news
ஞாயிறு மறையுரை
17 நவம்பர் 2024 (இரண்டாம் ஆண்டு) ஆண்டின் பொதுக்காலம் 33-ஆம் ஞாயிறு - தானி 12:1-3; எபி 10:11-14,18 மாற் 13:24-32

கடவுளின் தீர்ப்பு ஏழைகளுக்கே சாதகம்!

திருவழிபாட்டு ஆண்டின் இறுதியை நாம் நெருங்கியுள்ளோம். அடுத்த ஞாயிறு கிறிஸ்து அரசர் திருநாளோடு இந்தத் திருவழிபாட்டு ஆண்டை நிறைவு செய்கிறோம். வரும் திருவருகைக்கால முதல் ஞாயிறு, திருவழிபாட்டின் புதிய ஆண்டாக அமைகிறது. நாம் நிறைவு செய்யும் இந்தத் திருவழிபாட்டு ஆண்டு முழுவதும் ஞாயிறு திருப்பலிகளில் மாற்கு நற்செய்தியின் வழியாக இறைவன் நமக்களித்த மேலான எண்ணங்களுக்காக அவருக்கு நன்றி கூறுவோம்.

2016-ஆம் ஆண்டு நாம் சிறப்பித்த இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில் உலக வறியோர் நாளை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்தார். அதன் அடிப்படையில், நவம்பர் மாதம் 17-ஆம் நாள், அதாவது பொதுக்காலம் 33-ஆம் ஞாயிறை எட்டாவது உலக வறியோர் தினமாகச் சிறப்பிக்கின்றோம். இந்நாளைக் குறித்து ஜூன் மாதம் 13-ஆம் நாள் கொண்டாடப்பட்ட  புனித அந்தோனியார் திருநாளன்று, சீராக் நூலாசிரியர் எடுத்துக்காட்டும் “ஏழைகளின் செபம் இறைவனை நோக்கி எழுகிறது (சீரா 21:5) என்ற இறைவார்த்தையை மையக்கருத்தாகத் திருத்தந்தை தெரிவு செய்துள்ளார்.

உலக வறியோர் தினத்தைக் கொண்டாடத் திரு அவை பணித்த இந்நாளில், நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள வாசகங்கள் இறுதிநாள்களைப் பற்றிச் சிந்திக்க நம்மை அழைக்கின்றன. வாழ்வின் இறுதிநாள் எப்போது, எவ்விதம் வரும் என்பது தந்தையைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. ஆனால், அந்த இறுதிக்காலத்தைச் சந்திக்க நாம் தயாராக இருக்கவேண்டும் என்பதே இன்றைய வழிபாடு நமக்கு விடுக்கும் அழைப்பு.

யூத மக்கள் மத்தியில் இறுதிநாள் சார்ந்த எண்ணங்கள் பரவலாகப் பேசப்பட்டன. அதுவும் அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே உலக முடிவு வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு அவர்களிடம் அதிகம் இருந்தது. இறுதிக்காலத்தைப் பற்றி யூதர்கள், இறுதி நாள் மிகுந்த அச்சம் தரும் நாளாக விடியும் என அஞ்சினர். அது கடவுளின் கோபம் எனவும், உலக அழிவு எனவும் எண்ணினர் (1அர 8:37; எரே 4:11-26; எசே 5:120). கொடுமையான அரசர்கள் பிடியில் சிக்கித் தவித்து, அடிமைகளாக வாழ்ந்தபோது, அதுவே உலக அழிவின் காலம் என நினைத்தனர். குழப்பங்கள், போர்கள், இயற்கை அழிவுகள் போன்றவை உலக இறுதிநாளின் முன்னோட்டம் எனவும் எண்ணினர். நம் காலத்திலும் புயல், வெள்ளம், நிலநடுக்கம் ஆகிய இயற்கைப் பேரிடர்களாலும், ‘கொரோனா எனும் பெருந்தொற்றினால் மக்கள் கொத்து கொத்தாக மடிந்த வேளைகளிலும் ‘இதுதான் உலக முடிவா?’ என்ற கேள்விகளும் எழுந்தன என்பதை நாம் அறிவோம்.

2000-ஆம் ஆண்டு நெருங்கிய வேளையில் உலக முடிவைப் பற்றிய வதந்திகளும், பல குழப்பங்களும் உருவாகின. இறுதிநாளின் அச்சத்தை மிகவும் மிகைப்படுத்தி, வர்த்தகர்களும், ஏன், ஒரு சில சமயப் போதகர்களும் இலாபம் தேடினர் என்பது உண்மை. எருசலேம் நகரில், இயேசுவின் விண்ணேற்றக் குன்றருகே ‘ஒலிவ மலை ஹோட்டல் (Mount of Olives Hotel) என்ற விடுதியை நடத்தும் உரிமையாளர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழும் பல்லாயிரம் கிறிஸ்தவர்களுக்கு 1998 -ஆம் ஆண்டு ஒரு மடலை அனுப்பியிருந்தனர். “2000 -ஆம் ஆண்டு, இயேசுவின் ‘இரண்டாம் வருகை நிகழும்போது, ஒலிவ மலையில் நீங்கள் காத்திருக்க வேண்டாமா? எங்கள் ஹோட்டலில் ஓர் அறையை உங்களுக்காக ஒதுக்கி வைக்கிறோம். முன்பதிவு செய்துகொள்ளுங்கள் என்பதே அக்கடிதத்தில் கூறப்பட்ட விளம்பர வரிகள்.

வர்த்தக உலகமும், சில சமயப் போதகர்களும் ‘உலக முடிவு, ‘இரண்டாம் வருகை ஆகியவற்றைக் கேலிப்பொருளாக மாற்றி, இலாபம் தேடுவதில் தீவிரம் காட்டும் வேளையில், உலக முடிவு என்ற உண்மை, நம்மில் எவ்வகை எண்ணங்களை எழுப்ப வேண்டும், எவ்வகையான உறுதியைத் தரவேண்டும், இறுதிக் காலத்தை நாம் எவ்விதம் தயார் செய்வது போன்ற கேள்விகளை எழுப்புவது நல்லது.

இன்றைய முதல் வாசகம், இறுதிக்காலத்தைப் பற்றி எடுத்துரைக்கின்றது. துன்பங்களில் நிலைகுலையாது நிலைத்திருக்கும் நல்லவரை ஆண்டவர் கைவிடமாட்டார் எனவும், அவர்கள் பெயர்கள் வாழ்வின் நூலில் இடம்பெறும் எனவும் நம்பிக்கை தருகிறது. இன்றைய நற்செய்திப் பகுதி மானிட மகனின் வருகையைப் பற்றி எடுத்துரைக்கின்றது. மனிதராகப் பிறந்து பாடுபட்ட இயேசு மிகுந்த வல்லமையோடு மீண்டும் வருவார்; வரும்போது வானில் பெரும் அடையாளங்கள் காணப்படும். தம்மைப் பின்பற்றி, இறைநம்பிக்கை கொண்டு நேரிய வழியில் நடப்போர் எதற்கும் அச்சப்படத் தேவையில்லை; இறைவனது விருப்பத்தை நிறைவேற்றி வாழ்வோர் இறைவனின் மாட்சியில் பங்குகொள்வர் என இயேசு எடுத்துரைக்கிறார்.

நல்வாழ்வின் அடிப்படையிலேயே ஒருவர் முடிவில்லா வாழ்வை வெகுமதியாகப் பெறமுடியும் என்பதே இன்றைய முதல் மற்றும் நற்செய்தி வாசகங்கள் நமக்குத் தரும் அழைப்பு. திருத்தந்தை உரையாற்றிய மூவேளைச் செப உரையிலும், “இறுதிநாள் குறித்து நாம் எப்போதும் விழிப்பாயிருக்கும் வகையில், நிகழ் காலத்தைச் செம்மையான முறையில் நாம் வாழ வேண்டும் எனக் கூறுகிறார் (வத்திக்கான், 18.11.2018).

நாம் வாழும் இந்த வாழ்க்கை இறப்போடு முற்றிலும் முடிந்து விடுவதில்லை. இவ்வுலகைத் தாண்டி, மற்றொரு வாழ்வு உண்டு. மறுவாழ்வு குறித்து திருவிவிலியத்தில் கூறப்பட்டுள்ள பல கருத்துகளில் ‘இறுதித்தீர்ப்பு என்பது ஒரு முக்கியமான பாடம். 

மூவகை மனநிலைகளில் வாழும் மனிதர்களைச் சந்திக்கிறோம். முதலில், எப்படியும் ஒருநாள் சாகத்தான் போகிறோம்; அதனால், உண்போம், குடிப்போம், எப்படியும் வாழ்வோம் என்ற சுயநல மனநிலையில் வாழ்பவர்கள்; இரண்டாம் நிலையில், என்னதான் நல்லவற்றைச் செய்தாலும், எல்லாமே ஒருநாள் அழியத்தான் போகிறது; பின் ஏன் நல்லவற்றைச் செய்ய வேண்டும்? என்ற விரக்தி மனநிலையோடு வாழ்பவர்கள்; மூன்றாம் நிலையில், எல்லாமே அழியத்தான் போகிறது, நானும் சாகப்போகிறேன்; அதற்கு முன் உள்ள நேரத்தில், என்னால் முடிந்தவரை நல்லது செய்வேன் என்ற நம்பிக்கை உணர்வில் வாழ்பவர்கள். இந்த நம்பிக்கை உணர்வுக்குக் கூடுதல் அர்த்தம் தருவது, மறுவாழ்வு என்ற எண்ணம். நம் வாழ்வு இவ்வுலகத்தோடு முடிவடையாமல் அது மறு உலகிலும் தொடரும் என்ற உணர்வே இவ்வுலகப் பயணத்தைப் பயனுள்ள பாதையில் தொடர்வதற்கு உதவியாக உள்ளது.

இவ்வுலகில் வாழும் நாம் இறுதிநாளில் தகுந்த வெகுமதியோ, தண்டனையோ எதனடிப்படையில் பெறுகிறோம்? ‘வறியோருக்கு நாம் என்ன செய்தோம்?’ என்ற ஒரே ஒரு கேள்விதான் மறுவாழ்விற்குள் நாம் அடியெடுத்து வைக்க அனுமதி தரும் நுழைவுச்சீட்டு. அதிலும், குறிப்பாக, தேவையில் இருக்கும் வறியோருக்கு நாம் என்ன செய்தோம் என்பது ஒன்றே மறுவாழ்வின் வாசலில் நம் வாழ்வை எடைபோடப் போகும் தராசு.

