இந்தியாவில் 28 மாநிலங்கள் மற்றும் எட்டு யூனியன் பிரதேசங்கள் உள்ளன. ஐந்து யூனியன் பிரதேசங்களுக்குச் சட்டமன்றங்கள் இல்லை. 20 மாநிலங்களில் பா.ச.க. ஆள்கிறது. ஒன்பது மாநிலங்களில் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சி செய்கிறது. அதில் மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் ஆள்கிறது. என்.டி.ஏ. மற்றும் ‘இந்தியா’ கூட்டணியில் சேராத மிசோரம் மாநிலத்தில் ‘ஜோரம்’ எனும் மாநிலக்கட்சி ஆள்கிறது. மணிப்பூர் மாநிலத்தில் இனக் கலவரங்களின் தொடர்ச்சியாக பா.ச.க. ஆட்சி வீட்டிற்கு அனுப்பப்பட்டு இந்திய அரசியல் அமைப்பின் சட்டப் பிரிவு 356-இன்படி குடியரசுத் தலைவர் ஆட்சி நடக்கிறது.
ஆர்.எஸ்.எஸ். திட்டப்படி புதிய அரசியல் அமைப்பை, ஆட்சிமுறையை, ஒரே தேர்தலை, பொதுச்சிவில் சட்டத்தைக் கொண்டுவர பா.ச.க.
ஆளாத மாநில சட்ட சபைகளே பெரும் தடைக்கல். அதன் காரணமாக எல்லா மாநிலங்களிலும் பா.ச.க.
ஆட்சி என்ற ஆட்சிவெறியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உள்ளது. வட இந்தியாவில் நன்கு
கால் ஊன்றிய பா.ச.க.வுக்குத் தென்னிந்தியா பெரும் சவாலாக உள்ளது.
குறிப்பாக, கேரளம் மற்றும் தமிழ்நாடே முக்கியத் தடைக்கல்.
பீகார்
தேர்தல் முடிவுகளுக்குப் பின் பா.ச.க.
தமிழ்நாடு அரசியலில் தனிக்கவனம் செலுத்தும். வலுவான என்.டி.ஏ. கூட்டணியை
உருவாக்கிவிடும். “அமித்ஷா தமிழ்நாடு தேர்தல் களத்தைப் புதிய கூட்டணியால் புரட்டிப் போடுவார்”
என வலதுசாரிகள் ஆருடம் பேசினர். அ.தி.மு.க.வைத் தவிர
எவரும் பா.ச.க.வின் என்.டி.ஏ. கூட்டணிக்கு
நகரவில்லை என்பதே 2026-இன் தமிழ்நாடு தேர்தல் கள எதார்த்தம்.
பீகார்
தேர்தல் முடிந்தவுடன் வாரம் ஒருமுறை அமித்ஷா வருவார், நிர்மலா சீத்தாராமன் வருவார், மோடி வருவார் என அரசியல் விமர்சகர்கள்
அடித்துக் கூறினார்கள். ஆனால், அவர்களுக்குப் புரியாத புதிர் அரசியல், புதிய சமூக
நீதி அரசியல்
தமிழ்நாட்டில் உள்ளது. சாண் ஏறினால் முழம் இறங்குகிற தமிழ் நாடு பா.ச.க
அரசியல், எதற்கும் அசையாத ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கே ஆட்டம் காட்டுகிறது.
தமிழ்நாட்டில் வலுவான என்.டி.ஏ. கூட்டணிக்கான கட்டாயம்
பா.ச.க.வுக்கு
உள்ளது.
2024-பாராளுமன்றத் தேர்தலில் என்.டி.ஏ. கூட்டணியில்
இருந்த பா.ம.க.
கட்சி குடும்பச் சண்டையில் கதிகலங்கி நிற்கிறது. அன்புமணி ஐயாவும், சௌமியா அன்புமணி அம்மாவும், தனித்தனி பயணங்களில் பாட்டாளிச் சொந்தங்களைச் சந்திக்கிறார்கள். ஆனால், களத்தில் பெரிய ஐயா இராமதாஸ் அவர்களுக்கே செல்வாக்கு என்பது உண்மை.
அம்மா
மக்கள் முன்னேற்ற கழக டி.டி.வி.
தினகரனோ, “துரோகி எடப்பாடி முதல்வர் வேட்பாளர் எனும் இடத்தில், எங்களுக்குக் கூட்டணி இல்லை; நானும் அமித்ஷாவிடம் பேசப்போவதில்லை; அமித்ஷாவும் எங்களிடம் பேசமாட்டார்” என்று
கூட்டணிக் கதவை இழுத்து
மூடிவிட்டார். ஊருக்கு பத்து
பேர் உள்ள கட்சிகளான தமிழ் மாநில காங்கிரசின் ஜி.கே. வாசனும்,
கல்வித்தந்தைகள், புதிய நீதிக்கட்சியின் எ.சி. சண்முகமும்,
ஐ.ஜே.கே. கட்சியின்
பாரிவேந்தரும், பா.ச.க.வை விட்டால் வேறு
வழியே இல்லை எனத் தொடர்கிறார்கள்.
அமித்ஷா,
‘அ.தி.மு.க.வின் உள் விவகாரங்களில் தலையிடமாட்டோம்’ என
அறிவித்தார். புதிதாகத் த.வெ.க.வில் சேர்ந்த செங்கோட்டையன் ஒருங்கிணைப்பு என்ற நாடகத்திற்கு கதை, வசனம், இயக்கம் அமித்ஷாவும், ஆடிட்டர் குருமூர்த்தியும் தான் என்ற உண்மையைப் போட்டு உடைத்தார். மேனாள் முதல்வர் பன்னீர்செல்வமோ, ‘எந்தப் பதவியும் வேண்டாம்; அ.தி.மு.க.வில் என்னை
அடிமட்டத் தொண்டனாகச் சேர்த்துவிடுங்கள்’ என
அமித்ஷாவிடம் பரிந்துரை விண்ணப்பம் போடுகிறார்.
