டிசம்பர் மாதம் - கத்தோலிக்கத் திரு அவை வரலாற்றில், ஏன் உலக வரலாற்றில்கூட முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஏனென்றால், உலக வரலாற்றைக் கிறிஸ்து பிறப்பிற்கு முன் (கி.மு.), கிறிஸ்து பிறப்பிற்குப் பின் (கி.பி.) என்று கணிக்கிறார்கள், கூர்ந்தாய்வு செய்கிறார்கள்.
டிசம்பர்
மாதம் இருபத்தைந்தாம் நாள் இறைமகன் இயேசு அவனியில் அவதரித்த நாள். ‘அருள் நிறைந்த மரியே வாழ்க’ என்ற
பொருள் பொதிந்த வாழ்த்துகளைக் கூறிய தேவதூதரின் வார்த்தைகளை மெய்ப்பிக்க வந்த சிசுபாலன் பிறந்த நாள்!
தச்சன்
சூசையும், தாய் மரியாவும் ஈன்றெடுத்த பச்சை மரம் துளிர்விட்ட நாள்! சுத்துகின்ற உலகில் சத்தமேதுமில்லாமல் சூசை-மேரியிடம் சுதன் இயேசு பிறந்த நாள்!
அன்பென்ற
மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றிய நாள்! மார்கழிக் குளிரில் மாடடைக் குடிலில் பிதாமகன் பிறந்த நாள்!
போட்ட
விதை முளைக்கும் பொன்னான பூமியிலே வாட்டமில்லாப் பயிராக முள்வேந்தன் முளைத்த நாள்! மாணிக்கத் தொட்டிலுக்கு வாய்க்காத பெருமையெல்லாம் ஆநிரைத் தொழுவினுக்குப் பெருமை சேர்த்த நாள்!
வானளந்த
திருக்குமரன், மனிதகுல மருத்துவன், தேனமுதத் திருவாயில் சித்திரங்கள் தீட்டிய சத்திய மகன் பிறந்த நாள்! மாளிகைச் செல்வம் தோற்கும், மாணிக்கத் தொட்டில் தோற்கும், தூளி இல்லாதபோதும் தூயமரியிடம் தூயவர் துயிலெழுந்த நாள்!
மாளிகையும்
இல்லை, மஞ்சமுமில்லை என்றாலும், ஏழைத் தொழுவில் வந்த இறைமகன் பிறந்த நாள்! மனிதரைப் புனிதராய் ஆக்கிடவே புனிதராம் கடவுள் மனிதரான நாள்! எத்தனையோ பாவிகளின் பாவத்தைத் தம் தோளில் ஏற்றுக்கொள்ள உத்தமர் உதித்த நாள்!
இந்த
நாளை அர்த்தமுள்ள நாளாகக் கொண்டாடுகின்றோமா? கிறிஸ்துவின் பிறப்பு மண்ணுலகை உவகை அடையச் செய்தது; உயர்வடையச் செய்தது; மானுடத்தைத் தம்முயிர் கொடுத்து மீட்டது; ஒடுக்கப்பட்டோருக்கு உரிமை வாழ்வைக் கொடுத்தது; பசித்தோரைப் புசிக்கச் செய்தது; ஆணவம் கொண்டோரை அரியணையிலிருந்து அகற்றியது; பாவங்களையும் சாபங்களையும் அகற்றி, மனித வாழ்வில் தீபங்கள் ஏற்றியது; அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்க வைத்து உயர்த்தியது; உள்ளத்தில் செருக்குடன் சிந்திப் போரைச் சிதறடித்தது; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்தியது; செல்வரை வெறுங்கையராய்ச் செல்வோராக மாற்றியது. இத்தகைய மகிமை கொண்ட, புனிதம் கண்ட கிறிஸ்து பிறப்பு விழாவை நாம் அர்த்தமுள்ளதாகக் கொண்டாடுகிறோமா?
விழாக்காலம்
வந்துவிட்டால் சிலருக்குக் கொண்டாட்டம்; பலருக்குத் திண்டாட்டம்; இன்னும் ஒரு சிலருக்குத் திண்டாட்டமும் கொண்டாட்டமும் இல்லாத போராட்டம்!
‘மனைவி, மக்களுக்குத் துணிகள் வாங்க வேண்டுமே, அதற்கு யாரிடம் கடன் வாங்குவது? கடன் வாங்கினால் எப்படித் திருப்பிக் கொடுப்பது? மற்ற பிள்ளைகளைப்போல் என் பிள்ளைகளும் அலங்காரமாக, ஆடம்பரமாகத் தெரிய வேண்டுமே! மனைவிக்குப் பட்டுச் சேலை வாங்கவேண்டுமே...’ என்கின்ற குடும்பத் தலைவர்களின் எண்ண ஓட்டம்.
‘என் கணவர் உயர்ந்த விலைக்குப் பட்டுச் சேலை எடுத்துத் தருவாரோ இல்லையோ?’ என்ற ஏக்கமும், ‘பக்கத்து வீட்டுக்காரப் பெண் பத்துப் பவுனுக்குக் காசுமாலை வாங்கி வந்துவிட்டாள்... அதேபோல் நாமும் என்ன பாடுபட்டாவது, கணவரை என்ன பாடுபடுத்தியாவது காசுமாலையை வாங்கிவிட வேண்டும்?’ - குடும்பத் தலைவிகளின் போட்டியும் பொறாமையும் ஆசையும் அங்கலாய்ப்பும் கலந்த பரிதாப பதைபதைப்பு!
‘நண்பர்களை அழைத்து ஓட்டலில் கறி விருந்து, மதுவிருந்து வைக்க வேண்டும்; அதற்கு அம்மா-அப்பாவிடம் தந்திரமாகக் காசு பறிக்க வேண்டும்’
என்கிற இளைஞர்களின் படபடப்பு!
பகட்டான
பட்டாடைகள் அணிந்து, ஆடம்பர அணிகலன்கள் சூடி கிறிஸ்துமஸ் விழாவிற்கு ஆலயங்களுக்குச் செல்கிறோமே... ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? அரசர்க்கெல்லாம் அரசர் கிறிஸ்து அரசர் இதற்காகவா ஏழையின் கோலத்தில் பிறந்தார்?
குடும்பப்
பொருளாதாரத்தை நிரூபிப்பதற்கும், ஆடைகளின் அணிவகுப்பை நடத்துவதற்கும், அணிகலன்களின் ஆடம்பரத்தைக் காட்டுவதற்குமா கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்? அடுத்த வேளை உணவில்லாமல் அடுத்த வீட்டு ஏழை ஏங்குகையில், நமக்கெதற்கு ஆடம்பரக் கொண்டாட்டம்?
பெற்றெடுத்தத்
தாயை முதியோர் இல்லங்களில் சேர்த்துவிட்டு நாம் மட்டும் கிறிஸ்துமஸ் விழாவை ஆடம்பரமாய்க் கொண்டாடுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? பக்தியோடு மறைநிகழ்வுகளில் பங்கெடுப்பதில்லை. கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நமக்கெதற்கு? தன்னைப்போல் தன் அயலானையும் நேசித்து அன்பாக வாழ விருப்பமில்லை. கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நமக்கெதற்கு? கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று வாழ்கின்றபோது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நமக்கெதற்கு? ஆலயங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய மனமில்லையெனில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நமக்கெதற்கு? வீட்டில் மது பாட்டில்களை அடுக்கி வைத்தும், மது அருந்தியும் கிறிஸ்துமஸ் திருப்பலிக்குச் செல்கிறோமே... கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நமக்கெதற்கு?
ஆயிரக்கணக்கில்
செலவு செய்து உணவு தயாரித்து, ஓர் அநாதைக்குக் கூட, ஓர் ஆதரவற்றோருக்குக் கூட, ஓர் ஏழைக்குக் கூட உணவளிக்க மறுத்து, எஞ்சியவற்றை, மிஞ்சியவற்றைத் தெருவில் கொட்டுகிறோமே! கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நமக்கெதற்கு?
