இயேசு கிறிஸ்துவில் அன்பார்ந்தவர்களே,
‘இந்தியப் பொதுநிலையினரின் பாதுகாவலர் புனித தேவசகாயம்’
என்று நமது திருத்தந்தை அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளதால் அவரது விழாவைத் (ஜனவரி 14) தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமையை
(18.01.2026) நாம் பொதுநிலையினர் ஞாயிறாகச் சிறப்பிக்கிறோம்.
புனித தேவசகாயம்
இன்றைய
குழித்துறை மறைமாவட்டத்தில் உள்ள நட்டாலம் என்ற இடத்தில் 1713, ஏப்ரல் 25-ஆம் நாள் வாசுதேவன் நம்பூதிரி, தேவகியம்மை ஆகியோருக்கு மகனாக நமது புனிதர் பிறந்தார். கல்வி மற்றும் கலைகளில் தேர்ச்சி பெற்றுத் திருவிதாங்கூர் அரசின் நிதிக் காப்பாளர் என்ற உயர் பொறுப்பைப் பெற்றார். குளச்சல் போரில் சிறைப்பிடிக்கப்பட்ட டச்சுத் தளபதி இஸ்தாக்கியுஸ் டிலனாய் என்பவர் இவருக்கு இயேசு கிறிஸ்துவை அறிமுகப்படுத்தினார். இயேசுவை மீட்பராக ஏற்றுக்கொண்டு 14.05.1745-இல் வடக்கன்குளத்தில் அருள்பணி. ஜோவான்னிபத்தீஸ்தா புத்தார் என்பவரிடம் திருமுழுக்குப் பெற்றார்.
இந்த
மனமாற்றத்தால் உயர்குலத்தோர் நம் புனிதரை எதிர்த்தனர். துன்பங்கள், வேதனைகள் அனைத்தையும் துணிவுடன் எதிர்கொண்டு, நம்பிக்கை வாழ்வில் தளராதிருந்தார். 11 மாதங்கள் சிறைவாசம், உடலில் கரும்புள்ளி - செம்புள்ளி, எருக்கம் பூமாலை, சுண்ணாம்புச் சூளையின் கடும் நெருப்பு, அடி, உதைகள் எதுவும் இவரது நம்பிக்கையைத் தகர்க்கவில்லை.
நம்பிக்கை
வாழ்வின் சிகரம் தொட்ட இந்த மாமனிதர் 1752, ஜனவரி 14-ஆம் நாள் கோட்டாறு மறைமாவட்டம் காற்றாடிமலை என்ற ஆரல்வாய் மொழியில் சுட்டுக் கொல்லப்பட்டார். நம் மறைச்சாட்சிக்கு 26.06.2012
அன்று அருளாளர்
பட்டமும், 15.05.2022
அன்று புனிதர் பட்டமும் அளிக்கப்பட்டன. 16.07.2025 அன்று இந்திய பொதுநிலையினரின் பாதுகாவலராக அறிவிக்கப்பட்டார்.
பொதுநிலையினர்
ஞாயிறு
- 2026
புனித
தேவசகாயத்தின் நம்பிக்கை வாழ்வுப் பின்னணியில் இந்த ஆண்டின் பொதுநிலையினர் ஞாயிறு திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு ‘இயேசுவின் பணியை முழுமையாக்க அழைப்பு’
(Call to Fulfil the Mission of Jesus) என்ற பொருத்தமான மையச்சிந்தனையை ஆயர் பேரவை நமக்குத் தந்துள்ளது.
போதிக்கும்
பணி, புனிதப்படுத்தும் பணி, வழிநடத்தும் பணி ஆகிய இயேசுவின் முப்பெரும் பணிகளில், நம்பிக்கையாளர்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் பங்கு உள்ளது. இப்பணிகளில் பங்கேற்கவும் பங்களிக்கவும் திருமுழுக்குப் பெற்ற நாம் இறைவனால் அழைக்கப்படுகிறோம்.
நடந்து
முடிந்த உலக ஆயர்கள் மாமன்றம் (2021-2023) கூட்டியக்கத் திரு அவையாக, நமது உறவு ஒன்றிப்பு மற்றும் பங்கேற்பின் வழி, நற்செய்திப் பணியாற்ற நமக்கு அழைப்பு விடுத்துள்ளதை நாம் அறிவோம். தொடர்ந்து நாம் கொண்டாடிய யூபிலி 2025 இணைந்து பயணிக்க, இணைந்து செவிசாய்க்க, இணைந்து கற்றுக்கொள்ள நமக்கு அழைப்பு விடுத்தது.
இயேசுவின் பணி
“உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” (மாற்
16:15) என்று தம் சீடர்களிடம் கூறிய இயேசு, தமது பணிவாழ்வின் தொடக்கத்தில் தம்முடைய பணிக் கொள்கையை எல்லாருக்கும் அறிவித்தார். “ஏழைகளுக்கு நற்செய்தி, சிறைப்பட்டோருக்கு விடுதலை, பார்வையற்றோர் பார்வைப் பெறுதல், ஒடுக்கப்பட்டோருக்கு விடுதலை”
(லூக் 4:18) என்பனவற்றைத் தமது பணி இலக்குகளாகப் பிரகடனப்படுத்தினார்.
“தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார், பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்” (லூக்
1:53) என்ற அன்னை மரியாவின் பாடலிலும் இந்த ‘ஏழைகள் சார்புநிலை’ வெளிப்படுவதைப்
பார்க்கிறோம்.
திரு அவையின்
படிப்பினை
‘யூபிலி 2025’ கொண்டாட்டத்திற்காக மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் 07.05.2024 அன்று வெளியிட்ட ‘எதிர்நோக்கு ஏமாற்றம் தராது’
(Spes Non Confundit) (உரோ
5:5) எனும் ஆணை மடலில் ‘திரு அவையின் கரிசனம்’ பற்றி பின்வருமாறு தெரிவித்துள்ளதைப் பார்க்கிறோம்:
• ஏழைகளையும் வறியோராக்கப்பட்டவர்களையும்
நாம் அன்றாடம் சந்திக்கிறோம் (எண்-15).
• பசி என்பது ஓர் இடறல்; மானுட உடலில் காணப்படும் ஆறாத புண் (எண்-16).
• பூமியின் வளங்கள் ஒருசிலருக்கு மட்டுமல்ல; எல்லாருக்கும் உரியன (எண்-16).
•
காலத்தின் அறிகுறிகளில் எதிர்நோக்கைக் கண்டறிய அழைக்கப்படுகிறோம் (எண்-7).
திருத்தந்தை
பிரான்சிஸைத் தொடர்ந்து கடந்த ஆண்டில் இறைவனின் கொடையாக நமக்குத் தரப்பட்டுள்ள புதிய திருத்தந்தை லியோ 09.10.2025 அன்று வெளியிட்ட ‘நான் உன்னை அன்பு செய்கிறேன்’ (Dilexi Te) எனும் அறிவுரை மடலில், ஏழைகள் பற்றியும், மனித மாண்பு பற்றியும், இயேசுவின் சீடர்களான நம்பிக்கையாளர்களின் பார்வையும் பணியும் எவ்விதம் அமையவேண்டும் என்ற வழிகாட்டுதல்களைத் தந்துள்ளார்.
• ஏழைகள், துன்புறுவோர், புலம்பெயர்ந்தோர், விளிம்புநிலை மக்கள் சார்பாகத் திரு அவை நிலைப்பாடு (Option) எடுக்கவேண்டும்.
• ‘ஏழைகள்தான் திரு
அவையின் இதயம்!’
• ஏழைகளுக்கான பணி வெறும் இரக்கப்பணியல்ல; மாறாக, அது சமூக மாற்றத்திற்கான பணியாகும்.
• துன்புறுவோர், நலிந்தோர், ஏழைகள் மீதான அன்பே, கடவுள் மீதான நம்பிக்கை. எனவே, நாம் ஏழைகள் சார்பான நிலைப்பாடு (Preferential option
for poor) எடுக்கவேண்டும்.
• சர்வாதிகாரப் பொருளாதாரம் (Dictatorship of Economy) பற்றியும்
எச்சரிக்கை செய்கிறார்.
• சமூத்தின் கடைநிலையில் உள்ளவர்களுடன் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டதாக இயேசுவை இந்த ஏடு விவரிக்கிறது. எனவே, ‘ஏழைகள் மீதான அக்கறையே நம் சீடத்துவத்தின் அடையாளம்’
என்று நமக்கான எதிர்காலச் செய்நெறியைத் திருத்தந்தை வரையறுக்கிறார்.
சங்க ஏடுகளும்,
திரு
அவைச்
சட்டமும்
நினைவூட்டும்
நமது
கடமைகள்
பல்வேறு
நேர்மறை அம்சங்கள் இருப்பினும், நாம் காணும் இந்தியச் சூழல் பெருமளவில் அச்சமூட்டுவதாகவும் அபாயகரமானதாகவும் உள்ளது என்பதே உண்மை. இந்நிலையில், சங்க ஏடுகளும், திரு அவைச் சட்டமும் நமக்கு உணர்த்தும் கடமைகளாவன:
• இரண்டாம் வத்திக்கான் சங்கம் முடிந்து 60 ஆண்டுகள் நிறைவுறும் வேளையில், இறை மக்களாகிய நாம் அனைத்துச் சூழமைவுகளிலும் மனிதச் சமுதாயத்தின் நடுவில் இயேசுவின் சாட்சிகளாக இருக்க அழைக்கப்பட்டவர்கள் (இன்றைய உலகில் திருஅவை - எண்: 43).
