இன்றைய சூழல்
•
இஸ்ரயேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் போர்; இரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் போர்.
•
இந்தியாவில் சனாதன ஒன்றிய ஆட்சியாளர்கள் இஸ்லாமியரை வெறுக்கின்றனர். கிறித்தவர்கள், சனநாயகவாதிகளைப் பகைவர்களாகப் பார்க்கின்றனர்.
•
சாதிமறுப்புத் திருமணம் செய்கிறவர்களை ஆதிக்கச் சாதி உறவினர்கள், பெற்றோரே கொலை செய்யும் அளவுக்குச் சாதிவெறி தலைவிரித்தாடுகிறது.
•
மாற்றுக்கருத்துகள், விமர்சனங்களை முன் வைப்போர் எதிரிகளாகவும் பகைவர்களாகவும் பார்க்கப்படுகின்றனர். கவுரி லங்கேஷ், பன்சாரே, கல்புர்க்கி, தபோல்கர் போன்றோர் படுகொலை செய்யப்பட்டனர்.
•
ஜார்க்கண்ட் பழங்குடியினரின் நில உரிமைக்காகவும் வாழ்வாதார உரிமைக்காகவும் போராடிய அருள்பணி. ஸ்டேன் சாமியை அரசு - நீதிமன்றம்
- சிறைச்சாலை மூன்றும் இணைந்து அநியாயமாகக் கொன்றன. அவரோடு ஒன்றித்துப் போராடியவர்கள் இன்னும் சிறையில் வாடுகின்றனர்.
அன்றும் இன்றும்
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்றார் உலக உறவுப் பண்பாட்டுப் புரட்சியாளர் புறநானூற்றுப் புலவர் கணியன் பூங்குன்றனார். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ (குறள்
972), ‘எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டி, அருள்நெறியில் நிற்பவர்களே அந்தணர்’
(குறள் 30) என்றார் வள்ளுவர் பெருந்தகை.
இந்தப்
பண்பாட்டுப் புரட்சியில் உலகிலுள்ள ‘அனைவரும் உடன் பிறந்தோரே’
(Fratelli tutti)
என்றார் தனது சுற்றுமடலில் (2020) திருத்தந்தை பிரான்சிஸ். மானுட ஒன்றிப்பின் மகத்தான அடையாளம் (icon) திருத்தந்தை பிரான்சிஸ். இவர் தாம் வாழ்ந்ததைக் கூறியவர், கூறியதை வாழ்ந்து காட்டிய அரிய முன்மாதிரி. இதனால்தான் திருத்தந்தை பிரான்சிஸ் அகில உலகின் பேசு பொருள் ஆனார்.
2019-இல் தெற்கு
சூடானில் போர் நடந்து கொண்டிருந்தது. அந்த நாட்டின் அதிபர் சர்விர்கிர், அதிருப்தித் தலைவர் ரியக் மக்சார் இவர்கள் இருவரது கால்களில் விழுந்து முத்தமிட்டு, போரை நிறுத்தும்படி கேட்டுக் கொண்ட மானுட ஒன்றிப்பின் குறியீடு திருத்தந்தை பிரான்சிஸ்.
பிரான்சிஸ்
(அசிசி) என்று யாருடைய பெயரைத் திருத்தந்தை தனது பெயராக எடுத்துக்கொண்டாரோ, அவரும் ஒரு மகத்தான சமய ஒன்றிப்பின் அடையாளமாகத் திகழ்ந்தவர். அது சிலுவைப் போர் நடந்து கொண்டிருந்த காலமும் சூழலும். 1220-இல் புனித பிரான்சிஸ் அசிசியார் துணிச்சலோடு எகிப்துக்குச் சென்று அந்நாட்டின் தலைவர் சுல்தான் மாலிக் - அல் கமில் என்பவரைச் சந்தித்தார். சமய நல்லிணக்க ஒன்றிப்பின் உறவையும் சமாதானத்தையும் ஏற்படுத்தினார். இவ்வாறு போருக்கு மத்தியிலும் அமைதியின் தூதராகச் செயல்பட்டார் புனித அசிசியார். இந்த வரலாற்று நிகழ்வின் 800-ஆம் ஆண்டு நினைவாக, 04.02.2019-இல் திருத்தந்தை பிரான்சிஸ் அபுதாபியில் வாழ்ந்த தலைமை இமாம் அகமத் - அல் - தாயெப் என்பவரைச் சந்தித்து உரையாடினார். ‘உலக அமைதிக்கான மானுட சகோதரத்துவமும் இணைந்து வாழ்தலும்’
(தோழமை ஒன்றிப்பு) என்ற ஆவணத்தில் இருவரும் இணைந்து கையெழுத்திட்டனர்.
அனைவரும் உடன்பிறந்தோர்
உலகச்
சகோதரத்துவ ஒன்றிப்பு என்பதே ‘அனைவரும் உடன்பிறந்தோர்’ என்ற
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடைய சுற்றுமடலின் மையக் கருத்து. அடுத்தவர்களைச் சகமனிதர்களாக ஏற்க மதிக்காது (சமுதாயத்தின் எச்சங்களாகப் பார்க்கும் நிலை), தங்களது சுயநலச் சொகுசு வாழ்வுக்காக அவர்களை ஒழித்துக்கட்ட நினைக்கும் சூழலில், மானிடர் அனைவரும் சகோதர உறவு கொண்டவர்கள் என்ற புதிய, புரட்சிப் பார்வையை முன்வைக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ். இதன் அடித்தளமாக இறைமையைச் சுட்டுகிறார்.
ஒரு
கையில் ஐந்து விரல்கள் உள்ளன. விரல்களின் நுனியில் மேம்போக்காகப் பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால், மிகச் சிலர் நுனி விரல்களின் அடி ஆழத்திற்குச் செல்கின்றனர். அங்குச் சமவெளிபோல் இருக்கும் அகலமான உள்ளங்கையில் ஒருங்கிணைகின்றனர். மேல் மட்டத்தில் தனித்தீவாக நின்றவர்களை இப்போது ஒருங்கிணைப்பது, அவர்களைத் தாங்கி நிற்கும் உள்ளங்கை இறைவன் ஆகும். இதை நன்குணர்ந்து அனுபவித்தவர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள். தனது
சுற்றுமடல்களில் சகோதரத்திற்கும் சமூக நட்புக்கும் சவாலான அடைபட்ட உலகையும் இருண்ட மேகங்களையும் அடையாளப்படுத்துகிறார்.
பெந்தகோஸ்து
நிகழ்வின்போது ஆவியாரைப் பெற்ற இளைஞர்கள் காட்சிகள் கண்டனர்; முதியோர்கள் கனவுகள் கண்டனர்; புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைத்தனர் (திப 2:16-17). நாம் அனைவரும் ஒருங்கிணைந்து ஓர் இலட்சிய உலகை, சகோதர-சகோதரிகள் ஒன்றித்து வாழும் உன்னத உலகைக் கனவு காணத் திருத்தந்தை அழைத்தார். நாம் அனைவரும் பூமித்தாயின் புதல்வர்கள்; இயற்கையின் சிகரப் படைப்புகள்; கண்ணால் காணும் கடவுளின் சாயல்கள் என்றார். இயற்கையில் அனைத்தும் ஒன்றோடொன்று இணைந்தும் ஒன்றை மற்றொன்று சார்ந்தும் இருப்பதுபோல மானிடரும் வாழ அழைத்தார். உலகின் சகோதரத்துவச் சேவையில் சமயங்கள் ஒன்றிணைய வேண்டும். சமயங்கள் மானிடரின் இறுதிப் பொருளை முன்வைக்கின்றன. இதை நடைமுறைப்படுத்த ஏதுவான புதிய சமுதாய - அரசியல் - பொருளாதார - பண்பாட்டு அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்கிறார்.
