இயேசு கருவாக உருவானது அவர் இறைமகன் என்பதற்கான ஓர் இறையியல் விளக்கம் என்பது மட்டுமல்ல, அது தூய ஆவியாரின் செயலுமாகும் என்பதை நற்செய்தி நூல்கள் தெளிவாகக் கற்பிக்கின்றன.
1. லூக்கா,
மத்தேயு மற்றும் யோவான் நற்செய்திகளின் சாட்சியங்களைப் பெற்று அதைத் தியானித்தத் திரு அவையானது மரியாவின் கன்னித்தன்மையானது ஒரு நம்பிக்கையின் மறையுண்மை என்ற கருத்தை எப்பொழுதுமே கொண்டிருந்தது.
வானதூதர்
மரியாவுக்கு மங்கள வார்த்தை அறிவிக்கும் நிகழ்வில் கன்னித்தன்மையில் நிலைத்திருப்பதற்கான அவரின் எண்ணத்தையும், அந்த எண்ணத்தோடு ஒத்துப்போகின்ற இறைவனின் திட்டமான அவரின் வியக்கத்தக்க தாய்மையையும் சுட்டிக்காட்டி நற்செய்தியாளர் லூக்கா, மரியாவை ‘கன்னி’ என்று அழைக்கின்றார். தூய
ஆவியாரின் செயலினால் கன்னித்தன்மையில் கருத்தரித்தார் என்ற நிலைப்பாடானது, இயற்கையான பாலினச் சேர்க்கையற்ற இனப்பெருக்கத்திற்கான (partheno genesis)
ஒவ்வொரு கருதுகோளையும் தவிர்க்கின்றது. லூக்காவின் விவரிப்பை யூதர்களின் (மதம் அல்லது கலாச்சாரம் சார்ந்த) கருத்து அல்லது பிற இனத்தவர்களின் புராணக்கதைகளின் தொடர்ச்சி என்று விளக்குவதற்கான முயற்சிகளையும் மறுக்கின்றது.
லூக்கா
நற்செய்தியின் அமைப்பானது (ஒப்பிடுக. லூக், 1:26-38; 2:19,51) இக்கருத்தின் மீதான எந்தவொரு குறைத்துக் கூறும் விளக்கத்தையும் தடுக்கின்றது. இந்த இறைவார்த்தைகளின் இசைவு ‘கன்னி’ என்ற சொல்லாடலின் மாற்றத்தையோ அல்லது தூய ஆவியாரினால் கன்னிமை நிலையில் மரியா கருத்தரித்தார் என்பதை உறுதி செய்கின்ற சொல்லாடல்களையோ உரிய வகையில் ஆதரிக்கவில்லை.
2. வானதூதரின்
அறிவிப்பை யோசேப்புவிடம் தெரிவிக்கின்ற நற்செய்தியாளர் மத்தேயுவும், நற்செய்தியாளர் லூக்காவைப் போன்றே மரியா கருத்தரித்தலில் தூய ஆவியாரின் செயலை உறுதிப்படுத்தி, திருமண உறவிற்கான கருதுகோள்களைப் புறந்தள்ளுகின்றார்.
மேலும்,
மரியா இயேசுவைக் கன்னித்தன்மையில் கருத்தரித்த செய்தியானது பிறகுதான் யோசேப்பிற்கு அறிவிக்கப்படுகின்றது. இயற்கைக்கு அப்பாற்பட்ட தூய ஆவியாரின் ஈடுபாட்டின் விளைவு (fruit of the
supernatural intervention of the Holy Spirit) மற்றும் இயேசுவின்
தாயான மரியாவின் ஒத்துழைப்பு இவற்றினால் மட்டுமே நிகழ்ந்த இயேசுவைக் கருத்தரிக்கும் நிகழ்வில் மரியா அதற்கு முன்பாக யோசேப்புவின் அனுமதி பெறவேண்டுமே என்ற கேள்வி நற்செய்தியாளர்களுக்கு எழவில்லை. கன்னியின் கணவராகவும், அந்தக் குழந்தையைப் பொருத்தவரை அதன் தந்தை என்ற வகையில் அவரின் பணியைச் செய்வதற்குமான பொறுப்பை ஒரு சுதந்திரமான மனப்பான்மையோடு ஏற்றுக்கொள்வதற்கே யோசேப்பு வானதூதரால் கேட்கப்படுகின்றார்.
மத்தேயு
நற்செய்தியாளர் இயேசுவின் கன்னி கருத்தரிப்பை இறைவாக்கினர் எசாயாவின் முன்னறிவிப்பாகவே காட்டுகின்றார்: “இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்” (மத்
1:23; எசா 7:14). இவ்வகையில், கன்னி கருத்தரிப்பானது மீட்பின் இறைத்திட்டத்திற்கான ‘கடவுள் நம்மோடு’ என்ற வார்த்தைகளில் கிறிஸ்துவை அடையாளம் காட்டுகின்ற அதன் தொடர்பைப் பற்றிச் சிந்திப்பதற்கு மத்தேயு நற்செய்தியாளர் நம்மை அழைத்துச் செல்கின்றார்.
தொடக்க காலத்
திரு
அவையானது
கன்னி
கருத்தரித்தலை
உறுதியாக
நம்பியது
3. லூக்கா
மற்றும் மத்தேயு நற்செய்திகள் போன்றல்லாமல், மாற்கு நற்செய்தியானது இயேசுவின் கருத்தரிப்பு மற்றும் பிறப்பு பற்றிக் குறிப்பிடவில்லை. இருப்பினும், மாற்கு நற்செய்தியாளர் யோசேப்புவை மரியாவின் கணவர்
என்று ஒருபோதும் குறிப்பிடாதது கவனிக்க வேண்டியதொன்றாகும். நாசரேத்து மக்களால் இயேசு ‘மரியாவின் மகன்’ என்றும் மற்றொரு சூழலில் ‘கடவுளின் மகன்’ என்றும் அழைக்கப்படுகிறார் (மாற் 3:11; 5:7; ஒப்பிடுக.1:11;9:14, 61-62;
15:39). இந்த விசயங்கள் மரியா அவரின் கன்னிமையில் கருத்தரித்தார் என்ற மறைபொருளின் நம்பிக்கையோடு ஒத்துப் போகின்றன. இந்த உண்மை, அண்மையில் செய்த திருவிவிலிய ஆய்வு முடிவுகளின்படி எரோணிமுஸ் மற்றும் தெர்த்தூலியன் போன்ற திரு அவைத் தந்தையர்கள் கூறுகின்றவாறு, கருத்தரிப்பு பற்றிய அந்த வார்த்தையானது வழக்கமான பன்மையில் இல்லாமல் ஒருமையில் உள்ளதாக, யோவான் நற்செய்தியின் முன்னுரையில் 13-வது இறைவார்த்தையானது வெளிப்படையாக இக்கருத்தைக் கூறுகின்றது: “அவர்கள் இரத்தத்தினாலோ உடல் இச்சையினாலோ அல்ல; மாறாக, கடவுளால் பிறந்தவர்கள்.” இயேசுவினுடைய மனுவுருவாதலின் மறைபொருளை விவரிக்கும் இடமான யோவான் நற்செய்தியின் முகவுரையில் ஒருமையில் இருக்கும் இந்த வார்த்தையானது, அவரின் கன்னிமையில் கருத்தரித்தலுக்கான முக்கியமான சான்றாக இருக்கின்றது. “காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்” (கலா
4:4-5) என்று கூறும் புனித பவுல் அடியாரின் இந்த முரண்பாடான உறுதிப்பாடு (paradoxical affirmation) இறைமகனின் மனிதத்தன்மை மற்றும் கன்னித்தன்மையில் பிறந்தது பற்றிய கேள்விக்கு வழிவகுக்கின்றது.
தொடக்க
காலத் திரு அவையின் பல்வேறு சூழல்களில் இயேசுவின் கன்னி கருத்தரிப்பில் உள்ள நம்பிக்கையானது எப்படிப்பட்டதாக இருந்தது என்று ஒத்தமைவு நற்செய்தியானது சான்று கூறுகின்றது. இந்த விளக்கமானது, கன்னிமையில் கருத்தரித்தலை வெறுமனே உடல் அல்லது உயிரியல் கண்ணோட்டத்தில் இல்லாமல் குறியீட்டு மற்றும் உவமானத்தால் மட்டுமே (only as symbolic and metaphorical) புரிந்துகொள்ளும்
தற்காலத்திய விளக்க உரைகளுக்கான எந்த அடிப்படையையும் மறுக்கின்றது. இவ்வாறு இது இயேசுவை மனுக்குலத்திற்கான கடவுளின் கொடையாக நிறுவுகின்றது. இதே வாதத்தை, கன்னிப் பெண் கருத்தரித்தல் என்பது இயேசு இறைமகன் என்கிற இறையியல் கோட்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் கூறப்பட்ட அதிகாரப் பூர்வமற்ற (theologoumenon) அல்லது அவரைப் பற்றிய புராணச் சித்தரிப்புக்கான (mythological
portrayal) ஒரு வழியாக இருக்கலாம் என்று
வேறு சிலரால் முன்வைக்கப்பட்ட கருத்தாகவும் நாம் கூறலாம்.
நாம்
மேலே கண்டவாறு, தூய ஆவியாரின் உதவியினால் உயிரியல் அடிப்படையிலான கன்னிமைக் கருத்தரித்தலுக்கான தெளிவான உறுதிப்பாட்டை நற்செய்தி நூல்கள் கொண்டுள்ளன. நம்பிக்கை அறிக்கை உருவாக்கத்தின் தொடக்கத்திலிருந்தே திரு அவையானது இந்த உண்மையைத் தனதாக்கிக் கொண்டது (ஒப்பிடுக. Catechism of the Catholic Church, n. 496).
