“ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?” (மாற்கு 8:36)
அதிகாலை
ஐந்து மணி. விமான நிலையம் ஏற்கெனவே விழித்துவிட்டது. விலை உயர்ந்த பயணப்பைகள், கைகளில் நவீன கைப்பேசிகள், காதுகளில் வயர்லெஸ் இயர்போன்கள், அவசரமாக ஓடும் மனிதர்கள்... எல்லாம் இருந்தன. ஆனால், அந்தக் கூட்டத்தில் ஒன்றை மட்டும் காண முடியவில்லை... மனநிறைவு!
இன்று
நாம் வாழும் உலகம் வசதிகளால் நிரம்பியுள்ளது. முன்பு பல ஆண்டுகள் கனவாக
இருந்தவை இன்று ஒரு பொத்தானை அழுத்தினால் கிடைக்கின்றன. உணவு வீட்டிற்கு வருகிறது. பணம் கைப்பேசியில் பரிமாறப்படுகிறது. உலகத்தின் எந்த மூலையிலும் இருப்பவருடன் ஒரு கணத்தில் பேச முடிகிறது. ஆனால், இந்த அளவுக்கு வசதிகள் பெருகியிருக்கும் போது, ஏன் மன அழுத்தமும் தனிமையும்
அதிகரிக்கின்றன? ஏன் சிரிப்புகள் குறைகின்றன? ஏன் பலரின் இதயங்கள் விளக்குகள் எரியும் வீடுகளைப் போல வெளியே ஒளிர்ந்தாலும், உள்ளே இருளாக இருக்கின்றன?
நாம்
எப்போதும் ‘இன்னும் கொஞ்சம் கிடைத்தால் மகிழ்ச்சியாக இருப்பேன்’
என்று நினைக்கிறோம். நல்ல வேலை கிடைத்தால்... சொந்த வீடு வந்தால்... புதிய கார் வாங்கினால்... பதவி உயர்வு கிடைத்தால்... ஆனால், ஒவ்வோர் இலக்கையும் அடைந்த பிறகும், மற்றொரு வெற்றிடம் நம்மை எதிர்பார்த்து நிற்கிறது. காரணம் எளிது.
பொருள்கள்
நம் தேவைகளை நிறைவேற்றலாம்; ஆனால், இறைவனுக்காகப் படைக்கப்பட்ட இதயத்தை அவை ஒருபோதும் நிரப்ப முடியாது. புனித அகுஸ்தினார் கூறிய வார்த்தைகள் இன்று இன்னும் உண்மையாக ஒலிக்கின்றன: “ஆண்டவரே, உம்மில் இளைப்பாறும் வரை எங்கள் இதயம் அமைதியடையாது.” இயேசுவின் காலத்திலும் இதே உண்மை இருந்தது. செல்வம் இருந்தும் அமைதி இல்லாத இளைஞன் அவரிடம் வந்தான். கட்டளைகளையெல்லாம் கடைப்பிடித்திருந்தான். ஆனால், மனநிறைவு இல்லை. ஏதோ ஒன்று குறைந்திருந்தது. இயேசு அவனைச் செல்வத்தை மட்டும் விடக் கூறவில்லை; அதைவிட ஆழமாக “என்னைப் பின்பற்றி வா” என்றார். ஏனெனில், மனித இதயத்தின் வெற்றிடத்தை நிரப்புவது ஒரு பொருள் அல்ல; ஓர் உறவு! இறைவனோடு இருக்கும் உறவு! இன்று நாமும் அதே தவறைச் செய்கிறோம். தனிமையைச் சமூக வலைத்தளங்களால் நிரப்ப முயற்சிக்கிறோம். அன்பின் பற்றாக்குறையைப் பொருள்களால் மறைக்க முயற்சிக்கிறோம். அமைதியைப் பொழுதுபோக்கில் தேடுகிறோம். ஆனால், தாகத்தைக் கடல் நீரால் தீர்க்க முடியாதது போல, இறைவன் இல்லாத இதயத்தை உலகம் நிரப்ப முடியாது.
நிறைவைத் தரும்
மூன்று
வழிகள்
1. அமைதிக்கான
நேரத்தை உருவாக்குங்கள். ஒவ்வொரு நாளும் சில நிமிடங்கள் கைப்பேசியை விட்டு விலகி, இறைவனோடு அமைதியாக இருங்கள். பல நேரங்களில், இறைவன்
அமைதியில்தான் பேசுகிறார்.
2. நன்றியுணர்வை
வளர்த்துக்கொள்ளுங்கள்,
இல்லாததை எண்ணுவதற்குப்
பதிலாக, இறைவன் ஏற்கெனவே தந்துள்ள அருள்கொடைகளை எண்ணத் தொடங்குங்கள். நன்றியுள்ள இதயத்தில் வெறுமை குறையும்.
3. அன்பைப்
பகிர்ந்து வாழுங்கள். அன்பு பெறுவதற்காக மட்டுமல்ல; அன்பு கொடுப்பதற்காக வாழத் தொடங்குங்கள். பிறரின் கண்ணீரைத் துடைக்கும் கரங்கள், தங்களின் வெறுமையையும் மறந்துவிடுகின்றன.
நம்
வாழ்க்கையில் பல வெற்றிடங்கள் இருக்கலாம்.
அவற்றை பணம், புகழ், பதவி, வசதிகள் ஆகியவற்றால் நிரப்ப முயற்சிக்கலாம். ஆனால், அவை அனைத்தும் தற்காலிகமானவை. இறைவன் மட்டுமே நிலையான நிறைவை அளிக்கிறார். அவரை மையமாகக் கொண்ட இதயம் எந்தச் சூழலிலும் நம்பிக்கையை இழக்காது; ஏனெனில், அதன் மகிழ்ச்சி உலகத்தின் நிலையற்ற பொருள்களில் அல்ல; மாறாத இறையன்பில் வேரூன்றியிருக்கிறது. நிறைந்த உலகத்தில் வாழ்வது பெரிய விசயமல்ல; இறைவனால் நிறைந்த இதயத்துடன் வாழ்வதே உண்மை ஆசிர்வாதம்!
1. கானாவூர் திருமணத்தில் மரியாவின் பரிந்துரையை நினைவுகூர்ந்த பிறகு, இரண்டாம் வத்திக்கான் சங்கமானது இயேசுவின் பொதுவாழ்வில் அவரது பங்களிப்பை இவ்வாறு வலியுறுத்துகின்றது:
“இயேசுவின் பொதுவாழ்வில் அவருடைய தாய் குறிப்பிடத்தக்க முறையில் தோன்றுகிறார். கலிலேயா நாட்டின் கானாவின் திருமண விருந்தில் மெசியாவாகிய இயேசுவிடம் இரக்கத்தோடு பரிந்துரைத்து, அவர் தம் முதல் அருளடையாளத்தைச் செய்யுமாறு (யோவா 2:1-11) தூண்டும் வேளையில் முதன்முறையாக மரியா தோன்றுகிறார். இரத்த உறவுகளையும், அவற்றின் பிணைப்புகளையும் கடந்ததே தமது ஆட்சி என்று கூறி, தம் அன்னை நம்பிக்கையோடு செய்து வந்தது போல் (லூக் 2:19) இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றவர் என கிறிஸ்து பறைசாற்றியபோது
(மாற் 3:35, லூக் 11:27-28), இவ்வார்த்தைகளை அவர் ஏற்றுக்கொண்டார்” (இறைத்திட்டத்தில்
திரு அவை, எண். 58).
பணியின்
தொடக்கத்தில் பாலஸ்தீனத் தெருக்களில் இயேசுவினுடைய பயணத்தின்பொழுதெல்லாம் அவரைப் பின்தொடர முடியாததொரு சூழலானது, மரியாவிற்கு அவரின்
மகனிடமிருந்தான பிரிவையே குறிக்கின்றது. அவரைப் பின்பற்றுவதற்கும், இறையாட்சியை அறிவிப்பதற்காக அர்ப்பணிப்பதற்கும் அவரின் சீடர்களுக்கு அவர் கொடுத்த நிபந்தனைகளிலிருந்தும் இயேசு வேண்டுமென்றே அவரது தாயிடமிருந்தும் மற்றும் குடும்பப் பாசத்திலிருந்த பிரிவைத் தேர்ந்தெடுக்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும்.
மரியா இயேசுவின்
வார்த்தைகளை
நம்பிக்கையோடு
வாழ்ந்து
காட்டுகின்றார்
மரியா
சில நேரங்களில் அவரது மகனின் மறையுரையைக் கேட்டார். குறிப்பாக, நாசரேத்து தொழுகைக்கூடத்தில் எசாயாவின் இறைவார்த்தையை வாசித்தபிறகு இயேசு அந்த ஏட்டிற்கான விளக்கத்தைக் கொடுத்து, அது தன்னைப் பற்றியதே என்று கூறியபொழுது அங்கே மரியாவும் இருந்ததாகக் கருதலாம் (லூக் 4:18-30). “அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று...” என்ற வார்த்தைகளில் உள்ள பொதுவான வியப்பை அவரும் அனுபவித்த பிறகு, அங்கே கூடியிருந்தவர்கள் அனைவரும் அவருக்கு எதிராக நின்று அவரை அந்த இடத்தை விட்டு வெளியேறச் சொன்னதையும், அவரைக் கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டதையும் மரியா கவனித்தபொழுது, அவர் எவ்வளவு துன்பத்தை அனுபவித்திருப்பார்! அந்த நேரத்தில் அந்த இடத்தில் நடந்தவைகளுக்கு நற்செய்தியாளர் லூக்காவின் வார்த்தைகளே சாட்சிகளாகும்: “அவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர். அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்” (லூக்
4:29-30).
இந்த
நிகழ்விற்குப் பிறகு, மேலும் பல சோதனைகளும் இருக்கலாம்
என்பதை உணர்ந்தவராக மரியா, தாய் என்கின்ற முறையில் அவரது துன்பத்தையும் தனிமையையும் அவருக்கே அர்ப்பணித்து, தந்தையின் விருப்பத்திற்குத் தனது முழுமையான கீழ்ப்படிதலை உறுதிப்படுத்துகின்றார் மற்றும் ஆழப்படுத்துகின்றார்.
