news
சிறப்புக்கட்டுரை
இந்திய அரசமைப்பின் அடிப்படை!

ஒரு நாட்டின் அரசமைப்புச் சட்டம் என்பது அந்த நாட்டு மக்களின் வரலாற்றையும், எதிர்காலத்தை நோக்கியக் குறிக்கோள்களை மையமாக வைத்தும் உருவாக்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகளையும் சட்டங்களையும் உள்ளடக்கியதாகும். நம்முடைய இந்திய அரசமைப்புச் சட்டமும், நம் நாட்டு மக்கள் எந்தப் பாதையில் பயணிக்க வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகளையும் சட்டங்களையும் கொண்டுள்ளது என்ற சிறப்பைப் பெற்றது.

இத்தனை புகழ் மிகுந்த நம்முடைய அரசமைப்பை மாற்றுவதற்கான பல முயற்சிகளைத் தற்போதைய ஒன்றிய அரசு சில ஆண்டுகளாகத் தொடர்ந்து மேற்கொள்கின்றது. ஆனால். சனநாயகத்தை வலியுறுத்தும் அனைவரும் இதை மிகவும் கடுமையாக எதிர்க்கின்றனர். ஏனெனில், தற்போது நம்மிடத்தில் உள்ள  அரசியலமைப்புச் சட்டம் அனைத்துச் சாராருக்கான உரிமைகளை உள்ளடக்கிய கூறுகளையும் தன்னகத்தில் கொண்டுள்ளதாகப் பெரும்பான்மை மக்கள் நம்புகின்றனர். அத்துடன், அரசமைப்பை முழுமையாக மாற்றுவது என்பது நாட்டில் எண்ணற்றக் குழப்பங்களை ஏற்படுத்தும் என்ற அச்சமும் நம்மைச் சூழ்கின்றது.

இதுவரை நம்முடைய அரசமைப்புச் சட்டம் 106 முறை திருத்தப்பட்டுள்ளது. இருப்பினும், அதனுடைய அடிப்படை அமைப்பானது மாற்றத்திற்குரியது அல்ல என்று 1973-இல் கெசவனாந்த பாரதிக்கும் கேரள அரசுக்கும் நடந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. இத்தனை முக்கியத்துவம் பெற்ற நம் அரசமைப்பு உருவான விதத்தையும் அதன் சாராம்சங்களையும் அறிந்து கொள்வதே அதைப் பாதுகாப்பதற்கான வழியாகும்.

பிரித்தானிய ஆதிக்கத்தின் பிடியிலிருந்து ஆகஸ்டு 15, 1947-இல் விடுதலை பெற்ற இந்தியாவிற்கென்று தனித்த அதிகாரம் பெற்ற அரசமைப்புச் சட்டம் என்றும் எதுவும் இல்லை. பிரித்தானிய ஆட்சிக் கலத்தில் பின்பற்றப்பட்ட சட்டங்களை அடிப்படையாக வைத்து, இந்திய அரசமைப்பை உருவாக்குவதற்காகத் தற்போதைய பாராளுமன்றம் போல், பல்வேறு இன மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 389 பிரதிநிதிகள் அடங்கிய அரசமைப்புச் சபையானது கூட்டப்பட்டது. இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகிய டாக்டர் இராஜேந்திர பிரசாத் அவர்கள், அரசமைப்பு அமைப்பு சபையின் தலைவராகவும், டாக்டர் அம்பேத்கர் அவர்கள் சட்ட வரைவுக் குழுவின் தலைவராகவும் இந்தியாவின் அரசமைப்புச் சட்ட உருவாக்கத்தில் தங்களுடைய பங்களிப்பை அளித்தனர். அச்சமயத்தில் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் இந்தியாவின் பிரதமராகவும், சர்தார் வல்லபாய் பட்டேல் துணைப் பிரதமராகவும் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நவம்பர் 26, 1949 - இல் அரசமைப்புக் குழுவால் இந்திய அரசமைப்புச் சட்டமானது ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டம் ஜனவரி 26, 1950 -இல் நடைமுறைக்கு வந்தது. அந்நாளை நாம் குடியரசு தினமாகக் கொண்டாடுகின்றோம். இந்த ஆண்டு இந்தியத் தாய்த் திருநாடானது தன்னுடைய 76-வது குடியரசு தினத்தைக் கொண்டாடுகின்றது. இவ்வுலகிலேயே மிக நீளமான அரசமைப்பைக் கொண்ட நம் இந்திய நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின்  அனைத்துக் கூறுகளும் இந்திய அரசமைப்பின் முகவுரையில் மிகச் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளது. இதை வலியுறுத்தி என்.. பால்கிவாலா அவர்கள் முகவுரையை அரசமைப்புச் சட்டத்தின் அடையாள அட்டை என்று வர்ணிக்கின்றார். இந்திய அரசமைப்பின் சட்டத்தையும், அதை உருவாக்கியவர்களின் மனத்தையும் அதனுடைய முகவுரையின் வெளிச்சத்துடன் அணுகும் போது, அதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். எனவே, அரசமைப்பின் முகவுரையைப் புரிந்துகொள்ள முயற்சி செய்வோம்.

இந்திய மக்களாகிய நாம்என்ற சொல்லாடலுடன் தொடங்கும் முகவுரை மக்களாட்சி சார்ந்த இறையாண்மையைத் தெளிவாக ஏற்கின்றது. இந்திய அரசின் அதிகாரம் அனைத்தும் மக்களிடமிருந்து பிறக்கின்றது. இதை மையப்படுத்தும் விதமாக, “அரசமைப்பு அதன் வேர்களை, அதிகாரத்தை, இறையாண்மையை மக்களிடமிருந்து பெற வேண்டும்என்று டாக்டர் அம்பேத்கர் கூறுகின்றார். எனவே, நம்முடைய அரசமைப்புச் சட்டம் மக்களை முன்னிறுத்துகின்றது என்பதை இவ்வார்த்தைகள் தெளிவாக விளக்குகின்றன.

இதையடுத்து வரும் இறையாண்மை, சமநலச் சமுதாயம், சமயச்சார்பின்மை, மக்களாட்சி மற்றும் குடியரசு ஆகிய வார்த்தைகளில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அனைத்து அம்சங்களும் அடக்கப்பட்டு விட்டன. இதில் சமநலச் சமுதாயம் மற்றும் சமயச்சார்பின்மை என்ற வார்த்தைகள் அரசமைப்புச் சட்டம் எழுதப்பட்ட பொழுது முகவுரையில் இடம்பெறவில்லை. 1976-இல் கொண்டு வரப்பட்ட 42-வது சட்டத் திருத்தத்தில் இவ்விரு வார்த்தைகளும் முகவுரையில் சேர்க்கப்பட்டன.

இந்தியா இறையாண்மை (Sovereign) கொண்ட நாடு, இதன் ஆட்சி அதிகாரம் எந்த ஒரு வெளிநாட்டிடமிருந்தோ, அமைப்பிலிருந்தோ தரப்படுவதில்லை. விடுதலைக்கு முன்பு பிரிட்டானிய முடியின் பிரதிநிதியாக இந்தியாவில் வைஸ்ராய்கள் இருந்தார்கள். ஆனால், தற்போது இந்தியாவில் வைஸ்ராய் என்ற பதவியே கிடையாது. இந்த இடத்தை மக்களால் மறைமுகமாகத் தேர்ந்தெடுக்கப்படும் குடியரசுத் தலைவர் நிரப்புகின்றார். இவர் இந்தியாவின் முதல் குடிமகனாக மக்களைப் பிரதிபலிக்கின்றார். நாட்டின் இத்தனை உயர் மதிப்பு கொண்ட குடியரசுத் தலைவரை அழைக்காமல், நம்முடைய தற்போதைய நாடாளுமன்றக் கட்டடம் மே, 28 2024-இல் திறக்கப்பட்டது. இது இந்தியாவின் இறையாண்மைக்குக் குந்தகம் விளைவிக்கக் கூடிய செயல் என்றுதான் கருதப்பட வேண்டும்.

1976-இல் 42-வது திருத்தச் சட்டத்தின் மூலம் சமநலச் சமுதாயம் (Socialist) என்ற சொல் அரசமைப்பில் சேர்க்கப்படும் முன்பே, அரசின் இயக்கநெறிக் கோட்பாடுகள் வழியாக அரசமைப்பில் சமத்துவக் கொள்கை நிலவியது. அதுவரை மறைமுகமாக இருந்த கருத்துகள், தற்போது வெளிப்படையாகவும் சட்டப்பூர்வமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அனைவருக்கும் சரிநிகர் வாய்ப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு நம் அரசமைப்புச் சட்டம் வரையப்பட்டது. இந்தியா சனநாயக சமத்துவ முறையைப் பின்பற்றுகின்றது. இந்தியாவின் சமத்துவக் கொள்கை பொதுவுடைமை மற்றும் முதலாளித்துவம் ஆகியவற்றைச் சம அளவீட்டில் கொண்ட கலவையான பொருளாதாரத்தைக் கொண்டது. இந்தியாவின் வளங்கள் மற்றும் இன்ன பிற முக்கியமான துறைகளை அரசு தன் கையில் வைத்திருக்கும், மற்ற துறைகள் தனியாரின் வசம் இருக்கும். ஆனால், தற்போதைய காலகட்டத்தில் அரசுத் துறை நிர்வாகத்தில் வளர்ச்சி இல்லை என்று கூறி, அரசின் முக்கியத் துறைகள் தனியாருக்குத் தாரைவார்க்கப்படுகின்றன. இந்திய மக்கள் போக்குவரத்திற்கு அதிகம் பயன்படுத்தும் இரயில்வே துறையிலும் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் தனியார் நிறுவனங்கள் நுழைந்துவிட்டன. இந்தத் துரிதமான தனியார்மயமாக்கல், இந்தியாவைச் சமவுடைமைத் தத்துவத்திலிருந்து நகர்த்தி முழுமையான முதலாளித்துவத்தை நோக்கி நகர்த்திச் செல்லும் அபாயம் உள்ளது.

