மூன்றடி உயரமும் நீண்ட உடலும் ஓநாய் போன்ற முகத்தோற்றமும் கொண்ட கிரீஜோ, குருவானவர் தொன்போஸ்கோ வெளியே புறப்பட்டபோது வாசலை வழிமறித்துக்கொண்டு படுத்திருந்தது. அவரின் தாயார் மார்கரீத், “பார்த்தாயா ஜான், நீ இந்த நேரத்தில் வெளியே செல்ல வேண்டாமென்று என் மனம் கூறுகிறது. கிரீஜோவும் வழிமறித்துப் படுத்திருக்கிறது. எனவே, இந்த இரவில் தனியே வெளியில் செல்ல வேண்டாம்” என்றார். தன் பணி நிமித்தம் முக்கியமான ஒருவரைச் சந்திக்கப் புறப்பட்ட தொன்போஸ்கோ சற்றே யோசிக்கலானார்.
தாயின்
வார்த்தைகள், கிரீஜோவின் வழி மறிப்பு இவை இரண்டின் வாயிலாய் இறைவன் தன்னை இந்த இரவு நேரத்தில் வெளியே செல்ல வேண்டாமென அறிவுறுத்துகிறார் என்பதைப் புரிந்துகொண்டவராய் வீட்டினுள் சென்று மற்றப் பணிகளில் ஈடுபட்டார்.
ஒரு
மணி நேரம் கடந்திருக்கும். அவர் வீட்டின் கதவு தட்டப்பட, திறந்த தொன்போஸ்கோ படபடப்போடு தன் முன்னே நிற்கும் நண்பர் ஒருவரைக் கண்டார். வந்தவர் “நல்ல வேளையாக நீர் வெளியே கிளம்பவில்லை. வெளியே இந்நேரம்வரை உம்மைக் கொல்வதற்காகக் காத்திருந்தவர்கள் நீர் வராததனால் ஏமாற்றத்தோடு இப்போதுதான் புறப்பட்டுப் போனார்கள்”
என்றார். தொன்போஸ்கோவின் உள்ளம் ஆண்டவரை நன்றியோடு நினைத்துப் பார்த்தபோது, கிரீஜோ அவரருகில் வாலாட்டியபடி நின்று கொண்டிருந்தது. கிரீஜோ
என்ற அந்த நாயை தொன்போஸ்கோ சந்தித்ததே ஓர் எதிர்பாராத நிகழ்வுதான்.
1852-ஆம் ஆண்டில்
ஓர் இரவு நேரத்தில் தொன்போஸ்கோ தனியே தன் மடத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் தனக்கு ஏதேனும் ஆபத்து நேரிடலாம் என்ற அச்சத்தோடு அவர் நடந்து வருகையில், எதிரே தன்னை நோக்கி ஓடிவரும் ஓநாய் முகத்தோற்றம் கொண்ட மூன்றடி உயர நாயைக் கண்டதும் இலேசாக அஞ்சினார். அவரை நோக்கி ஓடிவந்த அந்நாயோ ‘சட்’டென நின்று ஏதோ வெகுகாலம் அவரிடம் பழகியதைப் போன்று அவர்முன் தன் வாலையாட்டி மகிழ்ச்சியைக் காட்டியபடி அவரைச் சுற்றி வந்தது.
அவர்
பின்னே மடம் வரைக்கும் தொடர்ந்துவந்த அந்தப் பிராணியைத் தடவிக் கொடுத்த தொன்போஸ்கோ இத்தாலிய மொழியில் அதன் நிறத்தின் பொருட்டு ‘கிரீஜோ’ என்று செல்லமாகப் பெயரிட்டு அழைத்தார். வாலை ஆட்டியபடி கிரீஜோ அங்கிருந்து ஓடிப்போனது. அன்று மட்டுமல்லாமல் இரவு வேளைகளில் அவர் தனிமையில் வீடு திரும்பும்போதெல்லாம் எங்கிருந்தோ வந்து அவரோடு மடம் வரைக்கும் பாதுகாவலாக உடன் வரும் கிரீஜோவின் துணை தொன்போஸ்கோவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இரவு நேரங்களில் அவர் தனியே வீடு திரும்பும்போது அவருக்கு ஆபத்து இருந்தது, அதற்குக் காரணமும் இருந்தது.
கத்தோலிக்கத்
திருமறை இத்தாலியில் வெகுவேகமாக வளர்ச்சி பெற்றுக் கொண்டிருந்த காலம் அது. இத்தாலியில் பினார்டி என்ற இடத்தில் மடம் அமைத்து ஏழைச் சிறுவர்களுக்குக் கல்வியும் தொழிலும் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்திருந்த தொன்போஸ்கோ, கத்தோலிக்க மதத்தின் கோட்பாடுகளிலிருந்து சிறிதும் வழுவாமல் தன் பணியைத் தொடர்ந்து கொண்டிருந்தார். அவரின் பிறர்நலப் பணிகளையும் கத்தோலிக்கத் திருமறையின் வளர்ச்சியையும் கண்டு பொறாமையுற்ற எதிரிகள், கத்தோலிக்க மதத்தைப் பற்றித் தவறான, பொருத்தமில்லாத கருத்துகளை வெளிப்படுத்தி அதன் வளர்ச்சியைச் சீர்குலைக்க முயன்றனர்.
இவர்களைக்
கத்தோலிக்க மக்கள் எதிர்த்துப் போராடத் தயங்கிய காலத்தில் தொன்போஸ்கோ சிறுவர்கள், பெரியவர்கள் அனைவரும் திருமறையைப் புரிந்துகொள்ளும் வண்ணம் பகைவர்களின் தவறான பிரச்சாரத்துக்குப் பதிலடிக் கொடுக்கும் முகமாக துண்டுப் பிரசுரங்களை அச்சடித்து அனைவருக்கும் வழங்கினார்.
‘வால்டேசியன்ஸ்’ என்ற
பிரிவினை சபையினர் நயத்தாலும் பயத்தாலும் அவரை மிரட்டிப் பார்த்தனர். அவரோ எதற்கும் அஞ்சாமல், அவர்களுடைய எதிர்ப்புகளுக்குப் பதில் கொடுக்கும் விதத்தில் ‘கத்தோலிக்க வாசகம்’ என்ற பத்திரிகையை வெளியிட்டுக் கத்தோலிக்க மதத்தின் நிகரற்றக் கோட்பாடுகளை, சமய நெறிகளை மக்களுக்கு அறிவித்து இறைமக்களைத் திருமறையில் உறுதிப்படுத்தினார். தன் பிறர்நலப் பணிகளால் மக்களின் இதயங்களைக் கவர்ந்த அவரை ஒழித்துக்கட்ட எதிரிகள் முயற்சித்ததில் வியப்பொன்றுமில்லை. எதிரிகளின் எத்தனையோ தாக்குதல் முயற்சிகளில் தொன்போஸ்கோ ஆண்டவர்மீது கொண்ட பற்றுறுதியால் காப்பாற்றப்பட்டார்.
ஆபத்து
அவரைத் தொடர்ந்துகொண்டுதானிருந்தது.
அதற்காக அவர் தன் பணியின் வேகத்தைக் குறைத்துக்கொள்ளவில்லை. ஏழைச் சிறுவர்களுக்காகத் தான் நடத்தும் மடத்தின் வளர்ச்சிக்காகவும், மதம் சம்பந்தப்பட்ட காரியங்களுக்காகவும் அவர் வெளியே செல்ல வேண்டிய அவசியம் இருந்தது. அப்படியே வெளியே சென்று இரவு நேரங்களில் தனிமையில் அவர் மடத்துக்குத் திரும்பும்போதெல்லாம், எங்கிருந்தோ இந்த கிரீஜோ வந்து அவருக்குத்
துணையாக நடந்தது. ஒரு சமயம் பகைவர்கள் தடிகளோடு தொன்போஸ்கோவைத் தாக்க முயன்றபோதும், மற்றொருமுறை மரத்தின் பின்னால் மறைந்திருந்து துப்பாக்கியால் அவரைச் சுட்டுக் கொல்ல முயன்றபோதும் கிரீஜோதான் ஆவேசமாக ஓடிவந்து எதிரிகள்மேல் பாய்ந்து அவர்களைத் துரத்தியடித்தது.
இப்படியெல்லாம்
உதவும் கிரீஜோ, தொன்போஸ்கோவை மடத்துவரை கொண்டு வந்து விட்டுப் போகும்போது அங்குள்ள சிறுவர்கள் அதற்கு ரொட்டியும் இறைச்சியும் கொடுப்பார்கள். கிரீஜோவோ அவற்றை ஏறெடுத்துப் பார்த்ததில்லை, முகர்ந்தும் பார்த்ததில்லை. “உனக்கு என்னதான் வேண்டும்?” என்று தொன்போஸ்கோ கேட்கும்போதெல்லாம், அவரை மகிழ்ச்சியுடன் நோக்கி வாலையாட்டிக்கொண்டே மடத்தைவிட்டு வெளியேறிவிடும் கிரீஜோ.
1854-ஆம் ஆண்டு
நவம்பர் மாத இறுதியில் மூடுபனியால் இருள் அடர்ந்திருந்த ஓர் இரவு நேரம். பணி நிமித்தம் வெளியே சென்ற தொன்போஸ்கோ தனிமையில் இல்லம் திரும்பிக் கொண்டிருந்தார். அவரைப் பின்தொடர்ந்து வந்த இருவர், அவர்மீது பாய்ந்து அவர் வாயைத் துணியால் அடைத்து, போர்வையால் அவர் முகத்தை மூடி அவரைக் கொல்ல முயன்றனர். ‘இனி
தான் பிழைப்பது அரிது’ என்று நினைத்துக்கொண்ட தொன்போஸ்கோ இறைவனுடைய உதவியை உள்ளத்தில் வேண்டிய நேரம், அதுவரை கண்ணில் படாதிருந்த கிரீஜோ எங்கிருந்துதான் வந்ததென்று தெரியவில்லை. சிங்கம்போல கோபாவேசத்துடன் அவ்விருவர்மீதும் பாய்ந்தது. அவர்களைக் கடித்துக் குதற ஆரம்பிக்க, பயந்துபோன அவர்கள் தொன்போஸ்கோவை நோக்கி, “ஐயா தொன்போஸ்கோ! உம் நாயை அழைத்துக்கொள்ளும்; இல்லாவிட்டால் எங்களுக்குச் சாவு நிச்சயம்”
என்று அலறினர்.
