news
ஆன்மிகம்
உயிர்ப்பின் சாட்சிகளாய்...

இத்தாலியின் போலோக்னா நகரைச் சேர்ந்த ஓர் இளம் மாணவர், புனித பக்கீத்தாவிடம் ஒரு கேள்வியை எழுப்பினார். “உங்களைக் கடத்தி சித்திரவதை செய்தவர்களை மீண்டும் சந்தித்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?”

நான் அவர்களைச் சந்தித்தால் அவர்கள் காலில் விழுந்து முத்தமிடுவேன்; ஏனெனில், அவர்கள் என்னைச் சாட்டையால் அடித்ததன் விளைவாகப் பெற்ற 144 தழும்புகள் இல்லையென்றால், இன்று நான் ஒரு கிறித்தவளாகவும் இறைப்பணியாளராகவும் மற்றும் துறவியாகவும் இருந்திருக்க முடியாது.”

இயேசுவோடு வாழ்ந்த திருத்தொண்டர்களைப் போலவும், எண்ணற்ற புனிதர்கள் சொல்லொண்ணாத் துயரத்தை ஏற்று இறைவனுக்குச் சாட்சிய வாழ்வு வாழ்ந்தனர். கிறித்தவ வாழ்வு என்பது வெறும் சடங்குகளின் தொகுப்பல்ல; நம் வாழ்வில் அர்த்தம் தரும் பயணமாகும். கிறிஸ்துவில் வைத்திருக்கும் நம்பிக்கை அவரின் பாடுகளில் அல்ல; உயிர்ப்பில்தான் உள்ளது. நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் ஆண்டவரின் உயிர்ப்புப் பெருவிழா நம் ஆன்மிகப்  பயணத்திற்கு ஒரு புதிய விடியலைத் தருகிறது.

அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சி சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தனர். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, ‘உங்களுக்கு அமைதி உரித்தாகுக!’ என்று வாழ்த்தினார். இவ்வாறு சொல்லிய பின் அவர்தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டனர். இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, ‘உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்என்றார். இதைச் சொன்ன பின் அவர் அவர்கள் மேல் ஊதி, “தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள் (யோவா 20:19-21) என்றார்.

கல்லறையின் இருளை வென்ற உயிர்த்த ஆண்டவரைச் சந்தித்த பிறகுதான் திருத்தூதர்கள் தூய ஆவியின் ஆற்றலைப் பெற்று, உலகெங்கும் நற்செய்தியை அறிவிக்கப் புறப்பட்டனர். அவர்களின் வாழ்க்கை முறையை இன்றைய சூழலில் நாம் எவ்வாறு பின்பற்றலாம்?

1. திருத்தூதர்களின் அடையாளம்

திருத்தூதர் (அப்போஸ்தல்லோஸ்) என்ற கிரேக்கச் சொல்லுக்குஅனுப்பப்பட்டவர்கள்என்று பொருள். திருத்தூதர்கள் இயேசுவின் போதனையை வெறும் தகவல்களாகப் பறைசாற்றவில்லை; மாறாக, உயிர்த்த ஆண்டவரின் ஆற்றலைப் பெற்று அவரது நற்செய்தியைத் தங்களின் இரத்தச்சாட்சியால் அறிவித்தனர். உயிர்த்த ஆண்டவரைச் சந்தித்தபின் இவர்கள் வீதிக்குச் சென்று துணிவுடன் உயிர்த்த ஆண்டவரிடமிருந்து பெற்ற அனுபவத்தைப் பற்றிப் பேசத் தொடங்கினர். இந்தத் துணிவுதான் ஒரு நற்செய்திப் பணியாளரின் முதன்மைப் பண்பாகும்.

அஞ்சாதீர்கள்என்ற ஆண்டவரின் வார்த்தையே அவர்களின் ஆன்மப் பலமானது. “தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லை வரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள் (திப 1:8). இது மனித பலத்தால் அல்ல; இறைவனின் ஆற்றலால் நிகழ்ந்தது.

2. ஏழு திருத்தொண்டர்களின் பணிகளும் மற்றும் சாட்சிய வாழ்வும்:

1. தூய ஸ்தேவான்:  இவரே திரு அவையின் முதல் இரத்தச்சாட்சியாவார். இறைநம்பிக்கையின் முதல் மறைச்சாட்சியாளர். ஏழு திருத்தொண்டர்களில் முதன்மையான ஸ்தேவான், தூய ஆவியாலும் இறைநம்பிக்கையாலும் நிறைந்தவர். பந்திகளில் உணவு பரிமாறும்டயகோனியாஎனும் தாழ்மையான பணியைச் செய்த அதேவேளையில், இறை வல்லமையால் மக்களிடையே பெரும் அரும் அடையாளங்களையும் செய்தார். மறைநூல் அறிஞர்களும் மூப்பர்களும் அச்சுறுத்தியபோது அஞ்சாமல், நற்செய்தியைத் துணிச்சலுடன் அறிவித்தார்.

2. பிலிப்பு: பிலிப்பு ஒரு சிறந்த நற்செய்தி அறிவிப்பாளராக விளங்கினார். சமாரியா நகருக்குச் சென்று அங்குள்ள மக்களுக்குக் கிறிஸ்துவைப் பற்றி அறிவித்ததோடு, தூய ஆவியாரின் தூண்டுதலால் எத்தியோப்பிய அரச சபையின் அதிகாரிக்குத் திருவிவிலியத்தை விளக்கி அவருக்குத் திருமுழுக்குக் கொடுத்தார். இதன்மூலம் நற்செய்திப் பணி என்பது எல்லா இனத்தவருக்கும் உரியது என்பதைத் தனது வாழ்வால் நிலைநாட்டினார்.

3. புரக்கோரோ: புரக்கோரோ திருத்தூதர்களால் வழங்கப்பட்ட நிர்வாகப் பணிகளை மிகவும் செம்மையாகவும் நேர்த்தியாகவும் செய்தவர். திரு அவை பாரம்பரியத்தின்படி, இவர் திருத்தூதர் யோவானின் உதவியாளராக இருந்து அவருக்குப் பணிவிடை செய்தார். பிற்காலத்தில் நிக்கோமீடியா பகுதியின் ஆயராகப் பொறுப்பேற்று, அங்கிருந்த மக்களுக்கு இறைவார்த்தையை அறிவித்தார்.

4.நிக்கானோர்: தொடக்கத் திரு அவையில் எபிரேய மற்றும் கிரேக்க மொழி பேசும் இறை நம்பிக்கையாளர்களிடையே நிலவிய பிரிவினைகளைத் தீர்ப்பதில் நிக்கானோர் முக்கியப் பங்காற்றினார். உணவுப் பங்கீட்டில் கிரேக்கக் கைம்பெண்கள் புறக்கணிக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த இவர், ஏழை விதவைகளுக்குத் தேவையான உதவிகளை முன்னின்று அளித்தார். ஸ்தேவான் கொல்லப்பட்ட அதே நாளில், இவரும் கிறிஸ்துவின் மீதிருந்த பற்றுறுதிக்காகத் தனது உயிரைத் தியாகம் செய்து இரத்தச்சாட்சியானார்.

5. தீமோன்: திரு அவையில் ஒழுங்குமுறையைப் பராமரிப்பதிலும், பந்திகளில் அனைவருக்கும் சமமான உணவு கிடைப்பதை உறுதி செய்வதிலும் தீமோன் கடுமையாகவே உழைத்தவர். பிற்காலத்தில் பெரோயா பகுதியின் ஆயராக நியமிக்கப்பட்ட இவர், அங்கு நற்செய்திப் பணிகளை விரிவுபடுத்தினார். கிறிஸ்துவின் மதிப்பீடுகளைப் பரப்பியதற்காகப் பல சித்திரவதைகளையும் துன்பங்களையும் அனுபவித்தபோதிலும், இறுதிவரை இறைநம்பிக்கையில் உறுதியாக இருந்து உயிர் துறந்தார்.

6. பார்மனா: திருத்தூதர்களுக்குப் பணிவிடை செய்வதிலும், நம்பிக்கையாளர்களின் அன்றாடத் தேவைகளைக் கவனிப்பதிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர். எளிய பணிகளின் வழியாகவும் இறைவனுக்கு மகிமை சேர்க்க முடியும் என்பதை இவர் உலகுக்குக் காட்டினார். பிலிப்பி நகரில் நற்செய்தி அறிவிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இறை நம்பிக்கைக்காகத் தனது உயிரைத் தியாகம் செய்தார்.

7. நிக்கொலா: அந்தியோக்கியாவைச் சேர்ந்த நிக்கொலா, பிற இனத்தைச் சார்ந்தவராக இருந்து யூத மதத்தைத் தழுவி, பின்னர் கிறித்தவத்திற்கு மாறியவர். கிரேக்க மொழி பேசும் பிற இனத்தவர்களிடையே நற்செய்தியை அறிவித்தார். திரு அவையின் நிர்வாகப் பணிகளைத் துல்லியமாகவும் நேர்மையாகவும் கையாண்ட இவர், நற்செய்திப் பணி என்பது அனைத்துப் பின்னணி கொண்டவர்களையும் உள்ளடக்கியது என்பதைத் தனது இறைப் பணியின் மூலம் உறுதி செய்தார்.

