news
ஆன்மிகம்
மரியா கன்னியாக நிலைத்திருக்க உளமார விரும்பினார்! (திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி - 27)

1. கிறிஸ்துவின் கருத்தரிப்பு மற்றும் பிறப்பை அறிவிக்கின்ற வானதூதரிடம் மரியா, “இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!” (லூக் 1:34) என்ற கேள்வியைக் கேட்கின்றார். குழந்தையே பெற இயலாத பெண்ணிற்கான வழக்கத்திற்கு மாறான பிறப்பு அறிவிப்பைத் தொடர்புப்படுத்துகின்ற திருவிவிலியக் குறிப்புகளைக் கவனத்தில் கொண்டால், அவரின் இத்தகைய விசாரிப்பானது வியப்புக்குரியதாகத் தோன்றுகிறது. அத்தகைய நிகழ்வுகள் அனைத்தும் அவர்களின் கடுமையான தொடர் செபத்திற்கு (ஒப்பிடுக. தொநூ 15:2;30:22-23; 1சாமு 1:10; லூக் 1:13), முறையான திருமண வாழ்வு வழியாக (1சாமு 1:19-20) கடவுள் குழந்தை பாக்கியத்தைக் கொடுத்து, இயல்பாகவே கருத்தரிக்கும் இயல்புடைய திருமணமான பெண்களோடு தொடர்புடையவை.

ஆனால், மரியா மாறுபட்டதொரு சூழ்நிலையில் வானதூதரின் செய்தியைப் பெறுகின்றார். அதாவது, அவர் கருத்தரிக்கும் தன்மை பிரச்சினைகளோடு இருந்த ஒரு திருமணமான பெண் அல்ல; மாறாக, அவரின் தன்னிச்சையானதொரு முடிவினால் கன்னியாக இருப்பதற்கு உளமார விரும்புகின்றார். எனவே, கடவுள் மீதான அவரின் அன்பின் கனியாகிய, கன்னித்தன்மைக்கான அவரின் எண்ணமானது, அவருக்கு அறிவிக்கப்பட்ட தாய்மைக்கு ஒரு தடையாகத் தோன்றுகின்றது.

மரியாவின் வார்த்தைகளை நாம் ஆராய்ந்தால், முதலில் அவை அவரின் இப்போதைய கன்னித்தன்மையின் நிலையை மட்டுமே வெளிப்படுத்துவதாகத் தோன்றலாம். மரியாகணவனை அறியவில்லைஎன்று கூறுவதன் வழியாக, அவர் ஒரு கன்னி என்று உறுதியாகக் கூறுகின்றார். எனினும், ‘இது எப்படி நிகழும்?’ என்று கேட்கப்படுகின்ற கேள்வியின் சூழலமைவு மற்றும் அதைத் தொடர்ந்து வருகின்றநான் கன்னி ஆயிற்றே!’ என்ற உறுதியானது, அவரின் அப்போதைய கன்னித்தன்மையையும் மற்றும் கன்னியாக நிலைத்திருப்பதற்கான அவரின் எண்ணத்தையும் கோடிட்டுக் காட்டுகின்றன. நிகழ்காலத்தில் அவர் பயன்படுத்துகின்ற சொல்லாடலானது, அவரின் நிலைத்த மற்றும் நீடித்தக் கன்னித்தன்மையை வெளிப்படுத்துகிறது.

மரியா கடவுளின் விருப்பத்தோடு முழுமையாக ஒத்துழைத்தார்

2. இந்தச் சிரமத்தைக் குறிப்பிட்டு, மரியா இறைவனின் திட்டத்தை ஒருபோதும் மறுக்கவில்லை; மாறாக, அதற்காகத் தன்னை உறுதிப்படுத்துவதற்கான அவரின்  எண்ணத்தை வெளிப்படுத்துகின்றார். மேலும், நாசரேத்தூர் பெண் இறைத்திட்டத்தோடு முழு இணக்கமாகவே எப்பொழுதும் வாழ்ந்தார்; ஆண்டவரைத் திருப்திபடுத்துகின்ற எண்ணத்தோடே கன்னி வாழ்வைத் தேர்ந்தெடுத்தார். உண்மையில் கன்னி வாழ்விற்கான அவரின் எண்ணமானது, “அவருடைய அனைத்து மனித மற்றும் பெண்தன்மையோடு (with all her human and feminine ‘I’) கடவுளின் விருப்பத்தை ஏற்றுக்கொள்வதற்கு அவரை ஒழுங்குபடுத்தியது. மேலும், நம்பிக்கையின் இந்தப் பதிலானதுமுன்னின்று உதவுகின்ற கடவுளின் அருள் மற்றும் தூய ஆவியாரின் செயலுக்கு முழுமையான வெளிப்படைத்தன்மை (மீட்பரின் தாய், எண்.13) ஆகிய இந்த இரண்டையுமே உள்ளடக்கியதொன்றாகும்

யூதக் கலாச்சாரத்தில் கன்னித்தன்மையானது ஒரு மதிப்பீடாகவோ அல்லது தேடிப்பெற வேண்டியதோர் இலக்காகவோ கருதப்படாததால், மரியாவின் வார்த்தைகளும் எண்ணங்களும் இயல்பாக நிகழ முடியாததொன்றாகச் சிலருக்குத் தோன்றுகின்றது. அதே பழைய ஏற்பாட்டு ஏடுகள் பல, நன்கு அறியப்பட்ட நிகழ்வுகள் மற்றும் கருத்துகளில் இதை உறுதி செய்கின்றன. உதாரணமாக, நீதித் தலைவர்கள் புத்தகத்தில், இளம் வயதிலும் மற்றும் திருமணமாகாத நிலையிலும் இறப்பைச் சந்திக்க வேண்டிய நிலையில் இருந்த ஜெப்தாவினுடைய மகள் அவளின் கன்னித்தன்மை குறித்துப் புலம்புகின்றாள். அதாவது, திருமணம் செய்துகொள்ள அவளால் இயலவில்லையே என்பதற்காக அவள் புலம்புகின்றாள் (நீதி 11:38). மேலும், “பலுகிப் பெருகி...” (தொநூ 1:28) என்ற இறைக்கட்டளையினிமித்தம், திருமணமானது தாய்மையோடு தொடர்புபடுத்தப்படுகின்ற, இன்ப - துன்பங்களை உள்ளடக்கிய பெண்ணிற்கான இயற்கையானதோர் அழைப்பாகவே கருதப்படுகின்றது.

3. மரியாவின் முடிவானது எத்தகையதொரு சூழ்நிலையில் பக்குவமானதொரு நிலையை அடைந்தது என்பதைப் புரிந்துகொள்ள, கிறித்தவம் தொடங்கப்பட்ட அடுத்த சில ஆண்டுகளிலேயே கன்னிமை பற்றியதொரு குறிப்பிடத்தக்க நேர்மறை எண்ணமானது சில யூதர்கள் மத்தியில் தோன்றத் தொடங்கியது என்பதையும் நாம் கட்டாயம் நினைவில்கொள்ளவேண்டும். உதாரணமாக, கும்ரானிலிருந்து கண்டெடுக்கப்பட்ட பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சான்றுகளின் அடிப்படையில், எஸ்ஸீனியர்கள் குழும வாழ்வின் பொருட்டும், கடவுளோடு ஒரு நெருங்கிய உறவுகொள்வதன் பொருட்டும் திருமணப் பழக்கத்தில் சில கட்டுப்பாடுகளை விதித்தனர், மணத்துறவு வாழ்வை மேற்கொண்டனர்.

மேலும், எகிப்தில் இருந்த ஒரு பெண்கள் குழுமமானது, எஸ்ஸீனிய ஆன்மிகத்தோடு தங்களை இணைத்துக்கொண்டது மற்றும் தற்கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தது. அலெக்சாந்திரியாவின் பிலோ என்பவரால் ஒரு சமயக் குழுவாக (sect) விவரிக்கப்படும்Therapeutaeஎன்கிற பெண்கள் குழுமமானது, ஆழ்நிலைத் தியானத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டது மற்றும் ஞானத்தேடலை மேற்கொண்டது (De Vita Contemplativa, 21-90).

மணத்துறவு மற்றும் கன்னி வாழ்வின் முன்னுதாரணமாக இருந்த இத்தகைய யூதச் சமயக் குழுக்களைப் பற்றி மரியா அறிந்திருந்ததாகத் தெரியவில்லை. ஆனால், திருமுழுக்கு யோவான் துறவு வாழ்வு வாழ்ந்திருக்கலாம் என்கிற உண்மையும், அவரின் சீடர்களின் குழுமத்தில் இது மிகவும் உன்னதமாகக் கருதப்பட்டது என்பதும், மரியாவின் கன்னிமைக்கான தேர்வானது இந்தப் புதிய கலாச்சார மற்றும் சமயச் சூழலைச் சார்ந்தது என்கிற யூகக் கருத்திற்குத் துணையாகலாம்.