ஆண்டவரின்
கருணையைப் புரிந்துகொண்ட தொன்போஸ்கோ, கிரீஜோவின் வீரத்தை வியந்த வண்ணம் அவர்களைப் பார்த்து, “நான் கூப்பிட்டுக் கொள்கிறேன். இனி இம்மாதிரி செயல்களில் ஈடுபடமாட்டோம் என உறுதி கூறுங்கள்” என்றார்.
அதற்கு அவர்களோ, “இனி உமக்கு எந்தத் தீங்கும் செய்யமாட்டோம்” என
ஒன்றாகக் குரலெழுப்பினர். இரக்கம் கொண்ட தொன்போஸ்கோ “கிரீஜோ! இவர்களை விட்டுவிடு” என்று
சொன்னதும்தான் தாமதம், அந்த இரண்டு பேரையும் விட்டுவிட்டு தொன்போஸ்கோ அருகில் வாலையாட்டியபடியே நின்றது. அவ்விருவரும் ‘தப்பித்தோம், பிழைத்தோம்’ என்று
தலை தெறிக்க ஓடிப் போயினர். தொன்போஸ்கோ கிரீஜோவின் தலையைக் கனிவோடு தடவிக் கொடுத்தார். பேராபத்திலிருந்து தப்பிய அவரை மடம் வரை கிரீஜோ பின்தொடர்ந்து வந்தது.
தங்கள்
குருவானவர் தொன்போஸ்கோவைக் காப்பாற்றும் நாய் குறித்து மடத்துச் சிறுவர்கள் “இந்த நாய் யாருடையது என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று பலமுறை கேட்டனர். தொன்போஸ்கோவால் இதற்குப் பதில் கூற முடியவில்லை.
அந்த
நாய் கிரீஜோ எங்கிருந்து வந்தது? அதன் உரிமையாளர் யார்? அதன் வரலாறு என்ன? என்பதெல்லாம் பற்றி அவர் எவ்வளவோ முயற்சித்தும் கடைசிவரை அவரால் கண்டறிய முடியவில்லை.
தன்னுடைய
ஆபத்துக்காலத்தில் ஆண்டவரால் அனுப்பப்பட்ட வாய் பேசமுடியாத நேசமிக்க பாதுகாவலன் என்ற அளவில்தான் அந்த நாய் கிரீஜோவை தொன்போஸ்கோ அறிந்து
வைத்திருந்தார்.
திரு அவையில் சரிபாதியினர் பெண்கள். திருவழிபாடுகளில் அதிகம் பங்கெடுப்போரும், குடும்பத்தில் நம்பிக்கையின் முதல் தூதுவர்களும் அவர்களே. திரு அவையின் நீண்ட வரலாற்றில் எண்ணற்றப் பெண்கள் மறைத்தூதர்களாகவும் இறையியலாளராகவும் பணியாற்றியுள்ளனர்; புனிதர்களாகவும் இறையிணைவு அருள்வாழ்வினராகவும் திகழ்ந்துள்ளனர். இன்று திரு அவை நிறுவனங்களிலும், மறைமாவட்ட மற்றும் உரோமைத் தலைமைச் செயலகங்களிலும் முக்கியப் பொறுப்பு வகிப்பவர்களும் உளர். பங்குத் தளங்களிலும் அன்பியங்களிலும் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுபவர்களும் அவர்களே. அனைத்திற்கும் மேலாக, முன்னணிக்கு வந்து முகம் காட்டாமலும், அதிகம் கண்கொள்ளப்படாமலும், பணித்தளங்களில் பெரும்பான்மையான அடிப்படைப் பணிகளை ஆற்றுபவர்களும் அவர்களே.
“இருப்பினும், திரு அவையின் வாழ்வுசார்ந்த பல்வேறு துறைகளில் தங்கள் அருங்கொடைகளும் அழைப்பும் இடமும் ஏற்கப்படுவதில் பெண்கள் இன்னும் பல தடைகளை எதிர்கொள்கின்றனர்.
இது அனைவராலும் பகிரப்படவேண்டிய திரு அவையின் பணியை அவர்கள் ஆற்றுவதற்கு இடையூறாக உள்ளது”
(இஅ 60). இதனால் மாமன்றம் திரு அவையில் அனைத்துத் துறைகளிலும் பெண்களுடைய முழுமையான பங்களிப்பை வளர்க்கும் வகையில் புதிய சில பார்வைகளையும் பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளது.
மாண்பிலும் பணிப்பொறுப்பிலும்
சமமானவர்கள்
கடவுள்
பெண்ணை ஆணுடன் இணைத்தும், ஆணுக்கு இணையாகவும் தமது உருவிலும் சாயலிலும் படைத்தார். இயேசுவும் இறையாட்சி பற்றிப் பெண்களுடன் உரையாடுகிறார்; தம் சீடர்கள் குழுமத்தில் அவர்களையும் இணைத்துக்கொள்கிறார். அவரது நலமளிக்கும் ஆற்றலையும் விடுதலையையும் அவர் மதித்து ஏற்றுக்கொண்டதையும் அனுபவித்த சில பெண்கள் கலிலேயாவிலிருந்து எருசலேம்வரை அவருடன் இணைந்து பயணித்தனர் (லூக் 8:1-3). மகதலா மரியா எனும் பெண்ணையே அவர் தமது உயிர்ப்புச்செய்தியின் முதல் அறிவிப்பாளராக அனுப்பிவைத்தார்.
மேலும்,
திருமுழுக்கின் வழியாக இறைமக்கள் சமூகத்தில் உறுப்பினர்களாக இணையும் பெண்கள், கிறிஸ்துவில் ஆண்களுக்கு இணையான மாண்பாலும், தூய ஆவியார் பொழியும் பல்வேறு அருங்கொடைகளாலும் அணிசெய்யப்படுகின்றனர். இதனால் “நாம் அனைவரும் கிறிஸ்துவின் அன்பிலும், போட்டியற்ற உறவின் ஒன்றிப்பிலும், திரு அவையின் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் செயலாக்கம் பெறும் கூட்டுப்பொறுப்பிலும் வாழ இணைந்து அழைக்கப்பட்டுள்ளோம்” (முஅ
9டி).
ஆண்களுக்கும்
பெண்களுக்கும் இடையிலான இத்தகைய அருமையான உறவுப் பரிமாற்றத்தை மாமன்றக் கூடுகையில் பங்கெடுத்தோர் அனுபவித்தனர். அருள்பணி மற்றும் அருளடையாளக் கண்ணோக்குடன் பெண்களைப் புரிந்துகொள்ளவும், அவர்களுடன் இணைந்து பயணிக்கவும் திரு அவை இன்னும் அதிகத் திட்டவட்டமான ஈடுபாடு காட்டவேண்டும் எனவும் அவர்கள் எடுத்துரைக்கின்றனர் (முஅ 9ந).
ஏனெனில்,
பெண்கள் பல்வேறு தளங்களில் தாங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளையும், அருள்வாழ்வு அனுபவங்களையும் பகிர விரும்புகின்றனர். பாலியல் வன்முறை, பொருளாதாரச் சமத்துவமின்மை, பொருள்களாக நடத்தப்படும் போக்கு என்பன நிலவும் சமூகங்களில் பெண்கள் நீதிக்காகக் குரலெழுப்புகின்றனர். இச்சூழமைவுகளில் பாதிக்கப்பட்ட பெண்களுடன் திரு அவையின் அருள்பணிசார் பயணித்தலும், அவர்களுக்காகக் குரல் கொடுப்பதும் இணைந்து செல்லவேண்டும்.
திரு
அவையில் பெண்களின் இடம், பணி, அவர்களுக்குத் திரு அவை ஆற்றவேண்டிய பணிகள் என்பவற்றிற்கு மாதிரி காட்டுபவர் இறைமகன் இயேசுவின் அன்னையாகவும், சிறந்த நம்பிக்கையாளராகவும் திகழ்ந்த நாசரேத்தூர் மரியா. கடவுளின் குரலைக் கேட்பதற்கும், தூய ஆவியாரின் தூண்டுதல்களுக்குத் திறந்த உள்ளத்துடன் இருப்பதற்கும் அவர் அனைவருக்கும் சிறந்த மாதிரி காட்டுகிறார். குழந்தைப் பேறு, பாலூட்டி வளர்த்தல் என்பனவற்றின் மகிழ்ச்சியையும் ஏழ்மை, அகதியாதல், மகனின் கொடிய கொலை என்பனவற்றின் துயரத்தையும் தன் மகனின் உயிர்ப்பு, பெந்தகோஸ்து என்பனவற்றின் மாட்சியையும் அனுபவித்தறிந்தவர் அவர்.
