இந்திய இந்துத்துவர்கள் பேசும் தேசியம், ‘இந்து தேசியம்’ என்று அழைக்கப்பட்டாலும், உண்மையில் இந்து தேசியமே இவர்களின் இந்திய தேசியம்! இவர்கள் வலிந்து பேசும் தேசியம் எல்லாரையும் உள்ளடக்கிய தேசியமாக இருக்க முடியாது. இந்தியா என்ற ஒரு நாடு ஆங்கிலேயர் ஆட்சியின்போது அரசியல் ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்ட (integrated) ஒன்று என்பதும், இந்நாடு கலாச்சார ரீதியாகப் பன்முகத் தன்மையுடையது என்பதும் உண்மையாயிருக்க, ஒரு குறிப்பிட்ட சமயத்தின் அடிப்படையிலான தேசியம், உள்ளடங்கிய தேசியமாக இருத்தல் எப்படிச் சாத்தியம்?
உண்மையான
தேசிய உணர்வு எல்லைகளைக் கடந்த ஒன்று. இந்துத்துவர் பேசும் ‘இந்து தேசியம்’ அல்லது கலாச்சாரத் தேசியம் அப்படியல்ல. பெரும்பான்மை மத அடிப்படையில் கட்டமைக்கப்பட்டு,
சிறுபான்மையினர் மத அடையாளங்கள் ஒதுக்கப்பட்டு
ஓரங்கட்டப்படலால், இத்தேசியம் மக்களை உள்ளடக்குவது அல்ல; இத்தேசியம்
சமூகத்தின் ஒருசாராரை ஒதுக்குவது. ‘ஒற்றுமை’ என்னும் பெயரில், ‘உள்ளடக்குவது’ என்னும்
பெயரில் பிரிவினையை வளர்க்கும் இவர்களின் அரசியலை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
‘ஒற்றுமை’ என்ற கோஷத்தை மக்கள் முன்பு வைக்கும் இந்துத் தேசியர்களின் உள்நோக்கம் ஒற்றுமையல்ல, பிரிவினையே! கடந்த ஆண்டு நடந்து முடிந்த மராட்டிய மாநிலத்திற்கான தேர்தல் பாரதிய சனதா கட்சி எதிர்பாராத அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கண்டபோது, இவ்வெற்றிக்கான காரணத்தைப் பாரதிய சனதாவினர் கூறியதை ஊடகவழி அறிந்தபோது வியப்பளித்தது. ‘இந்தியா’ கூட்டணியின் இந்து மதம் பற்றிய பொய்யான பிரிவினை பற்றிய பிரச்சினைதான் மக்கள் மத்தியில் எதிர்க்கட்சியினர் மீது அவநம்பிக்கையை உருவாக்கியுள்ளது. அது என்ன பிரிவினை பற்றிய பிரச்சினை?
இந்து
மதம் சார்ந்த அரசியலை முன்னெடுப்போர் எப்போதுமே இந்து மதம் பேசும் சாதியத்தை எதிர்ப்பதில்லை. பிறப்பின் அடிப்படையிலான சாதிப்பிளவைத் தர்மமாகக் கருதும் இவர்கள், சாதி உருவாக்கிய ஏற்றத்தாழ்வைச் சமூகநீதியின் அடிப்படையில், இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நிவர்த்திக்க முயன்ற அரசமைப்பையும் இந்துத்துவ அரசியலார் ஏற்றதில்லை. மண்டல் குழு பரிந்துரையைப் பெரிய அளவில் எதிர்த்து அரசியல் செய்தவர்கள் இவர்கள். சாதிய ஏற்றத்தாழ்வையும், சாதியப் பாகுபாட்டையும் கடுமையாக எதிர்த்த அம்பேத்கரையும், தந்தை பெரியாரையும், பிற சாதி ஒழிப்புப் போராளிகளையும் பிரிவினைவாதிகளாகவே இவர்கள் கருதினர்.
சாதி
ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களுக்கான நீதி கிடைக்கும் வகையில் எதிர்க்கட்சியினர் முன்வைத்த சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புக் கோரிக்கையை ‘இந்துகளைப் பிளவுபடுத்த முன்னெடுக்கப்பட்ட சதி’ என்கிற பிரச்சாரம் மக்களிடம் சரியாகச் சென்றதால், ‘இந்துகளின் ஒற்றுமையைக் குலைத்தோர்க்கு மக்கள் தோல்வியைக் கொடுத்தனர்’ என்றனர்
சனாதனிகள். அதாவது, உண்மையாகவே பிளவுபடுத்தும் சாதிய ஏற்றத்தாழ்வைச் சமன் செய்யும் நோக்கில் எதிர்க்கட்சிகள் வைத்த கோரிக்கை இவர்கள் பார்வையில் பிரிவினை! சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இவர்கள் பார்வையில் பிரிவினை! ஆனால், சாதியப் பிளவுகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் பாகுபாட்டினையும் அப்படியே ஏற்றுக்கொண்டால் ஒற்றுமை (unity). பிரிவினை, ஒற்றுமை எனும் நிலைப்பாடுகள் ஒவ்வொன்றும் தேவைக்கேற்ப, நம் வசதிக்கேற்பப் பயன்படுத்திக்கொள்ளும் வினோதப்போக்கினை இவர்களின் அரசியல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கவனிப்போர் அறியலாம்.
திராவிடமும் பிரிவினையும்
அண்மையில்
நடிகர் கமல்ஹாசனின் ‘தமிழிலிருந்து கன்னடம் பிறந்தது’
என்று பேசிய பேச்சொன்று பெரும் சர்ச்சையானது. கன்னட நடிகர் திரு. சிவராஜ்குமார் முன்னிலையில், கமல் அவர்கள் எந்தவித உள்நோக்கமுமின்றி வெளியிட்ட இக் கருத்தைக் கன்னட மொழிக்கெதிரான மிகப்பெரிய அவமதிப்பான கருத்தாக எடுத்துக்கொண்டு வேகமாக எதிர்வினையாற்றினர். கர்நாடக மாநிலத்தின் முதல்வர் சித்தராமையா, ‘கமல்ஹாசனுக்கு வரலாறு தெரியாது’
என்றார். தமிழிலிருந்து கன்னடம் பிறந்ததாகக் கூறிய கமலின் திரைப்படம், கர்நாடகாவில் திரையிடப்படவில்லை. கர்நாடக உயர் நீதிமன்றமும் கமல்ஹாசனை மன்னிப்புக் கோரக் கேட்டுக்கொண்டது. இவர்களுக்கெல்லாம் மேலாக, கர்நாடகத்தின் பா.ச.க.
தலைவர்கள் கமலின் இக்கருத்துக்கு எதிராகத் திரண்டெழுந்தனர். இந்தியப் பண்பின் ‘ஒருமை’ பற்றி எப்போதும் பேசும் பாரதிய சனதா, கன்னடத்தை அவமதித்ததாக ஏன் பேசவேண்டும்?
“இந்தியக் கலாச்சாரம் தனித்த பண்புடையது; இப்பண்புகள் ஒன்றையொன்று சார்ந்தவை. இந்திய மொழிகள் வெவ்வேறு வகையாகப் பேசப்பட்டாலும், இம்மொழிகள் அடிப்படையில் ஒன்று” என்பார் கோல்வால்கர். அனைத்து மொழிகளுக்கும் அடிப்படை ஒற்றுமைக்கூறுகள் உள்ளன என்று கூறும் இந்த ‘ஒற்றைக் கலாச்சாரக் காவலர்கள்’
கமல் அவர்களின் மொழி பற்றிய கூற்றுக்கு ஏன் கடுமையான எதிர்வினை ஆற்றவேண்டும்? இந்த ஒரு மொழி, ஒரு கலாச்சாரக் காவலர்கள் கமல் கருத்தை மதித்திருக்க அல்லவா வேண்டும்!
