட்டல் உலகை உருவாக்கி வருகின்றன. இது ஒருவகையில் இரண்டு துருவங்களைக் கொண்டிருக்காமல், பன்முனை சாம்ராஜ்ஜியங்களுக்கு வழிவகுக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை.
ஐம்பது
ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா-இரஷ்யாவிற்குமிடையே பனிப்போர் இருந்தும் எதிர்பார்த்தவாறு அணு ஆயுதப் போர் வெடிக்கவில்லை; ஏனெனில், ஒருவேளை போர் மூண்டால் இரு தரப்பும் அழிவதை இரு தரப்பாரும் அறிந்திருந்தனர். இப்போதுள்ள நிலை, தமிழ் பழமொழி கூறுவதுபோல் ‘தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன்’ என்ற
நிலையில், வெற்றியைத் தீர்மானிக்கும் குழப்பச் சூழலில், ‘யார் பலிகடாக்களாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்?’
என்ற நிச்சயமற்ற எதிர்காலம் வரும் சந்ததியினருக்குக் காத்திருக்கிறதா? என்ற ஐயம் எழுகிறது.
இன்றைய
சைபர் போர்ச்சூழலில், தாக்குதலுக்கு எது இலக்காகப் போகிறது என்று கணிக்க முடியாத நிலை உள்ளது. யார் தாக்குதலைத் தொடங்கினார்கள் என்றும் தெரியாது. ஒருவேளை வலிமையான நாடு தன் ஆயுதங்களை இயக்கினால், அவை அவர்களின் ஆணைக்குக் கட்டுப்படுமா? என்ற கேள்வியும் உள்ளது. வலிமையான போர் ஆயுதங்களைத் தயார் நிலையில் வைத்திருக்கிறோம் என்று எண்ணும் நாடு, அதில் தோல்வி அடையும் நிலையும் உருவாகலாம்.
உலகில்
இன்று முக்கிய முடிவுகளை இயந்திரங்களிடம் ஒப்படைப்பதென்பது, ஒருநாள் இப்புதிய தொழில்நுட்பத்திற்கு அடிப்படையான நாம் ‘மனிதர்’ என்பதை இல்லாமல் ஆக்கிவிடுமோ என்ற அச்சம் பலர் மனத்தில் எழுந்தாலும், ‘ஏ.ஐ.’ நம்
வாழ்க்கை முறையை வசதியாய் அமைக்கும் கருவியாய் இருக்கிறதென்பதை மறுக்க இயலாது.
மனித
வாழ்க்கைத் தத்துவத்தில் நுண்ணறிவு என்பது ஒட்டுமொத்த நிறைவை வெளிப்படுத்துவதல்ல; பிழைகள் என்பது மனித வாழ்க்கைப் பயணத்தில் ஒன்றிவிட்ட நிகழ்வு. இவை அடுத்து நாம் சரியான முடிவுகளை எடுக்கவும், திருத்தி அமைத்துக்கொள்ளவும் உதவுகின்றன. ‘ஏ.ஐ.’ தொழில்நுட்பத்தில்
மனிதக் கோட்பாடுகளை அடித்தளமாய் அமைப்பதென்பது ஒழுக்கத்திற்கான தேவை என்பதைவிட, சமுதாய மேம்பாட்டிற்கும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் இன்றிமையாததாக உள்ளது என்றே உணரப்படுகிறது.
இதற்கான
பொறுப்பு ‘ஏ.ஐ.’-யை
உருவாக்குபவர்களிடம் என்றில்லை. இதன் பங்காளிகளான அரசு, வணிகம், பொதுத்துறை நிறுவனங்கள், தனிமனிதர் என்று அனைவருக்கும் உள்ளது.
‘ஏ.ஐ.’ சமுதாயத்திற்கு
ஒரு சக்தி வாய்ந்த கருவியாக அமைய வேண்டுமென்றால், இத்தொழில்நுட்பம் மனிதத்துவத்தோடு ஒன்றியிருப்பதற்கு நாம் அளிக்கும் பங்கில் அனைவரும் விழிப்புடன் இருப்பதைப் பொருத்தே உள்ளதென்பது பொதுவான கருத்து.
ஆற்றங்கரையில் அழகிய மாலைப்பொழுதில் ஏதோ ‘தொபக்’கென விழுகின்ற சத்தம் கேட்டு, வீட்டுத் திண்ணையில் படுத்திருந்த இராசையா ‘திடுக்’கென எழுந்தான். வீட்டிற்கு முன்பாகத் தலை இல்லாது நின்ற தென்னை மரம் இரண்டு துண்டாக முறிந்து விழுந்திருந்தது.