தமிழ்நாடு
வந்த மோடியை ‘தங்களைக் காணும் பாக்கியம் வேண்டும்’
என்ற பன்னீரின் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டது. உடனே தமிழ்நாடு முதல்வரை ஒரே நாளில் இரண்டு முறை சந்தித்தார். எடப்பாடிக்காக அண்ணாமலையைக் கட்சித் தலைவர் பதவியிலிருந்து மாற்றிய பா.ச.க.-விடம் பன்னீர்செல்வம் தஞ்சம் புகுவது வீண். அ.தி.மு.க.வைச் சுக்கு
நூறாக உடைத்து, பா.ச.க.
தமிழ்நாட்டில் இரண்டாமிடம் பெறுவதே ஆர்.எஸ்.எஸ். மற்றும் அமித்ஷாவின் செயல்திட்டம். அ.தி.மு.க. 2026-இல் தோல்வி அடைந்தபின் அ.தி.மு.க.வை உடைக்க
இரண்டாம் கட்ட மூத்த தலைவர்களையும் பா.ச.க.
வளைத்துள்ளது.
2024 - பாராளுமன்றத் தேர்தலில்
அ.தி.மு.க
. கூட்டணியில் இருந்த பிரேமலதா விஜயகாந்தின் தே.தி.மு.க. ‘கூட்டணி ஆட்சி’ என்கிறது. தமிழ்நாட்டில் உள்ள எல்லாச் சிறு கட்சிகளுக்கும், ‘நடிகர் விஜய்யின் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு’ என்ற சிறப்புச் சலுகைப் பிடித்திருக்கிறது. ஆனால், வாக்கு பலம் நிரூபிக்காத விஜய் பக்கம் நகர்வதில் தயக்கம் கொள்கிறார்கள்.
பீகார்
வெற்றிக்குப் பின் நான்கு நாள்கள் கழித்துப் பிரதமர் மோடி பூட்டர்பதி சத்யசாய் பாபாவின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவிற்காக ஆந்திரா வருகிறார். அதன்பின் கோவையில் தமிழ்நாடு ஆளுநரின் செயலாளர் ஏற்பாடு செய்த விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொள்கிறார். கோவையில் தடையை மீறி, கறுப்பு பலூனைப் பறக்கவிட்டு மோடிக்கு தமிழ்நாட்டு மக்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். மோடி, “விவசாயிகள் துண்டைச் சுழற்றி என்னை வரவேற்றனர்; பீகார் காற்று இங்கும் வீசுகிறது”
என இவ்வளவான, அதிகபட்சமான வார்த்தைகளில் அரசியல் பேசினார். அதேநாளில் கோவை, மதுரை மெட்ரோ திட்டங்கள் நிறைவேற்ற சாத்தியமில்லை என்ற அறிவிப்புகள் ஒன்றிய அரசிடமிருந்து வந்தது.
தமிழ்நாடு மக்கள்
மத்தியில் தொடர்ந்து ஒன்றிய அரசு புறக்கணிக்கப்படுவது குறித்த விவாதம் சூடானது. கோவை, மதுரையைவிடக் குறைவாக மக்கள்தொகை கொண்ட ஆக்ரா, இலக்னோ, இந்தூர், போபால் போன்ற நகரங்களுக்கு எந்த அடிப்படையில் மெட்ரோ வழங்கப்பட்டது? என்று தமிழ்நாட்டு மக்கள் கொதித்தனர். ‘வரிப்பகிர்வில் உரிய பங்கீடு தருவதில்லை; தமிழ்நாடு திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில்லை; தமிழர் நாகரிகம், தொன்மை குறித்துத்
தடங்கல் செய்வது’ என தமிழ்நாடு மக்கள்
மாநில உரிமைகள் பேசினர்.
வட
இந்தியாவைப் போல ஆர்.எஸ்.எஸ். சாதி ரீதியான வாக்குகளைஒருங்கிணைக்க முயல்கிறது. மறுபுறம், ‘இந்துகளே! ஒன்றிணைவீர்’ என
அவர்களுக்குக் கைவந்த மத அரசியலையும் கையில்
எடுக்கிறது. தமிழ்நாட்டில் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளின் பலம் பெரும் சவாலாக உள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் வெற்றி-தோல்விகளை நிர்ணயிக்கும் 18 முதல் 20 விழுக்காடு வாக்குகளைக் கொண்ட சிறுபான்மை மக்கள் பா.ச.க.
எதிர்ப்பில் ஓரணியாக நிற்கிறார்கள்.
பா.ச.க.வின்
எந்தவிதச் சித்து
விளையாட்டுகளும் பலிக்காதபோது, திருப்பரங்குன்ற தீபம் போன்ற தன் கடைசி மத கலவர ஆயுதத்தை
எடுக்கிறார்கள். சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, தி.மு.க.
ஆட்சிக் கலைப்பு, ஆளுநர் ஆட்சியில் தேர்தல் என்ற புதிய கலவர வெறியில் தமிழ்நாடு தேர்தல் களத்தை அமைக்க அடிப்படைப் பணிகளைச் செய்கிறார்கள். மதக்கலவரங்கள், ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல; சிறுபான்மையினரின் பாதுகாப்பை உள்ளடக்கியது. தமிழ்நாடு அரசு தன் இரும்புக் கரம் கொண்டு காவி தீவிரவாதிகளை அடக்கவேண்டும். அது 2026 - தேர்தல் நாள்வரை தமிழ்நாடு அரசிற்குப் பெரும் சவால் என்பதில் ஐயமில்லை.
சிறுபான்மைச்
சமூக மக்களான நாம், நம் சனநாயக உரிமையான வாக்குகள் வழி இந்து மத வாத பா.ச.க.வை
தமிழ்நாட்டிலிருந்து முற்றிலும் தவிர்க்கவேண்டும்.
அது நம் தார்மீகக் கடமையாகும்.
