மதுரை உயர்மறைமாவட்டப்
புதிய பேராயர் மேதகு முனைவர் அந்தோனிசாமி சவரிமுத்து அவர்களுடன் ஒரு நேர்காணல்!
• அன்புப் பேராயர் அவர்களே! முதலாவதாக, தமிழ்நாடு திரு அவையின் தனிப்பெரும் வார இதழான ‘நம் வாழ்வு’ வார இதழின் நிர்வாகத்தினர், வாசகர்கள் சார்பாக உங்களுக்கு எங்களுடைய வாழ்த்துகளையும் செபங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்! மதுரை உயர்மறைமாவட்டத்தின் பேராயராகத் திருத்தந்தையால் தாங்கள் நியமிக்கப்பட்டது குறித்துத் தங்களுக்கு ஏற்பட்ட உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்...
“உணர்வுகள் என்று சொல்லும்போது, தொடக்கத்தில் ஒரு குழப்ப நிலையாகத்தான் இருந்தது. அதாவது, மதுரை உயர்மறைமாவட்டத் திருத்தூது நிர்வாகியாகப் பொறுப்பேற்க வேண்டும் என்று திருத்தந்தையின் இந்தியத் தூதர் தொலைப்பேசியில் தொடர்புகொண்டபோது, ‘இது தற்காலிகமானது’ என்றுதான்
குறிப்பிட்டார். ஆகவே, மகிழ்வோடு அதை ஏற்றுக்கொண்டேன். ஆனால், தற்போது மீண்டுமாகத் தொலைப்பேசியில் இந்த நியமனம் குறித்துத் தொடர்பு கொண்டபோது நான் வியப்படைந்தேன்! இது நான் எதிர்பார்க்காத ஒன்று. என்னுடைய பணிகள் திருமுழுக்கு யோவானுடைய பணிகளைப் போன்று வரவிருக்கும் பேராயருக்கான வழியை ஆயத்தம் செய்யும், தயாரிப்புப் பணியாகத்தான் நான் முதலிலே இதை ஏற்றுக்கொண்டேன். அதில் நான் தெளிவாகவும் இருந்தேன். மதுரை உயர்மறைமாவட்ட அருள்பணியாளர்களிடமும் இச் செய்தியை நான் முன்பே தெளிவாகப் பகிர்ந்துகொண்டேன். ஆனால், அங்கேயே பேராயராக நியமனம் பெறும்போது எனக்கு அது பெரும் வியப்பாகத்தான் இருந்தது. ‘முன்பு தற்காலிகமான பணி என்றுதானே குறிப்பிட்டீர்கள்’ என்று
திருத்தந்தையின் இந்தியத் தூதரிடம் வினவியபோது, ‘இது திருத்தந்தையின் ஆணை’ என்று கூறினார். ஆகவே, அதனை வியப்போடு ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒரு சூழலாகத்தான் அமைந்தது.”
• கடந்த எட்டு
மாதங்களாக
மதுரை
உயர்மறைமாவட்டத்தின்
திருத்தூது
நிர்வாகியாகப்
பணியாற்றிய
அனுபவங்கள்
பற்றி
சில
வார்த்தைகள்...
“அது ஒரு நல்ல அனுபவமாகத்தான் அமைந்தது. மதுரையில் குருத்துவக் கல்லூரியில் அதிபராகப் பணியாற்றிய காலங்களில் மதுரையைப் பற்றி அறிவேன். ஆனால், மதுரை உயர்மறைமாவட்டக் குருக்கள், சிறப்பாக நிர்வாகப் பணிகளை அதிகமாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. தற்போது அங்கு நியமனம் பெற்றபோது இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்வதற்கு வாய்ப்பாக அமைந்தது. குருக்கள் அனைவரும் பாசமாக இருந்தார்கள்; நல்ல ஒத்துழைப்புத் தந்தார்கள். சில பிரச்சினைகள் இருந்தன; அதில் தீர்வு காணவேண்டும் என்பதில் எல்லாருமே ஆர்வமாக இருந்தார்கள். மேலும், அவர்கள் மத்தியிலே ஒரு ‘நீதி உணர்வு’ இருந்ததை என்னால் காண முடிந்தது. அதாவது, ‘நமது மறைமாவட்டம் நன்றாக இருக்கவேண்டும்’ என்ற
ஓர் உணர்வு அவர்களிடத்திலே மேலோங்கியிருந்தது. நான் அவ்வப்போது அங்குச் சென்றாலும், பணிகள் சற்றுக் கடினமாக அமைந்தாலும், மகிழ்வாக மன
நிறைவாகத்தான் இருந்தது. பணிகள்
அத்தகைய மகிழ்வைத் தருவதற்கு குருக்களே காரணமாக அமைந்தார்கள்.”
• பாளை மறைமாவட்டத்தின்
ஆயராக
ஆற்றிய
பணிகளை
நன்றியோடு
நினைவுகூரும்
நீங்கள்,
பேராயராகப்
பணி
உயர்வு
பெறும்
இவ்வேளையில்,
பாளையங்கோட்டை இறைச்சமூகத்திற்குத் தாங்கள்
விடுக்கும்
செய்தி...
“பாளையங்கோட்டை மறைமாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகள், 8 மாதங்களாகப் பணியாற்றி இருக்கிறேன். அது பெரும் மகிழ்ச்சியான அனுபவம். அது என்னுடைய சொந்த மறைமாவட்டம். அதே மறைமாவட்டத்தில் குருவாக இருந்தேன்; பின்பு முதன்மைக் குருவாகப் பணியாற்றினேன். ஆகவே, பங்குகளை எல்லாம் நன்கு அறிவேன். அருள்பணியாளர்களை நன்கு அறிவேன். எனவே, பெரும் மகிழ்வோடு பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. அது கடவுள் எனக்குக் கொடுத்த ஒரு கொடையாகவே பார்க்கிறேன். அது ஓர் இறைப்பணி. இந்தக் காலச்சூழலில் அப்பணியை மேற்கொள்ள இறைவன் எனக்குக் கொடுத்த ஒரு வாய்ப்பு. பாளையங்கோட்டை மறைமாவட்டத்தின் முதல் ஆயர் மேதகு இருதயராஜ் அவர்கள் தொடக்கக் காலத்திலிருந்தே மிகச் சிறப்பாகப் பணிகளை மேற்கொண்டிருந்தார்கள். அதன்பிறகு வந்த மேதகு ஆயர் ஜூடு பால்ராஜ் அவர்கள் இன்னும் அடுத்தத் தளத்திற்குச் சிறப்பாக எடுத்துச் சென்றார்கள். அவர்களைத் தொடர்ந்து நான் கடந்த 5 ஆண்டுகள், 8 மாதங்கள் இந்தப் பணிகளைத் திறம்படச் செய்ய இறைவன் எனக்கு ஒரு வாய்ப்பைத் தந்திருந்தார். அருள்பணியாளர்கள், இருபால் துறவியர், இறைமக்கள் என யாவரும் இணைந்து
மேற்கொண்ட பல பணிகள் குறிப்பிடத்தக்கவை.
அனைவருடைய நல்ல ஒத்துழைப்பும் நிறைவான அன்பும் கிடைக்கப் பெற்றேன். ஆகவே, பணிகள் மேம்பட வாய்ப்புக் கிட்டியது. அத்தகைய பணிகளைத் தொடர்ந்து இம்மண்ணிலே நிகழ்த்த வேண்டும் என நான் இறைவனை
வேண்டுகிறேன். என்னை மிகவும் நேசித்த, பணிக்கு ஒத்துழைப்பு நல்கிய பாளை மறைமாவட்ட அருள்பணியாளர்களுக்கும் இருபால் துறவியருக்கும் இறைமக்களுக்கும் எனது நன்றியையும் செபங்களையும் உரித்தாக்கிக் கொள்கிறேன். நான் மேற்கொண்டிருக்கும் இந்தப் புதிய பணிக்காகவும், மதுரை உயர்மறைமாவட்டப் பணித்தளத்தில் பணிகள் திறம்பட அமைந்திடவும் எனக்காக வேண்டிக்கொள்ள அன்போடு வேண்டுகிறேன்.”
• தொடக்கக் காலத்தில்
தமிழ்நாட்டின்
மறைபரப்புப்
பணியின்
மையத்தளமாக
விளங்கிய
மதுரை
மறைத்தளத்தில்
இனிவரும்
காலங்களில்
தாங்கள்
முன்னெடுக்கவிருக்கும்
இறையாட்சிப்
பணிகளைப்
பற்றி
உங்களுடைய
கருத்துகளைப்
பகிர்ந்து
கொள்ளுங்களேன்...
