இறைவார்த்தையின் ஒளி
புனித
பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்தில் குறிப்பிடுவதுபோல, “நீ கற்று, உறுதியாய்
அறிந்தவற்றில் நிலைத்து நில்”
(2திமொ 3:14). நம்பிக்கை என்பது வெறும் பாரம்பரியம் மட்டுமல்ல, அது ஒவ்வொரு தலைமுறையிலும் புதிய வாழ்வு பெறுவதாகும். அண்மையில் திருத்தந்தை அவர்கள் வழங்கிய புதன் மறைக் கல்வி உரையில், இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் ‘இறைவெளிப்பாடு’ (Dei Verbum) ஆவணத்தின் வெளிச்சத்தில், கடவுள் இன்றும் மனித மொழியில் நம்மோடு பேசிக்கொண்டிருக்கிறார் என்பதை ஆழமாக வலியுறுத்தினார்.
1. மனித மொழியில் ஒலிக்கும்
கடவுளின்
வார்த்தை
திருத்தந்தை
வலியுறுத்திய மிக முக்கியமான உண்மை: மறைநூல் மனித மொழியில் எழுதப்பட்டுள்ளது. கடவுள் மனிதர்களிடம் பேசுவதற்காக, நம்முடைய பலவீனமான மொழியையே கருவியாகக் கொண்டார். Dei Verbum (எண் 13) கூறுவதுபோல, “மனித மொழியில் வெளிப்படுத்தப்பட்ட கடவுளின் வார்த்தை, மனிதர் பேசுவதைப் போல ஆனது.” இது இறைமகன் இயேசு மனித உருவெடுத்த (Incarnation) மறைபொருளுக்கு
நிகரானது.
திருவிவிலியம்
என்பது வெறும் கடந்த கால வரலாறு அல்ல; அது ஒரு வாழும் கடிதம். நாம் திருவிவிலியத்தை வாசிக்கும்போது, எழுத்துகளுக்குப் பின்னால் இருக்கும் தூய ஆவியானவரின் குரலைத் தேடவேண்டும். “ஆவி இல்லாமல் எழுத்து கொல்லும்”
(2கொரி 3:6) என்ற பவுலின் எச்சரிக்கை, நாம் மறைநூலை இதயத்தால் வாசிக்கவேண்டும் என்பதை நினைவூட்டுகிறது.
2. மீட்புக்கு வழிநடத்தும் ஞானம்
“திருமறைநூல் இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையால் உன்னை மீட்புக்கு வழிநடத்தும் ஞானத்தை அளிக்க வல்லது”
(2திமொ 3:15). நற்செய்தி என்பது ஒரு தத்துவப் பாடம் அல்ல; அது ஒரு நபர் - அவரே இயேசு கிறிஸ்து. நாம் திருவிவிலியத்தைப் பயிற்றுவிப்பதற்கும் கண்டிப்பதற்கும் சீராக்குவதற்கும் பயன்படுத்துகிறோம் (2திமொ 3:16). ஆனால், இவை அனைத்தும் ‘அன்பால்’ செய்யப்பட வேண்டும். புனித அகுஸ்தினார் கூறுவதுபோல, “அன்பைக் கட்டியெழுப்பாத மறைநூல் விளக்கம் இன்னும் முழுமையல்ல.”
இன்றும்
நமது சூழலில், நாம் திருவிவிலியத்தை வாசிக்கும்போது, அது நம்மைச் சுற்றியுள்ள அநீதிகளையும் ஏழ்மையையும் கண்டுகொள்ளாமல் இருக்க அனுமதிக்காது. உண்மையான ஞானம் என்பது இறைவார்த்தையைச் செயலாக மாற்றுவதே.
3. இறை ஏவுதலும் மனித
ஆசிரியர்களும்:
ஒரு
சமநிலை
திரு
அவை மறைநூலின் முதன்மை ஆசிரியர் கடவுள் என்பதை உறுதியாக நம்புகிறது. அதே நேரத்தில், மனித ஆசிரியர்களும் உண்மையான கருவியாகச் செயல்பட்டனர். புனித தாமஸ் அக்குவினாஸ் கூறுவதுபோல, “அருள் இயல்பை அழிக்காது; அதனை நிறைவு செய்கிறது.” கடவுள் மனித ஆசிரியர்களின் அறிவையும் திறமையையும் பயன்படுத்தினார். எனவே, திருவிவிலியத்தை விளக்கும் போது அதன் வரலாற்றுச் சூழல், இலக்கிய வடிவங் கள் ஆகியவற்றை நாம் கவனிக்கவேண்டும். ஆனால், அதை வெறும் ஒரு வரலாற்று நூலாக மட்டும் சுருக்கிவிடக் கூடாது. அது இன்றும் நம் வாழ்வின் சவால்களுக்குப் பதில் அளிக்கும் உயிருள்ள வார்த்தை.
4. இன்றைய விசுவாசிகளின்
மனசாட்சியும்
சமூகப்
பொறுப்பும்
கத்தோலிக்கத்
திரு அவையின் மறைக்கல்வித் தொகுப்பு (CCC 2242) மற்றும்
திருத்தந்தையின் போதனைகளின்படி, ஒரு நம்பிக்கையாளர் தனது மனசாட்சிக்கு விரோதமான, நற்செய்தி விழுமியங்களுக்குப் புறம்பான அதிகாரங்களுக்குப் பணியத் தேவையில்லை. தமிழ்நாட்டில் நிலவும் ஊழல், போதைப்பொருள் கலாச்சாரம் மற்றும் இயற்கை வளங்கள் சுரண்டப்படுதல் போன்றவற்றுக்கு எதிராக இறைவார்த்தை நம்மை எச்சரிக்கிறது. “மறைநூல் அனைத்தையும் கடவுள் தூண்டினார்... அது நேர்மையாக வாழப் பயிற்றுவிப்பதற்குப் பயனுள்ளது”
(2திமொ 3:16). நேர்மையான வாழ்வு என்பது தனிப்பட்ட தூய்மை மட்டுமல்ல; சமூக நீதியும் கலந்ததாகும்.
5. வார்த்தையால் ஊட்டமளிக்கும்
கடவுள்
திருத்தந்தை
தனது உரையை ஒரு நம்பிக்கையுடன் நிறைவு செய்தார்: “கடவுள் ஒருபோதும் தனது மக்களுக்கு வார்த்தையின் ஊட்டச்சத்தை வழங்கத் தவறுவதில்லை. மனிதன் அப்பத்தால் மட்டும் அல்ல; கடவுளின் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையாலும் வாழ்கிறான்” (மத்
4:4).
தவக்காலத்தின்
இந்தச் சூழலில், நாம் வெறும் உணவைத் தவிர்ப்பதோடு நிறுத்தாமல், இறைவார்த்தையை உணவாகக் கொண்டு உருமாற்றம் அடைவோம். இயேசுவின் மீதுள்ள நம்பிக்கையில் வேரூன்றி, சமூகத்தில் ‘மண்ணிற்கு உப்பாகவும், உலகிற்கு ஒளியாகவும்’ திகழ்வோம்.
இதயத்தில் ஒரு
கேள்வி:
“இந்தத் தவக் காலத்தில், இறைவார்த்தை என் வாழ்வில் எந்த மாற்றத்தைக் கொண்டு வரப்போகிறது? நான் வெறும் வாசகனா? வார்த்தையின்படி வாழ்பவனா?
“மரியா எலிசபெத்தைச் சந்தித்தது உண்மையில் இயேசுவின் நற்செய்தி அறிவிப்புப் பணிக்கான தொடக்கமாகும். அவரது தாய்மையின் தொடக்கத்திலிருந்தே மகனின் மீட்புப் பணியில் ஒத்துழைப்பதில் கிறிஸ்துவின் ஒளி மற்றும் மகிழ்ச்சியை எங்கும் வாழ்கின்ற மக்களுக்கும் கொண்டு செல்பவர்களுக்கும் ஒரு முன்மாதிரியாகின்றார்.”