அருள்பணியாளர்கள்
மற்றும் ஆயர்களின் பணிகள் பற்றிப் பெண்கள் பலர் ஆழ்ந்த நன்றி தெரிவிக்கின்றனர். அதேவேளையில், அருள்பணியாளர் ஆதிக்கம், ஆணாதிக்கம், அதிகார அத்துமீறல்கள், பாலியல் துன்புறுத்தல்கள் என்பனவற்றால் திரு அவையில் தாங்கள் புண்படுவதையும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். இவை தொடர்ந்து திரு அவையின் முகத்தைக் கறைபடுத்துவதுடன், அதன் ஒன்றிப்புறவையும் சிதைக்கின்றன. மேலும்,
திரு அவையில் ஆண் - பெண் உறவுகளில் மாண்பும் நீதியும் மறுக்கப்படும்போது, உலகின் பார்வையில் நமது நம்பிக்கை அறிக்கை நம்பகத்தன்மையை இழக்கிறது. நீதியையும் நலப்படுத்தலையும் ஒப்புரவையும் கோருகின்ற இச்சூழமைவில் உள்ளங்கள், உறவுகள் மற்றும் அமைப்புகளிலும் மாற்றங்கள் அவசியமாகின்றன.
செயல்படுத்தச்
சில
பரிந்துரைகள்
1. திரு
அவையின் வாழ்வு மற்றும் திருத்தூதுப் பணி சார்ந்த அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு ஏற்று மதிக்கப்படவேண்டும், அவர்களது தலைமையும் வளர்த்தெடுக்கப்படவேண்டும் எனும் கோரிக்கை உலகெங்கும் உள்ள திரு அவைகளிலிருந்து எழுந்துள்ளன. பெண்களிடம் காணப்படும் திறமைகளையும் அருங்கொடைகளையும் அருள்பணிசார்ந்த தேவைகளுக்கு ஏற்ப இன்னும் அதிகமாகப் பயன்படுத்தும் வகையில் பல்வேறு பொறுப்புகளையும் திருப்பணிகளையும் அவர்களுக்கு வழங்குவது பற்றி அதிகம் சிந்திக்கவேண்டும்; தேவைப்படின் புதிய பணிகளையும் ஏற்படுத்தலாம்.
2. பெண்கள்
திருத்தொண்டர் பணி ஆற்றுவது தொடக்கத் திரு அவையில் நடைமுறையில் இருந்தது. அது இன்றைய காலத்தின் அறிகுறிகளுக்குச் சரியான பதிலிறுப்பாகவும் அமையக்கூடியது. மேலும், அது திரு அவைக்குப் புதிய ஆற்றலும் உயிரோட்டமும் தரக்கூடியது. இக்காரணங்களால் இன்று பெண்களுக்குத் திருத்தொண்டர் பணியைத் தருவது எனும் கருத்திற்குப் பரவலான ஆதரவு இருந்தது. இருப்பினும், அது மரபுக்கு முரணானது எனும் காரணமும் அதற்கு எதிராகக் கூறப்பட்டது. இறுதியாக, அது பற்றி இன்னும் ஆழமான திருவிவிலிய, வரலாற்று, இறையியல் ஆய்வுகள் தேவை என முடிவெடுக்கப்பட்டது.
3. தலத்திரு
அவைச் சூழமைவுகளில் விளிம்பு நிலையில் உள்ள பெண்களுக்குச் செவிமடுத்து, அவர்களுடன் பயணித்து உதவிட அத்திரு அவைகளை மாமன்றம் ஊக்குவிக்கிறது.
4. முடிவெடுக்கும்
அருள்பணிசார் நடவடிக்கைகளிலும் திருப்பணிகளிலும் அதிகாரம் உள்ள பொறுப்புகளுடன் பெண்கள் பங்கேற்பது உறுதி செய்யப்படவேண்டும். உரோமைத் தலைமைச் செயலகப் பொறுப்புகளில் பெண்கள் பலரைத் திருத்தந்தை நியமித்துள்ளதுபோல, மறைமாவட்டங்களிலும் பல்வேறு பொறுப்புகளில் பெண்கள் இடம்பெற வேண்டும். இதற்கு வழிசெய்யும் வகையில் திரு அவைச் சட்டத்திலும் உரிய திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.
5. திரு
அவையில் பெண்களுக்கு, அதிலும் குறிப்பாகப் பெண் துறவியருக்கு, வேலை ஒதுக்கீட்டில் அநீதி இழைக்கப்படுவதும் குறைந்த ஊதியம் தரப்படுவதும் சரிசெய்யப்படவேண்டும்.
6. உருவாக்கப்
பயிற்சித் திட்டங்களிலும் இறையியல் கல்வியிலும் பங்கேற்கப் பெண்களுக்கு அதிக வாய்ப்புகள் அளிக்கப்படவேண்டும். திரு அவை சட்டமுறை நடவடிக்கைகளில் நடுவர்களாகச் செயல்பட உரிய உருவாக்கம் பெண்களுக்கும் தரப்படவேண்டும்.
7. திருவழிபாட்டிலும்,
திரு அவை ஆவணங்களிலும் இருபால் பொதுமொழியைப் பயன்படுத்துவதுடன், பெண்களின் அனுபவங்களை வெளிப்படுத்தும் சொற்களும் உருவகங்களும் நிகழ்வுரைகளும் அதிகம் இடம்பெற வேண்டும். (தொடரும்)
‘அருளினால் நிரம்பியிருக்கின்ற’ மரியாவின் நிலை அவருடைய தகுதியினால் (Human merit) கிடைத்தது அல்ல; மாறாக, முற்றிலும் கடவுளின் வியக்கத்தக்க செயலினால் விளைந்த ஒன்று (wholly the result of god’s wonderful work) என்பதை புனித லூக்கா நற்செய்தியாளர் தெளிவாக விவரிக்கின்றார்.
1. கிறிஸ்து
பிறப்பு அறிவிப்புப் பற்றிய விவரிப்பில் ‘மகிழ்ந்திடு’ என்ற
வானதூதரின் வாழ்த்தொலியானது பழைய ஏற்பாட்டில் ‘சீயோனின் மகளை’ நோக்கிக் கூறப்பட்டிருக்கும் மகிழ்ச்சிக்கான அழைத்தலின் இறைவாக்குகளை நமக்கு நினைவூட்டுகின்றது. இதை நான் இதற்கு முந்தைய எனது மறைக்கல்வியில் சுட்டிக்காட்டியுள்ளேன். மேலும், இந்த அழைப்பிற்கான பின்வரும் காரணங்களையும் விளக்கியுள்ளேன்: ‘கடவுளின் மக்களிடையே அவருடைய இருத்தல், மெசியாவாகிய அரசரின் வருகை மற்றும் தாய்வழிப் பலன்’ (Marternal fruitfulness) இந்தக்
காரணங்கள் மரியாவில் நிறைவடைகின்றன. கபிரியேல்
தூதர் நாசரேத்தூர் கன்னியை நோக்கி ‘Chaire’ அதாவது
‘மகிழ்ந்திடு’ என்று
வாழ்த்துவதில் அவரை ‘kecharitoméne’ அதாவது ‘அருளால் நிறைந்தவரே’ என்று
அழைக்கின்றார். கிரேக்கத் திருவிவிலிய மூலத்தினுடைய ‘Chaire’ மற்றும்
‘kecharitoméne’ போன்ற சொல்லாடல்கள் ஒன்றோடொன்று மிகவும் நெருக்கமான தொடர்புடையவை. ஆண்டவருடைய தாயாவதன் பொருட்டு கடவுள் அவரை அன்பு செய்வதாலும் அருளால் நிறைப்பதாலும் அதனைக் குறித்து மகிழ்ந்திட மரியா அழைக்கப்படுகின்றார்!
இறையருளானது
மகிழ்ச்சிக்கானதொரு காரணம் மற்றும் அந்த மகிழ்ச்சியானது கடவுளிடமிருந்து வருகின்ற ஒன்று என்று திரு அவையின் நம்பிக்கையும் புனிதர்களின் அனுபவங்களும் கற்பிக்கின்றன. கிறித்தவர்களின் வாழ்வில் நிகழ்கின்றவாறே மரியாவிலும் அந்தத் தெய்வீகக் கொடையானது ஆழமானதொரு மகிழ்ச்சியை உண்டாக்குகின்றது.
2. Kecharitoméne: மரியாவை
நோக்கிச் சொல்லப்பட்ட இந்தச் சொல்லாடலானது இயேசுவின் தாயாக இருக்கின்றதொரு பெண்ணை விவரிப்பதற்குரிய மிகச் சரியானதொன்றாகத் தெரிகின்றது. இதை இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடான ‘இறைத்திட்டத்தில் திரு அவை’ பின்வருமாறு விவரிக்கின்றது: “கருவான முதல் நொடியிலிருந்தே தனிச்சிறப்பான தூய்மையின் மாட்சியால் அணி செய்யப்பட்டிருந்த நாசரேத்துக் கன்னியைக் கடவுளின் ஆணையால் தூது சொல்ல வந்த வானதூதர் ‘அருள்மிகப் பெற்றவரே’
(காண். லூக் 1:28) என்று வாழ்த்துகின்றார்” (ஒப்பிடுக:
இறைத்திட்டத்தில் திரு அவை, எண். 56).
வானதூதர்
மரியாவை இவ்வகையில் வாழ்த்தும் நிகழ்வானது இறைத்தூதரின் வாழ்த்தொலி மதிப்பை உயர்த்துகின்றது. மரியாவைப் பொருத்தவரை இது கடவுளின் மறைமுகமான மீட்புத்திட்டத்தின் வெளிப்பாடாக இருக்கின்றது. இதையே ‘நான் மீட்பரின் தாய்’ (Redemptoris Mater) என்கின்ற
எனது சுற்றுமடலில் இவ்வாறு கூறியிருக்கிறேன்: “அருளால் நிறைந்தவளே!’ என்ற வாழ்த்தானது கிறிஸ்துவின் தாயாவதற்காக முன்குறித்து வைக்கப்பட்டு தேர்ந்துகொள்ளப்பட்டதனால் மரியாவுக்குக் கிடைக்கப்பெற்ற சிறப்புச் சலுகைகளான இயற்கைக்கு அப்பாற்பட்ட அனைத்து
நன்மைகளையும் குறிக்கின்றது” (மீட்பரின்
தாய், எண். 9).