நாம் எத்தனை முறை கோவிலுக்குச் சென்றோம், எத்தனை மறைநூல்களைக் கற்றுத்தேர்ந்தோம், எத்தனை பக்தி முயற்சிகளில், திருப்பயணங்களில் பங்கேற்றோம், எத்தனை நாள் உண்ணா நோன்புகளைக் கடைப்பிடித்தோம் என்பவை மட்டும் மறுவாழ்வில் நாம் நுழைவதற்கு அளவுகோல்களாக இருக்காது. வறியோரிடமிருந்து பெறக்கூடிய பரிந்துரைக் கடிதம் இன்றி, மறுவாழ்வில் அடியெடுத்து வைக்க முடியாது. தேவையில் இருப்போர் சார்பில் என்னென்ன செய்தோம் அல்லது செய்ய மறுத்தோம் என்பதே நம்மை ‘முடிவில்லா வாழ்வுக்கு அல்லது ‘முடிவில்லா அழிவுக்கு இட்டுச் செல்லும்.

உலக வறியோர் தினத்திற்காகத் தமது செய்தியில், ‘கடவுள் தமது குழந்தைகளின் துன்ப துயரங்களை அறிந்திருக்கிறார்; ஏனென்றால் அவர் நம்மீது கவனமும் அக்கறையும் கொண்ட ஒரு தந்தை என்றும், ‘ஒரு தந்தையாக தேவையில் இருப்போராகிய ஏழைகள், ஒதுக்கப்பட்டவர்கள், துன்பப்படுபவர்கள் மற்றும் மறக்கப்பட்டவர்களை மிகவும் நன்றாகக் கவனித்துக்கொள்கிறார் என்றும் விளக்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், ‘நாம் நாள்தோறும் சந்திக்கும் ஏழைகளின் முகங்களிலும் முகவரியிலும் இந்த இறைவார்த்தையைப் படித்துச் சிந்திப்போம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் (உலக வறியோர் தின உரை, 13.06.2024).

பல்வேறு துன்பங்களால் தங்கள் முகத்தையும், முகவரியையும் இழந்து, அடையாளம் ஏதுமின்றி அலையும் ஏழை மக்களுடன் தம்மையே இணைத்துக்கொண்ட இயேசு,  அதே இணைப்பை இறுதித்தீர்ப்பு நேரத்திலும் உருவாக்குகிறார். மனிதர்கள் என்ற அடையாளமே இன்றி உருக்குலைந்து போயிருக்கும் இம்மனிதர்களே, இறுதித்தீர்ப்பு வேளையில் இயேசுவோடு இணைந்து, நமக்குத் தீர்ப்பு வழங்க வருவர். எனவே, தேவையில் இருக்கும் ஒருவருக்காவது நன்மைகள் செய்து, அவரிடமிருந்து நற்சான்றிதழ் பெற்று, விண்ணரசில் நுழையும் தகுதி பெற இன்றே முயல்வோம்.

ஏழைகளுக்காக மன்றாடும்போதும், அவர்களுக்காகப் பிறரன்புச் செயல்களில் ஈடுபடும்போதும் நாம் கடவுளோடு ஒன்றிக்கிறோம் என்பதை உணர்ந்துகொள்வோம். ஏழைகளுக்கு உதவுவதில் முன்மாதிரியாய் இருந்து, தேவையில் இருப்போருக்கு விரைந்துசென்று உதவிய அன்னை மரியாவின் பரிந்துரையை நாடுவோம். அச்சம் தவிர்த்து, இறுதிநாளில் மானிட மகனை நம்பிக்கையோடு எதிர்கொள்வோம்.

news
ஞாயிறு மறையுரை
10, நவம்பர் 2024 (இரண்டாம் ஆண்டு) ஆண்டின் பொதுக்காலம் 32-ஆம் ஞாயிறு - 1அர 17:10-16; எபி 9:24-28; மாற்கு 12:38-44
இறைவனில் இழக்கத் துணிந்த மனம்!

இறைவனுக்குக் காணிக்கை கொடுக்கும் வழக்கம் எல்லாச் சமயங்களிலும் இருக்கிறது. சிந்தித்துப் பார்த்தால், இறைவனுக்கு எதை நாம் காணிக்கையாகக் கொடுக்க முடியும்? நமக்குச் சொந்தமானதைக் கொடுத்தால்தானே அது காணிக்கையாகும்! நம்முடையது என நாம் நினைக்கும் எதுவும் நம்முடையதல்லவே. இந்தப் பூமி நம்முடையதல்ல... நம் உடல், உயிர் நம்முடையதல்ல... ஏன் நம் பெற்றோர்கூட நாம் தேர்ந்தெடுத்தவர்கள் அல்லர்... நாம் இறக்கும்போது ‘இது என்னுடையது’ என எதையும் கொண்டு செல்லவும் முடியாது. 

ஒன்றுமே கொண்டு வராத நமக்கு இறைவன் வழங்கியதில் சிறியவற்றை மீண்டும் அவருக்கே திருப்பிக் கொடுப்பது எப்படிக் காணிக்கை ஆகும்? இறைவனுக்குத் தேவைகள் ஏதேனும் உண்டோ? இறைவன் எந்தத் தேவையும் அற்றவர். இறைவன் பெறுபவர் அல்லர்; அவர் தருகிறவர்! பிறகு ஏன் காணிக்கை? 

காணிக்கை தருவது உண்மையில் ஒரு வழிபாடு. ‘இறைவா நான் உமக்குத் தருபவை எதுவும் என்னுடையதல்ல; அது உம்முடையது. உம்முடையதை உமக்கே திருப்பித் தருகிறேன்’ என்ற உணர்வோடு அனைத்தையும் இறைவனுக்கே கொடுக்கும் ஓர் உள்ளார்ந்த வழிபாடுதான் காணிக்கை. இந்த உணர்வோடு இறைவனுக்குக் கொடுக்க முன்வருபவர்கள் விளம்பரம் தேட மாட்டார்கள்; வீண் பெருமையை நாட மாட்டார்கள். 

இன்று தர்மம் செய்வதுகூட ஒரு வியாபாரமாகி விட்டது. “நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும்” (மத் 6:5) என்கிறது திருவிவிலியம். உயர்ந்த அறத்தின் இலக்கணமும் இதுவல்லவா! ஆனால், இன்று பலர் தண்டோரா போட்டுத் தர்மம் செய்கிறார்கள். தங்கள் புகைப்படம் பத்திரிகையில் வரவேண்டும் என்பதற்காகத் தர்மம் செய்கிறார்கள். தங்கள் பெயர்கள் கல்வெட்டுகளில் பதிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே உதவி செய்கின்றனர். ஆலயங்களில் தர்மம் செய்யும்போதுகூட சிலர் தங்கள் பெயர்களைப் பெரிதாகப் போட்டு, ‘இன்னார் உபயம்’ என்று எழுதி வைத்துள்ளதைப் பார்த்திருக்கிறோம். இவை அனைத்தும் தர்மமாகுமோ? அது முதலீடு; அது பண்டமாற்று. உண்மையில் தர்மம் என்பது இறைவன் நமக்குக் கொடுத்த கடனைத் திரும்பக் கொடுப்பதுவே. 

‘நான் மிகப்பெரிய செல்வந்தன்’ என்ற ஆணவத்திலும், ‘எல்லாம் என்னுடையதே’ என்ற அறியாமையிலும் தம்பட்டம் அடித்துத் தானதர்மங்கள் செய்யும் விளம்பர விரும்பிகளுக்கு நடுவில், எவ்வித விளம்பரமும் தேடாமல், எவருடைய கவனத்தையும் ஈர்க்காமல், இறைவன்மீது மட்டில்லாப் பற்றுகொண்டு வாழ்ந்த இரண்டு ஏழைக் கைம்பெண்கள் இன்றைய வார்த்தை வழிபாட்டில் நாம் கடைப்பிடிக்கப்பட வேண்டிய உயர் ஆளுமைகள்.

இன்றைய முதல் வாசகத்தில் எலியா என்ற இறைவாக்கினர் சந்திக்கும் சாரிபாத்துக் கைம்பெண்ணை நாமும் சந்திக்கிறோம். சாரிபாத்து ஒரு பெனிசிய துறைமுக நகர். இது ஒரு புறவின மக்கள் வாழும் இடம். இஸ்ரயேலில் (வட நாடு) பணியாற்றிய மிக முக்கியமான இறைவாக்கினரான எலியா இஸ்ரயேல் குலத்தவரல்லாத பெண்ணைச் சந்திக்கிறார். அந்தக் கைம்பெண்ணும், அவரது மகனும் வாழ்ந்த வாழ்க்கை என்பது வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல் தினந்தோறும் போராடும் பல கோடி ஏழைகளின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது. அடுத்த நாள் விடியாமலே இருந்தால் நன்றாக இருக்குமே என்ற ஏக்கத்தோடு படுக்கச் செல்லும் கோடிக்கணக்கான ஏழைகளில் இவர்களும் அடங்குவர். ஒரு பானையில் கையளவு மாவு... கலயத்தில் சிறிதளவு எண்ணெய்... இவ்வளவுதானே இந்த ஏழைத்தாயின் சொத்து மதிப்பு. இருப்பதை இன்றோ, நாளையோ உண்டுவிட்டு மாண்டுவிட வேண்டியதுதான் என்று தங்களுக்குத் தாமே மரணத் தீர்ப்பு எழுதிவிட்டனர் (1அர 17:12).

விரக்தியின் விளிம்பில் விம்மிக்கொண்டிருந்த இந்தக் கைம்பெண்ணின் வாழ்க்கையில் கடவுள், இறைவாக்கினர் எலியா வழியாகக் குறுக்கிடுகிறார். இறைவனின் குறுக்கீடு என்பது அந்தப் பெண்ணின் வாழ்வில் இறைவன் நிகழ்த்தப்போகும் வல்ல செயல்களைக் காண்பதற்கான ஓர் அழைப்பு அல்லவா!  குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கேட்ட எலியா, தொடர்ந்து ‘கொஞ்சம் உணவும் (அப்பமும்) தருவாயா?’ என விண்ணப்பிக்கிறார். அந்தப் பெண்ணோ தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்தினாலும், தன்னுடைய வறுமையிலும் பசியிலும் மற்றொரு மனிதரின் பசியைப் போக்க முன்வருகிறார். ஆம், ஏழைகளின் மனம் அப்படிப்பட்டதுதானே! அவர்களுக்குத்தான் பிறர் பசி என்பது என்னவென்று அனுபவப்பூர்வமாகத் தெரியும். எனவேதான், மகனின் பசியையும்கூட மறந்து, எலியாவின் பசியைத் துடைப்பதே பெரிது என எண்ணுகிறார். 

எவ்விதப் பலனையும் எதிர்பாராமல் தன்னுடைய வாழ்வுக்காக வைத்திருந்த அனைத்தையும் கொடுத்த இந்த சாரிபாத்துக் கைம்பெண்ணைப்போல, மற்றொரு கைம்பெண்ணை இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கிறோம். இந்த ஏழைக் கைம்பெண்ணைக் குறித்து நற்செய்தி கூறும் வார்த்தைகள் ஆழமானவை.

