ஆற்றங்கரையில் அழகிய மாலைப்பொழுதில் ஏதோ ‘தொபக்’கென விழுகின்ற சத்தம் கேட்டு, வீட்டுத் திண்ணையில் படுத்திருந்த இராசையா ‘திடுக்’கென எழுந்தான். வீட்டிற்கு முன்பாகத் தலை இல்லாது நின்ற தென்னை மரம் இரண்டு துண்டாக முறிந்து விழுந்திருந்தது.
“அந்த மரத்த முறிக்கணுமுன்னு ஆயிரம் வாட்டி சொல்லியாச்சி. நம்ம சொல்லுறதக் கேட்க இந்த வீட்டுல யாரு இருக்கா?” என்று அடிக்கடிச் சொல்லி களைத்துப் போயிருந்தாள் இராசையாவின் மனைவி பொம்மி. “அது இன்னும் பட்டே போகல. இப்போதெல்லாம் விழாது” என்று சொல்லி எப்போதும் நழுவிச்செல்வார் இராசையா. நல்ல வேளையாக வீட்ல பொம்மியும் விஜியும் இல்லாதபோது மரம் விழுந்தது ஒருவிதத்தில் நிம்மதிதான்.
மேட்டூர்
சந்தைக்குப் பொருள்கள் வாங்கிவரச் சென்றிருந்தார்கள் பொம்மியும் விஜியும். ஐந்தாம் வகுப்பு படிக்கும் விஜி, தனக்கும் பென்சில் பாக்ஸ் வாங்க வேண்டும் என்று சொன்னதால் அவளும் உடன் சென்றிருந்தாள். பொம்மியும் விஜியும் வீட்டிற்கு வரும் முன்பே வாசலுக்கருகில் விழுந்து கிடக்கிற தென்னை மரத்தை வெட்டி ஒதுக்கிட முடிவெடுத்தார் இராசையா. கொல்லைப்புற மாட்டுத் தொழுவத்திலிருந்த வெட்டரிவாளையும் கோடாரியையும் எடுத்துக் கொண்டு மரம் வெட்டத் தயாரானார்.
அந்த
ஆற்றோரக் கிராமத்தின் மௌனத்தைக் கத்தரிக்கோல் கொண்டு கிழிப்பதைப்போல கிளிகள் இரண்டு ‘கீச்’சென்று சத்தம் போட்டுக் கொண்டிருந்தன. அந்த மரத்தையே இவ்விரு கிளிகளும் சுற்றி வந்துகொண்டிருந்தன. இராசையாவிற்கு வியப்பாக இருந்தது. அடிக்கடி அந்த மரத்தில் இந்த இரண்டு கிளிகளும் வந்துபோய்க் கொண்டிருந்ததைக் கவனித்திருக்கிறார். ஆனால், இன்று இந்தக் கிளிகள் ஏன் ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கின்றன? காரணம் தெரியவில்லை?
“என்னங்க ஆச்சு... இந்தக் கிளிங்க கத்திக்கிட்டே இருக்கு?” தூரத்தில் விஜியோடு வந்து கொண்டிருந்தபோதே கேட்டாள் பொம்மி.
மூங்கில்
கேட்டைத் தள்ளித்திறந்து உள்ளே வந்த விஜி, தான் நட்டு வைத்த புடலைச் செடியின் அடியில் இரண்டு கிளிகுஞ்சுகள் செத்துக் கிடந்ததைப் பார்த்து அரண்டழுதாள். அந்த அழுகை வானில் வட்டமிட்ட இரண்டு கிளிகளின் ஒப்பாரிச் சத்தத்திற்கு இணையாக இருந்தது. கீழே விழுந்த தென்னை மரத்தின் பொந்து ஒன்றில் கிளிகள் முட்டைகளிட்டு அடைகாத்து வந்தன என்பது பொம்மிக்கும் விஜிக்கும் ஏற்கெனவே தெரியும். தினமும் வந்து தென்னை மரப்பொந்தில் உட்கார்ந்துக்கொண்டு தன் குஞ்சுகளுக்கு இரை கொடுத்துச் செல்லும் கிளிகளை அவர்கள் தோட்ட வேலை செய்துகொண்டே பார்த்திருக்கின்றார்கள்.
“அம்மா! அப்பாட்டச் சொல்லி எனக்கு ஒரு கிளி புடிச்சு தரச் சொல்லும்மா... நான் வளக்குறேன்” என்று
அடிக்கடிச் சொல்லி நச்சரிப்பாள் விஜி.
இரு
கிளிக்குஞ்சுகளும் இறந்து கிடந்தது எல்லாரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இராசையா மரத்தைச் சிறு துண்டுகளாக வெட்டி அவற்றை ஓரத்தில் அடுக்கிவைத்தார். வானில் கதிரவன் கண்கள் சிவந்திருந்த நேரம் தூரத்தில் கிளிகளின் ஒப்பாரிச் சத்தம் இன்னும் ஓய்ந்திருக்கவில்லை.
வீட்டுத்
திண்ணையில் எல்லாரும் அமர்ந்திருந்தபோது ஓட்டுக்கூரையின் மேலிருந்து ஒரு முனங்கல் சத்தம் கேட்டு, இராசையா ஏணி வைத்து டார்ச் லைட் அடித்து எட்டிப்பார்த்தார். இளம் கிளி குஞ்சு ஒன்று அரைகுறையாகப் பறந்து கொண்டு கூரையின் மேல் விழுந்து மயக்கநிலையில் இருந்து எழுந்திருக்கிறது. அதனை அப்படியே தூக்கியெடுத்து விஜியின் கையில் வைத்தார்.
தன்
கையில் கிளிகுஞ்சு இளம்பச்சை நிறத்தில் பூத்திருப்பதைப் பார்த்து விஜி பூரித்து நின்றாள். அவள் சிறு முகம் குண்டு பல்ப் வெளிச்சத்தில் குதூகலித்தது தெரிந்தது.
“இன்னைக்கோ நாளைக்கோ பறந்து போகுமளவிற்கு இறக்கை வந்திடுச்சி. நாளைக்கு ஒரு கூண்டு வாங்கித் தரேன். நீ வீட்டிலேயே வளத்துக்கோ...”
மகளுக்கு ஏதோ விலையுயர்ந்த தங்கக் கொலுசு வாங்கிக்கொடுத்தப் பிரமிப்பில் தன் மனைவி பொம்மியைப் பார்த்தார் இராசையா. விஜியைப் பார்த்தாள் பொம்மி.
எங்கோ
தூரத்தில் இரு கிளிகளின் அழுகைக் குரல் விஜியின் காதுகளைத் துளைத்துக்கொண்டே இருந்தது. நொடிப்பொழுதில் தன் கையிலிருந்த கிளிகுஞ்சை கைவிரித்துப் பறக்க அனுமதித்தாள் விஜி. கிளியும் ‘கீச்’ சத்தம் போட்டுக்கொண்டே பறந்துச் சென்றது.
“ஏன் விட்டுட்ட?” என்று கோபப்பட்டார் இராசையா. “நான் விடல, அதுவாவே போயிடுச்சிப்பா” என்று
சொல்லி அம்மாவின் முந்தானைக்குள் முகம் மறைத்தாள் விஜி.
இராசையாவிற்குக்
கடைசிவரைக் காற்றில்லாமலே மரம் எப்படி உடைந்து விழுந்தது என்றும் தெரியவில்லை; கைக்குள்ளிருந்த கிளிகுஞ்சு எப்படிப் பறந்து சென்றது என்பதும் புரியவில்லை. யாரும் பொறுப்பேற்காதவரை யாதும் குழப்பமே!
செயற்கை
நுண்ணறிவு இன்றைய உலகில் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. அதிலும் குறிப்பாகக் கொடிய தானியங்கி ஆயுத Lethal Autonomous Weapons (LAW) வடிவமைப்பில் அதிகமாகப்
பயன்படுத்தப்படவிருக்கிறது.