• நற்செய்தி எல்லா மக்களையும் சென்றடைய உழைத்தல் (திரு அவைச் சட்டம்:211).
• ஏழைகளுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முன்னுரிமை அளித்தல் (திருப்பணியாளர்களின் வாழ்வும் பணியும் GT600T:6).
• மனித அமைப்புகள் எல்லாவிதச் சமூக-அரசியல் அடிமைத்தனங்களுக்கும் எதிராக ஊக்கமுடன் போராடவேண்டும் (இன்றைய உலகில் திரு அவை - எண்:29).
• உலகை ஊடுருவி, சமுதாயத்தைப் புதுப்பித்து, அதைப் புனிதப்படுத்தி உருமாற்றுவது பொதுநிலையினர் பெற்றுள்ள தனிவரம் (பொது நிலையினரின் திருத்தூதுப் பணி எண்:2).
நமக்கான அழைப்பு
இன்றைய
நற்செய்தி வாசகத்தில் ‘இயேசு தூய ஆவியாரால் திருமுழுக்குக் கொடுப்பவர்’ என்ற
நம்பிக்கையை திருமுழுக்கு யோவான் வெளிப்படுத்துகிறார். திருமுழுக்குப் பெற்ற நம்பிக்கையாளர்களாகிய நாம், கிறிஸ்துவுக்கு அர்ப்பணிக்கப்பெற்று, தூய ஆவியாரால் அருள் பொழிவு செய்யப்பட்டவர்கள். இயேசுவின் இலட்சியத்தையும் மதிப்பீடுகளையும் நமதாக்கி, ஏழைகள் மற்றும் விளிம்பு நிலை மக்களுக்காகத் திருத்தூதுப் பணியாற்ற அழைப்புப் பெற்றவர்கள். இது தொடர்பாகத் தனது மடலில் திருத்தந்தை லியோ பரிந்துரைக்கும் கீழ்க்காணும் சிலவற்றை முன்னெடுக்க முயற்சிப்போம்:
• ஏழைகள் மீதான அன்பின் வழியாக உலகைப் புதுப்பித்தல்.
• பிளவுகளைக் குணப்படுத்தும் இரக்கம் மற்றும் உரையாடல்.
• ஏழைகளில் இயேசுவைச் சந்தித்தல்.
• வீடுகளில் / குடும்பங்களில் அன்பு மற்றும் விருந்தோம்பல்.
• துன்பப்படுவோருக்கான பரிந்துரை மன்றாட்டுகள்.
• தேவையிலிருப்போருடன் நேரத்தையும் அக்கறையையும் பகிர்தல்.
• சமூக நீதி மற்றும் ஒற்றுமையை ஊக்குவித்தல்.
• இறைவனின் அன்பும் நீதியும் நிறைந்த இறையாட்சியைக் கட்டமைத்தல்.
அருள்பணி. மரிய
மிக்கேல், செயலர், தமிழ்நாடு பொதுநிலையினர் பணிக்குழு
மேதகு ஆயர்
சகாயராஜ்,
தலைவர், தமிழ்நாடு பொதுநிலையினர் பணிக்குழு
(தந்தை அன்புச் செல்வன், தாய் மார்த்தா, மகன் அகஸ்டின், மகள் கிறிஸ்டினா இவர்களோடு அருள்பணியாளர் தாமஸின் உரையாடல் தொடர்கிறது)
அன்புச் செல்வன்: “தந்தையே, கடந்த முறை நாம் பேசிக்கொண்டிருந்தபோது, வாழ்வின் மட்டிலான நம் ஆழமான பார்வைக்கும், பிரபஞ்சத்தின் ‘இருப்பு நிலைக்கும்’ தொடர்பு இருப்பதை எடுத்துரைத்தீர்கள். பிரபஞ்சத்தின் இருப்புநிலை அல்லது உண்மைநிலை என்பது எல்லாம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டும் பிணைக்கப்பட்டும் இருக்கிற நிலை என்பதையும் எடுத்துரைத்தீர்கள். மனித வாழ்க்கையைப் பொறுத்த அளவில் சுற்றியுள்ளவற்றோடு இணைந்து இருக்கும் நிலையையே நாம் ‘உறவு’ என்கின்றோம். அதாவது மனிதர்களாகிய நாம் உறவோடும், உறவிற்காகவுமே படைக்கப்பட்டுள்ளோம் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. மேற்கூறப்பட்ட இருப்புநிலைக்கும் இணைப்பு நிலைக்கும், அதாவது உறவிற்கு எதிராகச் செல்வதே ‘பாவம்’ என்றழைக்கப்படுகிறது. உறவு பற்றிய இன்னும் சில தெளிவுகளையும், உறவிற்கு எதிராக நாம் செல்வதன் காரணமாக எவ்வாறு பாவங்களைக் கட்டிக்கொள்கிறோம் என்பதைப் பற்றியும் எங்களுக்குத் தரமுடியுமா... தந்தையே?”
அருள்பணி: “பொதுவாக உறவை நான்கு வகைகளாகப் பிரிப்பதுண்டு:
அ) தன்னோடு உறவு, ஆ) சகமனிதர்களோடு உறவு, இ) இயற்கையோடு உறவு மற்றும் ஈ) கடவுளோடு உறவு.
இந்த நான்கு உறவுகளிலும் சரியான மனநிலையோடு நடந்துகொள்ளாமல் பாதகத்தை ஏற்படுத்தக்கூடிய
வகையில் நடந்துகொள்வதே பாவம் என்பதாகும்.”
கிறிஸ்டினா: “தன்னோடு உள்ள உறவில் ஒரு மனிதர் எவ்வாறு
பாவம் செய்யமுடியும் தந்தையே?”
அருள்பணி: “ஒவ்வொரு மனிதரையும் கடவுள் இந்தப்
பூவுலகிற்கு அனுப்பும்போது தமது சாயலோடுதான் அனுப்புகின்றார். நாம் கடவுளின் பிம்பமாக
இவ்வுலகில் இருக்கிறோம் என்பது உண்மை. எனினும், பல மனிதர்கள் இவ்வுண்மையை உணராமல்,
வெளிப்படையாகத் தெரியும் தங்களின் உடல் அமைப்பு, நிறம், குடும்பப் பின்னணி போன்றவற்றை
மட்டும் வைத்து தங்களை அளவுக்கதிமாகவோ அல்லது அளவுக்குக் குறைவாகவோ மதிப்பிடுகிறார்கள்.
தங்களை அளவுக்கதிகமாக மதிப்பிடுவது அகந்தைக்கும், அளவுக்குக் குறைவாக மதிப்பிடுவது
தாழ்வு மனப்பான்மைக்கும் காரணமாக இருக்கின்றன. இவ்விரண்டு அணுகுமுறைகளும் நம் உண்மைநிலையை
நாம் ஏற்றுக்கொள்ளாத, அன்பு செய்யாத நிலையைச் சுட்டிக்காட்டுகிறது. எனவே, அகந்தையும்
தாழ்வு மனப்பான்மையும் தன்னோடுடனான உறவில் ஒரு மனிதர் செய்யும் பாவங்கள் என்று நாம்
கூறலாம். அகந்தையும் தாழ்வு மனப்பான்மையும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களே! இரண்டுமே
நாம் நம்மைச் சரியாக மதிப்பிடத் தெரியாததன் காரணமாக நம்மில் நிகழ்வது. இரண்டுமே நாம்
கடவுளின் சாயலில் படைக்கப்பட்டுள்ளோம் என்ற உண்மையை உணராததன் காரணமாகவும், நம் வழியாகக்
கடவுள் செயல்படுகின்றார் என்ற விழிப்புணர்வு நம்மிடம் இல்லாததன் காரணமாகவும் நம்மில்
நிகழ்வது.”
அன்புச் செல்வன்: “அகந்தையைப் பற்றிய கதை இது! மின்சார
வசதி கிராமப்புறங்களைச் சென்றடையாத காலத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்ட கதை இது!
ஒரு நபர் கிராமத்திலிருந்து வெளியேறி, ஒரு நகரத்தில் வாழ்ந்து வந்தார். அவருடைய கிராமப்புற
நண்பர் சிலகாலம் கழித்து அவரைச் சந்திக்கச் சென்றார். நண்பரிடம் சென்ற கிராமத்தவர்,
‘ஒரே புழுக்கமாக இருக்கிறது. ஒரு விசிறி கொடு’ என்றாராம்.
