news
சிறப்புக்கட்டுரை
சமூக நீதி வேண்டும்! - ஆகஸ்டு 10 (கறுப்பு நாள்)

சமூக, பொருளாதார, கல்வி, அரசியல், கலாச்சாரத் தளங்களில் மிகவும் பின்தங்கி பிற்பட்ட நிலையில் உள்ள மக்களுக்குச் சிறப்புச் சலுகை வழியாகத்தான் முன்னேற்றம் அடையச் செய்ய முடியும் என்பதை பிரிட்டிஷ் ஆட்சியிலும் மன்னர் ஆட்சியிலும் சுதந்திர இந்தியாவிலும் தலைவர்கள் உணர்ந்து செயல்பட்டார்கள்.

வரலாற்றில் தலித் மக்களின் சமூக, பொருளாதார, கல்வி, கலாச்சார உரிமைகள் வர்ணாசிரமத் தர்மத்தின் அடிப்படையில் மறுக்கப்பட்டது. மனித உரிமைகளைப் பிறப்போடு இணைக்கப்பட்ட சாதியின் அடிப்படையில் மறுப்பதை மனுதர்ம சாஸ்திரம் சட்டமாக்கியது. இதன் விளைவாக ஒடுக்கப்பட்ட மக்களின் அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டு அடிமைகள் ஆக்கப்பட்டனர். பிரிட்டிஷ் ஆட்சியில் சமூக நீதி அடிப்படையில் ஒதுக்கீடு வழங்குவது தொடங்கப்பட்டது.

ஆண்டுதோறும் ஆகஸ்டு 10-ஆம் நாள் கறுப்பு தினமாக அறிவிக்கப்பட்டு, தலித் கிறித்தவர்களுக்குப் பட்டியல் வகுப்பினர் உரிமைகளை ஒன்றிய அரசு வழங்க தேசிய அளவில் போராட்டங்கள் நடத்தப்படுகிறது. இவ்வாண்டும் இக்கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் தொடர்கிறது. பல்லாண்டு காலம் இந்தியக் கிறித்தவர் என்ற பிரிவில் தொடர்ந்து ஒதுக்கிட்டு உரிமைகளைப் பெற்று வந்தனர். 1950-ஆம் ஆண்டு இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 15/4 சாதியின் பெயரால் அனைத்துப் பட்டியல் சாதியினருக்கும் அளிக்கப்பட்ட ஒதுக்கீட்டு உரிமைகளைச் சமயத்தின் பெயரால் தலித் கிறித்தவர்களுக்கு மறுக்கும் 1950 சனாதிபதி ஆணையில் சனாதிபதி கையெழுத்திட்ட நாள் ஆகஸ்ட் 10-ஆம் நாள் கறுப்பு நாள் ஆகும்.

தலித் கிறித்தவர்களுக்கு மறுக்கப்படும் உரிமைகள்

அரசியல் பிரிவு 341 அளிக்கும்அரசியல் அதிகாரம் குடியரசுத் தலைவர் பட்டியலினச் சாதிகளின் பட்டியல் அளிப்பதுஎன்று உள்ளது. ஆனால், முதல் குடியரசுத் தலைவர் திரு. இராஜேந்திர பிரசாத் அத்துமீறி, அரசியல் சாசனம் அளித்த அதிகாரத்தையும் கடந்து, ஓர் அநீதியான Constitution (Scheduled Caste) Order 1950 என்ற ஆணையை வெளியிட்டார். 1950 என்ற ஆணை 3-வது பத்திஇந்து மதத்தைத் தழுவாத தாழ்த்தப்பட்டோர், பட்டியலினத்தார் (SC) என்று கருதப்படமாட்டார்என்று கூறுகிறது. இந்த ஆணை சமயத்தின் அடிப்படையில் ஷெட்யூல்டு வகுப்பைச் சார்ந்த மக்களைப் பிரித்து, இந்து மதத்தைத் தழுவாத தலித் மக்களுக்கு உரிமைகளை மறுக்கிறது. அரசியல் அமைப்புச் சட்டம் சாதி (SC) பெயரால் அளிக்கும் உரிமைகளைச் சமயத்தின் பெயரால் மறுக்கிறது. இந்த ஆணை அரசியல் நிர்ணயச் சாசன சட்டம் எண் 15/4, 46,330, 332, 341, 25 பிரிவுகளுக்கு எதிராக அமைந்துள்ளது. சமய சார்பற்றத்தன்மையை ஒழிக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவுகள் சாதியின் அடிப்படையில் அளிக்கின்ற உரிமைகளைச் சமயத்தின் பெயரால் மதம் மாறிய தலித் மக்களுக்கு இந்தக் குடியரசுத் தலைவரின் ஆணை மறுக்கிறது. இவ்வாணை திருத்தப்பட்டு, மதம் மாறிய சீக்கிய தலித் மக்களுக்கு 1956-ஆம் ஆண்டும், புத்தமத தலித் மக்களுக்கு 1990-ஆம் ஆண்டிலிருந்தும் பட்டியலின சலுகைகளையும் ஒதுக்கீட்டு உரிமைகளையும் அளிக்கிறது. ஆனால், ஒன்றிய அரசுகள் தொடர்ந்து தலித் கிறித்தவர்களுக்குச் சமூக நீதியின் அடிப்படையில் அளிக்கும் பட்டியலின (SC) உரிமைகளை மறுத்து வருகின்றன. கல்வி, வேலைவாய்ப்பு, பாராளுமன்றம், சட்டமன்றம் உள்ளாட்சி அனைத்திலும் ஒதுக்கீட்டு உரிமைகள் அளிக்கப்படுகிறது. ஆனால், பட்டியலினத்தார்க்கு அளிக்கப்படும் சமூக நீதி, மதம் மாறிய கிறித்தவப் பட்டியலினத்தார்க்கு மறுக்கப்படுகிறது.