போர்கள் நடைபெறும் இடங்களில் அல்லது தீவிரவாதிகளை அழித்தொழித்தலில் இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று கூறிக்கொண்டு 50-க்கும் மேற்பட்ட நாடுகள் செயற்கை நுண்ணறிவைத் தங்கள் நாட்டு இராணுவத் திட்ட வரையறையில் சேர்த்துள்ளன. இந்தியா ‘மைக்ரோ சாப்ட்’
(Microsoft) நிறுவனத்துடன்
சேர்ந்து சுமார் மூன்று பில்லியன் டாலர் மதிப்பில் ‘இந்திரஜால் தானியங்கி ட்ரோன் பாதுகாப்பு அமைப்பு’
(Indrajaal Autonomous Drone Security System) என்னும் திட்டத்தைக் கையிலெடுத்துள்ளது. அதிலும் குறிப்பாகக் கொடிய தானியங்கி ரோபோக்களையும் (Lethal Autonomous Robotics), ‘மியூல்’ (MULE - Multi-Utility
Legged Equipment) என்னும்
ரோபோட்டிக் நாய்களையும் தனது படைப்பிரிவில் இந்தியா சேர்த்துள்ளது.
2015, ஜூலை 28 அன்று
சர்வதேசச் செயற்கை நுண்ணறிவிற்கான கூட்டு மாநாட்டில் முக்கியமான அறிஞர்களும் உலகத் தலைவர்களும் கொடிய தானியங்கி ஆயுதங்களைக் குறித்து எச்சரித்திருந்தனர். ஆயினும், இப்பந்தயத்தில் ஓடி வல்லரசாகிட வேண்டுமென்ற நோக்கத்தில் எல்லா நாடுகளும் வரையறையற்ற முறையில் இத்தொழில்நுட்பத்தில் பணத்தை முதலீடு செய்கின்றனர்.
மனிதத்
தலையீடு இல்லாமல் செயற்கை நுண்ணறிவினால் இயக்கப்படும் இந்தக் கொடிய ஆயுதங்கள் நாட்டின் பாதுகாப்பிற்காகத் தவிர்க்க முடியாதது என்றாலும் அதன் ‘பொறுப்பேற்காத் தன்மை’
(avoiding accountability) இன்று பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
உலகளவில்
செயற்கை நுண்ணறிவிற்கான சட்டத்திட்டங்கள் இன்னும் இயற்றப்படாத நிலையில், கொடிய தானியங்கி ஆயுதங்கள் இன்னும் முறையாகச் சோதித்துப் பார்க்கப்படாத நிலையில், செயற்கை நுண்ணறிவில் பல்வேறு குறைபாடுகள் உள்ள நிலையில் இத்தொழில்நுட்பம் எப்படி மனிதகுலத்திற்கு நன்மை பயக்கும்? போரிலோ அல்லது பாதுகாப்பிலோ ஏதாவது தவறு நிகழ்ந்துவிட்டால், “ஐயோ! இது நான் அல்லேன்; ஏஐ...” என்று சொல்லி யார் வேண்டுமென்றாலும் தன் பொறுப்பைத் தட்டிக்கழித்துத் தப்பிச்செல்ல முடியும்.
யாரும்
பொறுப்பேற்காதவரை யாதும் தவறே!
ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்குப் பெருங்கனவு ஒன்று உண்டு. தனது அமைப்பின் நூற்றாண்டு விழா ஆண்டில் பா.ச.க. ஆட்சியில் இருக்க வேண்டும்; அப்போதுதான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இரண்டாம் தலைவர் கோல்வால்கரின் சித்தாந்த அடிப்படையான ‘இந்து இராஜ்ஜியம்’ என்ற கனவு நனவாகும்; அதற்கான காலச்சூழல் கனியும்; அதற்கான மூல அறிக்கையான ‘ஞான கங்கையை’ செயல்படுத்த இதுவே கடைசி யுத்தம்.
ஞான
கங்கை அறிக்கை சொல்கிறது: ‘மாநில அரசுகள் இல்லாத மத்திய அரசு, சாதி அடிப்படையில் மாவட்டங்களாக ‘சனப்பதங்கள்’ அவை
-200-லிருந்து 300-க்குள் இருக்கலாம். சனாதன ரீதியான அந்த ஆட்சியின் அதிகாரங்கள் முழுவதும் புது தில்லி மத்திய அரசிடம் குவிக்கப்படும்.’
‘குடியுரிமைச் சட்டம் எத்தனை பேருக்குக் குடியுரிமை கொடுத்தது?’ எனப் பாராளுமன்றத்தில் கேள்வி கேட்கப்பட்டது. பதில் அளித்த உள்துறை துணை அமைச்சர் நித்தியானந்தா ராய் “குடியுரிமை எவருக்கும் தரப்பட்டதாகத் தகவல் இல்லை; ஆனால், 37,000 பேரை நாடு கடத்திவிட்டோம்” என்றார்.
அம்பேத்கர்
அன்றே கூறினார்: “நான் எழுதிய அரசமைப்புச் சட்டம், என்று மக்களைப் பாதிக்கிறதோ, அன்று இந்த நாட்டை நல்லவர்கள் ஆட்சி செய்யவில்லை.” அதுதானே பா.ச.க.
ஆட்சியில் இன்று நடக்கிறது.
இந்திய
அரசியல் சாசனம் இந்தியாவை ‘இறையாண்மை, சமத்துவம், மதச்சார்பற்ற குடியரசாக’
அறிவிக்கிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு விடுதலைப் போராட்டம், இந்திய அரசியல் சாசனம், அரசமைப்புச் சட்டம் என்பதில் எக்காலத்திலும் நம்பிக்கை இல்லை. இந்தூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு கூட்டத்தில் “இராமர் கோவில் திறந்த நாளே இந்தியாவின் சுதந்திரத் திருநாள்”
என்று புதுக்கதை பேசுகிறார்கள். அவர்கள் தங்களது சனாதனக் கோட்பாட்டின் அடிப்படையில் இந்து
இராஜ்ஜியம் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். அதற்கான செயல்திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துகிறார்கள்.
‘இந்து இராஜ்ஜியம்’ என்றால்
இந்துகள் மட்டுமே இருக்கவேண்டும்; சிறுபான்மை மக்களைப் பதற்றத்தில் வைக்கவேண்டும்; வரலாற்றைப் புதிதாக மாற்றி எழுதவேண்டும்; சமூக நலத் திட்டங்களை நிறுத்த வேண்டும். சனாதனத் தர்மப்படி அரசியலை முன்னெடுத்து, ஆட்சி அதிகாரத்தை நிலைநிறுத்த புதிய சனாதன அரசமைப்புக்கு நகர்தல் அவசியம். மன்னர் ஆட்சியின் குறியீடான செங்கோலைப் புது நாடாளுமன்றக் கட்டடத்தில் வைத்ததும் இதன் அடையாள அரசியலே.
“தங்களது பத்து ஆண்டுகால ஆட்சியில், இந்திய ‘அரசு இயந்திரம்’
முழுவதையும் காவி மயமாக்கி விட்டார்கள். இருபது ஆண்டு காலத்திற்கு அதன் தாக்கம் இருக்கும்”
என்று எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி தன் கவலையை வெளிப்படுத்துகிறார். இதற்காக ஆடிட்டர் குருமூர்த்தி அவர்களைத் தலைவராகக் கொண்ட ‘விவேகானந்தா பவுண்டேஷன்’ என்ற
அமைப்பு செயல்படுவதாகத் தெரிவித்துள்ளார். இந்தக் குழுவில் 97% ஒரே உயர்
சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதுபோன்ற குழுக்கள் எந்த வழக்குகள் எந்த நீதிபதியிடம் செல்வது என முடிவு செய்கிறது
என ‘கேரவன்’ பத்திரிகைக் கூறுகிறது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இசுலாமியர்களைக் குறிவைத்து குடியுரிமைச் சட்டம் கொண்டு வந்தார்கள். பிரதமர் மோடி கேலியாக “இச்சட்டத்தை எதிர்த்துப் போராடுபவர்கள் உடைகளைப் பாருங்கள்; அவர்கள் யாரெனத் தெரியும்”
எனத் தன் மத வன்மத்தை வெளிப்படுத்தினார்.
