தவக்காலம் மனிதர்களுக்குக் கடவுளால் வழங்கப்பட்ட பொன்னான, பொக்கிசமான நாள்கள் என்று கூறினால் அது மிகையாகாது என எண்ணுகிறேன். ஏனென்றால், தவக்காலம் என்பது அருளின் காலம்; ஆசிர்வாதத்தின் காலம்; இரக்கத்தின் காலம்; ஈகையின் காலம்; மன்னிப்பின் காலம்; மனமாற்றத்தின் காலம்; பரிவின் காலம்.
‘தவக்காலம்’ கரடுமுரடான வாழ்வைச் செதுக்கி, நல்ல வடிவத்தை உருவாக்கும்
உன்னதமான காலம். கல்லான இதயத்தைக் கனிவுள்ள இதயமாக மாற்றும் சிறந்த காலம். உடைகளைக்
கிழித்துக் கொள்ளாமல் உள்ளத்தைக் கிழித்துக்கொள்ளும் அருமையான காலம்.
தவக்காலத்தின்
மிக முக்கிய நோக்கங்களாக மூன்றினைக் குறிப்பிடலாம். அவை செபம், தவம், தர்மம் ஆகியவை
ஆகும். செபத்தால் மனிதன் கடவுளோடு நெருக்கமான உறவை ஏற்படுத்தித் தன்னைப் புதுப்பித்துக்
கொள்கிறான். தவத்தால் தன்னைப் பற்றி ஆழமாகப் புரிந்து, தெரிந்து தனது பலவீனத்தை வெல்வதற்கு
முயற்சிகளை மேற்கொண்டு தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறான். தர்மத்தால் இயலாதவர்கள்,
இல்லாதவர்கள், முடியாதவர்கள், ஏழைகள் யாவருக்கும் ஒறுத்தல் வழியாக, உண்ணாநோன்பு வழியாக
உணவை, உடைமையை, பொருளைப் பகிர்ந்து கொடுத்து,
பிறரன்பையும் இறையன்பையும் அனுபவிக்கும் அருமையான காலம். தவக்காலம் மனிதனை மனிதனாய்
மாற்றும் சிறந்த மனிதநேய காலம்.
தவக்காலம்
மனமாற்றத்தின் காலம். மனம் மாறுவது என்பது மேலோட்டமான மாற்றம் அல்ல; வேரோட்டமான மாற்றம்.
மனம் மாறி ஒரு புதிய மனிதனாக, சிறந்த மனிதனாக உருவாகுவதே தவக்காலத்தில் கொடுக்கப்படும்
சிறந்த அழைப்பு. பழைய பாவப் பழக்கவழக்கங்களிலிருந்து புதிய, புனிதமான நிலைக்கு வருவதுதான்
மனமாற்றம். எனது பாவப் பழக்கவழக்கங்கள், பலவீனங்கள், குற்றங்குறைகளைச் செபம், தவம்
வழியாக உணர்ந்து, அதிலிருந்து விடுபட்டு, விடுதலை பெற்ற மனிதனாக வாழ்வது. மந்தமான மனநிலையிலிருந்து,
ஊதாரி மகனைப் போல அறிவுத் தெளிவு பெற்று இறைவனிடம் திரும்பி வருவதும், திருந்தி வாழ்வதும்
தவக்காலத்தின் மிக முக்கியமான பண்பாகும்.
தவக்காலம்
மன்னிப்பின் காலம். நாம் எல்லாரும் பலவீனமானவர்கள், பாவம் செய்யக்கூடியவர்கள், தவறக்கூடியவர்கள்,
தவறு செய்யக்கூடியவர்கள். எனவே, பிறரைக் காயப்படுத்துவது மனித குணமாக மாறிவிட்டது.
இதனால் இறைவனோடும்-இயற்கையோடும் தன்னோடும்-பிறரோடும் உள்ள உறவை முறித்து வாழ்கிறோம்.
எனவே, இக்காலம் ஒருவரையொருவர் சந்தித்து ஒப்புரவாகி, மன்னித்து உறவைப் புதுப்பிக்கும்
காலம். உறவுகள் ஊனமாகிவிட்டால் வாழ்வும் ஊனமாகிவிடும். எனவே, மன்னித்து உறவுகளைப் புதுப்பித்து,
புதியதொரு வாழ்க்கை வாழ்வதே தவக்காலத்தின் மிகச்சிறப்பு.
தவக்காலம்
சடங்கு, சம்பிரதாயங்கள், கொண்டாட்டங்கள் வழிபாடுகளோடு முடிந்து விடக்கூடாது; மாறாக,
தவக்காலத்தின் நோக்கங்களும், கடவுளின் ஏக்கங்களும் நிறைவேறுவதாக அமையவேண்டும். இறைச்சியை,
முட்டையைத் தவிர்ப்பதால் புனிதத்தை எட்டிப்பிடித்துவிட முடியாது. எல்லாரிடமும் நல்லுறவை
ஏற்படுத்தி, அன்பு செய்வதன் வழியாகத் தவக்காலத்தின் பலனை அனுபவிக்கலாம்.
எல்லாவற்றிற்கும்
மேலாக ஆடையில்லாதவர்களுக்கு ஆடை கொடுப்பதும், பசியாய் இருப்பவர்களுக்கு உணவு கொடுப்பதும்,
தாகமாய் இருப்பவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பதும்,
இருக்க இடமில்லாதவர்களுக்குத் தங்க இடம் கொடுப்பதும், சிறையில் இருப்பவர்களைக்
காணச் செல்வதும், அந்நியரை வரவேற்பதும், தவக்காலத்தில் சேமிக்கும் பணத்தை ஏழைகளுக்குக்
கொடுத்து நிறைவு காண்பதிலும்தான் தவக்காலம் நிறைவடைகிறது. எனவே, தவக்காலத்தில் தவமிருப்போம்;
இறைவேண்டலில் நிலைத்திருப்போம்; ஏழைகளுக்குக் கொடுப்பதில் மகிழ்வடைவோம்; உயிர்ப்புப்
பெருவிழாவை உயிராற்றல்மிக்க உணர்வோடு கொண்டாடுவோம்.
• திரு அவையின் கடந்தகால வரலாற்றிலிருந்து இன்றுவரை ஏழைகள் மீதான அன்பும் அக்கறையும் ஒரு முகாமையான தொடர் கதையாகவே இருந்து வந்திருக்கிறது. இது நிறுவனங்களின் வெறும் மனிதாபிமான செயல்பாடுகளிலிருந்து வேறுபட்டு நிற்கிறது.
