news
சிறப்புக்கட்டுரை
ஏ.ஐ. தொழில்நுட்பம் (AI Technology) - உலகம் உன் கையில் - 02

விரைவில் தொழில்நுட்பமயமான புதிய சகாப்தத்தை (era) காணவிருக்கிறோம். இவ்வாறு உலகில்ஏஐயின் (AI) மூலம் அடையப்போகும் பெரும் மாற்றத்தில் எவ்வாறு நம்மை இணைத்துக்கொள்ளப் போகிறோம் என்ற கேள்வி இன்று நம் முன் நிற்கிறது.

ஏஐயின் மின்னல் வேகம், ஒரு கட்டத்தில் மனித அறிவாற்றலுக்கு (Human Level Intelligence) சமமாக உருவெடுக்க எவ்வளவு காலமெடுக்கும் என்ற கேள்வி பலரின் மனத்தில் எழுந்தது; சில ஆய்வுகளும் நடத்தப்பட்டன. இதற்குச் சிலர், அடுத்த சில பத்து ஆண்டுகள் ஆகலாம் என்றனர்; ஒருசிலர் நூறு ஆண்டுகள், சிலர் இது இயலாத ஒன்று என வேறுபட்ட கருத்துகளைக் கூறினார்கள். இந்நிலையில், 2060/2070-இல்  முடியலாமென்பது பரவலாகக் கருதப்பட்டாலும், சிலர் அதற்கு முன்பே நிகழலாம் என்கின்றனர்.

1903-ஆம் ஆண்டு மனிதன் ஆகாயத்தில் பறக்க முடியும் என்பதை முதன் முதல் பறந்த விமானிகளான வில்பர் ரைட், ஆர்வில் ரைட் (Wilbur Wright - Orville Wright) செய்து காட்டினர். ஆனால், 1901-ஆம்ஆண்டு வில்பர் தன் சகோதரரான ஆர்வில்லிடம், இச்சாதனை நடைமுறைக்கு வர இன்னும் 50 ஆண்டுகள் ஆகலாமென்று கூறினாலும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிகழ்ந்துவிட்டது. வரலாற்றில் இவ்வாறு பல வெளிவராத நிகழ்வுகளிருப்பதால், புதுமைப் படைப்புகளுக்குக் காலத்தைக் கணிக்க முடியாமலிருக்கிறோம். இன்று மூலை முடுக்குகளெல்லாம் தொழில்துறை, வணிகம், மருத்துவம் என்று எல்லாவற்றிலேயும் ஊடுருவிக் கொண்டிருக்கும்ஏஐ 70 ஆண்டுகளுக்கு முன் நம்மில் பலரிடையே ஒரு பகல் கனவாக இருந்தது.

50 ஆண்டுகளுக்கு முன் கால்குலேட்டர் (calculator) இருந்தது. மனிதரை விட துரிதமாகவும் துல்லியமாகவும் பிழையின்றி முடிவுகளைக் கொடுக்கும் ஆற்றல் படைத்து, பெரும்பாலானோரின் அலுவலக மேஜைகளை அலங்கரித்தும், பலரின் கணிதம் சார்ந்த வேலைகளுக்கு நண்பனாகவும் இருந்ததை அறிவோம். இதன் வேகம் (speed), தனித்தன்மை (generality), மாறிடும் அமைப்பு (scale) பொறுத்து அதன் செயல்பாட்டினை மதிப்பிடும்போது கால்குலேட்டரை (calculator) அறிவாற்றல் (intelligent) என்ற பெரிய தொகுப்பின் வரிசையில் இடம்பெறுவதாகவும் கருதப்பட்டது.

கைப்பேசியின் ஆரம்பக் காலத்தில், சிலரின் கழுத்தைச் சுற்றி மாலையாக அணிவதைப் பெருமையாக உணர்ந்தனர் என்பதைப் போன்று, அதற்குமுன் கால்குலேட்டர் சிலரிடமே இருந்தது. ஆனால், இதனை இன்று நாம் காணும் அறிவாற்றலின் (intelligent) திறவுவாசலானஏஐ-க்குச் சமமாகக் கருத முடியுமா? ஏனென்றால், ‘ஏஐஒவ்வொரு நாளும் புதிய தோற்றத்தையும் ஆற்றலையும் பெற்று உருவாகிக் (evolve) கொண்டிருக்கிறது. ஆரம்பக் காலத்தில் கல்விக்காக (academic) மட்டும் போதுமானது என்று பயின்ற நாள்கள் சென்று, இத்தொழில்நுட்பம் 21-ஆம் நூற்றாண்டில், அன்றாட வாழ்க்கையின் பயன்பாட்டிற்கும் தேவை என்று உணரப்படுகிறது.

இன்றுஏஐதொழில்நுட்பத்தினால் ஒருவருடைய முகத்தையோ அல்லது பொருளையோ அறிந்துகொள்ள முடியும் (recognise).

ஒருவரின் பேச்சை எழுத்து வடிவில் (text transcription) பெற்றிடவும், உடனடியாக மொழிபெயர்ப்பு செய்திடும்படியான தொழில்நுட்பத்தைப் பெற்றிருக்கிறோம்.

ஒருசில தூண்டுதல் (prompts) மூலம்ஏஐமாடல்களிடமிருந்து வரைபடங்களை (images) மற்றும் தெளிவான, விளக்கமான தகவல் தொகுப்புகளை உருவாக்க முடியும். ‘ஏஐவழிமுறைகள் (systems) சிறிதும் மாறாத குரல்களை உருவாக்கவும், வியத்தகு இசையை அமைத்திடவும் திறன் பெற்றவைகளாக உள்ள நாள்களில் வாழ்கிறோம்.

இன்று பலர் ஸ்மார்ட் ஃபோன் (smart phones) மூலம் தொட்டுப் பேசுவதைக் காண்கிறோம். ‘ஏஐ -யின் கிளைப்பிரிவில் உருவானதே நாம் பரவலாகப் பயன்படுத்தும் கணினிப் பார்வை (computer vision). ஆன்லைன் மூலம் கல்வி என்பது (online classes) ‘ஏஐ-யின் மற்றொரு பிரிவு.

பொழுதுபோக்குக்கென்று தொடங்கி, ஓட்டுநரில்லாத கார் (self driven cars), ரோபோட்ஸ் (Robots), ட்ரோன்ஸ் (Drones) என்று 2030 போல்ஏஐபோக்குவரத்து, சுகாதாரம், கல்வி, பாதுகாப்பு, பொழுதுபோக்கு என்று பல துறைகளில் அன்றாடப் பயன்பாட்டிலிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏஐ-யின் ஊடுருவல் சமுதாயத்திலும் பொருளாதாரத்திலும் மாற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் நிலையில், சமுதாயம் இதன்மூலம் பயன் பெற தயார்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயமும் உள்ளது.

பொருளாதாரத்தின் வலிமை முன்பு ஒரு நாட்டின் நிலம், வேளாண்மை, அதனை நிர்வகிக்கும் திறனில் இருந்தது; இது உலகளவில் பரந்து விரிந்தும் இருந்தது. காலத்திற்கேற்ப பொருள்களின் முக்கியத்துவமும் மாறிக்கொண்டிருப்பதற்குத் தரவு (Data) ஓர் எடுத்துக்காட்டு.

இன்று நாம் பயன்படுத்தும் தரவுகள் (datas) வலிமையும் வேகமும் கொண்டதாக உள்ளன. தனி மனிதனின் அனைத் துத் தரவுகளையும் இயந்திரம் வைத்திருப்பது ஒருவரின் வாழ்வின் முறையைக் கணிக்க, வசப்படுத்த உதவிடும் என்பதோடு இல்லாமல்ஏஐஎது சரி? எது இல்லை? (redefine what is right and wrong) என்பதைத் தீர்மானிக்கும் இடத்தையும் பெற்று விடுகிறது.

ஏஐஎன்பது இயந்திரங்களை அறிவாற்றலடையச் (intelligent) செய்து, அந்த அறிவாற்றல் சூழலுக்கேற்ப எதிர்நோக்குடன் செயலாற்றச் செய்வதாகும். ‘ஏஐமனிதர்களை விட மேன்மையாக, குறைந்த செலவில் தன்னிச்சையாகச் செயலாற்றும் இயந்திர உருவாக்கமும் கூட (unaided machines being able to accomplish every task better and more cheaply than human).

