தூய லூக்கா நற்செய்தியில் வரும் எலிசபெத்து மரியாவை வாழ்த்துகின்ற நிகழ்வானது, மரியாவின் நம்பிக்கையானது, இயேசுவினுடைய மலைப்பொழிவின்படி வாழும் அனைவருக்கு மானதொரு மாதிரியாக இருப்பதைக் காட்டுகின்றது.
1. மரியா
எலிசபெத்தைச் சந்திக்கின்ற நற்செய்தியின் விவரிப்பில் எலிசபெத்து ‘ஆவியானவரால் நிரப்பப்பட்டு’ மரியாவை
வரவேற்று, “ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்” (லூக்
1:45) என்று வாழ்த்தினார். முதன் முதலாக லூக்கா நற்செய்தியில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த வாழ்த்துரையானது, மரியாவை அவரின் நம்பிக்கையினால் இயேசுவினுடைய மலைப்பொழிவை நிறைவேற்றுவதில் திரு அவைக்கு முன்மாதிரியானவராகக் காட்டுகின்றது.
மரியாவின் நம்பிக்கையைப்
பற்றி எலிசபெத்து புகழ்ந்து பேசுவது, இறைத்தூதரின் அறிவிப்பை சக்கரியாவுக்கான இறைத்தூதரின் அறிவிப்புடன் ஒப்பிடுவதன் வழியாக வலுப்படுத்தப்படுகிறது. மரியா மற்றும் சக்கரியா இருவருக்குமான அறிவிப்பை
மேலோட்டமாக வாசிக்கின்றபொழுது, இருவரும் அந்த இறைச்செய்திக்கு ஒத்த பதில்களைக் கொடுத்ததாகக் கருதக்கூடும். “இது நடைபெறும் என எனக்கு எப்படித்
தெரியும்? நான் வயதானவன். அதுபோல் என் மனைவியும் வயது முதிர்ந்தவராயிற்றே” (லூக்
1:18) என்று சக்கரியாவும், “இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!” (லூக் 1:34) என்று மரியாவும் கேட்கின்றார்கள். ஆனால், இந்த இரண்டு நிகழ்வுகளிலும் வருகின்ற முக்கியக் கதாபாத்திரங்களான சக்கரியா மற்றும் மரியாவின் உள்மனப்பான்மைக்கு இடையேயான ஆழமானதொரு வேறுபாட்டை இறைத்தூதரின் வார்த்தைகளிலிருந்தே நாம் அறிந்துகொள்ளலாம். அதாவது, சக்கரியாவின் அவநம்பிக்கைக்காக இறைத்தூதர் அவரைக் கடிந்துகொள்கின்றார். ஆனால், மரியாவின் கேள்விக்கு
அவர் உடினடியாகப் பதில் அளிக்கின்றார். எலிசபெத்தின் கணவரைப் போலல்லாமல், மரியா இறைத்திட்டத்திற்கு முழுமையாக அடிபணிகின்றார். மேலும், கண்ணுக்குத் தெரிகிற அடையாளத்தைக் (visible sign) கொடுக்கவேண்டும் என்ற நிபந்தனையின்றி
தனது சம்மதத்தை அளிக்கின்றார்.
மரியா
ஒரு தாயாக வேண்டும் என்று முன்மொழிந்த இறைத்தூதரிடம், தான் ஒரு கன்னியாக இருக்கவேண்டும் என்ற தனது எண்ணத்தை மரியா நினைவுபடுத்துகின்றார். இறைத்தூதரின் அறிவிப்பானது நிறைவேறும் என்று அவர் முழுமையாக நம்பினார். அதற்கு அவர் முழு தயார் நிலையுடன் தன்னைக் கையளிக்க விரும்பினார். எனவே, இறைவனின் விருப்பத்தைச் சிறந்த முறையில் நிறைவேற்றுவதற்காக, அத்தூதரிடம் அது நிகழப்போகும் விதம் குறித்து மட்டுமே கேள்வி எழுப்புகின்றார். இதை புனித அகுஸ்தினார், “அவர், அது நிகழப்போகும் அந்த வழியைத்தான் தேடினார்; கடவுளின் பேராற்றலை அவர் சந்தேகிக்கவில்லை” (Sermo 291) என்று விளக்குகின்றார்.
செவிசாய்த்தல்
மற்றும்
தூய
நம்பிக்கை
இவை
இரண்டும்
மரியாவுக்குத் தேவைப்பட்டன
2. இந்த
இரண்டு அறிவிப்புகளும் வெளியிடப்பட்ட சூழலானது மரியாவினுடைய நம்பிக்கையின் சிறப்பை உயர்த்த உதவுகிறது. தூய லூக்காவின் நற்செய்தியில், சக்கரியாவுக்கான மிகவும் சாதகமான சூழ்நிலையையும், அவர் அளித்த பதிலின் போதாமையையும் காண்கின்றோம். எருசலேம் ஆலயத்தில் ‘திருத்தூயகத்திற்கு’ முன்
(விப 30:6-8) பலிபீடத்தில் இறைத்தூதரின் அறிவிப்பை சக்கரியா பெறுகிறார். அவர் தூபம் போடுகையில் இறைத்தூதர் அவரிடம் அறிவிக்கின்றார். அதாவது, குரு என்ற முறையில் அதற்கான தனது கடமையைச் செய்கின்ற அவருடைய வாழ்வின் முக்கியமானதொரு தருணத்தில் அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு, இறைவனின் முடிவானது ஒரு காட்சி வழியாக அவருக்குத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பிடத்தக்க இச்சூழ்நிலைகள் அவருக்கு வழங்கப்பட்ட செய்தியின் தெய்வீக நம்பகத்தன்மையை நாம் எளிதில் புரிந்துகொள்வதற்கு உதவுகின்றன. மேலும், அச்செய்தியை உடனடியாக ஏற்றுக்கொள்வதற்கான ஊக்கத்தையும் நமக்கு அளிக்கின்றன.
எவ்வாறாயினும்,
மரியாவுக்கான அறிவிப்பானது சக்கரியாவிடம் வெளியிடப்பட்ட புனிதத்தன்மையின் வெளிப்புறக்கூறுகள் எதுவுமே இல்லாமல் எளிமையானதொரு வேலைநேரச் சூழலில் நடைபெறுகிறது. தூய லூக்கா நற்செய்தியாளர் இறைமகனுடைய பிறப்பின் அறிவிப்பானது இந்த இடத்தில்தான் நடந்தது
என்று எந்தவொரு குறிப்பிட்ட இடத்தையும் சுட்டிக்காட்டவில்லை: மரியா சிறிதளவே முக்கியத்துவம் வாய்ந்த கிராமமான நாசரேத்தில் இருந்ததாக மட்டுமே அவர் குறிப்பிடுகின்றார். இது இந்நிகழ்வுக்கு முன்னரே தீர்மானிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. மேலும், இறைத்தூதர் தோன்றுகின்ற அந்த நேரத்திற்கு, வழக்கத்திற்கு மாறான எந்தவொரு முக்கியத்துவத்தையும் நற்செய்தியாளர் குறிப்பிடவில்லை; எந்தவொரு வரலாற்றுச் சூழ்நிலையையும் அவர்
விவரிக்கவும் இல்லை. இறைத்தூதரைச் சந்திப்பதில், அவருடைய வார்த்தைகளின் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில் ஒருவரின் கவனம் முழுவதும் செலுத்தப்படுகிறது. எனவே, மரியாவுக்கு முனைப்புடன் கேட்டல் மற்றும் தூய்மையான நம்பிக்கை தேவைப்படுகிறது.
ஒன்றை
நம்புவதற்காக எளிதில் கண்டுணரக் கூடிய அடையாளங்களைத் தொடர்ந்து கேட்கும் வழக்கம் இன்றும் நம்மிடம் உள்ள மனநிலையோடு ஒப்பிடுகையில், இந்தக் கடைசிக் கருத்தானது நம்மை மரியாவினுடைய நம்பிக்கையின்
மகத்துவத்தைப் பாராட்டச் செய்கிறது.
3. சக்கரியாவுக்கு
அறிவிக்கப்பட்டதைவிட மிகவும் உயர்ந்ததோர் உண்மைக்கு அவரின் ஒப்புதலைத் தருமாறு மரியா கேட்டுக்கொள்ளப்படுகின்றார்.
