அதிகாரமல்ல, ஆழமான நட்பு
“இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்லமாட்டேன்;… உங்களை நான் என் நண்பர்கள் என்றேன்”
(யோவா 15:15). இயேசுவின் இந்த ஒற்றை வார்த்தை கத்தோலிக்க நம்பிக்கையின் அஸ்திவாரத்தை மாற்றியமைக்கிறது. கிறித்தவம் என்பது வெறும் சட்டங்களின் தொகுப்போ அல்லது சடங்குகளின் பட்டியலோ அல்ல; அது கடவுளுக்கும் மனிதருக்கும் இடையிலான ஓர் உயிருள்ள உறவு என்பதைத் திருத்தந்தை லியோ அவர்கள் தனது மறைக்கல்வி உரையில் இந்த ‘அன்பின் உறவை’ மையப்படுத்தி நம்பிக்கையாளர்களுக்கு ஓர் உன்னதமான ஆன்மிகப் பாதையை வகுத்துக் கொடுத்துள்ளார்.
கடவுளின் அடையாளம்:
பண்பல்ல,
அதுவே
சாராம்சம்
திருவிவிலியத்தில்
யோவான் தனது முதல் கடிதத்தில் நமக்கு ஓர் உறுதியான உண்மையை உரக்கக் கூறுகிறார்: “கடவுள் அன்பாய் இருக்கிறார்” (1யோவா
4:8). அன்பு என்பது கடவுளின் பல பண்புகளில் ஒன்று
மட்டுமல்ல; அதுவே அவரது சாராம்சம்.
புனித
கிரகோரி குறிப்பிடுவதுபோல, “கிறிஸ்து நம்மைப்போல மாறினார்; நாம் அவர் வழியாகக் கடவுளாக மாறவேண்டும் என்பதற்காக.” கடவுள் நம்மைத் தேடி வருவது நமது தகுதியினால் அல்ல; மாறாக, அவர் அன்பாகவே இருப்பதால்தான். “கடவுள் உலகை எத்துணை அன்புகூர்ந்தார் எனில், தம் ஒரே மகனையே அளித்தார்”
(யோவா 3:16) என்ற இறைவார்த்தை, அன்பு என்பது வெறும் உணர்ச்சியல்ல; அது ஒரு ‘தியாகம்’ என்பதை உறுதிப்படுத்துகிறது.
இறைவெளிப்பாடு:
ஒரு
தெய்வீக
உரையாடல்
இரண்டாம்
வத்திக்கான் சங்கத்தின் ‘இறைவெளிப்பாடு’ (Dei Verbum) ஆவணம் ஒரு முக்கியமான உண்மையை முன்வைக்கிறது. கடவுள் மனிதர்களுக்குத் தரும் வெளிப்பாடு என்பது தகவல் பரிமாற்றம் அல்ல; அது ஒரு தனிப்பட்ட தொடர்பு. திருத்தந்தை லியோ இதனை விவரிக்கையில், “கடவுள் மனிதர்களிடம் நண்பர்களாகப் பேசுகிறார்” (Dei Verbum, 2) என்று வலியுறுத்துகிறார்.
திருவிவிலிய
வாசிப்பு என்பது ஒரு வரலாற்றைப் படிப்பதல்ல; மாறாக, நம் அருகில் அமர்ந்து, நம்மிடம் பேசும் இறைவனின் குரலுக்குச் செவி மடுப்பதாகும். நவீன உலகில் தகவல்கள் பெருகிவிட்ட போதிலும், ஆழமான உள்ளுணர்வுத் தொடர்பு குறைந்துவிட்ட நிலையில், இறைவார்த்தை மட்டுமே இதயங்களை இணைக்கும் பாலமாக அமைகிறது.
பணியாளர்கள் அல்லர்,
நண்பர்கள்!
நட்பு
என்பது சமமானவர்களுக்கு இடையே உருவாவது. இது ஒரு சமத்துவத்தின் புரட்சி. படைப்பாளரான இறைவனுக்கும், படைப்பான மனிதனுக்கும் இடையே சமநிலை என்பது இயற்கையில் சாத்தியமற்றது. ஆனால், புனித அகுஸ்தினார் கூறுவதுபோல, “கடவுளின் அருள் மட்டுமே நம்மைக் கடவுளின் நண்பர்களாக மாற்ற முடியும்.”
இயேசு
நம்மை நண்பர்கள் என்று அழைப்பதன் மூலம் மூன்று நிலைகளை உருவாக்குகிறார்:
1. சமத்துவம்: நட்பில் அதிகாரம் மறைந்து அன்பு முதன்மையாகிறது.
2. பகிர்தல்:
தந்தை தமக்குத் தெரிவித்த அனைத்தையும் இயேசு நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.
3. அர்ப்பணிப்பு:
“தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு வேறில்லை”
(யோவா 15:13).
செயலால் பேசும்
அன்பின்
சாட்சிகள்
அன்பு
என்பது கோவிலுக்குள் மட்டும் அடங்கிவிடக் கூடியதல்ல; அது சமூகத்தில் செயல்பாடாக மாறவேண்டும். அதற்கு இரண்டு மாபெரும் சாட்சிகள் நமக்கு முன் வைக்கப்படுகின்றன:
1. புனித டேமியன்:
தொழுநோயாளிகளுக்காகத்
தன் வாழ்வை அர்ப்பணித்தவர். ‘அன்பு என்பது வார்த்தைகளில் இல்லை; அது மற்றவர்களின் காயங்களைக் கழுவுவதில் இருக்கிறது’ என்பதை
உலகுக்கு உணர்த்தினார்.
2. அன்டோன் ஷ்மிட்:
இரண்டாம் உலகப் போரின்போது தனது உயிரைப் பணயம் வைத்து யூதர்களைக் காப்பாற்றிய வீரர் இவர். கிறிஸ்துவின் அன்பை இரத்தச்சாட்சியமாக வாழ்ந்து காட்டினார்.
அவருக்கு என்மேல்
அன்பு
“என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும், உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்”
(யோவா 15:11). இன்றைய உலகில் நிலவும் தனிமைக்கு மருந்தாகத் திகழ்ந்த நிகழ்வைப் பார்ப்போம். அயர்லாந்து நாட்டுப் பெரியவர் ஒருவரிடம் “நீங்கள் கடவுளுக்கு நெருக்கமானவரா?” என்று கேட்டபோது, அவர் கூறினாராம்: “ஆமாம், அவருக்கு என்மேல் மிகுந்த அன்பு உண்டு.”
நமது
உண்மையான அடையாளம் நமது பதவியோ அல்லது செல்வமோ அல்ல; மாறாக, ‘இயேசு நேசிக்கும் நபர்’ என்பதுதான். இந்த உணர்வே வாழ்வின் துன்பங்களுக்கு மத்தியிலும் நிலையான மகிழ்ச்சியைத் தருகிறது.
நாம் பின்பற்ற
வேண்டிய
நடைமுறைப்
பாதை
• திருவழிபாடு: திருப்பலியில் இறைவார்த்தையை வெறும் சத்தமாகக் கேட்காமல், கடவுள் நம்மிடம் பேசும் தூதாக ஏற்க வேண்டும்.
• அமைதியான தியானம்:
தினமும் சிறிது நேரம் கடவுளின் பிரசன்னத்தில் அமைதியாக அமர்ந்து, அவருடைய நட்பை உணர வேண்டும்.
