ஊனாகி உயிராகி ஒளியானவர், வானாகி வளியாகி வழியுமானவர்! ‘நானே உலகின் ஒளி’ என்றவர், கோனாகி தாவீதின் குடிப்பிறந்தார். விண்ணுக்கு ஒளியாகி வழிகாட்டிட, வாக்கு மனு உருவாக மாபரன் இயேசு மண்ணுக்கு வந்தார். மனிதன் தெய்வமாக, தெய்வமே மனிதனாகப் பிறந்த நாள். மரியன்னை பெற்றெடுத்த மனிதநேயம் இப்பூமியில் பிறந்த நாள்தான் கிறிஸ்துமஸ் பெருவிழா!
இயேசுவின்
பிறப்பு நேரத்தில் அவர் சம்பந்தப்பட்ட ஆள்கள், பொருள்கள், உரையாடல்களில் பொதிந்திருக்கும் சில உண்மைகளைப் பற்றி காண்போம்.
இயேசு பிறந்த
இடம்
“விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை” (லூக்
2:7). வேறு யாருக்கு விடுதியில் இடம் இருந்தது? சீசரின் ஆள்களுக்கும் அதிகாரிகளுக்கும் படைவீரர்களுக்கும் பணக்காரர்களுக்கு மட்டும்தான். ஆனால், இந்த சூசை, மரியா ஏழைக் குடும்பத்திற்கு இடமில்லை. இடமில்லை என்று சொல்லிவிட்டால், இறைவாக்கினர்கள் இயேசு பிறப்புப் பற்றி முன்னறிவித்த செய்திகள் வரலாற்றில் இடம் பெறாமல் போய்விடுமா என்ன?
அங்கு
மாடடையும் தொழுவத்தில் இடம் கிடைக்க, வந்து விடுகிறார் இயேசு. ஒரு தொழுவம் தொழுகை பெற்ற வரலாறு இங்குதான் நடந்தேறியது. பாருங்கள், நாம் அவருக்கு இடம் இல்லை என்று சொன்னாலும், இயேசு தாம் மிகவும் நேசித்த தம் அன்புச் சீடர்களிடம், “நான் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப் போகிறேன்”
(யோவா 14:2-3) என்கிறார். மேலும், “நான் போய் இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பி வந்து உங்களை என்னிடம் அழைத்துக்கொள்வேன்” என்றும்
கூறுகிறார். என்னே இறைப்பேரன்பு!
குழந்தை இயேசுவைச்
சுற்றிய
துணி
“குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்” (லூக்
2:12) என்று வானதூதர்கள் இடையர்களுக்கு அறிவித்தார்கள். இந்தத் துணி கிறிஸ்து இயேசுவின் வாழ்வில் வெளிப்பட்ட மீட்பையும், வல்லமையையும் குறிக்கிறது. 1. பிறந்தபோது வல்லமையின் துணியாகவும், 2. இயேசு வளர்ந்தபின் வல்லமையின் துணியாகவும், 3. சிலுவைப் பாடுகளின்போது உரிந்துகொள்ளப்பட்டு பகிர்ந்துகொள்ளப்படும் துணியாகவும் இருந்தது.
குழந்தையின்
மீது சுற்றப்பட்ட சாதாரண துணி, இரட்சிப்பும் வல்லமையும் நிறைந்த குழந்தையின் மீது சுற்றப்பட்டதால் அதுவும் வல்லமை மிக்கதாக மாறுகிறது. அதனால்தான் 12 ஆண்டுகளாக இரத்தப்போக்குடன் போராடிய பெண் (லூக் 8:44-46) இயேசு அணிந்திருந்த ஆடையின் ஓரத்தைத் தொட்டவுடன் குணமடைகிறாள். இங்கு வல்லமையின் துணியாகக் காட்டப்படுகிறது. மேலும், சிலுவையடியில் மீட்பின் ஆடையை நாம் அணிந்துகொள்ள, தம் ஆடை அகற்றப்பட்டு ஆடையில்லாத கோலத்தில் நிற்கிறார். போர்வீரர்கள் இயேசுவின் ஆடையின் மேல் சீட்டுப் போட்டு பகிர்ந்துகொள்ள பகிர்வின் ஆடையாகவும் மாறுகிறது.
தீவனத் தொட்டி
தீவனத்
தொட்டி என்பது கால்நடைகள் (மிருகங்கள்) தீனி பெற இருக்கும் தொட்டி. மனிதன் தன் பாவத்தால் தரம் தாழ்ந்து, மிருகக்குணம் பெற்றதால், மனுகுலம் சீரடைய, மனிதனின் உணவாக (நற்கருணையாக) வந்ததன் அடையாளத்தையே தீவனத் தொட்டி உணர்த்துகிறது. “வாழ்வு தரும் உணவு நானே”
(யோவா 6:35) என்றவர் தீவனத் தொட்டியில் உணவாகக் கிடத்தப்பட்டார்.
இயேசுவின் பாதங்களும்,
காலடிகளும்
இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முன்பாக, பெத்லகேம் மாடடையும் குடிலில் தம் பிஞ்சுப் பாதங்களைப் பதித்தார் இயேசு. இறைவனின் பாதப்பதிவுகள் மனுகுலத்திற்குச் சொந்தமான நாள். காலங்களையும் நேரங்களையும் கடந்த இறைவன், மனித நேரங்களுக்குள் நுழைந்த இரவு இந்தக் கிறிஸ்துமஸ் இரவு. பெயர்களை எல்லாம் கடந்த இறைவன் ‘இம்மானுவேல்’ என்ற
பெயர் பெற்ற நாள். கி.மு., கி.பி. என்று காலங்களைப் பிரித்து, சரித்திரமே வியந்த சரித்திரம் படைக்கப்பட்ட நாள். சரித்திரத்தையே மாற்றிப்போட்ட நிகழ்வுதான் கிறிஸ்து பிறப்பு நிகழ்வு.
மேலும்,
பாவியான பெண் இயேசுவின் காலடிகளைக் கண்ணீரால் நனைக்கிறார் (லூக் 7:35). அதிக மீன்பாட்டைக் கண்டவுடன் சீடர்கள் இயேசுவின் காலடிகளில் விழுகின்றனர் (மாற் 5:22). திருமுழுக்கு யோவான் இயேசுவின் காலடிகளைத் தொடக்கூட தனக்குத் தகுதியில்லை எனத் தன் தாழ்ச்சியை வெளிப்படுத்துகின்றார். தொழுகைக் கூடத் தலைவன் யாயீர் இயேசுவின் காலடிகளில் பணிகிறார் (மாற்கு 5:33). “நமது கால்கள் அமைதி வழியில் நடக்க, விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகிறது”
(லூக் 1:79) என்கிறார் லூக்கா. இறுதி உணவின்போது இயேசு தம் சீடர்களின் கால்களைக் கழுவி “நான் உங்களுக்குச் செய்தது போல், நீங்களும் செய்யுங்கள்” என்று
(யோவா 13:14) சொல்கிறார். ஒருவர் ஒருவருடன் பணிவோடும் தாழ்ச்சியோடும் நடந்துகொள்ள வேண்டுமென்பதையே இங்குக் குறித்துக் காட்டப்படுகிறது.