மலட்டுத் திருமண சேர்க்கையினுள் (within sterile marital union)
வளமையானதொன்றாக ஆக்க கடவுள் விரும்பியதனால் நடக்கும் ஓர் அதிசயமான பிறப்பை நம்ப சக்கரியா அழைக்கப்பட்டார். அதாவது, பழைய ஏற்பாட்டுப் பெண்கள் பலர் பயன்பெற்றதைப் போன்றதொரு தெய்வீக இடையீடு: சாராள் (தொநூ 17:15-21, 18:10-14), ராக்கேல் (தொநூ 30:22), சாம்சனுடைய தாய் (நீப 13:1-7) மற்றும் சாமுவேலின் தாயான அன்னா (1சாமு 1:11-20). இந்நிகழ்வுகள் அனைத்திலும் குறிப்பாக, கடவுளின்
கொடைக்கான நன்றியுணர்வானது வலியுறுத்தப்படுகிறது.
மரியா
பழைய ஏற்பாட்டில் எந்தவொரு முன்னுதாரணமும் குறிப்பிடப்படாத ஒன்றான கன்னித் தாய்மையை (virginal motherhood) நம்ப அழைக்கப்படுகின்றார். உண்மையில், நன்கு அறியப்பட்ட இறைவாக்கினர் எசாயாவின் இறைவாக்கான, “இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவள் ‘இம்மானுவேல்’ என்று
பெயரிடுவார்” (7:14) என்கிற
பார்வையைத் தவிர்க்கவில்லை என்றாலும், இந்த அர்த்தத்தில் வெளிப்படையாக விளக்கமளிக்கப்பட்டது கிறிஸ்துவின் வருகைக்குப் பிறகும், நற்செய்தி வெளிப்பாட்டின் வெளிச்சத்திலும் மட்டுமேயாகும்.
இவ்வாறு,
இதற்குமுன் வெளிப்படுத்தப்படாத ஓர் உண்மையை ஒப்புக்கொள்ளும்படி மரியா கேட்கப்படுகிறார். மரியாவும் அதை எளிமையான இன்னும் தைரியமான இதயத்தோடு ஏற்றுக்கொள்கின்றார். “இது எவ்வாறு நிகழும்?” என்ற கேள்வியுடன் கன்னித்தன்மையைத் தனது விதிவிலக்கான மற்றும் தனித்துவமான தாய்மையுடன் ஒத்துப்போகச் செய்வதற்கான இறைச்சக்தியின் மீதான அவரின் நம்பிக்கையை அவர் வெளிப்படுத்துகின்றார்.
“தூய ஆவி உம்மீது வரும்; உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும்; ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்”
என்று பதிலளிப்பதன் வழியாக மரியா
கேட்ட கேள்விக்கு இறைத்தூதர் கடவுளின் சொல்லுதற்கரிய தீர்வை அளிக்கின்றார். அதுவரை ஒரு தடையாக இருந்த கன்னித்தன்மையானது மனுவுருவான கடவுள் பற்றிய கருத்தாக்கம் தூய ஆவியானவர் அவரில் நிறைவேற்றும் உறுதியானதொரு சூழலாக மாறுகிறது. இவ்வாறு, இறைத்தூதரின் பதிலானது இயேசுவைப் பெற்றெடுப்பதில் தூய ஆவியானவருடன் கன்னி மரியா ஒத்துழைப்பதற்கான வழியைத் திறக்கிறது.
4. இறைத்திட்டத்தை
நிறைவேற்றுவதில் மனிதனின் சுதந்திரமான ஒத்துழைப்பானது உணரப்படுகின்றது. இறைவனின் வார்த்தையை நம்பியதன் வழியாகத் தனக்கு அறிவிக்கப்பட்ட தாய்மையை நிறைவேற்றுவதில் மரியா ஒத்துழைக்கின்றார்.
மரியாவின் நம்பிக்கைச்
செயலானது
ஆபிரகாமின்
நம்பிக்கையை
நினைவுபடுத்துகின்றது
திரு
அவைத் தந்தையர் பெரும்பாலும் இயேசுவின் கன்னி கருத்தரிப்பின் (virginal conception) இந்தத் தன்மையை வலியுறுத்துகிறார்கள். இயேசுவின் பிறப்பு அறிவித்தல் பற்றிய நற்செய்தி விளக்கத்தில் புனித அகுஸ்தினார் சிறப்பாக இவ்வாறு கூறுகின்றார்: “இறைத்தூதர் அறிவிக்கின்றார், கன்னி மரியா அதைக் கேட்கின்றார், நம்புகின்றார் மற்றும் கருத்தரிக்கின்றார்” (Sermo 13 In Nat. Dom.). மீண்டுமாக, “கிறிஸ்து நம்பப்படுகிறார் மற்றும் நம்பிக்கையின் வழியாகக் கருத்தரிக்கப்படுகிறார். இவ்வாறு, நம்பிக்கையின் வருகை
முதலில் கன்னி மரியாவின் இதயத்தில்
நிகழ்கிறது, பின்னர் அந்த நம்பிக்கையின் பலன் தாயின் வயிற்றில் உருவாகிறது” (Sermo 293) என்று கூறுகின்றார்.
பழைய
உடன்படிக்கையின் தொடக்கத்தில், கடவுளை நம்பியதால் ஒரு பெரிய சந்ததியினரின் தந்தையாகிய ஆபிரகாமின் நம்பிக்கையை மரியாவின் நம்பிக்கை
நினைவுபடுத்துகின்றது
(ஒப்பிடுக. தொநூ 15:6: மீட்பரின் தாய், எண்.14). புதிய ஏற்பாட்டின் தொடக்கத்தில் மனுவுருவாதலின்
மறைபொருளை நிறைவேற்றுவது, இயேசுவின் முழுமையான மீட்புப்பணியின் தொடக்கம் மற்றும் அனைத்திலும் மரியா தனது நம்பிக்கையுடன் தீர்க்கமானதொரு செல்வாக்கைச் செலுத்தினார்.
இயேசுவின்
பொதுவாழ்வில் வலியுறுத்தப்பட்ட நம்பிக்கைக்கும் மீட்பிற்கும் இடையிலான நெருங்கிய உறவானது (ஒப்பிடுக. மத் 5:34, 10:52), மரியாவின் நம்பிக்கை
செயல்படுத்திய மற்றும் மனுக்குல மீட்பில் தொடர்ந்து செயல்படும் அடிப்படைப் பங்கை நாம் புரிந்துகொள்ளவும் உதவுகிறது.
மூலம்:
John Paul II, Mary freely co-operated in God’s plan, in
Osservatore Romano Weekly Edition in English, 10 July 1996, p. 11.
சிந்தனைகளின் ஊற்று மனம். சிந்திக்கும் மனிதனே சிந்தனையாளர். தெளிந்த மனத்தோடு தன் எண்ணத்தை ஒரே நிலையில் கொண்டு சென்று சிந்திப்பவன் தன்னை அறியும் ஆற்றலைப் பெற்று, சரியான பாதையில் சென்று மன அமைதி பெற்று வெற்றியடைகின்றான்.
‘மாகோங்’ என்றால் ‘ஞானி’ என்று பொருள். ஞானிகளின் தன்னம்பிக்கையும், தெளிவான சிந்தனையும், குழப்பமில்லாத கண்ணோட்டமும் அவர்களின் பிறப்புரிமைகள். ஒவ்வொரு மனிதனின் மனத்திலும் தெய்வீகம் பொருந்திய சிந்தனை இருக்கின்றது. அவை ஒவ்வொரு மனிதனிடமும் வேறுபடும்போது புதுமையாகத் தோன்றுகிறது.
மெல்கியோர்
எனும் பாரசீக ஞானி இயேசுவை அமைதியின் அரசராக எண்ணி பொன்னையும், கஸ்பார் எனும் எத்தியோப்பிய ஞானி குருத்துவத்தைக் குறிக்கும் சாம்பிராணியையும், பல்தசார் எனும் அரேபிய ஞானி இறந்த உடலைப் பதப்படுத்தும் வெள்ளைப்போளத்தை இயேசுவின் சிலுவை மரணம் குறித்தும் காணிக்கையாகக் கொண்டு செல்கிறார்கள். விண்மீன் அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தது. ஒரு புதிய அரசர் பிறப்பை இந்த
விண்மீன் முன்னறிவிப்பதாக இவர்கள் நம்பினர்.