3. நம்பிக்கைக்கொண்டோரின் வாழ்வுமுறை

திருத்தூதர்கள் தங்களின் சிந்தனையாலும் செயலாலும் ஒன்றிணைந்த வாழ்வை வாழ்ந்தனர். இதுவே பல்வேறு சமூகக் காரணங்களால் பிரிந்து கிடக்கும் உலகிற்குத் திருத்தூதர்கள் தந்த சிறந்த எடுத்துக்காட்டாகும். சுயநலத்தைத் துறந்து, தங்களுக்குள் இருந்தவற்றைத் தாராளமாகப் பகிர்ந்து கொண்டனர். ‘எனதுஎன்பதுநமதுஎன்று மாறிய போது, அங்கே வறுமை நீங்கி இறையாட்சி புலர்ந்தது. தனிமனித ஆதிக்கத்தைவிட பொதுநலமே மேலானது என்பதை அவர்கள் உலகிற்குக் கற்பித்தனர். திருத்தூதர்கள் எத்தகைய துன்பத்திலும் இறைவார்த்தையை விட்டுக்கொடுக்கவில்லை. சோதனைகளை வேதனைகளாகப் பார்க்காமல், இறைவனுக்கு ஆற்றும் தொண்டாகப் பார்த்தனர்.

4. இன்றைய சூழலில் திருத்தூதுப் பணி

திருத்தந்தை பிரான்சிஸ், “நற்செய்தி அறிவிப்பு என்பது ஒரு நுகர்வுப் பொருள் அல்ல; அது ஒரு கொண்டாட்டம்என்று கூறுகிறார். நற்செய்தி அறிவிப்பவர் முகத்தில் மகிழ்ச்சி இருக்கவேண்டும். உயிர்த்த ஆண்டவரைச் சுமப்பவர்கள் ஒருபோதும் விரக்தியில் மூழ்கமுடியாது. சோகமான முகம் நற்செய்தியின் வீரியத்தைக் குறைத்துவிடும். நற்செய்தி ஒருவரைப் பயமுறுத்துவதற்கு அல்ல; மாறாக, இறைவனின் பேரன்பால் அவரை மாற்றியமைக்கவே அறிவிக்கப்படுகிறது.

மக்களின் காயங்களைக் குணப்படுத்துவது உடல் ரீதியான நோய்களைத் தாண்டி, மனக்காயங்களை ஆற்றும் மருந்தாக நற்செய்தி இருக்க வேண்டும். உலகம் அன்பிற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறது. அந்த ஏக்கத்தைப் பூர்த்தி செய்வதே நற்செய்திப் பணியாகும். நம் வாழ்வு மக்களை நோக்கி புறப்பட்டுச் செல்லும் திரு அவையாக மாறி, இறைவன் தரும் மகிழ்ச்சியை விதைக்கவேண்டும். நம் பணி தேங்கி நிற்கும் குட்டையைப் போல இல்லாமல், ஓடும் நதிபோல நற்செய்தியை எல்லா இடங்களுக்கும் கொண்டு செல்லவேண்டும். இப்படிப்பட்ட  நற்செய்திப் பணியை ஆற்றிடத் திரு அவை நம்மை அழைக்கிறது.

உயிர்ப்புப் பெருவிழா நமக்கு விடுக்கும் அழைப்பு இதுவே. உயிர்த்த ஆண்டவர் நம்மீது அருள்பொழியும் ஆவியைப் பெற்று, திருத்தூதர்களைப் போல நாமும் நம் அச்சத்தைத் துறப்போம். நாம் ஒவ்வொருவரும் தனித்துவமான சமூக அடையாளங்களைப் பெற்றிருந்தாலும், கிறிஸ்துவின் அன்பில் நாம் அனைவரும் ஒன்றாக வாழ அழைக்கப்படுகிறோம். “ஆண்டவருடைய ஆவி என்மேல் உள்ளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும், ஆண்டவர் அருள் தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார் (லூக் 4:16-18) என்பதற்கிணங்க, திருத்தொண்டர்கள் வழியில் பிறரன்புப் பணியிலும், மனவுறுதியோடு நற்செய்தியை அறிவிப்போம்.

எனவே, நாம் சொல்லால் மட்டும் நற்செய்தியை அறிவிப்பவர்களாக இல்லாமல், நம்முடைய அறச்செயல்களால் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும். இருள் சூழ்ந்த இந்த உலகிற்கு நாம் வெறும் விளக்குகள் அல்ல; உயிர்த்த இயேசு கிறிஸ்துவின் அணையாத சுடர்களாவோம். ஏனெனில், உயிர்த்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே நம் ஆற்றல். அவரின் நற்செய்தியே நம் வாழ்வு!

news
ஆன்மிகம்
பேரொளியின் ஒளியாக!

இறைத்தந்தையின் பேரன்பில் நம்பிக்கை கொண்டு வாழ, வழிகாட்டும் ஒளியாக ஒளிரும் இயேசு ஆண்டவர், அக ஒளியாக உறைந்து நம்மில் அருள் ஒளி பொழிகின்றார். அவரது வழிநடத்துதலில் செய்யும் நற்செயல்கள் நம்மைப்  பேறுபெற்றவர்களாக உருவாக்கும். சுடரொளியாக நாம்  உரையாடி உறவாடும் அனைவரும் ஒளியின் மக்களாக விளங்குவர். இறைத் தந்தையின் பேரன்பில் நம்பிக்கைகொண்டு அவரை மாட்சிப்படுத்துவர்.  உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க! அப்பொழுது, அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு, உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள் (மத் 5:16) என்று இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளுக்கு உயிர் கொடுக்கும் அருளைப் பெற்றுக்கொள்கின்றோம்.

நம்பிக்கையாளர்கள் நிலைவாழ்வை நோக்கிப் பயணிக்கும் எதிர்நோக்கின் திருப்பயணிகளாக வாழ வல்லமை பெற்றுக்கொள்கின்றோம். இவ்வாறு நாம் நற்செயல் புரிந்து வாழும்படி கடவுள் முன்கூட்டியே ஏற்பாடு செய்திருக்கிறார் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். “ஏனெனில், நாம் நற்செயல் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாகப் படைக்கப்பட்டிருக்கிறோம். இவ்வாறு நாம் நற்செயல் புரிந்து வாழும்படி கடவுள் முன்கூட்டியே ஏற்பாடு செய்திருக்கிறார்...” (எபே 2:10) என்பதையும் நாம் நினைவில்கொள்ளவேண்டும்.

நமக்காக ஏற்பாடு செய்துவிட்டு ஒதுங்கி நிற்பவர் அல்லர் நம் ஆண்டவர். நம் உடனிருந்து அவரே செயலாற்றுகின்றார். அவரின்றி நாமாக எதுவும் செய்ய இயலாது என்பதை, தூய பவுலடியார் பிலிப்பியருக்கு எழுதிய திருமடலில் மிகச் சிறப்பாக உணர்த்துகின்றார்: “கடவுளே உங்களுள் செயலாற்றுகின்றார்; அவரே தம் திருவுளப்படி நீங்கள் செயல்படுவதற்கான விருப்பத்தையும் ஆற்றலையும் தருகிறார் (பிலி 2:13). நமக்கு நன்மை மட்டுமே செய்யும் நல்ல ஆண்டவர், நாமும் பிறருக்கு நன்மை செய்வதில் ஆர்வம் கொண்டு, அன்பு உறவை வளர்க்க நம்மைத் தூண்டுவதோடு, தம் அளப்பரிய அருளால் நிரப்பிச் செயல்படுகின்றார். அக ஒளியால் நிரப்பப்பட்ட அனைவரும் ஒளியின் மக்களாக, அன்புறவில் இயேசுவின் சீடர்களாக நிறைவுடன் வாழ முடியும். இது அனுபவத்தில் நாம் உணர்ந்து, அனுபவித்த பேருண்மை.

2026, பிப்ரவரி மாதம் 2-ஆம் நாள், ஆண்டவரைக் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தல்  விழா. 11 மணிக்கு ஓர் அடக்கத் திருப்பலியில்  கலந்துகொள்ளும் கட்டாயம் ஏற்பட்டது. இருப்பினும், திருவிழா திருப்பலியில் கலந்துகொள்ளும் ஆர்வத்துடன் பங்கேற்ற பின், உரிய இடத்தில் அடக்கத் திருப்பலியில் கலந்துகொள்ள விரைந்தேன். பேருந்து கால தாமதமாகப் புறப்பட்டது. பேருந்தில் என்னுடன் பயணம் செய்த ஒரு தாய் தன் வேதனை நிறைந்த வாழ்வினை விவரித்துக் கொண்டிருந்தார். அவரிடம் மன்னிப்பின் மாண்பினையும், நன்றியுடன் செபிப்பதன் மகத்துவத்தையும்  எடுத்துரைத்தேன். இது ஒரு நற்செய்தி அறிவிக்கும் வாய்ப்பாக அமைந்தது.