பிறர் பாராட்ட வேண்டுமென மிகுதியிலிருந்து மிகுதியாய்க் காணிக்கைக் கொடுத்தனர் செல்வர்கள். ஆனால், இந்த ஏழைக் கைம்பெண்ணோ தமக்குப் பற்றாக்குறை இருப்பது தெரிந்தும் தம்மிடம் இருந்த அனைத்தையுமே, ஏன் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே காணிக்கைப் பெட்டியில் போடுகிறார். இந்தக் கைம்பெண் போட்டது என்னமோ இரண்டு செப்புக்காசுகள்தாம். அதாவது, சிறிதும் மதிப்பற்ற மிகச்சிறிய நாணயங்கள் அவை. இவர் போட்ட இரண்டு காசுகள் ஒரு கொதிராந்துக்கு இணையானவை என மாற்கு குறிப்பிடுகிறார். ஒரு கொதிராந்து என்பது ஒரு தெனாரியத்தில் 128 -இல் ஒரு பகுதி. அதாவது ஒரு தெனாரியம் என்பது ஒரு நாள் கூலி. அப்படியெனில், அப்பெண் காணிக்கைப் பெட்டியில் போட்டது மிக மிகச் சிறிய காசு. ஆனால், அப்பெண்ணின் பார்வையில் அக்காசு மிகவும் மதிப்புக்குரியது. மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகப் பல ‘வித்தைகளை’ செய்த மறைநூல் அறிஞர்கள் நடுவில், அடுத்தவர்களின் கவனத்தை ஈர்க்க எத்தகைய முயற்சியையும் எடுக்காத இப்பெண்ணின் செயலைக் கூர்ந்து கவனித்த இயேசு, அவரை மட்டுமே சிறப்பாகப் பாராட்டுகிறார். 

“இறைவன் அளவுகளையும், எண்ணிக்கைகளையும் கருதுபவர் அல்லர். அவர் தரமான வாழ்வைக் கருதுபவர். உள்ளத்தின் சிந்தனைகளை நன்கு அறியும் இறைவன், தூய எண்ணங்களுக்கு முக்கியத்துவம் வழங்குகிறார்” என்று திருத்தந்தை பிரான்சிஸ் எடுத்துரைத்ததை நாம் இங்கு நினைவில் கொள்ளலாம் (மூவேளைச் செப உரை, 11.11.2018).

இறைவனுக்கு அளிக்கும் காணிக்கை நம் அன்புக்கு உரியதாக, சிறந்ததாக இருக்க வேண்டும். அதைத் தரும்போது மனம் உவந்து தரவேண்டும். இல்லை என்றால், அது காணிக்கை ஆகாது. காணிக்கை என்பது தியாக உணர்வின் வெளிப்பாடு. தியாகம் அன்பை அளக்கும் அளவுகோல். இந்தக் கைம்பெண் தன்னை முழுவதும் இறைவனுக்கு அர்ப்பணித்து விடுகிறார். இறைப்பராமரிப்பில் தன்னையே இழக்கிறார். கைம்மாறு கருதாமல் தன்னையே கடவுளிடம் கொடுக்கிறார். கடவுள் தன் தியாகத்தைப் பார்த்து ஏதாவது செய்வார் என்று அவர் இப்படிச் செய்யவில்லை. எனவேதான், காணிக்கை செலுத்திய நிறைவுடன் காணாமல் போய் விடுகிறார். ‘கடவுளே, நான் இவ்வளவு தருகிறேன், நீ இவ்வளவு தா’ என்றால் அது வியாபாரம். 

சங்க காலத்தில் ஆய் அண்டிரன் என்ற ஒரு சிற்றரசன் இருந்தான். அவனது கொடை குணத்தைப் பாராட்டி, புலவர் ஏணிச்சேரி முடமோசியார் இவ்வாறு பாராட்டிப் பாடுகிறார்:

“இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்
அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்; 
பிறரும் சான்றோர் சென்ற நெறி என
ஆங்குப் பட்டன்று, அவன் கைவண்மையே”
(புறநானூறு 134)

இந்தப் பிறவியில் அறம் செய்தால் அது மறுபிறவியில் பயன் தரும் என்று எண்ணிக்கொண்டு ஆய் அறம் செய்வதில்லை. ஏனெனில், அவ்வாறு செய்தால் அது அறமல்ல, வணிகம் என்று நினைப்பவன் ஆய். அறம் என்பது சான்றோர்கள் வாழ்ந்து காட்டிய ஒரு வழிமுறை என்று எண்ணிக்கொண்டு கொடை வழங்குபவன் ஆய் என்று புகழ்ந்து பாடுகிறார் புலவர்.

இன்றைய வாசகங்களில் நாம் சந்தித்த இவ்விரண்டு கைம்பெண்களும் தங்களுடைய செலவுகள் மற்றும் தேவைகளைக் கருத்தில் கொள்ளாது, அனைத்தையும் கொடுத்துவிட்டு, இறைவனுக்கு முன் வெறுமையாகத் திரும்புகின்றனர். ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக நன்மைகள் செய்த இவர்கள், இறைவனின் இதயத்தில் இடம்பிடித்தனர். எவ்விதப் பலனையும் எதிர்பாராமல், இவ்விரு கைம்பெண்கள் செய்த செயல்களைப் பற்றிச் சிந்திக்கும்போது, கவிஞர் கலீல் கிப்ரான் அவர்கள் எழுதிய ‘கொடுப்பது’ என்ற கவிதை நினைவுக்கு வருகிறது. ‘நீ சேர்த்து வைத்துள்ள உடைமைகளிலிருந்து நீ கொடுக்கும்போது, குறைவாகவே கொடுக்கிறாய். எப்போது நீ உன்னையே கொடுக்கிறாயோ, அப்போதுதான் உண்மையிலேயே கொடுக்கிறாய்.’

எனவே, கடவுளுக்கும், பிறருக்கும் தரும்போது, எதையும் எதிபார்க்காமல், நம்மையே வருத்திக் கொடுக்க முன்வருவோம். இந்த இரு கைம்பெண்களைப்போல, தங்கள் வாழ்வு முழுவதையும் தியாகப் பலியாகத் தந்துள்ள ஆயிரமாயிரம் கைம்பெண்களை நினைத்துப் பார்ப்போம். வறுமையில் வாழ்ந்தாலும், தன்னை முற்றிலும் இறைவனில் இழந்த அன்னை மரியாவைப்போல நம்மையே இறைவனில் இழக்க முன்வருவோம்.

news
ஞாயிறு மறையுரை
03, நவம்பர் 2024 (இரண்டாம் ஆண்டு) ஆண்டின் பொதுக்காலம் 31-ஆம் ஞாயிறு - இச 6:2-6 எபி 7:23-28 மாற் 12:28-34

அன்பே வாழ்வு!

அன்பே பெருங்கொடை!

“அன்புதான் இந்த உலகத்தில் எல்லா நோய்களுக்கும் மருந்து. ஆனால், அந்த அன்பே பொய்யானால் இந்த உலகத்தில் அதைவிடக் கொடிய நோய் எதுவுமில்லை” என்றவர் புனித அன்னை தெரேசா. மனித வாழ்வின் இரகசியம் அன்பு செய்வதிலே அடங்கியிருக்கிறது. காலத்திற்கும் காலாவதியாகாத ஒரே மருந்து அன்பே. மனிதர் அன்பு செய்யக் கற்றுக்கொள்ளும்போதுதான் மகிழ்ச்சியாக வாழக் கற்றுக் கொள்கிறார்.

“கடவுள் தம் உருவிலே மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்” (தொநூ 1:27). கடவுளுடைய பண்புகளால் படைக்கப்பட்டவரே மனிதர். மற்ற படைப்புகளில் இறைவனுடைய பண்புகள் சில வெளிப்பட்டாலும், மனிதரிடத்தில்தான் கடவுளுடைய பண்புகள் முழுமையாக வெளிப்பட்டன. அன்பே கடவுளின் முழுமையான பண்பு. மனிதர் இறை-மனித அன்பின் வழியாக இறைவனோடு நெருங்கி வரமுடியும். கடவுளின் கட்டளைகளின்படி நடந்தால் கடவுளை இன்னும் அதிகமாக நெருங்கி வரலாம். இறைவனின் முதன்மையான கட்டளையே அன்பு செய்வதுதான். இறைவனோடு அன்புகொள்ளும் தகுதி மனிதருக்கே இருக்கிறது. இதுவே மானிடப் படைப்பின் பெருமை.

‘மானிடர் - கடவுளின் உருவம்’ என்ற கருத்துரு மனிதர் மற்ற படைப்புகளோடும், சக மனிதர்களோடும், இறைவனோடும் அன்பு கொள்ள வேண்டும் என்பதை உணர்த்திக் கொண்டிருக்கிறது. இதுவே மனிதராவதற்கு உயரிய வழி. மனித பிறப்பின் இலட்சியமும் அதுவே. “அன்பே உருவான கடவுள், பிறரை அன்புகூர வேண்டும் என்ற நோக்கத்தினாலேயே, அன்பிலிருந்து நம்மைப் படைத்தார்” என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ். ‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ எனப் பாடினார் புலவர் ஒளவையார். உண்மையில் மானிடராய்ப் பிறத்தல் எளிது; ஆனால், மானிடராய் வாழ்வதுதான் கடினம். அதனால்தான் உருதுக் கவிஞர் மிர்ஸா காலிப், ‘மனிதனுக்கு மிகவும் கடினமானது மனிதனாவதுதான்’ என்கிறார்.

அன்பிற்குரியவர்களே! ஆண்டின் பொதுக்காலம் 31 -ஆம் ஞாயிறு வழிபாடு முப்பரிமாண அன்பைக் குறித்துச் சிந்திக்க நம்மை அழைக்கிறது. தன்னையும், தன்னைப் போன்ற பிறரையும், தம் உருவின் முழுவடிவாம் இறைவனையும் அன்பு செய்து வாழ ஆரத்தழுவி நம்மை அழைக்கிறார் இறைமகன் இயேசு.

இன்றைய நற்செய்தியிலிருந்து நம் சிந்தனையைத் துவங்குவோம். இயேசுவின் அறிவுத்திறனைக் கண்டு வியந்த மறைநூல் அறிஞர் ஒருவர், இயேசுவை அணுகி வந்து, “அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?” (மாற் 12:28) என்ற ஒரு கேள்வியை முன்வைக்கிறார். இயேசு அந்த மறைநூல் அறிஞருக்கு மட்டுமல்லாமல், கூடியிருந்த அனைத்து மக்களுக்கும் கிறிஸ்தவ மறையின் மிக முக்கியமான கட்டளைகளைக் கூறுகிறார். “இஸ்ரயேலே கேள்” என்ற சிறப்பான அறைகூவலுடன் இயேசு மூன்று கட்டளைகளைக் கூறுகிறார். அவை 1. இறையன்பு, 2. பிறரன்பு, 3. தன்னன்பு.

