மே மாதம் என்றதும் உங்கள் மனத்தில் எழும் சொல் என்ன? ‘மாதா வணக்கம்’ என்றால் நீங்கள் நல்ல கத்தோலிக்கர் என்று பொருள். உங்கள் முதுகில் நீங்களே தட்டிக் கொடுத்துக்கொள்ளலாம். கடந்த காலங்களில் நமது பங்குகளில் மாதாவின் வணக்க மாதம் மிகவும் சிறப்புடன் கொண்டாடப்பட்டது. ‘தேவதாயின் மாதம் இதுவல்லவோ! அதைச் சிறப்பாய்க் கொண்டாடிடவே புறப்பட்டு வாரீர் தோழா’ என்றொரு சிறப்புப் பாடல் அக்காலத்தில் பாடப்பட்டது தெரியுமா? இன்றைய தலைமுறையினர் அறியாத அருமையான பாடல் அது.
முன்பெல்லாம்
வணக்க மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் ஒரு திருவிழா போலவே கொண்டாடப்பட்டது. மரியன்னைக்கு நம் அன்பை, நன்றியை, பாசத்தை வெளிப்படுத்தும் நிகழ்வுகள் கோவில்களிலும் இல்லங்களிலும் நடத்தப்பட்டன. அத்துடன், அன்னையிடம் காணப்படும் நற்பண்புகள், நல்லியல்புகளை நாமும் பின்பற்ற அறைகூவல் விடுக்கும் நாள்களாகவும் அந்நாள்கள் அமைந்தன.
இன்றோ
பெரும்பாலும் கிராமங்களில் மட்டுமே வணக்க மாதம் கொண்டாடப்படுகிறது. அங்கே இன்னும் மக்கள் மாலை நேரங்களில் கோவிலுக்குச் செல்கிறார்கள். செபமாலை, மரியன்னைப் பாடல்கள், மன்றாட்டு, மாதாவின் புதுமைகளை வாசித்தல், நிறைவாக நற்கருணை ஆசிர் நடைபெறுகிறது, சில இடங்களில் இனிப்போ, சிற்றுண்டியோ வழங்கப்படுகிறது. இன்னும் சில பங்குகளில் ஒவ்வொரு நாள் வணக்கத்தை ஒரு குடும்பத்தினர் சிறப்பிக்கின்றார்கள். இவையெல்லாம் கடந்த காலத்தின் எச்சங்களாகவே பார்க்கப்படவேண்டும். இன்னும் எவ்வளவு காலம் இவை நீடிக்கும் என்பதுவும் கேள்விக்குறியே.
ஊரக
மற்றும் நகரப் பங்குகளில் இந்தப் பழக்கங்கள் இல்லை. மே மாதம் என்றாலே
விடுமுறை மாதம். எனவே, பலரும் பயணங்களில் ஈடுபடுகிறார்கள். வழக்கமாக நடைபெறும் சிறப்பு நிகழ்வுகள்கூட மே மாதம் நடைபெறுவதில்லை
என்றாகிவிட்டது. குடும்ப இறைவேண்டல் போலக் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவரும் பக்தி முயற்சிகளுள் வணக்க மாத நிகழ்வுகளும் சேர்ந்துவிடுமோ என்று தோன்றுகிறது. எனவே, குடும்ப இறைவேண்டல் போலவே, மாதா வணக்கத்தையும் நாம்
மறு ஆய்வு செய்து புதுப்பிக்கவேண்டும்.
ஆண்டு
முழுவதுமே அன்னையின் மாதங்கள்தானே! நம் திரு அவையின் திருவழிபாட்டுக் காலண்டரை உற்றுநோக்கினால், சனவரி 01 ‘அன்னை மரியா இறைவனின் தாய்’ பெருவிழாவிலிருந்து, டிசம்பர் 08 ‘மரியன்னையின் அமல உற்பவம்’ பெருவிழாவரை எல்லா மாதமும் ஏதோ ஒரு வகையில், ஒரு பெயரில் அன்னைக்கு விழாக்கள் கொண்டாடப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இருப்பினும், மே மாதம் மட்டும்
சிறப்பான விதத்தில் அன்னையின் வணக்க மாதம் என்று கொண்டாடப் படுவது ஏன்? என்ற கேள்வி சிலரிடம் எழலாம்.
13-ஆம்
நூற்றாண்டிலிருந்தே மே மாத வணக்கம்
நடைபெற்று வருகிறது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. ஆனால், 18-ஆம் நூற்றாண்டிலிருந்துதான் இப்போது நாம் கொண்டாடும் முறைகள் அறிமுகமாயின. மரியன்னை திருத்தந்தையான ஆறாம் பவுல், 1965-ஆம் ஆண்டு ஏப்ரல் 29-ஆம் நாள் ‘மே மாதம்’ (Mense Maio) என்ற தலைப்பிலேயே ஒரு சுற்றுமடல் வெளியிட்டு மே மாத வணக்கத்தை
ஊக்குவித்தார். ‘மரியாவைக் கொண்டாடுபவர், அவர் மகன் இயேசுவை அறியாமல் இருப்பாரா?’ என்பது அவரது கேள்வி.
அந்தச்
சுற்றுமடல் வெளிவந்த நேரம் நம் கவனத்திற்குரியது. இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் இறுதி அமர்விற்கு முன்னால் அது வெளியிடப்பட்டது. வியட்நாம் போர், அமெரிக்கா-சோவியத் இரஷ்யா இடையே பனிப்போர் நிகழ்ந்த காலகட்டம் அது. எனவே, அமைதியின் தேவையை வலியுறுத்தி ‘அமைதியின் அரசியான மரியாவின் பாதுகாப்பையும் பரிந்துரையையும்’ (மடல்
எண். 10) மன்றாடி, அன்னை மரியாவிடம் நம்மை ஒப்படைக்க அழைத்தது அந்த மடல்.
அந்த
மடலின் வழியாக மே மாதம் முழுவதும்
உலகெங்குமுள்ள கத்தோலிக்கர் அன்னை மரியாவைச் சிறப்பான விதத்தில் கொண்டாட வேண்டும். வீடுகளில் குடும்பமாகச் செபமாலை செபிக்கவேண்டும். அமைதியின் அரசியான அன்னையிடம் உலக அமைதிக்காக மன்றாடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார் திருத்தந்தை ஆறாம் பவுல். இந்தச் சுற்றுமடல் வெளிவந்து 60 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும், வணக்க மாதத்தைக் கொண்டாடும் தேவையில் மாற்றமில்லை. இன்றும் உலகைப் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இன்றும் நம் குடும்பங்களில் அமைதியும் ஒற்றுமையும் தேவைப்படுகின்றன. எனவே, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த மே மாதத்தில் நாம்
அன்னையை அண்டி வருவோமாக.
ஆனால்,
வணக்க மாதத்தைக் கொண்டாடும் விதத்தில்தான் மாற்றங்கள் தேவை. முன்பு அன்னையின் திருச்சுரூபத்திற்கு மாலை அணிவித்து, மலர்க்கிரீடம் சூட்டி, சப்பரத்தில் பவனியாக அன்னையை அழைத்து வந்தோம். இன்றோ, சப்பரம், பவனி, மலர் மாலைகள், மெழுகுதிரிகள் போன்றவற்றிற்குத் தரும் அழுத்தத்தைக் குறைத்து, இன்றைய சூழலுக்கேற்ப வணக்க மாதத்தின் கொண்டாட்டத்தைத் தகவமைக்கவேண்டும். குறிப்பாக, மூன்று முதன்மையான நோக்கங்களுக்காக அன்னையிடம் மன்றாட இந்த வணக்க மாதம் உதவவேண்டும்...
1. பெருந்தொற்று, நோய்களிலிருந்து
பாதுகாக்கப்பட
மன்றாடுவோம்.