நண்பரோ, ‘நீ இப்போது நகரத்தில் இருக்கிறாய். இங்கு விசிறியெல்லாம் தேவையில்லை. நான்
கையசைத்தாலே காற்று வரும்’ என்று பெருமையோடு கூறிவிட்டு மின் விசிறிக்கான
பொத்தானை அழுத்த, காற்று வந்தது. அடுத்து கிராமத்தவர், ‘இரவு நேரம் வந்துவிட்டது. அரிக்கேன்
விளக்கை ஏற்று’ என்று கூற நண்பர், ‘இது கிராமமல்ல;
நகரம்! இங்கு நான் கையசைத்தாலே எல்லாம் நடக்கும். இப்போது என் கையசைவில் வெளிச்சம்
வரும் பார்’ என்று பெருமையோடு கூறிவிட்டு, பொத்தானை
அழுத்த குழல்விளக்கு எரிந்தது. கிராமத்தவர் இவற்றையெல்லாம் பிரமிப்போடு பார்த்துக்கொண்டிருந்தார்.
இவ்வாறு வானொலிப்பெட்டி, தொலைக்காட்சிப் பெட்டி ஆகியவற்றையெல்லாம் தன் கை அசைவினாலே
இயக்கினார். இதற்கிடையில் திடீரென மின்சாரம் போய்விட்டது. காற்று இல்லை, வெளிச்சம்
இல்லை. கிராமத்தவர், ‘நண்பா! உன் கையை அசை! காற்றும் வெளிச்சமும் வரட்டும்’ என்றாராம். இப்படித்தான் நம்மில் பலர்! கடவுளின் ஆற்றல்
நம் வழியாகப் பாய்வதன் காரணமாகவே நம்மால் சிறப்பாகச் செயல்பட முடிகிறது என்கின்ற விழிப்புணர்வு
இல்லாதவர்களாக இருக்கின்றோம். ஏதோ நம்மாலேயே எல்லாம் நடைபெறுகிறது என்று நம்மைக் குறித்து
அளவுக்கதிகமாகவே எடை போட்டுக்கொள்கிறோம்.”
அருள்பணி: “இது ஒருபுறம் இருக்க, தாழ்வு மனப்பான்மையில்
உழன்று, தங்களின் ஆற்றல் என்னவென்று தெரியாமலேயே வாழ்ந்து மடிவோரும் உள்ளனர். வங்கக்கவி
இரவீந்தரநாத் தாகூரின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு. அவரது குடும்பம் பெரிய குடும்பம்.
பெற்றோருக்குப் பதினான்காவது குழந்தையாகப் பிறந்தவர் இவர். எனவே, இவரை அதிகமாக வளர்த்தது
இவரது வீட்டில் வேலை செய்த ஒரு பணியாளரே! இந்தப் பணியாளருக்கு மற்ற வேலைகளும் இருந்ததன்
காரணமாக, தாகூரோடு உடனிருந்து இவரைக் கவனித்துக்கொள்ள முடியவில்லை. குழந்தையான தாகூரைக்
கையாள ஒரு வழிமுறையைக் கையாண்டார். தாகூரை வீட்டின் ஓரிடத்தில் வைத்து, அவரைச் சுற்றித்
தன் கையாலே ஒரு வட்டமிட்டு, ‘இது ஒரு மந்திர வளையம். இதைத் தாண்டி நீ வெளியே வந்தால்,
ஒரு பெரிய மிருகம் வந்து உன்னை விழுங்கிவிடும்’ என்று
கூறிப் பயமுறுத்தி, அவரை அங்கேயே இருக்க வைப்பாராம். மேலும், அவரது குடும்பம் பக்தியான
குடும்பமாதலால் இராமாயணம், மகாபாரதம் போன்றவை இவருக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டன. இதன்
பின்னணியில் அந்தப் பணியாளர், ‘இராமாயணத்தில் இராமர் சொன்ன எல்லையைத் தாண்டிச் சென்றதாலே,
இராவணன் சீதையைக் கடத்திச் சென்றான். நீயும் நான் வரைந்த எல்லையைத் தாண்டி வந்தால்,
உனக்குத் தீங்கு தான் ஏற்படும்’ என்று கூறி, அவரை வட்டத்திற்குள்ளே
கட்டுப்படுத்தி வைப்பாராம். இதுபோலத்தான் நம்மில் பலரது வாழ்வும்! நம்மைச் சுற்றி நாமே
ஒரு மனவட்டத்தை உருவாக்கி, ‘அதுதான் நாம்’ என்கின்ற
மனநிலையோடு, நம் உண்மையான ஆற்றல் என்னவென்று தெரியாமலேயே வாழ்கிறோம்.”
மார்த்தா: “தந்தையே, அடுத்ததாக சக மனிதர்களுக்கு
எதிராக நாம் செய்யும் பாவங்கள் குறித்தும், அதன் பாதிப்புகள் குறித்தும் நாம் அதிகம்
விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று எண்ணுகின்றேன். இது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்.
இயற்கைக்கு எதிராக நாம் செய்யும் பாவங்கள் பற்றிக் கூறுங்கள் தந்தையே!”
அருள்பணி: “மானிட வாழ்வின் நல்வாழ்விற்கென்று
கடவுள் கொடுத்துள்ள மாபெரும் கொடை இயற்கை! இயற்கைக்கு எதிராக நாம் இரண்டு பாவங்களைக்
கட்டிக்கொள்ள முடியும். ஒன்று, அளவுக்கதிமாக இயற்கை வளங்களை நம் வசதிக்காக நுகர்வது.
இரண்டு, இயற்கையைப் பாதுகாக்கவும் பாராமரிக்கவும் நம்மால் இயன்ற முயற்சிகளை எடுக்காமல்
இருப்பது.”
அன்புச் செல்வன்: “இன்றைய சூழ்நிலையில் மனிதர்களாகிய
நாம் நம் வசதிக்காக இயற்கை வளங்களை அளவுக்கதிகமாகவே நுகர்கிறோம் என்பதைப் பல சூழலியலாளர்கள்
தெளிவாக எடுத்துரைக்கிறார்கள். மனிதர்களது அதீத நுகர்வு மற்றும் பராமரிப்பின்மையின்
காரணமாக நதிகள் நாசமாகிக் கொண்டிருக்கின்றன; மலைகள் மறைந்து கொண்டிருக்கின்றன; காடுகள்
காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன; மண் மலடாகிக் கொண்டிருக்கிறது. இவற்றின் காரணமாக
அடுத்து வரும் தலைமுறையினருக்கு விட்டுச் செல்லவேண்டிய இயற்கை வளங்களை நாமே சூறையாடிக்கொண்டிருக்கின்றோம்.
இவை இயற்கைக்கு எதிரான பாவங்கள்தானே!”
அருள்பணி: “நிச்சயமாக! இயற்கை வளங்களைச் சூறையாடுவதால்
அதிக பாதிப்பு மனிதர்களுக்குத்தான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இயற்கையின்
பாதிப்பு காலநிலைச் சீர்கேடாக நம்மைத் தாக்குகின்றன. இத்தகைய சூழ்நிலையில் இயற்கையைப்
பராமரித்துப் பாதுகாக்கின்ற கடமை ஒவ்வொரு மனிதருக்கும் முக்கியமாக ஒவ்வொரு கிறித்தவருக்கும்
உண்டு. மரங்களை நடுவது, மரங்களை வெட்டாமல் இருப்பது, வாகனங்களை அவசியத்திற்காக மட்டும்
பயன்படுத்துவது, போதுமான தேவைகளோடு வாழக் கற்றுக்கொள்வது போன்றவை இயற்கையுடனான நம்
உறவைக் கட்டியெழுப்ப நாம் மேற்கொள்ளும் சிறுசிறு முயற்சிகளே!”
அன்புச் செல்வன்: “இயற்கை குறித்துப் பேசும்போது, இயற்கைமட்டிலான
நம் முன்னோர்களின் அணுகுமுறை என் மனக்கண்முன் வருகிறது. அவர்கள் இயற்கையில் இறைவனின்
பிரசன்னம் இருக்கிறது என்பதை உணர்ந்திருந்தனர். ‘மாசில் வீணையும் மாலை மதியமும் / வீசு
தென்றலும் வீங்கிள வேனிலும் / மூசு வண்டறை பொய்கையும் போன்றதே / ஈசன் எந்தை இணையடி
நீழலே’ என்ற அப்பரின் வார்த்தைகள் நமக்குத்
தெரிந்ததே! அத்தகைய மனநிலை இயற்கையை மதிக்க வேண்டும் என்ற மனநிலையை நம் முன்னோர்களுக்குக்
கொடுத்தது. எனவே, இயற்கையைக் கையாள்வதில் மிகவும் கவனமாக இருந்தனர். நவீன மனிதர் இயற்கையைத்
தூக்கி எறிகின்ற பொருளாகப் பார்க்கின்றனர். இவ்வாறு பார்ப்பதே ஒருவகையில் இயற்கைக்கு
எதிரான பாவம்தான்.”
(முற்றும்)
நமது வாழ்க்கை பல நேரங்களில் சிக்கல்கள், தடைகள் மற்றும் எதிர்மறைச் சூழ்நிலைகளால் சூழப்பட்டுள்ளது. மனிதர்கள் தங்களது முயற்சிகளில் வெற்றியடையாதபோது, வாழ்க்கை வெறுமையாக, குழப்பமாகத் தோன்றும். இந்நிலையில், சாலமோனின் ஞானநூலில் கூறப்படும் இறைவார்த்தை நமக்கு ஆழமான நினைவூட்டலைத் தருகிறது.
