எனது பேனாமுனை முதலில் எந்த அறிவுரைகளுக்குள்ளேயும் செல்ல மறுக்கிறது. கரூர் துயரத்தில் உயிர்களை இழந்து தவிக்கும் அன்பர்களுக்கு ஒரு சகோதர இரங்கலை, ஆழ்ந்த வருத்தத்தை ஊடக நண்பர்களோடு இணைந்து பகிர்ந்துகொள்ள விழைகிறேன். 41 உயிர்களை இழந்த குடும்பங்களோடு நெஞ்சார உடனிருக்க விழைகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் நலமடைந்து இல்லம் திரும்ப இறைவனை மன்றாடுகிறேன். இவ்வேளையில், கரூர் துயரம் சார்ந்த எந்தத் தரவுகளுக்கும் செல்லாமல், எவ்வித அரசியல் உள்நோக்கங்களையும் மனத்தில் ஏற்காமல் உங்களுடன் பயணிக்கும் சகோதரனாக எனது கருத்துகளைப் பதிவிடுகிறேன்.
பாடம் 1: உயிர்களைப்
பேணுவோம்
நமது
பரந்துபட்ட இந்திய நாட்டில், உலகிலேயே மக்கள்தொகையில் முதல் நிலையில் இருக்கும் வேளையில் இயற்கைப் பேரிடர்கள், விபத்துகள், நோய்வாய்ப்பட்டு இறத்தல் தவிர மற்றெங்கிலும் நடக்கும் இறப்புகளுக்கு அதிகபட்ச மக்கள்தொகையைக் காரணம் காட்டிவிட்டுச் சென்றுவிட முடியாது. இதில் தனிமனிதத் தவறு (Human error)
மட்டுமே உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளாவிட்டால், பின்னாளில் ஏற்பட இருக்கும் உயிரிழப்புகளைத் தடுக்க முடியாது. மனித உயிர் விலைமதிப்பற்றது. ஈடு இணை செய்ய முடியாதது. எனவே, உயிர்களைப் பேண வேண்டியது நமது கடமை எனக் கருதுவோம். மக்கள் ஒன்றுகூடும் இடங்களை முதலில் ஆய்வு செய்வோம். பெருமளவு மக்கள் அடர்த்திப் பெருகிடும் இடங்களை, நேரத்தை, சூழல்களை முன்கூட்டியே கணித்தல் சால்பு. இந்திய நாட்டில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 492 மக்கள் இருப்பதாக அளவிடப்படுகிறது. அச்சூழலில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 50 மடங்கிற்கு மக்கள் கூடும் இடங்களை அரசு இயந்திரங்களான ஆட்சியர் தொடங்கி காவல்துறைவரை மீளாய்வு செய்ய வேண்டிய கடமையினை உதறித்தள்ளிவிட முடியாது.
அரசியல்,
மதம், தன்னார்வ அமைப்புகள், போராட்டக் குழுக்கள் - இவ்வாறு யாருடைய கூடுகையையும் இயல்பான ஒன்றாக எடுத்துக்கொண்டு செல்ல முடியாது என்றெண்ணும்போது, எத்துணை பொறுப்பு மிக்க பணியை அரசு இயந்திரங்கள் செய்து கொண்டிருக்கின்றன என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ள முடியும். ஆகையால், பாரபட்சமின்றி எல்லாக் கூடுகைகளையும் ஒழுங்கு செய்யும் பொறுப்பினைக் காவல்துறைக்கு முழுமையான அதிகாரத்தோடு மக்கள் நலன் கருதி வழங்கிடல் வேண்டும்.
கூட்டம்
நடக்க இருக்கும் பகுதியைச் சிறப்பு கவனிப்புப் பகுதியாகக் கருதிடல் வேண்டும். மக்கள் உள்நுழையும் வழி, வெளியேறும் வழி, உள்ளே புழங்கும் இடம் போன்றவை பாதுகாப்பானதாகவும் சாதகமானதாகவும் உள்ளதா? என்பதை அவ்வப்போது கண்காணித்திடல் வேண்டும். புழங்குவதற்கும் அதிகப்படியான உள்நுழைதலும் இரும்புக் கரம் கொண்டு மக்கள் பாதுகாப்புக் கருதியே தடுக்கப்படல் வேண்டும். மக்கள் கூடிடும் இடங்களில் அவர்கள் அமர்வதற்கும், இயற்கைத் தேவைகளைச் சந்திப்பதற்கும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என்பதையும், நீண்டநேரக் காத்திருப்புகள் இருப்பின் உணவு, குடிநீர்த் தேவைகள் எவ்வாறு சந்திக்கப்படுகின்றன என்பதையும் உறுதி செய்திடல் வேண்டும். ஏதேனும் சுணக்கம் ஏற்பட்டால் கூட்டப் பொறுப்பாளர்கள் களமிறங்கி உடனடியாக அத்தேவைகளை மக்கள் சந்தித்திட ஆவன செய்தல் முறையே.
மக்கள்
கூடிடும் இடங்களில் வழிப்போக்கர்கள், வாகனங்கள், கடைகள் மற்றும் அங்கு வசிப்போர் எவ்வித இடையூறுகளும் இல்லாமல் இயங்கிட உரிமை உண்டு என்ற நிலையில், அவர்களுக்கான பாதுகாப்பும் வழங்க வேண்டியதையும் நாம் மேலோட்டமாகக் கருதிட முடியாது. கூட்டம் நிறைவுற்ற பின் மக்கள் வெளியேறும் பகுதிகள் தொகுதி தொகுதியாகப் பிரிக்கப்பட்டு வேகமும் அழுத்தமும் இல்லாத நிலையில் வெளியேற்றப்படுவதை உறுதி செய்திடல் மிக மிக அவசியமானது.
யாரும்
அசம்பாவிதங்களையோ விபத்துகளையோ உண்டாக்கிடவோ அல்லது அதை நோக்கியோ நகர்வதில்லை என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், இவை யாவும் தவிர்க்கப்பட முடியும், பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதும் அரசின், தலைவர்களின் முதற்கடன் என்பதை இவ்வேளையில் நினைவூட்டல் அவசியம்.
பாடம் 2: பாதிக்கப்பட்டோரை
இழித்துரைத்தல்
(Victim blaming) மோசமான அணுகுமுறை
ஒரு
கூட்டம் கூட்டப்படுவதென்பது பொதுவெளியில் நிகழ்கிறபோது, பெருவாரியான மக்கள் தன்னெழுந்த நிலையில் ஒன்று கூடுவதென்பது இயல்பு. இவர்கள் ஏன் வந்தார்கள்? இவர்களுக்கு அறிவு இருக்கிறதா? இருந்திருந்தால் இவற்றையெல்லாம் செய்திருப்பார்களா? என்பதெல்லாம் தெருவோர விவாதங்களுக்கும் பழித்துரைத்தலுக்கு மட்டுமே பொருத்தமானதே ஒழிய ஊடகங்களும், பொறுப்பில் இருப்போரும் இத்தகைய மனநிலையை ஊக்கப்படுத்துவதைத் தவிர்த்திடல் வேண்டும். எத்தனை கோடிகள் கொடுத்தாலும் இழந்த சொந்தங்களை நாம் திருப்பித் தந்துவிட முடியாது என்ற நிலையில், உறவுகளை இழந்து தவிப்போரின் ஆறுதலாக நாம் பதிவிடும் சொற்கள் இல்லாவிட்டால், ‘எங்கே தொலைந்தது நமது மனித நேயம்?’ எனக் கேட்கத் தோன்றுகிறது.
ஒரு
கூட்டத்தின் அடர்த்தி பெருகிக்கொண்டே வரும்போது அதைத் தடுத்தாட்கொள்ளும் சூழல் இல்லாத நிலையில் தன்னெழுச்சியாக ஒவ்வொருவரும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முனையும் வேளையில், எதிர்பாராதவிதமாக ஒருவர் மேல் ஒருவர் விழுந்து காயங்கள் மற்றும் பாதிப்புகள் ஏற்படுவதென்பது தவிர்க்க முடியாதது. இதில் எங்கே வந்தது அவர்களுடைய அறிவற்ற செயல், முட்டாள்தனம், வெறிகொண்ட நிலை என்பதெல்லாம்?
பொதுமக்களை
அறிவற்றவர்கள், உணர்ச்சிகளைக் கையாளத் தெரியாதவர்கள், பொறுப்பற்றவர்கள் என்றெல்லாம் விமர்சிப்பது என்பது சாமானியர்களை அசிங்கப்படுத்தும் செயல் மட்டுமே ஒழிய, உண்மையான காரணம் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றது என்பதனை இவ்வேளையில் உணர்தல் அவசியம். 90%-க்கும் மேலாகப்
பாதிக்கப்பட்டோர் பொதுவாக வறுமையின் பிடியில் இருப்பவர்கள்தான் என்றெண்ணும்போது, ஏறெடுக்கப்படும் கூட்டங்களின் பொதுமாந்தர் யார் என்பதும், அதன் பயனாளிகள் உள்ளபடியே யார் என்பதும் நம் அனைவருக்கும் கண்கூடாகவே தெரிகின்றது.
சாதாரண
மக்களின் குரலொலியாக, வாய்ச் சொல்லாக அமைப்புகளும் தலைவர்களும் செயல்பட வேண்டுமே ஒழிய, அவர்களைத் துச்சமெனக் கருதி அவர்களைக் காய்களாகப் பயன்படுத்தித் தங்கள் தனிப்பட்ட நன்மைகளை வெற்றியாகப் பெறுவதென்பது மக்கள் துரோகச் செயல். பொதுமக்கள்,
காவல்துறையினர் மற்றும் பொறுப்பு அமைப்புகளோடு ஒத்துழைப்பு நல்கிட ஊக்கப்படுத்தப்பட வேண்டுமே ஒழிய, அவர்களைப் பழித்துரைத்தல் எந்தச் சூழலிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
பாடம் 3: பொதுவெளியில்
உணர்ச்சிகளைக்
கையாளப்
பழகுதல்
யாவருக்கும்
நலம்
ஊடக
யுகத்தில் நாம் வாழும் வேளையில் இந்த நேரம், இந்தச் சூழலில் மக்களின் தேவைகளை நிறைவு செய்து பணம் சம்பாதிக்கும் சித்து விளையாட்டுகளை ஊடக வியாபாரிகள் கையில் எடுத்துள்ளனர். ஒரு தனிநபரின் ஒவ்வோர் அசைவையும் பதிவிட்டு காசு பார்க்கமுடியும் என்பதை ஊடகங்கள் நிரூபித்து வருகின்றன. தனிநபர் வாழ்க்கையையும் கூட தகவலாக்கி, செய்தியாக்கிப்பதிவிட முடியும் என்ற நிலையில் அதைக் கண்டு இரசிக்க இலட்சக்கணக்கானோர் வெட்டியாக வெளியே திரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைத்தானே இவ்வேளையில் நாம் உணர வேண்டியிருக்கிறது.