‘முத்தலாக்’ சட்டம்,
‘வக்பு’ திருத்தச்
சட்டம் என இசுலாமியர்களை ஓர்
எல்லையில் நிறுத்துகிறார்கள். அதற்கு முன்னோட்டமாக இந்திய இராணுவத்திற்கும் இந்திய இரயில்வேக்கும் கூட ‘வக்பு’ வாரிய அளவிற்குச் சொத்துகள் இல்லை என ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பொதுமக்கள்
கருத்தைத் திசை திருப்பியது.
மேற்கு
வங்கத் தேர்தலை முன்னிட்டும், ‘வக்பு’ சட்டத் திருத்தம் குறித்தும் ஆர்.எஸ்.எஸ். தன் கலவரங்களை ஆரம்பித்துவிட்டது. மேற்கு வங்கத்தில் காளிக்குப் பதில் இராமரை முன்னிறுத்தும் மத அரசியலை ஆர்.எஸ்.எஸ். நடத்துகிறது. அடுத்த ஆண்டு முதல் 20,000 இடங்களில் இராமநவமி விழாவைக் கொண்டாட ஆர்.எஸ்.எஸ். அறைகூவல் விடுகிறது.
இக்கட்டுரையின்
அடிநாதமான தகவலை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘ஆர்கனைசர்’
03.04.2025-இல் தலையங்கமாக வெளியிட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். தன் கொள்கைப் பிரகடனங்களை மட்டுமே தலையங்கமாகத் தீட்டும். அது கத்தோலிக்கருக்கா? அல்லது வக்புக்கா? யாருக்கு அதிக சொத்து? என்ற தலைப்பில் கேள்வி கேட்டது. கத்தோலிக்க அமைப்புகளுக்கு 20,000 கோடி மதிப்பில், 17 கோடி ஏக்கர் நிலம் உள்ளது என எழுதியது. இத்தகவலை
ஆர்.எஸ்.எஸ். திரட்டியதாகத் தெரிகிறது. ‘நேற்று இசுலாமியர்கள், நாளை கிறித்தவர்களா?’
என்ற பரபரப்பு தீப்பற்ற, முறையற்ற அப்பதிவு திரும்பப் பெறப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் நீக்கிவிட்டார்கள்.
கிறித்தவத்
தொண்டு நிறுவனங்களைத் தடைசெய்து, மக்கள் சேவைகளை முடக்கிய பா.ச.க.
அரசு அவர்களது கல்வி, மருத்துவச் சேவைகளை நிறுத்த வழிதேடுகிறது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்குப் பெரும் நிதி அயல்நாடுகளிலிருந்து வருவதைப் பா.ச.க.
அரசு ஊக்குவிக்கிறது. இது குறித்துத் திருமுருகன் காந்தி ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார்.
தற்போதைய
நிகழ்வுகள் சில பெரும் பொறுப்பு வகிப்பவர்களின் ஆர்.எஸ்.எஸ். மனப்பான்மையைக் காட்டுகின்றன. பாம்பன் பாலத் திறப்பு விழாவிற்கு வந்த பிரதமர் மோடி ‘ஜெய் ஸ்ரீராம்’
என மக்களை மத அடிப்படையான பரவசத்திற்கு
இட்டுச் செல்கிறார். அதைப் பின்பற்றி ஆளுநர் ஆர்.என். இரவியும் மதுரை தியாகராயா கல்லூரியில் இதையே திரும்ப ‘ஜெய் ஸ்ரீராம்’
எனச் சொல்ல சர்வ மத மாணவர்களையும் கட்டாயப்படுத்துகிறார்.
தமிழ்நாட்டில்
புதிதாகப் பா.ச.க.
தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் நயினார் நாகேந்திரன், சாகாவில் 7 மற்றும் 15 நாள் பயிற்சியில், தனது வாழ்வுமுறை மாறிவிட்டதாகக் கூறி தனது பதவி ஏற்பு விழாவில் பாடுகிறார்: ‘கேசவனை நாம் வணங்குவோம்; அவர் பாதையில் நாமும்
செல்வோம்; இலட்சியத்தை எய்திடுவோம்; நாம் நிச்சயமாய் வெற்றியை நிலைநாட்டுவோம்’ என
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தப் பாடலைப் பதவியேற்பு மேடையிலே பாடி ஆர்.எஸ்.எஸ். விசுவாசம் காட்டுகிறார். இவரது பழைய பதிவு ஒன்று இப்படிக் கூறுகிறது: “இந்து தர்மத்தைத் தவறாகப் பேசினால் அவனைக் கொலை செய்யவும் தயாராக இருக்க வேண்டும்.”
இதுபோன்ற
மதவெறிப் பேச்சுகளால் ‘யூ.சி.எஃப்.
என்ற அமைப்பால் எடுக்கப்பட்ட புள்ளி விவரப்படி, கிறித்தவர்களுக்கு எதிரான 823 தாக்குதல்கள் நடந்திருப்பதாகப் பதியப்படுகிறது. பிரதமர் மோடி அவர்களிடம் உளவுத்துறை ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. “சிறுபான்மை மக்களுக்கு எதிரான இதேநிலை நீடித்தால் விரைவில் இசுலாமியர்கள், கிறித்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், தலித்துகள், பழங்குடியினர் என அனைவரும் இணைந்த
சிறுபான்மையோரின் பெரும் போராட்டம் நாட்டில்
நடைபெறும்” என்கின்றது.
எனவே, ஆளும் பா.ச.க.
அரசு ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடமிருந்து விடுதலை பெற்று, சமயச் சார்பற்ற குடியாட்சி முறைக்குத் திரும்ப வேண்டும்.
உலகின் 19% இளைஞர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். இந்திய இளைஞர்களின் எண்ணிக்கை 60 கோடி என்கிறது புள்ளி விவரங்கள். இவர்களில் 20% பேர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பங்கு பெறுகிறார்கள். உலகளாவிய போட்டிக்கான தொழில்நுட்ப அறிவு மற்றும் ஆராய்ச்சிகளின் அளவு பற்றாக்குறையால் தேச வளர்ச்சி முடங்கிக் கிடக்கிறது. மனிதவள மேம்பாட்டு நிறுவனம் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ.) தருகிற அறிக்கைப்படி, பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்திய இளைஞர்களின் எண்ணிக்கை 37% குறைந்துள்ளது.
நவீன
காலத்திலோ பதின் பருவ மாற்ற நிலையிலேயே இளமையின் சவால்கள் அளப்பரியது. அது உடல், உள்ளம் சார்ந்த அகப்பிரச்சினைகளோடு, சமூகம் சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்தல், அதில் மீள முடியாமையால் தவித்து நிற்பது; தரமானக் கல்வி, தேர்ச்சி, நல்ல மதிப்பெண்கள்; விரும்பிப் படிக்க உயர்கல்வி என நீள்கிறது. வேலைவாய்ப்பு,
வளாக நேர்காணல் என விடை தெரியாத
கேள்விகள் மேலும் விரிகிறது. இது தவிர தொலைக்காட்சி, மின்னணு ஊடகங்கள் என்ற திசை திருப்புதல்களும், போதைப்பழக்கம் என்ற பின்னடைவுகளைக் கொண்ட தடைகளைத் தாண்ட வேண்டும். நமது பல்கலைக்கழகங்கள் வழங்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு, நடுத்தர பிற்படுத்தப்பட்ட இளையோரின் தேடல் எல்லைக்குள் அடங்கி விடுகின்றது. ஐ.ஐ.டி.
மற்றும் ஐ.பி.எம்.
போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் குறிப்பிட்ட 3% மேற்குடி
மக்களுக்கானது. மீறி சேரும் இதர பிரிவு மாணவர்கள், அவர்கள் தரும் அழுத்தம் மற்றும் பிற்போக்குப் பார்வையால் இடைநிறுத்தம் செய்கிறார்கள் அல்லது தற்கொலை செய்து கொள்கிறார்கள். அப்படி ஒன்றிய பா.ச.க.வின் பத்து ஆண்டு ஆட்சிக்காலத்தில், இடை நிறுத்தம் செய்த 25,539 மாணவர்கள் மற்றும் 135 தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் விவரத்தைத் தாக்கல் செய்ய உச்ச
நீதிமன்ற அமர்வு, அரசிற்கு உத்தரவிட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி., அங்கு உயர்சாதி அரசியல் செய்கிறது. அதுபோலவே, அங்குள்ள ஆசிரியர்களும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களைக் கல்வி கற்கக்கூடாது என மனுதர்ம அரசியல்
செய்கிறார்கள். ஆனால், தமிழ்நாடு மூன்று தலைமுறைகளாகப் பெற்றுள்ள கல்விச் செல்வ விழிப்புணர்வு, புதிய திசைகளை அடையாளம் காண்கிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டு இளைஞர்கள் இயல்பிலேயே புத்திசாலிகள். இருமொழிக் கொள்கையால் ஆங்கிலத்தில் அசத்துபவர்கள். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தரும் சான்று இதோ: “தமிழ்நாட்டிலிருந்து பலர் அமெரிக்க நாடுகளுக்குச் செல்கின்றனர். அவர்கள் ஆங்கிலம் கற்றுச் சிறப்பாகச் செயல்படுகிறார்கள்.”
கூகுள்
தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பவர் ஒரு தமிழர். அமெரிக்காவில் உயர் பதவிகளில் தமிழர்கள் இருக்கிறார்கள். ஐ.ஏ.எஸ்.
தேர்வுகளுக்குப் பயிற்சி எடுக்க வருபவர்களில் அதிகம் பேர் தமிழர்கள்தாம். பொதுவாக ஐ.ஏ.எஸ்.,
ஐ.பி.எஸ். என்றால்
அது தமிழ்நாடு என்ற நிலை இருக்கும். தற்போது அவர்கள் சாதிக்க உலகம் முழுவதும் பயணிக்கிறார்கள். தமிழர்கள் ஆங்கிலம் கற்றுச் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். ஆனால், அனைவருக்கும் தாய்மொழி அறிவும், ஆங்கில அறிவும் சமவாய்ப்பாக அமைவதில்லை. பொறியியல் பட்டதாரிகள் உள்பட, பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்கள் விடுப்பு விண்ணப்பங்களில், விடுப்பிற்கான காரணங்களை ஆங்கிலத்தில் எழுதத் திணறுகிறார்கள். இது வருத்தத்திற்குரியது. மதிப்பெண்ணை மட்டும் அடிப்படையாகக் கொண்ட கல்விமுறையின் கோளாறு இது. வாசிப்புப் பழக்கம், கடிதங்கள் எழுதும் பழக்கம் இல்லாததே இதற்கு
அடிப்படைக் காரணி.
இன்று
வாட்ஸ்-ஆப் குறுஞ்செய்தியைக் கூட எழுத்துப் பிழைகளைத் தவிர்க்க, உச்சரிப்பு வார்த்தைகளில் எழுத்துகளைச் சுருக்கும்
முறையும் புது மொழி
வடிவாக இருக்கிறது. மொழிக் கல்வியை மதிப்பெண் என்ற வட்டத்தில் அடக்கியது மூலப் பிழையாகும். தாய்மொழிக் கல்வி என்பது
அரசுகளின் கடமைக்குள் முன்னுரிமை பெறுவதாகும். அது புதிய தலைமுறைகளை உரு தருவதாகும்.
காரல்
மார்க்ஸ் கூறுகிறார்: “ஒரு தாயின் கவனிப்பு இல்லாமல், அவர்கள் வாழக்கூடிய தருணத்திலிருந்து, அனைத்துக் குழுந்தைகளின் கல்வியும் அரசு நிறுவனங்களில் இருக்க வேண்டும்.” ஆனால், இங்கு எவருக்கும் உண்மையான, சமச்சீரான கல்வி தரப்படுவதில்லை. இராமேஸ்வரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து சாதித்த அப்துல் கலாம் போல அனைவருக்கும் ஏற்ற சமமான வாய்ப்புகள் எளிதாகக் கனிவதில்லை.
வேலைவாய்ப்பிற்குப்
பின், நுகர்வுக் கலாச்சாரத்திற்கு அடிமையாகி, இ.எம்.ஐ.
போதையில் விழுகின்றனர். ‘கையிலே வாங்கினேன், பையிலே போட்டேன், காசுபோன இடம் தெரியலை’ என்ற பாடலே இன்றைய இளைய சமுதாயத்திற்குப் பொருந்திப் போகிறது. டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் என்ற கடந்த தலைமுறையின் நுகர்வுக் கலாச்சாரக் கொண்டாட்டங்கள் மாறிவிட்டன. புது நாகரிகத்தைப் பிரதிபலிக்கிற ஷாப்பிங் மால் கலாச்சாரம் தறிக்கெட்டுக் கிடக்கிறது. புதிய ‘வீக் எண்ட்’ திருவிழாக்கள், போதையின் பாதையில் வசந்தத் தென்றலாய் வீசுகிறது.
வாழ்வாதாரப்
பணி தவிர, இன்றைய இளைஞர்கள் இரசிகர் மன்றங்களிலும், கிரிக்கெட் பந்தயங்களிலும் தொலைந்து கிடக்கின்றார்கள். சிறு கிராமங்களில் கூட தனக்குப் பிடித்த நடிகனுக்குக் கட்-அவுட் வைப்பதைப் பெருமையாக நினைக்கிறார்கள். அதில் அளவு ரீதியாக ‘என் தலைவனுக்குதான் பெரிது’ எனக் கட்-அவுட், பிளக்ஸ் என்ற போட்டிகள் தனி இரகம். என் நண்பர் கூறுகிறார்... ‘எத்தனை அம்மாக்களின் சிறுவாட்டுச் சில்லறைச் சேமிப்புக்கு, இந்த இரசிகர்கள் கட்-அவுட் வைத்து, வேட்டு வைத்தனரோ?’
தலைமுறைகள்
மாற மாற சமூக-அரசியல் விழிப்புணர்வுகள் குறைந்துகொண்டே வருகின்றன. வாட்ஸ்-ஆப்பில், யூடியூப்பில் வரும் வதந்திகளை உண்மை என நம்புகிறார்கள். போதிய சமூக,
அரசியல் வரலாறு தெரிந்திருப்பதில்லை. சம கால அரசியல்
குறித்த விழிப்புணர்வு இல்லை. தனி மனித ஆராதனை அதிகமாகி விட்டது. ஓர் அரசியல் கட்சியின் பயிற்சிப் பாசறைக் கூட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்களின் கேள்விகள், வாட்ஸ்-ஆப் குறித்தே அதிகமாக இருந்தன.
கீழ்மட்டத்
தொண்டர்கள் கொள்கை, சமூகப் பார்வை கொண்டவர்களாக, பொதுநலன் சார்ந்த, சுயநலமற்ற மனிதர்களாக வாழ்கிறார்கள். வளர்ந்து வரும் இரண்டாம் கட்டத் தலைவர்கள் சுயநலத்தோடு, அரசியலைப் பணமாக்கும் தொழிலாகப் பார்க்கிறார்கள். இது நாளைய நாள்களில் தேசம் சந்திக்கிற பெரும் சவாலாகும்.
இன்றைய
இளைஞர்களைச் சமூக-அரசியல் விழிப்புணர்வு பெற்றவர்களாக மாற்ற கல்வி முறையில் மாற்றம் வேண்டும். தேசம் காக்கிற அர்ப்பணிப்புக் கல்வியைப் பிள்ளைப் பருவத்திலேயே புகட்டுதல் காலத்தின் கட்டாயமாகும்.