நமது உலகம் ‘கோவிட் 19’ நோயின் பேரச்சத்திலிருந்து விடுபட்டு, ஆசுவாசப்பட்டிருக்கிறது. இந்தியாவிலும், இன்னும் குறிப்பாக, தமிழ்நாட்டிலும் இந்தக் கொள்ளை நோய் ஆயிரக்கணக்கானோரைக் கொன்று குவித்து, நம்மைக் குலைநடுங்க வைத்து விட்டது. இனிமேல் இப்படிப்பட்ட ஒரு பெருந்தொற்று நம் உலகைத் தாக்காதபடி நாம் மன்றாட வேண்டும். அன்னையே நம் மிகப்பெரிய பரிந்துரையாளர். எனவே, பெருந்தொற்று நோய்களிலிருந்து நாம் பாதுகாக்கப்பட அன்னையை நோக்கி மன்றாடுவோம்.
குறிப்பேடு
முதல் நூலில் தாவீது அரசர் கொள்ளை நோயால் பாதிக்கப்பட்ட தன் மக்களுக்காகக் கடவுளிடம் பரிந்து மன்றாடும் ஒரு காட்சியை 21-ஆம் அதிகாரத்தில் பார்க்கிறோம். ஆண்டவர் இஸ்ரயேலின்மேல் கொள்ளை நோயை அனுப்பினார். அதனால், இஸ்ரயேலருள் எழுபதினாயிரம் பேர் மாண்டனர் (1குறி 21:14). அப்போது தாவீதும் பெரியோர்களும் சாக்கு உடை உடுத்தி, முகம் குப்புற விழுந்து மன்றாடினர். தாவீது கடவுளிடம், “என் கடவுளாகிய ஆண்டவரே, உமது கை என்மேலும்,
என் தந்தையின் வீட்டாரின் மேலும் இருக்கட்டும்; கொள்ளை நோய் மக்களிடமிருந்து விலகட்டும்” (1குறி
21: 17) என்று வேண்டினார்.
தாவீது
கடவுளுக்கு உகந்தவராய் இருந்தாலும், பாவங்கள் பல செய்தவர். அன்னை
மரியாவோ பிறப்பு நிலைப் பாவமின்றிப் பிறந்தவர். பாவமே அறியாதவர். எனவே, அவர் நமக்காகப் பரிந்து மன்றாடும்போது நிச்சயம் கொள்ளை நோய்களிலிருந்து நாம் பாதுகாக்கப்படுவோம். எனவே, மிகவும் இரக்கமுள்ள நம் தாயை நோக்கி நாம் உருக்கமாக மன்றாடுவோம். அப்போது திருப்பாடல் 91-இல் ஆண்டவர் வாக்களித்தபடி, “இருளில் உலவும் கொள்ளை நோய்க்கும், நண்பகலில் தாக்கும் கொடிய வாதைக்கும் நீர் அஞ்சமாட்டீர்” (திபா
91:6) என்னும் வாக்குறுதிப்படி நாம் கொரோனா போன்ற பெருந்தொற்றுகளிலிருந்து காக்கப்படுவோம்.
2. அமைதியின் அரசியிடம் நம்
உலகையும்,
வீட்டையும்
ஒப்புக்கொடுப்போம்.
அன்னை மரியாவின் சிறப்புப் பெயர்களுள் ஒன்று ‘அமைதியின் அரசி.’ அவர் உலக நாடுகளிடையே அமைதி நிலவச் செய்கிறார். குடும்பங்களிலும் அமைதியைப் பெற்றுத் தருகிறார். எனவேதான், அன்னை மரியாவிடம் நாட்டையும் குடும்பத்தையும் ஒப்புக்கொடுத்து நாம் மன்றாட வேண்டும். குறிப்பாக, இஸ்ரயேல் - பாலஸ்தீனப் போர், இஸ்ரயேல் - ஈரான் போர், உக்ரைன் - இரஷ்யப் போர் போன்றவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டு அமைதி நிலவ வேண்டுமென்று உலக நாடுகளைத் திருத்தந்தையோடு இணைந்து மரியாவின் மாசற்ற இதயத்திற்கு ஒப்புக்கொடுத்து உலக அமைதிக்காக அன்னையிடம் மன்றாடுவோமாக!
அமைதி
என்பது உயிர்த்த இயேசு நமக்கு வாக்களித்த கொடைகளுள் ஒன்று. இயேசுவே அமைதியின் அரசர். “அவரே நமக்கு அமைதி அருள்பவர். அவரே இரண்டு இனத்தவரையும் பிரித்து நின்ற பகைமை என்னும் சுவரை, தமது உடலில் ஏற்ற துன்பத்தின் வழியாய்த் தகர்த்தெறிந்து, அவர்களை ஒன்றுபடுத்தினார்” (எபே
2:14) என்பது இயேசுவைப் புகழ்ந்து பவுலடியார் எழுதிய இறைப்புகழ்ச்சி.
பிளவுபட்ட
நாடுகளை ஒன்றுபடுத்துபவர் இயேசுவே. நம் தாய் நமக்காகப் பரிந்து பேசும்போது, இயேசு இந்த அமைதியை நமக்கு வழங்குவார். எனவே, “இறைப்பற்றும் கண்ணியமும் நிறைந்தவர்களாய், தொல்லையின்றி அமைதியோடு வாழ அரசர்களுக்காகவும், உயர் நிலையிலுள்ள எல்லா மனிதர்களுக்காகவும் மன்றாடுங்கள்” (1திமொ
2:2) என்ற பவுலடியாரின் பரிந்துரையை ஏற்று, நாம் அமைதியின் அரசியான அன்னை மரியாவிடம் மன்றாடுவோமாக. அப்போது நாடுகளும், நம் உலகமும் அமைதி என்னும் கொடையைப் பெற்றுக்கொள்வோம்.
3. குடும்ப ஒற்றுமைக்காக
மன்றாடுவோம்.
இன்று நம் குடும்பங்கள் சந்திக்கும் பல சிக்கல்களுக்கு ஒரு
காரணம், குடும்பங்களில் இறைவேண்டல் இல்லை என்பதே. முன்பெல்லாம் இரவு நேரங்களில் குடும்பமாக இறைவேண்டல் செய்த பின்னரே உணவு உண்ணும் பழக்கம் இருந்தது. இன்றோ, வேலை, தொலைக்காட்சி, பொழுதுபோக்கு, நண்பர்கள் எனப் பல காரணிகளால் குடும்ப
இறைவேண்டல் மறைந்துவிட்டது. மரியன்னையின் வணக்க மாதம் மீண்டும் நம் இல்லங்களில் குடும்ப இறைவேண்டலைத் தொடங்க உதவட்டும். “விண்ணுலகிலும் மண்ணுலகிலும் உள்ள ஒவ்வொரு குடும்பமும் உண்மையிலேயே குடும்பமாய் விளங்குவதற்குக் காரணமாய் இருக்கிற தந்தையிடம் நான் மண்டியிட்டு வேண்டுகிறேன்” (எபே
3:14-15) என்னும் பவுலடியாரின் மன்றாட்டு நமக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமையட்டும்.
இறைத்தந்தையின்
ஆசியே நம் குடும்பங்களை ஒற்றுமையோடு வாழச் செய்கிறது. எனவே, இல்லங்களில் நாம் மண்டியிட்டு மன்றாடும் பழக்கத்தை மீண்டும் தொடரவேண்டும். “நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்”
(யோசு 24:15) என்று சூளுரைத்த யோசுவாவைப் போல, ஒவ்வொரு குடும்பத் தலைவரும் குடும்ப இறைவேண்டல் வழியாக ஆண்டவருக்கு ஊழியம் செய்வார்களாக.
மே
மாதம் முழுவதும் குடும்பமாக இணைந்து இறைவேண்டல் செய்வது, அன்னையின் பரிந்துரையால் ஆசிகளை நமக்குப் பெற்றுத் தரும். கானாவூர் திருமணத்தில் பரிந்துரைத்ததுபோல, குடும்பமாய் இறைவேண்டல் செய்யும் அனைவருக்காகவும் நம் தாய் பரிந்து மன்றாடுவார். நமது மாதா வணக்கம் மேற்கண்ட மூன்று இலக்குகளையும் முன்வைத்து நடக்கட்டும். அன்னையின் மதிப்பீடுகளை வாழ்வாக்கும் நாள்களாக மாறட்டும்.
