1972-ஆம் ஆண்டு கோவை மாநகரத்தில் உள்ள கணபதி பகுதியில் 25 கத்தோலிக்கக் கிறித்தவக் குடும்பங்கள் வசித்து வந்தன. கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பாத்திமா அன்னை ஆலயத்திற்கு அவர்கள் இறை வழிபாட்டிற்குச் சென்று வந்தார்கள். கப்புச்சின் அருள்பணியாளர்களின் ஆன்மிக வழிகாட்டுதலின்படி, கணபதி பகுதிவாழ் கத்தோலிக்கக் கிறித்தவ மக்கள் வழிநடத்தப்பட்டார்கள்.
மேனாள்
ஆயர் மேதகு அம்புரோஸ் ஆண்டகை அவர்களின் பெரும் முயற்சியால் கத்தோலிக்க ஆலயம் கட்ட கணபதி, அத்திபாளையம் பிரிவில் உள்ள அசிசி நகரில் 50 செண்ட் நிலம் 1980-ஆம் ஆண்டு வாங்கப்பட்டது. பின்பு அந்த இடத்தில் கணபதி இறைமக்களின் ஆன்மிகத் தேவைகளை உணர்ந்து சிற்றாலயம் கட்டிட முடிவு செய்யப்பட்டு 03-05-1987 அன்று மேனாள் ஆயர் அம்புரோஸ் ஆண்டகை அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு பணி நிறைவுற்றது. கோவை கணபதி பகுதி தொழில் ரீதியாக வளர்ச்சி அடைந்து வந்தது. இறைமக்கள் கணபதி பகுதியில் குடியேறும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. கணபதி பகுதியில் கத்தோலிக்கக் குடும்பங்களின் எண்ணிக்கை 500 ஆக உயர்ந்தது. சிற்றாலயம்
போதவில்லை. ஆலய விரிவாக்கம் தேவைப்பட்டது. கோவை கணபதி பங்கில் உள்ள முக்கியஸ்தர்கள் ஆலய விரிவாக்கத்திற்கு மேனாள் ஆயர் அம்புரோஸ் ஆண்டகை அவர்களை அணுகினர். ஆயர் அவர்கள் ஆலய விரிவாக்கத்திற்கு ஒப்புதல் வழங்கி, மேலும் ஆலயம் அருகில் இடம் வாங்குவதற்கும் அனுமதி வழங்கினார்.
01-06-1990 அன்று கோவை காந்திபுரம் பாத்திமா அன்னை ஆலயத்திலிருந்து கணபதி பகுதி இறைமக்களைப் புகழ்மிக்க புனிதர் பிரான்சிஸ் அசிசி அவர்களைப் பாதுகாவலராகக் கொண்டு தனிப்பங்காக உருவாக்கி ஆலய விரிவாக்கப் பணியும் தொடங்க அனுமதி வழங்கினார். 09-10-1994 அன்று ஆலய விரிவாக்கம் நிறைவு பெற்று மேனாள் ஆயர் அம்புரோஸ் ஆண்டகை அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
கோவை
மாவட்டம் தொழில்களில் மேலும் வேகமாக வளர்ச்சியடைந்த மாவட்டமாக மாறியதால், வெளியூர் வாழ் மக்கள் குடியேறும் எண்ணிக்கை மென்மேலும் வேகமாக அதிகரித்தது. 1500 குடும்பங்களுக்கு மேல் புகழ்மிக்க புனித பிரான்சிஸ் அசிசியாரின் பாதுகாப்பில் கத்தோலிக்கக் கிறித்தவர்கள் இறைவழிபாட்டுக்காக வருகின்றார்கள். விரிவாக்கம் செய்யப்பட்ட ஆலயத்தில் மேலும் இடப்பற்றாக்குறை ஏற்பட்டு, திருப்பலியில் கலந்து கொள்பவர்களில் 50 சதவிகிதம் பேர் வெளியில் நின்று திருப்பலி காணும் நிலை ஏற்பட்டது. அருள்பணியாளர் மற்றும் இறைமக்கள் கோவை மறைமாவட்ட ஆயர் மேதகு தாமஸ் அக்குவினாஸ் ஆண்டகை அவர்களை அணுகி புதிய ஆலயம் கட்ட அனுமதி கேட்டனர். முறையான அரசாங்க அனுமதி பெற்று உறுதித் தன்மையுடன் ஆலயம் கட்டிட அறிவுறுத்தி, ஆயர் அனுமதி வழங்கினார்.
2014 ஆம் ஆண்டு
பழைய ஆலயம் முற்றிலும் இடிக்கப்பட்டு
புதிய ஆலயத்தின் கட்டுமான பணி தொடங்கப்பட்டது. துரதிருஷ்டவசமாக கட்டட உறுதித்தன்மையில் தடங்கல் ஏற்பட்டதால் கோவை ஆயர் மேதகு தாமஸ் அக்குவினாஸ் ஆண்டகை அவர்கள் ஆலயக் கட்டுமான பணிகளை உடனே நிறுத்தக் கட்டளை பிறப்பித்தார். உறுதித் தன்மையில் உள்ள குறைபாடுகளையும் விதிமீறல்களையும் கண்டறிய ஏழு அருள்தந்தையர்கள் கொண்ட சிறப்புக் குழுவையும், அரசாங்கக் கட்டடப் பொறியாளர்களையும் நியமனம் செய்தார். அவர்களால் ஆய்வு செய்யப்பட்ட பின்னர்,
உறுதித் தன்மையில் உள்ள குறைபாடுகளும் விதிமீறல்களும் உறுதி செய்யப்பட்டன. கட்டடத்தைத் தாங்கக்கூடிய உறுதித்தன்மை இல்லாததால் ஆயர் அவர்கள் ஆலயப் பணிகளை முற்றிலுமாக உடனே நிறுத்த அருள்பணியாளர்களுக்கு மீண்டும் கட்டளை பிறப்பித்தார்.
திருவழிபாட்டிற்காக
ஆலயம் இல்லாமல் கணபதி பிரான்சிஸ் அசிசி பங்கு மக்கள் பெரும் வேதனையை அனுபவித்து வந்தனர். ஆன்மிக வழிபாடின்றி சிறப்பாகக் கட்டமைக்கப்பட்ட புனித பிரான்சிஸ் அசிசி ஆலய இறைமக்களின் உறவுகள் சிதையத் தொடங்கின. இறைமக்களின் அடிப்படைத் தேவையான மகிழ்ச்சி முற்றிலும் குறைந்தது.
புனித
பிரான்சிஸ் அசிசி ஆலய புதிய அருள்பணியாளராக ஜான்பால் வின்சென்ட் அவர்களை, புதிய ஆலயக் கட்டுமான பணிகளை உடனடியாகத் துவங்க வேண்டும் என்ற உறுதியான எண்ணத்துடனும், இறைவேண்டலோடும் மேதகு ஆயர் தாமஸ் அக்குவினாஸ் ஆண்டகை அவர்கள் 2016-ஆம் ஆண்டு நியமனம் செய்தார். கோவை மறைமாவட்ட மேதகு ஆயர், முதன்மை அருள்பணியாளர், பொருளாளர் அருள்பணியாளர், புனித பிரான்சிஸ் அசிசி ஆலய அருள்பணியாளர், பங்கு முக்கியஸ்தர்கள், இறைமக்கள் அனைவரின் கூட்டு முயற்சியால் புதிய ஆலயக் கட்டுமான பணிக்கான அனைத்துக் காரியங்களும் இறையருளால் புதியதாகத் தொடங்கப்பட்டது. குறைபாடுகளுடன் கட்டப்பட்ட கட்டடம் முழுவதும் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. அரசாங்கக் கட்டட அனுமதி, ஆலயம் கட்ட முறையாகப் பெறப்பட்டது. 09-12-2018 அன்று மேதகு ஆயர் தாமஸ் அக்குவினாஸ் ஆண்டகை அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. உறுதியான முறையில் நடைபெற கட்டுமான பணிகள் விரைவுபடுத்தப்பட்டன. அன்டர் கிரவுண்ட் கார் பார்க்கிங் (130 x 130), ஆலய உட்புறம் (100 x 100), பால்கனி (50 x 100) என்று இறைவனுக்கு நன்றி செலுத்த, இறைமக்கள் திருப்பலியில் செபித்திட பிரமாண்டமான புத்தம் புதிய ஆலயம் உருவாகியுள்ளது.