2. நற்செய்திகளின்படி,
மகனுடைய போதனைகளைக் கேட்பதற்கு மரியா வேறுபல சந்தர்ப்பங்களையும் பெற்றிருந்தார். முதலாவதாக, கானாவூர் திருமண நிகழ்விற்குப் பிறகு கப்பர்நாகூமில், “இதன் பிறகு அவரும் அவர் தாயும் சகோதரர்களும் அவருடைய சீடரும் கப்பர்நாகூம் சென்று அங்குச் சில நாள்கள் தங்கியிருந்தனர்” (யோவா
2:12) என்று திருவிவிலியம் கூறுகின்றது. மேலும், பாஸ்கா விழாவைக் கொண்டாடுவதற்காக இயேசு தனது தந்தையின் வீடு என்றழைத்த மற்றும் அவர் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த எருசலேம் கோவிலுக்கு அவரைப் பின்தொடர்ந்து மரியாவும் ஒருவேளை சென்றிருக்கலாம் (யோவா 2:16-17). பெருங்
கூட்டத்தினிடையே அவரைக் கண்டதாலும் இயேசுவை மரியா நெருங்கமுடியாததாலும், இயேசுவிடம் மரியாவும் அவரது உறவினர்களும் அவரைக் காண அங்கு வந்துள்ளார்கள் என்று சொன்னவர்களிடம், “இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்”
(லூக் 8:21) என்று அவர் சொன்ன பதிலையும் அவர் தன் காதுபடக் கேட்கின்றார்.
இந்த
வார்த்தைகளோடு கிறிஸ்து அவரது குடும்பத்தோடு உள்ள தொடர்பைக் கூறினாலும் கூட, அவருக்கு அவரின் தாயோடு இருக்கும் அந்த ஆழமான உறவை உறுதி செய்கின்ற வகையில் அவரை
மிகவும் புகழ்ந்து பேசுகின்றார். உண்மையில், அவரது மகனுக்குச் செவிகொடுப்பதில் மரியா இயேசுவின் அனைத்து வார்த்தைகளையும் ஏற்று நம்பிக்கையோடு அவற்றைப் பின்பற்றுகின்றார்.
பிரிவு
என்பது இதயத்தின் தூரத்தைக் குறிக்கவில்லை; அது, நாசரேத்தில் இயேசுவின் மறைவான வாழ்க்கையின்போது மரியா தன் மகனை ஆன்மிக ரீதியாகப் பின்பற்றியதையும், அவரது போதனைகளைக் கடைப்பிடித்துத் தியானித்ததையும் தடுக்கவில்லை. உண்மையில்,
மரியாவின் நம்பிக்கையானது இயேசுவுக்கு நடக்கவிருந்த பாடுகளோடு தொடர்புடைய, அவரது போதனைகளைப் புரிந்துகொள்ளத் தவறிய இயேசுவின் சீடர்களைக் காட்டிலும், அவருக்கு இயேசுவினுடைய வார்த்தைகளின் அர்த்தத்தின் ஆழத்தை உள்வாங்க உதவியது (மத் 16: 21-23; மத் 9:32; லூக் 9:45).
3. தன்
மகனின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களில் சிலரிடமிருந்து நிராகரிப்பை அனுபவித்த இயேசுவின் துயரத்தில் மரியாவும் பங்குகொண்டார். இந்த நிராகரிப்பு, அவர் நாசரேத்திற்குச் சென்ற பயணத்தின் போது முதன்முதலில் வெளிப்பட்டது; மேலும், மக்களுடைய தலைவர்களின் வார்த்தைகளிலும் மனப்பான்மைகளிலும் அது மேலும் மேலும் தெளிவாக வெளிப்பட்டது.
இந்த
வகையில், கன்னி மரியா அவரது வாழ்வில் தனது மகன் இயேசுவை நோக்கிய பலரது இத்தகைய விமர்சனங்களையும் அச்சுறுத்தல்களையும் அடிக்கடிக் கேள்விப்பட்டிருக்கலாம். நாசரேத்திலும்
கூட இயேசுவைத் தங்களது நலனுக்காகப் பயன்படுத்திக்கொள்ள முயன்ற (யோவா 7:2-5) மற்றும் அவரது பணியைத் தடுத்து நிறுத்த முயன்ற (மாற் 3:21) உறவினர்கள் மற்றும் நண்பர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் அடிக்கடி மனவருத்தத்திற்கு உள்ளாகியிருக்கலாம்.
மிகுந்த
கண்ணியத்துடனும் மறைவாகவும் தாங்கிக்கொண்ட இந்தத் துன்பத்தின் வழியாக மரியா தன் மகனின் ‘எருசலேமிற்கான’ (லூக்
9:51) பயணத்தில் பங்குகொள்கிறார்; மேலும், நம்பிக்கை மற்றும் அன்பில் அவருடன் மிக நெருக்கமாக ஒன்றிணைந்து, மீட்புப் பணியில் அவரும் ஒத்துழைக்கிறார்.
கிறிஸ்துவின்
வார்த்தைகளை
ஏற்றுக்கொள்வோருக்கு
மரியா
ஒரு
முன்மாதிரி
4. இவ்வாறு,
கிறிஸ்துவின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்வோருக்கு கன்னி மரியா ஒரு முன்மாதிரியாகத் திகழ்கின்றார். வானதூதர் மரியாவிற்குக் கிறிஸ்து பிறப்பை அறிவித்ததில் அந்த இறைவார்த்தையில் நம்பிக்கை வைத்தும், அவரின் மகனுக்கு முழுமையாகத் துணை நின்றும், மீட்பருக்கு நம்பிக்கையோடு செவிசாய்க்கவும் நம் வாழ்வை உருமாற்றிப் புதுப்பிக்கும் இறைவார்த்தையை அவரில் கண்டுகொள்ளவும் நமக்குக் கற்றுத் தருகின்றார். மேலும்,
கிறிஸ்துவுக்கு உண் மையாய் இருப்பதன் மூலம் வரும் சோதனைகளையும் துன்பங்களையும் ஏற்றுக்கொள்ளவும், தமக்குச் செவிசாய்த்துத் தமது வார்த்தையைக் கடைப்பிடிப்பவர்களுக்கு இயேசு வாக்களித்த மகிழ்ச்சியின்மீது நமது பார்வையை நிலைநிறுத்தவும் மரியாவின் இந்த அனுபவமானது நம்மை ஊக்குவிக்கிறது.
மூலம்:
Pope John Paul II, Mary had role in Jesus’ public ministry, in
«L’Osservatore Romano», weakly edition in English», 19 march 1997, p. 11.
பெர்சியா அரசன் டேரியஸ் கி.மு. 515-இல் சிந்து சமவெளி மாகாணத்தைக் கைப்பற்றி, தட்சசீலத்தைத் தலைநகராக்கிக் கொண்டான். யூதர்கள் பலர் பெர்சியாவிலிருந்து வந்து இங்கு குடியேறலாயினர். இதனால் பெர்சியம், யூத மதங்கள் இவற்றோடு ஜொராஸ்ட்ரியத் (Zoroastrianism) தத்துவமும் இங்கே ஏற்பட்டது.
தட்சசீல
நகரின் வளமை மற்றும் செழுமை பற்றிக் கூறவேண்டுமானால் அதற்குரிய சான்றாக விளங்குவது கி.மு. 326-ஆம்
ஆண்டில் மகா அலெக்சாண்டரின் படையெடுப்பாகும். அவன் முதலில் பெர்சியாவைக் கைப்பற்றிய பின்னர் சிந்து சமவெளிப் பகுதியை நெருங்கினான். அப்போது தட்சசீல மன்னன் ஹம்பி, அலெக்சாண்டரின் படைபலத்திற்கு அஞ்சி அவனிடம் சரணடைந்து ஓர் உடன்படிக்கை செய்துகொண்டான். அதன்படி அலெக்சாண்டருக்குப் பரிசாக ஏராளமான மாடுகள், ஆடுகள் மற்றும் படைவீரர்களை வழங்கினான். அந்த
அளவுக்கு மிகச் செழுமையான நகரமாக தட்சசீலம் விளங்கிற்று என அலெக்சாண்டருடன் வந்திருந்த கிரேக்க
வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
சில
காலம் கழித்து, மௌரியர் ஆட்சியின் கீழ் வந்த தட்சசீலம் அவர்களின் முக்கிய நகரங்களில் ஒன்றாக விளங்கிற்று. கி.மு. 272-இல்
மகா அசோகரின் ஆட்சிக்கு இந்நகர் உட்பட்டு, இங்கே புத்த சமயக் கொள்கைகள் பரப்பப்பட்டன. புத்த விகார்கள், தூண்கள் பலவும் கட்டப்பட்டன. பின்னர் அரசுகள் மாறி, கி.மு. 19-இல்
பார்த்தியர்கள் ஆளத் தொடங்கினர்.
பார்த்தியர்கள்
தொடக்க காலத்தில் ஜொராஸ்டர் என்ற ஈரானிய தீர்க்கத்தரிசியின் தத்துவங்களையே தங்கள் சமயக் கொள்கைகளாகப் பின்பற்றினர். பாரசீகம், கிரேக்க மரபுகள் கலந்த கலைகளில் மிகுந்த ஈடுபாடு காட்டினர். மிகச்சிறந்த குதிரை வீரர்களாகவும், வெளியிடங்களுக்குப் பயணம் செய்வதில் ஆர்வம் மிக்கவர்களாகவும் பாராட்டத்தக்கப் போர்வீரர்களாகவும் விளங்கினர். மேலும் கட்டடக் கலையிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தனர்.
கட்டடக்
கலையில் பேரார்வம் கொண்ட அரசன் கொண்டோபரஸ், தலைநகர் தட்சசீலத்தில் 352 அடி நீளமும், 272 அடி அகலமும் கொண்ட பெரிய தோர் அரண்மனையை அமைத்து வாழ்ந்தாலும், எல்லாரும் வியக்கத்தக்க வகையில் உரோமானியக் கலைநயம் மிக்க மற்றொரு புதிய அரண்மனை தனக்குவேண்டும் என்று ஆசைப்பட்டான். அதன் பொருட்டே தன் நாட்டு வணிகரான ஹப்பானின் மூலம் சிறந்த கட்டடக் கலைவல்லுநரை வெளிநாடுகளில் தேடினான். அரசன் கட்டளைப்படியே ஹப்பானும் தோமாவைக் கண்டறிந்து அவரைத் தன்னோடு அழைத்து வந்திருந்தான்.