• மீண்டும் ‘நல்ல சமாரியர்’
உவமை - இந்த உவமையில் ‘யாரோடு உங்களை இணைத்துப் பார்க்கிறீர்கள்?’ என்ற வினாவைத் திருத்தந்தை எழுப்புகிறார். இன்றும் இந்த உவமை அதிகம் அர்த்தமுடையதாகவே இருக்கிறது.
• நமது பல முன்னேற்றம், வளர்ச்சியின்
மத்தியில் ஏழைகளைப் பொறுத்தமட்டில் நாம் படிப்பற்ற அறிவிலிகளாகவே (illiterate) இருக்கிறோம்.
• ஏழைகளைச் சமுதாயப் பிரச்சினைகளாக, நமக்குத் தொந்தரவு தருகிறவர்களாகப் பார்க்கிறோமா? அப்படியானால் நம் சமுதாயம் ஒரு சீக்குப் பிடித்த சமுதாயம் அல்லது கிறித்தவ நம்பிக்கையில், ஏழைகளை என்னைப் போல ஒருவராக, கடவுளின் சாயலாக, மனித மாண்பு கொண்டவர்களாக, இயேசுவால் மீட்கப்பட்டவர்களாக, கடவுளால் தொடர்ந்து அன்பு செய்யப்படுகிறவர்களாகப் பார்க்கிறோமா? ‘நீரும் போய் அவ்வாறே செய்யும்’
என்பது (லூக் 10:37), இயேசுவிடமிருந்து உரிமையுடன் எழும் அன்புக் கட்டளை என்பதைத் தினமும் நாம் நினைவுகூரவேண்டும்.
இன்றைய திரு
அவையின்
தவிர்க்க
முடியாத
சவால்
• ஏழைகளின் இன்றைய நிலைக்கு அவர்களே காரணம் என்பதைத் திருத்தந்தை புனித பெரிய கிரகோரியார் துணிச்சலோடு கண்டனம் செய்கிறார்.
•
நற்செய்தியின்
கடமைகள் பற்றி ஏழைகள் நமக்குக் கற்றுத்தர அதிகம் இருக்கிறது.
• செல்வச் செழிப்பில் வாழ்ந்த செல்வந்தன், ஏழை இலாசருக்கு நீதி வழங்கவில்லை, அவனுக்குப் பரிவு காட்டவில்லை. எனவே, அவன் இறந்த பின்பு பாதாளத்தில் புதைக்கப்பட்டான் (லூக் 16: 19-31).
• கிறித்தவர்களாகிய நமக்கு ஏழைகள் ஒரு சமுதாய வகை (Sociological Category) அல்ல;
மாறாக, கிறிஸ்துவின் சதை (Body of Christ).
• கிறித்தவச் சமயத்தைத் தனிமனிதருக்கானது என்ற சுருக்கிய தளத்தோடு முடக்கிவிடக்கூடாது. குடிமைச் சமூகத்தில் எழும் மக்களுடைய பிரச்சினைகளில் சமயம் ஈடுபட வேண்டும். ஏழைகளுடைய வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பது அரசின் கடமை அல்லது சந்தைப் பொருளாதாரம் கவனித்துக்கொள்ளும் என ஒதுங்கிவிடக் கூடாது.
இன்று தர்மம்
செய்வது...
• எனது ஊக்க உரையை நிறைவு செய்வதற்கு முன், தர்மம் செய்வது குறித்து ஒன்று சொல்ல விழைகிறேன். தர்மம் உலக ஏழ்மையைத் தீர்க்காது; ஆயினும், தர்மம் செய்வது தற்போது ஏழைகளோடு தொடர்புகொள்ள, அவர்களைச் சந்திக்க, அவர்கள் நிலைக்கு இறங்கிவர ஒரு வாய்ப்பைத் தரும்.
• ஏழைகளுக்கு முன்னால் சற்று நேரம் நிற்க, அவர்களது கண்களைப் பார்க்க, அவர்களைத் தொட, நம்மை அவர்களோடு பகிர்ந்துகொள்ள வாய்ப்புத் தருவது தர்மம். தர்மம் கடினமான இதயத்தை மென்மையாக்கும்.
• “தர்மம் இறைவேண்டலின்
இறக்கை. உனது இறைவேண்டல் இறக்கையோடு இணைத்துச் செய்யப்படவில்லையெனில், அது பறப்பது அரிதாகிவிடும்” என்கிறார்
ஜான் கிறிஸ்சோஸ்தம்.
• “கருணை நிறைந்தவர்
தம் உணவை ஏழைகளோடு பகிர்ந்து உண்பர். அவரே ஆசி பெற்றவர்”
(நீமொ 22:9).
• கிறித்தவர்கள் தர்மம் செய்வதை நிறுத்திவிடக் கூடாது. ஒன்றும் செய்யாமல் இருப்பதைவிட தர்மம் செய்வது சிறந்தது.
• ஏழைகளுக்கு நீங்கள் செய்யும் மிகச் சிறிய உதவிகளால் ‘நான் உன் மீது அன்பு செலுத்தி வருகிறேன்’
(திவெ 3:9) என்று இயேசு சொல்வதை ஏழைகள் உணர்வார்கள்.
சில அல்லது பல கிறித்தவர்களுக்கு இந்தத் தலைப்பு புதிராகவும் அதிர்ச்சியாகவும் தோன்றலாம். ஆனால், முதல் ஏற்பாட்டின் பக்கங்களை நாம் புரட்டினோம் என்றால், யாவே கடவுளின் அரசியலாக்க ஈடுபாடு தெளிவாக வெளிப்படும்.
அரசியலாக்க ஈடுபாடு
உள்ளவரா
யாவே
கடவுள்?
யாவே
வரலாற்றின் கடவுள்! அவர் வரலாற்றில் செயல்பட்டார், வரலாற்றை வழிநடத்தினார், வரலாற்றை உருமாற்றினார். மக்களை ஓர் உடன்படிக்கைச் சமூகமாகக் கட்டியெழுப்புவதற்கு ஆதரவாக வரலாற்றை வழிநடத்தினார். உடன்படிக்கை என்பது ஓர் ஒப்பந்தமோ, உடன்பாடோ அல்ல; ஒப்பந்தம்-உடன்பாட்டின் நோக்கம் நிறைவேறியவுடன் அது நிறுத்தப்படலாம். மாறாக, உடன்படிக்கை என்பது ஒப்பந்தம்-உடன்பாட்டில் இருந்து வேறுபட்டது. அடிப்படையில் மக்களுடன் கடவுள் கொண்டுள்ள பிணைப்பு மற்றும் நீண்டகால உறவாகப் பரிணமிப்பது உடன்படிக்கையாகும். கடவுள் இந்த உடன்படிக்கை உறவை வரலாற்று ரீதியாக இஸ்ரயேலர்கள் மூலம் ஏற்படுத்தினார்.
