எது துக்கச் சேதி?
பிறப்பு
மகிழ்வான செய்தி! இறப்போ துக்கச் செய்தி! நமக்குத் தெரியும், பிறப்பவர் கண்டிப்பாக இறந்தாக வேண்டும் என்று. பிறப்பின் முடிவு இறப்பிலுள்ளது. அப்படியென்றால், இறப்பு பிறப்பின் மகுடம்தானே! மகுடம் சூட்டும் நாளை மகிழ்வான நாளாகக் கொண்டாடுவதுதானே இயல்பு! அப்படியெனில், இறப்பில் நம்மில் பலர் அழுகிறோம், புலம்புகிறோம், ஏன் ஒப்பாரி வைக்கின்றோம்? இறப்பு அன்பை முறித்துவிடுவதாலா? ஏன், இறப்பிற்குப் பின்பும் நீ
அன்பு செய்யலாமே! ஒருவேளை இறந்தவரைக் காண முடியாது, அவரோடு பேச முடியாது, அவரின்றிக் குடும்பம் பொருளாதாரத்தில் சிதைந்துவிடும், அவரின்றி மறுபடியும் தலை தூக்குவது கடினம் என்ற நினைவுகள் நம்மை வருத்தத்தில் ஆழ்த்துவதாலா?
இறப்பும் சோகமும்
மனித
இயல்பில் இறந்தவர் மாயமானவர் போலாகிறார். அவரில்லாது தலை தூக்குவது கடினம். அதிலும் கணவன் இளம் வயதில் இறந்துவிடின், மனைவி ‘விதவை’ எனக் கணிக்கப்படுவதும், அது அவளுக்கு வந்த சாபம் எனக் கூறுவதும், பூவும் பொட்டும் வைக்க அனுமதி மறுப்பதும் நம் சமூகம் செய்யும் அபத்தம். பல நல்ல நிகழ்வுகளில்
அவர்கள் அழைக்கப்படுவதில்லை. அவர்கள் பிரசன்னமே அபசகுனமாகக் கருதப்படுகிறது. இறப்பு தரும் வேதனைகள் சொல்லிலடங்கா!
இன்னும்
ஒருசிலரது இறப்பு நல்லதாகப் பார்க்கப்படுகிறது. பல குடும்பங்களில் அப்பா
- குடிகார மனிதன், அடித்துத் தொல்லை தருகின்ற மனிதன் இறந்துவிட்டான் என்று ஆறுதல் அடைகிறது. சமுதாயமும் இம்மனிதன் தொல்லை எனக்கூறி தம்மைச் சமாதானப்படுத்திக்கொள்கிறது.
இறப்பு விடுதலையா?
ஆனால்,
இறப்பு சாபமா? அல்லது இழப்பா? அல்லது சோகமா? வாழ்வின் இரு பாகங்கள்தான் பிறப்பும் இறப்பும். ஒளியில் மட்டுமல்ல, இருளிலும் நன்மையுண்டு. மகிழ்வில் மட்டுமல்ல, துன்பத்திலும் நன்மையுண்டு. உடல் நலனில் மட்டுமல்ல, நோயிலும் நன்மை உண்டு. உண்மையில் துன்பத்திலிருந்துதான் பல பாடங்களைக் கற்றுக்கொள்கிறோம்.
நோயுறும்போதுதான் அயலாரின் நோயின் கனாகனம் தெரியும். நாம் அவரைப் புரிந்துகொள்ள நல்ல தருணம் அதுதான். ஒளி நல்லது; ஆனால், இருள் நல்லதல்ல என்று யார் கூறினது? ‘இருளிலிருந்து ஒளிக்கும்’
எனும்போது இருளைத் துயரத்திற்கும், ஒளியைத் துயரத்திலிருந்து பெறுகின்ற
விடுதலைக்கும் ஒப்பிடுகிறோம்.
இருளின் பொருள்
பகலில்
பார்க்க முடியாத நிலவை இருளில் பார்க்கிறோம். அவ்வாறே விண்மீன்களைப் பார்க்கிறோம். இரவில் நிசப்தமான அந்தப் பொழுதில் எழுதுகிறோம், சிந்திக்கிறோம், நிம்மதியாகத் தூங்குகிறோம். இருளில் பயணம் செய்து காலையில் வேலைக்குப் போகிறோம். இரவில்தான் பலவற்றைக் கண்டுபிடிக்கிறோம்.
இயேசுவும்
துன்பங்கள் பற்றியும், பாடுகள் பற்றியும், அவரது இறப்பு பற்றியும் முன்மொழிகின்றார். இறப்பு மீட்பின் சாரமாகவும், பாவங்களை மன்னிக்கும் ஆற்றல் உடையதாகவும் காண்கின்றார் (மாற் 8:31). பேதுரு இந்தக் கருத்தையும் சிந்தனைகளையும் ஒத்துக்கொள்வதில்லை. அவர் இயேசுவைத் தனியே அழைத்து அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினார். இயேசு, “என் பின்னாலே போ, சாத்தானே! நீ கடவுளுக்கு ஏற்புடையதை
எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவற்றைப் பற்றியே சிந்திக்கிறாய்” என்று
கடிந்துகொண்டார் (மாற் 8:32-33; மத் 16:21-28; லூக்கா 9:22-23).
தவறு
செய்யும் மனிதன் முழுவதும் தீயவனல்ல; அவன் மனம் திரும்பிப் புனிதனாகலாம். தீமை என்று நாம் கருதும் பலவை நன்மைத்தனத்திற்கு வாய்க்காலாக அமைகின்றன. நீதிமானிலும்
கறையுண்டு, பாவியிலும் நன்மைத்தனம் உண்டு. இரண்டும் கலந்ததுதான் மனிதம் அல்லது மனித வாழ்வு.
உதிரும் இலை
இப்போது
இறந்தோரைப் பற்றிச் சிந்திப்போம். கவிஞர் வைரமுத்து உதிரும் இலை பற்றி மிக ஆழமாக எழுதுவது நமக்கு உதவியாக இருக்கலாம். உதிர்ந்து வாடி கீழே விழப்போகும் இலையின் உற்சாகமான வார்த்தைகளைக் கவனிப்போம்:
‘உயிரின் கடைசி இழையில்
ஊசலாடி
நிற்கிறேன்.
உரசும்
காற்று உணர்ச்சிவசப்பட்டாலோ
முத்து
மழைத்துளியென்பது
மூக்கில்
விழுந்தாலோ
என்
கிளையில் ஒரு பறவை
சில்லென்றமர்ந்து
சிறகடிக்கும் அதிர்ச்சியிலோ
நான்
விழுந்து விடுவேன்
இந்தச்
சாவை முன்னிட்டு
என்னை
மன்னித்துவிட்டன சக இலைகள்
பிறந்த
நாள் முதல்
பிரிந்திருந்த
தாய்மண்ணை
முதன்
முதலில் முத்தமிடப் போகிறேன்.
அப்படியானால்
வாழ்வு குறைகுடமா?
சாவு
நிறைகுடமா?
வாழ்வு
தராத வரம் ஒன்றைத்
தாய்மண்ணே
நீ வழங்கவந்தாய் எனக்கு!’
என்று
எழுதும் இக்கவிஞர் மற்றொரு நிலைக்கு நம்மை அழைத்துச்செல்கிறார்.
இயேசுவும் கல்லறையும்
இயேசுவின்
சாவும் இந்த நிறைவை அறிவிக்கிறது. “எல்லாம் நிறைவேறிற்று” என்ற
கூற்று அவரது பணியின் சாரத்தை அறிவுறுத்துகிறது. இறப்பில் பணியின் நோக்கம் வெற்றிகரமாக நிறைவுபெறுகிறது. இயேசுவின் இறப்பு நமது மீட்பாக அமைகிறது. கிறிஸ்துவில் அனைவரும் உயிர்த்தெழுவர் (1கொரி 15:22,23). இறப்பின் வழியாக நாமும் மாற்றுரு பெறுவோம், அழியாமையையும் சாகாமையையும் அணிவோம் (1கொரி 15: 52-56). இயேசுவின்
சாவு சாவையும் வென்றது; பாவத்தையும் வென்றது (1கொரி 15:54-55).
எனவே,
கல்லறைகள் நம்பிக்கையின் அடையாளங்கள். உயிர்த்தெழுதலை நினைவூட்டும் சின்னங்கள். நமது முன்னோர்கள் துயில்கொள்ளும் இடம். உறவு ஒன்றிப்புக்கான தோட்டம்.
“இறப்பு விண்ணக மாளிகையைத் திறக்கும் தங்கத் திறவுகோல்”
என்று ஜான் மில்டன் கூறுகிறார்.