1. மரியா
எலிசபெத்தைச் சந்திக்கின்ற நிகழ்வில் கிறிஸ்து பிறப்பின் அருளானது மரியாவை நிரப்பிய பிறகு, எலிசபெத்தின் இல்லத்தையும் நிரப்பியது என்று காட்டுகின்றது. அவரது தாயின் கருவில் சுமக்கப்பட்ட மனுக்குல மீட்பர், உலகிற்கு அவர் வந்த தன் தொடக்கத்திலிருந்தே அவரை வெளிப்படுத்தி தூய ஆவியைப் பொழிகின்றார்.
மரியா
யூதேயாவிற்குப் புறப்பட்டுச் சென்றதை விவரிக்கையில் நற்செய்தியாளர் ‘எழுதல்’ அல்லது ‘புறப்படுதல்’ என்று
பொருள்படுகின்ற ‘anístemi’ என்ற கிரேக்க வினைச்சொல்லைப் பயன்படுத்துகிறார். இந்த வினைச்சொல்லானது இயேசுவின் உயிர்ப்பை (மாற் 8:31; 9:9,31; லூக் 24:7,46) அல்லது ஆன்மிக முயற்சியைக் குறிக்கின்ற உடல்சார் செயல்களைக் (லூக் 5:27-28; 15:18,20) குறிப்பதற்கும், நற்செய்திகளில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதைக் கருத்தில் கொண்டு நற்செய்தியாளர் லூக்கா, தூய ஆவியாரின் உந்துதலின் கீழ் உலகத்திற்கு அதன் மீட்பரைக் கொடுப்பதற்காக மரியாவைச் செயல்புரியத் தூண்டிய உறுதியானதோர் ஆர்வத்தைக் கோடிட்டுக்காட்ட விரும்பி இந்தச் சொற்றொடரைப் பயன்படுத்துகின்றார் என்பதை நாம் யூகிக்க முடியும்.
மரியா எலிசபெத்தைச்
சந்தித்தது
மகிழ்ச்சிமிக்கதொரு
மீட்பின்
நிகழ்வாகும்
2. லூக்கா
நற்செய்தியானது மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு ‘விரைந்து சென்றார்’
என்று கூறுகின்றது (லூக் 1:39). லூக்கா நற்செய்தியின் சூழலில் ‘மலைநாட்டிலுள்ள’ என்ற
குறிப்பும் கூட, இது எசாயா புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட நற்செய்திகளின் தூதுவரை நினைவிற்குக் கொண்டுவர
அழைப்பதால், ஒரு சாதாரண இட அமைப்பு விவரக்
குறிப்பு (topogrphical indication) என்பதையும் தாண்டி, அதற்கு மேலானதொன்றாகத் தோன்றுகின்றது: “நற்செய்தியை அறிவிக்கவும், நல் வாழ்வைப் பலப்படுத்தவும், நலம்தரும் செய்தியை உரைக்கவும், விடுதலையைப் பறைசாற்றவும் சீயோனை நோக்கி, ‘உன் கடவுள் அரசாள்கின்றார்’ என்று
கூறவும் வருவோரின் பாதங்கள் மலைகள் மேல் எத்துணை அழகாய் இருக்கின்றன” (எசா
52:7).
நற்செய்தி
அறிவிப்பில் இந்த இறைவாக்கு ஏடானது நிறைவேறியதைக் கண்டுகொண்ட புனித பவுலடியாரைப் போன்று, புனித லூக்காவும் மரியாவின் இறைமகனது மறைப்பயணத்தைத் தொடங்கி வைத்து நற்செய்தியைப் பரப்புகின்ற முதல் நற்செய்தியாளராக மரியாவைக் காண்பதற்கு நம்மை அழைப்பதாகத் தோன்றுகின்றது.
இறுதியாக,
கன்னி மரியாவின் பயணத்தின் திசையானது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கிறது. அதாவது, இயேசுவின் மறைப்பணியைப் போன்றே இதுவும் கலிலேயாவிலிருந்து யூதேயாவை நோக்கியதொரு பயணமாக இருக்கின்றது (ஒப்பிடுக. 9:51).
உண்மையில்,
மரியா எலிசபெத்தைச் சந்தித்தது இயேசுவின் பணிக்கானதொரு தொடக்கமாக இருந்தது. அவரது தாய்மையின் தொடக்கத்திலிருந்தே மகனது மீட்புப் பணியில் பங்கெடுப்பதில், அவர் திரு அவையில் ஒவ்வொரு காலத்தின் மற்றும் இடத்தின் மக்களுக்கும் கிறிஸ்துவின் ஒளி மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டு செல்ல குறிக்கப்பட்டுள்ளோருக்கு ஒரு முன்மாதிரியாகின்றார்.
3. மரியா
எலிசபெத்தைச் சந்திக்கும் நிகழ்வானது குடும்ப உணர்வின் இயல்பான உணர்ச்சிகளுக்கு அப்பால் செல்கின்ற மகிழ்ச்சியான மீட்பு நிகழ்வின் தன்மையைக் கொண்டுள்ளது. அவநம்பிக்கையின் குழப்பமானது சக்கரியாவின் பேச முடியாத தன்மையில் வெளிப்படுத்தப்படுவதாகத் தோன்றுகையில், மரியா அவரது உயிரோட்டமான மற்றும் உடனடியான நம்பிக்கையின் மகிழ்வோடு இவ்வாறு ஆர்ப்பரிக்கின்றார்: “அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார்” (லூக்
1:40).
தூய
லூக்கா, “மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது, அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று” (லூக்
1:41) என்று விவரிக்கின்றார். மரியாவின் வாழ்த்தொலியானது எலிசபெத்தின் மகன் மகிழ்ச்சியினால் துள்ளக் காரணமாயிற்று. மரியாவின் செயலால், எலிசபெத்தின் இல்லத்தில் இயேசுவின் வருகை, பழைய ஏற்பாடு மெசியாவின் உடனிருத்தலின் அடையாளமாக முன்னறிவிக்கின்ற அந்த மகிழ்ச்சியை, இன்னும் பிறக்காத அந்த இறைவாக்கினர் (திருமுழுக்கு யோவான்) கொண்டு வந்துள்ளது என்றும் பொருள் கொள்ளலாம்.
மரியாவின்
வாழ்த்தில், மீட்பின் மகிழ்ச்சியானது எலிசபெத்திற்கும் வருகின்றது. “எலிசபெத்து தூய ஆவியாரால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். அப்போது அவர் உரத்த குரலில், ‘பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே!” (லூக் 1:41-42) என்றுரைத்தார். அச்சந்திப்பின்பொழுது
இறையொளியால் எலிசபெத்து மரியாவின் மகத்துவத்தைப் புரிந்துகொள்கின்றார். பழைய ஏற்பாட்டில் மரியாவை முன் குறித்து உணர்த்திய எஸ்தர் மற்றும் யூதித் இவ்விருவரைவிட, அவரது வயிற்றின் கனியாகிய இயேசு என்னும் மெசியாவின் பொருட்டு அவர் பெண்களுக்குள் பேறுபெற்றவராக இருக்கின்றார்.
4. உரத்த
குரலில் எழுப்பப்பட்ட எலிசபெத்தின் வியப்பொலி (exclamation) இன்றும் நம்பிக்கையுள்ளோரின் உதடுகளால் செபத்தில் மீண்டும் மீண்டும் மிகவும் உயர்ந்தவரான அந்த இறைவனது மகனின் தாயில் நிறைவேற்றப்பட்ட அரும்பெரும் செயல்களுக்காகத் திரு அவையின் புகழ்பாடலாக ‘அருள்நிறை மரியே’ என்று தொடர்ந்து ஒலிக்கக் கூடிய, உண்மையான ஓர் ஆன்மிக ஆர்வத்தைக் காட்டுகின்றது.
