news
ஆன்மிகம்
மரியா: தமது மகனின் பணியில் மிகவும் துடிப்புடன் இருக்கின்றார்! (திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி – 45)

கானாவூர் திருமண நிகழ்வில் மரியாவின் வேண்டுகோளானது, அவரது மகனுடைய மீட்புப் பணியின் தொடக்கத்தில் அவர் எவ்வாறெல்லாம் ஒத்துழைக்கின்றார் என்பதற்கான மாதிரியாகும். மேலும், அந்நிகழ்வானது இயேசுவில் நம்பிக்கை கொள்வதில் அவரே முதன்மையானவர் என்பதையும் காட்டுகின்றது.

1. இயேசுவின் பொதுவாழ்வில் மரியாவின் உடனிருப்பை விவரிக்கும் இரண்டாம் வத்திக்கான் சங்கமானது கானாவூரில் இயேசுவின் முதல் புதுமையின்போது அவர் எங்ஙனம் தன்னையே தனது மகனின் பணியில் ஈடுபடுத்திக்கொண்டார் என்பதையும் நினைவுகூர்கின்றது: “கலிலேயா நாட்டின் கானாவில் திருமண விருந்தில் மெசியாவாகிய இயேசுவிடம் இரக்கத்தோடு பரிந்துரைத்து அவர் தம் முதல் அருளடையாளத்தைச் செய்யுமாறு (யோவா 2:1-11) தூண்டுகின்றார் (இறைத்திட்டத்தில் திருச்சபை, எண். 58). நற்செய்தியாளர் யோவானைப் பின்பற்றி, ஒரு தாய் தன் வார்த்தைகளால் தமது மகனை அவரதுமுதல் அடையாளத்தைசெய்யும்படி வற்புறுத்தும்போது, அவரது விவேகமான மற்றும் பயனுள்ள பங்கை இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கமும் சுட்டிக்காட்டுகிறது. அவரது செல்வாக்கு விவேகமானதாகவும் தாய்மையுள்ளதாகவும் இருந்தாலும், அவரது பிரசன்னம் தீர்க்கமானதாக அமைகிறது.

மரியா தன்  வார்த்தைகளால் தமது மகனை அவரது முதல் அருளடையாளத்தைச் செய்யும்படி வலியுறுத்தினார் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டி, நற்செய்தியாளர் யோவானைத் தொடர்ந்து இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கமும் மரியாவினுடைய அறிவுகூர்ந்த மற்றும் பயனுள்ள பங்கைச் சுட்டிக்காட்டுகின்றது. மரியாவினுடைய செல்வாக்கு விவேகம் மற்றும் தாயன்பு சார்ந்தது என்றாலும், அவருடைய உடனிருப்பானது தீர்க்கமானது என்பதையே இது  நமக்கு உணர்த்துகின்றது.

தாயன்பால் என்ன செய்ய முடியும் என்பதை மரியா காட்டுகின்றார்

யூதச் சமூகத்தில் பெண்களின் தாழ்ந்த நிலையைக் கருத்தில் கொண்டால், புனித கன்னி மரியாவின் இந்த முயற்சி இன்னும் வியப்பளிக்கிறது. உண்மையில், கானாவூர் திருமண நிகழ்வில் இயேசு பெண் ஆளுமைகளின் மாண்பு மற்றும் அவர்களுடைய பங்களிப்பை மட்டும் அங்கீகரிக்கவில்லை; தமது தாயின் பரிந்துரையை ஏற்பதன் வழியாக அவர் தமது மீட்புப் பணியில் அவரும் பங்கேற்பதற்கானதொரு வாய்ப்பைத் தருகிறார். ‘பெண் (யோவா 2:4) என்று இயேசு மரியாவை அழைக்கும் அடைமொழியானது, அவருடைய நோக்கத்திற்கு முரணானது அல்ல; உண்மையில்பெண்என்னும் இவ்வார்த்தையில் எதிர்மறையான அர்த்தங்கள் எதுவும் இல்லை. சிலுவையின் அடியில் அவருடைய தாய் மரியா நிற்கும்போதும் அவரை அழைப்பதற்கு இதே சொல்லாடலைத்தான் அவர் பயன்படுத்துகின்றார் (யோவா 19:26). சில திருவிவிலிய விளக்கவுரைகளின்படிபெண்என்று மரியாவை அழைக்கும் சொல்லாடலானது, அவரைப் புதிய ஏவாளாக, அதாவது அனைத்து நம்பிக்கையாளர்களின் தாயாக முன்வைக்கிறது.

நாம் மேற்குறிப்பிட்ட இரண்டாம் வத்திக்கான் திருச்சங்க ஏட்டில் திருச்சங்கமானதுஇரக்கத்தினால் உந்தப்பட்டுஎன்னும் சொற்றொடரைப் பயன்படுத்துகின்றது. இதிலிருந்து அவ்விடத்தில் திராட்சை இரசம் தீர்ந்து போனதைக் கேள்வியுற்று, மரியா தனது இரக்கமுள்ள இதயத்தால் தூண்டப்பட்டார் என்பதை நாம் புரிந்துகொள்ள திருச்சங்கம் நமக்கு உதவுகின்றது. திராட்சை இரசம் தீர்ந்து போனதால் புதுமணத் தம்பதியினருக்கும் விருந்தினர்களுக்கும் ஏற்படவிருந்த ஏமாற்றத்தை உணர்ந்த புனித கன்னி மரியா, இயேசுவிடம் அவரது மீட்பளிக்கும் வல்லமையைக் கொண்டு இக்குறையைத் தீர்க்குமாறு இரக்கத்துடன் பரிந்துரைக்கின்றார்.

சிலருக்கு மரியாவின் வேண்டுகோள் வரம்பு மீறியதாகத் தோன்றலாம்; ஏனெனில், அது மீட்பரது புதுமைகளின் தொடக்கத்தை ஒரு தாய் பக்தி செயலுக்காகப் பின்னுக்குத் தள்ளுகிறது. இயேசுவே இந்தச் சிக்கலைக் கையாண்டார்; தம் தாயின் வேண்டுகோளுக்குச் சம்மதித்ததன் மூலம், மனித எதிர்பார்ப்புகளுக்குப் பதிலளிப்பதில் ஆண்டவரின் அளவற்ற அருளை அவர் வெளிப்படுத்தினார். மேலும், ஒரு தாயின் அன்பால் என்ன செய்ய முடியும் என்பதையும் விளக்கினார்.

2. இங்கு யோவானின் நற்செய்தியிலிருந்து திருச்சங்கம் எடுத்துக் கையாண்டுள்ளஅவரது புதுமைகளின் தொடக்கம்என்ற வார்த்தைகள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. இதில் பயன்படுத்தப்படும்தொடக்கத்தில்என்ற கிரேக்க வார்த்தையானarcheஎன்பதை யோவான் தனது நற்செய்தியின் முன்னுரையில் (Prologue) பயன்படுத்துகிறார்: “தொடக்கத்தில் வாக்கு இருந்தது (யோவா 1:1). இந்தக் குறிப்பிடத்தக்க ஒற்றுமையானது, கிறிஸ்துவின் எல்லையற்ற மாட்சிமையின் மூலத்திற்கும், அவரது  பூவுலகப் பணியில் அதே மாட்சிமையின் முதல் வெளிப்பாட்டிற்கும் இடையே ஓர் இணையைச் சுட்டிக்காட்டுகிறது.

தமது முதல் புதுமையில் மரியாவின் முன் முயற்சியை வலியுறுத்துவதன் மூலமும், பின்னர் கல்வாரியில் சிலுவையின் அடியில் அவர் இருந்ததை நினைவுகூர்வதன் மூலமும், கிறிஸ்துவின் பணி முழுவதிலும் மரியாவின் ஒத்துழைப்பு எவ்வாறு விரிவடைந்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ள நற்செய்தியாளர் நமக்கு உதவுகிறார். கன்னி மரியாவின் வேண்டுகோளானது, தெய்வீகமான மீட்புத் திட்டத்திற்குள் வைக்கப்பட்டுள்ளது.

இயேசு செய்த முதல் அடையாளத்தில், திரு அவைத் தந்தையர் ஒரு முக்கியமான குறியீட்டுப் பரிமாணத்தைக் கண்டனர்; தண்ணீர் திராட்சை இரசமாக மாறுவதை, பழைய உடன்படிக்கையிலிருந்து புதிய உடன்படிக்கைக்கு மாறுவதற்கான அறிவிப்பாக அவர்கள் கண்டனர். கானாவூர் திருமண விருந்தில், யூதர்களின் தூய்மையாக்கலுக்காகவும், சட்டக் கட்டளைகளை நிறைவேற்றுவதற்காகவும் (மத் 7:1-15) ஒதுக்கப்பட்டிருந்த குடங்களில் இருந்த தண்ணீரே, திருமண விருந்தின் புதிய திராட்சை இரசமாக மாறுகிறது; அது கடவுளுக்கும், மனிதகுலத்திற்கும் இடையிலான உறுதியான ஒன்றிப்பின் சின்னமாகும்.

3. இயேசு தமது முதல் அற்புதத்திற்காகத் தேர்ந்தெடுத்த திருமண விருந்தின் சூழலானது, பழைய ஏற்பாட்டில் கடவுளுக்கும், அவருடைய மக்களுக்கும் இடையேயான உடன்படிக்கையைக் குறிக்கவும் (ஓசே 2:21; எரே 2: 1-8; திபா 44, இன்னும் பல), புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துவிற்கும் திரு அவைக்கும் இடையேயான ஒன்றிப்பைக் குறிக்கவும் (யோவா 3: 28-30; எபே 5: 25-32; திவெ 21:1-2, இன்னும் பல) அடிக்கடிப் பயன்படுத்தப்படும் திருமணக் குறியீட்டைக் குறிக்கிறது. கானாவூரில் இயேசுவின் உடனிருப்பு, திருமணத்திற்கான கடவுளின் மீட்புத்திட்டத்தின் ஓர் அடையாளமாகவும் விளங்குகிறது. இந்தக் கண்ணோட்டத்தில், திராட்சை இரசம் இல்லாததை எதிர்பாராத விதமாகத் திருமண உறவுகளை அடிக்கடி அச்சுறுத்தும் அன்பின் பற்றாக்குறையின் ஒரு குறிப்பாகப் புரிந்துகொள்ளலாம். கடவுளை அடிப்படையாகக் கொண்ட அன்பினால் மட்டுமே துரோகம், தவறான புரிதல் மற்றும் பிரிவினை ஆகிய ஆபத்துகளிலிருந்து விடுவிக்கப்படக்கூடிய அனைத்துத் திருமணமான தம்பதியினருக்காகவும் தலையிடுமாறு மரியா இயேசுவிடம் வேண்டுகிறார். திருவருளடையாளத்தின் அருள், தம்பதியினருக்கு அன்பின் இந்த மேலான வலிமையை வழங்குகிறது; இது வாழ்வின் கடினமான சூழ்நிலைகளிலும்கூட, நம்பிக்கையில் அவர்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்பை வலுப்படுத்த வல்லது.