“மதுரை உயர்மறைமாவட்டம் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு பணித்தளம். தென் தமிழ்நாட்டின் மறைமாவட்டங்களிலேயே தொன்மையானது திருச்சி என்று கூறினாலும், சேசு சபை குருக்களால் உருவாக்கப்பட்ட இந்த மதுரை மறைபரப்புப் பணித்தளம்தான் தென்னகப் பகுதியில் முதல் மறைபரப்புப் பணித்தளமாக விளங்கியது. இன்று உருவாகியிருக்கும் அத்தனை மறைமாவட்டங்களும் இவர்களுடைய மறைபரப்புப் பணியின் விளைச்சல் என்றே கூற வேண்டும். ஆகவே, சேசு சபையாரின் பணிகள் இங்கு அளப்பரிய பணிகள். மேலை நாடுகளிலிருந்து வந்த பல சேசு சபையார்
இங்குப் பணியாற்றினாலும் இராபர்ட் தெ நொபிலி, அருளானந்தர்,
கான்ஸ்டன்டைன் பெஸ்கி எனப்படும் வீரமாமுனிவர் ஆகியோரின் பணிகள் இங்குக் குறிப்பிடத்தக்கவை. தமிழ் கலாச்சாரத்தை, பண்பாட்டை உள்வாங்கிய இறையாட்சிப் பணிகளை அவர்கள் மேற்கொண்டார்கள். மக்களுடைய வாழ்வோடு தங்களுடைய பணி வாழ்வை இணைத்துக்கொண்டார்கள். பிற மதத்தவரோடும் நல்லுறவு கொண்டவர்களாக அடையாளப்படுத்தப்பட்டார்கள்.
அவர்களின் சமூக, ஆன்மிக, கலாச்சார, தமிழ்ப் பண்பாட்டு வளர்ச்சிப் பணிகள் மகத்தானவை. இத்தகைய கூறுகளால்தான் கிறித்தவ மதிப்பீடுகளை அவர்களால் எளிதாக எல்லாத் தளங்களுக்கும் எடுத்துச் செல்ல முடிந்தது.
ஆனால்,
இன்றைய காலச்சூழலில் நேரடியாக மறைபரப்புப் பணி என்பது சவால் நிறைந்தது. ஆனால், மறைபரப்புப் பணிக்காக அழைக்கப்பட்ட நாம் ஒவ்வொருவருமே நம்முடைய முன்னோர்களின் மறைப்பணிக் கட்டமைப்புகளை உள்வாங்கி மீண்டும் மொழி, கலாச்சாரம், பண்பாட்டுக் கூறுகள் வயிலாகக் கிறித்தவ மதிப்பீடுகளை எடுத்துச் செல்லக்கூடிய வழிமுறைகளைக் காணவேண்டும். மற்ற மதத்தவரோடு உரையாடல் மேற்கொள்ள வேண்டும் என்பதும் எனது ஆவலாக இருக்கிறது. மேலும், சேசு சபை மறைப்பணியாளர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவராக நான் பார்ப்பது புனித அருளானந்தர். அவர் இவ்வுயர் மறைமாவட்டத்தின் பாதுகாவலர். அவருடைய மறைப்பணி செயல்பாடு என்பது ‘தியாகம்’ நிறைந்ததாகப் பார்க்கப்படுகிறது. இறையரசு மதிப்பீடுகளுக்காகத் தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்தவர்; மறைச்சாட்சியானவர். அத்தகைய தியாக மனப்பான்மை இன்றைய மறைபரப்புப் பணியாளர்களாகிய நம் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் மலரவேண்டும் என ஆசைப்படுகிறேன். அத்தகைய எண்ணத்தில்
மறைபரப்புப் பணியை மேற்கொள்கின்றபோது, பலரையும் நம்மை நோக்கி ஈர்க்க முடியும் என்று உளமார நம்புகிறேன்.”
• கலை, இலக்கியம்,
தொன்மையான
கலாச்சாரம்,
உலகறியும்
தமிழர்
பண்பாடு,
மதநல்லிணக்கம்
எனப்
பெருமைகொள்ளும்
மதுரை
மண்ணுக்கான
‘பல்சமய
உறவை’ மேம்படுத்தத் தாங்கள்
கொண்டிருக்கும்
கனவுகள்...
“நீங்கள் குறிப்பிட்டதுபோல, இந்த மதுரை மறைப்பணித்தளம் பல்சமய உரையாடலுக்கு மிகவும் பெயர் பெற்றது. சேசு சபை மறைப்பணியாளர்கள் காலந்தொட்டு இன்றுவரை, இங்கு மதநல்லிணக்கம் என்பது பலராலும் வரவேற்கத்தக்கதாகவும் பாராட்டத்தக்கதாகவும் இருக்கிறது. பல்வேறு மறைத்தளங்களுக்கு எடுத்துக்காட்டான ஒரு செயல்பாடாக இங்கு அது பார்க்கப்படுகிறது. அப்பணிகள் தொடரவேண்டும் என்பதும் என்னுடைய விருப்பம். மதத்தைக் கடந்து மக்களின் வாழ்வாதார மேம்பாடு, மனிதநேயம், மனித உரிமைகள் எனப் பல தளங்களில் மக்களுக்கான
அடிப்படைக் கூறுகளைப் பெறுவதற்கு இன்று நல் மனம் கொண்டோர் மதத்தைக் கடந்து மனிதநேயத்தில் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. ஆகவே, மதநல்லிணக்கம் என்பது பெயரளவில் இல்லாமல், உறவாலும் உணர்வாலும் ஒன்றிக்கக்கூடிய வலுவான ஒரு கூட்டமைப்பாக அது மலர வேண்டும் என்பது எனது கனவாக இருக்கிறது. ஒவ்வொரு மதத்திலும் இருக்கக்கூடிய வளமான கூறுகளை, தன்மைகளைப் பகிர்ந்துகொள்ளக்கூடிய ஒரு புரிதலை மற்ற மதத் தலைவர்களோடு இணைந்து பயணிக்கக் கூடிய ஒரு சமூகத்தைப் படைக்க வேண்டும் என்பதும் எனது விருப்பமாக இருக்கிறது. அத்தகைய உறவு, பல சமூகப் பணிகளுக்கு
வழிகாட்டும் என்பதால் அதை முன்னெடுக்க மனதார விருப்பம் கொண்டிருக்கிறேன். மதுரை மண்ணுக்கான இந்தப் பல்சமயக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் என்னைச் சந்தித்தார்கள். அது மிகவும் மகிழ்ச்சிக்குரிய தருணமாக இருந்தது. அவர்களிடமும் நான் இதை வலியுறுத்தியிருக்கிறேன். ‘இணைந்து பயணிப்போம்; சேர்ந்து பல பணிகளை முன்னெடுப்போம்’ என
உறுதி அளித்திருக்கிறேன். மக்களின் மாண்பு காக்கப்பட நாம் ஒன்றிணைய வேண்டும் என அவர்களிடத்திலே வலியுறுத்தியிருக்கிறேன்.”
• ஆன்மிகம் செழிக்கும்
மதுரை
மறைத்தளத்தில்
பொருளாதாரத்தில்
பின்தங்கிய
குடும்பங்கள்,
பிற்படுத்தப்பட்ட,
மிகவும்
பிற்படுத்தப்பட்ட
இலக்கு
மக்களின்
மேம்பாட்டுக்கான
தங்களின்
செயல்திட்டங்களைப்
பற்றிக்
குறிப்பிடுங்களேன்...