இவ்வாறு
ஏழை, எளிய மக்களின் வாழ்வில் தினமும் மகிழ்ச்சியைக் காண நாமும் இயேசுவைப் போல் அன்பு, அரவணைப்பு, எளிமை, இரக்கம், பணிவு, பாசம், தாழ்ச்சி, பகிர்வு போன்ற குணங்களைக் கடைப்பிடித்து வாழ்வோம். இவ்வாறு இயேசுவோடு சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நிகழ்வும், பொருள்களும், சொற்களும் அன்பு என்ற நுண்ணிய பொருளை உள்ளடக்கியதாகவே காணப்படுகின்றது. நாமும் ஏழை, எளிய மக்களோடு இணக்கமாக வாழ முயல்வோம். நம்மிடம் உள்ளவற்றை இல்லாதவர்களோடு பகிர்வோம்.
எதைக்
கொண்டு வந்தோம் இவ்வுலகிற்கு? போகும்போது எடுத்துக் கொண்டு போக! அர்ப்பணிப்பு உணர்வோடு வாழ்ந்து, ஆர்ப்பரிப்போடு இக்கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடுவோம்.
‘மகிழ்வான குழந்தை வருங்கால தேசத்தின் பெருமை’ என்றார் காந்தியடிகள். ஒரு சிறு விதைக்குள் மிகப்பெரிய மரம் ஒளிந்திருப்பது போல், சிறு குழந்தை உலகை அசைக்கும் மிகப்பெரிய தலைவராக உருவாக முடியும். கலீல் ஜிப் ரான் கூறுவதுபோல, “நாம் அவர்களுக்கு உடலைத் தரலாம்; ஆனால், அவர்களிள் ஆன்மாக்களை அல்ல. ஏனென்றால், அவர்களின் ஆன்மாக்கள் நாளைய வீட்டில் வசிக்கின்றன; அதை நீங்கள் இப்போது பார்க்க முடியாது, உங்கள் கனவில் கூட இல்லை.”
ஆம்,
அவர்கள் எதிர்காலத்தில் எப்படி உயர்வார்கள் என்பதை நாம் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. அவர்கள் உயர்ந்து நிற்கும்போது, அதைப் பார்த்து மகிழக்கூட, கனவு கண்டு உருவாக்கிய உள்ளங்கள் இல்லாமல் போகலாம். ஆனால், குழந்தைகளின் வளர்ச்சியில் சம்பந்தப்பட்ட பெற்றோர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள், அவர்களோடு தொடர்புடையோர் அனைவருக்கும் மிகப்பெரிய கடமையும் பொறுப்பும் உண்டு என்றாலும் பெற்றோர்கள், குழந்தைகளின் வளர்ச்சியில் முழு தார்மீகப் பொறுப்பை ஏற்பவர்களாக உள்ளனர்.
கரு
உருவானதிலிருந்து தொடங்கி, சமுதாயத்திற்குப் பங்களிப்பவர்களாய் குழந்தைகளின் வாழ்வு மலர்ந்திட, மணம் பரப்பிட முழுமுதற் காரணம் பெற்றோர்களே. இக்காலத்தில் பெற்றோர்கள் இருந்தும் அநாதைகள் பெருகி வருவது, நமது மனத்தை வருத்துவதாய் அமைகிறது. இந்நூற்றாண்டில் நாம் இழைக்கும்
சமூக அநீதிகளில் இதுவும் ஒன்றாய் இருக்கிறது.
உண்மையில்
பெற்றோரை இழந்த குழந்தைகள் காப்பகங்களில், உற்றார்-உறவினர்கள் மூலம் ஓரளவு அவர்களின் உடல் உளவியல் தேவைகள் கவனிக்கப்படுகின்றது. பல குழந்தைகள் அதை
நன்றாகப் பயன்படுத்தி, வாழ்வை எதிர்கொண்டு வெற்றியடைகின்றனர். ஆனால், பெற்றோர்கள் இருந்தும் குழந்தைகள் தற்கொலைக்கும், தவறான வாழ்க்கைமுறைக்கும், போதைப் பழக்கத்திற்கும் அடிமையாகி வாழ்வை இளம் வயதிலேயே இழந்து போகின்றனர். பெற்றோர்கள் தங்கள் ஆன்ம-உளவியல் கடமைகளை உணர்ந்து மகிழ்வான குழந்தைகளை உருவாக்கி, இச்சமுதாயத்தை வளமாக்கிட வேண்டும்.
உடல்
தேவைகளை நிறைவு செய்தால் போதுமா? பணவசதி படைத்த பெற்றோர்கள் பணம், பதவி, புகழ், பட்டம் போன்றவற்றை முதன்மைப்படுத்தி, அவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் போன்ற தேவைகளை மட்டும் மிகச் சிறப்பாக நிறைவேற்றி விட்டுக் குழந்தைகளின் ஆன்மிக-உளவியல் தேவைகளில் அக்கறை இல்லாத காரணத்தால் தற்கொலையின் விளிம்பிற்குச் செல்கின்றன குழந்தைகள்.
• தகாத உறவுகளால் உடைந்த குடும்பங்களில் உள்ள குழந்தைகள், தாய் தந்தையின் அன்பும் பாதுகாப்புமின்றி அன்பிற்காய், அரவணைப்பிற்காய், ஏங்கி ஆதரவின்றி இளம் வயதில் கவர்ச்சிவசப்பட்டு, காதல் என்ற பெயர் சொல்லி கடைசியில் மடியும்
குழந்தைகள்... அவர்கள் அனுபவிக்கும் மனவேதனைக்கு அளவே இல்லை.
• தங்களது இலட்சியத்தைப் பிள்ளைகளின் மேல் திணிப்பதால், பெற்றோர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாது, பெற்றோர்கள் இருந்தும் தேர்வு முடிவு வந்தவுடன் பெற்றோர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாமல் தற்கொலைக்குச் செல்லும் குழந்தைகள் எண்ணிக்கை கூடிக்கொண்டே போவது மிகவும் கொடுமையாக உள்ளது.