தனிப்பட்ட
ஒரு பெரும்புள்ளியின் வாழ்க்கையே ஊடக முதன்மைத்துவம் (Media value)
பெறும் நிலையில் இவ்வாறு இருக்க, பொதுவெளியில் பெரும்புள்ளிகளின் (VIP) சார்பாக
நடைபெறும் கூட்ட நிகழ்வுகளைப் பதிவிடுவது, அதற்கு எதிர்வினை ஆற்றுவது என்பதும் தராசின் சமநிலை தவறாமல் பார்க்கப்பட வேண்டும் என்பதும், அதை அதிகமாகப் பேசி ஊக்கப்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டியது என்பதும் இவ்வேளையில் உணர வேண்டும்.
பெரும்பான்மை ஊடகங்கள் மட்டுமே கோலோச்சிய காலகட்டங்கள் மறைந்து திறன்பேசி (Smartphone) வைத்திருக்கும் யாவரும் ஊடகவியலாளரே என்ற நிலை உருவாகி உள்ளது வரவேற்கத்தக்கது என்றாலும், சமூகத்தளத்தில் அதைப் பதிவிடுவது குறித்தப் பொறுப்பும் அக்கறையும் எப்போதும் இருந்திடல் வேண்டும்.
ஊடகங்கள்
வாயிலாக உறவுகளுக்கு வாழ்த்து அனுப்பும் பழக்கம் கொண்டவரை நாம் ஊடகவியலாளராகக் கருதவில்லை; மாறாக, கருத்தை உரக்கக்கூற சமூகத்தில் நிகழும் பல
விசயங்களை ஏற்றியும் இறக்கியும், தன் பார்வை, தன் கொள்கை, ஒரு கட்சியின் சார்பு என்பதையெல்லாம் அதிகப்படியாகப் பகிர்ந்துகொண்டு மக்கள் மத்தியில் பரப்பும் நபர்கள் தங்கள் உரிமைகளைத் தாண்டிப் பயணிக்கக்கூடாது என்பதே முதலில் கற்க வேண்டியது.
அடுத்தபடியாக
நடிகர்கள், தலைவர்கள், தனி நபர்கள் போன்றோரின் பல்வேறு தேடல்களில் முதல் நிலையில் இருப்பவர்கள்தான் அன்றாடங் காய்ச்சிகள், இழுத்த இழுப்புக்கெல்லாம் பணிவார்கள் என்ற தவறான நோக்கில் அவர்களை வைத்து தங்கள் பயன்களை அடைய நினைப்பதென்பது இழிவான செயலும் அணுகுமுறையும் என்பதும், அவர்களின் சார்பாக நிற்காமல் அவர்களது துயரங்களில் ஓடி ஒளிந்து கொண்டு, தன் சார்பை ஊடகங்கள் வாயிலாக நியாயப்படுத்துவது என்பதும் எவ்விதத்தில் ஏற்புடையது?
ஊடகப்
பதிவுகள் மிக வேகமாகப் பகிரப்படும் இச்சூழலில் நட்பை, அன்பை, மனிதநேயத்தை, நாடாளும் நல்ல கொள்கைகளை, தனிப்பட்ட வெற்றிகளை, குடும்ப/சமூகக் கொண்டாட்டங்களைப் பகிர்தல் எல்லாருக்கும் பொருத்தமான ஒன்று. துயரச் சம்பவங்களைக் காட்டிலும் அதை மீண்டும் மீண்டும் பதிவிட்டு மக்கள் மனத்தில் வெறுப்பை, வன்மத்தை விளைவிக்கும் நபர்களை தீநுண்மிகளைப் (virus) போலவே கருதித் தள்ளி நிற்க நினைப்பதும், பதிவுகள் எல்லை மீறும் வேளையில் தேவைப்பட்டால் இவர்கள் சட்டத்தின் முன் கொணரப்பட வேண்டியவர்கள் என்பதும் சமூக அமைதியைப் பாதுகாக்கும்.
இறுதியாக,
கரூர் துயர் நிகழ்வு இனியும் தொடரக்கூடாது என்பதை உறுதியாக மனத்தில் ஏற்போம். பொறுப்புள்ள குடிமக்களாக வாழப் பழகுவோம்.
நமக்கு மிகவும் நெருக்கமானதாகவும், நம் பணிக்கு மிக முக்கியமானதாகவும் இருப்பது அச்சு ஊடகம். இன்றைய டிஜிட்டல் உலகில் அச்சு ஊடகத்தின் தொடர்பை நிலைநிறுத்துவதும், அவை எதிர்கொள்ளும் சவால்களைக் குறித்து நாம் சிந்திப்பதும் காலத்தின் தேவையாகும்.
இன்று
ஒரு கருத்து நம் சிந்தைக்குள் செல்வதற்கு முன்னதாகவே அவை வேகமாகப் பரவும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். செய்திகள் பத்திரிகை அலுவலகங்களை வந்தடைவதற்கு முன்னதாகவே சமூக ஊடகங்களில் பரப்பப்படுகின்றன. செய்திகள் கண்ணிமைக்கும் நேரத்தில் ஊடகம் வழியாகப் பரவிவிடுகின்றன. நிமிடத்திற்கு எண்ணிலடங்காத வகையில் செய்திகள் பெருகுகின்றன. பெரும்பாலும் பொய்யான செய்திகள் ‘முக்கியச் செய்தியாக’
மாற்றப்படுகின்றன.
இதனால் உண்மைச் செய்திகள் வெளி உலகத்திற்குத் தெரியாமலேயே போய்விடுகின்றன. இத்தகைய சூழ்நிலையில் கூட நம் கத்தோலிக்க அச்சு ஊடகம் உண்மையை உரைக்கும் ஊடகமாக, மக்கள் மத்தியில் தவிர்க்க முடியாத ஓர் ஊடகமாகத் திகழ்கிறது என்பதில் ஐயமில்லை.
ஆன்மிகம்,
கல்வி, சமூகப்பணி வாயிலாக உலகை வடிவமைக்கும் செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கும் திரு அவை, இந்த வியத்தகு மாற்றங்களை அமைதியாகப் பார்க்கத் துணியுமோ? “இந்த நிகழ்வுகளின் பிரதான ஓட்டத்திலிருந்து திரு அவை தனியாக விலகி நிற்கவேண்டும் அல்லது தன்னைத் தனிமைப்படுத்த முயற்சிக்கவேண்டும்” என்று
கூறுவதற்குப் பதிலாக, மனித முன்னேற்றத்தின் மையத்தில்தான் திரு அவை இருக்க முடியும். பிற மனிதர்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதும், அவற்றைப் புரிந்துகொண்டு, நம்பிக்கையின் ஒளியில் அவற்றை விளக்குவதும் அவசியம்.
“மனிதகுலத்தின் நன்மைக்காகவும், உலகத்திற்கான கடவுளின் திட்டத்தை நிறைவேற்றுவதற்காகவும் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துவது கடவுளின் உண்மையுள்ள மக்களின் கடமையாகும். ஒவ்வொரு நபரின் மனித மற்றும் உன்னதமான வாழ்வுக்குப் பணிபுரிய கணினி யுகத்தின் முழுத் திறனையும் பயன்படுத்துவதன் வாயிலாக, அனைத்து நன்மைகளின் ஊற்றான தந்தைக்குப் புகழ் சேர்க்கவேண்டும்” என்கிறார்
திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் (1990).
1. அச்சு ஊடகத்துறையில் முன்னணியிலிருந்த
கிறித்தவச் சமூகம்
ஒரு
காலத்தில் இந்தியாவில் அச்சு ஊடகத்துறையில் திரு அவை முன்னணியில் இருந்தது. வட்டார மற்றும் உள்ளூர் மொழி வெளியீடுகளுக்குப் பணி செய்வதற்காக இந்தியாவின் பல பகுதிகளில் அச்சகங்களைத்
தொடங்கியது கிறித்தவச் சமூகமே. கிறித்தவ மறைப்பணியாளர்கள் உள்ளூர் மொழிகளில் பல இதழ்களைத் தொடங்கினர்
என்பது குறிப்பிடத்தக்கது.
2. அச்சின் நீடித்த மதிப்பு
அச்சு
என்பது வெறும் காகிதத்தில் உள்ள மை அல்ல; அது
நிலைத்தத்தன்மை, நம்பிக்கையூட்டும் தன்மை மற்றும் கருத்துச் செறிவுமிக்க உள்ளடக்கத்தைக் குறிக்கிறது. ஓர் அச்சுப்பக்கம் நம்மை எளிதாகப் படிக்க வைக்கவும் சிந்திக்கவும் அழைக்கிறது. திரைச்சுற்றல்மீது (Scrolling) அடிமையாகிவிட்ட
உலகில், அச்சிடப்பட்ட வார்த்தைகள் சிந்தனையின் செயலாக மாறுகிறது. அச்சிடப்பட்டவை நம்பிக்கைக்குரியதாக, தேர்வு செய்யப்பட்டதாக மற்றும் சரிபார்க்கப்பட்டதும் பொறுப்புள்ளதுமாக இருக்கிறது. நமது கத்தோலிக்க நிறுவனங்கள் திரு அவைச் செய்தி மடல்கள், மறைப்பணி இதழ்கள் ஆகியவற்றில் முக்கியப் பங்காற்றுவது இந்த அச்சு ஊடகமே. எனவே, இவை வெறும் வெளியீடுகள் அல்ல, அவை உயிருள்ள வரலாறுகள்.
3. நாம் எதிர்கொள்கின்ற சவால்கள்
இன்று
அச்சு ஊடகம் எதிர்கொள்கின்ற சவால்களை மறுக்க இயலாது. குறைந்து வரும் சந்தாதாரர்கள், அச்சுக்கான அதிகச் செலவுகள், கவன நேரம் குறைந்து வருதல், மேலும் பெருகி வரும் டிஜிட்டல் தளங்கள் இவற்றால் அச்சு ஊடகம் பெரும் சவால்களைச் சந்திப்பது உண்மைதான். இளைய தலைமுறையினர் அடிக்கடி நம்மிடம் கேட்பது: ‘என் கைப்பேசியில் எல்லாம் இருக்கிறபோது அச்சு எதற்கு?’ விளம்பரதாரர்களும் இன்று எளிதான சேவைகளுக்காக டிஜிட்டல் தளங்களை நோக்கியே நகர்ந்து வருகின்றனர் என்பதையும் மறுப்பதற்கில்லை. இவை யாவும் உண்மையான சவால்களே. இருப்பினும், இந்தச் சவால்கள் மீண்டும் நாம் புதிய முயற்சிகளில் முன்னோக்கிப் பயணிப்பதற்கான வாய்ப்புகளாகும்.
