news
சிறப்புக்கட்டுரை
மோடி 75 பதவி விலகுவாரா?

பா... கட்சி என்பது ஆர். எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் பிரிவு; இது இந்திய அரசியலின் இந்துத்துவா முகமும் முக மூடியுமாகும். மோடியும் அமித்ஷாவும் தன் தாய்வீடான ஆர்.எஸ். எஸ். அமைப்பிற்கு இணங்க மறுக்கிறார்கள்; பதவி மோகத்தில் பிடிவாதம் பிடிக்கிறார்கள். “75 வயதானால் புதியவர்களுக்கு வழிவிட அமைப்பு, கட்சி, ஆட்சி என அனைத்துப் பொறுப்புகளிலிருந்து தானே விலக முன்வரவேண்டும்என்கிறது ஆர்.எஸ்.எஸ். தலைமைப்பீடம். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் விதிகள் பா...வுக்குப் பொருந்தாது என மோடியின் துதிபாடிகள் வியாக்கியானம் பேசுகிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ். பெரியதா? பா... பெரியதா?’ என்ற கேள்விக்கான விடை, ‘ஆர்.எஸ்.எஸ். பெரியதுஎன்றே முடிவாகும். இராமர் கோவில் திறப்பு விழாவில் முதல் மரியாதை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்திற்குத் தரப்பட்டது. இரண்டாம் மரியாதை உத்தரப்பிரதேச முதல்வர் யோகிக்குக் கொடுக்கப்பட்டது. மூன்றாம் மரியாதை இந்தியப் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. பிரசாதத் தேங்காயைத் தவறுதலாக மோடிக்குத் தர நீண்ட கரம் இழுக்கப்பட்டது. அது ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சென்றது.

பா...வில் 75 வயதானால் பதவி விலக வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் விதி வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுமித்ரா மகாஜன், ஜஸ்வந்த் சிங், கல்ராஜ் மிஸ்ரா ஆகியோருக்கு இது செயல்முறையானது. இவர்கள் 75 வயதை எட்டும்முன் வயதைக் காரணம் காட்டிசீட்மறுக்கப்பட்டது. நம்மூர் ஹெச். இராஜாவுக்கும் இவ்விதி பொருந்தியது. இல. கணேசன் அவர்களுக்கு மட்டும் அவர் தீவிர ஆர்.எஸ்.எஸ். என்பதால் ஆளுநராகப் பதவி தொடர்கிறார்.

75 வயதானால் தானாகப் பதவி விலகவேண்டும், மற்றவர்களுக்கு வழிவிடவேண்டும்என்று ஜூலை 09 அன்று நாக்பூரில் நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசுகிறார். இதைக் கூறுகிற மோகன் பகவத் அவர்களுக்குச் செப்டம்பர் 11-இல் 75 வயதாகிறது. பகவத், தான் பதவி விலகும்முன் புதிய ஆர்.எஸ்.எஸ். தலைவரையும், பா... தேசியத் தலைவரையும், புதிய பிரதமரையும் அடையாளம் காணவேண்டிய பெரும் பொறுப்பு அவருக்கு உண்டு. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் புதிய தலைவராக கர்நாடகாவைச் சேர்ந்த தத்தாத்ரேயா தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதே மேல் மட்டத்தில் கசியும் தகவல். இவர்தான் சனவரி 2025-இல் இந்திய அரசியல் சாசனச் சட்ட முகப்பில்சமதர்ம சமயச் சார்பற்றஎன்ற வரிகளை நீக்கவேண்டும் எனப் பேசி பரபரப்பு ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பா... கட்சிக்கு நட்டாவுக்குப் பிறகுயார் அடுத்தத் தலைவர்?’ என்ற போட்டி நடக்கிறது. மாநிலத் தலைவர்களை நியமிக்கும் பணி அதிரடியாக நடக்கிறது. அதன் முடிவில் பா... தேசியத் தலைவர் தேர்வு செய்யப்படுவார்நிதின் கட்காரி அல்லது நிர்மலா சீதாராமன் என்ற இருவர் பெயரும் ஆர்.எஸ்.எஸ். வட்டாரத்தில் பேசப்படுகிறதுசரி, ‘மோடிக்குப் பின் அடுத்தப் பிரதமர் யார்?’ என்ற கேள்விக்கு இராஜ்நாத் சிங் பெயரை ஆர்.எஸ்.எஸ். முன்மொழிகிறது. அடுத்த 2029 மக்களவைத் தேர்தலுக்கு ஆர்.எஸ்.எஸ். தன் செல்லப்பிள்ளையான உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களை முன்நிறுத்தத் திட்டம் தீட்டுகிறது.

பிரதமர் மோடி செப்டம்பர் 17-இல் தனது 75 வயதில் ஓய்வு பெறவேண்டும். மோடி ஓய்வு பெறுவாரா? என்பது பெருங்கேள்வி. பா... மூத்த தலைவர்கள், ‘மோடியின் முகமே பா...வை மூன்று முறை ஆட்சிக் கட்டிலில் ஏற்றியது. அவரே தொடர்வார்என்கிறார்கள். மகாராஷ்டிரா முதல்வர் பட்னா விஸ் ஒரு படி மேலே சென்று கூறுகிறார்: “அப்பா உயிரோடு இருக்கும்போதே அடுத்த வாரிசு யார்? என்ற பேச்சு தேவை இல்லை; இது அடிப்படையில் மொகலாயர்களின் கலாச்சாரம்என்கிறார்.

வாருங்கள், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா...வின் 75 வயது ஓய்வு பற்றிய வரலாற்றைப் புரட்டுவோம்.

2014-2016-களில் குஜராத் முதல்வராக இருந்தவர் ஆனந்தி பென் பட்டேல். அவருக்கு 2016, நவம்பரில் 75 வயதாகிறது. ஆனந்தி பென் ஆகஸ்டு மாதமே பதவி விலகுகிறார். அவரது அறிவிப்பு ‘75 வயதாகி விட்டது, கட்சி விதிகளின்படி விலகுகிறேன்என்பதே. அப்போது அமித்ஷாஎல்லாருக்கும் ஆனந்தி பென் சிறந்த வழிகாட்டலை உருவாக்கிவிட்டார், இது எல்லாருக்கும் பொருந்தும்என்றார்.

சவுகானின் மத்தியப்பிரதேச அமைச்சரவையிலும், மந்திரி சபை மாற்றம் என்ற பெயரில் 75 வயதான மூத்த அமைச்சர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்கள். 2019-இல்தி வீக்பத்திரிகைக்கு அமித்ஷா அளித்த நேர்காணலில் “75 வயதைத் தொடும் மூத்த தலைவர்களுக்குச்சீட்தரமாட்டோம்; இது எங்கள் கட்சியின் விதிஎன்கிறார். 2024  மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில்ஆம் ஆத்மிகட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மோடியின் 75 வயது பணி மூப்பு பதவி விலகல் பற்றிப் பேச 2029-லும் மோடியே பிரதமர் வேட்பாளர் என பா... முட்டுக்கொடுத்தது.

மோடியின் வெளிநாட்டுப் பயணங்களையும், உயரிய விருதுகள் என்ற பெயரில் வீண்பெருமை தேடுவதையும் ஆர்.எஸ்.எஸ். இரசிக்கவில்லை. பொதுவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தனிமனித வழிபாட்டையும், தனிமனித காட்சி அரங்கேற்றத்தையும் விரும்புவதில்லை. இந்துத்துவா குறித்த பொதுச் சிவில் சட்டம், ஒரே நாடு, ஒரே தேர்தல், குடியுரிமைச் சட்டம் என்பதில் பா...வின் வேகம், மோடியின் செயல்திறன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைக் கொதி நிலைக்குத் தள்ளியுள்ளது.

மூன்றுமுறை நடந்த மோடி-மோகன் பகவத் சந்திப்புகளும் பயனற்றுப் போயின. மதவாதத்தை வைத்து நீண்ட நெடிய அரசியல் நடத்த முடியாது என்று உணர்ந்த பா...வின் எதார்த்தம் ஆர்.எஸ். எஸ். தலைவர்களுக்கு எரிச்சல் மற்றும் கோபமூட்டுகிறது. மோடி பதவி விலக செப்டம்பர் 11-இல், 75 வயதாகும் மோகன் பகவத் பதவி விலகி நெருக்கடி கொடுப்பார் எனப் பேசப்படுகிறது.

2024 - மக்களவைத் தேர்தலின்போதே ஆர்.எஸ்.எஸ். - பா... மோதல் உச்சம் பெற்றது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தேர்தல் வேலையைச் செய்ய மறுத்தது. அதன் விளைவாக உத்தரப்பிரதேசத்தில் பா... 43 தொகுதிகளை இழந்து பெரும்பான்மை இல்லாத அரசாக உருவானது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பா...வைத் தொடர்ந்து கட்டுக்குள் வைக்கத் திட்டமிடுகிறது. அமித்ஷா போன்றோர் 75 வயதில் பதவி விலகல் என்பது பா... கட்சியின்  சட்ட விதிகளில் இல்லை என அடம்பிடிக்கிறார்கள். ஏனெனில், அமித்ஷாவும் ஓய்வுபெறும் வயதை அடைந்துவிட்டார்.

மோடிக்கும் மோகன் பகவத் அவர்களுக்கும் தன் முனைப்பு (ஈகோ) பிரச்சினை உச்சம் பெற்றுள்ளது. அது எதில் முடியும்? என்பதே வரும் நாள்களின் இந்திய அரசியல். இதில் அதிகபட்சமாக ஆட்சி கவிழும் அபாயமும் உள்ளது.

பிரதமர் மோடியும் பா...வும் தங்கள் பதவி ஆசைகளைத் துறந்து, இந்துத்துவா தவிர்த்து, ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடமிருந்து விலகி, மக்களுக்கு என்ன செய்யப் போகிறார்கள்? என்பதே ஆதங்கமும், நடுநிலையாளர்களின் கேள்வியுமாகும்.

news
சிறப்புக்கட்டுரை
திண்ணைவாசி (வலையும் வாழ்வும் – 24)

இராமையாவிற்கு முதுமை என்ற தீராத நோய். நாட்டு வைத்தியம் முதல் ஆங்கில மருத்துவம் வரை பார்த்தும் ஒரு முன்னேற்றமும் இல்லை. முதுமைக்கு மருந்து இன்னும் கண்டறியப்படவில்லை என்பது அவருக்கும் தெரிந்திருந்தது. ஆனால், அவர் வீட்டில் உள்ளவர்களுக்கு முதுமை என்பது ஒரு நோய். முதியவர் என்பவர் ஒரு நோயாளர்.