‘சமரசம் உலாவும் இடமே!
பேதமில்லாமல்
எல்லாரும்
முடிவில்
சேர்ந்திடும் காடு;
தொல்லையின்றியே
தூங்கிடும் வீடு;
ஆவிபோனபின்
கூடிடுவார் இங்கே!’
என்ற
கல்லறை குறித்த பாடல் எப்போதும் காதுகளில் ஒலிக்கட்டும்.
ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் 2-ஆம் ஞாயிறை ‘தலித் விடுதலை ஞாயிறு’ என இந்திய ஆயர் பேரவையும் (CBCI), இந்தியத் திரு அவைகளின் தேசியப் பேரவையும் (NCCI) இணைந்து சிறப்பிக்கின்றன. இந்த நாளை அனைத்துப் பங்குகளிலும், துறவற மையங்களிலும் திருப்பலி, செப வழிபாட்டிலும் கொண்டாடுவோம்.
‘விளிம்புகளிலிருந்து தொடங்குகிறது எதிர்நோக்கின் யூபிலி’ எனும் இந்த ஆண்டின் தலைப்பு, தம் மீட்புப் பணியை எப்போதும் விளிம்புநிலை மாந்தரிடமிருந்தே தொடங்கும் நல் இறைவனை மீண்டும் கண்டடைய நம்மை அழைக்கிறது.
ஒடுக்கப்பட்டவர்களின்
அழுகுரலைக்
கேட்கும்
இறைவன்
(விப
3:7-10)
திருமுழுக்கு
மூலம் ‘இறைவனின் மக்கள்’ எனும் மாண்பைப் பெற்ற பின்னரும், தலித் கிறித்தவர்கள் இன்றும் ஒடுக்கப்படுகிறார்கள், ஒதுக்கப்படுகிறார்கள்; அவர்களின் குரல் நசுக்கப்படுகிறது. திரு அவைக்குள்ளும் சாதி அடிப்படையிலான ஒடுக்கு முறைகள் நடந்தேறி வருகின்றன. பங்குத் திரு விழாக்களிலும், பங்குப் பேரவைகளிலும் பங்கேற்கும் சம உரிமை அவர்களுக்கு
மறுக்கப்படுகிறது; கல்லறைகளிலும் சாதியப் பிரிவினையும் ஒதுக்குதலும் நிகழத்தான் செய்கின்றன. ஆயர் பேரவையின் பல நல்ல முன்னெடுப்பு
களுக்குப் பின்னரும், இந்த அவலங்கள் தொடரத்தான் செய்கின்றன.
ஒடுக்கப்பட்டவர்களின்
அழுகுரலைக் கேட்கும் இறைவன்மீது தலித் கிறித்தவர்கள் கொண்டுள்ள நம்பிக்கை சில நேரங்களில், சில இடங்களில் அவர்களின் அழுகுரலை உரிமைக் குரலாகவும் ஓங்கி ஒலிக்கச் செய்கின்றது. விளிம்புகளில் தொடங்குகிறது நம்பிக்கையின் யூபிலி என்பதற்கு இதுவே அடையாளமாகவும் சான்றாகவும் விளங்குகிறது.
சகோதரத்துவ ஒற்றுமை
பற்றிய
திருப்பாடல்
(திபா
133)
• திரு அவை ஒரு படிநிலைச் சமூகம் அல்ல; இது சமத்துவம் மிக்க ஒரு குடும்பம். பிரிவினைச் சுவர்கள் சகோதர ஒற்றுமைக்கும் திரு அவைக்கும் மாறானவை.
• சாதியப் பாகுபாட்டின் எந்த வடிவமும் நற்செய்திக்கு முரணான குறியீடு எனத் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பவுல் அவர்கள் 2003-இல் இந்திய ஆயர்களை எச்சரித்தார்: “சாதி அடிப்படையிலான முற்சார்பின் எந்த ஒரு சாய லும் உண்மையான ஆன்மிகத்திற்கு அச்சுறுத்தலாகவும் திரு அவையின் நற்செய்தி அறிவிப்புப் பணிக்குத் தடையாகவும் அமைகிறது.”
• திரு அவைக்குள் சாதி நுழையும்போது, கிறிஸ்து மீண்டும் சிலுவையில் அறையப்படுகிறார் - இந்த முறை கல்வாரி மலையில் அல்ல; நம் திரு அவைச் சமூகங்களில்.
நம்பிக்கை நம்மை
ஒரே
குடும்பமாக
மாற்றுகிறது
(கலா
3:23-29)
இன்றைய
காலகட்டத்தில் பவுல் நம்மிடையே இருந்தால், அவர் இவ்வாறு கூறியிருக்கலாம்: “தலித்தும் இல்லை; தலித் அல்லாதவரும் இல்லை - நீங்கள் அனைவரும் கிறிஸ்துவில் ஒன்றாக இருக்கிறீர்கள்.”
தூய
பவுலின் இந்த அறிவிப்பு, திரு அவை வாழ்ந்து காட்டவேண்டிய ஓர் ஆன்மிக உண்மை. இன்னும் நாம் அந்த ஆன்மிக உண்மையிலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறோம் என்பதை, 2007-இல் நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம் வெளிப்படுத்தியது.
தலித்
கிறித்தவர்கள், பொதுச்சமூகத்தில் மட்டுமல்ல, திரு அவைக்குள்ளும் பாகுபாடுகளுக்கு உள்ளாகி வருகின்றனர் என்பதை அந்த ஆணையம் ஆவணப்படுத்தியது.
இட
ஒதுக்கீட்டிற்குத் தகுதிபெறும் பட்டியலிடப்பட்ட சாதி (Scheduled Caste) அந்தஸ்தை,
தலித் கிறித்தவர்களுக்கு அரசு மறுப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்றொரு கொடுஞ் செயலாகும்.
சமாரியப் பெண்ணுடன்
இயேசு
(யோவா
4:1-9)
இயேசு
ஒரு சமாரியப் பெண்ணைச் சந்திக்கிறார். ஒரு பெண்ணாகவும், தீண்டத்தகாத இனத்தைச் சார்ந்தவராகவும் இரட்டைப்
புறக்கணிப்புக்குள்ளானவர்
இந்தச் சமாரியப் பெண். யூதரும் சமாரியரும் கிண்ணத்தில் நீர் அருந்துவதுமில்லை, பகிர்வதுமில்லை. ஆனால், இயேசு, “குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும்” என்ற ஓர் எளிய வேண்டுகோளால் அந்தத் தீண்டாமைத் தடையை உடைத்தெறிந்தார். அந்தத் தருணத்தில் இயேசு ஒரு சமூக எல்லையைக் கடந்தார். புறக்கணிக்கப்பட்ட சமாரியப் பெண்ணிடம் இயேசு உரையாடியதன் மூலம், தமது இறைமையை அப்பெண்ணுக்கு வெளிப்படுத்தினார். நம் ஆண்டவரின் இறைவெளிப்பாடு விளிம்புகளில் நிகழ்கிறது.
இறைவாக்குரைக்க
அழைக்கப்பட்டுள்ள
திரு
அவை
சாதியப்
புறக்கணிப்பை/பாகுபாட்டை ஒரு தீவிரமான சமூகப் பாவமென 2016-இல் வெளியிடப்பட்ட தலித் கிறித்தவர்களின் அதிகாரப்படுத்துதலுக்கான இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவை (CBCI Policy of Dalit Empowerment in the Catholic Church in India)
குறிப்பிடுகிறது. இந்தியக் கத்தோலிக்கர்களில் 65% பேர் தலித்துகள் என்பதை அந்தக் கொள்கை வரைவு சுட்டிக்காட்டுகிறது. இருப்பினும், அவர்கள் திரு அவையின் தலைமைப் பணிகளிலும் கல்வியிலும் மறைப்பணி அமைப்புகளிலும் குறைவாகவே பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனர்.
தலித்
விடுதலைக்கான எந்த ஒரு செயல்திட்டமுமின்றி, தலித் விடுதலை ஞாயிறைச் சிறப்பிப்பது ஒரு வெற்றுச்சடங்கும் பாசாங்குமாகும். விடுதலையைப் போதிப்பது மட்டுமல்ல, அதை வாழ்ந்து காட்டுவதும் திரு அவையின் பொறுப்பே.
திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் ‘Fratelli Tutti’-இல்
ஒரு மாபெரும் உண்மையைச் சுட்டிக்காட்டுகிறார்: “அன்பு வட்டத்திலிருந்தும் சகோதரத்துவ வட்டத்திலிருந்தும் யாரும் விலக்கப்படமுடியாது” (பத்தி
97). இப்பேருண்மையை வாழ்ந்து காட்ட வேண்டியது திரு அவையின் கடமை.