• கண்டும் காணாமல், கடமைகளைச் செய்யாதிருக்கும் பெற்றோர்கள் அதாவது, தொலைக்காட்சி மோகம், அலைப்பேசி தொடர்புகள், பொழுதுபோக்கு அம்சங்கள், குடிவெறி போன்றவைகளால், குழந்தைகளுக்குத் தேவையான நேரத்தில் அவர்களின் உடல், உள்ள, ஆன்மிக, கலாச்சாரத் தேவைகளைக் கண்டும் காணாமல் அவர்களின் வளமான எதிர்காலத்தை நாசமாக்கும் பெற்றோர்கள்.
பிறருடன்
ஒப்புமைப் பாராட்டி தாழ்வுமனப்பான்மையை உருவாக்கி குழந்தைகளின் முழு வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதும், அவர்களின் திறமைகள் பலவீனங்கள், பலங்களைக் குறை நிறைகளோடு ஏற்றுக் கொள்ளாது அவமதித்து பிஞ்சிலே கருகச் செய்யும் பெற்றோர்களும் உண்டு.
இவ்வாறு
பெற்றோர்கள் இருந்தும் அநாதைகளாய் ஆகும் குழந்தைகள் ஏராளம். ஆன்மிக- உளவியல் ரீதியில் சிந்தித்து நமது சிந்தனைகளில் தெளிவடைவதும், அதற்கு ஏற்றபடி நமது செயல் திட்டங்களை அமைத்துக்கொள்வதும் காலத்தின் கட்டாயம்.
“உங்கள் குழந்தைகள் உங்கள் வழியாக வந்தவர்களே அன்றி, உங்களுடையவர்கள் அல்லர்” என்கிறார் கலீல் ஜிப்ரான். அவர்களிடம் நமது எதிர்பார்ப்பைத் திணிப்பது மிகப்பெரிய பாவம். ஆகவே, சிந்தனையில் மாற்றம் கொள்வோம்.
குழந்தைகளை வாழ்விக்கும்
சில பரிந்துரைகள்
குடும்பச்
செபமே ஆன்மிக உளவியல் மருந்து. அனுதினமும் முடிந்தால் வாரத்திற்கு மூன்று நாள்களாவது இரவில் ஒன்றாய் உணவருந்தி, அமர்ந்து செபிக்க வேண்டும். அதன்பின் குடும்பத்தில் உள்ளோரின் தேவைகள், எதிர்பார்ப்புகள், கவலைகள், பிரச்சினைகளைக் கலந்துரையாடுவது மிக மிக அவசியம். அதுவே ஆன்மிக-உளவியல் மருந்து.
அன்பு
அதிர்வுகள் உண்மையானவை, ஆழமானவை, ஆன்மிகமானவை. உடலளவில் உடன் இருக்க இயலாத பெற்றோர்கள் அன்பால், செபத்தால், தியானத்தால் உளவியல் ரீதியாக ஆழமான உறவும், உடனிருப்பும் செய்திட முடியும். வழியின்றித் தொலைதூரத்தில் உள்ள பெற்றோர்கள் செபத்தின் மூலம், தியானத்தின் மூலம் அன்பு அதிர்வுகளை அனுப்ப வேண்டும். குழந்தைகளுக்கு நாம் தரும் அற்புதமான உளவியல் ஊக்கமருந்தாகும்.
உற்றுநோக்குதலும்,
உள்ளம் கலந்துரையாடல் போன்றவையே தீர்வுகள். தங்களது பொழுதுபோக்கு அம்சங்கள், தொலைப்பேசி, அலைப்பேசி தொடர்புகள், திரைப்பட மோகம் ஆகியவற்றைத் தியாகம் செய்துவிட்டு குழந்தைகளோடு உடனிருப்பு அவசியம். ‘உடனிருப்பு’ உடலளவில்
இருப்பது அல்ல; மாறாக, அவர்களின் ஆன்மிக உளவியல், கலாச்சாரச் சமுதாயத் தேவைகளை உற்றுநோக்கி அதை நிறைவேற்றுவது!
பெற்றோர்
இருந்தும் குழந்தைகள் அநாதைகளாவதைத் தவிர்த்திடுவோம்! இறைவன் கொடுத்த தெய்வங்களை
வாழவைப்போம்!
இயேசுவின் பிறப்பு மனுகுலத்திற்கு மாபெரும் நற்செய்தியாக விளங்குகிறது. இயேசுவின் பிறப்பு ஒட்டுமொத்த மானுடத்திற்கும் இறைவன் அளித்த கொடை. இதனை வெறுமனே மதம் சார்ந்த விழாவாகக் குறுகிய வட்டத்திற்குள் சுருக்குதல் நீதியாகாது. இயேசு மதங்களுக்குள் கட்டுப்பட்டு பிறந்தவர் அல்லர். கிறிஸ்து சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட அனைவருக்குமான மீட்பாகப் பிறந்தார்.
தெருத்தெருவாகப்
பஜனைகள், திருவருகைக் காலத் தியானம், ஒப்புரவு அடையாளம், கிறிஸ்து பிறப்புக்கு முன் அலங்காரங்கள், குடில்கள், பரிசுப் பொருள்கள், பட்டாசுகள், பலகாரங்கள் என எத்தனையோ செயல்கள்
கிறிஸ்து பிறப்பு விழாவையொட்டி இயல்பாக வருடந்தோறும் நடைபெறுகின்றன. ஆனால், கிறிஸ்து பிறப்பு விழா இப்படிக் கொண்டாடப்படுவதை இயேசு விரும்புவாரா? மனமாற்றமில்லாத கொண்டாட்டங்களை இயேசு விரும்பவில்லை. மனமாற்றத்தைத்தான் இயேசு விழாவாகக் கொண்டாட விரும்புவார்.
இயேசுவின்
உடனிருப்பால் சக்கேயு மனம்மாறி அதைத் தன் செயலின் வழியாக வெளிக்காட்டினார். அதன் விளைவாக, சக்கேயுவுக்குப் புதுவாழ்வு கிடைத்தது. நாம்
கொண்டாடும் கொண்டாட்டம் இயேசுவை நம்மில் பிறக்கச் செய்கிறது என்றால், நம்மில் இன்னும் ஏன் எந்த மாற்றமும் ஏற்படவில்லை? நமது பக்தி முயற்சிகள், திருப்பலிக் கொண்டாட்டங்கள் எல்லாம் அடுத்திருக்கின்றவரோடு நல்லுறவில் வாழ இயலவில்லையென்றால் பயனற்றதே.