அரசன்
கொண்டோபரசைத் தலைநகர் தட்சசீலத்தில் ஹப்பான் அறிமுகத்துடன் சந்தித்தார் தோமா. தோமாவின் உயர்ந்த தோற்றம், சிவந்த நிறம், வலிமைமிகு கரங்கள், நுண்ணிய பார்வையுடைய கண்கள் இவற்றைக் கண்டதும் அரசனுக்குத் தோமாவின்பால் நம்பிக்கை ஏற்பட்டது. அந்த நாள்களில் வணிகத்தால் பல நாடுகள் தொடர்புகளில்
இருந்தன. பல்வேறு நாடுகளில் வணிகத்தின் பொருட்டு வேற்று நாட்டினரும் நடமாடுவதால் தோமாவின் உருவத் தோற்றத்தை அவன் அதிசயமாகப் பார்க்கவில்லை.
“உம்மை நான் வரவழைத்த காரணத்தை ஹப்பான் கூறியிருப்பார். எல்லா நாட்டினரும் வியப்படையும்படிக்கு புதிய அரண்மனை ஒன்றைக் கட்ட விரும்புகிறேன். நீர் சிறந்த தச்சர் என்று கேள்விப்பட்டேன். மரம் மற்றும் கற்களைக் கொண்டு என்னென்ன செய்வீர்?” என்று கேட்டான் அரசன்.
தோமா
அமைதியான குரலில் “மரக்கட்டைகள், கற்களைப் பயன்படுத்தி பெரிய கோவில்கள், அரண்மனைகள், நினைவிடங்களை அமைக்க முடியும். கல்தூண்கள், மிகப்பெரிய வாயிற்கதவுகள், சன்னல்கள், மேல்மாடங்கள் கூடிய அரண்மனையை எழுப்பித் தரமுடியும்” என்று
கூற, “இத்தகைய அனுபவம் மிக்க தச்சரைத்தான் நான் தேடினேன்”
என்று மனம் மகிழ்ந்து போனான் அவன். தோமாவிடம் கட்டடக் கலைப் பற்றி உரையாடியவன் அவரை அரண்மனை கட்டவேண்டிய இடத்தைக் காட்ட ஊருக்கு வெளியே வரவழைத்தான்.
தான்
அரண்மனை அமைக்க விரும்பிய இடத்தைக் காட்டி, அது குறித்து அரசன் கேட்டபோது “அரண்மனை கட்டுவதற்கு இது மிகச்சிறந்த இடம்” என்று தோமா ஒப்புதல் அளித்தார். “அப்படியானால் உடனடியாக வேலையைத் தொடங்குங்கள்” எனக்
கேட்டுக்கொண்ட அரசனிடம் “குளிர் காலத்தில்தான் என் பணியை ஆரம்பிப்பேன்” என்று
தோமா கூறிய பதில் அவனுக்கு வியப்பாக இருந்தது.
“எல்லாரும் கோடைக்காலத்தில்தான் கட்டட வேலையைச் செய்வார்கள். நீர் குளிர்காலம் என்கிறீர். குளிர்காலத்தில் எப்படி அரண்மனை கட்ட இயலும்?” என்று அரசன் கேட்க, தோமாவோ “அப்போதுதான் என்னால் இயலும். குளிர்காலத்தில் தொடங்கி கோடைக்காலத்திற்குள் அரண்மனையைக் கட்டி முடிப்பேன்” என்றார்
உறுதியாக.
அயல்நாட்டாருக்கு
இந்தியப் பகுதிகளின் வெப்பம் எப்போதும் ஒத்துக்கொள்ளாது என்பது ஒருபுறமிருக்க, தோமாவின் உள்மனதிற்குள் ஏதோ எண்ணமும் இருந்தது.
தோமாவின்
உறுதியான பதில் குறித்துச் சிந்தித்த அரசன், “இப்போது நீங்கள் செல்லலாம்; இன்னும் சில நாள்களில் தங்களைச் சந்திப்பேன். அதற்குள் அரண்மனைக்கான வரைபடம் ஒன்றைத் தயாரித்துக் கொடுங்கள்”
என்றான். தோமாவும் ஒப்புக்கொண்டார். அரசனின் வேண்டுகோள்படியே தோமா வரைபடத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார். அதற்காக இரும்பாலான ஓர் அளவுகோலைக் கொண்டு அரண்மனையின் சுற்று எல்லைகளை, உள் அளவுகளை அளக்கலானார்.
கோடைக்காலத்தில்
வெப்பம் தாக்காத வகையில் அறைகளைக் குறித்தார். குளிர்காலத்தில் நெருப்பு மூட்டிக் குளிர்காய புகைபோக்கிகளைக் குறிப்பெடுத்தார். சூரிய ஒளி பாயும்படிக்குக் கிழக்குப் பகுதியில் கதவுகள் அமைத்தார். வெளிச்சமும் குளிர்ந்த காற்றும் தாராளமாக வரக்கூடிய வகையில் மேற்கு நோக்கியபடி சன்னல்களுக்கு இடங்கள் கொடுத்தார். தெற்குப்பகுதியில் வெளிச்சமான சமையல் அறைகளுக்கு இடம் ஒதுக்கினார். வடக்கில் நீர்த்தேக்கங்களுக்கு வசதி செய்தார். அங்கிருந்து தண்ணீர் வரும் குழாய்களுக்குப் பாதைகள் வகுத்தார். அரண்மனையின் மையப்பகுதியில் புதையல் அறையை நிர்மாணித்தார்.
அரண்மனைக்
கலைஞர்கள் வசிக்க இடமும், அரண்மனைக்குச் சற்று தொலைவில் குதிரைகள், கழுதைகளுக்கான தொழுவங்களும் குறிக்கப்பட்டன. பணி முடியும்வரை பொன், வெள்ளி, கொல்லர்கள், மரவேலைப்பாடு செய்பவர்கள். வண்ணம் பூசுபவர்களுக்கான தங்குமிடங்களைக் குறித்தார். இவற்றையெல்லாம் அளவுகளோடு குறித்துக்காட்டி வரைபடத்தைத் தயாரித்த தோமா, அதனை அரசனிடம் அளித்தபோது வரைபடத்தைக் கண்ட அரசன் தோமாவின் தொழில்நுட்ப அறிவைக் கண்டு வியந்து போனான். தோமாவைப் பாராட்டியவன், “நீர் திறன் மிக்கவர் என்பதைப் புரிந்துகொண்டேன். என்னுடைய பணிச்சுமைகள் காரணமாக என்னால் அடிக்கடி இங்கே வரமுடியாது. வேறு மாநிலத்தில் தங்கவிருக்கிறேன். எனவே, தலைநகர் திரும்ப சில காலமாகலாம். உமக்குத் தேவையான அளவுக்கு பொன், வெள்ளிக்காசுகளை அளிக்கிறேன். கட்டடப் பொருள்களை வாங்கப் பயன்படுத்திக்கொள்ளும். மேலும், தேவைப்பட்டால் செய்தி அனுப்பும், ஏற்பாடு செய்கிறேன். நான் திரும்பி வருகையில் இந்த வரைபடத்தில் திட்டமிட்டுள்ளபடி அரண்மனையை முடித்துவையும்” என்றவன்,
அங்கிருந்து நம்பிக்கையோடு புறப்பட்டுப் போனான்.
அரசன்
புறப்பட்டுப் போனபின்பு, அவனுடைய நம்பிக்கையைத் தோற்கடிக்கும் விதமாக இறைநம்பிக்கையில் தோமா இயல்பாகச் செயல்பட ஆரம்பித்தார். அரசன் கொடுத்த பணத்தை அரண்மனை கட்டச் செலவிடாமல், அருகிலுள்ள நகர்ப்புறங்களுக்கும் கிராமப் புறங்களுக்கும் கால்நடையாகச் சென்றவர், அரசன் வந்து கேட்டால் என்ன பதில் கூறுவது என்பது பற்றியெல்லாம் கவலைகொள்ளாமல், கையிலிருந்த பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்து உதவிக்கொண்டே நடந்தார்.
அரசன்
கொண்டோபரஸ் அரண்மனை கட்டுவதற்காகத் தன்னிடம் கொடுத்த பணத்தை ஏழை எளிய மக்களுக்குக் கொடுத்து உதவிய தோமா, தான் செல்லும் இடமெங்கும் நற்செய்தியைப் போதிக்கலானார். அத்துடன் நோயாளர்களைக் குணப்படுத்துவதும், தீய ஆவிகளை ஓட்டுவதுமாக மக்களுக்கு நன்மைகள் புரிந்தார். அவர் இருக்குமிடம் தேடி மக்கள் வரத் தொடங்கினர். அவரோ ஓரிடத்தில் இல்லாமல் தம் பயணத்தைத் தொடர்ந்தார்.
(தொடரும்)
1491-இல் இஸ்பானிய நாட்டின் குஸ் பிஸ்கோவா பகுதியிலுள்ள இலயோலா அரண்மனை இல்லத்தில் பிறந்து, 1556-இல் உரோமையில் இறந்த புனித இஞ்ஞாசியார் இயேசு சபையைத் தோற்றுவித்து வளர்த்தெடுத்தவர். வீர சாகசங்கள் செய்து, பெரும் புகழ் பெற்று அழகிய இளவரசியை மணந்து ஆடம்பரத்தில் வாழ விரும்பிய இனிகோ இளைஞனுக்கு, இறைவன் வேறொரு திட்டத்தை வெளிப்படுத்தினார்.
1521-இல் தனது
நாட்டைக் காப்பாற்றுவதற்காகப் பாம்பலூனா கோட்டையில் பிரெஞ்சுப் படைகளுக்கு எதிராகத் தீவிரமாகப் போர் புரிந்த போர்வீரன் இனிகோவின் காலை அணுகுண்டு துளைத்தது. குணமாகிக் கொண்டிருந்தபோது இயேசுவிற்காகப் பணிபுரியும் போர்வீரனாக இனி மாறவேண்டும் என்ற மனமாற்றம் அவருக்கு ஏற்பட்டது. அரண்மனை வாழ்வைத் துறந்து, ஆண்டியாகத் துறவு மேற்கொண்டு, கடுந்தவம் புரிந்து, ஆழ்ந்த செபத்திலே இறைத் திருவுளத்தைக் கண்டுகொண்டு, திரு அவை வழியாக அகில உலகிற்கும் பலதரப்பட்ட பணிகள் வழியாக இறை-மனிதப் பணி செய்திட இயேசு சபையை நிறுவி வழிநடத்தினார்.
