news
ஆன்மிகம்
திருப்பலியின் ‘அறிக்கை நேரம்’ சிந்திக்க வேண்டிய தருணம்

ஞாயிற்றுக்கிழமை திருப்பலியின் இறுதி நேரம். கையில் அறிக்கையை எடுத்துக்கொண்டு வாசிக்கத் தொடங்கும் அருள்பணியாளர்கள். நாற்பது நிமிடங்கள் கடந்து சென்றபின்... முன் புறத்தில் சில வயதான பாட்டிகள் அமைதியாக அமர்ந்திருந்தனர். மற்றவர்கள் முகம் சுளித்து, ‘சரி, அப்புறம் பார்க்கலாம்என்ற முகபாவனையுடன் பார்த்தனர். அடுத்த வாரம், மனத்துள் ஏற்பட்ட அதிருப்தியோடு அருள்பணியாளர் சிறிது கடுமையான குரலில் அறிவித்தார்: “அறிக்கை வாசிக்கும்போது வெளியே செல்வோர் அருளடையாளங்களைப்  பெறமுடியாது.”

அமைதியான குழப்பம்நிலவியது. மக்கள் முகத்தில் இன்னும் சொல்லப்படாத எண்ணங்கள் தெரிந்தன. அன்றைய திருப்பலியும் வழக்கம்போல நாற்பது நிமிடங்கள் நீடித்தது. அதைக் கடந்து வந்த வாரங்களில், அறிக்கை நேரம் மூன்றில் நான்கு மடங்காக நீண்டது. சிறப்பு அழைப்பாளர்கள் வந்த நாள்களில் அது ஒருமணி நேரம் வரை சென்றது.

இதுபோன்ற நிலைமைகள் புதிதல்ல. நாட்டின் பெரும்பாலான பங்குகளிலும் இன்று இதேபோல் நடந்து வருகிறது. ஆனால், இந்நிகழ்வுகளின் அடியில் மக்களின் மனநிலை எவ்வாறு மாறி வருகிறது என்பதை நாம் சிந்தித்ததுண்டோ?

எழுபது, அறுபது வயதுகளில் உள்ள மூத்தோர் பெரும்பாலும், “எங்களுக்குச் சுகர், பிரஷர், வலி எல்லாம் இருக்கு. எட்டு மணிக்குப் பூசைக்கு வந்துட்டு பத்து முப்பதுக்கே வீட்டுக்குப் போற நேரத்திற்குள் வெடவெடன்னு ஆகிடுது; அதனால மாதா டி.வி.யில பூசை பார்த்துக்கலாம்னு முடிவு பண்ணிட்டோம்என்று கூறத்தொடங்கியுள்ளனர். இது அவர்களின் உடல் சோர்வை மட்டுமல்ல, மனச் சோர்வையும் வெளிப்படுத்துகிறது.

இளம் தலைமுறையினரைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அவர்கள் திருப்பலிக்கு வருவதே ஒரு சாதனை. அதன் பின்பு நீண்ட மறையுரை, நீளமான அறிக்கை என்று தொடர்கையில் அவர்களின் பொறுமை துரிதமாகக் கலைந்துவிடுகிறது. கடவுளிடம் அவர்களைக் கொண்டு சேர்க்க வேண்டிய நேரம், பதற்றமூட்டும் நேரமாக மாறிவிடுகிறது. அவர்கள் உள்ளங்களில்அன்பான விருந்தினராககடவுள் இருக்க வேண்டினால், அவர்களை ஈர்க்கும் இனிய மொழியில் சுருக்கமான செய்திகளைப் பரிமாறவேண்டும்.

இன்றைய இணையச் சுழற்சி உலகில், மனநிலை வேகமாக மாறுகிறது. சமூக வலைத்தளங்கள், நுகர்வுவெறி, சினிமா கவர்ச்சி, தொழில்நுட்ப நெருக்கடிகள்... இவற்றின் நடுவே கடவுளின் குரல் மெல்லிய ஒலியாய் மட்டுமே கேட்கிறது. இத்தகைய சூழலில், மறையுரை மற்றும் அறிக்கையால் அவர்களை இணைத்துக்கொள்ள வேண்டியவர்கள் திரு அவை அருள்பணியாளர்கள். அவர்களிடம் சிந்தனையும் புதுமையும் கலந்திருக்க வேண்டிய காலம் இது. திருப்பலி, மக்கள் சார்ந்த விழிப்புணர்வாக இருக்கட்டுமேயன்றி, மன அழுத்தம் தரும் நிகழ்வாக மாறாதிருக்க சுருக்கமான, இனிய பாங்கே வழி.

அறிக்கைஎன்பது வெறும் தகவலாக அல்ல; மாறாக, மக்களை ஊக்குவிக்கும் ஆன்மிக உரை என்று பார்க்கப்பட வேண்டும். திருத்தந்தை பிரான்சிஸ்  ஒருமுறை கூறியுள்ளார்: “மறையுரை ஏழு முதல் பத்து நிமிடங்கள் போதும்.” அதேபோல் அறிக்கைகளும் சுருக்கமானதாக இருக்க வேண்டியது அவசியம்.

அறிக்கை என்பது ஆலயத்தின் இதயத்துடிப்பு; அது மக்களை எச்சரிக்கும் விழிப்புணர்வூட்டும் ஒன்றிணைக்கும் ஓர் அசைவு. ஆனால், அதற்கு அளவு மீறிய நீளம் வரும்போது, அந்த இதயத் துடிப்பு சோர்வாகிவிடுகிறது. திருப்பலி என்பது இயற்கையின் அமைதியையும் இறைவனின் நெருக்கத்தையும் உணர்த்தும் பொன்னான தருணம்; அதனைச் சுருக்கமாக, சுவையாக, இனிமையாக வைத்திருக்கிறபோதுதான் மக்கள் உள்ளங்களில் கடவுளின் பெயர் நின்றுவிடும். கடவுளின் வார்த்தை நீண்ட வாக்கியங்களில் அல்ல; மாறாக, மனத்தைத் தொட்ட ஓர் உயிருள்ள சொல் மூலமே செல்வது. அதுவே திருப்பலியின் உண்மையான புனிதம்!

news
ஆன்மிகம்
வாழ்வின் ஆழத்திற்குள்... (அருளடையாளங்கள்: உளவியல் ஆன்மிகத் தொடர் – 27)

(தந்தை அன்புச் செல்வன், தாய் மார்த்தா, மகன் அகஸ்டின், மகள் கிறிஸ்டினா இவர்களோடு  அருள்பணியாளர் தாமஸின் உரையாடல் தொடர்கிறது)

அன்புச்செல்வன்:தந்தையே, கடந்தமுறை நாம் உரையாடியபோது, வாழ்வில் மேலோட்டமான பார்வை, ஆழமான பார்வை என்ற இரு பார்வைகள் உள்ளன என்று கூறினீர்கள். ‘நீ வேறு-நான் வேறுஎன்று பிரித்தும் பகுத்தும் பார்க்கின்ற பார்வை மேலோட்டமான பார்வை என்றும், எல்லாம் ஒன்றோடொன்று இணைந்தும் பிணைந்தும் இருக்கின்றன என்ற பார்வை ஆழமான பார்வை என்றும் கூறினீர்கள். மேலோட்டமான பார்வையிலிருந்து ஆழமான பார்வையை நோக்கி நாம் நகர்வதற்காக நமக்குக் கொடுக்கப்பட்டவையே கட்டளைகள் என்பதையும் தெளிவுபடுத்தினீர்கள். மேற்கண்ட இரு பார்வைகள் குறித்து நான் சிந்தித்துக் கொண்டிருந்தபோது, ஆழமான பார்வைக்கும் பிரபஞ்சத்தின் உண்மைத்தன்மைக்கும், அதாவது அதன் இருப்புக்கும் தொடர்பு இருப்பதாக எனக்குத் தென்பட்டது. மேலோட்டமான பார்வை நம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் தவறாகப் பார்க்கும் முறை என்றும், ஆழமான பார்வை அனைத்தையும் சரியாகப் பார்க்கும் முறை என்றும் கருதுகிறேன்.”

