குழந்தை தெரேசா குழந்தை பருவத்திலிருந்தே மிகுந்த செல்வச் செழிப்போடு வாழ்ந்தவர். ஆனால், குறைகளே இல்லாமல் வாழ்ந்தவர் அல்லர்; கொடுமையிலும் கொடுமை தாயை இழப்பது. இந்த மாபெரும் கொடுமை நான்கு வயதில் நடந்தது. ஆம்! தன் தாயை இழந்து சொல்லெண்ணாத் துயர் அடைந்தார். இந்த இழப்பு அவரை மனதளவில் மிகவும் பாதித்தது. பின் தன் சகோதரிகளில் ஒருவரான பவுலினைத் தன் தாயாக நினைத்து வாழ்ந்து வந்த சூழலில், அவரும் குழந்தை தெரேசாவிற்கு ஒன்பது வயது இருக்கும்போது பவுலின் கார்மேல் மடத்திற்குச் சென்றார். மற்றோர் இடியாகத் தனக்குக் கிடைத்த இரண்டாம் தாயையும் இழந்து தவித்தார். இப்படிக் குழந்தை பருவத்தின் பாதிப்பு குழந்தை தெரேசாவிற்கு அதிகமாகவே இருந்தது.
‘ஃபிராய்டு அட்லர்’ போன்ற மனோதத்துவ நிபுணர்கள், ‘ஒருவர் குழந்தையாக இருக்கும்போது ஏற்படுகின்ற காயங்களும் வேதனைகளும் ஒருவரை மீண்டும் எழுந்துவர முடியாத அளவிற்குப் பாதிக்கும்’ என்கிறார்கள்.
ஆனால், இந்தத் தத்துவத்தைக் குழந்தை தெரேசா இறைவன் அருளால் சுக்குநூறாக உடைத்து, இறைஉறவில் வளர்ந்து இறைவனையே தன் தாயாக, தந்தையாக மாற்றிக்கொண்டார்.
சிறுமலர் பேரிலும்
ஆன்மிகத்திலும்
எளிமை
குழந்தை
தெரேசா சிறுவயதிலிருந்தே மலர்களை இரசிக்கும் குணம் கொண்டவர். காடுகளிலே காண்பாரற்றுக் கிடக்கின்ற எளிய வகை மலர்தான் கார்ன்காக்கில். இந்தச் சிறிய வகை எளிய மலர்களோடுதான் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டார்.
பெரிய பெரிய வண்ண வண்ண மலர்களும், நறுமணம் வீசும் மலர்களும் மட்டுமல்ல, இச்சிறுவகை மலர்கள்கூட இறைவனை மகிமைப்படுத்துகின்றன. எனவேதான் தன்னை ஒரு சிறுமலராக இணைத்துக்கொண்டார்.
சிறுமலர்
தெரேசாவிடத்தில் முதலில் ஆன்மிகக் குழந்தைத்தனம் இருந்தது. மிகுந்த அடம்பிடிக்கின்ற, உணர்ச்சிவசப்படுகின்ற நபராக இருந்தார். சிறு தவறுகள் கூட கடவுளின் அன்பை முற்றிலும் இழக்கச் செய்யும் என்றிருந்தார். பின்பு அதையே ஓர் ஆன்மிகமாக அமைத்து, குழந்தைத்தனத்திலிருந்து குழந்தை மனம் கொண்ட ஆன்மிகமாக மாற்றி, தன்னைக் கடவுளிடம் ஒப்படைத்து நமக்குச் சிறுவழி ஆன்மிகம் தந்திருக்கிறார்.
இறைவனிடத்தில்
குழந்தைபோல்
நம்பிக்கை
வைப்பது
குழந்தைகளிடத்தில்
பகைமையின்றி அன்பிருக்கும், எதிர்மறை எண்ணமின்றி நேர்மறை குணம் இருக்கும், பாகுபாடின்றி எல்லாரையும் ஏற்கும் மனமிருக்கும், உள்ளத்தில் தூய்மை, வாழ்வில் எளிமை இவைகளே குழந்தையின் அணிகலன்கள். இவைகளையே குழந்தை தெரேசா தன் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்தார். ‘நான் பெரிய காரியங்களைச் செய்ய முடியாது. ஆனால், சிறிய காரியங்களில் நான் அன்புடன் செய்ய விரும்புகிறேன்’ என்று
சிறுவழி ஆன்மிகத்தை நமக்குக் கொடுத்திருக்கிறார்.
சிறுமலர் தெரேசாவின்
உச்சக்கட்ட
ஆன்மிகம்
குழந்தை
தெரேசா தனது சுயசரிதையில் (ஓர் ஆன்மாவின் வரலாறு) எவ்வாறு நாம் அன்பு செய்ய வேண்டுமென்று விளக்குகிறார். இயேசு பத்துக் கட்டளைகளைச் சுருக்கி, இரண்டு கட்டளைகளாகக் கொடுத்தார். கடவுளை அன்பு செய்வது முதல் கட்டளையாகவும், தன்னை நேசிப்பதுபோல் பிறரையும் நேசிப்பதை இரண்டாம் கட்டளையாகவும் கொடுத்தார். இந்த இரண்டாம் கட்டளையில் உள்ள சிக்கல் என்னவென்றால், நான் என்னை அன்பு செய்வது போன்று, பிறரையும் அன்பு செய்வது என்பது சிக்கல் நிறைந்த ஒன்றாக இருப்பதை குழந்தை தெரேசா உணர்ந்தார். “நான் என்னை எவ்வளவு அன்பு செய்கின்றேன்? ஒருவேளை கால்வாசி, அரைவாசி என்று அன்பு செய்தால் பிறரை அதே அளவு அன்பு செய்தால் போதுமா?” இதுபோன்ற கேள்விகள் குழந்தை தெரேசா மனத்தில் உதயமாயின. அதற்கு அவர் கண்ட விடைதான் “நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்” (யோவா
13:34). ஆகவே, நான் என்னை அன்பு செய்வது போன்று மட்டுமல்ல, இயேசு என்னை அன்பு செய்வது போன்று பிறரை அன்பு செய்ய வேண்டுமென்று கண்டுணர்ந்தார். அன்றிலிருந்து இயேசு எவ்வாறு தன்னோடு பேசுவாரோ, அவ்வாறே பிறரோடு பேச ஆரம்பித்தார். இயேசு எவ்வாறு தனக்கு உதவி செய்தாரோ, அவ்வாறே பிறருக்கும் உதவி செய்தார். இயேசு எவ்வாறு தனக்குச் செவிமடுத்தாரோ அவ்வாறே பிறருக்கும் செவிமடுத்தார்.