திரு அவையின்
ஆன்மிகப்
புதையல்:
நீண்ட காலமாகத் தான் பெற்ற ஆழ்ந்த இறையனுபவத்தை எல்லாரோடும் பகிர்ந்துகொள்ள ‘ஆன்மிகப் பயிற்சிகள்’ என்ற
நூலை வடித்தெடுத்து பொதுநிலையினருக்கும் துறவறத்தாருக்கும் குருக்களுக்கும் இறைவழி காட்டிடும் ஆன்மிகப் புதையலை விட்டுச் சென்றிருக்கின்றார். இஞ்ஞாசியாரின் ஆன்மிகப் பயிற்சிகள் வழியாக மலர்ந்துள்ளதுதான் புனித இஞ்ஞாசியாரின் ஆன்மிகம். திரு அவையை வழிநடத்திடும் பலவகையான ஆன்மிகங்களில் சிறப்பான ஆன்மிகமாக 500 ஆண்டுகளைக் கடந்தும் பயனுள்ளதாகச் செயல்பட்டு வருகின்றது.
இயேசு சபையாருக்கு
மட்டுமல்ல;
இறை
மக்களுக்கும்
உரிய
ஆன்மிகம்:
இஞ்ஞாசியார் ஆன்மிகம் என்றால் ஏதோ இயேசு சபையாருக்கு மட்டுமே உரித்தான ஆன்மிகம் என்று சிலர் நினைக்கின்றனர். மாறாக, இந்த ஆன்மிகம் திரு அவையில் இருப்போர் அனைவருக்கும் கொடையாகப் புனித இஞ்ஞாசியார் விட்டுச் சென்றுள்ளார். இந்த ஆன்மிகப் பயிற்சிகளைத் தொடக்க காலத்தில் பொதுநிலையினரிடம்தான் அதிகமாகப் பகிர்ந்துகொண்டுள்ளார். இன்றும் இஞ்ஞாசியாரின் ஆன்மிகப் பயிற்சிகளை ஒரு மாதம், எட்டு நாள், மூன்று நாள் தியானமாகப் பல துறவற சபையினரும்
குருக்களும், சில பொதுநிலையினரும் செய்து ஆன்மிகத்தில் வளர்ந்து வருகின்றனர். மேலும், மேற்கத்திய நாடுகளிலே பொதுநிலையினர் இந்த ஆன்மிகப் பயிற்சிகளை மேற்கொள்வதோடு மட்டுமில்லாமல், அவர்களே அதில் பாண்டித்தியம் பெற்று இந்த ஆன்மிகப் பயிற்சிகளை வழிநடத்தி வருவது பெருமைக்குரியதாக உள்ளது.
தியானத்திற்கு
மட்டுமல்ல,
வாழ்வுமுறை
வழி
காட்டியாகவும்:
இஞ்ஞாசியாரின் ஆன்மிகப் பயிற்சிகளை வெறும் ஒரு தியானச் சூழலுக்குள் மட்டும் சுருக்கி வைத்துவிட முடியாது. கிறித்தவ வாழ்வை நெறிப்படுத்தும் ஒரு வாழ்வு முறையாக இவ்வான்மிகம் பார்க்கப்படுகின்றது. இயேசுவை, அவரின் வாழ்வை, பணியை, விழுமியங்களை மையமாகக் கொண்டுள்ள இவ்வான்மிகப் பயிற்சிகள் கிறித்தவ வாழ்வை, ஏன் மனித வாழ்வையே வழிநடத்தும் ஒரு வழிமுறையாக உள்ளது.
மரியன்னையின்
மகத்தான
பக்தர்:
இந்த இஞ்ஞாசியார் ஆன்மிகத்தில் கடந்த 54 ஆண்டுகள் வளர்ந்து வந்த இயேசு சபையாளன் என்ற முறையில் இவ்வான்மிகம் முன்வைக்கும் சில முக்கியமான பார்வைகளை, வழிமுறைகளை, அணுகுமுறைகளைக் கிறித்தவர் அனைவரின் நலன்களுக்காகவும், குடும்ப-குழும வாழ்வின் வளர்ச்சிக்காகவும் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.
மனித வாழ்வின்
மூலக்கோட்பாடும்
முக்கியக்
குறிக்கோளும்:
தனது ஆன்மிகப் பயிற்சி நூலின் 23-வது எண்ணிலே மனித வாழ்வின் மூலக்கோட்பாட்டையும் முக்கியக் குறிக்கோளையும் பதிவுசெய்துள்ளார். “கடவுளாகிய நம் ஆண்டவரைப் போற்றவும் வணங்கவும் அவருக்குப் பணிபுரியவும், அவ்வாறு செய்வதன் வழியாக நமது ஆன்மா ஈடேற்றம் அடைவதற்கும் மனிதர் படைக்கப்பட்டுள்ளனர்.” நம்மைப் படைத்து, பராமரித்து, வழிநடத்திடும் இறைவனைப் போற்றுவதும் வணங்குவதும் வெறும் வழிபாடுகளில், செபங்களில், சடங்குகளில் மட்டும் நின்றுவிடாது, அவை நமது வாழ்வில் பணியாகப் பரிணமிக்கவேண்டும் என வலியுறுத்துகின்றார்.
எனவே,
மனிதரின் நலனுக்காக உலகில் படைக்கப்பட்டுள்ளவற்றை இந்தக் குறிக்கோளை நிறைவேற்றுவதற்காகத்தான் மனிதர் பயன்படுத்த வேண்டுமே ஒழிய, தமது சுயநலத்திற்காகவோ, பிறரது வாழ்வை அடிமைப்படுத்தி, அவர்களது நலன்களைப் பறித்துக்கொண்டு சுகமாக வாழ்வதற்கோ அல்ல என்பதையும் சுட்டிக்காட்டுகின்றார். இதற்கு மிகவும் தேவையான அகச்சுதந்திரத்தில் (holy
indifference or interior freedom) செயல்பட
அழைப்பு விடுக்கின்றார்.
இன்றைய
முதலாளித்துவச் சூழலில், தேவைகளைவிட ஆடம்பர வசதிகளுக்காக வாழ நிர்ப்பந்திக்கும் நுகர்வுவெறிக் கலாச்சாரத்தில், அதற்காக எதையும் எவரையும் காவுகொடுத்திடத் துடித்திடும் இச்சூழலில், மனிதர் எல்லாரையும் படைப்புகள் அனைத்தையும் மாண்புடன் நடத்திடும் வாழ்வுக்கு இஞ்ஞாசியார் ஆன்மிகம் சவால் விடுக்கின்றது.
ஆண்டவரின் அதிமிகு
மாட்சிக்கே:
இயேசு சபை நிறுவனங்களிலும் இல்லங்களிலும் பணித் தளங்களிலும் ‘ஆண்டவரின் அதிமிகு மாட்சிக்கே’ (AMDG: Ad Maiorm Dei Gloriam) எனும்
இலட்சினையைக் காணலாம். எதைப் போதித்தாலும், எதைச் செய்தாலும், எங்குப் பணி செய்தாலும் அனைத்தையும் கடவுளின் மாட்சிக்காகத்தான் செய்ய வேண்டும் எனும் உயர் இலட்சியத்தோடு வாழ்ந்த புனித இஞ்ஞாசியார், தனது சபையும் அப்படித்தான் வாழவேண்டும் எனப் பணித்தவர். தான் வடிவமைத்துக் கொடுத்துள்ள ‘இயேசு சபை சட்டச் சாசனத்தில்’ இந்த
ஏ.எம்.டி.ஜி. எனும்
சொல்லாடல் ஏறக்குறைய இருநூறு தடவை பயன்படுத்தப்பட்டுள்ளதிலிருந்து
இந்த நோக்கத்திற்காக இஞ்ஞாசியார் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார் என்பது தெளிவாகின்றது. உலகின் படைப்பையே கடவுளின் மாட்சியாகக் கண்ட புனித இஞ்ஞாசியார், உலகில் நடக்கும் அனைத்தும் கடவுளின் மாட்சிக்காக நடக்கவேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருந்தார்.
கடவுளின்
திருவுளத்தை, திட்டத்தைத் தெளிந்து தேர்ந்துகொண்டு, அதன்படி வாழ்வதும், வாழ வைப்பதும்தான் ‘கடவுளின் மாட்சி’ என நம்பிச் செயல்பட்டவர்
இஞ்ஞாசியார். ஒட்டுமொத்தமாக, கடவுளின் மாட்சி என்பது, அவரது படைப்புகளும் மானிடரும் மாண்போடு வாழ்வதுதான். புனித ஐரேனியுஸ் மொழிந்தபடி ‘மனிதர்கள் நிறைவாக வாழ்வதுதான் கடவுளின் மாட்சி’ ஆகும்.
‘தான்’,
‘தனது’, ‘தமது’ என்று
அனைத்தையும் பயன்பாட்டுப் பார்வையோடு நடத்துவதும், எதைச் செய்தாலும் சுயபாராட்டிற்காகவும் சுயகௌரவத்திற்காகவும் தன்னை மட்டும் முன்னிறுத்திப் பெருமை பெறுவதற்காகவும் செயல்படும் இன்றைய சமுதாயத்தில், பிறரும் படைப்புகளும் மாண்போடு வாழ்வதுதான் கடவுளின் மாட்சி எனும் வேரோட்டமான பார்வையை வழங்குகின்றது இஞ்ஞாசியாரின் ஆன்மிகம்.