சிறிது தூரம் நடந்துசெல்லவேண்டும். வேகமாக நடக்கவேண்டும், ஆனால் இயலவில்லை. அந்த நிலையில் அறிமுகம் இல்லாத ஒருவர், ‘எங்கே செல்லவேண்டும்?’ என்று கேட்டார். நான்ஆனந்தா இல்லம்என்று கூறியதும், ‘நானும் அங்குதான் செல்கின்றேன்என்று பைக்கில் அழைத்துச் சென்றார். நன்றியுடன், அவர் நலனுக்காகச் செபிக்கின்றேன் என்று கூறிவிட்டு நான் விரைவாக நடந்த போது, அவர் மீண்டும் என்னிடம் வந்து தன் பிரச்சினைகளைக் கூறி செபிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

அங்கிருந்து திரும்பியபோது என் நண்பர் ஒருவர் தன் வாகனத்தில் என் இல்லம் கொண்டு வந்து சேர்த்தார். இங்கு குறிப்பிட்டுள்ள நிகழ்வுகளில் ஆண்டவரின் பேரன்பு சிறப்பாக வெளிப்பட்டதையும், என்னைத் தம் மீட்பின் கருவியாக்கி ஆண்டவரே செயலாற்றியதையும் உணர்ந்து  நன்றிப் பெருக்குடன் அவரிடம் சரணடைந்தேன். பேரொளியாம் ஆண்டவரிடம் அனைத்தையும் ஒப்படைத்துச் சரணடையும்பொழுது, அவர் அளவற்ற பேரன்பு காட்டி நம் சார்பாகச் செயலாற்றுவார்.

திபா 37:5-இல் நாம் காண்கின்றோம்: “உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு; அவரையே நம்பியிரு. அவரே உன் சார்பில் செயலாற்றுவார்.”  இந்தச் செபம் நம் வாழ்வாகும்பொழுது நாம் பேரொளியின் ஒளியாகச் சுடர்விடுவோம். தூய ஆவியாரின் வல்லமையால், இயேசுவின் நெருக்கமான தோழமையை அனுபவித்து, அவரின் அன்புச் சீடராவோம், இறைத்தந்தையை மாட்சிப்படுத்துவோம்.

இயேசுவைக் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த தின செபம்:

என்றும் வாழும் இறைவா! உம் திருமகன் இயேசு மனிதராகி இன்று ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டதை நாங்கள் நினைவுகூர்கிறோம். மரியாவும் யோசேப்பும் இயேசுவை உமக்கு அர்ப்பணித்ததுபோல, நாங்களும் இந்த நாளில் எங்கள் உள்ளம், உடல், எண்ணம், சொல், செயல் அனைத்தையும் உமக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கிறோம். நாங்கள் பாவத்தின் இருளில் வாழாமல், ஒளியின் பிள்ளைகளாக வாழவும், கிறிஸ்துவின் ஒளியை உலகிற்கு எடுத்துச்செல்லவும் வரமருளும். எங்களுடைய வாழ்வு, எங்கள் குடும்பங்கள், எங்கள் பணிகள் அனைத்தும் உமக்கு உகந்த காணிக்கையாக மாற அருள்புரியும்.

என்றும் வாழும் தந்தையே! நீர் எனக்குத் தந்த இந்த வாழ்வை மீண்டும் உமது கரங்களிலேயே அர்ப்பணிக்கிறேன். சிமியோனைப் போல நானும் இயேசுவை என் வாழ்வில் கண்டு, இறைவனின் மீட்பை உணர்ந்து, என் இறுதி மூச்சுவரை உமக்கு உண்மையுள்ளவனாக வாழ அருள் தாரும். ஆண்டவரே, இந்த நாளை உமக்கு அர்ப்பணிக்கிறேன். இந்த நாளில் நான் செய்யும் நன்மைகள், சந்திக்கப் போகும் துன்பங்கள், மகிழ்வுகள் அனைத்தையும் உமது திருப்பாதத்தில் சமர்ப்பிக்கிறேன். ஆமென்!

news
ஆன்மிகம்
அரசியலாக்க ஈடுபாட்டிற்கு அழைத்திடும் இயேசு (கிறித்தவரின் அரசியல் ஈடுபாடு – 4)

இயேசுவின் மனுவுரு எடுத்தல் என்பது மனித வரலாற்றிலே தம்மையே நேரடியாக ஈடுபடுத்திக் கொள்ளும் அருள் மிகுந்த கடவுளின் நிகழ்வாகும். “வாக்கு மனிதரானார்; நம்மிடையே குடிகொண்டார் (யோவா 1:14). தாம் வாழ்ந்த வரலாற்றுச் சூழலில் இயேசு தம்மையே இணைத்துக்கொண்டு வாழ்ந்தது வெறும் ஆன்மிக, சமயத் தளங்களில் மட்டுமல்ல.

அநீதிச் சமூகத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தது அரசியலாக்க நிலைப்பாடே!

சமூக (மத் 9:9-12), பொருளாதார (மத் 20:1-16), பண்பாட்டு (லூக் 13:10-17),  சமய (மாற் 14:53-63), அரசியல் (யோவா 18:28-19:38) களங்களில் இயேசு பரிவன்புமிக்கவராகவும் இறைவாக்கினராகவும் செயல்படுவதைப் பார்க்கின்றோம். அவருடைய சமுதாயத்தில் அரசியல் சமயத் தலைவர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட அநியாயங்கள், அதர்மங்கள், ஒடுக்குமுறைகள், ஏழ்மை, வேலையில்லாமை, ஆதிக்கத்தனம், சுரண்டல், ஆண்வழிச் சமுதாயத்தின் ஆதிக்கத்தனம், மனிதநேயம் மறந்த சடங்குத்தனம், நீதியை மறந்த சட்டத்தனம்... இவற்றையெல்லாம் இயேசு எதிர்த்து இறைவாக்கினராகச் செயல்பட்டார். இவற்றினால் பாதிக்கப்பட்டஅனாவிம்என்ற முதுகொடிக்கப்பட்ட மக்களோடு தம்மையே ஒன்றாக இணைத்துக்கொண்டு, அதர்மச் சமுதாயத்திற்கு எதிர்த்துக் குரல் கொடுத்தார்.

இறையாட்சிச் சமூகத்தில் அனைவரும் சமம் என்பதும் அரசியலாக்கப் பார்வைதான்!

காயப்படுத்தப்பட்டு ஒடுக்கப்பட்ட தம்முடைய சமுதாயச் சூழலிலே, ‘இறையாட்சிஎனும் கனவோடு மக்கள் எல்லாரையும் இனம், மதம், நிறம், சமூக அந்தஸ்து, பாலினம், தகுதி உள்ளவர்கள், தகுதியற்றவர்கள் என்பதை எல்லாம் கடந்து, எல்லாரையும் கடவுளின் மாண்பு நிறைந்த மக்களாக மாற்றும் பணியைச் செய்தார் (யோவா 1:12).

சமத்துவச் சமுதாயம்தான் அவரது இறையாட்சிக் கனவின் உள்ளீடாகும். பரிவன்போடும் இறைவாக்கினர் தன்மையோடும் அவர் வழங்கிய போதனைகள், ஈடுபட்ட செயல்பாடுகள் எல்லாம் மக்களைக் கடவுளின் பிள்ளைகளாக்கும் சக்தி படைத்த இறையாட்சிக் கனவிலே வெளிப்பட்டது.

எல்லாரையும் கடவுளுடைய மக்களாக ஆற்றல்படுத்துவது உண்மையிலேயே இறையாட்சியினுடைய அரசியல் செயல்பாடு ஆகும். ஏனென்றால், அரசியல் என்பது ஒருவரோ ஒரு குழுவோ தம்முடைய வாழ்வைத் தேர்ந்துகொள்வதற்கும் தீர்மானிப்பதற்கும் அதைச் செயல்படுத்துவதற்கும் பெற்றிருக்கும் ஆற்றலாகும். இவ்வாற்றல் பறிக்கப்பட்ட மக்கள், அந்த ஆற்றலை மறுபடியும் பெறவும், மனித மாண்போடு வாழவும் இயேசுவினுடைய  இறையாட்சிப் பணி வழியமைத்தது.

சமயப் பணியில் இழையோடிய சமூகப் பணியும் அரசியலாக்கம்தான்!

இயேசு வெறும் ஒரு சமயப் போதகர் அல்லர்; நோயாளிகளைக் குணமாக்கினார்; ஒடுக்கப்பட்ட ஏழையர் சார்பாக நின்று செயல்பட்டார்; மக்களைப் பீடித்திருந்த பேய்களையும் தீய சக்திகளையும் விரட்டியடித்தார்; யூதராக, சமாரியராக கலிலேயராக, பிற இனத்தவராக, ஆணாக, பெண்ணாக, குழந்தையாக, மூன்றாம் பாலினத்தவராக இருந்தாலும் எல்லாரையும் சமமாக நடத்தினார். இப்படிப்பட்ட சமதர்ம சமத்துவ இறையாட்சிச் சமுதாயத்தைக் கட்டியெழுப்பும்போது அவர் இறையாட்சிக்கு எதிரான தீய சக்திகளையும் அமைப்புகளையும் மக்களையும் துணிச்சலோடு எதிர்கொண்டார் (மத் 23). ஏழைகளுக்கு நற்செய்தி அறிவித்தார்; ஒடுக்கப்பட்டோருக்கு விடுதலை வாழ்வு, பார்வையற்றோருக்குப் பார்வை, சிறைப்பட்டோருக்கு விடுதலை என்று தம்முடைய பணியில் தெளிவாக, கூர்மை நிறைந்தவராக, தீர்க்கமாகச் செயல்பட்டார் இயேசு (லூக் 4:18).

