news
ஆன்மிகம்
கிறிஸ்து பிறப்பு நிகழ்வு இயேசுவுடன் அன்னை மரியாவுக்குள்ள நெருங்கிய தொடர்பைக் காட்டுகிறது! – 36

1. இயேசுவின் பிறப்பு பற்றிய செய்தியில் லூக்கா நற்செய்தியாளர் அந்நிகழ்வின் மறைபொருளை  நன்கு  புரிந்துகொள்ளக்கூடிய வகையில் நமக்கு எடுத்துக் கூறுகிறார்.

முதலில், நற்செய்தியாளர் தாவீதின் வழிமரபினரான யோசேப்புவையும், அவரின் மனைவி மரியாவையும்கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்கு...” (லூக் 2:5) செல்லப் பணித்த அகுஸ்துஸ் சீசரால் ஆணையிடப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்.

அந்தப் பயணமும் இயேசுவின் பிறப்பும் எத்தகைய சூழலில் நிகழ்ந்தவை என்பதைப் பற்றி நமக்குக் கூறுகையில், நற்செய்தியாளர் லூக்கா மெசியாவின் அரசைப் பற்றிய சில அடிப்படைப் பண்புகளாகிய துன்பம் மற்றும் ஏழ்மை போன்ற சூழ்நிலையோடு நமக்குக் கூறுகின்றார். அதாவது, அவரின் அரசு பற்றி அவரே அவரது பொதுவாழ்வில் கூறுகின்றவாறு, எந்தவிதமான உலகுசார்ந்த மரியாதையோ அல்லது அதிகாரமோ இல்லாததோர் அரசாகும்: “மனுமகனுக்கோ தலைசாய்க்கக்கூட இடமில்லை (லூக் 9:58).

2. இயேசுவின் பிறப்பு பற்றிய நற்செய்தியாளர் லூக்காவின் விவரிப்பானது ஒருசில முக்கியமில்லாத குறிப்புகளைக் கொண்டிருக்கின்றதுஅவை இயேசுவினுடைய பிறப்பின் மறையுண்மைகளையும் மற்றும் இறைமகனைப் பெற்றெடுத்தவரின் உணர்வுகளை நன்றாகப் புரிந்துகொள்ளவும், வாசிப்பவர் களை ஊக்கப்படுத்தும் நோக்கத்தோடும் எழுதப்பட்டிருக்கலாம்.

பிறப்பு பற்றிய விவரிப்பானது சாதாரண முறையில் கூறப்பட்டிருந்தாலும், மரியாவை அவர் மனத்தில் இருத்தித் தியானிப்பவராக மற்றும் கிறிஸ்துவின் மறையுண்மைகளில் மிக நெருக்கமாகப் பங்கெடுப்பவராகப் பதிவுசெய்கின்றது. “அவர்தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத்தொட்டியில் கிடத்தினார்...” (லூக் 2:7). மரியாவின்  இச்செயலானது ஏற்கெனவே கிறிஸ்து பிறப்பு அறிவிப்பின் பொழுது வெளிப்படுத்தப்பட்டஉம் சொற்படியே எனக்கு நிகழட்டும் (லூக் 1:38) என்ற வார்த்தைபடி கடவுளின் திட்டத்தில் துணை நிற்பதற்கான அவரின் தீர்க்கமான மனநிலையைக் குறிக்கின்றதொன்றாகவே இருக்கின்றது.

மரியா தனது மகனின் மீட்புப் பணியைப் பகிர்ந்து கொள்கின்றார்

மரியா மகப்பேற்றை ஒரு முழுமையான ஏழ்மை கோலத்தில் அனுபவிக்கின்றார். புதிதாகப் பிறக்கின்ற ஒரு குழந்தைக்குத் தாய்மார்கள் வழக்கமாகக் கொடுக்கின்ற ஒன்றைக்கூட அவரால் இறைமகனுக்குக் கொடுக்க முடியவில்லை. அதற்குப் பதிலாகமிக மிக உயர்ந்தவரின் மகன்என்ற கௌரவத்திற்கு மாறான புதுமையானதொரு தொட்டிலாகியஒரு தீவனத் தொட்டியில்மரியா அவரைக் கிடத்த வேண்டியதாயிற்று.

3. “விடுதியில் அவர்களுக்கு இடமில்லை (லூக் 2:7) என்று லூக்கா நற்செய்தி கூறுகின்றது. இந்த வார்த்தையானது, யோவான் நற்செய்தியின் முகவுரையை நமக்கு நினைவுபடுத்துகின்றது: “அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை (யோவா 1:11). மேலும் இது அவர் தமது பூவுலக வாழ்வின் பொழுது எதிர்கொள்ளப் போகின்ற அநேகப் புறக்கணிப்புகளை முன்னறிவிக்கின்றதொன்றாகவே அமைகின்றது.  “விடுதியில் அவர்களுக்கு இடமில்லை (லூக் 2:7). இங்குஅவர்களுக்குஎன்ற சொல் மகன் மற்றும் தாயை இந்தப் புறக்கணிப்பில் இணைக்கின்றது. மேலும், மரியா எவ்வாறு ஏற்கெனவே அவரது மகனின் பாடுகளோடு இணைக்கப்படுகின்றார் மற்றும் மீட்புப் பணியைப் பகிர்கின்றார் என்பதையும் காட்டுகின்றது.

தமக்குரியவர்களாலேயேபுறக்கணிக்கப்பட்டு ஒன்றும் அறியாதவர்கள், காட்டுமிராண்டிகள் மற்றும் கரடுமுரடானவர்கள் என்று கூறப்பட்ட ஆனால், மெசியாவின் பிறப்பு பற்றிய நற்செய்தியை முதலில் பெற கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்ட ஆடு மேய்ப்பவர்களால் வரவேற்கப்படுகின்றார். வானதூதர் அவர்களுக்குக் கொடுக்கின்ற செய்தியானது மகிழ்ந்து களிகூர்வதற்கானதோர் அழைப்பாகும். ‘அஞ்சாதீர்கள்என்று சொல்லி அனைத்து பயங்களையும் வெற்றிகொள்ளுங்கள் என்ற அழைப்போடு, “இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன் (லூக் 2:10) என்றும் கூறுகின்றார்.

உண்மையில், கிறிஸ்து பிறப்பு அறிவிப்பின் பொழுது மரியாவுக்கு இருந்ததைப்போலவே மனிதர்களுக்கான கடவுளது நல்லெண்ணத்தின் ஒரு மிகப்பெரிய அடையாளமாகவே இயேசுவின் பிறப்பு, ஆடு மேய்ப்பவர்களுக்கு (இடையர்களுக்கு) அமைகின்றது. பெத்லகேம் குகையின் ஏழ்மையில் தியானிக்கப்படும் தெய்வீக மீட்பரில், மனுக்குலத்தின் நம்பிக்கையாக இருக்கின்ற ஒருவரை நம்பிக்கையோடு எதிர்கொள்வதற்கான ஓர் அழைப்பாக இதை நாம் காணமுடியும்.