அக்டோபர்
2025-இல் வெளியான ‘Dilexi Te’ என்ற புதிய நன்மதிகூறல் மடலில், திருத்தந்தை பதினான்காம் லியோ ஓர் அருமையான செய்தியை நினைவூட்டுகிறார்: “எனவே, ஏழைகளுக்கான அன்பு அவர்களின் ஏழ்மை எந்த வடிவத்தில் இருந்தாலும், இறைவனுடைய இதயத்திற்கு உண்மையாய் வாழும் திரு அவையின் நற்செய்தி அடையாளமாகும்” (பத்தி
103). இந்த நினைவூட்டலை இந்தியப் பின்னணியில் இவ்வாறு புரிந்துகொள்ளலாம்: ‘தலித்துகளுக்கான அன்பு... இறைவனுடைய இதயத்திற்கு
உண்மையாய் வாழும் திரு அவையின் நற்செய்தி அடையாளமாகும்.’
எதிர்நோக்கின்
யூபிலி
திருவிவிலிய
யூபிலி காலத்தில் கடன்கள் மன்னிக்கப்பட்டன; அடிமைகள் விடுதலை அடைந்தனர்; மூல உரிமையாளர்களிடம் நிலம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. சமத்துவமும் புதுப்பித்தலும் நிலவும் காலமே யூபிலியாகும்.
இன்று
நாம் கொண்டாடும் ‘எதிர்நோக்கின் யூபிலி’ அரண்மனைகளிலோ, பேராலயங்களிலோ அல்ல; விளிம்புகளில்! தலித் கிறித்தவர்கள் மற்றும் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களிடத்தில் தொடங்குகிறது.
“ஒடுக்கப்பட்டோரின் விடுதலை என்பது, ஒடுக்குதல் எனும் பாவத்திலிருந்து ஒடுக்குவோர் பெறும் விடுதலையும் ஆகும்” என்கிறார் விடுதலை இறையியலாளர் குஸ்தாவோ குடியெரெஸ். இவர் கூறியதுபோல், தலித்துகள் விடுதலையடையும்போது, முழு திரு அவையும் விடுதலை பெறுகிறது. விளிம்பில் கிடப்பவர்கள் எழுந்து, நிமிர்ந்து நிற்கும்போது, மையம் தன் ஆன்மாவை மீண்டும் கண்டடைகிறது.
மனமாற்றத்திற்கான
அழைப்பு
இன்றைய
திருப்பலி ஒரு மனமாற்றத்தின் (மெட்டானோயா) தருணம். இதயங்கள் இறைவனிடம் திரும்பும் நேரம். கிறிஸ்துவின் மறையுடலான திரு அவையில் சாதியம் நிலைத்திருக்கக் காரணமாக இருந்த நம்முடைய மௌனம் மற்றும் பங்களிப்பிற்காக மனம் வருந்துவோம், மனம் திருந்துவோம்.
வேடிக்கைப்
பார்ப்பவர்களாகவோ, வெறும் பார்வையாளர்களாகவோ இராது, அனைவரும் சமப் பங்கேற்பாளர்களாகத் திகழும் பங்குத்தளங்களைக் கட்டியெழுப்ப உறுதி கொள்வோம்.
இறுதியாக...
இந்தத்
தலித் விடுதலை ஞாயிறு உண்மையிலேயே ஓர் எதிர்நோக்கின் யூபிலியாக அமையுமாறு இறைவேண்டல் செய்வோம். நீதியும் சகோதரத்துவமும் நிறைந்த இறையாட்சி, விளிம்புகளிலிருந்து விடியட்டும்.
“நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார். அழிவின் குழியிலிருந்து என்னை அவர் வெளிக்கொணர்ந்தார்; சேறு நிறைந்த பள்ளத்தினின்று தூக்கியெடுத்தார்” (திருப்பாடல்
40:1-2) என ஒவ்வொரு தலித் கிறித்தவனும் மகிழ்ச்சிப்பண் பாடும் தருணம் விரைந்து நெருங்கட்டும்!
புறக்கணிப்போ
புறம்தள்ளுதலோ இல்லாத ஒரு குடும்பமாக, கிறிஸ்துவின் அன்பினால் பிணைக்கப்பட்ட ஒரு குடும்பமாக, அனைவரும் சம உரிமையுடனும் சமமாண்புடனும்
வாழ வகை செய்யும் இறையாட்சியின் உயிருள்ள அடையாளமாக நம் திரு அவை மாறட்டும்!
மரியாவின் அமல உற்பவக் கோட்பாட்டு அறிவிப்பின் வழியாகத் திரு அவையானது, கிறிஸ்து பாவத்திலிருந்து நம்மை விடுவிப்பதோடு அதன் சக்தியிலிருந்தும் நம்மைப் பாதுகாக்கின்றார் என்பதைக் காட்டுகின்றது.
1. மரியா
தாயின் கருவில் உருவானதிலிருந்தே முற்றிலும் புனிதமானவர் என்ற கோட்பாடானது அது அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே, புனித பவுல் அடியாரின் முதல் பாவம் மற்றும் பாவத்தின் பொதுத் தன்மையைப் பற்றிய கருத்துகளினாலும், அதன் மீதான புனித அகுஸ்தினாரின் குறிப்பிடத்தக்க விளக்கங்களினாலும் மேற்கத்திய திரு அவையில் ஒருவித எதிர்ப்பைச் சந்தித்தது.
முற்றிலும்
புனிதத்துவமிக்க மகனின் தாய் என்கின்ற நிலையை அடைவதற்காக மரியாவிற்கு முற்றிலும்
தூய்மையான மற்றும் சிறப்புமிக்க புனிதத்துவமானது தேவையான ஒன்றாக இருந்தது என புனித அகுஸ்தினார்
உணர்ந்தார். இதன் காரணமாகத்தான், பெல்லாஜியுஸ் உடனான கருத்து வேறுபாட்டில் (Pelagius controversy)
மரியாவின் புனிதத்துவமானது, சிறப்புமிக்க அருளின் கொடையாக இருக்கிறதென்று வலியுறுத்தி இவ்வாறு கூறுகின்றார்: “ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மகிமைக்காக யாரை நான் எந்த வகையிலும் பாவத்தோடு தொடர்புபடுத்திக் குறிப்பிடுவதற்கு விரும்பவில்லையோ, அந்தக் கன்னி மரியாவுக்கு நாங்கள்
விலக்களிக்கின்றோம். உண்மையில் பாவமற்றவரைக் கருத்தரித்துப் பெற்றெடுத்தவர், பாவத்தின்மீது முழுமையான வெற்றிகொள்ளும் நிமித்தம் சிறப்பானதோர் அருள் அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்தது என்பது நமக்குத் தெரியாதா?” (De natura
et gratia, n. 42).
‘ஆண்டவரின் தாய்’ என்பதனால் அவருக்கு வழங்கப்பட்ட உயர் மதிப்பினால் அவரில் எந்தவித தனிப்பட்டதொரு பாவமில்லாத் தன்மையையும் அவருக்குரிய புனிதத்துவத்தையும் புனித அகுஸ்தினார் வலியுறுத்துகின்றார். இருப்பினும், கருத்தரித்தலின் போதான முற்றிலும் பாவமில்லாத் தன்மை பற்றிய கோட்பாட்டுக்கும், ஆதாமின் வழி வந்தோர் அனைவருக்குமான மீட்பு பற்றிய கோட்பாட்டுக்கும் இடையே எவ்வாறு பொருத்தப்பாட்டை உருவாக்குவது என்பதை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. இது, மரியா எவ்வாறு அவர் தாயின் கருவில் உருவானபொழுதே கிறிஸ்துவின் மதிப்பினால், மீட்பின் அருளால் பயனடைந்தார் என்பதை விளக்குவதன் வழியாக, பிற்காலத்திய திரு அவையின் மிகச் சரியான புரிதலின் வழியாக முடிவுக்கு வந்தது.
‘டன்ஸ் ஸ்காட்டஸ்’(Duns Scotus) அமல உற்
பவம்
பற்றிய
மறுப்புகளை
வெற்றி
கொண்டார்
2. 9-வது நூற்றாண்டில்
முதலில் இத்தாலியின் நேப்பிள்ஸ் நகரத்திலும், பின் இங்கிலாந்திலும் மேற்கத்திய நாடுகளில் அமல உற்பவத் திருவிழாவானது அறிமுகப்படுத்தப்பட்டது.