சமுதாயத்தில்
சுதந்திரமாக வாழமுடியாமல் குறிப்பிட்ட இன வரையறைகளுக்குள் சிக்கித் தவிக்கும்
மக்கள் இருக்கின்றனர். தங்களின் அடிமை நிலையைக் கூட உணர இயலாமல், தொடர்ந்து தங்களுக்கான
உரிமைகளைக் கேட்கத் துணிவின்றி காலம் நகர்த்துகின்றனர். ஒருவர் பயன்படுத்தித் தூக்கி எறிந்த குப்பையைப் புதையலெனச் சேகரித்து அதை விற்று வரும் வருமானத்தில் குடும்பம் நடத்தும் மனிதரும் வாழ்கின்றனர். ஆதரவற்ற இல்லங்கள், இது போக வீட்டில் வைத்துக் கவனிக்க இயலாத தொற்றும் நோய் தாக்குதல் உள்ளவர்களைக் கவனிக்கும் இல்லங்களில் வசிப்போர், சிறைகளில் வாழ்வோர், தொடர் இழப்புகள், போர்கள், இயற்கைப் பேரிடர்கள் இவற்றினால் வாழ்வில் நிம்மதியின்றித் தவிப்போர் என இயல்பாக வாழ
இயலாத பலரும் நம்மைச் சூழ்ந்திருக்கின்றனர். இவர்களுக்கு நினைத்ததுபோல் வாழும் வசதி கிடையாது. இச்சூழலில், குறிப்பிட்ட மக்கள் மட்டும் கொண்டாடுவதும், மற்றவர்கள் ஏக்கத்தில் வருந்துவதும் கிறிஸ்து
பிறப்பு விழாக் கொண்டாட்டமாகுமா?
நம்
இதயம்தான் இயேசு விரும்பும் கோவில். இவ்விதயக் கோவிலை அழகுப்படுத்தும் முறைகளைக் கண்டறிந்து செயல்பட வேண்டும். அதைச் செய்யாமல், வெறுமனே வெளியிடங்களில் அழகான, அலங்காரச் செயல்பாடுகளில் ஈடுபடுவது சிறந்த கிறிஸ்து பிறப்புக் கொண்டாட்டமாக அமையாது.
இயேசுவின்
பிறப்பு அனைவருக்குமான நற்செய்தியாகும். ஆனால், நமது பாரம்பரியமான செயல்பாடுகளால் இயேசுவின் பிறப்பை ஒருசில வரையறைகளுக்குள் குறுகச் செய்துவிட்டோம். அனைத்து மக்களும் இணைந்து சகோதர உணர்வோடு விழாக்களைக் கொண்டாடும்போதுதான் விழா அர்த்தம் பெறுகிறது.
இணைந்து
வாழும் மனிதரிடையேதான் இறைவன் பிறக்கின்றார். இதயம் இணைந்து மகிழும்போதுதான் அவர் நம்மில் நிறைகின்றார். வெற்று ஆடம்பரங்களைத் தவிர்த்து அர்த்தமுள்ள விதத்தில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாட முயல்வோம். கிறிஸ்துவை நம் இதயக்குடிலில் ஏற்றுத் தாலாட்டி மகிழ்வோம்.
டிசம்பர் மாதம் - கத்தோலிக்கத் திரு அவை வரலாற்றில், ஏன் உலக வரலாற்றில்கூட முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஏனென்றால், உலக வரலாற்றைக் கிறிஸ்து பிறப்பிற்கு முன் (கி.மு.), கிறிஸ்து பிறப்பிற்குப் பின் (கி.பி.) என்று கணிக்கிறார்கள், கூர்ந்தாய்வு செய்கிறார்கள்.
டிசம்பர்
மாதம் இருபத்தைந்தாம் நாள் இறைமகன் இயேசு அவனியில் அவதரித்த நாள். ‘அருள் நிறைந்த மரியே வாழ்க’ என்ற
பொருள் பொதிந்த வாழ்த்துகளைக் கூறிய தேவதூதரின் வார்த்தைகளை மெய்ப்பிக்க வந்த சிசுபாலன் பிறந்த நாள்!
தச்சன்
சூசையும், தாய் மரியாவும் ஈன்றெடுத்த பச்சை மரம் துளிர்விட்ட நாள்! சுத்துகின்ற உலகில் சத்தமேதுமில்லாமல் சூசை-மேரியிடம் சுதன் இயேசு பிறந்த நாள்!
அன்பென்ற
மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றிய நாள்! மார்கழிக் குளிரில் மாடடைக் குடிலில் பிதாமகன் பிறந்த நாள்!
போட்ட
விதை முளைக்கும் பொன்னான பூமியிலே வாட்டமில்லாப் பயிராக முள்வேந்தன் முளைத்த நாள்! மாணிக்கத் தொட்டிலுக்கு வாய்க்காத பெருமையெல்லாம் ஆநிரைத் தொழுவினுக்குப் பெருமை சேர்த்த நாள்!
வானளந்த
திருக்குமரன், மனிதகுல மருத்துவன், தேனமுதத் திருவாயில் சித்திரங்கள் தீட்டிய சத்திய மகன் பிறந்த நாள்! மாளிகைச் செல்வம் தோற்கும், மாணிக்கத் தொட்டில் தோற்கும், தூளி இல்லாதபோதும் தூயமரியிடம் தூயவர் துயிலெழுந்த நாள்!
மாளிகையும்
இல்லை, மஞ்சமுமில்லை என்றாலும், ஏழைத் தொழுவில் வந்த இறைமகன் பிறந்த நாள்! மனிதரைப் புனிதராய் ஆக்கிடவே புனிதராம் கடவுள் மனிதரான நாள்! எத்தனையோ பாவிகளின் பாவத்தைத் தம் தோளில் ஏற்றுக்கொள்ள உத்தமர் உதித்த நாள்!
இந்த
நாளை அர்த்தமுள்ள நாளாகக் கொண்டாடுகின்றோமா? கிறிஸ்துவின் பிறப்பு மண்ணுலகை உவகை அடையச் செய்தது; உயர்வடையச் செய்தது; மானுடத்தைத் தம்முயிர் கொடுத்து மீட்டது; ஒடுக்கப்பட்டோருக்கு உரிமை வாழ்வைக் கொடுத்தது; பசித்தோரைப் புசிக்கச் செய்தது; ஆணவம் கொண்டோரை அரியணையிலிருந்து அகற்றியது; பாவங்களையும் சாபங்களையும் அகற்றி, மனித வாழ்வில் தீபங்கள் ஏற்றியது; அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்க வைத்து உயர்த்தியது; உள்ளத்தில் செருக்குடன் சிந்திப் போரைச் சிதறடித்தது; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்தியது; செல்வரை வெறுங்கையராய்ச் செல்வோராக மாற்றியது. இத்தகைய மகிமை கொண்ட, புனிதம் கண்ட கிறிஸ்து பிறப்பு விழாவை நாம் அர்த்தமுள்ளதாகக் கொண்டாடுகிறோமா?