யூதர்கள் ஆண்டவரை முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும், முழு ஆற்றலோடும் அன்பு செய்வதைத் தங்கள் முதன்மையான கட்டளையாகக் கடைப்பிடித்து வந்தனர். இந்த முதன்மையான கட்டளையே (இச 6:4) யூதரின் நம்பிக்கை முழக்கம் ஆகும். இது யூதச் சமயத்தில் மிக முக்கியமான ‘செமா மன்றாட்டு’ (Shema Prayer). ஒரு யூதர் இந்த மன்றாட்டை ஒவ்வொரு நாளும் இரண்டுமுறை செபித்தார். இதனை இஸ்ரயேலர்களின் காலைச் செபம் என்று சொல்வார்கள். இவர்களின் காலைச் செபம் ‘செமா இஸ்ரயேல்’ (shema Israel) என்று தொடங்குகின்றது. யூதக் குழந்தைகளுக்கு முதன்முதலில் கற்றுக்கொடுக்கப்பட்ட செபமும் இதுவே. “நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல்” (இச 6:7). இறக்கும் தறுவாயில் ஒரு யூதரின் உதடுகளில் ஒலித்த இறுதி மன்றாட்டும் இதுதான்.

இந்த ‘இஸ்ரயேலே கேள்’ என்ற நம்பிக்கை முழக்கத்தை ஒவ்வொரு யூதரும் தங்கள் வீடுகளின் கதவுகளில் தொங்கவிட்டனர். ஆண்களோ இந்த நம்பிக்கை முழக்கத்தைக் கையிலே சீட்டுப் பட்டமாகக் கட்டிக் கொண்டனர். சிலர் சீட்டுப் பட்டமாக எழுதி நெற்றியிலும் கட்டிக்கொண்டனர். இஸ்ரயேலர்கள் தங்கள் முழு இதயத்தோடும், முழு சிந்தனையோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆன்மாவோடும், முழு ஆற்றலோடும், முழு வலிமையோடும் கடவுளை அன்பு செய்ய வலியுறுத்தப்படுகிறார்கள்.

இதில் மிக முக்கியமான இறையியல் நம்பிக்கைகள் பொதிந்து கிடக்கின்றன. யாவே, பிற தெய்வப் போலி வழிபாடுகளைச் சகித்துக்கொள்ளாத கடவுள் ஆவார். அவர் அன்பைக் கொடுத்து அனைத்தையும் தொடங்கி வைக்கிறார் (உரோ 8:31-39; எபே 1:1). பின்னர் அதே அன்பை எதிர்பார்க்கிறார். அந்த அன்பு முழுமையான அன்பாக இருக்கவேண்டும். ‘கடவுளையும் அன்பு செய்வேன்; அதேவேளையில் கொஞ்சம் மூடநம்பிக்கையிலும் எனக்கு விருப்பம் உண்டு’ என்ற நிலைப்பாட்டில் உள்ளவர்கள் பகுதி நேர அன்பர்கள். அவர்களால் கடவுளை முழுமையாக அன்பு செய்ய முடியாது. எனவேதான், இக்கட்டளையின் முக்கியத்துவத்தை உணர்ந்த இயேசு  திருச்சட்டத்தின் முதன்மையான கட்டளை எது எனக் கேட்ட மறைநூல் அறிஞரிடம், இந்த வசனத்தையே (இச 6:4) மனப்பாடமாகக் கூற வைத்தார் (மாற் 12:28).

இறையன்பு என்ற கட்டளையைப் பற்றிப் பேசிய இயேசு, இதற்கு இணையாக இரண்டாவது கட்டளையாக லேவியர் நூலிலிருந்து மேற்கோள் காட்டுகிறார். “உன்மீது நீ அன்பு கூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக” என்கிறார் (லேவி 19:18; மாற் 12:31). யூதர்களின் பார்வையில் இக்கட்டளை தம் சொந்த இனத்தாரை மட்டுமே அன்பு செய்யத் தூண்டியது (விப 2:13). அதாவது, அடுத்திருப்பவர் என்பது ஒரு சக யூதரையே குறித்தது. ஆனால், இயேசுவோ அன்புக்கு எல்லை இல்லை எனத் தெளிவாகக் கற்பித்தார் (லூக் 10:25; மத் 5:43). இயேசுவின் பார்வையில் அடுத்திருப்பவர் என்பவர் தேவையிலிருக்கும் அனைவரையும் உள்ளடக்குகிற, பரந்து விரிந்த கண்ணோட்டமாகும். இதுவே இயேசு வழங்கும் புதிய கட்டளையாகும் (யோவா 13:34-35).

இயேசு கூறிய இரண்டாம் கட்டளையை ஆழமாகப் பார்த்தால், அங்கு இரு அன்புகளைப் பற்றி இயேசு பேசுவதை உணரலாம். அடுத்தவர்மீது அன்பு கொள்வதற்கு ஓர் உந்துசக்தியாக, தன்மீது கொள்ளும் அன்பை இயேசு குறிப்பிடுகிறார். அதாவது, அடுத்தவர்மீது அன்புகூர்வதற்குமுன், ஒருவர் தன்மீது முதலில் அன்புகூர வேண்டும் என்று இயேசு கூறுகிறார். பிறரன்பின் தொடக்கமே தன்னன்பு. தன்னை அன்பு செய்பவர் மட்டுமே கடவுளையும் மற்றவரையும் அன்பு செய்வர். தன்னன்பு இல்லாதவர் பிறரிடமிருந்து அன்பைப் பெறவோ, பிறருக்கு அன்பைக் கொடுக்கவோ முடியாது. தன் உணர்வுகளுக்கும், விருப்பு வெறுப்புகளுக்கும், எண்ணங்களுக்கும் செவிமடுப்பவரே, பிறருடைய உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும் செவிமடுக்க முடியும். தன்னை மதித்து, ஏற்று, அன்பு செய்து, பிறரையும் ஏற்று உறவுகொண்டு, இறையன்பில் வாழும் மனிதரே முழு மனிதராகிறார்.

இறையன்பு மற்றும் பிறரன்பு பற்றித் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குறிப்பிடும்போது, “கடவுளை அன்புகூர்வது என்பது, அவரருகே அவருக்காக வாழ்ந்து, அவருடன் இணைந்து உழைப்பவர்களாக, அதாவது நமக்கு அடுத்திருப்பவரிடையே எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி பணிபுரிவதையும், எல்லைகளின்றி மன்னிப்பதையும், ஒன்றிப்பிலும் சகோதரத்துவத்திலும் உறவுகளை வளர்ப்பதையும் குறித்து நிற்கின்றது” எனவும், “பிறரன்பு என்பது ஏழைகளின் வெளிப்புறத் தேவைகளை நாம் நிறைவேற்ற வேண்டும் என்பது மட்டுமல்ல; அவர்கள் எதிர்பார்க்கும் உடன்பிறந்த நெருக்கத்தையும், அக்கறையையும் நாம் வெளிப்படுத்தவேண்டும்” எனவும் குறிப்பிடுகிறார் (மூவேளைச் செப உரை, 04.11.2018).

நிறைவாக, இடையறாது அன்பு செலுத்தி வாழ்வது என்பது கடினம்தான். ‘அன்பு செலுத்தியதால் துன்பத்துக்கு ஆளாகி இருக்கிறேன்’ என்று புலம்பும் பெரும்பாலான மனிதர்களின் ஓசையைக் கேட்க முடிகிறது. ‘அன்பினால் பல ஏமாற்றங்களைச் சந்தித்துத் துவண்டுப்போனேன்’ என அங்கலாய்த்தவர்களையும் நாம் சந்தித்துள்ளோம். உண்மையான அன்பு யாரையும் ஏமாற்றுவதில்லை. உண்மை அன்பு எதையும் எதிர்பார்ப்பதுமில்லை. அன்பு செலுத்துவதையே தங்களது இயல்பாகக் கொண்டவர்களின் எண்ணங்கள் மேன்மையானதாகவே இருக்கும். உண்மை அன்பு எந்த நிபந்தனைகளுக்கும் விதிமுறைகளுக்கும் உட்பட்டதல்ல. ஒருவரை அவருடைய இயல்பிலேயே, இருக்கும் நிலையிலேயே ஏற்றுக்கொள்வதே உண்மையான அன்பு.

இயேசு கிறிஸ்து நம்மீது கொண்ட அன்பு உண்மையான, நிபந்தனையற்ற அன்பு. நாம் இருக்கும் நிலையிலேயே நம்மை அன்பு செய்கிறார். தமது வாழ்வில் சந்தித்த எல்லாரையும் அளவுகடந்து அன்புகூர்ந்தார். தலைமைக் குருவான அவர் தம்மைத் தாமே பலியாகச் செலுத்தி (எபி 7:27), தம் அன்பு முகவரியை அகிலத்திற்கும் பறைசாற்றினார். அன்பே வாழ்வு; அன்பே கடவுள்; அன்பே பெருங்கொடை. “உண்மையான செல்வம் என்பது கடவுளால் அன்பு செய்யப்படுவதும், அவரைப்போல அன்பு செய்யக் கற்றுக்கொள்வதுமே” (மூவேளைச் செப உரை, 13-10-2024) உண்மையான, கலப்படமற்ற அன்பின் தெய்வீக இலக்கணத்தை இயேசுவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள, அதையே அயலாருக்கும் வழங்க இறைவனின் அருளை இறைஞ்சுவோம்.

news
ஞாயிறு மறையுரை
பொதுக்காலம் 24 -ஆம் ஞாயிறு (15 செப்டம்பர் 2024)
சிலுவை இல்லாமல் சீடத்துவம் இல்லை!

இயேசு யார்? அவரை எப்படிப் பின்பற்றுவது? எனும் இரு கேள்விகளுக்கு விடை காண அழைக்கிறது ஆண்டின் பொதுக்காலம் 24 -ஆம் ஞாயிறு. மாற்கு நற்செய்தி 16 அதிகாரங்களைக் கொண்ட மிகச்சிறிய நற்செய்தி. இந்த நற்செய்தியின் முதல் பகுதி, இயேசுவின் கலிலேயப் பணியை மையமாகவும் (1:14-8:26), இரண்டாம் பகுதி எருசலேம் பணியை மையமாகவும் (8:31-16:8) கொண்டு பிரித்துக் கூறுகின்றனர் திருவிவிலியப் பேராசிரியர்கள். மாற்கு நற்செய்தி 8 -ஆம் அதிகாரம் இயேசுவின் கலிலேயப் பணியின் நிறைவுப் பகுதியாகவும், எருசலேம் பணியின் தொடக்கப் பகுதியாகவும் அமைகிறது. இவ்வதிகாரத்தில் இயேசு கேட்கும் இரு கேள்விகளை மையமாகக் கொண்டு நம் சிந்தனைகளை நிறைப்போம்.