உடன்படிக்கைச்
சமூகம் என்பது ஒரு சமத்துவச் சமுதாயமாகும். அங்கு அனைவரும் மனித மாண்போடு வாழ்வர். மனித மாண்பு என்பது
ஒவ்வொரு மனிதருக்கும் உள்ளார்ந்த விதமாகக் கொடுக்கப்பட்ட கொடையாகும். ஏனென்றால், மனிதர் கடவுளின் சாயலிலும் உருவிலும் படைக்கப்பட்டவர்கள் (தொநூ 1:27). கடவுளின் சாயலும் உருவும்தான் ஒவ்வொரு மனிதருக்கும் கொடுக்கப்பட்ட மாண்பாகும்.
மாண்பு
என்பது ஒருவருடைய அல்லது ஒரு குழுவின் வாழ்க்கையைப் பகுத்தறிந்து, முடிவெடுக்கும் மற்றும் செயல்படுத்தும் ஆற்றலில் உறுதியாக வெளிப்படுகிறது. உடன்படிக்கை உறவுச் சமூகத்தில் பிணைக்கப்பட்டு, மாண்புநிறை மனிதர்களாக வாழ்வதற்கு, மக்களுக்குச் சக்தியளிக்கும் வரலாற்று நிகழ்வுகளில் கடவுள் பங்கேற்று, மக்களை ஆற்றல்படுத்துவதுதான் கடவுளின் அரசியலாக்க ஈடுபாடாகும்.
வரலாற்றை மாற்றியமைக்கும்
கடவுள்
அரசியலாக்க
ஈடுபாடு என்பது தனக்கும்-மற்றவர்களுக்கும் மாண்புநிறை வாழ்வை அளிக்கும் ஆற்றலாகும். தமது மீட்புத் திட்டத்தை இஸ்ரயேலர் மூலம் உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் வெளிப்படுத்தச் செயல்பட்டவர் யாவே. ஒரு குறிப்பிட்ட மக்களைத் தேர்ந்தெடுப்பதில் தீவிரமாக ஈடுபட்டவர் நமது வரலாற்றின் கடவுள் யாவே ஆவார். பல நாடுகள், இனங்களின்
மூதாதையராகிட ஆபிரகாம் தேர்ந்தெடுக்கப்பட்டது (தொநூ 17:5) மக்களைச் சக்திப்படுத்தும், கடவுளின் அரசியலாக்க நடவடிக்கை ஆகும். ‘ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபின் கடவுள்’ என்ற சொற்றொடர் மீண்டும் மீண்டும் வருவது (1குறி 29:18; 2குறி 30:6; மத் 22:32; மாற் 12:26) கடவுள் இஸ்ரயேலை விரும்பித் தேர்ந்தெடுத்ததைக் குறிக்கிறது.
‘நிலமில்லாதவர் முகமில்லாதவரே’ என்பதற்கேற்ப,
நிலம் ஒருவரது மாண்பின் அடையாளமாக உள்ளது. கடவுள் ஒரு மக்களினத்தைத் தேர்ந்தெடுத்து, அவர்களைச் சுதந்திரம், சமத்துவம், நீதி மற்றும் மாண்பு கொண்ட மக்களாக மாற்றிட நிலத்தை அவர்களுக்கு வழங்குவது, மக்களின் மாண்புநிறை வாழ்விற்குச் சக்தி அளிக்கும் அரசியலாக்கச் செயல்பாடாகும். வாழ்ந்திட வாழ்வாதாரம், கண்டிட நிலம் என்பது ஒருவரின் அடிப்படை உரிமையாகும்.
நிலமற்றவராக,
நிலம் பறிக்கப்பட்டவராக ஒருவரோ, ஒரு குழுமமோ இருக்கும்போது அவர்களது தான்மையும் மாண்பும் பறிக்கப்படுகின்றன. உரிமை பறிக்கப்பட்ட மக்களை அடிப்படை உரிமையான நிலம் பெறச்செய்து, சுதந்திர மக்களாக்கிடும் கடவுளின் வரலாற்று ஈடுபாடு ஓர் அரசியலாக்கச் செயல்பாடாகும். மூதாதையரான ஆபிரகாம், ஈசாக், யாக்கோபு போன்றோருக்கு நிலம் வழங்கி, மாண்பு நிறைந்த தலைமுறையாக அவர்களை மாற்றியது கடவுளின் அரசியலாக்கச் செயல்பாடே!
ஆற்றல்படுத்தும்
விடுதலைக்கான
அரசியலாக்கச்
செயல்பாடு
தங்களது
மாண்பு, தான்மையை இழந்து அடிமைகளாக எபிரேயர்கள் எகிப்தில் தவித்துக்கொண்டிருந்தபோது, யாவே அவர்களின் வரலாற்றில் பங்கு பெற்று, மோசே மூலம் அவர்களைச் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் கொண்ட நாட்டிற்கு அழைத்து வந்தார் (விப 3:6-17). கடவுளின் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாக யாவே அவர்களைக் கானான் நாட்டில் குடியமர்த்தினார். எகிப்தில் அடிமைப்படுத்தப்பட்ட மக்களுக்குக் கானான் நாட்டில் நிலம் தந்து அவர்களைச் ஆற்றல்படுத்தப்பட்டவர்களாக மாற்றிய கடவுளின் ஈடுபாடு ஓர் அரசியலாக்கச் செயல்பாடே!
யாவேயின் உடன்படிக்கைச்
சமூகம்
தனிநபர்களுடன்
நோவா (தொநூ 6:18), ஆபிரகாம் (15:18), ஈசாக் (17:21), யாக்கோபு (28,35) போன்றவரோடு கடவுள் செய்த உடன்படிக்கையை அறிவோம். ஆனால், இஸ்ரயேலர் என்ற மக்களோடு ஒரு குழுமமாக யாவே உடன்படிக்கை செய்தார் (விப 19-20). பிறகு அவர்களை ஒரு மாறுபட்ட (Contrast Community) மற்றும்
எதிர் பண்பாட்டுச் சமுதாயமாக (Counter-Cultural Community) வாழப்
பணித்தார்.
மோசே
மூலம் கொடுக்கப்பட்ட மனிதநேயப்படுத்தும் வழிமுறைகள், நெறிமுறைகள், சட்டங்கள், கோட்பாடுகள் வழியாக அவர்களை வழிநடத்தினார் (இச 6-30). இஸ்ரயேலரை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, அவர்களைக் கானானில் எதி-கலாச்சார-தனித்துவமான உடன்படிக்கைச் சமூகமாக மாற்றியது கடவுளின் அரசியலாக்க ஈடுபாட்டில் எழுந்த ஆற்றல்படுத்தும் செயல்பாடாகும்.
