இறைத்தந்தையின் பேரன்பில் நம்பிக்கை கொண்டு வாழ, வழிகாட்டும் ஒளியாக ஒளிரும் இயேசு ஆண்டவர், அக ஒளியாக உறைந்து நம்மில் அருள் ஒளி பொழிகின்றார். அவரது வழிநடத்துதலில் செய்யும் நற்செயல்கள் நம்மைப் பேறுபெற்றவர்களாக உருவாக்கும். சுடரொளியாக நாம் உரையாடி உறவாடும் அனைவரும் ஒளியின் மக்களாக விளங்குவர். இறைத் தந்தையின் பேரன்பில் நம்பிக்கைகொண்டு அவரை மாட்சிப்படுத்துவர். “உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க! அப்பொழுது, அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு, உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்” (மத் 5:16) என்று இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளுக்கு உயிர் கொடுக்கும் அருளைப் பெற்றுக்கொள்கின்றோம்.
நம்பிக்கையாளர்கள்
நிலைவாழ்வை நோக்கிப் பயணிக்கும் எதிர்நோக்கின் திருப்பயணிகளாக வாழ வல்லமை பெற்றுக்கொள்கின்றோம். இவ்வாறு நாம் நற்செயல் புரிந்து வாழும்படி கடவுள் முன்கூட்டியே ஏற்பாடு செய்திருக்கிறார் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். “ஏனெனில், நாம் நற்செயல் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாகப் படைக்கப்பட்டிருக்கிறோம். இவ்வாறு நாம் நற்செயல் புரிந்து வாழும்படி கடவுள் முன்கூட்டியே ஏற்பாடு செய்திருக்கிறார்...” (எபே 2:10) என்பதையும் நாம் நினைவில்கொள்ளவேண்டும்.
நமக்காக
ஏற்பாடு செய்துவிட்டு ஒதுங்கி நிற்பவர் அல்லர் நம் ஆண்டவர். நம் உடனிருந்து அவரே செயலாற்றுகின்றார். அவரின்றி நாமாக எதுவும் செய்ய இயலாது என்பதை, தூய பவுலடியார் பிலிப்பியருக்கு எழுதிய திருமடலில் மிகச் சிறப்பாக உணர்த்துகின்றார்: “கடவுளே உங்களுள் செயலாற்றுகின்றார்; அவரே தம் திருவுளப்படி நீங்கள் செயல்படுவதற்கான விருப்பத்தையும் ஆற்றலையும் தருகிறார்”
(பிலி 2:13). நமக்கு நன்மை மட்டுமே செய்யும் நல்ல ஆண்டவர், நாமும் பிறருக்கு நன்மை செய்வதில் ஆர்வம் கொண்டு, அன்பு உறவை வளர்க்க நம்மைத் தூண்டுவதோடு, தம் அளப்பரிய அருளால் நிரப்பிச் செயல்படுகின்றார். அக ஒளியால் நிரப்பப்பட்ட
அனைவரும் ஒளியின் மக்களாக, அன்புறவில் இயேசுவின் சீடர்களாக நிறைவுடன் வாழ முடியும். இது அனுபவத்தில் நாம் உணர்ந்து, அனுபவித்த பேருண்மை.
2026, பிப்ரவரி மாதம்
2-ஆம் நாள், ஆண்டவரைக் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தல் விழா.
11 மணிக்கு ஓர் அடக்கத் திருப்பலியில் கலந்துகொள்ளும்
கட்டாயம் ஏற்பட்டது. இருப்பினும், திருவிழா திருப்பலியில் கலந்துகொள்ளும் ஆர்வத்துடன் பங்கேற்ற பின், உரிய இடத்தில் அடக்கத் திருப்பலியில் கலந்துகொள்ள விரைந்தேன். பேருந்து கால தாமதமாகப் புறப்பட்டது. பேருந்தில் என்னுடன் பயணம் செய்த ஒரு தாய் தன் வேதனை நிறைந்த வாழ்வினை விவரித்துக் கொண்டிருந்தார். அவரிடம் மன்னிப்பின் மாண்பினையும், நன்றியுடன் செபிப்பதன் மகத்துவத்தையும் எடுத்துரைத்தேன்.
இது ஒரு நற்செய்தி அறிவிக்கும் வாய்ப்பாக அமைந்தது.
சிறிது
தூரம் நடந்துசெல்லவேண்டும். வேகமாக நடக்கவேண்டும், ஆனால் இயலவில்லை. அந்த நிலையில் அறிமுகம் இல்லாத ஒருவர், ‘எங்கே செல்லவேண்டும்?’ என்று கேட்டார். நான் ‘ஆனந்தா இல்லம்’ என்று கூறியதும், ‘நானும் அங்குதான் செல்கின்றேன்’ என்று
பைக்கில் அழைத்துச் சென்றார். நன்றியுடன், அவர் நலனுக்காகச் செபிக்கின்றேன் என்று கூறிவிட்டு நான் விரைவாக நடந்த போது, அவர் மீண்டும் என்னிடம் வந்து தன் பிரச்சினைகளைக் கூறி செபிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
அங்கிருந்து
திரும்பியபோது என் நண்பர் ஒருவர் தன் வாகனத்தில் என் இல்லம் கொண்டு வந்து சேர்த்தார். இங்கு குறிப்பிட்டுள்ள நிகழ்வுகளில் ஆண்டவரின் பேரன்பு சிறப்பாக வெளிப்பட்டதையும், என்னைத் தம் மீட்பின் கருவியாக்கி ஆண்டவரே செயலாற்றியதையும் உணர்ந்து நன்றிப்
பெருக்குடன் அவரிடம் சரணடைந்தேன். பேரொளியாம் ஆண்டவரிடம் அனைத்தையும் ஒப்படைத்துச் சரணடையும்பொழுது, அவர் அளவற்ற பேரன்பு காட்டி நம் சார்பாகச் செயலாற்றுவார்.
திபா
37:5-இல் நாம் காண்கின்றோம்: “உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு; அவரையே நம்பியிரு. அவரே உன் சார்பில் செயலாற்றுவார்.” இந்தச்
செபம் நம் வாழ்வாகும்பொழுது நாம் பேரொளியின் ஒளியாகச் சுடர்விடுவோம். தூய ஆவியாரின் வல்லமையால், இயேசுவின் நெருக்கமான தோழமையை அனுபவித்து, அவரின் அன்புச் சீடராவோம், இறைத்தந்தையை மாட்சிப்படுத்துவோம்.
இயேசுவைக் காணிக்கையாக
ஒப்புக்கொடுத்த
தின
செபம்:
என்றும்
வாழும் இறைவா! உம் திருமகன் இயேசு மனிதராகி இன்று ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டதை நாங்கள் நினைவுகூர்கிறோம். மரியாவும் யோசேப்பும் இயேசுவை உமக்கு அர்ப்பணித்ததுபோல, நாங்களும் இந்த நாளில் எங்கள் உள்ளம், உடல், எண்ணம், சொல், செயல் அனைத்தையும் உமக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கிறோம். நாங்கள் பாவத்தின் இருளில் வாழாமல், ஒளியின் பிள்ளைகளாக வாழவும், கிறிஸ்துவின் ஒளியை உலகிற்கு எடுத்துச்செல்லவும் வரமருளும். எங்களுடைய வாழ்வு, எங்கள் குடும்பங்கள், எங்கள் பணிகள் அனைத்தும் உமக்கு உகந்த காணிக்கையாக மாற அருள்புரியும்.
என்றும்
வாழும் தந்தையே! நீர் எனக்குத் தந்த இந்த வாழ்வை மீண்டும் உமது கரங்களிலேயே அர்ப்பணிக்கிறேன். சிமியோனைப் போல நானும் இயேசுவை என் வாழ்வில் கண்டு, இறைவனின் மீட்பை உணர்ந்து, என் இறுதி மூச்சுவரை உமக்கு உண்மையுள்ளவனாக வாழ அருள் தாரும். ஆண்டவரே, இந்த நாளை உமக்கு அர்ப்பணிக்கிறேன். இந்த நாளில் நான் செய்யும் நன்மைகள், சந்திக்கப் போகும் துன்பங்கள், மகிழ்வுகள் அனைத்தையும் உமது திருப்பாதத்தில் சமர்ப்பிக்கிறேன். ஆமென்!
இயேசுவின் மனுவுரு எடுத்தல் என்பது மனித வரலாற்றிலே தம்மையே நேரடியாக ஈடுபடுத்திக் கொள்ளும் அருள் மிகுந்த கடவுளின் நிகழ்வாகும். “வாக்கு மனிதரானார்; நம்மிடையே குடிகொண்டார்” (யோவா 1:14). தாம் வாழ்ந்த வரலாற்றுச் சூழலில் இயேசு தம்மையே இணைத்துக்கொண்டு வாழ்ந்தது வெறும் ஆன்மிக, சமயத் தளங்களில் மட்டுமல்ல.
அநீதிச் சமூகத்திற்கு
எதிராகக்
குரல்
கொடுத்தது
அரசியலாக்க
நிலைப்பாடே!