இந்திய சனநாயகச் சமத்துவத்தின் முக்கிய நோக்கம் ஏழ்மை, அறியாமை, நோய் மற்றும் சமவாய்ப்புக்கு எதிராக எழும் சிக்கல்களை முடிவுக்குக் கொண்டு வருவதாகும். இதைத்தான் நம் அரசமைப்பின் ஆசான்கள் நாம் பயணிக்க வேண்டிய பாதையாகக் காட்டுகின்றார்கள்.

இந்தியா ஒரு சமயச்சார்பற்ற நாடு. இந்தக் கருத்தை தற்போது மத்தியில் ஆளும் அரசின் முக்கியப் பொறுப்புகளில் உள்ளவர்கள் முழுமையாக ஏற்க மறுக்கின்றனர். 2015-இல் மத்திய செய்தி மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட விளம்பரத்தில் சமூகநலச் சமுதாயம் மற்றும் சமயச்சார்பின்மை ஆகிய வார்த்தைகள் தவிர்க்கப்பட்டன. சிறுபான்மை மக்களிடையே இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தியாவின் அரசியல் ஆட்சிமுறை எந்த ஒரு மதத்தைச் சார்ந்ததாகவும் இருக்கக்கூடாது என்பதில் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் உறுதியாக இருந்தார். இதனை உறுதிப்படுத்தும் வகையில், அரசமைப்பில் சுதந்திரம் குறித்த அடிப்படை உரிமைகளை உறுதி செய்யும் 25 முதல் 28-ஆம் கட்டுரைகளை நம்முடைய அரசமைப்பின் பிதாக்கள் இடம்பெறச் செய்தனர். இது இன்றைய பொழுதில் நம் நாட்டின் சமயச் சார்பின்மையைக் காக்கும் அரணாகத் திகழ்கின்றது.

இந்திய அரசின் முடிவுகள் எந்த ஒரு மதத்தைச் சார்ந்ததாகவும் இருக்கக்கூடாது. ஆனால், ஆளும் பா...வின் ஆட்சியில் இது நடைமுறையில் உள்ளதா? என்றால், அது மிகப்பெரிய கேள்விக் குறியாக இருக்கின்றது.

மேலும், இந்தியா ஒரு சனநாயகக் குடியரசு நாடாகும். நம் நாடு பாராளுமன்ற சனநாயகத்தைப் பின்பற்றுகின்றது. சனநாயகம் என்ற வார்த்தையைக் கேட்டவுடன் நம்முன் வந்து நிற்பதுமக்களால் மக்களுக்காக மக்களே செய்யும் ஆட்சிஎன்ற ஆபிரகாம் லிங்கனின் வார்த்தைகள்தாம். பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள் மக்களால் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதனால்தான் நம் நாட்டில் தேர்தலானது அதிக முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கின்றது.

மத்தியில் பாராளுமன்றமும், மாநிலத்தில் சட்டமன்றமும் அரசின் கொள்கைகளை வடிவமைக்கின்றன. எனவே, இந்தியாவில் கூட்டாட்சித் தத்துவம் நிலவுகின்றது. இருப்பினும், இன்றுவரை அது முழு வடிவை எட்டவில்லை. நம்முடைய கூட்டாட்சித் தத்துவம் அமெரிக்காவின் மாகாணக் கூட்டாட்சியைப் போலல்லாமல், சற்று சிக்கல் நிறைந்தது. இந்தக் கூட்டாட்சித் தத்துவத்தை முழுமையாக வேரறுக்கவும், மக்களின் சிந்தனைகளை மாநிலத்தை விடுத்து மத்தியை நோக்கித் திருப்பவும்ஒரே நாடு! ஒரே தேர்தல்!’ என்ற திட்டத்தை நம்முடைய ஆளும் அரசு கொண்டு வந்துள்ளது. இது நமது நாட்டின் சனநாயகப் பண்புகளையும் அதன் இயல்புகளையும் மட்டுப்படுத்துகின்றது.

நம்முடைய அரசமைப்பு ஆசான்கள் சமத்துவம், நீதி பரவலாக்கல், தனிமனித உரிமைகள், வழிபாட்டு உரிமைகள் ஆகியவற்றை நிலைநிறுத்துவதை மையமாகக் கொண்டு நம்முடைய அரசமைப்பை வடிவமைத்தனர். ஆனால், நம்முடைய ஆளும் அரசு அந்த அரசியலமைப்பின் அம்சங்களுக்குத் தொடர்ந்து ஊறு விளைவிக்கிறது. இறுதியாக, நம் அரசமைப்பையே மாற்ற எத்தனித்து விட்டது. எனவே, நாம் விழித்துக்கொள்ள வேண்டிய நேரமிது.

நம்முடைய வாக்குரிமை நமக்குத் தேர்தலின் போது மட்டும்தான்; ஆனால், நம்முடைய அரசமைப்பு அனுதினமும் நமது உரிமைகளைக் காத்திட நமக்குத் துணை நிற்கின்றது. அம்பேத்கரின் வார்த்தைகளின்படி அரசமைப்பைக் கற்று, அதைப் பிறருக்குக் கற்பித்து, அரசமைப்பையும், நம்முடைய உரிமைகளையும் காப்பதற்கு ஓரணியில் திரள்வோம்! வளமான சமதர்ம, சமயச் சார்பற்ற சனநாயகத்தைக் கட்டி எழுப்புவோம்!

news
சிறப்புக்கட்டுரை
அரசியல் சாசனம் - புதிய தொடர் (அரசியல் அறிவோம்!)

இருநூறு ஆண்டுகளுக்கு மேல் ஆங்கிலேய ஆதிக்கச் சக்தியால் அடிமைச் சக்கரத்தில் சுழன்ற இந்தியா, பலரது அகிம்சைவழித் தொடர் போராட்டங்கள், எதிர்ப்புகள் வழியாக 1947, ஆகஸ்டு 15-ஆம் நாள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கியது. மக்களே தங்கள் நாட்டை ஆளப்போகிறவர்களைத் தேர்வு செய்யும் அதிகாரம் பெற்றது - தன்னாட்சி நிலையை அடைந்தது. அப்பொழுது சுதந்திரம் பெற்றுத் தந்த தியாகிகளுக்கிடையேயும், நல்லுள்ளம் கொண்டோர் மனத்திலும் எழுந்த கேள்விகள் பற்பல. யார் இந்த நாட்டை ஆள்வது? அவர்களை எப்படித் தேர்வு செய்வது? அவர்களுக்குரிய அதிகாரங்கள், கடமைகள் என்னென்ன? மக்களுக்கும் அரசுக்கும் உள்ள உறவுகள், உரிமைகள், கடமைகள் என்ன? இந்திய மக்களிடையே நிலவும் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைச் சரிசெய்து, சமத்துவத் தன்மையை எப்படி நிலைநாட்டுவது? சிறுபான்மை மக்களின் நிலை என்ன? அவர்களை எவ்விதப் பாகுபாடுமின்றி பாதுகாப்பது எப்படி?

இதுபோன்ற பல கேள்விகளுக்குப் பதிலாக உதயமானதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்ட ஆவண நூலாகும். இது உலகிலேயே நீண்டு எழுதப்பட்ட சட்ட ஆவணமாகும். இது 22 பகுதிகளையும் 395 பிரிவுகளையும் உள்ளடக்கியது. டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் வார்த்தையில் கூற வேண்டுமென்றால், “இது வெறும் ஒரு சட்டப்பூர்வ ஆவணம் மட்டுமல்ல; மாறாக, ஒரு யுகத்தின் உணர்வையே உள்ளடக்கிய வாழ்க்கை வழிகாட்டியாகும்.”

இது இந்திய அரசியலுக்கு அடித்தளம் அமைத்துத் தந்திருக்கிறது. உலகில் வேறு எந்த ஓர் அரசியலமைப்பும் தராத பொதுநலன் மற்றும் சமூகச் சீரமைப்பிற்கான முக்கியத்துவத்தை இது தந்திருக்கிறது என்றால், இது எவ்வளவு முக்கியமான ஆவணம் என்பதை ஒவ்வொரு குடிமகளும் / குடிமகனும் புரிந்து கொள்ள வேண்டும்.

இதுஇந்தியாவின் ஆன்மாஎன்று அழைக்கப்படுகிறது. இது சட்டத்தின் ஆட்சியின் முறைப்படி ஆட்சி செய்ய  வேண்டுமென்று வலியுறுத்துகிறது. இந்தியாவின் முதல் குடிமகனாக/மகளாகக் கருதப்படும் குடியரசுத் தலைவரும், நாட்டின் பிரதமரும், மற்ற எல்லா அதிகாரத்திற்குள்ளவர்களும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்குக் கீழ்தான் வருகிறார்கள்; அதற்கு மேல் அல்ல. இதுதான் இந்திய நாட்டின் குடியாட்சி முறைக்கு முதுகெலும்பாகும். இது முறிக்கப்பட்டால், மாற்றப்பட்டால் நாடு சிதறும்.

இது 300-க்கும் மேற்பட்ட பல்வேறு தரப்பினரைச் சரிசமமாக உள்ளடக்கிய இந்திய அரசியல் சாசன உருவாக்கக் குழுவின், அயராத மூன்று ஆண்டுகள் கடின உழைப்பால், சனநாயக முறையில் கலந்துரையாடல் செய்து, வாக்குவாதம், வாக்கெடுப்பு நடத்தி, ஒப்புதல் பெற்று உருவாக்கப்பட்ட ஆவணம். இது முறைப்படி ஆழ்ந்து சிந்தித்து, அர்ப்பணிப்புணர்வுடன் உருவாக்கப்பட்ட ஆவணம். இக்குழுவின் அச்சாணியாகச் செயல்பட்டவர் டாக்டர். அம்பேத்கர் அவர்கள். இன்று அவரை அவமானப்படுத்துவது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையே அவமானப்படுத்துவதற்குச் சமம். இது 1949, நவம்பர் 26-ஆம் நாள் உருவாக்கப்பட்டு, 1950, சனவரி 24-ஆம் நாள் பாராளுமன்ற உறுப்பினர்களால் கையெழுத்திடப்பட்டு, 1950, சனவரி 26-ஆம் நாள் சட்டப்படி நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த நாளைத்தான் நாம் ஒவ்வோர் ஆண்டும் குடியரசு தினமாகக் கொண்டாடி வருகிறோம்.