விழாக்காலம்
வந்துவிட்டால் சிலருக்குக் கொண்டாட்டம்; பலருக்குத் திண்டாட்டம்; இன்னும் ஒரு சிலருக்குத் திண்டாட்டமும் கொண்டாட்டமும் இல்லாத போராட்டம்!
‘மனைவி, மக்களுக்குத் துணிகள் வாங்க வேண்டுமே, அதற்கு யாரிடம் கடன் வாங்குவது? கடன் வாங்கினால் எப்படித் திருப்பிக் கொடுப்பது? மற்ற பிள்ளைகளைப்போல் என் பிள்ளைகளும் அலங்காரமாக, ஆடம்பரமாகத் தெரிய வேண்டுமே! மனைவிக்குப் பட்டுச் சேலை வாங்கவேண்டுமே...’ என்கின்ற குடும்பத் தலைவர்களின் எண்ண ஓட்டம்.
‘என் கணவர் உயர்ந்த விலைக்குப் பட்டுச் சேலை எடுத்துத் தருவாரோ இல்லையோ?’ என்ற ஏக்கமும், ‘பக்கத்து வீட்டுக்காரப் பெண் பத்துப் பவுனுக்குக் காசுமாலை வாங்கி வந்துவிட்டாள்... அதேபோல் நாமும் என்ன பாடுபட்டாவது, கணவரை என்ன பாடுபடுத்தியாவது காசுமாலையை வாங்கிவிட வேண்டும்?’ - குடும்பத் தலைவிகளின் போட்டியும் பொறாமையும் ஆசையும் அங்கலாய்ப்பும் கலந்த பரிதாப பதைபதைப்பு!
‘நண்பர்களை அழைத்து ஓட்டலில் கறி விருந்து, மதுவிருந்து வைக்க வேண்டும்; அதற்கு அம்மா-அப்பாவிடம் தந்திரமாகக் காசு பறிக்க வேண்டும்’
என்கிற இளைஞர்களின் படபடப்பு!
பகட்டான
பட்டாடைகள் அணிந்து, ஆடம்பர அணிகலன்கள் சூடி கிறிஸ்துமஸ் விழாவிற்கு ஆலயங்களுக்குச் செல்கிறோமே... ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? அரசர்க்கெல்லாம் அரசர் கிறிஸ்து அரசர் இதற்காகவா ஏழையின் கோலத்தில் பிறந்தார்?
குடும்பப்
பொருளாதாரத்தை நிரூபிப்பதற்கும், ஆடைகளின் அணிவகுப்பை நடத்துவதற்கும், அணிகலன்களின் ஆடம்பரத்தைக் காட்டுவதற்குமா கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்? அடுத்த வேளை உணவில்லாமல் அடுத்த வீட்டு ஏழை ஏங்குகையில், நமக்கெதற்கு ஆடம்பரக் கொண்டாட்டம்?
பெற்றெடுத்தத்
தாயை முதியோர் இல்லங்களில் சேர்த்துவிட்டு நாம் மட்டும் கிறிஸ்துமஸ் விழாவை ஆடம்பரமாய்க் கொண்டாடுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? பக்தியோடு மறைநிகழ்வுகளில் பங்கெடுப்பதில்லை. கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நமக்கெதற்கு? தன்னைப்போல் தன் அயலானையும் நேசித்து அன்பாக வாழ விருப்பமில்லை. கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நமக்கெதற்கு? கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று வாழ்கின்றபோது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நமக்கெதற்கு? ஆலயங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய மனமில்லையெனில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நமக்கெதற்கு? வீட்டில் மது பாட்டில்களை அடுக்கி வைத்தும், மது அருந்தியும் கிறிஸ்துமஸ் திருப்பலிக்குச் செல்கிறோமே... கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நமக்கெதற்கு?
ஆயிரக்கணக்கில்
செலவு செய்து உணவு தயாரித்து, ஓர் அநாதைக்குக் கூட, ஓர் ஆதரவற்றோருக்குக் கூட, ஓர் ஏழைக்குக் கூட உணவளிக்க மறுத்து, எஞ்சியவற்றை, மிஞ்சியவற்றைத் தெருவில் கொட்டுகிறோமே! கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நமக்கெதற்கு?
உங்களுக்கு
ஓர் உண்மை தெரியுமா? வீடுகளில், விழாக்காலங்களில், நல்ல நிகழ்ச்சிகளில் மிஞ்சிய உணவுப் பதார்த்தங்களைச் சேகரித்தால், தமிழ்நாட்டில்... ஏன் இந்தியாவில் இல்லாமை இல்லாமையாகிவிடும்! ஆகவே, அன்பில் நனைவோம். ஆன்மிகத்தில்
இணைவோம். இழந்தோரிடத்தில்
இரக்கம் கொள்வோம். ஈகை உதவி இதயம் மலர்வோம். உறவோரிடத்து உள்ளன்பு வைப்போம். ஊரார்
புகழப் பணிவுடன் நடப்போம். என்றும்
எதிலும் உண்மையாய் வாழ்வோம். ஏழைகளுக்கு உதவி செய்வோம்.
கன்னித்
தாயின் காலடி வணங்குவோம். காலம் அறிந்து கணக்குற வாழ்வோம். கிட்டாதாயின் வெட்டென மறப்போம். கீழோர் மேலோர் பேதம் துறப்போம். கெட்ட பழக்கம் இல்லாமல் வாழ்வோம். கேடுகள் எதையும் நாடாதிருப்போம். கொடுஞ் செயல்களை அழித்துக் காட்டி, கோமகனின் பிறப்பு விழாவை அர்த்தமுள்ளதாகக் கொண்டாடுவோம்.
அனைவருக்கும்
கிறிஸ்து பிறப்பு வாழ்த்துகள்!
கொண்டாட்டங்கள் நமக்கு மகிழ்ச்சியைக் கொண்டு வருகின்றன, உற்சாகத்தைக் கொடுக்கின்றன, கவலைகளை மறக்க வைக்கின்றன. நமக்குள்ளும் நம்மைச் சுற்றிலும் ஓர் இனம் புரியாத இன்பத்தைச் சேர்க்கின்றன. ஆனால், ஆன்மிக அர்த்தத்தில் இந்தக் கொண்டாட்டங்களை ஆழ்ந்து சிந்திக்கும் போது, அது சில சமயங்களில் சில உண்மைகளை நம் கவனத்தில் கொண்டுவராமல் தவிர்த்து விடுகின்றன. ஏனெனில், இந்த உண்மைகள் நம் மகிழ்ச்சியைப் பறித்துவிடுமோ அல்லது குந்தகம் ஏற்பட்டு விடுமோ என்று அச்சப்பட்டு, நம்மை ஆராயவிடாமல் அந்த மேலோட்டமான நிலையிலேயே இருக்கும்படிச் செய்கின்றன.