இம்மூவரும்
வெவ்வேறு இடங்களிலிருந்து புறப்பட்டாலும் ஒரே இலட்சியத்தோடு, வேற்றுமையில் ஒற்றுமையாக, பிற இனத்தாரின் பிரதிநிதிகளாக இரவிலும் காடு, மலை கடந்து இறையாசிர் பெற ஆவலுடன் சென்றபோது, வழிகாட்டிச் சென்ற விண்மீன் மறைவால் ஏரோது அரசர் மாளிகையை அடைந்தனர். அரசன் ஏரோதிடம், “யூதர்களின் அரசர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்தோம்” என்று கூற, அதைக் கேட்ட ஏரோது அரசன் தனக்குப் போட்டியாகப் பிறந்த குழந்தையைக் கொல்ல மனத்தில் திட்டமிட்டு அவர்களிடம், “நீங்கள் சென்று வணங்கிவிட்டு எனக்கு அறிவியுங்கள்” (மத்
2:8) என்று அனுப்புகிறான். பின்னர் நடந்தேறிய பல நூற்றுக்கணக்கான மாசற்றக் குழந்தைகளின்
சாவிற்குக் காரணமாகிறான் ஏரோது. ‘கெடுவான் கேடு நினைப்பான்’ என்ற
பழமொழிக்கேற்ப அவன் வாழ்வு அழிவுக்குட்பட்டது. அதிகாரம் ஆணவத்தின் பிறப்பிடம். “சிறியதொரு கடுகுபோல் உள்ளம் கொண்டோர் தெருவாருக்கும் பயனற்ற சிறிய வீணன்” என்றார் பாவேந்தர் பாரதிதாசன்.
மூன்று
ஞானியரும், ஏரோது மன்னனின் தீய என்ணத்தை அறியாமல் இருந்தனர். இயேசு பாலனை விழுந்து வணங்கிவிட்டு மனநிறைவும் அமைதியும் ஆசிரும் பெற்று, ஆண்டவரின் தூதர் எச்சரித்ததால் வேறு வழியே சென்றடைந்தனர்.
பிறக்கும்
இந்தப் புத்தாண்டில் (2026) நாட்டின் நீதி, நேர்மை, வளம் பெற தேர்தல் களம் செல்ல வேண்டியிருக்கிறது. பழிவாங்கும் உணர்ச்சி, பதவி மோகம், சாதி-மதவெறி கொண்டவர்கள் மன்னராட்சியில் மட்டுமின்றி, சனநாயக அமைப்பிலேயும், ஆட்சிப் பீடத்தைத் தனக்குக் கிடைத்த நிரந்தரமான சுக பூமி என்று தப்புக்கணக்கு போட்டு அழிந்து போகிறார்கள். குறுக்கு வழியிலே அதிகாரத்தில் தொடர்ந்து இருக்க விரும்புகிறார்கள். பொறாமையால் மற்றவர்களுக்குக் கெடுதல் செய்வதிலேயே, சுயநலத்திலேயே இவர்களின் சிந்தனை இருக்கும். ஒருபோதும் இவர்கள் சரித்திரத்தில் இடம்பெறுவதில்லை.
சுயநலமின்றிப்
பொதுப் பணியாற்றி, மக்களுக்கு நன்மை செய்வதே ஆண்டவருக்கு உகந்த இலட்சிய வாழ்வு. கிளர்ச்சியைத் தூண்டிவிட்டு மக்கள் ஆதரவைப் பெறும் தலைவர்களைத் தவிர்த்து, உள்ளதை உள்ளபடி உரைக்கும் நேர்மையான தலைவர்களை, மக்களாகிய நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை காணும் மக்களாகிய நாம் குடியுரிமை, வாக்குரிமையை இழந்துவிடாமல் விழிப்புணர்வுடன் செயலாற்ற வேண்டும். ‘இனாம்’ என்ற பெயரில் நாம் பெற்ற சுதந்திரத்தை இழந்து அடிமையாகக் கூடாது. நமக்குத் தெரிந்த உண்மைகளைப் பாமர மக்களின் சிந்தனைக்கு எட்டும் வகையில் விளக்கமாக எடுத்துரைக்கவேண்டும்.
மூன்று
ஞானிகள் பாலன் இயேசுவை வணங்கியபின் மனம் நிறைந்து, எந்தவிதக் குழப்பமும் இல்லாமல் சென்றதுபோல, நாமும் நமது சிந்தனைகளைச் சிதறவிடாமல் மனமாற்றம் அடைந்து, இறையனுபவம் பெற்றவர்களாக இயேசுவின் முக ஒளியில் அமைதி காண்போம்!
கிறிஸ்து பிறப்பின் 2025-ஆம் ஆண்டுகளின் நிறைவு, மகிழ்ச்சியான யூபிலி விழாவாகக் கொண்டாடப்படும் என்ற அறிவிப்பினைத் திருத்தந்தை பிரான்சிஸ் 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ஆம் நாள் அறிவித்தார். ‘எதிர்நோக்கின் திருப்பயணிகள் நாம்’ என்ற அழைப்பை யூபிலி 2025-க்கான மையப்பொருளாக முன்மொழிந்தார். ‘புதிய நற்செய்தி அறிவிப்பு’ பணிக்குழுவிடம் திருத்தந்தை பிரான்சிஸ் இதற்கான தயாரிப்பினை மேற்கொள்ள அழைப்பு விடுத்திருந்தார்.
2023-ஆம் ஆண்டு
இரண்டாம் வத்திக்கான் சங்க மறுமலர்ச்சி மற்றும் புதுப்பித்தலை உணர்த்த நான்கு கொள்கைத் திரட்டுகளை வாசிக்கவும், மறுவாசிப்பு செய்யவும், அதன் அடிப்படையில் தனிமனித வாழ்விலும், திரு அவையில் மறுமலர்ச்சியைச் செயல்படுத்தவும் திருத்தந்தை அழைப்பு நல்கினார். 2024-ஆம் ஆண்டை யூபிலிக்கான தயாரிப்பில் ‘இறைவேண்டலின் ஆண்டாக’ அறிவித்து இறைவேண்டல் முன்னிறுத்தும் இறைவனைத் தேடுதல், தளரா நம்பிக்கையுடன் வாழ்தல் மற்றும் இறைவேண்டலையே நம் வாழ்வாக மாற்றுதல் எனும் சீரிய சிந்தனைகளை முன்வைத்தார்.
2025-ஆம் ஆண்டு
யூபிலி விழாவாகச் சிறப்பிக்க அழைப்புவிடுத்த திருத்தந்தை பிரான்சிஸ், யூபிலி ஆண்டின் நோக்கத்தையும் மையக்கருத்தையும் விளக்கி, தன் ஆணைமடலை (Bull) 2024-ஆம்
ஆண்டு மே மாதம் 9-ஆம்
நாள் இயேசுவின் விண்ணேற்றப் பெரு விழா அன்று உரோமையில் இலாத்தரன் பேராலயத்தில் வெளியிட்டார். அம்மடலில் புனித பவுலின் “எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது”
(உரோ 5:5) என்ற ஆழமான பொருள் நிறைந்த வார்த்தைகளை மையமாக அமைத்து ‘எதிர்நோக்கின் பயணிகள்’ என்பதன் பொருள் என்ன என்பதைத் தெளிவுபடுத்தினார்.
வெற்றுக்
கொண்டாட்டங்களையோ, வெறுமையான விழாக்களையோ மையப்படுத்திக் கொண்டாடும் நிகழ்வாக அல்லாமல், நம்பிக்கையாளர்களின் இறைநம்பிக்கையைப் (Faith) புதுப்பிக்கவும்,
பிறரன்புச் செயல்களை (Love-Charity) இன்றைய
காலகட்டத்தில் எப்படித் தொடர வேண்டுமெனவும், திரு அவையைத் தூண்டியெழுப்பும் நோக்குடன் சிந்தனைகளை ஆணைமடலின் மையச்செய்தியாக முன்வைத்தார். இதன் தொடர்ச்சியாக, 2024, டிசம்பர் 24-ஆம் தேதி மாலை உரோமையில் (வத்திக்கான் புனித பேதுரு பேராலயத்தில்), கிறிஸ்து பிறப்புப் பெருவிழாத் திருப்பலிக்கு முன்பாக புனிதக் கதவினை
(Holy Door) திறந்துவைத்தார்.