சமூக
(மத் 9:9-12), பொருளாதார (மத் 20:1-16), பண்பாட்டு (லூக் 13:10-17), சமய
(மாற் 14:53-63), அரசியல் (யோவா 18:28-19:38) களங்களில் இயேசு பரிவன்புமிக்கவராகவும் இறைவாக்கினராகவும் செயல்படுவதைப் பார்க்கின்றோம். அவருடைய சமுதாயத்தில் அரசியல் சமயத் தலைவர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட அநியாயங்கள், அதர்மங்கள், ஒடுக்குமுறைகள், ஏழ்மை, வேலையில்லாமை, ஆதிக்கத்தனம், சுரண்டல், ஆண்வழிச் சமுதாயத்தின் ஆதிக்கத்தனம், மனிதநேயம் மறந்த சடங்குத்தனம், நீதியை மறந்த சட்டத்தனம்... இவற்றையெல்லாம் இயேசு எதிர்த்து இறைவாக்கினராகச் செயல்பட்டார். இவற்றினால் பாதிக்கப்பட்ட ‘அனாவிம்’ என்ற முதுகொடிக்கப்பட்ட மக்களோடு தம்மையே ஒன்றாக இணைத்துக்கொண்டு, அதர்மச் சமுதாயத்திற்கு எதிர்த்துக் குரல் கொடுத்தார்.
இறையாட்சிச் சமூகத்தில்
அனைவரும்
சமம்
என்பதும்
அரசியலாக்கப்
பார்வைதான்!
காயப்படுத்தப்பட்டு
ஒடுக்கப்பட்ட தம்முடைய சமுதாயச் சூழலிலே, ‘இறையாட்சி’
எனும் கனவோடு மக்கள் எல்லாரையும் இனம், மதம், நிறம், சமூக அந்தஸ்து, பாலினம், தகுதி உள்ளவர்கள், தகுதியற்றவர்கள் என்பதை எல்லாம் கடந்து, எல்லாரையும் கடவுளின் மாண்பு நிறைந்த மக்களாக மாற்றும் பணியைச் செய்தார் (யோவா 1:12).
சமத்துவச்
சமுதாயம்தான் அவரது இறையாட்சிக் கனவின் உள்ளீடாகும். பரிவன்போடும் இறைவாக்கினர் தன்மையோடும் அவர் வழங்கிய போதனைகள், ஈடுபட்ட செயல்பாடுகள் எல்லாம் மக்களைக் கடவுளின் பிள்ளைகளாக்கும் சக்தி படைத்த இறையாட்சிக் கனவிலே வெளிப்பட்டது.
எல்லாரையும்
கடவுளுடைய மக்களாக ஆற்றல்படுத்துவது உண்மையிலேயே இறையாட்சியினுடைய அரசியல் செயல்பாடு ஆகும். ஏனென்றால், அரசியல் என்பது ஒருவரோ ஒரு குழுவோ தம்முடைய வாழ்வைத் தேர்ந்துகொள்வதற்கும் தீர்மானிப்பதற்கும் அதைச் செயல்படுத்துவதற்கும் பெற்றிருக்கும் ஆற்றலாகும். இவ்வாற்றல் பறிக்கப்பட்ட மக்கள், அந்த ஆற்றலை மறுபடியும் பெறவும், மனித மாண்போடு வாழவும் இயேசுவினுடைய இறையாட்சிப்
பணி வழியமைத்தது.
சமயப் பணியில்
இழையோடிய
சமூகப்
பணியும்
அரசியலாக்கம்தான்!
இயேசு
வெறும் ஒரு சமயப் போதகர் அல்லர்; நோயாளிகளைக் குணமாக்கினார்; ஒடுக்கப்பட்ட ஏழையர் சார்பாக நின்று செயல்பட்டார்; மக்களைப் பீடித்திருந்த பேய்களையும் தீய சக்திகளையும் விரட்டியடித்தார்; யூதராக, சமாரியராக கலிலேயராக, பிற இனத்தவராக, ஆணாக, பெண்ணாக, குழந்தையாக, மூன்றாம் பாலினத்தவராக இருந்தாலும் எல்லாரையும் சமமாக நடத்தினார். இப்படிப்பட்ட சமதர்ம சமத்துவ இறையாட்சிச் சமுதாயத்தைக் கட்டியெழுப்பும்போது அவர் இறையாட்சிக்கு எதிரான தீய சக்திகளையும் அமைப்புகளையும் மக்களையும் துணிச்சலோடு எதிர்கொண்டார் (மத் 23). ஏழைகளுக்கு நற்செய்தி அறிவித்தார்; ஒடுக்கப்பட்டோருக்கு விடுதலை வாழ்வு, பார்வையற்றோருக்குப் பார்வை, சிறைப்பட்டோருக்கு விடுதலை என்று தம்முடைய பணியில் தெளிவாக, கூர்மை நிறைந்தவராக, தீர்க்கமாகச் செயல்பட்டார் இயேசு (லூக் 4:18).
இயேசு
அறிவித்துச் செயல்படுத்திய அனைத்திலும் சமூக, பொருளாதார, பண்பாடு, சமய, அரசியல் ரீதியாக எல்லாரையும் மாண்பு நிறைந்த கடவுளுடைய பிள்ளைகளாக்கும் தணியாத தாகம் நிறைந்திருந்தது. சவால் மிகுந்த இயேசுவின் இலட்சியமும் பணியும் வாழ்வும் மக்கள் எல்லாரையும் கடவுளுடைய பிள்ளைகளாக்கும் சக்தி படைக்கும் குழந்தைகளாக வளர்த்தெடுப்பதுதான் அவருடைய ஒட்டுமொத்த இறையாட்சியின் கனவாக இருந்தது. இக்கனவு இயேசுவின் அரசியலாக்க ஈடுபாட்டில் மலர்ந்தது.
கிறித்தவரின்
அரசியலாக்க
ஈடுபாடு:
வரலாற்றுக்
கட்டாயமே
கிறித்தவர்களின்
அரசியலாக்க ஈடுபாடு என்பது இறையாட்சிச் சமூகத்தைக் கட்டி எழுப்பும் பணியோடு பின்னிப் பிணைந்தது. கிறித்தவர் அனைவரும் ஆற்றல் பெற்றிட, ஆற்றல் பெற்றவராகப் பிறரை வளர்த்திட இன்று கட்டாயம் நமக்கு அரசியலாக்க ஈடுபாடு தேவை என்பதில் மாற்றுக் கருத்தே கிடையாது.
இனியும்
நாம் அரசியலாக்க ஈடுபாட்டில் அக்கறையில்லாமல் அலட்சியமாகச் சுயநலத்தோடு ஒதுங்கி இருந்தோம் என்றால், நாமும், நம்முடைய கிறித்தவ இருப்பும் வாழ்வும் பணியும் இந்திய நாட்டிலே ஒதுக்கி முடக்கி வைக்கப்படும். ஏனென்றால், மதவாத, ஆர்.எஸ்.எஸ். முன்னெடுக்கும் இந்துத்துவ, பாசிச அரசியல் ஆட்சியிலே நமது உரிமைகள் படிப்படியாகப் பறிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
அண்மையில்
முன்வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதா (FCRA) சட்டமும், ஏற்கெனவே 13 மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டுள்ள மதமாற்றத் தடைச் சட்டமும் தொடர்ந்து கிறித்தவர்கள் மேல் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளும் தொடர்ச்சியாகக்
கூடிக்கொண்டே போகும்போது, நாமே நமது உரிமைக்குத் துணிச்சலாகக் குரல் கொடுத்திடும் அரசியலாக்க ஈடுபாடு தவிர்க்க முடியாத கிறித்தவ இறையாட்சியின் ஈடுபாடாக மாறுகின்றது.
கிறித்தவ அரசியலாக்க
ஈடுபாட்டுச்
செயல்பாட்டிற்குச்
சில
பரிந்துரைகள்
• அரசியலாக்கக் கல்வியையும் விழிப்புணர்வையும் நம்முடைய பங்குகளிலும் கல்வி நிறுவனங்களிலும் முன்னெடுக்கவேண்டும்.
• இந்தியாவின் அரசமைப்புச் சாசனத்தைப் பற்றிய விழிப்புணர்வும் கல்வியும் நம்முடைய நிறுவனங்களிலும் பங்குகளிலும் வளர்க்கப்பட வேண்டும்
• இந்திய அரசமைப்புச் சாசனத்தின் முகப்புரையை நாம் பொது இடங்களில் வைப்பதும் நடக்கும் முக்கிய நிகழ்வுகளில் நாம் எல்லாரும் அவற்றை ஒன்றாக வாசித்து அறிக்கையிடுவதும் அரசமைப்புச் சாசனம் தருகின்ற விழுமியங்களில் வளர்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும் .
• பெற்றோர் தங்கள் பிள்ளைகளை வெறும் பணம் ஈட்டும் ஐ.டி. போன்ற
தொழிற்கல்விகளில் மட்டுமல்லாது, அரசியல் களத்தில் ஈடுபடுகின்ற அரசியல்வாதியாக மாற்றிடவும் முன்வரவேண்டும். அரசியல் பணியும் ஒரு முக்கியச் சமுதாயப் பணியாகப் பார்க்கப்பட வேண்டும்.
