கத்தோலிக்க உலகில் ஒரு புயல் அடிப்பது போல, சமூக ஊடகங்களில் ஒரு குழப்பச் செய்தி வலம் வந்து திரு அவையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதுதான் அன்னை மரியா பற்றிய செய்தி. இவ்வருடம் 2025, நவம்பர் 4-ஆம் தேதி புனித சார்லஸ் பொரேமியோ திருநாளன்று வத்திக்கானின் நம்பிக்கைக் கோட்பாட்டுத் திருப்பேராயம் (Dicastery for the Doctrine of the Faith) மேற்கூறிய ஓர் அறிக்கையை (Doctrinal Note), “Mater Populi Fidelis” (Mother of the Faithful People) - இறை நம்பிக்கையாளர்களின் அன்னை என்னும் பெயரில் வெளியிட்டது. ஆனால், இந்நம்பிக்கைக் கோட்பாட்டு அறிக்கை பல்லாண்டுகளாகத் தயாரிக்கப்பட்டு, திருத்தந்தையின் ஒப்புதலுக்காகக் காத்திருந்து, பின்னர் 2025 அக்டோபர் 7-ஆம் தேதி செபமாலை மாதா திருவிழா அன்று திருத்தந்தை லியோ அதற்கு ஒப்புதல் கொடுத்துக் கையெழுத்திட்டார். நம்பிக்கைக் கோட்பாட்டுப் பேராயத்தின் தலைவர் கர்தினால் விக்டர் மனுவேல் பெர்னாண்டஸ் அவர்களைப் பிரகடனப்படுத்தக் கூறினார். இவ்வாறு இவ்வேடு பிரகடனப்படுத்தப்பட்டு, திரு அவை பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. இவ்வேடு குழப்பவுமில்லை; மாதா பக்தியைக் குறைப்பதுமில்லை. இதை விளக்க கீழ்க்காணும் மூன்று ஆய்வுகள் செய்வோம்:
1. 80 எண்கள் கொண்ட
இவ்வேடு அன்னை மரியா பற்றிய திரு அவையின் போதனையாகக் கூறுவதென்ன?
2. திரு
அவை சட்ட முறைப்படி இதன் கனம் என்ன? நம்பிக்கையாளர்கள் எப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும்?
3. எதுவும்
தடை செய்யப்பட்டதா?
1. திருப்பேராயத்தின்
இவ்வறிக்கை உண்மையிலே அன்னை மரியா பற்றிய இறையியலின் ஓர் அருமையான தொகுப்பு. ஒரு மரியியல் (Mariology) கருவூலம்.
இதன் பின்புலம் என்ன? கடந்த அரை நூற்றாண்டாகக் கத்தோலிக்கத் திரு அவையின் பல்வேறு இடங்களிலிருந்து அன்னை மரியாவை ‘இணை மீட்பாளர்’ (Co-Redemptrix) என
அறிவிக்க வேண்டும் என்று நம்பிக்கையாளர்களிடமிருந்து
கோரிக்கைகள் வந்த வண்ணமாய் உள்ளன. அன்னை மரியா பற்றிய இந்த 5-வது கோட்பாட்டைத் திரு அவை அறிவிக்கவேண்டும் என்று தொடர் வேண்டுதல்கள் எழும்பிக் கொண்டிருந்தன. இவற்றிற்கு உறுதிபட பதிலளிக்கவே இவ்வேடு திரு அவையின் ஆசிரியத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வேட்டின் சாராம்சம் இதுவே:
இவ்வேடு
அன்னை மரியா பற்றிய கீழ்க்காணும் இரண்டு சொற்றொடர்களைக் (Titles of Mary) கவனமாக
ஆய்வு செய்து, அவற்றைத் தவிர்க்க வேண்டும் எனக் கூறுகின்றது. அவை முறையே: i) அன்னை மரியா, இணை மீட்பர் (Co-Redemptrix); ii) அன்னை
மரியா அனைத்து வரங்களையும் பெற்றுத்தரும் இடைநிலையாளர் (Media trix of All Graces). திரு
அவையின் இந்த இரு போதனைகளும், “கடவுள் ஒருவரே; கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளரும் ஒருவரே. அவரே இயேசு கிறிஸ்து என்னும் மனிதர்”
(1திமோ 2:5) என்ற திருவிவிலியத்தின் அடிப்படையிலும், “இவராலேயன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை. ஏனென்றால், நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின் கீழ் மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை” (திப
4:12) என்ற இறைவார்த்தையின் அடிப்படையிலும், அன்னை மரியா அல்லர் (எண்கள் 28-33); மாறாக, கிறிஸ்துவே மீட்பர்; மீட்பருக்கு இணையாக எவரையும் கருதக்கூடாது என அறிவுறுத்துகின்றது இவ்வேடு. அதேபோல
இறைவனிடமிருந்து மீட்பையும் வரங்களையும் பெற்றுத் தருபவர் கிறிஸ்துவே (எண் 50-61) என்றும் உறுதிபட விளக்குகின்றது இவ்வேடு.
மனிதர்
என்ற முறையில் அன்னை மரியாவே கிறிஸ்துவால்தான் மீட்கப்பட்டிருக்கிறார் என்பது தான் இறையியல் உண்மை. இதுதான் இவ்வேட்டின் சாராம்சம். இதை முழுமையாகப் படிக்காமல் ஊடகங்கள் குழப்புவது போன்றும், அன்னை மரியா வணக்கத்தைக் குறைப்பது போன்றும், பிரிவினை சபை போலக் கத்தோலிக்கத் திரு அவை மாறுகின்றதா? என்றும் கருத்துத் தெரிவித்துள்ளன. இது அறியாமையின் வெளிப்பாடேயன்றி வேறொன்றுமில்லை.
2. திரு
அவைச் சட்டம் 750-இன்படி திருவிவிலியத்திலும் (Scripture) மற்றும்
வாழையடி வாழையாகத் திரு அவை மரபு (Tradition) வழியாகவும்,
கத்தோலிக்கத் திரு அவையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நம்பிக்கைக் கோட்பாடுகளை (Doctrines), திரு
அவையின் ஆசிரியம், (Solemn Magisterium) உலகளாவிய
ஆசிரியப் போதனையாக அல்லது இறைவனால் வெளிப்படுத்தப்பட்ட (divinely revealed) போதனையாக ஒரு கோட்பாட்டை அறிவிக்கும்போது, நம்பிக்கையாளர் அனைவரும் அப்போதனையை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதைத் திருத்தந்தையே அறிவிக்கலாம் அல்லது திருப்பேராயங்களின் (Dicastery) வழி
அறிவிக்கலாம். இப்போதனைக்கெதிரான கோட்பாடுகளையும் கருத்துகளையும் தவிர்க்க வேண்டியது நம்பிக்கையாளர்களின் கடமை.
தி.ச. 752 கூறுகின்றது: ‘நம்பிக்கையாளர்கள் அனைவரும் அப்போதனைக்கு அறிவு மற்றும் மனம் சார்ந்த ஏற்றுக்கொள்ளலை (a religious submission
of intellect and will) வழங்க
வேண்டும்.’ நமது இறையியல் சிந்தனைகளையும் கருத்துகளையும் அதிகாரப்பூர்வமான இப்போதனையின்படி முறைப்படுத்த வேண்டும். திறந்த மனத்துடனும், திரு அவையின் ஆசிரியத்திற்குக் கீழ்ப்படிதல் மனநிலையுடனும் இப்போதனையை (Infallibility) ஏற்றுக்கொள்ள
வேண்டும்.
அதேவேளை,
இது வழுவா வரம் (Immaculate Conception) உடைய
போதனை அல்ல; தி.ச. 749-இன்படி
திருத்தந்தை, நம்பிக்கை
மற்றும் அறநெறி (Faith and Morals) சார்ந்த
போதனையைக் கோட்பாடாகத் திருத்தந்தை அறுதியிட்டு அறிவிக்கும்போது மட்டுமே அது வழுவா வரம் பெற்ற கோட்பாடாகின்றது. அதை எதிர்க்கும் அல்லது முரண்பட்டுக் கருத்துத் தெரிவிக்கும் நம்பிக்கையாளர்கள் திரு அவையின் உறவு ஒன்றிப்பிலிருந்து நீக்கப்படுகிறார்கள். (உ.ம்.) ‘அன்னை
மரியா அமல உற்பவி’
(Immaculate Conception) என்ற
கோட்பாடு.
