தாக்கம் (Impact) என்பது ஒரு செயலால் ஏற்படும் விளைவைக் குறிக்கும். அதில் நேர்மறையான தாக்கம் என்பது ஒருவரின் செயலின் மூலம் சமூகத்திற்கோ, தனிநபரின் வாழ்வின் நலனுக்கோ, சுற்றுச் சூழலுக்கோ நல்ல ஆக்கப்பூர்வமான விளைவை ஏற்படுத்துவதாகும்.
அதேபோல்,
கடவுள் நம் ஒவ்வொருவரையும் ஆவிக்குரிய வாழ்வில் தாக்கம் ஏற்படுத்த வேண்டுமென்று விரும்புகிறார். இதற்காகவே வாழ்வின் நிகழ்வுகளில் நம்முடைய நம்பிக்கை, நடத்தை, தூய்மையான வாழ்வு முக்கியம்.
கிறித்தவ
வாழ்வின் தாக்கம் குடும்பத்திலிருந்து தொடங்கப்படவேண்டும். இதற்கு ஆதாரமாக திமொத்தேயுவின் வாழ்வில் காணலாம். “வெளிவேடமற்ற உன் நம்பிக்கையை நினைத்துப் பார்க்கிறேன். இத்தகைய நம்பிக்கை முதலில் உன் பாட்டி லோயி மற்றும் உன் தாய் யூனிக்கி ஆகியோரிடம் விளங்கியது. இப்போது உன்னிடமும் உள்ளதென உறுதியாக நம்புகிறேன்” (2திமொ
1:5). திமொத்தேயுவின்
பாட்டி மற்றும் தாய் கடவுள்மீது உண்மையான நம்பிக்கையுடன் வாழ்ந்தனர். அவர்கள் இயேசுவின் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்தியதின் மூலம், போலித்தனமற்ற பக்தி, கடவுளைப் பற்றிய ஆழமான புரிதல் மற்றும் தூய உள்ளம் கொண்ட வாழ்க்கை ஆகியவற்றை முன்னுதாரணமாகக் காட்டினர். மேலும், அவர்கள் திருவிவிலியத்தைத் தியானித்து, அதை குழந்தைப் பருவத்திலிருந்தே திமொத்தேயுவுக்குத் தொடர்ந்து கற்பித்தனர். இதன்மூலம் அவரது குணம் வடிவமைக்கப்பட்டு, உண்மையான நம்பிக்கை உறுதியாக நிலைநாட்டப்பட்டது. இதே நம்பிக்கைதான் அவரைத் திருத்தூதர் பவுலுடன் நம்பிக்கையுள்ள உடன் பணியாளராக வளரச் செய்தது.
இவ்வாறு
திமொத்தேயுவின் வாழ்க்கையில் அவரது பாட்டி மற்றும் தாயின் நம்பிக்கை ஓர் ஆழமான மற்றும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது. அதேபோல், இன்று ஒவ்வொரு குடும்பத்திலும் பெற்றோர் மற்றும் பெரியவர் தமது வாழ்வின் மூலம் கிறித்தவத் தாக்கம் குழந்தைகளுக்குள் ஏற்படவேண்டும். இவ்வாறு பெற்றோர் தங்கள் குழந்தைகளின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துபவர்களாக மாறும்பொழுது, அந்தக் குழந்தைகளும் சமூகத்தில் தானியேல் மற்றும் பவுலைப் போன்று ஒவ்வொருவரின் மத்தியிலும் கிறித்தவத் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.
ஆகவே,
அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் நபர்கள் அதிக ஊக்கத்தை அளிக்கிறார்கள் என்பதை நினைவில்கொண்டு, நம் சொந்த ஆன்மிகப் பயணத்தில் நாம் எங்கு இருக்கிறோம் என்பதைக் கவனிக்கவேண்டிய நேரம் இதுதான்.
நாம்
வாழும் இவ்வுலகில் கிறிஸ்துவின் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் நம் வாழ்வானது உவர்ப்புள்ள உப்பைப்போல, கிறிஸ்துவின் சுவையை வெளிக்கொணரும்படி இருக்கவேண்டும். அதற்கான எளிதான வழிகளில் ஒன்று, கடவுளை நம் வாழ்வின் எல்லாப் பகுதிகளிலும் முதன்மைப்படுத்துவது. நம் எண்ணங்கள், நோக்கங்கள், ஆசைகள், அதிகாரங்கள், செல்வங்கள், செயல்கள், திட்டங்கள், உறவுகள், உரையாடல்கள், வேலை மற்றும் அட்டவணை ஆகியவற்றின் முழு ஆதிக்கத்தையும் அவருக்கே கொடுக்கவேண்டும்.
அன்பு
நிறைந்த அன்றாட வாழ்க்கையின் மையத்தில் கடவுளை வைத்திருப்பதன் மூலம் நாம் உரையாடுகின்ற, செயல்படுகின்ற ஒவ்வொன்றிலும் தூய்மை நிறைந்திருக்கும். இவை அனைத்திற்கும் கடவுளே ஆதாரமாக இருக்கும்போது, நம்மைச் சுற்றியுள்ள உலகம் கடவுளின் அரசிற்காக நம் வாழ்வின் வழியாக ஒரு தாக்கத்தை அனுபவிக்கும். திருமுழுக்கு யோவான் போலவே, நாமும் எந்தவோர் இடத்திலும் இயேசுவைச் சுட்டிக்காட்டுவோம். இது என்னைப் பற்றியது அல்ல; இது அவரைப் பற்றியது என்று மனதாரச் சொல்வோம்.
நம்
வாழ்வில் எந்தவொரு தாக்கம் ஏற்பட்டாலும் அது கிறிஸ்துவை வெளிப்படுத்துவதாக இருக்கட்டும். அந்தத் தாக்கம் மிகவும் எளிமையானதாக இருந்தாலும் பரவாயில்லை; ஆனால், கிறிஸ்துவை முன்னிறுத்துவதாக இருக்கவேண்டும். அதற்கான சிறந்த உதாரணம் தபித்தா. யோப்பா நகரில் வாழ்ந்த தபித்தா மிகவும் எளிமையான பெண் சீடர். நன்மை செய்வதிலும், இரக்கச்செயல்கள் புரிவதிலும் அவர் முழுமையாக ஈடுபட்டிருந்தார். ஆனால், இவரது எளிமையான வாழ்க்கை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இவர் இறந்தபோது இவரின் நற்செயல்களின் சாட்சிகள் பேதுருவை அழைத்து வரச்செய்து, இறந்த தபித்தாவை உயிர்த்தெழச் செய்தனர். அந்த நிகழ்வு யோப்பா நகர மக்களில் பலரையும் கிறிஸ்துவுக்குள் நம்பிக்கை கொள்ளச் செய்தது (திப 9:36-42).