ஏஐஇயந்திரங்களான ரோபோக்கள், ட்ரோன்கள் (Robots and Drones) இயங்குவது மட்டுமன்றி, ஒன்றுக்கொன்று இணைந்து செயலாற்றும் (collective intelligence) திறன்பெற்றிருப்பதை அவைகளின் சில செயல்களான ஜோடிகளாகப் பறப்பதில் (flying formation) காணமுடிகிறது. எதிர்காலத்தில் இன்னும் பலஏஐஇயந்திரங்கள் ஒன்றுடன் ஒன்று பேசிக்கொள்வது நடைமுறையில் வருவது தொலைவில் இல்லை.

இன்று கணினி உலகில் பரவலாகப் பேசப்படும் அல்கோரித தொழில்நுட்பத்திற்கு அதிக இடம் (space) ஒன்றும் தேவைப்படாது. ஒரு நாட்டிலிருந்தே பொறியாளர்கள் கோட் (code), அல்கோரித சாவியை (keys) வைத்து அனைத்துலக நிலைமையைக் கண்காணிக்கலாம். இதனால் ஏழ்மை நாடுகள் ஒதுக்கிவிடப்பட்ட நிலையிலும், வலிமையான நாடுகள் மேலும் வலிமை பெறவும் வழிவகுக்கும். இதே நிலைதான் உலகளவில் தொழிலாளர்களுக்கும் ஏற்படும்.

இந்த டிஜிட்டல் வளர்ச்சி எங்கு கொண்டு சேர்க்கும்? என்று திகைக்கும் நாள்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இயந்திரம் தரவுகளைத் தன் வசம் வைத்து, உலகளவில் அனைவரின் சொந்தத் தகவல்களைப் பெற்றிருப்பது எந்த நாட்டில் யார் வாழ்வது? ஒரு வேளை நாம் டிஜிட்டல் நாட்டில் வாழ்கிறோமா? என்பதாகக்கூட இருக்கும்.

இந்த ஓட்டத்தில் சேர்ந்துகொள்ள இயலாதோர் சமுதாயத்தில் தானாகவே ஒதுங்கி நிற்கும் சூழலும் ஏற்படலாம்.

news
சிறப்புக்கட்டுரை
மும்மொழிப் போர்வையில் ஒரே மொழி!

தமிழ்நாடு மீண்டும் ஒரு மொழிப்போரைத் தொடங்கும் வண்ணம் ஒன்றிய அரசு திட்டமிட்டு காயை நகர்த்தி வருகின்றது. மொழி என்னும் வலுவான பண்பாட்டுக் கருவியைத் தளராமல் கூர்மைப்படுத்தி வரும் தமிழ்நாடு இப்போதும் தமிழ் மரபைக் காத்து வருவதில் உறுதியைக் காட்டி நிற்பதைப் பார்க்க முடிகிறது.

மும்மொழியா? இருமொழியா?’ என்ற கேள்வி எழுப்பப்பட்டு வரும் இன்றைய போக்கினை வெறும் மொழிப்பிரச்சினை என்று சுருக்கிவிடல் கூடாது. சுருக்கிப் பார்க்கும் போக்கு இந்நாட்டின் புவிசார் அரசியல் பற்றிய தெளிவற்ற நிலையையே குறிக்கும்.

ஒன்றுஎன்பது வெறும் எண்ணைக் குறிப்பதன்று; ‘ஒன்றுஅல்லதுஒற்றைஎன்பது பன்மையை மறுப்பது; பன்மையை மறுப்பது என்பது சனநாயகத்தை மறுப்பது. சனநாயகத்தை மறுப்பது என்பது எதேச்சதிகாரத்தை ஏற்பதாகும். சுருங்கக் கூறுவதென்றால், பாசிசத்தின் திறவுகோல் இங்குதான் உருவெடுக்கிறது என்பதாகும்.

ஒன்றிய அரசு மாநில அரசுகளின் தலைவர் (Master) என்ற மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். மாநில அரசுகளோடு ஒன்றிய அரசு மேற்கொள்ளும் எதேச்சதிகாரப் (Authoritarian) போக்கையும் மாற்றிக்கொள்ள வேண்டும். ஒன்றிய அரசு சனநாயகத்தையும் உரையாடலையும் வழிமுறையாகக் கொள்ள வேண்டும். அச்சுறுத்தக் கூடாது. மிரட்டல் செய்யக் கூடாது - நன்றி: ‘டெக்கன் ஹெரால்டு 18.02.2025.

அண்மையில் எழுந்தமும்மொழியா? இரு மொழியா?’ என்ற விவாதத்திற்குடெக்கான் ஹெரால்டுஆங்கில நாளிதழ் தந்த விமர்சனப் பார்வை இது. இன்று ஒன்றிய அரசால் எழுப்பப்பட்டுள்ள இப்பிரச்சினையின் அடிநாதமே இங்குதான் உள்ளது. பன்மொழி பேசும் இந்தியாவில்ஒரு மொழியே ஆட்சி மொழிஎன்று கூறுவதும், அதைத் திணிக்க முயல்வதும் பன்மைக் (Plural) குணமிக்க இந்தியாவின் தன்மையை மறுப்பதாகும்.

ஒன்றுபட்ட இந்தியாவின் ஒருமையைக் காக்க ஒற்றைமொழி தேவைஎன அன்றைய தேசியத் தலைவர்கள் விரும்பியிருக்கலாம். ஏன், அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய நமது பெருந்தலைவர்களில் பலர் இச்சிந்தனை கொண்டிருந்தவர்கள்தாம். சுதந்திரம் பெற்ற இந்தியா ஒன்றுபட்ட இந்தியாவாக நீடித்து நிற்க  இந்தி பயன்படும் எனத் தேசத்தந்தை மகாத்மா உறுதியாக நம்பினார். அந்த நம்பிக்கையின் வெளிப்பாடே தேசம் முழுக்க கிளை பரப்பிய இந்திப் பிரச்சார சபாக்கள்.  ‘ஒன்றுபட்ட இந்தியாவுக்குபொதுமொழி அல்லது அலுவல் மொழி ஒன்றின் தேவையை இவர்கள் உணர்ந்ததால், அரசமைப்புச் சட்டத்தில் கூட அதை இடம்பெறச் செய்திருக்கலாம். அரசமைப்புச் சட்டத்தில் இந்தி அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை. அரசமைப்பைக் காட்டி, இதனை நியாயப்படுத்தினாலும் இது இந்தியப் பன்முகத் தன்மைக்கும், மாநில சுயாட்சிக்கும் எதிரானதே.

தமிழ்நாடு எப்போதுமே இந்தித் திணிப்பை எதிர்த்து வந்துள்ளது. இந்தி மொழிக் கட்டாயமாகும் என்று காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அறிவித்தபோது 1965-ஆம் ஆண்டு மிகப்பெரிய மக்கள் போராட்டம் வெடித்தது. நூற்றுக்கணக்கான தமிழர்கள் போராட்டத்தில் தங்களைத் தியாகம் செய்தபோது ஒன்றிய அரசு, மக்கள் ஏற்கும்வரை இந்தி மொழி அறிமுகமாகாது என்று அறிவித்த உறுதிமொழியின் காரணமாகப் போராட்டம் கைவிடப்பட்டது.

தமிழ்நாடு தனித்து நின்று போராடிய இம்மொழிப் போர் இன்னும் ஓய்ந்துவிடவில்லை. ஒன்றிய அரசுசமக்ரா சிக்ஷா அபியான்என்ற திட்டத்தை அங்கீகரிக்க வற்புறுத்துகிறது. தமிழ்நாடு ஏற்கெனவே ஏற்றுக்கொண்ட இருமொழிக் கொள்கையில் உறுதிகாட்டவே, இத்திட்டத்தை ஏற்காத தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய நிதி ரூ. 2,150 கோடியை ஒன்றிய அரசு விடுவிக்காமலிருக்கிறது. ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கையை உள்ளடக்கியசமக்ரா சிக்ஷா அபியான்திட்டத்தை ஏற்றுக்கொள்வதும், ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கையை ஏற்பதும் மும்மொழியும் ஒன்றாகிய இந்தியை ஏற்பதும் கட்டாயமாகும் என்பதாலேயே இருமொழிக் கொள்கையே தமிழ்நாட்டின்கல்விக் கொள்கைஎன்பதில் தமிழ்நாடு உறுதிகாட்டுகிறது. தமிழ்நாட்டின் இந்த நிலைப்பாட்டிற்காக நிதி மறுக்கப்படுவதாக ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளிப்படையாக அறிவிப்பது அராஜகத்தின் உச்சம்.