3. அன்னை
மரியா பக்தி அல்லது மரியியல் இறையியல் கருத்துகள் ஊடகங்களில் வந்தது போல எதுவும் தடை செய்யப்படவில்லை. தற்போது இப்படி உரைப்பது சரியானதல்ல (எண் 22: ‘it is always
inappropriate to use the title “Co-redemptrix” to define Mary’s
cooperation’) என்றுதான் கூறுகின்றது. அன்னை மரியா இணை மீட்பர் (Co-Redemptrix) எனத்
திரு அவையில் நம்பிக்கைக் கோட்பாடாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற தொடர் கோரிக்கைகளுக்குப் பதில் வழங்கியுள்ளது இத்திருப்பேராயம். இவ்வேடு அன்னை மரியா எப்படி மீட்புத் திட்டத்தில் ‘ஆம்’ எனக் கூறி (லூக் 1:38) பங்கேற்றது முதல் கல்வாரியில் இறுதிவரை மனுக்குல மீட்பின் தாயாக (யோவா 19:25) கிறிஸ்துவாலேயே வழங்கப்பட்டு கிறிஸ்துவின் முதன்மைச் சீடராக (எண் 73) விளங்குகிறார் என்பதை எண்கள் 6,7,8-இல் கூறுகின்றது. பின்னர் எபேசு மற்றும் நிசேயா திருச்சங்கங்களில் மரியா, ‘இறைவனின் தாய்’
(Theotokos) மற்றும் ‘என்றும்
கன்னி’ (virgininty
of Mary) என்ற
போதனைகளை நினைவூட்டி ( எண். 10, 11), பின்னர் வத்திக்கான் ஏடுகள், குறிப்பாக, ‘திரு அவை’ ஏடு வழி (Lumen Gentium No. 62, 66, 69) மீட்புத் திட்டத்தில்
மரியாவின் பங்கு பற்றியும் மற்றும் திருத்தந்தையரின் ஏடுகள், குறிப்பாக, புனித இரண்டாம் ஜான்பாலின் 1987-இல் வந்த ‘மீட்பரின் அன்னை’
(Redemptoris Mater no.
4, 38) போன்ற திருத்தந்தை சுற்றுமடலையும், புனித அகுஸ்தின், பொனவெந்தூர் போன்ற மறை வல்லுநர்களின் கருத்துகளையும் தாங்கிய ஒரு பெட்டகமாக இவ்வேடு வெளிவந்துள்ளது.
தனிப்பட்ட
விதத்தில் கடந்த 30 ஆண்டுகளாக அன்னை மரியாமய ஆன்மிகத்தையே என் குருத்துவத் தனிப்பட்ட வரமாகவும் வாழ்வாகவும் கொண்டு, அது பற்றிய நூல் வெளியிட்டு இருக்கும் எனக்கு, தொடக்கத்தில் கேள்விப்பட்டவுடனே குழப்பமிருந்தாலும் ஏட்டின் திரு அவையின் போதனையைப் படித்து, எனது தனிப்பட்ட விருப்ப அறிவை விடுத்து, திரு அவை ஆசிரியத்தின் போதனையை ஏற்றுக்கொண்டவுடன் தெளிவு பிறந்தது. இப்படிப்பட்ட மனநிலையே ஒவ்வொரு நம்பிக்கையாளர்களுக்குள்ளும்
எழவேண்டும். அதுதான் கத்தோலிக்கக் கிறித்தவம்.
ஒரு நபர், ஒரு நிகழ்வு, ஒரு வார்த்தை
தமிழ்க்
கத்தோலிக்க உலகிற்கு ஒரு தொலைக்காட்சி வேண்டும் என்பது ஒரு நீண்ட காலக் கனவு. பல கிறித்தவ சபைகளின்
போதகர்கள் தனிப்பட்ட விதத்தில் தொலைக்காட்சி நடத்தும்போது, ‘நம்முடைய கத்தோலிக்கத் திரு அவை எண்ணிலடங்கா நிறுவனங்களையும் ஆள் பலத்தையும் பணபலத்தையும் வைத்துக்கொண்டு, ஏன் இன்னும் இந்த ஊடகத் தளத்தை உருவாக்கவில்லை?’ என்று பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்ட காலகட்டத்தில், பல கள ஆய்வுகளின்
அடிப்படையில் 2011-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திருச்சியில் நடந்த தமிழ்நாடு ஆயர் பேரவையின் கூட்டத்தில், ‘நாம் ஒரு தொலைக்காட்சியை நடத்தலாம்’
என்று ஆயர்களிடத்தில் ஒரு திட்டக் கோரிக்கையை வைத்தேன்.
அப்போது
ஆயர்கள் கொடுத்த அறிவுறுத்தலின்படி மீண்டும் மக்கள் மத்தியில் ஒரு கள ஆய்வு செய்யப்பட்டது.
அதில் மூன்று முக்கியக் கேள்விகளின் அடிப்படையில் இந்தக் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
‘ஒரு கத்தோலிக்கத் தொலைக்காட்சி நமக்குத் தேவையா? அவ்வாறு தேவை எனில் எப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை எதிர்பார்க்கின்றீர்கள்? கத்தோலிக்கத் தொலைக்காட்சி நமக்குத் தேவை எனில், அதை நாம் நடத்த நீங்கள் பொருளாதார ரீதியில் உதவ முன் வருவீர்களா?’ என்ற மூன்று அடிப்படை வினாக்களுக்கு மக்களின் விடைகளைப் பெற்று அதை சென்னை இலொயோலா கல்லூரியுடன் இணைந்து பகுப்பாய்வு செய்து 2012 ஜனவரி 27 அன்று திருச்சி மணிகண்டத்தில் நடைபெற்ற ஆயர் மன்றத்தில் படைத்து, அவர்களின் ஒப்புதலுடன் தமிழ்நாட்டின் அனைத்து மறைமாவட்டங்களிலும் பங்குத்தளங்களிலும் பரப்புரை செய்து, ஏறக்குறைய முப்பதாயிரம் பங்குதாரர்களை உள்ளடக்கிய ஒரு நிறுவனத்தை உருவாக்கி, 5.5 கோடி பணத்தை மத்திய அரசிடம் பாதுகாப்புத் தொகையாக (Security deposit)
உருவாக்கி, தொலைக்காட்சி தொடங்கலாம் என்று ஆயர்களின் இறுதி ஒப்புதலுக்கான 2013-ஜூலை மாதம் மதுரையில் நடந்த ஆயர்கள் மாமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
அப்போது
இதை மீண்டும் ஓர் ஆழமான பரிசீலனை செய்ய வேண்டும் என்று அதே மாதம் 17-ஆம் தேதி சென்னை சாந்தோம் கலைத்தொடர்பு நிலையத்தில் ஆயர் மன்றத்தின் சில முக்கிய ஆயர்கள், கத்தோலிக்கத் திரு அவையில் ஊடகத்துறையிலும் தணிக்கைத்துறையிலும்
(auditing) சில முக்கிய வல்லுநர்களை அழைத்து மீண்டும் பரிசீலனை செய்தபோதுதான் அந்த மறக்க முடியாத நிகழ்வு நடந்தது.
“மாதா தொலைக்காட்சியை உங்களால் அரசின் அங்கீகாரத்தோடு அதன் உரிமம் பெற்றுத் (License) தொடங்க
முடியும்; அது பெரிய காரியம் இல்லை; ஆனால், இந்தத் தொலைக்காட்சியை எவ்வாறு மக்களிடம் கொண்டு சேர்ப்பீர்கள்? அதை கேபிள் மற்றும் டிஷ் தளங்கள் வழியாகக் கொண்டு செல்ல என்ன திட்டம் வைத்திருக்கின்றீர்கள்? அதற்கு ஆகும் செலவு எவ்வளவு என்று உங்களுக்குத் தெரியுமா? மாதந்தோறும் ரூ.35 இலட்சம் செலவு பணத்திற்கு என்ன செய்யப் போகின்றீர்கள்? மேலும், முப்பதாயிரம் பேரிடம் பங்குகளைப் பெற்றுள்ளீர்கள்; இதை எப்படிப் பங்கு ஒதுக்கீடு (share allotment) செய்யப் போகின்றீர்கள்?” என்று கேட்டனர்.
அந்தப்
பெரியவர்களின் நம்பிக்கையைப் பெறும் அளவிற்கு என்னால் உடனே பதில்கூற இயலவில்லை. எனவே, “மாதா தொலைக்காட்சி ஆரம்பித்துப் பணத்தை இழப்பதற்குப் பதிலாக, மக்களிடம் வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுங்கள். நம்மால் மாதா தொலைக்காட்சியைத் தொடங்க முடியும்; ஆனால், தொடர்ந்து மாதம் ரூ.35 இலட்சம் செலவு செய்து அதை நடத்த வழியில்லை. எனவே, இதை இப்போதே நிறுத்தி விடுவோம்”
என்று ஒரு முடிவு செய்யப்பட்டது.