உங்களுக்கு
ஓர் உண்மை தெரியுமா? வீடுகளில், விழாக்காலங்களில், நல்ல நிகழ்ச்சிகளில் மிஞ்சிய உணவுப் பதார்த்தங்களைச் சேகரித்தால், தமிழ்நாட்டில்... ஏன் இந்தியாவில் இல்லாமை இல்லாமையாகிவிடும்! ஆகவே, அன்பில் நனைவோம். ஆன்மிகத்தில்
இணைவோம். இழந்தோரிடத்தில்
இரக்கம் கொள்வோம். ஈகை உதவி இதயம் மலர்வோம். உறவோரிடத்து உள்ளன்பு வைப்போம். ஊரார்
புகழப் பணிவுடன் நடப்போம். என்றும்
எதிலும் உண்மையாய் வாழ்வோம். ஏழைகளுக்கு உதவி செய்வோம்.
கன்னித்
தாயின் காலடி வணங்குவோம். காலம் அறிந்து கணக்குற வாழ்வோம். கிட்டாதாயின் வெட்டென மறப்போம். கீழோர் மேலோர் பேதம் துறப்போம். கெட்ட பழக்கம் இல்லாமல் வாழ்வோம். கேடுகள் எதையும் நாடாதிருப்போம். கொடுஞ் செயல்களை அழித்துக் காட்டி, கோமகனின் பிறப்பு விழாவை அர்த்தமுள்ளதாகக் கொண்டாடுவோம்.
அனைவருக்கும்
கிறிஸ்து பிறப்பு வாழ்த்துகள்!
கொண்டாட்டங்கள் நமக்கு மகிழ்ச்சியைக் கொண்டு வருகின்றன, உற்சாகத்தைக் கொடுக்கின்றன, கவலைகளை மறக்க வைக்கின்றன. நமக்குள்ளும் நம்மைச் சுற்றிலும் ஓர் இனம் புரியாத இன்பத்தைச் சேர்க்கின்றன. ஆனால், ஆன்மிக அர்த்தத்தில் இந்தக் கொண்டாட்டங்களை ஆழ்ந்து சிந்திக்கும் போது, அது சில சமயங்களில் சில உண்மைகளை நம் கவனத்தில் கொண்டுவராமல் தவிர்த்து விடுகின்றன. ஏனெனில், இந்த உண்மைகள் நம் மகிழ்ச்சியைப் பறித்துவிடுமோ அல்லது குந்தகம் ஏற்பட்டு விடுமோ என்று அச்சப்பட்டு, நம்மை ஆராயவிடாமல் அந்த மேலோட்டமான நிலையிலேயே இருக்கும்படிச் செய்கின்றன.
இங்குக்
கொண்டாட்டங்கள் வேண்டாமென்று கூறவில்லை; அதிலுள்ள ஏமாற்று வேலைகளை அறிந்துகொள்ள வேண்டும் என்பதை எடுத்துக் கூறுவது கடமையாயிருக்கிறது. ஏனெனில், உலகமயமாக்கலின் காரணமாக, பெருநிறுவனங்கள் (corporate) கடவுள், மனிதம், பொருள்கள் என்பதை வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. ஒவ்வொன்றையும் விலைக்கு உரிய பொருளாகப் பார்க்க ஆரம்பித்து விட்டன. எதில்
வரவு அதிகம் என்பதை ஆராய்ந்து, அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, அதை மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்துகின்றன. அவர்களுக்குக் கிறிஸ்து பிறப்பும் ஒரு பொருள்தான். ஆகவே, இந்த நாளை மிகவும் வணிக நோக்கில் அறிமுகப்படுத்தி, அதில் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய பயன்படுத்திக்கொள்கின்றன.
இந்த
உலக மாயைக்குள்ளும், அதன் மாயக் கவர்ச்சிக்குள்ளும் சிக்கி நம் ஆன்மாவை இழந்து விடாமல் இருக்கவும், கிறிஸ்து பிறப்பை எவ்வாறு பொருள் உணர்ந்து கொண்டாடலாம் என்ற சிந்தனையை வழங்கவே இங்கு முயல்கிறோம்.
முதல்
கிறிஸ்துமசுக்கு முந்தைய நாள் அன்று, உலகம் இங்கு என்ன நடக்கப்போகிறது என்பதை அறியாமல் இருந்தது. ஆனால், விண்ணுலகில் உள்ள எண்ணற்ற வானதூதர்கள், தூயவர்கள் அனைவரும் கடவுள் தம்முடைய மீட்பை அனுப்புவதைக் குறிக்கும் ஒரு குழந்தையின் பிறப்புக்கு, புகழ்ச்சி மற்றும் வழிபாடு ஆகியவற்றிற்காகக் காத்திருந்தனர். அன்று விண்ணகத்தில் ஒரு பிரியாவிடை நடந்து கொண்டிருந்தது. மகன் தந்தையிடம் விடைபெறும்பொழுது நடந்த உரையாடல், அதில் ஒரு பகுதி, எபிரேயர் 10-வது அதிகாரத்தில் நமக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இயேசு தம் தந்தையிடம் பேசுகிறார்: “பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; ஆனால், ஓர் உடலை எனக்கு அமைத்துத் தந்தீர். எரிபலிகளும் பாவம் போக்கும் பலிகளும் உமக்கு உகந்தவையல்ல; எனவே, நான் கூறியது: ‘என் கடவுளே, உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன்’ (எபிரேயர்
10:5). அப்பா, நீங்கள் விலங்குகளின் இரத்தத்தில் நிறைவடையவில்லை என்பதை நான் உணர்கிறேன். நான் அந்த உலகத்திற்குச் சென்று நிறைவான தியாகமாக இருப்பதற்காக நீர் எனக்காக ஓர் உடலை அமைத்துத் தந்தீர், அதை நான் நிறைவேற்றுவேன். ஏனென்றால், உமது திருவுளத்தை நிறைவேற்ற திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளபடி நான் வருகிறேன்”
என்றார். எனவே, இயேசு கிறிஸ்து தமது தந்தையிடம் விடைபெற்று, முப்பத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சிலுவையில் நிறைவடையும் ஒரு மீட்பின் பயணத்தைத் தொடங்கினார். கிறிஸ்துவின்
உடல் கடவுளை மனிதரிடம் கொண்டு வருவதற்கான கருவியாக இருக்க கடவுளால் தெய்வீகமாக ஆயத்தப்படுத்தப்பட்டது. மேலும், இது பாவத்திற்கான சரியான பலியாக இருந்தது. ஆகவே, இயேசு விண்ணகத்தின் ஆரவாரத்துடன் வந்தார். ஆனால், உலகில் எந்த ஆரவாரமும் இல்லை. உலகு மறதியாக இருந்தது. கடவுள் ஊனுடலில் வெளிப்பட்டார்; விண்ணகம் அதை அறிந்திருந்தது, ஆனால், உலகம் அறியவில்லை. தூய ஆவி தமது பணியை நிறைவேற்ற ஒன்பது மாதங்கள் எடுத்தார். அவர் அந்த ஒன்பது மாதங்களில் மரியாவின் வயிற்றில் ஓர் உடலை வடிவமைத்தார். அது மூவொரு இறைவனின் இரண்டாவது நபர் வசிக்கும் ஓர் உடலாயிற்று. மேலும், பிரசவிக்கப்படுவதற்கான நேரம் தயாராக இருந்தது. இயேசு என்கிற கருவின் காலத்தின் முழுமை வந்து, முழு உருப்பெற்றது,
ஒவ்வொரு
கிறிஸ்துமஸ் நிகழ்விலும், நாம் அனைவரும் கிறிஸ்துவின் பிறப்பின் முழுமையை உணராமல் மேம்போக்காக ஒப்புக்கொள்கிறோம். அவர்
இவ்வுலகில் பிறந்தார் என்பது பிரச்சினை அல்ல; ஏன் பிறந்தார் என்பதுதான் பிரச்சினை. அதில் ஒருவித மீட்பின் உண்மை உள்ளது என்ற உண்மையோடு மட்டும் நிறுத்திக் கொள்வதில் பலர் திருப்தி அடைகிறார்கள். அவர் உண்மையில் எதற்காக வந்தார் என்று ஒருபோதும் எண்ணிப் பார்ப்பதில்லை.