இன்னும் அதிகமாக:
கடவுளுக்காகப் பணிபுரிவதில், பிறருக்காக வாழ்வதில் ‘இன்னும் அதிகமாக’ (MAGIS) எனும்
போக்கோடு செயல்பட வேண்டும் என்று இஞ்ஞாசியார் ஆன்மிகம் வழிகாட்டுகின்றது. ‘போதும்’,
‘குறைந்த அளவு’,
‘இவ்வளவுதான்’ எனும்
சொல்லாடல்களுக்கு இஞ்ஞாசியாரின் வாழ்விலும் பணியிலும் அகராதியிலும் இடமே இல்லை. கணக்கிடாமல் கொடுத்திட, காயத்தைக் கவனியாது போரிட, ஓய்வைத் தேடாது உழைத்திடத் தூண்டுகின்றது இஞ்ஞாசியாரின் ஆன்மிகம்.
குறைவாக
உழைத்துவிட்டு மிகுதியாக ஆடம்பர வாழ்க்கை வாழும் போக்குகள் அதிகரித்து வரும் இச்சமுதாயத்தில், அன்பிற்கு அணை போடாமல், பிறர் பணிக்கு வேலி போடாமல் இன்னும் அதிகமாக... இன்னும் அதிகமாக என்று அன்பு செய்ய வேண்டும், பணி செய்யவேண்டும் என அறைகூவல் விடுப்பது
இஞ்ஞாசியார் ஆன்மிகமாகும். கணக்குப் பார்த்து, கைம்மாறு கருதி, பயன்பாட்டுப் பார்வையில் (Utilitarianism) தனது
சாதி, தனது சொந்தங்கள், தனக்குப் பிடித்தவர்கள் என்று மட்டும் அன்பு செய்திடும் சுயநலச் சூழலில் இஞ்ஞாசியார் காட்டும் ‘இன்னும் அதிகமாக’ எனும் ஆன்மிகப் பார்வை, புதிய மாற்றங்களையும் வளர்ச்சிகளையும் கொண்டு வந்து, சமத்துவத் தோழமை இறையாட்சிச் சமுதாயமாகக் கட்டி எழுப்பிவிடும்.
தெளிந்து தேர்ந்திடல்
- தீர்க்கமாகத்
தீர்மானித்திடல்:
எதைச் செய்தாலும் அது கடவுளின் திருவுளத்தின் வழியாகத் தெரிந்து கொண்டுதான் செய்யவேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தார் இஞ்ஞாசியார். நமது தனிப்பட்ட, குடும்ப, குழும வாழ்விற்கும், இன்னும் பணிவாழ்விற்கும் பொது வாழ்விற்கும் நமது விருப்பங்களும் ஆசைகளும் முக்கியமல்ல; கடவுள் எதை விரும்புகிறார்? எதைச் செய்யச் சொல்கின்றார்? என்பதை அறிந்திட ‘தெளிந்து தேர்ந்திடல்’ (Discernment) எனும் ஆன்மிகப் பயிற்சியை, உத்தியை, வழிமுறையை வழங்கியுள்ளார்.
ஒவ்வொரு
நாளும் நாம் பல தீர்மானங்களை எடுக்கின்றோம்,
அவை இறைத் திருவுளத்தால் தூண்டப்பட்டு எடுக்கின்றோமா? அல்லது நமது சுயநலங்களை முன்னிறுத்தி எடுக்கின்றோமா? என்பதை ஆய்வுசெய்து செயல்பட இஞ்ஞாசியார் வழங்கியுள்ள ‘தெளிந்து தேர்ந்திடல்’ வழிமுறை
மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இன்று மேலாண்மைக் கல்வி நிறுவனங்களும் இவரின் வழிமுறைகளைக் கற்றுக்கொண்டு வருகின்றன. எப்போதுமே நல்லதைச் செய்யச் சொல்லும் கடவுளின் திருவுளம் நாடி நமது முடிவுகளை, தீர்மானங்களை எடுத்தால் அது நமது வாழ்வையும் பிறரது வாழ்வையும் மேம்படுத்தும்.
எல்லாவற்றிலும்
எல்லாரிடமும்
கடவுளைக்
கண்டிட:
உடல்-ஆன்மா, பொருள்-ஆவி என மானுடத்தைக் கூறுபடுத்திய
ஆன்மிகப் பார்வைகளின் மத்தியில் ‘கடவுளை எல்லாவற்றிலும் கண்டிட, எல்லாவற்றிலும் கடவுளைக் கண்டிட’ எனும் புதிய, நேர்மறையான, ஆக்கப்பூர்வமான பார்வையைத் தருகின்றது இஞ்ஞாசியார் ஆன்மிகம். புனிதம் புனிதமற்றது, தூய்மையானது, தீட்டுப்பட்டது என்று உலகையும் மானுடத்தையும் கூறுபடுத்திப் பார்க்கையில், ஏற்றத்தாழ்வுகளும் மேடு பள்ளங்களும் பிளவுபடுத்துதலும் பிரித்தாளுவதும் ஆதிக்கப்போக்கும் அடிமைத்தனமும் போட்டி போட்டு மனித சமுதாயத்தைக் காயப்படுத்தி வருகின்றன.
இறைவன்
படைத்திட்ட அனைத்தும் புனிதமானது. அவை அனைத்திலும் ஆண்டவர் பிரசன்னமாய் உள்ளார். ‘கடவுளின் அன்பை அடைந்திட’
எனும் காட்சித் தியானத்தில் ‘இறைவன் அனைத்திலும் அன்பிற்காக உழைத்துக் கொண்டு இருக்கின்றார்’ என்று
நம்மை உணர்வுப்பூர்வமாக உணர வைக்கின்றார். மேலும், இந்தப் பார்வையானது படைப்பையும் படைப்புயிர்களையும் மதித்து, மாண்போடு நடத்த வழிவகுக்கின்றது. நம்மோடு பிரசன்னமாய் இருந்து அன்புசெய்து கொண்டிருக்கின்ற கடவுளைப் போல, நாமும் பிறரது வாழ்வில் பிரசன்னமாக இருந்து அன்புசெய்திடத் தூண்டுகின்றது.
அனைவருக்கும்
துணை
நின்றிடும்
இஞ்ஞாசியார்
ஆன்மிகம்:
படைப்பாற்றலோடு நேர்மறையாக ஆக்கமுடன் வாழ்ந்திட வழிகாட்டும் இஞ்ஞாசியார் ஆன்மிகம் இயேசு சபையினருக்கும் துறவிகளுக்கும் குருக்களுக்கும் உரியன மட்டுமல்ல; ஒவ்வொரு கிறித்தவருக்கும் உரிய ஆன்மிகச் சொத்தாகும். பெரும்பாலும் நான்கு சுவர்களுக்குள் வாழப்பட்ட துறவற வாழ்வை மக்களை, சூழலை மையமாக வைத்து வாழவேண்டிய திருத்தூதுத் துறவாக மாற்றியுள்ளதில் இஞ்ஞாசியார் ஆன்மிகத்திற்குப் பெரும் பங்கு உள்ளதைத் திரு அவையில் யாரும் மறுக்க முடியாது.
மனித
வாழ்வின் மூலக்கோட்பாடு, முக்கியக் குறிக்கோள், ஆண்டவரின் அதிமிகு மாட்சி, இன்னும் அதிகமாக, எல்லாவற்றிலும் கடவுளைக் காண்பது போன்ற பார்வைகளை உள்ளடக்கியுள்ள இஞ்ஞாசியாரின் ஆன்மிகம் இன்று எல்லாக் கிறித்தவருக்கும் தேவையான ஒன்று. லூத்தர் கொணர்ந்த எதிர்ப்பு கிறித்தவ மறுமலர்ச்சி இயக்கம் திரு அவையை வெகுவாகப் பாதித்துப் பிளவுபடுத்திய சூழலில், மாற்று மறுமலர்ச்சி இயக்கத்தை வளர்த்தெடுத்து, கத்தோலிக்கத் திரு அவையின் தூணாகத் தானும் தனது சபையும் தீவிரமாகச் செயல்பட உந்தித் தள்ளியுள்ளது இஞ்ஞாசியாரின் ஆன்மிகம்.
இன்றைய
சூழல்களில் நாம் சந்திக்கும் சவால்கள், போராட்டங்கள், மானிட உரிமை காத்திடச் சந்திக்கும் நெருக்கடிகள் மத்தியில் நீதி நிறைந்த சமத்துவம் போற்றிடும் இறையாட்சிச் சமுதாயமாக வாழ்ந்திட உதவுகின்றது இஞ்ஞாசியார் ஆன்மிகம். இயேசுவின்
உண்மையான சீடர்களாக உருவெடுத்திட இஞ்ஞாசியாரின் ஆன்மிகம் அனைத்துக் கிறித்தவர்கட்கும் துணை நிற்கும் எனும் எதிர்நோக்கில் தொடர்ந்து வாழ்ந்திடுவோம்.
இஞ்ஞாசியார்
ஆன்மிகம் அறிந்திடுவோம், இயேசுவின் உண்மைச் சீடராய் மலர்ந்திடுவோம்!
படைத்தான் படைப்பை மனுவுக்காக; மனுவைப் படைத்தான் தனை வணங்க’ என்பது முதுமொழி. இறைவன் உலகையும், அதிலுள்ள அனைத்தையும் படைத்தார் என்பதில் கிறித்தவர்களாகிய நமக்கு எந்த மாற்றுக்கருத்தும் இருக்க இயலாது. ஏனெனில், திருவிவிலியத்தின் முதல் நூலாகிய தொடக்கநூலின் முதலிரு அதிகாரங்கள் இறைவன் எப்படி விண்ணையும் மண்ணையும், அதில் உள்ள யாவற்றையும் படைத்தார் என விளக்கிக் கூறுகின்றன. அப்படைப்புகளில் மனிதப் படைப்பானது தனித்துவமானதுதான். எனவேதான் தொடக்கநூலின் முதல் அதிகாரத்தில் இறைவனது படைப்பை விவரிக்கும் குருத்துவ மரபு படைப்புகளுக்கு மணிமுடியாக மனிதப் படைப்பை அமைக்கின்றது (தொநூ 1:26,27).