இயேசு மெசியாவாக மக்களுக்கும் குறிப்பாக, தம் சீடருக்கும் வெளிப்படுத்த விரும்பி, அதற்கேற்ப தம் இறையாட்சிப் பணிகளை ஆற்றினார். மக்களும் சீடரும் இயேசுவின் வல்ல செயல்களைக் கண்டு வியந்தனர்; அவர் போதனைகளை ஏற்றனர்; பரிசேயர், மறைநூல் அறிஞர் போன்றவர்களைத் தவிர ஏனைய மக்கள் இயேசுவைப் பற்றி நல்லெண்ணம் கொண்டனர். தம்மைப் பிற்காலத்தில் மக்களுக்கு அறிவித்துத் தம் இறையாட்சிப் பணியைத் தொடர்ந்து செய்ய வேண்டிய சீடர்கள், தம்மைப் பற்றித் தெளிவான அறிவுபெற வேண்டும் என இயேசு விரும்பினார். ஆகவே, கலிலேயாவில் பணி முடியும் வேளையில் தம்மைப் பற்றிய ஆய்வை இயேசு சீடரிடம் நடத்துகிறார். அவர் நடத்தும் ஆய்வில் கேட்கும் இரண்டு கேள்விகள்தான் ‘நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?’, ‘நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?’

இயேசுவின் இந்த இரு கேள்விகளையும் ஆழமாகச் சிந்திக்கும்போது, இது வெறும் கேள்விகள் அல்ல; மாறாக, சீடத்துவத்துக்கான ஓர் அழைப்பு எனப் புரிந்துகொள்ளலாம். இயேசுவின் பணி வாழ்விலும், பாடுகளிலும் பங்கேற்க அவரே நமக்குத் தரும் அழைப்பு. அழைப்புக்கு வெறும் வாய்மொழி அறிக்கையால் அல்ல; செயல் வடிவம் கொடுக்க அல்லது இயேசுவின்மேல் கொண்டுள்ள நம்பிக்கையை வாழ்வில் நடைமுறையாக்குவதற்கான அழைப்பாகும் (முதல் வாசகம் யாக் 2:14-18). இயேசு தருகின்ற அழைப்பைச் சீடர்கள் புரிந்துகொண்டனரா? நாம் புரிந்துகொண்டுள்ளோமா? சிந்திப்போம்.

இயேசு கேட்ட முதல் கேள்வி: ‘நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?’ என்பது. இயேசு இந்தக் கேள்வியைக் கேட்ட இடமும் முக்கியத்துவம் பெறுகிறது. இயேசு பிலிப்புச் செசரியாவைச் சேர்ந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் செல்லும் வழியில் இந்தக் கேள்விகளைக் கேட்கிறார். மன்னன் ஏரோதின் மகன் பிலிப்பு தன் நினைவாகவும், சீசரின் நினைவாகவும் உருவாக்கிய பிரமாண்டமான நகரம் பிலிப்புச் செசரியா. மேலும், அப்பகுதியில் பால் (Bal), பான் (Pan), சீயுஸ் (Zeus) போன்ற கடவுள்களுக்குக் கோவில்களும் இருந்தன. அரசர்கள், பிற கடவுள்கள் போன்றோரின் பெருமைகளையும், அவர்கள் கட்டிய பிரமாண்டமான நினைவுச் சின்னங்களையும் அடையாளப்படுத்தும் அப்பகுதியில், சீடரின் எண்ணங்களில் தாம் எத்தகைய அடையாளத்தைப் பதித்திருக்கிறோம் என்பதை அறிய விழைந்தார் இயேசு. இயேசுவின் முதல் கேள்விக்குச் சீடர் இயேசுவிடம், “வல்ல செயல்கள் செய்ததால் எலியா என்றும், ஆட்சியாளர்களின் குற்றங்களைச் சுட்டிக்காட்டியதால் திருமுழுக்கு யோவான் என்றும், எரேமியாவைப்போல செயல்பட்டதால் இறைவாக்கினருள் ஒருவர் எனவும் சொல்கின்றனர்” என்கிறார்கள் (8:28). ஆனால், சீடர்கள் தம்மை என்ன சொல்கிறார்கள் என்பதை அறிய ஆர்வம் கொண்ட இயேசு, “நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என வினவுகிறார். இயேசுவின் இந்தக் கேள்வி மாற்கு நற்செய்தியின் மையக்கேள்வியாக அமைகிறது. பேதுரு “நீர் மெசியா” என்று ஒரே வார்த்தையில் பதிலளிக்கிறார். பேதுருவின் பதில்மொழி ஒட்டுமொத்தக் கிறிஸ்தவர்களின் பதிலாகவே பார்க்கப்பட வேண்டும். மெசியா என்றால் ‘அருள்பொழிவு செய்யப்பட்டவர்’ என்று பொருள். பழைய ஏற்பாட்டில் குருக்கள், அரசர்கள், இறைவாக்கினர்கள் அருள்பொழிவு செய்யப்பட்டு கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டனர் என நம்பினர். ஆனால், இயேசுவின் காலத்தில் மெசியா குறித்த யூதர்களின் எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொள்வது அவசியம். ‘தாவீதின் வழித்தோன்றலில் மெசியா மாபெரும் அரசராக இருப்பார்; உரோமையரின் பிடியிலிருந்து மக்களை விடுவித்து நலமான எதிர்காலத்தை அமைத்துத் தருவார்; அவர் எருசலேம் நகரைப் புதுப்பிப்பார்; அவருக்கு எதிராக எழும் போரில் அவரே வெற்றி பெறுவார்; அவருடைய எதிரிகள் காணாமல் போவார்கள்; மெசியாவே உலக நாடுகளை அரசாள்வார்; அவரது அரசு என்றென்றும் நீடித்திருக்கும்; அமைதியும் நன்மையும் நிறைந்த புதிய காலத்தை அவர் அருள்வார்.’ இவ்வாறான மெசியா குறித்த பெருங்கனவு யூதர்களுக்கு மட்டுமல்ல, சீடர்களுக்கும் இருந்தன. மெசியா வீரதீரச் செயல்கள் புரிந்து, யூத மக்களுக்கு ஒரு வெற்றிகரமான அரசியல் தலைவராக இருப்பார் என்ற நம்பிக்கையின் எதிரொலிதான் பேதுருவின் ‘மெசியா அறிக்கை.’

பேதுருவும், மற்ற சீடரும் இயேசுவை மெசியா என்று அறிக்கையிட, இயேசுவோ தமது மரணத்தைப் பற்றி அறிக்கையிடுகிறார். தம்மை ‘மானிட மகன்’ என்கிறார். இந்த மானிட மகனைத் தம் மக்களுக்காகத் தியாகம் செய்து இறக்க வேண்டிய ‘துன்புறும் மெசியாவாக’ மிக அழகாக வடிக்கிறார் நற்செய்தியாளர் மாற்கு.

இயேசு தம் துன்பங்களையும் இறப்பையும் முதன்முறை வெளிப்படுத்துகிறார் (8:31). தம்மைப் பின்தொடர்தல் என்பது தமது பாடுகள், இறப்பு, உயிர்ப்பில் பங்குகொள்வதாகும் எனும் படிப்பினையை இயேசு தொடர்ச்சியாகக் கற்பிக்கிறார். பேதுருவால் இதைப் புரிந்துகொள்ளவும் முடியவில்லை, ஏற்றுக்கொள்ளவும் இயலவில்லை. எனவே, பேதுரு இயேசுவைத் தனியே அழைத்துக் கடிந்துகொள்கிறார். இயேசுவும் பேதுருவிடம் ‘என் கண்முன் நில்லாதே, சாத்தானே’ என்றும், ‘மனிதருக்கு ஏற்றவை பற்றி எண்ணுகிறாய்’ எனவும்  கடிந்துகொள்கிறார்.

‘சாத்தான்’ என்றால் ‘எதிரி’ என்று பொருள்படும். நம்பிக்கை இல்லாத சீடர்கள் சாத்தானுக்குரியவர்கள். இயேசுவின் குழுமத்தில் சாத்தானுக்கு இடமில்லை. ‘மனிதர்கள்’ என்பவர்கள் இவ்விடத்தில் யூதத் தலைமைத்துவத்தையும், அல்லது தொடக்கக்கால திரு அவையில் இயேசுவிற்கு எதிராக இருந்த அனைத்துத் தலைமைத்துவத்தையும் குறிப்பதாக அமைகிறது. இப்பின்னணியில் இயேசு பாடுபடக் கூடாது என்று அடம்பிடிக்கும் பேதுரு தமக்கு எதிரி என்றும், அவர் விரும்பியபடியே தாம் வல்ல செயல்களையே செய்து கொண்டிருக்க வேண்டிய மெசியா அல்ல என்றும் இயேசு ஆவேசத்துடன் இங்கே அறிவிக்கிறார் (8:33).

சீடருடன் உரையாடிய இயேசு, மக்களையும் தம்மிடம் அழைத்து, தம்மைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தங்கள் வாழ்வில் துன்பங்களை ஏற்க வேண்டும் என்றும் திட்டவட்டமாக விளக்கம் தருகிறார். எனவே, தம்மைப் பின்பற்றுதல் என்பது ஓர் அழைப்பு என்றும், அதற்கு ஒருவர் தமது சிலுவையைச் சுமக்க வேண்டும் என்றும் சொல்கிறார். இங்கே சீடத்துவம் என்பது அனைவருக்கும் உரிய ஓர் அழைப்பு என்பது புலப்படுகிறது. இயேசு கற்றுத் தரும் சீடத்துவம் என்பது சிலுவையைத் தூக்கிச் சுமப்பதே. எனவே, சிலுவையைத் தூக்கிச் சுமப்பவரே ஆண்டவரின் ஊழியர் என்பதை முதல் வாசகம் வழி புரிந்துகொள்கிறோம்.

ஆண்டவரின் ஊழியராக எவ்வாறு செயல்படுவது என்பதை ஆண்டவரின் ஊழியரைப் பற்றிய மூன்றாம் கவிதையில் எசாயா (எசா 50:5-9)  அழகுறக் குறிப்பிடுகிறார். எசாயா குறிப்பிடும் ஆண்டவரின் ஊழியரின் வாழ்க்கையை ஆய்வு செய்யும்போது, அவருக்கு எதிர்ப்புகள் வரும் (மோசே); பல வழிகளில் துன்பங்கள் வரும் (எரேமியா); இருப்பினும், அவர் ஆண்டவரின் வார்த்தைகளை மக்களுக்குக் கொடுப்பார்; அதன் வழியாக அவர்களைக் கடவுள் சார்பில் ஊக்குவிப்பார்; அவர் ஒவ்வொரு நாளும் ஆண்டவரின் வார்த்தைகளுக்குச் செவிசாய்ப்பார்; ஆண்டவரின் குரலைக் கேட்க எப்போதும் தம் செவிகளையும் மனத்தையும் திறந்து வைத்திருப்பார்; துன்பங்கள் சூழ்ந்தாலும் கடவுளது விருப்பத்தை நிறைவேற்றத் தயாராக இருப்பார்; ஆண்டவரின் துணையும் அவருக்கு எப்போதும் இருக்கும். இந்தப் பண்புகளைப் பார்க்கும்போது, ஆண்டவரின் உண்மையான ஊழியராகிய இயேசுவின் பணியையும் வாழ்வையும் புரிந்துகொள்ள முடிகிறது.