இந்த
நிகழ்வை என்னால் மறக்க முடியாது. அன்று கூடி வந்த பெரியவர்களின் கேள்விகளுக்கு என்னால் அவர்களின் நம்பிக்கையைப் பெறும் அளவிற்குப் பதில் கூற முடியவில்லை. ஆனால், இது கடவுளின் திருவுளம் என்றால் அது நடக்கும் என்ற உறுதியான நம்பிக்கை இருந்தது.
அன்று
முதல் பல இரவுகள் நான்
உறங்கவில்லை. கடவுளிடம் கண்ணீரோடு ‘ஏன் இப்படிச் செய்தீர்கள்? ஏன் இந்த மக்கள் இந்தத் திட்டத்தை நம்பிப் பணம் கொடுத்தார்கள்?’ என்று ஒவ்வொரு நாளும் கண்ணீரோடு முறையிட்ட நாள்களுக்குக் கணக்கில்லை. என் மனவேதனையின் உச்சமாக எனக்கு Facial Paralysis ஏற்பட்டு பல வாரங்கள் சரிவரப்
பேச முடியவில்லை. பேசினால் என் வாய் ஒரு பக்கமாகக் கோணிவிடும். வேதனையின் உச்சத்தில் இருந்தேன்.
ஏறக்குறைய
ஓரிரு மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் ஆயர் அந்தோணி டிவோட்டா என்னை அலைப்பேசியில் தொடர்பு கொண்டார். ‘Tomorrow will you be in chennai?’
என்று கேட்டார். “நான் எங்கே போவேன் ஆண்டவரே? இங்கேதான் இருக்கிறேன்” என்றேன்.
மறுநாள்
அதிகாலையிலேயே மலைக்கோட்டை இரயிலில் வந்தார். காலை ஒன்பது மணி இருக்கும். என் அலுவலகத்தில் அமர்ந்து, “David, I will take the responsibility to talk to our bishops and I will give you one more
month time. Can you complete the entire process of the company matters and
apply to the Central Ministry Information and broadcasting affairs for the
Television License?” என்று
படபடவென்று அவருக்கே உரிய பாணியில் பேசினார்.
நான்
அவரிடம், “இது போதும் ஆண்டவரே, உடனே அனைத்துப் பணிகளையும் தொடங்குகிறேன். 20 நாள்களுக்குள் அனைத்தையும் முடித்துக்காட்டுகிறேன். காரணம், ஏற்கெனவே அனைத்துக் கோப்புகளையும் தயார் நிலையில்தான் வைத்திருக்கிறேன். அதனை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டியதுதான் பாக்கி” என்றேன்.
அன்று
ஆயர் அந்தோணி டிவோட்டா என்ற ஒரு நபர் இப்படிப்பட்ட ஆதரவும் ஊக்கமும் கொடுத்து, ‘இதை நாங்கள் கட்டாயம் செய்வோம்’
என்று எங்களை நம்பவில்லை என்றால், இன்று மாதா தொலைக்காட்சி இல்லை. ஆயர் அந்தோணி டிவோட்டா வழியாகக் கடவுளின் செயல், தமிழ்நாடு கத்தோலிக்க மக்களின் நீண்ட காலக் கனவு நிறைவேறியது என்றால் அது மிகையல்ல.
2014-ஆம்
ஆண்டு பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி காலை 5 மணியளவில் பல்வேறு தடைகள், அவமானங்கள், சோதனைகளைக் கடந்து மாதா தொலைக்காட்சியின் ஒலி-ஒளி அதிர்வுகள் ‘Insat 17’ என்ற
அமெரிக்கச் செயற்கைக்கோள் வழியாக உலகமெங்கும் தமிழர்களின் இல்லங்களைச் சென்றடைந்தபோது என் உள்ளத்தில், என் ஆன்மாவில் ஓங்கி ஒலித்த இறைவார்த்தை: ‘இது கடவுளால் நிகழ்ந்துள்ளது; நம் கண்களுக்கு வியப்பாயிற்று.’
இன்று
மாதா தொலைக்காட்சியும், அதன் பல்வேறு சமூக வலைதளங்கள், பல்வேறு முன்னெடுப்புகள்... மேலும் கடந்த மூன்று ஆண்டுகளாகப் புதிதாகக் கத்தோலிக்க இளைஞர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள ‘Synergising Youth for Change’ (SYNC)
என்ற அமைப்பும், AI தொழில்நுட்பத்தில்
தமிழில் புதிய மொழிபெயர்ப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள திருவிவிலியத்தில் ‘Madha Chat’ என்ற AI தளம்... இவையனைத்தும் கடவுளின் செயல் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
‘நம் வாழ்வு’ பத்திரிகையின் தலைமை ஆசிரியர் அருள்முனைவர் இராஜசேகரன் அவர்கள் என்னிடம் என் பணி வாழ்க்கையில் என்னை மிகவும் பாதித்த நிகழ்வு, நபர், வார்த்தை இதைப்பற்றி என் அனுபவத்தை எழுதும்படி கேட்டார். நிச்சயமாக! என் வாழ்வில் என்னால் மறக்க முடியாத, கடவுள் என் கூடவே இருந்து என்னை வழிநடத்துகிறார் என்று உறுதிப்படுத்திய, எனக்குத் திடம் கொடுத்த, என்னைச் சரியான பாதையில் பயணிக்கச் செய்த, என் குறைகளை, நிறைகளை எனக்கு மிகத் தெளிவாக உணர்த்திய நிகழ்வுகள், நபர்கள் மேலும் நல்ல வார்த்தைகள் பல பல உள்ளன;
ஆனால், என் வாழ்வின் உச்சகட்டமாகத் தற்சமயம் நான் கருதும் செயல்பாடு ‘மாதா தொலைக்காட்சி’, இதற்காக நான் எடுத்த முன்னெடுப்புகள் மற்றும் செயல் திட்டங்கள் என்னை மிகவும் புடமிட்டுள்ளன. எனவே, இக்காலகட்டத்தில் என்னை மிகவும் பாதித்த கடவுளின் உடனிருப்பையும் பராமரிப்பையும் உணர்த்திய நிகழ்வையும், நபரையும் மேலும் இறை வார்த்தையையும் குறித்துச் சான்று பகர்கிறேன்.
அதேநேரத்தில்
மாதா தொலைக்காட்சியின் தொடக்கம், வளர்ச்சி, முன்னேற்றம், எதிர்கால முன்னெடுப்புகளில் தங்களின் பங்களிப்பையும் தியாகச் செயல்களையும் உடனிருப்பையும் கொடுத்த அனைத்து தமிழ்நாட்டுத் திரு அவையின் பேராயர்கள், ஆயர்கள், மறைமாவட்டக் குருக்கள், துறவியர் மற்றும் மக்கள் ஒவ்வொருவரையும் நான் நன்றியோடு நினைக்கிறேன். அவர்களின் அன்புக்கும் ஆதரவிற்கும் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்.
இன்று
‘மாதா தொலைக்காட்சி’ பல்வேறு
முன்னெடுப்புகளை எடுத்துள்ளது. ஊடகத்துறையில் ஒவ்வொரு நிலையிலும் வரும் புதிய தளங்களின் ஊடாக அனைத்து வயதினரையும் சென்றடையும் முயற்சிகளில் சிறந்த வெற்றி கண்டுள்ளது. கடவுள் எனக்கு தமிழ்நாடு ஆயர்கள் வழியாகக் கொடுத்த இம்மாபெரும் பணிக்காக நன்றியோடு துதி பாடுகிறேன். இயேசுவுக்கே புகழ்! இயேசுவுக்கே நன்றி! மரியே வாழ்க!
வழிபாட்டு ஆண்டின் சிகரமாகவும், அதன் மகுடமாகவும் விளங்குவது மாட்சிமிகு கிறிஸ்து அரசர் பெருவிழா. இத்திருநாள் ஒரு சாதாரண கொண்டாட்டம் அல்ல; இது காலத்தைக் கடந்து நிற்கும் ஓர் அரசரின் நிலையான ஆட்சிப் பிரகடனமாகும்.
இந்த
விழா 1925-ஆம் ஆண்டு திருத்தந்தை பதினோராம் பயஸ் அவர்களால் ‘Quas Primas’ என்ற சுற்றுமடலின் மூலம் நிறுவப்பட்டது. உலகப் போர்கள் மற்றும் மதச்சார்பின்மையின் எழுச்சியால் உலகெங்கும் குழப்பமும் அநீதியும் கோலோச்சிய காலத்தில், உலகிற்கு உண்மையான அமைதியையும் நீதியையும் வழங்கக்கூடிய ஒரே அரசர் இயேசு கிறிஸ்து மட்டுமே என்ற அடிப்படை உண்மையை உலகிற்கு உரக்கக்கூறும் கட்டாயம் திரு அவைக்கு ஏற்பட்டது. கிறிஸ்துவை நம் வாழ்வின் மையத்தில், சமூகத்தின் மையத்தில் மீண்டும் நிலைநாட்டவே இத்திருநாள் நிலைபெற்றது.
