news
ஆன்மிகம்
இறைவாக்கினரின் அரசியல் ஈடுபாட்டு வழியில் கிறித்தவர்கள் (கிறித்தவரின் அரசியல் ஈடுபாடு - 3)

அநியாயத்தையும் அதர்மத்தையும் பிடுங்கி எறியவும் தகர்க்கவும், சுரண்டலையும் மனிதத்தைக் கேவலப்படுத்தும் அனைத்தையும் அழிக்கவும் தகர்க்கவும், மறுபடியும் கடவுளின் உடன்படிக்கைச் சமுதாயத்தைக் கட்டவும் நடவும் இஸ்ரயேல் இறைவாக்கினர்கள் கடவுளின் குரலாக, தூதர்களாகத் தீவிரமாகச் செயல்பட்டார்கள். யாவே இறைவனின் அரசியல் ஆக்கப்பணியைப்போல, இறைவாக்கினரும் மக்களை உடன்படிக்கைச் சமுதாயத்தில் ஆற்றல் படைத்தவர்களாக மாற்றிட, அரசியல் ஆக்கப்பணியில் ஈடுபட்டார்கள். இறைவாக்கினருடைய நிலைப்பாடும், கடவுளுடைய திருவுளத்தின் அறிவிப்பும் அரசியலாக்கத்தின் வெளிப்பாடுகளாக இருப்பதை இறைவாக்கினர்களில் காண்கிறோம்.

அரசர்களைத் தேர்ந்தெடுத்து திருப்பொழிவு செய்த இறைவாக்கினர்கள்

கடவுளின் கட்டளைக்கு ஏற்ப இறைவாக்கினர்கள் அரசர்களைத் தேர்ந்தெடுத்துத் திருப்பொழிவு செய்தார்கள். சாமுவேல் இறைவாக்கினர் சவுல் என்பவரை இஸ்ரயேலின் முதல் அரசராக ஏற்படுத்தியபோது அவர் கூறியது: “ஆண்டவர் உன்னை மக்களின் அரசராகத் திருப்பொழிவு செய்து இருக்கிறார் (1சாமு 10:1). எல்லாருக்கும் அரசராக இருக்கின்ற கடவுள் இந்தப் பெரிய பொறுப்பை மனிதருக்கும் கொடுத்து தமது சார்பாக ஆட்சி நடத்த அழைப்பு விடுக்கிறார்.

சவுல் அரசன் கடவுளுடைய வழிகளைப் பின்பற்றாமல் சென்றபோது, அவனை ஆண்டவர் ஒதுக்கி விடுகிறார். எபிரோன் மக்களால் தாவீது கடவுளின் அரசராகத் திருப்பொழிவு செய்யப்படுகிறார் (2சாமு 2:4). அரசரைத் திருப்பொழிவு செய்யும் அரசியல் அதிகாரத்தைக் கடவுள் மக்களுக்கும் கொடுக்கிறார். அரசரைத் தேர்ந்து கொள்கின்ற உரிமையைக் கடவுள் சனநாயகப்படுத்திடும் அரசியலாக்கப் பணியில் ஈடுபடுகிறார். எனவே, அரசரை நியமிக்கும் பணியை இறைவாக்கினர்களுக்கும் மக்களுக்கும் கொடுப்பதன் வழியாக, மக்களுக்கும் இறைவாக்கினர்களுக்கும் அரசரைத் தேர்ந்து கொள்ளும் அரசியலாக்க அதிகாரத்தைத் தருகின்றார். அரசரைத் திருப்பொழிவு செய்யும் பழக்கம் சாலமோன் இறந்த பிறகும் தொடர்ந்தது (1சாமு 11:29-32).

அரசியல் ஆட்சியாளர்களை வழிநடத்தும் இறைவாக்கினர்கள்

யாவே இறைவனின் அறிவுரையால் இறைவாக்கினர்கள் அரசர்களை வழிநடத்தினார்கள். சிரியா நாட்டு அரசன் இஸ்ரயேலைத் தாக்க முயற்சித்தபோது, பெயர் இல்லாத ஓர் இறைவாக்கினர் ஆகாபுக்கு அறிவுரை கூறி, இஸ்ரயேலைக் காப்பாற்றும் வழியைக் காண்பித்தார் (1அர 20:1-22). ஆகாப் கடவுளுடைய அறிவுரையை மீறினான் என்றால், அவன் அழிக்கப்படுவான் என்று இறைவாக்கினர் மீக்கா அறிவித்தார் (1அர 22:1-40).

இறைவாக்கினர் எலிசா அரசியல் இராணுவக் காரியங்களில் நேரடியாக ஈடுபட்டார் (2அர 3:4-27). இஸ்ரயேல் உடன்படிக்கையை மறுபடியும் புதுப்பிப்பதற்கு யோசியா, குல்தா என்ற இறைவாக்கினரைக் கலந்து ஆலோசித்தார் (2அர 22:8-20). இறைவாக்கினர்கள் அரசு அதிகாரத்திலே நேரடியாகப் பங்கு பெற்று, அரசர்களையும் ஆட்சியாளர்களையும் கடவுளுடைய ஒளியில் வழிநடத்தினர்நீதியுள்ள அரசை உருவாக்கவேண்டும் என இறைவாக்கு உரைத்தனர். எனவே, அவர்களுடைய இறைவாக்குப் பணி அரசியலாக்க ஈடுபாடு நிறைந்ததாக இருந்தது.

ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் எச்சரிக்கை மணியடித்த இறைவாக்கினர்கள்

காலப்போக்கில் இஸ்ரயேல் வரலாற்றில் முடியாட்சி என்பது அநியாய அராஜகச் சுரண்டல் ஆட்சியாக மாறியது. எனவே, இறைவாக்கினர்கள் அரசர்களும் மக்களும் செய்கின்ற அநியாயங்களைச் சுட்டிக்காட்டவும், அவர்களது  உடன்படிக்கை மீறல்களைத் தட்டிக்கேட்கவும் செய்தனர். அவர்களை மறுபடியும் உடன்படிக்கை வாழ்விற்கு அழைக்கவும் செய்தனர்.

நாபோத் என்பவரின் திராட்சைத் தோட்டத்தைத் தனது பேராசையால் அபகரித்த ஆகாப் மன்னனை எலியா இறைவாக்கினர் எச்சரித்துத் தீர்ப்பு வழங்கினார் ((1அர 21:19).  தனது அரசு அதிகாரத்தைத் தனது சுயநலத்திற்காகப் பயன்படுத்தி, உரியாவின் மனைவி பத்சேபாவை அபகரித்ததோடு மட்டுமில்லாமல், அவருடைய கணவரையும் கொலை செய்த தாவீது, நாத்தான் இறைவாக்கினரால் எச்சரிக்கப்படுகிறார் (2சாமு 11:1-12).

இறைவாக்கினர்கள் அரசர்களுக்கு அரசியல் ஆலோசகர்களாக, அறிவிப்பாளர்களாகச் செயல்பட்டனர். அநியாயம் செய்கின்ற மக்களையும் இறைவாக்கினர்கள் எச்சரித்து வழிநடத்தத் தவறவில்லை. யாவே கடவுளின் வழிபாட்டை மறுதலித்துவிட்டு, வேற்றுத் தெய்வ வழிபாடுகளை மேற்கொண்டவரையும் (எரே 10, எசா 44),  ஏழைகளைச் சுரண்டியவர்களையும் (ஆமோ 2:6-9), ஆடம்பரமான அர்த்தமற்ற திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களையும் (எசா 1:10-16, ஆமோ 5:21-23) நீதி மறுக்கப்படுவதையும் குறிப்பாக, ஏழைகள் ஒடுக்கப்படுவதையும் உரக்கச் சொல்லி எச்சரித்தார்கள். நீதிக்கும் நேர்மைக்கும் உரிய வாழ்வு வாழ இறைவாக்கினர்கள் இஸ்ரயேலரை மறுபடியும் சமத்துவம் நிறைந்த உடன்படிக்கைச் சமுதாயமாக மாறிடப் பணி செய்தார்கள்.

மக்களை ஆட்சி செய்த அவர்களே மக்களின் ஆற்றல் பறிக்கப்பட்டு ஒடுக்கப்படுவதற்குக் காரணமாக இருந்தபோது, இறைவாக்கினர்கள் அவர்களை எச்சரித்ததோடு மட்டுமல்லாமல், கடவுளுடைய தீர்ப்பினையும் துணிச்சலோடு எதிரொலித்தார்கள். கடவுள் எவ்வாறு மக்களை ஆட்சி செய்கிறாரோ, அவ்வாறே ஆட்சி செய்ய மன்னர்களுக்கும் அறைகூவல் விடுத்தார்கள். மக்களும் கடவுளுக்குரிய நம்பிக்கையில் தவறியபோது, அவர்களும் எச்சரிக்கப்பட்டு, பலவகையான தண்டனைகளால் புதுப்பிக்கப்பட்டு உடன்படிக்கையின் மக்களாக மாற்றிட இறைவாக்கினர்கள் உழைத்தார்கள். இவையெல்லாம் இஸ்ரயேலர் ஆற்றல் பெற்றவர்களாக வாழ வேண்டும் எனும் அரசியல் ஈடுபாட்டின் செயல்பாடாக இருக்கின்றது.