கற்றுக்கொள்வோம்...

• சிலுவை இல்லாத சீடத்துவம் வெறுமையானது. இயேசுவிற்காக அனைத்தையும் இழக்கலாம், இயேசுவை எதற்காகவும் இழக்கக்கூடாது என்பதை உணர்வோம்.   

• இயேசுவை நம்பி, அவரோடு பயணிக்க, அவரைப் போல் வாழ, துயருற்றாலும் துணிந்து பின் தொடர, நமது வாழ்வுப்பாதையை மாற்றியமைப்போம்.

• வெறும் அலங்கார வார்த்தைகளால் தேவையிலிருப்போருக்கு ஆறுதல் கூறாமல், அவர்களின் குறைகளை நீக்க நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய முற்படுவோம்.
news
ஞாயிறு மறையுரை
பொதுக்காலம்; 23 -ஆம் ஞாயிறு (08 செப்டம்பர் 2024)
கடவுளுக்கு நாம் முக்கியமானவர்கள்!

மனிதராய் பிறந்த அனைவரும் சந்திக்கும் ஒன்று நோய். ஏழை-பணக்காரர், படித்தவர்-படிக்காதவர் என எவ்விதப் பாகுபாடுமின்றி அனைவரையும் நோய்கள் பாதிக்கும். நோயுற்ற மனிதன் தன் சொந்தத் தாய்-தந்தையைவிட, மனைவி-குழந்தைகளைவிட மருத்துவரைத்தான் அதிகம் நம்புகிறான். குறிப்பாக, செல்வம் படைத்தவர்கள் உலகின் எந்த மூலைக்கும் சென்று, அல்லது உலகின் எந்த மூலையிலும் இருந்து மருத்துவர்களை வரவழைத்து நோயை நீக்க முயற்சிகள் மேற்கொள்வதை அறிகிறோம். ஆனால், நோயைத் தீர்ப்பதற்கோ அல்லது அதிலிருந்து விடுபடுவதற்கோ அடிப்படை வசதிகள் ஏதுமில்லா ஏழைகள் நம்பியிருப்பதோ இறைவனை மட்டுமே.

இன்று செப்டம்பர் 8 - நம் அன்னையின் பிறந்த நாள்! மனுக்குலத்தின் மீட்பரை, ஆண்டவரின் திருமகனைப் பெற்றெடுத்த தாய் மரியா உதித்த நாள்! நோயுற்ற மனிதர்கள் வேதனையும் கண்ணீருமாக, கனத்ததோர் இதயத்துடன் துயர் நீக்கும் வேளைநகர் ஆரோக்கிய அன்னையின் பரிந்துரையைத் தேடி, பெருமூச்சிட்டபடியே, அன்னையின் திருத்தலங்களுக்குச் செல்லும் ஆயிரமாயிரம் பக்தர்களை நாம் அறிவோம்.

ஆரோக்கிய அன்னையின் விழாவைக் கொண்டாடும் இன்று இடம்பெறும் வாசகங்கள், ஆரோக்கியத்தைப் பற்றிச் சிந்திக்க நம்மை அழைக்கின்றன. வாழ்வின் தவிர்க்க முடியாத எதார்த்தங்களான நோயும், வறுமையும் நம்மை வாட்டும்போது, நம் மனத்தில் எழும் எண்ணங்கள் என்ன? நோயுற்றோரை, வறியோரைப் பற்றிச் சிந்திக்கும்போது, நாம் என்ன நினைக்கிறோம்? என்ன செய்கிறோம்?

பளபளக்கும் கிரானைட் கற்களும், மினுமினுக்கும் கண்கவர் விளக்குகளும், பத்து பதினைந்து தளங்களும் கொண்ட மருத்துவமனைக்குள் இன்று ஏழைகள் நுழையவே இயலாது. அதுபோலவே, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வறியோரும் நோயுற்றோரும் இறைவனை நெருங்க முடியாது. காரணம், அன்றைய யூதச் சமயத் தலைவர்கள், ‘நோய் தீமையானது! குற்றங்களுக்குத் தண்டனையாக வருவது; நோய்க்கான காரணம் மனிதரின் தீய செயலே; எனவே, நோயும் வறுமையும் பாவத்திற்கான தண்டனைகள். நோயுற்றோரும் வறியோரும் இறைவனால் தண்டிக்கப்பட்டவர்கள். அவர்களை விட்டு விலகியிருப்பது நல்லது’ போன்ற அச்சங்களை மனிதர்கள்மீது திணித்து வந்தனர். நோயுற்றோர் கோயிலுக்குள் கூட நுழைய அனுமதிக்கப்படவில்லை. நோயாளி அல்லது ஏழை என்றவுடன், ‘இவர் செய்த பாவமா? அல்லது இவர் பெற்றோர் செய்த பாவமா?’ என வழக்குகள் எழுந்தன (யோவா 9:2).

சமயத் தலைவர்கள் நோயுற்றோரையும் வறியோரையும் இறைவனிடமிருந்தும் பிறரிடமிருந்தும் பிரித்து வைத்து, அவர்களை நம்பிக்கை இழக்கச் செய்த வேளையில், உறுதியற்ற அவர்களின் உள்ளங்களுக்கு மீட்பிற்கான உறுதியை அளிக்கிறது இன்றைய முதல் வாசகம். நம்பிக்கை இழப்பு, கடவுளால் கைவிடப்பட்ட ஓர் உணர்வு, அரசர்களின் பலவீனமான ஆட்சி, அசிரியாவின் அச்சுறுத்தல், ஏதோமியர்களின் துன்புறுத்தல் (ஏதோமியர்கள் ஏசாவின் வழிவந்தவர்கள்), வட அரசான இஸ்ரயேலின் அழிவு, தொடர் தோல்வி, தொடர் ஏமாற்றங்கள்... இவற்றால் துவண்டுபோயிருந்த மக்களுக்கு எசாயாவின் வார்த்தைகள் நம்பிக்கையை அளிக்கின்றன. இறுகிப்போன பாறைக்குள்ளிருந்தும் சின்னதாய்க் கசியும் நீர்த்துளி போல, மக்களின் ஆழமான வேதனைகளிலும் இறைவனிடம் கொண்ட நம்பிக்கைக் குறையவில்லை.  இரண்டாந்தர குடிமக்களாக, மதிக்கப்படாத மனிதர்களாகப் பார்க்கப்பட்ட பெண்கள், கைம்பெண்கள், ஏழைகள், நோயுற்றோர், சிறார், பிற இனத்தார், அயல்நாட்டினர் யாவரும் கடவுளின் பிள்ளைகள்; மதிக்கப்பட வேண்டியவர்கள்; பாதுகாப்பிற்கு உரியவர்கள். இவர்கள் துன்புறும்போது ஓடோடி வந்து உதவுபவர் இறைவன் என்பது இன்றைய திருப்பாடலின் மையக்கருத்து (திபா 146).

வறியோர், நோயுற்றோர் இவர்களின் நிழல்கூட தங்கள்மேல் படக்கூடாது  எனக் கருத்தாய் செயல்பட்ட யூதச் சமயத் தலைவர்களுக்கு மத்தியில், இவர்களையே இயேசு தேடிச் செல்கிறார். இவர்களையே ‘பேறுபெற்றோர்’ என்கிறார். இவர்களுக்கு முன்னுரிமை கொடுத்துத் தம்முடைய இறையாட்சிக்குள் அவர்களைச் சேர்த்துக் கொள்கிறார். இன்றைய நற்செய்தியில் காது கேளாதவரும், திக்கிப் பேசுபவருமான ஒருவரை இயேசு நலப்படுத்துவதைக் காண்கிறோம் (மாற்கு 7:31-37).

இயேசு பிற இனத்துப் பகுதிகளான தீர், சீதோன் போன்ற நகர்களில் தமது பணியை முடித்துவிட்டு, தெக்கப்பொலி வழியாகக் கலிலேயக் கடலை அடைகிறார். இரு பகுதிகளுமே பிற இனத்தார் வாழும் பகுதிகள். தெக்கப்பொலி என்றால் ‘பத்து நகரங்கள்’ என்பது பொருள். இந்த நகரங்கள் யோர்தானை ஒட்டிய பகுதியிலிருந்து தமஸ்குவரை பரவிக்கிடந்தன. இது அதிகமாகப் பிற இனத்தார் வாழ்ந்த குடியேற்றப் பகுதி. தெக்கப்பொலி என்று மாற்கு குறிப்பிட்டு எழுதுவது இயேசு பிற இனத்தாரோடு தம்மை ஒன்றித்துக் கொண்டதையே காட்டுகிறது. இப்பகுதியில் காதுகேளாதவரும், திக்கிப் பேசுபவருமான ஒருவரைச் சிலர் இயேசுவிடம் கொண்டு வருகிறார்கள்.

பார்வையுடைய, நடக்க முடிந்த இவர் தானாகவே இயேசுவிடம் வந்து நலம் வேண்டியிருக்கலாமே! ஏன் இவரைச் சிலர் இயேசுவிடம் கொண்டு வரவேண்டும்? குறையுள்ள மனிதர் ஒரு பாவி என்றும், அவர் கடவுளின் தண்டனையை அனுபவிக்கிறார் என்பதும் யூதர்களின் நம்பிக்கை. யூதச் சமயப் போதகர்களால் இவ்வாறு முத்திரை குத்தப்பட்ட இந்தக் காதுகேளாதவர் சமூக அழுத்தம், புறக்கணிப்பு, தன்னைக் காயப்படுத்தும் முறையில் நடந்துகொள்ளும் சமூகம், சமயத் தலைவர்கள்மீது கொண்டிருந்த வெறுப்பு இவற்றால் அச்சமூகத்திலிருந்தே விலகி வாழ விரும்பியவர்.  மேலும், இயேசுவைப் பற்றிக் கேட்க முடியாத நிலையிலும், தன் தேவையை வெளிப்படுத்த முடியாத நிலையிலும் இருந்த ஒரு நோயாளி. இப்படி வாழ்ந்த ஒருவரைத்தான் அவர்மேல் அக்கறை கொண்ட சிலர் இயேசுவிடம் கொண்டு வந்தனர் என்பதை நாம் புரிந்துகொள்கின்றோம். நோயுற்றவரை நலமாக்குவது ஒரு வல்ல செயல் என்றால், அவர்களை மனிதர்களாக மதித்து நடத்துவதும் ஒரு வல்ல செயல்தான்.