திரு அவையின் நம்பிக்கை பயணத்தை மரியா தொடங்கி வைக்கின்றார்

கிறித்தவ எழுத்தாளர்களின் விளக்கத்தின்படி, கானாவூரில் நடந்த அற்புதமானது ஆழமான நற்கருணைப் பொருளையும் கொண்டுள்ளது. யூதர்களின் பாஸ்கா பண்டிகைக் காலத்திற்கு அருகில் இந்த அற்புதத்தைச் செய்வதன் மூலம் (யோவா 2:13) இயேசு அப்பங்களைப் பெருகச் செய்ததைப் போலவே (யோவா 6:4) உண்மையான பாஸ்கா விருந்தான நற்கருணைக்கு ஏற்பாடு செய்யவேண்டியதற்கான தமது நோக்கத்தை இங்கு வெளிப்படுத்துகின்றார். கானாவூர் திருமணத்தில் அவரது விருப்பம், புதிய உடன்படிக்கையின் இரத்தத்தைக் குறிக்கும் திராட்சை இரசத்தின் பிரசன்னத்தாலும், ஒரு விருந்தின் சூழலாலும் மேலும் வலியுறுத்தப்படுவதாகத் தெரிகிறது.

இவ்வாறு, திருமணக் கொண்டாட்டத்தில் இயேசுவின் பிரசன்னத்திற்குக் காரணமாக இருந்த பிறகு, உயிர்த்தெழுந்த தம் மகன் சீடர்களிடையே பிரசன்னமாக இருப்பதன் உன்னத அடையாளமான நற்கருணையை முன்னறிவிக்கும் புதிய திராட்சை இரசத்தின் அற்புதத்தை மரியா பெறுகிறார்.

4. தமது தெய்வீக மகன்மீது ஆண்டவரின் அன்னை கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையால் சாத்தியமான இயேசுவின் முதல் அற்புதத்தின் விவரிப்பின் முடிவில், நற்செய்தியாளர் யோவான் இவ்வாறு முடிக்கிறார்: “அவருடைய சீடர்களும் அவரிடம் நம்பிக்கை கொண்டார்கள் (யோவா 2:11). இவ்வாறு, கானாவூர் திருமண நிகழ்வில் அவருடைய சீடர்கள் மற்றும் ஊழியர்களின் கவனத்தைக் கிறிஸ்துவின் பக்கம் திருப்பி, மரியா திரு அவையின் நம்பிக்கை பயணத்தைத் தொடங்கி வைக்கின்றார்

மரியாவின் தளராத பரிந்துரையானது, சில சமயங்களில்இறைவனின் மௌனம்என்ற அனுபவத்தை எதிர்கொள்பவர்களையும் ஊக்குவிக்கிறது. எல்லா நம்பிக்கைகளுக்கும் அப்பாற்பட்டு நம்பிக்கை வைக்குமாறும், எப்போதும் ஆண்டவரின் நன்மையில் நம்பிக்கை வைக்குமாறும் அவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மூலம்: John Paul II, Mary is active in her son’s mission, in «L’Osservatore Romano», Weekly Edition in English, 12 March 1997, p. 7.

news
ஆன்மிகம்
தோமா கால் பதித்த தேசம் – 04

அன்றிரவு ஆண்டிரோபோலிஸ் நகரிலேயே தங்கி அங்கு முகாமிட்டிருந்த மற்ற வணிகர்களுடன் மறுநாள் அதிகாலை புறப்பட்டு, தங்கள் பயணத்தைத் தொடர தோமாவும் ஹப்பானும் திட்டமிட்டனர். கடல் பயணத்தைத் தொடர விரும்பிய இருவரும் அன்றிரவு அமைதியான உறக்கத்தில் ஆழ்ந்தனர். ஆனால், அன்றுதான் திருமணம் மூலம் தங்கள் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கிய மணமகனும் மணமகளும் அன்றிரவு உறக்கமற்றுப் போனார்கள். ஆம், அன்று அந்த இளம் தம்பதியரின் இல்வாழ்வின் மனநிலை, தோமாவின் போதனையால் மாற்றம் கண்டுகொண்டிருந்தது.

மறுநாள் காலைப்பொழுது புலர்ந்து, சூரியன் தன் ஒளியை மண்ணில் பாய்ச்சத் தொடங்கிய நேரம். தம்பதியர் இருவருமே அரசனைச் சந்தித்தனர். இளவரசியையும், அவள் கணவனையும் கண்ட மாத்திரத்தில் அரசன் மனத்தில் ஏதோ உணர்ந்தான். புதுத்தம்பதியருக்குள்ள மகிழ்ச்சி அவர்கள் முகத்தில் தென்படவில்லை. குழப்பத்தோடு அவர்களை நோக்கினான். “என்ன மகளே?” என்று பாசத்தோடு வினவியவனிடம், இருவரும் கூறிய பதிலால் அவன் சினத்தின் உச்சிக்கே போனான்.

தம்பதியர் இருவரும் தணிந்த குரலில், “அரசே, சினம் கொள்ளவேண்டாம். நாங்கள் இருவரும் மணத்துறவு வாழ்வைத் தொடர விரும்புகிறோம். இதன்மூலம் கடவுளை மாட்சிமைப்படுத்த ஆசிக்கிறோம்என்றனர்.

கடவுளா? எந்தக் கடவுள்? அயல் நாட்டு மனிதன் அறிமுகப்படுத்திய கடவுளா?” என்று சீறினான் அரசன். கோபம் அடங்காதவனாய் தன் வீரர்களை அழைத்து, “வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் அந்த மந்திரவாதியை எங்கிருந்தாலும் உயிரோடு பிடித்து வாருங்கள்; நானே அவனைத் தண்டிக்கிறேன்என்று அவன் உத்தரவிட, வீரர்கள் அந்நகர் மற்றும் கடலோரப் பகுதிகளில் தோமாவை வலைவீசித் தேடினர். எங்குத் தேடியும் தோமா கிடைக்காததால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

அன்று அதிகாலையிலேயே ஆண்டிரோபோலிஸ் பகுதியிலிருந்து புறப்பட்டிருந்த தோமாவின் பயணக்கப்பல் கடலுக்குள் வெகுதூரத்தில் பயணித்துக் கொண்டிருந்தது.

ஆண்டிரோபோலிஸ் நகரிலிருந்து புறப்பட்ட தோமாவும் ஹப்பானும் அரேபியத் தீபகற்பத்தில் சொகோட்டிரா என்ற தீவை அடைந்து கப்பல் பயணத்திற்கு ஏதுவான பருவநிலை மாற்றத்திற்காகக் காத்திருந்தனர். சுமூகமான சூழலில் அங்கிருந்து பயணித்த தோமா, சிந்து நதிக்கருகில் உள்ள பட்டாலா என்ற துறைமுக ஊரில் சில காலம் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. பட்டாலாவுக்குடாடா துறைமுகம்என்றொரு பெயரும் இருந்தது. சிந்து சமவெளிப் பகுதிகளில் தோமா நற்செய்தி போதித்ததற்கான ஆதாரமாகச் சொல்லப்படுகிறது தூமா பகத் (Thomas The Saint) என்ற சபையினரைப் பற்றிய குறிப்புகள். பிரிவினை சபை கிறித்தவர்களான இவர்கள் புனித தோமாவைப் பின்பற்றியவர்களாகக் கருதப்பட்டனர். புனித மத்தேயு நற்செய்தி நூலையே பயன்படுத்தியதோடு, கிறித்தவச் சடங்குமுறைகள் பலவற்றைக் கடைப்பிடித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே, சிந்து சமவெளிப் பகுதிகளில் தோமாவின் போதனைக்குப் பின்னர் இச்சபை உருவெடுத்ததால் தோமா இப்பகுதியில் தங்கியுள்ளது தெரியவருகிறது.

சிந்து சமவெளிப் பகுதியிலிருந்து புறப்பட்ட இருவரும் கப்பலில் பயணித்து அட்டோக் என்ற ஊரின் கரையை வந்தடைந்தனர். கடல்வழி முடிவுற்ற நிலையில், 40 மைல்கள் நடந்து தென்கிழக்குப் பகுதியில் இந்தோ-பார்த்திய தேசத்தின் தலைநகராக விளங்கிய தட்சசீலத்திற்குள் வணிகர் ஹப்பானுடன் வருகை தந்தார் தோமா.

கி.மு. 138-ஆம் ஆண்டில் கிழக்கு ஈரான், ஆப்கானிஸ்தான், மேற்கு பாகிஸ்தான், இந்தியாவின் வடமேற்குப் பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதிகளைப் பார்த்தியர்கள் ஆண்டனர். அவர்களின் முதல் அரசர் முதலாம் மித்ரிடேட்டஸ் என்பவர், காலப்போக்கில் அரசுகள் கைமாறிப் போய் இந்தோ-சிந்தியர்கள் வசம் ஆட்சி இருந்தபோது, கி.மு. 19-ஆம் ஆண்டில் ஈரான் நாட்டு வம்சாவளியைச் சார்ந்த முதலாம் கொண்டோபரஸ் என்ற அரசர் சிந்தியர்களின் பிடியிலிருந்து விடுதலை பெற்று அரகோஷியா, செயிஸ்டான், சிந்து, பஞ்சாப், காபூல் பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகள் உள்ளடங்கிய இந்தோ-பார்த்தியா நாட்டை உருவாக்கித் தன்னை அரசருக்கெல்லாம் அரசராக அறிவித்துக் கொண்டார்.

அவருடைய வழித்தோன்றலாக நான்காம் தலைமுறை அரசரான கொண்டோபரஸ் சாசஸ் என்பவரே தோமா வருகையின்போது தட்சசீலத்தைத் தலைநகராகக் கொண்டு பார்த்தியாவை ஆண்டு கொண்டிருந்தார். நான்காம் கொண்டோபரஸ் ஆட்சி கி.பி. 20-லிருந்து கி.பி.50 ஆண்டுக்குள் நீடித்திருந்ததாகக் கருதப்படுகிறது.

சார்லஸ் மேசன் என்ற ஆங்கிலேய தொல்லியல் ஆய்வு நிபுணர், 1834-ஆம் ஆண்டு தன் தொல்லியல் ஆய்வில் ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலுக்கு வடக்கே 25 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பக்ராம் என்ற இடத்தில் முதன்முதலாகக் கொண்டோபரஸ் பெயர்கள் பொறித்த நாணயங்களைக் கண்டுபிடித்தார். அங்கே பல இடங்களில் நாணயங்கள் கிடைத்தன. இக்கண்டுபிடிப்புகளின் தொடர்ச்சியாக 1854-ஆம் ஆண்டு ஜெனரல் கன்னிங்காம் என்பவர் தன் ஆய்வுநூலில் காபூல், காந்தகார், செயிஸ் டான், மேற்கு மற்றும் தெற்கு பஞ்சாப் பகுதிகளில் அரசரின் பெயர்களும் உருவங்களும் பொறிக்கப்பட்ட நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைக் குறிப்பிட்டுள்ளார்.

1857-இல் பாகிஸ்தானின் பெஷாவர் நகரின் வடகிழக்கில் கிடைக்கப்பெற்ற தாக்த்--பாகி கல்வெட்டுகளிலும் நாணயங்களிலும் அவ்விதமே அரசரின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளன. மேலும், நாட்டில் பெரும் பதவி வகித்து வந்த அவர் உறவினர்கள் பெயர்களும் உருவங்களும் பொறித்த நாணயங்களும் கிடைத்தன. இவையனைத்திலும் எழுத்துகள் இந்திய பாலி மொழியிலேயே இருந்தன.

பார்த்தியா தேசத்தின் தலைநகராய் விளங்கிய தட்சசீலம் இன்றைய பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத் நகரிலிருந்து வடமேற்கே 32 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருந்தது. சமஸ்கிருத மொழியில் பண்டைய தட்சசீலம் நகரத்தைதக்சசீலாஎன்றும், பாலி மொழியில்தக்கசிலாஎன்றும் அழைப்பர். தட்சசீலம் நகரத்தில் கி.மு. 3,360 ஆண்டுகளுக்கு முன்னரே மனிதக் குடியிருப்புகள் இருந்ததற்கான ஆதாரங்கள், இங்குள்ள ஹத்தியால் தொல்லியல் அகழ்வாய்வுகள் மூலம் அறியப்பட்டுள்ளது.