‘மொழியால் பிரிவினை பேசுவோர்’
என்று நாளும் நம்மீது பழிதூற்றும் மதவாதிகள், கன்னட மொழியை இகழ்ந்ததாகக் கன்னட மொழிவெறியர்களோடு அணிசேர்ந்து கூச்சல் போடுவது போலித்தனமில்லையா? இரு மாநில மொழிகளுக்கிடையே எழும் முரண்கள் அல்லது மோதல்கள் ‘ஒரே தேசம்’ எனும் கருத்தியலுக்கு முரண் சேர்ப்பது என்ற கருத்தை மறந்துவிட்டார்களா? இக்கூச்சல் இவர்கள் முன்வைக்கும் இந்திய ஒருமைக்கு, ஒற்றுமைக்கு எதிரானது அல்லவா?
‘இந்திய மொழிகளுக்கெல்லாம் சமஸ்கிருதமே தாய்மொழி’
என்றும், இம்மொழி தேவபாஷை என்றும் கூறி வந்த வடவர்க்கு, கால்டுவெல் கண்ட திராவிடம், திராவிட மொழிகளின் தனித்த பண்பு, திராவிட மொழிகளுள் சீரிளமை குன்றாமல் தனித்தியங்கும் தன்மை தமிழுக்கு உண்டு என்று வரையறுத்ததால், கால்டுவெல் இன்றைய இந்துத்துவக் கருத்தியலாளர்க்குப் பிரிவினைவாதியாகக் கருதப்பட்டார். கால்டுவெல் உருவாக்கிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் கால்டுவெல்லின் அறிவுப் பார்வையின் விளைவு. அன்றைய கோல்வால்கரிலிருந்து இன்றைய ஆர்.என். இரவி வரை திராவிடத்தைக் கண்ட கால்டுவெல் பிரிவினைவாதி. ஆரியம் வேறு, திராவிடம் வேறு. இரண்டும் வெவ்வேறு மொழிக்குடும்பங்கள். தனது நீண்ட நெடிய ஆய்வில் இதைக் கண்ட கால்டுவெல் பிரிவினை வாதியாகச் சித்தரிக்கப்படுகிறார். ‘ஒருமை’ பேசும் இந்துத்துவர்கள், கால்டுவெல் பேசும் உண்மையைப் ‘பிரிவினை’
என்கின்றனர். தமிழ், கன்னடம் எனும் குடும்ப மொழிகளின் தொடர்பை மகிழ்வோடு பேசும்போது, பிரிவினைக் கோஷமிடுகின்றனர். தமிழின் பெருமையை ‘வியந்து போற்றும்’
பிரதமர் மோடி, தமிழ்-கன்னட மொழிப் பிரச்சினையைக் கண்டுகொள்வதில்லை.
‘எல்லாருக்குமான நாடு’,
‘எல்லாருக்குமான வளர்ச்சி’
என்று நாவளவில் பேசிக்கொண்டு, நாளும் நடத்தும் பகையரசியலில் மத ரீதியான ஓர்மை
(Polarism) இருக்கிறதே
தவிர, ஒற்றுமைக்கான அல்லது உள்ளடக்குதலுக்கான எந்த முயற்சியும் இல்லை. உத்தரப்பிரதேச முதல்வர் அம்மாநிலத் தேர்தலின்போது ‘எண்பதுக்கும் - இருபதுக்குமான போட்டியில் வெல்லப்போவது யார்?’ என்று சவால் விட்டார். இச்சவாலில் இவர் யாரை ஓர்மைப்படுத்தினார்? யாரை ஒதுக்கிக்காட்டினார்?
தீவிரவாதத்தை
ஆதரிக்கும் நாடாகப் பாகிஸ்தானைத் தொடர்ந்து காட்டிவரும் இந்திய அரசு, பாகிஸ்தான் என்ற நிலப்பரப்பையும், அதனை ஆள்வோரை மட்டுமே எதிரிகளாகக் காட்டுவதோடு, இந்தியாவில் ஏற்கெனவே கட்டமைக்கப்பட்ட இசுலாமியர் எதிர்ப்பை உறுதிப்படுத்தத்தான் பாகிஸ்தானுக்கு எதிரான கோஷம் என்பதையும் மறந்துவிடல் கூடாது. ஒரு பகை நாட்டைக் கட்டமைக்கும்போது, ஏற்கெனவே கட்டமைத்த பகைச்சமூகமே இங்கு முதன்மை பெறுதலை மறந்துவிடல் கூடாது.
அண்மையில்
நடைபெற்ற ‘சிந்தூர்’
ஆப்ரேஷனின் உள்ளடக்கம், இந்துப் பெண்களின் திலகம் அழிக்கப்பட்டது எனக் காட்டுவதோடு, இசுலாமியரைக்
குற்றவாளிகளாக்குவதே அவர்களின் உள்நோக்கம் என்பதையும் மறந்துவிடக்கூடாது. மதப் பெரும்பான்மையினரை ஓர்மைப்படுத்துதல், மத ரீதியாக மக்களை
ஒன்றுபடுத்துதல் என்பது நோக்கமாக இருந்தால் வரவேற்கலாம். இந்த நோக்கம் எல்லா மதத்தினருக்கும் உகந்ததே. மத ரீதியாக அம்
மதம் சார்ந்தோரை, அரசதிகாரத்தைக் கைப்பற்றுதலுக்காகச் செய்யப்படுமாயின் இதன் பெயர் ஒற்றுமை அல்ல. பெரும்பான்மை மதம் சார்ந்தோரை ஒருங்கிணைத்து அரசியல் ஆதாயம் தேடுவது. இதைத்தான் மதவாத அரசியல் என்கிறோம்.
‘ஒரே தேசம், ஒரே கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே தேர்தல்’ - இது இந்தியாவெங்கும் ஓங்கி ஒலிக்கும் ‘ஒற்றை’ முழக்கம்!
‘ஒரே’ அல்லது ‘ஓர்’ அல்லது ‘ஒன்று’ என்பது ஒரு வசீகரமான சொல் என்பதில் ஐயமில்லை. எங்கும் நிறைந்த பரம்பொருளை ‘ஒருவன்’ என்கிறோம். ‘ஒன்று’ என்ற சொல்லுக்கு ‘உயர்வு’ அல்லது ‘ஒப்பற்ற’ என்ற பொருள்களும் உள்ளன. ‘இந்தியா’ எனும் நாடு ஒன்று; அதன் மக்கள் ஒன்று; புவிப் பரப்பு ஒன்று. இவ்வொன்றின் உள்ளடங்கிய பொருள் பல சிறப்புகளை உள்ளடக்கியதால்
மக்களைக் குறிப்பாக, குடிமக்களை எளிதாக ஈர்க்க முடிகிறது.
ஒருவன்,
ஒன்று, ஒற்றை என்ற சொற்கள் வெறும் எண்கள் மட்டுமல்ல; இந்தச் சொற்களின் பின்னே ஒரு கலாச்சாரம் இருப்பதையும், இதன் பின்னே ஓர் அரசியல் இருப்பதையும் காணமுடியும். இந்தப் பின்னணியையும் கண்டுகொள்ள முடியாதவர்கள், கண்டுகொள்ளும் ஆற்றல் பெற்ற வகையில் இவ்வழகிய சொல்லை அறிமுகம் செய்கிறவர்கள் பார்த்துக்கொள்கின்றனர். ஒன்று என்ற சொல் இரண்டினை மறுப்பது; இரண்டு என்பது மற்றொன்றின் இருப்பை ஏற்பது! எளிமையாகக் கூறுவதானால் அல்லது இன்றைய அரசியல் வழக்கில் கூறுவதானால் பன்மையை மறுப்பது!
ஒருமை
அல்லது பன்மை என்பது வெறும் சொற்கள் அல்ல; பன்மை என்ற சொல் மற்றொன்றை ஏற்பது. இன்னொன்றை ஏற்பதில் சமூக உணர்வு இருக்கிறது. ஒற்றையில் அல்லது ஒன்றில் தொக்கி நிற்கும் பண்பு எது?
ஒற்றை,
ஒன்று என்பது எதேச்சதிகாரத்தின் வடிவம். ‘நான்’
(I am) எனும்
இச்சொல்லில் ‘நாம்’ இல்லை. ‘நாம்’ என்ற சொல் உள்ளடங்கும் சொல். நாம் என்ற சொல் அனைவரையும் உள்ளடக்கியது என்பதுபோல், ஒன்றைத் தவிர்த்து இரண்டு என்ற சொல்லிலும் உள்ளடங்கும் சொல்லிலும் உள்ளடங்கிய பண்பு (Inclusiveness) உண்டு.