இயேசு அறிவித்துச் செயல்படுத்திய அனைத்திலும் சமூக, பொருளாதார, பண்பாடு, சமய, அரசியல் ரீதியாக எல்லாரையும் மாண்பு நிறைந்த கடவுளுடைய பிள்ளைகளாக்கும் தணியாத தாகம் நிறைந்திருந்தது. சவால் மிகுந்த இயேசுவின் இலட்சியமும் பணியும் வாழ்வும் மக்கள் எல்லாரையும் கடவுளுடைய பிள்ளைகளாக்கும் சக்தி படைக்கும் குழந்தைகளாக வளர்த்தெடுப்பதுதான் அவருடைய ஒட்டுமொத்த இறையாட்சியின் கனவாக இருந்தது. இக்கனவு இயேசுவின் அரசியலாக்க ஈடுபாட்டில் மலர்ந்தது.

கிறித்தவரின் அரசியலாக்க ஈடுபாடு: வரலாற்றுக் கட்டாயமே

கிறித்தவர்களின் அரசியலாக்க ஈடுபாடு என்பது இறையாட்சிச் சமூகத்தைக் கட்டி எழுப்பும் பணியோடு பின்னிப் பிணைந்தது. கிறித்தவர் அனைவரும் ஆற்றல் பெற்றிட, ஆற்றல் பெற்றவராகப் பிறரை வளர்த்திட இன்று கட்டாயம் நமக்கு அரசியலாக்க ஈடுபாடு தேவை என்பதில் மாற்றுக் கருத்தே கிடையாது.

இனியும் நாம் அரசியலாக்க ஈடுபாட்டில் அக்கறையில்லாமல் அலட்சியமாகச் சுயநலத்தோடு ஒதுங்கி இருந்தோம் என்றால், நாமும், நம்முடைய கிறித்தவ இருப்பும் வாழ்வும் பணியும் இந்திய நாட்டிலே ஒதுக்கி முடக்கி வைக்கப்படும். ஏனென்றால், மதவாத, ஆர்.எஸ்.எஸ். முன்னெடுக்கும் இந்துத்துவ, பாசிச அரசியல் ஆட்சியிலே நமது உரிமைகள் படிப்படியாகப் பறிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

அண்மையில் முன்வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதா (FCRA) சட்டமும், ஏற்கெனவே 13 மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டுள்ள மதமாற்றத் தடைச் சட்டமும் தொடர்ந்து கிறித்தவர்கள் மேல் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளும்  தொடர்ச்சியாகக் கூடிக்கொண்டே போகும்போது, நாமே நமது உரிமைக்குத் துணிச்சலாகக் குரல் கொடுத்திடும் அரசியலாக்க ஈடுபாடு தவிர்க்க முடியாத கிறித்தவ இறையாட்சியின் ஈடுபாடாக மாறுகின்றது.

கிறித்தவ அரசியலாக்க ஈடுபாட்டுச் செயல்பாட்டிற்குச் சில பரிந்துரைகள்

அரசியலாக்கக் கல்வியையும் விழிப்புணர்வையும் நம்முடைய பங்குகளிலும் கல்வி நிறுவனங்களிலும் முன்னெடுக்கவேண்டும்.

இந்தியாவின் அரசமைப்புச் சாசனத்தைப் பற்றிய விழிப்புணர்வும் கல்வியும் நம்முடைய நிறுவனங்களிலும் பங்குகளிலும் வளர்க்கப்பட வேண்டும்

இந்திய அரசமைப்புச் சாசனத்தின் முகப்புரையை நாம் பொது இடங்களில் வைப்பதும் நடக்கும் முக்கிய நிகழ்வுகளில் நாம் எல்லாரும் அவற்றை ஒன்றாக வாசித்து அறிக்கையிடுவதும் அரசமைப்புச் சாசனம் தருகின்ற விழுமியங்களில் வளர்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும் .

பெற்றோர் தங்கள் பிள்ளைகளை வெறும் பணம் ஈட்டும் .டி. போன்ற தொழிற்கல்விகளில் மட்டுமல்லாது, அரசியல் களத்தில் ஈடுபடுகின்ற அரசியல்வாதியாக மாற்றிடவும் முன்வரவேண்டும். அரசியல் பணியும் ஒரு முக்கியச் சமுதாயப் பணியாகப் பார்க்கப்பட வேண்டும்.

இளைஞரும், சமூக விழிப்புணர்வு உள்ளவரும் அரசியலில் நேரடி ஈடுபாட்டில் களம் இறங்க வேண்டும்.

நிறைய கிறித்தவர்கள் பஞ்சாயத்து உறுப்பினராக, நகராட்சி, மாநகராட்சி உறுப்பினர்களாகவும் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் மாறிட உழைக்கவேண்டும்.

நீதித்துறை, நிர்வாகத் துறை, சட்டத்துறை போன்றவற்றில் நம்முடைய கிறித்தவர்கள் பணி செய்திட தங்களையே தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

..எஸ்., .பி.எஸ்., .எஃப்.எஸ். போன்ற நிர்வாகத் துறைகளில் கிறித்தவர்கள் அதிகமாகக் களம் இறங்கவேண்டும்.

ஆயர்களும் அருள்பணியாளர்களும் நம்முடைய இறைமக்களை இப்படிப்பட்ட நேரடியான அரசியல் வாழ்வுக்குக் களமிறங்கிடப் பேராதரவையும் உற்சாகத்தையும் வழங்கவேண்டும்.

நமக்கு முன்பு சுதந்திரப் போராட்டத்தில், நேரடி அரசியல் வாழ்வில் ஈடுபட்டுள்ள கிறித்தவர்களை மறுபடியும் நினைவிற்குக் கொண்டு வந்து, அவர்களுடைய வாழ்வை உண்மையாக்க முன்வர வேண்டும்.

வாக்களிப்பது நமது பிறப்புரிமை. எனவே, வரும் தேர்தல்களில் எந்தக் கிறித்தவரும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் வாக்களிக்காமல் இருந்தால், அது கிறித்தவத்திற்கே செய்கின்ற துரோகமாகும்.

வாக்களித்து சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதோடு மட்டுமில்லாமல், அவர்கள் பணியில் இருக்கும்பொழுது தங்களுடைய கடமையைச் சரியாகச் செய்கிறார்களா என்று துணிச்சலுடன் கண்காணிக்கவேண்டும்

எல்லாக் கிறித்தவரும் இந்தியச் சமூகத்தைக் கூறுபடுத்தும் இந்துத்துவவாதத்திற்கும் பாசிசத்திற்கும் பார்ப்பனியத்திற்கும் மதவாதத்திற்கும் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தனத்திற்கும் எதிரான நிலைப்பாடு எடுத்திடவேண்டும்.

கிறித்தவர்கள் தனியே நின்றிடாமல், அரசமைப்புச் சாசனம் தருகின்ற விழுமியங்களைப் தூக்கிப்பிடிக்கின்ற மதச்சார்பின்மையைப் பாதுகாக்கின்ற சுதந்திரம் சனநாயகத்தைக் காப்பாற்றுகின்ற, ஏழை மக்கள் சிறுபான்மையினரின் உரிமைகளைக் காக்கின்ற பிற அரசியல் அமைப்புகளோடும் இயக்கங்களோடும் கட்சிகளோடும் இணைந்து பணியாற்றிட முன்வரவேண்டும்.

மேனாள் திருத்தந்தையின் அறைகூவல்

இறுதியாக, நம்முடைய மேனாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கிறித்தவ அரசியலாக்க ஈடுபாடு பற்றி மொழிந்த அறிவுரையோடு முடிக்க விரும்புகின்றேன்:

திரு அவையின் சமூகப் போதனையின்படி அரசியல் என்பது அன்பின் உயர்ந்த வெளிப்பாடுகளில் ஒன்று; ஏனென்றால், அரசியல் பொதுநலனை முன்னெடுக்கிறது. நான் கிறித்தவர் என்ற முறையில் வெறும் பால்கனியிலிருந்து அரசியலை ஒரு பார்வையாளராக நின்று பார்க்கின்றேனா? இனியும் கிறித்தவர்கள் பால்கனி பார்வையாளராக இருக்க முடியாது; அரசியல் களம் இறங்கவேண்டும். கத்தோலிக்கராகிய நாம் நமது நம்பிக்கை வாழ்வை ஒரு குறுகிய தனிப்பட்ட வட்டத்திற்குள் வைத்துக்கொள்ளக்கூடாது. மாறாக, நம்முடைய நம்பிக்கை வாழ்வைப் பொது வழிக்குக் கொண்டு வருவது என்பது அநியாயத்திற்கு எதிரான குரலாகவும், நீதிக்குச் சார்பான குரலாகவும் நாம் மாற்றிட வேண்டும். அப்போதுதான் குரலற்ற மக்களின் குரலாகக் கிறித்தவர்கள் மாறமுடியும்!”