இறைவார்த்தையின் ஒளி
புனித
பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்தில் குறிப்பிடுவதுபோல, “நீ கற்று, உறுதியாய்
அறிந்தவற்றில் நிலைத்து நில்”
(2திமொ 3:14). நம்பிக்கை என்பது வெறும் பாரம்பரியம் மட்டுமல்ல, அது ஒவ்வொரு தலைமுறையிலும் புதிய வாழ்வு பெறுவதாகும். அண்மையில் திருத்தந்தை அவர்கள் வழங்கிய புதன் மறைக் கல்வி உரையில், இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் ‘இறைவெளிப்பாடு’ (Dei Verbum) ஆவணத்தின் வெளிச்சத்தில், கடவுள் இன்றும் மனித மொழியில் நம்மோடு பேசிக்கொண்டிருக்கிறார் என்பதை ஆழமாக வலியுறுத்தினார்.
1. மனித மொழியில் ஒலிக்கும்
கடவுளின்
வார்த்தை
திருத்தந்தை
வலியுறுத்திய மிக முக்கியமான உண்மை: மறைநூல் மனித மொழியில் எழுதப்பட்டுள்ளது. கடவுள் மனிதர்களிடம் பேசுவதற்காக, நம்முடைய பலவீனமான மொழியையே கருவியாகக் கொண்டார். Dei Verbum (எண் 13) கூறுவதுபோல, “மனித மொழியில் வெளிப்படுத்தப்பட்ட கடவுளின் வார்த்தை, மனிதர் பேசுவதைப் போல ஆனது.” இது இறைமகன் இயேசு மனித உருவெடுத்த (Incarnation) மறைபொருளுக்கு
நிகரானது.
திருவிவிலியம்
என்பது வெறும் கடந்த கால வரலாறு அல்ல; அது ஒரு வாழும் கடிதம். நாம் திருவிவிலியத்தை வாசிக்கும்போது, எழுத்துகளுக்குப் பின்னால் இருக்கும் தூய ஆவியானவரின் குரலைத் தேடவேண்டும். “ஆவி இல்லாமல் எழுத்து கொல்லும்”
(2கொரி 3:6) என்ற பவுலின் எச்சரிக்கை, நாம் மறைநூலை இதயத்தால் வாசிக்கவேண்டும் என்பதை நினைவூட்டுகிறது.
2. மீட்புக்கு வழிநடத்தும் ஞானம்
“திருமறைநூல் இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையால் உன்னை மீட்புக்கு வழிநடத்தும் ஞானத்தை அளிக்க வல்லது”
(2திமொ 3:15). நற்செய்தி என்பது ஒரு தத்துவப் பாடம் அல்ல; அது ஒரு நபர் - அவரே இயேசு கிறிஸ்து. நாம் திருவிவிலியத்தைப் பயிற்றுவிப்பதற்கும் கண்டிப்பதற்கும் சீராக்குவதற்கும் பயன்படுத்துகிறோம் (2திமொ 3:16). ஆனால், இவை அனைத்தும் ‘அன்பால்’ செய்யப்பட வேண்டும். புனித அகுஸ்தினார் கூறுவதுபோல, “அன்பைக் கட்டியெழுப்பாத மறைநூல் விளக்கம் இன்னும் முழுமையல்ல.”
இன்றும்
நமது சூழலில், நாம் திருவிவிலியத்தை வாசிக்கும்போது, அது நம்மைச் சுற்றியுள்ள அநீதிகளையும் ஏழ்மையையும் கண்டுகொள்ளாமல் இருக்க அனுமதிக்காது. உண்மையான ஞானம் என்பது இறைவார்த்தையைச் செயலாக மாற்றுவதே.
3. இறை ஏவுதலும் மனித
ஆசிரியர்களும்:
ஒரு
சமநிலை
திரு
அவை மறைநூலின் முதன்மை ஆசிரியர் கடவுள் என்பதை உறுதியாக நம்புகிறது. அதே நேரத்தில், மனித ஆசிரியர்களும் உண்மையான கருவியாகச் செயல்பட்டனர். புனித தாமஸ் அக்குவினாஸ் கூறுவதுபோல, “அருள் இயல்பை அழிக்காது; அதனை நிறைவு செய்கிறது.” கடவுள் மனித ஆசிரியர்களின் அறிவையும் திறமையையும் பயன்படுத்தினார். எனவே, திருவிவிலியத்தை விளக்கும் போது அதன் வரலாற்றுச் சூழல், இலக்கிய வடிவங் கள் ஆகியவற்றை நாம் கவனிக்கவேண்டும். ஆனால், அதை வெறும் ஒரு வரலாற்று நூலாக மட்டும் சுருக்கிவிடக் கூடாது. அது இன்றும் நம் வாழ்வின் சவால்களுக்குப் பதில் அளிக்கும் உயிருள்ள வார்த்தை.
4. இன்றைய விசுவாசிகளின்
மனசாட்சியும்
சமூகப்
பொறுப்பும்
கத்தோலிக்கத்
திரு அவையின் மறைக்கல்வித் தொகுப்பு (CCC 2242) மற்றும்
திருத்தந்தையின் போதனைகளின்படி, ஒரு நம்பிக்கையாளர் தனது மனசாட்சிக்கு விரோதமான, நற்செய்தி விழுமியங்களுக்குப் புறம்பான அதிகாரங்களுக்குப் பணியத் தேவையில்லை. தமிழ்நாட்டில் நிலவும் ஊழல், போதைப்பொருள் கலாச்சாரம் மற்றும் இயற்கை வளங்கள் சுரண்டப்படுதல் போன்றவற்றுக்கு எதிராக இறைவார்த்தை நம்மை எச்சரிக்கிறது. “மறைநூல் அனைத்தையும் கடவுள் தூண்டினார்... அது நேர்மையாக வாழப் பயிற்றுவிப்பதற்குப் பயனுள்ளது”
(2திமொ 3:16). நேர்மையான வாழ்வு என்பது தனிப்பட்ட தூய்மை மட்டுமல்ல; சமூக நீதியும் கலந்ததாகும்.
5. வார்த்தையால் ஊட்டமளிக்கும்
கடவுள்
திருத்தந்தை
தனது உரையை ஒரு நம்பிக்கையுடன் நிறைவு செய்தார்: “கடவுள் ஒருபோதும் தனது மக்களுக்கு வார்த்தையின் ஊட்டச்சத்தை வழங்கத் தவறுவதில்லை. மனிதன் அப்பத்தால் மட்டும் அல்ல; கடவுளின் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையாலும் வாழ்கிறான்” (மத்
4:4).
தவக்காலத்தின்
இந்தச் சூழலில், நாம் வெறும் உணவைத் தவிர்ப்பதோடு நிறுத்தாமல், இறைவார்த்தையை உணவாகக் கொண்டு உருமாற்றம் அடைவோம். இயேசுவின் மீதுள்ள நம்பிக்கையில் வேரூன்றி, சமூகத்தில் ‘மண்ணிற்கு உப்பாகவும், உலகிற்கு ஒளியாகவும்’ திகழ்வோம்.
இதயத்தில் ஒரு
கேள்வி:
“இந்தத் தவக் காலத்தில், இறைவார்த்தை என் வாழ்வில் எந்த மாற்றத்தைக் கொண்டு வரப்போகிறது? நான் வெறும் வாசகனா? வார்த்தையின்படி வாழ்பவனா?
“மரியா எலிசபெத்தைச் சந்தித்தது உண்மையில் இயேசுவின் நற்செய்தி அறிவிப்புப் பணிக்கான தொடக்கமாகும். அவரது தாய்மையின் தொடக்கத்திலிருந்தே மகனின் மீட்புப் பணியில் ஒத்துழைப்பதில் கிறிஸ்துவின் ஒளி மற்றும் மகிழ்ச்சியை எங்கும் வாழ்கின்ற மக்களுக்கும் கொண்டு செல்பவர்களுக்கும் ஒரு முன்மாதிரியாகின்றார்.”