உரோமையில் 2026-ஆம் ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி வரையிலும், பிற இடங்களில் 2025-டிசம்பர் 28-ஆம் தேதி வரையிலும் யூபிலி ஆண்டாக அறிவிப்பு செய்யப்பட்டது.
நற்செய்தி மதிப்பீடுகளை
வாழ்வதில்
திரு அவை நிறைவு காணவேண்டும்
எதிர்நோக்கின்
திருப்பயணம் உலகம் சார்ந்த நிறைவை அல்ல; மாறாக, நற்செய்தி மதிப்பீடுகளை வாழ்வதில் அடையும் நிறைவை முன்னிறுத்துகிறது. உலகப் பயன்பாடுகளையோ, ஆடம்பரக் கொண்டாட்டங்களையோ அல்ல; மாறாக, அன்பையும் அமைதியையும் விதைக்கும் பணியையும், நீதிக்கும் நேர்மைக்கும் உண்மைக்கும் பகிர்வுக்கும் நம்மைச் சாட்சிகளாக்கும் செயல்பாட்டாளர்களாக உருவாக்குகிறது. கிறித்தவ வாழ்வு ஓர் இலக்கு நோக்கிய பயணமெனில், இந்தப் பயணம் நம்மை ஏமாற்றமாட்டா. நம்பிக்கையும் அன்பும் எதிர்நோக்கும் நம்மை ஏமாற்றாது எனும் உண்மையைத் திருவிவிலியம் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது.
எதிர்நோக்கு
வாழ்வு என்பது மனிதர்களை மையப்படுத்தியது அல்ல; அது மூவொரு கடவுளை மையப்படுத்திய நம்பிக்கை வாழ்வு, திருவிவிலிய வரலாற்றில் மிக உயர்ந்த நம்பிக்கை கொண்ட குலமுதுவர்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, தொடங்கி மோசே வழிவந்த இறைவாக்கினர்களின் பணியிலும் வாழ்விலும் ஏமாற்றம் தராத எதிர்நோக்கு வாழ்வை அவர்கள் வாழ்ந்ததைக் காணமுடிகிறது.
‘எதிர்நோக்கு’ எனும்
இலக்கில் மணிமகுடமாக அமைந்ததுதான் இயேசுவின் வாழ்வும் பணிகளும். அதே எதிர்நோக்கைத் தம் சீடர்களின் உள்ளத்திலும் விதைத்தார் இயேசு. துவண்டுபோன வேளைகளிலும் அவர்தம் சீடர்களை நம்பிக்கையில் உறுதிப்படுத்தி எதிர்நோக்குடன் பயணிக்க அறிவுறுத்தி, அவர்களுக்கு முன்மாதிரிகை காட்டும் பயணத்தை மேற்கொண்டார். பொதுநலனுக்காக, பிறர்வாழ்வுக்காகத் தம்மையே ஒப்படைத்ததனால் துன்பத்திற்கு ஆளான கிறிஸ்துவைத் திரு அவை பின்பற்ற முன் வரவேண்டும்.
இறையாட்சிப் பணியில்
எதிர்நோக்கு...
எதிர்நோக்கு
என்பது மனவுறுதியுடன் பயணித்தல் ஆகும். மனவுறுதி என்பது சமரசம் செய்யாத நிலைப்பாடு என்பது உண்மை. இந்த மனவுறுதியைக் கடவுளின் ஆவியார் நம் ஒவ்வொருவருக்கும் நாம் பெற்ற திருமுழுக்கில் ஏற்கெனவே வழங்கியுள்ளார். திருமுழுக்குடன் நாம் தொடங்கியது ஓர் இலட்சியப் பயணம். இலக்கை நோக்கி நாம் பயணிப்பதில் பல்வேறு சவால்களை நாம் எதிர்கொள்கிறோம். ஆட்சியாளர்கள், அதிகார அமைப்புகள், அரசு அமைப்புகள், பணபலமும் ஆள்பலமும் ஆதிக்க பலமும் கொண்ட சில பல மனிதர்களும் நிறுவன
அமைப்புகளும் இயக்கமாகச் செயல்படும் திரு அவையின் இறையாட்சிப் பயணத்திற்குச் சவால்களாக அமைந்துள்ளன. மனவுறுதி கொண்டு பயணித்த உண்மையான இறைவாக்கினர்கள் சமூக விழுமியங்களை எடுத்துரைத்தது மட்டுமல்ல, சமூக அநீதிகளை இடித்துரைத்தனர். சமரசம் செய்யாமல் பணியாற்றுவதே நம் இறைவாக்குப் பணி என்பதை உணரவேண்டும்.
இறைவாக்குச் சமூகமாய்
பயணிக்க...
இறையாட்சிப்
பயணத்தை நிகழ்த்திய இயேசுவோ அநீதிகளை விதைக்கும் அமைப்புகளையும் அதிகார வர்க்கத்தையும் எதிர்த்து நின்றார். எனவே, அவரின் வாழ்வும் பணியும் நமது பணியாகவும் வாழ்வாகவும் மாற உழைப்பதும் பயணிப்பதும் நம்பிக்கையாளர்களாகிய நம் அனைவரின் கடமையாக மாறுகிறது. இன்று நாமும் பல்வேறு அநீதிகளோடும் அநீதி அமைப்புகளோடும் மிக எளிதாகச் சமரசம் செய்கிறோம். இது நமது எதிர்நோக்குடன் கூடிய இலட்சியப் பயணத்திற்குத் தடையாக அமைந்து விடக் கூடாது. எனவே, மனவுறுதியுடன் தீமைகளை எதிர்த்து நிற்கவும், நன்மைத்தனமான செயல்பாடுகளை ஊக்குவிக்கவும், இறைவாக்குத் திரு அவையாகப் பயணிக்கவும் உறுதியேற்போம்.
மாற்றம் தேடும்
தமிழ்நாடு
திரு
அவை
யூபிலி
2025, திரு அவையின் ஆடம்பரக் கொண்டாட்டங்களில் மற்றொன்றாக மட்டும்
அமைந்துவிடாமல், மறுமலர்ச்சிக்கான, மாற்றத்திற்கான நிகழ்வாக தமிழ்நாடு திரு அவையில் தடம் பதிக்கவேண்டும். தமிழ்நாடு திரு அவை தன்னையே புதுப்பித்துக்கொள்ளத் தயக்கமின்றி, தடைகளைத் தாண்டி முன்வரவேண்டும். அமைப்பு நிலையிலும், நிர்வாக நிலையிலும், பணி நிலையிலும், பங்கேற்பு நிலையிலும் மாற்றத்தின் செயல்பாடுகள் வெளிப்படையான மறுமலர்ச்சி காண வேண்டும். சமநீதி, சமூக நீதி, சமத்துவம் இவற்றின் அடிப்படையில் கட்டியெழுப்பப்படும் இறையாட்சி இயக்கமாக அது உருவாகவேண்டும்.
புதுப்பித்தல்
இன்றி யூபிலி 2025 உண்மையான மகிழ்வின் நிகழ்வாக நிறைவுபெறாது. சமத்துவம் என்பது இலக்கு நோக்கிய தொடர் பயணம் என்பதையும், இயேசுவின் இறையாட்சி இலட்சியமே சமத்துவ சமூகம் படைத்தல் என்பதையும் முன்னிறுத்தி தமிழ்நாடு திரு அவை இலட்சியத்தோடு பயணிக்கவேண்டும். தனிமனித வாழ்வில் கிறிஸ்துவின்மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கையானது அச்சத்தை அகற்றவேண்டும். ஏனெனில், கிறிஸ்துவின் நம்பிக்கையும் செயல்பாடும் நல்லவை என்பதால், எப்போதும் நன்மை செய்யும் ஆர்வம் கொண்டிருக்க வேண்டும். ஆகவே, இயேசு கிறிஸ்துவை மாதிரியாகப் பின்பற்றி நன்மை செய்து வாழ்வோம்.
இறுதியாக,
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்குப் பிறகு புதிய திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நம் திருத்தந்தை லியோ, இந்த யூபிலி ஆண்டின் செயல்பாடுகளைத் தொடர்ந்து நடத்துவதும், திரு அவைக்கு மிகச் சிறப்பான தலைமைத்துவத்தைக் கொடுத்துக் கொண்டிருப்பதும் எதிர்நோக்கின் காணத்தக்க அடையாளமே. திருத்தூதர்கள்
பேதுரு, பவுல் வழிவரும் பணியாளர்களிலும், அன்னை மரியாவின் அர்ப்பண வாழ்வை வாழும் துறவியர்களிலும், நம்பிக்கையாளர் அனைவரின் வாழ்விலும் ‘எதிர்நோக்கு ஒருபோதும் நம்மை ஏமாற்றாது’
எனும் உறுதிப்பாடு உயரட்டும், உண்மையாகட்டும்.