2025, சனவரி 26, 75-வது குடியரசு தினமாகும். அப்படியென்றால், இந்திய அரசியல் சாசனம் ஏற்படுத்தப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவுபெற்ற தினமாகும்.

இந்திய மக்களாகிய நமக்கு இந்த ஆவணம் பற்றிய போதிய அடிப்படை அறிவு இருக்கிறதா? இது தருகின்ற சனநாயக விழுமியங்கள் சாமானியர்கள், சமூகத்தின் விளிம்பில் தள்ளப்பட்டிருக்கும் பெண்கள், குழந்தைகள், தலித் மற்றும் பழங்குடி மக்களைச் சென்றிருக்கிறதா என்றால்... சென்றடையவில்லை என்பதுதான் சற்றுக் கடினமான உண்மை நிலையாகும். இதனைத் தெரிந்துகொள்வது என்பது இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.

இந்திய அரசியலமைப்பின் ஆன்மாவாக / மையமாகத் திகழ்வது அதன் முகவுரையாகும். இதுதான் இந்தியா எந்த இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும்? எப்படிப் பயணிக்க வேண்டும்? என்பதை வரையறுக்கிறது. இப்பயணத்தில் இந்தியக் குடிமக்கள் அனைவரும் இந்தியாவின் கனவான இறையாண்மை, சனநாயகம், குடியாட்சி, சோசலிசம், சமயச்சார்பின்மை மதிப்புகளை உள்வாங்கி சமூக நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவக் கோட்பாடுகளை வாழ்வாக்க வேண்டுமென அழைக்கிறது. இக்கட்டுரையின் மூலம் குடியாட்சி என்றால் என்ன? அது எப்படி இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளது? இவை பற்றிய சில அரசியல் சிந்தனைத் துளிகளை வழங்க முயற்சிக்கிறேன்.

அரசியல் சாசனம் என்றால் என்ன?

ஓர் அமைப்பு அரசு நிறுவப்பட வேண்டிய முறைகளைப் பற்றியும், அதன் அதிகாரங்களைப் பற்றியும், குடிமக்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றியும், அரசுக்கும் குடிமக்களுக்குமுள்ள உறவுகள் மற்றும் இணைந்த செயல்பாடுகள் பற்றியும் விளக்கிக் கூறும் சட்டம் மற்றும் வழிகாட்டும் நெறிமுறை ஆவணமாகும். இதுதான் அந்நாட்டில் உருவாக்கப்படும் மற்ற சட்டங்களுக்கெல்லாம் அடித்தளமாகவும் மையமாகவும் அமைகிறது.

அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு நேர்மாறான சட்டத்தை இயற்ற முடியாது. இயற்றினாலும் சட்டமாகாது. இதைக் கண்காணிக்க வேண்டிய தலையாயப் பொறுப்பு நீதிமன்றத்திற்கும் குடிமக்களுக்கும் உள்ளது. அரசு சமயத்தின் அடிப்படையில் செயல்படக் கூடாது என்பது இந்திய அரசியல் அமைப்புச் சட்டம். அதன்படி செயல்பட்டால் அதனை நெறிப்படுத்தும் பொறுப்பு மக்களுக்கும் நீதிமன்றத்திற்கும் உண்டு.

(தொடரும்)

news
சிறப்புக்கட்டுரை
இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவை (CCBI)-இன் ‘மறைத்தூதுப் பணி (MISSION) மேய்ப்புப் பணித்திட்டம்

சென்ற இதழ் தொடர்ச்சி

தமிழ்நாடு கத்தோலிக்கத் திரு அவைக்கான  வழிகாட்டு நெறிமுறை விளக்கக் கூட்டம்

வினா 1: நமது தமிழ் நாடு ஆயர் பேரவைக்குமறைத்தூதுப் பணி 2033’ மேய்ப்புப்பணித் திட்டத்திற்கு இணையான, நமது பொதுநிலை இறைமக்கள், துறவியர், அருள்பணியாளர்கள், ஆயர்களை உள்ளடக்கிய ஒரு மேய்ப்புப் பணித் திட்டம் தேவையா? எவ்விதங்களில் அத்தகைய திட்டத்தை முன்னெடுக்கப் போகிறோம்?

தமிழ்நாடு திரு அவைக்கு இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் மேய்ப்புப் பணித் திட்டத்தோடு இணைந்த ஒரு திட்டம் கண்டிப்பாகத் தேவை. முன்னெடுக்க வேண்டிய வழிமுறைகள்:

தற்போது மாநில, மறைமாவட்டப் பணிக் குழுக்கள் செயல்படுத்தும் மேய்ப்புப்பணித் திட்டங்களைத் திருத்தந்தையின் கூட்டொருங்கியக்கத் திரு அவை வழிகாட்டுதல்களின் பார்வையில் மறுவாசிப்பு, மறு ஆய்வு செய்வதும், தேவைப்படின் மறு சீரமைப்பு செய்வதும் முக்கியமான ஒன்று.

செயல்பாடுகளின் ஒவ்வொரு நிலையையும் கண்காணித்து (Monitoring), திட்டம் சரியான பாதையில் செல்வதை உறுதிசெய்வதும், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் திறனாய்வு செய்து, நிறை-குறைகளைக் கண்டுணர்ந்து, தேவையான மாற்றங்களைச் செய்வது, செயல்பாடுகளைத் தொடர்வது.

மறைமாவட்ட, மாநிலத் திரு அவைகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அதனடிப்படையில் குறுகிய / நீண்டகால திட்டங்களைத் தீட்டுவது.

மாநில அளவில் பணிக் குழுக்களுக்கான திட்டமிடுதல், ஒருங்கிணைப்புக் குழுவை பொதுநிலை இறைமக்கள், இருபால் துறவிகள், மறைமாவட்டக் குருக்கள், ஆயர்களைக் கொண்டு உருவாக்க வேண்டும்.

ஒருங்கிணைப்பாளர்களின் ஒருங்கிணைப்பாளர் (Coordinator of Coor
-dinators
) என்ற அமைப்பும் செயல்முறைகளும், மாநில அளவிலும், மறைமாவட்ட அளவிலும் தேவை.

வினா 2: நாம் நமது பணிக் குழுக்களோடும் மறைமாவட்டங்களோடும் ஒத்த கருத்துடைய அமைப்புகளோடுமுள்ள ஒருங்கிணைப்புப் பணியை எவ்விதம் வலுப்படுத்தலாம்?

குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பணிக் குழுக்களுக்கு இடையிலும், ஒவ்வொரு பணிக்குழுவிலும் தொடர் கூடுகைகள் மிக மிக அவசியம்.

பணிக் குழுக்களின் அனைத்துச் செயல்பாடுகளிலும் துறவற சபை அருள்பணியாளர்கள், அருள்கன்னியர்கள் இவர்களை ஈடுபடுத்த வேண்டும். மேலும், துறவற சபைகளின் மேய்ப்புப் பணித் திட்டங்கள் மறைமாநில அருள்பணித் திட்டங்களோடு இணைந்தப்படி அமைத்துக்கொள்வது தேவை.

அனைவரிடையேயும் உறவு நிலை சமத்துவத்தையும் (Sense of Equality), உரிமை நிலை சமத்துவத்தையும் (Sense of Equal Rights) ஏற்படுத்திக்கொள்வது தேவை.

வினா 3: தமிழ்நாடு ஆயர் பேரவை வரும் பத்து ஆண்டுகளில் முன்னிலைப்படுத்த வேண்டிய ஆக்கப்பூர்வச் செயல்பாடுகள் யாவை?

தற்போது செயல்படுத்தி வரும் தலைமைத்துவப் பயிற்சிகள், களப்பணிப் பயிற்சிகளின் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதும், பயிற்சிகள் இல்லாத இடங்களில் புதிதாகப் பயிற்சிகள் ஆரம்பிப்பதற்கான திட்டங்களைத் தீட்டி செயல்படுத்துவதும்.

பழையன கழிதலும் புதியன புகுதலும்என்பதற்கேற்ப புதிய சிந்தனை, புதிய உறுப்பினர்கள், புதிய ஆற்றல்கள் உருவாக்கப்பட வேண்டும். இதற்கு உலகியல் துறைசார் மற்றும் பணிக்குழு சார்ந்த வல்லுநர்கள், நெறியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட வேண்டும்.

மறைமாவட்ட அளவில் சில சிறப்புப் பணிக் குழுக்களுக்கு முன்னுரிமை தருவதும் ஊக்கப்படுத்துவதும் வேண்டும் (.கா: சுற்றுச்சூழல் பணிக்குழு, சிறைப்பணிக்குழு, மாற்றுத்திறனாளிகள் பணிக்குழு, திருநங்கையருக்கான மேய்ப்புப் பணித் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு செயல்படுத்துவது காலத்தின் கட்டாயம்). அவர்களுக்கு உரிய, உயரிய பணிகளில் பணி அமர்த்துவது தகுதியும் நீதியும் ஆகும்.

தொழில் நுட்பங்களை மேய்ப்புப் பணிகளுக்குப் பயன்படுத்துவது, பயிற்சிகளை அளிப்பது மிக மிகத் தேவை.

வினா 4: தமிழ்நாடு ஆயர் பேரவை இந்திய ஆயர் பேரவைக்கு அளிக்கக்கூடிய சிறப்பான பங்களிப்புகள் யாவை?