4. நற்செய்தி
நூல்களில் கூறப்பட்ட இந்த நம்பிக்கையானது எந்தவித மாற்றுக் கருத்துமின்றி பின்னாளில் திரு அவையின் பாரம்பரியத்தினால் உறுதி செய்யப்பட்டது. முதல் கிறித்தவ அறிஞர்களின் நம்பிக்கை அறிக்கைகள் கன்னிமையில் கருத்தரித்தலின் உறுதிப்பாட்டை முன்னதாகவே கணிக்கின்றன. அரிஸ்திதேஸ், ஜஸ்டின், எரோணிமுஸ் மற்றும் தெர்த்தூலியன் போன்றவர்கள் ‘இயேசு உண்மையில் கன்னியிடமிருந்து பிறந்தவர்’
என்று அறிவிக்கும் அந்தியோக்கு நகர் புனித இஞ்ஞாசியாரின் கருத்தை ஒத்துக்கொள்கின்றனர் (Smyrn. 1,2). இந்த
அறிஞர்கள் ஒழுக்கம் அல்லது அந்தக் குழந்தையின் பிறப்பில் வெளிப்படுத்தப்படும் உறுதியற்ற அருளின் கொடையை மட்டும் உறுதி செய்வதிலிருந்து விலகி, இயேசு கன்னிமையில் கருத்தரிக்கப்பட்ட நிகழ்வை உண்மையான மற்றும் வரலாற்றுப்பூர்வமானதொரு நிகழ்வாகவே அர்த்தம் கொள்கின்றனர்.
முதல்
சுருக்கமான நம்பிக்கை அறிக்கையும், அதைத் தொடர்ந்து வந்த
திருச்சங்கத்தின் இறுதியான நம்பிக்கை அறிக்கை (definitions of faith) மற்றும் திருத்தந்தையின்
ஆசிரியமும் இந்த உண்மையோடு முற்றிலும் ஒத்துப்போகின்றன. கால்சேதேயன் திருச்சங்கம் (451), அதனுடைய நம்பிக்கை அறிக்கையை மிக கவனமுடன் எழுதி, தனது தவறிழைக்காத தன்மையினால் (infallibility) அதன் சாராம்சத்தை வரையறுத்து,
“கிறிஸ்துவை இந்த இறுதி நாள்களில் அவரின் மனுக்குலத்திற்கும் நமக்கும் நமது மீட்பிற்கும் இறைவனின் தாயாகிய கன்னி மரியா ஈன்றெடுத்தார்” (DS 301) என்பதை உறுதிப்படுத்துகின்றது.
இதே வகையில் மூன்றாவது கான்ஸ்டான்டிநோபிள் திருச்சங்கமானது (681) “இயேசு கிறிஸ்து அவருடைய மனுக்குலத்திற்காக, தூய ஆவி முறையான மற்றும் உண்மையில் கடவுளின் தாயாகிய கன்னி மரியா வழியாகப் பிறந்தார்”
(DS 555) என்று
அறிக்கையிடுகின்றது. மற்றத் திருச்சங்கங்களும் (இரண்டாவது கான்ஸ்டான்டைன் திருச்சங்கம், நான்காவது இலாத்தரன் திருச்சங்கம் மற்றும் இரண்டாவது லியோன் திருச்சங்கம்) மரியாவின் என்றைக்குமான கன்னித்தன்மையை அடிக்கோடிட்டு அவரை ‘என்றும் கன்னி’
(ever-virgin) என்று அறிவித்தது (DS 423, 801, 852).
மரியாவைப் பற்றிய
இந்த உண்மைகளை வெளிச்சமிட்டுக் காட்டிய இரண்டாம் வத்திக்கான் சங்கமானது அதைப் பின்வரும் வார்த்தைகளால் உறுதிப்படுத்தியது: “கணவரையே அறியாத அவர் தூய ஆவியார் நிழலிடத் தன் நம்பிக்கையாலும் கீழ்ப்படிதலாலும் தந்தையின் மகனையே உலகில் பெற்றெடுத்தார். புதிய ஏவாளாகிய அவர் ஆதி பாம்பாகிய அலகைக்குச் செவிமடுக்கவில்லை; மாறாக, கடவுளின் தூதுவரிடம் ஐயமற்ற நம்பிக்கை கொண்டார். பல சகோதரர்-சகோதரிகளிடையே...
அதாவது நம்பிக்கை கொண்டோரிடையே தலைப் பேறாக (உரோ 8:29) கடவுளால் நியமிக்கப்பட்ட மகனையே அவர் பெற்றெடுத்தார். இவர்களை நம்பிக்கை கொண்டோராகப் பெற்றெடுத்து வளர்ப்பதில் மரியா தாய்க்குரிய அன்போடு ஒத்துழைக்கிறார்” (இன்றைய உலகில் திரு அவை, எண். 63).
மரியாவைப்
பற்றிய இந்த வரையறையைத் தவிர, திரு அவையின் ஆசிரியம் ‘ஆசிர்வதிக்கப்பட்ட கன்னி மரியா’ என்ற அமல உற்பவக் கோட்பாட்டையும் (DS 2803) மற்றும்
‘அமல உற்பவி மற்றும் என்றும் கன்னியான இறைவனின் தாய்’ என்ற விண்ணேற்புக் கோட்பாட்டையும் வரையறுக்கின்றது (DS 3903).
மரியாவின் புனிதத்துவமும் கன்னித்தன்மையும்
மிகவும்
நெருக்கமான
தொடர்புடையவை
5. திருத்தந்தை
முதலாம் மார்ட்டினால் விரும்பப்பட்ட 649-ஆம் ஆண்டு நடைபெற்ற இலாத்தரன் சங்கத்தைத் தவிர மற்ற எல்லாத் திரு அவையின் போதனைகளும் ‘கன்னி’ என்ற சொல்லாடலுக்கான அர்த்தத்தை விளக்கவில்லை. இதிலிருந்து இந்தச் சொல்லாடலானது, அதன் வழக்கத்திலிருந்த அர்த்தத்தில்தான் பயன்படுத்தப்பட்டது என்பது தெளிவாகிறது. பாலுறவிலிருந்து மனமுவந்து விலகியிருந்தது மற்றும் உடல் ஒழுக்கத்தைக் காத்தது. இருப்பினும், உடல் ஒழுக்கமானது இயேசுவின் கன்னி கருத்தரித்தலினுடைய நம்பிக்கையின் முக்கியமானதோர் அம்சமாகக் கருதப்படுகிறது (ஒப்பிடுக. Catechism of the Catholic Church,
n.
496). ‘என்றும்
தூய கன்னி, அமல உற்பவி’ போன்ற விவரிப்பானது தூய்மை மற்றும் கன்னிமைக்கிடையே உள்ள தொடர்பை நோக்கி நம் கவனத்தை ஈர்க்கின்றது. கடவுளிடம் அவரின் முழு இதயத்தையும் ஒப்படைப்பதற்கு விரும்பியதனால் அதை மையப்படுத்தியே தன் வாழ்வை அமைத்துக் கொண்டதனால் அவர் ஒரு கன்னிமை வாழ்வு வாழ விரும்பினார்.
மரியாவின் விண்ணேற்புக்
கோட்பாட்டு வரையறையில் பயன்படுத்தப்பட்ட, ‘அமல உற்பவி’,
‘இறைவனின் தாயான என்றும் கன்னி’ போன்ற சொல்லாடல்களும், மரியாவின் தாய்மைக்கும் கன்னிமைக்கும் இடையேயான தொடர்பையே குறிப்பதாகும். இந்தச் சிறப்புரிமையானது அற்புதமான வகையில் உண்மையான கடவுளும் மனிதருமான இயேசுவின் கருத்தரிப்பில் அற்புதமான வகையில் இணைகின்றது. இவ்வாறு மரியாவின் கன்னிமையில்
அவரின் தெய்வீகத் தாய்மையும், முழுமையான புனிதத்துவமும் நெருக்கமான வகையில் இணைக்கப்பட்டுள்ளன.
மூலம்:
Pope John Paul II, Virginal conception is biological fact, in
«L’Osservatore Romano», Weekly Edition in English, 17
July 1996, p.11.
விருந்தினர்’ என்ற சொல் இன்று ‘உறவினர்’ என்ற பொருளில் கையாளப்படுகின்றது. உண்மையில் விருந்து என்றால், புதுமை என்றும், விருந்தினர் என்றால் அறிமுகமில்லாத அயலவர் என்றும் பொருள். உணவுவிடுதிகள், தங்கும் விடுதிகள் இல்லாத சங்க காலத்தில் வழிப்போக்கர்கள் ஆங்காங்கே உள்ள மக்களிடம் உறவினர்போலப் பழகுவர். அவர்களும் வழிப்போக்கரை உறவினராக எண்ணியே விருந்து படைத்து, ஓய்வெடுத்துச் செல்லுமாறு கூறுவர். இதனை ‘அல்லில்லாயினும் விருந்துவரின் உவக்கும்’ என்கிறது நற்றிணை. அதாவது, புதியவர் நள்ளிரவில் வந்தாலும் விருந்து உபசரித்து மகிழ்ந்தனராம் பழந்தமிழர். அதுபோல் இன்றும் நாம் இயலாத அயலாரை ஏற்று நம்மாலான உதவியினை மனமுவந்து செய்யவேண்டும். வறுமையில் வாடும் அனைவருமே இறைவனின் விருந்தினர் என எண்ணி உதவ வேண்டும்.
“உன்னால் நூறு பேருக்கு உணவிட முடியவில்லை என்றாலும், ஒருவருக்கேனும் உணவிடு. அதுவுமில்லையெனில் இருப்பதைப் பங்கிட்டு உண்ணலாமே!” என்கிறார் அன்னை தெரேசா. இதையே ‘யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி, யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே’ என்கிறார்
திருமூலர். அதாவது, கைப்பிடி உணவும் இல்லாத போது, நீங்கள் பிறர்மீது கருணைகொண்ட இனிய சொற்களையேனும் பகிருங்கள் என்பது இதன் பொருள்.