புனித பிரான்சிஸ்
அசிசியாரும்
ஆட்டுக்குட்டியும்
கடும்
குளிர்காலக் காலைப்பொழுதில் அசிசியின் புனித பிரான்சிஸ் அவர்கள் ஓர் இளம் பிரான்சிஸ்கன் சகோதரருடன் அமைதியாக வழிப்பயணம் செய்து கொண்டிருந்தார். குளிர்காற்று முகத்தைத் துளையிடும் வகையில் வீசியது; பாதை கிட்டத்தட்ட வெறிச்சோடியிருந்தது. அந்த நேரத்தில், புனிதர் திடீரென்று நடையை நிறுத்தினார். மரவேலி ஒன்றின் அருகில் ஒரு சிறிய ஆட்டுக்குட்டி உடல் நடுங்கிக்கொண்டு, பயத்தில் மூச்சை முட்டிக் கொண்டு ஒற்றையாய் தனியாகத் தவித்துக்கொண்டிருந்தது. அதன் மேனி முட்செடிக்குள் சிக்கியிருந்தது, அது முற்றிலும் உதவியற்ற நிலையில் பார்த்த புனித பிரான்சிஸ் கருணையுடன் முனைந்து அந்த ஆட்டுக்குட்டியை மெதுவாகத் தனது கரங்களில் தூக்கிக்கொண்டார். அப்போது உடன்வந்த இளம் சகோதரர் பயத்துடன் கேட்டார்: “அருள்தந்தையே பிரான்சிஸ், இது ஒரு சிறிய மிருகம்தானே! நாம் விரைந்து செல்ல வேண்டிய வேலையுண்டு; மக்கள் நம்மை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்” என்றார்.
உடனே
பிரான்சிஸ், “சகோதரனே! இந்த ஆட்டுக் குட்டி அதைப் படைத்த ஆண்டவருக்குச் சொந்தமானது. கடவுளின் அளவற்ற அன்பு இந்த நொடியிலும் அதை வாழவைத்திருக்கிறது. அதை நாம் எப்படி உதாசீனப்படுத்தி கடந்து செல்ல முடியும்?” என்று கேட்டு, புனிதர் அக்கறையுடன் அந்த ஆட்டுக்குட்டியைத் தனது மார்பில் சாய்த்தபடி அதன் உரிமையாளரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தார். உரிமையாளர் ஆழ்ந்த நன்றியுடன் அவரை வாழ்த்தினார்.
அந்த
நேரத்தில் புனித பிரான்சிஸ் மிக எளிமையாகக் கூறினார்: “இந்தச் சிறிய உயிரினத்தைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்; ஒவ்வொரு படைப்பும் ஆண்டவருக்குச் சொந்தமானது. கடவுளின் அன்பு எல்லா உயிர்களையும் ஒவ்வொரு கணமும் தாங்கி நிறுத்துகிறது.”
அன்று
நடந்த இந்நிகழ்வை அவருடன் பயணித்த இளம்சகோதரர் தனது நாள்குறிப்பில் இவ்வாறு பதிவு செய்தார்: “அந்த நாளில்தான் நான் இறைவார்த்தையை உண்மையாகப் புரிந்துகொண்டேன்.”
“ஆண்டவரே, உயிர்கள்மீது அன்புகூர்கின்றவரே, நீர் எல்லாவற்றையும் வாழவிடுகின்றீர்; ஏனெனில் அவை யாவும் உம்முடையன”
(சாஞா 11:26). இந்த இறைவார்த்தையில் கடவுளின் அன்பும் பராமரிப்பும் மனித வாழ்வின் அர்த்தமும் இணைக்கப்பட்டுள்ளன. புனித அகுஸ்தின் ஹிப்போ மற்றும் புனித பவுலின் கருத்தைப் போல, மனிதன் கடவுளின் படைப்பில் உயிர்ப்பெற்று வாழ்வது கடவுளின் கருணையால்தான் என்பதை மையமாகக் கொண்டு திருத்தந்தை லியோ தனது புதன் மறைக்கல்வி உரையை நிகழ்த்தினார்.
1. கடவுள் அன்பில் உலகத்தை
நிர்வகிக்கிறார்!
கடவுள்
நம்மை அன்புடன் காப்பாற்றுகிறார். மனிதர்கள் சந்திக்கும் நோய், பிளவுபாடு, கஷ்டங்கள் போன்ற சூழ்நிலைகளிலும் கடவுளின் அன்பு நம்மைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் சக்தியாக அமைகிறது. தூய ஆவியின் செயல்பாடுகளில் இயேசு கிறிஸ்து தமது அன்பை நோயுற்றவர்கள், காயமடைந்தவர்கள், பாவங்களில் விழுந்தவர்களுக்குக் காட்டினார் (மத் 14:14). தூய ஆவி இவ்வாறான அன்பின் செயல்களை ஆன்மிகப் பராமரிப்பு என வர்ணிக்கிறார். கடவுளே
உயிரின் முதன்மை ஆதாரம்; அவரது அன்பால் எல்லாப் படைப்புகளையும் பராமரிக்கிறார் எனக் கத்தோலிக்கத் திருச்சங்கக் கொள்கை கற்பிக்கிறது (Catechism of the Ctholic Church, 301).
2. கடவுள் அனைத்தையும் வாழவிடுகிறார்
‘நீர் எல்லாவற்றையும் வாழவிடுகின்றீர்…’என்பது
உலகில் உள்ள அனைத்து உயிர்களும் கடவுளின் கையிலே பாதுகாக்கப்பட்டுள்ளதைக் காட்டுகிறது. மனிதர்கள் மட்டுமல்ல; விலங்குகள், இயற்கை வளங்கள், சுற்றுப்புறம் ஆகிய அனைத்தும் ஆண்டவரின் பராமரிப்பில் உள்ளன.
உலகில்
8.7 மில்லியன் உயிரினங்கள் வாழ்கின்றன. இவை அனைத்தும் கடவுளின் கரங்களால் பாதுகாக்கப்பட்டவை. இயற்கையின் அடையாளங்களையும் மனித வாழ்வையும் இணைக்கும் கருணை, கடவுளின் பராமரிப்பை அடிப்படையாகக் கொண்டது. “நாம் வாழும் எல்லா நிமிடங்களும் கடவுளின் பரிசுதான்”
(1கொரி 10:31) என்கிறார் புனித பவுல்.
3. எல்லாம் ஆண்டவருடையவை
“ஏனெனில் அவை யாவும் உம்முடையன...” நம் செல்வம், திறமை, உடல் மற்றும் மனம் அனைத்தும் கடவுளுக்கே சொந்தமானவை. நமது வாழ்க்கையை நம்முடைய சொந்த முயற்சியாக மட்டுமே எண்ணாமல், கடவுளின் வழிகாட்டுதலின்படி வாழ்வது அவசியம். நமது முயற்சிகள் கடவுளின் நம்பிக்கையுடன் இணையும்போது மட்டுமே செம்மையாகும். மனிதர்கள் கடவுளை மறந்தால், இயற்கை, குடும்பம் மற்றும் சமூக உறவுகளில் சிக்கல்கள் உருவாகின்றன. “கடவுளின் மகிமை மனித வாழ்க்கையின் எல்லாப் படைப்புகளிலும் தெரியும்”
என்கிறது திருச்சங்கக் கொள்கை (CCC 294).
4. வாழ்க்கைக்கு எதிர்நோக்கு தேவை
வாழ்க்கைக்கு
ஒரு திசை, ஓர் எதிர்நோக்கு இல்லாவிட்டால், அது சோம்பல் மற்றும் குழப்பமாக மாறும். கடவுளை நம்பும் நம்பிக்கை மனிதர்களை சிரமங்களின் வழியாக நடக்க வைக்கும், சோதனைகளில் நிலைத்திருக்க உதவும்.
வாழ்க்கைப்
பயணத்தில் கடவுளின் அன்பை நினைவில் வைத்துக்கொண்டு முன்னேற வேண்டும். எதிர்நோக்கு இல்லாமல் வாழும் வாழ்க்கை வெறுமை, குழப்பமான பயணம் போன்றதாகத் தோன்றும். திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் கூறியதாவது: “வாழ்க்கையில் எதிர்நோக்கு இல்லாதவர் துயரத்தில் தவிக்கிறார்; கடவுளில் நம்பிக்கை வைத்தவர் மட்டுமே உண்மையான அமைதியைப் பெறுகிறார்.”
5. இயேசு கிறிஸ்துவின்
உயிர்ப்பு
- நம்பிக்கையின்
ஆதாரம்
“தீமையின் இருள் எப்போதும் நம்மைச் சுற்றி இருப்பதாகத் தோன்றினாலும், இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு நம்மை ஆதரிக்கும் வலிமையாக உள்ளது. வாழ்க்கை மங்கியதாகத் தோன்றினாலும், அவர் எப்போதும் நம்முடன் இருக்கிறார்” என்று
திருத்தந்தை லியோ வழங்கிய புதன் மறைக்கல்வி உரை, மக்கள் மனத்தில் கடவுளின் அன்பின் நிலையான நினைவூட்டலை உருவாக்குவதாக அமைகிறது.