இளையோர் எழுச்சியும்
நான்கு
முனைப்
போராட்டமும்
‘கிறிஸ்து வாழ்கிறார்’ என்ற
திருத்தூது ஊக்க உரையில் அநீத, அசமத்துவ, ஏற்றத்தாழ்வு உலகில் ஒன்றிப்பை உருவாக்க இளையோர் கலகம் செய்யவும் கிளர்ச்சியை உருவாக்கவும் அழைக்கிறார். திருத்தந்தை பிரான்சிஸ் கனவு காணும் (இதுவே இயேசுவின் இறையாட்சிக் கனவும் ஆகும்) உடன் பிறந்தவர்களாக அனைவரும் அன்பிலும் நீதியிலும் வாழ உறுதி ஏற்பின், நான்கு முனைப் போராட்டங்களை அனைவரும் இணைந்து முன்னெடுக்க வேண்டும்.
1. நமது
மனத்திலும் இதயத்திலும் கட்டியிருக்கும் பிரிவினைச் சுவர்களை இடிக்கவும், ‘நான்’,
‘எனது’ என்ற
அகந்தைச் சிறையை உடைக்கவும், தன்னையும் பிறரையும் அழிக்கும் சுயகாதல் கோட்டையில் இருந்து வெளியேறி, பிறரை, குறிப்பாகச் சமுதாயத்தின் விளிம்புநிலை மக்களின் வாழ்வை வளப்படுத்தும் பொதுநன்மையை நோக்கி நகரும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
2. ஏழைகளின்
உழைப்பைச் சுரண்டும் கார்ப்பரேட் கம்பெனிகள், முதலாளி வர்க்கத்தினர் (முதலாளித்துவத்தைக் கடுமையாக விமர்சித்தவர் திருத்தந்தை பிரான்சிஸ்) முதல் உலக நாடுகளின் பொருளாதாரச்
சுரண்டல் அமைப்புகளுக்கு எதிரான போராட்டத்தில், இதனால் பாதிக்கப்படும் அடித்தள மக்களை, அமைப்புகளை, முற்போக்கு இயக்கங்களை ஒன்றிணைக்க வேண்டும்.
3. பிறப்பின்
அடிப்படையில் உயர்வு-தாழ்வுக் கற்பிக்கும் சனாதன அதர்மத்திற்கு எதிராகச் சவால்விடும் சமூக நீதிப் போராட்டத்தை இன்னும் கூர்மைப்படுத்த வேண்டும்.
4. தந்தை
வழி ஆணாதிக்கத்தைத் தகர்த்து, ஆண் - பெண் உறவுகளில் சரிநிகர் சமத்துவம் (ஆண் - பெண் வேறுபாடுகள் உண்டு; ஆனால், ஏற்றத்தாழ்வு கூடாது) என்பதைத் தூக்கி நிறுத்த பெண் விடுதலைப் போராட்டத்தைக் கையில் எடுக்க வேண்டும்.
அனைத்துப்
போராட்டங்களின் அடித்தளம், கைம்மாறு கருதாத இயேசு காட்டிய அன்பாக அமைய வேண்டும். இப்போராட்டங்களின் இலக்கு நீதி - சமத்துவ சகோதரச் சமுதாயம் படைப்பதாகும். அன்பும் நீதியும்தான் திருவிவிலியக் கடவுளின் இரு பெரும் பண்புகள் (மத் 23:23; லூக் 11:42). மற்ற விழுமியங்களான இரக்கம், பரிவு, மன்னிப்பு, நேர்மை, உண்மை, நன்மை போன்றவை அன்பு- நீதி என்ற விழுமியங்களின் நீட்சி-விரிவாக்கமாகும்.
நிறைவாக...
அன்று
எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரயேல் மக்களை விடுவிக்க யாவே கடவுள் மோசே வழியாக அம்மக்களோடு இணைந்து போராடினார் (விப 14:14,23-24). இன்று மகன் இயேசு புதிய சகோதரத்துவ உலகை உருவாக்க இம்மானுவேலராக நம்மோடு உடனிருந்து ஆவியாரின் ஆற்றலால் நம்மை உறுதிப்படுத்துகிறார் (மத் 28:20; மாற் 16:20).
சமயங்கள்,
கோட்பாடுகள், சட்டத்திட்டங்கள், சமூகப் பழக்கவழக்கங்களைக் கடந்து மனிதர்களைக் குறிப்பாக சமுதாயத்தின் விளிம்புநிலைகளில் உள்ளவர்களை அன்பு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் மானுட ஒன்றிப்பின் விடிவெள்ளியாக ஒளிர்ந்து இன்று நமக்கு வழிகாட்டுகின்றார்.
அன்று அதிகாலையில் மிகவும் பரபரப்பாக இருந்தேன். உலகின் மாபெரும் தலைவரை, திரு அவையின் தந்தையை நேருக்கு நேராகச் சந்திக்கவும், அவரோடு சில மணித்துளிகள் செலவிடவும் கிடைத்த அருமையான வாய்ப்பை எண்ணி அந்தப் பரபரப்பு... ஏக்கம்...!
இயேசு
சபையின் பொது அமர்வு 2016 அக்டோபர், நவம்பர் மாதங்களில் உரோமையில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற 215 நபர்களில் நானும் ஒருவன். 2016, அக்டோபர் 24 ஒரு மறக்க முடியாத சிறப்பான நாள். அன்று காலை 8:45 மணி முதல் மதியம் 1:00 மணி வரை திருத்தந்தை பிரான்சிஸ் எங்களுடன் இருப்பார், உரையாடுவார், ஒவ்வொருவரையும் சந்திப்பார் என்பதால் இரட்டிப்பான மகிழ்ச்சி... பரபரப்பு! அவர் அன்று ஆற்றிய உரைக்கும், தான் இறப்பதற்கு முந்தைய நாள் 2025, ஏப்ரல் 20 அன்று ஆற்றிய உரைக்கும் நெருங்கியத் தொடர்பு இருக்கிறது. இதையே இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.
பொதுநலனை முன்வைக்கும்
திருத்தந்தை
பதற்றமும்
(Tension), உள்மனப்
போராட்டமும் எல்லாருடைய வாழ்விலும் எப்போதும் உண்டு. குறிப்பாக, நமது கிறித்தவ வாழ்வில் இறை தியானத்திற்கும் - செயல்பாடுகளுக்கும் இடையே, நம்பிக்கைக்கும் - நீதிக்கும் இடையே, தனிவரத்திற்கும் - நிறுவனத்திற்கும் இடையே, குழும வாழ்விற்கும் - நமது பணிகளுக்கும் இடையே பதற்றம், மோதல்கள் எப்போதும் உண்டு. இப்பதற்றங்களால் உருவாகும் மன உளைச்சல், முரண்பாடுகள்,
போராட்டங்கள் இயல்பானவை. ஆனால், அவற்றைப் புனித இஞ்ஞாசியாரின் ஆன்மிகப் பயிற்சிகளின் அடிப்படையில், இயேசுவின் பாதச்சுவடுகளைப் பின்பற்றி நாம் வாழும் காலத்தின் அறிகுறிகளை அலசி ஆய்ந்தறிந்து இப்பதற்றங்களுக்குப் பதிலிறுப்பது இன்றியமையாதது என்றுரைத்தார் திருத்தந்தை.