கல்வி, மாநில அரசின் பட்டியலிலிருந்து ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளபோது, கல்வி அமைப்பை ஒழுங்குபடுத்திச் சில நடைமுறைகளை NCTE, NECRT, U.G.C போன்ற உயர் கல்வி நிறுவனங் கள் மூலம் சில பரிந்துரைகளை வைக்கலாம். மாநிலங்களில் இப்படிப்பட்ட கல்விமுறைதான் இருக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு நினைக்குமானால், இப்போக்கு சனநாயகத்திற்கும், சனநாயகம் காக்க உருவான அரசமைப்புச் சட்டத்திற்கும், மாநிலச் சுயாட்சிக்கும் எதிரானது. ஏற்கெனவே பல்கலைக்கழக நிதிக்குழுவின் புதிய வரைவில், மாநிலக் கல்வியின் ஓர் அங்கமாகிய பல்கலைக் கழகங்களில் சுயாட்சி மிகப்பெரிய பாதிப்பைச் சந்தித்து வருகிறது. உயர் கல்வியில் மாநில அதிகாரத்தில் குழிபறிக்க நினைக்கும் ஒன்றிய அரசு, மும்மொழிக் கொள்கையை அங்கீகரிக்க மறுக்கும் தமிழ்நாட்டை அவதூறுகளால், பாகுபாட்டால் ஒதுக்கி ஒரங்கட்ட முனைகிறது.

மொழி பற்றிய ஒன்றிய அரசின் போக்கை வெகு விழிப்போடு உற்றுநோக்குவது தமிழ் மக்களின் கடமையாகும். இது வெறும் மொழி பற்றிய பிரச்சினை அல்ல; வகுப்புவாத அரசு என்பது, தன் ஆட்சியதிகாரத்தின் மூலம் ஒரு தேசிய இனத்தின் மீது நடத்தும் மிகப்பெரிய தாக்குதலாகும். ‘திராவிடம்என்ற அடையாளத்தோடு தமிழ்நாடு முன்வைக்கும் சித்தாந்தத்தின் அடிப்படை, இன்றைய ஒன்றிய அரசின் சித்தாந்தப் போக்கிற்கு முற்றிலும் எதிரானது. திராவிடம் பேசும் கருத்திய லும், இந்துத்துவம் பேசும் கருத்தியலும் முரண்பட்டவை என்பதால், தமிழ்நாட்டைத் திட்டமிட்டு வஞ்சித்து வருகிறது.

காசித் தமிழ்ச்சங்கம்என்ற பெயரில் ஆயிரக்கணக்கானோரை ஒன்றுதிரட்டி, வாரணாசியில் சங்கமிக்க நடத்தப்பெறும் விழாவிற்கு என்ன பொருள்? வாரணாசியில் கூட்டப்பெறும் இந்தச் சங்கமம் பற்றி தமிழ்நாடும் தமிழ்நாட்டுக் கட்சிகளும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமை வியப்பையே தருகிறது. உதயநிதியின் சனாதனம் பற்றிய பேச்சு பிரிவினைவாதமாகவும் இந்து மதத்திற்கு எதிரானதாகவும் பிரதமர் மோடி  அவர்களாலே பரப்புரை செய்யப்பட்டதையும் நாம் நினைவில்கொள்ள வேண்டும். செல்லுமிடமெங்கும் தமிழின் பெருமையைப் பேசும் பிரதமரின் இரட்டை முகத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

தேசியக் கல்விக்கொள்கையைத் தமிழ்நாடு முழுமையாக மறுத்துவிட்ட நிலையில், தேசியக் கல்விக்கொள்கை தாய்மொழிக் கல்வியை வலியுறுத்துவதாகக் கூறி மக்களைத் திசை திருப்புகிறது.

ஒன்றியக் கல்வி அமைச்சரின் கருத்தில் இருக்கும் முரணையும் நாம் புரிந்துகொள்ளுதல் அவசியம். ஒன்றிய அரசின் கேந்திரியப் பள்ளிகளில் ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலி போன்ற மொழிகளையும் ஓர் அறிக்கையில் அப்போதைய மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி அறிவித்ததோடு நிறுத்திவிட்டு, இப்போது அம்மொழிகளுக்குப் பதிலாக, சமஸ்கிருதம் இடம் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சி பெருகி வரும் நிலையில், உலகளாவிய வாய்ப்புகளைப் பெறும் வகையில் அறிவிக்கப்பட்ட ஐரோப்பிய மொழிகள் புறக்கணிக்கப்பட்டு, அவ்விடத்தைச் சமஸ்கிருதம் மூலம் நிரப்ப முயல்வது என்ன நியாயம்?

அண்மையில் நாடாளுமன்றத்தில் நடைமுறைக்கு வந்த ஒரு நிகழ்வு ஒன்றிய அரசின் உண்மை முகத்தைக் காட்டியது. நாடாளுமன்ற உரைகள் அனைத்தும் உடனடி மொழிமாற்றம் பெறுவதுண்டு. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தத்தம் தாய்மொழிகளில் உரையாடலாம். இம்மொழிகளின் எண்ணிக்கை 21 என்று கூறப்படுகிறது. உறுப்பினர்களுக்குத் தெரிய வைக்கவேண்டும் என்பதே நோக்கம். இப்போது 22-வது மொழியாகச் சமஸ்கிருதம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினையை அவையில் எழுப்பிய உறுப்பினர்களுக்கு அவைத் தலைவர் என்ன பதில் கூறினார் தெரியுமா? சமஸ்கிருதம் அனைத்து மொழிகளின் மூல மொழியாம்! ஆகவே, கேள்வி கேட்க முடியாது!

சபாநாயகரின் பதில் நமக்குத் தரும் செய்தி என்ன? இந்தியாவின் வெறும் எழுத்து மொழியான சமஸ்கிருதம் குறைந்த எண்ணிக்கையில் எழுபதாயி ரம் பேரால் மட்டுமே பேசப்படுகிறது; இது வழக்கு மொழி அல்ல. ‘தேவபாஷைஎன்று மட்டுமே போற்றப்படும் இம்மொழி எப்படி இந்திய மொழிகளின் மூலமொழியாக இருக்க முடியும்? இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சார்ந்த ஒரு மொழி இந்தியாவில் வழக்குமொழியான திராவிட மொழி களுக்கு எப்படி மூலமொழியாக முடியும்?

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த கருத்தியலாளர் குருஜி கோல்வாக்கர், தனதுசிந்தனைக் கொத்து (Bunch of thought) என்ற நூலில், சமஸ்கிருத மொழியை இந்திய மொழிகளின் ஊற்று (Fountain) என்று வர்ணிப்பார். எனவே, இந்திய நாட்டின் ஆட்சி மொழியாகத் தற்காலிகமாக இந்தியை ஏற்றுக்கொண்டாலும், இந்தியாவின் தேசிய மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் சமஸ்கிருதம்தான் இருக்க முடியும் என்ற குருஜியின் யோசனையை இந்துத்துவர்கள் மறுக்க முடியுமா? இன்றைய மும்மொழிக் கொள்கையின் பின்னணியில் இருக்கும் அரசியலைப் புரிந்துகொள்வதற்காகவே இவ்வுண்மைகள் தரப்பட்டன.         

சனநாயகத்தை நம்பாத ஆட்சியாளர்கள், சனநாயகம் தரும் தேர்தல்வழி பெரும்பான்மை வாதத்தைக் கட்டமைத்து, ஒதுக்கலையும் ஒடுக்கலையும் சூழ்ச்சியாகக் கொண்டு செயல்படும் வகுப்புவாத அரசு, சனநாயக நெறிமுறைகளைக் காக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. எனவேதான் அப்பட்டமாக அரசியல்  தர்மத்தை மீறும் வகையில்நிதியைத் தர முடியாதுஎன்று மறுக்கும் அளவுக்கு வன்மம் மேலோங்கியிருப்பதைப் பார்க்க முடிகிறது.

