ஒருநாள் ஒரு நகர்ப்புற ஆலயத்தில் மாலைத் திருப்பலி நிறைவேற்றிவிட்டு, கோவிலில் இருக்கைகளில் ஒன்றில் அமர்ந்து என்னிடம் செபிக்கக் கேட்டவர்களுக்காக வேண்டிக் கொண்டிருந்தேன். அத்தருணத்தில் ஒருவர் பீடமுற்றத்தில் சோடித்து வைக்கப்பட்டிருந்த இயேசுவின் உயிர்த்த சுரூபத்தின் முன்நின்று பக்தியோடு செபித்துவிட்டு, இயேசுவின் பாதம், கரங்கள் என்று ஒவ்வொரு பாகமாகத் தொட்டு கும்பிட்டுக் கொண்டிருந்ததால் பராக்குக்கு ஆளானேன். பழைய மனிதனுக்குரிய, பாவ நிலையைக் களைந்துவிட்டு புதிய மனிதனாகப் பாஸ்கா காலத்தில் மாறிய அவர், புது மனிதனாக வாழ முற்பட்டிருக்கிறார் என நினைத்துக் கொண்டேன்.
அவர்
வெளியே சென்றபின், நான் மாதா கெபியின் முன்சென்று செபித்துவிட்டுத் திரும்பும்போது, அதே ஆள் கோவிலின் முன்பு நிறுவப்பட்டிருந்த பொன், வெள்ளி, உலோகத் தகடு சுற்றப்பட்டு ‘பளபள’ என மின்னொளியில் மிளிர்ந்த
கொடிமரத்தையும் மாறி மாறித் தொட்டுக் கும்பிட்டு விட்டு, தன் பையனையும் அவ்விதம் செய்யும்படி பணித்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எதை? ஏன்? எதற்காகக் கும்பிடுவது? என்ற விஷயத்தில் இன்னும் பழைய மனிதனாகவே இருக்கிறாரே? என வருந்தினேன். ஆனால்,
அவரிடம் உடனே என்ன, எப்படிச் சொல்வது? என்று வகையறியாமல் அமைதியாக குருவின் இல்லத்துள் சென்றுவிட்டாலும், இது பற்றிய உண்மை எதுவாக இருக்கும் என்ற சிந்தனை என்னை உறுத்திக் கொண்டே இருந்தது.
நமது
வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற சிலருக்கு ‘வணக்கம்’ எனக் கூறி வாழ்த்துகிறோம் அல்லது மிகவும் மரியாதைக்குரிய ஒருவராக இருந்தால் கைகூப்பி கும்பிடுகிறோம். நமக்கும் மற்றவர்கள் இவ்விதமே செய்கின்றனர். கும்பிடுகிற செயல் மட்டும் ஏதாவது ஒருவகையில் ஆன்ம வாழ்வோடு தொடர்புடையதாக இருக்கும் அல்லது மிகவும் எளியவர் ஒருவர் வசதி படைத்தவரிடம் உதவி எதிர்பார்த்துச் செய்கின்ற செயலாக இருக்கும். ஆனால், காலில் விழுந்து கும்பிடுவது தவிர, உயிருள்ள மனிதரை யாரும் தொட்டுக் கும்பிடுவது இல்லை.
ஆனால்,
ஓர் உயிரற்றப் பொருளுக்கு வணக்கம் செலுத்துவதோ, அதை கைகூப்பிக் கும்பிடுவதோ சில நேரங்களில் மட்டுமே. உதாரணமாக, நமது தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்துவதும், திருவுருவங்களைக் கும்பிடுவதும்! ஒன்று, நாட்டுப்பற்றை, தேசபக்தியை வெளிப்படுத்தும் செயல். மற்றொன்று, புனிதர் அல்லது புனிதைமீது நம் பக்தியைக் காட்டும் செயல். அதுபோல புனித இடங்கள் என நாம் நம்புகிற
இடங்களிலிருந்து கொண்டு வருகின்ற பொருள்களை வணக்கத்தோடு, மறையாட்டியோடு வைத்துக் கொள்கிறோம். அவை உணவுப்பொருளாய் இருந்தால் அவைகளை மரியாதையோடு உண்டு மகிழ்கிறோம். (உ.ம்) திருவிழா
- மிட்டாய்.
அதேநேரத்தில்
தேசியக் கொடியைக் கம்பத்தில் பறக்கவிட்டால்தான் வணக்கம் செலுத்துவோமே தவிர, அதை மடித்துப் பெட்டிக்குள் வைத்தபின் வணக்கம் செய்வதில்லை. அதுபோல, கொடிக்கு மட்டும்தான் வணக்கமே தவிர, கொடியைத் தாங்கும் கொடிமரத்திற்கோ, கொடிக் கம்பத்திற்கோ யாரும் (salute) வணக்கம் செலுத்துவதில்லை. கொடிமரம்/கம்பம் முக்கியத்துவம் பெறுவது அந்த மரத்திலோ அல்லது கம்பத்திலோ இருந்து கொடி எப்பொழுது பறக்கிறதோ அப்பொழுது மட்டும்தான்! அதுவும் கூட திரு விழாக் கொடியோ, தேசியக் கொடியோ, கட்சிக்கொடியோ, மன்றக்கொடியோ பறக்கின்றது என்றால், அந்தக் கொடிக்கு மட்டும்தான் வணக்கமும் கும்பிடுவதும் இருக்குமே தவிர, கொடிமரத்திற்கோ/கம்பத்திற்கோ அல்ல; ஏறக்குறைய பூவும் நாரும் போலதான்.
அண்மைக்காலத்தில்
கத்தோலிக்கக் கிறித்தவர்களும் பிற மதத்தவரைப் பின்பற்றி கொடிமரத்திற்கும் கூட மிக அதிகமாக முக்கியத்துவம் கொடுத்து, அது பயன்படும் திருவிழா நாள்களில் மட்டுமல்லாமல், மற்ற நாள்களிலும் கொடியில்லாதபோதும் அந்த மரத்திற்கு / கம்பத்திற்கு வணக்கம் செலுத்துவது மட்டுமல்ல, அதைச் சுற்றி வருவதும் கும்பிடுகிற பழக்கமும் நமது மக்களில் சிலரிடையே புகுந்திருப்பது ஆச்சரியத்திற்குரியது மட்டுமல்ல, வருத்தத்திற்கும் உரியது! அதோடு ஒருவரைப் பார்த்து ஒருவர், ஒவ்வொரு கோவிலிலும் இக்கொடிமரத்தை பொன், வெள்ளி, உலோகத் தகடுகளால் அழகுப்படுத்திப் பெருமை தேடுவதோடு, பரிதாபத்திற்குரிய வகையில் அந்த மரத்தைத் தொட்டு கும்பிடவும் ஆரம்பித்து விட்டார்கள். இதுபற்றித் திரு அவைத் தலைவர்களும் எதுவும் கூற இருப்பதாகத் தெரியவில்லை. எனவேதான், ஊர் ஊராக இந்த நோய், அதாவது கொடிமரத்தை பொன், வெள்ளி, தகடுகளால் அழகுபடுத்தும் நோய் பரவிக் கொண்டே இருக்கிறது.
கொடி,
கொடிமரம் இதைப்பற்றித் திரு அவையின் தெளிவான போதனை எதுவும் இருப்பதாகவும் தெரியவில்லை. ஆனால், வாடிக்கை, வழக்கம் என்ற பெயரிலும் அங்கு எப்படி? இங்கு அப்படி? என்ற பிறர் சொல்வதைக் கேட்டும், அநேகச் சடங்கு முறைகள் ‘இவை சரிதானா? அர்த்தமுள்ளவையா?’ எனக் கேட்கக்கூடிய அளவுக்குப் புகுந்துவிட்டன. ஒரு திருவிழாவுக்குரிய நவநாள்களில் ஆரம்ப அடையாளமாக மட்டுமே கொடிமரத்தில் கொடி ஏற்றப்படுகிறது. கொடிமரத்தில் ஏற்ற அக்கொடியைப் பறக்க விடுவதும் ஓர் அடையாளச் செயலே என்பதை குரு அக்கொடியை அர்ச்சிக்கும்போது, ‘இக்கொடி உயர ஏற்றப்படுவதுபோல மக்களுடைய உள்ளங்களும் விண்ணகம் நோக்கி உயர்த்தப்படுவனவாக! இந்த நவநாள்களில் இக்கொடியைக் காண்போர் அனைவரும் தங்கள் பாதுகாவலர் / பாதுகாவலியை நினைவுகூர்ந்து அவர்தம் மாதிரியைப் பின்பற்றி உமக்கு உகந்தவர்கள் ஆவார்களாக’
என்ற செபத்திலிருந்து அறியலாம்.