• இளைஞரும், சமூக விழிப்புணர்வு உள்ளவரும் அரசியலில் நேரடி ஈடுபாட்டில் களம் இறங்க வேண்டும்.
• நிறைய கிறித்தவர்கள் பஞ்சாயத்து உறுப்பினராக, நகராட்சி, மாநகராட்சி உறுப்பினர்களாகவும் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் மாறிட உழைக்கவேண்டும்.
• நீதித்துறை, நிர்வாகத் துறை, சட்டத்துறை போன்றவற்றில் நம்முடைய கிறித்தவர்கள் பணி செய்திட தங்களையே தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
• ஐ.ஏ.எஸ்.,
ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். போன்ற நிர்வாகத் துறைகளில் கிறித்தவர்கள் அதிகமாகக் களம் இறங்கவேண்டும்.
• ஆயர்களும் அருள்பணியாளர்களும் நம்முடைய இறைமக்களை இப்படிப்பட்ட நேரடியான அரசியல் வாழ்வுக்குக் களமிறங்கிடப் பேராதரவையும் உற்சாகத்தையும் வழங்கவேண்டும்.
•
நமக்கு முன்பு சுதந்திரப் போராட்டத்தில், நேரடி அரசியல் வாழ்வில் ஈடுபட்டுள்ள கிறித்தவர்களை மறுபடியும் நினைவிற்குக் கொண்டு வந்து, அவர்களுடைய வாழ்வை உண்மையாக்க முன்வர வேண்டும்.
• வாக்களிப்பது நமது பிறப்புரிமை. எனவே, வரும் தேர்தல்களில் எந்தக் கிறித்தவரும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் வாக்களிக்காமல் இருந்தால், அது கிறித்தவத்திற்கே செய்கின்ற துரோகமாகும்.
• வாக்களித்து சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதோடு மட்டுமில்லாமல், அவர்கள் பணியில் இருக்கும்பொழுது தங்களுடைய கடமையைச் சரியாகச் செய்கிறார்களா என்று துணிச்சலுடன் கண்காணிக்கவேண்டும்
• எல்லாக் கிறித்தவரும் இந்தியச் சமூகத்தைக் கூறுபடுத்தும் இந்துத்துவவாதத்திற்கும் பாசிசத்திற்கும் பார்ப்பனியத்திற்கும் மதவாதத்திற்கும் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தனத்திற்கும் எதிரான நிலைப்பாடு எடுத்திடவேண்டும்.
• கிறித்தவர்கள் தனியே நின்றிடாமல், அரசமைப்புச் சாசனம் தருகின்ற விழுமியங்களைப் தூக்கிப்பிடிக்கின்ற மதச்சார்பின்மையைப் பாதுகாக்கின்ற சுதந்திரம் சனநாயகத்தைக் காப்பாற்றுகின்ற, ஏழை மக்கள் சிறுபான்மையினரின் உரிமைகளைக் காக்கின்ற பிற அரசியல் அமைப்புகளோடும் இயக்கங்களோடும் கட்சிகளோடும் இணைந்து பணியாற்றிட முன்வரவேண்டும்.
மேனாள் திருத்தந்தையின்
அறைகூவல்
இறுதியாக,
நம்முடைய மேனாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கிறித்தவ அரசியலாக்க ஈடுபாடு பற்றி மொழிந்த அறிவுரையோடு முடிக்க விரும்புகின்றேன்:
“திரு அவையின் சமூகப் போதனையின்படி அரசியல் என்பது அன்பின் உயர்ந்த வெளிப்பாடுகளில் ஒன்று; ஏனென்றால், அரசியல் பொதுநலனை முன்னெடுக்கிறது. நான் கிறித்தவர் என்ற முறையில் வெறும் பால்கனியிலிருந்து அரசியலை ஒரு பார்வையாளராக நின்று பார்க்கின்றேனா? இனியும் கிறித்தவர்கள் பால்கனி பார்வையாளராக இருக்க முடியாது; அரசியல் களம் இறங்கவேண்டும். கத்தோலிக்கராகிய நாம் நமது நம்பிக்கை வாழ்வை ஒரு குறுகிய தனிப்பட்ட வட்டத்திற்குள் வைத்துக்கொள்ளக்கூடாது. மாறாக, நம்முடைய நம்பிக்கை வாழ்வைப் பொது வழிக்குக் கொண்டு வருவது என்பது அநியாயத்திற்கு எதிரான குரலாகவும், நீதிக்குச் சார்பான குரலாகவும் நாம் மாற்றிட வேண்டும். அப்போதுதான் குரலற்ற மக்களின் குரலாகக் கிறித்தவர்கள் மாறமுடியும்!”
அநியாயத்தையும் அதர்மத்தையும் பிடுங்கி எறியவும் தகர்க்கவும், சுரண்டலையும் மனிதத்தைக் கேவலப்படுத்தும் அனைத்தையும் அழிக்கவும் தகர்க்கவும், மறுபடியும் கடவுளின் உடன்படிக்கைச் சமுதாயத்தைக் கட்டவும் நடவும் இஸ்ரயேல் இறைவாக்கினர்கள் கடவுளின் குரலாக, தூதர்களாகத் தீவிரமாகச் செயல்பட்டார்கள். யாவே இறைவனின் அரசியல் ஆக்கப்பணியைப்போல, இறைவாக்கினரும் மக்களை உடன்படிக்கைச் சமுதாயத்தில் ஆற்றல் படைத்தவர்களாக மாற்றிட, அரசியல் ஆக்கப்பணியில் ஈடுபட்டார்கள். இறைவாக்கினருடைய நிலைப்பாடும், கடவுளுடைய திருவுளத்தின் அறிவிப்பும் அரசியலாக்கத்தின் வெளிப்பாடுகளாக இருப்பதை இறைவாக்கினர்களில் காண்கிறோம்.
அரசர்களைத் தேர்ந்தெடுத்து
திருப்பொழிவு
செய்த
இறைவாக்கினர்கள்
கடவுளின்
கட்டளைக்கு ஏற்ப இறைவாக்கினர்கள் அரசர்களைத் தேர்ந்தெடுத்துத் திருப்பொழிவு செய்தார்கள். சாமுவேல் இறைவாக்கினர் சவுல் என்பவரை இஸ்ரயேலின் முதல் அரசராக ஏற்படுத்தியபோது அவர் கூறியது: “ஆண்டவர் உன்னை மக்களின் அரசராகத் திருப்பொழிவு செய்து இருக்கிறார்” (1சாமு
10:1). எல்லாருக்கும்
அரசராக இருக்கின்ற கடவுள் இந்தப் பெரிய பொறுப்பை மனிதருக்கும் கொடுத்து தமது சார்பாக ஆட்சி நடத்த அழைப்பு விடுக்கிறார்.
சவுல்
அரசன் கடவுளுடைய வழிகளைப் பின்பற்றாமல் சென்றபோது, அவனை ஆண்டவர் ஒதுக்கி விடுகிறார். எபிரோன் மக்களால் தாவீது கடவுளின் அரசராகத் திருப்பொழிவு செய்யப்படுகிறார் (2சாமு 2:4). அரசரைத் திருப்பொழிவு செய்யும் அரசியல் அதிகாரத்தைக் கடவுள் மக்களுக்கும் கொடுக்கிறார். அரசரைத் தேர்ந்து கொள்கின்ற உரிமையைக் கடவுள் சனநாயகப்படுத்திடும் அரசியலாக்கப் பணியில் ஈடுபடுகிறார். எனவே, அரசரை நியமிக்கும் பணியை இறைவாக்கினர்களுக்கும் மக்களுக்கும் கொடுப்பதன் வழியாக, மக்களுக்கும் இறைவாக்கினர்களுக்கும் அரசரைத் தேர்ந்து கொள்ளும் அரசியலாக்க அதிகாரத்தைத் தருகின்றார். அரசரைத் திருப்பொழிவு செய்யும் பழக்கம் சாலமோன் இறந்த பிறகும் தொடர்ந்தது (1சாமு 11:29-32).
அரசியல் ஆட்சியாளர்களை
வழிநடத்தும்
இறைவாக்கினர்கள்
யாவே
இறைவனின் அறிவுரையால் இறைவாக்கினர்கள் அரசர்களை வழிநடத்தினார்கள். சிரியா நாட்டு அரசன் இஸ்ரயேலைத் தாக்க முயற்சித்தபோது, பெயர் இல்லாத ஓர் இறைவாக்கினர் ஆகாபுக்கு அறிவுரை கூறி, இஸ்ரயேலைக் காப்பாற்றும் வழியைக் காண்பித்தார் (1அர 20:1-22). ஆகாப் கடவுளுடைய அறிவுரையை மீறினான் என்றால், அவன் அழிக்கப்படுவான் என்று இறைவாக்கினர் மீக்கா அறிவித்தார் (1அர 22:1-40).