இராமையா அந்த ஊரில் மிக முக்கியமானவர். வசதியாக வாழ்ந்தவர். அந்த ஊரிலேயே பெரிய வீடு ஒன்றைக் கட்டினார். யார் கண் பட்டதோ தெரியாது, தன் மனைவி சரோஜாவின் திடீர் மரணம் இராமையாவைத் தடுமாறச்செய்தது. இராணித் தேனி இல்லாத தேன்கூடு கலைந்துபோகும் என்பதுபோல சரோஜா இல்லாத அந்தக் குடும்பம் நிலைகுலைந்துப் போனது. எல்லாவற்றையும் இழந்தாலும் தாயில்லாத தன் மகன் அகிலனை ஒரு தாயைப்போல பராமரித்து, படிக்கவைத்து திருமணமும் செய்து வைத்தார் இராமையா.

மருமகள் கீதா கெட்டிக்காரிதான். ஈரோடு டவுனில் பிறந்து வளர்ந்தவள். கல்லூரிப் படிப்பெல்லாம் முடித்திருக்கிறாள். தொடக்கத்தில் புல்லாணி கிராம வாழ்க்கை அவளுக்குச் சிரமமாகதான் இருந்தது. நிறையவே சுத்தம் பார்ப்பாள். இராமையாவின் முதுமையும் சுத்தமின்மையும் அவளுக்கு எரிச்சலைக் கொடுத்தது. வெற்றிலைக்கறைப் பற்கள், மஞ்சள் குளித்த ஆடை, வேப்பெண்ணை நெடி... கீதாவிற்கு அவரைப் பார்க்கும்போதே எரிச்சலைத்தான் தந்தது.

தனக்குப் பிறந்த மகனை அவள் இராமையாவிடம் இதுவரை கொடுத்ததில்லை. ஆசையாய் கடைத்தெருவிலிருந்து மிட்டாய் வாங்கி குழந்தைக்குக் கொடுப்பார். “மாமா! அவனுக்கு நீங்க ஒண்ணும் வாங்கித் தரவேண்டாம். இட்ஸ் நாட் ஹைஜீனிக் என்பாள் கீதா.

ஒருமுறை குழந்தை, தாத்தாவின் மடியிலே புரண்டு விளையாடிக் கொண்டிருந்தது. குழந்தையிடமிருந்து பஞ்சுமிட்டாயைப் பறித்தெடுப்பதுபோல தன் மாமனாரிடமிருந்து குழந்தையைப் பறித்தெடுத்தாள். இராமையாவால் இந்தத் ‘தீண்டாமைக் கொடுமையை யாரிடமும் கூறமுடியவில்லை. ‘சரோஜா போனபிறகு அகிலனை நான்தான் சிறிய வயதிலிருந்து ஒரு தாயா வளர்த்தேன். நீ எனக்கே பிள்ளை வளர்க்க சொல்லித்தாரியா?’ என்று சில நேரங்களில் மருமகளிடம் கேட்க வேண்டும்மென்று தோன்றும். ஆனாலும், மனதிற்குள்ளேயே எல்லா உணர்வுகளையும் மறைத்துவைப்பார்.

அப்பா! நீங்க உங்க ரூம்ம கொஞ்சம் சுத்தமா வச்சிகோங்க. அங்கிருந்து ஸ்மெல் வருதாம். குழந்தைக்கு அது அலர்ஜி ஆகுதாம் என்று ஒருநாள் தன் மகன் அகிலனே தன்னிடம் கூறியதை இராமையாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அன்றே பெட்டிப்படுக்கையை எடுத்துக்கொண்டு திண்ணைக்கு வந்துவிட்டார். “நாமளா அவர அனுப்பினோம். அவர்தானே போனார்! இனி அங்கேயே கிடக்கட்டும் - கீதாவின் கடுஞ்சொல்லை வழக்கம்போல அவர் காதில் போட்டுக்கொள்ளவில்லை. அந்த நாளிலிருந்து இராமையா தன் வீட்டுத் திண்ணையில்தான் வசிக்கிறார். அவரே வெளியே தனியாகச் சமைக்கிறார். இரவில் திண்ணையில் படுத்துக்கொள்கிறார். இப்போதெல்லாம் அந்தச் சிறு பையன்கூட தாத்தா பக்கம் வருவதில்லை. மாட்டுவண்டியின் சக்கரம் கழன்று சாலையில் கட்டுப்பாடின்றி ஓடுவதுபோல ஆண்டுகளும் பல கட்டுப்பாடின்றி வேகமாக ஓடின. முதுமையில் வாடிய அந்தக் கிழவன், தான் கட்டிய வீட்டுத் திண்ணையில் பல ஆண்டுகளாய் தீண்டத்தகாதவனாகவே கிடந்தான். குளிரிலும் மழையிலும் நோயிலும் வேதனையிலும் அங்கேயே கிடந்தான். மகனும் மருமகளும் மன்னிப்புக் கேட்டுவிட்டு அடுத்த நாளே வீட்டிற்குள் அழைப்பார்கள் என்று பொய்க்கணக்குப் போட்டுவிட்டார் போலும்! அது நடக்கவேயில்லை. இனியும் நடப்பதற்கான சாத்தியக்கூறு ஒன்றும் தென்படவில்லை.

ஒருநாள் காலைக் கதிரவன் எழும்போது அவர் மட்டும் திண்ணைப் படுக்கையிலிருந்து எழவே இல்லை. அடக்கச்சடங்குகள் எந்தக் குறைபாடும் இல்லாமல் ஆடம்பரமாக நடந்து முடிந்தன. எந்தக் குற்றவுணர்வுமில்லாமல் அகிலன் இராமையாவின் புகைப்படத்தை அந்த மச்சுவீட்டில் மாட்டப்பட்ட தன் தாய் சரோஜாவின் பக்கத்திலே மாட்டிவைத்து மாலையிட்டான். இத்தனை ஆண்டுகள் திண்ணையிலேயே மக்கிக்கிடந்தவர் புகைப்பட வடிவிலே மச்சுவீட்டு மகாராசரானார். தீண்டத்தகாதவர் இன்று தீட்சிதர் ஆனார்!

அகிலன், அவன் மனைவி கீதா மற்றும் அவர்களின் மகன் ஆகியோர் அந்தப் புகைப்படத்தின் முன்பாக நின்றுகொண்டு ஒரு ‘செல்பி எடுத்துக் கொண்டார்கள். ‘வீ மிஸ் யூ அப்பா!’ என்று தன் ‘பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுத் தன் நண்பர்களின் ஆழ்ந்த அனுதாபங்களைப் பெற்றுக்கொண்டான் அகிலன். நடந்ததனைத்தையும் அந்த வீட்டுத் திண்ணை மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தது. இராமையா சுத்தமில்லாதவர், அழுக்கு மூட்டை என்றெல்லாம் கதைகட்டி அவரைத் தன் கணவரிடமிருந்தும் மகனிடமிருந்தும் பிரித்து வீட்டை விட்டு வெளியேறச் செய்து திண்ணைவாசியாக்கிய கீதா இன்றைய ஊடக மொழியில் ஓர் ‘இன்புளுவன்சர் (Influencer).

இன்றைய வலைத்தள உலகில் செல்வாக்காளர்கள் (Influencers) அதிகம் ஆதிக்கம் செலுத்துவதைப் பார்க்கிறோம். பத்து இலட்சத்திற்கும் மேல் ‘பின் தொடர்பவர்கள் (Followers) அல்லது ‘சந்தாதாரர் கள் (Subscribers) கொண்டிருப்பவர்களை ‘மெகா இன்புளுவன்சர்ஸ் (Mega-influencers) என்று அழைக்கிறோம். அதுவே ஓர் இலட்சம் முதல் பத்து இலட்சத்திற்குள்ளாக ‘பின்தொடர்பவர்கள் (Followers) அல்லது ‘சந்தாதாரர்கள் (Subscribers) கொண்டிருப்பவர்களை ‘மேக்ரோ இன்புளுவன்சர்ஸ் (Macro-influencers) என்று அழைக்கிறோம். மேலும், ஆயிரம் முதல் ஓர் இலட்சத்திற்குள்ளாக ‘பின்தொடர்பவர்கள் (Followers) அல்லது ‘சந்தாதாரர்கள் (Subscribers)  கொண்டிருப்பவர்களை ‘மைக்ரோ இன்புளுவன்சர்ஸ் (Micro-influencers) என்று அழைக்கிறோம். இதுவே ‘நேனோ இன்புளுவன்சர்ஸ் (nano-influencers)  என்றும் ஆயிரத்திற்கும் குறைவாக ‘பின்தொடர்பவர்கள் (Followers) அல்லது ‘சந்தாதாரர்கள் (Subscribers) என்று அழைக்கிறோம்.

உற்பத்தியாளர்களோடு கைகோர்த்துக்கொண்டு பொருளைச் சமூக ஊடகங்களில் சந்தைப்படுத்துவதில் சமூக ஊடகச் செல்வாக்காளர்களின் (Influencers) பங்கு மிக அதிகமாகவே உள்ளது. டிஜிட்டல் உலகில் இதனையே செல்வாக்காளர்வழி சந்தைப்படுத்துதல் (Influencer- Marketing) என்கின்றனர்.

