news
ஆன்மிகம்
எதிர்நோக்கின் சாட்சிகளாக...

எதிர்நோக்கு யாரைப் பற்றியது? எதைப் பற்றியது? எதிர்நோக்கு விசித்திரமானதா? எதிர்நோக்கு வீரியமானதா?  எதிர்நோக்கு விந்தையானதா? என அடுக்கடுக்கான தொடர் தேடல்களில் மலர்ந்த பதிவுகள் என் வாழ்வைப் புரட்டிப்போட்டன.

தோற்றுவிடுவோம்என்ற உணர்வோடு யாரும் போராட போர்க்களத்திற்குச்  செல்வதில்லை; வெற்றியை எதிர்நோக்கியே களம் இறங்குகின்றனர்.

தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்பவர்கள்இழந்துவிடுவோம்என்ற நம்பிக்கையில் பணத்தை முதலீடு செய்வதில்லை; இலாபம் ஈட்டுவோம் என்ற எதிர்நோக்கோடு பயணத்தைத்  தொடர்கின்றனர்

முப்போக விளைச்சலில் விருட்சங்களைக் காண முடியும் என்ற எதிர்நோக்கில்தான் இறுகிப்போன மண்ணை இலகுவாக்கி விதையைத் தூவுகிறான் விவசாயி.

கடவுளின் ஆசிரை இழந்த மனிதனை, ஏன் படைக்க வேண்டும்?’ என்று கடவுள் நினைப்பதில்லை. தமது சாயலாகப் படைக்கப்படும் ஒவ்வொரு மனிதனும் பூமியை அழகாக்குவான் என்ற எதிர்நோக்கோடுதான் கடவுள் மனிதனைப் படைக்கின்றார். ஆம், எதிர்நோக்கு வித்தியாசமானதுதான்; வீரியமானதுதான்; விவரமானதுதான்; விந்தையானதுதான்.

எதிர்நோக்கு ஒரு நற்செய்தி. மண்ணின் எதிர்நோக்கு விண்ணைச் சார்ந்தது. விதையின் எதிர்நோக்கு துளிரைச் சார்ந்தது. இசையின் எதிர்நோக்குப் புல்லாங்குழலின் துளையைச் சார்ந்தது.   தேனீக்களின் எதிர்நோக்குப் பூக்களைச் சார்ந்ததுபறவையின் உணவுக்கான எதிர்நோக்குப் பயணத்தைச் சார்ந்தது. இரவின் எதிர்நோக்கு விடியலைச் சார்ந்தது. கடல் பயணத்தின் எதிர்நோக்குக் கலங்கரை விளக்கைச் சார்ந்தது. முத்துக்குளிப்போரின் எதிர்நோக்குக் கடலின் ஆழத்தைச் சார்ந்தது. தேடலின் எதிர்நோக்கு மன உறுதியைச் சார்ந்தது. முயற்சியின் எதிர்நோக்கு  வெற்றியைச் சார்ந்தது.

ஒன்று மற்றொன்றை எதிர்நோக்கி இருக்கும்போது அங்கு நன்மைத்தன்மை உதயமாகிறது. எதிர்நோக்கு நற்செய்தியைக் கொடுக்கவே உருவெடுக்கிறது. எதிர்நோக்கிக் காத்திருந்தவர்கள் மீட்பின் நற்செய்தியைச் சுவைத்தார்கள். இயேசு நகர் நகராய், ஊர் ஊராய் சென்று இறையரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றி வந்தார் (லூக் 8:1). நற்செய்தி நேர்மறைச்சிந்தனையை, நம்பிக்கையின் ஆழத்தை, வாழ்வின் இலக்குத் தெளிவுகளை, மகிழ்ச்சியான அனுபவத்தை, முன்னேற்றத்தின் படிநிலையை, விடுதலைத் தாகத்தை வடிவமைக்கிறது.

பழைய ஏற்பாட்டில் சேமின் வழிமரபினராகிய தெராகுவின் மகன் ஆபிரகாம் தன் மனைவி சாரா மலடியாய் இருப்பதைக் கண்டு தனக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்று எதிர்நோக்கிக் காத்திருந்தார். சாராவிடம் அந்த எதிர்நோக்குத் தடைபட்டிருந்தது. இறைதூதர்கள் வழியாக இறையாசிர் வெளிப்படும்போதுநானோ மலடி! எனக்குப் பிள்ளைப்பேறா?” எனச் சிரிக்கிறாள் (தொநூ 18:13). ஆபிரகாம் தனது ஈர்ப்புசக்தியால் இறைநற்செய்தியைப் பெற்றுக் கொள்கிறார். “உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உன் வழியாக மண்ணுலகின் மக்கள் இனங்கள் அனைத்தும் ஆசிர் பெறும் (தொநூ 12:3) என்ற நற்செய்தி ஆபிரகாமின் மனநிலையில் வெளிப்படுகிறது. நல்ல மனநிலை நம்மை நன்மைக்கு இட்டுச் செல்கின்றது. நன்மைத்தனம் செயலுக்கு இட்டுச் செல்கின்றது. செயல் வெற்றிக்கு இட்டுச் செல்கின்றது. கடவுள் மனிதனைப் படைத்த நோக்கமே நற்செய்தியைப் பிறருக்கு விதைத்திடவே. வளர்ந்து வருகின்ற நாகரிகமும் அறிவியல் மாற்றங்களும் புதிய புதிய கண்டுபிடிப்புகளும் மக்களுக்கு நற்செய்தியைக் கொடுப்பதைவிட முரண்பாடான வாழ்க்கை முறைகளை, இயற்கையை அழிக்கும் செயற்கைத்தனத்தை, எதிர்மறை உணர்வுகளைக் கையாளும் சின்னத்திரை நாடகங்களை, வியாபார நோக்கத்தில் விளம்பரப்படுத்தப்படும் புதுப்புது விளம்பர யுக்திகளை, திரைக்குள் வந்து மறைந்து கோடிகளைச் சம்பாதித்துச் செல்லும் நடிகர் - நடிகைகளின் வாழ்க்கைப் பின்பற்றல்களைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை. இதனால் நற்செய்தியை வென்றெடுப்பது என்பது எட்டாக்கனியாகவே அமைந்துவிடுகிறது. நல்ல செய்திகள் வாழ்வை அழகுபடுத்தும் என்ற உண்மை சுடும் காலம் எப்போது வருமோ?

எதிர்நோக்கு ஒரு புதிய வாழ்வின் தொடக்கம். ஆர்ப்பரிக்கும் அலைகளில் அலைக்கழிக்கப்பட்ட மனங்களுக்குகரையைச் சேர்ந்துவிடமாட்டோமா?’ என்ற எதிர்நோக்கு அவர்களின் கண்களில் தெரியும். முரண்பட்ட வாழ்க்கையில் முடமாகிப் போனவர்களுக்கு, எழுந்து ஒளிவீச வேண்டும் என்ற எதிர்நோக்கு அவர்கள் நெஞ்சுறுதியில் தெரியும். வாழ்வா? சாவா? என்ற போராட்டத்திற்குள் உயிர் மூச்சைத் தொலைத்தவர்களுக்கு வாழ்ந்துவிட வேண்டும் என்ற எதிர்நோக்கு அவர்களின் நம்பிக்கையில் தெரியும். அடிமைத்தனத்திற்குச் சாவு மணி அடித்துச் சமாதியில் புதைக்க வேண்டும் என்ற எதிர்நோக்கு விடுதலைக் குரல் முழங்கும் போராளியின் போர்க்குரலில் தெரியும். இருட்டறைக்குள் வாழ்வைத் தொலைத்து  வாடும் மனங்களுக்கு வெளிச்சத்தைக் காண வேண்டும் என்ற எதிர்நோக்கு அவர்களின்   நம்பிக்கையில் தெரியும்.

எதிர்நோக்கு புதிய வாழ்வின் தொடக்கம். புதிய வாழ்வு நம்மைப் புதுமைக்கு இட்டுச் செல்கின்றது. பழையன கழியும்போது இனிமை பிறக்கிறது. கடந்தகாலக் கசப்பான அனுபவங்கள் மறைந்து எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையை அளிக்கிறது. இயல்புகளையும் திரிபுகளையும் மாற்றிக்கொள்ள வாய்ப்பைத் தருகிறது. சவால்களை எதிர்கொள்ள சக்தி தருகிறது. தொலைநோக்குக் கனவுகளுக்குப் பாதை அமைக்கிறது. எதிர்காலத்தைப் பற்றிய விழிப்புணர்வைத் தருகிறது.