அருள்பணி:நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை! ஓர் உதாரணம் இக்கருத்தைத் தெளிவுபடுத்தும்! நாம் மேலோட்டமாகப் பார்க்கும்போது சூரியன் பூமியைச் சுற்றிவருவதாக நமக்குத் தென்படுகிறது. ஆனால், கலிலியோ பிரபஞ்சத்தை உற்றுநோக்கி, சூரிய இயக்கத்தைப் பற்றிய ஆழமான பார்வையைத் தனதாக்கினார். பூமியே சூரியனைச் சுற்றிவருகிறது என்ற உண்மையை எடுத்துரைத்தார். கலிலியோவின் ஆழமான பார்வையே பிரபஞ்சத்தின் உண்மைநிலை என்பது நாம் அறிந்ததுதானே!”

மார்த்தா:மேலோட்டமான பார்வை தவறானது என்றாலும், அதை அவ்வளவு எளிதில் நம்மால் விட்டுவிட முடிவதில்லையே! பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது என்று தெரிந்தாலும், நம் அன்றாட வாழ்வில்சூரியன் உதிக்கிறது, ‘சூரியன் உச்சிக்கு வந்துவிட்டது, ‘சூரியன் மறைகிறதுஎன்று சூரியன்தான் நகர்கிறது என்பது போலல்லவா நாம் பேசுகிறோம்!”

அருள்பணி: நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை. பல விசயங்கள் நமக்குத் தவறு என்று தெரிந்தாலும், அவ்வளவு எளிதில் நம்மால் அவற்றை விட்டுவிட முடிவதில்லை. அதற்கான ஒரு காரணம் பழக்கதோஷம்!”

கிறிஸ்டினா:தந்தையே, வாழ்வின் மட்டிலான மேலோட்டமான பார்வை நம் வாழ்விற்குள் பல பிரச்சினைகளைக் கொண்டு வருவதாகக் கடந்தமுறை கூறினீர்கள். அது குறித்துக் கொஞ்சம் கூறமுடியுமா?”

அருள்பணி:ஒருசில பிரச்சினைகளைப் பார்க்கலாம். முதலாவதாக, மேலோட்டமான பார்வை கொண்டு வாழும் மனிதர்கள் உறவின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்வதில்லை. தனிமனிதத் தன்மைகளையும், தனிமனித முன்னேற்றத்தையும் அளவுக்கதிகமாகத் தூக்கிப் பிடிப்பதன் காரணமாக, தங்களை அறியாமலேயே தங்களைச் சுற்றி எதிரிகளையும் எதிர்ப்புகளையும் உருவாக்கிக் கொள்கிறார்கள். நம்மைச் சுற்றி எதிரிகளும், எதிர்ப்பு மனநிலை உள்ளவர்களும் வாழ்ந்தால் அதற்கு மத்தியில் வாழ்வது எவ்வளவு கடினமானது என்பது நமக்குத் தெரியும்.”

மார்த்தா:ஐயய்யோ! அது நரக வாழ்க்கை! எங்களுக்கே ஓர் அனுபவம் உண்டு. திருமணம் ஆன புதிதில் நாங்கள் இருவரும் ஒரு வாடகை வீட்டில் குடியேறினோம். அதற்கு அடுத்த வீட்டில் வாழ்ந்தவர் என் கணவரோடு கல்லூரியில் வேலை பார்த்தவர். அங்கு நடந்த சிறு சிறு மனத்தாங்கல்களால் அவர் எங்களை எப்பொழுதுமே எதிரியாகப் பார்த்தார். அவருடைய வீட்டுக்கும் எங்களுக்குமிடையே சுமூகமான சூழல் கிடையாது. இதன் காரணமாக, எங்கள் வீட்டில் ஏதாவது மகிழ்ச்சியான நிகழ்வு நடந்தால், அவர் வீட்டில் இழவு நடந்ததுபோலச் சோகமாக இருந்தார். எங்கள் வீட்டில் ஏதாவது பிரச்சினை நடந்ததென்றால், அந்த நாள்களில் குதூகலமாக இருப்பார்.”

அருள்பணி:மேலோட்டமான வாழ்வு அந்நியப்பட்ட மனநிலைக்குக் காரணமாக இருக்கிறது. அந்நியப்பட்ட மனநிலையோ பிறரது இன்பத்தை நம் துன்பமாகவும், பிறரது துன்பத்தை நம் இன்பமாகவும் பார்க்க வைக்கிறது.”

கிறிஸ்டினா: (கிண்டலாக) “தந்தையே, நீங்கள் கூறுவதைப் பார்த்தால் நமக்கு நிறைய எதிரிகள் இருப்பது நல்லதுபோலத் தெரிகிறதே! காரணம், அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போதெல்லாம் நாம் இன்பமாக இருப்போம் அல்லவா!” (அனைவரும் சிரிக்கிறார்கள்)

அன்புச்செல்வன்: நமக்குப் பிடிக்காதவர்களுக்குத் துன்பம் நேரிட்டால், நாம் இன்பமாக இருப்போம் என்பது உண்மைதான். ஆனால், அவர்களுக்கு இன்பம் நேரிட்டால்?”

அகஸ்டின்: (சிரித்துக்கொண்டே) “வேறென்ன? நமது வயிறு எரிய வேண்டியதுதான்.”

மார்த்தா:இப்படித்தான் பல மனிதர்களது வாழ்வு போய்க்கொண்டிருக்கிறது. எனக்கு ஒரு கதை நினைவிற்கு வருகிறது. ஒரு மனிதர் மருத்துவரிடம் சென்று, ‘எனக்கு வயிறெல்லாம் எரியுது டாக்டர்! தாங்க முடியலை. எனக்கு மருந்து கொடுங்கஎன்றாராம். மருத்துவர், ‘எப்பொழுதிருந்து வயிற்றெரிச்சல் இருக்கிறது?’ என்று கேட்க, வந்தவர், ‘என் பக்கத்து வீட்டுல பரமசிவம்னு ஒருத்தர் இருக்கிறார். எனக்கும் அவருக்கும் ஆகாது. அவரு என்னைக்குக் கார் வாங்கினாரோ அன்றிலிருந்து எனக்கு வயிற்றெரிச்சல் ஆரம்பித்துவிட்டதுஎன்றாராம்.”

கிறிஸ்டினா: மேலோட்டமான மனநிலையோடு வாழும்போது வரும் இரண்டாவது பிரச்சினை என்ன தந்தையே?”

அருள்பணி:சக மனிதர்களை வசதியிலும் பொருளாதாரத்திலும் திறமையிலும் போட்டியாளர்களாகக் கருதி, அவர்களுடன் போட்டி போடுவது. அவர்களை விட ஒருபடி மேலே நாம் இருந்தால்தான் நாம் வாழ்வைச் சரியாக வாழ்வதாக நினைத்துப் புளகாங்கிதம் அடைகின்றோம். ஒருவேளை அவர்களைவிடக் கீழான நிலையில் இருக்க நேரிட்டால், கவலையாலும் கண்ணீராலும் நம் வாழ்வைக் கசப்பாக்கிக் கொள்கின்றோம்.”

அகஸ்டின்:நமது மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தனதுஅக்கினிச் சிறகுகள்என்ற புத்தகத்தில், ‘நான் பத்மபூஷன் விருது பெற்றவுடன், என்னுடன் பணிசெய்த ஒருசில விஞ்ஞானிகளால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதுவரை என்னோடு நட்போடு பழகியவர்கள் என் எதிரிகளாக மாறினார்கள்என்று குறிப்பிடுகிறார்.”