4. இருப்பினும், நாசரேத்துக் கன்னியின் இந்த வழக்கத்திற்கு மாறான நிகழ்வானது, அவரைச் சுற்றியிருந்தவர்களின் மனநிலையோடு அவருடைய உள்மனநிலையையும் தொடர்புபடுத்தி, அவரில் நிறைவேறிய மறையுண்மையின்  தனித்துவத்தை முற்றிலும் தவிர்க்கக்கூடிய தவற்றில் நம்மை விழவைக்கக்கூடாது. குறிப்பாக, அவருடைய வாழ்வின் தொடக்கத்திலிருந்தே கிறிஸ்து பிறப்பு அறிவிப்புச் செய்தியின் பொழுது வானதூதரால் அங்கீகரிக்கப்பட்ட சிறப்புமிக்கதோர் அருளை மரியா பெற்றிருந்தார் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. “அருள்மிகப் பெற்றவரே (லூக் 1:28) என்ற வாழ்த்தொலியானது திரு அவையின் பொருள் விளக்கத்தின்படி, மரியா அவருடைய பிறப்பின் தொடக்கத்திலிருந்தே புனிதத்தின் முழுமையினால் வளப்படுத்தப்பட்டிருந்தார் என்பதன் பொருள் ஆகும். அமல உற்பவத்தின் தனிப்பட்ட சிறப்புச் சலுகையானது, அந்த நாசரேத்தூர் இளம்பெண்களின் ஒட்டுமொத்த ஆன்மிக வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

மரியாவின்  ஏழ்மையை ஆண்டவர் வளமையாக மாற்றுகின்றார்

இவ்வாறாக, திரு அவையின் வரலாற்றில் கன்னிமை அர்ப்பண வாழ்விற்கு (Virginal Consecrationஅநேகப் பெண்களை ஈர்க்கின்ற அதே தூய ஆவியாரின்2 தூண்டுதலினால், கன்னித்தன்மைக்கான மாதிரியாக இருக்க மரியா வழிநடத்தப்பட்டார்.

மரியாவின் வாழ்வில் அருளினுடைய தனிப்பட்ட பிரசன்னமானது அந்த இளம் பெண்ணானவள் கன்னிமைக்குத் தன்னையே முழுமையாக அர்ப்பணித்திருந்தார் என்ற முடிவிற்கு இட்டுச்செல்கின்றது. அவருடைய வாழ்வின் தொடக்கத்திலிருந்தே ஆண்டவரின் அளப்பரிய கொடைகளால் நிரப்பப்பட்டு, கன்னியாக அவரையே கொடுப்பதில்  தன் உடல், ஆன்மா அனைத்தையும் கடவுளுக்கே முழுமையாக அர்ப்பணிப்பதற்கு முனைப்போடு இருந்தார்.

அதோடு, கன்னிமை வாழ்விற்கான அவரின் தீராத ஆசையானது, பழைய ஏற்பாடு மிகவும் உயர்வாகக் கருதுகின்ற கடவுளுக்கு முன்பான ஏழ்மை நிலையோடு இசைந்தே இருக்கிறது. இந்த வழியில் முழுமையாக அவரையே அர்ப்பணித்து, இஸ்ரயேலில் மிகவும் பாராட்டப்பட்ட, பெண்ணின் தனிப்பட்ட சொத்தாகிய தாய்மையையே மரியா விட்டுக்கொடுக்கிறார். இவ்வாறாக, அவர்துணிந்து நம்பி அவரிடமிருந்து மீட்பைப் பெறுகின்ற, ஆண்டவருடைய எளிய மற்றும் தாழ்ச்சி மிக்கவர்களிடையே உயர்ந்து நிற்கின்றார் (இறைத்திட்டத்தில் திருச்சபை , எண். 55). 

எவ்வாறாயினும், கிறிஸ்து பிறப்பு அறிவிப்பில் அவரை எளியவராகக் காண்பிப்பதிலும், ஆன்மிகக் கனிகளை மட்டுமே இலக்காகக் கொள்வதிலும், ஆண்டவர் அவரின் ஏழ்மையை வளமையாக மாற்றியிருக்கின்றார் என்பதை மரியா கண்டுகொள்கின்றார்மரியா உன்னதக் கடவுளுடைய மகனின் கன்னித் தாயாக இருப்பார். பின்னர், யாரையெல்லாம் மீட்க இந்த இறைமகன் வந்தாரோ, அந்த மனிதர்களையெல்லாம் நோக்கி அவருடைய தாய்மையானது அகலப்படுத்த வேண்டியுள்ளதையும் அவர் கண்டுகொள்வார் (ஒப்பிடுக. Catechism of the Catholic
Church, n.
501).

மூலம்: John Paul II, Our Lady intended to remain a virgin, in ‘L’Osservatore Romano’ Weekly Edition in English, 31 July 1996, p.7.

news
ஆன்மிகம்
பொய் பேசக்கூடாது! ஆனால், பாடலாமா?

அன்று மாமன்னர்களையும் மன்னர்களையும் அரசவைப் புலவர்கள் உண்மைக்குப் புறம்பாகவும், வானளாவப் புகழ்ந்தும் பாடியது ஒரு வரலாறு. இன்று அரசியல் பிரமுகர் ஒருவரைப் பற்றியோ குருக்கள்-துறவியர் பற்றியோ, அவரிடம் இல்லாத திறமைகள், குணங்கள் எல்லாம் உள்ளவராகப் பேசுவதும், அவருக்காக எதையும் செய்வோம் என்று வாழ்த்திப் பாடுவதும் உலகப் போக்கு. ஆனால், நமது எண்ணங்களை அறியும் ஆண்டவர் முன்பு, அப்படி மிகைப்படுத்திப் பேசுவதோ, பாடுவதோ சரியாகுமா?

நமது வழிபாடுகளில், நாம் பாடும் பாடல்களில் உள்ள சில வார்த்தைகள் சரியானவையா? உண்மையானவையா? என நாம் கவலைப்படுவதே இல்லை. ஏனெனில், அந்த வார்த்தைகள் நம்முடைய வார்த்தைகள் அல்ல; நாம் எழுதியதும் அல்ல; நாம் புரிந்துகொண்டு உச்சரிக்கும் வார்த்தைகளும் அல்ல; வேறு ஒருவரால் ஒரு குறிப்பிட்ட நிகழ்வுக்காக எழுதப்பட்டவை. அத்தகைய சரியில்லாத வார்த்தைகள் உண்மையானவை அல்ல என்று அறிந்தும், நாம் பாடினால் அல்லது செபித்தால் அவைபொய்ஆகிவிடும் அல்லவா?

உதாரணமாக, ஒரு துறவற வார்த்தைப்பாடு நிகழ்வின் தொடக்கத்தில், கைகளில் தீபம் ஏந்தி அருள்சகோதரிகள் பவனியாக வரும்போது பாடியதீபத்தின் ஒளியினில் இணைவோம்என்ற பாடலை மற்ற இடங்களில்நேரங்களில் பவனியே இல்லாதபோதும் பாடுவது பொருத்தமானதா? அதேபோல் பெரிய ஆலயத்தின் உள்ளேயோ, துறவியரின் சிற்றாலயத்திலோ விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய அளவில் மட்டும் சிலர் இருக்கும்போது, வருகைப் பவனியும் இல்லாத போது  ஒருசிலர் மட்டும்ஆலயத்தில் நாம் நுழை கையிலேஎன்றோ, ‘இங்கே இதயங்கள் பல கோடிஎன்றோ பாடுகின்ற வார்த்தைகளும்...

காணிக்கைப் பவனியே இல்லாதபோது நற்செய்தி விளக்கம் கூறி முடிந்தவுடன் அப்பத்தையும் இரசத்தையும் குரு ஒப்புக்கொடுத்துச் செபிக்கின்ற வார்த்தைகளுக்குஇறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராகஎன்ற பதிலுரையை  மறந்தவர்களாய், தொடர்ந்து வரும் செபங்களும் தங்கள் பெயரால்தான் எழுப்பப்படுகின்றன என்பதையும் பொருட்படுத்தாமல், ‘காணிக்கை தர நான் வருகின்றேன்என்றோ, உண்மைக்குப் புறம்பாகஇயற்கை ஈந்த மலர்கள் பறித்துத் தருவேன்என்றோ அதேசிலர்  பாடுகிற வார்த்தைகளும்...

திருவிருந்தில் பங்குகொள்ள ஒருசிலர் மட்டுமே இருக்கிறபோது தொடங்கிய பாடலின் முதல் அடியைப் பாடி முடிக்குமுன், திருவிருந்தே முடிகின்ற நிலையில் அவசரம் அவசரமாகப் பாடகர்கள் முந்தியும் பிந்தியுமாகஅவ்விருந்தை உண்டிடச் சென்றிடுவோம் இன்பம் பொங்கஎன்றும் பாடிக்கொண்டே திருவிருந்துக்கு வருவதும் அவ்வளவு சரிதானா? பொருத்தமானதா?

வருகை, காணிக்கை, திருவிருந்து பவனியே இல்லாதபோது பாடல் தேவையா? ‘ஒருமுறை பாடுவது இருமுறை செபிப்பதற்குச் சமம்என்பது கூட பொருத்தமான நேரத்தில், பொருத்தமான பாடலைப் பொருளுணர்ந்து பாடும்பொழுது மட்டும்தானே? வருகைப் பவனி, காணிக்கைப் பவனி, திருவிருந்துப் பவனி நடைபெறுகின்ற முக்கியமான விழா நாள்களில் கூட பாடுகின்ற பாடல்கள் அநேக நேரங்களில் பொருத்தமில்லாதவையாக இருப்பதை நாம் கண்டும் காணாமலே இருப்பது நடைமுறையாகிவிட்டது. குறிப்பாக, துறவற வார்த்தைப்பாடு விழா, ஆலயத் திருவிழா, யூபிலி விழா போன்ற நிகழ்வுகளுக்காக இயற்றப்பட்ட பாடல்களைக் குறுந்தகட்டிலோ (CD), பாட்டுப் புத்தகத்திலோ இருக்கின்ற ஒரே காரணத்திற்காகப் பாடுவது சரியாகுமா? என்று நினைக்காமலே பாடுவதும் வழக்கமாகி விட்டது.

ஏதோ பாடித்தான் ஆகவேண்டும் என்பதற்காக... உதாரணமாக, நற்செய்திக்கு முன்அல்லேலூயாபாடுகிற பொழுது, இசைக் கருவிகளே எதுவும் இல்லாத  போதும்மெல்லிசைக் கருவிகள் மீட்டிடுவோம்!’ என்றோ, ‘என்னென்ன இராகங்கள்என்றோ, இறைவார்த்தையை விட்டுவிட்டுப் பாடுவதோ சரியல்ல என்பதா? ‘பொய்என்பதா? பொருத்தமற்றது என்பதா?