இறைவனது
உடனிருப்பாலும், இறை அன்னையின் பரிந்து பேசுதலாலும் கோவை ஆயர் மேதகு தாமஸ் அக்குவினாஸ் ஆண்டகை அவர்களின் அறிவுத்தெளிவாலும், நிர்வாக ஆளுமையாலும் தொலைநோக்குப் பார்வையாலும் கோவை மறைமாவட்ட முதன்மை அருள்பணியாளர் ஜான் ஜோசப் ஸ்தனிஸ் அவர்களின் முழு முயற்சியாலும் கோவை மறைமாவட்டப் பொருளாளர் அருள்பணியாளர் அந்தோணி செல்வராஜ் அவர்களின் முழு ஒத்துழைப்பாலும் கோவை கணபதி அசிசி நகர், புனித பிரான்சிஸ் அசிசி ஆலய அருள்பணியாளர் ஜான் பால் வின்சென்ட் அவர்களின் அர்ப்பணிப்பாலும், புனித பிரான்சிஸ் அசிசி ஆலய இறைமக்கள் அனைவரின் நம்பிக்கை நிறைந்த இடைவிடாத செபத்தாலும், ‘நமது வாழ்வு கடவுளால் உயர்த்தப்பட்டது’ என்ற
உண்மையான எண்ணம் கொண்ட நன் கொடையாளர்களாலும் கோவை மறைமாவட்டத்தின் பல்வேறு பங்குகளின் பங்கு அருள்பணியாளர்கள், இறைமக்கள், பிற மத சகோதர-சகோதரிகள்
வாரி வழங்கிய பொருளுதவியால் பிரமாண்டமான புனித பிரான்சிஸ் அசிசி ஆலயம் இறைவனின் மகிமைக்காகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அசிசி ஆலயக் கட்டுமான பணிக்காகக் கடுமையாக உழைத்தவர்கள், திறமையாக உழைத்தவர்கள் அனைவருக்கும் வாழ்நாள் நன்றிகள்.
‘நம் வாழ்வு’ வாசகர்களும் இறைமக்களும் ஆலய அர்ச்சிப்பு விழாவில் குடும்பமாகக் கலந்துகொண்டு இறை வரங்களைப் பெற்றுச்செல்ல அன்புடன் அழைக்கின்றோம்; அழைப்பில் மகிழ்கின்றோம்.
தந்தை பெலிக்ஸ் வில்பிரட் அவர்களின் இறுதிப்பயணத் திருப்பலியில் தஞ்சை மறைமாவட்ட மேதகு ஆயர் த. சகாயராஜ் ஆண்டகை அவர்கள் ஆற்றிய மறையுரை:
அன்புக்குரிய
சகோதரர்களே,
சகோதரிகளே!
சொல்லொண்ணா
மனத்துயர், விவரிக்க முடியாத மனநிறைவு; இரண்டும் ஒருசேரக் கலந்து இருக்கிற தருணம் இது. ஒரு பக்கம் பிரிவாற்றாமை; மற்றொரு பக்கம் நன்றி நிறைந்த மனநிலை. கண்ணீர் கலங்குகிறது; ஆனாலும்கூட கரங்கள் நன்றி சொல்ல இணைந்து உயர்கின்றன. நமது பாசமிகு தந்தை பெலிக்ஸ் வில்பிரட் அவர்களை நினைத்து அவர்களுக்கு முன்னால் நின்று, ‘நன்றி’ என்று சொல்லக்கூடிய தருணமாக இருக்கிறது. திரு அவைக்கும் இந்தச் சமூகத்திற்கும் தந்தை அவர்கள் தனது நெடிய 76 வயதில் செய்திருக்கிற எல்லா மேலான பணிகளுக்காக இவரை நமக்கு மிகப்பெரிய கொடையாகக் கொடுத்த திரு அவைக்கும் சமூகத்திற்கும் கடவுளுக்கு முன்னாலும் இன்று கரங்களை உயர்த்தி நன்றி சொல்லி மனம் நிறைந்திருக்கிறது.
திருவள்ளுவர்
கூறுவார் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று.
ஒன்றைச் சொல்ல மறந்தார், ‘இறப்புக்கா எல்லா உயிருக்கும்’ என்று.
பிறக்கிற போது எல்லாரும் சமநிலையிலேயே பிறக்கிறோம். உயர்வு-தாழ்வு இன்றி. ஆனால், இறக்கிறபோது ஒரு சிலர் உயர்ந்த மனிதர்களாய், சிறந்த மனிதர்களாய், சான்றோராய் வாழ்ந்து இறக்கிறார்கள். அவர்கள் மேன்மக்களே! அந்த வகையில் ஒரு மிகப்பெரிய சான்றோராய் வாழ்ந்து மரித்திருக்கிறார் நம்முடைய தந்தை பெலிக்ஸ் வில்பிரட் அவர்கள். ஒருசிலரைக் குறித்து மட்டுமே நாம் சொல்ல முடியும், ‘God does not create many of his kind’ என்று. தந்தை அவர்களைப் பார்த்து நாம் எப்போதுமே தயக்கமின்றி சொல்லலாம் ‘God does not create many of your kind’ என்று.
இரவீந்திரநாத்
தாகூர் ‘கீதாஞ்சலி’
என்கிற தன்னுடைய கவிதை நூலில் ஒரு சிறு கதையைக் கவிதையாக வடித்து இருப்பார். மாலை நேரம், சூரியன் மறையப் போகிற நேரம். சூரியனுக்குக் கவலை, நான் மறைந்த பிறகு யார் இந்தப் பூமிக்கு ஒளி தருவார் என்று. படைப்பு அனைத்தையும் பார்த்துக் கேட்கிறது, ‘எனக்குப் பின்னால் ஒளி கொடுக்க யார் முன்வருவீர்கள்?’ என்று. அமைதி! யாரும் பேசவில்லை. ஒரு சிறு அகல் விளக்கு சொன்னது: ‘நான் இருக்கிறேன், நீ போய் வா.
நீ வருகிற வரை ஒளி கொடுக்க நான் தயாராக இருக்கிறேன். என்னால் இயன்ற அளவு, இயன்றவரை ஒளி கொடுத்துக் கொண்டே இருப்பேன்’
என்று. எரிந்துகொண்டிருக்கிற இந்தப் பாஸ்கா திரிபோல, எரிந்து ஒளி கொடுத்து, அணைந்திருக்கிற ஒரு தீபமாக தந்தை அவர்களை நாம் பார்க்கலாம். ஆசியத் திரு அவையில் வானில் ஜொலித்த ஒரு நட்சத்திரமாய் இவர் ஒரு பேராளுமை. அறிவுநிறை பேராளுமை. அதேபோல் ஆசிய இறையியல் என்றால் அதற்கான ஒரு தனிச் சிறப்பு மிகுந்த, ஆகச்சிறந்த திசை காட்டியாக வாழ்ந்திருக்கிறார்.
குறைந்தபட்சம்
கடந்த 40 ஆண்டுகளாக, ஆசிய இறையியல் குரலாக, இந்திய இறையியலின் குரலாக, தமிழ்நாட்டு இறையியலின் குரலாக, ஏழைகளது இறையியல் குரலாக, விடுதலை இறையியலின் குரலாக, பெண்ணியத்தின் இறையியல் குரலாக, ஒடுக்கப்பட்டோரின் இறையியல் குரலாக, விளிம்புநிலை மக்களின் இறையியல் குரலாக, தலித் மக்களின் இறையியல் குரலாக ஓங்கி ஒலித்த இந்தக் குரல் இன்று அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறது.
தந்தை
அவர்கள் என்னிடம் சொல்லக் கேட்டிருக்கிறேன், “இறையியல் மொழி என்பது அறிவு சார்ந்ததல்ல; அது அறிவு மொழி அல்ல; அது இதயத்து மொழி” என்று. இதயத்தோடு இதயம் பேசுவதே சரியான, முறையான இறையியல் மொழியாக இருக்கும். அப்படி இதயத்தால் நம்மோடு இறையியல் மொழி பேசிய இந்த இதயம் இன்று அமைதியாக இருக்கிறது. ஓர் இறையியல் இயக்கமாகவே இயங்கிக் கொண்டிருந்த இந்த மாபெரும் இறையியல் இயக்கம், இன்று தனது இதயத்துடிப்பை நிறுத்தி இருக்கிறது என்பது நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் கொடுக்கிறது.
ததும்பாத
நிறைகுடமாய், ஆர்ப்பாட்டம் இல்லாது, ஆரவாரம் இல்லாது, நெடும் ஆழத்தோடு அமைதியாகப் பயணித்துக் கொண்டே இருக்கும் வற்றாத நதியாகப் பயணித்தவராக தந்தை அவர்களை நாம் பார்த்து உணர முடியும்.
தந்தை
அவர்களது வாழ்வு நேற்று முன் தினம் மாலை எட்டு நாற்பது போல அடங்கியது என்று கூறக் கேட்டேன். என்னால் உறுதியாய்க் கூற முடியும், அவரை அறிந்தவரை அந்த மாலை 8:39 மணி வரைக்கும் இந்த இதயம் இறையியலையே சிந்தித்து இருக்கும். இறையியலை யாரோடாவது உரையாடி இருக்கும். அந்த இறையியல் கருத்துகளையே எழுத்தாகவோ, கணினியிலோ அது பதிவு செய்து கொண்டிருக்கும் என்று. ஆக, எப்போதுமே இயங்கிக் கொண்டிருந்த ஓர் இயக்கம் என்று பார்க்கிறோம்.