அச்சு
மற்றும் டிஜிட்டல் ஊடகங்கள் இரண்டுமே சந்தை சக்திகளின் பிடியில் இருக்கின்றன. இன்று ஊடகங்கள் சந்திக்கும் போராட்டங்கள் இவை. ஆனால், சவால்கள் என்பது எப்போதுமே சுயமாற்றத்திற்கான வாய்ப்புகளே. ஊடகங்கள் மெருகூட்டப்பட்ட கவர்ச்சி உலகம் மற்றும் புகழ் வேட்டையின் பின்செல்கின்றன. மேலும், அவை தங்களைக் காத்துக்கொள்வதற்காக ஆதிக்கச் சக்தியினர்களின் கட்டுப்பாட்டுக்குள் அடிமையாகிவிட்டன. தேசிய விடுதலைப் போராட்டத்தில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற அரசமைப்பு விழுமியங்களை முன்னெடுத்ததில் அச்சு ஊடகம் வகித்த பெருமைக்குரிய பங்கை நாம் மறந்துவிட்டாலும், இன்று அவை சக்திவாய்ந்தவர்களால் ‘வாங்கப்பட்டு’ கட்டுப்படுத்தப்படும்
நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதுபோல் தோன்றுகிறது. மாபியா தலைவர்களைப் புகழ்ந்துரைத்து, அவர்களுக்கு அரசியல் மரியாதை அளிக்க முயலும் போக்கை யாராலும் மன்னிக்க இயலாது. குற்றவாளிகள் மகிமைப்படுத்தப்பட்டு கதாநாயகர்களாக எடுத்துக்காட்டப்படுகின்றனர்.
வணிக நலன்களால் வழிநடத்தப்படும் சில அச்சு ஊடகங்கள், முன்பு பளபளப்பான பத்திரிகைகளின் பாதுகாப்பிற்காகக் கருதப்பட்ட கவர்ச்சி, வதந்திகள் மற்றும் பாலியல் ஆகியவற்றை மட்டுமே விற்பனை செய்கின்றன.
கடந்த
காலத்தின் அடையாளமாக இருந்த அச்சு ஊடகங்களில் தொழில்முறைத் தலைமை பலவீனமடைந்து வருவதாகவும் மறைந்து வருவதாகவும் தெரிகிறது. தொழில்முறை பத்திரிகையாளர்களின் ஒருங்கிணைந்த மனசாட்சியைப் பலவீனப்படுத்தும் வகையில், குறுகிய பல்வேறு சுயநல அடிப்படையிலான பத்திரிகையாளர்கள் சங்கங்கள் உருவாகிவிட்டன. இதன் விளைவாக, நீதிமன்றங்களின் கண்டனங்களும், இந்தியப் பத்திரிகைக் கவுன்சிலின் எச்சரிக்கைகளும்கூட ஊடகங்கள் தங்கள் பாதையைத் திருத்துவதை உறுதிசெய்ய முடியாத நிலையில்தான் உள்ளன.
4. செயல்பாட்டிற்கான பாதைகள்
இன்று
சவால்களை நாம் எவ்வாறு முறியடிப்பது? நாம் எடுக்கவேண்டிய பாதைகள் என்ன?
•
அச்சு ஊடகம் சிறந்ததாகச் செய்யக்கூடியவற்றை நம்பிக்கையுடன் செய்யவேண்டும். நம்முடைய பதிப்புகள் ஆழமான சிந்தனைகளுக்குரிய இடமாக இருக்கட்டும். நமது வெளியீடுகள் நம்பிக்கையின் சாட்சியங்களாகவும், மனித உணர்வுகள் மற்றும் மனித உரிமைகள் அரசமைப்பு மதிப்புகளை நிலைநிறுத்துவதாகவும் அமையவேண்டும். இவை அனைத்தும் ஒரு குறுஞ்செய்திக்குள் குறைக்க முடியாத கலையாக இருக்கவேண்டும்.
•
இவை மிகுந்த கவனத்துடன் சேவை புரிவதாக இருக்கவேண்டும். கத்தோலிக்க அச்சு ஊடகம் முக்கியமான நம் சமூகங்கள், பங்குகள், மறைமாவட்டங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தவேண்டும். ஏனெனில், இங்கு நிகழும் நம் செய்திகள் பிற ஊடகங்களில் எதிரொலிக்கப்படுவதில்லை. சாதாரண நம்பிக்கையாளர்கள், முன்னோடிகள், திருநிலை-பொதுநிலைப் பணியாளர்கள், சமூகப் பணியாளர்கள் ஆகியோரின் செய்திகளை நாம்தாம் எடுத்துரைக்கவேண்டும்.
•
அச்சுக்கலை ஒரு சுற்றுச்சூழல் அமைப்பின் ஒரு பகுதியாக வடிவமைக்கப்பட வேண்டும். அச்சுக்கலையும் எண்ணிமக்கலையும் ஒன்றோடொன்று தொடர்புடையதே. டிஜிட்டலுடன் அச்சு போட்டியிடவில்லை; மாறாக, இது அதை நிறைவு செய்கிறது. ஓர் இதழில் ‘QR’ குறியீடுகள்
மூலம் வீடியோக்கள், அலைவரிசைகள் அல்லது பங்கு நிகழ்வுகளுடன் இணைக்கலாம். அச்சு என்பது அடிப்படையில் அடித்தளம்; டிஜிட்டல் என்பது விரிவாக்கம். அச்சு என்பது அமைப்பு; டிஜிட்டல் என்பது அதன் செயல்.
5. நிலைத்தன்மை மற்றும் படைப்பாற்றல்
நிலைத்தன்மை
குறித்து நாம் வேறுபாடாகச் சிந்திக்கவேண்டும்:
• சந்தாக்கள்
மற்றும் உறுப்பினர் சேர்க்கைகள் பரிவர்த்தனைகளாக அல்ல, உறவுகளாக வளர்க்கப்படவேண்டும்.
• சிறப்பு பதிப்புகள், சேகரிப்பாளர் இதழ்கள், பக்தி வழிகாட்டிகள், மேய்ப்புப்பணி கடிதங்களின் தொகுப்புகள் இவை பணிகள் மற்றும் வருவாய் வழிகளாக இருக்கலாம்.
• நிகழ்வுகள், கருத்தரங்குகள், இளைஞர் போட்டிகள், குழந்தைகளுக்கான பக்கம் மேலும் உந்துதல் தரும் அறிவுத் துணுக்குகள் போன்றவற்றை நம் அச்சு முயற்சிகளுடன் இணைத்தால், அவை பத்திரிகையை மக்களின் வாழ்க்கையில் ஓர் உயிருள்ள இருப்பாக மாற்றும்.
6. அச்சுப்பணி - ஒரு சமூகத்
தொண்டு
முக்கியமாக
நாம் நினைவில்கொள்ள வேண்டியது: நம் அச்சு ஊடகம் ஒரு வணிக முயற்சி மட்டுமல்ல; அது ஒரு சமூகத்தொண்டு. அது ஒரு சமயப் போதனை; அது ஓர் உருவாக்கம்; அது ஓர் உண்மைக்கான பணி. ஒரு கத்தோலிக்க நாளிதழ் அல்லது இதழ் என்பது வெறும் தகவல்களுக்காக மட்டுமல்ல, ஊக்கமளிக்க, உயிரளிக்க, மாற்றத்தைக் கொண்டுவர அமைந்தது. அது வெறும் நிகழ்வுகளை உள்ளடக்குவதில்லை; மாறாக, அது நம்பிக்கையின் ஒளியில் அவற்றை விளக்குகிறது. இது சிக்கல்களை மட்டும் தெரிவிக்காது, நம்பிக்கையின் பக்கம் வழிகாட்டுகிறது.
7. மீண்டும் கண்டுபிடிப்பதற்கும்
பிறரை
ஒளிர்விப்பதற்குமான
ஓர்
அழைப்பு
டிஜிட்டல்
புயல் உண்மையாகவே உள்ளது. அது அனைத்தையும் கவர்ந்திழுக்கும் சக்தியாக மாறியுள்ளது என்பதில் ஐயமில்லை. நம் பதில் என்ன? அச்சை விலக்குவது அல்ல; அதன் அழைப்பை மீண்டும் காணப்படச் செய்தல். அதாவது, தவறான தகவல்களால் நிரம்பிய காலத்தில் நம்பிக்கைக்குரிய சாட்சியாக, திசைதிருப்பும் உலகில் சிந்தனையைத் தூண்டும் வெளிப்பாடாக, முழக்கங்களுக்கு மத்தியில் ஒரு மென்மையான குரலாக அச்சு ஊடகம் அமையவேண்டும். நம் அச்சு ஊடகம் மறைப்பணியின் ஆழம், அதன் அழகு, நம்பகத்தன்மை ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஒரு தொண்டுப் பணியாக மாறக்கூடும் எனில், அது டிஜிட்டல் யுகத்தில் மூழ்கிவிடாது, தனித்து ஒளி கொடுக்கும் பேரொளியாக அச்சு ஊடகம் அமையும்.
வத்திக்கானில்
நடைபெற்ற நோபல் பரிசு பெற்றவர்கள் கூட்டத்தில் உரையாற்றிய திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் விடுத்த அழைப்பு எண்ணிப்பார்க்கத்தக்கதே: “இது மனிதகுலத்தின் நலனுக்காகச் செயல்படும் முறைகளை வடிவமைக்க வேண்டிய பொறுப்பை மனிதர்கள் ஏற்கவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இது சமூகத்தின் மேம்பாட்டிற்கும் சமூக ஒற்றுமைக்குமான முறைகளையும் கட்டமைக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.”
எனவே,
நம் இதயங்களில் அச்சிடப்பட்ட வார்த்தை “என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு; என் பாதைக்கு ஒளியும் அதுவே!” (திபா 119:105) எனும் தூய வார்த்தையை நம் உள்ளங்களில் ஏற்று, கத்தோலிக்கத் தொடர்பாளர்களாகத் துணிவுடனும் படைப்பாற்றலுடனும் நம்பிக்கையுடனும் முன்னே செல்வோம்.
