இயேசு ஞானத்திலும் வயதிலும் மற்றும் இறையருளிலும் வளர்ந்து வந்தபோது, மரியா தனது தாய்மையின் அர்த்தத்தையும் ‘கிறிஸ்துவுடன் கடவுளுக்குள் மறைந்திருந்த’ தன் வாழ்வின் அர்த்தத்தையும் இன்னும் நன்றாகப் புரிந்துகொண்டார்.
1.
திருக்குடும்பமானது நாசரேத்தில் வாழ்ந்த ஆண்டுகளைப் பற்றிய நற்செய்தி விவரிப்புகள் மிகவும் அரிதான பல தகவல்களை நமக்கு வழங்குகின்றன. எகிப்திலிருந்து திரும்பிய பின், நாசரேத்தைத் திருக்குடும்பத்தின் நிரந்தர இல்லமாக மாற்ற யோசேப்பு எடுத்த முடிவைப் பற்றி நற்செய்தியாளர் புனித மத்தேயு விவரிக்கின்றார் (மத் 2:22-23). ஆனால்,
யோசேப்பு ஒரு தச்சன் என்பதைத் தவிர வேறு எந்தத் தகவலையும் அவர் தனது நற்செய்தியில் கொடுக்கவில்லை (மத் 13:55). திருக்குடும்பமானது நாசரேத்திற்குத் திரும்பியதைப் புனித லூக்கா இருமுறை குறிப்பிடுகிறார் (லூக் 2:39-51). எருசலேமிற்கான
பயண நிகழ்விற்கு முன்னும் பின்னும் இயேசுவின் குழந்தைப் பருவத்தைப் பற்றிய இரண்டு சுருக்கமான குறிப்புகளைத் தருகிறார்: “குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று, ஞானத்தால் நிறைந்து, கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது” (லூக் 2:40); “இயேசு ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்” (லூக் 2:52).
மரியா தன் இதயத்தில் வைத்துச் சிந்தித்தார்
இயேசுவின் வாழ்க்கையைப் பற்றிய இந்தச் சுருக்கமான குறிப்புகளைக் கூறும்போது, லூக்கா அநேகமாகத் தன் மகனுடன் மரியா கொண்டிருந்த ஆழ்ந்த நெருக்கத்தின் ஒரு காலகட்டத்தைப் பற்றிய நினைவுகளையே குறிப்பிடுகிறார். ‘இயேசுவிற்கும் அருளால் நிறைந்தவருக்கும்’ இடையேயான அந்த ஒன்றிப்பு பொதுவாக, தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் இருக்கும் உறவைவிட மிகவும் மேலானது. ஏனெனில், அது இயற்கைக்கு அப்பாற்பட்ட நிலையில் வேரூன்றி, இறைத்திட்டத்திற்கு இருவரும் கொடுத்த சிறப்புமிக்க ஒப்புதலால் வலுப்படுத்தப்பட்டது.
ஆகவே, நாசரேத்தின் வீட்டில் நிலவிய அமைதி மற்றும் சமாதானச் சூழலும், கடவுளின் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான அவர்களின் இடைவிடாத தேடலும், தாய்க்கும் மகனுக்கும் இடையிலான உறவுக்கு ஓர் அசாதாரணமான மற்றும் தனித்துவமான ஆழத்தை அளித்தன என்று நாம் முடிவு செய்யலாம்.
2.
கடவுளால் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு பணியைச் செய்கிறோம் என்ற மரியாவின் உணர்வு, அவருடைய அன்றாட வாழ்க்கைக்கு ஓர் உயர்ந்த அர்த்தத்தைக் கொடுத்தது. அன்றாட வாழ்வின் எளிய, தாழ்மையான வேலைகள் அவர் பார்வையில் ஒரு சிறப்பு மதிப்பைப் பெற்றன; ஏனெனில், அவர் அவற்றை கிறிஸ்துவின் பணிக்கான தனது பங்களிப்பாக நினைத்து அவைகளைச் செய்தார்.
இவ்வாறு, மரியாவினுடைய எடுத்துக்காட்டான வாழ்வானது குறிப்பாக, வீட்டில் இருந்தபடியே தங்களது அன்றாடப் பணிகளைச் செய்யும் பல பெண்களுடைய அனுபவத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது, அவர்களை ஊக்குவிக்கின்றது. இது ஒரு தாழ்மையான, மறைவான, திரும்பத் திரும்பச் செய்யப்படும் முயற்சியாகும். மேலும், இது பெரும்பாலும் போதுமான அளவு பாராட்டப்படுவதில்லை. ஆயினும்கூட, நாசரேத்தின் வீட்டில் மரியா கழித்த நீண்ட ஆண்டுகள், உண்மையான அன்பின் மகத்தான ஆற்றலையும், அதன் மூலம் கிடைக்கும் மீட்பையும் வெளிப்படுத்துகின்றன. உண்மையில், சேவை மற்றும் அன்பின் ஒரு பணியாகக் கருதப்படும் எண்ணற்ற இல்லத்தரசிகளின் வாழ்க்கையின் எளிமை, ஆண்டவரின் பார்வையில் மிக மிக மதிப்புடையது.
நாசரேத்தில் மரியாவின் வாழ்க்கை சலிப்பால் நிறைந்திருக்கவில்லை என்று நிச்சயமாகக் கூறலாம். வளர்ந்து வரும் இயேசுவுடனான தனது தொடர்பில், தியானம் மற்றும் ஆராதனையின் மூலம் தன் மகனின் மறைபொருளுக்குள் ஊடுருவி அறிய அவர் முயன்றார். இதையே புனித லூக்கா நற்செய்தியாளர் இவ்வாறு விவரிக்கின்றார்: “மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தன் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார்” (லூக்கா 2:19-51).
‘இந்நிகழ்ச்சிகளையெல்லாம்’ கிறிஸ்து பிறப்பு அறிவிப்பில் தொடங்கி, அதையும் தாண்டி, இது அவருடைய மகன் சம்பந்தப்பட்டதாக இருந்ததால் இந்நிகழ்வுகள் அனைத்திலும் அவர் பார்வையாளராகவும் பங்கேற்பாளராகவும் இருக்கின்றார். அவருடனான நெருக்கத்தின் ஒவ்வொரு நாளும், அவரை இன்னும் நன்றாக அறிந்துகொள்வதற்கும், அவருடைய பிரசன்னத்தின் அர்த்தத்தையும், ஆளுமையின் மறையுண்மைகளையும் இன்னும் ஆழமாகக் கண்டறிவதற்குமான ஓர் அழைப்பாகும்.
3.
இயேசுவுடன் தினசரி தொடர்பில் வாழ்ந்ததால், மரியாவிற்கு நம்பிக்கை கொள்வது எளிதாக இருந்திருக்கும் என்று சிலர் நினைக்கலாம். இருப்பினும், இவ்விடத்தில் நாம் ஒன்றை நினைவில்கொள்ளவேண்டும்: அவருடைய மகனின் ஆளுமையின் தனித்துவமான அம்சங்கள் பொதுவாக மறைக்கப்பட்டிருந்தன; அவருடைய செயல்படும்விதம் முன்மாதிரியாக இருந்தபோதிலும், அவர் தன் சம வயதினரைப் போன்றே ஒரு வாழ்க்கையை வாழ்ந்தார்.
நாசரேத்தில் இயேசு வாழ்ந்த முப்பது ஆண்டுகளில், இயேசு தமது இயற்கைக்கு அப்பாற்பட்ட குணங்களை வெளிப்படுத்தவோ அல்லது அற்புதங்களைச் செய்யவோ இல்லை. அவருடைய போதனையின் தொடக்கத்துடன் தொடர்புடைய, அவருடைய ஆளுமையின் முதல் அசாதாரண வெளிப்பாடுகளின்போது ஒரு விளக்கத்தின்படி அவருடைய உறவினர்கள் (நற்செய்தியில் ‘சகோதரர்கள்’ என்று அழைக்கப்படுபவர்கள்), அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர்; ஏனெனில், அவருடைய நடத்தை இயல்பானதாக இல்லையென உணர்ந்தனர் (மாற் 3:21).
நாசரேத்தின் கண்ணியமும் கடின உழைப்பும் நிறைந்த சூழலில், தன் மகனின் பணியில் கடவுளின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ள மரியா முயன்றார். இது சம்பந்தமாக, அவருடைய தாயார் குறிப்பாகச் சிந்தித்த ஒரு விசயம் இயேசுவுக்குப் பன்னிரண்டு வயதாக இருந்தபோது எருசலேம் தேவாலயத்தில் அவர் கூறிய இந்த வார்த்தைகள்தான்: “நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்கவேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?” (லூக் 2:49). இதைத் தியானித்ததன் மூலம் இயேசுவின் தெய்வீகக் குமாரத்துவத்தின் அர்த்தத்தையும், தன் சொந்தத் தாய்மையின் அர்த்தத்தையும் மரியாவால் நன்கு புரிந்துகொள்ள முடிந்தது. ஏனெனில், தன் மகன், ‘என் தந்தை’ என்று அழைத்தவருடைய சாயலை வெளிப்படுத்தும் பண்புகளை அவரது நடத்தையில் கண்டறிய அவர் முயன்றார்.
நம் வாழ்வானது கிறிஸ்துவுடன் கடவுளில் மறைக்கப்பட்டுள்ளது
4.