இவ்வாறுதான்
நம்மில் உள்ள கிறித்தவ ஒளியானது மனிதர்முன் ஒளிவீச வேண்டும். அப்பொழுது அவர்கள் நம் நற்செயல்களைக் கண்டு நம் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள் (மத் 5:16). அவ்வாறான வாழ்க்கை வாழ்பவர்களுக்கு மத்தேயு 28: 19-இல் கூறப்பட்டுள்ளபடி, “நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்” என்ற
இயேசுவின் கட்டளை இயல்பாகவே நிறைவேறும்.
இவ்வாறு,
ஒரு சீடனின் கிறித்தவச் சாட்சிய வாழ்க்கை மற்றொருவருக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும்போது அது பெருகி இரட்டிப்பாகும். இரண்டு நான்காக, நான்கு எட்டாகும்போது, சீடர்களின் எண்ணிக்கை தொடர்ந்து பெருகிக்கொண்டே போகும். நம் கிறித்தவத் தாக்கத்தின் மூலம் இவ்வுலகில் எத்தனை ஆன்மாக்கள் கடவுளின் அரசிற்குள் வரப்போகின்றன என்பதையும், அதன் விளைவாக, கடவுளுடைய அரசிற்குள் படையெடுத்து வரும் கூட்டத்தால் விண்ணரசு எவ்வளவோ மகிமையானதாக மாறும்! அதை நினைத்துப் பார்க்கும்போது, நம் சாட்சிய வாழ்க்கை மூலம் கடவுளின் அருளின் வழியாக நாமும் பங்கு பெற்றிருப்பதில் ஆன்மிக மகிழ்ச்சி கொள்வோம். அப்பொழுது இயேசு கிறிஸ்து நம்மைப் பார்த்து, “நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே, பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்குகொள்ளும்” (மத்
25:21) என்று கூறி, நம்மை மேன்மையுள்ள இடத்திற்கு உயர்த்துவார். உலகிற்குக் கிறிஸ்துவின் தாக்கத்தை உருவாக்குவோம். கிறிஸ்துவிற்கு ஆன்மாவை அறுவடை செய்வோம்!
‘இறைவனின் ஊழியர்’ என்று தன்னையே அறிவிப்பதன் வழியாக, புனித கன்னி மரியா இறைவனின் விருப்பத்திற்கான தனது முழு கீழ்ப்படிதலைக் காட்டுகிறார். மேலும், அவரது எல்லாத் தனிப்பட்ட பண்புகளுடனும் அதைத் தனதாக்கிக் கொள்கின்றார்.
1.
கிறிஸ்து பிறப்பு அறிவிப்பின் பொழுது கூறப்பட்ட “நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே
எனக்கு நிகழட்டும்” (லூக் 1:38) என்ற கன்னி மரியாவின்
வார்த்தைகள், யூத மத பக்தியின் பண்பைக் குறிக்கின்றது. பழைய உடன்படிக்கையின் தொடக்கத்தில்,
இறைவனின் அழைப்பிற்குப் பதிலளிக்கும் விதமாக மோயிசன் தன்னைத் தானே ஊழியனாக அறிவித்துக்கொள்கின்றார்
(ஒப்பிடுக. விப 4:10-14,31). புதிய உடன்படிக்கையின் வருகையுடன் மரியாவும் இறைவனுடைய
ஊழியராக இருப்பதற்கு முழுமனச் சுதந்திரத்தோடு அடி பணிந்து, இறை விருப்பத்திற்குத் தன்னையே
கையளிக்கின்றார்.
பழைய
ஏற்பாட்டில் ‘ஆண்டவரின் அடிமை’ என்கிற தகுதியானது, தேர்ந்தெடுக்கப்பட்ட
மக்களுக்காகப் பணிசெய்ய அழைக்கப்பட்ட அனைவரையும் இணைக்கின்ற ஒரு சொல்லாக இருக்கின்றது.
ஆபிரகாம் (தொநூ 26:24), ஈசாக்கு (தொநூ 24:14), யாக்கோபு (விப 32:13; எசே 37:25), யோசுவா
(யோசு 24:29), தாவீது (2சாமு 7:8) மற்றும் சிலர். இறைவனின் உண்மையுள்ள பணியில் மக்களை
உருவாக்குகின்ற வேலையைச் செய்கின்ற இறைவாக்கினர்களும் குருக்களும் கூட ஊழியர்களே ஆவர்.
பலருடைய பாவங்களுக்கான மீட்பின் நம்பிக்கையில் கடவுளுடைய நம்பகத்தன்மையின் மாதிரியான
‘துன்புறும் ஊழியரின்’ பண்பை எசாயா புத்தகமானது உயர்த்திப்
பேசுகின்றது (ஒப்பிடுக. எசா 42:53). யூதர்களின்
மீட்புக்காகப் பரிந்து பேசுவதற்கு முன், “உம்முடைய ஊழியர்” (எஸ் 4:17) என்று தன்னையே பலமுறை அழைத்து கடவுளிடம் வேண்டுதல்
செய்த அரசி எஸ்தர் போன்ற சில பெண்களும் நம்பிக்கையின் மாதிரிகளாக இருக்கின்றனர்.
‘அப்படியே
ஆகட்டும்’ என்கிற
மரியாவின் வார்த்தைகள் அவரது முழுமையான கீழ்ப்படிதலை வெளிப்படுத்துகிறது
2.
அருளால் நிறைந்த மரியா, ‘ஆண்டவருடைய அடிமை’ என்று
தன்னையே அறிவித்ததன் வழியாகத் தனிப்பட்ட முறையில் அவரும் மற்றும் ஒட்டுமொத்தமாக எல்லா
மக்களும் ஆண்டவர் எதிர்பார்க்கின்ற பணியை நிறைவேற்ற தன்னையே ஈடுபடுத்திக்கொள்ள வேண்டுமென
விரும்புகின்றார். “இதோ, ஆண்டவருடைய அடிமை” என்கின்ற
வார்த்தைகள் தன்னைப் பற்றியே சொல்லவிருக்கின்ற ஒருவரை முன்னறிவிக்கின்றன. “மானிட மகன்
தொண்டு ஏற்பதற்கு அல்ல; மாறாக, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாக தம் உயிரைக்
கொடுப்பதற்கும் வந்தார்” (மாற் 10:45, ஒப்பிடுக. மத்
20:28). இவ்வாறு, தூய ஆவியானவர் தாய்க்கும் மகனுக்கும் இடையே ஒன்றுபட்டதொரு மனப்பான்மையைக்
கொண்டு வருகிறார். இது ஊழியர் என்கின்ற வகையில், தனது மகனின் பணியில் உடன் நடப்பதற்காக
அவரது தாய் என்கின்ற பங்கை அவர் முழுமையாக ஏற்றுக்கொள்வதற்கு அனுமதிக்கின்றது.
இயேசுவின்
வாழ்வில் பணி செய்வதற்கான எண்ணமானது நிலையானதாகவும் வியப்பானதாகவும் இருக்கின்றன. கடவுளின்
மகன் என்கின்ற வகையில், அவர் பணிவிடை செய்யப்பட வேண்டும் என்று முறையாகக் கோரியிருக்கலாம்.
