அன்பு என்பது தனித்துவமானது; எல்லைகள் அனைத்தையும் கடந்து நிற்பது; தனக்கென வாழாமல் பிறருக்கென வாழ்வதில் பெரும் மகிழ்ச்சி காண்பது; தான் நேசிப்பவர்கள் விரும்புவதை முன்னின்று செய்வதில் உள்ளம் பூரிப்பது. தன்னை வருத்தித் தியாகம் செய்வதும், பிறர் நலனில் தன் நலம் காண்பதுமே அன்பின் இலக்கு. தூய அன்போ எல்லாவற்றையும் விஞ்சியது; தன் குழந்தைக்காகத் தன்னையே இழக்கும் ஆற்றல்மிக்கது; தன் பிள்ளைகளுக்காகத் தன்னையே உருக்கித் தரும் தன்மையது. மானிடரின் அன்பே இத்தனை உன்னதமானது என்றால், அதற்கெல்லாம் ஊற்றாக விளங்கும் இறைவனின் பேரன்பு எத்துணை மேலானது!
இன்று
நாம் தூய்மைமிகு மூவொரு கடவுளின் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம். இப்பெருவிழா தந்தை, மகன், தூய ஆவியார் எனும் மூவொரு கடவுளின் பேரன்பின் முழுமையை நமக்கு உணர்த்துகிறது.
இன்று
‘சுயநலம்’ எனும்
தீராத நோயில் சமூகம் சிக்கித் தவிக்கும் வேளையில், இந்த மூவொரு கடவுள் பெருவிழா இன்னும் பொருத்தமானதாகவும், கூடுதல் பொருளுள்ளதாகவும் மாறுகிறது. திரு அவையின் வரலாற்றில் பத்தாம் நூற்றாண்டிலிருந்தே இவ்விழா கொண்டாடப்பட்டதற்கான சான்றுகள் இருந்தாலும், 1334-ஆம் ஆண்டு திருத்தந்தை 22-ஆம் யோவான் அவர்களே இவ்விழாவைத் திரு அவை முழுவதும் அதிகாரப்பூர்வமாகக் கொண்டாடப் பணித்தார். இருப்பினும், இவ்விழாவின் வேர்கள் நான்காம் நூற்றாண்டிலேயே ஆழமாக ஊன்றப்பட்டிருந்தன. அக்காலத்தில் ஆரியுஸ் என்ற ஆயர், “இயேசு கடவுள் அல்லர்; அவர் கடவுளின் முதல் படைப்பு மட்டுமே” என்று போதித்து, இயேசுவின் இறைத்தன்மையையும், தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான சமநிலையையும் மறுத்தார். மூவொரு கடவுள் எனும் பேருண்மையைச் சிதைக்க முயன்ற இந்தத் தவறான போதனையைத் திரு அவை துணிச்சலுடன் எதிர்கொண்டது. கி.பி. 325-இல்
புனித அத்தனாசியுஸ் தலைமையில் கூடிய நைசியா பொதுச்சங்கம், மூவொரு கடவுள் பற்றிய தெளிவான படிப்பினையை வரையறுத்தது.
அன்று
உருவான ‘நைசியா நம்பிக்கை அறிக்கை’,
“இயேசு எல்லாக் காலங்களுக்கும் முன்பே தந்தையிடமிருந்து பிறந்தார்; அவர் உதித்தவர், உண்டாக்கப்பட்டவர் அல்லர்” என்றும், “தூய ஆவியார் தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படுபவர், உயிரளிப்பவர்” என்றும்
முழங்கியது. இந்த நம்பிக்கைப் போராட்டத்தின் வெற்றிக் கொண்டாட்டமே இப்பெருவிழாவின் தொடக்கம். மாறிவரும் இந்த அதிநவீன காலத்தில், அறிவியல் முன்னேற்றங்களுக்கு மத்தியிலும் இறைவனின் மாறாத பேரன்பை நாம் சிந்திப்பது காலத்தின் கட்டாயமாகிறது.
நாம்
ஒவ்வொருவரும் மழலையாய் இருந்தபோது, ‘அம்மா, அப்பா’ என்ற உறவுகளுக்கு அடுத்தபடியாக நமக்கு அறிமுகமான மிக நெருக்கமான உறவு - மூவொரு கடவுளே. நாம் பூவுலகில் கால்பதித்த தருணத்தில், நம்மைக் காண வந்த ஒவ்வொருவரும் நமது பிஞ்சு நெற்றியில் சிலுவை அடையாளம் வரைந்து, இறை ஆசியை நமக்குப் பெற்றுத்தந்தனர். ‘தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே, ஆமென்’ என்ற எளிமையான செபமே நம் நாவுகள் முதன்முதலில் உச்சரிக்கக் கற்றுக்கொண்ட மூவொரு கடவுளின் திருமந்திரம். அந்தப் பேரன்பின் பெயராலேயே நாம் திருமுழுக்குப் பெற்று இறைமக்களாகப் பிறந்தோம்.
நம்மீது
தூய நீர் தெளிக்கப்படும்போதெல்லாம், அந்தப் பெயரைக் கூறி சிலுவை அடையாளம் வரைந்து, நம்மைப் புனிதப்படுத்திக்கொள்கிறோம்.
பாவச்சுமையிலிருந்து நாம் விடுதலை பெற்று மன்னிக்கப்படுவதும், இல்லறம்-துறவறம் என நாம் ஏற்கும்
அனைத்து அருளடையாளங்களும் அதே மூவொரு கடவுளின் பெயராலேயே உறுதிப்படுத்தப்படுகின்றன. நம்முடைய ஒவ்வொரு விடியலும், ஒவ்வொரு செயலும் அந்தத் திருப்பெய ரால் தொடங்கி, அந்தப் பேரன்பிலேயே நிறைவுபெறுகின்றன.
இன்றைய
திருவழிபாட்டு வாசகங்கள் அனைத்தும் மூவோர் இறைவனின் அளப்பரிய பேரன்பை மையப்படுத்துகின்றன. முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டு, பாலைநிலப் பயணத்தில் உடனிருந்து வழிநடத்திய ஆண்டவர், மோசேவுக்குத் தம் திருப்பெயரை வெளிப்படுத்துகிறார். மோசே சீனாய் மலையில் இறைப்பிரசன்னத்தில் நின்ற போது, இறைவன் கடந்து சென்று தம்மையே “இரக்கமும் பரிவும் உள்ள இறைவன் சினம் கொள்ளத் தயங்குபவர்; பேரன்புமிக்கவர்” (விப
34:6) என்று அறிமுகப்படுத்துகிறார். இஸ்ரயேல் மக்கள் பலமுறை இறைவனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து ‘வணங்காக் கழுத்துள்ள மக்களாக’
(34:8) இருந்த போதிலும், இறைவன் அவர்களைக் கைவிடவில்லை; மாறாக, மோசேயின் பரிந்துரையால் அவர்களின் கொடுமைகளையும் பாவங்களையும் மன்னித்து, அவர்களைத் தமது உரிமைச் சொத்தாக மீண்டும் ஏற்றுக்கொள்கிறார். இது மனித வலுவின்மையைத் தாண்டி நிற்கும் இறைவனின் எல்லையற்ற பேரன்பை நமக்கு உணர்த்துகிறது.
பழைய
ஏற்பாட்டில் தம்மை இரக்கமும் பேரன்பும் மிக்கவராக வெளிப்படுத்திய அதே மூவொரு கடவுள், பாவத்தினால் தம்மை விட்டுப் பிரிந்து போன உலகை மீட்கத் தம் ஒரே மகனையே கையளித்ததில் அந்த அன்பின் ஆழம் முழுமைபெறுகிறது. புனித யோவான் குறிப்பிடுவது போல, “உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல; தம் மகன் வழியாக அதனை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்” (யோவா
3:17). கண்ணுக்குத் தெரியாத இறைத்தந்தையின் பேரன்பு, மானிடருக்குப் புலப்படும் வகையில் அவரது அன்பு மகன் வழியாகவே வரலாற்றில் வெளிப்பட்டது (1யோவா 4:9-10).
கடவுள்
அனைத்து மக்களையும் எவ்விதப் பாரபட்சமுமின்றி நேசிக்கும் ஓர் உன்னதத் தந்தை என்றும், நாம் அனைவரும் அவரது பிள்ளைகள் என்றும் இயேசு நமக்குக் கற்றுத் தந்தார். அந்த அன்பை வெறும் வார்த்தைகளால் மட்டும் சொல்லாமல், “சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்கு”
(பிலி 2:8) தம்மையே உருக்கித் தந்து நிரூபித்தார். இயேசுவின் இந்தத் தன்னலமற்ற, எல்லைகளற்ற தியாக அன்பினால்தான் நாம் மீண்டும் இறைத்தந்தையின் உரிமைச் சொத்தாகவும், அவரது சொந்த மக்களாகவும் மாறினோம்.
இன்றைய
இரண்டாம் வாசகத்தில் புனித பவுல், “ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும், கடவுளின் அன்பும், தூய ஆவியின் உறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக”
(2கொரி 13:13) என்று வழங்குகின்ற வாழ்த்து வெறும் சடங்கு வார்த்தைகள் அல்ல; அது மூவோர் இறைவனின் இயல்பை விளக்கும் உன்னதமான நம்பிக்கை அறிக்கையாகும். மீட்பராகிய திருமகனிடமிருந்து வழியும் ‘அருள்’,
படைப்பின் மூலமான தந்தையிடமிருந்து பொழியும் ‘அன்பு’ மற்றும் நம்மை இறைவனோடும் பிறரோடும் பிணைக்கும் தூய ஆவியின் ‘உறவு’ ஆகியவற்றை இது குறிக்கிறது. இதன் மூலம், நாம் ஒவ்வொருவரும் மூவொரு இறைவனின் தெய்வீக அன்பின் வட்டத்தில் ஒன்றிணைந்து வாழ அழைக்கப்படுகிறோம் என்பதைப் புனித பவுல் தெளிவுபடுத்துகிறார்.