அரசியல் ஈடுபாட்டிற்கான கடவுளின் அழைப்பு கிறித்தவத்தின் அழைப்பு

இன்றைய கிறித்தவமும் இந்த இறைவாக்குப் பணியைத் தொடர அழைக்கப்படுகிறது. இஸ்ரயேல் இறைவாக்கினரோடும், இறைவாக்கினர்களுக்கெல்லாம் மேலான இறைவாக்கினரான இயேசுவோடும் இணைந்து செயல்பட்டு, இறையாட்சிச் சமூகத்தைக் கடவுளின் சமூகமாகக் கட்டி எழுப்பி, எல்லாரையும் ஆற்றல் படைத்தவர்களாக மாற்றிட அழைக்கப்படுகிறார்கள்.

இந்த மாற்றம் வெறும் செபத்தாலும் தவத்தாலும் நடந்துவிடாது. மாறாக, அவற்றோடு தீர்க்கமான, தெளிவான அரசியல் ஈடுபாட்டோடு இந்திய அரசமைப்புச் சாசனம் காட்டுகின்ற விழுமியங்களைத் தூக்கிப் பிடித்து வாழ்வதால் நிகழும்.

அநீதிக்கும் அதர்மத்திற்கும் எதிராகக் குரல் கொடுத்து, நம் நாட்டிலே நீதியும் சுதந்திரமும் விடுதலையும் சகோதரத்துவமும் மலர்ந்திட கிறித்தவர்கள் இறைவாக்கினர் குரலாகச் செயல்பட வேண்டும்.

நமது சனநாயக உரிமையை எந்த அரசியல் ஆட்சியும் நம்மிடமிருந்து அபகரிக்க அனுமதிக்கக் கூடாது. எனவே, நம்முடைய குடியுரிமை உரிமைகளையும், இந்திய அரசமைப்புச் சாசன விழுமியங்களையும் கட்டிக் காத்திட நமது அரசியல் ஈடுபாடு கட்டாயம் தேவை.

திருத்தந்தை பிரான்சிஸ் கூறியதுபோல, “உங்களுடைய சக குடிமக்களின் மாண்பையும் உரிமையையும் பாதுகாத்திட அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்; பொதுப்பணிக்காக அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்இதுதான் அரசியல் ஈடுபாட்டின் முக்கிய நோக்கம்.”

news
ஆன்மிகம்
சிலுவை காட்டும் உணர்வுசார் முதிர்ச்சி!

ஆம்பள புள்ள அழக் கூடாது, ‘பொம்பள சிரிச்சா போச்சு, ‘கோபமே படாம அமைதியா இருப்பவர்கள் முதிர்ச்சியானவர்கள், ‘அவன்/அவள் எதுக்குமே உணர்ச்சிவசப்படமாட்டார்...’ இவை போன்ற சொல்லாடல்கள் நம் சமூகத்தில் எதார்த்தமாகப் பயன்படுத்தப்படக்கூடியவை. சற்று நிதானமாக யோசித்தால், இவை யாவும்உணர்வுஎன்ற ஒற்றைப்பொருளை மையமாகக் கொண்டு வழங்கப்படும் சொல்லாடல்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

இந்தச் சொல்லாடல்களின் அடிப்படையில் சோகம், மகிழ்ச்சி, கோபம் மற்றும் பரபரப்பு முதலிய உணர்வுகள் அனைத்துமே ஒரு மனிதரின் வளர்ச்சிக்கு உகந்தது அல்ல எனக் கருதலாம். அதே நேரத்தில், இந்த உணர்வுகள் ஒரு மனிதரின் அன்றாட வாழ்வின் அடிப்படை எனலாம். நாம் எல்லா நேரத்திலுமே ஏதோ ஓர் உணர்வோடுதான் இருக்கின்றோம். பின்பு, உணர்வுகள் சரியானவையா அல்லது தவறானவையா? தவறானவை என்றால், பின்பு ஏன் கடவுள் நம்மை உணர்வுகளோடு படைத்தார்? சரியானவை என்றால், நம் சமூகம் அதைத் தவறாக முன்னிறுத்துவது ஏன்?

உணர்வு என்றால் என்ன?

உணர்வுகளை அறிவியலின் வெவ்வேறு தளங்களும் வெவ்வேறு விதமாக வரையறுக்கின்றன. உளவியலாளர் ஜான் பால்பி, உணர்வைதொடர் சமிக்ஞை (Communication Signal) என்கிறார். நரம்பியல் வல்லுநர் அன்டோனியோ டமாசியோ, ‘உடலின் தற்காப்பு பொறிமுறையே உணர்வுகள் (Survival Mechanism) என நிறுவுகிறார். சமூகவியலாளர் ஆர்லி ஹோச்சில்ட், உணர்வுகளை ஒருசமூகத் தகவல் தொடர்புக் கருவியாகப் (Social Signalling) பார்க்கிறார். எனவே, உணர்வுகளை ஓர் ஒருங்கிணைந்த பார்வையில், ‘உள்ளத்தின் ஆழத்தில் எழும் உயிருள்ள இயக்க அலை; அது மனத்தையும் உறவுகளையும் தொட்டு மனிதரை முழுமையாக்கக் கூடிய ஒன்றுஎன நான் புரிந்துகொள்கிறேன்.

மேற்கூறிய வரையறைகளின் பின்புலத்திலும், அறிவியல் புரிதலின் பின்புலத்திலும் உணர்வுகளை ஒரு மனிதருடைய அடிப்படை ஆக்கப்பூர்வ ஆற்றல் எனப் புரிந்துகொள்ளலாம். ஆக்கப்பூர்வமான ஒன்றை, சமூகம் அழிவிற்கான ஒன்றாகக் காட்சிப்படுத்தினால் அதையே நாம் ஒடுக்குமுறை என்கின்றோம். இதற்கு எடுத்துக்காட்டாகப் பெண் கல்வியைக் கூறலாம். முந்தைய காலத்தில் அநாவசியமாக, அழிவாகக் கருதப்பட்டது இன்று அத்தியாவசியம் என நம்மால் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. அதேபோல, நம் உணர்வுகளும் சரியானவையே; அவற்றை நாம் உணர்வதும், உள்ளபடியே வெளிப்படுத்துவதும் சரியானவையே என நாம் உணரவேண்டிய தருணம் இது.

உணர்வுசார் ஒடுக்குமுறை

மனிதர் பொதுவாகத் தன் உணர்வுகளை, முகபாவனை (Facial Expression), உடல் மொழி (Body Language) மற்றும் மொழியால் (Verbal Expression) வெளிப்படுத்துகிறார். மனிதரின் அடிப்படை ஆக்கக்கூறான உணர்வுகள் வெளிப்படுத்தப்படாமல் ஒடுக்கப்படும்போது, அது ஒரு மனிதரை அழிவுக்கு இட்டுச்செல்லும் ஆற்றலாக மாறுகிறது. இந்த உணர்வு ஒடுக்கம், பிறரால் திணிக்கப்படும்போது, அது சாதிய, பொருளாதார மற்றும் நிற ஒடுக்குமுறைக்கு இணையான ஒடுக்குமுறையாக மாறுகிறது. சமூகத்தின் வெவ்வேறு தளங்களில் ஏற்கெனவே ஒடுக்கப்பட்ட மக்கள் உணர்வுத்தளத்திலும் ஒடுக்கப்படும்போது அதன் விளைவுகள் தீவிரமடைகின்றன.

உணர்வுசார் ஒடுக்குமுறையின் மற்றொரு பரிமாணம்உணர்வுசார் மிரட்டல் (Emotional Blackmail) ஆகும். உளவியலாளர் சூசன் ஃபார்வர்டு இந்த உணர்வுசார் மிரட்டலைFOG (பனிமூட்டம்) என்ற சுருக்கச் சொல்லால் விளக்குகிறார். F - Fear  (பயம்), O - Obligation (கடமை), G - Guilt (குற்ற உணர்வு). ‘நான் சொல்வதைக் கேட்காவிட்டால், உன்னைவிட்டு சென்றுவிடுவேன், ‘எனக்காக இதைச் செய்வது உன் கடமை; எனவே, இதை நீ செய்துதான் ஆகவேண்டும், ‘உன்னால்தான் எனக்கு இந்த நிலை; உன்னால்தான் நான் இவ்வளவு சிரமப்படுகிறேன்....’ இவை போன்ற வாக்கியங்களால் ஒருவர் உணர்வளவில் மிரட்டப்படுவதும் உணர்வுசார் ஒடுக்குமுறையே.

ஒடுக்குமுறையை நியாயப்படுத்துதல்

உணர்வு வெளிப்பாட்டை ஒடுக்குவதில் கலாச்சாரம், நிறுவனங்கள், மதம் மற்றும் சமூகம் ஆகியவை மிக முக்கியப் பங்குவகிக்கின்றன. கலாச்சாரம், உணர்வுகளை வெளிப்படுத்துவதை ஒரு பலவீனமாகவும், மௌனமாகச் சகித்துக்கொள்வதை ஒரு வீரமாகவும் சித்தரித்து, ஒரு தனிமனிதர் தனது உண்மையான இயலாமைகளை மறைக்கக் கட்டாயப்படுத்துகின்றது. நிறுவனங்கள்உணர்வுவசப்படாத நிலை (Professionalism) என்பதை ஒரு தகுதியாகக் காட்டி, ஓர் ஊழியர் தனது மேலதிகாரியால் ஒடுக்கப்படும்போது, அந்த வலியை வெளிப்படுத்தாமல் மௌனமாக ஏற்பதே கீழ்ப்படிதல் மற்றும் ஒழுக்கம் என்று போதிக்கிறது. மதங்களும் சமூகமும் இயல்பான மனித உணர்வுகளைப் பாவமாகச் சித்தரித்து, அதன் விளைவாக மனிதர்கள் புனிதர்களாகக் காட்டிக்கொள்வதற்காகத் தங்கள் உணர்வுகளைப் புதைத்து, ஒரு போலியான புனிதத் தன்மையைத் தழுவ வற்புறுத்துகிறது.