இப்படி
அவர் மூச்சிலும் பேச்சிலும் செயலிலும் நம்பிக்கையிலும் இயேசுவை மையமாகக் கொண்டார். இதை
அவர் எவ்வாறு செய்தாரென்றால் ‘இயேசுவே, நான் என்னை அன்பு செய்ததுபோல பிறரை அன்பு செய்ய முடியாத நிலையில் உள்ளேன். நீரே என்னில் வந்து என் வழியாகப் பிறரை அன்பு செய்யும்’
என்று தன்னையே இயேசுவுக்கு முழுமையாக ஒரு குழந்தையைப்போல் ஒப்புக் கொடுத்து விட்டார். இயேசுவும் குழந்தை தெரேசாவோடு இரண்டறக் கலந்து, இன்றும் குழந்தை தெரேசாவின் வழியாக நம்மை அன்புசெய்து வருகிறார். நாமும் இப்படி ஒரு வாழ்வு வாழ அழைக்கின்றார். சிறுவழி ஆன்மிகத்தைச் செயல்வழி ஆன்மிகமாக மாற்றி வாழ முயற்சிப்போம்.
“தங்கள் பணியில் இறைவாக்கினர்களாக வாழ்ந்து, தங்களுடைய தனித்துவமிக்க வாழ்க்கையாலும் அர்ப்பணமிக்க செயல்களாலும் கிறிஸ்துவுக்கு உண்மையான சான்றாகத் திகழ்வதும், தங்களது உடனிருப்பாலும் பணிகளாலும் உலகை விழித்தெழச் செய்தவர்களே துறவியர்” என மேனாள் திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிடுகிறார். இத்தகைய நோக்கத்தோடு திரு அவையின் வரலாற்றில் காலச்சூழலுக்கேற்ப, இறைவனின் குரலுக்குப் பதில் கொடுத்துப் பணியாற்றிய பல பேராளுமைகளும் துறவு சபைகளும் அவ்வப்போது தோன்றி வளர்ந்தது நமக்குச் சான்றாகும். அத்தகைய ஒரு பின்னணியும் தாக்கமும் தெரேசாவின் வாழ்விலும் இருந்ததை அறியமுடிகிறது.
பிரான்ஸ்
நாட்டில் ஏற்பட்ட பிரெஞ்சுப் புரட்சி முடியாட்சியை வீழ்த்தி, அடிமைத்தனங்களை அகற்றி, அனைத்து மக்களுக்கும் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் என்று விடுதலை விழுமியங்களை உலகுக்குப் பறைசாற்றி, அதனடிப்படையில் ஒரு மாற்றுச்சமூகத்தை நிறுவுவதற்கான முயற்சியாக அமைந்தது. பிரெஞ்சுப்
புரட்சியால் திரு அவை அதன் அதிகாரத்தை இழந்து நின்றது. பல
துறவற சபைகளும் முடக்கப்பட்டிருந்தன. தெரேசாவின்
காலத்தில் திரு அவை பல்வேறு அழுத்தங்களிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டெழுந்து கொண்டிருந்தது. இக்காலகட்டத்தில், ஐரோப்பாவில் பகுத்தறிவுச் சிந்தனைகளும் நேர்மறைச் செயல்பாடுகளும் பொருளாதார வளர்ச்சியும் சமயத்தைப் பற்றிய விமர்சனங்களும் வளர்ந்து, அனைத்தையும் அறிவுப்பூர்வமாக அணுகும்போக்கு உருவானது. இத்தகைய சிந்தனையின் தாக்கம் தெரேசாவின் வாழ்விலும் பார்வையிலும் வெளிப்பட்டதை அவருடைய துறவு வாழ்வின் பயணத்தில் நம்மால் உணர முடிகிறது.
கடுமையான
சட்டங்களையும் விதிமுறைகளையும் கடைப்பிடிப்பதே புனிதம் எனக் கருதுபவர்களும், பொறுமையோடு இருப்பது இறைவனுக்கு ஏற்புடையது என நினைப்பவர்களும் அன்றும் இன்றும்
உள்ளனர். ஆனால், தெரேசாவும் அவருடைய தந்தையும் அந்தச் சட்டங்கள், ஒழுங்குகளை மேற்கொள்வதற்கு எடுத்தத் தொடர் முயற்சிகளும், அதன்மூலம் பெற்ற வெற்றிகளும் நம்மை வியக்க வைக்கின்றன. இதன்மூலம் கண்மூடித்தனமாக ஒழுங்குகளைப் பின்பற்றுவதும், அவைகளுக்காக அடங்கிப் போவதும் ஆன்மிகமல்ல; மாறாக, இறை விருப்பத்தைத் தேர்ந்து தெளிவதே சிறந்தது என்பதை நமக்குச் சுட்டிக்காட்டுகிறார்கள்.
உலகை
உருமாற்றும் உன்னதமான பணியை ஆற்ற அழைக்கப்பட்டிருக்கும் துறவியர், இன்றைய காலகட்டத்தில் அப்பணியை ஆற்றுவதற்குச் சிறந்த அமைப்பு, வாழ்க்கைமுறை எது என்பதைத் தேர்ந்து தெளிந்து, அதற்குப் பயன் தராத அமைப்புகளையும் பாரம்பரியங்களையும் புறந்தள்ளி, சரியான இலட்சியங்களை அடைவதற்கான முயற்சிகளை இடைவிடாமல் முன்னெடுக்க நமக்குக் கற்றுத் தருகிறார் தெரேசா.
விவிலிய மையவாழ்வு
கார்மேல்
சபையின் மரபுகளையும், தூயவர்களான அவிலா தெரேசா, சிலுவை யோவான் இவர்களது ஆன்மிகத்தையும், அடைபட்ட கார்மேலில் வாழத்துவங்கிய தெரேசா, திருவிவிலியம் பரவலாக்கப்படாத அக்காலத்திலும் இறைவார்த்தை மீது தீவிர ஆர்வம் கொண்டு இறைவேண்டல் சமயங்களிலும் தியானங்களிலும், ஆன்மிக வாசிப்பு வேளைகளிலும் இறைவார்த்தையை வாசித்து, சிந்தித்துத் தியானித்தார். அதன் விளைவாக, இயேசுவின் வாழ்வும் செயல்பாடுகளும் அவர் வாழ்ந்த சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் மற்றும் ஏழையர், துன்புறுவோர், கரிசனைக்குரியோர், ஒடுக்கப்பட்டோர் ஆகியோருக்கு இயேசு காட்டிய அன்பு, பரிவு புதிய வெளிச்சங்களையும் விளக்கங்களையும் கொடுத்தன. அதன் மூலமாகப் பல்வேறு வடிவங்களில் சிதறிக்கிடந்த அவருடைய பார்வை கூர்மையாக்கப்பட்டு, தனது வாழ்வைச் சிறந்த முறையில் ஒருங்கிணைக்கப் பெரிதும் துணைபுரிந்தது. அதன்
மூலமாக இறைவார்த்தையை மையப்படுத்திய புதிய பார்வையையும் புதிய வாழ்வையும் தான் பெற்று வாழ்ந்ததோடு, அதனை அன்பின் பாதையாக உலகிற்கும் வழங்கினார்; எனவேதான் தெரேசாவைத் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்கள், ‘அன்பின் அறிவியல் நிபுணர்’ என்கிறார்.