வெற்றிக்காக எதிர்நோக்கிக் காத்திருத்தல் என்பது ஓர் இனிய கலை. கலைஞன் கவிதையை உருவாக்க வார்த்தைகளால் சொல் தொடுத்து, வாக்கியங்களைக் கோர்வையாக்கி, எதுகை மோனையுடன் அறப்பா தொடுத்துப் பாக்களால் பண்ணிசைத்துக் காத்திருக்கின்றான். அவனின் காத்திருத்தலில் கவிதை துள்ளிவரும் அருவியாக வாசிப்போரின் மனத்தைக் கொள்ளை கொள்கிறது. எதிர்நோக்கு என்பது காத்திருப்பது. என்ன வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் எப்போதும் நடக்கலாம்; எனது இலக்கு வெற்றியே! எனவே, எதற்கும் தயார் என்ற மனநிலையில் வாழ்வது.

இஸ்ரயேல் மக்களின் மீட்புக்கு மெசியா வருவார் எனப் பல பெண்கள் காத்திருந்தனர். ஆனால், அந்த மீட்புத்திட்டம் அன்னை மரியாவில் வெளிப்படுகின்றது. காத்திருக்கும்போது துணிவு பிறக்கின்றது தோல்விக்கான பாடங்களைக் கற்றுக்கொண்டு வெற்றிக்கான பாதைகளை வகுத்துக் கொடுக்கின்றது. “வெற்றி என்பது ஒரு தோல்வி அல்ல; மற்றொரு தோல்விக்கு உற்சாகத்தை இழக்காமல் நகரும் திறன்என்கிறார் வின்ஸ்டன் சர்ச்சில். நாலு வயதுவரை பேச முடியவில்லை. இவனால் பெரிய அளவில் சாதிக்க முடியாது என்று பள்ளியை விட்டு அனுப்பப்பட்ட ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சிறந்த இயற்பியலாளராக நோபல் பரிசு பெறுகிறார்.

தேர்ந்தெடுக்கும் இலக்கின்மீது ஆர்வமும் ஆளுமையைப் பிரதிபலிக்கும் எண்ணமும் மகிழ்ச்சியும் உற்சாகமும் நல்ல எண்ணங்களும் வெற்றிக்கான படிக்கட்டுகளாக அமைகின்றன. “எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் என்று நினைக்கும்போது ஒன்றை மட்டும் மறக்காதீர்கள்! எதிர்காலம் என்ற ஒன்று உண்டுஎன்கிறார் கிளப்டை. தாமஸ் ஆல்வா எடிசன் பலமுறை தோல்வி அடைந்துவிட்ட பின்புதான் மின்சாரத்தைக் கண்டுபிடிக்கின்றார். கடந்த காலத்தில் வாழ்ந்து, எதிர்காலத்தை எதிர்நோக்குவதைவிட நிகழ்காலத்தில் கவனம் செலுத்தி இலக்குகளை அடையப் பாடுபடும்பொழுது வெற்றி நிச்சயம் உண்டு.

எதிர்நோக்கு என்னும் நெருப்பை நாம் தொடர்ந்து பற்றி எரியச் செய்ய வேண்டும் என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ். அன்றாட வாழ்வில் முரண்பட்ட வாழ்க்கையில் முட்டி மோதிக்கொண்டிருக்கும் நமக்கு நமது எதிர்காலத்தைப் பற்றிய எதிர்நோக்குப் பல இருக்கும். ‘கனவு காணுங்கள்என்ற அப்துல்கலாம் வார்த்தைகளுக்கு ஏற்ப எதிர்காலத்தைப் பற்றிய கனவுகள் ஏராளமாக இருக்கும். “உங்கள் நம்பிக்கை செயல்வடிவம் பெறாவிட்டால்  தன்னிலே உயிரற்றதாய் இருக்கும் (யாக் 2:17) என்ற பவுலடியாரின் வார்த்தைகளுக்கு ஏற்ப, நம் எதிர்நோக்குச் செயல்பாடுகளுக்கு இட்டுச் செல்ல வேண்டும். ‘செயல்களில்லா விசுவாசம் செத்த விசுவாசம்என்பதற்கேற்ப தொலைநோக்குப் பார்வையில் எதிர்நோக்கு ஒளிர வேண்டும்.

உலக அதிசயங்களை வியந்து வியந்து புதிய புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்துக் கொண்டிருக்கும் அறிவியல் அறிஞர்கள் தம் புதுமைகளை, கண்டுபிடிப்புகளை ஒருபோதும் நிறுத்துவதே இல்லை; ‘புது உலகு படைப்போம்என்ற எதிர்நோக்கோடு பயணத்தைத் தொடர்கின்றனர். நாமும் புனிதப் பயணங்களை நம் வாழ்வில் தொடர்வோம்.

news
ஆன்மிகம்
அடைக்கப்பட்டோரின் அழுகுரல் (நீங்கா நினைவுகள் – 1)

நீதி அப்பொழுதே கிடைத்தால் மட்டுமே அது நீதி; அந்த நீதி சில நிமிடங்களைக் கடந்தால், அது அநீதியின் குரலாக மாறிவிடுகிறது.

காலமும் சூழலும், இயற்கையும் இயலும், உண்மையும் பொய்யும், தேடலும் தேவனும், அறிவியலும் அரசியலும் மாறிவருகின்ற இன்றைய காலச்சூழலில் நீதி, நேர்மை, உண்மை, இரக்கம், அரவணைப்பு என்பதனைத் தேடுவது மனித வாழ்க்கையில் காண இயலாத பொக்கிஷமாக மாறிக்கொண்டிருக்கிறது.

அநீதிக்காகக் குரல் கொடுத்த நீதிமான்கள் ஏராளம் ஏராளம்! உண்மைக்காகப் போராடிய புண்ணியவான்கள் ஏராளம் ஏராளம்!

யார் யார் கண்டுகொள்ள முடியும்? அடைக்கப்பட்ட மனிதனின் கண்ணீரையையும் கவலையையும். சிறைக்குச் செல்பவர்கள் எல்லாம் உண்மைக்குப் புறம்பாக வாழ்ந்தவர்களும் அல்ல; நேர்மைக்காக வந்தவர்களும் அல்ல; பல பேர் தவறுக்குத் தண்டனையாக வந்தவர்கள், சில பேர் பிறரைக் காக்கத் தானாக வந்தவர்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு வரலாறு; வந்த கதை கேட்டால் பலருக்குக் கண்ணீரும், சொந்தக் கதை கேட்டால் சிலருக்குக் கொடுமையும்தான் நடந்து கொண்டிருக்கிறது. அழுகுரல்... அழுகுரல்... சிறையில் அடைக்கப்பட்ட பலரின் அழுகுரல்!

குடும்பத்திற்காக, உறவுகளுக்காக, நண்பனுக்காக, அரசியலுக்காக, அமைதிக்காக, மற்றவருக்காக, தனக்காக என்று பல்வேறு சூழ்நிலையில் அடைக்கப்பட்ட மனிதர்களின் அழுகுரல் யார் காதுகளுக்கும் கேட்காது. அடைக்கப்பட்டவரின் அழுகுரலுக்குச் செவிகொடுப்பவர்கள் சிலர். அதிலும் பல அழுகுரலுக்கு அமைதி அளித்தவர் நமது திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தை அவர்கள் நற்செய்தியின் விழுமியங்களானநான் சிறையில் இருந்தேன். என்னைச் சந்திக்க வந்தீர்கள்என்பதனைத் தன் வாழ்வாக வாழ்ந்தவர். சிறையில் இருப்பவர்களைச் சந்திப்பது, அவர்களுக்காகத் திருப்பலி நிறைவேற்றுவது, அவர்களின் காலடிகளைக் கழுவுவது போன்ற பல்வேறு செயல்களை அவர்களுக்காகச் செய்து அழுகையை அரவணைப்பில் மாற்றிக் கொண்டிருந்தவர்.