கி.பி. 1128-ஆம் ஆண்டில் எட்மெர் என்கின்ற கான்டர்பெரி நகரத்துத் துறவி ‘அமல உற்பவம்’ பற்றியதொரு கட்டுரையை எழுதும்பொழுது, அமல உற்பவத் திரு விழாவுக்கான திருவழிபாடானது குறிப்பாக, “தூய்மை நிறை எளிமையான மற்றும் மிகவும் தாழ்ச்சி மிகுந்த கடவுளுக்கான பக்தியானது யாரில் காணப்பட்டதோ...” (Tract. De conc. B.M.V., 12) என்கின்ற
பகுதியானது ஓரங்கட்டப்பட்டது அல்லது புறக்கணிக்கப்பட்டது என்று குற்றம் சாட்டுகின்றார். இந்த விழாவை மீட்டெடுக்க விரும்பிய அந்தப் பக்திமிகு துறவி மனுக்குலம் அனைத்தின் மீதான முதல் பாவத்தின் கடத்தல் கொள்கையை அடிப்படையாக வைத்து அமல உற்பவத்தின் சிறப்புச் சலுகை பற்றிய புனித அகுஸ்தினாரின் மறுப்புகளைப் புறந்தள்ளினார். இதை
விளக்குவதற்காக அவர் ஒரு கஷ் கொட்டையின் உருவத்தை (image of a chestnut) பொருத்தமாகப்
பயன்படுத்தினார். அதாவது, “அது கருத்தரிக்கப்பட்டு, ஊட்டமளித்து, அதன் துளையின் அடியில் (beneath its bur) உருவாகிறது, இன்னும்
அது குத்தப்படாமல் பாதுகாக்கப்படுகிறது”(Tract. 10).
முதல்
பாவத்தைக் கடத்த வேண்டிய படைப்பு செயலில் கூட, மரியா கடவுளின் வெளிப்படையான விருப்பத்தால் ஒவ்வொரு கறையிலிருந்தும் பாதுகாக்கப்பட்டார், “அவர் வெளிப்படையாக இதைச் செய்ய முடிந்தது மற்றும் அவ்வாறு செய்ய விரும்பினார். அவர் விரும்பியதால் அதைச் செய்தார்”
(ibid) என்று
எட்மெர் வாதிடுகிறார்.
எட்மெர்
இவ்வாறு வாதிட்டாலும், 12-வது நூற்றாண்டு இறையியல் வல்லுநர்கள் புனித அகுஸ்தினாரின் கருத்துகளைத் தமதாக்கிக்கொண்டனர். பாவத்தின் நிபந்தனைகள் எல்லா மனிதருக்கும் பொதுவானதொன்றாக இல்லையென்றால், கிறிஸ்துவால் கிடைக்கும் மீட்பானது அனைவருக்குமானதொன்றாக இருக்காது என்று வாதிட்டனர். மேலும், மரியா முதல் பாவம் அறியாதவராக இருந்திருந்ததால், அவர் மீட்கப்பட்டிருக்க மாட்டார் என்றும் கூறினார்கள். உண்மையில், மீட்பு என்பது பாவநிலையில் இருப்பவர்களை அதிலிருந்து விடுவிப்பதில்தான் இருக்கின்றது என்பதே அவர்களின் வாதமாகும்.
3. 12-வது நூற்றாண்டு
இறையியல் வல்லுநர்களைப் பின்பற்றி டன்ஸ்காட்டஸ் அமல உற்பவக் கோட்பாடு பற்றிய இந்த மறுப்புகளை வெற்றி கொள்வதற்கான வழியைக் கண்டுபிடித்தார். உண்மையான, நடுநிலையாளரான கிறிஸ்து, மரியாவை முதல் பாவத்திலிருந்து பாதுகாத்ததன் வழியாக மரியாவில் அவரின்
நடுநிலையாளருக்கான உயர் நிலைச் செயலைச் செய்தார்.
இவ்வாறு,
கிறித்தவ இறையியலில் பாதுகாத்தல் வழியாக மீட்பு என்கின்றதொரு கருத்துருவாக்கத்தைப் புகுத்தினார். இதன்படி மரியா இன்னும் கூட மிகவும் அதிசயிக்கத்தக்க வகையில் மீட்கப்பட்டார். பாவத்திலிருந்து விடுவிக்கப்பட்டதனால் அல்ல; மாறாக, பாவத்திலிருந்து பாதுகாக்கப்பட்டதனால் அவர் மீட்கப்பட்டார்.
இதன்
காரணமாகவே டன்ஸ்காட்டஸ் பிற்காலத்தில் ‘அமல உற்பவக் கோட்பாட்டின் வல்லுநர்’
என்று அழைக்கப்பட்டார். மேலும், இவரின் சிந்தனையானது இறையியல் வல்லுநர்களால் நன்கு வரவேற்கப்பட்டது. குறிப்பாக, 14-வது நூற்றாண்டின் தொடக்கம் முதலே பிரான்சிஸ்கன் சபையைச் சார்ந்தவர்கள் இக்கருத்தை ஏற்றுக்கொண்டனர். கி.பி. 1477-இல்
திருத்தந்தை நான்காவது சிக்ஸ்துஸால் அமல உற்பவ விழாவிற்கான திருப்பலியானது அங்கீகரிக்கப்பட்டபின் இக்கோட்பாடானது பல்வேறுபட்ட இறையியல் வல்லுநர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அமல
உற்பவம் பற்றிய திருவழிபாடு மற்றும் கோட்பாட்டின் இந்தக் குறிப்பிடத்தக்க வளர்ச்சியானது திரு அவையின் ஆசிரியம் மரியாவின் சிறப்பு அம்சங்களை வரையறுப்பதற்கான வழியைத் தயார் செய்தது. ஆனால், கோட்பாட்டுப் பிரகடனமானது பல நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான் செய்யப்பட்டது.
இது திரு அவையின் அடிப்படைச் சிந்தனையின் வழியாக நிகழ்ந்தது. கிறிஸ்துவின் தாயாகிய மரியா, அவரின் வாழ்வின் தொடக்கத்திலிருந்தே முற்றிலும் தூயவராக இருக்க வேண்டியிருந்தது.
4. மரியாவுக்கு
வழங்கப்பட்ட இந்தச் சிறப்புச் சலுகை, கிறிஸ்துவின் மீட்புச் செயலானது நம்மைப் பாவத்திலிருந்து விடுவிப்பதோடு மட்டுமல்லாமல், அதிலிருந்து நம்மைப் பாதுகாக்கவும் செய்கின்றது என்பதை உறுதி செய்வதையும் யாரும் கவனிக்க மறந்துவிடக்கூடாது. மரியாவில் முற்றிலுமாக இருந்த பாதுகாத்தல் பற்றிய இந்தப் பகுதியானது மனிதனைப் பாவத்திலிருந்து விடுவிப்பதிலும், அவனுடைய வாழ்வில் அதன் தாக்கத்தினை வெற்றி கொள்வதற்கான அருளையும் சக்தியையும் கொடுக்கும் கிறிஸ்துவின் மீட்பிற்கான தலையீட்டிலும் இருக்கின்றது.
அமல
உற்பவக் கோட்பாடானது அருளின் தாக்கத்தை வெளிப்படுத்துகின்றது. இவ்வகையில், மரியாவின் அமல உற்பவக் கோட்பாடானது மீட்பராம் கிறிஸ்துவின் அருளின் தாக்கத்தை மங்கச் செய்யாமல், வியக்கத்தக்க வகையில் வெளிப்படுத்த உதவுகின்றது.
ஆண்டவருடைய
அருளின் உதவியினால் கிறித்தவர்களின் வாழ்வில் எதை அடைவதற்கு அழைக்கப்பட்டார்களோ, அந்த முழுமையான புனிதத்துவத்தின் அடையாளமாகவும் (ஒப்பிடுக. இறைத்திட்டத்தில் திரு அவை, எண். 65) கிறிஸ்துவினால் முதலில் மீட்கப்பட்டவராகவும், ஒரு நொடி கூட தீமை மற்றும் பாவத்தின் சக்திக்கு உட்படாத சிறப்புச் சலுகையைப் பெற்றவராகவும் மரியாவைப் பார்க்கின்றனர்.
மூலம்:
John Paul II, Christ’s grace preserved Mary from sin, in
«L’Osservatore Romano», Weekly Edition in English, 12 June 1996, p. 11.
சென்ற இதழ் தொடர்ச்சி...
கிரகோரியன் திருப்பலி
என்றால் என்ன?