மூவொரு
கடவுளின் இந்தப் பேரன்பு நம் அன்றாட வாழ்விற்கு மூன்று முக்கியப் பாடங்களைக் கற்றுத்தருகிறது. முதலாவதாக, விலகி நிற்காத ஈடுபாடு. இன்றைய ‘தனிநபர்வாதம்’ எனும்
நோய்க்கு மூவொரு கடவுளின் உறவே மருந்து. ‘எனக்குத் தெரிந்தால் போதும், நான் நலமாக இருந்தால் போதும்’ என்ற சுயநலத்தை விடுத்து, ஒருவருக்காக ஒருவர் அர்ப்பணிப்புடன் வாழவேண்டும். விட்டுக் கொடுப்பதில் தாழ்வு இல்லை, அங்கேயே தெய்வீகம் பிறக்கிறது. மற்றவர்களோடு இணைந்து வாழ்வதே உண்மையான வாழ்வு.
இரண்டாவதாக,
பன்மைத்துவத்தில் ஒருமைப்பாடு. தந்தை, மகன், தூய ஆவி என மூவரும் வெவ்வேறு
பணிகளைச் செய்தாலும், நோக்கத்தில் ஒன்றாக இருக்கிறார்கள். நம்மிடம் உள்ள வெவ்வேறு திறமைகளும் பண்புகளும் பிளவுகளை உண்டாக்காமல், சமூகத்தின் நன்மைக்காக ஒன்றிணைய வேண்டும். “அன்பு இருக்கும் இடத்தில் ஒற்றுமை இருக்கும்”
என்ற அன்னை தெரசாவின் வாக்குப்படி, வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்.
மூன்றாவதாக
‘தியாகம் கலந்த பகிர்தல்.’ தந்தை தம் மகனை உலகிற்குத் தந்தது என்பது ஒரு சாதாரண கரம் கொடுக்கும் செயல் அல்ல; அது தம் இதயத்தையே கொடுத்த உன்னதச் செயல். கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பது நம்மிடம் மிஞ்சியிருப்பதை அல்ல; மாறாக, நமக்கு மிக நெருக்கமானவற்றைப் பிறரோடு பகிர்ந்துகொள்வதையே. மூவொரு கடவுளின் பேரன்பு என்பது தேங்கி நிற்கும் குளமல்ல; அது பொங்கி வழியும் நீரூற்று. அது பிறரைச் சென்றடையவேண்டும்.
நிறைவாக,
மூவொரு கடவுள் பெருவிழா என்பது மறைபொருளை ஆராயும் நாள் அல்ல; மாறாக, ஒரு வாழ்வுமுறையைத் தழுவும் திருநாள். மூவொரு கடவுளின் இந்தப் பேரன்பை நாம் உய்த்துணர ‘நம்பிக்கையே’ ஆணிவேராகிறது.
அந்த நம்பிக்கையே பரிவும் இரக்கமும் நிறைந்த இறைவனை நம் தந்தையாகக் காணச்செய்கிறது. நாமும் அவரைப் போலவே கருணை உள்ளம் கொண்டவர்களாக வாழத் தூண்டுகிறது. “அன்பின்றிச் செய்யப்படும் எதுவும் பயனற்றது”
என்ற புனித பிரான்சிஸ் டி சேல்சின் வாக்கிற்கு
இணங்க நம் வாழ்வு ஒரு பகிர்தலாக, தியாகமாக, உறவின் சங்கமமாக மலரட்டும். தந்தையின் அருளும், மகனின் அன்பும், தூய ஆவியாரின் வழிநடத்துதலும் எப்போதும் நம்மோடு தங்கி, நம்மை அன்பின் சாட்சிகளாக மாற்றட்டும்.
இன்று நாம் மீட்பு வரலாற்றின் மிக முக்கியமான தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். உயிர்ப்புப் பெருவிழாவிற்குப்பின் வரும் ஐம்பதாம் நாளில் இவ்விழா கொண்டாடப்படுவதால், இது ‘பெந்தகோஸ்து விழா’ என்று அழைக்கப்படுகிறது. ‘பெந்தகோஸ்து’ என்னும் சொல்லுக்கு ‘ஐம்பதாம் நாள்’ என்பது பொருள். இது கோதுமை அறுவடைக்காக நன்றி செலுத்தும் யூதத் திருவிழா. ஏழு வாரங்கள் கழித்துக் கொண்டாடியதால் இது ‘வாரங்களின் விழா’ எனவும் அழைக்கப்பட்டது. கி.மு. 2-ஆம் நூற்றாண்டிலிருந்து சீனாய் மலை உடன்படிக்கையை நினைவுகூரும் நாளாகவும் இது கொண்டாடப்பட்டது.
“என் தந்தை வாக்களித்த வல்லமையை நான் உங்களுக்கு அனுப்புகிறேன்...” (லூக் 24:49) என்ற உயிர்த்த இயேசுவின் வாக்குறுதிப்படி, பெந்தகோஸ்து விழாவே திரு அவையின் தொடக்கமாயிற்று. “தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்” (லூக்
3:16) என்ற இயேசுவைப் பற்றிய திருமுழுக்கு யோவானின் கூற்று நிறைவேறிய இந்நாளே சீடர்களும் தொடக்ககாலக் கிறித்தவர்களும் திருமுழுக்குப் பெற்ற நாள் என்றும் கூறலாம்.
இந்த
உன்னத நாள், அச்சம் தோற்கடிக்கப்பட்டு வீரம் வெற்றிகொண்ட ஒரு மாபெரும் மாற்றத்தின் நாள்! சீடர்களைச் சிறைபிடித்திருந்த மூடிய கதவுகள் நற்செய்தி அறிவிப்பிற்காகத் திறக்கப்பட்டு, அவர்களின் சந்தேகங்கள் அன்பு நிறைந்த நம்பிக்கையினால் விரட்டியடிக்கப்பட்ட நாள்! நற்செய்தி அறிவிப்பின் வழியாக மக்களை இறையாட்சிக்குள் அறுவடை செய்யும் பணியைத் தொடங்கி வைத்த நாள்! நம் திரு அவையின் பிறந்த நாள்! இன்று திரு அவை உலகம் முழுவதும் ஆல்போல் பரவியிருக்கிறது என்றால், உறுதியாக அது ஆவியாரின் செயல்தான். சுருக்கமாக, திரு அவையின் தொடக்கமும் ஓட்டமும் அதன் அனைத்தும் தூய ஆவியாரின் செயலே.
திருவிவிலியச்
சிந்தனைகளிலும் இறையியல் ஆய்வுகளிலும் தூய ஆவியாரைப் பற்றிய தேடல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கத்தோலிக்கத் திரு அவை இவரை மூவொரு கடவுளின் மூன்றாம் ஆளாக நம்பி ஏற்றுக்கொள்கிறது. “தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படும் ஆண்டவரும் உயிரளிப்பவருமான தூய ஆவி, தந்தையோடும் மகனோடும் ஒன்றாக ஆராதனையும் மாட்சியும் பெறுகிறார்” என்கிறது
நீசான் நம்பிக்கை அறிக்கை.
‘ஆவி’ என்ற சொல் எபிரேயத்தில் ‘ரூஆ’ என்றும், கிரேக்கத்தில் ‘நீயூமா’ என்றும், இலத்தீனில் ‘ஸ்பிரித்துஸ்’ என்றும்
அழைக்கப்படுகிறது. இதற்கு மூச்சு, காற்று, ஆன்மா எனப் பல பொருள்கள் உள்ளன.
குறிப்பாக, ‘ரூஆ எலோயிம்’ என்பது கடவுளின் ஆவி, வல்லமை மற்றும் வாழ்வைக் குறிக்கிறது.
திருவிவிலிய
வரலாற்றில் மிக முக்கியமான நான்கு பிறப்புகளை நாம் காண்கிறோம்: உலகின் பிறப்பு (தொநூ 1:2); இஸ்ரயேல் என்னும் தேர்ந்தெடுக்கப்பட்ட இனத்தின் பிறப்பு (விப 19:3); இறைமகன் இயேசுவின் பிறப்பு (மத் 1:18-25) மற்றும் இன்றைய நாளில் நாம் கொண்டாடும் திரு அவையின் பிறப்பு (திப 2:1-11). இந்த நான்கு வரலாற்றுத் திருப்புமுனைகளுக்கும் மூலக் காரணமாய், இயக்கு சக்தியாய் இருந்தவர் தூய ஆவியார். மீட்பின் வரலாற்றில் இவருடைய இன்றியமையாத செயல்பாட்டைத் திருவிவிலியம் சூட்டும் பெயர்கள் நமக்குப் பறைசாற்றுகின்றன. அவர் நம்மை வழிநடத்தும் துணையாளர், வாழ்வு தரும் உயிர் அளிப்பவர், உண்மையை வெளிப்படுத்துபவர் மற்றும் நம்மை இறைப்பிள்ளைகளாக்கும் ஆவியாக இருக்கிறார். மேலும், வல்லமை, விடுதலை, மாட்சி மற்றும் அருங்கொடைகளின் ஊற்றாகத் திகழும் இவரைத் தண்ணீர், எண்ணெய், நெருப்பு, புறா, காற்று மற்றும் ஞானம் போன்ற பல்வேறு அடையாளங்கள் வழியாக நாம் உணர்ந்துகொள்ள முடிகிறது.