(சென்ற வார தொடர்ச்சி)
திருத்தந்தையும் உரோமைத்
தலைமைச் செயலகமும்
அனைத்து
நம்பிக்கையாளர்களின் கூட்டியக்கம், ஆயர்களின் குழுமப் பண்பு என்பன ஆக்கம்பெற திருத்தந்தையின்
முதன்மை அவசியம். இதனால் “கூட்டியக்கம், குழுமப் பண்பு, முதன்மை என்பன ஒன்றுடன் ஒன்று
தொடர்புடையன” (முஅ 13a). அனைத்துக்
கிறித்தவர்களின் ஒன்றிப்பை வளர்ப்பது திருத்தந்தையின் பணியினுடைய இன்றியமையாத ஒரு கூறு.
திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் வெளியிட்ட ‘அவர்கள் ஒன்றாய் இருக்க’ எனும் சுற்றுமடலில் அவர் விடுத்த அழைப்பிற்குப் பெறப்பட்ட
பதில்களும், கிறித்தவ ஒன்றிப்பு உரையாடல்களில் எட்டப்பட்ட முடிவுகளும் திருத்தந்தையின்
முதன்மை, ஆயர்களின் குழுமப் பண்பு, அனைத்து நம்பிக்கையாளர்களின் கூட்டியக்கம் என்பனவற்றையும்,
அவற்றிற்கு இடையே உள்ள உறவையும் பற்றிய பொதுவான புரிதலை உருவாக்க உதவக்கூடியவை.
உரோமைத்
தலைமைச் செயலகத்தின் சீரமைப்பு, கத்தோலிக்கத் திரு அவையின் கூட்டியக்கப் பயணத்திற்கு
இன்றியமையாதது. அது திருத்தந்தைக்கும் ஆயர்களுக்கும் குறுக்கே நிற்பது அல்ல; மாறாக,
அது இருவரும் தங்களுக்கே உரிய பணிகளை ஆற்ற உதவுவது ஆகும். அது ஒன்றித்த வாழ்வையும்,
நலமான அதிகாரப் பரவலாக்கலையும் வளர்க்க வேண்டும். உரோமைப் பேராயங்கள் தலத்திரு அவைகளுடனும்
தங்களுக்கு இடையிலும் உள்ள உறவை மேம்படுத்துவதும்
அவசியம்.
செயல்படுத்தச் சில பரிந்துரைகள்
1.
பின்வருவனவற்றின் இறையியல் அடிப்படையும் சட்ட வரையறைகளும் தெளிவுபடுத்தப்பட வேண்டும்;
அ. ஆயர் பொறுப்பைப் பகிர்தல் மற்றும் கூட்டுப்பொறுப்பு என்பவற்றின் அளவும் வகைகளும்;
ஆ. ஆயர்களது குழுமப் பண்பிற்கும் அவர்கள் தங்கள் இறையியல் மற்றும் அருள்பணிசார்ந்த
மாற்றுக்கருத்துகளை வெளியிடுதல் என்பனவற்றிற்கும் இடையிலான தொடர்பு; இ. இளையோரையும்
வலுவற்றோரையும் பாதுகாக்கவும், அத்தகையோர் மீதான சீண்டல்கள் பற்றி நீதிமுறையிலான நடவடிக்கைகளை
மேற்கொள்ளவும் மற்றொரு தனிக்குழுவைத் திரு அவைச் சட்டப்படி ஏற்படுத்துவது பொருத்தமானதாக
இருக்கும்.
2.
தணிக்கைப் பண்பாடு என்பது கூட்டுப்பொறுப்பை வளர்க்கவும், முறைகேடுகளைத் தடுக்கவும்
உதவுவது. இது கூட்டியக்கத் திரு அவைக்கு இன்றியமையாதது. இதனால் ஆயர் பணியின் செயலாக்கத்தையும்
குறிப்பாக, அதிகாரத்தை அவர் கையாளும் முறை, மறைமாவட்டச் சொத்துகளைச் சார்ந்த அவரது
பொருளாதார நிர்வாகம், பங்கேற்பு அமைப்புகளின் செயல்பாடு, பல்வகை முறைகேடுகளைத் தடுத்தல்
என்பனவற்றையும் அவ்வப்போது மதிப்பீட்டாய்வு செய்வதற்கான அமைப்புகளும் செயல்முறைகளும்
வரையறுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
3.
ஆயர் பேரவை, மறைமாவட்ட அருள்பணிப் பேரவை என்பனவற்றைக் கட்டாயமாக்குவதும், மறைமாவட்டப்
பங்கேற்பு அமைப்புகள் தங்களது கூட்டுப்பொறுப்பை அதிக நன்முறையில் செயல்படுத்துவதும்
உறுதி செய்யப்படவேண்டும். தேவைப்படின் இது சட்டமுறையானது என ஆக்கப்படலாம்.
4.
ஆயர் பணிக்கான ஆள்களைத் தேர்வு செய்யும் முறையில் திருத்தந்தையின் தூதுவரின் அதிகாரமும்,
ஆயர் பேரவையின் பங்கேற்பும் சமன் செய்யப்படவேண்டும். மேலும், அப்பணிக்கெனத் தேர்வு
செய்யப்படுவதற்கு ஒருவரிடம் இருக்கவேண்டிய
தகுதிக் கூறுகளை மறு ஆய்வு செய்தல் அவசியம்.
அதற்கான கலந்தாய்வில் இன்னும் அதிக எண்ணிக்கையில் பொதுநிலையினரையும் துறவியரையும்
ஈடுபடுத்தும் வகையில் அதை விரிவாக்கம் செய்யவும்வேண்டும்.
5.
சகோதர உறவு, ஒன்றிற்கு ஒன்று ஆதரவு, வெளிப்படைத்தன்மை, பரந்துபட்ட கலந்துரையாடல் என்பனவற்றின்
வழியாகப் பல்வேறு நிலப்பகுதிகளில் உள்ள திரு அவைகளின் குழுமப் பண்பு வெளிப்படுகிறது.
அதனை உறுதிசெய்யும் வகையில் உயர் மறைமாவட்டம்
மற்றும் மாநில அளவிலான அமைப்புகளின் செயல்பாட்டை
மறு ஆய்வு செய்வது, அவற்றை வலுப்படுத்துவது அவசியம்.
6.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் ஆயர்களின் உரோமை வருகை (Ad Limina Visit)
தலத்திரு அவைகளின் ஆயர்களுக்கும் உரோமை ஆயருக்கும் அவருடன் நெருங்கி ஒத்துழைக்கும்
வத்திக்கான் தலைமைச் செயலகத்திற்கும் உள்ள உறவின் உச்ச நிகழ்வாகும். “ஒன்றிப்புறவையும்
குழுமப் பண்பையும் கூட்டியக்கத்தின் உண்மையான செயலாக்கத்தையும் வளர்க்கும் வகையில்
ஒருவர் ஒருவருடனான திறந்த பரிமாற்றத்திற்கு வாய்ப்பாக அது திகழும் நோக்கில், அதன் நடைமுறை
மறு ஆய்வு செய்யப்படவேண்டும்” (முஅ 13g).
7.
உரோமைத் தலைமைச் செயலகப் பேராயங்கள் திரு அவையின் கூட்டியக்கப் பண்பைக் கருத்தில் கொண்டு
ஆயர்களுடன் கலந்துரையாடலை வளர்க்கவேண்டும். சூழமைவுகளின் பன்மைநிலையைக் கவனத்தில் கொண்டு
தலத்திரு அவைகளின் குரல்களை அவை இன்னும் அதிகக் கருத்துடன் கேட்க வேண்டும் (முஅ 13h).
8.
திருத்தந்தையின் பணிக்கு உதவுகின்ற வகையில் கர்தினால்களின் ஆலோசனைக் குழுவின் செயல்பாடு
கூட்டியியக்க உணர்வுடன் வலுவாக்கப்படவேண்டும் (முஅ 13j).
9.