நாசரேத் இல்லத்தில் இயேசுவுடன் இணைந்து வாழ்ந்த வாழ்வானது, மரியாவைத் தனது ‘நம்பிக்கைப் பயணத்தில்’ (இன்றைய உலகில் திருச்சபை, எண். 58) முன்னேறச் செய்தது மட்டுமல்லாமல், நம்பிக்கையிலும் முன்னேற வழிவகுத்தது. கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு நினைவாலும், சிமியோனின் வார்த்தைகளாலும் வளர்க்கப்பட்டுப் பேணப்பட்ட இந்த நற்பண்பு, அவருடைய பூவுலக வாழ்நாள் முழுவதும் நீடித்தது; அதிலும் குறிப்பாக, நாசரேத்தில் கழித்த முப்பது ஆண்டுகால மௌனத்திலும் மறைவிலும் இது சிறப்பாகப் பின்பற்றப்பட்டது.
நாசரேத்து வீட்டில் கன்னி மரியா இறைநம்பிக்கையை அதிக அளவில் அனுபவித்தார். இறைவன் தமது வாக்குறுதியை நிறைவேற்றும் நேரங்களையோ வழிகளையோ அவர் அறிந்திருக்காவிட்டாலும் தான் ஏமாற்றமடையேன் என்பதை அவர் அறிவார். நம்பிக்கையின் இருளிலும், தன் மகனின் மீட்புப் பணியின் தொடக்கத்தை அறிவிக்கும் வழக்கத்திற்கு மாறான அறிகுறிகள் இல்லாத நிலையிலும், எல்லாச் சான்றுகளையும் கடந்து, இறைவனின் வாக்குறுதி நிறைவேறும் என்று அவர் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.
நம்பிக்கையிலும் எதிர்நோக்கிலும் வளர்ச்சி பெறுவதற்கான ஓர் இடமாக, நாசரேத்தின் இல்லம் அன்பிற்கு உன்னதமான சாட்சி பகரும் ஓர் இடமாக மாறுகிறது. கிறிஸ்து உலகில் பொழிய விரும்பிய அன்பு, எல்லாவற்றிற்கும் மேலாக அவருடைய தாயின் இதயத்தில் பற்றிக்கொண்டு எரிகிறது. சரியாக அந்த இல்லத்தில் தான் தெய்வீக அன்பின் நற்செய்திப் பிரகடனம் ஆயத்தப்படுத்தப்படுகிறது.
நாசரேத்து ஊரைக் கண்முன் கொண்டு இயேசுவின் மற்றும் கன்னி மரியாவின் மறையுண்மைகளைப் பற்றிச் சிந்திக்கும்போது, நம் வாழ்வின் உண்மைகளைப் பற்றி நாம் சிந்திக்க அழைக்கப்படுகின்றோம். இதையே புனித பவுலடியார் இவ்வாறு நினைவு கூர்கின்றார்: “உங்கள் வாழ்வு அவரோடு இணைந்து, கடவுளிடம் மறைந்து இருக்கிறது” (கொலோ 3:3).
இது பெரும்பாலும் உலகின் பார்வையில் எளிமையானதாகவும் முக்கியத்துவம் இல்லாததாகவும் தோன்றலாம்; ஆனால், மரியாவின் முன்மாதிரியைப் பின்பற்றுவதன் மூலம், அது கிறிஸ்துவின் அன்பையும் சமாதானத்தையும் பரப்பி, மீட்பின் எதிர்பாராத சாத்தியக்கூறுகளை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும்.
மூலம்: John Paul II, Mary\'s hidden
life is example to mothers, in «L’Osservatore Romano», Weekly Edition in English, 5 February 1997, page 11.
தூய ஆவியார் வருகையின் துணிவால் சீடர்கள் அனைவரும் ஒருநாள் ஒன்றுகூடி நற்செய்திப் பணி குறித்த ஆலோசனையில் ஈடுபட்டனர். தங்கள் தலைவரின் நற்செய்தியை எங்கே, எவ்விதம் கொண்டு செல்வது என்று வெகுநேரம் ஆலோசித்தனர். உலகமெங்கும் பரவிச் செல்ல முடிவெடுத்த அவர்கள் யார், எந்தப் பகுதிக்குச் செல்வது என்பதில் சிறிது குழப்பம் ஏற்படவே இறுதியாக, சீட்டுப் போட்டுப் பார்த்து எவரெவர் எந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டுமென்று குறிப்பிடப்படுகிறதோ அதன்படி அந்நாடுகளுக்குப் பயணிக்கலாம் எனத் தீர்மானித்தனர். இறைவேண்டுதலோடு திருவுளச் சீட்டும் போடப்பட்டது. அதன்படி தோமா தான் செல்ல வேண்டியது இந்தியப் பகுதி என்றவுடன் அதனை ஏற்றுக்கொள்ள அவரிடம் பெரும் தயக்கமே தலைதூக்கி நின்றது.
1955-ஆம் ஆண்டு
டிசம்பர் 18 அன்று இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் நடைபெற்ற புனித தோமா நினைவுநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் காலஞ்சென்ற டாக்டர் இராஜேந்திர பிரசாத் அவர்கள் தம் உரையின்போது இவ்வாறு குறிப்பிட்டார்.
“நினைவில் கொள்ளுங்கள்... புனித தோமா இந்தியா வருவதற்குமுன் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் கிறித்தவத்தை அறிந்திருக்கவில்லை. புனித தோமாவின் வருகைக்குப்பின் இந்தியர் கிறித்தவத்தைத் தழுவியதால் மற்ற பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளைப்போல் அல்லாமல் நீண்ட வரலாறும் உயர்ந்த வழிமரபும் கொண்டதாகக் கிறித்தவம் இந்தியாவில் விளங்குகிறது. இது உண்மையில் நாமெல்லாம் பெருமை கொள்ளக்கூடிய செய்தியாகும்.”
குடியரசுத்
தலைவரின் கூற்று உண்மைதான். இயேசுமீது பற்று வைத்து, இந்தியாவில் தோமா ஆற்றிய நற்செய்திப் பணிதான் கிறித்தவத்தை இந்நாட்டில் வேரூன்றச் செய்தது.
இயேசுமீதான
தோமாவின் பற்று என்பது இயேசுவின் அழைப்பில்தான் நிலைபெற்றது. இயேசுவை தோமா தன் குருவாக ஏற்றுக்கொள்ளும்போது அவருக்கு வயது 29. திருமணம் முடித்திருந்த அவர் ஆரம்பத்தில் தச்சுத் தொழிலையே செய்துவந்தார். பின்னரே அவர் மீன்பிடித் தொழிலுக்கு வந்தார். கலிலேயாவில் தாரிகே என்ற பகுதியில் குடியிருந்து வந்தார். அவருடைய பெற்றோர் திபேரியாவில் வசித்து வந்தனர்.
தோமாவின்
பெற்றோர் அவரின் சிறுவயதில் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித் தவித்ததால், தோமாவின் இளம்பருவம் மகிழ்ச்சிகரமானதாக இல்லை. தன் குடும்பச் சூழலில் அவர் சிறுவயதிலேயே கடின மனதுடையவராக வளர்ந்தார். அரமாயிக் மொழி பேசிய தோமா, மற்ற யூதர்களைப் போலவே சராசரி கல்வியறிவு கொண்டிருந்தாலும் எதையும் ஆராய்ந்து பார்க்கும் திறன் கொண்டு விளங்கினார். சிறுவயதிலிருந்தே அறிவியல் மனப்பான்மை அவருள் வளர்ந்தது.
‘யூதா’ என்ற இயற்பெயர் கொண்ட அவரிடம் ‘தோமா’ என்ற கிரேக்கப் பெயர் பின்னர் இணைந்திட, ‘யூதா தோமா’ என்று அழைக்கப்பட்டார். இதற்கு ‘இரட்டையராகிய யூதா’ என்று பொருள். இதற்கு ஒரு காரணமும் கூறப்படுகிறது. தோமாவுக்கு ஒரு சகோதரி இருந்திருக்கிறார். இருவரும் ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டைப் பிள்ளைகள் என்றும், தோமாவுக்கு ஒன்பது வயது நடக்கும்போது அந்தச் சகோதரி இறந்துவிட்டதாகவும் தெரிகிறது.
நற்செய்தியாளரான
மத்தேயு தோமாவை ஏழாவது இடத்திலும், மாற்கு, லூக்கா இருவரும் அவரை எட்டாவது இடத்திலும் குறிப்பிடுகின்றனர். எனினும், தோமாவை மற்ற சீடர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தோமானால் பலவித வேறுபாடுகள் தென்படுகின்றன.
பேதுருவுக்கு
அதிகாரம் இருந்தது. யோவான் இயேசுவின் அன்புக்குரிய சீடராக இருந்தார். அந்திரேயாவும், பெரிய யாக்கோபும் இவ்விருவரிடமும் நெருக்கமானவர்களாக இருந்தார்கள். பிலிப்பு, பர்த்தலோமேயு இருவரும் நட்பைப் பகிர்ந்து கொண்டார்கள். யூதா ததேயு, சின்ன யாக்கோபு, கானாவூர் சீமோன் ஆகியோர் இயேசுவின் உறவினர்களாக விளங்கினார்கள். மத்தேயு வரி வசூலிக்கும் பெரிய பொறுப்பிலிருந்து சீடரானவர். யூதா இஸ்காரியோத் பணத்தை வைத்திருக்கும் அளவுக்குப் பெரிய நபராக இருந்தார். ஆனால், தோமா என்ன பின்னணியில் இயேசுவின் சீடராக மாறினார் என்பது தெரியவில்லை.
மேலும்,
திருத்தூதர்களில் ஏழு பேர் மட்டுமே அவர்கள் அழைக்கப்படுவதற்கு முன்னமே நற்செய்தி நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர். தோமா உள்பட யூதா ததேயு, சின்ன யாக்கோபு, சீமோன், யூதாஸ் இஸ்காரியோத் ஆகிய ஐந்து பேரும் அழைக்கப்பட்ட விதம் நமக்குத் தெளிவாகவில்லை.