ஒடுக்குமுறையின் விளைவுகள்

உணர்வுசார் ஒடுக்குமுறை ஒரு மனிதரில், உடல் மற்றும் மனநலம் சார்ந்த ஆழமான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஒரு மனிதர் பொதுவாக, தனியாக விரும்பத்தகாத உணர்வுகளை மட்டுமல்ல; ஒட்டுமொத்த உணர்வுகளையும் ஒடுக்கக் கற்றுக்கொள்கிறார். இதன் விளைவாக அவர் ஓர் உணர்வற்ற நிலைக்குத் (Emotional Numbness) தன்னையே தள்ளுகிறார். இந்த நிலை அவரை ஓர் இயந்திரத்தைப் போல மாற்றுகிறது. மேலும், உணர்வுகளை ஒடுக்குவது தேவையற்ற பயம், பதற்றம், தொடர்ச்சியான அகப்போராட்டம், மனச்சோர்வு, அன்ஹெடோனியா, தொடர்பு துண்டிப்பு (Dissociation) மற்றும் பதற்றக் கோளாறுகள் உள்ளிட்ட மனநோய்களுக்கு வழிவகுக்கின்றன. இதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம், இயற்கை நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமடைதல், முதுகு வலி, கழுத்து வலி மற்றும் ஒற்றைத் தலைவலி முதலிய உடல்சார் நோய்களை வருவிக்கின்றன.

உணர்வுசார் மிரட்டல் பெரும்பாலும் நெருங்கிய உறவினரால் ஏற்படுவதால் முடிவெடுக்கும் திறனில் பாதிப்பு, எப்போதுமே பதற்றத்துடனேயே இருக்கும் நிலை, நீண்ட காலச் சோர்வு, இதயத் துடிப்பு அதிகரிப்பு, உறவு நிலைகளில் சவாலான மனநிலையை எதிர்கொள்தல், உறவுப் பிரச்சினைகளுக்குத் தானே காரணம் என எண்ணுதல், தன்னை மீண்டும் மீண்டும் சரிசெய்ய முயற்சித்தல், தனது சொந்த உணர்வுகளையும் நினைவுகளையும் சந்தேகித்தல் மற்றும் அதீதப் பொறுப்புணர்வு போன்ற மோசமான பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.

உணர்வுசார் முதிர்ச்சி

உணர்வுசார் ஒடுக்குமுறையின் வெவ்வேறு கூறுகளை அறிந்த நாம், ‘அதிலிருந்து விடுதலை சாத்தியமா?’ என அறிவதும் தகும் என நம்புகின்றேன். இந்த உணர்வுசார் ஒடுக்குமுறையின் விடு தலைக் கூறாக அமைவது உணர்வு முதிர்ச்சியாகும். இந்த முதிர்ச்சியைத் திருவிவிலிய மாந்தர்களில் மிக முக்கியமான நபரான இயேசு நமக்கு வாழ்ந்து காட்டியிருக்கிறார். உணர்வுசார் முதிர்ச்சிக்கு அடிப்படையாக அமைவது இரண்டு முக்கியக் கூறுகள்:

1. உணர்வுகளின் அங்கீகாரம் மற்றும் நுண்ணறிவு. 2. பாதுகாப்பான உறவு எல்லைகள்.

1. உணர்வுகளின் அங்கீகாரம் மற்றும் நுண்ணறிவு

தம் நண்பன் இலாசர் இறந்தபோது அழுததன் வழியாகவும், கெத்சமனி தோட்டத்தில் தம் பாடுகளைக் குறித்து இயேசு மனம் வருந்தியபோதும்எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது (மத் 26:38) எனத் தம் துயரைத் தம் சீடர்களிடம் பகிர்ந்ததன் வாயிலாகவும், சிலுவையில் இறக்கும்போதும்என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?” எனக் கதறியதன் வாயிலாகவும் இயேசு தம் உணர்வுகளைப் பற்றிய சுய உணர்வோடு அவற்றை உள்ளபடியே ஏற்றுக்கொண்டு, ஆரோக்கியமான விதத்தில் வெளிப்படுத்தினார். மாறாக, தம் உணர்வுகளுக்கு அவர் பிறரைக் காரணம் கூறவுமில்லை; விரும்பத்தகாத விதத்தில் தம் உணர்வுகளை அவர் வெளிப்படுத்தவு மில்லை. எனவே, ஒருவர்நான் எத்தகைய உணர்வுகளோடு இருக்கின்றேன்?’ என்ற சுய உணர்வும், அவ்வாறு அறிந்த உணர்வுகளை உள்ளவாறே ஏற்றுக்கொண்டு, அதை ஆரோக்கியமான முறையில் வெளிப்படுத்துவதுமே, உணர்வு முதிர்ச்சியின் முதல் படியாகும்.

2. பாதுகாப்பான உறவு எல்லைகள்

இயேசு தமது இறப்பை முன்னறிவித்தபோது, பேதுருஆண்டவரே, இப்படி உமக்கு நேரவே கூடாதுஎன்று தடுத்தபோது, பேதுரு இயேசுவின் மீதான அன்பில் அவ்வாறு கூறியிருந்தாலும், அது இயேசு தம் இலக்கை அடைய உதவாது என்பதால், “என் கண்முன் நில்லாதே சாத்தானே!” எனக் கூறி பேதுருவின் பரிந்துரைக்கு இசையவில்லை. அதே போல, யாக்கோபு மற்றும் யோவான் தம் தாயோடு வந்து, இயேசுவின் ஆட்சியில் அதிகாரம் கேட்டது, ஒரு குடும்ப நலன் சார்ந்த ஒன்றாகவே இருந்தது. அதை நன்கறிந்த இயேசு, மற்றச் சீடர்களுக்கும் புரியும்படி தமது ஆட்சியைப் பற்றியும், பணிபுரியும் தலைமையைப் பற்றியும் எடுத்துக் கூறினாரே தவிர, அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவில்லை.

ஒரு நபருடைய வாழ்வில் மற்றவருக்கு எத்தகைய பங்கு உண்டு, அவருடைய வாழ்வைப் பற்றி முடிவெடுப்பதில் எவ்வளவு சுதந்திரம் உண்டு என முடிவெடுக்கும் உரிமை அந்த நபருக்கு மட்டுமே உண்டு. அவ்வாறு முடிவெடுத்து தனக்கான எல்லைகளை ஏற்படுத்துவது, உறவுகளில் இடைவெளியை ஏற்படுத்தும் கூறுகளல்ல; அவை உறவுகளைத் திடப்படுத்தும் அணைக்கட்டுகள்.

இயேசு ஓர் உணர்வு முதிர்ச்சியின் அடையாளமாக மட்டும் திகழவில்லை; மாறாக, உணர்வுத் தளங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கும் எடுத்துகாட்டாகத் திகழ்கின்றார். சீடர்கள் தடுத்த போது, சிறுவர்களைத் தம்மிடம் வரவழைத்ததன் வாயிலாக, ஒடுக்கப்பட்ட அந்தச் சிறுவர்களின் மகிழ்ச்சியை அவர்கள் உணர உறுதுணையாக இருந்தார். இவ்வாறு, இயேசு உணர்வுசார் முதிர்ச்சிக்கு அரியதோர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்.

இறுதியாக...

உணர்வுகள் என்பவை ஏதோ விரும்பத்தகாதவை அல்ல; அவை மனிதரின் மைய ஆற்றல்! அந்த உணர்வுகளைப் பற்றிய ஆழமான மற்றும் தெளிவான புரிதலின் வாயிலாகவும், அதை ஆரோக்கியமாக மேலாண்மை செய்வதன் வாயிலாகவும் ஒரு மனிதரால் தன் வாழ்வின் நோக்கை எளிதாக அடைய முடியும்; ஏன், அவர் முழுமை அடைகிறான் என்றும் கூற முடியும். இயேசு தம் வாழ்நாள் முழுவதும் குறிப்பாக, சிலுவையின் கோர நிலையிலும் வெளிப்படுத்திய உணர்வு முதிர்ச்சியை நமதாக்குவோம்! நம் உலகம், நம் வசமாகட்டும்.

news
ஆன்மிகம்
இறை இரக்கம்: எல்லையற்ற இயேசுவின் அன்பின் வெளிப்பாடு!

பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையை நாம் இறை இரக்கப் பெருவிழாவாகக் கொண்டாட அழைக்கப்படுகிறோம். இது வெறும் சடங்கு அல்ல; மாறாக, நம் பாவங்களைக் காட்டிலும் இறைவனின் மன்னிப்பு பெரியது என்பதை உலகம் உணர்ந்துகொள்ளும் ஓர் உன்னதத் திருநாள்!