news
ஆன்மிகம்
இறைவாக்கினரின் அரசியல் ஈடுபாட்டு வழியில் கிறித்தவர்கள் (கிறித்தவரின் அரசியல் ஈடுபாடு - 3)

அநியாயத்தையும் அதர்மத்தையும் பிடுங்கி எறியவும் தகர்க்கவும், சுரண்டலையும் மனிதத்தைக் கேவலப்படுத்தும் அனைத்தையும் அழிக்கவும் தகர்க்கவும், மறுபடியும் கடவுளின் உடன்படிக்கைச் சமுதாயத்தைக் கட்டவும் நடவும் இஸ்ரயேல் இறைவாக்கினர்கள் கடவுளின் குரலாக, தூதர்களாகத் தீவிரமாகச் செயல்பட்டார்கள். யாவே இறைவனின் அரசியல் ஆக்கப்பணியைப்போல, இறைவாக்கினரும் மக்களை உடன்படிக்கைச் சமுதாயத்தில் ஆற்றல் படைத்தவர்களாக மாற்றிட, அரசியல் ஆக்கப்பணியில் ஈடுபட்டார்கள். இறைவாக்கினருடைய நிலைப்பாடும், கடவுளுடைய திருவுளத்தின் அறிவிப்பும் அரசியலாக்கத்தின் வெளிப்பாடுகளாக இருப்பதை இறைவாக்கினர்களில் காண்கிறோம்.

அரசர்களைத் தேர்ந்தெடுத்து திருப்பொழிவு செய்த இறைவாக்கினர்கள்

கடவுளின் கட்டளைக்கு ஏற்ப இறைவாக்கினர்கள் அரசர்களைத் தேர்ந்தெடுத்துத் திருப்பொழிவு செய்தார்கள். சாமுவேல் இறைவாக்கினர் சவுல் என்பவரை இஸ்ரயேலின் முதல் அரசராக ஏற்படுத்தியபோது அவர் கூறியது: “ஆண்டவர் உன்னை மக்களின் அரசராகத் திருப்பொழிவு செய்து இருக்கிறார் (1சாமு 10:1). எல்லாருக்கும் அரசராக இருக்கின்ற கடவுள் இந்தப் பெரிய பொறுப்பை மனிதருக்கும் கொடுத்து தமது சார்பாக ஆட்சி நடத்த அழைப்பு விடுக்கிறார்.

சவுல் அரசன் கடவுளுடைய வழிகளைப் பின்பற்றாமல் சென்றபோது, அவனை ஆண்டவர் ஒதுக்கி விடுகிறார். எபிரோன் மக்களால் தாவீது கடவுளின் அரசராகத் திருப்பொழிவு செய்யப்படுகிறார் (2சாமு 2:4). அரசரைத் திருப்பொழிவு செய்யும் அரசியல் அதிகாரத்தைக் கடவுள் மக்களுக்கும் கொடுக்கிறார். அரசரைத் தேர்ந்து கொள்கின்ற உரிமையைக் கடவுள் சனநாயகப்படுத்திடும் அரசியலாக்கப் பணியில் ஈடுபடுகிறார். எனவே, அரசரை நியமிக்கும் பணியை இறைவாக்கினர்களுக்கும் மக்களுக்கும் கொடுப்பதன் வழியாக, மக்களுக்கும் இறைவாக்கினர்களுக்கும் அரசரைத் தேர்ந்து கொள்ளும் அரசியலாக்க அதிகாரத்தைத் தருகின்றார். அரசரைத் திருப்பொழிவு செய்யும் பழக்கம் சாலமோன் இறந்த பிறகும் தொடர்ந்தது (1சாமு 11:29-32).

அரசியல் ஆட்சியாளர்களை வழிநடத்தும் இறைவாக்கினர்கள்

யாவே இறைவனின் அறிவுரையால் இறைவாக்கினர்கள் அரசர்களை வழிநடத்தினார்கள். சிரியா நாட்டு அரசன் இஸ்ரயேலைத் தாக்க முயற்சித்தபோது, பெயர் இல்லாத ஓர் இறைவாக்கினர் ஆகாபுக்கு அறிவுரை கூறி, இஸ்ரயேலைக் காப்பாற்றும் வழியைக் காண்பித்தார் (1அர 20:1-22). ஆகாப் கடவுளுடைய அறிவுரையை மீறினான் என்றால், அவன் அழிக்கப்படுவான் என்று இறைவாக்கினர் மீக்கா அறிவித்தார் (1அர 22:1-40).

இறைவாக்கினர் எலிசா அரசியல் இராணுவக் காரியங்களில் நேரடியாக ஈடுபட்டார் (2அர 3:4-27). இஸ்ரயேல் உடன்படிக்கையை மறுபடியும் புதுப்பிப்பதற்கு யோசியா, குல்தா என்ற இறைவாக்கினரைக் கலந்து ஆலோசித்தார் (2அர 22:8-20). இறைவாக்கினர்கள் அரசு அதிகாரத்திலே நேரடியாகப் பங்கு பெற்று, அரசர்களையும் ஆட்சியாளர்களையும் கடவுளுடைய ஒளியில் வழிநடத்தினர்நீதியுள்ள அரசை உருவாக்கவேண்டும் என இறைவாக்கு உரைத்தனர். எனவே, அவர்களுடைய இறைவாக்குப் பணி அரசியலாக்க ஈடுபாடு நிறைந்ததாக இருந்தது.

ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் எச்சரிக்கை மணியடித்த இறைவாக்கினர்கள்

காலப்போக்கில் இஸ்ரயேல் வரலாற்றில் முடியாட்சி என்பது அநியாய அராஜகச் சுரண்டல் ஆட்சியாக மாறியது. எனவே, இறைவாக்கினர்கள் அரசர்களும் மக்களும் செய்கின்ற அநியாயங்களைச் சுட்டிக்காட்டவும், அவர்களது  உடன்படிக்கை மீறல்களைத் தட்டிக்கேட்கவும் செய்தனர். அவர்களை மறுபடியும் உடன்படிக்கை வாழ்விற்கு அழைக்கவும் செய்தனர்.

நாபோத் என்பவரின் திராட்சைத் தோட்டத்தைத் தனது பேராசையால் அபகரித்த ஆகாப் மன்னனை எலியா இறைவாக்கினர் எச்சரித்துத் தீர்ப்பு வழங்கினார் ((1அர 21:19).  தனது அரசு அதிகாரத்தைத் தனது சுயநலத்திற்காகப் பயன்படுத்தி, உரியாவின் மனைவி பத்சேபாவை அபகரித்ததோடு மட்டுமில்லாமல், அவருடைய கணவரையும் கொலை செய்த தாவீது, நாத்தான் இறைவாக்கினரால் எச்சரிக்கப்படுகிறார் (2சாமு 11:1-12).

இறைவாக்கினர்கள் அரசர்களுக்கு அரசியல் ஆலோசகர்களாக, அறிவிப்பாளர்களாகச் செயல்பட்டனர். அநியாயம் செய்கின்ற மக்களையும் இறைவாக்கினர்கள் எச்சரித்து வழிநடத்தத் தவறவில்லை. யாவே கடவுளின் வழிபாட்டை மறுதலித்துவிட்டு, வேற்றுத் தெய்வ வழிபாடுகளை மேற்கொண்டவரையும் (எரே 10, எசா 44),  ஏழைகளைச் சுரண்டியவர்களையும் (ஆமோ 2:6-9), ஆடம்பரமான அர்த்தமற்ற திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களையும் (எசா 1:10-16, ஆமோ 5:21-23) நீதி மறுக்கப்படுவதையும் குறிப்பாக, ஏழைகள் ஒடுக்கப்படுவதையும் உரக்கச் சொல்லி எச்சரித்தார்கள். நீதிக்கும் நேர்மைக்கும் உரிய வாழ்வு வாழ இறைவாக்கினர்கள் இஸ்ரயேலரை மறுபடியும் சமத்துவம் நிறைந்த உடன்படிக்கைச் சமுதாயமாக மாறிடப் பணி செய்தார்கள்.

மக்களை ஆட்சி செய்த அவர்களே மக்களின் ஆற்றல் பறிக்கப்பட்டு ஒடுக்கப்படுவதற்குக் காரணமாக இருந்தபோது, இறைவாக்கினர்கள் அவர்களை எச்சரித்ததோடு மட்டுமல்லாமல், கடவுளுடைய தீர்ப்பினையும் துணிச்சலோடு எதிரொலித்தார்கள். கடவுள் எவ்வாறு மக்களை ஆட்சி செய்கிறாரோ, அவ்வாறே ஆட்சி செய்ய மன்னர்களுக்கும் அறைகூவல் விடுத்தார்கள். மக்களும் கடவுளுக்குரிய நம்பிக்கையில் தவறியபோது, அவர்களும் எச்சரிக்கப்பட்டு, பலவகையான தண்டனைகளால் புதுப்பிக்கப்பட்டு உடன்படிக்கையின் மக்களாக மாற்றிட இறைவாக்கினர்கள் உழைத்தார்கள். இவையெல்லாம் இஸ்ரயேலர் ஆற்றல் பெற்றவர்களாக வாழ வேண்டும் எனும் அரசியல் ஈடுபாட்டின் செயல்பாடாக இருக்கின்றது.