சமூக ஊடகங்களில் ‘இன்புளூவன்சர்கள் என்று அறியப்படுபவர்கள் பொருள்களைச் சந்தைப்படுத்துவதோடு நின்றுவிடுவதில்லை; மாறாக, ஒருவருடைய அல்லது ஒரு கட்சி சார்ந்த கருத்தியலையும், தன்னைப் பின்தொடர்பவர்களிடம் சந்தைப்படுத்துகின்றனர். இதனை ‘சோசியல் இன்ஜினியரிங் (Social Engineering) என்கிறோம். நாம் எதைப் பேச வேண்டும்? எதை வாங்க வேண்டும்? எதைப் பார்க்கவேண்டும்? யாருக்கு வாக்களிக்கவேண்டும்? எங்குச் செல்லவேண்டும்? என்ன படிக்கவேண்டும்? எதை உண்ணவேண்டும்? என்பதைப் பல நேரம் நமக்குத் தெரியாமலேயே தீர்மானிப்பவர்களாகவும் திணிப்பவர்களாகவும் இந்த ‘இன்புளூவன்சர்கள் இருக்கின்றார்கள்.

சமூக ஊடகங்களில் வரும் இன்புளூவன்சர்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர்; விமர்சனப் பார்வையோடு அவர்களையும் அவர்களின் கருத்துருவாக்கத்தையும் அணுகுவது நல்லது!

news
சிறப்புக்கட்டுரை
குட்டக் குட்டக் குனிபவனும் முட்டாள்! குனியக் குனியக் குட்டுபவனும் முட்டாள்!

மக்கள்தொகையிலும் சந்தை மதிப்பிலும் மனித வளத்திலும் சனநாயக மதிப்பீடுகளிலும் உலகின் மிகப்பெரிய வல்லரசுகளில் ஒன்றாக உருவாகி வரும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையினை எப்படிக் கையாளக்கூடாதோ, அப்படிக் கையாண்டு சர்வதேச அரங்கில் பல தளங்களில் இந்தியா நிலை தவறி அவமானப்பட்டு நிற்பதற்குப் பிரதமர் மோடியின்தன்முனைப்புஒரு பெரும் காரணம். உலக நாடுகளை நமது நட்பு நாடுகளாக உருவாக்குவதில் நாட்டம் செலுத்தாமல், அந்நாடுகளின் தலைவர்களைத் தனது தனிப்பட்ட நண்பர்கள் என்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்குவதிலேயே அவரது நேரத்தினையும், வெளியுறவுத் துறையின் செயலாக்கத்தையும் பயன்படுத்தினார். உலக நாடுகளின் பெருந்தலைவர்களைத் தனதுபால்ய நண்பர்கள்போல நடத்துவதால், உள்நாட்டில் தனக்கு ஓர் அகில உலகத் தலைவர் (விஸ்வ குரு) என்ற அங்கீகாரம் கிடைக்கும் என்ற அவரது தவறான அணுகுமுறையால் உலக அரங்கில் பல இழப்புகளைச் சந்தித்துள்ளோம். சர்வதேச உறவுகள் என்பதும், வெளியுறவுக் கொள்கை என்பதும் தனி நபர் சார்ந்ததல்ல என்பதை அவர் உணரக்கூடிய காலம் வந்துவிட்டது.

அமெரிக்க அதிபர் டிரம்ப்பைத் தனது தனிப்பட்ட நண்பர் என்று பீற்றிக்கொள்வதில் நமது பிரதமருக்கு ஓர் அலாதி இன்பம். சர்வதேச இராஜதந்திர உறவுகளின் எல்லைகளை மீறி, விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் இந்தியாவின் பிரதமர் அந்நிய மண்ணில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் டிரம்புக்காகப் பகிரங்கமாக வாக்கு கேட்டார். அவரைத் தனது சொந்த மாநிலமான குஜராத்துக்குக் கூட்டிவந்து, பல நூறு கோடி ரூபாய் செலவு செய்து கொண்டாட்டங்கள் நடத்தினார்அதற்காக ஏழைகள் வாழும் குடிசைகளையெல்லாம் அப்புறப்படுத்தினார். அந்தத் தேர்தலில் டிரம்ப் தோற்றதால் வெற்றி பெற்ற சனநாயகக் கட்சி வேட்பாளர் பைடனின் நல்லெண்ணத்தை இந்தியா இழந்தது.

மீண்டும் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் இந்திய வம்சாவளியினர் வாக்குகளை டிரம்ப்புக்குப் பெற்றுத் தருவதற்குப் பா...வின் அயலக அணியும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பு நிறுவனங்களும் கடுமையாக உழைத்தன. டிரம்ப் வெற்றி பெற்றால் அமெரிக்கப் பொருளாதாரத்தை இந்தியாவுக்கும், அமெரிக்க அரசு நிர்வாகத்தை இந்திய வம்சாவளியினருக்கும் டிரம்ப் திறந்து விடுவார் என்று இடைவிடாது பிரச்சாரம் செய்தனர். உலக அரங்கில் அமெரிக்காவுடன் உள்ள உறவு மட்டுமே போதும் என்று காலங்காலமாக இந்தியாவுடன் நட்புறவாக இருந்த நாடுகளையெல்லாம் நமது வெளியுறவுத்துறை தள்ளி வைத்தது. பல முக்கியமான கட்டங்களில் நாம் தொடர்ந்து பின்பற்றி வந்த அணுகுமுறைகளையும் நிலைப்பாடுகளையும் மாற்றி, அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டையே நமது வெளியுறவு நிலைப்பாடாக அறிவித்தது. சர்வதேசச் சட்டங்களைப் பல நாடுகள் மீறியபோது ஐக்கிய நாடுகள் சபையில் நியாயத்தின் பக்கம் நின்று வாக்களிக்க வேண்டிய இந்தியா, அமெரிக்காவுக்குப் பயந்து வாக்களிக்காமல் வெளிநடப்புச் செய்வது அல்லது எதிராக வாக்களிப்பது என்ற நிலைப்பாட்டை எடுத்தது. பாலஸ்தீனம்-காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் இன அழிப்பைக்கூட கண்டிக்க இந்தியா முன்வரவில்லை என்பது எவ்வளவு பெரிய தவறு! இஸ்ரேலைப்போல இந்தியாவும் ஒரு காலகட்டத்தில் அமெரிக்காவின்நிரந்தரக் கையாளாகமாறக்கூடும் என்பதைப் போன்ற ஓர் அணுகுமுறையை நமது வெளியுறவுத் துறை பின்பற்றத் தயங்கவில்லை.

இதற்குக் கைமாறாக அமெரிக்கா நமது பொருளாதாரத்தைப் பெருக்கவும், நமது பாதுகாப்பினைப் பலப்படுத்தவும் பெரும் உதவிகளைச் செய்யும் என்று மோடி அரசு எதிர்பார்த்துக் காத்திருந்த வேளையில், நம் தலையில் மண்ணை அள்ளிப் போட டிரம்ப் அரசு முடிவெடுத்திருப்பதுதான் நமக்கு இன்று ஏற்பட்டுள்ள சோகம்.

அமெரிக்கத் தயாரிப்புகளையும் தொழில்நுட்பங்களையும் சேவைகளையும் மிகக்குறைந்த வரியில் தடையின்றித் தாராளமாக அனுமதிக்காத எந்த நாட்டுடனும் அமெரிக்கா வியாபாரம் செய்யாது. அந்த நாட்டுப் பொருள்கள் அமெரிக்காவுக்கு உள்ளே வர தாறுமாறான இறக்குமதி வரியையும் மற்றும் சில நாடுகளுக்கு அபராத வரிகளையும் டிரம்ப் அரசு விதித்து வருகிற வேளையில், தனது தனிப்பட்ட நட்பின் காரணமாக இந்தியாவுக்கு மட்டும் மிகக் குறைவான வரியைத்தான் விதிப்பார்கள் என்று நமது பிரதமர் எதிர்பார்த்திருந்த வேளையில், டிரம்ப்பின் அறிவிப்பு பேரிடியாக நம் தலையில் விழுந்துள்ளது.

ஆகஸ்டு மாதத்திலிருந்து இந்தியப் பொருள்களுக்கு 25% வரி என்றும், அது தவிர இரஷ்யாவிலிருந்து பெட்ரோலியப் பொருள்களையும் ஆயுதங்களையும் அதிகமாக இறக்குமதி செய்வதால் அதற்காகத் தனியாக அபராத வரியும் விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். ‘அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டதைப்போல, அமெரிக்காவை நம்பி இப்போது நாடு அநாதரவாக நிற்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சனநாயகம், மனித உரிமைகள், எல்லாருக்குமான வளர்ச்சி, உலக நாடுகளிடையே சமாதானம் நிறைந்த நல்லுறவு, அணு ஆயுதக் குறைப்பு, புவி வெப்பமயமாதலைத் தடுப்பது, ஏழை எளிய நாடுகளுக்குப் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப உதவிகள் என்று எந்த நல்ல சிந்தனைகளுக்கும் முயற்சிகளுக்கும் அமெரிக்காவுக்கும் இனிமேல் சம்பந்தமே இல்லை என்று பதவியேற்றவுடன் அறிவித்த டிரம்ப், ‘பணம்மட்டுமே தனது நோக்கம் என்பதை ஒவ்வொரு மேடையிலும் தவறாமல் கூறிவருகிறார். உலகின் மிகப்பெரிய வல்லரசின் தலைவர் என்ற ஆணவத்தின் உச்சத்தில் நிற்கும் அவர், உலக நாடுகள் காலங்காலமாகப் போற்றி வரும் சர்வதேச நிறுவனங்கள், உறவுகள், வியாபாரம், தகவல் பரிமாற்றம் போன்ற அனைத்தையும் தான் தோன்றித்தனமாக ஒவ்வொரு நாளும் சிதைத்து வருகிறார். உலகின் பல நாடுகள் தங்களின் இருப்புக்கே அமெரிக்காவின் தயவு தேவைப்படுவதால் அவமானங்களைத் தொடர்ந்து ஏற்றுக்கொண்டு அமைதி காக்கின்றன. இந்த நாடுகளின் வரிசையில் நம்மையும் நிற்க வைக்க டிரம்ப் நினைக்கின்றார்.