தூய
ஆவியார் அடிப்படையில் மாற்றங்களைக் கொண்டுவருபவர் என்பதைத் திருவிவிலியத்தின் தொடக்கம் முதல் முடிவுவரை நாம் காணமுடிகிறது. தொடக்கத்திலேயே, பாழ்வெளிக்கும் இருளுக்கும் நடுவே “கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்ததால்...” (தொநூ 1:2) அங்கே படைப்பு என்னும் மாபெரும் மாற்றம் நிகழ்ந்தது. கடவுள் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசியில் தம் ‘உயிர் மூச்சை’ ஊதியபோதுதான், வெறும் மண் உயிருள்ள மனிதனாக உருமாறியது (தொநூ 2:7). “நான் உங்களில் உயிர்மூச்சைப் புகச் செய்வேன்; நீங்களும் உயிர் பெறுவீர்கள்” (எசே
37:5) என்ற இறைவாக்கினரின் வரிகள், தூய ஆவியார் உலர்ந்த எலும்புகளையும் உயிர்ப்பிக்கும் வல்லமை கொண்டவர் என்பதை உறுதிப்படுத்துகின்றன. இவ்வாறு, ஆண்டவரின் ஆவி எங்கே அனுப்பப்படுகிறதோ, அங்கெல்லாம் படைப்புகளிலும் மனிதர்களிலும் புதுவாழ்விற்கான மாற்றங்கள் மலர்கின்றன. அந்த வகையில், இன்றைய திருவழிபாட்டின் வாசகங்கள் தூய ஆவியார் நம் வாழ்வில் எத்தகைய வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்துகிறார் என்பதைத் தெளிவாக நமக்கு எடுத்துரைக்கின்றன.
திருத்தூதர்
பணிகள் நூலிலிருந்து எடுக்கப்பட்ட முதல் வாசகம், சீடர்களிடம் ஏற்பட்ட வியத்தகு மாற்றத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது. இயேசு உயிர்த்துவிட்டார் என்பதை அறிந்திருந்தும், அதைப் புற உலகிற்கு அறிவிக்கத் துணிவின்றி, யூதர்களுக்கு அஞ்சி “தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள்” (யோவா
20:19). ஆனால், ஆண்டவர் இயேசு அவர்கள் நடுவே தோன்றி, தம் ‘உயிர்மூச்சை’ அவர்கள்மீது
ஊதி, தூய ஆவியாரை வழங்கிய பின்னரே அவர்களின் அச்சம் விலகியது. தூய ஆவியாரால் ஆட்கொள்ளப்பட்ட அந்த நொடியே, பாவங்களை மன்னிக்கும் தெய்வீகத் திடத்தையும் அவர்கள் பெற்றார்கள் (யோவா 20:22). அதுவரை தங்களுக்குத் தெரிந்த மொழிகளில் மட்டும் பேசிக்கொண்டிருந்த சாதாரண மனிதர்கள், ஆவியாரின் தூண்டுதலால் உலகெங்கும் நற்செய்தி பரவத் தடையாக இருந்த மொழி எல்லைகளைத் தகர்த்து, பல்வேறு மொழிகளில் பேசத் தொடங்கினார்கள். எந்த இயேசுவைப் பாடுகளின் போதும் இறப்பின் போதும் அச்சத்தினால் கைவிட்டு ஓடினார்களோ, அதே இயேசுவை எவருக்கும் அஞ்சாமல் உரக்க அறிவித்ததே தூய ஆவியின் வல்லமையால் சீடர்கள் பெற்ற மாற்றம்.
இரண்டாம்
வாசகத்தில், தூய ஆவியார் அருளும் வாழ்வு குறித்து புனித பவுல் மிகத் தெளிவாக விளக்குகிறார். திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவர் மீதும் தூய ஆவியாரின் அழியாத முத்திரை பதிக்கப்படுவதால், அவர்கள் அனைவரும் பல்வேறு அருள்கொடைகளால் நிரப்பப்படுகிறார்கள். இந்த அருள்கொடைகள் தனிமனிதப் பெருமைக்காக வழங்கப்பட்டவை அல்ல; மாறாக, அவை அனைத்தும் பொது நன்மைக்காகவும், கிறிஸ்துவின் உடலாகிய திரு அவைக் கட்டியெழுப்பப்படுவதற்காகவுமே
பொழியப்படுகின்றன என்கிறார். மேலும், அவர் “தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவரன்றி, வேறு எவரும் ‘இயேசுவே ஆண்டவர்’ எனச் சொல்ல முடியாது”
(1கொரி 12:3) என்று வலியுறுத்துகிறார். நம் உதடுகள் இயேசுவை அறிக்கையிடுவதே நமக்குள் ஆவியார் செயல்படுகிறார் என்பதற்கான சான்றாகும்.
தூய
ஆவியாரின் ஆட்கொள்தலால் நம் வாழ்வில் நிகழவேண்டிய மாற்றங்களை மூன்று முக்கியப் பாடங்களாகக் காணலாம். முதலாவதாக, தூய ஆவியானவர் மாற்றத்தைக் கொண்டுவரும் முதன்மையான இடம் நமது உள்ளம். நம்மிடம் காணப்படும் கடினமான மனநிலை, பிடிவாதம் மற்றும் குறுகிய சுயநலம் போன்ற தடைகளை அவர் அகற்றி நம்மைப் புதுப்பிக்கிறார். இன்றைய நவீன உலகில் தொழில்நுட்பத்தால் நாம் உலகெங்கும் இணைக்கப்பட்டிருந்தாலும், இதயப்பூர்வமான பிணைப்பின்றித் தனிமைப் பயணிகளாகவே வாழ்கிறோம். எனவே, போலித்தனமான முகமூடிகளைக் களைந்து, ‘சுயநலம்’ என்னும் சிறையை உடைத்து, நம் இதயத்தை இறைவனின் மகிழ்ச்சிக்கும் பிறரின் தேவைகளுக்கும் இடமளிக்கும் ஒரு வரவேற்கத்தக்க இல்லமாக மாற்றவேண்டும்.
இரண்டாவதாக,
தூய ஆவியார் நமது உறவுகளின் எல்லைகளைத் திறந்து, பிளவுகளைக் கடக்கத் துணைபுரிகிறார். இறைவனின் அன்பு நமக்குள் குடிகொள்ளும்போதுதான், கடினத்தன்மையை வென்று பிறருக்கு இதயத்தைத் திறக்கும் ஆற்றலைப் பெறுகிறோம். இதன் மூலமே திரு அவை அனைவரையும் உள்ளடக்கிய இடமாக மாறுகிறது. எனவே, உறவுகளில் நிலவும் கசப்புகளை ஆவியாரின் உதவியால் வெல்லவேண்டும். வேறுபாடுகளை ஒருங்கிணைத்து, அனைவரையும் அன்புடன் வரவேற்கும் விருந்தோம்பும் மனப்பான்மையால் நம் உறவுகளைப் புனிதப்படுத்த முன்வர வேண்டும்.
மூன்றாவதாக,
தூய ஆவியார் வெறுப்பின் சுவர்களைத் தகர்த்து, நம்மை அமைதியின் மொழியைப் பேச அழைக்கிறார். பெந்தகோஸ்து நாளில் சீடர்கள் பேசியவை மனிதர்களை இதயத்தால் இணைக்கும் ‘சந்திப்பின் மொழிகள்’ ஆகும். இது திரு அவையின் உலகளாவிய பணியைச் சுட்டிக்காட்டுகிறது. ஆவியார் அலட்சியம் மற்றும் வெறுப்பு என்னும் சுவர் களைத் தகர்த்து, அமைதி ஆட்சி செய்யும் உலகைக் கட்டியெழுப்ப நமக்கு ஆற்றல் தருகிறார். எனவே, பிரிவினையைத் தூண்டும் சொற்களைத் தவிர்த்து, நல்லிணக்கத்தின் மொழியைப் பேசவேண்டும்; பிறர் மீதான அலட்சியத்தைக் களைந்து, துன்பப்படுபவர்களுக்குக் கரம் கொடுக்கும் தூய ஆவியின் கருவிகளாக நாம் மாறவேண்டும்.
நிறைவாக,
நம் எல்லைகளைத் தகர்த்து மாற்றங்களைக் கொண்டுவரும் தெய்வீக ஆற்றலோடு நம் தன்னலத்தைத் தகர்த்து, உறவுகளை மேம்படுத்தி, உலகிற்கு அமைதியின் தூதுவர்களாகச் செயல்படுவோம். நம் அன்றாட வாழ்வு ஆவியாரால் புதுப்பிக்கப்பட்ட வாழும் நற்செய்தியாக மாறட்டும். அனைவருக்கும் தூய ஆவியார் பெருவிழா வாழ்த்துகள்!
மானுடத்தின் மாட்சியைப் போற்றும் உன்னதத் திருநாளான ஆண்டவருடைய விண்ணேற்றப் பெருவிழாவை இன்று மகிழ்வோடு கொண்டாடுகிறோம். விண்ணேற்றம் என்பது ஒரு மனிதரின் பிரிவோ அல்லது ஒரு காலத்தின் முடிவோ அல்ல; மாறாக, அது கடவுளுக்கும் மனிதகுலத்திற்கும் இடையிலான இடைவெளியை உடைத்து, தெய்வீகம் மனித இதயங்களில் குடியேறிய ஒரு மகத்தான பரிமாற்றமாகும். “இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” (மத் 28:20) என்ற இயேசுவின் அந்த இறுதித் திருவாக்கு, காலங்களைக் கடந்து நம் காதுகளில் இன்றும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இந்த வாக்குறுதிதான் இன்றுவரை திரு அவையை இயக்கும் உயிர்நாடியாகவும் துடித்துக் கொண்டிருக்கிறது.