பன்னிரு
சீடர்களும் இயேசுவோடு இருக்கையில் அவரவர் சில பொறுப்புகளை எடுத்துக்கொண்டனர். பர்த்தலோமேயு திருத்தூதர்களின் பெற்றோரைக் கவனிக்கும் பொறுப்பையும், பிலிப்பு உணவு தயாரிக்கும் பொறுப்பையும், அல்பேயுவின் மகனாகிய சிறிய யாக்கோபு, யூதா ததேயு இருவரும் கூட்டங்களை ஒழுங்குபடுத்துபவர்களாகவும்
பொறுப்பேற்றிருந்தனர்.
யூதாஸ் இஸ்காரியோத் பணக் கணக்குப் பார்க்கும் பொறுப்பில் இருந்தார்.
இயேசுவும்
சீடர்களும் நற்செய்திப் போதிப்பதற்கு ஏதுவாக ஊர், இடம், காலம், நேரம் ஆகியவற்றை வடிவமைக்கும் பொறுப்பு தோமாவுக்குக் கிடைத்தது. அவர் தமக்கு ஒப்படைக்கப்பட்ட பணியைத் திறம்படச் செய்தார் என்றும் கூறப்படுகிறது. இயேசுவின் சீடர்களில் துணிவு மிகக்கொண்டவர்கள் பேதுருவும், செபதேயுவின் மகனான பெரிய யாக்கோபும் என்று கருதப்பட்டாலும், தோமாவும் மிகத் துணிவு உடையவராகவே விளங்கினார்.
தோமாவிடம்
காணப்பட்ட துணிவு, நம்பிக்கை இரண்டுமே வியப்பூட்டும் விதமாக இருந்தன. ஒருமுறை இயேசு தம் பாடுகளை முன்னறிவிக்கும் போது தலைமைச் சீடரான பேதுரு குறுக்கிட்டு, “ஆண்டவரே, இது உமக்கு வேண்டாம்”
என்று தடுத்ததை அறிவோம். இயேசுமீது கொண்டிருந்த அன்பின் மிகுதியால் பேதுரு அப்படிக் கூறியிருந்தாலும், அவருக்கும் சற்றே பயம் இருந்தது. பாடுகள் பற்றிக் குறிப்பிடும்போதே பேதுரு இலேசாக அஞ்சினார் என்றால், பாடுகள் பட இயேசு புறப்படும்போதே
“வாருங்கள், நாமும் போவோம்; அவரோடு இறப்போம்”
என்று இயேசுவின்மேல் வைத்த பற்றுறுதியோடும், அசாத்தியமான துணிவோடும் தோமா மற்ற சீடர்களை அழைத்தார்.
தோமா
இவ்வளவு துணிவுள்ளவராக இருந்தாலும், அவ்வப்போது மனச்சோர்வு கொண்டவராக இருந்தார். அவர் இப்படி இருக்கக் கண்டால் பர்த்தலோமேயு அவரைத் தேற்றுவதைக் கடமையாகக் கொண்டார். பேதுரு தோமாவை நன்கு புரிந்து வைத்திருந்தார். தோமா மனச்சோர்வு கொள்ளும்போது இயேசுவுடன் தொடர்புகொள்வதே கிடையாது என்றும் கூறப்படுகிறது. தோமாவிற்கு இயேசுவிடம் பிடித்தது அவருடைய தடுமாறாத நிலையான மனது என்றால், சந்தேகக் குணமுடைய தோமாவிடம் இயேசுவுக்குப் பிடித்தது தோமாவின் நேர்மைதான்.
தோமாவின்
அந்தச் சந்தேக குணம்தான் இரண்டாயிரம் ஆண்டுகளாக உலகம் அவரை, ‘சந்தேகத் தோமா, ஐயப்பாட்டுத் தோமா’ என்று அழைக்க வைத்திருக்கிறது. அவருடைய சந்தேகம்கூட உயிர்த்த இயேசுவை அவர் தரிசித்ததால் ஆசிர்வாதமாக மாறிப்போனது.
உயிர்த்த
இயேசுவைச் சந்தித்த மற்ற திருத்தூதர்களுடன் தோமா ஏன் காணப்படவில்லை என்பதற்குச் சரியான விளக்கம் கிடைக்கவில்லை. மனச் சோர்வுகொள்ளும் இயல்புடைய அவர் இயேசுவின் பாடுகளை அறிந்து மனமுடைந்து போனவராய் எங்கேனும் சென்றிருக்கலாம். உயிர்த்த இயேசுவைக் கண்ட ஆனந்தத்தில் மற்ற சீடர்கள் “ஆண்டவரைக் கண்டோம்” என்றபோது ‘ஆண்டவரின் விலாவில் விரல் விட்டுப் பார்த்தாலன்றி நம்ப மாட்டேன்’
என்று கூறும்போதே தோமாவின் ஐயக்குணம் வெளிப்பட்டது.
மற்ற
திருத்தூதர்முன் இயேசு தோன்றும்போது தோமா அருகில் இல்லை. எம்மாவு கதையில் இயேசுவைச் சந்தித்த சீடர்கள் தெரிவித்த செய்திகளிலும் அவர் முழுநம்பிக்கைகொள்ளவில்லை. அவருக்குள் இருந்த ஒரே பெரிய கவலை, இயேசுவைத் தரிசித்ததன் மூலமாக மற்ற சீடர்கள் அனுபவித்த இறைமகிழ்ச்சியை, இறையனுபவத்தைத் தான் அனுபவிக்க முடியவில்லையே என்பதுதான்.
ஆனால்,
தோமாவின் நேர்மைமீது பற்றுக் கொண்டிருந்த இயேசு, திருத்தூதர்கள் கூடியிருந்த அறையில் நேரில் தோன்றி தோமாவிடம், தம் விலா காயத்தைத் தொட்டுப் பார்க்க அனுமதியளித்து அவருடைய ஐயத்தைப் போக்கியதுடன், அவருடைய சந்தேகக் குணத்தை மன்னிக்கவும் செய்கிறார். அன்று தெய்வீக உண்மையும், மனித இயல்பிலான ஐயமும் நேருக்கு நேர் சந்திக்கையில், இறையுண்மையின் முன் மனித ஐயம் காணாமல் போகிறது. இதனால்தான் தோமாவால் தன்னையறியாமல் ‘என் ஆண்டவரே, என் கடவுளே’ என்று வாய்விட்டு நம்பிக்கை அறிக்கையிட முடிகிறது. ஐயம் நீக்கப்பட்டது அவருக்கு மட்டுமல்ல; அவர் வழியாகக் கிறித்தவச் சமூகத்திற்கும்தான்.
இந்நிகழ்வு
தொடர்பாக ஒரு பாரம்பரியச் செய்தியும் உண்டு. இயேசுவின் விலாக்காயத்தைத் தொட்ட தோமாவின் கரம் செந்நிறக் கறையைக் கொண்டிருந்தது என்றும், அந்தக் கறை தோமா மரிக்கும்வரை இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. எது எப்படியோ, தன் தலைவரின் காயத்தைத் தொட்ட தோமாவின் கரம், வாழ்நாள் முழுக்க இயேசுவை நினைவூட்டுவதாகவே இருந்தது என்றால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. மேலும், இந்த நம்பிக்கை மற்ற திருத்தூதர்களைக் காட்டிலும் வெகுதொலைவில் சென்று நற்செய்திப் பரப்பும் பணிக்கு அவரைத் துணிவுடன் இயங்க வைத்தது என்றால் அது மிகையாகாது என்றே கொள்ளலாம்.
இயேசுவின்
நற்செய்தியைப் பரப்ப மிகுந்த ஆர்வம் கொண்ட தோமா தொடக்க காலத்தில் தம் நாடுவிட்டு கண்காணாத தொலைவில் செல்லத் தயக்கம் கொண்டவராகவே இருந்தார். அதனால்தான் எருசலேமில் ஒருநாள் அனைத்துத் திருத்தூதர்களும் ஒன்றுகூடி சீட்டுக் குலுக்கிப் போட்டுத் தாங்கள் செல்ல வேண்டிய பகுதிகளை முடிவு செய்தபோது, தோமா இந்தியப் பகுதிகளுக்குச் செல்லவேண்டும் என்று சீட்டு விழுந்தவுடன் அவர் மிகவும் தயங்கினார்; அதற்குக் காரணமும் இருந்தது.
‘அரமாயிக் மொழி மட்டுமே தெரிந்திருந்த யூதனான நான், இந்தியப் பகுதிகளில் எப்படி நற்செய்திப் பணி செய்யமுடியும்? அப்பகுதி மொழிகளின் பெயர்களைக்கூட அறிந்திராத நிலையில் எப்படி அம்மக்களிடம் தொடர்பு கொள்ள முடியும்? அவர்கள் என்னை ஏற்றுக்கொள்வார்களா?’ என்று குழம்பியதோடு அதை மற்ற திருத்தூதர்களிடம் வினாவாகவும் எழுப்பினார்.
கூடியிருந்த
மற்றவர்கள் ‘தோமா, இது இறைவனின் சித்தம். உம்மைப் போலத்தான் நாங்களும் நமக்குத் தொடர்பே அல்லாத தேசங்களுக்குச் செல்லவிருக்கிறோம். உமக்கு ஏன் தயக்கம்? உலகெங்கும் போய் நற்செய்தியை அறிவியுங்கள் என்றுரைத்த நம் ஆண்டவரின் கட்டளையைத்தான் நாம் நிறைவேற்றப் போகிறோம்’
என்று அவரைத் தைரியப்படுத்தினர். ஆனாலும், தோமாவின் தயக்கம் எளிதில் மாறவில்லை, பிடிவாதமும் போகவில்லை.