அருள்மிகப் பெற்றவர்; ஆன்மிக வழிகாட்டி; திரு அவையின் தாய்; ஏழைகளின் அன்னை; துயருறுவோருக்கு ஆறுதல்; குடும்பங்களின் பாதுகாவலி; உறவுகளின் சிகரம்; பெண் குலத்திற்குப் பெருமை; மனிதகுல மாணிக்கம்... எனப் பல்வேறு பெயர்களில் அன்னை மரியாவை அழைக்கிறோம். ஆண்டின் முதல் நாளில் அன்னையின் மகிமையை எண்ணிப்பார்த்து, அன்னை மரியாவை ‘ஆண்டவரின் தாய்’ என்று அறிக்கையிட்டுக் கொண்டாடுகிறோம்.
கடவுளின் தாயான
அன்னை
மரியா
கடவுளின்
அன்னையான மரியா, நமக்காகப் பரிந்து பேசுபவராக, நமது நம்பிக்கைப் பயணத்தில் உடன் வரும் சகோதரியாக இருக்கிறார். கடவுளின் தாயாகத் தெரிந்துகொள்ளப்பட்ட மரியா தன்னையே தாழ்த்தி, தன் மகனோடு துன்புற்றார். கடைசி வரைக்கும் கீழ்ப்படிந்ததால் நம் அனைவருக்கும் தாயாக, எல்லாத் தலைமுறையினரும் பேறுபெற்றவர் எனப் போற்றும் அளவிற்குக் கடவுள் அவரை உயர்த்தினார். “நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” (லூக்
1:38) என்று கூறி, கடவுளின் வார்த்தைக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்ததால் கடவுளுக்கே தாயாகும் பேற்றினைப் பெறுகிறார். கடவுளின் தாயாகும் பேற்றினைப் பெற்ற அன்னை மரியா, மூன்று மாதங்கள் எலிசபெத்தோடு தங்கியிருந்து பணிவிடை புரிந்தது நாம் கற்கவேண்டிய உன்னதமான பாடம்.
நம்மோடு பயணிக்கும்
அன்னை
மரியா
அன்பு
செய்பவர்கள் பயணம் செய்தாக வேண்டும். ஆண்டவர் மீதும் அன்னை மரியா மீதும் நாம் அன்பு கொண்டிருப்பதால்தான் நாம் திருப்பயணங்கள் மேற்கொள்கிறோம். அன்னை மரியா புறப்பட்டு யூதேயா மலை நாட்டிலுள்ள எலிசபெத்தைச் சந்தித்து பணிவிடை புரிய மேற்கொண்ட பயணம் (லூக் 1:39); மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது தன் பெயரைப் பதிவு செய்ய மண ஒப்பந்தமான மரியா,
யோசேப்போடு கலிலேயாவில் உள்ள நாசரேத்திலிருந்து மேற்கொண்ட பயணம் (2:5); மோசேயின் சட்டப்படி தூய்மைச்சடங்கை நிறைவேற்ற குழந்தை இயேசுவோடு எருசலேமுக்கு மேற்கொண்ட பயணம் (2:22); ஏரோதின் கொலை வாளுக்குப் பயந்து குழந்தையைக் காப்பாற்ற எகிப்திற்குப் பயணம் (மத் 2:14); ஏரோது காலமானதும் இஸ்ரயேல் நாட்டுக்குப் பயணம் (2:19); ஆண்டுதோறும் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமை நோக்கியப் பயணம்; குழந்தையைக் காணாததால் மீண்டும் எருசலேமுக்குப் பயணம் (லூக் 2:45)... என வாழ்நாள் முழுவதும்
அன்னை மரியா பல்வேறு பயணங்களை மேற்கொண்டார். இறுதியில் கல்வாரி மலையை நோக்கிய பயணம் எனத் தொடர்ந்து பயணங்களை மேற்கொண்டவர், இன்று நம்மோடும் தனது பயணத்தைத் தொடர்கிறார். திரு அவையோடு தொடர்ந்து பயணிக்கிறார்.
பயணங்களின்
நோக்கம் அன்னை மரியா நம்மீது கொண்ட அன்பு மட்டுமே. இன்று அன்னை மரியா நம்மிடம் எதிர்பார்ப்பது உண்மையான அன்புடன் பிறருக்கு உதவி செய்ய, அன்பைத் தெரிவிக்க, அக்கறையை வெளிப்படுத்த நாமும் பயணிக்கவேண்டும் என்பதுதான்.
நமக்காகப் பரிந்துபேசும்
அன்னை
மரியா
கடவுளிடம்
அன்புகூர்பவர்களோடு, அதாவது அவரது திட்டத்தைச் செயல்படுத்துபவர்களோடு அன்னை மரியா முழுமையாக ஒத்துழைக்கிறார். ஏழை-பணக்காரர், சிறியவர்-பெரியவர் என்ற வேற்றுமை அன்னை மரியாவுக்குத் தெரியாது. நாம் யாராக இருந்தாலும் கடவுளிடம் அன்பு கொள்ள வேண்டும், கடவுளை நோக்கி வர வேண்டும், தன்
மகனின் சாயலுக்கு ஏற்றவாறு இருக்கவேண்டும் என்பதுதான் அன்னை மரியா நமக்குக் கற்றுத்தருவது.
ஓர்
ஏழை தச்சுத் தொழிலாளியின் மனைவியான அன்னை மரியா அமைதியாய் துன்புற்ற வேளையிலும், அந்தத் துன்பத்தை இறைவன் தாமே நீக்குகிறார். அடிப்படைக் காரணம் மரியா கடவுள்மீது கொண்ட நம்பிக்கைதான்.
அன்னை
மரியாவைப் போல நாமும் கடவுள் மீது நம்பிக்கை வைத்து அமைதியாகத் துன்புறும் போது கடவுள் நம்மை ஏமாற்ற மாட்டார் என்ற நம்பிக்கையை நாம் அன்னையிடமிருந்து கற்றுக்கொள்கிறோம்.