போராட்டம்

2010, ஆகஸ்டு 10-ஆம் நாள் முதல் ஆண்டு தோறும்கறுப்பு நாள்கண்டனத்தை வெளிப்படுத்தும் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன் மூலம் தலித் கிறித்தவர்கள் சம உரிமை பெறுவதற்கான போராட்டங்களை, திட்டங்களை முன்னெடுக்கின்றது. 1992 முதற்கொண்டு நீதி ஞாயிறாகவும், 2007 முதல் தலித் விடுதலை ஞாயிறாகவும் கருத்துடன் கடைப்பிடிக்கப்பட்டது.

இப்போராட்டம் சம நீதிக்காக எடுக்கும் நெடும் போராட்டமாக உள்ளது. தேசிய அளவில், அகில இந்திய ஆயர் பேரவைத் தலித் மற்றும் பழங்குடியினர் பணிக்குழு, மாநில ஆயர்கள் பணிக்குழு, தலித் கிறித்தவ மக்கள் இயக்கங்கள் கடந்த 70 ஆண்டுகளாகப் பேரணி மாநாடு, உண்ணாவிரதம் போன்ற பல போராட்டங்களை நடத்தியுள்ளன. மத்திய-மாநில தலைவர்களிடம் கோரிக்கை மனுக்களை அளித்துள்ளன. இச்சமூக நீதி பிரச்சினை அரசிய லாக்கப்பட்டு, தலித் கிறித்தவர் உரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்றது.

கோரிக்கைகள்

ஒன்றிய அரசு மே 2007 முதல் 18 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருக்கும் இரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையான குடியரசுத் தலைவரின் ஆணை 1950 பத்தி 3 முழுவதையும் நீக்கி, SC பட்டியலில் சேர்க்க பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றவேண்டும்; 2004 முதல் 21 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கு (WP 180/2004) விசாரணைக்குப் பா... அரசு உடனே பதில் தரவேண்டும்; நீதித்துறை தலித் கிறித்தவர்களுக்குச் சமூக நீதி வழங்க வேண் டும்.

இந்த அநீதியை ஒழித்து தலித் கிறித்தவர்களுக்குச் சமூக நீதியை வழங்குவதற்காக தமிழ்நாடு அரசு, அரசினர் தலித் தீர்மானத்தை 19.04.2023 அன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றி உள்ளது. இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க அரசினர் தலித் தீர்மானத்தை நிறைவேற்றிய முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்களுக்குக் கிறித்தவச் சமூகம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. இத்தீர்மானம் நிறைவேற உதவிய அனைவருக்கும் நன்றி கூறுகிறது.

பா... கொள்கையின் அடிப்படையில் சிறுபான்மையினருக்கு உரிமைகளை முற்றிலுமாக மறுக்கிறது. ஆகவே, பா... தொடக்கத்திலிருந்தே தலித் கிறித்தவர்களுக்குச் சமூக நீதியை மறுக்கிறது. பாராளுமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் அநீதியாக எதிர்க்கிறது.

கிறித்தவச் சமூகம் தாய்த்திருநாட்டிற்கு எண்ணற்ற நன்மைகளை ஆற்றி வருகிறது. கல்விச் சேவையில் அனைவரும் பாராட்டும் வகையில் அர்ப்பணத்தோடு செயல்படுகிறது. கிறித்தவ மக்கள்தொகை 2.5% உள்ளது. அதில் தலித் கிறித்தவர் 1.5% அவர்களுக்குப் பட்டியலின அந்தஸ்து ஒதுக்கீட்டு உரிமையை அளிப்பதால் மற்றவர்களுக்கு இழப்பில்லை. ஆகவே, இவர்களுக்குச் சமூக நீதி அடிப்படையில் பட்டியலினத்தார் உரிமைகளைப் பா... மறுப்பது மாபெரும் அநீதியாகும். தமிழ்நாடு அரசின் தனித் தீர்மானம் சமூக நீதியை நிலைநாட்டும் செயலாகும்.

உச்ச நீதிமன்ற வழக்கில் நீதி கிடைக்கவும், ஒன்றிய அரசு தலித் கிறித்தவர்களைப் பட்டியலினத்தார் (Scheduled Caste) பட்டியலில் சேர்த்துச் சமூக நீதி வழங்கவும், இந்தியத் திரு அவை தேசிய அளவில் தொடர்ந்து போராட வேண்டும்.

போராடுவோம், சமூக நீதியை வென்றெடுப்போம்!

news
சிறப்புக்கட்டுரை
துன்பப்படும் தலித் கிறித்தவர்களுடன் நமது ஒற்றுமையை வெளிப்படுத்துவோம்!

கறுப்பு தினத்தை (ஆகஸ்டு 10) நினைவுகூர  தமிழ்நாடு ஆயர் பேரவையின் தலித் பணிக்குழுத் தலைவரின் சுற்றறிக்கை

அன்புக்குரியவர்களே,

பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியின மக்களின் உரிமைகளுக்கான உங்கள் ஆதரவுக்கும் ஊக்கத்திற்கும் தலித் பணிக்குழுவின் சார்பில் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

அரசியலமைப்புபட்டியல் சாதிகள் ஆணைகையெழுத்திடப்பட்டு 74 ஆண்டுகள் நிறைவடையும் இந்நாள் தலித் கிறித்தவர்களுக்கும் தலித் இஸ்லாமியர்களுக்கும் மதம் காரணமாக, பட்டியல் சாதியினராக (SC) அடையாளப்படுத்தப்படுவது அநியாயமாக மறுக்கப்பட்டதைக் குறிக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் குடிமை உரிமைகள் மனு (Civil Rights Petition) 180/2004 நிலுவையில் உள்ள போதிலும், இந்தக் கொடுமையான அநீதி தொடர்கிறது. இவ்வேதனையை வெளிப்படுத்தவும், அரசியலமைப்பு உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்படுவதைக் கண்டித்தும் அமைதியான முறையில் நாம் போராட்டம் நடத்த விரும்புகிறோம். இந்த இக்கட்டான சூழலில் அரசின் கவனத்தை ஈர்க்க கறுப்பு தின நிகழ்வுகளை ஆகஸ்டு 10, 2025 அன்று மேற்கொள்ள அன்போடு வேண்டுகிறோம்.