இந்தக்
கொடியின் ஆயுள், அது கொடிமரத்தில் ஏற்றப்பட்ட நாளிலிருந்து விழா முடிவில் இறக்கப்படும் நாள் வரையில்தான். கொடி ஒரு திருப்பண்டம் (relics) அல்ல;
எனவே, அதைத் ‘திருக்கொடி’ என்று
குறிப்பிடுவதும் பொருத்தமானதல்ல. அர்ச்சிக்கப்பட்ட எல்லாப் பொருளும் திருப்பொருள் ஆகிவிடுவதில்லை; கொடிமரமும் முக்கியத்துவம் பெறுவது அதில் ஏற்றப்படும் கொடியினால்தானே தவிர, அந்தக் கொடிமரமும், கல்தூணோ, பொன், வெள்ளி, தகடுகளால் சுற்றப்பட்டதோ என்பதெல்லாம் எந்த வகையிலும் முக்கியமானவை அல்ல; பொருளற்றதும் கூட (immaterial). ஏனெனில், கொடியும் கொடிமரமும் நமது உள்ளங்களை விண்ணகம் நோக்கி உயர்த்தப்பட தூண்டவும், அதற்கு உதவியாக நடைபெறும் நவநாள் வழிபாடுகளில் தகுதியோடு பங்குபெற்றுப் பயனடையத் தூண்டவுமே!
ஒரு
திருவிழா முடிந்து அடுத்த ஆண்டு திருவிழா வரைக்கும் அந்தக் கொடியோ, கொடிமரமோ யாருக்கும் எவ்விதத்திலும் அடையாளமாகவோ, உண்மையாகவோ பயன்படுவதில்லை. எனவே, பல இடங்களிலோ, சில
இடங்களிலோ இப்படிச் செய்கிறார்கள் என்பதற்காகக் கொடிமரத்திற்காக இவ்வளவு செலவு செய்ய வேண்டுமா? என்ற கேள்வியும், இத்தகைய கொடிமரத்தைத் தொட்டுக் கும்பிடுவதும் சரியா? என்ற கேள்வியும் எழும்புகிறது.
மேலும்,
திருவிழாவை முன்னிட்டு மட்டும் புனிதப்படுத்தப்படுகிற கொடியையோ, கொடிமரத்தையோ தொட்டுக் கும்பிடலாம் என்பது சரியென்றால், அதே
திருவிழா சமயத்தில் புனிதப்படுத்தப்படுகிற புனிதரோ/புனிதையோ பவனி வருகின்ற தேர், சப்பரம் இவைகளையும் மற்ற நாள்களிலும் அவ்விதம் தொட்டுக் கும்பிட வேண்டுமா? என்ற கேள்வியும் சரிதானே! ஏற்கெனவே பல இடங்களில் கொடிமரத்திற்கு
பொன்/வெள்ளி தகடுச் சுற்றி வைத்திருப்பதுபோல இனி சப்பரத்திற்கும் தேருக்கும்... ஏன் கொடிக்கும்கூட அவ்வித முக்கியத்துவம் கொடுத்துவிடாமல் தடுக்க வேண்டியது அந்தந்த இடத்தில் உள்ள அருள்பணியாளரும், அவருடைய ஆயரும்தானே தவிர வேறு யார்?
“நமது வேதம், தொட்டுக் கும்பிடுவதில் திருப்தி அடைகிற வேதம் அல்ல; நமது நம்பிக்கையும் கூடத் தொட்டு கும்பிடுவதில் அல்ல; மாறாக, நாம் நம்புகிற உண்மைகளை வாழ்வில் ஏற்று, வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதுதானே உண்மை! எனவே, கொடியோ கொடிமரத்தையோ தொட்டுக் கும்பிட்டு அவைகளைக் கறைபடுத்துவதற்குப் பதில், சரியில்லாத (மூட) நம்பிக்கை எனும் கதைகளை இறைவார்த்தைகளைக் கொண்டு நீக்கி, இறைவார்த்தைகளின்படி வாழ்ந்து இயேசு (லூக் 11:28) கூறுவதுபோல பேறுபெற்றோரோடு இணைவோம். லூக்கா 8:21-இன்படி இயேசுவின் தாயும் சகோதரருமாய் திகழ்வோம்.
புனித தேவசகாயம் இந்தியத் திரு அவையின் முதல் மறைச்சாட்சி; முதல் பொதுநிலைப் புனிதர்; இன்று ‘பொதுநிலையினருக்குப் பாதுகாவலர்’ என்ற பெருமைகளுக்கு மகுடம் சூடக்கூடியவர் நம் புனிதர் புனித தேவசகாயம். எட்டு மாதங்கள் தன்னைத் தயாரித்து ‘கடவுள் என் உதவி’ (துணை) என்று நீலகண்டபிள்ளையாக இருந்த இந்துமத அரண்மனைக் காப்பாளர் திருமுழுக்குப் பெற்ற ஏழே ஆண்டுகளில், தன்னைக் கிறிஸ்துவுக்காகக் குண்டுகளினால் குருதி சிந்திப் பலியானார்.
ஒரே
நாடு, ஒரே மொழி, ஒரே கடவுள் என்பது மன்னர்களின் ஆட்சியில் புதிதல்ல; அதிலும், அவர்களையே கடவுள் என்பது வரலாற்றிற்கு அப்பாற்பட்டது அல்ல; ஆனால்,
“கடவுள் ஒருவரன்றி வேறு தெய்வங்கள் இல்லை”
(8:4), “நமக்கு ஆண்டவரும் ஒருவரே; அவரே இயேசு கிறிஸ்து...” (8:6) என்று கொரிந்து மக்களுக்குப் புனித பவுலடியார் கூறுவது போல, இவரும் ஆண்டவர் இயேசுவையே ஒரே கடவுளாக, வாழ்வின் ஊற்றாகத் தன்னை ஒப்புக் கொடுத்தார்.
‘வாழ்க்கை வாழ்வதற்கே’ என்ற
அதிநவீன காலத்தில், ‘வாழ்க்கையை நாம் எவ்வாறு வாழ்ந்தோம்?’ என்று அலசி ஆராய வேண்டும். வாழ்ந்தோம், இறந்தோம் என்றில்லாமல், இன்றும் பல உள்ளங்களில் வாழ்கிறோம்
என்பது வாழ்வின் உச்சத்தின் பொருளமைந்த இறையருள்.
1712-இல் பிறந்த
இவர், 1745-இல் திருமுழுக்குப் பெற்ற புனித தேவசகாயம், திருமுழுக்கு அர்த்தத்தை முழுமையாகப் புரிந்துகொண்டு, தன்னுடைய மறைச்சாட்சி பணியைத் தொடர்ந்தார். தன் வாழ்வின் புதிய அத்தியாயத்தைக் கிறிஸ்துவுக்காகத் தொடங்கிய இவருக்கு முட்டுக்கட்டுகள் ஏராளம். துன்பமும் வேதனையும் அதிகரிக்கத் தொடங்கின. மனித வாழ்வின் இறுதியும், புனித வாழ்வின் தொடக்கமாக அமைந்தது. கருக்கலுக்கும் காரிருளுக்கும் நடுவில் நள்ளிரவில் குண்டின் ஓசையும், குருதியின் ஓட்டமும் “தந்தையே உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்” என்ற
இயேசுவின் வார்த்தையைத் தன்னில் உட்கொண்டு, “இயேசுவே என்னை மீட்டருளும்” என்ற
உச்சரிப்பில் நம் புனிதர் 1752, ஜனவரி 17 அன்று மரணத்தைத் தழுவினார்.