1. மரியா
எலிசபெத்தைச் சந்திக்கின்ற நிகழ்வில் கிறிஸ்து பிறப்பின் அருளானது மரியாவை நிரப்பிய பிறகு, எலிசபெத்தின் இல்லத்தையும் நிரப்பியது என்று காட்டுகின்றது. அவரது தாயின் கருவில் சுமக்கப்பட்ட மனுக்குல மீட்பர், உலகிற்கு அவர் வந்த தன் தொடக்கத்திலிருந்தே அவரை வெளிப்படுத்தி தூய ஆவியைப் பொழிகின்றார்.
மரியா
யூதேயாவிற்குப் புறப்பட்டுச் சென்றதை விவரிக்கையில் நற்செய்தியாளர் ‘எழுதல்’ அல்லது ‘புறப்படுதல்’ என்று
பொருள்படுகின்ற ‘anístemi’ என்ற கிரேக்க வினைச்சொல்லைப் பயன்படுத்துகிறார். இந்த வினைச்சொல்லானது இயேசுவின் உயிர்ப்பை (மாற் 8:31; 9:9,31; லூக் 24:7,46) அல்லது ஆன்மிக முயற்சியைக் குறிக்கின்ற உடல்சார் செயல்களைக் (லூக் 5:27-28; 15:18,20) குறிப்பதற்கும், நற்செய்திகளில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதைக் கருத்தில் கொண்டு நற்செய்தியாளர் லூக்கா, தூய ஆவியாரின் உந்துதலின் கீழ் உலகத்திற்கு அதன் மீட்பரைக் கொடுப்பதற்காக மரியாவைச் செயல்புரியத் தூண்டிய உறுதியானதோர் ஆர்வத்தைக் கோடிட்டுக்காட்ட விரும்பி இந்தச் சொற்றொடரைப் பயன்படுத்துகின்றார் என்பதை நாம் யூகிக்க முடியும்.
மரியா எலிசபெத்தைச்
சந்தித்தது
மகிழ்ச்சிமிக்கதொரு
மீட்பின்
நிகழ்வாகும்
2. லூக்கா
நற்செய்தியானது மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு ‘விரைந்து சென்றார்’
என்று கூறுகின்றது (லூக் 1:39). லூக்கா நற்செய்தியின் சூழலில் ‘மலைநாட்டிலுள்ள’ என்ற
குறிப்பும் கூட, இது எசாயா புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட நற்செய்திகளின் தூதுவரை நினைவிற்குக் கொண்டுவர
அழைப்பதால், ஒரு சாதாரண இட அமைப்பு விவரக்
குறிப்பு (topogrphical indication) என்பதையும் தாண்டி, அதற்கு மேலானதொன்றாகத் தோன்றுகின்றது: “நற்செய்தியை அறிவிக்கவும், நல் வாழ்வைப் பலப்படுத்தவும், நலம்தரும் செய்தியை உரைக்கவும், விடுதலையைப் பறைசாற்றவும் சீயோனை நோக்கி, ‘உன் கடவுள் அரசாள்கின்றார்’ என்று
கூறவும் வருவோரின் பாதங்கள் மலைகள் மேல் எத்துணை அழகாய் இருக்கின்றன” (எசா
52:7).
நற்செய்தி
அறிவிப்பில் இந்த இறைவாக்கு ஏடானது நிறைவேறியதைக் கண்டுகொண்ட புனித பவுலடியாரைப் போன்று, புனித லூக்காவும் மரியாவின் இறைமகனது மறைப்பயணத்தைத் தொடங்கி வைத்து நற்செய்தியைப் பரப்புகின்ற முதல் நற்செய்தியாளராக மரியாவைக் காண்பதற்கு நம்மை அழைப்பதாகத் தோன்றுகின்றது.
இறுதியாக,
கன்னி மரியாவின் பயணத்தின் திசையானது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கிறது. அதாவது, இயேசுவின் மறைப்பணியைப் போன்றே இதுவும் கலிலேயாவிலிருந்து யூதேயாவை நோக்கியதொரு பயணமாக இருக்கின்றது (ஒப்பிடுக. 9:51).
உண்மையில்,
மரியா எலிசபெத்தைச் சந்தித்தது இயேசுவின் பணிக்கானதொரு தொடக்கமாக இருந்தது. அவரது தாய்மையின் தொடக்கத்திலிருந்தே மகனது மீட்புப் பணியில் பங்கெடுப்பதில், அவர் திரு அவையில் ஒவ்வொரு காலத்தின் மற்றும் இடத்தின் மக்களுக்கும் கிறிஸ்துவின் ஒளி மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டு செல்ல குறிக்கப்பட்டுள்ளோருக்கு ஒரு முன்மாதிரியாகின்றார்.
3. மரியா
எலிசபெத்தைச் சந்திக்கும் நிகழ்வானது குடும்ப உணர்வின் இயல்பான உணர்ச்சிகளுக்கு அப்பால் செல்கின்ற மகிழ்ச்சியான மீட்பு நிகழ்வின் தன்மையைக் கொண்டுள்ளது. அவநம்பிக்கையின் குழப்பமானது சக்கரியாவின் பேச முடியாத தன்மையில் வெளிப்படுத்தப்படுவதாகத் தோன்றுகையில், மரியா அவரது உயிரோட்டமான மற்றும் உடனடியான நம்பிக்கையின் மகிழ்வோடு இவ்வாறு ஆர்ப்பரிக்கின்றார்: “அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார்” (லூக்
1:40).
தூய
லூக்கா, “மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது, அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று” (லூக்
1:41) என்று விவரிக்கின்றார். மரியாவின் வாழ்த்தொலியானது எலிசபெத்தின் மகன் மகிழ்ச்சியினால் துள்ளக் காரணமாயிற்று. மரியாவின் செயலால், எலிசபெத்தின் இல்லத்தில் இயேசுவின் வருகை, பழைய ஏற்பாடு மெசியாவின் உடனிருத்தலின் அடையாளமாக முன்னறிவிக்கின்ற அந்த மகிழ்ச்சியை, இன்னும் பிறக்காத அந்த இறைவாக்கினர் (திருமுழுக்கு யோவான்) கொண்டு வந்துள்ளது என்றும் பொருள் கொள்ளலாம்.
மரியாவின்
வாழ்த்தில், மீட்பின் மகிழ்ச்சியானது எலிசபெத்திற்கும் வருகின்றது. “எலிசபெத்து தூய ஆவியாரால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். அப்போது அவர் உரத்த குரலில், ‘பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே!” (லூக் 1:41-42) என்றுரைத்தார். அச்சந்திப்பின்பொழுது
இறையொளியால் எலிசபெத்து மரியாவின் மகத்துவத்தைப் புரிந்துகொள்கின்றார். பழைய ஏற்பாட்டில் மரியாவை முன் குறித்து உணர்த்திய எஸ்தர் மற்றும் யூதித் இவ்விருவரைவிட, அவரது வயிற்றின் கனியாகிய இயேசு என்னும் மெசியாவின் பொருட்டு அவர் பெண்களுக்குள் பேறுபெற்றவராக இருக்கின்றார்.
4. உரத்த
குரலில் எழுப்பப்பட்ட எலிசபெத்தின் வியப்பொலி (exclamation) இன்றும் நம்பிக்கையுள்ளோரின் உதடுகளால் செபத்தில் மீண்டும் மீண்டும் மிகவும் உயர்ந்தவரான அந்த இறைவனது மகனின் தாயில் நிறைவேற்றப்பட்ட அரும்பெரும் செயல்களுக்காகத் திரு அவையின் புகழ்பாடலாக ‘அருள்நிறை மரியே’ என்று தொடர்ந்து ஒலிக்கக் கூடிய, உண்மையான ஓர் ஆன்மிக ஆர்வத்தைக் காட்டுகின்றது.
‘பெண்களுக்குள் பேறுபெற்றவர்’ என்று
அவரை அழைப்பதில், எலிசபெத்து மரியாவின் நிறைவளத்திற்கான (blessedness) காரணமாக அவரது நம்பிக்கையைச் சுட்டிக்காட்டுகின்றார்: “ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்” (லூக்
1:45). இவ்வாறு, மரியாவின் பெருமையும் மகிழ்ச்சியும் அவர் ‘நம்பிக்கை கொண்டவர்’
என்ற உண்மையிலிருந்து எழுகின்றன.
