ஒடுக்கப்பட்ட யூத மக்களின் துயர் கண்டு இறங்கி வந்து விடுதலை அளித்த இறைவன், விடுதலைப் பயண நூலில் (3:7-10) தம்மை ஒடுக்கப்பட்டோரின் கடவுள் என வெளிப்படுத்துகிறார். மீட்பின் வரலாற்றில் தொடர்ந்து விளிம்பு நிலை மக்களுக்கு விலங்கொடித்து விடுதலை அளித்துக்கொண்டே இருக்கிறார். உலகில் உள்ள அடிமைப்படுத்தப்பட்ட இனங்கள் விடுதலை அடைந்து கொண்டுள்ளன.
இந்தியாவில்
தலித் கிறித்தவர் மூன்று நிலைகளிலும் ஒடுக்கப்படுகின்றனர். இந்துவாக இருந்தபோது சாதியத் தீண்டாமையினாலும், கிறித்தவச் சமூகத்திற்குள் காட்டப்படும் வேறுபாடுகளினாலும் பாதிப்பட்டுள்ளனர். ஒன்றிய அரசினாலும் அவர்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. இறையாட்சியின் மதிப்பீடுகளின் அடிப்படையில் சமத்துவம், நீதி நிறைந்த சமுதாயம் அமைக்க தலித் மக்கள் விடுதலை பெற வேண்டும். தலித் மக்களின் விடுதலையில்தான் இறையாட்சி விடியும்.
சமூகத்தில் ஒடுக்கப்பட்டோர்
இந்தியச் சமூகம்
சாதிய அமைப்பின்மீது கட்டப்பட்ட சமூகம். இச்சாதியம் சமயம் கடந்து எங்கும் பரவியுள்ளது. இந்திய வரலாற்றில் வர்ணத்திலிருந்து வளர்ந்த சாதியம் கி.மு. 1500-ஆம்
ஆண்டிற்குப்பின் ஆரியர்களால் புகுத்தப்பட்டது. அவர்கள் தலைமையைத் தக்க வைக்க இந்தப் பொய்யான படிநிலை சாதியமைப்புக் கடவுளின் படைப்பு என்று கூறப்பட்டது. வேத நூல்கள் அதைப் புனிதம் ஆக்கியது. சாதி அமைப்பைத் ‘தர்மம்’ என்று ரிக் வேதம் அடித்தளம் அமைத்துக் கொடுக்கிறது (X90.12). இந்த
நான்கு வர்ண (Chatur Varba) அமைப்புகளுக்குள்ளும்
வராத மக்களைச் ‘சாதிக்குப் புறம்பானவர்கள்’ என்று
தள்ளிவைத்தனர். மனுதர்மச் சட்டம் மண்ணின் மைந்தர்களை அடிமைகள் (தாசர்கள்), பஞ்சமர்கள் (ஐந்தாவது பிரிவினர்), சாதிக்குப் புறம்பானவர்கள், சண்டாளர்கள் என்று பெயரிட்டது. மண்ணின் மைந்தர்களின் மனித உரிமைகள் பறிக்கப்பட்டு அடிமைகள் ஆக்கப்பட்டனர்.
உரிமைகள் மறுக்கப்படுவோர்
ஒடுக்கப்பட்ட
மக்கள் ஒருங்கிணைந்த முன்னேற்றம் பெறுவதற்கு உரிமைகள் அளிக்கப்பட்டன. இந்திய அமைப்புச் சட்டம் 15, 16 இவைகளில் முதல் சட்டத்திருத்தம் கொண்டு வந்து பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இவர்களுக்குச் சிறப்பு உரிமைகளையும் ஒதுக்கீட்டையும் அரசு அளித்தது. அரசியல் சாசனப் பிரிவு 15(4) சமூகத்திலும் கல்வியிலும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தார் மற்றும் பழங்குடியினர் இவர்களின் முன்னேற்றத்திற்காகச் சிறப்புச் சட்டங்களை அரசு உருவாக்குவது என்ற அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் கீழ்க்காணும் உரிமைகளைப் பட்டியலினத்தார் மற்றும் பழங்குடி மக்களுக்குச் சமூகநீதி அடிப்படையில் அரசு அளிக்கிறது. கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவைகளில் ஒதுக்கீட்டு உரிமையும் சட்டப் பாதுகாப்பும் அளிக்கப்படுகிறது.
பட்டியலினத்தவருக்கு
வழங்கப்படும் உரிமைகள் அனைத்தும் மதம் மாறிய பட்டியலினக் கிறித்தவர்களுக்கு மறுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தொடர்ந்து பல அமைப்புகள் தலித்
சம உரிமைக்காகப் போராடி வருகின்றன. இது இந்தியாவெங்கும் ஒடுக்குமுறைக்கு எதிரானப் போராட்டமாகவும் எதிரொலித்து வருகின்றன.
திரு அவையின்
தலித்
விடுதலைத்
திட்டங்கள்
தமிழ்நாடு
தலித் கத்தோலிக்க ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக, தமிழ்நாடு ஆயர் பேரவை 1990-ஆம் ஆண்டு 10 அம்ச செயல்திட்டத்தினை அறிக்கையிட்டது. அதனைத் தொடர்ந்து 2004-இல் தலித் கத்தோலிக்கக் கிறித்தவர்களை அதிகாரப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான எட்டு அம்சத்திட்டம் ஒன்றை அறிவித்தது. ஆனால், முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை.
இந்தியக்
கத்தோலிக்க ஆயர்கள் பேரவை பட்டியலின கத்தோலிக்கரின் அதிகாரப்படுத்தலுக்கான கொள்கை வரைவை 2016, டிசம்பர் 26-இல் பிரகடனம் செய்தது. இதில் 12 தலைப்புகளில் 56 செயல்திட்டங்களைக் கத்தோலிக்கத் திரு அவையில் உள்ள அனைவரும் ஒருங்கிணைந்து, திட்டங்களைச் செயல்படுத்தி, தலித் மக்களை அதிகாரப்படுத்த வேண்டும் என்று அறிக்கையிடப்பட்டது. இதன் நோக்கம் அனைவரையும் உள்ளடக்கிய நீதி, சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் மனித மாண்பு நிறைந்த இறையாட்சிச் சமூகத்தை இம்மண்ணில் மலரச் செய்வது ஆகும். எட்டு ஆண்டுகள் நெருங்கும் நிலையில் இத்திட்டங்கள் செயலாக்கம் பெறவில்லை. ஆகவே கீழ்க்காணும் தலித் கொள்கை வரைவுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, தலித் மக்களை அதிகாரப்படுத்த வேண்டும்.
1. தீண்டாமை,
சாதிப் பாகுபாடுகளை ஒழித்து, சமத்துவச் சமுதாயம் உருவாக்குதல்.
2. அரசியல்தளத்தில்
சம உரிமை பெற மக்கள் அமைப்புகளோடு இணைந்து செயல்படுதல்.
3. பங்கேற்பு
அமைப்புகளில் ஆளுமையோடு பங்கேற்று தலைமையேற்கச் செய்தல்.
4. பொதுநிகழ்வுகளில்
தலித் கலை, பண்பாட்டுக் கூறுகளை இடம்பெறச் செய்தல்.
5. உயர்கல்வி,
தொழில்நுட்பக் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக் கல்வி அளிக்க வேண்டும்.
6. இளைஞர்கள்
நுண்திறன்கள், ஆளுமை வளர்ச்சி, தலைமைப் பண்பு, தன்னம்பிக்கை, தற்சார்பு ஆகியவற்றை வளர்த்துக்கொண்டு நல்ல தலைவர்களாக உருவாகச் செய்தல்.
7. அனைத்து
நிலைகளிலும் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான சிறப்புப் பயிற்சி அளித்தல்.
8. பெண்கள்
சமப் பங்கேற்பு, பங்களிப்பு மற்றும் தலைமையேற்க வழிசெய்தல்.
9. திரு
அவை, சமூகம், அரசியல் தளங்களில் தலைமையேற்கத் தொடர் பயிற்சித் திட்டங்கள்.
10. ஒடுக்கப்பட்டோருக்கு
உரிமையளிக்கும் வலுவுள்ள மக்கள் அமைப்புகளை அமைத்தல்.
11. குறைதீர்ப்பு
மையம்.
12. கண்காணிப்புக்குழு.
தலித் விடுதலைக்கு
அரசு
உரிமைகள்
1921-ஆம் ஆண்டிலிருந்து
வகுப்புவாரி ஒதுக்கீட்டு ஆணையின் அடிப்படையில் ‘இந்தியக் கிறித்தவர்’ என்ற
பிரிவில் தொடர்ந்து ஒதுக்கீட்டு உரிமைகளைப் பெற்று வந்தனர். 1950-ஆம் ஆண்டு இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 15/4 சாதியின் பெயரால் அனைத்துப் பட்டியல் சாதியினருக்கும் அளிக்கப்பட்ட ஒதுக்கீட்டு உரிமைகளைச் சமயத்தின் பெயரால் தலித் கிறித்தவர்களுக்கு மறுக்கும் 1950 ஜனாதிபதி ஆணை 3-வது பத்தி நீக்கப்பட்டு, சமூக நீதி தலித் கிறித்தவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.