நாம் எந்த வார்த்தைகளைச் சொல்லிப் பாடினாலும் நம் உள்ளத்தால் உணர்ந்து பாடாத பாடல் வழிபாட்டுக்கு உகந்தது அல்ல! எனவேதான் திரு அவை நாம் பாடும் பாடல்கள் மட்டும் அல்ல; வழிபாட்டின் (திருப்பலியின்) ஒவ்வொரு வார்த்தையையும் கூட  நாம் உணர்ந்து செபிக்கவேண்டும், பாட வேண்டும் என்பதற்காக அவரவரது தாய்மொழியிலேயே வழிபட அழைக்கிறது.

இப்படியிருக்க, திருப்பலியின் நற்கருணை மன்றாட்டின் தொடக்கத்தில் முகவுரையைத் தொடர்ந்துநீர் மெய்யாகவே தூயவர்என்ற வார்த்தைகளைக் குரு உபயோகித்தாலும், முகவுரை முடிவில்பரிசுத்தர்! பரிசுத்தர்என்ற வார்த்தைகளையே பயன்படுத்துவதும்அதே நேரத்தில், ‘தூயவர்! தூயவர்என்ற பாடலில் ஆண்டவரின் திருநாமத்தில்வந்தவரை வாழ்த்திப் பாடிடுவோம்என்பதற்குப் பதிலாகவல்லவரை வாழ்த்திஎன்று பாடுவதும் வாடிக்கையான, அனிச்சைச் செயல் போன்று பொருத்தமற்றதாக அமைவதில்லையா?

இயேசு மத்தேயு 12:36-இல்மனிதர் பேசும் ஒவ்வொரு வீண் வார்த்தைக்கும் தீர்ப்பு நாளில் கணக்குக் கொடுக்கவேண்டும்என்றும், மத்தேயு 15:8-இல்இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்; இவர்கள் உள்ளமோ வெகு தொலைவில் இருக்கிறதுஎன்ற எசாயாவின் இறைவாக்கைக் குறிப்பிட்டும் நமது செபங்களிலும் பாடல்களிலும் பயன்படுத்தும் வார்த்தைகள் பொருத்தமானவையாக, பயனுள்ளவையாக, உண்மையானவையாக  இருக்கவேண்டும் என்று எச்சரிக்கிறார்.

திருத்தூதர் பணி 5:45-இல் நேர்மையின்றி நடந்துகொண்ட அனனியாவிடம் பேதுரு, “நீ மனிதரிடமல்ல, கடவுளிடமல்லவா பொய் சொன்னாய்!” என்று கூற, அவன் கீழே விழுந்து உயிர்விட்டான் என்பதும் நமக்கு ஓர் எச்சரிக்கை. நாமோ வாடிக்கை, வழக்கம் என்றோ, ‘எல்லாரும் எல்லாக் கோவில்களிலும் இப்படித்தானே!’ என்ற போர்வையிலோ செபிக்கிற / பாடுகிற வார்த்தைகள் பொய்யானவை என்பது பற்றிக் கவலைப்படாமல் இருக்கலாமா?

திருப்பலி நேரத்தில் பாட வேண்டியிருந்தால் திருப்பலிக்கு முன்பே உரிய பாடல்களைத் தெரிவு செய்துகொண்டு பாடவேண்டாமா? திருப்பலியில் பாடுவது கட்டாயமில்லையே? உண்மைக்குப் புறம்பான வார்த்தைகளைச் சொல்லிச் செபிப்பதும் பாடுவதும் நம்மைத் தீர்ப்புக்கு உரியவர் ஆக்குமல்லவா?

செபப்புத்தகத்திலோ, பாட்டுப் புத்தகத்திலோ அச்சடித்திருந்தாலும் பொருத்தமற்ற, பொய்யான வார்த்தைகள் உள்ள செபங்கள் / பாடல்கள் தீர்ப்புக்கு உரியவையே. உதாரணமாக, புனித அந்தோணியார் மன்றாட்டு, நற்கருணை ஆராதனை (24) மன்றாட்டுகள் போன்றவை மாற்றி அமைக்கப்பட வேண்டியவை.

எனவே, தேவையற்ற நேரங்களில், தேவையற்ற பாடல்களுக்கோ செபங்களுக்கோ இடம்கொடாமல், அமைதியில் தனி (மௌன) செபத்திற்கு இடம் கொடுப்பது உள்ளத்தால் செபிப்பதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும். இறையருள் பெருகவும் உதவும் அல்லவா!

இதையெல்லாம் பெரிசுபடுத்தலாமா?’ என்ற விவாதம், “மிகச் சிறியவற்றில் நம்பத்தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத்தகுந்தவராய் இருப்பார் (லூக்கா 16:10) என்ற இறைவார்த்தைக்கு எதிரானதுதானே!

news
ஆன்மிகம்
நற்செய்தியும் நல்வாழ்வும் (2026, சனவரி 25 இறைவார்த்தை ஞாயிறு

2026, சனவரி 25-ஆம் நாள் அகில உலக 7-வது இறைவார்த்தை ஞாயிறாகக் கொண்டாடப்பட நம் திருத்தந்தை லியோ திரு அவைக்கு அழைப்பு விடுத்துள்ளார். 2020-ஆம் ஆண்டு முதல் திருவழிபாட்டு ஆண்டின் பொதுக் காலத்தின் மூன்றாம் ஞாயிறு, அகில உலக இறைவார்த்தை ஞாயிறாகக் (Sunday of the Word of God) கொண்டாடப்பட நம் மேனாள் திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்பு நல்கினார்.

அப்போது அவர்களுடைய கண்கள் திறந்தன (லூக் 24:31) என்ற புனித லூக்காவின் இறைவார்த்தையை மையப்படுத்தி, 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் நாள் திருவிவிலியத்தின் பேரறிஞர் புனித ஜெரோமின் விழாவன்றுAPERUIT ILLISஎன்ற தன் திருத்தூது ஊக்கவுரையை வெளியிட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அகில உலக இறைவார்த்தை நாளை அறிவிப்புச் செய்தார்.

இறைவார்த்தை நம் உள்ளத்தையும் வாழ்வையும் நல்வழிப்படுத்தி, அவநம்பிக்கையையும் அறியாமையையும் அகற்றி, புதிய ஒளியோடு பயணிக்க நம் கண்களைத் திறக்கவல்லது என்ற எம்மாவு அனுபவத்தை, உயிர்ப்பின் அனுபவமாகத் தரும் நாளாக அகில உலக இறைவார்த்தை ஞாயிறு கொண்டாடப்பட திரு அவை நமக்கு வழிகாட்டுகிறது. இயேசுவின் நற்செய்தியைக் கேட்பதும், வாசிப்பதும், தியானிப்பதும், வாழ்வாக்குவதும் நம்பிக்கையாளர் அனைவரின் இன்றியமையாதக் கடமை என்பதை இந்த இறைவார்த்தை ஞாயிறு மீண்டும் வலியுறுத்துகிறது.

ஒவ்வோர் ஆண்டும் ஒரு மையச் சிந்தனையை இறைவார்த்தையின் அடிப்படையில் முன்மொழிந்து, இறைவார்த்தையின் மேன்மையையும் புனிதத்தையும் போற்றும் நாளாகவும், இறைவார்த்தைக்கேற்ப நம் நம்பிக்கை வாழ்வு அமையவேண்டும் என அறிவுரை வழங்கும் ஆண்டவரின் நாளாகவும் அகில உலக இறைவார்த்தை ஞாயிறு கொண்டாடப்படுகிறது. அதன் அடிப்படையில் 2026-ஆம் ஆண்டின் சனவரி 25-ஆம் நாள் இறைவார்த்தை ஞாயிறாக நாம் கொண்டாடப்பட அகில உலகமும் அழைக்கப்படுகிறது.

தமிழ்நாடு திரு அவையில் ஒவ்வொரு செப்டம்பர் மாதமும் திருவிவிலிய மாதமாக நாம் சிறப்பாகக் கொண்டாடினாலும், அண்மை ஆண்டுகளில் அகில உலக இறைவார்த்தை ஞாயிறுக்காகத் திருத்தந்தை முன்மொழியும் இறைவார்த்தையையே தமிழ்நாடு திரு அவையும் தன் சீரிய சிந்தனைக்கும் செயல்பாட்டுக்கும் அந்த ஆண்டின் மையக்கருத்தாக எடுத்துக்கொள்கிறது என்பதை இங்கே பணிவுடன் உங்கள் மேலான கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். எனவே, இந்த ஆண்டுக்கான அகில உலக இறைவார்த்தை ஞாயிறுக்கான திருத்தந்தையின் அழைப்பை இங்கே மகிழ்ச்சியோடு அறிமுகம் செய்ய விழைகிறேன்.

கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக (கொலோ 3:16) எனும் புனித பவுலின் அழைப்பே இந்த 2026-ஆம் ஆண்டின் இறைவார்த்தை ஞாயிறுக்கான முழக்கமாக, அறைகூவலாக விடுக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரி 25-ஆம் நாளில் புனித பவுலின் (மனமாற்ற) அழைப்பு விழாவில், இறைவார்த்தை ஞாயிறாக இந்த நாள் கொண்டாடப்படுவது இன்னும் இந்த நாளுக்கு மெருகூட்டுகிறது. அத்துடன், அகில உலகக் கிறித்தவ ஒன்றிப்பு வாரத்தின் நிறைவு நாளான ஜனவரி 25-ஆம் நாள், அகில உலக இறைவார்த்தை நாளாக இந்த ஆண்டு கொண்டாடப்படுவது கூடுதல் சிறப்பையும் இந்த நாளுக்கு வழங்குகிறது.