ஆகவே,
நம்முடைய அன்புத் தாய் என்றைக்குமே நமக்கு நல்லது மட்டுமே செய்துகொண்டே இருக்கிறார். அந்தத் தாயினுடைய பாதுகாவல், பரிந்துபேசுதல் நம் அனைவருக்கும் உண்டு என நம்புவோம். எத்தனையோ
வல்ல செயல்களை அன்னையின் பரிந்து பேசுதலால் நாம் பெற்றுக்கொண்டுள்ளோம்.
இப்புதிய
ஆண்டிலும் எல்லா அருளையும் ஆசிரையும் பிறந்துள்ள பாலன் இயேசு வழியாக அவர் நமக்குப் பெற்றுத்தருவார்.
எல்லாத்
தலைமுறையினராலும் பேறுபெற்றவராக உயர்ந்து நிற்கும் நம் அன்னை மரியாவைப் போல, நாமும் எந்நிலையிலும் இறைவன் மீது நம்பிக்கை வைத்தவர்களாக வாழ்வோம்.
‘நம் வாழ்வு’- கிறிஸ்து பிறப்பு உறவுக் கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட தென்னிந்தியத் திருச்சபையின் சென்னை மண்டல மேனாள் பேராயர் மேதகு முனைவர் தேவசகாயம் அவர்களின் வாழ்த்துச் செய்தி:
“நம் வாழ்வு’ குடும்பத்தார் அனைவருக்கும் என்னுடைய பணிவான வணக்கங்களையும், கிறிஸ்துமஸ் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன். இந்த ஆண்டும் கடந்த ஆண்டும் அன்போடு என்னைக் கிறிஸ்துமஸ் விழாவிற்கு அழைத்ததோடு, ‘நம் வாழ்வு’ என்ற இந்தச் சீரிய இதழின் பயணத்தில் என்னையும் இணைத்துக் கொண்ட முதன்மை ஆசிரியர் அவர்களுக்கும், ஆயர் அவர்களுக்கும், ‘நம் வாழ்வு’ குடும்பத்தினர் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியைப் பதிவுசெய்ய விரும்புகிறேன்.
ஒவ்வொரு
முறையும் ‘நம் வாழ்வு’ இதழ் என் கைகளில் வரும்போது முழுவதையும் வாசிக்க இயலாவிட்டாலும், தலையங்கத்தைத் தவறாமல் படிப்பது எனக்குப் புதிய உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கிறது. அது காலத்திற்கேற்ற இறைவார்த்தையாக அமைந்து, நாம் எதிர்கொள்ளும் சமூக, ஆன்மிகச் சவால்களைத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது. மக்கள் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டிய பிரச்சினைகள் அனைத்தும் அதில் நயமாகப் பொதிந்து கிடக்கின்றன.
கிறிஸ்து
பிறப்பு நாடகங்களில் பொதுவாக இரண்டு முக்கியக் காட்சிகள் இடம்பெறுகின்றன. ஒன்று,
மேய்ப்பர்களுடைய வயல்; மற்றொன்று,
மாட்டுத் தொழுவம். மேய்ப்பர்களுடைய வயல் - ஒளியும் தூய்மையும் மகிழ்ச்சியும்!
மேய்ப்பர்களுடைய
வயல் காட்சியில் ஐந்து முக்கிய அம்சங்கள் வெளிப்படுகின்றன:
1. ஒளி - வான
தூதர் தோன்றியபோது அந்த வயல்வெளி முழுவதும் ஒளியால் நிரம்பியது.
2. கூட்டம் - வான
தூதர்கள், மேய்ப்பர்கள் என ஒரு பெரிய
குழாம் அங்குக் கூடியது.
3. தூய்மை - இறைமகன்
பிறப்பின் அறிவிப்பால் அந்த வயல்வெளி ஒரு தூய இடமாக மாற்றப்பட்டது.
4. செழுமை - அக்காலத்தில்
நிலம், ஆடு, மாடுகள் கொண்டிருப்பது செழுமையின் அடையாளமாகக் கருதப்பட்டது.
5. மகிழ்ச்சியும் துதியும்
- முதலில் வான தூதர்கள் துதித்தனர்; பின்னர் மேய்ப்பர்களும் துதியின் குரலாக மாறினர்.
மாட்டுத்தொழுவம்
- வறுமையின்
மத்தியில்
வெளிப்பட்ட
இறையன்பு!
இரண்டாவது
காட்சியான, மாட்டுத்தொழுவம். வெளிப்படையாக அது இருளும் வறுமையும் நிறைந்த இடமாக இருந்தாலும், அதுவே உலகிற்கு ஒளியைக் கொடுத்த இடமாக மாறியது. இயேசு பிறந்த தருணத்திலிருந்தே அவரை அழிக்க சதிகள் தொடங்கின. வாழ்நாள் முழுவதும் அவர் இருளின் சூழலில் வாழ்ந்தார்.
அவரைச்
சூழ்ந்து மக்கள் கூட்டம் இருந்தாலும், அவர் அனுபவித்தது ஆழ்ந்த தனிமை. பன்னிரண்டு திருத்தூதர்களும் கூட அவரை முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை. ‘இவர் யார்?’ என்ற கேள்வி அவர்களுக்குள் இருந்தது. அந்தத் தனிமையின் உச்சம் கெத்சமெனி தோட்டத்தில் வெளிப்பட்டது.
இயேசு
வாழ்ந்த கலிலேயா பகுதி, கிராமங்களும் ஏழை மக்களும் நிறைந்த பகுதி. சமயத்தால் ஒதுக்கப்பட்டவர்களை நண்பர்களாக ஏற்றுக்கொண்டார். வறுமையை அவர் தன்னிச்சையாக ஏற்றார். பிறப்பில் கந்தைத்துணி; இறப்பில் பிறருடைய கல்லறை. படகு, கழுதை, கல்லறை - அனைத்தும் அவருக்கு இரவலாக இருந்தன. அதனால்தான் அவர் கூறினார்: “நரிகளுக்கு வளைகள் உண்டு, வானத்துப் பறவைகளுக்குக் கூடுகள் உண்டு; மானிட மகனுக்கோ தலைசாய்க்க இடமில்லை.”