சாலமோனின்
வார்த்தைகள் நமக்கு உண்மையை உணர்த்துகிறது: ‘கடவுள் உலகையும் உயிர்களையும் வாழவிட்டு, அனைத்தையும் தமது அன்பால் நிர்வகிக்கிறார். நம்முடைய வாழ்க்கை சவால்கள் நிறைந்ததாக இருந்தாலும், அவர் அன்பையும் கருணையையும் நம்மோடு வைத்திருக்கிறார்.’
நாம்
கடவுளின் அன்பை நம்பினால், எந்தச் சவாலையும் கடந்து வாழலாம். உலகின் அனைத்து உயிர்களும், மனிதர்கள், இயற்கை வளங்கள், வாழ்க்கையின் அனைத்துத் தரப்புகளும் அவரது கைகளில் பாதுகாக்கப்படுகின்றன.
6. வாழ்வின் திசையும் எதிர்நோக்கும்
உலகில்
பரவியுள்ள நம்பிக்கையின்மை என்ற நோய்க்கு எதிராக, நாம் வாழ்வை ஆபத்தில் கிடைத்த கொடையாகவும், மகிழ்ச்சியாக இருக்கவே நம்மைப் படைத்த தந்தையின் அன்பின் மீதான நம்பிக்கையாகவும் கொள்ளவேண்டும். கடவுள் “வாழ்க்கையை அன்புகூர்பவர்” (சாஞா
11:26).
இயேசு
கிறிஸ்துவே வாழ்வு; அவர் தமது உயிரைக் கொடுத்து நமக்கு வாழ்வு அளித்தார். உருவாக்குவது என்பது (Creating) அன்பினாலும்
அன்பிலும் பிறரை வாழ்க்கையில் கொண்டு வருவதாகும். பொறாமைக்கு எதிராகக் கடவுளின் அன்பும் வாழ்க்கைத் திட்டமுமே உண்மையான வழி. உயிர்த்த இயேசுவே நமது நிரந்தர எதிர்நோக்கு. அவரே நம்முடன் நடந்து வருகிறார்!
ஆண்டவர்
அன்பில் வாழும் வாழ்க்கை நம்பிக்கை, பரிசுத்தம் மற்றும் ஆன்மிக வளர்ச்சியின் வழிகாட்டியாகும்.
தூய லூக்கா நற்செய்தியில் வரும் எலிசபெத்து மரியாவை வாழ்த்துகின்ற நிகழ்வானது, மரியாவின் நம்பிக்கையானது, இயேசுவினுடைய மலைப்பொழிவின்படி வாழும் அனைவருக்கு மானதொரு மாதிரியாக இருப்பதைக் காட்டுகின்றது.
1. மரியா
எலிசபெத்தைச் சந்திக்கின்ற நற்செய்தியின் விவரிப்பில் எலிசபெத்து ‘ஆவியானவரால் நிரப்பப்பட்டு’ மரியாவை
வரவேற்று, “ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்” (லூக்
1:45) என்று வாழ்த்தினார். முதன் முதலாக லூக்கா நற்செய்தியில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த வாழ்த்துரையானது, மரியாவை அவரின் நம்பிக்கையினால் இயேசுவினுடைய மலைப்பொழிவை நிறைவேற்றுவதில் திரு அவைக்கு முன்மாதிரியானவராகக் காட்டுகின்றது.
மரியாவின் நம்பிக்கையைப்
பற்றி எலிசபெத்து புகழ்ந்து பேசுவது, இறைத்தூதரின் அறிவிப்பை சக்கரியாவுக்கான இறைத்தூதரின் அறிவிப்புடன் ஒப்பிடுவதன் வழியாக வலுப்படுத்தப்படுகிறது. மரியா மற்றும் சக்கரியா இருவருக்குமான அறிவிப்பை
மேலோட்டமாக வாசிக்கின்றபொழுது, இருவரும் அந்த இறைச்செய்திக்கு ஒத்த பதில்களைக் கொடுத்ததாகக் கருதக்கூடும். “இது நடைபெறும் என எனக்கு எப்படித்
தெரியும்? நான் வயதானவன். அதுபோல் என் மனைவியும் வயது முதிர்ந்தவராயிற்றே” (லூக்
1:18) என்று சக்கரியாவும், “இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!” (லூக் 1:34) என்று மரியாவும் கேட்கின்றார்கள். ஆனால், இந்த இரண்டு நிகழ்வுகளிலும் வருகின்ற முக்கியக் கதாபாத்திரங்களான சக்கரியா மற்றும் மரியாவின் உள்மனப்பான்மைக்கு இடையேயான ஆழமானதொரு வேறுபாட்டை இறைத்தூதரின் வார்த்தைகளிலிருந்தே நாம் அறிந்துகொள்ளலாம். அதாவது, சக்கரியாவின் அவநம்பிக்கைக்காக இறைத்தூதர் அவரைக் கடிந்துகொள்கின்றார். ஆனால், மரியாவின் கேள்விக்கு
அவர் உடினடியாகப் பதில் அளிக்கின்றார். எலிசபெத்தின் கணவரைப் போலல்லாமல், மரியா இறைத்திட்டத்திற்கு முழுமையாக அடிபணிகின்றார். மேலும், கண்ணுக்குத் தெரிகிற அடையாளத்தைக் (visible sign) கொடுக்கவேண்டும் என்ற நிபந்தனையின்றி
தனது சம்மதத்தை அளிக்கின்றார்.
மரியா
ஒரு தாயாக வேண்டும் என்று முன்மொழிந்த இறைத்தூதரிடம், தான் ஒரு கன்னியாக இருக்கவேண்டும் என்ற தனது எண்ணத்தை மரியா நினைவுபடுத்துகின்றார். இறைத்தூதரின் அறிவிப்பானது நிறைவேறும் என்று அவர் முழுமையாக நம்பினார். அதற்கு அவர் முழு தயார் நிலையுடன் தன்னைக் கையளிக்க விரும்பினார். எனவே, இறைவனின் விருப்பத்தைச் சிறந்த முறையில் நிறைவேற்றுவதற்காக, அத்தூதரிடம் அது நிகழப்போகும் விதம் குறித்து மட்டுமே கேள்வி எழுப்புகின்றார். இதை புனித அகுஸ்தினார், “அவர், அது நிகழப்போகும் அந்த வழியைத்தான் தேடினார்; கடவுளின் பேராற்றலை அவர் சந்தேகிக்கவில்லை” (Sermo 291) என்று விளக்குகின்றார்.
செவிசாய்த்தல்
மற்றும்
தூய
நம்பிக்கை
இவை
இரண்டும்
மரியாவுக்குத் தேவைப்பட்டன
2. இந்த
இரண்டு அறிவிப்புகளும் வெளியிடப்பட்ட சூழலானது மரியாவினுடைய நம்பிக்கையின் சிறப்பை உயர்த்த உதவுகிறது. தூய லூக்காவின் நற்செய்தியில், சக்கரியாவுக்கான மிகவும் சாதகமான சூழ்நிலையையும், அவர் அளித்த பதிலின் போதாமையையும் காண்கின்றோம். எருசலேம் ஆலயத்தில் ‘திருத்தூயகத்திற்கு’ முன்
(விப 30:6-8) பலிபீடத்தில் இறைத்தூதரின் அறிவிப்பை சக்கரியா பெறுகிறார். அவர் தூபம் போடுகையில் இறைத்தூதர் அவரிடம் அறிவிக்கின்றார். அதாவது, குரு என்ற முறையில் அதற்கான தனது கடமையைச் செய்கின்ற அவருடைய வாழ்வின் முக்கியமானதொரு தருணத்தில் அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு, இறைவனின் முடிவானது ஒரு காட்சி வழியாக அவருக்குத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பிடத்தக்க இச்சூழ்நிலைகள் அவருக்கு வழங்கப்பட்ட செய்தியின் தெய்வீக நம்பகத்தன்மையை நாம் எளிதில் புரிந்துகொள்வதற்கு உதவுகின்றன. மேலும், அச்செய்தியை உடனடியாக ஏற்றுக்கொள்வதற்கான ஊக்கத்தையும் நமக்கு அளிக்கின்றன.