“அந்த மரத்த முறிக்கணுமுன்னு ஆயிரம் வாட்டி சொல்லியாச்சி. நம்ம சொல்லுறதக் கேட்க இந்த வீட்டுல யாரு இருக்கா?” என்று அடிக்கடிச் சொல்லி களைத்துப் போயிருந்தாள் இராசையாவின் மனைவி பொம்மி. “அது இன்னும் பட்டே போகல. இப்போதெல்லாம் விழாது” என்று சொல்லி எப்போதும் நழுவிச்செல்வார் இராசையா. நல்ல வேளையாக வீட்ல பொம்மியும் விஜியும் இல்லாதபோது மரம் விழுந்தது ஒருவிதத்தில் நிம்மதிதான்.
மேட்டூர்
சந்தைக்குப் பொருள்கள் வாங்கிவரச் சென்றிருந்தார்கள் பொம்மியும் விஜியும். ஐந்தாம் வகுப்பு படிக்கும் விஜி, தனக்கும் பென்சில் பாக்ஸ் வாங்க வேண்டும் என்று சொன்னதால் அவளும் உடன் சென்றிருந்தாள். பொம்மியும் விஜியும் வீட்டிற்கு வரும் முன்பே வாசலுக்கருகில் விழுந்து கிடக்கிற தென்னை மரத்தை வெட்டி ஒதுக்கிட முடிவெடுத்தார் இராசையா. கொல்லைப்புற மாட்டுத் தொழுவத்திலிருந்த வெட்டரிவாளையும் கோடாரியையும் எடுத்துக் கொண்டு மரம் வெட்டத் தயாரானார்.
அந்த
ஆற்றோரக் கிராமத்தின் மௌனத்தைக் கத்தரிக்கோல் கொண்டு கிழிப்பதைப்போல கிளிகள் இரண்டு ‘கீச்’சென்று சத்தம் போட்டுக் கொண்டிருந்தன. அந்த மரத்தையே இவ்விரு கிளிகளும் சுற்றி வந்துகொண்டிருந்தன. இராசையாவிற்கு வியப்பாக இருந்தது. அடிக்கடி அந்த மரத்தில் இந்த இரண்டு கிளிகளும் வந்துபோய்க் கொண்டிருந்ததைக் கவனித்திருக்கிறார். ஆனால், இன்று இந்தக் கிளிகள் ஏன் ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கின்றன? காரணம் தெரியவில்லை?
“என்னங்க ஆச்சு... இந்தக் கிளிங்க கத்திக்கிட்டே இருக்கு?” தூரத்தில் விஜியோடு வந்து கொண்டிருந்தபோதே கேட்டாள் பொம்மி.
மூங்கில்
கேட்டைத் தள்ளித்திறந்து உள்ளே வந்த விஜி, தான் நட்டு வைத்த புடலைச் செடியின் அடியில் இரண்டு கிளிகுஞ்சுகள் செத்துக் கிடந்ததைப் பார்த்து அரண்டழுதாள். அந்த அழுகை வானில் வட்டமிட்ட இரண்டு கிளிகளின் ஒப்பாரிச் சத்தத்திற்கு இணையாக இருந்தது. கீழே விழுந்த தென்னை மரத்தின் பொந்து ஒன்றில் கிளிகள் முட்டைகளிட்டு அடைகாத்து வந்தன என்பது பொம்மிக்கும் விஜிக்கும் ஏற்கெனவே தெரியும். தினமும் வந்து தென்னை மரப்பொந்தில் உட்கார்ந்துக்கொண்டு தன் குஞ்சுகளுக்கு இரை கொடுத்துச் செல்லும் கிளிகளை அவர்கள் தோட்ட வேலை செய்துகொண்டே பார்த்திருக்கின்றார்கள்.
“அம்மா! அப்பாட்டச் சொல்லி எனக்கு ஒரு கிளி புடிச்சு தரச் சொல்லும்மா... நான் வளக்குறேன்” என்று
அடிக்கடிச் சொல்லி நச்சரிப்பாள் விஜி.
இரு
கிளிக்குஞ்சுகளும் இறந்து கிடந்தது எல்லாரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இராசையா மரத்தைச் சிறு துண்டுகளாக வெட்டி அவற்றை ஓரத்தில் அடுக்கிவைத்தார். வானில் கதிரவன் கண்கள் சிவந்திருந்த நேரம் தூரத்தில் கிளிகளின் ஒப்பாரிச் சத்தம் இன்னும் ஓய்ந்திருக்கவில்லை.