அருள்பணியாளர்களின்
வாழ்வு என்று பார்க்கிற போது சிந்தனைத் தளம், செயல்பாட்டுத் தளம் என்று இரண்டுமே அவசியம் என்று உணர்வோம். பல நேரங்களில் நானும்
உணர்ந்திருக்கிறேன். உங்களில் பலர் உணர்ந்திருக்கலாம். பெரும்பாலும் சிந்தனைத் தளத்திலேயே தனது பெரும் வாழ்வை இவர் நடத்தி இருக்கிறாரோ என்று. ஆனால், என்னைப் பொருத்தவரை நம்மையெல்லாம் சிந்திக்கத் தூண்டிய ஓர் இறையியல் அனுபவத்தை நமது மக்களுக்குக் கொடுக்கக்கூடிய சிந்தனைத் தளத்திலும் செயல்பாட்டுத் தளத்திலும் ஒருசேரக் கடுமையாக உழைத்த ஒரு மனிதராக இவரைப் பார்க்க முடியும்.
இப்படிச்
சொல்வார்கள் ‘Work ethics’ என்று;
‘Mission ethics’ என்று.
அவரிடம் நான் கற்றுக் கொண்ட அருமையான வாழ்க்கைப் பாடம். எந்த ஒரு காரியத்தையும் முழுமையான, நூறு விழுக்காடு அர்ப்பணத்தோடு, ஆரவாரமின்றி செய்யக்கூடிய பணிகளாக அவரை நான் பார்த்திருக்கிறேன்.
இந்த
நாளில் மறையுரை சிந்தனைகளாக தந்தை அவர்களது சிந்தனைகளையே மூன்று சிறு கருத்துகளாக உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். ஒன்று, தலத் திரு அவைகள் உருவாக வேண்டும் என்பது; இரண்டாவது, இந்தத் தலத் திரு அவைகள் மக்களை மையப்படுத்திய திரு அவைகளாக வளர வேண்டும் என்பது; மூன்றாவது,
இந்தத் தலத் திரு அவைகள் விளிம்பு நிலை மக்களை நோக்கிய திரு அவையாக இருக்க வேண்டும் என்பது.
முதலாவது,
தலத் திரு அவைகள் உருவாக்கப் பட வேண்டும் என்பது
தந்தை அவர்களது நெடிய கனவு, நெடிய ஆசை. ஆக, மேற்கத்திய அந்தப் பண்பாட்டு மேலாதிக்கத்திலிருந்து, அந்த மேலாண் மைத்தனத்திலிருந்து, மேட்டிமைத்தனத்திலிருந்து விடுதலை அடைந்து ஆசியத் திரு அவைகளாக, இந்தியத் திரு அவைகளாக, தமிழ்நாட்டுத் திரு அவையாக, கன்னியாகுமரி திரு அவையாக, தஞ்சாவூர் திரு அவையாக திரு அவைகள் வளர வேண்டும் என்று விரும்பியவர் தந்தை அவர்கள். தங்களது பண்பாட்டில் வேரூன்றி, தங்கள் தாய்மொழி பேசி, அந்தத் திரு அவைகள் எல்லாம் வளர வேண்டும் என்று விரும்பியவர் அவர். தமிழ்நாடு என்றால் குறிஞ்சியும் முல்லையும் மருதமும் நெய்தலும் பாலையும் ஆன இந்தப் புழுதி
மண்ணிலிருந்து (From the dusty soil) அந்த
இறையியல் உருவாக வேண்டும், அந்தத் தலத் திரு அவைகள் உருவாக வேண்டும் என்று சொல்வார். ஆக, நாம் பேசுவது எல்லாம் மனுவுரு இறையியல் எனில், அந்த மண் வாசனையோடு, அந்த மண்ணின் நிறத்தோடு அந்த இறையியல் மகிழ்ந்து திரு அவையாக வளர்வது தானே முறையாக இருக்க முடியும் என்று வாதிடுவார் தந்தை அவர்கள்.
இரண்டாவதாக,
மக்களை மையப்படுத்திய தலத் திரு அவைகளாக அவையெல்லாம் வளர வேண்டும் என்று சொல்வார். அவர் சொல்வார் ‘The Laity are the primary stakeholders of the Catholic Church’
என்று. ஆக, கத்தோலிக்கத் திரு அவையின் அடிப்படை உரிமைதாரர்களும் பங்குதாரர்களும் இந்தச் சாமானிய இறை மக்களே. இவர்களுக்குப் பணி செய்வதற்காகத்தான் இங்கு ஆயர்கள் இருக்கிறார்கள், அருள்பணியாளர்கள் இருக்கிறார்கள், துறவியர் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் ஆதிக்க மனநிலையில் இருந்து, தங்களது மேட்டிமைத்தன்மையிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு, மக்களுக்கான பணியாளர்களாகவே அவர்கள் எந்நாளும் திகழ வேண்டும் என்பதை எப்போதுமே சொல்வார். The clericalism என்பதற்கு
எதிராக எப்போதுமே குரல் கொடுத்த ஒரு கலகக்காரராகவே தந்தை அவர்களை நாம் எப்போதுமே பார்க்க முடியும்.
மூன்றாவதாக,
விளிம்புநிலை மக்களை நோக்கிய இறையியலாக இது மிளிர வேண்டும் என்று விரும்பியவர்கள் தந்தை அவர்கள். அவர்களது எழுத்துகளைக் குருமாணவராக இருந்த போது ஓடி ஓடி படித்த காலத்திலும் சரி, அவருக்குக் கீழே ஓர் ஆய்வு மாணவனாகப் படித்த காலத்திலும் சரி, அவரது பேச்சுகளில் இருந்து, அவரது எழுத்துகளிலிருந்து நான் அதிகமாகக் கேட்ட இரண்டு வார்த்தைகள்: ஒன்று, The Subaltern; மற்றொன்று the people at the
periphery. மிக
அதிகமாக உச்சரித்த இரண்டு வார்த்தைகள். ஆக, அதிகாரம் பெற முடியாத சமுதாயத்தின் அதிகார நிலையில இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டு இருக்கிற சாமானிய மனிதர்கள் அவர்களது முதல் நோக்காக இருந்தார்கள். இரண்டாவது, விளிம்புநிலையில் இருக்கக்கூடிய மக்கள் பல நூறு காரணங்களுக்காக
விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டது - மக்கள் குறித்து எப்போதும் பேசுவதாக அவரது குரல் ஒலித்தது என்று நாம் பார்க்கிறோம்.
அவரைப்
பொறுத்தவரை நம் கடவுள் விடுதலை அளிக்கிற கடவுள். நமது திருவிவிலியம் ஒரு விடுதலை உடன்படிக்கையின் ஏடு. அவரைப் பொறுத்த வரை நாம் பேச வேண்டிய மொழியெல்லாம் விடுதலை மொழியாகவே இருக்க வேண்டும். ஏனெனில், நாம் பேசுகிற இறையியல் விடுதலையை முன்வைக்கக்கூடிய இறையியலே என்று பேசுவார். இந்த இறையியலைப் பேசுவதற்காக எந்த ஒருவரையறைகளையும் எல்லைகளையும் தாண்டிச் செல்ல தயங்காத ஓர் ஆளுமையாக அவர் இருந்தார்.
அவரைப்
பொறுத்தவரை இறையியல் கலந்துரையாடல்கள் எல்லாம் இறையியல் வகுப்பறைகளிலோ அல்லது இறையியலாளர் ஒன்றுகூடி அமர்ந்து பேசக்கூடிய அரங்குகளிலோ அமைந்து போவது கிடையாது. அவரைப் பொறுத்தவரை கன்னியாகுமரி மாவட்டத்தின் கடற்கரைகளில் மீன் பிடித்துக் கொண்டிருக்கக் கூடிய அந்தப் படகுகளில் அந்த இறையியலாக்கம் நடைபெற வேண்டும்; அவர்களது உரையாடல் இறையியல் உரையாடல்களாக இருக்க வேண்டும். அந்த இறையியலின் கரு அந்த மக்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும் என்று சொல்வார். ஆக, கன்னியாகுமரியின் கடற்கரையிலே மீன்களை உலர வைத்துக் கொண்டிருக்கிற மீனவர்களும், தங்கள் வலைகளைக் காய வைத்துக் கொண்டிருக்கிற மீனவர்களும் பேசக்கூடிய ஒன்றாக நமது இறையியல் வளர்ந்து போக வேண்டும் என்று சொல்வார்.
எனது
மறைமாவட்டத்தை அவரது சிந்தனையில் எடுத்துக்கொள்வது என்றால் தஞ்சை தலத் திரு அவை அல்லது தஞ்சை தலத் திரு அவையில் இறையியல் என்றால் அது அந்தக் கழனிகளில், நெல் வயல்களில், நெல் நாற்றுகளை நடுகிற போதும், களை பறிக்கிற போதும், அறுவடை செய்கிற போதும் விளைந்த நெல்லை சந்தைப் படுத்துகிற போதும் அந்த மக்களது உரையாடலாக அந்த இறையியல் இருக்க வேண்டும். அந்த இறையியல் கரு என்பதும், உள்ளீடு என்பதும் மக்களது வாழ்வு சம்பந்தமானதாக இருக்க வேண்டும். அது போன்றே எப்போதும் விரும்பி வாசித்து, அதையே தனது இறையியல் முன்மொழிவாகக் கொண்டிருந்த தந்தையாக அவர்களை நாம் பார்க்க முடியும்.