ஆயர் பேரவைகளின் கோட்பாடு மற்றும் விதிமுறை சார்ந்த அதிகாரத்தைத் தெளிவாக வரையறுத்தல்
அவசியம். ஒரே நம்பிக்கையின் உண்மையான படிப்பினையைத் தத்தம் சூழமைவுக்குப் பொருத்தமானதும்
பண்பாட்டுக்கு ஏற்றதுமான முறையிலும் வெளிப்படுத்தும் திருவழிபாடு, மறைக்கல்வி, விதிமுறைகள்,
அருள்பணி இறையியல், அருள்வாழ்வு என்பனவற்றின் வடிவங்களைக் கண்டறிய அவற்றின் குழுமச்
செயல்பாடு உதவ முடியும் (2-ஆம் வத். நற்செய்திப் பணி 22).
10. ஆயர் பேரவைகளால் எடுக்கப்பட்ட முடிவுகளை ஒவ்வோர் ஆயரும் தமது மறைமாவட்டத்தில் நடைமுறைப்படுத்துவது உறுதிசெய்யப்பட வேண்டும்.
(தொடரும்)
‘ஏழைகளுக்கு முன்னுரிமை’ அல்லது ‘ஏழைகள் மட்டில் தனிப்பட்ட அக்கறை’ என்ற சொல்லாடல் கொலம்பியா நாட்டில் உள்ள மெடலினில் (1968), பின்பு மெக்சிகோ நாட்டு ‘புவேப்லா’ நகரில் (1979) நடந்த இலத்தீன் அமெரிக்க ஆயர்கள் பேரவை கூட்டங்களில் பிறந்தது. விடுதலை இறையியலின் மையக் கருத்து இப்பேரவைகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்பு திரு அவைப் படிப்பினையிலும் இது அதிகாரப்பூர்வமாக இடம்பெற்றது.
ஏழைகளுக்கு
முன்னுரிமை என்பது, மற்றவர்களை ஒதுக்குவதல்ல; மாறாக, கடவுளின் இதயத்தில் சமுதாயத்தால் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டவர்களுக்கு ஒரு சிறப்பான இடம் உண்டு என்பதுதான் இதன் பொருள்.
பழைய
ஏற்பாட்டில் கடவுள் ஏழைகளின் கூக்குரலைக் கேட்டு அவர்களை விடுவிப்பவராகத் தம்மை வெளிப்படுத்துகிறார். கடவுளின் இச்செயலே அவரது பெயர்போல ஆனது. “இந்த ஏழை கூவி அழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; எல்லா நெருக்கடியினின்றும் அவர் அவனை விடுவித்துக் காத்தார்”
(திபா 34:6).
ஏழைகளின்
புகலிடம் கடவுள். குறிப்பாக, இறைவாக்கினர்கள் ஆமோஸ், எசாயா வழியாக ஏழைகளுக்கும் பலவீனர்களுக்கும்
எதிராக இழைக்கப்படும் அநீதிகளைக் கடவுள் மிகவே கடிந்து கொள்கிறார். ஏழைகளை ஒடுக்குபவர்கள் கடவுளுக்கு ஏற்புடைய வழிபாடு செய்ய இயலாது என்கிறார்கள் இறைவாக்கினர்கள்.
இயேசு - ஓர்
ஏழை
மெசியா!
கடவுள்
ஏழைகளின் சார்பானவர் என்பது நாசரேத்தூர் மெசியாவில் நிறைவு பெறுகிறது. இயேசு ஏழைகளுக்குச் சார்பானவர் மட்டுமல்லர்; ஏழைகளது வாழ்வைப் பகிர்ந்துகொண்டு, ஏழையாகவே வாழ்ந்தவர்.
இயேசு
மனுவுருவானதில் தம்மை ஏழையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று, மனித உருவில் தோன்றியவர் (பிலிப் 2:7). அவரின் ஏழ்மை ஆழமானது, வேரோட்டமானது. இந்த ஏழ்மையின் வழி தந்தையின் நிபந்தனையற்ற அன்பை அவர் நமக்கு வெளிப்படுத்தினார் (1யோவா 4:9). இவ்வாறு அவரது ஏழ்மையில் நாம் செல்வராகும்படிச் செய்தார் (2கொரி 8:9).
இயேசு
பிறப்பதற்குச் சத்திரத்தில் இடம் கிடைக்கவில்லை (லூக் 2:7). அவரைக் காப்பாற்ற அவரது பெற்றோர் எகிப்துக்கு ஓட வேண்டியதிருந்தது (மத் 2:13-15). நாசரேத்து தொழுகைக் கூடத்தில் தமது பணித்திட்டத்தை அறிவித்தபோதே அவர் புறக்கணிக்கப்பட்டு, ஊருக்கு வெளியே துரத்தப்பட்டார் (லூக்கா 4:14-30).
இயேசு
எளிய கைவினையராகத் தச்சுத் தொழில் செய்தார் (மாற் 6:3). அவர் கோவிலில் அர்ப்பணிக்கப்பட்டபோது, ஏழைகளின் காணிக்கையான இரண்டு மாடப்புறாக்களை அவரின் பெற்றோர் கொடுத்தனர் (லூக் 2:22-24). அவருக்குத் தலைசாய்க்க இடமின்றி, நாடோடிப் போதகராக வாழ்ந்தார் (மத் 8:20; லூக் 9:58).
இறுதியாக,
சமூகத்தால் நிராகரிக்கப்பட்டு, எருசலேம் நகருக்கு வெளியே எல்லாராலும் கைவிடப்பட்ட ஏழையைப்போல, சிலுவையில் அறையப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவ்வாறு இயேசு ஓர் ஏழை மெசியாவாக வாழ்ந்தவர் மட்டுமல்லர், ஏழைகளுக்காக வாழ்ந்த மெசியாவும் கூட. திரு அவை இயேசுவைப் போல (பேறுபெற்ற) ஏழைகளின் திரு அவை!
இன்று
பல ஏழைகள் பிச்சையெடுத்து வாழ நிர்ப்பந்தப்படுத்தப்படுகிறார்கள்.
இது ஒரு சமூக அவமானம். ஏழ்மையும் வியாதியும் பாவத்தின் விளைவு என்பதை இயேசு மறுக்கிறார்.
ஏழைகளுக்குக்
கடவுள் முன்னுரிமை கொடுப்பதை, அவர்களுக்குத் தனிப்பட்ட அக்கறை காட்டுவதைத் திருவிவிலியம் மிகத் தெளிவாகக் எடுத்துரைக்கிறது. ‘ஆனால், ஏன் அநேகர் இதைப் புரிந்துகொள்ளாமல் புறக்கணிக்கிறார்கள்?’ என்ற கேள்வியை எழுப்புகிறார் திருத்தந்தை லியோ.
இணைச்சட்டம்
6:5 என்பது பழைய ஏற்பாட்டு நம்பிக்கை அறிக்கை. இதன் விளக்கத்தை லேவியர் 19:18 பகுதியைக் கொண்டு இயேசு விளக்குகிறார். ‘கடவுள் மீதுள்ள நம்பிக்கை என்பதன் பொருள், அடுத்திருப்பவர் மீது அன்புகூர்வது’ (மாற்கு
12:29-31) என்கிறார்.
இறை-மனித அன்பு என்பதை ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரிக்க முடியாது (Inseparable). ஆனால்,
ஒவ்வொன்றும் தனித்துவமானது (மத் 25:40).
பிறருக்கு
விருந்து கொடுக்கும்போது, கைம்மாறு செய்ய தங்களிடம் ஒன்றுமில்லாத ஏழைகள் உடல் - கால் ஊனமுற்றோர், பார்வையற்றோரை அழைத்தால் விருந்து கொடுப்பவருக்குக் கைம்மாறு கிடைக்கும் (லூக் 14:12-14). இத்தகையவர்களைப் ‘பேறுபெற்றோர்’ என்கிறார்
இயேசு.
மக்கள்
அனைவருக்குமான தீர்ப்பிலும் (மத் 25: 31-46) ‘என் தந்தையின் ஆசி பெற்றவர்களே!’ என இத்தகையவர்களை அரசர்
விளிக்கிறார் (மத் 25:34).
இது
நம் கவனத்திற்குரியது. எந்த விளக்கமும் தேவைப்படாத தெளிவான புரிதல் இது. எந்தப் புனிதமும் இதைத் தவிர்த்துப் புரிந்துகொள்ள முடியாது.