இறந்தோருக்காகத்
திருப்பலி ஒப்புக்கொடுக்கிற வழக்கம் ஆன்ம இளைப்பாற்றித் திருப்பலி, இறந்தோரின் ஆண்டு
நினைவு நாள் திருப்பலி ஆகியவற்றோடு முடிவுறுவது இல்லை; மாறாக, இறந்தவர்களுக்காக நவநாள்
திருப்பலி ஒப்புக்கொடுப்பது மற்றும் கிரகோரியன் திருப்பலி ஒப்புக்கொடுப்பது ஆகியவையும்
இதில் அடங்கும். இதில் நவநாள் என்பது தொடர்ச்சியாக ஒன்பது நாள்கள் திருப்பலியை இறந்தவரின்
ஆன்மாவிற்காக ஒப்புக்கொடுப்பதாகும்.
கிரகோரியன்
திருப்பலி என்பது ஒருவர் இறந்தவுடன் தொடர்ந்து 30 திருப்பலிகளை ஒப்புக்கொடுத்து, கழுவாய்நிலையில்
இருக்கிற ஓர் ஆன்மாவை விரைந்து விண்ணகம் சேர்த்திட இறைவனிடம் இறைஞ்சுகிற ஒரு பாரம்பரிய
முறையாகும்.
கிரகோரியன்
திருப்பலி என்ற இந்தப் பெயரானது கி.பி. 590 முதல் 604 வரை திருத்தந்தையாக இருந்த புனித
பெரிய கிரகோரியாரின் நினைவாகவே கொடுக்கப்பட்டது. ஏனெனில், ஆன்மாக்களைக் கழுவாய்நிலையில் இருந்து மீட்பதற்காக நிறைவேற்றப்படும் இந்தக் கிரகோரியன்
திருப்பலி என்ற இந்தப் பக்தி முயற்சி பரவ இவர் பெரும் தொண்டாற்றினார். இவர் உரோமை நகரில்
உள்ள புனித ஆண்ட்ரூ இல்லத்தில் இறந்த துறவியான யுஸ்துஸ் அவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக
30 நாள்கள் தொடர்ந்து திருப்பலி ஒப்புக்கொடுத்தார். முப்பதாம் நாள் திருப்பலி முடிவில்
இறந்த யுஸ்துஸ் தனது சக துறவிக்குத் தோன்றி, தான் கழுவாய்நிலையின் அணையா நெருப்பிலிருந்து
மீட்கப்பட்டதை அறிவித்தார் என்பதை புனித பெரிய கிரகோரியார் தனது ‘உரையாடல்கள்’ (Dialogues)
எனும் நூலில் குறிப்பிடுகிறார்.
இறந்தோருக்கான திருப்பலி
மற்றும் காணிக்கைகள் குறித்த திரு அவைச் சட்டப் பார்வை
திரு
அவைச் சட்ட எண். 945 கிறித்தவ நம்பிக்கையாளர்களின் கருத்துகளுக்காகத் திருப்பலி ஒப்புக்கொடுக்க
அதிலும் குறிப்பாக, காணிக்கை எதுவும் பெறாமல் வறியவர்களுக்காகத் திருப்பலி ஒப்புக்கொடுக்க
மிகவும் அறிவுறுத்துகிறது. இந்த ஆண்டு திருப்பலி குறித்து அருள்பணியாளர்களுக்கான வத்திக்கான்
நகரத்திலிருக்கும் திருப்பீடப் பேராயம் வெளியிட்ட ‘secundum Aroatum’ என்ற ஆவணம் ஏழைகளுக்காக
அவர்களுடைய கருத்துகளுக்காக அவர்களிடம் எந்தவிதத் திருப்பலிக்கான கட்டணமும் பெறாமல்
அருள்பணியாளர்கள் திருப்பலி ஒப்புக்கொடுப்பதன் தேவையையும் அடிக்கோடிட்டுக்காட்டியுள்ளது.
இது ஏழைகள், அவர்கள் குடும்பத்திலிருந்து இறந்துபோன அவர்களுடைய உறவினர்களுக்காக அருள்பணியாளர்கள்
திருப்பலி ஒப்புக்கொடுப்பதன் தேவையை உணர்த்துகிறது.
திரு
அவைச் சட்ட எண். 948, ‘தனிப்பட்ட காணிக்கைகள் சிறியதாக இருந்தாலும், எத்தனை கருத்துகளுக்காக
அளிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டதோ அத்தனை கருத்துகளுக்காகத் தனிப்பட்ட திருப்பலிகள்
ஒப்புக்கொடுக்க வேண்டும்’ எனவும் விளக்குகின்றது. இது ஒரு மேல்வரிச்சட்டம்
என்றாலும், திருப்பலியின் விலைமதிப்பற்ற தன்மையினாலும் குறைந்து வரும் அருள்பணியாளர்களின்
எண்ணிக்கைக்கு மத்தியில் பெருகிவரும் மக்களது ஆன்மிகத் தேவைகளைக் கருத்தில் கொண்டு
திரு ஆட்சிப்பீடமானது 1991-ஆம் ஆண்டு ஓர் ஆணையை வெளியிட்டது. Mos iugiter (ííS 83 (1991) 436-446) என்று அழைக்கப்பட்ட திரு ஆட்சிப்பீடத்தின் அந்த ஆணை திரு
அவைச் சட்ட எண் 948 வரையறுத்த கடுமையான சட்டத்தைத் திருத்தியமைத்து பின்வரும் நிபந்தனைகளின்
அடிப்படையில் திருப்பலியில் திரள்தொகுப்பு கருத்துகளுக்கு அனுமதி வழங்கியது:
1.
கூட்டுத்திருப்பலி கருத்துகள் (pluri-intentioral mass
of collective mass Intentiobs)
கொண்டாடப்படுவதற்கு முன்பு நன்கொடையாளர்களுக்கு அவர்களின் திருப்பலிக்கான கருத்துகள்
ஒரே திருப்பலியில் இணைக்கப்படுவது குறித்து தெரிவிக்கப்பட்டு அவர்களது ஒப்புதலைப் பெறுதல்
வேண்டும்.
2. இத்தகைய திருப்பலிகள் நடைபெறும் நேரம், இடம் கண்டிப்பாக இத்தகைய திருப்பலியை ஒப்புக்கொடுக்க
விரும்புகிறவர்களுக்கு அறிவிக்கப்படல் வேண்டும். அதேபோல இத்தகைய கூட்டுக் கருத்து திருப்பலிகளின்
எண்ணிக்கை வாரத்திற்கு இரண்டுக்கு மிகாமல் பார்த்துக்கொள்ளுதல் வேண்டும்.
3.
திருப்பலியை நிறைவேற்றுபவர் ஒரு திருப்பலிக்கு உரிய காணிக்கையைத் தனக்கென எடுத்துக்
கொண்டு மீதமிருக்கிற கருத்துகளை ஆயர் வரையறுத்துள்ள நோக்கத்திற்காக அனுப்புதல் வேண்டும்
என்றெல்லாம் வரையறுத்துள்ளது.
இறந்த ஆன்மாக்களுக்கான
புகழ்பெற்ற செபம்
புனித
ஜெர்த்ரூத் அவர்களின் செபம்தான் இறந்தவர்களுக்காகக் கூறப்படும் செபங்களில் மிகவும்
பிரபலமான செபம். புனித ஜெர்த்ரூத் அம்மா 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பெனடிக்டைன்
சபையைச் சேர்ந்த துறவி மற்றும் இறை உணர்வாளர். இந்த இறைவேண்டலை பக்தியோடு இறைவேண்டல்
செய்கிற ஒவ்வொரு முறையும் 1000 ஆன்மாக்கள் கழுவாய்நிலையிலிருந்து விடுவிக்கப்படும்
என்று இயேசு கிறிஸ்துவே இவருக்கு வாக்குறுதி தந்ததாகக் கூறப்படுகின்றது.
அந்த
இறைவேண்டல் பின்வருமாறு: ‘என்றென்றும் வாழும் கடவுளே! எங்கள் ஆண்டவரும் உமது அன்பு
மகனுமாகிய இயேசு கிறிஸ்துவின் விலை மதிப்பில்லாத் திரு இரத்தத்தை, இந்த நேரத்தில் ஒப்புக்கொடுக்கப்படும்
எல்லாத் திருப்பலிகளோடும் சேர்த்து, கழுவாய்நிலையில் உள்ள எல்லா ஆன்மாக்களுக்காகவும்,
உலகெங்கும் உள்ள பாவிகளுக்காகவும், திரு அவையில் உள்ள பாவிகளுக்காகவும், எந்தன் இல்லத்திலும்
குடும்பத்திலுள்ள பாவிகளுக்காகவும் ஒப்புக்கொடுக்கிறேன். ஆமென்.’