‘பெண்களுக்குள் பேறுபெற்றவர்’ என்று
அவரை அழைப்பதில், எலிசபெத்து மரியாவின் நிறைவளத்திற்கான (blessedness) காரணமாக அவரது நம்பிக்கையைச் சுட்டிக்காட்டுகின்றார்: “ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்” (லூக்
1:45). இவ்வாறு, மரியாவின் பெருமையும் மகிழ்ச்சியும் அவர் ‘நம்பிக்கை கொண்டவர்’
என்ற உண்மையிலிருந்து எழுகின்றன.
மரியாவின்
தனித் தகுதியினிமித்தம், அவரது சந்திப்பின் பெருமையானது எத்தகையது என்பதை எலிசபெத்தும் புரிந்துகொள்கின்றார்: “என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?”
(லூக் 1:43). ‘என் ஆண்டவர்’ என்ற சொல்லாடல் வழியாக எலிசபெத்து அரசருக்குரிய மற்றும் மெசியாவிற்குரிய மாண்பை மரியாவின் மகனில் கண்டுகொள்கின்றார். பழைய ஏற்பாட்டில் இந்தச் சொல்லாடலானது உண்மையில் அரசனை அழைப்பதற்கு (ஒப்பிடுக. 1அர 1:13,20,21) மேலும், மெசியாவாகிய அரசரை அழைப்பதற்குப் (திபா 10:1) பயன்படுத்தப்பட்டது. கபிரியேல் தூதர் இயேசுவைப் பற்றிக் கூறியது: “அவர் பெரியவராயிருப்பார்; உன்னதக் கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார்”
(லூக் 1:32). ‘ஆவியானவரால் நிரப்பப்பட்டு’ எலிசபெத்தும்
அதே உள்ளுணர்வைப் (insight) பெற்றிருக்கிறார். இவ்வாறு, ஆழ்நிலை புலனுணர்வின் அடிப்படையில் (transcendent sense) இந்தச் சிறப்புப்
பட்டமானது எவ்வாறு புரிந்துகொள்ளப்படவேண்டும் என்பதைக் கிறிஸ்துவின் பாஸ்கா மகிழ்ச்சியானது வெளிப்படுத்துகின்றது (ஒப்பிடுக. யோவா 20:28; திப 2:34-36).
தெய்வீக மீட்பின்
அனைத்துப்
பணியிலும்
மரியா
உடனிருக்கின்றார்
ஆச்சரியத்துடன்
வியந்து பாராட்டுகிற எலிசபெத்து, கன்னியின் உடனிருப்பானது ஒவ்வொரு நம்பிக்கையாளரின் வாழ்க்கைக்கும் ஒரு பரிசாகக் கொண்டுவரும் அனைத்தையும் பாராட்ட நம்மை அழைக்கிறார். மரியாவின் சந்திப்பில், தூய ஆவியாரைப் பொழியும் கிறிஸ்துவைத் திருமுழுக்கு யோவானின் தாயிடம் அவர் கொண்டுவருகிறார். இந்த இடைமீட்பாளர் பங்கானது (role of mediatrix) எலிசபெத்தின் வார்த்தைகளினால் கொண்டு வரப்படுகின்றது: “உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று” (லூக்
1:44). தூய ஆவியாரின் கொடையால், மரியாவின் உடனிருப்பானது தூய ஆவியாரின் வருகைக்கான தொடக்கமாகப் (prelude to Pentecost)
பயன்படுகிறது. இவ்வாறு, மரியாவின் பங்கானது இயேசுவின் பிறப்பில் தொடங்கிய ஒத்துழைப்பை உறுதிசெய்து, இறை மீட்பின் ஒட்டுமொத்த செயலிலும் வெளிப்படுத்தப்படுவது முன்பே தீர்மானிக்கப்படுகிறது.
மூலம்:
John Paul II, Visitation is prelude to Jesus’ mission, in
«L’Osservatore Romano», Weekly Edition in English, 9 October 1996, p.11.
பாஸ்கா காலத்தினுடைய நான்காம் ஞாயிறு ‘நல்லாயன் ஞாயிறு’ என்று அழைக்கப்படுகின்றது. இவ்வாண்டு ஏப்ரல் 26, 2026 அன்று இந்தத் தினம் உலக இறை அழைத்தல் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. பல்வேறு சவால்கள் மத்தியில் வாழ்கின்ற திருநிலையினர், அழைத்தல் வாழ்வில் அனுபவிக்கும் நெருக்கடித் தருணங்களை எதிர்கொள்ள ஆற்றல் பெறுவதற்காக இறை வேண்டல் செய்யவும் ஏப்ரல் (2026) மாதத் திருத்தந்தையின் கருத்து நமக்கு அழைப்பு விடுக்கின்றது. இப்பின்னணியில் கடவுளின் இலவசக் கொடையான இறை அழைத்தலின் அகத்தைக் கண்டறிவது, ஆழ்ந்து தியானிப்பது அவசியமான ஒன்றாக இருக்கிறது.
1. ஆண்டவரின் சீடரே அழகானவர்
‘நல்ல ஆயன் நானே’ என்று கூறிய இயேசுவைப் பின்பற்றும்போது நம் வாழ்வு அழகாகிறது. மேய்ப்பரின் பார்வையோடு நம் பார்வையை இணைத்து, அவருக்குச் செவிசாய்த்து நடந்தால் மட்டுமே அழகின் பாதையில் பயணிக்க முடியும். உண்மையில் அழகானவர் யார் என்றால், இயேசுவின் வழியைப் பின்பற்றும் சீடர்தாம்!
இறையியலாளர்
பாவெல் பிளாரன்ஸ் எழுதியது போல, துறவறம் வெறுமனே ’நல்ல’ நபரை உருவாக்குவதில்லை; மாறாக, ஓர் ‘அழகான’ நபரை உருவாக்குகிறது. அந்த அழகு கிறிஸ்துவின் வாழ்வில் இருந்து வெளிப்படும் வெளிச்சமான ஆன்மிக அழகாகும். இப்பின்னணியில் கிறித்தவ அழைப்பு என்பது இயேசுவின் வாழ்வில் பங்கேற்பதும், அவர் பணியில் பங்குகொள்வதுமாக அமைகிறது. புனித அகுஸ்தினார் தனது ஒப்புரவு அறிக்கையில் தனது இளமையின் பாவங்களை அறிக்கையிட்டாலும், கடவுளை ‘எனது மிக ஆழமான பகுதியை விடவும் ஆழமானவர்’
என்று குறிப்பிடுகிறார். சுய அறிவைவிட மேலாக, இருளில் தன்னை வழிநடத்தும் தெய்வீக ஒளியின் அழகைப் புனித அகுஸ்தினார் கண்டறிகிறார். அழைத்தலின் அகவாழ்வைப் பேணிக்காப்பதுதான் கிறிஸ்துவைச் சந்திக்கும் தளம் என்கிறார். இந்த உறவு இறை வேண்டலையும் அமைதியையும் அடிப்படையாகக் கொண்டது. இந்தப் பயணம் அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்த சாகசப் பயணம். இங்குதான் கடவுளின் அழகையும் நன்மைத்தனத்தையும் நாம் அனுபவிக்கின்றோம்.
குடும்பங்களிலும்
பங்குத்தளங்களிலும் அழைத்தல் வாழ்வு ஆழப்படவேண்டும். நமது சூழல்கள் நம்பிக்கையால் ஒளியூட்டப்பட்டு, இடைவிடா இறைவேண்டலில் நிலைநிறுத்தப்பட்டு, சகோதரத்துவத் தோழமையால் செழுமைப்படுத்தப்படும் பொழுது கடவுளின் அழைப்பு மலர்ந்து, முதிர்ச்சி அடைந்து, தனி நபர்களுக்கும் உலகுக்கும் மகிழ்ச்சியான மீட்பின் பாதையாக அது மாறுகிறது.