தட்சசீலத்தின் பெருமையைப் பற்றிக் கூற வேண்டுமானால், பண்டைக் காலத்தில் அங்கு நிறுவப்பட்டிருந்த பல்கலைக்கழகம் பற்றிக் குறிப்பிட்டே ஆகவேண்டும். மத்திய ஆசியாவிலிருந்து நாடோடிகளாக வந்த ஆரியர்களின் குடியேற்றம் முதலில் பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் மாநிலத்தில்தான் நடந்தது. இந்துகள் வேதநூல்களின் கல்வி மையமாகத் திகழ்ந்த இப்பகுதியிலுள்ள தட்சசீல நகர் பல்கலைக்கழகத்தில் இளவரசர்கள் மற்றும் பிராமணர்கள் கல்வி பயில அனுப்பப்பட்டனர். தத்துவம், மொழி இலக்கியம், அறிவியல், மூலிகை மருத்துவம் முதலான பாடங்கள் பயிற்றுவிக்கப்பட்டன

(தொடரும்)

news
ஆன்மிகம்
ஏழையரை முன்னிறுத்தும் திரு அவை

தமிழ்நாடு மேய்ப்புப்பணிப் பேரவையின் ஆண்டுக் கூட்டத்தில் தமிழ்நாடு-புதுவை ஆயர் பேரவைத் தலைவர் மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களின்  தொடக்க உரை

இறை இயேசுவில் அன்பார்ந்த ஆயர் பெருமக்களே, அருள்தந்தையரே, துறவியரே, இறைமக்களே! தமிழ்நாடு மேய்ப்புப்பணிப் பேரவையின் இன்றைய இந்த முக்கியமான உரையாடலுக்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன்.

திரு அவை என்பது கட்டடங்களின் கூட்டுத் தொகுப்போ, நிறுவனங்களின் கூட்டமைப்போ அல்ல; அது மனிதர்கள் இணைந்து பயணிக்கும் இறைமக்களின் சமூகம். நம்பிக்கையில் ஒன்றுபட்டு, இறையாட்சியை நோக்கிப் பயணிக்கும் திருப்பயணிகளின் குடும்பம். வத்திக்கானின் ஏடுAd Gentesஉணர்த்துவது போல, இந்தப் பயணத்தில் நமது இன்றைய காலகட்டத்தின் மகிழ்ச்சிகளையும் துயரங்களையும் நம்பிக்கைகளையும் ஏமாற்றங்களையும் குறிப்பாக, ஏழையர் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் வாழ்க்கை அனுபவங்களையும் முன்னிறுத்துவது நமது அழைப்பாகும். இந்த அழைப்பின் பார்வையில், நமது இந்த ஆண்டின் மேய்ப்புப்பணிப் பேரவையின் மையக்கருத்தாகத் தேர்ந்தெடுத்துள்ள தலைப்பு, ‘ஏழையரை முன்னிறுத்தும் திரு அவை.’ இன்று நமது சிந்தனையை அறிமுகப்படுத்தும் வகையில் ஐந்து அடிப்படையான கேள்விகளை இந்தத் தொடக்க உரையில் உங்கள் முன்வைக்க விரும்புகிறேன்.

1. ‘ஏழையரை முன்னிறுத்துதல்- பணம் வைத்திருப்பவர்களுக்கு எதிரான நிலைப்பாடா?

ஏழையருக்கான நிலைப்பாட்டைக் குறித்துப் பேசும்போதெல்லாம் அடிக்கடி எழும் கேள்விதான் இது. ‘ஏழையரை முன்னிறுத்தும் திரு அவைஎன்று நாம் கூறும்போது, திரு அவை செல்வந்தர்களை ஒதுக்குகிறதா? அவர்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டுகிறதா? இதற்கான திரு அவையின் பதில் மிகவும் தெளிவானது: ‘இல்லை, ஏழையரின் சார்புநிலை, பணம் வைத்திருப்பவர்களுக்கு எதிரான பாகுபாடு ஆகாது.’

திரு அவை யாரையும் புறக்கணிப்பதில்லை. இறைவனின் அன்பு அனைவருக்கும் சமமானது. ஏழையராயினும் செல்வந்தராயினும் ஒவ்வொருவரும் இறைவனின் உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்டவர்கள். மனிதர்கள் எல்லாருமே புனித வாழ்விற்கும் மீட்பிற்கும் அழைக்கப்பட்டவர்கள். அப்படியானால், ஏன் திரு அவை ஏழையருக்கு முன்னுரிமை அளிக்கிறது?

அன்பார்ந்தவர்களே, இங்குதான் நாம் ஒரு முக்கியமான வேறுபாட்டை உணரவேண்டும். திரு அவை வறுமையை உயர்த்திப் பேசுவதில்லை; வறுமையால் காயமடைந்த மனிதனை உயர்த்திப் பிடிக்கிறது. மனித மாண்பைச் சிதைக்கும் ஏழ்மை ஒருபோதும் இறைவனின் விருப்பமல்ல; ஆனால், அந்த ஏழ்மையால் மனித மாண்பை இழந்து வாழும் சகோதரர்-சகோதரிகளின் பக்கம் நிற்பதே திரு அவையின் அழைப்பாகும்.

எனவே, திரு அவையின் சார்புத்தன்மை வறுமைக்கு அல்ல; வறியவர்களுக்கே. இன்றைய சமூக, அரசியல், பொருளாதாரக் காரணங்களால், வறுமையின் பிடியில் சிக்கியிருப்போரை விடுதலை செய்வதே திரு அவையின் மறைப்பணி. வறுமையைப் போதிக்க அல்ல; வறுமையிலிருந்து மனிதரை விடுவிக்கவே திரு அவை செயல்படுகிறது.

நற்செய்தி போதிக்கும் ஏழ்மை மற்றும் சமூகத்தில் நிலவும் ஏழ்மை இரண்டும் ஒன்றல்ல. Gospel poverty is different from the reality of poverty. Gospel\'s poverty is liberating, chosen out of free will. Poverty as a social reality is dehumanising and forced by systematic violence and indifference. We don\'t spiritualise poverty. We stand for the liberation of the poor.

ஏழையரின் சார்புநிலையும் முன்னுரிமையும், மற்றவர்களை ஒதுக்கும் மனப்பான்மை அல்ல; காயமடைந்தவர்களை முதலில் அணுகும் இறையன்பின் வெளிப்பாடு.

99 ஆடுகளைப் பாலைநிலத்தில் விட்டுவிட்டு, காணாமற்போன ஓர் ஆட்டைத் தேடிச்செல்லும் நல்லாயனின் தேடல்.

அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர், முதலில் ஆபத்தான நிலையில் இருப்போருக்குச் சிகிச்சை அளிப்பது போல, மனித மாண்பும் வாழ்வுரிமையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பவர்களைத் திரு அவை முன்னிலைப்படுத்துகின்றது.

இது பாகுபாடு அல்ல; நீதியின் அழைப்பு. இது ஒருதலைப்பட்சம் அல்ல; இறைஇரக்கத்தின் மொழி.

மனித மாண்பு மறுக்கப்பட்ட இடத்தில் இறைவனின் அன்பு முதலில் சென்றடையவேண்டும் என்ற நற்செய்தியின் பார்வையை வாழ்வாக்கத் துடிக்கும் தேர்வு. The preferential option for the poor simply acknowledges a painful reality: those who suffer deprivation, exclusion, injustice and marginalisation require greater attention because their human dignity is more vulnerable.

இன்று உலகம் வளர்ச்சியைப் பற்றி பெருமையாகப் பேசுகிறது. தொழில்நுட்பமும் பொருளாதாரமும் அறிவியல் தொலைத்தொடர்பு கண்டுபிடிப்புகளும் அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அதேநேரத்தில், மனித சமூகத்தின் சரிபாதி அதாவது 50 விழுக்காடு மக்கள் இன்னும் பசியில், தனிமையில், அநீதியில், ஒதுக்கப்பட்ட நிலையில் வாழ்கின்றனர்.

இந்த அப்பட்டமான முரண்பாட்டைக் கண்டும் அமைதியாய் இருக்கத் திரு அவை மறுக்கின்றது. ஆகையால், ஏழையரை முன்னிறுத்துதல் என்பது நமது சமூக அக்கறை சார்ந்த நிலைப்பாடு மட்டுமல்ல, நமது நம்பிக்கையின் உயிர்த்துடிப்பும் கூட. “மிகவும் சிறியவர்களில் ஒருவருக்குச் செய்ததை எனக்கே செய்தீர்கள்என்று ஆண்டவர் இயேசு அறிவித்த நற்செய்தியை தினசரி வாழ்வியலில் செயல்படுத்தும் வழியாகும்.

2. திரு அவையின் ஏழையருக்கான சார்பு நிலைக்கு அடித்தளம் என்ன?

ஏழையரை முன்னிறுத்தும் திரு அவையின் நிலைப் பாட்டிற்கு உறுதியான அடித்தளங்கள்:

இறைவார்த்தையின் ஒளி,

வறியவரின் முன்னேற்றத்திற்கான திரு அவையின் வரலாற்று சார்பு நிலை,

கத்தோலிக்கச் சமூகப் போதனை

திரு அவையின் வரலாறும், சமூகப் போதனையும்தான்The Church\'s preferential option for the poor is rooted in God\'s saving love revealed throughout Scripture, especially in the life and mission of Jesus Christ. It is reflected in the witness of the early Christian community, developed by the Church Fathers, and affirmed by Catholic social teaching. More than a social concern, it is a Gospel imperative that places the dignity of the poor at the heart of the Church\'s mission.

திருவிவிலியத்தில் இறைவனின் சிறப்பான பாதுகாப்பிற்கு உரிய மக்களுக்கு என்று ஒரு சிறப்புப் பெயர் உண்டு: அனாவிம்! (Anawim). யார் இந்த அனாவிம்? கைம்பெண்கள், அனாதைகள், புலம் பெயர்ந்தோர், ஒடுக்கப்பட்டோர், உரிமையற்றோர் ஆகியோரே இறைவனின் அனாவிம். தமக்கு நீதி கிடைக்க வழியில்லாதவர்களின் நீதியாக இறைவன் நிற்கிறார். இந்த இறையன்பின் உச்ச வெளிப்பாடு இயேசு கிறிஸ்துவில் நிறைவேறுகிறது. தமது பொதுப்பணியைத் தொடங்கியபோது இயேசு அறிவித்த முதல் அறிவிப்பு இதுவே: ஆண்டவரின் ஆவி என்மேல் உள்ளது; ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்க அவர் என்னை அருள்பொழிவு செய்துள்ளார் (லூக் 4:18).

இயேசு அரண்மனையில் பிறக்கவில்லை; எளிமையான தொழுவத்தில் பிறந்தார். அதிகார மையங்களில் வாழவில்லை; சாதாரண மக்களிடையே வாழ்ந்தார். சமூகம் விலக்கி வைத்த தொழு நோயாளியைத் தொட்டார். ‘பாவிஎன்று முத்திரை குத்தப்பட்டவர்களை அரவணைத்தார். பெண்களின் மாண்பைக் காத்தார். ஒதுக்கப்பட்டவர்களோடு உணவருந்தினார். சமூகம் மறுத்தவர்களுக்குள் இறைவனின் பிள்ளைகளைக் கண்டார். எனவே, ஏழையருக்கு முன்னுரிமை அளிப்பது என்பது இயேசுவின் பணிவாழ்வு முறையைத் தேர்ந்தெடுப்பதாகும்.