திருவிழாவின்
முக்கியத்துவம்
இந்த
விழாவானது ஆண்டின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் கொண்டாடப்படுவதற்குக் காரணம், நமது நம்பிக்கைப் பயணத்தின் இறுதி இலக்கையும், நம் வரலாற்றின் முடிவில் கிறிஸ்து இயேசு எப்படி எல்லாவற்றிற்கும் முடிசூட்டப்பட்ட அரசராக வருவார் என்பதையும் நமக்கு நினைவூட்டி, நாம் அனைவரும் நமது நம்பிக்கை வாழ்க்கையின் விளைவுகளைச் சிந்தித்து, மீண்டும் ஒரு புதிய நம்பிக்கைப் பயணத்தைத் தொடங்க ஆயத்தமாவதற்கு இத்திருநாள் ஆண்டின் முடிவில் கொண்டாடப்படுகிறது. நாம் இன்று கேட்கவேண்டிய கேள்வி: ‘நம் உள்ளங்களில், நம் குடும்பங்களில், நம் சமூகத்தில் கிறிஸ்து உண்மையிலேயே அரசராக ஆட்சி செய்கிறாரா? இல்லையேல், நாம் அவருக்குச் சிம்மாசனத்தை அமைத்துக் கொடுக்க மறுக்கிறோமா?’
கிறிஸ்துவின்
அரச மேன்மை என்பது ஒரு புதிய கருத்து அல்ல; இது யூதர்களின் நம்பிக்கையின் ஆணிவேராக இருந்தது. மேலும், இறைவாக்கினர்கள் மூலமாகப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே முன்னறிவிக்கப்பட்டது.
கடவுள் தாவீது அரசருக்கு, “உன் அரியணை என்றும் நிலைத்திருக்கும்” (2சாமு
7:16) என்று வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதி தாவீதின் வழித்தோன்றலாக வரவிருந்த நிலையான அரசராகிய கிறிஸ்துவில்தான் முழுமை பெறுகிறது. “இதோ! ஓர் அரசர் நேர்மையுடன் அரசாள்வார்; தலைவர்களும் நீதியுடன் ஆட்சி செய்வார்கள்” (எசா
32:1). இயேசு நீதியின் அரசராகவும் அமைதியின் அரசராகவும் வருவதை எசாயா தீர்க்கத்தரிசியும் தெளிவாக முன்னறிவித்தார் (எசா 9:6).
புதிய ஏற்பாட்டின்
பிரகடனம்
கபிரியேல்
வானதூதர் அன்னை மரியாவிடம், “அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார்; அவர் தம் தந்தையாகிய தாவீதின் அரியணையை அவருக்குக் கொடுப்பார். அவர் யாக்கோபின் வீட்டின்மீது என்றென்றும் ஆட்சி செய்வார்”
(லூக் 1:32-33) என்று அறிவித்தார். இது இயேசுவின் அரச மேன்மையை அவர் கருவிலிருக்கும்போதே உறுதிசெய்கிறது. இயேசு தமது போதனைகள் அனைத்திலும் ‘விண்ணரசு’
அல்லது ‘கடவுளின் அரசு’ பற்றியே அதிகம் பேசினார். மலைப்பொழிவு, உவமைகள் அனைத்தும் அந்த அரசின் மதிப்புகளையும் சட்டங்களையும் வெளிப்படுத்தின. அவர் எருசலேமுக்குள் ஒரு கழுதையின்மீது பவனி வந்தபோது, மக்கள் “தாவீதின் மகனுக்கு ஓசன்னா! ஆண்டவரின் பெயரால் வருகிறவர் ஆசிர்வதிக்கப்பட்டவர்! இஸ்ரயேலின் அரசர்!” என்று ஆர்ப்பரித்தனர் (மத் 21:9; யோவா 12:13). கிறிஸ்துவின் அரச மேன்மை என்பது தற்காலிகமானதல்ல; அது காலம் கடந்த ஒரு நிலையான உண்மை!
உலக
அரசர்களின் ஆட்சிக் கோட்டைகள், படை பலங்கள், ஆடம்பரமான உடைகள் ஆகியவற்றால் பிரகாசிக்கிறது. ஆனால், கிறிஸ்து அரசர் தமது அரியணையைச் சிலுவையிலும், தமது கிரீடத்தை முள் முடியிலும், தமது அரச உடைமையைப் பிறரின் ஏளனமான பேச்சிலும் கண்டார். இதுவே கிறிஸ்துவின் ஆட்சியின் மிகப்பெரிய முரண்பாடாகும்.
கிறிஸ்து அரசின்
பண்புகள்
கிறிஸ்துவின்
அரசு ஒருபோதும் நிலையற்றதல்ல; காலத்திற்குத் தகுந்தபடி மாறும் கோட்பாடுகளைக் கொண்டதும் அல்ல; அதன் அடிப்படைகள் நிலையானவை. இயேசுவின் மலைப்பொழிவே இந்த அரசின் அரசியலமைப்புச் சட்டமாகும். இயேசுவே “வழியும் உண்மையும் வாழ்வும்...” (யோவா 14:6) என்று அறிவிக்கிறார். அவருடைய அரசு பொய், கபடம், தந்திரம் ஆகியவற்றின்மீது கட்டப்படவில்லை. அது உண்மைமீது நிறுவப்பட்டிருக்கிறது.
“முதலில் அவரது அரசையும் அவரது நீதியையும் தேடுங்கள்”
(மத் 6:33). கிறிஸ்துவின் அரசு என்பது சமத்துவத்தின் அரசாகும். இங்குப் பணக்காரன்-ஏழை, ஆள்பவர்-ஆளப்படுபவர் என்ற வேறுபாடுகள் இல்லை. ஒவ்வொரு மனிதனும் கடவுளின் சாயலாக உருவாக்கப்பட்டு, சம மதிப்புடையவனாக மதிக்கப்படுகிறான்.
சமூக அநீதிகளைக் களைவதும், பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்குவதும் இந்த அரசின் அடிப்படை விதியாகும். கிறிஸ்துவின் அரசின் மிக உயர்ந்த மற்றும் மிக முக்கியமான குணம் அன்பு. “நீங்கள் ஒருவரை ஒருவர் அன்பு செய்யுங்கள்; நான் உங்களை அன்பு செய்ததுபோல நீங்களும் ஒருவர் ஒருவரை அன்பு செய்ய வேண்டும்”
(யோவா 13:34) என்பதே அரசின் முதன்மைக் கட்டளை. இந்த அன்பு நிபந்தனைகளற்றது. எதிரிகளை மன்னிப்பதும், பகைவருக்கு
நன்மை செய்வதும், அநீதி இழைத்தவர்களுக்காகச் செபிப்பதும் இந்த அன்பின் வெளிப்பாடுகளே.
இந்த
உலகம் தரும் அமைதி நிரந்தரமற்றது. ஆனால், கிறிஸ்து தரும் அமைதி நிலைத்திருப்பது. “நான் உங்களுக்கு அமைதியை கொடுத்துச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்குக் கொடுக்கிறேன்” (யோவா
14:27). இந்த அமைதி புறச்சூழ்நிலைகளைப் பொறுத்தது அல்ல; அது கடவுளோடு மனிதன் கொண்டுள்ள உள்ளுறவின் விளைவாகும். உன் அமைதி, உன் குடும்ப அமைதி, உலக அமைதி என்பதே இந்த அரசின் செயல்பாட்டுத் தந்திரமாகும்.
சமூக நீதியும்
கிறிஸ்துவின்
ஆட்சியும்
கிறிஸ்துவின்
ஆட்சி தனிப்பட்ட விசுவாசத்துடன் நின்றுவிடவில்லை. அது நாம் வாழும் சமுதாயம் முழுவதையும் உள்ளடக்கியது. சமூக வாழ்வில் நீதியையும் அன்பையும் நிலைநாட்டுவதே கிறிஸ்து அரசருக்கு நாம் செலுத்தும் உண்மையான அன்பின் வெளிப்பாடாகும். இதில் ஏழைகள், ஒதுக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரே கிறிஸ்துவின் பிரதிநிதிகள் என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது. கிறிஸ்துவின் ஆட்சி வரையறை என்பது வறுமை, ஏற்றத்தாழ்வு, இன வெறி, சாதி
வேறுபாடுகள், மனித உரிமை மீறல்கள் போன்ற எல்லாவகையான சமூகத் தீமைகளுக்கும் எதிரானது. கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொள்வது என்றால், உழைப்புக்குரிய கூலியை வழங்குவது, ஏழைகளுக்குச் செவிசாய்ப்பது. நேர்மையான ஆட்சிக்கு ஆதரவளிப்பது, பொது நன்மைக்காக உழைப்பது. கடவுளால் கொடுக்கப்பட்ட உலகைப் பாதுகாப்பது; அதைச் சுரண்டாமல் இருப்பது.