தானியேல் புத்தகம் கூறுகின்ற, “எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவரை வழிபட
வேண்டும்” (தானி 7:14) என்கின்ற வார்த்தையின்படி,
‘கடவுளின் மகன்’ என்கின்ற பட்டத்தைத் தமக்குத்தாமே குறிப்பிடுகின்றார்.
அவர் மற்றவர்களைவிடத் தாம் சிறந்தவர் என்று கோரியிருக்கலாம். ஆனால், அதற்குப் பதிலாக,
முதன்மை இடத்தைப் பிடிப்பதற்கான சீடர்களின் பதவி வெறியைச் சுட்டிக்காட்டி அவர்களுடைய
மனநிலைக்கு எதிராகவும் (ஒப்பிடுக. மாற் 9:34), பாதம் கழுவும்பொழுது இருந்த தூய பேதுருவின் மறுப்பு மனநிலைக்கு எதிராகவும் குரல் கொடுக்கின்றார்
(ஒப்பிடுக. யோவா 13:6). இவ்வாறு, இயேசு பணிவிடை செய்யப்பட விரும்பவில்லை; மாறாக, அவரின்
வாழ்வையே முழுமையாக மீட்புப் பணிக்காகக் கொடுத்து முழுமையானதொரு பணியைச் செய்ய விரும்புகின்றார்
என அறியலாம்.
3.
மேலும், வானதூதரின் அறிவிப்பில் தனக்கு வழங்கப்பட்ட மரியாதையை மரியா அறிந்திருந்தாலும்,
அவர் தன்னைப் பற்றிக் கூறுகையில், ‘இறைவனின் ஊழியர்’ என்றே
அறிவிக்கின்றார். இப்பணியின் அர்ப்பணிப்பில், கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு நிகழ்விற்கும்,
எலிசபெத்தம்மாவைச் சந்திக்கும் நிகழ்விற்கும் இடையேயான ஓர் இணைப்பாக, தனது அண்டை வீட்டாருக்குப்
பணி செய்வதற்கான நோக்கத்தையும் அவர் வைத்திருந்தார். எலிசபெத்தின் கர்ப்பம் பற்றி வானதூதர்
வழியாகத் தெரிந்துகொண்ட மரியா, அவரின் உறவினரான எலிசபெத்து குழந்தையைப் பெற்றெடுக்க
உதவுவதற்காகத் தன்னையே முழுமையாக அர்ப்பணிக்க யூதேயாவிற்கு விரைந்து (லூக் 1: 39) புறப்பட்டுச்
செல்கின்றார். இவ்வாறு எல்லாக் காலகட்டங்களிலும் வாழும் கிறித்தவர்களுக்குப் பணி செய்வதன்
முன்மாதிரியாக மரியா விளங்குகின்றார்.
“உம்
சொற்படியே எனக்கு நிகழட்டும்” (லூக் 1:38) என்ற வார்த்தைகள், ஓர்
ஊழியர் என்று கூறித் தன்னையே கடவுளின் விருப்பத்திற்கு முற்றிலுமாகக் கீழ்ப்படியும்
ஒரு நபரை நம் கண்முன் கொண்டு வருகின்றன. நற்செய்தியாளர் லூக்கா பயன்படுத்துகின்ற genoito- ‘அப்படியே ஆகட்டும்’ என்கிற ஒருவரின் விருப்பத்தை வெளிப்படுத்துகின்ற வார்த்தைகள்,
தெய்வீகத் திட்டத்தை ஏற்றுக்கொள்வதோடு மட்டுமல்லாமல், தனது சக்தி முழுவதையும் பயன்படுத்தி
அத்திட்டத்தைத் தனதாக்குவதில் அவர் வெளிப்படுத்திய அவரின் உறுதியான எண்ணத்தையும் காட்டுகின்றது.
இறைவனின் விருப்பத்திற்கு
இணங்குவதன் வழியாக, மரியா கிறிஸ்துவின் மனநிலையை
முன் நிகழ்த்திக் காட்டுகின்றார்
4.
இறைத்திட்டத்திற்கு இணங்குவதன் வழியாக மரியா கிறிஸ்துவின் மனநிலையை முன்குறித்துக்
காட்டி, அதைத் தனதாக்கிக் கொள்கின்றார். அந்தக் கிறிஸ்துவின் மனநிலையானது எபிரேயருக்கு
எழுதப்பட்ட கடிதத்தில் தெளிவாகக் குறிப்பிடப்படுகிறது: “பலியையும் காணிக்கையையும் நீர்
விரும்பவில்லை; ஆனால், ஓர் உடலை எனக்கு அமைத்துத் தந்தீர்... எனவே நான் கூறினேன்...
உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன்”
(எபி 10:5-7; திப 40-41, 7-9).
இவ்வாறே,
மரியாவின் பணிவும் கல்வாரி வரை இயேசு தமது பொது வாழ்வின்போது வெளிப்படுத்தியதையே அறிவிக்கின்றது
மற்றும் முன்குறிக்கின்றது. அதாவது கிறிஸ்து, “என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும்
அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே என் உணவு”
(யோவா 4:34) என்று கூறுவார். இயேசுவின் இந்த வார்த்தைகளைத் தனது வாழ்வு முழுவதுமே தந்தையின்
விருப்பத்தை எழுச்சியூட்டக் கூடியதொரு கொள்கையாக மரியா ஆக்குகிறார். மேலும், தன்னிடம்
ஒப்படைக்கப்பட்ட பணியை நிறைவேற்ற தேவையான பலத்தை அதில் தேடுகின்றார்.
கிறிஸ்து
பிறப்பு அறிவிப்பின் பொழுது, கிறிஸ்துவின் பணியைக் குறிக்கும் தியாகத்தைப் பற்றி மரியாவுக்கு
இன்னும் தெரியவில்லை என்றாலும், சிமியோனின் தீர்க்கதரிசனம் தன் மகனின் சோகமானதொரு முடிவைக்
காண அவருக்கு உதவி இருக்கும் (ஒப்பிடுக. லூக் 3: 34-35). இருப்பினும், கன்னி மரியா
நெருக்கமானதொரு பகிர்வின் வழியாகத் தன்னைக் கிறிஸ்துவுடன் தொடர்புபடுத்துகிறார். இறைவனின்
விருப்பத்திற்கு முழுவதும் கீழ்ப்படிந்ததன் வழியாக, அந்தத் தெய்வீக அன்பானது அவரின்
வாழ்விற்காகத் திட்டமிடக்கூடிய அனைத்தையும், அவரது ஆன்மாவைக் குத்திக் கிழிக்கும் அந்த
‘வாளையும்’ ஏற்று வாழ மரியா தயாராக இருக்கின்றார்.
மூலம்:
John Paul II, Mary offers sublime model of service, in
«L’Osservatore Romano», Weekly Edition in English, 11 September 1996, p. 15.
விண்ணுலகில் தேர்தல்
ஒருமுறை
விண்ணுலகில் தேர்தல் நடைபெற்றதாம்! அத்தேர்தலில் யாரோ ஒருவர் கம்யூனிஸ்டு கட்சிக்கு வாக்களித்துவிட்டார். இதைக் கேள்வியுற்ற தந்தையாம் கடவுளுக்குக் கடும் கோபம் வந்துவிட்டது. “கடவுளே இல்லையென்று சொல்கின்ற கம்யூனிஸ்டுகளுக்கு வாக்களித்தது யார்?” என்று அறிய விரும்பினார் தந்தையாம் கடவுள்.