• செயலில் அன்பு:
ஏழைகளின் குரலுக்குச் செவிசாய்ப்பதே உண்மையான வழிபாடு. அநீதிக்கு எதிரான போரும் மன்னிப்பும் அன்பின் வெளிப்பாடுகளே.
அன்பே எதிர்காலம்!
“நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய இம்மூன்றும் நிலைத்திருக்கும். இவற்றுள் அன்பே தலைசிறந்தது” (1கொரி
13:13). மீட்பு என்பது ஒரு கடினமான கோட்பாடு அல்ல; அது ஓர் இனிமையான உறவு. கிறிஸ்துவின் அன்பில் நிலைத்திருப்போம். அந்த அன்பு ஒன்றே உலகின் அநீதிகளை வேரறுத்து, அமைதியை நிலைநாட்டும்.
அன்பே
வாழும் மொழி; அன்பே உலக மாற்றம்; அன்பே இறைவழியின் அடையாளம்!
கிறிஸ்து பிறப்பு அறிவிப்பின் பொழுது மரியா வெளிப்படுத்திய கன்னியாக இருக்க விரும்பிய அவரின் எண்ணமானது பின்னர் மாற்றப்பட்டது என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை.
1. திரு
அவையானது மரியாவின் என்றைக்குமான கன்னித்தன்மையின் மீதான தனது நம்பிக்கையை எப்பொழுதுமே வெளிப்படுத்தியுள்ளது. மிகப் பழமையான ஏடுகள் இயேசு கருவில் உருவானதைக் குறிப்பிடும் பொழுது, மரியாவை வெறுமனே ‘கன்னி’ என்றே அழைக்கின்றன. மேலும், இந்தக் குணத்தை அவருடைய வாழ்நாள் முழுவதும் என்றென்றைக்குமான உண்மையாகவே அவர்கள் கருதினார்கள் என்றும் அவ்வேடுகள் அனுமானிக்கின்றன.
தொடக்ககாலக்
கிறித்தவர்கள் ‘ஏய்பர்த்தேனுஸ்’ (aeiparthenos)
அதாவது ‘என்றும் கன்னி’ என்ற கிரேக்க வார்த்தை வழியாகத் தங்களது திடமான நம்பிக்கையை வெளிப்படுத்தினார்கள். இச்சொல்லாடலானது மரியாவை ஒரு தனித்துவமான மற்றும் பயனுள்ள முறையில் விவரிக்கவும், ஒரே வார்த்தையில் திரு அவையின் நம்பிக்கையான அவரது என்றென்றைக்குமான கன்னித்தன்மையை வெளிப்படுத்தவும் உருவாக்கப்பட்டது. மேலும், கிறிஸ்துவின் மனுவுருவாதலோடு தொடர்புபடுத்தி கி.பி. 374-ஆம்
ஆண்டு புனித எபிபானியுஸ் (St. Epiphanius) இயற்றிய
இரண்டாவது நம்பிக்கை அறிக்கையில் (Second Symbol of Faith) இச்சொல்லாடலானது
பயன்படுத்தப்பட்டிருப்பதைக்
காணலாம். இயேசு கடவுளின் மகனாகப் பிறந்தார்; அதாவது, “அவர் எப்பொழுதும் அருள்நிறைந்த கன்னி மரியாவால் தூய ஆவியாரின் வழியாகச் சரியானதொரு வழியில் மனிதராக உருவாக்கப்பட்டார்” (Ancoratus, 119,5; DS 44).
‘என்றும் கன்னி’ என்கின்ற சொல்லாடலானது, இரண்டாம் கான்ஸ்டான்டிநோபிளின் திருச்சங்கத்தால் (கி.பி. 553) கையாளப்பட்டது.
இச்சங்கமானது, “புனித மற்றும் மகிமைமிகு இறைவனின் தாயும் என்றும் கன்னியுமாகிய மரியாவிடமிருந்து மனுவுருவான கடவுளின் வார்த்தையானவர்” (DS 422) என்பதை உறுதி
செய்கின்றது. இக்கொள்கை வரைவானது நான்காவது இலாத்தரன் திருச்சங்கம் கி.பி. 1215 (DS 801),
இரண்டாவது லியோன் திருச்சங்கம் (கி.பி. 1274 (DS 852)
மற்றும் மரியாவின் என்றென்றைக்குமான கன்னித்தன்மை அவர் உடலிலும் ஆன்மாவிலும் விண்ணக மகிமைக்கு அழைத்துச் செல்லப்பட்டதற்கான ஒரு காரணியாக ஏற்றுக்கொண்ட மரியாவின் விண்ணேற்பு பற்றிய கோட்பாட்டு வரைவு அறிக்கை கி.பி.1950 (DS 3903)
வழியாகவும் உறுதி செய்யப்படுகின்றது.
மரியா
இயேசுவின் பிறப்பிற்கு முன்னும், பிறப்பின் பொழுதும், அதற்குப் பின்னும் கன்னியாகவே இருந்தார்
2. சுருக்கமானதொரு
நம்பிக்கை அறிக்கையில் திரு அவையானது மரியாவை, ‘பிறப்பிற்கு முன்னும், பிறப்பின்பொழுதும், அதற்குப் பின்னும் கன்னி’ என்ற தன்னுடைய நிலைப்பாட்டை முன்வைக்கின்றது. இந்த மூன்று தருணங்களையும் குறிப்பிடுவதன் வழியாக, அவர் ஒருபோதும் கன்னியாக இருப்பதை நிறுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.
இம்மூன்றில்,
‘பிறப்பிற்கு முன்’ அவரின் கன்னித்தன்மையை உறுதிப்படுத்துவது சந்தேகத்திற்கு இடமின்றி, மிக முக்கியமானதொன்றாகும். ஏனென்றால், அது இயேசு கருவாக உருவாவதைக் சுட்டிக்காட்டுவது மட்டுமல்லாமல், மனுவுருவாதல் மறையுண்மையையும் நேரடியாக வெளிப்படுத்துகின்றது. இதன் காரணமாகவே, தொடக்கத்திலிருந்தே இது திரு அவையின் நம்பிக்கையில் தொடர்ந்து
காணப்படுகின்றது.
‘பிள்ளைப்பேற்றின் பொழுதும் அதற்குப் பின்னரும்’
அவரது கன்னித்தன்மை, திரு அவையின் ஆரம்ப நாள்களிலிருந்தே மரியாவிற்குக் கூறப்பட்ட ‘கன்னி’ என்ற தலைப்பில் மறைமுகமாக இருந்தாலும், சிலர் வெளிப்படையாகச் சந்தேகங்களை எழுப்பத் தொடங்கியதிலிருந்து, அது ஆழமான கோட்பாட்டு ஆய்விற்கு உட்பட்டது. “கடவுளின் மகன் மனிதனாக ஆனார்; காலத்திலும் முறையிலும் ஒரு மனிதனாகவே பிறந்தார் மற்றும் தன் தாயின் கருப்பையைத் திறப்பதற்காகப் பிறந்தார்”
(லூக் 2:23). மேலும், “கடவுளின் வல்லமையின் வழியாக, தன் தாயின் கன்னித் தன்மையைக் கலைக்கவில்லை” என்று
திருத்தந்தையான புனித ஹோர் மிஸ்தாஸ் விளக்குகின்றார். இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கமும் மரியாவின் முதல்
மகன் “தன் தாயின் கன்னி ஒருமைப்பாட்டைக் குறைக்கவில்லை; மாறாக, அதைப் புனிதப்படுத்தினார்” (இறைத்
திட்டத்தில் திரு அவை, எண். 57) என்று
இக்கோட்பாட்டை உறுதிசெய்கின்றது.