இறைவாக்கினர்
எலிசா அரசியல் இராணுவக் காரியங்களில் நேரடியாக ஈடுபட்டார் (2அர 3:4-27). இஸ்ரயேல் உடன்படிக்கையை மறுபடியும் புதுப்பிப்பதற்கு யோசியா, குல்தா என்ற இறைவாக்கினரைக் கலந்து ஆலோசித்தார் (2அர 22:8-20). இறைவாக்கினர்கள் அரசு அதிகாரத்திலே நேரடியாகப் பங்கு பெற்று, அரசர்களையும் ஆட்சியாளர்களையும் கடவுளுடைய ஒளியில் வழிநடத்தினர். நீதியுள்ள
அரசை உருவாக்கவேண்டும் என இறைவாக்கு உரைத்தனர்.
எனவே, அவர்களுடைய இறைவாக்குப் பணி அரசியலாக்க ஈடுபாடு நிறைந்ததாக இருந்தது.
ஆட்சியாளர்களுக்கும்
மக்களுக்கும்
எச்சரிக்கை
மணியடித்த
இறைவாக்கினர்கள்
காலப்போக்கில்
இஸ்ரயேல் வரலாற்றில் முடியாட்சி என்பது அநியாய அராஜகச் சுரண்டல் ஆட்சியாக மாறியது. எனவே, இறைவாக்கினர்கள் அரசர்களும் மக்களும் செய்கின்ற அநியாயங்களைச் சுட்டிக்காட்டவும், அவர்களது உடன்படிக்கை
மீறல்களைத் தட்டிக்கேட்கவும் செய்தனர். அவர்களை மறுபடியும் உடன்படிக்கை வாழ்விற்கு அழைக்கவும் செய்தனர்.
நாபோத்
என்பவரின் திராட்சைத் தோட்டத்தைத் தனது பேராசையால் அபகரித்த ஆகாப் மன்னனை எலியா இறைவாக்கினர் எச்சரித்துத் தீர்ப்பு வழங்கினார் ((1அர 21:19). தனது
அரசு அதிகாரத்தைத் தனது சுயநலத்திற்காகப் பயன்படுத்தி, உரியாவின் மனைவி பத்சேபாவை அபகரித்ததோடு மட்டுமில்லாமல், அவருடைய கணவரையும் கொலை செய்த தாவீது, நாத்தான் இறைவாக்கினரால் எச்சரிக்கப்படுகிறார் (2சாமு 11:1-12).
இறைவாக்கினர்கள்
அரசர்களுக்கு அரசியல் ஆலோசகர்களாக, அறிவிப்பாளர்களாகச் செயல்பட்டனர். அநியாயம் செய்கின்ற மக்களையும் இறைவாக்கினர்கள் எச்சரித்து வழிநடத்தத் தவறவில்லை. யாவே கடவுளின் வழிபாட்டை மறுதலித்துவிட்டு, வேற்றுத் தெய்வ வழிபாடுகளை மேற்கொண்டவரையும் (எரே 10, எசா 44), ஏழைகளைச்
சுரண்டியவர்களையும் (ஆமோ 2:6-9), ஆடம்பரமான அர்த்தமற்ற திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களையும் (எசா 1:10-16, ஆமோ 5:21-23) நீதி மறுக்கப்படுவதையும் குறிப்பாக, ஏழைகள் ஒடுக்கப்படுவதையும் உரக்கச் சொல்லி எச்சரித்தார்கள். நீதிக்கும் நேர்மைக்கும் உரிய வாழ்வு வாழ இறைவாக்கினர்கள் இஸ்ரயேலரை மறுபடியும் சமத்துவம் நிறைந்த உடன்படிக்கைச் சமுதாயமாக மாறிடப் பணி செய்தார்கள்.
மக்களை
ஆட்சி செய்த அவர்களே மக்களின் ஆற்றல் பறிக்கப்பட்டு ஒடுக்கப்படுவதற்குக் காரணமாக இருந்தபோது, இறைவாக்கினர்கள் அவர்களை எச்சரித்ததோடு மட்டுமல்லாமல், கடவுளுடைய தீர்ப்பினையும் துணிச்சலோடு எதிரொலித்தார்கள். கடவுள் எவ்வாறு மக்களை ஆட்சி செய்கிறாரோ, அவ்வாறே ஆட்சி செய்ய மன்னர்களுக்கும் அறைகூவல் விடுத்தார்கள். மக்களும் கடவுளுக்குரிய நம்பிக்கையில் தவறியபோது, அவர்களும் எச்சரிக்கப்பட்டு, பலவகையான தண்டனைகளால் புதுப்பிக்கப்பட்டு உடன்படிக்கையின் மக்களாக மாற்றிட இறைவாக்கினர்கள் உழைத்தார்கள். இவையெல்லாம் இஸ்ரயேலர் ஆற்றல் பெற்றவர்களாக வாழ வேண்டும் எனும் அரசியல் ஈடுபாட்டின் செயல்பாடாக இருக்கின்றது.
அரசியல் ஈடுபாட்டிற்கான
கடவுளின்
அழைப்பு
கிறித்தவத்தின்
அழைப்பு
இன்றைய
கிறித்தவமும் இந்த இறைவாக்குப் பணியைத் தொடர அழைக்கப்படுகிறது. இஸ்ரயேல் இறைவாக்கினரோடும், இறைவாக்கினர்களுக்கெல்லாம் மேலான இறைவாக்கினரான இயேசுவோடும் இணைந்து செயல்பட்டு, இறையாட்சிச் சமூகத்தைக் கடவுளின் சமூகமாகக் கட்டி எழுப்பி, எல்லாரையும் ஆற்றல் படைத்தவர்களாக மாற்றிட அழைக்கப்படுகிறார்கள்.
இந்த
மாற்றம் வெறும் செபத்தாலும் தவத்தாலும் நடந்துவிடாது. மாறாக, அவற்றோடு தீர்க்கமான, தெளிவான அரசியல் ஈடுபாட்டோடு இந்திய அரசமைப்புச் சாசனம் காட்டுகின்ற விழுமியங்களைத் தூக்கிப் பிடித்து வாழ்வதால் நிகழும்.
அநீதிக்கும்
அதர்மத்திற்கும் எதிராகக் குரல் கொடுத்து, நம் நாட்டிலே நீதியும் சுதந்திரமும் விடுதலையும் சகோதரத்துவமும் மலர்ந்திட கிறித்தவர்கள் இறைவாக்கினர் குரலாகச் செயல்பட வேண்டும்.
நமது
சனநாயக உரிமையை எந்த அரசியல் ஆட்சியும் நம்மிடமிருந்து அபகரிக்க அனுமதிக்கக் கூடாது. எனவே, நம்முடைய குடியுரிமை உரிமைகளையும், இந்திய அரசமைப்புச் சாசன விழுமியங்களையும் கட்டிக் காத்திட நமது அரசியல் ஈடுபாடு கட்டாயம் தேவை.
திருத்தந்தை
பிரான்சிஸ் கூறியதுபோல, “உங்களுடைய சக குடிமக்களின் மாண்பையும்
உரிமையையும் பாதுகாத்திட அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்;
பொதுப்பணிக்காக அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்; இதுதான்
அரசியல் ஈடுபாட்டின் முக்கிய நோக்கம்.”
ஆம்பள புள்ள அழக் கூடாது’, ‘பொம்பள சிரிச்சா போச்சு’, ‘கோபமே படாம அமைதியா இருப்பவர்கள் முதிர்ச்சியானவர்கள்’, ‘அவன்/அவள் எதுக்குமே உணர்ச்சிவசப்படமாட்டார்...’ இவை போன்ற சொல்லாடல்கள் நம் சமூகத்தில் எதார்த்தமாகப் பயன்படுத்தப்படக்கூடியவை. சற்று நிதானமாக யோசித்தால், இவை யாவும் ‘உணர்வு’ என்ற ஒற்றைப்பொருளை மையமாகக் கொண்டு வழங்கப்படும் சொல்லாடல்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
இந்தச்
சொல்லாடல்களின் அடிப்படையில் சோகம், மகிழ்ச்சி, கோபம் மற்றும் பரபரப்பு முதலிய உணர்வுகள் அனைத்துமே ஒரு மனிதரின் வளர்ச்சிக்கு உகந்தது அல்ல எனக் கருதலாம். அதே நேரத்தில், இந்த உணர்வுகள் ஒரு மனிதரின் அன்றாட வாழ்வின் அடிப்படை எனலாம். நாம் எல்லா நேரத்திலுமே ஏதோ ஓர் உணர்வோடுதான் இருக்கின்றோம். பின்பு, உணர்வுகள் சரியானவையா அல்லது தவறானவையா? தவறானவை என்றால், பின்பு ஏன் கடவுள் நம்மை உணர்வுகளோடு படைத்தார்? சரியானவை என்றால், நம் சமூகம் அதைத் தவறாக முன்னிறுத்துவது ஏன்?
உணர்வு என்றால்
என்ன?