அவர்
கடைசி காலத்தில் அதிகமாகப் பேசிய சூழலியல் இறையியல் ஆக இருக்கட்டும் அல்லது
பொதுவெளி இறையியலாக இருக்கட்டும் அத்தனையும் இறையியலாக விவாதிக்கப்பட வேண்டும், வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்று விரும்பிய தந்தையாக நான் அவரைப் பார்க்கிறேன். ஆக, இந்தத் தந்தை அந்தக் கடவுளுக்கு முன்னால் இப்படித்தான் சொல்லி இருக்க வேண்டும்; ‘எனது பிறப்பில் கடவுளே எனது வாழ்வு நீ கொடுத்த ஒரு
கொடை. இப்போது எனது இறப்பில் எனது வாழ்வு நான் உனக்குக் கொடுக்கிற காணிக்கை.’
ஓர்
அழகிய காணிக்கையாகக் கடவுள் முன் சென்றிருக்கிறார் நம்முடைய தந்தை என்று என்னால் உணர முடிகிறது. யோவான் நற்செய்தி 16 -ஆம் அதிகாரம் 22-ஆம் இறைவார்த்தையில் வாசிக்கிறோம், இயேசு தமது இறப்பு குறித்து பேசும்போது சொல்வார்: “நான் தந்தையிடமிருந்து வந்தேன், இப்போது மீண்டும் தந்தையிடம் போகிறேன்.” அந்தத் தந்தையிடமிருந்து வந்த நம் தந்தை இப்போது நம் தந்தையாம் கடவுளிடமே திரும்பப் போய் இருக்கிறார் என்று உணர முடிகிறது. அதே இயேசு தமது இறப்புக்கு முன்னால் பேசிய மற்றோர் இறைவார்த்தை யோவான் நற்செய்தி 16- ஆம் அதிகாரம் 33-ஆம் இறைவார்த்தையில் வாசிக்கிறோம்: “நான் உலகின் மீது வெற்றி கொண்டு விட்டேன்”
என்று. ஆக, நம் தந்தையின் இறப்பு என்பது இந்த உலகின்மீது, உலகின் தீமையின்மீது, நமது இயலாமையின்மீது, நமது பாவ இயல்பின் மீது நாம் கொண்டிருக்கக் கூடிய வெற்றி என்று உணர்கிறபோது இயேசுவைப் போல வெற்றி அடைந்த மனிதராய் அந்தக் கடவுளிடம் சென்றிருக்கிறார் என்று உணர முடிகிறது. புல்டன்ஷீன் சொல்வார்: “இவ்வுலகில் வாழ்கிறபோது கடவுள் நம்மோடு இருக்கிறார். நமது இவ்வுலக வாழ்வுக்குப் பிறகு நாம் அந்தக் கடவுளோடு இருக்க போகிறோம்”
என்று. எப்போதும் வாழ்க்கை என்றால் அது கடவுளும் நாமும் இணைந்த, இயைந்த வாழ்வு என்று. தந்தை அவர்கள் தந்தையாம் கடவுளிடம் சென்று இருக்கிறார். சென்று வாருங்கள் தந்தையே. bye…bye…till we meet again……-
திரு அவை வரலாற்றில் யூபிலி கொண்டாடும் வழக்கம் 13 -ஆம் நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்டது. ஓர் ஆண்டு புனித ஆண்டாக அறிவிக்கப்பட்டு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்வாண்டில் பாவங்களுக்குரிய தண்டனை நீக்கம் திருத்தந்தையால் வழங்கப்பட்டது. அதிலிருந்து யூபிலி ஆண்டு ஆண்டவரின் இரக்கத்தையும் மீட்பின் பேறுபலன்களையும் மிகுதியாகப் பெறும் ஆண்டாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது புனித ஆண்டு என்றும் அழைக்கப்படுகிறது.
யூபிலி
ஆண்டில் புனித வாயில் திறக்கும் பழக்கமும் ஏற்பட்டது கி.பி. 1550 -இல்
தான். இவ்வாண்டு புனித பேதுரு, புனித பவுல், புனித மேரி மேஜர், புனித இலாத்தரன் பேராலயங்களில் புனித வாயில்கள் எக்காள முழக்கத்தோடு திறக்கப்பட்டன. இவ்வாயில்கள் வழி நுழைவது மனிதர்களின் வாழ்வுப் பயணம், இறைவனை நோக்கிய ஆன்மிகப் பயணம் என்பதையும், இறைக்குடும்பத்தின் உறுப்பினர்கள், இறைவனுக்குச் சொந்தமானவர்கள் இவர்கள் என்பதையும் குறித்துக் காட்டுகின்றது. கி.பி. 2000 -ஆம்
ஆண்டில் நாம் கொண்டாடவிருக்கும் யூபிலி 28-வது யூபிலியாகும்.
யூபிலி
என்பது மகிழ்ச்சி. அது நமக்கு நன்றி கொண்டாட்டம். திருவிவிலியத்தில் யூபிலியானது சமூக நீதி, ஒப்புரவு, விடுதலை ஆகியவற்றின் கொண்டாட்டமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
“திருச்சபைக்கு யூபிலி என்பது சுருக்கமாக ஆண்டவர் அருள்தரும் ஆண்டாகும். பாவ மன்னிப்பு, பாவங்களுக்குரிய தண்டனை நீக்கம்,
பிணக்கம் கொண்டோர்கிடையே இணக்கம், நிறைந்த மனமாற்றம்... போன்றவற்றிற்குரிய ஆண்டாகும். மற்றக் காலங்களைவிட மிகுதியாகப் பேறுபலன்களை வழங்குதல் யூபிலி ஆண்டுகளின் மரபாகும். மனிதாவதாரத்தை நினைவுகூரும் யூபிலிகளோடு 100, 50, 25 ஆண்டுகள் இடைவெளியில் மீட்பு, இயேசுவின் சிலுவை, கொல்கொதாவில் அவரது இறப்பு, உயிர்ப்பு ஆகியவற்றின் நினைவாகக் கொண்டாடப்படும் யூபிலிகளும் உள்ளன. இந்தச் சமயங்களிலும் திரு அவை ‘ஆண்டவர் அருள்தரும் ஆண்டை’ அறிவித்து, அவருடைய அருளால் விசுவாசிகள் பலன்பெறச் செய்கிறது! இந்த
நோக்கில், கிறிஸ்து பிறப்பின் இரண்டாயிரம் ஆண்டுகளின் நிறைவு தனிச்சிறப்புடைய ஒரு பெரிய யூபிலியாகும்.
“கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாகக் கிறித்தவம் மனுக்குலத்திற்கு ஆற்றியுள்ள சேவைகளை மனத்தில் கொண்டால், இது கிறித்தவர்களுக்கு மட்டுமல்லாது, மனுக்குலம் முழுமைக்குரிய விழாவாகும். இரண்டாயிரம் ஆண்டுகள் நிறைவுறும் இந்த முக்கியமான வேளையில் திரு அவை கடவுள் முன்வைக்கும் உருக்கமான வேண்டுதல்களில் குறிப்பிடத்தக்கது கிறித்தவர்களின் பல்வேறு பிரிவினரிடையேயும் ஒற்றுமை வளர்ந்து நிறைவு பெறவேண்டும் என்பதாகும்.”
1994 நவம்பர் 10-இல்
திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் அவர்கள் வெளியிட்ட ‘மூன்றாம் ஆயிரம் ஆண்டு வரும் வேளையிலே’
என்ற மறைத்தூது திருமுகத்தில் இந்தக் கருத்துகளைக் குறிப்பிட்டுள்ளார்கள். இதன்படி மாபெரும் யூபிலி 2000-க்கான உடனடித் தயாரிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
முதல் கட்டம்:
திருவருகைக்காலம்
1994 முதல் கிறிஸ்து அரசர் திருவிழா 1996 வரை என்பதாகும். இதன் ஆய்வுப்பொருள்: கிறிஸ்தியல், நம்பிக்கை, பிறரன்பு, மன்னிப்பு, மனமாற்றம், கிறித்தவ ஒன்றிப்பு, சகிப்புத்தன்மை, இன்றைய வாழ்வில் திரு அவை, சான்று பகர்தல், கடவுளுக்கும்-மனிதருக்குமான ஒரே நடுநிலையாளரும், உலகத்தின் ஒரே மீட்பரும் கிறிஸ்துவே என்னும் உண்மை.
இரண்டாம் கட்டம்:
திருவருகைக்காலம்
1996 முதல் கிறிஸ்து அரசர் திருவிழா 1999 வரை. இதன் ஆய்வுப் பொருள். மூவொரு கடவுள் (1996), இயேசு கிறிஸ்து (1997), தூய
ஆவி (1998), தந்தையாம் இறைவன் (1999).
வத்திக்கானில்
1995 ஜூன் மாதம் இப்பணிக்காகத் தனியொரு செயலகம் தொடங்கப்பட்டது.
யூபிலி-2000
(மதுரை
மறைமாநில
பேராயர்
மரியானுஸ் ஆரோக்கியசாமி அவர்களின் இறைச்
செய்தி
- 02.01.2000)
“கிறிஸ்து
கடவுளோடு இருந்தவர்; கடவுளாக இருந்தவர்”
(யோவா 1:1-2). அவர் மனு வுரு எடுத்த இந்த மாபெரும் மறைபொருள் நிகழ்ந்த இரண்டாயிரம் ஆண்டினை மாபெரும் யூபிலி ஆண்டாகவும், புனித ஆண்டாகவும் கொண்டாடத் திரு அவை நம்மை அழைக்கிறது.