பிறப்பிற்குப்
பிந்தைய அவரின் கன்னித் தன்மையைப் பொறுத்தவரை, கிறிஸ்து பிறப்பு அறிவிப்பின் பொழுது (லூக் 1:34) ஒரு கன்னியாகவே இருக்கவேண்டும் என்று மரியா வெளிப்படுத்திய தனது எண்ணத்தை, பிறகு மாற்றிக்கொண்டார் என நினைப்பதற்கு எந்தக்
காரணமும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டவேண்டும். மேலும், மரியாவையும், சிலுவையின் அடியில் நின்ற அவரின் அன்புச் சீடரையும் நோக்கி இயேசு கூறிய, “பெண்ணே, இதோ, உன் மகன்”,
“இதோ, உன் தாய்”
(யோவா 19:6) என்ற வார்த்தைகளின் உடனடிப் பொருள் மரியாவுக்கு வேறு குழந்தைகள் இல்லை என்பதையே குறிக்கின்றன.
பிறப்பிற்குப்
பிறகு அவரின் கன்னித் தன்மையை மறுப்பவர்கள் நற்செய்தியில் இயேசுவிற்குக் கூறப்படும் ‘முதற்பேறானவர்’ (லூக்
2:7) என்ற சொல்லாடலின் அடிப்படையில், இயேசுவிற்குப் பிறகு மரியா மற்ற குழந்தைகளைப் பெற்றெடுத்தார் என்பதை இந்த வார்த்தை உணர்த்தியது போன்றதோர் உறுதியான வாதத்தை முன்வைக்கின்றனர். ஆனால், ‘முதற்பேறானவர்’ என்ற
சொல்லின் அர்த்தம் ‘இக்குழந்தைக்கு முன்பு’ அதாவது, இயேசுவுக்கு முன்பு மரியாவுக்கு எந்தக் குழந்தையும் இருந்திருக்க வாய்ப்பில்லை என்பதைக் குறிக்கின்றதேயன்றி, இயேசுவுக்குப் பிறகு அவருக்கு மற்ற குழந்தைகள் இருந்தார்கள் என்பதைக் குறிக்கவில்லை. மேலும், ஒரு தாயானவள் மற்ற குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்கலாமா? என்பதைத் தவிர்த்து, நற்செய்தியாளர் குழந்தையின் இந்தத் தன்மையை அதாவது ‘முதற்பேறானவர்’ (லூக்
2: 23) என்பதை ஏன் வலியுறுத்துகிறாறென்றால், யூதச் சட்டத்தில் முதல் குழந்தையின் பிறப்புடன் சில கடமைகள் இணைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறாக,
தாய்க்கு ஒரே மகனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் உரியவற்றை நிறைவேற்றுவதற்கு ‘ஆண் தலைப்பேறு’
என்கின்ற முறையில் மோசேவின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணித்து அதை நிறைவேற்றினார்.
‘சகோதரர்’ என்ற
வார்த்தையானது
பலவிதமான
உறவின்
வகைகளைக்
குறிக்கின்றது
3. சிலருடைய
கூற்றுப்படி யாகப்பர், யோசேப்பு, சைமன் மற்றும் யூதாஸ் போன்ற இயேசுவின் நான்கு சகோதரர்களும் (மத் 13:55-56) மற்றும் பல சகோதரிகளும் இருந்தார்கள்
என்ற நற்செய்திக் குறிப்புகளின் அடிப்படையில் (கிறிஸ்துவினுடைய) பிறப்பிற்குப் பிந்தைய மரியாவின் கன்னித்தன்மையானது மறுக்கப்படுகிறது.
‘உறவினர்’ என்ற வார்த்தையை வெளிப்படுத்த எபிரேய மற்றும் அரமேயிக் மொழிகளில் குறிப்பிட்ட சொல் எதுவும் இல்லை என்பதையும், ‘சகோதரர்’ மற்றும் ‘சகோதரி’ என்ற சொற்கள் மிகவும் பரந்த உறவுகளை உள்ளடக்கியது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். உண்மையில், ‘இயேசுவின் சகோதரர்கள்’ என்ற
சொல்லாடலானது, கிறிஸ்துவின் சீடராக இருந்த மரியாவின் ‘குழந்தைகள்’ என்பதைக்
குறிக்கிறது (ஒப்பிடுக. மத் 27:56). மேலும், அவர் ‘மற்ற மரியா’ என்று குறிப்பிடத்தக்க வகையில் வேறுபடுத்தப்படுகின்றது (மத் 28:1). பழைய ஏற்பாட்டு கூற்றின்படி, அவர்கள் இயேசுவின் நெருங்கிய உறவினர்கள் ஆவார்கள் (Catechism of the Catholic Church, எண். 500).
எனவே,
புனித மரியா ‘எப்பொழுதும் கன்னியாக’
இருக்கின்றார்.
இது கிறிஸ்துவின் மீட்புப் பணிக்கு அவரை முழுமையாக அர்ப்பணித்த அவரது தெய்வீகத் தாய்மையின் விளைவு மற்றும் சிறப்புரிமை ஆகும்.
மூலம்:
John Paul II, The Church presents Mary as ‘Ever Virgin’, in
«L’Osservatore Romano», Weekly Edition in English, 4 September
1996, p. 11.
திரு அவையின் நூற்றாண்டுப் படிப்பினை
• 1891-இல் திருத்தந்தை
13-ஆம் லியோ
அவர்களோடு திரு
அவையின் படிப்பினை
தொடங்குகிறது. தொழில்
புரட்சியின் பின்புலத்தில்
அவர் தொழில்
- தொழிலாளர் பிரச்சினை
பற்றிப் பேசுகிறார்.
•
திருத்தந்தை 23-ஆம் யோவான், ‘அன்னையும்
ஆசிரியையும்’ என்ற சுற்றுமடலில்
வளர்ந்த நாடுகள்
ஏழை நாடுகளுக்கு
உதவக் கேட்கிறார்.
• 2-ஆம் வத்திக்கான்
‘இன்றைய உலகில்
திரு அவை’
எண். 69, “உலக நலன்கள், அனைத்து
மனிதர்களுக்காகவே உள்ளன”
என்கிறது. அன்பை
அடிப்படையாகக் கொண்ட
நீதியில் உலகப்
பொருள்கள் பகிரப்படவேண்டும். ஒவ்வொருவரும் தனக்கும்
தன் குடும்பத்திற்கும் தேவையான தனிச்சொத்தைப்
பெற உரிமை
உண்டு. இந்தத்
தனிச்சொத்திற்கும் சமூகக்
கடமை உண்டு.
மிகப்பெரும் இடர்ப்பாட்டிலிருப்பவர் தனக்கும் தன்
குடும்பத்திற்கும் தேவையானதை
அதிகமாகச் சொத்து
வைத்திருப்பவர்களிடமிருந்து எடுத்துக்கொள்ள
உரிமை உண்டு
என்கிறார்கள் திரு
மறைத் தந்தையர்கள்.