நீங்கள்
செய்வது உதவியோ, இன்னுரையோ அது மிகச்சிறியதாகக் கூட இருக்கலாம். ஆனால், பெறுபவருக்கு அது அந்நேரத்தில் அவர்களின் வாழ்வையே மாற்றக்கூடியதாக அமைந்துவிடக் கூடும்.
வீட்டின்
ஒரு சிறிய பகுதியே கதவு. கதவைவிடச் சிறியது பூட்டு. பூட்டைவிடச் சிறியது சாவி. ஆனால், அந்தச் சிறிய சாவிதான் முழு வீட்டையும் திறக்கிறது. ஆக, சிறிய ஒன்றின் சக்தியையும் இறைவன் ஒருபோதும் குறைத்து மதிப்பிடுவதில்லை.
உண்மையான
இறைநேசிப்பாளர்களுக்கு
இறைவனின் கட்டளைகள் நல்ல மனிதர்கள் வழி செவியோரம் தூது வரும். சிலர் அதனை ஏற்பதாக மொழிவர். ஆனால், அக்கட்டளைப் படிச் செயல்படமாட்டார்கள். ஒருசிலர் கட்டளையை மறுப்பர்; ஆனால், அதனைப் பின்னாளில் செய்துமுடிப்பர்.
இவ்வாறு
சொல்லொன்று செயலொன்று என்று இருப்போருக்கு இறையருள் என்றுமே உணரப்படுவதில்லை. சொல்லும் செயலும் ஒன்றென வாழ்பவரே இறையருளை என்றும் உணர்வர்.
தம் சீடர்களின் உருவாக்கத்தில் இயேசு செலவிட்ட நேரம், திரு அவையின் உருவாக்கப் பணியின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. அவர் கையாண்ட உருவாக்க முறையே அதற்கு மாதிரியாகவும் திகழ்கிறது. அவர் கற்றுத்தருவதுடன் நின்றுவிடவில்லை; தம் வாழ்வையே பகிர்ந்து அவர்களுக்கு ‘மாதிரி’ காட்டினார். எவ்வாறெனில், “தமது இறைவேண்டலின் மாதிரி வழியாக ‘இறைவேண்டல் செய்ய எங்களுக்குக் கற்றுத்தாரும்’ என அவர்களைக் கேட்கச் செய்தார். கூட்டத்திற்கு உணவு அளித்த தன் வழியாகத் தேவையில் இருப்போரைக் கவனிக்கக் கற்பித்தார். எருசலேமுக்குப் பயணித்த தன் வழியாக சிலுவையின் பாதையை அவர்களுக்குக் காட்டினார்” (முஅ 14 b).
இறைமக்கள்
அனைவரும் சீடத்துவ உறவு வாழ்வுக்கும், நற்செய்தியின் மகிழ்ச்சிக்கும் சாட்சியம் பகரவும், கூட்டியக்க முறையைச் செயல்படுத்தவும் அழைக்கப்பட்டுள்ளனர். “கூட்டியக்கம் என்பது அழைத்தலையும், மறைத்தூதுப் பணியையும் பற்றிய ஆழ்ந்த உணர்வு, புதிய முறையில் திரு அவைசார் உறவுகளை வாழ்தல், பங்கேற்பில் புதிய நடைமுறை, திரு அவையோடு இணைந்து தெளி தேர்வு செய்யும் செயல்முறை, தொடர் மதிப்பீட்டாய்வு செய்யும் பண்பாடு என்பவற்றை உள்ளடக்கியது ஆகும்”
(இஅ 141). உரிய உருவாக்க முறைகள் இன்றி இவை கைகூடாது. மேலும், கூட்டியக்கத்திற்கான உருவாக்கத்தைப் பெற்றிருந்தால்தான் திருமுழுக்கில் தாங்கள் பெற்ற கொடைகளை மறைத்தோ பயன்படுத்தப்படாமலோ வைத்திராது, அனைவருடைய நலனுக்காகவும் அவை பயன்படுத்தப்பட வேண்டியவை எனும் உணர்வும் உறுதிப்பாடும் அவர்களுக்கு ஏற்படும்.
பெறுபவர்களே வழங்குபவர்களும்
ஆவர்!
இறைமக்கள்
உருவாக்கம் பெறுபவர்கள் மட்டும் அல்லர்; முதன்முதலில் அவர்களே கூட்டுப் பொறுப்புடன் அதை வழங்குபவர்களும் ஆவர். ஏனெனில், முதல் உருவாக்கம் குடும்பத்தில்தான் நிகழ்கிறது. இதனால் திரு அவையில் உருவாக்கப் பணியாற்றுபவர்கள் இறைமக்கள் அனைவரின் ஞானத்துடன் இணைத்தே அதை ஆற்றவேண்டும். இதுவே கூட்டியக்க முறையில் உருவாக்கம் நிகழ்கிறது என்பதன் முதல் அடையாளம் (முஅ 14c). “கூட்டியக்க முறையிலான உருவாக்கம் என்பது தங்கள் குடும்பத்திலும் வேலையிடத்திலும், திரு அவை மற்றும் சமூக, அறிவுசார் தளங்களிலும் இறைமக்களைத் தங்கள் திருமுழுக்கு அழைப்பை முழுமையாக வாழச்செய்யும் நோக்குடையது. அது ஒவ்வொருவரும் தனக்கே உரிய அருங்கொடைகளுக்கும் அழைத்தலுக்கும் ஏற்ப திரு அவையின் மறைத்தூதுப் பணியில் செயலாக்கத்துடன் பங்கேற்கும் வகையில் அவர்களை ஆற்றல்படுத்தும் குறிக்கோளைக் கொண்டது”
(முஅ 14f).
இயேசுவில்
திருமுழுக்குப் பெற்ற அனைவரும் அவருடைய சீடர்கள்; அவரது திருத்தூதுப் பணியில் பங்கேற்பவர்கள். அவர்களது சீடத்துவ உருவாக்கம் கிறித்தவப் புகுநிலையில் தொடங்கித் தொடர்கிறது. அவர்கள் ஒவ்வொருவரும் தங்களது நம்பிக்கைப் பயணத்தில் தாங்கள் சந்திப்பவர்கள் இயேசுவுடன் கொள்ளும் உறவில் வளரவும், அவர்களுக்குத் திரு அவையுடன் உள்ள ஒன்றிப்புறவை அறிமுகப்படுத்தவும் உதவுகின்றனர். பெற்றோர், உறவினர், ஞானப் பெற்றோர், வேதியர்கள், ஆசிரியர்கள், திருவழிபாட்டுத் தலைவர்கள், அன்பிரக்கப் பணி ஆற்றுகின்றவர்கள், திருத்தொண்டர்கள், அருள்பணியாளர்கள், ஆயர்கள் அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்.
ஆனால்,
புகுமுகப் பயணம் முடிந்ததும் குழுமத்துடன் அவர்கள் கொண்டுள்ள உறவு பொதுவாக ஆழத்தையும் வலுவையும் இழக்கிறது; அவர்களது உருவாக்கமும் அதிகம் கண்டுகொள்ளப்படுவதில்லை. “ஆனால், ஆண்டவரின் திருத்தூதுப் பணியாற்றும் சீடராக மாறுதல் என்பது ஒருபோதும் முற்றுப் பெறும் செயல் அல்ல; தொடர் மனமாற்றத்தையும் ‘கிறிஸ்துவிடம் காணப்பட்ட நிறைவைப் பெறுமளவுக்கு’ (எபே
4:13) அன்பில் வளருவதையும் நம்பிக்கையின் உயிர்துடிப்பும் மகிழ்ச்சியும் உள்ள சாட்சியம் பகர ஆவியார் தரும் கொடைகளுக்கு உள்ளம் திறந்தவர்களாக இருப்பதையும் தொடர்ந்து அது கோருகிறது”
(இஅ 142).
கிறிஸ்துவுடன்
ஒன்றித்து ஒத்துருவாவதே உருவாக்கத்தின் நிறைவு. நம்பிக்கையாளர்கள் பலருக்கு அவர்கள் திரு அவையுடன் கொண்டுள்ள ஒரே தொடர்பு ஞாயிறு திருப்பலியில் பங்கேற்பது மட்டுமே. அதனால் அது மிக அர்த்தமும் அனுபவமும் தரும் வகைகளில் கொண்டாடப்படவேண்டும். குறிப்பாக, மறையுரையும் அனைவருடைய பங்கேற்பும் சிறப்பாக அமைதல் அவசியம். இதுவே அவர்களது கூட்டியக்கத்தை உறுதிசெய்யும்.
உருவாக்கத் தளங்களும்
முறைகளும்
இறைமக்களின்
உருவாக்கம் பல்வேறு தளங்களில் நடைபெறுகிறது. இறையியல் உருவாக்கத்துடன் கூட்டுப்பொறுப்பு, செவிகொடுத்துக் கேட்டல், தெளிதேர்வு செய்தல், கிறித்தவ ஒன்றிப்பு மற்றும் பல்சமய உரையாடல், வறியோருக்கு உதவுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஊடகங்கள்வழி மறைத்தூதுப் பணி என்பனவற்றை நடத்துவதற்கான தனிப்பட்ட சில திறமை வளர்ப்புப் பயிற்சிகளும் தேவைப்படுகின்றன. சிறாருக்கும் இளையோருக்கும் மறைக் கல்வி உருவாக்கம் தருவதிலும் தனிப்பட்ட கவனம் தேவை.