இயற்கை
வளங்களோ, மனித வளங்களோ இல்லாத ஐரோப்பிய நாடுகள், நவீனமய தொழில்நுட்ப அறிவால் ஆற்றல் பெறுகின்றன. நமது கல்வி முறை, புதிய கண்டுபிடிப்புகளுக்குப் புதிய கருத்தாக்கங்களுக்கு உட்பட்டதாக இல்லை. உலகளாவியச் சவால்களைத் தாக்குப் பிடிப்பதில்லை. நமது பாடத்திட்டங்கள் ஒன்றிய பா.ச.க. அரசால்
பழைய பஞ்சாங்கமாக மாற்றப்படுவது கவலை தருவதாகும்.
தேசத்தின்
கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் கொண்டு வரப்படுகிற காலத்திற்கேற்ற நவீன மாற்றங்களே தேசமெனும் தோட்டத்தில் இளமையெனும் பூங்காற்று வீச அடிப்படை வீச்சாக அமையும்.
மே மாதம் பிறந்துவிட்டால் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு ஒரே கொண்டாட்டம்தான். ஒரு மாதம் பள்ளிகளில் கோடை விடுமுறை விடப்பட்டவுடன் அவர்கள் மனத்தில் குதூகலம் கொண்டாடும். அவர்களது உள்ளம் வண்ணத்துப் பூச்சிகள்போல வட்டமிட்டுப் பறந்து விளையாடும். ‘எங்கே உல்லாசப் பயணம் போகலாம்?’ என அம்மா- அப்பாவிடம் கேட்டு நச்சரிப்பார்கள். வேலைக்குப் போகிற பெற்றோர்கள் என்றால், ‘இவர்களை எப்படிக் கோடை விடுமுறையில் சமாளிப்பது?’ எனத் திட்டம் போடுவதில் மும்முரமாக இருப்பார்கள். ஆனால், அந்தக் காலத்தில் ஒரே வழிதான். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைக் கோடை விடுமுறையில் தம் சொந்த ஊருக்கு அனுப்பி விடுவார்கள். தாத்தா-பாட்டி அரவணைப்பில் சிறிது நாள்கள் வாழ அங்கே அனுப்பிவிடுவார்கள். வீட்டைப் பராமரிக்கும் தாயாக இருந்தால், குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு சொந்த ஊருக்குச் சென்று விடுவதுண்டு.
பிள்ளைகளுக்கு
அந்தச் சொந்த ஊர் பயணம் ஒரு சொர்க்கமான பயணமாக இருந்தது. பல மதிப்பீடுகளையும் வாழ்க்கை எதார்த்தங்களையும்
கற்றுக் கொடுக்கும் பாசறையாக இருந்தது. பொதுவாகச் சொந்த ஊர் என்பது ஒரு கிராமமாக இருக்கும். தாத்தா-பாட்டி மற்றும் சொந்தங்கள் கூடி வாழும் ஒரு கூட்டுக் குடும்ப வாழ்க்கையாக இருக்கும்.
சுதந்திரமாக
ஓடி விளையாடுவதற்குப் பரந்த நிலப்பரப்பு கொண்டது கிராமம். கிராமங்களின் பசுமை கண்களில் ஒட்டிக்கொள்ளும். அந்தச் சிலிர்ப்பு அழகிய அனுபவமாக இருக்கும். அது அவர்களுக்கு இயற்கை அழகை இரசிக்கக் கற்றுக் கொடுத்தது. ஒலிக்கும் குயில்களின் சத்தம் இசையை நேசிக்கச் சொல்லிக் கொடுத்தது. குளத்தில் குளியலாடி, நீச்சல் கற்றுக்கொள்ள ஒரு நல்ல களமாக இருந்தது. தானாக எதையும் கற்றுக்கொள்ள முடியும் என்ற தன்னம்பிக்கையை வளர்த்தது. ஆற்றின் கரை தொட்டு பயமின்றி நீரில் கால் நனைத்து, பயத்தை வெற்றிக்கொள்ளச் சொல்லிக் கொடுத்தது. மரத்தின் அடியில் பல்லாங்குழி ஆட்டம் ஆடி, நம் கலாச்சாரப் பொழுதுபோக்கை அப்பருவத்தில் அறிமுகம் செய்தது.
வண்ணத்துப்
பூச்சி பிடித்து, வரப்புகளில் நடந்து, விழுந்து, எழுந்து, தோல்வியில் எப்படி மீண்டு எழுவது எனப் பயிற்சி கொடுத்தது. கேழ்வரகு, நெற்கதிர் கசக்கி உண்டு, கரும்புச் சாறு பிழிந்து குடித்து, தென்னை மரத்தின் அடியில் இளநீர் குடித்து, நொங்கு தின்றது... இவை இயற்கை உணவின் ருசியை இரசிக்கச் செய்த அனுபவங்கள். நிலாச்சோறு உண்டு, மலர் பறித்துத் தேன் உறிஞ்சி, மழையில் நனைந்து உடல் சிலிர்த்து, இரவில் குளத்தில் நிலா பிம்பம் கண்டு, நிலவைக் கையில் பிடித்த அனுபவம் மனதிற்குள் இருந்த கலை உணர்வைத் தூண்டியது. பட்டம் விட்டு வான்தொட்ட பெருமிதம் குழந்தைகளின்
மனங்களில் ‘வானமே எல்லை’ என்ற நம்பிக்கை விதையை விதைத்தது. கிராமங்களில் புதிய உறவுகள், புதிய நட்புகள் அறிமுகம், குழந்தைகள் மத்தியில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’,
‘எல்லாரும் நம் சொந்தம்’ என்ற மனப்பான்மையில் எல்லாரையும் உள்வாங்கிக்கொள்ளும் மனத்தை உருவாக்கும்.
தாத்தா-பாட்டிகளின் அரவணைப்பு, கிராம மண்வாசனை, எதார்த்தமான எளிய மக்களின் வாழ்க்கை, இயற்கையோடு பின்னிப்பிணைந்த ஓர் அழகிய அனுபவம். நம் கலாச்சாரத்தின் வேர்களின் மணங்களை நுகர்ந்த அனுபவம். இப்படியாக ஒரு முழுமையான சிறப்புமிக்க அனுபவம் குழந்தைகளின் வலுவான மதிப்பீடுகளுக்கு அடித்தளமாக இருந்தது. இந்த அனுபவங்களுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. பல ஆயிரங்கள் செலவழித்தாலும்
இந்த அனுபவத்தை விலை கொடுத்து வாங்க முடியாது. ஆனால், இன்றைய சூழலில் பள்ளிக் குழந்தைகளுக்கு இந்த அனுபவங்கள் சாத்தியமா? என்றால் சந்தேகமே.
இன்றைய சூழலில் குடும்பத்தில் அப்பா, அம்மா இருவரும் வேலைக்குச் செல்லும் பட்சத்தில், இந்தக் கோடை விடுமுறை, சொந்த ஊர் பயணம் கடினமே. படிக்கின்ற இடத்திலேயே பலவிதமான கோர்ஸ், ட்ரைனிங் எனக் கோடை விடுமுறைகள் குழந்தைகளுக்கு மன அழுத்தம் கொடுக்கும்
கோடை விடுமுறையாக மாறிபோனது வருத்தம் அளிக்கிறது.
அந்தக்
காலக் கிராமச் சூழல் கொடுத்த அனுபவம் மீண்டும் குழந்தைகளுக்குக் கிடைக்க
வேண்டும். சுதந்திரமாய் ஆடி, ஓடி, மகிழ்ந்து பல ஆளுமைகளைக் குழந்தைகளுக்கு
அறிமுகம் செய்து வைத்த களமாய் அமைந்தது அந்தக் கிராமியக் கோடை விடுமுறை என்றால் மிகையாகாது.
நம்
வாழ்க்கை வேர்களின் பிரதேசங்களை நம் குழந்தைகளுக்கு அவ்வப்போது காட்டுவது, பழமையில் புதுமையைக் காணும் ஓர் உன்னதமான திசையைக் காட்டும்.