கிறிஸ்துவே நற்செய்தி (Christ and His Gospel at the Centre)

இந்த ஆண்டுக்கான இறைவார்த்தையை நாம் வாசிக்கிறபோது முதல் சிந்தனையாகநற்செய்தி என்பது என்ன? யார் என்பதைப் புரிந்துகொள்ள அழைக்கப்படுகிறோம்?’ இறைவார்த்தை என்பதைகிறிஸ்துவைப் பற்றிய நற்செய்திஎன்று புனித பவுல் அடையாளப்படுத்துகிறார். ‘கிறிஸ்துஎன்றாலே அது ஒருநற்செய்திஎன்பதும், ‘நற்செய்திஎன்றாலே அதுஇயேசு கிறிஸ்துவேஎன்பதும் திரு அவையில் திருப்பயணிகளாகிய அனைத்து நம்பிக்கையாளர்களின் ஆழமான உறுதிப்பாடு என்பதை மறுக்க இயலாது. “கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம் (மாற் 1:1) என்று முதல் நற்செய்தி நூலான மாற்கு நற்செய்தி தொடங்குவதை நாம் காணும்போது, இயேசு எனப்படும் வார்த்தையும் செயலும் நற்செய்தி என்பதாகவே நமக்குத் தரப்படுகிறது. இயேசு பேசியதும் செய்தவை அனைத்துமே நற்செய்திதான்.

இயேசு தம் போதனையாலும், நல்ல செயல்களாலும், வல்ல செயல்களாலும், தம் முன்மாதிரிகைச் செயல்களாலும் கொணர்ந்த இறையாட்சிப் பணியின் சாராம்சமே அவரின் நற்செய்தியாகும். “ஏழையருக்கு நற்செய்தியை அறிவிக்கவும்...” (லூக் 4:18) என்ற நாசரேத்தூர் இயேசுவின் தொழுகைக் கூட இறைவாக்கு வாசிப்பு அவரின் ஒட்டுமொத்தப் பணியையும்நற்செய்திஎனும் ஒற்றை வார்த்தையில் உள்ளடக்கி விடுகிறது. “இந்த நற்செய்தி அவருடைய மகனைப் பற்றியது ஆகும் (உரோ 1:3) என்ற பவுலின் வார்த்தைகள் அவரின் தீர்க்கமான நம்பிக்கையையும், அதன் அடிப்படையிலேயே தன் நற்செய்திப் பணியையும் வாழ்வையும் அமைத்துக் கொண்டதையும் நமக்கு அடிக்கோடிட்டுக்காட்டுகிறது. எனவே, நற்செய்தி என்பதையும் இயேசுவையும் நம்மால் பிரித்துப் பார்க்க இயலாது. இயேசுவே நற்செய்தி. நற்செய்தியே இயேசுதான். நமது வாழ்வும் நற்செய்தியாகவேண்டும் என்பது இதன் உள்ளீடு.

நற்செய்தியால் இயக்கப்படுதல் (New Way of Living by Word)

நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக (கொலோ 3:16) என்ற புனித பவுலின் அழைப்பு, ஒரு கிறித்தவன் தன் வாழ்வின் முதன்மையான வாழ்வுக் கடமையாக இயேசு தன்னில் தங்கவும் செயல்படவும் இயங்கவும், தன்னையும், தான் சார்ந்துள்ள சமூகத்தையும் இயக்கவும் இடம்தரவேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. இன்று உலகச் சிந்தனைகளாலும், போலியான மெய்யியல்களாலும், உலகத்தரமான கொள்கைகளாலும், ஆதிக்க அரசியலாலும் நாம் வழிநடத்தப்படும் சூழலில், நமது சுயநல எண்ணம், விருப்பு, கொள்கை, சுயநலம் ஆகியவற்றின் அடிப்படையில் பிறரையும் வழிநடத்தும் நிலையில், ‘கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி நம்மில் குடிகொள்ளட்டும்என்று புனித பவுல் அழைப்புவிடுக்கிறார்.

இறைவார்த்தையை அறிவிக்கக் கடமைப்பட்டுள்ள நம்மில் பலர், சில நேரங்களில் நம்மைப் பற்றியே அறிவிக்கிறோம். இயேசுவை அறிவிப்பதை விட்டுவிட்டு, அவரின் நற்செய்தியை முதன்மைப்படுத்துவதை மறந்துவிட்டு நம்மை எல்லாவற்றிலும் முன்னிலைப்படுத்துவது முரண்பாடான நம்பிக்கை வாழ்வாகும். பணியாளர்களுக்கும் அனைத்து நம்பிக்கையாளர்களுக்கும் இந்த முரண்பாட்டு வாழ்வு அழகல்ல.

கிறிஸ்துவின் நற்செய்தியே நம் வாழ்வின் மையமாக மாறவேண்டும். “வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார் (யோவா 1:14) எனும் புனித யோவானின் வார்த்தைகள்குடிகொள்தல்என்பதன் பொருளை நமக்குத் தெளிவுபடுத்துகிறது. “நீங்கள் என்னுள்ளும், என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும் (யோவா 15:7) என்ற இயேசுவின் அழைப்பு அவரின் வார்த்தையும் வாழ்வும் நம்மில் தங்கவேண்டும் (குடிகொள்ள வேண்டும்), நம்மை வழிநடத்தவேண்டும்; அதுவே நம் வாழ்வின் செயல்பாடாக, சாட்சியமாக வெளிப்படவேண்டுமென்பதை நமக்கு வலியுறுத்திக் கூறுகிறது. “நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவரது அன்பில் நிலைத்திருப்பதுபோல, நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால், என் அன்பில் நிலைத்திருப்பீர்கள் (யோவா 15:10) என்பதிலேயே, இயேசுவின் நற்செய்தி நம்மில் ஏன் குடிகொள்ள வேண்டும் என்பதற்கான காரணத்தை, விளக்கத்தை இயேசுவின் வார்த்தைகள் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன.

நற்செய்தியால் மாற்றம் பெறுதல் (Transformation by Word)

நிறைவாகக் குடிகொள்வதாக (கொலோ 3:16) என்ற புனித பவுலின் அழைப்பு, யூபிலி ஆண்டினை நிறைவு செய்துள்ள நமக்கு, எதிர்நோக்கு வாழ்வுக்கான தொடர்ந்த பாதையைக் காட்டுகிறது. நற்செய்தியின் எதிர்நோக்கு நம்மை நிறைவுக்கு அழைக்கிறது. அனைவரும் இணைந்த கூட்டியக்கத் திரு அவையின் பயணத்திலும் நிறைவை நோக்கியே நாம் பயணிக்கிறோம். “இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டுமிருந்து, உங்களை ஏமாற்றிக்கொள்ள வேண்டாம்; அதன்படி நடக்கிறவர்களாயும் இருங்கள் (யாக் 1:22) என்ற புனித யாக்கோபின் அறிவுரை, இந்த ஆண்டுக்கான நம்பிக்கைப் பயணத்தில் நமக்குத் தெளிவான பாதையைக் காட்டுகிறது. எனவே, நிறைவாகக் குடிகொள்ள வேண்டிய வாழ்வு தரும் இறைவார்த்தையை வாசித்து, தியானித்து, வாழ்வாக்கி சான்றுபகர நாம் இந்த ஆண்டில் அழைக்கப்படுகிறோம்.

நற்செய்திக்கு முரணானதைக் களைந்து கிறிஸ்துவை அணிந்துகொள்வோம்!

புனித பவுலின் அழைப்பான கொலோ 3:16- உள்ளடக்கிய பகுதிகிறிஸ்துவில் புதுவாழ்வுஎனப் பெயரிடப்பட்டுள்ளது. கிறிஸ்துவின் நற்செய்திக்கு எதிரானவற்றையும் முரணானவற்றையும் களைந்து விட்டு, கிறிஸ்துவையும் அவரின் நற்செய்தியையும் நமதாக்க வேண்டும். இன்னும் சாட்சியம் நிறைந்த நம்பிக்கை வாழ்வை வாழ்வாக்க 2026-ஆம் ஆண்டில் முன்வருவோம். இயேசுவின் நற்செய்திக்கு எதிரான மனநிலைகள், ஆதிக்கச் சிந்தனைகள், வேற்றுமை உணர்வுகள், போட்டி பொறாமைகளை விட்டு விலகுவோம். தனிமனித வாழ்விலும், குடும்ப வாழ்விலும், அருள்பணி நிலையிலும், துறவற அழைப்பிலும் நற்செய்திக்குச் சான்று பகர்வோம்.

இந்த ஆண்டு முழுவதும் இறைவார்த்தை நம்மில் தங்கட்டும். இயேசுவே நம் பயணமாகட்டும்.

news
ஆன்மிகம்
கன்னித்தன்மையில் கருவுருதல் என்பது ஓர் உயிரியல் உண்மை! (திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி - 26)

இயேசு கருவாக உருவானது அவர் இறைமகன் என்பதற்கான ஓர் இறையியல் விளக்கம் என்பது மட்டுமல்ல, அது தூய ஆவியாரின் செயலுமாகும் என்பதை நற்செய்தி நூல்கள் தெளிவாகக் கற்பிக்கின்றன.

1. லூக்கா, மத்தேயு மற்றும் யோவான் நற்செய்திகளின் சாட்சியங்களைப் பெற்று அதைத் தியானித்தத் திரு அவையானது மரியாவின் கன்னித்தன்மையானது ஒரு நம்பிக்கையின் மறையுண்மை என்ற கருத்தை எப்பொழுதுமே கொண்டிருந்தது.