“இது இன்று எல்லாப் பணித்தளங்களிலும் நாம் சந்திக்கக்கூடிய ஒரு பெரும் சவால். அவர்களுக்கு நம்பிக்கையைக் கொடுப்பது மட்டுமல்ல, அந்த நம்பிக்கை செயல் வடிவம் பெறக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதிலே நான் உறுதியாக இருக்கிறேன். திருத்தூதர் யாக்கோபு குறிப்பிடுவதுபோல, ‘செயல்
இல்லாத நம்பிக்கை செத்ததாகிப் போய்விடும்.’ இவ்வேளையில் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் வெளிக்கொணர்ந்த ‘கடவுள் அன்பாக இருக்கிறார்’ என்னும்
திருத்தூது மடலில் அவர் குறிப்பிடுவதை நினைவுகூர்கிறேன். அதாவது, ‘நாம் ஆண்டவரை அன்பு செய்கிறோம் என்றால், பிறரை அன்பு செய்யாமல், தேவையில் இருப்போருக்கு உதவி செய்யாமல் நம்மால் இருக்க முடியாது’
என்று குறிப்பிடுவார். ஆகவே, தேவையில் இருப்பவருக்கு உதவி என்பது நம்முடைய கிறித்தவ அடிப்படைப் பண்பாகிறது. இப்பணியை மதுரை உயர்மறைமாவட்டத்தில் மேற்கொள்ள தமிழ்நாடு ஆயர் பேரவை முன்னெடுத்திருக்கும் சமூக-பொருளாதாரக் கணக்கீட்டுத் தரவுகள் கிடைக்கின்றபோது மக்களுடைய வாழ்வாதாரம், அடிப்படைத் தேவை, எதிர்காலத் திட்டம் என்பவை எல்லாம் தெளிவுபடுத்தப்பட்டு மறைமாவட்ட மேய்ப்புப்பணி சார்ந்த அமைப்புகள், பல்நோக்குச் சமூக மன்றம், மற்றப் பணிக்குழுக்கள் ஒத்துழைப்போடு கல்விப் பணி, சமூக மேம்பாட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படும் என்பதையும் நான் இவ்வேளையில் குறிப்பிட விரும்புகிறேன். அடிப்படையில் அனைத்துப் பணிகளும் எல்லாரையும் சமூகத்திலே மாண்புமிக்கவர்களாக உயர்த்தவேண்டும் என்பதுதான் எனது அடிப்படை நோக்கமாக இருக்கிறது.”
• யூபிலி 2025-ஆம்
ஆண்டில்
பயணிக்கும்
நாம்,
‘கூட்டொருங்கியக்கத்
திரு
அவையாக’ மலர மதுரை
இறைச்சமூகத்திற்குத்
தாங்கள்
விடுக்கும்
அழைப்பு
என்ன?
“மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் காலத்தின் தேவை அறிந்து திரு அவையின் செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுவதற்குத் தந்த ஓர் அற்புதமான அடித்தளம் இந்த யூபிலி-2025 கொண்டாட்டம். இதன் மையச்சிந்தனையாக ‘எதிர்நோக்கின் திருப்பயணிகளாக... கூட்டொருங்கியக்கத் திரு அவையாகப் பயணிப்போம்’ என்று
வலியுறுத்தினார்கள். அதன் அடிப்படையில் கூடிய இந்த மாமன்றம் ஆவணங்களை வெளிக்கொணரக் கூடிய மன்றமாக அல்லாமல், செயல்திட்டங்களை முன்னெடுக்கக்கூடிய ஒரு சிறப்பு மாமன்றமாக அமைந்தது. அதன் செயல்திட்டங்களாகக் குறிப்பிடத்தக்க வகையில், திரு அவையில் எல்லாரையும் மதிக்கவேண்டும், எல்லாரிடமும் உறவாட வேண்டும், எல்லாருடைய கருத்தையும் கேட்டுப்பெற வேண்டும் என்பன அடிப்படையான கூறுகளாக வலியுறுத்தப்பட்டிருக்கின்றன.
இந்த வழிமுறையில் குருக்கள், துறவறத்தார், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் ஒன்றிணைந்து தூய ஆவியின் தூண்டுதலைப் பெற்று, மறைமாவட்ட அமைப்புகள் மூலம் சிறப்பான பணிகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறார். ஆகவே, அதன்
அடிப்படையில் ஒன்றாக இணைந்து, ஆன்மிகத்தில் வளர்ந்து பல திட்டங்களை உயர்மறைமாவட்டத்தின்
வளர்ச்சிக்காக மேற்கொள்ள அனைவரும் இணைந்து பயணிக்க விரும்புகிறேன்.
இதன்
நீட்சியாக, செயல்திட்டமாக ஏற்கெனவே மறைமாவட்டங்களில், பங்குத்தளங்களில் இருக்கின்ற அமைப்புகளை வலுப்படுத்தவேண்டும். நமது புதிய திருத்தந்தை லியோ அவர்கள் திருத்தந்தை பிரான்சிசின் வழிநின்று ‘திரு அவை புனிதர்களின் கூடாரம் அல்ல; பாவிகளின் மருத்துவமனை’ என்று
குறிப்பிடுகிறார். அதாவது, எல்லாரையும் உள்ளடக்கிய, இயேசு குறிப்பிட்டதுபோல ‘நீதிமான்களை அல்ல, பாவிகளையே தேடி வந்தேன்’ என்னும் சிந்தனையில் யாவரையும் உள்ளடக்கிய திரு அவையை உருவாக்க எல்லாரும் இணைந்து செயல்பட அழைக்கிறேன்.”
• பொன்விழா காணும்
‘நம்
வாழ்வு’ வார இதழின்
வாசகர்களுக்குத்
தங்களுடைய
செய்தி....
“நம் வாழ்வு வார இதழ் பொன்விழா காண்பது ஒரு மகிழ்ச்சியான தருணமாக இருக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற பொன்விழாக் கொண்டாட்டத்தில் நானும் கலந்து கொண்டது மட்டற்ற மகிழ்ச்சி தருகிறது. இன்றைய காலச்சூழலில் தொலைத்தொடர்பு அல்லது ஊடகத் தொடர்பு என்பது தவிர்க்க முடியாதது. இன்னும் குறிப்பாக, எண்ணிமத் தொழில்நுட்பத்தில் இன்று ஒருவரை ஒருவர் தொடர்புகொள்ள அவசியமானதாக ஊடகம் பார்க்கப்படுகிறது. அந்தக் கோணத்தில் ‘நம் வாழ்வு’ வார இதழ் அப்பணிகளைத் திறம்பட மேற்கொண்டு வருவது மிகவும் பாராட்டத்தக்கது. குறிப்பாக, ‘நம் வாழ்வு’ வார இதழில் அண்மைக் காலங்களில் வெளிவரும் ஆசிரியர் பக்க கட்டுரை, மற்ற அரசியல்-சமூக விழிப்புணர்வுக் கட்டுரைகள், ஆன்மிகக் கட்டுரைகள் யாவும் மிகச் சிறப்பாக இருப்பது பாராட்டுதற்குரியது. ஆன்மிகத்தை மையம் கொண்ட நமது வாழ்வானது, காலச்சூழலுக்கு ஏற்ப சமூக-அரசியல் தளத்தில் நாம் தெளிவுபெற வேண்டும் என்ற ஒற்றை இலக்கை முன்வைத்து, படைப்புகள் வெளிவருவது பாராட்டுதற்குரியது. உளவியல், தன்னம்பிக்கை கட்டுரைகள், மரியன்னை பக்திமுயற்சி, திருவழிபாட்டுக் குறிப்புகள், மறையுரை, உலகளாவிய திரு அவைச் செய்திகள் எனப் பல மலர்கள் கோர்த்த
பூமாலையாக ‘கதம்பமாக’
இம்மலர் மணம் வீசுவது உண்மையிலேயே பாராட்டத்தக்கது.
ஒரு
சிறு இதழாக இருந்தாலும், பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவது வியப்பளிக்கிறது. இதற்கான உங்கள் பணிகள் குறிப்பிடத்தக்கவை. இப்பணியைத் திறம்பட மேற்கொண்டிருக்கும் முதன்மை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர் குழு உறுப்பினர்களை மனதாரப் பாராட்டுகிறேன். இது இன்னுமாக வளர வேண்டும்; பல்வேறு மக்களுடைய கரங்களிலும் குடும்பங்களிலும் இது தவழ வேண்டும்.
தற்போது
‘Namvazhvu
E-news paper’ வெளிக்கொணர
இருப்பதற்கு எனது வாழ்த்துகள்! இது இன்று காலத்தின் தேவையாகவே பார்க்கிறேன். இளையோர் மற்றும் எண்ணிமத் தொழில்நுட்பத்தில் பயணிக்கும் யாவரையும் நாம் சென்றடைய இந்த முயற்சி பயனளிக்கும் என நம்புகிறேன். உங்களுடைய
பணி தொடர வாழ்த்துகிறேன்.
தமிழ்நாடு
கத்தோலிக்க இறைமக்கள் இவ்விதழுக்குப் பேராதரவு நல்குவதோடு, இதனுடைய வளர்ச்சியில் நீங்களும் பங்களிப்புச் செய்ய அன்போடு வேண்டுகிறேன். எல்லாருடைய கரங்களிலும் இவ்விதழ் தவழவேண்டும்; வாசிப்பு மலர வேண்டும்; புதிய சமூகம் புலரவேண்டும்! என ஆசிக்கிறேன்.”
•
இறுதியாக,
பேராயர்
அவர்களே!