மீறப்பட்ட உடன்படிக்கையும்
ஆற்றல்
இழந்த
மக்களும்
இஸ்ரயேலர்கள்
பழங்குடிக் கூட்டமைப்பு ஆட்சியிலிருந்து (Tribal Confederation) விலகி, முடியாட்சி
முறைக்கு மாற விரும்பியபோது, அரசர்கள் தங்கள் அரசராகிய யாவே கடவுளின் சார்பாக ஆட்சி செய்யப் பணிக்கப்பட்டனர். மன்னராட்சி முறை சீரழிந்து, அநீதி, சுரண்டல், வறுமை மற்றும் சமத்துவமின்மையை உருவாக்கியபோது, அவர்களை மீண்டும் உடன்படிக்கைச் சமூகத்திற்குக் கொண்டுவர கடவுள் இறைவாக்கினர்களை அனுப்பிச் செயல்பட்டார்.
அதிகாரம் அளித்திடும்
கடவுளின்
அரசியலாக்க
நடவடிக்கை
பாலஸ்தீனத்தில்
இஸ்ரயேலர்கள் வறியவர்களாகவும் சுரண்டப்பட்டவர்களாகவும் அதிகாரம் இழந்தவர்களாகவும் மாற்றப்பட்டபோது, ஏழைகள் மற்றும் ஓரங்கட்டப்பட்டவர்களின் சார்பாகவும், ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராகவும் கடவுளின் குரல் சிங்கம் போல ஓங்கி ஒலித்தது. இறைவாக்கினர்கள் மூலம், கடவுள் தமது மக்களுக்கு அதிகாரம் அளித்து, அவர்களைச் சமத்துவம், நீதி, மாண்பு மற்றும் சகோதரத்துவத்துடன் வாழ வைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார்.
அரசியலாக்கப்
பணிக்கான
கடவுளின்
அழைப்பு
மக்களுக்குச்
சக்தி அளிப்பதற்காக நமது வரலாற்றில் அரசியலாக்கப் பணியில் ஈடுபட்ட கடவுளை
நாம் இனங்கண்டு கொள்ளவேண்டும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் உறுதியான வரலாற்று மற்றும் அரசியல் நிகழ்வுகளில் தமது துடிப்பான ஈடுபாட்டின் மூலம் கடவுள் மனிதரின் மீட்பைச் செயல்படுத்தினார்.
அதே
கடவுள், கிறித்தவர்களைப் புதிய உடன்படிக்கைச் சமூகமாகவும், இந்தியாவின் உரிமையுள்ள குடிமக்களாகவும் உறுதிப்படுத்தவும்
விரும்புகிறார். இந்தியாவின் உரிமையுள்ள குடிமக்கள் என்ற நமது கிறித்தவ அடையாளத்தையும் மனித மாண்பையும் சிதைத்திடும் அடக்குமுறை மற்றும் சமூக விரோதச் சூழலில் நாம் அரசியலாக்க ஈடுபாடு, அக்கறை இல்லாமல் இனியும் ஒதுங்கி இருக்க முடியாது. யாவே கடவுளின் அரசியலாக்கப் பணியைச் சரியாகத் திருவிவிலிய ஒளியில் புரிந்துகொண்டு, இன்றைய சூழலில் சரியான அரசியலாக்கப் பணியில் கிறித்தவர்கள் முழுமூச்சாகக் களமிறங்கிட வேண்டும். காலம் தாழ்த்திக்கொண்டே சென்றால் இந்தியாவில் கிறித்தவ இருப்பிற்கே ஆபத்துகளைச் சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்படுவோம்.
கிறித்தவராகிய
நம்மை மட்டுமல்ல, பிறரையும் ஆற்றல்படுத்தி மாண்புநிறை மனிதராக, இந்தியக் குடிமக்களாக வாழ்ந்திடச் செய்யும் அரசியலாக்கப் பணியில் நாம் அணிவகுக்கவேண்டும். யாவே கடவுளின் அரசியலாக்க ஈடுபாடு நம்மை வழிநடத்தட்டும், ஆற்றல்படுத்தட்டும், மாண்புநிறை கிறித்தவராக இந்தியாவில் தொடர்ந்து வாழ்ந்திடும் சாத்தியங்களை உருவாக்கட்டும்.
தாக்கம் (Impact) என்பது ஒரு செயலால் ஏற்படும் விளைவைக் குறிக்கும். அதில் நேர்மறையான தாக்கம் என்பது ஒருவரின் செயலின் மூலம் சமூகத்திற்கோ, தனிநபரின் வாழ்வின் நலனுக்கோ, சுற்றுச் சூழலுக்கோ நல்ல ஆக்கப்பூர்வமான விளைவை ஏற்படுத்துவதாகும்.
அதேபோல்,
கடவுள் நம் ஒவ்வொருவரையும் ஆவிக்குரிய வாழ்வில் தாக்கம் ஏற்படுத்த வேண்டுமென்று விரும்புகிறார். இதற்காகவே வாழ்வின் நிகழ்வுகளில் நம்முடைய நம்பிக்கை, நடத்தை, தூய்மையான வாழ்வு முக்கியம்.
கிறித்தவ
வாழ்வின் தாக்கம் குடும்பத்திலிருந்து தொடங்கப்படவேண்டும். இதற்கு ஆதாரமாக திமொத்தேயுவின் வாழ்வில் காணலாம். “வெளிவேடமற்ற உன் நம்பிக்கையை நினைத்துப் பார்க்கிறேன். இத்தகைய நம்பிக்கை முதலில் உன் பாட்டி லோயி மற்றும் உன் தாய் யூனிக்கி ஆகியோரிடம் விளங்கியது. இப்போது உன்னிடமும் உள்ளதென உறுதியாக நம்புகிறேன்” (2திமொ
1:5). திமொத்தேயுவின்
பாட்டி மற்றும் தாய் கடவுள்மீது உண்மையான நம்பிக்கையுடன் வாழ்ந்தனர். அவர்கள் இயேசுவின் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்தியதின் மூலம், போலித்தனமற்ற பக்தி, கடவுளைப் பற்றிய ஆழமான புரிதல் மற்றும் தூய உள்ளம் கொண்ட வாழ்க்கை ஆகியவற்றை முன்னுதாரணமாகக் காட்டினர். மேலும், அவர்கள் திருவிவிலியத்தைத் தியானித்து, அதை குழந்தைப் பருவத்திலிருந்தே திமொத்தேயுவுக்குத் தொடர்ந்து கற்பித்தனர். இதன்மூலம் அவரது குணம் வடிவமைக்கப்பட்டு, உண்மையான நம்பிக்கை உறுதியாக நிலைநாட்டப்பட்டது. இதே நம்பிக்கைதான் அவரைத் திருத்தூதர் பவுலுடன் நம்பிக்கையுள்ள உடன் பணியாளராக வளரச் செய்தது.