அன்பு
செயலற்ற நம்பிக்கை, செத்த நம்பிக்கை என்கிறார் யாக்கோபு (2:14-17). ஏழைத் தொழிலாளிக்குக் கொடுக்காத கூலி கடவுளை நோக்கிக் கூக்குரலிடுகிறது (யாக் 5:3-5).
‘தேவையில் உழல்வதைக் கண்டு பரிவு காட்டாதவரிடம் கடவுளின் அன்பு எப்படி நிலைத்திருக்க முடியும்?’ எனக் கேட்கிறார் அன்புச் சீடர் யோவான் (1யோவா 3:17).
“முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர்”
(2கொரி 9:7) என்கிறார் பவுல்.
“ஏழைகளுக்கு இரங்கி உதவி செய்கிறவர், ஆண்டவருக்குக் கடன் கொடுக்கிறார். அவர் ஏழைகளுக்குக் கொடுத்ததை ஆண்டவர் திருப்பித் தந்து விடுவார்”
(நீமொ 19:17). “நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்” (லூக்
6:38).
உண்மையிலேயே திருவருகைக் காலம் அருள்மிகு காலம். கிறிஸ்து பிறப்பு விழாவை மிகவும் அர்த்தமுள்ள வகையில் கொண்டாடிட இந்தத் திருவருகைக் காலம் உதவியாக இருக்கிறது. இயேசு கிறிஸ்துவின் வழியாக அருளும் உண்மையும் நமக்கு வழங்கப்பட்டன (யோவா 1:16-17). மேலும், மானிட மகனின் இரண்டாம் வருகையை நமக்கு நினைவுபடுத்துகின்ற காலமாகவும் இருக்கின்றது. ‘வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார்’ என்ற மாபெரும் நிகழ்வைக் கிறிஸ்து பிறப்பு விழாவாகக் கொண்டாட இருக்கிறோம்.
திருவருகைக்
காலத்தின் நான்கு வாரங்களையும் ‘எதிர்நோக்கு, அமைதி, மகிழ்ச்சி, அன்பு’ எனும் கருப்பொருள்களால் அணிசெய்து, இக்காலத்தின் ஆழமான பொருளுக்குத் திரு அவை நம்மை அழைத்துச்செல்கிறது. டிசம்பர் 17-லிருந்து கிறிஸ்து பிறப்பு விழாவின் நவநாள்களைத் தொடங்குகின்றோம். இந்த நவநாள்களிலே இயேசுவின் பிறப்போடு நெருக்கமாக இருக்கின்ற நிகழ்வுகளை நற்செய்தியாகத் திருவிருந்து கொண்டாட்டங்களிலே திரு அவை நமக்கு வழங்குகின்றது.
அன்னை
மரியாவை இந்த நாள்களிலே நினைத்துப் பெருமைப்படுகின்றோம். இயேசுவின் வளர்ப்புத் தந்தை யோசேப்பையும், இறைவனுடைய திருவுளத்தை நிறைவேற்றிய அவருடைய அர்ப்பண வாழ்வையும் நினைவு கூர்கின்றோம். இயேசுவின் வழியாகத் தொடர்ந்து நிகழ்ந்திடும் மீட்பின் வரலாற்றிலே இவர்கள் எவ்வளவு முக்கியமான பங்களித்திருக்கிறார்கள் என்பதை நினைத்து ஆண்டவருக்கு நன்றிகூறி, அவர்களோடு இணைந்து கிறிஸ்துவின் பிறப்பிற்காக நம்மையே தயாரித்துக் கொண்டிருக்கிறோம்.
மீட்பின்
வரலாற்றிலே பெண்களின் பங்களிப்பை இன்னும் குறிப்பாக, கன்னிமை குன்றாத நிலையிலே கடவுளின் தாயாக மரியா வாழ்ந்திட அழைக்கப்பட்டதால் அவரும், அவருடைய துணைவருமான யோசேப்பும் அனுபவித்த அவமானங்கள், அவதூறுகள், வேதனைகள், தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு ஓரங்கட்டப்பட்ட அனுபவங்கள் போன்றவற்றை நினைவுகூரப் பெரும்பாலும் தவறி விடுகின்றோம். இயேசுவின் மனுவுரு எடுத்தலின் இந்த இரண்டு முக்கியச் சவால்களையும் பார்வைகளையும் நாம் சிந்திக்க அழைக்கப்படுகிறோம்.
மீட்பின் வரலாற்றில்
இடம்பெறும்
பெண்கள்
லூக்கா
நற்செய்தியில் இயேசுவினுடைய தலைமுறைப் பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கிறது
(3:22-38). இது முழுக்க ‘ஆண் மையம்’ நிறைந்த ஒன்றாக இருக்கிறது. ஆனால், மத்தேயு நற்செய்தியில் கொடுக்கப்பட்டுள்ள தலைமுறைப் பட்டியலிலே (1:1-16) தாமார், இராகாபு, உரியாவின் மனைவி பத்சேபா, ரூத், மரியா போன்ற ஐந்து பெண்கள் இடம் பெறுகிறார்கள். இவர்களில் தாமாரும் மரியாவும்தான் இஸ்ரயேல் இனத்தைச் சார்ந்தவர்கள். மாறாக, இராகாபு (கனானியப் பெண்), பத்சேபா (இத்தியப் பெண்), ரூத் (மோவாபியப் பெண்) இவர்கள் எல்லாரும் இஸ்ரயேல் இனத்தைச் சாராத பிற இனத்துப் பெண்களாக உள்ளனர். இப்பெண்களும் இந்தத் தலைமுறைப் பட்டியலில் இடம்பெற்றிருப்பது, வரவிருக்கின்ற மீட்பராகிய இயேசு எல்லாருக்கும் மீட்பர் என்பதை அறிவிப்பதாக இருக்கின்றது.
இயேசு
யூதர்களுக்காக மட்டும் அனுப்பப்பட்டவர் அல்லர்; அவருடைய பிறப்பானது எல்லா மக்களையும் இனங்களையும் நாடுகளையும் அரவணைக்கின்ற பிறப்பாக அமையப்போகின்றது என்பதற்கு முன்னடையாளமே இஸ்ரயேல் அல்லாத பெண்களும் இயேசுவின் தலைமுறைப் பட்டியலில் இடம் பெற்றிருப்பது.
தாழ்த்தப்பட்டோரை
உயர்த்திடும்
இயேசுவின்
தலைமுறைப்
பட்டியல்
மத்தேயுவின்
தலைமுறைப் பட்டியலிலே பதிவு செய்யப்பட்டுள்ள ஐந்து பெண்களும் இஸ்ரயேல் சமுதாயத்திலே தரக்குறைவாகப் பார்க்கப்பட்டவர்கள்.
• யூதாவின் மருமகளான தாமார், யூதாவின் வம்சாவளியில் வாழ்வதற்குத் தனக்கு உரிமை இருக்கின்றது என்பதை நிரூபிக்க தன் மாமனார் யூதாவோடு உடலுறவு கொண்டு குழந்தை
பெற்றெடுத்தார்.
• இராகாபு எனும் பெண்மணி விலைமாதாக இருந்தார். ஆனால், எரிக்கோவை வேவுபார்க்கச் சென்ற இஸ்ரயேலரை இவர் காப்பாற்றியதால் இன்று இஸ்ரயேல் சமுதாயத்திலும் இறைவனால்
போற்றப்படுகின்ற பெண்மணியாகின்றார்.
• பத்சேபா எனும் இத்திய இனப்பெண் தாவீதின் காமவேட்கைக்கு முதலில் பலியானாலும், பிறகு முறையாகத் தாவீது அரசனின் மனைவியாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர். சாலமோனைப் பெற்றெடுக்கும் பேறுபெறுகின்றார்.
• மோவாபு நாட்டைச் சேர்ந்த ரூத் என்பவர் இஸ்ரயேலரான போவாசின் மனைவியாகி இஸ்ரயேல் குடிமகளாக மாறுகின்றார்.
• திருமணம் ஆவதற்கு முன்பே கருவுற்றிருந்ததால் மரியாவும் மரியாதை குறைவாகப் பார்க்கப்பட்ட பெண்மணி ஆவார்.