துணிச்சல்
மிக்கவரும், எதையும் ஆராய்ந்து உணர்பவரும், பிடிவாதக் குணமும் உள்ளவரான தோமாவின் மனம் இந்தியப் பகுதிகளுக்குப் போவதை மறுத்துப் பிடிவாதமாக இருந்த நிலையில் ஓர் இரவு இயேசு அவருக்குத் தோன்றி “பயப்படாதே தோமா, இந்தியப் பகுதிக்குச் சென்று நற்செய்தியை அறிவி. நான் உன்னோடிருக்கிறேன்” என்றுரைக்க,
தன்னுடைய உணர்வுகளை மறைத்துப் பழக்கமில்லாத தோமா, “எங்குப் போனாலும் நான் இந்தியா பக்கம் மட்டும் போகமாட்டேன்” என்று
முரண்டு பிடித்தார். இயேசுவும் அவரின் பிடிவாதத்தைக் கண்டு புன்னகைத்து மறைந்துபோனார்.
இயேசு
தோன்றி மறைந்தபின் தோமா இப்போது இரட்டை மனநிலைக்கு ஆளானார். ‘இந்தியப் பகுதிகளுக்குப் போகவே மாட்டேன்’
என்று பிடிவாதமாய் இருந்தவர் இப்போது ‘போவதா? வேண்டாமா?’ என்ற குழப்பத்திற்கு உள்ளானார்.
(தொடரும்)
ஆலயத்தில் சிறுவன் இயேசுவைக் கண்டுபிடித்த நிகழ்வை விளக்கும் திருவிவிலியப் பகுதியானது தனது தெய்வீக மகனின் வாழ்விலும், பணியிலும் மரியா கொண்டிருந்த பங்களிப்பானது வளர்ந்து வருவதை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது.
1. புனித
திருமுழுக்கு யோவானின் இறைவாக்கு உரைக்கும் பணியின் தொடக்கத்திற்கு முன்னதாக புனித லூக்கா நற்செய்தியாளர் இயேசுவின் குழந்தைப் பருவ விவரிப்பின் கடைசிப்பகுதியாக அவரது எருசலேம் ஆலயத் திருப்பயணத்தை விவரிக்கின்றார். இது எருசலேமில் இயேசுவின் பல ஆண்டுகால மறைமுகமான
வாழ்வை நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டும் வழக்கமானதொரு சித்தரிப்பாகும்.
இதன்மூலம்
தமது ‘தந்தையின் இல்லத்திற்குள்’ அவர்
மேற்கொள்ளும் இந்த இரண்டாவது ‘நுழைவிற்கு’ ஏற்கெனவே
ஆலயத்தில் தமது அர்ப்பணிப்பைக் குறித்திருந்த கடவுளுக்குத் தம்மை முழுமையாக அர்ப்பணித்ததன் அர்த்தத்தை அளிக்கிறார்.
இந்தத்
திருவிவிலியப் பகுதியானது ‘இயேசு யோசேப்பிற்கும் மரியாவிற்கும் கீழ்ப்படிந்திருந்தார்’ என்ற
லூக்கா நற்செய்தியாளரின் விவரிப்பிற்கு முரணாக இருப்பதாகத் தெரிகிறது (லூக் 2:51). ஆனால், நாம் சற்று உற்றுநோக்கினால், இங்கு அவர் ஒரு மகனாக தமது இயல்பான நிலைக்குத் தன்னிலை உணர்ந்து வேண்டுமென்றே முரண்படுவதாகத் தெரிகிறது. எதிர்பாராத விதமாக மரியா மற்றும் யோசேப்பு ஆகியோரிடமிருந்து ஒரு திட்டவட்டமானதொரு பிரிவினையை ஏற்படுத்துகிறார். தமது நன்னடத்தை விதியாக இயேசு தமது வானகத் தந்தைக்கு மட்டுமே உரியவர் என்று கூறுகிறார்; தமது இவ்வுலகக் குடும்பத்துடனான உறவுகளைப் பற்றி அவர் குறிப்பிடவில்லை.
இயேசுவின் நடத்தையானது
வழக்கத்திற்கு
மாறான
ஒன்றாகத்
தோன்றுகிறது
2. இந்நிகழ்வின்
வழியாக, மீட்பின் மறையுண்மையைப் புரிந்துகொள்ளும் வகையில் இயேசு தமது தாயைத் தயார்படுத்துகின்றார். எருசலேம் ஆலயத்தில் தங்குவதற்காகச் சிறுவன் இயேசு அவர்களிடமிருந்து விலகியிருக்கும் அந்த மூன்று வியத்தகு நாள்களில், மரியாவும் யோசேப்புவும் இயேசுவின் பாடுகள், இறப்பு மற்றும் உயிர்ப்பின் கொண்டாட்டத்திற்கெனத்
தங்களையே தயாரிக்கும் அதன் முன்சுவையை அனுபவிக்கின்றார்கள்.
எருசலேம்
ஆலயத்திற்குப் பாஸ்கா கொண்டாடச் சென்றவர் அங்கேயே தங்கவேண்டும் என்ற தமது ஆசையைத் தமது பெற்றோரிடம் கூறாமலேயே தமது தாயையும் யோசேப்புவையும் சொந்த ஊரான கலிலேயாவுக்குப் புறப்பட அனுமதித்த இயேசு, அவர்கள் அனுபவித்த அந்தத் துன்பத்திற்கான மறைபொருளின் வழியாகப் பின்னாளில் தமது பாஸ்கா அறிவிப்பின் வழியாக அவரது சீடர்களோடு அவர்கள் அனுபவிக்கவிருந்த அந்தப் பாஸ்கா மகிழ்ச்சிக்கு அவர்களை இட்டுச்செல்கின்றார்.
நற்செய்தியாளர்
லூக்காவின் விவரிப்பின்படி, ஒருநாள் பயணத்திற்குப் பிறகு நாசரேத்திற்குத் திரும்பிய யோசேப்புவும் மரியாவும் காணாமல்போன இயேசுவின் நிலையைப் பற்றி நினைத்துக் கவலைப்படுகிறார்கள், வேதனைப்படுகிறார்கள். அவர்களின் உறவினர்கள் மற்றும் அறிமுகமானவர்களிடையே சற்று ஏமாற்றத்தோடு அவரைத் தேடுகிறார்கள். எருசலேமிற்குத் திரும்பி வந்து அவரை ஆலயத்தில் கண்டதும், “அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டும், அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக் கொண்டும் இருந்தார்”
(லூக் 2:46). அதைக்கண்டு அவர்கள் மலைத்துப் போனார்கள். அவரது நடத்தையானது வழக்கத்திற்கு மாறான ஒன்றாகத் தோன்றுகின்றது. மூன்று நாள்களுக்குப் பிறகு அவரை அவர்கள் கண்டுபிடித்தல் என்பது அவரது பெற்றோருக்கு அவரின்
ஆளுமை மற்றும் பணியைப் பற்றிப் புரிந்துகொள்ள உதவியது என்றும் நாம் பொருள் கொள்ளலாம்.
பின்னாளில்
தமது பொதுவாழ்வில் செய்ய வேண்டியதை இப்பொழுதே ஓர் ஆசிரியரைப் போன்று அனைவரும் வியக்கும் வகையில் பேசுகின்றார்: “அவற்றைக் கேட்ட அனைவரும் அவருடைய புரிந்துகொள்ளும் திறனையும், அவர் அளித்த பதில்களையும் கண்டு மலைத்துப் போயினர்”
(லூக் 2:47). கேட்போரை
வியப்பில் ஆழ்த்தும் வகையிலானதொரு ஞானத்தை வெளிப்படுத்திய அவர், தமது மீட்புப் பணியின் சிறப்பியல்புகளாக இருக்கும் உரையாடலுக்கான (the art of dialogue) பயிற்சியை
அப்பொழுதே செய்யத் தொடங்குகிறார்.
இயேசுவின்
தாய் அவரிடம் இவ்வாறு கூறுகின்றார்: “மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே” (லூக்
2:48). இவ்வார்த்தைகளில்
பல தாய்மார்கள் தங்கள் குழந்தைகள் ஏற்படுத்தும் துன்பங்களைப் பற்றிக் கேட்கும் ‘குரலின்’ எதிரொலியை நாம் காணலாம். மேலும், இவ்வார்த்தைகள் சோதனைக் காலங்களில் ஒவ்வோர் ஆணும் பெண்ணும் தமது இதயத்தின் ஆழத்தில் எழுப்பும் கேள்விகளாகும்.
3. மரியாவின்
கேள்விக்கு இயேசு தரும் கேள்வி வடிவிலான பதில் இங்கு மிகவும் குறிப்பிடத்தக்கதொன்றாகும்:
“நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்கவேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?” (லூக் 2:49).
இப்பதில்
வழியாக அவர் தாம் யார் என்பதன் மறையுண்மையை எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத விதத்தில் யோசேப்பிற்கும் மரியாவிற்கும் வெளிப்படுத்துகிறார். இவ்வகையில் வெளித் தோற்றங்களைக் கடந்து செல்ல அவர்களை அழைப்பதோடு, தமது எதிர்காலத்திற்கான புதிய எல்லைகளையும் அவர்களுக்கு முன்பாக விரித்துக் காட்டுகிறார்.
துயருற்ற
தம் தாய்க்கு அளித்த பதிலில், இயேசு தமது நடத்தைக்கான காரணத்தை உடனடியாக வெளிப்படுத்துகிறார். மரியா யோசேப்பைச் சுட்டிக்காட்டி ‘உன் தந்தை’ என்று குறிப்பிடுகிறார். ஆனால், இயேசுவோ தமது வானகத் தந்தையைக் குறிக்கும் விதமாக ‘என் தந்தை’ என்று பதில் அளிக்கிறார்.