இவ்வாறு
திமொத்தேயுவின் வாழ்க்கையில் அவரது பாட்டி மற்றும் தாயின் நம்பிக்கை ஓர் ஆழமான மற்றும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது. அதேபோல், இன்று ஒவ்வொரு குடும்பத்திலும் பெற்றோர் மற்றும் பெரியவர் தமது வாழ்வின் மூலம் கிறித்தவத் தாக்கம் குழந்தைகளுக்குள் ஏற்படவேண்டும். இவ்வாறு பெற்றோர் தங்கள் குழந்தைகளின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துபவர்களாக மாறும்பொழுது, அந்தக் குழந்தைகளும் சமூகத்தில் தானியேல் மற்றும் பவுலைப் போன்று ஒவ்வொருவரின் மத்தியிலும் கிறித்தவத் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.
ஆகவே,
அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் நபர்கள் அதிக ஊக்கத்தை அளிக்கிறார்கள் என்பதை நினைவில்கொண்டு, நம் சொந்த ஆன்மிகப் பயணத்தில் நாம் எங்கு இருக்கிறோம் என்பதைக் கவனிக்கவேண்டிய நேரம் இதுதான்.
நாம்
வாழும் இவ்வுலகில் கிறிஸ்துவின் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் நம் வாழ்வானது உவர்ப்புள்ள உப்பைப்போல, கிறிஸ்துவின் சுவையை வெளிக்கொணரும்படி இருக்கவேண்டும். அதற்கான எளிதான வழிகளில் ஒன்று, கடவுளை நம் வாழ்வின் எல்லாப் பகுதிகளிலும் முதன்மைப்படுத்துவது. நம் எண்ணங்கள், நோக்கங்கள், ஆசைகள், அதிகாரங்கள், செல்வங்கள், செயல்கள், திட்டங்கள், உறவுகள், உரையாடல்கள், வேலை மற்றும் அட்டவணை ஆகியவற்றின் முழு ஆதிக்கத்தையும் அவருக்கே கொடுக்கவேண்டும்.
அன்பு
நிறைந்த அன்றாட வாழ்க்கையின் மையத்தில் கடவுளை வைத்திருப்பதன் மூலம் நாம் உரையாடுகின்ற, செயல்படுகின்ற ஒவ்வொன்றிலும் தூய்மை நிறைந்திருக்கும். இவை அனைத்திற்கும் கடவுளே ஆதாரமாக இருக்கும்போது, நம்மைச் சுற்றியுள்ள உலகம் கடவுளின் அரசிற்காக நம் வாழ்வின் வழியாக ஒரு தாக்கத்தை அனுபவிக்கும். திருமுழுக்கு யோவான் போலவே, நாமும் எந்தவோர் இடத்திலும் இயேசுவைச் சுட்டிக்காட்டுவோம். இது என்னைப் பற்றியது அல்ல; இது அவரைப் பற்றியது என்று மனதாரச் சொல்வோம்.
நம்
வாழ்வில் எந்தவொரு தாக்கம் ஏற்பட்டாலும் அது கிறிஸ்துவை வெளிப்படுத்துவதாக இருக்கட்டும். அந்தத் தாக்கம் மிகவும் எளிமையானதாக இருந்தாலும் பரவாயில்லை; ஆனால், கிறிஸ்துவை முன்னிறுத்துவதாக இருக்கவேண்டும். அதற்கான சிறந்த உதாரணம் தபித்தா. யோப்பா நகரில் வாழ்ந்த தபித்தா மிகவும் எளிமையான பெண் சீடர். நன்மை செய்வதிலும், இரக்கச்செயல்கள் புரிவதிலும் அவர் முழுமையாக ஈடுபட்டிருந்தார். ஆனால், இவரது எளிமையான வாழ்க்கை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இவர் இறந்தபோது இவரின் நற்செயல்களின் சாட்சிகள் பேதுருவை அழைத்து வரச்செய்து, இறந்த தபித்தாவை உயிர்த்தெழச் செய்தனர். அந்த நிகழ்வு யோப்பா நகர மக்களில் பலரையும் கிறிஸ்துவுக்குள் நம்பிக்கை கொள்ளச் செய்தது (திப 9:36-42).
இவ்வாறுதான்
நம்மில் உள்ள கிறித்தவ ஒளியானது மனிதர்முன் ஒளிவீச வேண்டும். அப்பொழுது அவர்கள் நம் நற்செயல்களைக் கண்டு நம் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள் (மத் 5:16). அவ்வாறான வாழ்க்கை வாழ்பவர்களுக்கு மத்தேயு 28: 19-இல் கூறப்பட்டுள்ளபடி, “நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்” என்ற
இயேசுவின் கட்டளை இயல்பாகவே நிறைவேறும்.
இவ்வாறு,
ஒரு சீடனின் கிறித்தவச் சாட்சிய வாழ்க்கை மற்றொருவருக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும்போது அது பெருகி இரட்டிப்பாகும். இரண்டு நான்காக, நான்கு எட்டாகும்போது, சீடர்களின் எண்ணிக்கை தொடர்ந்து பெருகிக்கொண்டே போகும். நம் கிறித்தவத் தாக்கத்தின் மூலம் இவ்வுலகில் எத்தனை ஆன்மாக்கள் கடவுளின் அரசிற்குள் வரப்போகின்றன என்பதையும், அதன் விளைவாக, கடவுளுடைய அரசிற்குள் படையெடுத்து வரும் கூட்டத்தால் விண்ணரசு எவ்வளவோ மகிமையானதாக மாறும்! அதை நினைத்துப் பார்க்கும்போது, நம் சாட்சிய வாழ்க்கை மூலம் கடவுளின் அருளின் வழியாக நாமும் பங்கு பெற்றிருப்பதில் ஆன்மிக மகிழ்ச்சி கொள்வோம். அப்பொழுது இயேசு கிறிஸ்து நம்மைப் பார்த்து, “நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே, பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்குகொள்ளும்” (மத்
25:21) என்று கூறி, நம்மை மேன்மையுள்ள இடத்திற்கு உயர்த்துவார். உலகிற்குக் கிறிஸ்துவின் தாக்கத்தை உருவாக்குவோம். கிறிஸ்துவிற்கு ஆன்மாவை அறுவடை செய்வோம்!