இம்மானுவேல்!
- எப்போதும்
நம்மோடு இருக்கும்
கடவுள்!
யோவான்
நற்செய்தியாளர் கூறுவதுபோல, “வார்த்தை மனிதனானார்!” தனிமையில் இருப்பவர்களுக்குத் துணையாகவும், துயரில் இருப்பவர்களுக்கு ஆறுதலாகவும் இயேசு வாழ்ந்தார். அவருக்கு ‘இம்மானுவேல்’ என்று
பெயரிடப்பட்டது - ‘கடவுள் நம்மோடு இருக்கிறார்’ என்பதற்கான
அடையாளம்.
இயேசு சென்ற
இடமெல்லாம்
தூய்மையடைந்தது!
மனிதர்களாக
இருந்தாலும், இடங்களாக இருந்தாலும். வெளிப்படையான தூய்மையைவிட, உள்ளார்ந்த தூய்மையையே இறைவன் எதிர்பார்க்கிறார் என்பதை அவர் போதித்தார். பசியிலிருந்தவர்களுக்கு உணவளித்தார். துயருற்றவர்களின் கண்ணீரைத் துடைத்தார். உடல்சார்ந்த செழுமையை மட்டுமல்ல, ஆன்மிகச் செழுமையையும் மீட்பையும் வழங்கினார். மனிதரை இறைப்பிள்ளைகளாக உயர்த்தினார்.
இறுதியாக,
ஒரு கேள்வி நம்முன் நிற்கிறது: நமக்கு வாய்ப்புக் கிடைத்தால், நாம் மேய்ப்பர்களுடைய வயலுக்குச் செல்ல விரும்புகிறோமா? அல்லது மாட்டுத் தொழுவத்திற்குச் செல்லத் தயாராக இருக்கிறோமா?
இயேசு
பிறந்தது செழுமையில் அல்ல; வறுமையில்! ஒளிமிக்க இடத்தில் அல்ல; இருளில்! அந்த இருளையே ஒளியாக மாற்ற வந்தார். அந்த ஒளி இன்றும் நம் வாழ்வை மாற்றிக் கொண்டிருக்கிறது. அந்த ஒளியை ஏந்தி வாழ்வதே உண்மையான கிறிஸ்துமஸ்.
கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!
‘நம் வாழ்வு’ வெளியீட்டுச்
சங்கத்
தலைவர்
மேதகு
ஆயர்
ஆனந்தம்
அவர்களின்
வாழ்த்து!
அன்புச் சகோதரிகளே, சகோதரர்களே, நம் வாழ்வின் இனிய வாசகப் பெருமக்களே! உங்கள் ஒவ்வொருவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளும் இறையாசிரும்!
புத்தாண்டின்
தொடக்க நாளில், ‘அன்னை மரியா இறைவனின் தாய்’ என்னும் நம்பிக்கை கோட்பாட்டை ஆழமாகச் சிந்திக்க அழைக்கப்படுகிறோம். கடவுளின் அன்னை நம் திரு அவைக்கு அன்னையாக, நம் ஒவ்வொருவருக்கும் அன்னையாக இருந்து நம்மைப் பாதுகாத்து அருள் வரங்களால் நிரப்புகிறார். அன்னையின் அரவணைப்பும் தொடர் பராமரிப்பு கிடைக்கவும், அன்பும் அமைதியும் மகிழ்ச்சியும் அவரது பரிந்துரையால் உங்கள் ஒவ்வொருவருக்கும் இப்புத்தாண்டில் நிறைவாகக் கிடைக்கவும் இறைவனை வேண்டுகிறேன்.
நமது
வாழ்வில் புதிய எண்ணங்களை, புதிய செயல்பாடுகளை, புதிய திட்டங்களை முன்னெடுக்க புத்தாண்டு நமக்கு அழைப்புவிடுக்கிறது. சமயச் சார்பின்மைக்கும், சமய நல்லிணக்கத்திற்கும், சமூக ஒருமைப்பாட்டிற்கும், உலக நாகரிகத்திற்கும் முன்னோடியாக, அடையாளமாக விளங்கும் இந்தியச் சூழல் அண்மைக் காலங்களில் கேள்விக்கு உள்ளாக்கப்படுவது பெரும் கவலைக்குரியது. இன்றைய இந்திய ஒன்றிய அரசின் மதவாத அடிப்படையிலான அரசியல் - சமூகச் செயல்பாடுகள் நாடெங்கும் பெரும் அதிர்ச்சியையும் ஐயத்தையும் ஒவ்வொரு நாளும் ஏற்படுத்தி வருவதை நாம் அறிவோம். இந்தியாவின் வட பகுதிகளில் தேர்தலையும்,
ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதையும் மையப்படுத்தி மதநல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வண்ணம் மேற்கொள்ளப்படும் பல்வேறு சூழ்ச்சிகளையும் நாடறியும்.
இத்தகைய
மதவாதக்கொள்கைகளால் மக்களைப் பிளவுபடுத்தும் அரசியல் சூழ்ச்சி அண்மைக் காலங்களில் தமிழ்நாட்டிலும் வேரூன்றுவதும், அரசியல் அமைப்பிற்கு எதிரான செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுவதும் மத நல்லிணக்கத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறது. இந்து, இசுலாமிய, கிறித்தவ மதநல்லிணக்க உணர்வோடு வாழும் தமிழ்நாட்டு மக்களின் மத்தியில் இத்தகைய பிளவு அரசியலையும், மதக்காழ்ப்புணர்வையும் முன்னிறுத்தி அரசியல் கட்டமைக்கப்படுவது எதிர்வரும் நம் தலைமுறையினருக்குப் பேராபத்து என்பதையும் நாம் அறிவோம்.