1992 முதற்கொண்டு நீதி
ஞாயிறாகவும், 2007 முதல் தலித் விடுதலை ஞாயிறாகவும் கருத்துடன் கடைப்பிடிக்கப்பட்டது. இப்போராட்டம் சமநீதிக்காக எடுக்கும் நெடும் போராட்டமாக உள்ளது. தேசிய அளவில், அகில இந்திய ஆயர் பேரவை தலித் மற்றும் பழங்குடியினர் பணிக்குழு, மாநில ஆயர்கள் பணிக்குழு, தலித் கிறித்தவ மக்கள் இயக்கங்கள் கடந்த 74 ஆண்டுகளாகப் பேரணி, மாநாடு, உண்ணாவிரதம் போன்ற பல போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
மத்திய-மாநிலத் தலைவர்களிடம் கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர். இச்சமூக நீதிப் பிரச்சினை அரசியல் ஆக்கப்பட்டு, தலித் கிறித்தவர் உரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.
ஒன்றிய
அரசு மே, 2007 முதல் 18 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருக்கும் இரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையான ஜனாதிபதி ஆணை 1950 பத்தி 3 முழுவதையும் நீக்கி SC பட்டியலில்
சேர்க்கப் பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்ற வேண்டும். 2004 முதல் 21 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள (WP 180/2004) விசாரணைக்குப்
பா.ச.க. அரசு
உடனே பதில் தர வேண்டும். நீதித்துறை
தலித் கிறித்தவர்களுக்குச் சமூக நீதி வழங்கவேண்டும்.
திரு
அவையில் தீண்டாமை ஒழிக்கப்பட்டு, சம உரிமைகளையும் அரசின்
பட்டியலின உரிமைகளையும் தலித் கிறித்தவர் பெறுவதற்கு அனைத்து மக்களும் இணைந்து செயல்பட வேண்டும். விளிம்பு நிலையில் உள்ள தலித் கிறித்தவ மக்களுக்கு விடுதலை அளிப்பதே யூபிலி ஆண்டின் சிந்தனையாக அமையவேண்டும். எல்லா நிலைகளிலும் தமிழ்க் கிறித்தவர் விடுதலை அடைந்து, அதிகாரப்படுத்தப்பட்டால் இறையாட்சி விடியல் உண்டாகும்.
தேடலில் மனிதன்!
வெள்ளிக்கு
விளைநிலம் உண்டு; பொன்னிற்குப் புடமிடும் இடமுண்டு. மண்ணிலிருந்து இரும்பு எடுக்கப்படுகின்றது; கல்லிலிருந்து செம்பு உருக்கப்படுகின்றது. மனிதர் இருளுக்கு இறுதி கண்டு எட்டின மட்டும் தோண்டி, இருட்டிலும் சாவின் இருளிலும் கனிமப் பொருளைத் தேடுகின்றனர். மேலே நிலத்தில் உணவு விளைகின்றது; கீழே அது நெருப்புக்குழம்பாய் மாறுகின்றது. ஆனால், ஞானம் எங்கே கண்டெடுக்கப்படும்? அறிவின் உறைவிடம் எங்கேயுள்ளது? ‘என்னுள் இல்லை’ என உரைக்கும் ஆழ்
கடல், ‘என்னிடம் இல்லை’ என இயம்பும் பெருங்கடல்.
மனிதர் அதன் மதிப்பை உணரார்; இவை யாவும் யோபுவின் இறைவார்த்தைகள்.
நவீன
அறிவியல் மின்னணு உலகில் கல்வி பயில்வோர் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருக்கின்றது. இளம் வளர் இடைப்பருவச் சிறார்கள் இடை நிற்றல், தொழில் புரியும் காட்சிப் பிம்பங்கள் ஒளிக்கீற்றாக
நம் கண்களுக்குப் புகுந்தாலும் நகரங்களுக்கு இணையாகக் கல்வி பயில்வோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டேதான் இருக்கிறது. இந்த எண்ணிக்கையின் உச்சம் எவ்வாறு இருக்கிறது என்றால், மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கத் துடிக்கும் தமிழகக் கனவுகளுக்கு ஒன்றிய அரசின் கல்விச் சட்டம் தவிடுப்பொடியாக்குகிறது. காரணம், குருவியைவிட கூடுகள் அதிகம் காணக்கிடைப்பது போல் தமிழ்நாட்டு மக்கள்தொகைக்கு முரணாக மருத்துவக் கல்லூரிகள் ஏராளம் இருக்கின்றன என்பது ஒன்றிய அரசின் குற்றச்சாட்டாகப் பதிவு செய்யப்படுகிறது.
கல்வியின் நோக்கம்
என்ன?
பல்வேறு
துறைகளில் பன்மடங்கு வளர்ச்சியை இச் சமூகம் கண்டாலும், சமூகத்தில் நிகழும் முரண்பாடான செயல்களினால் ‘அறிவும் ஞானமும் எங்கே?’ என்ற கேள்விதான் எல்லார் மனத்திலும் எழுகின்றது. பெருகிவரும் குற்றங்களில் பெரும்பாலானோர் கல்வி பயின்றவர்கள். ஓடும் மழை நீரில் ஒய்யாரமாகத் தாவித்திரியும் தவளைகள் போல, கல்வியில் தன்னை முதல் தரத்தில் அழகுப்படுத்திக் கொண்டாலும், இளையோர் சிலர் குற்றச் செயல்களில் ஈடுபட்டுத் தண்டனை பெறுவது கலாச்சாரமாகக் காட்சியளிக்கிறது. செயற்கை நுண்ணறிவு, மனிதனின் செயல்பாடில்லா இயந்திரங்கள் இவ்வுலகத்தை ஆட்டிப் படைக்கின்ற வேளையிலே நண்பர் கூட்டத்திலிருந்து வருகின்ற நாளுக்கு ஒரு செய்தியாக ‘தொலைத்தொடர்பு ஊடகங்களைப் பிறர் ஹேக் செய்துவிட்டார்கள்’ என்பதே
ஆகும். அப்படி என்றால் இவர்கள் கல்வி பயிலாதவர்களா? கண்டிப்பாகப் பயின்றவர்கள்.
அறிவுத் தேடலில்
மனிதன்
மனிதன்
பிறந்த தருணத்திலிருந்து அவன் ஒரு தேடல் மயமான விலங்கு. உலகின் வெளிச்சம் அவன் விழிகளில் ஒளிர்ந்தாலும் உள்ளத்தின் இருள் அவனை ஏதோ ஒரு தேடலில் ஈடுபட செய்கிறது. அறிவால் மனிதன் இயந்திரங்களை உருவாக்குகின்றான். ஆனால், அவன் மனிதனாக வாழ்வதற்குச் சற்று தோல்வி அடைந்துவிடுகின்றான். அறிவு என்பது மனிதனின் உள்ளார்ந்த தாகமாக இருக்கின்றது; அது உண்மையைத் தேடிக்கொண்டே
செல்லும் ஒரு பயணமாக அமைகின்றது. மனித சிந்தனையின் உச்சமும் இறை அச்சத்தின் ஆழமும் சந்திக்கும் இடம்தான் அறிவு என்கிறார் புனித அகுஸ்தினார். அறிவு என்பது நீதியின் ஒளி அது இறைவனிடமிருந்து வருகின்ற பரிசு என்று கூறுகின்றார் புனித தாமஸ் அக்குவினாஸ். அறிவும் நம்பிக்கையும் இரண்டு இறக்கைகள் போல அவை மனித ஆன்மாவை உண்மையின் பக்கம் இட்டுச் செல்கின்றன என்கிறார் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால்.
தமிழ்
இலக்கியம் புறநானூறு ‘நீரினும் நெஞ்சம் நன்கு அறிந்தாரே ஞானிகள்’
- அப்படியென்றால் ஞானம், அறிவு என்பது மனத்தின் தெளிவும் கருணையும் ஆகும் என்கிறது. ஆனால், பயின்றவர்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் அறிவுடையோராய் மனத்தில் தெளிவும் மனிதாபிமான கருணையும் கொண்டுள்ளார்களா என்று சிந்திக்கின்ற வேளையிலே குற்றங்கள் நிகழ்ந்து தண்டனை பெறும் அனைவரும் இவை இல்லை என்பதைச் சுட்டிக்காட்டுகின்றார்கள்.
ஆகவேதான் பலருடைய கேள்வியாகக் கல்விச்சாலைகள் எதற்காக? அறிவு எங்கே? ஞானம் எங்கே? என்ற கேள்வியை இதயத் துடிப்பாகத் துடித்துக் கொண்டிருக்கிறது.
இதைத்தான்
யோபுவின் வார்த்தைகள் “ஆண்டவருக்கு அஞ்சுங்கள்; அதுவே ஞானம். தீமையை விட்டு விலகுங்கள்; அதுவே அறிவு” என்கிறது. இதையே திருவள்ளுவரும்
‘அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல்
அறிவார் தொழில்’
என்று
அழகாகக் கூறுகின்றார். உலகில் நாம் அஞ்ச வேண்டிய செயல்களுக்கு அஞ்சாமல் இருப்பது அறியாமையாகும்; அதேவேளையில் அஞ்ச வேண்டிய காரியங்களுக்கு அஞ்சி நடப்பதே அறிவுடையோரின் செயலாகும் என்று கூறுகின்றார்.
ஆழ்ந்து
அறிந்து கட்டடமாக இருக்கும் கடினமான பாடங்களைப் படித்துத் தேர்ந்தாலும் வாழ்வில் கட்டுப்பாடுகளும் கடவுள் பயமும் இல்லை என்றால், வாழ்வு அறிவற்றுதான் காணப்படும். இன்று அறிவு காணப்படுகிறது, ஆனால் ஞானம், பகுத்தறியும் திறன் குறைவாகத்தான் காணப்படுகிறது.