கார்மேலில் தெரேசாவின்
மாதிரி
‘சிறுமலர்’
என உலகமே செல்லமாகக் கொண்டாடும் குழந்தை இயேசுவின் தெரேசா இன்று நாம் வாழும் நவீன உலகத்தின் சவால்களுக்கு அர்த்தமுள்ள, பொருளுள்ள வாழ்வு வாழ இன்றைய துறவிகளுக்கு முன்மாதிரியாக மின்னித் துலங்குகிறார் என்பதை, கார்மேலில் அவர் வாழ்ந்த வாழ்வு நமக்குப் பறைசாற்றுகின்றது.
வெற்றி,
புகழ், பெருமை, சாதனை, பணம் இவற்றின் சோதனைகள் இறையாட்சிப் பணியாளர்களை ஆக்கிரமிக்கும் சமகாலத்தில், அன்பு, எளிமை மற்றும் மாற்றத்திற்குப் பயன்படாத மரபுகளையும் அமைப்புகளையும் சட்டங்களையும் கடந்து செல்லும் தெரேசாவின் துணிவும் மனபலமும் நமக்கெல்லாம் இன்று உந்துசக்தியாகவே உள்ளது.
தான்
வாழும் சூழலில் தன்னோடு துறவு இல்லத்தில் வாழும் தேவையிலிருக்கும் மனிதருக்கு அன்புப் பணியாற்றுவதையே தனது நம்பிக்கை வாழ்வாக ஆக்கிக்கொண்டார் தெரேசா.
குழுமத்தில்
நோயாளர்களைப் பேணும் பணியினைப் பரிவோடும் கனிவோடும் செய்து, அவர்களோடு உரையாடுவதையும் உதவுவதையும் இன்முகத்தோடு விரும்பிச் செய்தார்.
குழுமத்தில்
அவருக்கு ஏற்பட்ட இடையூறுகளையும் கசப்பான துன்பங்களையும் புரிந்துகொள்ளாமையையும் குறைசொற்களையும் குழும மகிழ்வுக்காகப் புன்முறுவலோடு ஏற்றுக்கொண்டு அவற்றை அர்ப்பணித்து, துறவு வாழ்வுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர் தூய குழந்தை இயேசுவின் தெரேசா.
குழும
வாழ்வில் உறவுச் சிக்கல்களும் உணர்வுப் பிறழ்வுகளும் சகோதரத் தோழமையும் சுயநலமும் தனிநபர் ஆதிக்கமும் கோலோச்சும் இன்றைய சூழலில், தெரேசா அனைவரையும் அவரவர் இருக்கும் நிலையிலேயே ஏற்று அன்பு செய்து, துன்பம் கொடுத்தவர்களுக்கும் நன்மை செய்து வாழ்ந்த மனநிலை இன்றைய நமது வாழ்வுக்கு உந்துதல். ஏழைகள்
மிகுந்து வாழும் நமது நாட்டுச் சூழலில் துறவு வாழ்வு இன்று பெரும்பாலும் அதற்கு எதிர் சாட்சியாகத் திகழ்கிறது. இந்நிலையில் தெரேசா எளிய வாழ்வும், நலிவுற்றவர்பால் பரிவும், தேவையில் இருப்போருக்கு உதவியும் புரிதலே உண்மையான துறவு எனத் தனது வாழ்வால் உரக்கக் கூறுகிறார்.
நான்கு
சுவர்களுக்குள் அடைபட்டிருந்தாலும், அவரது மனம் தொலைதூரத்தில் இருக்கும் மறைபரப்பு நாடுகளிலேயே நிலைகொண்டிருந்தது. உலக நடப்புகளையும் மறைபரப்புப் பணியாளர்களின் வாழ்வுமுறைகளையும் அறிந்துகொள்வதிலும், அவர்களுடைய தேவைகள், பணிகளின் போக்கு இவைகளைப் பற்றி அறிந்து, கடிதத்தொடர்பு மூலம் உற்சாகப்படுத்துவதும் இறைவேண்டல் செய்வதும் அவருடைய பணி ஆர்வத்தை வெளிப்படுத்தின.
மனிதநேயம்
கொண்ட ஒரு சமூகத்தை வென்றெடுப்பதற்கு தெரேசாவின் மனம் எப்போதும் துடித்துக் கொண்டேயிருந்தது. அதனைச்
செயல்படுத்த தனது பார்வையை விசாலமாக்கி, உலக நாடுகளை உற்றுநோக்கி, தேவையிலிருப்போருக்காக இறைவேண்டல் மற்றும் தோழமை உணர்வை வெளிப்படுத்துதல் போன்ற செயல்பாடுகளால் துறவுக்குப் பொருள் கண்டார்.
மரபுகளையும்
அமைப்புகளையும் சட்டங்களையும் கூர்ந்துநோக்கி காலத்தின் தேவைக்கேற்ப தனது துறவு வாழ்வால் புதிய பார்வையைக் கொடுத்து, அன்பு
வாழ்வுக்கு நமக்கெல்லாம் முன்மாதிரியாக விளங்குகிறார் தெரேசா!
வாழ்வில் துன்பங்கள், சவால்கள் அனைத்தையும் இன்று நாம் கடந்துவரும் ஒரே பாதை அன்பின் பாதை என்பதே புனித தெரேசாவின் ஆன்மிக இலக்கணம்.
மனித
வாழ்க்கையில் துன்பமும் சவால்களும் இரவு-பகல் போன்றவை. மொழியும்-இசையும் போன்றவை. இவை ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்படுவதில்தான் அதன் சிறப்பு மிளிர்கிறது. அதுபோலத்தான் நமது வாழ்வில் வரும் துன்பமும் சவால்களும் தவிர்க்க முடியாதவை.