• ‘ஏழைகள் கிறிஸ்துவின்
பகராளிகள்’ (Vicars)
என்று திருத்தந்தை
6-ஆம் பவுல்
1967-இல் அமெரிக்க
ஐக்கிய நாட்டில்
ஏழைகள் சார்பாக
உரையாற்றுகிறார். ‘மக்களின்
முன்னேற்றம்’ (1967) என்ற சுற்றுமடல்,
ஏழைகள் அடிப்படைத்
தேவைகளின்றி உழலும்போது,
மற்றவர்கள் பேராசையால்
தேவைக்கு அதிகமாக
உலகச் சொத்தை
அபகரிக்க உரிமை
இல்லை என்கிறார்.
• 2-ஆம் புனித
யோவான் பவுலின்
‘சமூக அக்கறை’
(Sollicitudo Rei Socialis -
1987) என்ற சுற்றுமடல்,
பணக்கார நாடுகள்
ஏழை நாடுகளுக்கு
உதவாததை ‘செல்வரும்
இலாசரும்’ (லூக்
16:19-31) என்ற திருவிவிலியப்
பகுதியோடு ஒப்பிட்டுப்
பேசுகிறார்.
• ‘மனித உழைப்பு’
(Laborem Excercens -
1981) சமூகப் பிரச்சினையைப்
புரிந்துகொள்ள உதவும்
சாவி என்கிறார்.
• திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட் ‘உண்மையில்
அன்பு’ (Caritas in Veritate)
என்ற மடலில்,
ஏழை மக்களின்
பசி என்பது
பொருளாதாரப் பற்றாக்குறையால்
வருவது அல்ல;
மாறாக, நியாயமான
பங்கீடு செய்யப்படாததால்
வருகிறது என்கிறார்.
• திருத்தந்தை பிரான்சிஸ்
- இலத்தீன் அமெரிக்க
ஆயர்களின் பேரவைகள்
மெடலின் (1968), புவேப்லா (1979) Santo Domingo
(1992) Aparecida
(2007) நகரங்களில் நடந்த
கூட்டங்களை எடுத்துக்கூறியும், புனித ஆஸ்கர்
ரொமெரோ பேராயருடைய
கொலையை எடுத்துக்
கூறியும், பெரு
நாட்டில் தான்
செய்த பணியை
நினைவுகூர்ந்தும் திரு
அவையின் தெளிந்து
தேர்தல் முறையை
அறிமுகப்படுத்துகிறார்.
• ஏழ்மையையும் ஏற்றத்தாழ்வையும் உருவாக்கும் பாவ
அமைப்புகளான பொருளாதார
சர்வாதிகாரத்தையும், முதலாளித்துவச்
சந்தைப் பொருளாதாரத்தையும் கடுமையாகச் சாடுகிறார்
திருத்தந்தை பிரான்சிஸ்.
• ‘அவர் நம்மை
அன்பு செய்கிறார்’
(Dilexit Nos) என்ற திருத்தூது
ஊக்க உரையில்,
சமூகப் பாவங்கள்
ஒன்று சேர்ந்து
பாவ அமைப்புகளை
உருவாக்குகின்றன என்கிறார்
திருத்தந்தை லியோ.
• ஏழைகள் பொருளாதாரத்திலிருந்து அந்நியப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு
நலத்திட்டங்கள் தற்காலிக
உதவி. பணக்காரருடைய
தொழில் இலாபத்தில்
இருந்து கசியும்
உதவி (trickle down drops)
தீர்வு அல்ல
என்கிறார்.
• சுற்றுச்சூழல் சீர்கேடுகளும்
ஏழைகளையே அதிகம்
பாதிக்கின்றன.
• நற்செய்தி என்பது
தனிநபர்களையும், இறைவனோடு
கூடிய தனிநபர்
உறவுகளையும் பற்றி
மட்டும் பேசவில்லை;
குழுமங்கள், சமுதாயம்,
உலகம் முழுவதுமே
நலமாக்குவது பற்றியும்
பேசுகிறது (லூக்
4:43).
ஏழைகள்
எழுவாய்கள்
• ஏழைகள் செயப்படுபொருள்
அல்ல (objects); எழுவாய்கள்
(subjects). ஏழைகள்
தங்களுக்கான பண்பாட்டை
உருவாக்கும் ஆற்றல்
பெற்றவர்கள், நற்செய்தியின்
முகவர்கள். அவர்களோடு
இணைந்து அவர்களுடைய
உரிமைகளை நிலைநாட்டுவது
நீதியின்பால் நம்
மீது சுமத்தப்பட்ட
கடமை ஆகும்
(உரோ 13:8).
• ஏழைகளில் காணும்
நல்லவைகளுக்காக, அவர்களுடைய
நலமான பண்பாட்டிற்காக,
இக்கட்டான நெருக்கடி
வேளைகளிலும் அவர்களிடம்
காணப்படும் இறை
நம்பிக்கைக்காக அவர்களைப்
பாராட்டுவோம்.
• ஏழைகள் மத்தியில்
சென்று வாழ்வதைத்
திருத்தந்தை பாராட்டுகிறார்.
• ஏழைகள் நமக்கு
நற்செய்தி அறிவிக்க
அனுமதிப்போம். கடவுள்
ஏழைகள் வழியாக
நம்மிடம் பகிர
விரும்பும் ஞானத்தைத்
திறந்த மனத்தோடு
ஏற்று வாழ்வோம்.
மரியாவை ஒரு ‘கன்னியாகக்’காட்டும்பொழுது நற்செய்தியாளர் லூக்கா, “அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர்” (லூக் 1:27) என்று கூறுகின்றார். இந்த இரண்டு செய்திகளும் முதலில் வாசிக்கின்றவர்களுக்கு ஒன்றுக்கொன்று முரண்பட்டவைகளாகத் தோன்றலாம்.
இங்குப்
பயன்படுத்தப்படும் ‘கன்னி’ என்பதற்கான கிரேக்கச் சொல்லானது, திருமண ஒப்பந்தம் செய்த ஒரு பெண்ணின் நிலையைக் குறிக்கவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். ஆகவே, மரியா திருமண நிலையில் வாழ்கின்றார்; ஆனால், மண ஒப்பந்தம் மட்டுமே
ஆனவர் (lives in the marital
state, but that of betrothal). இருப்பினும்,
நவீன கலாச்சாரத்தில் இருப்பதைப் போலல்லாமல், பண்டைய யூதர்களின் திருமண நிச்சயதார்த்தமானது ஓர் ஒப்பந்தத்திற்காக வழங்கப்பட்டது மற்றும் பொதுவாக உறுதியான மதிப்பைக் கொண்டிருந்தது. அந்த இளைஞன் அந்தப் பெண்ணை அவரின் வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றபோதுதான் உண்மையில் திருமணம் முழு நிறைவை அடைந்தாலும் கூட, அது உண்மையில் திருமண நிலைக்கு ஒப்பந்தமானவரைத் திருமண வாழ்வுக்கு அறிமுகப்படுத்துவதாக இருந்தது.
இவ்வாறு,
வானதூதர் மரியாவுக்கு இயேசுவின் பிறப்பை அறிவித்தபொழுது திருமண ஒப்பந்தமானவருக்கான நிலையை மரியா பெற்றிருந்தார். என்றைக்கும் கன்னியாக நிலைத்திருக்கும் எண்ணத்தைக் கொண்டிருந்த மரியா, ஏன் திருமண ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டார்? என்று நாம் வியப்படையலாம். இச்சிக்கலை நற்செய்தியாளர் புனித லூக்காவும் அறிந்திருந்தார். ஆனால், எந்த விளக்கத்தையும் அளிக்காமல், நிலைமையை மட்டும் குறிப்பிடுகின்றார். உண்மையில், கன்னித்தன்மையில் இருப்பதற்கான மரியாவின் எண்ணத்தை வலியுறுத்தும் நற்செய்தியாளர், அவரை யோசேப்புவின் மனைவியாகவும் காட்டுகின்றார் என்பது இரண்டு தகவல்களின் வரலாற்று நம்பகத்தன்மையின் அறிகுறியாகும்.