மக்கள் குரல்என்ற இதழுக்குக் கொடுத்த ஒரு பேட்டியிலே திருத்தந்தை இவ்வாறு கூறுகிறார். “நான் சிறைகளுக்குச் செல்கின்ற வேளையில் என் உள்ளம் உருகும். எனது மூன்று பெரிய வியாழன் கொண்டாட்டங்களில் இரண்டினைச் சிறைகளிலே காலடிகளைக் கழுவும் நிகழ்ச்சிகளை நடத்தினேன். இத்தாலியிலே ஒரு சிறைக்குச் சென்று சிறைக்கைதிகளோடு உணவருந்தி உரையாடிக் கொண்டிருந்தபோது திடீரென ஓர் எண்ணம் எனது தலையில் உதித்தது. இங்கே நான் ஒரு கைதியாக இருந்தால்என்ற நினைப்பு. யாரும் குற்றம் செய்ய மாட்டோம், சிறையிலே அடைக்கப்பட மாட்டோம் என்ற நிச்சயம் இல்லை. நான் இங்கு வராமல் கடவுள் எப்படிக் காப்பாற்றினார்? என்று கடவுளிடம் கேட்பேன். அவர்களுக்காக நான் வருத்தமுறுகிறேன். நான் சிறையில் இல்லை என்பதற்காக நான் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். பெரும் குற்றங்களிலிருந்து என்னைக் காப்பாற்றியதுபோல அவர்கள் காப்பாற்றப்படவில்லை. அந்த நினைப்பு என்னை உள்ளத்தில் அழவைக்கிறது. அந்த உணர்வு அழுத்தமாகவே உள்ளது என்று பதிவு செய்துள்ளார்.

நீதியரசர்களின் நீதி சாட்சிகளையும், ஆதாரங்களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. ஆனால், அடைக்கப்பட்ட மனிதனின் அழுகுரல் எதையும் ஈடு செய்ய முடியாது. வார்த்தைகளும் வசனங்களும் மாறி மாறி பேசினாலும், நீதியும் நேர்மையும் வெளிப்படையாகக் காண்பிக்கப்பட்டாலும், அன்பும் அமைதியும் உறவுகளில் திளைத்தாலும் காரணமும் சூழ்நிலையும், தன்னிடம் உள்ள தவறான குணத்தால்  அடைக்கப்பட்டு மனிதனின் அழுகுரலின் வேதனை; பார்ப்பவருக்கு அல்ல, அதை உணர்ந்தவர்களுக்கு...!

news
ஆன்மிகம்
மீட்பின் வரலாற்றில் பெண்களின் தவிர்க்க முடியாத பங்களிப்பு - திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி : 15

1. பழைய ஏற்பாடு இஸ்ரயேலின் போராட்டத்திலும் வெற்றியிலும் மற்றும் அதன் மீட்பிலும் கடவுளின் ஆவியாரால் தூண்டப்பட்டுச் செயலாற்றிய சில  பெண்களைப்  படம்பிடித்துக் காட்டுகின்றது. மக்களுடைய வரலாற்றில் அவர்களின் உடனிருப்பானது விளிம்புநிலையிலோ அல்லது செயலற்றதொன்றாகவோ இல்லை; மாறாக, மீட்பு வரலாற்றின் உண்மையான கதாநாயகிகளாகவே தோன்றுகின்றார்கள். இதோ சில குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டுகள்:

செங்கடலைக் கடந்த பிறகு அந்த இறுதி நிகழ்வானது ஒரு விழாக் கொண்டாட்டமாக மாறுவதற்கான முயற்சியை ஒரு பெண்தான் முன்னெடுத்தாள் என்பதைப் புனித நூலானது சுட்டிக்காட்டுகின்றது: “இறைவாக்கினரும் ஆரோனின் தங்கையுமான மிரியாம், கஞ்சிரா ஒன்றைக் கையில் எடுத்துக்கொண்டாள். பெண்டிர் அனைவரும் கஞ்சிரா கொட்டிக்கொண்டும் நடனமாடிக்கொண்டும் அவள் பின் சென்றனர். அப்போது மிரியாம், ‘ஆண்டவருக்குப் புகழ்பாடுங்கள்; ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றிபெற்றார்; குதிரையையும் குதிரை வீரனையும் கடலுக்குள் அமிழ்த்திவிட்டார்என்று பல்லவியாகப் பாடினாள் (விப 15:20-21). ஒரு விழாக் கொண்டாட்ட சூழலில் பெண்ணை முன்னிருத்திக் கூறுவதென்பது பெண்ணினுடைய பங்களிப்பின் முக்கியத்துவத்தை மட்டும் சுட்டிக்காட்டாமல், கடவுளைப் புகழ்வதிலும் அவருக்கு நன்றி செலுத்துவதிலும் அவளுக்கிருந்த அவளின் தனித்திறமையையும் சுட்டிக்காட்டுகின்றது.

பெண்களின் நேர்மறையான பங்களிப்பு

2. நீதித்தலைவர்களின் புத்தகம் எழுதப்பட்ட காலத்தில் இறைவாக்கினரான தெபோராவின் செயலானது இன்னும் முக்கியமானதொன்றாக இருக்கின்றது. படைத் தளபதியிடமும், அவரின் வீரர்களிடமும் சென்று அவர்களை ஒன்றிணைப்பதற்கான உத்தரவைத் தந்த பிறகு அவர்களுடனேயே இருந்து யாவேல் என்றழைக்கப்படும் மற்றொரு பெண்ணானவள் அவர்களின் எதிரிகளை வீழ்த்துவாள் என்று முன்னறிவித்து இஸ்ரயேலர்களுடைய படையின் வெற்றியை உறுதி செய்கின்றாள்.

மிகப்பெரும் அந்த வெற்றியைக் கொண்டாடுவதற்காகத் தெபோராவும் யாவேலினுடைய செயலைப் புகழ்ந்து, மிக நீளமானதொரு பாடலைப் பாடுகின்றாள்: “கேனியனான கெபேரின் மனைவி யாவேல்! நீ பெண்களுள் பேறுபெற்றவள்! கூடாரம்வாழ் பெண்களுள் நீ பேறுபெற்றவள்!” (நீதி 5:24). புதிய ஏற்பாட்டில் இந்தப் புகழ்ச்சியானது மரியா எலிசபெத்தைச் சந்திக்கச் சென்றபொழுது எலிசபெத் மரியாவை வாழ்த்திக்கூறும் அந்தப் பாடலில் எதிரொலிக்கிறது: “பெண்களுக்குள் நீர் ஆசிபெற்றவர்...” (லூக் 1:42).

தெபோரா மற்றும் யாவேல் போன்ற பெண்களை வெளிச்சமிட்டுக் காட்டுவதன் வழியாக மக்களின் மீட்பில் பெண்களுடைய குறிப்பிடத்தக்க பங்கானது யோசியா அரசரின் காலத்தில் வாழ்ந்த குல்தா என்ற மற்றோர் இறைவாக்கினரின் வரலாற்றிலும் எடுத்துக்காட்டப்படுகின்றதுஇல்க்கியா என்ற குருவினால் கேள்வி கேட்கப்பட்டு, கடவுளுடைய தண்டனைக்குப் பயந்து அரசருக்கு மன்னிப்பு வழங்கப்படும் என்று அறிவித்து அவள் இறைவாக்குரைத்தாள். இவ்வாறு குல்தா இரக்கம் மற்றும் அமைதியின் தூதுவராக மாறுகின்றார் (2அர 22:14-20).

3. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றிற்கான நேர்மறையான பங்களிப்பை உயர்த்திப் பேசுகின்ற யூதித்து மற்றும் எஸ்தர் புத்தகமானது மிகக் கொடூரமானதொரு கலாச்சாரப் பின்னணியில் இஸ்ரயேல் மக்களின் வெற்றி மற்றும் மீட்பைப் பெற்றுத்தந்த இரண்டு பெண்களைப் பற்றிப் பேசுகின்றன.