காது கேளாத மனிதரை இயேசுவிடம் அவரது நண்பர்கள் கொண்டு வந்ததும், இயேசு செய்த செயல் வியப்பைத் தருகின்றது. ஒரு சொல் கொண்டு அவரை நலமாக்கியிருக்கலாம். ஆனால், அவ்வாறு செய்யாமல், இயேசு காதுகேளாதவரைத் தனியே அழைத்துச் செல்கிறார். தனியே அழைத்துச் செல்வது என்பது பெறப் போகும் தனிப்பட்ட இறையனுபவத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. தம் விரல்களை அவர் காதுகளில் இடுகிறார்; உமிழ் நீரால் அவர் நாவைத் தொடுகிறார்; வானத்தை அண்ணாந்து பார்க்கும் இயேசு, தம் தந்தையின் துணையை அழைத்தவராய், ‘எப்பத்தா’ என்று அரமேயத்தில் சொல்கிறார். அதற்குத் ‘திறக்கப்படு’ என்பது பொருள். இயேசுவின் இந்தச் செயல் நோயுற்ற அந்த மனிதர்மீது இயேசு கொண்டிருந்த ஆழ்ந்த அன்பையும் அரவணைப்பையும் வெளிப்படுத்தின. இயேசுவின் ஆழ்ந்த அன்பு அவரை முழுமையாக நலமாக்கியது.

இயேசு நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள், பாவிகள் ஆகியோரை எப்போதும் இழிவாகக் கருதியதே இல்லை. இயேசு நலமற்ற இந்த மனிதருக்காக எடுத்துக்கொள்ளும் நேரமும், காட்டும் பொறுமையும் வியப்பைத் தருகின்றன. குறையுள்ள மனிதரைத் தனியே அழைத்துச் சென்று அவரை நிறைவாக்கி அனுப்புகின்றார். இயேசு இந்த மனிதரை ஒரு பிரச்சினையாகவோ அல்லது ஓர் இடர்பாடாகவோ கருதவில்லை. அவரை ஒரு மனிதராகக் கருதினார். தாய்க்குரிய பரிவோடு இயேசு இம்மனிதரின் செவிகளையும் நாவையும் தொட்டு நலமாக்கினார். ஒரு தொடுதல், ஓர் அன்பான சொல் இவை ஆற்றக்கூடிய வியப்பான செயல்களை நாம் அறிவோம்.

இன்று செய்யக்கூடிய நற்செயல்களைப் பலரும் பார்த்துப் பாராட்ட வேண்டும் என்ற ஆவலோடு நற்செயல்களைச் செய்பவர்களுக்கு மத்தியில், நோயுற்ற இந்த மனிதரை ஒரு காட்சிப்பொருளாக மற்றவர்களிடம் காட்டாமல் இயேசு நலமாக்கியதன் வழியாக நமக்கு முக்கியமான ஒரு பாடத்தைக் கற்றுத்தருகிறார். இன்று உதவிகள் செய்வதைப் படங்களாக, காணொளிகளாகப் பதிவு செய்து, ஊடகங்களிலும் இணையத்திலும் பதிவேற்றிப் பலர் பணம் சம்பாதிக்கின்றனர். ஆனால், உதவிகள் பெறுவோரின் முகங்களை ஊடகங்களில் வெளியிடுவது இன்னும் உதவிகள் பெறுவோரின் மனத்தைக் களங்கப்படுத்தும் என்பதைப் பலரும் உணர்வதில்லை.

இன்று நோயுற்றோரையும் வறியோரையும் எப்படிப் பார்க்கிறோம்? அவர்களை எப்படி நடத்துகிறோம்? நம்மில் எத்தனை பேருக்கு வறியோரை, நோயுற்றோரைக் கண்டதும் மரியாதை என்ற உணர்வு எழுகிறது? மனிதர்கள் பலரும் இன்று ஆள்பார்த்தே செயல்படுகின்றனர். வசதியும் செல்வாக்கும் உள்ளவர்களுக்குத்தான் திரு அவையிலும் முதலிடம் (யாக் 2:9) என்பதை வேதனையுடன் ஏற்றுக்கொள்வோம். இந்தச் சமுதாய நோயை நம்மிடமிருந்தும், திரு அவையிடமிருந்தும் இறைவன் அகற்ற வேண்டும் என்று மனமுருகி வேண்டுவோம். கடவுளை மட்டுமே நம்பி வாழ்பவர்கள் ‘யாவேயின் ஏழைகள்’. அவர்களைக் கடவுள் என்றும் காப்பாற்றுவார் (திபா 35:10; எசா 61:1; மத் 5:3; லூக் 6:20). அவர்களை ஒருபோதும் இழிவாகக் கருதாமல் அரவணைத்து உதவிட முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்ற இயேசுவின் அன்புப் பாடங்களை முன்வைக்கும் புனித யாக்கோபுவின் நல்வார்த்தைகளை நமதாக்குவோம் (யாக் 2:1-5).

நோயுற்றோரும், வறியோரும் இறைவனுக்கு மிக நெருக்கமானவர்கள் என்பதை உணர்ந்து, அவர்களைத் தன் வாழ்வின் மையமாகவும், பணிகளின் மையமாகவும் கொண்டு வாழ்ந்த புனித அன்னை தெரேசாவைப் போல, வறியோருக்காகவும், நோயுற்றோருக்காகவும் தொடர்ந்து அன்புப் பணியை ஆற்றுவோம். மகிழ்ச்சியான தாராள உள்ளமே நல்ல கிறிஸ்தவருக்கான அடையாளம். ஆகவே, முகமலர்ச்சியோடும் அகமலர்ச்சியோடும் நோய்களின் பிடியில் உழன்று கொண்டிருக்கும் சக மனிதர்களுக்கு நாம் நம்பிக்கை ஒளியாய் இருப்போம்.
news
ஞாயிறு மறையுரை
பொதுக்காலம் 22-ஆம் ஞாயிறு (01 செப்டம்பர் 2024)
டவுள் விரும்புவது இதயத் தூய்மையே!

கடவுள் இல்லாத இடம் உண்டா? ஒருவேளை இறைவனிடம், “இறைவா! எல்லா இடங்களிலும் நீர் இருப்பதாகச் சொல்கிறார்கள். நீர் இல்லாத இடம் ஒன்று ஏதாகிலும் உண்டோ?” என்று கேட்டால் அவர் ‘ஆம்’ என்று சொல்வார். “நான் இல்லாத இடம் ஒன்று உண்டு. அது வழிபாட்டுத் தலங்கள்” என்பார். இன்று சடங்குகள், சம்பிரதாயங்கள், மரபுகள் கடவுளோடும் கோவிலோடும் இணைக்கப்பட்டு விட்டன. அவை மேலும் இறுகிப்போய் இம்மியளவும் மாற்றப்பட முடியாத மதச்சடங்குகளாக மாறிவிட்டன.  இந்தச் சடங்குகளும், பாரம்பரியங்களும் சமய வாழ்வில் கடவுளைவிட முக்கியத்துவம் பெற்றுவிட்டதால், வெறுமையான சடங்குகளை மட்டுமே முன்னிறுத்தும் ஆலய வழிபாடுகளில் இறைவனுக்கு ஏது நாட்டம்? (ஆமோ 5:21).

கடவுள் தூயவர்! அவர் எத்தகைய தூய்மையை விரும்புகிறார்? அகத்தூய்மையையா? அல்லது புறத் தூய்மையையா? அவர் விரும்புவது சடங்குகளையும் மரபுகளையுமா? அல்லது அவரையும் பிறரையும் அன்பு செய்வதையா? கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பது இதயத் தூய்மையா? அல்லது வெளிவேடச் செயல்களா? மனிதச் சட்டங்கள், சடங்குகள், மரபுகள் எல்லாம் எந்த மதிப்பீட்டைக் கட்டிக் காக்கின்றன? இவற்றால் மனிதம் மதிக்கப்படுகிறதா? மானிட மாண்பு காக்கப்படுகிறதா? இதுபோன்ற பல கேள்விகளுக்குச் சிறந்த விடயத்தை வழங்குகிறது ஆண்டின் பொதுக்காலம் 22 -ஆம் ஞாயிறு வழிபாடு.

முதல் வாசகத்திலிருந்து நமது சிந்தனையைத் துவங்கலாம். கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஓர் இனம் இஸ்ரயேல் (விப 19:6). அவர்கள் கடவுளுக்குச் சொந்தமானவர்கள்; சுதந்திர மக்கள். எனவே, அவர்கள் சிலை வழிபாட்டில் ஈடுபடாது, பிற மக்களின் தவறான மதிப்பீடுகளைப் பின்பற்றாது, தீய வழியில் நடவாமல் நல்ல மனிதராக வாழ வேண்டும் என யாவே கடவுள் விரும்பினார். அவர்கள் கடவுளை அறியவும், மற்ற மக்களைப் போல் அல்லாமல் தனிப்பட்ட முறையில் கடவுளுடன் உறவுகொள்ளவும் அழைக்கும் இறைவன், சீனாய் மலையில் மோசே வழியாகப் பத்துக் கட்டளைகளை வழங்குகின்றார் (விப 20:1-17). இவை அடிப்படைச் சட்டங்கள்; மக்கள் சுதந்திரமாக வாழ உதவும் நெறிமுறைகள்.

வாங்கிய கடனைத் திரும்பக் கொடுப்பது, காணும் பொருளைக் களவாடாமல் இருப்பது, மற்றவர்களின் உரிமைகளை மதித்து நடப்பது என மக்களின் அன்றாட வாழ்வை நெறிப்படுத்தத் தேவையான கட்டளைகளைக் கடவுள் வழங்கினார். கடவுள் கொடுத்த சட்டங்கள் நல்லவையாகவும் நீதியுள்ளவையாகவும் இருந்தன. எடுத்துக்காட்டாக, எதிரியின் மாடு அல்லது கழுதை துன்பப்பட்டுக் கொண்டிருந்தால் அதன் துன்பம் போக்க அடுத்தவருக்குக் கடமை உண்டு. அதாவது, பகைமை இருந்தாலும்கூட பிறர் சொத்து அழிவதைப் பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது போன்ற  மனிதநேயக் கருத்துகள் இறைவன் வகுத்துக் கொடுத்த சட்டங்களின் மையமாக இருந்தன (விப 23:4-5).

ஏறக்குறைய நாற்பது ஆண்டு காலப் பயணத்திற்குப் பிறகு, மோசே மோவாபு சமவெளிப் பகுதியில் புதிய தலைமுறை இஸ்ரயேல் மக்களுக்கு ஆண்டவராகிய கடவுள் வகுத்த சட்டம் குறித்தும், இறைமக்களின் மேன்மை குறித்தும் அவர்களுக்கு மீண்டும் எடுத்துரைக்கிறார். மக்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டை உரிமையாக்கிக் கொள்ளவும், அதில் நீடித்து வாழவும் வேண்டுமென்றால் கடவுள் வழங்கிய கட்டளைகளைக் கடைப்பிடித்தல் அவசியம். கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்வதன் நோக்கம் உடன்படிக்கை உறவில் நிலைத்து நிற்கும் வாழ்வாகும். இதையே, “மக்களுக்கு நெருங்கிய கடவுளைக் கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா?” என்று மோசே கேட்கிறார். மேலும், மிக முக்கியமாக கடவுளின் கைகளால் கொடுக்கப்பட்ட கட்டளைகளில் “எதையும் சேர்க்கவும் வேண்டாம்; அதிலிருந்து எதையும் நீக்கவும் வேண்டாம்” (இச 4:2) என அறிவுரை வழங்குகிறார். இதுதான் இன்றைய முதல் வாசகத்தின் சூழல்.