‘ஒன்று’ என்பது சனநாயகத்திற்கு முரணானது. ‘நான்’ என்ற சொல்லில், ‘நான்’ என்ற சொல் உள்ளடக்கும் ஒற்றையில், பன்மை இல்லாதபோது அங்குச் சனநாயகம் இல்லை.
‘சனநாயகம்’
என்றால் என்ன?
சனநாயகம்
ஒற்றையை ஏற்பதல்ல; சனநாயகம் பன்மையை மதிப்பது. பன்மைச் சமூகங்களின் சமப் பங்கேற்பை மதிப்பது. சமம் என்பது, சமத்துவம் என்பது இதன் உயரிய விழுமியம். பன்மைச் சமூகங்களின் மாண்பு சனநாயகத்திலும்தான் மிளிர்கிறது. பன்மைச் சமூகத்தின் மாண்பு அல்லது மரியாதை அதன் பன்முகப் பண்பைப் போற்றுதலில்தான் உள்ளது. இன்றைய இந்திய ஒன்றிய அரசு, மக்கள் முன்பு வைக்கும் ‘ஒற்றை’ அல்லது ‘ஒரு’ அல்லது ‘ஒன்று’ எனும் பெருமுழக்கத்தின் உள்ளடக்கம் சனநாயக மறுப்பு என்பதனைப் புரிந்திருக்கிறோமா?
ஒற்றையும் ஒற்றுமையும்
‘ஒற்றை’ ஒற்றுமையை உருவாக்க முடியாது. பன்மையைப் போற்றலில் ஒற்றுமையை உருவாக்க முடியுமே தவிர, பன்மையை மறுத்த சமூகம் ஒற்றுமையை உருவாக்காது. எனவேதான் ‘வேற்றுமையுள் ஒற்றுமை’ என்கிறோம். ஒரு சமூகம் எப்போதுமே ஒற்றைச் சமூகமாக இருக்க முடியாது. சமூகத்தின் அழகே அதன் பன்மைக்குணம்தான். பன்மைச் சமூகங்கள் தம் தனித்த அடையாளங்களைக் காக்கின்ற உரிமை பெறுகின்றபோது, நிலவும் சமூகங்களுக்கிடையே சமத்துவத்தைப் பேணும்போது இச்சமூகங்களிடையே சுமூக உறவும் உரையாடலும் நிகழும்போது உண்மையான ஒற்றுமை ஏற்படும்.
பன்மைச்
சமூகங்கள் தம் பன்முகப்பண்பை மதிக்கும் உரிமைகள் உத்தரவாதப்படுத்தப் பெறுகின்றபோதுதான் ஒற்றுமை உருவாகும். இவ்வொற்றுமை உரிமைப் பாதுகாப்பில், சமூகங்களின் மாண்பினை அங்கீகரிக்கும் தன்மையில் உள்ளது. இந்நோக்கில் கட்டப்படும் ஒற்றுமை நிலையானது, உண்மையானது. ஒற்றுமை (Unity) என்பது
ஒரு மதிப்பீடு. மாந்தர்தம் உயர் மதிப்பீடு! ஒற்றுமை வெறுமையில் உதிப்பதல்ல; ஒற்றுமை நிதர்சனத்தின் ஊற்றுக்கண்!
இன்றைய
ஒன்றிய அரசின் ‘ஒற்றை’ எனும் கொள்கை ஒற்றுமையை உருவாக்குவதுதான் என்று கூறிக்கொண்டாலும், இவர்கள் நோக்கம் ‘ஒற்றுமை’ எனும் பொய்யான முழக்கத்தின் பெயரால், ஒற்றுமையைச் சிதைத்து, பகையை வளர்த்து, சமூகத்தின் அமைதியைக் கெடுப்பதே ஆகும். வெறும் வெற்று முழக்கங்களால் பன்மைச்சமூகங்களின் சமப் பங்கேற்பில் பன்முகச் சமூகங்களின் சனநாயக உறுதியேற்பில்தான் ஒற்றுமை உருவாகும்.
வேறுபாடு
என்பது சமூகத்தின் இயல்பான பண்பு. வேறுபாடுகள் உடைய சமூகம் அல்லது வேற்றுமை நிலவும் சமூகங்கள்தாம் பன்மைச் சமூகமாக இருக்கமுடியும். வேற்றுமையை இயல்பாகக் கருதும்போது, வேறுபாடுகள் இயல்பானவை என்று ஏற்றுக்கொள்கின்றபோது, வேறுபாடுகளின் அடிப்படையில் பாகுபாட்டிற்கு இடமில்லை. ஐக்கிய நாட்டு அவையின் அரிய முழக்கங்களில் ஒன்றான ‘வேற்றுமையைப் பாதுகாப்போம்’ (Protect diversity),
‘பாகுபாட்டைத் துறப்போம்’
(Eliminate Discrimination) என்ற
முழக்கம் மக்களின் பெருமுழக்கமாக மாற வேண்டும்.
தேசம்,
தேசப்பற்று, தேசியம் என்ற பல்வகைப் பெயர்களில் மக்களைத் திசை திருப்பிவரும் இன்றைய அரசுகள் ‘ஒற்றை’,
‘ஒருமை’, ‘ஒற்றுமை’ என்ற
கேள்விகளால் மக்களைத் திசைதிருப்பி வரும் சூழலில், இம்மாதிரியான பொய்முழக்கங்களால் மக்கள் நிலைதடுமாறி விழாமல் காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு.
ஓர்மையும் ஒற்றுமையும்
இன்றைய
இந்துத்துவ அரசியல் இந்துமத அடிப்படையில் மக்களை அணிதிரட்டி, வெறியூட்டி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளதை நாம் அறிவோம். ‘இந்து’ என்ற மத அடையாளத்தையும், ‘இந்தியா’ என்ற நாட்டு அடையாளத்தையும் வேறு வேறாகப் பார்க்கவிடாது, ஒற்றைக்குள் பார்க்கச் செய்து மக்களை மயக்கி வருகிறது. இந்து மதத்தினை விமர்சிப்பவர்களை, இந்துகளின் எதிரிகளாகப் பார்க்க மறுத்து, இந்தியாவின் எதிரிகளாகச் சித்தரிப்பதோடு, கொடிய சட்டங்களால் தண்டிக்கப்படுதலையும் காண்கிறோம்.
இந்தியக்
குடிமக்களாகிய ‘நாம்’ என்பதே அரசமைப்புச் சட்டத்தின் முகவரியாக இருக்க, குடிமக்களை மத ரீதியாக ஒன்றுபடுத்தி
அவர்களின் வாக்கைப் பெற்று ஆட்சி அதிகாரத்தைப் பிடிப்பது சனநாயகத்திற்கு எதிரானது. குடிமக்களின் தேர்வு என்பது, அவர்களின் தெரிவுசெய்யும் அதிகாரத்தில் உள்ளது. சாதி, மத, இன ரீதியாக மக்களை
ஒருங்கிணைத்து அல்லது ஓர்மைப்படுத்திப் (Polarise) பெரும்பான்மை
என்று காட்டுவது பெரும்பான்மை அல்ல; இது பெரும்பான்மைவாதம் (majoritarian). பெரும்பான்மைவாத அரசு எப்போதுமே சமத்துவ அரசாக இருக்காது. பெரும்பான்மைவாத அரசு பெரும்பான்மை அடையாளம் சார்ந்த அரசாக இருப்பதால் பன்முக அடையாளத்தை மறுக்கும். பன்முக அடையாளங்களுடைய ஏனைய சமூகங்களை ஒடுக்கும், ஒதுக்கும்.
‘தேசம்’,
‘தேச ஒற்றுமை’,
‘தேசப்பற்று’ என்று
ஓயாது பேசும் இன்றைய மதவாத அரசு மதச்சிறுபான்மையினரை ஒடுக்குவதையும், ஒதுக்கி வருவதையும் பார்க்கிறோமல்லவா! ‘உலகின் மிகப்பெரிய சனநாயக நாடு’ என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் இந்திய அரசின் ஆளும் கட்சியில் இசுலாமிய வகுப்பைச் சேர்ந்த எவரும் பிரதிநிதித்துவப்படவில்லை என்ற உண்மை அனைவரும் அறிந்த ஒன்றே! குடிமக்களின் தெரிவு செய்யும் உண்மையை முற்றிலுமாக மறுத்து, அடையாள அரசியலைக் கையிலெடுக்கும் மதவாத அரசியலில், அரசியல் அறத்தை எங்கே தேடுவது?