பணிக்குழுசார் வல்லுநர்களைக் கொண்ட குழு அமைத்து, தமிழ்நாடு திரு அவையிலிருந்து தேசிய பணிக்குழுவை வலுப்படுத்துவதற்கான கருத்தாளர்களைத் தயார்படுத்தி அனுப்பலாம்.

பணிக்குழுக்களின் வளர்ச்சிப் பணிகள் தொடர்புடைய செயல்பாடுகளுக்காக இந்திய ஆயர் பேரவை தமிழ்நாடு திரு அவையை அழைப்பது, நம்மிடையே உள்ள கட்டுமான வளங்களை அளிப்பது.

புதிய முறைகளில் அனைவரையும் ஈர்க்கும்படி நற்செய்தி அறிவிப்பை உருவாக்கி ஊக்குவிப்பது, அவைகளைத் தேசிய அளவில் இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை மூலம் கொண்டு செல்வது.

பொது அமர்வில் எழுந்த முக்கியக் கருத்துகள் மற்றும் உடனடிச் செயல்பாட்டுக்கான தீர்மானங்கள் அனைவரின் சம்மதத்தோடு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி...

மறைத்தூதுப் பணி 2033’ மேய்ப்புப்பணித் திட்டத்தை நம் தமிழ்நாடு திரு அவையின் சூழலுக்கு ஏற்ப தன்னுருவாக்கம் (Personalize) செய்வது.

வெற்றிகரமாகச் செய்து கொண்டிருக்கும் பிற மாநிலங்களின் மேய்ப்புப்பணித் திட்டங்களைத் தழுவி, தமிழ்நாடு திரு அவை தனது மேய்ப்புப் பணித் திட்டத்தை உருவாக்குவது.

  மறைத்தூதுப் பணி 2033’ என்கிற அனைத்து பணிக்குழுக்களுக்குமான மேய்ப்புப்பணித் திட்டத்தை அந்தந்தப் பணிக்குழு வாரியாகப் பிரித்துக் கொடுத்து செயலாக்கம் பெறச் செய்வது.

மேய்ப்புப் பணிக்கான ஆர்வத்தை ஆயர்கள், அவரவர் மறைமாவட்டப் பணிக்குழுச் செயலர்களுக்கும், குருக்களுக்கும் ஊட்டி வளர்ப்பது காலத்தின் கட்டாயம்.

இதன் அடிப்படையில் வரும் 2025, பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் அனைத்து மாநில பணிக்குழுக்களின் செயலர்கள் அனைத்து மறைமாவட்டங்களிலும், தான் சார்ந்த அந்தந்த மறைமாவட்ட பணிக்குழுக்களின் செயலர்களோடு திட்டமிடுதல், பரவலாக்கம் குறித்த கூடுகை நடத்தப்பட வேண்டும் என்றும் ஒரே மனதாக முடிவு செய்யப்பட்டது. அதைக் குறித்து ஒரு செயல்பாட்டு அறிக்கை தமிழ்நாடு ஆயர் பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

இவ்வாறு வரும் ஆண்டுகளில் இந்த மேய்ப்புப் பணித்திட்டத்தைச் சரியான விதத்தில் செயல்படுத்த நம் அனைவரின் பங்கேற்பும் பங்களிப்பும் மிகவும் இன்றியமையாததாகும். திரு அவையின் எதிர்நோக்கின் திருப்பயணிகளாக, புதியதாய் புலர்ந்துள்ள இந்த யூபிலி ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நாம், நமது இலக்கை நோக்கிய தெளிவான மேய்ப்புப்பணித் திட்டங்களோடு இறையாட்சியின் கருவிகளாகச் செயல்படுவோம். இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவை தனதுமறைத்தூதுப் பணி 2033’ மேய்ப்புப் பணித்திட்டத்தின் வழியாக மக்களின் மனங்களில் விதைத்த விதைகள் புதிய உத்வேகத்தோடு கிளர்ந்து முளைத்தெழுந்து, ஒரு சில முப்பதும், ஒரு சில அறுபதும், ஒரு சில நூறுமாகப் பலன் கொடுத்து, 2033-ஆம் ஆண்டில் நமது மீட்பின் மாபெரும் யூபிலியைக் கொண்டாடும்போது, குறிப்பிடும்படியான மாற்றத்தைத் தனி மனிதனிலும், பங்கு அளவிலும், மறைமாவட்ட, மாநிலத் திரு அவையிலும் ஏற்படுத்தியிருப்பதை நாம் கண்கூடாய்க் காண முடியும். நாம் முன்னெடுத்த இச்செயல்பாடுகள் வழியாக, ஒன்றியத் திரு அவையின் கூட்டொருங்கியக்கத்திற்குச் சான்றாகவும், கிறித்தவம் ஒரே திருஅவையாக நம் நாட்டில் வளர்ச்சி காணவும், ஒவ்வொருவரும் இறையாட்சியில் பொறுப்புள்ள உறுப்பினராகவும், தமிழ்த் திரு அவைத் தழைத்தோங்கவும், இறைவன் தம் ஒரே மகன் இயேசு கிறிஸ்துவின் வழியாகத் தூய ஆவியாரின் ஆற்றலில் நம்மை நடத்திச் செல்லட்டும்.

- திரு. வில்லியம், திரு. ஜூட் இவர்களின் உதவியோடு 

அருள்பணி. பிரான்சிஸ் ஜோசப்

news
சிறப்புக்கட்டுரை
அரங்கேறும் அரசியல் சூழ்ச்சிகள்

அரசியல் சிந்தனையின் அவையச் சிதைவு; தலைவர்களின் அறிவுசார் வறட்சி; நவீன சிந்தனைக்கு ஏற்பட்ட துயர முடிவு; அரசியலில் நேர்மையும் நெறியும் குறைந்துவிட்டது. உரையாடல் சுருங்கிப்போய்விட்டது. தொலைநோக்குப் பார்வை நலிந்துவிட்டது  (யோகேந்திர யாதவ்ஆனந்த விகடனில்எழுதிய கட்டுரையிலிருந்து).

இந்திய ஒற்றுமை இயக்கத்தின் முன்னோடிகளுள் ஒருவரான திரு. யோகேந்திர யாதவ் அவர்களின் கருத்தில் தொனிக்கும் இவ்வார்த்தைகள் எவையுமே மிகையானவை அல்ல; இன்றைய அரசியல் போக்கை அலசிப் பார்ப்போர் எவருக்கும் இவ்வார்த்தைகள் வியப்பைத் தராது என்பதே உண்மை.

அரசியல் களங்களில் எப்போதுமே நேர்மையும் நாணயமும் முழுமையாக இடம்பெறவில்லை எனினும், நிலவும் இன்றைய அரசியல் போக்கின் ஒவ்வொரு பகுதியும் யாதவ் அவர்களின் கூற்றை நியாயப்படுத்துகின்றன. குறிப்பாக, ஆளும் அரசியலாரின் நேர்மையற்ற, நாணயமற்ற தகிடுதத்தங்கள் நேர்மை வேண்டிநிற்கும் குடிமக்களை அரசியல் அணுகலிலிருந்தும், இவ்வரசியல் மேற்கொள்ளும் சமூகத்திலிருந்தும் எட்டி நிற்கவே செய்து விடுகிறது. அரசியலாரின், குறிப்பாக ஆளும் அரசியலாரின் அனைத்து அரசியல் வடிவங்களும் சூதும் வஞ்சமும் பொய்யும் நிறைந்தே காணப்பெறுகின்றன. வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு பார்க்கின்ற ஆற்றல் படைத்தோர் இப்போக்கில் காணும் பொய்மையை உணர்ந்தறிய முடியும். இவ்வாய்ப்பினைப் பெறாத புதிய சமூகம், உண்மை அறியும் வாய்ப்பினை எப்படிப் பெறும்?

தி இந்துநாளிதழில் (12, டிசம்பர் 2024) மேற்கண்ட தலைப்பு பொருந்துமாறு ஒரு செய்தி வெளிவந்துள்ளது. ஆளுநர் இரவி அவர்கள் குமரி மாவட்டத்தில்அய்யா வழி ஆய்வு மையம்ஒன்றைத் துவங்கி வைக்கிறார். இந்த அய்யா அவர்கள், தான் சார்ந்த சமயத்தை விட்டு விலகாமல், உள்ளே இருந்து புரட்சி செய்தவர். அன்றைய திரு விதாங்கூர் சமஸ்தானத்தின்மேல்சாதிஆதிக்கத்தையும், வணங்கும் கடவுளைக்கூட சாதிய மேலாதிக்கத்தார் தமதாக்கிக் கொண்டதையும், இந்து மதத்திற்குள்ளே இருந்து கொண்டு எதிர்த்துக் கலகம் செய்தவர்அய்யாஎன்று அழைக்கப்பெறும் முத்துக்குட்டி.

இவ்வாறு கடவுளரைக்கூட சமநிலையில் வழிபட மறுத்த சனாதனத்தை வெறுத்தொதுக்கிய அய்யா அவர்களைப் பற்றிய ஆய்வகத்தை, முழுமையாகச் சனாதனத்தை நம்பும் ஒருவரை வைத்துத் தொடக்க விழா நிகழ்த்துவது வேடிக்கையல்லவா?! அவர் சொல்கிறார்:

பிரதமர் மோடி போன்று, இந்நாடு பற்றியிருக்கும் சனாதனத் தர்மம் பற்றித் தெளிவான புரிதல் உள்ளவர் எவரும் இல்லை. பிரதமர் மோடி அவர்கள் இந்நாட்டின் 140 கோடி மக்களையும் எந்தவிதப் பாகுபாடுமின்றி வழிநடத்துகிறார். மோடி அவர்கள் அய்யாவின் உள்ளடங்கிய கொள்கையால் ஈர்க்கப்பட்டவர். சனாதனத் தர்மம் என்பது அனைவரையும் சமமாகப் போற்றுவது.”