தமது
தெய்வீகப் பிறப்பைக் குறிப்பிடுகையில், தமது வானகத் தந்தை வாழும் இடமான கோவிலை அவர் வசிக்குமிடமாகக் (natural place) கூற அவர்
அதிகம் விரும்பவில்லை. ஏனெனில், அவர் தமது வானகத் தந்தையின் திட்டத்தை நிறைவேற்றுவதிலேயே மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். இவ்வாறு தம் தந்தையின் விருப்பமே, தாம் கீழ்ப்படியவேண்டிய ஒரே நெறிமுறை என்பதை வலியுறுத்த விரும்புகிறார்.
கடவுளின்
திட்டத்திற்கு அவர் தம்மை முழுமையாக அர்ப்பணித்ததைக் குறிக்கும் இந்தக் குறிப்பானது, நற்செய்தி உரையில் ‘நான் துன்பப்பட வேண்டும்’
என்ற வார்த்தைகளால் சிறப்பித்துக் காட்டப்பட்டுள்ளது. இந்த வார்த்தைகள் பின்னாளில் அவரது துன்பம் பற்றிய முன்னறிவிப்பிலும் தோன்றலாம் (காண்க: மாற் 8:31).
அதன்
பிறகு அவரது வானகத் தந்தை அவரை எங்கு வழிநடத்துகிறாரோ அங்குச் சென்று தமது பணியை நிறைவேற்ற அவரை அனுமதிக்குமாறு அவரது பெற்றோர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
4. நற்செய்தியாளர்
லூக்கா, “அவர் சொன்னதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை” (லூக்
2:50) என்று குறிப்பிடுகின்றார்.
யோசேப்புவும்
மரியாவும் அவரது பதிலின் பொருளையோ, பெற்றோரின் அக்கறைக்கு அவர் பதிலளிக்கும் விதத்தையோ (வெளிப்படையாக நிராகரித்தல்) புரிந்துகொள்ளவில்லை. இந்த மனப்பான்மையின் மூலம் தமது வானகத் தந்தையுடனான நெருக்கத்தின் மறைபொருளின் அர்த்தங்களை வெளிப்படுத்த இயேசு எண்ணுகிறார். மரியா, தான் அனுபவித்துக் கொண்டிருக்கும் சோதனையுடன் அவற்றை எவ்வாறு தொடர்புபடுத்துவது என்று தெரியாமலேயே அவற்றை
உள்ளுணர்வால் அறிகிறார்.
மீட்புப்பணியில்
மரியா
புதியதொரு
பரிமாணத்தை
அடைகின்றார்
உண்மையிலேயே
இந்தக் கடினமான காலத்தை மரியா எப்படி கடக்கின்றார் என்பதை நற்செய்தியாளர் லூக்காவின் வார்த்தைகள் நமக்குக் கற்பிக்கின்றன. மரியா, “இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தனது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்” (லூக்
2:51) என்கிறார் நற்செய்தியாளர் லூக்கா. இயேசுவின் தாய் இந்த நிகழ்வுகளை, கிறிஸ்து பிறப்பில் அவருக்கு வெளிப்படுத்தப்பட்ட தனது மகனின் மறைபொருளுடன் தொடர்புபடுத்துகின்றார். மேலும், ஆழ்ந்த தியானத்தின் அமைதியில் அவற்றைச் சிந்தித்து இறைவனுக்குத் தன்னையே அர்ப்பணிக்கும் மன நிலையுடன் ‘ஆம்’ எனக்
கூறி, இறைத்திட்டத்திற்கு ஒத்துழைக்கத் தன்னையே அர்ப்பணிக்கின்றார்.
இவ்வாறு, மரியா
தனது தாய்மையிலிருந்து வரும் இயல்பான நிலையிலிருந்து படிப்படியாக விடுபட்டு, தனது மகனின் பணிக்குத் தன்னை அர்ப்பணிக்க வழிவகுக்கும் நிகழ்வுகளின் சங்கிலியில் முதல் இணைப்பு உருவாக்கப்படுகிறது.
எருசலேம்
ஆலயத்தில் தமது பணிக்கு முன்னுரையாக இயேசு தம் தாயைத் தம்முடன் இணைத்துக் கொள்கிறார்; இனி மரியா இயேசுவைப் பெற்றெடுத்த தாய் மட்டுமல்ல; மாறாக, இறைத் தந்தையின் திட்டத்திற்குத் தானே கீழ்ப்படிவதன் மூலம் மீட்பின் மறைபொருளில் ஒத்துழைக்கக்கூடிய ஒரு பெண்மணியாகவும் விளங்குகிறார்.
இவ்வாறு
மிகுந்த அர்த்தம் நிறைந்த ஒரு நிகழ்வைத் தன் இதயத்தில் இருத்திக்கொண்டு, அன்னை மரியா, மீட்புப் பணியில் தனது ஒத்துழைப்பின் ஒரு புதிய பரிமாணத்தை அடைகிறார்.
மூலம்:
John Paul II, Mary co-operates by personal obedience, in «L’Osservatore
Romano», Weekly Edition in English, 22 January 1997, p. 11.
இயேசு கிறிஸ்துவின் பன்னிரு திருத்தூதர்களில் ஒருவரான புனித தோமா, இயேசுவின் பாடுகளின் போதும், அவருடைய அநியாய மரணத்தின் போதும் எருசலேமில் இல்லாமல் போனது ஏன் என்ற கேள்விக்கான விடை இன்னமும் நாம் அறியாததாகவே உள்ளது. எனினும், உயிர்த்த இயேசுவின் விலாக் காயங்களில் தன் விரலைவிட்டுச் சோதித்துப் பார்த்து, “என் ஆண்டவரே, என் தேவனே” என அவர் உலகிற்கே அறிக்கையிட, அந்நிகழ்வு அமைந்தது.
இத்தகைய
மகத்தான நம்பிக்கை அறிக்கைக்காகவே ஆண்டவர் இயேசுவின் சித்தப்படி தன்னிச்சையாகவே தோமா
அன்று எருசலேமில் இல்லாது போயிருக்கலாம். எது எப்படியோ, நாமும் இது குறித்துச் சில
கேள்விகளைக் கேட்டு, நமக்குள்ளேயே சமாதானப் பதிலைத் தேடிக்கொள்ளும் விதமாக அமைந்துள்ள
கீழ்க்காணும் கவிதையுடன் ‘தோமா கால் பதித்த தேசம்’ என்னும்
தலைப்பிட்ட இந்தியாவின் திருத்தூதரான புனித தோமாவின் வரலாற்றுக்குள் நாம் மனம் பதிப்போம்.
‘வாருங்கள்
அவரோடு நாமும் இறப்போமென’
வார்த்தைகளில்
கூறியவரா நீர்?
வாழ்வும்
வழியுமான தலைவர் இயேசுவையே
வேதனையில்
விட்டவரா நீர்?
கூறுங்கள்
தோமாவே,
பாடுகளின்
வேளையிலே
கூட
வரா தெங்கே போனீர்?
கூட்டமாய்
எருசலேமே வேடிக்கைப் பார்க்கையிலே
கோமகனே
என்ன ஆனீர்?
உயிரைத்
துச்சமென மதித்து இயேசுவுடன்
பெத்தானியா
சென்றீர் அன்று.
உம்
வீரம் எங்களுக்கு வியப்பைத் தருவதனால்
உள்ளுக்குள்
கேள்வியொன்று
உடன்
வந்த சீடரெல்லாம் இயேசுவைக் கைவிட்டு
உயிர்
பிழைக்க ஓடிச்சென்று ஒளிய,
நீர்
மட்டும் ஊரிலேயே இல்லாமல்
போனதுதான்
ஏனோ அன்று?
விருந்து
முடிந்தவுடன் அவசரப் பணி நிமித்தம்
விடைபெற்றுப்
போயிருந்தீரோ?
வீரர்கள்
இயேசுவைக் கைது செய்த சேதியறியா
வெளியூரில்
நீர் இருந்தீரோ?
பருந்துகள்
வசம் சிக்கிய
அமைதிப்புறா
இயேசு பற்றி
அறிந்திரா
இடம் சென்றீரோ?
பார்க்காது
நம்பிக்கையின் பண்பை வெளிப்படுத்த
பரம
னும்மைத் தேர்ந்தெடுத்தாரோ!
இயேசு
பிரா னறியாது தூசு கூட நகராது
எல்லாம்
அறிந்தவர் அவரே -அவர்தம்
இன்னல்
வேளையில் நீர் இல்லாது போனதற்குக்
காரணமாய்
இருந்த த(அ)வரே
மாசு
மருவில்லா உம் நம்பிக்கை வெளிப்படவே
நிகழ்ந்தது
இந்தப் புதிரே
மாபரன்
இயேசுவுக்காய்
மறைச்சாட்சி
ஆனவரே
தோமா
என்னும் ஞானக் கதிரே!
இயேசுபிரான்
பாடுவேளை இல்லாது போனாலும்
இயேசுவுக்காய்
பாடுபட்டீர்!
இயேசு
தந்த நற்செய்தி எங்கெங்கோ அறிவிக்க
இருக்கின்ற
நாடு விட்டீர்!
இயேசு
வழி மாந்தரிந்த பூமியில் இணைந்திடவே
இயேசுவுக்காய்
உயிரை விட்டீர்!
எள்ளளவும்
குறையாத நம்பிக்கை சாட்சியமாய்
எங்கள்
நெஞ்சில் மதிப்பைப் பெற்றீர்!