மதுரை
உயர்மறைமாவட்டத்தில்
தங்களின்
பணி
சிறக்க
மீண்டும்
‘நம்
வாழ்வு’ தனது வாழ்த்துகளையும்
செபங்களையும்
உரித்தாக்குகிறது.
தமிழுக்கும் தமிழ்ப் பண்பாட்டிற்கும் சமய நல்லிணக்கத்திற்கும் நலிந்தோர் சேவைக்கும் பெயர் பெற்றுத் திகழும் ஒப்புயர்வற்ற மறைத்தளம் மதுரை உயர்மறைமாவட்டம். ஏறக்குறைய 500 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட மறைப்பணி வரலாறு கொண்ட இத்தளம், சேசு சபையின் நிறுவுநர் புனித இலொயோலா இஞ்ஞாசியாரின் அன்புத் தோழர் புனித பிரான்சிஸ் சவேரியார் கோவாவிலும், தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளிலும் நற்செய்தி அறிவித்துச் சென்ற சூழலில், தென் தமிழ்நாட்டின் மையப்பகுதிகளில் மதுரையை மையமாகக் கொண்டு தமிழ் வளர்த்த மறைப்பணியாளர்களைக் கண்ட மங்காத மறைத்தளம் இது.
தமிழுக்குத்
தொண்டாற்றி தமிழ் முனிவராகவே வாழ்ந்து தேம்பாவணி காப்பியம் படைத்த வீரமாமுனிவர், தமிழ் உரைநடையின் தந்தை என்று அழைக்கப்பட்ட ‘தத்துவ போதகர்’ அருள்பணியாளர் இராபர்ட் தெ நொபிலி, இராமநாதபுரம்
மறவ நாட்டில் மறைச்சாட்சியாய் மரித்த அருளானந்தர், புதிய ஏற்பாட்டைத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்த திரிங்கால் சாமிகள், கழுகேர்கடையில் வேதசாட்சியாக இன்னுயிர் தந்து, ‘வேதபோதகர்’
என அன்போடு அழைக்கப்படும் அருள்பணி. அகஸ்டின் கப்பலி, பாம்பன்-மண்டபம்-வேதாலை கடற்கரைப் பகுதிகளில் மறை வளர்த்து, சேசு சபையாரின் முதல் மறைச்சாட்சியான அருள்பணி. அந்தோணி கிரிமினாலி, இறைஊழியர் தந்தை லெவே சுவாமிகள்... எனத் தொடர்ந்த சேசு சபையாரின் மறைப்பணித் தொண்டு இன்றும் கல்வி, சமூக, ஆன்மிகத் தளங்களில் ஆழம் கொண்டு மக்களை நம்பிக்கையில் வளர்த்து வருவது நன்றியோடு நினைவுகூரத்தக்கது. இயேசு சபையாரின் மறைப்பணியால் அன்று மதுரை மறைத்தளம் புதிய வடிவம் பெற்றது என்றால் அது மிகையல்ல.
ஏறக்குறைய
80 ஆண்டுகளுக்கு முன்பாக உருவாக்கப்பட்ட மதுரை உயர்மறைமாவட்டம், இதுவரை ஆறு பேராயர்களைக் கண்டிருக்கிறது. அன்றைய ஒருங்கிணைந்த மதுரை உயர்மறைமாவட்டத்தின் எல்லையானது வடக்கில் மேலூர் முதல், தெற்கில் வள்ளியூர் வரையிலும் கிழக்கில் இராமேஸ்வரம் தீவு முதல் மேற்கில் கொடைக்கானல் மலை வரைக்கும் பரந்து விரிந்திருந்தது.
இந்த
உயர்மறைமாவட்டத்தின் முதல் பேராயராகப் பொறுப்பேற்ற பேராயர் ஜான்பீட்டர் லியோனார்டு அவர்கள், எல்லாப் பங்குத்தளங்களிலும், எல்லாப் பெரிய கிளைப்பங்குகளிலும் ஆரம்பப் பள்ளிகளைத் தொடங்கி இவ்வுயர் மறைமாவட்டத்தின் கல்வி மேம்பாட்டுக்கு வழிகாட்டினார். அந்நாளில் ஆன்மிகம், கல்வி, சமூக, மருத்துவப் பணிகள் என யாவற்றையும் உள்ளடக்கிய
ஒருங்கிணைந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அதுவே பின்னாளில் பல்வேறு பணிகளாகக் கிளைபரப்ப, வளர்ச்சி அடைய அடித்தளமாக அமைந்தன.
உயர்
கல்வியை மனக்கண்முன் கொண்டு, உயர்நிலைப் பள்ளிகள் முதல் கல்லூரி வரையிலான உயர்கல்வியை உயர்மறைமாவட்டம் முழுமைக்கும் கொண்டு வந்து சேர்த்த பெருமை இரண்டாவது பேராயர் ஜஸ்டின் திரவியம் அவர்களையே சாரும்! இவருடைய காலத்தில் பாளையங்கோட்டை, சிவகங்கை, மதுரை என எல்லாப் பணித்தளங்களிலும்
எண்ணற்ற புதிய ஆலயங்கள், பள்ளிக்கூடங்கள், மாணவர் விடுதிகள் கட்டப்பட்டன. இவ்வளர்ச்சி இன்னும் விரிவுபட பாளையங்கோட்டை, சிவகங்கை மறைமாவட்டங்களைப் பிரித்து அதனுடைய முழுமையான வளர்ச்சிக்கு வழிகாட்டியவரும் அவரே!
மூன்றாவது
பேராயராகப் பொறுப்பேற்ற பேராயர் கஸ்மிர் ஞானாதிக்கம் அவர்கள் 20 மாதங்கள் மட்டுமே இங்குப் பணியாற்றி, பிறகு சென்னை - மயிலை உயர்மறைமாவட்டத்தின் பேராயராகப் பணிமாறுதல் பெற்றுச் சென்றார். பேராயரின் பணிக் காலம் மதுரை உயர்மறைமாவட்டத்தில் சிறிது காலமே என்றாலும், மேய்ப்புப்பணியில் பல புதிய தடங்களைப்
பதித்துச் சென்ற பெருமைக்குரியவர்.
நான்காவது
பேராயராகப் பொறுப்பேற்ற பேராயர் மரியானுஸ் ஆரோக்கியசாமி அவர்களின் 17 ஆண்டுகாலப் பணித்திட்டங்கள், செயல்பாடுகள் தமிழ்நாட்டையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தன. தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மதுரை, மற்றொரு தலைநகரம் போலவே சமூக, ஆன்மிக, அரசியல் தளங்களில் பல்சமயத் தலைவர்களின் கூடுகையால், அவர்களின் வீரியமான செயல்பாடுகளால், ‘திருவருட்பேரவை’ போன்ற
அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்ட மக்கள் பணிகளால், மதுரை அன்றாடச் செய்தியில் தவிர்க்க முடியாத நகரமாகவே இருந்தது.
அதன்
பிறகு பத்து ஆண்டுகள் உளவியல் மேதையாக குருக்களையும் மக்களையும் ஆன்மிகத்திலும் சமய நல்லிணக்கத்திலும் வழிநடத்தியவர் மேதகு பேராயர் பீட்டர் பெர்னாண்டோ அவர்கள். பேராயரின் வழிநடத்துதலில் புதிய மறைவட்டங்கள், புதிய பங்குகள், புதிய ஆலயங்கள், பள்ளிக்கூடங்கள் என எண்ணற்றவை உருவாக்கப்பட்டன.
தந்தைக்குரிய கரிசனையும், அதிர்ந்து பேசாத பேராண்மையும், தன்னை எதிர்ப்பவர்களையும் அன்பு செய்யும் பேராற்றலும் பேராயரின் அருள்பணி ஆன்மிகத்திற்கு அழகு சேர்த்தன.
ஆறாவது
பேராயராகப் பொறுப்பேற்ற பேராயர் அந்தோனி பாப்புசாமி அவர்களின் நியமனம் மதுரை உயர்மறைமாவட்ட வரலாற்றில் தனித்துவமானது. துணை ஆயராக நியமிக்கப்பட்ட இவர், இத்தனை ஆண்டுகள் பணிக்குப் பிறகு, திண்டுக்கல்
மறைமாவட்டம் உருவாக்கப்பட்டு அதன் முதல் ஆயராகப் பத்து ஆண்டுகள் திறம்படப் பணியாற்றி, மீண்டும் மதுரை உயர்மறைமாவட்டத்திற்குப் பேராயராகப் பணி நியமனம் பெற்றார். ஏறக்குறைய 10 ஆண்டுகள், நான்கு மாதங்கள் மதுரை உயர்மறைமாவட்டத்தைப் பல்வேறு நிலைகளில் வளர்ச்சிக்கான பல திட்டங்களை முன்னெடுத்தவர்
என்ற பெருமைக்குரியவர்.