“நாம் கடவுள்மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல; மாறாக, அவர் நம்மீது அன்பு கொண்டுள்ளார்” (1யோவா
4:10) என்கிற செய்தியே நம் நம்பிக்கையின் மையமாக இருப்பதாக என்று மொழிந்த திருத்தந்தை பிரான்சிஸ் மே 15, 2022 உரோமையில் இவரைப் புனிதர் நிலைக்கு உயர்த்தினார். இந்தியர்களின் மகிழ்ச்சியும், ஆன்மிக அருளும் பெருகிவரும் இச்சூழலில், இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் (CCBI) கோரிக்கையின்
பேரில், திருவழிபாடு மற்றும் அருளடையாளங்களுக்கான வத்திக்கான் ஆணையம், புனித தேவசகாயம் அவர்களை ‘இந்தியாவின் பொதுநிலையினரின் பாதுகாவலர்’ எனும்
திருத்தந்தையின் ஆணையை 2025, ஜூலை 16 அன்று வெளியிட்டுள்ளது. இப்புதிய அறிவிப்பு வரும் அக்டோபர் மாதம் 15 அன்று வாரணாசி புனித மரியன்னை பேராலயத்தில் முறையாக அறிவிக்கப்பட உள்ளது.
“கிறித்தவர்கள் ஒன்றில் தங்களது மதத்தைக் கைவிடவேண்டும்; இன்றேல் துன்புறுத்தப்பட வேண்டும் என்றால், நானும் ஒரு கிறித்தவன் என்பதை அறிந்துகொள்ளுங்கள். என்னிடமிருந்து துன்புறுத்தலைத் தொடங்குங்கள்” என்று
மொழிந்த நம் புனிதர், நமக்கெல்லாம் பாதுகாவலராகத் திரு அவையால் உயர்த்தப்பட்டுள்ளார்.
நம்மில்
ஒருவர் நமக்குப் பாதுகாவலர் என்ற பெருமகிழ்வில் நாமும் பயணிப்போம், புனிதர்களாவோம்!
புனிதர்கள் என்பவர்கள் பழங்காலத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது நவீன உலகத்துடன் தொடர்பு இல்லாதவர்கள் என்று பலர் நினைக்கலாம். ஆனால், புனித கார்லோ அக்குதிஸ் அதற்கு முற்றிலும் மாறுபட்டவர். இணைய யுகத்திலும் புனிதர்கள், அசாதாரணமான விசுவாசத்தைக் கொண்ட சாதாரண இளைஞர்களாக இருக்க முடியும் என்பதை அவர் நிரூபித்தார்.
கார்லோ
அக்குதிஸ் மே 3, 1991 அன்று இலண்டனில் பிறந்தார். மதம் சாராதப் பெற்றோருக்குப் பிறந்தாலும், சில வாரங்களிலேயே அவருக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது. பின்னர், அவருடைய குடும்பம் இத்தாலியின் மிலான் நகருக்குக் குடிபெயர்ந்தது. பெற்றோர் வேலைக்குச் சென்றதால், கார்லோ பெரும்பாலும் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் வளர்ந்தார். சிறுவயதிலிருந்தே அவர் கத்தோலிக்க நம்பிக்கையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அவரது பராமரிப்பாளர்களில் ஒருவர் அவரின் கத்தோலிக்க நம்பிக்கை குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்து, அவருடைய இறைநம்பிக்கைக்கு உறுதுணையாக இருந்தார்.
இளம் வயதிலேயே
இறை
நம்பிக்கை
மூன்று
வயதில் கார்லோவின் தாத்தா இறந்தபோது, அவர் கனவில் வந்து தனக்காகச் செபிக்கக் கூறினார். சிறிது காலத்திற்குப் பிறகு, தனது பாட்டியிடம் தனது மேலாடையை அணிந்துகொண்டு ஆலயத்திற்குச் செல்லவேண்டும் என்று கார்லோ கூறினார். காரணம் கேட்டபோது, “தாத்தா
இயேசுவைப் பார்க்கச் சென்றுவிட்டார், அவருக்காகச் செபிக்க வேண்டும்”
எனப் பதில் அளித்திருக்கிறார்.
ஒருமுறை
குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் சில குழந்தைகள் அவரைத் துன்புறுத்தியபோது, அவர் கனிவாகவே நடந்துகொண்டார். “கோபப்பட்டால் இயேசு மகிழ்ச்சியடையமாட்டார்” என்று
அவர் கூறினார். இந்தக் கனிவான குணம் அவருடைய அன்றாட வாழ்க்கையிலும் வெளிப்பட்டது.
விடுமுறைக்குப்
பிறகு, உள்ளூர் தேவாலயத்திற்கு வரும் வயதான பெண்களுடன் சேர்ந்து அவர் செபமாலை சொல்வார். பள்ளிக்குச் செல்லும்போது சாலையில் வேலை செய்பவர்களின் பெயர்களைத் தெரிந்துகொண்டு, ஒவ்வொரு காலையிலும் அவர்களை வாழ்த்துவார்; அவர்களுக்காக இறைவேண்டல் செய்வதாகக் கூறுவார்.
ஏழு
வயதில் முதல் நற்கருணை பெற்ற பிறகு, கார்லோ அடிக்கடித் திருப்பலியில் கலந்துகொண்டு நற்கருணை பெறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நற்கருணை முடிவில்லா வாழ்விற்கு வழி எனத் திடமாக நம்பினார். நற்கருணை வழிபாட்டிலும் ஆர்வமாகக் கலந்துகொள்வார். அவருடைய ஆழ்ந்த நம்பிக்கையும் இடைவிடாத கேள்விகளும் அவருடைய தாயாரை மீண்டும் கத்தோலிக்க நம்பிக்கைக்குத் திரும்பச் செய்தது. அவருடைய வீட்டில் பணி செய்த இராஜேஷ் மோகூர் என்பவருடன் கார்லோ நட்புக்கொண்டு, அவருக்குத் திருமுழுக்குப் பெற உதவினார். அக்குதிஸ் பேசியதைக்கேட்டு மோகூரின் நண்பரும் தாயாரும்கூட கத்தோலிக்க நம்பிக்கைக்கு மாறினர்.
இணைய யுகத்தின்
பயன்பாடு
இளைஞனாக
இருந்த கார்லோவுக்குக் கணினி அறிவியல் மற்றும் நிரலாக்கம்மீது ஆர்வம் இருந்தது. தானாகவே நிரலாக்கம் கற்றுக்கொண்டார். சாக்ஸபோன் வாசிப்பதையும், ஹேலோ, சூப்பர் மாரியோ, போக்கெமான் போன்ற வீடியோ கேம்கள் விளையாடுவதையும் அவர் விரும்பினார். ஆனால், அடிமையாகிவிடக்கூடாது என்பதற்காக, வாரத்திற்கு ஒரு மணிநேரம் மட்டுமே விளையாடுவார்.
பன்னிரண்டாவது
வயதிலிருந்து தனது நண்பர்களுடன் விசுவாசத்தைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார். புனிதர்களின் வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்வதில் அவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. குறிப்பாக, புனித பிரான்ஸிஸ் அசிசியார், புனித பதுவா அந்தோனியார், புனித பிரான்சிஸ்கோ, புனித யசிந்தா மார்டோ மற்றும் புனித டொமினிக் சாவியோ ஆகியோரின் வாழ்க்கையைப் பற்றி அறிந்துகொள்ள மிகுந்த ஆர்வம் காட்டினார்.