தனிப்பட்ட வாழ்வில்
கிறிஸ்து
அரசர்
கிறிஸ்துவை
உலகத்தின் அரசர் என்று ஏற்றுக்கொள்வது எளிது. ஆனால், அவரை நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையின் அதாவது நம் மனசாட்சியின், ஆசைகளின், முடிவுகளின் அரசர் என்று அறிக்கை செய்வதுதான் மிகவும் சவாலான செயல். கிறிஸ்து அரசின் குடியுரிமை பெறுவதற்குப் பிறப்புரிமை தேவையில்லை; மனமாற்றமும் சீடத்துவமும் மட்டுமே தேவை.
இறுதிக் காலத்தில்
கிறிஸ்துவின்
அரசு
கிறிஸ்து
அரசர் பெருவிழா வெறும் வரலாற்றுக் கொண்டாட்டம் அல்ல; அது எதிர்காலப் பார்வையை நோக்கி நம்மை நகர்த்துகிறது. கடவுளைப் புறக்கணிக்கும் மதச்சார்பற்ற உலகில், நம்பிக்கையுடன் வாழ்வும் வெறுப்பும் பகைமையும் நிறைந்த உலகில், கிறிஸ்துவின் அன்பை வழங்கவும் அநீதியும் ஒடுக்குமுறையும் உள்ள சமூகத்தில், நீதிக்காக நாம் குரல் கொடுக்கவும் வலியுறுத்துவோம்.
நாம்
ஒவ்வொருவரும் கிறிஸ்து அரசரின் தூதுவர்களாக இருப்போம். நம்முடைய வீடுகள் அந்த அரசின் சிறிய பிரதிபலிப்புகளாக இருக்கட்டும். நம்முடைய பணியிடங்கள் அந்த அரசின் நீதியையும் நேர்மையையும் பிரதிபலிக்கட்டும். கிறிஸ்துவின் அரசு என்றென்றும் நிலைத்திருப்பதுபோல, நம் வாழ்விலும் அவர் தரும் அமைதியும் நீதியும் அன்பும் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்.
இறையாட்சியை வாழ்ந்துகாட்டி அடையாளப்படுத்துவதும், சுற்றியிருக்கும் சமூகத்தில் ஈடுபட்டு அதை நற்செய்தி விழுமியங்களால் ஊடுருவி அதனைப் பரவச்செய்யும் ஆற்றல்மிகுக் கருவியாகச் செயல்படுவதுமே திரு அவையின் வாழ்வும் பணியும். இவ்வாறு அது வாழவும் செயல்படவும் உதவும் வகையில் அதன் உறுப்பினர்களுக்குத் தூய ஆவியார் பல்வேறு அருங்கொடைகளையும் ஆற்றல்களையும் அளித்துள்ளார். அவற்றுள் ஆயர், அருள்பணியாளர், திருத்தொண்டர் எனும் முப்பெரும் திருப்பணிகள் திரு அவையின் அமைப்பு சார்ந்த இன்றியமையாத பணிகள். இதனால்தான் தொடக்கத்திலேயே தோன்றி இன்றுவரை அவை எல்லாத் திரு அவைகளிலும் நிலைத்திருக்கின்றன.
இவை
தொடக்ககாலத்திலிருந்து
இன்றுவரைத் திரு அவையில் நிலைத்திருப்பவை என்றாலும், வரலாற்றின் போக்கில் அவற்றைச் செயல்படுத்தும் முறை பல்வேறு மாற்றங்களுக்கு ஆளாகியுள்ளது. இன்றும் அவை எதிர்கொள்ளும் சவால்கள் பல. உலகின் பல பகுதிகளில் உள்ள
திரு அவைகளில் அருள்பணியாளர் பற்றாக்குறை நிலவுகிறது; அருள்பணியாளர் மேற்கொள்ளும் கட்டாய மணத்துறவும், பரவலாக நிலவும் அருள்பணியாளர் ஆதிக்கமும் கேள்விக்கு உள்ளாக்கப்படுகின்றன; மேலும், பொதுநிலையினர் பல்வேறு பணிகளை ஏற்றெடுக்க முன்வந்துள்ளனர். இதனால் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் தொடங்கிவைத்த இப்பணிகளின் புதுப்பித்தல் இன்னும் ஆழமாகத் தொடரப்பட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம். இதற்குப் பதிலிறுப்புச் செய்யும் வகையில் 16-வது ஆயர் மாமன்றமும் இணைந்து பயணிக்கும் முறையில் இப்பணிகளை எவ்வாறு புரிந்துகொள்ளவும் செயல்படுத்தவும் வேண்டும் என்பதற்காகப் பின்வரும் சில புதிய பார்வைகளையும் பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளது.
குழுமக் கூட்டியக்கத்திற்கு
உதவுபவர்கள்
“திரு அவையில் உள்ள எல்லாத் திருப்பணிகளைப்போல் ஆயர், அருள்பணியாளர், திருத்தொண்டர் எனும் பணிகளும் நற்செய்தி அறிவிப்பு, திரு அவைக் குழுமத்தைக் கட்டி வளர்த்தல் என்பவற்றிற்கு உதவவே இருக்கின்றன” (இஅ
68). இம்மூவகையினரும்
இறைவார்த்தைப் பணி, திருவழிபாடு, அனைத்திற்கும் மேலாக அன்பிரக்கச் செயல்பாடுகள் என்பனவற்றின் வழியாக இறைமக்களுக்குப் பணியாற்றுபவர்கள். எனினும், அவை ஒவ்வொன்றும் திரு அவையின் வாழ்விலும் பணிகளிலும் வகிக்கும் இடமும் பொறுப்பும் தனித் தன்மை வாய்ந்தது. இவற்றுள் அருள்பணியாளர்களும் திருத்தொண்டர்களும் பங்கு, நற்செய்தி அறிவிப்பு, கல்வி, கலைகள், இறையியல் ஆய்வு, அருள்வாழ்வு மையங்கள் எனப் பல வகைகளிலும் துறைகளிலும்
பணியாற்றுகின்றனர். அவர்களது அரும்பணிகளுக்காக மாமன்றம் அவர்களுக்கு ஆழ்ந்த நன்றியைத் தெரிவிக்கிறது. அவர்களுள் பலர் தனிமையையும் வேறு பல சிக்கல்களையும் எதிர்கொள்கின்றனர்
என்பதை உணர்ந்து, கிறித்தவக் குழுமங்கள் தங்கள் இறைவேண்டல், நட்புறவு, ஒத்துழைப்பு என்பனவற்றால் அவர்களை ஆதரிக்கவேண்டும் எனவும் அது கேட்டுக் கொள்கிறது.
ஆதிக்கம் அற்ற
அருள்பணி
அவர்களது
ஆக்கம் மிக்க பணிக்குப் பெரும் தடையாக இருப்பது அருள்பணியாளர் ஆதிக்கம். இறைவனது அழைப்பைத் தவறாகப் புரிந்துகொள்வதன் விளைவாகத் தோன்றுவதே இவ் வாதிக்கம். இது அவ்வழைப்பைப் பணி என்பதை விட சிறப்புரிமையாகக் கருதுகிறது. மேலும், இது அதிகாரத்தை உலகப் பாணியில் கையாண்டு, தன்னைத் தணிக்கைக்கு உட்படுத்த மறுக்கிறது. இவ்வாறு இது அருள்பணியாளர் அழைப்பையே சீர்குலைக்கிறது.
“தனது நலனுக்காக அதிகாரத்தைப் பயன்படுத்துவதே அருள்பணியாளர் ஆதிக்கம் என நாம் புரிந்துகொள்ளலாம்.
இறைமக்களின் பணிக்கான திரு அவையின் அதிகாரத்தை அது சீர்குலைக்கிறது. இது திருப்பணியாளர்களின் பாலியல் மற்றும் பொருளாதாரம் சார்ந்த முறைகேடுகள், மனச்சான்று மற்றும் அதிகாரம் என்பவற்றைத் தவறாகப் பயன்படுத்துதல் எனும் பல வடிவங்களில்
வெளிப்படுகிறது” (இஅ
74). உருவாக்கத்தின் தொடக்க நிலைகளிலிருந்தே இந்த ஆதிக்க மனநிலை வேரறுக்கப்பட வேண்டும்.