எவ்வாறாயினும்,
மரியாவுக்கான அறிவிப்பானது சக்கரியாவிடம் வெளியிடப்பட்ட புனிதத்தன்மையின் வெளிப்புறக்கூறுகள் எதுவுமே இல்லாமல் எளிமையானதொரு வேலைநேரச் சூழலில் நடைபெறுகிறது. தூய லூக்கா நற்செய்தியாளர் இறைமகனுடைய பிறப்பின் அறிவிப்பானது இந்த இடத்தில்தான் நடந்தது
என்று எந்தவொரு குறிப்பிட்ட இடத்தையும் சுட்டிக்காட்டவில்லை: மரியா சிறிதளவே முக்கியத்துவம் வாய்ந்த கிராமமான நாசரேத்தில் இருந்ததாக மட்டுமே அவர் குறிப்பிடுகின்றார். இது இந்நிகழ்வுக்கு முன்னரே தீர்மானிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. மேலும், இறைத்தூதர் தோன்றுகின்ற அந்த நேரத்திற்கு, வழக்கத்திற்கு மாறான எந்தவொரு முக்கியத்துவத்தையும் நற்செய்தியாளர் குறிப்பிடவில்லை; எந்தவொரு வரலாற்றுச் சூழ்நிலையையும் அவர்
விவரிக்கவும் இல்லை. இறைத்தூதரைச் சந்திப்பதில், அவருடைய வார்த்தைகளின் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில் ஒருவரின் கவனம் முழுவதும் செலுத்தப்படுகிறது. எனவே, மரியாவுக்கு முனைப்புடன் கேட்டல் மற்றும் தூய்மையான நம்பிக்கை தேவைப்படுகிறது.
ஒன்றை
நம்புவதற்காக எளிதில் கண்டுணரக் கூடிய அடையாளங்களைத் தொடர்ந்து கேட்கும் வழக்கம் இன்றும் நம்மிடம் உள்ள மனநிலையோடு ஒப்பிடுகையில், இந்தக் கடைசிக் கருத்தானது நம்மை மரியாவினுடைய நம்பிக்கையின்
மகத்துவத்தைப் பாராட்டச் செய்கிறது.
3. சக்கரியாவுக்கு
அறிவிக்கப்பட்டதைவிட மிகவும் உயர்ந்ததோர் உண்மைக்கு அவரின் ஒப்புதலைத் தருமாறு மரியா கேட்டுக்கொள்ளப்படுகின்றார்.
மலட்டுத் திருமண சேர்க்கையினுள் (within sterile marital union)
வளமையானதொன்றாக ஆக்க கடவுள் விரும்பியதனால் நடக்கும் ஓர் அதிசயமான பிறப்பை நம்ப சக்கரியா அழைக்கப்பட்டார். அதாவது, பழைய ஏற்பாட்டுப் பெண்கள் பலர் பயன்பெற்றதைப் போன்றதொரு தெய்வீக இடையீடு: சாராள் (தொநூ 17:15-21, 18:10-14), ராக்கேல் (தொநூ 30:22), சாம்சனுடைய தாய் (நீப 13:1-7) மற்றும் சாமுவேலின் தாயான அன்னா (1சாமு 1:11-20). இந்நிகழ்வுகள் அனைத்திலும் குறிப்பாக, கடவுளின்
கொடைக்கான நன்றியுணர்வானது வலியுறுத்தப்படுகிறது.
மரியா
பழைய ஏற்பாட்டில் எந்தவொரு முன்னுதாரணமும் குறிப்பிடப்படாத ஒன்றான கன்னித் தாய்மையை (virginal motherhood) நம்ப அழைக்கப்படுகின்றார். உண்மையில், நன்கு அறியப்பட்ட இறைவாக்கினர் எசாயாவின் இறைவாக்கான, “இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவள் ‘இம்மானுவேல்’ என்று
பெயரிடுவார்” (7:14) என்கிற
பார்வையைத் தவிர்க்கவில்லை என்றாலும், இந்த அர்த்தத்தில் வெளிப்படையாக விளக்கமளிக்கப்பட்டது கிறிஸ்துவின் வருகைக்குப் பிறகும், நற்செய்தி வெளிப்பாட்டின் வெளிச்சத்திலும் மட்டுமேயாகும்.
இவ்வாறு,
இதற்குமுன் வெளிப்படுத்தப்படாத ஓர் உண்மையை ஒப்புக்கொள்ளும்படி மரியா கேட்கப்படுகிறார். மரியாவும் அதை எளிமையான இன்னும் தைரியமான இதயத்தோடு ஏற்றுக்கொள்கின்றார். “இது எவ்வாறு நிகழும்?” என்ற கேள்வியுடன் கன்னித்தன்மையைத் தனது விதிவிலக்கான மற்றும் தனித்துவமான தாய்மையுடன் ஒத்துப்போகச் செய்வதற்கான இறைச்சக்தியின் மீதான அவரின் நம்பிக்கையை அவர் வெளிப்படுத்துகின்றார்.
“தூய ஆவி உம்மீது வரும்; உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும்; ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்”
என்று பதிலளிப்பதன் வழியாக மரியா
கேட்ட கேள்விக்கு இறைத்தூதர் கடவுளின் சொல்லுதற்கரிய தீர்வை அளிக்கின்றார். அதுவரை ஒரு தடையாக இருந்த கன்னித்தன்மையானது மனுவுருவான கடவுள் பற்றிய கருத்தாக்கம் தூய ஆவியானவர் அவரில் நிறைவேற்றும் உறுதியானதொரு சூழலாக மாறுகிறது. இவ்வாறு, இறைத்தூதரின் பதிலானது இயேசுவைப் பெற்றெடுப்பதில் தூய ஆவியானவருடன் கன்னி மரியா ஒத்துழைப்பதற்கான வழியைத் திறக்கிறது.
4. இறைத்திட்டத்தை
நிறைவேற்றுவதில் மனிதனின் சுதந்திரமான ஒத்துழைப்பானது உணரப்படுகின்றது. இறைவனின் வார்த்தையை நம்பியதன் வழியாகத் தனக்கு அறிவிக்கப்பட்ட தாய்மையை நிறைவேற்றுவதில் மரியா ஒத்துழைக்கின்றார்.
மரியாவின் நம்பிக்கைச்
செயலானது
ஆபிரகாமின்
நம்பிக்கையை
நினைவுபடுத்துகின்றது
திரு
அவைத் தந்தையர் பெரும்பாலும் இயேசுவின் கன்னி கருத்தரிப்பின் (virginal conception) இந்தத் தன்மையை வலியுறுத்துகிறார்கள். இயேசுவின் பிறப்பு அறிவித்தல் பற்றிய நற்செய்தி விளக்கத்தில் புனித அகுஸ்தினார் சிறப்பாக இவ்வாறு கூறுகின்றார்: “இறைத்தூதர் அறிவிக்கின்றார், கன்னி மரியா அதைக் கேட்கின்றார், நம்புகின்றார் மற்றும் கருத்தரிக்கின்றார்” (Sermo 13 In Nat. Dom.). மீண்டுமாக, “கிறிஸ்து நம்பப்படுகிறார் மற்றும் நம்பிக்கையின் வழியாகக் கருத்தரிக்கப்படுகிறார். இவ்வாறு, நம்பிக்கையின் வருகை
முதலில் கன்னி மரியாவின் இதயத்தில்
நிகழ்கிறது, பின்னர் அந்த நம்பிக்கையின் பலன் தாயின் வயிற்றில் உருவாகிறது” (Sermo 293) என்று கூறுகின்றார்.
பழைய
உடன்படிக்கையின் தொடக்கத்தில், கடவுளை நம்பியதால் ஒரு பெரிய சந்ததியினரின் தந்தையாகிய ஆபிரகாமின் நம்பிக்கையை மரியாவின் நம்பிக்கை
நினைவுபடுத்துகின்றது
(ஒப்பிடுக. தொநூ 15:6: மீட்பரின் தாய், எண்.14). புதிய ஏற்பாட்டின் தொடக்கத்தில் மனுவுருவாதலின்
மறைபொருளை நிறைவேற்றுவது, இயேசுவின் முழுமையான மீட்புப்பணியின் தொடக்கம் மற்றும் அனைத்திலும் மரியா தனது நம்பிக்கையுடன் தீர்க்கமானதொரு செல்வாக்கைச் செலுத்தினார்.
இயேசுவின்
பொதுவாழ்வில் வலியுறுத்தப்பட்ட நம்பிக்கைக்கும் மீட்பிற்கும் இடையிலான நெருங்கிய உறவானது (ஒப்பிடுக. மத் 5:34, 10:52), மரியாவின் நம்பிக்கை
செயல்படுத்திய மற்றும் மனுக்குல மீட்பில் தொடர்ந்து செயல்படும் அடிப்படைப் பங்கை நாம் புரிந்துகொள்ளவும் உதவுகிறது.
மூலம்:
John Paul II, Mary freely co-operated in God’s plan, in
Osservatore Romano Weekly Edition in English, 10 July 1996, p. 11.
சிந்தனைகளின் ஊற்று மனம். சிந்திக்கும் மனிதனே சிந்தனையாளர். தெளிந்த மனத்தோடு தன் எண்ணத்தை ஒரே நிலையில் கொண்டு சென்று சிந்திப்பவன் தன்னை அறியும் ஆற்றலைப் பெற்று, சரியான பாதையில் சென்று மன அமைதி பெற்று வெற்றியடைகின்றான்.