இயேசு
ஏன் பிறந்தார்? கடவுளை முன் வைக்கவா? ஆம்! உண்மையைக் கற்பிக்கவா? ஆம்! திருச்சட்டத்தை நிறைவேற்றவா? ஆம்! அவருடைய அரசை வழங்கவா? ஆம்! கடவுளைப் பற்றிப் புரியாதவர்களுக்குப் போதிக்கவா? ஆம்! அன்பை வெளிப்படுத்தவா? ஆம்! அமைதியை ஏற்படுத்தவா? ஆம்! நோயுற்றவர்களைக் குணப்படுத்தவா? ஆம்! மற்றும் பல. ஆனால், அவர் வந்ததற்கான இரண்டாம் காரணங்கள்தான் இவையெல்லாம். ஒரு முதன்மை நோக்கம் உள்ளது. இயேசு நம் பாவங்களுக்காகத் துன்பப்படவும் இறக்கவும் வந்தார்; அதற்காக மட்டுமே அவர் வந்தார். அவர் பிறந்து வளர்ந்த பிறகு கடவுளின் திட்டத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் இறக்க வந்தவரல்ல. விண்ணகத்தில் இருக்கும்போதே இறைத்திட்டத்தில் இருந்ததை அறிந்தே வந்தார். அவர் வாழ்வில் பெத்லகேம் மட்டுமல்ல, கல்வாரியும் உண்டு. அவர் இறப்பதற்காக மட்டுமே வாழ்ந்தார்.
மனிதன்
மண்ணகத்தில் எல்லாவற்றின் மீதும் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று கடவுள் படைத்தார். ஆனால், அவன் பாவத்தில் விழுந்து தன் ஆதிக்கத்தை இழந்தான். வீழ்ந்த அவன் தன் அரசாட்சியையும், நிலைவாழ்வையும் இழந்தான். ஆகவே, கடவுள் இந்த உலகத்தின் மனிதர்களைப் பார்த்தார். பாவத்தினால் இறக்கப் போகும் மனிதர்களைக் கண்டார்; மேலும், அவர் தமது அன்பின் காரணமாக, எல்லா மனிதர்களும் தங்கள் பாவத்தில் இறக்க அனுமதிக்கமாட்டேன்; அவர்களின் தண்டனையைச் சுமக்க, அவர்கள் மரணத்தை வெற்றிகொள்ள நான் என் மகனையே அனுப்புவேன் என்று தம் அன்பு மகனை அனுப்ப முன்வந்தார். இதற்காகத்தான் இயேசு வந்தார். நமக்கு மாற்றாக வந்தார். சிலுவையில் அறையப்பட்டபோது, நமக்காக இறந்தார்; நமக்கான தண்டனையை அவர் செலுத்தினார்.
ஆகவே,
தொழுவத்தை மற்றொரு முறை சென்று பாருங்கள்; மரியாவின் வயிற்றில் தூய ஆவியால் வடிவமைக்கப்பட்டு, தீவனத் தொட்டியில் கிடத்தியிருக்கும் விலைமதிப்பற்ற தெய்வீகக் குழந்தையின் அந்த மென்மையான பிஞ்சு கைகளையும், கால்களையும் தொட்டுப் பாருங்கள்; அவை சிலுவையில் ஆணிகளால் அடிக்கப்பட வேண்டும். பளபளக்கும் கண்களையும் கொழு கொழு கன்னத்தையும் தலையையும் தொட்டுப் பாருங்கள். அந்த இனிமையான தலை முள்முடியால் நசுக்கப்பட வேண்டும். அந்த மென்மையான உடல் காயங்களாலும் இரத்தக்கறை படிந்த ஆடைகளாலும் மூடப்பட்டிருக்க வேண்டும். ஒருநாள் அந்தப் பிஞ்சுக் குழந்தையின் இதயம் ஓர் ஈட்டியால் திறக்கப்பட வேண்டும். இந்த இனிய குட்டிக் குழந்தையிடம் ‘ஏன் இத்தகைய துயரங்களை ஏற்கப் பிறந்தாய்?’ என்று கேட்டுப் பாருங்கள். ‘நான் உனக்காகப் பலியாகவே வந்தேன்!’ என்பார். அவரின் கைகளைத் தொட்டு வணங்குங்கள்; அவரையே உற்றுநோக்குங்கள். அப்பொழுது அந்தத் தெய்வீகப் பாலகனின் மழலைச் சிரிப்பு உங்கள் உள்ளத்திற்கு அமைதியைக் கொண்டு வரும்.
பொதுவாக அமைதி இருவகைகளில் வெளிப்படுகிறது. புயலுக்குப் பின் ஏற்படுவது முதல் வகை அமைதி. ஒருவிதத் துடிப்போ, துயரமோ எதுவும் இன்றி அப்படியே சலனமற்று இருப்பது மறுவகை அமைதி. இதில் இயேசுவின் பிறப்பு எந்த வகை அமைதியை அளித்தது?
இயேசுவின்
பிறப்பு இருவகை அமைதியையும் கொண்டு வந்தது. ஒருவர் கொண்டிருந்த
மன நிலையைப் பொருத்தே அந்த இருவகை மனநிலைகளில் ஒன்று அவருக்குக் கிட்டியது. அங்ஙனமே அவை இரண்டும் இருவேறு விளைவுகளையும் உலகில் ஏற்படுத்தியது.
புயலுக்கு பின்
அமைதி
புயலுக்கு
பின் அமைதி என்கிற முதல்வகை அமைதியை இயேசு பிறப்பு தந்தது என்றால், பிறந்த பாலன்
இயேசு முதலில் புயலாக அமைந்திருப்பாரோ? அதன் பின்பு அமைதியைத் தந்திருப்பாரோ? என்கிற கேள்விகள் எழுகின்றன. ஆம்! அவருடைய பிறப்பு பலருக்குப் பல தருணங்களில் புயலாகவே
இருந்தது. சில தருணங்களில் சிலருக்கு மட்டுமே அமைதியைத் தந்தது. உதாரணமாக, கடவுளின் தூதர் கன்னியான மரியா முன் தோன்றி “இதோ கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்” என்று
கூறியபோது மரியா அமைதி பெறவில்லை; மாறாக கலக்கமடைந்து, “இது எப்படி நிகழும்? நான் கன்னியாயிற்றே!” என்று
குழம்பி நின்றார். புயலை விட அழுத்தமான பாதிப்புக்குள்ளானது அவர் மனது. அந்த நேரத்தில் அவருக்கு அதே வானதூதரால் முறையான விளக்கம் கொடுக்கப்பட, அதை
ஏற்றுக்கொண்டு அதன் பின்பு அவர் மனம் அமைதியானது. அமைதியான அவர் அந்த அமைதியை, தான் மட்டும் அனுபவித்து அயர்ந்து விடவில்லை; மாறாக, அடுத்திருப்பவரிடமும் குறிப்பாக, தேவையிலிருப்போரிடம் வழங்குவதற்காக எலிசபெத் இல்லத்திற்கு ஓடிச்சென்று
அவரை வாழ்த்துகிறார். மரியாவின் வாழ்த்து
கேட்டு எலிசபெத் வயிற்றில் இருந்த குழந்தை மகிழ்ந்து துள்ளியது.
இப்படியாக மரியா பெற்ற அமைதி தேவையிலுள்ள அடுத்தவருக்கும் பகிரப்பட்டு ஆனந்தத்தை அளித்து மகிழ்ந்தது.