மரியாவின்
தனித் தகுதியினிமித்தம், அவரது சந்திப்பின் பெருமையானது எத்தகையது என்பதை எலிசபெத்தும் புரிந்துகொள்கின்றார்: “என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?”
(லூக் 1:43). ‘என் ஆண்டவர்’ என்ற சொல்லாடல் வழியாக எலிசபெத்து அரசருக்குரிய மற்றும் மெசியாவிற்குரிய மாண்பை மரியாவின் மகனில் கண்டுகொள்கின்றார். பழைய ஏற்பாட்டில் இந்தச் சொல்லாடலானது உண்மையில் அரசனை அழைப்பதற்கு (ஒப்பிடுக. 1அர 1:13,20,21) மேலும், மெசியாவாகிய அரசரை அழைப்பதற்குப் (திபா 10:1) பயன்படுத்தப்பட்டது. கபிரியேல் தூதர் இயேசுவைப் பற்றிக் கூறியது: “அவர் பெரியவராயிருப்பார்; உன்னதக் கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார்”
(லூக் 1:32). ‘ஆவியானவரால் நிரப்பப்பட்டு’ எலிசபெத்தும்
அதே உள்ளுணர்வைப் (insight) பெற்றிருக்கிறார். இவ்வாறு, ஆழ்நிலை புலனுணர்வின் அடிப்படையில் (transcendent sense) இந்தச் சிறப்புப்
பட்டமானது எவ்வாறு புரிந்துகொள்ளப்படவேண்டும் என்பதைக் கிறிஸ்துவின் பாஸ்கா மகிழ்ச்சியானது வெளிப்படுத்துகின்றது (ஒப்பிடுக. யோவா 20:28; திப 2:34-36).
தெய்வீக மீட்பின்
அனைத்துப்
பணியிலும்
மரியா
உடனிருக்கின்றார்
ஆச்சரியத்துடன்
வியந்து பாராட்டுகிற எலிசபெத்து, கன்னியின் உடனிருப்பானது ஒவ்வொரு நம்பிக்கையாளரின் வாழ்க்கைக்கும் ஒரு பரிசாகக் கொண்டுவரும் அனைத்தையும் பாராட்ட நம்மை அழைக்கிறார். மரியாவின் சந்திப்பில், தூய ஆவியாரைப் பொழியும் கிறிஸ்துவைத் திருமுழுக்கு யோவானின் தாயிடம் அவர் கொண்டுவருகிறார். இந்த இடைமீட்பாளர் பங்கானது (role of mediatrix) எலிசபெத்தின் வார்த்தைகளினால் கொண்டு வரப்படுகின்றது: “உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று” (லூக்
1:44). தூய ஆவியாரின் கொடையால், மரியாவின் உடனிருப்பானது தூய ஆவியாரின் வருகைக்கான தொடக்கமாகப் (prelude to Pentecost)
பயன்படுகிறது. இவ்வாறு, மரியாவின் பங்கானது இயேசுவின் பிறப்பில் தொடங்கிய ஒத்துழைப்பை உறுதிசெய்து, இறை மீட்பின் ஒட்டுமொத்த செயலிலும் வெளிப்படுத்தப்படுவது முன்பே தீர்மானிக்கப்படுகிறது.
மூலம்:
John Paul II, Visitation is prelude to Jesus’ mission, in
«L’Osservatore Romano», Weekly Edition in English, 9 October 1996, p.11.
பாஸ்கா காலத்தினுடைய நான்காம் ஞாயிறு ‘நல்லாயன் ஞாயிறு’ என்று அழைக்கப்படுகின்றது. இவ்வாண்டு ஏப்ரல் 26, 2026 அன்று இந்தத் தினம் உலக இறை அழைத்தல் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. பல்வேறு சவால்கள் மத்தியில் வாழ்கின்ற திருநிலையினர், அழைத்தல் வாழ்வில் அனுபவிக்கும் நெருக்கடித் தருணங்களை எதிர்கொள்ள ஆற்றல் பெறுவதற்காக இறை வேண்டல் செய்யவும் ஏப்ரல் (2026) மாதத் திருத்தந்தையின் கருத்து நமக்கு அழைப்பு விடுக்கின்றது. இப்பின்னணியில் கடவுளின் இலவசக் கொடையான இறை அழைத்தலின் அகத்தைக் கண்டறிவது, ஆழ்ந்து தியானிப்பது அவசியமான ஒன்றாக இருக்கிறது.
1. ஆண்டவரின் சீடரே அழகானவர்
‘நல்ல ஆயன் நானே’ என்று கூறிய இயேசுவைப் பின்பற்றும்போது நம் வாழ்வு அழகாகிறது. மேய்ப்பரின் பார்வையோடு நம் பார்வையை இணைத்து, அவருக்குச் செவிசாய்த்து நடந்தால் மட்டுமே அழகின் பாதையில் பயணிக்க முடியும். உண்மையில் அழகானவர் யார் என்றால், இயேசுவின் வழியைப் பின்பற்றும் சீடர்தாம்!
இறையியலாளர்
பாவெல் பிளாரன்ஸ் எழுதியது போல, துறவறம் வெறுமனே ’நல்ல’ நபரை உருவாக்குவதில்லை; மாறாக, ஓர் ‘அழகான’ நபரை உருவாக்குகிறது. அந்த அழகு கிறிஸ்துவின் வாழ்வில் இருந்து வெளிப்படும் வெளிச்சமான ஆன்மிக அழகாகும். இப்பின்னணியில் கிறித்தவ அழைப்பு என்பது இயேசுவின் வாழ்வில் பங்கேற்பதும், அவர் பணியில் பங்குகொள்வதுமாக அமைகிறது. புனித அகுஸ்தினார் தனது ஒப்புரவு அறிக்கையில் தனது இளமையின் பாவங்களை அறிக்கையிட்டாலும், கடவுளை ‘எனது மிக ஆழமான பகுதியை விடவும் ஆழமானவர்’
என்று குறிப்பிடுகிறார். சுய அறிவைவிட மேலாக, இருளில் தன்னை வழிநடத்தும் தெய்வீக ஒளியின் அழகைப் புனித அகுஸ்தினார் கண்டறிகிறார். அழைத்தலின் அகவாழ்வைப் பேணிக்காப்பதுதான் கிறிஸ்துவைச் சந்திக்கும் தளம் என்கிறார். இந்த உறவு இறை வேண்டலையும் அமைதியையும் அடிப்படையாகக் கொண்டது. இந்தப் பயணம் அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்த சாகசப் பயணம். இங்குதான் கடவுளின் அழகையும் நன்மைத்தனத்தையும் நாம் அனுபவிக்கின்றோம்.
குடும்பங்களிலும்
பங்குத்தளங்களிலும் அழைத்தல் வாழ்வு ஆழப்படவேண்டும். நமது சூழல்கள் நம்பிக்கையால் ஒளியூட்டப்பட்டு, இடைவிடா இறைவேண்டலில் நிலைநிறுத்தப்பட்டு, சகோதரத்துவத் தோழமையால் செழுமைப்படுத்தப்படும் பொழுது கடவுளின் அழைப்பு மலர்ந்து, முதிர்ச்சி அடைந்து, தனி நபர்களுக்கும் உலகுக்கும் மகிழ்ச்சியான மீட்பின் பாதையாக அது மாறுகிறது.
2. இறையன்பின் விழிப்புணர்வு
அழைப்பு
என்பது இறையன்பைப் பற்றிய விழிப்புணர்வே ஆகும். “நம் தலைமுடி எல்லாம் எண்ணப்பட்டு இருக்கின்றன” (மத்
10:30). அக்கறையாய் காக்கும் இறையன்பை இது வெளிப்படுத்துகிறது. இறைவேண்டல், இறைக்குரலுக்குச் செவிசாய்ப்பது, அருளடையாளங்கள், திரு அவையின் வாழ்வு முறை, அறச்செயல்கள் மூலம் கடவுளை அறிய அழைக்கப்படுகின்றோம். இரவில் எதிர்பாராத விதமாக ஆண்டவரின் குரலைக் கேட்டு ஏலியின் உதவியுடன் அதை அடையாளம் காண கற்றுக்கொண்ட இளம் சாமுவேலைப் போல, நாமும் இறைக்குரலைக் கேட்க அக அமைதிக்கான ஓர்
இடத்தைக் கண்டறியவேண்டும். இந்தச் சந்திப்பு வாழ்வை மாற்றும் தனிப்பட்ட சந்திப்பாக மாறும்.