2. இறையன்பின் விழிப்புணர்வு
அழைப்பு
என்பது இறையன்பைப் பற்றிய விழிப்புணர்வே ஆகும். “நம் தலைமுடி எல்லாம் எண்ணப்பட்டு இருக்கின்றன” (மத்
10:30). அக்கறையாய் காக்கும் இறையன்பை இது வெளிப்படுத்துகிறது. இறைவேண்டல், இறைக்குரலுக்குச் செவிசாய்ப்பது, அருளடையாளங்கள், திரு அவையின் வாழ்வு முறை, அறச்செயல்கள் மூலம் கடவுளை அறிய அழைக்கப்படுகின்றோம். இரவில் எதிர்பாராத விதமாக ஆண்டவரின் குரலைக் கேட்டு ஏலியின் உதவியுடன் அதை அடையாளம் காண கற்றுக்கொண்ட இளம் சாமுவேலைப் போல, நாமும் இறைக்குரலைக் கேட்க அக அமைதிக்கான ஓர்
இடத்தைக் கண்டறியவேண்டும். இந்தச் சந்திப்பு வாழ்வை மாற்றும் தனிப்பட்ட சந்திப்பாக மாறும்.
அழைப்பு
என்பது உலகின் செவியை அடைக்கும் இரைச்சலையும் மீறி உண்மையான மகிழ்ச்சியுடனும், தாராள மனத்துடனும் பதிலளிக்க நம்மை அழைக்கும் ஒருவருடன் நெருக்கமான உரையாடலை உருவாக்குவதே ஆகும். “உங்களை விட்டு வெளியேற வேண்டாம்; உங்களுக்குள் திரும்புங்கள்; உண்மை உள் மனத்தில் வாழ்கிறது”
எனக் கூறும் புனித அகுஸ்தினார், இயேசுவின் குரலைக் கேட்பதற்காக இரைச்சலான வாழ்வின் மத்தியில் இடைநிறுத்தம் செய்யவும், உள் அமைதிக்கு இடம் அளிக்கவும் கற்றுக்கொள்வது மிகவும் முக்கியம் என்பதைப் புனிதர் நினைவூட்டுகிறார்.
நம்
திறமைகளைப் பயன்படுத்தவும், நம் பலவீனங்களைக் கிறிஸ்துவின் சிலுவையோடு இணைக்கவும் அவர் நம்மை அழைக்கிறார். ஆகவே, நற்கருணை ஆராதனைக்கு நேரம் ஒதுக்குவோம்; இறைவார்த்தையை ஆழமாய்த் தியானிப்போம்; அதைக் கடைப்பிடிப்போம்; அருளடையாளக் கொண்டாட்டங்களை வாழ்வாக்குதன் வழியாக ஆண்டவரை நாம் ஆழமாக அறிந்துகொள்வோம். ஒவ்வோர் அழைப்பும் ஒரு கொடையே. அவரை அறிந்துகொள்வது என்பது அவருடைய பராமரிப்பில் நம்மை நாம் ஒப்படைப்பதற்குச் சமமாகும்.
3. கடவுளின் வாக்குறுதியில்
நம்பிக்கை
அறிவு
தன்னம்பிக்கைக்கு வழிவகுக்கிறது. இந்தத் தன்னம்பிக்கை நம்பிக்கையிலிருந்து எழும் ஒரு மனநிலையாகும். கீழ்ப்படிந்த அன்னை மரியின் இதயம், குழந்தை இயேசுவைக் காப்பாற்றிய புனித யோசேப்பின் பராமரிப்பு இவையெல்லாம் நம்பிக்கைக்கு அருமையான உதாரணங்கள். தன்னைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற இருளான சூழலிலும், தங்களைக் கடவுளிடம் ஒப்படைக்கும் அற்புதமான அனுபவத்தை அன்னை மரியிலும் யோசேப்பிலும் பார்க்கின்றோம்.
கிறிஸ்து
பிறப்பு அறிவிப்பு பெற்ற மரியின் அனுபவமும், இரத்த வியர்வை சிந்திய இயேசுவின் கெத்சமனி அனுபவமும், புனித யோசேப்பின் அனுபவமும் கடவுளின் வாக்குறுதிகளில் நாம் கொள்ளக்கூடிய நம்பிக்கையை பலப்படுத்த வேண்டும். எந்தச் சூழலிலும் விரக்திக்கு உள்ளாகாமல், உயிர்த்த இயேசுவில் நம்பிக்கை கொண்டு நம் அச்சங்களை நாம் வெல்லவேண்டும். நிழல் என்னும் இருள் கூட நம்மைச் சூழாதபடி வெளிச்சத்தோடு நம்மைக் காக்க நம் கடவுள் நம்மோடு பயணிக்கிறார்.
4. கிறிஸ்துவை நெருங்குவதே முதிர்ச்சி
அழைத்தல்
என்பது நம் ஆண்டவருடனான நெருக்கத்தால் நிலைநிறுத்தப்படும் ஓர் ஆற்றல் மிக்க முதிர்ச்சி செயல்முறையாகும். அழைப்பில் வளர்வது என்பது இயேசுவுடன் இருப்பதையும், தூய ஆவியார் நம் இதயங்களிலும் வாழ்க்கையின் சூழ்நிலைகளிலும் செயல்பட அனுமதிப்பதையும், இந்த வரத்தின் ஒளியில் எல்லாவற்றையும் மறுவிளக்கம் செய்வதையும் குறிக்கிறது.
திராட்சைக்
கொடியையும் அதன் கிளைகளையும் போல (யோவா 15:1-8), நம்முடைய முழு வாழ்வும் ஆண்டவருடனான ஒரு வலிமையான மற்றும் உயிரோட்டமான பிணைப்பில் வேரூன்றியிருக்க வேண்டும். அப்போதுதான், நம்முடைய சோதனைகள் மற்றும் தேவையற்றவற்றை அகற்றுதல் ஆகியவற்றின் ஊடாக அவருடைய அழைப்பிற்கு நாம் இன்னும் முழு மனத்துடன் பதிலளிக்க முடியும். இறை விருப்பம் மிகவும் வெளிப்படும் இடங்களும், அவருடைய எல்லையற்ற அன்பை நாம் அனுபவிக்கும் இடங்களும், பெரும்பாலும் நம் வாழ்நாள் முழுவதும் நாம் ஏற்படுத்திக்கொள்ளும் உண்மையான சகோதரத்துவப் பிணைப்புகளாகவே இருக்கின்றன. நமது அழைப்பைக் கண்டறிவதிலும் வளர்ப்பதிலும் நம்முடன் துணைபுரிய ஓர் உண்மையான ஆன்மிக வழிகாட்டி இருப்பது எவ்வளவு விலைமதிப்பற்றது!
தூய
ஆவியாரின் தூண்டுதல்களைத் தெளிந்து தேர்வதுதான் அழைத்தலின் அழகுக்கு நற்பயனாய் அமைய முடியும். எனவே, ஓர் அழைப்பு என்பது ஒருமுறை நிரந்தரமாகக் ‘கொடுக்கப்படும்’ ஒன்றல்ல;
மாறாக, அது வாழ்க்கையைப் போலவே விரிவடையும் ஒரு பாதையாகும்.
நாம்
பெற்ற வரம் பாதுகாக்கப்படவேண்டும் என்பது மட்டுமல்லாமல், அது வளர்ந்து கனி தருவதற்காக இறையுறவில் ஆழப்படவேண்டும். அழைத்தல் நம் முழு வாழ்வையும் நம்மை நேசிக்கும் கடவுளுடன் தொடர்புபடுத்துகிறது. எதுவும் வெறும் தற்செயலின் விளைவு அல்ல; மாறாக, நம் வாழ்வில் உள்ள அனைத்தும் நமக்காக ஓர் அற்புதமான திட்டத்தைக் கொண்டுள்ள ஆண்டவருக்குப் பதிலளிக்கும் ஒரு வழியாக மாறக்கூடும் என்பதை இது நமக்கு உணர்த்துகிறது.