ஒரு
மனிதன் தனது வாழ்வின் உண்மையைக் கண்டடைய வேண்டுமெனில் அறிவும் ஞானமும் அவனுக்குத் தேவைப்படுகிறது. உலகில், அறிவுசார் தகவல் மழை பெய்து கொண்டிருக்கிறது; ஆனால், ஞானத்தின் நிலம் காய்ந்து வறட்சி அடைந்திருக்கிறது.
அறிவினால்
கடவுளின் படைப்பை ஆராய்வதை விட்டுவிட்டு கடவுளின் அருளால் அவருக்கு அஞ்சி நமது வாழ்வை உண்மையான பாதையில் சீர்தூக்கிட முற்படுவோம்.
மனைவி, பிள்ளைகளிடம் இப்போதெல்லாம் நான் சிரித்துப் பேசுவதில்லை. தன்னையே மறந்து எப்போதும் சிரித்தபடியே சுற்றித்திரியும் மனநோயாளியைப் பார்க்கும்போது கூட எனக்குப் பொறாமையாக இருக்கிறது. சிறகொடிந்திருந்த பறவையைப்போல ஒரே இடத்திலேயே பல மணிநேரம் அசையாமல் அமர்ந்திருந்தேன்.
என் மனைவி அடிக்கடி ‘ஏன் இப்படி இருக்கீங்க? என்னதான் ஆச்சு?’ என்று பலமுறை கேட்டுவிட்டாள். நான் பரிட்சைக்குப் பதில் தெரியாமல் முழிக்கும் சிறு குழந்தைபோல நின்றுகொண்டிருந்தேன்.
சிறு வயதிலிருந்து பழகிய நண்பன் சந்துரு. சில ஆண்டுகளுக்கு முன்பாக ‘எனக்கு ஹார்ட் பிராப்ளம், ஆப்ரேஷன் பண்ணணும்’ என்று வந்து நின்றவனுக்கு ஆபீசில் லோன் போட்டு இரண்டு இலட்சம் ரூபாயை எந்தக் கேள்வியும் கேட்காமல் கொடுத்திருந்தேன். சில நாள்களுக்குப் பிறகு பிசினஸ் பண்ண பணம் அதிகமாகத் தேவைப்படுகிறது என்பதால் வேறு வழியில்லாமல் அப்பணத்தைத் திருப்பித் தரும்படி அவனிடம் கேட்டேன். ‘இதோ இன்று தருகிறேன், நாளை தருகிறேன்’ என்று கூறிக்கொண்டே ஆறு மாதங்களாக என்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டான். இதனால் படியேறி வந்த பிசினஸ் வாய்ப்பு கைநழுவிச் சென்றது.
கோபத்தை எப்படி வெளிப்படுத்தவேண்டும் என்று தெரியவில்லை. அவனிடமும் நேரடியாகச் சென்று கேட்க மனம் விரும்பவில்லை. இனிமேல் அவனிடம் பேசவும் வேண்டாம், அந்தப் பணத்தைக் கேட்கவும் வேண்டாம் என்று முடிவு செய்தேன்.
யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் பழனி முருகன் கோவிலுக்குச் சென்று மொட்டை போட்டுக்கொண்டு வந்தது என் மனைவி, பிள்ளைகளுக்கு இன்னும் மனச்சங்கடத்தை ஏற்படுத்தியது.
ஏமாற்றம் என்பது ஒரு நோய். ஏமாற்றப்பட்டவர்களுக்கே அந்த நோயின் வலி புரியும். நான் ஏமாற்றப்பட்டுவிட்டேன் என்று நினைக்கும்போது நிலைகுலைந்து போனேன்.
ஆண்டுகள் பல ஓடின. என்னதான் காலம் புரண்டு படுத்தாலும் மனத்திலே வெறுமையும் வெறுப்புமே மிஞ்சியிருந்தது.
ஒருநாள் ஆபீஸ் கிளம்பலாம் என்று தயாரானபோது, என் நண்பனின் மகன் வீட்டிற்கு வந்திருந்தான். முன்பு பார்த்ததைவிட இப்போது நன்கு வளர்ந்திருந்தான் அவன். ‘எப்படி இருக்கீங்க அங்கிள்?’ என்று நலம் விசாரித்தான். நான் தலையை மட்டும் அசைத்தேன். அவனை உட்காரச் சொல்லிவிட்டு ஒரு டம்ளர் காபி கொடுத்தாள் என் மனைவி. அவனும் அதை மெதுவாகக் குடித்து முடித்துவிட்டு, தன் தோள்பையிலிருந்து சில பணக் கட்டுகளை எடுத்து என்னிடம் கொடுத்தான். நானும் வாங்கிக்கொண்டேன். ‘நான்கு இலட்சம் இருக்கு அங்கிள். லேட்டா கொடுத்ததற்குச் சாரி அங்கிள்’ என்றான். ‘இரண்டு இலட்சம்தானே கொடுத்திருந்தேன், சாரி எல்லாம் எதற்கு?’ என்று கூறுவதற்கு வாயெடுப்பதற்கு முன்பே, ‘சரி அங்கிள், நான் கிளம்புகிறேன்’ என்று சொல்லி வேகவேகமாக வெளியேறினான் சந்துருவின் மகன். ‘சந்துரு எப்படி இருக்கிறான்?’ என்று கேட்பதற்குக்கூட நான் நினைக்கவில்லை. என் உள்ளம் ஏன் இப்படிக் கல்லாய் போனது? நண்பர்கள் தேவையில் இருக்கும்போது உதவுவதே உண்மையான நட்பு என்பது போல, என் நண்பனின் உதவி எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அந்தப் பணம் இருந்ததால் என் மூத்த மகளை நல்ல கல்லூரியில் சேர்க்க முடிந்தது.
சந்துருவை நேரில் சந்தித்து நன்றி சொல்ல வேண்டும் என்று என் மனைவி அடிக்கடிச் சொல்வாள். நான் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.
காலங்கள் உருண்டோடின. என் மகள் படித்து பட்டதாரியானாள். பழைய கோபங்கள் பழைய நோட்டுப் புத்தக எழுத்துகள் போல மங்கிப் போயிருந்தன.
சந்துருவைச் சந்தித்து நன்றி சொல்லிவிட வேண்டும் என்று முடிவெடுத்து அவனுடைய சொந்த ஊரான வள்ளியூருக்குச் சென்றேன். அங்கிருந்து பல ஆண்டுகளுக்கு முன்பாகவே அவன் குடும்பத்தோடு திருநெல்வேலிக்குக் குடிபெயர்ந்து விட்டான் என்று அறிந்து, அவனைத் தேடி திருநெல்வேலிக்குச் சென்றேன். ஒருவழியாக பல போராட்டங்களுக்கிடையில் சந்துருவின் வீட்டைக் கண்டுபிடித்தேன். அவனிடம் என்ன பேச வேண்டும், எப்படிப் பேசவேண்டும் என்றெல்லாம் பல கேள்விகள் உள்ளத்திலே ஊசலாடிக் கொண்டிருந்தன. அவன் கொடுத்த பணத்திற்காக அவனுக்கு நன்றிசொல்லிடவேண்டும் என்பது மட்டும்தான் மனத்திலே இருந்தது. காலிங்பெல் அடித்தவுடன் யாரோ ஒருவர் கதவைத் திறக்க, முதலில் தெரிந்தது மாலையணிவித்த நிலையில் இருந்த என் நண்பனின் புகைப்படம்தான். சந்துரு இறந்து நான்கு ஆண்டுகள் கழிந்திருந்தன.
‘காலம் கடந்து சொல்லப்படும் நன்றி, நன்றியற்றதற்குச் சமம்.’
ஒருவன் பிரச்சினையில் இருக்கிறான் என்றால், அவனுக்கு நண்பர்கள், குடும்பத்தினர் என்று அனைவரும் உதவிசெய்ய முன்வரவேண்டும். அதுவே அவனுக்குப் பிரச்சினைகளே இல்லை என்றால், அவன் யாரையும் பற்றிக் கவலைப்படுவதேயில்லை. அவன், அவனுடைய குடும்பம் என்று சுயநலவாதியாகிவிடுகிறான். குடும்பத்தின் பாசவளையத்திற்குள்ளேயே நிம்மதிப் பெருமூச்சுவிடுகிறான்.
சிலர் குடும்பத்தைப் பற்றிக்கூட அக்கறைப்படுவதில்லை. சமூக ஊடகங்கள் வந்த பிறகு சமூக ஊடகங்கள் தருகின்ற போதையில் பலரும் மிதக்கின்றனர். கிணற்றுத்தவளைபோல தான் கண்டதே உலகம் என்கின்றனர். அவர்களை ஊக்கப்படுத்துவதுபோல சமூக ஊடகங்களில் பல புதுமைகள் புகுத்தப்படுகின்றன. அதில் ஒன்றுதான் ASMR (Autonomous Sensory Meridian Response) காணொளிகள்.
இத்தகைய காணொளிகள் பார்வையாளர்களின் புலன்களுக்கு ஒருவிதமான கிளர்ச்சியை ஏற்படுத்துவதோடு, இதமான உணர்வைத் தூண்டியெழுப்புகின்றன. எடுத்துக்காட்டாக முடிவெட்டுவது, புற்களை வெட்டுவது, வீட்டைச் சுத்தம் செய்வது, காகிதத்தை மெதுவாகக் கிழிப்பது, பலூன்களில் தண்ணீர் நிரப்பி, அதனை ‘ஸ்லோ மோசனில்’ உடையச் செய்வது.