குறிப்பாக, யூதித்து புத்தகமானது இஸ்ரயேலை வெல்வதற்காக நெபுகத்னேசரால் அனுப்பப்பட்ட மிகப் பயங்கரமானதொரு படையைப் பற்றிப் பேசுகின்றது. பெத்தூலியா நகரைக் கைப்பற்றுவதற்காக எதிரிகள் தயாராக இருந்த நிலையில், எந்தவோர் எதிர்ப்பும் பயனளிக்காது என்றறிந்து, ஒலோபெரினால் வழிநடத்தப்பட்ட அதனுடைய மக்கள் விரக்தியில் அவர்களின் அரசரைச் சரணடையுமாறு கேட்டுக்கொள்கிறார்கள். அவர்களுக்கு உடனடியாக யாருடைய உதவியும் இல்லாத நிலையில், அந்த நகரத்துப் பெரியவர்கள் நகரத்தை எதிரிகளிடம் ஒப்படைக்கத் தயாராக இருந்த நிலையில், ஆண்டவரிடமிருந்து வரவிருக்கின்ற மீட்பிற்கான  அவளின் முழுமையான நம்பிக்கையை அறிவித்து அவர்களின் நம்பிக்கையின்மைக்காக யூதித்தால் அவர்கள் கண்டனம் செய்யப்படுகிறார்கள்.

அவளின் தாழ்ச்சி மிகுந்த செபம் மற்றும் என்றும் கற்புடன் நிலைத்திருப்பதற்கான அவளுடைய எண்ணத்தினால் ஆண்டவரை நோக்கி எழுப்பப்பட்ட மிக நீண்டதொரு விண்ணப்பத் திற்குப் பிறகு ஆண்டவர் மீதான நம்பிக்கையின் அடையாளமாக இருந்த அவள் அகங்காரம், விக்கிரக வணக்கம் மற்றும் ஒழுக்கமற்ற எதிரித்தலைவனாகிய ஒலோபெரினிடம் தனித்துவிடப்பட்ட நிலையில் அவனைத் தாக்குவதற்குமுன் யூதித்து, யாவே கடவுளை நோக்கி இவ்வாறு கூறி செபிக்கின்றாள்: “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே, எனக்கு இன்று வலிமை அளித்தருளும் (யூதி 13:7). பிறகு ஒலோபெரினின் வாளை எடுத்து அவனின் தலையைத் துண்டிக்கின்றாள்.

தாவீது மற்றும் கோலியாத்திற்கிடையேயான நிகழ்வில் நடந்ததைப் போன்றே இங்கும் ஆண்டவர் பலவீனமான ஒருவர் பலமிக்கவரை வெற்றிகொள்ளச் செய்கின்றார். எவ்வாறாயினும் இந்த நிகழ்விலும் வெற்றியைப் பெற்றுத்தந்தவள் ஒரு பெண்தான். மக்களை ஆள்பவர்களின் கோழைத் தனம் மற்றும் நம்பிக்கையின்மையினால் ஆட்கொள்ளப்படாமல் யூதித்து ஒலோபெரினிடம் சென்று அவனைக் கொன்று தலைமைக் குரு மற்றும் எருசலேம் பெரியவர்களின் நன்றி மற்றும் பாராட்டைப் பெறுகின்றாள்.

எதிரிகளைக் கொன்ற யூதித்தை நோக்கி இந்த நகரத்துப் பெரியவர்கள் இவ்வாறு புகழ்ந்தார்கள்: “நீரே எருசலேமின் மேன்மை; நீரே இஸ்ரயேலின் பெரும் மாட்சி; நம் இனத்தாரின் உயர் பெருமை நீரே! இவற்றையெல்லாம் உம் கையாலேயே ஆற்றியிருக்கிறீர்; இஸ்ரயேலுக்கு நன்மைகள் செய்திருக்கிறீர். இவை குறித்து கடவுள் மகிழ்ச்சி அடைந்துள்ளார். எல்லாம் வல்ல ஆண்டவர் எக்காலத்துக்கும் உமக்கு ஆசி வழங்குவாராக!” (யூதி 15:9-10).

4. எஸ்தர் புத்தகத்தில் கூறப்பட்டிருக்கும் நிகழ்வுகள் யூதர்களுக்கு மற்றொரு மிகவும் கடினமானதொரு சூழ்நிலையில் நிகழ்ந்தவைகளாகும். பாரசீக அரசில் ஆமான் அரசனின் மேற்பார்வையாளர் யூதர்களை அழித்தொழிக்க ஆணையிடுகின்றான். இந்த ஆபத்தைத் தவிர்க்க சூசான் நகரத்துக் கோட்டையில் வாழ்ந்த மொர்தக்காய் என்பவர், அரசி என்கின்ற பட்டத்தைப் பெற்று அரசருடைய அரண்மனையில் வாழ்ந்து வந்த அவரின் மருமகளான எஸ்தரிடம் செல்கின்றார். நடைமுறையில் இருந்த சட்டத்திற்கு எதிராக மரண தண்டனைக்கான ஆபத்து இருந்தபொழுதும் அழைப்பாணையின்றி அரசனிடம் சென்று அழித்தொழிக்கும் ஆணையை இரத்துச் செய்வதற்கான உத்தரவைப் பெறுகின்றாள். ஆமான் தூக்கிலிடப்பட்டு மொர்தக்காய் ஆட்சிக்கு வந்தபின் யூதர்கள் அச்சுறுத்தலிலிருந்து விடுவிக்கப்படுகின்றார்கள். இவ்வாறு அவர்கள் தங்கள் எதிரிகளை விடவும் மேன்மையானதொரு நிலையை அடைகின்றார்கள்

யூதித்தும் எஸ்தரும் தங்களுடைய மக்களின் மீட்பிற்கான வெற்றியைப் பெறுவதற்காக அவர்களின் வாழ்வை இழக்கவும் துணிகின்றார்கள். இருப்பினும், இந்த இரண்டு  தலையீடுகளும் ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுபட்டவைகள்; எஸ்தர் தங்களின் எதிரியைக் கொல்லாமலேஇடையீட்டாளர்என்கின்ற பங்கைச் செய்து அழிவு பற்றிய பயம் காட்டி அச்சுறுத்தப்பட்ட அந்த மக்களுக்காகப் பரிந்துபேசுகின்றாள்.

மனித மீட்பில் மரியாவின் பங்கைத் தூய ஆவியார் வடிவமைக்கின்றார்

5. இத்தகைய பரிந்துபேசுகின்ற பங்கானது பின்னாளில் முதல் சாமுவேல் புத்தகத்தில் வரும் மற்றொரு பெண்ணான நாபாலின் மனைவி அபிகாயிலுக்கும் கூறப்படுகின்றது. இங்கும் முன்பு போன்று அவளுடைய பரிந்துரை வழியாகவே மீட்பானது அவர்களுக்குக் கிடைத்தது.

நாபாலின் குடும்பத்தை அழிக்க முடிவெடுத்திருந்த தாவீதை அவள் சந்திக்கச் சென்று, அவளுடைய கணவரின் பாவங்களுக்காக மன்னிப்புக் கேட்கின்றாள். இவ்வாறு அவளின் குடும்பத்தை அழிவிலிருந்து மீட்டெடுக்கின்றாள் (1சாமு 25).

இந்நிகழ்வுகளிலிருந்து பழைய ஏற்பாட்டு மரபும் குறிப்பாக, கிறிஸ்துவின் வருகையையொட்டிய பழைய ஏற்பாட்டுப் பகுதிகளும் இஸ்ரயேலினுடைய மீட்பில் பெண்களின் தீர்க்கமான செயலை வலியுறுத்துகின்றன.

இவ்வாறு பழைய ஏற்பாட்டுப் பெண்களோடு தொடர்புடைய நிகழ்வுகள் வழியாகத் தூய ஆவியானவர் மனுக்குலம் அனைத்திற்குமான மீட்புப் பணியில் மரியாவின் பணியை என்றுமில்லாத மிகத் துல்லியமான பண்புகளோடு வடிவமைக்கின்றார்.