அன்றாட
இறைவேண்டல் மூலமாகவும், இறை வார்த்தையைத் தியானிப்பதன் மூலமாகவும், கடவுளுடனான நம் தனிப்பட்ட உறவை வளர்த்துக் கொண்டு சற்று நிதானித்து, செவிகொடுத்து, நம்மை அவரிடம் அர்ப்பணிப்போம். இவ்வழியில், நம் அழைப்பின் கொடை முதிர்ச்சியடைந்து, நமக்கு மகிழ்வைத் தந்து, திரு அவைக்கும் உலகுக்கும் மிகுந்த கனிகளை அளிக்கும்.
கிறிஸ்துவில் அன்பார்ந்த சகோதரர்களே, சகோதரிகளே!
உயிர்த்த
ஆண்டவரின் ஆசி உங்களோடு என்றும் தங்கி இருக்க இறைவனிடம் நான் மனதார வேண்டுகிறேன். முதன்முதலில் இவ்வருடத்திலிருந்து நல்லாயன் ஞாயிறாகிய இறையழைத்தல் ஞாயிறைப் பீடப்பணியாளர்களின் ஞாயிறாகக் கொண்டாடி, பீடப்பணியாளர்களிடையே இறையழைத்தல் பெருகிட நீங்கள் தொடர்ந்து செபிக்கவும், அவர்களை உற்சாகப்படுத்தவும் உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
உயிர்த்த
ஆண்டவர் இயேசுவின்மீது கொண்ட நம்பிக்கையால் தங்களது வாழ்வை முழுமையாக இயேசுவுக்கு அர்ப்பணித்தவர்கள்தாம் தொடக்ககாலக் கிறித்தவர்கள். இயேசுவின் பணியையும் வாழ்வையும் கண்டு அவரது உயிர்ப்புச் செய்தியால் ஊட்டம் பெற்றார்கள். இந்த அனுபவமும், நம்பிக்கையின் செய்தியும் தங்களது அடுத்த தலைமுறையினரின் வாழ்விலும் பிரதிபலித்தது. ஆனால், காலத்தின் மாற்றத்தால் அவர்கள் விலங்குகளுக்கு இரையாக்கப்பட்டார்கள்; சமூகத்தால் வெறுக்கப்பட்டார்கள், சில நேரங்களில் மூடநம்பிக்கையாளர்கள் என்று முத்திரை குத்தப்பட்டார்கள். இத்தகைய காரணங்களால்தான் அவர்கள் கல்லறைகளில் மறைந்து வாழ்ந்தார்கள். கிறித்தவர்கள் என்று அறியப்பட்டு சிறையிலடைக்கப்பட்டு துன்புற்றால் அதற்காகக் கடவுளுக்கு மிகுந்த நன்றி கூறினார்கள்.
அவர்களிடையே
காணப்பட்ட சகோதர மனப்பான்மை இன்றளவும் வியப்பாக உள்ளது. அவர்களிடையே தேவைகளில் உழல்வோர் என்று யாரும் இருக்கவில்லை. அனைவருக்கும் தேவையானது கிடைத்தது. இவ்வாறு கிறித்தவ நெறியைப் பின்பற்றுபவர்களின் வாழ்க்கைமுறை ஒரு புதிய நெறியை உலகிற்கு வகுத்துக்காட்டியது. அத்தகைய உயர்ந்த நெறியும் வாழ்க்கை முறையை இன்றைய கிறித்தவர்களாகிய நாம் மறந்துவிட்டோம். ‘போர்களாலும் குழப்பங்களாலும் உலகிற்கு என்ன ஆகுமோ?’ என்ற ஏக்கத்தில் பெருவாரியான மக்கள் வாழ்கிறார்கள். இந்நிலையில் புனித பிரான்சிஸ் அசிசியாரின் வாழ்வு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. சிலுவைப்போர்களால் பகைமை வளர்ந்திருந்த அந்த நாள்களில் புனித பிரான்சிஸ் அசிசியார் எகிப்தை ஆண்ட சுல்தான் மாலிக் அல் கமில் என்பவரை 1219-ஆம் ஆண்டு சந்தித்தார். அவரின் எளிமையான வாழ்வும் அன்பு கலந்த அணுகுமுறையும் சுல்தானின் மனத்தை மாற்றுகிறது. அதனால் பகைமை எனும் இருள் விலகியது. ஆம், கிறித்தவ நெறியின்மீது அவர் கொண்டிருந்த தவறான எண்ணம் மறைந்தது. வரலாற்றில் யாரும் நிகழ்த்த முடியாத அற்புதத்தை புனித பிரான்சிஸ் அசிசி அன்று நிகழ்த்திக் காட்டினார். அச்சந்திப்பு அமைதிக்கு வழிவகுத்தது.
அவரைப்
போன்று கிறிஸ்துவை எளிமையான வாழ்க்கை முறையாலும் இரக்கச் செயல்களாலும் வெளிப்படுத்தி, அமைதியின் தூதவர்களாய் நாம் வாழ வேண்டும் என்பதே இக்காலத்தின் உடனடித் தேவையாக இருக்கின்றது. இயேசுவை மறுதலித்தவர்களுக்கும், அவருடைய துன்ப நேரத்தில் கைவிட்டுவிட்டு ஓடியவர்களுக்கும் அவர் காட்சி கொடுத்தார்; தம்முடைய இரக்கத்தாலும் அன்பினாலும் அவர்களை மீண்டும் தம்முடையவர்களாக மாற்றினார். இயேசுவின் உயிர்ப்புச் செய்தியால் மகிழ்ந்திருக்கின்ற நாமும், இத்தகைய அணுகுமுறைகளைப் பின்பற்றவும், நமது வாழ்வால் பிரதிபலிக்கவும் கடமைப்பட்டுள்ளோம்.
காலத்தின்
மாற்றங்களுக்கேற்ப திரு அவையின் வாழ்வும் பணியும் நற்செய்தியின் அடிப்படையில் மக்களின் உள்ளங்களைத் தூண்டி எழுப்புகிறது. அத்தகைய பணியை இன்றும் தொடர்ந்து ஆற்றிவரும் திரு அவையோடு நாமும் இணைந்திட எளிமையான வாழ்வாலும் இரக்கச் செயல்களாலும் சமுதாயத்தில் அமைதியின் தூதுவர்களாக வாழ்ந்திடுவோம். உயிர்த்த ஆண்டவரின் ஆசி உங்களோடு என்றும் இருப்பதாக!
மேதகு
ஆயர்
அருள்செல்வம்
இராயப்பன்,
தலைவர்
தமிழ்நாடு
ஆயர் பேரவையின் இறையழைத்தல் பணிக்குழு
ஆன்மிகம் என்பது...
ஏப்ரல்
14-ஆம் நாள் மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாளைக் கொண்டாடுகின்றோம். அம்பேத்கர் பிறப்பால் ஓர் இந்துவாக இருந்தாலும், வாழ்நாள் முழுவதும் அவரது ஆன்மிகம் ஒரு தேடல் இறையனுபவமாகவே இருந்தது.
மனித
வாழ்வு பல பரிமாணங்களைக் கொண்டது.
உடல், கலாச்சாரம், மனம், மதம், சமுதாயம் என்ற பல பரிமாணங்களை உள்ளடக்கியது.
அதில் ஆன்மிகப் பரிமாணமானது அனைத்துப் பரிமாணங்களின் மையமாக அமைந்து, அவனது வாழ்வைப் பொருளுள்ளதாக்குகிறது.