ஆழமான
ஆன்மிக அடித்தளம் கொண்ட பேராயர் அவர்கள், மேய்ப்புப்பணித் திட்டங்களைக் கூர்மைப்படுத்துவதிலும், எதிர்வரும் சவால்களைத் துணிவோடு சந்திப்பதிலும் தனித்துவமானவர்.
பேராயரின்
பணி ஓய்விற்குப் பிறகு, இவ்வுயர் மறைமாவட்டத்திற்குக் கிடைத்த மற்றொரு கொடை திருத்தூது நிர்வாகி. பாளையங்கோட்டை மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றி வந்த மேதகு ஆயர் அந்தோனி சவரிமுத்து அவர்கள், கடந்த எட்டு மாதங்களாக இம்மதுரை உயர்மறைமாவட்டத்தின் திருத்தூது நிர்வாகியாகப் பொறுப்பேற்று, களச்சூழலை நன்கு அறிந்து, குருக்களுடன் சிறப்பாகக் கலந்து ஆலோசனை கண்டு, தீர்க்கமான முடிவெடுப்பதில் சிறந்ததொரு நிர்வாகியாகத் தன்னை அடையாளப்படுத்தியதுடன், மறைமாவட்டத்தையும் சிறப்புற வழிநடத்தினார்.
இவருடைய
மேலான பணிகளைக் கண்டு பூரிப்படைந்த இறைவன், “இவரே என் அன்பார்ந்த மகன்; இவரே நான் தேர்ந்துகொண்டவர்” என்ற
இறைவாக்கு மெய்ப்படும் வகையில் இவ்வுயர் மறைமாவட்டத்தின் ஏழாவது ஆயராகத் தந்திருப்பது எமக்கு மட்டற்ற மகிழ்ச்சி தருகிறது.
சிறந்த
ஆசிரியராய், ஆன்மிகத் தந்தையாய், வழிகாட்டியாய், ஆழமான இறைப்பற்றாளராய், இயேசுவின் குருத்துவத்தில் மகிமை கண்டவராய், நல்லாயன் இயேசுவின் வழிகாட்டலில் நல்மேய்ப்பராய் வாழ்ந்து வருவதால் இறைவன் இவரை இன்று இந்த உன்னதப் பணிக்கு உயர்த்தி இருக்கிறார். மதுரை உயர்மறைமாவட்டம் பேருவகையோடு மகிழ்ந்து வரவேற்கிறது!
“அஞ்சாதீர்! நம்பிக்கையோடு மட்டும் இரும்” (லூக் 8: 50) என்பது பேராயரின் ஆயத்துவ விருதுவாக்கு! அச்சம் தவிர்த்து நம்பிக்கையில் ஆழப்படவும், மக்களின் வாழ்க்கையில் அச்சத்தைப் போக்கி நம்பிக்கையில் அவர்களை உறுதிப்படுத்தவும் இவ்விருதுவாக்கை முன்னெடுத்து வருகிறார் நம் பேராயர்.
பேராயரின்
இலட்சினையில் நான்கு அடையாளங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
முதலாவதாக, திருவிவிலியம்! நமது இறைநம்பிக்கையின் அடித்தளமாக இருப்பது திருவிவிலியம். அத்தகைய அடித்தளத்தில் மக்களின் நம்பிக்கையைக் கட்டி எழுப்பவும், அதையே மறைப்பணியின் ஊற்றாகக் கொண்டிருக்கவும் திருவிவிலியத்தின்மீது கட்டப்பட்ட திரு அவையை முன்னெடுக்கவும் வருகிறார் பேராயர்.
இரண்டாவதாக,
பாதுகாப்பான ஒரு கரத்தில் இளைப்பாறும் குழந்தையின் அடையாளம். இறைவன் நம்மைப் பராமரிக்கிறார், பாதுகாக்கிறார், நம்மை அரவணைத்துக்கொள்கிறார், நம் பெயரைத் தம் உள்ளங்கையில் பொறித்து வைத்திருக்கிறார் என்னும் பேருண்மைகளைத் தியானிக்கும் வகையில் இறைவனின் பாதுகாப்பை, பராமரிப்பை நாமனைவரும் பெற்றுக்கொள்கிறோம் என்ற பேருண்மையை எடுத்துக்கூறுகிறது இந்த அடையாளம்.
மூன்றாவதாக,
இடம்பெற்றிருக்கும் நங்கூரம், நமது நம்பிக்கையை உறுதிப்படுத்தும் குறியீடாக முன்வைக்கப்படுகிறது. உறுதியான நம்பிக்கையில் நாம் ஆழமாக வேரூன்றி இருக்கிறோம் என்பதை இது அடையாளப்படுத்துகிறது. வாழ்வின் எதார்த்தச் சூழலில் நாம் சந்திக்கும் துன்ப துயரங்கள், வேதனைகள், போராட்டங்கள் காற்றாக, மழையாக,
புயலாக, அலையாக, பேரிரைச்சலாக நம்மைத் தாக்கினாலும், நம்பிக்கையில் ஆழமாக நாம் வேரூன்றி இருக்கும்போது, எளிதில் நாம் வெற்றிகொள்கிறோம் என்பதை எடுத்துக்கூறுகிறது.
நான்காவதாக,
இடம்பெற்றிருக்கும் லில்லி மலர், பேராயர் அவர்கள் தனது பாதுகாவலர் தூய அந்தோனியாரின்மீது கொண்ட பற்றுதலின் வெளிப்பாடாக தூய அந்தோனியாரின் கரங்களில் இருக்கும் லில்லி மலர்போல, தன் பணியும் வாழ்வும் புனிதம் கொண்டதாக அமைய தன்னையே அர்ப்பணிக்கும் அடையாளமாக முன்வைக்கப்பட்டிருக்கிறது.
தன்னையும், தன்னைச் சார்ந்த இறைச்சமூகத்தையும் இறைவார்த்தையின் அடிப்படையில் நம்பிக்கையில் ஆழமாக வேரூன்றி தூய வாழ்வு வாழ அழைக்கும் பேராயரின் பணிவாழ்வு சிறக்க வாழ்த்துவோம், இறைவேண்டல் செய்வோம் !
மனித வாழ்க்கையின் மூலவேர்களாகவும், பாசத்தின் பாதுகாப்புக் கோட்டையாகவும் இருக்கின்றவர்கள் நம்முடைய தாத்தா-பாட்டிகள். அவர்களின் கைகளில் நாம் பழகிய முதல் நொடிகளில் கதைகள் பிறந்தன. அவர்களின் வார்த்தைகளில் முதன் முதலாய் அறிவு பிறந்தது. மூத்தோர் நாள் என்பது அவர்களுடைய பங்கு, பாசம் மற்றும் பண்பாட்டுக்குரிய பாராட்டுகளை நன்றியுடன் நினைவூட்டும் ஒரு சிறப்பு நாள். இந்நாளில், அவர்கள் இல்லாமல் இவ்வுலகம் எவ்வளவு வெறுமையாக இருக்கின்றது என்பதை நினைத்துப் பார்க்க அழைக்கின்ற தருணம்.
இல்லம்
என்பது கோவில். அதில் முதியோர், பெரியோர், இளையோர், சிறுவர் எனப் பலரும் இணைந்து இருக்கின்றபொழுது அது ஒரு குடும்பமாக அமைகின்றது, கோவிலாக இருக்கின்றது. ஆனால், எங்கே நம்முடைய முதியோர்கள்? எங்கே நம்முடைய தாத்தா-பாட்டிகள்? முதியோர் இல்லத்திலும், மூன்று மகன்களின் இல்லத்திலும் மாதம் ஒரு முறை இருக்கும் சூழலை நினைத்துப் பார்க்கின்ற தருணம் இது.
“முந்தையத் தலைமுறையின் ஆசிர்வாதம், எதிர்காலத்தின் நம்பிக்கையின் விதைகள்!” என்று திருத்தந்தை 14-ஆம் லியோ தாத்தா-பாட்டிகள் பற்றித் தன்னுடைய செய்தி மடலில் கூறுகின்றார். மேலும்,
வாழ்வின் நீண்ட பயணத்தைக் கடந்து, அனுபவங்களின் ஒளியில் ஒளிரும் தாத்தா-பாட்டி என்பவர்கள், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு தூணாக இருக்கின்றனர். நம் மனத்தில் நிறைந்து இருக்கும் பாடல்கள், பழமொழிகள், செபங்கள் மற்றும் பழக்கவழக்கங்கள்... இவைகளெல்லாம் அவர்களால்தான் பசுமையாக இன்று இருக்கிறது.