‘இறைவனின் ஊழியர்’ என்று தன்னையே அறிவிப்பதன் வழியாக, புனித கன்னி மரியா இறைவனின் விருப்பத்திற்கான தனது முழு கீழ்ப்படிதலைக் காட்டுகிறார். மேலும், அவரது எல்லாத் தனிப்பட்ட பண்புகளுடனும் அதைத் தனதாக்கிக் கொள்கின்றார்.
1.
கிறிஸ்து பிறப்பு அறிவிப்பின் பொழுது கூறப்பட்ட “நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே
எனக்கு நிகழட்டும்” (லூக் 1:38) என்ற கன்னி மரியாவின்
வார்த்தைகள், யூத மத பக்தியின் பண்பைக் குறிக்கின்றது. பழைய உடன்படிக்கையின் தொடக்கத்தில்,
இறைவனின் அழைப்பிற்குப் பதிலளிக்கும் விதமாக மோயிசன் தன்னைத் தானே ஊழியனாக அறிவித்துக்கொள்கின்றார்
(ஒப்பிடுக. விப 4:10-14,31). புதிய உடன்படிக்கையின் வருகையுடன் மரியாவும் இறைவனுடைய
ஊழியராக இருப்பதற்கு முழுமனச் சுதந்திரத்தோடு அடி பணிந்து, இறை விருப்பத்திற்குத் தன்னையே
கையளிக்கின்றார்.
பழைய
ஏற்பாட்டில் ‘ஆண்டவரின் அடிமை’ என்கிற தகுதியானது, தேர்ந்தெடுக்கப்பட்ட
மக்களுக்காகப் பணிசெய்ய அழைக்கப்பட்ட அனைவரையும் இணைக்கின்ற ஒரு சொல்லாக இருக்கின்றது.
ஆபிரகாம் (தொநூ 26:24), ஈசாக்கு (தொநூ 24:14), யாக்கோபு (விப 32:13; எசே 37:25), யோசுவா
(யோசு 24:29), தாவீது (2சாமு 7:8) மற்றும் சிலர். இறைவனின் உண்மையுள்ள பணியில் மக்களை
உருவாக்குகின்ற வேலையைச் செய்கின்ற இறைவாக்கினர்களும் குருக்களும் கூட ஊழியர்களே ஆவர்.
பலருடைய பாவங்களுக்கான மீட்பின் நம்பிக்கையில் கடவுளுடைய நம்பகத்தன்மையின் மாதிரியான
‘துன்புறும் ஊழியரின்’ பண்பை எசாயா புத்தகமானது உயர்த்திப்
பேசுகின்றது (ஒப்பிடுக. எசா 42:53). யூதர்களின்
மீட்புக்காகப் பரிந்து பேசுவதற்கு முன், “உம்முடைய ஊழியர்” (எஸ் 4:17) என்று தன்னையே பலமுறை அழைத்து கடவுளிடம் வேண்டுதல்
செய்த அரசி எஸ்தர் போன்ற சில பெண்களும் நம்பிக்கையின் மாதிரிகளாக இருக்கின்றனர்.
‘அப்படியே
ஆகட்டும்’ என்கிற
மரியாவின் வார்த்தைகள் அவரது முழுமையான கீழ்ப்படிதலை வெளிப்படுத்துகிறது
2.
அருளால் நிறைந்த மரியா, ‘ஆண்டவருடைய அடிமை’ என்று
தன்னையே அறிவித்ததன் வழியாகத் தனிப்பட்ட முறையில் அவரும் மற்றும் ஒட்டுமொத்தமாக எல்லா
மக்களும் ஆண்டவர் எதிர்பார்க்கின்ற பணியை நிறைவேற்ற தன்னையே ஈடுபடுத்திக்கொள்ள வேண்டுமென
விரும்புகின்றார். “இதோ, ஆண்டவருடைய அடிமை” என்கின்ற
வார்த்தைகள் தன்னைப் பற்றியே சொல்லவிருக்கின்ற ஒருவரை முன்னறிவிக்கின்றன. “மானிட மகன்
தொண்டு ஏற்பதற்கு அல்ல; மாறாக, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாக தம் உயிரைக்
கொடுப்பதற்கும் வந்தார்” (மாற் 10:45, ஒப்பிடுக. மத்
20:28). இவ்வாறு, தூய ஆவியானவர் தாய்க்கும் மகனுக்கும் இடையே ஒன்றுபட்டதொரு மனப்பான்மையைக்
கொண்டு வருகிறார். இது ஊழியர் என்கின்ற வகையில், தனது மகனின் பணியில் உடன் நடப்பதற்காக
அவரது தாய் என்கின்ற பங்கை அவர் முழுமையாக ஏற்றுக்கொள்வதற்கு அனுமதிக்கின்றது.
இயேசுவின்
வாழ்வில் பணி செய்வதற்கான எண்ணமானது நிலையானதாகவும் வியப்பானதாகவும் இருக்கின்றன. கடவுளின்
மகன் என்கின்ற வகையில், அவர் பணிவிடை செய்யப்பட வேண்டும் என்று முறையாகக் கோரியிருக்கலாம்.
தானியேல் புத்தகம் கூறுகின்ற, “எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவரை வழிபட
வேண்டும்” (தானி 7:14) என்கின்ற வார்த்தையின்படி,
‘கடவுளின் மகன்’ என்கின்ற பட்டத்தைத் தமக்குத்தாமே குறிப்பிடுகின்றார்.
அவர் மற்றவர்களைவிடத் தாம் சிறந்தவர் என்று கோரியிருக்கலாம். ஆனால், அதற்குப் பதிலாக,
முதன்மை இடத்தைப் பிடிப்பதற்கான சீடர்களின் பதவி வெறியைச் சுட்டிக்காட்டி அவர்களுடைய
மனநிலைக்கு எதிராகவும் (ஒப்பிடுக. மாற் 9:34), பாதம் கழுவும்பொழுது இருந்த தூய பேதுருவின் மறுப்பு மனநிலைக்கு எதிராகவும் குரல் கொடுக்கின்றார்
(ஒப்பிடுக. யோவா 13:6). இவ்வாறு, இயேசு பணிவிடை செய்யப்பட விரும்பவில்லை; மாறாக, அவரின்
வாழ்வையே முழுமையாக மீட்புப் பணிக்காகக் கொடுத்து முழுமையானதொரு பணியைச் செய்ய விரும்புகின்றார்
என அறியலாம்.
3.