இந்தி எனும் மொழிக்கு எவரும் எதிரியாக இருக்க முடியாது. ஒரு மொழி என்ற நிலையில், எவர் கற்றாலும் தடுக்க முடியாது. இந்தியை வளர்க்க என்று உருவாக்கப்பட்டஇந்திப் பிரச்சார சபாஇந்தியா முழுமையும் செயல்பட்டு வரும் வலுவான ஓர் அமைப்பு. தமிழ்நாடு முழுவதும் இந்திப் பாடத் தேர்வுகளை நடத்திவரும் இவ்வமைப்பினைத் தடைசெய்யும் நோக்கு எவருக்குமில்லை. விரும்பியோர் ஒரு மொழியை விரும்பித் தேர்வு செய்வதில் எவருக்கும் ஆட்சேபனை இல்லை. ஆனால், இந்திய மொழிகளுள் ஒன்றான இந்தியை, மக்களில் பெரும் பகுதியினர் பேசுவதாகக் கூறிக்கொண்டு, அம்மொழியைத் தேசிய மொழியாகத் திணிப்பதை எப்படி ஏற்றுக்கொள்வது?

ஒற்றையும், ஒரு மொழியும்

1925-இல் உருவான வகுப்புவாத ஆர்.எஸ்.எஸ்அமைப்பின் கொள்கைகள் எவற்றையும் இந்திய நாட்டு மக்களும் இந்தியத் தலைவர்களும் இந்துத்து வர்கள் முன்வைத்தக் கோரிக்கைகளை ஒரு கும்பலின் கூச்சலாகவே எடுத்துக் கொண்டனர். வலுவான சமயச் சார்பற்ற பின்னணியைக் கொண்ட மகாத்மாவும், ஜவகர்லால் நேருவும், அறிவர் அம்பேத்கரும் இக்கும்பலின் கொள்கை உயிர் பெறும் என்று நம்பவில்லை.

பன்மையை மறுத்து ஒற்றையை வலியுறுத்திய இக்கும்பல், இராமரை அடையாளப்படுத்தி அயோத்தியில் இராமருக்குக் கோவில் என்றது; பெரும்பான்மை பெறும் நிலையில் அரசமைப்பை மாற்றுவோம் என்றது; காஷ்மீரின் தனி அந்தஸ்துக்கான 370 பறிக்கப்பெறும் என்றது; பொது சிவில் சட்டம் நடைமுறைப்படும் என்றது; மதமாற்றத் தடைச்சட்டம் உருவாக்கப்பெறும்; ஒரே தேர்தல் நடைமுறைக்கு வருகிறது. மதச்சிறுபான்மையினராம் இசுலாமியரின் இருப்பு கேள்விக்குள்ளானது. இவை அனைத்தும் இன்றைய நிதர்சனங்கள்.

ஒரே கலாச்சாரம், ஒரே தேசம், ஒரே சமயம், ஒரே தலைவர், ஒற்றை அரசு சாத்தியமா?’ என்ற கேள்விக்குசாத்தியமேஎன்பதுதான் பதில். ‘ஒற்றைஉண்மையாகும்போது, ஒரே மொழியும் (இந்தி) உண்மையாகும் என்பதில் ஐயமில்லை.

ஒற்றை மறுப்பை எப்படி உறுதிப்படுத்தப் போகிறோம்? ஒன்றிய பா... அரசின் தமிழ்நாட்டுத் தலைவர்களைத் தவிர, தமிழ்நாட்டுக் கட்சிகள் அனைத்தும் ஒன்றிய அரசின் மும்மொழித் திட்டத்தையும், தமிழ்நாடு அரசுக்கு அளிக்க வேண்டிய நிதியை மறுக்கும் ஒன்றிய அரசின் போக்கையும் கடுமையாக எதிர்த்து வருவது பாராட்டத்தக்கதே. ஒன்றிய அரசின் மக்களுக்கு எதிரான இத்திட்டங்களை ஒருங்கிணைந்து எதிர்க்க வேண்டும் என்பதே நம் நோக்கம்.

தமிழ்நாடு அரசு தேசியக் கல்வித் திட்டத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். நாட்டின் அனைத்துப் பகுதிகளும் ஏற்றுக்கொண்டிருக்கும் போது, தமிழ்நாடு அரசு ஏன் ஏற்க மறுக்கிறது? இவர்கள் குழப்பத்தில் உள்ளனர். அரசியல் நோக்கில் இக்குழப்பத்தைச் செய்கின்றனர். ஏன் மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுக்கின்றனர்? நாடு மாற்றம் பெற்று வருகிறது. உலகம் மாறி வருகிறது. இவர்களுக்கு என்ன வந்தது?”- தர்மேந்திர பிரதான், ‘தி இந்துபிப்.17,2023.

தமிழர்கள் ஒன்றிய அரசின் அச்சுறுத்தலுக்கு அஞ்சப்போவதில்லை. தமிழர்கள் உன்னத உயர் குணமுடையவர்கள் (Unique). அரசியல் சாசனத்தின் எப்பகுதியிலாவது மும்மொழித் திட்டம் பற்றிய குறிப்பு உள்ளதா? அப்படியிருந்தால் எடுத்துக் காட்ட முடியுமா? ஒன்றிய அரசு இந்தியக் கல்வி அமைப்பின் மொத்தக் காவலர்களா? தமிழ்நாட்டின் மீது நிகழ்த்தப்பெறும் அச்சுறுத்தலைத் தமிழ்நாடு எதிர்கொள்ளத் தயாராகவே உள்ளது - மு.. ஸ்டாலின், நன்றி: ‘தி இந்து 17, பிப். 2025.

மேலும், ‘இந்தியும் சமஸ்கிருதமும் வலிந்து திணிக்கப்படுவதால், இந்திய மொழிகள் யாவும் திட்டமிட்டுச் சிதைக்கப்படுகின்றனஎன்றும், ‘தாய்மொழி மீது கைவைப்பது தேன்கூட்டைத் தொடுவது போன்று ஆபத்தானதுஎன்றும் ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை விடுத்ததுடன், ‘கட்டாயமாக ஒரு மொழியைத் திணித்தால் அது நாட்டின் ஒற்றுமைக்கே பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்என்றும் தமிழ்நாடு முதல்வர் கூறியிருக்கிறார்.

ஒன்றிய அமைச்சரின் அதிகாரப் பேச்சும், தமிழ்நாடு முதல்வரின் பதில் மொழியும் இக்கட்டுரையின் உட்பொருளை நன்கு உணர்த்தவே செய்யும்.

news
சிறப்புக்கட்டுரை
சருகணியின் சகாப்தம்

இராமநாதபுரத்தில் 13 ஆண்டுகள் பணி செய்து, மக்களின் மனத்தில் நீங்கா இடம்பிடித்து, இறைப் பணியிலிருந்து ஓய்வு பெற்று, சருகணிக்கு ஆன்மிகக் குருவாக மாற்றம் பெற்று வந்தார். தந்தை லெவே அவர்களின் பாதம் சனவரி 31-ஆம் தேதி 1956-ஆம் ஆண்டு சருகணியில் பதிந்தது.

சருகணியில் நடைபெறும் குருக்களின் மாதாந்திரத் தியானத்தில் அவர்களுக்குப் பாவசங்கீர்த்தனம் கேட்கவும், ஆன்மிக ஆலோசனைகள் வழங்கவும் ஆன்மிகக் குருவாக நியமிக்கப்பட்டார். மதுரை உயர் மறைமாவட்டத்தின் கீழ் சருகணி ஒரு மறைவட்டத் தளமாக இருந்தது. ஒவ்வொரு மாதமும் முதல் வியாழன் அன்று  சருகணியில் வட்டாரக் குருக்களின் தியானம் நடைபெறும். தியானத்தைத் தந்தை லெவே அவர்கள்தான் வழிநடத்துவார்கள். குருக்களின் தூய்மையான வாழ்க்கை, கடவுளின் அழைப்புக்கேற்ற வாழ்க்கை, மக்களை விசுவாசத்தில் வாழ வழிசெய்தல் எனப் பலவற்றைக் குறித்து அறிவுரை வழங்குவார்.