இங்குக்
கொண்டாட்டங்கள் வேண்டாமென்று கூறவில்லை; அதிலுள்ள ஏமாற்று வேலைகளை அறிந்துகொள்ள வேண்டும் என்பதை எடுத்துக் கூறுவது கடமையாயிருக்கிறது. ஏனெனில், உலகமயமாக்கலின் காரணமாக, பெருநிறுவனங்கள் (corporate) கடவுள், மனிதம், பொருள்கள் என்பதை வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. ஒவ்வொன்றையும் விலைக்கு உரிய பொருளாகப் பார்க்க ஆரம்பித்து விட்டன. எதில்
வரவு அதிகம் என்பதை ஆராய்ந்து, அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, அதை மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்துகின்றன. அவர்களுக்குக் கிறிஸ்து பிறப்பும் ஒரு பொருள்தான். ஆகவே, இந்த நாளை மிகவும் வணிக நோக்கில் அறிமுகப்படுத்தி, அதில் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய பயன்படுத்திக்கொள்கின்றன.
இந்த
உலக மாயைக்குள்ளும், அதன் மாயக் கவர்ச்சிக்குள்ளும் சிக்கி நம் ஆன்மாவை இழந்து விடாமல் இருக்கவும், கிறிஸ்து பிறப்பை எவ்வாறு பொருள் உணர்ந்து கொண்டாடலாம் என்ற சிந்தனையை வழங்கவே இங்கு முயல்கிறோம்.
முதல்
கிறிஸ்துமசுக்கு முந்தைய நாள் அன்று, உலகம் இங்கு என்ன நடக்கப்போகிறது என்பதை அறியாமல் இருந்தது. ஆனால், விண்ணுலகில் உள்ள எண்ணற்ற வானதூதர்கள், தூயவர்கள் அனைவரும் கடவுள் தம்முடைய மீட்பை அனுப்புவதைக் குறிக்கும் ஒரு குழந்தையின் பிறப்புக்கு, புகழ்ச்சி மற்றும் வழிபாடு ஆகியவற்றிற்காகக் காத்திருந்தனர். அன்று விண்ணகத்தில் ஒரு பிரியாவிடை நடந்து கொண்டிருந்தது. மகன் தந்தையிடம் விடைபெறும்பொழுது நடந்த உரையாடல், அதில் ஒரு பகுதி, எபிரேயர் 10-வது அதிகாரத்தில் நமக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இயேசு தம் தந்தையிடம் பேசுகிறார்: “பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; ஆனால், ஓர் உடலை எனக்கு அமைத்துத் தந்தீர். எரிபலிகளும் பாவம் போக்கும் பலிகளும் உமக்கு உகந்தவையல்ல; எனவே, நான் கூறியது: ‘என் கடவுளே, உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன்’ (எபிரேயர்
10:5). அப்பா, நீங்கள் விலங்குகளின் இரத்தத்தில் நிறைவடையவில்லை என்பதை நான் உணர்கிறேன். நான் அந்த உலகத்திற்குச் சென்று நிறைவான தியாகமாக இருப்பதற்காக நீர் எனக்காக ஓர் உடலை அமைத்துத் தந்தீர், அதை நான் நிறைவேற்றுவேன். ஏனென்றால், உமது திருவுளத்தை நிறைவேற்ற திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளபடி நான் வருகிறேன்”
என்றார். எனவே, இயேசு கிறிஸ்து தமது தந்தையிடம் விடைபெற்று, முப்பத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சிலுவையில் நிறைவடையும் ஒரு மீட்பின் பயணத்தைத் தொடங்கினார். கிறிஸ்துவின்
உடல் கடவுளை மனிதரிடம் கொண்டு வருவதற்கான கருவியாக இருக்க கடவுளால் தெய்வீகமாக ஆயத்தப்படுத்தப்பட்டது. மேலும், இது பாவத்திற்கான சரியான பலியாக இருந்தது. ஆகவே, இயேசு விண்ணகத்தின் ஆரவாரத்துடன் வந்தார். ஆனால், உலகில் எந்த ஆரவாரமும் இல்லை. உலகு மறதியாக இருந்தது. கடவுள் ஊனுடலில் வெளிப்பட்டார்; விண்ணகம் அதை அறிந்திருந்தது, ஆனால், உலகம் அறியவில்லை. தூய ஆவி தமது பணியை நிறைவேற்ற ஒன்பது மாதங்கள் எடுத்தார். அவர் அந்த ஒன்பது மாதங்களில் மரியாவின் வயிற்றில் ஓர் உடலை வடிவமைத்தார். அது மூவொரு இறைவனின் இரண்டாவது நபர் வசிக்கும் ஓர் உடலாயிற்று. மேலும், பிரசவிக்கப்படுவதற்கான நேரம் தயாராக இருந்தது. இயேசு என்கிற கருவின் காலத்தின் முழுமை வந்து, முழு உருப்பெற்றது,
ஒவ்வொரு
கிறிஸ்துமஸ் நிகழ்விலும், நாம் அனைவரும் கிறிஸ்துவின் பிறப்பின் முழுமையை உணராமல் மேம்போக்காக ஒப்புக்கொள்கிறோம். அவர்
இவ்வுலகில் பிறந்தார் என்பது பிரச்சினை அல்ல; ஏன் பிறந்தார் என்பதுதான் பிரச்சினை. அதில் ஒருவித மீட்பின் உண்மை உள்ளது என்ற உண்மையோடு மட்டும் நிறுத்திக் கொள்வதில் பலர் திருப்தி அடைகிறார்கள். அவர் உண்மையில் எதற்காக வந்தார் என்று ஒருபோதும் எண்ணிப் பார்ப்பதில்லை.
இயேசு
ஏன் பிறந்தார்? கடவுளை முன் வைக்கவா? ஆம்! உண்மையைக் கற்பிக்கவா? ஆம்! திருச்சட்டத்தை நிறைவேற்றவா? ஆம்! அவருடைய அரசை வழங்கவா? ஆம்! கடவுளைப் பற்றிப் புரியாதவர்களுக்குப் போதிக்கவா? ஆம்! அன்பை வெளிப்படுத்தவா? ஆம்! அமைதியை ஏற்படுத்தவா? ஆம்! நோயுற்றவர்களைக் குணப்படுத்தவா? ஆம்! மற்றும் பல. ஆனால், அவர் வந்ததற்கான இரண்டாம் காரணங்கள்தான் இவையெல்லாம். ஒரு முதன்மை நோக்கம் உள்ளது. இயேசு நம் பாவங்களுக்காகத் துன்பப்படவும் இறக்கவும் வந்தார்; அதற்காக மட்டுமே அவர் வந்தார். அவர் பிறந்து வளர்ந்த பிறகு கடவுளின் திட்டத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் இறக்க வந்தவரல்ல. விண்ணகத்தில் இருக்கும்போதே இறைத்திட்டத்தில் இருந்ததை அறிந்தே வந்தார். அவர் வாழ்வில் பெத்லகேம் மட்டுமல்ல, கல்வாரியும் உண்டு. அவர் இறப்பதற்காக மட்டுமே வாழ்ந்தார்.