இரக்கம் அல்லது கருணை என்பதன் சொற்பிறப்பு, இலத்தீன் மொழியின்மிசெரிகோர்டியா (misericordia) என்ற சொல்லிலிருந்து உருவாகிறது . இதுமிசர் (miser - பரிதாபகரமான, துயரமான) மற்றும் கோர் (cor- இதயம்) ஆகிய சொற்களின் இணைப்பாகும். இச்சொல்லாடலானதுபரிதாபகரமானவர்களுக்கு, துயர் நிலையில் இருப்பவர்களுக்கு நம் இதயத்தைக் கொடுப்பதுஎன்பதாகும். இது மற்றொருவரின் துயரத்தைப் போக்க, ஒருவரைத் தூண்டும் ஆழ்ந்த அன்புறவைக் குறிக்கிறது

இரக்கம் அல்லது கருணை என்பது நாம் செய்த புண்ணியத்திற்காகக் கிடைப்பதல்ல; மாறாக, நாம் அவருடைய பிள்ளை என்பதற்காக வழங்கப்பட்ட ஒரு பெருங்கொடை; மேலான ஓர் அருள் வரம்! ஒரு பெற்றோர் தம் குழந்தையின் மீது காட்டும் அன்பு, அக்குழந்தை எதையாவது சாதித்ததால் வருவதல்ல; அக்குழந்தை பிறந்த அந்த நொடியிலேயே அங்கு அன்பு பிறப்பெடுக்கிறது. அதுபோலவே, நாம் பாவிகளாய் இருந்தபோதே நம்மைத் தேடி வந்த கிறிஸ்துவின் அன்புதான் இறை இரக்கம்; அந்தத் தெய்வீகக் கருணை!

2016-ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டஇறைவனின் திருப்பெயர் இரக்கம் (The Name of God is Mercyஎன்ற நூல், இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையிலான ஆழமான உறவைஇரக்கம்என்ற ஒற்றைச் சொல்லால் பிணைக்கிறது. வத்திக்கான் செய்தியாளர் ஆண்ட்ரியா டொர்னியேலியுடன்  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்ட உரையாடல்களின் தொகுப்பாக வெளிவந்த இந்த நூலில், ‘புனிதர்களுக்காகவோ அல்லது நீதிமான்களுக்காகவோ மட்டும் இறைவன் காத்திருக்கவில்லை; மாறாக, தன்னை ஒரு பாவி என்று உணர்ந்து அவரிடம் வருபவர்களுக்காகவே அவர் தவம் இருக்கிறார்என்பதை அவர் சிறப்பாக வலியுறுத்துகிறார்மேலும், ‘நமது பாவங்களே நாம் இறைவனின் இரக்கத்தைச் சந்திக்கும் புனிதத் தலங்களாக மாறுகின்றனஎன்றும், ‘நாம் ஒரு பாவி என்பதை உணர்வதே இறைவனிடமிருந்து நமக்குக் கிடைக்கும் முதல் கொடைஎன்றும், ‘அந்த இடத்தில்தான் இயேசுவின் குணப்படுத்தும் தொடுதல் நிகழ்கிறதுஎன்றும் குறிப்பிடுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அவ்வாறே, “ஒருவர் மிகப்பெரும் பாவியாக இருந்தாலும், என் கருணையின் மணிமாலையை (Divine Mercy Chaplet) ஒருமுறை செபித்தால், அவர் என் எல்லையற்ற கருணையிலிருந்து அருளைப் பெறுவார்என்று புனித பவுஸ்தீனா வழியாக இறைவன் உலகிற்குத் தந்த செய்திகள் நம்பிக்கையற்றுக் கிடக்கும் மானுடத்திற்கு ஒரு கலங்கரை விளக்கம்.

இயேசு புனித பவுஸ்தீனாவிடம் அளித்த வாக்குறுதிகள் கற்பனைக்கு எட்டாதவை. குறிப்பாக, மரணத் தறுவாயில் இருப்பவர்களுக்காகச் செபமாலையைச் செபிக்கும்போது, இயேசு ஒரு நீதியுள்ள நடுவராக இல்லாமல், ‘இரக்கமுள்ள மீட்பராகதந்தைக்கும் அந்த ஆன்மாவிற்கும் இடையில் இருப்பதாக உறுதி அளித்துள்ளார். இயேசு கல்வாரி மலையில் தம் உயிரைத் துறந்த அந்த மாலை மூன்று மணி, அகில உலகிற்குமான பெரும் கருணையின் நேரம். அந்த நேரத்தில் நாம் கேட்கும் எதையும் தமது திருப்பாடுகளின் பெயரால் அவர் மறுப்பதில்லை. நாமும் இரக்கத்தின் தூதுவர்களாவோம்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பார்வையில், திரு அவை என்பது சட்டங்களை வகுக்கும் ஒரு கூடம் அல்ல; அது ஒருபோர்க்கள மருத்துவமனை (Field Hospital) காயப்பட்டவர்கள், விளிம்பு நிலை மக்கள், சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்கள் என அனைவரையும் அரவணைக்கும் இடமே திரு அவை. “Who am I to judge others?  - ஒருவர் ஆண்டவரைத் தேடினால், அவரைத் தீர்ப்பிட நான் யார்?” எனும் அவருடைய கூற்று, கத்தோலிக்கத் திரு அவையில் பாவிகள் என நாம் தீர்ப்பிடும் பலருக்குப் பல முன்னுரிமைகளை மாற்றியமைத்துள்ளது.

எல்லாச் சூழல்களிலும் சமகாலச் சட்ட வல்லுநர்களாக நாம் இருக்கக்கூடாது; மாறாக, கிறிஸ்துவின் உடலை ஏழைகளிடமும் தேவையிலுள்ளோரிடமும் தொட்டுணரும் மேய்ப்பர்களாக இருக்கவேண்டும். திரு அவை என்பது மக்களைக் கண்டனம் செய்வதற்காக இல்லை; மாறாக, இறைவனின் ஆழமான அன்பைச் சந்திக்க வைப்பதற்காகவே அது இருக்கிறது எனும் அவருடைய சிந்தனைகள் வாழ்வாக்கத்தக்கதே!

புனித பவுஸ்தீனாவின் செபம் நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் எதிரொலிக்கவேண்டும். நம் கண்கள், காதுகள், நாக்கு, கைகள் மற்றும் கால்கள் என அனைத்தும் இரக்கத்தின் கருவிகளாக மாறவேண்டும். அடுத்தவரைத் தீர்ப்பிடாத கண்கள், பிறரின் கூக்குரலைக் கேட்கும் காதுகள், ஆறுதல் வார்த்தைகளை மட்டுமே பேசும் நாக்கு, நற்செயல்களை மட்டுமே செய்யும் கைகள், பிறருக்கு உதவ விரைந்து செல்லும் கால்கள் இவை அனைத்தும் ஒன்றிணையும்போது நாம் இறைவனின் வாழும் சாயலாக மாறுகிறோம்.

இறை இரக்கப் பெருவிழா, ஆன்மாக்களுக்கு ஒரு புகலிடம். அன்று ஒப்புரவு அருளடையாளத்தில் பங்குகொண்டு, நற்கருணை உட்கொள்பவர்களுக்குப் பாவங்களும் அதற்கான தண்டனைகளும் முழுமையாக மன்னிக்கப்படுகின்றன. “உங்கள் பாவங்கள் கருஞ்சிவப்பாய் இருந்தாலும், அவை பனிபோல் வெண்மையாகும்என்ற இறைவனின் வாக்கு அன்றைய தினம் முழுமையாக நிறைவேறுகிறது.

இறைவனின் இரக்கம் நம் பாவங்களை விடவும், இந்த உலகத்தின் பாவங்களை விடவும் பெரியது. இந்த உலகம் வெறுப்பாலும் வன்முறையாலும் சூழந்திருக்கலாம்; ஆனால், இறைவனுடைய இரக்கத்தின் நீரூற்று இன்றும் வற்றாமல் சுரந்து கொண்டிருக்கிறது. நாம் செய்ய வேண்டியதெல்லாம், நம்முடைய தற்பெருமையைக் களைந்து, தாழ்ச்சியுடன் அவரிடம் திரும்புவதுதான்.

ஆகவே, இறை இரக்கப் பெருவிழாவை நாம் கொண்டாடும் இவ்வேளையில், நாமும் இறைவனைப் போலஅதிகமாக மன்னிக்கும்அந்தப் பண்பைப் பெற்றுக்கொள்வோம். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகளில் கூறுவதென்றால், “மக்களின் இதயங்களைக் குளிரூட்டும், அவர்களோடு  நெருக்கமாக இருக்கும் ஒரு திரு அவையாக நாம் மாறுவோம்.”

இறைவனின் திருப்பெயர் இரக்கம்; அந்த இரக்கத்தில் நாமும் அடைக்கலம் புகுவோம்!

news
ஆன்மிகம்
உயிர்த்தெழுதலின் முப்பரிமாண இறையனுபவங்கள்

கிறித்தவத்தின் தனித்துவம்

உயிர்த்தெழுதல் என்பது கிறித்தவர்களின் தனித்துவமும், மிக முக்கியமான அம்சமும் ஆகும். இயேசுவின் காலியான கல்லறையே நமது நம்பிக்கையின் அருளடையாளம். உயிர்த்தெழுதல் என்பது ஒரு நம்பிக்கையின் நிகழ்வாக மட்டும் பார்ப்பது நமது பராம்பரியம் அன்று; மாறாக, அது இவ்வுலகையே புதுப் படைப்பாகப் பார்க்கும் ஓர் ஆன்மிக மற்றும் உளவியல் சார்ந்த இறைனுபவம் ஆகும். “கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால், நாங்கள் பறைசாற்றிய  நற்செய்தியும், நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும் பொருளற்றதாய் இருக்கும். நமது விசுவாசம் அனைத்தும் பொய்...” (1கொரி 15:14) என்கிறார் தூய பவுலடியார்.