இந்த ஆண்டு ஆகஸ்டு 10-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை வருகிறது. எனவே, ஒவ்வொரு பங்கு ஆலயத்திலும் முக்கியத் திருப்பலிக்குப் பிறகு நமது ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் நாம் எதிர்கொள்ளும் பாகுபாடுகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து வலியுறுத்த வேண்டுகிறோம்.

ஆகவே, அனைத்து ஆலயங்களிலும் கிறித்தவ வீடுகளிலும் கறுப்புக் கொடிகளை ஏற்ற ஏற்பாடு செய்யவும், பரந்த சமூக ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், பஞ்சாயத்துத் தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் போன்ற உள்ளூர் தலைவர்களைக் கொடி ஏற்றுவதில் பங்கேற்க அழைத்து ஊக்குவிக்கவும் வேண்டுகிறோம். அனைத்துப் பங்கு ஆலயங்கள் மற்றும் கத்தோலிக்க நிறுவனங்களில் பங்குத்தந்தைகள் அல்லது நிறுவனத் தலைவர்கள் கறுப்புக் கொடிகளை ஏற்றி இந்நிகழ்விற்கு ஆதரவு அளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், நம் போராட்டத்தின் தீவிரத்தை வலியுறுத்தும் வகையில், ஆயர் மறைமாவட்டத் தலைமையகம் அல்லது பேராலயத்தில் தனிப்பட்ட முறையில் கறுப்புக் கொடியை ஏற்றிடவும் அன்புடன் வேண்டுகிறோம். அவ்வாறே, 2025 ஆகஸ்டு 11 அன்று மறைமாவட்டப் பட்டியல் இனத்தவர்/பழங்குடியினர் ஆணையச் செயலாளர், தலித் பிரதிநிதிகளுடன், சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களைச் (MPs) சந்தித்து, தலித் கிறித்தவர்கள் மற்றும் தலித் இஸ்லாமியர்களுக்குப் பட்டியல் சாதியில் அடையாளப்படுத்துவதற்கான விரிவான பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க வேண்டுகிறோம்.

அதிகபட்சப் பங்கேற்பை உறுதிப்படுத்தும் வண்ணம், பல்வேறு குழுக்களைத் தயாரிக்கவும், அனைத்துக் குருக்கள் மற்றும் துறவறத்தார்களின் ஆதரவைப் பெறவும், பட்டியல் இனத்தவர்/பழங்குடியினர் செயலாளர் ஓர் ஆயத்தக் கூட்டத்தைச் (தலித் மற்றும் தலித் அல்லாதவர்கள் இருவர் உடனும்) சாத்தியமான இடங்களில் ஏற்பாடு செய்யவும், இந்தியக் குடியரசுத் தலைவர், பிரதமர், மாவட்ட ஆட்சியர் மற்றும் சிறுபான்மையினர் ஆணையர் ஆகியோருக்கு விரிவான மனுக்களைத் தயாரித்துச் சமர்ப்பிக்கவும் வேண்டுகிறோம். மேலும், அனைத்துக் கூட்டங்களிலும் கையெழுத்து இயக்கத்தை நடத்தவும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC) ஒதுக்கீட்டிற்குள் தலித் கிறித்தவர்களுக்கு 4.6% உள்ஒதுக்கீடு கோரும் நமது கோரிக்கைக்கு ஆதரவாக முடிந்தவரை பல கையொப்பங்களைச் சேகரிக்கவும் கேட்டுக்கொள்கிறோம்.

இறுதியாக, தலித் கிறித்தவர்கள் மற்றும் தலித் இஸ்லாமியர்களுக்குப் பட்டியல் சாதியில் அடையாளப்படுத்தப்படுவதில் மறுக்கப்படும் உரிமைகள் குறித்து, இந்திய அரசுக்கு நாம் இடைவிடாமல் நினைவூட்ட வேண்டும். இந்த முயற்சியில் உங்களது பங்களிப்பு மிகவும் முக்கியமானது. நமது உறுதியான ஆதரவையும், பட்டியல் சாதியில் பிறந்து துன்பப்படும் கிறித்தவர்களுடன் நமது ஒற்றுமையை வெளிப்படுத்தத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு குருக்கள், துறவறத்தார் மற்றும் நம்பிக்கையாளர்கள் கலந்து கொள்ள கேட்டுக்கொள்கிறோம். மக்கள் அதிக அளவில் பங்கேற்க தீவிரமாக ஊக்குவிக்குமாறும் உங்களை அன்புடன் வேண்டுகிறோம்.

news
சிறப்புக்கட்டுரை
‘சமயச் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்!’ (தமிழ்நாடு ஆயர் பேரவையின் கண்டன அறிக்கை!)

அண்மைக்காலங்களில் இந்தியாவில் மதவாதச் சக்திகளால் சிறுபான்மையினர் குறிப்பாக, கிறித்தவர்கள் துன்புறுத்தப்படுவது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்திய அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள சமயச் சுதந்திரத்தை அச்சுறுத்தும் வன்முறை, துன்புறுத்தல் மற்றும் பாகுபாடு போன்ற நிகழ்வுகள் அதிகம் பதிவாகியுள்ளன.

கடந்த ஜூலை 26-ஆம் தேதி அன்று மிகவும் கவலைக்குரிய நிகழ்வு ஒன்று சத்தீஸ்கரில் உள்ள துர்க் இரயில் நிலையத்தில் நடந்துள்ளது. மேரி இமாக்குலேட் அசிசி துறவற சபை அருள்சகோதரிகள் ப்ரீத்தி மேரி மற்றும் வந்தனா பிரான்சிஸ் ஆகிய இருவர் மீதும் கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்றக் குற்றங்கள் போலியாகச் சுமத்தப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ளனர். சாதி, சமயம் பாராமல் ஏழை, எளியவர்களுக்காக உண்மையாக உழைத்துக் கொண்டிருந்த இந்த அருள்சகோதரிகளுக்கு நேர்ந்தது சனநாயகத்திற்கு எதிரான செயல் என தமிழ்நாடு ஆயர் பேரவை வன்மையாகக் கண்டனம் தெரிவிக்கிறது.