அரசியல் ஈடுபாட்டிற்கான கடவுளின் அழைப்பு கிறித்தவத்தின் அழைப்பு

இன்றைய கிறித்தவமும் இந்த இறைவாக்குப் பணியைத் தொடர அழைக்கப்படுகிறது. இஸ்ரயேல் இறைவாக்கினரோடும், இறைவாக்கினர்களுக்கெல்லாம் மேலான இறைவாக்கினரான இயேசுவோடும் இணைந்து செயல்பட்டு, இறையாட்சிச் சமூகத்தைக் கடவுளின் சமூகமாகக் கட்டி எழுப்பி, எல்லாரையும் ஆற்றல் படைத்தவர்களாக மாற்றிட அழைக்கப்படுகிறார்கள்.

இந்த மாற்றம் வெறும் செபத்தாலும் தவத்தாலும் நடந்துவிடாது. மாறாக, அவற்றோடு தீர்க்கமான, தெளிவான அரசியல் ஈடுபாட்டோடு இந்திய அரசமைப்புச் சாசனம் காட்டுகின்ற விழுமியங்களைத் தூக்கிப் பிடித்து வாழ்வதால் நிகழும்.

அநீதிக்கும் அதர்மத்திற்கும் எதிராகக் குரல் கொடுத்து, நம் நாட்டிலே நீதியும் சுதந்திரமும் விடுதலையும் சகோதரத்துவமும் மலர்ந்திட கிறித்தவர்கள் இறைவாக்கினர் குரலாகச் செயல்பட வேண்டும்.

நமது சனநாயக உரிமையை எந்த அரசியல் ஆட்சியும் நம்மிடமிருந்து அபகரிக்க அனுமதிக்கக் கூடாது. எனவே, நம்முடைய குடியுரிமை உரிமைகளையும், இந்திய அரசமைப்புச் சாசன விழுமியங்களையும் கட்டிக் காத்திட நமது அரசியல் ஈடுபாடு கட்டாயம் தேவை.

திருத்தந்தை பிரான்சிஸ் கூறியதுபோல, “உங்களுடைய சக குடிமக்களின் மாண்பையும் உரிமையையும் பாதுகாத்திட அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்; பொதுப்பணிக்காக அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்இதுதான் அரசியல் ஈடுபாட்டின் முக்கிய நோக்கம்.”

news
ஆன்மிகம்
சிலுவை காட்டும் உணர்வுசார் முதிர்ச்சி!

ஆம்பள புள்ள அழக் கூடாது, ‘பொம்பள சிரிச்சா போச்சு, ‘கோபமே படாம அமைதியா இருப்பவர்கள் முதிர்ச்சியானவர்கள், ‘அவன்/அவள் எதுக்குமே உணர்ச்சிவசப்படமாட்டார்...’ இவை போன்ற சொல்லாடல்கள் நம் சமூகத்தில் எதார்த்தமாகப் பயன்படுத்தப்படக்கூடியவை. சற்று நிதானமாக யோசித்தால், இவை யாவும்உணர்வுஎன்ற ஒற்றைப்பொருளை மையமாகக் கொண்டு வழங்கப்படும் சொல்லாடல்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

இந்தச் சொல்லாடல்களின் அடிப்படையில் சோகம், மகிழ்ச்சி, கோபம் மற்றும் பரபரப்பு முதலிய உணர்வுகள் அனைத்துமே ஒரு மனிதரின் வளர்ச்சிக்கு உகந்தது அல்ல எனக் கருதலாம். அதே நேரத்தில், இந்த உணர்வுகள் ஒரு மனிதரின் அன்றாட வாழ்வின் அடிப்படை எனலாம். நாம் எல்லா நேரத்திலுமே ஏதோ ஓர் உணர்வோடுதான் இருக்கின்றோம். பின்பு, உணர்வுகள் சரியானவையா அல்லது தவறானவையா? தவறானவை என்றால், பின்பு ஏன் கடவுள் நம்மை உணர்வுகளோடு படைத்தார்? சரியானவை என்றால், நம் சமூகம் அதைத் தவறாக முன்னிறுத்துவது ஏன்?

உணர்வு என்றால் என்ன?

உணர்வுகளை அறிவியலின் வெவ்வேறு தளங்களும் வெவ்வேறு விதமாக வரையறுக்கின்றன. உளவியலாளர் ஜான் பால்பி, உணர்வைதொடர் சமிக்ஞை (Communication Signal) என்கிறார். நரம்பியல் வல்லுநர் அன்டோனியோ டமாசியோ, ‘உடலின் தற்காப்பு பொறிமுறையே உணர்வுகள் (Survival Mechanism) என நிறுவுகிறார். சமூகவியலாளர் ஆர்லி ஹோச்சில்ட், உணர்வுகளை ஒருசமூகத் தகவல் தொடர்புக் கருவியாகப் (Social Signalling) பார்க்கிறார். எனவே, உணர்வுகளை ஓர் ஒருங்கிணைந்த பார்வையில், ‘உள்ளத்தின் ஆழத்தில் எழும் உயிருள்ள இயக்க அலை; அது மனத்தையும் உறவுகளையும் தொட்டு மனிதரை முழுமையாக்கக் கூடிய ஒன்றுஎன நான் புரிந்துகொள்கிறேன்.

மேற்கூறிய வரையறைகளின் பின்புலத்திலும், அறிவியல் புரிதலின் பின்புலத்திலும் உணர்வுகளை ஒரு மனிதருடைய அடிப்படை ஆக்கப்பூர்வ ஆற்றல் எனப் புரிந்துகொள்ளலாம். ஆக்கப்பூர்வமான ஒன்றை, சமூகம் அழிவிற்கான ஒன்றாகக் காட்சிப்படுத்தினால் அதையே நாம் ஒடுக்குமுறை என்கின்றோம். இதற்கு எடுத்துக்காட்டாகப் பெண் கல்வியைக் கூறலாம். முந்தைய காலத்தில் அநாவசியமாக, அழிவாகக் கருதப்பட்டது இன்று அத்தியாவசியம் என நம்மால் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. அதேபோல, நம் உணர்வுகளும் சரியானவையே; அவற்றை நாம் உணர்வதும், உள்ளபடியே வெளிப்படுத்துவதும் சரியானவையே என நாம் உணரவேண்டிய தருணம் இது.

உணர்வுசார் ஒடுக்குமுறை

மனிதர் பொதுவாகத் தன் உணர்வுகளை, முகபாவனை (Facial Expression), உடல் மொழி (Body Language) மற்றும் மொழியால் (Verbal Expression) வெளிப்படுத்துகிறார். மனிதரின் அடிப்படை ஆக்கக்கூறான உணர்வுகள் வெளிப்படுத்தப்படாமல் ஒடுக்கப்படும்போது, அது ஒரு மனிதரை அழிவுக்கு இட்டுச்செல்லும் ஆற்றலாக மாறுகிறது. இந்த உணர்வு ஒடுக்கம், பிறரால் திணிக்கப்படும்போது, அது சாதிய, பொருளாதார மற்றும் நிற ஒடுக்குமுறைக்கு இணையான ஒடுக்குமுறையாக மாறுகிறது. சமூகத்தின் வெவ்வேறு தளங்களில் ஏற்கெனவே ஒடுக்கப்பட்ட மக்கள் உணர்வுத்தளத்திலும் ஒடுக்கப்படும்போது அதன் விளைவுகள் தீவிரமடைகின்றன.

உணர்வுசார் ஒடுக்குமுறையின் மற்றொரு பரிமாணம்உணர்வுசார் மிரட்டல் (Emotional Blackmail) ஆகும். உளவியலாளர் சூசன் ஃபார்வர்டு இந்த உணர்வுசார் மிரட்டலைFOG (பனிமூட்டம்) என்ற சுருக்கச் சொல்லால் விளக்குகிறார். F - Fear  (பயம்), O - Obligation (கடமை), G - Guilt (குற்ற உணர்வு). ‘நான் சொல்வதைக் கேட்காவிட்டால், உன்னைவிட்டு சென்றுவிடுவேன், ‘எனக்காக இதைச் செய்வது உன் கடமை; எனவே, இதை நீ செய்துதான் ஆகவேண்டும், ‘உன்னால்தான் எனக்கு இந்த நிலை; உன்னால்தான் நான் இவ்வளவு சிரமப்படுகிறேன்....’ இவை போன்ற வாக்கியங்களால் ஒருவர் உணர்வளவில் மிரட்டப்படுவதும் உணர்வுசார் ஒடுக்குமுறையே.