உலக
தாத்தா-பாட்டிகள் தினம், நம் மூத்தத் தலைமுறையின் பங்களிப்புகளுக்கு நன்றி செலுத்தும் ஓர் அரிய நாள். இவ்விதமான ஒரு நாளில், நாம் அவர்களைப் பாராட்டுவதே இல்லை. நம் உள்ளத்தை அவர்களிடம் செலுத்தி, அவர்கள் சிரிப்பிலும் அமைதியிலும் இறைவனைக்
காணும் ஆசிர்வாதமாக உணர்வதற்கான ஓர் அழைப்பாக இது இருக்கிறது என்றும் திருத்தந்தை தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
“தாத்தா பாட்டியின் செபம் ஓர் இல்லத்தின் பாதுகாப்புச் சுவராகும்.”
“பழமை என்பது பாழ்மை அல்ல; அது நம்மை வழிநடத்தும் ஒளி.”
“வயது கூடினாலும், நம்பிக்கை புதிதாகிறது. அவர்கள் நமக்கான செபக்கதவுகள்!”
பெரியவர்கள்
வீட்டின் கதவுகள் போல. வெளியே புயல் இருந்தாலும், உள்ளே நிம்மதி இருக்கிறது. அவர்களின் வாழ்வில் இருந்த கற்றல்களும் தியாகங்களும், நம் தலைமுறைக்குத் தேவையான ஒளிக்கீற்று. இன்று நாம் நம் தாத்தா-பாட்டிக்கு அருகில் போகவேண்டும், அவர்களின் கைகளைப் பிடித்து, நம் வாழ்க்கையின் ஒரு சிறு பகுதியை அவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். இது ஒரு கடமை அல்ல; இது ஒரு கருணைப்பூர்வமான அழகு. நம் குழந்தைகள், நம் பேரன்கள் இந்த மரபைத் தொடர, இப்போதைய நம் நடத்தைதான் அவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும். பெரியவர்கள் நமக்கு ஓர் ஆசிர்வாதம், வாழும் நம்பிக்கையின் சின்னங்கள்!
“வயது என்பதெல்லாம் எண்கள் மட்டும்; உள்ளத்தில் அன்பு நிறைந்திருந்தால் வாழ்வு அழகு!”
“தாத்தா-பாட்டியின் புன்னகையில் தேவனின் முகம் தெரிகிறது!”
“அவர்களின் நாள்கள் சிரமமானவையாக இருந்தாலும், அவர்களின் நினைவுகள் சீரானவை!”
தாத்தாவும்-பாட்டியும் இல்லாத வீடு, சத்தம் இல்லாத கோவில்போல் இருக்கும். அவர்களின் பரிசுத்தமான அன்பும், அனுபவங்களின் வெளிச்சமும் நம்மை வழிநடத்துகிறது. மூத்தோர் தினம் ஒரு நாளாக மட்டுமல்ல; அவர்கள் வாழ்வில் ஒவ்வொரு நாளும் நம் அன்பையும் கவனத்தையும் வழங்கும் ஒருவிதமான கடமை. அவர்களுக்கு நன்றி கூறுவதும், அவர்களைக் கொண்டாடுவதும் நம் சமூகப் பண்பாடுகளுக்குப் பெருமை சேர்க்கும். அன்பும் மதிப்பும் சேர்க்கும் இந்த நாள், நம் மூத்தோர்களுக்கான புகழின் நாளாக நிலைக்கட்டும்!
பேருந்து நிறுத்தத்தில் காத்துக்கிடந்தார் ஆவுடையப்பன் தாத்தா. ஒரு நாளுக்குக் காலை-மாலையென்று சோமனூருக்கு இரண்டு பேருந்துகள்தான். காலை ஒன்பது மணிக்கெல்லாம் வரவேண்டிய வண்டி இன்னும் வரவில்லை. காலையிலேயே களத்துல பறிச்ச தக்காளிகளை ஒரு கோணிப்பையில் கட்டி சூலூர்ல போய் விற்று வரவேண்டி நின்றுகொண்டிருந்தார் ஆவுடையப்பன் தாத்தா. பத்தரை மணிக்கெல்லாம் சூலூர் சந்தைக்குச் சரக்கை கொண்டுபோனாதான் தக்காளி வியாபாரமாகும்.
நேரம்
ஆக ஆக ஆவுடையப்பன் தாத்தாவிற்கு
ஏதோபோலிருந்தது. “தாத்தா! வரும்போது சிவப்பு கலர்ல பெரிய பலூன் ஒண்ணு வாங்கிட்டு வாங்கோ”
- வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது தன் பேரன் சொன்னது ஞாபகம் வந்தது.
“என்ன பெருசு சூலூருக்கா?” தன் மிடுக்கான சோடாபுட்டிக் கண்ணாடியைச் சரிசெய்துகொண்டே குரல் வந்த திசையை நோக்கித் திரும்பிப் பார்த்தார் தாத்தா.
“யாரது? இராணியா?”
“ஆமா! நானேதான்”
சிரித்துக்கொண்டே
பதிலளித்தாள் அவள்.
இராணிக்கு
இப்போது நாற்பது வயதிற்குமேலிருக்கும். அவள் பிறந்து வளர்ந்த ஊர் கோம்பக்காடு. இளம்வயதில் பள்ளி படிக்கும்போதே சோமனூர்க்காரர் ஒருவரைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டாள்.
“எங்க புறப்பட்டீக? சோமனூர் இராணி” ஆவுடையப்பன் தாத்தாவின் கேள்வியில் கோயம்புத்தூர் குசும்பு கொஞ்சம் ஒளிந்திருந்தது.
“அத ஏன்பு கேட்டுக்கிட்டு?
ஆத்தா சூலூர் சர்கார் ஆஸ்பத்திரில சாகக்கிடக்கிறானு செய்தி வந்துச்சு. அதான் ஓர் எட்டுபோய் பார்த்துக்கிட்டு வந்திடலாமுனு போறேன். அவுக என்ன ஏத்துக்காட்டாலும், அவுக எனக்கு ஆத்தா இல்லாம போகுமா!” பொங்கிவரும் உணர்வை முந்தானையால் பொத்திக்கொண்டு அருகிலிருந்த வேப்பமர நிழலில் அமர்ந்துகொண்டாள் இராணி.
இன்னும்
வேறு சிலரும் பேருந்துக்காக முனங்கியபடியே
காத்துக்கிடந்தனர். காலையிலேயே வெயில் உயிரை உறிஞ்சுவதுபோலிருந்தது. அந்தப் பொத்தல் சாலையில் அவ்வப்போது சைக்கிள்களும் பைக்குகளும் அணிவகுப்பு நடத்தின. ஆனால், ஒன்பது மணி பேருந்து பத்தாகியும் இன்னும் வரவில்லை. ஒருசிலர் திட்டியபடியே வீடு திரும்பினர். ஆவுடையப்பன் தாத்தாவுக்கு மூட்டையில் இருக்கும் தக்காளிகளும், பேரன் கேட்ட சிவப்பு கலர் பலூனும் நினைவுக்கு வந்து தலைக்கிறக்கத்தை ஏற்படுத்தியது. தன் தாயின் சாவுக்கு முன்பாக அவரை ஒருமுறை பார்த்துப் பேசிவிடவேண்டும் என்ற தவிப்பு இராணியின் கண்கள் வழியாக எட்டிப்பார்த்தது. அந்தப் பேருந்து நிறுத்தத்தில் நின்றவர்களின் கண்கள் அந்த ஒற்றைப் பேருந்துக்காய் எதிர்நோக்கி இருந்தன. ஒரு பேருந்து எவ்வளவு கனவுகளைச் சுமக்கிறது? ஒரு பேருந்து எத்தனை உறவுகளுக்குப் பாலமாகிறது? என்பதைப் போன்று, ஓர் இணையம் எத்தனை இதயங்களை இணைக்கிறது! எத்தனை மாணவர்களுக்குப் பல்கலைக்கழகமாகிறது! எத்தனை நாடுகளுக்குப் பாலமாகிறது! எத்தனை வியாபாரங்களுக்குத் தளமாகிறது!