வீட்டுத்
திண்ணையில் எல்லாரும் அமர்ந்திருந்தபோது ஓட்டுக்கூரையின் மேலிருந்து ஒரு முனங்கல் சத்தம் கேட்டு, இராசையா ஏணி வைத்து டார்ச் லைட் அடித்து எட்டிப்பார்த்தார். இளம் கிளி குஞ்சு ஒன்று அரைகுறையாகப் பறந்து கொண்டு கூரையின் மேல் விழுந்து மயக்கநிலையில் இருந்து எழுந்திருக்கிறது. அதனை அப்படியே தூக்கியெடுத்து விஜியின் கையில் வைத்தார்.
தன்
கையில் கிளிகுஞ்சு இளம்பச்சை நிறத்தில் பூத்திருப்பதைப் பார்த்து விஜி பூரித்து நின்றாள். அவள் சிறு முகம் குண்டு பல்ப் வெளிச்சத்தில் குதூகலித்தது தெரிந்தது.
“இன்னைக்கோ நாளைக்கோ பறந்து போகுமளவிற்கு இறக்கை வந்திடுச்சி. நாளைக்கு ஒரு கூண்டு வாங்கித் தரேன். நீ வீட்டிலேயே வளத்துக்கோ...”
மகளுக்கு ஏதோ விலையுயர்ந்த தங்கக் கொலுசு வாங்கிக்கொடுத்தப் பிரமிப்பில் தன் மனைவி பொம்மியைப் பார்த்தார் இராசையா. விஜியைப் பார்த்தாள் பொம்மி.
எங்கோ
தூரத்தில் இரு கிளிகளின் அழுகைக் குரல் விஜியின் காதுகளைத் துளைத்துக்கொண்டே இருந்தது. நொடிப்பொழுதில் தன் கையிலிருந்த கிளிகுஞ்சை கைவிரித்துப் பறக்க அனுமதித்தாள் விஜி. கிளியும் ‘கீச்’ சத்தம் போட்டுக்கொண்டே பறந்துச் சென்றது.
“ஏன் விட்டுட்ட?” என்று கோபப்பட்டார் இராசையா. “நான் விடல, அதுவாவே போயிடுச்சிப்பா” என்று
சொல்லி அம்மாவின் முந்தானைக்குள் முகம் மறைத்தாள் விஜி.
இராசையாவிற்குக்
கடைசிவரைக் காற்றில்லாமலே மரம் எப்படி உடைந்து விழுந்தது என்றும் தெரியவில்லை; கைக்குள்ளிருந்த கிளிகுஞ்சு எப்படிப் பறந்து சென்றது என்பதும் புரியவில்லை. யாரும் பொறுப்பேற்காதவரை யாதும் குழப்பமே!
செயற்கை
நுண்ணறிவு இன்றைய உலகில் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. அதிலும் குறிப்பாகக் கொடிய தானியங்கி ஆயுத Lethal Autonomous Weapons (LAW) வடிவமைப்பில் அதிகமாகப்
பயன்படுத்தப்படவிருக்கிறது.
போர்கள் நடைபெறும் இடங்களில் அல்லது தீவிரவாதிகளை அழித்தொழித்தலில் இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று கூறிக்கொண்டு 50-க்கும் மேற்பட்ட நாடுகள் செயற்கை நுண்ணறிவைத் தங்கள் நாட்டு இராணுவத் திட்ட வரையறையில் சேர்த்துள்ளன. இந்தியா ‘மைக்ரோ சாப்ட்’
(Microsoft) நிறுவனத்துடன்
சேர்ந்து சுமார் மூன்று பில்லியன் டாலர் மதிப்பில் ‘இந்திரஜால் தானியங்கி ட்ரோன் பாதுகாப்பு அமைப்பு’
(Indrajaal Autonomous Drone Security System) என்னும் திட்டத்தைக் கையிலெடுத்துள்ளது. அதிலும் குறிப்பாகக் கொடிய தானியங்கி ரோபோக்களையும் (Lethal Autonomous Robotics), ‘மியூல்’ (MULE - Multi-Utility
Legged Equipment) என்னும்
ரோபோட்டிக் நாய்களையும் தனது படைப்பிரிவில் இந்தியா சேர்த்துள்ளது.
2015, ஜூலை 28 அன்று
சர்வதேசச் செயற்கை நுண்ணறிவிற்கான கூட்டு மாநாட்டில் முக்கியமான அறிஞர்களும் உலகத் தலைவர்களும் கொடிய தானியங்கி ஆயுதங்களைக் குறித்து எச்சரித்திருந்தனர். ஆயினும், இப்பந்தயத்தில் ஓடி வல்லரசாகிட வேண்டுமென்ற நோக்கத்தில் எல்லா நாடுகளும் வரையறையற்ற முறையில் இத்தொழில்நுட்பத்தில் பணத்தை முதலீடு செய்கின்றனர்.