நம்பிக்கையின்
இலக்கணமாய், வீரத்தின் உறைவிடமாய் திருவிவிலியம் காட்டும் புனித தோமாவின் வரலாறு ஒரு
வீரியமிக்க வரலாறு. இந்திய நாட்டின் இதயத்தோடு இணைந்த வரலாறு. ஐரோப்பிய நாடுகள் கிறித்தவத்தை
அறியும் முன்னமே ஆசிய கிறித்தவர்களுக்கு அதிலும் குறிப்பாக, இந்தியக் கிறித்தவர்களுக்குக்
கிறித்தவத்தை தோமா அறிமுகப்படுத்திய தீரமிக்க வரலாறு. புனித தோமாவின் இவ்வரலாறு இந்தத்
தொடரில் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு நிகழ்ந்த ஒரு வார காலத்திற்குப்பின் ஆரம்பமாகிறது.
தங்கள்
தலைவர் இயேசு சிலுவை சுமந்து, பாடுகள் பட்டு மரித்த துயரமான நிகழ்வுகள் அவரின் பதினோரு
சீடர்களின் நினைவுகளை விட்டு நீங்காமல் அவர்தம் உள்ளங்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாக்கியிருந்தன.
மேலும், எதிரிகள் முன்பைவிட தீவிரமாக அவர்களைத் தேடிவந்த அந்நிலையில், தாங்கள் எருசலேமில்
தங்கியிருப்பது பாதுகாப்பானது அல்ல என்பதையும் உணர்ந்தனர். எனவே, யூதேயா நாட்டிலிருந்து
இடம்பெயர்ந்து வடக்கிலுள்ள கலிலேயாவிற்குச் செல்லத் தீர்மானித்தனர்.
இயேசுவின்
பன்னிரு சீடர்களில் இறந்த யூதாஸ் இஸ்காரியோத் மட்டுமே யூதேயா நாட்டைச் சார்ந்தவர்.
மற்ற பதினோரு பேரும் கலிலேயாவைச் சார்ந்தவர்களே. எனவே, பாதுகாப்பிற்காகத் தங்கள் சொந்த
நாடான கலிலேயாவிற்கு அவர்கள் புறப்பட்டனர். மேலும் இயேசுவை அதிகம் நேசித்த மக்கள் வாழும்
நாடு என்ற சிறப்பும் கலிலேயாவுக்கு இருந்தது.
ஆண்டவர்
இயேசுவின் விலாக்காயங்களில் விரல் நுழைத்து அவர் உயிர்ப்பில் நம்பிக்கை கொண்டு “ என்
ஆண்டவரே, என் தேவனே!” என்று நம்பிக்கை அறிக்கையிட்ட தோமா இந்த முறை தன் நண்பர்களை விட்டு
விலகவில்லை. இனி எந்த நிலையிலும் அவர்களை விட்டு விலகக்கூடாது என்ற உறுதியான மனநிலையோடுதான்
அவர்களுடன் கலிலேயா புறப்பட்டார். கலிலேயாவின் அருகிலிருந்த திபேரியா பகுதியில்தான்
தோமாவின் பெற்றோரும் வசித்து வந்தனர்.
அவர்கள்
அனைவரும் புறப்பட்ட அந்தப் பயணத்தில் கலிலேயா எல்லையை அடைந்தபோது அங்குத் தெரிந்த மலைகள், வயல்கள், சோலைகள், வழிப் பாதைகள் என எல்லா இடங்களும்
இயேசுவுடன் தாங்கள் நடந்த அந்த நாள்களை நினைவுபடுத்தின. கலிலேயா கடற்கரையில் அமைந்திருந்த
பதினான்கு மைல் நீளமும், ஆறு மைல் அகலமும் கொண்ட கெனசரேத் ஏரியைக் கண்டபோது அதன் கரையில்
மனிதர்களைப் பிடிக்கும் பணிக்குத் தங்களை இயேசு அழைத்த நினைவு நிழலாடியது.
கெனசரேத்
ஏரியின் மேற்குப் பகுதியில் கோதுமைப் பயிர் நிறைந்த பரந்த வயல்கள் கண்ணுக்கெட்டிய தூரம்
வரை தென்பட்டன. மரம், செடி, கொடிகள், கரும்புத் தோட்டங்கள், பனைமர வயல்கள் இருந்தன.
அதற்கு நேர்மாறாக, கிழக்குப் பகுதியில் காடுகளும் கற்பாறைகளும், பாலைநிலங்களுமே இருந்தன.
கிழக்குப்
பகுதிக் கரையோரத்தில் செங்குத்தான பாறைகள் இருந்தபடியால், படகுகள் வந்து இறங்கும் துறையாக
அப்பகுதி விளங்கியது. ஏரியின்மீது எப்போதும் படகுகள் போய்க்கொண்டிருந்தன. மீனவர்கள்
மீன் பிடிக்கச் செல்லும் படகுகள் நூற்றுக்கணக்கில் கரையில் காத்திருந்தன. மீனவர்களுக்கான
குடிசைகள் அங்கே நிறைந்திருந்தன. இந்தப் பகுதிகளிலும் அவர்கள் இயேசுவோடு நடந்த நாள்களை
நினைவுகூர்ந்தனர்.
பாஸ்கா
பண்டிகை முடிந்த ஒருவார காலத்திற்குப் பின்னர் புறப்பட்ட பயணம் நிறைவுற்றபோது, அவர்கள்
தங்கள் சொந்தக் கடற்கரை நிலத்தில் கால் பதித்தனர். இனிப் பிழைப்பிற்கு வழிதேடியாக வேண்டிய
நிலையில் சீமோன் பேதுரு “நான் மீன் பிடிக்கப்போகிறேன்” என்று
மற்றவர்களுக்குக் கூறினார். ஆம், அதுவே அவர்கள் முன்னர் செய்துவந்த மூதாதையரின் தொழில்.
மீன்பிடிப்பதில்
ஏற்கெனவே அனுபவம் பெற்றிருந்த சீடர்களில் ஆறு பேர், “நாங்களும் வருகிறோம்” என்றனர். அந்த
ஆறு பேரில் ஒருவரின் சம்மதக் குரலாக தோமாவின் குரலும் ஒலித்தது. ஏற்கெனவே இயேசுவின்
மரணத்தில் பாடம் கற்றுக்கொண்ட அனுபவம் உடையவரான தோமா, மற்றவர்களை விட்டுப் பிரிவதால்
நல்ல சந்தர்ப்பங்களை இனி இழக்கக்கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தார். எனவே, அந்திரேயா,
பெரிய யாக்கோபு, யோவான், சின்ன யாக்கோபு, யூதா, ததேயு இவர்களின் குரல்களோடு தோமாவின்
குரலும் சேர்ந்துகொண்டது.
திபேரியா
கடற்கரைப் பகுதியில் அவர்கள் தங்களுக்குத் தெரிந்த தொழிலான மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக்
கொண்டிருக்கையில், ஒருநாள் ஏழு பேரும் படகில் ஏறிக் கடல் நடுவில் சென்று, இரவெல்லாம்
உழைத்தும் ஒரு மீன்கூடப் பிடிபடாத கவலையில் இருந்தனர். அப்போது சூரிய உதயத்திற்குள்
இருள் கவ்வியிருந்த நேரத்தில் இயேசுவை அவர் யாரென்று அறியாமலேயே அவர் கூறியபடி படகின்
வலதுபக்கம் வலையை வீசி 153 பெரிய மீன்களைப் பிடித்து வந்து, இயேசுவுடன் பகிர்ந்து உண்டனர்.
இயேசுவைச் சீடர்கள் அறிந்துகொண்ட பின்னர் பேதுருவிடம் தம் ஆட்டுக்குட்டிகளை மேய்க்கச்
சொல்லி, இயேசு தம் திரு அவையைப் பேதுருவிடம் ஒப்படைத்த ஒப்பற்ற நிகழ்வும் அங்கே நடந்தது.
உயிர்த்தபின்
நாற்பது நாள்கள் பூமியில் இருந்த இயேசு இறுதியாக அவர்களுடன் சேர்ந்து உணவு உண்ணும்போது
அவர்களிடம், “நீங்கள் எருசலேமை விட்டு நீங்க வேண்டாம். என்னிடமிருந்து கேட்டறிந்த தந்தையின்
வாக்குகளை நிறைவேற்ற அங்கே காத்திருங்கள். யோவான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தார்.
நீங்களோ இன்னும் சில நாள்களில் தூய ஆவியால் திருமுழுக்குப் பெறுவீர்கள்” என்று அறிவுறுத்தினார். இயேசுவின் கட்டளைப்படி அவர்கள்
மீண்டும் யூதேயா நாட்டிற்குத் திரும்ப வேண்டியதாயிற்று. அங்கே பெத்தானியாவிலுள்ள ஒலிவ
மலைப்பகுதியில் இயேசு விண்ணேற்றமடைந்தார்.
(தொடரும்)
1. மெசியாவின் மீட்புப் பணியில் மரியாவின் பங்கு பற்றி அறிவிக்கும் வயது முதிர்ந்த சிமியோனின் வார்த்தைகள், மீட்பின் மறையுண்மையில் பெண்ணின் பங்கை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. உண்மையில் மரியா ஒரு தனிப்பட்ட நபர் மட்டுமல்ல; இயேசுவின் பாடுகளைப் பகிர்ந்து கொள்வதற்கும், ஆவியில் கடவுளின் பிள்ளைகளைப் பெற்றெடுப்பதற்கும் மீட்பரின் பக்கத்தில் துணையாக நிற்கின்ற ஒரு புதுமைப் பெண்ணாக, ‘சீயோனின் மகள்’ இருக்கின்றார். இந்த உண்மையானது மரியாவின் இதயத்தை ஏழு அம்புகள் குத்திக் கிழிக்கின்ற வகையில் சித்தரிக்கப்பட்டிருக்கின்ற புகழ்பெற்ற ஓவியத்தால் வெளிப்படுத்தப்படுகின்றது: இந்த ஓவியமானது சீயோனின் மகளோடும் திரு அவையோடும் அடையாளப்படுத்தப்படுகின்ற ஒரு தாய்க்கும், மனுவுருவான வார்த்தையாகிய இயேசு கிறிஸ்துவின் துயரமிக்க முடிவிற்கும் இடையேயானதோர் ஆழமான தொடர்பைக் கோடிட்டுக் காட்டுகின்றது.