‘மாகோங்’ என்றால் ‘ஞானி’ என்று பொருள். ஞானிகளின் தன்னம்பிக்கையும், தெளிவான சிந்தனையும், குழப்பமில்லாத கண்ணோட்டமும் அவர்களின் பிறப்புரிமைகள். ஒவ்வொரு மனிதனின் மனத்திலும் தெய்வீகம் பொருந்திய சிந்தனை இருக்கின்றது. அவை ஒவ்வொரு மனிதனிடமும் வேறுபடும்போது புதுமையாகத் தோன்றுகிறது.
மெல்கியோர்
எனும் பாரசீக ஞானி இயேசுவை அமைதியின் அரசராக எண்ணி பொன்னையும், கஸ்பார் எனும் எத்தியோப்பிய ஞானி குருத்துவத்தைக் குறிக்கும் சாம்பிராணியையும், பல்தசார் எனும் அரேபிய ஞானி இறந்த உடலைப் பதப்படுத்தும் வெள்ளைப்போளத்தை இயேசுவின் சிலுவை மரணம் குறித்தும் காணிக்கையாகக் கொண்டு செல்கிறார்கள். விண்மீன் அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தது. ஒரு புதிய அரசர் பிறப்பை இந்த
விண்மீன் முன்னறிவிப்பதாக இவர்கள் நம்பினர்.
இம்மூவரும்
வெவ்வேறு இடங்களிலிருந்து புறப்பட்டாலும் ஒரே இலட்சியத்தோடு, வேற்றுமையில் ஒற்றுமையாக, பிற இனத்தாரின் பிரதிநிதிகளாக இரவிலும் காடு, மலை கடந்து இறையாசிர் பெற ஆவலுடன் சென்றபோது, வழிகாட்டிச் சென்ற விண்மீன் மறைவால் ஏரோது அரசர் மாளிகையை அடைந்தனர். அரசன் ஏரோதிடம், “யூதர்களின் அரசர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்தோம்” என்று கூற, அதைக் கேட்ட ஏரோது அரசன் தனக்குப் போட்டியாகப் பிறந்த குழந்தையைக் கொல்ல மனத்தில் திட்டமிட்டு அவர்களிடம், “நீங்கள் சென்று வணங்கிவிட்டு எனக்கு அறிவியுங்கள்” (மத்
2:8) என்று அனுப்புகிறான். பின்னர் நடந்தேறிய பல நூற்றுக்கணக்கான மாசற்றக் குழந்தைகளின்
சாவிற்குக் காரணமாகிறான் ஏரோது. ‘கெடுவான் கேடு நினைப்பான்’ என்ற
பழமொழிக்கேற்ப அவன் வாழ்வு அழிவுக்குட்பட்டது. அதிகாரம் ஆணவத்தின் பிறப்பிடம். “சிறியதொரு கடுகுபோல் உள்ளம் கொண்டோர் தெருவாருக்கும் பயனற்ற சிறிய வீணன்” என்றார் பாவேந்தர் பாரதிதாசன்.
மூன்று
ஞானியரும், ஏரோது மன்னனின் தீய என்ணத்தை அறியாமல் இருந்தனர். இயேசு பாலனை விழுந்து வணங்கிவிட்டு மனநிறைவும் அமைதியும் ஆசிரும் பெற்று, ஆண்டவரின் தூதர் எச்சரித்ததால் வேறு வழியே சென்றடைந்தனர்.
பிறக்கும்
இந்தப் புத்தாண்டில் (2026) நாட்டின் நீதி, நேர்மை, வளம் பெற தேர்தல் களம் செல்ல வேண்டியிருக்கிறது. பழிவாங்கும் உணர்ச்சி, பதவி மோகம், சாதி-மதவெறி கொண்டவர்கள் மன்னராட்சியில் மட்டுமின்றி, சனநாயக அமைப்பிலேயும், ஆட்சிப் பீடத்தைத் தனக்குக் கிடைத்த நிரந்தரமான சுக பூமி என்று தப்புக்கணக்கு போட்டு அழிந்து போகிறார்கள். குறுக்கு வழியிலே அதிகாரத்தில் தொடர்ந்து இருக்க விரும்புகிறார்கள். பொறாமையால் மற்றவர்களுக்குக் கெடுதல் செய்வதிலேயே, சுயநலத்திலேயே இவர்களின் சிந்தனை இருக்கும். ஒருபோதும் இவர்கள் சரித்திரத்தில் இடம்பெறுவதில்லை.
சுயநலமின்றிப்
பொதுப் பணியாற்றி, மக்களுக்கு நன்மை செய்வதே ஆண்டவருக்கு உகந்த இலட்சிய வாழ்வு. கிளர்ச்சியைத் தூண்டிவிட்டு மக்கள் ஆதரவைப் பெறும் தலைவர்களைத் தவிர்த்து, உள்ளதை உள்ளபடி உரைக்கும் நேர்மையான தலைவர்களை, மக்களாகிய நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை காணும் மக்களாகிய நாம் குடியுரிமை, வாக்குரிமையை இழந்துவிடாமல் விழிப்புணர்வுடன் செயலாற்ற வேண்டும். ‘இனாம்’ என்ற பெயரில் நாம் பெற்ற சுதந்திரத்தை இழந்து அடிமையாகக் கூடாது. நமக்குத் தெரிந்த உண்மைகளைப் பாமர மக்களின் சிந்தனைக்கு எட்டும் வகையில் விளக்கமாக எடுத்துரைக்கவேண்டும்.
மூன்று
ஞானிகள் பாலன் இயேசுவை வணங்கியபின் மனம் நிறைந்து, எந்தவிதக் குழப்பமும் இல்லாமல் சென்றதுபோல, நாமும் நமது சிந்தனைகளைச் சிதறவிடாமல் மனமாற்றம் அடைந்து, இறையனுபவம் பெற்றவர்களாக இயேசுவின் முக ஒளியில் அமைதி காண்போம்!
கிறிஸ்து பிறப்பின் 2025-ஆம் ஆண்டுகளின் நிறைவு, மகிழ்ச்சியான யூபிலி விழாவாகக் கொண்டாடப்படும் என்ற அறிவிப்பினைத் திருத்தந்தை பிரான்சிஸ் 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ஆம் நாள் அறிவித்தார். ‘எதிர்நோக்கின் திருப்பயணிகள் நாம்’ என்ற அழைப்பை யூபிலி 2025-க்கான மையப்பொருளாக முன்மொழிந்தார். ‘புதிய நற்செய்தி அறிவிப்பு’ பணிக்குழுவிடம் திருத்தந்தை பிரான்சிஸ் இதற்கான தயாரிப்பினை மேற்கொள்ள அழைப்பு விடுத்திருந்தார்.
2023-ஆம் ஆண்டு
இரண்டாம் வத்திக்கான் சங்க மறுமலர்ச்சி மற்றும் புதுப்பித்தலை உணர்த்த நான்கு கொள்கைத் திரட்டுகளை வாசிக்கவும், மறுவாசிப்பு செய்யவும், அதன் அடிப்படையில் தனிமனித வாழ்விலும், திரு அவையில் மறுமலர்ச்சியைச் செயல்படுத்தவும் திருத்தந்தை அழைப்பு நல்கினார். 2024-ஆம் ஆண்டை யூபிலிக்கான தயாரிப்பில் ‘இறைவேண்டலின் ஆண்டாக’ அறிவித்து இறைவேண்டல் முன்னிறுத்தும் இறைவனைத் தேடுதல், தளரா நம்பிக்கையுடன் வாழ்தல் மற்றும் இறைவேண்டலையே நம் வாழ்வாக மாற்றுதல் எனும் சீரிய சிந்தனைகளை முன்வைத்தார்.
2025-ஆம் ஆண்டு
யூபிலி விழாவாகச் சிறப்பிக்க அழைப்புவிடுத்த திருத்தந்தை பிரான்சிஸ், யூபிலி ஆண்டின் நோக்கத்தையும் மையக்கருத்தையும் விளக்கி, தன் ஆணைமடலை (Bull) 2024-ஆம்
ஆண்டு மே மாதம் 9-ஆம்
நாள் இயேசுவின் விண்ணேற்றப் பெரு விழா அன்று உரோமையில் இலாத்தரன் பேராலயத்தில் வெளியிட்டார். அம்மடலில் புனித பவுலின் “எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது”
(உரோ 5:5) என்ற ஆழமான பொருள் நிறைந்த வார்த்தைகளை மையமாக அமைத்து ‘எதிர்நோக்கின் பயணிகள்’ என்பதன் பொருள் என்ன என்பதைத் தெளிவுபடுத்தினார்.
வெற்றுக்
கொண்டாட்டங்களையோ, வெறுமையான விழாக்களையோ மையப்படுத்திக் கொண்டாடும் நிகழ்வாக அல்லாமல், நம்பிக்கையாளர்களின் இறைநம்பிக்கையைப் (Faith) புதுப்பிக்கவும்,
பிறரன்புச் செயல்களை (Love-Charity) இன்றைய
காலகட்டத்தில் எப்படித் தொடர வேண்டுமெனவும், திரு அவையைத் தூண்டியெழுப்பும் நோக்குடன் சிந்தனைகளை ஆணைமடலின் மையச்செய்தியாக முன்வைத்தார். இதன் தொடர்ச்சியாக, 2024, டிசம்பர் 24-ஆம் தேதி மாலை உரோமையில் (வத்திக்கான் புனித பேதுரு பேராலயத்தில்), கிறிஸ்து பிறப்புப் பெருவிழாத் திருப்பலிக்கு முன்பாக புனிதக் கதவினை
(Holy Door) திறந்துவைத்தார்.