அதேபோல்
மரியாவோடு மண ஒப்பந்தமாயிருந்த யோசேப்பு மரியா
கருவுற்றிருப்பதை அறிந்து அமைதியோ ஆனந்தமோ அடையவில்லை; மாறாக, மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி,
மரியாவை மறைவாக விலக்கிவிடவே
திட்டமிடுகிறார். பின்பு இறைவனின் திட்டம் அவருக்குக் கனவில் வெளிப்படுத்தப்பட, முறையான விளக்கம் பெற்ற யோசேப்பு அமைதி அடைகிறார். அதன்பின் மரியாவை மிகுந்த அன்போடு கவனிப்பதில் ஆர்வம் காட்டுகிறார். அதுவே அவர் பெற்ற அமைதியின் விளைவாக வெளிப்படுகிறது.
அதேவேளையில், கீழ்த்திசை
அறிஞர்களின் வாயிலாக இயேசுவின் பிறப்பை அறிந்துகொண்ட ஏரோது மன அமைதி பெறவில்லை; மாறாக,
மனக் குழப்பமும் எரிச்சலும் பெற்று அவரைக் கொன்றுவிடத் துடிக்கிறான், சதித்திட்டம் போடுகிறான்.
ஆக,
இயேசுவின் பிறப்பு குறித்து அறிந்த நேரத்தில் மரியா, யோசேப்பு, ஏரோது போன்றோர் முதலில் குழப்பமும் கலக்கமும் பெற்று, ஒரு புயலின் தாக்கத்தையே தங்கள் மனங்களில் பெறுகின்றனர். பின்பு மரியாவும், யோசேப்பும் அமைதியைப் பெற, ஏரோதோ எரிச்சலை அடைகின்றான். அதற்குக் காரணம் அவனின் மனநிலையே.
“உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக”
(லூக் 2:14) எனும் வானவர் செய்தி மரியா,
யோசேப்பு இருவரிடமும் அமைதியைத் தந்தது. காரணம், அவர்களிடம் ஆண்டவருக்கு உகந்த நல்மனநிலை இருந்தது. எனவே, இயேசுவின் பிறப்பு முதலில் அவர்களுக்குக் கலக்கத்தை, குழப்பத்தை ஒரு புயல் போல உண்டாக்கினாலும், தெளிவு பெற்றபின் அவர்களுக்கு அமைதியைக் கொடுத்தது.
அப்படி
அவர்கள் பெற்ற அமைதி அவர்களுக்குள் மட்டுமே முடங்கி விடாமல் அடுத்தவருக்கும் எட்ட துடிப்பைக் கொடுத்தது. புயல்போலச் செயல்படும் தொடர் ஆற்றலையும் அளித்தது. அவர்களிடமிருந்த ஆண்டவருக்குகந்த நல்மனமே
அதற்குக் காரணமாகவும் இருந்தது. ஆனால், ஏரோதிடம் நல்மனம் இருக்கவில்லை. தன் பதவியின் மேல் கொண்ட அதீத ஆசையால் தனக்கு எதிராக மற்றொருவர் வந்துவிடுவாரோ என்கிற பயத்தால் இயேசுவின் பிறப்பு குறித்து கேள்விப்பட்டு, கலக்கமுற்று எரிச்சல் அடைகிறான்; அமைதி இழக்கிறான். அந்த எரிச்சல் மனநிலையும் புயல் போல செயல்பட்டு அந்நாட்டில் இருந்த அத்தனை ஆண் குழந்தைகளையும் கொல்வதற்கு உத்தரவிடுகிறது.
ஆக,
இயேசுவின் பிறப்பு நல்ல மனம் கொண்டவர்களுக்கு அமைதியை அளித்ததுடன், அது அடுத்தவருக்கும் தொடர்ந்து கிடைக்க ஆற்றலைக் கொடுக்கிறது. அங்ஙனமே, தீய மனம் கொண்டவர்களுக்கு அமைதியை இழக்கச் செய்வதுடன் அந்த அமைதி அடுத்தவருக்கும் எட்டி விடாமல் அழிவைத் தருகிறது.
சலனமற்று உறைந்து
கிடக்கும்
அமைதி
இயேசுவின்
பிறப்பு அறிவிப்பு இடையர்கள், கீழ்த்திசை அறிஞர்கள் போன்றவர்களுக்குச் சலனமற்று உறைந்து கிடக்கும் இரண்டாம் வகை அமைதியைத் தருகின்றது. இவர்களுக்கு இயேசுவின் பிறப்பு அறிவிப்பு எவ்விதக் குழப்பத்தையும் கொடுக்கவில்லை, புயலையும் ஏற்படுத்தவில்லை. மாறாக, பிறந்த இயேசுவைத் தேடிச்செல்லும் ஆர்வத்தைக் கொடுத்தது என்பதை நாம் பார்க்கிறோம். அதற்குக் காரணம் அவர்களிடம் இருந்த எளிய மனமே.
எவ்வித
முன் தீர்மானமும் இன்றி தாங்கள் கேள்விப்பட்டதை என்ன? ஏது? என்று
அறிந்து கொள்ளத் துடிக்கும் ஒருவிதத் தேடுதல் உள்ள எளிய மனம் அவர்களிடம் இருந்தது. எனவே, அவர்கள் அவரைக் காண ஓடோடி வருகின்றனர். எளிய மனம் கொண்ட இவர்கள் இயேசுவைக் கண்டதும் தங்கள் மனத்தில் அமைதி பெறுகின்றனர். ஆனந்தம் அடைகின்றனர். ஆனால் அந்த அமைதியை, ஆனந்தத்தை அடுத்து இருப்பவருக்குக் கொடுக்கவில்லை. மாறாக, தங்களுக்குள்ளேயே அனுபவித்துக் கொள்கிறார்கள்.
இறுதியாக,
இயேசுவின் பிறப்புச் செய்தி கேட்கின்ற எல்லாருக்கும் அமைதியாக அமையவில்லை, அமைதியைத் தரவில்லை. மாறாக, நல்ல
மனமும், எளிய மனமும் உடையவர்கள் மாத்திரமே அந்த அமைதியைப் பெற்றார்கள் என அறிகிறோம். எனவே,
இயேசுவின் பிறப்பு நமக்கு அமைதியைத் தர வேண்டும் என்றால்,
முதலில் அதற்கு நாம் எளிய மனத்தையோ அல்லது நல்ல உள்ளத்தையோ பெற்றவர்களாக இருக்க வேண்டும். நல் மனத்தால் விளைந்த அமைதி, தான்
பெற்றதைப் பிறருக்கு அளித்து மகிழ்வதில் ஆர்வம் காட்டும். எளிய மனத்தோடு இயேசுவைக் காணத் தேடுவோர் அவரை அமைதியில் கண்டு மகிழ்வர்.
பிறக்கும்
பாலன் நம்மில் பிறக்க அதன் வழி நாமும் புதிதாய் பிறக்க வாழ்த்துகள்!
“நம்ம பிளாட்டுக்கு கிறிஸ்துமஸ் கேரல் குழுவினர் வர்றாங்களாம். நம்ம வீட்டுக்கும் வருவாங்க” என்றாள் மார்கிரட்.
“கிறிஸ்துமஸ் தாத்தா வருவாரா மம்மி?” ஆவலோடு கேட்டான் டோனி.
“ஆமா, கட்டாயம் வருவாரு” பதிலளித்தாள் மார்கிரட்.
டோனி
யூ.கே.ஜி. படிக்கிறான்.
தாய் மார்கிரட் குடும்பத் தலைவி. தந்தை
பீட்டர் வங்கி அதிகாரி.
கிறிஸ்துமஸ்
தாத்தாவைப் பார்க்கப் போகிறோம் என்று நினைத்தவுடன் மகிழ்ச்சியில் துள்ளினான் டோனி. அவரைப் பற்றிய கற்பனை சிறகடித்து பறந்தது.