மூலம்: John Paul II, Woman’s indispensable role in salvation history, in ‘L’Osservatore Romano’, Weekly Edition in English, 3 April 1996, p. 3.

news
ஆன்மிகம்
பிறப்புநிலை பாவம் ஒரு மீள்பார்வை (அருளடையாளங்கள்: உளவியல் ஆன்மிகத் தொடர் – 16)

(தந்தை அன்புச் செல்வன், தாய் மார்த்தா, மகன் அகஸ்டின், மகள் கிறிஸ்டினா இவர்களோடு அருள்பணியாளர் தாமஸின் உரையாடல் தொடர்கிறது)

கிறிஸ்டினா: “தந்தையே, சென்றமுறை நாம் உரையாடியபோது, புறம்நோக்கிய மனம் தன் எதிர்பார்ப்பு மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப, சுற்றியுள்ளவற்றை அணுகி, அதன் அடிப்படையில் தரம் பிரிப்பதன் காரணமாக ஆணவம், கன்மம், மாயை ஆகிய தீமைகள் உருவாவதாகக் கூறினீர்கள். அது குறித்து இன்னும் கொஞ்சம் தெளிவாகக் கூற முடியுமா?”

அருள்பணி: “சுற்றியுள்ளவற்றைத் தனக்கேற்றார்போல மனம் தரம் பிரிப்பதை நாம் இரண்டாகப் பிரிக்கலாம். முதலாவதாக, வாழ்க்கை நிகழ்வுகளைத் தரம் பிரித்து மதிப்பீடு செய்கிறது.  இரண்டாவதாக, சுற்றியுள்ள மனிதர்களைத் தரம் பிரித்து மதிப்பீடு செய்கிறது.”

மார்த்தா: “வாழ்க்கை நிகழ்வுகளை மனம் தரம் பிரித்து மதிப்பீடு செய்கிறதா? எப்படித் தந்தையே?”

அருள்பணி: “நம் வாழ்வில் நாள்தோறும் ஏராளமான நிகழ்வுகள் நடந்துகொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு நிகழ்விற்கு என்று தனித்தன்மையும் உண்டு, நோக்கமும் உண்டு. இந்த நிகழ்வுகள் அனைத்தின் வழியாகவும் கடவுள் நம் வாழ்க்கைச் சக்கரத்தை நகர்த்தி, நம்மை நாமே உயர்த்திக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார். எனினும், நடக்கின்ற எல்லா நிகழ்வுகளையும் நாம் சமநிலை மனநிலையோடு அணுகி வாழ்வை முழுமையாக வாழ்வதில்லை என்பது உண்மை. நமக்குப் பிடித்த நிகழ்வுகளை ‘இன்பமானவை என்று முத்திரை குத்தி, அவை நிலையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். நமக்குப் பிடிக்காதவற்றை ‘துன்பமானவை என்று முத்திரை குத்தி அவற்றைத் தவிர்க்க முனைகின்றோம். நம் எதிர்பார்ப்பிற்கு ஏற்றார்போல அமைகின்ற நிகழ்வுகளை ‘நல்லவை என்றும், ‘உயர்ந்தவை என்றும் சொல்லி, அவற்றின் மீது பற்றுக்கொள்கிறோம். நம் எதிர்பார்ப்பிற்கு மா(ற்)றாக இருக்கின்ற நிகழ்வுகளை ‘கெட்டவை என்றும், ‘தாழ்ந்தவை என்றும் முத்திரை குத்தி, அவற்றின்மீது வெறுப்புகொள்கின்றோம்.”

அன்புச் செல்வன்: “ஆக, இன்பம்-துன்பம், பிடித்தவை-பிடிக்காதவை, உயர்ந்தவை-தாழ்ந்தவை போன்ற பிரிவினைகள் நிகழ்வுகளைச் சார்ந்தவை அல்ல; மாறாக, மனத்தைச் சார்ந்தவை என்று சொல்கிறீர்கள், அப்படித்தானே?”

அருள்பணி: “ஆம்! நம் மனம் இவ்வாறு பிரித்து, ஒன்றைத் தேர்ந்தெடுத்து, மற்றொன்றைத் தள்ளி வைக்க முயற்சி செய்வதன் காரணமாக, நம்மால் வாழ்வை அதன் முழுமைத்தன்மையோடு வாழ முடிவதில்லை. நமக்குப் பிடித்த காரியங்கள் நடைபெறுகின்றபோது உற்சாகமாக இருக்கும் நாம், நமக்குப் பிடிக்காத காரியங்கள் நடைபெறுகின்றபோது தோற்றுப்போனதாக நினைத்துச் சோர்ந்துபோய் விடுகின்றோம். அதாவது, வாழ்வை அரைகுறையாக வாழ ஆரம்பிக்கின்றோம். வாழ்க்கை நிகழ்வுகளில் பாதியைப் பற்றிக்கொண்டு, மீதியை நிராகரிக்கும்போது, வாழ்வே அரைகுறையானதாக மாறிவிடுகிறது. இயேசுவைப்போல ஒவ்வொரு வினாடியும் முழுமனிதர்களாக நம்மால் வாழ முடிவதில்லை.”

அன்புச் செல்வன்: “அது மட்டுமல்ல தந்தையே, நமக்குப் பிடித்த காரியங்களை இன்னும் அதிகமாக்கிக்கொள்வதே மகிழ்ச்சி என்று எண்ணி, அவற்றின் பின்னால் நாம் இன்னும் அதிமாக ஓட ஆரம்பிக்கின்றோம். எனினும், நாம் விரும்பித் தேடி ஓடுபவை பெரும்பாலும் நமக்குக் கிடைப்பதில்லை என்பது உண்மை. அதேபோல நமக்குப் பிடிக்காத காரியங்களைத் தள்ளிவைத்தால்தான் நிம்மதி கிடைக்கும் என்று எண்ணி, அவற்றிற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றோம். ஆனால், அதில் நமக்குப் பெரும்பாலும் வெற்றி கிடைப்பதில்லை என்பதுதான் உண்மை. எனவே, ஒட்டுமொத்த வாழ்வே மகிழ்ச்சியற்ற ஒன்றாகத் தென்படுகிறது.”

அகஸ்டின்: “அடேங்கப்பா! மனத்தின் தரம் பிரித்தல் ஒட்டுமொத்த வாழ்வையே எதிர்மறையாகப் பாதிக்கிறதா?நம் மனம் மனிதர்களையும் தரம் பிரிக்கிறது என்று சொன்னீர்களே! எப்படி?”

அருள்பணி: “நமது மனம் வாழ்க்கை நிகழ்வுகளையும் சுற்றியுள்ள மனிதர்களையும் அவர்கள் செய்யும் செயல்களையும் தனது விருப்பு, வெறுப்பு மற்றும் எதிர்பார்ப்புகள் அடிப்படையிலேயே அணுகுகின்றது. மனம் தன் விருப்பு-வெறுப்புகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் ஏற்ப நடந்துகொள்ளும் மனிதர்களை ஒரு குழுவாகவும், அவ்வாறு இல்லாதவர்களை மற்றொரு குழுவாகவும் பிரிக்கிறது. மனத்தின் தூண்டுதலாலேயே நாம் நமக்கேற்ப நடந்துகொள்பவர்களை ‘நல்லவர்கள் என்றும், ‘நண்பர்கள் என்றும் கருதுகிறோம். நமக்கேற்ப நடந்துகொள்ளாதவர்களை ‘கெட்டவர்கள் என்றும், ‘எதிரிகள் என்றும் கருதுகிறோம். நல்லவர்கள்-கெட்டவர்கள் என்ற நம் பிரிவினை அவர்களது செயல்பாடுகளை வைத்து வருகின்றது என்று எண்ணுகின்றோம். அது உண்மையல்ல! நம் விருப்பு-வெறுப்புகளிலிருந்து வருகிறது. உதாரணமாக, ஒருவர் நல்ல காரியத்தைச் செய்தாலும், அது நமக்குப் பாதகமாக இருந்தால், அவரைக் கெட்டவர் என்று முத்திரை குத்தத் தயங்கமாட்டோம். அதேபோல, ஒருவர் எதிர்மறையான காரியம் செய்தாலும், அதனால் நமக்கு நன்மை விளையுமானால், அவரோடு உறவை ஏற்படுத்திக் கொள்கிறோம். இவ்வாறு சக மனிதர்களை நம் மனம் தரம் பிரிப்பதன் காரணமாக, அவர்களை அவர்களது நிலையில் வைத்து நம்மால் பார்க்க முடிவதில்லை. நம்மால் அவர்களை அன்பு செய்யவும் இயலவில்லை.” 