யோசேப்பு கடவுளின்
மீட்புத்
திட்டத்தில்
உடன்
உழைக்க
அழைக்கப்பட்டார்
அவர்கள்
திருமண ஒப்பந்தம் செய்து கொண்ட பொழுது கன்னியாக வாழ்வதற்கான திட்டம் குறித்து யோசேப்பு மற்றும் மரியாவுக்கு இடையே ஒரு புரிதல் இருந்தது என்றும் கருதலாம். மேலும், வார்த்தை மனுவுருவாதலின் மறைபொருளைக் கருத்தில் கொண்டு கன்னித்தன்மையைத் தேர்வு செய்ய மரியாவைத் தூண்டிய தூய ஆவியானவரால், குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்றதொரு குடும்ப அமைப்பில் இந்தத் தூய ஆவியானவர் வர வேண்டும் என்று
விரும்பி யோசேப்பிலும் கன்னித்தன்மையின் மகத்துவத்தை ஊக்குவிக்க முடிந்திருக்கும்.
இறைத்தூதர்
யோசேப்புக்குக் கனவில் தோன்றி இவ்வாறு கூறுகின்றார்: “யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம்; ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியாரால்தான்” (மத்
1:20). தூய ஆவியானவரின் இவ்வார்த்தைகளால், யோசேப்பு தனது திருமண வாழ்வை முற்றிலும் சிறப்பு வாய்ந்த முறையில் வாழ அழைக்கப்பட்டார் என்பதற்கான உறுதியைப் பெற்றார். இவ்வாறு, இயேசுவைப் பெற்றெடுப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மரியாவுடன் கன்னித்தன்மையில்
ஒன்றித்திருப்பதன் வழியாக, கடவுளின் மீட்புத் திட்டத்தை நிறைவேற்றுவதில் உடன் ஒத்துழைக்க யோசேப்புவையும் இறைவன் அழைக்கின்றார்.
மரியாவையும்
யோசேப்பையும் எந்த வகையான திருமண வாழ்வு வாழ தூய ஆவியானவர் அழைத்தார் என்பதை மீட்புத் திட்டத்தின் மற்றும் உயர்ந்ததோர் ஆன்மிகத்தின் பின்னணியில் மட்டுமே நாம் புரிந்துகொள்ள முடியும். மனுவுருவாதல் மறைபொருளின் உறுதியான செயலாக்கமானது தெய்வீகமானதொரு மகப்பேற்றை முன்னிலைப்படுத்துகின்றதொரு
கன்னிப் பிறப்புக்கு அழைப்பு விடுக்கின்ற அதேநேரத்தில், அக்குழந்தையின் ஆளுமையின் இயல்பானதொரு வளர்ச்சிக்கு உதவக்கூடியதொரு குடும்பத்தை அமைக்கவும் அவர்களை அம்மறைபொருள் அழைத்தது.
மிகச்
சுருக்கமாகக் கூறவேண்டுமென்றால், வார்த்தை மனுவுருவாதலின் மறைபொருளில் அவர்கள் அளித்த பங்களிப்பைக் கருத்தில் கொண்டு, யோசேப்பு மற்றும் மரியா கன்னித்தன்மை என்னும் சிறப்பு வரம் மற்றும் திருமணத்தின் கொடை ஆகிய இரண்டையும் வாழும் அருளைப் பெற்றனர். மரியா மற்றும் யோசேப்பின் கன்னி அன்பின் ஒற்றுமையானது (communion of virginal love) மனுவுருவாதல்
என்னும் மறைபொருளின் உறுதியான செயலாக்கத்துடன் தொடர்புபடுத்தப்பட்டதொரு சிறப்புமிக்க நிகழ்வு என்றாலும்கூட, அது உண்மையான திருமணமாகும் (ஒப்பிடுக. மீட்பரின் தாய், எண். 7).
இரண்டாம்
நூற்றாண்டிலிருந்து, யோசேப்பு மற்றும் மரியாவிற்கிடையேயான அவர்களின் மணமக்களுக்கான ஒன்றிப்பின் உயர் மறைபொருளை ஏற்றுக்கொள்வதிலிருந்த சிரமமானது சிலரை அவர் வயதில் முதியவர் என்று நினைப்பதற்கும், அவரை மரியாவின் கணவர் என்பதைவிட பாதுகாவலர் என்று கருதுவதற்கும் இட்டுச்சென்றது. இதற்கு மாறாக, அவர் அந்நேரத்தில் ஒரு வயதான மனிதர் அல்லர்; மாறாக, அவரது உள்மன நிறைவு மற்றும் இறையருளின் பலனானது மரியாவுடனான தனது திருமண உறவைக் கன்னிப் பாசத்துடன் (virginal affection) வாழ்வதற்கு இட்டுச்சென்றது என்று கருதுவதற்கான ஒரு கருத்தாக்கமாகும்.
திருத்தந்தை
13-ஆம்
சிங்கராயர்
யோசேப்பின்
பாதுகாவலில்
திரு
அவை
முழுவதையும்
ஒப்படைத்தார்
மனுவுருவாதல்
மறைபொருளில் யோசேப்புவின் ஒத்துழைப்பானது இயேசுவின் தந்தை என்கிற பங்கையும் அதனுள் அடக்குகின்றது. அவரின் இப்பணியை வானதூதர் அவருக்குக் கனவில் தோன்றி அவரை அக்குழந்தைக்குப் பெயரிட அழைக்கின்ற போது உறுதிப்படுத்துகின்றார்: “அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார்; அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர்; ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்”
(மத் 1:21).
இயற்கையான
முறையில் மனிதப் பிறப்பெடுப்பதைத் தவிர்க்கின்ற அதேவேளை, யோசேப்புவிற்கான தந்தை என்கிற நிலையானது உண்மையானதொன்றாக இருக்கின்றது. ஆனால், வெளிப்படையானதாக இல்லை. தந்தை (father) மற்றும் தோற்றுவித்தவர் (one who begets) என்பனவற்றை வேறுபடுத்திப்
பார்க்கையில், மரியாவின் கன்னித்தன்மை
பற்றிக் கூறுகின்ற நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ‘De Margarita’என்கிற நூலானது இவ்வாறு கூறுகின்றது: “கணவன்-மனைவியாக வாழ்வதற்காக
மரியாவும்-யோசேப்பும் ஏற்றுக்கொண்ட
கடமைகள் யோசேப்புவைத் தந்தை என அழைப்பதற்கான தகுதியை
அவருக்குக் கொடுத்தது. எவ்வாறாயினும் அவர் இயேசுவைத் தோற்றுவிக்காத தந்தை ஆவார்”
(a father, however, who did not beget). இவ்வாறாக, மீட்பர் முழுச் சுதந்திரத்தோடு கீழ்ப்படிந்திருக்கக் காரணமான (லூக் 2:51) அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவரை வளர்ப்பதிலும் தச்சுத் தொழிலைக் கற்றுக் கொடுப்பதிலும் யோசேப்பு இயேசுவின் தந்தை
என்கிற பங்கை நிறைவேற்றினார்.