இன்று
இணைய உலகில் பெரும் சக்தியாகவும் இணைப்புப்பாலமாகவும் பேசுபொருளாகவும் இருப்பது ‘கிரிப்டோ கரன்சி’
(crypto currency) ஆகும். கிரிப்டோ
கரன்சி என்பது இணையத்தில் மட்டுமே செல்லுபடியாகும் ஒருவகையான டிஜிட்டல் பணம். எந்த ஓர் அரசின் அல்லது வங்கியின் கட்டுப்பாடு இல்லாமல் இணையம் வழியாக டிஜிட்டல் பணபரிவர்த்தனை செய்ய இயலும். கிரிப்டோ கரன்சி பிளாக்செயின் (block chain) தொழில்நுட்பத்தின் துணைகொண்டு இயங்குகிறது.
பிளாக்செயின் என்பது ஒரு தானியங்கி கணினிப் பதிவேடாகும் (digital ledger). ஒவ்வொரு பரிவர்த்தனையும்
இதில் பதிவு செய்யப்படுகிறது. அனைவரும் இந்தப் பதிவேட்டைப் பார்க்கமுடியும். ஆனால், பதிவேட்டின் தரவுகளை மாற்றமுடியாது.
கிரிப்டோ
கரன்சி இன்று பல பிட்காயின் (bitcoin), எத்தீரியும்
(ethereum), சோலனா (solana), டோஜ்காயின் (Dodgecoin) என்று
பல வகைகளில் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மதிப்பு இருக்கின்றது. இந்த நாணயங்களை வாங்க மற்றும் விற்க பல உலகளாவிய மற்றும்
தேசிய இணையத் தளங்கள் உள்ளன. பைனான்சு (finance), காயின் பேசு (coinbase) போன்ற உலகளாவிய தளங்களிலும், வாஃயீர்எக்ஸ் (wazirX), காயின் டி.சி.எக்ஸ்.
(coin DCX) போன்ற இந்திய தளங்களைப் பயன்படுத்தி கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை செய்யலாம்.
கிரிப்டோ
கரன்சி பரிவர்த்தனையில் இந்தியாவின் நிலைப்பாடு மாறிக்கொண்டே இருக்கின்றது. 2025-இல் உச்ச நீதிமன்றம் ‘கிரிப்டோ கரன்சியைத் தடைசெய்வது என்பது உலக எதார்த்தங்களுக்கு நாம் கண்மூடிக் கொண்டிருப்பதுபோலுள்ளது’ என்று
தனது கருத்தை வெளியிட்டுள்ளது. மெய் நிகர் டிஜிட்டல் சொத்துகள் (Virtual Digital assets)
குறித்த நிலையான வரிக்கொள்கைகள், தெளிவுகள் மற்றும் சட்டங்கள் இந்தியாவில் விரைவில் கொணரப்பட வேண்டும் என்பது அப்பரிவர்த்தனைகளில் ஈடுபடுவோரின் விருப்பமாக உள்ளது. 2023 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் வியாபார முதலீட்டாளர்கள் 6.6 பில்லியன் டாலருக்கும் மேற்பட்ட தொகையைக் கிரிப்டோ சொத்துகளில் முதலீடு செய்துள்ளனர். இது 2030-இல் இன்னும் பல மடங்கு உயரக்கூடும்
என்று கணிக்கப்படுகிறது.
என்னதான்
கிரிப்டோ கரன்சி டிஜிட்டல் உலகில் தவிர்க்க முடியாதது என்று நாம் பேசினாலும், அதில் ஒளிந்திருக்கும் ஆபத்துகளையும் நாம் அறிந்து கொள்ளவேண்டும். கிரிப்டோ கரன்சியின் மதிப்பு எப்போது கூடும்? எப்போது குறையும்? என்று கணிப்பது சிரமம். அரசுகளின் கட்டுப்பாடும் கண்காணிப்பும் இல்லாததனால், இதில் ஏமாற்று வேலைகள் நடக்க வாய்ப்புள்ளது. தீவிரவாதம் மற்றும் நாச வேலைகளுக்குக் கிரிப்டோ கரன்சி அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. இரகசியக் குறியீட்டு எண் (private key) திருடப்பட அல்லது
அது வைக்கப்பட்டுள்ள வாலட் (wallet) தொலைந்துபோக வாய்ப்புள்ளது. இலண்டனைச் சார்ந்த ஜேம்ஸ் ஹோவல் என்பவர் 2013-ஆம் ஆண்டு தொலைத்த இரகசியக் குறியீட்டு எண் இருந்த ஹார்ட் டிரைவை இன்றளவும் தேடிக் கொண்டிருக்கிறார். இன்றைய நாளில் அவர் தொலைத்த பிட்காயினுடைய மதிப்பு 800 மில்லியன் டாலர் என்று கணக்கிடப்படுகிறது.
எத்தனை
டிஜிட்டல் பணபரிவர்த்தனை முறைகள் வந்தாலும், எத்தனை புதிய தொழில்நுட்பங்கள் வந்தாலும் அவை பெரும்பாலும் ஏழை எளியவர்களுக்கு உதவாமல், பணம் படைத்தவர்களையே மையப்படுத்துகின்றது. ஏழை எளியவர்கள் வாழ்வு மேம்படச்செய்யும் தொழில்நுட்பங்கள் என்று வருகின்றதோ, அன்றுதான் தொழில்நுட்பங்களின் புரட்சி எனக் கூறமுடியும். அன்றைய நாள் என்று வருமோ?
1947-இல் இந்தியா சுதந்திரம் பெறுகிறது. அன்று முதல் இன்றுவரை ‘காஷ்மீர் யாருக்குச் சொந்தம்?’ எனும் கேள்வியாலே இந்தியா-பாகிஸ்தான் யுத்தங்கள் தொடர்கின்றன. காஷ்மீர் பகுதிகளை மெல்ல மெல்ல பல்லாயிரக்கணக்கான சதுர மைல் பரப்பில் சீனாவும் பாகிஸ்தானும் ஆக்கிரமித்துவிட்டன. இந்திய அரசாங்கம் இது குறித்து வாய் திறக்க மறுக்கிறது. ‘இது இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே உள்ள பிரச்சினை; மூன்றாம் நாடுகளின் தலையீடு கூடாது’ என்ற இந்தியாவின் நிலையில் டிரம்ப் மண் அள்ளிப் போடுகிறார். தான்தோன்றித்தனமாக ‘நான் பஞ்சாயத்துச் செய்கிறேன்’ என அறிவிப்பது, முட்டுச்சந்தில் இந்திய வெளியுறவுத் துறையை நிறுத்திவிட்டது. காஷ்மீர் பிரச்சினையைச் சர்வதேசப் பிரச்சினையாக்கும் பாகிஸ்தானின் குரலுக்கு டிரம்ப் முட்டுக்கொடுக்கிறார்.
பாகிஸ்தான்
தன் தீவிரவாதத் தாக்குதல்களால் இந்தியாவிற்கு நெருக்கடி கொடுப்பது எப்போதும் வாடிக்கையான செயலாகும். ஏப்ரல் 22 அன்று 5 தீவிரவாதிகள், 26 சுற்றுலா பயணிகளைப் பகல்காம் எனும்
இடத்தில் சுட்டுக்கொன்றனர். இவர்கள் லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை
அமைப்பான எதிர்ப்பு முன்னணி (டி.ஆர்.எஃப்.)
என்ற அமைப்பைச் சார்ந்தவர்கள் எனத் தேசியப் புலனாய்வு அமைப்பு அடையாளம் கண்டது. முதலில் பொறுப்பேற்ற அவ்வமைப்பு, பிறகு தாங்கள் ஈடுபடவில்லை என மறுத்தது. இந்திய
அரசாங்கம் பாகிஸ்தானைத் தொடர்புகொண்டு, அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரியது. பாகிஸ்தான் வழக்கம்போல் கள்ள மௌனம் சாதித்தது.
15 நாள்கள்
மௌனம் காத்த இந்திய அரசாங்கம், மே 7 அன்று ‘சிந்தூர் ஆபரேஷன்’ எனும் நடவடிக்கையை முன்னெடுத்தது. பாகிஸ்தானில் உள்ள ஒன்பது தீவிரவாத முகாம்கள் அடையாளம் காணப்பட்டு, வான்வெளித்தாக்குதல் வழி அழிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் தீவிரவாத அமைப்புகளான லஷ்கர்-இ-தொய்பா மற்றும்
செய்ஷ்-இ-முகமது அமைப்பைச்
சார்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டது.
மே
15-ஆம் தேதி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “முன்பே பாகிஸ்தான் அரசுக்குத் தெரிவித்துவிட்டுத்தான் தீவிரவாத முகாம்களைத் தாக்கினோம்” என்றார்.