அன்புச் செல்வன்: “அது மட்டுமல்ல தந்தையே! நம் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நடந்துகொள்கின்றவர்கள் என்றுமே அவ்வாறே நடந்துகொள்ள வேண்டும் என்றும் மனம் எதிர்பார்க்கிறது. ஆனால், அது பெரும்பாலும் நடப்பதில்லை. மேலும், நமக்குப் பிடிக்காதவர்களைத் தள்ளிவைத்தால்தான் மகிழ்ச்சி என்று நினைத்து, அவர்களைத் தள்ளிவைக்கப் போராடுகிறது. ஆனால், அதுவும் பெரும்பாலும் நடப்பதில்லை. எனவே, ஒட்டுமொத்த வாழ்வே போராட்டமான ஒன்றாகத் தெரிகிறது.”

அருள்பணி: “சுருக்கமாகக் கூற வேண்டுமெனில், மனம் உலகையே இரண்டாகப் பிரித்து, நம் வாழ்வையும் இரண்டாகப் பிரித்து விடுகிறது. நாம் அரை குறை மகிழ்ச்சியோடு வாழ சுற்றியுள்ள சூழல்தான் காரணம் என்று நம்மில் பலர் எண்ணுகின்றோம். ஆனால், உண்மையான காரணம் ‘நன்மை-தீமை அறிகின்ற மரமாகிய நம் மனம் என்பதை நாம் உணர்வதில்லை. எனவேதான் ஞானிகள் நம் மனத்தின் மட்டில் விழிப்பாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். புத்தர் ‘நம் மோசமான எதிரியைவிட மோசமானது நம் மனம் என்கின்றார். பாரதியார் ‘பேயாய் உழலும் சிறுமனமே என்கின்றார். சித்தர்களில் ஒருவர் மனத்தை ‘அகப்பேய் என்று அழைத்தார்.”

கிறிஸ்டினா: “தந்தையே! இத்தகைய எதிர்மறைத்தன்மையைக் குறைக்க வழி என்ன?”

அருள்பணி: “வாழ்வின் எல்லா நிகழ்வுகளிலும் இறைச்செயல்பாடு இருப்பதை எண்ணி, அவற்றைச் சமநிலை மனநிலையோடு ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவத்தை நம்மில் உருவாக்கிக்கொள்ள முனைவதே அந்த வழி! அத்தகைய நிலையை அடைய மனத்தை அகம்நோக்கித் திருப்பக் கற்றுக்கொள்வது அவசியமானது. அகம் நோக்கிய மனம் மேற்கூறப்பட்ட எதிர்மறைத்தன்மைகளை வெற்றிகொள்வதோடு, மனிதர்கள் தளர்வாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க உதவுகின்றது. இதுபோல மனத்தை அகம் நோக்கித் திருப்ப நாம் எடுக்கும் முயற்சிகளையே ‘ஆன்மிகப் பயிற்சிகள் என்றும், ‘பக்தி முயற்சிகள் என்றும் கூறுகின்றோம்.”

மார்த்தா: “தந்தையே, நீங்கள் கூறுவதைப் பார்த்தால் புறம்நோக்கி இயங்குகிற மனத்தின் ஒப்பிடுதலும் தரம்பிரித்தலும் ஆணவம், வெறுப்பு, குறை சொல்லுதல், தீர்ப்பிடுதல், தன்னிலிருந்து அந்நியப்படல் போன்ற எண்ணற்ற தீமைகளுக்குக் காரணமாக இருக்கின்றது. மனத்தின் இத்தகைய தன்மையை நாம் ‘பிறப்புநிலை பாவம் என்று சொல்ல முடியுமா?”

அருள்பணி: “இன்னும் சரியாகக் கூற வேண்டுமெனில், புறம் நோக்கி இயங்கும் மனம் தன் விருப்பத்திற்கும் ஆசைகளுக்கும் ஏற்றார்போல எல்லாம் நடந்துவிட்டது என்றால், மகிழ்வு தனதாகிவிடும் என்று நினைத்துச் செயல்படுகிறதல்லவா! அதுதான் பிறப்புநிலை பாவம் என்பது. மனிதர்களின் விருப்பங்களுக்கும் ஆசைகளுக்கும் ஏற்றார்போல நிகழ்வுகள் எல்லா நேரமும் நிச்சயமாக நடைபெறப் போவதில்லை. அது நமக்குள் வெறுப்பையும் சஞ்சலத்தையும் கவலையையும் ஏற்படுத்துகிறது. ஒருவேளை அவ்வப்போது நம் எதிர்பார்ப்புகள் பூர்த்தியானால்கூட, அவை நம்மில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதைவிட, அதிகமாக ஆணவத்தை ஏற்படுத்துகின்றன என்பதுதான் வாழ்க்கைப் பாடம். உண்மையான மகிழ்வு என்பது நம் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் கடவுள் செயல்படுகிறார் என்பதை உணர்ந்து, நம் வாழ்க்கை நிகழ்வுகளை இறைத்திருவுளத்தின் பின்னணியில் (‘இறைவன் ஏன் இத்தகைய நிகழ்வுகளை நமக்குத் தருகிறார் என்பதன் பின்னணியில்) ஆராய்ந்து நம் வாழ்வை ஆழப்படுத்திக் கொள்வ தாகும். சுருக்கமாகக் கூற வேண்டுமெனில், பிறப்பு நிலை பாவம் என்பது வாழ்வின் மகிழ்வை இறைவனின் விருப்பத்தில் தேடாமல், மனித விருப்பத்தில் தேடுவதாகும்; கடவுளின் விருப்பத்திற்கு ஏற்ப நாம் செயல்பட வேண்டும் என்று எண்ணாமல், நம் விருப்பங்களுக்கு ஏற்ப கடவுள் உட்பட எல்லாரும் செயல்படவேண்டும் என்று எண்ணுவதாகும்; தன்னிலும், தனக்குள் இருக்கும் கடவுளிலும் மகிழ்வைத் தேடாமல், கடவுள் அல்லாதவற்றில் மகிழ்வைத் தேடுவதாகும்.”                (தொடரும்)

news
ஆன்மிகம்
மூவொரு கடவுளால் அழைத்து அனுப்பப்படும் திரு அவை (மாமன்றச் சாதனைகள் ஒரு மீள்பார்வை – 4)

கூட்டியக்கத் திரு அவையின் ஊற்றும் உயர் மாதிரியும் மூவொரு கடவுளே. ஏனெனில், அது இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் குறிப்பிடுவதுபோலதந்தை, மகன், தூய ஆவியாரின் ஒன்றிப்பின் ஆற்றலால் ஒன்றுகூட்டப்பெற்ற மக்கள் குலம் (திரு அவை 4). மானிடரைச் சந்திக்க வரும் கடவுளின் மூவொருமையின் இயக்க ஆற்றல்நான்என்பதிலிருந்துநாம்எனும் உளப்பாங்கிற்கும் உறவு ஒன்றிப்பிற்கும் நம்மைக் கொண்டுவந்து, உலகிற்கு இறையாட்சிப் பணியாற்ற திரு அவையை இட்டுச்செல்கிறது.

திரு அவையின் கூட்டியக்கப் பயணம் இறையாட்சியை நோக்கியதே. அப்பணியை ஆற்ற அதற்கு இன்றியமையாதது கிறித்தவக் குழுமங்களின் புதுப்பித்தல். இறையருளின் முதன்மையை நாம் அறிந்து ஏற்றுக்கொண்டால்தான் அப்புதுப்பித்தல் நிகழ முடியும். “அருள்வாழ்வுசார் அடித்தளமின்றிக் கூட்டியக்கத்தன்மை மேலோட்டமானதாகவே இருக்கும் (முஅ* 2c). அந்த அருள் அனுபவம் குழும இயக்கமாகச் செயலாக்கம் பெறும். அது மட்டுமின்றி, அக்குழும ஆளாள் உறவு அனுபவமே இறைச் சந்திப்பின் ஒரு தளமாகவும் வகையாகவும் திகழ முடியும். தூய ஆவியாரில் நிகழும் இந்த உறவாடலும் உரையாடலும்ஆவியார் திரு அவைகளுக்குச் சொல்வதைத் தெளிந்து தேர்ந்திட உதவும் உண்மையான செவிமடுத்தலுக்கு வழிவகுக்கும் (முஅ 2d). இவ்வாறு இந்த உறவாடலும் உரையாடலும் மனமாற்றத்திற்கான தூண்டுதலையும் தரும். (முஅ) மாமன்ற முதல் அமர்வின் அறிக்கையையும், (இஅ) இறுதி அறிக்கையையும் குறிக்கின்றன.