கடவுளிடமிருந்து
கொடையாக அவர் பெற்றுக்கொண்டவரை, அவரின் மீட்புப் பணிக்காக அர்ப்பணிப்பதன் வழியாகத் திரும்பவும் அவரிடமே கொடுப்பதற்காக மரியாவும் இந்தப் பணிக்காகத் தன்னையே அர்ப்பணிக்கின்றார். இந்தச் செயலானது இயல்பிலேயே உள்ளதொரு தாய்மைப் பாசத்தின் கனியான ஆத்மார்த்தமானதொரு பகிர்தலாக மட்டும் இல்லாமல், கிறிஸ்துவின் மீட்புப் பணிக்கான புதுமைப் பெண்ணின் ஒப்புதலையும் வெளிப்படுத்துகின்றது.
இயேசுவின் துன்பத்தில்
மரியாவும்
பங்குகொள்வார்!
2. இவை
அனைத்தும் நிகழும், “இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும்” (லூக்
2:35) என்ற வார்த்தைகளில் இயேசுவினுடைய அர்ப்பணத்தின் மற்றும் மரியாவினுடைய துன்பத்தின் நோக்கத்தை சிமியோன் சுட்டிக்காட்டுகின்றார். அவரின் தாயையும் அவரது துன்பத்தில் ஈடுபடுத்துகின்ற “எதிர்க்கப்படும் அடையாளமாக இருக்கின்ற” (லூக்
2:34) இயேசு, அவரது இந்த நிலைப்பாட்டில் ஆண்களையும் பெண்களையும் முக்கியமானதொரு முடிவை எடுக்க அழைத்து அவர்களை வழிநடத்துகிறார். உண்மையில் “அவர் இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கிறார்” (லூக்
2:34).
இவ்வாறு,
மீட்புப் பணியின் பொருட்டு இந்த முரண்பாட்டில் அவரது இறைமகனோடு இணைக்கப்பட்டு இருக்கின்றார். உண்மையிலேயே கிறிஸ்துவை மறுப்பவர்களுக்கு அழிவின் ஆபத்தானது நிச்சயம். ஆனால், பலரது உயிர்ப்பானது மீட்பின் அற்புதமானதொரு பலனாக இருக்கின்றது. இந்த அறிவிப்பு மட்டுமே அர்ப்பணத்தின்
கனியானது யாருக்கெல்லாம் ஏற்கெனவே
சாட்சியம் கூறுகின்றதோ, அவரது இதயங்களில் மிகப்பெரியதொரு நம்பிக்கையைத் தூண்டுகின்றது.
சடங்கு
சம்பந்தமானதோர் அர்ப்பணத்திற்கு முன்பு இத்தகைய மீட்பின் எதிர்பார்ப்புகளை நோக்கி தூய கன்னியின் கவனத்தைத் திருப்புவதன் வழியாக, மனுக்குலத்தின் மீட்பிற்கான அவரது பங்களிப்பாகவே இந்தச் செயலை அவர் செய்கின்றார் என்பதை மரியாவுக்குச் சிமியோன் அறிவுறுத்துவதாகத் தோன்றுகின்றது. உண்மையில், அவர் சூசையிடமோ அல்லது சூசையைப் பற்றி மரியாவிடமோ பேசவில்லை; அவரின் வார்த்தைகள் அவரது மகனின் முடிவோடு அவர் தொடர்புபடுத்துகின்ற மரியாவுக்கு மட்டுமே
கூறப்பட்ட வார்த்தைகளாக இருக்கின்றன.
3. கால
வரிசைப்படி முதன்மை பெறுகின்ற மரியாவின் இந்தச் செயலானது இயேசுவின் முதன்மை நிலையை மங்கச் செய்யவில்லை. மீட்புத் திட்டத்தில் மரியாவின் இந்தப் பங்கை இரண்டாம் வத்திக்கான் சங்கமானது “மீட்பினுடைய மறைத்திட்டத்தை நிறைவேற்றுவதில், அவருடைய மகனின் சேவையில் அவருக்குக் கீழும் அவரோடு இணைந்தும்…
முழுமையாகத் தன்னையே ஒப்படைத்தார்” (இறைத்திட்டத்தில்
திரு அவை, எண். 56) என்று விவரிக்கின்றது.
இயேசுவைக்
கோவிலில் காணிக்கையாக அர்ப்பணிக்கும் நிகழ்வில், மரியா கிறிஸ்துவுக்குக் கீழும் கிறிஸ்துவோடும் மீட்பின் மறைத்திட்டத்திற்காக உதவுகின்றார். உண்மையில் மீட்பில் அவர் முதன்மையான பங்கை வகிக்கின்றார். எனவே, சடங்கு முறை காணிக்கையால் மட்டுமே அவர்
மீட்கப்பட வேண்டும். அவரது ஆன்மாவை ஊடுருவுகின்ற வாளினால் மரியா
அவருடைய மகனின் பலியோடு இணைக்கப்படுகின்றார்.
4. கிறிஸ்துவின்
முதன்மை இடமானது ஈடு செய்யப்பட முடியாத பெண்ணின் பங்கைத் தகுதியற்றதெனத் தள்ளாமல், அதற்குத் துணைநின்று சரியானதொன்றைக் கோருகின்றது. அவரது சொந்தப் பலியில் தமது தாயை ஈடுபடுத்துவதன் வழியாக, கிறிஸ்து அந்தப் பலியின் ஆழமானதொரு மனிதநிலை அடிப்படையை வெளிக்கொணரவும், சிலுவையின் குருத்துவப் பலிக்கான முன்னோட்டத்தை நமக்குக் காட்டவும் விரும்புகிறார்.
மீட்புப்
பணியில் பெண்ணின் குறிப்பிடத்தக்க பங்களிப்பிற்கான தெய்வீக நோக்கத்தைப் பலியாக ஒப்புக்கொடுக்கின்ற அந்தச் சடங்கில் யோசேப்பு கலந்துகொண்ட போதிலும் சிமியோனின் தீர்க்கத்தரிசனம் மரியாவை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்தது என்பதிலிருந்து காணலாம்.
இயேசுவைக்
கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கும் இந்த நிகழ்வின் முடிவானது, மீட்புத் திட்டத்தில் பெண்ணினுடைய உடனிருப்பின் மதிப்பு மற்றும் அர்த்தத்தை உறுதிப்படுத்துவதாகத் தோன்றுகின்றது. அன்னா என்னும் பெண்ணுடனான சந்திப்பு, பழைய ஏற்பாடு புதிய ஏற்பாட்டிடம் ஒப்படைக்கப்படுவது போன்ற சிறப்புத் தருணங்களை நிறைவு செய்கிறது.
சிமியோனைப்போல,
இந்தப் பெண்ணும் தேர்ந்தெடுக்கப்பட்ட
மக்களுள் சிறப்பானதொரு நிலையைப் பெறவில்லை; ஆனால், அவரது வாழ்வானது கடவுளின் பார்வையில் மிகவும் உயர்ந்த மதிப்பைப் பெற்றிருப்பதாகத் தோன்றுகின்றது. ஒருவேளை, அவரின் ஆழ்ந்து ஆராய்ந்து முடிவெடுக்கும் கொடையின் பொருட்டும் தூய ஆவியாரின் தூண்டுதலின்கீழ் அவர் நடத்திய அந்தப் புனித வாழ்வின் பொருட்டும் அநேகப் பேர் அவரிடம் ஆலோசனை பெற்றதனால், தூய லூக்கா மரியாவை ஓர்
இறைவாக்கினராக அழைக்கின்றார்.
அன்னா
84 வயது நிறைந்தவராகவும், பல ஆண்டுகளாக விதவையாகவும்
இருந்தார். தன்னையே முழுமையாகக் கடவுளுக்கு அர்ப்பணித்து, “கோவிலை விட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்துவந்தார்” (காண்.
லூக் 2:37). அவர் மெசியாவை மிகவும் ஏக்கத்தோடு எதிர்பார்த்து வாழ்ந்து வந்ததனால், அது இயேசுவில் நிறைவேறுவதை ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்த பலரையும் பிரதிபலிக்கின்றார். இதையே நற்செய்தியாளர், “அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்தார்” (லூக்
2:38) என்று குறிப்பிடுகின்றார்.
ஆலயத்தில்
தொடர்ந்து தங்கியிருந்ததால், ஆண்டவருக்காக அர்ப்பணிக்கப்பட்டதும், திருவசனத்தைக் கேட்பதாலும் செபத்தாலும் செழுமைப்படுத்தப்பட்டதுமான ஒரு வாழ்வின் முடிவில் சிமியோனை விடவும் ஒருவேளை அவரால் எளிதாக இயேசுவைச் சந்திக்க முடிந்தது.
மீட்பின்
தொடக்கத்தில் தனது புனித வாழ்வாலும், செபத்தோடு கூடிய எதிர்பார்ப்பாலும் கிறிஸ்துவின் பிரசன்னத்தை ஏற்றுக்கொள்ளவும், அவரது முடிவில்லா இரக்கத்தால் பெற்றுக்கொண்ட அற்புதங்களுக்காக ஒவ்வொரு நாளும் கடவுளைப் புகழவும் தயாராக இருக்கும் எல்லாப் பெண்களையும் இந்த இறைவாக்கினரான அன்னாவில் காண முடியும்.