இந்த நற்செய்திப் பார்வையைத் திரு அவை இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தனது சமூகப் போதனைகளில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கடந்த நூற்றாண்டில், ‘Rerum Novarum’ முதல் ‘Laudato Si’ வரை, அண்மையில் வெளிவந்த Magnificas Humanitas-லும் கூட மனித மாண்பைப் பாதுகாப்பதும், ஏழையருக்கு நீதியை நிலைநாட்டுவதும் திரு அவையின் மறைப்பணியாகவே வலியுறுத்தப்படுகிறது.

திருத்தந்தை பிரான்சிஸ் நமக்கு நினைவூட்டுகிறார்: ஏழையருக்கான முன்னுரிமை என்பது சமூக, அரசியல் அல்லது பொருளாதாரக் கருத்தியல் சார்ந்த முடிவு அல்ல; அது நமக்கு அனைத்திற்கும் மேலாக ஓர் இறையியல் தேர்வு.” அதாவது, இந்த முன்னுரிமை திரு அவையின் தன்னிச்சையான தேர்வு அல்ல; இறைவன் திரு அவைக்கு வகுத்த மறைப்பணியின் அடித்தளம். இப்போது நாம் மற்றொரு முக்கியமான கேள்வியை எழுப்பவேண்டும்.

3. ஏழையருக்கான திரு அவையின் தேர்வு வெறும் சமூகச் சேவையா?

நிச்சயமாக இல்லை. தவறாக நினைத்துக் கொள்ளவேண்டாம்; சமூகச் சேவை முக்கியம்தான். பசியோடு இருப்பவருக்கு உணவளிப்பதும், நோயுற்றவரைப் பராமரிப்பதும், கல்வியற்றவருக்குக் கல்வி வழங்குவதும் கிறித்தவ அன்பின் வெளிப்பாடுகள். இவை அனைத்தும் தமிழ்நாடு திரு அவையின் மறைப்பணியின் அங்கம்தான். இவற்றை ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது.

ஆனால், திரு அவை பேசும் ஏழையரை முன் னிறுத்தும் தேர்வு அதைவிட ஆழமானது. இது உதவி செய்வதற்கான செயல்முறை மட்டுமல்ல; நமது சமூகத்தை ஆராய்ந்து பார்க்க உதவும் புதிய பார்வை. ஏழையரின் கண்களைக் கொண்டு உலகைப் பார்க்கவும், அவர்களின் அனுபவங்களின் வழியே சமூகத்தின் உண்மைகளைப் புரிந்துகொள்ளவும் இது நம்மை அழைக்கிறது.

ஏழையருக்கான திரு அவையின் தேர்வு வறுமையின் விளைவுகளைக் குறைப்பது மட்டும் அல்ல; வறுமையை உருவாக்கும் காரணிகளைக் கேள்விக்கு உள்ளாக்குவது. The Option for the Poor is a call to question the systematic poverty that makes the rich richer and the poor poorer.

The Poor are not objects of charity but subjects of their liberation. மேலும் ஏழையர் இரக்கத்தின் பெறுநர்களாக மட்டும் இருக்கக்கூடாது. The poor are not just beneficiaries of our Charity programs. They are active partners of our mission. அவர்கள் திரு அவையின் வாழ்விலும், முடிவெடுப்பிலும், மறைப்பணியிலும் பங்குபெறும் சகோதர-சகோதரிகளாக மதிக்கப்படவேண்டும். ஏழைகள் நமது மறைப்பணியின் இலக்கு அல்ல; அவர்கள் நமது துணைப் பயணிகள் என்பதை Dilexit Te-இல் திருத்தந்தை லியோ தெளிவாகக் குறிப்பிடுகின்றார்.

ஏழையரின் குரல் நமது பங்குகளில் ஒலிக்க வேண்டும்; அவர்களின் அனுபவம் நமது மேய்ப்புப் பணித் திட்டங்களை வடிவமைக்கவேண்டும்; அவர்களின் நம்பிக்கை நமது நம்பிக்கையை வளப்படுத்தவேண்டும். உண்மையில், ஏழையருக்கு நாம் நற்செய்தியை  எடுத்துச்செல்கிறோம் என்று நினைக்கிறோம். ஆனால், பல நேரங்களில், நற்செய்தியை வாழ்ந்து காட்டுவது அவர்கள்தான். குறைவான வசதிகளோடு அதிக நம்பிக்கையுடன் வாழும் அவர்களிடமிருந்து, இறைவனை முழுமையாக நம்புவது எப்படி என்பதை நாம் கற்றுக்கொள்கிறோம். ஆகவே, ஏழையரை முன்னிறுத்துதல் என்பதுஅவர்களுக்காகசெயல்படுவது மட்டுமல்ல; ‘அவர்களோடுஇணைந்து நடப்பதுமாகும்.

4. ஏழையருக்கான முன்னுரிமை நமது மேய்ப்புப்பணியில் எவ்வாறு வெளிப்படவேண்டும்?

அன்பிற்குரியவர்களே, ஏழையரை முன்னிறுத்தும் இந்த அழைப்பு அழகான கருத்தாக மட்டுமே இருந்துவிட்டால், அது நற்செய்தியின் ஆற்றலை இழந்துவிடும். ஏழையருக்கான திரு அவையின் தேர்வு நமது ஆவணங்களில் மட்டுமல்ல, நமது வாழ்விலும் மேய்ப்புப்பணியிலும் ஆளுமையிலும் வெளிப்படவேண்டும். எனவே, இந்தப் பேரவையில் நமது தமிழ்நாடு திரு அவை தன்னைத்தானே சில நேர்மையான கேள்விகளால் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.

நமது பங்குகளில் ஏழையர் உண்மையாகவே வரவேற்கப்படுகிறார்களா? அவர்கள் இந்தத் திரு அவைதங்களை முன்னிறுத்தும் தங்களுடைய சொந்தக் குடும்பம்என்று உணர்கிறார்களா?

நமது கல்வி நிறுவனங்கள் சமூகத்தின் விளிம்பு நிலைகளில் வாழும் குழந்தைகளுக்குப் போதிய இடமும் முன்னுரிமையும் இருக்கின்றதா? அல்லது கல்வி என்பது வசதி படைத்தவர்களின் உரிமையாக மட்டும் மாறிவிட்டதா?

நமது பள்ளிகளின் தரத்தை எவ்வாறு தீர்மானிக்கின்றோம்? ‘எத்தனை பேர் நூற்றுக்கு நூறு வாங்கினார்கள்?’ என்ற எண்ணிக்கையை வைத்தா? அல்லதுஎனது பள்ளி எத்தனை ஏழை மாணவரை உருவாக்கி, வளர்ச்சியின் பாதைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது?’ என்ற கேள்வியை வைத்தா?

நமது மருத்துவ மற்றும் சமூகநல நிறுவனங்கள் தேவையில் இருக்கும் ஏழையரை முன்னிறுத்து கிறதா?

நமது மேய்ப்புப்பணித் திட்டங்கள் மக்களின் வாழ்க்கையை உண்மையில் மாற்றுகின்றனவா? அல்லது பங்கு, மறைவட்ட, மறைமாவட்ட நிகழ்ச்சிகளின் எண்ணிக்கையை மட்டுமே அதிகரிக்கின்றனவா?

இவை வெறும் நிர்வாகக் கேள்விகள் அல்ல; நமது திரு அவையின் சாட்சிய வாழ்வை மதிப்பீடு செய்யும் ஆன்மிகக் கேள்விகள்.

ஏழையரை முன்னிறுத்தும் திரு அவை என்பது உதவிகளை வழங்கும் திரு அவை மட்டுமல்ல; மனித மாண்பை மீட்டெடுக்கும் திரு அவை.

அது தொழிலாளர்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கும்.

பெண்களின் மாண்பையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும்.

தலித் மற்றும் பழங்குடியின மக்களின் நீதிக்கான போராட்டத்தில் துணையாக நிற்கும்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அந்நியர்களாக அல்லசகோதர-சகோதரிகளாக வர வேற்கும்.

மாற்றுத்திறனாளிகள், முதியோர், நோயாளிகள், தனிமையில் வாழ்பவர்கள் ஆகியோருக்கு அவர்கள் திரு அவையின் விளிம்பில் அல்ல, இதயத்தில் இருக்கிறார்கள் என்ற உணர்வை அளிக்கும்.

மனித மாண்பு புறக்கணிக்கப்படும் திருநங்கைகள் சார்பாக நிற்கும்.

வேலைவாய்ப்பிற்காகப் போராடும் இளையோருக்கும், எதிர்காலம் குறித்து அச்சத்தோடு வாழும் குடும்பங்களுக்கும் நம்பிக்கையின் துணையாக இருக்கும்.

இவ்வாறு மனித வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் கிறிஸ்துவின் கரங்களாக மாறுவதே நமது மேய்ப்புப்பணியின் நோக்கமாக இருக்கவேண்டும். எனவே, நமது வெற்றி எத்தனை நிகழ்ச்சிகளை நடத்தினோம் என்பதில் இல்லை; எத்தனை வறியோர் கிறிஸ்துவின் அன்பை நமது வழியாக அனுபவித்தனர் என்பதில்தான் உள்ளது.

5. இன்றைய தமிழ்நாடு திரு அவைக்கு இந்தஏழையருக்கான முன்னுரிமைஅழைப்பின் பொருள் என்ன?

தமிழ்நாடு பல துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளது. கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம், பொருளாதாரம் ஆகியவற்றில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதற்காக நாம் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம். ஆனால், இந்த வளர்ச்சியின் மறுபக்கத்தையும் நாம் காண வேண்டியுள்ளது.

  இன்றும் கடன் சுமையால் துன்புறும் விவசாயிகள் இருக்கிறார்கள்.

வேலைவாய்ப்பின்றி எண்ணற்ற இளையோர் இருக்கிறார்கள்.

கடலின் நிலையற்ற தன்மையோடு போராடும் மீனவக் குடும்பங்கள் இருக்கின்றன.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற சூழலில் உழைக்கிறார்கள்.

தலித் மற்றும் பழங்குடியின மக்கள் இன்னும் சமத்துவத்திற்காகக் குரல் கொடுக்க வேண்டிய நிலை தொடர்கிறது.

பெண்களுக்கு எதிரான வன்முறையும் பாகுபாடும் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

முதியோர் பலர் தனிமையில் வாழ்கிறார்கள்.

போதைப்பழக்கம் ஏராளமான இளையோரின் எதிர்காலத்தைப் பறித்துக்கொண்டிருக்கிறது.

சுற்றுச்சூழல் சீரழிவு, காலநிலை மாற்றம், இயற்கை வளங்களின் அழிவு ஆகியவை ஏழை மக்களின் வாழ்வை மேலும் பாதிக்கின்றன.

இந்தச் சூழலில், நமது திரு அவை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. தமிழ்நாட்டின் திரு அவை கல்வி, மருத்துவம், சமூகநலம் ஆகிய துறைகளில் நூற்றாண்டுகளாக மகத்தான சேவையாற்றியுள்ளது. எண்ணற்ற மறைப்பணியாளர்கள், ஆயர்கள், அருள்தந்தையர், துறவியர், பொதுநிலையினர் தங்கள் வாழ்வையே இந்தப் பணிக்காக அர்ப்பணித்துள்ளனர். அவர்களின் அர்ப்பணிப்பிற்கு நாம் நன்றியுடன் தலைவணங்குகிறோம். ஆனால், இன்று இறைவன் நம்மை இன்னும் ஆழமான மாற்றத்திற்கு அழைக்கிறார்.