நாம்
எத்தகைய செயல்பாடுகளைச் செய்தாலும் அவை ஒட்டுமொத்த மனித குலத்திற்கு இன்னும் அதிகமான, சிறப்பான பொதுநலனை முன் வைத்தும், இறை இரக்கத்தின் உதவியுடனும் இன்றைய பதற்றங்களைத் தணிக்க நாம் தனிநபராக, சபையாக, திரு அவையாகச் செயல்பட முன்வர வேண்டும் என்ற ஆழமான அழைப்பை முன் வைத்தார். இக்கருத்தைத் தனது 12 ஆண்டு காலத் திருத்தந்தை பணிவாழ்வில் வலியுறுத்தி வாழ்ந்து காட்டியதோடு, உயிர்ப்பு நாள் 2025, ஏப்ரல் 20 அன்று தனது இறுதிச் செய்தியாகவும் வெளிப்படுத்தினார். பதற்றம் நிறைந்த இவ்வுலகில் அமைதியை உருவாக்க, குறிப்பாக லெபனான், சிரியா, ஏமன், உக்ரைன் மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் பதற்றங்கள் தணியவும் அமைதி திரும்பவும் அனைவரும் செயல்பட உலகத் தலைவர்களுக்கும் நமக்கும் அழைப்பு விடுத்துச் சென்றுள்ளார்.
உரையாடலை வாழ்வாக்கிய
திருத்தந்தை
நாடுகளிடையே,
குழுக்களிடையே, மதங்களிடையே, குடும்பங்களிடையே, நம்மிடையே பல்வேறு கருத்து மோதல்கள், வேறுபாடுகள், கலாச்சார - மொழி - இனப் பாகுபாடுகள் இருப்பினும், இப்பதற்றத்தை உரையாடல்கள் மூலம் தணிக்க முடியும், களைய முடியும் என முழுமையாக நம்பினார்.
அகில உலக அளவில் மதத் தலைவர்களிடையே, நாட்டுத் தலைவர்களிடையே உரையாடலை ஊக்குவிக்கப் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தார். உரையாடல் மூலம் பதற்றத்தைத் தணிக்கவும் நல்லிணக்கத்தை
ஊக்குவிக்கவும் மனித நேயத்திற்கு ஆதரவான சூழலை உருவாக்கவும் இறுதிவரை பல்வேறு செயல்பாடுகளை ஏற்பாடு செய்தார்.
பரிவிரக்கத்தின்
பாலமான
திருத்தந்தை
“இவ்வுலக அவலங்களினால் துயருறும் மக்களின் அழுகுரல்கள் நமதாக வேண்டும்”
என்ற திருத்தந்தையின் கூற்று அவரின் பரிவிரக்கத்தின் அன்பை ஆழமாக உணர்த்துகிறது. ஏழைகள், நோயாளிகள், வறுமையில் வாடுவோர், அநீதச் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டோர், இயற்கைச் சீற்றங்களினால் பாதிக்கப்பட்டோர் இவர்களுக்கான பணி முன்னுரிமையும் ஆதரவும் அன்பும் நமதாக வேண்டுமென அறைகூவல் விடுக்கிறார். வளர்ச்சியின் பெயரால் புலம்பெயர்ந்த, ஆதரவற்ற மக்களுக்குத் திரு அவை அடைக்கலம் தர வேண்டுமென வலியுறுத்தினார்.
‘புலம்பெயர்ந்தோரின் வேதனை என் இதயத்தை முள்போல் குத்துகிறது’ எனத்
தனது பரிவிரக்க அன்பைப் பாதிக்கப்பட்டவருக்காக வெளிப்படுத்தினார். பரிவிரக்கத்தோடு கூடிய பிறரன்புப் பணிகளே, நற்செய்திப் பணியின் தவிர்க்க முடியாத அங்கமாகவும் அமைய வேண்டும் என வலியுறுத்தினார்.
சமூக நீதியை
நிலைநாட்டிய
திருத்தந்தை
சமூகத்தில்
ஒடுக்கப்பட்டோருக்கு முன்னுரிமை வழங்குவதிலும், பாதிக்கப்பட்டோரின் பார்வையில் திரு அவையின் செயல்பாடுகள் மாற்றம் பெறுவதிலும், அழிந்து வரும் இயற்கையைப் பேணிக்காப்பதிலும் திரு அவை செயல்பட இவர் எடுத்த முயற்சிகள் சிறப்பானவை. துன்புறும் ஏழை எளியோரைத் தேடிச்செல்வதும் (go to the street), அவர்களது துயரினில்
பங்குகொள்வதும் (smell the sheeps) இவரது சமூக
நீதியின் அடித்தளமாக அமைந்திருந்தன. இத்தகைய சிந்தனைகளையே ‘இறைவா உமக்கே புகழ்’
(Laudato si),
‘அனைவரும் உடன் பிறந்தோர்’
(fratalli totti) எனும் தனது ஏடுகளில் சிறப்பாக வலியுறுத்தினார்.
கடந்த
இரண்டு ஆண்டுகளாக அவர் முன்னிறுத்திய கூட்டொருங்கியக்கத் திரு அவை (synodal church), திரு அவையை
மாற்றத்தை நோக்கி மக்கள் மையத் திரு அவையாகத் திசை திருப்பியுள்ளது. இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு, இயற்கை மற்றும் பாதிக்கப்பட்டோரைப் பாதுகாப்பது என இரண்டு தன்மைகளையும்
இணைத்து ஒருங்கிணைந்த இயற்கை (integral ecology) அல்லது மனிதன்
காக்கும் இயற்கை (human ecology) என ஒடுக்கப்பட்டோரின்
சமூக நீதிக்கான பார்வையைத் திரு அவைக்கு வழங்கி, அதை நோக்கிச் செயல்படவும் தூண்டியவர். ஒடுக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்காமல் இயற்கையை நாம் பாதுகாக்க இயலாது என்பதை அழுத்தமாக எடுத்துரைத்தார்.
ஆன்மிகத் தாகம்
கொண்ட
திருத்தந்தை
இறைச்சாயலாகப்
படைக்கப்பட்ட மனிதரைச் சிதைப்பதும் ஒடுக்குவதும் பாவம் என்றும், இப்படிப் பாதிக்கப்பட்ட ஏழைகளையே இயேசு தேடி வந்தார் ( மாற் 2:17) என்னும் ஆன்மிகப் புரிதலை ஆழமாக வாழ்ந்து காட்டியவர் இவர். எச்சூழலிலும் எந்நேரத்திலும் இறையாற்றலில் உறுதி கொண்டு ஆழமான நம்பிக்கையில் தன்னையே சரணாகதி ஆக்கிய இறைத்தொண்டர் இவர். அவரது ஒவ்வொரு செயல்பாடும் புனித இஞ்ஞாசியாரின் ஆன்மிகப் பயிற்சியைப் பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது. இறையன்பில், இறைப் பராமரிப்பில் முழு நம்பிக்கை, இந் நம்பிக்கை ஒருபோதும் கைவிடாது (hope does not dissappoint) என்ற உணர்வோடு ஏழை-எளியோருக்கான முன்னுரிமை, இன்னும் சிறப்பாகச் செயல்படும் வேகம், துணிவு, செபமும் செயல்பாடும் இணைந்தே இருப்பது, அனைத்திற்கும் மேலாக ஆவியில் பகுத்துணர்ந்து முடிவெடுக்கும் ஆற்றல் (discernment) இவை திருத்தந்தையைப் புனித இஞ்ஞாசியாரின் மறுவுருவாக
வாழ வைத்துள்ளது.