ஆன்மிகம்
என்பது ஒரு மனிதன் தன் வாழ்வின் நிறைவையும் இறைமையையும் அடைந்திட, அவன் பின்பற்றும் சமயத்தில் தான் தேர்ந்தெடுக்கும் நோக்கமும் (VISION), அதை
அடைந்திட அவர் கையாளும் வாழ்க்கைமுறைகளும் (WAY OF LIFE) ஆகும்.
இதனால் ஆன்மிகமானது அவரது வாழ்விற்கு நிறைவான அர்த்தத்தை அளித்து, அவரது வாழ்வைப் பொருளுள்ளதாக்கி, இறைமைக்கும் இறவாமைக்கும் இட்டுச்செல்லும் ஒரு முக்கியப் பரிமாணம் ஆகும்.
ஆன்மிகம்
என்பது ஒரு மனிதனுக்குத் தேடல் அனுபவமாகவே அமையவேண்டும். இத்தேடல் மனித வாழ்வின் தனித்துவத்திற்கும், ஆளுமை வளர்ச்சிக்கும் அடிப்படையும் ஆணிவேருமாய் அமைகிறது. மனித வாழ்வின் அறநெறிக் கட்டாயமும் ஆகும்.
அம்பேத்கரின்
இலக்கு
(VISION)
அம்பேத்கரின்
இலக்கு சுதந்திரம் (LIBERITY), சமத்துவம்
(EQUALITY), சகோதரத்துவம்
(FRATERNITY) ஆகும்.
சுதந்திரம் என்பது, ஒரு மனிதன் தன்னையும் பிறரையும் வாழவைக்கும் செயல்களை எவ்விதத் தடையுமின்றிச் செய்திட உரிமையைச் சுட்டிக்காட்டுகிறது. சமத்துவம் என்பது, மனிதப் படைப்பில் எவ்வித ஏற்றத் தாழ்வுகளும் இல்லாது, சமத்துவ உறவுடன் வாழ்ந்திடும் சமூக அமைப்பாகும். சகோதரத்துவம் என்பது, பாதிக்கப்பட்ட மனிதர்மீது சக மனிதன் கொண்டுள்ள
அர்ப்பணமுள்ள செயல்பாடுகளைக் கொண்ட சமூகத்தைக் குறிக்கிறது. மொத்தத்தில், ஒரு சமூகத்தில் மனிதராகப் பிறந்த அனைவரும் மாண்புடைய
மனிதர்களாகத் திகழ்ந்து, இறைமையை உணர்வதே அவரது இலக்காகும். அம்பேத்கரின் வாழ்க்கை முறையினை அவரது கொள்கை வாக்கியமான ‘கற்பி, போராடு, ஒன்றுசேர்’
என்பது எடுத்துரைக்கிறது.
கற்பி (EDUCATE)
‘கற்பி’ என்று சொல்லும்போது, நாம் நன்றாகக் கற்க வேண்டும். இரண்டாவதாக, கல்வி மறுக்கப்பட்ட மக்கள் கற்பிக்க உழைத்திடவேண்டும். அம்பேத்கரைப் பொறுத்தமட்டில், நன்கு படித்துப் பட்டங்கள் பெற்று, ‘தான் உண்டு, தன் குடும்பம் உண்டு’ என்று குறுகிய வட்டத்தில் வாழ்ந்து, எவ்விதச் சமுதாய அக்கறையுமின்றி இருப்போரை ‘மூளை பெருத்தவர்’ (LEARNED) என்பார். உண்மையான
அறிவுஜீவி (INTELLECTUALS), இச்சமுதாயம்
சீரடையத் தன்னை அர்ப்பணிக்கும் உயர்ந்தோர் ஆவார். ஆக, தான் கற்றக் கல்வியால் பாதிக்கப்பட்ட சமுதாயம் மாண்புடைய மனிதர்களாக வாழ்ந்திட தன்னையே அர்ப்பணிக்கும் வாழ்க்கை முறையாகும்.
போராடு (AGITATE)
பாதிக்கப்பட்டவர்களுக்குச்
சலுகைகளை நாய்களுக்குப் போடும் எண்ணமும் அதை விரும்பி ஏற்கும் மனப்போக்கும் தன்மானத்திற்கு எதிரானது என்பார். “சிறுத்தைகளையா கோவில்களில் பலியிடுகின்றனர்? ஆடுகளைத்தானே! எனவே, சிறுத்தைகளாகக் கிளர்ந்து எழவேண்டும்” என்பார்.
சாய்கின்ற பக்கம் சாய்ந்திடும் செம்மறி ஆடுகளைப் போல் மானங்கெட்டு வாழ்வதைவிட, தன்மானத்திற்காய் ஒரு நிமிடம் போராடி அமரர் ஆவதே மேல் என்பார். இதில் மேலோங்குவது வரையறையற்ற உணர்ச்சிகள் அல்ல; மனித மாண்புடைய உணர்வுகளின் மேலாண்மை என்பார்.
ஒன்றுசேர் (ORGANIZE)
தலித்
மக்கள் துண்டாடப்பட்டு, பல பிரிவுகளாக இருப்பதைக்
கண்டார் அம்பேத்கர். தன் மக்கள் ஓரணியில் திரண்டு ஒன்றுபட விரும்பினார். மற்ற சாதியினர் ஒன்றுதிரள்வது அநீதி நிறைந்த சாதியத்தை வலுப்படுத்தவே. அது சமூகப் பாவம் ஆகும். ஆனால், தலித் மக்கள் சாதியத்தை ஒழித்து மனித மாண்பிற்காகப் போராடுவது, தெய்வீகமாகும் என்பதை உணர்ந்திருந்தார். ‘ஒன்றுசேர்’
என்பது மனித மாண்பிற்காகப் போராட ஒன்று சேரும் குழுமத்தைக் குறிக்கிறது.
தொடர் தேடலே
ஆழமான,
அர்த்தமுள்ள
ஆன்மிகம்
ஆன்மிகத்
தேடல் என்பது மதம் போதிக்கும் அனைத்துக் கருத்துகளையும் குருட்டுத்தனமாக ஏற்றுக்கொள்வதில் அல்ல; அது தொடர் தேடலாக அமையவேண்டும் என்பார். இயேசு யூத மதத்தில் பிறந்தவராக இருந்தாலும், அப்படியே யூத மதக் கருத்துகளை ஏற்றுக்கொண்டவர் அல்லர்; தமக்குப் பொருள்ளதாகக் கண்டதைத் தெளிந்து
தேர்ந்து தம் வயப்படுத்தி, நமக்கு
இறையாட்சியின் மதிப்பீடுகளாகத் தந்துள்ளார். அம்பேத்கரின் ஆன்மிகத் தேடல், சமுதாயத்தால் பாதிக்கப்பட்ட அனுபவத்திலும் மனித மாண்பிலும் தொடங்குகிறது.
எனவே, 1935-ஆம் ஆண்டு அக்டோபர் 13-ஆம் தேதி “நான்
பிறப்பால் இந்துவாக இருந்தாலும், ஓர் இந்துவாக இறக்கப் போவதில்லை”
என்று கூறினார். கிறித்தவச் சமயத்தைத் தான் விரும்புவதாகப் பல முறை குறிப்பிட்டுள்ளார்.