அதே
நூலின் இரண்டாம் அதிகாரத்தில் இறைவனது படைப்பை விவரிக்கும் யாவே மரபு, படைப்புகளுக்கெல்லாம் முதன்மையாக, சிகரமாக அல்லது தலைமையாக மனிதப் படைப்பை விளக்குகின்றது (தொநூ 2:7). மனிதப் படைப்பு வெறும் உயிருள்ள படைப்பு மட்டுமல்ல; இறைவன் மனிதரைத் தமது சாயலிலும் உருவிலும் படைத்தார் (தொநூ 1:26,27). ஆகவே,
மனித வாழ்வு ஒரு சாதாரண நிகழ்வு அல்ல; அது இறைவனின் அரிய, மதிப்புமிக்க, புனிதமான கொடை. எனவே, ஒவ்வோர் உயிரும் மதிப்புக்குரியது, மாண்புக்குரியது மட்டுமல்ல; எல்லா உயிர்களையும் பொறுப்புடனும் சமத்துவத்துவத்துடனும் பேணி, அன்பு செய்து, பாதுகாக்கவேண்டியது தனது கடமை என்பதை மனிதப் படைப்பு உணர்ந்துகொள்ளவேண்டும்.
இன்றைய
உலகில் போர்கள், வன்முறைகள், கருக்கலைப்பு, முதியோர் புறக்கணிப்பு, சுற்றுச்சூழல் அழிவு, சாதி-சமய வேறுபாடுகள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் போன்றவை மனித வாழ்வின் மதிப்பைக் குறைக்கும் நிலையை உருவாக்கியுள்ளன. இத்தகைய சூழலில் திருவிவிலியம் ஒவ்வொரு மனித உயிரும் இறைவனுக்கு மதிப்புமிக்கது என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கின்றது. மனித வாழ்வை மதிப்பதும் காப்பதும் வளர்ப்பதும் ஒவ்வோர் இறைநம்பிக்கையாளரின் கடமையாகும்.
1. படைப்பின் மேன்மை
இறைவனின்
படைப்புச் செயலை விவரிக்கும் தொடக்க நூல், ஒவ்வொரு படைப்பையும் படைத்த பிறகு ‘அது நன்று’ என்று கடவுள் கூறுவதாக அமைக்கிறது. ஆறு நாள்கள் நடைபெறும் படைப்புப் பணிகளில் ஏழு முறைகள் கடவுள் ‘நன்று’
(தொநூ
1:4,10,12,18,21,25,31) என்று
கூறும் சொல் இடம்பெறுகின்றது. ஆனால், ஆறாம் நாள் மனிதரைப் படைத்த பிறகு, படைப்பின் முழுமையை மற்றும் நிறைவைக் கண்ட இறைவன் ‘மிகவும் நன்று’ என்று கூறுவதாகத் தொடக்க நூல் கூறுகின்றது. இறைவனின் இக்கூற்று மனிதரின் மேன்மையையும் மாண்பையும் எடுத்துரைக்கிறது.
மனிதர்
இறைவனின் சாயலைத் தாங்கியவராக இருப்பதால் அவரை இன ரீதியாக, மொழி
ரீதியாக, சமூக ரீதியாக, பண்பாட்டு ரீதியாக மட்டும் நாம் கூறுபோட்டுப் பார்ப்பதை விடுத்து, இவ்வுலகில் இறைவனைப் பிரதிபலிப்பவராகவும், இறைவனது பதிலாளாகவும் மனிதரைப் பார்ப்பது சிறப்பு. எனவே, எந்த மனிதரையும் இழிவாகக் கருதுவது இறைவனின் படைப்பை அவமதிப்பதாகும். தொடக்க நூல் 2:7-இல், “ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர்மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான்” என்று கூறப்பட்டுள்ளது. எல்லா உயிரினங்களையும் இறைவனே படைத்தார். ‘உண்டாகுக!’ என்ற உடனே அவை படைப்புகளாக உருமாறிவிட்டன. ஆனால், மனிதனைப் படைத்த போது மட்டும் இறைவன் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவர் வடிவமைத்த அம்மனித உருவத்தின் நாசிகளில் தமது உயிர்மூச்சை ஊதி, அவனைச் சிறப்பான விதத்தில் படைக்கின்றார். இதனால் மனித வாழ்வு இறைவனிடமிருந்து வரும் கொடை. மனித உயிர் என்பது மனிதனின் தனித்துவமான சொத்து அல்ல; அது இறைவன் மனிதனுக்கு வழங்கிய அரும்பெரும் கொடை. இறைவன் மனிதருக்கு வழங்கிய கிடைத்தற்கரிய வரம்.
2. மனித வாழ்வு இறைவனின்
கொடை
ஒவ்வொரு
மனித வாழ்வும் இறைவனின் திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. மனிதன் பிறப்பதற்கு முன்பே இறைவன் அவரை அறிந்திருக்கிறார். “என் தாயின் கருவிலே எனக்கு உரு தந்தவர் நீரே”
(திபா 139:13) என்கிறார் திருப்பாடல் ஆசிரியர். மனித வாழ்வின் தொடக்கம் முதல் இறைவனின் படைப்பாற்றல் மிக்க அன்பு செயல்படுகிறது என்பதைத் திருப்பாடல் ஆசிரியரின் இக்கூற்று உணர்த்துகிறது. கருவிலுள்ள குழந்தையும் இறைவனின் திட்டத்தின் ஒரு பகுதியாகவே எண்ணப்பட வேண்டும். எனவே, மனித வாழ்வை அது கருவாக உருப்பெற்றது முதல் அதன்பின் உலகில் குழந்தையாகப் பிறந்து, வளர்ந்து, மூப்பு எய்தி மண்ணுக்குத் திரும்பும்வரை மதிக்கவேண்டும். இறைவாக்கினர் எரேமியா அழைக்கப்பட்டபோது இறைவன் பின்வருமாறு கூறுகிறார்: “தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கும் முன்பே அறிந்திருந்தேன்” (எரே
1:5). இதன் மூலம் ஒவ்வொரு மனிதனுக்கும் தனிப்பட்ட அழைப்பும் நோக்கமும் இருப்பதை அறிகிறோம்.
3. மனிதன் இறைவனின் சாயல்
இறைவனின்
சாயலில் படைக்கப்பட்ட மனிதனின் மாண்பை யாராலும் அழிக்க முடியாது. இந்த மாண்பு பாலினம், வயது, சாதி, சமூகம், உடல்நிலை, கல்வி, செல்வம் போன்றவற்றால் தீர்மானிக்கப்படுவதில்லை. இயேசு தாம் வாழ்ந்த காலத்தில் எல்லா மனிதர்களையும் சமமாக மதித்தார். அவர் ஏழைகளை, பெண்களை, குழந்தைகளை, உடல்நலமற்றோரை, பாவிகளாகக் கருதப்பட்டவர்களை, வரிதண்டுவோரை, சமாரியர்களை அன்போடு ஏற்றுக்கொண்டார். “ஏழைகளே பேறு பெற்றோர்”
(லூக் 6:20) என்று அவர் கூறியபோது, ஏழைகள்பால் அவருக்கு இருந்த அக்கறையை நாம் அறிய முடிந்தது. பாவிப்பெண் ஒருவர் தமது காலடிகளில் நறுமணத்தைலம் பூசியதில் குறை கண்ட பரிசேயரான சீமோனிடம் அப்பெண் தம்மீது கொண்டிருந்த அன்பின் பெருமை குறித்துப் பேசியபோது (லூக் 7:37-47), பெண்கள்பால் அவருக்கு இருந்த மதிப்பை நம்மால் புரிந்துகொள்ள முடிந்தது. “சிறு பிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள்; அவர்களைத்
தடுக்காதீர்கள்\"
(மாற் 10:14) என்று அவர் கூறியபோது பச்சிளங் குழந்தைகளின் மாண்பை அவர் பேணும் தன்மையை நம்மால் உணர முடிந்தது. ஓய்வுநாளில் தொழுகைக்கூடத்திற்கு வெளியே சூம்பிய கையுடன் நின்றுகொண்டிருந்த உடல் நலமற்ற ஒருவரை அழைத்துத் தொழுகைக்கூடத்தின் “நடுவே வந்து நில்” என்று கூறி அவரைக் குணப்படுத்தியபோது (லூக் 6:6-8), உடல் நலமற்றோரின்மீது அவருக்கு இருந்த கரிசனையை நாம் அறியமுடிந்தது. பாவியும் வரிதண்டுவோருமான சக்கேயுவின் வீட்டில் தங்க விரும்புவதாக இயேசு கூறியபோது (லூக் 19:1-10) பாவிகளான வரிதண்டுபவரோடு உறவு கொள்வதில் அவருக்கு இருந்த விருப்பத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிந்தது. இவ்வாறு சமூகத்தில் கீழ்நிலையில் இருந்த எல்லாரிடமும் இயேசு இறைவனின் சாயலைக் கண்டார் என்பதை இதன்மூலம் நாம் அறியலாம்.
4. மனித உயிர் புனிதமானது
மனித
உயிரின் தொடக்கம் என்பது இறைவனின் மூச்சுக்காற்றே (தொநூ 2:7). இறைவனின் மூச்சுக்காற்றை உள்வாங்கியதும் மனிதன் உயிர் பெறுகிறான்; செயல்படுகிறான்; நடமாடுகிறான். மனிதனுக்கு உயிர் தந்து, அவனைச் செயல்பட வைப்பது இறைவனே. ‘அவனின்றி ஓர் அணுவும் அசையாது’ என்பது நாம் அறிந்த முதுமொழி. இறைவனே மனித வாழ்வின் உயிராக, மனித வாழ்விற்கு மூச்சாக இருப்பதால் மனித உயிர் புனிதமானது. எனவே, மனித உயிருக்கான அதிகாரமும் பொறுப்பும் இறைவனிடமே உள்ளன. இந்தச் சிந்தனையின் பின்னணியில்தான் தொடக்கத்தில் மனிதன் உள்பட உயிரினங்கள் அனைத்தும் செடி, கொடிகள், தாவரங்கள் இவற்றின் கனிகளை உண்டதையும் (தொநூ 1:29), காயினின் முதல் இரத்தப்பலி மற்றும் பெருவெள்ளம் ஆகிய நிகழ்வுகளுக்குப்பின் இரத்தம் தவிர்த்து உயிரினங்கள் அனைத்தையும் இறைவன் மனிதனுக்கும் உயிரினங்களுக்கும் உணவாகக் கொடுத்ததையும் (தொநூ 9:3-4) நாம் இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.