அர்ப்பணிப்புடன் செயல்படும் மதச்சிறுபான்மையினரை அச்சுறுத்தும் செயலாக இது அமைகிறது. எனவே, ஒன்றிய அரசு உடனடியாக இதில் தலையிட்டு, அந்த இரு அருள்சகோதரிகளை எந்தவிதமான நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறது. அத்தோடு, சமயச் சுதந்திரத்திற்கான உறுதிப்பாட்டை நிலைநிறுத்தவும், தனிநபர்கள் சமய நம்பிக்கைகளுக்காக அநியாயமாகக் குற்றம் சுமத்தப்படவோ துன்புறுத்தப்படவோ கூடாது என உறுதி செய்யவும் வேண்டும். சிறுபான்மையினரைத் தவறாகக் குற்றம்சாட்டப் பயன்படுத்தக்கூடிய மாநிலச் சட்டங்களின் சீர்திருத்தங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது

பரந்த நம் இந்திய நாட்டில் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் என்பதை உணர்ந்து, வேற்றுமையில் ஒற்றுமைப் பாராட்டி, சமயச் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், இந்தியாவில் சிறுபான்மையினர் குறிப்பாக, கிறித்தவர்கள் மீதான துன்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் தமிழ்நாடு ஆயர் பேரவை ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

+ மேதகு பேராயர், ஜார்ஜ் அந்தோணிசாமி

தலைவர், தமிழ்நாடு ஆயர் பேரவை

news
சிறப்புக்கட்டுரை
ஈமோஜி முகங்கள்! (வலையும் வாழ்வும் – 23)

வெள்ளையடிக்கப்படாத சுவற்றில் ஒற்றைக் கீறலோடிருந்த அந்த முகக் கண்ணாடியில், தன் முகம் பார்த்துத் தலைவாரிக் கொண்டு அவசரம் அவசரமாக வெளியே கிளம்பினான் சத்யா. ‘டேய்! கொஞ்சம் சாப்பிட்டுட்டுப் போகலாம்லஎன்ற தன் தாயின் பேச்சைக் காதில் வாங்கிக்கொள்ளாமல், ‘வந்து சாப்பிடுறேன்மாஎன்று மட்டும் சொல்லிக்கொண்டு போனான்.

அந்த வீட்டில் என்னவோ எல்லாருடைய முகமும் ஏதோ சோகத்தைப் பிரதிபலித்துக்கொண்டே இருந்தன. சத்யாவுக்குச் சிறுவயதிலிருந்தே பைக் ஓட்டப் பிடிக்கும். வீட்டுச்சுவர் முழுவதும் ரேஸ் பைக்குகளின் கதாநாயகர்கள் சிரித்த முகத்தோடு இருப்பது போன்றே புகைப்படங்கள் ஒட்டப்பட்டிருக்கும். சிறு வயது முதலே சிறுகச் சிறுக பைக் வாங்க வேண்டுமென்பதற்காகவே உண்டியலில் சேமித்தும் வந்தான். பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவுடன் பைக் வாங்கித் தரவேண்டும் என்று முன்கூட்டியே வீட்டில் சொல்லி வைத்திருந்தான்.

சத்யாவின் குடும்பம் அப்போது பைக் வாங்கிக் கொடுக்கும் நிலையில் இல்லை. ஆம்னி பஸ் ஓட்டுநராக இருந்த அவனுடைய அப்பா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கோர விபத்துக்குப் பிறகு வீட்டிற்குள்ளேயே முடங்கிப்போனார். கால்களில் முறிவு ஏற்பட்டது. அவருடைய முகம் சிதைந்திருந்தது. எனவே, எப்போதும்மாஸ்க்அணிந்திருப்பார். வெளியில் முகம் காட்டவே வெட்கப்பட்டார். அதன் பிறகு வீட்டிலேயே பெட்டிக்கடை ஒன்றை வைத்துக் கொண்டு அன்றாட வாழ்க்கையை நகர்த்தி வந்தார். அவர் அழுவதையும் சிரிப்பதையும் யாரும் கண்டதில்லை. அந்த விபத்திற்குப் பிறகு சத்யாவின் பைக் கனவும் தடைபட்டது. அதன் பிறகுபைக் வாங்கித் தாங்கஎன்று அவன் தன் பெற்றோரிடம் கேட்டதே இல்லை. ஆனாலும், அவனுக்குப் புதிய பைக் வாங்கணும் என்ற ஏக்கம் இருந்தது. மதுரை அருளானந்தர் கல்லூரியில் பி.எஸ்.சி. பிசிக்கல் சயின்ஸ் படித்து வருகிறான்.

சத்யாவின் குடும்பத்திலிருந்த ஒரே நம்பிக்கை சாந்தி அக்காதான். ‘கவலைப்படாத உனக்கு நான் ஒருநாள் பைக் வாங்கித்தரேன். கொஞ்சம் பொறுத்துக்கோஎன்று தன் தம்பியை அவ்வப்போது தேற்றுவாள் சாந்தி. கல்லூரிப்படிப்பை முடித்திருந்த சாந்திக்கு நிறைய படிக்க வேண்டுமென்று ஆசைதான். ஆனால், வறுமையின் காரணத்தினால் அவளால் மேற்படிப்பிற்குச் செல்ல முடியவில்லை. அருகிலிருந்த டோல்கேட் ஒன்றில் இரண்டு ஆண்டுகளாக ஆபிஸ் கிளர்க்காகப் பணிசெய்து வருகிறாள்.

உனக்குப் பிடித்த பைக்க வாங்கிக்கோ. மீதி காச மாதந்தோறும் கொஞ்சம் கொஞ்சமா கட்டலாம்என்று ஒருநாள் தான் சொன்னபடியே தன் தம்பி சத்யாவை அழைத்து அவன் கையில் ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தைத் திணித்தாள் சாந்தி. ‘எதுக்குமா பைக்கெல்லாம்? அவனுக்குப் பிறகு வாங்கிக் கொடுக்கலாம். உன் கல்யாணத்துக்குக் கொஞ்சம் சேர்த்துவைச்சா நகை நட்டு வாங்க உதவுமுல?’ தாய் எவ்வளவுதான் சொல்லிப் பார்த்தாலும் சாந்தி கேட்கவில்லை.