கடவுள் மரியாவுக்கு அருளை முழுமையாகக்
கொடுத்துள்ளார்!
‘அருளால் நிறைந்தவரே’ என்பது
கடவுளின் பார்வையில் மரியா பெற்றிருக்கின்ற ஒரு பெயராகும். உண்மையில் தூய லூக்கா நற்செய்தியாளரைப் பொருத்தவரை வானதூதர் ‘மரியா’ என்கின்ற பெயரைச் சொல்வதற்கு முன்பே இந்தச் சொல்லாடலைப் பயன்படுத்துகின்றார். இவ்வகையில் நாசரேத்தூர் கன்னியின் ஆளுமையில் மிகவும் உயர்ந்ததொரு பார்வையை நற்செய்தியாளர் வலியுறுத்துகின்றார். ‘அருளால் நிறைந்தவரே’ என்கின்ற
சொல்லாடலானது ‘kecharitoméne’ என்கின்ற
கிரேக்கச் சொல்லின் மொழியாக்கமாகும். இது ஒரு வினையின் செயப்பாட்டு இலக்கண வடிவமாகும் (passive
participle). ஆகவே, கிரேக்க வார்த்தையின் மிக நுட்பமான வேறுபாட்டைக் காட்டுகின்றவாறு வெறுமனே ‘அருளால் நிறைந்தவரே’ என்று
கூறாமல், அதற்கு மாறாக ‘அருளினால் முழுமையாக் கப்பட்டவர்’ என்றோ
அல்லது அதையும் கடந்து, கன்னி மரியாவுக்குக் கடவுளால் அளிக்கப்பட்டதொரு கொடை என்பதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்ற வகையில் ‘அருளினால் நிறைக்கப்பட்டவர்’ என்றோ
கூறவேண்டும். வினையின் செயப்பாட்டு (perfect
participle) இலக்கண
வடிவத்தில் இருக்கின்ற இந்தச் சொல்லாடலானது முழுமையைக் குறிக்கின்ற நிறைவான மற்றும் என்றென்றைக்குமான அருளின் பிம்பத்தை மேம்படுத்துகிறது. ‘அருளை வழங்குதல்’
என்கின்ற அர்த்தத்தில் கடவுளின் அன்பு மகனில் தந்தையால் நமக்குக் கொடுக்கப்பட்ட அபரிமிதமான அருளைக் குறிப்பதற்கும், மீட்பின் கனியாக மரியா பெறுகின்ற அருளைக் குறிப்பதற்கும் (ஒப்பிடுக: மீட்பரின் தாய், எண். 10) இதே வினைச்சொல்லானது எபேசியர்களுக்கு எழுதப்பட்ட கடிதத்தில் பயன்படுத்தப்படுகிறது (எபே 1:6).
3. கன்னி
மரியாவைப் பொருத்தவரை, கடவுளின் செயலானது உண்மையிலேயே வியப்புக்குரியதொன்றாக இருக்கின்றது. மெசியாவின் வருகையைப் பற்றிய அறிவிப்பைப் பெறுவதற்கு மரியாவுக்கு எவ்விதச் சிறப்புத் தகுதியும் இல்லை. அவர் ஒரு தலைமைக்குருவோ, யூதமதத்தின் அதிகாரப்பூர்வமான பிரதிநிதியோ அல்லது ஓர் ஆணோ அல்ல; மாறாக, அவர் வாழ்ந்த காலகட்டத்தில் அந்தச் சமூகத்தில் எந்தவொரு செல்வாக்கும் பெற்றிராத ஓர் இளம்பெண். அதோடு, பழைய ஏற்பாட்டில் எந்த இடத்திலும் குறிக்கப்படாத நாசரேத்து என்னும் கிராமத்தைச் சார்ந்தவர். யோவான் நற்செய்தியில் “நாசரேத்தூரிலிருந்து நல்லது ஏதும் வரக்கூடுமோ?” (யோவா 1:46) என்று நத்தானியேல் கேட்கின்றவாறு அந்தக் கிராமத்திற்கென்று எந்தவொரு பெருமையோ புகழோ இருந்திருக்கச் சாத்தியமில்லை.
வழக்கத்திற்கு
மாறான மற்றும் புரிந்துகொள்ள இயலாத இந்தக் கடவுளின் தலையீட்டின் தன்மையானது லூக்கா நற்செய்தியில் வரும் சக்கரியாவிற்கு நடந்தவைகளை விவரிக்கும் பகுதியோடு ஒத்திருப்பது தெளிவாகின்றது. சக்கரியாவின் ‘குரு’ என்கின்ற தகுதியும், அவருடைய முன்மாதிரியான வாழ்வும் குறிப்பிடப்படுவதன் வழியாக அவரும் அவரின் மனைவியான எலிசபெத்தும் பழைய ஏற்பாட்டின் மாதிரிகளாகக் காட்டப்படுகின்றார்கள். “அவர்கள் இருவரும் கடவுள் பார்வையில் நேர்மையானவர்களாய் விளங்கினார்கள். ஆண்டவருடைய அனைத்துக் கட்டளைகளுக்கும் ஒழுங்குகளுக்கும் ஏற்ப குற்றமற்றவர்களாய் நடந்து வந்தார்கள்” (லூக்
1:6).
ஆனால்,
மரியாவின் தோற்றம் பற்றித் திருவிவிலியத்தில் நமக்கு எந்தவிதமான தகவல்களும் சொல்லப்படவில்லை: “தாவீது குடும்பத்தினராகிய...” (லூக் 1:27) என்பதுகூட யோசேப்புவையே குறிக்கின்றது. மரியாவின் நடத்தை
(Mary’s behaviour)
பற்றிய எந்தவிதத் தகவலும் குறிக்கப்படவில்லை. மரியாவைப் பொருத்தவரை
ஒவ்வொன்றும் இறைவனின் அருளிலிருந்து வருவதாக, தூய லூக்கா நற்செய்தியாளர் இலக்கியத் தெளிவோடு வலியுறுத்துகின்றார். மரியாவுக்கு வழங்கப்பட்டதெல்லாம் அவருக்கானதொரு தனிச்சிறப்பின் பலனாக இல்லாமல், கடவுளுடைய சுதந்திரமான மற்றும் விருப்பத்தின் நற்கொடையின் பலனாகவே இருக்கின்றது.
மரியாவில் கடவுளின் இரக்கமானது
உயர்
நிலையை
அடைகின்றது
4. அவ்வாறு
செய்வதில் நற்செய்தியாளர் உண்மையில் கன்னி மரியாவின் தனிப்பட்ட மதிப்பைச் சிறுமைப்படுத்த எண்ணவில்லை. மாறாக, கடவுளுடைய நன்மைத்தனத்தின் தூய்மையானதொரு கனியாகவே மரியாவைக் காட்ட அவர் விரும்புகின்றார். ‘அருள் நிறைந்தவரே’ என்று
வானதூதர் பயன்படுத்திய அடைமொழியின்படி அவரால் செய்ய முடிந்ததையே அவர் ஏற்றுக்கொள்ளவும் முடிந்தது.
இவ்வாறு
செய்வதன் வழியாக, நற்செய்தியாளர் நிச்சயமாகப் பேறுபெற்ற கன்னியின் சிறந்த, தனிப்பட்ட மதிப்பைக் குறைத்து மதிப்பிட விரும்பவில்லை; மாறாக, மரியாவைக் கடவுளின் நல்லெண்ணத்தின் தூய கனியாகக் காட்ட விரும்புகிறார். வான தூதர் பயன்படுத்திய அடைமொழியான ‘அருள் நிறைந்த’வராக மாற்றுவதற்காக அவர் மரியாவைத் தமதாக்கிக் கொண்டார்.
யாவே
கடவுள் பழைய ஏற்பாட்டில் அவரின் அபரிமிதமான அன்பைப் பல வழிகளில், பல
நேரங்களில் வெளிப்படுத்துகின்றார். புதிய ஏற்பாட்டின் தொடக்கத்தில், கடவுளுடைய இரக்கத்தின் கொடையானது மரியாவில் அதன்
உயர்நிலையை அடைகின்றது. அவரில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கும் குறிப்பாக, தாழ்மையானவர்களுக்கும் ஏழைகளுக்கும் காட்டப்படும் கடவுளின் சார்புநிலையானது அதன் உச்சத்தை அடைகிறது.
ஆண்டவரின்
வார்த்தையாலும் புனிதர்களின் அனுபவத்தினாலும் உந்தப்பட்டு, திரு அவையானது அதன் நம்பிக்கையாளர்களை மீட்பரின் தாயான மரியாவில் அவர்களின்
கண்களைப் பதிய வைக்கவும், அவரைப் போன்றே கடவுளால் அன்பு செய்யப்பட்டவர்கள் என்று தங்களையே கருதுவதற்கும் அவர்களைத் தூண்டுகின்றது. மரியாவின் தாழ்ச்சியையும் ஏழ்மையையும் பகிர்ந்துகொள்வதற்குத் திரு அவையானது அவர்களை அழைக்கின்றது. ஏனெனில், அவருடைய எடுத்துக்காட்டு மற்றும் பரிந்துரையைப் பின்பற்றி அவர்களின் இதயங்களைப் புனிதப்படுத்தக்கூடிய மற்றும் மாற்றக்கூடிய கடவுளின் அருளில் அவர்களாலும் நிலைத்திருக்க முடியும்.
மூலம்:
John Paul II, Blessed virgin was filled with God’s grace, in
«L’Osservatore Romano», Weekly Edition in English, 15
May 1996, p. 11.