மதவாத
அரசியலாளர் பேசும் மத ஒற்றுமை என்பது
உள்நோக்கம் கொண்டது. இது ஒற்றுமையின்பால் கொண்ட பணியல்ல; அரசியல் ஆதாய நோக்கில் செய்யப்படும் பிரிவினை. உள்ளார்ந்த பிரிவினைக் கொள்கையை மறைக்கச் செய்யும் கபட நாடகமே ‘ஒற்றுமை’ எனும் இந்தப் பொய்முழக்கம்.
ஆகவே,
‘ஒருமை’, ‘ஓர்மை’, ‘ஒற்றுமை’ எனும்
உயரிய விழுமியங்கள் போற்றப்பெற வேண்டியன. ஆனால், இன்றைய மதவாத அரசு பகை, வெறுப்பு என்பன மூலம் பிரிவினையை வேகமாகச் சமூகத்தில் வளர்த்து வரும் போக்கை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ‘ஒருமையிலும்’, ‘ஒற்றுமையிலும்’ இன்றைய
மதவாத அரசு செய்யும் அரசியலைப் புரிந்துகொள்வோம்.
மே மாத வெயில் உச்சந்தலையைப் பிளக்க, காலில் தேய்ந்துபோன செருப்பு ஒன்றை மாட்டிக்கொண்டு, கையில் பச்சை நிறத்தில் கொடி ஒன்றைப் பிடித்தநிலையில் நின்றான் இராமச்சந்திரன். ஆறு வழிச் சாலை வழியாகப் போகின்றவர்களை ஹோட்டலுக்குச் சாப்பிட அழைப்பதுதான் அறுபது வயது இராமச்சந்திரனின் வேலை.
வேலையில்
சேர்ந்த தொடக்கத்தில் இராமச்சந்திரனுக்கு இந்த வேலை பிடிக்கவே இல்லை. “கொரோனா காய்ச்சல் வந்ததிலிருந்து வேறு எந்த வேலையையும் செய்ய முடியல; அதான் இந்த வேலைக்குச் சம்மதிச்சேன்” - ஏ.டி.எம்.மில்
செக்யூரிட்டி வேலை செய்துகொண்டிருந்த மணிகண்டனிடம் இதையே அடிக்கடிச் சொல்வார். மணிகண்டனும் அவருடைய வயதுக்காரர் என்பதால் அவர்களுக்குள் நல்ல நட்பு இருந்தது. நெற்றியில் வழியும் வியர்வையும், கடுத்துப்போகும் கால்களும், கண்டுகொள்ளாமல் செல்லும் ஓராயிரம் பார்வையும் போகப்போக இராமச்சந்திரனுக்குப் பழகிப்போயின. ஒருசிலர் மட்டும் வெயிலில் காய்ந்தச் செடிக்குக் கொஞ்சம் தண்ணீர் தெளிப்பதுபோல பாவம் பரிதாபம் பார்த்து அஞ்சோ... பத்தோ அவருக்குக் கொடுப்பார்கள். இராமச்சந்திரன் வேலை முடிந்து ஏ.டி.எம்.
வழியாக வீடு திரும்பும் நேரத்தில் தனக்குக் கிடைத்த வடை அல்லது அவித்த கடலையை மணிகண்டனிடம் பகிர்ந்துகொள்வார். இருவரும் நேரம் போவது தெரியாமலே சிறுபிள்ளைகள்போல பேசிக்கொண்டிருப்பர்.
ஒருநாள்
வழக்கம்போல இராமச்சந்திரன் ஏ.டி.எம்.
வழியாக வீடு திரும்புகையில் “டேய், இராமச்சந்திரா, எப்படிப் போகுது? உன் காட்டுல டிப்ஸ் மழைபோல”
- மணிகண்டன் நக்கலாகவே கேட்டார்.
“உனக்கென்னப்பா சூடுனா ஏசி அறையிலபோய் குந்திக்கிற. காலுல, இடுப்புல பெல்ட்டு, மிலிட்டரி சட்டை வேற... நமக்கு அப்படியா? வெயில் மழைனு பிச்சக்காரப் பொழப்புதான்” - இராமச்சந்திரனின்
பதிலில் கொஞ்சம் வலியும் கொஞ்சம் பொறாமையும் அவர் மென்று துப்பிய வெற்றிலைப் பாக்குபோல சேர்ந்தே வெளிப்பட்டன.
பதிலுக்குப்
பதில் பேசியேதான் ஆகவேண்டுமா! சில பேச்சுகளை மனிதர்கள் காதில் வாங்காமல் கடந்துபோனால்தான் என்ன? ஆனால், இராமச்சந்திரனின் நக்கல் பேச்சைக் கேட்ட பிறகும் அவர் துப்பிய எச்சில் தன்மேலே விழுந்ததுபோல உணர்ந்த ஏ.டி.எம்.
மணிகண்டனால் கெட்ட வார்த்தை பேசாமல் இருக்க முடியவில்லை. அவனது உள்ளமும் உதடும் ஆயிரங்களில் ரூபாய் எடுக்கும்போது அலறித்துடிக்கும் எ.டி.எம்.
மெஷினைப்போல குலுங்கி அடங்கியது. அன்றிலிருந்து இரண்டு பேரும் பார்த்தாலும் பேசிக்கொள்வதில்லை. இராமச்சந்திரன் ஏ.டி.எம்.
வழியாகப் பலமுறை கடந்து சென்றாலும் அத்தனை முறையும் தன்னை முறைத்துப் பார்ப்பது போலவே மணிகண்டனுக்குத் தோன்றியது.
இராமச்சந்திரனுக்கும்
மணிகண்டனுக்குமிடையே ஆயிரம் வேறுபாடுகள் இருந்தாலும், அவர்களின் பொதுமொழி வறுமையும் முதுமையும்தான். ஒருநாள் காலை வேளையில் ஏ.டி.எம்.
மிலிருந்த பணம் திருடப்பட்டது தெரிய வந்தது. போலிஸ்காரர்கள், வியாபாரிகள் என்று பெருங்கூட்டம் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது. அவ்வழியாக வந்த இராமச்சந்திரனும் கூட்டத்தோடு வந்து நின்றுகொண்டான். சில காவலர்கள் மணிகண்டனிடம் ஏதோ திருடனிடம் விசாரிப்பதுபோல மூர்க்கமாக விசாரித்துக் கொண்டிருந்தனர். நண்பனைப்போல பேசிப் பழகியிருந்தாலும் குற்றவாளியைப் போன்று விசாரிக்கப்பட்ட மணிகண்டனை ‘இவனுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்’
என்ற கோணத்திலேயே பார்த்தான் இராமச்சந்திரன்.
தீவிர
விசாரணையிலிருந்த மணிகண்டனின் பார்வை ‘சட்’டென்று கூட்டத்தில் நின்ற இராமச்சந்திரனின் மேல் விழுந்தது. ‘நான் திருடியதாக இராமச்சந்திரன் நினைத்திருப்பானோ?’ என்று மணிகண்டன் நினைக்கையில், ‘போலீசிடம் என் பெயரைச் சொல்லி என்னை மாட்டிவிட்டாலும் விடுவான் இந்த மணிகண்டன்’
என்று நினைத்துக்கொண்டு அந்த இடத்தைவிட்டு வேகமாக நகர்ந்து சென்றான் இராமச்சந்திரன்.
வாழ்க்கையில்
ஏதோ ஒன்று இடைவெளியை உருவாக்குகிறது. ஏதோ ஒன்று இடைவெளியைப் போக்குகிறது. அந்த ஏதோ ஒன்று நாம்தான்.
பிரிவு,
பிளவு மனித உறவுகளில் மட்டுமல்ல, அது தொழில்நுட்பத்தின் பயன்பாட்டிலும் அதன் பரவலாக்கத்திலும் இருக்கிறது. இதனை ‘எண்ணிம இடைவெளி’
(Digital Divide) என்கிறோம்.