“இயேசு விண்ணகத்திற்கு ஏறிச்சென்றபோது நம்மிடமிருந்து பிரிந்து விடவில்லை; அதேபோல அவர் பூமிக்கு இறங்கி வந்தபோது விண்ணகத்தை விட்டுப் பிரிந்துவிடவில்லை” என்பார்
புனித அகுஸ்தின். இந்த ஆழமான இறையியல் உண்மைதான் இன்றைய விழாவின் மையம். இயேசு விண்ணேற்றம் அடையும் முன்னர் ஒரு தந்தை தன் பிள்ளையிடம் பொறுப்புகளை ஒப்படைக்கும்போது காட்டும் அதே நம்பிக்கையை, அவர் தம் சீடர்களிடம் காட்டுகிறார். தமக்கெனத் தந்தையாம் இறைவன் தந்த பணியை முழுமையாய் நிறைவேற்றி, அப்பணி உலகில் தொடர்ந்து நடைபெறத் தமது ஆவியைத் தருவதாகச் சீடர்களுக்கு வாக்களித்து, வானகம் திரும்புகிறார்.
இன்றைய
முதல் வாசகத்தில், திருத்தூதர் பணிகளின் ஆசிரியர் புனித லூக்கா, இயேசுவின் உலகளாவிய பணிகளை மீண்டும் ஒருமுறை சிந் தித்துப் பார்க்க நம்மை அழைக்கிறார். இயேசு விண்ணேற்றம் அடைந்த நாள்வரை அவர் செய்தவை, கற்பித்தவை அனைத்தையும் நாம் கூர்ந்து நோக்கவேண்டும் (திப 1:2). இயேசு வெறும் வார்த்தைகளை உதிர்க்கும் பேச்சாளர் அல்லர்; அவர் ஒரு செயல்வீரர். அவர் தம்மை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல், இறைத்தந்தையின் ஆட்சி இவ்வுலகில் மலர உழைத்தார். அந்த ஆட்சி அன்பின் அடிப்படையில் அமையவேண்டுமே தவிர, வெறும் சட்டங்களிலோ அல்லது சடங்குமுறைகளிலோ சிறைப்பட்டிருக்கக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்தார். மானுட நலனைப் பேணுவதே உண்மையான ஆன்மிகம் என்பதை வாழ்ந்து காட்டிய அவர், அதற்கு முரணாக நின்ற அதிகார வர்க்கத்தை எதிர்த்தார். அதன் விளைவாக, அரசியலும் ஆன்மிகமும் கைகோர்த்து, அவரைச் சிலுவையில் அறைந்தன. ஆனால், சாவை வென்று உயிர்த்த ஆண்டவர், விண்ணேற்றம் அடையும்வரை தம் சீடர்களோடு தங்கி, அவர்களைத் தகுதியுள்ள சாட்சிகளாக உருவாக்கினார். இயேசு விண்ணேற்றம் அடையுமுன் சீடர்களுக்கு வழங்கும் இறுதிப்பணி, இன்றைய நற்செய்தியில் ஒரு கட்டளையாக ஒலிக்கிறது: “சீடராக்குங்கள் - திருமுழுக்குக் கொடுங்கள் - கற்பியுங்கள்.”
இயேசு
தரும் கட்டளைகள் ஒரு போர் வீரனுக்குத் தரப்படும் ஆணை போன்றது அல்ல; மாறாக, ஒரு தந்தை தன் பிள்ளையிடம் குடும்பப் பொறுப்புகளை ஒப்படைப்பது போன்றது.
முதலாவதாக,
‘மக்களினத்தாரைச்
சீடராக்குதல்’ என்பது,
தாம் உவமைகள் வழியாக உணர்த்திய உலகளாவிய மீட்பை எல்லைகளின்றி அனைவரும் பெற்றிடச் செய்து, பாரபட்சமற்ற ஒரே இறையாட்சிச் சமூகத்தை உருவாக்குவதைக் குறிக்கிறது. இரண்டாவதாக, ‘மூவொரு கடவுளின் பெயரால் திருமுழுக்குக் கொடுத்தல்’
என்பது, சடங்குகளைக் கடந்து தீமையிலிருந்து நன்மைக்கும், தன்னலத்திலிருந்து பிறர்நலத்திற்கும் கடந்துசெல்லும் ஒரு புது வாழ்வின் அடையாளமாகவும், சமூக முன்னேற்றத்திற்காகத் தம்மை முழுவதுமாகக் கையளிக்கும் அர்ப்பணிப்பாகவும் அமைகிறது. மூன்றாவதாக, ‘கட்டளைகளைக் கற்பித்தல்’ என்பது,
இயேசு சிலுவை வரை வாழ்ந்து காட்டிய அந்தத் தியாகமிக்க, தூய, மன்னிக்கும் அன்பின் புதிய கட்டளையை உலகிற்குப் போதிப்பதாகும்.
சுருக்கமாகக்
கூறினால், அன்பினால் அனைவரையும் ஒருங்கிணைத்து, அருளடையாளத்தால் புனிதப்படுத்தி, கிறிஸ்துவின் வாழ்வுமுறையைப் பிறருக்குக் கற்றுக்கொடுப்பதே இவ்விழா நமக்குத் தரும் வாழ்நாள் பணியாகும்.
வாழ்நாள்
பணியாகிய இறையாட்சியை அறிவிக்கும் இக்கடமையில், நாம் ஒருபோதும் தனித்து விடப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்தும் விதமாக, தாம் உலகம் முடியும்வரை சீடரின் நற்செய்திப் பணிக்கு உறுதுணையாக இருப்பதாகவும் வாக்களிக்கிறார் இயேசு. அதாவது, நற்செய்திப் பணியைத் தொடங்கியவரும் அவரே; அதைத் தொடர்ந்து வழிநடத்துபவரும் அவரே என்ற மகிழ்ச்சியான சிந்தனை இந்த வாக்குறுதியில் வெளிப்படுகிறது.
இந்த
வாக்குறுதி திடீரென வழங்கியதல்ல; மாறாக, அவரது பணிவாழ்வு முழுவதும் பல்வேறு சூழல்களில் இது வெளிப்பட்டதைக் காண்கிறோம். சீடர்கள் புயலில் சிக்கித் தவித்தபோது, “துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்” (மத்
14:27) என்று தேற்றியவர் அவரே. “இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரால் கூடும்போது அவர்கள் நடுவே இருப்பேன்”
(18:20) என்று சமூக உறவுகளுக்குள் குடியேறியவரும் அவரே.
இயேசு
மறைநூலை விளக்கும்போதும் (லூக் 24:27), அப்பத்தைப் பிட்டுப் பகிரும்போதும் சீடர்கள் அவரது பிரசன்னத்தை உணரத் தொடங்கினர் (24:30-31). “நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன்” (யோவா
14:1,18); “வேறொரு துணையாளரை உங்களுக்கு அருள்வேன்”
(14:16) என்று
தாம் முன்மொழிந்த அதே பாதுகாப்பை, இன்று விண்ணேற்றத்தின் வாயிலாக உறுதிப்படுத்துகிறார். ஆகவே, எல்லா மக்களையும் உள்ளடக்கிய ஓர் அன்பின் சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் நமது அன்றாடப் போராட்டங்களில் உயிர்த்த ஆண்டவர் நம் ஒவ்வொரு மூச்சிலும் செயலிலும் உடனிருந்து வழிநடத்துகிறார் என்பதை இத்திருநாள் நமக்கு மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகிறது.
ஆண்டவரின்
விண்ணேற்றப் பெருவிழா நமது அன்றாட வாழ்விற்கு வழங்கும் மூன்று முக்கிய வாழ்வியல் பாடங்களை நம் இதயத்தில் ஏந்துவோம்.
முதலாவதாக,
நற்செய்தி அறிவிப்பு என்பது ஆயருக்கோ அல்லது துறவியருக்கோ மட்டுமே உரிய பணி அல்ல; அது ஒவ்வொரு கிறித்தவக் குடும்பத்திற்கும் விடுக்கப்பட்ட பொதுவான அழைப்பு என்பதை உணர்வோம். அன்று இயேசுவிடமிருந்து இந்தக் கட்டளையைப் பெற்றவர்கள் சாதாரண குடும்பத் தலைவர்களும் தொழிலாளிகளுமே. எனவே, இந்தப் பணி நமது இல்லங்களில் ஒரு வாழ்வியல் முறையாக மலரவேண்டும். குறிப்பாக, தம்பதியர் ஒருவருக்கொருவர் மன்னித்து ஏற்றுக்கொண்டு ஒப்புரவாகும்போது, அங்கே நற்செய்தி உயிர் பெறுகிறது. பெற்றோர் நற்செய்தியை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் மறைப்பணியாளர்களாக மாறவேண்டும். மேலும், நமது இல்லங்களின் கதவுகள் விருந்தோம்பலுக்காகவும், ஏழைகளின் நலனுக்காகவும் திறந்திருக்கும்போது, நமது குடும்பம் ஒரு ‘நடமாடும் நற்செய்தியாக’ மாறுகிறது.
இவ்வாறு, அன்றாட உறவுகளில் வெளிப்படும் சுயநலமற்ற அன்பே சமூகத்திற்கு நாம் வழங்கும் மிகப் பெரிய நற்செய்தி அறிவிப்பாகும்.
இரண்டாவதாக,
நற்செய்திப் பயணத்தில் சவால்களும் தடைகளும் இயல்பானவை என்பதை உணர்வோம். இயேசுவின் பணிவாழ்வு எப்படித் துன்பங்களால் நிறைந்திருந்ததோ, அதுபோலவே நமது நற்செய்திப் பயணமும் துயரங்கள் நிறைந்ததாக இருக்கலாம். ஆனால், ‘நாம் ஒருபோதும் தனிமையில் இல்லை’ என்ற ஆழமான நம்பிக்கை அந்தத் தடைகளைத் தகர்க்கும்.