வானதூதரின் பாடல்: உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!” என்று கூறுகின்றது. இதுநல்லெண்ணம் கொண்ட மனிதர்கள் (லூக் 2:14) என்றும் மொழிபெயர்க்கப்படலாம். இப்பாடல் மரியா அவரது பாடலில் (Magnificat) கூறியதை இடையர்களுக்கு வெளிப்படுத்துகிறது. இயேசுவின் பிறப்பு கடவுளின் இரக்கம் நிறைந்த அன்பின் அடையாளமாக இருக்கிறது. அதுவே தாழ்நிலையில் இருந்தோருக்கும் ஏழைகளுக்கும் சிறப்பான விதத்தில் காட்டப்படுகின்றது

4. இடையர்கள் வானதூதரின் அழைத்தலுக்கு ஆர்வத்தோடும் உடனடியாகவும் பதிலளிக்கிறார்கள்: “வாருங்கள், நாம் பெத்லகேமுக்குப் போய் ஆண்டவர் நமக்கு அறிவித்திருக்கிற இந்த நிகழ்ச்சியைப் பார்ப்போம் (லூக் 2:15).

அவர்கள் வீணாகத் தேடவில்லை: மேலும் அவர்கள்.... மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள் (லூக் 2:16). அவர்களுக்குத் திருச்சங்கம் நினைவுகூர்வதைப் போன்று, “இறைவனின் தாய் அவரின் தலைச்சன் மகனை மகிழ்ச்சியோடு காண்பித்தாள் (இறைத்திட்டத்தில் திரு அவை, எண். 57). இதுதான் அவர்களது வாழ்வின் முக்கியமானதொரு தருணமாக இருந்தது.

மரியா இந்த நிகழ்வுகளை அவரது மனத்தில் தியானித்தார்

பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியை...” (லூக் 2:17) தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வம் இடையர்களுக்கு இயல்பாகவே இருந்தது. தாயை அவரது மகனோடு சந்தித்த அந்த அற்புதமான அனுபவத்திற்குப் பிறகு, அந்த இடையர்கள் எல்லாக் காலத்தையும் சார்ந்த நற்செய்தி அறிவிப்பாளர்கள் இயேசுவை நன்கு தெரிந்துகொள்வதற்கும் மற்றும் அவரது மீட்பின் நற்செய்தியை அறிவிக்கின்ற மகிழ்ச்சியான அறிவிப்பாளர்களாக மாறுவதற்கும் உரிய வழிமுறைகளையும், அவர்கள் மரியாவோடு ஆழமான ஆன்மிக உறவு கொண்டிருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும், அதன் அவசியத்தையும் பரிந்துரைக்கிறார்கள்.

இத்தகைய வழக்கத்திற்கு மாறான நிகழ்வுகளோடு, நற்செய்தியாளர் லூக்காமரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார் (லூக் 2:19) என்று கூறுகின்றார்.

இடையர்கள் பயத்திலிருந்து வியப்பிற்குக் கடந்து சென்றபொழுது, நம்பிக்கையின் காரணமாக மரியா அவரது மகனோடு தொடர்புடைய நிகழ்வுகளின் பதிவுகளை மனத்தில் வைத்திருந்தார். மேலும், அவைகளைப் பற்றி இதயத்தில் அதாவது, அவரது இதயத்தின் ஆழத்தில் தியானித்ததனால் அவைகளைப் பற்றிய அவரின் புரிதலை ஆழப்படுத்தினார்.

இவ்வகையில், மீட்பின் மறைபொருளைச் சிறப்பாக ஏற்றுக்கொள்வதற்கும், அதனை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்வதற்கும், அனைத்துக் காலங்களைச் சார்ந்த மக்களிடமும் புதுப்பிக்கப்பட்ட முயற்சியுடன் அதனைப் பறைசாற்றுவதற்கும் ஏதுவாக மற்றொரு தாயான திரு அவையானது தியானம் மற்றும் இறையியல் சிந்தனை ஆகிய கொடையையும் பணியையும் வளர்த்தெடுக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைக்கிறார்.

மூலம்: Pope John Paul II, Nativity shows Mary’s closeness to Jesus, in «L’Osservatore Romano», 27 Novembre 1996, p.11.

news
ஆன்மிகம்
இயேசு ஆண்டவரின் மூன்று முகங்கள்

திருவிவிலியத்தில் உள்ள புதிய ஏற்பாட்டு நூல்கள், ஆண்டவர் இயேசுவின் வாழ்வைத் தெளிவாகவும் நேரடியாகவும் பேசுகின்றன. அந்த முறையில் ஆண்டவர் இயேசுவைப் பற்றிய  கூற்றுகளை ஆய்ந்தறியும்போது, அவரைப் பற்றிய வெளிப்பாடுகள் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றன. இத்தூண்டுதலின் விளைவாக ஏற்பட்ட எண்ண அலைகள்தான் இக்கட்டுரை.

இயேசுவின் முதல் முகம், துன்புறும் கிறித்தவர்கள்

அக்காலத்தில் சவுல் கிளர்ந்தெழுந்து கிறித்தவர்களைத் துன்புறுத்தவும், கைது செய்யவும் தமஸ்குவை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார். அப்போது ஓர் ஒளி அவரைச் சூழ்ந்து வீசியதால் தரையில் விழுந்த சவுலிடம், “சவுலே, சவுலே ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?” என்ற குரல் கேட்டது. அதற்கு அவர், “ஆண்டவரே நீர் யார்?” எனக் கேட்க, “நீ துன்புறுத்தும் இயேசு  நானேஎன்ற பதில் கிடைத்தது (திப 9:1-6).

இயேசுவின் இக்கூற்று நம்மை ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டுகிறது. ஏனெனில், கிறித்தவர்கள் துன்புறும்போதெல்லாம் இயேசுவே துன்புறுகிறார் என்று பொருளாகிறது. எனவேதான், துன்புறும் கிறித்தவர்களை ஆண்டவர்  இயேசுவின் முதல் முகம் என்கிறோம். அண்மைக் காலத்தில் வடஇந்தியாவில் பல இடங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது கிறித்தவர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். இத்தாக்குதலில் துன்புறுவது கிறித்தவர்களல்லர்; மாறாக, இயேசு ஆண்டவர்தாம் என்பது புலனாகிறது. கிறித்தவர்களின் கூட்டத்தைத் திரு அவை என்கிறோம். திரு அவைக்குக் கிறிஸ்துவின் மறையுடல் என்னும் ஓர் இறையியல் கருத்து உள்ளது. திரு அவைக்கு இயேசுவே தலையாக உள்ளார் (கொலோ 1:18). எனவேதான் கிறித்தவர்கள் துன்புறும்போது கிறிஸ்துவே துன்புறுகிறார். கிறித்தவர்கள் பிளவுபட்டிருக்கும் போதும் கிறிஸ்துவே பிளவுபட்டிருக்கிறார்.