அந்தப் பணத்தைத் தன் கையில் பெற்றுக்கொண்ட சத்யா அப்படியே தன் அக்காவை இறுக அணைத்துக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதான்.  ‘வீடு இருக்குற நிலையில் இவனுக்கு இது தேவையா?’ தன் மனைவியிடம் சொல்லிக் கவலைப்பட்டார் சத்யாவின் அப்பா. இருவரின் முகமும் வேதனையில் ஆழ்ந்திருந்தது.

ஞாயிற்றுக்கிழமையும் அதுவுமா காலையிலேயே சாப்பிடாம போனவன இன்னும் காணலியே. உன் தம்பிக்கு ஒரு போன் போட்டுக் கேளு சாந்திஎன்று சொல்லிக்கொண்டு சோறு வடிக்கத் தயாரானாள் சத்யாவின் தாய். வீட்டிற்கு வெளியே பட்டாசு சத்தம்; பெருங்கூட்டம். சத்யாவின் நண்பர்கள் புடைசூழ புதிய வண்டி வாசலிலேயே வந்து நின்றது. தன் பெற்றோரிடம் முதலில் காட்டவேண்டும் என்பதனால் மூடப்பட்ட நிலையிலேயே இருந்தது அது.

அக்கம் பக்கத்து வீட்டார் கண்கள் அனைத்தும் வண்டி மேலேயே வேரூன்றிருந்தன. ‘டேய்! சத்யா வண்டி வாங்கிட்ட? கலக்கு மச்சான்பக்கத்து வீட்டு நண்பன் வாழ்த்து சொன்னான்.

சத்யாவின் முகத்தில் பிரமிப்பு இருந்தது. தான் எதையோ சாதித்ததாக நினைத்தான். தன் பெற்றோரையும், தன் அக்கா சாந்தியையும் அருகில் வரவழைத்து மூடப்பட்டிருந்த துணியைத் தூக்கியெறிந்து வண்டியை அவர்களிடம் காட்டினான். நண்பர்கள் கைதட்ட, பட்டாசு காகித மலர் சொரிய, அந்த நிகழ்வே தடாலடி கொண்டாட்டமாக இருந்தது. எல்லாருக்கும் ஆச்சரியம் என்னவென்றால், அது அவனுக்கான உயர்ரக பைக் இல்லை. தன் தந்தைக்காக அவன் பிரத்யேகமாகச் செய்துபெற்ற நான்கு சக்கர பைக்.

அப்பா! இந்தப் பைக்கை அக்காவின் பணத்தை வைத்தும், என் சேமிப்பையும் போட்டு வாங்கினேன். என்னைவிட உங்களுக்குத்தான் இப்போ இது தேவைப்படுகிறதுஎன்று சொல்லி கண்ணீர் வடித்தான் சத்யா. தன் தம்பியின் செயலை நினைத்து சாந்தி அவன் தோளைத்தட்டி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள்.

கண்களைத் துடைத்துக்கொண்டுஅப்பா! ஒரு ரவுண்டு ஓட்டிப்பாருங்க. வாங்கஎன்று சொல்லி தன் அப்பாவை அழைத்தான் சத்யா. தன் மாஸ்கை கழற்றியெறிந்து விட்டு தன் முகச்சிரிப்பைத் தன் மகனுக்கு அன்று அவர் பரிசளித்தார். இதற்காகவே இத்தனை ஆண்டுகள் தவமிருந்ததாக உணர்ந்தது அக்குடும்பம். முகம் ஆயிரம் பேசும் என்றாலும், அன்று மட்டும் அங்கிருந்தவர்களின் ஒவ்வொரு முகமும் ஒன்றையே பேசியது. அது மகிழ்ச்சி!

தொடர்பாடல் (communication) என்பதே உணர்வுகளை, எண்ணங்களை, தகவல்களைப் பகிர்ந்துகொள்வதுதான். ஆயினும், நம் எண்ணங்களையும் உணர்வுகளையும் நூறு விழுக்காடு நம்மால் பிறருக்குக் கடத்தமுடிகிறதா என்றால், அது இல்லை. எனவேதான் தகவல் தொடர்புக்கு, சொல் தொடர்பாடலும் (verbal communication), சொல்லில்லாத் தொடர்பாடலும் (non verbal communi cation) மிக முக்கியம்.

வளர்ந்து வரும் இந்த டிஜிட்டல் உலகிலே பிறரோடு பேசுவதற்குப் பதிலாக, குறுஞ்செய்திகளைப் புலனம் (whats app) வழியாகவோ, எஸ்.எம்.எஸ். வழியாகவோ அனுப்புகிறோம். ஆனால், இது நாம் நினைப்பதை அல்லது உணர்வதைச் சரியாக எடுத்துரைப்பதில்லை. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக இன்று பலரும் பயன்படுத்துகின்ற ஒன்றுதான்ஈமோஜிகள் (Emojis). தமிழில் இதனைஉணர் சின்னங்கள்என்றும் சொல்லலாம் (இது என் கண்டுபிடிப்பு). எனினும், இங்கு நமது புரிதலுக்கு வேண்டிஈமோஜிகள்என்ற வார்த்தையையே பயன்படுத்துகிறேன்.

பொன்னிற முகம், சிவந்த கன்னங்கள், முகம் முழுக்க இதயம், அதோடு ஓர் அழகிய சிரிப்பு. காதலைத் தெரிவிக்க, சோகத்தைக் காண்பிக்க, அதிருப்தியை வெளிப்படுத்த என்று ஏராளமான ஈமோஜிகளை நாம் பயன்படுத்துகிறோம். இப்போதெல்லாம் ஈமோஜிகளைப் பிசினஸ் உலகிலும் பலர் மார்கெட்டிங்காகப் பயன்படுத்துகின்றனர்.

ஸ்காட் . பால்மேன் என்பவர் எண்பதுகளில் முதன் முதலில்ஈமோடிகான்ஸ் (Emotiocons – Emotions+icon) என்ற பெயரில் ஈமோஜிகளை வடிவமைத்துத் தன் மின்னணுத் தகவல் தொடர்பிற்குப் பயன்படுத்தியிருக்கிறார். தற்போது நாம் பயன்படுத்துகின்ற ஈமோஜிகள்ஷிகேடகா குரிட்டாஎன்னும் ஜப்பானைச் சேர்ந்தவரால் முதன்முதலில் 2001-ஆம் ஆண்டில் பயன்படுத்தப்பட்டது.