- மொழியாக்கம்:
அருள்பணி. ஜெ. ஞானசேகரன்
ஒருமுறை நண்பன் ஒருவனோடு உரையாடிக் கொண்டிருக்கும்போது, “உனக்கு உடல் நிலை சரியில்லை என்றால் என்ன செய்வாய்?” என்று கேட்டேன். “மருத்துவரைச் சந்திப்பேன்” எனப் பதிலளித்தான். “சரி, மனம் சரியில்லை என்றால்?” என்றேன்.
அமைதியாய்
என்னை வெறித்துப் பார்த்தான்.
உடல்நிலை
சரியில்லை என்றால், மருந்து கொடுத்து, மருத்துவரிடம் அழைத்துச் சென்று நம்மை வளர்த்தவர்கள், மனம் சரியில்லை என்றால், என்ன செய்வது என நமக்குச் சொல்லித்
தரவே இல்லை. அத்தகைய சூழல்களில், நம்மில் பலர் நண்பர்களிடம் பகிர்வோம் அல்லது அமைதியை விரும்புவோம் அல்லது வாழ்வின் ஓட்டத்தில் நம் மனம் இருக்கும் நிலையைக் கூட பொருள்படுத்தும் சொகுசு நம்மில் பலருக்கு அமைவதில்லை. ஆனால், மீண்டும் அதே மனநிலை என்றோ உருவாகும்; மீண்டும் அதே சுழற்சி. நாம் தொடர்ந்த அதே ஓட்டத்தில் ஓடிக்கொண்டே இருப்போம். பல நேரங்களில் நிம்மதியின்றி
வாழ்வதுதான் மனித வாழ்வின் இயல்பு என நம்மை நாமே
தேற்றிக் கொண்டு மனசஞ்சலங்களோடு வாழ்ந்துகொண்டு இருக்கின்றோம்.
மனிதர்: பன்முகப்
பார்வை
ஒரு
தனிமனிதரை மூன்று முக்கியக் கூறுகளாகப் பிரிக்கலாம்: 1. உடல், 2. மனம், 3. ஆன்மா. உடல்நலனில் ஏதேனும் மாற்றம் ஏற்படும்போது, அதைக் கவனிக்க சிறுவயது முதலே நாம் பயிற்றுவிக்கப்படுகின்றோம்.
மருத்துவம் அதற்கு உதவுகிறது. ஆன்ம நலனைப் பேண, பல நேரங்களில் நாம்
பின்பற்றும் மதங்கள் நமக்கு வழி கூறுகின்றன. சமய நம்பிக்கையற்றவர்களுக்கும் கூட அவர்கள் தாங்கி நிற்கும் கொள்கைகள் உதவுகின்றன. ஆனால், மனநலனைப் பற்றி மிக அரிதாகவே நாம் அறிந்திருக்கின்றோம். இன்றைய காலகட்டத்தில் சிறு குழந்தைகள் கூட மன அழுத்தத்தைப் (Stress)
பற்றிப் பேசுகின்றனர். மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.
பல நேரங்களில் மன நலனை, நாம் மனநலம் குன்றியவர்களோடு மட்டும் தொடர்புபடுத்தத் தொடங்கிவிடுகின்றோம். ஆனால், மனநலம் என்பது, மனிதனாய் பிறந்த எவருக்கும் உரியது.
வாழ்வுமுறை மாற்றமும்
மனநலமும்
மனநலம்
பற்றிய நமது புரிதல் மிகவும் குறைவுதான். முந்தைய தலைமுறைக்கு அதைப் பற்றிய அறிவு ஒரு தேவையாகவே இருந்ததில்லை. ஆனால், இன்று அது ஓர் அவசியத் தேவை. அன்றைய வாழ்வுமுறை மனநலனைப் பேணுவதற்கான அனைத்துக் காரணிகளையும் உள்ளடக்கியிருந்தது. பள்ளி முடித்து வீடு திரும்பும் குழந்தைகள் பெரும்பாலும் நடந்தோ, மிதிவண்டியிலோ பயணித்தனர். நண்பர்களோடு இணைந்த அந்தப் பயணம், மாலை நேர விளையாட்டு எனப் பல்வேறு காரணிகள் குழந்தைகளின் மன அழுத்தத்தைப் போக்கும்
இயற்கைக் காரணிகளாய் அமைந்திருந்தன. பெரியவர்களும், தங்கள் நிலம் சார்ந்த, இயற்கை சார்ந்த பணிகளையே செய்து வந்தனர். குடும்பங்கள், கூட்டுக் குடும்பங்களாக, குறைந்தது தாத்தா, பாட்டியுடன் கூடிய குடும்பங்களாக இருந்தன. அங்குப் பணிப்பகிர்வு அதிகம் இருந்தது. அதோடு அன்றைய கிராம அமைப்பு, உறவுப் பரிமாற்றம், முறையான உறக்கச் சுழற்சி (Sleep Cycle), விழாக்கள்,
வழிபாடுகள் எனப் பல கூறுகள் ஒரு
மனிதனின் மனநலனைப் பேணுவதில் முக்கியப் பங்காற்றின. ஆனால், இன்றைய காட்சி அதிலிருந்து முற்றும் மாறுபட்டது.
மன
அழுத்தம் மனிதருக்குத் தொன்றுதொட்டு இருந்துவருகிறது. ஆனால், அன்றைய வாழ்வியல், அந்த மன அழுத்தத்தை இயல்பாக
வெளியேற்றும் வாய்ப்புகளைக் கொண்டிருந்தது. காலை எழுந்தவுடனேயே அன்றைய நாளுக்கான தயாரிப்பு, நாள் முழுவதும் கல்வி அல்லது பணி, மீண்டும் வீட்டிற்கு வந்தபின் பகல் முழுவதும் செய்த பணியின் தொடர்ச்சி... இந்த ஓட்டத்தில் நம்மில் இருக்கும் மன அழுத்தத்தை வெளியேற்ற
வாய்ப்பு முற்றிலும் இல்லாமல் போகின்றது. பணி செய்யும் பெண்களின் நிலை இன்னும் கவலைக்கிடம். அவர்களின் அன்றாடப் பணிச்சுமையோடு, குடும்பப் பொறுப்பு அவர்களை மேலும் மன அழுத்தத்திற்கு உட்படுத்துகிறது.
ஆழ்மனத்தில் சேரும் அழுத்தம் எல்லாம் ஒன்று சேர்ந்து நம் இயக்க ஆற்றலை முடக்குகின்றது.
காலத்தின் அறிகுறி
மீண்டும்
பழைய வாழ்க்கைமுறைக்குத் திரும்புவது மட்டுமே, நல்ல மனநலத்துடன் கூடிய வாழ்வுக்கு ஒரே வழியா? “நாங்க அந்தக் காலத்தில...” எனப் பழைய காலத்தை வளமைப்படுத்தி, துக்கம் கொண்டாடுவது எந்த விதத்திலும் நமக்குப் பயன்தரப் போவதில்லை. ஆனால், காலத்தின் அறிகுறிகளுக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக்கொள்வதில் மனிதனுக்கு இணை மனிதன் மட்டுமே. அறிவியல் வளர்ச்சியும் விஞ்ஞான சாதனைகளும் அதற்குச் சான்று பகரும். ஏன், ஆன்மிகத்தில் கூட காலத்தின் அறிகுறிகளுக்கு ஏற்ப தங்கள் சித்தாந்தங்களை மாற்ற மனித இனம் தயாராகவே இருக்கின்றது.
உடல்நலனில்
தொய்வு ஏற்படும்போது மருத்துவரைச் சந்திப்பதில் அக்கறை காட்டும் நாம், மனநலனில் தொய்வு ஏற்படும்போது மனநல மருத்துவரையோ, மனநல ஆலோசகரையோ சந்திப்பது நம்மிடையே அதிகம் விரும்பப்படாத ஒன்றாகவே இருக்கின்றது. ‘ஆண் அழக்கூடாது’ எனக்
கூறியே வளர்த்த நாம், அவன் அழுவதற்கான காரணம் என்ன எனக் கேட்கத் தயாராகவே இல்லை. அதைப்போன்றே, ஒரு மனிதனின் மன அழுத்தத்திற்குக் காரணமும் நமக்குத்
தெரிவதில்லை.
மனநலத்திற்கான
கசாயம்
தலைவலிக்கு
ஒரு குவளை கசாயமோ, தேநீரோ உதவுவது போல, உளவியலாளர் வில்லியம் கிளாசர் விவரித்த ஒரு வழியைச் சுருக்கமாகக் கூற விழைகின்றேன். கிளாசரின் புரிதலின்படி, எல்லா மனநலன் சார்ந்த பிரச்சினைகளும் அடிப்படையில் உறவுச் சிக்கல்களே! மனிதன் ஐந்து முக்கியத் தேவைகளால் உந்தப்படுகின்றான்: 1. இருப்பு (Survival), 2. அன்பு
மற்றும் சார்ந்திருப்பது (Love & belonging),
3. சக்தி (Power), 4. சுதந்திரம்
(Freedom), 5. மகிழ்ச்சி
(Fun). இவற்றுள்
அன்பு மற்றும் சார்ந்திருப்பதை முதன்மையாகக் கருதுகிறார். ஒருவருக்கு ஓர் ஆழம் மற்றும் அடர்த்தி நிறைந்த உறவு இருக்குமாயின், மற்ற எல்லாச் சவால்களையும் அவரால் எதிர்கொள்ள முடியும். நமக்கு அப்படிப்பட்ட உறவுகள் அல்லது உறவு உண்டா?
இந்தத்
தேவைகள் ஒவ்வொருவருக்கும் மாறுபடுகின்றன. இந்தத் தேவைகள் நிறைவு பெறாதபோது ஒரு மனிதன் சலனமடைகிறான். இதற்கு அவர் பரிந்துரைக்கும் கசாயம், தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் (Choice).
மனிதனுக்கு
எல்லாச் சூழலிலும் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இருக்கிறது. அவன் எத்தகைய வாய்ப்பைத் தேர்ந்தெடுக்கின்றான் என்பதைப் பொறுத்தே அவனது செயல்பாடு அமைகிறது. கோபத்தில் கத்தித் தீர்ப்போரைப் பார்த்திருப்போம். அதேநேரத்தில் நிதானமாய் பதிலிருப்புத் தருவோரையும் பார்த்திருப்போம். இருவருமே கோபத்தில் இருந்தாலும், அந்தச் சூழலுக்கு அவர்கள் தரும் பதில் வெவ்வேறு. அவர்களைக் கோபமூட்டிய சூழலை அவர்களால் மாற்ற முடியாவிட்டாலும், அந்தச் சூழலுக்கான அவர்களின் பதிலிருப்பு அவர்களின் விருப்பமே!