அதனால்,
வானதூதர் தலைமையில் ஒரு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. தீவிர புலன் விசாரணைக்குப் பிறகு கம்யூனிஸ்டு கட்சிக்கு வாக்களித்தது புனித யோசேப்பு என்று கண்டுபிடிக்கப்பட்டது.
புனித
யோசேப்பு தந்தையாம் கடவுளின் முன்னிலையில் நிறுத்தப்பட்டார். “நீர் ஏன் கம்யூனிஸ்டுகளுக்கு வாக்களித்தீர்?” என்று கேள்விக் கணையைத் தொடுத்தார் தந்தையாம் கடவுள்.
“கம்யூனிஸ்டுகள் தொழிலாளர்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள். நான் தொழிலாளர்களின் பாதுகாவலன். எனவே, அவர்களுக்கு வாக்களித்தேன்” என்று
பதில் கூறினார் புனித யோசேப்பு.
“என்னவாக இருந்தாலும் ‘கடவுளே இல்லை’ என்று சொல்கின்ற கம்யூனிஸ்டுகளுக்கு வாக்களித்தது பெரும் குற்றமாகும். எனவே, நீர் விண்ணுலகை விட்டு வெளியேற உத்தரவிடுகிறேன்!” என்று ஆணையிட்டார் தந்தையாம் கடவுள்.
அதற்குப்
புனித யோசேப்பு, “நான் வெளியேற வேண்டுமென்றால் எனது மகன் இயேசுவையும் அழைத்துச் செல்வேன்”
என்று பதில் கூறினார்.
இதைக்
கேட்டவுடன் தந்தையாம் கடவுள் சற்று அதிர்ந்து போனார். இயேசு ஆண்டவர் தூய மூவொரு கடவுளின் இரண்டாம் ஆள் இல்லாமல் விண்ணுலகம் எப்படி இயங்க முடியும்? எனவே, தந்தையாம் கடவுள் தமது முடிவை மாற்றிக் கொண்டார். புனித யோசேப்பு விண்ணுலகில் தொடர்ந்து வாழ அனுமதிக்கப்பட்டார்.
அன்பு
மிகுந்தவர்களே! இக்கதை கூறும் செய்தி என்னவென்றால், புனித யோசேப்பு மண்ணுலகில் மட்டுமன்றி, விண்ணுலகிலும் வல்லமை மிகுந்தவர் என்பதுதான். மண்ணுலகில் வாழும்
மாந்தர்களின் மன்றாட்டுகளுக்குத் தனது மகன் இயேசு ஆண்டவர் வழியாக வரங்களைப் பெற்றுத் தரும் ஆற்றல் வாய்ந்தவர் புனித யோசேப்பு.
திருவிவிலியத்தில்
புனித
யோசேப்பு
‘இவர் ஒரு நேர்மையாளர்’ என்று
புனித மத்தேயு நற்செய்தியாளர் கூறுகின்றார் (1:19). நேர்மையாளர் எனும் சொல்லுக்கு மனசாட்சி உடையவர், உண்மையை ஏற்றுக்கொள்பவர், நீதியோடு வாழ்பவர் என்று பொருள் கொள்ளலாம். எனவேதான் அன்னை மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்காமல், கடவுளின் திட்டத்திற்கு அடிபணிகின்றார். அதனால்தான் கவியரசு கண்ணதாசன் புனித யோசேப்பை, ‘சொல்லரும் அறிஞரே! சூசையப்பரே!’ என வாழ்த்துகிறார் (இயேசு காவியம்).
புனித
யோசேப்பு பொறுப்பும் கடமையும் உள்ள தந்தையாகச் செயல்பட்டார். கனவில் எச்சரிக்கப்பட்டவுடன் இயேசு பாலகனையும், அன்னை மரியாவையும் அந்த இரவிலேயே எகிப்துக்கு அழைத்துச் செல்கிறார் (மத் 2:14). கடமையை ஆற்றுவதில் ஆர்வமும் விவேகமும் புனித யோசேப்பிடம் இருப்பதைக் காண்கிறோம். இப்புனித யோசேப்பு தாவீதின் வழிமரபினர் என்பது (லூக் 2:4), அவருக்கு மேலும் மாண்பையும் புகழையும் சேர்க்கிறது.
திருத்தந்தை
10-ஆம்
பயசின்
கூற்று
“புனித யோசேப்பு அமைதியானவர்; ஆழ்ந்த நம்பிக்கையின் அடையாளமானவர்; எளிமையானவர்; தாழ்ச்சி உடையவர்; தியாக உள்ளம் கொண்டவர்; கடவுளிடம் தடுமாற்றம் இல்லாத நம்பிக்கை வைத்தவர்; தொழிலாளர்களுக்கு முதன்மையான அடையாளமாகத் திகழ்பவர்; செய்யும் தொழிலை ஊக்கத்தோடும் அர்ப்பணத்தோடும் செய்யும் ஆன்மிகத்தை அருள்பவர்”
என்று நினைவில் வாழும் திருத்தந்தை 10-ஆம் பயஸ் கூறுகிறார்.
புனித யோசேப்பு
ஓர்
அருமையான
பாதுகாவலர்
புனித
யோசேப்பின் பண்பையும் ஆற்றலையும் கண்ணுற்றத் திரு அவை, அவரைப் பல்வேறு நிலைகளுக்குப் பாதுகாவலராய் நியமித்துள்ளது. புனித யோசேப்பு தொழிலாளர்களின் பாதுகாவலர், குடும்பங்களின் பாதுகாவலர், குடும்பத் தந்தையர்களின் பாதுகாவலர், கல்வியின் பாதுகாவலர், பல்கலைக்கழகங்களின் பாதுகாவலர், கற்பின் பாதுகாவலர், கன்னியர் இல்லங்களின் பாதுகாவலர், திருத்தந்தையர்களின் பாதுகாவலர், திரு அவையின் பாதுகாவலர், பயணிகளின் பாதுகாவலர், அகதிகளின் பாதுகாவலர், வழக்கறிஞர்களின் பாதுகாவலர், நல்மரணத்தின் பாதுகாவலர். மேலும், புனித யோசேப்பு ஆஸ்திரியா, குரோவாசியா போன்ற நாடுகளின் பாதுகாவலரும் ஆவார்.
புனித யோசேப்பை
நோக்கிய
மன்றாட்டுகள்
உலகெங்குமுள்ள
பக்தர்கள் புனித யோசேப்பை நோக்கி வேலைவாய்ப்பு கிடைக்க, அன்றாட வாழ்வுக்குப் பாதுகாப்பு கிடைக்க, இறையழைத்தல் கிடைக்க, சுகப்பிரசவம் நடக்க, நல்ல திருமணம் நடைபெற, நல்ல மரணம் கிடைக்க வேண்டுகின்றனர்.