உணர்வுகளை
அறிவியலின் வெவ்வேறு தளங்களும் வெவ்வேறு விதமாக வரையறுக்கின்றன. உளவியலாளர் ஜான் பால்பி, உணர்வை ‘தொடர் சமிக்ஞை’
(Communication Signal) என்கிறார்.
நரம்பியல் வல்லுநர் அன்டோனியோ டமாசியோ, ‘உடலின் தற்காப்பு பொறிமுறையே உணர்வுகள்’
(Survival Mechanism) என
நிறுவுகிறார். சமூகவியலாளர் ஆர்லி ஹோச்சில்ட், உணர்வுகளை ஒரு ‘சமூகத் தகவல் தொடர்புக் கருவியாகப்’ (Social Signalling) பார்க்கிறார். எனவே, உணர்வுகளை ஓர் ஒருங்கிணைந்த பார்வையில், ‘உள்ளத்தின் ஆழத்தில் எழும் உயிருள்ள இயக்க அலை; அது மனத்தையும் உறவுகளையும் தொட்டு மனிதரை முழுமையாக்கக் கூடிய ஒன்று’ என நான் புரிந்துகொள்கிறேன்.
மேற்கூறிய
வரையறைகளின் பின்புலத்திலும், அறிவியல் புரிதலின் பின்புலத்திலும் உணர்வுகளை ஒரு மனிதருடைய அடிப்படை ஆக்கப்பூர்வ ஆற்றல் எனப் புரிந்துகொள்ளலாம். ஆக்கப்பூர்வமான ஒன்றை, சமூகம் அழிவிற்கான ஒன்றாகக் காட்சிப்படுத்தினால் அதையே நாம் ஒடுக்குமுறை என்கின்றோம். இதற்கு எடுத்துக்காட்டாகப் பெண் கல்வியைக் கூறலாம். முந்தைய காலத்தில் அநாவசியமாக, அழிவாகக் கருதப்பட்டது இன்று அத்தியாவசியம் என நம்மால் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.
அதேபோல, நம் உணர்வுகளும் சரியானவையே; அவற்றை நாம் உணர்வதும், உள்ளபடியே வெளிப்படுத்துவதும் சரியானவையே என நாம் உணரவேண்டிய
தருணம் இது.
உணர்வுசார் ஒடுக்குமுறை
மனிதர்
பொதுவாகத் தன் உணர்வுகளை, முகபாவனை (Facial Expression), உடல்
மொழி (Body Language) மற்றும்
மொழியால் (Verbal Expression) வெளிப்படுத்துகிறார்.
மனிதரின் அடிப்படை ஆக்கக்கூறான உணர்வுகள் வெளிப்படுத்தப்படாமல் ஒடுக்கப்படும்போது, அது ஒரு மனிதரை அழிவுக்கு இட்டுச்செல்லும் ஆற்றலாக மாறுகிறது. இந்த உணர்வு ஒடுக்கம், பிறரால் திணிக்கப்படும்போது, அது சாதிய, பொருளாதார மற்றும் நிற ஒடுக்குமுறைக்கு இணையான ஒடுக்குமுறையாக மாறுகிறது. சமூகத்தின் வெவ்வேறு தளங்களில் ஏற்கெனவே ஒடுக்கப்பட்ட மக்கள் உணர்வுத்தளத்திலும் ஒடுக்கப்படும்போது அதன் விளைவுகள் தீவிரமடைகின்றன.
உணர்வுசார்
ஒடுக்குமுறையின் மற்றொரு பரிமாணம் ‘உணர்வுசார் மிரட்டல்’
(Emotional Blackmail) ஆகும்.
உளவியலாளர் சூசன் ஃபார்வர்டு இந்த உணர்வுசார் மிரட்டலை ‘FOG’ (பனிமூட்டம்) என்ற
சுருக்கச் சொல்லால் விளக்குகிறார். F - Fear (பயம்), O - Obligation (கடமை),
G - Guilt (குற்ற
உணர்வு). ‘நான் சொல்வதைக் கேட்காவிட்டால், உன்னைவிட்டு சென்றுவிடுவேன்’, ‘எனக்காக
இதைச் செய்வது உன் கடமை; எனவே, இதை நீ செய்துதான் ஆகவேண்டும்’, ‘உன்னால்தான்
எனக்கு இந்த நிலை; உன்னால்தான் நான் இவ்வளவு சிரமப்படுகிறேன்....’ இவை போன்ற வாக்கியங்களால் ஒருவர் உணர்வளவில் மிரட்டப்படுவதும் உணர்வுசார் ஒடுக்குமுறையே.
ஒடுக்குமுறையை
நியாயப்படுத்துதல்
உணர்வு
வெளிப்பாட்டை ஒடுக்குவதில் கலாச்சாரம், நிறுவனங்கள், மதம் மற்றும் சமூகம் ஆகியவை மிக முக்கியப் பங்குவகிக்கின்றன. கலாச்சாரம், உணர்வுகளை வெளிப்படுத்துவதை ஒரு பலவீனமாகவும், மௌனமாகச் சகித்துக்கொள்வதை ஒரு வீரமாகவும் சித்தரித்து, ஒரு தனிமனிதர் தனது உண்மையான இயலாமைகளை மறைக்கக் கட்டாயப்படுத்துகின்றது. நிறுவனங்கள் ‘உணர்வுவசப்படாத நிலை’
(Professionalism) என்பதை
ஒரு தகுதியாகக் காட்டி, ஓர் ஊழியர் தனது மேலதிகாரியால் ஒடுக்கப்படும்போது, அந்த வலியை வெளிப்படுத்தாமல் மௌனமாக ஏற்பதே கீழ்ப்படிதல் மற்றும் ஒழுக்கம் என்று போதிக்கிறது. மதங்களும் சமூகமும் இயல்பான மனித உணர்வுகளைப் பாவமாகச் சித்தரித்து, அதன் விளைவாக மனிதர்கள் புனிதர்களாகக் காட்டிக்கொள்வதற்காகத் தங்கள் உணர்வுகளைப் புதைத்து, ஒரு போலியான புனிதத் தன்மையைத் தழுவ வற்புறுத்துகிறது.
ஒடுக்குமுறையின்
விளைவுகள்
உணர்வுசார்
ஒடுக்குமுறை ஒரு மனிதரில், உடல் மற்றும் மனநலம் சார்ந்த ஆழமான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஒரு மனிதர் பொதுவாக, தனியாக விரும்பத்தகாத உணர்வுகளை மட்டுமல்ல; ஒட்டுமொத்த உணர்வுகளையும் ஒடுக்கக் கற்றுக்கொள்கிறார். இதன் விளைவாக அவர் ஓர் உணர்வற்ற நிலைக்குத் (Emotional Numbness) தன்னையே
தள்ளுகிறார். இந்த நிலை அவரை ஓர் இயந்திரத்தைப் போல மாற்றுகிறது. மேலும், உணர்வுகளை ஒடுக்குவது தேவையற்ற பயம், பதற்றம், தொடர்ச்சியான அகப்போராட்டம், மனச்சோர்வு, அன்ஹெடோனியா, தொடர்பு துண்டிப்பு (Dissociation) மற்றும்
பதற்றக் கோளாறுகள் உள்ளிட்ட மனநோய்களுக்கு வழிவகுக்கின்றன.
இதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம், இயற்கை நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமடைதல், முதுகு வலி, கழுத்து வலி மற்றும் ஒற்றைத் தலைவலி முதலிய உடல்சார் நோய்களை வருவிக்கின்றன.
உணர்வுசார்
மிரட்டல் பெரும்பாலும் நெருங்கிய உறவினரால் ஏற்படுவதால் முடிவெடுக்கும் திறனில் பாதிப்பு, எப்போதுமே பதற்றத்துடனேயே இருக்கும் நிலை, நீண்ட காலச் சோர்வு, இதயத் துடிப்பு அதிகரிப்பு, உறவு நிலைகளில் சவாலான மனநிலையை எதிர்கொள்தல், உறவுப் பிரச்சினைகளுக்குத் தானே காரணம் என எண்ணுதல், தன்னை
மீண்டும் மீண்டும் சரிசெய்ய முயற்சித்தல், தனது சொந்த உணர்வுகளையும் நினைவுகளையும் சந்தேகித்தல் மற்றும் அதீதப் பொறுப்புணர்வு போன்ற மோசமான பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.
உணர்வுசார் முதிர்ச்சி
உணர்வுசார்
ஒடுக்குமுறையின் வெவ்வேறு கூறுகளை அறிந்த நாம், ‘அதிலிருந்து விடுதலை சாத்தியமா?’ என அறிவதும் தகும்
என நம்புகின்றேன். இந்த உணர்வுசார் ஒடுக்குமுறையின் விடு தலைக் கூறாக அமைவது உணர்வு முதிர்ச்சியாகும். இந்த முதிர்ச்சியைத் திருவிவிலிய மாந்தர்களில் மிக முக்கியமான நபரான இயேசு நமக்கு வாழ்ந்து காட்டியிருக்கிறார். உணர்வுசார் முதிர்ச்சிக்கு அடிப்படையாக அமைவது இரண்டு முக்கியக் கூறுகள்:
1. உணர்வுகளின்
அங்கீகாரம் மற்றும் நுண்ணறிவு. 2. பாதுகாப்பான உறவு எல்லைகள்.