Emojiஎன்பதற்கு ஜப்பானிய மொழியில்Eஎன்றால் படங்கள், ‘mojiஎன்றால் எழுத்துருக்கள் என்று பொருள். ஓர் ஆய்வின் அடிப்படையில் இன்று 74 விழுக்காடு அமெரிக்கர்கள் தாங்கள் அனுப்பும் குறுஞ்செய்திகளில் ஈமோஜிகளைப் பயன்படுத்துகின்றார்கள். இன்று சமூக ஊடகங்களிலும், அன்றாட மெசேஜ்களிலும் ஈமோஜிகள் பயன்படுத்தப்படாத குறுஞ்செய்திகள் இல்லை என்றே கூறவேண்டும்.  

எல்லாவற்றையும் வேகமாகவும் சுருக்கமாகவும் கூறவிரும்பும் இத்தலைமுறையினர் குறுஞ்செய்திகளிலும் ஈமோஜிகளிலும் மட்டுமே தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றனர். இதனால் சொல்ல விரும்பும் செய்தி சரியாகப் புரிந்துகொள்ளப்படாத சூழல், மொழிவளம் குன்றுகின்ற நிலை, செய்தியின் தீவிரத்தன்மையை அறிந்திராது கடந்துபோகின்ற போக்கு என்று ஏராளமான தகவல் தொடர்பு இரைச்சல்களை உருவாக்கக்கூடும்.

சக மனிதர்களிடம் முகமுகமாகப் பேசி, சிரித்து, அழுது, கோபித்து, வெட்கி, உறவாடி மகிழ்வது தொடர்பாடலின் உன்னத நிலையே. இவ்வுணர்வினை எந்த ஈமோஜிக்களாலோ ஸ்டிக்கர்களாலோ கொடுக்கமுடியாது என்பதே உண்மை. (தொடரும்)

news
சிறப்புக்கட்டுரை
ஏழாவது பேராயர் மேதகு முனைவர் அந்தோனிசாமி

1606-இல் இயேசு சபை போர்த்துக்கீசியத் துறவிகளால் அடித்தளமிடப்பட்ட மதுரை மிஷனிலிருந்து உருவான மதுரை உயர்மறைமாவட்டத்தின் ஏழாவது பேராயராகப் பொறுப்பேற்கும் மேதகு ஆயர் அந்தோனிசாமி சவரிமுத்து அவர்களைப் பேராயராகப் பெறுவதில் மதுரை திரு அவை அகமகிழ்கின்றது.

திருவிவிலியத்தில் 7-ஆம் எண் எப்போதும் நிறைவைக் குறிக்கின்றது. அத்தகைய நிறைவோடு, எழுச்சிமிகு புதிய பேராயர் உள்ளே வரட்டும்! வாயில்கள் திறக்கட்டும்! தொன்மைமிகு கதவுகள் உயர்ந்து நிற்கட்டும்! மாட்சிமிகு பேராயர் உள்ளே நுழையட்டும்! (திபா 24:9).

மாட்சிமிகு பேராயர்கள் மேதகு லெயோனார்டு, மேதகு ஜஸ்டின் திரவியம், மேதகு கஷ்மிர் ஞானாதிக்கம், மேதகு மரியானுஸ் ஆரோக்கியசாமி, மேதகு பீட்டர் பெர்னாண்டோ மற்றும் மேதகு அந்தோனி பாப்புசாமி ஆகிய பேராயர்கள் வழிநடத்திய மதுரைத் திரு அவையின் மந்தையை, இயேசுவின் பெயரால் கரம்பிடித்து வழிநடத்த புதியதொரு பேராயர்  மதுரைக்குக் கிடைத்திருப்பது கடவுளின் திட்டம்!

செயற்கைத் தொழில்நுட்பம் எல்லா நிலைகளிலும் ஊடுருவும் ஒரு சவாலான காலகட்டத்தில், யூபிலி ஆண்டில் எல்லா நம்பிக்கையாளர்களும்-மறைமாவட்டக் குருக்கள், துறவறத்தார், பொதுநிலையினர் பங்குபெறும் கூட்டொருங்கியக்கத் திரு அவையில் தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் பேராயரின் மேய்ப்புப்பணிகளுக்கு மாமதுரைக் களம் தன்னையே வழங்குகின்றது.

1960-இல் பாளையங்கோட்டை மறைமாவட்டம் வண்டானத்தில், அமல அன்னையின் திருவிழா அன்று ஆயர் பிறந்ததே ஓர் அதிசயம்தான்! தன்னுடைய திரு அவைச் சட்ட முனைவர் பட்டப் படிப்பை பாரிஸில் முடித்துவிட்டு, பல்வேறு நிலைகளில் தமிழ்நாடு மற்றும் இந்தியத் திரு அவை அளவில் அருள்பணி புரிந்து, 2025, ஆகஸ்டில் இத்தொன்மை வாய்ந்த மதுரை மண்ணில் ஆயர் பொறுப்பேற்றிருப்பது பெருமைக்குரியதே!

அகில இந்தியத் திரு அவைச் சட்ட வல்லுநர்கள் குழாமின் செயற்குழு உறுப்பினர்களாக இருமுறை ஆயரும், நானும் தேர்வு செய்யப்பட்டுப் பணியாற்றிய காலத்தில் நான் கண்ட ஆயரின் மேன்மைகளையும், அவருக்கு மதுரைத் திரு அவையின் வாழ்த்துகளையும் பதிவு செய்கின்றேன்.

ஆயர் செபவாழ்வு: ஆயர் பணியைக் கிறிஸ்துவின் மனநிலையில் புரிய முதலில் ஒரு குரு கிறிஸ்துவோடு எப்போதும் இணைந்திருக்க வேண்டும் (யோவா 15:4). இதை நன்கு உணர்ந்து, அதிகாலை 5 மணிக்கே எழுந்து நடைப்பயிற்சியோடு, ஆண்டவரைப் புகழ்ந்து, ஒரு செபமாலை முழுவதுமாகச் செபித்து, உடலையும் மனத்தையும் ஆன்மாவையும் தூய்மையாகப் பாதுகாத்துக் கொள்ளும் (2திமோ 1:6) ஒரு பேராயர் இவர்.