இயேசுவின் இரண்டாவது முகம் - துன்புறும் மக்கள்

மத்தேயு நற்செய்தியாளர் உலக முடிவைப் பற்றி 25-ஆம் அதிகாரத்தில் எடுத்துரைக்கிறார். உலக முடிவின்போது மானிட மகன் உயிரோடிருப்பவர்களையும் இறந்தோரையும் தீர்ப்பிட வருவார். நல்லவர்கள் அவரது வலது பக்கம் நிற்பர். தீயவர்கள் அவரது இடது பக்கம் நிற்பர். நல்லவர்களைப் பார்த்து, “நான் பசியாக இருந்தேன், உணவு தந்தீர்கள்; தாகமாய் இருந்தேன், தண்ணீர் தந்தீர்கள்.....” என்றெல்லாம் கேட்பார். அப்பொழுது நல்லவர்கள், “ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாக இருந்தீர், உமக்கு உணவு அளித்தோம்? தாகமாய் இருந்தீர், தண்ணீர் தந்தோம்?.....” என்றெல்லாம் கேட்பார்கள் (மத் 25:31-46). அதற்கு மானிட மகன், “மிகச் சிறியவராகிய என் சகோதரர்-சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் (மத் 25:40) எனப் பதில் கூறுவார். இக்கூற்றை ஆய்வு செய்கையில் இயேசு ஆண்டவரின் இரண்டாவது முகம், துன்புறும் மக்கள் எல்லாரும் ஆவர். துன்புறும் மக்கள் சாதி, மதம், இனம், நாடு ஆகியவற்றையும் கடந்து நிற்கும் மக்களாவர். அத்தகைய துன்புறும் மக்களுக்கு உதவி செய்கின்றபோதெல்லாம் இயேசுவுக்கே உதவி செய்கிறோம். துன்புறும் மக்களைப் புறக்கணிக்கும் போதெல்லாம் இயேசுவையே புறக்கணிக்கிறோம்.

இயேசுவின் மூன்றாவது முகம் - இயற்கை

புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமடலில் ஆழ்ந்த கிறிஸ்தியல் இருக்கிறது. இப்பின்புலத்தில் புனித பவுல் கூறுகின்ற வார்த்தை நம்மை வியக்க வைக்கிறது: “இந்நாள் வரை படைப்பு அனைத்தும் ஒருங்கே பேறுகால வேதனையுற்றுத் தவிக்கிறது (உரோ 8:22).

இங்கே படைப்பு என்னும் வார்த்தை இயற்கையைச் சுட்டிக் காண்பிக்கிறது என்று பொருள் கொள்ளலாம் அல்லவா! அப்படியானால், இயற்கை சுரண்டப்படும் பொழுதெல்லாம் இயேசுவே சுரண்டப்படுகிறார் என்பதுதானே பொருள்! ஆகவேதான் இயேசு ஆண்டவரின் மூன்றாவது முகம் இயற்கை என்கிறோம். மேலும் புனித பவுல், “விண்ணிலுள்ளவை மண்ணிலுள்ளவை அனைத்தையும் கிறிஸ்துவின் தலைமையின் கீழ் ஒன்று சேர்க்கவேண்டும் (எபே 1:10) என மொழிகிறார். அதாவது, இயற்கையை அல்லது படைப்பு அனைத்தையும் கிறிஸ்துவில் ஒன்றுசேர்க்கவேண்டும் என்பதே கடவுளின் திட்டம் என்று உறுதியாக உரைக்கிறார்.

ஆகவே, இயற்கையை அழிக்கும்போது இயேசுவையே அழிக்கிறோம் என்பதுதானே பொருள்! இயற்கையை நிறைவுபெற விடாமல் அதனை அழித்து, கனிம வளங்களைக் கொள்ளையடித்து நாசம் செய்கிறோம். இது கடவுளுக்கு எதிரான துரோகச் செயலாகும். “நிலம் என்னுடையது; நீங்களோ என்னைப் பொறுத்தவரையில் அந்நியரும் இரவற்குடிகளுமே (லேவி 25:23) என்கிறது திருவிவிலியம்.

மனிதர்கள் நிலத்தின் காவலாளிகள். கடவுள் மட்டுமே நிலத்தின் உரிமையாளர். எனவே, இயற்கையை அழிப்பது, சுரண்டுவது கடவுளுக்கு எதிரான பாவமாகும். இயற்கை ஆண்டவர் இயேசுவின் மூன்றாவது முகம்.

இயற்கையின் அம்சங்களாகிய நிலம், நீர், காற்று இவைகளை மாசுபடுத்தும் பொழுது இயேசுவையே மாசுபடுத்துகிறோம். ஆதலால் இயற்கையைப் பேணுவோம், பாதுகாப்போம். ஏனெனில், இயற்கையை அன்பு செய்வதே இறைப்பணியாகும்.

news
ஆன்மிகம்
கூட்டொருங்கியக்கத் திரு அவையின் திருப்பயணிகளாக...

சுயநலமும் வன்முறையும் பிரிவினை வாதமும் நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்ற இன்றைய உலகச் சூழலில், திரு அவையாகிய நாம், ஒரு மாற்றுப் பண்பாட்டை நற்செய்தியாய் எடுத்துரைக்கின்ற சமூகமாக மலர அழைக்கப்படுகின்றோம். அதன்படி, திரு அவைத் தலைவர்களும் துறவியரும் பொதுநிலையினரும் இணைந்து இறைத்திருவுளத்தைத் தெளிந்து தேர்ந்து (Spiritual Discernment) வாழ்வாக்குகின்ற கூட்டியக்கமாகத் திரு அவை மலரவேண்டும். அக்கனவை நனவாக்கிடவே, கூட்டொருங்கியக்கத் திரு அவைக்கான மாமன்றத்தைத் திருத்தந்தை பிரான்சிஸ் அமைத்தார். இம்மாமன்றம் வழக்கமான ஆயர் மாமன்றங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. திரு அவைத் தலைவர்கள், துறவியர், இறையியலாளர்கள், துறை வல்லுநர்கள், பொதுநிலையினர் என அனைவரையும் உள்ளடக்கியதாக அமைந்தது.