மனிதத்
தலையீடு இல்லாமல் செயற்கை நுண்ணறிவினால் இயக்கப்படும் இந்தக் கொடிய ஆயுதங்கள் நாட்டின் பாதுகாப்பிற்காகத் தவிர்க்க முடியாதது என்றாலும் அதன் ‘பொறுப்பேற்காத் தன்மை’
(avoiding accountability) இன்று பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
உலகளவில்
செயற்கை நுண்ணறிவிற்கான சட்டத்திட்டங்கள் இன்னும் இயற்றப்படாத நிலையில், கொடிய தானியங்கி ஆயுதங்கள் இன்னும் முறையாகச் சோதித்துப் பார்க்கப்படாத நிலையில், செயற்கை நுண்ணறிவில் பல்வேறு குறைபாடுகள் உள்ள நிலையில் இத்தொழில்நுட்பம் எப்படி மனிதகுலத்திற்கு நன்மை பயக்கும்? போரிலோ அல்லது பாதுகாப்பிலோ ஏதாவது தவறு நிகழ்ந்துவிட்டால், “ஐயோ! இது நான் அல்லேன்; ஏஐ...” என்று சொல்லி யார் வேண்டுமென்றாலும் தன் பொறுப்பைத் தட்டிக்கழித்துத் தப்பிச்செல்ல முடியும்.
யாரும்
பொறுப்பேற்காதவரை யாதும் தவறே!
ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்குப் பெருங்கனவு ஒன்று உண்டு. தனது அமைப்பின் நூற்றாண்டு விழா ஆண்டில் பா.ச.க. ஆட்சியில் இருக்க வேண்டும்; அப்போதுதான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இரண்டாம் தலைவர் கோல்வால்கரின் சித்தாந்த அடிப்படையான ‘இந்து இராஜ்ஜியம்’ என்ற கனவு நனவாகும்; அதற்கான காலச்சூழல் கனியும்; அதற்கான மூல அறிக்கையான ‘ஞான கங்கையை’ செயல்படுத்த இதுவே கடைசி யுத்தம்.
ஞான
கங்கை அறிக்கை சொல்கிறது: ‘மாநில அரசுகள் இல்லாத மத்திய அரசு, சாதி அடிப்படையில் மாவட்டங்களாக ‘சனப்பதங்கள்’ அவை
-200-லிருந்து 300-க்குள் இருக்கலாம். சனாதன ரீதியான அந்த ஆட்சியின் அதிகாரங்கள் முழுவதும் புது தில்லி மத்திய அரசிடம் குவிக்கப்படும்.’
‘குடியுரிமைச் சட்டம் எத்தனை பேருக்குக் குடியுரிமை கொடுத்தது?’ எனப் பாராளுமன்றத்தில் கேள்வி கேட்கப்பட்டது. பதில் அளித்த உள்துறை துணை அமைச்சர் நித்தியானந்தா ராய் “குடியுரிமை எவருக்கும் தரப்பட்டதாகத் தகவல் இல்லை; ஆனால், 37,000 பேரை நாடு கடத்திவிட்டோம்” என்றார்.
அம்பேத்கர்
அன்றே கூறினார்: “நான் எழுதிய அரசமைப்புச் சட்டம், என்று மக்களைப் பாதிக்கிறதோ, அன்று இந்த நாட்டை நல்லவர்கள் ஆட்சி செய்யவில்லை.” அதுதானே பா.ச.க.
ஆட்சியில் இன்று நடக்கிறது.
இந்திய
அரசியல் சாசனம் இந்தியாவை ‘இறையாண்மை, சமத்துவம், மதச்சார்பற்ற குடியரசாக’
அறிவிக்கிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு விடுதலைப் போராட்டம், இந்திய அரசியல் சாசனம், அரசமைப்புச் சட்டம் என்பதில் எக்காலத்திலும் நம்பிக்கை இல்லை. இந்தூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு கூட்டத்தில் “இராமர் கோவில் திறந்த நாளே இந்தியாவின் சுதந்திரத் திருநாள்”
என்று புதுக்கதை பேசுகிறார்கள். அவர்கள் தங்களது சனாதனக் கோட்பாட்டின் அடிப்படையில் இந்து
இராஜ்ஜியம் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். அதற்கான செயல்திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துகிறார்கள்.