பதின்மூன்று
வயதில், அற்புதங்களுக்கான இணையப்பக்கத்தையும், பின்னர் தன்னார்வத் தொண்டுக்கான இணையதளத்தையும் உருவாக்கினார். தன்னுடைய நிரலாக்கத் திறமையைப் பயன்படுத்தி, உலகம் முழுவதும் நடந்த திருவுடல் அற்புதங்கள் மற்றும் அன்னை மரியாவின் காட்சிகள் பற்றிய தகவல்களைப் பட்டியலிட்டு ஓர் இணையதளத்தை உருவாக்கினார். இரண்டாண்டுகள் உழைத்து அந்த இணையதளத்தை 2006 அக்டோபர் 4 அன்று வெளியிட்டார்.
இளவயது மரணம்
மற்றும்
புனிதர்
பட்டம்
இணையதளத்தை
வெளியிடுவதற்குச் சில நாள்களுக்கு முன்பு கார்லோவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. முதலில் பரோடிடிஸ் என்று கண்டறியப்பட்டாலும், அவருடைய நிலைமை மோசமானது. பிறகு
அவருக்குக் கடுமையான இரத்தப்புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவமனையில் இருந்தபோது, அவர் தனது வலிகளைத் திருத்தந்தை மற்றும் திரு அவைக்காக ஒப்புக்கொடுத்தார்.
தன்னுடைய
வலியைக் குறித்து மருத்துவர்கள் கேட்டபோது, ‘என்னைவிடப் பலர் அதிகமாகத் துன்புறுகிறார்கள்’ என்று
பதிலளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவர் தனது தாயாரிடம், அம்மா, பயப்படாதீர்கள். மரணம் முடிவில்லா வாழ்க்கைக்குப் போகும் பாதை. நாம் முடிவில்லா வாழ்வை வாழத் தயாராக வேண்டும் என்று கூறி அவரைத் திடப்படுத்தினார். 2006 அக்டோபர் 12, அன்று, தனது 15 வயதில் அவர் மரணமடைந்தார். அவருடைய இறுதிச் சடங்கில், பல இளைஞர்களும், திரு
அவையை விட்டுச் சென்றவர்களும் அதிக எண்ணிக்கையில் கலந்துகொண்டனர்.
அருளாளர் மற்றும்
புனிதர்
பட்டம்
கார்லோ
அக்குதிஸின் இறப்பிற்குப் பிறகு, அவருடைய புனிதர் பட்டத்திற்கான பணிகள் தொடங்கின. பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒரு சிறுவன், கணையப் பிறவிக் குறைபாட்டிலிருந்து குணமடைந்தது, கார்லோவின் பரிந்துரையால் நடந்த அற்புதம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த அற்புதம் காரணமாக, 2020-ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ், கார்லோவை அருளாளர் என்று அறிவித்தார்.
மேலும்,
2022-ஆம் ஆண்டு கோஸ்டா ரிகாவில் ஒரு பெண்ணின் மூளை இரத்தக்கசிவு, கார்லோவின் பரிந்துரையால் குணமானது. இந்த அற்புதங்கள் திரு அவையால் அங்கீகரிக்கப்பட்டதால் அவரது புனிதர் பட்டத்திற்கான நிகழ்வு 2025 மே மாதத்தில் திட்டமிடப்பட்டிருந்தது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவு, இந்த நிகழ்வு தள்ளிப் போவதற்குக் காரணமாய் அமைந்தது. சிறு தாமதத்திற்குப் பின், 2025 செப்டம்பர் 7, வத்திக்கானில் திருத்தந்தை லியோ அவரைப் புனிதர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இன்று,
புனித கார்லோ அக்குதிஸ் இளம் கிறித்தவர்களுக்கு ஊக்கமளிக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்.
யாரை அன்புகூர்கிறோம்?
நீங்கள்
நிறையப் பணம் வைத்திருப்பதால் உங்களை உண்மையாக எல்லாரும் நேசிப்பதில்லை; நீங்கள் செல்வாக்கு உடையவர்களாகவோ, மிகுந்த திறமை பல உடையவராகவோ இருப்பதால்
மக்கள் உங்களை அன்பு செய்வதில்லை; மாறாக, உங்கள் மதிப்பீடுகள், பண்புகள், நன்மைத்தனங்கள் உங்கள் எளிமையைப் பார்த்து அன்பு செய்பவர்களே உண்மையான அன்பு செய்கிறவர்கள்.
இரத்தன் டாடா
பில்கேட்ஸ்
உலகில் மிகப்பெரிய பணக்காரர். அவர் வியப்புறும் ஒரு மனிதரைப் பற்றிக் கூறியது எல்லாரையும் கவர்ந்தது. ‘நீங்கள் வியப்புறும் ஒருவரைப் பற்றிக் கூறுங்கள்?’ என்றபோது, “எனது இந்திய நண்பர் இரத்தன் டாடா! இவர் ஓர் அற்புதமான மனிதர். பெரிய பணக்காரர் எனினும், பணக்காரர் பட்டியலில் இவரது பெயர் இடம் பெறவில்லை. காரணம், தனது வருமானத்தில் 67% ஏழைகளுக்குக் கொடுக்கிறார்.
வயோதிகர்களுக்கான இல்லங்களைத் திறந்து அவர்களைக் கண்காணித்து வருகிறார். ஏழைகளுக்கு உணவும் உடையும் கொடுக்கிறார். குறைந்த வருமானம் உள்ளவர்களும் கார் வாங்க வேண்டும் என்ற நோக்குடன் மிகக் குறைந்த விலையில் வாகனங்களைத் தயாரிக்கிறார். இலாபம் ஈட்டுவது இவரது நோக்கமல்ல; மக்கள் நலமுடன் வாழ வேண்டும் என்பதே இவரது முதல் விருப்பம். எளிமையான வாழ்வு, யாரையும் ஏமாற்றுவதில்லை, எவருக்கும் தீங்கு செய்வதில்லை. இவர் ஒரு நேர்மையாளர்; மனிதரை அன்பு செய்யக்கூடியவர். இவரை
எல்லாரும் மதிக்கின்றனர். அன்பு செய்கின்றனர்” என்று
பதிலளித்தார்.
இது
பற்றி இரத்தன் டாடாவிடம் கேட்டபோது, “நாம்
இறப்பிற்குப் பிறகு எதையும் எடுத்துச் செல்வதில்லை. ஆகவே, இருக்கும் வரையில் எல்லாருக்கும் நன்மை செய்வோம்”
என்பது இவரது பதில். இவரது
இறப்பு இந்தியாவிற்குப் பேரிழப்பு.
அன்னை தெரசா
இதே
கருத்தை அன்னை தெரசா மற்றொரு விதமாகக் கூறுவார்: “எரியும்
திரியிலிருந்து மற்றொரு திரியை ஏற்றுகையில், எரியும் திரி குறைந்துவிடாது; மாறாக, வெளிச்சம் இன்னும் அதிகமாகும். அதேபோல நம்மிடம் இருப்பதைப் பகிர்ந்தால் பிறரது வாழ்வு ஒளியைப் பெறும், நாமும் மகிழ்வாக இருக்கலாம்.”
நேர்மையாளர் எதிர்கொள்ளும்
தீங்கு:
மனித மதிப்பீடுகள் அவன் மாண்புடன் வாழ உதவுகின்றன. அதைத் தீயவர்கள் ஒத்துக்கொள்வதில்லை. “நல்லவர்களின் நாணயமான வாழ்க்கை எங்களுக்குப் பெருஞ்சுமையாக உள்ளது” என எதிரிகள் கூறுவதாகத்
திருவிவிலியம் சுட்டிக்காட்டுகிறது.
சாலமோனின்
ஞானம் 2:12: “நீதிமான்களைத் தாக்கப் பதுங்கியிருப்போம்; ஏனெனில், அவர்கள் நமக்குத் தொல்லையாய் இருக்கிறார்கள்” (14), “அவர்களது
நடத்தையே நம் எண்ணங்களைக் கண்டிக்கிறது. அவர்களைப் பார்ப்பதே நமக்குத் துயரமாய் உள்ளது”
(20), “இழிவான சாவுக்கு அவர்களைத் தீர்ப்பிடுவோம்” (21), “தீயவர்களின்
தீயொழுக்கமே அவர்களைப் பார்வையற்றோர் ஆக்கிவிட்டது” என்று
கூறுவதைக் கவனிப்போம். இவ்வாறு உலகப்போக்குடன் வாழ்க்கை நடத்தும்போது மதிப்பீடுகள், உயர்பண்புகள், நல்ல மனத்துடன் நேர்மை வாழ்வு வாழ்வது கடினமாகிறது. இதைத்தான் இயேசு “குறுகலான பாதை வழியாகச் செல்லுங்கள்” என்கிறார்.