கிறித்தவ வாழ்வின் அழிவின்மை

நமது கிறித்தவ வாழ்வு மற்றும் இறப்பின் முழு நம்பிக்கை கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழும் புனித நிகழ்வின் பார்வையில்தான் பொருளுள்ளதாகிறது. கிறிஸ்து உயிர்ப்பின் மறைபொருளை விளக்கும் தூய பவுலடியார் கிறிஸ்துவின் உயிர்ப்பின் மூலம், “அழிவுக்குரிய இவ்வுடல் அழியாமையை அணிந்தாகவேண்டும். சாவுக்குரிய இவ்வுடல் சாகாமையை அணிந்தாக வேண்டும்என்று கூறி, “சாவு முற்றிலும் ஒழிந்தது, வெற்றி கிடைத்ததுஎன்கிறார் (1கொரி 16:54).

இத்தகைய முக்கியமான நம்பிக்கையின் நிகழ்வு கிறிஸ்து இறந்தபின் சீடர்கள் கிறிஸ்துவின் உயிர்ப்பை நினைவுகூர்ந்து, வாழ்ந்து காட்டி, அனைவரிலும் அவரைக் கண்டுகொண்டு, மறு கிறிஸ்துகளாகப் புத்துருபெற்று, கிறிஸ்துவின் பாடுகளிலும் உயிர்ப்பிலும் முழுமையாய் பங்கேற்று, அவரது உயிர்ப்பிற்குச் சாட்சிகளாகின்றனர் (திப 2- 5 வரையுள்ள அதிகாரங்கள்). எனவே, உயிர்ப்பின் அனுபவம் நம்மை இக்காலச் சூழலுக்கு ஏற்றபடி புரிந்துகொள்வதும், அதன்படி நமது வாழ்வைப் புதுப்பித்துக்கொள்வதும் காலத்தின் கட்டாயமும் அறைகூவலுமாகும். கிறிஸ்துவின் உயிர்ப்பை மூன்று முக்கிய ஆன்மிக - உளவியல் பார்வையில் சிந்தித்துச் செயல்படுவதை ஓர் அறநெறிக் கட்டாயமாக உணர்கிறேன்....

நினைவுகூர்தல்

தொடக்க காலத் திரு அவையில் உயிர்த்த இயேசுவின் இறையனுபவம்: பெரும்பாலும் கிறித்தவத்தில் பாஸ்கா நிகழ்வை நினைவுகூர்ந்து கொண்டாடுவதாகும். ‘நினைவுகூர்தல்என்ற வார்த்தையின் பொருள் அந்நிகழ்வைப் பற்றி மீண்டும் சிந்தித்து, கிறிஸ்துவைப் பிரசன்னப்படுத்தி வாழ்ந்து காட்டுவதாகும். “இதை என் நினைவாகச் செய்யுங்கள் (லூக் 22:19) என்று எடுத்துரைத்து, பாஸ்கா மறைபொருளை நிறுவினார் இயேசு. தொடக்கத் திரு அவையில் அதை நினைவுகூர்ந்து வாழ்ந்து காட்டினார்கள். தங்களது உடைமைகளைப் பொதுவாக வைத்து அனைவரும் பகிர்ந்து கொண்டனர். “அவர்களில் தேவையில் உழல்வோர் எவரும் காணப்படவில்லை (திப 5:34). கிறிஸ்துவின் பாஸ்கா நிகழ்வை வாழ்வில் வாழ்ந்து காட்டி அதைச் சீடர்கள் நினைவுகூர்ந்தனர்.

வாழ்வே நற்செய்தியாக...

அதன்பின் அது சிறு வழிபாடாகவும் (LITURGY), கொண்டாட்டமாகவும் (COMMEMORATE) மாறியது. உயிர்ப்பின் நிகழ்வானது வழிபாட்டோடு மட்டும் நின்றுவிடத் தொடங்கியது. இங்கு உயிர்த்த இறைவன் போதனைகளைத் தந்தபின், மரித்து அதன்பின் உயிர்த்து விண்ணிற்குச் சென்றுவிட்டார். இப்போது நாம் அவரைப் பிரசன்னப்படுத்தி (RE-MEMBER) அவரது மதிப்பிடுகளை வாழ்ந்து காட்டி, உயிர்ப்பின் சாட்சிகளாகத் திகழ்வது, உயிர்த்தெழுதலின் முதல் பரிமாணமாகும். இங்கு உயிர்த்த இறைவன் மூன்றாம் ஆளாக, படர்க்கையில் (3rd - person) பார்க்கும் மனப்போக்கு. இதன் உளவியல் பின்னணி, உயிர்த்த இறைவன் விண்ணகத்தில் இருப்பது போலவும், அங்கிருந்து நம்மை வழிநடத்துவதாக உணர்வதாகும். உளவியல் ரீதியாக இறைவனுக்கும் நமக்கும் இடைவெளி அதிகமாய் இருப்பது போன்ற புரிதல், மதிப்பீடுகளின்படி வாழ்ந்து காட்டும் வழிபாடுகளின்போது மட்டும் அவரது பிரசன்னத்தை உணர்கிறோம். மற்ற நேரங்களில் வேறுபட்ட வாழ்வு வாழ்ந்திட வாய்ப்பு இருக்கிறது. அன்றாட வாழ்வில் மற்றவர்களிடம் உயிர்த்த கிறிஸ்துவைக் கண்டுகொள்வது எப்படி?

கண்டுகொள்ளுதல்

சீடர்கள் பெற்ற உயிர்த்த இயேசு இறையனுபவம்: எம்மாவுஸ் சீடர்கள் இயேசுவின் பாஸ்கா நிகழ்வை நினைவுகூர்ந்து பேசிக்கொண்டு சென்றார்களே அன்றி, அவரைக் கண்டுகொள்ளவில்லை. காரணம், அவர்கள் உயிர்ப்பின் முழுமையைப் புரிந்துகொள்ளாத அறிவிலிகளாய் இருந்தனர் (லூக் 24:25). அப்பத்தைப் பிட்கும் நிகழ்வை நினைவுகூர்வதில் மட்டும் நிறைவடைவதில்லை; மாறாக, அவரைக் கண்டுகொள்வதிலே உயிர்ப்பின் இரண்டாம் பரிமாணம் அமைந்துள்ளது. கிறிஸ்துவை இனிமேல் இயேசுவின் உருவில் காண்பதை விடுத்து, அவரை அன்றாட வாழ்வில் நாம் பிறரிடமும் மற்றும் இயற்கையிலும் அவரின் உடனிருப்பைக் கண்டுகொள்ளும் வாழ்க்கை முறையாகும்.

அனைத்திலும் அனைவரிலும் உயிர்த்த இயேசு                                 

உண்மையில் உயிர்த்த இயேசு இனி தோட்டக்காரராக, (யோவா 20:15) வழிப்போக்கராக, (லூக் 24:15), மீன்பிடிப்பவராக (யோவா 21:4) அவர்களுக்கு முன்வந்து, அவர்களோடு உறவாடி தமது உயிர்ப்பின் உடனிருப்பை உணர்த்துகிறார். ஆக, அனைத்திலும் அனைவரிலும் இறைவனைக் கண்டுகொள்ளும் ஆன்மிக நிலையாகும். சாதி, மதம், இனம் கடந்து தெய்வீகத்தைத் தன்னைச் சுற்றியுள்ள அனைத்திலும் கண்டுணர்ந்து (RECOGNIZE) அனுபவிப்பதாகும். உயிர்ப்பைப் பற்றிய ஆன்மிகப் புரிதலின் இரண்டாம் பரிமாணம் ஆகும். இங்கு உயிர்த்த இறைவன் இரண்டாவது ஆளாக முன்னிலையில் ((2nd – person) பார்க்கும் புரிதல் ஆகும்அனைத்திலும் அனைவரிலும் இறைவனைப் பார்க்கும் ஆன்மிக அனுபவம். இருப்பினும், உளவியல் ரீதியில் அவரது பாடுகளிலும் உயிர்ப்பிலும் பங்கெடுக்காமல் இருந்திட வாய்ப்புகள் உள்ளன. இயேசு எம்மாவுஸ் சீடர்களிடம்மெசியாதான் மாட்சியடைவதற்குமுன் இத்துன்பங்களைப் படவேண்டுமல்லவா!” (லூக் 24:28) என்று எடுத்துரைத்து உயிர்த்தெழுதலின் மூன்றாம் பரிமாணத்தைப் பற்றி விளக்குகிறார்.

புத்துரு பெறுதல்

சாட்சிய வாழ்வில் உயிர்த்த இயேசு: உயிர்த்தெழுதலின் மூன்றாம் பரிமாணத்தில் உயிர்த்த இறைவனை முதல் நிலையில், தன்மையில் (1st person) வைத்துப் பார்ப்பதாகும். நாமே கிறிஸ்துவாகப்  புத்துரு பெறுவதில் (RENEWAL) உள்ளது. மறுகிறிஸ்துவாக உருபெறுவதில் உள்ளது. தூய பவுலடியார் இந்த இறையனுபவ நிலையை மிக அழகாக, “வாழ்வது நானல்ல, என்னில் கிறிஸ்துவே வாழ்கிறார் (கலா 2:20) என்று எடுத்துரைக்கிறார்.