‘இந்து இராஜ்ஜியம்’ என்றால்
இந்துகள் மட்டுமே இருக்கவேண்டும்; சிறுபான்மை மக்களைப் பதற்றத்தில் வைக்கவேண்டும்; வரலாற்றைப் புதிதாக மாற்றி எழுதவேண்டும்; சமூக நலத் திட்டங்களை நிறுத்த வேண்டும். சனாதனத் தர்மப்படி அரசியலை முன்னெடுத்து, ஆட்சி அதிகாரத்தை நிலைநிறுத்த புதிய சனாதன அரசமைப்புக்கு நகர்தல் அவசியம். மன்னர் ஆட்சியின் குறியீடான செங்கோலைப் புது நாடாளுமன்றக் கட்டடத்தில் வைத்ததும் இதன் அடையாள அரசியலே.
“தங்களது பத்து ஆண்டுகால ஆட்சியில், இந்திய ‘அரசு இயந்திரம்’
முழுவதையும் காவி மயமாக்கி விட்டார்கள். இருபது ஆண்டு காலத்திற்கு அதன் தாக்கம் இருக்கும்”
என்று எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி தன் கவலையை வெளிப்படுத்துகிறார். இதற்காக ஆடிட்டர் குருமூர்த்தி அவர்களைத் தலைவராகக் கொண்ட ‘விவேகானந்தா பவுண்டேஷன்’ என்ற
அமைப்பு செயல்படுவதாகத் தெரிவித்துள்ளார். இந்தக் குழுவில் 97% ஒரே உயர்
சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதுபோன்ற குழுக்கள் எந்த வழக்குகள் எந்த நீதிபதியிடம் செல்வது என முடிவு செய்கிறது
என ‘கேரவன்’ பத்திரிகைக் கூறுகிறது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இசுலாமியர்களைக் குறிவைத்து குடியுரிமைச் சட்டம் கொண்டு வந்தார்கள். பிரதமர் மோடி கேலியாக “இச்சட்டத்தை எதிர்த்துப் போராடுபவர்கள் உடைகளைப் பாருங்கள்; அவர்கள் யாரெனத் தெரியும்”
எனத் தன் மத வன்மத்தை வெளிப்படுத்தினார்.
‘முத்தலாக்’ சட்டம்,
‘வக்பு’ திருத்தச்
சட்டம் என இசுலாமியர்களை ஓர்
எல்லையில் நிறுத்துகிறார்கள். அதற்கு முன்னோட்டமாக இந்திய இராணுவத்திற்கும் இந்திய இரயில்வேக்கும் கூட ‘வக்பு’ வாரிய அளவிற்குச் சொத்துகள் இல்லை என ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பொதுமக்கள்
கருத்தைத் திசை திருப்பியது.
மேற்கு
வங்கத் தேர்தலை முன்னிட்டும், ‘வக்பு’ சட்டத் திருத்தம் குறித்தும் ஆர்.எஸ்.எஸ். தன் கலவரங்களை ஆரம்பித்துவிட்டது. மேற்கு வங்கத்தில் காளிக்குப் பதில் இராமரை முன்னிறுத்தும் மத அரசியலை ஆர்.எஸ்.எஸ். நடத்துகிறது. அடுத்த ஆண்டு முதல் 20,000 இடங்களில் இராமநவமி விழாவைக் கொண்டாட ஆர்.எஸ்.எஸ். அறைகூவல் விடுகிறது.
இக்கட்டுரையின்
அடிநாதமான தகவலை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘ஆர்கனைசர்’
03.04.2025-இல் தலையங்கமாக வெளியிட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். தன் கொள்கைப் பிரகடனங்களை மட்டுமே தலையங்கமாகத் தீட்டும். அது கத்தோலிக்கருக்கா? அல்லது வக்புக்கா? யாருக்கு அதிக சொத்து? என்ற தலைப்பில் கேள்வி கேட்டது. கத்தோலிக்க அமைப்புகளுக்கு 20,000 கோடி மதிப்பில், 17 கோடி ஏக்கர் நிலம் உள்ளது என எழுதியது. இத்தகவலை
ஆர்.எஸ்.எஸ். திரட்டியதாகத் தெரிகிறது. ‘நேற்று இசுலாமியர்கள், நாளை கிறித்தவர்களா?’
என்ற பரபரப்பு தீப்பற்ற, முறையற்ற அப்பதிவு திரும்பப் பெறப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் நீக்கிவிட்டார்கள்.
கிறித்தவத்
தொண்டு நிறுவனங்களைத் தடைசெய்து, மக்கள் சேவைகளை முடக்கிய பா.ச.க.
அரசு அவர்களது கல்வி, மருத்துவச் சேவைகளை நிறுத்த வழிதேடுகிறது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்குப் பெரும் நிதி அயல்நாடுகளிலிருந்து வருவதைப் பா.ச.க.
அரசு ஊக்குவிக்கிறது. இது குறித்துத் திருமுருகன் காந்தி ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார்.