ஏழ்மையும் தாழ்ச்சியும்
மிளிரும்
திருத்தந்தை
சிறிய
பதவி கிடைத்தாலே ஆடம்பரமும் ஆரவாரமும் கொண்ட அரசியல் மற்றும் மதத் தலைவர்கள் மத்தியில், ஒரு தனித்துவமான தலைவராக வலம் வந்தவர் திருத்தந்தை பிரான்சிஸ். தனது வாழ்வின் எல்லா நிலைகளிலும் வகைகளிலும் ஏழ்மையை விரும்பி ஏற்றவர். தங்குமிடம்,
உடுத்தும் உடை, நடை உடை பாவனை என எப்போதும் எளியோரின்
தோற்றம்! அதேபோலத் திரு அவையின் அகில உலகத் தலைவர் எனினும், எளியோரின் பாதம் தொட்டுக் கழுவி முத்தமிடும் தாழ்ச்சி மிக்கப் பணியாளராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர். உலகத் தலைவர்களுள் ஏழ்மையையும் தாழ்ச்சியையும் தனதாக்கி, புறக்கணிக்கப்பட்டோரின் புனிதராக நம்மிடையே வாழ்ந்த சமகாலச் சமூகப் புனிதர். இவ்வாறு ஏழ்மையும் தாழ்ச்சியும்
நிறைந்த திருத்தந்தையாக இவரை இறைவன் நமக்கு அடையாளம் காட்டுகிறார். இவரைப் பின்பற்றி, புறக்கணிக்கப்பட்டோரின் புனிதர்களாக வாழ்ந்து காட்ட, இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் தொடர்ந்து
அழைப்பு விடுக்கிறார்.
2000-ஆம் ஆண்டுகளுக்கு முன்பு உரோமையர்களின் அதிகாரத்திற்கு உட்பட்டிருந்த யூதேயா நாட்டில் முகவரி இல்லாத சில மனிதர்களால் துவங்கப்பட்ட ‘சத்தியத் திரு அவை’ காலக் கரையானால் அரிக்கப்படாமல், அதிகாரச் சுனாமிகளுக்கு அசைந்து கொடுக்காமல் இனம், மொழி, பிராந்தியம் என்ற எல்லாப் பிரிவினைகளையும் கடந்து இன்னும் வளர்ந்து கொண்டு இருக்கின்றது. இது மனித முயற்சியாலா!
ஆயிரக்கணக்கான
ஆண்டுகளாக வார்த்து எடுக்கப்பட்ட ஆகம வழிமுறைகளைத் தங்கள் பெருமைமிகு அடையாளமாக விரித்திருந்த யூத மேலாக்கத்தின் மரண அச்சுறுத்தல்களுக்கும், பேரரசு மன்னர்கள் அள்ளி எறிந்த அக்கினி எரிகணைகளுக்கு இடையிலும், விசுவாசக் கண்ணீரை உணவாக உட்கொண்டு உயிர் வாழ்ந்ததோடு மட்டுமல்லாமல், தங்களை அழிக்க நினைத்த பேராசை மேல் வெற்றி கொண்டு இன்னும் உயிரோட்டமாக வாழ்கிறது கிறித்தவம் என்றால் அதற்கு யார் காரணம்?
இந்த
நீண்ட காலப் பயணத்திற்கு ஒவ்வொரு காலத்திலும் பல வழிகாட்டிகள் தேவைப்பட்டார்கள்.
காலத்தின் தேவைகளை எதிர்கொள்ளத் தகுதியான தலைமைகள் தேவைப்பட்டன. போர்க்காலத்தின் தன்மைகளின் அடிப்படையிலும், எதிரிகளின் தகுதியின் அடிப்படையிலும் போருக்குத் தேவையான கருவிகளும் ஆயுதங்களும் யுக்திகளும் தேவைப்பட்டன. தேவையான அனைத்தையும் இறைவனே தம் தூய ஆவியின் மூலம் திரு அவைக்குத் தந்தார் என்பதுதான் உண்மை. இதில் முதன்மையாகத் தமது திரு அவையைத் தலைமையேற்று வழிநடத்த இறைவன் உருவாக்கின நிறுவனமே ‘பாப்பரசர்’
என்ற திருப்பீடம் (Holy see).
இந்த மேய்ப்பர் மூலமாகத்தான் இறைவன் தம் ஆடுகளைக் கட்டுக்கோப்பான மந்தையாக 2000 ஆண்டுகளாக வழிநடத்தி வந்துள்ளார்.
மேய்ப்பரை
அறியாத ஆடுகளும், ஆடுகளை அறியாத மேய்ப்பரும் ஒரு நாளும் மந்தையாக வாழ முடியாது. உடல் சோர்ந்து, திரு அவையின் ஆட்சிப் பாரத்தைச் சுமக்க முடியாமல் மற்றொரு சுமைதாங்கியின்மீது பாரத்தை இறக்கி வைக்க வேண்டும் என்று முன்னாள் திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட் முடிவெடுக்கையில், இறைவன் தமது திரு அவையின் அடுத்தக்கட்ட பயணத்தைத் தலைமையேற்று நடத்த ஒரு சரியான மாலுமியை அவரே அடையாளம் காண்பித்தார். அவர்தான் திருத்தந்தை பிரான்சிஸ்!
உலகின்
மிகப்பெரிய ஆன்மிக இயக்கமான கத்தோலிக்கத் திரு அவையைத் தலைமையேற்று வழிநடத்தும் ஒரு திருத்தந்தை, ஒரே நாளில் உருவாக்கப்படுவதில்லை. இறைவன் அவரைக் கருவின் உருவிலேயே அடையாளம் காண்கிறார். அவரை ஒவ்வொரு நாளும் செதுக்கிச் சமைக்கிறார். திருத்தந்தை பிரான்சிஸ் இறைவன் எப்படி இந்த 12-ஆண்டு காலகட்டத்திலும் தம் அருள் எனும் உளி கொண்டு செதுக்கி வடிவமைத்தார் என்பதற்கு அவர் ஆற்றிய பணிகளே மிகச்சிறந்த சான்று.
காலம்
எவ்வளவு மாறுபடுகின்றது? உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், நுகர்வோர் கலாச்சாரம், பயங்கரவாதம், புதிய தகவல் தொழில்நுட்பங்கள், சீரழியும் சுற்றுச்சூழல், பெரும் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களின் பேராசை, அரசியல் தலைவர்கள் மத்தியில் நீக்கமற நிலைத்திருக்கும் ஊழல், ஆண்-பெண் உறவுகள்-திருமண பந்தங்களில் ஏற்பட்டுள்ள உரசல்கள் மற்றும் விபரீதங்கள் போன்ற பல புதிய சவால்களைத்
திரு அவை எதிர்கொள்கிறது. பயணத்தின் ஆபத்துகளை நாம் புரிந்திருந்தாலும், நம்மை வழிநடத்தும் திருத்தந்தை அந்தச் சவால்களைச் சந்திக்கும் தகுதியும் தலைமைத்துவமும் பெற்றவராகவே விளங்கினார்.
உரோமாபுரி
மாளிகையின் நான்கு சுவர்களுக்குள் பாதுகாத்து வைக்கப்பட்ட புனித பொருளாகப் பாப்பரசர்கள் இருந்த காலம் போய், உலகின் தெரு வீதிகளில் உள்ளம் நிறைய கவலைகளோடும், கண்களில் நிறைய கண்ணீரோடும் காயப்பட்டு உயிருக்குப் போராடும் மனிதத்தைத் தூக்கி தன் மார்பில் சாய்த்து, நம்பிக்கை பால் ஊட்டி, மனித நேயம் வளர்க்கும் மகத்தான பணிதான் பாப்பரசரது பணியாக இருந்தது.