இதற்கு அடிப்படையாக அமைவது திருத்தூதர் பணிகள் நூலில் அமைந்துள்ள எருசலேம் முதற் சங்கத்தைப் பற்றிய பகுதியாகும் (திப 15:5-21). விருத்தசேதனம் செய்துகொள்வது பற்றிய கேள்வி எழுந்தபோது, திருத்தூதர்களும் திரு அவை மூப்பர்களும் இறைமக்களும் இணைந்து ஒருவர் மற்றவருக்குச் செவிகொடுத்து இறைவனின் விருப்பத்தைக் கண்டுணர்கின்றனர். அதே வழியில், இன்றைய திரு அவையானது, கடவுளோடும் சக மனிதர்களோடும் இயற்கையோடும் உடன் நடந்து, உணர்வுகளுக்கும் சிந்தனைகளுக்கும் செவி கொடுத்து, இணைந்து இறைத்திருவுளத்தைத் தெளிந்து தேர்ந்திட அழைக்கப்படுகின்றது. அத்தகைய செயல்பாடு வழியாக உலகத்தின் பிரச்சினைகளுக்குப் பதிலிறுப்புச் செய்வதே கூட்டொருங்கியக்க மாமன்றம் வெளிப்படுத்திய நம்பிக்கை. ஆனால், இக்கனவு ஆயர் மன்றத்தோடு நிறைவுபெற்றுவிட இயலாது. இதன் உண்மையான பலன், நமது குடும்பங்கள், இயக்கங்கள், பங்குக் குழுமங்கள், துறவற அமைப்புகள், திரு அவை அமைப்புகள் அனைத்தும் அதே வழியில் சிறு சிறு கூட்டியக்கங்களாக மாறுகின்றபோதுதான் முழுமையடையும். அதற்கான அமைப்புமுறை மற்றும் செயல்முறை மாற்றங்களோடு, நம்மில் உள்ளார்ந்த பண்பியல் மாற்றமும் நிகழ, திரு அவையானது ஒரு தொடர் திருப்பயணத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

வாழும் கடவுளின் திருவுளம்: இறைத்திருவுளம் என்பது நிறைவுசெய்யப்பட்ட கோட்பாட்டுக் கருவூலம் அல்ல; அது உயிரோட்டமான இயக்கமாகும். படைத்துக் காக்கும் இறைவன் தொடர்ந்து சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் வாழ்வியல் சூழலில் உடன் நடந்து, நம்மைத் தூய ஆவியார் வழியாக வழிநடத்துகிறார். “என் சட்டத்தை அவர்கள் உள்ளத்தில் பதிப்பேன் (எரே 31:33) எனக் கூறிய கடவுள், நமது உள்ளார்ந்த ஏக்கங்கள், நீதி மற்றும் ஒப்புரவுக்கான சமூகக் குரல்கள் வழியாகத் தம் கட்டளைகளை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கின்றார். எனவே, தனிப்பட்ட வாழ்விலும் குழுவாகவும், நமது முயற்சிகளிலும் முடிவுகளிலும் இறைத்திருவுளத்தைத் தேர்ந்து செயல்படுவதை வாழ் வாக்கவேண்டும்.

உறவு ஒன்றிப்பு: தெளிந்து தேர்தல் என்பது கடவுளின் திருவுளத்தினைக் கண்டறிவதற்கான மனித முயற்சி மட்டுமல்ல; அது தூய ஆவியாரின் கொடை என்கிறது திருவிவிலியம் (1கொரி 2:12-14, 12:10-11). அவரே நம்மை முழு உண்மையை நோக்கி வழிநடத்துகிறார். வரப்போகிறவற்றை அறிவித்து, தகுந்த முடிவுகளை எடுக்க உதவுகிறார் (யோவா 16:13). எனினும், அவர் தனித்துச் செயல்படுவதில்லை. அவர் மூவொரு இறைவனின் அன்பிலிருந்து பிறக்கின்ற இறையாட்சிக்கான கனவிலிருந்தே நமக்கான இறைத்திட்டத்தை வெளிப்படுத்துகிறார். எனவே, இறைத்திருவுளம் என்பது மூவொரு இறைவன் தமக்குள் கொண்டிருக்கும் உறவை மையமாகக்கொண்டது.

மூவொரு இறைவனின் உறவில் இணைக்கப்பட்டவர்களாக, இறையாட்சிக்கான திட்டத்தில் நம்மையும் பங்குபெறச் செய்வதே தெளிந்து தேர்தல் முறையாகும். எனவே, அது அறிவுத்தளத்தில் நிகழ்கின்ற மனிதச் செயல்பாடு அல்ல; இறைநம்பிக்கையையும் உறவு ஒன்றிப்பையும் அடிப்படையாகக் கொண்ட ஆன்மிகச் செயல்பாடு என்பதைப் புரிந்துகொள்ளலாம். எனவே, செபச் சூழலில், சுயநலங்களைக் கடந்து, அனைவருக்கான நன்மையை நாடி கருத்துகளைப் பகிர்வது இதன் அடிப்படையாகும்.

காலத்தின் அறிகுறிகள்: மாறிவரும் காலச்சூழலில், தகுந்த பதிலிறுப்பைத் தெளிந்து தேர்ந்திட, இன்றைய சமூகத்தைச் சார்பின்றி அறிவார்ந்த முறையில் ஆய்ந்தறிவது அவசியமாகும். இன்றைய சமூகத்தின் போக்கினை நான்கு அடிப்படைப் பண்புகளைக் கொண்டதாக அறிஞர்கள் விளக்குகின்றனர். அதன்படி, இன்றைய உலகமானது நிலையற்றது, நிச்சயமற்றது, குழப்பமானது, தெளிவற்றது. இந்த உலகம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றது. எத்தகைய மாற்றத்தை நோக்கிப் பயணிக்கின்றது என்று யூகிக்க முடியாத அளவு குழப்பம் நிறைந்ததாகவும் இருக்கிறது. பல பிரச்சினைகள் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்ததாக, எளிதாகத் தீர்வுகள் காணமுடியாத அளவு சிக்கலானதாகவும் தெளிவற்றதாகவும் விளங்கின்றன. எனவே, இன்றைய சமூகத்திற்கான தீர்வுகளை ஒற்றைப் பார்வையின் அடிப்படையில் கண்டறிந்திட முடியாது என்பதே உண்மை. எனவே, குழுமத்தில் உள்ள யாவரும் பொறுப்பினையேற்று, ஒரு கூட்டியக்கமாக அனைவருடைய பார்வைகள், கருத்தியல்கள், அனுபவங்கள், உணர்வுகள், அவர்கள் சந்திக்கின்ற பிரச்சினைகள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கி, நிகழ்த்துகின்ற உள்ளார்ந்த தேடலே தகுந்த முடிவுகளை நோக்கி நகர்த்தும்.

மாற்றுக் கருத்துகளும், தூய ஆவியாரின் தூண்டுதலில் வெளிப்படுகின்றன என்கிற நம்பிக்கையில், மாண்போடு அவற்றை உள்ளத்தில் ஏற்றுச் சிந்திக்கவும் அதில் வெளிப்படுகின்ற உண்மையைக் கண்டுணரவும் முயல்வது நம்மை உண்மையை நோக்கி வழிநடத்தும். இவ்வாறு, நாம் கருத்தளவில் வேறுபட்டாலும், இறைநம்பிக்கையிலும் இறைத்திருவுளத்தை நாடித் தேடுகிற அடிப்படை முயற்சியிலும் ஒரே மனமும் உள்ளமும் கொண்டவர்களாய் விளங்க முடியும்.