மேலும், வானதூதரின் அறிவிப்பில் தனக்கு வழங்கப்பட்ட மரியாதையை மரியா அறிந்திருந்தாலும்,
அவர் தன்னைப் பற்றிக் கூறுகையில், ‘இறைவனின் ஊழியர்’ என்றே
அறிவிக்கின்றார். இப்பணியின் அர்ப்பணிப்பில், கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு நிகழ்விற்கும்,
எலிசபெத்தம்மாவைச் சந்திக்கும் நிகழ்விற்கும் இடையேயான ஓர் இணைப்பாக, தனது அண்டை வீட்டாருக்குப்
பணி செய்வதற்கான நோக்கத்தையும் அவர் வைத்திருந்தார். எலிசபெத்தின் கர்ப்பம் பற்றி வானதூதர்
வழியாகத் தெரிந்துகொண்ட மரியா, அவரின் உறவினரான எலிசபெத்து குழந்தையைப் பெற்றெடுக்க
உதவுவதற்காகத் தன்னையே முழுமையாக அர்ப்பணிக்க யூதேயாவிற்கு விரைந்து (லூக் 1: 39) புறப்பட்டுச்
செல்கின்றார். இவ்வாறு எல்லாக் காலகட்டங்களிலும் வாழும் கிறித்தவர்களுக்குப் பணி செய்வதன்
முன்மாதிரியாக மரியா விளங்குகின்றார்.
“உம்
சொற்படியே எனக்கு நிகழட்டும்” (லூக் 1:38) என்ற வார்த்தைகள், ஓர்
ஊழியர் என்று கூறித் தன்னையே கடவுளின் விருப்பத்திற்கு முற்றிலுமாகக் கீழ்ப்படியும்
ஒரு நபரை நம் கண்முன் கொண்டு வருகின்றன. நற்செய்தியாளர் லூக்கா பயன்படுத்துகின்ற genoito- ‘அப்படியே ஆகட்டும்’ என்கிற ஒருவரின் விருப்பத்தை வெளிப்படுத்துகின்ற வார்த்தைகள்,
தெய்வீகத் திட்டத்தை ஏற்றுக்கொள்வதோடு மட்டுமல்லாமல், தனது சக்தி முழுவதையும் பயன்படுத்தி
அத்திட்டத்தைத் தனதாக்குவதில் அவர் வெளிப்படுத்திய அவரின் உறுதியான எண்ணத்தையும் காட்டுகின்றது.
இறைவனின் விருப்பத்திற்கு
இணங்குவதன் வழியாக, மரியா கிறிஸ்துவின் மனநிலையை
முன் நிகழ்த்திக் காட்டுகின்றார்
4.
இறைத்திட்டத்திற்கு இணங்குவதன் வழியாக மரியா கிறிஸ்துவின் மனநிலையை முன்குறித்துக்
காட்டி, அதைத் தனதாக்கிக் கொள்கின்றார். அந்தக் கிறிஸ்துவின் மனநிலையானது எபிரேயருக்கு
எழுதப்பட்ட கடிதத்தில் தெளிவாகக் குறிப்பிடப்படுகிறது: “பலியையும் காணிக்கையையும் நீர்
விரும்பவில்லை; ஆனால், ஓர் உடலை எனக்கு அமைத்துத் தந்தீர்... எனவே நான் கூறினேன்...
உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன்”
(எபி 10:5-7; திப 40-41, 7-9).
இவ்வாறே,
மரியாவின் பணிவும் கல்வாரி வரை இயேசு தமது பொது வாழ்வின்போது வெளிப்படுத்தியதையே அறிவிக்கின்றது
மற்றும் முன்குறிக்கின்றது. அதாவது கிறிஸ்து, “என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும்
அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே என் உணவு”
(யோவா 4:34) என்று கூறுவார். இயேசுவின் இந்த வார்த்தைகளைத் தனது வாழ்வு முழுவதுமே தந்தையின்
விருப்பத்தை எழுச்சியூட்டக் கூடியதொரு கொள்கையாக மரியா ஆக்குகிறார். மேலும், தன்னிடம்
ஒப்படைக்கப்பட்ட பணியை நிறைவேற்ற தேவையான பலத்தை அதில் தேடுகின்றார்.
கிறிஸ்து
பிறப்பு அறிவிப்பின் பொழுது, கிறிஸ்துவின் பணியைக் குறிக்கும் தியாகத்தைப் பற்றி மரியாவுக்கு
இன்னும் தெரியவில்லை என்றாலும், சிமியோனின் தீர்க்கதரிசனம் தன் மகனின் சோகமானதொரு முடிவைக்
காண அவருக்கு உதவி இருக்கும் (ஒப்பிடுக. லூக் 3: 34-35). இருப்பினும், கன்னி மரியா
நெருக்கமானதொரு பகிர்வின் வழியாகத் தன்னைக் கிறிஸ்துவுடன் தொடர்புபடுத்துகிறார். இறைவனின்
விருப்பத்திற்கு முழுவதும் கீழ்ப்படிந்ததன் வழியாக, அந்தத் தெய்வீக அன்பானது அவரின்
வாழ்விற்காகத் திட்டமிடக்கூடிய அனைத்தையும், அவரது ஆன்மாவைக் குத்திக் கிழிக்கும் அந்த
‘வாளையும்’ ஏற்று வாழ மரியா தயாராக இருக்கின்றார்.
மூலம்:
John Paul II, Mary offers sublime model of service, in
«L’Osservatore Romano», Weekly Edition in English, 11 September 1996, p. 15.
விண்ணுலகில் தேர்தல்
ஒருமுறை
விண்ணுலகில் தேர்தல் நடைபெற்றதாம்! அத்தேர்தலில் யாரோ ஒருவர் கம்யூனிஸ்டு கட்சிக்கு வாக்களித்துவிட்டார். இதைக் கேள்வியுற்ற தந்தையாம் கடவுளுக்குக் கடும் கோபம் வந்துவிட்டது. “கடவுளே இல்லையென்று சொல்கின்ற கம்யூனிஸ்டுகளுக்கு வாக்களித்தது யார்?” என்று அறிய விரும்பினார் தந்தையாம் கடவுள்.
அதனால்,
வானதூதர் தலைமையில் ஒரு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. தீவிர புலன் விசாரணைக்குப் பிறகு கம்யூனிஸ்டு கட்சிக்கு வாக்களித்தது புனித யோசேப்பு என்று கண்டுபிடிக்கப்பட்டது.
புனித
யோசேப்பு தந்தையாம் கடவுளின் முன்னிலையில் நிறுத்தப்பட்டார். “நீர் ஏன் கம்யூனிஸ்டுகளுக்கு வாக்களித்தீர்?” என்று கேள்விக் கணையைத் தொடுத்தார் தந்தையாம் கடவுள்.
“கம்யூனிஸ்டுகள் தொழிலாளர்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள். நான் தொழிலாளர்களின் பாதுகாவலன். எனவே, அவர்களுக்கு வாக்களித்தேன்” என்று
பதில் கூறினார் புனித யோசேப்பு.