(தந்தை அன்புச் செல்வன், தாய் மார்த்தா, மகன் அகஸ்டின், மகள் கிறிஸ்டினா இவர்களோடு அருள்பணியாளர் தாமஸின் உரையாடல் தொடர்கிறது)
அகஸ்டின்:
“தந்தையே, திருமுழுக்கு அருளடையாளம் நமக்கு வெவ்வேறு வகையான உறவுக் கொடைகளை வழங்குகிறது என்பதைச் சிந்தித்து வருகிறோம். இதன் பின்னணியில் திருமுழுக்கு எவ்வாறு நம்மைத் தூய ஆவியின் ஆலயமாக மாற்றுகிறது என்பதைக் குறித்துக் கூறமுடியுமா?”
அருள்பணி:
“ஒரு கட்டடம் என்பது கற்களால் கட்டப்படுவது. அக்கட்டடத்திற்குள்ளே யார் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அக்கட்டடத்தின் பெயர் மாற்றப்படும். ஒரு கட்டடத்தில் ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாதவர்கள் தங்கியிருந்தால், அக்கட்டடம் ‘விடுதி’ என்று அழைக்கப்படும். ஒரு கட்டடத்தில் கணவன், மனைவி என்று ஒருவரையொருவர் அன்பு செய்பவர்கள் தங்கியிருந்தால் அது ‘வீடு’ என்று அழைக்கப்படும். ஒரு கட்டடத்தில் நாட்டை அரண்போல இருந்து பாதுகாத்து வருகின்ற அரசன் இருந்தால் அது ‘அரண்மனை’ என்று அழைக்கப்படும். ஒரு கட்டடத்தில் கடவுளின் பிரசன்னம் தங்கியிருந்தால் அது ‘கோவில்’ என்றும், ‘ஆலயம்’ என்றும் அழைக்கப்படும். ஒருவகையில் பார்த்தால் இந்த உலகின் ஒரே அரசர் கடவுள் மட்டுமே! ‘கோன்’ என்றால் ‘அரசன்’ என்று பொருள். எனவே, இவ்வுலகின் அரசராகிய கடவுள் இருக்கின்ற இடமே கோவில் (கோன்+இல்) என்று அழைக்கப்படுகிறது.”
அன்புச்செல்வன்:
“மனிதர்களாகிய நம் உடலில் தூய ஆவி தங்குவதன் காரணமாக நாமும் அவரது கோவிலாக இருக்கிறோம் என்பதைத் திருவிவிலியம் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது. ‘நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா?’ (1கொரி 3:16) என்கிறார் புனித பவுல். அவரே தொடர்ந்து, ‘உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் கோவில் என்று தெரியாதா?’ (1கொரி 6: 19) என்று எழுதுகிறார்.”
மார்த்தா: “தூய ஆவியார் திருமுழுக்கு அருளடையாளத்தின்போது நம்மீது இறங்கி வருகிறார் என்பதைத் திருவிவிலியம் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது: இயேசு திருமுழுக்குப் பெற்றபோது அவர்மீது தூய ஆவி இறங்கி வந்தார் (மத் 3:16). கொர்னேலியுவும் அவரது குடும்பத்தாரும் திருமுழுக்குப் பெற்றபோது, தூய ஆவியைப் பெற்றுக்கொண்டனர் (திப 10-ஆம் பிரிவு). மேலும், இயேசுவின் திருமுழுக்கு யோவானின் திருமுழுக்கிலிருந்து வித்தியாசமானது. திருமுழுக்கு யோவானின் திருமுழுக்குத் தண்ணீரால் கொடுக்கப்பட்டது. அது மன மாற்றத்திற்காக மட்டுமே
கொடுக்கப்பட்டது. இயேசுவின் திருமுழுக்கு தூய ஆவியைக் கொடையாக வழங்கும் திருமுழுக்கு (திப 1: 2).”
அருள்பணி:
“மனிதர்களாகிய நமக்குள்ளேயே கடவுளின் பிரசன்னம் இருக்கின்றது என்ற சிந்தனையைக் கிறித்தவம் அதிகமாக வலியுறுத்தினாலும், இத்தகைய சிந்தனை மற்ற ஆன்மிக மரபுகளிலும் காணப்படுகிறது. தமிழ்நாட்டில் வாழ்ந்த சிவவாக்கிய சித்தர் இவ்வாறு கூறுகின்றார்:
‘கோயிலாவது ஏதடா? குளங்களாவது ஏதடா?
கோயிலும்
குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும்
மனத்துளே குளங்களும் மனத்துளே!’
அதேபோல
திருமூலரும், ‘கூடிய நெஞ்சத்து கோயிலாகக் கொள்வனே’ என்று சொல்கிறார்.”
அகஸ்டின்:
“தந்தையே! எனக்கு ஒரு கேள்வி எழும்புகிறது. தூய ஆவியின் பிரசன்னம் நமக்குள் இருப்பதன் காரணமாக நாமே கோவிலாகத்தான் இருக்கின்றோம். எனவே, நாம் இருக்கின்ற இடத்திலே இருந்துகொண்டு கடவுளைத் தியானிக்கவும் வழிபடவும் செய்யலாமே! ‘ஏன் ஆலயத்திற்குச் செல்ல வேண்டும்?’ இது எனது கேள்வி மட்டுமல்ல, என்னைப் போன்ற சில இளைஞர்கள் ‘New age Spirituality’ என்று
சொல்லப்படுகின்ற நவீனவகை ஆன்மிகத்தின் பின்னணியில் இதுபோன்ற கேள்விகளை எழுப்புகின்றனர்.”
அருள்பணி:
ஏறத்தாழ இதேபோன்ற ஒரு கேள்வியை ஒரு துறவு மடத்தின் தலைவராக இருந்த தலைமைத் துறவியிடம் ஓர் இளம் துறவி கேட்டாராம். அதாவது ‘நானே கோவிலாக இருக்கும்போது, நான் ஏன் கோவிலுக்குச் செல்ல வேண்டும்?’ என்ற கேள்வி! அப்போது அந்தத் தலைமைத் துறவி ஓர் எரிகின்ற மெழுகுதிரியை இளம் துறவியிடம் கொடுத்து, திறந்த வெளியில் பிடித்திருக்கச் சொன்னார். திரி காற்றினால் அணைந்து போனது. அதே திரியை மீண்டும் ஏற்றி ஒரு கட்டடத்திற்குள் பிடிக்கச் சொன்னார். இப்போது மெழுகுதிரி அணையவில்லை. தலைமைத் துறவி இளம் துறவியிடம், ‘கடவுள் நமக்குள் இருந்தாலும், அவரை உணர்வதற்கு ஏற்ற சூழல் எல்லா இடங்களிலும் இருந்து விடுவதில்லை. இத்தகைய தகுந்த சூழலை ஆலயம் வழங்குகிறது’ என்று
சொன்னாராம்.”
மார்த்தா: “தந்தையே, திருமுழுக்கு நமக்கு வழங்கும் அடுத்த கொடை ‘திரு அவையின் உறுப்பினர்’ என்பது!
அது குறித்து...?”
அருள்பணி:
“மனிதர்களாகிய நாம் உறவி(வா)ல் உருவாவதோடு,
உறவிற்காகவே படைக்கப்பட்டிருக்கிறோம். உறவிற்காக ஏங்குவதும், உறவை நோக்கிப் பயணிப்பதும் மானுட வாழ்வின் அடிப்படைத் தன்மை. உறவிற்காக ஏங்கும் நாம், உறவை ஏற்படுத்தி, அதில் வளர்வதற்காக நல்ல தளத்தை நமக்கு அமைத்துக் கொடுப்பது திரு அவை! உதாரணமாக, நமது பங்குத் திரு அவையும், அதில் உள்ள பல்வேறு வகையான பக்தசபைகளும், நாம் உறவில் வளர்வதற்கான ஏற்ற இடம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. மேலும், திரு அவை என்பது தங்களிடையே ஆழமான உறவு கொண்ட இறைமக்களின் கூட்டம் என்பதைத் திருவிவிலியம் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது.”
அன்புச்செல்வன்:
“தொடக்கக் கிறித்தவர்களின் இணைந்த, இயைந்த வாழ்வு (திப 2 மற்றும் 4-ஆம் பிரிவுகள்), ஒற்றுமை கொரிந்து நகர கிறித்தவர்களிடம் இல்லாததை புனித பவுல் கண்டித்தது (1கொரி 11-ஆம் பிரிவு), கிறித்தவ வாழ்வின் அடிப்படை நெறியாக அன்பை அவர் சுட்டிக்காட்டுவது (1கொரி 13-ஆம் பிரிவு)... இவை அனைத்துமே திரு அவையின் உறவு நிலையைச் சுட்டிக்காட்டுகின்றன. மேலும், யூதர்-கிரேக்கர், அடிமைகள்-உரிமைக் குடிமக்கள் போன்ற மேலோட்டமான வேறுபாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் (1கொரி 12:13), திரு அவை என்கின்ற ஒரே உடலின் உறுப்புகளாக நாம் வாழ்வதற்கான அழைப்பையும் புனித பவுல் தருகிறார்.”
அருள்பணி:
“திரு அவையில் பல்வேறு வகையான மாற்றங்களைக் கொண்டு வந்த ஒரு முக்கியமான நிகழ்வு இரண்டாம் வத்திக்கான் சங்கம்! இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்கு முன்புவரை திரு அவை ஓர் அமைப்பாகக் (Institution) கருதப்பட்டது.
இரண்டாம் வத்திக்கான் சங்கமோ திரு அவை ஓர் இறைமக்களின் குழுமம் (Community of people
of God) என்ற கருத்தாக்கத்திற்கு அழுத்தம் கொடுத்தது. திரு அவையின் நிறுவனத்தன்மையைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அதன் உறவுத்தன்மையைத் தூக்கிப்பிடித்தது இரண்டாம் வத்திக்கான் சங்கம். திருமுழுக்குப் பெறும் ஒரு நபர் இத்தகைய ஓர் உறவுக் கூட்டத்தின் உறுப்பினராக இணைகின்றார்.”