ஆண்டாவூரணில் 22 ஆண்டுகளும், இராமநாதபுரத்தில் 13 ஆண்டுகளும் கடுமையாக உழைத்த தந்தைக்கு ஓய்வு தேவை எனப் பேராயர் முடிவு செய்து, சருகணிக்கு அனுப்பினார். ஆனால், தந்தை லெவே அவர்கள்ஓய்வுக்கே ஓய்வுகொடுத்து விட்டார். இறைவன் மீதும் மக்கள் மீதும் கொண்ட ஆர்வத்தால் ஒரு பங்குக் குருவைப் போல தொடர்ந்து இறைப்பணியைச் செய்தார். சருகணி அருகில் உள்ள அனைத்துக் கிராமங்களுக்கும் சென்று திருப்பலி நிறைவேற்றுவார். மக்களின் ஆன்ம தாகத்தை அறிந்து அவர்களுக்குப் பல இறைப்பணிகளைச் செய்துள்ளார்.

திருப்பலி நிறைவேற்ற சைக்கிள், மாட்டு வண்டி மற்றும் பேருந்துகளில் பயணம் செய்வார். செக்ககுடி, கடம்பாவூர், உச்சாணி, இரவிய மங்களம், பொன்னலிக்கோட்டை போன்ற பல கிராமங்களுக்கு நடந்தே பலமுறை சென்றிருக்கின்றார். தந்தையின் முயற்சியால் 30-க்கும் மேற்பட்ட சிற்றாலயங்கள் கட்டி எழுப்பப்பட்டுள்ளன.

சருகணியில் தந்தையிடம் மழைக்காக வேண்டி பலர் வருவார்கள்; அவர் கையில் செபமாலை ஏந்தி செபித்த உடனே மழை வரும் என்பது மக்களின் நம்பிக்கை; அது நடந்தும் இருக்கின்றது. அவரைக் காண்பதற்காகப் பலர் பல மைல் தூரத்திலிருந்து, பல கிராமங்களிலிருந்து வந்திருப்பார்கள்; ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் பார்த்து, அவர்களுடன் பேசி, அவர்களுக்கு ஆலோசனை வழங்கி அனுப்புவார். குறிப்பாக, பிள்ளைகளின் எதிர்காலம் சீரும் சிறப்புமாக அமைய பல்வேறு இடங்களுக்குச் சென்று படிக்க கடிதங்களைக் கொடுத்து அனுப்புவார். சாதி, மத, இன வேறுபாடு இன்றி எல்லா மக்களின் வாழ்வாதாரமும் சிறக்க  உழைத்தார்; அது இன்றளவும் பலருடைய வாழ்க்கையில் நினைவு கூரப்பட்டு வருகின்றது.

இவ்வாறு தனது பணிகளைச் செய்த தந்தை அவர்கள் 1973, பிப்ரவரி மாதத்தில் நோய்வாய்ப்பட்டு, சருகணி அருகில் உள்ள ஆரோக்கிய அன்னை மருத்துவமனையில் சிகிச்சை பெறச் சேர்க்கப்பட்டார். தான் இறப்பதற்கு முன்பாகவே தனக்குக் கல்லறையை லூர்து அன்னையின் கெபிக்கு மேற்காகவும், புனித குழந்தை தெரசம்மாள் பீடத்திற்குத் தெற்காகவும் தோண்டக் கேட்டுக் கொண்டார். அவ்வாறு தோண்டப்பட்ட கல்லறையைத் தந்தை முன்கூட்டியே புனிதப்படுத்தினார்.

மருத்துவமனையில் இருந்த தந்தை, தான் சருகணியில் இறக்க விரும்பி தன்னைச் சருகணிக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டபடி, சருகணிக்கு அழைத்து வரப்பட்டார். சருகணிக்கு வந்தவுடன் நோயில்பூசுதலைப் பெற்று, மார்ச் 21-ஆம் தேதி மாலை 5.10 மணிக்குஇயேசு மரி சூசைஎன உச்சரித்தவாறு இயற்கை எய்தினார். மறவ நாட்டு மண்ணில் அயராது உழைத்த தந்தை லெவே அவர்களின் உயிர் விண்ணை நோக்கிப் பறந்து விட்டதுமண்ணகப் பிறப்பிலிருந்து விண்ணகத்தில் பிறந்துவிட்டார்.

தந்தையின் இறுதி ஊர்வலத்தில் ஆண்டாவூரணி, இராமநாதபுரம், சருகணி என அவர் பணியாற்றிய ஊர்களிலிருந்தும் சுற்று வட்டாரத்திலிருந்தும் கூட்டம் அலை மோதியது. தந்தை அவர்கள் புனிதப்படுத்திய கல்லறையில் அவர் அடக்கம் செய்யப்பட்டார். அவர் புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டார்!

தந்தை லெவே அவர்கள் கூறியது போலவே, அவர் இறந்த பின்பும் தொடர்ந்து மக்களுக்காகப் பரிந்து பேசுகின்றார். சாதி, மத, இன பேதமின்றி இறை ஊழியரின் பல புதுமைகள் இன்று இங்கு நடந்து கொண்டிருக்கின்றன. அன்றாடம் அவர் கல்லறைக்குப் பலர் வந்து சென்று கொண்டிருக்கின்றார்கள். அவருடைய பரிந்துரையால் இறைவனுடைய ஆசியையும் அருளையும் பெற்றுச் செல்கின்றார்கள்.

ஒவ்வோர் ஆண்டும் அவருடைய விண்ணகப் பிறப்பு நாளான மார்ச் 21-ஆம் தேதி சருகணி விழாக்கோலம் காண்கிறது. பல ஊர்களிலிருந்தும் மக்கள் தந்தையின் பரிந்துரையை நாடி வருகிறார்கள்; இறைவனுடைய ஆசியைப் பெற்றுச் செல்கிறார்கள்

2016-ஆம் ஆண்டு தந்தை லெவே அவர்கள் இறை ஊழியராக அறிவிக்கப்பட்டார்கள். அவர் விரைவிலேயே அருளாளராக, புனிதராக உயர்த்தப்படுவார் என்று ஒவ்வொரு நாளும் சருகணி இறைச் சமூகம் செபத்தோடு காத்து நிற்கின்றது.

தந்தை லெவே அவர்கள் 17 ஆண்டுகள் தங்கிய குருக்களின் இல்லத்தை லெவே தந்தையின் அருங்காட்சியகமாக மாற்றி, தந்தையினுடைய வாழ்க்கை வரலாறு பற்றிய புகைப்படங்களை எல்லாம் சேகரித்து அருங்காட்சியகத்தில் மக்களுடைய பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகப் பணியானது லெவே தந்தையினுடைய விண்ணகப் பிறப்பின் 50-ஆம் ஆண்டு தொடங்கி, அவருடைய விண்ணகப் பிறப்பின் 51-ஆம் ஆண்டு, பணிகள் நிறைவு பெற்று, சிவங்கை ஆயர் மேதகு லூர்து ஆனந்தம் அவர்களால் அர்ச்சித்துத் திறந்து வைக்கப்பட்டது.

அன்பர்களே, சருகணிக்கு வாருங்கள் இறை ஊழியரைக் காண... அவர் பரிந்துரையை நாடுவோம், நலம் பெற்றுச் செல்வோம்!

news
சிறப்புக்கட்டுரை
தந்தை லெவே இயேசுவின் கோதுமை மணி

கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால்தான், அது பலன் கொடுக்கும் (யோவான் 12:24) என்ற இயேசுவின் வார்த்தைக்கு ஏற்ப, தான் வாழ்ந்தபோதும், சருகணி மண்ணிலே துயில் கொண்ட பின்பும் இயேசுவின் கோதுமை மணியாக மாறி, மக்களின் வாழ்க்கையோடு கலந்து, மடிந்து இன்றும் பலன் அளித்துக் கொண்டு இருக்கின்றார் நம் சருகணியின் சகாப்தமான இறை ஊழியர் லூயி மரி லெவே.

தந்தை அவர்கள் விண்ணகப் பிறப்பு அடைந்து 51 ஆண்டுகள் கடந்தாலும், அவரின் பரிந்துரையை நாடி ஒவ்வொரு நாளும் சருகணியின் மண்ணை நோக்கி மக்கள் சாதி, இன, மத பேதமின்றி வந்து செல்கின்றார்கள். இன்றளவும் அவரது கல்லறையில் தங்களது விண்ணப்பங்களை, மன்றாட்டுகளை வைத்துச் செபித்த பின்பு, ஒவ்வொரு மாதமும் லெவே தினமாக 21-ஆம் தேதி சாட்சியம் கூறிக் கொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக, புற்றுநோயிலிருந்து, சிறுநீரகக் கல் அடைப்பிலிருந்து, பார்வை குறைபாட்டிலிருந்து, தீராத தலைவலி மற்றும் கண் வலியிலிருந்து குணத்தைப் பெற்றுச் செல்கின்றனர். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர் மற்றும் திருமண வரனுக்காகக் காத்திருப்போர், அவரின் பரிந்துரையால் குழந்தைச் செல்வத்தையும், நல்லதொரு வரம் கிடைத்தவர்களாய் அவருக்கு நன்றி செலுத்த சருகணி நோக்கி மக்கள் ஒவ்வொரு நாளும் வந்து செல்கின்றனர்.