சனாதனத்தை ஆளுநர் இரவி நம்பலாம்; பிரதமர் மோடி நம்பலாம். ஆனால், அய்யா வைகுண்டர் ஏற்றுக்கொண்டவரா? இரவி எப்படி வேண்டுமானாலும் புரட்டலாம். ஆனால், இம்மனிதரை எந்த அடிப்படையில் விழா நடத்துவோர் அழைத்தனர் என்றுதான் நமக்குப் புரியவில்லை. இதில் ஏதேனும் சூதும் இருக்கலாமோ?

சூது கவ்விய புது அரசியல் வரவு

அண்மையில் நிகழ்ந்தேறிய அம்பேத்கர் பற்றிய நூல் வெளியீடு தொடர்பாக எழுந்த சர்ச்சையில் புகுந்த சூது எனும் கேட்டைப் பலர் புரிந்திருக்கலாம்; பலர் புரிய மறுக்கலாம். ஆனால், இந்நிகழ்வுகளில் புகுந்து நாடகமாடிய சூது என்னும் கயமையை நாம் புரிந்துகொள்ளல் இன்றைய கட்டாயத் தேவை.

மதச்சார்பற்றக் கூட்டணியுள் வலுவான ஆளுமையாக இயங்கும் திருமாவளவனின் உறுதியான நிலைப்பாட்டைத் தகர்க்கும் அளவில் நடந்த வஞ்சகத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் கட்சிகள் பல தம் பகைமையை மறந்து ஒன்றுபட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தையும், அதன் தலைமையிலான அரசையும் ஆதரித்து வருவதை நாம் நன்கறிவோம். சமீபத்தில் உருவாகியுள்ள ஒரு தாக்குதல் அணியில் புதிதாகச் சேர்ந்துள்ளவர் நடிகர் விஜய். பாசிசத்தைப் பாயாசமாகச் சித்தரித்தவர் இவர். இக்கூற்றோடு தி.மு.. அரசையும் தன் முதல் மாநாட்டில் சாடிச் சென்றவர். பல நாள்களாகக் காணாமல் போனவர் தனக்கு அறிமுகமே இல்லாத அல்லது இவரின் எந்த நிலையிலும் அறியத் தேவையில்லாத ஓர் உன்னதமான அரிய மனிதர் பற்றிய நூல் ஒன்றை வெளியிட அழைக்கப்பெறுகிறார். என்ன வேடிக்கை இது? விடுதலைச் சிறுத்தைகளின் திருமாவளவனைச் சரியாக உள்ளிழுத்து, கூட்டணியைச் சிதைக்க முயன்ற சதி எப்படியோ உடைந்த பின்பும் ஏற்கெனவே திட்டமிட்ட சதி உயிர்ப்புக்குள்ளாக சதியின் வழி தொடர்ந்தது. அம்பேத்கர் பணியிலும் வாழ்விலும் அவர்தம் அர்ப்பணத்திலும் சிறிதும் தொடர்பற்ற ஒரு நடிகரிடம் நூல் வெளியிடும் வாய்ப்பு வழங்கப்பெறுகிறது. இவர் கூட்டிய முதல் மாநாட்டின் முகப்பில் இவர் வைத்த அம்பேத்கர் படம் ஒன்றே அம்பேத்கருக்கும் இவருக்கும் உள்ள தொடர்பு.

இம்மேடையை உருவாக்கி, நூல் வெளியீட்டை நடத்தியவிகடன்பிரசுரத்தின் நம்பகத்தன்மை மற்றும் நேர்மை கேள்விக்குள்ளாகிறது. அம்பேத்கர் நூலை வெளியிடத் தெரிவு செய்யப்பட்ட மனிதர், அதற்கான அரங்கு எல்லாம் வணிக நோக்காய் இருப்பினும், இதன் பின்னிருக்கும் அரசியல் சூது மற்றும் வஞ்சத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆயினும், ‘ஆனந்த விகடன்என்னும் வணிக ஊடகம் விஜய் என்னும் நடிகரை வைத்து ஆடிய விஷம நாடகத்தை மக்கள் அறிந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு வருவோம்... இந்நிகழ்வில் அம்பேத்கர் பேரன் கலந்துகொள்கிறார். அம்பேத்கரின் சித்தாந்தத்தில் உறுதியான நம்பிக்கை கொண்ட நீதியரசர் சந்துரு கலந்துகொள்கிறார். சந்துரு தன் உரையில் அம்பேத்கரைப் பற்றிப் பேசிய விசயங்கள் இன்னும் பொதுவெளிக்குப் பெரிதாக வரவில்லை. நடிகர் விஜய் பேசும் முன்னரே சந்துரு பேசி முடித்த நிலையில், விஜய் தனது நீண்ட உரையில் என்ன பேசினார்? சந்துரு அவர்கள் அம்பேத்கரின் அர்ப்பணத்தை, அவர் உருவாக்கிய அரசமைப்புச் சட்டத்தை, அவர் சந்தித்த சவால்களை எடுத்துக்காட்டிவிட்டு, ஒன்றியத்தை வழிநடத்தும் இன்றைய ஆட்சியாளர் என்ன செய்கின்றனர் என்று கேள்விக்குட்படுத்தினார். அம்பேத்கர் பேரன் இன்று பிணையில் இருக்கிறார். ‘உபாஎன்ற கொடிய கறுப்புச் சட்டம் மூலம் அருள்தந்தை ஸ்டேன் சுவாமி கொலை செய்யப்பட்ட நிலை பற்றியெல்லாம் அவர் பேசினார். இராகுல் காந்தி செல்லும் இடமெல்லாம் அரசியல் அமைப்புச் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு மக்களிடம் காட்டி வருவதன் அவசியத்தை எடுத்துக்காட்டினார்.

நடிகர் விஜய் அவர்களுக்கு சந்துரு முன்வைத்த விசயங்கள் புரியாமல் இருக்க வாய்ப்புண்டு. அதனை நாம் புரிந்துகொள்கிறோம். அம்பேத்கரைப் பற்றிய நூல் ஒன்றினை வெளியிடத் தகுதி பெற்றவரா இவர்? எத்தகுதியும் அற்ற ஒருவர் அம்பேத்கர் பற்றி என்ன பேசினார் என்பது இங்கு முக்கியமல்ல. ஆனால், அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கூட்டணியை உடைக்கும் பணியைச் செய்த சதிக் கூட்டத்துள் இவரும் இணைந்துகொண்டதுதான் பெரிய அவலம்.

திருமா கூட்டணியின் அழுத்தத்தால் விழாவில் கலந்துகொள்ளவில்லைஎன்றும், ‘அவர் எங்கள் நினைவில்தான் இருப்பார். கூட்டணி பலம் மைனஸ் ஆகிவிடும்என்ற பேச்செல்லாம் யாரைக் குறி வைத்து? அரசியல் ஞானம் திரு. விஜய் அவர்களுக்கு இருக்கிறதோ இல்லையோ... அரசியல் சூதாடிகள் வலையில் அருமையாக விழுந்துள்ளார் விஜய் அவர்கள். நடந்த அந்த நூல் வெளியீட்டு விழாவின் ஒவ்வோர் அசைவிலும் ஒரு சதியின் நிழல் இருந்தது என்பதே உண்மை.

ஊழலே பிரச்சினையாம்!

விழாவில் பேசிய விடுதலைச் சிறுத்தைகளின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ச்சுனா அவர்களும் விஜய் கூட்டணியில் புதிய அவதாரம் எடுத்து சதிக்கூட்டத்துள் இணைந்துள்ளார். ஆளும் திராவிட முன்னேற்றக் கழக அரசு ஊழல் நிறைந்த அரசு என்று வசைபாடினார் இவர். ஆளும் அரசுகள் எவையாக இருந்தாலும், அவை ஊழலற்ற அரசாக இருக்க வேண்டுமென்பதில் இரு வேறு கருத்தில்லை. சமூக நீதியை உள்ளடக்கமாகக் கொண்ட இந்தத்திராவிட மாடல் அரசுஊழல் கறைபடாமல் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் ஆவல். ஆனால், ஊழல் எனும் நோய் சனநாயகத்தின் பெயரால் அமைந்து வரும் அனைத்து அரசுகளின் பொது இயல்பாய் இருக்க, திராவிட முன்னேற்றக் கழக அரசு மட்டுமே ஊழல் கறை படிந்த அரசாகச் செயல்படுவதாகக் குறிவைத்துக் குற்றம் சாட்டுதலில் ஒரு சூது இருப்பதையே அனுமானிக்க முடிகிறது.

திராவிட முன்னேற்றக் கழகம் இணைந்துள்ள கூட்டணி ஒரு கொள்கைக் கூட்டணி. ஆனால், இந்தியாவில் வளர்ந்து ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் மதவாத சக்திகளின் அணியோ சனநாயகத்தையும், சனநாயகம் காக்க உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்தையும் உருக்குலைக்கின்ற வகையில் உருவான கூட்டணி. இக்கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகளும் குறைந்தபட்சபுரிதலோடுஇணைந்தவைதாம்.

திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் தலைமையேற்றுள்ள தி.மு..வைச் சாடும் எதிர்ச் சக்திகள் இக்கூட்டணியின் பலத்தைக் குலைக்கும் நோக்கிலேயே இன்று தீவிரமாகச் செயல்படுகின்றன. இச்சூழ்ச்சியின் ஒரு பகுதியாகவே திருமாவை வெளியே கொணர்வதற்கான முயற்சி! இச்சூதாட்டத்திற்கு திருமா பங்காளியாகவில்லை என்பதுதான் இவர்களுக்கு ஏமாற்றம்.

முந்தைய மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுமீது ஊழல் புகாரைச் சுமத்தி, தலைநகரில் பெரிய அளவில் போராட்டம் நடத்தியவர் அன்னா ஹசாரே. ஊழல் புகார்களை மட்டுமே முன்வைத்து போராட்டம் நடத்திய இவர் வகுப்புவாதம் பற்றியோ, பிரிவினைவாதம் பற்றியோ, மதவாதிகள் பேசிய பொய்த்தேசியம் பற்றியோ கவலைப்படவில்லை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கவிழ வேண்டும் என்ற மதவாதிகளின் ஒரே கனவுக்கு இந்ததியாகிதுணை போனார். ஊழலை எதிர்த்த போராளி அன்னா ஹசாரே இன்று காணாமற்போனார். பத்தாண்டு கால மோடி அரசு ஊழலற்ற அரசு என்று இவரால் இன்று கூற முடியுமா?