ஏழையருக்காகச் சில திட்டங்களைச் செய்வதற்கு மட்டுமல்ல; ஏழையரோடு சேர்ந்து நடப்பதற்கு.

அவர்களைப் பற்றிப் பேசுவதற்கு மட்டுமல்ல; அவர்களின் குரலைக் கேட்பதற்கு.

அவர்களுக்காக முடிவெடுப்பதற்கு மட்டுமல்ல; அவர்களையும் முடிவெடுக்கும் பயணத்தில் பங்காளிகளாக மாற்றுவதற்கு.

இதுவே நமது ஒன்றிணைந்து பயணிக்கும் திரு அவை என்ற கனவின் மையக்கருத்தாகும். எனவே, நமது மறைமாவட்டங்கள், பங்குகள், அன்பியங்கள், கல்வி நிறுவனங்கள், சமூகப்பணிக் கழகங்கள், இயக்கங்கள், பக்த சபைகள் அனைத்தும் ஒரே மனத்துடன் இந்தப் புதுப்பிப்புப் பயணத்தில் இணையவேண்டும்.

முடிவுரை

நமது சிந்தனையை ஒரு முக்கியமான உண்மை யோடு நிறைவு செய்ய விரும்புகிறேன். ஏழையரை முன்னிறுத்தும் தேர்வு என்பது, இறுதியில் கிறிஸ்து வையே முன்னிறுத்தும் தேர்வாகும். புனித பவுல் கூறுகிறார்: “நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளை நீங்கள் அறிவீர்கள். அவர் செல்வராக இருந்தும், உங்களுக்காக ஏழையானார்; அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வந்தராவதற்காக (2கொரி 8:9).

நாம் ஏழையரின் கண்ணீரைத் துடைக்கும் ஒவ்வொரு முறையும், கிறிஸ்துவின் முகத்தைத் தொடுகிறோம். ஒடுக்கப்பட்டோரின் மாண்பை மீட்டெடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும், இறையாட்சியின் மதிப்புகளை உலகிற்கு அறிவிக்கிறோம். நம்பிக்கை இழந்தோருக்கு எதிர்நோக்கை அளிக்கும் ஒவ்வொரு செயலிலும், உயிர்த்தெழுந்த ஆண்டவரின் ஒளியைப் பிரதிபலிக்கிறோம். எனவே, இந்த மேய்ப்புப்பணிப் பேரவை வெறும் கலந்துரையாடலுக்கான அரங்கமாக மட்டும் இருக்கக்கூடாது. இது நமது திரு அவையின் மனமாற்றத்திற்கான ஒரு திருப்புமுனையாக அமையவேண்டும் என்று கூறி எனது உரையை நிறைவு செய்கின்றேன்.

news
ஆன்மிகம்
வெற்றிக்காக அல்ல; வளர்ச்சிக்காக! இறை வளர்ப்பின் பாதையில் ஒரு சிறு பயணம்

வெற்றிஎன்ற ஒரு வார்த்தையைக் கேட்டாலே போதும்; நம் கண்முன் பளிங்கு தட்டுகளும், கைத்தட்டல்களும், முதலிடப் பட்டியல்களும் வந்து நிற்கின்றன. பள்ளியில் முதல் மதிப்பெண், அலுவலகத்தில் பதவி உயர்வு, வீட்டில்எல்லாம் சரியாக நடந்ததுஎன்ற திருப்தி... இவை எல்லாமே நம் வாழ்வின் இலக்காகிவிட்டன. ஆனால், ஒரு மென்மையான கேள்வி நம் இதயத்தின் கதவைத் தட்டுகிறது. இறைவன் நம்மிடம் கேட்பது: ‘நீ வென்றாயா?’ அல்லதுநீ வளர்ந்தாயா?’

திருவிவிலியம் முழுவதும் ஓர் உண்மை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி நிற்கிறது. கடவுள் முடிவை அல்ல; பயணத்தைக் கொண்டாடுகிறார். அவர் கிரீடத்தைத் தேடுவதில்லை, வேரைத் தேடுகிறார்.

திருத்தூதர் பவுல் கொரிந்து சபையாருக்கு எழுதிய கடிதத்தில் ஓர் எளிய, ஆனால் ஆழமான ஒப்புமையைப் பயன்படுத்துகிறார்: “நான் நட்டேன்; அப்பொல்லோ நீர் பாய்ச்சினார்; கடவுளே விளையச் செய்தார். நடுகிறவருக்கும் பெருமை இல்லை; நீர் பாய்ச்சுபவருக்கும் பெருமை இல்லை; விளையச் செய்யும் கடவுளுக்கே பெருமை (1கொரி 3:6-7).

இதைவிட நம் தலைப்பிற்குப் பொருத்தமான திருவிவிலிய வரி வேறு ஏதேனும் இருக்குமா? வெற்றியை அளவிடுவது நாம் அல்ல; விதையை நாம் இடலாம், நீரை நாம் ஊற்றலாம்... ஆனால், வளர்ச்சி கடவுளின் கையில்தான் இருக்கிறது.

உங்களுள் நற்செயலைத் தொடங்கியவர், இயேசு கிறிஸ்துவின் நாள்வரை அதை நிறைவுறச் செய்வார் (பிலி 1:6).

கவனியுங்கள்... ‘தொடங்கினவர்... முடிக்க வைப்பார்என்கிறது; ‘வென்றார்என்று சொல்லவில்லை. வளர்ச்சி என்பது ஒரு நிகழ்வு அல்ல; அது ஒரு தொடர்ச்சியான செயல்முறை.

மூங்கிலின் பாடம்

சீனாவில் ஒரு வகை மூங்கில் உண்டு. அதை நட்ட பின்பு நான்கு ஆண்டுகளாக மேலே எதுவும் தெரியாது. வெறும் மண் மேடு மட்டுமே. ஆனால், அந்த நான்கு வருடங்களில் அதன் வேர்கள் தரைக்கடியில் பல மீட்டர்கள் தூரம் பரவிக் கொண்டிருக்கும். ஐந்தாம் ஆண்டில் அந்த மூங்கில் ஆறே வாரங்களில் இருபது அடி உயரம் வளர்ந்து விடுகிறது. அது அதிசயமல்ல; அது தயார்நிலையின் வெளிப்பாடு.

இயேசுவும் இதையே கூறினார். கடுகு விதை ஓர் இரவில் மரமாவதில்லை. அது வளர்கிறது. மெதுவாகக் கண்ணுக்குப் புலப்படாமல்! ஆனால், உறுதியாக நீங்கள்இன்று ஒன்றும் நடக்கவில்லைஎன்று நினைக்கும் காலகட்டத்தில் இருக்கலாம். வேலை தேடிக் கிடைக்காமல், திருமணம் தாமதமாகி, கனவுகள் தொலைதூரத்தில் தெரிய, உங்களைச் சுற்றியுள்ளோர் முன்னேறிக் கொண்டிருக்க நீங்கள் நிற்காமல், அமைதியாக ஓடிக் கொண்டிருக்கலாம். கண்ணுக்குத் தெரியாத வளர்ச்சியும் வளர்ச்சியே.

யாக்கோபு தனது கடிதத்தில் ஆச்சரியமான ஓர் அறிவுரையைத் தருகிறார்: “பல்வேறு சோதனைகளில் விழும்போது, அதை மிகுந்த மகிழ்ச்சியாக எண்ணுங்கள்; ஏனெனில் சோதனை பொறுமையை உருவாக்குகிறது, பொறுமை முதிர்ச்சியை உருவாக்குகிறது (யாக் 1:2-4).

தோல்வியைக் கொண்டாடச் சொல்கிறாரா இவர்? இல்லை. தோல்வி வீணாகாது என்று கூறுகிறார். ஒவ்வொரு விழுதலும் ஒரு வாய்ப்பு; மீண்டும் எழ, இன்னும் ஆழமாக வேர் விட.

மின்விளக்கைக் கண்டுபிடிக்கும் முன் ஆயிரக்கணக்கான முறை தோற்ற தாமஸ் ஆல்வா எடிசன் ஒருமுறை கூறினார்: “நான் தோல்வியடையவில்லை; வேலை செய்யாத பத்தாயிரம் வழிகளைக் கண்டுபிடித்தேன்.” அவருக்கு வெற்றி என்பது இறுதி விளக்கு மட்டுமல்ல; ஒவ்வொரு முயற்சியும் ஒரு படிக்கல்.

ஒரு விவசாயியைப் பாருங்கள். வயலில் விதை தூவும்போது அன்றே அறுவடையை எதிர்பார்ப்பதில்லை. மண்ணை ஆழமாகக் கொத்தி, உரம் இட்டு, மழைக்காகக் காத்திருந்து, பல மாதங்கள் கடந்த பின்னரே கதிர்களைக் கொண்டாடுகிறார். அவர் வேகத்தைக் குறித்துப் புகார் செய்வதில்லை; பருவத்தை மதிக்கிறார்.

ஒரு தாயைப் பாருங்கள். தன் குழந்தை நடக்கக் கற்கும்போது எத்தனை முறை விழுகிறது? ஒவ்வொரு விழுதலையும் அவள் தோல்வியாகப் பார்ப்பதில்லை; வளர்ச்சியின் அடையாளமாகவே பார்க்கிறாள். குழந்தை விழுந்ததைப் பார்த்து அல்ல; மீண்டும் எழுந்து நடப்பதைப் பார்த்தே அவள் கைத்தட்டுகிறாள்.

ஒரு மாணவனைப் பாருங்கள். தேர்வில் தோற்றுவிட்டான். உலகம் அவனைதோல்வியாளன்என்று முத்திரை குத்தலாம். ஆனால், அந்தத் தோல்வி அவனுக்குக் கற்றுத் தந்த பொறுமையும் கடின உழைப்பும் தாழ்மையும் அவன் வாழ்நாள் முழுவதும் சுமக்கும் மறையாத செல்வங்கள். அடுத்தத் தேர்வில் வென்றாலும் தோற்றாலும், அவன் ஒரு பக்குவமான மனிதனாக ஏற்கெனவே வளர்ந்திருப்பான்.

அன்னை தெரேசா அடிக்கடி நினைவுபடுத்துவார்: “கடவுள் நம்மை வென்றவர்களாக இருக்கச் சொல்லவில்லை; உண்மையானவர்களாக, உண்மையான நம்பிக்கையுடன் இருக்கச் சொன்னார். வெற்றியைக் கடவுள் கணக்கிடுவதில்லை; நம்பிக்கையையே அவர் கணக்கிடுகிறார்.”

இடுக்கண் வருங்கால் நகுக அதனை

அடுத்தூர்வது அஃதொப்பது இல் (குறள் 621).

துன்பம் வரும்போது சிரியுங்கள். உங்கள் இதயத்திற்குள் உண்மையான துன்பம் இல்லை என்று அதற்குச் சொல்லுங்கள் என்பது இதன் பொருள். இது வெறும் சமாதான வார்த்தைகள் அல்ல; இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு தமிழ் ஞானி கண்டடைந்த ஆழ்ந்த உண்மை.