மார்த்தா:
“தந்தையே, உறுப்பினர் என்கின்ற வார்த்தை ஓர் அற்புதமான வார்த்தை. அது ‘உறுப்பு’ என்கின்ற வார்த்தையைத் தன்னகத்தே கொண்டது. உடலில்
ஒவ்வோர் உறுப்புக்கும் தனித்தன்மை உண்டு. எனினும், மற்ற உறுப்புகளோடு இணைந்திருக்கும்போது மட்டுமே அந்த உறுப்பு செயல்பட முடியும். ‘உடல் ஒன்றே! உறுப்புகள் பல’
(1கொரி 12:12-30) என்கிறார் புனித பவுல். இங்கு உடல் உறுப்புகள் தனித்தன்மையோடும், அதேவேளையில் ஒன்றையொன்று சார்ந்தும் செயல்படுவதை புனித பவுல் உதாரணமாகக் காட்டி, திரு அவையின் உறுப்பினர்களும் அவ்வாறே செயல்படவேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார். திரு அவையாகிய உடலின் தலையாக இருப்பவர் கிறிஸ்துவே (எபே 5: 23) என்ற கருத்தையும் முன்வைக்கின்றார்.”
அருள்பணி:
“இன்றைய திரு அவையானது ஸ்டீபன் ஹாக்கிங் திரு
அவையாக (Stephen hawking Church) இருக்கின்றது.
ஸ்டீபன் ஹாக்கிங் என்பவர் உலகப் புகழ்பெற்ற அறிவியலாளர். அண்மையில்தான் அவர் இறந்தார். அவர் தலை மிகவும் சிறப்பாகச் செயல்படக்கூடியது. விண்வெளி இரகசியங்களை ஆராயக்கூடியது. ஆனால், அவரது ஒட்டுமொத்த உடலோ செயலற்றதாக இருந்தது. 20 வயதில் வந்த ஒரு நோயின் காரணமாகத் தலையைத் தவிர உடலின் எல்லா உறுப்புகளும் செயலற்றதாக மாறின. 20 வயது முதல் 76 வயது வரை அவர் சக்கர நாற்காலியில்தான் இருந்தார். திரு அவையாகிய உடலின் தலையாகிய கிறிஸ்து இன்றுவரை சிறப்பாகச் செயல்படுகிறார். உடலாகிய நாமோ சாதியம், சடங்காச்சாரம் போன்றவற்றால் முடக்கப்பட்டுக் கிடக்கின்றோம். திரு அவையின் உறுப்பினர்களாகிய நாம் நம் மேன்மையை உணர்ந்து கிறிஸ்துவோடு இணைந்து செயல்படக்கூடிய உயிரோட்டம் உள்ள உடலாக மாறுவது அவசியம்.”
(தொடரும்)
பூமியின் முதல் பதிவு தனிமை!
வாழ்வின்
இறுதிப் பதிவும் தனிமை!
பிறப்புக்கும்
இறப்புக்கும் இடைப்பட்ட காலத்தில் உறவுகள் மலர்கின்றன; உன்னதம் பிறக்கின்றது. தனிமை வேரறுக்கப்பட்டு, பிறரோடு இணைந்து பயணிக்கும் பேரின்பம் கிடைக்கிறது. பேரின்பம் கிடைத்துவிட்டதே என்று ஆனந்தப் பரவசம் அடைந்தாலும், அன்றாட வாழ்வில் அவ்வப்போது இந்தத் தனிமை தொட்டுவிட்டுச் செல்லும் அனல் காற்றுபோல இதயத்தை வருடித்தான்
செல்கிறது.
உறவுகளால்
கைவிடப்படும்போது
உணர்வுகள்
மதிக்கப்படாதபோது
விரக்தியின்
விளிம்பில் தள்ளப்படும்போது
தோல்வியில்
கலங்கி நிற்கும்போது
குடும்ப
வாழ்வு சீர்குலையும்போது
கண்டுகொள்ளப்படாமை
அதிகரிக்கும்போது
கருத்துகள்
மதிக்கப்படாதபோது
எல்லாராலும்
வெறுக்கப்படும்போது
பிறப்பால்
ஒதுக்கப்படும்போது
கூட்டத்தின்
மத்தியில் அவமானப்படும்போது
அன்பை
அலட்சியப்படுத்தும்போது
குழுவாகச்
செய்யும் பொறுப்புகளைத்
தனியாகச்
செய்யும் சூழல் நேரிடும்போது
உடல்
நோயில் உறவுகள் உடனிருக்காதபோது...!
இந்தத்
தனிமை உயிர்க்கொல்லியாக இதயத்தை ஊடுருவி, உயிரோடு மனித மனங்களைப் புதைத்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. தனிமை வரமா? சாபமா? என்பது அவரவர் மனநிலையை, சூழ்நிலையை, அனுபவத்தைப் பொறுத்து அமைகிறது. பிரச்சினைகளை எப்படி உற்றுநோக்குகிறோம்? மனப்பக்குவத்துடன் அதை எப்படிக் கையாள்கிறோம்? என்பதன் அடிப்படையில்தான் வரமும் சாபமும் நம் கண்முன் வைக்கப்படுகின்றன.
தனிமை தந்த
வலிகள்
‘மனிதன் தனியாய் இருப்பது நல்லது அன்று’ என்று மனிதனுக்குத் துணையாகப் பெண்ணைப் படைத்தார் இறைவன். ‘இன்பத்திலும் துன்பத்திலும் இணைந்து பயணிப்போம்’ என்று
அவர்கள் கொடுத்த திருமண வாக்குறுதி சில குடும்பங்களில் இறுதிவரை நிலைத்திருப்பதில்லை. ‘நான்’ என்ற ஆணவமும், விட்டுக்கொடுக்காத மனநிலையும், பொருளாதாரப் பின்னடைவுகளும், தூய அன்பற்ற நிலையும், பிரமாணிக்கமின்மையும், தரக்குறைவான வார்த்தைகளும் குடும்ப வாழ்வைக் கேள்விக்குறியாக்கி விடுகின்றன. விளைவு - தனிமை வாழ்வு! கணவனால், மனைவியால், பிள்ளைகளால், கைவிடப்பட்ட நிலை. முதியோர் இல்லங்களிலும் தெருவோரங்களிலும் வாழ்கின்ற அவல நிலை. இதற்கு
என்ன காரணம்? சற்று ஆழ்ந்து சிந்தித்தால், ‘நான் பிறரால் அன்பு செய்யப்படவில்லை’ என்ற
எண்ணமே மேலோங்கி நிற்கின்றது. தனிமை தந்த வலிகளை அனுபவித்தவர்கள் மட்டுமே உணர முடியும்.
தனிமை தந்த
பாடங்கள்
சில
நேரங்களில் தனிமை வலியைத் தந்தாலும் சுயசிந்தனை, சுயஒழுக்கம், சுயக்கட்டுப்பாடு, சுய வளர்ச்சி, சுயஉணர்தல் ஆகியவற்றின் தளமாகத் தனிமை உணரப்படுகிறது. நம்மை நாம் புரிந்துகொள்வதற்கும் நாம் எந்த நிலையில் இருக்கிறோம்? என்ற தெளிவு பெறுவதற்கும், மன அமைதியுடன் வாழ்வதற்கும்,
உறவுகளைப் புரிந்துகொள்வதற்கும், உறவின் மகத்துவம் உணர்வதற்கும், தன்னம்பிக்கையுடன் வாழ்வதற்கும், படைப்பாற்றல் திறனுடன் செயல்படுவதற்கும் இந்தத் தனிமை நமக்குப் பல பாடங்களைக் கற்றுத்தருகின்றன.
தாவீது
அரசர் சவுல் அரசனின் பைத்தியக்காரத்தனத்தால் தனிமைக்கூண்டில் சிக்கியப்போது மனைவியை இழந்தார், நண்பனை இழந்தார், உறவினர்களை இழந்தார், படை வீரர்களை இழந்தார். அனைத்தும் இழந்த நிலையில் தனிமையாக நாட்டை விட்டே தப்பி ஓடினார். ஆயினும், மனம் தளரவில்லை. தனிமையின் பாடங்களைக் கற்றுக்கொண்டு இறைவன்மீது ஆழ்ந்த நம்பிக்கைகொண்டு ‘இறைவன் என்னைக் காப்பாற்றுவார்; மீண்டும் இந்த அரசாட்சியில் என்னை நிலை நிறுத்துவார்’ என்ற
நம்பிக்கை உணர்வுடன் தாவீது செயல்பட்டார்; வெற்றியும் பெற்றார். ‘தனிமைப் படுத்தப்பட்டோம்’ என்று
தயங்கத் தேவையில்லை. தனிமையிலும் இனிமை காணலாம். தனிமை சாபம் அல்ல; அவற்றை வரமாக மாற்றியவர்களும் நம் மத்தியில் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இயேசுவின்
தனிமை…
பாலைவனத்
தனிமை
கருக்கலில்
தனிமை
விடியற்காலத்
தனிமை
இயற்கையின்
எழில் அழகில் தனிமை
மலை
சூழ்ந்த காடுகளில் தனிமை...
எனத்
தொடர்கிறது. பாலைவனப் பயணம் மிகக் கொடியது. மனித வாடையே இல்லாத இந்தப் பாலைவனத் தனிமையை இயேசு ஏன் விரும்பினார்?
இஸ்ரயேல்
மக்கள் 40 ஆண்டுகள் பாலைவனப் பயணத்தில் தம்மைத் தூய்மையாக்கி, பாலும் தேனும் பொழியும் கானான் தேசத்தை அடைகிறார்கள்.