நாமும் பெருமளவில் அமெரிக்கப் பொருளாதாரத்தைச் சார்ந்து நிற்கிறோம். அமெரிக்காதான் நமது உற்பத்திகளின் பெரிய சந்தை. 2024-ஆம் ஆண்டு அமெரிக்காவோடு நமக்கு நடந்த வியாபாரத்தின் மொத்த மதிப்பு 124 பில்லியன் டாலர். நமது இறக்குமதி போக நம்மிடம் வணிக மிகுதியாக (trade surplus) இருப்பது சுமார் 43 பில்லியன் டாலர். நமது மொத்த ஏற்றுமதியில் சுமார் 20% அமெரிக்காவுக்குச் செல்கிறது.

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் இருதரப்பு வணிகம் சம்பந்தமாகவும், இரண்டு தரப்பினரும் ஒத்துக்கொண்டு பல்வேறு ஏற்றுமதி இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட வேண்டிய வரிகள் சம்பந்தமாகவும் பேசி முடிவு செய்ய அமைச்சர்கள் மட்டத்திலும், அதிகாரிகள் மட்டத்திலும் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் ஐந்து முறைகள் பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்துள்ளன. ஆறாவது மற்றும் இறுதி பேச்சுவார்த்தையினை இம்மாத இறுதியில் இந்தியாவில் நடந்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அது முடிவதற்குள் நம்மைப் பயமுறுத்தி நெருக்கடி கொடுப்பதற்காகவும், ஒத்துக்கொண்டு சரணடைவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை என்று டிரம்ப் நம்புவதாலும் இப்படி ஒரு முரட்டுத்தனமான முயற்சியில் இறங்கியுள்ளார்.

சீனா, கனடா போன்ற நாடுகள் அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கைக்கு எதிராக வலிமையான எதிர்வினை ஆற்றியுள்ளன. அத்தகைய தன்னம்பிக்கையும் சுயகௌரவமும் மோடி அரசுக்கு இருக்க முடியாது. இந்தியா-பாகிஸ்தான் மோதலைநான்தான் தலையிட்டுத் தடுத்து நிறுத்தினேன்என்று டிரம்ப் கூறும்போது, மோடியும் மோடி அரசும் எப்படி மௌனம் காத்தார்களோ, அதைப்போல இப்போதும் அமைதியாக இருப்பது என்றே முடிவு செய்துள்ளனர்.

டிரம்ப்பின் இந்த நடவடிக்கையால் இந்தியப் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைவிட, மோடியின் நண்பர்களான அதானி மற்றும் அம்பானிக்கான பாதிப்புகள் அதிகம். டிரம்ப்பை எதிர்த்து மோடி எதிர்வினையாற்றினால், அமெரிக்க பங்குச் சந்தை நிறுவனம் அதானிமீது தொடர்ந்துள்ள மோசடிக் குற்றத்திற்கான கிரிமினல் வழக்கின் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும். அம்பானியும் அதானியும் அமெரிக்காவில் பெருமளவில் முதலீடு செய்துள்ளனர். அவர்களைத் தவிர குஜராத்தைச் சார்ந்த பல பெருமுதலாளிகள் அமெரிக்காவில் பெரிய அளவில் வியாபாரம் செய்து வருகின்றனர். சிலர் டிரம்ப் அரசின் நிர்வாகத்தில் பல அதிகாரம் நிறைந்த பதவிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

பா...வுக்கும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தொண்டு நிறுவனங்களுக்கும் கோடிக்கணக்கான டாலர் நன்கொடைகள் அமெரிக்காவிலிருந்தே வருவதாகக் கூறுகிறார்கள். இந்திய அரசும் மோடியும் டிரம்ப்பை எதிர்த்தால் இவர்களுடைய நிலைமை அமெரிக்காவில் மிகவும் சிக்கலாகிவிடும். அமெரிக்காவின் தயவில் பெரும் பணம் சம்பாதிப்பவர்களும் பெரிய பதவிகளில் இருப்பவர்களும் மோடிக்கு மிகவும் நெருக்கமானவர்களாக இருப்பதால், அமெரிக்காவையும் டிரம்ப்பையும் பகைத்துக் கொள்ள மோடி மிகவும் யோசிப்பார். ‘தனது நண்பர்களுக்காக இந்தியப் பொருளாதாரத்தை மோடி நாசம் செய்துவிட்டார்என்று இராகுல்காந்தி அடிக்கடிக் கூறிவருவதன் காரணம் இதுவே. டிரம்பின் பதவியேற்பு விழாவுக்கு அவருடைய தனிப்பட்ட விருந்தினர்களாக அம்பானியும் அதானியும் அழைக்கப்பட்டு முக்கியமான இருக்கைகளில் உட்காரவைக்கப்பட்டதை நினைவில் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட செல்வாக்கை அவர்கள் இருவரும் இழக்க மோடி ஒருநாளும் சம்மதிக்க மாட்டார்.

குதிரை கீழே தள்ளியது மட்டுமல்லாமல், குழியும் பறித்ததுஎன்பதைப்போல, அநியாயமாக வரிகளை விதித்ததோடு, அபராத வரிகளையும் விதிக்கப் போவதாக டிரம்ப் மிரட்டியுள்ளார். இரஷ்யா விலிருந்து ஆயுதங்களையும் பெருமளவில் பெட்ரோலிய பொருள்களையும் நாம் இறக்குமதி செய்வதால் அமெரிக்காவுக்கு நாம் தண்டம் கட்ட வேண்டுமாம்! நமக்குத் தேவையான பொருள்களை நாம் எங்கே வாங்கவேண்டும் என்பதைக்கூட டிரம்ப்தான் முடிவு செய்வார் என்றால், இந்தியாவைஅமெரிக்காவின் காலனி நாடுஎன்றுகூட அறிவித்துவிடலாமே!

டிரம்ப்பின் தேர்தலுக்கு முன்னர் குஜராத் வந்த டிரம்ப்மோடியை உலகின் மிகப்பெரிய தலைவர்என்று புகழ்ந்தார். இந்தியாவை, ‘உலகின் மிகச் சிறந்த நாடு, மிகப்பெரிய பொருளாதாரம்என்று வர்ணித்தார். அதே டிரம்ப் இன்று இந்தியப் பொருளாதாரத்தைசெத்துப் போன பொருளாதாரம்என்றும், ‘நாமும் இரஷ்யாவும் சேர்ந்து அழியப் போகிறோம்என்றும் சாபம் விடுகிறார். ‘இந்தியாவை எதிர்ப்பவர்களைப் பீரங்கி குண்டுகளால் சுட்டுப் பொசுக்கி விடுவேன்என்று இரண்டு நாள்களுக்கு முன்னால் பாராளுமன்றத்தில் கர்ஜித்த ‘56 இஞ்ச் மார்புவாய் திறக்காமல் பயந்து மௌனம் காக்கிறது. சீனாவைப்போலவா, ஒரு கை பார்க்கலாம்என்று சவால்விடக்கூடிய அளவுக்கு நமது பொருளாதாரத்தை மோடி அரசு கட்டமைக்கவில்லை.

டிரம்ப் அரசின் இந்த ஒருதலைப்பட்சமான அதீத வரிவிதிப்பால் இந்தியா பல துறைகளில் தனது ஏற்றுமதிச் சந்தையை இழக்க நேரிடும். குறிப்பாக, ஜவுளிகள், தங்க-வைர நகைகள், அணுசக்தி இயந்திரங்கள், மின்சார உபகரணங்கள், முத்துகள் மற்றும் விலையுயர்ந்த கற்கள், தாது உலோகங்கள் மற்றும் மருந்துகள் போன்ற துறைகளில் பெரும் பாதிப்பு ஏற்படும். தமிழ்நாடு மிகவும் அதிகமாக ஏற்றுமதி செய்கின்ற திருப்பூர் ஜவுளி ஆடைகள், தோல் பொருள்கள், மொபைல் போன்கள் போன்ற முக்கியத் தொழில்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவிடும்.

நம்மோடு ஏற்றுமதியில் போட்டியிடுகின்ற நாடுகளுக்கும், நம்மைச் சுற்றி இருக்கின்ற அண்டை நாடுகளுக்கும் அமெரிக்காவின் குறைந்த வரிவிதிப்பு நடைமுறையில் இருக்கும்போது, நமக்கு மட்டும் ஏற்றுமதி வரிகளை மிக அதிகமாகக் கூட்டுவதற்கு டிரம்ப் கூறுகின்ற காரணங்களை ஏற்றுக்கொள்ள இயலாது.

எழுபது விழுக்காட்டிற்கும் அதிகமான இந்தியர்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் மக்களாக இருக்கும்போது, இந்தியச் சந்தையினை அமெரிக்க விளைபொருள்களுக்குத் தடையின்றி, குறைந்த வரிவிதிப்பில் திறந்துவிட வேண்டும் என்ற டிரம்ப்பின் நிர்ப்பந்தத்திற்கு நாம் எப்படிப் பணிய முடியும்? மரபணுக்கள் மாற்றப்பட்ட விதைகளையும் பயிர்களையும் எப்படி அனுமதிக்க முடியும்? அதனால் நமது பாரம்பரிய விதைகளும் பயிர்களும் நிரந்தரமாக அழிந்துவிடுமே!

அமெரிக்கப் பசுக்களின் பால் மற்றும் பால் பொருள்களைத் தடையின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் நிர்ப்பந்திக்கிறார். அமெரிக்கப் பசுக்களுக்குக் கொடுக்கப்படும் தீனியில் மாட்டு இறைச்சியும், பிற மிருகங்களின் இரத்தமும் சேர்க்கப்படுகின்றன. அந்தப் பால் கெட்டுப்போகாமல் இருக்க நம் நாட்டு உணவு கலப்படத் தடைச்சட்டத்தின்படி தடை செய்யப்பட்ட ஏராளமான வேதிப்பொருள்களும் சேர்க்கப்படுகின்றன. அப்படிப்பட்ட பாலை நமது நாட்டில் எப்படி அனுமதிக்க முடியும்?