திருத்தூதுச்
சீடர்களுக்கான உருவாக்கம் அறிவு, உணர்ச்சி, உறவு, அருள்வாழ்வு எனும் ஆளுமையின் அனைத்துப் பரிமாணங்களையும் சார்ந்ததும் ஒருங்கிணைந்தும் நடைமுறை அனுபவமுறையிலும் அமைவதாகும். “மாமன்றத்தின் நடைமுறை முழுவதிலும் அழுத்தியுரைக்கப்பட்ட ஒன்று ஆண்களும் பெண்களும் பொதுநிலையினரும் துறவியரும் திருநிலைத் திருப்பணியாளர்களும் அருள்பணி பயிற்சி மாணவர்களும் இணைந்து பங்கேற்கும் பொது உருவாக்கம். இத்தகைய உருவாக்கத்தில் ஒருவர் மற்றவரை நன்கு தெரிந்துகொள்ளவும் மதிக்கவும் ஒத்துழைக்கும் திறனை வளர்க்கவும் முடியும்”
(இஅ 143).
இத்தகைய
உருவாக்கத்திற்குத் தேவை தாங்கள் கற்றுத்தருவதைத் தாங்களே வாழ்ந்து காட்டும் தகுதியும் திறமையும் வாய்ந்த உருவாக்குநர்கள். இதனால் உருவாக்குநர்களின் உருவாக்கத்தில் அதிகம் கவனம் செலுத்தப்படுவது அவசியம். திருத்தூதுச் சீடர்களை உருவாக்குவது அவர்கள் மட்டுமல்ல; நம் குடும்பங்கள், அன்பியங்கள், பங்குகள், பணிக்குழுக்கள் மற்றும் கழகங்கள், அருள்பணி பயிற்சி இல்லங்கள், துறவு இல்லங்கள், கல்வி நிறுவனங்கள், சமூகத்தில் நலிவுற்றோர் மற்றும் ஓரங்கட்டப்பட்டோர் மேம்பாட்டிற்கான பணித்தளங்கள், மறைத்தூதுப் பணி மற்றும் தன்னார்வத் தொண்டு முயற்சிகள் என்பனவும் திருத்தூதுச் சீடர்களை உருவாக்கும் தளங்களே. ஏனெனில், “திரு அவையில் எவரும் உருவாக்கம் பெறுபவர்கள் மட்டும் அல்லர்; பிறருக்கு வழங்க தங்களிடம் ஏதாவது இருப்பதால், ஒவ்வொருவரும் உருவாக்குநர்களே. மக்கள் பக்தி கூட திரு அவைக்கு ஒரு விலைமதிக்கவியலாக் கருவூலமே. பயணிக்கும் இறைமக்கள் அனைவருக்கும் அது (பலவற்றை) கற்பிக்கிறது” (இஅ
144).
உருவாக்கச்
செயல்பாடுகளுள் மறைக்கல்வி தனிக்கவனம் செலுத்தப்படவேண்டிய ஒரு துறை. அது கிறித்தவப் புகுநிலையுடன் முடிந்துவிடவேண்டியது அல்ல; மாறாக, மக்களை அது வாழ்க்கை முழுவதும் மறைத்தூதுப் பணியாற்ற இட்டுச்செல்ல வேண்டும். “பல திரு அவைகளில்
மக்களுடன் தொடர்ந்து பயணித்து உருவாக்கம் அளிப்பதில் வேதியர்கள் சிறந்த வளமாக இருக்கின்றனர். அவர்களது பணி கிறித்தவக் குழுமங்களால் இன்னும் அதிகமாகப் பாராட்டி ஊக்கப்படுத்தப்படவேண்டும்” (இஅ
145).
கிறித்தவக்
குழுமங்கள் பல துறைகளைச் சார்ந்த
கல்விப்பணியிலும் ஈடுபட்டுள்ளன. வேலை வாய்ப்புகளுக்காகவும், சமூகம், அரசியல், பல்வகைக் கலைகள், விளையாட்டு என்பன போன்ற துறைகளில் ஈடுபடவும் அவை மக்களைத் தயாரிக்கின்றன. புற உலகில் நற்செய்திப் பணியாற்ற முன்னேறிச் செல்லும் திரு அவையின் முன்னணிப் பணித்தளங்களாக இவை இயங்குகின்றன. “அவற்றுள் தனிச்சிறப்பாகக் கத்தோலிக்கக் கல்விக் கூடங்களும் பல்கலைக்கழகங்களும் நம்பிக்கைக்கும் பண்பாட்டிற்கும் இடையிலான உரையாடலிலும் விழுமியங்களை முன்னிறுத்தும் ஒழுக்கநெறிக் கல்வி வழங்குவதிலும், நிறைவாழ்வின் உயிரோவியமாகிய கிறிஸ்துவை நோக்கிய உருவாக்கம் தருவதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவ்வாறு அவை தனியாள் மையப்போக்கு, போட்டி மனப்பான்மை என்பனவற்றால் இயக்கப்படும் இன்றைய பரவலான வாழ்க்கை முறைகளுக்கு ஒரு மாற்று மாதிரியை ஊக்குவிக்கும் ஆற்றல் உடையவை. இவ்வாறு அவை இறைவாக்குப் பணியும் ஆற்றுகின்றன” (இஅ
146).
தனிப்பட்டத் திருப்பணிகளுக்கான
உருவாக்கம்
திருமுழுக்குப்
பெற்ற அனைவருக்குமான இணைந்த கூட்டியக்க உருவாக்கத்தின் பின்னணியில்தான் தனிப்பட்ட திருப்பணிகளுக்கும் அழைத்தல்களுக்கும் தேவைப்படும் சிறப்பு உருவாக்கம் புரிந்துகொள்ளவும் நடைமுறைப்படுத்தப்படவும் வேண்டும். “மாமன்ற அமர்வுகளின்போது வலுவாக எழுந்த இந்த வேண்டுகோள் உருவாக்கத்தின் சூழமைவுகள் மற்றும் நடைமுறைகள் சார்ந்த பார்வையிலும் செயல்பாடுகளிலும் பல வேளைகளில் மாற்றத்தைக்
கோருகிறது” (இஅ
147).
அருள்பணி
மாணவர்களின் தேர்ந்தெடுப்பும், அவர்களது உருவாக்கமும் கூட்டியக்க முறையில் நடைபெறவேண்டும் என்பது மாமன்றக் கலந்துரையாடல்களில் பலமுறை எழுப்பப்பட்ட வேண்டுகோள். பெண்களின் கணிசமான பங்களிப்பு, மக்களது அன்றாடக் குழும வாழ்வில் பங்கேற்பு, திரு அவையில் உள்ள அனைவருடனும் இணைந்து செயல்படுவதற்கும், சபைசார் தெளிதேர்வு செய்வதற்கும் அவர்களைத் தயார்படுத்தும் பயிற்சி என்பன அதில் இடம்பெறுவது அவசியம்.
“உருவாக்கம் ஆயர்களுக்கும் இவ்வாறு அவசியமானதே. அதனால் அவர்கள் ஆவியாரின் கொடைகளை ஒன்றிணைக்கும் தங்கள் பணியைச் சிறப்புற ஆற்றவும், தங்களுக்குத் தரப்பட்ட அதிகாரத்தைக் கூட்டியக்க முறையில் செயல்படுத்தவும் முடியும்”
(இஅ 148).
செயல்படுத்த சில
பரிந்துரைகள்
1. கூட்டியக்கப்
பார்வையின் பின்னணியில், பொதுநிலையினர், துறவியர், அருள்பணியாளர்கள் என இறைமக்கள் அனைவருக்கும்
இணைந்து பங்கேற்கும் உருவாக்க நிகழ்ச்சிகளை வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்.
2. அருள்பணியாளர்
உருவாக்கத்தில் பல நிலைகளில் உள்ள
இறைமக்கள் பங்கேற்க வேண்டும். பெண்களும் குடும்பங்களும் அதில் பங்கேற்பது தனி முக்கியத்துவம் வாய்ந்தது.
3. அருள்பணியாளர்
உருவாக்கத்திற்கெனத் தேர்ந்தெடுக்கப்படுவோர் பயிற்சிக்கு உரிய பண்புகளும் திறமைகளும் கொண்டிருப்பதை உறுதி செய்வதற்கு ஏற்ற அளவீடுகளும் முறைகளும் செயல்படுத்தப்படவேண்டும்.
4. கூட்டியக்கத்
திரு அவையின் பல்வேறு இடங்களின் சூழமைவுகளுக்கு ஏற்ப அருள்பணியாளர் உருவாக்கம் திட்டமிடப்படவேண்டும். அப்பயிற்சியில் பங்கேற்கும் முன்பு அவர்கள் அக்கிறித்தவக் குழுமத்தின் அனுபவத்தைக் கணிசமான அளவு பெற்றிருக்கவேண்டும் “(அருள்பணியாளர்) உருவாக்கம் நம்பிக்கையாளர்களின் சாதாரண வாழ்விலிருந்து வேறுபட்ட செயற்கையான சூழமைவில் நடைபெறக்கூடாது” (முஅ
14n). மாறாக, “ஏழ்மையிலும் விளிம்புநிலையிலும் வாழ்வோரைச் சந்தித்தல், அவர்களது வாழ்வைப் பகிர்தல், அவர்களுக்குப் பணிசெய்தல் என்பன கிறித்தவக் குழுமங்கள் வழங்கும் அனைத்து உருவாக்க முறைகளிலும் இன்றியமையாத ஒரு பகுதியாக இருத்தல்வேண்டும். இது விருப்பத்திற்கு விடப்பட்ட ஒரு (பிற்)சேர்க்கை அல்ல; மாறாக, நம்பிக்கையின் கட்டாயத் தேவை. திருநிலைப் பணிகள் மற்றும் துறவு வாழ்வுக்கான உருவாக்கத்திற்கு இது இன்னும் அதிகம் பொருந்தும்” (முஅ 4o). இதற்கென அருள்பணியாளர் மற்றும் திருத்தொண்டர் என்போருக்கான உருவாக்கத்திற்கான அடிப்படைத் திட்டத்தை (Ratio Fundamentalis) மறுசீரமைப்பது
அவசியம்.