ஒவ்வொருவரும்
எதிர்கொள்ளும் சவால்கள் வெவ்வேறாக இருந்தாலும், அவற்றை நாம் எந்த மனநிலையோடு அணுகினோம், அணுகுகின்றோம், அணுகுவோம் என்பதில்தான் நமது வாழ்வு பக்குவப்படுகிறது, பண்படுகிறது. மனித வாழ்வு அன்பால் இயக்கப்படும்போது வெறுப்பும் வன்முறையும் கார்கால மேகத்தின் இடையே தோன்றி மறையும் வானவில்லைப்போல் மறைந்தொளியும் என்பதற்கு, புனித சிறுமலர் தெரேசாவின் வாழ்வு நமக்குச் சிறந்த எடுத்துக்காட்டு.
புனித
சிறுமலர் தெரேசா 1873-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2-ஆம் தேதி பிரான்ஸ் நாட்டில் உள்ள லிஸ்யு நகரில் செல்வ செழிப்பு மிகுந்த தம்பதியருக்கு 9 நவரத்தினங்களில் ஒன்பதாவது இரத்தினமாக மலர்ந்தாள். இப்புவியில் சிறுவயதிலேயே தனது தாயை இழந்தபொழுதிலும், தனது சகோதரிகளால் மிகுந்த பாசத்துடன் வளர்க்கப்பட்டாள். ‘எனக்கு அனைத்தும் வேண்டும்’
என்ற தெரேசாவின் வார்த்தை அவரது இளமைப் பருவத்திலும் தொடந்தது. அன்பே தனது அழைத்தல் எனப் புரிந்துகொண்ட நம் புனிதர், 15 வயதில் லிசியே நகரின் கார்மேல் மடத்தில் சேர்ந்தார். குழந்தைப் பருவத்தில் இருந்த பக்தியும் இறைநம்பிக்கையும் கார்மேல் மடத்திலும் தொடந்தது. தன்னை வெறுத்தோர், காயப்படுத்தியவர்கள்மீது வார்த்தைகளால் அவள் போர் தொடுக்கவில்லை; மாறாக, சிறு புன்னகையால் அகிம்சை போர்புரிந்து வெற்றியும் கண்டாள். பாவிகளின் மனந்திரும்புதலுக்காகவும் ஆன்மாக்களின் ஈடேற்றத்திற்காகவும் செபித்தாள்.
படிப்பறிவாள்;
அவள் பட்டம் பெறவில்லை. மாறாக, தனது மௌன மொழியால் திரு அவையின் மகள் என்ற மாபெரும் பட்டத்தைப் பெற்றாள். திரு அவையின் மேல் தனக்கிருந்த பற்றால் திரு அவையின் இதயத்தில் தான் என்றும் அன்பாகவே இருக்க ஆசைப்படுகிறேன் என்று மொழிந்தவள். ‘மற்றவர்களை வெல்ல என்னிடம் அன்பைத் தவிர வேறோர் ஆயுதம் இல்லை’ என்று மகாத்மா காந்தி கூறுவதைப் போலவும், ‘அன்புதான் உன் பலவீனம் என்றால், இந்த உலகில் மிகச்சிறந்த பலசாலி நீதான்’ என்று அன்னை தெரேசா கூறுவதைப் போலவும், அன்பை ஆயுதமாகக் கொண்டு துறவற வாழ்வில் ஒன்பது ஆண்டுகள் இறைப்பணியாற்றினார் தெரேசா. அந்த 9 ஆண்டுகளும் ஆண்டவருக்காகவே வாழ்ந்தார். இத்தகைய சிறப்புமிக்கப் புனிதையின் முன்மாதிரியைப் பின்பற்றும் நாம் நமது வாழ்வினை இங்குச் சற்று சிந்தித்துப் பார்த்து, அதனைச் சீர்செய்வது மிகவும் சாலச்சிறந்தது.
நாம்
வாழும் இந்த உலகம் வெறுப்பு, போட்டி, பொறாமை, பகைமை, பிரிவினை போன்ற தீய சக்திகளால் ஆட்கொள்ளப்பட்டிருக்கிறது. எந்த அளவிற்கு அறிவியல் வளர்ந்ததோ, அதைவிட பன்மடங்கு மக்களின் மனமும் ‘நாம்’,
‘நாங்கள்’ என்ற
பரந்த மனநிலையில் இருந்து, ‘நான்’ என்ற குறுகிய வட்டத்தில் கூடாரம் அடித்துத் தங்கி விட்டது. இவ்வாறான சூழலில், அன்பு என்ற அமைதியின் மொழியைக் கொண்டு அணுகுவதே மாற்றத்திற்கான முதல்படி. அன்பு என்பது பலவீனமல்ல; அது மிகப்பெரிய வலிமை. எவ்வாறெனில் நம் புனிதை கூறுவார்: “கிறிஸ்துவே என் அன்பு, அவரே என் நிறைவாழ்வு, அன்புக்காக இறப்பதே எனது நம்பிக்கை, இறைவனின் அன்பில் நிலைத்திருப்பதே எனது ஆவல். அன்புக்காக வாழ்வதே என் வாழ்வின் இலக்கு.”
இன்பத்திலும்
துன்பத்திலும் வறுமையிலும் வளமையிலும் நோயிலும் சாவிலும் இருளிலும் ஒளியிலும் எந்நிலையிலும் அஞ்சாது, இயேசுவில் சரணடைந்து, குழந்தைபோல் அவரது தோளில் சாய்ந்து, குழந்தையாகவே மாறி, இறை அன்பிற்காகவே வாழ்ந்தவர் நம் புனிதை.
புனித
பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமடலில் 13 -ஆம் அதிகாரம் முழுவதும் அன்பின் சிறப்பு இயல்புகளைத் தெள்ளத் தெளிவாக எடுத்தியம்பியிருப்பது இதற்குச் சிறந்த சான்று. எல்லா மதமும் மனிதனும் அன்பு என்ற ஒற்றை வார்த்தையில்தான் முழுமை பெறுகிறது. அன்பு இன்று வந்த புதுக்கவிதை அல்ல; மாறாக, தொன்று தொட்டே காவியம் படைத்துள்ளது என்பதற்குப் பின்வரும் சான்றோர்களின் கூற்று சாட்சியம் பகர்கின்றது. வள்ளலார் தனது திருவருட்பாவில் 6-வது அத்தியாயத்தில் அன்பைக் குறித்து அழகாகப் பாடியுள்ளார்:
‘அன்பே சிவம் என அறிந்தார் அறிவொன்று
அன்பின்றி
அமரரோடும் இராதே.