‘யூபிலி’ என்ற சொல், ‘ஜோபெல்’ என்ற எபிரேய வார்த்தையால் குறித்துக் காட்டப்படுகிறது. இவ்வார்த்தை முதலில் ஆட்டுக்கடாவையும், பின் அறிவிப்பு செய்யப் பயன்படுத்திய அதன் கொம்பையும் குறித்தன (விப 19:13). பழங்கால இஸ்ரயேலில் ஒவ்வொரு 50-வது ஆண்டும் சிறப்பான ஆண்டாக அறிவிக்கப்பட்டது.
ஆட்டுக்
கொம்பினாலான எக்காள முக்காளத்தோடு இந்த 50-ஆம் ஆண்டு ஆடம்பரமாகத் தொடங்கப்பட்டதால் இது ‘ஜோபெல் ஆண்டு’ என்று அழைக்கப்பட்டது. ‘ஜோபெல்’ என்ற எபிரேயச் சொல்லுக்கு ‘ஜூபிலுஸ்’
அல்லது ‘ஜூபிலும்’
என்று இலத்தீன் சொல் பயன்படுத்தப்பட்டது. இதற்கு, ‘இடையர்களின் மகிழ்ச்சிக் குரல்’ என்பது பொருள். இவ்வாறு இடையர்களின் மகிழ்ச்சிக் குரல் இஸ்ரயேல் மக்கள் கொண்டாடிய ஜோபெல் ஆண்டுடன் இரண்டறக் கலந்து ‘யூபிலி ஆண்டு’ என்று வழக்கில் உள்ளது.
யூபிலி ஆண்டின்
நோக்கங்கள்
நான்கு
அடிமைகளுக்கு
விடுதலை
(லேவி
25:10): மனிதர்கள்
கடவுளின் சாயலிலும், உருவிலும் படைக்கப்பட்டவர்கள் (தொநூ 1:27). எனவே, அவர்கள் கடவுளுக்கு மட்டுமே சொந்தம். வேறு எவருக்கும் அவர்கள் அடிமைகளாக முடியாது. ஆகவே அடிமைகளுக்கு விடுதலை அழுத்தம் பெற்றது.
கடன்களுக்கு மன்னிப்பு
(இச
15: 1-2): கடன்களை
மன்னித்தல் மனிதரிடையே உறவைப் புதுப்பித்து புது வாழ்வைக் கொணர்கிறது. மகிழ்ச்சியைக் கொணரும் வாய்ப்பாக அமைகிறது. ஆகவே கடன்கள் மன்னிக்கப்பட்டன.
சொத்துகள் மீட்பு
(லேவி
25:13-14,23): மண்ணுலகு
இறைவனுக்குச் சொந்தம். மனிதர்கள் நிலத்தின் கண்காணிப்பாளர்களே. எனவே அவர்கள் தங்கள் சுயநலத்திற்காகத் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட படைப்புகளைப் பாழ்படுத்த உரிமை இல்லை என்பதை இவ்வம்சம் வலியுறுத்துகிறது.
நிலத்திற்கு ஓய்வு
(லேவி
25: 11-12): நிலத்திற்கு
ஓய்வு வேண்டும் என்பது மனிதர்கள் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்பதை அறிவுறுத்துகிறது. இவ்வாறு யூபிலி ஆண்டு உலக வாழ்வில் மனிதர்கள் இழந்துபோன உரிமைகளைப் பெறுதலாகிய சமூக நீதியையும் சமத்துவத்தையும் அருள் வாழ்வில் இறைவனோடும் பிற மனிதரோடும் ஒப்புரவாகி மகிழ்வுடன் வாழும் புது வாழ்வின் பரிமாணங்களையும் வெளிப்படுத்துகின்றது.
புதிய
ஏற்பாட்டில் “ஆண்டவர் அருள் தரும் ஆண்டை அறிவிக்க அவர் என்னை அனுப்பினார்” (லூக்
1:18-19) என்று இயேசு கூறுகின்றார். கிறிஸ்துவில் மலர்ந்த அருள் தரும் ஆண்டு அதாவது ‘யூபிலி ஆண்டு’ மனமாற்றத்தை வலியுறுத்துகின்றது. உலக மதிப்பீடுகளின்படி வாழ்வதை விடுத்து, மாற்று மனநிலை கொண்டிருத்தலையும் பகிர்வையும் பிறரோடு கொள்ளும் உறவில் நீதி, பொறுமை, அடக்கம் ஆகியவற்றையும் கொண்டு ஆவியில் நிறைந்த உரிமை மக்களாய் வாழ அழைப்பு விடுக்கின்றது.
“சாட்பாட் ஒரு மனிதனைப் போல் நடந்துகொண்டு, பாலியல் ரீதியான கற்பனையை வளர்த்து, அச்சுறுத்தும் வகையில் எதார்த்த அனுபவங்களைத் தன் மகனுக்கு வழங்கியது. உயிரை மாய்த்துக்கொள்வது தொடர்பான எண்ணங்களை அவன் அந்தச் சாட்பாட்டிடம் தெரிவிக்கவே, அது குறித்து அவ்வப்போது அவனை நினைவூட்டி வந்துள்ளது.” - இதுவே தனது 14 வயது மகன் டெனெரிஸ் தர்காரியன் இறப்பிற்குக் காரணமென அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தாய், சாட்பாட் (chatbot) நிறுவனம் ஒன்றின்மீது வழக்குத் தொடுத்துள்ளார்.
அமெரிக்கப்
பத்திரிகையாளர் கெவின் ரூஸ்ஸின் (Kevin Roose), “எனக்கு
நேர்ந்தது உங்களுக்கும் நேரலாம், எனவே எச்சரிக்கையாக இருங்கள்!” என ஏ.ஐ.
சாட்பாட்கள் தன்னை எதிரியாகக் கருதுவதாகக் கவலை தெரிவித்து, நியூயார்க் டைம்ஸில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் கடந்த ஆண்டு மைக்ரோசாஃப்டின் ‘பிங்’ தேடியந்திரத்தின் சாட்பாட் வசதி மூலம் உருவான சாட்பாட்டுடன் தான் உரையாடியதாகவும், உரையாடலில் அந்தச் சாட்பாட் அவரைக் காதலிப்பதாகவும், அதற்காக அவரது மனைவியை விட்டு விலகி வருமாறும் ஆலோசனை வழங்கியுள்ளது. இதனை அவர் ஊடகப் பொதுவெளியில் பதிவிட்டதிலிருந்து அவரை வில்லனாக, நேர்மையற்றவராகப் பாவிக்க ஆரம்பித்துவிட்டன ஏ.ஐ. சாட்பாட்கள்.
இயற்கையை மிஞ்சும்
செயற்கை
“எல்லாச் செயற்கையான பொருள்களையும் உருவாக்கிய மூளைகளுக்குச் சொந்தக்காரர்களாகிய மனிதர்கள், செயற்கையாக மூளைகளையும் உருவாக்க வேண்டும் என்றும் நினைத்தார்கள். அங்ஙனமே செய்மெய் (AI) பிறந்தது” (ஆழி
செந்தில்நாதன்).
எந்தவொரு
புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் வந்தாலும், அது குறித்த சந்தேகங்களும் கூடவே வரும். பல நேரங்களில் சந்தேகங்களைக்
கிளப்பி விடுபவர்கள் அறிவியல் துறையில் முற்றிலும் தொடர்பில்லாதவர்களாக அல்லது எதிர்க்க வேண்டும் என்கிற ஒரே நோக்கத்துடன் செயல்படக் கூடியவர்களாகவே இருப்பார்கள். ஆனால், ஏ.ஐ.-யைப்
பொறுத்தவரையில் கண்டுபிடிப்பாளர்களுக்கே மிகுந்த சந்தேகமும் நிலைமை கைமீறிச் சென்று விடுமோ? என்கிற தொடர் அச்சமுமிருக்கிறது.
‘கருவிதானே, எப்படிச் சுயமாகச் சிந்திக்கும்?’ என்ற கேள்வி எழுவது நியாயமே! மனித மூளையின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளுக்குக் காரணம் நியூரான்கள். அவ்விடத்தைச் செயற்கை நுண்ணறிவில் ப்ரோக்ராம்கள் பிடித்துக் கொண்டுள்ளன. நூற்றுக்கும் குறைவான ப்ரோகிராம்களும், அவைகளுக்கு இடையிலான தொடர்புகளும் நியூரான்களின் வேலையை மேற்கொள்கின்றன. இதுவே செயற்கை நியூரல் வலைப்பின்னல் (Artificial neural
network). நியூரான்கள் ஒவ்வொன்றும் மின் இரசாயன அதிர் வலைகளால் தூண்டப்பட்டு, மனித மூளையைச் செயல்பட வைக்கின்றன. ஜெனிடிக் அல்காரிதம் (Genetic Algorithm) முறைப்படி
ப்ரோக்ராம் வினையாற்றுகிறது. அதுவும் இயற்கை உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி முன்னெடுக்கும் தேர்வு (selection), தக்கவைத்தல் (crossover), மாற்றம் (mutation) ஆகிய மூன்று வழி முறைகளையே தன்னுடைய செயல்பாட்டிற்குப் பயன்படுத்திக் கொள்கிறது.