திரு அவையின் கூட்டியக்கத்தின் நோக்கம் நற்செய்திப் பணி என்பதால் கிறித்தவக் குழுமங்கள் பிற சமயத்தார், மாறுபட்ட சிந்தனைகள் மற்றும் பண்பாடுகள் என்பவற்றுடனும் கூட்டுத் தோழமையை ஏற்படுத்துவது அவசியம். “ஒருவர் மற்றவரிடமிருந்து கற்றுக்கொள்ளுதல், இணைந்து பயணித்தல் என நடைபெறும் இந்தக் கலந்துரையாடலின் தாக்கம் நற்செய்தி அறிவிப்பு, ஏழைகளுக்கான பணி, நமது பொதுவீடாகிய இந்நில உலகின் நலம் பேணுதல், இறையியல் ஆய்வு என்பவற்றின் பண்புகளாகப் பரிமளிக்கவேண்டும் (முஅ 2e).

நம்பிக்கைக் குழுமத்தில் புகுநிலைப்படுத்தல்

இறைவார்த்தையைக் கேட்டல், வாழ்க்கை மாற்றம், திருவழிபாடு, கிறித்தவக் குழும வாழ்விலும் அதன் நற்செய்திப் பணியிலும் பங்கேற்பு என்பவையே நம்பிக்கைக் குழுமத்தில் புகுதலை ஓர் இணைந்த பயணம் ஆக்குகின்றது. அதன் வழியாக நம்பிக்கையாளர் உயிர்ப்பு நம்பிக்கையின் அறிமுக அனுபவத்தைப் பெறுகிறார்; மூவொரு கடவுள் மற்றும் திரு அவையின் ஒன்றிப்புறவில் இணைக்கவும்படுகிறார்.

இவ்வாறு நம்பிக்கையாளர் குழுமத்தில் புகுவதன் வழியாக ஒவ்வொருவரும் திரு அவையில் உள்ள பல்வேறு அழைத்தல்கள், பணிகள் என்பனவற்றுடன் இணைக்கப்படுகின்றனர். அவற்றின் வழியாக அன்னையாகிய திரு அவை தம் மக்களோடு இணைந்து பயணித்து அவர்களுக்கு வாழ்க்கைப் பயணமுறையைக் கற்றுத்தருகிறது. “அவர்கள் சொல்வதைக் கேட்டு அவர்களுடைய சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் அது பதிலளிக்கிறது. ஒவ்வொருவருடைய வரலாறு, மொழி, பண்பாடு என்பவற்றின் புதுமை வழியாக அதுவும் வளமை அடைகிறது (முஅ 3o). இதுவே கிறித்தவக் குழுமம் மேற்கொள்ளும் இணைந்த பயணத்தின் தொடக்கம்.

நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம் (1கொரி 12:13). இதனால் திருமுழுக்குப் பெற்ற அனைவருக்கும் இடையே மாண்பிலும் அவரவர் அழைத்தலுக்கேற்ப நற்செய்திப் பணியாற்றும் பொதுவான பொறுப்பிலும் உண்மையான சமத்துவம் நிலவுகிறது. இதனால்இறைமக்கள் சமூகம் முழுவதும் நற்செய்தி அறிவிப்பின் முகவரே. நாம் எல்லாரும் மறைத்தூதுச் சீடர்கள் என்பதால், திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவரும் மறைத்தூதுப் பணியை முன்னெடுக்க அழைக்கப்பட்டவரே (இஅ 4). ஒவ்வொருவரும் தாம் வாழும் மற்றும் பணியாற்றும் சூழமைவில் தம் வாழ்க்கை நிலைக்கும் ஆற்றலுக்கும் ஏற்ப மறைத்தூதுப் பணி ஆற்ற அழைக்கப்பட்டுள்ளனர். அவரவரது வாழ்க்கை நிலை, தொழில், குடிமைச் சமூக-அரசியல்-சமூக- சுற்றுச்சூழல் ஈடுபாடு என்பவற்றிற்கு ஏற்ப அவர்கள் நற்செய்திப் பணியாற்றும் முறைகள் வேறுபட்டும், தூய ஆவியாரின் துணையுடன் தேவைக்கேற்ப புதுப்புது வகைகளிலும் அவை அமையும்.

மேலும், திருமுழுக்குப் பெற்றவர்களிடம் தூய ஆவியிடமிருந்து அனைத்தையும் கற்றுக்கொள்ளும் நம்பிக்கை உணர்வு உள்ளது. இது அவர்களிடம் இயல்பாகவே எழும் நற்செய்தியின் உண்மைக்கான நாட்டம். நம்பிக்கையாளர்களின் இந்த ஒத்த உணர்வைக் கூட்டியக்க நடைமுறை உறுதிப்படுத்தி வளர்த்துவிடுகிறது. ஒரு குறிப்பிட்ட கோட்பாடோ செயல்பாடோ திருத்தூதர்சார் நம்பிக்கைக்குரியது என்பதைத் தீர்மானிக்க இந்நடைமுறை ஓர் உறுதியான அளவுகோலைத் தருகிறது.

உறுதிபூசுதல் எனும் அருளடையாளத்தின் வழியாகப் பெந்தக்கோஸ்தின் அருள் திரு அவையில் நிலைத்திருக்கிறது. நம்பிக்கையாளர்களை அது ஆவியாருடைய கொடைகளால் வளப்படுத்துகிறது. நற்செய்திப் பணியாற்றுவதற்கான தங்கள் தனி அழைத்தலை வளர்த்தெடுக்க அது ஒவ்வொருவரையும் அழைக்கவும் ஆற்றல்படுத்தவும் செய்கிறது.

நற்கருணைக் கொண்டாட்டம், அதிலும் சிறப்பாக ஞாயிறு திருப்பலி நம்பிக்கை வாழ்விற்கு அடிப்படையானது. “ஆண்டவரது உடலையும் உதிரத்தையும் உட்கொள்வதன் வழியாகப் பிறரோடும் அவரோடும் அவர் நம்மை ஓருடலாக உருவாக்குகிறார் (முஅ 3e). இது நம்மை இணைந்து பயணிக்க அழைக்கிறது.

செயல்படுத்த சில பரிந்துரைகள்

1. தெளிதேர்வு செய்து இறைவனின் குரலை இனம்காண்பதற்கான அளவுகோல்கள் இறையியல் கண்ணோக்கில் தெளிவாகவும் ஆழமாகவும் வரையறுக்கப்பட வேண்டும். குறிப்பாக, திருவிவிலியம், திரு அவை மரபு மற்றும் ஆசிரியம் என்பனவற்றுடன் காலத்தின் அறிகுறிகளையும் முன்வைத்துக் கடவுளின் திருவுளத்தைக் கண்டறியும் முறை தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

2. நம்பிக்கை அனுபவத்தில் பகுத்தறிவு மற்றும் உணர்ச்சி எனும் இரு பரிமாணங்களையும் நலமாக இணைத்துக்கொள்ள வேண்டும். அதுபோல் இறையியல் சிந்தனைகளுடன் கலை மற்றும் சமூக அறிவியல்களின் பங்களிப்புகளையும் எவ்வாறு இணைத்துக்கொள்ள முடியும் என்பதுவும் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

3. பல்வேறு அருள்பணிகளிலும் சிறப்பாக, திருமணம், பல்வேறு தொழில்கள் மற்றும் சமூகத் துறைகள் என்பவற்றிலும் கிறித்தவ மனநிலையுடன் ஈடுபடுவதற்கான உருவாக்கமாகக் கிறித்தவப் புகுநிலைப் பயிற்சியை அமைப்பது பற்றிய ஆய்வுகள் தொடரப்படவேண்டும்.

4. கிறித்தவப் புகுநிலைப்படுத்தல் பற்றி இன்னும் அதிகமான ஒன்றிணைந்த பார்வை உருவாக்கப்பட்டு, அது திரு அவையின் கூட்டியக்கத் தன்மையைப் புரிந்து வாழ்ந்திட எவ்வாறு உதவமுடியும் என்பது பற்றி ஆழமாகச் சிந்திப்பது அவசியம் (முஅ 3g).