“கூட்டியக்கத் திரு அவையில் அருள்பணியாளர்கள் தங்கள் மக்களுடன் நெருங்கியத் தொடர்பு, அனைவரையும் வரவேற்று அவர்களுக்குச் செவிகொடுக்கத் தயாராக இருத்தல் எனும் உளப் பாங்குடன் தங்கள் பணியை வாழ்வாக்க அழைக்கப்பட்டுள்ளனர்“ (இஅ
72). மக்களுடன் நெருங்கிய உறவு, தேவையில் இருப்போருக்குப் பணியாற்றும் நடைமுறை அனுபவம் என்பனவற்றிலிருந்து கற்றுக்கொள்வது அதற்கு இன்றியமையாதது.
அருள்பணியாளர்கள்
ஆயரின் முதன்மையான ஒத்துழைப்பாளர்கள். அவருடன் ஓர் அருள்பணிக் குழுமமாக ஒன்றித்துச் செயல்படுவர்கள். ஒருபுறம், ஆயருடனும் அருள்பணியாளர் குழுமத்துடனும் ஒத்திசைவு; மறுபுறம், ஏனைய திருப்பணிகள் மற்றும் அருங்கொடைகளுடன் ஆழ்ந்த ஒன்றிப்பு என்பன அவர்கள் தங்கள் பணியை நன்முறையில் செயல்படுத்த இன்றியமையாதவை.
மணத்துறவு பற்றி
மறு
ஆய்வு
அவசியம்
அருள்பணியாளர்களின்
மணத்துறவு இறைவாக்குத்தன்மையுடன் இயேசுவுக்கு ஆற்றலுள்ள
முறையில் சாட்சியம் பகர உதவுவது என எல்லாராலும் பாராட்டப்படுவது.
இறையியல் பார்வையிலும் அது அருள்பணியாளர் பணிக்கு ஏற்றதே. இருப்பினும், இன்று அருள்பணியாளர் பற்றாக்குறை பல திரு அவைகளில்
நிலவுகிறது. மேலும், பல பண்பாட்டுச் சூழமைவுகளிலும்
அது மிகக் கடினமாகவும் உள்ளது. இந்நிலைகளில், இலத்தீன் மரபுத் திரு அவையில் உள்ளது போன்று அது அப்பணிக்குச் சட்டமுறையில் கட்டாயத்
தேவை ஆக்கப்படவேண்டுமா? எனும் கேள்வியும் எழுப்பப்பட்டது.
பணியில் பகிர்வு
இன்றியமையாதது
அருள்பணியாளர்கள்
தங்கள் பணியில் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.
தனிமை, தனித்துப் பணியாற்ற வேண்டிய நிலை, மிகுதியான பணிச்சுமை என்பன அவற்றுள் முக்கியமான சில. மாமன்ற அனுபவம் கற்றுத்தரும் பின்வரும் பாடம் அவர்களுக்கு உதவ முடியும். அது இறைமக்கள் சமூகத்தின் ஏனைய உறுப்பினர்களின் ஒத்துழைப்பை அவர்கள் தேடி, தங்கள் பணியைக் கூட்டுப்பொறுப்புடன் நிறைவேற்ற முயல்வதே. “பணிகளையும் பொறுப்புகளையும் பரவலாகப் பகிர்ந்தளிப்பதும், என்னென்ன திருநிலைப்பாட்டுத் திருப்பணிக்கே உண்மையாக உரியன, எவற்றையெல்லாம் ஆற்ற பிறருக்குப் பதிலாள் உரிமை தரலாம், தரவும் வேண்டும் என்பவை பற்றிய துணிச்சலான தெளிதேர்வுடனும், அருள்பணிசார் இயக்கத் தன்மையுடன் அப்பணியை ஆற்ற உதவும்”
(இஅ 74). மேலும், இது முடிவெடுக்கும் முறைகளைக் கூட்டியக்கத்தன்மை உடையவை ஆக்கவும் அருள்பணியாளர் ஆதிக்கத்தை மேற்கொள்ளவும் உதவ முடியும்.
நிலையான திருத்தொண்டர்கள்
இன்னும்
ஏன்
இல்லை?
நிலையான
திருத்தொண்டர் பணி இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்திற்குப் பின்பே இலத்தீன் மரபுத் திரு அவையில் நடைமுறைக்கு வந்தது. இருப்பினும், இன்றளவும் அது உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள திரு அவைகளில் அறியப்படாததாகவே உள்ளது. “நிலையான
திருத்தொண்டர் பணி தம்மையே எல்லாருக்கும் பணியாளர் ஆக்கிக்கொண்ட இயேசுவின் மாதிரியைப் பின்பற்றித் திரு அவை தாமும் பணியாளாக வளர்ச்சி காண உதவும் பயனுள்ள வளம் என்பதை இனங்கண்டு, அதிகத் தாராளமாக அதை வழங்கத் தலத்திரு அவைகள் காலம் தாழ்த்தாமல் இருக்க நல்ல பல காரணங்களைப் (2-ஆம்
வத்திக்கான் பொதுச்சங்கம்) படிப்பினை ஏற்கெனவே தந்துள்ளது” (இஅ
73). ஆனால், இன்றுவரை அப்பணி ஏழைகளுக்கும் தேவைகளில் இருப்போருக்கும் ஆற்றப்படும் வகையில் விரிவாக்கப்படவில்லை; மாறாக, அது பெரிதும் திருவழிபாடு சார்ந்ததாக மட்டுமே நடைபெறுகிறது.
செயல்படுத்த சில
பரிந்துரைகள்
1. நிலையான
திருத்தொண்டர் பணி எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது
என்பது பற்றிய மதிப்பீட்டாய்வு செய்யப்பட்டு, புத்தாக்கம் பெற வேண்டும். ஏழைகளுக்கும் நலிவுற்றோருக்குமான பணியாகவும் அதை விரிவாக்கம் செய்யும் வழிமுறைகள் கண்டறியப்படவேண்டும்.
2. அருள்பணியாளர்களும்
திருத்தொண்டர்களும் தங்கள் பணிப்பொறுப்புகளை எவ்வாறு நிறைவேற்றுகின்றனர் என்பதைச் சரியான கால அளவுகளில் தணிக்கை செய்வதற்கான வழிமுறைகளையும் அமைப்புகளையும் தலத் திரு அவைகள் கண்டறிந்து நடைமுறைப்படுத்தவேண்டும்.
3. தங்கள்
திருப்பணியை விட்டு விலகியிருக்கும் அருள்பணியாளர்களின் உருவாக்கத்தையும் அனுபவத்தையும் பயன்படுத்தும் வகையில், சூழ்நிலைக்கு ஏற்ப என்னென்ன அருள்பணிகளில் அவர்களைப் பங்கேற்கச் செய்யலாம் என்பதை அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஏற்பச் சிந்தித்து முடிவெடுக்கலாம்.
(தந்தை அன்புச் செல்வன், தாய் மார்த்தா, மகன் அகஸ்டின், மகள் கிறிஸ்டினா இவர்களோடு அருள்பணியாளர் தாமஸின் உரையாடல் தொடர்கிறது)
அருள்பணி: “கடந்த நமது உரையாடல்களில் திருமுழுக்கு
அருளடையாளம் குறித்து பல்வேறு கருத்துகளை நாம் பகிர்ந்து கொண்டோம். இன்றைய நமது உரையாடலில்
ஒப்புரவு அருளடையாளம் குறித்துப் பேசலாம்.”
அகஸ்டின்: “தந்தையே, ஒப்புரவு அருளடையாளத்தைப்
பற்றி எனக்கு ஒரு கேள்வி உண்டு. ‘ஒப்புரவு என்கின்ற அருளடையாளம் தேவைதானா?’ என்பதே
அக்கேள்வி.”
அருள்பணி: “ஒப்புரவு அருளடையாளத்தின் முக்கியத்துவத்தை
நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், பாவம் என்பது என்ன? பாவம் நம் வாழ்வை எவ்வாறு
பாதிக்கிறது? பாவத்திலிருந்து வெளியேறுவதற்கான வழி என்ன? போன்ற கேள்விகளுக்குப் பதில்
தேடுவது இன்றியமையாதது. பாவம் என்பது என்ன?”
அகஸ்டின்: “கடவுளின் கட்டளைகளை மீறுவதே பாவம்’ என்று மறைக்கல்வி வகுப்பில் படித்ததாக நினைவு.”
அருள்பணி: “உண்மைதான்! எனினும், ‘கடவுளின் கட்டளைகள்’ எவையெவை என்பது குறித்த தெளிவு நம்மிடம் இருந்தாலும், கடவுள்
மனிதர்களாகிய நமக்குக் கட்டளைகளைக் கொடுத்ததன் நோக்கம் என்ன என்கின்ற தெளிவு நம்மிடம்
பெரும்பாலும் இருப்பதில்லை. எனவே, கடவுள் தந்த கட்டளைகளின் நோக்கம் என்பது குறித்து
இன்றைய நாளில் நாம் உரையாடலாம்.”