உயிர்ப்பின் இறையனுபவம் என்பது கிறிஸ்துவின் மனநிலையில் பங்கெடுப்பதாகும் (பிலி 2:6). அதாவது, அன்றாட வாழ்வில் அவரது பாடுகளில் பங்கேற்பதன் வழியாக, அவரது உயிர்ப்பில் பங்கெடுப்பதாகும். “அவர் சிலுவைச் சாவை ஏற்கும் அளவிற்குக் கீழ்ப்படிந்தார். எனவே, கடவுள் அவரை உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார் (பிலி 2:8,9) எடுத்துக்காட்டாக, அனைத்துப் புனிதர்களின் மறைச்சாட்சி வாழ்விலே கிறிஸ்துவின் உயிர்ப்பைப் பற்றிய ஆழமான புரிதலையும் சாட்சிபகர்வதையும் உணரலாம்.

முப்பரிமாணம் கொண்டது உயிர்ப்பின் இறையனுபவம்

இதை இந்தியத் தத்துவங்கள் மிக அழகாகஅகம் பிரம்மாஸ்மிஎன்றும், ‘தத்துவமசிஎன்றும் தெளிவாக விளக்கம் தருகிறது. நம்மிடம் உள்ள தெய்வீகத்தன்மையை உணர்ந்து ஒளிர்விப்பதாகும். நமது வாழ்வே நற்செய்தியாக மாறுகிறது. நம்மோடு நம்மில் வாழ்ந்த ஸ்டான் சுவாமியின் வாழ்வு, உயிர்ப்பின் முப்பரிமாணத்தை விளக்குகிறது. உயிர்த்த இயேசு தரும் இறையனுபவம் முப்பரிமாணம் கொண்டது. நீளமானது, அகலமானது. ஆழமானது. இம்மூன்று பரிமாணங்களும் உயிர்ப்பின் முழுமையான, நிறைவான இறையனுபவம் அடங்கியுள்ளது. அன்றாட வாழ்வில், மதிப்பீடுகளின்படி வாழ்ந்துகாட்டி, அவரைக் கண்டுகொண்டு, அன்றாட வாழ்வில் சிறு சிறு  பாடுகளில் பங்கேற்பதன் மூலம் கிறிஸ்துவின் உயிர்ப்பின் முப்பரிமாண இறையனுபவத்தைத் தொடர்வோம்.

news
ஆன்மிகம்
புதிய ஏவாளாகிய மரியா முழுமன சுதந்திரத்துடன் இறைவனுக்குக் கீழ்ப்படிந்தார்! (திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி – 33

‘மனுவுருவாதல் (incarnation) என்னும் மிகப்பெரிய மறைபொருளுக்கு முன்பு அன்னை மரியா ‘ஆம் என்று கூறி தனது விருப்பத்தை வெளிப்படுத்தி, மனுக்குலத்திற்கான கடவுளின் மீட்புத்திட்டத்தை முழுமையாக ஏற்றுக்கொள்கின்றார்.

1. கிறிஸ்து பிறப்பு அறிவிப்பைப் பற்றிய தனது கருத்தில் இரண்டாம் வத்திக்கான் சங்கமானது, இறைத்தூதரின் வார்த்தையை நம்பி அதற்குத் தனது ஒப்புதலைத் தெரிவித்த மரியாவின் மதிப்புமிக்க பதிலுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றது. இதுபோன்ற நற்செய்தி விவரிப்புகளில் நிகழ்வதைப் போலல்லாமல், இது இறைத்தூதரால் வெளிப்படையாகவே அறிவிக்கப்படுகின்றது: “ஒரு பெண்ணால் சாவு வந்ததுபோல் மற்றொரு பெண்ணால் வாழ்வும் வரவேண்டும் என்பதற்காக, கிறிஸ்து மனிதர் ஆவதற்கு முன்பே, அவருடைய தாயாக முன் நியமிக்கப்பட்டவரின் இசைவு பெறவேண்டும் என்று இரக்கம் நிறை தந்தை ஆவல் கொண்டார் (இறைத்திட்டத்தில் திருச்சபை எண். 56).

இறைத்திட்டத்தில் திருச்சபை என்னும் இந்த ஏடானது புனித எரோணிமுஸ் விவரிக்கும் ஏவாளுக்கும் மரியாவிற்கும் இடையேயான வேற்றுமையை நினைவுகூர்கின்றது: “முந்தையவள் அதாவது ஏவாள், ஒரு தூதரின் (சாத்தானின்) வார்த்தைகளால் ஏமாற்றப்பட்டதனால் இறைவனின் வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் அவரை விட்டு விலகிச் சென்றாள். ஆனால், மரியாவோ ஓர் இறைத்தூதரின் அறிவிப்பிலிருந்து நற்செய்தியைப் பெற்று, அவரது வார்த்தைக்குக் கீழ்ப்படிந்ததால் இறைவனையே பெற்றெடுத்தார். மேலும், ஏவாள் இறைவனுக்குக் கீழ்ப்படியாமல் இருக்கும் அளவுக்குச் சாத்தானால் ஏமாற்றப்பட்டாள். ஆனால், மரியாவோ இறைவனுக்குக் கீழ்ப்படிவதென உறுதி செய்துகொண்டார்.  இதன் வழியாக மரியா ஏவாளுக்காக இறைவனிடம் பரிந்து பேசுபவரானார். ஒரு கன்னியால் (ஏவாள்) மனித இனம் முழுவதுமே மரணத்திற்கு உட்படுத்தப்பட்டதைப் போன்றே, மற்றொரு கன்னியால் (மரியா) அது மீட்கப்பட்டது. இவ்வாறு ஒரு கன்னியின் கீழ்ப்படியாமையானது மற்றொரு கன்னியின் கீழ்ப்படிதலால் சமன் செய்யப்பட்டது...” (Adv. Haer., V,  19, 1).

சுதந்திரமானதொரு நம்பிக்கை மற்றும் கீழ்ப்படிதல் வழியாக மரியா இறைத்திட்டத்திற்கு ஒத்துழைத்தார்

2. இறைவனின் திட்டத்திற்கான அவரது முழுச்  சம்மதத்தைத் தெரிவிப்பதில், மரியா இறைவனுக்கு முன் முற்றிலும் சுதந்திரமுள்ளவராக இருந்தார். அதே நேரத்தில், அவரது பதிலில் முழு மனிதகுலத்தின் எதிர்காலமும் இருப்பதையும் தனிப்பட்ட முறையில் மரியா உணர்ந்திருந்தார்.

இறைவன், முழு மனிதகுலத்தின் எதிர்காலத்தையும் ஒரு பெண்ணின் கரங்களில் வைக்கின்றார். இவ்வகையில், உலக மீட்பிற்காக இறைவன் தமது அன்பில் தயாரித்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கான முன்திட்டமே மரியாவின்  ‘ஆம் என்கிற சம்மத மொழியாகும்.

மீட்பின் இறைத்திட்டத்திற்கான மரியாவின் சுதந்திரமான சம்மதத்தில் உள்ள முழு மனிதகுலத்திற்குமான தீர்க்கமான மதிப்பைச் சுருக்கமாகவும் திறம்படவும் கத்தோலிக்கத் திரு அவையின் மறைக்கல்வி ஏடானது கூறுகின்றது: “கன்னி மரியா சுதந்திரமான நம்பிக்கையோடும் கீழ்ப்படிதலோடும் மனுக்குல மீட்பில் ஒத்துழைத்தார். மனுக்குலம் அனைத்தின் சார்பாகவும் அவர் ‘ஆம் என்று கூறினார். அவரின் கீழ்ப்படிதலினால், வாழ்வோர் அனைவரின் தாயாகிய புதிய ஏவாள் ஆனார் (Catechism of the Catholic Church, n. 511).

3. தனது நன்னடத்தை வழியாக, நம் வாழ்விற்கான இறைவனின் திட்டத்தை ஏற்றுக்கொள்வதற்கான நமது தீவிரமான பொறுப்பை மரியா, நம் ஒவ்வொருவருக்கும் நினைவுபடுத்துகிறார். இறைத்தூதரின் வார்த்தைகளில் வெளிப்படுத்தப்படும் இறைவனுடைய மீட்பின் விருப்பத்திற்கு முற்றிலும் கீழ்ப்படிதலில், “கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு அதன்படி அவர்கள் நடக்கும்படி (லூக் 11:28) ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் (blesseds) என்று ஆண்டவர் குறிப்பிடுகிறவர்களுக்கு மரியா முன்மாதிரியாகின்றார். ‘ஆசிர்வதிக்கப்பட்டவர் என்று தன் தாயை அறிவித்த கூட்டத்திலிருந்த அந்தப் பெண்ணிடம் இயேசு மரியாவின் ஆசிர்வாதத்திற்கான உண்மையான காரணத்தை வெளிப்படுத்துகிறார். இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான அவரது விருப்பமே இறைவனின் தாயாக இருப்பதற்கான அந்த அழைத்தலை அவர் ஏற்றுக்கொள்ள வழிவகுத்தது.