‘கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு அண்டார்டிக் பனிப் பிரதேசத்தில் ஒரு தொழிற்சாலை இருக்கிறது. ஏராளமான குட்டி சம்மனசுகள் வேலை பார்க்கிறார்கள். அந்தத் தொழிற்சாலையில் வருடம் முழுவதும் விதவிதமான பொம்மைகள்
தயாரிக்கிறார்கள். கிறிஸ்துமஸ்
சீசன் தொடங்கியவுடன் பனிச்சறுக்கு வண்டியில் அந்தப் பொம்மைகளைப் பொட்டலமாகக் கட்டி வண்டியில் போட்டு கிறிஸ்துமஸ் தாத்தா ஊருக்குள் வருகிறார். நடு
இரவில் அனைவரும் தூங்கும்போது ஒவ்வொரு வீட்டின் புகைக் கூண்டு வழியாக இறங்கி அந்த
வீட்டிலிலுள்ள குட்டிப் பிள்ளைகள் தலைமாட்டில் பொம்மையை வைத்து விட்டு போகிறார்’ என்று
கார்ட்டூன் படத்தில் பார்த்தது டோனி மனத்தில் ஆழமாகப் பதிந்திருந்தது.
முழுவதையும்
அப்படியே நம்ப முடியாவிட்டாலும் கிறிஸ்துமஸ் தாத்தா வருவார், நிச்சயம் பரிசு தருவார் என்று நம்பினான்.
அதனால் தூங்காமல் ஆவலோடு காத்திருந்தான் டோனி.
கேரல்
பாட்டு சப்தம் கேட்டது. கதவைத்
திறந்தார் பீட்டர். ஆவலோடு
ஓடி வந்து ‘கிறிஸ்துமஸ் தாத்தா வந்திருக்கிறாரா?’ என்று எட்டிப் பார்த்தான் டோனி. கிறிஸ்துமஸ் தாத்தா நின்று கொண்டிருந்தார். ஆனால்,…அவனது கற்பனை தகர்ந்தது! பாவம் ஒல்லியாகப் பரிதாபமாக இருந்தார் கிறிஸ்துமஸ் தாத்தா. கசங்கிய சிகப்பு டிரஸ். பாலிஷ் போடாத அழுக்கு ஷூ. ஒழுங்கில்லாத குல்லா. தோளில்
ஓர் அழுக்குத் துணிப்பை.
கேரல்
குழுவினர் கிறிஸ்து பிறப்புப் பாடல்களைப்
பாடத் தொடங்கினார்கள். தாத்தா நடனமாடினார். பிறகு காணிக்கைப் பையை நீட்டினார். டோனியின் தந்தை நூறு ரூபாய் நோட்டை டோனி கையில் கொடுத்து போடச் சொன்னார். தாத்தா ஆளுக்கு ஒரு சாக்லெட் கொடுத்தார். ‘மெரி கிறிஸ்துமஸ்’ என்று
கைகொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.
பரிசு
கொடுப்பார் என்று நினைத்த கிறிஸ்துமஸ் தாத்தா, பணம் வாங்கிக் கொண்டு சென்றதைப் பார்த்ததும் டோனியின் மனது வேதனையில் துடித்தது.
‘ஏழைக் குழந்தைகளுக்குப் பரிசு வாங்க பணம் வாங்கிட்டு போறாரு’ என்று சமாளித்தாள் மார்கிரட்.
கிறிஸ்துமஸ்
நேரங்களில் புற்றீசல் போல் பல குழுக்கள்
‘கேரல்’ என்ற
பெயரில் வீடு வீடாகச் சென்று சில பாடல்களைப் பாடிவிட்டு, கிறிஸ்துமஸ்
தாத்தாவை ஆட வைத்துப் பணம்
வசூலிப்பது வழக்கமாகிவிட்டது.
‘பணம் வசூலிக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அதற்காகக் கிறிஸ்துமஸ் தாத்தாவை இப்படி இழிவுபடுத்துவதா?’ மார்கிரட் மனம் வருந்தினாள். மகனின்
ஏமாற்றத்தை மாற்றத் தீர்மானித்தாள்.
அடுத்த
நாள் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தவுடன்
டோனிக்கு ஒரே ஆச்சரியம்.
வீடு
முழுவதும் வண்ண வண்ண பலூன்கள். சரிகை
பேப்பர் அலங்காரம். கண் சிமிட்டும் விளக்குகளில் காட்சியளித்த கிறிஸ்துமஸ் மரம். பரிசுப்
பொட்டலங்கள். பாலன் இயேசு சுரூபம் அலங்கரிக்கப்பட்டு நடுவில் வைக்கப்பட்டிருந்தது. மகிழ்ச்சியோடு ஓடி வந்து அம்மா கன்னத்தில் முத்தமிட்டான் டோனி.
“இன்னைக்கு நம்ம வீட்டுல கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப் போறோம். உன் நண்பர்கள் எல்லாரையும் அழைச்சிருக்கேன்” என்றாள் மார்க்கிரட்.
“அப்படியா... ஜாலி” என்று துள்ளினான்.
“கிறிஸ்மஸ் தாத்தா?”
“நீதான் கிறிஸ்துமஸ் தாத்தா. நீதான் உன் நண்பர்களுக்குப் பரிசு கொடுக்கப்போறே” என்று
அவனுக்கு வாங்கி வந்திருந்த கிறிஸ்துமஸ் தாத்தா டிரஸ்ஸைக் காட்டினாள்.
மாலையில்
கிறிஸ்துமஸ் தாத்தா உடையணிந்து நண்பர்கள் வருகைக்காகக் காத்திருந்தான் டோனி. பீட்டரின் குடும்ப நண்பர்களும், டோனியின் பள்ளித் தோழர்களும் பெற்றோர்களுடன் வந்தார்கள். டோனியைக் கிறிஸ்துமஸ் தாத்தா உடையில் பார்த்ததும் நண்பர்களுக்கு
அளவற்ற ஆனந்தம்!
விழா
தொடங்கியது. அனைவரும் கேரல் பாடல்களைப் பாடினார்கள். டோனி
கிறிஸ்துமஸ் கேக் வெட்ட ‘விஷ் யூ ஏ மெரி
கிறிஸ்மஸ் அண்ட் கேப்பி நியூ இயர்’ பாடல் பாடப்பட்டது. டோனி தனது நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் கிறிஸ்துமஸ் பரிசு வழங்கினான். நண்பர்கள் ‘ தாங்ஸ்’ என்று கைகுலுக்கினார்கள். டோனி மனம் ஆனந்தத்தால் துள்ளி குதித்தது. பரிசு வாங்குவதைவிட, பரிசு கொடுப்பதில் எவ்வளவு ஆனந்தம்! பரிசு வாங்கும்போது நாம் மட்டும் மகிழ்ச்சியடைகிறோம். பரிசு கொடுக்கும் போது வாங்குகிற ஒவ்வொருவரும் மகிழ்ச்சியடைகிறார்களே! பிறருக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதுதானே உண்மையான கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்! டோனியின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது அன்றைய அனுபவம்.
இன்று
டோனி ஒரு பெரிய தொழிலதிபர். ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்துமஸ் விழா மிகச் சிறப்பாக அவனது தொழிற்சாலையில் நடைபெறுகிறது. ஊழியர்களின்
குழந்தைகளுக்கு டோனியே கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறி பரிசுகளை வழங்கி வருகிறான்.
இத்தாலி நாட்டில் ஓர் ஏழ்மையான குடும்பத்தில், 1955 -ஆம் ஆண்டு பிராங்கோ பிறந்தான். சிறுவனாக இருக்கும்போதே தன் பெற்றோரை இழந்து அநாதையானான். காலப்போக்கில் குடிபோதைக்கு அடிமையாகி திசைமாறிய பறவையானான். 30 ஆண்டுகள் பிச்சைக்காரனாக, உரோமைநகர் வீதிகளையே உறைவிடமாகக் கொண்டு வாழ்ந்தான். 2016 -ஆம் ஆண்டு நவ. 19 -ஆம் தேதி, புனித பேதுரு சதுக்கத்தில், போப் பிரான்சிஸ் நிறைவேற்றிய ‘இரக்கத்தின் வெள்ளிவிழா’… திருப்பலியில் பங்கெடுத்தான். சோகமே உருவான பிராங்கோ, இரக்கம் ததும்பி வழியும் திருத்தந்தையின் கண்களில் படுகின்றான்.