தனக்குப் பிடித்த ஆளுமைகளாகப் புத்தரையும் இயேசுவையும் கூறியுள்ளார் (ஜோலாப் பூர் மாநாடு). கிறித்தவர்கள் இயேசுவின் போதனைகள்படி வாழ்வதில்லை என்றார். ஆனால், இயேசுவின் இறைமைத்தன்மையை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
மனித மாண்பே
இறைமைக்கு
அடித்தளம்
1956-ஆம் ஆண்டு
அக்டோபர் மாதம் 14-ஆம் நாள் நாக்பூரில், பௌத்த மதமே தனக்கும், தன் மக்களுக்கும் சரியான ஆன்மிகப் பாதைக்கு இட்டுச் செல்லும் என்று உணர்ந்து, 22 உறுதிமொழிகளுடன் போதிசத்துவர் ஆனார். பௌத்த மதத்தை அப்படியே அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மாறாக, புத்தரைக் கடவுளாகப் பார்க்கும் மாகாயானம் மற்றும் ஹீனயானம் அல்லாமல், தனது தேடல் அனுபவத்தின் மூலம் நவயான பௌத்தம் (NEO – BUDDHISM) என்ற புதிய பௌத்த மதத்தை ஏற்றுக்கொண்டார். ‘நவ’ என்றால் ‘புதிய’ என்றும், ‘யானம்’ என்றால் ‘ஆன்மிகத்தைப் பின்பற்றும் முறை’ என்றும் பொருளாகும். தானும், தன் மக்களும் மனித மாண்பை அடைவதன் வழியாக, இறைமையையும் இறவாமையையும் அவர்கள் அனுபவிக்க முடியும் என்றார்.
சிந்திக்க...
செயல்பட...
நாம்
பிறப்பால் ஒரு சமயத்தைப் பின்பற்றினாலும், ஆன்மிகத் தேடலின் மூலம் நமது
இலக்கையும் வாழ்க்கை முறையையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், அதன்
அடிப்படை உண்மையைத் தேடி, நமக்குப் பொருளுள்ளதாக மாற்றி, அவற்றைத் தம்வயப்படுத்திப் பின்பற்றும் போது, உண்மையான தெய்வீகத்தையும் இறைமையையும் நாம் அடைய முடியும். இதுவே ஒரு மானிட அறிவுஜீவியின் ஆளுமையையும் தனித்துவத்தையும் சிறப்படையச் செய்கிறது.
இத்தாலியின் போலோக்னா நகரைச் சேர்ந்த ஓர் இளம் மாணவர், புனித பக்கீத்தாவிடம் ஒரு கேள்வியை எழுப்பினார். “உங்களைக் கடத்தி சித்திரவதை செய்தவர்களை மீண்டும் சந்தித்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?”
“நான் அவர்களைச் சந்தித்தால் அவர்கள் காலில் விழுந்து முத்தமிடுவேன்; ஏனெனில், அவர்கள் என்னைச் சாட்டையால் அடித்ததன் விளைவாகப் பெற்ற 144 தழும்புகள் இல்லையென்றால், இன்று நான் ஒரு கிறித்தவளாகவும் இறைப்பணியாளராகவும் மற்றும் துறவியாகவும் இருந்திருக்க முடியாது.”
இயேசுவோடு
வாழ்ந்த திருத்தொண்டர்களைப் போலவும், எண்ணற்ற புனிதர்கள் சொல்லொண்ணாத் துயரத்தை ஏற்று இறைவனுக்குச் சாட்சிய வாழ்வு வாழ்ந்தனர். கிறித்தவ வாழ்வு என்பது வெறும் சடங்குகளின் தொகுப்பல்ல; நம் வாழ்வில் அர்த்தம் தரும் பயணமாகும். கிறிஸ்துவில் வைத்திருக்கும் நம்பிக்கை அவரின் பாடுகளில் அல்ல; உயிர்ப்பில்தான் உள்ளது. நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் ஆண்டவரின் உயிர்ப்புப் பெருவிழா நம் ஆன்மிகப் பயணத்திற்கு
ஒரு புதிய விடியலைத் தருகிறது.
“அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சி சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தனர். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, ‘உங்களுக்கு அமைதி உரித்தாகுக!’ என்று வாழ்த்தினார். இவ்வாறு சொல்லிய பின் அவர்தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டனர். இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, ‘உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்’ என்றார்.
இதைச் சொன்ன பின் அவர் அவர்கள் மேல் ஊதி, “தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்” (யோவா
20:19-21) என்றார்.
கல்லறையின்
இருளை வென்ற உயிர்த்த ஆண்டவரைச் சந்தித்த பிறகுதான் திருத்தூதர்கள் தூய ஆவியின் ஆற்றலைப் பெற்று, உலகெங்கும் நற்செய்தியை அறிவிக்கப் புறப்பட்டனர். அவர்களின் வாழ்க்கை முறையை இன்றைய சூழலில் நாம் எவ்வாறு பின்பற்றலாம்?
1. திருத்தூதர்களின் அடையாளம்
‘திருத்தூதர்’ (அப்போஸ்தல்லோஸ்)
என்ற கிரேக்கச் சொல்லுக்கு ‘அனுப்பப்பட்டவர்கள்’ என்று
பொருள். திருத்தூதர்கள் இயேசுவின் போதனையை வெறும் தகவல்களாகப் பறைசாற்றவில்லை; மாறாக, உயிர்த்த ஆண்டவரின் ஆற்றலைப் பெற்று அவரது நற்செய்தியைத் தங்களின் இரத்தச்சாட்சியால் அறிவித்தனர். உயிர்த்த ஆண்டவரைச் சந்தித்தபின் இவர்கள் வீதிக்குச் சென்று துணிவுடன் உயிர்த்த ஆண்டவரிடமிருந்து பெற்ற அனுபவத்தைப் பற்றிப் பேசத் தொடங்கினர். இந்தத் துணிவுதான் ஒரு நற்செய்திப் பணியாளரின் முதன்மைப் பண்பாகும்.
‘அஞ்சாதீர்கள்’ என்ற
ஆண்டவரின் வார்த்தையே அவர்களின் ஆன்மப் பலமானது. “தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லை வரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்” (திப
1:8). இது மனித பலத்தால் அல்ல; இறைவனின் ஆற்றலால் நிகழ்ந்தது.
2. ஏழு திருத்தொண்டர்களின் பணிகளும்
மற்றும்
சாட்சிய
வாழ்வும்:
1. தூய ஸ்தேவான்: இவரே
திரு அவையின் முதல் இரத்தச்சாட்சியாவார். இறைநம்பிக்கையின் முதல் மறைச்சாட்சியாளர். ஏழு திருத்தொண்டர்களில் முதன்மையான ஸ்தேவான், தூய ஆவியாலும் இறைநம்பிக்கையாலும் நிறைந்தவர். பந்திகளில் உணவு பரிமாறும் ‘டயகோனியா’
எனும் தாழ்மையான பணியைச் செய்த அதேவேளையில், இறை வல்லமையால் மக்களிடையே பெரும் அரும் அடையாளங்களையும் செய்தார். மறைநூல் அறிஞர்களும் மூப்பர்களும் அச்சுறுத்தியபோது அஞ்சாமல், நற்செய்தியைத் துணிச்சலுடன் அறிவித்தார்.
2. பிலிப்பு: பிலிப்பு
ஒரு சிறந்த நற்செய்தி அறிவிப்பாளராக விளங்கினார். சமாரியா நகருக்குச் சென்று அங்குள்ள மக்களுக்குக் கிறிஸ்துவைப் பற்றி அறிவித்ததோடு, தூய ஆவியாரின் தூண்டுதலால் எத்தியோப்பிய அரச சபையின் அதிகாரிக்குத் திருவிவிலியத்தை விளக்கி அவருக்குத் திருமுழுக்குக் கொடுத்தார். இதன்மூலம் நற்செய்திப் பணி என்பது எல்லா இனத்தவருக்கும் உரியது என்பதைத் தனது வாழ்வால் நிலைநாட்டினார்.
3. புரக்கோரோ: புரக்கோரோ
திருத்தூதர்களால் வழங்கப்பட்ட நிர்வாகப் பணிகளை மிகவும் செம்மையாகவும் நேர்த்தியாகவும் செய்தவர். திரு அவை பாரம்பரியத்தின்படி, இவர் திருத்தூதர் யோவானின் உதவியாளராக இருந்து அவருக்குப் பணிவிடை செய்தார். பிற்காலத்தில் நிக்கோமீடியா பகுதியின் ஆயராகப் பொறுப்பேற்று, அங்கிருந்த மக்களுக்கு இறைவார்த்தையை அறிவித்தார்.