இன்று நம் சமூகம் எதிர்கொள்ளக் கூடிய உடனடிப் பிரச்சினைகளுள் மிகவும் முக்கியமான ஒன்று பணவீக்கம். இப்பணவீக்கம் நாட்டின் பொருளாதாரத்தையும் தாண்டி, நம்முடைய தனிப்பட்ட வாழ்வையும் பாதிக்கின்றது. ஏனெனில், நம்முடைய வருமானமே நம்முடைய வாழ்வின் போக்கைத் தீர்மானிக்கின்றது. பணவீக்கத்தால் விலைவாசி அதிகரிக்கின்றது. இதனால், நம்முடைய அன்றாடத் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் மனக் கலக்கம் அடைகின்றோம். ஆனால், நம்முடைய இம் மனக்கலக்கத்திற்குப் பின்பு மிகப்பெரிய பொருளாதாரச் சிக்கல்களும் வரலாறும் உள்ளன என்றால் அது மிகையாகாது.
ஆதி
மனிதன் காட்டு விலங்குகளை வேட்டையாடித் தன்னுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொண்டான். நாகரிக மலர்ச்சியில், இன்று நாம் பணத்தை வேட்டையாடி நம்முடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றோம். ஆனால், உண்மையில், இப்பணத்தை அதிகளவு குவித்து வைத்திருக்கும் பெரும் முதலாளிகள் ஏழை, எளியோரின் உழைப்பை வேட்டையாடுகின்றனர்; சந்தையை முன்னிலைப்படுத்துகின்றனர்.
இதனால் மனித மனங்களுக்கான மாண்பு சிதைக்கப்படுகின்றது.
பெரு
முதலாளிகளால் ஆட்டிப்படைக்கப்படும் சந்தையைப் பொருத்தே இவ்வுலகமும், அதனுடைய பொருளாதாரமும் கட்டமைக்கப்பட்டுள்ளது. நமக்குத் தேவையா? இல்லையா? என்று யோசிக்காமல், யாரோ ஒருவர் உற்பத்தி செய்யும் பொருளை வாங்கிக் குவிப்பதற்காக நம்முடைய சுயத்தை இழந்து மாய உலகில் வாழ்கின்றோம். நாம் விரும்பும் ஒரு பொருளை வாங்க முடியவில்லை என்றால், அதை நம்முடைய பெரும் இழப்பாகக் கருதவைக்கும் அளவிற்குப் பொருளாதார உலகம், நம்முடைய தனிமனித வாழ்வின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றது.
தனிப்பட்ட
ஒரு மனிதனின் வாழ்க்கை முறையானது அம்மனிதனின் இனம், மதம், மொழி மற்றும் வாழும் சூழல் போன்ற பல்வேறு காரணிகளால் நிர்ணயிக்கப்படுகின்றது. இருப்பினும், இக்காரணிகள் அனைத்திற்கும் தொடக்கமாக நம்முடைய பொருளாதாரம் அமைகின்றது என்று புரட்சியின் புதல்வன் காரல் மார்க்ஸ் குறிப்பிடுகின்றார். பொருளாதார அடிக்கல்லின் மீதே சமூகத்தின் பிற தூண்கள் ஊன்றப்பட்டுள்ளன என்கிறார். எனவே, ஒரு சமூகத்தின் நடைமுறைகள், கலாச்சார மாற்றங்கள், தேவைகள் என அனைத்தும் அச்சமூகத்தின்
பொருளாதார நிலையை மையமாக வைத்துதான் நகர்கின்றது. சுருக்கமாகக் கூறின், இச்சமூகத்தில் பணம்தான் அனைத்தையும் முடிவு செய்கின்றது. இக் கூற்றை ஏற்றுக்கொள்வதற்குச் சற்று கடினமாக இருந்தாலும், இக்காலச் சூழலில் இதுதான் உண்மை.
தொடக்கத்தில்
அன்றாடத் தேவைகளை நிறைவேற்ற மனிதன் வாணிபம் புரிந்தான்; இன்று பொருள்களை
வாங்கிக் குவிப்பதற்காகவே வாழும் நிலைக்கு மனிதன் தள்ளப்பட்டுள்ளான். நம்முடைய ஆசைகளை வரிசையாகப் பட்டியலிட்டால், அவற்றில் ‘வாங்க வேண்டிய பொருள்களின்’ பட்டியலே
மிகுந்திருக்கும். ‘வாங்க வேண்டும்’
என்ற ஆவலில் வாழ்வை இழந்து, வாழ்வின் சாரம் புரியாமல் ‘எதற்காக உழைக்கின்றோம்? யாருக்காக உழைக்கின்றோம்?’ என்று தெரியாமல் நம் வாழ்வை நாமே கடினப்படுத்திக் கொள்கின்றோம். எனவே, பொருளாதார உலகுக்கும், நம்முடைய வாழ்வுக்கும் உள்ள பிணைப்பை முதலில் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
பொருள்கள்
மற்றும் சேவைகளின் தேவையும், அதற்கான விலையும் அதிகரிக்கும்பொழுது பணவீக்கம் ஏற்படுகின்றது. 2024-ஆம் ஆண்டின் கணக்கின்படி உலகளவில் 5.8% பணவீக்கமும்,
இந்தியாவில் 5.22% பணவீக்கமும்
உள்ளது. இப் பணவீக்கமானது, பெரும் முதலாளிகளின் தந்திரத்தாலும், அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளாலும் உருவாக்கப்படுகின்றது. இவர்களால் உருவாக்கப்பட்ட பணவீக்கத்தின் சுமையை நடுத்தர மற்றும் ஏழை மக்கள் தங்கள் தோள்களில் சுமக்கிறார்கள்.
முதலாளிகள்
தங்கள் பணத்தைப் பெருமளவு பெருக்க நினைப்பதாலும், அரசாங்கம் பொருளாதாரம் சார்ந்த தன்னுடைய தவறுகளை மறைக்கப் பணத்தை அதிகமாக அச்சிடுவதாலும் பணவீக்கம் ஏற்படுகின்றது. ஏதேனும் ஒரு பொருளின் தேவை அதிகரிக்கும்பொழுது, அப்பொருளின் விலை அதிகரிக்கின்றது. இதனால் அப்பொருளினை வாங்கும் திறன் மக்களிடத்தில் குறைகின்றது. இந்த மாற்றம் இயற்கையாக நடைபெறுவதில்லை; செயற்கையாக
ஏற்படுத்தப்படுகின்றது.
மக்களின்
தேவைகளை விளம்பரங்கள் மூலம் அதிகரிக்கின்றனர். மக்கள் அந்தப் பொருளை வாங்கும்பொழுது, அப்பொருளைச் சந்தைப்படுத்தாமல் மறைத்து வைத்து, அதனுடைய விலையை அதிகரிக்கச் செய்கின்றனர். இதனால் மக்கள் அப்பொருளை அத்தியாவசியப் பொருளாகக் கருதி, அதிக விலை கொடுத்து வாங்குகின்றனர். இவ்வாறு பணவீக்கமானது பெரும் முதலாளிகளால் செயற்கையாக ஏற்படுத்தப்படுகின்றது. இந்தச் செயற்கையான பணவீக்கத்திற்குச் சில நேரங்களில் அரசும் துணை நிற்கின்றது. அரசு மக்களின் நலனில் அக்கறை கொள்ளாமல், பெரும் முதலாளிகளை மகிழ்விப்பதற்காகப் பொருளாதாரத் திட்டங்களை வகுக்கும்பொழுதும் அரசு இழப்பைச் சந்திக்கின்றது. இந்த இழப்பின் பாரத்தையும் வரி என்ற பெயரில் மக்கள்தான் சுமக்கின்றார்கள்.
இப்படிப்
பணவீக்கம் அதிகரிப்பதற்குப் பொருளாதார மற்றும் அரசியல் காரணிகளைத் தாண்டி நம்முடைய சமூக நடைமுறைகளும் ஒரு காரணமாக அமைகின்றது. இதன் மூலமாகவே இந்தப் பணவீக்கம் நமக்கு மன ஏக்கத்தைத் தருகின்றது.