யூடியூப் மற்றும் இன்ஸ்டா பக்கங்களில் வரும் இவ்வகை ஏ.எஸ்.எம்.ஆர். காணொளிகள் மன அழுத்தத்தைக் குறைத்து மனத்தை ஆற்றுப்படுத்துகின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன. இவ்வகை, காணொளிகள் உடல் முழுவதும் செயல்படும் நரம்பூக்கிகளான (neurohormones) டோபமைன் (மகிழ்ச்சி ஹார்மோன்), ஆக்ஸிடோசின் (காதல் ஹார்மோன்), மற்றும் எண்டோர்பின்கள் (வலி நிவாரணி) ஆகியவைகளை விழித்தெழச்செய்து மனத்தைக் குளிர்விக்கின்றன எனலாம்.
‘அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு’ என்பது போல அதிகளவில் நுகரப்படும் ஏ.எஸ்.எம்.ஆர். காணொளிகள் பல்வேறு உடல் மற்றும் மனநலப் பாதிப்புகளையும் வருவிக்கின்றன. குறிப்பாக, ஏ.எஸ்.எம்.ஆர். காணொளிகள் அதிகளவில் பார்க்கப்படுவதால் தூக்கமின்மை, நேரவிரயம், போதை மயக்கத்தில் திளைத்திருப்பது போன்ற உணர்வு, பதற்றம், உடல் பருமன் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
அமைதியையும் ஆறுதலையும் ஒருவர் மற்றவரின் சிரிப்பில் கண்டு அனுபவிப்பதே உச்சக்கட்ட இன்பம் எனலாம்.
(தொடரும்)
‘நீலத் திமிங்கல சவால்’ எனும் விளையாட்டு பரபரப்பாகப் பேசப்பட்டது. இது இணைய வழி விளையாட்டு எனினும், குழந்தைகளின் உயிரோடு ‘கியூரேட்டர்’ விளையாடுவார். இதில் 50 சவால்கள் உள்ளன. 30-49 படிநிலைகளில் உயிரைப் பணயம் வைத்து விளையாடவேண்டும். அது தற்கொலை முடிவைக் கேட்கும் உயிர் விளையாட்டு. ஒவ்வொரு சவால் முடிந்ததும், கியூரேட்டருக்குப் புகைப்படம் அனுப்பவேண்டும். கியூரேட்டர் பதிலுக்கு, பயங்கர இசையை அல்லது திகில் படத்தை அனுப்புவார். மாதிரிக்கு ஒரு படிநிலையைக் காண்போம்.
அதிகாலை
4.20க்கு கியூரேட்டர்
ஒரு படம் அனுப்புவார், ஒரு செய்தியும் அனுப்புவார். அதில் ‘உங்கள் சொந்தக் கைகளை நீளவாக்கில் வெட்டுங்கள்; பின் ஒரு திமிங்கலத்தைக் காகிதத்தில் வரையுங்கள்.’
விளையாடுபவர்
திமிங்கலமாக மாறத் தயாராக இருந்தால் தன் காலில் ‘ஆம்’ என எழுதவேண்டும். இல்லையெனில்,
அவர்கள் தங்களைப் பலமுறை வெட்டிக்கொள்ளவேண்டும். அவர்களை பாலம், கூரை, கிரேன் மீது ஏறிக் குதிக்கச் சொல்வார். இப்படி அப்பாவி பதின் பருவத்தினர் செய்யவேண்டும். அப்படிச் செய்து, அவர்கள் நீலத் திமிங்கலத்தோடு பேசுவார்கள். அவர்கள் நீலத் திமிங்கலமாக மாறும் சவாலில் படிநிலை மாறுவார்கள். இறுதியில் உயிரையும் விடுவார்கள்.
மேலை
நாடுகளில் பெற்றோருக்குத் தன் குழந்தைகளின், இணைய தள உபயோகிப்பில் வழிகாட்
டும் நெறிமுறைகள் உள்ளன. அங்குப் பெற்றோரின் கண்காணிப்பில் பதின் பருவத்தினர் வளர்கின்றனர். நம் நாட்டில் பதின் பருவத்தினர், பள்ளிக் கல்விக்குப் பின் இளையோர், இருபாலரும், யூடியூப், முகநூல், இன்ஸ்ட்டா, எக்ஸ் தளம் (டுவிட்டர்) என இணைய தளங்களில்
மூழ்கிக் கிடக்கின்றனர். வெளியுலக நடப்புத் தெரியாது வாழ்கிறார்கள். எதற்கெடுத்தாலும் ரீல்ஸ், லைக், கமெண்ட், ஷேர் என்பதே அவர்கள் உலகமாய் இருக்கிறது. பெரும்விழாக்களில், சுற்றுலா தளங்களில் இன்புளூயென்சர் என்போர் முக்கிய நபராக வலம் வருகிறார்கள்.
பலமுறை
‘டிரெண்டிங்’ எனப்படும்
செய்திகளை, திரைப்பாடல்களை, திரைப்பட முன்னோட்டங்களைக் கண்டு வியந்து
போயிருக்கிறேன். உலகளாவிய தமிழர்கள் எண்ணிக்கைகளைவிட ‘வியூஸ்’ எனும் பார்வைகளின் எண்ணிக்கை கண்டு அதிர்கிறேன். அது தொழில்நுட்ப, கார்ப்பரேட் எல்லாம் விலையெனும் வியூகம் தெரிந்து நொந்துள்ளேன்.
ஒரு
காலத்தில் அஜித் இரசிகர்கள், விஜய் இரசிகர்களின் சமூக வலைத்தளச் சண்டைகள், தமிழில் இத்தனை கெட்ட வார்த்தைகள் உள்ளனவா? என அறிய வைத்தன. அச்சேற்ற
முடியாத வார்த்தைகள் மின்னணுக்களில் மின்னியது.
குறிப்பாக,
பதிவிடுவோரின் உடல் உறுப்புகளையும், அவரது தாய், சகோதரிகள் குறித்த பதிவுகள்! அவர்களைக் கண்டுபிடித்து, கழுத்தை நெரிக்கலாமா? எனவும் தோன்றியது. முகநூலில் இந்த இரசிகர்கள் முகத்தை, முகவரியை மறைத்துவிட்டுச் செய்கிற அசிங்கம் படுகேவலம்.
சில
நேரங்களில், இவர்களது முகநூல் பதிவுகள் குறித்துக் கருத்துத் தெரிவித்தால், பா.ச.க.
அண்ணாமலை போல எதிர்கேள்வி: “உனக்கு ரூபாய் 200 வந்துவிடும்” என்ற
ஒற்றைப் பதிலே இரசிகர் கூட்டங்களின் தாரக மந்திரம். முடியாவிட்டால், தற்கொலைக்குத் தூண்டுகிற அர்ச்சனைகள், தரம் தாழ்ந்த பதிவுகள். இவர்கள் என்றும் வேலைக்குச் செல்லாமல் செய்கிற முழுநேர வேலையே இதுதான்.
அஜித்
இரசிகர்களை விட்டுவிட்டு, ரஜினி இரசிகர்களோடு, தங்கள் அட்டைக்கத்திகளை விஜய் இரசிகர்கள் வீசினர். அதன் நீட்சி கரூரில் வெளிச்சமானது. எத்தனை எத்தனை பேட்டிகள்! கல் வீசப்பட்டது என்றார்கள். வீசிய கற்கள் வானிலே நின்றுவிட்டதா?
என்றால் பதில் இல்லை. கத்திக் குத்து, மயக்க ஸ்பிரே அடிக்கப்பட்டது, கத்தியில் குத்தினார்கள் என எத்தனை பேட்டிகள்...
சமூக வலைத்தளப் பதிவுகளில் மூன்று நாள்கள் உலா வந்தன. முதல்வரே தலையிட்டு, ‘வதந்தியைப் பரப்பக்கூடாது, அவர்கள் கைது செய்யப்படுவார்கள்’ என்றவுடன்,
மூன்று கைதுகளுக்குப் பின், தங்கள் சமூக வலைத்தளக் கணக்கை இவர்கள் இழுத்து மூடிப் பதுங்கினர்.
25 ஆண்டுகள்
பள்ளியில் பணிபுரிந்தவன் என்ற முறையில் ஆணித்தரமாகக் கூறுகிறேன்: பெற்றோர் தங்கள் செல்லப் பிள்ளைகளின் தவறுகளை நன்கு தெரிந்தும் ஏற்றுக் கொள்வதில்லை. அடிப்படை வாழ்வாதாரத்திற்குப் போராடும் குடும்பப் பிள்ளைகளின் கையில் விலையுயர்ந்த ஆன்ட்ராய்டு கைப்பேசிகளைக் காண்கிறேன். இவர்களின் எதிர்காலம் குறித்துக் கவலை கொள்கிறேன். இவர்களது மொழி அறிவு, சமூகத் தொடர்பு, வேலைவாய்ப்பு எதுவுமின்றி கனவுகளில் வாழ்கிறார்கள். வாழ்க்கையைத் தொலைக்கிறார்கள்.
கரூர்
சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களைக் காண்கிறேன். அனைவரும் மிக ஏழைகள் என உணர்ந்து வருந்துகிறேன்.