இராமச்சந்திரனும் மணிகண்டனும் அருகருகே பணி செய்து கொண்டிருந்தாலும் அவர்களுக்கிடையே இருக்கின்ற இடைவெளி அதிகமாக இருப்பதுபோல ஒரே நாட்டில் நாம் வாழ்ந்தாலும் நம்மிடையே பல்வேறு இடைவெளிகள் உள்ளன. அதில் குறிப்பிடத்தக்கது ‘எண்ணிம இடைவெளி.’ கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு கணினி (Computer), மடிக்
கணினி (Laptop), கைக்கணினி
(tablet), திறன்பேசி (Smart phone),
திறன் கடிகாரம் (Smartwatch), செவிப்பேசி
(Ear phone),
இணையம் (Internet) என்று
பலவிதமான திறன்பொருள்கள் (Gadgets) வந்தபோதும்
அது இன்னும் எல்லாருடைய பயன்பாட்டிற்கும் வந்து சேரவில்லையென்றே கூற வேண்டும்.
இந்த
‘எண்ணிம இடைவெளி’ என்பது ஏழ்மைச் சூழலினாலும், புவியியல் அமைப்பினாலும், மின்மய மாக்கலின்மையினாலும், தலைமுறை இடைவெளியினாலும், ஆண்-பெண் சமத்துவமின்மையாலும், கல்வியறிவு குறைபாடாலும் ஏற்படலாம். ஒரு சமூகத்தினுடைய வளர்ச்சியென்பது இந்த இடை வெளி குறைகிறபோது நிச்சயம் நடக்கும்.
கொரோனா
காலகட்டத்தில் வசதியான குடும்பங்களைச் சார்ந்த மாணவர்கள் எளிதாகக் கற்றுக்கொள்ள முடிந்தது. ஆனால், ஏழ்மையில் வாடிய மாணவர்கள் இணையவழிக் கல்வியின் பயன்பாட்டை முழுமையாகப் பெறமுடியவில்லை. இந்த டிஜிட்டல் இடைவெளியைச் சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம், ‘இது கல்விகற்கும் மாணவர்களுக்கு எதிரான ஓர் அடிப்படை உரிமை மீறல்’ என்று குற்றம்சாட்டியது.
‘ஆக்ஸ்பாம் இந்தியா’
(Oxfam India) என்ற
அமைப்பு 2022-ஆம் ஆண்டு நடத்திய ஆய்வின்படி இந்தியாவில் வெறும் 31 விழுக்காடு கிராமப்புற மக்களிடமும், 67 விழுக்காடு நகர்ப்புற மக்களிடமும் இணையப் பயன்பாடு உள்ளது என்பது தெரிய வருகிறது. நகர்ப்புறம் தொழில்நுட்பக் கூறுகளாலும் டிஜிட்டல்மயமாகுதலாலும் தாங்கிப் பிடிக்கப்படுகிறபோது, கிராமப்புறங்கள் இன்னும் மனிதக் கண்டுபிடிப்புகளைத் தங்களின் வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் பயன்படுத்த முடியாத சூழலை என்னவென்று கூறுவது?
இணையமும்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் இன்று கற்றோரையும் பொருள் பெற்றோரையும் இன்னும் அதிகமாக உயரச் செய்கிறதே தவிர, ஏழைகளையும் எளியவர்களையும் கண்டுகொள்ளாமலேயே இருக்கின்றது. இந்நிலை மாறி செயற்கை நுண்ணறிவும், டிஜிட்டல் கண்டுபிடிப்புகளும் மனித மாண்பைப் பேணுவதாகவும், மனித ஆற்றலை வளர்ச்சியடையச் செய்வதாகவும் இருக்கவேண்டும்.
பள்ளி-கல்லூரிகளில் டிஜிட்டல் கல்விமுறையை அறிமுகமாக்குவது, கிராமப்புறங்களில் இணையக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவது, தாய்மொழிகளில் கணினி பற்றிய பாடத் திட்டத்தை வரையறுப்பது, ‘சைபர்’ பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு பயிலரங்குகள் நடத்துவது, செயற்கை நுண்ணறிவு பற்றிய தெளிவுகளைக் கொடுப்பது போன்ற செயல்களின் வழியாக டிஜிட்டல் இடைவெளியை நம் பகுதிகளிலே இல்லாமல் செய்யலாம். மனித இடைவெளியினை இதயத்தால் இணைப்போம்! டிஜிட்டல் இடைவெளியினை இணையத்தால் இணைப்போம்!
இந்திய அரசு பண மோசடிக் குற்றங்களை அந்நியச் செலாவணிச் சட்ட விரோதப் பண பரிமாற்றங்களைக் கண்டறிய 1956, மே 11 அன்று ஒரு புதிய புலனாய்வு அமைப்பை உருவாக்கியது. அமலாக்கத்துறை எனும் அத்துறை தப்பியோடிய குற்றவாளிகளைத் தேடும் பணியையும் செய்தது. இன்று அமலாக்கத்துறை ஆளும் பா.ச.க.வின் அரசியல் மிரட்டலுக்குப் பயன்படுத்தும் துறையாக உருமாறியிருப்பது பெரும் அவலம்.
பா.ச.க. ஆட்சிக்கு
முன் 262 அதிகாரிகள் இருந்த அமலாக்கத்துறை, இன்று 3000 அதிகாரிகளோடு ஊழல் மிகுந்த, அதிகாரம் குவிந்த, காவிச் சாயம் பூசப்பட்ட அடியாள் அமைப்பாக மாறிவிட்டது. அமலாக்கத்துறை ஊழல் மிகுந்த எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை வெளுக்கும் பா.ச.க.
வாஷிங்மிசினுக்கு மிரட்டியே ஆள்பிடிக்கிறது. ஆளும் பா.ச.க.வின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்குத் துணைபோகிறது என்பதே நிகழ்காலக் குற்றச்சாட்டு.
நிதி
அமைச்சகத்தின் வருவாய்த் துறைக்கு உள்பட்ட அமலாக்கத்துறைக்குத் தேசத்தின் முக்கிய நகரங்களில் 10 மண்டல அலுவலகங்கள் உள்ளன. இத்துடன் 11 துணை இயக்குநர் அலுவலகங்களும் உள்ளன. அமலாக்கத்துறையில் பணியாற்றும் 70 விழுக்காடு அதிகாரிகள் இந்திய வருவாய் சேவை, இந்திய நிர்வாகச் சேவை, இந்திய காவல் சேவை, மத்திய சுங்கக் காவல்துறை மற்றும் வங்கித்துறை சார்ந்த அதிகாரிகள். இவர்கள் கடந்த பத்தாண்டுகளில் அரசியல்வாதிகள்மீது பதிந்த வழக்குகள் 193. தண்டனை வாங்கிக் கொடுத்த வழக்குகள் இரண்டு மட்டுமே. அமலாக்கத்துறை பதிந்த பண மோசடி வழக்குகள்
5422. நிரூபிக்கப்பட்டுச் சிறைக்குச்
சென்றவர்கள் 23 பேர்
மட்டுமே. அவர்களது வழக்கு வெற்றி விழுக்காடு 0.5 விழுக்காடு மட்டுமே. அந்நியச் செலாவணி மோசடிக் குற்றவாளிகளான குஜராத் தொழில் அதிபர்களை அமலாக்கத்துறை வெளிநாடுகளுக்குக் காலம் கடத்தியே தப்பவிட்டதாக ஐயம் உண்டு. ஆனால், அமலாக்கத்துறை எதிர்க்கட்சி
அரசியல்வாதிகள்மீது வேகம் காட்டுகிறது.
தில்லி
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு 2021-2022 காலத்திற்கு உள்பட்டது. தில்லி அரசு மதுபான வணிகத்திலிருந்து விலகிச் சில்லறை மதுபான விற்பனைக்கு உரிமை வழங்கியது. இதில் அமலாக்கத்துறை கோடிக்கணக்கான ரூபாய் சட்ட விரோதப் பணப்பரிமாற்றம் நடந்தது என வழக்குப் பதிந்தது.