சீரிய சிந்தனை, போதனையாளர்: ஆயர் மேய்ப்புப்பணிப் பளு அதிகமிருந்தாலும், மறைமாவட்டச் செய்திமடலில் ஆயருரையையும் கூட்டங்களில் கருத்துரையையும் மறையுரையையும் தானே எழுதி, போதிக்கும் பணியை ஆற்றுபவர் (மாற் 16:15) இவர்திரு அவைச் சட்டம் பற்றிய நுணுக்கங்களை எடுத்துக் கூறுவதிலும், அதன்படி பங்கில் குருக்கள் சந்திக்கும் மேய்ப்புப்பணி கேள்விகளுக்குச் சரியான விளக்கம் தருவதிலும் மக்களை ஞானத்துடன் வழிநடத்துவதிலும் (சீராக் 44:4) கூர்மதியுடைய அறிஞர் இவர்.

நட்பு: புதிய பேராயர் அவர்கள் மகிழ்ச்சியான, ஆற்றல் பெற்ற, நட்பை வளர்க்கின்ற ஒரு நல்ல குரு. குருத்துவத் தோழமையின், நட்பின் இலக்கணம். அகில இந்தியத் திரு அவைக் கூட்டமைப்பில்  பொறுப்பில் இருந்தபோது ஆயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்பு மீண்டும் கூட்டத்திற்கு ஆயராக வந்தபோதும் அதே நட்புடன், வாஞ்சையுடன் எல்லாரிடமும் பழகியவர். தன்னிடம் படித்த அருள்பணியாளர்கள் பிற மறைமாவட்டங்களிலிருந்து ஆயரை அழைக்கின்றபோது இசைந்து, அந்த குருக்கள் அன்புறவுக்கு முக்கியத்துவம் தரும் ஆயர் இவர் (யோவா 15:15).

எளிமை: ஆயருக்குரிய எவ்வித அதிகாரத் தோரணையையோ அல்லது தேவையற்ற வசதிகளையோ இவர் விரும்புவதில்லை. பேச்சிலும் உறவிலும் எளிமையானவர் (லூக் 2:7). 

நிர்வாக நேர்மை-உற்சாகம்: தன் குரு குழாமிடம் நேர்மையுடனும் உண்மையுடனும் கண்டிப்புடனும் இருந்து வழிநடத்துபவர் (2திமோ 2:24-25). தொலைநோக்குச் சிந்தனையுடன் எல்லாவற்றையும் ஆராய்ந்து, உண்மையைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்கக்கூடிய ஒரு கூர்மதி உடைய ஓர் ஆயர் இவர். மேய்ப்புப்பணியில் வரும் சிக்கல்களுக்குத் திரு அவைச் சட்டத்தின் பின்புலத்தில் சரியான  முடிவுகள் தருபவர்.

திரு அவை அன்பு: தன் ஆயர் குழாமோடு நட்பையும் நல்லுறவையும் நாளும் வளர்த்து, திரு அவையின் மேல் கொண்டிருக்கின்ற தன்னுடைய பற்றைச் சொல்லாலும் செயலாலும் வெளிப்படுத்துகின்ற ஆயர் இவர்.

கூட்டொருங்கியக்கத் திரு அவை ஆயர்: அவரவருக்குரிய  அருள்பணி அலுவல்களைப் பகிர்ந்து கொடுத்து, எல்லாரிடமும் கருத்துக் கேட்டு, இறுதியாக நற்செய்தியின் ஒளியில், தீர்க்கமான முடிவெடுக்கின்ற ஓர் ஆயராக இருப்பதை இந்தத் தொடக்கக் காலத்திலேயே நான் பார்க்கிறேன்ஆயர் மாமன்ற வழிகாட்டுதலின்படி இந்த யூபிலி ஆண்டில், மதுரை உயர்மறைமாவட்டம் முழுவதையும் அறிந்து, அடுத்த பத்தாண்டுகளுக்கான மேய்ப்புப்பணித் திட்டத்தைத் தயாரித்து, எல்லா நம்பிக்கையாளர்களையும் ஒன்றுபடுத்திஎல்லாரையும் கிறிஸ்துவின் அன்பில் இணைத்து, மதுரைத் தலத்திரு அவையை வழிநடத்த வாழ்த்துகின்றோம்.

அரிய பெரிய மறைப்பணியாளர்களும், மூத்த குருக்களும், பெரும் பேராயர்களும் வழிநடத்திய மதுரைத் திரு அவையானது, இன்று மகிழ்ச்சியுடன் ஏழாவது பேராயர் அவர்களை வரவேற்கிறது. பேராயரோடு சேர்ந்து இந்த மதுரைத் திரு அவையை, ஆண்டவர் இயேசுவின் வழியில் கட்டியெழுப்ப மதுரைத் திரு அவை அருள்பணியாளர்கள் குழாம் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறது.

news
சிறப்புக்கட்டுரை
விருட்சம் கண்டு வியக்கிறேன்!

மதுரை மறைத்தளம் தன்னில் மங்கலத் திலகம் கண்ட நாள் 2025, ஜூலை 5.  பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயரும், எமது மதுரை உயர்மறை மாவட்டத்தின் திருத்தூது நிர்வாகியாகக் கடந்த எட்டு மாதங்களாகப் பணியாற்றி வருபவருமான மேதகு ஆயர் முனைவர் அந்தோனிசாமி சவரிமுத்து அவர்களை மதுரை உயர்மறைமாவட்டத்தின் ஏழாவது பேராயராக, திருத்தந்தை லியோ அவர்கள் நியமித்த மகிழ்ச்சியான தருணம் அது. மாமதுரை மறைப்பணித்தளம்  பேருவகை கொண்ட நன்னாள் அது!