அழைப்பு
என்பது உலகின் செவியை அடைக்கும் இரைச்சலையும் மீறி உண்மையான மகிழ்ச்சியுடனும், தாராள மனத்துடனும் பதிலளிக்க நம்மை அழைக்கும் ஒருவருடன் நெருக்கமான உரையாடலை உருவாக்குவதே ஆகும். “உங்களை விட்டு வெளியேற வேண்டாம்; உங்களுக்குள் திரும்புங்கள்; உண்மை உள் மனத்தில் வாழ்கிறது”
எனக் கூறும் புனித அகுஸ்தினார், இயேசுவின் குரலைக் கேட்பதற்காக இரைச்சலான வாழ்வின் மத்தியில் இடைநிறுத்தம் செய்யவும், உள் அமைதிக்கு இடம் அளிக்கவும் கற்றுக்கொள்வது மிகவும் முக்கியம் என்பதைப் புனிதர் நினைவூட்டுகிறார்.
நம்
திறமைகளைப் பயன்படுத்தவும், நம் பலவீனங்களைக் கிறிஸ்துவின் சிலுவையோடு இணைக்கவும் அவர் நம்மை அழைக்கிறார். ஆகவே, நற்கருணை ஆராதனைக்கு நேரம் ஒதுக்குவோம்; இறைவார்த்தையை ஆழமாய்த் தியானிப்போம்; அதைக் கடைப்பிடிப்போம்; அருளடையாளக் கொண்டாட்டங்களை வாழ்வாக்குதன் வழியாக ஆண்டவரை நாம் ஆழமாக அறிந்துகொள்வோம். ஒவ்வோர் அழைப்பும் ஒரு கொடையே. அவரை அறிந்துகொள்வது என்பது அவருடைய பராமரிப்பில் நம்மை நாம் ஒப்படைப்பதற்குச் சமமாகும்.
3. கடவுளின் வாக்குறுதியில்
நம்பிக்கை
அறிவு
தன்னம்பிக்கைக்கு வழிவகுக்கிறது. இந்தத் தன்னம்பிக்கை நம்பிக்கையிலிருந்து எழும் ஒரு மனநிலையாகும். கீழ்ப்படிந்த அன்னை மரியின் இதயம், குழந்தை இயேசுவைக் காப்பாற்றிய புனித யோசேப்பின் பராமரிப்பு இவையெல்லாம் நம்பிக்கைக்கு அருமையான உதாரணங்கள். தன்னைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற இருளான சூழலிலும், தங்களைக் கடவுளிடம் ஒப்படைக்கும் அற்புதமான அனுபவத்தை அன்னை மரியிலும் யோசேப்பிலும் பார்க்கின்றோம்.
கிறிஸ்து
பிறப்பு அறிவிப்பு பெற்ற மரியின் அனுபவமும், இரத்த வியர்வை சிந்திய இயேசுவின் கெத்சமனி அனுபவமும், புனித யோசேப்பின் அனுபவமும் கடவுளின் வாக்குறுதிகளில் நாம் கொள்ளக்கூடிய நம்பிக்கையை பலப்படுத்த வேண்டும். எந்தச் சூழலிலும் விரக்திக்கு உள்ளாகாமல், உயிர்த்த இயேசுவில் நம்பிக்கை கொண்டு நம் அச்சங்களை நாம் வெல்லவேண்டும். நிழல் என்னும் இருள் கூட நம்மைச் சூழாதபடி வெளிச்சத்தோடு நம்மைக் காக்க நம் கடவுள் நம்மோடு பயணிக்கிறார்.
4. கிறிஸ்துவை நெருங்குவதே முதிர்ச்சி
அழைத்தல்
என்பது நம் ஆண்டவருடனான நெருக்கத்தால் நிலைநிறுத்தப்படும் ஓர் ஆற்றல் மிக்க முதிர்ச்சி செயல்முறையாகும். அழைப்பில் வளர்வது என்பது இயேசுவுடன் இருப்பதையும், தூய ஆவியார் நம் இதயங்களிலும் வாழ்க்கையின் சூழ்நிலைகளிலும் செயல்பட அனுமதிப்பதையும், இந்த வரத்தின் ஒளியில் எல்லாவற்றையும் மறுவிளக்கம் செய்வதையும் குறிக்கிறது.
திராட்சைக்
கொடியையும் அதன் கிளைகளையும் போல (யோவா 15:1-8), நம்முடைய முழு வாழ்வும் ஆண்டவருடனான ஒரு வலிமையான மற்றும் உயிரோட்டமான பிணைப்பில் வேரூன்றியிருக்க வேண்டும். அப்போதுதான், நம்முடைய சோதனைகள் மற்றும் தேவையற்றவற்றை அகற்றுதல் ஆகியவற்றின் ஊடாக அவருடைய அழைப்பிற்கு நாம் இன்னும் முழு மனத்துடன் பதிலளிக்க முடியும். இறை விருப்பம் மிகவும் வெளிப்படும் இடங்களும், அவருடைய எல்லையற்ற அன்பை நாம் அனுபவிக்கும் இடங்களும், பெரும்பாலும் நம் வாழ்நாள் முழுவதும் நாம் ஏற்படுத்திக்கொள்ளும் உண்மையான சகோதரத்துவப் பிணைப்புகளாகவே இருக்கின்றன. நமது அழைப்பைக் கண்டறிவதிலும் வளர்ப்பதிலும் நம்முடன் துணைபுரிய ஓர் உண்மையான ஆன்மிக வழிகாட்டி இருப்பது எவ்வளவு விலைமதிப்பற்றது!
தூய
ஆவியாரின் தூண்டுதல்களைத் தெளிந்து தேர்வதுதான் அழைத்தலின் அழகுக்கு நற்பயனாய் அமைய முடியும். எனவே, ஓர் அழைப்பு என்பது ஒருமுறை நிரந்தரமாகக் ‘கொடுக்கப்படும்’ ஒன்றல்ல;
மாறாக, அது வாழ்க்கையைப் போலவே விரிவடையும் ஒரு பாதையாகும்.
நாம்
பெற்ற வரம் பாதுகாக்கப்படவேண்டும் என்பது மட்டுமல்லாமல், அது வளர்ந்து கனி தருவதற்காக இறையுறவில் ஆழப்படவேண்டும். அழைத்தல் நம் முழு வாழ்வையும் நம்மை நேசிக்கும் கடவுளுடன் தொடர்புபடுத்துகிறது. எதுவும் வெறும் தற்செயலின் விளைவு அல்ல; மாறாக, நம் வாழ்வில் உள்ள அனைத்தும் நமக்காக ஓர் அற்புதமான திட்டத்தைக் கொண்டுள்ள ஆண்டவருக்குப் பதிலளிக்கும் ஒரு வழியாக மாறக்கூடும் என்பதை இது நமக்கு உணர்த்துகிறது.
அன்றாட
இறைவேண்டல் மூலமாகவும், இறை வார்த்தையைத் தியானிப்பதன் மூலமாகவும், கடவுளுடனான நம் தனிப்பட்ட உறவை வளர்த்துக் கொண்டு சற்று நிதானித்து, செவிகொடுத்து, நம்மை அவரிடம் அர்ப்பணிப்போம். இவ்வழியில், நம் அழைப்பின் கொடை முதிர்ச்சியடைந்து, நமக்கு மகிழ்வைத் தந்து, திரு அவைக்கும் உலகுக்கும் மிகுந்த கனிகளை அளிக்கும்.
கிறிஸ்துவில் அன்பார்ந்த சகோதரர்களே, சகோதரிகளே!