அன்றைய தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அன்றைய தெலுங்கானா முதல்வர் க. சந்திர சேகரின் மகள்
கவிதா வரை கைது நடவடிக்கை நீண்டது. வழக்கு எந்நிலை எனிலும், ஆட்சி மாற்றங்கள் தில்லியிலும், தெலுங்கானாவிலும் நடந்தது. அதன் அடிதொட்டுத் தமிழ்நாட்டிலும் இதேபோன்ற காட்சியை அமலாக்கத்துறை அரங்கேற்றியது.
ஜி.எஸ்.டி. வரிமாற்றத்திற்குப் பின் மாநில அரசுகளுக்கு மது விற்பனை, பத்திரப் பதிவு, வாகன எரிபொருள் என்பவையே பிரதான வரி வருவாயாகும். தமிழ்நாடு அரசு நடத்தும் மதுபான விற்பனை நிறுவனம், தமிழ்நாடு மாநிலச் சந்தைப்படுத்தும் கழகம் (டாஸ்மாக்) என்பதாகும். அதன் சில்லறை விற்பனையில் 2017 முதல் 2024 வரை முறைகேடுகள் நடந்ததாகத் தமிழ்நாடு காவல் துறையால் 41 முதல் 46 வரை குற்றப்பதிவிற்கான முதல் தகவல் அறிக்கைகள் பதியப்பட்டன. இவற்றில் 6 முதல் 7 வழக்குகள் தவிர அனைத்து வழக்குகளும் அ.தி.மு.க.-வின் ஆட்சிக்காலத்தில்
நடந்தவை.
இது
குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி ஒன்றுக்கு முன்னாள் கலால்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கேட்டார்: “எந்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் அமலாக்கத்துறை உள் வருகிறது?”
குற்றம்
நடந்த இடங்களைக் குறிவைக்காமல், அமலாக்கத்துறை டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் முதற்கொண்டு, டாஸ்மாக்
அதிகாரிகளைக் குறிவைத்துப் பெரும் ரெய்டு நடத்துகிறார்கள். கடந்த வாரத்திலேயே தமிழ்நாடு துணை முதல்வர், ஏன் தமிழ்நாடு முதல்வர்கூட அமலாக்கத்துறையால் கைது செய்யப்படலாம் என்ற வதந்தி காவி ஊடகங்களால் திட்டமிட்டுப் பரப்பப்பட்டன. ரெய்டு நடக்கும்போதே அன்றைய தமிழ்நாடு பா.ச.க.
தலைவர் அண்ணாமலை ‘ரூபாய் 1000 கோடி ஊழல்’ எனக் கொளுத்திப் போடுகிறார். அடுத்த நாள் அமலாக்கத்துறையும் ‘தமிழ்நாட்டில் ரூபாய் 1000 கோடி ஊழல் நடந்துள்ளது’ என
அறிக்கை தருகிறது. புது தில்லியிலும் இதே ரூபாய் 1000 கோடி மதுபானக் கொள்கை ஊழல் என்றே அமலாக்கத்துறை அரசியல் சார்ந்த ஆட்டத்தைத் தொடங்கியது என்பது நினைவுகூரத்தக்கது.
தமிழ்நாடு
அரசும், டாஸ்மாக் நிறுவனமும் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்றனர். தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்
அமர்வுமுன் வழக்கு செல்கிறது. வழக்கிற்கு இடைக்காலத் தடை வழங்கிய தலைமை நீதிபதி அமலாக்கத்துறையை நோக்கிக் கேட்கிறார்: “அமலாக்கத்துறை இவ்வழக்கில் கையில் எடுத்த மூல வழக்கு எது? தனி மனிதக் குற்றங்களுக்காக, ஏன் ஓர் அரசு நிறுவனத்தின்மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமென்ன?” எனக் கேட்டு, “இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது”
என்கிறார். இவை அனைத்து வரம்புகளையும் மீறியது எனவும் கண்டிக்கிறார்.
வழக்கில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், “டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களின் தொலைப்பேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாகவும், உயர் அதிகாரிகளின் அலைப்பேசிகள் குளோனிங் செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். “இது அமலாக்கத்துறை தன்னிச்சையோடு செயல்பட்டுத் தனிமனிதச் சுதந்திரத்தைப் பறிக்கிற செயல்” என வாதிட்டார். அமலாக்கத்துறைக்கு
எல்லை மீறுவது தினப்படி நடவடிக்கை. பொறியில் மாட்டிய பின் விழிப்பது கைவந்த கலை.
திண்டுக்கல்
அரசு மருத்துவரிடம் முடிந்த சொத்துக்குவிப்பு வழக்கை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி பிரதமர் அலுவலகம் மீண்டும் விசாரிக்கச் சொல்கிறது. விசாரணை வேண்டாம் எனில், ரூ. 51 இலட்சம் தர வேண்டும் எனக்
கூறி, ரூ. 20 இலட்சம் முதல் தவணைப் பெற்றார். இரண்டாம் தவணை ரூ. 20 இலட்சம் பெற்றபோது காரில் தப்பி ஓடி, துரத்திப் பிடிபட்டார். இவ்வாறு பெறப்பட்ட பணம், சக அதிகாரிகள் முதல்
உயர் அதிகாரிகள் வரை பகிர்ந்து கொள்ளப்படுகிறது என்ற தகவல் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதில் மதுரை அமலாக்கத்துறையின் அலுவலகம், தமிழ்நாடு இலஞ்ச ஒழிப்புத்துறை காவல் அதிகாரிகளால் சோதனை இடப்பட்டது. ஏன்... கிரிக்கெட் மேட்ச் பிக்சிங் வழக்கில், அமலாக்கத்துறையின் இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டதும் கடந்தகாலப்
பதிவு.
கேரளாவில்
முந்திரி வியாபாரியைப் பண மோசடி வழக்கில்
கைது செய்யாமல் இருக்க ரூபாய் இரண்டு கோடி கேட்ட கொச்சி அமலாக்கத்துறை உதவி இயக்குநர் சேகர் குமாரும், இராஜஸ்தானில் சிட் பண்டு (chit fund) விவகாரத்தில் ரூபாய்
15 இலட்சம் கேட்ட இரண்டு அமலாக்கத்துறை அதிகாரிகளும், அமலாக்கத்துறையின் ‘இலட்சணமான’
முகமாக இருக்கிறார்கள். அமலாக்கத்துறை எவ்வளவு வெளிப்பட்டாலும், தன் தன்மை மாறாமல் ஆளும் காவி பா.ச.க.விற்குச் சேவகம் செய்வதில் குறியாக உள்ளது. உயர் நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை குட்டுப்பட்டாலும் வலிப்பதில்லை.
முன்னாள்
தில்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது மற்றும் பிணையின்போது அமலாக்கத்துறைக்கு நீதித்துறை
காட்டிய கடுமை, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் நிலமோசடி தொடர்பான பண மோசடி வழக்கு...
எனப் பல வழக்குகள் உதாரணங்கள்.
அமலாக்கத்துறை
நீதிமன்றத்தில் எத்தனை அடி
வாங்கினாலும், எவ்வளவு
அடித்தாலும், தாங்கும் வலுகொண்டதாக உள்ளது. அமலாக்கத்துறை ஆளுங்கட்சியின் அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாமல், தன்னாட்சிப் பெற்ற சுயாட்சி அமைப்பாகத் தன்னை வடிவமைத்தால், மக்களிடையே மதிப்புப் பெறும்.
ஒரு பூதம் இரத்தவெள்ளத்தில் மிதக்கிறது. வன்முறைகள்வழி வலுத்த உயிர்ப்பலிகள் கேட்கிறது. அது பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களிலும் உருமாறுகிறது. மதப்பயங்கரவாதம், கருத்தியல் பயங்கரவாதம், அரசியல் பயங்கரவாதம் என்பவை வடிவுமாறி அரசப் பயங்கரவாதமாக உச்சம் பெறுகிறது. இதன் உள்ளடக்கம் மதவாத, தேசியவாத, இனவாத, மொழிவாத காவி அரசப் பயங்கரவாதமாகும்.
சுதந்திர
இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தேசவிரோத அமைப்பென மூன்று முறை தடை செய்யப்பட்டது. அதன் அரசியல் பிரிவான பா.ச.க.