மனிதன்
மண்ணகத்தில் எல்லாவற்றின் மீதும் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று கடவுள் படைத்தார். ஆனால், அவன் பாவத்தில் விழுந்து தன் ஆதிக்கத்தை இழந்தான். வீழ்ந்த அவன் தன் அரசாட்சியையும், நிலைவாழ்வையும் இழந்தான். ஆகவே, கடவுள் இந்த உலகத்தின் மனிதர்களைப் பார்த்தார். பாவத்தினால் இறக்கப் போகும் மனிதர்களைக் கண்டார்; மேலும், அவர் தமது அன்பின் காரணமாக, எல்லா மனிதர்களும் தங்கள் பாவத்தில் இறக்க அனுமதிக்கமாட்டேன்; அவர்களின் தண்டனையைச் சுமக்க, அவர்கள் மரணத்தை வெற்றிகொள்ள நான் என் மகனையே அனுப்புவேன் என்று தம் அன்பு மகனை அனுப்ப முன்வந்தார். இதற்காகத்தான் இயேசு வந்தார். நமக்கு மாற்றாக வந்தார். சிலுவையில் அறையப்பட்டபோது, நமக்காக இறந்தார்; நமக்கான தண்டனையை அவர் செலுத்தினார்.
ஆகவே,
தொழுவத்தை மற்றொரு முறை சென்று பாருங்கள்; மரியாவின் வயிற்றில் தூய ஆவியால் வடிவமைக்கப்பட்டு, தீவனத் தொட்டியில் கிடத்தியிருக்கும் விலைமதிப்பற்ற தெய்வீகக் குழந்தையின் அந்த மென்மையான பிஞ்சு கைகளையும், கால்களையும் தொட்டுப் பாருங்கள்; அவை சிலுவையில் ஆணிகளால் அடிக்கப்பட வேண்டும். பளபளக்கும் கண்களையும் கொழு கொழு கன்னத்தையும் தலையையும் தொட்டுப் பாருங்கள். அந்த இனிமையான தலை முள்முடியால் நசுக்கப்பட வேண்டும். அந்த மென்மையான உடல் காயங்களாலும் இரத்தக்கறை படிந்த ஆடைகளாலும் மூடப்பட்டிருக்க வேண்டும். ஒருநாள் அந்தப் பிஞ்சுக் குழந்தையின் இதயம் ஓர் ஈட்டியால் திறக்கப்பட வேண்டும். இந்த இனிய குட்டிக் குழந்தையிடம் ‘ஏன் இத்தகைய துயரங்களை ஏற்கப் பிறந்தாய்?’ என்று கேட்டுப் பாருங்கள். ‘நான் உனக்காகப் பலியாகவே வந்தேன்!’ என்பார். அவரின் கைகளைத் தொட்டு வணங்குங்கள்; அவரையே உற்றுநோக்குங்கள். அப்பொழுது அந்தத் தெய்வீகப் பாலகனின் மழலைச் சிரிப்பு உங்கள் உள்ளத்திற்கு அமைதியைக் கொண்டு வரும்.
பொதுவாக அமைதி இருவகைகளில் வெளிப்படுகிறது. புயலுக்குப் பின் ஏற்படுவது முதல் வகை அமைதி. ஒருவிதத் துடிப்போ, துயரமோ எதுவும் இன்றி அப்படியே சலனமற்று இருப்பது மறுவகை அமைதி. இதில் இயேசுவின் பிறப்பு எந்த வகை அமைதியை அளித்தது?
இயேசுவின்
பிறப்பு இருவகை அமைதியையும் கொண்டு வந்தது. ஒருவர் கொண்டிருந்த
மன நிலையைப் பொருத்தே அந்த இருவகை மனநிலைகளில் ஒன்று அவருக்குக் கிட்டியது. அங்ஙனமே அவை இரண்டும் இருவேறு விளைவுகளையும் உலகில் ஏற்படுத்தியது.
புயலுக்கு பின்
அமைதி
புயலுக்கு
பின் அமைதி என்கிற முதல்வகை அமைதியை இயேசு பிறப்பு தந்தது என்றால், பிறந்த பாலன்
இயேசு முதலில் புயலாக அமைந்திருப்பாரோ? அதன் பின்பு அமைதியைத் தந்திருப்பாரோ? என்கிற கேள்விகள் எழுகின்றன. ஆம்! அவருடைய பிறப்பு பலருக்குப் பல தருணங்களில் புயலாகவே
இருந்தது. சில தருணங்களில் சிலருக்கு மட்டுமே அமைதியைத் தந்தது. உதாரணமாக, கடவுளின் தூதர் கன்னியான மரியா முன் தோன்றி “இதோ கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்” என்று
கூறியபோது மரியா அமைதி பெறவில்லை; மாறாக கலக்கமடைந்து, “இது எப்படி நிகழும்? நான் கன்னியாயிற்றே!” என்று
குழம்பி நின்றார். புயலை விட அழுத்தமான பாதிப்புக்குள்ளானது அவர் மனது. அந்த நேரத்தில் அவருக்கு அதே வானதூதரால் முறையான விளக்கம் கொடுக்கப்பட, அதை
ஏற்றுக்கொண்டு அதன் பின்பு அவர் மனம் அமைதியானது. அமைதியான அவர் அந்த அமைதியை, தான் மட்டும் அனுபவித்து அயர்ந்து விடவில்லை; மாறாக, அடுத்திருப்பவரிடமும் குறிப்பாக, தேவையிலிருப்போரிடம் வழங்குவதற்காக எலிசபெத் இல்லத்திற்கு ஓடிச்சென்று
அவரை வாழ்த்துகிறார். மரியாவின் வாழ்த்து
கேட்டு எலிசபெத் வயிற்றில் இருந்த குழந்தை மகிழ்ந்து துள்ளியது.
இப்படியாக மரியா பெற்ற அமைதி தேவையிலுள்ள அடுத்தவருக்கும் பகிரப்பட்டு ஆனந்தத்தை அளித்து மகிழ்ந்தது.