“வாழ்வுக்குச் செல்லும் வாயில் இடுக்கமானது; வழியும் மிகக் குறுகலானது; இதைக் கண்டுபிடிப்போர் சிலரே”
(மத் 7:13-14). இயேசுவின் போதனை இறையாட்சி பற்றியது; நேர்மையாளரே இங்கு நுழைய முடியும்.
நேர்மையாளர் யார்?
நேர்மையைப்
பற்றி, ஒழுக்கமுடைமை பற்றி, பண்புகளையெல்லாம் உள்ளடக்கிய தனிப்பண்பு பற்றிச் சிந்திப்பது நல்லது.
தனக்கு
உண்மையாகவும் சிந்தனை, சொல், செயலில் ஒருமைப்பாட்டையும் கொண்டிருப்பதை நேர்மை (INTEGRITY) எனலாம்.
நல்லவர்கள் நல்ல கொள்கைகளில், சிறப்பான செயல்பாடுகளில் எந்தப் பேரமும் பேசமாட்டார்கள். இவைகள்தான் இவர்களைச் சிறப்பானவர்களாக மாற்றுகின்றன. கொண்ட கொள்கையில் நிலைத்திருந்து, நீதிபிறழாமல்
வாழும் இச்சிறப்பான பண்புக்கு ஈடு இணை இல்லை. அவரை அறநெறியாளர் என்பர். மாசற்றவர் என்பர். உண்மைக்கு உயிரைக் கொடுப்பவர் என்பர்.
நேர்மையாளரின்
பண்புகள்:
1. சமமாக நடத்துபவர்:
நேர்மையாளர் உள்ளத்தில் கபடற்றவர்; போலித்தனம் இல்லாதவர்; நீதியோடும் நேர்மையோடும் செயல்படுபவர். அவர் அஞ்சாதவர்; எல்லாரையும் மதித்து மாண்பைப் போற்றுபவர்; எல்லாரிடமும் நீதிநெறி பிறழாமல் நடப்பவர். வன்முறைக்கோ, வற்புறுத்துதலுக்கோ இணங்காமல், ஆணவத்தோடு செயல்படாமல் இருப்பவரை நேர்மையாளர் எனலாம். இவரை வழிநடத்துவது அறமே. இவரிடம் காண்பது சமத்துவம்.
2. நேர்மையோடு செயல்படுபவர்:
இவர்கள் பணத்துக்காகவோ, சலுகைக்காகவோ விட்டுக் கொடுக்காது, கொண்ட கொள்கைகளில் சிறப்போடு செயல்படுபவர்கள். நல்லறம் காப்பது இவர்களின் செயல்பாடாகும்.
3. நேர்மையாளர்களை மக்கள் நம்புவர்:
நடுநிலை
நின்று பிறழாமல், மக்கள் நம்பிக்கைக்குத் தீங்கிழைக்காது வாழ்வோர் மக்களின் நம்பிக்கைக்குத் தகுதியானவர்களாயிருப்பர். தன்னில் நேர்மையுடனும், பிறருக்கு உண்மையுடனும் வாழ்பவரை உலகம் போற்றும். நல்ல மரம், நல்ல நிலம், நல்ல நீர், நல்ல சூழல் இருக்கையில் நல்ல பலனைத் தரும். நல்ல மனிதனும் அவ்வாறே. நல்ல மனிதனைச் சுற்றி நம்பிக்கை வளரும்.
4. நல்ல மனிதர் யாருக்கும்
அஞ்சார்:
பணம், பதவி, அதிகாரம் அவனை எச்சரிக்கலாம், அவரைப் பயமுறுத்தலாம். ஆனால், அவர் நல்லது செய்வதில், நீதியானதைச் செய்வதில் பேரம் பேசுவதில்லை. அவர் அலைக்கழிக்கப்படலாம், பல இடங்களுக்கு மாற்றப்படலாம்.
நீதிக்காக எத்துயரையும் தாங்கும் நிலைப்பாடு அவரிடம் உண்டு. இவர்கள் தவறு செய்யும்போது அதற்காக மனம் வருந்தத் தயங்கார்.
5. தனது குற்றத்தை ஒத்துக்
கொள்வர்:
வகுப்பில்
காலம்தாழ்த்தி வந்த மாணவனுக்குத் தண்டனை வழங்கினார் அந்த ஆசிரியர். ஒருநாள் மிதிவண்டியில் வந்து கொண்டிருந்தபோது அச்சிறு மாணாக்கன் பல வீடுகளில் காலை
செய்தித் தாளைப் போட்டுவிட்டு, நடக்க முடியாத தன் அம்மாவைச் சக்கர
நாற்காலியில் ஓட்டி வந்து, உணவு கொடுத்துவிட்டுப் பள்ளிக்கு வருகையில், காலம் தாழ்த்தி வந்தான். ஆசிரியர் எந்தப் பிரம்பால் அவனை அடித்தாரோ, அதே பிரம்பை அவனிடம் கொடுத்துத் தன்னை அடிக்கக் கூறினார். தான் செய்த தவற்றிற்கு மன்னிப்புக் கோரினார். இதைக் கண்ட வகுப்பில் இருந்த மாணாக்கர் அனைவரும் அவரைப் பாராட்டி வியந்தனர்.
வள்ளுவர் தரும்
விளக்கம்
மனத்தில்
குற்றமில்லாதவன், தீய எண்ணங்களைக் கொண்டிராதவன் எல்லா அறங்களையும் கொண்டவனாகிறான். இவனையே அனைத்து அறங்களையும் உடையவன் (MAN OF INDEGRITY) என்று
வள்ளுவர் கூறுகிறார்.
‘மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல
நீர பிற’
(குறள் 34).
மேலும்
வள்ளுவர்,
‘அறத்தால் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த
புகழும் இல’
(குறள் 39)
என்பார்.
ஆனால், அப்படிப்பட்டவரை இவ்வுலகம் கொன்றுவிடும். ஆபிரகாம் லிங்கன், மார்ட்டின் லூதர் கிங், மகாத்மா காந்தி... ஏன் நம்பிரான் இயேசுவும் கொல்லப்பட்டது இதனாலேதான். நற்செயல்களுக்காக வாழ்பவர் தீயோரின் மனசாட்சியைத் துன்புறுத்துவர். மேலும்,
‘பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு
மாய்வது மன்’
(குறள் 996)
என்று
வள்ளுவர் கூறுகிறார். அதாவது, நல்ல பண்பு உடையவர்களின் ஒழுக்கத்தால் இவ்வுலகம் நடைபெறுகிறது. அவர்கள் இல்லையெனில் உலக ஒழுக்கம் மண்ணில் புதைந்துவிடும். இயேசுவின் போதனை, வாழ்வு, இறப்பு எல்லாம் இதற்குச் சான்று.
கபிரியேல் தூதர் கன்னி மரியாவிடம் கூறிய ‘அருள் நிறைந்தவளே’ என்ற வார்த்தைகளின் ஆழத்தைத் திரு அவையின் சிந்தனையானது பின்வருமாறு விவரிக்கின்றது:
1. மரியா
‘அருளால் நிறைந்தவர்’ என்பது
‘பாவத்தின் எல்லாக் கறைகளிலிமிருந்தும் விடுவிக்கப்பட்டவர் மற்றும் முற்றிலும் புனிதமானவர்’, ‘கருவான
முதல் நொடியிலிருந்தே தனிச் சிறப்பான தூய்மையின் மாட்சியால் அணி செய்யப்பட்டிருந்தார்’, ‘தனிப்பட்டதொரு
புனிதத்துவத்தின் சிறப்புகளால் அவருடைய கருத்தரித்தலின் தொடக்கத்திலிருந்தே வளமைப்படுத்
தப்பட்டார்’ என்று
அங்கீகரிக்கப்பட்டிருந்தது
(இறைத்திட்டத்தில் திரு அவை, எண். 56).