ஆட்சிக்கு வந்தபின் அரசப் பயங்கரவாதத்தைக் கையில் எடுக்கின்றனர். இந்திய வரலாற்றில் காந்தியைக் கொன்ற கோட்சே சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி எனக் கூறப்படுகிறார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு குஜராத் மாநிலம் எப்பொழுதுமே சோதனைக்களம்தான். 2001-ஆம் ஆண்டு குஜராத் தேர்தலில் பா.ச.க.
ஆட்சியைப் பிடிக்கிறது. குஜராத் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாத நரேந்திர மோடி முதல்வராகத் தேர்வு செய்யப்படுகிறார். அவர் ஆறு மாதங்களில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் மட்டுமே குஜராத்தில் முதல்வராகத் தொடர முடியும். செல்வாக்கு
மிக்க பட்டேல் சமூக மக்கள், மோடியின் வெற்றியைத் தடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கின்றனர். மோடியின் வெற்றி கேள்விக்குறியான பின் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு காவி அரசப் பயங்கரவாதத்தைக் கையில் எடுக்கிறது.
கரசேவகர்கள்
பயணித்த இரயில் பெட்டிகள் கோத்ரா எனும் இடத்தில் தீ வைக்கப்படுகிறது. தீ வைத்தவர்கள்
இசுலாமியர்கள் என்ற கட்டுக்கதை பரப்பப்படுகிறது. காவல்துறை துணையோடு மத வெறியர்கள் இசுலாமியர்களைத்
தாக்கத் தொடங்குகிறார்கள். 10,000 பிணங்களின் மேல் மோடி வெற்றி பெறுகிறார்.
அரசப்
பயங்கரவாதம் என்பது மாநில அரசால் சொந்த மக்கள்மீதே கட்டவிழ்த்துவிடும் தீவிரவாத நடவடிக்கையாகும். அங்கு மக்கள் வாழ்வாதாரங்களை, வீடுகளை, உடைமைகளை இழக்கிறார்கள். அன்றைய பிரதமர் வாஜ்பாய் முகாமில் தஞ்சமடைந்துள்ள மக்களைச் சந்திக்கிறார். மக்கள் கண்ணீரோடு நடந்த உண்மைகளைக் கூறுகிறார்கள். வாஜ்பாய் கோத்ரா சம்பவத்திற்கு வெட்கித் தலைகுனிவதாக வருத்தம் தெரிவித்தார். அதனால் வாஜ்பாய் ‘தவறான கட்சியில் உள்ள நல்ல மனிதர்’ என வர்ணிக்கப்பட்டார். கோத்ரா சம்பவம்
குறித்து இரானா அயூப் என்பவர் எழுதிய ‘குஜராத் கோப்புகள்’
என்ற புத்தகம் நடந்த உண்மையை, காவிப் பயங்கரவாதத்தை வெளிக்கொணர்கிறது. குஜராத்தைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், தில்லி என பா.ச.க.வின் நச்சுக்
கரங்கள் விரிகின்றன. அரசப் பயங்கரவாதம் தொடர்கின்றது.
பா.ச.க.வில்
ஆர்.எஸ்.எஸ். சார்ந்தவர்கள் “மோடியைவிட உ.பி. முதல்வர்
யோகி பிரதமராக வந்திருந்தால் சிறப்பாக இருக்கும்”
எனக் கனவு காண்கிறார்கள். மெல்லக் காரணம் கேட்டால் ‘புல்டோசர் பாபா’ யோகி ஆதித்யநாத், அரசை எதிர்ப்பவர்கள், விமர்சிப்பவர்கள் என யாரை அடையாளம்
காண்கிறாரோ, அவர் வீட்டிற்கு அடுத்தநாள் புல்டோசர் அனுப்புவார், வீடு இடித்துத் தரைமட்டமாக்கப்படும். அதில் சிறுபான்மை இசுலாமியர்களே அவரது குறி என்பதும் கண்கூடு. 2024, நவம்பரில் உச்ச நீதிமன்றம் யோகியின் உத்தரப்பிரதேச அரசிற்குக் கண்டனம் தெரிவித்து, சட்டத்தின் ஆட்சி நடத்திட உத்தரவிட்டது. புல்டோசர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.
உத்தரப்பிரதேச
அரசியலுக்கு முற்றிலும் மாறுபட்டது மணிப்பூர். அங்குக் கலவரக்காரர்களுக்குக் காவல்துறை பாதுகாப்பாய் நின்றதும், தேவாலயங்கள் இடிக்கப்பட்டபோது வேடிக்கைப் பார்த்ததும் விழிகாண் பதிவுகள். வன்முறைக் கும்பல்கள் வைத்திருந்த ஆயுதங்கள் எவ்வாறு? எவ்வழி வந்தது? என்ற கேள்விகளும் உண்டு. மணிப்பூரில் அரசு இயந்திரம் முடங்கிக் கிடந்ததும், பிரதமர் நேரில் செல்லத் தயங்குவதும் ஆயிரமாயிரம் ஐயங்களை எழுப்புகிறது. 2020-இல் தில்லியின் வடக்குப் பகுதிகளில் கலவரம் வெடிக்கிறது. இசுலாமிய மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். அதன் விளைவு 2024-இல் தில்லியின் ஆட்சியைப் பா.ச.க.
கைப்பற்றுகிறது.
‘யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே’ என்ற பழமொழிக்கேற்ப ‘தேர்தல் வரும் பின்னே, பல கலவரங்கள் எழும்
முன்னே’ என்பது
பா.ச.க.வின்
தந்திரமாக இருக்கக்கூடுமோ என்பது சாமானியர்களுக்குச் சந்தேகமாக எழுகிறது. 2019-ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன் இந்திய இராணுவ வாகனங்கள்மீது நடைபெற்ற புல்வாமா தற்கொலை படைத் தாக்குதலை பா.ச.க. தேர்தல்
பிரச்சாரமாக்கி வாக்குச் சேகரித்தது. இது குறித்த உண்மை நிகழ்வுகளை அம்மாநில ஆளுநரே பின்னாள்களில் வெளிக்கொணர்ந்தார். அவர் “2019 மக்களவைத் தேர்தல்கள், இறந்த நமது வீரர்களின் உடல்மீது நடத்தப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டிருந்தால் அன்றைய உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டியிருக்கும்” என்றார்.
நடைபெறவுள்ள பீகார் தேர்தலை முன்னிட்டே பஹல்காம் சம்பவங்கள் என்ற விமர்சனங்களும் உண்டு. இவ்விரு சம்பவங்களிலும் எழுப்பப்படும் விடைதெரியா வினாக்களே இதற்கான முழுச்சான்றாகும். பா.ச.க.வின் அரசியல் பார்வை கலவரங்களில், பயங்கரவாதங்களில் வாக்குப் பெறுவது என்பதே அடிப்படை நோக்கமாகும்.
தமிழ்நாட்டிலும்
பா.ச.க. தன்
தடம்பதிக்கக் கலவரங்களைத் தூண்டுகிறது. மைக்கேல்பட்டியில் மதமாற்றம் என அண்ணாமலை முதல்
அவரது தொண்டர்கள் வரை குதித்தார்கள். திருவண்ணாமலையில் இராணுவ வீரரும் அவர் மனைவியும் மதக்கலவரத்தைத் தூண்ட பேசிய பேச்சுகள், குரல் பதிவுகள் வெட்ட வெளிச்சமாகியது. குழாயடிச் சண்டையை மேடை போட்டு ‘துப்பாக்கி வழங்குவேன்’ எனக்
குதித்த முன்னாள் தென்காசி இராணுவ வீரர், மன்னிப்புக் கேட்டு மன்றாடிக் கதறி அழுததும் நடந்தது. ஒவ்வொரு பெரிய வழிபாட்டுத் தலங்களிலும், அவினாசி, சென்னிமலை என பா.ச.க. போட்ட உரிமை
மீட்புக் கபடத்தன நாடகங்களும்
புஸ்வாணமாகியது.
மதுரை
திருப்பரங்குன்றத்தில்
‘மலை எங்களது’ என்ற வெற்றுவாதத்தை உயர் நீதிமன்றம் பொட்டில் அடித்து நிறுத்தியது. “திருப்பரங்குன்ற மக்கள் சகோதர-சகோதரிகளாக வாழ்கிறார்கள். அவர்களிடம் எந்தப் பிரிவினையும் இல்லை. அது சார்ந்த எந்தப் போராட்டத்திற்கும் அனுமதி இல்லை” என
ஆணி அடித்துவிட்டது. மதுரை ஆதினம் பா.ச.க.