கிறிஸ்டினா: “கடவுளின் கட்டளைகளுக்கென்று நோக்கம்
இருக்கிறதா? என்ன நோக்கம் தந்தையே?”
அருள்பணி: “ஒரு சிறிய உதாரணம்! ஒருவர் கடைக்குச்
சென்று ஒரு குளிர்சாதனப்பெட்டி வாங்குவதாக வைத்துக்கொள்வோம். அப்பெட்டியோடு ஒரு கையேட்டையும்
(User Manual)
வழங்குவார்கள். அதில் குறிக்கப்பட்டுள்ள வழிமுறைகளின்படி அப்பெட்டியை இயக்கும்போது
மட்டுமே அது அவருக்குப் பயன்தரக் கூடியதாக இருக்கிறது. அதற்கு மாறாக இயக்கினார் என்றால்
(உதாரணமாக, மின் இணைப்பை மாற்றிக் கொடுப்பது, சுகாதாரமற்ற முறையில் கையாள்வது) அது
குளிர்சாதனப் பெட்டியைப் பாழடையச் செய்வதோடு, அவருக்கும் பாதகமாக மாற வாய்ப்புண்டு.
அதுபோல, இந்த உலகில் இருக்கும் ஒவ்வொன்றையும் எவ்வாறு கையாள்வது என்பதற்கான வரையறைகளும்
வழிமுறைகளும் உள்ளன.”
அன்புச்செல்வன்: “எனக்கு ஒரு கதை நினைவிற்கு வருகிறது.
தொழிற்சாலை ஒன்றில் ஒரு பெரிய இயந்திரம் பழுதாகி விட்டது. அதை இயக்குபவர் அதற்குரிய மின்சாரப் பொத்தானை அழுத்தியும்
அது இயங்கவில்லை. தொழிற்சாலையின் உற்பத்திக்கு இந்த இயந்திரத்தின் செயல்பாடு மிகவும்
முக்கியமானதாக இருந்தது. இவ்வியந்திரத்தின் பகுதியாக ஒரு பெரிய சக்கரம் இருந்தது. அச்சக்கரம்
இயங்க மறுத்தது. இதன் காரணமாகவே ஒட்டுமொத்த இயந்திரமும் இயங்கவில்லை. பல தொழிலாளர்கள்
இணைந்து அச்சக்கரத்தை நகர்த்த முயற்சி செய்தனர். ஆனால், முடியவில்லை. வேறு வழியில்லாமல்
மேலதிகாரி அந்த இயந்திரத்தை உருவாக்கிய நிறுவனத்தோடு தொடர்புகொண்டு, பிரச்சினையை எடுத்துக்கூறி
அதனைச் சரிசெய்ய ஒரு நபரை அனுப்பும்படி கேட்டுக்கொண்டார். அந்நிறுவனமும் ஒரு நபரை அனுப்பியது.
வந்த நபர் இயந்திரத்தைக் கூர்ந்து நோக்கினார்.
தன்னிடமிருந்த ஒரு சிறிய சுத்தியலால் சக்கரத்தின் ஓர் இடத்தில் இலேசாகத் தட்டினார்.
பின்பு மின்சாரப் பொத்தானை அழுத்தியவுடன் அது இயங்க ஆரம்பித்தது. வந்த நபர் மேலதிகாரியிடம்,
‘இயந்திரத்தைச் சரிசெய்ததற்கான செலவு ரூபாய் இருபத்து ஐந்தாயிரம்’ என்று கூறினார். அதிர்ச்சியடைந்த மேலதிகாரி, ‘ஒரு சிறிய
சுத்தியலை வைத்து இலேசாகத் தட்டியதற்காகவா ரூபாய் இருபத்து ஐந்தாயிரம்?’ என்று கேட்டார்.
அந்த நபர், ‘இந்தப் பணம் சுத்தியலை வைத்துத் தட்டியதற்காக அல்ல; எங்குத் தட்ட வேண்டும்
என்று தெரிந்து வைத்திருப்பதற்காக!’ என்றாராம்.”
அருள்பணி: “ஓர் இயந்திரம் நமக்குப் பலன்தரக்
கூடியதாக இருக்க வேண்டுமெனில், அது எப்படி இயங்குகிறது என்கின்ற தெளிவு நம்மிடம் இருப்பது
அவசியம். ஓர் இயந்திரத்தை எப்படியும் இயக்கலாம் என்ற ரீதியில் அணுகினோம் என்றால், அது
சிக்கலைத்தான் கொண்டு வரும். நீங்கள் கூறிய கதையில், தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு அந்தப்
பெரிய இயந்திரத்தைப் பற்றிய தெளிவு இல்லை. எனவே, அதில் பிரச்சினை வந்தபோது கையாளத்
தெரியவில்லை. அதைச் சரிசெய்ய வந்த நபருக்கு அந்த இயந்திரம் செயல்படும் விதம் தெரிந்திருந்தது.
எனவே, அவரால் பிரச்சினையை எளிதில் சரிசெய்ய முடிந்தது. இது இயந்திரத்திற்கு மட்டுமல்ல,
மனித வாழ்விற்கும் பொருந்தும்! வாழ்வு என்கின்ற மாபெரும் இயந்திரம் எவ்வாறு செயல்படுகிறது
என்கிற தெளிவை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக, கடவுள் ஒரு கையேட்டை நமக்குக்
கொடுத்துள்ளார். அவற்றையே நாம் ‘கட்டளைகள்’ என்று
அழைக்கின்றேம். ஓர் இயந்திரத்தைச் சரியாக இயக்குவதற்கென்று கையேடு இருப்பதுபோல, வாழ்வைச்
சரியாக வாழ கடவுளால் கொடுக்கப்பட்ட கையேடுதான் கட்டளைகள் என்பவை!”
மார்த்தா: “எனவே கட்டளைகளை ‘வாழ்க்கைக் கையேடு’ என்று அழைக்கலாம்.”
கிறிஸ்டினா: “தந்தையே! கட்டளைகளைப் பற்றிய புதிய
பார்வையாக இது தெரிகிறது. கொஞ்சம் விளக்கமாகக் கூறுங்களேன்!”
அருள்பணி: “வாழ்க்கை இரண்டு நிலைகளில் இயங்குகிறது.
ஒன்று, மேலோட்டமான நிலை; மற்றொன்று, ஆழமான நிலை. மேலோட்டமான நிலையில் பார்க்கும்போது,
பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் தனித்தனியானவையாக, ஒன்றிலிருந்து மற்றவை மாறுபட்டவையாகத்
தெரிகின்றன. ஆனால், ஆழமான நிலையில் அவற்றின் தன்மை வேறு! அவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டவையாக
இருக்கின்றன.”
அன்புச்செல்வன்: “நீங்கள் இதைக் கூறும்போது எனக்கு ஓர்
உதாரணம் மனத்தில் தோன்றுகிறது. ஒரு மரத்தை எடுத்துக்கொண்டோமென்றால் மேலோட்டமாகப் பார்க்கும்போது
அது தனியே இருக்கின்ற ஒன்றாகத் தெரிகிறது. ஆனால், கொஞ்சம் கூர்ந்து நோக்கினோம் என்றால்,
அது சுற்றியுள்ள எல்லாவற்றோடும் இணைந்து இருக்கிறது. மரத்தின் இலைகள் காற்றிலிருந்து
கார்பன்-டை-ஆக்ஸைடைப் பெற்றும், காற்றிற்கு ஆக்ஸிஜனைக் கொடுத்தும் காற்றோடு இணைந்திருக்கின்றன;
கிளைகள் சூரியனின் கதிர்களை உள்வாங்கி ஒளியோடு இணைந்துள்ளன; மரத்தின் வேர்கள் மண்ணோடும்
நீரோடும் இணைந்திருந்து, அவற்றிலிருந்து சத்துகளைப் பெறுவது மட்டுமல்லாமல், மண்ணுக்கு
உறுதித்தன்மையைத் தருகின்றன. மேற்கண்ட தொடர்பும் இணைப்பும் இல்லையேல் அந்த மரம் உயிரோடு
நீடிக்க முடியாது. இவ்வாறு மேலோட்டமாகப் பார்க்கும்போது, தனியே இருப்பதாகத் தெரிகின்ற
ஒன்று சுற்றியுள்ளவற்றோடு இணைந்தும் பிணைந்தும் இருக்கின்றது.”