இயேசுவும்
தம் பணிவாழ்வின் அடையாளமாக மானுடச் சமூகத்தைத் தூய்மையாக்க, பாவ வாழ்வில் இருந்து மக்களைப் பாதுகாக்க, யாவே இறைவனை நோக்கி மக்களை வழிநடத்த பாலைநிலத்துக்குச் செல்கிறார் (மாற்கு 1:13; மத் 14:13).
சமூகப்பணி,
மீட்புப்பணி, போதிக்கும் பணியின் முன் அடையாளமாகப் பாலைவனத் தனிமையை இயேசு தேடிச்சென்றாலும், அங்கும் மூன்று ஆன்மிக எதிரிகளைச் சந்திக்கின்றார். அவை உடல், உலகம், சாத்தான். ஆசையைத் தூண்டுதல் சாத்தானின் வேலை. “இந்தக் கல்லை அப்பமாக மாற்று; நீர் இறைமகன் என்றால் கீழே குதியும்; நீ நெடுஞ்சாண் கிடையாக
என்னை விழுந்து வணங்கினால் இந்த அரசை உனக்கு உரிமையாகத் தருவேன்” என்ற மூன்று ஆன்மிக எதிரிகளை இயேசு சந்திக்கின்றார் (மத் 4:3-8). இங்கு இயேசு உலகப் பசிக்கும் உடல் பசிக்கும் இடம் கொடுக்கவில்லை. ஆன்மிகப் பசிக்கு முதலிடம் கொடுத்து ஆன்மிக எதிரிகளை வென்றெடுக்கின்றார். அவர் எடுத்த முதல் அடியே இறையாட்சியின் வெற்றிக்கான அடித்தளமாக அமைகிறது. இயேசுவின் தனிமையில் ஆன்மிக எதிரிகளை வென்றெடுக்க நாம் தயாரா?
உயர் மலையின்
உன்னதத்
தனிமை
மலை
- இறைப்பிரசன்னத்தின்
அடையாளம். இறைவன் உயர் மலையில் வீற்றிருந்து மக்களைக் கண்ணோக்குகிறார் என இஸ்ரயேல் மக்கள்
நம்பினர். சீயோன் மலையில்தான் மனித ஒழுக்கங்களைச் சீர்படுத்தும் பத்துக்கட்டளைகள் யாவே இறைவனால் மோசேவிடம் கொடுக்கப்பட்டன. மலை இறையுறவின் சங்கமம். எலியா இறைவாக்கினர் கார்மேல் மலையில் யாவேதாம் உன்னத இறைவன் என்பதை எண்பித்துக்காட்டுகிறார். இறைமகன் இயேசுவும் உன்னத இறைவனின் உறைவிடமாம் மலையை நோக்கி தனிமையான பயணத்தை மேற்கொண்டு செபிக்கிறார். மலைமீது ஏறி அமர்ந்து பேறு பெற்றவர்கள் யார்? என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.
இயேசுவின்
தனிமையில் ஞானம் பிறந்தது. சுய பரிசோதனைக்கான தெளிவு கிடைத்தது. இறைவனின் மீட்புத் திட்டத்திற்கு எதிர்வரும் சவால்களைத் துணிவோடு எதிர்கொள்ள மன வலிமை கிடைத்தது.
மக்களின் உடல் நோய்களைக் குணமாக்கக்கூடிய ஆற்றல் கிடைத்தது. ஆழ்ந்த இறையனுபவத்தின் வழியாகக் கடவுளின் அருள் கிடைத்தது. “இவரே என் அன்பார்ந்த மகன்” என இறைவனே சான்றுபகரும்
பேரானந்தம் கிடைத்தது.
ஆகவே,
இயேசுவின் தனிமையை நமதாக்குவோம். நாமும் படைப்பாற்றல் திறன் மிக்கவர்களாக, புதுமைச் சிந்தனைகளை வரவேற்பவர்களாக, சுய அறிவும் சுயதெளிவும் கொண்டு ‘இப்படித்தான் வாழ வேண்டும்’
என்ற கொள்கை உணர்வுடன் செயல்படுபவர்களாக மாறுவோம்.
இறுதியாக....
தனிமை
நமக்கு மனச்சிதைவை உண்டாக்கும்போது, நம் மனித ஆளுமையைப் பாதிக்கும்போது, மனஅழுத்தம் குடிகொள்ளும்போது, கைவிடப்பட்ட நிலை உருவாகும்போது, ‘வாழத் தகுதியற்றவர்கள்’ என்ற
எண்ணம் தோன்றும்போது நாம் சோர்ந்துபோக வேண்டாம். இயேசுவின் தனிமையை நமதாக்குவோம். நம் மனநிலையில் மாற்றத்தைக் கொண்டு வருவோம். தனிமையை வரமாகப் பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வோம். சத்தங்களற்ற நிசப்தத்தின் சிறப்பைக் கண்டுணர்வோம். மெல்லிய தென்றல் காற்றில் இறைவனோடு உரையாடுவோம். தனிசெபத்தில் ஆன்மிக இறையனுபவம் பெறுவோம். தனிமையைச் சாபமாக அல்ல, வரமாகப் பார்ப்போம்!
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்திற்குப் பிற்பட்ட காலம் ‘பொதுநிலையினரின் பொற்காலம்’ என அழைக்கப்படுவது உண்டு. ஏனெனில், சங்கம் அவர்களது சமமான மாண்பையும் இறையாட்சிப் பணிப் பொறுப்பையும் உறுதியாக எடுத்துரைத்தது. அதன் அறிவுறுத்தலுக்கேற்ப மறைமாவட்ட மற்றும் பங்கு அளவில் அருள்பணிப் பேரவைகள், நிதிக் குழுக்கள் என்பனவற்றில் பொதுநிலையினர் இடம்பெற்றனர். தலைமைப் பொறுப்புகளுக்கு வழிகாட்டப்பட்டனர். அத்தகைய மாற்றத்தில் மலர்ந்ததுதான் ‘கூட்டொருங்கியக்கத் திரு அவை.’ இக்கருத்தை மாமன்றத்தின் மைய ஆய்வுப் பொருளாக வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அது மட்டுமின்றி, பொதுநிலையினரும் தங்கள் கருத்துகளை எடுத்துரைக்கும் வகையில் மாமன்றக் கலந்துரையாடல்கள் அடிமட்டத்திலிருந்தே தொடங்கப்பட வேண்டும் என்றார். அனைத்திற்கும் மேலாக, ஆயர் மாமன்றத்தில் முதன்முதலாகப் பொதுநிலையினர் சிலரும் வாக்குரிமையுடன் பங்கேற்க வழிசெய்தார். இதனால் மாமன்றமும் பொதுநிலையினரைப் பற்றி அதிகமாகவும் ஆழமாகவும் கலந்தாய்வு செய்துள்ளது.
உலகுசார் துறைகளை
ஊடுருவி
உருமாற்றுபவர்கள்
திரு
அவையின் மறைத்தூதுப் பணி அதன் அனைத்து உறுப்பினர்களையும் சார்ந்தது. புகுமுக அருளடையாளங்கள் வழியாக அப்பணிப் பொறுப்பு அதன் உறுப்பினர் அனைவருக்கும் தரப்பட்டுள்ளது. “திரு அவையின் பணி திருமுழுக்குப் பெற்ற அனைவருக்கும் உரியது”
(இஅ 66). அப்பணியை ஆற்ற இருபால் பொதுநிலையினர், துறவியர், திருப்பணியாளர்கள் என அனைவரும் பல்வேறு
அருங்கொடைகளையும் அழைத்தல்களையும் பெற்றுள்ளனர்.
தூய
ஆவியார் அவர்களுக்குத் தந்துள்ள கொடைகளால் பொதுநிலையினரும் அதில் உயிரோட்டமுடன் பங்களிப்புச் செய்ய அழைக்கப்பட்டுள்ளனர். ஏனென்றால், சமூகத்தின் அனைத்துத் துறைகளும், அன்றாட வாழ்வுச் சூழமைவுகளும் அவர்களுக்கே சிறப்பான பணித்தளங்கள். “பொதுநிலைப் பெண்கள் மற்றும் ஆண்களின் முதல் கடமை நற்செய்தி உளப்பாங்குடன் உலகுசார் துறைகளை ஊடுருவி அவற்றை உருமாற்றுவதே” (2-ஆம்
வத். திரு அவை 31,33; பொதுநிலையினர் 5-7) (இஅ 66). அதிலும் குறிப்பாக, இன்றைய கணினிக் கலாச்சாரம், இளைஞர் பணி, தொழில்துறை, அரசியல், கலைகள் மற்றும் பண்பாடு, அறிவியல் ஆராய்ச்சி, கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொதுவாழ்வில் பங்கேற்பு என்பனவற்றில் அவர்களே அதிகமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் அவர்களே அத்துறைகளில் திரு அவையை உடனிருக்கச் செய்பவர்களும் நற்செய்தி அறிவிப்பவர்களும் ஆவர்.
குடும்பமே முதல்
பணித்தளம்
பொதுநிலையினர்
நற்செய்திப் பணியாற்ற வேண்டிய முதல் தளம் தங்கள் குடும்பமே. திருமணம் எனும் அருளடையாளத்தால் கிறித்தவக் குடும்பம் உருவெடுக்கிறது. அந்த அருளடையாளம் “தனிப்பட்ட ஒரு மறைத்தூதுப் பணியை ஒப்படைக்கிறது. அப்பணி குடும்ப வாழ்வு, திரு அவையைக் கட்டியெழுப்புதல், சமூக ஈடுபாடு என்பனவற்றைச் சார்ந்தது”
(இஅ 64). கிறித்தவக் குழுமத்தின் அடித்தளம் குடும்பமே. அது அன்புறவு, அருள்வாழ்வு என்பனவற்றின் ஒன்றியம். அதுவே நம்பிக்கை உருவாக்கம்; கிறித்தவ வாழ்க்கைமுறை என்பனவற்றின் முதல் அனுபவமாகவும் முக்கிய அறிமுகமாகவும் திகழ்வது. அங்கு நம்பிக்கையில் வாழ்ந்து, பகிரும் பெற்றோரும் தாத்தா-பாட்டியருமே முதல் மறைத்தூதுப் பணியாளர்கள்.