இயேசுவின்
உடனிருப்பு ஒரு நிழலைப் போன்றது. அது வெளிச்சத்தில் நமக்குத் தெரியாமல் இருக்கலாம்; ஆனால், அது எப்போதும் நம்மைத் தொடரும். “மகனே, மகளே... கலங்காதே, உன் கரங்களைப் பிடித்திருப்பது நான்தான்”
என்று விண்ணேற்றம் கண்ட ஆண்டவர் நமக்கு வாக்குறுதி அளிக்கிறார். நாம் சோர்ந்துபோகும் போதெல்லாம் அந்த ‘உடனிருப்பின் வாக்குறுதி’ நம்மை
மீண்டும் எழுந்து நடக்கச்செய்யும் உந்துசக்தியாக மாறும்.
மூன்றாவதாக,
நமது இறுதி இலக்கு விண்ணகம் என்பதை உணர்ந்து, மண்ணக வாழ்வைத் தூய்மையாக வாழ்வோம். நாம் பூமியில் வாழ்ந்தாலும், நமது உண்மையான குடியுரிமை விண்ணகத்தில் இருக்கிறது; விண்ணேற்றம் அடைந்த இயேசு இப்போது எங்கும் நிறைந்திருக்கிறார்; அவர் நோயுற்றவரின் படுக்கையருகிலும், ஏழையின் கண்ணீரிலும், நம்பிக்கையற்றவரின் இதயத்திலும் குடிகொண்டிருக்கிறார்; மண்ணகத்தின் மடியில் நின்றுகொண்டு விண்ணகத்தைப் பார்த்த சீடர்களுக்கு, மண்ணகத்தையே விண்ணகமாக மாற்றும் இரகசியத்தை இயேசு கற்றுக்கொடுத்தார். பசியோடும் நோயோடும் அகதிகளாகவும் வாடும் மாந்தருக்கு நாம் செய்யும் சிறு உதவியும் இயேசுவுக்கே செய்யப்படுகிறது. இந்த உணர்வு நம்மை வெறும் சொற்களின் மனிதராக அல்லாமல், செயல்களின் மனிதராக மாற்றுகிறது.
நிறைவாக,
விண்ணேற்றம் என்பது இயேசு நம்மை விட்டுத் தூரமாகச் சென்ற நிகழ்வு அல்ல; மாறாக, அவர் நம் ஒவ்வொருவருடைய வாழ்விலும் ஆழமாகக் குடியேறிய உன்னத நிகழ்வு. அவர் எங்கோ எட்டாத வானத்தில் இல்லை; மாறாக, துயருறுவோரின் கண்ணீரைத் துடைக்கும் கரங்களிலும், பசித்திருப்போர் அருந்தும் உணவிலும், தனிமை யில் வாடுவோருக்கு ஆறுதல் தரும் அன்புக் குரலிலும் உயிர்ப்போடு இருக்கிறார்.
“எல்லா நேரங்களிலும் நற்செய்தியை அறிவிக்க முயற்சியுங்கள்; தேவைப்பட்டால் மட்டும் வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள்” என்ற
புனித பிரான்சிஸ் அசிசியாரின் கூற்றிற்கேற்ப, நாம் நற்செய்தியின் கருவிகளாக மாறுவோம். மண்ணகத்தின் மடியில் நின்றுகொண்டு, விண்ணகத்தின் வாக்குறுதியைச் சுமந்தபடி, துணிவோடும் நம்பிக்கையோடும் புறப்படுவோம். உயிர்த்த ஆண்டவர் உலகம் முடியும் வரை எந்நாளும் நம்மோடு இருக்கிறார்.
மானிட வாழ்வில் ‘பிரிவு’ என்பது தாங்க முடியாத ஒரு பெருவலி. அது ஆன்மாவை அலைக்கழிக்கும் கலக்கத்தையும், ஆறாத ஏக்கத்தையும் தரக்கூடியது. நாம் உயிராக நேசிப்பவர்கள் நம்மை விட்டுச் செல்கிறார்கள் அல்லது பிரிகிறார்கள் என்றாலே, ஒருவிதத் திக்கற்ற நிலையும், ஆதரவற்ற உணர்வும் நம்மைச் சூழ்ந்து கொள்ளும். மனித உறவுகள் மட்டுமன்றி, சில நேரங்களில் நாம் நேசித்த பொருள்களும், வாழ்ந்த இடங்களும் கூட நம் உணர்வுகளோடு இரண்டறக் கலந்துவிடுகின்றன. அத்தகைய சூழலில் ஏற்படும் இழப்பு, நம்மை மீளாத்துயரின் ஆழத்திற்கு இட்டுச் செல்கிறது.
ஓர்
உயிரையோ அல்லது ஒரு பொருளையோ பிரிவது என்பது இதயத்தில் ஒரு வடுவையும், வாழ்வில் ஈடுசெய்ய முடியாத ஒரு பெரும் வெற்றிடத்தையும் உருவாக்கிவிடுகிறது. குறிப்பாக, நம் வாழ்வில் நிபந்தனையற்ற அன்பையும் ஆழமான தோழமையையும் வெளிப்படுத்திய சொந்தங்களைப் பிரிந்தும் இழந்தும் நிற்கும்போது வழிகின்ற கண்ணீர் அந்த உறவின் உன்னதத்தைச் சொல்லும் அர்த்தமுள்ள சாட்சியம். “அந்த உறவு மீண்டும் எப்போது திரும்பும்?” என்று மனம் ஏங்கித் தவிப்பதும் துடிப்பதும் இயல்பே. நம் வாழ்வின் திசையையே மாற்றிய அல்லது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியவர்களின் பிரிவு, காலத்தால் ஈடுசெய்ய முடியாத ஒன்றாக மாறிவிடுகிறது. ஏனெனில், அத்தகைய இழப்புகளுக்கு உலகியல் சார்ந்த எந்த ஆறுதலும் நிகராகாது!
இன்றைய
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு நமக்கு ஒரு மாபெரும் வாழ்வியல் ஆறுதலை வழங்குகிறார். அவர் தம் சீடர்களைத் தனிமையில் தவிக்கவிடவில்லை; மாறாக, காலங்கள் கடந்தும் அவர்களோடு நிலைத்திருக்கும் ஒரு தெய்வீக உறவை இன்றைய நற்செய்தியின் வழியாக உறுதிப்படுத்துகிறார். அவர் நமக்காக ஏற்படுத்திய அந்த உறவு, ஒருபோதும் பிரியாதது; நமக்குத் துணையாக வரும் அந்தத் துணையாளர், நம்மை ஒருபோதும் கைவிடாதவர்.
இன்று நாம்
உயிர்ப்புக்காலத்தின்
ஆறாம் ஞாயிறைக் கொண்டாடுகிறோம். இந்த ஞாயிறு நமக்கு விடுக்கும் மையமான அழைப்பு யாதெனில், “உங்களை நான் திக்கற்றவர்களாக விடமாட்டேன்” (யோவா
14:18) என்பதுதான். இறைவனின் உடனிருப்பு எப்போதும் நம்மோடு நிழலாகத் தொடர்கிறது என்பதை ஆழமாக உணர்ந்து, நம்பிக்கையோடு வாழ்வின் சவால்களை எதிர்கொள்ளவே இன்றைய திருவழிபாடு நம்மைத் தூண்டுகிறது.
இயேசு
தம் சீடர்களுடன் அமர்ந்து பகிர்ந்துகொண்ட அந்த இறுதி இராவுணவின் பிரியாவிடை உரையைக் கடந்த வாரத்தின் தொடர்ச்சியாக இன்றும் நாம் நற்செய்தியாக வாசிக்கிறோம். தாம் தந்தையிடம் செல்லப்போவதை இயேசு முன்னறிவித்த அந்தத் தருணம், சீடர்களை ஆழ்ந்த சோகத்திலும் சொல்லொண்ணாத் துயரிலும் ஆழ்த்தியது. “ஆண்டவர் எங்கே போகிறார்? (14:5) அவர் பிரிந்த பின் நமக்கென்று யார் இருப்பார்? அவர் இல்லாத எதிர்காலம் எப்படியிருக்கும்?” என்ற கேள்விகள் அவர்களை வாட்டியிருக்கக் கூடும். ஏனெனில், இயேசுவின் உடனிருப்புதான் அந்தச் சீடர்களை ஒரு குடும்பமாக இணைத்தது; அவர்களின் துன்பங்களில் அரணாக நின்றது; மனமுடைந்து போகாமல் அவர்களுக்குத் தெம்பூட்டியது.
இந்தச்
சூழலில், “நான் தந்தையிடம் போகிறேன்”
(14:12) என்று இயேசு கூறியது பெரும் ஆற்றாமை உணர்வைச் சீடர்களுக்குத் தந்தாலும், சீடர்களின் கலக்கத்தை உணர்ந்த இயேசு, தேனினும் இனிய ஒரு வாக்குறுதியை அவர்களுக்கு அளிக்கிறார்: “உங்களோடு இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார்”
(14:16). இந்த வாக்குறுதி என்பது வெறும் வெற்று வார்த்தையல்ல; அது ஒரு தந்தை தன் பிள்ளைகளுக்குத் தரும் மிக உயரிய பாதுகாப்பு உறுதிமொழி. இயேசு உடலால் மறைந்தாலும், தூய ஆவியின் வழியாக ‘இன்றும்’ நம்மோடு வாழ்கிறார் என்பதே இதன் ஆழமான மையப்பொருள்.