இப்படிப்பட்டப்
பெண்மணிகளை மூதாதையர் தலைமுறைப் பட்டியலிலே இணைத்திருப்பது யூதச் சமுதாயத்திற்கு வியப்பாகவும் இடறலாகவும் இருந்திருக்கும். ஆனால், அடக்குமுறைப் பார்வையோடும் அவமானப்படுத்தும் பார்வையோடும் செயல்படும் தூய்மை-தீட்டு எனும் கருத்தியலை உள்வாங்கிய யூதச் சமுதாயத்திற்கு இது ஒரு சவால்.
மீட்பின்
வரலாற்றிலே பெண்களும் குறிப்பாக, ஒடுக்கப்பட்ட பெண்களும் முன்னிலைப்படுத்தப்படுவது, எல்லாரும் சமத்துவத்திலும் மாண்பிலும் சகோதரத்துவத்திலும் வாழ்ந்திட அழைக்கப்பட்ட சமுதாயத்தினர் என்பதை உறுதி செய்வதாக உள்ளது.
அன்னை மரியா
அனுபவித்த
அவமானம்
இஸ்ரயேலின்
சமய-பண்பாட்டு பின்புலத்தில் திருமண ஒப்பந்தம் என்பது சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. ஏன், திருமணத்திற்கு இணையாகவே பார்க்கப்பட்டது. இவ்வாறு திருமண ஒப்பந்தத்திற்கு உள்ளாகி இருக்கும் ஒரு பெண் திருமணத்திற்கு முன்பாகவே அவருக்கு ஒப்பந்தமாக இருந்த ஒருவரோடோ அல்லது வேறு வழியிலோ அவர் கருவுற்றிருந்தால் அது விபச்சாரமாகப் பார்க்கப்பட்டது. இதற்காக அப்பெண்ணைக் கல்லால் எறிந்து கொல்லக்கூடிய ஒழுங்குமுறையையும் இஸ்ரயேல் சமுதாயம் பின்பற்றியது.
மரியா
எலிசபெத்தோடு மூன்று மாதங்கள் தங்கி விட்டு வீடு திரும்பியதாக லூக்கா நற்செய்தியாளர் பதிவு செய்கிறார் (1:56). தூய ஆவியாரின் வல்லமையால் கடவுளின் தாயாகும் நற்செய்தியைக் கபிரியேல் தூதர் மரியாவுக்கு அறிவித்த நாளிலிருந்தே இயேசுவைக் கருத்தாங்கினார்.
திருமணத்திற்கு
முன்பே மரியா கருவுற்று இருப்பதைக் கண்ட நாசரேத் ஊர் மக்கள் கட்டாயம் அன்னை மரியாவை மிகவும் கேவலமாகப் பார்த்து, அவர்மேல் அவதூறு கூறி... ஏன் அவரைக் கல்லால் எரிந்து கொல்வதற்கும் முயன்றிருப்பார்கள். அவதூறு, அவமானம், மிகவும் தரக்குறைவாகப் பார்த்த பார்வைகள், சமூக ஒதுக்குமுறை, அநியாயமான குற்றச்சாட்டு போன்றவற்றால் அன்னை மரியா சொல்லொண்ணா வேதனையையும் துயரத்தையும் அனுபவித்திருப்பார். ஆனால், கடவுளுடைய திருவுளத்தை நிறைவேற்றுவதற்காக இவற்றையெல்லாம் மிகவும் துணிவோடு அன்னை மரியா ஏற்றுக்கொண்டார். மரியா, என்று இயேசுவைத் தன்னுடைய கருவறையில் சுமக்கத் தொடங்கினாரோ, அன்றிலிருந்து இயேசுவோடு இணைந்த அவரது கல்வாரிப் பயணமும் தொடங்கிவிட்டது.
மரியா-யோசேப்பின்
கல்வாரிப்
பயணம்
திருமணத்திற்கு
முன்பே கருவுற்றிருக்கும் ஒரு பெண்ணைத் தன்னுடைய மனைவியாக ஏற்றுக்கொள்ள முன்வந்த யோசேப்புவையும் அந்த நாசரேத்தூரார் கட்டாயம் மிகவும் கேவலமாகப் பார்த்து, அவமானப்படுத்தி அவதூறு கூறியிருப்பார்கள். ஆனால், யோசேப்பும் இயேசுவினுடைய வளர்ப்புத் தந்தையாகத் தான் தேர்ந்தெடுக்கப்பட்டதை நன்றியோடு நினைவுகூர்ந்து, கடவுளுடைய திருவுளத்தை நிறைவேற்றிட மரியாவை மனைவியாக ஏற்றுக்கொள்வதோடு மட்டுமல்லாது, அவரை அன்போடு பாதுகாத்திட, வழிநடத்திட முன்வருகிறார்.
கடவுளின்
மகனுக்கு அன்னையாக மாறிட அழைப்பு வந்த நேரத்திலிருந்தும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாக வாழ அழைக்கப்பட்ட நேரத்திலிருந்தும் இயேசுவினுடைய சிலுவை வழியிலே நடக்க இருவரும் துணிந்திருக்கிறார்கள். துன்புறும் மெசியாவாக வாழப்போகின்ற இயேசுவோடு தங்களுடைய சிலுவைப் பயணத்தையும் முன்னெடுத்திட துணிச்சலோடும் நம்பிக்கையோடும் முன்வருகிறார்கள் மரியாவும் யோசேப்பும்.
நமது கவனத்தை
ஈர்க்க
வேண்டிய
திருப்பார்வைகள்
மீட்புத்
திட்டத்திலே பெண்களுக்கும் பங்கேற்பு உண்டு என்பதையும், கடவுள் மகனின் தாயாக வாழ அழைக்கப்பட்டதால், இயேசுவின் வளர்ப்புத் தந்தையாக வாழ தேர்ந்துகொள்ளப்பட்டதால் மரியாவும் யோசேப்பும் வேதனைகளையும் அவதூறுகளையும் அவமானங்களையும் சமூக ஒதுக்குமுறைகளையும் சந்தித்தனர் என்னும் இந்த இரண்டு பார்வைகளுமே இயேசுவின் மனுவுருவெடுத்தலில் இரண்டறக் கலந்த பார்வைகளாக உள்ளன.
• திருவருகைக் காலத்தில் இந்த இரண்டு பார்வைகளிலும் நாம் வளர்ந்தோமென்றால், கிறிஸ்து பிறப்பு விழா கொண்டாட்டமானது நாம் எல்லாரும் எதிர்நோக்கோடும் நம்பிக்கையிலும் துணிவோடும் நம் அன்னை மரியா-புனித யோசேப்பு இவர்களோடு பயணிக்க உதவியாக இருக்கும். கருவுற்றதிலிருந்து பலவகையான துன்பங்களையும் வேதனைகளையும்... ஏன் ஒருசில சமயங்களில் சமூக அவமான முத்திரை பதிக்கப்பட்ட நிலையில் வாழ்கின்ற பெண்களையும் மதிக்க நாம் அழைக்கப்படுகின்றோம்.
• இன்னும் குறிப்பாக, பேறுகால வேதனையுற்று ஓர் உயிரை இந்த உலகிற்குக் கொண்டுவரும் ஒவ்வொரு பெண்மணியையும் நாம் மதிப்போடும் மாண்போடும் நடத்துவோம்.
• ஒவ்வொரு கணவரும் தன்னுடைய மனைவியை ஏற்றுக்கொண்டு, மதிப்போடு நடத்தி, அவரோடு நம்பிக்கையுடன் பயணிக்க அன்னை மரியாவும், புனித யோசேப்பும் வழிகாட்டிகளாக இருக்கிறார்கள்.
• நம் வாழ்வில் அன்றாடம் சந்திக்கின்ற துன்பங்களையும் துயரங்களையும் போராட்டங்களையும் சிக்கல்களையும் மனுவுரு எடுத்த இயேசுவின் பயணத்தோடு இணைத்துக் கொண்டு, துணிவும் நம்பிக்கையும் நிறைந்த மரியாவோடும் யோசேப்போடும் தொடர்ந்து பயணிக்க அழைக்கப்படுகிறோம்.
இறுதியாக,
கடவுளுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதில் துன்பத்தைக் கண்ட மரியா-யோசேப்பு இவர்களுடைய பரிந்து பேசுதலிலே இந்த கிறிஸ்து பிறப்பு விழாவை அர்த்தமுள்ள வகையில் கொண்டாடிட தொடர்ந்து தயாரிப்போம்.