திருப்பலி
முடிந்தவுடனே திருத்தந்தை பிரான்சிஸ் பிராங்கோவைத் தேடிவந்து, தனிமரமாகக் கவலையுடன் நின்றவனின் கரங்களைப் பற்றிக்கொண்டு நலம் விசாரிக்கிறார். அவன் கண்ணீர் சிந்தியவனாக, “நான் ஓர் ஏழை, இவ்வுலகில் எனக்கென்று யாருமில்லை” என்று
கதறி அழுதவனை இறுக அரவணைத்து, அவனுக்கு உணவு, உறைவிடம், நிரந்தரப் பணியிடம் வழங்கி அவனது வாழ்க்கையில் விடியலாகத் திகழ்ந்தார்.
இந்த
நிகழ்வு திருத்தந்தை அவர்களின் உள்ளத்திலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. எனவே, ஏழைகளின் விடியலாக வரப்போகும் தெய்வீகக் குழந்தை இயேசுவின் திருவருகைக் காலத்திற்கு முன், 33 -ஆம் ஞாயிறை, ஏழைகளின் ஞாயிறு திருவிழாவாக 2017 -இல் திருத்தந்தை பிரான்சிஸ் ஏற்படுத்தி, உலகமெங்கும் ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றும் வெள்ளி நிலவாகத் திகழ்கின்றார். நம்மை மீட்க வந்த மெசியாவின் வழித்தோன்றலாகவும் வாழ்ந்து வருகிறார்.
பொதுவாக
உலகிலுள்ள பிற சமயங்களை நோக்கும் போது, மனிதனின் இதயத்தில் இறைவனைத் தேடும் ஓர் உந்துதல் இருக்கிறது. இறைவனைத் தேடும் மனிதன், அவரில் சங்கமம் ஆகும்வரை இது ஒரு தொடர் நிகழ்வே! இந்த வாழ்க்கையே ஒரு தேடலாக அமைகிறது.
தங்களின்
முழுவிடுதலைக்காக மெசியா பிறப்பார் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மக்களின் விடிவெள்ளியாக இயேசு கிறிஸ்து தோன்றினார் (மத்
1:8-25, யோவா
1:1-14). இவரை நம்பும் யாவரும் மீட்கப்பட்டு கடவுளின் பிள்ளைகளாகிறோம் (கலா 4:4-5).
ஈராயிரம்
ஆண்டுகளுக்கு முன்பு இயேசு இம்மண்ணில் தோன்றினார் என்று இறை நம்பிக்கையற்ற வரலாற்று அறிஞர்கள்கூட ஏற்றுக்கொள்கின்றனர். அவரது பிறப்புப் பெருவிழாவை ஆண்டுதோறும் அகமும், முகமும் மலர சமூகக் கொண்டாட்டமாக நாம் கொண்டாடி மகிழவேண்டும். ஆனால், இன்று அது வணிகக் கொண்டாட்டமாக மாறிவிட்டது! திருவிவிலியக் கண்ணோட்டத்துடனும், திரு அவையின் பாரம்பரியத்தின் பார்வையிலும் நோக்குவோமென்றால், இப்புனித நிகழ்ச்சி நம் வழியாகத் தொடர்ந்து நிகழும் தொடர் நிகழ்வாகும்.
மனுவுரு
எடுத்து வரலாற்றில் வாழும் கிறிஸ்துவை இறைவார்த்தை, அருளடையாளங்கள், திரு அவை வழியாக மட்டுமல்ல, தங்கள் சொந்த இறையனுபவத்திலும் பல புனிதர்கள் சந்தித்துள்ளனர்.
உதாரணம் புனித பிரான்சிஸ் அசிசியார். மனுவுரு எடுத்துள்ள இயேசுவின் பிரசன்னம், இறைவனை அதிகமாக அறிந்துகொள்ளும் வாயிலாகத் திகழ்கின்றது. இந்த மனித தெய்வமே, எளிமை, ஏழ்மை, எளியோரை அன்பு செய்யக் கற்றுக் கொடுக்கின்றார். அதேபோன்று புனித இஞ்ஞாசியார், “மனிதனாகப் பிறந்த மரிமகன் இயேசுவை ஆழமாக அன்புசெய்ய உமது அருளைத் தாரும் என்று இறைவேண்டல் செய்ததுடன், அவரே நம் அர்ப்பண வாழ்வுக்கு உன்னத மாதிரியாகவும் நமது பணிவாழ்வுக்கு முன்னோடியாகவும் விளங்குகின்றார்” என்கிறார்.
தம்மையே
தந்த விடிவெள்ளி, உலகிற்கு விடியலாக வந்த வெள்ளி நிலா இறைமகன் இயேசு, தமது திருப்பணியின் தொடக்கத்திலேயே தமது வாழ்வின் இலக்காக ஏழைகளுக்கு நற்செய்தி சொல்லவும், சிறைப்பட்டோருக்கு விடுதலை அளிக்கவும், பார்வையற்றோருக்குப் பார்வை கொடுக்கவும் வந்ததாகக் கூறுகின்றார் (லூக் 4: 18-19).
திண்டுக்கல்
அருகே பார்வையற்ற ஒரு பெண்மணி, 45 பார்வை இழந்தவர்களுக்காக ஓர் அறக்கட்டளை நடத்தி வருகிறார். ஒருமுறை நான் அவரைச் சந்தித்தபோது, “பார்வையற்ற நீங்கள் எதையும் செய்ய சிரமப்படுவீர்களா?” என்றதற்கு, “எங்கள் அன்றாடத் தேவைகளையும் வேலையையும் செய்யப் பயிற்சி எடுத்துக் கொள்கிறோம். அதற்கப்பால் வாசிப்பது, ஆள்களின் குரலைக் கொண்டு அவர்களை அடையாளம் கண்டுகொள்வதற்குச் சிரமமில்லை. ஆனால், ஒன்றே ஒன்றுதான் நீங்கள் செய்வதை என்னால் செய்ய முடியாது”
என்று பேச்சை நிறுத்தினார். அவரது மனக்குறை என்னவாக இருக்கும் எனத் தெரிந்து கொள்ளும் ஆவலில், “பார்வையற்றவர்களுக்காக இதை நடத்துவதில் சிரமமா?” என்றேன். அதற்கு அவர், “பார்வையற்றவர்களுக்குப் பார்வை கொடுத்த இயேசப்பா, உங்களைப்போல நல்மனம் கொண்டவர்கள் வழியாக இன்றும் வாழவைக்கிறார். ஆனால், உங்களைப்போல கண்தானம் செய்ய முடியாதே”…
என்று உணர்ச்சிவசப்பட்டுக் கூறிய போது, என்னையும் அறியாது கண்களில் கண்ணீர் கசிந்தது. ‘இருளும் ஒளியாகும்’
என்னும் சொல்லாட லுக்கேற்ப, அந்தப் பார்வை இல்லாத பெண் என் கண்களைத் திறந்தார். நானும் கண்தானம் செய்வதென்று அன்று முடிவு செய்தேன்.
மனுவுரு
எடுத்து விடிவெள்ளியாகத் திகழும் (திவெ 22:16) இயேசுவின் வழியில் நாமும் நடந்து, புதிய உலகம் படைக்கும் விடியல்களாகத் திகழ்வோமாக!
அனைவருக்கும் கிறிஸ்துமஸ்
நல்வாழ்த்துகள்!
விவரிக்க இயலாத கொடுமைகளால் பெரும்பான்மையான அடித்தட்டு மக்கள் விடுதலைக்காகவும் நீதிக்காகவும் சமத்துவத்துக்காகவும் கடவுளைத் தேடிய காலத்தில், ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிட்ட காலத்தில், விடுதலை நல்கும் மெசியாவின் வருகை நிகழ வேண்டும் என ஏக்கத்தோடு எதிர்பார்த்த காலத்தில் கடவுளின் பதிலிறுப்பே 2000 ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்த மாபெரும் வரலாற்று நிகழ்வான கிறிஸ்து பிறப்பு! மீட்பு வரலாறும், திருவிவிலிய வரலாறும் இதை உண்மைப்படுத்தி, உறுதிப்படுத்துகிறது.