புனித
யோசேப்பை நோக்கி எழுப்பப்படுகின்ற மன்றாட்டுகள் அதிக அளவில் நிறைவேற்றப்படுகின்றன. கடும் நோயிலிலிருந்து விடுதலை பெற்ற புனித அவிலா தெரசம்மாள், “புனித யோசேப்பு வழியாக நான் கேட்ட எந்த மன்றாட்டும் நிறைவேற்றப்படாமல் போனதில்லை”
என மொழிகின்றார்.
எனவே,
நாம் ஒவ்வொருவரும் புனித யோசேப்பு வழியாகக் கடவுளிடம் வேண்டுவோம். எல்லாம் வல்ல இறைவன் நமது வேண்டுதல்களை நிறைவேற்றுவாராக!
அதிகாரமல்ல, ஆழமான நட்பு
“இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்லமாட்டேன்;… உங்களை நான் என் நண்பர்கள் என்றேன்”
(யோவா 15:15). இயேசுவின் இந்த ஒற்றை வார்த்தை கத்தோலிக்க நம்பிக்கையின் அஸ்திவாரத்தை மாற்றியமைக்கிறது. கிறித்தவம் என்பது வெறும் சட்டங்களின் தொகுப்போ அல்லது சடங்குகளின் பட்டியலோ அல்ல; அது கடவுளுக்கும் மனிதருக்கும் இடையிலான ஓர் உயிருள்ள உறவு என்பதைத் திருத்தந்தை லியோ அவர்கள் தனது மறைக்கல்வி உரையில் இந்த ‘அன்பின் உறவை’ மையப்படுத்தி நம்பிக்கையாளர்களுக்கு ஓர் உன்னதமான ஆன்மிகப் பாதையை வகுத்துக் கொடுத்துள்ளார்.
கடவுளின் அடையாளம்:
பண்பல்ல,
அதுவே
சாராம்சம்
திருவிவிலியத்தில்
யோவான் தனது முதல் கடிதத்தில் நமக்கு ஓர் உறுதியான உண்மையை உரக்கக் கூறுகிறார்: “கடவுள் அன்பாய் இருக்கிறார்” (1யோவா
4:8). அன்பு என்பது கடவுளின் பல பண்புகளில் ஒன்று
மட்டுமல்ல; அதுவே அவரது சாராம்சம்.
புனித
கிரகோரி குறிப்பிடுவதுபோல, “கிறிஸ்து நம்மைப்போல மாறினார்; நாம் அவர் வழியாகக் கடவுளாக மாறவேண்டும் என்பதற்காக.” கடவுள் நம்மைத் தேடி வருவது நமது தகுதியினால் அல்ல; மாறாக, அவர் அன்பாகவே இருப்பதால்தான். “கடவுள் உலகை எத்துணை அன்புகூர்ந்தார் எனில், தம் ஒரே மகனையே அளித்தார்”
(யோவா 3:16) என்ற இறைவார்த்தை, அன்பு என்பது வெறும் உணர்ச்சியல்ல; அது ஒரு ‘தியாகம்’ என்பதை உறுதிப்படுத்துகிறது.
இறைவெளிப்பாடு:
ஒரு
தெய்வீக
உரையாடல்
இரண்டாம்
வத்திக்கான் சங்கத்தின் ‘இறைவெளிப்பாடு’ (Dei Verbum) ஆவணம் ஒரு முக்கியமான உண்மையை முன்வைக்கிறது. கடவுள் மனிதர்களுக்குத் தரும் வெளிப்பாடு என்பது தகவல் பரிமாற்றம் அல்ல; அது ஒரு தனிப்பட்ட தொடர்பு. திருத்தந்தை லியோ இதனை விவரிக்கையில், “கடவுள் மனிதர்களிடம் நண்பர்களாகப் பேசுகிறார்” (Dei Verbum, 2) என்று வலியுறுத்துகிறார்.
திருவிவிலிய
வாசிப்பு என்பது ஒரு வரலாற்றைப் படிப்பதல்ல; மாறாக, நம் அருகில் அமர்ந்து, நம்மிடம் பேசும் இறைவனின் குரலுக்குச் செவி மடுப்பதாகும். நவீன உலகில் தகவல்கள் பெருகிவிட்ட போதிலும், ஆழமான உள்ளுணர்வுத் தொடர்பு குறைந்துவிட்ட நிலையில், இறைவார்த்தை மட்டுமே இதயங்களை இணைக்கும் பாலமாக அமைகிறது.
பணியாளர்கள் அல்லர்,
நண்பர்கள்!
நட்பு
என்பது சமமானவர்களுக்கு இடையே உருவாவது. இது ஒரு சமத்துவத்தின் புரட்சி. படைப்பாளரான இறைவனுக்கும், படைப்பான மனிதனுக்கும் இடையே சமநிலை என்பது இயற்கையில் சாத்தியமற்றது. ஆனால், புனித அகுஸ்தினார் கூறுவதுபோல, “கடவுளின் அருள் மட்டுமே நம்மைக் கடவுளின் நண்பர்களாக மாற்ற முடியும்.”
இயேசு
நம்மை நண்பர்கள் என்று அழைப்பதன் மூலம் மூன்று நிலைகளை உருவாக்குகிறார்:
1. சமத்துவம்: நட்பில் அதிகாரம் மறைந்து அன்பு முதன்மையாகிறது.
2. பகிர்தல்:
தந்தை தமக்குத் தெரிவித்த அனைத்தையும் இயேசு நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.
3. அர்ப்பணிப்பு:
“தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு வேறில்லை”
(யோவா 15:13).
செயலால் பேசும்
அன்பின்
சாட்சிகள்
அன்பு
என்பது கோவிலுக்குள் மட்டும் அடங்கிவிடக் கூடியதல்ல; அது சமூகத்தில் செயல்பாடாக மாறவேண்டும். அதற்கு இரண்டு மாபெரும் சாட்சிகள் நமக்கு முன் வைக்கப்படுகின்றன:
1. புனித டேமியன்:
தொழுநோயாளிகளுக்காகத்
தன் வாழ்வை அர்ப்பணித்தவர். ‘அன்பு என்பது வார்த்தைகளில் இல்லை; அது மற்றவர்களின் காயங்களைக் கழுவுவதில் இருக்கிறது’ என்பதை
உலகுக்கு உணர்த்தினார்.
2. அன்டோன் ஷ்மிட்:
இரண்டாம் உலகப் போரின்போது தனது உயிரைப் பணயம் வைத்து யூதர்களைக் காப்பாற்றிய வீரர் இவர். கிறிஸ்துவின் அன்பை இரத்தச்சாட்சியமாக வாழ்ந்து காட்டினார்.
அவருக்கு என்மேல்
அன்பு
“என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும், உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்”
(யோவா 15:11). இன்றைய உலகில் நிலவும் தனிமைக்கு மருந்தாகத் திகழ்ந்த நிகழ்வைப் பார்ப்போம். அயர்லாந்து நாட்டுப் பெரியவர் ஒருவரிடம் “நீங்கள் கடவுளுக்கு நெருக்கமானவரா?” என்று கேட்டபோது, அவர் கூறினாராம்: “ஆமாம், அவருக்கு என்மேல் மிகுந்த அன்பு உண்டு.”