அக்கறையோடு பயணிப்போம்
வேகமாய்
இயங்கிக் கொண்டிருக்கும் நம் அன்றாட வாழ்வில், நம்மை அழுத்தத்திற்கு உட்படுத்தும் சூழலை மாற்ற முடியவில்லை என்றாலும், அந்தச் சூழலுக்கான நமது பதிலைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் நமது கைகளில் மட்டுமே!
மனநலனின்
முக்கியத்துவத்தை உணர்ந்த ஐக்கிய நாடுகள் சபை அக்டோபர் 10-ஆம் தேதியை அகில உலக மனநல நாளாக அறிவித்திருக்கின்றது. இந்த நாளைச் சிறப்பிக்கின்ற இந்தத் தருணத்தில், நமது மனநலனில் அக்கறை கொள்வதோடு, பிறர் மனநலனிலும் அக்கறை கொள்ள உறுதி ஏற்போம்! உள்மன அமைதி நிறைந்த சமூகத்தைக் கட்டமைப்போம்.
உலகப் பார்வையில் பிரான்சிஸ்-பிறைடா தம்பதியினர் பணக்காரர்கள்தான். அப்பார்ட்மெண்ட் வாழ்க்கை, சொகுசுக்கார், ஆடம்பர உடை, ஆபரணங்கள் எல்லாம் அவர்களைப் பணக்காரர்கள் என்றுதான் எல்லாருக்கும் காட்டியது. தெளிந்த குட்டையின் ஆழத்தில் சகதியும் நெகிழியுமாகக் காணப்படுவதுபோல, இந்தப் பணக்கார அடையாளத்தின் ஆழத்தில் வறுமையும் வெறுமையும் மிகுந்து கிடந்தது யாருக்கும் தெரியாது.
அடுத்தவேளை
உணவிற்குக்கூட கஷ்டப்பட வேண்டிய சூழல். திடீரெனப் பறிபோன ஐ.டி. வேலை,
வீட்டு வாடகைப் பாக்கி, நகைகளையும் சொகுசுக் காரையும் விற்றுவிட்ட போதிலும், கழுத்தை நெரிக்கும் இ.எம்.ஐ.
பிரச்சினைகள், வெளியே தலைகாட்ட முடியாத அவல நிலை... என்று பிரான்சிஸ்-பிறைடா குடும்பம் கோடைக்கால சுழல்காற்றில் சிக்கிச்சுழலும் சருகைப் போலானது.
வீட்டிலிருந்த
அனைத்தையும் விற்றாகி விட்டது. கொஞ்ச நாளாகவே ஆன்லைன் ‘சொமாட்டோ’
சாப்பாடுதான்.
அதற்கும் இனி வழியில்லை என்ற நிலை வரும்போது தற்கொலைதான் ஒரே வழி என்ற முடிவை எடுத்தது அந்தக் குடும்பம்.
இன்று
மாலை சாவதற்கான நல்ல நேரம். விஷம் அருந்திச் சாகத்திட்டம் ஒன்று உருவானது.
திருமணமாகி
ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று காலை தான் கருவுற்றிருப்பதை அறிந்தாள் பிறைடா. சாக முடிவெடுத்த நிலையில் ஒரு புதிய உயிர்! நல்ல செய்திதான். ஆனால், ‘இரண்டு வயிற்றுக்குச் சாப்பாடு போதாதபோது, மூன்றாவது வயிறு தேவைதானா?’ என்ற கேள்வி அவளைப் பசி என்னும் ஆயுதம் கொண்டு தாக்கியது.
மதிய
வேளையாகப் போகிறது. இன்னும் படுக்கையிலிருந்து எழும்பாத தன் கணவன் பிரான்சிசின் அருகில் படுத்துக்கொண்டாள் அவள். தான் கருவுற்றிருப்பதைக் கூறமுடியாமல் முண்டியடித்து வந்த தன் கண்ணீரை அடக்கிக்கொண்டாள். யாரும் இன்னும் காலை உணவு உண்ணவில்லை. காரணம், வீட்டில் உணவு இல்லை. இருந்த உணவுப் பொருள்கள் எல்லாம் காலியானது. யாரிடமும் தன் வறுமையைக் கூறி யாசிக்க அவர்கள் மனம் விரும்பவில்லை.
கண்களைக்
கசக்கிக்கொண்டே புரண்டு படுத்த பிரான்சிஸ் ‘இன்னைக்கு நீ ரொம்ப அழகா
இருக்க’ என்று
கூறிக்கொண்டே பிறைடாவின் நெற்றியிலே முத்தமிட்டான். இருவரும் ஒருவர் மற்றவர் அணைப்பில் படுத்திருந்தபோது பக்கத்து வீட்டிலிருந்து பிரியாணி வாசம் அவர்களைத் தாலாட்டியது.
தங்கள்
வீட்டில் சாப்பிட ஒரு பாட்டில் விஷம் மட்டும்தான் இருக்கிறது என்ற நிலையில், பிரான்சிஸ்-பிறைடா தம்பதியினர் தங்கள் தற்கொலை முடிவு என்னவாகப் போகிறது என்பதைத் தங்கள் பார்வையினாலேயே பேசிக்கொண்டனர்.
பிறைடா
கனத்த உள்ளத்தோடு ‘நான் பிரெக்னன்ட்டா இருக்கேன்’
என்று பிரான்சிஸின் காதிலே மெதுவாகக் கூறினாள். பிரான்சிஸ் என்ன சொல்வது என்று தெரியாமல், அவள் கண்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.
பக்கத்து வீட்டுப் பிரியாணி வாசம் அதிகமாக அதிகமாக அவர்களுக்கு அன்று என்றுமில்லாத வகையில் அதிகமாகவே பசித்தது. ‘காலிங்’ பெல் சத்தம் கேட்டது. பிறைடா கதவைத் திறக்க எழுந்து சென்றாள். “புதுசா பக்கத்து வீட்டுல குடிவந்திருக்கோம். அதான் பிரியாணி கொடுத்துட்டுப் போகலாமுணு வந்தேன்” என்று நடுத்தர வயதுகொண்ட பெண் ஒருவர் சிரித்த முகத்துடன் சில பிரியாணி பார்சல்களைக் கொடுத்துவிட்டுச் சென்றாள். அந்தப் பிரியாணி பொட்டலங்கள் அன்றைய நாளுக்கான அவர்களின் பசியை ஆற்றியது.
மாலை
தற்கொலை செய்துகொள்வதற்கான நேரம் வந்தது. ‘காலிங்’ பெல் சத்தம் மீண்டும் கேட்டது. கதவைத் திறக்க எழுந்து சென்றாள் பிறைடா. ஒவ்வோர் அலையும் ஏதாவது ஒன்றை நமக்காகவே கரைசேர்க்கிறது.
மனிதகுலம்
எவ்வளவுதான் துயரப்பட்டாலும் எல்லாக் காலகட்டத்திலும் ஏதாவது ஒரு கண்டுபிடிப்பு அத்துயரத்திலிருந்து அவர்களைக் காப்பாற்றியிருக்கிறது. அப்படியான மனிதகுலத்தின் அதி நவீனக் கண்டுபிடிப்பை இக்காலகட்டத்தில் ‘செயற்கை நுண்ணறிவு’
என்கிறோம். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் பல்வேறு வகைகளும் பயன்களும் உண்டு. பெரும்பாலும் செயற்கை நுண்ணறிவை உரை (text), இசை
(music), காணொளி
(video), குறியீட்டு
மொழி (codes) மற்றும் பட (images) உருவாக்கத்திற்குப்
பயன்படுத்துகின்றனர்.
இவ்வகை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ‘ஜெனரேட்டிவ் ஏ.ஐ.’ (Generative
AI) என்று அழைக்கிறோம். இத்தகைய தொழில்நுட்பப் படைப்புகளே இன்று இணையதள உலகில் குவிந்து மலிந்து கிடக்கின்றன.
‘ஜெனரேட்டிவ் ஏ.ஐ.’ தன்
ஆதிக்கத்தை முழுமையாக நிலைநாட்டுவதற்கு முன்பாகவே செயற்கை நுண்ணறிவின் அடுத்தகட்டப் பரிணாமம் நம் கண்முன்பாக உலா வருகிறது. இதனை ‘ஏஜென்டிக் ஏ.ஐ.’ (Agentic A.I)
என்று அழைக்கின்றனர். ஒரு நிறுவனத்தின் இலக்கை அடைவதற்கு அந்நிறுவனத்தின் பல்வேறு துறைகளில் வேலை செய்யும் அனைத்து முகவர்களும் (Agents) இணைந்து
உழைக்க வேண்டியுள்ளதை நாம் அறிவோம். அதேபோல ஒரு நிறுவனத்தின் வெற்றிக்காகச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, அந்நிறுவனத்தின் பணிகளைச் சரியாகச் செய்து முடிக்க உதவும் தொழில்நுட்பத்தையே ‘ஏஜென்டிக் ஏ.ஐ.’ என்கிறோம்.
இன்று இவ்வகை தொழில்நுட்பம் மருத்துவம், கல்வி, வியாபாரம், பொருளாதாரம், கட்டுமானம் என்று எல்லாத் துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
‘ஏஜென்டிக் ஏ.ஐ.’ செயற்கை
முகவர்களைப் (Agentic A.I) பணியமர்த்தி,
சரியான நேரத்தில் சரியான முடிவைத் தன்னிச்சையாக (autonomous) எடுத்துச் செயல்படும் ஆற்றல் கொண்டது. ஜெனரேட்டிவ் ஏ.ஐ. எதிர்வினை
(reactive) ஆற்றும் பண்புகொண்டது. கேட்பதைக் கொடுப்பதோடு தன் இயக்கத்தை நிறுத்திக்கொள்ளும். ஆனால், ஏஜென்டிக் ஏ.ஐ. எதிர்வினை
ஆற்றாமல் (pro active) சிந்தித்துச் சரியான
முடிவை எடுக்கவல்லது. இவ்வாறு தன்னிச்சையாகச் செயல்படும் ஏ.ஐ. முகவர்
(Agentic Automation) குறிப்பிட்ட
அலுவலின் நோக்கத்தை ஆய்ந்து அறிந்துகொண்டு அதற்கேற்றார் போன்ற பாணியைக் கையாண்டு நோக்கத்தைத் துல்லியமாக நிறைவேற்றித் தருகின்றது.