நாடு முழுவதும் ஒரு சித்தாந்தப் போரை முன்னெடுக்க வேண்டிய கட்டாயச் சூழல் இன்று. சனநாயகமும் சமயச் சார்பின்மையும் காக்கப்பெற வேண்டிய நிலையில், திட்டம் போட்டு நடத்தப்படும் சதிகளை, இச்சதிகளின் பின்னிற்கும் வஞ்சகர்களை எப்போது புரிந்துகொள்ளப் போகிறோம்?

ஆர்.எஸ்.எஸ். துவங்கிய காலம் முதல், இதன் கிளை அமைப்புகளாகிய அனைத்துப் பரிவாரங்களும் ஒரு சூழ்ச்சியின் அடிப்படையிலேயே இயங்கி வருகின்றன. இறுதியாக, தாம் கட்டமைக்க விரும்புகின்ற இந்து இராஷ்டிராவுக்கான படிக்கற்களை வெகு தந்திரமாகக் கட்டி வருகின்றனர். பாசிஸ்டுகள் சனநாயகத்தை நம்பாதவர்கள்; ஆனால், பாசிசத்தின் வெற்றி சனநாயக வழிதான் நடந்திருக்கிறது என்பதே வரலாறு. இன்றைய அரசு முன்னெடுத்த அனைத்துத் திட்டங்களும் இந்து இராஷ்டிரத்தை முன்வைத்தே செய்யப்படுகின்றன. இராமர் கோவிலுக்கான முன்னெடுப்பின் வெற்றி, காஷ்மீரின் தனித்துவம் அழிப்பு, உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீடு, புதிய தேசியக் கல்விக்கொள்கை என்பனவெல்லாம் இந்து இராஷ்டிரத்தை நியாயப்படுத்துவன. ‘ஒரே தேசம், ஒரே தேர்தல், ஒரே கலாச்சாரம்என்பன இவர்களின் இலக்கு. ஒற்றைமயம் என்பது இந்து இராஷ்டிரத்தின் இறுதி இலக்கு. இவ்விலக்கை நாடாளுமன்ற சனநாயகம் மூலம் வென்றெடுக்க மதவாதிகள் எடுத்து வைக்கும் அடியை நாம் மறந்துவிடக்கூடாது.

1991-இல் கொண்டு வந்த ஆலயங்களின் பாதுகாப்புச் சட்டம், 1947-ஆம் ஆண்டில் வழிபாட்டுத் தலங்கள் எப்படி இருந்தனவோ, யாருக்கானதாக இருந்தனவோ அவைகளைத் தோண்டியெடுத்து ஆய்வு செய்யக்கூடாது என்ற விதி இருந்தபோதும், பாபர் மசூதி இந்துகளுக்கானதாக உச்ச நீதிமன்றத்திற்குக் கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் மூலம் மீறப்பட்ட நிலையில், அவ்விடத்தில் இராமருக்கான பெரிய ஆலயம் உருவாகியது. இவ்விதி தொடர்ந்து மீறப்பட்டு வரும் நிலையில், இன்று .பி.யின் சம்பலில் மசூதியில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. காசியின் கான்வாப்பில் மசூதியின் பாதிப்பகுதியில் இந்துகள் வழிபட அனுமதிக்கப்படுகின்றனர்.

இவையெல்லாம் எங்கோ நடக்கும் சிறு சிறு நிகழ்வுகள் அல்ல; அனைத்து நிகழ்வுகளும் ஒரே நோக்கில் பின்னப்பட்ட சூழ்ச்சிகளே ஆகும்.

news
சிறப்புக்கட்டுரை
இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவை (CCBI)-இன் ‘மறைத்தூதுப் பணி (MISSION) 2033’

மேய்ப்புப் பணித்திட்டம்

தமிழ்நாடு கத்தோலிக்கத் திரு அவைக்கான வழிகாட்டு நெறிமுறை விளக்கக் கூட்டம்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அதிகமாக வலியுறுத்திக் கூறும் கூட்டொருங்கியக்கச் செயல்முறைகளின் விளைவுகளை நடைமுறைக்குக் கொண்டு வரும் திட்டத்தை உணர்ந்துகொள்ள இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவை (Conference of the Catholic Bishops of India) “2033-இல் கடவுள் திரு அவையை எவ்வாறு இருக்க அழைக்கிறார்?” (Where is God calling the church to be by 2033) என்ற வினாவிற்கு விடையளிக்கும் விதமாக, 34-வது அகில இந்திய ஆயர் பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஒரு மேய்ப்புப் பணித்திட்டச் செயல்முறையில் தீவிரமாகக் களமிறங்கத் தீர்மானித்தது. இதன் அடிப்படையில் இந்தியா முழுவதிலும் அதற்கான களப்பயிற்சிகளும் களப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு, பலருடைய கருத்துகளை உள்வாங்கி, அவைகளை ஒன்றிணைத்துமறைத்தூது பணி 2033’ (MISSION-2033) என்ற இலக்கை முன்வைத்து இந்தியா முழுவதற்குமான மேய்ப்புப் பணித்திட்டக் கையேடு ஒன்று உருவானது.

இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவை தனதுமறைத்தூதுப் பணி 2033’ மேய்ப்புப் பணித்திட்டக் கையேடு அதன் தலைவர் கர்தினால் பிலிப் நேரி அவர்களால் 2024, செப்டம்பர் 11-ஆம் தேதியன்று வெளியிட்டது. ‘மறைத்தூதுப் பணி 2033’ என்று தலைப்பிடப்பட்ட இறுதி வடிவ மேய்ப்புப் பணித் திட்டம் ஆவியானவரில் மனம் திறந்த உரையாடல்களின் (Spiritual Conversation) பலன் ஆகும். எனவே, ஒவ்வொரு தனிநபரும் இத்திட்டத்தை மறைமாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் செயல்படுத்த அவர்களால் இயன்ற பங்களிப்பை உய்த்துணர வேண்டும். இத்திட்டத்தின் மையம் தேசியப் பணிக் குழுக்களின் மீது நிலைபெற்றிருப்பினும்இத்திட்டத்தின் பலன்கள் நமது மாநில மற்றும் மறைமாவட்டத் திரு அவைகளைத் தொடர்ந்து அனைத்துப் பங்குகளையும் சென்றடைந்து நன்மை பயக்கும்.

எல்லா நிலைகளிலும் நமது நம்பிக்கை, வாழ்க்கை மற்றும் மறைத்தூதுப் பணியின் தரத்தை ஆழப்படுத்த கடவுள் நம்மை அழைக்கிறார். 2033-ஆம் ஆண்டு நம்முடைய மீட்பின் மாபெரும் யூபிலியைக் கொண்டாடும்போது, இந்த மேய்ப்புப் பணித் திட்டத்தின் பலன்களைக் கண்டு நாம் சான்று பகர்வோம்.

இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை வெளியிட்ட கையேட்டில் அடங்கியுள்ள மேய்ப்புப் பணித் திட்டங்களை நமது தமிழ் நாடு திரு அவைக்கு எடுத்துச் செல்வதற்கான வழிகாட்டு நெறிமுறைக் கூட்டமானது டிசம்பர் 12, 2024 அன்று  மதுரை உயர் மறைமாவட்டத்தில் அமைந்துள்ளபில்லர்’ (PILLAR) மையத்தில்  நடைபெற்றது. இத்திட்ட விளக்கக் கூட்டத்தை தமிழ்நாடு கத்தோலிக்க ஆயர் பேரவையின் செயலரும்கோட்டாறு  மறைமாவட்ட ஆயருமான  மேதகு நசரேன் சூசை அவர்கள் தலைமையேற்று நடத்தினார். தமிழ்நாடு ஆயர் பேரவையின் இணைச்செயலரும், ‘மறைத்தூதுப் பணி 2033’-இன் மாநில ஒருங்கிணைப்பாளருமான அருள்பணி. பிரான்சிஸ் ஜோசப் இக்கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.

தமிழ்நாடு மாநிலத் திரு அவையும் அதிலுள்ள ஒவ்வொரு மறைமாவட்ட தலத் திரு அவையும் இந்த மறைத்தூது பணி குறித்த மேய்ப்புப் பணித் திட்டத்தைச் சரியாகப் புரிந்து கொண்டு செயல்படுத்தும் விதமாக தமிழ்நாடு திரு அவையின் பணிக் குழுக்களின் செயலர்களும், மறைமாவட்டப் பணிக் குழுக்களின் ஒருங்கிணைப்பாளர்களும் இக்கூட்டத்திற்கு அழைப்பு பெற்றிருந்தனர். ஏறக்குறைய 40 பேர் கலந்து கொண்ட இக்கூட்டத்தின் கருத்தாளராகமறைத்தூதுப் பணி 2033’-இன் தேசிய ஆலோசகர் அருள்பணி. ஜோ சேவியர் சே.. அவர்கள் அந்நாளின் அமர்வுகளைச் சிறப்பாக வழிநடத்தினார்.

மேதகு ஆயர் நசரேன் சூசை அவர்கள் தனது துவக்க உரையில் கீழ்க்காணும் கருத்துகளை முன்வைத்தார்:

நமது தமிழ்நாடு திரு அவை பல சிறப்பான முன்னெடுப்புகளைச்   செய்துகொண்டிருக்கின்றது. திரு அவையின் மேய்ப்புப் பணிக்குழுக்கள் தனித்தனியே தங்களது பணிகளைப் பல்வேறு விதங்களில் செய்துகொண்டிருக்கின்றன. இருப்பினும், ஒட்டுமொத்தமாகப் பணிக் குழுக்களிடையே சரியான ஒருங்கிணைப்பும் திட்ட இலக்குகளும் இன்னும் சிறிது அதிகமாகத் தேவைப்படுகின்றன.