நமது
உண்மையான அடையாளம் நமது பதவியோ அல்லது செல்வமோ அல்ல; மாறாக, ‘இயேசு நேசிக்கும் நபர்’ என்பதுதான். இந்த உணர்வே வாழ்வின் துன்பங்களுக்கு மத்தியிலும் நிலையான மகிழ்ச்சியைத் தருகிறது.
நாம் பின்பற்ற
வேண்டிய
நடைமுறைப்
பாதை
• திருவழிபாடு: திருப்பலியில் இறைவார்த்தையை வெறும் சத்தமாகக் கேட்காமல், கடவுள் நம்மிடம் பேசும் தூதாக ஏற்க வேண்டும்.
• அமைதியான தியானம்:
தினமும் சிறிது நேரம் கடவுளின் பிரசன்னத்தில் அமைதியாக அமர்ந்து, அவருடைய நட்பை உணர வேண்டும்.
• செயலில் அன்பு:
ஏழைகளின் குரலுக்குச் செவிசாய்ப்பதே உண்மையான வழிபாடு. அநீதிக்கு எதிரான போரும் மன்னிப்பும் அன்பின் வெளிப்பாடுகளே.
அன்பே எதிர்காலம்!
“நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய இம்மூன்றும் நிலைத்திருக்கும். இவற்றுள் அன்பே தலைசிறந்தது” (1கொரி
13:13). மீட்பு என்பது ஒரு கடினமான கோட்பாடு அல்ல; அது ஓர் இனிமையான உறவு. கிறிஸ்துவின் அன்பில் நிலைத்திருப்போம். அந்த அன்பு ஒன்றே உலகின் அநீதிகளை வேரறுத்து, அமைதியை நிலைநாட்டும்.
அன்பே
வாழும் மொழி; அன்பே உலக மாற்றம்; அன்பே இறைவழியின் அடையாளம்!
கிறிஸ்து பிறப்பு அறிவிப்பின் பொழுது மரியா வெளிப்படுத்திய கன்னியாக இருக்க விரும்பிய அவரின் எண்ணமானது பின்னர் மாற்றப்பட்டது என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை.
1. திரு
அவையானது மரியாவின் என்றைக்குமான கன்னித்தன்மையின் மீதான தனது நம்பிக்கையை எப்பொழுதுமே வெளிப்படுத்தியுள்ளது. மிகப் பழமையான ஏடுகள் இயேசு கருவில் உருவானதைக் குறிப்பிடும் பொழுது, மரியாவை வெறுமனே ‘கன்னி’ என்றே அழைக்கின்றன. மேலும், இந்தக் குணத்தை அவருடைய வாழ்நாள் முழுவதும் என்றென்றைக்குமான உண்மையாகவே அவர்கள் கருதினார்கள் என்றும் அவ்வேடுகள் அனுமானிக்கின்றன.
தொடக்ககாலக்
கிறித்தவர்கள் ‘ஏய்பர்த்தேனுஸ்’ (aeiparthenos)
அதாவது ‘என்றும் கன்னி’ என்ற கிரேக்க வார்த்தை வழியாகத் தங்களது திடமான நம்பிக்கையை வெளிப்படுத்தினார்கள். இச்சொல்லாடலானது மரியாவை ஒரு தனித்துவமான மற்றும் பயனுள்ள முறையில் விவரிக்கவும், ஒரே வார்த்தையில் திரு அவையின் நம்பிக்கையான அவரது என்றென்றைக்குமான கன்னித்தன்மையை வெளிப்படுத்தவும் உருவாக்கப்பட்டது. மேலும், கிறிஸ்துவின் மனுவுருவாதலோடு தொடர்புபடுத்தி கி.பி. 374-ஆம்
ஆண்டு புனித எபிபானியுஸ் (St. Epiphanius) இயற்றிய
இரண்டாவது நம்பிக்கை அறிக்கையில் (Second Symbol of Faith) இச்சொல்லாடலானது
பயன்படுத்தப்பட்டிருப்பதைக்
காணலாம். இயேசு கடவுளின் மகனாகப் பிறந்தார்; அதாவது, “அவர் எப்பொழுதும் அருள்நிறைந்த கன்னி மரியாவால் தூய ஆவியாரின் வழியாகச் சரியானதொரு வழியில் மனிதராக உருவாக்கப்பட்டார்” (Ancoratus, 119,5; DS 44).
‘என்றும் கன்னி’ என்கின்ற சொல்லாடலானது, இரண்டாம் கான்ஸ்டான்டிநோபிளின் திருச்சங்கத்தால் (கி.பி. 553) கையாளப்பட்டது.
இச்சங்கமானது, “புனித மற்றும் மகிமைமிகு இறைவனின் தாயும் என்றும் கன்னியுமாகிய மரியாவிடமிருந்து மனுவுருவான கடவுளின் வார்த்தையானவர்” (DS 422) என்பதை உறுதி
செய்கின்றது. இக்கொள்கை வரைவானது நான்காவது இலாத்தரன் திருச்சங்கம் கி.பி. 1215 (DS 801),
இரண்டாவது லியோன் திருச்சங்கம் (கி.பி. 1274 (DS 852)
மற்றும் மரியாவின் என்றென்றைக்குமான கன்னித்தன்மை அவர் உடலிலும் ஆன்மாவிலும் விண்ணக மகிமைக்கு அழைத்துச் செல்லப்பட்டதற்கான ஒரு காரணியாக ஏற்றுக்கொண்ட மரியாவின் விண்ணேற்பு பற்றிய கோட்பாட்டு வரைவு அறிக்கை கி.பி.1950 (DS 3903)
வழியாகவும் உறுதி செய்யப்படுகின்றது.
மரியா
இயேசுவின் பிறப்பிற்கு முன்னும், பிறப்பின் பொழுதும், அதற்குப் பின்னும் கன்னியாகவே இருந்தார்
2. சுருக்கமானதொரு
நம்பிக்கை அறிக்கையில் திரு அவையானது மரியாவை, ‘பிறப்பிற்கு முன்னும், பிறப்பின்பொழுதும், அதற்குப் பின்னும் கன்னி’ என்ற தன்னுடைய நிலைப்பாட்டை முன்வைக்கின்றது. இந்த மூன்று தருணங்களையும் குறிப்பிடுவதன் வழியாக, அவர் ஒருபோதும் கன்னியாக இருப்பதை நிறுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.
இம்மூன்றில்,
‘பிறப்பிற்கு முன்’ அவரின் கன்னித்தன்மையை உறுதிப்படுத்துவது சந்தேகத்திற்கு இடமின்றி, மிக முக்கியமானதொன்றாகும். ஏனென்றால், அது இயேசு கருவாக உருவாவதைக் சுட்டிக்காட்டுவது மட்டுமல்லாமல், மனுவுருவாதல் மறையுண்மையையும் நேரடியாக வெளிப்படுத்துகின்றது. இதன் காரணமாகவே, தொடக்கத்திலிருந்தே இது திரு அவையின் நம்பிக்கையில் தொடர்ந்து
காணப்படுகின்றது.