5. அருள்பணியாளர்
உருவாக்கத்தில் கூட்டியக்க நடைமுறை எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பதைக் கண்டறியவும், கூட்டியக்கத் திரு அவைக்கு ஏற்ற அதிகாரச் செயலாக்கத்தை வளர்த்தெடுப்பதற்கு உரிய மாற்றங்களைப் பரிந்துரைக்கவும் அருள்பணியாளர் தொடக்க மற்றும் தொடர் உருவாக்கத்திற்கான பொறுப்பாளர்களின் கலந்தாய்வு ஒன்றை நடத்தவேண்டும்.
இயேசு கிறிஸ்துவில் அன்பார்ந்தவர்களே,
‘இந்தியப் பொதுநிலையினரின் பாதுகாவலர் புனித தேவசகாயம்’
என்று நமது திருத்தந்தை அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளதால் அவரது விழாவைத் (ஜனவரி 14) தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமையை
(18.01.2026) நாம் பொதுநிலையினர் ஞாயிறாகச் சிறப்பிக்கிறோம்.
புனித தேவசகாயம்
இன்றைய
குழித்துறை மறைமாவட்டத்தில் உள்ள நட்டாலம் என்ற இடத்தில் 1713, ஏப்ரல் 25-ஆம் நாள் வாசுதேவன் நம்பூதிரி, தேவகியம்மை ஆகியோருக்கு மகனாக நமது புனிதர் பிறந்தார். கல்வி மற்றும் கலைகளில் தேர்ச்சி பெற்றுத் திருவிதாங்கூர் அரசின் நிதிக் காப்பாளர் என்ற உயர் பொறுப்பைப் பெற்றார். குளச்சல் போரில் சிறைப்பிடிக்கப்பட்ட டச்சுத் தளபதி இஸ்தாக்கியுஸ் டிலனாய் என்பவர் இவருக்கு இயேசு கிறிஸ்துவை அறிமுகப்படுத்தினார். இயேசுவை மீட்பராக ஏற்றுக்கொண்டு 14.05.1745-இல் வடக்கன்குளத்தில் அருள்பணி. ஜோவான்னிபத்தீஸ்தா புத்தார் என்பவரிடம் திருமுழுக்குப் பெற்றார்.
இந்த
மனமாற்றத்தால் உயர்குலத்தோர் நம் புனிதரை எதிர்த்தனர். துன்பங்கள், வேதனைகள் அனைத்தையும் துணிவுடன் எதிர்கொண்டு, நம்பிக்கை வாழ்வில் தளராதிருந்தார். 11 மாதங்கள் சிறைவாசம், உடலில் கரும்புள்ளி - செம்புள்ளி, எருக்கம் பூமாலை, சுண்ணாம்புச் சூளையின் கடும் நெருப்பு, அடி, உதைகள் எதுவும் இவரது நம்பிக்கையைத் தகர்க்கவில்லை.
நம்பிக்கை
வாழ்வின் சிகரம் தொட்ட இந்த மாமனிதர் 1752, ஜனவரி 14-ஆம் நாள் கோட்டாறு மறைமாவட்டம் காற்றாடிமலை என்ற ஆரல்வாய் மொழியில் சுட்டுக் கொல்லப்பட்டார். நம் மறைச்சாட்சிக்கு 26.06.2012
அன்று அருளாளர்
பட்டமும், 15.05.2022
அன்று புனிதர் பட்டமும் அளிக்கப்பட்டன. 16.07.2025 அன்று இந்திய பொதுநிலையினரின் பாதுகாவலராக அறிவிக்கப்பட்டார்.
பொதுநிலையினர்
ஞாயிறு
- 2026
புனித
தேவசகாயத்தின் நம்பிக்கை வாழ்வுப் பின்னணியில் இந்த ஆண்டின் பொதுநிலையினர் ஞாயிறு திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு ‘இயேசுவின் பணியை முழுமையாக்க அழைப்பு’
(Call to Fulfil the Mission of Jesus) என்ற பொருத்தமான மையச்சிந்தனையை ஆயர் பேரவை நமக்குத் தந்துள்ளது.
போதிக்கும்
பணி, புனிதப்படுத்தும் பணி, வழிநடத்தும் பணி ஆகிய இயேசுவின் முப்பெரும் பணிகளில், நம்பிக்கையாளர்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் பங்கு உள்ளது. இப்பணிகளில் பங்கேற்கவும் பங்களிக்கவும் திருமுழுக்குப் பெற்ற நாம் இறைவனால் அழைக்கப்படுகிறோம்.
நடந்து
முடிந்த உலக ஆயர்கள் மாமன்றம் (2021-2023) கூட்டியக்கத் திரு அவையாக, நமது உறவு ஒன்றிப்பு மற்றும் பங்கேற்பின் வழி, நற்செய்திப் பணியாற்ற நமக்கு அழைப்பு விடுத்துள்ளதை நாம் அறிவோம். தொடர்ந்து நாம் கொண்டாடிய யூபிலி 2025 இணைந்து பயணிக்க, இணைந்து செவிசாய்க்க, இணைந்து கற்றுக்கொள்ள நமக்கு அழைப்பு விடுத்தது.
இயேசுவின் பணி
“உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” (மாற்
16:15) என்று தம் சீடர்களிடம் கூறிய இயேசு, தமது பணிவாழ்வின் தொடக்கத்தில் தம்முடைய பணிக் கொள்கையை எல்லாருக்கும் அறிவித்தார். “ஏழைகளுக்கு நற்செய்தி, சிறைப்பட்டோருக்கு விடுதலை, பார்வையற்றோர் பார்வைப் பெறுதல், ஒடுக்கப்பட்டோருக்கு விடுதலை”
(லூக் 4:18) என்பனவற்றைத் தமது பணி இலக்குகளாகப் பிரகடனப்படுத்தினார்.
“தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார், பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்” (லூக்
1:53) என்ற அன்னை மரியாவின் பாடலிலும் இந்த ‘ஏழைகள் சார்புநிலை’ வெளிப்படுவதைப்
பார்க்கிறோம்.
திரு அவையின்
படிப்பினை
‘யூபிலி 2025’ கொண்டாட்டத்திற்காக மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் 07.05.2024 அன்று வெளியிட்ட ‘எதிர்நோக்கு ஏமாற்றம் தராது’
(Spes Non Confundit) (உரோ
5:5) எனும் ஆணை மடலில் ‘திரு அவையின் கரிசனம்’ பற்றி பின்வருமாறு தெரிவித்துள்ளதைப் பார்க்கிறோம்:
• ஏழைகளையும் வறியோராக்கப்பட்டவர்களையும்
நாம் அன்றாடம் சந்திக்கிறோம் (எண்-15).
• பசி என்பது ஓர் இடறல்; மானுட உடலில் காணப்படும் ஆறாத புண் (எண்-16).
• பூமியின் வளங்கள் ஒருசிலருக்கு மட்டுமல்ல; எல்லாருக்கும் உரியன (எண்-16).
•
காலத்தின் அறிகுறிகளில் எதிர்நோக்கைக் கண்டறிய அழைக்கப்படுகிறோம் (எண்-7).
திருத்தந்தை
பிரான்சிஸைத் தொடர்ந்து கடந்த ஆண்டில் இறைவனின் கொடையாக நமக்குத் தரப்பட்டுள்ள புதிய திருத்தந்தை லியோ 09.10.2025 அன்று வெளியிட்ட ‘நான் உன்னை அன்பு செய்கிறேன்’ (Dilexi Te) எனும் அறிவுரை மடலில், ஏழைகள் பற்றியும், மனித மாண்பு பற்றியும், இயேசுவின் சீடர்களான நம்பிக்கையாளர்களின் பார்வையும் பணியும் எவ்விதம் அமையவேண்டும் என்ற வழிகாட்டுதல்களைத் தந்துள்ளார்.
• ஏழைகள், துன்புறுவோர், புலம்பெயர்ந்தோர், விளிம்புநிலை மக்கள் சார்பாகத் திரு அவை நிலைப்பாடு (Option) எடுக்கவேண்டும்.
• ‘ஏழைகள்தான் திரு
அவையின் இதயம்!’
• ஏழைகளுக்கான பணி வெறும் இரக்கப்பணியல்ல; மாறாக, அது சமூக மாற்றத்திற்கான பணியாகும்.
• துன்புறுவோர், நலிந்தோர், ஏழைகள் மீதான அன்பே, கடவுள் மீதான நம்பிக்கை. எனவே, நாம் ஏழைகள் சார்பான நிலைப்பாடு (Preferential option
for poor) எடுக்கவேண்டும்.
• சர்வாதிகாரப் பொருளாதாரம் (Dictatorship of Economy) பற்றியும்
எச்சரிக்கை செய்கிறார்.
• சமூத்தின் கடைநிலையில் உள்ளவர்களுடன் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டதாக இயேசுவை இந்த ஏடு விவரிக்கிறது. எனவே, ‘ஏழைகள் மீதான அக்கறையே நம் சீடத்துவத்தின் அடையாளம்’
என்று நமக்கான எதிர்காலச் செய்நெறியைத் திருத்தந்தை வரையறுக்கிறார்.
சங்க ஏடுகளும்,
திரு
அவைச்
சட்டமும்
நினைவூட்டும்
நமது
கடமைகள்
பல்வேறு
நேர்மறை அம்சங்கள் இருப்பினும், நாம் காணும் இந்தியச் சூழல் பெருமளவில் அச்சமூட்டுவதாகவும் அபாயகரமானதாகவும் உள்ளது என்பதே உண்மை. இந்நிலையில், சங்க ஏடுகளும், திரு அவைச் சட்டமும் நமக்கு உணர்த்தும் கடமைகளாவன:
• இரண்டாம் வத்திக்கான் சங்கம் முடிந்து 60 ஆண்டுகள் நிறைவுறும் வேளையில், இறை மக்களாகிய நாம் அனைத்துச் சூழமைவுகளிலும் மனிதச் சமுதாயத்தின் நடுவில் இயேசுவின் சாட்சிகளாக இருக்க அழைக்கப்பட்டவர்கள் (இன்றைய உலகில் திருஅவை - எண்: 43).