அன்னா: நற்செய்தியைப்
பரப்புகின்ற
பெண்களின்
அடையாளம்
குழந்தை
இயேசுவைச் சந்திப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிமியோனும் அன்னாவும், மரியா மற்றும் சூசையோடு இயேசுவின் உடனிருப்பினுடைய
மகிழ்ச்சியைப் பகிர்வதிலும், அதை அவர்கள் வாழ்ந்த இடத்தில் பரப்புவதிலும் ஆழமானதோர் அனுபவத்தைப் பெற்றிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக, அவரது சாதாரண மற்றும் அசாதாரணமான நம்பிக்கையினால் சான்றுபகர்வதன் வழியாக, அன்னா இயேசுவைப் பற்றிப் பேசுவதில் வியக்கத்தக்கதோர் ஆர்வத்தைக் காட்டுகிறார். இந்த நம்பிக்கை மற்றவர்களும் அவர்கள் வாழ்வில் மெசியாவை ஏற்றுக்கொள்வதற்கான முன்தயாரிப்பாக இருக்கின்றது.
“எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப் பற்றிப் பேசினார்”
(லூக் 2:38) என்ற தூய லூக்காவின் கருத்தானது, நற்செய்தியைப் பரப்புவதில் தங்களை அர்ப்பணித்து, மீட்பிற்கான நம்பிக்கையைத் தூண்டி வளர்க்கும் பெண்களின் அடையாளமாக அவரைக் கருதுவதாகத் தெரிகிறது.
மூலம்:
Pope John Paul II, Christ calls women to share his mission, in
«L’Osservatore Romano», Weekly Edition in English, 15 January
1997, p.11.
1. “இயேசுவே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி” (லூக் 2:32) என்பதை உணர்ந்த பிறகு, சிமியோன் மரியாவிடம் அந்த மீட்பராகிய இயேசு அனுபவிக்க வேண்டிய மிகப்பெரும் துயரத்தையும் அந்தத் துன்பியல் நிகழ்வில் அவரின் (மரியாவின்) பங்களிப்பையும் முன்னறிவிக்கின்றார்.
அவரின்
மீட்புப் பலி பற்றிய குறிப்பானது இயேசுவின் பிறப்பு பற்றிய அறிவிப்பு நிகழ்வின் பொழுது சுட்டிக்காட்டப்படாமல் மரியின் மகனுடைய மறையுண்மைகளை அவர் புரிந்துகொள்ள உதவிய கிட்டத்தட்ட கிறிஸ்து பிறப்பின் இரண்டாவது அறிவிப்பு (ஒப்பிடுக. மீட்பரின் தாய், எண்.16) என்று கூறப்படும் சிமியோனின் தீர்க்கத்தரிசனத்தில் வெளிப்படுத்தப்படுகின்றது.
அதுவரை
அங்கிருந்தவர்களிடம் பேசிக்கொண்டிருந்த சிமியோன், யோசேப்புவையும் மரியாவையும் ஆசிர்வதிக்கையில் மரியாவிடம் மட்டும் அவரது மகனின் பாடுகளை அவரும் பகிர்ந்துகொள்வார் என்று முன்னறிவிக்கின்றார். தூய ஆவியாரால் தூண்டப்பட்டு அவர் மரியாவை நோக்கி, “இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்”
(லூக் 2:34-35) என்கிறார். தாய் என்கிற முறையில் மரியாவின் துன்பமானது அவரது மகனின் பாடுகளில் அதன் உச்சத்தை அடைகிறது.
2. இந்த
வார்த்தைகள் மீட்பர் எதிர்கொள்ளவிருக்கும் துன்பத்தை முன்னறிவிக்கின்றன. உண்மையில் அவர் அவரது சமகாலத்தவர்களின் கடுமையான எதிர்ப்புகளை எதிர்கொள்ள முன்குறிக்கப்பட்ட ‘முரண்பாட்டின் அடையாளம்’
(the sign of contradiction) ஆவார்.
ஆனால், கிறிஸ்துவின் துன்பத்துடன் இணைத்து மரியாவின் இதயமானது வாளால் குத்திக் கிழிக்கப்படும் என்பதைக் காட்சிப்படுத்துவதன் வழியாக அவரது மகனின் துன்பமிக்க முடிவோடு அவரின் அன்னையையும் சிமியோன் இணைக்கின்றார்.
இவ்வாறு,
மதிப்புமிக்க வயோதிகரான அவர், மீட்பர் எதிர்கொள்ளவிருக்கும் பகையை முன்கூட்டியே எதிர்பார்க்கையில், அப்பகையானது தாயின் இதயத்தில் ஏற்படுத்தவிருக்கும் எதிர்வினையையும் சுட்டிக்காட்டுகின்றார். தாயின் இந்தத் துன்பமானது மீட்புப் பலியில் அவரது மகனாகிய இயேசுவோடு இணையும் அந்தப் பாடுகளில் அதன் உச்சத்தை அடைகிறது.
லூக்கா
நற்செய்தி 2:32-இல் மேற்கோள் காட்டப்பட்டுள்ள துன்புறும் ஊழியர் பற்றிய பாடல்களை நமது மனக்கண்முன் கொண்டு வரும் பொழுது (ஒப்பிடுக: எசா 42:6; 49:6), சிமியோனின் வார்த்தைகள், “அவர் நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்” (எசா
53:5), “தம் உயிரைக் குற்ற நீக்கப் பலியாகத் தந்தார்”
(எசா 53:10) போன்ற தனிப்பட்ட மற்றும் ஆன்மிகத் தியாகத்தை விளக்கும் பண்டைய சடங்குமுறைகளையும் விஞ்சுகின்ற வகையில் இருக்கும் துன்புறும் ஊழியர் பற்றிய இறைவாக்கை நமக்கு நினைவூட்டுகின்றன.
‘துன்புறும் ஊழியரின்’
துக்ககரமான எதிர்காலத்திற்கும், மரியாவின் எதிர்காலத் துன்பத்திற்கும் இடையே ஒரு தனித்துவமான ஒற்றுமை இருப்பதை சிமியோனின் இறைவாக்கானது எவ்வாறு வெளிப்படுத்துகின்றது என்பதை இங்கு நாம் கவனிக்கலாம்.
3. இயேசுவை,
சிமியோன் “பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி”
(லூக் 2:32) என்று அறிவிக்கும் பொழுது, மரியாவும் யோசேப்புவும் திகைத்து நிற்கின்றனர். சிமியோனின் வார்த்தைகளைக்
கேட்ட பிறகு தன் இருதயத்தைத் துளைக்கும் வாள் பற்றிய இறைவாக்குப் பற்றி மரியா எதுவுமே சொல்லவில்லை. யோசேப்புவுடன் இணைந்து அந்தப் புரிந்துகொள்ள முடியாத இறைவாக்கு வார்த்தைகளையும் இயேசுவைக் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தலின் உண்மையான அர்த்தத்தையும் அமைதியுடன் மரியா ஏற்றுக்கொள்கின்றார்.
உண்மையில்,
புனித லூக்கா தனது நற்செய்தியில் “அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு ஒரு சோடி மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக் குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது” (லூக்
2:24) என்று குறிப்பிடுவதைப் போன்று, அது “நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்”
(மத் 11:29) என்று கூறும் இயேசுவின் பலியை முன்குறிக்கின்றது. இதில் இயேசுவின் மீட்புப் பணியில் அவரது தாயையும் இணைக்கும் “உண்மையானதொரு கையளிப்பும்” (லூக்
2:22) நிகழ்த்தப்பட்டது.
மரியா தனது
மகனின்
மீட்புப்
பணியில்
பங்குகொள்ள
வேண்டியதாயிருந்தது...
4. சிமியோனின்
இறைவாக்கைத் தொடர்ந்து இறைவாக்கினரான அன்னாவினுடனான சந்திப்பும் நிகழ்கின்றது: “அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக் குழந்தையைப் பற்றிப் பேசினார்”
(லூக் 2:38). “கோவிலை விட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்து”
(லூக் 2:37) வந்ததன் வழியாக மீட்பரின் வரவை எதிர்பார்த்திருந்த அந்த வயதான பெண்ணின் நம்பிக்கையும், இறைவாக்குரைக்கும் ஞானமும் இஸ்ரயேலின் கடவுள்மீது நம்பிக்கை வைப்பதற்குத் திருக்குடும்பத்திற்கு மேலும் ஊக்கமூட்டியது.
இந்தக்
குறிப்பிட்ட தருணத்தில், அன்னாவின் செயலானது மரியாவிற்கும் யோசேப்புவிற்கும் இறைவனிடமிருந்து வந்ததோர் அடையாளமாகத் தோன்றியிருக்கும். இது நம்பிக்கையளிக்கும் ஒளியின் மற்றும் தொடர் பணியின் செய்தியாகும்.
சிமியோனின்
இறைவாக்குரைக்கும் நிகழ்வு முதல், மரியா தனது வாழ்க்கையை இயேசு கிறிஸ்துவின் பாடுகள் நிறைந்த பணிவாழ்வில் மிக நெருக்கமாகவும், புரிந்துகொள்ள இயலாத வகையிலும் ஒன்றிணைக்கிறார்.
இவ்வாறு,
மனிதகுலத்தின் மீட்புக்காக மரியா தன் மகனின் உண்மையுள்ள உடன் உழைப்பாளராக மாற வேண்டியதாயிருந்தது.
மூலம்:
John Paul II, Mary has role
in Jesus’ saving mission, in «L’Osservatore Romano», Weekly Edition in English,
1 January 1997, p. 11.