அன்புடையார்
எல்லாம் உளரென்பர்
இதுவும்
இல்லாரே அல்லாதார் என்பதோர் அறம்’
பாடலின்
பொருள் அன்பே சிவம் என உணர்ந்தவர்களை உண்மையான
அறிவாளிகள், அன்பில்லாதவர்கள் தேவர்கள் கூட இருந்தாலும் இறைவன் அருளைப் பெற முடியாது. இன்னும் சிறப்பாகக் கூற வேண்டுமெனில், நமது தமிழ் மூதாட்டி அவ்வை தனது குரல் வெண்பாவில்
‘அன்பிற்கினியவொரு இல்லையாம் உயிர்நிலைக்கும் துன்பிற்குத் தானேழும் அணி’
பாடலின்
பொருள்: அன்பைப் போல இனிமையானது ஒன்றும் இல்லை. அது துன்பங்களைத் தானாகவே பரிகரிக்கக்கூடிய மருந்தாகும். ஆம், இங்கு நாம் சிந்தித்துக் கொண்டிருக்கும் தலைப்பு இக்குறட்பாவோடு முற்றிலும் பொருந்துகிறது.
‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்ற உலக வழக்குச் சாத்தியமாக வேண்டுமெனில், அங்கு அன்பே அடித்தளமாக இருக்க வேண்டும். உயிரோட்டமான வாழ்விற்கு உறவுகள் பலப்பட வேண்டும். உறவுகள் உயிரோட்டம் பெற உள்ளொன்று, புறமொன்று பேசித் திரியாமல், பார்க்காத ஒன்றைப் பார்த்தேன் எனக் கூறி பிறரைப் பற்றித் தவறான தகவல்களைப் பரப்புவதும், கேட்காத ஒன்றைக் கேட்டேன் என அடுத்தவரைப் பற்றி
அநியாயமாக அறிவிப்பதும் ‘இப்படியும் இருக்கலாம்’ எனப்
பொய்யான ஊகத்துக்கு உறுதுணை புரிவதைக் களைந்து, திறந்த, பக்குவப்பட்ட மனத்தோடு எல்லாரிடமும் அன்பாக, எளிமையாக, பகிர்வு என்ற பண்போடு காயப்படுத்தாத வார்த்தைகளைப் பேசி, ஆணவம் இல்லா அன்பைக் காட்டி வாழ முற்பட வேண்டும்.
எனது
இனம், மதம், சாதி என்ற பெயரால் சமூகத்தைச் சீர்குலைக்கும் அனைத்துவிதமான பயங்கரவாதத்தையும் குழிதோண்டிப் புதைக்க முன்வருவோம். அமைதியில், ஒற்றுமையில், தோழமையில் கூடி வாழ அன்பு என்ற ஆயுதத்தைக் கையில் எடுப்போம். அகிலத்தை அன்பால் வயப்படுத்துவோம்.
அழகிய சிட்டுக்குருவி ஒன்று பறக்க இயலாமல் தாவித்தாவி அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தது. இதைக் கண்ட சிறுவன் ஒருவன் அதனைப் பிடித்து வளர்க்கலாம் என நினைத்து வீட்டிற்கு எடுத்துவந்தான். தன் அன்னையிடம் கொடுத்தான். அன்னையானவள் குருவி ஏன் பறக்க இயலவில்லை என்று சிறகின் தூவல்களைப் பிரித்துப் பார்த்தபோது ஒரு நீளமான நெகிழி (Plastic) நூல் சிக்கி இருந்தது. அதனை மெதுவாக எடுத்துவிட, கண்ணிமைக்கும் நேரத்தில் குருவி சிட்டாய்ப் பறந்து சென்றது.
அன்னை
தன் மகனிடம் “பார்த்தாயா? நாம் ஒரு சிறிய தீச்செயலில் ஈடுபட்டாலும் நம் வாழ்வு குறிக்கோளினை அடைந்துவிட இயலாது. அதனால் பெருந்துன்பங்கள் அடைந்து வேதனைப்பட நேரிடும்”
என்றுரைத்தாள்.
ஆம்,
நம் வாழ்வில் குறிக்கோளினை அடைந்திட வேண்டுமெனில் நமது விருப்பங்கள், நாட்டங்கள், விருப்பு-வெறுப்புகள், செல்வம், புகழ், பதவி, அந்தஸ்து இவை அனைத்தும் நிலையானவை அல்ல என்ற சிந்தனை நம் ஒவ்வொருவருக்கும் வேண்டும். “அனைத்தையும் நான் குப்பை எனக் கருதுகின்றேன்” என்று
தூய பவுல் தனது திருமுகத்தில் குறிப்பிடுகின்றார். வெறுமையிலிருந்து படைக்கப்பட்டான் மனிதன். திரும்பவும் வெறுமையை நோக்கிதான் பயணம் செய்கின்றான். இதனிடையே தன் வாழ்வில் ‘என் வீடு, என் உறவு, என் நாடு, என் மொழி, என் உலகம்’ என்று நம் மனத்தினுள் பெரிய பெரிய கோட்டைகளைக் கட்டி விடுகிறோம். இவற்றைப் பற்றிப் பிடித்துக்கொண்டு வாழ்ந்து வருகிறோம். ஆனால், ஒருசிலர் இவ்வுலக நாட்டங்களிலிருந்து தங்களையே விடுவித்துக் கொண்டு இறைவனுக்காக, இறைமக்களுக்காகத் தங்கள் வாழ்வை அமைத்துக்கொண்டு தனியாகவோ, குழுமமாகவோ வாழ்ந்து மகிழ்கின்றனர்.
‘பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக
பற்று விடற்கு’
(குறள் 350)
எனும்
திருக்குறளைத் திருவள்ளுவர் ஏழு பதங்களில் இரண்டடிகளில் பற்றற்ற வாழ்வினைப் பற்றித் தெளிவாக எடுத்தியம்புகின்றார். எல்லாம் வல்ல இறைவனைப் பற்றுக்கோடாகக் கொண்டு வாழ்பவன்தான் துறவு வாழ்வை மேற்கொள்பவன் என்று விளக்குகிறார்.
பற்றற்ற
வாழ்வு அமைதியையும் மகிழ்ச்சியையும் நிறைவான ஆன்மிக வாழ்வினையும் வழங்குகின்றது. நேர்மறையான செயல்பாட்டிற்கும் ஆரோக்கியமான சமநிலைக்கும் வித்திடுகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர்தான் புனித குழந்தை தெரஸ். சிறுவயதிலேயே இறைவனை அன்பு செய்ய வேண்டும், அவரோடு வாழ வேண்டும் என்ற ஆழமான உணர்வினால் உந்தப்பட்டவளாய், தந்தை, சகோதரிகள் இவர்களை விட்டுப் பிரிந்து தனது பதினைந்தாவது அகவையில் கார்மேல் துறவு வாழ்வு வாழ நாட்டம் கொண்டாள்.