விடுதலைக்காகவும்
நீதிக்காகவும் அமைதிக்காகவும் வாழ்வின் விழுமியங்களுக்காகவும் ஏழை எளிய சராசரி மக்கள் அழுகுரலோடு ஆண்டவரைத் தேடிய காலத்தில் கடவுள் தம் மகனையே உலகின் மீட்புக்காகவும், ஏழைகளின் ஒட்டுமொத்த விடுதலை வாழ்வுக்காகவும் இந்த உலகில் மனிதராகப் பிறப்பெடுக்கச் செய்த நிகழ்வே கிறிஸ்து பிறப்பு நிகழ்வாகும். எனவே, இன்றைய காலகட்டத்தில் நாம் சந்திக்கும் போராட்ட எதார்த்தங்களின் பின்னணியில், அதிலும் குறிப்பாக யூபிலி 2025-இல் எதிர்நோக்கின் காலமாக அழைக்கும் சூழலில் கிறிஸ்து பிறப்பு விழா நமக்கு விடுக்கும் செய்தி என்ன?
அகில
உலகத் திரு அவையின் இன்றைய பயணத்தின் எதார்த்தத்தில் மூன்று மிக முக்கியமான நிலைகளில், குறிப்பாக, கூட்டியக்கத் திரு அவையின் பார்வையில் (SYNODAL HIERARCHY), பொறுப்பும்
வெளிப்படைத்தன்மையும்
(ACCOUNTABILITY AND TRANSPARENCY), யூபிலி 2025: எதிர்நோக்கின்
திருப்பயணிகள் (JUBILEE 2025: A PILGRIMS OF HOPE) எனும் இச்சூழல்களில்
திரு அவையின் மிக முக்கியமான நிகழ்வுகளாக மட்டுமல்ல, அவை விடுக்கும் செய்தி இந்தக் காலத்தில் கடவுளின் குரலாகவும், தூய ஆவியாரின் செயல்பாடாகவும் அமைந்திருப்பதாக நாம் காண்கிறோம். போராடும் உலகுக்குக்
கடவுளின் பதிலிறுப்பே கிறிஸ்துவின் பிறப்பு!
கூட்டியக்கத்
திரு
அவையின்
பார்வையில்
கடவுளின்
பதிலிறுப்பு
‘கூட்டியக்கத் திரு அவை’
(SYNODAL CHURCH) என்னும் மையக்கருத்தில் 2021-ஆம் ஆண்டு அகில உலகம் முழுவதும் தலத் திரு அவைகளின் செவிமடுத்தல் மற்றும் தேர்ந்து தெளிதலின் அடிப்படையில் கூட்டியக்கத் திரு அவையின் பயணமானது ஆரம்பமானது. இப்பயணமானது பங்குகள் நிலையில், மறைமாவட்ட நிலையில், துறவற சபைகளின் பல்வேறு நிலைகளில், தேசிய நிலைகளில் கலந்துரையாடல்களும் கருத்தமர்வுகளும் கருத்துகளுக்குக் காரணமான செவிமடுத்தலும் வலியுறுத்தப்பட்டன.
அதன் அடிப்படையில் தலத் திரு அவைகளுக்கும் அகில உலகத் திரு அவையும், கூட்டியக்கத் திரு அவையாகச் செயல்பட திருவிவிலிய, இறையியல், அருள்பணிப் பார்வையில் தேர்ந்து தெளிதல் நடைபெற்றது.
இதுவரை
தலத்திரு அவைகளில் யாருக்கு இன்னும் நாம் செவிமடுக்க மறுத்திருக்கிறோமோ அல்லது மறந்திருக்கிறோமோ அவர்களின் குரலுக்குச் செவிமடுக்கவும், ஆதிக்கத் திரு அவையாக அல்ல, ஆளும் திரு அவையாக அல்ல, அன்பும் உண்மையும் அமைதியும் நீதியும் நிலவும் திரு அவையாக இணைந்து செயல்படவும் நமக்கு அழைப்பு விடுக்கிறது.
2022 -ஆம் ஆண்டு
தேசிய நிலையிலிருந்து கண்டங்கள் அளவில் கூட்டியக்கத் திரு அவையின் பாதையில் நம் பார்வையும் பயணமும் விரிவடைந்தது என்றாலும், தலத்திரு அவைகளின் முன் மொழியப்பட்ட கருத்துகளே அங்கும் சிந்தனைக்காகவும் செவிமடுத்தலுக்காகவும் இணைந்து செயல்படும் திரு அவைக்கான முன்னுரிமைகளாக, இறைவார்த்தையின் ஒளியிலும் சமூக எதார்த்தங்களின் பின்னணியிலும் ஆய்வு செய்யப்பட்டன.
இதுவரை
நடைபெற்ற 15 அகில உலக ஆயர் மாமன்றங்களில், தொகுப்பறிக்கைகளின் அடிப்படையில் திருத்தந்தை வெளியிட்ட திருத்தூது மடல்களின் பாரம்பரியத்தைக் கடந்து, 2024 அக்டோபர் 02 முதல் 27 வரை உரோமையில் நடைபெற்ற பொதுப்பேரவை மேற்கொண்ட வழிகாட்டுதல்கள், பரிந்துரைகள் மற்றும் முடிவுகளைத் திரு அவையின் ஆசிரியத்தின் ஏடாகத் திருத்தந்தை அறிவித்திருப்பது கூட்டியக்கத் திரு
அவையின் முதல் மறுமலர்ச்சிக்கான செயல்பாடாகப் பார்க்கப்படுகிறது.
தன்
அதிகாரத்தின் வெளிப்பாடாக ஓர் ஏட்டினை வெளியிடுவதை விட, பதினாறாம் ஆயர் மாமன்றத்தில் யாவரும் இணைந்து மேற்கொண்ட முடிவுகளையும் வழிகாட்டுதல்களையும் திருத்தந்தை அப்படியே அங்கீகரித்திருப்பது இன்றைய காலகட்டத்திற்குக் கடவுளின் குரலாக ஒலிக்கிறது.
திரு
அவை என்பது படிநிலை அமைப்பு என்பதைக் கடந்து, பங்கேற்கும் திரு அவை, பயணிக்கும் திரு அவை, பணியாளர் திரு அவை எனும் இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் பார்வையில் கூட்டியக்கத் திரு அவை, கூட்டொருங்கியக்கத் திரு அவை எனும் எதார்த்தத்தை ஒரு
புதிய வெளிச்சத்தை இன்று உலகில் பாய்ச்சியிருப்பது தூய ஆவியாரின் செயல்பாடு என்பதை மறுக்க இயலாது. அதிகாரம், அடக்குமுறை, ஆணவம், ஆதிக்கம், செல்வச்செருக்கு, பணபலம், எதேச்சதிகாரம், ஆணாதிக்கம், இனவெறி, சாதிய ஆதிக்க மனநிலை இவற்றைக் களைந்து விட்டு, செவிமடுத்தல், பிறரை மதித்துக் கலந்துரையாடுதல், பொதுக் குருத்துவத்தை உயர்வாக மதித்துப் பணி செய்வதே பணிக்குருத்துவம் என்பதைத் திரு அவைக்கு வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது இந்த ஆயர் மாமன்றம்.