உயிர்த்த
ஆண்டவரின் ஆசி உங்களோடு என்றும் தங்கி இருக்க இறைவனிடம் நான் மனதார வேண்டுகிறேன். முதன்முதலில் இவ்வருடத்திலிருந்து நல்லாயன் ஞாயிறாகிய இறையழைத்தல் ஞாயிறைப் பீடப்பணியாளர்களின் ஞாயிறாகக் கொண்டாடி, பீடப்பணியாளர்களிடையே இறையழைத்தல் பெருகிட நீங்கள் தொடர்ந்து செபிக்கவும், அவர்களை உற்சாகப்படுத்தவும் உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
உயிர்த்த
ஆண்டவர் இயேசுவின்மீது கொண்ட நம்பிக்கையால் தங்களது வாழ்வை முழுமையாக இயேசுவுக்கு அர்ப்பணித்தவர்கள்தாம் தொடக்ககாலக் கிறித்தவர்கள். இயேசுவின் பணியையும் வாழ்வையும் கண்டு அவரது உயிர்ப்புச் செய்தியால் ஊட்டம் பெற்றார்கள். இந்த அனுபவமும், நம்பிக்கையின் செய்தியும் தங்களது அடுத்த தலைமுறையினரின் வாழ்விலும் பிரதிபலித்தது. ஆனால், காலத்தின் மாற்றத்தால் அவர்கள் விலங்குகளுக்கு இரையாக்கப்பட்டார்கள்; சமூகத்தால் வெறுக்கப்பட்டார்கள், சில நேரங்களில் மூடநம்பிக்கையாளர்கள் என்று முத்திரை குத்தப்பட்டார்கள். இத்தகைய காரணங்களால்தான் அவர்கள் கல்லறைகளில் மறைந்து வாழ்ந்தார்கள். கிறித்தவர்கள் என்று அறியப்பட்டு சிறையிலடைக்கப்பட்டு துன்புற்றால் அதற்காகக் கடவுளுக்கு மிகுந்த நன்றி கூறினார்கள்.
அவர்களிடையே
காணப்பட்ட சகோதர மனப்பான்மை இன்றளவும் வியப்பாக உள்ளது. அவர்களிடையே தேவைகளில் உழல்வோர் என்று யாரும் இருக்கவில்லை. அனைவருக்கும் தேவையானது கிடைத்தது. இவ்வாறு கிறித்தவ நெறியைப் பின்பற்றுபவர்களின் வாழ்க்கைமுறை ஒரு புதிய நெறியை உலகிற்கு வகுத்துக்காட்டியது. அத்தகைய உயர்ந்த நெறியும் வாழ்க்கை முறையை இன்றைய கிறித்தவர்களாகிய நாம் மறந்துவிட்டோம். ‘போர்களாலும் குழப்பங்களாலும் உலகிற்கு என்ன ஆகுமோ?’ என்ற ஏக்கத்தில் பெருவாரியான மக்கள் வாழ்கிறார்கள். இந்நிலையில் புனித பிரான்சிஸ் அசிசியாரின் வாழ்வு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. சிலுவைப்போர்களால் பகைமை வளர்ந்திருந்த அந்த நாள்களில் புனித பிரான்சிஸ் அசிசியார் எகிப்தை ஆண்ட சுல்தான் மாலிக் அல் கமில் என்பவரை 1219-ஆம் ஆண்டு சந்தித்தார். அவரின் எளிமையான வாழ்வும் அன்பு கலந்த அணுகுமுறையும் சுல்தானின் மனத்தை மாற்றுகிறது. அதனால் பகைமை எனும் இருள் விலகியது. ஆம், கிறித்தவ நெறியின்மீது அவர் கொண்டிருந்த தவறான எண்ணம் மறைந்தது. வரலாற்றில் யாரும் நிகழ்த்த முடியாத அற்புதத்தை புனித பிரான்சிஸ் அசிசி அன்று நிகழ்த்திக் காட்டினார். அச்சந்திப்பு அமைதிக்கு வழிவகுத்தது.
அவரைப்
போன்று கிறிஸ்துவை எளிமையான வாழ்க்கை முறையாலும் இரக்கச் செயல்களாலும் வெளிப்படுத்தி, அமைதியின் தூதவர்களாய் நாம் வாழ வேண்டும் என்பதே இக்காலத்தின் உடனடித் தேவையாக இருக்கின்றது. இயேசுவை மறுதலித்தவர்களுக்கும், அவருடைய துன்ப நேரத்தில் கைவிட்டுவிட்டு ஓடியவர்களுக்கும் அவர் காட்சி கொடுத்தார்; தம்முடைய இரக்கத்தாலும் அன்பினாலும் அவர்களை மீண்டும் தம்முடையவர்களாக மாற்றினார். இயேசுவின் உயிர்ப்புச் செய்தியால் மகிழ்ந்திருக்கின்ற நாமும், இத்தகைய அணுகுமுறைகளைப் பின்பற்றவும், நமது வாழ்வால் பிரதிபலிக்கவும் கடமைப்பட்டுள்ளோம்.
காலத்தின்
மாற்றங்களுக்கேற்ப திரு அவையின் வாழ்வும் பணியும் நற்செய்தியின் அடிப்படையில் மக்களின் உள்ளங்களைத் தூண்டி எழுப்புகிறது. அத்தகைய பணியை இன்றும் தொடர்ந்து ஆற்றிவரும் திரு அவையோடு நாமும் இணைந்திட எளிமையான வாழ்வாலும் இரக்கச் செயல்களாலும் சமுதாயத்தில் அமைதியின் தூதுவர்களாக வாழ்ந்திடுவோம். உயிர்த்த ஆண்டவரின் ஆசி உங்களோடு என்றும் இருப்பதாக!
மேதகு
ஆயர்
அருள்செல்வம்
இராயப்பன்,
தலைவர்
தமிழ்நாடு
ஆயர் பேரவையின் இறையழைத்தல் பணிக்குழு
ஆன்மிகம் என்பது...
ஏப்ரல்
14-ஆம் நாள் மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாளைக் கொண்டாடுகின்றோம். அம்பேத்கர் பிறப்பால் ஓர் இந்துவாக இருந்தாலும், வாழ்நாள் முழுவதும் அவரது ஆன்மிகம் ஒரு தேடல் இறையனுபவமாகவே இருந்தது.
மனித
வாழ்வு பல பரிமாணங்களைக் கொண்டது.
உடல், கலாச்சாரம், மனம், மதம், சமுதாயம் என்ற பல பரிமாணங்களை உள்ளடக்கியது.
அதில் ஆன்மிகப் பரிமாணமானது அனைத்துப் பரிமாணங்களின் மையமாக அமைந்து, அவனது வாழ்வைப் பொருளுள்ளதாக்குகிறது.
ஆன்மிகம்
என்பது ஒரு மனிதன் தன் வாழ்வின் நிறைவையும் இறைமையையும் அடைந்திட, அவன் பின்பற்றும் சமயத்தில் தான் தேர்ந்தெடுக்கும் நோக்கமும் (VISION), அதை
அடைந்திட அவர் கையாளும் வாழ்க்கைமுறைகளும் (WAY OF LIFE) ஆகும்.
இதனால் ஆன்மிகமானது அவரது வாழ்விற்கு நிறைவான அர்த்தத்தை அளித்து, அவரது வாழ்வைப் பொருளுள்ளதாக்கி, இறைமைக்கும் இறவாமைக்கும் இட்டுச்செல்லும் ஒரு முக்கியப் பரிமாணம் ஆகும்.
ஆன்மிகம்
என்பது ஒரு மனிதனுக்குத் தேடல் அனுபவமாகவே அமையவேண்டும். இத்தேடல் மனித வாழ்வின் தனித்துவத்திற்கும், ஆளுமை வளர்ச்சிக்கும் அடிப்படையும் ஆணிவேருமாய் அமைகிறது. மனித வாழ்வின் அறநெறிக் கட்டாயமும் ஆகும்.
அம்பேத்கரின்
இலக்கு
(VISION)
அம்பேத்கரின்
இலக்கு சுதந்திரம் (LIBERITY), சமத்துவம்
(EQUALITY), சகோதரத்துவம்
(FRATERNITY) ஆகும்.