இறையருளும் அருள்வளமும் ஆழமான நம்பிக்கையும் கொண்ட மறைப்பணித்தளம் மதுரை உயர்மறைமாவட்டம். சேசு சபையாரின் மறைப்பணித்தளமாகப் பண்படுத்தப்பட்டு, விதையிடப்பட்டு, நம்பிக்கையின் விளைச்சலை மிகுதியாகக் கண்ட புண்ணிய பூமி இது.

தமிழ் மரபு, சமய வழிபாடு, அரசாட்சி, வணிகம், ஆன்மிகம்... என நீளும் மதுரைக்கான வரலாற்றுச் சிறப்பில், கிறித்தவத்தின் பங்களிப்புத் தவிர்க்க முடியாதது. சாதி, மத, இன வேறுபாடு இன்றி, அனைவருக்குமான கல்வி, பொருளாதாரம், மருத்துவம், சமூக மேம்பாடு எனப் பல்வேறு தளங்களில் பன்முக வளர்ச்சியை இம்மண்ணில் முன்னெடுத்தது கிறித்தவம்.

மறைப்பணியில் ஆழமாக வேரூன்றி இம்மண்ணின் குறியீடாக, அடையாளமாக, முகவரியாக இருப்பவர் இராபர்ட் தெ நொபிலி எனும் சேசு சபை மறைப்பணியாளர். அதன் நீட்சியாக இன்றும் மதுரை மண்ணின் அடையாளமாக இருப்பது நொபிலி மறைப்பணி நிலையம். அன்றும் இன்றும்நொபிலிமதுரை உயர்மறைமாவட்டத்தின் அருள்பணிகளை ஒருங்கிணைக்கும், பணிக்குழுக்களை வழிநடத்தும் தளமாக, குறியீடாக அறியப்படுகிறது. நொபிலி மறைப்பணித்தளத்தின் இயக்குநர் என்ற முறையில் பேராயர் வளாகத்தில் பணிகளை முன்னெடுக்கும் சூழலில் பேராயரோடும், பேராயர் இல்லத்தில் பணிபுரியும் சக குருக்களோடும் நெருங்கி உறவாடும் வாய்ப்புக் கிட்டுவதால், பல கருத்துகளைப் பெறவும், திட்டங்களைத் தீட்டவும் முன்னெடுப்புகளைப் பகிர்ந்துகொள்ளவும் பெரும் வாய்ப்பாக அமைகிறது.

அதன் அடிப்படையில், கடந்த எட்டு மாதங்களாக உயர்மறைமாவட்டத்தின் திருத்தூது நிர்வாகியாகப் பணியாற்றிய மேதகு ஆயர் அந்தோனிசாமி அவர்களுடன் பணித்திட்டங்கள் சார்பாகவும், மேய்ப்புப் பணி சார்ந்த பல நிர்வாகக் காரணங்களுக்காகவும், மேய்ப்புப்பணி நிலையம் முன்னெடுக்கும் பல விழாக்களுக்காகவும் அவரைச் சந்திக்க வாய்ப்புக் கிட்டியபோதெல்லாம் அவருடைய கருத்துப் பரிமாற்றத்தையும் அறிவுக்கூர்மையையும் தெளிவான ஞானச் சிந்தனைகளையும், திரு அவைச் சட்டம் குறித்த கூர்மையான விளக்கங்களையும், அன்பும் கண்டிப்பும் நிறைந்த நிர்வாகத் திறனையும், மனம் திறந்த கலந்துரையாடலையும், பிறரின் கருத்துக்குச் செவி கொடுக்கும் நல்லெண்ணத்தையும், தீர்க்கமான முடிவெடுக்கும் தன்மையையும் கண்டு வியந்து நின்றேன்!

ஆலமரம்போல விருட்சம் கொண்டு, பன்முகத் தன்மையில் சிறந்த ஆளுமையாய் விளங்கும் எம் திருத்தூது நிர்வாகியே, எமது உயர்மறைமாவட்டத்தின் பேராயராக நியமனம் பெற்றிருப்பது எமக்குக் கிடைத்த பெரும்பேறு!

தனது சொந்த மறைமாவட்டமான பாளையங்கோட்டை மறைமாவட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டு காலம் மேய்ப்புப்பணியில் புடமிடப்பட்டவர் இவர். தொய்வில்லாது தீவிர ஈடுபாட்டுடன் மேற்கொண்ட பல்வேறு பணிகளால் மறைமாவட்டம் மலர்ந்து உயர்ந்திருப்பது இவரது நிர்வாகத்தின் தனிச் சிறப்பினைப் பறைசாற்றுகிறது.

இவரது ஆயர் பணியின் நீட்சியாகப் பணி உயர்வு பெற்று, மதுரை உயர்மறைமாவட்டத்தின் பேராயராகப் பணிப்பொறுப்பேற்பது இவரது ஆளுமைப் பண்பின் கூறுகளை இன்னும் இம்மண்ணில் விரவிடச்செய்யும்.

அஞ்சாதே, நம்பிக்கையோடு மட்டும் இரும் (லூக் 8:50) என்னும் விருதுவாக்கோடு ஆயர் பணியேற்ற எம் புதிய பேராயர், அதே விருதுவாக்கில் இன்னும் ஆழமாக வேருன்றி, இம்மறைத்தளத்தில் தூய ஆவியாரின் துணைகொண்டு துணிவோடும் தெளிவோடும் பல பணிகளை முன்னெடுக்க வாழ்த்துகிறோம்!

என் ஆடுகளைப் பேணிவளர் (யோவா 21: 17) என பேதுருவுக்கு உயிர்த்த நம் ஆண்டவர் இயேசு விடுத்த அழைப்பினைப்போல, ஆண்டவர் விடுத்திருக்கும் இந்த அழைப்பினை ஏற்று, மதுரை உயர்மறைமாவட்டத்தின் பேராயராகப் பொறுப்பேற்கும் எம் புதிய பேராயர் ஆடுகளை அரவணைத்துச் சென்று, மந்தையை மாண்புடன் வழிநடத்தவும், மந்தைக்குரிய மாண்பினைப் பேணவும் முன்னெடுக்கும் அனைத்துப் பணிகளுக்கும் துணை இருப்பதையும், செபத்தில் நினைவுகூருவதையும் உறுதியளிக்கிறோம்!