• நற்செய்தி எல்லா மக்களையும் சென்றடைய உழைத்தல் (திரு அவைச் சட்டம்:211).
• ஏழைகளுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முன்னுரிமை அளித்தல் (திருப்பணியாளர்களின் வாழ்வும் பணியும் GT600T:6).
• மனித அமைப்புகள் எல்லாவிதச் சமூக-அரசியல் அடிமைத்தனங்களுக்கும் எதிராக ஊக்கமுடன் போராடவேண்டும் (இன்றைய உலகில் திரு அவை - எண்:29).
• உலகை ஊடுருவி, சமுதாயத்தைப் புதுப்பித்து, அதைப் புனிதப்படுத்தி உருமாற்றுவது பொதுநிலையினர் பெற்றுள்ள தனிவரம் (பொது நிலையினரின் திருத்தூதுப் பணி எண்:2).
நமக்கான அழைப்பு
இன்றைய
நற்செய்தி வாசகத்தில் ‘இயேசு தூய ஆவியாரால் திருமுழுக்குக் கொடுப்பவர்’ என்ற
நம்பிக்கையை திருமுழுக்கு யோவான் வெளிப்படுத்துகிறார். திருமுழுக்குப் பெற்ற நம்பிக்கையாளர்களாகிய நாம், கிறிஸ்துவுக்கு அர்ப்பணிக்கப்பெற்று, தூய ஆவியாரால் அருள் பொழிவு செய்யப்பட்டவர்கள். இயேசுவின் இலட்சியத்தையும் மதிப்பீடுகளையும் நமதாக்கி, ஏழைகள் மற்றும் விளிம்பு நிலை மக்களுக்காகத் திருத்தூதுப் பணியாற்ற அழைப்புப் பெற்றவர்கள். இது தொடர்பாகத் தனது மடலில் திருத்தந்தை லியோ பரிந்துரைக்கும் கீழ்க்காணும் சிலவற்றை முன்னெடுக்க முயற்சிப்போம்:
• ஏழைகள் மீதான அன்பின் வழியாக உலகைப் புதுப்பித்தல்.
• பிளவுகளைக் குணப்படுத்தும் இரக்கம் மற்றும் உரையாடல்.
• ஏழைகளில் இயேசுவைச் சந்தித்தல்.
• வீடுகளில் / குடும்பங்களில் அன்பு மற்றும் விருந்தோம்பல்.
• துன்பப்படுவோருக்கான பரிந்துரை மன்றாட்டுகள்.
• தேவையிலிருப்போருடன் நேரத்தையும் அக்கறையையும் பகிர்தல்.
• சமூக நீதி மற்றும் ஒற்றுமையை ஊக்குவித்தல்.
• இறைவனின் அன்பும் நீதியும் நிறைந்த இறையாட்சியைக் கட்டமைத்தல்.
அருள்பணி. மரிய
மிக்கேல், செயலர், தமிழ்நாடு பொதுநிலையினர் பணிக்குழு
மேதகு ஆயர்
சகாயராஜ்,
தலைவர், தமிழ்நாடு பொதுநிலையினர் பணிக்குழு
(தந்தை அன்புச் செல்வன், தாய் மார்த்தா, மகன் அகஸ்டின், மகள் கிறிஸ்டினா இவர்களோடு அருள்பணியாளர் தாமஸின் உரையாடல் தொடர்கிறது)
அன்புச் செல்வன்: “தந்தையே, கடந்த முறை நாம் பேசிக்கொண்டிருந்தபோது, வாழ்வின் மட்டிலான நம் ஆழமான பார்வைக்கும், பிரபஞ்சத்தின் ‘இருப்பு நிலைக்கும்’ தொடர்பு இருப்பதை எடுத்துரைத்தீர்கள். பிரபஞ்சத்தின் இருப்புநிலை அல்லது உண்மைநிலை என்பது எல்லாம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டும் பிணைக்கப்பட்டும் இருக்கிற நிலை என்பதையும் எடுத்துரைத்தீர்கள். மனித வாழ்க்கையைப் பொறுத்த அளவில் சுற்றியுள்ளவற்றோடு இணைந்து இருக்கும் நிலையையே நாம் ‘உறவு’ என்கின்றோம். அதாவது மனிதர்களாகிய நாம் உறவோடும், உறவிற்காகவுமே படைக்கப்பட்டுள்ளோம் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. மேற்கூறப்பட்ட இருப்புநிலைக்கும் இணைப்பு நிலைக்கும், அதாவது உறவிற்கு எதிராகச் செல்வதே ‘பாவம்’ என்றழைக்கப்படுகிறது. உறவு பற்றிய இன்னும் சில தெளிவுகளையும், உறவிற்கு எதிராக நாம் செல்வதன் காரணமாக எவ்வாறு பாவங்களைக் கட்டிக்கொள்கிறோம் என்பதைப் பற்றியும் எங்களுக்குத் தரமுடியுமா... தந்தையே?”
அருள்பணி: “பொதுவாக உறவை நான்கு வகைகளாகப் பிரிப்பதுண்டு:
அ) தன்னோடு உறவு, ஆ) சகமனிதர்களோடு உறவு, இ) இயற்கையோடு உறவு மற்றும் ஈ) கடவுளோடு உறவு.
இந்த நான்கு உறவுகளிலும் சரியான மனநிலையோடு நடந்துகொள்ளாமல் பாதகத்தை ஏற்படுத்தக்கூடிய
வகையில் நடந்துகொள்வதே பாவம் என்பதாகும்.”
கிறிஸ்டினா: “தன்னோடு உள்ள உறவில் ஒரு மனிதர் எவ்வாறு
பாவம் செய்யமுடியும் தந்தையே?”
அருள்பணி: “ஒவ்வொரு மனிதரையும் கடவுள் இந்தப்
பூவுலகிற்கு அனுப்பும்போது தமது சாயலோடுதான் அனுப்புகின்றார். நாம் கடவுளின் பிம்பமாக
இவ்வுலகில் இருக்கிறோம் என்பது உண்மை. எனினும், பல மனிதர்கள் இவ்வுண்மையை உணராமல்,
வெளிப்படையாகத் தெரியும் தங்களின் உடல் அமைப்பு, நிறம், குடும்பப் பின்னணி போன்றவற்றை
மட்டும் வைத்து தங்களை அளவுக்கதிமாகவோ அல்லது அளவுக்குக் குறைவாகவோ மதிப்பிடுகிறார்கள்.
தங்களை அளவுக்கதிகமாக மதிப்பிடுவது அகந்தைக்கும், அளவுக்குக் குறைவாக மதிப்பிடுவது
தாழ்வு மனப்பான்மைக்கும் காரணமாக இருக்கின்றன. இவ்விரண்டு அணுகுமுறைகளும் நம் உண்மைநிலையை
நாம் ஏற்றுக்கொள்ளாத, அன்பு செய்யாத நிலையைச் சுட்டிக்காட்டுகிறது. எனவே, அகந்தையும்
தாழ்வு மனப்பான்மையும் தன்னோடுடனான உறவில் ஒரு மனிதர் செய்யும் பாவங்கள் என்று நாம்
கூறலாம். அகந்தையும் தாழ்வு மனப்பான்மையும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களே! இரண்டுமே
நாம் நம்மைச் சரியாக மதிப்பிடத் தெரியாததன் காரணமாக நம்மில் நிகழ்வது. இரண்டுமே நாம்
கடவுளின் சாயலில் படைக்கப்பட்டுள்ளோம் என்ற உண்மையை உணராததன் காரணமாகவும், நம் வழியாகக்
கடவுள் செயல்படுகின்றார் என்ற விழிப்புணர்வு நம்மிடம் இல்லாததன் காரணமாகவும் நம்மில்
நிகழ்வது.”
அன்புச் செல்வன்: “அகந்தையைப் பற்றிய கதை இது! மின்சார
வசதி கிராமப்புறங்களைச் சென்றடையாத காலத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்ட கதை இது!
ஒரு நபர் கிராமத்திலிருந்து வெளியேறி, ஒரு நகரத்தில் வாழ்ந்து வந்தார். அவருடைய கிராமப்புற
நண்பர் சிலகாலம் கழித்து அவரைச் சந்திக்கச் சென்றார். நண்பரிடம் சென்ற கிராமத்தவர்,
‘ஒரே புழுக்கமாக இருக்கிறது. ஒரு விசிறி கொடு’ என்றாராம்.
நண்பரோ, ‘நீ இப்போது நகரத்தில் இருக்கிறாய். இங்கு விசிறியெல்லாம் தேவையில்லை. நான்
கையசைத்தாலே காற்று வரும்’ என்று பெருமையோடு கூறிவிட்டு மின் விசிறிக்கான
பொத்தானை அழுத்த, காற்று வந்தது. அடுத்து கிராமத்தவர், ‘இரவு நேரம் வந்துவிட்டது. அரிக்கேன்
விளக்கை ஏற்று’ என்று கூற நண்பர், ‘இது கிராமமல்ல;
நகரம்! இங்கு நான் கையசைத்தாலே எல்லாம் நடக்கும். இப்போது என் கையசைவில் வெளிச்சம்
வரும் பார்’ என்று பெருமையோடு கூறிவிட்டு, பொத்தானை
அழுத்த குழல்விளக்கு எரிந்தது. கிராமத்தவர் இவற்றையெல்லாம் பிரமிப்போடு பார்த்துக்கொண்டிருந்தார்.