கிறித்தவர்கள்
எப்பொழுதுமே யோசேப்புவை மரியாவுடனும் இயேசுவுடனும் நெருக்கமான ஒற்றுமையுடன் வாழ்ந்தவர் என்று ஒப்புக்கொண்டு மரணத்திலும் அவர்களின் பாசத்தையும் ஆறுதல் அளிக்கும் உடனிருப்பையும் அவர் அனுபவித்தார் என்கிற முடிவுக்கு வந்தனர். இந்த நிலையான பாரம்பரியத்திலிருந்து, பல இடங்களில் திருக்குடும்பத்திற்கும்,
மீட்பரின் பாதுகாவலரான யோசேப்புவிற்கும் ஒரு சிறப்புப் பக்தியானது வளர்ந்துள்ளது. ஆகவேதான் அனைவரும் அறிந்தவாறு, திருத்தந்தை 13-ஆம் சிங்கராயர் யோசேப்புவின் பாதுகாவலில்
திரு அவை முழுவதையும் ஒப்படைத்தார்.
மூலம்:
John Paul II, Mary and Joseph lived gift of virginity, in
«L’Osservatore Romano», Weekly Edition in English, 28 August
1996, p. 7.
குழந்தை பிறப்பு முதல் முதியவர் இறப்பு வரை பல்வேறு பருவங்களாகக் காலங்கள் மனித வாழ்வில் ஓர் உறுப்புகளாக உருவெடுக்கின்றன. குழந்தைப் பருவம், இளமைப் பருவம், திருமணப் பருவம், முதுமைப் பருவம் இவையெல்லாம் மூன்று காலங்களில் அடங்கியுள்ளது. அவை கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம். இவை மனிதரின் வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கமாக இருக்கின்றது. அதுபோலக் கிறித்தவர்களின் வாழ்வில் காலங்கள் காலடி பதிக்கின்றன.
இந்தக்
கிறித்தவக் காலங்களில் மிக முக்கியமான காலமாகக் கருதப்படுவது தவக்காலம். இந்தத் தவக்காலம் ஒவ்வொரு கிறித்தவரின் வாழ்வில் சிறப்பாக, பல புனிதர்களின் வாழ்வில்
பல புதுமைகளைப் புரட்டிப் போட்ட காலம். இறைமகன் இயேசு 40 நாள்கள் தமது பணி தொடங்குவதற்கு முன்பாகத் தம்மைத் தயார் செய்துகொண்ட காலம், தவக்காலம் மனமாற்றத்திற்கான காலம், ஒவ்வொரு மனிதனும் மனம் திரும்ப வேண்டிய காலம். சுய ஆய்வுப் பயணத்தில் பயணிக்க அழைப்பு விடுக்கும் காலம். இதற்கு அடையாளம் நெற்றியில் பூசப்படும் சாம்பல்! சாம்பல் தவத்தின் தொடக்கம்.
இந்தச்
சாம்பல் பழைய ஏற்பாட்டில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றது. தாமார் தன் தலைமீது சாம்பல் தூவினார் (2சாமுவேல் 13:19). இது தாமாரின் சோகத்தையும், தனக்கு நிகழ்ந்த இழிவு நிலை நினைத்து வருந்துவதையும் குறிக்கிறது. “என்னையே நொந்து கொள்கிறேன்; புழுதியிலும் சாம்பலிலும் இருந்து மனம் வருந்துகிறேன்” (யோபு
42:6). “மகளாகிய என் மக்களே! சாக்கு உடை உடுத்துங்கள்; சாம்பலில் புரளுங்கள்; இறந்த பிள்ளைக்காகத் துயருற்று அழுவதுபோல், மனமுடைந்து அழுது புலம்புங்கள்” (எரே
6:26). இவ்வாறு பழைய ஏற்பாட்டில் சாம்பலானது வருத்தத்தைத் தெரிவித்து மனம் வருந்துவதைக் குறிக்கிறது. ஆனால், புதிய ஏற்பாடானது மனம் மாற, மனம் திரும்ப அழைப்பு விடுக்கின்றது. “தீர், சீதோன் நகரங்களில் செய்யப்பட்டிருந்தால் அங்குள்ள மக்கள் முன்பே சாக்கு உடை உடுத்திச் சாம்பல் பூசி மனம் மாறியிருப்பார்” (மத்தேயு
11:21). சாம்பல் புதன், நெற்றியில் சாம்பல் பூசுவது பழைய வாழ்க்கையைக் களைந்து, தீமையிலிருந்து நன்மைக்கும், இருளிலிருந்து ஒளிக்கும் பயணிக்க இந்தப் பயணம் தொடர்கிறது.
நாம்
பயணிக்கவிருக்கும் இந்தத் தவக்காலமானது, இயேசுவின் அளவு கடந்த மன்னிப்பையும் இரக்கத்தையும் நாம் உணர்ந்துகொள்ள பாதை அமைக்கிறது. சாம்பல் குரல்: ‘இன்று நான், நாளை நீ.’ ஆம், இவ்வுலகில் எவரும் நிலையாக இடம் பதிப்பதில்லை; சாம்பலாகக் காற்றிலே அடித்துச் செல்லாவிட்டாலும், மண்ணோடு மண்ணாக நாம் மக்கிப் போவதை நினைவில்கொள்ள வேண்டும்.
இந்த
மனமாற்றப் பயணத்திலே, மன்னிப்புப் பாதையில் பயணம் செய்கின்ற ஒவ்வொருவரையும் மன்னிப்பிற்கு எதிர்மறையான தண்டனை பற்றிக் கேள்வி எழுப்ப இந்தச் சாம்பல் புதன் மனத்திற்குள்ளே ஓர் எரியும் நெருப்பாகின்றது. தண்டனை ஒரு முற்றுப்புள்ளியா? அறிவியலுக்கும் அறிஞருக்கும் பட்டமும் பதவியும், அணு உலைக்கும் ஆயுதக் கிடங்குகளும் ஏவுகணையாக எட்டாத் தூரத்தில் பறந்து கொண்டிருக்கும் இம்மின்னணுச் சமுதாயத்தில் தண்டனை ஒரு முற்றுப்புள்ளியா?
கண்ணீரும்
கதறலும், இரத்தமும் இரக்கமற்ற மிருகங்களும், குழந்தையென்று பாராமல், தன் இன மனிதனென்று பாராது
உடம்பை மிருகமாகக் கிழித்துக் குதறித் தின்னும் இச்சமுதாயத்தில் ஒவ்வொரு நொடிப்பொழுதும் சீர்கேடுகள் சின்னா பின்னமாகச் சிதறிக்கொண்டே இருக்கின்றன. குற்றம் நடந்துகொண்டே இருக்கின்றன. தண்டனை கொடுக்கப்பட்டே இருக்கின்றன. ஆனால், குற்றம்? குற்றம் குறைகின்றதா? இல்லை. தொன்றுதொட்டு இன்றுவரை அவை நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றது.