ஆகவே,
தம்மை நம்பி இறையாட்சிப் பணி இயக்கத்தில் தங்களை முழுமையாக இணைத்துக்கொண்ட சீடர்களை ஒருபோதும் திக்கற்றவர்களாகத் தான் விடுவதில்லை என்பதை இயேசு மிக உறுதியாகக் கூறுகிறார். தந்தையிடமிருந்து தாம் அனுப்புகின்ற துணையாளர் அவரின் பிரிவை உணராவண்ணம் சீடர்களைத் தேற்றுவார்; ஒரு தாயைப்போல அருகிலிருந்து ஆறுதலளிப்பார்; கடினமான பாதைகளில் சோர்ந்துவிழாதபடி ஆற்றல் தருவார்; தங்களுக்காகப் பரிந்து பேசுவார்; எந்தவொரு சூழலிலும் முடிவெடுக்கத் திணறித் தடுமாறும்போது, அந்தத் துணையாளரே தெளிவான ஆலோசனைகளை வழங்கி வழிநடத்துவார். தாம் போதித்த உண்மைகளை அவர்களுக்கு மீண்டும் நினைவூட்டி, தமது இறையாட்சிப் பணியைத் தொய்வின்றித் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல அந்தத் தூய ஆவியானவரே உந்துசக்தியாகத் திகழ்வார் என இயேசு மாபெரும்
நம்பிக்கையளிக்கிறார்.
இயேசு
வாக்களித்த இந்தத் துணையாளரின் உடனிருப்பு வெறும் அக உணர்வு மட்டுமல்ல;
அது செயலில் வெளிப்பட வேண்டிய ஒன்று. ஆண்டவருடைய விண்ணேற்றம் (பிரிவு) என்பது மீட்புத் திட்டத்தில் நிகழ்ந்தே தீர வேண்டிய ஒரு கட்டாயம். அந்தப் பிரிவிற்குப் பிறகு இயேசுவின் பணியை இவ்வுலகில் தொடரவேண்டிய பெரும் பொறுப்பு அவரைப் பின்பற்றிய சீடர்களின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டது. இதனை இன்றைய முதல் வாசகத்தில் பிலிப்பு ஆற்றிய நற்செய்திப் பணி தெள்ளத் தெளிவாக நிரூபிக்கிறது. சமாரியருக்கும் யூதருக்கும் இடையே நீடித்த கடுமையான பகைமையையும் மீறி, இயேசு காட்டிய அதே அன்புப் பாதையில் பிலிப்பு பயணிக்கிறார். தூய ஆவியின் ஆற்றலால் ஈர்க்கப்பட்ட பிலிப்பு, பிணிகள் தீர்த்தும், தீய ஆவிகளை விரட்டியும் சமாரியாவிற்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொண்டு வருகிறார்.
இவ்வாறு,
இயேசுவின் உடல்சார்ந்த பிரிவு, தூய ஆவியின் வழியாக ஓர் உலகளாவிய நற்செய்திப் பணியாக உருவெடுக்கிறது. அன்னை தெரேசா கூறுவது போல, “ஆண்டவர் நம்மைப் பயன்படுத்துவதற்கு நாம் வெறும் கருவிகளாக மட்டுமே இருக்கிறோம். அந்தத் தூய ஆவியானவரே நம்மை இயக்கும் ஆற்றல்.” பிலிப்புவைப் போல நாமும் அந்தத் துணையாளரின் குரலுக்குச் செவிசாய்க்கும்போது, நம் வாழ்வும் பிறருக்கு மகிழ்ச்சி தரும் நற்செய்தியாக மாறுகிறது.
நிறைவாக,
இன்றைய நாள் நமக்கு வழங்கும் இறைச்செய்தி என்ன? ஆண்டவர் இயேசு, “நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால்...” (14:15)
என்று தொடங்கும்போதே, அன்பு என்பது வெறும் வார்த்தைகளோ அல்லது உணர்ச்சிகளோ அல்ல; அது செயலில் வெளிப்பட வேண்டிய ஒரு மாபெரும் சக்தி என்பதை உணர்த்துகிறார். முதலில், நாம் இறைவனை நேசிக்கிறோம் என்பதற்கு மிகச்சிறந்த அடையாளம், அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழ்வதுதான். புனித அன்னை தெரசா கூறியதுபோல, சிறிய காரியங்களைச் செய்தாலும், அவற்றை மிகுந்த அன்போடு செய்யவேண்டும். இறைக்கட்டளைகளை நம் அன்றாட வாழ்வில் செயல்படுத்துவதன் மூலமே நாம் உண்மையான சீடர்களாகிறோம். தாழ்ச்சியான கீழ்ப்படிதலே நம்மைத் தூய ஆவியின் வழிநடத்துதலுக்குத் தகுதியுள்ளவர்களாக்குகிறது.
இரண்டாவதாக,
ஆண்டவர் இயேசு சீடர்களுக்கு வழங்கிய மிக உன்னதமான வாக்குறுதி, “உங்களுக்குத் துணையாளராம் தூய ஆவியைப் பெற்றுத்தருவேன்” என்பதாகும்.
இந்தத் தூய ஆவியானவர் “உண்மையை வெளிப்படுத்துபவர்” (14:17). உலகம்
பெரும்பாலும் குறுக்கு வழிகளையும், பொய்மையின் கவர்ச்சிகளையும் காட்டி நம்மைத் திசைதிருப்ப முயலும். அத்தகைய சூழல்களில், நாம் உலகப்போக்கின் பின்னால் செல்லாமல், நமக்குள் ஒலிக்கும் துணையாளரின் மெல்லிய குரலுக்குச் செவிசாய்க்கவேண்டும். உலகம் உண்மையை ஏற்க மறுக்கும் போதும், நாம் நேர்மையின் அடையாளமாகத் திகழவேண்டும். உண்மைக்காகத் துயரங்களை ஏற்கும்போது, அந்தத் தூய ஆவியானவரே நமக்குத் துணையாக நின்று ஆற்றல் தருகிறார். இறுதியில், அந்த உண்மையே நமக்கு விடுதலையையும் நிலையான வாழ்வையும் அளிக்கும் (8:32).
மூன்றாவதாக,
இன்று நாம் வாழும் சூழலில், உறவுகளின் பிரிவாலும், எதிர்பாராத உயிரிழப்புகளாலும் நிலைதடுமாறி, ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் பல சகோதர சகோதரிகளைச்
சந்திக்கின்றோம். நாம் ஒவ்வொருவரும் தூய ஆவியானவரைப் பெற்றிருக்கிறோம் எனில், அந்த ஆவியின் கனிகளை நம் வாழ்வில் வெளிப்படுத்த வேண்டும். அதாவது, துயருறுவோருக்கு ஆறுதல் அளிக்கும் ‘துணையாளராகவும்’, திக்கற்றவர்களுக்குப்
‘பாதுகாப்பாளராகவும்’, ஒடுக்கப்பட்டோருக்காக
இறைவனிடம் ‘பரிந்து பேசுபவராகவும்’ நாம்
மாறவேண்டும் என்பதே அதன் பொருள். இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பேதுரு அறிவுறுத்துவது போல, நாம் எப்போதும் கனிவோடும் மரியாதையோடும் நடந்து கொள்ளவேண்டும். தீமைக்குத் தீமை செய்யாமல், அநீதி இழைப்போரையும் கிறிஸ்துவின் மேலான அன்பால் வென்று, நம் செயல்கள் மற்றும் அணுகுமுறைகள் வழியாக உலகிற்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் அறிவிப்பதே நமது வாழ்நாள் கடமையாகும்.
இறுதியாக,
“திக்கற்றவர்களாக” இனி
நாம் கலங்க வேண்டியதில்லை. நமக்குள் குடிகொண்டு நம்மைத் தாங்கிப் பிடிக்கும் அந்தத் துணையாளரின் ஆற்றலோடு, நம்பிக்கையின் மக்களாகவும், கிறிஸ்துவின் அன்பிற்குச் சான்றுகளாகவும் உலகிற்கு முன்செல்வோம். எத்தகைய சோதனைகள் வந்தாலும், ஒருபோதும் பிரியாத நம் தெய்வீகத் துணையாளர், மிகுந்த பிரியமுடன் நம் ஒவ்வொரு காலடியையும் வழிநடத்தட்டும். அவரின் உடனிருப்பு இன்னும் வலுவாக நம்மில் வெளிப்படட்டும்.
நாம் வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போதோ அல்லது வெளியூர் செல்லும்போதோ வீட்டிலுள்ளவர்களிடம், ‘நான் போயிட்டு வரேன்’ என்று கூறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். ‘போயிட்டு வரேன்’ என்ற சொல்லில் ‘மீண்டும் வருவேன்’ என்ற நம்பிக்கையும், உறவின் தொடர்ச்சியும் ஒளிந்திருக்கிறது. ஆங்கிலத்தில் ‘Goodbye’ என்று கூறும்போது அதற்குள் ‘God be with you’ (இறைவன் உன்னோடு இருப்பாராக!) என்ற ஆசி கலந்திருக்கிறது. ‘Farewell’ என்ற வார்த்தை பிரிந்து செல்பவர் ‘நலமாக இருக்கவேண்டும்’ என்ற வாழ்த்தைச் சுமந்து நிற்கிறது. ஆனால், தமிழ் மொழியில் உள்ள ‘பிரியாவிடை’ என்ற சொல் இன்னும் ஆழமானது. ‘உன்னை விட்டு நான் பிரியமாட்டேன், தற்காலிகமாகத்தான் விடைபெறுகிறேன்’ என்ற உட்பொருளை அது உணர்த்துகிறது. பிரிவு என்பது ஓர் உறவின் முற்றுப்புள்ளி அல்ல; மாறாக, அது ஒரு தொடர்ச்சி.