எடுத்துக்காட்டாக,
ஒரு மனிதர் வெளிநாட்டிற்குப் பயணம் செல்லவேண்டுமெனில், அவர் சில முகவர்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருக்கும். ஆனால், ஏஜென்டிக் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில்
அமெரிக்கா செல்லவேண்டும் என்ற கட்டளைப் பிறப்பிக்கப்பட்டவுடன், ஏ.ஐ. அந்தக்
கட்டளையைப் புரிந்துகொண்டு பிளைட் டிக்கெட் புக் செய்வதிலிருந்து மின்னஞ்சலுக்கு ஒவ்வோர் அப்டேட்டையும் அனுப்புவதுவரை எல்லா வேலைகளையும் ஏ.ஐ. முகவர்களே
பார்த்துக்கொள்கின்றனர்.
இதனால் நேர விரயம் தவிர்க்கப்படுவதோடு, மிக நேர்த்தியாக வேலையும் செய்து முடிக்கப்படுகிறது என்கின்றனர் ஏ.ஐ. நிபுணர்கள்.
மனிதர்களின்
வேலையை ஏ.ஐ. முகவர்கள்
செய்து முடிக்கின்றார்கள் எனில், மனிதர்கள் இனி என்னதான் செய்வார்கள்?
நாகரிகச் சமூகம் தன் துறையில் பெயர்பெற்ற தனிமனிதர்களைக் கொண்டாடுகிறது. காலத்தே துறைகள் மாறுகிறது. சமூகம் வேட்டை வீரர்களை, போர்வீரர்களை, விளையாட்டு வீரர்களை, கவிஞர்களை, கதாசிரியர்களைக் கொண்டாடி மகிழ்ந்தது. 19-ஆம் நூற்றாண்டில் நாடக நடிகர்கள், திரைப்படக் கலைஞர்கள் எனப் புதுமாற்றம் உருவானது. விளையாட்டில் கிரிக்கெட், கால்பந்து எனவும் விரிவு பெற்றது. நம் நாட்டில் கொண்டாடப்பட்ட ஹாக்கி விளையாட்டு கிரிக்கெட்டால் மெல்ல மெல்ல அழிகிறது.
இந்தியத்
திரை வரலாற்றில் முதல் ஓர் இலட்சம் ஊதியம்
பெற்ற முதல் கதாநாயகி ‘கொடுமுடி கோகிலம்’ என்று அழைக்கப்பட்ட கே.பி. சுந்தராம்பாள்.
இவர் கதர் இயக்கம், தீண்டாமை ஒழிப்பு, வெள்ளை ஏகாதிபத்திய எதிர்ப்பு என, தேச விடுதலைப் போரில் ‘கணீர்’ குரலில் மக்களிடையே பாடியவர். காங்கிரஸ் சார்பாக 1951-இல் அன்றைய சென்னை மாகாண சட்ட சபையில் நுழைகிறார். இந்திய அரசியல் வரலாற்றில் திரைக்கலைஞர் ஒருவர் ஆட்சி மன்றத்தில் முதல் முறையாகப் பதவி பெற்ற நிகழ்வு, துவக்கப்புள்ளி அதுதான். அந்நாள் முதல் இன்றுவரை வரலாறு தொடர்கிறது.
திராவிட
இயக்க வரலாற்றில் ‘நடிப்பிசைப் புலவர்’ எனப்படும் கே.ஆர். இராமசாமி
பேரறிஞர் அண்ணாவின் நெருங்கிய கூட்டாளி. தனது நாடகங்கள்வழி தொடக்ககாலத் தி.மு.க.விற்கு நிதி திரட்டிக் கொடுத்த வள்ளல். தி.மு.க.வின் முதல் இராயபுரம் அலுவலகத்திற்கு நாடகம் மூலமும் சொந்தப் பணத்திலும் 25,000 ரூபாய் வழங்கிய பெருந்தகை. 1960-ஆம் ஆண்டில் இவர் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்றார்.
அன்று
திராவிட இயக்கத்தில் சிவாஜி கணேசன், எஸ்.எஸ். இராஜேந்திரன் என்போர் குணச்சித்திர நடிகர்களாக மிளிர்ந்தனர். எம்.ஜி. இராமச்சந்திரன் தொடக்க காலங்களில் காங்கிரஸ் பேரியக்க அனுதாபியாக அடையாளம் காணப்பட்டார். காலம் நடிகர் திலகம் சிவாஜியைக் காங்கிரஸ் கட்சிக்கும், புரட்சி நடிகர் எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்களைத் தி.மு.க.விற்கும் நகர்த்தியது.
திரைக்கலைஞர்களில்
அரசியலில் வெற்றி கண்டவர் இருவர். ஒருவர் எம்.ஜி. இராமச்சந்திரன். மற்றொருவர் ஆந்திராவின் என்.டி.ஆர். என
அழைக்கப்படும் என்.டி. இராமராவ். இவர் சைதன்யா ரத யாத்திரை மூலம்
ஆந்திரா முழுவதும் 75,000 கிலோ மீட்டர் வேன் வழிப் பயணம் செய்து, 1983-இல் ஆந்திர ஆட்சியைப் பிடித்தார்.
அண்மையில்
கேரளாவில் பா.ச.க.வுக்காக முதல்
முறையாக திருச்சூர் நாடாளுமன்றத் தொகுதியில் வென்றார் சுரேஷ் கோபி. மத்திய இணை அமைச்சராகவும் பா.ச.க.வில் பதவி பெற்றார். இவர் தனது அமைச்சர் பதவியிலும் அரசியலிலும் விருப்பமில்லாமல் இருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. சில நாள்கள் இவரைக் காணவில்லை எனவும் பரபரப்பாகப் பேசப்பட்டன. இதுதான் நடிகர்களின் நடப்பு அரசியல். தமிழ்நாடு அரசியலில் திராவிடக் கட்சிகளின் தாக்கங்கள் திரை உலகில் இருந்தே உருப்பெறுகிறது.
எம்.ஜி. இராமச்சந்திரன் அண்ணா மற்றும் கலைஞரின் திரைக்கதை, வசனங்களால் திரைப்படங்களில் தொடர்
வெற்றி முத்திரை பதித்தார். தி.மு.க.வும் தன் தேர்தல் வெற்றிக்கு எம்.ஜி.ஆர். என்ற
தம் துருப்புச் சீட்டை வைத்து தமிழ்நாட்டு அரசியலில் ஆட்டம் காட்டியது. நடிகர் அரசியலுக்கு வரலாம், வெற்றி பெறலாம் என எம்.ஜி.ஆர். வழிகாட்டினார். அவருக்குப் பின்பு செல்வி ஜெ. ஜெயலலிதாவும் அரசியலில் தடம் பதித்தார். வெற்றியோடு கடும் விமர்சனங்களையும் நெருக்கடிகளையும் சந்தித்தார்.
எம்.ஜி.ஆர்.-ஐ
தொடர்ந்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களும் 1988-ஆம் ஆண்டு ‘தமிழக முன்னேற்ற முன்னணி’ எனத் தனிக்கட்சி கண்டார். அன்றைய பிளவுபட்ட அ.தி.மு.க.வின் ஓர்
அணியான ஜானகி அம்மையார் அணியோடு கூட்டணி கண்டு, 1989 - சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்தார். திருவையாறு தொகுதியில் நடிகர் சிவாஜி கணேசன் குறைந்த வாக்குகள் பெற்று வெற்றியைப் பறி கொடுத்தார். வி.என். ஜானகி
அம்மாவும் திரைத்துறை கதாநாயகியே.
நடிகர்களின்
அரசியல் என்பது தனித்துவமான கதாநாயகப் பிம்ப அரசியலை முன்னெடுப்பதாகும். நடிகர் விஜய்காந்த் தன் கல்யாண மண்டபம் முன் பகுதி இடிப்பிற்குப் பின் தி.மு.க.மீது கொண்ட பகையையும், அதற்கு முன்னான கலைஞர் கருணாநிதி பாசத்தையும் ‘தங்கத் தலைவனுக்கு விழா’ என்பதே சான்று உரைப்பதாகும். திரை நாயகர்கள் திரையில் மட்டுமல்ல, வாழ்விலும் அரசியலிலும் தங்களை ‘கதாநாயகன்’
என்ற மாயத்திலே வாழ்வது, எதார்த்தம் மறப்பது, சுற்றியுள்ள காக்காபிடிக் கும்பலின் மயக்க வார்த்தைகளை நம்புவது, கற்பனைக் கோட்டைகளில் வசிப்பது என நாட்டு நிலவரம்
அறியாமல் அரசியலில் குதிக்கிறார்கள்; கட்சி ஆரம்பிக்கிறார்கள்.
எம்.ஜி.ஆர். தனது
அரசியல் வாரிசு என அறிவித்த நடிகர்
பாக்கியராஜ் கட்சி ஆரம்பித்துச் சோபிக்கவில்லை. பல்துறை வித்தகர் எனப்படும் நடிகர் டி. இராஜேந்தர் காட்டிய அரசியல் கட்சி என்ற வித்தை பலிக்கவில்லை. நடிகர் சரத்குமார் போட்ட பல்டிகள் பா.ச.க.வோடு முடிந்துவிட்டது. நடிகர் கமலஹாசன் ஆளும் தி.மு.க.வின் பிரச்சார அணியாகத் தன் மக்கள்நீதி மையத்தை மடைமாற்றி விட்டார். நடிகர்
கருணாஸ் தனக்கு ஒரு சீட் வேண்டும் எனத் தி.மு.க. கூட்டணியில்
சீட் போடுகிறார்.
இராமராஜன்,
எஸ்.எஸ். சந்திரன், எஸ்.வி. சேகர், வாகை சந்திரசேகர், தியாகு, நெப்போலியன், குஷ்பு, கஸ்தூரி, கௌதமி, விந்தியா என்ற நடிகர் பட்டாளமும் தமிழ்நாடு அரசியலின் வண்ணமிகு பக்கங்கள். ஏன் கட்சி ஆரம்பித்தோம்? எதற்குப் பிரச்சாரம் செய்கிறோம்? யாரோடு கூட்டணி? இது பகலா? இரவா? என அறியாமல் கட்சி
ஆரம்பித்தவர் பழம்பெரும் நடிகர் முத்துராமனின் மகன் கார்த்திக். இவருக்கெனச் சாதி இளைஞர் பட்டாளம் இருந்தது என்பது வரலாறு. நடிகை ரோஜா பரபரப்பு அரசியலில் ஆந்திர அரசியலைக் கலக்குவது கலகல பக்கம்.