5. எல்லா நம்பிக்கையாளர்களிடமும் குழுமத்தைக் கட்டியெழுப்பவும் உலகில் நற்செய்திப் பணியாற்றவும், நம்பிக்கைக்குச் சாட்சியம் பகர்வதற்குமான அழைத்தலை எழுச்சியுறச் செய்யும் வகையில் உறுதிபூசுதலுக்கான தயாரிப்பை மேம்படுத்தும் முறைகள் கண்டறியப்படவேண்டும்.

6. நற்கருணை திரு அவையின் கூட்டியக்கத்திற்கு ஊற்றாகி உருக்கொடுப்பது. இதனால் இயேசுவுடனான ஆளாள் உறவையும் நம்பிக்கையாளர்களுக்கு இடையிலான குழும உறவையும் வளர்த்தெடுக்க உதவும் முறையில் அதைக் கொண்டாட முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

7. மேலும், பரவலாக எழுப்பப்பட்டுள்ள கோரிக்கைக்கேற்பத் திருவழிபாட்டு மொழி அனைத்து மக்களும் எளிதில் புரிந்துகொள்ளக் கூடியதாகவும் அந்தந்தப் பண்பாடுகளில் உருவெடுப்பதாகவும் இருக்கவேண்டும். இப்பணியில் அதிகப் பொறுப்பு ஆயர் பேரவைகளிடம் ஒப்படைக்கப்படவேண்டும் (முஅ 3l).

8. வேறு எந்தப் பயிற்சி முறையையும்விட அதன் (திருவழிபாட்டின்) எழிலும் எளிமையுமே நம்மை முதன்மையாக உருவாக்கவேண்டும்

(முஅ 3k). * முன்னமர்வு (மு..)

news
ஆன்மிகம்
பேரொளியின் ஒளியாக!

இறைவன் விண்ணுலகையும் மண்ணுலகையும் படைத்த பொழுதுஒளி தோன்றுக!’ என்றார்; ஒளி தோன்றிற்று. கடவுள் ஒளி நல்லது என்று கண்டார் (தொநூ 1:3-4). பேரொளியாம் கடவுள் படைத்த ஒளி அனைத்தையும் தெளிவுபடுத்துகின்றது; உண்மை நிலைகளை உணர்த்துகின்றது; அனைத்தையும் நலமெனக் கண்ட இறைவனின் பார்வை நமதாகும்பொழுது, நிறைவாழ்வை நோக்கிய எதிர்நோக்கின் திருப்பயணம் அருள்வாழ்வின் திருப்பயணமாகிறது.

பேரொளியான இறைவனின் திருமகன் மனுவுருவானதை எடுத்துரைக்கும் திருத்தூதர் யோவான் தனது நற்செய்தியில் இதை உறுதிப்படுத்துகின்றார்: “அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்து கொண்டிருந்தது. ஒளியான அவர் உலகில் இருந்தார். உலகு அவரால்தான் உண்டானது; ஆனால், உலகு அவரை அறிந்துகொள்ளவில்லை (யோவா 1:9-10).

இறைத்தந்தையோடு ஒன்றாய் இணைந்திருக்கும் இயேசு, பேரொளியாய் உலகில் நம்மோடு இருக்கின்றார். இந்தப் பேருண்மையை இயேசு நிக்கதேமுடன் உரையாடும்போது உறுதிப்படுத்துகின்றார்: “உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும் (யோவான் 3:21).

கடவுளைசிக்கெனப் பற்றிகொண்டு அவரைச் சார்ந்து வாழ இறைவார்த்தையே நமக்கு ஒளியூட்டும், வழிகாட்டும், உள்ளிருந்து மெய்ஞானம் புகட்டும், உடனிருந்து செயலாற்றும். திபா 119:105 இதனை  உறுதிப்படுத்துகின்றது: “என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே!”

நாம் உலகின் ஒளியாகச் சுடர்விட வேண்டும் என்றால் உண்மையைச் சார்ந்தவர்களாய் இயேசுவின் குரலைக் கேட்டு, அவர் விருப்பப்படி  நன்மைசெய்து வாழவேண்டும். அப்பொழுது உலகில் ஒளியாகச் சுடர் விடமுடியும். இதனால் இயேசுவை அறியாதவர்களை அவரிடம் ஈர்க்கும் மீட்பின் கருவிகளாக, சீடர்களாக நாம் செயல்பட முடியும்.

இறையாட்சிப் பணியை வல்லமையுடன் ஆற்றி மறைச்சாட்சிகளான புனித அருளானந்தர், புனித தேவசகாயம், மறைபரப்புப்பணி நாடுகளின் பாதுகாவலரான புனித சவேரியார் போன்றவர்கள் நமக்கு முன்னுதாரணங்களாக, வழிகாட்டிகளாக, உலகின் ஒளியாகத் திகழ்கின்றனர். இந்த மறைப்பணி தொடர்ந்து இன்றும் நிகழ்ந்து கொண்டிருப்பதை எண்ணி ஆண்டவருக்கு நன்றி கூறுவோம். இறையன்பு பிறரன்பாக வெளிப்பட்டு இயேசுவின்பால் ஈர்க்கப்பட்ட ஒரு நிகழ்வைச் சாட்சியப்படுத்த விரும்புகின்றேன்.

பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு தாய் தன் மகளுடன் எங்கள் துறவற இல்லத்திற்கு உதவி கேட்டு வந்தார். தாய்க்குச் சமையல் வேலை கொடுத்து, மகளைப் படிக்கவைத்தோம். திறமையும் ஆர்வமும் கொண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் பொறியியல் படிப்பில் சிறந்த வெற்றி பெற்றாள் அப்பெண். உடனே நல்ல வேலையும் கிடைத்தது. தங்கள் வாழ்வின் முன்னேற்றம் இயேசுவால்தான் என்பதை ஆழமாக நம்பி, அவருடைய பிள்ளையாக வேண்டும் என்ற ஆவலுடன் இருவரும் தாங்களாகவே முன்வந்து திருமுழுக்குப் பெற்றனர். இது அவர்கள் ஆண்டவருக்குச் செலுத்திய ஒரு நன்றி காணிக்கை. தன்னை வளர்த்தெடுத்து உயர்ந்திடச் செய்த அருள்சகோதரிகளுக்கும் நன்றி கலந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பேரொளியின் ஒளியாகச் சுடர்விடும் அனைவரும் இயேசுவின் வார்த்தையின்படி இறைத்தந்தையை மாட்சிப்படுத்த முடியும். “உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு, உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள் (மத் 5:16) என்ற இயேசுவின் வார்த்தை நம் வாழ்வாகட்டும். இது கத்தோலிக்கத் திரு அவையின் உறுப்பினர் ஒவ்வொருவரின் கடமையும்கூட.

திருமுழுக்கில் பெற்றோரிடமும் ஞானப் பெற்றோரிடமும் ஒளி ஒப்படைக்கப்பட்டு அவர்களது கடமை உணர்த்தப்படுகிறது. “பெற்றோர்களே, ஞானத் தாய்-தந்தையரே! உங்கள் குழந்தையின் உள்ளத்தில் அணையாது காக்கும் பொருட்டு உங்களிடம் இந்த ஒளி ஒப்படைக்கப்படுகிறது. கிறிஸ்துவினால் இக்குழந்தைகள் ஒளி பெற்று, ஒளியின் மக்களாய் என்றும் வாழ்வார்களாக. நம்பிக்கையில் இவர்கள் நிலைத்திருந்து ஆண்டவர் வரும்போது அனைவரோடும் வான்வீட்டில் அவரை எதிர்கொண்டு செல்லத் தகுதி பெறுவார்களாகஎன்று அருள்பணியாளர் கடமையையும் பொறுப்பையும் உறுதிப்படுத்துகின்றார். இந்தத் திருமுழுக்கு வழிபாடு நாம் பேரொளியின் ஒளியாகவே என்றும் வாழவேண்டிய நம் கடமையை உணர்த்துகின்றது. எனவே, வாழ்வைப் பற்றிய வார்த்தையை வழங்க ஒளியில் வாழ்வோம். உலகின் ஒளியாவோம்.