குடும்ப
உறுப்பினர்களோடு இணைந்து ஒரு பத்து மணி செபமாலையாக புனித ஜெர்த்ரூத் அம்மாளின் இந்த
அற்புதமான செபத்தை இறைவேண்டல் செய்வது ஓர் அலாதியான அனுபவத்தையும் ஆறுதலையும் நமக்குப்
பெற்றுத்தரும்.
இறந்து
கழுவாய்நிலையில் இருக்கிற நம் நேசத்துக்குரியவர்களால் எந்த ஒரு பிறரன்புச் செயலும்
செய்ய முடியாது. எனவே, அவர்களின் மீட்புக்காக
உயிரோடு இருக்கிற நாம் பிறரன்புச் செயல்களைச் செய்யலாம். நமது செயல்கள் அவர்களின் பாவங்களுக்குப்
பரிகாரமாக அமையும். இவர்களுக்காக இறைவேண்டல் செய்வது மிகச் சரியான வழி, கிறிஸ்துவின்
தியாகத்தை உள்ளடக்கிய திருப்பலியே ஆகும்.
ஓர்
அருள்பணியாளர் திருப்பலியை ஒரு குறிப்பிட்ட கருத்துக்காக ஒப்புக்கொடுக்கிறபோது, அது
நாம் அந்த நபர்மீது கொண்டிருக்கிற அன்பில் வேரூன்றி, கடவுளிடம் அளிக்கப்பட்ட கிறஸ்துவின்
நிறைவான இறைவேண்டலாக மாற்றம் பெறுகின்றது. இறைவேண்டல், ஒறுத்தல் முயற்சிகள், தானம்
செய்தல் போன்ற பல காரியங்களில் நாம் ஈடுபடலாம் என்றாலும், கிறிஸ்துவின் தியாகப்பலிக்கு
ஈடாக பலன் தரக்கூடிய ஒன்று இருக்க முடியாது. நம் நேசத்துக்குரியவர்கள் இறந்துபோகிறபோது
அவர்களுக்காக ஒப்புக்கொடுக்கிற திருப்பலியையும் இறைவேண்டலையும்விட ஆறுதலையும் அமைதியையும்
எந்த ஓர் அனுதாப அட்டையோ அல்லது சூட்டப்படும் மலர்களோ கொடுத்துவிட முடியாது. எனவே,
திருப்பலி மற்றும் இறைவேண்டல்களை ஒப்புக்கொடுப்பதன் வழியாக அவர்கள் நிறை வாழ்வைப் பெற
நாம் அவர்களுக்கு உதவி செய்வோம்.
தேனி மாவட்டத்திலுள்ள தே. சிந்தலைச்சேரி என்னும் கிராமத்தில் 09-09-1948-இல் பிறந்தேன். என் அப்பா திரு. சவரிமுத்து பள்ளி ஆசிரியராகவும், அஞ்சலக மேலதிகாரியுமாக இருந்தார். என் அம்மா திருமதி. சலேத்தம்மாள் ஓர் இல்லத்தரசி. எனக்கு இரண்டு அண்ணன்கள், ஓர் அக்கா, ஒரு தம்பி மற்றும் ஒரு தங்கை. என் குடும்பத்தில்தான் நான் இன்றுவரை பின்பற்றும் நல்ல மதிப்பீடுகளையும் நல்ல பண்புகளையும் கற்றுக்கொண்டேன்.
என்னைச் செதுக்கிய
சிற்பிகள்
எனது
வாழ்க்கை உயர்ந்த குறிக்கோளுடன் அமைய உதவிய மூன்று முக்கியமானவர்களை இங்குப் பெருமிதத்துடன் குறிப்பிட விரும்புகின்றேன்.
1. அருள்தந்தை மாத்யூ
டி
முட்டம்
சே.ச.
பல ஆண்டுகள் சிந்தலைச்சேரியில் பங்குத் தந்தையாகப் பணியாற்றியவர். நான் இயேசு சபைக் குருவாக வேண்டும் என்ற கனவுக்கு வடிவம் கொடுத்தவர் தந்தை முட்டம் அவர்கள்தான்.
2. திருச்சி
புனித வளனார் கல்லூரியின் அன்றைய தாவரவியல் துறையின் தலைவர் அருள்தந்தை
கே.எம்.
மாத்யூ,
சே.ச.
அவர்கள். நான் தாவரவியல் பாடத்தை விரும்பிப் படித்ததற்கும், அதில் பல விருதுகள், பரிசுகள்,
புதிய கண்டுபிடிப்புகள் என உலக அளவில்
புகழ் பெற்றிருப்பதற்கும் அன்று தந்தை கே.எம். மாத்யூ
அவர்களிடம் நான் கற்றப் பாடங்களே காரணம்.
3. எனது
இன்றைய ஆய்வு வாழ்க்கைக்கு அடித்தளமிட்ட மற்றொரு மறக்க முடியாத மனிதர் பேராசிரியர் பாபு அவர்கள். டெல்லி பல்கலைக்கழகத்தில் தாவரவியலில் முனைவர் பட்ட ஆய்வுக்கு வழிகாட்டியாக அமைந்தவர்தான் முனைவர் பாபு. உடன் பணியாற்றுபவர்களுக்கும் ஆய்வு மாணவர்களுக்கும் உற்ற நண்பரைப்போல விளங்கியவர். எனது முனைவர் பட்ட ஆய்வு மிகச்சிறப்பாக அமையக் காரணம் பேராசிரியர் பாபு அவர்கள் எனக்களித்த அளவற்ற ஆதரவு, வழங்கிய பங்களிப்பு, என்பால் காட்டிய அன்பு, அக்கறை மற்றும் நட்புறவு ஆகியவைதாம். அவரிடம் நான் கற்றுக் கொண்ட யுக்திகள் எண்ணற்ற மாணவர்களை ஆய்வில் ஈடுபடுத்த உதவின.
என்னை வழிநடத்திய
கனவு
சிறுபிள்ளையாக
இருக்கும்பொழுதே தினமும் காலை 5.30 மணி திருப்பலியில் தவறாது கலந்துகொள்ள ஆரம்பித்தேன். அதேபோன்று, மாலை நேர செப வழிபாட்டிலும் தவறாது கலந்துகொள்வேன். குருத்துவ வாழ்வில் இணைந்து இறைவனின் அருள்பெற்று ஏழை, எளிய மக்களுக்குச் சேவை புரிய வேண்டும் என்ற எண்ணம் எனது எட்டாவது வயதிலேயே எனக்கு ஏற்பட்டது.
அந்த
வயதில் எனக்கு ஒரு கனவு தோன்றியது. அந்தக் கனவு இரண்டு நாள்கள் தொடர்ந்தது. முதல் நாள் கனவு கீழ்வருமாறு இருந்தது. நான் எனது அப்பாவோடு ஊரில் உள்ள நடுத்தெருவில் நடந்து சென்றேன். அப்படி நடந்து சென்ற பொழுது எனது அருகில் அன்னை கன்னி மரியா திடீரென வந்து கூடச் சேர்ந்து நடந்தார்கள். பின்பு தெருவின் முடிவை எட்டிய பொழுது உலக உருண்டை எனக்கு முன் தென்பட்டது. இத்தோடு முதல் நாள் கனவு முடிந்துவிட்டது.
பின்பு
அதன் தொடர்ச்சியாக இரண்டாம் நாள் கனவு தொடர்ந்தது. நானும், அன்னை மரியாவும் அந்த உலகை உருண்டை மேல் நடந்து செல்கிறோம். என் அப்பா என்னோடு வரவில்லை. உச்சியை அடைந்தபொழுது சிலுவையில் அறையுண்ட இயேசு காட்சி அளிக்கிறார். உடனே திரும்பிப் பார்த்தேன், அன்னை மரியாவைக் காணவில்லை. நானும் இயேசுவும் மட்டும்தான் அங்கிருந்தோம்.
அன்றிலிருந்து
இறைவன் என்னிடம் ஏதோ எதிர்பார்க்கின்றார் என்று அதனைத் தேடிக் கண்டுபிடிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டேன். குறிப்பாக, இறைவனோடு செபம் வழியாகப் பேசுவது எனது அன்றாடப் பழக்கமாகிவிட்டது.