இறைவனின் கட்டளைகள் வழியாக அவரோடு இணைந்திருப்பதைத் தங்கள் அடையாளமாகவும் கலாச்சாரமாகவும் எண்ணினர் இஸ்ரயேல் மக்கள். காலப்போக்கில் இவர்கள் தங்கள் மூதாதையரின் மரபுகளை முன்னிறுத்தி, கடவுளின் கட்டளைகளைப் பின்னுக்குத் தள்ளினர். புதிய புதிய சட்டங்களும் மரபுகளும் பெருகப் பெருக கடவுளின் கட்டளைகளின் நோக்கம் மறைந்துபோனது. யூதச் சமூகத்தில் சட்டக் காவலர்களாகத் தங்களை முன்னிலைப்படுத்திய பரிசேயரும், மறைநூல் அறிஞரும் கடவுளின் பத்துக் கட்டளைகளைத் தங்கள் வசதிக்கேற்ப 613 சட்டங்களாகப் பிரித்து, பெரிதாக்கி அதைச் சாதாரண மக்கள்மீது திணித்தனர். தேவையற்ற மரபுகள், சடங்குகள் சார்ந்த சட்டங்கள் மக்களுக்குக் கடைப்பிடிப்பதில் பெரும் சுமையாகிவிட்டன. எனவே, கடவுளைவிட முக்கியமானதாகக் கருதப்பட்டு, கடைப்பிடிக்கப்பட்டு வந்த பொருளற்ற சடங்குகளையும் பரிசேயர் மற்றும் திருச்சட்ட அறிஞரின் வெளிவேடத்தை இயேசு இன்றைய நற்செய்தியில் தோலுரித்துக் காட்டுகிறார்.

‘கழுவுதல்’ என்ற மரபு பற்றிய விவாதம் எழுவதை இன்றைய நற்செய்தியில் காண்கிறோம். ‘மூதாதையர் மரபுப்படி’ இயேசுவின் சீடர்கள் கழுவாத கைகளால் உண்பதைக் கேள்விக்கு உள்ளாக்குகின்றனர் பரிசேயரும் மறைநூல் அறிஞரும். சம்பிரதாயக் கழுவுதல் என்பது யூதர்கள் மத்தியில் மிகக் கவனமாகப் பின்பற்றப்பட்ட ஒரு சடங்கு. இன்றைய நற்செய்தியில் காணப்படும் வரிகள் இதனை உறுதி செய்கின்றன (மாற் 7:3-4). உணவுக்கு முன் கைகளைக் கழுவுவதையும் கிண்ணங்கள், பரணிகள், செம்புகள் ஆகியவற்றைக் கழுவுவதையும் கடந்து, கடவுளின் கட்டளைகள் கற்றுத் தரும் மனிதநேய மதிப்பீடுகளின்படி வாழ இயேசு அழைக்கிறார். ‘மூதாதையர் மரபு’ என்பது கடவுள் கட்டளை அல்ல; அது காலப்போக்கில் சில சட்ட அறிஞர்கள் உருவாக்கிய வாய்மொழி மரபுகள். பரிசேயர் மற்றும் மறைநூல் அறிஞர் உருவாக்கிய இந்த வாய்மொழி மரபுகள் சாமானிய மக்கள்மேல் ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் செலுத்த பயன்பட்டதே தவிர, இறை அனுபவத்தையோ, மனித மாண்பு செயல்களையோ உருவாக்கவில்லை என்பதே இயேசுவின் குற்றச்சாட்டு.

தூய்மை - தீட்டு என்பதற்குப் பரிசேயரும் மறைநூல் அறிஞரும் முன்னோர் மரபு சார்ந்த விளக்கம் கொண்டிருக்கையில், இயேசு மனிதம் சார்ந்த புதிய விளக்கம் தருகிறார். ‘தீட்டு’ என்பது சட்டத்தை மீறி கை கழுவாததால் வருவதல்ல; அது பிறரைக் குற்றப்படுத்துவதாலும், அடுத்தவர்களின் குறைகளைப் பெரிதுபடுத்துவதாலும், பிறருடைய தேவைகளை உணராதிருப்பதாலும், தாங்கள் மட்டுமே தூய்மையானவர்கள் என்ற எண்ணத்தாலும் வருவது என உரைக்கிறார். நோன்பு கடைப்பிடித்தல், கோவில் வரி செலுத்துதல், வழிபாட்டுத் தூய்மை, ஓய்வுநாள் சட்டத்தைப் பின்பற்றுதல், தொழுகைக்கூடங்களில் தவறாமல் பங்கெடுத்தல் போன்ற புறச்செயல்களைச் செய்வதால் தாங்கள் மட்டுமே நல்லவர்கள் என்றும், மற்றவர்கள் பாவிகள் என்றும் சொல்லிக் கொண்டனர் பரிசேயக் கூட்டத்தினர். உணவு அருந்தும் முன் கை கழுவாத தம் சீடர்களைவிட, சமுதாயத்தில் எளியவரின் நிலையைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் ‘வெளிவேடக்காரராய்’ வாழும் பரிசேயர், மறைநூல் அறிஞர் போன்றோரே தீட்டானவர்கள் எனக் கடுமையாகச் சாடுகிறார் இயேசு.

இன்று ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் அழுக்கானவர்கள், அவர்களைத் தொட்டால் தீட்டு என்று கூறித் தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் கொடுமை நம் நாட்டில்தான் நடக்கிறது. மனிதர்களிடையே உயர்வு-தாழ்வு கற்பிப்பவர்கள் சமூக எதிரிகள் மட்டுமல்லர், சமய எதிரிகளும்கூட. அவர்கள் கடவுளுக்கும் எதிரானவர்கள். எல்லா உயிர்களையும் இறைவன்தாமே படைத்தார்; அப்படியிருக்க, தீட்டானதை இறைவன் எப்படிப் படைத்திருக்க முடியும்? (சாஞா 11:24). சக மனிதர்களை அன்பு செய்யத் தெரியாதவர்களால் எப்படிக் கடவுளிடம் அன்பு செலுத்த முடியும்? (1யோவா 4:20).

சக மனிதரைப் பிறப்பால் ‘தீட்டானவர்’ என்று கூறுபவர், தனது சிந்தனையால் தீட்டானவர் ஆகிறார். புற அழுக்கைவிட, அக அழுக்கு அசிங்கமானது! இதைத்தான் இயேசு ‘மனிதர் உள்ளத்திலிருந்து வெளிவரும் தீய எண்ணங்கள், சொற்கள், செயல்கள் போன்றவையே ஒருவரைத் தீட்டுப்படுத்தும்’ என்கிறார் (7:14). இன்று சமயவாதிகளில் பலர் மூளையில் அழுக்கைச் சுமக்கிறார்கள். அவர்கள் அதை அழுக்கென்று ஒப்புக்கொள்வதில்லை. மாறாக, அழுக்குகளுக்கு அர்த்தமுண்டு என்று வாதாடுகிறார்கள், பரிசேயர் மற்றும் மறைநூல் அறிஞரைப்போல.

இயேசு ஏற்படுத்திய இறையாட்சி என்பது நாம் வெளியரங்கமாகக் கடைப்பிடிக்கும் சில சட்டங்களால் உருவானதல்ல; அது உள்ளார்ந்த மனமாற்றத்தாலும், இறைத்திட்டத்தைச் செயலாக்குவதாலும் அமைவது. இன்றைய இரண்டாம் வாசகத்தில் தூய யாக்கோபு, இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இராமல், அதன்படி நடப்பவர்களாக இருக்க வேண்டும் (யாக் 1:22) என்கிறார். துன்புறும் அனாதைகள், கைம்பெண்களைக் கவனித்துக்கொள்வதோடு தம் வாழ்வின் தவறுக்கு ஏதுவான செயல்களைத் தவிர்த்தலே நேரிய சமய வாழ்வின் அடையாளங்கள் (1:27).

யாக்கோபு வரையறுத்த இந்தத் தூய வாழ்வை, தன் சொந்த வாழ்வாக மாற்றி, ஏழையரோடு தன்னை இணைத்துக்கொண்டவர் செப்டம்பர் 5 ஆம் நாள் சமய பேதமின்றி நாம் கொண்டாடும் புனித அன்னை தெரசா. ஒருமுறை ஓர் ஊடகவியலாளர் அன்னை தெரசாவின் பணியைக் கண்டு வியந்து, “எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்வாக இப்பணிகளைச் செய்ய முடிகிறது? என்று கேட்டபோது, அன்னை தெரசா பணிவோடு அவரிடம், “நான் 18 வயதில் என் குடும்பத்தினரை விட்டு துறவற வாழ்வில் இணைந்தபோது, ‘இயேசுவின் கைகளில் உன் கைகளை இணைத்துக் கொள்... அவருடன் நடந்துசெல்’ என்று சொல்லி என் அம்மா என்னை வழியனுப்பி வைத்தார்கள். அம்மா அன்று சொன்ன வார்த்தைகளே என்னை இதுவரை மகிழ்வுடன் வைத்துள்ளது” என்று கூறினார். இந்தச் சமூகம் சாக்கடை, அழுக்கு, தீட்டு என முத்திரை குத்திய இடங்களில்தான் இந்தத் தூய இதயம் தன்னை இணைத்துக்கொண்டது. அந்த இதயத்தில்தான் இறைவனும் குடிகொண்டார்!

நாம் உணர்ந்துகொள்ள வேண்டியவை:

• ‘உதட்டினால் மட்டும் கடவுளைப் போற்றுகிறவர்களாக இராமல்’ (எசா 29:13), கடவுளின் கட்டளைகளைப் பின்பற்றி (இச 4:6) நாம் உண்மையான சமயப் பற்றோடு வாழ்வோம்.

• சடங்குகள், சட்டங்கள், மரபுகள் இவற்றைக் கடவுளைவிட முக்கியமான நிலைக்கு உயர்த்திவிடும்போது, நாம் கடவுளையே மறந்துவிடுகிறோம் என்னும் ஆபத்தை உணர்வோம்.

• இதயத் தூய்மைக்கு முக்கியத்துவம் அளித்து, ‘மனத்துக்கண் மாசிலனாய்’ வாழ்ந்து கடவுளுக்கு உகந்த காணிக்கையாக நாளும் நம்மையே ஒப்புக்கொடுப்போம் (திபா 15).