மார்த்தா: மேலோட்டமான மனநிலை மற்றுமொரு முக்கியமான பிரச்சினைக்கும் காரணமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். கடவுளின் உறவிலிருந்து அந்நியப்பட்டவர்களாக நாம் மாறுவதே அந்தப் பிரச்சினை. காரணம், நாம் மனிதர்களிடமிருந்து அந்நியப்படும்போது கடவுளிடமிருந்தும்  அந்நியப்படுகிறோம் என்று திருவிவிலியம் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது. ‘மிகச் சிறியோராகிய என் சகோதரர்-சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத் 25:40) என்று இயேசு கூறியிருக்கிறாரே!”

அருள்பணி: நீங்கள் கூறுவது மிகவும் சரி! சக மனிதர்களின் உறவிலிருந்து அந்நியப்படுவது கடவுளிடமிருந்து நாம் அந்நியப்படுவதற்குக் காரணமாக இருக்கிறது. கடவுளிடமிருந்து அந்நியப்படுவது பிரபஞ்சத்திலிருந்தே நம்மைத் துண்டித்துக்கொள்வதற்கு இணையானது. ஒரு மரத்திலிருக்கும் ஒரு கிளை தன்னை அம்மரத்திலிருந்து துண்டித்துக்கொள்வதாக நினைத்துக்கொள்வோம். இதன் காரணமாக மரத்திற்குப் பெரிய அளவில் பாதிப்பு இல்லை; ஆனால், துண்டிக்கப்பட்ட கிளை வாடி, வறண்டு ஒன்றுமில்லாமலேயே ஆகிவிடுகிறது.”

அன்புச்செல்வன்:என்னைப் பொறுத்த அளவில், இன்றைக்குப் பல மனிதர்கள் பொருளாதார வசதியில் திளைத்தாலும், உறவைப் பொறுத்த அளவில் சக மனிதர்களிடமிருந்தும் கடவுளிடமிருந்தும் பிரபஞ்சத்திலிருந்தும் துண்டிக்கப்பட்ட வாழ்வு வாழ்கின்றனர். இதன் காரணமாக மகிழ்வைப் பொறுத்த அளவில் அவர்களது வாழ்வு வாடி, வறண்டு ஒன்றுமில்லாததாக இருக்கிறது.”

அருள்பணி:இத்தகைய துண்டிக்கப்பட்ட வாழ்வே, அதாவது பாவ வாழ்வே நம்மில் சோகமாக, தனிமையாக, பயமாக, கவலையாகஎன்று பல நிலைகளில் பரிணமிக்கிறதுஇதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் வாழ்வை நாம் சரியாகவும் சிறப்பாகவும் வாழ வேண்டுமெனில், அதற்கான ஒரே வழி வாழ்வின் ஆழத்திற்குள் பயணிப்பதே! வாழ்வின் ஆழத்திற்குள் செல்லும் மனிதர்களேநீ வேறு-நான் வேறுஎன்ற மனநிலையைக் களைந்துவிட்டு (அதாவதுகளைகளைநீக்கிவிட்டு), உறவு மனநிலையோடு வாழ ஆரம்பிக்கின்றனர். ‘வாழ்வின் ஆதாரம் உறவுஎன்கின்ற உண்மையை, ஒருவர் அனுபவப்பூர்வமாக உணரும்போது மேற்காணும் தீமைகளும் துன்பங்களும் தாமாகவே களையப்படுகின்றன. இவ்வாறு வாழ்வின் ஆழத்திற்குள் பயணிப்பதற்கான மாபெரும் வாய்ப்பை வழங்கும் அருளடையாளமே ஒப்புரவு!”

(தொடரும்)

news
ஆன்மிகம்
ஒரு குரல் ஒரு பாலைவனம்

ஒரு குரல்

ஒலி குரலுடன் அடையாளப்படுத்தப்படும் உயிர்க் குறியீடு. உலகின் முதல் ஒலியே கடவுளின் குரல்தான். கடவுளின் குரல் உலகைப் படைத்தது. உலகைப் படைத்த கடவுளின் குரல் பல்வேறு சூழல்களில், பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு மனிதர்கள் வழியாக ஒலித்தது.

ஏதேன் தோட்டத்தில் தொலைந்துபோன ஆதாம், ஏவாளைத் தேடும் குரலாக ஒலித்தது. ஊர் என்ற கிராமத்தில் வாழ்ந்த குழந்தையற்ற முதியவர் ஆபிரகாமுக்கு வாக்குறுதி கொடுத்து அழைக்கும் குரலாக ஒலித்தது. எகிப்து நாட்டில் தம் மக்கள் படும் அழுகுரலைக் கேட்டு, எரியும் முள்புதரில் தோன்றி மோசேவை அழைத்து, மாற்றத்தின் குரலாக ஒலித்தது. மக்கள் தங்களுக்கு ஓர் அரசர் வேண்டும் என்றபொழுது, சவுலைத் திருநிலைப்படுத்தி அரச குரலாக ஒலித்தது. எசாயா இறைவாக்கினர் மூலம் மெசியாவை அறிவித்த மீட்பின் குரலாக ஒலித்தது.

இன்று தம் மகனின் வருகைக்காக வழியை ஆயத்தம் செய்ய, இறைவாக்குகளும் திருச்சட்டங்களும் நிறைவேற திருமுழுக்கு யோவானில் ஒலிக்கிறது. ‘மிதியடிவாரை அவிழ்க்க நான் தகுதியற்றவன்என்று தாழ்ச்சியின் குரலாக, ‘பிறர் மனைவியை வைத்திருப்பது தவறுஎன்று நீதியின் குரலாக, ‘மனம் மாறுங்கள், வழியை ஆயத்தம் செய்யுங்கள்என்று மீட்பின் குரலாக, ‘இதோ, கடவுளின் ஆட்டுக்குட்டிஎன்று மெசியாவைச் சுட்டிக்காட்டிய குரலாக ஒலித்தது திருமுழுக்கு யோவானின் குரல்.

கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்என்ற இயேசுவின் வார்த்தையை வாழ்வாக்கி, பாலைவனக்  குரலாம் திருமுழுக்கு யோவானின் குரலுக்குச் செவிசாய்ப்போம்; மெசியாவிற்கு வழியை ஆயத்தம் செய்வோம்; பிறருக்காகவும் குரல் கொடுப்போம்!

ஒரு பாலைவனம்

பாலைவனம் மனமாற்றத்திற்கான ஓர் இடம்; ஒரு மனிதனை வெறுமையாக்கும் இடம்; ஒறுத்தலின் இடம்; தன்னை ஆயத்தப்படுத்தும் இடம். பாலும் தேனும் பொழியும் கானான் தேசம் வந்தடைய நாற்பது ஆண்டுகள் பாலைவன அனுபவம் தேவைப்பட்டது. ஆகார் தன் மகன் இஸ்மாயிலைக் காப்பாற்ற பாலைவனம் தேவைப்பட்டது. யோனா நினிவே மக்களை மனமாற்ற பாலைவன அனுபவம் தேவைப்பட்டது. இறைமகன் இயேசு, தம் இறையாட்சிப் பணியைத் தொடர நாற்பது நாள்கள் பாலைவன அனுபவம் தேவைப்பட்டது. வெட்டுக்கிளியும், காட்டுத்தேனும் உண்டு, தன்னை வெறுமையாக்கி மக்களை மீட்பிற்காகத் தயார் செய்ய ஒரு பாலைவன திருமுழுக்கு யோவானுக்குத் தேவைப்பட்டது.

பாலைவனம், நீதியைக் கற்றுக்கொடுத்தது, அநீதியை எதிர்க்கச் செய்தது, உண்மையை உரக்க அறிவிக்கச் செய்தது, பல மக்களைத் திருமுழுக்கினால் மனம் மாறச்செய்தது, தாழ்ச்சியைக் கற்றுக்கொடுத்தது, மீட்பரை அடையாளப்படுத்தியது.