திறந்த மனம்: முதல் ஏற்பாட்டில், இறைவாக்கினர் எலியா குழப்பத்தோடு இருந்தபோது, இறைவன் அவரைக் குகைக்கு வெளியே வருமாறு அழைக்கிறார் (1அர 19: 9-18). அவர் வெளியே வந்ததும், புயல் காற்றும், பூகம்பமும் நெருப்பும் ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்கின்றன. ஆனால், அவற்றில் எல்லாம் கடவுள் இல்லை. இறுதியாக, மெல்லிய தென்றல் காற்றில் கடவுளின் குரலை எலியா கண்டுகொள்கிறார். குழப்பம் தெளிந்து, இறைத்திருவுளத்தை உணர்ந்து செயல்படுகிறார். இந்நிகழ்வு, தெளிந்து தேர்தலுக்கான பல இறையியல் உண்மைகளை வெளிப்படுத்துகிறது. குகையிலிருந்து கடவுள் அவரை வெளியே அழைப்பதன் வழியாக, நாமும் நமது முற்சார்பு சிந்தனைகள், கவலைகள், எதிர்பார்ப்புகள், கருத்தியல்கள் ஆகியவற்றில் முடங்கிவிடாமல், திறந்த மனத்தோடு இறைவனின் உடனிருப்பை உணர்ந்து இறைத்திட்டத்தை நாட அழைக்கப்படுகிறோம். புயல் காற்றாகவும் பூகம்பமாகவும் நெருப்பாகவும் நம்மைத் துன்புறுத்தும் வெளியிருந்து வரும் அழுத்தங்கள், உள்ளார்ந்த பலவீனங்கள், உள்மனப் போராட்டங்கள் ஆகியவற்றை ஒதுக்கி, அமைதி நிறைந்த உள்ளத்தோடு நாடும் போது கடவுளின் குரலை உணர முடியும்.

குழுமத் தெளிந்து தேர்தல் முயற்சியில், அரசியல் செல்வாக்கு, செல்வம், புகழ், பெருமை ஆகியவற்றை நாடும் அதிகாரத்தின் குரலும், அவற்றிற்கு அடி பணிந்து, அச்ச உணர்வினால் தங்களைத் தற்காத்துக்கொள்ள முற்படும் சமரசக் குரல்களும் வெறுப்பும் வன்முறையும் நிறைந்த குரல்களும் புயல் காற்றாகவும் பூகம்பமாகவும் நெருப்பாகவும் நம்மைத் திசை திருப்பலாம். அத்தகைய நிலைகளில் மெல்லிய காற்றாக வீசுகிற ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், பெண்கள், குழந்தைகள், ஊனமுற்றோர், அகதிகள் போன்றோரின் குரல்களே கடவுளின் குரலாக அமையலாம்விளிம்பு நிலையில் வாழ்வோரின் குரலையும் உள்ளடக்கிய தேடலே இறையாட்சியின் பாதையில் நம்மை வழிநடத்தும்.

எதிர்நோக்கு நிறைந்த உள்ளம்: எல்லாரும் எதிர்பார்க்கிற முடிவுகளைக் குழுமமாக விவாதித்து ஏற்பது அல்ல தெளிந்து தேர்தலின் நோக்கம். இஸ்ரயேல் மக்கள் தங்களை மீட்க வரும் மெசியா, அரசராக வந்து தங்களை அரசியல் அடிமைத்தனத்திலிருந்து மீட்பார் என்கிற தீர்வினை நாடிக் காத்திருந்தனர். ஆனால், இறைத்திட்டமோ அரசியல் அடிமைத்தனத்தையும் கடந்து உள்ளார்ந்த விடுதலையைத் தருகின்ற மீட்பினை நோக்கியதாக இருந்தது.

மேலும், அம்மீட்பினைத் தர, இறைமகன் தம்மையே சிலுவையில் அர்ப்பணிப்பது என்பது மனிதர்களின் கற்பனைக்கு எட்டாத ஒன்றாகவே இருந்தது. அதைப்போல, நம்முடைய வாழ்வுக்கான இறைத்திட்டமும் நமது பார்வைகளின் எல்லைகளைக் கடந்ததாக அமையலாம். எதிர்நோக்குக் கொண்ட பரந்த பார்வையோடு இறைத்திட்டத்தை நாடித் தெளிந்து தேர்ந்திட தூய ஆவியார் நம்மை வழிநடத்துவார். எனவே, நமது சிறிய ஞானத்திற்குள் முடங்கிவிடாமல், இறைஞானத்தின்மீது நம்பிக்கை வைக்க அழைக்கப்படுகிறோம்.

அத்தகைய நம்பிக்கையோடு, கூட்டடொருங்கியக்கத் திரு அவையை வாழ்வாக்கும் எதிர்நோக்குடன் திருப்பயணிகளாக இணைந்து பயணிப்போம்.

news
ஆன்மிகம்
சகோ. ஜெயா ஞானாதிக்கம் CIC

பேரொளியாக இறைவன் வியத்தகு செயல்களைச் செய்து நம்மோடு வாழ்கின்றார் என்ற எதிர்நோக்குடன் வாழும்போது அற்புதங்கள், அதிசயங்கள் தொடர்ந்து நிகழும் என்பது நிதர்சனமான உண்மை. கத்தோலிக்க நம்பிக்கையை நம்  இறை அனுபவங்கள் ஆழமாக்கும். பிற சபைகளுக்கு மாறி மாறிச் சென்று அற்புதங்களுக்காக அலைந்து கொண்டிருக்கத் தேவையில்லை. நம் உன்னதமும் உயர்ந்ததுமான திருப்பலிக்கு நிகர் வேறு எந்த வழிபாடும் இல்லை. அதனால்தான் நாம் பாடுகிறோம், ‘பூசைபலி போல் பாக்கிய செல்வம் புவியில் இல்லையே! புவி நிரம்ப பொன் தந்தாலும் இப்பலிக்கு  ஈடில்லையே!’ என்று.

இயேசுவோடு நம்மைப் பலியாக இறைத்தந்தையிடம் ஒப்புக்கொடுக்கும் பொழுது, இயேசுவின் பாடுகளில் குறைவாய் இருப்பதை நம் உடலில் தாங்கிக்கொள்ளும் உறுதி  பெறுகின்றோம். இறைவனுக்கு நன்றி கூறுவது மீட்பு தரும் செயல் என்று திருப்பலியில் செபிக்கின்றோம். மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்: “ஒரு நாளில் பலமுறை நான்கு வார்த்தைகளைக் கூறுவது சிறப்பானது; ‘தயவுசெய்து,’ நன்றி, ‘மன்னியுங்கள்இவை அனைத்தும் இறையாட்சி மலரச் செய்து அன்புறவை நிலைப்படுத்தும் வார்த்தைகள் மட்டுமல்லாமல், நம் வாழ்க்கையைப் பொருள் நிறைந்ததாகவும் சிறப்பாகவும் மாற்றுகின்றன.”