இவ்வாறு வானொலிப்பெட்டி, தொலைக்காட்சிப் பெட்டி ஆகியவற்றையெல்லாம் தன் கை அசைவினாலே
இயக்கினார். இதற்கிடையில் திடீரென மின்சாரம் போய்விட்டது. காற்று இல்லை, வெளிச்சம்
இல்லை. கிராமத்தவர், ‘நண்பா! உன் கையை அசை! காற்றும் வெளிச்சமும் வரட்டும்’ என்றாராம். இப்படித்தான் நம்மில் பலர்! கடவுளின் ஆற்றல்
நம் வழியாகப் பாய்வதன் காரணமாகவே நம்மால் சிறப்பாகச் செயல்பட முடிகிறது என்கின்ற விழிப்புணர்வு
இல்லாதவர்களாக இருக்கின்றோம். ஏதோ நம்மாலேயே எல்லாம் நடைபெறுகிறது என்று நம்மைக் குறித்து
அளவுக்கதிகமாகவே எடை போட்டுக்கொள்கிறோம்.”
அருள்பணி: “இது ஒருபுறம் இருக்க, தாழ்வு மனப்பான்மையில்
உழன்று, தங்களின் ஆற்றல் என்னவென்று தெரியாமலேயே வாழ்ந்து மடிவோரும் உள்ளனர். வங்கக்கவி
இரவீந்தரநாத் தாகூரின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு. அவரது குடும்பம் பெரிய குடும்பம்.
பெற்றோருக்குப் பதினான்காவது குழந்தையாகப் பிறந்தவர் இவர். எனவே, இவரை அதிகமாக வளர்த்தது
இவரது வீட்டில் வேலை செய்த ஒரு பணியாளரே! இந்தப் பணியாளருக்கு மற்ற வேலைகளும் இருந்ததன்
காரணமாக, தாகூரோடு உடனிருந்து இவரைக் கவனித்துக்கொள்ள முடியவில்லை. குழந்தையான தாகூரைக்
கையாள ஒரு வழிமுறையைக் கையாண்டார். தாகூரை வீட்டின் ஓரிடத்தில் வைத்து, அவரைச் சுற்றித்
தன் கையாலே ஒரு வட்டமிட்டு, ‘இது ஒரு மந்திர வளையம். இதைத் தாண்டி நீ வெளியே வந்தால்,
ஒரு பெரிய மிருகம் வந்து உன்னை விழுங்கிவிடும்’ என்று
கூறிப் பயமுறுத்தி, அவரை அங்கேயே இருக்க வைப்பாராம். மேலும், அவரது குடும்பம் பக்தியான
குடும்பமாதலால் இராமாயணம், மகாபாரதம் போன்றவை இவருக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டன. இதன்
பின்னணியில் அந்தப் பணியாளர், ‘இராமாயணத்தில் இராமர் சொன்ன எல்லையைத் தாண்டிச் சென்றதாலே,
இராவணன் சீதையைக் கடத்திச் சென்றான். நீயும் நான் வரைந்த எல்லையைத் தாண்டி வந்தால்,
உனக்குத் தீங்கு தான் ஏற்படும்’ என்று கூறி, அவரை வட்டத்திற்குள்ளே
கட்டுப்படுத்தி வைப்பாராம். இதுபோலத்தான் நம்மில் பலரது வாழ்வும்! நம்மைச் சுற்றி நாமே
ஒரு மனவட்டத்தை உருவாக்கி, ‘அதுதான் நாம்’ என்கின்ற
மனநிலையோடு, நம் உண்மையான ஆற்றல் என்னவென்று தெரியாமலேயே வாழ்கிறோம்.”
மார்த்தா: “தந்தையே, அடுத்ததாக சக மனிதர்களுக்கு
எதிராக நாம் செய்யும் பாவங்கள் குறித்தும், அதன் பாதிப்புகள் குறித்தும் நாம் அதிகம்
விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று எண்ணுகின்றேன். இது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்.
இயற்கைக்கு எதிராக நாம் செய்யும் பாவங்கள் பற்றிக் கூறுங்கள் தந்தையே!”
அருள்பணி: “மானிட வாழ்வின் நல்வாழ்விற்கென்று
கடவுள் கொடுத்துள்ள மாபெரும் கொடை இயற்கை! இயற்கைக்கு எதிராக நாம் இரண்டு பாவங்களைக்
கட்டிக்கொள்ள முடியும். ஒன்று, அளவுக்கதிமாக இயற்கை வளங்களை நம் வசதிக்காக நுகர்வது.
இரண்டு, இயற்கையைப் பாதுகாக்கவும் பாராமரிக்கவும் நம்மால் இயன்ற முயற்சிகளை எடுக்காமல்
இருப்பது.”
அன்புச் செல்வன்: “இன்றைய சூழ்நிலையில் மனிதர்களாகிய
நாம் நம் வசதிக்காக இயற்கை வளங்களை அளவுக்கதிகமாகவே நுகர்கிறோம் என்பதைப் பல சூழலியலாளர்கள்
தெளிவாக எடுத்துரைக்கிறார்கள். மனிதர்களது அதீத நுகர்வு மற்றும் பராமரிப்பின்மையின்
காரணமாக நதிகள் நாசமாகிக் கொண்டிருக்கின்றன; மலைகள் மறைந்து கொண்டிருக்கின்றன; காடுகள்
காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன; மண் மலடாகிக் கொண்டிருக்கிறது. இவற்றின் காரணமாக
அடுத்து வரும் தலைமுறையினருக்கு விட்டுச் செல்லவேண்டிய இயற்கை வளங்களை நாமே சூறையாடிக்கொண்டிருக்கின்றோம்.
இவை இயற்கைக்கு எதிரான பாவங்கள்தானே!”
அருள்பணி: “நிச்சயமாக! இயற்கை வளங்களைச் சூறையாடுவதால்
அதிக பாதிப்பு மனிதர்களுக்குத்தான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இயற்கையின்
பாதிப்பு காலநிலைச் சீர்கேடாக நம்மைத் தாக்குகின்றன. இத்தகைய சூழ்நிலையில் இயற்கையைப்
பராமரித்துப் பாதுகாக்கின்ற கடமை ஒவ்வொரு மனிதருக்கும் முக்கியமாக ஒவ்வொரு கிறித்தவருக்கும்
உண்டு. மரங்களை நடுவது, மரங்களை வெட்டாமல் இருப்பது, வாகனங்களை அவசியத்திற்காக மட்டும்
பயன்படுத்துவது, போதுமான தேவைகளோடு வாழக் கற்றுக்கொள்வது போன்றவை இயற்கையுடனான நம்
உறவைக் கட்டியெழுப்ப நாம் மேற்கொள்ளும் சிறுசிறு முயற்சிகளே!”
அன்புச் செல்வன்: “இயற்கை குறித்துப் பேசும்போது, இயற்கைமட்டிலான
நம் முன்னோர்களின் அணுகுமுறை என் மனக்கண்முன் வருகிறது. அவர்கள் இயற்கையில் இறைவனின்
பிரசன்னம் இருக்கிறது என்பதை உணர்ந்திருந்தனர். ‘மாசில் வீணையும் மாலை மதியமும் / வீசு
தென்றலும் வீங்கிள வேனிலும் / மூசு வண்டறை பொய்கையும் போன்றதே / ஈசன் எந்தை இணையடி
நீழலே’ என்ற அப்பரின் வார்த்தைகள் நமக்குத்
தெரிந்ததே! அத்தகைய மனநிலை இயற்கையை மதிக்க வேண்டும் என்ற மனநிலையை நம் முன்னோர்களுக்குக்
கொடுத்தது. எனவே, இயற்கையைக் கையாள்வதில் மிகவும் கவனமாக இருந்தனர். நவீன மனிதர் இயற்கையைத்
தூக்கி எறிகின்ற பொருளாகப் பார்க்கின்றனர். இவ்வாறு பார்ப்பதே ஒருவகையில் இயற்கைக்கு
எதிரான பாவம்தான்.”
(முற்றும்)
நமது வாழ்க்கை பல நேரங்களில் சிக்கல்கள், தடைகள் மற்றும் எதிர்மறைச் சூழ்நிலைகளால் சூழப்பட்டுள்ளது. மனிதர்கள் தங்களது முயற்சிகளில் வெற்றியடையாதபோது, வாழ்க்கை வெறுமையாக, குழப்பமாகத் தோன்றும். இந்நிலையில், சாலமோனின் ஞானநூலில் கூறப்படும் இறைவார்த்தை நமக்கு ஆழமான நினைவூட்டலைத் தருகிறது.
புனித பிரான்சிஸ்
அசிசியாரும்
ஆட்டுக்குட்டியும்
கடும்
குளிர்காலக் காலைப்பொழுதில் அசிசியின் புனித பிரான்சிஸ் அவர்கள் ஓர் இளம் பிரான்சிஸ்கன் சகோதரருடன் அமைதியாக வழிப்பயணம் செய்து கொண்டிருந்தார். குளிர்காற்று முகத்தைத் துளையிடும் வகையில் வீசியது; பாதை கிட்டத்தட்ட வெறிச்சோடியிருந்தது. அந்த நேரத்தில், புனிதர் திடீரென்று நடையை நிறுத்தினார். மரவேலி ஒன்றின் அருகில் ஒரு சிறிய ஆட்டுக்குட்டி உடல் நடுங்கிக்கொண்டு, பயத்தில் மூச்சை முட்டிக் கொண்டு ஒற்றையாய் தனியாகத் தவித்துக்கொண்டிருந்தது. அதன் மேனி முட்செடிக்குள் சிக்கியிருந்தது, அது முற்றிலும் உதவியற்ற நிலையில் பார்த்த புனித பிரான்சிஸ் கருணையுடன் முனைந்து அந்த ஆட்டுக்குட்டியை மெதுவாகத் தனது கரங்களில் தூக்கிக்கொண்டார். அப்போது உடன்வந்த இளம் சகோதரர் பயத்துடன் கேட்டார்: “அருள்தந்தையே பிரான்சிஸ், இது ஒரு சிறிய மிருகம்தானே! நாம் விரைந்து செல்ல வேண்டிய வேலையுண்டு; மக்கள் நம்மை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்” என்றார்.