ஒருகாலத்தில்
தமிழ்நாடு திரையுலகில் பரபரப்பாகப் பேசப்பட்டவர் என்.எஸ். கிருஷ்ணன். மூட நம்பிக்கை ஒழிப்பு, தேசபக்தி, நன்கொடைத் தன்மையால் வள்ளல் எனப் புகழப்பட்டவர் என்.எஸ். கிருஷ்ணன். இவர் மட்டுமே திராவிட அரசியலில் இருந்தும், அரசியலில் இல்லாத கதாநாயகர்கள் என்று கலைஞர் கருணாநிதியால் பாராட்டப்பெற்ற விதிவிலக்கு நடிகர். நடப்பு அரசியலில் தாங்கள் நடித்த இரண்டு திரைப்படங்கள் வெற்றி பெற்றால், தமிழ்நாடு முதல்வராகும் கனவு நடிகர்களுக்கு முளைக்கிறது. அவர்கள் தமிழ்நாட்டின் வரலாறு, நிலப்பரப்பு குறித்த அடிப்படை அறிவு இல்லாதவர்கள். குக்கிராம, கிராம, நகர, மாநகரத் தெருக்களின் நீள அகலங்கள் தெரியாதவர்கள். மக்களின் வசிப்பிடங்கள், தொழில், பொருளாதாரம், வருமானம் குறித்து அறியாதவர்கள். சமூக, கலாச்சார, பண்பாட்டு, வழிபாட்டுச் சூழல்களைப் புரியாதவர்கள், மக்களின் மன ஓட்டங்கள், ஒவ்வொரு
குடும்பத்தின் நிலை காணாதவர்கள், யாரோ சொல்ல ஏதோ புரிந்த அளவு செயல்படுபவர்கள்.
இவர்கள்
மக்களைக் காப்பாற்றுவார்களா? ஒரு நடிகர் மத்திய அரசு அதிகாரத்திற்கும், மாநில அரசு அதிகாரத்திற்கும் வேறுபாடு அறியாமல் தபால் கார்டு விலையைக் குறைப்பேன் என்று கூறினார். இதிலும், தன் கட்சிக் கொள்கை குறித்த பத்திரிகையாளரின் கேள்விக்குப் பதில் கூறாமல், ஏதேதோ பிதற்றினார்.
இப்பொழுதும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் இதேபோன்ற கேள்விக்கு
“நான் அதிகம் படித்தவன் இல்லை” என
ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டார். மற்றொரு நடிகர் பத்திரிகையாளர் சந்திப்பு என்றாலே ஏதோ தெரு சண்டை அளவு இழுத்துவிட்டார். பொதுவாழ்வு என்பது போராட்டம் என்பதைப் புரிந்து நடிகர் ரஜினிகாந்த் ‘இந்தப் பழம் புளிக்கும்’ என அரசியலில்
இருந்து ஒதுங்கிக்கொண்டார்.
நடிகர்கள்
அரசியலுக்கு வருமுன் தமிழ்நாட்டில் உள்ள பட்டிகள், பாளையங்கள், மங்கலங்கள், குப்பங்கள், மடங்கள், குளங்கள், கோவில்கள், பேட்டை, கோட்டை என்றுள்ள ஊர்ப்பெயர்களை அறிந்து, அதன் அடிப்படைகளை, சமயங்களை, சாதிகளை, தொழில்களை, வாழ்வாதாரங்களை, மக்களின் அடிப்படைத் தேவைகளை அறிந்து வரட்டும்.
எல்லாத்
தொழில் செய்வோரும் அரசியலுக்கு வரலாம் என்பதே இந்தியச் சனநாயகம்.
இந்து தேசியர்களின் கனவு மிக அகலமானது. இந்தியா பல தேசங்களை உள்ளடக்கிய ஒரு நாடு என்பதை மறுத்து, இந்தியாவை ஒரு தேசமாகவே கட்டமைக்கும் இந்து தேசியவாதிகளைப் புரிந்துகொள்வோம்.
‘கலாச்சாரத் தேசியம்’ என்ற பெயரில் பன்மைக் கலாச்சாரத்தை அழித்து, ஒற்றைப் பண்பைத் திணித்து, எதேச்சதிகாரப் பாணியில் ஆட்சி நடத்தி வருதலையும் நாம் அறிவோம். திராவிடம் என்பது கால்டுவெல் மூலம் இந்நாட்டைப் பிளக்க அந்நியர் உருவாக்கிய சதி என்றும், இந்தியா ஒரு தேசம்; இத்தேசத்தின் உள்ளடக்கம் ஒரே மொழி, ஒரே இனம், ஒரே கலாச்சாரம் என்றிருக்க, இந்நாட்டின் எதிரிகள் இந்நாட்டை ஒரு துணைக் கண்டம் (Sub continent)
என்றும் முத்திரையிட்டு உண்மையை மறைக்கும் இழிசெயலைச் செய்கின்றனர் என்றும் இந்துத்துவர்கள் வசைபாடுவதோடு நின்றிடவில்லை. இந்தியாவில் இன்று ஆட்சியைக் கைப்பற்றி ஆளும் உரிமையைப் பெற்றிருக்கும் கட்சியின் பூர்வீக அமைப்பாம் ஆர்.எஸ்.எஸ். மற்றும் சவார்க்கரின் ‘இந்து மகா சபா’ என்பனவெல்லாம் இன்று நாம் காணும் நிலப்பரப்பைக் கொண்டுள்ள இந்தியாவை இவர்கள் கனவு காணும் நாடாக ஏற்கவில்லை.
இன்று
நாம் ஆளும் இந்திய நிலப்பரப்பு குறைபட்ட ஒன்று. இந்தியா விடுதலை பெற்ற நாளில், இந்திய நிலப்பரப்பினுள் பாகிஸ்தானை இழந்தோம்; ஏற்கெனவே ஆப்கானில்தான் பறிபோயிற்று; தென் இலங்கை கைமாறியது என்றெல்லாம் அகண்ட பாரதம் சுருங்கிப் போய்விட்டதாகக் கலங்கும் இந்துத்துவர்களைப் பற்றி நாம் அறிய வேண்டுவது, இன்றும் இந்துத்துவத் தலைவர்களின் ‘அகண்ட பாரதக் கனவு’ அப்படியேதான் உள்ளது.
அகண்ட
பாரதத்தின் உறுப்பு நாடுகளாக இவர்கள் கருதிய தேசங்கள் இன்று தன்னாட்சியும் இறையாண்மையும் பெற்ற நாடுகளாகவே திகழ்கின்றன. இந்தியாவில் இந்துத் தேசியர்களின் ஆட்சி மலர்ந்திருக்கும் காலத்தில் ‘சார்க்’
(SAARC) என்ற
அமைப்பு ஏனில்லை? ‘ஏசியன்’
(Asian) தெற்காசியக்
கூட்டமைப்பு எங்கே? உலகின் ஒரே இந்து நாடு என்று இங்குள்ள இந்துத்துவர்களால் பாராட்டப்பட்ட நேபாளம் இந்தியாவின் கவனத்துள் இல்லை. சனநாயக ஆட்சிக்கு முந்தைய முடியாட்சி இந்துத்துவர்களின் விருப்பமான ஆட்சியாக இருந்திருக்க, சனநாயக நேபாளம், சீனா பக்கம் திரும்பியுள்ளதே... ஏன்?
இந்துத்துவக்
கனவு என்பது ஒரு சனநாயகக் கனவல்ல; தேசிய இனங்களை அங்கீகரித்து, அவைகளின் தனித்துவத்தை மதிப்பதோ ஏற்பதோ அல்ல; இந்துத்துவர்களின் கனவு நவீன ஏகாதிபத்தியக் கனவு. ஏகாதிபத்தியத்தின் எல்லையோ பெரிது. ஏகாதிபத்தியம் என்பது விழுங்கும் இயல்பினைக் கொண்டது. ஏகாதிபத்தியத்தின் அரசியல் கொடுமையானது. இன்றைய மோடி அரசின் கொள்கை ஏகாதிபத்தியச் சாயலைக் கொண்டது. உலகில் நாம் இன்று சந்திக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், உருசிய
அதிபர் புதின், பாலஸ்தீனத்தில் நாளும் கொலை பாதகம் நடத்திவரும் இஸ்ரேல் பிரதமர் என்போரெல்லாம் ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதிகளே.
வெவ்வேறு
நாடுகளைக் காலனிகளாக மாற்றி, அந்நாடுகளின் வளத்தைச் சுரண்டி அடிமைப்படுத்துவது மட்டுமல்ல ஏகாதிபத்தியம்; சுயாட்சி பெற்ற நாட்டில் இயங்கும் அரசுகூட ஏகாதிபத்தியச் சிந்தனையோடு, ஏகாதிபத்தியம் உருவாக்கும் எதேச்சதிகார வடிவத்தைக் கொண்டிருக்கலாம்.
இன்றைய
இந்துத்துவ மதவாத அரசு மத அடிப்படைவாதத்தைக் கொள்கையாகக் கொண்டிருப்பதால்,
இவ்வரசில் சனநாயகப் பண்பு இல்லை. ஆனாலும், சனநாயகத்தின் மிகப்பெரிய மதிக்கப்பெறும் தேர்தல் முறை, இந்துத்துவ மதவாத சனநாயக எதிர்ப்பாளர்களால் ஏன் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது
என்பதை அரசியல் அறிவுள்ளோர் புரிந்துகொள்வர். குடிமக்களின் சமத்துவத்தை, குடிமக்களின் தெரிவு செய்யும் உரிமையை, குடிமக்களின் மனித உரிமைகளை மத ரீதியாக அணுகிப்
பாகுபடுத்தும் ஓர் அரசு, ஏகாதிபத்திய ஏதேச்சதிகார அரசாகத்தான் இருக்க முடியும். சனநாயகத்தை நம்பாத ஓர் அரசு, சனநாயகம் தரும் தேர்தல் சனநாயகத்தை (Electrical Democracy) ஏற்பதாக
நடித்து, அம்முறையில் ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றிவிடுகிறது.
சாதி,
மதம், இனம், மொழி ரீதியாக எவரும் பாகுபடுத்தப்படக்கூடாது என்று பகரும் அரசமைப்புச் சட்ட உரிமைகள் மிகக் கேவலமாக மீறப்பட்டு, மத ரீதியாக மக்களைத்
துருவப்படுத்தி, தேர்தலில் பெறுகின்ற பெரும்பான்மை, உண்மையான பெரும்பான்மை அல்ல என்பதையும், மத ஒருங்கிணைப்பு மூலம்
பெற்றுவரும் பெரும்பான்மை, பெரும்பான்மைவாத அரசியலுக்கே இட்டுச்செல்லும் என்பதை அறிந்திருந்தும், ஒரு மதப்பெரும்பான்மைவாத அரசின் ஆட்சியின் போக்கை 140 கோடி மக்கள் மௌனமாகத் தரிசித்து, சகித்து வருகின்றனர்.