ஆகவே,
இத்தகைய சூழலில் இந்து, இசுலாமிய, கிறித்தவ மக்கள் ஒன்றித்து வாழ்வதும் தனிமனித, சமூக மற்றும் அரசியல் உரிமைகளுக்காக இணைந்து குரல் கொடுப்பதும் காலத்தின் கட்டாயமாகிறது. அண்மைக் காலங்களில் தமிழ்நாடு திரு அவையில் பல்சமய உரையாடலும், சமய நல்லிணக்க செயல்பாடுகளும் சிறப்பாக முன்னெடுக்கப்படுவது வரவேற்கத்தக்கது; பாராட்டுதற்குரியது. தொடர்ந்து நம் மண்ணையும் மக்களையும் காத்து, மனிதநேயம் போற்றி ஒருதாய் மக்களாய் இணைந்து வாழ்வோம்! நம் உரிமையையும், அரசியல் சாசன மேன்மையையும் பேணிப் பாதுகாத்து நல்லதொரு சமுதாயம் படைப்போம். பிறந்த புத்தாண்டு அத்தகைய வளமும் நலமும் அருள வாழ்த்துகிறேன். அனைவருக்கும் இறை ஆசிர்!
மேதகு முனைவர்
லூர்து
ஆனந்தம்
சிவகங்கை
மறைமாவட்ட ஆயர், தலைவர் - நம் வாழ்வு வெளியீட்டுச் சங்கம்
வரலாறு என்பது கடந்த கால நிகழ்வுகளை ஆவணப்படுத்துவது மட்டுமல்ல; மாறாக, அது முக்காலத்தையும் இணைக்கும் காலக் கண்ணாடி. ஒரு புள்ளியைச் சென்றடையும் திட்டமிடாத பயணம் அல்ல; விடுதலையை நோக்கியத் திட்டமிடப்பட்ட மனிதப் பயணம். வரலாற்றிற்கு ஒரு தனித்துவமான உயிர் உள்ளது. ஏனெனில், வரலாறு நிறைவின்மையிலிருந்து நிறைவை நோக்கி முன்னேறுகிறது. அந்த நிறைவை நோக்கி மனிதகுலத்தை நகர்த்த, கடவுள் இறைத்திட்டத்தை ஏற்படுத்தி, அதற்காகத் தம் ஒரே மகனை வரலாற்றில் பயணிக்கும் நபராக இந்த உலகத்திற்குத் தருகிறார்.
இஸ்ரயேலர்களின்
வரலாற்றுக்
கடவுள்
இஸ்ரயேல்
மக்களின் வாய்மொழி உரையாடலாக இருந்த இறையனுபவ நிகழ்வுகள் எழுத்து வடிவம் பெறும்போது, அது உயிரோட்டமுள்ள வரலாறு கொண்ட புனித நூலாக மாறுகிறது. அப்படிப்பட்ட நிகழ்வுகளில்தான் கடவுள் தம்மை மோசேவுக்கு “இருக்கின்றவராக இருக்கின்றவர்” (விப
3:14) என்று வெளிப்படுத்துகிறார். கடவுள் நேற்றும் இன்றும் என்றும் மாறாத நபராகத் தம்மை வெளிப்படுத்துகிறார். மோசேவுடன் பயணித்த கடவுள் அவருக்குப் பின் வந்த யோசுவாவுடனும் பயணிக்கும் கடவுளாக இருக்கிறார். “மோசேவுடன் இருந்தது போல் நான் உன்னோடு இருப்பேன். உன்னைக் கைநெகிழ மாட்டேன், கைவிடவும் மாட்டேன்”
(யோசுவா 1:5) என்கிறார் கடவுள்.
மோசேவுக்குப்
பிறகு இஸ்ரயேல் மக்களை யோசுவா வழிநடத்தினார். இஸ்ரயேல் மக்களின் வரலாற்று வழிநடத்துதலில் மோசேவைப் போலவே யோசுவா கடவுளுடன் நெருக்கமாக இருந்தார். எகிப்திலிருந்து இஸ்ரயேல் மக்களை மீட்டு பாலைவனத்தில் மோசே வழிநடத்தியதுபோல, புதிய நாட்டைக் கைப்பற்றுவதில் வீரராக யோசுவா இருந்தார். நாடோடி இனமாக அலைந்த இனத்தை, தேசிய இனமாக மோசே மாற்றியது போல, இஸ்ரயேல் மக்களை நாட்டின் குடிமக்களாக யோசுவா உருவாக்கினார்.
மோசே
நாட்டை உளவு பார்க்க ஒற்றர்களை அனுப்பியதுபோல, யோசுவா ஒற்றர்களை அனுப்பினார். மோசேவைப்போல யோசுவா இஸ்ரயேல் மக்களை யோர்தான் ஆற்றைக் கடக்கவும், உடன்படிக்கைப் பேழைக்கு முக்கியத்துவமும் கொடுத்தார்.
யோசுவாவிற்குப்
பின் வருகின்ற நீதித்தலைவர்கள், அரசர்கள் மற்றும் இறைவாக்கினர்கள் வழியாகக் கடவுள் தொடர்ந்து வரலாற்றில் பயணித்துள்ளார்.
மேற்கண்ட
நிகழ்வுகள் அனைத்தும் வரலாற்றுச் சான்றுகளுடனும், அகழ்வாராய்ச்சிக் கண்டுபிடிப்புகளுடனும் ஒத்துப்போகின்றன. இதன் மூலம் இறைவன் காலத்திற்கும் அழியாத நபராக நம்மோடு பயணித்துக் கொண்டிருக்கிறார்.
இறைத்திட்டத்தில்
வரலாற்று
நபர்களாக
மரியா-யோசேப்பு
அன்னை
மரியாவும் வரலாற்றில் பயணித்த நபராக இருந்தார். அவரும் இறைவனின் திட்டத்தில் வரலாற்று நபராக இருந்து இறைத்திட்டத்திற்கு ஓர் ஊடலாகச் செயல்பட்டார். அந்த ஊடல் பணியில் என்றும் கன்னியாக இருந்து தன் வாழ்வைப் புனிதமாக்கி ‘நாமே அமல உற்பவம்’ என்று வெளிப்படுத்தினார். மரியாவும் பத்து மாதம் கடவுளின் குழந்தையைச் சுமந்து, பேறுகால வேதனையுற்று, இயேசுவை இந்த உலகத்திற்குக் கொடுத்தார்.