‘அன்பு ஒன்றுதான் நம்மைக் கடவுளுக்கு உகந்தவர்களாக்குகிறது; அன்பின் பொருட்டு என் வீட்டு உடைமைகள் அனைத்தையும் தியாகம் செய்தும் அந்தத் தியாகத்தை நான் ஒரு பொருட்டாய் எண்ணவில்லை’ என்று
தனது பற்றற்ற வாழ்வின் தன்மையை உணர்த்துகிறாள்.
‘இவ்வுலகில் எவ்வகை ஆறுதலையும் இழந்தவளாய் வாழ்வதே எனக்குப் பேரின்பம்’
என்று தன் வரலாற்று நூலில் குறிப்பிடுகின்றாள். பற்றுகளகற்றி இறைப்பற்றில் வாழும்போது மனிதன் புனிதனாகிறான். துன்பங்கள் அனைத்தையும் இறைவன் தரும் வரமாகக் கண்டாள். தனக்கு வந்திருந்த எலும்புருக்கி நோயினைக்கூட தன்மீது கடவுள் வைத்திருந்த அன்பின் வெளிப்பாடாக நினைத்தாள்.
இறைவனின்
அரசில் நாம் பங்குபெறும்போது நம் வாழ்வின் குறிக்கோள் நிறைவடைகிறது. இறைவன் கரங்களில் தவழும் பந்து என்றே தன்னை நினைத்துக்கொண்டு இறைத்திட்டம் தன்னில் நிறைவேறட்டும் என்று வாழ்ந்து வந்தவள் தான் ‘சின்ன ராணி’ என்றழைக்கப்படும் தூய குழந்தை தெரேசா!
தெரேசா
இறைவனை முழுமையான அன்பினால் பற்றிக்கொண்டாள். இவ்வுலகம் நிலையானது அல்ல; மற்றொரு வாழ்வு உண்டு என்று எதிர்நோக்கிய தூய குழந்தை தெரேசா, ஒவ்வொரு நொடியையும் விண்ணக வாழ்வினை எதிர்நோக்கியே தனது ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தாள். தனது பற்றுக்கோடு தன் தலைவன் இயேசுதாம் என முழுமையாகக் கண்டுணர்ந்தாள்.
இவ்வுலகப் பற்றுகளிலிருந்து நாமும் விடுபட்டு நம்பிக்கை, எதிர்நோக்கு, விசுவாசம் எனும் பண்புகளைப் பற்றிக்கொண்டு நம் வாழ்வு புனிதமடைய நடைபோடுவோம்.
உண்மையான இறைவேண்டல் என்பது மனதார இறைவனை நம்பி, அவர்மீது முழுமையான பக்தி கொண்டு, அவரின் வழிகாட்டுதலின்படி நடப்பதாகும். இது வெறும் வார்த்தைகளால் இறைவனை வேண்டுவது மட்டுமல்ல, நம் செயல்களிலும் எண்ணங்களிலும் இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றுவதாகும்.
இறைவனோடு
உரையாடுவது, உறவாடுவதே இறைவேண்டல். இந்த உரையாடல், உறவாடல் பல்வேறு பரிமாணங்களில் வெளிப்படுத்தப்பட வேண்டும். மனித ஆளுமையின் தளங்களான உடல், மனம், ஆன்மா, உணர்வுகள், மனவலிமை ஆகிய அனைத்துத் தளங்களும் இறைவேண்டலில் இணையும்போதுதான் அது முழுமையானதாக மாறுகிறது. உடலாலும் உள்ளத்தாலும் இறைவனோடு உறவாட வேண்டும் என்பதை எளிதில் புரிந்துகொள்கிற நாம், ஆன்மாவிலும் இறைவேண்டல் செய்யவேண்டும் என்பதையும் உள்வாங்கி அதைச் செயல்படுத்தவேண்டும்.
ஆன்மா என்றால்
என்ன?
என்னும்
கேள்விக்கு
நம்
கத்தோலிக்கத்
திரு
அவை
விடை
தருகிறது...
உடலையும்
ஆன்மாவையும் ஒருங்கே கொண்டவரே மனிதர்கள். அவர்களுக்குள் பருப்பொருள் சார்பற்ற, அழிவுறா ஓர் ஆன்மா இருக்கிறது என்கிறது வத்திக்கான் திரு அவையின் இன்றைய உலகில் திருச்சபை (எண் 14). எப்போதெல்லாம் நமக்குள் இறைவன் பற்றிய தேடல் ஆழப்படுகிறதோ, அப்போதெல்லாம் நம் ஆன்மாவின் சலனத்தை நாம் உணரலாம். எப்போதெல்லாம் ஆண்டவரின் சந்நிதியில் இனம் புரியாத அமைதியும் மகிழ்வும் நம்மை ஆட்கொள்கிறதோ, அப்போதெல்லாம் கடவுள் நம் ஆன்மாவைத் தொடுவதை நாம் அனுபவிக்கலாம். “என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது; என் உள்ளமும் உடலும் என்றுமுள்ள இறைவனை மகிழ்ச்சியுடன் பாடுகின்றது” (84:2) என்னும்
திருப்பாடல் வரிகள் நமது இறைவேண்டலில்
நம் உடல், மனம், ஆன்மா
இவை மூன்றுமே இணைய வேண்டும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு.
இறைவேண்டலின்போது
நம் ஆன்மா அகமகிழும் என்பதை “நான்
உமக்குப் புகழ் பாடுகையில் என் நா அக்களிக்கும்; நீர்
மீட்டுள்ள என் ஆன்மாவும் அக்களிக்கும்” (திபா 71:23) என்னும் வரிகள் பறைசாற்றுகின்றன. மகிழ்ச்சியின்போது மட்டுமல்ல, துயர வேளைகளிலும் நம் உள்ளத்தோடு நம் ஆன்மாவும் இறைவனை நோக்கி உயர வேண்டும். எனவே தான், “இஸ்ரயேலின் கடவுளே, கடும் துயரில் உழலும் ஆன்மாவும் கலக்கமுறும் உள்ளமும் உம்மை நோக்கி கூக்குரலிடுகின்றன” (பாரூ
3:1) என்கிறார் இறையடியார் பாரூக்கு.