வானதூதர் மரியாவுக்கு மங்கள வார்த்தை அறிவிக்கும் நிகழ்வில் கன்னித்தன்மையில் நிலைத்திருப்பதற்கான அவரின் எண்ணத்தையும், அந்த எண்ணத்தோடு ஒத்துப்போகின்ற இறைவனின் திட்டமான அவரின் வியக்கத்தக்க தாய்மையையும் சுட்டிக்காட்டி நற்செய்தியாளர் லூக்கா, மரியாவைகன்னிஎன்று அழைக்கின்றார்.   தூய ஆவியாரின் செயலினால் கன்னித்தன்மையில் கருத்தரித்தார் என்ற நிலைப்பாடானது, இயற்கையான பாலினச் சேர்க்கையற்ற இனப்பெருக்கத்திற்கான (partheno genesis) ஒவ்வொரு கருதுகோளையும் தவிர்க்கின்றது. லூக்காவின் விவரிப்பை யூதர்களின் (மதம் அல்லது கலாச்சாரம் சார்ந்த) கருத்து அல்லது பிற இனத்தவர்களின் புராணக்கதைகளின் தொடர்ச்சி என்று விளக்குவதற்கான முயற்சிகளையும் மறுக்கின்றது

லூக்கா நற்செய்தியின் அமைப்பானது (ஒப்பிடுக. லூக், 1:26-38; 2:19,51) இக்கருத்தின் மீதான எந்தவொரு குறைத்துக் கூறும் விளக்கத்தையும் தடுக்கின்றது. இந்த இறைவார்த்தைகளின் இசைவுகன்னிஎன்ற சொல்லாடலின் மாற்றத்தையோ அல்லது தூய ஆவியாரினால் கன்னிமை நிலையில் மரியா கருத்தரித்தார் என்பதை உறுதி செய்கின்ற சொல்லாடல்களையோ உரிய வகையில் ஆதரிக்கவில்லை.

2. வானதூதரின் அறிவிப்பை யோசேப்புவிடம் தெரிவிக்கின்ற நற்செய்தியாளர் மத்தேயுவும், நற்செய்தியாளர் லூக்காவைப் போன்றே மரியா கருத்தரித்தலில் தூய ஆவியாரின் செயலை உறுதிப்படுத்தி, திருமண உறவிற்கான கருதுகோள்களைப் புறந்தள்ளுகின்றார்.

மேலும், மரியா இயேசுவைக் கன்னித்தன்மையில் கருத்தரித்த செய்தியானது பிறகுதான் யோசேப்பிற்கு அறிவிக்கப்படுகின்றது. இயற்கைக்கு அப்பாற்பட்ட தூய ஆவியாரின் ஈடுபாட்டின் விளைவு (fruit of the supernatural intervention of the Holy Spirit) மற்றும் இயேசுவின் தாயான மரியாவின் ஒத்துழைப்பு இவற்றினால் மட்டுமே நிகழ்ந்த இயேசுவைக் கருத்தரிக்கும் நிகழ்வில் மரியா அதற்கு முன்பாக யோசேப்புவின் அனுமதி பெறவேண்டுமே என்ற கேள்வி நற்செய்தியாளர்களுக்கு எழவில்லை. கன்னியின் கணவராகவும், அந்தக் குழந்தையைப் பொருத்தவரை அதன் தந்தை என்ற வகையில் அவரின் பணியைச் செய்வதற்குமான பொறுப்பை ஒரு சுதந்திரமான மனப்பான்மையோடு ஏற்றுக்கொள்வதற்கே யோசேப்பு வானதூதரால் கேட்கப்படுகின்றார்.

மத்தேயு நற்செய்தியாளர் இயேசுவின் கன்னி கருத்தரிப்பை இறைவாக்கினர் எசாயாவின் முன்னறிவிப்பாகவே காட்டுகின்றார்: “இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர் (மத் 1:23; எசா 7:14). இவ்வகையில், கன்னி கருத்தரிப்பானது மீட்பின் இறைத்திட்டத்திற்கானகடவுள் நம்மோடுஎன்ற வார்த்தைகளில் கிறிஸ்துவை அடையாளம் காட்டுகின்ற அதன் தொடர்பைப் பற்றிச் சிந்திப்பதற்கு மத்தேயு நற்செய்தியாளர் நம்மை அழைத்துச் செல்கின்றார்.

தொடக்க காலத் திரு அவையானது கன்னி கருத்தரித்தலை உறுதியாக நம்பியது

3. லூக்கா மற்றும் மத்தேயு நற்செய்திகள் போன்றல்லாமல், மாற்கு நற்செய்தியானது இயேசுவின் கருத்தரிப்பு மற்றும் பிறப்பு பற்றிக் குறிப்பிடவில்லை. இருப்பினும், மாற்கு நற்செய்தியாளர் யோசேப்புவை மரியாவின்  கணவர் என்று ஒருபோதும் குறிப்பிடாதது கவனிக்க வேண்டியதொன்றாகும். நாசரேத்து மக்களால் இயேசுமரியாவின் மகன்என்றும் மற்றொரு சூழலில்கடவுளின் மகன்என்றும் அழைக்கப்படுகிறார் (மாற் 3:11; 5:7; ஒப்பிடுக.1:11;9:14, 61-62; 15:39). இந்த விசயங்கள் மரியா அவரின் கன்னிமையில் கருத்தரித்தார் என்ற மறைபொருளின் நம்பிக்கையோடு ஒத்துப் போகின்றன. இந்த உண்மை, அண்மையில் செய்த திருவிவிலிய ஆய்வு முடிவுகளின்படி எரோணிமுஸ் மற்றும் தெர்த்தூலியன் போன்ற திரு அவைத் தந்தையர்கள் கூறுகின்றவாறு, கருத்தரிப்பு பற்றிய அந்த வார்த்தையானது வழக்கமான பன்மையில் இல்லாமல் ஒருமையில் உள்ளதாக, யோவான் நற்செய்தியின் முன்னுரையில் 13-வது இறைவார்த்தையானது வெளிப்படையாக இக்கருத்தைக் கூறுகின்றது: “அவர்கள் இரத்தத்தினாலோ உடல் இச்சையினாலோ அல்ல; மாறாக, கடவுளால் பிறந்தவர்கள்.” இயேசுவினுடைய மனுவுருவாதலின் மறைபொருளை விவரிக்கும் இடமான யோவான் நற்செய்தியின் முகவுரையில் ஒருமையில் இருக்கும் இந்த வார்த்தையானது, அவரின் கன்னிமையில் கருத்தரித்தலுக்கான முக்கியமான சான்றாக இருக்கின்றது. “காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார் (கலா 4:4-5) என்று கூறும் புனித பவுல் அடியாரின் இந்த முரண்பாடான உறுதிப்பாடு (paradoxical affirmation) இறைமகனின் மனிதத்தன்மை மற்றும் கன்னித்தன்மையில் பிறந்தது பற்றிய கேள்விக்கு வழிவகுக்கின்றது.

தொடக்க காலத் திரு அவையின் பல்வேறு சூழல்களில் இயேசுவின் கன்னி கருத்தரிப்பில் உள்ள நம்பிக்கையானது எப்படிப்பட்டதாக இருந்தது என்று ஒத்தமைவு நற்செய்தியானது சான்று கூறுகின்றது. இந்த விளக்கமானது, கன்னிமையில் கருத்தரித்தலை வெறுமனே உடல் அல்லது உயிரியல் கண்ணோட்டத்தில் இல்லாமல் குறியீட்டு மற்றும் உவமானத்தால் மட்டுமே (only as symbolic and metaphorical) புரிந்துகொள்ளும் தற்காலத்திய விளக்க உரைகளுக்கான எந்த அடிப்படையையும் மறுக்கின்றது. இவ்வாறு இது இயேசுவை மனுக்குலத்திற்கான கடவுளின் கொடையாக நிறுவுகின்றது. இதே வாதத்தை, கன்னிப் பெண் கருத்தரித்தல் என்பது இயேசு இறைமகன் என்கிற இறையியல் கோட்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் கூறப்பட்ட அதிகாரப் பூர்வமற்ற (theologoumenon) அல்லது அவரைப் பற்றிய புராணச் சித்தரிப்புக்கான   (mythological portrayal) ஒரு  வழியாக  இருக்கலாம்  என்று வேறு சிலரால் முன்வைக்கப்பட்ட கருத்தாகவும் நாம்  கூறலாம்.

நாம் மேலே கண்டவாறு, தூய ஆவியாரின் உதவியினால் உயிரியல் அடிப்படையிலான கன்னிமைக் கருத்தரித்தலுக்கான தெளிவான உறுதிப்பாட்டை நற்செய்தி நூல்கள் கொண்டுள்ளன. நம்பிக்கை அறிக்கை உருவாக்கத்தின் தொடக்கத்திலிருந்தே திரு அவையானது இந்த உண்மையைத் தனதாக்கிக் கொண்டது (ஒப்பிடுக. Catechism of the Catholic Church, n. 496).

4. நற்செய்தி நூல்களில் கூறப்பட்ட இந்த நம்பிக்கையானது எந்தவித மாற்றுக் கருத்துமின்றி பின்னாளில் திரு அவையின் பாரம்பரியத்தினால் உறுதி செய்யப்பட்டது. முதல் கிறித்தவ அறிஞர்களின் நம்பிக்கை அறிக்கைகள் கன்னிமையில் கருத்தரித்தலின் உறுதிப்பாட்டை முன்னதாகவே கணிக்கின்றன. அரிஸ்திதேஸ், ஜஸ்டின், எரோணிமுஸ் மற்றும் தெர்த்தூலியன் போன்றவர்கள்இயேசு உண்மையில் கன்னியிடமிருந்து பிறந்தவர்என்று அறிவிக்கும் அந்தியோக்கு நகர் புனித இஞ்ஞாசியாரின் கருத்தை ஒத்துக்கொள்கின்றனர் (Smyrn. 1,2). இந்த அறிஞர்கள் ஒழுக்கம் அல்லது அந்தக் குழந்தையின் பிறப்பில் வெளிப்படுத்தப்படும் உறுதியற்ற அருளின் கொடையை மட்டும் உறுதி செய்வதிலிருந்து விலகி, இயேசு கன்னிமையில் கருத்தரிக்கப்பட்ட நிகழ்வை உண்மையான மற்றும் வரலாற்றுப்பூர்வமானதொரு நிகழ்வாகவே அர்த்தம் கொள்கின்றனர்.