யோசேப்பும்
கடவுளின் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் தனது முழு ஒத்துழைப்பையும் கொடுத்தார். அவர் அன்னை மரியாவைப் போன்று இறைத்திட்டத்தின் ஊடலாகச் செயல்பட்டார். யோசேப்பு, இயேசுவைத் தன் வயிற்றில் கருத்தரிப்பதைத் தவிர்த்து மற்ற எல்லாச் செயல்களிலும் நிகழ்வுகளிலும் மரியாவைப் போன்று செயல்பட்டார். அவரும் மரியாவைப் போன்று என்றும் இயேசுவின் தந்தையாக இருந்து தன் முழு பங்களிப்பையும் கடவுளின் மீட்புத் திட்டத்திற்குக் கொடுத்தார்.
இதன்வழியாக
வரலாற்றில் வாழும் நம் அனைவரையும் இறைவனின் திட்டத்திற்கும், இயேசு விரும்பிய இறையாட்சி சமுதாயத்தை உருவாக்கும் கருவியாகவும் செயல்பட இந்தக் கிறிஸ்து பிறப்பு நம்மை அழைக்கிறது.
கட்டமைக்கப்படும்
வரலாறுகள்
தத்துவவியலாளர்
ஹெகல், “வரலாற்றாளருக்குச் சான்றுகள் இருந்தால் மட்டும் போதாது; சான்றுகளைப் புரிந்துகொள்ளும் ஆற்றலை வழங்கும் தத்துவப் பார்வையும் அவசியம்” என்கிறார்.
இன்று
வரலாற்று வழியாகத் தெரிந்த உண்மைகள் ஒவ்வொன்றாக மாற்றியமைக்கப்பட்டு, புதிய போலியான சிந்தனைகளை இந்துத்துவா அமைப்புகள் தொடர்ந்து நம் நாட்டில் ஊடகங்கள் வழியாகவும், சர்ச்சைக்குரிய சொற்பொழிவுகளாலும் மறைமுகமாகத் திணித்து வருகின்றன. எடுத்துக்காட்டாக, குஜராத் மாநிலத்தில் ஒன்பதாம் வகுப்பு கேள்வித்தாளில், ‘காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்?’ என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
காலங்காலமாகத்
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றி வந்த இடத்தில் இன்று புதிய வரலாறாகப் போலியான கருத்தை அந்த அமைப்பு விதைக்கிறது. ‘வந்தே மாதரம்’ என்ற நமது தேசியப் பாடலின் 150-ஆம் ஆண்டு விழாவில் போலியான கருத்துகளை முன்வைத்து தற்பொழுது ஆளும் தலைவர்கள் சர்ச்சைகளை ஏற்படுத்துகிறார்கள்.
மேலும்,
மக்கள் மத்தியில் பிளவு ஏற்படுத்தி புதிய கட்டமைப்பை உருவாக்க இந்துத்துவா முனைந்து செயல்படுகிறது.
தொடக்கத்தில்
யூதர்களில் ஒரு நபர்கூட காசா பகுதியில் வாழ்ந்ததில்லை. ஆனால், ‘அந்த நாடு எமக்குக் கொடுத்தது’
என்று இஸ்ரயேல் பிரதமர் புதிய வரலாற்றை முன்வைத்து பல இலட்சம் மக்களின்
உயிர்களைப் போர்கள் மூலம் பறித்துக் கொண்டிருக்கிறார்.
வரலாற்றை
முழுமையாகத் தெரிந்து கொள்ளவில்லை என்றால், நம் நம்பிக்கையும் நம் வாழ்க்கையும் பொருளற்றுப் போய்விடும். அறியாமை மக்களிடம் எளிமையான பிளவை உண்டாக்கி வலது சாரிகளை ஆதரிப்பதற்கும், அவர்களை உருவாக்குவதற்கும் உதவியாக மாறிவிடும்.
எனவே,
வரலாற்றில் இருக்கின்றவராக இருக்கின்றவரை உணர்ந்து, அவரது மீட்புத் திட்டத்தின் பதிலிருப்பாகப் பிறக்கப் போகும் வரலாற்று இயேசுவை நம் உள்ளத்தில் பிறக்கவைத்து, வரப்போகும் புதிய ஆண்டில் புத்துலகம் படைக்க முற்படுவோம்.
கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!
ஆண்டிற்கு ஒருமுறை வரும் விழாக்களின் வரிசையில் கடைசியில் நிற்கிறது கிறிஸ்துமஸ். இவ்விழா இயேசுவின் பிறப்பு விழா கொண்டாட்டம் மட்டுமே என்று எண்ணி நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். உலகம் முழுவதிலும் ஆண்டின் மிகப்பெரும் செலவு விழா இது.
ஐரோப்பிய
நாடுகளில் அக்டோபர் முதலே விழாக்காலம் தொடங்குகிறது. முன்பு இல்லாதது போல இப்போது ஆண்டு முழுவதும் புதுத்துணிகளை வாங்கிக்குவித்த நமக்கு, ஏன் வேண்டும் மற்றொரு சோடி புதுத்துணிகள்? குடும்பமே புத்தாடைக் கொண்டாட்டத்தில் கடன் வாங்கிப் பொருள் வாங்கும் நோயிலிருந்து (Shopaholics)இந்த
ஆண்டு நலம் பெறலாமா?