‘நீங்கள் யார்?’ என்று கேட்டால், ‘நான் ஒரு பாவி’ என்று தாழ்ச்சியுடன் தன்னை அடையாளப்படுத்துகிற ஒரு பாப்பரசராக நம் திருத்தந்தை விளங்கினார். ஊழல், உலகம் வெப்பமயமாதல், இருப்பவர்கள் மற்றும் இல்லாதவர்களுக்கு இடையே உலகம் முழுவதும் இருக்கின்ற பெரும் இடைவெளி, ஓரினச் சேர்க்கையாளர்களின் உளவியல் பிரச்சினைகள், கத்தோலிக்கக் குருத்துவத்தால் கசக்கி முகரப்பட்ட சிறுவர்-சிறுமியர்களுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமைகள், கத்தோலிக்கத் திரு அவையின் மேல்மட்ட நிர்வாகங்களில் இருக்கிற குளறுபடிகள்... என்று எல்லாவற்றைப் பற்றியும் உணர்வுப்பூர்வமாகத் தன் உள்ளத்தைத் திறந்து பேசும் ஒரு சமூக நீதிப் போராளியாகத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பணி அமைந்திருந்தது.
தனது
தலைமையிலான திரு அவை ‘ஏழை மக்களுக்கான ஏழைத் திரு அவை’ என்று நமது திருத்தந்தை கூறியபோது, நமது கண்கள் நன்றியின் கண்ணீரால் நனைந்தன.
இத்தனை
நல்ல பண்புகளைத் தாங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவு நம் ஒட்டுமொத்தத் திரு அவைக்கும் அளவில்லாத துயரத்தையும் பேரிழப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நற்செய்தியின் பாதையில் நடந்து, அனைவரும் சகோதர-சகோதரிகளாக ஒருவருக்கொருவர் இணைந்து நடப்பதன் அழகை மீண்டும் கண்டறிய அவர் விதைத்துச் சென்ற விதையானது நல்லெண்ணம் கொண்ட நம் அனைவரின் உள்ளங்களிலும் தொடர்ந்து முளைக்கும் என்பதில் ஐயமில்லை!
நான் அறிந்த திரு அவைத் தலைவர்களுள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வாழ்வும் பணியும் ஆண்டவர் இயேசுவின் வாழ்வு மற்றும் பணியோடு நெருக்கமாக ஒத்திருப்பதாகவே உறுதியாக நம்புகிறேன். இயேசுவின் வாழ்வும் திருத்தந்தையின் வாழ்வும் ஒன்றோடொன்று பிரிக்க முடியா இணைப்பைக் கொண்டுள்ளதாக உணர்கிறேன். ஒருசில ஒற்றுமைகளை மட்டும் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.
தீவனத் தொட்டியில்
கந்தைத்
துணியில்
பொதிந்தவர்
“துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்.” வாழ்நாள் முழுவதும் எளிமையே இயேசுவின் அடையாளம். திருத்தந்தை 13-ஆம் நூற்றாண்டு புனித அசிசி நகர் பிரான்சிஸ் பெயரை ஏற்று, அதற்கேற்ப எளிய வாழ்வும் ஏழைகளுக்கான அர்ப்பணமும் கொண்டு வாழ்ந்தவர். ஆயராகப் பணியாற்றியபோது ‘குடிசைப் பகுதிகளின் ஆயர்’ என்றே அறியப்பட்டவர். திருத்தந்தையரின் ஆடம்பர வாழ்வைத் துறந்து, எளிய குடிலில் தங்கி உணவு, உடை, பயணம் என யாவற்றிலும்
எளிமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்.
எதிர்க்கப்படும்
அடையாளம்
இது
சிமியோன் குழந்தை இயேசுவைப் பற்றி முன்குறித்த இறைவாக்கு. யூத சமயத் தலைவர்கள், மறைநூல் அறிஞர் இயேசுவை வன்மையாக எதிர்த்தனர். உண்மையைவிட தங்கள் அதிகாரத்தையும் செல்வாக்கையும் பாரம்பரியங்களையும் உயர்வாக அவர்கள் கருதினார்கள். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் அண்மைக்காலத் திரு அவைத் தந்தையர்களில் அதிகமான எதிர்ப்பைச் சந்தித்தவர். திரு அவை பற்றிய அவருடைய கருத்துகள், ஏழைகள், ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பில் அவர் கொண்டிருந்த நிலைப்பாடு போன்றவை எதிர்ப்புக்குக் காரணங்களாய் அமைந்தன. வரம்பு மீறிய முதலாளித்துவம், உலகச் சந்தை போன்றவற்றைக் கடுமையாக விமர்சித்தார். அமெரிக்காவில் எதிர்ப்பு எழுந்தபோது, “அமெரிக்கர்கள் என்னைத் தாக்குவதை மரியாதையாக ஏற்கிறேன்”
என்றார். ‘From Benedict’s peace to francis’ war’ மற்றும்
‘lost shepherd’ போன்ற நூல்கள் இத்தகைய எதிர்ப்பின் வெளிப்பாடுகள். ஆயினும், வேடிக்கையாகத் திருத்தந்தை குறிப்பிட்டார், “தம் எளிய குடிலில் மற்றவரோடு வரிசையில் நின்று உணவு பெறுவதால் உணவில் நஞ்சைக் கலக்கவும் வாய்ப்பில்லை.”
‘என் திருச்சபையைக்
கட்டுவேன்’
திரு
அவை ஆண்டவர் இயேசுவால் அழைக்கப்பெற்று, கட்டியமைக்கப்பட்ட சமூகம். நம்பிக்கையின் தொடர் பயணத்தில் இணைந்து செல்லும் மக்கள் திரு அவை. தலைவர்கள் ஏற்றத் தாழ்வு அற்ற, அனைவருக்கும் பணியாளர்களாகச் செயல்படும் மாறுபட்ட சமூகம். அவ்வாறே, திருத்தந்தையும் இறைமக்களைத் திரு அவையின் மையத்திற்குக் கொணர்கிறார். திருமுழுக்கு அருளடையாளம் மக்களிடையே சமத்துவத்தை நிலைநாட்டும் அடையாளம். திரு அவை வாழ்விலும் பணியிலும் அனைத்து இறைமக்களும் பங்கேற்க வேண்டும் என்ற நோக்குடன் திருத்தந்தை கூட்டொருங்கியக்கத் திரு அவையை முன்னிலைப்படுத்தினார். இதன் வழியாக அனைவரையும் உள்ளடக்கிய, அனைவருடைய பங்கேற்பையும் உறுதி செய்கின்ற திரு அவையைச் சமைக்க முற்பட்டார். திரு
அவையில் ஓரங்கட்டப்பட்டவர்களான பெண்கள், இளைஞர் ஆகியோருக்குப் பொறுப்புகளையும் பங்களிப்புக்கான அழைப்பையும் வழங்கினார்.
‘நான் இம்மக்கள்
மீது
பரிவு
கொள்கிறேன்’
‘ஏழைகளுக்கு நற்செய்தி’
இயேசுவின் திருப்பணிக்கும் திருத்தந்தையின் திருப்பணிக்கும் மையமாக அமைகிறது. தன் ஆண்டவரைப் போன்று திருத்தந்தையும் மனவுருக்கம் நிறைந்தவர். பிற நாடுகளில் குடிபுகுந்தவர்கள், அகதிகள் ஆகியோருடைய நலன்களை நோக்கிப் பயணித்தவர். தன் கிரீஸ் பயணத்தின்போது லெப்பாஸ் என்னும் இடத்திலுள்ள அகதிகள் முகாமைப் பார்வையிட்டு அங்கிருந்து 12 சிரியா நாட்டு இஸ்லாமியர்களைத் தன் விமானத்தில் உரோமை நகருக்கு அழைத்து வந்தார். ஆலயங்கள் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டும் என ஆயர்கள், பேராயர்களுக்கு
அறைகூவல் விடுத்தார். கிறித்தவர்கள் எந்த எதிர்பார்ப்பும் இன்றி நற்செயல்கள் செய்யவும் அந்நியரை ஆதரிக்கவும் வேண்டும் என வலியுறுத்தினார். மற்றவர்களைப் பற்றிய
அக்கறையின்மையை, உலகமயமாக்குதலை வன்மையாகக் கண்டித்தார்.