உரோமையில் 2026-ஆம் ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி வரையிலும், பிற இடங்களில் 2025-டிசம்பர் 28-ஆம் தேதி வரையிலும் யூபிலி ஆண்டாக அறிவிப்பு செய்யப்பட்டது.
நற்செய்தி மதிப்பீடுகளை
வாழ்வதில்
திரு அவை நிறைவு காணவேண்டும்
எதிர்நோக்கின்
திருப்பயணம் உலகம் சார்ந்த நிறைவை அல்ல; மாறாக, நற்செய்தி மதிப்பீடுகளை வாழ்வதில் அடையும் நிறைவை முன்னிறுத்துகிறது. உலகப் பயன்பாடுகளையோ, ஆடம்பரக் கொண்டாட்டங்களையோ அல்ல; மாறாக, அன்பையும் அமைதியையும் விதைக்கும் பணியையும், நீதிக்கும் நேர்மைக்கும் உண்மைக்கும் பகிர்வுக்கும் நம்மைச் சாட்சிகளாக்கும் செயல்பாட்டாளர்களாக உருவாக்குகிறது. கிறித்தவ வாழ்வு ஓர் இலக்கு நோக்கிய பயணமெனில், இந்தப் பயணம் நம்மை ஏமாற்றமாட்டா. நம்பிக்கையும் அன்பும் எதிர்நோக்கும் நம்மை ஏமாற்றாது எனும் உண்மையைத் திருவிவிலியம் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது.
எதிர்நோக்கு
வாழ்வு என்பது மனிதர்களை மையப்படுத்தியது அல்ல; அது மூவொரு கடவுளை மையப்படுத்திய நம்பிக்கை வாழ்வு, திருவிவிலிய வரலாற்றில் மிக உயர்ந்த நம்பிக்கை கொண்ட குலமுதுவர்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, தொடங்கி மோசே வழிவந்த இறைவாக்கினர்களின் பணியிலும் வாழ்விலும் ஏமாற்றம் தராத எதிர்நோக்கு வாழ்வை அவர்கள் வாழ்ந்ததைக் காணமுடிகிறது.
‘எதிர்நோக்கு’ எனும்
இலக்கில் மணிமகுடமாக அமைந்ததுதான் இயேசுவின் வாழ்வும் பணிகளும். அதே எதிர்நோக்கைத் தம் சீடர்களின் உள்ளத்திலும் விதைத்தார் இயேசு. துவண்டுபோன வேளைகளிலும் அவர்தம் சீடர்களை நம்பிக்கையில் உறுதிப்படுத்தி எதிர்நோக்குடன் பயணிக்க அறிவுறுத்தி, அவர்களுக்கு முன்மாதிரிகை காட்டும் பயணத்தை மேற்கொண்டார். பொதுநலனுக்காக, பிறர்வாழ்வுக்காகத் தம்மையே ஒப்படைத்ததனால் துன்பத்திற்கு ஆளான கிறிஸ்துவைத் திரு அவை பின்பற்ற முன் வரவேண்டும்.
இறையாட்சிப் பணியில்
எதிர்நோக்கு...
எதிர்நோக்கு
என்பது மனவுறுதியுடன் பயணித்தல் ஆகும். மனவுறுதி என்பது சமரசம் செய்யாத நிலைப்பாடு என்பது உண்மை. இந்த மனவுறுதியைக் கடவுளின் ஆவியார் நம் ஒவ்வொருவருக்கும் நாம் பெற்ற திருமுழுக்கில் ஏற்கெனவே வழங்கியுள்ளார். திருமுழுக்குடன் நாம் தொடங்கியது ஓர் இலட்சியப் பயணம். இலக்கை நோக்கி நாம் பயணிப்பதில் பல்வேறு சவால்களை நாம் எதிர்கொள்கிறோம். ஆட்சியாளர்கள், அதிகார அமைப்புகள், அரசு அமைப்புகள், பணபலமும் ஆள்பலமும் ஆதிக்க பலமும் கொண்ட சில பல மனிதர்களும் நிறுவன
அமைப்புகளும் இயக்கமாகச் செயல்படும் திரு அவையின் இறையாட்சிப் பயணத்திற்குச் சவால்களாக அமைந்துள்ளன. மனவுறுதி கொண்டு பயணித்த உண்மையான இறைவாக்கினர்கள் சமூக விழுமியங்களை எடுத்துரைத்தது மட்டுமல்ல, சமூக அநீதிகளை இடித்துரைத்தனர். சமரசம் செய்யாமல் பணியாற்றுவதே நம் இறைவாக்குப் பணி என்பதை உணரவேண்டும்.
இறைவாக்குச் சமூகமாய்
பயணிக்க...
இறையாட்சிப்
பயணத்தை நிகழ்த்திய இயேசுவோ அநீதிகளை விதைக்கும் அமைப்புகளையும் அதிகார வர்க்கத்தையும் எதிர்த்து நின்றார். எனவே, அவரின் வாழ்வும் பணியும் நமது பணியாகவும் வாழ்வாகவும் மாற உழைப்பதும் பயணிப்பதும் நம்பிக்கையாளர்களாகிய நம் அனைவரின் கடமையாக மாறுகிறது. இன்று நாமும் பல்வேறு அநீதிகளோடும் அநீதி அமைப்புகளோடும் மிக எளிதாகச் சமரசம் செய்கிறோம். இது நமது எதிர்நோக்குடன் கூடிய இலட்சியப் பயணத்திற்குத் தடையாக அமைந்து விடக் கூடாது. எனவே, மனவுறுதியுடன் தீமைகளை எதிர்த்து நிற்கவும், நன்மைத்தனமான செயல்பாடுகளை ஊக்குவிக்கவும், இறைவாக்குத் திரு அவையாகப் பயணிக்கவும் உறுதியேற்போம்.
மாற்றம் தேடும்
தமிழ்நாடு
திரு
அவை
யூபிலி
2025, திரு அவையின் ஆடம்பரக் கொண்டாட்டங்களில் மற்றொன்றாக மட்டும்
அமைந்துவிடாமல், மறுமலர்ச்சிக்கான, மாற்றத்திற்கான நிகழ்வாக தமிழ்நாடு திரு அவையில் தடம் பதிக்கவேண்டும். தமிழ்நாடு திரு அவை தன்னையே புதுப்பித்துக்கொள்ளத் தயக்கமின்றி, தடைகளைத் தாண்டி முன்வரவேண்டும். அமைப்பு நிலையிலும், நிர்வாக நிலையிலும், பணி நிலையிலும், பங்கேற்பு நிலையிலும் மாற்றத்தின் செயல்பாடுகள் வெளிப்படையான மறுமலர்ச்சி காண வேண்டும். சமநீதி, சமூக நீதி, சமத்துவம் இவற்றின் அடிப்படையில் கட்டியெழுப்பப்படும் இறையாட்சி இயக்கமாக அது உருவாகவேண்டும்.
புதுப்பித்தல்
இன்றி யூபிலி 2025 உண்மையான மகிழ்வின் நிகழ்வாக நிறைவுபெறாது. சமத்துவம் என்பது இலக்கு நோக்கிய தொடர் பயணம் என்பதையும், இயேசுவின் இறையாட்சி இலட்சியமே சமத்துவ சமூகம் படைத்தல் என்பதையும் முன்னிறுத்தி தமிழ்நாடு திரு அவை இலட்சியத்தோடு பயணிக்கவேண்டும். தனிமனித வாழ்வில் கிறிஸ்துவின்மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கையானது அச்சத்தை அகற்றவேண்டும். ஏனெனில், கிறிஸ்துவின் நம்பிக்கையும் செயல்பாடும் நல்லவை என்பதால், எப்போதும் நன்மை செய்யும் ஆர்வம் கொண்டிருக்க வேண்டும். ஆகவே, இயேசு கிறிஸ்துவை மாதிரியாகப் பின்பற்றி நன்மை செய்து வாழ்வோம்.
இறுதியாக,
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்குப் பிறகு புதிய திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நம் திருத்தந்தை லியோ, இந்த யூபிலி ஆண்டின் செயல்பாடுகளைத் தொடர்ந்து நடத்துவதும், திரு அவைக்கு மிகச் சிறப்பான தலைமைத்துவத்தைக் கொடுத்துக் கொண்டிருப்பதும் எதிர்நோக்கின் காணத்தக்க அடையாளமே. திருத்தூதர்கள்
பேதுரு, பவுல் வழிவரும் பணியாளர்களிலும், அன்னை மரியாவின் அர்ப்பண வாழ்வை வாழும் துறவியர்களிலும், நம்பிக்கையாளர் அனைவரின் வாழ்விலும் ‘எதிர்நோக்கு ஒருபோதும் நம்மை ஏமாற்றாது’
எனும் உறுதிப்பாடு உயரட்டும், உண்மையாகட்டும்.