குடும்பமாக,
குழுவாகக் கொண்டாடி மகிழ்வதில் யாருக்கும் தடையில்லை. ஆனால், கூட்டங்கூட்ட மாகச் சத்தத்தை மிகுதியாக்கிக் கொண்டு ‘நாங்கள் கொண்டாடுகிறோம்’ என்பதையும்,
தீபாவளி யைவிட அதிகப்படியான பட்டாசு வெடிகளை உலகம் முழுக்க கிறிஸ்துமஸ் - புத்தாண்டு நாள்களில் கொளுத்துகிறோம் என்றெண்ணும்போது, தலைநகர் டெல்லி போன்ற காற்று மாசுபாடு கூடிடும் நகரங்களில் இன்னும் பெரு கிட நம்மால் முடிந்த தீமை யையும் செய்துவிடுகிறோம் என்பதை எண்ணிப் பார்ப் போம்.
‘எப்படித் திடீரென வந்து விடுகிறது-கிறிஸ்துமஸ்-புத்தாண்டு நாள்களில் குதூகலம்? நமது கடன்கள் தீரவில்லை; நமது திட்டங்கள் நிறைவேறவில்லை; நமது உறவுகள் சொல்லிக்கொள்ளுமளவுக்கு நிறைவைத் தரவில்லை; நமது இலக்குகள் நெடுந்தொலைவில் உள்ளன’
(செலவின் சுமையைத் தாங்க விழிபிதுங்கிக் கொண்டிருக்கும் பெற்றோர்களின் குரல் போல உள்ளதே!)
அதிகப்படியான
மக்காத குப்பைகள் (நெகிழி போன்றவை) அதிகரித்திடும் காலம் ஆண்டின் இறுதி பத்து நாள்கள் என்றால் அவற்றைக் குறைப்பதும், பரிசுப்பொருள்களை உறைகளில் போடும் பழக்கத்திலிருந்து விடுபட்டு, உள்ளவாறே பரிசுகளை அடுத்தவரோடு பகிர்ந்திடும் நற்செயலை கிறிஸ்துமஸ் - புத்தாண்டிலிருந்து நாம் தொடர்ந்திடுவோமா?
கிறிஸ்துமஸ்
என்றவுடன் கேக் சாப்பிட்டே ஆக வேண்டும் என்று
தோன்றுகிறதே! இக்காலத்தில் வீட்டிலேயே கேக் தயாரிப்பது எப்படி? என்று பல காணொளிகள் கொட்டிக்கிடக்கின்றன.
உங்களுக்கும் நண்பர்களுக்குமான சிறிய அளவில் கேக் செய்வதை ஆண்டிற்கு ஒருமுறை கற்றுக்கொள்ளலாமே! இதனால் செலவு குறைவதோடு மட்டுமில்லாமல், பதப்படுத்தப்படும் ஊக்கிகள் கேக்கில் சேர்க்கப்படும்போது, அது உடல் உபாதைகளை ஏற்படுத்துகின்றது என்பதையும் கவனத்தில் கொள்வோம்!
கிறித்தவ
ஆலயங்களில் பயன்படுத்தப்படும் அலங்காரப் பொருள்கள் கொண்டாட்ட உணர்வைப் பெற்றுத்தரும் என்றாலும், மொத்தக் கோவில் வளாகத்தை அலங்காரத்தால் நிறைத்துக் குப்பைகளை ஏற்படுத்துவது, தெர்மோகோல் போன்ற சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் பொருள்களை அதிகம் பயன்படுத்துவது - இவற்றிலிருந்து நம்மை விடுவிக்கப்போவது யார்? கிறிஸ்துமஸ் குடில் என்பது இயேசுவின் பிறப்பு வரலாற்றை அழகுற எடுத்துக்காட்ட அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இயேசுவின் பிறப்பின் எளிமை என்பது ஒன்றுமில்லாமையிலிருந்து, ஆண்டவர் உலகத்தைப் படைத்ததை மீண்டும் நமக்கு அறிவுறுத்துவது என்ற எண்ணம் மறந்துபோய், இலட்சக்கணக்காய் பணத்தைக் குடில் செய்வதில் வீணடிப்பது கிறிஸ்து பிறப்புச் செய்திக்கு நேர் எதிரானது என்பதை நமது ஆலயப் பொறுப்பாளர்களிடமும் இளையோரிடமும் கூறுவது யார்?
சரி,
இவையெல்லாம் ஒருபுறமிருக்க, கிறிஸ்துமஸ் விழா கூறும் எளியோரிடம் இருப்பதைப் பகிர்ந்துகொள்வதை எங்கிருந்து ஆரம்பிப்பது?
வசதியில்
குறைவுள்ளோர், நலிந்தவர், வீதியோரங்களில் வாழ்வோரைச் சந்திக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா நிகழ்வுகளை, வலக்கை கொடுப்பதை இடக்கை அறியாதிருக்கட்டும் என்பது போல வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் மற்றும் சமூக வலைத்தளங்களில் அப்டேட் செய்யும் போதைப் பழக்கத்திலிருந்து விடுபடலாமா? உடன் அமர்ந்து, அவர்களின் கண்களைப் பார்த்து உரையாடி, அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்து, முடியுமானால் இயன்ற உதவிகளைச் செய்வோமே!
இல்லாதவருக்கு
ஏதேனும் ஒன்றைக் கொடுத்து விடுவதால் நாம் வள்ளலாகிவிட முடியாது. நாம் கொடுப்பது அவர்களிடமிருந்து ஏதேனும் ஒன்றை, நாம் ஏதோ ஒருவகையில் பறித்ததைத்தான் என்று எண்ணிப் பார்ப்போம். கொடுப்பது நமக்கு முதலில் தாழ்ச்சியைக் கொடுக்கட்டும்.
சூழலியல்
கிறிஸ்துமஸ்-புத்தாண்டு கொண்டாட்டத்தைப் பற்றிய கட்டாயத் தேவை நமது பூமிப் பந்தை அண்டவெளியில் இன்னும் சிறிது காலம் வாழத் துணை செய்யும்.
வீசும்
எதிர்காற்று நமது செயல் வேகத்தைச் சற்றே வீரியமாக்கட்டும்!