அருள்பணி: “நல்ல உதாரணம்! இது மரத்திற்கு மட்டுமல்ல,
மனிதர்கள் உள்பட இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றிற்கும் பொருந்தும். இவ்வாறு இணைந்தும்
பிணைந்தும் இருப்பதையே நாம் ‘உறவு’ என்று அழைக்கின்றோம். எனவே, பிரபஞ்சத்தின்
அடிப்படைத்தன்மையே உறவு அல்லது அன்பு என்று கூறலாம். உறவி(வா)ல் மட்டுமே உயிர்கள் வாழமுடியும்
என்பது பிரபஞ்ச நியதி. எனினும், ஏராளமான மனிதர்கள் ஆழமான பார்வையோடு வாழ்வை அணுகுவது
கிடையாது. மேலோட்டமான பார்வை கொண்டு ‘நீ வேறு, நான் வேறு’ என்ற
மனநிலையோடு வாழ்கின்றனர். இத்தகைய மனநிலை மனித வாழ்வில் பல்வேறு பிரச்சினைகளைக் கொண்டு
வருகிறது.”
அகஸ்டின்: “என்னென்ன பிரச்சினைகள் தந்தையே?”
அருள்பணி: “மேலோட்டமாக வாழும் நிலையே நம்மைப்
பாதிக்கும் பாவங்களுக்கான முக்கியமான காரணம் என்பதை நாம் புரிந்துகொள்வது அவசியம்.
இத்தகைய மேலோட்டமான நிலை கொண்டுவரும் பிரச்சினைகள் குறித்து நாம் அடுத்தமுறை பேசலாம்.
இப்பொழுது நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவெனில், மேலோட்டமாக வாழும் மனிதர்களை ஆழமான
நிலை நோக்கி (அதாவது உறவை நோக்கி) நகர்த்துவதற்காகக் கொடுக்கப்பட்டவையே கட்டளைகள் என்பவை.
கடவுள் மனிதர்களுக்குக் கொடுத்துள்ள ‘பத்து கட்டளைகள்’ மனிதர்களை
உறவை நோக்கி நகர்த்துவதற்காகக் கொடுக்கப்பட்டவை. முதல் மூன்று கட்டளைகள் கடவுளோடுடனான
உறவை ஆழப்படுத்துவது குறித்தும், அடுத்த ஏழு கட்டளைகள் பிறரோடுடனான உறவை ஆழப்படுத்துவது
குறித்தும் பேசுகின்றன.”
மார்த்தா: “தந்தையே, இப்போது நீங்கள் கூறிய விளக்கத்திலிருந்து
பாவம் என்றால் என்ன என்பதற்கான ஒரு தெளிவு கிடைக்கின்றது. பாவம் என்பது மேலோட்டமான
மனநிலையோடு நமது தனிமனிதத்தன்மைகளுக்கு அதீத அழுத்தம் கொடுப்பதன் காரணமாக உறவிலிருந்து
அந்நியப்பட்டு வாழ்வதாகும்; கடவுளோடு உள்ள உறவில் இருந்தும், சகமனிதர்களோடு உள்ள உறவில்
இருந்தும் அந்நியப்பட்டு, நம் வாழ்வும் பிறர் வாழ்வும் சீர்கெட்ட நிலையாகும். இந்நிலை
மாறி மகிழ்வான வாழ்வு வாழ வேண்டுமென்றால், ஒரு மனிதர் கட்டளைகளின் பின்னணியில் தன்னையே
உறவிலிருந்து துண்டித்துக் கொண்ட நிலையிலிருந்து வெளியேறி மீண்டு வரவேண்டும். இதுவே
ஒப்புரவு என்பது. அப்படித்தானே?”
அருள்பணி: “ஆம்!”
(தொடரும்)
“விண்ணகத்தில் உள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்” (மத் 12:50). பேரொளியாம் இறைவனின் விருப்பப்படி வாழ்பவரே ஒளியின் மக்கள். அவர்களால் மட்டுமே ஒளியின் செயல்களைச் செய்யமுடியும்; பேரொளியின் சுடராக ஒளிவீச முடியும்; அவர்களின் செயல்கள் இரக்கச் செயல்களாகவே இருக்கும்.
“உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல, நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்”
(லூக் 6:36.) என்று இயேசு அறிவுறுத்துகிறார். இறைத்தந்தையின் மக்களாக வாழ்வதற்கு அடிப்படைப் பண்பு, அன்பில் இணைந்த இரக்கம்.
நம்
தந்தையாம் இறைவன் இரக்கம் நிறைந்தவர், பேரன்பு காட்டுகிறவர். நாம் இரக்கச்செயல்கள் புரிந்து, அவரை மாட்சிப்படுத்த வைகறை தோறும் தம் பேரன்பால் நம்மை நிரப்புகிறார். இரக்கம் நிறைந்த அன்பு சமத்துவச் சமுதாயத்தை
உருவாக்கும்; சகோதரத்துவ உணர்வில் மாந்தர் அனைவரையும் உடன்பிறப்புகளாக உருமாற்றும்.
பேருந்தில்
பயணம் செய்யும்போது இந்தச் சகோதரத்துவத்தை நாம் அனுபவிக்கின்றோம். வயோதிகர், ஊனமுற்றோர், கர்ப்பிணி மகளிர், குழந்தையை வைத்திருப்போர் ஆகியோரைக் கண்டதும் நன்மனமுடையோர் உடனே எழுந்து இடம் அளிப்பர். ஒருநாள் நான் பேருந்தில் ஏறி அமர
இடம் தேடும் முன்பே, ஒரு சகோதரர் எழுந்து என்னை அமரச் செய்து வசதியாகப் பயணம் செய்ய உதவினார். இறங்கி இரண்டு பைகளைத் தூக்கிகொண்டு நடந்து வந்தேன். எதிர்ப்புறம் நின்ற ஓர் ஆசிரியை உடனே வந்து, என்னுடைய பைகளைப் பெற்றுக் கொண்டு, நான் சாலையைக் கடந்து என் இல்லம் செல்ல உதவினார். இவருடைய நன்மனம் கொண்ட நற்செயல்
என்னை மகிழ்ச்சிப்படுத்தியது; மனதார அவர்களை வாழ்த்தி நன்றிகூறினேன். இத்தகையோரைப் பார்த்துதான் இயேசு இறுதிநாளில் கூறுவார், “மிகச் சிறியோராகிய என் சகோதர சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்” (மத்
25:40) என்று.
நம்
இரக்கச்செயல்களைக் கொண்டே நாம் இறுதித்தீர்ப்பு பெறுவோம் என்பது இயேசுவின் போதனை மட்டுமல்ல, வாக்குறுதியும் கூட. அதே நேரத்தில் இரக்கமற்றவனுக்கு இரக்கமற்றத் தீர்ப்புதான் கிடைக்கும் என்பதை மத் 25:41-46-இல் நாம் உணர்த்தப்படுகின்றோம். திருப்பாடலில் செபித்து நாம் உறுதி கூறுகின்றோம்: “ஆண்டவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். அவர் உன் வாழ்நாளை நலன்களால் நிறைவுறச் செய்கின்றார்” (திபா
103:4-5). இறைப் பேரன்பை அனுபவிக்கும் நாம் இரக்கமுடையவர்களாக, வாழ்வளிக்கும் வள்ளல்களாக, வழிநடத்தும் விண்மீன்களாக வாழ்ந்து பிறரையும் வாழ்விப்போம்.
இத்தகைய
நிலையில் நாம் நடந்துசெல்லும் பாதை ஒளியின் பாதை, உண்மையின் பாதை, நன்மை நிறைந்த பாதை. அதுவே வாழ்விக்கும் இரக்கம் நிறைந்த பாதை. இத்தகைய பாதையில் நடப்பவர்கள் இடறிவிழ மாட்டார்கள். இயேசுவின் கரத்தை ‘சிக்’கெனப் பற்றிக்கொண்டு நடப்பவர்கள், நிறைவாழ்வை நோக்கித் திருப்பயணம் மேற்கொண்டு எதிர்நோக்கின் திருப்பயணிகளாக வாழ்பவர்கள், விண்ணகச் செல்வத்தை மட்டுமே சேர்க்கும் ஏழையர் உள்ளத்தோர்... இவர்கள் இறைவனை மட்டுமே சார்ந்து வாழும் நம்பிக்கையாளர்கள்.
தூய
ஆவியின் ஆலயமாகிய நம் உடல் ஒளியைத் தாங்கும் விளக்குதான். விளக்காகிய நம்மில் அருளாகிய எண்ணெய் ஊற்றி, சுடர்விடும் ஒளியை ஏற்றுபவர் பேரொளியாம் இறைத்தந்தையே! எனவேதான் அவரிடம் செபிக்கின்றோம்: “ஆண்டவரே, நீர் என் விளக்குக்கு ஒளியேற்றுகின்றீர்; என் கடவுளே, நீர் என் இருளை ஒளியாக்குகின்றீர்” (திபா
18:28).