திருத்தூதர்  பவுல் தன் வாழ்நாளின் முதிர்ச்சியில் எழுதுகிறார்: “கடந்ததை மறந்துவிட்டு, முன்னிருப்பதைக் கண்முன் கொண்டு, பரிசுபெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன் (பிலி 3:13-14).

கவனியுங்கள்... அவர்வென்றேன்என்று சொல்லவில்லை; ‘ஓடுகிறேன்என்கிறார். அவருக்குக் கிறித்தவ வாழ்க்கை ஓர் ஓட்டப் பந்தயம்; அதுவும் முடிவை அடைவதற்காக மட்டுமல்ல, உண்மையாக ஓடுவதற்காகவே.

இன்று உங்கள் வாழ்வைத் திரும்பிப் பாருங்கள். கடந்த ஆண்டில் நீங்கள்வென்றதுஎத்தனை? ‘வளர்ந்ததுஎத்தனை? இரண்டும் ஒன்றல்ல என்பதை இன்று உணருங்கள்.

ஒரு தேர்வில் தோற்றதையோ, ஒரு வேலையில் தவறியதையோ, ஒரு திட்டம் முடியாமல் போனதையோ எண்ணி இனி வேதனைப்படாதீர்கள். அதற்குப் பதிலாக இந்தக் கேள்வியைக் கேளுங்கள்: ‘இதன் மூலம் நான் என்ன கற்றுக்கொண்டேன்? நான் எவ்வாறு வளர்ந்தேன்?’

news
ஆன்மிகம்
மகத்தான மானுடம்: நற்செய்திக்கு நம்பிக்கைக்குரிய வகையில் இயங்கும் ஓர் அணுகுமுறை

அத்தியாயம் - 1

இந்த அத்தியாயத்தில் திரு அவையின் ஆசிரியம் எப்படி மாறிவரும் காலத்திற்கு ஏற்ப சமுதாயப் படிப்பினையைக் கொடுத்து வந்திருக்கிறது என்று திருத்தந்தை லியோ சுருக்கமாக எடுத்துரைக்கிறார்.

மானிட வரலாற்றினூடே பயணிக்கும் திரு அவை

திரு அவை உலகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட அமைப்பு அல்ல; மாறாக, இது மானிடரின் வாழ்வுப் பிரச்சினைகள், சவால்களோடு இணைந்து பயணித்துக் கொண்டிருக்கிறது. காலத்தின் அறிகுறிகளை விளக்கி உரைப்பதில் தத்துவம், மானிட மற்றும் சமூக அறிவியல் போன்றவைகளின் பங்களிப்பையும், சமூகப் படிப்பினையையும் திறந்த மனத்தோடு பெற்றுக்கொள்கிறது. திரு அவையின் சமுதாயப் படிப்பினை என்பது ஒரு கூட்டுத்துவத் தெளிந்து தேர்தல் ஆகும்.

திருத்தந்தை 6-ஆம் பவுல், வேறுபட்ட வரலாற்றுச் சூழல்களில், எல்லாருக்கும் பொதுவான சமுதாயப் படிப்பினையைக் கொடுக்க இயலாது. எனவே, ஒவ்வொரு கிறித்தவச் சமூகமும் தங்களது நாட்டின் சூழலுக்கு ஏற்ப பொறுப்போடு எதார்த்தங்களை விளக்கிச் சொல்ல அழைக்கிறார்.

திருத்தந்தை 13-ஆம் லியோ காலத்திலிருந்து இன்றுவரை திரு அவைப் படிப்பினையின் வளர்ச்சி

மனித வரலாற்றில் இறைவன் செயல்படுவதை உணர்ந்து, மாறிவரும் புதிய சூழல்களுக்கு ஏற்றவாறு நற்செய்தியின் ஒளியில் திருத்தந்தை 13-ஆம் லியோ தொடங்கி இன்றுவரை திரு அவையின் ஆசிரியம் சமுதாயப் படிப்பினைகளைத் தந்து கொண்டிருக்கிறது. இன்று இது செயற்கை நுண்ணறிவு குறித்துப் புதிய போதனையைத் தருகிறது.

ஒவ்வொரு காலகட்டத்திலும் வெளியிடப்பட்ட திரு அவையின் சமுதாயப் படிப்பினை குறித்து திருத்தந்தை லியோ முக்கியக் கருத்துகளைச் சுருக்கமாக முன்வைக்கிறார்:

திருத்தந்தை 13-ஆம் லியோ - Rerum Novarum, 1891 - தொழிலாளர்கள் நிலைமை

19-வது நூற்றாண்டின் தொழில்புரட்சி பின்புலத்தில் ஆலைத் தொழிலாளர்களின் உரிமைகள், உழைப்பின் மேன்மை மற்றும் முதன்மை, நியாயமான குடும்ப ஊதியம் இவற்றைப் பற்றிப் பேசுகிறது இம்மடல். மூலதனம், இலாபம் இவற்றைக் காட்டிலும், தொழிலாளர்கள் முதன்மையானவர்கள், தனிச் சொத்துக்குச் சமூகக் கடமை உண்டு என்கிறார் 13-ஆம் லியோ.

திருத்தந்தை 11-ஆம் பயஸ் - Quadragesimo Anno, 1931 - சமுதாய ஒழுங்கமைப்பு

அன்றைய பொருளாதார நெருக்கடியின் பின்புலத்தில், ஒருசிலர் கையில் பொருளாதாரம் குவிக்கப்பட்டிருப்பதைச் சாடுகிறார் 11-ஆம் பயஸ். சங்கம் அமைக்க தொழிலாளர்களுக்கு உரிமை உண்டு. கீழ்மட்டத்திலுள்ள குழுக்கள் தாமாகவே செய்யக் கூடுமானவற்றில் மேல்மட்டக் குழுக்கள் தலையிடாதிருத்தல்வேண்டும் (Principle of Subsidiarity). இந்தத் துணைநிலைக் கொள்கை, பின்வரும் சமுதாயப் படிப்பினைகளுக்கு மூலைக்கல் போல் அமைகிறது.

திருத்தந்தை 12-ஆம் பயஸ் - 1942 - வானொலிச் செய்தி

இரண்டாம் உலகப் போரும், போரின் அழிவுகளை நாடுகள் சரிசெய்யும் வரலாற்றுப் பின்புலத்தில் உலகளாவிய ஒழுங்கமைப்பு நீதி, அமைதி, மனித மாண்பை அடிப்படையாகக் கொண்டதாக அமையவேண்டும். மேலும், மானிடருக்கு அடிப்படையான, மீறத்தகாத உரிமைகள் உள்ளன என்று வானொலிச் செய்தி மூலம் அறிவுறுத்துகிறார் 12-ஆம் பயஸ்.

திருத்தந்தை 23- ஆம் யோவான் - Mater et Magistra, 1961 - அன்னையும் ஆசிரியையும்

உலகளாவிய சமூகப் பிரச்சினைகளில் குறிப்பாக, பொருளாதாரத் துறையில் தனியாருடைய முன்னெடுப்புகளும், அரசு அதிகாரிகளுடைய ஒத்துழைப்பும் தேவை. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அங்குள்ள எல்லாக் குடிமக்களின் வளர்ச்சிக்கும் பயன்பட வேண்டுமென்பது சமூக நீதியின் பாற்பட்ட கோரிக்கையாகும் என்கிறார் 23-ஆம் யோவான்.

Pacem in Terris – 1968 - அவனியில் அமைதி

இது முதன்முதலாகநல்லுள்ளம் படைத்த எல்லா மனிதருக்கும்என்று எழுதப்பட்ட சுற்றுமடல் ஆகும். இம்மடல் மனித மாண்பையும், அடிப்படை மானிட உரிமைகளையும் கடமைகளையும் இணைக்கிறது. உலகளாவிய ஒழுங்கமைப்பு என்பது உண்மை, நீதி, அன்பு, சுதந்திரம் - இவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்படவேண்டும் என்கிறார் 23-ஆம் யோவான்.

2-ஆம் வத்திக்கான் சங்கம் - 1962 - 65

இன்றைய உலகில் திரு அவைஎன்ற ஏடு திரு அவையானது உலகோடு ஈடுபட்டு, வரலாற்றுச் சூழல் எதார்த்தங்களை விளக்கி உரைக்கிறது. பொருளாதார மற்றும் நிறுவன அமைப்புகள் மனிதரின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காகவும், அவருடைய பொறுப்புள்ள பங்கேற்பையும் முன்னெடுக்கும்போதுதான் நீதியானதாக அமையும். உலகை இறையாட்சியாக உருமாற்றும் பணியானது கிறித்தவ நம்பிக்கையிலிருந்து பிறக்கும் ஒரு கடமை என்கிறது.

திருத்தந்தை 6 -ஆம் பவுல் - Populorum Progressio, 1967 - மக்களின் முன்னேற்றம்

முன்னேற்றம் என்பது குறையுடைய மனிதத்திலிருந்து, நிறையுடைய மனித நிலைக்குக் கடந்து செல்வதாகும். ஒருங்கிணைந்த முன்னேற்றம் பொருளாதாரத்தையும் கடந்து மனித மாண்புக்கு உகந்த சூழல்களை உருவாக்கவேண்டும் என்கிறார் 6-ஆம் பவுல்.

Octogesima Adveniens  - 1971 -  அரசியல் அதிகாரம், கருத்தமைவு, சமூக ஈடுபாடு

இது தொழில்புரட்சிக்குப் பிந்தைய ஏழ்மையின் புதிய வடிவங்கள், மிக வேகமாக மாறிவரும் பண்பாட்டு மாற்றங்கள், தனிமனிதரையும் குழுமங்களையும் எப்படிப் பாதிக்கின்றன என்று பேசுகிறது. நாம் வாழும் சூழலிலிருந்து வேறுபட்ட சூழலில் நற்செய்தி எழுதப்பட்டு அறிவிக்கப்பட்டாலும், இன்றும் அது மனித ஆளுமை, உறவுகள், அதிகாரம், பொதுநன்மை, பொருளாதார - அரசியல் - பண்பாடு பற்றி ஒரு புதிய பார்வையைத் தருகிறது. திரு அவையின் அரசியல் செயல்பாடு இந்த மடலின் மையக் கருத்து எனலாம்.

திருத்தந்தை 2-ஆம் யோவான் பவுல் - Laborem Exercens, 1981 - மானிட உழைப்பு

பொருளாதார உலகமயமாதல் பின்புலத்தில் உழைப்பாளி மனிதராக நடத்தப்படுகிறாரா அல்லது உற்பத்தி இயந்திரத்தின் ஒரு பகுதியாக உபயோகப்படுத்தப்படுகிறாரா? சமுதாயப் பிரச்சினையின் மையமே பொருளாதாரச் செயல்பாடுதான். உழைப்பு, முதலீட்டைவிட முதன்மை வாய்ந்தது என்கிறார் 2-ஆம் யோவான் பவுல்.

Sollicitudo Rei Socialis, 1987 - திரு அவையின் சமூக ஈடுபாடு

ஏழை மக்களுக்கான பொருளாதார முன்னேற்றச் செயல்பாடுகள் ஏற்கெனவே இருக்கின்ற உலகின் வடக்கு-தெற்கு என்ற இடைவெளியைப் பெரிதாக்கி உள்ளதேயொழிய குறைக்கவில்லை. நலமான முன்னேற்றம் மனிதக் கூட்டொருமையில்தான் அடங்கும் என்கிறது. மேலும், இது பாவ அமைப்புகள் பற்றியும் பேசுகிறது.