உண்மையான இறைவேண்டுதலின்
அம்சங்கள்
இறைநம்பிக்கை:
கடவுள் இருக்கிறார், அவர் வல்லமை மிக்கவர், அவர்மீது முழுமையான நம்பிக்கை வைக்கவேண்டும்.
பக்தி: இறைவனை நேசிப்பதும், அவரை எப்போதும் நினைவில் கொள்வதும், அவருடைய கட்டளைகளை மதிப்பதும் பக்தி.
வேண்டுதல்:
இறைவனிடம் மனம் திறந்து பேசுவது, நம் குறைகளைச் சொல்வது, அவருடைய ஆசிர்வாதத்தை வேண்டுவது.
நன்றி செலுத்துதல்:
இறைவன் நமக்கு அளித்த அனைத்து ஆசிர்வாதங்களுக்கும் நன்றி செலுத்துவது. கடவுள் வழிநடத்தல், இறைவனால் போதிக்கப்பட்ட வழியில் நடப்பது, அவருடைய கட்டளைகளைப் பின்பற்றுவது.
உண்மையான இறைவேண்டுதலின்
பயன்கள்
மனஅமைதி,
துன்பங்களிலிருந்து விடுதலை, சந்தோஷம், சரியான வழிகாட்டுதல். உண்மையான இறைவேண்டுதல் என்பது ஒரு பயணம். அது வாழ்நாள் முழுவதும் இறைவனை நோக்கி நாம் மேற்கொள்ளும் பயணம். இந்தப் பயணத்தில் நாம் சோதனைகளையும் துயர்களையும் சந்திக்க நேரிடலாம்; ஆனால், இறைவனை நம்பி அவருடைய வழிகாட்டுதலின்படி நடந்தால் வெற்றி நிச்சயம்.
குழந்தை தெரேசாவும்
இறையனுபவமும்
குழந்தைகளைப்போல
தன்னம்பிக்கையையும் கடவுள் நம்பிக்கையையும் அடிப்படையாகக் கொண்ட ஓர் எளிய ஆன்மிகத்தை உருவாக்கினார் குழந்தை தெரசா. அவரது சிறு வழி என்னும் ஆன்மிகம் அசாதாரணமான சிறப்பான செயல்களைச் செய்வதில் அல்ல; ஆனால், வாழ்க்கையில் உள்ள சாதாரண எளிய செயல்களை நன்றாகவும் சிறப்பாகவும் பேரன்புடனும் செய்வதாகும். அவர் செய்யும் ஒவ்வொரு சிறு சிறு செயல்களையும் கடவுளுக்கு அர்ப்பணித்தார்.
அவர்
நம்பியது, படிப்பித்தது எல்லாமே கடவுளின் அருள்தான் என்பதாகும். உண்மையான அன்போடும் ஆவலோடும் கவனித்தால், கடவுளின் திருமுகத்தையும் அவரது உடனிருப்பையும் எல்லா மனிதரிலும், நமது வாழ்க்கையின் எல்லாச் சூழ்நிலைகளிலும் அனுபவிக்க முடியும் என்கிறார் புனித குழந்தை தெரேசா. இவரது ஆன்மிகம் எளிமையானது, சிறியது,
மிகவும் ஆழமானது. மனித
நேயம் உடையது.
அன்பான
இறைவா! எங்கள் அன்றாட வாழ்வில் ஆழமாக இறைவேண்டல் செய்யக்கூடிய நல்ல மக்களாக எங்களை மாற்றுவீராக! இறைவேண்டல் செய்யும்பொழுது உமது பிள்ளைகளுக்குரிய பண்புகளோடு செய்ய அருளையும் ஆற்றலையும் தாரும்.
‘அன்பு என்பது
ஆன்மாவின்
மணியோசை!
அதை
இசைத்தால் எழுவது அன்பின் வெளிப்பாடு!’
‘அன்பே எனது அழைப்பு’ என்று உணர்ந்தவளாய், தனது 15-வது வயதில் இறைவனின் கரம் பற்றிப்பிடிக்கத் தன்னையே தியாகமாக்கியவள் சிறுமலர் குழந்தை தெரேசா என்ற சின்ன ராணி!
‘கிறிஸ்துவே என் அன்பு, அவரே என் நிறைவாழ்வு, அன்புக்காக இறப்பதே என் நம்பிக்கை, இறைவனின் அன்பில் நிலைத்திருப்பதே எனது ஆவல், அன்புக்காக வாழ்வதே என் வாழ்வின் இலக்கு’ என்று பார்போற்றும் குழந்தை தெரேசாவின் ‘அன்றாட வாழ்வில் அன்பின் வெளிப்பாடுகள்’ எங்ஙனம்
அமைந்திருக்கின்றன என்பது பற்றிய ஒரு பார்வை...
குழந்தை
தெரேசா தன்னுடைய ஆன்மிக வழியை ‘அன்பின் வழி’ என்று தனது நூல்களில் சித்தரிக்கின்றார். தனது அழைத்தலின் திறவுகோலே அன்புதான். திரு அவை இதய அன்பினால் பற்றிக் கொண்டிருக்கின்றது. அந்த அன்புத் தீ அணைந்து விடக்கூடாது;
அதற்காக நான் செபிக்க வேண்டுமென்று நற்கருணை முன் முழந்தாளிடவும் அவள் தயங்கவில்லை. அன்பின் வெளிப்பாடாகவே தன் செயல்கள் ஒவ்வொன்றையும் குழந்தை தெரேசா பார்த்தாள். அன்பு என்ற உணர்வு அனைத்து அழைத்தல்களையும் தாங்கி நிற்கின்றது. தெரேசா அன்பைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘மனித அன்பு குறைவுள்ளது, முடிவுடையது, நிரந்தரமற்றது; ஆனால், நம் கடவுள் நம்மிடம் காட்டுகின்ற அன்பானது முடிவில்லாததாகும்; இதனை ஆழம் பார்க்கவோ, எல்லை காணவோ, அளந்து பார்க்கவோ நம்மால் இயலாது’ என்கிறார்.
குழந்தை
தெரேசாவின் மனம் மாசற்ற, கள்ளங்கபடமின்றி அனைவரிடமும் வேற்றுமை பாராட்டாமல் அனைவரையும் அன்பு செய்யும் இதயமாக அமைந்திருந்தது. தன் அன்னை தனது சிறுவயதிலேயே விண்ணகம் நோக்கிச் சென்றபோது தன் அன்னையிடம் காட்டிய அன்பை இயேசுவின் தாய் அன்னை மரியாவிடம் வெளிப்படுத்தினாள். அனுதினமும் மாதாவின் சுரூபத்தின் முன் தன் தோட்டத்து மலர்களால் அலங்கரித்தாள். தனது மூத்த சகோதரி பவுலினைத் தனது அன்னையாக இருக்க வேண்டும் எனக் கேட்டு, சிறு சிறு செயல்களால் அவர்களை மகிழ்விப்பதில் ஆர்வம் காட்டினாள்.