4.நிக்கானோர்: தொடக்கத் திரு
அவையில் எபிரேய மற்றும் கிரேக்க மொழி பேசும் இறை நம்பிக்கையாளர்களிடையே நிலவிய பிரிவினைகளைத் தீர்ப்பதில் நிக்கானோர் முக்கியப் பங்காற்றினார். உணவுப் பங்கீட்டில் கிரேக்கக் கைம்பெண்கள் புறக்கணிக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த இவர், ஏழை விதவைகளுக்குத் தேவையான உதவிகளை முன்னின்று அளித்தார். ஸ்தேவான் கொல்லப்பட்ட அதே நாளில், இவரும் கிறிஸ்துவின் மீதிருந்த பற்றுறுதிக்காகத் தனது உயிரைத் தியாகம் செய்து இரத்தச்சாட்சியானார்.
5. தீமோன்: திரு
அவையில் ஒழுங்குமுறையைப் பராமரிப்பதிலும், பந்திகளில் அனைவருக்கும் சமமான உணவு கிடைப்பதை உறுதி செய்வதிலும் தீமோன் கடுமையாகவே உழைத்தவர். பிற்காலத்தில் பெரோயா பகுதியின் ஆயராக நியமிக்கப்பட்ட இவர், அங்கு நற்செய்திப் பணிகளை விரிவுபடுத்தினார். கிறிஸ்துவின் மதிப்பீடுகளைப் பரப்பியதற்காகப் பல சித்திரவதைகளையும் துன்பங்களையும் அனுபவித்தபோதிலும்,
இறுதிவரை இறைநம்பிக்கையில் உறுதியாக இருந்து உயிர் துறந்தார்.
6. பார்மனா: திருத்தூதர்களுக்குப்
பணிவிடை செய்வதிலும், நம்பிக்கையாளர்களின் அன்றாடத் தேவைகளைக் கவனிப்பதிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர். எளிய பணிகளின் வழியாகவும் இறைவனுக்கு மகிமை சேர்க்க முடியும் என்பதை இவர் உலகுக்குக் காட்டினார். பிலிப்பி நகரில் நற்செய்தி அறிவிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இறை நம்பிக்கைக்காகத் தனது உயிரைத் தியாகம் செய்தார்.
7. நிக்கொலா: அந்தியோக்கியாவைச்
சேர்ந்த நிக்கொலா, பிற இனத்தைச் சார்ந்தவராக இருந்து யூத மதத்தைத் தழுவி, பின்னர் கிறித்தவத்திற்கு மாறியவர். கிரேக்க மொழி பேசும் பிற இனத்தவர்களிடையே நற்செய்தியை அறிவித்தார். திரு அவையின் நிர்வாகப் பணிகளைத் துல்லியமாகவும் நேர்மையாகவும் கையாண்ட இவர், நற்செய்திப் பணி என்பது அனைத்துப் பின்னணி கொண்டவர்களையும் உள்ளடக்கியது என்பதைத் தனது இறைப் பணியின் மூலம் உறுதி செய்தார்.
3. நம்பிக்கைக்கொண்டோரின் வாழ்வுமுறை
திருத்தூதர்கள்
தங்களின் சிந்தனையாலும் செயலாலும் ஒன்றிணைந்த வாழ்வை வாழ்ந்தனர். இதுவே பல்வேறு சமூகக் காரணங்களால் பிரிந்து கிடக்கும் உலகிற்குத் திருத்தூதர்கள் தந்த சிறந்த எடுத்துக்காட்டாகும். சுயநலத்தைத் துறந்து, தங்களுக்குள் இருந்தவற்றைத் தாராளமாகப் பகிர்ந்து கொண்டனர். ‘எனது’ என்பது ‘நமது’ என்று மாறிய போது, அங்கே வறுமை நீங்கி இறையாட்சி புலர்ந்தது. தனிமனித ஆதிக்கத்தைவிட பொதுநலமே மேலானது என்பதை அவர்கள் உலகிற்குக் கற்பித்தனர். திருத்தூதர்கள் எத்தகைய துன்பத்திலும் இறைவார்த்தையை விட்டுக்கொடுக்கவில்லை. சோதனைகளை வேதனைகளாகப் பார்க்காமல், இறைவனுக்கு ஆற்றும் தொண்டாகப் பார்த்தனர்.
4. இன்றைய சூழலில் திருத்தூதுப்
பணி
திருத்தந்தை
பிரான்சிஸ், “நற்செய்தி அறிவிப்பு என்பது ஒரு நுகர்வுப் பொருள் அல்ல; அது ஒரு கொண்டாட்டம்” என்று
கூறுகிறார். நற்செய்தி அறிவிப்பவர் முகத்தில் மகிழ்ச்சி இருக்கவேண்டும். உயிர்த்த ஆண்டவரைச் சுமப்பவர்கள் ஒருபோதும் விரக்தியில் மூழ்கமுடியாது. சோகமான முகம் நற்செய்தியின் வீரியத்தைக் குறைத்துவிடும். நற்செய்தி ஒருவரைப் பயமுறுத்துவதற்கு அல்ல; மாறாக, இறைவனின் பேரன்பால் அவரை மாற்றியமைக்கவே அறிவிக்கப்படுகிறது.
மக்களின்
காயங்களைக் குணப்படுத்துவது உடல் ரீதியான நோய்களைத் தாண்டி, மனக்காயங்களை ஆற்றும் மருந்தாக நற்செய்தி இருக்க வேண்டும். உலகம் அன்பிற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறது. அந்த ஏக்கத்தைப் பூர்த்தி செய்வதே நற்செய்திப் பணியாகும். நம் வாழ்வு மக்களை நோக்கி புறப்பட்டுச் செல்லும் திரு அவையாக மாறி, இறைவன் தரும் மகிழ்ச்சியை விதைக்கவேண்டும். நம் பணி தேங்கி நிற்கும் குட்டையைப் போல இல்லாமல், ஓடும் நதிபோல நற்செய்தியை எல்லா இடங்களுக்கும் கொண்டு செல்லவேண்டும். இப்படிப்பட்ட நற்செய்திப்
பணியை ஆற்றிடத் திரு அவை நம்மை அழைக்கிறது.
உயிர்ப்புப்
பெருவிழா நமக்கு விடுக்கும் அழைப்பு இதுவே. உயிர்த்த ஆண்டவர் நம்மீது அருள்பொழியும் ஆவியைப் பெற்று, திருத்தூதர்களைப் போல நாமும் நம் அச்சத்தைத் துறப்போம். நாம் ஒவ்வொருவரும் தனித்துவமான சமூக அடையாளங்களைப் பெற்றிருந்தாலும், கிறிஸ்துவின் அன்பில் நாம் அனைவரும் ஒன்றாக வாழ அழைக்கப்படுகிறோம். “ஆண்டவருடைய ஆவி என்மேல் உள்ளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை
விடுதலை செய்து அனுப்பவும், ஆண்டவர் அருள் தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்” (லூக்
4:16-18) என்பதற்கிணங்க,
திருத்தொண்டர்கள் வழியில் பிறரன்புப் பணியிலும், மனவுறுதியோடு நற்செய்தியை அறிவிப்போம்.
எனவே,
நாம் சொல்லால் மட்டும் நற்செய்தியை அறிவிப்பவர்களாக இல்லாமல், நம்முடைய அறச்செயல்களால் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும். இருள் சூழ்ந்த இந்த உலகிற்கு நாம் வெறும் விளக்குகள் அல்ல; உயிர்த்த இயேசு கிறிஸ்துவின் அணையாத சுடர்களாவோம். ஏனெனில், உயிர்த்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே நம் ஆற்றல். அவரின் நற்செய்தியே நம் வாழ்வு!