Centesimus Annus, 1991 - சோசலிசமும் முதலாளித்துவமும்

சோசலிசத்தின் வீழ்ச்சி, முதலாளித்துவத்தின் தீமைகள், சந்தைப்பொருளாதாரம், குடிமக்களின் பங்கேற்பு, சனநாயகத்தின் எழுச்சி, மானிடக் கூட்டுத் தோழமை, சனநாயகம் - சந்தைப் பொருளாதாரம் பற்றிய விமர்சனம், அரசியல் பிரதிநிதித்துவத்திலிருந்து பலரை ஒதுக்கி வைத்தல், சுரண்டலின் புதிய வடிவங்கள் பற்றிப் பேசுகிறது.

திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட் - Caritas in Veritate, 2009 - உண்மையில் அன்பு

திரு அவையின் சமுதாயப் படிப்பினையில் உண்மையோடு கூடிய அன்பு மையம் பெறுகிறது. மனித முன்னேற்றம், பொருளாதாரம், சமூகநீதி, உலகமயமாக்கல், சுற்றுச்சூழல், தொழில்நுட்பம் ஆகியவை உண்மையில் அன்பையும், பொது நன்மை நோக்கையும் உறுதிப்படுத்தவேண்டும். இன்றைய தேவை புதியதொரு முழுமையான மனிதநலக் கொள்கையாகும் என்கிறார் 16-ஆம் பெனடிக்ட்.

திருத்தந்தை பிரான்சிஸ் - Laudato Si, 2015 - இறைவா! உமக்குப் புகழ்!

மகிழ்வின் நற்செய்திஎன்ற மறைத்தூது அறிவுரையில், நற்செய்தி அறிவிப்பின் ஓர் இன்றியமையாத கூறு அதன் சமூகப் பார்வை ஆகும் என்கிறது. இதை அடியொற்றிஇறைவா! உமக்குப் புகழ்!’ என்ற சுற்றுமடலில், பூமியாகிய நம் பொது இல்லத்தைப் பொறுப்போடு பேணிக்காக்க வேண்டும்; இப்பூமியின் அபயக் குரலுக்கும், ஏழையரின் கூக்குரலுக்கும் செவிமடுத்து, சுற்றுச்சூழல் நலம் பேணும் மனமாற்றம் பெற்றிடவேண்டும் என்கிறதுஇத்தோடு, படைப்பு அனைத்தும் எல்லாருக்கும் பொதுவானது என்பதையும் நம் உலகில் ஒரு பண்பாட்டுப் புரட்சி நிகழவேண்டும் என்பதையும் மனத்தில்கொள்ளவேண்டும் என்கிறார் பிரான்சிஸ்.

Fratelli Tutti, 2020 - அனைவரும் உடன் பிறந்தோர்

சமூக அமைப்பின் சீரழிவு, போர் மேகச்சூழல், ‘கோவிட் 19’ பின்புலத்தில்அனைவரும் உடன் பிறந்தோரேஎன்ற சுற்றுமடல், மனிதகுலம் முழுவதும் ஒரே குடும்பம் என்கிறது. இனம், மொழி, நாடு, பொருளாதார வேறுபாடுகளைத் தாண்டி, உலகளாவிய சகோதரத்துவமும், சமூக நட்பும் உருவாகவேண்டும் என்கிறார் பிரான்சிஸ். இதை எடுத்துக்காட்ட நல்ல சமாரியரின் உவமையை விரித்துரைக்கிறார். ஒவ்வொரு மனிதரின் மாண்பும் மதிக்கப்படவேண்டும். அன்பு என்பது தனிமனித உறவுகளைத் தாண்டி, சமூக - அரசியல் - பொருளாதார தளங்களில் வெளிப்படவேண்டும், சந்திப்பு பண்பாடு வளர்த்தெடுக்கப்படவேண்டும் என்கிறார் பிரான்சிஸ்.

Dilexit Nos, 2024 - அவர் நம்மை அன்பு கூர்ந்தார்

இயேசுவின் திரு இதயம் மனிதகுலத்தின்மீது கடவுள் கொண்டுள்ள எல்லையற்ற அன்பின் அடையாளம். இந்த அன்பை அனுபவிப்பது மனமாற்றத்திற்கும், பிறரை அன்போடு அணுகுவதற்கும் வழிவகுக்கிறது. பிறரை, குறிப்பாக, காயமடைந்த உலகிலுள்ள ஏழையர், புறக்கணிக்கப்பட்டோர், துன்புறுவோரை அன்போடு அணுகவும் அழைக்கிறார் பிரான்சிஸ்.

இவ்வாறு மாறிவரும் வரலாற்று எதார்த்தங்களை நம்பிக்கையின் ஒளியில் ஒவ்வொரு திருத்தந்தையும், திரு அவைப் படிப்பினையும் விளக்கிச் சொல்கின்றனர். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இவை மனித மாண்பு, உழைப்பின் மேன்மை, படைப்பு அனைவருக்கும் பொதுவானது, கூட்டுத் தோழமை, துணைநிலைக் கொள்கை, படைப்பைப் பேணுதல், அமைதி, சகோதரத்துவம் போன்ற விழுமியங்களை வலியுறுத்துகின்றன.

news
ஆன்மிகம்
தோமா கால் பதித்த தேசம் – 03

இந்தியப் பகுதிக்குப் போகலாமா? வேண்டாமா?’ என்ற குழப்பம் தோமாவிடம் பல நாள்கள் நீடித்துக் கொண்டிருந்தது. இப்படிப்பட்ட நிலையில் ஒருநாள் அவரைத் தேடி யாரோ ஓர் அந்நியன் வந்திருப்பதாகச் சொல்ல, அவனைச் சந்தித்தார் தோமா. வந்தவன் தோமாவுக்கு வணக்கம் செலுத்தினான். முன்பின் அறிந்திராத அம்மனிதனைக் கண்ட தோமா, “நீர் யார்? நான் உமக்கு என்ன செய்யவேண்டும்? என்று கேட்டார்.

வந்தவன்என் பெயர் ஹப்பான். நான் ஒரு வணிகன். நான் தச்சர் தோமாவைப் பார்க்கவேண்டும்என்றான். ‘நான் செய்யும் தொழில் இந்த அந்நிய மனிதனுக்கு எப்படித் தெரியும்?’ என்று யோசித்த தோமா, “நான்தான் தோமா. எங்கிருந்து நீர் வருகிறீர்?” என்று வினவினார்.

பார்த்தியா தேசத்திலிருந்து வருகிறேன்என்ற ஹப்பானிடம், “பார்த்தியாவா? அது எங்கிருக்கிறது?” என்று தோமா கேட்க, “இந்தியப் பகுதிக்கு அருகாமையில் இருக்கிறதுஎன்று அவன் பதில் கூறவும், “இந்தியாவா?” என்று வினவிய தோமா, ‘இந்தியப் பகுதிகளே வேண்டாம் என்றிருக்கும் நிலையில் இந்த அழைப்பு பார்த்தியாவுக்கானதா அல்லது இந்தியாவுக்கானதா?’ என்ற குழப்பம் ஏற்பட்டது.

சிலநொடிகள் அமைதிக்குப்பின்அது சரி, என்னை எப்படி அறிவீர்? உம்மை என்னிடம் அனுப்பி வைத்தது யார்?” என்று கேட்க, “உம்மிடம் அனுப்பி வைத்ததுடன், உம்மை என்னிடம் ஒப்படைத்து உறுதிப் பத்திரமும் கொடுத்திருப்பவர் உம் தலைவராக அல்லவா இருக்கவேண்டும்! உம் தலைவரை நீர் அறிந்ததில்லையா?” என்ற ஹப்பானின் கேள்வியால் திகைத்துப் போன தோமாவிடம் ஹப்பான் சொன்னான், “நான் இந்தியாவின் வடமேற்கிலுள்ள பார்த்தியா தேசத்திலிருந்து வரும் வணிகன். எம் மன்னர் கொண்டோபரஸ் தன் நாட்டில் அரண்மனையைக் கட்ட விரும்பி ஒரு சிறந்த தச்சரை அழைத்து வருமாறு என்னை இங்கே அனுப்பியிருக்கிறார். இங்கு வந்ததும் உம்மைப் பற்றிக் கேள்விப்பட்டேன். ஏர்க்கலப்பைகள், துடுப்புகள், படகுகள், கப்பல் பாகங்கள் செய்வதுடன் கல்தூண்கள், கோயில், அரண்மனை போன்றவற்றை நீர் கட்டுவீர் என அறிந்தேன். அதற்காகவே உம்மை நான் நாடி வந்திருக்கிறேன்என்றான்.

என்னைப் பற்றி யார் மூலம் கேள்விப்பட்டீர்?” என்ற தோமாவின் கேள்விக்கு, “உம் நண்பர்கள் வழியாக அறிந்தேன்என்றவன், மேலும்உம் தலைவர் என்னை அங்காடித் தெருவில் சந்தித்தார். அவர்தாம் உம் பெயரைக் குறிப்பிட்டார். அவர் உமக்கு நெருக்கமானவராம். அவருக்கு நீர் கடமைப்பட்டிருக்கிறீராம். அதனால் உம்மை என்னிடம் ஒப்புவிக்கும் பொறுப்பை அவர் ஏற்றுக் கொண்டுவிட்டார். உம்மைக் குறித்து தம் கைப்பட இந்த உறுதிப் பத்திரத்தை எழுதிக் கொடுத்தார்எனக் கூறி ஒரு பத்திரத்தை தோமாவின்முன் நீட்டினான் ஹப்பான். அதைச் சிந்தனையோடு வாங்கிப் படித்தார் தோமா. அதில்தச்சர் யோசேப்பின் மகன் இயேசு கிறிஸ்துவாகிய நான், யூதா தோமாவைப் பார்த்தியா தேசத்து மன்னர் கொண்டோபாஸ் என்பாரின் வணிகரான ஹப்பான் என்பவரிடம் ஒப்படைக்கிறேன்என்று எழுதப்பட்டிருந்ததைக் கண்டு பரவசமடைந்த தோமா மனம் மாறியவராக, “மாபெரும் தச்சராகிய இயேசுவே! உம் சித்தத்தின்படியே ஆகட்டும். நீர் சொல்லுமிடத்திற்கு நானும் செல்கிறேன்என்றார். அடுத்த சில நாள்களில் தோமா பயணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தார்.

இந்தியாவிலிருந்து முத்து, மிளகு, ஏலக்காய், கிராம்பு, பருத்தி, பட்டு, வாசனைப் பொருள்கள் ஆகியன மேலைநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட காலம் அது. குறிப்பாக, உரோமானிய நாட்டுடன் மிகச் சிறப்பான முறையில் வணிகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்தியாவிலிருந்து நேரடியாக மட்டுமின்றி, சீன நாட்டிலிருந்து இந்தியா வழியாகப் பலர் வாணிபம் செய்தனர். வணிகர் பலர் பார்த்தியா (ஆப்கானிஸ்தான்), பெர்சியா (ஈரான்), மெசபடோமியா (ஈராக்) போன்ற நாடுகள் வழியாகப் பயணம் செய்து பல்வேறு பொருள்களின் ஏற்றுமதி, இறக்குமதியில் ஈடுபட்டனர். இவர்கள் தரைவழியாகப் பயணித்து வணிகம் செய்வது பாதுகாப்பற்றும் கடினத்துடனும் இருந்ததோடு, அவர்கள் உட்புகும் நாடுகளின் அரசர்களுக்கு அதிக வரிசெலுத்த வேண்டிய நிலைமையும் இருந்தது. இதனால் வணிகர்கள் சிலர் கடல்வழிப் பயணத்தையே பெரிதும் விரும்பினர். இத்தகைய சூழலில், ஹப்பானும் தோமாவும் கடல்வழியே பார்த்தியாவை அடைய முடிவெடுத்தனர்.