இந்த
அங்கீகாரத்திற்கு ‘மரியா அமல உற்பவி’ என்ற கோட்பாட்டின் (Dogma of immaculate
conception) அறிவிப்பிற்குக் காரணமான கோட்பாட்டு அடிப்படையிலான சிந்தனையின் நீண்டதோர் உருவாக்கம் தேவைப்பட்டது. கிறிஸ்து பிறப்பில் வானதூதரால் மரியாவிடம் கூறப்பட்ட ‘அருளின் முழுமையினால் உருவாக்கப்பட்டவர்’ என்ற
சொல்லாடலானது முன்னறிவிக்கப்பட்ட அவருடைய தாய்மையின் பொருட்டு நாசரேத்தூர் இளம் பெண்ணுக்குக் காட்டப்பட்ட சிறப்புமிக்கக் கடவுளின் கருணையைக் குறிக்கின்றது. இருப்பினும், இது மரியாவில் இருந்த
தெய்வீக அருளின் தாக்கத்தையே நேரடியாகக் குறிக்கின்றது. மரியா இயல்பிலேயே அருளால் என்றும் நிறைக்கப்பட்டிருந்தார் மற்றும் அதனாலேயே தூயவரானார். ‘Kecharitoméne’ என்ற
அடைமொழியானது மிகவும் ஆழமானதோர் அர்த்தத்தைக் கொண்டுள்ளது மற்றும் இது பற்றிய திரு அவையின் புரிதலை ஆழப்படுத்துவதில் தூய ஆவியானவர் தொடர்ந்து செயல்படுத்துகின்றார்.
புனிதப்படுத்தும்
அருளானது
மரியாவை
ஒரு
புதுப்படைப்பாக்கியது
2. ‘அருளாள் நிறைந்தவரே’ என்கின்ற
வானதூதரின் வாழ்த்தொலியானது கிட்டத்தட்ட மரியாவின் பெயராகவே பயன்படுகின்றது. கடவுளின் பார்வையில் இதுதான் மரியாவின் பெயராகும். செமிடிக் இனத்தவரின் வழக்கத்தில் (Semitic) ஒரு
நபரின் அல்லது பொருளின் பெயரானது எதைக் குறித்துக் காட்டுகின்றதோ, அதுவே அந்த நபரின் அல்லது பொருளின் உண்மையான தன்மையை வெளிப்படுத்துகின்றது. அதன்
விளைவாக, ‘அருளால் நிறைந்தவர்’ என்கின்ற
இந்தச் சிறப்புச் சலுகையானது அருளினாலும் கருணையினாலும் உருவாக்கப்பட்டவர் என்று வரையறுக்கப்படும் அளவுக்கு நாசரேத்தூர் இளம் பெண்ணின் ஆளுமையில் மிக ஆழமானதொரு நிலையையே காட்டுகின்றது.
அதேநேரத்தில்,
மரியா “தூய ஆவியாரால் வடிவமைக்கப்பட்டவர்’ மற்றும்
‘ஒரு புதிய உயிரினமாக உருவானவர்’
என்பதை உறுதிப்படுத்தி, திரு அவைத் தந்தையர்கள் அவரை ‘முற்றிலும் புனிதமானவர்’ என்று
அழைத்தபோது, இந்த உண்மையைக் குறிப்பிட்டதாக இரண்டாம் வத்திக்கான் சங்கமானது மீண்டும் நினைவுகூர்கின்றது” (இறைத்
திட்டத்தில் திரு அவை, எண். 56).
தனிப்பட்ட
புனிதத்துவத்தை உருவாக்கும் ‘புனிதப்படுத்தும் அருள்’ என்ற அர்த்தத்தில் புரிந்துகொள்ளப்பட்ட அருளானது, மரியாவில் புதிய
படைப்பைக் கொண்டுவந்தது. மேலும், அவரைக் கடவுளின் திட்டத்திற்கு முழுமையாக இணங்கச் செய்தது.
3. இவ்வாறு,
கோட்பாட்டுச் சிந்தனையானது Doctrinal reflection
மரியாவுக்கு ஒரு முழுமையான புனிதத்தன்மையைக் காரணமாகக் குறிப்பிட்டு, அது முழுமையானதாக இருக்க அவருடைய வாழ்க்கையின் தொடக்கத்தை உள்ளடக்கியிருக்க வேண்டும் எனலாம்.
கி.பி. 550 முதல்
650 வரையிலான காலகட்டத்தில் பாலஸ்தீனத்தின் லிவியாஸ் நகரத்தில் வாழ்ந்த தெயோடோக்னோஸ் என்பவர் முதல் தூய்மையை (original
purity) நோக்கி தனது சிந்தனையை நகர்த்துகின்றார். மரியாவை ‘தூயவர்’ மற்றும் ‘அழகின் முழுமை’,
‘களங்கமற்றவர்’ மற்றும்
‘மாசற்றவர்’ எனச்
சித்தரித்து, அவரின் பிறப்பிலும் இந்த வார்த்தைகளை அவர் குறிப்பிடுகின்றார்: “மாசற்ற மற்றும் களங்கமற்றவரான அவர் ஒரு கெருபீம் (cherubim) போல பிறந்தார்”(Panegyric for the feast of the
Assumption, 5/6).
முதல்
மனிதனின் படைப்பை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருகின்ற இந்தச் சொல்லாடலானது அதாவது, பாவத்தால் கறைப்படுத்தப்படாமல் ஒரு களிமண்ணால் உருவாக்கப்பட்டார் என்பது, மரியாவினுடைய பிறப்பின்
அதே பண்புகளைக் குறித்துக் காட்டுகின்றது: கன்னியின் பிறப்பும் ‘தூய்மையானதாக மற்றும் மாசற்றதாக’
அதாவது, எந்தவொரு பாவமும் அற்றதாக இருந்தது. மரியாவை ஒரு தேவதையுடனான ஒப்பீடென்பதும் அவருடைய வாழ்வின் தொடக்கத்திலிருந்தே மரியாவின் வாழ்வு குறித்துக்காட்டுகின்ற தலைசிறந்த பண்புகளை வலியுறுத்துகின்றது.
தெயோடோக்னோஸின்
இந்த உறுதியான நிலைப்பாடானது, ஆண்டவருடைய தாயின் மறையுண்மை பற்றிய இறையியல் சிந்தனையில் குறிப்பிடத்தக்கதொரு நிலையைக் குறிக்கின்றது. கிரேக்க மற்றும் கிழக்கத்திய திரு அவைத் தந்தையர்களும் கருவுறுதலுக்கு முன்போ (St. Gregory Nazianzen,
Oratio 38, 16) அல்லது கருவுறுதலின்பொழுதோ (St. Ephrem, Severian of Gabala, James of Sarug) கடவுளின் அருளினால் மரியாவில் கொண்டுவரப்பட்ட அந்தப் புனிதமாக்குதலை ஒத்துக் கொள்கின்றார்கள்.