உயிரினங்களின்
இரத்தத்தில் இறைவனின் மூச்சுக்காற்று இருப்பதாகத் தொடக்க காலத்தில் யூதர்கள் எண்ணியதால் இரத்தத்தை உண்ணலாகாது என்று வலியுறுத்தினர். “கொலை செய்யாதே”
(விப 20:13) என்பது மோசேயின் பத்துக் கட்டளைகளில் ஒன்று. இதன் அடிப்படையில், ஒருவரது உயிரை இன்னொருவர் பறிக்கவும் ஒருவரது உயிரை அவரே மாய்த்துக் கொள்ளவும் உரிமை இல்லை என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியும்.
5. அன்பு மனித வாழ்வின்
அடித்தளம்
மனித
வாழ்வை நாம் மதிக்கவேண்டும் என்பதற்கான அடிப்படை நோக்கம் அன்பே ஆகும். மிகப்பெரிய கட்டளைகளாக இயேசு தமது போதனையின்போது வலியுறுத்தியது, “உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து... உன்மீது நீ அன்பு கூர்வதுபோல
உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக”
(மத் 22:37-39) என்பதே. யூதர்களைப் பொறுத்தமட்டில் ‘அடுத்திருப்பவர்’ என்றால்
அது மற்றொரு யூதரைத்தான் குறிக்கும். ஆனால், இயேசுவைப் பொறுத்தமட்டில் அடுத்திருப்பவர் யார் என்பதை நல்ல சமாரியர் உவமை (லூக் 10:25-37) வழியாகத் தெளிவுபடுத்துகின்றார். சாலையோரத்தில் காயமடைந்திருந்த மனிதனை உதாசீனப்படுத்தாமல் உதவி செய்த சமாரியரே காயப்பட்டவருக்கு அடுத்திருப்பவர் என்று நல்ல சமாரியர் உவமையில் இயேசு கூறியதன் வழியாக, யூதருக்கு ஒரு சமாரியர் அடுத்திருப்பவராக இருக்க முடியும் என்பதை வலியுறுத்துகின்றார்.
‘அப்பா, நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும், ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செய்தல்வேண்டும்’ என்றார்
வடலூர் வள்ளலார். ‘அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு’ என்பார் வள்ளுவப் பெருந்தகை. அதாவது, அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிருள்ள உடம்பு. அன்பு இல்லாதவர்களுடைய உடம்பு எலும்பின்மேல் தோலைப் போர்த்தி வைத்துள்ளதற்குச் சமம் என்பது இதன் பொருள்.
கொரிந்தியருக்கு
எழுதிய முதல் திருமுகத்தில், “நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலை சிறந்தது”
(1கொரி 13:13) என்கிறார் திருத்தூதர் பவுல். நாம் அன்பு செய்ய வேண்டியவர்கள் நம் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் மட்டுமல்ல; உலகில் உள்ள எல்லா மனிதர்கள் உள்பட அனைத்துப் படைப்புகளும் நம்மால் அன்பு செய்யப்பட வேண்டியவையே. இன்று நாம் தேவையில் உள்ள ஒவ்வொரு படைப்புக்கும் நமது உதவிக்கரங்களை நீட்டும்போது, மனித வாழ்வையும் இறைவனின் ஒவ்வொரு படைப்பையும் நாம் மதிக்கிறோம் என்பது பொருள்.
6. இன்றைய காலத்தில் மனித
வாழ்வை
மதிப்பதற்கான
நடைமுறைகள்
எவை?
இன்றைய
சமூகத்தில் மனித வாழ்வின் மதிப்பை வெளிப்படுத்த பல வழிகள் உள்ளன:
• சாதி, சமயம், மொழி, பாலின வேறுபாடின்றி அனைவரையும் சமமாக நடத்துதல்.
• கருவிலுள்ள குழந்தை முதல் முதியோர் வரை ஒவ்வோர் உயிரையும் மதித்தல்.
• ஏழைகள், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், உடல்நலமற்றோர் மற்றும் புலம்பெயர்ந்தோர் ஆகியோருக்கு உதவுதல்.
• குடும்பத்தில் அன்பு, பரிவு, ஒற்றுமை, சமத்துவம், நட்புறவு மற்றும் மன்னிப்பு போன்ற இறையாட்சியின் விழுமியங்களை வளர்த்தெடுத்தல்.
• வன்முறையையும் வெறுப்பையும் தவிர்த்து, அமைதியைக் குடும்பங்களில், சமூகங்களில், ஊர்களில் நிலைநாட்ட முயற்சி செய்தல்.
• இயற்கை வளங்களைப் பாதுகாப்பதன் மூலம் இறைவனின் படைப்பை மதித்தல் மற்றும் பல்லினப் பெருக்கத்திற்குத் துணை நிற்றல்.
• சமூக நீதி மற்றும் மனித உரிமைகளை நிலைநாட்டப் பாடுபடுதல்.
முடிவுரை
மனித
வாழ்வு இறைவனின் அரிய கொடை. ஒவ்வொரு மனிதரும் இறைவனின் சாயலில் படைக்கப்பட்டவர்களாக இருப்பதால் மனித உயிர்களின் மாண்பை யாராலும் அழிக்க இயலாது. அன்பு, இரக்கம், நீதி, சமத்துவம், மன்னிப்பு மற்றும் சேவை ஆகியவற்றின் வழியாக மனித வாழ்வை மதிக்க நாம் அழைக்கப்படுகிறோம். இயேசு கிறிஸ்துவின் வாழ்வும் போதனைகளும் ஒவ்வொரு மனிதரையும் அன்போடு ஏற்றுக்கொண்டு, அவர்களின் வாழ்வை உயர்த்தவேண்டும் என்பதை நமக்குக் கற்றுத்தருகின்றன.
மனித
உயிரைக் காப்பதும், வலிமை குன்றியவர்களைத் தாங்குவதும், படைப்பைப் பாதுகாப்பதும் இறைவனுக்குச் செலுத்தும் உண்மையான வழிபாடாகும். எனவே, ஒவ்வொரு மனித உயிரையும் இறைவனின் விலைமதிப்பற்ற கொடையாக ஏற்று, மதித்து, அன்பு செய்து, பொறுப்புணர்வுடன் வாழ்வோம். அப்போதுதான் இறைவனின் படைப்பின் மேன்மையை நம் வாழ்வில் வெளிப்படுத்த முடியும். உலகமும் மனிதநேயத்தாலும் இறையன்பாலும் புதுப்பிக்கப்படும்.
கானாவூர் திருமண நிகழ்வில் மரியாவின் வேண்டுகோளானது, அவரது மகனுடைய மீட்புப் பணியின் தொடக்கத்தில் அவர் எவ்வாறெல்லாம் ஒத்துழைக்கின்றார் என்பதற்கான மாதிரியாகும். மேலும், அந்நிகழ்வானது இயேசுவில் நம்பிக்கை கொள்வதில் அவரே முதன்மையானவர் என்பதையும் காட்டுகின்றது.
1. இயேசுவின்
பொதுவாழ்வில் மரியாவின் உடனிருப்பை விவரிக்கும் இரண்டாம் வத்திக்கான் சங்கமானது கானாவூரில் இயேசுவின் முதல் புதுமையின்போது அவர் எங்ஙனம் தன்னையே தனது மகனின் பணியில் ஈடுபடுத்திக்கொண்டார் என்பதையும் நினைவுகூர்கின்றது: “கலிலேயா நாட்டின் கானாவில் திருமண விருந்தில் மெசியாவாகிய இயேசுவிடம் இரக்கத்தோடு பரிந்துரைத்து அவர் தம் முதல் அருளடையாளத்தைச் செய்யுமாறு (யோவா 2:1-11) தூண்டுகின்றார்” (இறைத்திட்டத்தில்
திருச்சபை, எண். 58). நற்செய்தியாளர் யோவானைப் பின்பற்றி, ஒரு தாய் தன் வார்த்தைகளால் தமது மகனை அவரது ‘முதல் அடையாளத்தை’ செய்யும்படி
வற்புறுத்தும்போது, அவரது விவேகமான மற்றும் பயனுள்ள பங்கை இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கமும் சுட்டிக்காட்டுகிறது. அவரது செல்வாக்கு விவேகமானதாகவும் தாய்மையுள்ளதாகவும் இருந்தாலும், அவரது பிரசன்னம் தீர்க்கமானதாக அமைகிறது.
மரியா
தன் வார்த்தைகளால்
தமது மகனை அவரது முதல் அருளடையாளத்தைச் செய்யும்படி வலியுறுத்தினார் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டி, நற்செய்தியாளர் யோவானைத் தொடர்ந்து இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கமும் மரியாவினுடைய அறிவுகூர்ந்த மற்றும் பயனுள்ள பங்கைச் சுட்டிக்காட்டுகின்றது. மரியாவினுடைய செல்வாக்கு விவேகம் மற்றும் தாயன்பு சார்ந்தது என்றாலும், அவருடைய உடனிருப்பானது தீர்க்கமானது என்பதையே இது நமக்கு
உணர்த்துகின்றது.
தாயன்பால் என்ன
செய்ய
முடியும்
என்பதை
மரியா
காட்டுகின்றார்
யூதச்
சமூகத்தில் பெண்களின் தாழ்ந்த நிலையைக் கருத்தில் கொண்டால், புனித கன்னி மரியாவின் இந்த முயற்சி இன்னும் வியப்பளிக்கிறது. உண்மையில், கானாவூர் திருமண நிகழ்வில் இயேசு பெண் ஆளுமைகளின் மாண்பு மற்றும் அவர்களுடைய பங்களிப்பை மட்டும் அங்கீகரிக்கவில்லை; தமது தாயின் பரிந்துரையை ஏற்பதன் வழியாக அவர் தமது மீட்புப் பணியில் அவரும் பங்கேற்பதற்கானதொரு வாய்ப்பைத் தருகிறார். ‘பெண்’
(யோவா 2:4) என்று இயேசு மரியாவை அழைக்கும் அடைமொழியானது, அவருடைய நோக்கத்திற்கு முரணானது அல்ல; உண்மையில் ‘பெண்’ என்னும் இவ்வார்த்தையில் எதிர்மறையான அர்த்தங்கள் எதுவும் இல்லை. சிலுவையின் அடியில் அவருடைய தாய் மரியா நிற்கும்போதும் அவரை அழைப்பதற்கு இதே சொல்லாடலைத்தான் அவர் பயன்படுத்துகின்றார் (யோவா 19:26). சில திருவிவிலிய விளக்கவுரைகளின்படி ‘பெண்’ என்று மரியாவை அழைக்கும் சொல்லாடலானது, அவரைப் புதிய ஏவாளாக, அதாவது அனைத்து நம்பிக்கையாளர்களின் தாயாக முன்வைக்கிறது.