பாலஸ்தீன நாட்டின் பெரும்பாலான வணிகர்  அதன் பழமையான துறைமுகமான யோப்பா அல்லது தீர் துறைமுகத்திலிருந்தே கிழக்கிந்திய நாடுகளுக்குப் புறப்படுவார்கள். அவர்கள் எகிப்திலுள்ள அலெக்சாண்ட்ரியா துறைமுகத்தை அடைகையில், பிற வணிகர் பலரும் அங்கே கூடுவர். அங்கிருந்து அவர்களின் பயணம் எகிப்தில் ஆண்டிரோபோலிஸ் நகரைச் சென்றடையும். அங்கிருந்து நைல்நதிப் பள்ளத்தாக்கிலிருந்து செங்கடல் பகுதியில் அமைந்துள்ள துறைமுகங்களை நோக்கிச் செல்லும் பாலைவன வழியிலுள்ள கோப்டோஸ் என்ற கடற்கரை நகரை அடைவர். அங்கிருந்துதான் வணிகர்கள் தங்கள் பொருள்களை ஒட்டகங்களின் மேல் ஏற்றிச் செங்கடலில் அமைந்துள்ள பெர்னிஸ் என்ற துறைமுகத்திற்குக் கொண்டு செல்வர். இந்தியர்களும் அராபியர்களும் வணிகம் செய்ய முக்கிய இடமாகப் பெர்னிஸ் விளங்கியது.

பெர்னிஸ் துறைமுக நகரில் கடல் பயணம் செய்பவர்கள் ஓய்வெடுக்க வசதிகள் செய்யப்பட்டிருந்தன. மேலும், வணிகர் தாங்கள் கொண்டு வந்திருந்த பொருள்களை விற்கவும், புதிய பொருள்களை வாங்கவும் வசதி இருந்தது. அங்கிருந்து இந்தியாவிற்கு ஆண்டுக்கு ஒருமுறை கப்பல் போக்குவரத்து நடைபெற்றது. அக்கப்பல்கள் மேற்கு ஆசியாவில் அரேபிய தீபகற்பத்தில் ஏமன் நாட்டிலுள்ள சொகோட்டிரா என்ற தீவிலும், ஏடேன் என்ற பகுதியிலும் நின்று உணவு, நீர் ஆகியவற்றைச் சேகரித்துக்கொண்டு இந்தியா சென்றடைந்தன.

தோமா பாலஸ்தீனாவிலிருந்து பார்த்தியா புறப்பட்ட காலம் அநேகமாக கி.பி. 44-ஆம் ஆண்டாக அளவிடப்படுகிறது. ஹப்பான் வணிகனுடன் அவர் புறப்பட்டு அலெக்சாண்ட்ரியாவைக் கடந்து பயணிக்கையில், பயங்கரக் கடல்காற்று வீசிட மிகுந்த சிரமத்துடன் ஆண்டிரோபோலிஸ் நகரை இருவரும் வந்தடைந்தனர். அவர்கள் அங்கு வந்த நேரம் குழலூதும் சத்தமும், இன்னிசை முழக்கமும் தொடர்ந்து கேட்க, ஏதோ ஒரு விழா நடப்பதற்கான ஆரவாரம் தென்பட்டது. இருவரும் அந்நகருக்குள் நுழைந்திட, ஹப்பான் அங்குள்ளவர்களை விசாரித்தான். அரசனின் மகளுக்கு அன்று திருமணம் நடைபெறுவதாகவும், அவ்விழாவில் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம் என்று அரசனால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி கிடைத்தது. காற்று வீசுவதால் காலதாமதம் செய்ய எண்ணிய இருவரும் அவ்விழா நடக்கும் இடம் சென்றபோது, விருந்திற்கு வந்திருந்த மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட வாசனைத் திரவியங்கள், நறுமணப் பொருள்கள், எண்ணெய் ஆகியவற்றை அளவுக்கு அதிகமாகப் பெற்று உடலில் பூசி மகிழ்வதைக் கண்டனர். தூரத்தே குழலூதும் பெண்ணொருத்தி அங்குமிங்குமாக ஓடி நடனம் ஆடிக் கொண்டிருந்தாள்.

பல்வகை உணவும் மதுவும் தாராளமாக வழங்கப்பட்ட சிறப்பான திருமண விருந்து நடந்து கொண்டிருந்தது. தோமா அவற்றில் அதிகம் கவனம் செலுத்தாது, சிலுவை அடையாளம் வரைந்து கொண்டவராய் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தபடி அமர்ந்திருந்தார். குழலோசை இப்போது அருகே கேட்கவே, தலை நிமிர்ந்துப் பார்க்க, அவர் அருகே ஆடிக் கொண்டிருந்தவள் தன் இனம் சார்ந்த எபிரேயப் பெண் என்பதைக் கண்டு கொண்டார். அப்பெண்ணும் தோமாவை ஓர் எபிரேயர் என்பதை இனம் கண்டுகொண்டதால் ஆனந்த மிகுதியால் அவர் முன்னே குழலூதியபடி வெகுநேரம் ஆடலானாள்.

அவள் பார்வை தோமாவின் மீதே பதிந்திருந்தது. ஆனால், தோமா அப்பெண்ணின் நடனத்தை இரசிக்காமல், அவளை ஏறெடுத்தும் பார்க்காமல் வானத்தையே உற்றுநோக்கிக் கொண்டிருந்தார். தன்னைச் சுற்றி நிகழ்ந்து கொண்டிருந்த இன்ப நாட்டங்களில் அவர் மனம் இலயிக்கவில்லை. இதைக் கவனித்துவிட்டான் விருந்தில் மது பரிமாறுபவன். நீண்ட நேரம் ஒரு பெண் அருகே நடனம் ஆடியும், அதனை இரசிக்காமல் வானத்தையே உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் தோமாவின் செயலைக் கண்டு, அப்பெண்ணை அவமரியாதை செய்வதாக எண்ணிக் கொண்டான். ஆத்திரம் பொங்க தோமாவின் அருகே சென்றவன் அவர் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.

தோமா அவனை உற்றுநோக்கியபடி அமைதியான குரலில், “மறுவுலக வாழ்வின் பொருட்டு இறைவன் உன்னை மன்னிக்கக்கூடும்; ஆனால், இவ்வுலகில் அவர் உன்னை மன்னிப்பாரா என்பது இன்னும் சிறிது நேரத்தில் உனக்குப் புரிந்துவிடும். எந்தக் கையால் அறைந்தாயோ, அந்தக் கையை நாய் இழுத்துச் செல்லும்என்று கூற, அவர் மொழி புரியாத மதுபானக்காரன் அவரைக் கண்டு ஏளனமாகச் சிரித்தான். ஆனால், அருகிலிருந்த எபிரேயப் பெண், தோமாவின் எபிரேய மொழியை அறிந்தவளாதலால் அச்சத்திற்குள்ளானாள். எனினும், அவர் தன் நாட்டவர் என்பதாலும், ஆளுமைத் தன்மை மிக்கவராகவும் தெரிந்ததால் தோமாவின் மேல் அவளுக்கு மதிப்பும் ஈடுபாடும் அதிகமாயிற்று. அவரிடம் எபிரேய மொழியில் உரையாட முயன்றாள். தோமாவோ எபிரேய மொழியில் இறைப்பாடல் ஒன்றைப் பாட, பொருள் புரிந்த அப்பெண் அவருக்கு முன்பாகச் சென்று அமர்ந்தாள். ஆனாலும், தோமா தன் பார்வையை எங்கும் செலுத்தவில்லை.

திடீரென்று அந்த விழாவில் கூச்சல் ஏற்பட்டது. தன் வாயில் ஒரு மனிதக் கையைக் கவ்விக்கொண்டு ஓடிய ஒரு நாயைத் துரத்திக்கொண்டு சிலர் ஓடி வந்தனர். அந்த நாயோ விருந்து நடக்கும் இடத்தை நோக்கி ஓடியது. சற்று நேரத்திற்குமுன் தன் நாட்டு மனிதர் கூறிய வார்த்தைகளை எண்ணிப் பார்த்த எபிரேயப் பெண், “இந்த மனிதர் உண்மையில் கடவுளின் தூதராகத்தான் இருக்கவேண்டும்; இவர் சொன்னபடியே இவரை அறைந்தவனின் வலது கையை நாய் கவ்விக்கொண்டு ஓடுகிறதுஎன்று கூச்சலிட்டாள். அவள் பேச்சை நம்பியும் நம்பாமலும் அங்கே கூடியிருந்த மக்கள் குழம்பியிருக்கையில் அங்கு வந்த ஒருவன், “நான்தான் பார்த்தேன். கிணற்றில் நீர் எடுக்க வந்த மதுபானக்காரன்மேல் எங்கிருந்தோ வந்த சிங்கம் ஒன்று பாய்ந்து அவன் உடலைக் கிழித்துப் போட்டுவிட்டது. அவன் உடலில் இருந்த கையைத்தான் நாய் கவ்விக்கொண்டு ஓடுகிறதுஎன்றான்.

தோமாவைக் கண்ட மக்கள் அவரை அச்சத்தோடு பார்த்தனர். அங்கே தோமா இயேசு பற்றி அவர்களுக்குப் போதிக்கலானார். அவரின் போதனையை அம்மக்கள் ஆர்வத்தோடு கேட்டனர். தோமாவின் கடவுள்மீது அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படலாயிற்று. தோமாவின் வார்த்தைகளினால் மதுபானக்காரனுக்கு ஏற்பட்ட நிலையைக் கேள்விப்பட்ட அரசன், ஓர் ஆளை அனுப்பி திருமணமாகப் போகும் தன் மகளுக்காகச் செபிக்குமாறு வேண்டி தோமாவுக்கு அழைப்புவிடுத்தான். ஆனால், தோமா செல்லவில்லை. எனினும், அவர் வற்புறுத்தப்பட்டு மணமகனும் மணமகளும் இருந்த அறைக்கு அழைத்துவரப்பட்டார்.

இருவரையும் தனிமையில் கண்ட தோமா அவ்விருவருக்கும் இயேசு பற்றி விளக்கமாக எடுத்துக் கூறினார். “இல்லற வாழ்வைக் காட்டிலும் மணத்துறவு வாழ்வு மேலானது. மணத்துறவு வாழ்வையே கடவுள் விரும்புகிறார். கடவுளுக்கான அர்ப்பணிப்பு வாழ்வில் கிட்டும் மகிழ்ச்சியைப் போல் சிறந்தது உலகில் வேறேதுமில்லைஎன்று அவர்களுக்கு அறிவுறுத்தியபோது, இயேசுவே தோமாவின் வழியாய் தங்களிடம் பேசுவதுபோல் மணமக்கள் உணர்ந்தனர். இருவர்மீதும் தன் கரங்களை வைத்துச் செபித்து, “கடவுள் உங்களோடு இருப்பார்என்று கூறி அவர்களை ஆசிர்வதித்தார்.

தோமா  மணமக்களை ஆசிர்வதித்தது குறித்து மனமகிழ்வு கொண்ட அரசன் அவருக்குப் பரிசுகள் கொடுக்க முனைந்தபோது, தோமா அவற்றை மறுத்துவிட்டுப் புறப்பட்டார். உடன் வந்த ஹப்பான் தோமாவின் செயல்களைக் கண்டு வியப்பில் ஆழ்ந்திருந்தான்.

(தொடரும்)