இயேசு கூறும் இந்தப் புதிய ஆன்மிகத் தாய்மையானது (new spiritual motherhood) அனைத்திற்கும் மேலாக மரியாவுடன் தொடர்புடையது என்பதை ‘மீட்பரின் தாய் என்கின்ற திருமடலில் நான் சுட்டிக்காட்டியிருக்கின்றேன். உண்மையில், இறைவனின் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்பவர்களில் மரியா முதன்மையானவர் அல்லவா! ஆகவே, கூட்டத்திலிருந்த பெண்ணிற்கு இயேசு அளித்த ஆசிர்வாதம் முதலில் மரியாவைத்தானே குறிக்கும்! (மீட்பரின் தாய், எண். 20). இவ்வாறு, மரியா அவருடைய மகனின் முதல் சீடராக (ஒப்பிடுக. ibid) அறியப்படுகிறார். மேலும், அவரது முன்மாதிரியால் ஆண்டவரின் அருளுக்குத் தாராளமாகப் பதிலளிக்க அனைத்து நம்பிக்கையாளர்களையும் அழைக்கின்றார்.

4. இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கமானது கிறிஸ்துவின் வாழ்வு மற்றும் அவரது பணியில் மரியாவின் முழு அர்ப்பணிப்பு பற்றி இவ்வாறு விளக்குகின்றது: “பாவத்தடையின்றித் தன் முழு இதயத்தோடு கடவுளின் மீட்புத் திருவுளத்தை ஏற்றுத் தன் மகனுக்கும் அவரின் பணிக்கும் தன்னையே ஆண்டவரின் அடிமையாக அவர் முற்றிலும் கையளித்தார் (இறைத்திட்டத்தில் திருச்சபை, எண். 56).

மரியாவைப் பொருத்தவரை, இயேசுவுக்கும் அவரது பணிக்குமான அவரின் அர்ப்பணிப்பு என்பது தன் மகனுடனான நெருங்கிய உறவு, அவரை ஒரு மனிதனாக வளர்ப்பதில் தாய்மையுள்ளம் கொண்ட ஈடுபாடு மற்றும் அவரது மீட்புப் பணியில் அவரின் ஒத்துழைப்பு போன்றவைகளாகும்.

மரியா மனுக்குலம் அனைத்திற்குமான மீட்பின் காரணமானார்

மீட்புப் பணியில் இயேசுவிற்கு ஒத்துழைப்பதில் மரியா ‘அவருக்குக் கீழ்நிலையில் இருந்து சிறப்பான வகையில் அதைச் செய்கின்றார். அதாவது, அருளின் பயனான கீழ்ப்படிதலின் நிலையில் இருந்து அதைச் செய்கின்றார். இருப்பினும், இது ஓர் உண்மையான ஒத்துழைப்பாகும். ஏனெனில் இது ‘அவரோடு நிறைவேற்றப்பட்டிருக்கிறது மற்றும் இது கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பிலிருந்து மீட்புப் பணியில் அவரது தீவிரமான பங்களிப்பையும் உள்ளடக்கியதாகும். எனவே, இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கமானது மிகச் சரியாக, “இவ்வாறு அவருக்குக் கீழும் அவருடனும் எல்லாம் வல்ல கடவுளின் கையில் மரியா  செயலற்ற ஒரு கருவியல்ல; மாறாக, நம்பிக்கையாலும் கீழ்ப்படிதலாலும் மனித இனத்தின் நிறைவாழ்வுக்குத் தன்னுரிமையுடன் ஒத்துழைத்தவர் எனத் திருத்தந்தையர் கருதுவது சரியே. தூய எரோணிமுஸ் கூறுவதுபோல, “மரியா தன் கீழ்ப்படிதலால் தானும் மனித இனம் அனைத்தும் நிறை வாழ்வு பெறக் காரணமானார் (Adv. Haer., III, 22,4).

நமது முதல் பெற்றோரின் பாவத்திற்கு எதிரான கிறிஸ்துவின் வெற்றியுடன் தொடர்புடைய மரியா உண்மையில் வாழ்வோரின் தாயாகத் தோன்றுகின்றார் (இறைத்திட்டத்தில் திருச்சபை, எண். 56). இவ்வாறு இறைத்திட்டத்திற்குக் கீழ்ப்படிவதைச் சுதந்திரமாக ஏற்றுக்கொண்ட அவரது தாய்மையானது மனுக்குலம் அனைத்திற்கும் வாழ்வின் ஊற்றாகின்றது.

மூலம்: John Paul II, Mary, the new Eve, freely obeyed God, in «L’Osservatore Romano», Weekly Edition in English, 25 September 1996, p. 19.

news
ஆன்மிகம்
நான் இப்போது அருள்பணியாளராக இல்லை!

அருள்பணியாளர்கள் மிகச் சிறந்தவர்களாக அப்பழுக்கற்றவர்களாக இருக்கவேண்டும் என்றுதான் நம்மில் பெரும்பான்மையானவர்கள் நினைக்கிறோம். பொதுவாழ்வில் ஈடுபட்டிருக்கும் நபர்களைப்போல அருள்பணியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மிகக் கடினமானவை. அருள்பணியாளர்களின் வாழ்வு பெரும் விமர்சனத்திற்கும் குற்றச்சாட்டிற்கும் உள்ளாக்கப்படுகிற காலம் இது. அவர்களில் பெரும்பான்மையானவர்கள் பொய்கள் மற்றும் வதந்திகள் எனும் சேற்றில் சிக்கிக் கிடக்கிறார்கள்.

1964-ஆம் ஆண்டு முதல் 2004-ஆம் ஆண்டு வரை மறைமாவட்டங்களிலிருந்து வத்திக்கானுக்கு அனுப்பப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் 69,063 அருள்பணியாளர்கள் தங்கள் அருள்பணி நிலையை விட்டு வெளியேறியிருக்கிறார்கள். 2000-ஆம் ஆண்டு முதல் 2004-ஆம் ஆண்டுவரை ஆண்டுதோறும் 26 விழுக்காடு அருள்பணியாளர்கள் தங்கள் அருள்பணி நிலையிலிருந்து விலகியிருக்கிறார்கள்.

அதே நேரத்தில், அருள்பணியிலிருந்து விலகிச் சென்றவர்கள் மீண்டும் அதே அருள்பணி நிலைக்குத் திரும்பி வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது என்று இணையதளத்தில் வாசிக்க நேரிட்டது.

உணர்ச்சி ரீதியான உறுதியற்ற சூழ்நிலைகள், மணத்துறவு, நம்பிக்கையில் ஏற்பட்ட வீழ்ச்சி, மனச் சோர்வு, திரு அவைத் தலைவர்களோடு ஏற்படும் கருத்து வேறுபாடு, மீளமுடியாத பிற காரணிகள் மற்றும் இன்னும் பிற காரணிகள் அருள்பணி நிலையிலிருந்து விலகுவதற்குக் காரணிகளாக இருக்கின்றன. நம்பிக்கைப் பயணத்தில் யூதாஸ் விழலாம்; தோல்வி அடையலாம்; பேதுரு விழலாம்; அருள்பணியாளர்களும் விழலாம்; தோல்வி அடையலாம்.

அமெரிக்க இறையியலாளரான ஸ்காட்ஹான் ஏப்ரல் 25-ஆம் தேதி 2001-ஆம் ஆண்டு EWTN தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடத்திய உரையில், தனது ஆன்மிக வழிகாட்டியிடமிருந்து கேட்ட திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் பற்றிய ஒரு நிகழ்வைப் பகிர்ந்துகொண்டார்.

இளைஞர் ஒருவர் அருள்பணியாளராக ஆக வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தார். அதனால் அவருடைய ஆயர் அவரைப் படிப்பதற்காக உரோமைக்கு அனுப்பினார். அவர் படித்து முடித்ததும் அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். சில வருடங்கள் தனது மறைமாவட்டத்தில் பணியாற்றினார். அவருடைய ஆயர் அவரை மேற்படிப்பிற்காக மீண்டும் உரோமைக்கு அனுப்பினார். அங்கு அவர் படித்துக்கொண்டிருந்த போது, தினமும் செபம் செய்வதற்காக அருகிலிருந்த ஆலயத்திற்குச் செல்வது வழக்கம். அந்த ஆலய வாசலில் பிச்சைக்காரர்கள் குழு யாசகம் கேட்டு அமர்ந்திருந்தனர். அவர்களில் ஒருவரைக் கண்டதும், ஏதோ விவரிக்க முடியாத ஒருவிதமான சங்கடம் அந்த அருள்பணியாளருக்கு ஏற்பட்டது.

அவர் அந்தப் பிச்சைக்காரரிடம் சென்று, “உங்களை எனக்குத் தெரியும். நாம் இருவரும் சேர்ந்து தானே குருமடத்தில் படித்தோம் என்று கேட்டார். அவர், ‘ஆமாம் என்று கூறியதோடு “நானும் உங்களுடன் உரோமையில் படித்தேன், திருநிலைப்படுத்தப்பட்டேன் என்று சோகத்துடன் தெரிவித்தார். திகைத்துப்போன அருள்பணியாளர், “உங்களுக்கு என்னதான் நடந்தது?” என்று கேட்டார். அதற்கு அவர், “என் வாழ்க்கையில் ஒன்றன்பின் ஒன்றாகப் பல நெருக்கடிகளைச் சந்தித்தேன். இறுதியில் அருள்பணியாளர் பணியைத் துறந்துவிட்டேன். அருள்பணியாளர் பொறுப்பு என்னிடமிருந்து பறிக்கப்பட்டது. நான் எல்லாவற்றையும் இழந்து, பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டேன் என்று கூறினார். அந்த அருள்பணியாளரால் அந்தப் பிச்சைக்காரரை மறக்கமுடியவில்லை. அவருக்காகத் தொடர்ந்து செபம் செய்தார். அவர் படிப்புப் பயிற்சி முடிவுக்கு வந்துகொண்டிருந்தது.