“நீங்கள் குழந்தைகளாக மாறாவிடில் விண்ணரசில் நுழையமாட்டீர்கள்; குழந்தையைப் போல் தன்னைத் தாழ்த்திக் கொள்ளுகிறவன் எவனோ, அவனே விண்ணரசில் பெரியவன்”
(மத் 18:3-4) என்ற இறைவார்த்தை குழந்தை தெரேசாவின் வாழ்விற்கு விதை போன்று அமைந்தது. தனது வாழ்வில் அன்பின் வெளிப்பாடாகக் குடும்ப வாழ்விலும் தன் தந்தையோடும் உறவுகளோடும் சகோதரிகளிடமும் குழந்தை உள்ளம் கொண்டு நடைபயின்றாள். அத னையே தான்
வாழ்ந்த கார்மேல் துறவற குழுமத்திலும் கடைப்பிடித்தாள்.
தன்னோடு
வாழ்ந்த துறவற சகோதரிகளை மகிழ்விக்க கவிதைகள் பல எழுதினாள். சிறு
சிறு துணுக்குகளையும் நகைச்சுவைகளையும் கூறி அனைவரையும் மகிழ்வித்தாள். முதிர்வயதுடைய துறவிகளுக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து அவர்களை மகிழ்வித்தாள். அனைத்தையும் அன்பர் இயேசுவிடம் தான் செய்கின்ற புண்ணிய மலர்களுக்கேற்ப ஆன்மாக்களைத் தரவேண்டும் என்று விண்ணப்பித்தாள்.
ஒருமுறை
நாளிதழில் வந்த குற்றவாளி பிரான்சீன் என்ற மனிதன் மனம் மாறுவதற்காகத் தியாகத்துடன் செப மலர்களை அர்ப்பணித்தாள். அது மட்டுமில்லாமல், கடவுளிடம் அவன் மனம் மாறியதற்குரிய அடையாளம் தரவேண்டுமென்று மன்றாடினாள். பிரான்சீன் தனது தண்டனையைப் பெறும் முன், தன் பாவத்திற்கு ஒப்புரவு பெற்று குருவானவர் கரங்களிலிருந்த சிலுவையை முத்தம் செய்தான் என்ற செய்தி கேட்டு குழந்தை தெரேசா ஆனந்தமடைந்து, இயேசுவைக் கட்டிப் பிடித்துக்கொண்டு நன்றி கூறினாள். இது இயேசுவின்மீதும் பிறர்மீதும் அவள் கொண்ட அன்பின் வெளிப்பாடாக அமைந்திருந்தது.
புனிதர்கள்
தங்கள் வாழ்வில் கடவுள்மீது அன்பு செலுத்துவதைத் தங்கள் வாழ்வின் மையமாகக் கருதினர். அந்த அன்பானது, இருளில் மிளிர்கின்ற ஒளி இருளை அகற்றி, தன் கதிர்களால் பிறர் கண்கள் காண வழிவகுப்பதுபோல, கடவுள் மீது வைத்துள்ள அன்பு பிறர்வாழ்விலும் செயல்பட வைத்தது. ‘ஆண்டவர் இயேசுவின் அன்பு என்னை உந்திக் கொண்டேயிருக்கிறது’ என்று
அடிக்கடி தன் இதயத்தில் கூறிக்கொள்வாள். துறவு நாள்களில் துணி துவைத்துக் கொண்டிருக்கும்போது பிற சகோதரிகள் துணி சுத்தம் செய்யும் தண்ணீர் தன் முகத்தில் படுகின்றபோதும் மனங்குமுறாமல் அவர்களுக்கு உதவி செய்து அனைவரின் அன்பையும் பெற்றாள்.
‘நன்மை இருக்கும் இடத்தில் தீமையும் அலைமோதும்’
என்பதற்கேற்ப குழந்தை தெரேசா எப்போதும் தன்னைக் குறை கூறிக்கொண்டிருக்கும் ஒரு மூத்த சகோதரியைக் கண்டபோதெல்லாம் மனதினுள் ஒருவித பயஉணர்வு தோன்றுவதை இயேசுவிடம் கூறி, ‘அன்பிற்குப் பதில் அன்பே’ என்ற நுணுக்கமான கருத்தை அந்தச் சகோதரியிடம் தனது அன்புச் செயல் வழியாக எண்பித்து, அவர்களது அன்பையும் பெற்றாள். இயேசுவிடம் கொண்டிருந்த ஆழமான பக்தி, நோயாளிகளிடத்தில் அவர் காட்டிய பரிவு, கருணை போன்ற நற்பண்புகளில் சிறந்து, வாழ்நாள் முழுவதும் தன்னை அர்ப்பணித்தாள்.
அன்பு
என்பது ஓர் அற்புதமான உணர்வு. இது ஒருவருக்கு ஒருவர் அன்பைப் பரிமாறிக்கொள்ளச் செய்கிறது. குழந்தை தெரேசா கடவுள்மீது அன்பும் ஆழ்ந்த பக்தியும், ஏழை எளியவர், நோயாளிகள், பாவிகள்மீது அன்பும் கருணையும் காட்டினார். அவரது வாழ்வில் அமைதியையும் பொறுமையையும் கடைப்பிடித்தார். 9 ஆண்டுகள் துறவு வாழ்வு வாழ்ந்தார். மொத்தம் 24 ஆண்டுகள் உலகத்தில் வாழ்ந்தார். இன்று உலகம் போற்றும் புனிதையாக, மறைவல்லுநராக, மறைபோதக நாடுகளின் பாதுகாவலியாக விளங்குகின்றாள். அவரது அன்பின் செயல்பாடுகள் ‘சிறு வழி என் இயேசுவின் அன்பின் வழி’ என்ற நோக்கில் விண்ணிலிருந்து மலர்களாகிய வரங்களை நம்மில் பொழிந்துகொண்டிருக்கிறாள்.
நம்
அன்றாட வாழ்விலும் பிறரிடம் அன்போடு உரையாடுவதிலும் உறவாடுவதிலும் உதவி செய்வதிலும் பிறர் துன்பங்களில் பங்கேற்பதிலும், பிறரைப் பாராட்டி மகிழ்வித்து இறைச் செயல்களைப் பிறருக்குச் செய்து, அன்பின் வழியில் வாழ்ந்திட நடைபோடுவோம்.