உடனே
பிரான்சிஸ், “சகோதரனே! இந்த ஆட்டுக் குட்டி அதைப் படைத்த ஆண்டவருக்குச் சொந்தமானது. கடவுளின் அளவற்ற அன்பு இந்த நொடியிலும் அதை வாழவைத்திருக்கிறது. அதை நாம் எப்படி உதாசீனப்படுத்தி கடந்து செல்ல முடியும்?” என்று கேட்டு, புனிதர் அக்கறையுடன் அந்த ஆட்டுக்குட்டியைத் தனது மார்பில் சாய்த்தபடி அதன் உரிமையாளரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தார். உரிமையாளர் ஆழ்ந்த நன்றியுடன் அவரை வாழ்த்தினார்.
அந்த
நேரத்தில் புனித பிரான்சிஸ் மிக எளிமையாகக் கூறினார்: “இந்தச் சிறிய உயிரினத்தைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்; ஒவ்வொரு படைப்பும் ஆண்டவருக்குச் சொந்தமானது. கடவுளின் அன்பு எல்லா உயிர்களையும் ஒவ்வொரு கணமும் தாங்கி நிறுத்துகிறது.”
அன்று
நடந்த இந்நிகழ்வை அவருடன் பயணித்த இளம்சகோதரர் தனது நாள்குறிப்பில் இவ்வாறு பதிவு செய்தார்: “அந்த நாளில்தான் நான் இறைவார்த்தையை உண்மையாகப் புரிந்துகொண்டேன்.”
“ஆண்டவரே, உயிர்கள்மீது அன்புகூர்கின்றவரே, நீர் எல்லாவற்றையும் வாழவிடுகின்றீர்; ஏனெனில் அவை யாவும் உம்முடையன”
(சாஞா 11:26). இந்த இறைவார்த்தையில் கடவுளின் அன்பும் பராமரிப்பும் மனித வாழ்வின் அர்த்தமும் இணைக்கப்பட்டுள்ளன. புனித அகுஸ்தின் ஹிப்போ மற்றும் புனித பவுலின் கருத்தைப் போல, மனிதன் கடவுளின் படைப்பில் உயிர்ப்பெற்று வாழ்வது கடவுளின் கருணையால்தான் என்பதை மையமாகக் கொண்டு திருத்தந்தை லியோ தனது புதன் மறைக்கல்வி உரையை நிகழ்த்தினார்.
1. கடவுள் அன்பில் உலகத்தை
நிர்வகிக்கிறார்!
கடவுள்
நம்மை அன்புடன் காப்பாற்றுகிறார். மனிதர்கள் சந்திக்கும் நோய், பிளவுபாடு, கஷ்டங்கள் போன்ற சூழ்நிலைகளிலும் கடவுளின் அன்பு நம்மைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் சக்தியாக அமைகிறது. தூய ஆவியின் செயல்பாடுகளில் இயேசு கிறிஸ்து தமது அன்பை நோயுற்றவர்கள், காயமடைந்தவர்கள், பாவங்களில் விழுந்தவர்களுக்குக் காட்டினார் (மத் 14:14). தூய ஆவி இவ்வாறான அன்பின் செயல்களை ஆன்மிகப் பராமரிப்பு என வர்ணிக்கிறார். கடவுளே
உயிரின் முதன்மை ஆதாரம்; அவரது அன்பால் எல்லாப் படைப்புகளையும் பராமரிக்கிறார் எனக் கத்தோலிக்கத் திருச்சங்கக் கொள்கை கற்பிக்கிறது (Catechism of the Ctholic Church, 301).
2. கடவுள் அனைத்தையும் வாழவிடுகிறார்
‘நீர் எல்லாவற்றையும் வாழவிடுகின்றீர்…’என்பது
உலகில் உள்ள அனைத்து உயிர்களும் கடவுளின் கையிலே பாதுகாக்கப்பட்டுள்ளதைக் காட்டுகிறது. மனிதர்கள் மட்டுமல்ல; விலங்குகள், இயற்கை வளங்கள், சுற்றுப்புறம் ஆகிய அனைத்தும் ஆண்டவரின் பராமரிப்பில் உள்ளன.
உலகில்
8.7 மில்லியன் உயிரினங்கள் வாழ்கின்றன. இவை அனைத்தும் கடவுளின் கரங்களால் பாதுகாக்கப்பட்டவை. இயற்கையின் அடையாளங்களையும் மனித வாழ்வையும் இணைக்கும் கருணை, கடவுளின் பராமரிப்பை அடிப்படையாகக் கொண்டது. “நாம் வாழும் எல்லா நிமிடங்களும் கடவுளின் பரிசுதான்”
(1கொரி 10:31) என்கிறார் புனித பவுல்.
3. எல்லாம் ஆண்டவருடையவை
“ஏனெனில் அவை யாவும் உம்முடையன...” நம் செல்வம், திறமை, உடல் மற்றும் மனம் அனைத்தும் கடவுளுக்கே சொந்தமானவை. நமது வாழ்க்கையை நம்முடைய சொந்த முயற்சியாக மட்டுமே எண்ணாமல், கடவுளின் வழிகாட்டுதலின்படி வாழ்வது அவசியம். நமது முயற்சிகள் கடவுளின் நம்பிக்கையுடன் இணையும்போது மட்டுமே செம்மையாகும். மனிதர்கள் கடவுளை மறந்தால், இயற்கை, குடும்பம் மற்றும் சமூக உறவுகளில் சிக்கல்கள் உருவாகின்றன. “கடவுளின் மகிமை மனித வாழ்க்கையின் எல்லாப் படைப்புகளிலும் தெரியும்”
என்கிறது திருச்சங்கக் கொள்கை (CCC 294).
4. வாழ்க்கைக்கு எதிர்நோக்கு தேவை
வாழ்க்கைக்கு
ஒரு திசை, ஓர் எதிர்நோக்கு இல்லாவிட்டால், அது சோம்பல் மற்றும் குழப்பமாக மாறும். கடவுளை நம்பும் நம்பிக்கை மனிதர்களை சிரமங்களின் வழியாக நடக்க வைக்கும், சோதனைகளில் நிலைத்திருக்க உதவும்.
வாழ்க்கைப்
பயணத்தில் கடவுளின் அன்பை நினைவில் வைத்துக்கொண்டு முன்னேற வேண்டும். எதிர்நோக்கு இல்லாமல் வாழும் வாழ்க்கை வெறுமை, குழப்பமான பயணம் போன்றதாகத் தோன்றும். திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் கூறியதாவது: “வாழ்க்கையில் எதிர்நோக்கு இல்லாதவர் துயரத்தில் தவிக்கிறார்; கடவுளில் நம்பிக்கை வைத்தவர் மட்டுமே உண்மையான அமைதியைப் பெறுகிறார்.”
5. இயேசு கிறிஸ்துவின்
உயிர்ப்பு
- நம்பிக்கையின்
ஆதாரம்
“தீமையின் இருள் எப்போதும் நம்மைச் சுற்றி இருப்பதாகத் தோன்றினாலும், இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு நம்மை ஆதரிக்கும் வலிமையாக உள்ளது. வாழ்க்கை மங்கியதாகத் தோன்றினாலும், அவர் எப்போதும் நம்முடன் இருக்கிறார்” என்று
திருத்தந்தை லியோ வழங்கிய புதன் மறைக்கல்வி உரை, மக்கள் மனத்தில் கடவுளின் அன்பின் நிலையான நினைவூட்டலை உருவாக்குவதாக அமைகிறது.
சாலமோனின்
வார்த்தைகள் நமக்கு உண்மையை உணர்த்துகிறது: ‘கடவுள் உலகையும் உயிர்களையும் வாழவிட்டு, அனைத்தையும் தமது அன்பால் நிர்வகிக்கிறார். நம்முடைய வாழ்க்கை சவால்கள் நிறைந்ததாக இருந்தாலும், அவர் அன்பையும் கருணையையும் நம்மோடு வைத்திருக்கிறார்.’
நாம்
கடவுளின் அன்பை நம்பினால், எந்தச் சவாலையும் கடந்து வாழலாம். உலகின் அனைத்து உயிர்களும், மனிதர்கள், இயற்கை வளங்கள், வாழ்க்கையின் அனைத்துத் தரப்புகளும் அவரது கைகளில் பாதுகாக்கப்படுகின்றன.
6. வாழ்வின் திசையும் எதிர்நோக்கும்
உலகில்
பரவியுள்ள நம்பிக்கையின்மை என்ற நோய்க்கு எதிராக, நாம் வாழ்வை ஆபத்தில் கிடைத்த கொடையாகவும், மகிழ்ச்சியாக இருக்கவே நம்மைப் படைத்த தந்தையின் அன்பின் மீதான நம்பிக்கையாகவும் கொள்ளவேண்டும். கடவுள் “வாழ்க்கையை அன்புகூர்பவர்” (சாஞா
11:26).
இயேசு
கிறிஸ்துவே வாழ்வு; அவர் தமது உயிரைக் கொடுத்து நமக்கு வாழ்வு அளித்தார். உருவாக்குவது என்பது (Creating) அன்பினாலும்
அன்பிலும் பிறரை வாழ்க்கையில் கொண்டு வருவதாகும். பொறாமைக்கு எதிராகக் கடவுளின் அன்பும் வாழ்க்கைத் திட்டமுமே உண்மையான வழி. உயிர்த்த இயேசுவே நமது நிரந்தர எதிர்நோக்கு. அவரே நம்முடன் நடந்து வருகிறார்!
ஆண்டவர்
அன்பில் வாழும் வாழ்க்கை நம்பிக்கை, பரிசுத்தம் மற்றும் ஆன்மிக வளர்ச்சியின் வழிகாட்டியாகும்.