கூட்ட நெரிசலில் ஓர் இளம்பெண்ணிடம் செய்தியாளர் கேட்கிறார்: “இவ்வளவு சிரமப்பட்டு, பிடித்த நடிகரைப் பார்க்க வேண்டுமா?” எனக் கேட்கிறார்.
அதற்கு அப்பெண், “நான் செத்தாலும் பரவாயில்லை, பிடித்த நடிகரைப் பார்த்துவிட்டுச் சாகிறேன்”
என்கிறார். இப்படிப் பிடிவாதம் பிடித்து உயிரிழந்தோர் ஏராளம்.
நடிகரின்
கட்சியில் நிர்வாகிகளாக உள்ள இளைஞர்களை நான் அறிவேன். எங்கள் தலைமுறையில் தொகுதிதோறும் பூத் கமிட்டி அமைக்கும் வரை வந்து இந்த அரசியல் வேண்டாம் என்ற நடிகரால் தன் தொழில், குடும்பம், வாழ்க்கை என எல்லாம் இழந்து
மரித்த சகோதரர்களைக் கண்டிருக்கிறேன். மீண்டும் அதுபோன்ற நிலை வரக்கூடாது என்பதே நமது ஆதங்கம்.
விக்கிரவாண்டி சாராயச்
சாவுகள் அனைவரும் அறிந்ததே. விக்கிரவாண்டியில் 50,000 உறுப்பினர்கள் எங்களுக்கு ஆன்லைனில் பதிவு செய்துள்ளார்கள் எனப் பேசினார்கள். விஜய் இரசிகர்கள் நோட்டாவுக்கு ஓட்டுப் போடுங்கள் என்றார்கள். அந்த இடைத்தேர்தலில் பொதுத்தேர்தல் ஓட்டுகளைவிட, நோட்டாவின் ஓட்டுகள் குறைந்தது என்பதே தமிழ்நாடு அரசியல் வரலாறு.
தனது
கருத்துகளைத் துணிந்து பொதுவெளியில் தந்தை பெரியாருக்குப் பிறகு பேசும் நடிகவேள் எம்.ஆர். ராதா கூறுவார்: “பார்த்தியா, ரசிச்சயா, அதோட கூத்தாடிய விட்டுப் போயிட்டே இரு. அவன் அடுத்தக் கூத்துக்கு ரெடியாயிட்டு இருப்பான். அவன் உலகத்திலே நுழைஞ்சி பார்க்காதே. அது ரொம்ப அசிங்கம். அவனை அரசியலுக்குக் கூப்பிட்டு, அழிஞ்சு போகாதே. நீ அவனுக்குக் காசு
கொடுக்கிறே. அவன் நடிக்கிறான். அவன் உன் வேலைக்காரன். அந்த வேலைக்காரனைத் தலைவன்னு கொண்டாடாதே. அது அசிங்கம், அவமானம்” என்பார்.
சில காலம்
தமிழர்கள் தங்கள் மீட்பரை வெள்ளித்திரையில் தேடுகிறார்கள் என்ற பிரச்சாரம் புதைந்து இருந்தது. அது மீண்டும் உயிர் பெற்றுவிட்டது. 2026 தமிழ்நாடு தேர்தல் குறித்த பல கட்டுரைகளில் கடைசி
வரியாகச் சொன்ன ஆருடம் கரூரில் நிகழ்ந்துவிட்டது.
இவர்கள்
நீலத் திமிங்கல விளையாட்டை இரசிகர்கள் கூட்டமாகச் செய்கிறார்கள். பெற்றோர் தாம் விழித்து, தம் பிள்ளைகளைக் காக்கவேண்டும். மனித உயிர்கள் மகத்தானவை!
ஆகஸ்டு 4-இல் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம் சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு எழுதிய ஒரு கடிதத்தில், இந்தியாவின் பாதுகாப்புத்துறை வாகனங்கள், கண்காணிப்பு மற்றும் வழிகாட்டிக் கருவிகள் மற்றும் தொலைத்தொடர்புக் கருவிகளை உருவாக்க அரியவகை கனிமங்கள் தேவைப்படுவதால் முக்கியக் கனிமங்கள் மற்றும் அணுக்கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் சுரங்கத் திட்டங்களைத் தேசப்பாதுகாப்பு முக்கியத்துவம் கொண்ட திட்டங்களாகக் கருதி, அவற்றிற்குச் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் நடைமுறையிலிருந்து விலக்களிக்கக் கோரப்பட்டுள்ளது.
ஆகஸ்டு 29-ஆம் தேதி ஒன்றிய அணுசக்தித் துறையானது சுற்றுச்சூழல் துறைக்கு எழுதிய இந்தக் கடிதத்தில், 3-ஆம் நிலை அணுமின் உற்பத்திக்குத் தேவையான தோரியம் எரிபொருளைக் கொண்டிருக்கும் மோனசைட் மற்றும் முதல்நிலை அணுமின் உற்பத்தியில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் யுரேனியம் காணப்படும் கடற்கரைத் தாதுமணலை அகழ்ந்தெடுக்கும் திட்டங்களுக்கு, பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்துவதிலிருந்து விலக்களிக்க வேண்டும் என்று கோரியுள்ளது. இக்கோரிக்கையைப் பரிசீலித்த ஒன்றியச் சுற்றுச்சூழல் அமைச்சகம், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத்தின்கீழ் முக்கியக் கனிமங்களாகவும் அணுக்கனிமங்களாகவும் வகைப்படுத்தப்பட்ட கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் திட்டங்களுக்கான பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் இரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. சுற்றுச்சூழல் நடைமுறையாக இருந்த பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம், இனி இத்திட்டங்களுக்கு நடத்தப்படமாட்டாது. இத்திருத்தம் இந்திய அரசமைப்புச் சட்டம் நிர்ணயித்துள்ள தகவல் அறியும் உரிமையையும், பிரிவு 48ஏ-இன் கீழ் வருகிற சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கடமையையும் மீறுவதாகவே அமைந்துள்ளது. ஒன்றிய-மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்க இயலாத நேரங்களில் மக்களின் நியாயமான உணர்வுகளையும் அச்சங்களையும் கேள்விகளையும் வெளிக்கொணர 1994-ஆம் ஆண்டிலிருந்து சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986-இன் கீழ் மக்களின் பங்கேற்பை உறுதிப்படுத்தவே பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் கொண்டுவரப்பட்டது. மக்களின் சனநாயக மாண்பைக் கூட மதிக்காமல் கார்ப்பரேட் நலன்களுக்காகவே இத்திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கிறது. சுற்றுச்சூழல் சீரழிவால் நேரடியாகப் பாதிக்கப்படும் சமூகங்களின் குரலை ஒடுக்குவதற்கு ஒன்றிய பாசிச அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 அறிவிக்கை ஒரு பேரழிவு. அதன் ஒரு பகுதியாகத்தான் இந்தச் சட்டத்திருத்தம்.
புதிய திருத்தம்:
பொதுமக்கள்
கருத்துக்கேட்புக்
கூட்டம்
தேவையில்லை
பெரிய
தொழில், சுரங்கத்திட்டங்களைத் தொடங்குவதற்கு அப்பகுதி மக்களிடையே கருத்துக்கேட்பு கூட்டம் நடத்துவது கட்டாயம் என்று தற்போது இருக்கும் விதியைத் திருத்தி, ‘கருத்துக்கேட்புக் கூட்டம் கட்டாயமில்லை’ என்று
ஆக்கும் வகையில் வரைவு அறிக்கை வெளியிட்டுள்ளது ஒன்றிய அரசு. இனிமேல் ஆழ்கடல் எண்ணெய் எரிவாயு அகழ்வுத்திட்டங்களுக்கும், அணுக்கனிமச் சுரங்கத்திட்டங்களுக்கும், டங்ஸ்டன், இரும்பு, பாக்சைட் சுரங்கத்திட்டங்களுக்கும் பொதுமக்களின்
கருத்துக்கேட்புக் கூட்டம் தேவையில்லை என அடிப்படை கருத்துச்
சுதந்திர உரிமையை நெரிக்கிறது. சுற்றுச்சூழல்
வரைவு தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2020-இல் 19-ஆம் பக்கத்தில் சுதந்திரமான முறையில் மக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க முடியாத நிலையிருந்தால் கருத்துக்கேட்புக் கூட்டம் இரத்து செய்யப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில பாடங்கள்
திருவண்ணாமலை
கிரிவலப் பாதைக்கு மிக அருகில் உள்ள கவுத்தி, வேடியப்பன் மலைகளில், காப்புக்காட்டில் 325 ஹெக்டேர் நிலப்பரப்பில் இரும்புத்தாது வெட்டியெடுத்து, கழுவி, வில்லைகளாக மாற்றி எடுத்துச்செல்லும் திட்டத்திற்கு ஜிண்டால் குழுமம் உரிமம் கேட்டிருந்தது. இதற்கான மக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் 2008, டிசம்பர் 27-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. ‘இந்த மலையை வெட்ட வேண்டுமென்றால் முதலில் என்னை வெட்டுங்கள்’ என்ற
உணர்ச்சிபொங்க 85 வயது மூதாட்டியின் கருத்தும், ‘மலைகளை அழித்துவிட்டு, எங்களை நோயாளிகளாக்கிவிட்டு, பிறகு மருத்துவமனை கட்டித்தருவீர்களா?’ என்ற இளைஞனின் நியாயமான கருத்தும், ‘திருவண்ணாமலையில் 2,20,000 மரங்களை வெட்டிவிட்டு, அதற்கு ஈடாக அம்பாசமுத்திரம் அருகே தனியார் காடு ஒன்றை வாங்கி வனத் துறைக்குக் கொடுக்கச் சொல்கிறீர்கள்... திருவண்ணாமலையில் இம்மரங்களால் தரப்பட்ட காற்றை, நாங்கள் அம்பாசமுத்திரத்தில் சுவாசிக்க முடியுமா?’ என்ற எதார்த்தமான பேச்சும், ‘இரும்புத்தாது துகள்களால் விவசாயம் செய்யத் தகுதியற்றவையாக விளைநிலங்கள் மாறுமே’ என்ற விவசாயியின் வலிமிகுந்த வார்த்தைகளும் மக்கள் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பதிவுசெய்யப்பட்டு அத்திட்டம் கைவிடப்பட்டது.