போராடும்
திரு அவைக்கும் உலகுக்கும் கடவுளின் பதிலிறுப்பாக அமைவதே இந்த மானுடலேற்பு மற்றும் கடவுளின் பதிலிறுப்பு. இது இன்றைய காலகட்டத்தில் கிறிஸ்து பிறப்பின் செய்தியாகவும் கடவுளின் குரலாகவும் அழைப்பாகவும் அறைகூவலாகவும் பார்க்கப்படுதல் நலமானது. மிகக் குறிப்பாக, பங்குத் தளங்களிலும் பணித்தளங்களிலும் மறைமாவட்டங்களிலும் அருள்பணியாளர்களும் ஆயர்களும் தங்கள் ஆதிக்க எதேச்சதிகாரப் போக்குகளை விட்டுவிட்டு, செவிமடுத்து பொது நன்மையை முன்னிறுத்திப் பணியாற்றுவது மிகவும் தேவையானது.
பொறுப்பும் வெளிப்படத்
தன்மையும்
மிகுந்த
பதிலிறுப்பு
இன்றைய
திரு அவையில் பல்வேறு சவால்களை, கடினமான சூழல்களைத் திரு அவை சந்தித்திருக்கிறது. மிகக் குறிப்பாக நிதி மேலாண்மை, சிறுவர் பாதுகாப்பு மற்றும் பொறுப்புகளில் உண்மைத்தன்மை மற்றும் கடமை உணர்தல் எனும் பல நிலைகளில் அருள்பணியாளர்களும்
ஆயர்களும் திரு அவையின் உயர் பொறுப்பில் உள்ளோரும் தவறிழைத்திருப்பதைப் பணிவுடனும், எதார்த்த மனநிலையுடனும் திரு அவை ஏற்றுக் கொண்டுள்ளது. நிதி முறைகேடு, பொதுப் பணத்தைக் கையாடல் செய்தல், முறையான கணக்குகளைப் பராமரிக்காமல் வீண் ஆடம்பரங்களுக்காகச் செலவிட்ட தவறுகள் என நிதி மேலாண்மையில்
திரு அவையில் உயர்மட்ட நிலையில் தொடங்கி, சாதாரண அருள்பணித் தலங்கள் வரை மிகக் கடினமான சூழல்களைத் திரு அவை சந்தித்திருக்கிறது. அதிலிருந்து சீர்படவும், தன்னையே உண்மையும் நம்பிக்கைத்தன்மையும் கடமையுணர்வும் நிறைந்த அமைப்பாகப் புதுப்பித்துக் கொண்டு பல்வேறு முயற்சிகளையும் காணத்தக்க மாற்றங்களையும் திரு அவை செயல்படுத்த முனைந்துள்ளது.
சவால்களின்
மத்தியிலும், நெருக்கடிகளின் மத்தியிலும் திருநிலையினர் வெளிப்படைத் தன்மையோடும் நம்பகத்தன்மையோடும் செயல்பட, திருத்தந்தையர்களின் அறிவுரைகளின் வழிகாட்டுதலில் திரு அவை தன்னையே புதுப்பித்துக்கொள்ள முன் வருவது பாராட்டுதற்குரியது.
நிதி
மேலாண்மைக்கு அடுத்து திரு அவையை அண்மைக் காலங்களில் உலுக்கிய மற்றொரு நிகழ்வு கடந்த காலங்களில் நிகழ்ந்த பாலியல் அத்துமீறல்கள். குறிப்பாக, சிறார்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள். இதனை மறுக்காமல் ஏற்றுக்கொண்டுள்ள திரு அவை பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதோடு, அவர்களுக்கு ஆதரவும் உரிய மாண்பும் தர உறுதியேற்றிருப்பது கடவுளின் குரலாக,
ஆவியானவரின் செயல்பாடாகக் காணப்படுகிறது. திரு அவையின் எல்லா நிலைகளிலும் பணித்தளங்களிலும் நிறுவனங்களிலும் வழிபாட்டுத் தளங்களிலும் சிறார் பாதுகாப்பும் மாண்பும் உறுதி செய்யப்பட்டுள்ளன. அத்துமீறுதல் செயல்பாடுகளுக்கும், சிறார் பாதுகாப்புக்கு எதிரானச் செயல்பாடுகளுக்கும் கடுமையான நடவடிக்கைகளும் தண்டனைகளும் அறிவிக்கப்பட்டது. தொடர் உருவாக்கப் பயிற்சிகள் அனைத்து நிலையினருக்கும் இன்று வழங்கப்படுகிறது.
2022 -ஆம் ஆண்டு
திருத்தந்தை பிரான்சிஸ் உருவாக்கிய சிறார் பாதுகாப்பு மற்றும் நலன், மாண்பு ஆகியவற்றுக்கான ஆணையம் 2023-ஆம் ஆண்டுக்கான தன் முதல் அறிக்கையைத் திருத்தந்தையிடம் வழங்கி தன் பரிந்துரைகளையும் தொடர் வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளது.
எதிர்நோக்கின்
திருப்பயண
யூபிலி பதிலிறுப்பு
2025-ஆம் ஆண்டு
இரண்டாம் வத்திக்கான் சங்க நிறைவின் 60 -ஆம் ஆண்டு வைர விழாவும், கிறிஸ்து பிறப்பின் 2025 -ஆம் ஆண்டுகளில் மகிழ்ச்சியான யூபிலி விழாவாகவும் சிறப்புமிக்க ‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ நாம்
என்ற அழைப்பை யூபிலிக்கான மையப்பொருள்களாக முன்மொழிந்துள்ளார் நம் திருத்தந்தை.
2024 டிசம்பர் 24-ஆம்
தேதி மாலை உரோமை வத்திக்கானில் தூய பேதுரு பேராலயத்தில் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா திருப்பலிக்கு முன்பாக, புனித கதவினைத் (Holy Door) திறந்து
வைத்து யூபிலி ஆண்டாகத் தொடங்கி வைக்க உள்ளார் நம் திருத்தந்தை பிரான்சிஸ்.
‘எதிர்நோக்கின் திருப்பயணிகளாக’ நம்
பயணத்தைத் தொடர மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார் திருத்தந்தை. ஆயிரம் நாள்களைக் கடந்துள்ள இரஷ்ய-உக்ரைன் போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் சார்பாகத் தன் ஆதரவு நிலைப்பாட்டையும் இங்கு அவர் வெளிப்படுத்துகிறார்.
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போரினால் காசாவில் நிகழ்ந்துள்ளது இனப்படுகொலையா? என ஆய்வு செய்யப்பட
வேண்டும் என அவர் அறைகூவல்
விடுத்திருப்பது அனைவரின் எதிர்நோக்குடன் கூடிய இறைவாக்குப் பணியாக அமைந்துள்ளது.
சுற்றுச்சூழல்
பாதுகாப்பு, புலம்பெயரும் மக்களுக்குப் புகலிடம், மூன்றாம் உலக ஏழை நாடுகளுக்கு வளர்ந்துள்ள நாடுகளின் கடமை என்பதை எல்லாம் திரு அவையின் குரலாக அவர் ஒலிப்பது, போராடும் உலகுக்குக் கடவுளின் பதிலிறுப்பாகவும் குரலாகவும் செய்தியாகவும் பார்க்கப்படுகிறது.
மேற்குறிப்பிட்டுள்ள
இந்தக் காலத்தின் அருங்குறிகள் மற்றும் எதார்த்த நிகழ்வுகள் வழியாகக் கடவுள் நமக்குக் கொடுக்கும் அழைப்பு, “வாக்கு மனிதரானார்; நம்மிடையே குடிகொண்டார்” (யோவா
1:14) எனும் உண்மையே!
இயேசுவின்
பிறப்பு என்பது கொண்டாடப்பட வேண்டிய விழா மற்றும் ஆடம்பரக் கொண்டாட்டம் என்பதைக் கடந்து, போராட்டங்கள், சவால்கள், சறுக்கல்கள், இயலாமைகள் மத்தியிலும் மானிட குலத்துக்கு வழிகாட்டும் மற்றும் வழிநடத்தும் கடவுளாக, மண்ணையும் மக்களையும் தேடிவரும் கடவுளாக ‘திருவிவிலியத்தின்
கடவுள் என்றும் செயல்படுகிறார்’ என்பதே
இந்த ஆண்டின் கிறிஸ்து பிறப்பு உணர்த்தும் செய்தி!