ஆதரவு பேச்சிலிருந்து, ஒரு படி மேலே சென்று ‘எனது உயிருக்கு ஆபத்து’ எனப் பரபரப்புக் கூட்டினார். சாதாரண கார் விபத்தைத் தன்னைக் கொல்ல சதி என்றார். தமிழ்நாடு காவல்துறை விபத்துக் குறித்த வீடியோ காட்சிகளை வெளியிட்டது. ஆதினம் அமைதியானார். அதில் அதிக வேகமாகச் சென்றது ஆதினத்தின் கார் என அடையாளம் காணப்பட்டது.
இதுபோன்ற
பல குற்றச்சாட்டுகள் இனி அதிகமாகலாம். தமிழ்நாடு அரசு தன் புலனாய்வு அமைப்பு கள்வழி இவர்களைக் கண்காணிக்க வேண்டும். பொது அமைதிக்கு உத்தரவாதம் தர வேண்டும்.
தமிழ்நாடு
சட்டமன்றத் தேர்தலுக்கு ஓராண்டே இருப்பதால் பா.ச.க.
எந்த நேரத்திலும் புதிய வழியில் மதக்கலவரங்களை முன்னெடுக்கும் என்பது எச்சரிக்கை கூடிய அறிவிப்பு. சிறுபான்மை மக்கள் விழிப்பாக இருப்பதும், மத, இனக் கலவரங்களை அடையாளம்
காண்பதும், காவல் மற்றும் நீதிமன்றங்கள் வழி நியாயம் பெறுவதும் காலக் கட்டாயமாகும்.
‘மனிதன் ஓர் அரசியல் பிராணி’ என்று கூறுவார் கிரேக்கத் தத்துவயியல் ஞானி அரிஸ்டாட்டில். ஆனால், அரசியல் தேவையா? ‘அரசியலில் நம்மால் என்ன செய்ய இயலும்? அரசியல் ஒரு சாக்கடை. அதில் என்னைப் புதைத்துக்கொள்ள வேண்டுமா?’ என்ற கேள்விகள் கிறித்தவ மக்களிடையே ஒருபுறம் எழுவது உண்டு. அப்படியென்றால், மனிதருக்கு அரசியல் தேவையில்லையா? கிரேக்கத் தத்துவ ஞானி தன் வார்த்தைகளின் அர்த்தத்தைச் சற்று அழுத்தி உச்சரிக்கையில், “அரசியல் வேண்டாம். சமூகம் வேண்டாம் என்பவர் கடவுளாக இருக்கவேண்டும். இல்லையென்றால் மிருகமாக இருக்க வேண்டும்” என்று கூறுகிறார்.
மனிதர்
தன்னிச்சையாகச் செயல்படும் பிராணி அல்லர்; பிறரைச் சார்ந்து வாழக்கூடியவர். ஒரு சமூகத்தைச் சார்ந்து வாழக்கூடியவர். ஆக, அரசியல் வேண்டாம், அரசியல் ஒரு பாவம் என்ற கருத்துகளைத் தன்னுள்ளே திணித்து வாழ்வது அறியாமையின் உச்சம் ஆகும். இந்தச் சமூகத்தில் அரசியல் யாருக்கும் ஒரு விருப்பத்தேர்வாகக் கொடுக்கப்படவில்லை.
அரசியல்
பற்றி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “அரசியல்-தொண்டு பணியின் உயர்ந்த நிலை” என்று பதிவு செய்கிறார். இளைஞர்களிடம் “அரசியல் சாக்கடை அல்ல, புனிதமான பணி, இளைஞர் இயேசுவின் பணி” என்றும் சுட்டிக்காட்டுகின்றார். இயேசு மண்ணுலகில் அரசராக, தலைவராகப் பணியாற்றினார். அவர் பதவியில், பணத்தில், மோகத்தில் அல்ல; மாறாக, பாவத்தில் விழுந்து கிடந்த, வாழ்வில் வலுவிழந்த, ஆட்சிக்கு அடிமைகளாக்கப்பட்ட, அரை நிர்வாணமாக்கப்பட்ட, சமூகத்தில் ஓரம் தள்ளப்பட்ட மக்களுக்குப் பணி செய்வதை அரசியலாகக் கொண்டார்.
அரசியல்
என்றால் என்ன? அரசியல் தனிமனித மதிப்பை, பணவீக்கத்தை, அதிகார நாற்காலியை, இனம் சார்ந்த சார்பு நிலைகளைக் கொள்வது அல்ல; திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ‘அனைவரும் உடன்பிறந்தோர்’ என்ற
சுற்றுமடலில், “அனைவரும் உடன்பிறந்த சகோதர, சகோதரிகள். நமது பணி பொதுப்பணி, அனைவரையும் சார்ந்த அனைவருக்குமான பணியாக இருக்கவேண்டும். அரசியல், பொதுநன்மைக்காக உழைக்கும் பணி, பிறரின் விருட்சத்திற்காகத் தன்னை உருக்கும் பணி” என்கிறார். ஒரு மனிதன்தான் உலகமா? ஒரு மனிதன் தன்னைச் சமூகத்தோடு பிணைத்து, சமூகப் பணிகளில் உட்புகுத்துகின்றபோது அவன் உலகம் ஆகிறான்.
ஏன்
அரசியல் வேண்டும்? அரசியலில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ளாமல் இருப்பது, நமது உரிமையை இழிவுபடுத்துவது. மனிதன் பேச வேண்டிய இடத்தில் தன் வார்த்தைகளை வர்ணிக்கவில்லையென்றால், அவன் தன்னைத் தீவிரவாதத்திற்குச் சமப்படுத்திக் கொள்வதாகும். நாம் அரசியலில் பங்கேற்கவில்லை என்றால், நமது சுதந்திரங்களை நம்மிடமிருந்து பறிகொடுப்பதாகும். நீதியான சமூகத்தை வளர்ச்சி நிலைக்கு எடுத்துச்செல்ல அரசியலில் நம்மைக் கையளிப்பது மிக அவசியம். இதற்கு இயேசு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார். இயேசு எப்பொழுதும் மக்கள் மத்தியில் வாழ்ந்தார். அவர் தம்மை இனம் கடந்து தேடலில் அடையாளப்படுத்திக்கொண்டார்.
அவர்தம் குருதியைத் தமக்காக, இனத்திற்காக, மதத்திற்காகச் சிந்தவில்லை; மாறாக, மானுட மனத்திற்காகச் சிந்தினார். இயேசுவின் ஆட்சிப் பணி, அரசியல் பணி மதம் சார்ந்த கொள்கை அல்ல; மாறாக, மனம் சார்ந்த கொள்கையாக இருந்தது. ஆகவேதான், இயேசு ‘கடவுளுக்குரியதைக் கடவுளுக்கும், சீசருக்குரியதைச் சீசருக்கும்...’ என்று தம்மை மனுக்குலத்தின் பங்காளியாக அடையாளப்படுத்தினார்.
2026-இல் தமிழ்நாட்டில்
‘யார் தலைமை?’ என்பதில் அனைவருக்கும் ஆவல். ஆனால், அதில் தனது உரிமையை நிறைவேற்ற வேண்டும் என்பதில் அச்சம், எதிர்மறை எண்ணங்கள், இனம்சார் கொள்கைகள் நம்மை இறுகப் பற்றிக் கொண்டிருக்கிறது. அரசியலில் நான் என்ன செய்யப் போகிறேன் என்பதை விடுத்து, என்னால் முடிந்ததை ஏன் நான் செய்யவில்லை? என்ற எண்ணத்தைக் கொள்வோம். ஒரு சமூகம் வளர்ச்சிபெற வேண்டும்; நீதி அனைவருக்கும் சமம் என்பது மெய்ப்பிக்கப்பட வேண்டுமென்றால், அரசியல் களம் அறத்தின் களமாக உருவெடுக்க வேண்டும். அறம் அன்பையும் அமைதியையும் இந்நாட்டிற்கும் வீட்டிற்கும் அளிக்கும் அமுத சுரபி ஆகும்.