முதல் சுருக்கமான நம்பிக்கை அறிக்கையும், அதைத் தொடர்ந்து  வந்த திருச்சங்கத்தின் இறுதியான நம்பிக்கை அறிக்கை (definitions of faith) மற்றும் திருத்தந்தையின் ஆசிரியமும் இந்த உண்மையோடு முற்றிலும் ஒத்துப்போகின்றன. கால்சேதேயன் திருச்சங்கம் (451), அதனுடைய நம்பிக்கை அறிக்கையை மிக கவனமுடன் எழுதி, தனது தவறிழைக்காத தன்மையினால் (infallibility) அதன் சாராம்சத்தை  வரையறுத்து, “கிறிஸ்துவை இந்த இறுதி நாள்களில் அவரின் மனுக்குலத்திற்கும் நமக்கும் நமது மீட்பிற்கும் இறைவனின் தாயாகிய கன்னி மரியா ஈன்றெடுத்தார் (DS 301) என்பதை உறுதிப்படுத்துகின்றது. இதே வகையில் மூன்றாவது கான்ஸ்டான்டிநோபிள் திருச்சங்கமானது (681) “இயேசு கிறிஸ்து அவருடைய மனுக்குலத்திற்காக, தூய ஆவி முறையான மற்றும் உண்மையில் கடவுளின் தாயாகிய கன்னி மரியா வழியாகப் பிறந்தார் (DS 555) என்று அறிக்கையிடுகின்றது. மற்றத் திருச்சங்கங்களும் (இரண்டாவது கான்ஸ்டான்டைன் திருச்சங்கம், நான்காவது இலாத்தரன் திருச்சங்கம் மற்றும் இரண்டாவது லியோன் திருச்சங்கம்) மரியாவின் என்றைக்குமான கன்னித்தன்மையை அடிக்கோடிட்டு அவரைஎன்றும் கன்னி (ever-virgin) என்று அறிவித்தது (DS 423, 801, 852).

மரியாவைப்  பற்றிய இந்த உண்மைகளை வெளிச்சமிட்டுக் காட்டிய இரண்டாம் வத்திக்கான் சங்கமானது அதைப் பின்வரும் வார்த்தைகளால் உறுதிப்படுத்தியது: “கணவரையே அறியாத அவர் தூய ஆவியார் நிழலிடத் தன் நம்பிக்கையாலும் கீழ்ப்படிதலாலும் தந்தையின் மகனையே உலகில் பெற்றெடுத்தார். புதிய ஏவாளாகிய அவர் ஆதி பாம்பாகிய அலகைக்குச் செவிமடுக்கவில்லை; மாறாக, கடவுளின் தூதுவரிடம் ஐயமற்ற நம்பிக்கை கொண்டார். பல சகோதரர்-சகோதரிகளிடையே... அதாவது நம்பிக்கை கொண்டோரிடையே தலைப் பேறாக (உரோ 8:29) கடவுளால் நியமிக்கப்பட்ட மகனையே அவர் பெற்றெடுத்தார். இவர்களை நம்பிக்கை கொண்டோராகப் பெற்றெடுத்து வளர்ப்பதில் மரியா தாய்க்குரிய அன்போடு ஒத்துழைக்கிறார்  (இன்றைய உலகில் திரு அவை, எண். 63).

மரியாவைப் பற்றிய இந்த வரையறையைத் தவிர, திரு அவையின் ஆசிரியம்ஆசிர்வதிக்கப்பட்ட கன்னி மரியாஎன்ற அமல உற்பவக் கோட்பாட்டையும் (DS 2803) மற்றும்அமல உற்பவி மற்றும் என்றும் கன்னியான இறைவனின் தாய்என்ற விண்ணேற்புக் கோட்பாட்டையும் வரையறுக்கின்றது (DS 3903).

மரியாவின்  புனிதத்துவமும் கன்னித்தன்மையும் மிகவும் நெருக்கமான தொடர்புடையவை

5. திருத்தந்தை முதலாம் மார்ட்டினால் விரும்பப்பட்ட 649-ஆம் ஆண்டு நடைபெற்ற இலாத்தரன் சங்கத்தைத் தவிர மற்ற எல்லாத் திரு அவையின் போதனைகளும்கன்னிஎன்ற சொல்லாடலுக்கான அர்த்தத்தை விளக்கவில்லை. இதிலிருந்து இந்தச் சொல்லாடலானது, அதன் வழக்கத்திலிருந்த அர்த்தத்தில்தான் பயன்படுத்தப்பட்டது என்பது தெளிவாகிறது. பாலுறவிலிருந்து மனமுவந்து விலகியிருந்தது மற்றும் உடல் ஒழுக்கத்தைக் காத்தது. இருப்பினும், உடல் ஒழுக்கமானது இயேசுவின் கன்னி கருத்தரித்தலினுடைய நம்பிக்கையின் முக்கியமானதோர் அம்சமாகக் கருதப்படுகிறது (ஒப்பிடுக. Catechism of the Catholic Church,
n
. 496). ‘என்றும் தூய கன்னி, அமல உற்பவிபோன்ற விவரிப்பானது தூய்மை மற்றும் கன்னிமைக்கிடையே உள்ள தொடர்பை நோக்கி நம் கவனத்தை ஈர்க்கின்றது. கடவுளிடம் அவரின் முழு இதயத்தையும் ஒப்படைப்பதற்கு விரும்பியதனால் அதை மையப்படுத்தியே தன் வாழ்வை அமைத்துக் கொண்டதனால் அவர் ஒரு கன்னிமை வாழ்வு வாழ விரும்பினார்.

மரியாவின்  விண்ணேற்புக் கோட்பாட்டு வரையறையில் பயன்படுத்தப்பட்ட, ‘அமல உற்பவி, ‘இறைவனின் தாயான என்றும் கன்னிபோன்ற சொல்லாடல்களும், மரியாவின் தாய்மைக்கும் கன்னிமைக்கும் இடையேயான தொடர்பையே குறிப்பதாகும். இந்தச் சிறப்புரிமையானது அற்புதமான வகையில் உண்மையான கடவுளும் மனிதருமான இயேசுவின் கருத்தரிப்பில் அற்புதமான வகையில் இணைகின்றது. இவ்வாறு மரியாவின்  கன்னிமையில் அவரின் தெய்வீகத் தாய்மையும், முழுமையான புனிதத்துவமும் நெருக்கமான வகையில் இணைக்கப்பட்டுள்ளன.

மூலம்: Pope John Paul II, Virginal conception is biological fact, in «L’Osservatore Romano», Weekly Edition in English, 17 July 1996, p.11.

news
ஆன்மிகம்
அயலாரை நேசிப்போம்!

விருந்தினர்என்ற சொல் இன்றுஉறவினர்என்ற பொருளில் கையாளப்படுகின்றது. உண்மையில் விருந்து என்றால், புதுமை என்றும், விருந்தினர் என்றால் அறிமுகமில்லாத அயலவர் என்றும் பொருள். உணவுவிடுதிகள், தங்கும் விடுதிகள் இல்லாத சங்க காலத்தில் வழிப்போக்கர்கள் ஆங்காங்கே உள்ள மக்களிடம் உறவினர்போலப் பழகுவர். அவர்களும் வழிப்போக்கரை உறவினராக எண்ணியே விருந்து படைத்து, ஓய்வெடுத்துச் செல்லுமாறு கூறுவர். இதனைஅல்லில்லாயினும் விருந்துவரின் உவக்கும்என்கிறது நற்றிணை. அதாவது, புதியவர் நள்ளிரவில் வந்தாலும் விருந்து உபசரித்து மகிழ்ந்தனராம் பழந்தமிழர். அதுபோல் இன்றும் நாம் இயலாத அயலாரை ஏற்று நம்மாலான உதவியினை மனமுவந்து செய்யவேண்டும். வறுமையில் வாடும் அனைவருமே இறைவனின் விருந்தினர் என எண்ணி உதவ வேண்டும்.

உன்னால் நூறு பேருக்கு உணவிட முடியவில்லை என்றாலும், ஒருவருக்கேனும் உணவிடு. அதுவுமில்லையெனில் இருப்பதைப் பங்கிட்டு உண்ணலாமே!” என்கிறார் அன்னை தெரேசா. இதையேயாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி, யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானேஎன்கிறார் திருமூலர். அதாவது, கைப்பிடி உணவும் இல்லாத போது, நீங்கள் பிறர்மீது கருணைகொண்ட இனிய சொற்களையேனும் பகிருங்கள் என்பது இதன் பொருள்.

நீங்கள் செய்வது உதவியோ, இன்னுரையோ அது மிகச்சிறியதாகக் கூட இருக்கலாம். ஆனால், பெறுபவருக்கு அது அந்நேரத்தில் அவர்களின் வாழ்வையே மாற்றக்கூடியதாக அமைந்துவிடக் கூடும்.

வீட்டின் ஒரு சிறிய பகுதியே கதவு. கதவைவிடச் சிறியது பூட்டு. பூட்டைவிடச் சிறியது சாவி. ஆனால், அந்தச் சிறிய சாவிதான் முழு வீட்டையும் திறக்கிறது. ஆக, சிறிய ஒன்றின் சக்தியையும் இறைவன் ஒருபோதும் குறைத்து மதிப்பிடுவதில்லை.