1. உணர்வுகளின் அங்கீகாரம் மற்றும்
நுண்ணறிவு
தம்
நண்பன் இலாசர் இறந்தபோது அழுததன் வழியாகவும், கெத்சமனி தோட்டத்தில் தம் பாடுகளைக் குறித்து இயேசு மனம் வருந்தியபோதும் “எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது” (மத்
26:38) எனத் தம் துயரைத் தம் சீடர்களிடம் பகிர்ந்ததன் வாயிலாகவும், சிலுவையில் இறக்கும்போதும் “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?” எனக் கதறியதன் வாயிலாகவும் இயேசு தம் உணர்வுகளைப் பற்றிய சுய உணர்வோடு அவற்றை உள்ளபடியே ஏற்றுக்கொண்டு, ஆரோக்கியமான விதத்தில் வெளிப்படுத்தினார். மாறாக, தம் உணர்வுகளுக்கு அவர் பிறரைக் காரணம் கூறவுமில்லை; விரும்பத்தகாத விதத்தில் தம் உணர்வுகளை அவர் வெளிப்படுத்தவு மில்லை. எனவே, ஒருவர் ‘நான் எத்தகைய உணர்வுகளோடு இருக்கின்றேன்?’ என்ற சுய உணர்வும், அவ்வாறு அறிந்த உணர்வுகளை உள்ளவாறே ஏற்றுக்கொண்டு, அதை ஆரோக்கியமான முறையில் வெளிப்படுத்துவதுமே, உணர்வு முதிர்ச்சியின் முதல் படியாகும்.
2. பாதுகாப்பான உறவு எல்லைகள்
இயேசு
தமது இறப்பை முன்னறிவித்தபோது, பேதுரு “ஆண்டவரே, இப்படி உமக்கு நேரவே கூடாது” என்று தடுத்தபோது, பேதுரு இயேசுவின் மீதான அன்பில் அவ்வாறு கூறியிருந்தாலும், அது இயேசு தம் இலக்கை அடைய உதவாது என்பதால், “என் கண்முன் நில்லாதே சாத்தானே!” எனக் கூறி பேதுருவின் பரிந்துரைக்கு இசையவில்லை. அதே போல, யாக்கோபு மற்றும் யோவான் தம் தாயோடு வந்து, இயேசுவின் ஆட்சியில் அதிகாரம் கேட்டது, ஒரு குடும்ப நலன் சார்ந்த ஒன்றாகவே இருந்தது. அதை நன்கறிந்த இயேசு, மற்றச் சீடர்களுக்கும் புரியும்படி தமது ஆட்சியைப் பற்றியும், பணிபுரியும் தலைமையைப் பற்றியும் எடுத்துக் கூறினாரே தவிர, அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவில்லை.
ஒரு
நபருடைய வாழ்வில் மற்றவருக்கு எத்தகைய பங்கு உண்டு, அவருடைய வாழ்வைப் பற்றி முடிவெடுப்பதில் எவ்வளவு சுதந்திரம் உண்டு என முடிவெடுக்கும் உரிமை
அந்த நபருக்கு மட்டுமே உண்டு. அவ்வாறு முடிவெடுத்து தனக்கான எல்லைகளை ஏற்படுத்துவது, உறவுகளில் இடைவெளியை ஏற்படுத்தும் கூறுகளல்ல; அவை உறவுகளைத் திடப்படுத்தும் அணைக்கட்டுகள்.
இயேசு
ஓர் உணர்வு முதிர்ச்சியின் அடையாளமாக மட்டும் திகழவில்லை; மாறாக, உணர்வுத் தளங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கும் எடுத்துகாட்டாகத் திகழ்கின்றார். சீடர்கள் தடுத்த போது, சிறுவர்களைத் தம்மிடம் வரவழைத்ததன் வாயிலாக, ஒடுக்கப்பட்ட அந்தச் சிறுவர்களின் மகிழ்ச்சியை அவர்கள் உணர உறுதுணையாக இருந்தார். இவ்வாறு, இயேசு உணர்வுசார் முதிர்ச்சிக்கு அரியதோர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்.
இறுதியாக...
உணர்வுகள்
என்பவை ஏதோ விரும்பத்தகாதவை அல்ல; அவை மனிதரின் மைய ஆற்றல்! அந்த உணர்வுகளைப் பற்றிய ஆழமான மற்றும் தெளிவான புரிதலின் வாயிலாகவும், அதை ஆரோக்கியமாக மேலாண்மை செய்வதன் வாயிலாகவும் ஒரு மனிதரால் தன் வாழ்வின் நோக்கை எளிதாக அடைய முடியும்; ஏன், அவர் முழுமை அடைகிறான் என்றும் கூற முடியும். இயேசு தம் வாழ்நாள் முழுவதும் குறிப்பாக, சிலுவையின் கோர நிலையிலும் வெளிப்படுத்திய உணர்வு முதிர்ச்சியை நமதாக்குவோம்! நம் உலகம், நம் வசமாகட்டும்.
பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையை நாம் இறை இரக்கப் பெருவிழாவாகக் கொண்டாட அழைக்கப்படுகிறோம். இது வெறும் சடங்கு அல்ல; மாறாக, நம் பாவங்களைக் காட்டிலும் இறைவனின் மன்னிப்பு பெரியது என்பதை உலகம் உணர்ந்துகொள்ளும் ஓர் உன்னதத் திருநாள்!
இரக்கம்
அல்லது கருணை என்பதன் சொற்பிறப்பு, இலத்தீன் மொழியின் ‘மிசெரிகோர்டியா’ (misericordia)
என்ற சொல்லிலிருந்து உருவாகிறது . இது ‘மிசர்’
(miser - பரிதாபகரமான,
துயரமான) மற்றும் ‘கோர்’ (cor-
இதயம்) ஆகிய சொற்களின் இணைப்பாகும். இச்சொல்லாடலானது ‘பரிதாபகரமானவர்களுக்கு, துயர் நிலையில் இருப்பவர்களுக்கு நம் இதயத்தைக் கொடுப்பது’
என்பதாகும். இது மற்றொருவரின் துயரத்தைப் போக்க, ஒருவரைத் தூண்டும் ஆழ்ந்த அன்புறவைக் குறிக்கிறது.
இரக்கம்
அல்லது கருணை என்பது நாம் செய்த புண்ணியத்திற்காகக் கிடைப்பதல்ல; மாறாக, நாம் அவருடைய பிள்ளை என்பதற்காக வழங்கப்பட்ட ஒரு பெருங்கொடை; மேலான ஓர் அருள் வரம்! ஒரு பெற்றோர் தம் குழந்தையின் மீது காட்டும் அன்பு, அக்குழந்தை எதையாவது சாதித்ததால் வருவதல்ல; அக்குழந்தை பிறந்த அந்த நொடியிலேயே அங்கு அன்பு பிறப்பெடுக்கிறது. அதுபோலவே, நாம் பாவிகளாய் இருந்தபோதே நம்மைத் தேடி வந்த கிறிஸ்துவின் அன்புதான் இறை இரக்கம்; அந்தத் தெய்வீகக் கருணை!
2016-ஆம் ஆண்டு
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட ‘இறைவனின் திருப்பெயர் இரக்கம்’
(The Name of God is Mercy) என்ற நூல்,
இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையிலான ஆழமான உறவை ‘இரக்கம்’ என்ற ஒற்றைச் சொல்லால் பிணைக்கிறது. வத்திக்கான் செய்தியாளர் ஆண்ட்ரியா டொர்னியேலியுடன் திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்ட உரையாடல்களின் தொகுப்பாக வெளிவந்த இந்த நூலில், ‘புனிதர்களுக்காகவோ அல்லது நீதிமான்களுக்காகவோ மட்டும் இறைவன் காத்திருக்கவில்லை; மாறாக, தன்னை ஒரு பாவி என்று உணர்ந்து அவரிடம் வருபவர்களுக்காகவே அவர் தவம் இருக்கிறார்’ என்பதை
அவர் சிறப்பாக வலியுறுத்துகிறார். மேலும்,
‘நமது பாவங்களே நாம் இறைவனின் இரக்கத்தைச் சந்திக்கும் புனிதத் தலங்களாக மாறுகின்றன’ என்றும்,
‘நாம் ஒரு பாவி என்பதை உணர்வதே இறைவனிடமிருந்து நமக்குக் கிடைக்கும் முதல் கொடை’ என்றும், ‘அந்த இடத்தில்தான் இயேசுவின் குணப்படுத்தும் தொடுதல் நிகழ்கிறது’ என்றும்
குறிப்பிடுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அவ்வாறே,
“ஒருவர் மிகப்பெரும் பாவியாக இருந்தாலும், என் கருணையின் மணிமாலையை (Divine Mercy Chaplet) ஒருமுறை
செபித்தால், அவர் என் எல்லையற்ற கருணையிலிருந்து அருளைப் பெறுவார்”
என்று புனித பவுஸ்தீனா வழியாக இறைவன் உலகிற்குத் தந்த செய்திகள் நம்பிக்கையற்றுக் கிடக்கும் மானுடத்திற்கு ஒரு கலங்கரை விளக்கம்.