மறுநாள் ஜெய்சங்கர் “அப்படிக் கூறவில்லை”
என உள்துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி மறுத்தார். மே 25-இல் ஜெய்சங்கரும், “இத்தகவல் பாகிஸ்தானுக்குக் கூறப்படவில்லை” என
மறுத்தார். முன்னுக்குப் பின் முரணாகப் பேசும் செயலற்ற வெளியுறவுத்துறை அமைச்சர்
ஜெய்சங்கர் பதவி விலக வேண்டுமென்ற எதிர்க்கட்சிகளின் குரல் வலுக்கிறது.
எதிர்க்கட்சித்
தலைவர் இராகுல் காந்தி, “சிந்தூர் ஆபரேஷனால் எத்தனை விமானங்கள் இந்திய இராணுவத்திற்கு இழப்பு ஏற்பட்டன? முன்பே தகவல் அளித்ததால் தீவிரவாதிகள் தப்பிவிட வாய்ப்பு உள்ளதே...” எனக் கேள்வி கேட்டார். பாகிஸ்தானும் பதிலுக்கு இந்திய எல்லைப் பகுதிகளில் குண்டு வீசியது. போர் துவங்கிவிட்டது. “நான் கூறியதால் இந்தியா-பாகிஸ்தான் யுத்தம் நின்றுவிட்டது” என்கிறார்
டிரம்ப். ஆம், அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்... “டிரம்ப் மத்தியஸ்தம் செய்யவில்லை; இந்தியாவிற்குப் போர் வேண்டாம் என உத்தரவு போட்டுவிட்டார்” என்பதே!
அது உண்மைதான். பாகிஸ்தானுக்குப் போரைத் தாங்கும் வலுவில்லை. டிரம்பிடம் கெஞ்சி தப்பிவிட்டது.
‘சிந்தூர் ஆபரேஷன்’ குறித்து உலகின் எந்த நாடும் இந்தியாவிற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்திய அரசு ஏழு தூதுக் குழுக்களை அமைத்து உலகெங்கும் ஆதரவு திரட்டியது.
எதிர்க்கட்சித் தலைவரை ஆலோசிக்கவில்லை. பா.ச.க.
தூதுக்குழு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த சசி தரூரை நியமித்து, உள்கட்சிப் பூசலை உருவாக்கியது.
வரலாற்றைத் திரும்பிப் பார்ப்போம்.
2008-ஆம் ஆண்டில்
நான்கு நாள்களில் மும்பையில் நடந்த லஷ்கர்-இ-தொய்பாவின் தீவிரவாதத்
தாக்குதலில் 160 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கோர் காயம் அடைந்தார்கள். அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் 100 நாடுகளுக்குப் பல்வேறு தூதுக் குழுக்களைச் சத்தமில்லாமல் அனுப்பினார். தீவிரவாதிகளின் உலகளாவியப் புகலிடம் பாகிஸ்தான் என உறுதிபட அறிவித்தார்.
பாகிஸ்தானுக்கு உலகளாவியப் பொருளாதார உதவிகளை நிறுத்தினார். இன்று இந்தியா-பாகிஸ்தான் போர் நிற்கிற நாளில், ஒரு மில்லியன் டாலர் கடனை ஐ.எம்.எஸ்.சிடமிருந்து பாகிஸ்தான் எளிதாகப் பெறுகிறது. சர்வதேச அரங்கில் பாகிஸ்தானைத் தனிமைப்படுத்தும் மோடி அரசின் முடிவுக்கு உலகின் எந்த நாடும் ஆதரவு தரவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட எல்லா நாடுகளுக்கும் பாகிஸ்தானின் தீவிரவாத நடவடிக்கைள் புரியும்.
2001-ஆம் ஆண்டு
அல்-கொய்தா அமைப்பு அமெரிக்காவில் இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடத்தியது. அதன் முழு மூளையாகச் செயல்பட்டவர் ஒசாமா பின்லேடன். 2011, மே 2 அன்று பாகிஸ்தானின் அபோட்டா பகுதியில் ஒசாமா பதுங்கியிருந்தபோது அமெரிக்க இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார். 1993-ஆம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்புச் சம்பவங்களில் தேடப்படும் நிழல் உலகத் தாதா தாவூத் இப்ராஹிம்கூட பாகிஸ்தானில் இருப்பதாகத் தகவல் கசிகிறது. அவர் முக்கியக் கிரிக்கெட் பந்தயங்களைப் பாகிஸ்தானில் உள்ள விளையாட்டுத்திடலுக்கே வந்து பார்த்தார் என்ற அதிகாரப்பூர்வமற்றத் தகவல்களும் உலா வருகின்றன. பாகிஸ்தான் உலகளாவியத் தீவிரவாதிகளின் புகலிடம் என்பதில்
இரு வேறு கருத்துகள் இல்லை.
பாகிஸ்தானில்
நிலையான அரசு இல்லை. குடியாட்சி இல்லை. இராணுவ ஆட்சி நடக்கிறது. தெற்காசிய
நாடுகளில், புவிசார் அரசியலில், சீனாவைக் காட்டி அமெரிக்காவிடமும், அமெரிக்காவைக் காட்டிச் சீனாவிடமும் பாகிஸ்தானியர்கள் சலுகைகளைப் பெற்றுக்கொள்கின்றனர். இலங்கையும் இந்தியாவிற்கு எதிராக இதே அரசியல் நிலைப்பாட்டில் கொழிக்கிறது.
நமது
பிரதமர் மோடி தனது 11 ஆண்டுகால பிரதமர் பதவிக் காலத்தில் 151 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டு 72 நாடுகளுக்குச் சென்றுள்ளார். அமெரிக்காவிற்கு மட்டுமே 10 முறை சென்றுள்ளார். ஆனால், ‘இந்த ஏழைத் தாயின் மகனுக்கு எந்த நாடும் ஆதரவாக இல்லை’ என்பதே பெருங்கவலை. கையறு நிலையில் கனடாவின் ஆல்பர்ட்டா நகரில் நடந்த ‘ஜி-7’ நாடுகளின் மாநாட்டில் அழையா விருந்தாளியாகச் சென்றார். உலகத் தலைவர்களோடு புகைப்படம் எடுத்துத் தன்னை மாபெரும் உலகப் பெருந்தலைவராக மோடி ஊடகங்களால் வெளிச்சம் பெற்றார். கெஞ்சி, கூத்தாடி டிரம்பிடம் பெற்ற காணல் பேச்சு வார்த்தை இரத்தானது. திடீரென டிரம்ப் அமெரிக்கா திரும்பினார். பிறகு வெள்ளை மாளிகையில் பாகிஸ்தான் இராணுவ அமைச்சருடன் மதிய உணவு மற்றும் பேச்சுவார்த்தைக்குத் திரும்பினார் எனத் தெரிய வந்தது.
பிரதமர்
மோடி சீன என்ற நாட்டின் பெயரைப் பொதுவெளியில் சொல்லவும், சீன அதிபரின் பெயரைச் சொல்லவும்
தைரியமற்றவர் என்ற உண்மை சுடுகிறது. நேருவால் முன்னெடுக்கப்பட்ட ‘அணிசேரா நாடுகள்’ என்ற நிலையும் மாறி, இந்திய
வெளியுறவுக்கொள்கை புயலில் சிக்கிய கப்பலாய் மோடி
ஆட்சியில் தவிக்கிறது. தற்போதைய இஸ்ரேல் - ஈரான் யுத்தத்தில் பா.ச.க.
அரசு தன் மதவெறியின் பகுதியாக இஸ்ரேல் பக்கம் சாயும் நிலையில் உள்ளது. இது குறைந்த விலைக்கு இந்தியாவிற்குக் கச்சா எண்ணெய் வழங்கும் ஈரானைக் கோபப்படுத்தும். அதன் பின்விளைவுகளால் இந்தியாவின் பொருளாதாரம் சரியும் என்ற அடிப்படையைக்கூட அறியாமல் உள்ளார்கள்.
மதவாத
அரசியல் நடத்தும் பா.ச.க.
தனது மோசமான அயலுறவுக்கொள்கையால் நாடுகள் இடையே தனித்து
விடப்பட்டுள்ள தன் நிலை அறிய வேண்டும். புதிய அயலுறவுக் கொள்கை உருவாக எதிர்க்கட்சிகளிடம் பேசி, கூட்டு முயற்சியில் நாட்டின் நலனைப் பாதுகாக்கப் புதிய முன்னெடுத்தல்கள் காலத்தின் கட்டாயம்.