அன்றாடம் நினைவுகூரும்
இறைவார்த்தைகள்
“உன் செல்வம் எங்குள்ளதோ, அங்கேதான் உன் இதயமும் இருக்கும். இந்த உலகில் நீ சேர்த்து வைப்பதைப்
பூச்சிகள் வந்து அழித்துவிடும். ஆனால், விண்ணுலகில் நீ சேர்த்து வைப்பதை
எவராலும் அழிக்க முடியாது”
என்ற இறைவார்த்தைகள் நான் எட்டு வயது சிறுவனாக இருந்தபொழுதே எனது மனத்தில் ஆழப் பதிந்துவிட்டன. இவையே என்னை இன்றும் வழிநடத்துகின்றன.
அதேபோன்று
“வீண், முற்றும் வீண்; எல்லாமே வீண்-இறைவனை நேசிப்பதையும் அவருக்குப் பணிவிடை செய்வதையும் தவிர...” என்ற இறைவார்த்தைகளும் இளம் வயதிலேயே என் உள்ளத்தில் வேரூன்றி எனது வாழ்க்கைப் பாதையைச் சரியான விதத்தில் அமைத்துக்கொள்ள பெரிதும் உதவின. இன்றும் இவையே எனக்கு ஒளியாய் இருக்கின்றன.
இந்தோனேசியாவில் உள்ள டிரோஜா என்னும் பழங்குடியினர், பல நூற்றாண்டுகளாகத் தங்கள் குடும்பத்தில் இறந்தவர்களின் உடலைப் பதப்படுத்தி அலங்காரம் செய்து, தங்கள் வீட்டில் வைத்து வாழ்ந்து வருகின்றனர். இறப்பு என்பது, வாழ்க்கையில் நீண்டதொரு பயணம் என்று நம்புகின்றனர். சிதிலமடைந்த உடல்களை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மீண்டும் சீரமைத்து, புத்தாடை உடுத்தி அழகுபடுத்தி, முக்கியமான விழாக்களின்போது உணவும் படைக்கின்றனர். அவர்களின் வாழ்க்கைத் துணை இறக்கும்வரை இல்லங்களில் வைத்துப் பாதுகாக்கப்படுகின்றனர்.
இறந்தவர்களின்
உடல்களுடன் அவ்வப்போது குடும்பமாக உரையாடி தங்கள் உறவைப் புதுப்பித்துக்கொள்கின்றனர்.
தங்கள் குடும்பத்தில் புதிதாகப் பிறந்தவர்களிடம் அறிமுகம் செய்து, குடும்பத்திற்காக அவர்கள் செய்த தியாகங்களையும் எடுத்துக்கூறி, புதிய தலைமுறையினரின் வாழ்வுக்குக் கலங்கரை தீபமாகச் சித்தரிக்கப்படுகின்றனர். இறந்தோரின் ஆவி, அவரது உடல் ஆடம்பரத்துடன் மறுவாழ்வுக்காகப் புதைக்கப்படும்வரை அவர்களை வழிநடத்துவதாகவும் நம்புகின்றனர். டிரோஜா பழங்குடி மக்களின் சிந்தனைப்படி இறப்பு இழப்புமல்ல; முடிவுமல்ல! நிறைவான, நிலைவாழ்வுக்கான வழியாகும்.
மரணத்தைப்
பற்றி வெகுஜன மக்களின் பார்வை: மனித வாழ்வின் நிலையாமையை ஒரு பழமொழி இவ்வாறு படம்பிடித்துக் காட்டுகிறது:
‘கண் திறந்தால் பிறப்பு!
கண்
மூடினால் இறப்பு!
கண்ணிமைப்
பொழுதுதான் வாழ்வு!’
இரத்தினச்
சுருக்கமாக, கருவறையிலிருந்து இறங்கி கல்லறை நோக்கிப் பயணிப்பதுதான் வாழ்க்கை. நம் வாழ்வு நிலையில்லாதது; நீர்க்குமிழி போன்றது; முடியப்போகும் பயணத்தைப் போன்றது; நிழலைப்போல மறைவது. நமக்கும் ஒருநாள் இல்லாத மறுநாள் வரும். ஒவ்வோர் இறப்பு ஊர்வலமும் நமது இறுதி ஊர்வலத்தின் ஒத்திகை என்று எத்தனையோ வகைகளில் விளக்கினாலும், அதை ஏற்றுக்கொள்ள நமது மனது மறுக்கின்றது.
‘மரணம் மற்றவர்களுக்குத்தானே ஒழிய, நானோ சாகா வரத்துடன் வந்திருக்கிறேன்’ அல்லது
‘இப்போது எனக்கு எதுவும் நடக்காது’
என்ற மனநிலையில்தான் நாம் வாழ்கின்றோம். வாழ்க்கை என்பதே ஒரு நீண்ட தூக்கத்தில் நாம் காண்கிற தொடர் கனவு. மரணம்தான் அதன் விளிம்பு என்கிறது ஜென் தத்துவம். அதனால் பயமெல்லாம் தேவையில்லை. பிறக்கும்போதே மரணம் நிச்சயம் என்பது எழுதப்படாத நியதியாகும். எனவேதான் ‘உறங்குவது போலும் சாக்காடு உறங்கிவிழிப்பது போலும் பிறப்பு’…
என்கிறார் திருவள்ளுவர்.
எப்போதோ பயின்றது
வாழ்க்கை,
மரணத்தைப் பார்த்துக் கேட்டதாம்: ‘என்னை மக்கள் ஏன் நேசிக்கிறார்கள்? உன்னை ஏன் வெறுக்கிறார்கள்?’…அதற்கு மரணம் சொன்னதாம்: ‘ஏனெனில்,‘நீ ஓர் அழகான
பொய்; நான் ஒரு கசப்பான உண்மை.’
எவ்வித
அச்சமுமின்றி ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் வானில் பறக்கும் மனிதன், ஆறடி ஆழ்குழியைக் கண்டதும் அஞ்சுகிறான். மனித வாழ்வு நிலையற்றது என்று தெரிந்திருந்தும் ஓய்வின்றி ஓடியோடி உழைத்துச் செல்வம் சேர்க்கின்றான். ஏக்கர் ஏக்கராக இடம் வாங்கப்போகிறேன் என்று எண்ணி மகிழ்ந்தவனைப் பார்த்துச் சுடுகாடு சிரித்துக்கொண்டு, ‘உன்னையே வாங்கப்போவது நான்தானே நண்பா!’… என்றதாம். ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா’…
என்பது நிதர்சனமான உண்மை.
ஒருவேளை
மருத்துவத்தின் அபார வளர்ச்சியால் வாழ்க்கையைக் கொஞ்ச காலம் நீடித்து இறப்பை ஒத்திப்போடலாமே ஒழிய, அதை நாம் தவிர்க்க முடியாது. இதற்காக மரணத்தைக் கண்டு நாம் அஞ்ச வேண்டியதில்லை. வாழ்பவர்களைவிட இம்மண்ணில் வாழ்ந்து இறந்தவர்கள்தாம் அதிகம். ஒருநாள்தான் தனது ஆயுள் என்பதால், ஈசல் சோகத்திலும் இருப்பதில்லை. நூறாண்டு காலம் என்பதால் ஆமை தலைக்கனத்துடன் திரிவதுமில்லை.
கி.மு. 5-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சாக்ரடீஸ், தான் விஷம் வைத்துக் கொல்லப்படுவதற்கு முன் தன்னைக்
காப்பாற்ற வந்த நண்பன் கிரீட்டோவிடம், “மரணத்தைப் பற்றிக் கவலைப்படாதே; நீ இருக்கும் வரை
மரணம் வருவதில்லை; அது வரும்போது நீயே இருக்கப்போவதில்லை. பிறகு ஏன் கவலை? நான் இறந்துவிடப் போகிறேன் என்று எவரும் எனக்காகக் கவலைப்பட வேண்டாம். என் உடலை எரிப்பதா? புதைப்பதா? என்ற குழப்பமும் வேண்டாம். அது வெறும் உணர்வற்ற சடலம்தானே! அதை என்ன செய்தால் என்ன?…” என்று சாக்ரடீஸ் கூறுகின்றார்.
ஓர்
உலகப் புகழ்பெற்ற லெபனான் நாட்டு பன்முகத்திறமை வாய்ந்த எழுத்தாளர் கலீல் ஹிப்ரான், “வாழ்க்கையைச் சரியாக வாழத் தெரிந்தவர்கள் மரணத்தையும் சரியாகப் பார்க்கிறார்கள். பகலில் பார்க்கத் தெரியாத ஆந்தைக்கு ஒளியின் உன்னதம் எப்படிப் புரியாதோ, அப்படி வாழ்வையே சரியாக வாழாதவர்களுக்கு மரணத்தின் உன்னதம் எப்படிப் புரியும்?” என்கிறார்.