இயேசு
புனித பவுஸ்தீனாவிடம் அளித்த வாக்குறுதிகள் கற்பனைக்கு எட்டாதவை. குறிப்பாக, மரணத் தறுவாயில் இருப்பவர்களுக்காகச் செபமாலையைச் செபிக்கும்போது, இயேசு ஒரு நீதியுள்ள நடுவராக இல்லாமல், ‘இரக்கமுள்ள மீட்பராக’
தந்தைக்கும் அந்த ஆன்மாவிற்கும் இடையில் இருப்பதாக உறுதி அளித்துள்ளார். இயேசு கல்வாரி மலையில் தம் உயிரைத் துறந்த அந்த மாலை மூன்று மணி, அகில உலகிற்குமான பெரும் கருணையின் நேரம். அந்த நேரத்தில் நாம் கேட்கும் எதையும் தமது திருப்பாடுகளின் பெயரால் அவர் மறுப்பதில்லை. நாமும் இரக்கத்தின் தூதுவர்களாவோம்.
திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்களின் பார்வையில், திரு அவை என்பது சட்டங்களை வகுக்கும் ஒரு கூடம் அல்ல; அது ஒரு ‘போர்க்கள மருத்துவமனை’ (Field Hospital) காயப்பட்டவர்கள், விளிம்பு நிலை மக்கள், சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்கள் என அனைவரையும் அரவணைக்கும்
இடமே திரு அவை. “Who am I to judge
others? - ஒருவர்
ஆண்டவரைத் தேடினால், அவரைத் தீர்ப்பிட நான் யார்?” எனும் அவருடைய கூற்று, கத்தோலிக்கத் திரு அவையில் பாவிகள் என நாம் தீர்ப்பிடும்
பலருக்குப் பல முன்னுரிமைகளை மாற்றியமைத்துள்ளது.
எல்லாச்
சூழல்களிலும் சமகாலச் சட்ட வல்லுநர்களாக நாம் இருக்கக்கூடாது; மாறாக, கிறிஸ்துவின் உடலை ஏழைகளிடமும் தேவையிலுள்ளோரிடமும் தொட்டுணரும் மேய்ப்பர்களாக இருக்கவேண்டும். திரு அவை என்பது மக்களைக் கண்டனம் செய்வதற்காக இல்லை; மாறாக, இறைவனின் ஆழமான அன்பைச் சந்திக்க வைப்பதற்காகவே அது இருக்கிறது எனும் அவருடைய சிந்தனைகள் வாழ்வாக்கத்தக்கதே!
புனித
பவுஸ்தீனாவின் செபம் நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் எதிரொலிக்கவேண்டும். நம் கண்கள், காதுகள், நாக்கு, கைகள் மற்றும் கால்கள் என அனைத்தும் இரக்கத்தின்
கருவிகளாக மாறவேண்டும். அடுத்தவரைத் தீர்ப்பிடாத கண்கள், பிறரின் கூக்குரலைக் கேட்கும் காதுகள், ஆறுதல் வார்த்தைகளை மட்டுமே பேசும் நாக்கு, நற்செயல்களை மட்டுமே செய்யும் கைகள், பிறருக்கு உதவ விரைந்து செல்லும் கால்கள் இவை அனைத்தும் ஒன்றிணையும்போது நாம் இறைவனின் வாழும் சாயலாக மாறுகிறோம்.
இறை
இரக்கப் பெருவிழா, ஆன்மாக்களுக்கு ஒரு புகலிடம். அன்று ஒப்புரவு அருளடையாளத்தில் பங்குகொண்டு, நற்கருணை உட்கொள்பவர்களுக்குப் பாவங்களும் அதற்கான தண்டனைகளும் முழுமையாக மன்னிக்கப்படுகின்றன. “உங்கள் பாவங்கள் கருஞ்சிவப்பாய் இருந்தாலும், அவை பனிபோல் வெண்மையாகும்” என்ற
இறைவனின் வாக்கு அன்றைய தினம் முழுமையாக நிறைவேறுகிறது.
இறைவனின்
இரக்கம் நம் பாவங்களை விடவும், இந்த உலகத்தின் பாவங்களை விடவும் பெரியது. இந்த உலகம் வெறுப்பாலும் வன்முறையாலும் சூழந்திருக்கலாம்; ஆனால், இறைவனுடைய இரக்கத்தின் நீரூற்று இன்றும் வற்றாமல் சுரந்து கொண்டிருக்கிறது. நாம் செய்ய வேண்டியதெல்லாம், நம்முடைய தற்பெருமையைக் களைந்து, தாழ்ச்சியுடன் அவரிடம் திரும்புவதுதான்.
ஆகவே,
இறை இரக்கப் பெருவிழாவை நாம் கொண்டாடும் இவ்வேளையில், நாமும் இறைவனைப் போல ‘அதிகமாக மன்னிக்கும்’ அந்தப்
பண்பைப் பெற்றுக்கொள்வோம். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகளில் கூறுவதென்றால், “மக்களின் இதயங்களைக் குளிரூட்டும், அவர்களோடு நெருக்கமாக
இருக்கும் ஒரு திரு அவையாக நாம் மாறுவோம்.”
இறைவனின்
திருப்பெயர் இரக்கம்; அந்த இரக்கத்தில் நாமும் அடைக்கலம் புகுவோம்!
கிறித்தவத்தின் தனித்துவம்
உயிர்த்தெழுதல்
என்பது கிறித்தவர்களின் தனித்துவமும், மிக முக்கியமான அம்சமும் ஆகும். இயேசுவின் காலியான கல்லறையே நமது நம்பிக்கையின் அருளடையாளம். உயிர்த்தெழுதல் என்பது ஒரு நம்பிக்கையின் நிகழ்வாக மட்டும் பார்ப்பது நமது பராம்பரியம் அன்று; மாறாக, அது இவ்வுலகையே புதுப் படைப்பாகப் பார்க்கும் ஓர் ஆன்மிக மற்றும் உளவியல் சார்ந்த இறைனுபவம் ஆகும். “கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால், நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும்,
நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும் பொருளற்றதாய் இருக்கும். நமது விசுவாசம் அனைத்தும் பொய்...” (1கொரி 15:14) என்கிறார் தூய பவுலடியார்.
கிறித்தவ வாழ்வின்
அழிவின்மை
நமது
கிறித்தவ வாழ்வு மற்றும் இறப்பின் முழு நம்பிக்கை கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழும் புனித நிகழ்வின் பார்வையில்தான் பொருளுள்ளதாகிறது. கிறிஸ்து உயிர்ப்பின் மறைபொருளை விளக்கும் தூய பவுலடியார் கிறிஸ்துவின் உயிர்ப்பின் மூலம், “அழிவுக்குரிய இவ்வுடல் அழியாமையை அணிந்தாகவேண்டும். சாவுக்குரிய இவ்வுடல் சாகாமையை அணிந்தாக வேண்டும்”
என்று கூறி, “சாவு முற்றிலும் ஒழிந்தது, வெற்றி கிடைத்தது”
என்கிறார் (1கொரி 16:54).
இத்தகைய
முக்கியமான நம்பிக்கையின் நிகழ்வு கிறிஸ்து இறந்தபின் சீடர்கள் கிறிஸ்துவின் உயிர்ப்பை நினைவுகூர்ந்து, வாழ்ந்து காட்டி, அனைவரிலும் அவரைக் கண்டுகொண்டு, மறு கிறிஸ்துகளாகப் புத்துருபெற்று, கிறிஸ்துவின் பாடுகளிலும் உயிர்ப்பிலும் முழுமையாய் பங்கேற்று, அவரது உயிர்ப்பிற்குச் சாட்சிகளாகின்றனர் (திப 2- 5 வரையுள்ள அதிகாரங்கள்). எனவே, உயிர்ப்பின் அனுபவம் நம்மை இக்காலச் சூழலுக்கு ஏற்றபடி புரிந்துகொள்வதும், அதன்படி நமது வாழ்வைப் புதுப்பித்துக்கொள்வதும் காலத்தின் கட்டாயமும் அறைகூவலுமாகும். கிறிஸ்துவின் உயிர்ப்பை மூன்று முக்கிய ஆன்மிக - உளவியல் பார்வையில் சிந்தித்துச் செயல்படுவதை ஓர் அறநெறிக் கட்டாயமாக உணர்கிறேன்....