‘நானும் தீர்ப்பளிக்கவில்லை’
பரிசேயர்
என்னும் குழுவினர் இயேசுவை ‘பாவிகளின் நண்பர்’ எனக் குறைகூறினர். ஆயக்காரரோடு உணவருந்துகிறார், ஒழுக்கக்கேடான பெண்களுக்குச் சார்பான நிலைப்பாடு எடுக்கிறார் என்றனர். பாவிகளை மீட்கவே தாம் வந்துள்ளதாக இயேசு பதில் மொழிந்தார். அதுபோல, தற்காலச் சூழலில் கேள்விக்குள்ளான சில அறநெறிகளைத் துணிச்சலுடன் எதிர்கொண்டவர் திருத்தந்தை. ஓரினப் பாலியல் உணர்வு கொண்டிருப்பது குற்றமல்ல என்றும், அப்படிப்பட்டவர் ஆண்டவரைத் தேடி அவரது அருளைப் பெறுவாராயின், அவரை நியாயம் தீர்ப்பதற்கு நான் யார்? என்று குறிப்பிட்டார். மணவிலக்குப்
பெற்றவர் மற்றும் மணவிலக்குப் பெற்று மறுமணம் செய்தவர் நற்கருணையில் பங்குபெற வகை செய்தார். “நற்கருணை என்பது தூயவருக்கு அளிக்கப்படும் பரிசு அன்று; மாறாக, பலவீனமானவர்களுக்கு அளிக்கப்படும் சக்தி வாய்ந்த மருந்து மற்றும் ஊட்டச்சத்து” என்றார்.
‘இஸ்ரயேலரிடத்திலும்
இத்தகைய
நம்பிக்கையை
நான்
கண்டதில்லை’
இயேசு
யூதர்-யூதர் அல்லாதோர் எனும் வேறுபாடு இன்றி சமயம், இனம் கடந்து மக்களை இறைவனின் அன்புக்குரியவராய் கண்ணோக்கினார். உண்மைகளை அனைவருக்கும் போதித்து நற்சுகம் அளித்தல், உணவளித்தல் போன்ற அருங்கொடைகளை அனைவருக்கும் வழங்கினார். யூதர் அல்லாதோரிடையே காணப்பட்ட நம்பிக்கையைப் பாராட்டினார். நற்செயல் செய்வதற்கு உதாரணமாக ஒரு சமாரியரைச் சுட்டிக்காட்டினார்.
திருத்தந்தையும் முழு மனுக்குல ஒற்றுமைக்காகத் தன்னை அர்ப்பணித்தவர், பாடுபட்டவர். “பாலம் கட்டாமல் தடுப்புச் சுவர் கட்டுகிறவன் கிறித்தவன் அன்று” எனத் துணிச்சலுடன் முழக்கமிட்டவர். துபாய் அல் அசார் மசூதியின் தலைமை இமாமைச் சந்தித்தபோது, அமைதி மற்றும் சமய நல்லிணக்கத்திற்கான அறிக்கையைப் பிரகடனப்படுத்தினார். ‘சமயப் பன்மை இறைவனின் திருவுளம்’
எனும் புரட்சிக் கருத்தையும் முன்வைத்தார். “பிற சமயங்களை அவர்தம் கண்ணோட்டத்திலும் உடன்பாடு முறையிலும் பார்க்க வேண்டும்; தம் சமயம் உயர்வானது என்னும் கண்ணோக்கில் ஒப்பிட்டுப் பார்ப்பது பயனற்றது”
என்றார். உலகம் சீரமைவதற்குச் சமயங்கள் ஒன்றிணைந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
இவர் பிற சமய வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று மத நல்லிணக்கத்தை வலியுறுத்தினார்.
இஸ்லாமும் வன்முறையும் பிரிக்க முடியாதது என்ற தவறான கருத்தினைத் தகர்த்தார்.
‘உப்பும் ஒளியும்
நீங்களே...
உங்கள்
ஒளி
மனிதர்
முன்
ஒளிர்க’
ஆண்டவர்
இயேசு தம் சீடரை உப்பாகவும் ஒளியாகவும் உருவகப்படுத்துகிறார். “சீடர் உப்பையும் ஒளியையும் கொண்டு செல்பவர் அல்லர்; மாறாக, அவர்களே உப்பாக ஒளியாக வாழ்பவர்.” “அப்பொழுதுதான் அவர்கள் உங்கள் நற்செயலைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்” என்றார்.
திருத்தந்தை பிரான்சிஸ் நம் கிறித்தவ நம்பிக்கை வெறும் கோட்பாடு அன்று; அது வாழ்வின் நெறி என்பதை வலியுறுத்தினார். நற்செய்தி வழி நின்று அன்றாட வாழ்வில் நற்செய்தித் தகவுகளின் வழியில் வாழ்வதே வலிமையுள்ள நற்செய்தி என்கிற அர்த்தத்தை, நற்செய்தி வாழ்வியலை தம் வழியாக வாய்மையாக வாழ்வாகக் கொண்டு பயணித்த திருத்தந்தை தம் ஆண்டவரோடு விண்ணுலகில் இப்பயணத்தைத் தொடர்கிறார்.
திருத்தந்தைக்கு
என் தாழ்மையான அஞ்சலி. அன்னாரது சீர்திருத்த கருத்தாக்கம், நிலைப்பாடு, செயலாக்கம் தொடரவும் திருச்சபை தொடர்ந்து புதுப்பிக்கப்படவும் இறைவனிடம் வேண்டுகின்றேன்.
அன்புடையீர்! வணக்கம்.
கடந்த
2013-ஆம் ஆண்டு ‘பிரான்சிஸ்’ என்ற
பெயரில் ஒரு போப் ஆண்டவர் கத்தோலிக்கக் கிறித்தவத் தலைமைப் பொறுப்பை அலங்கரிக்கப் போகிறார் என்றவுடன், ஒட்டுமொத்த உலகமும் வத்திக்கானைத் திரும்பிப் பார்த்தது.
இன்னார்,
இன்ன கருத்தைச் சொன்னார் என்று ஒரு பெயரைக் குறிப்பிடுவோம். ஆனால், தன் பெயரைக் குறிப்பிடுவதிலேயே ஒரு கருத்தைப் பதிவு செய்தவர் மரியாதைக்குரிய போப் பிரான்சிஸ் அவர்கள். எளிமை, தாழ்ச்சி, இரக்க குணம், அன்பு, மனிதநேயம் அத்தனைக்கும் சொந்தக்காரரான திருத்தந்தை போப் பிரான்சிஸ் அவர்கள் 2025, ஏப்ரலில் தன்னுடைய மேல் உலகப் பயணத்தை மேற்கொண்டார் என்றதும், இங்குத் தங்கி நிற்கும் நாம் தயங்கி நிற்கிறோம். இனி வழிகாட்ட யார்?