இந்திய
அரசு வெளியிட்டுள்ள புதிய வரைவு அறிக்கை அப்படியே நடைமுறைக்கு வந்தால் எந்தத் திட்டத்திற்கு வேண்டுமானாலும் சுதந்திரமாகக் கருத்துத் தெரிவிக்கும் சூழ்நிலை இல்லை என்று அரசு தன் விருப்பம்போல கூறி மக்கள் கருத்துக்கேட்புக் கூட்டத்தை இரத்து செய்யலாம். மக்கள் கருத்துகளைக் கேட்பதற்கான வாய்ப்பு மட்டுமல்ல, வரப்போகும் திட்டத்தைப் பற்றிய உண்மையை மக்கள் தெரிந்துகொள்ளும் (Right to Information) வாய்ப்பும்
இல்லாமல் போகும் ஆபத்து உருவாகும்.
சட்டத்திருத்தத்தின்
முக்கிய
அம்சங்கள்
இந்தியாவில்
காணப்படும் 24 வகையான முக்கியக் கனிமங்களையும், 6 வகையான அணுக் கனிமங்களையும் அகழ்ந்தெடுக்கும் பணிகளைப் பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தாமலே மேற்கொள்ளலாம் என ஒன்றிய அமைச்சகம்
அறிவித்துள்ளது.
2023-ஆம் ஆண்டு 24 கனிமங்களை ‘முக்கியக் கனிமங்கள்’
என வகைப்படுத்தி அறிவிப்பு வெளியிட்டது ஒன்றிய அரசு. சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குபடுத்துதல் சட்டத்தின் பிரிவு பி-இன்படி 6 வகையான
கனிமங்கள் அணுக்கனிமங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
கனிமங்கள் மீது மாநில
அரசுக்கு இனிமேல் எந்த உரிமையும் இல்லை. சுற்றுச்சூழல் அனுமதியை இனி ஒன்றிய அரசே வழங்கும். பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் இரத்து செய்யப்பட்டு மக்களின் கருத்துச் சுதந்திரமும் பறிபோகும். கடற்கரைத் தாதுமணலிலிருந்து கனிமங்களைப் பிரித்தெடுக்கும் பணிகளால் மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும்போது, சுற்றுச்சூழல் நாசமாகும்போது, கடலரிப்பு நிகழ்ந்து மக்களின் இருப்பிடங்கள் அழியும் நிலை உருவாகும்போது, வாழ்விடப் பாதிப்புகள் அதிகரிக்கும்போது, கதிரியக்க அபாயத்தால் மக்கள் புற்றுநோயால் மடியும்போது, ‘செத்து
மடியுங்கள்’ என்று
கூறுவதுதான் மக்களைக் கருத்துச் சொல்ல விடாமல் தடுப்பது. அப்படியென்றால் இத்திருத்தம் யாருடைய இலாபத்திற்கு?
ஏற்கெனவே
48 கனிமத்தொகுதிகள் ஏலத்திற்குக் கொண்டுவரப்பட்டு, அதில் 24 கனிமத்தொகுதிகளில் ஏலம் விடும் உரிமை ஒன்றிய அரசின் அதிகாரத்திற்கு மாற்றப்பட்டு இருக்கிறது. மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. இது மிகவும் ஆபத்தான போக்காகும்.
கன்னியாகுமரி
மாவட்டம், கிள்ளியூர் தாலுகாவுக்கு உள்பட்ட மிடாலம் முதல் கொல்லங்கோடு வரை 1144 ஹெக்டேர் பரப்பளவில் நாற்பது ஆண்டுகள் அணுக்கனிமச் சுரங்கத்திட்டத்திற்கு அனுமதி கோரி இந்திய அரிய மணல் ஆலை நிறுவனம் விண்ணப்பத்திருந்த நிலையில், அதற்கான பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் தக்கலையில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மக்களின்
கடுமையான எதிர்ப்பிற்குப் பிறகு, கருத்துக்கேட்புக் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது. ஆனால், இப்போதுள்ள சட்டத் திருத்தத்தின்படி, கருத்துக்கேட்புக் கூட்டம் தேவையில்லை, கருத்துக்கேட்புக்கான அசாதாரணமான சூழ்நிலை நிலவுகிறது எனப் பொய்க்காரணம் கூறி, கருத்துக்கேட்புக் கூட்டத்தை இரத்து செய்ய ஏதேச்சதிகாரம் ஒன்றிய அரசுக்கு உண்டு.
வேடிக்கையான
விசயம் என்னவென்றால், இத்திருத்தத்தை ஒன்றிய அரசு நாடாளுமன்ற நடைமுறைகளைப் பின்பற்றாமலே, சட்டத்திற்குப் புறம்பாக அலுவல் உத்தரவு வாயிலாக வெளியிட்டிருக்கிறது. இது கடுமையான கண்டனத்துக்குரிய ஒன்று. தென்மண்டலப் பசுமைத் தீர்ப்பாயத்தின்படி, அலுவல் உத்தரவுகள் சட்டமியற்றும் விதிகள் கிடையாது. இம்மாற்றம் சட்டப்பூர்வக் கோட்பாட்டிற்கு முரணானது என்று OA.No.74 of 2021 என்கிற
வழக்கில் கூறியுள்ளது.
சுற்றுச்சூழல்
விதிகள் பலவீனப்படுத்தப்படும்போது திட்ட முன்வரைவாளர்களான நிறுவனங்கள் தங்களின் தார்மீகப் பொறுப்பை அலட்சியப்படுத்தும் நிலை உருவாகும். தென்மண்டலப் பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை மதிக்காமல், மீண்டும் அலுவல் உத்தரவு வாயிலாகச் சுற்றுச்சூழலைச் சீரழிக்கும் பாசிசப் போக்கையும், கனிம வளங்களைத் தனியாருக்குத் தாரைவார்க்கும்
முயற்சியில் பொதுமக்களோ, மாநில அரசுகளோ வரக்கூடாது என்று ஒன்றிய
பா.ச.க. அரசு
வெளியிட்டிருப்பதும் வேதனைக்குரியதும் கண்டனத்திற்குரியதுமாகும். ஒன்றிய அரசின் இம்முடிவை எதிர்த்து அனைத்து மக்களும் போராட வேண்டியது அவசியமாகும்.
கடந்த அக்டோபர் மாதம் 6-ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்த ஓர் அநாகரிகச் செயல் இந்திய சனநாயகம், சட்டத்தின் ஆட்சி, நீதித்துறையின் சுதந்திரமான செயல்பாடு, சமூகநீதி ஆகியவற்றின் எதிர்காலத்தைப் பற்றிய அச்சங்களை நம் மனத்தில் ஏற்படுத்துவதைத் தவிர்க்க இயலவில்லை.
70 வயதுக்கு
மேற்பட்ட வழக்குரைஞர் ராகேஷ் கிஷோர், “சனாதனத்தை அவமதிப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாது”
என்று கூச்சலிட்டுக் கொண்டே தன்
காலில் போட்டிருந்த செருப்பை எடுத்து உச்ச நீதிமன்றத்தின் தலைமை ஆசனத்தில் அமர்ந்து நீதிபரிபாலனம் செய்துகொண்டிருந்த தலைமை நீதியரசர் கவாய் அவர்களை நோக்கி எறிந்ததை ஒரு சாதாரண நீதிமன்ற அவமதிப்பு நிகழ்வாகக் கருதிக் கடந்துசெல்ல முடியாது.
நமது
கலாச்சாரப்படி செருப்பைக் கழற்றி ஒருவரை அடிப்பது அல்லது ஒருவர்மேல் எறிவது என்பது ஒரு தனிமனிதருக்கு நாம் செய்யும் உச்சபட்சமான அவமானம். அந்தத் தாக்குதலின் நோக்கம் ஒருவரை உடல்ரீதியாகக் காயப்படுத்துவதற்காக அல்ல; மாறாக, அது ஒரு தனிமனிதரின் சுயமரியாதையைக் கொச்சைப்படுத்துவதற்காகத் தாக்கப்பட்ட நபர் தனது சுயகௌரவத்தை இழந்து சமூகத்தின் முன் அவமானப்பட்டு, வெட்கத்தால் தலைகுனிந்து நிற்கவேண்டும் என்பதே அந்தத் தாக்குதலின் நோக்கம்.