பாலைவன அனுபவம் நம்மையும் சீர்படுத்தும் ஆற்றுப்படுத்தும் உறுதிப்படுத்தும் உயிரூட்டும் வாழ்வு கொடுக்கும். மீட்பரைத் தரிசிக்க, மீட்பில் பங்குபெறச் செய்யும். எனவே, திருமுழுக்கு யோவானின் குரலுக்குச் செவிமடுப்போம். பாலைவன அனுபவத்தில் பங்கெடுப்போம். வழியை ஆயத்தம் செய்வோம்.

கிறிஸ்துவை மையப்படுத்தி வழியை ஆயத்தம் செய்தல்

திருமுழுக்கு யோவானின் தயாரிப்பு இயேசுவை மையப்படுத்தியிருந்தது. இயேசுவை முன்னிறுத்தி இயேசுவுக்கு முன்னோடியாக, மணமகனின் தோழராகத் தன் பணியைத் தொடர்ந்தார். “நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். எனக்குப் பின் வருபவர் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார்என்று இயேசுவின் திருமுழுக்கை முன்னிறுத்தினார் திருமுழுக்கு யோவான்.

நாங்கள் என்ன செய்ய வேண்டும்?’ என்ற பல குழுக்களின் கேள்விக்குப் பதிலளித்தார் (லூக் 3:10). கூட்டத்தினரிடம், ‘இரண்டு அங்கிகள் உள்ளவர் இல்லாதவரிடம் பகிருங்கள்என்றுபொருளாதார நீதியைவலியுறுத்தினார்வரி வசூலிப்பவரிடம், “உங்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டதை விட அதிகமாக வசூலிக்க வேண்டாம்என்று ஊழலை எதிர்த்து, ஒருமைப்பாட்டை வலியுறுத்தினார். வீரர்களுக்குஅச்சுறுத்தல்கள் மூலமாக மிரட்டிப் பணம் பறிக்காதீர்கள்என்றுநீதியைவலியுறுத்தினார்.

திருமுழுக்கு யோவானின் இறையாட்சிப்பணி மீட்பின் திட்டத்திற்கு ஆணிவேராகவும் தனிமனித மற்றும் சமூக மாற்றத்திற்கு அச்சாணியாகவும் திகழ்ந்தது. மெசியாவை எல்லாரும் கண்டுணர வழியை ஆயத்தம் செய்தார். மனமாற்றம், நம்பிக்கை, கீழ்ப்படிதல் இறையாட்சியின் பிரதிபலிப்பாக நம்மிலும் சமூகத்திலும் நிலவவேண்டும் என்று எடுத்துரைத்தார்.

திருமுழுக்கு யோவானின் குரல் நம்மில் ஒலிக்க வேண்டும். நம் சமூகங்களில் ஒலிக்க வேண்டும். நம் இதயத்திலும் உலகிலும் வழியை ஆயத்தம் செய்ய வேண்டும். “வாருங்கள், கடவுளின் ஆட்டுக்குட்டியைக் கண்டு கொள்வோம்என்ற திருமுழுக்கு யோவானின் வழியை ஆயத்தம் செய்வோம். ஓங்கிய குரலாக ஒலிப்போம். மாற்றம் நம்மிலும் நிகழட்டும், கிறிஸ்து நம்மில் பிறக்கட்டும்!

news
ஆன்மிகம்
திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதரால் வரையறுக்கப்பட்ட மரியாவின் அமல உற்பவக் கோட்பாடு (Immaculate Conception Defined by Pius IX) (திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி – 23)

1. மரியாபுனிதைஎன்று அழைக்கப்பட வேண்டும் என்பதற்காகவே அவர் கருவில் உருவானதிலிருந்தே (உருவான முதல் நொடியிலிருந்து) பாவத்தின் ஒவ்வொரு கறையிலிருந்தும் பாதுகாக்கப்பட்டிருந்தார் என்ற திடமான நம்பிக்கையானது பல நூற்றாண்டுகளாக, திருவழிபாடு மற்றும் இறையியலில் படிப்படியாக ஒரு தளத்தை ஏற்படுத்தியது. 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இந்த வளர்ச்சியானது சிறப்புமிக்க அமல உற்பவத்தின் கோட்பாட்டு வரையறைக்கான வேண்டுகோளுக்கு இட்டுச்சென்றது.

கிட்டத்தட்ட இந்த நூற்றாண்டின் மத்தியில், இந்த விண்ணப்பத்தை ஏற்பதென்ற நோக்கத்தோடு, இறையியலாளர்களைக் கலந்தாலோசித்த பிறகு ஒருதிருச்சங்கம்கூட்டப்படுவதைப் போன்று, திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் அத்தகைய கோட்பாட்டிற்கான சாத்தியம் மற்றும் சந்தர்ப்பம் பற்றி ஆயர்களிடம் கேள்வி எழுப்பினார். அதன் முடிவானது குறிப்பிடும்படியாக இருந்தது. 604 ஆயர்களில் பெரும்பான்மையானவர்கள் அக்கேள்விக்கு நேர்மறையான பதிலைத் தந்தார்கள்அந்தக் கோட்பாட்டு வரையறையில் திரு அவையின் நம்பிக்கை வெளிப்படுத்தப்பட வேண்டும் என்ற அவருக்கு முந்தைய திருத்தந்தையின் அக்கறையை வலியுறுத்தி, அத்தகையதொரு பரந்துபட்ட கலந்தாலோசனைக்குப் பிறகுகவனத்தோடு ஆவணத் தயாரிப்பைத் தொடங்கினார்.

பேறுபெற்ற கன்னி பாவத்தின் ஒவ்வொரு கறையிலிருந்தும் விலக்கப்பட்டிருக்கிறார்

இந்த வெளிப்படுத்தப்பட்ட கோட்பாட்டைத் தீர்மானிப்பதற்கென ஒன்பதாம் பத்திநாதரால் அமைக்கப்பட்ட இறையியலாளர்களுடைய சிறப்புக் குழு திரு அவையின் வழக்கத்திற்கான அடிப்படை பங்கை வகுத்தது. திரு அவையின் வாழ்வு அனுபவங்களிலிருந்தும், கிறித்தவ மக்களின் நம்பிக்கை மற்றும் வழிபாட்டிலிருந்தும் எடுக்கப்பட்ட சொல்லாடல்களை விரும்பிய இந்த முறையானது, முறையான வரையறைகளுக்கான கோட்பாட்டின் உருவாக்கத்திற்கு இட்டுச்சென்றது

இறுதியாக, 1854-இல் Ineffabilis Deus’ என்ற மடல் வழியாகத் திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் அவர்கள், ‘அமல உற்பவிஎன்கிற மரியன்னை கோட்பாட்டை இவ்வாறு கூறி பிரகடனம் செய்தார்: “கன்னி மரியா அவர் கருவில் உருவான நாளிலிருந்தே கடவுளின் தனிப்பட்ட மற்றும் சிறப்பான அருளினால், இயேசு கிறிஸ்துவினுடைய சிறப்புத் தகுதியின் அடிப்படையில், முதல் பாவத்தின் ஒவ்வொரு கறையிலிருந்தும் பாதுகாக்கப்பட்டிருந்தார். இதன் காரணமாக, இது உறுதியாகவும் தொடர்ந்து, கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொண்ட அனைவராலும் நம்பப்பட நாங்கள் அறிவித்து, பறைசாற்றிப் பிரகடனம் செய்கின்றோம் (DS 2803).