‘அம்மையே மகவே வாய்ந்த
வருந்தவத் திறைவ சூசை
நும்மையே
யுயிரென்றாக
நுதலிநுந் நிழலில் வாழ்ந்த
நம்மையே
யகன்று போதீர்
நட்பிடை யகலா தன்பின்
செம்மையே
பேண்மி னென்னாச்
சென்றுமீண் டெவரும் போனார்’
- தேம்பாவணி
ஒவ்வோர்
உயிரின் மரணத்தின் போதும் நிலையாமையை நாம் உணர்ந்து கொள்கிறோம். எனினும், நிலையாத இந்த வாழ்வை கொண்டு இறைநெறியை, எளியோரின் நல்வாழ்வுக்கான சாத்தியக்கூறுகளை நிலைப்படுத்த முயற்சிக்க வேண்டும். அப்படி முயற்சித்தவர்களைப் பிரியும் போது ‘மனிதநேயத்தின் நுரையீரல்’
வலிக்கிறது.
‘வெந்திறல் கூற்றம் பெரும்பே துறுப்ப
எந்தை
ஆகுதல் அதற்படல் அறியேன்;
அந்தோ
அளியேன் வந்தனென் மன்ற;
என்னா
குவர்கொல் எற்றுன்னி யோரே;
மாரி
இரவின் மரங்கவிழ் பொழுதின்
ஆரஞர்
உற்ற நெஞ்சமொடு ஓராங்குக்
கண்ணில்
ஊமன் கடற்பட் டாங்கு...’-புறநானூறு-238
இந்த
நேரத்தில் தேவையான ஆறுதலையும் தேறுதலையும் இறைவன் நம் அனைவருக்கும் அளிப்பாராக என்று பிரார்த்திப்போம்.
ஏழைகளை
நாம் கௌரவப்படுத்த வேண்டும் என நான் விரும்புகிறேன்.
அவர்களை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். மனிதர்கள் தன்னலம் பார்ப்பதைவிட, பிறர் நலம் பார்க்க வேண்டும். “ஒரே ஒரு பயம் இருக்கட்டும்; ஏழைகளை நாம் அலட்சியப்படுத்தினால் கடவுளின் அன்பைப் புண்படுத்துவதாகும், காயப்படுத்துவதாகும். ஏழைகளை இயேசு நேசிக்கிறார்.
தேவை உள்ளவர்களிடம் இயேசு இருக்கிறார்” - இது
2021-ஆம் ஆண்டின் கிறிஸ்துமஸ் விழாவில் திருத்தந்தை
போப் பிரான்சிஸ் அவர்களின்
உரை.
நடக்க
இயலாத போதும் நல் எண்ணத்தால் எழுந்துவிடலாம். ஆனால், கண்கூடாகப் பாதிக்கப்பட்ட பிறருக்கு உதவாதபோது, எப்பேர்பட்ட செல்வந்தனாகவோ அறிவாளியாகவோ பலசாலியாகவோ இருந்தாலும், ஒரு மனிதன் முடங்குகிறான்.
‘நேயத்தே என்ற நிமலன் அடிபோற்றி!’ என்றார் மாணிக்கவாசகர். தான் மனிதநேயத்தோடு நடந்துகொள்வது என்பதைக்காட்டிலும், தன்னைப் போல எல்லாரும் பின்பற்றி நடக்க வேண்டும் என்று தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஒருவர் வாழ்ந்து காட்டுவது அரிது.
‘பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு
மாய்வது மன்’
(குறள் 996)
2025, ஈஸ்டர் விழாவில்
ஆயிரக்கணக்கான கிறித்தவ மக்களிடையே உரையாற்றும்போது திருத்தந்தை அவர்கள் கூறிய கருத்து பின்வருமாறு:
“உலக நாடுகளுக்குள் நடைபெறும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும். போர் என்பது மனிதநேயத்தின், மனித குலத்தின் தோல்வி. எனவே, அமைதியை ஏற்படுத்த வேண்டும்.”
அன்பர்களே!
இந்தச் செய்தியைக் கூர்ந்து கவனியுங்கள். ஒருவர் கடைசியில் எதைக் கூறினார் என்பதல்ல; கடைசி வரைக்கும் எதைக் கூறினார் என்பதில்தான் அவரது கொள்கை நிலைத்து நிற்கிறது. “நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்து கொள்வார்கள்” (மத்
13) என்று திருவிவிலியம் அறிவிக்கிறது.
தஞ்சை
மாவட்டம், பாபநாசத்திலிருந்து திருக்கருகாவூர் வரும் வழியில் ‘மறுபிறவி மர இழைப்பகம்’ என்கின்ற ஒரு பெயர்ப் பலகையைப் பார்த்தேன். சிந்தனையைத் தூண்டியது. மரம் குறித்தான இருவேறு பார்வைகள் உள்ளன. புனிதமானது பயனுடையது என்றாலும், உபயோகம் இல்லாமல்
நிற்பவர்களை ‘மரம்போல் நிற்கிறாயே...’ என்பது உலக வழக்கு. விளைந்த மரங்களை அறுத்து முறைப்படுத்தி, பலகைகளாக்கி கதவு, ஜன்னல், நிலைகள் எனக் கட்டுமானங்களுக்கும், கோவில்களில் இறைவன் எழுந்தருளும் வாகனம், தேர் எனவும் பல்வேறு வகைகளில் பயன்படுத்துகிறோம். மரங்கள் பயன் மரங்களாய் மறுபிறவி எடுக்கிறது பாருங்கள். இதைத்தான், ‘மறுபிறவி மர இழைப்பகம்’ என்னும் பெயர் குறிக்கிறது என்று நினைக்கிறேன். புரிந்துகொள்வோம்; விதையாவோம்; மரமாவோம்; பயனளிப்போம். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இறைப்பணிக்கும் மனிதநேய மாண்புக்கும் தலை வணங்குகிறேன்.
நமது வாழ்வு ‘உறவு’, ‘உலகு’ எனும் இரு கூறுகளின் சங்கமத்தில் ‘இருத்தல்’ கொண்டது. இவ்விரு தளங்களையும் ஒழுங்குபடுத்தும் போதும் அவற்றை நேரிய வழியில் பேணிக்காக்கும் போதும் இறைவனின் ஒட்டுமொத்தப் படைப்பும் பேருவகை கொள்ளும். இப்பேருண்மையை உணர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ், தனது பணிக்காலத்தின் முதல் நாள் தொட்டு, இறுதி மூச்சு வரை அதைத் தன் போதனையாகவே கொண்டிருந்தார். காலம் கரைந்தாலும், கனவுகள் சிதைந்தாலும் திருத்தந்தையின் சிந்தனைக் கதிர்கள் அதிர்வலைகளை இனி எப்போதும் ஏற்படுத்திக் கொண்டே இருக்கும் என்பதே என் நம்பிக்கை.
‘அக்கறை’ என்பது உறவின் மீதும் உலகின் மீதும் நாம் ஒவ்வொருவரும் கொண்டிருக்க வேண்டிய வாழ்வியல் நியதி. Man is not only a rational being, but also a relational being.
உறவுச் சமூகத்தைக் கட்டியெழுப்புவதும், உலகு எனும் பொது இல்லத்தைக் கட்டியெழுப்புவதும் நமது இயல்பாகவும் கடமையாகவும் இருக்க வேண்டும் என்னும் அவருடைய சிந்தனையை இவ்வுலகோருக்கு வாழ்வியல் சிந்தனையாக விட்டுச் சென்றிருக்கிறார்.
‘நாம் வாழும் இவ்வுலகின் மீது அக்கறை கொள்வது நம்மீதே நாம் கொள்ளும் அக்கறையாகும்’ எனக்
குறிப்பிடும் திருத்தந்தை, “நாம் அனைவரும் இவ்வுலகின் பொது இல்லத்தில் (common home) வாழும் ஒரே
குடும்பத்தினர் எனச் சிந்திப்பது அவசியமானதொன்று” எனவும்
வலியுறுத்துகிறார்.