தந்தை வாழ்ந்தபோதே விவசாயிகளின் காப்பாளனாய், மழைக்காக மக்கள் காத்திருந்தபோது தந்தை லெவேயிடம் வந்து, “ஐயா, மழையில்லாமல் பயிர்கள் வாடுகின்றன; எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும்என்று கூறியபோது, உடனே மக்களின் கண்ணீரைப் போக்க செபமாலையுடன் முழந்தாள்படியிட்டுச் செபிப்பார். உடனே அல்லது மூன்று நாள்களுக்குள் மழை வரும். மக்களும் மன நிம்மதியுடன் தங்கள் இல்லம் திரும்புவார்கள்.

விவசாயிகள் தங்களின் பயிர்களைப் பூச்சி, எலி, புழுக்கள் கடித்துத் தின்றால், நாசப்படுத்தினால் உடனே தந்தை லெவேயிடம் ஓடி வருவார்கள். அவரும் பனையோலையில் செபத்தை எழுதி மந்திரித்துக் கொடுத்து அனுப்புவார். தங்களின் நிலத்தில் அந்த மந்திரித்த ஓலையைக் கட்டியவுடன், பூச்சி மற்றும் எலியின் தொல்லையிலிருந்து பாதுகாக்கப்பட்டதாகக் கூறுவார்கள்.

இன்றளவும் மக்கள் தங்கள் நிலத்தில் விதைப்பதற்கு முன்பு, லெவே சாமியின் கல்லறையைத் தரிசித்து, விதைகளைக் கல்லறை மீது வைத்துச் செபித்த பின்புதான் விதைக்கச் செல்வார்கள். பயிர்களைப் பூச்சி, புழு அழித்தால், ஓலைகளை வாங்கிச் சென்று கட்டுவார்கள். இன்றும் பல ஊர்களிலிருந்து விவசாயிகள் வந்து செல்வதுண்டு.

நான் செய்யும் செயல்களை, என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்கள்என்றார் இயேசு (யோவான் 14:12). தந்தை லெவே அவர்கள் இறைவன் மீது முழு நம்பிக்கை கொண்டவராய் வாழ்ந்தார். அதனால்தான் இந்த மண்ணிலே துயில் கொண்டு பல புதுமைகளைத்தான் அன்பு செய்த மக்களுக்காகச் செய்து கொண்டு இருக்கிறார்.

வாருங்கள், சருகணியை நோக்கி!

தந்தை லெவே அவர்களின் பரிந்துரையை

நாடுங்கள், இறையருளைப்

பெற்றுச் செல்லுங்கள்!

news
சிறப்புக்கட்டுரை
இறை ஊழியர் லூயி லெவேயும் பொதுநிலையினரும்

“தன் பணிக்காலங்களில் தனிப்பட்ட நபர்களின் பேராதரவைப் பெறவும், அவர்களின் ஆன்மிகக் காரியங்களில் அக்கறை காட்டவும் தந்தை லெவே தவறியதில்லை. கீழக்கரை, சித்தார்கோட்டை, இராமநாதபுரம், தேவிபட்டணம் போன்ற இடங்களிலிருந்த இஸ்லாமியர்களிடமும் இவர் நல்லுறவு கொண்டிருந்தார்.”

1962, அக்டோபர் 11 முதல் 1965 டிசம்பர்வரை நடைபெற்ற இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்குப் பிறகுதான் திரு அவையில் பொதுநிலையினர் மற்றும் அவர்தம் பங்களிப்பு பற்றிப் பேசப்பட்டு வருகிறது. ஆனால், அதற்கு முன்பே (1943-73) வாழ்ந்த இறை ஊழியர் லூயி மரி லெவே சே.. பொதுநிலையினரோடு  இணைந்து பணிபுரிந்துள்ளார்.

ஆண்டாவூரணியில் 22 ஆண்டுகளும், 13 ஆண்டுகள் இராமநாதபுரத்திலும், 17 ஆண்டுகள் சருகணியிலும் மறைப்பணியாற்றிய தந்தை லெவேயின் மறை அறிவிப்புப் பணியில் பெருவாரியாக பிரிட்டிஷ் இந்தியாவின் பொதுநிலையினர் பல்வேறு நிலைகளில் பங்கு பெற்றுள்ளனர். ஆசிரியர் பயிற்சி பெற்றுத் தம் பள்ளிகளில் பணிபுரிந்த இருபால் ஆசிரியர்கள்பயிற்சி பெற்ற வேதியர்கள், இவர்களால் உருவாக்கம் பெற்ற கோவில்பிள்ளைகள், உபதேசியார்கள் எனப் பொதுநிலையினரின் பட்டியல் நீள்கிறது.

எதைச் சொன்னாலும், எதைச் செய்தாலும் அனைத்தையும் ஆண்டவர் இயேசுவின் பெயரில் செய்து, அவர் வழியாய் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள் ( கொலோ 3:17) என்ற பவுல் அடியாரின் கூற்றுக்கு ஏற்ப பணிபுரிந்தார் தந்தை லெவே. இராமநாதபுரத்தில் தந்தை லெவே வாழ்ந்த காலங்களில் (1943-56) பிரான்சில்  உள்ள தன் உறவுகளுக்குத் தன் கைப்பட எழுதிய கடிதங்களை வாசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதில் காணப்பட்டவையே இக்கட்டுரையின் கருவாய் அமைந்துள்ளன.

தன் அண்ணன் மகன் இயேசுவின் மரியாவுக்கு மார்ச் 1949-இல் எழுதிய மடலில், “இங்குள்ள வேளாண் மக்கள் அறுவடையிலிருந்து கால் பலன் மட்டுமே பெற்றுள்ளனர். அவர்கள் தாமதமாக நடவு செய்யத் தொடங்கினர். மழை போதுமானதாக இல்லை; மழை இல்லாததால் அவர்களின் அறுவடைகள் அழிந்தன. பெண்கள் வயல்களில் புல் வெட்டி அவைகளைக் குதிரைக்காக இராமநாதபுரம் சென்று விற்கிறார்கள்இப்பணத்தில் ஒரு நாளைக்குப் போதுமான உணவை வாங்குகிறார்கள். அவர்கள் இராமநாதபுரத்திலிருந்து தாமதமாகத் திரும்பி வருகிறார்கள்மிகவும் சோர்வாக இருக்கிறார்கள்படிக்கும் தைரியம் அவர்களுக்கு இல்லை. அவர்களுக்குத் தொடர்ந்து உதவி செய்து வருகிறேன்என்று எழுதியுள்ளார்.

23.10.1953-இல் இயேசுவின் மரியாவுக்கு எழுதிய கடிதத்தில், “தேவிபட்டணம், ஆத்தங்கரை மீனவர்களின் குறைதீர்க்கும் வகையில் தஞ்சாவூரிலிருந்து நரம்பு நூல்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து மீன்வலைகளைப் பின்னினால் அவர்களின் மீன் பிடிப்பு முன்னேற வாய்ப்புகள் அதிகமாகும்இவைகளுடன் அவர்களுக்கு நல்ல படகும் ஏற்பாடு செய்து கொடுப்பது நமது கடமையாக இருக்கிறது. அவ்வாறு உதவி செய்தால், அவர்கள் பெரிய அளவில் மீன்களைப் பிடிக்கலாம். அவர்களுடைய  வாழ்க்கைத் தரம் உயர வாய்ப்புள்ளதுஎன்று எழுதியுள்ளார். இவை தந்தை லெவே அவர்கள் பொதுநிலையினர் மீது கொண்டிருந்த கரிசனையைப் படம் பிடித்துக்காட்டுகிறது.