நினைவுகூர்தல்
தொடக்க
காலத் திரு அவையில் உயிர்த்த இயேசுவின் இறையனுபவம்: பெரும்பாலும் கிறித்தவத்தில் பாஸ்கா நிகழ்வை நினைவுகூர்ந்து கொண்டாடுவதாகும். ‘நினைவுகூர்தல்’ என்ற
வார்த்தையின் பொருள் அந்நிகழ்வைப் பற்றி மீண்டும் சிந்தித்து, கிறிஸ்துவைப் பிரசன்னப்படுத்தி வாழ்ந்து காட்டுவதாகும். “இதை என் நினைவாகச் செய்யுங்கள்” (லூக்
22:19) என்று எடுத்துரைத்து, பாஸ்கா மறைபொருளை நிறுவினார் இயேசு. தொடக்கத் திரு அவையில் அதை நினைவுகூர்ந்து வாழ்ந்து காட்டினார்கள். தங்களது உடைமைகளைப் பொதுவாக வைத்து அனைவரும் பகிர்ந்து கொண்டனர். “அவர்களில் தேவையில் உழல்வோர் எவரும் காணப்படவில்லை” (திப
5:34). கிறிஸ்துவின் பாஸ்கா நிகழ்வை வாழ்வில் வாழ்ந்து காட்டி அதைச் சீடர்கள் நினைவுகூர்ந்தனர்.
வாழ்வே நற்செய்தியாக...
அதன்பின்
அது சிறு வழிபாடாகவும் (LITURGY), கொண்டாட்டமாகவும்
(COMMEMORATE) மாறியது.
உயிர்ப்பின் நிகழ்வானது வழிபாட்டோடு மட்டும் நின்றுவிடத் தொடங்கியது. இங்கு உயிர்த்த இறைவன் போதனைகளைத் தந்தபின், மரித்து அதன்பின் உயிர்த்து விண்ணிற்குச் சென்றுவிட்டார். இப்போது நாம் அவரைப் பிரசன்னப்படுத்தி (RE-MEMBER) அவரது
மதிப்பிடுகளை வாழ்ந்து காட்டி, உயிர்ப்பின் சாட்சிகளாகத் திகழ்வது, உயிர்த்தெழுதலின் முதல் பரிமாணமாகும். இங்கு உயிர்த்த இறைவன் மூன்றாம் ஆளாக, படர்க்கையில் (3rd - person)
பார்க்கும் மனப்போக்கு. இதன் உளவியல் பின்னணி, உயிர்த்த இறைவன் விண்ணகத்தில் இருப்பது போலவும், அங்கிருந்து நம்மை வழிநடத்துவதாக உணர்வதாகும். உளவியல் ரீதியாக இறைவனுக்கும் நமக்கும் இடைவெளி அதிகமாய் இருப்பது போன்ற புரிதல், மதிப்பீடுகளின்படி வாழ்ந்து காட்டும் வழிபாடுகளின்போது மட்டும் அவரது பிரசன்னத்தை உணர்கிறோம். மற்ற நேரங்களில் வேறுபட்ட வாழ்வு வாழ்ந்திட வாய்ப்பு இருக்கிறது. அன்றாட வாழ்வில் மற்றவர்களிடம் உயிர்த்த கிறிஸ்துவைக் கண்டுகொள்வது எப்படி?
கண்டுகொள்ளுதல்
சீடர்கள் பெற்ற
உயிர்த்த
இயேசு
இறையனுபவம்:
எம்மாவுஸ் சீடர்கள் இயேசுவின் பாஸ்கா நிகழ்வை நினைவுகூர்ந்து பேசிக்கொண்டு சென்றார்களே அன்றி, அவரைக் கண்டுகொள்ளவில்லை. காரணம், அவர்கள் உயிர்ப்பின் முழுமையைப் புரிந்துகொள்ளாத அறிவிலிகளாய் இருந்தனர் (லூக் 24:25). அப்பத்தைப் பிட்கும் நிகழ்வை நினைவுகூர்வதில் மட்டும் நிறைவடைவதில்லை; மாறாக, அவரைக் கண்டுகொள்வதிலே உயிர்ப்பின் இரண்டாம் பரிமாணம் அமைந்துள்ளது. கிறிஸ்துவை இனிமேல் இயேசுவின் உருவில் காண்பதை விடுத்து, அவரை அன்றாட வாழ்வில் நாம் பிறரிடமும் மற்றும் இயற்கையிலும் அவரின் உடனிருப்பைக் கண்டுகொள்ளும் வாழ்க்கை முறையாகும்.
அனைத்திலும் அனைவரிலும்
உயிர்த்த
இயேசு
உண்மையில்
உயிர்த்த இயேசு இனி தோட்டக்காரராக, (யோவா 20:15) வழிப்போக்கராக, (லூக் 24:15), மீன்பிடிப்பவராக (யோவா 21:4) அவர்களுக்கு முன்வந்து, அவர்களோடு உறவாடி தமது உயிர்ப்பின் உடனிருப்பை உணர்த்துகிறார். ஆக, அனைத்திலும் அனைவரிலும் இறைவனைக் கண்டுகொள்ளும் ஆன்மிக நிலையாகும். சாதி, மதம், இனம் கடந்து தெய்வீகத்தைத் தன்னைச் சுற்றியுள்ள அனைத்திலும் கண்டுணர்ந்து (RECOGNIZE) அனுபவிப்பதாகும்.
உயிர்ப்பைப் பற்றிய ஆன்மிகப் புரிதலின் இரண்டாம் பரிமாணம் ஆகும். இங்கு உயிர்த்த இறைவன் இரண்டாவது ஆளாக முன்னிலையில் ((2nd – person)
பார்க்கும் புரிதல் ஆகும். அனைத்திலும்
அனைவரிலும் இறைவனைப் பார்க்கும் ஆன்மிக அனுபவம். இருப்பினும், உளவியல் ரீதியில் அவரது பாடுகளிலும் உயிர்ப்பிலும் பங்கெடுக்காமல் இருந்திட வாய்ப்புகள் உள்ளன. இயேசு எம்மாவுஸ் சீடர்களிடம் “மெசியாதான் மாட்சியடைவதற்குமுன் இத்துன்பங்களைப் படவேண்டுமல்லவா!” (லூக் 24:28) என்று எடுத்துரைத்து உயிர்த்தெழுதலின் மூன்றாம் பரிமாணத்தைப் பற்றி விளக்குகிறார்.
புத்துரு பெறுதல்
சாட்சிய வாழ்வில்
உயிர்த்த
இயேசு:
உயிர்த்தெழுதலின் மூன்றாம் பரிமாணத்தில் உயிர்த்த இறைவனை முதல் நிலையில், தன்மையில் (1st – person) வைத்துப் பார்ப்பதாகும். நாமே கிறிஸ்துவாகப் புத்துரு
பெறுவதில் (RENEWAL) உள்ளது.
மறுகிறிஸ்துவாக உருபெறுவதில் உள்ளது. தூய பவுலடியார் இந்த இறையனுபவ நிலையை மிக அழகாக, “வாழ்வது நானல்ல, என்னில் கிறிஸ்துவே வாழ்கிறார்” (கலா
2:20) என்று எடுத்துரைக்கிறார்.
உயிர்ப்பின்
இறையனுபவம் என்பது கிறிஸ்துவின் மனநிலையில் பங்கெடுப்பதாகும் (பிலி 2:6). அதாவது, அன்றாட வாழ்வில் அவரது பாடுகளில் பங்கேற்பதன் வழியாக, அவரது உயிர்ப்பில் பங்கெடுப்பதாகும். “அவர் சிலுவைச் சாவை ஏற்கும் அளவிற்குக் கீழ்ப்படிந்தார். எனவே, கடவுள் அவரை உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்”
(பிலி 2:8,9) எடுத்துக்காட்டாக, அனைத்துப் புனிதர்களின் மறைச்சாட்சி வாழ்விலே கிறிஸ்துவின் உயிர்ப்பைப் பற்றிய ஆழமான புரிதலையும் சாட்சிபகர்வதையும் உணரலாம்.
முப்பரிமாணம்
கொண்டது
உயிர்ப்பின்
இறையனுபவம்
இதை
இந்தியத் தத்துவங்கள் மிக அழகாக ‘அகம் பிரம்மாஸ்மி’ என்றும்,
‘தத்துவமசி’ என்றும்
தெளிவாக விளக்கம் தருகிறது. நம்மிடம் உள்ள தெய்வீகத்தன்மையை உணர்ந்து ஒளிர்விப்பதாகும். நமது வாழ்வே நற்செய்தியாக மாறுகிறது. நம்மோடு நம்மில் வாழ்ந்த ஸ்டான் சுவாமியின் வாழ்வு, உயிர்ப்பின் முப்பரிமாணத்தை விளக்குகிறது. உயிர்த்த இயேசு தரும் இறையனுபவம் முப்பரிமாணம் கொண்டது. நீளமானது, அகலமானது. ஆழமானது. இம்மூன்று பரிமாணங்களும் உயிர்ப்பின் முழுமையான, நிறைவான இறையனுபவம் அடங்கியுள்ளது. அன்றாட வாழ்வில், மதிப்பீடுகளின்படி வாழ்ந்துகாட்டி, அவரைக் கண்டுகொண்டு, அன்றாட வாழ்வில் சிறு சிறு பாடுகளில்
பங்கேற்பதன் மூலம் கிறிஸ்துவின் உயிர்ப்பின் முப்பரிமாண இறையனுபவத்தைத் தொடர்வோம்.