மௌனம்
எப்போதுமே ஒடுக்கலையே ஊக்குவிக்கும் (Silence nourishes
supressure). இந்தியக் குடிமக்கள் மௌனிக்கின்றனரா? இக்கூற்றில் உண்மை இல்லை என்பதும் உண்மையே. விரும்பி ஏற்கும் மௌனம் வேறு; மௌனிக்க வைத்தல் வேறு. இன்றைய இந்தியாவில் வகுப்புவாதக் கருத்தியலின் வளர்ச்சி பற்றி ஆய்வு செய்வோர் எளிதில் ஒன்றைப் புரிந்துகொள்ள முடியும். வகுப்புவாதக் கருத்தியல் பிரிவினையை உள்ளடக்கமாகக் கொண்டது; முடங்கும் சமூக அமைப்பை நியாயப்படுத்துவது; எதேச்சதிகார விதை இதன் உள்ளடக்கம்; எனவே, இக்கருத்தியல் பாசிசத்தின் விளை நிலம் என்றெல்லாம் தொடர்ந்து கூறப்பட்டு வரும் நிலையிலும், ‘இந்தியத் தாய்’ இதை உவந்து ஏற்றுக்கொண்டிருப்பது எப்படி?
இந்தியா கற்றுக்கொள்ளுமா?
அகண்ட
பாரதப் பெருங்கனவுக்குள் சிக்கிக்கொள்ளாமல், இறையாண்மை மிக்கதாயும், சனநாயக நாடாகவும் தம்மை அறிவித்துக் கொண்ட நம் அண்டை நாடுகளின் நிலை என்ன? தென் இலங்கையிலும், இந்தியா உதவியோடு உருவாக்கப்பட்ட வங்காளதேசத்திலும், ‘உலகின் ஒரே இந்து நாடு’ என்று நம்மில் பெரும்பான்மைவாதிகளால் போற்றிப் புகழப்பட்ட நேபாளத்திலும் இன்று நடப்பது என்ன?
இம்மூன்று
நாடுகளின் இளைஞர் கூட்டம் உயிரைத் துச்சமென வைத்துத் தெருவிற்கு வந்துள்ளது. இந்நாடுகள் அனைத்தும் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றவை. வங்காளதேசமும் பாகிஸ்தானும் மத அடிப்படையில் உருவாக்கப்பட்டவை
என்றாலும், மதம் என்ற பண்பாட்டு அடையாளம் ஒற்றைத் தேசத்தை உருவாக்கும் கருவியாக முடியாது என்பதை நிரூபித்து, இரு நாடுகளாக இவை உருவான வரலாற்றை நாம் அறிவோம்.
நம்
அண்டையிலிருக்கும் இவ்விரு நாடுகளின் பிரிவினை, இந்தியாவின் மதப்பெரும்பான்மைவாதிகளின் மதரீதியான தேசியத்தை வேரோடு அழித்தது. 1971-ஆம் ஆண்டு பொய்யான ‘தேசியம்’ என்ற கற்பனைக் கருத்தியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு வங்காளதேசம் உருவான நிலையிலும், இந்தியாவின் மதப்பெரும்பான்மைவாதம் இன்னும் அதே பொய்மையை இங்கு வளர்த்து, அதை நம்பச் செய்து ஆட்சிக் கட்டிலிலும் ஏறி, மேலும் வேகமாக வளர்த்து வருகிறது.
இங்கு
நாம் சிந்திக்க வேண்டியது, ‘மதத்தால்’
என்ற சித்தாந்த அடிப்படையில் மக்கள் அணி திரட்டப்பட்டு உருவான பாகிஸ்தான் இரண்டாகப் பிரிந்தது எப்படி? அந்நியரிடமிருந்து விடுதலை பெற்ற இந்தியத் துணைக்கண்டம், இருபெரும் நாடுகளாகத் துண்டிக்கப்படும் முன், பல இலட்சம் மக்களை
மதவெறிக்குப் பலியாக்கியிருந்தது. சாத்விகத்தையும் அகிம்சையையும் போதித்த காந்தி பிறந்த மண்ணில் மனித இரத்தம் நதியெனப் பாய்ந்தது. மத ரீதியில் மக்களை
வெறியூட்டி உருவான பாகிஸ்தான் ஒரே ஓர் ஆண்டு மட்டுமே ஜின்னா அவர்களின் வேண்டுகோளின் பெயரில் - சமய வேண்டுகோளின் பெயரில் ‘சமயச் சார்பற்றக் குடியரசு’
என அறிவிக்கப்பட்டது. ஜின்னாவின் மறைவிற்குப் பின் பாகிஸ்தான் இசுலாமியக் குடியரசாக உருமாறிப் போனது. மத ரீதியாக மக்களை
ஒருங்கிணைத்து உருவான நாடு, சனநாயகக் குடியரசாக மாறும் என்பது பொய்யான ஒரு நம்பிக்கை என்பதை பாகிஸ்தான் இவ்விதம் நிரூபித்தது.
இந்தியாவில்
காந்தி மற்றும் நேரு தலைமையில் வளர்க்கப்பட்ட இந்தியத் தேசியம் வலுப்பெற்றிருந்த காலத்தில், மதவாத தேசியம் தன்னை நிலைநிறுத்தத் துடித்துக் கொண்டிருந்தது. பெரும்பான்மைவாதிகளுடன் நிகழ்ந்த சித்தாந்தப் போரில் காந்தியைக் கூட இழந்துவிட்டிருந்தாலும், இந்தியா சனநாயகக் குடியரசாக அறிவிக்கப்பட்டது. இன்று என்ன? வராது போல் வந்த மாமணியைக் காக்கத் தவறிவிட்ட அவலச் சூழலில் உள்ளோம். சனநாயகம் காக்கும் வேள்வியில் எந்தப் பங்கும் பெறாத ஒரு ‘பெரும்பான்மைவாத அமைப்பு’,
கடந்த பதினோர் ஆண்டுகளாக ஆண்டு கொண்டிருக்க, வராது போல் வந்து மாமணியாம் சனநாயகத்தைக் காவு கொடுத்துக் கொண்டிருக்கிறோம் நாம். சனநாயகமும், சனநாயகப் பாதுகாப்புக்கென உருவாக்கப்பட்ட சனநாயக நிறுவனங்களும், இந்திய அரசமைப்புச் சட்டங்களும் நாளும் குடிமக்களின் கண்முன்னே நசுக்கப்பட்டு வரும் நிதர்சனத்தை மௌனமாய் தரிசிக்கிறோம். ஏற்றுக்கொள்ளப் பழகிக் கொண்டோம். அநீதியைக் கைகூப்பி ஏற்றுக்கொள்ளும் இம்மனநிலையை ‘இந்தியப் பண்பாடு’ என்று நியாயப்படுத்துகிறோம்.
“மோடியின் ஆட்சியில் கேள்வி கேட்பது தேசத் துரோகம்; கேள்வி துறந்து மௌனிப்பது தேசப்பற்று; உண்மையான இந்திய அடையாள அட்டை (badge) என்பது அஞ்சி நடுங்குவோருக்கும் பார்வையற்றோருக்கும் முதுகெலும்பு இல்லாதோருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன” என்கிறார்
காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால்.
“மோடி அரசு மறுத்தல் (being), திசை திருப்பல் (distract), பொய்யுரைத்தல் (Lie), நியாயப்படுத்தல்
(Justify) போன்ற
கொள்கைகளின் பின் நின்று உண்மையை மறைத்து வருகிறது”
என்கிறார் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ்.
மேலே
தரப்பெற்ற இருவரின் கூற்றுகளும், இக் கூற்றுகளில் உள்ளடங்கும் அவல அடையாளங்களும் ஒரு பாசிச அரசின் நிலைப்பாடுகளே. இந்த நிலைப்பாடுகளை எவ்வளவு காலம் தாங்கிக் கொண்டு நாம் வாழப்போகிறோம்? ‘அகண்ட பாரதத்தின் அண்டை நாடுகள்’ காட்டும் வழியை எப்போது கண்டு கொள்ளப்போகிறோம்?
ஈழப்போரில்
வெற்றிகண்டதாகவும், ஈழப்புலிகளை அழித்துவிட்டதாகவும், சிங்கள மக்களை ஒருங்கிணைத்துப் பேரினவாதப் பெருமை பேசிய இராசபக்சேக்கள் தூக்கி எறியப்பட்டது எப்படி?
கார்கிலைக்
காட்டி, புல்வர்மாவைப் பொய்யாகச் சித்தரித்து, பெகல்காமில் நடத்தப்பட்ட கொலைகளை ‘சிந்தூர்’
எனும் பெயரில் மக்கள் உணர்வைத் தூண்டி, மோடி சாம்ராஜ்யம் வெற்றி பெறுவது எப்படி?
இலங்கையில்
சிங்களப் பேரினவாதம் தந்த வெற்றி தகர்ந்தது. ‘ஒரே இந்து நாடு’ என்று பெருமைப்படுத்திய நேபாளமும் தகர்ந்தது. முடியாட்சியைத் தகர்த்துக் குடியாட்சி கண்டவர்கள், அக்குடியாட்சியின் அனைத்து மகத்துவங்களும் தகர்ந்துபோனது கண்ட இளைஞர்கள் கொஞ்சமும் காலந்தாழ்த்தாது வெடித்தெழுந்தது எப்படிச் சாத்தியமாயிற்று?
சனநாயக
அரசின் நம்பகத்தன்மை இழந்துபோன நிலையில், ஆளும் அரசுகளின் தவறான ஆளுகை, மக்களுக்குப் பதில் சொல்லும் கடமையை மறுத்தல், மனித உரிமை மீறல்கள், சுரண்டல், ஊழல் எனும் கொடுமைகளைக் கண்டும், கேட்டும் பழகிப்போய்விட்ட பாரத நாட்டுக் குடிமக்களைப் போலல்லாமல், இராசபக்சே
துரத்தப்படுகிறார்; வங்கதேசத்து அசீனா ஓட்டம் பிடிக்கிறார்; நோபாளத் தலைவர்கள் காணாமற் போகின்றனர்! இத்தனை எழுச்சிகளுக்கும் காரணகர்த்தர்கள், இந்நாடுகளின் இராணுவப் பலத்தையும் எதிர்த்து, உயிரை மாய்த்து மாற்று அரசுக்கு வழிகண்ட இளைஞர் கூட்டம். இக்கூட்டம் உலக நாடுகளுக்கு குறிப்பாக, நமக்குப் பாடம் கற்றுத்தருகிறது. இவ்வேளை, ஒரு வெற்றுத் தலைவர் பெயரில் கூடும் ஒரு கூட்டம், அக்கூட்டத்தின் வெற்றுக் குரல், வெற்றுக் கூச்சலையும் நாம் மறந்திடல் கூடாது.