ஒருசில மறைமாவட்டங்களில் தங்களுடைய திரு அவை குறித்த சரியான புள்ளி விவரங்களைச் சேகரித்தும், தங்களுடைய இன்றைய நிலையைத் தெளிவாக அறிந்தும், பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் தங்களுக்கான மேய்ப்புப் பணித் திட்டங்களையும் இலக்கையும் நிர்ணயித்து பயணிப்பதும் மிகவும் பாராட்டுக்குரியது.

மாநில அளவிலான செயல்திட்டங்கள் அனைத்தும் மறைமாவட்டங்கள், மறைவட்டங்கள், பங்குத்தளங்கள் என இறுதிவரை சென்று சேர்வதில்லை. இதற்கு மாநிலப் பணிக்குழுக்களின் செயலர்களுக்கும் மறைமாவட்டப் பணிக் குழுக்களின் செயலர்களுக்கும்  உள்ள தொடர்புகளும், பணிக் குழுவின்  மறைமாவட்டச் செயலர்- மறைவட்டம்-பங்கு இவைகளுக்கிடையே உள்ள தொடர்புகளும் உறுதி செய்யப்பட வேண்டியது தேவையான ஒன்று.

பணிக்குழுக்களின் திட்டமிடல், செயல்பாடுகள் மற்றும் திறனாய்வுக் கூட்டங்கள் சரியான கால இடைவெளிகளில் நடைபெறாமல் இருப்பது தெரிய வருகிறது. மறைமாவட்ட அருள்பணியாளர்களுக்கு இடையே இணக்கமான தொடர்புகளை ஏற்படுத்துவது மேய்ப்புப்பணித் திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்வதற்கான காரணிகளுள் மிக முக்கியமானதொன்றாக இருப்பதால், மறைமாவட்ட அருள்பணியாளர்களுக்கு இடையிலும், அருள்பணியாளர்களுக்கும் பொதுநிலை இறைமக்களுக்கு இடையேயும் இணைந்த செயல்பாடுகளை மேம்படுத்துவது கண்டிப்பாகத் தேவை.

இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் பார்வையில் நமது திருத்தந்தை செயல்படுத்தி வரும் கூட்டொருங்கியக்கத் திரு அவைக்கான வழிமுறையைத் தவிர திரு அவைக்கு வேறு சிறப்பான வழியில்லை. இதன் அடிப்படையில் உருவாகியுள்ள இந்தமறைத்தூதுப் பணி 2033’ மேய்ப்புப்பணித் திட்டத்தை உள்வாங்கி இறைமக்களிடம் கொண்டுபோய் சேர்க்க நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்என்று தன் உரையை நிறைவு செய்தார்.

ஆயரைத் தொடர்ந்து அருள்பணி. ஜோ சேவியர் சே.. அவர்கள்மறைத்தூதுப் பணி 2033’ தொடர்பான வழிமுறைகளை விளக்கினார். அவர் உரையிலிருந்து எழுந்த முக்கியக் கருத்துகள்:

இந்தியக் கத்தோலிக்கத் திரு அவை தற்போது நேர்மையாகவும் உண்மையாகவும் தனது இலக்கு நோக்கிய வளர்ச்சிப் பாதையில் நகர்ந்து கொண்டிருப்பது பாராட்டுக்குரியது. இருப்பினும் பயணிக்க வேண்டிய தொலைவு அதிகமாகவே உள்ளது.

இந்தியாவில் பல இடங்களில் திரு அவை பொது நிலை இறைமக்களை விட்டு அந்நியப்பட்டு, தொடர்பின்றி உள்ளது. இதை ஆழ்ந்து சிந்திக்கவும், அதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்து செயல்படுத்தவும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

இளையோர், பெண்கள், மாற்றுத் திறனாளிகள், புலம் பெயர்ந்தோர் இவர்களுக்கான பணிக்குழுக்கள் இப்பிரிவினரோடு மிகுந்த ஈடுபாடு காட்டுவது தேவையான ஒன்றுஎன்றார்.

ஒரு நிறுவனம் எவ்வாறு தனது இலக்கு நோக்கிய செயல்பாடுகளிலும், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பாதுகாப்பு குறித்த செயல்பாடுகளை எவ்வாறு இலக்கு நோக்கி துல்லியமாகத் திட்டமிடுகிறது என்பது காணொளி மூலம் விளக்கப்பட்டது.

பின்னதாக நடத்தப்பட்ட குழு அமர்வு பகிர்வில் பின்வரும் நான்கு வினாக்கள் ஆய்வுக்கு விடப்பட்டு, அவற்றின் பகிர்வு முடிவுகள் பெறப்பட்டன.                        

(தொடரும்)

news
சிறப்புக்கட்டுரை
‘வென்டிலேட்டர் சப்போர்ட்டில்’ நாட்டின் பொருளாதாரம்!

தவளை ஒன்றைக் கொதிக்கும் நீரில் தூக்கிப் போட்டால், அது உடனே துள்ளி வெளியே குதித்து விடும். ஆனால், குளிர்ந்த நீரில் தூக்கிப் போட்டு கொஞ்சம் கொஞ்சமாகச் சூடேற்றினால் அந்தத் தண்ணீரிலேயே இருந்து வெந்து செத்துவிடும். வெப்பம் கொஞ்சம் கொஞ்சமாக ஏறும்போது அந்த வெப்பத்தின் தாக்கத்தை தவளை உணர்வதில்லை. நம் நாட்டு மக்களும் அந்தத் தவளையைப்போல் இருக்கிறார்களோ என்று நான் அடிக்கடி நினைப்பது உண்டு.

கடந்த பத்து ஆண்டுகளாக மோடி அரசு பின் பற்றி வரும் மக்கள் விரோதக் கொள்கைகள், ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரங்களைத் தொடர்ந்து சிதைத்து வருவதால், தேசத்தின் பொதுச்சொத்துகளைப் பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகள் வரை முறையில்லாமல் சுருட்டிக் கொழுக்க அனுமதிப்பதால், சனநாயக நிறுவனங்களைச் சீரழிப்பதால், இயற்கை வளங்களைத் தனியார் கொள்ளையிட அனுமதிப்பதால், சாதிமத மோதல்களைத் திட்டமிட்டு உருவாக்கி வெறுப்பு அரசியலை வளர்த்தெடுப்பதால் நாடு ஒரு பேரழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதை மக்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி பற்றி, மோடிமயமாக்கப்பட்டிருக்கும் முதலாளித்துவ கார்ப்பரேட் ஊடகங்கள் தொடர்ந்து செய்து வரும் பொய்ப்பிரச்சாரம், கள எதார்த்தங்களை மக்களிடமிருந்து திட்டமிட்டு மறைக்கும் கபட விளம்பர யுக்திகள், அனைத்துப் பிரச்சினைகளையும் மதமயமாக்கும் அடையாள அரசியல் போன்ற சதிகளால் சாமானிய மக்களின் கண்கள் கட்டப்பட்டுள்ளன. அவர்களது கண்களைத் திறக்க செய்து, எதார்த்தங்களைக் காணவைத்து அதர்ம அரசியலை முடிவுக்குக் கொண்டுவர உண்மைகளைத் தொடர்ந்து நாம் மக்கள் மன்றத்தில் வைப்போம்.

புயலும் சூறாவளியும் பேரழிவும் வரும்போது அது வருவதற்கான அடையாளங்களையும் சூழ்நிலைகளையும் வானிலை விஞ்ஞானிகள் முன்கூட்டியே அறிந்து அறிவிப்பதைப்போல, பெரும் பொருளாதாரப் பேரழிவு வரக் காத்திருப்பதைப் பொருளாதார அறிஞர்கள் கடந்த சில மாதங்களாகச் சில குறியீடுகளைக்காட்டி நாட்டு மக்களை எச்சரிக்கின்றனர்.

தன்னுடைய ஆட்சிக் காலத்தில் ஏழை மக்களின் வாங்கும் சக்தி (purchasing power) தொடர்ந்து அதிகரித்து வருவதாக உண்மைக்குப் புறம்பான ஒரு செய்தியை நமது பிரதமர் வாய் கூசாமல் அடிக்கடிக் கூறி வருகிறார். ஆனால், அவரது அரசின் பல துறைகள் வெளியிடுகின்ற அதிகாரப்பூர்வத் தகவல்களும், ரிசர்வ் வங்கி, நிதி ஆயோக், ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனங்கள், சர்வதேசத் தர நிர்ணய அமைப்புகள் போன்ற நிறுவனங்கள் வெளியிடும் தகவல்களும் பிரதமர் சொல்வதற்கு முற்றிலும் முரணான தகவல்களைத் தருகின்றன.

127 நாடுகளைக் கொண்ட உலகளாவிய பட்டினிக் குறியீடு பட்டியலில் இந்தியா 105-வது இடத்தைப் பெற்றுள்ளது. பட்டினிக் குறியீட்டில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கையை விட மிகவும் மோசமான இடத்துக்கு இந்தியா சென்றுள்ளது. 13.7% மக்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடனும், 35.5% குழந்தைகள் வளர்ச்சிக் குன்றியவர்களாகவும், 18.7% குழந்தைகள் எடை குறைந்தவர்களாகவும், 3% குழந்தைகள் ஐந்து வயதுக்கு முன்னரே இறந்து விடுவதாகவும் அந்தப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பா... அரசின்நிதி ஆயோக்சொல்லும் தகவல்கள் இதைவிட அதிர்ச்சியானவை. வறுமை ஒழிப்பில் இந்திய விழுக்காடு 72. பட்டினி ஒழிப்பில் இந்திய விழுக்காடு 52. தரமான கல்வியை வழங்குவதில் இந்திய விழுக்காடு 61. பாலினச் சமத்துவத்தில் இந்திய விழுக்காடு 49. குறைந்த விலை, சுத்தமான ஆற்றல் குறியீட்டில் இந்தியா 68. இந்தத் தகவல்கள் வெளியான அதே நாளில், “இந்தியா கடந்த சில ஆண்டுகளில் வலிமை மிக்க தேசமாகவும், மதிப்பிற்குரியதாகவும் உருவெடுத்துள்ளதுஎன்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசுவதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை.