இன்று
நாம் பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். இன்றைய நற்செய்திப் பகுதி இயேசுவின் மிக நீண்ட பிரியாவிடை (யோவா 13:31-) உரையின் தொடக்கப் பகுதியாக அமைகிறது. நம் வாழ்வின் இக்கட்டான நேரங்களில் நாம் ஒருபோதும் தனித்து விடப்படவில்லை என்பதை உணரவும், நமது அச்சங்களைக் களைந்து, இயேசுவிடம் முழுமையான நம்பிக்கைகொண்டு வாழவும் அழைக்கப்படுகிறோம்.
இயேசுவின்
சீடர்கள் ஒருவிதமான இக்கட்டான மனநிலையோடு மேல்மாடியில் அமர்ந்திருக்கிறார்கள். அவர் விரைவில் தங்களை விட்டுச் சென்று விடுவார் என்னும் உணர்வு சீடர்களுக்குப் பெரும் வேதனையையும் கலக்கத்தையும் அளிக்கிறது. 13-ஆம் அதிகாரத்தில் சீடர்களின் கால்களைக் கழுவி, அன்பின் பணிவிடையை ஆழமாகப் பதிவு செய்த இயேசு, பின்னர் தமக்கு நடக்கவிருக்கும் துன்பங்களையும் பிரிவையும் பற்றி விளக்கிக் கூறுகிறார். அது மட்டுமின்றி, “உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்” (13:21) என்றும்,
பாறையாகத் தெரிந்த பேதுருவே தம்மை ‘மறுதலிப்பார்’ (13:38) என்றும்
அவர் கூறியபோது, சீடர்களின் உள்ளம் நிலைகுலைந்து போகிறது.
“பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன்...” (13:3) என்று இயேசு கூறுவதன் வழியாக, ‘தங்களை வழிநடத்தியவருக்கே இந்த நிலையா? நம் எதிர்காலம் என்னவாகும்?’ என்ற பல கேள்விகளும் அச்சங்களும்
அவர்களை அலைக்கழிக்கின்றன. இப்படியாக மன உளைச்சலுக்கு உள்ளான
தம் சீடர்களைத் திடப்படுத்தவே இயேசு, “நீங்கள் உள்ளம் கலங்கவேண்டாம்” (14:1) என்ற
நம்பிக்கை சொற்களைக் கூறுகிறார்.
சூழல்கள்
நமக்கு எதிராக மாறும்போதுதான் நமது நம்பிக்கை சோதிக்கப்படுகிறது. இருண்ட அறையில் மெழுகுவர்த்தி எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் சோதனையில் இறைநம்பிக்கை. “கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள்; என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள்” (14:1) என்று
அழைப்பு விடுக்கும் இயேசு, சீடர்களுக்கு (நமக்கும்) மூன்று விதமான தீர்வுகளை முன்வைக்கிறார்:
முதலில்,
‘தந்தையின் இல்லத்தில் பல உறைவிடங்கள் உள்ளன’ (14:2) என்று
இயேசு கூறும்போது, அது வெறும் கட்டடங்களைக் குறிக்கவில்லை; மாறாக, இறைவனின் எல்லையற்ற பராமரிப்பைக் குறிக்கின்றது. தொடக்ககாலத் திரு அவை தந்தை ஒரிஜன் இதனை “கடவுளை நோக்கிய நமது ஆன்மிகப் பயணத்தின் தங்குமிடங்கள்” என்று
விளக்குகிறார். யோவான் நற்செய்தியில் ‘உறைவிடம்’
என்பது இயேசுவிற்கும் அவர் சீடர்களுக்கும் இடையே நம்பிக்கையால் உருவாகும் ஒரு நிரந்தர உறவைக் குறிக்கிறது. இது ஒரு தற்காலிகத் தங்குமிடம் அல்ல; மாறாக (14:2) மாறாத அன்பின் இல்லம். “அப்படி இல்லையெனில், ‘உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப் போகிறேன்’
என்று சொல்லியிருப்பேனா?” (14:2) என்று இயேசு வினவுவது, தமது வார்த்தையின் மீதான நம்பகத்தன்மையை ஆணித்தரமாக உறுதிப்படுத்துவதற்காகவே.
இரண்டாவதாக,
அச்சத்திலும் குழப்பத்திலும் மூழ்கியிருந்த சீடர்களுக்கு (13:21,38) “வழியும் உண்மையும் வாழ்வும் நானே”
(14:6) என்ற காலத்தால் அழியாத சொற்களை இயேசு வழங்குகிறார். திகைத்து நின்றவர்களுக்கு நம்பிக்கையூட்டும் ‘வழியாகவும்’, போலித்தனங்களுக்கு
மத்தியில் நிலையான ‘உண்மையாகவும்’, தந்தையோடு
இணைக்கும் உயிரோட்டமான ‘வாழ்வாகவும்’ அவர்
விளங்குகிறார். ஒரு தாயின் கனிவோடு அவர்களின் வருங்காலக் கனவுகளை மீட்டெடுக்கும் இயேசு, தந்தையிடம் அழைத்துச் செல்லும் ஒரே பாலமாகத் தம்மை வெளிப்படுத்துகிறார்
(14:3). நம் நெருக்கடியான சூழலில், அவரே நமக்கு வழியாகவும், உண்மையான வாழ்வாகவும் இருந்து நமது நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறார்.
மூன்றாவதாக,
இயேசு தம் சீடர்களிடம் வெறும் தத்துவங்களைப் பேசவில்லை; மாறாக, அவர்களைத் தம்மோடு இணைந்து செயல்பட அழைக்கிறார். “என் வார்த்தையின் பொருட்டு நீங்கள் என்னை நம்பாவிட்டாலும், நான் செய்த செயல்களின் பொருட்டாவது என்னை நம்புங்கள்” (14:11) என்று
அவர் உருக்கமாகக் கூறுகிறார். ஏனெனில், அந்த நம்பிக்கைதான் சீடர்களை இயேசுவைப் போன்ற செயல்களைச் செய்யத் தூண்டும் வல்லமை கொண்டது. இன்னும் சொல்லப்போனால், இயேசு செய்த அருஞ்செயல்களை விடவும் மேன்மையானவற்றைச் செய்யும் ஆற்றலை அவர் தம் சீடர்களுக்கு வழங்குகிறார்.
இயேசுவின்
“பெரிய செயல்களைச் செய்வீர்கள்” என்ற
வாக்குறுதி, அவர் விண்ணேற்றம் அடைந்த பிறகு சீடர்களின் வாழ்வில் எப்படிச் செயலாற்றியது என்பதற்கு இன்றைய முதல் வாசகம் (திப 6:1-7) ஒரு சிறந்த சான்று. சீடர்களின் எண்ணிக்கை பெருகியபோது, கிரேக்க மற்றும் எபிரேய மொழி பேசுவோரிடையே கைம்பெண்களைப் பராமரிப்பதில் பாரபட்சம் எனும் இக்கட்டான சூழல் எழுகிறது. மீண்டும் ஒரு சவாலைச் சந்தித்த திருத்தூதர்கள், இயேசுவின் ‘உள்ளம் கலங்க வேண்டாம்’
என்ற வார்த்தையை நினைவுகூர்ந்து, தூய ஆவியால் தூண்டப்பட்டு ஏழு திருத்தொண்டர்களைத் தேர்ந்தெடுத்தனர். “யாரும் திக்கற்றவர்களாக விடப்படக் கூடாது” என்ற உயரிய நோக்கத்தில், அவர்கள் சமுதாயப் பணியையும் இறைப்பணியையும் நேர்த்தியாக முன்னெடுத்துச் சாதித்தனர்.
திருத்தூதர்கள்
முன்னெடுத்த அந்தச் செயல்பாடு, நற்செய்தியில் இயேசு காட்டிய ‘வழியும்’,
அவர் வாக்களித்த ‘உறைவிடமும்’ வெறும்
கற்பனையல்ல, அவை ஒரு புதிய சமூகத்தை உருவாக்கும் வல்லமை கொண்டவை என்பதை உறுதிப்படுத்துகின்றன. இதனைத்தான் இரண்டாம் வாசகத்தில் புனித பேதுரு, உலகால் தள்ளப்பட்டாலும் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘மூலைக்கல்லான’ (திபா
118:22) இயேசுவின்மீது
கட்டப்பட்ட ‘உயிருள்ள கற்கள் நாம்’ என்கிறார். அந்த மூலைக்கல்லோடு (இயேசுவோடு) நாம் இணையும்போது, தந்தையின் இல்லத்து வாரிசுகளாக, அதாவது, ‘குருத்துவ அரசராகவும்’, ‘தூய
மக்களினமாகவும்’ (விப
19:6) மாறி, இறைவனுக்கும் மனிதருக்கும் இடையே பாலமாக அமையும் ‘பெரிய செயல்களை’
(1பேது 2:9) செய்யும் ஆற்றலைப் பெறுகிறோம். இந்தப் புதிய அடையாளம், நம்மை இருளிலிருந்து வியப்புக்குரிய ஒளிக்கு அழைத்துச் செல்வதுடன், நாம் ஒருபோதும் திக்கற்றவர்கள் அல்ல; மாறாக, உலகத்தைப் படைத்த தந்தையின் பிள்ளைகள் என்பதையும் பறைசாற்றுகிறது.
இன்றைய
வழிபாடு நமக்கு விடுக்கும் வாழ்வுக்கான சிந்தனைகள்: முதலாவதாக, “உள்ளம் கலங்க வேண்டாம்”
என்னும் உயரிய அறிவுரையை இயேசு நமக்கு வழங்குகிறார். கவலையும் கலக்கமும் மேலிடும் நமது அன்றாட வாழ்வில், பல நேரங்களில் நம்பிக்கை
குறைவினால் கடவுளின் உடனிருப்பை உணரும் ஆற்றலை நாம் இழந்துவிடுகிறோம். ஆயினும், இக்கட்டான எந்தச் சூழலிலும் கடவுள் நம்மைக் கைவிடாமல் கரம்பிடித்துக் காத்து வருகிறார் என்பதே இயேசு இன்று நமக்குத் தரும் மிக வலிமையான உறுதிப்பாடாகும்.