“என்னவாக இருந்தாலும் ‘கடவுளே இல்லை’ என்று சொல்கின்ற கம்யூனிஸ்டுகளுக்கு வாக்களித்தது பெரும் குற்றமாகும். எனவே, நீர் விண்ணுலகை விட்டு வெளியேற உத்தரவிடுகிறேன்!” என்று ஆணையிட்டார் தந்தையாம் கடவுள்.
அதற்குப்
புனித யோசேப்பு, “நான் வெளியேற வேண்டுமென்றால் எனது மகன் இயேசுவையும் அழைத்துச் செல்வேன்”
என்று பதில் கூறினார்.
இதைக்
கேட்டவுடன் தந்தையாம் கடவுள் சற்று அதிர்ந்து போனார். இயேசு ஆண்டவர் தூய மூவொரு கடவுளின் இரண்டாம் ஆள் இல்லாமல் விண்ணுலகம் எப்படி இயங்க முடியும்? எனவே, தந்தையாம் கடவுள் தமது முடிவை மாற்றிக் கொண்டார். புனித யோசேப்பு விண்ணுலகில் தொடர்ந்து வாழ அனுமதிக்கப்பட்டார்.
அன்பு
மிகுந்தவர்களே! இக்கதை கூறும் செய்தி என்னவென்றால், புனித யோசேப்பு மண்ணுலகில் மட்டுமன்றி, விண்ணுலகிலும் வல்லமை மிகுந்தவர் என்பதுதான். மண்ணுலகில் வாழும்
மாந்தர்களின் மன்றாட்டுகளுக்குத் தனது மகன் இயேசு ஆண்டவர் வழியாக வரங்களைப் பெற்றுத் தரும் ஆற்றல் வாய்ந்தவர் புனித யோசேப்பு.
திருவிவிலியத்தில்
புனித
யோசேப்பு
‘இவர் ஒரு நேர்மையாளர்’ என்று
புனித மத்தேயு நற்செய்தியாளர் கூறுகின்றார் (1:19). நேர்மையாளர் எனும் சொல்லுக்கு மனசாட்சி உடையவர், உண்மையை ஏற்றுக்கொள்பவர், நீதியோடு வாழ்பவர் என்று பொருள் கொள்ளலாம். எனவேதான் அன்னை மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்காமல், கடவுளின் திட்டத்திற்கு அடிபணிகின்றார். அதனால்தான் கவியரசு கண்ணதாசன் புனித யோசேப்பை, ‘சொல்லரும் அறிஞரே! சூசையப்பரே!’ என வாழ்த்துகிறார் (இயேசு காவியம்).
புனித
யோசேப்பு பொறுப்பும் கடமையும் உள்ள தந்தையாகச் செயல்பட்டார். கனவில் எச்சரிக்கப்பட்டவுடன் இயேசு பாலகனையும், அன்னை மரியாவையும் அந்த இரவிலேயே எகிப்துக்கு அழைத்துச் செல்கிறார் (மத் 2:14). கடமையை ஆற்றுவதில் ஆர்வமும் விவேகமும் புனித யோசேப்பிடம் இருப்பதைக் காண்கிறோம். இப்புனித யோசேப்பு தாவீதின் வழிமரபினர் என்பது (லூக் 2:4), அவருக்கு மேலும் மாண்பையும் புகழையும் சேர்க்கிறது.
திருத்தந்தை
10-ஆம்
பயசின்
கூற்று
“புனித யோசேப்பு அமைதியானவர்; ஆழ்ந்த நம்பிக்கையின் அடையாளமானவர்; எளிமையானவர்; தாழ்ச்சி உடையவர்; தியாக உள்ளம் கொண்டவர்; கடவுளிடம் தடுமாற்றம் இல்லாத நம்பிக்கை வைத்தவர்; தொழிலாளர்களுக்கு முதன்மையான அடையாளமாகத் திகழ்பவர்; செய்யும் தொழிலை ஊக்கத்தோடும் அர்ப்பணத்தோடும் செய்யும் ஆன்மிகத்தை அருள்பவர்”
என்று நினைவில் வாழும் திருத்தந்தை 10-ஆம் பயஸ் கூறுகிறார்.
புனித யோசேப்பு
ஓர்
அருமையான
பாதுகாவலர்
புனித
யோசேப்பின் பண்பையும் ஆற்றலையும் கண்ணுற்றத் திரு அவை, அவரைப் பல்வேறு நிலைகளுக்குப் பாதுகாவலராய் நியமித்துள்ளது. புனித யோசேப்பு தொழிலாளர்களின் பாதுகாவலர், குடும்பங்களின் பாதுகாவலர், குடும்பத் தந்தையர்களின் பாதுகாவலர், கல்வியின் பாதுகாவலர், பல்கலைக்கழகங்களின் பாதுகாவலர், கற்பின் பாதுகாவலர், கன்னியர் இல்லங்களின் பாதுகாவலர், திருத்தந்தையர்களின் பாதுகாவலர், திரு அவையின் பாதுகாவலர், பயணிகளின் பாதுகாவலர், அகதிகளின் பாதுகாவலர், வழக்கறிஞர்களின் பாதுகாவலர், நல்மரணத்தின் பாதுகாவலர். மேலும், புனித யோசேப்பு ஆஸ்திரியா, குரோவாசியா போன்ற நாடுகளின் பாதுகாவலரும் ஆவார்.
புனித யோசேப்பை
நோக்கிய
மன்றாட்டுகள்
உலகெங்குமுள்ள
பக்தர்கள் புனித யோசேப்பை நோக்கி வேலைவாய்ப்பு கிடைக்க, அன்றாட வாழ்வுக்குப் பாதுகாப்பு கிடைக்க, இறையழைத்தல் கிடைக்க, சுகப்பிரசவம் நடக்க, நல்ல திருமணம் நடைபெற, நல்ல மரணம் கிடைக்க வேண்டுகின்றனர்.
புனித
யோசேப்பை நோக்கி எழுப்பப்படுகின்ற மன்றாட்டுகள் அதிக அளவில் நிறைவேற்றப்படுகின்றன. கடும் நோயிலிலிருந்து விடுதலை பெற்ற புனித அவிலா தெரசம்மாள், “புனித யோசேப்பு வழியாக நான் கேட்ட எந்த மன்றாட்டும் நிறைவேற்றப்படாமல் போனதில்லை”
என மொழிகின்றார்.
எனவே,
நாம் ஒவ்வொருவரும் புனித யோசேப்பு வழியாகக் கடவுளிடம் வேண்டுவோம். எல்லாம் வல்ல இறைவன் நமது வேண்டுதல்களை நிறைவேற்றுவாராக!