எதிர்மாறாக,
மரணத்தைப் பற்றிச் சிந்திக்கும்போது மோரி என்னும் எழுத்தாளர் மரணத்தின் அர்த்தத்தையும் அவசியத்தையும் பின்வருமாறு எடுத்தியம்புகின்றார்: “நீ இறப்பதற்குக் கற்றுக்
கொண்டாயானால், வாழ்வது எப்படி என்று கற்றுக் கொள்வாய். பிறப்பைப்போல இறப்பும் ஒன்றின் தொடக்கமும் தொடர்ச்சியும் ஆகும். உதிர்ந்த சருகு வழிவிட்ட இடத்திலிருந்து புதிய தளிர் துளிர்ப்பதுபோல, மரணத்திற்குப் பிறகும் மண்ணகத்தில் நமது வாழ்வு தொடர்கின்றது. இறப்பு என்னும் வாயிற்படி வழியாக, அது நிலைவாழ்வில் நிறைவு பெறுகிறது என்பதைப் பல்வேறு கோணங்களிலிருந்து பார்க்க முயலும்.”
மண்ணகத்தில் தொடர்
வாழ்வுக்கான
வித்துகள்
1) ஒவ்வொருவரும்
இறைவனின் படைப்புத் திட்டத்தில், உடன் படைப்பாளியாகச் செயல்பட்டுக் குழந்தையை உருவாக்குகின்றோம். அதற்கு இரத்தமும் - சதையும், இருதயமும் - எலும்பும் கொண்ட உடலை மட்டும் கொடுப்பதில்லை; அக்குழந்தை பெற்றோரின் பண்புநலன்களையும் உள்வாங்கி, அவர்களின் நகலாக, வாரிசாகத் தோன்றுகின்றது. பெற்றோர் தங்கள் மறைவிற்குப் பிறகும் தங்கள் பண்புகள், குணநலன்களுடன் தங்கள் வாழ்வைத் தங்கள் வாரிசுகள் வழியாகத் தொடர்கின்றனர். பிள்ளைகள் வழியாகவே ஒருவரது தகைமை வெளிப்படும் என்கின்றது சீராக்கின் ஞானம் (11:28).
2) ஒருவன்
பெயரளவுக்குக் கிறித்தவன் என்பதால், அவனுக்குப் பெயரும் புகழும் வாழ்வும் வந்துவிடப் போவதில்லை. நற்செய்தி விழுமியங்களின் அடிப்படையில் இயேசு கூறியது போன்று, அன்புக் கட்டளைக்குச் செயல் வடிவம் கொடுக்கும்போது (லூக் 10:27-28) நாம் இறந்தும் வாழ்கிறோம். இதற்கு அன்னை தெரசா சிறந்த எடுத்துக்காட் டாகும். அதேபோன்று, அண்மையில் மறைந்த ரத்தன் டாட்டா, தான் பெற்ற செல்வத்தை ஏழைகள், அனாதைகளுக்கு விட்டுச்சென்றதால், இறந்தும் இறவாது அவர்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
திரு அவையின்
கண்ணோட்டத்தில்
ஒவ்வோர்
ஆண்டும் நவம்பர் 2-ஆம் நாள் நம்மை விட்டுப் பிரிந்து சென்ற நமது பாசமிகு சொந்தங்களை எண்ணி அவர்களுக்காகத் திருப்பலி ஒப்புக்கொடுத்து மனித பலவீனத்திலே அவர்கள் செய்த தவறுகளைக் களைந்து, நித்தியப் பேரின் பத்தில் இறைவனுடன் இணைந்து வாழவேண்டுகிறோம். “நாம் இவ்வுலகில் குடியிருக்கும் உடலாகிய கூடாரம் அழிந்து போனாலும் பெருமூச்சுவிடுகிறோம்”… (2கொரி
5:12); “நமக்கோ விண்ணகமே தாய்நாடு”
(பிலி 3:12); “நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே, நான் இறந்தால் அது எனக்கு ஆதாயமே. உயிர்நீத்துக் கிறிஸ்துவோடு இருக்க வேண்டும் என்பது என் ஆவல்”
(பிலி 1:21-23).
ஒருவனின்
பிறப்பைப் பற்றிக் கணிக்கத் தெரிந்த நமக்கு மரணம் எப்போது வரும் என்று தெரியாது. திருடனைப்போல இரவில் வரும் - மானிட மகனைச் சந்திக்க நாம் ஆயத்தமாய் இருக்க வேண்டும் என்று திருவிவிலியத்தில் பல்வேறு இடங்களில் காண்கிறோம். மேலும், புனித யோவான் நற்செய்தியில், “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே; என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வர்”
(யோவா 11:25) என்று இயேசு கூறுகிறார். தம் இறப்பின் வழியாக நமது சாவை அழித்து, தம் உயிர்ப்பினால் வாழ்வு அளிப்பவர் (2திமொ 1:10) இயேசு என இறந்தோருக்கான மன்றாட்டில்
செபிக்கிறோம்.
எவ்வாறு
பாம்பின் விஷத்தைக் கொண்டு விஷத்தை அகற்றுகின்றோமோ, முள்ளை முள்ளால் எடுக்கின்றோமோ அதுபோல கிறிஸ்துவின் மரணம் நம் மரணத்தை அழித்து, நமக்கு நிலைவாழ்வு அளிக்கின்றது. நிலைவாழ்வு என்பது இறைவனை ஏற்று அவருடன் வாழும் அன்புறவாகும். எனவே, “உன்னைப் படைத்தவரை நீ மறவாது, நீ
முடிவற்ற ஓய்விற்குச் செல்லும் முன்னும், கடவுள் தந்த உயிர் அவரிடமே திரும்பும் முன்னும் உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை” என்கிறார் சபை உரையாளர் (12:6-7).
முடிவில்லாத
தண்டனை என்பது இறைவனின் அன்பைப் புறக்கணித்து, அவருடன் கொண்டிருந்த உறவைத் துண்டித்துக் கொள்வதாகும். இரும்பை அதன் துருவைத் தவிர, வேறு யாரும் அழிக்க இயலாது. அதுபோல, உனது எண்ணம், சிந்தனை, செயலைத் தவிர யாரும் உன்னை அழிக்க முடியாது.
வேறு
வார்த்தைகளில் கூறினால், நரகம் என்பது இறைவன் இல்லாத இருளடைந்த உலகமே தவிர வேறில்லை. நிலைவாழ்வை நமதாக்கிக்கொள்வதும் புறக்கணிப்பதும் நம் கையில்தான் உள்ளது.
முடிவாக,
இம்மண்ணக வாழ்வும் விண்ணக வாழ்வும் இரட்டைக் குழந்தைகளாகும். ‘நீ பிறந்ததும் அழுதாய்
மகனே! ஆனால், பிரபஞ்சம் மகிழ்ந்தது. உன் வாழ்க்கையை நினைத்து மற்றவர் அழ, நீ மகிழ்வோடு சாதல்
வேண்டும்’… என்கிறது
ஒரு பழமொழி. ஒவ்வொருவருக்கும் இறைவன் பரிசாக வழங்கிய வாழ்வை அர்த்தமுள்ள வகையில் வாழ்ந்து, நிலைவாழ்வை நோக்கிப் பயணிப்போம்.
ஓர்
அருமையான பழமைவாய்ந்த கதையுடன் இக்கட்டுரையை நிறைவு செய்ய விரும்புகிறேன்: ஒரு மகாராஜா ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் மங்கள இசையுடன் தனது ஈமச்சடங்குகளைத் தானே கொண்டாடுவார். கூடவே ‘நான் இந்த நாளை முழுமையாக வாழ்வேன்’
என்று செபிப்பாராம்.
இளவரசன்
தன் தந்தையிடம், ‘ஏனப்பா நீங்கள் இறக்கும் முன்னே ஒவ்வொரு நாளும் உங்கள் ஈமச்சடங்கை நீங்களே செய்கிறீகள்?’ என்று கேட்டானாம்.
அதற்கு
அவர், ‘மகனே, இந்த மகாராஜா செய்வது என்னவென்றால், தன் நிலையாமையை நித்திய வாழ்க்கையுடன் இணைத்துக்கொள்கிறார். இதனால் ஒவ்வொரு நாளும் இன்றே அவரது இறுதி நாள் என்பதுபோல வாழ்வார்’…
என்றாராம்.
என்ன
நேயர்களே, இந்த மகாராஜாவைப்போல நாமும் வாழ்வோமென்றால், நமக்கு இம்மையிலும் மறுமையிலும் இறப்பு என்பதே இல்லை.