நமது பசுக்களின் தீவனத்தில் தாவரங்களும், தாவரப் பொருள்களுமே சேர்க்கப்படுகின்றன. நம்மைப் பொறுத்தவரை பசு என்பது ஒரு புனிதமான அடையாளம். பசுவின் பால் ஆலய அபிஷேகங்களுக்கும், விழா காலங்களில் இறைவழிபாட்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்கப் பசுவின் பாலைப் புனித காரியங்களுக்குப் பயன்படுத்த முடியாது. இந்தியாவைப் பொறுத்தவரை கோடிக்கணக்கான ஏழை எளிய மக்கள் கறவை மாடுகளை மட்டுமே நம்பி வாழ்கின்றனர். அமெரிக்கப் பாலையும் பால் பொருள்களையும் வரைமுறை இல்லாமல் திறந்து விட்டால், அந்த மக்களின் வாழ்வாதாரம் என்ன ஆகும்?

இவற்றில் எல்லாம் சமரசத்திற்கு இடமே இல்லை என்பதை மோடி அரசு உரக்கக் கூற வேண்டும். கச்சா எண்ணெய் எங்கே மலிவாகக் கிடைக்கிறதோ அங்கே கொள்முதல் செய்வதற்கு நமக்கு உரிமை உண்டு. இறையாண்மை உள்ள ஒரு நாட்டிடம் அதற்குத் தேவையான பொருள்களை இங்கேதான் வாங்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கும் அதிகாரம் அமெரிக்காவுக்கு இல்லை என்பதை நமது பிரதமர் தைரியமாகக் கூறுவாரா?

ஒரு வாரத்திற்கு முன்னதாகவே இரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டது என்று கூறுகிறார்கள். அது உண்மையாக இருக்கக்கூடாது என்று நான் விரும்புகிறேன்.

வரலாற்றில் மிகப்பெரிய வாய்ப்பினை இந்திய சனநாயகம் மோடிக்கு வழங்கியுள்ளது. இந்தியாவில் இதுவரை எந்தப் பிரதமருக்கும் கிடைக்காத வளமான பொருளாதாரம், பாராளுமன்றத்தில் தொடர்ச்சியாக நிபந்தனைகளே இல்லாமல் கண்களை மூடிக்கொண்டு ஆதரிக்கும் பெரும்பான்மை, கேள்வியே கேட்காமல் ஒரு பக்தர் சபைபோல செயல்படும் பா..., வரலாறு காணாத வரி வசூல், எந்நாளும் இல்லாத அந்நியச் செலவாணி கையிருப்பு, தொடர்ந்து 12 ஆண்டுகளாக வறட்சியே இல்லாத பருவ மழை, பிரதமரின் விருப்பம் அறிந்து செயல்படும் அரசு நிர்வாகம், ஊடகங்கள், அரசியல் சாசன நிறுவனங்கள் என்று இவ்வளவு சாதகங்கள் இந்தியாவில் எந்தப் பிரதமருக்கும் கிடைக்கவில்லை. இவ்வளவு வாய்ப்புகளும் வசதிகளும் கிடைக்கப் பெற்ற பிரதமர், அவைகளை இந்த நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் பயன்படுத்தினாராஎன்ற கேள்விக்கு மோடியின் பதில் என்ன?

மோடி பதவியிலிருந்த பத்தாண்டுகளும் வீண் ஆடம்பரங்களிலும் வெற்றுக் கோஷங்களிலுமே கழிந்தது. வருடத்தில் பாதி நாள்கள் வெளிநாட்டிலும், மீதி நாள்களை உள்நாட்டில் தேர்தல் பிரச்சாரங்களிலும் செலவிட்ட மோடி, தேசத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்குமான அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்கும் வழிகாட்டுதலையும் நிர்வாகத்தையும் தரவில்லை. மக்கள் மத்தியில் தன்னம்பிக்கையையும் ஒற்றுமை உணர்வினையும் வளர்த்தெடுக்க வேண்டிய மோடியும் பா...வும் மோடி அரசும் இந்திய மக்களை மதம், சாதி, மாநிலம், மொழி அடிப்படையில் பிரித்து வைத்து அதிகாரத்தைக் கைப்பற்றுவதிலேயே குறியாக இருந்ததால், உண்மையான வளர்ச்சியும் முன்னேற்றமும் நாட்டுக்கு வாய்க்கவில்லை.

உள்நாட்டில் மக்கள் மத்தியில் சமூகப் பதற்றம், எல்லைப் பகுதிகளில் நிரந்தரமான அச்சுறுத்தல்கள், அண்டை நாடுகளோடு பழுதாகிப்போன உறவுகள், சரிவை நோக்கி விரையும் பொருளாதாரம் என்று அனைத்து முனைகளிலும் தோற்று நிற்கும் மோடி அரசுக்கு வரும் நாள்கள் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

மிரட்டுவதற்கும் ஓர் எல்லை உண்டு. பணிந்து போவதற்கும் ஒரு வரைமுறை உண்டு. ‘குட்டக் குட்டக் குனிபவனும் முட்டாள்! குனியக் குனியக் குட்டுபவனும் முட்டாள் - எங்கள் ஊர் பழமொழி.

news
சிறப்புக்கட்டுரை
மலரும் ‘இறை ஊழியர்’ வீரமாமுனிவர்!

வீரமாமுனிவர்என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி திரு அவையால் கடந்த ஆகஸ்டு 3-ஆம் தேதி பாண்டிச்சேரியிலுள்ள புனித ஜென்ம இராக்கினி பேராலயத்தில் பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் பேராயர் மேதகு பிரான்சிஸ் கலிஸ்ட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் இறை ஊழியராக அறிவிக்கப்பட்டார். அவரது அருள்வாழ்வையும் பணியையும் கருத்தில் கொண்டு  அவருக்கு அருளாளர் மற்றும் புனிதர் பட்டம் தருவதற்கான ஆய்வுத் திருப்பணி தொடங்கி வைக்கப்பட்டது. திருப்பலிக்கு முதலாக வீரமாமுனிவரின் திருவுருவச் சிலையும், அவர் ஏற்படுத்திய பணித்தளங்களாகிய ஏலாக்குறிச்சியிலிருந்து அடைக்கல மாதாவின் திருவுருவச் சுரூபமும், கோனான் குப்பத்திலிருந்து பெரியநாயகி மாதாவின் திருவுருவச் சுரூபமும், அவரது படைப்பான தேம்பாவணியும், அவர் காலத்தில் பயன்பாட்டிலிருந்த பாதக்குறடின் மாதிரிகையும், ஆயரின் இல்லத்திலிருந்து பவனியாக எடுத்து வரப்பட்டன. இயேசு சபையின் சென்னை மறைத்தளத்தின் மேனாள் தலைவர் அருள்பணி. செபமாலை இருதயராஜ் அவர்களின் தொடக்கச் செபத்துடன் பவனி தொடங்கியது.

திருப்பலியில் வீரமாமுனிவரின் புண்ணிய வாழ்வையும் பெருமையையும் கருத்தில் கொண்டு, அவருக்கு அருளாளர் மற்றும் புனிதர்பட்ட ஆய்வுத் திருப்பணியைத் தொடங்கத் தடையேதும் இல்லை என்ற சான்றறிக்கை உரோமை வத்திக்கானிலிருந்து வழங்கப்பட்டது. அந்தச் சான்றறிக்கையை இயேசு சபை சென்னை மறைமாநிலத்தின் தலைவர் அருள்பணி. பிரிட்டோ வின்சென்ட் வழங்க பேராயர் வெளியிட்டார். இந்தப் பணிக்கான விசாரணைக் குழுவையும் வரலாற்றுக் குழுவையும் இறையியல் ஆய்வுக் குழுவையும் பேராயர் ஏற்படுத்தினார். அந்தந்தக் குழுக்களின் உறுப்பினர்கள் தங்கள் பணிக்கான இரகசியம் காப்போம் என்ற உறுதிமொழியை உயர் மறைமாவட்ட வேந்தர் அருள்பணி. மெல்கிசெதெக் அவர்களின் முன்னிலையில் வழங்கினர். இயேசு சபை மதுரை மறைமாநிலத்தின் முதன்மை ஆலோசகர் அருள்பணி. எல். எக்ஸ். ஜெரோம் அவர்களால் வீரமாமுனிவரின் திருவுருவப்படம் திறந்து வைக்கப்பட்டது. திருப்பலியின் இறுதியில் வீரமாமுனிவரின் புனிதர் பட்டத்திற்கான செபமும், அருள்பணி. மரிய அருள் ராஜா சே.. எழுதியவீரமாமுனிவர்: அருள்வாழ்வும் திருப்பணியும்என்ற நூலும் பேராயர் அவர்களால் வெளியிடப்பட்டது.

இந்தச் சிறப்புத் திருப்பலியில் பாண்டிச்சேரி - கடலூர் உயர் மறைமாவட்டப் பொறுப்பாளர்கள், தமிழ்நாடு இயேசு சபையினர், வீரமாமுனிவர் பணியாற்றிய பணித்தள இறைமக்கள் மற்றும் பொதுநிலையினர் பங்கேற்றனர்.

யார் இந்த வீரமாமுனிவர்?

1680-ஆம் ஆண்டு இத்தாலி நாட்டிலே பிறந்தார். கிறிஸ்துவை அனைத்துலகோருக்கும் அறிவிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டு 1711-ஆம் ஆண்டு இயேசு சபை மறைப்பணியாளராக தமிழ்நாடு வந்தார். பல்வேறு இடங்களுக்குச் சென்று ஆலயங்கள் எழுப்பி, வேதியர்களுக்குப் பயிற்சியளித்து இறைமக்களை நம்பிக்கையில் வளர்த்தெடுக்க அயராது இறைப் பணியாற்றினார்.