தற்போதைய
நிகழ்வுகள் சில பெரும் பொறுப்பு வகிப்பவர்களின் ஆர்.எஸ்.எஸ். மனப்பான்மையைக் காட்டுகின்றன. பாம்பன் பாலத் திறப்பு விழாவிற்கு வந்த பிரதமர் மோடி ‘ஜெய் ஸ்ரீராம்’
என மக்களை மத அடிப்படையான பரவசத்திற்கு
இட்டுச் செல்கிறார். அதைப் பின்பற்றி ஆளுநர் ஆர்.என். இரவியும் மதுரை தியாகராயா கல்லூரியில் இதையே திரும்ப ‘ஜெய் ஸ்ரீராம்’
எனச் சொல்ல சர்வ மத மாணவர்களையும் கட்டாயப்படுத்துகிறார்.
தமிழ்நாட்டில்
புதிதாகப் பா.ச.க.
தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் நயினார் நாகேந்திரன், சாகாவில் 7 மற்றும் 15 நாள் பயிற்சியில், தனது வாழ்வுமுறை மாறிவிட்டதாகக் கூறி தனது பதவி ஏற்பு விழாவில் பாடுகிறார்: ‘கேசவனை நாம் வணங்குவோம்; அவர் பாதையில் நாமும்
செல்வோம்; இலட்சியத்தை எய்திடுவோம்; நாம் நிச்சயமாய் வெற்றியை நிலைநாட்டுவோம்’ என
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தப் பாடலைப் பதவியேற்பு மேடையிலே பாடி ஆர்.எஸ்.எஸ். விசுவாசம் காட்டுகிறார். இவரது பழைய பதிவு ஒன்று இப்படிக் கூறுகிறது: “இந்து தர்மத்தைத் தவறாகப் பேசினால் அவனைக் கொலை செய்யவும் தயாராக இருக்க வேண்டும்.”
இதுபோன்ற
மதவெறிப் பேச்சுகளால் ‘யூ.சி.எஃப்.
என்ற அமைப்பால் எடுக்கப்பட்ட புள்ளி விவரப்படி, கிறித்தவர்களுக்கு எதிரான 823 தாக்குதல்கள் நடந்திருப்பதாகப் பதியப்படுகிறது. பிரதமர் மோடி அவர்களிடம் உளவுத்துறை ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. “சிறுபான்மை மக்களுக்கு எதிரான இதேநிலை நீடித்தால் விரைவில் இசுலாமியர்கள், கிறித்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், தலித்துகள், பழங்குடியினர் என அனைவரும் இணைந்த
சிறுபான்மையோரின் பெரும் போராட்டம் நாட்டில்
நடைபெறும்” என்கின்றது.
எனவே, ஆளும் பா.ச.க.
அரசு ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடமிருந்து விடுதலை பெற்று, சமயச் சார்பற்ற குடியாட்சி முறைக்குத் திரும்ப வேண்டும்.
உலகின் 19% இளைஞர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். இந்திய இளைஞர்களின் எண்ணிக்கை 60 கோடி என்கிறது புள்ளி விவரங்கள். இவர்களில் 20% பேர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பங்கு பெறுகிறார்கள். உலகளாவிய போட்டிக்கான தொழில்நுட்ப அறிவு மற்றும் ஆராய்ச்சிகளின் அளவு பற்றாக்குறையால் தேச வளர்ச்சி முடங்கிக் கிடக்கிறது. மனிதவள மேம்பாட்டு நிறுவனம் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ.) தருகிற அறிக்கைப்படி, பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்திய இளைஞர்களின் எண்ணிக்கை 37% குறைந்துள்ளது.
நவீன
காலத்திலோ பதின் பருவ மாற்ற நிலையிலேயே இளமையின் சவால்கள் அளப்பரியது. அது உடல், உள்ளம் சார்ந்த அகப்பிரச்சினைகளோடு, சமூகம் சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்தல், அதில் மீள முடியாமையால் தவித்து நிற்பது; தரமானக் கல்வி, தேர்ச்சி, நல்ல மதிப்பெண்கள்; விரும்பிப் படிக்க உயர்கல்வி என நீள்கிறது. வேலைவாய்ப்பு,
வளாக நேர்காணல் என விடை தெரியாத
கேள்விகள் மேலும் விரிகிறது. இது தவிர தொலைக்காட்சி, மின்னணு ஊடகங்கள் என்ற திசை திருப்புதல்களும், போதைப்பழக்கம் என்ற பின்னடைவுகளைக் கொண்ட தடைகளைத் தாண்ட வேண்டும். நமது பல்கலைக்கழகங்கள் வழங்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு, நடுத்தர பிற்படுத்தப்பட்ட இளையோரின் தேடல் எல்லைக்குள் அடங்கி விடுகின்றது. ஐ.ஐ.டி.