நாம்
மேற்குறிப்பிட்ட இரண்டாம் வத்திக்கான் திருச்சங்க ஏட்டில் திருச்சங்கமானது ‘இரக்கத்தினால் உந்தப்பட்டு’ என்னும்
சொற்றொடரைப் பயன்படுத்துகின்றது. இதிலிருந்து அவ்விடத்தில் திராட்சை இரசம் தீர்ந்து போனதைக் கேள்வியுற்று, மரியா தனது இரக்கமுள்ள இதயத்தால் தூண்டப்பட்டார் என்பதை நாம் புரிந்துகொள்ள திருச்சங்கம் நமக்கு உதவுகின்றது. திராட்சை இரசம் தீர்ந்து போனதால் புதுமணத் தம்பதியினருக்கும் விருந்தினர்களுக்கும் ஏற்படவிருந்த ஏமாற்றத்தை உணர்ந்த புனித கன்னி மரியா, இயேசுவிடம் அவரது மீட்பளிக்கும் வல்லமையைக் கொண்டு இக்குறையைத் தீர்க்குமாறு இரக்கத்துடன் பரிந்துரைக்கின்றார்.
சிலருக்கு
மரியாவின் வேண்டுகோள் வரம்பு மீறியதாகத் தோன்றலாம்; ஏனெனில், அது மீட்பரது புதுமைகளின் தொடக்கத்தை ஒரு தாய் பக்தி செயலுக்காகப் பின்னுக்குத் தள்ளுகிறது. இயேசுவே இந்தச் சிக்கலைக் கையாண்டார்; தம் தாயின் வேண்டுகோளுக்குச் சம்மதித்ததன் மூலம், மனித எதிர்பார்ப்புகளுக்குப் பதிலளிப்பதில் ஆண்டவரின் அளவற்ற அருளை அவர் வெளிப்படுத்தினார். மேலும், ஒரு தாயின் அன்பால் என்ன செய்ய முடியும் என்பதையும் விளக்கினார்.
2. இங்கு
யோவானின் நற்செய்தியிலிருந்து திருச்சங்கம் எடுத்துக் கையாண்டுள்ள ‘அவரது புதுமைகளின் தொடக்கம்’
என்ற வார்த்தைகள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. இதில் பயன்படுத்தப்படும் ‘தொடக்கத்தில்’ என்ற
கிரேக்க வார்த்தையான ‘arche’ என்பதை யோவான்
தனது நற்செய்தியின் முன்னுரையில் (Prologue) பயன்படுத்துகிறார்:
“தொடக்கத்தில் வாக்கு இருந்தது”
(யோவா 1:1). இந்தக் குறிப்பிடத்தக்க ஒற்றுமையானது, கிறிஸ்துவின் எல்லையற்ற மாட்சிமையின் மூலத்திற்கும், அவரது பூவுலகப்
பணியில் அதே மாட்சிமையின் முதல் வெளிப்பாட்டிற்கும் இடையே ஓர் இணையைச் சுட்டிக்காட்டுகிறது.
தமது
முதல் புதுமையில் மரியாவின் முன் முயற்சியை வலியுறுத்துவதன் மூலமும், பின்னர் கல்வாரியில் சிலுவையின் அடியில் அவர் இருந்ததை நினைவுகூர்வதன் மூலமும், கிறிஸ்துவின் பணி முழுவதிலும் மரியாவின் ஒத்துழைப்பு எவ்வாறு விரிவடைந்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ள நற்செய்தியாளர் நமக்கு உதவுகிறார். கன்னி மரியாவின் வேண்டுகோளானது, தெய்வீகமான மீட்புத் திட்டத்திற்குள் வைக்கப்பட்டுள்ளது.
இயேசு
செய்த முதல் அடையாளத்தில், திரு அவைத் தந்தையர் ஒரு முக்கியமான குறியீட்டுப் பரிமாணத்தைக் கண்டனர்; தண்ணீர் திராட்சை இரசமாக மாறுவதை, பழைய உடன்படிக்கையிலிருந்து புதிய உடன்படிக்கைக்கு மாறுவதற்கான அறிவிப்பாக அவர்கள் கண்டனர். கானாவூர் திருமண விருந்தில், யூதர்களின் தூய்மையாக்கலுக்காகவும், சட்டக் கட்டளைகளை நிறைவேற்றுவதற்காகவும் (மத் 7:1-15) ஒதுக்கப்பட்டிருந்த குடங்களில் இருந்த தண்ணீரே, திருமண விருந்தின் புதிய திராட்சை இரசமாக மாறுகிறது; அது கடவுளுக்கும், மனிதகுலத்திற்கும் இடையிலான உறுதியான ஒன்றிப்பின் சின்னமாகும்.
3. இயேசு
தமது முதல் அற்புதத்திற்காகத் தேர்ந்தெடுத்த திருமண விருந்தின் சூழலானது, பழைய ஏற்பாட்டில் கடவுளுக்கும், அவருடைய மக்களுக்கும் இடையேயான உடன்படிக்கையைக் குறிக்கவும் (ஓசே 2:21; எரே 2: 1-8; திபா 44, இன்னும் பல), புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துவிற்கும் திரு அவைக்கும் இடையேயான ஒன்றிப்பைக் குறிக்கவும் (யோவா 3: 28-30; எபே 5: 25-32; திவெ 21:1-2, இன்னும் பல) அடிக்கடிப் பயன்படுத்தப்படும் திருமணக் குறியீட்டைக் குறிக்கிறது. கானாவூரில் இயேசுவின் உடனிருப்பு, திருமணத்திற்கான கடவுளின் மீட்புத்திட்டத்தின் ஓர் அடையாளமாகவும் விளங்குகிறது. இந்தக் கண்ணோட்டத்தில், திராட்சை இரசம் இல்லாததை எதிர்பாராத விதமாகத் திருமண உறவுகளை அடிக்கடி அச்சுறுத்தும் அன்பின் பற்றாக்குறையின் ஒரு குறிப்பாகப் புரிந்துகொள்ளலாம். கடவுளை அடிப்படையாகக் கொண்ட அன்பினால் மட்டுமே துரோகம், தவறான புரிதல் மற்றும் பிரிவினை ஆகிய ஆபத்துகளிலிருந்து விடுவிக்கப்படக்கூடிய அனைத்துத் திருமணமான தம்பதியினருக்காகவும் தலையிடுமாறு மரியா இயேசுவிடம் வேண்டுகிறார். திருவருளடையாளத்தின் அருள், தம்பதியினருக்கு அன்பின் இந்த மேலான வலிமையை வழங்குகிறது; இது வாழ்வின் கடினமான சூழ்நிலைகளிலும்கூட, நம்பிக்கையில் அவர்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்பை வலுப்படுத்த வல்லது.
திரு அவையின்
நம்பிக்கை
பயணத்தை
மரியா
தொடங்கி
வைக்கின்றார்
கிறித்தவ
எழுத்தாளர்களின் விளக்கத்தின்படி, கானாவூரில் நடந்த அற்புதமானது ஆழமான நற்கருணைப் பொருளையும் கொண்டுள்ளது. யூதர்களின் பாஸ்கா பண்டிகைக் காலத்திற்கு அருகில் இந்த அற்புதத்தைச் செய்வதன் மூலம் (யோவா 2:13) இயேசு அப்பங்களைப் பெருகச் செய்ததைப் போலவே (யோவா 6:4) உண்மையான பாஸ்கா விருந்தான நற்கருணைக்கு ஏற்பாடு செய்யவேண்டியதற்கான தமது நோக்கத்தை இங்கு வெளிப்படுத்துகின்றார். கானாவூர் திருமணத்தில் அவரது விருப்பம், புதிய உடன்படிக்கையின் இரத்தத்தைக் குறிக்கும் திராட்சை இரசத்தின் பிரசன்னத்தாலும், ஒரு விருந்தின் சூழலாலும் மேலும் வலியுறுத்தப்படுவதாகத் தெரிகிறது.
இவ்வாறு,
திருமணக் கொண்டாட்டத்தில் இயேசுவின் பிரசன்னத்திற்குக் காரணமாக இருந்த பிறகு, உயிர்த்தெழுந்த தம் மகன் சீடர்களிடையே பிரசன்னமாக இருப்பதன் உன்னத அடையாளமான நற்கருணையை முன்னறிவிக்கும் புதிய திராட்சை இரசத்தின் அற்புதத்தை மரியா பெறுகிறார்.
4. தமது
தெய்வீக மகன்மீது ஆண்டவரின் அன்னை கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையால் சாத்தியமான இயேசுவின் முதல் அற்புதத்தின் விவரிப்பின் முடிவில், நற்செய்தியாளர் யோவான் இவ்வாறு முடிக்கிறார்: “அவருடைய சீடர்களும் அவரிடம் நம்பிக்கை கொண்டார்கள்” (யோவா
2:11). இவ்வாறு, கானாவூர் திருமண நிகழ்வில் அவருடைய சீடர்கள் மற்றும் ஊழியர்களின் கவனத்தைக் கிறிஸ்துவின் பக்கம் திருப்பி, மரியா திரு அவையின் நம்பிக்கை பயணத்தைத் தொடங்கி வைக்கின்றார்.
மரியாவின்
தளராத பரிந்துரையானது, சில சமயங்களில் ‘இறைவனின் மௌனம்’ என்ற அனுபவத்தை எதிர்கொள்பவர்களையும் ஊக்குவிக்கிறது. எல்லா நம்பிக்கைகளுக்கும் அப்பாற்பட்டு நம்பிக்கை வைக்குமாறும், எப்போதும் ஆண்டவரின் நன்மையில் நம்பிக்கை வைக்குமாறும் அவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மூலம்:
John Paul II,
Mary is active in her son’s mission, in «L’Osservatore Romano», Weekly Edition
in English, 12 March 1997, p. 7.