மாணவர்கள் அனைவரும் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களிடமிருந்து தனிப்பட்ட ஆசிர்வாதங்களைப் பெற அழைக்கப்பட்டனர். அவரிடம் தனிப்பட்ட முறையில் பேச அவர்களுக்கு அனுமதி இல்லை. ஆனால், இந்த அருள்பணியாளர் ஆசிர்வாதம் பெறுவதற்காக மண்டியிட்டபோது, மனம் முழுவதும் அந்தப் பிச்சைக்காரரைப் பற்றியே நிறைந்திருந்தது. அதனால் அவர் திடீரென்று, “புனித தந்தையே, உரோமையில் ஓர் ஆலயத்திற்கு வெளியே பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் ஒருவருக்காக இறைவேண்டல் செய்யுங்கள். அவர் ஓர் அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டவர்; ஆனால், பணியைத் துறந்துவிட்டார். அவருடைய அருள்பணிப் பொறுப்பும் நீக்கப்பட்டுவிட்டது என்று கூறி விட்டார்.

கோபமடைந்த உதவியாளர்கள் அவரை அவசரமாக அங்கிருந்து அப்புறப்படுத்தியதால், அவர் பேசி முடிப்பதற்குக்கூட நேரம் கிடைக்கவில்லை.

சில நாள்களுக்குப் பிறகு வத்திக்கானைச் சேர்ந்த பணியாளர்கள் அந்த அருள்பணியாளரைத் தொலைப்பேசியில் தொடர்புகொண்டனர். அவரும், அந்தப் பிச்சைக்காரரும், அதாவது மேனாள் அருள்பணியாளரும் திருத்தந்தையுடன் இரவு உணவு உண்ண அழைக்கப்பட்டிருப்பதாக அவர்கள் அருள்பணியாளரிடம் தெரிவித்தனர். உற்சாகமும் ஆவலும் அடைந்த அவர், தன் வகுப்புத் தோழரைக் கடைசியாகப் பார்த்த ஆலயத்திற்கு விரைந்தார். அங்கே சில பிச்சைக்காரர்கள் மட்டுமே இருந்தனர். அவருடைய மேனாள் வகுப்புத் தோழரும் அந்தச் சிலரில் ஒருவராக இருந்தார்.

இவர் அந்த மனிதரை அணுகி, “நான் திருத்தந்தையைச் சந்தித்தேன்; அவர் உங்களுக்காகச் செபிப்பதாகக் கூறினார். அது மட்டுமல்ல, அவர் நம்மை இரவு உணவிற்காகத் தனது தனிப்பட்ட இல்லத்திற்கு அழைத்துள்ளார் என்றார்.

நடக்காத காரியம். என்னைப் பாருங்கள்... நான் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறேன். நான் நீண்ட காலமாகக் குளிக்கவில்லை. என் உடைகளும் அழுக்கான நிலையில் இருக்கின்றன. இந்த நிலையில் அவரை நான் எப்படிச் சந்திக்க முடியும்?” என்று கேட்டார்.

சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்த அருள்பணியாளர், “நான் உங்களுக்காக ஓர் அறையை ஏற்பாடு செய்திருக்கிறேன். அங்கே நீங்கள் குளித்து சவரம் செய்துகொள்ளலாம். உங்களுக்குப் பொருந்தக்கூடிய உடைகளும் என்னிடம் உள்ளன என்றார்.

அந்தப் பிச்சைக்கார அருள்பணியாளர் ஒப்புக்கொண்டார். பின்னர் அவர்கள் திருத்தந்தையுடன் இரவு உணவு உண்ணப் புறப்பட்டனர்.

இருவரும் புனித பீட்டர் தேவாலயத்தின் பெரிய வாயில்கள் வழியாக உள்ளே நுழைந்தனர். அங்குத் திருத்தந்தையின் போலந்து நாட்டைச் சார்ந்த செயலாளரான மான்சிக்னோர் டிசிவிஸ் அவர்களை வரவேற்றார். அவர் அவர்களை உணவு அறைக்கு அழைத்துச் சென்றார். அங்குத் திருத்தந்தை அவர்களுக்காகக் காத்திருந்தார். அறிமுகங்களுக்குப் பிறகு, அவர்கள் ஓர் அருமையான உணவை உண்ண அமர்ந்தனர். உணவு முடிந்ததும், திருத்தந்தை தனது செயலாளருக்குச் சைகை காட்டினார். அவர் எழுந்து அருள்பணியாளரைத் தன்னைப் பின்தொடரும்படி சைகை காட்டிவிட்டு, அறையை விட்டு வெளியேறினார். பிச்சைக்காரரான அருள்பணியாளரும் திருத்தந்தையும் தனிமையில் உரையாடினர்.

சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு திருத்தந்தை அவர்களை மீண்டும் உள்ளே அழைத்தார். அவர்களுக்கிடையான உரையாடல் யாரும் அறியாத இரகசியமாகவே புதைக்கப்பட்டது. என்ன நடந்தது என்பது பற்றி எதுவும் பேசப்படவில்லை.

புனித பீட்டர் சதுக்கத்தைக் கடந்து சென்ற போது, மிகுந்த ஆர்வம் மேலிட அந்த அருள்பணியாளர், தான் அறைக்கு வெளியே இருந்தபோது ‘என்ன நடந்தது?’ என்று அந்தப் பிச்சைக்கார அருள்பணியாளரிடம் ஆவலுடன் கேட்டார்.

கண்ணீரோடு பேச ஆரம்பித்தார். “நாங்கள் தனியாக இருந்தபோது திருத்தந்தை என்னை நோக்கித் திரும்பி, ‘அருள்பணியாளரே, நான் உங்களிடம் பாவசங்கீர்த்தனம் செய்ய விரும்புகிறேன் என்றார். நான் பெரும் குழப்பத்துடனும் வேதனையுடனும் ‘என்னால் முடியாது; நான் இப்போது அருள்பணியாளராக இல்லை என்று பதிலளித்தேன். திருத்தந்தை என்னை அன்புடனும் கருணையுடனும் பார்த்தார். பிறகு அவர் தனது வலது கையை உயர்த்தி, விரலை அசைத்து, ‘ஒருமுறை அருள்பணியாளராக அருள்பொழிவு செய்யப்பட்டால் எப்போதும் அருள்பணியாளர்தான் என்று கூறினார். என்னுடைய பிரச்சினையைத் திருத்தந்தையுடன் பகிர்ந்துகொண்டேன். திருத்தந்தையிடம் பாவ சங்கீர்த்தனம் செய்தேன்.”

நீண்ட மௌனத்திற்குப் பிறகு அவர் தொடர்ந்தார்... “உரோமையின் ஆயர் மற்றும் கத்தோலிக்கத் திரு அவையின் தலைவர் என்ற முறையில் உங்கள் அருள்பணி தகுதிகளை உங்களுக்கு மீண்டும் வழங்குகிறேன் என்றார் திருத்தந்தை. நான் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதேன். மீண்டும் திருத்தந்தை என்னிடம் பாவசங்கீர்த்தனம் செய்ய கோரிக்கை வைத்தார். திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் என்னிடம் பாவசங்கீர்த்தனம் செய்தார். செபம் மற்றும் தியானத்திற்காகச் சிறிது நேரம் ஒதுக்கிய பிறகு திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் கூறினார்: ‘நீங்கள் இங்கிருந்து சென்றதும், நீங்கள் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த ஆலயத்திற்குச் சென்று, அந்தப் பங்குத்தந்தையைச் சந்திக்கவேண்டும்; அங்கு உங்களை உதவி பங்குத்தந்தையாக நியமனம் செய்யச் சொல்கிறேன். ஆலய வாசல்களில் பிச்சை கேட்கும் பிச்சைக்காரர்களைக் கவனிக்கும் சிறப்புப் பொறுப்பை நீங்கள் ஏற்கவேண்டும் என்றார்.”

அருள்பணியாளர் திரு அவைச் சட்டங்கள் மற்றும் தார்மிகக் கடமைகளின்படி வாழவேண்டும் என்பது உண்மை. அருள்பொழிவு அருள்சாதனம் நிரந்தரத் தன்மையுடையது என்பதற்காகத் தனிப்பட்ட விருப்பம் போல் வாழலாம் என்பதல்ல.

அருள்பணியாளர் எப்படி அருள்பணி நிலையிலிருந்து வெளியேறினார்? என்ன செய்தார்? என்பதும் இதில் அடங்கும். இரக்கமுள்ள தந்தையைப் போலவே ஞானத்துடனும் ஆன்மிகப் பொறுப்புடனும் திரு அவை எப்போதும் கதவைத் திறந்து வைத்திருக்கிறது; வைத்திருக்கவேண்டும். ஓர் அருள்பணியாளர் மனிதனைப் பிரதிநிதிப்படுத்துகிறார். அவரது தகுதி மனிதர்களுக்குச் செய்கிற நலமான பணியால்தான் அளவிடப்படுகிறது.