இந்தியத்
தண்டனைச் சட்டம் (IPC), குற்றப்
பிரிவியல் தனி அமைப்பு என்று பல குழுக்கள் அமைந்திருந்தும்
அழிக்க முடியாத சக்தியாக, பிரிக்க முடியாத பிணைப்பாக இவ்வுலகில் இக்குற்றங்கள் நடைபெறக் காரணம் யார்? எங்கே வைப்பது முற்றுப் புள்ளி? பொதுவாக, தண்டனை என்று கூறும்போது அரபு நாடுகளைக் கூறுவார்கள். ஏனென்றால், பொது இடத்தில் ஒரு பெண்ணிடம் பேசினாலே மிகக் கொடூரமான இரக்கமற்ற தண்டனை வழங்குவது வழக்கம். ஆனாலும், குற்றங்கள் குறைகின்றனவா?
தண்டனைச்
சட்டங்களும், குற்றவியல் பிரிவுகளும் இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைப்பதில்லை. சுப்பிரமணிய இராஜி கூறுவார்: “வாயிலே அழுக்கென்று நீரெடுத்துக் கொப்பளித்தேன்; கொப்பளிக்கக் கொப்பளிக்க வாயும் ஓயாமல், அழுக்கும் போகாமல் உற்றுப் பார்த்தேன்; நீரே அழுக்கு.’ இன்று யார் மத்தியில் நீதியும் நேர்மையும் நிலைபெற வேண்டுமோ, எந்தத் தராசு சமமாக உண்மையே வெல்லும் என்று மெய்ப்பிக்கப்பட வேண்டுமோ அங்கேயே உண்மையும் நீதியும் செத்து ஒரு பிணமாக அலைந்து கொண்டிருக்கின்றது.
நீதிக்காகவும்
நியாயத்திற்காகவும் ஒருவன் போராடினால் அங்கே அவன் அநீதிக்கு உள்ளாக்கப்படுகிறான். இந்தச் சட்டங்கள் எதற்கு? தான் உண்மையைக் கூறினால், அநீதிக்கு எதிர்த்துப் போராடினால், சுயபிம்பம் வெளிவந்தால் என் பிம்பம் மறைந்து விடுமே என்று ஒளிந்து கொண்டிருக்கும் இச்சமூகத்திற்குச் சட்டங்கள் எதற்கு?
இவற்றிற்கெல்லாம்
ஒரு முற்றுப்புள்ளி ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனின் சுய ஆய்வு. இன்று நீ சுய ஆய்வு
உன்னைச் செய்யவில்லையென்றால் நாளை நீ ஆய்வுக் கூடத்தில்
சுழன்று கொண்டிருப்பாய். இன்றைய நாடும் சமுதாயமும் இதை நோக்கித்தான் பயணித்துக் கொண்டிருக்கின்றது.
“ஒரு தவறை நீ ஏற்றுக்கொள்ளும்போது அது புனிதமாகிறது” என்கிறார்
அன்னை தெரேசா. தவறிழைப்பது மனித இயல்பு அதை உணர்ந்து கொள்கிறாயா?
நாம்
பிறரை விமர்சிக்கவும், பிறருக்குத் தண்டனை வழங்கவும் பரிசேயர், சதுசேயர் போல் ஏங்கி கொண்டிருக்கிறோம். நாம் மனம் மாற, இருளிருந்து ஒளி
பெற மானிட மகன் இவ்வுலகிற்கு ஒளியாக உருவெடுத்தார். “நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனி பாவம் செய்யாதீர்” (யோவா
8:11).
ஆயுதங்களும்
சட்டங்களும் மாற்றியமைக்க முடியாத தவறை, மன்னிப்பு என்னும் ஊன்றுகோலால் இரக்கம் காட்டி ‘இனி பாவம் செய்யாதீர்’ என்று
அன்புக் கட்டளையும் விடுக்கின்றார்.
பிறர்
கண்ணில் இருக்கும் தூசியை எடுப்பதை நிறுத்திவிட்டு நம் கண்ணில் இருக்கும் மரக்கட்டையை எடுக்க முயற்சிப்போம்.
தீர்ப்பு
என்பது ஒரு மனிதரின் வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைப்பது அல்ல; பாவத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது. அதுபோலத் தண்டனையும் ஒருவரின் வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைப்பதல்ல; மாறாக, தீமைக்கு முற்றுப்புள்ளி வைப்பது.
ஆகவே,
சாம்பலை நெற்றியில் பூசி, பழைய தவறுகளைக் களைந்து மனம்மாறி நற்செய்தியைப் பறைசாற்றிட, இருளிருந்து ஒளிக்குத் தவக் காலமென்னும் இவ்வசந்த காலத்தில், மனமாற்றத்தின் காலத்தில் பயணிப்போம்.
அமைதியின் தூதுவர், இயற்கையின் பாதுகாவலர், கத்தோலிக்க விசுவாசத்தின் வீரர், ஏழ்மையின் காதலர், மறு கிறிஸ்து எனப் போற்றப்படும் அசிசி நகர் புனித பிரான்சிசின் 800-ஆம் ஆண்டு (1226-2026) இறப்பினை நினைவுகூரும் விதத்தில் சிறப்பு யூபிலி ஆண்டைத் திருத்தந்தை 14-ஆம் லியோ அறிவித்துள்ளார். 2026, ஜனவரி 10 அன்று தொடங்கிய இந்த யூபிலியானது 2027 ஜனவரி வரை சிறப்பிக்கப்படும்.
இந்தச்
சிறப்பு யூபிலி ஆண்டினைப் பயன்படுத்தி இறைமக்கள் திரு அவை அருளும் பரிபூரணப் பலன் என்கின்ற சிறப்பு ஞானச் சலுகையைப் பெற்றுகொள்ள திருத்தந்தை அழைப்புவிடுக்கிறார். பிரான்சிஸ்கன் யூபிலி ஆண்டானது திரு அவைக்குக் கிடைக்கப்பெற்ற மிகப்பெரிய கொடையாகும். இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்தி உள்ளார்ந்த ஆன்மிக மறுமலர்ச்சிக்கும், கிறித்தவ வாழ்வைப் புதுப்பிக்கவும் முன்வருவோம்.
யூபிலி ஆண்டின்
சிறப்பு
ஆசிர்:
பரிபூரணப்
பலன்
பிரான்சிஸ்கன்
துறவிகளால் நடத்தப்படுகின்ற ஆலயங்கள் அல்லது புனித அசிசி பிரான்சிஸ்க்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆலயங்களுக்குத் திருப்பயணம் மேற்கொண்டு, உண்மையான மனத் துயருடன் நல்லதோர் ஒப்புரவு அருளடையாளத்தைப் பெற்றுப் பரிபூரணப் பலன் என்கின்ற இந்தச் சிறப்பு ஞானச் சலுகையைப் பெறமுடியும். மேலும் முதியோர், நோயுற்றோர் மற்றும் பல்வேறு காரணங்களால் தங்கள் இருப்பிடங்களை விட்டு நகர முடியாதவர்களுக்கு அவர்கள் இருக்கின்ற இடத்திலே உரிய இறைவேண்டல் மற்றும் இயன்ற ஒறுத்தல் முயற்சிகளை மேற்கொண்டு இப்பலனைப் பெற்றுக்கொள்ளலாம்.