அச்சுறுத்தலாகப்
பார்க்க
வேண்டுமா?
உலகமெங்கும்
ஒரு செயற்கை அறிவுப் பந்தயம் நிகழ்கிறது. அதீதமான செயற்கை அறிவு அம்சங்களை யார் முதலில் உருவாக்குவது? என்பதில் கடும் போட்டா போட்டி. இது நிறுவனங்கள் தாண்டி, நாடுகளுக்கு இடையிலான போட்டியாகவும் மாறிவிட்டது. இந்நிலையில்தான் ‘ஏன் செயற்கை நுண்ணறிவை நாம் அச்சுறுத்தலாகப் பார்க்க வேண்டும்?’ என்கிற கேள்வி நியாயமானதாகிறது. அதற்குப் பல காரணங்களைக் குறிப்பிடலாம்.
தற்பொழுது ஏ.ஐ. ஜெனிடிக்
ப்ரோக்ராம்கள் தவறுகளைக் கண்டறிந்து, தானாகவே திருத்திக் கொள்ளும் ஆற்றல் படைத்திருக்கின்றன; தேர்வு, தக்கவைத்தல் மற்றும் மாற்றம் ஆகியவைகளின் அடிப்படையில் சூழ்நிலைகளை அறிந்து கொண்டு, அதற்கு ஏற்ப தங்களைத் தாங்களே தகவமைத்தும் வளர்த்துக் கொள்ள அவற்றால் முடிகிறது. ப்ரோக்ராம்கள் வழியாகப் புதிய விசயங்களைத் தொடர்ச்சியாகக் கற்றுக்கொண்டேயிருப்பதால், நம்மைவிட பன்மடங்கு அதிக வேகத்தில் தானா கவே சிந்தித்துச் செயல்படுகிறது.
கார்
உற்பத்தி, ஆலைத்தொழில், மருத்துவம் மற்றும் விவசாயத் துறைகளில் இதன் ஆதிக்கம் முன்னிலை வகித்தாலும், அடுத்தத் தொழில் புரட்சி உருவாக்கத்தில் செயற்கை நுண்ணறிவின் கையே ஓங்கி இருக்க வேண்டும் என்கிற நோக்கில் நாடுகள் செயல்படத் துவங்கிவிட்டதால் மனிதப் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஒரு நாட்டின் பாதுகாப்பு அரணாக இருக்கும் இராணுவ வீரர்களை உருவாக்கும் முயற்சியிலும் செயற்கை நுண்ணறிவு களம் காண்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த போஸ்டன் டைனமிக்ஸ் நிறுவனம் ‘அட்லஸ்’ என்கிற செயற்கை நுண்ணறிவு மனித இராணுவக் கருவியை உருவாக்கியுள்ளது. ஆறடி உயரத்தில் ஆளை மிரட்டும் தோற்றத்திலிருக்கும் இது இயற்கைப் பேரிடர் மற்றும் அணு உலை ஆபத்து போன்ற பேரிடர் காலங்களில் மனித உயிர்களைக் காப்பாற்ற உருவாக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இதன் கரங்களில் எதிரிகளைச் சிதறடிக்கும் ஆயுதங்களைக் கொடுத்தால்?
இந்தியாவில் ஏ.ஐ.
தாக்கம்
ஏ.ஐ. தொழில்நுட்பச் செயலாக்கத்தின்
சர்வதேசச் சராசரி 26 விழுக்காடு. இதனை மிஞ்சும் விதமாய் இந்தியா 30% எட்டிப்பிடித்துள்ளது.
இருப்பினும், இந்தியாவில் 74% நிறுவனங்கள்
ஏ.ஐ. பயன்பாட்டால் ஏற்படும்
உறுதியான மதிப்பு மாற்றத்தை இன்னும் முழுமையாக உணரவில்லை. உலகளவில் 4% நிறுவனங்கள்
தங்களின் செயல்பாடுகளில் அதிநவீன ஏ.ஐ. திறன்களை
மேம்படுத்தி, குறிப்பிடத்தக்க அளவில் தங்களது மதிப்பை அதிகரித்துக் கொண்டுள்ளன.
எப்பொழுதும்
பயன்நிறை வளர்ச்சிகள் பாராட்டுதற்குரியவை. உதாரணத்திற்கு, அரியானா அரசியலமைப்பு அருங்காட்சியகத்தில், சென்னை ஐ.ஐ.டி.
தயாரித்த வழிகாட்டி ரோபோ பார்வையாளர்களுக்கு உதவும் சேவையைத் துவங்கியுள்ளது. டெல்லி தேசிய நீதித்துறை அருங்காட்சியகம் மற்றும் ஆவணக் காப்பகத்தில் ஏ.ஐ. மூலம்
இயங்கும் வழக்கறிஞர் உள்ளார். நாடு முழுவதும் நீதிமன்றங்களில் 5.1 கோடி வழக்குகள் தேங்கியிருக்கின்றன. இதில் 1,80,000 வழக்குகள் 30 ஆண்டுகளைக் கடந்தவை. இந்நிலையில் வழக்குகளை விரைந்து முடிக்க இயந்திர நீதிபதி வரவு நன்றே என்கின்றனர். அதேவேளையில் இந்தியாவில் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ அட்டூழியங்களும் புது வடிவங்களில் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. இது குறித்த விழிப்புணர்வும் அவசியம்.
தமிழ்நாட்டில்
கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், ஆராய்ச்சி, மருத்துவத்துறைகளில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதன் வாய்ப்புகள் குறித்த ஆக்கப்பூர்வ வழிகாட்டுதல்களையும், இப்புதிய தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை வழிநடத்தத் தேவைப்படும் வரையறைகளைத் தெளிவாக வகுக்கவும் 2024-25-ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் பேசப்பட்டது. அதன்படி, சமீபத்தில் தமிழ்நாடு முதல்வர் தலைமையில் ‘தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம்’ செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இவ்வியக்கத்தை அமல்படுத்த முதல் கட்டமாக ரூ.13.93 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
உயர்
வாழ்வை எல்லாரும் பெறுவதே சமூக முன்னேற்றம். இதனை அடைய ‘வாழ்தல்’,
‘ஆள்தல்’ எனும்
இரு நிலைகளுக்கிடையே நிகழும் நீண்ட போராட்ட இடைவெளி சுருங்க வேண்டும். வாழ்வதற்கான வளர்ச்சிகள் வரவேற்கத்தக்கவை; ஆள்வதற்கான அலட்சியங்கள் எதிர்க்க வேண்டியவையே!
பெங்களூரில் அமைந்துள்ள போற்றுதலுக்குரிய நமது புனித பேதுரு பாப்பிறைக் குருத்துவக் கல்லூரி இறைவனின் அளப்பரிய ஆசிரால் ஆல்போல் தழைத்து, தனது பொன்விழா ஆண்டில் (1976-2026) அடியெடுத்து வைத்துள்ளது. இப்பொன் விழா நிகழ்வுகள் மூன்று நிலைகளில் கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளன. முதலாவதாக, யூபிலி தொடக்கக் கொண்டாட்டம் 2025, ஜனவரி 10 மற்றும் 11 ஆகிய நாள்களிலும், இரண்டாவது நிகழ்வாக, முன்னாள் மாணவர்களுடன் சர்வதேச மாநாட் டுக் கொண்டாட்டம் 2025 செப்டம்பரிலும், மூன்றாவது நிகழ்வாக, யூபிலி நிறைவுக் கொண்டாட்டம் 2026 ஜனவரியிலும் நிகழ்த்தப்பட உள்ளன. வரலாற்றுச் சிறப்புமிக்க இப்பொன்விழாவைக் கொண்டாடும் விதமாக இக்கல்லூரியின் பெருமையையும் புகழையும் அறிய முற்படுவோம்.
புனித பேதுரு
பாப்பிறைக்
குருமடத்தின்
வரலாறு
(1778-1976), பாப்பிறைக் கல்லூரி உருவாக்கம்
(1976) வரலாற்றுப் பார்வை
புனித
பேதுரு குருமடமானது 1778-இல் பாண்டிச்சேரியில் ‘பாரின் மிஷன் சொசைட்டி ஆப் பாரிஸ்’-
MEP சபையினரால்
உருவாக்கப்பட்டது.
1790-இல் புனித வளனார் பெரிய குருமடமாகச் (Grand Seminaire)) செயல்படத்
தொடங்கியது. 1934-ஆம் ஆண்டில் இக்குருமடம் ‘புனித பேதுரு குருமடம்’
என்ற பெயரில் பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது. 1962-இல் வத்திக்கான் நகரின் உர்பானியானா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டதன் வழியாக இறையியல் இளங்கலைப்பட்டம் வழங்குவதற்கான அனுமதியைப் பெற்றது. ஜனவரி 6, 1976-ஆம் ஆண்டு உரோமைக் கத்தோலிக்கக் கல்விக்கான பேராயத்தின் ‘Ecce vir Orienó’
எனும் ஆணை கடிதத்தின் மூலம் புனித பேதுரு பாப்பிறைக் கல்லூரி நிறுவப்பட்டது.