2. ‘அமல உற்பவிஎன்ற மரியன்னை கோட்பாட்டின் அறிவிப்பானது, நம்பிக்கையின் மிக முக்கியமானதொரு குறிப்பை (essential datum of faith) வெளிப்படுத்துகிறது. திருத்தந்தை ஏழாம் அலெக்சாண்டர் கி.பி. 1661-ஆம் ஆண்டு எழுதிய ‘Sollicitudo’ என்கிற தனது திருமடலில் மரியாவின் ஆன்மாவானது, ‘அதன் படைப்பு மற்றும் உடலினுள் உட்செலுத்தப்படுதலில்பாதுகாக்கப்பட்டதைப் பற்றிக் கூறுகின்றார் (DS 2017). இருப்பினும், ஒன்பதாம் பத்திநாதரின் வரையறை, எவ்வாறு ஆன்மாவானது உடலினுள் உட்செலுத்தப்படுகிறது மற்றும் மரியாவுக்கு  அது எவ்வாறு தொடர்புபடுத்தப்படுகிறது என்பது பற்றி விளக்கி, கருவில் உருவானது முதல் அவர் எவ்வாறு முதல் பாவத்தின் ஒவ்வொரு கறையிலிருந்தும் பாதுகாக்கப்பட்டார் என்கிற உண்மையை அனைத்து விளக்கங்களிலும் விவரித்துக் கூறுகின்றார்.

முதல் பாவத்தின் ஒவ்வொரு கறையிலிருந்தும்விடுதலை என்பது எல்லாப் பாவங்களிலிருந்தும் முழு விடுதலை அடைந்ததன் ஒரு நேர்மறை விளைவு மற்றும் மரியாவின் நிறைவான புனிதத்துவத்தை அறிவிப்பதாகக் கருதப்படுகின்ற இந்தக் கோட்பாட்டு வரையறைக்கான அடிப்படைப் பங்களிப்பைச் செய்கின்ற ஒரு கொள்கையாகப் பார்க்கப்படுகின்றதுஉண்மையில், மேற்கத்திய பாரம்பரியத்தில் எழுந்த முதல் பாவம் பற்றிய தொடக்ககால சர்ச்சைகளின் விளைவான, மரியாவிற்கான சிறப்புரிமையின் எதிர்மறை வடிவமைப்பானது, கிழக்கத்திய பாரம்பரியத்தில் மிகத் தெளிவாக வலியுறுத்தப்பட்ட மரியாவினுடைய  புனிதத்துவத்தின் நேர்மறை கருத்துகளினால் எப்பொழுதுமே ஈடு செய்யப்பட வேண்டும்.              

ஒன்பதாம் பத்திநாதரின் வரையறையானது, முதல் பாவத்திலிருந்தான விடுதலையை மட்டுமே குறிப்பிடுகின்றது; பால்வகைச் சேர்க்கையிலிருந்தான விடுதலையைச் (freedom from concupi
-scence)
சேர்க்கவில்லை. எனினும், மரியாவினுடைய  முதல் பாவத்தின் ஒவ்வொரு கறையிலுமிருந்தான முழு பாதுகாப்பென்பது, திரிதெந்து திருச்சங்கத்தின்படி (Council of Trent), பாவத்திலிருந்து வந்து பாவத்தின்மீது நாட்டம் கொள்ளச் செய்கின்ற ஒழுங்குபடுத்தப்படாத மனோபாவமான, பால்வகைச் சேர்க்கையிலிருந்தான அவருடைய விடுதலையின் விளைவையும் (as a consequence her freedom from concupiscence) கொண்டிருக்கின்றது (DS 1515).  

3. ‘எல்லாம் வல்ல கடவுளின் தனிப்பட்ட அருள் மற்றும் சிறப்புச் சலுகையினால்வழங்கப்பட்ட இந்த முதல் பாவத்திலிருந்தான பாதுகாப்பு என்பது, முற்றிலும் இறை ஆதரவினால் அவருடைய பிறப்பின் முதலே (கருவாக உருவான முதல் நொடியிலிருந்து) மரியா பெற்றுக்கொண்ட பேறுபலனாகும்.

இந்தக் கோட்பாட்டு வரையறையானதுமரியாவிற்கான தனிப்பட்ட சிறப்புச் சலுகை தனித்தன்மையான ஒன்று எனக் கூறவில்லை. ஆனால், அதை இயல்பாகவே உணரச் செய்கின்றது. இருப்பினும், இந்தத் தனித்தன்மையின் உறுதி பற்றி 1953-ஆம் ஆண்டு திருத்தந்தை 12-ஆம் பத்திநாதர் தனது ‘Fulgens corona’ என்ற சுற்றறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அதில் திருத்தந்தை அவர்கள், “மற்ற எந்த நபருக்கும் எப்பொழுதும் வழங்கப்படாத தனிச்சிறப்பு மிக்க சிறப்புச் சலுகைஎன்று கூறுகின்றார் (AAS 45 (1953), 580). இவ்வாறு, இது எந்தவித அடிப்படையுமில்லாமல் சிலரால் ஆதரிக்கப்பட்ட, புனித யோசேப்புவுக்கும் இந்தச் சிறப்புச் சலுகையை உடைமையாக்குவதைத் தவிர்த்தது. கன்னி மரியா அமல உற்பவியாகக் கருத்தரித்தலின் தனிப்பட்ட அருளை மனுக்குலத்தின் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் சிறப்புத் தகுதியின்  நிமித்தம் பெற்றுக்கொண்டார், அதாவதுஅனைத்துலக மீட்புச் செயலின் பொருட்டுப் பெற்றுக்கொண்டார்

கோட்பாட்டு வரையறையின் ஏடானது, மரியா மீட்கப்பட்டார் என்று வெளிப்படையாகப் பிரகடனம் செய்யவில்லை. ஆனால், ‘Ineffabils Deus’ என்கிற அதே திருமடல் மற்றோர் இடத்தில், “மிகவும் மேன்மையான வகையில் மரியா மீட்கப்பட்டார்என்று கூறுகிறது. இது வழக்கத்திற்கு மாறானதோர் உண்மையாக இருக்கிறது. “கிறிஸ்து அவருடைய தாயின் மீட்பராக இருக்கிறார்; அவருடைய வாழ்வின் தொடக்கம் முதலே அவரில்மிகச்  சரியான வகையில்அவரின் மீட்புச் செயலை நிறைவேற்றுகின்றார்(Fulgens corona, ASS 45 (1953], 581). இதையே, “மரியாவில்  மீட்பின் மிக உன்னதமான கனியைதிரு அவை   வியந்து பாராட்டுகின்றது மற்றும் மேன்மைப்படுத்துகின்றது என்று இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடானது அறிவிக்கின்றது (திருவழிபாடு, எண்.103).  இந்தச் சிறப்பு வரையறை இறை மக்களின் நம்பிக்கைக்கு உதவுகிறது.

4. ஆர்ப்பரிப்போடு அறிவிக்கப்பட்ட இந்தக் கோட்பாடானதுகடவுளால் வெளிப்படுத்தப்பட்டதொரு கோட்பாடுஎன்று தெளிவாகக் குறிக்கப்பட்டது. திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர், “இது உறுதியாகவும் தொடர்ச்சியாகவும் எல்லா நம்பிக்கையாளர்களாலும் நம்பப்பட வேண்டும்என்று கூறு கின்றார். ஆகவே, யாரெல்லாம் இதைத் தன்னுடையதாக்கிக் கொள்ளவில்லையோ அல்லது இதற்கு மாறான கருத்தைக் கொண்டுள்ளாரோ அவர், ‘நம்பிக்கையில் பேரழிவைச் சந்திக்கின்றார்அல்லதுகத்தோலிக்க ஒருமைப்பாட்டிலிருந்து தன்னை விலக்கிக்கொள்கின்றார்என்றும் கூறுகின்றார்

அமல உற்பவிஎன்கிற இந்த மரியன்னை கோட்பாட்டு உண்மையை அறிவிப்பதில், அகில உலகத் திரு அவைக்குமான மேய்ப்பர் என்கிற வகையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல் வத்திக்கான் சங்கத்தில் பிரகடனப்படுத்தப்பட்ட தவறா நிலையுடைய போதனையின் அதிகாரத்தைப் (power of infallible teaching) பயன்படுத்துவதில் எனக்கு முந்தைய திருத்தந்தை மிகவும் கவனமாக இருந்தார். இவ்வாறாக, அவர் தனது  தவறா நிலையுடைய போதனையைக் கடவுளுடைய மக்களின் நம்பிக்கைக்கு உதவுகின்ற வகையில் செயல்பாட்டிற்குக் கொண்டுவந்தார். மேலும், அவர் இதை மரியாவைச் சிறப்பு செய்வதற்காகப் பயன்படுத்தினார்என்று  திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் குறிப்பிட்டார்.