தமிழ்மொழியின் வளமையைக் கண்டுணர்ந்து ஈர்க்கப்பட்டார். தமிழ்மொழியைக் கசடறக் கற்பதோடு நின்றுவிடாமல், தனது ஓய்வு நேரங்களில் காப்பியங்களையும் சிற்றிலக்கியங்களையும் இயற்றினார். சதுரகராதி, சிறுகதைகள், மருத்துவ நூல்கள் போன்றவற்றை எழுதினார். தொன்னூல் விளக்கம், கொடுந் தமிழ் இலக்கணம் போன்ற இலக்கண நூல்களை வடித்தார். கம்பரின் இராமாயணத்திற்கு இணையாக, புனித வளனாரைக் காப்பியத் தலைவராகக் கொண்டுதேம்பாவணிஎன்ற பெருங்காப்பியத்தை இயற்றினார். திருக்காவலூர் கலம்பகம், அன்னை அழுங்கல் அந்தாதி, கித்தேரி அம்மாள் அம்மானை போன்ற சிற்றிலக்கியங்களை வழங்கினார். தமிழில் எழுத்துச் சீர்த்திருத்தம் செய்தார். திருச்சி, தஞ்சை, பாண்டிச்சேரி-கடலூர், தூத்துக்குடி, பாளையங்கோட்டை என்று இன்று இயங்கும் திரு அவையின் பல பணித்தளங்களில் வாஞ்சையுடன் பணியாற்றினார். உடல் நலம் பேணாத, தனது ஓய்வில்லாத உழைப்பினால் 67-ஆம் அகவையில் கேரளாவிலுள்ள அம்பலக்காடு என்ற குருமடத்தில் பணியாற்றியபோது நோய்வாய்ப்பட்டு இறையடி சேர்ந்தார். இன்று நம்மிடையே இறை ஊழியராக உயர்ந்து நிற்கிறார்.

- அருள்பணி. . புகழேந்தி சே..

வீரமாமுனிவருக்கான ஆய்வுத் திருப்பணியின் துணை முன்மொழியாளர்

news
சிறப்புக்கட்டுரை
கனவு நனவாகிறது... ‘நம் வாழ்வு’மின்னஞ்சல் நாளிதழ் (Nam vazhvu E-newspaper)

நம் வாழ்வின்என் அன்பு வாசகப் பெருமக்களே!

இயேசுவின் இனிய நாமத்தில் வாழ்த்துகள்! தமிழ்கூறும் நல்லுலகில், தமிழ்நாடு கத்தோலிக்கத் திரு அவையின் தனிப்பெரும் வார இதழாக 1975-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டநம் வாழ்வுஇவ்வாண்டு, 2025 - இல் தனது பொன்விழாவைக் கொண்டாடி மகிழும் இத்தருணத்தில்கூர்முனைப் புரட்சியால் சீர்மிகு உலகமைப்போம்!’ என்னும் இலட்சிய வேட்கையோடு தனது அடுத்தப் பரிணாம வளர்ச்சியை எட்டிப் பிடித்திருக்கிறது!

தமிழ்நாடு கத்தோலிக்கக் கிறித்தவர்களுக்கென்று தனி நாளிதழ் ஒன்று வெளிவர வேண்டும் என்ற பலருடைய கனவும் ஆவலும் எண்ணமும் ஏக்கமும் இன்று நனவாகியிருக்கிறது! இன்றைய பொருளாதாரச் சூழலில் நாளிதழை அச்சிடுவதும், அதை அன்றாடம் தங்கள் கைகளில் கிடைக்கும் வண்ணம் பரவலாக்கம் செய்வதும் மிகப்பெரிய சவால் என்ற சூழலில், ஒவ்வொரு நாளும் பல வண்ணத்தில் நான்கு பக்கம் வடிவமைக்கப்பட்டுநம் வாழ்வுமின்னஞ்சல் நாளிதழ்(Nam Vazhvu E-newspaper) இம்மாதம் ஆகஸ்டு 15-ஆம் நாள் முதல் வெளிவரவிருக்கிறது!

திருத்தந்தையின் வத்திக்கான் நிகழ்வுகள், செய்திகள், ஆசிய-இந்திய-தமிழ்நாடு ஆயர் பேரவையின் செய்திகள், கிறித்தவர் சிறுபான்மையினர் உரிமைகள் சார்ந்த உலக-இந்திய-தமிழ்நாடு சமூக அரசியல் களத்தின் செய்திகளையும், ஒவ்வொரு மறைமாவட்டச் சிறப்புச் செய்திகளையும், திருத்தலங்கள் சார்ந்த நிகழ்வுகளையும் தாங்கி இன்றைய கணினி உலகின் எண்ணிமத் தொழில்நுட்பச் சூழலுக்கு ஏற்றவாறு வலைத்தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் அன்றாடச் செய்திகளைத் தாங்கி வரவிருக்கிறது!

நம் வாழ்வுவார இதழுக்கும், ‘கல்விச் சுரங்கம்மாணவர் மாத இதழுக்கும் தாங்கள் பேராதரவு நல்குவதுபோல, இந்தநம் வாழ்வு - மின்னஞ்சல்நாளிதழுக்கும் பேராதரவு தந்திட தமிழ்நாடு ஆயர் பேரவையின் அச்சு ஊடகப் பணியகத்தின் சார்பாக உங்களை அன்போடு வேண்டுகிறேன். இம்முயற்சியை முன்னெடுக்க அனுமதி தந்து ஊக்கப்படுத்திய தமிழ்நாடு ஆயர் பேரவையின் தலைவர் மேதகு பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களுக்கும், ஏனைய ஆயர் பெருமக்களுக்கும், இம்முயற்சி செயல்வடிவம் பெற பேராதரவும், வழிகாட்டுதலும் தந்து உடனிருக்கும் தமிழ்நாடு ஆயர் பேரவையின் எம் அச்சு ஊடகப் பணியகத்தின் தலைவர் மேதகு ஆயர் லூர்து ஆனந்தம் அவர்களுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

இப்பெரும் முயற்சிக்கு தமிழ்நாடு கத்தோலிக்க இறைமக்கள் குறிப்பாக, எண்ணிமத் தொழில்நுட்பத்தில் இரண்டறக் கலந்திருக்கும் இளைய தலைமுறையினர் பேராதரவு தருவதுடன், அன்றாடம் தங்களைத் தேடி வரும் இந்தநம் வாழ்வு - மின்னஞ்சல் நாளிதழைமற்றவரோடும் பகிர்ந்து நம் வாழ்வின் வளர்ச்சியில் பங்கெடுக்க அன்போடு அழைக்கின்றேன்! ஒவ்வொரு மறைமாவட்டத்திற்கும் நமதுநம் வாழ்வுவார இதழின் மற்றும் மின்னஞ்சல் நாளிதழின் தொடர்பாளர்களாகப் பணியாற்ற விருப்பமிக்க, தன்னார்வமிக்க இளையோர், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.

இந்த மின்னஞ்சல் நாளிதழ் ஒவ்வொரு நாளும் தடையின்றி வெளிவருவதற்கு ஒவ்வொரு மறைமாவட்டத்தின் மக்கள் தொடர்பாளர்களாக (PRO), மறைப்பணி நிலைய இயக்குநர்களாக, மறைமாவட்ட இதழின் முதன்மை ஆசிரியர்களாகப் பணியாற்றும் அருள்பணியாளர்கள், இருபால் துறவற சபைகள் வெளிக்கொணரும் இதழ்களின் ஆசிரியர்களாகப் பணியாற்றும் துறவியர், திருத்தலப் பத்திரிகைகளின் பொறுப்பாளர்கள் என யாவரும் இப்பெரும் முயற்சிக்குக் கரம் கொடுத்திட அன்போடு வேண்டுகிறேன். தங்களைச் சூழ்ந்து நிகழும் சமூக-ஆன்மிக-அரசியல்-வாழ்வியல் கள நிகழ்வுகளைச்  செய்திகளாக்கி  namvazhvu.enewspaper@gmail.com என்ற மின்னஞ்சலுக்கும், 8248411795 என்ற புலனத் தொடர்பு எண்ணிற்கும் புகைப்படத்துடன் அனுப்பி வைக்குமாறு அன்போடு வேண்டுகிறேன்!

வாருங்கள் இணைந்து பயணிப்போம்! கூர்முனைப் புரட்சியால் சீர்மிகு உலகமைப்போம்!

- முதன்மை ஆசிரியர்

news
சிறப்புக்கட்டுரை
இந்திய சனநாயகத்தினைப் பலவீனமாக்கும் அரசுகள்

ஏழைகளிடமிருந்து கல்வியைப் பறிப்பது, வளர்ச்சி என்ற பெயரில் விவசாயிகளிடமிருந்து வேளாண் நிலங்களைப் பறிப்பது, அடர்ந்த காடுகளில் பல தலைமுறைகளாக வாழும் மலைவாழ் மக்களிடமிருந்து அவர்கள் வாழ்விடங்களைப் பறிப்பது, துறைமுகங்களின் விரிவாக்கம் என்ற பெயரில் கடற்கரையில் வாழும் மீனவர்களின் உறைவிடங்களைப் பறிப்பது, பொதுத்துறை வங்கிகளில் இருக்கும் ஏழை மற்றும் நடுத்தட்டு மக்களின் சேமிப்பு நிதிகளைப் பறித்து, பெரும் கார்ப்பரேட் முதலாளிகளுக்குக் கடன்களாக அள்ளிக்கொடுத்துவிட்டு பின்னர் தள்ளுபடி செய்வது, தேசத்தின் விலை மதிக்க முடியாத இயற்கை வளங்களைப் பறித்து, பன்னாட்டு கம்பெனிகள் வரை முறையில்லாமல் கொள்ளையடிக்க அனுமதிப்பது, பட்டியல் இன, பழங்குடி, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை இன மக்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய அதிகார மையங்களிலிருந்து அவர்களை விலக்கி வைப்பது, மாநில அரசுகளின் உரிமைகளைப் பறித்து அவைகளைச் செயல்படவிடாமல் முடக்குவது... என்று ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு வகையில் இந்திய சனநாயகத்தினைப் பலவீனமாக்கும் மோடி அரசும், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா...வினரும்  தற்போது பாராளுமன்ற சனநாயகத்தின் அடிமடியிலேயே கைவைக்கத் துவங்கியுள்ளனர்.