மறைத்தூதுப் பணியியல்
(Missiology) மற்றும்
விவிலிய
இறையியல்
(Biblical Theology)
துறைகள்
உருவாக்கம்
உரோமை
ஆட்சிப் பீடத்தின் அனுமதியுடன், இந்தியாவில் மறைத்தூதுப் பணியியல் படிப்பிற்கான முதல் கல்வியகம் என்ற பெருமையுடன் முதுகலை பயிலும் ஏழு மாணவர்களைக் கொண்டு 1976 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்நாள் வரை 121 மாணவர்கள் முதுகலைப் பட்டத்தில் தேர்ச்சியும், 1989 முதல் இன்று வரை 51 பேர் முனைவர் பட்டமும் பெற்றுள்ளனர். ஜூலை 1, 1981-இல் விவிலிய இறையியலில் முதுகலைப் பாடத்திட்டமானது கொண்டு வரப்பட்டது. துவங்கிய ஐந்து ஆண்டுக்குள் விவிலிய இறையியலில் முதுகலைப் பட்டமும், முனைவர் பட்டமும் வழங்குவதற்கான பாடத்திட்டங்களோடு உயர்ந்தது. விவிலிய இறையியல் துறை இதனைத் துவங்கியபோது ஐந்து மாணவர்கள் மட்டுமே இருந்தாலும், பின்னர் தொடர்ந்து அதிகரித்து வந்து தற்போது வரை 303 பேர் விவிலிய இறையியலில் முதுகலைப் பட்டமும் (Licentiate) 65 பேர்
முனைவர் பட்டமும் பெற்றுள்ளனர்.
கல்லூரியின் பரிணாம
வளர்ச்சி:
நூலகமும்
(1978) நிரந்தர அங்கீகாரமும்
(1985)
MEP தந்தையர்கள், மறைந்த அருள்முனைவர் பியர் பென்வென் மற்றும் அருள்முனைவர் லூசியன் லெக்ராண்ட் ஆகியோரின் முற்போக்குச் சிந்தனை புனித பேதுரு பாப்பிறைக் கல்லூரியை உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்தது. நம் நினைவில் வாழும் கர்தினால் துரைசாமி சைமன், பேராயர் மைக்கேல் அகஸ்டின், பேராயர் ஆனந்தராயர், அருள்தந்தை ஜே.பி. செக்வேரா
மற்றும் பல மூத்த பேராசிரியர்களுக்கும்,
அருள்தந்தை ஜோசப் பிரான்சிஸ், அலாய்சியஸ் சேவியர் ஆகியோருக்கும் இக்கல்லூரி மிகுந்த நன்றிக்கடன்பட்டுள்ளது. மெய்யியல்,
விவிலிய இறையியல் மறைத்தூதுப் பணியியல் மற்றும் திரு அவைச் சட்டம், மறை அறிவியல் ஆகிய துறைகளில் உயர் கல்வி வழங்கும் கல்வியகமாக இன்று உயர்ந்துள்ளது.
1976 -ஆம் ஆண்டு
முதல் குறிப்பிடத்தக்க பல முன்னேற்றங்களை உயர்
கல்வியகம் கண்டுள்ளது. 1978-இல் இக்குருமடத்தின் இரு நூற்றாண்டு நினைவாகப் புனித பேதுரு நூலகமும், முதுகலை மாணவர்களுக்கான தங்குமிடமும் கட்டப்பட்டன. இறையியல் அறிவை ஆழப்படுத்த கத்தோலிக்கக் கல்விக்கான பேராயம் 1985-இல் புனித பேதுரு பாப்பிறைக் கல்லூரிக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்கியது.
பொதுநிலையினருக்கான
பாடத்திட்டங்கள்
(1980) திரு அவைச் சட்டப்
படிப்பிற்கான
மையம்
(1981)
இரண்டாம்
வத்திக்கான் சங்கத்திற்குப் பிறகு பொதுநிலையினரை உருவாக்குவதைக் கருத்தில் கொண்டு, இறைமக்களுக்கு இறையியலைக் கொண்டு செல்ல புனித பேதுரு பாப்பிறைக் கல்லூரி 1980-களிலேயே பல்வேறு பாடத்திட்டங்களை உருவாக்கி, இன்றுவரை கற்பித்துக் கொண்டிருக்கிறது.
1983 -ஆம் ஆண்டு
புதிய திரு அவைச் சட்டம் வெளியிடப்பட்ட பிறகு, இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவை (CBCI) உத்தரவின்
பேரில் புனித பேதுரு பாப்பிறைக் கல்லூரியில் திரு அவைச் சட்டம் பயிலும் மையத்தை 1987-இல் தொடங்கியது. அடுத்த ஆண்டே (1988) கத்தோலிக்கக் கல்விக்கான பேராயம் ஒப்புதல் அளித்ததன் பேரில் புனித பேதுரு திரு அவைச் சட்ட மையமானது வத்திக்கான் நகரின் உர்பானியானா பாப்பிறை பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்டது. இன்று வரை 410 மாணவர்கள் முதுகலை உயர் கல்வியை நிறைவு செய்து இந்தியத் திரு அவைக்குச் சிறப்பான பணியாற்றி வருகின்றனர்.
மெய்யியல்
(1991) மறைசார்ந்த அறிவியலில் உயர்
கல்வி (Higher
Institute of Religious Education HIRS - 2022)
புனித
பேதுரு பாப்பிறைக் கல்லூரி மெய்யியல் முதுகலைப் பட்டப்படிப்பை வழங்க 1991-ஆம் ஆண்டு தனித்துறையைத் துவக்க அங்கீகாரமும் பெற்றது. 1992, ஜூன் முதல் அதற்கான பாடத் திட்டங்களை வகுத்துக் கற்பிக்கத் தொடங்கியது. மறைசார்ந்த அறிவியலில் உயர் கல்வி (Higher Institute of Religious Science - HIRS) ஜூன் 2022 -இல் தொடங்கப்பட்டு, பொதுநிலையினருக்கும் அர்ப்பணிப்பு வாழ்விலுள்ள சகோதர, சகோதரிகளுக்கும் மறைசார்ந்த அறிவியலில் இளங்கலைப் பட்டமும் (Bachelor of Religious Science), முதுகலைப் பட்டமும்
(Licentiate in Religious Science) பெறுவதற்கான வழிவகையைத்
தருகின்றது.
இணைய வழி
இறையியல்
கல்வி
(St. Peter\'s Online Theology –SPOT 2023)
இறையியல்
கல்வியை நேரிடையாகச் சென்று பயில முடியாதவர்களுக்கு இணையம் வழியாகக் கற்பிக்கும் முறையைப் புனித பேதுரு பாப்பிறைக் கல்லூரி 2023 -ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. பொதுநிலையினர் மற்றும் அர்ப்பண வாழ்வு சபையினருக்கான இரண்டு வருட இறையியல் பட்டயப் படிப்பு மற்றும் இறையியல், விவிலிய இறையியல், மறைத்தூதுப் பணியியல், திரு அவைச் சட்டம் ஆகிய துறைகளில் ஒருவருட சான்றிதழ் படிப்பிற்கான கல்வியை 950 நபர்களுக்கு வழங்கி வருகிறது.
புனித
பேதுரு பாப்பிறைக் கல்லூரி ஆளுகையின் கீழ் இந்தியாவில் செயல்படும் 9 இறையியல் கல்லூரிகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
புனித பேதுரு
பாப்பிறைக்
கல்லூரியின்
நோக்க
மும்
எதிர்கால
திட்டமும்
இந்தியத்
திரு அவை எதிர்கொள்ளும் இன்றைய சவால்களைத் தத்துவ மற்றும் இறையியல் அறிவுடன் சந்திக்க இக்கல்லூரி முற்படுகிறது. திரு அவை சார்ந்த மேற்படிப்புகளில், அறிவியல் ஆய்வுகளில் ஆர்வத்தோடு ஈடுபட பயிற்சியும், இந்தியக் கலாச்சார, தார்மீக, மத மற்றும் தத்துவ
மரபுகளின்படி ஆய்வுகளை ஊக்கப்படுத்தவும் இக்கல்வியகம் உதவுகிறது. மெய்யியல், இறையியல், திரு அவைச் சட்டம், மறைத்தூதுப் பணியியல் துறைகளின் செயல்பாடுகளை விரிவாக்கம் செய்து பல திட்டங்கள் செயல்படுத்தப்பட
உள்ளன.
புனித
பேதுரு பாப்பிறைக் கல்லூரியானது மென்மேலும் வளர்ச்சி பெற்று இந்தியத் திரு அவைக்குப் பணியாற்ற வாழ்த்துவோம்.
பொங்கல் விடுமுறையாதலால் பாவையின் கணவர், குழந்தைகள் வேந்தன்-அஞ்சனம், கணவரின் தங்கை பியூலா அனைவரும் கிளம்பி சிலம்புச் செல்வியின் வீட்டுக்குச் சென்றனர்.