மூலம்: John Paul II, Immaculate conception defined by Pius IX, in kL\'Osservatore Romano, Weekly Edition in English, 19 June 1996, p.11.

news
ஆன்மிகம்
அன்பும் நட்பும் (சதுக்கத்தின் சப்தம் – 6)

இயேசுவின் வாழ்க்கை, மரணம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றில் நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் அன்புகூர வேண்டும் என்ற அன்புக் கட்டளை மையம் கொண்டுள்ளது. இக்கட்டளை கிறித்தவத்தின் அடையாளமல்ல; மாறாக, மனிதாபிமானத்தின் ஆழமான வெளிப்பாடு; உடன்பிறந்த உறவு; மனித வாழ்க்கையின் அடித்தளம்.

நமது பிறப்பு முதல் வளர்ச்சிவரை, பிறருடனான உறவுகளின் ஆதரவு இல்லாமல் நாம் வாழமுடியாது. இருப்பினும், உலகம் இன்று மோதல்கள், அநீதிகள், தனிமைகள் மற்றும் வெறுப்பால் சிதறிப்போயுள்ளது. இந்த இருளை வெல்லும் ஒரே ஒளி உடன்பிறந்த அன்பே (யோவா 15;12-15) என்ற மையப்பொருளோடு நமது திருத்தந்தை லியோ தனது புதன் மறைக்கல்வி உரையை நிகழ்த்தினார்.

அன்பில் வீரம்: மில்டன் ஆலிவ்

சிகாகோவில் ‘மில்டன் ஆலிவ் பார்க் என்ற ஒரு நகராட்சி பூங்கா உள்ளது. இந்தப் பூங்காவின் பெயர் ஒரு வீரத்தின் நினைவாக வைக்கப்பட்டது. மில்டன் ஆலிவ் என்பவர் 19 வயது போர்வீரர். அவர் வியட்நாமில் போராடியவர். 1965, அக்டோபரில் ஒரு கையெறி குண்டு நேரடியாக வெடிக்க இருந்தபோது, அவர் தன்னைத்தானே குண்டின்மீது வீசி, நான்கு தோழர்களின் உயிரைக் காப்பாற்றினார். மில்டன் ஆலிவ் தன் உயிரை இழந்தபின், அவருக்கு மரியாதை பதக்கம் வழங்கப்பட்டது. அந்த நேரத்தில் அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் ஜான்சன் கூறியதாவது: “அவர் இறக்க முடிவு செய்த அந்த நிமிடம் மிகவும் கடினமானது. அதேநேரத்தில் அவர் மற்றவர்களை முதலிடத்தில் வைத்து, தன்னைக் கடைசியில் வைத்தார். இது எவ்விதமான மனிதனாலும் எடுக்க முடியாத உயர்ந்த முடிவாகும் என்று நான் நம்புகிறேன்.” எனவே, அந்த வீரத்தின் நினைவாக, பூங்காவின் பெயர் ‘மில்டன் ஆலிவ் பார்க் என்று வைக்கப்பட்டுள்ளது. மில்டன் ஆலிவ் எதிர்கொண்ட சூழ்நிலை கடுமையாக இருந்தது. ஆனால், எவ்வளவு சுலபமான சூழ்நிலைகளில்கூட, மற்றவர்களை முன்வைத்துக்கொள்வதில் நாம் தயாராக இருக்கிறோமா?

ஒரு ஹீரோ எப்போதும் கூறுவதுபோல, “ஒரு ஹீரோ தன்னால் பாதுகாக்க முடியாததைத் தியாகம் செய்து, மற்றவர்களைக் காப்பாற்றுகிறான்.” ஆனால், நம்முடைய நாயகன் இயேசுவோ நம்மீது கொண்ட அன்பினால் தம்மால் இயன்றபோதும் கூட மற்றவரைத் துன்புறுத்தாது, தாமே தம் சாவை வலிந்து பற்றிக்கொண்டார்.

இயேசுவின் நண்பர்கள் யார்? கிறித்தவ வாழ்வின் நான்கு முக்கிய அடையாளங்கள்

மனித வாழ்க்கையில் நட்பு ஒரு பெரும் செல்வம். ஆனால், இந்த உலகின் எந்த உறவையும் மிஞ்சும் உயர்ந்த உறவு ஒன்று உள்ளது; அது இயேசுவின் அன்பு நட்புறவு! யோவான் 15:12-17-இல் இயேசு, “நீங்கள் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால், நீங்கள் என் நண்பர்கள் என்று கூறுகையில், தன்னைத்தானே எல்லாருக்கும் நண்பன் என அறிவிப்பதில்லை; மாறாக, தமது நண்பர்களின் பண்புகளைத் தெளிவாகக் கூறுகிறார். இன்று நாமும் அந்த நற்செய்தி சத்தியத்தை ஆராய்ந்து, இயேசு நம்மைத் தம் ‘நண்பர்கள் என்று அழைப்பாரா? என்பதைப் பார்ப்போம்.

1. அன்பு - இயேசுவின் நண்பர்களின் முதன்மை அடையாளம் (யோவா 15:12-13,17)

இயேசு தமது சீடர்களை, “ஒருவருக்கொருவர் அன்பு செய்யுங்கள் என்று ஒரே இரவில் பலமுறை கட்டளையிட்டார். ஏனெனில், அன்பு பளபளக்கும் வார்த்தை அல்ல; தன்னலமில்லாத அர்ப்பணிப்பு. அவருடைய அன்பு என்பது சிலுவையில் தம்மைத் தாமே பலியாக அளித்த அன்பு. இன்றும் கிறித்தவர்கள் நடுவே பல மோதல்கள், பிளவுகள் ஏற்படுவதற்குக் காரணம் தன்னலம். அன்பு உணர்ச்சி மட்டுமல்ல, அது செயலாக வெளிப்படும் தியாகம். வீட்டில், தேவாலயத்தில், சமூகத்தில் நாமே முதலில் தன்னலத்தை மறுத்து, மற்றவரின் நன்மையை நாடும்போதுதான் கிறிஸ்துவின் அன்பு தெரிய வரும்.

இயேசுவின் சீடர்கள் ஒரேமாதிரியான மனிதர்கள் அல்லர்; மத்தேயு - உரோமை பேரரசின் அதிகாரி; சீமோன் - உரோமை அரசுக்கு எதிராகப் போராடிய தீவிரவாதி. இருவரையும் ஒரே குழுவில் வைத்து, “அன்பு செய்யுங்கள் என்று கட்டளையிட்டது அன்பின் உண்மையான சோதனை. தேவாலயங்களிலும் இதே சோதனை இன்று நடக்கிறது. இயேசுவின் நண்பராக இருக்க விரும்புகிறவர்களுக்கு அன்பு கட்டாயம்!