மேலும்,
“கூட்டொருங்கியக்கத் திரு அவைக்கு அவசியமான அடிப்படை நடைமுறைகளைக் குடும்பங்களில் நாம் அனுபவத்தில் கற்றுக்கொள்கிறோம். குடும்பங்கள் முறிவுற்ற நிலையையும் துன்பங்களையும் அனுபவித்தாலும், அன்பு, நம்பிக்கை, ஒப்புரவு, மன்னிப்பு மற்றும் புரிதல் என்பனவற்றை நாம் கற்றுக்கொள்ளும் இடங்களாக அவை திகழ்கின்றன. ‘நாம்’ எனும் உறவின் வழியாகக் குடும்பம் மக்களை மனிதமயமாக்குகிறது; அதேவேளையில், ஒவ்வொருவருடைய முறையான வேறுபாடுளையும் அது வளர்த்தெடுக்கிறது” என்கிறார்
திருத்தந்தை பிரான்சிஸ் (இஅ 35).
பொதுநிலைத் திருப்பணியாளர்கள்
பொதுநிலையினர்
பெற்றுள்ள பல்வகை அருங்கொடைகள் தூய ஆவியார் திரு அவைக்கு வழங்கியுள்ள தனிச்சிறப்பான வரங்கள் ஆகும். அவற்றை இனங்கண்டு, ஏற்று, முழுமையாகப் பாராட்டி, ஊக்கப்படுத்திப் பயன்படுத்துவது அவசியம். “திருக்குழுமமும், அதனை வழிநடத்தும் பொறுப்பாளர்களும் மக்கள்முன் வெளிப்படையாக அருங்கொடைகளை ஏற்றுக்கொள்ளும்போது அவை திருப்பணிகள் ஆகின்றன”
(இஅ 75). இவ்வாறு அவை நிலையான முறையில் மறைத்தூதுப் பணிக்கு உதவுகின்றன. தெளிதேர்வு செய்து, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு
ஏற்ற உருவாக்கம் அளித்து, உரிய சடங்குமுறை வழியாக அவற்றுள் சில ஆயரால் வழங்கப்படுகின்றன. வாசகர், பீடத்துணைவர், வேதியர் என்பன இலத்தீன் மரபுத் திரு அவையில் ஏற்கெனவே ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும்
பொதுநிலையினர் திருப்பணிகள். இவை தவிர, தங்கள் திரு அவைகளின் தேவைகளுக்கு ஏற்ப ஏனைய திருப்பணிகளைத் திருத்தந்தையின் அனுமதியுடன் நிறுவவும், அவற்றிற்கான தகுதிகளையும் உருவாக்க முறைகளையும் முடிவு செய்யவும் ஆயர் பேரவைகளுக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது.
இதற்கு
ஏற்ப தமிழ்நாடு ஆயர் பேரவை நற்செய்திப் பணியாளர் (வாசகர்), நற்கருணைப் பணியாளர் (பீடத்துணைவர்), நோயுற்றோர் பணியாளர், நீதிப்பணியாளர், அருள்பணித் துணைவர், வேதியர் என ஆறு பொதுநிலையினர்
திருப்பணிகளைக் கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டுள்ளது. இது அனைத்துலகத் திரு அவைகளுக்கே முன் மாதிரி காட்டும் செயல்.
அவ்வாறே,
மாமன்றத்தின் பின்வரும் படிப்பினை
அருங்கொடைகளையும் திருப்பணிகளையும் பற்றிய அதன் நிலைப்பாட்டை மிகச் சுருக்கமாகவும் தெளிவாகவும் எடுத்துரைக்கிறது: “அனைத்து அருங்கொடைகளும் திருப்பணிகளாக ஏற்படுத்தப்பட வேண்டியதில்லை; அதுபோல திருமுழுக்குப் பெற்ற அனைவரும் திருப்பணியாளர் ஆகவேண்டியதில்லை. ஓர் அருங்கொடை திருப்பணியாக ஏற்படுத்தப்பட வேண்டுமெனில், அதற்கான உண்மையான அவசியத்தைத் திருக்குழுமம் இனம் காண வேண்டும். பொதுநிலையினரின் அதிகத் திருப்பணி வகைகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். அவற்றிற்குத் திருநிலைகள் எனும் அருளடையாளம் தேவையில்லை; அவை திருவழிபாட்டைச் சார்ந்தவையாக இருக்கவேண்டியதும் இல்லை. அவை நிறுவப்பட்டவையாகவோ நிறுவப்படாதவையாகவோ இருக்கலாம்” (இஅ
66). அப்பணிகள் எத்தகையவை ஆயினும், அனைத்துப் பணியாளர்களும் கூட்டுப் பொறுப்புடன் பணியாற்றுவது திரு அவையின் இணைந்த பயணத்திற்கு இன்றியமையாதது.
கிறித்தவக்
குழுமங்களிலும் பொதுநிலையினர் அதிகமதிகமாகப் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். “அவர்களது
இத்தகைய பங்களிப்புகள் இன்றியமையாதவை என்பதால், அவற்றிற்குத் தேவையான திறமைகளை வளர்க்க வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்”
(முஅ 8ந). மேலும், இத்தகைய பணிகளுக்கு நிலைத்தத்தன்மை தரவும், இவை மக்களால் ஏற்று மதிக்கப்படவும் உதவும் வகையில் இவற்றைத் தலத்திரு அவைப் பொறுப்பாளர்கள் திருக்குழுமத்தின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கலாம். மேலும், நற்கருணை வழங்கல், அருள்பணியாளர் இல்லாத சூழ்நிலைகளில் ஞாயிறு வழிபாடு நடத்துதல், சில அருள்வேண்டல் குறிகளை வழங்குதல் என்பன போன்றவற்றில் சிறப்புரிமைத் திருப்பணியாளராகப் பொதுநிலையினர் செயல்பட வாய்ப்பு ஏற்கெனவே உள்ளது. “அந்தந்த இடத்துச் சூழ்நிலைகளின் தேவைகளுக்குப் பதிலிறுப்புச் செய்யும் வகையில் பொதுநிலையினர் திருப்பணிகள் ஆற்ற இத்தகைய வாய்ப்புகளை விரிவாக்கம் செய்வது பற்றியும், நிலையானவை ஆக்குவது பற்றியும் சிந்திக்க வேண்டும்”
(இஅ 76).
செயல்படுத்தச்
சில
பரிந்துரைகள்
1. பங்கு,
மறைமாவட்ட மற்றும் அனைத்துலகத் திரு அவை அளவுகளில் இன்று அதிகமதிகமாக அருள்பணி சார்ந்த பல செயல்பாடுகளும் திருப்பணிகளும்
பொதுநிலையினரிடம் ஒப்படைக்கப்படுகின்றன. இறையியல் விளக்கங்களும், திரு அவைச் சட்ட வழிவகைகளும் இந்த முக்கிய வளர்ச்சியுடன் இயைந்து இருத்தல்வேண்டும். குறிப்பாக, திரு அவையின் மறைத்தூதுப் பணி ஒன்றே என்பதைக் கருத்தில்கொண்டு, திரு அவையின் அகப்பணிகள் திருநிலையினருக்கும், உலகுசார் பணிகள் பொதுநிலையினருக்கும் உரியன எனக் கூறுபோடுதல் தவிர்க்கப்பட வேண்டும். “உலகில் பொதுநிலையினர் ஆற்றும் பணியைச் சரியாகப் புரிந்து ஏற்றுக்கொள்ளுதல் என்பது கிறித்தவக் குழுமத்தைக் கவனிக்கும் பணியை ஆயர்களிடமும் அருள்பணியாளர்களிடமும் மட்டுமே ஒப்படைப்பதற்குப் போலிக் காரணம் ஆகிவிடக்கூடாது” (முஅ
18டி).
2. திரு
அவையின் முடிவெடுக்கும் செயல் முறைகளில் பங்கேற்கவும், மறைமாவட்டங்களிலும் அருள்பணியாளர் பயிற்சி இல்லங்கள், இறையியல் கல்வி நிறுவனங்கள் என்பனவற்றிலும் பொறுப்புள்ள பணிகளில் செயல்படவும் பொதுநிலை மற்றும் இருபால் துறவியருக்கும் அதிக வாய்ப்புகள் தரப்படவேண்டும் (இஅ 77).
3. தலத்திரு
அவைகளின் தேவைகளுக்கு ஏற்ப புதிய திருப்பணிகளை ஏற்படுத்துவதும், இளையோருக்கும் அவற்றைத் தருவதும் அவசியம். வாசகர் திருப்பணி இன்னும் விரிவான இறைவார்த்தைப் பணியாகப் புதுப்பிக்கப்படலாம்; மறையுரை வழங்குவதும் அதனுடன் இணைக்கப்படலாம்.
4. குடும்ப
வாழ்வை ஆதரித்தல் மற்றும் திருமணத் தயாரிப்புப் பணிகளைத் திருப்பணிகளாக ஏற்படுத்தி, அவற்றை ஆற்றும் தம்பதியருக்கு அத்திருப்பணிகளை வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
5. ஏற்ற
நிறுவன அமைப்புகளை உருவாக்கி, அவற்றின் வழியாக அருள்பணித் தலைவர்களும் இறையியல் ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளோரும் உரையாடல் மேற்கொள்வது அவசரமான தேவை (இஅ 67).