போகும்
வழி நெடுகிலும் கரும்பைக் கட்டு கட்டாகக் கட்டி நிறுத்திக் குவித்து வைத்திருந்தனர். புது மஞ்சளும் இஞ்சியும் பெருமளவில் விற்பனையாகிக் கொண்டிருந்தன.
வீதியெல்லாம்
என்னவோ போல் வித்தியாசமாக இருக்கிறதை “என்ன அது... என்ன அது?” என வேந்தன் கேட்டுக்கொண்டே
வந்தான்.
“சரி, எல்லாவற்றையும் கேட்டாயே... வீடுகளின் நிலைப்படிகளில், வாசலில் என்று பூளைப் பூவையும், வேப்பிலையையும் சேர்த்துக் கட்டிச் செருகி வைத்திருக்கிறார்களே….. அதை
நீ கவனிக்கவில்லையாக்கும்?” என்று கேட்டாள் பாவை.
“அது என்னங்க அம்மா பூளைப்பூ?”
“வெள்ளையாக, சிறிதாக மூக்குத்தி அளவில் காணப்படுகிறதல்லவா! அதுதான் பூளைப்பூ. பொங்கல் சமயத்தில் மட்டும்தான் இந்தப் பூ விளையும். கோவையில்,
பூளைப்பூ அதிகமாக விளைந்த பகுதியை ‘பூளைமேடு’
என்றனர். அப்பெயர் மருவி இப்பொழுது பொருள் தெரியாமல் ‘பீளமேடு’ என்று கூறுகிறார்கள். பூளைப்பூ அழகு; வேப்பிலை கிருமிநாசினி. எனவே, இரண்டையும் சேர்த்து வைப்பது நமது தொன்றுதொட்ட மரபாக இருந்து வருகிறது. இது மட்டுமில்லை பாவை, பூளைப் பூவிற்கு மருத்துவக் குணம் மிகுதி. ஈரத்தை உறியும் ஆற்றல் பூளைப் பூவிற்கு உண்டு. வேப்பிலையும் சூடு தைக்குளிர் தரையெல்லாம் நடுங்கும் என்பார்கள். சுற்றுப்புறச் சூழலில் உள்ள பனியின் அளவைச் சமச்சீராக்கித் தருவதற்காக இறைவன் நமக்குக் கொடுத்த கொடையே பூளைப்பூ.”
பேராசிரியரான
தன் அண்ணா சொல்வதை மருத்துவரான பியூலா கேட்டு வியந்த வண்ணம் இருந்தார்.
‘பொங்கலோ பொங்கல்’
- இப்படி மூன்று முறை அனைவரும் சேர்ந்து ஒரே குரலில் முழங்கினர். சிலம்புச் செல்வியின் வீட்டிற்குள் பாவை குடும்பத்தினர் நுழைவதற்கும், பொங்கல் முழக்கம் எழுவதற்கும் சரியாக இருந்தது. முழக்கத்தைத் தொடர்ந்து பெண்களும் வயதானவர்களும் சேர்ந்து நாவால் குலவை இட்டனர்.
“என்ன குழந்தைகளா, எல்லாம் உங்களுக்கு வியப்பாக இருக்கிறதா! முதலில் பொங்கல் சாப்பிடுங்கள். பிறகு பொங்கல் பண்டிகை பற்றி என்ன விவரம் வேண்டும், கேளுங்கள் நான் சொல்கிறேன்” - சிலம்புச்
செல்வியின் மாமனார் சமயச் சொற்பொழிவாளர் அன்புடன் கூறினார்.
முந்திரி,
கல்கண்டு, நெய் என்று மணத்த பொங்கல் பிள்ளைகளை மயக்கியது. விருப்பமாகக் குழந்தைகள் உண்டனர்.
“குழந்தைகளா, வெறும் பொங்கல் மட்டும் சாப்பிட்டால் எப்படி? அதிரசம், முறுக்கு, பணியாரம் எனப் பலகாரங்களும் இருக்கின்றனவே. அவைகளையும் ஒரு கை பாருங்கள்” என்றார் பெரியவர்.
“தாத்தா, பொங்கலுக்கு முதல் நாள் தீ எதுக்கு வைக்கிறாங்க?”
இது அஞ்சனத்தின் ஐயம்.
“ஒரு வருடமாக வீட்டில் சேர்ந்திருக்கும் பழைய குப்பைகளை எல்லாம் வெளியே எடுத்துப் போட்டுத் தூய்மை செய்வார்கள். வெளியே எறிந்துவிட்டால் சுற்றுப்புறம் மாசுபடும். ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’
என்பார்கள். அந்த முறையில் பழைய குப்பைகளை நெருப்பு வைத்துச் சாம்பலாக்கிப் போக்கி விடுவர். பழைய குப்பைகளைப் போக்கும் நிகழ்வை ஒரு பண்டிகையாகவே நம் முன்னோர் முறைப்படுத்திக் கடைப் பிடித்தனர். அதைத்தான் போகிப் பண்டிகை என்கின்றோம்.”
“தைப்பொங்கலுக்கு ஏன் தாத்தா யாரும் தலைக்குக் குளிப்பதில்லை? தீபாவளிக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கிறார்கள் இல்லையா?”
“தீபாவளி சமயம் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு ஏற்ற வகையில் வெப்பம் இருக்கும். பொங்கலின் பொழுது கடும் பனிக்காலமாக இருக்கிறது இல்லையா! அதனால் எண்ணெய் தேய்த்துத் தலைக்கு நீராடல் என்பது முக்கியத்துவம் பெறாது. ஆனால், தீபாவளி நமது பண்டிகை இல்லை. வட நாட்டாருடையது.”
“அப்படியானால் பொங்கல்தான் தமிழர் பண்டிகையா தாத்தா?” அஞ்சனா வினவினாள்.
“ஆமாம். உழவுத் தொழில்தான் நம் தமிழர்களின் முக்கியத் தொழில். ‘சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்’ என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார்.”
“தை பிறந்தால் வழி
பிறக்கும்’-ன்னு
ஏன் சொல்றாங்க தாத்தா?” இது
வேந்தன்.
“தை மாதம் நன்மைகள்
பெருகுமாம். நல்லது செய்யக்கூடியதும் ஆதாரமாக இருக்கக்கூடியவற்றையெல்லாம்
பெண்ணாகக் கூறுவது மரபு. மலை, கடல், ஆறு இவற்றைப் பெண்ணாகத்தான் நாம் பார்க்கிறோம். அதைப்போல் ஓராண்டு காலம் உழவர்கள் உழைத்த உழைப்பெல்லாம் தை மாதத்தில் நெல்மணிகளாகப்
பெருக்கெடுக்கின்றன. அந்த நெல் சோறாகப் பொங்கிப் பசியைத் தீர்க்கின்றது. இதேமாதிரி நன்மைகளின் ஊற்றாக இருக்கும் தைப்பொங்கலைத் தமிழர்களின் புது வருடப் பிறப்பாகத் தமிழக அரசு அறிவித்திருப்பது மிகப் பொருத்தம்தானே”
“அது சரி தாத்தா. வீட்டுக்கு வெள்ளை அடிச்சிருக்கீங்க சரி, மாட்டுக்கு எதுக்கு வண்ணம் பூசியிருக்கீங்க?” - இது அஞ்சனத்தின் வினா.
“சாம்பார் இல்லாத கல்யாணமா? எருதுகள் இல்லாமல் உழவுத் தொழிலா? உழவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளை மதிக்கும் வகையில் பொங்கலுக்கு அடுத்த நாள் கொண்டாடப்படுவதுதான் மாட்டுப் பொங்கல். அன்றைக்கு மாடுகளுக்கு வேலைகள் கொடுக்கமாட்டார்கள். முதல் நாளிலேயே மாடுகளைக் குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணம் தீட்டுவர். கொம்பின் நுனியில் மணிகளைக் கட்டி அழகு செய்வர். மாட்டுப் பொங்கலன்று சங்க காலத்தில் இருந்தே துள்ளி வரும் காளைகளை அடக்கும் வீர விளையாட்டு நடந்து வருகிறது. அதற்கு ‘ஏறு தழுவுதல்’
என்று முல்லைக்கலி குறிப்பிடுகிறது.”
“அது சரி. ‘காணும் பொங்கல்’ன்னா என்ன தாத்தா?”
“அழகு அஞ்சனா! சொல்றேன்
கேளு. மாட்டுப் பொங்கலுக்கு அடுத்த நாள் ஒருவர் ஒருவரைச் சென்று கண்டு மகிழ்வதும் பெரியவர்களைக்
கண்டு ஆசிர்வாதம் வாங்கிக்கொள்வதும்தான் காணும் பொங்கல்.”
“தாத்தா... பொங்கல் விழாவில் இத்தனை செய்திகள், தமிழர் மரபு, வாழ்வியல் இருக்கின்றனவா! ஆச்சரியமாக இருக்கிறதே!”
“ஆமாம். தமிழர் வாழ்வியல் இது... மறந்துவிடாதீர்கள். மனத்தில் கொள்ளுங்கள்.”