மனிதன் சமூகமாக வாழத் தொடங்கிய காலம் முதல் ஏற்றத்தாழ்வுகள் என்பது அவனை ஆட்டிவைக்க ஆரம்பித்துவிட்டது. மனிதன் தன்னுடைய பிறப்பின் அடையாளத்தை மாற்ற முடியாது. எனவே, தன்னுடைய பொருளாதார உயர்வின் மூலம் சமூக மதிப்பைப் பெறுகின்றான். இதைச் சமூகத்தின் உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் விரும்புவதில்லை. இதன் காரணமாகப் பாமரனுக்கும்-பணக்காரனுக்கும் இடையே உள்ள இடைவெளியை அதிகப்படுத்துகின்றனர்; பொருளாதாரச் சமத்துவமின்மையை உருவாக்குகின்றனர்.
இவ்வுலகின்
10% மக்கள்,
76% வளங்களைத்
தங்கள் வசம் வைத்துள்ளனர். அதே வேளையில், இவ்வுலகின் 50% ஏழைகள்,
மொத்தமாக வெறும் 2% வளங்களைத்
தங்கள் உடைமையாகக் கொண்டுள்ளனர். இந்த ஏற்றத்தாழ்வானது பணத்துடனும் பகட்டுடனும் வாழும் வாழ்வைச் சிறந்த வாழ்வாகவும், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையை இழிநிலையாகவும் உருவகப்படுத்துகின்றது. இதை அடிப்படையாகக் கொண்டுதான் நம் நாட்டில் சாதியமும் பொருளாதாரமும் ஒன்றோடொன்று கலந்து நிற்கின்றது. இது ‘உயர்ந்தோர்-தாழ்ந்தோர்’ என்ற
மனநிலையை உருவாக்குகிறது! இது முற்றிலும் தவறானது. இதுபோன்று சமூகத்தில் ஏற்றப்பட்டுள்ள மாயவலைப் பின்னல்களை மக்களை நசுக்க முதலாளிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
பணம்
படைத்தவருக்கு ஒரு கல்வி, அற்றவருக்கு ஒரு கல்வி. இதுபோன்று மருத்துவம், பொழுதுபோக்கு என்ற அனைத்துத் துறைகளிலும் பணமற்றவருக்கு இரண்டாந்தரப் பொருள்களும் சேவைகளுமே கிடைக்கின்றது. இந்த மாயவலையில் சிக்கிக்கொண்டு, பணவீக்கத்தால் வதைப்படும் மனிதர்கள், தங்கள் வாழ்வின் நிலையை எண்ணி ஏக்கம் அடைகின்றனர். இதற்கும் மேலாக, ‘Elite and Premium’ போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி, பொய்யான ஒரு சமூக உயர்வு நிலையை அடைந்து விட்டதாக இன்று சில சிறு பணக்காரர்களும், நடுத்தர வகுப்பினரும் பெருமிதம் அடைகின்றனர். இவையெல்லாம், மதிப்பற்ற ஒரு பொருளை, ‘branded’ என்ற
பெயரில் அதிக விலைக்கு விற்பதற்கான வியாபார யுக்தி என்று அறிந்தும் நாம் அவற்றிற்குப் பலியாகின்றோம்.
இப்பணவீக்கத்திலிருந்து மனஏக்கத்தைக்
களைவதற்கான நடவடிக்கைகளை நாம் ஒரு சமூகப் புரட்சியாக மேற்கொள்ள வேண்டும். இவற்றிற்குப் பொருளாதார, அரசியல், சமூக மற்றும் தனிமனித மாற்றத்தின் மூலமாகவே தீர்வு காணமுடியும். பொருளாதார அளவில் சுய தொழில்களை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இதனால்
வேலைவாய்ப்பின்மை குறைந்து, மக்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும்.
அரசியல்
அளவில் அனைத்துச் சாராருக்குமான சரியான பொருளாதாரக் கொள்கைகளைத் தீட்ட வேண்டும். ஜிம்பாவே, வெனிசுலா போன்ற நாடுகளைப்போல பணத்தை மேலும் அச்சிட்டுப் பணவீக்கத்தை அதிகரிக்கச் செய்யாமல், ஏற்றுமதியை அதிகரித்து, இறக்குமதியைக் குறைக்க வேண்டும். நாட்டைத் தன்னிறைவு கொண்ட நாடாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சமூக அளவில் நம்மிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகள் போலியானவை என்று உணர்ந்து, அனைவரும் சமமாகக் கருத வேண்டும். ‘எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்’
என்ற சமதர்ம சமுதாயத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். கல்வி, மருத்துவம் போன்ற அத்தியாவசியத் தேவைகள் பொதுத்துறை நிறுவனங்களால் அதிகக் கட்டுப்பாட்டுடன் இயங்க வேண்டும். அனைத்திற்கும் மேலாக, ‘போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்பதை உணர்ந்து, நம்முடைய தேவைகளைக் குறைத்துக் கொண்டு, எளிய வாழ்வு வாழ்வதன் மூலம் பணவீக்கத்தையும், நம்முடைய மனஏக்கத்தையும் தவிர்க்கலாம்.
சித்ராவின் சக்கர நாற்காலி சத்தம் கேட்டவுடன் எழுந்து இடம் கொடுத்து விட்டு நகர்ந்து சென்று படுத்துக்கொண்டது ஜிம்மி. இருபத்தைந்து வயதிலிருந்தே இருசக்கர நாற்காலிக்குள் அடங்கிப்போயிருந்தது சித்ராவின் வாழ்க்கை. அருகாமையில் உள்ள பள்ளியில் மாலை 4 மணிக்கு அலறும் மணியின் சத்தம் சித்ராவிற்கான சிக்னல். அவள் எங்கு இருந்தாலும் பள்ளி மணி அடித்ததும் அந்தச் சக்கர நாற்காலி நகர்ந்து சன்னலோரம் வந்து நிற்கும். வீடு திரும்பும் பள்ளி மாணவர்களின் உற்சாகத் துள்ளல், வரிசை மீறும் ஆட்டோக்கள், ஓடிவரும் மழலையரை அணைத்துக்கொள்ளும் அம்மாக்கள், சாலையோரப் பாட்டிக் கடையில் தேனீக்களுக்குப் போட்டியாய் மொய்த்துக் கிடக்கும் மாணவர்கள், மாணவர்கள் வீடு திரும்பும் முன்பே முண்டியடித்துக் கொண்டு வீடு பறக்கும் ஆசிரியர்கள் என்று சன்னலோரக் கம்பிகளின் வழியாக நிகழும் காட்சிக் குவியலுக்குள் சித்ராவின் கண்கள் யாரையோ எதையோ தேடும்!
“அப்படி
என்னதான் பாப்பியோ? யாரைத்தான் தேடுறியோ? கேட்டா சொல்லவும் மாட்டேங்குற. பார்த்தது
போதும். காப்பி போட்டு வச்சிருக்கேன், எடுத்துக் குடி. ஆறிடப் போகுது.”
கண்டிப்புக்
கலந்த கரிசனையில் சொன்னாள் சித்ராவின் தாய். சித்ரா நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவள்தான்.
தந்தை மஸ்கட்டில் 15 ஆண்டுகள் டிரைவர் வேலை பார்த்து விட்டு இப்போது சென்னைப் புறநகர்
புதிய பேருந்து நிலையம் அருகில் வாடகைக் கார் ஓட்டுகிறார். ஊபர், ஓலா, ராபிடோ ஓட்டங்கள்தான்.
இரவு-பகல் பாக்காம ஓட்டுனா கையில கொஞ்சம் பணம் மிஞ்சும். சித்ராவிற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கால் செயலிழக்கத்
தொடங்கியது. எத்தனையோ மருத்துவமனைகளுக்கு அலைந்து பார்த்தபின்பும் நோய்க்கான காரணம்
தெரியவில்லை. இக்கொடிய நோயினுடைய வீச்சு அவளைக் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கிக் கொண்டிருக்கின்றது
என்பதை எல்லாரும் அறிந்திருந்தனர்.