மேலும், சமூகத்தில் பொருள் படைத்த சிலரும் விரும்பி இவரின் அருள்பணியில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் கப்பல் கேப்டன் திரு. மைக்கேல் கோமஸ். தந்தை லெவேயின் பேருபகாரி. இறைபக்தியும் மனிதநேயமும் கொண்ட கத்தோலிக்கச் செல்வந்தர். மதுரை மறைமாவட்டத்தில் திருத்தந்தையின் விருது பெற்ற முதல் கத்தோலிக்கர் இவர்.

1951-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் நாள் தனுஷ்கோடி குழந்தை இயேசு வளாகத்தில் நடைபெற்ற விழாவில் அருள்தந்தையர் அடைக்கலம், பொடல், லெவே மற்றும் ஜோக்கிம் கலந்துகொண்டனர் (The New Leader, 13.1.1952). இவர் தனுஷ்கோடியிலிருந்து இலங்கை செல்லும் கப்பலின் தலைவராய் விளங்கினார். இலங்கை கண்டியில் படித்த அன்றைய இராமநாதபுரம் சமஸ்தானத்தை ஆண்ட அரசர் சண்முகராஜ இராஜேஸ்வர சேதுபதியின் புதல்வர்கள் இவர் கப்பலில்தான் பயணிப்பர். இந்தப் பழக்கத்தைப் பயன்படுத்தி இராஜா தினகரனாலும், அவர் மனைவி மாரி என்னும் மேரி நாச்சியாராலும் கட்டப்பட்டிருந்த கிறிஸ்துராஜா தொடக்கப் பள்ளியைராஜா தினகர் ஆர். சி. பள்ளிஎன்ற பெயர் மாற்றத்துடன் தந்தை லெவேக்கு வாங்கிக்கொடுத்தவர் இவரே. இன்று அதே பெயரில் உயர்நிலைப் பள்ளியாய் உயர்ந்து நிற்கிறது அப்பள்ளி (நன்றி: ‘ஏழைப்பங்காளன் அருள்தந்தை லூயி லெவே சே.. D. கஸ்பார் S.H.J. 21.3.1999).

இத்தகு செல்வாக்குப் பெற்ற கேப்டன், 1955-இல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பெங்களூரில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். அவர் உடல் நலிந்து வருவதையும், வேதனையில் துடிதுடிப்பதையும், அறுவை சிகிச்சை செய்ய இருப்பதையும், அருளானந்தரின் பரிந்துரைக்காய் ஏங்கி நிற்பதையும் மிகுந்த மனவேதனையோடு தன் அண்ணன் மகள் இயேசுவின் மரியாவுக்கு 07.06.1955-இல்  எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார். லூர்துநகர் சென்று லூர்து அன்னை கெபியில் கேப்டனுக்காகச் செபிக்கும்படியும் கேட்டுக்கொள்கிறார்.

பாம்பனிலிருந்து இரயில் நிலையத்தில் திரும்பி வரும்போது, இரயில்வேயில் ஓய்வு பெற்ற அதிகாரியைச் சந்திக்கிறார். இவர் ஒரு பிராமண ஐயங்கார். 1914-18 போரில் பொதுப் போக்குவரத்துக் கண்காணிப்பாளராக இருந்தவர். இவருடன் உரையாடும்போதுஇந்து, கிறித்தவ மதங்களிடையே குறைந்த வித்தியாசமே உள்ளன. கிறிஸ்துவும் கிருஷ்ணரும் ஒருவரேஎன்கிறார் அவர். ஆனால், தந்தை லெவே அவரிடமிருந்து முரண்படாமல், கிறிஸ்துவின் வல்லமை, உன்னதம், முழுமை போன்றவைகளைப் பற்றிக் கூறி கத்தோலிக்கத் திருமறையை விளக்குகிறார். இதில் சேர நல்லெண்ணம் ஒன்றே போதும் என்று உணர்த்துகிறார். இயேசு கற்பித்த செபத்தை மீண்டும் மீண்டும் சொல்லக் கேட்டுக்கொள்கிறார். இவர் மனைவியை இழந்தவர். இறக்கும் தருவாயில் தன் மனைவி கேட்டுக் கொண்டதற்கிணங்க 60 வயதாகியும் மறுமணம் செய்துகொள்ளாமல் ஆரோக்கியமாக வாழ்கிறார். “என் மனைவி நல்ல மனசாட்சியுடன் இறந்தார்என்கிறார். நல்ல மனசாட்சியுடன் இவ்வுலகை விட்டுச் செல்லும் இந்து மத அன்பர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று இந்த நிகழ்வினைத் தன் அண்ணன் மகள் இயேசுவின் அன்னை மரியாவுக்கு 17.9.1950-இல் எழுதிய கடிதத்தில் பதிவிடுகிறார்.

இவ்வாறு தன் பணிக்காலங்களில் தனிப்பட்ட நபர்களின் பேராதரவைப் பெறவும், அவர்களின் ஆன்மிகக் காரியங்களில் அக்கறை காட்டவும் அவர் தவறியதில்லை. கீழக்கரை, சித்தார்கோட்டை, இராமநாதபுரம், தேவிபட்டணம் போன்ற இடங்களில் இருந்த இஸ்லாமியர்களிடமும் இவர் நல்லுறவு கொண்டிருந்தார்.

செம்மண் புனிதர்அருளானந்தர் திருத்தலம் பசிலிக்காவாக உயர்த்தப்பட்டிருக்கும் இவ்வேளையில், சாதி, மதம் கடந்து பொதுநிலையினரோடு நல் லுறவு கொண்டிருந்த சின்ன அருளானந்தர் இறை ஊழியர் லூயி லெவே அவர்கள் விரைவில் புனிதராய் உயர்ந்து நம் உள்ளங்களையும் இல்லங்களையும் பலிபீடங்களையும் அழகு செய்வாராக!

news
சிறப்புக்கட்டுரை
இறைஊழியர் தந்தை லூயி மரி லெவேயின் வாழ்வின் வழித்தடங்கள்

இறைவார்த்தையின்படி வாழ்ந்தவர்களே புனிதர்கள்என மறைந்த திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட் வலியுறுத்திக் கூறுகிறார். இறைவார்த்தையினின்று புறப்பட்டு வரும் சுடரொளி போன்று ஒவ்வொரு புனிதரும் இறையடியார்களும் விளங்குகின்றனர். இயேசுவின் பாதச்சுவட்டைத் தன் வாழ்வில் பதித்து புனிதம் பெறுகின்றனர். “தூயோராய் இருங்கள்; ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நான் தூயவர் (லேவி 19:2) என்ற இறைவாக்கின்படி, கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப தூய வாழ்வு வாழ்ந்து, தூய்மையான நெறிமுறைகளால் தங்களை அலங்கரித்து நடமாடும்  புனிதர்களாய், மாமனிதர்களாய் வாழ்ந்து தடம்பதித்துச் சென்றவர்கள்தான் புனிதர்கள். அத்தகையவர்களின் வரிசையில் இடம்பெறுபவருள் ஒருவர்தான் இறை ஊழியர் லூயி மரி லெவே!

முகவை மாவட்டத்தின் விசுவாச வாழ்வின் விளக்காக வாழ்ந்து, செம்மண் புனிதர் அருளானந்தரின் அடிச்சுவட்டில் தடம்பதித்து, ‘சின்ன அருளானந்தர்என்ற பெயருக்குச் சொந்தக்காரராக இருப்பவர் சருகணியின் புனிதர், மேற்கத்திய சூரியன் அருள்தந்தை லூயி மரி லெவே!

பிறப்பும் இளமைப் பருவமும்

06.04.1884-ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் ரென் மாவட்டத்தில் இலாவி என்ற ஊரில், திருவாளர் ஜோசப் லெவே, திருமதி. ஜூலியானா லெபினே என்ற தம்பதியருக்குப் பத்தாவது குழந்தையாய், மண்ணின் மாணிக்கமாய் பிறந்தார். ‘நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்என்பது போல, குடும்பத்திலேயே சிறப்பான பண்புகளுடன் வளர்க்கப்பட்டார். இறையுறவு, பிறர் உறவு, இறைவார்த்தையைப் படித்து வாழ முயற்சித்தல் போன்றவற்றுடன் செபம் செய்தல், செபமாலை செபித்தல் போன்ற ஆன்மிகச் செயல்பாடுகளில் ஈடுபடுத்தி வளர்க்கப்பட்டவர்.