2. கீழ்ப்படிதல் - நட்பின் உறுதியான அடையாளம் (யோவா 15:14)

இயேசு கூறுகிறார்: “என் கட்டளைகளைச் கடைப்பிடித்தால் நீங்கள் என் நண்பர்கள்.” கீழ்ப்படிதல் நம்மை நண்பர் ஆக்குவதில்லை; ஆனால், நண்பனாகியவரின் அடையாளம் அதுவே. இயேசுவுடன் நெருக்கம், அவரது வார்த்தையை அறிந்து, அதை வாழ்வில் செயல்படுத்தும் இடத்தில்தான் இருக்கிறது. இயேசுவின் நண்பர் என்ற பெயர் வாயால் கூறப்படும் ஒரு பட்டம் அல்ல; வாழ்க்கை நடத்தையால் தெரியும் ஓர் உண்மை.

3. உண்மையைப் புரிந்துகொள்ளுதல் - நண்பர்களுக்குக் கிடைக்கும் சிறப்பு (யோவா 15:15)

அடிமைக்குத் தலைவனின் நோக்கம் தெரியாது. ஆனால், நண்பருக்கு எல்லாம் வெளிப்படையாகக் கூறப்படும். அதுபோல இயேசு, தந்தையிடமிருந்து கேட்ட அனைத்தையும் தமது சீடர்களோடு பகிர்ந்தார்.

இன்று நமக்காகத் தூய ஆவி மற்றும் இறை வார்த்தைகள் இறைவனுடைய நோக்கங்கள், நியாயங்கள், உண்மைகளை வெளிப்படுத்துகின்றன. இதனால் கிறித்தவர்கள் உலகத்தின் எந்த ஞானியையும் மிஞ்சிச் செல்லும் உண்மையை அறிகிறார்கள்:

படைப்பாளியான கடவுளை அறிதல்.

மீட்பின் வழியை, அருளைப் புரிதல்.

நிலைவாழ்வின் உறுதித்தன்மையை உறுதிப்படுத்துதல்.

வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் இறைவனுடைய நோக்கத்தை ஆழமாக அறிதல்.

உண்மையைப் புரிந்து, அதன்படி வாழ்வதே இயேசுவின் நண்பர்களின் மற்றோர் அடையாளம்.

4. கனி கொடுத்தல் - தேர்வுக்குரிய நோக்கம் (யோவா 15:16)

இயேசு தெளிவாகக் கூறுகிறார்: “நீங்கள் என்னைத் தேர்ந்தெடுக்கவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன்.” அவரது அழைப்பு வெறும் மீட்புக்காக மட்டுமல்ல; மாறாக, கனி கொடுக்க. இந்தக் கனி கிறிஸ்துவைச் சந்திக்கும் ஆத்துமாக்கள். அவர்களை அவர் காக்கிறார்; அவர்களின் வாழ்க்கை நிலைத்த கனி. ஆனால், கனி அளிப்பது மனித முயற்சியால் அல்ல, செபத்தால்! இறைவன் மட்டுமே தமது இதயத்தைத் திறந்து புதிய வாழ்க்கை அளிக்க முடியும்.

அனைவரும் சகோதர-சகோதரிகள் என அசிசியின் புனித பிரான்சிஸ் அறிவித்த ஆத்தும குரல், இன்றும் அதே வலிமையுடன் நம்மில் ஒலிக்கிறது. மனிதர்களை வேறுபடுத்தாமல் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க அழைக்கிறது நமது கிறித்தவ வாழ்வு. திருத்தந்தை பிரான்சிஸ் வெளியிட்ட ‘Fratelli tutti’ இப்படிப்பட்ட உலகளாவிய சகோதரத்துவத்தை மீண்டும் நினைவூட்டி, ‘இயேசுவின் அன்புக் கட்டளை புதியது; ஏனெனில், அதனை அவர் சிலுவையில் முழுமைப்படுத்தினார் என்கிறது.

நான் உங்களிடம் அன்புகொண்டதுபோல...” என்பது ஒரு குடும்ப மரபு அன்பல்ல; தியாகமும் மன்னிப்பும் நிறைந்த மறுபிறப்பு அன்பு. இந்த அன்பு நம்மைச் சுயநலம், பிரிவினை, பகைமை ஆகியவற்றிலிருந்து விடுவித்து, கிறிஸ்துவின் ஆவியில் புதுப்பிக்கிறது. நாம் உண்மையிலே ‘உடன்பிறந்தோர் என வாழத்தொடங்கும்போது, கிறிஸ்துவின் பாதை நம்முடைய வாழ்க்கையில் வெளிச்சமாகிறது. எனவே, அன்பில் ஒன்றிப்போம்; கிறிஸ்துவின் சமாதானத்தை உலகில் விதைப்போம்.

news
ஆன்மிகம்
“நான் உன்மீது அன்பு செலுத்தி வருகிறேன்!” - (திவெ 3:9) திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் திருத்தூது ஊக்க உரை “Dilexi Te”

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ‘இயேசு நம்மீது அன்புகூர்ந்தார் (Dilexit Nos) என்ற தனது 4-வது சுற்றுமடலை 2024-இல் வெளியிட்டார். அதில் இயேசுவின் திரு இருதய இறை-மனித அன்பை மிக அருமையாக எடுத்துக்காட்டுகிறார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நான்கு சுற்றுமடல்கள்

1. Lumen Fidei – The Light of Faith’ -  ‘நம்பிக்கையின் ஒளி - திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட் அவர்களோடு இணைந்து 2013-இல் வெளியிட்ட சுற்றுமடல்.

2. ‘Laudato Si’- ‘நம் பொது இல்லமாகிய பூமியைப் பாதுகாத்தல், 2015.

3. ‘Fratelli Tutti’ - ‘அனைவரும் உடன்பிறந்தோர், 2020.

4. Dilexit Nos’ - ‘அவர் நம்மை அன்பு செய்தார்.’ இயேசுவின் திரு இருதய இறை-மனித அன்பு, 2024.

தொடர்ந்து திரு அவை ஏழை எளியவர்மீது கொள்ளவேண்டிய அன்பு, அக்கறை என்ற ஊக்க உரையை தன் வாழ்வின் இறுதிநாள்களில் எழுதத் தொடங்கினார். கிறிஸ்து நம் ஒவ்வொருவரிடமும் நேரடியாகப் பேசுவதுபோல - “நான் உன்மீது அன்பு செலுத்தி வருகிறேன் (திவெ 3:9) என்ற தலைப்பை, தான் எழுதத் தொடங்கிய ஊக்க உரைக்குக் கொடுத்தார். இதை எழுதி நிறைவு செய்வதற்குமுன் இறைவன் அவரைத் தம்மிடம் அழைத்துக்கொண்டார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் விருப்பத்தை நான் பகிர்ந்துகொள்கிறேன். அவர் எழுதத் தொடங்கிய உரையோடு எனது சில சிந்தனைகளையும் சேர்த்துக்கொள்கிறேன். எனது ஆட்சியின் தொடக்கத்தில் புனித பிரான்சிஸ்கு அசிசியாரின் நினைவு நாளாகிய 04.10.2025-இல் இதில் கையொப்பமிட்டு, 9-ஆம் தேதி ‘Dilexi Te’ -  ‘நான் உன்மீது அன்பு செலுத்தி வருகிறேன் (திவெ 3:9) என்ற என் திருத்தூது ஊக்க உரையாக வெளியிடுகிறேன்என்கிறார் திருத்தந்தை லியோ அவர்கள்.

எல்லாக் கிறித்தவர்களும் கிறிஸ்துவின் அன்பையும், அதோடு மிக நெருங்கிய தொடர்புடைய கிறிஸ்துவின் அன்பிலிருந்து பிரிக்க இயலாத திரு அவை, ஏழைகள்மீது கொண்ட அன்பும் அக்கறையும் இந்தத் திருத்தூது ஊக்க உரையின் மையக்கருத்தாகும். இதை நான் ஐந்து தலைப்புகளில் விரித்துரைக்கிறேன். அவை முறையே:

1. ஒருசில முகாமையான வார்த்தைகள் -A Few Essential Words.

2. கடவுள் ஏழைகளைத் தேர்ந்தெடுக்கிறார் - God Chooses the Poor.