‘பட்டாம்பூச்சி
பறக்கத் துடிக்கும்போது வாலில் சிறு கல் கட்டி விளையாடும் சிறு பிள்ளைகள்போல கடவுள்
தன்னை விளையாட்டுப் பொருளாக்கி விட்டாரே’ என்று சித்ராவிற்குக் கடவுளின் மேல்
ஒரு கோபம் உண்டு. சன்னல் அருகில்தான் சித்ராவின் பெரும்பான்மையான காலம் சக்கர நாற்காலியில்
கடந்து போனது.
சித்ரா
சிலகாலம் வாழ்ந்து, இறந்தும் போனாள். ஆனால், கடைசிவரை அவளைத் தாக்கிய கொடிய நோய் என்னவென்று
தெரியவில்லை; அவள் சன்னல் கம்பிகளுக்கு வெளியே யாரை அல்லது எதைத் தேடினாள் என்பதும்
தெரியவில்லை. எல்லாம் தனக்குத் தெரிந்தும் வெளியில் சொல்ல முடியவில்லையே என்ற விரக்தியில்
சன்னலோர வெளிச்சக் கீற்றுகளுக்கிடையில் சிறைப்பட்டுக் கிடந்தது சித்ரா வளர்த்த ஜிம்மி.
சித்ராவின்
தேடல் விவரங்களும் அவள் நோய் விவரங்களும் யாருக்கும் தெரியாமல் போனதுபோல, செயற்கை நுண்ணறிவு
செயற்பாட்டு முறைமைகளில் யாருக்கும் தெரியாத அல்லது புரியாத பகுதி என்று ஒன்று உள்ளது.
இதனை ‘பிளாக் பாக்ஸ்’ (Black
box) என்கின்றனர்.
இன்று
செயற்கை நுண்ணறிவு மனித நுண்ணறிவிற்கு இணையாகப் பேசப்படுகின்றது. மருத்துவம், கல்வி,
ஊடகம், தொழில்நுட்பம் என்று இன்று செயற்கை நுண்ணறிவு இல்லாத தளங்களே இல்லை எனலாம்.
எனினும், செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்துகின்ற ‘பிளாக் பாக்ஸ்’ பிரச்சினையினைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமெனில், அது
எப்படி இயங்குகிறது? என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு
செயற்கை நுண்ணறிவு எவ்வாறு இயங்குகின்றது? எங்கிருந்து தரவுகள் பெறப்படுகின்றன? இதனுடைய
தரவுகளின் அளவு என்ன? எந்த நாட்டின் தரவுகள் அதிகமாக உள்ளது? எந்தெந்த மொழிகள் இந்தத்
தரவுத்தளங்களில் உள்ளன? எந்தக் குறிப்பிட்ட கருத்தியல் அதிகமாகச் சேர்க்கப்பட்டுள்ளது?
எந்த ‘அல்காரித’ கோட்பாட்டின் அடிப்படையில் தரவுகளைத்
தேடிக் கண்டறிகிறது? எந்த ‘அல்காரித’ அடிப்படையில் முடிவுகளை எடுக்கிறது?
என்பது போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்காதபோது அதனைச் செயற்கை நுண்ணறிவு உலகில் ‘பிளாக்
பாக்ஸ்’ (Black
Box) என்கின்றனர்.
செயற்கை
நுண்ணறிவின் அடிப்படையே இயந்திரக் கற்றல் (Machine
Learning (LM) எனலாம்.
இம்முறையின்படி ஓர் இயந்திரம் தனக்குக் கொடுக்கப்பட்ட தரவுகளை முழுமையாகக் கற்றறிந்து
கொண்டு, அத்தரவுகளுக்குள் கேட்கப்படும் கேள்விகளுக்குப் புகைப்பட வடிவிலோ, காணொளி வடிவிலோ
அல்லது எழுத்து வடிவிலோ பதில் தருகின்றது. கொடுக்கப்படும் தரவுகள் பெரிதாக இருந்தால்
(Big Data)
பதில்களின் நம்பகத்தன்மையும் அதிகமாக இருக்கும். கொடுக்கப்படும் தரவுகள் அமெரிக்காவைச்
சார்ந்தது எனில், அது தரும் பதில் தரவுகளும் அமெரிக்க வாசம் கொண்டதாகவே இருக்கும்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளின் தொழில்நுட்பக்
கூடங்களில் உருவாக்கப்படுவதால், இயல்பாகவே இத்தாலியிலுள்ள பைசாவின் சாய்ந்த கோபுரம்போல
மேற்கு நாடுகள் பக்கமாக அதனுடைய சார்புத்தன்மையும் (Bias) சாய்ந்தே
நிற்கின்றது. இதனாலேயே செயற்கை நுண்ணறிவு வழியாகப் பெறப்படும் தரவுகளின் உண்மைத்தன்மை
கேள்விக்குள்ளாக்கப்படுகின்றது. இத்தகைய அடிப்படையும் அணுகுமுறையும் இந்தியா போன்ற
வளரும் நாடுகளுக்குப் பெரும் சவாலாக இருக்கிறது. கச்சா எண்ணெயை மையமாகக் கொண்டு உலகப்
போர்கள் உருவானதுபோல பெரும் தரவுகளை (Big Data) மையப்படுத்தி நாடுகளுக்கிடையே சண்டைகள்
உருவாகும் அபாயம் இருப்பதாக அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
பெரும்
தரவுத்தொகுப்பின் (Big Data) முக்கியத்துவம் அறிந்து இந்தியாவின்
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Ministry
of Electronics and Information technology
(Meit) மேற்கொண்டுள்ள முயற்சியின் அடிப்படையில்
இந்தியாவிற்கான தரவுத் தொகுப்பு (National
Data Set) ஒன்று உருவாக்கப்படுவதற்கான
முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ‘ஏ.ஐ. கோஷா’
(A.I. Kosha)
என்னும் இந்தியாவிற்கான இத்தரவுத் தொகுப்பு பல்வேறு இந்தியத் துறைகளின் தரவுகளை அடிப்படையாகக்
கொண்டு அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசோ
அல்லது தனியார் நிறுவனங்களோ... யாராக இருந்தாலும் பெரும் தொகுப்பைக் கொண்டு செயற்கை
நுண்ணறிவு மென்பொருளை வடிவமைத்திருந்தாலும், அதன் செயல்பாட்டு முறைமையை அதனைப் பயன்படுத்தும்
பயனர்களுக்கு விரிவாக விளக்கிக்கூறும் தன்மை என்பதே (Explainable AI)
அறநெறியாகும்.
கடைக்குச்
சென்று ஓர் உணவுப்பொருள் வாங்குகிறோமெனில், அந்த உணவுப்பொருள் எங்குத் தயாரிக்கப்படுகிறது?
என்னென்ன பொருள்கள் அதில் சேர்க்கப்பட்டிருக்கின்றன? என்பன போன்ற தெளிவுகளை அப்பொருளை
உருவாக்கும் நிறுவனம் விளக்கிக்கூறுவதும் அதனை அறிந்து கொள்வதும் அதனைப் பயன்படுத்துபவரின்
உரிமையென நான் நினைக்கிறேன். செயற்கை நுண்ணறிவு காலத்தின் கட்டாயம் என்றாலும், அதன்
நெறிப்பாட்டு முறையின் செயல்பாடு அதன் பெரும் தரவுகளின் விவரம் அதனைப் பயன்படுத்தும்
சாமானிய மனிதனுக்கும் விளக்கிக் கூறப்பட வேண்டும் என்ற குரல் மட்டும் தொடர்ந்து உலகின்
ஏதோ ஓர் ஓரத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது.
சன்னல்
திரைகளைத் திறந்தே வைப்போம்; சன்னலோர வெளிச்சம் இருண்டு கிடக்கும் வீட்டை நிரப்பட்டும்.