‘பிள்ளைப்பேற்றின் பொழுதும் அதற்குப் பின்னரும்’
அவரது கன்னித்தன்மை, திரு அவையின் ஆரம்ப நாள்களிலிருந்தே மரியாவிற்குக் கூறப்பட்ட ‘கன்னி’ என்ற தலைப்பில் மறைமுகமாக இருந்தாலும், சிலர் வெளிப்படையாகச் சந்தேகங்களை எழுப்பத் தொடங்கியதிலிருந்து, அது ஆழமான கோட்பாட்டு ஆய்விற்கு உட்பட்டது. “கடவுளின் மகன் மனிதனாக ஆனார்; காலத்திலும் முறையிலும் ஒரு மனிதனாகவே பிறந்தார் மற்றும் தன் தாயின் கருப்பையைத் திறப்பதற்காகப் பிறந்தார்”
(லூக் 2:23). மேலும், “கடவுளின் வல்லமையின் வழியாக, தன் தாயின் கன்னித் தன்மையைக் கலைக்கவில்லை” என்று
திருத்தந்தையான புனித ஹோர் மிஸ்தாஸ் விளக்குகின்றார். இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கமும் மரியாவின் முதல்
மகன் “தன் தாயின் கன்னி ஒருமைப்பாட்டைக் குறைக்கவில்லை; மாறாக, அதைப் புனிதப்படுத்தினார்” (இறைத்
திட்டத்தில் திரு அவை, எண். 57) என்று
இக்கோட்பாட்டை உறுதிசெய்கின்றது.
பிறப்பிற்குப்
பிந்தைய அவரின் கன்னித் தன்மையைப் பொறுத்தவரை, கிறிஸ்து பிறப்பு அறிவிப்பின் பொழுது (லூக் 1:34) ஒரு கன்னியாகவே இருக்கவேண்டும் என்று மரியா வெளிப்படுத்திய தனது எண்ணத்தை, பிறகு மாற்றிக்கொண்டார் என நினைப்பதற்கு எந்தக்
காரணமும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டவேண்டும். மேலும், மரியாவையும், சிலுவையின் அடியில் நின்ற அவரின் அன்புச் சீடரையும் நோக்கி இயேசு கூறிய, “பெண்ணே, இதோ, உன் மகன்”,
“இதோ, உன் தாய்”
(யோவா 19:6) என்ற வார்த்தைகளின் உடனடிப் பொருள் மரியாவுக்கு வேறு குழந்தைகள் இல்லை என்பதையே குறிக்கின்றன.
பிறப்பிற்குப்
பிறகு அவரின் கன்னித் தன்மையை மறுப்பவர்கள் நற்செய்தியில் இயேசுவிற்குக் கூறப்படும் ‘முதற்பேறானவர்’ (லூக்
2:7) என்ற சொல்லாடலின் அடிப்படையில், இயேசுவிற்குப் பிறகு மரியா மற்ற குழந்தைகளைப் பெற்றெடுத்தார் என்பதை இந்த வார்த்தை உணர்த்தியது போன்றதோர் உறுதியான வாதத்தை முன்வைக்கின்றனர். ஆனால், ‘முதற்பேறானவர்’ என்ற
சொல்லின் அர்த்தம் ‘இக்குழந்தைக்கு முன்பு’ அதாவது, இயேசுவுக்கு முன்பு மரியாவுக்கு எந்தக் குழந்தையும் இருந்திருக்க வாய்ப்பில்லை என்பதைக் குறிக்கின்றதேயன்றி, இயேசுவுக்குப் பிறகு அவருக்கு மற்ற குழந்தைகள் இருந்தார்கள் என்பதைக் குறிக்கவில்லை. மேலும், ஒரு தாயானவள் மற்ற குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்கலாமா? என்பதைத் தவிர்த்து, நற்செய்தியாளர் குழந்தையின் இந்தத் தன்மையை அதாவது ‘முதற்பேறானவர்’ (லூக்
2: 23) என்பதை ஏன் வலியுறுத்துகிறாறென்றால், யூதச் சட்டத்தில் முதல் குழந்தையின் பிறப்புடன் சில கடமைகள் இணைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறாக,
தாய்க்கு ஒரே மகனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் உரியவற்றை நிறைவேற்றுவதற்கு ‘ஆண் தலைப்பேறு’
என்கின்ற முறையில் மோசேவின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணித்து அதை நிறைவேற்றினார்.
‘சகோதரர்’ என்ற
வார்த்தையானது
பலவிதமான
உறவின்
வகைகளைக்
குறிக்கின்றது
3. சிலருடைய
கூற்றுப்படி யாகப்பர், யோசேப்பு, சைமன் மற்றும் யூதாஸ் போன்ற இயேசுவின் நான்கு சகோதரர்களும் (மத் 13:55-56) மற்றும் பல சகோதரிகளும் இருந்தார்கள்
என்ற நற்செய்திக் குறிப்புகளின் அடிப்படையில் (கிறிஸ்துவினுடைய) பிறப்பிற்குப் பிந்தைய மரியாவின் கன்னித்தன்மையானது மறுக்கப்படுகிறது.
‘உறவினர்’ என்ற வார்த்தையை வெளிப்படுத்த எபிரேய மற்றும் அரமேயிக் மொழிகளில் குறிப்பிட்ட சொல் எதுவும் இல்லை என்பதையும், ‘சகோதரர்’ மற்றும் ‘சகோதரி’ என்ற சொற்கள் மிகவும் பரந்த உறவுகளை உள்ளடக்கியது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். உண்மையில், ‘இயேசுவின் சகோதரர்கள்’ என்ற
சொல்லாடலானது, கிறிஸ்துவின் சீடராக இருந்த மரியாவின் ‘குழந்தைகள்’ என்பதைக்
குறிக்கிறது (ஒப்பிடுக. மத் 27:56). மேலும், அவர் ‘மற்ற மரியா’ என்று குறிப்பிடத்தக்க வகையில் வேறுபடுத்தப்படுகின்றது (மத் 28:1). பழைய ஏற்பாட்டு கூற்றின்படி, அவர்கள் இயேசுவின் நெருங்கிய உறவினர்கள் ஆவார்கள் (Catechism of the Catholic Church, எண். 500).
எனவே,
புனித மரியா ‘எப்பொழுதும் கன்னியாக’
இருக்கின்றார்.
இது கிறிஸ்துவின் மீட்புப் பணிக்கு அவரை முழுமையாக அர்ப்பணித்த அவரது தெய்வீகத் தாய்மையின் விளைவு மற்றும் சிறப்புரிமை ஆகும்.
மூலம்:
John Paul II, The Church presents Mary as ‘Ever Virgin’, in
«L’Osservatore Romano», Weekly Edition in English, 4 September
1996, p. 11.