3. ஏழைகளுக்கான திரு அவை - A Church for the Poor.

4. தொடரும் வரலாறு - A History that Continues.

5. நிரந்தர சவால் - Constant Challenge

நான் உன்மீது அன்பு செலுத்தி வருகிறேன்’ (Dilexi Te)

முகாமையான சில வார்த்தை கள் - A Few Essential Words.

முதல் அதிகாரம் பெண் ஒருவர் இயேசுவின் தலையில் விலையுயர்ந்த நறுமணத் தைலத்தை ஊற்றுவதோடு தொடங்குகிறது (மத் 26:6-13). சில சீடர்கள் இதை விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே எனக் கோபமடைந்தனர்ஆனால், அப்பெண் இயேசுவில் துன்புறும் மெசியாவைக் காண்கிறார். இன்னும் சில நாள்களில் இத்தலையில் முள்முடி வைத்து அழுத்தப்படும். எனவே, இப்பெண் இப்போதே இயேசுமீது தனது முழு அன்பையும் பொழிகிறார். இச்செயல் இயேசுவுக்கு அதிக ஆறுதல் அளித்திருக்க வேண்டும்.

ஏழைகள் எப்போதும் உங்களோடு இருக்கிறார்கள்; ஆனால், நான் எப்போதும் உங்களோடு இருக்கப்போவதில்லை. என்னுடைய அடக்கத்திற்கு இப்பெண் என்னை ஆயத்தம் செய்திருக்கிறார்என்றார் இயேசு. மேலும், “உலகில் எங்கெல்லாம் நற்செய்தி அறிவிக்கப்படுமோ, அங்கெல்லாம் இப்பெண் செய்ததும் எடுத்துக்கூறப்படும்; இவரும் நினைவுகூரப்படுவார்என்றார். இதனால் ஏழைகளுக்கு துன்பத்தில், பிரச்சினைகளில் இருப்பவர்களுக்குச் செய்யப்படும் மிகச்சிறிய அன்புச் செயலும் மறக்கப்படாது; மாறாக, நினைவுகூரப்படும். இத்தனைக்கும் இப்பெண் ஊர் பேர் தெரியாத ஒருவர்.

ஆண்டவரை அன்பு செய்வதென்பது ஏழைகளை அன்பு செய்வதாகும். “சின்னஞ் சிறியோருக்குச் செய்தது, எனக்குச் செய்தது...” (மத் 25:40) என மக்களினத்தார் அனைவருக்கும் தீர்ப்பு நிகழ்வில் மிகத் தெளிவாகக் கூறுகிறார் ஆண்டவர்.

சின்னஞ்சிறியோருக்குச் செய்வது வரலாற்று இயேசுவைச் சந்திப்பதற்கு மிக அடிப்படையான வழி என இயேசு இங்கே வெளிப்படுத்துகிறார். ஏழைகள் வழியாக இன்று கிறிஸ்து நம்மிடம் பேசுகிறார்.

கர்தினால் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவர் அருகில் பிரேசில் நாட்டு கர்தினால் கிளாடியோ ஹமூமஸ் இருந்தார். அவர் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோவை அரவணைத்துக் கொண்டு, “ஏழைகளை மறந்துவிடாதீர்கள்என்றார். உடனே புனித பிரான்சிஸ் அசிசியார் இவரது நினைவுக்கு வந்தார். அவருடைய பெயரையே திருத்தந்தை எடுத்துக்கொண்டார். இந்தப் பெயரை இதற்கு முன் எந்தத் திருத்தந்தையும் தேர்ந்தெடுக்கவில்லை. புனித பிரான்சிஸ் அசிசி என்ற பெயர் ஏழைகளின் அடையாளம், குறியீடு. ஏழைத் தொழுநோயாளியில் கிறிஸ்துவைச் சந்தித்த நிகழ்வுதானே அசிசியாரின் வாழ்வையே மாற்றியது!

புனித பவுல் எருசலேமுக்குச் சென்றபோது அங்குள்ள மூப்பர்களை, “ஏழைகளுக்கு உதவி செய்ய மறக்க வேண்டாம்எனக் கேட்டுக்கொண்டார். “அதைச் செய்வதிலே நான் முழு ஆர்வத்தோடு ஈடுபட்டிருந்தேன் (கலா 2:10) என்றார் பவுல்.

இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கமும் திருத்தந்தை புனித 6-ஆம் பவுலும் திரு அவை பின்பற்ற வேண்டிய ஆன்மிகத்திற்கு, நல்ல சமாரியர் அடிபட்டுக் கிடந்தவருக்கு உதவிய உவமையை நம் கண்முன் வைக்கின்றனர்.

ஏழைகளுக்கு முன்னுரிமை கொடுத்து உதவுவது என்பது திரு அவையையும், நாம் வாழும் சமுதாயத்தையும் புதுப்பிக்கும்; சுயநலத்திலிருந்து நம்மை விடுவிக்கும்; ஏழைகளின் கூக்குரலுக்குச் செவிமடுக்க உதவும்.

இவ்வாறே பழைய ஏற்பாட்டில் யாவே கடவுள் எகிப்தில் அடிமைப்பட்டுக்கிடந்த ஏழை இஸ்ரயேலரின் கூக்குரலைக் கேட்டு, மோசே வழியாக அவர்களை விடுவித்தார் (விப 3:7-12).

ஏழைகளின் குரலைக் கேட்கும்போது, நாம் இறைவனின் இதயத்திற்குள் நுழைய கேட்டுக்கொள்ளப்படுகிறோம். எப்போதும் இறைவன் ஏழைகள், துன்பப்படுவோர், தேவையில் இருப்பவர்கள் குறித்து மிகுந்த அக்கறை கொள்கிறார். ஏழைகளின் குரலை நாம் கேட்கவில்லையெனில், அவர்கள் ஆண்டவரை நோக்கி நமக்கு எதிராக முறையிடுவர். அது நம்மைக் குற்றத்திற்கு உள்ளாக்கும் (இச 15:9).

பலவகையான ஏழ்மைகள் உள்ளன. அடிப்படைத் தேவையின்றி உழலும் ஏழ்மை, சமுதாயத்தால் ஒதுக்கப்படும் ஏழ்மை, தங்களுடைய மனித மாண்புக்கும் சுதந்திரத்திற்கும் குரலெழுப்ப முடியாத ஏழ்மை, மின்சாரம் இன்றி வாழும் ஏழ்மை (இது ஏழ்மையாகக் கருதப்படுவதில்லை). இத்தகைய ஏழ்மைகள் செய்தித்தாள்களில் முக்கியத்துவம் பெறுவதில்லை.

பெண்கள் இரண்டு மடங்கு ஏழைகளாக்கப்படுகின்றனர். இவர்களைத் தந்தை வழி ஆணாதிக்கச் சமுதாயம் ஒதுக்குகிறது. இவர்கள் வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். தங்கள் உரிமைகளை நிலைநாட்ட இயலாதவர்களாக ஆக்கப்படுகின்றனர். இப்படியெல்லாம் இருந்தும் பெண்கள்தான் குடும்பப் பாரத்தைச் சுமந்து நிற்கின்றனர்.

கருத்தியல் முற்சார்புகள், ஏழ்மை என்பது முன்போல் இல்லை, பொருளாதாரத்தில் நாம் வளர்ந்திருக்கிறோம் என்கிறது. இது ஒருவகையில் உண்மைதான். ஆனால், இன்று வறுமையும் ஏழ்மையும் மிக அதிகமாகவே கூடியிருக்கின்றன. ஒருங்கிணைந்த முழு மனித வளர்ச்சி இல்லை. உண்மையான எதார்த்தம் நம் கண்களைக் குருடாக்குகிறது.

ஏழைகள்மட்டிலான இரக்கச் செயல்பாடுகளுக்கு நம்மில் ஒருமனநிலை மாற்றம்வேண்டும்.