மற்றும் ஐ.பி.எம்.
போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் குறிப்பிட்ட 3% மேற்குடி
மக்களுக்கானது. மீறி சேரும் இதர பிரிவு மாணவர்கள், அவர்கள் தரும் அழுத்தம் மற்றும் பிற்போக்குப் பார்வையால் இடைநிறுத்தம் செய்கிறார்கள் அல்லது தற்கொலை செய்து கொள்கிறார்கள். அப்படி ஒன்றிய பா.ச.க.வின் பத்து ஆண்டு ஆட்சிக்காலத்தில், இடை நிறுத்தம் செய்த 25,539 மாணவர்கள் மற்றும் 135 தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் விவரத்தைத் தாக்கல் செய்ய உச்ச
நீதிமன்ற அமர்வு, அரசிற்கு உத்தரவிட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி., அங்கு உயர்சாதி அரசியல் செய்கிறது. அதுபோலவே, அங்குள்ள ஆசிரியர்களும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களைக் கல்வி கற்கக்கூடாது என மனுதர்ம அரசியல்
செய்கிறார்கள். ஆனால், தமிழ்நாடு மூன்று தலைமுறைகளாகப் பெற்றுள்ள கல்விச் செல்வ விழிப்புணர்வு, புதிய திசைகளை அடையாளம் காண்கிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டு இளைஞர்கள் இயல்பிலேயே புத்திசாலிகள். இருமொழிக் கொள்கையால் ஆங்கிலத்தில் அசத்துபவர்கள். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தரும் சான்று இதோ: “தமிழ்நாட்டிலிருந்து பலர் அமெரிக்க நாடுகளுக்குச் செல்கின்றனர். அவர்கள் ஆங்கிலம் கற்றுச் சிறப்பாகச் செயல்படுகிறார்கள்.”
கூகுள்
தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பவர் ஒரு தமிழர். அமெரிக்காவில் உயர் பதவிகளில் தமிழர்கள் இருக்கிறார்கள். ஐ.ஏ.எஸ்.
தேர்வுகளுக்குப் பயிற்சி எடுக்க வருபவர்களில் அதிகம் பேர் தமிழர்கள்தாம். பொதுவாக ஐ.ஏ.எஸ்.,
ஐ.பி.எஸ். என்றால்
அது தமிழ்நாடு என்ற நிலை இருக்கும். தற்போது அவர்கள் சாதிக்க உலகம் முழுவதும் பயணிக்கிறார்கள். தமிழர்கள் ஆங்கிலம் கற்றுச் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். ஆனால், அனைவருக்கும் தாய்மொழி அறிவும், ஆங்கில அறிவும் சமவாய்ப்பாக அமைவதில்லை. பொறியியல் பட்டதாரிகள் உள்பட, பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்கள் விடுப்பு விண்ணப்பங்களில், விடுப்பிற்கான காரணங்களை ஆங்கிலத்தில் எழுதத் திணறுகிறார்கள். இது வருத்தத்திற்குரியது. மதிப்பெண்ணை மட்டும் அடிப்படையாகக் கொண்ட கல்விமுறையின் கோளாறு இது. வாசிப்புப் பழக்கம், கடிதங்கள் எழுதும் பழக்கம் இல்லாததே இதற்கு
அடிப்படைக் காரணி.
இன்று
வாட்ஸ்-ஆப் குறுஞ்செய்தியைக் கூட எழுத்துப் பிழைகளைத் தவிர்க்க, உச்சரிப்பு வார்த்தைகளில் எழுத்துகளைச் சுருக்கும்
முறையும் புது மொழி
வடிவாக இருக்கிறது. மொழிக் கல்வியை மதிப்பெண் என்ற வட்டத்தில் அடக்கியது மூலப் பிழையாகும். தாய்மொழிக் கல்வி என்பது
அரசுகளின் கடமைக்குள் முன்னுரிமை பெறுவதாகும். அது புதிய தலைமுறைகளை உரு தருவதாகும்.
காரல்
மார்க்ஸ் கூறுகிறார்: “ஒரு தாயின் கவனிப்பு இல்லாமல், அவர்கள் வாழக்கூடிய தருணத்திலிருந்து, அனைத்துக் குழுந்தைகளின் கல்வியும் அரசு நிறுவனங்களில் இருக்க வேண்டும்.” ஆனால், இங்கு எவருக்கும் உண்மையான, சமச்சீரான கல்வி தரப்படுவதில்லை. இராமேஸ்வரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து சாதித்த அப்துல் கலாம் போல அனைவருக்கும் ஏற்ற சமமான வாய்ப்புகள் எளிதாகக் கனிவதில்லை.