உண்மையான இறைநேசிப்பாளர்களுக்கு இறைவனின் கட்டளைகள் நல்ல மனிதர்கள் வழி செவியோரம் தூது வரும். சிலர் அதனை ஏற்பதாக மொழிவர். ஆனால், அக்கட்டளைப் படிச் செயல்படமாட்டார்கள். ஒருசிலர் கட்டளையை மறுப்பர்; ஆனால், அதனைப் பின்னாளில் செய்துமுடிப்பர்.

இவ்வாறு சொல்லொன்று செயலொன்று என்று இருப்போருக்கு இறையருள் என்றுமே உணரப்படுவதில்லை. சொல்லும் செயலும் ஒன்றென வாழ்பவரே இறையருளை என்றும் உணர்வர்.

news
ஆன்மிகம்
திருத்தூதுச் சீடர்களுக்கான உருவாக்கம் (மாமன்றச் சாதனைகள் ஒரு மீள்பார்வை – 12)

தம் சீடர்களின் உருவாக்கத்தில் இயேசு செலவிட்ட நேரம், திரு அவையின் உருவாக்கப் பணியின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. அவர் கையாண்ட உருவாக்க முறையே அதற்கு மாதிரியாகவும் திகழ்கிறது. அவர் கற்றுத்தருவதுடன் நின்றுவிடவில்லை; தம் வாழ்வையே பகிர்ந்து அவர்களுக்குமாதிரிகாட்டினார். எவ்வாறெனில், “தமது இறைவேண்டலின் மாதிரி வழியாகஇறைவேண்டல் செய்ய எங்களுக்குக் கற்றுத்தாரும்என அவர்களைக் கேட்கச் செய்தார். கூட்டத்திற்கு உணவு அளித்த தன் வழியாகத் தேவையில் இருப்போரைக் கவனிக்கக் கற்பித்தார். எருசலேமுக்குப் பயணித்த தன் வழியாக சிலுவையின் பாதையை அவர்களுக்குக் காட்டினார் (முஅ 14 b).

இறைமக்கள் அனைவரும் சீடத்துவ உறவு வாழ்வுக்கும், நற்செய்தியின் மகிழ்ச்சிக்கும் சாட்சியம் பகரவும், கூட்டியக்க முறையைச் செயல்படுத்தவும் அழைக்கப்பட்டுள்ளனர். “கூட்டியக்கம் என்பது அழைத்தலையும், மறைத்தூதுப் பணியையும் பற்றிய ஆழ்ந்த உணர்வு, புதிய முறையில் திரு அவைசார் உறவுகளை வாழ்தல், பங்கேற்பில் புதிய நடைமுறை, திரு அவையோடு இணைந்து தெளி தேர்வு செய்யும் செயல்முறை, தொடர் மதிப்பீட்டாய்வு செய்யும் பண்பாடு என்பவற்றை உள்ளடக்கியது ஆகும் (இஅ 141). உரிய உருவாக்க முறைகள் இன்றி இவை கைகூடாது. மேலும், கூட்டியக்கத்திற்கான உருவாக்கத்தைப் பெற்றிருந்தால்தான் திருமுழுக்கில் தாங்கள் பெற்ற கொடைகளை மறைத்தோ பயன்படுத்தப்படாமலோ வைத்திராது, அனைவருடைய நலனுக்காகவும் அவை பயன்படுத்தப்பட வேண்டியவை எனும் உணர்வும் உறுதிப்பாடும் அவர்களுக்கு ஏற்படும்.

பெறுபவர்களே வழங்குபவர்களும் ஆவர்!

இறைமக்கள் உருவாக்கம் பெறுபவர்கள் மட்டும் அல்லர்; முதன்முதலில் அவர்களே கூட்டுப் பொறுப்புடன் அதை வழங்குபவர்களும் ஆவர். ஏனெனில், முதல் உருவாக்கம் குடும்பத்தில்தான் நிகழ்கிறது. இதனால் திரு அவையில் உருவாக்கப் பணியாற்றுபவர்கள் இறைமக்கள் அனைவரின் ஞானத்துடன் இணைத்தே அதை ஆற்றவேண்டும். இதுவே கூட்டியக்க முறையில் உருவாக்கம் நிகழ்கிறது என்பதன் முதல் அடையாளம் (முஅ 14c). “கூட்டியக்க முறையிலான உருவாக்கம் என்பது தங்கள் குடும்பத்திலும் வேலையிடத்திலும், திரு அவை மற்றும் சமூக, அறிவுசார் தளங்களிலும் இறைமக்களைத் தங்கள் திருமுழுக்கு அழைப்பை முழுமையாக வாழச்செய்யும் நோக்குடையது. அது ஒவ்வொருவரும் தனக்கே உரிய அருங்கொடைகளுக்கும் அழைத்தலுக்கும் ஏற்ப திரு அவையின் மறைத்தூதுப் பணியில் செயலாக்கத்துடன் பங்கேற்கும் வகையில் அவர்களை ஆற்றல்படுத்தும் குறிக்கோளைக் கொண்டது (முஅ 14f).

இயேசுவில் திருமுழுக்குப் பெற்ற அனைவரும் அவருடைய சீடர்கள்; அவரது திருத்தூதுப் பணியில் பங்கேற்பவர்கள். அவர்களது சீடத்துவ உருவாக்கம் கிறித்தவப் புகுநிலையில் தொடங்கித் தொடர்கிறது. அவர்கள் ஒவ்வொருவரும் தங்களது நம்பிக்கைப் பயணத்தில் தாங்கள் சந்திப்பவர்கள் இயேசுவுடன் கொள்ளும் உறவில் வளரவும், அவர்களுக்குத் திரு அவையுடன் உள்ள ஒன்றிப்புறவை அறிமுகப்படுத்தவும் உதவுகின்றனர். பெற்றோர், உறவினர், ஞானப் பெற்றோர், வேதியர்கள், ஆசிரியர்கள், திருவழிபாட்டுத் தலைவர்கள், அன்பிரக்கப் பணி ஆற்றுகின்றவர்கள், திருத்தொண்டர்கள், அருள்பணியாளர்கள், ஆயர்கள் அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்.

ஆனால், புகுமுகப் பயணம் முடிந்ததும் குழுமத்துடன் அவர்கள் கொண்டுள்ள உறவு பொதுவாக ஆழத்தையும் வலுவையும் இழக்கிறது; அவர்களது உருவாக்கமும் அதிகம் கண்டுகொள்ளப்படுவதில்லை. “ஆனால், ஆண்டவரின் திருத்தூதுப் பணியாற்றும் சீடராக மாறுதல் என்பது ஒருபோதும் முற்றுப் பெறும் செயல் அல்ல; தொடர் மனமாற்றத்தையும்கிறிஸ்துவிடம் காணப்பட்ட நிறைவைப் பெறுமளவுக்கு (எபே 4:13) அன்பில் வளருவதையும் நம்பிக்கையின் உயிர்துடிப்பும் மகிழ்ச்சியும் உள்ள சாட்சியம் பகர ஆவியார் தரும் கொடைகளுக்கு உள்ளம் திறந்தவர்களாக இருப்பதையும் தொடர்ந்து அது கோருகிறது (இஅ 142).

கிறிஸ்துவுடன் ஒன்றித்து ஒத்துருவாவதே உருவாக்கத்தின் நிறைவு. நம்பிக்கையாளர்கள் பலருக்கு அவர்கள் திரு அவையுடன் கொண்டுள்ள ஒரே தொடர்பு ஞாயிறு திருப்பலியில் பங்கேற்பது மட்டுமே. அதனால் அது மிக அர்த்தமும் அனுபவமும் தரும் வகைகளில் கொண்டாடப்படவேண்டும். குறிப்பாக, மறையுரையும் அனைவருடைய பங்கேற்பும் சிறப்பாக அமைதல் அவசியம். இதுவே அவர்களது கூட்டியக்கத்தை உறுதிசெய்யும்.

உருவாக்கத் தளங்களும் முறைகளும்

இறைமக்களின் உருவாக்கம் பல்வேறு தளங்களில் நடைபெறுகிறது. இறையியல் உருவாக்கத்துடன் கூட்டுப்பொறுப்பு, செவிகொடுத்துக் கேட்டல், தெளிதேர்வு செய்தல், கிறித்தவ ஒன்றிப்பு மற்றும் பல்சமய உரையாடல், வறியோருக்கு உதவுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஊடகங்கள்வழி மறைத்தூதுப் பணி என்பனவற்றை நடத்துவதற்கான தனிப்பட்ட சில திறமை வளர்ப்புப் பயிற்சிகளும் தேவைப்படுகின்றன. சிறாருக்கும் இளையோருக்கும் மறைக் கல்வி உருவாக்கம் தருவதிலும் தனிப்பட்ட கவனம் தேவை.

திருத்தூதுச் சீடர்களுக்கான உருவாக்கம் அறிவு, உணர்ச்சி, உறவு, அருள்வாழ்வு எனும் ஆளுமையின் அனைத்துப் பரிமாணங்களையும் சார்ந்ததும் ஒருங்கிணைந்தும் நடைமுறை அனுபவமுறையிலும் அமைவதாகும். “மாமன்றத்தின் நடைமுறை முழுவதிலும் அழுத்தியுரைக்கப்பட்ட ஒன்று ஆண்களும் பெண்களும் பொதுநிலையினரும் துறவியரும் திருநிலைத் திருப்பணியாளர்களும் அருள்பணி பயிற்சி மாணவர்களும் இணைந்து பங்கேற்கும் பொது உருவாக்கம். இத்தகைய உருவாக்கத்தில் ஒருவர் மற்றவரை நன்கு தெரிந்துகொள்ளவும் மதிக்கவும் ஒத்துழைக்கும் திறனை வளர்க்கவும் முடியும் (இஅ 143).