பிரான்ஸ் நாட்டில் சிறப்பாகப் பணிபுரிந்து வரும் இயேசு சபைக் குருக்களின் வாழ்வு அவரை ஈர்த்ததால் இறைப்பணி செய்ய ஆர்வம் கொண்டு, 06.10.1906-இல், பெல்ஜியத்தில் உள்ள இயேசு சபையில் தன்னை இணைத்துக் கொண்டார். டூலூஸ் மறைமாநிலத்தில் இரண்டு ஆண்டுகள் நவ துறவியாகப் படித்துவிட்டு தமிழ், ஆங்கிலம் மொழிப்  பயிற்சி பெறுவதற்காக ஓராண்டு கொடைக்கானலில் உள்ள செண்பகனூரிலும், மேலும் இரண்டு ஆண்டுகள் மெய்யியல் பயிற்சியும் பெற்றபின், நான்கு ஆண்டுகள் களப்பணிக்காகப் (Regeney) பாளையங்கோட்டைக்கும், இறையியல் பயிற்சிக்காக இரண்டு ஆண்டுகள் டார்ஜிலிங் மாவட்டத்திலும் பயிற்சிகளை முடித்து, 13.01.1920-இல் குருத்துவ அருள்பொழிவு பெற்றார். அதன்பின் ஆண்டாவூரணி பங்குப்பணியாளராக சிவகங்கை மண்ணில் தன் அடிச்சுவடுகளைப் பதித்தார்.

1921-1943 வரை முத்தாய்ப்பான பணிகளைச் செய்தார். பின் 1943 - 1956 வரை மக்கள் வியந்து போகும் வகையிலே ஆக்கப்பூர்வமான பணிகளை ஆவலோடும் ஆனந்தமாகவும் செய்து மக்களின் மனத்தைக் கொள்ளை கொண்டார். பின்னர் சருகணியின் சரித்திரமாய் இம்மண்ணிற்குப் பணிவிடை புரிய வந்தவர் ஆன்மிகக் குருவாக இருந்து, ஓய்வுக்காக வந்தவர் ஓயாது பணிபுரிந்து, ஓங்கு புகழோடு உயர்ந்து நிற்கிறார் நம் அனைவர் மனத்திலும்!

குருத்துவ வாழ்வியல்

அருள்பொழிவு நாளில் இறைவன் தந்த புனிதப்படுத்தும் பணி, மேய்ப்புப் பணி, போதனைப் பணி என்னும் முப்பெரும் பணிகளிலும் தடம் பதித்தவர். இறைவார்த்தை பரவிட, இறைப்பணிகள் தொடர்ந்திட இறக்கும் வரையும் தன்னை இயக்கியவர். நற்செய்தியின் விழுமியங்களை எட்டுத்திக்கும் பறைசாற்றி குருக்களுக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்து குன்றின் மேலிட்ட தீபமாய் ஒளிர்ந்தவர்.

பங்குப் பணித்தளத்தில்

இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள் (1தெச 5:17) என்ற இறைவாக்கின்படி, அதிகாலையில் நான்கு மணிக்கு எழுந்து செபம் செய்துவிட்டு திருப்பலி நிறைவேற்றும் இவர், பின் ஒப்புரவு அருள்சாதனம், செபமாலை, சிலுவைப்பாதை போன்ற ஆன்மிகச் செயல்களால் இறையுறவில் திளைத்திருப்பவர். இறைவனின் பிரசன்னத்தால் ஒவ்வொரு நாளும் அரும்பெரும் செயல்களைச்  செய்தவர். நற்கருணை ஆண்டவரின் நல்லாசிர் பெற்று, நாளெல்லாம் இறையுறவில் மூழ்கி இயேசுவைச் சுவாசமாக்கியவர்.

ஞாயிறு திருப்பலியின் மகத்துவத்தை மக்கள் அறிய வீடு வீடாக, தெருத் தெருவாகச் சென்று, மக்களை அழைத்து வந்து திருப்பலியின் மேன்மையை உணர்த்தியதோடு, செபம் சொல்ல, செபமாலை செய்ய மக்களை ஊக்கப்படுத்தியவர். திருப்பலி முடிந்தபின்னும் இறைமக்களோடு நேரத்தைச் செலவிட்டுஇயேசுவே, அன்பின் அரசரே! உமது அன்புள்ள இரக்கத்தை நம்புகிறேன்என்ற மந்திரத்தை மக்களுக்கு ஊட்டியவர். ஆழமான போதனைகளால் மக்களை இறைவன்பால் ஈர்த்தவர். புனித அருளானந்தர்மீது அளப்பரிய பக்தி கொண்டவர். அவர் வழித்தடத்தில் தன் பாதையை அமைத்துக் கொண்டவர். செப, தவ, தான, தர்மங்களால் கருணையாளர் ஆனவர். “எனக்கு வலுவூட்டுகிற ஆண்டவரின் துணை கொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு (பிலி 4:13) என்ற புனித பவுல் அடியாரின் கூற்றை நம்பியவர். அவருக்கு வலுவூட்டும் சக்தியாக இருந்தது செபம் மட்டுமே. சோதனைக்கு உள்பட்டபோதெல்லாம், கதவு, சன்னல்களை அடைத்துக் கொண்டு ஐந்து முடிச்சு கொண்ட  சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சோதனைகளை வென்றவர்.

பண்பு நலன்களின் செயல் வீரர்

அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, சாந்தம், விசுவாசம் போன்ற ஆவியின் கொடைகளால் தன்னை அலங்கரித்துக் கொண்டவர். குழந்தைக்குரிய மனநிலையுடன் வாழ்ந்தவர். வானகத்தின் திறவுகோலான எளிமையை வாழ்வாக்கியவர். இறையன்பின் சாயலை மக்களிடமும் இயற்கையிடமும் கண்டு நட்புக் கொண்டு வாழ்ந்தவர்.

ஆடு, மாடு வளர்ப்புப் பிராணிகளுக்கு நோய் வந்தாலும் செபித்து, புனித நீர் தெளித்துச் சுகப்படுத்தியவர். யார் வீட்டில் எது நடந்தாலும் பங்குப் பணியாளராக மட்டுமல்ல; குடும்ப உறவினர்போல் கலந்துகொண்டு அனைவரையும் மகிழ்விப்பவர். கொடுப்பதில் இன்பம் கண்டு, அனைவருக்கும் குறிப்பாக, ஏழைகளுக்குக் கொடுத்து வாழ்வதில் நிறைவு பெற்றவர்.

அறிவார்ந்த தோழமை, ஆதிக்கமில்லாத அணுகு முறை, சாதி வேறுபாடில்லாத உறவு, கலாச்சார ஒற்றுமை போன்ற விழுமியங்களில் மையம் கொண்டு, உயர்ந்த செயல்பாடுகளால் மக்களைக் கவர்ந்தவர். மக்களிடமிருந்து வரும் ஒவ்வொரு கடிதத்தையும் வாசித்து, உருக்கமாய் செபித்து, செபத்தின் வெளிப்பாடாக பதில் கடிதம் தவறாது அனுப்பியவர்.

மக்களால் கொடுக்கப்பட்ட செல்லப் பெயர்கள்

லெவே சாமி, தாத்தா சாமி, மழைச்சாமி, வெள்ளக்காரச் சாமி, ஆண்டாவூரணியின் ஆதவன், சருகணியின் சகாப்தம், முகவையின் முகவரி, மேற்கத்திய சூரியன் எனப் பல்வேறு அடைமொழிகளில் சிவகங்கைச் சீமையில் பவனி வந்தவர். இத்தகைய மாமனிதர் வாழும்போதே இறைத்துணையால் புதுமைகள் செய்யும் சிறப்பு வரம் பெற்றவர். எல்லோராலும் வணக்கம் செலுத்தத் தகுதியுள்ளவர். திரு அவையில் புனிதர் என்னும் அங்கீகாரம் பெற்று, உலக மக்கள் அனைவரும் போற்றும் புனிதப் பட்டம் பெறும் காலம் இதோ கனிந்து வருகிறது. அதற்காகச் செபிப்பதோடு, தந்தை லூயி மரி லெவேயின் ஆன்மிகத்தோடு அவரின் புனிதமான நற்பண்புகளால் நம் மனத்தை நிறைத்து, அவரின் வழித்தடங்களை நமது வாழ்வின் தடங்களாக்கி நாமும் புனிதம் பெறுவோம்; புது வாழ்வு வாழ்வோம்!