பொதுவாக,
தன் தகுதியை மறந்து, மனத்தாலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு கொடுமையான இழிச்செயலைச் செய்தவர்களுக்குத்தான் நமது முன்னோர்கள் ‘செருப்படி’
என்ற இந்தத் தண்டனையைப் பயன்படுத்தினார்கள். இந்தத் தண்டனையையும் யாரும் ‘மேல் சாதிக்காரர்களுக்கு’ கொடுப்பதில்லை.
‘கீழ்சாதிக்காரர்களுக்கு’ மட்டுமே
பெரும்பாலும் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது என்பதையும் நாம் மனத்தில் கொள்ளவேண்டும்.
நாம்
இன்று ‘வரலாற்று நாயகர்கள்’
என்று கொண்டாடுகின்ற நம் தேசத்தின் தந்தை மகாத்மாவும், தந்தை பெரியாரும்கூட ஆதிக்கச் சக்திகளால் இப்படிப்பட்ட தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டார்கள் என்பதையும் நாம் மறக்கவில்லை. அந்த நேரங்களில் நம் மாபெரும் தலைவர்கள் அந்தத் தரங்கெட்டவர்களின் தாக்குதலை எவ்வாறு எதிர்கொண்டனரோ, அதே வழியில் நமது தலைமை நீதிபதியும் தனது சித்தம் கலங்காமல், அவர் வகிக்கின்ற பொறுப்பின் மாட்சிமையும் கண்ணியமும் குறைந்துவிடாமல் இந்தச் சம்பவத்தைக் கடந்து சென்றார் என்பதும் நமக்கெல்லாம் பெருமை. ஆனால், நமது சமூகம் அந்தச் சம்பவத்தை அப்படிக் கடந்துபோக முடியாது.
நீதியரசர்
கவாய் சுதந்திர இந்தியாவின் முக்கால் நூற்றாண்டுகால வரலாற்றில் தலித்
சமூகத்திலிருந்து வருகின்ற இரண்டாவது தலைமை நீதிபதி. அம்பேத்கர் சிந்தனை மற்றும் சமூகக் கண்ணோட் டத்தைத் தங்களது மரபணுக்களில் கொண்டிருக்கும் பாரம்பரியமான குடும்ப மரபில் வந்தவர். அவரது தந்தை இராமகிருஷ்ண சூரியபான் கவாய், பாபா சாஹேப் டாக்டர் அம்பேத்கரின் நெருங்கிய தோழர். பல போராட்டக் களங்களில்
அம்பேத்கரோடு தோளோடு தோள் இணைந்து நின்று போராடியவர். 1956-ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் நாக்பூரில் பௌத்த
மதத்தைத் தழுவியபோது, அவரோடு சேர்ந்து பௌத்த மதத்தைத் தழுவியவர். அந்த வகையில் நீதியரசர் கவாய் பௌத்த மதத்தைச் சார்ந்த முதல் தலைமை நீதிபதி எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.
“சனாதனத்தை இழிவுபடுத்தியதால், இறைவன் எனக்கு ஆணை தந்ததால் தலைமை நீதிபதியை நோக்கிச் செருப்பினை எறிந்தேன். இதில் வருத்தப்படுவதற்கோ, மன்னிப்புக் கேட்பதற்கோ எதுவும் இல்லை” என்று அடாவடியாக கிஷோர் பேசுவதால், தலைமை நீதிபதியின் சமூகப் பின்னணி முக்கியத்துவம் பெறுகிறது. அவர் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்று முதன்முறையாக அவரது சொந்த மாநிலமான மகராஷ்டிராவுக்குச் சென்றபோது, மாநில அரசின் சார்பாக இந்தியத் தலைமை நீதிபதியை வரவேற்க ஒருவரும் வரவில்லை என்பது அந்த மாநில அரசின் தலித் எதிர்ப்பு மனநிலையைக் காண்பிக்கிறது என்று அன்றைய தினம் ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டது.
“இந்தியாவில் நடப்பது சட்டத்தின் ஆட்சிதான். புல்டோசர் ஆட்சி அல்ல; அதனை ஒருநாளும் அனுமதிக்கமாட்டேன்” என்று
ஆணித்தரமாகத் தீர்ப்பினைத் தந்து புல்டோசர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தவர் நீதியரசர் கவாய். தனது பதவிக் காலம் முடிந்தபின்னர் வேறு எந்த அரசுப் பொறுப்பினையும் பெற்றுக்கொள்ளமாட்டேன் என்று
பகிரங்கமாக அறிவித்த மானஸ்தர். ஆர்.எஸ். எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று எவ்வளவோ வற்புறுத்தியும், அதில் கலந்துகொள்ள மறுத்துவிட்டார் தலைமை நீதிபதியின் தாயார்.
இந்தப்
பின்னணியில் சில நாள்களுக்கு முன்பு மத்தியப்பிரதேசத்தில் இருக்கின்ற புராதன ஜாவேரி இந்து ஆலயத்தில் சிதிலமடைந்து இருக்கும் விஷ்ணுவின் சிலையை மீண்டும் சரிசெய்து தர வேண்டும் என்று
தொடரப்பட்ட வழக்கில் நீதியரசர் கவாய் கூறிய சில வார்த்தைகள் இந்துகளின் மனத்தைப் புண்படுத்திவிட்டது என்று வலதுசாரி சமூக ஊடகங்கள் கடுமையாக அவரை விமர்சனம் செய்தன. “உச்ச நீதிமன்றத்திற்குள் சென்று தலைமை நீதிபதி ஆசனத்தில் அவர் அமர்ந்திருக்கும்போது, அவரது தலையினை உடைக்க வேண்டும்; அந்த உணர்வு எந்த இந்து வழக்குரைஞருக்காவது உள்ளதா என்று பார்க்க வேண்டும்; அப்படி யாராவது செய்தால் அவர்களை விட வீரர்கள் யாரும் இல்லை” என்றெல்லாம் வலதுசாரி மதவெறியர்கள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பதிவிட்டு வந்தனர். இப்படி வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவிட்ட நூற்றுக்கணக்கானோர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது, இந்த வன்முறையாளர்களுக்கு ஒன்றிய அரசின் ஆதரவு இருக்கிறதோ என்ற நியாயமான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
தனது
வார்த்தைகளுக்குத் தவறான உள்நோக்கங்களைச் சிலர் சமூக ஊடகங்களில் பதிவிடுவதாக வும், தான் அனைத்து மதங்களையும் மதிப்பவர் எனவும் தலைமை நீதிபதி, நீதிமன்றத்திலேயே விளக்கம் கொடுத்தார்.
சம்பந்தப்பட்ட
வழக்கில் தலைமை நீதிபதி எதுவும் தவறாகப் பேசியதாகத் தெரியவில்லை. சம்பந்தப்பட்ட ஆலயம் மிகப் பழமையான ஒன்று. தொல்பொருள்துறை கட்டுப்பாட்டிலும், ஐக்கிய நாடுகள் சபையின் ‘யுனிசெப்’
மேற்பார்வையிலும்
இருக்கிறது. அவர்களது அனுமதி இல்லாது எவ்விதப் பணிகளையும் அந்த ஆலயத்திற்குள் செய்ய முடியாது. “நீதிமன்றத்தால் எதுவும் செய்ய வழியில்லை. அந்தத் தெய்வத்திடம் சென்று சொல்லுங்கள். அவரால்தான் அது முடியும்”
என்ற வகையில் பேசி அந்த வழக்கினை தலைமை நீதிபதி முடித்துவைத்தார். இதனைத்தான் வழக்குரைஞர் கிஷோர் ‘சனாதனத்தை நீதிபதி அவமதித்துவிட்டார்’ என்றும்,
அதற்கான பரிகாரத்தை அந்தத் தெய்வம் கூறியபடி தான் நிறைவேற்றியிருப்பதாகவும் கூறுகிறார்.
“இறைவன் சொன்னார்; நான் செய்தேன்”
என்று கிஷோர் கூறும்போது, மேனாள் தலைமை நீதிபதி சந்திரசூட் அயோத்தி இராமர் கோவில் வழக்கில், “இறைவன் இரவில் சொன்னார்; அதனை அப்படியே தீர்ப்பாக எழுதிவிட்டேன்” என்று
கூறியது என் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. அதைப்போல நமது பிரதமரும் இந்த நாட்டை வழிநடத்துவதற்கு இறைவனே தன்னைத் தேர்ந்தெடுத்து அனுப்பினார் என்று
கூறினார். குறிப்பிட்ட நீதிபதிகளுக்கும், குறிப்பிட்ட வழக்குரைஞர்களுக்கும், நமது பிரதமரைப் போன்றவர்களுக்கு மட்டும் நேரிடையாக வந்து கூறுகின்ற இறைவன், வறுமையிலும் ஏழ்மையிலும் உழலும் சாதாரண பொதுமக்களிடம் ஏன் பேசுவது இல்லை? என்பது எனக்கு விளங்கவில்லை.
ஆனால்,
ஒன்று மட்டும் புரிகிறது. தங்களது செயலுக்கு எவ்விதமான நியாயத்தையும் தர முடியவில்லையென்றால், ஆண்டவன் மேல்
பாரத்தைப் போடுவதுதான் பொறுப்பிலிருந்து தப்பிப்பதற்கான ஒரேவழி என்பது மட்டும் தெரிகிறது. ‘அருணாச்சலம்’ திரைப்படத்தில்
ரஜினி சொல்வாரல்லவா! “ஆண்டவன் சொல்றான். அருணாச்சலம் செய்றான்”
என்று. அது திரைப்படத்திற்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். உலகின் மிகப்பெரும் சனநாயக நாட்டின் தலைமை நீதிபதியை நீதிமன்றத்திலேயே செருப்பால் தாக்க முயற்சித்துவிட்டு, ‘ஆண்டவன் சொன்னான். நான் செய்தேன்’
என்று கூறினால் அதனை அப்படியே விட்டுவிட முடியுமா? அப்படி விட்டுவிட்டால் நமது சனநாயகமும், சட்டத்தின் ஆட்சியும் என்னவாகும்?