ஒடுக்குமுறையை நியாயப்படுத்துதல்

உணர்வு வெளிப்பாட்டை ஒடுக்குவதில் கலாச்சாரம், நிறுவனங்கள், மதம் மற்றும் சமூகம் ஆகியவை மிக முக்கியப் பங்குவகிக்கின்றன. கலாச்சாரம், உணர்வுகளை வெளிப்படுத்துவதை ஒரு பலவீனமாகவும், மௌனமாகச் சகித்துக்கொள்வதை ஒரு வீரமாகவும் சித்தரித்து, ஒரு தனிமனிதர் தனது உண்மையான இயலாமைகளை மறைக்கக் கட்டாயப்படுத்துகின்றது. நிறுவனங்கள்உணர்வுவசப்படாத நிலை (Professionalism) என்பதை ஒரு தகுதியாகக் காட்டி, ஓர் ஊழியர் தனது மேலதிகாரியால் ஒடுக்கப்படும்போது, அந்த வலியை வெளிப்படுத்தாமல் மௌனமாக ஏற்பதே கீழ்ப்படிதல் மற்றும் ஒழுக்கம் என்று போதிக்கிறது. மதங்களும் சமூகமும் இயல்பான மனித உணர்வுகளைப் பாவமாகச் சித்தரித்து, அதன் விளைவாக மனிதர்கள் புனிதர்களாகக் காட்டிக்கொள்வதற்காகத் தங்கள் உணர்வுகளைப் புதைத்து, ஒரு போலியான புனிதத் தன்மையைத் தழுவ வற்புறுத்துகிறது.

ஒடுக்குமுறையின் விளைவுகள்

உணர்வுசார் ஒடுக்குமுறை ஒரு மனிதரில், உடல் மற்றும் மனநலம் சார்ந்த ஆழமான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஒரு மனிதர் பொதுவாக, தனியாக விரும்பத்தகாத உணர்வுகளை மட்டுமல்ல; ஒட்டுமொத்த உணர்வுகளையும் ஒடுக்கக் கற்றுக்கொள்கிறார். இதன் விளைவாக அவர் ஓர் உணர்வற்ற நிலைக்குத் (Emotional Numbness) தன்னையே தள்ளுகிறார். இந்த நிலை அவரை ஓர் இயந்திரத்தைப் போல மாற்றுகிறது. மேலும், உணர்வுகளை ஒடுக்குவது தேவையற்ற பயம், பதற்றம், தொடர்ச்சியான அகப்போராட்டம், மனச்சோர்வு, அன்ஹெடோனியா, தொடர்பு துண்டிப்பு (Dissociation) மற்றும் பதற்றக் கோளாறுகள் உள்ளிட்ட மனநோய்களுக்கு வழிவகுக்கின்றன. இதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம், இயற்கை நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமடைதல், முதுகு வலி, கழுத்து வலி மற்றும் ஒற்றைத் தலைவலி முதலிய உடல்சார் நோய்களை வருவிக்கின்றன.

உணர்வுசார் மிரட்டல் பெரும்பாலும் நெருங்கிய உறவினரால் ஏற்படுவதால் முடிவெடுக்கும் திறனில் பாதிப்பு, எப்போதுமே பதற்றத்துடனேயே இருக்கும் நிலை, நீண்ட காலச் சோர்வு, இதயத் துடிப்பு அதிகரிப்பு, உறவு நிலைகளில் சவாலான மனநிலையை எதிர்கொள்தல், உறவுப் பிரச்சினைகளுக்குத் தானே காரணம் என எண்ணுதல், தன்னை மீண்டும் மீண்டும் சரிசெய்ய முயற்சித்தல், தனது சொந்த உணர்வுகளையும் நினைவுகளையும் சந்தேகித்தல் மற்றும் அதீதப் பொறுப்புணர்வு போன்ற மோசமான பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.

உணர்வுசார் முதிர்ச்சி

உணர்வுசார் ஒடுக்குமுறையின் வெவ்வேறு கூறுகளை அறிந்த நாம், ‘அதிலிருந்து விடுதலை சாத்தியமா?’ என அறிவதும் தகும் என நம்புகின்றேன். இந்த உணர்வுசார் ஒடுக்குமுறையின் விடு தலைக் கூறாக அமைவது உணர்வு முதிர்ச்சியாகும். இந்த முதிர்ச்சியைத் திருவிவிலிய மாந்தர்களில் மிக முக்கியமான நபரான இயேசு நமக்கு வாழ்ந்து காட்டியிருக்கிறார். உணர்வுசார் முதிர்ச்சிக்கு அடிப்படையாக அமைவது இரண்டு முக்கியக் கூறுகள்:

1. உணர்வுகளின் அங்கீகாரம் மற்றும் நுண்ணறிவு. 2. பாதுகாப்பான உறவு எல்லைகள்.

1. உணர்வுகளின் அங்கீகாரம் மற்றும் நுண்ணறிவு

தம் நண்பன் இலாசர் இறந்தபோது அழுததன் வழியாகவும், கெத்சமனி தோட்டத்தில் தம் பாடுகளைக் குறித்து இயேசு மனம் வருந்தியபோதும்எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது (மத் 26:38) எனத் தம் துயரைத் தம் சீடர்களிடம் பகிர்ந்ததன் வாயிலாகவும், சிலுவையில் இறக்கும்போதும்என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?” எனக் கதறியதன் வாயிலாகவும் இயேசு தம் உணர்வுகளைப் பற்றிய சுய உணர்வோடு அவற்றை உள்ளபடியே ஏற்றுக்கொண்டு, ஆரோக்கியமான விதத்தில் வெளிப்படுத்தினார். மாறாக, தம் உணர்வுகளுக்கு அவர் பிறரைக் காரணம் கூறவுமில்லை; விரும்பத்தகாத விதத்தில் தம் உணர்வுகளை அவர் வெளிப்படுத்தவு மில்லை. எனவே, ஒருவர்நான் எத்தகைய உணர்வுகளோடு இருக்கின்றேன்?’ என்ற சுய உணர்வும், அவ்வாறு அறிந்த உணர்வுகளை உள்ளவாறே ஏற்றுக்கொண்டு, அதை ஆரோக்கியமான முறையில் வெளிப்படுத்துவதுமே, உணர்வு முதிர்ச்சியின் முதல் படியாகும்.

2. பாதுகாப்பான உறவு எல்லைகள்

இயேசு தமது இறப்பை முன்னறிவித்தபோது, பேதுருஆண்டவரே, இப்படி உமக்கு நேரவே கூடாதுஎன்று தடுத்தபோது, பேதுரு இயேசுவின் மீதான அன்பில் அவ்வாறு கூறியிருந்தாலும், அது இயேசு தம் இலக்கை அடைய உதவாது என்பதால், “என் கண்முன் நில்லாதே சாத்தானே!” எனக் கூறி பேதுருவின் பரிந்துரைக்கு இசையவில்லை. அதே போல, யாக்கோபு மற்றும் யோவான் தம் தாயோடு வந்து, இயேசுவின் ஆட்சியில் அதிகாரம் கேட்டது, ஒரு குடும்ப நலன் சார்ந்த ஒன்றாகவே இருந்தது. அதை நன்கறிந்த இயேசு, மற்றச் சீடர்களுக்கும் புரியும்படி தமது ஆட்சியைப் பற்றியும், பணிபுரியும் தலைமையைப் பற்றியும் எடுத்துக் கூறினாரே தவிர, அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவில்லை.

ஒரு நபருடைய வாழ்வில் மற்றவருக்கு எத்தகைய பங்கு உண்டு, அவருடைய வாழ்வைப் பற்றி முடிவெடுப்பதில் எவ்வளவு சுதந்திரம் உண்டு என முடிவெடுக்கும் உரிமை அந்த நபருக்கு மட்டுமே உண்டு. அவ்வாறு முடிவெடுத்து தனக்கான எல்லைகளை ஏற்படுத்துவது, உறவுகளில் இடைவெளியை ஏற்படுத்தும் கூறுகளல்ல; அவை உறவுகளைத் திடப்படுத்தும் அணைக்கட்டுகள்.

இயேசு ஓர் உணர்வு முதிர்ச்சியின் அடையாளமாக மட்டும் திகழவில்லை; மாறாக, உணர்வுத் தளங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கும் எடுத்துகாட்டாகத் திகழ்கின்றார். சீடர்கள் தடுத்த போது, சிறுவர்களைத் தம்மிடம் வரவழைத்ததன் வாயிலாக, ஒடுக்கப்பட்ட அந்தச் சிறுவர்களின் மகிழ்ச்சியை அவர்கள் உணர உறுதுணையாக இருந்தார். இவ்வாறு, இயேசு உணர்வுசார் முதிர்ச்சிக்கு அரியதோர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்.

இறுதியாக...

உணர்வுகள் என்பவை ஏதோ விரும்பத்தகாதவை அல்ல; அவை மனிதரின் மைய ஆற்றல்! அந்த உணர்வுகளைப் பற்றிய ஆழமான மற்றும் தெளிவான புரிதலின் வாயிலாகவும், அதை ஆரோக்கியமாக மேலாண்மை செய்வதன் வாயிலாகவும் ஒரு மனிதரால் தன் வாழ்வின் நோக்கை எளிதாக அடைய முடியும்; ஏன், அவர் முழுமை அடைகிறான் என்றும் கூற முடியும். இயேசு தம் வாழ்நாள் முழுவதும் குறிப்பாக, சிலுவையின் கோர நிலையிலும் வெளிப்படுத்திய உணர்வு முதிர்ச்சியை நமதாக்குவோம்! நம் உலகம், நம் வசமாகட்டும்.

news
ஆன்மிகம்
இறை இரக்கம்: எல்லையற்ற இயேசுவின் அன்பின் வெளிப்பாடு!

பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையை நாம் இறை இரக்கப் பெருவிழாவாகக் கொண்டாட அழைக்கப்படுகிறோம். இது வெறும் சடங்கு அல்ல; மாறாக, நம் பாவங்களைக் காட்டிலும் இறைவனின் மன்னிப்பு பெரியது என்பதை உலகம் உணர்ந்துகொள்ளும் ஓர் உன்னதத் திருநாள்!

இரக்கம் அல்லது கருணை என்பதன் சொற்பிறப்பு, இலத்தீன் மொழியின்மிசெரிகோர்டியா (misericordia) என்ற சொல்லிலிருந்து உருவாகிறது . இதுமிசர் (miser - பரிதாபகரமான, துயரமான) மற்றும் கோர் (cor- இதயம்) ஆகிய சொற்களின் இணைப்பாகும். இச்சொல்லாடலானதுபரிதாபகரமானவர்களுக்கு, துயர் நிலையில் இருப்பவர்களுக்கு நம் இதயத்தைக் கொடுப்பதுஎன்பதாகும். இது மற்றொருவரின் துயரத்தைப் போக்க, ஒருவரைத் தூண்டும் ஆழ்ந்த அன்புறவைக் குறிக்கிறது

இரக்கம் அல்லது கருணை என்பது நாம் செய்த புண்ணியத்திற்காகக் கிடைப்பதல்ல; மாறாக, நாம் அவருடைய பிள்ளை என்பதற்காக வழங்கப்பட்ட ஒரு பெருங்கொடை; மேலான ஓர் அருள் வரம்! ஒரு பெற்றோர் தம் குழந்தையின் மீது காட்டும் அன்பு, அக்குழந்தை எதையாவது சாதித்ததால் வருவதல்ல; அக்குழந்தை பிறந்த அந்த நொடியிலேயே அங்கு அன்பு பிறப்பெடுக்கிறது. அதுபோலவே, நாம் பாவிகளாய் இருந்தபோதே நம்மைத் தேடி வந்த கிறிஸ்துவின் அன்புதான் இறை இரக்கம்; அந்தத் தெய்வீகக் கருணை!

2016-ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டஇறைவனின் திருப்பெயர் இரக்கம் (The Name of God is Mercyஎன்ற நூல், இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையிலான ஆழமான உறவைஇரக்கம்என்ற ஒற்றைச் சொல்லால் பிணைக்கிறது. வத்திக்கான் செய்தியாளர் ஆண்ட்ரியா டொர்னியேலியுடன்  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்ட உரையாடல்களின் தொகுப்பாக வெளிவந்த இந்த நூலில், ‘புனிதர்களுக்காகவோ அல்லது நீதிமான்களுக்காகவோ மட்டும் இறைவன் காத்திருக்கவில்லை; மாறாக, தன்னை ஒரு பாவி என்று உணர்ந்து அவரிடம் வருபவர்களுக்காகவே அவர் தவம் இருக்கிறார்என்பதை அவர் சிறப்பாக வலியுறுத்துகிறார்மேலும், ‘நமது பாவங்களே நாம் இறைவனின் இரக்கத்தைச் சந்திக்கும் புனிதத் தலங்களாக மாறுகின்றனஎன்றும், ‘நாம் ஒரு பாவி என்பதை உணர்வதே இறைவனிடமிருந்து நமக்குக் கிடைக்கும் முதல் கொடைஎன்றும், ‘அந்த இடத்தில்தான் இயேசுவின் குணப்படுத்தும் தொடுதல் நிகழ்கிறதுஎன்றும் குறிப்பிடுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அவ்வாறே, “ஒருவர் மிகப்பெரும் பாவியாக இருந்தாலும், என் கருணையின் மணிமாலையை (Divine Mercy Chaplet) ஒருமுறை செபித்தால், அவர் என் எல்லையற்ற கருணையிலிருந்து அருளைப் பெறுவார்என்று புனித பவுஸ்தீனா வழியாக இறைவன் உலகிற்குத் தந்த செய்திகள் நம்பிக்கையற்றுக் கிடக்கும் மானுடத்திற்கு ஒரு கலங்கரை விளக்கம்.

இயேசு புனித பவுஸ்தீனாவிடம் அளித்த வாக்குறுதிகள் கற்பனைக்கு எட்டாதவை. குறிப்பாக, மரணத் தறுவாயில் இருப்பவர்களுக்காகச் செபமாலையைச் செபிக்கும்போது, இயேசு ஒரு நீதியுள்ள நடுவராக இல்லாமல், ‘இரக்கமுள்ள மீட்பராகதந்தைக்கும் அந்த ஆன்மாவிற்கும் இடையில் இருப்பதாக உறுதி அளித்துள்ளார். இயேசு கல்வாரி மலையில் தம் உயிரைத் துறந்த அந்த மாலை மூன்று மணி, அகில உலகிற்குமான பெரும் கருணையின் நேரம். அந்த நேரத்தில் நாம் கேட்கும் எதையும் தமது திருப்பாடுகளின் பெயரால் அவர் மறுப்பதில்லை. நாமும் இரக்கத்தின் தூதுவர்களாவோம்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பார்வையில், திரு அவை என்பது சட்டங்களை வகுக்கும் ஒரு கூடம் அல்ல; அது ஒருபோர்க்கள மருத்துவமனை (Field Hospital) காயப்பட்டவர்கள், விளிம்பு நிலை மக்கள், சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்கள் என அனைவரையும் அரவணைக்கும் இடமே திரு அவை. “Who am I to judge others?  - ஒருவர் ஆண்டவரைத் தேடினால், அவரைத் தீர்ப்பிட நான் யார்?” எனும் அவருடைய கூற்று, கத்தோலிக்கத் திரு அவையில் பாவிகள் என நாம் தீர்ப்பிடும் பலருக்குப் பல முன்னுரிமைகளை மாற்றியமைத்துள்ளது.

எல்லாச் சூழல்களிலும் சமகாலச் சட்ட வல்லுநர்களாக நாம் இருக்கக்கூடாது; மாறாக, கிறிஸ்துவின் உடலை ஏழைகளிடமும் தேவையிலுள்ளோரிடமும் தொட்டுணரும் மேய்ப்பர்களாக இருக்கவேண்டும். திரு அவை என்பது மக்களைக் கண்டனம் செய்வதற்காக இல்லை; மாறாக, இறைவனின் ஆழமான அன்பைச் சந்திக்க வைப்பதற்காகவே அது இருக்கிறது எனும் அவருடைய சிந்தனைகள் வாழ்வாக்கத்தக்கதே!

புனித பவுஸ்தீனாவின் செபம் நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் எதிரொலிக்கவேண்டும். நம் கண்கள், காதுகள், நாக்கு, கைகள் மற்றும் கால்கள் என அனைத்தும் இரக்கத்தின் கருவிகளாக மாறவேண்டும். அடுத்தவரைத் தீர்ப்பிடாத கண்கள், பிறரின் கூக்குரலைக் கேட்கும் காதுகள், ஆறுதல் வார்த்தைகளை மட்டுமே பேசும் நாக்கு, நற்செயல்களை மட்டுமே செய்யும் கைகள், பிறருக்கு உதவ விரைந்து செல்லும் கால்கள் இவை அனைத்தும் ஒன்றிணையும்போது நாம் இறைவனின் வாழும் சாயலாக மாறுகிறோம்.

இறை இரக்கப் பெருவிழா, ஆன்மாக்களுக்கு ஒரு புகலிடம். அன்று ஒப்புரவு அருளடையாளத்தில் பங்குகொண்டு, நற்கருணை உட்கொள்பவர்களுக்குப் பாவங்களும் அதற்கான தண்டனைகளும் முழுமையாக மன்னிக்கப்படுகின்றன. “உங்கள் பாவங்கள் கருஞ்சிவப்பாய் இருந்தாலும், அவை பனிபோல் வெண்மையாகும்என்ற இறைவனின் வாக்கு அன்றைய தினம் முழுமையாக நிறைவேறுகிறது.

இறைவனின் இரக்கம் நம் பாவங்களை விடவும், இந்த உலகத்தின் பாவங்களை விடவும் பெரியது. இந்த உலகம் வெறுப்பாலும் வன்முறையாலும் சூழந்திருக்கலாம்; ஆனால், இறைவனுடைய இரக்கத்தின் நீரூற்று இன்றும் வற்றாமல் சுரந்து கொண்டிருக்கிறது. நாம் செய்ய வேண்டியதெல்லாம், நம்முடைய தற்பெருமையைக் களைந்து, தாழ்ச்சியுடன் அவரிடம் திரும்புவதுதான்.

ஆகவே, இறை இரக்கப் பெருவிழாவை நாம் கொண்டாடும் இவ்வேளையில், நாமும் இறைவனைப் போலஅதிகமாக மன்னிக்கும்அந்தப் பண்பைப் பெற்றுக்கொள்வோம். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகளில் கூறுவதென்றால், “மக்களின் இதயங்களைக் குளிரூட்டும், அவர்களோடு  நெருக்கமாக இருக்கும் ஒரு திரு அவையாக நாம் மாறுவோம்.”

இறைவனின் திருப்பெயர் இரக்கம்; அந்த இரக்கத்தில் நாமும் அடைக்கலம் புகுவோம்!