திரு அவையின் நூற்றாண்டுப் படிப்பினை
• 1891-இல் திருத்தந்தை
13-ஆம் லியோ
அவர்களோடு திரு
அவையின் படிப்பினை
தொடங்குகிறது. தொழில்
புரட்சியின் பின்புலத்தில்
அவர் தொழில்
- தொழிலாளர் பிரச்சினை
பற்றிப் பேசுகிறார்.
•
திருத்தந்தை 23-ஆம் யோவான், ‘அன்னையும்
ஆசிரியையும்’ என்ற சுற்றுமடலில்
வளர்ந்த நாடுகள்
ஏழை நாடுகளுக்கு
உதவக் கேட்கிறார்.
• 2-ஆம் வத்திக்கான்
‘இன்றைய உலகில்
திரு அவை’
எண். 69, “உலக நலன்கள், அனைத்து
மனிதர்களுக்காகவே உள்ளன”
என்கிறது. அன்பை
அடிப்படையாகக் கொண்ட
நீதியில் உலகப்
பொருள்கள் பகிரப்படவேண்டும். ஒவ்வொருவரும் தனக்கும்
தன் குடும்பத்திற்கும் தேவையான தனிச்சொத்தைப்
பெற உரிமை
உண்டு. இந்தத்
தனிச்சொத்திற்கும் சமூகக்
கடமை உண்டு.
மிகப்பெரும் இடர்ப்பாட்டிலிருப்பவர் தனக்கும் தன்
குடும்பத்திற்கும் தேவையானதை
அதிகமாகச் சொத்து
வைத்திருப்பவர்களிடமிருந்து எடுத்துக்கொள்ள
உரிமை உண்டு
என்கிறார்கள் திரு
மறைத் தந்தையர்கள்.
• ‘ஏழைகள் கிறிஸ்துவின்
பகராளிகள்’ (Vicars)
என்று திருத்தந்தை
6-ஆம் பவுல்
1967-இல் அமெரிக்க
ஐக்கிய நாட்டில்
ஏழைகள் சார்பாக
உரையாற்றுகிறார். ‘மக்களின்
முன்னேற்றம்’ (1967) என்ற சுற்றுமடல்,
ஏழைகள் அடிப்படைத்
தேவைகளின்றி உழலும்போது,
மற்றவர்கள் பேராசையால்
தேவைக்கு அதிகமாக
உலகச் சொத்தை
அபகரிக்க உரிமை
இல்லை என்கிறார்.
• 2-ஆம் புனித
யோவான் பவுலின்
‘சமூக அக்கறை’
(Sollicitudo Rei Socialis -
1987) என்ற சுற்றுமடல்,
பணக்கார நாடுகள்
ஏழை நாடுகளுக்கு
உதவாததை ‘செல்வரும்
இலாசரும்’ (லூக்
16:19-31) என்ற திருவிவிலியப்
பகுதியோடு ஒப்பிட்டுப்
பேசுகிறார்.
• ‘மனித உழைப்பு’
(Laborem Excercens -
1981) சமூகப் பிரச்சினையைப்
புரிந்துகொள்ள உதவும்
சாவி என்கிறார்.
• திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட் ‘உண்மையில்
அன்பு’ (Caritas in Veritate)
என்ற மடலில்,
ஏழை மக்களின்
பசி என்பது
பொருளாதாரப் பற்றாக்குறையால்
வருவது அல்ல;
மாறாக, நியாயமான
பங்கீடு செய்யப்படாததால்
வருகிறது என்கிறார்.
• திருத்தந்தை பிரான்சிஸ்
- இலத்தீன் அமெரிக்க
ஆயர்களின் பேரவைகள்
மெடலின் (1968), புவேப்லா (1979) Santo Domingo
(1992) Aparecida
(2007) நகரங்களில் நடந்த
கூட்டங்களை எடுத்துக்கூறியும், புனித ஆஸ்கர்
ரொமெரோ பேராயருடைய
கொலையை எடுத்துக்
கூறியும், பெரு
நாட்டில் தான்
செய்த பணியை
நினைவுகூர்ந்தும் திரு
அவையின் தெளிந்து
தேர்தல் முறையை
அறிமுகப்படுத்துகிறார்.
• ஏழ்மையையும் ஏற்றத்தாழ்வையும் உருவாக்கும் பாவ
அமைப்புகளான பொருளாதார
சர்வாதிகாரத்தையும், முதலாளித்துவச்
சந்தைப் பொருளாதாரத்தையும் கடுமையாகச் சாடுகிறார்
திருத்தந்தை பிரான்சிஸ்.
• ‘அவர் நம்மை
அன்பு செய்கிறார்’
(Dilexit Nos) என்ற திருத்தூது
ஊக்க உரையில்,
சமூகப் பாவங்கள்
ஒன்று சேர்ந்து
பாவ அமைப்புகளை
உருவாக்குகின்றன என்கிறார்
திருத்தந்தை லியோ.
• ஏழைகள் பொருளாதாரத்திலிருந்து அந்நியப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு
நலத்திட்டங்கள் தற்காலிக
உதவி. பணக்காரருடைய
தொழில் இலாபத்தில்
இருந்து கசியும்
உதவி (trickle down drops)
தீர்வு அல்ல
என்கிறார்.
• சுற்றுச்சூழல் சீர்கேடுகளும்
ஏழைகளையே அதிகம்
பாதிக்கின்றன.
• நற்செய்தி என்பது
தனிநபர்களையும், இறைவனோடு
கூடிய தனிநபர்
உறவுகளையும் பற்றி
மட்டும் பேசவில்லை;
குழுமங்கள், சமுதாயம்,
உலகம் முழுவதுமே
நலமாக்குவது பற்றியும்
பேசுகிறது (லூக்
4:43).
ஏழைகள்
எழுவாய்கள்
• ஏழைகள் செயப்படுபொருள்
அல்ல (objects); எழுவாய்கள்
(subjects). ஏழைகள்
தங்களுக்கான பண்பாட்டை
உருவாக்கும் ஆற்றல்
பெற்றவர்கள், நற்செய்தியின்
முகவர்கள். அவர்களோடு
இணைந்து அவர்களுடைய
உரிமைகளை நிலைநாட்டுவது
நீதியின்பால் நம்
மீது சுமத்தப்பட்ட
கடமை ஆகும்
(உரோ 13:8).
• ஏழைகளில் காணும்
நல்லவைகளுக்காக, அவர்களுடைய
நலமான பண்பாட்டிற்காக,
இக்கட்டான நெருக்கடி
வேளைகளிலும் அவர்களிடம்
காணப்படும் இறை
நம்பிக்கைக்காக அவர்களைப்
பாராட்டுவோம்.
• ஏழைகள் மத்தியில்
சென்று வாழ்வதைத்
திருத்தந்தை பாராட்டுகிறார்.
• ஏழைகள் நமக்கு
நற்செய்தி அறிவிக்க
அனுமதிப்போம். கடவுள்
ஏழைகள் வழியாக
நம்மிடம் பகிர
விரும்பும் ஞானத்தைத்
திறந்த மனத்தோடு
ஏற்று வாழ்வோம்.