தலைமை
நீதிபதியைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்த அநாகரிகத் தாக்குதலைவிட, இந்த மாதிரியான ஓர் அநாகரிகத் தாக்குதலைச் செய்ய வேண்டும் என்ற மனநிலையும், விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் அந்த அசிங்கத்தைச் செய்யும் துணிவும் எப்படி வந்தது என்பதுமே முக்கியமானது.
மகாத்மாவின்
படுகொலைக்குப் பின்னர் அந்தச் சம்பவத்தின் பின்னணி பற்றிப் பேசிய அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் பட்டேல் அவர்கள் சொன்ன கருத்துகளை இங்கே நினைவுகூர்வது பொருத்தமானது. காந்தியடிகளின் படுகொலையில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு நேரிடையான தொடர்பு உண்டா என்பதை நிரூபிப்பதற்குத் தற்சமயம் போதுமான ஆதாரம் இல்லையென்றாலும், இதைப் போன்ற மாபாதகம் நடப்பதற்கு அந்த இயக்கத்தின் நடவடிக்கைகளும் பிரச்சாரங்களும், அவர்கள் முன்னெடுத்த வெறுப்பு அரசியலும் முக்கியக் காரணம் என்பதைத் தன்னால் உறுதியாகச் சொல்லமுடியும் என்று தெரிவித்தார்.
இன்று
நாடு முழுவதும் பா.ச.க., ஆர்.எஸ்.எஸ், விஸ்வஹிந்து பரிஷத், பஜ்ரங் தள், ஹிந்து மகா சபா போன்ற வலதுசாரி மதவாத அமைப்புகள் விதைத்து வரும் துவேஷமும் வெறுப்பும், மதநல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் அடியோடு அழிக்கும் ஊழித் தீயாகப் பரவி வருகின்றன. சிறுபான்மையினர், பட்டியலின மக்கள், இடதுசாரிச் சிந்தனையாளர்கள், சமூக நீதியினை வலியுறுத்தும் முற்போக்காளர்கள், பெண் உரிமைப் போராளிகள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் வலதுசாரி மதவெறி அரசியலை எதிர்க்கும் அனைவரையும் ‘தேச விரோதிகள்’
என்றும், ‘இந்து மத எதிர்ப்பாளர்கள்’ என்றும் தவறாகச் சித்தரித்து, வாய்ப்புகள் கிடைக்கும்போதெல்லாம் அவர்கள்மீது வன்முறையினை வரைமுறையின்றி ஏவிவிடுவதும், அத்தகைய வன்முறையாளர்களைப் போற்றிப் புகழ்ந்து அவர்களை அமைச்சர்களாக, நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்களாக அமரவைத்து அழகு பார்ப்பதும் கடந்த பத்தாண்டுகளாக நாட்டின் அரசியலாக மாறிப்போனதுதான் இன்று உச்ச நீதிமன்றத்திற்குள்ளேயும் எதிரொலித்துள்ளது.
தங்களுக்கு எதிரான கருத்தியல் கொண்டவர்களை ‘சனாதனத்தின் எதிரி’ என்றும்,
‘இந்து மதத்தின் எதிரி’ என்றும் தங்களது
ஆதரவு ஊடகங்களில் பிரகடனம் செய்து, அந்தக் கருத்தியலாளர்களை மிரட்டிச் செயல்படவிடாமல் முடக்குவதுதான் அவர்களுடைய திட்டம். கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக அவர்கள் இந்தச் சதிவேலையைத் தொடர்ந்து செய்துவந்தாலும், தற்போது அவர்களுக்குக் கிடைத்துள்ள அரசியல் அதிகாரமும், அவர்கள் கைகளில் இருக்கின்ற அரசு நிர்வாகமும் எதை வேண்டுமானாலும் செய்யலாம், தங்களைக் கேட்க ஆளில்லை என்ற ஆணவத்தையும் அதிகாரத் திமிரையும் துணிவையும் தந்துள்ளது.
இந்தச்
சம்பவத்தை எதிர்க்கட்சியினர் கடுமையாகக் கண்டித்தனர். பிரதமர் ஒரு நீண்ட மௌனத்திற்குப்பின் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து வார்த்தைகளில் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார். ஒன்றிய அரசின் சட்ட அமைச்சகம் இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவித்ததாக நான் பார்க்கவில்லை. இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கும்போது, பிரதமரே தலைமை நீதிபதியின் வீட்டுக்குச் சென்று அரசின் ஆதரவையும், தனது உடனிருப்பையும் தெரிவித்திருக்கவேண்டும் அல்லது சட்ட அமைச்சரையாவது அரசின் சார்பாக, தலைமை நீதிபதிக்கு ஆறுதல் கூற அனுப்பியிருக்க வேண்டும்.
நாடாளுமன்ற
உறுப்பினர் ஓவைசி கூறிய ஒரு கருத்தினை ஒதுக்கிவிட முடியாது. இந்தச் சம்பவத்தை ஒரு முஸ்லிம் வழக்குரைஞர் செய்திருந்தால் இதற்குள் நாடே ரணகளமாக மாறியிருக்கும். அந்த நபரின் வீட்டை புல்டோசர் இடித்துத் தள்ளியிருக்கும். அவரைத் தேசிய புலனாய்வு முகமையினர் தங்களது விசாரணை வளையத்திற்குள் உட்படுத்தியிருப்பார்கள். தேசிய ஊடகங்களிலே இடைவிடாத நேர்காணல்களும் விவாதங்களும் குறைந்தது ஒரு வாரத்திற்கு இடைவிடாமல் தொடர்ந்திருக்கும். சொல்லி வைத்தாற்போல பா.ச.க.
தலைவர்கள், அமைச்சர்கள், செய்தித் தொடர்பாளர்கள், பெரும்பாலான பா.ச.க.
கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் இவ்வேளையில் அமைதி காத்தது நமக்குப் பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன.
சம்பவம்
நடந்த மறுநாள் வழக்குரைஞர் கிஷோர் பா.ச.க.வின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் ஒருவரோடு நீண்ட நேரம் இருந்த செய்தியும் வீடியோ பதிவும் சமூக ஊடகங்களில் வெளிவந்தன. நம்மைப் பொறுத்தவரை கிஷோர் என்பவர் எய்யப்பட்ட அம்பு மட்டுமே. அவரை எய்திய சதிக் கும்பல் எது என்பதுதான் முக்கியம். அந்தச் சதி மிகவும் கவனமாகத் திட்டமிடப்பட்டது என்பதில் நமக்கு ஐயமில்லை. ஒரு தலித் நீதியரசர்மீது செருப்பினை எறிய அதே சமூகத்தைச் சார்ந்த ஒரு தலித் வழக்குரைஞரைத் தயார் செய்ததுதான் ‘அவர்களது’
சாமர்த்தியம்.
இது
அவர்களுக்கு ஒன்றும் புதிதல்ல. தென் மாவட்டங்களில் தங்களது மார்புகளை மறைக்கும் உரிமைகள் மறுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்துப் பெண்கள் தோள் சீலைப் போராட்டத்தை நடத்தினர். அவர்கள் இரவிக்கை அணிந்து பொது இடங்களுக்குப் போவதென்று முடிவெடுத்து இரவிக்கை அணிந்தபோது அதே சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்கள்தாம் அப்பெண்களின் இரவிக்கைகளைத் தொரட்டி கம்பு கொண்டு கிழித்தார்கள். ஆலயப் பிரவேச அனுமதி மறுக்கப்பட்ட சமூகங்களைச் சார்ந்தவர்களை, சீர்திருத்தவாதிகள் ஆலயங்களுக்குள் அழைத்துச் சென்றபோது அந்தச் சமூகங்களைச் சார்ந்தவர்களே சீர்திருத்தவாதிகளைத் தாக்கினர். தேவதாசி முறையினை ஒழிக்க வேண்டும் என்று முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் இயக்கம் நடத்தியபோது, அவரைத் தாக்கியவர்களும் தேவதாசி சமூகத்துப் பெண்களே. வீரர்களும் துரோகிகளும் ஒரே வீட்டில் பிறப்பது ஆச்சரியமும் இல்ல! அதிசயமும் அல்ல! வரலாற்றின் வழிநெடுகிலும் அதற்கு உதாரணங்கள் ஏராளம் உள்ளன.
நாம்
கவலைப்படுவதெல்லாம், அரசியல் சாசன சட்டத்தின் காவல் அரணாகவும், அத்துமீறல்களைத் தடுத்து நிறுத்துகின்ற அதிகாரம் பெற்ற அமைப்பாகவும் இருக்கின்ற உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு, உச்ச நீதிமன்றத்தின் வளாகத்திற்குள்ளேயே இந்த நிலை என்றால், இந்த நாட்டின் எதிர்காலம் என்னவாகும் என்பதே!
‘தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்; மீண்டும் தர்மமே வெல்லும்’
என்பதை மட்டும் இப்போது மனத்தில் வைப்போம்.