இந்த ஆண்டு 2025 - ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நூற்றாண்டு. சனநாயகம், சோசலிசம், மதச்சார்பின்மை, தனிமனித அடிப்படை உரிமைகள் போன்ற நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் விழுமியங்களை அவர்கள் என்றும் ஏற்றுக்கொண்டதில்லை. அவை ஐரோப்பிய கலாச்சாரக் கூறுகள் என்றும், நம் மண்ணுக்கும், நமது கலாச்சாரத்திற்கும் அந்நியமானவைகள் என்பதுதான் அவர்களது நிலைப்பாடு. மனுதர்மம் மட்டுமே நமது அரசியல் சட்டமாக இருக்கவேண்டும் என்பதே அவர்களது சித்தாந்தம். பெரும்பான்மையான இந்திய மக்கள் நமது அரசியல் சட்டத்தை இழக்க விரும்பமாட்டார்கள் என்பதைப் புரிந்துகொண்ட அவர்கள், தங்களுடைய முயற்சியில் வெற்றியடைய புதிய வியூகங்களை வகுத்துள்ளனர்.

இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கித் தந்த நமது பிதாமகர்கள் எதிர்காலத்தில் இப்படிப்பட்ட அச்சுறுத்தல்கள் ஏற்படக்கூடும் என்பதை எதிர்நோக்கியே, அரசியல் சட்டத்தைப் பாதுகாக்க அரசியல் சட்ட நிறுவனங்களை உருவாக்கினர். நாடாளுமன்றம், சட்டமன்றம், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள்,  வரையறுக்கப்பட்ட அரசு நிர்வாகம், தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகார வரம்புக்குள் சுதந்திரமாகச் செயல்படும் மாநில அரசுகள் என்ற பல நிறுவனங்களைக் கட்டமைத்து அவைகளைச் செழுமைப்படுத்தியிருந்தனர்.

பாராளுமன்ற சனநாயகத்தின் ஊற்றுக்கண்நேர்மையான, சுதந்திரமான தேர்தல்என்பதில் தெளிவாக இருந்த நமது முன்னோர்கள், அதற்கான தேர்தல் ஆணையத்தினை உருவாக்கினர். அரசியல் சட்டத்தின் பிரிவு 324 தேர்தல்களை நடத்துவதற்கும், வாக்காளர் பட்டியல்களைத் தயார் செய்வதற்குமான முழுமையான அதிகாரத்தைத் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கியுள்ளது. 18 வயது நிறைவடைந்த இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமையினைப் பிரிவு 326 உறுதி செய்கின்றது. சாதி, மதம், மொழி, மாநிலம், ஆண்-பெண், படித்தவர்-படிக்காதவர், ஏழை-பணக்காரர் என்ற எந்த வேறுபாடுகளும் இல்லாமல்அனைவருக்கும் வாக்குரிமைஎன்பது சுதந்திரம் நம் நாட்டு மக்களுக்குத் தந்த மிகப்பெரும் கொடை. குறிப்பாக, விளிம்புநிலை மற்றும் அடித்தட்டு மக்களின் குரலுக்கு நமது அதிகார வர்க்கம் இன்று செவிசாய்க்கிறது என்றால் அவர்கள் கைகளில் இருக்கும் வாக்குச்சீட்டுகளின் வலிமைதான். ஆதிக்கச்சாதியினரின் கைகளிலிருந்த அரசியல் அதிகாரம் சாமானியர்களின் கைகளுக்கு மாறியதற்கான மிகப்பெரும் காரணம் அனைவருக்கும் வழங்கப்பட்ட வாக்குரிமையே!

இட ஒதுக்கீடு, அடிப்படை உரிமைகள், பட்டியல் இன, பழங்குடி மற்றும் சிறுபான்மையினர் உரிமைகளைப் பாதுகாக்கும் சிறப்புச் சட்டங்கள் மற்றும் சமூகநீதிக்கான முன்னெடுப்புகள் அனைத்தும் இன்று நடைமுறையில் இருப்பதற்கு அடிப்படையான காரணம், அனைவருக்கமான வாக்குரிமையேவலதுசாரி மதவாதப் பாசிச சக்திகளுக்குஅனைவருக்கும் வாக்குரிமைஎன்பதில் என்றும் உடன்பாடு இருந்ததில்லை. கல்வி அறிவு இல்லாத நாட்டில் எல்லாருக்கும் வாக்குரிமை கொடுத்தால் தேசம் சீரழிந்துவிடும் என்று கூக்குரலிட்டுப் பார்த்தனர். ஆனால், நமது முதல் பிரதமர் நேரு உள்ளடக்கிய தலைவர்கள்அனைவருக்கும் வாக்குரிமைஎன்பதில் மிகவும் உறுதியாக இருந்ததினால் எல்லாருக்கும் வாக்குரிமை சாத்தியமாயிற்று.

சுதந்திரமாகவும் நேர்மையாகவும் தேர்தல் நடத்தினால், ஆட்சியையும் அதிகாரத்தையும் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள முடியாது என்பதை நன்குணர்ந்தஅவர்கள்சுதந்திரம் நமக்கு வழங்கிய அனைத்து உரிமைளையும் ஒவ்வொன்றாகப் பறித்ததுபோல நம்மிடம் இருக்கும் வாக்களிக்கும் உரிமையினையும் பறிக்கச் சதிவலை விரித்துள்ளனர்தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்யும் அதிகாரம் பெற்ற குழுவிலிருந்து உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாக ஓர் ஒன்றிய கேபினட் அமைச்சர் என்ற அடிப்படையில் அமித்ஷாவைப் பிரதமர் மோடி நியமித்துக் கொண்டார். இருவரும் சேர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் இராகுல்காந்தியின் ஆட்சேபனைகளையும் மீறி, தங்களுக்கு வேண்டிய அதிகாரிகளைத் தேர்தல் ஆணையர்களாக நியமித்துக்கொண்டனர்.

நாடு முழுவதும் உள்ள அதிகார வர்க்கத்தில் தங்களது கருத்தியலுக்குச் சார்பாக இருக்கும் அதிகாரிகளையும், தாங்கள் விரும்புகின்ற எதனையும் செய்யத் துணிந்த அதிகாரிகளையும் அடையாளம் கண்டு, அவர்களைத் தேர்தல் ஆணையத்தில் பணியமர்த்தியுள்ளதால் தற்போது தேர்தல் ஆணையம் தேசிய சனநாயகக் கூட்டணியின் ஓர் அங்கமாகவே மாறிவிட்டதோ என்று நடுநிலையாளர்கள் கருதும் அளவுக்கு, அதன் நடவடிக்கைகள் ஒருதலைப்பட்சமாக அமைந்துள்ளன.

தேர்தல் அட்டவணையினை பா...வின் மற்றும் பிரதமரின் வசதிக்கேற்ப தயாரிப்பதும், தேர்தல் பிரச்சாரங்களின்போது பிரதமர், அமித்ஷா மற்றும் பா... கூட்டணித் தலைவர்களின் தேர்தல் விதிமுறைகள் மீறுதல்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும், பா...வுக்கு ஆதரவான அதிகாரிகளைத் தேர்தல் அலுவலர்களாக நியமிப்பதும், எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் மாநிலத் தலைமைச் செயலர், காவல்துறைத் தலைவர் போன்ற முக்கியமான பணியிடங்களில் இருக்கின்ற அதிகாரிகளை மாற்றிவிட்டு, தங்கள் சொல்படி மட்டுமே செயல்படும் அதிகாரிகளை நியமிப்பதும், ஆளும் கட்சி வெளியிடும்விதிகளை மீறும் விளம்பரங்களைஅனுமதிப்பதும், தேர்தல் பிரச்சாரம் துவங்கிய பின்னர் சி.பி.., வருவாய் புலனாய்வுத்துறை, வருமான வரித்துறை போன்ற ஒன்றிய அரசுத்துறை அதிகாரிகளை எதிர்க்கட்சி வேட்பாளர்கள் வீடுகளிலும் அலுவலகங்களிலும் சோதனை என்கிற பெயரிலும், விசாரணை என்ற பெயரிலும் அவர்களைத் தேர்தல் பிரச்சாரம் செய்யவிடாமல் தடுப்பதை அனுமதிப்பது என்று தேர்தல் ஆணையம் கடந்த காலங்களில் செய்த மற்றும் செய்யத் தவறிய முறைகேடுகளைப் பட்டியலிட்டுக் கொண்டே இருக்கலாம்.

இந்தத் தவறுகளின் உச்சத்தைத்தான் அரியானாவிலும் மகாராஷ்டிராவிலும் சந்தித்தோம். பதிவு செய்யப்பட்டதாகத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட வாக்குகளுக்கும், இறுதியாக எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் உள்ள மிகப்பெரிய இடைவெளிகள், வாக்குப்பதிவின் கடைசி மணித் துளிகளில் அதிசயிக்கத்தக்க வகையில் பதிவாகும் இலட்சக்கணக்கான வாக்குகள், அனைத்துமே கணினிமயமாக்கப்பட்டபோதும் வாக்குப்பதிவின் இறுதி நிலவரங்களை வெளியிடுவதில் உள்ள முரண்பாடுகளும், விளக்கவே முடியாத காலதாமதங்களும் பல நியாயமான சந்தேகங்களையும் யூகங்களையும் எழுப்புகின்றன. இந்தச் சந்தேகங்களைத் தெளிவுபடுத்தக்கூடிய வாக்குச்சாவடிகளில் நடந்த வாக்குப்பதிவுகளின் வீடியோ பதிவுகளை யாருக்கும் தரக்கூடாது என்று அவசரம் அவசரமாக விதிகளைத் திருத்துவதும், நாற்பத்தைந்து நாள்களுக்குமேல் அவைகளை அழித்துவிடவேண்டும் என்று உத்தரவிடுவதும், தேர்தல் ஆணையம் எதையோ மறைக்க முற்படுகிறது என்ற நியாயமான சந்தேகத்தை மேலும் உறுதிப்படுத்துகின்றன.

அரியானா மற்றும் மகாராஷ்டிராவில் வாக்காளர் பட்டியலில் இருக்கும் பெரும் பிழைகளும் முரண்பாடுகளும், தேர்தல் நடத்தும் முறைகளும், அதனை நடத்துகின்ற முகமைகளும் அடியிலிருந்து அழுகத் துவங்கி விட்டன என்பதைத் தெளிவாகத் தெரிவிக்கின்றன. இம் மாநிலங்களில் சில மாதங்களுக்கு முன்னர் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில்இந்தியாகூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்ற தொகுதிகளில் புதிதாகச் சேர்க்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை நம்மை அதிர்ச்சியடையச் செய்கிறது. 100 சதுர அடி வீட்டில் 150 வாக்காளர்கள் வசிப்பதாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் அக்கிரமத்தைத் தேர்தல் ஆணையம் நியாயப்படுத்துவதை எப்படி ஏற்க முடியும்?

சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற பா... கூட்டணி வேட்பாளர்களில் அநேகர் புதிதாகச் சேர்க்கப்பட்ட வாக்குகளின் காரணமாகவே வெற்றி பெற்றிருப்பது மற்றுமொரு விபரீதம். இதற்கான விளக்கங்களை திரு. இராகுல்காந்தியும் மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களும் தேர்தல் ஆணையத்திடம் கேட்டால், அதற்குப் பதில் சொல்வதற்குப் பதிலாக அந்தத் தலைவர்களையும், அவர்களது இயக்கங்களையும் மூன்றாம்தர மொழியில் விமர்சிப்பது ஓர் அரசியல் சட்ட நிறுவனம் (Constitutional Institution) செய்யக்கூடிய செயலா? என்பதையும் நாட்டு மக்கள் சிந்திக்கவேண்டும். பாராளுமன்ற சனநாயகத்தின் அடிநாதமாக இருக்கின்ற தேர்தல்களை நடத்தும் முறைகளிலும், அதனை நடத்துகின்ற ஆணையத்திலும் தொடர்ந்து நடைபெற்றுவரும் முறைகேடுகளையும் நிர்வாகச் சீர்கேடுகளையும் தேசிய ஊடகங்களும் நீதிமன்றங்களும் கண்டும் காணாததுபோல இருப்பது, தவறு செய்கின்றவர்களுக்கு மேலும் தைரியத்தைக் கொடுத்துள்ளதோ என்று நாம் அஞ்சுகிறோம்.

‘SIR’ (Special Intensive Revision) என்றழைக்கப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு நடவடிக்கை என்ற பெயரில், பீகாரில் இலட்சக்கணக்கான ஏழை, எளிய பட்டியல் இன, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் மற்றும் புலம்பெயர்ந்துள்ள தொழிலாளர்களின் வாக்குரிமைகளைப் பறிப்பதற்கு ஒரு பெரும் அநியாயத்தைத் தேர்தல் ஆணையம் அரங்கேற்றி வருகின்றது. 2003-ஆம் ஆண்டுக்குப் பின்னர் வாக்காளர்களாகப் பதிவு செய்து, இறுதிசெய்யப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்கள் அனைவரும் தங்களை இந்தியர்கள் என்று நிரூபிப்பதற்கான சில ஆவணங்களை ஜூலை 25-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும்; அப்படித் தாக்கல் செய்யாதவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான படிவங்களைத் தேர்தல் ஆணையம் அச்சிட்டு வெளியிட்டுள்ளது. இந்தப் படிவங்களைப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் இதற்காக நியமிக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்; அவைகளைச் சரிபார்த்து சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் அதிகாரம் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் ஓர் இலட்சத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

2003-ஆம் ஆண்டுக்குப் பின்னர் பதிவு செய்துள்ள இந்த வாக்காளர்கள் இதுவரை ஐந்து பொதுத்தேர்தல்களில் வாக்களித்துள்ளனர். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் வாக்களித்துள்ளனர். இந்த ஆண்டு சனவரி மாதத்தில் நடந்த வாக்காளர் சீர்திருத்தப்பட்டியல் தயாரிக்கப்பட்டபோதும் சரிபார்க்கப்பட்டு, வெளியிடப்பட்டுள்ள சீர்திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளனர். தேர்தல் ஆணையம் இவர்களிடம் கேட்கும் ஆவணங்கள் எதுவும் இவர்களில் பலரிடம் இருப்பதற்கு வாய்ப்பில்லை. ஜூன் மாதம் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்  வாக்காளர்கள் தாங்கள் இந்த நாட்டின் குடிமக்கள் என்பதை நிரூபணம் செய்வதற்குத் தாக்கல் செய்யக்கூடிய பதினோர் ஆவணங்களைப் பட்டியலிட்டுள்ளது. பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், 12-வது வகுப்பு சான்றிதழ், சாதிச்சான்றிதழ், சொத்துரிமைக்கான பத்திரங்கள்... என்று நீள்கின்ற பட்டியலில் சாமானிய அடித்தட்டு மக்களிடம் இருக்கும் ஆதார் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவைகள் இடம்பெறவில்லை என்பதுதான் பெரும் துரதிருஷ்டம்! மேலும், இவர்களிடம் இல்லாத இந்த ஆவணங்களை முப்பது நாள்களுக்குள் பெற்று தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டுள்ள தேர்தல் ஆணையத்திற்கு, பீகார் அரசு இயந்திரம் எவ்வளவு வேகமாக வேலைசெய்யும் என்று தெரியாதா?

தேர்தல் ஆணையத்தின் தற்போதைய உத்தரவுக்கிணங்க பெரும்பாலான இந்த வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் அவர்களது ஆதார் எண்களோடு இணைக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையம் வழங்கிய வாக்காளர் அடையாள அட்டையைத் தேர்தல் ஆணையமே ஏற்க மாட்டோம் என்று சொல்வதற்குத் தேர்தல் ஆணையம் வெட்கப்பட வேண்டாமா?

இந்தியாவில் பெரும்பாலான புலம்பெயர் தொழிலாளர்கள் பீகாரைச் சேர்ந்தவர்களே! அவர்களுக்கும், அவர்களது சொந்த மண்ணுக்கும் இருக்கும் ஒரே தொடர்பு இந்த வாக்களிக்கும் உரிமை மட்டுமே! இவர்களில் அநேகருக்கு அவர்களது வாக்களிக்கும் உரிமைகளைப் பறிப்பதற்கு இப்படி ஒரு சதி நடப்பதே தெரியாது. தெரிந்தாலும் பெரும் பொருள் செலவு செய்து பீகாருக்குப் பயணித்து மீண்டும் தொழில் செய்யும் மாநிலங்களுக்குத் திரும்பத் தேவைப்படும் பொருளாதார வசதி அவர்களிடம் இல்லை. அவர்களது அரை வேட்டியையும் அவிழ்த்து, சொந்த மண்ணில் அரசியல் உரிமைகளற்ற நிர்வாண மனிதர்களாக ஆக்கும் இக்கொடுமையினை உச்ச நீதிமன்றம் தடுக்குமா? என்பதைப் பார்க்க பதற்றத்துடன் காத்திருக்கின்றோம்.

வாக்காளர் பட்டியலைச் சீராய்வு செய்கிறோம் என்று சொல்லிக்கொண்டு குடியுரிமைப் பட்டியலைத் தயார் செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு உண்டா? இந்தச் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு, எவ்வித முன்தயாரிப்பும் இன்றி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைக் கலந்து ஆலோசிக்காமல் அரைவேக்காட்டுத்தனமாக அவசரம் அவசரமாக நடத்தப்படுவதை நடுநிலையாளர்கள் அனைவரும் ஊடகங்களும் கடுமையாகக் கண்டித்துள்ளனர். இதற்காக நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி அலுவலர்கள் மட்டும்தான் தேர்தல் ஆணையத்தின் படிவங்களை விநியோகிக்க வேண்டும் என்றும், பூர்த்தி செய்யப்பட்டப் படிவங்களை அவர்கள் மட்டுமே பெறவேண்டும் என்ற விதிகள் எங்கேயும் பின்பற்றப்படவில்லை என்று கூறுகிறார்கள். உள்ளூர் ஊராட்சி மற்றும் நகராட்சி மன்றங்களின் சுகாதாரப் பணியாளர்களே இப்பணிகளைச் செய்வதாகத் தெரிகிறது. அவர்களுக்கு எவ்விதமான முறையான பயிற்சிகளும் அளிக்கப்படவில்லை. காய்கறிக் கடைகளில் அச்சடிக்கப்பட்ட பாரங்கள் நூற்றுக்கணக்கில் குவிந்து கிடப்பதை ஒரு தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களைப் பெற்றுக்கொண்டதற்கு எவ்வித அத்தாட்சியும் வழங்குவதில்லை. இலட்சக்கணக்கான வாக்காளர்கள் தங்களது வாக்குரிமைகளை இழக்கப்போவது உறுதி.

தேர்தல் ஆணையம் நடத்தும் இந்தச் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு காரணமாக வாக்குரிமையினை இழக்கப்போகின்ற பெரும்பாலோர் அடித்தட்டு மற்றும் விளிம்புநிலை மக்களே! பட்டியல் இன மக்களும், சிறுபான்மை மக்களும் சொத்துப் பத்திரங்களுக்கு எங்கு போவார்கள்? புலம்பெயர்ந்த தொழிலாளர்களுள் பெரும்பான்மையினர் பிற்படுத்தப்பட்ட மக்களே! வாக்காளர் பட்டியல் சீராய்வு என்பது இவர்களிடமிருந்து வாக்குரிமைகளைப் பறிக்கும் சதி என்று இப்போது புரிகிறதா?

வாக்குரிமை இல்லாத எனக்கு இந்த நாட்டில் இனிமேல் என்ன இருக்கிறது?” என்று அங்கலாய்க்கின்ற மக்கள் இந்தத் தேசத்தின் இறையாண்மைக்கு எதிரான எவ்வளவு பெரிய ஆபத்து என்பதைத் தேர்தல் ஆணையம் உணர்வதாகத் தெரியவில்லை.

தேர்தலின் மீதும் தேர்தல் ஆணையத்தின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை உள்ளவரைதான் சனநாயகம் வாழும். ஆட்சியில் உள்ளவர்கள் தவறு செய்தால் தேர்தல் மூலம் நீதி வழங்கலாம். ஆனால், தேர்தல் முறைகளே தவறும்போது நியாயம் கிடைப்பது எங்கே? கவிஞன் பாடினான்: ‘மங்கை சூதானால் கங்கையில் குளிக்கலாம்! கங்கையே சூதானால் எங்கே போவது?’ என்று! இந்த வரிகள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க இயலவில்லை.