இத்தகைய உருவாக்கத்திற்குத் தேவை தாங்கள் கற்றுத்தருவதைத் தாங்களே வாழ்ந்து காட்டும் தகுதியும் திறமையும் வாய்ந்த உருவாக்குநர்கள். இதனால் உருவாக்குநர்களின் உருவாக்கத்தில் அதிகம் கவனம் செலுத்தப்படுவது அவசியம். திருத்தூதுச் சீடர்களை உருவாக்குவது அவர்கள் மட்டுமல்ல; நம் குடும்பங்கள், அன்பியங்கள், பங்குகள், பணிக்குழுக்கள் மற்றும் கழகங்கள், அருள்பணி பயிற்சி இல்லங்கள், துறவு இல்லங்கள், கல்வி நிறுவனங்கள், சமூகத்தில் நலிவுற்றோர் மற்றும் ஓரங்கட்டப்பட்டோர் மேம்பாட்டிற்கான பணித்தளங்கள், மறைத்தூதுப் பணி மற்றும் தன்னார்வத் தொண்டு முயற்சிகள் என்பனவும் திருத்தூதுச் சீடர்களை உருவாக்கும் தளங்களே. ஏனெனில், “திரு அவையில் எவரும் உருவாக்கம் பெறுபவர்கள் மட்டும் அல்லர்; பிறருக்கு வழங்க தங்களிடம் ஏதாவது இருப்பதால், ஒவ்வொருவரும் உருவாக்குநர்களே. மக்கள் பக்தி கூட திரு அவைக்கு ஒரு விலைமதிக்கவியலாக் கருவூலமே. பயணிக்கும் இறைமக்கள் அனைவருக்கும் அது (பலவற்றை) கற்பிக்கிறது (இஅ 144).

உருவாக்கச் செயல்பாடுகளுள் மறைக்கல்வி தனிக்கவனம் செலுத்தப்படவேண்டிய ஒரு துறை. அது கிறித்தவப் புகுநிலையுடன் முடிந்துவிடவேண்டியது அல்ல; மாறாக, மக்களை அது வாழ்க்கை முழுவதும் மறைத்தூதுப் பணியாற்ற இட்டுச்செல்ல வேண்டும். “பல திரு அவைகளில் மக்களுடன் தொடர்ந்து பயணித்து உருவாக்கம் அளிப்பதில் வேதியர்கள் சிறந்த வளமாக இருக்கின்றனர். அவர்களது பணி கிறித்தவக் குழுமங்களால் இன்னும் அதிகமாகப் பாராட்டி ஊக்கப்படுத்தப்படவேண்டும் (இஅ 145).

கிறித்தவக் குழுமங்கள் பல துறைகளைச் சார்ந்த கல்விப்பணியிலும் ஈடுபட்டுள்ளன. வேலை வாய்ப்புகளுக்காகவும், சமூகம், அரசியல், பல்வகைக் கலைகள், விளையாட்டு என்பன போன்ற துறைகளில் ஈடுபடவும் அவை மக்களைத் தயாரிக்கின்றன. புற உலகில் நற்செய்திப் பணியாற்ற முன்னேறிச் செல்லும் திரு அவையின் முன்னணிப் பணித்தளங்களாக இவை இயங்குகின்றன. “அவற்றுள் தனிச்சிறப்பாகக் கத்தோலிக்கக் கல்விக் கூடங்களும் பல்கலைக்கழகங்களும் நம்பிக்கைக்கும் பண்பாட்டிற்கும் இடையிலான உரையாடலிலும் விழுமியங்களை முன்னிறுத்தும் ஒழுக்கநெறிக் கல்வி வழங்குவதிலும், நிறைவாழ்வின் உயிரோவியமாகிய கிறிஸ்துவை நோக்கிய உருவாக்கம் தருவதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவ்வாறு அவை தனியாள் மையப்போக்கு, போட்டி மனப்பான்மை என்பனவற்றால் இயக்கப்படும் இன்றைய பரவலான வாழ்க்கை முறைகளுக்கு ஒரு மாற்று மாதிரியை ஊக்குவிக்கும் ஆற்றல் உடையவை. இவ்வாறு அவை இறைவாக்குப் பணியும் ஆற்றுகின்றன (இஅ 146).

தனிப்பட்டத் திருப்பணிகளுக்கான உருவாக்கம்

திருமுழுக்குப் பெற்ற அனைவருக்குமான இணைந்த கூட்டியக்க உருவாக்கத்தின் பின்னணியில்தான் தனிப்பட்ட திருப்பணிகளுக்கும் அழைத்தல்களுக்கும் தேவைப்படும் சிறப்பு உருவாக்கம் புரிந்துகொள்ளவும் நடைமுறைப்படுத்தப்படவும் வேண்டும். “மாமன்ற அமர்வுகளின்போது வலுவாக எழுந்த இந்த வேண்டுகோள் உருவாக்கத்தின் சூழமைவுகள் மற்றும் நடைமுறைகள் சார்ந்த பார்வையிலும் செயல்பாடுகளிலும் பல வேளைகளில் மாற்றத்தைக் கோருகிறது (இஅ 147).

அருள்பணி மாணவர்களின் தேர்ந்தெடுப்பும், அவர்களது உருவாக்கமும் கூட்டியக்க முறையில் நடைபெறவேண்டும் என்பது மாமன்றக் கலந்துரையாடல்களில் பலமுறை எழுப்பப்பட்ட வேண்டுகோள். பெண்களின் கணிசமான பங்களிப்பு, மக்களது அன்றாடக் குழும வாழ்வில் பங்கேற்பு, திரு அவையில் உள்ள அனைவருடனும் இணைந்து செயல்படுவதற்கும், சபைசார் தெளிதேர்வு செய்வதற்கும் அவர்களைத் தயார்படுத்தும் பயிற்சி என்பன அதில் இடம்பெறுவது அவசியம்.

உருவாக்கம் ஆயர்களுக்கும் இவ்வாறு அவசியமானதே. அதனால் அவர்கள் ஆவியாரின் கொடைகளை ஒன்றிணைக்கும் தங்கள் பணியைச் சிறப்புற ஆற்றவும், தங்களுக்குத் தரப்பட்ட அதிகாரத்தைக் கூட்டியக்க முறையில் செயல்படுத்தவும் முடியும் (இஅ 148).

செயல்படுத்த சில பரிந்துரைகள்

1. கூட்டியக்கப் பார்வையின் பின்னணியில், பொதுநிலையினர், துறவியர், அருள்பணியாளர்கள் என இறைமக்கள் அனைவருக்கும் இணைந்து பங்கேற்கும் உருவாக்க நிகழ்ச்சிகளை வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்.

2. அருள்பணியாளர் உருவாக்கத்தில் பல நிலைகளில் உள்ள இறைமக்கள் பங்கேற்க வேண்டும். பெண்களும் குடும்பங்களும் அதில் பங்கேற்பது தனி முக்கியத்துவம் வாய்ந்தது.

3. அருள்பணியாளர் உருவாக்கத்திற்கெனத் தேர்ந்தெடுக்கப்படுவோர் பயிற்சிக்கு உரிய பண்புகளும் திறமைகளும் கொண்டிருப்பதை உறுதி செய்வதற்கு ஏற்ற அளவீடுகளும் முறைகளும் செயல்படுத்தப்படவேண்டும்.

4. கூட்டியக்கத் திரு அவையின் பல்வேறு இடங்களின் சூழமைவுகளுக்கு ஏற்ப அருள்பணியாளர் உருவாக்கம் திட்டமிடப்படவேண்டும். அப்பயிற்சியில் பங்கேற்கும் முன்பு அவர்கள் அக்கிறித்தவக் குழுமத்தின் அனுபவத்தைக் கணிசமான அளவு பெற்றிருக்கவேண்டும் “(அருள்பணியாளர்) உருவாக்கம் நம்பிக்கையாளர்களின் சாதாரண வாழ்விலிருந்து வேறுபட்ட செயற்கையான சூழமைவில் நடைபெறக்கூடாது (முஅ 14n). மாறாக, “ஏழ்மையிலும் விளிம்புநிலையிலும் வாழ்வோரைச் சந்தித்தல், அவர்களது வாழ்வைப் பகிர்தல், அவர்களுக்குப் பணிசெய்தல் என்பன கிறித்தவக் குழுமங்கள் வழங்கும் அனைத்து உருவாக்க முறைகளிலும் இன்றியமையாத ஒரு பகுதியாக இருத்தல்வேண்டும். இது விருப்பத்திற்கு விடப்பட்ட ஒரு (பிற்)சேர்க்கை அல்ல; மாறாக, நம்பிக்கையின் கட்டாயத் தேவை. திருநிலைப் பணிகள் மற்றும் துறவு வாழ்வுக்கான உருவாக்கத்திற்கு இது இன்னும் அதிகம் பொருந்தும் (முஅ 4o). இதற்கென அருள்பணியாளர் மற்றும் திருத்தொண்டர் என்போருக்கான உருவாக்கத்திற்கான அடிப்படைத் திட்டத்தை (Ratio Fundamentalis) மறுசீரமைப்பது அவசியம்.

5. அருள்பணியாளர் உருவாக்கத்தில் கூட்டியக்க நடைமுறை எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பதைக் கண்டறியவும், கூட்டியக்கத் திரு அவைக்கு ஏற்ற அதிகாரச் செயலாக்கத்தை வளர்த்தெடுப்பதற்கு உரிய மாற்றங்களைப் பரிந்துரைக்கவும் அருள்பணியாளர் தொடக்க மற்றும் தொடர் உருவாக்கத்திற்கான பொறுப்பாளர்களின் கலந்தாய்வு ஒன்றை நடத்தவேண்டும்.