அமைதியின் தூதுவர்
புனித
பிரான்சிஸ்
திருத்தந்தை
லியோ, யூபிலி ஆண்டிற்கான சிறப்பு மடலில், இவ்வுலகம் இன்று பல்வேறு குழப்பங்களையும் போர்களையும் சந்தித்து வருகின்றது; நாடுகள் மற்றும் சமூகங்களுக்கு
இடையே பல்வேறு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருப்பதை அறிவோம். புனித பிரான்சிசின் வாழ்வு நமது சமூக ஒற்றுமைக்கு ஆற்றல் மிகு தூண்டுதலாக உள்ளது என்பதை நினைவில் கொண்டு உலகில் அமைதியான சூழ்நிலை அமைந்திட பாடுபடுவோம். புனித பிரான்சிசின் ஏழ்மை, அமைதி, சகோதரத்துவம், இயற்கையைப் பராமரித்தல், திரு அவைக்குக் கீழ்ப்படிதல் ஆகிய நற்செய்திப் பண்புகளை ஏற்று அன்பான சமூகம் அமைய இணைந்து வருவோம். புனித பிரான்சிஸ் இறைவனோடும் இயற்கையோடும் தன்னோடு வாழ்ந்த மக்களோடும் அமைதியான நட்புறவைக் கொண்டிருந்தார். ஆகவே, அவரது தூய வாழ்வினைப் பின்பற்றி நாமும் இறைவனோடும் இயற்கையோடும் உலக மக்கள் அனைவரோடும் நட்புறவைப் பேணுவோம். உலகிற்கு அமைதியை, நிம்மதியை நிறைவாக வழங்குவோம்.
புனித
அசிசி பிரான்சிசின் ஆன்மிகத்தைப் பின்பற்றும் அவரது எளிய சகோதர-சகோதரிகள் மற்றும் இறைமக்கள் இந்த ஆண்டின் சிறப்பு ஆசிரைப் பயன்படுத்தி, புனித வாழ்வின் முன்மாதிரியாகவும், அமைதிக்கான தொடர் சாட்சிகளாகவும் வாழ்ந்திட திருத்தந்தை லியோ வலியுறுத்துகின்றார்.
புனித
பிரான்சிஸ் இறந்து 800 ஆண்டுகள் கடந்தும் அமைதிக்கான அவரின் நெறி சார்ந்த வாழ்வு திரு அவைக்கும் சமூகத்திற்கும் இன்றும் ஆக்கப்பூர்வமாக உள்ளது. அமைதி என்பது மனித முயற்சியால் கிடைப்பதல்ல; மாறாக, இறைவனின் கொடை! அது நாள்தோறும் கொண்டாடப்பட வேண்டும். பிரான்சிசின் அமைதிக்கான கனவு என்பது மனித உறவுகளைக் கடந்து படைப்பனைத்தோடும் நாம் மேற்கொள்ளும் தோழமை, உறவு கொண்டாட்டமாகும். புனித பிரான்சிசின் ஆழமான, ஆக்கப்பூர்வமான ஆன்மிகம் இறைவனை நோக்கி இறைமக்களை அழைத்துச் செல்லட்டும். பிளவுபட்ட இவ்வுலகில் நற்செய்திப்பணி வாழ்வுக்கும், கிறிஸ்துவின் அமைதிக்கும், உலக ஒற்றுமைக்கும் உயிருள்ள சாட்சிகளாக நாம் திகழ புனித பிரான்சிசின் வாழ்வியல் நெறி உதவட்டும்.
பரிபூரணப் பலன்
- திருத்தந்தையின்
சிறப்பு
ஞானச்
சலுகை
பரிபூரணப்
பலன் என்றால், உத்தரிக்கிற நிலை பாவங்கள் மன்னிக்கப்படுவது. ஒப்புரவு அருளடையாளத்தால் நரகத்தின் தண்டனையிலிருந்து தப்பினாலும், உத்தரிக்கிற நிலைக்கு உட்படுவோம். ஆகவே, அந்நிலையிலிருந்தும் நமக்கு விடுதலை தருவதுதான் பரிபூரணப் பலன். இது உத்தரிக்கிற ஆன்மாக்களுக்குப் பெரும் உதவியாகும்.
பரிபூரணப் பலனை
எப்படிப்
பெறலாம்?
• திரு அவைச் சட்டம் (992) மற்றும் கத்தோலிக்கத் திரு அவை மறைக்கல்வி நூல் (1471) வழிகாட்டுதலின்படி கத்தோலிக்கர் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும்.
• நல்லதோர் ஒப்புரவு அருளடையாளம் மேற்கொண்டு, முழு திருப்பலி கண்டு, திவ்ய நற்கருணை உட்கொண்டு, திருத்தந்தையின் கருத்துகளுக்காக மன்றாடவேண்டும். இவை அனைத்தும் ஒரே நாளில் செய்து முடிக்க வேண்டிய கட்டாயமில்லை. ஏறக்குறைய 20 நாள்களுக்கும் ஒப்புரவு அருளடையாளத்தை மேற்கொள்ளவேண்டும்.
• பரிபூரணப் பலன் பெறவேண்டும் என்ற நம்பிக்கையோடு ஆலயங்களைச் சந்தித்தல், ஆலயத்தில் வழிபடும்போது நம்பிக்கை அறிக்கை மற்றும் ஒருமுறை ‘விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே’ என்ற செபத்தை மன்றாடி ஒரு பரிபூரணப் பலன் பெற்றுக்கொள்ளுவது.
• திருத்தந்தையின் கருத்துகளுக்காக மன்றாடும் போது, ஒரு ‘விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே’ மற்றும் ஓர் ‘அருள் நிறைந்த மரியே வாழ்க’ என்ற செபங்களைச் செபிக்கவும்.
•
பரிபூரணப் பலன் தனக்காகவும், இறந்துபோன இறைநம்பிக்கையாளர்களுக்காகவும்
மன்றாடலாம். ஆனால், வாழும் மற்றொரு நபருக்காகச் செபிக்க முடியாது.
• ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே ஒருவர் பரிபூரணப் பலனைப் பெறமுடியும்.
மக்களின் பார்வைக்கு
புனித
அசிசி
பிரான்சிசின்
உடல்
புனித
அசிசி பிரான்சிசின் 800-வது ஆண்டு விண்ணகப் பிறப்பை நினைவுகூரும் வேளையில் அவரது புனித உடல் பொதுமக்கள் பார்வைக்காக, பிப்ரவரி 22 முதல் மார்ச் 22, 2026 வரை இத்தாலியில் அசிசி பிரான்சிசின் திருத்தலப் பேராலயத்தில் வைக்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில்
புனித
அசிசி
பிரான்சிசுக்கு
அர்ப்பணிக்கப்பட்ட
ஆலயங்கள்
• குருசுகுப்பம், பாண்டிச்சேரி - கடலூர் உயர் மறைமாவட்டம்.
• வாலாஜாபாத், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மறைமாவட்டம்.
• அருளகம், வி.கே.புரம்,
பாளை மறைமாவட்டம்.
• ஒக்கூர் புதூர், சிவகங்கை மறைமாவட்டம்.
•
கணபதி, கோவை மறைமாவட்டம்.
• அசிசி நகர், பொன்னிமாந்துறை, திண்டுக்கல் மறைமாவட்டம்.
• மார்த்தால், பூதப்பாண்டி, கோட்டாறு மறைமாவட்டம்.
• பாடலூர், கும்பகோணம் மறைமாவட்டம்.
• குண்டா பிரிட்ஜ், உதகை மறைமாவட்டம்.
• மாத்தூர், திருச்சி மறைமாவட்டம்.
“இறைவா! அமைதியின்
தூதுவனாய்
என்னைப்
பயன்படுத்தும்”
- புனித
அசிசி பிரான்சிஸ் (1182-1226)