சுதந்திரம் என்பது, ஒரு மனிதன் தன்னையும் பிறரையும் வாழவைக்கும் செயல்களை எவ்விதத் தடையுமின்றிச் செய்திட உரிமையைச் சுட்டிக்காட்டுகிறது. சமத்துவம் என்பது, மனிதப் படைப்பில் எவ்வித ஏற்றத் தாழ்வுகளும் இல்லாது, சமத்துவ உறவுடன் வாழ்ந்திடும் சமூக அமைப்பாகும். சகோதரத்துவம் என்பது, பாதிக்கப்பட்ட மனிதர்மீது சக மனிதன் கொண்டுள்ள
அர்ப்பணமுள்ள செயல்பாடுகளைக் கொண்ட சமூகத்தைக் குறிக்கிறது. மொத்தத்தில், ஒரு சமூகத்தில் மனிதராகப் பிறந்த அனைவரும் மாண்புடைய
மனிதர்களாகத் திகழ்ந்து, இறைமையை உணர்வதே அவரது இலக்காகும். அம்பேத்கரின் வாழ்க்கை முறையினை அவரது கொள்கை வாக்கியமான ‘கற்பி, போராடு, ஒன்றுசேர்’
என்பது எடுத்துரைக்கிறது.
கற்பி (EDUCATE)
‘கற்பி’ என்று சொல்லும்போது, நாம் நன்றாகக் கற்க வேண்டும். இரண்டாவதாக, கல்வி மறுக்கப்பட்ட மக்கள் கற்பிக்க உழைத்திடவேண்டும். அம்பேத்கரைப் பொறுத்தமட்டில், நன்கு படித்துப் பட்டங்கள் பெற்று, ‘தான் உண்டு, தன் குடும்பம் உண்டு’ என்று குறுகிய வட்டத்தில் வாழ்ந்து, எவ்விதச் சமுதாய அக்கறையுமின்றி இருப்போரை ‘மூளை பெருத்தவர்’ (LEARNED) என்பார். உண்மையான
அறிவுஜீவி (INTELLECTUALS), இச்சமுதாயம்
சீரடையத் தன்னை அர்ப்பணிக்கும் உயர்ந்தோர் ஆவார். ஆக, தான் கற்றக் கல்வியால் பாதிக்கப்பட்ட சமுதாயம் மாண்புடைய மனிதர்களாக வாழ்ந்திட தன்னையே அர்ப்பணிக்கும் வாழ்க்கை முறையாகும்.
போராடு (AGITATE)
பாதிக்கப்பட்டவர்களுக்குச்
சலுகைகளை நாய்களுக்குப் போடும் எண்ணமும் அதை விரும்பி ஏற்கும் மனப்போக்கும் தன்மானத்திற்கு எதிரானது என்பார். “சிறுத்தைகளையா கோவில்களில் பலியிடுகின்றனர்? ஆடுகளைத்தானே! எனவே, சிறுத்தைகளாகக் கிளர்ந்து எழவேண்டும்” என்பார்.
சாய்கின்ற பக்கம் சாய்ந்திடும் செம்மறி ஆடுகளைப் போல் மானங்கெட்டு வாழ்வதைவிட, தன்மானத்திற்காய் ஒரு நிமிடம் போராடி அமரர் ஆவதே மேல் என்பார். இதில் மேலோங்குவது வரையறையற்ற உணர்ச்சிகள் அல்ல; மனித மாண்புடைய உணர்வுகளின் மேலாண்மை என்பார்.
ஒன்றுசேர் (ORGANIZE)
தலித்
மக்கள் துண்டாடப்பட்டு, பல பிரிவுகளாக இருப்பதைக்
கண்டார் அம்பேத்கர். தன் மக்கள் ஓரணியில் திரண்டு ஒன்றுபட விரும்பினார். மற்ற சாதியினர் ஒன்றுதிரள்வது அநீதி நிறைந்த சாதியத்தை வலுப்படுத்தவே. அது சமூகப் பாவம் ஆகும். ஆனால், தலித் மக்கள் சாதியத்தை ஒழித்து மனித மாண்பிற்காகப் போராடுவது, தெய்வீகமாகும் என்பதை உணர்ந்திருந்தார். ‘ஒன்றுசேர்’
என்பது மனித மாண்பிற்காகப் போராட ஒன்று சேரும் குழுமத்தைக் குறிக்கிறது.
தொடர் தேடலே
ஆழமான,
அர்த்தமுள்ள
ஆன்மிகம்
ஆன்மிகத்
தேடல் என்பது மதம் போதிக்கும் அனைத்துக் கருத்துகளையும் குருட்டுத்தனமாக ஏற்றுக்கொள்வதில் அல்ல; அது தொடர் தேடலாக அமையவேண்டும் என்பார். இயேசு யூத மதத்தில் பிறந்தவராக இருந்தாலும், அப்படியே யூத மதக் கருத்துகளை ஏற்றுக்கொண்டவர் அல்லர்; தமக்குப் பொருள்ளதாகக் கண்டதைத் தெளிந்து
தேர்ந்து தம் வயப்படுத்தி, நமக்கு
இறையாட்சியின் மதிப்பீடுகளாகத் தந்துள்ளார். அம்பேத்கரின் ஆன்மிகத் தேடல், சமுதாயத்தால் பாதிக்கப்பட்ட அனுபவத்திலும் மனித மாண்பிலும் தொடங்குகிறது.
எனவே, 1935-ஆம் ஆண்டு அக்டோபர் 13-ஆம் தேதி “நான்
பிறப்பால் இந்துவாக இருந்தாலும், ஓர் இந்துவாக இறக்கப் போவதில்லை”
என்று கூறினார். கிறித்தவச் சமயத்தைத் தான் விரும்புவதாகப் பல முறை குறிப்பிட்டுள்ளார்.
தனக்குப் பிடித்த ஆளுமைகளாகப் புத்தரையும் இயேசுவையும் கூறியுள்ளார் (ஜோலாப் பூர் மாநாடு). கிறித்தவர்கள் இயேசுவின் போதனைகள்படி வாழ்வதில்லை என்றார். ஆனால், இயேசுவின் இறைமைத்தன்மையை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
மனித மாண்பே
இறைமைக்கு
அடித்தளம்
1956-ஆம் ஆண்டு
அக்டோபர் மாதம் 14-ஆம் நாள் நாக்பூரில், பௌத்த மதமே தனக்கும், தன் மக்களுக்கும் சரியான ஆன்மிகப் பாதைக்கு இட்டுச் செல்லும் என்று உணர்ந்து, 22 உறுதிமொழிகளுடன் போதிசத்துவர் ஆனார். பௌத்த மதத்தை அப்படியே அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மாறாக, புத்தரைக் கடவுளாகப் பார்க்கும் மாகாயானம் மற்றும் ஹீனயானம் அல்லாமல், தனது தேடல் அனுபவத்தின் மூலம் நவயான பௌத்தம் (NEO – BUDDHISM) என்ற புதிய பௌத்த மதத்தை ஏற்றுக்கொண்டார். ‘நவ’ என்றால் ‘புதிய’ என்றும், ‘யானம்’ என்றால் ‘ஆன்மிகத்தைப் பின்பற்றும் முறை’ என்றும் பொருளாகும். தானும், தன் மக்களும் மனித மாண்பை அடைவதன் வழியாக, இறைமையையும் இறவாமையையும் அவர்கள் அனுபவிக்க முடியும் என்றார்.
சிந்திக்க...
செயல்பட...
நாம்
பிறப்பால் ஒரு சமயத்தைப் பின்பற்றினாலும், ஆன்மிகத் தேடலின் மூலம் நமது
இலக்கையும் வாழ்க்கை முறையையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், அதன்
அடிப்படை உண்மையைத் தேடி, நமக்குப் பொருளுள்ளதாக மாற்றி, அவற்றைத் தம்வயப்படுத்திப் பின்பற்றும் போது, உண்மையான தெய்வீகத்தையும் இறைமையையும் நாம் அடைய முடியும். இதுவே ஒரு மானிட அறிவுஜீவியின் ஆளுமையையும் தனித்துவத்தையும் சிறப்படையச் செய்கிறது.