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு என் உறவினர் குடும்பத்தோடு பொருள்கள் வாங்க கடைக்குச் சென்றிருந்தேன். உடனிருந்த சிறுமி மிட்டாய் வாங்கினாள். கடைக்காரரிடம் ரூபாய் கொடுத்து, ‘தயவுசெய்து மிட்டாய் தாருங்கள்என்று கேட்டாள். வாங்கிய பின்நன்றிஎன்று கூறினாள். உடனிருந்த அனைவரும் அவளை மட்டுமல்லாமல், அவளுடைய பெற்றோரையும் வாழ்த்தினர்.

குற்றங்களுக்கு மன்னிப்புக் கேட்டு, பெற்றவைக்கு நன்றி கூறுவது மீட்பு தரும் செயல் என்று திருப்பலியில் செபிக்கின்றோம். மன்னிப்புக் கேட்பது மட்டுமல்ல; மன்னிப்புக் கொடுப்பதும் இயேசுவின் நெருக்கமான தோழமையை அனுபவித்து, அவரின் அன்புச் சீடராக வாழும் உன்னத நிலைக்கு உயர்த்தப்படுவதாகும். நன்றி உணர்வுடன் அவரிடம் சரணடைவது இயேசுவுக்கு உகந்த செயல்.

உலகின் ஒளி நானே; என்னைப் பின் தொடர்பவர் இருளில் நடக்க மாட்டார்; வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்  (யோவா 8:12) என்ற இயேசுவின் கூற்று நம்மை ஒளியாக உருமாற்றம் பெறச் செய்யும் ஆற்றல் நிறைந்தது. மத்தேயு 5:14-இல் இயேசு இதனை உறுதிப்படுத்தும் வகையில் கூறுகின்றார்: “நீங்கள் உலகிற்கு ஒளியாக இருக்கிறீர்கள்.” ஒளியாகச் சுடர்விட்டு இயேசுவுக்கு உரியவர்களாக நிலைத்து நிற்கும் நிலையில், நாம் இயேசுவின் குரலைக் கேட்டு அகமகிழ்வோம்அவர் அடியொற்றி நடக்கும் அவரின் அன்புச் சீடராக வாழும் உன்னத நிலைக்கு உயர்வோம்.

மண்ணுலகில் ஒளியாக நம்மை வாழவைக்கும்விண்ணுலகின் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு (திபா 136:26). இந்த உயிரினும் மேலான பேரன்பில் (திபா 63:3) நிலையாக நம்பிக்கை வைத்து வாழும் வாழ்க்கை, ஒளியின் மக்களை உருவாக்கும் வல்லமை கொண்டது. நமது கத்தோலிக்கக் கிறித்தவ நிறுவனங்கள் இத்தகைய ஒளியின் மக்களை உருவாக்கி உலகில் சுடர்விடும் விண்மீன்களாகத் துலங்கச் செய்கின்றன.

ஒருநாள் காலையில் கால் வலியுடன் மிகவும் மெதுவாகச் சாலையில் நடந்து கொண்டிருந்தேன். ஒரு பைக் என் அருகில் நிறுத்தப்பட்டது. அதிலிருந்த இளைஞர் என்னிடம், ‘சிஸ்டர், நீங்கள் செல்லும் இடத்தில் கொண்டு வந்து சேர்க்கிறேன்என்று அழைத்தார். நானும் இடத்தைச் சொல்லி பைக்கில் அமர்ந்தேன். நான் சேரவேண்டிய இடம் சென்றதும்நன்றிகூறினேன். அவர், “நான் இராஜகெம்பீரத்தில் உங்கள் பள்ளியில் அருள்சகோதரிகளிடம்தான் படித்தேன், இன்று நல்ல நிலையில் இருக்கிறேன்என்று மகிழ்வோடு கூறினார். அறிமுகம் இல்லாதவருக்கும் நன்றியுடன் நன்மை செய்யும் நன்மனம் உள்ளவர்களை நம் பள்ளிகளில் உருவாக்க, இறைவனின் அருள் ஒளி நம்மில் ஒளியாக ஒளிர்வது அவரது வல்லமை நிறைந்த வழிநடத்துதல்தான்.

news
ஆன்மிகம்
நிழல் பணியாளர் புனித யோசேப்பு

கடனென்ப நல்லவை எல்லாம் கடனறிந்து

சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு (குறள் 981)

என்ற குறள் வரிகளுக்கு ஏற்ப, நன்மைகளையே வாழ்வின் கடமையாய் ஆற்றி சான்றாண்மையாளராக வாழ்ந்து, ‘நீதிமான்என்ற ஒற்றைச் சொல்லில் ஓராயிரம் கருத்துகளைப் பதித்தவர் புனித யோசேப்பு.

யார் இந்த யோசேப்பு?

திருமறை நூல் மற்றும் திரு அவையின் பாரம்பரிய போதனைகளின்படி இவர் 1. தாவீதின் வழிமரபிலே வந்தவர் (லூக் 1:27); 2. கன்னி மரியின் கற்புள்ள காவலர் (மத் 1:25); 3. இயேசுவின் வளர்ப்புத் தந்தை (மத் 2:13-15, 19-23); 4. திருக்குடும்பத்தைப் பேணி வளர்த்தவர் (லூக் 2:41-52); 5. திரு அவையின் நம்பிக்கையின் பாதுகாவலர் என்று திருத்தந்தை 9-ஆம் பத்திநாதரால் அறிவிக்கப்பட்டவர்; 6. இறைத்திட்டத்திற்கு எப்போதும் பணிந்தவர் (மத் 1:24); 7. கற்புக்கும் நற்படிப்பிற்கும் பாதுகாவலர்; 8. திருவிவிலிய நற்செய்தியில் நீதிமான் (மத் 1:49); 9. உழைக்கும் மக்களின் முன் மாதிரி (மத் 13:55).

புனித யோசேப்பு திருவிவிலியத்தில் ஒரு வார்த்தைகூட பேசாதவர். ஆனால், திரு அவையில் அன்னை மரியாவிற்கு அடுத்தபடியாக அதிகம் பேசப்பட்டு வணங்கப்படும் புனிதர். இவரது குழந்தை இவருக்குச் சொந்தமானது இல்லை; வெறுமனே இவரது அரவணைப்பில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்று தெரிந்தும் இறைச் சித்தத்திற்குக் கீழ்ப்படிந்து, அன்னை மரியாவையும், குழந்தை இயேசுவையும் தன் அரவணைப்பில் இறுதி வரை கண்ணின் மணிபோல் பாதுகாத்தவர். இவ்வுலகில் வேறு எந்த மனிதராலும் இதுபோல் செய்ய முடியாது. இதில்தான் புனித யோசேப்பின் மாண்பும் நேர்மையும் அடங்கியிருக்கிறது.

புனித யோசேப்பு ஒரு தந்தையின் இதயத்தோடு இயேசுவை அன்பு செய்தார்என்று மேனாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார். இயேசுவுடனான தன் உறவில் புனித யோசேப்பு விண்ணகத் தந்தையின் மண்ணக நிழலாக இருந்தார். ஓசேயா 11:3-4-இல் கூறப்பட்டுள்ளது போல் அவருக்கு நடை பயிற்றுவித்தார்; அவரைக் கையில் ஏந்தினார்; அவரது கன்னங்களை ஆரத் தழுவி குனிந்து அவருக்கு உணவு ஊட்டினார்.

ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே;

சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே

என்ற புறநானூற்றுப் பாடல் கூறுவதைப் போல் இயேசு பெற்றிருந்த ஞானத்திற்கும் அறிவுத்தெளிவிற்கும் அடிப்படைக் காரணம் புனித யோசேப்பின் தந்தைக்குரிய அக்கறையும் வளர்ப்பும்தான். “எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது? இவர் தச்சருடைய மகனல்லவா?” (மத் 13:54-55) என்று மக்கள் வியந்து போற்றும் அளவிற்கு யோசேப்பின் வளர்ப்பு இருந்துள்ளது. மேலும், நான்கு நற்செய்தியாளர்களும் இயேசுவை யோசேப்பின் மகன் என்று அழைக்கத்தக்க விதமாக, ஒரு தந்தையின் பாசத்தையும் கடமைகளையும் செய்துள்ளார்.

சாதாரணமாக, அதிகம் செய்தித்தாள்களில் இடம்பெறாத, மேடைகளில் தோன்றாத, புகழ் வெளிச்சத்தில் மின்னாத நிழல் பணியாளர்கள் பலர் உள்ளனர். முக்கியமாக மருத்துவமனைப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், உழைத்து உருக்குலைந்து அனைவருக்கும் உணவு விளைவித்துக் கொடுக்கும் விவசாயிகள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி ஓட்டுபவர்கள், இறந்தவர்களை அடக்கம் செய்பவர்கள் போன்ற இவர்கள்தாம் சாதாரண மக்களின் வாழ்வுடன் பின்னிப் பிணைந்துள்ளனர் எனலாம். இவர்கள்தான் அதிகம் வெளிச்சத்திற்கு வராதவர்கள். நிழலின் மறைவில் பணியாற்றுபவர்கள். ஆனால், இவர்கள் பணிசெய்யாவிட்டால் வீடும் ஊரும் உலகமும் நாற்றமெடுத்துவிடும்.

இவர்கள்தாம் மக்களின் வாழ்க்கைச் சக்கரம் சுமூகமாகச் சுழல அச்சாணியாக இருக்கின்றனர். அதேபோல்தான் புனித யோசேப்பும், வெளிப்படாத மறைந்த வாழ்வில்தான் மீட்பின் வரலாற்றில் ஒப்புயர்வற்ற பங்களிப்பை வழங்கியுள்ளார்.

ஏழையாகப் பிறந்தாலும் ஏற்றமிகு வாழ்வு வாழ்ந்தவர்;

துன்பத்தில் துவண்டாலும்

தூய்மையான வாழ்வு வாழ்ந்தவர்;

கஷ்டங்களுக்கு மத்தியிலும் கண்ணியமாக வாழ்ந்தவர்.’

உழைத்து வாழவேண்டும் என்ற உழைப்பின் உன்னதத்தை உணர்த்தியவர் புனித யோசேப்பு. அதனால்தான் இவர் அகில உலகத் திரு அவையின் பாதுகாவலராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், கற்பிற்கு, கல்விக்கு, திருமணம், குடும்பங்கள், நல்ல மரணம், தொழிலாளர்கள், கர்ப்பிணிகள் பயணம் செய்வோர், புலம்பெயர்ந்தோர், அகதிகள் இவர்களுக்கெல்லாம் பாதுகாவலராக இருக்கிறார். இவர்களெல்லாம் புனித யோசேப்புவிடம் வரங்களைக் கேட்டு தவறாமல் பெற்றுக்கொண்டுள்ளனர்.

புனித யோசேப்பிடம் வரம் கேட்டு எவரும் அடையாமல் போனதில்லை என்று புனித தெரேசம்மாள் கூறியதை நினைத்து, நாமும் நமது செபங்களை, வேண்டுதல்களை, விண்ணப்பங்களை, நம் குடும்பங்களை வரம் தரும் வளனாரிடம் சமர்ப்பிப்போம்.

கேட்ட வரங்களைப் பெற்று இறை மகிமையில் திளைப்போம்.

news
ஆன்மிகம்
மரியா கடவுளின் இரக்கத்தினைப் புகழ்ந்து பாடுகின்றார்! (திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி – 35)

“மனுவுருவான இறைமகனின் தாயாக இருப்பதற்குத் தாழ்ச்சி மிகுந்த அடியவளை அழைத்த இறைவனின் பெருந்தன்மையை நினைவுகூர்ந்து ‘மரியாவின் புகழ்ச்சிப் பாடலில் (Magnificat) கன்னி மரியா எடுத்துரைக்கிறார் என்று மரியா பற்றிய தனது மறைக்கல்வி போதனையில் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்கள் ‘மரியாவின் புகழ்ச்சிப் பாடல் என்று அழைக்கப்படுகின்ற Magnificat பற்றிக் கூறுகின்றார்.

1. பழைய ஏற்பாட்டுப் பாரம்பரியத்தினால் தூண்டப்பட்டு, மரியா அவர் வழியாகக் கடவுள் செய்த அற்புதங்களைப் புகழ்ச்சிப் பாடல் பாடிக் கொண்டாடுகின்றார். இப்பாடல் கிறிஸ்து பிறப்பு அறிவிப்பிற்கான கன்னி மரியாவின் பதிலாக இருக்கின்றது: வானதூதர் தனது உரையாடலில் மரியாவை மகிழ்வதற்கு அழைக்கின்றார். ஆகவே, தனது ஆன்மாவின் புகழ்ச்சியை அவரது  மீட்பராம் கடவுளுக்கு இப்பொழுது வெளிப்படுத்துகின்றார். அவரது மகிழ்ச்சியானது வரலாற்று முக்கியத்துவமில்லாத ஒரு சாதாரண பெண்ணான அவரை நோக்கி இறைவனின் கருணைமிக்க பார்வை திரும்பியதன் சொந்த அனுபவத்திலிருந்து பெருக்கெடுக்கின்றதொன்றாகும்.

Magnificat என்ற சொல்லானது, உடன்படிக்கையின் மக்களது நம்பிக்கை, எதிர்பார்ப்பு  மற்றும் மனித ஆன்மாவின் உன்னதமான ஆசையையும் கடந்துசென்று, வானதூதர் வழியாக இறைவனின் எல்லாம் வல்ல தன்மையை வெளிப்படுத்தும் அவரது மேன்மையைக் கொண்டாடுதல் என்ற பொருள் கொண்ட கிரேக்க வார்த்தையின் இலத்தீன் மொழிபெயர்ப்பாகும். 

வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்

வல்லமை மற்றும் இரக்கமுள்ள ஆண்டவருக்கு முன், இப்பாடல் வழியாக மரியா அவரது தாழ்ச்சியின் உணர்வை வெளிப்படுத்துகின்றார்: “ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார் (லூக் 1:47-48). ‘Tapeinosis என்ற கிரேக்கச் சொல்லானது ஒருவேளை சாமுவேலின் தாயாகிய அன்னாவின் பாடலிலிருந்து எடுக்கப்பட்டிருக்கலாம். இது தனது துன்பங்களைக் கடவுளிடம் நம்பி ஒப்படைக்கின்ற ஒரு மலடியின் ‘அவமானம் (humiliation) மற்றும் ‘இழிநிலையை (misery) (ஒப்பிடுக. 1சாமு 1:11) நம்முடைய கவனத்திற்குக் கொண்டு வருகின்றது. இதற்கு ஒத்ததோர் உணர்வோடு, தனது அற்ப நிலையை உணர்ந்து அவரது ஏழ்மை நிலையை ஒரு சுதந்திரமான தீர்மானத்தின் வழியாக நாசரேத்தைச் சார்ந்த ஓர் எளிய பெண்ணைக் கண்ணோக்கி, மீட்பரின் தாயாக அழைத்த இறைவன்முன் வெளிப்படுத்துகின்றார்.

2. “இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர் (லூக் 1:48) என்ற வார்த்தைகளானது முதன் முதலாக மரியாவை ‘பேறுபெற்றவர் என்று அழைத்த எலிசபெத்தின் வாழ்த்துச் செய்தியிலிருந்து (லூக் 1:45) எழுந்ததொன்றாகும். அந்த அறிவிப்புச் செய்தியானது ஒரு தளராத உத்வேகத்தோடு எந்தவித தயக்கமுமில்லாமல் இன்னும் அதிகமாக எங்கும் எடுத்துச் செல்லப்படும் என்பதை இப்பாடல் முன்னறிவிக்கின்றது. அதேநேரத்தில், திரு அவையின் தொடக்க நூற்றாண்டுகளிலிருந்தே வழக்கத்திலிருக்கின்ற இயேசுவின் தாய்க்கான சிறப்பு வணக்கத்திற்கும் சான்றுபகர்கின்றது. மரியாவின் புகழ்ச்சிப் பாடல்தான் நாசரேத்து கன்னி மரியாவுக்கான திரு அவையின் அன்பை வெளிப்படுத்த, ஒரு தலைமுறையிடமிருந்து அடுத்த தலைமுறைக்கு வழங்கப்பட்ட பல்வேறுபட்ட பக்தி வடிவங்களின் முதல் கனியாக இருக்கின்றது.

3. “ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார் (லூக் 1:49-50).

மரியாவில் இறைவன் செய்த அந்த அரும்பெரும் செயல்கள் யாவை? பழைய ஏற்பாட்டில் இந்தச் சொல்லாடலானது எகிப்து அல்லது பாபிலோனியாவிலிருந்து இஸ்ரயேல் மக்களை விடுவித்ததைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. மரியாவின் புகழ்ச்சிப் பாடலில், வானதூதரின் கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு நிகழ்விற்குப் பிறகு நாசரேத்தில் நிகழ்ந்த மறையுண்மையான இயேசுவின் கன்னிக் கருத்தரிப்பைக் குறிக்கின்றது.

மரியாவின்  புகழ்ச்சிப் பாடல், உண்மையில் ஓர் இறையியல் பாடல். ஏனென்றால், அது மரியாவின்  தாழ்நிலையைக் கண்ணுற்ற கடவுள் கபிரியேல் தூதர் அறிவித்தவாறு எல்லாம் செய்ய வல்லவர் மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதனிடமும் நம்பிக்கை மற்றும் கனிவு கொண்ட இரக்கமுள்ள கடவுளாகவும் இருக்கிறார்.

அவர்தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்; உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பி விடுகிறார் (லூக் 1:51-53).

அறிவார்ந்த அவரின் வரலாற்றுப் பார்வையோடு, கடவுளின் புரிந்துகொள்ள இயலாத செயலின் அர்த்தத்தைக் கண்டுபிடிப்பதில் மரியா நம்மை வழிநடத்திச் செல்கின்றார்.  உலகத்தின் தீர்ப்புகளைத் தலைகீழாக மாற்றி, பணக்காரர் மற்றும் அதிகாரம் படைத்தவர்களின் விருப்பத்திற்கு மாறாக, அவர் ஏழை மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு உதவ வருகின்றார். மேலும், அவரிடம் தங்களது வாழ்வை அர்ப்பணித்தவர்களுக்கு மிதமிஞ்சிய வகையில் நலன்களால் அவர் நிரப்புகிறார் (ஒப்பிடுக. மீட்பரின் தாய், எண். 37).

இத்தகைய வார்த்தைகள் மரியாவைத் திடமான மற்றும் உயர்வானதொரு மாதிரியாகக் காட்டுகின்றன. மேலும், கடவுளின் கருணையை ஈர்ப்பது தாழ்ச்சிமிகுந்த இதயமே  என்பதையும் நாம் புரிந்துகொள்வதற்கு உதவுகின்றன.

கடவுள் அவரது வாக்குறுதிகளை அபரிமிதமான தாராள குணத்தோடு மரியாவில் நிறைவேற்றுகின்றார்!

5. இறுதியாக, மரியாவின் புகழ்ச்சிப் பாடலானது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்குக் கடவுளது  வாக்குறுதிகள், அவரது நம்பிக்கைத்தன்மையின் நிறைவை உயர்த்திப்பிடிக்கின்றது: “மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழிமரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார் (லூக் 1:54-55).

தெய்வீகக் கொடைகளால் நிரப்பப்பட்ட மரியா, தன் பார்வையைத் தனது வாழ்வில் நிகழ்ந்த சொந்த நிகழ்வுகளோடு நிறுத்திக்கொள்ளவில்லை; மாறாக, இந்தக் கொடைகள் எவ்வாறு கடவுளின் கருணையை அவரது மக்கள் அனைவரிடமும் காட்டுகின்றன என்பதையும் உணர்ந்தாள். அவளில், கடவுள் தனது வாக்குறுதிகளை நம்பகத்தன்மை மற்றும் தாராள மனப்பான்மையுடன் நிறைவேற்றுகிறார்.

பழைய ஏற்பாட்டாலும், சீயோனின் மகளின் ஆன்மிகத்தாலும் ஈர்க்கப்பட்டு, மரியாவின்  புகழ்ச்சிப் பாடல் அதன் அடிப்படையிலான இறைவாக்கினர் நூல்களை (prophetic texts) மிஞ்சி, இஸ்ரயேலின் மீட்பர் பற்றிய நம்பிக்கைகளைவிட (messeianic hopes) அதிகமாக இறைத் தலையீட்டின் தொடக்கத்தை ‘அருளால் நிறைந்தவளாகிய அவரில் வெளிப்படுத்துகிறது; இது வார்த்தை மனுவுருவாதலின் புனிதமிக்க மறைபொருள் ஆகும்.

மூலம்: John Paul II, Mary sings the praises of God’s mercy, in «L’Osservatore Romano», Weekly Edition in English, 13 November 1996, p.11.