பொருளாதாரம்வென்டிலேட்டர் சப்போர்ட்டில்இருக்கிறது என்பதைச் சில முக்கியத் தகவல்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களின்நுகரு தல் (consumption) மிகவும் குறைந்து வருகிறது. உணவுப் பொருள்கள், ஆடை அணிகலன்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் மற்றும் வாழ்க்கைத் தேவைகளுக்கான பொருள்களைச் சந்தைகளில் அதிகமாக வாங்கிப் பயன்படுத்தும் இந்த மக்கள் கைகளில் பணப் புழக்கம் இல்லாததால் இப்பொருள்களை உற்பத்தி செய்யும் தொழில்கள் மூடப்படும் அபாயத்தில் இருக்கின்றன. பணவீக்கம் அதிகரித்து வரும் சூழ்நிலையில், தொழிலாளர்களின் ஊதியங்களில் கடந்த எட்டு வருடங்களாக எவ்வித மாற்றமும் இல்லை. கல்வி, மருத்துவம், போக்குவரத்து போன்ற அத்தியாவசியச் சேவைகளின் கட்டணங்கள் கூடிக்கொண்டே வருவதால் அடித்தட்டு மக்களும், நடுத்தர மக்களும் உணவுக்காகச் செலவிடுகின்ற தொகையினைக் குறைத்துக் கொண்டுள்ளனர். அதை மட்டும்தான் அவர்களால் குறைத்துக் கொள்ள முடியும்.

இந்தியப் பொருளாதாரத்தை இழுத்துச் செல்லும் என்ஜின்நடுத்தர மக்களே! (Middle Class) அவர்களது பொருளாதாரம் கவலைக்கிடமாக உள்ளது. அவர்களது சேமிப்பு விகிதம் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு அதல பாதாளத்திற்குச் சென்றுள்ளது. வங்கிகளில் தங்க நகைக் கடன்கள் 50% அதிகமாகியுள்ளது. அது மட்டுமின்றி, அடகு வைத்த நகைகளை மீட்டெடுக்க முடியாத நிலையில் அவர்கள் இருப்பதால் நகைமீது வாராக்கடனும் 30% அதிகரித்துள்ளது.

கார் விற்பனை கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவில் மிகவும் சரிந்துள்ளது. மக்களின் வாங்கும் சக்தி குறைந்து போனதால், உற்பத்தி குறைந்து, உற்பத்தி குறைந்ததால் ஜி.எஸ்.டி. வரிவசூல் குறைந்து கொண்டே வருகிறது. வரிவசூல் குறைந்தால் மோடி அரசு சாமானிய மக்களுக்கான நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில்தான் முதலில் கைவைக்கும் என்பது நமது கடந்த கால அனுபவம்.

வங்கிகள் வழங்கும் கடன் விகிதங்கள் குறைந்து கொண்டே வருகின்றன. தனிநபர் கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டு கடன்கள்தாம் அதிகம் வழங்கப்படுகின்றன. தொழில் மற்றும் வியாபாரத் தேவைகளுக்கான கடன் கோரிக்கைகள் குறைந்து கொண்டே வருகின்றன. வங்கிகள் அல்லாத நிதி கம்பெனிகள் (NBFC) வழங்கி வந்த கடன்களும் இந்தக் காலாண்டில் 13.5% குறைந்துள்ளது.

குறைந்து கொண்டே வரும் மக்களின் நுகர்தலின் திறம் (Puchasing Capacity), உற்பத்திக் குறைவால் சுருங்கிப் போன முதலீடுகள், குறைந்து கொண்டே போகும் தொழிலாளர்களின் ஊதிய விகிதம் போன்ற துயரச் சோதனைகள் தொடரும் என்றால், அதன் விளைவுகள் நாம் கற்பனை செய்ய முடியாத அளவுக்குப் படுமோசமாக இருக்கும்.

பேரழிவை நோக்கிச் செல்லும் வேகத்தை அதிகரிக்கும் அடுத்த முக்கியக் காரணி டாலருக்கு எதிராகச் சரிந்து வரும் ரூபாயின் மதிப்பு. ஏற்றுமதிகள் குறைந்து, இறக்குமதிகள் அதிகரிப்பதும், சர்வதேச நாணயச் சந்தையில் இந்திய ரூபாய்க்குத் தேவையில்லாமல் இருப்பதும் ரூபாயின் மதிப்பின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணங்கள். பங்குச் சந்தை சூதாட்ட வியாபாரத்தில் முதலீடு செய்த பன்னாட்டு முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளைப் பெரும் இலாபத்தோடு வெளியே எடுத்துச் செல்லும்போது டாலரின் தேவை அதிகரிக்கிறது. அதனால் அதன் மதிப்பு அதிகரிப்பதால் ரிசர்வ் வங்கி தனது கையிருப்பு டாலர்களைச் சந்தையில் விட்டு, டாலர்களின் தேவைகளைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் நமது அந்நியச் செலாவணியின் கையிருப்பு வேகமாகச் சரிகிறது. வரலாற்றில் என்றும் இல்லாத அளவில் ஒரு டாலரின் மதிப்பு 386-ஐத் தொடுகிறது.

நமது மறதிதானே மோடியின் பலம்! 2013-இல் 40-43 ரூபாயாக டாலர் மதிப்பு இருந்தபோது அன்றைய பா...வின் பிரதமர் வேட்பாளராக இருந்த மோடி கூறிய வார்த்தைகள் நினைவில் இருக்கிறதா?

டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு குறைகிறது என்றால், நாட்டின் நிர்வாகத்தை நடத்தும் பிரதமர் கோழை என்று அர்த்தம். கையாலாகாத பேடி என்றும் சொல்ல வேண்டும். பிரதமரின் திறமையின்மையே ரூபாயின் மதிப்பு சரிவதற்கான காரணம்என்று பேசியவர்தான் மோடி.

நாம் அதே வார்த்தைகளை அவருக்கு எதிராகப் பயன்படுத்த விரும்பவில்லை. ஏனெனில், அவர் நம் தேசத்தின் பிரதமர். அப்படித் தரக்குறைவாகப் பேசும் கலாச்சாரம் நமது மரபணுக்களில் இல்லை.

பொருளாதார வீழ்ச்சிக்கான காரணங்களை அறிந்து, அவற்றைச் சரிசெய்யும் எந்த முயற்சியிலும் ஈடுபட மோடி அரசு விரும்பவில்லை. மேலும் மேலும் அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தினருடைய தோள்களில் பாரத்தை ஏற்றுகின்ற வகையில் அவர்கள் கட்டுகின்ற ஜி.எஸ்.டி. போன்ற வரிகளைக் கூட்டிக் கொண்டே வருகிறது. பாப்கார்னுக்கு மூன்று விதமான வரிகளை விதிக்கும் நிர்மலா சீத்தாராமனின் பொருளாதார அறிவைப் பற்றி சுப்பிரமணியசுவாமி சொல்வதைப் போல தரம் தாழ்ந்து விமர்சிக்க நாம் தயாராக இல்லை.

அடித்தட்டு மக்கள் கைகளிலும், நடுத்தர மக்களின் பைகளிலும் பணம் இருந்தால் அந்தப் பணம் உடனே சந்தைக்கு வந்துவிடும். மக்கள் பொருள்களை வாங்குவார்கள். உற்பத்தி கூடும். வேலை வாய்ப்புகள் பெருகும். பெரும் பணக்காரர்களிடம் பணம் மேலும் மேலும் சேர்ந்தால் தங்கம், ரியல் எஸ்டேட் மற்றும் பங்கு மார்க்கெட்டில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் முதலீடு செய்யப்படும். சந்தைக்கு வராது. பொருள்களை வாங்காது. உற்பத்தியைப் பெருக்காது. வேலை வாய்ப்புகளை உருவாக்காது. இந்தக் குறைந்தபட்ச பொருளாதாரப் புரிதல் கூட இல்லாமல் மேலும் மேலும் பணக்காரர்களுக்கே அதிக வசதிகளையும் சலுகைகளையும் தொடர்ந்து செய்து வரும் மோடி அரசின் பொருளாதார பயங்கரவாதத்தை என்னவென்று சொல்வது?

எங்கள் கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு. ‘பெற்ற தாய் குலைப்பட்டினி; மகன் கோதானம் கொடுத்தானாம்என்று. பெற்ற தாய் வீட்டில் பட்டினியால் சாகக்கிடக்கிறாள். மகன் பசு மாட்டைத் தானம் கொடுத்தானாம். அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜோ பைடனின் மனைவிக்குப் பிரதமர் மோடி பரிசாக அளித்த வைர மோதிரத்தின் விலை ரூபாய் இருபது இலட்சத்திற்கும் மேல் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. உலகின் எந்த நாட்டுத் தலைவரும் அவ்வளவு விலை உயர்ந்த பரிசை அமெரிக்கக் குடியரசுத் தலைவருக்கு இதுவரை வழங்கியதில்லையாம்!

வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்ற மக்கள் உலகிலே மிக அதிகமாக இருக்கும் ஒரு நாட்டின் பிரதமர் இப்படியெல்லாம் மக்களின் வரிப் பணத்தைச் செலவிடலாமா?’ என்று நாம் கேட்டால், ‘அவர்கள்நம்மைதேசவிரோதிகள்என்று அழைப்பார்கள். நம் மக்களைப் போல நாமும் கண்களை மூடிக் கொள்வோம்; அவர்கள் பார்வையில் அப்போதுதான் நாம்தேசபக்தர்கள்.’ இதுதான் மோடி காணும்புதிய இந்தியா!’