அதேபோல்
மரியாவோடு மண ஒப்பந்தமாயிருந்த யோசேப்பு மரியா
கருவுற்றிருப்பதை அறிந்து அமைதியோ ஆனந்தமோ அடையவில்லை; மாறாக, மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி,
மரியாவை மறைவாக விலக்கிவிடவே
திட்டமிடுகிறார். பின்பு இறைவனின் திட்டம் அவருக்குக் கனவில் வெளிப்படுத்தப்பட, முறையான விளக்கம் பெற்ற யோசேப்பு அமைதி அடைகிறார். அதன்பின் மரியாவை மிகுந்த அன்போடு கவனிப்பதில் ஆர்வம் காட்டுகிறார். அதுவே அவர் பெற்ற அமைதியின் விளைவாக வெளிப்படுகிறது.
அதேவேளையில், கீழ்த்திசை
அறிஞர்களின் வாயிலாக இயேசுவின் பிறப்பை அறிந்துகொண்ட ஏரோது மன அமைதி பெறவில்லை; மாறாக,
மனக் குழப்பமும் எரிச்சலும் பெற்று அவரைக் கொன்றுவிடத் துடிக்கிறான், சதித்திட்டம் போடுகிறான்.
ஆக,
இயேசுவின் பிறப்பு குறித்து அறிந்த நேரத்தில் மரியா, யோசேப்பு, ஏரோது போன்றோர் முதலில் குழப்பமும் கலக்கமும் பெற்று, ஒரு புயலின் தாக்கத்தையே தங்கள் மனங்களில் பெறுகின்றனர். பின்பு மரியாவும், யோசேப்பும் அமைதியைப் பெற, ஏரோதோ எரிச்சலை அடைகின்றான். அதற்குக் காரணம் அவனின் மனநிலையே.
“உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக”
(லூக் 2:14) எனும் வானவர் செய்தி மரியா,
யோசேப்பு இருவரிடமும் அமைதியைத் தந்தது. காரணம், அவர்களிடம் ஆண்டவருக்கு உகந்த நல்மனநிலை இருந்தது. எனவே, இயேசுவின் பிறப்பு முதலில் அவர்களுக்குக் கலக்கத்தை, குழப்பத்தை ஒரு புயல் போல உண்டாக்கினாலும், தெளிவு பெற்றபின் அவர்களுக்கு அமைதியைக் கொடுத்தது.
அப்படி
அவர்கள் பெற்ற அமைதி அவர்களுக்குள் மட்டுமே முடங்கி விடாமல் அடுத்தவருக்கும் எட்ட துடிப்பைக் கொடுத்தது. புயல்போலச் செயல்படும் தொடர் ஆற்றலையும் அளித்தது. அவர்களிடமிருந்த ஆண்டவருக்குகந்த நல்மனமே
அதற்குக் காரணமாகவும் இருந்தது. ஆனால், ஏரோதிடம் நல்மனம் இருக்கவில்லை. தன் பதவியின் மேல் கொண்ட அதீத ஆசையால் தனக்கு எதிராக மற்றொருவர் வந்துவிடுவாரோ என்கிற பயத்தால் இயேசுவின் பிறப்பு குறித்து கேள்விப்பட்டு, கலக்கமுற்று எரிச்சல் அடைகிறான்; அமைதி இழக்கிறான். அந்த எரிச்சல் மனநிலையும் புயல் போல செயல்பட்டு அந்நாட்டில் இருந்த அத்தனை ஆண் குழந்தைகளையும் கொல்வதற்கு உத்தரவிடுகிறது.
ஆக,
இயேசுவின் பிறப்பு நல்ல மனம் கொண்டவர்களுக்கு அமைதியை அளித்ததுடன், அது அடுத்தவருக்கும் தொடர்ந்து கிடைக்க ஆற்றலைக் கொடுக்கிறது. அங்ஙனமே, தீய மனம் கொண்டவர்களுக்கு அமைதியை இழக்கச் செய்வதுடன் அந்த அமைதி அடுத்தவருக்கும் எட்டி விடாமல் அழிவைத் தருகிறது.
சலனமற்று உறைந்து
கிடக்கும்
அமைதி
இயேசுவின்
பிறப்பு அறிவிப்பு இடையர்கள், கீழ்த்திசை அறிஞர்கள் போன்றவர்களுக்குச் சலனமற்று உறைந்து கிடக்கும் இரண்டாம் வகை அமைதியைத் தருகின்றது. இவர்களுக்கு இயேசுவின் பிறப்பு அறிவிப்பு எவ்விதக் குழப்பத்தையும் கொடுக்கவில்லை, புயலையும் ஏற்படுத்தவில்லை. மாறாக, பிறந்த இயேசுவைத் தேடிச்செல்லும் ஆர்வத்தைக் கொடுத்தது என்பதை நாம் பார்க்கிறோம். அதற்குக் காரணம் அவர்களிடம் இருந்த எளிய மனமே.
எவ்வித
முன் தீர்மானமும் இன்றி தாங்கள் கேள்விப்பட்டதை என்ன? ஏது? என்று
அறிந்து கொள்ளத் துடிக்கும் ஒருவிதத் தேடுதல் உள்ள எளிய மனம் அவர்களிடம் இருந்தது. எனவே, அவர்கள் அவரைக் காண ஓடோடி வருகின்றனர். எளிய மனம் கொண்ட இவர்கள் இயேசுவைக் கண்டதும் தங்கள் மனத்தில் அமைதி பெறுகின்றனர். ஆனந்தம் அடைகின்றனர். ஆனால் அந்த அமைதியை, ஆனந்தத்தை அடுத்து இருப்பவருக்குக் கொடுக்கவில்லை. மாறாக, தங்களுக்குள்ளேயே அனுபவித்துக் கொள்கிறார்கள்.
இறுதியாக,
இயேசுவின் பிறப்புச் செய்தி கேட்கின்ற எல்லாருக்கும் அமைதியாக அமையவில்லை, அமைதியைத் தரவில்லை. மாறாக, நல்ல
மனமும், எளிய மனமும் உடையவர்கள் மாத்திரமே அந்த அமைதியைப் பெற்றார்கள் என அறிகிறோம். எனவே,
இயேசுவின் பிறப்பு நமக்கு அமைதியைத் தர வேண்டும் என்றால்,
முதலில் அதற்கு நாம் எளிய மனத்தையோ அல்லது நல்ல உள்ளத்தையோ பெற்றவர்களாக இருக்க வேண்டும். நல் மனத்தால் விளைந்த அமைதி, தான்
பெற்றதைப் பிறருக்கு அளித்து மகிழ்வதில் ஆர்வம் காட்டும். எளிய மனத்தோடு இயேசுவைக் காணத் தேடுவோர் அவரை அமைதியில் கண்டு மகிழ்வர்.
பிறக்கும்
பாலன் நம்மில் பிறக்க அதன் வழி நாமும் புதிதாய் பிறக்க வாழ்த்துகள்!