4. லிவியாஸ்
நகரத்தில் வாழ்ந்த தெயோடோக்னோஸ், மரியாவினுடைய வாழ்வின் தொடக்கத்திலி ருந்தே அவரிடம் தூய்மை இருந்திருப்பதை விரும்புவதாகத் தெரிகின்றது: “மனுக்குலமானது அதன் தொடக்கத்திலிருந்த அந்த அழகை மரியாவின் அமல உற்பவப் பிறப்பில் இன்று அதன் நிறைவை அடைகின்றது. உண்மையில், மீட்பரின் தாயாவதற்காக முன்குறித்து வைக்கப்பட்டவர் முற்றிலும் தூயவராகவும், மாசற்ற தொடக்கத்தைக் கொண்டவராகவும் இருக்க வேண்டியதாயிற்று. மனுக்குலத்தின் இயல்பான ஈர்ப்பையும் சிறப்பையும் பாவத்தினால் ஏற்பட்ட குற்ற உணர்வானது மங்கச்செய்தது. ஆனால், அழகில் சிறந்தவரான அந்தத் தாய் பிறந்தபொழுது இந்த இயற்கையானது மரியாவில் அதன்
தொடக்ககாலச் சிறப்பைத் திரும்பவும் பெறுகின்றது. மேலும், உண்மையில் கடவுள் நிலைக்குப் பொருத்தமான மிகச்சிறந்ததொரு மாதிரிக்கு ஏற்றாற்போல உருவமைக்கப்படுகின்றது. நம்முடைய இயல்பின் மறுமலர்ச்சியானது இன்று தொடங்குகின்றது. மேலும், முழுமையாகத் தெய்வீக உருமாற்றத்திற்குட்பட்ட பழைய உலகானது இரண்டாவது படைப்பின் முதற்கனியைப் பெறுகின்றது.”
தொடக்கத்திலிருந்த
அந்தக் களிமண்ணின் உருவத்தை மீண்டும் பயன்படுத்தி அவர் இவ்வாறு கூறுகின்றார்: “கன்னி மரியாவின் உடலானது கடவுளால் பண்படுத்தப்பட்ட நிலம் போன்றதாகும்; கிறிஸ்துவால் தெய்வீகப்படுத்தப்பட்ட ஆதாமின் முதற் கனியாகும்; உண்மையில் முந்தைய அழகையொத்த உருவம், இறை ஓவியரால் உருவாக்கப்பட்ட களிமண்ணாவார்.”
மரியாவின் தொடக்கநிலைத்
தூய்மையே
மீட்பின்
தொடக்கமாகும்
இவ்வாறாக,
மரியாவின் தூய்மையான அமல உற்பவமானது புதிய படைப்பின் தொடக்கமாகப் பார்க்கப்படுகின்றது. இது மனுக்குலமனைத்திற்கும் கடவுளால் விரும்பப்பட்ட அபரிமிதமான அருளின் காலத்தைச் சுட்டிக்காட்டுகின்ற கிறிஸ்துவின் தாயாவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தப் பெண்ணிற்கும் வழங்கப்பட்ட தனிப்பட்ட சிறப்புரிமை பற்றியதாகும்.
மேலும்,
8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கான்ஸ்டான்டைன் நகரத்துப் புனித ஜெர்மானுஸ் மற்றும் புனித ஜான் தமாசேனே போன்றவர்கள் மீண்டுமாக இந்தக் கோட்பாட்டைக் கையிலெடுத்து மரியாவின் தொடக்கநிலைத் தூய்மையையே உலக மீட்பின் தொடக்கமாகக் காட்டி அதனை வெளிப்படுத்து கின்றது. இந்த வகையில், திரு அவையின் பாரம்பரியமானது வானதூதரால் மரியாவுக்கு வழங்கப்பட்ட ‘அருளால் நிறைந்தவரே’ என்பதன்
உண்மையான அர்த்தத்தைத் தனதாக்கி, அதை வெளிப்படையாக அறிவிக்கின்றது. மரியா புனிதப்படுத்துகின்ற அருளின் நிறைவாக இருக்கின்றார். அதுவும் அவரின் தொடக்கம் முதலே அவ்வாறு இருக்கின்றார். எபேசியருக்கு எழுதப்பட்ட கடிதத்தின்படி இந்த அருளானது, கிறிஸ்துவில் எல்லா நம்பிக்கையாளர்களுக்கும் வழங்கப்படுகின்றது (எபேசியர் 1:6).
மரியாவின்
தொடக்கநிலைத் தூய்மையானது அளவிட முடியாத கொடையின் மாதிரியையும், உலகில் கிறிஸ்துவின் அருளினைப் பகிர்ந்து வழங்குவதையும் குறிக்கின்றது.
மூலம்:
John Paul II,
Mary was conceived without original sin, in «L’Osservatore Romano», Weekly
Edition in English, 22
May 1996, p. 11.
‘இறைவனால் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது என்பதற்காகத்தான் அன்னையரைப் படைத்தார்’ என்பது சீனப் பழமொழி. அன்னையர்களின் தன்னலமற்ற அன்பு, பராமரிப்பு, தியாகம் ஆகியவற்றை உணர்த்தவே இவ்வாறு சொல்வதாகப் புரிந்து, இச்சொற்றொடரின் பின்புலம் அறியும் எவரும் தாயன்பைக் கட்டாயம் கொண்டாடுவர்.
இறைவனைத்
தந்தையாகவே புரிந்து போதித்த கிறித்தவமும் இன்று அன்னையாகவும் தந்தையாக வும் கடவுளை ஏற்று, ‘இறைத்தந்தாய்’ (தந்தை
+ தாய்) என்று கொண்டாடுகின்றது. நாம் இந்த உலகத்திற்கு வரவும் வாழவும் நம் தந்தை மற்றும் தாயிடம் பொறுப்பினைக் கடவுள் பகிர்ந்து தந்திருக்கிறார். ஈரைந்து மாதங்கள் தாய் குழந்தையைக் கருவில் சுமப்பார்; தந்தை அவரையும் சேர்த்து உயிருள்ளவரை இருவரையும் மனத்தில் சுமப்பார் என்பதுதான் உண்மை. இந்த மாதம் நாம் இறையன்னையின் புகழ்பாட வாய்ப்புப் பெற்ற மாதம். ஆதலால், நம் அன்னையைப் பற்றியும், அன்னையாக நம்மைப் பற்றியும் சிறிது உளவியல் சார்ந்து சிந்திப்போம்.
ஒரு
மனிதனின் உடல், உள்ள, ஆன்மிக நலனுக்கு யார் பொறுப்பு என்று பார்ப்பதற்குப் பதிலாக, இயற்கையாக இறைவன் எப்படி அதற்கு வகை செய்திருக்கிறார் என்று கேட்பது நலம் பயக்கும். பெற்றோரை ஆதாரமாகவும், சமூகம் முழுமையையும் அடித்தளமாகவும் வைத்துப் பின்னப்பட்ட தேவைகளின் தொடக்கம், குழந்தை கருவுருவாவதற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்பாகவே ஆரம்பிக்கின்றது என்று அறிந்தபோது ஆச்சர்யம் அடையாமல் இருக்க முடியவில்லை.
பொதுவாக,
280 நாள்கள் அல்லது ஏறக்குறைய 40 வாரங்கள் நாம் நமது தாயின் கருவறையில் குடி கொள்கிறோம். முழுமையாக 9 முதல் 10 மாதங்களாகவும் அல்லது சில காரணங்களினால் மாறும் இந்த நாள்கள் மிக மிக முக்கியமான அடித்தள நாள்களாக அமைகின்றன. ஆம், உயிர் உருவாக 9 மாதங்களுக்கு முன்பாகப் பெற்றோரின் வழியாக ஏற்படும் உளவியல் தாக்கம் இந்த நாள்களில் இன்னும் வலிமையானதாகின்றது. மூளை முழு வளர்ச்சியடைய காலம் எடுத்துக்கொண்டாலும், அது தன் தாயின் வயிற்றிலிருந்தவாறே தன்னைச்சுற்றி நடப்பவற்றைக் கவனிக்கின்றது.
ஆக,
அவை நல்லவைகளாக இருந்தால் பின்னாள்களில் நேர்மறையான தாக்கத்தினையும், தீயவையாக இருந்தால் எதிர்மறையான தாக்கத்தினையும் ஏற்படுத்துகின்றது. கரு அனைத்தையும் துரிதமாகக் கற்கும் திறன் படைத்தது என்று உளவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த நாள்களில் தன்னைச்சுற்றி நடக்கும் அனைத்தையும் கரு கூர்ந்து கவனிக்கின்றது. எனவே, தாயின் நாள்களில் தாயின் மகிழ்ச்சி கருவின் இன்றியமையாத அடிப்படைத் தேவைகளில் ஒன்று.