நாம்
அனைவரும் ஒரே மனித குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உணர்வு மறைந்து வரும் இன்றைய உலகில், நீதி மற்றும் அமைதிக்காக நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்துகிறார். ஆகவே,
ஏமாற்று மாயையின் பின்னணியில் பிறக்கும் பாராமுகமாய் உலகமயமாக்கப்பட்ட, நேச உணர்வற்ற அலட்சியப் போக்கினால் அனைவரும் சக்தி வாய்ந்தவர்கள் என நினைத்துக் கொண்டு
நாம் அனைவரும் ஒரே படகில் இருக்கிறோம் என்பதை உணரத் தவறி விடுகின்றோம்.
ஒவ்வொரு
மதமும், கடவுளின் குழந்தையாகப் படைக்கப்பட்ட மனிதர்கள் மீது கொண்ட மரியாதையின் அடிப்படையில் சகோதரத்துவத்தை வளர்ப்பதற்கும் சமூகத்தில் நீதியைப் பாதுகாப்பதற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க வேண்டும் என்று வழிகாட்டுகிற திருத்தந்தை, சகோதரத்துவம் மற்றும் சமாதானத்தை நோக்கியப் பயணத்தில் அடிப்படை மனித உரிமைகள் மறக்கப்படக்கூடாது என நினைவூட்டினார். இதுவே பல்வேறு
கலாச்சாரங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் வளர்க்கக்கூடியது.
ஆகவேதான்,
திருத்தந்தை பிரான்சிஸ் தன் வாழ்நாள் முழுவதும் இறையரசின் மதிப்பீடுகளான அன்பு, அமைதி, நீதி, சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்திற்கான அறைகூவலை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக்கொண்டே இருந்தார். எனவே,
“மனிதர் அனைவரையும் உரிமைகள், கடமைகள் மற்றும் மாண்பில் சமமாக உருவாக்கி, அவர்களைச் சகோதர, சகோதரிகளாக ஒன்றாக வாழவும், உலகை நிரப்பவும், நன்மை, அன்பு மற்றும் அமைதி ஆகியவற்றின் மதிப்புகளை அறியவும் கடவுளே நம்மை அழைத்துள்ளார்” என
வேண்டுகிறார். இத்தகைய
கொள்கையில், கருத்தியலில், வாழ்வியலில் உறுதியான நிலைப்பாடு கொண்டதால்தான், “ஒருவரைக் கொல்பவன், முழு மனிதகுலத்தையும் கொல்பனைப் போன்றவன்; ஒரு நபரைக் காப்பாற்றுகிறவன், முழு மனிதகுலத்தையும் காப்பாற்றுகிறவனைப் போன்றவன்”
என அவரால் உறுதிபடக் கூறமுடிந்தது.
ஆகவே,
ஏழைகள், ஆதரவற்றவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், மிகவும் தேவையிலிருப்பவர்கள், அனாதைகள், விதவைகள், அகதிகள், வீடுகளிலிருந்தும் நாடுகளிலிருந்தும் நாடு கடத்தப்பட்டவர்கள், போர்களால் துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள், அநீதிகளால் பாதிக்கப்பட்ட அனைவரின் பெயரால் பலவீனமானவர்கள், பயத்தில் வாழ்பவர்கள், போர்க் கைதிகள் மற்றும் உலகின் எந்தப் பகுதியிலும் சித்திரவதை செய்யப்பட்டவர்கள்... எப்போதும் அவர் கண்முன் நின்றனர். எனவே, அவர்களின் பாதுகாப்பை, அமைதியை மற்றும் ஒன்றாக வாழ்வதற்கான வாய்ப்பை உறுதி செய்து, எல்லாரையும் ஒன்றிணைத்து அரவணைத்துச் செல்லும் புது சமுதாயத்தைக் காண வழிகாட்டினார்.
அமைதியில்
மலரும் கலந்துரையாடலே இத்தகைய விடியலுக்கான விடிவெள்ளி என்பதை உணர்ந்தவர். உரையாடல் கலாச்சாரத்தைப் பாதையாகவும் பரஸ்பர ஒத்துழைப்பை நடத்தை நெறிமுறையாகவும் ஒருவருக்கொருவர் இடையேயான புரிதலை வழியாகவும் தரச்சான்றாகவும் அறிவித்துள்ளார்.
சுருங்கக்கூறின்,
உலகளாவிய சகோதரத்துவத்தை வலியுறுத்துவதன் வாயிலாக உலகோடு உறவையும், உலகின் படைப்பனைத்தோடும் நல்லிணக்கத்தையும் இரு கண்களாக அவர் கொண்டிருந்தார்; நம்மையும் அவ்வாறே கொண்டிருக்க அழைத்தார். உலகோர் அனைவருக்கும் சகோதரனாக விளங்கிய அவர், இறுதிவரை இந்த ‘பிரபஞ்சத்தின் சகோதரனாகவே’ வாழ்ந்திருக்கிறார்
என்பதே உண்மை!
ஆகவே,…
“ஆண்டவரே, மாந்தர் அனைவரின் தந்தையே, நீர் மனிதர் அனைவரையும் ஒரே மாண்புடன் படைத்துள்ளீர்; ஒரு சகோதரத்துவ ஆவியை எங்கள் இதயங்களில் ஊற்றவும் புத்துணர்வுப் பெற்ற உரையாடல், நீதி மற்றும் அமைதி குறித்தக் கனவை எங்களுக்குள் ஊக்குவித்தருளும். மேலும், கண்ணியமான உலகத்தை, பசி, வறுமை, வன்முறை மற்றும் போர் இல்லாத ஆரோக்கியமான சமூகங்களை உருவாக்க எங்களையே நாங்கள் மாற்றிட அருள்புரியும். எங்கள் இதயங்களைப் புவியின் எல்லா மக்களுக்கும் தேசங்களுக்கும் திறந்திருக்கச் செய்யும். நீர் எங்கள் ஒவ்வொருவரிடமும் விதைத்துள்ள நன்மையையும் அழகையும் அடையாளம் காணவும், இதன் மூலம் ஒற்றுமையையும் பொதுவான திட்டங்களையும் கனவுகளையும் பகிர்ந்திடச் செய்தருளும்.
உம்
இறைமையின் ஆழமான ஒற்றுமையிலிருந்து, சகோதர அன்பினால் எங்களை நிரப்பும். நாசரேத்தின் குடும்பத்தில், தொடக்ககாலக் கிறித்தவச் சமூகத்தில், இயேசுவின் செயல்களில் பிரதிபலித்த அன்பை எங்களுக்கும் தாரும். கிறித்தவர்களாகிய நாங்கள் நற்செய்தியை வாழ்வாக்கவும், ஒவ்வொரு மனிதனிலும் கிறிஸ்துவைக் காணவும், கைவிடப்பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் படுகின்ற துன்பங்களில், சிலுவையில் அறையப்பட்ட இயேசுவையும், ஒரு புதிய தொடக்கம் காணும் ஒவ்வொரு சகோதர, சகோதரியிலும் உயிர்த்த இயேசுவையும் கண்டடையும் அருள்தாரும்.
வாரும்
தூய ஆவியே! புவியின் எல்லா மக்களிலும் பிரதிபலிக்கும் உம் அழகை எங்களுக்குக் காட்டும். இதனால் அனைவரும் முக்கியமானவர்கள், அவசியமானவர்கள், கடவுள் அதிகம் அன்பு செய்யும் மனித குலத்தின் வெவ்வேறு முகங்கள் என்பதை நாங்கள் அறியச்செய்யும்!” என ‘Fratelli tutti’
(‘சகோதரத்துவமும் சமூக நீதியும்’)
என்ற தனது திருத்தூது மடலில் அவர் தரும் செபம் என்றென்றும் நம் வாழ்க்கைப் பாடமாகட்டும்.