வேலைவாய்ப்பிற்குப்
பின், நுகர்வுக் கலாச்சாரத்திற்கு அடிமையாகி, இ.எம்.ஐ.
போதையில் விழுகின்றனர். ‘கையிலே வாங்கினேன், பையிலே போட்டேன், காசுபோன இடம் தெரியலை’ என்ற பாடலே இன்றைய இளைய சமுதாயத்திற்குப் பொருந்திப் போகிறது. டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் என்ற கடந்த தலைமுறையின் நுகர்வுக் கலாச்சாரக் கொண்டாட்டங்கள் மாறிவிட்டன. புது நாகரிகத்தைப் பிரதிபலிக்கிற ஷாப்பிங் மால் கலாச்சாரம் தறிக்கெட்டுக் கிடக்கிறது. புதிய ‘வீக் எண்ட்’ திருவிழாக்கள், போதையின் பாதையில் வசந்தத் தென்றலாய் வீசுகிறது.
வாழ்வாதாரப்
பணி தவிர, இன்றைய இளைஞர்கள் இரசிகர் மன்றங்களிலும், கிரிக்கெட் பந்தயங்களிலும் தொலைந்து கிடக்கின்றார்கள். சிறு கிராமங்களில் கூட தனக்குப் பிடித்த நடிகனுக்குக் கட்-அவுட் வைப்பதைப் பெருமையாக நினைக்கிறார்கள். அதில் அளவு ரீதியாக ‘என் தலைவனுக்குதான் பெரிது’ எனக் கட்-அவுட், பிளக்ஸ் என்ற போட்டிகள் தனி இரகம். என் நண்பர் கூறுகிறார்... ‘எத்தனை அம்மாக்களின் சிறுவாட்டுச் சில்லறைச் சேமிப்புக்கு, இந்த இரசிகர்கள் கட்-அவுட் வைத்து, வேட்டு வைத்தனரோ?’
தலைமுறைகள்
மாற மாற சமூக-அரசியல் விழிப்புணர்வுகள் குறைந்துகொண்டே வருகின்றன. வாட்ஸ்-ஆப்பில், யூடியூப்பில் வரும் வதந்திகளை உண்மை என நம்புகிறார்கள். போதிய சமூக,
அரசியல் வரலாறு தெரிந்திருப்பதில்லை. சம கால அரசியல்
குறித்த விழிப்புணர்வு இல்லை. தனி மனித ஆராதனை அதிகமாகி விட்டது. ஓர் அரசியல் கட்சியின் பயிற்சிப் பாசறைக் கூட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்களின் கேள்விகள், வாட்ஸ்-ஆப் குறித்தே அதிகமாக இருந்தன.
கீழ்மட்டத்
தொண்டர்கள் கொள்கை, சமூகப் பார்வை கொண்டவர்களாக, பொதுநலன் சார்ந்த, சுயநலமற்ற மனிதர்களாக வாழ்கிறார்கள். வளர்ந்து வரும் இரண்டாம் கட்டத் தலைவர்கள் சுயநலத்தோடு, அரசியலைப் பணமாக்கும் தொழிலாகப் பார்க்கிறார்கள். இது நாளைய நாள்களில் தேசம் சந்திக்கிற பெரும் சவாலாகும்.
இன்றைய
இளைஞர்களைச் சமூக-அரசியல் விழிப்புணர்வு பெற்றவர்களாக மாற்ற கல்வி முறையில் மாற்றம் வேண்டும். தேசம் காக்கிற அர்ப்பணிப்புக் கல்வியைப் பிள்ளைப் பருவத்திலேயே புகட்டுதல் காலத்தின் கட்டாயமாகும்.
இயற்கை
வளங்களோ, மனித வளங்களோ இல்லாத ஐரோப்பிய நாடுகள், நவீனமய தொழில்நுட்ப அறிவால் ஆற்றல் பெறுகின்றன. நமது கல்வி முறை, புதிய கண்டுபிடிப்புகளுக்குப் புதிய கருத்தாக்கங்களுக்கு உட்பட்டதாக இல்லை. உலகளாவியச் சவால்களைத் தாக்குப் பிடிப்பதில்லை. நமது பாடத்திட்டங்கள் ஒன்றிய பா.ச.க. அரசால்
பழைய பஞ்சாங்கமாக மாற்றப்படுவது கவலை தருவதாகும்.
தேசத்தின்
கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் கொண்டு வரப்படுகிற காலத்திற்கேற்ற நவீன மாற்றங்களே தேசமெனும் தோட்டத்தில் இளமையெனும் பூங்காற்று வீச அடிப்படை வீச்சாக அமையும்.