அடுத்து,
மிகவும் முக்கியமானது நிபந்தனையற்ற முறையில் ஏற்றுக்கொள்ளுதல். தான் கருவுற்றிருப்பதை அறியும் தாயும், அவர் வழியாக அவ்வுயிரினைப் பற்றி அறியும் அவரது தந்தையும், அவர்கள் வழியாக அச்செய்தியினை அறிந்துகொள்ளும் குடும்பமும் சமூகமும் அந்தக் குழந்தையின் வரவை மகிழ்வோடு ஏற்கவேண்டும். இதில் ஏற்படும் பிழை பின்னாள்களில் (சமூக வெறுப்பு சுயவெறுப்பாக மாறி) தற்கொலை எண்ணமாகக்கூட வாய்ப்புள்ளது.
அடுத்தது
நிர்ப்பந்தக் கோளாறு. பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று அறிய தாமாக ஆசைப்படுதலாகும். கரு உருவாகும்போதே இது நிர்ணயிக்கப்படுகின்றது என்பதை அறிந்தவர்களும் கூட இதில் பிழை செய்கிறார்கள். தன்னைத் தன் பாலினமாகப் பாவிக்காமல், இவர்கள் பிறந்த பின் குணத்தாலும் செயல்களாலும் மாறிய ஒரு வாழ்க்கையைப் பிரதிபலித்து, பெரும்பாலும் சமூக நகைப்பிற்கு உள்ளாகிறார்கள். சுயவெறுப்பு, வெறுமையுணர்வு, சமூகவிரோத நடத்தை, கைவிடப்பட்ட எண்ணம் போன்றவற்றின் விதைகள் இந்தக் காலத்தில்தான் உருவாகின்றன. தாயும் அவர் சார்ந்த சமூகமும் கொண்டுள்ள நல்ல நேர்மறையான நம்பிக்கைகளும், தாய்க்கும் அதன் கருவுக்கும் கொடுக்கப்படும் நல்ல அன்பும் செபங்களும் குழந்தையின் எதிர்கால உளவியல் வாழ்க்கைக்கு நல்ல தூண்டல்களாகும்.
குழந்தை
பிறந்த முதல் ஒன்பது மாதங்களை உளவியலாளர்கள் தாயோடு உடல் சார்ந்த பிணைப்பு நாள்களாகக் கணிக்கிறார்கள். ‘மனோ பகுப்பாய்வுக் கோட்பாட்டின் தந்தை’ என்றழைக்கப்படும் சிக்மண்ட் ஃபிராய்டு இந்நாள்களை ‘சிம்பயாடிக் யூனியன்’ அதாவது ‘சகவாழ்வு நாள்கள்’ என்கிறார். அதாவது, குழந்தை தன் தாயிலிருந்து வேறுபட்டவர் என்பதை இன்னும் உணரவில்லை; தாய் தன் உடலின் ஓர் உறுப்பு என்றே எண்ணிக் கொண்டிருக்கின்றது. இந்த நாள்களில்தான் தாயின் உடனிருப்பு ஒரு குழந்தைக்குத் தேவை.
பொதுவாகவே,
தாய் தன் குழந்தையின் கண்களைக் கூர்ந்து பார்ப்பது மிகவும் சிறப்பானது. காரணம், குழந்தைகள் உணர்வுகளைக் கற்கும் பாடசாலை அதுதான். தாயின் கண்கள்தான் குழந்தை உலக மனிதர்களைப் படிக்கும் புத்தகம். குழந்தையின் கண்களும் தாயின் கண்களும் பார்க்கும்போது இருவரின் இதயமும் ஆக்சிடோசின் என்ற சுரப்பி மூலம் இணைகின்றன. குழந்தை தன் தாயின் பிரமிப்பினை உணரவேண்டியது அவசியம். இந்த ஆக்சிடோசின் செய்யும் வேலை என்ன தெரியுமா? எத்தனை பெண்கள் இருந்தாலும், ‘என் தாய்தான் அழகானவள்’
என்ற உணர்வைக் குழந்தைக்கும், எத்தனை குழந்தைகளிலும் ‘என் குழந்தைதான் அழகானது’ என்ற எண்ணத்தைத் தாய்க்கும் தருகின்றது.
இப்படித்
தாயின் உடனிருப்பில் குழந்தை வளர வாய்ப்பின்றி குழந்தைப்பருவத் தேவைகள் மறுக்கப்பட்டதென்றால், தாயின்றி அழுத அனுபவங்கள் பின்னாள்களில் அவர்களை யாரையும் நம்ப விடுவதில்லை. தகுந்த நேரங்களில் தாயின் கண்களைக் காணாததால், மற்றவர்களின் உணர்வுகளை இவர்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை. தேவையில்லாமல் கோபமடைவதும் சண்டையிடுவதும் இவர்களின் பொதுவான குணங்களாகின்றன. குற்றச் செயல் புரிவதும், ‘எனக்கென்று யாருமில்லை’ என்று
உணர்வதும் இவர்களின் பிரதானமாகிறது.
உடல்
சார்ந்த உடனிருப்பு ஒன்பது மாதமென்றாலும், உணர்வு சார்ந்த உடனிருப்பு முதல் ஏழு ஆண்டுகள் என்றும் சில உளவியலாளர்கள் கூறுகின்றனர். இந்த ஏழு ஆண்டுகளில் தன் தாய் பார்த்து உறங்கவேண்டும், எழுந்தவுடன் தன் தாய் வேண்டும் என்று குழந்தைகள் ஆசைப்படுகிறார்கள். அழுதாலும் சிரித்தாலும் அவர்கள் அறியப்படுத்த விரும்பும் முதல் நபர் தாய்தான். பரந்தவெளியில் வேகமாக ஓடும் குழந்தை நின்றவுடன் திரும்பித் தேடிப் பார்ப்பது தன் தாயைத்தான். அவர்களின் உணர்வுத்தேடல் வெற்றியடையவில்லை என்றால், அது அதிக பய உணர்வைக் குழந்தைக்குள்
உண்டாக்குகின்றது. ஏழு ஆண்டுகள் என்று சொன்னாலும், அண்மைக்காலத்தில் சில உளவியலாளர்கள் தாய்-சேய்க்கான இந்த உணர்வுப் பிணைப்பு இறுதிமூச்சு வரையும் நீடிக்கிறது என்றும் கூறுகிறார்கள்.
உலகத்
தாய்மார்களுக்கே இப்படியென்றால், உலகத்தினைப் படைத்த உன்னதரின் தாயாம் நம் அன்னை மரியாவுக்கு எவ்வளவு மகத்துவம் கொடுக்கப்பட வேண்டும்! மாபரனை உலகிற்குக் கொண்டுவரும் கருவியாக மட்டும் நாம் அவரைக் குறுக்கிவிட முடியுமா? சிலுவையில் செந்நீர் சிந்தும்போதும், ‘மக்களின் மீட்பே என் தியாக வாழ்வின் இலக்கு’ என்று அமைதி காக்க வைத்தது நம் அன்னை கூறிய அல்லது வாழ்ந்த தியாகப் பாடத்தின் விளைவல்லவா!
மகத்துவமாய்
பிறந்தாரென்று மகிழ்ந்த நேரத்தில், வாளொன்று உன் இதயத்தைத் தாக்குமென்று குழந்தையான இயேசுவைக் கையில் வைத்திருந்த போது அறிந்த இந்த அன்னையின் மனம் உயிரற்ற அன்பு மகனைச் சிலுவையின் நிழலில் தாங்கிச் சந்தித்த வேதனைகளைத் தன் மகனுக்கும் மற்றவருக்கும் கடத்தாமல் தனக்குள்ளேயே தாங்கிக் கொண்ட வேதனையின் ஆழம், இயேசுவுக்காக மட்டுமே என்று என்னால் எப்படிக் கடந்துபோக முடியும்? அது நிச்சயமாக எனக்காகவும், என் மீட்புக்காகவும்தான். அதனால்தான் கானாவூரில் தானே முன்சென்று தேவையில் வாடுவோரின் கவலையை நீக்குகிறார் இறையன்னை. காரணம், இந்த அன்னை கருணையின் வடிவமே!