இரண்டாவதாக,
“உன்னோடு இருக்கிறேன்” என்ற
உறுதிமொழி வழியாகப் பிரிவு குறித்த கவலையைத் தாண்டிச் செயல்பட இயேசு அழைக்கிறார். பிரிவு துயரமானதே; எனினும், அது மேலான நன்மையை நோக்கிய இறைத்திட்டமாகும். அவர் நம்மை விட்டு ஒருபோதும் விலகுவதில்லை; மாறாக, ஒரு துணையாளராக, நம் நிழலாய் என்றும் தொடர்கிறார். எனவே, அவரது பணிகளை இம்மண்ணில் தொடர்ந்து ஆற்றுவதன் வழியாக ஒருநாள் அவரோடு நிலையாக இணைந்திருப்போம் என்ற பேரின்ப ஆறுதலைப் பெறுவோம்.
மூன்றாவதாக,
இயேசு செய்த செயல்களை அவரில் நம்பிக்கை கொள்வோரும் செய்யமுடியும்; செய்யவும்வேண்டும் என்பதே இயேசுவின் அழைப்பு. அவரைவிடப் பெரிய செயல்களைச் செய்வோம் என்ற வாக்குறுதி நமக்கு உத்வேகம் தருகிறது. மற்றவர்களின் கண்ணீரைத் துடைப்பதும், திக்கற்றவர்களுக்குத் துணையாய் நிற்பதுமே அந்த ‘பெரிய செயல்கள்.’ அவரே வழியாக இருப்பதால் நாம் பாதையைப் பற்றி அஞ்சத் தேவையில்லை, அவரே இலக்காக இருப்பதால் நமது பயணம் அர்த்தமுள்ளதாகிறது.
நிறைவாக,
“நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன்” என்ற
வார்த்தை இன்று நமக்கான பெரும் ஆறுதல். பிரிவு நம்மை வாட்டலாம், சூழல்கள் நம்மைப் பயமுறுத்தலாம். ஆனால், “உன் நிழலாய் நான் வருவேன்” என்று வாக்களித்த ஆண்டவர் இன்றும் நம்மோடு இருக்கிறார். எனவே, நமது உள்ளம் கலங்க வேண்டிய அவசியமில்லை. நாம் இயேசுவின்மீது கொண்ட நம்பிக்கையை ஆழப்படுத்துவோம். அவரே நமது வழி; அவரே நமது உண்மை; அவரே நமது வாழ்வு!
2013-ஆம் ஆண்டு ஏப்ரல் 11-இல், கொரியப் போரில் வீர மரணமடைந்த அருள்பணியாளர் எமில் கப்பானுக்கு (Emil Kapaun) அமெரிக்காவின் மிக உயரிய இராணுவ விருது வழங்கப்பட்டது. பொதுவாக எதிரிகளை வீழ்த்தும் வீரர்களுக்கே தரப்படும் இவ்விருது, போர்க்களத்தில் ஒருமுறை கூடத் துப்பாக்கியை ஏந்தாத ஓர் அருள்பணியாளருக்கு வழங்கப்பட்டது உலகையே வியக்க வைத்தது. “துப்பாக்கியால் ஒரு முறைகூட சுடாத ஓர் அமெரிக்க வீரரை இன்று நாம் பெருமைப்படுத்துகிறோம். அருள்பணியாளர் எமில் கப்பான் பயன்படுத்திய ஒரே ஆயுதம் அன்பு! தன் நண்பர்களுக்காக உயிரைத் தந்த மேலான அன்பு!” என அதிபர் ஒபாமா இவரைப் போற்றினார்.
அதே போர்க்களத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒரு வீரர், இறப்பதற்கு முன் ஒப்புரவு அருளடையாளம் பெற விரும்பினார். அங்கு மருத்துவம் பார்த்தவர் அருள்பணியாளருக்கு எங்கே போவது எனத் திகைத்தபோது, அருகே படுகாயமடைந்து கிடந்த மற்றொரு வீரர், “நான் ஓர் அருள்பணியாளர்” எனத் தன்னை அறிமுகப்படுத்தினார். “அசைந்தால் உங்கள் உயிருக்கு ஆபத்து” என மருத்துவர் எச்சரித்தபோதும், “என் வாழ்வைவிட என் நண்பனின் ஆன்மா முக்கியம்” எனக் கூறி தரையோடு தரையாக ஊர்ந்து சென்று அந்த வீரருக்கு அருளடையாளம் வழங்கிவிட்டு, அவரோடே இறைவனில் இணைந்தார். “தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை” (யோவா 15:13) என்ற வரிகளுக்கு இணங்க, ஆயுதம் ஏந்தாத இந்த மேய்ப்பர்கள் அன்பால் வரலாற்றில் இடம்பிடித்தனர்.
இன்று நாம் உயிர்ப்புக்காலத்தின் நான்காம் ஞாயிறைக் கொண்டாடுகிறோம். இது ‘நல்லாயன் ஞாயிறு’ என்றும், ‘உலக இறையழைத்தல் நாள்’ என்றும் சிறப்பிக்கப்படுகிறது. இறைப்பணிக்காகத் தங்களை அர்ப்பணிக்க முன்வருபவர்களுக்காகவும், பணியில் இருப்பவர்களின் உறுதிப்பாட்டிற்காகவும் சிறப்பாகச் செபிக்கும் நாளாக இது அமைகிறது.
‘நல்லாயன்’ என்ற சொல்லைக் கேட்டதுமே, ஓர் ஆட்டுக்குட்டியைத் தம் தோள்மீது சுமந்தபடி கனிவோடு நிற்கும் இயேசுவின் உருவமே நம் கண்களில் நிழலாடுகிறது. வரலாற்று அறிஞர்களின் கூற்றுப்படி, கிறித்தவப் பாரம்பரியத்தில் இயேசுவைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட முதல் உருவம் இதுவேயாகும். கி.பி. 3-ஆம் நூற்றாண்டில், உரோமைப் பேரரசின் அடக்குமுறைக்கு அஞ்சி நிலத்தடிக் கல்லறைகளில் (Catacombs) தஞ்சம் புகுந்த தொடக்க காலக் கிறித்தவர்களுக்கு, அங்கிருந்த சுவர்களில் வரையப்பட்டிருந்த இந்த நல்லாயன் உருவமே அளவற்ற ஆறுதலையும், அசைக்க முடியாத நம்பிக்கையையும் வழங்கியது.
திருவிவிலியப் பார்வையில் ஆடுகளும் ஆயர்களும் பிரிக்க முடியாதவர்களாகவே விளங்குகின்றனர். திருவிவிலியத்தின் முதல் ஆயனாக ஆபேல் (தொநூ 4:2) தொடங்கி, இஸ்ரயேல் மக்களின் மாபெரும் தலைவர்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, மோசே மற்றும் தாவீது ஆகியோர் ஆடுகளைப் பேணிக்காத்த ஆயர்களாகவே தங்கள் வாழ்வைத் தொடங்கினர். குறிப்பாக, மந்தை மேய்த்துக் கொண்டிருந்த தாவீதையே இறைவன் தேர்ந்தெடுத்துத் தம் மக்களின் ஆயராக (தலைவராக) உயர்த்தினார் (2சாமு 7:8). திருவிவிலியச் சூழலில் ‘தலைவர்’ என்பவருக்கு ‘ஆயர்’ என்பதே மிகச்சரியான அடையாளமாக இருந்தது (1அர 22:17).
காலப்போக்கில் இஸ்ரயேல் சமுதாயத்தில் ஆயர்கள் தங்கள் மதிப்பை இழந்தனர். தலைவர்கள் ஆடுகளைப் பற்றிக் கவலைப்படாமல், தங்களையே மேய்த்துக்கொண்ட ‘கறுப்பு ஆயர்களாக’ மாறினர் (எசே 34:3-4). மந்தையை முறையாக மேய்க்காமல் சிதறடித்த அந்தத் தலைவர்களைக் கண்டித்த இறைவன், “நானே என் மந்தையைத் தேடிச் சென்று பேணிக்காப்பேன்” (எசே 34:11) என்று வாக்களித்தார். மேலும், “என் இதயத்திற்கு ஏற்ற மேய்ப்பர்களை உங்களுக்குக் கொடுப்பேன்” (எரே 3:15) என்ற இறைவாக்கின் நிறைவாகவே இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்தார். அந்த ஒப்புயர்வற்ற, தலை சிறந்த ஆயர் இயேசுவே என்பதையும், ஒரு நல்லாயனுக்கு இருக்க வேண்டிய முக்கியமான பண்புகளையும் இன்றைய நற்செய்தியில் யோவான் மிக அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறார்.
முதலாவதாக, ஒரு நல்ல ஆயர் தன் மந்தையை நன்கு அறிபவர். “நான் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; அவையும் என்னை அறிந்திருக்கின்றன” (யோவா 10:14). திருவிவிலியச் சூழலில் ‘அறிதல்’ என்பது வெறும் தகவல் சார்ந்த அறிவு அல்ல; அது ஓர் ஆழமான இதயம் சார்ந்த பிணைப்பு. ஒரு நல்ல மேய்ப்பர் தன் ஆடுகளின் பசி, தாகம், வலி மற்றும் பயத்தைத் தன் சொந்த வலியாக உணர்கிறார். “ஆண்டவரே, நீர் என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர்” (திபா 139:1) என்ற திருப்பாடல் வரிகளுக்கேற்ப, நம்மைப் படைத்தவர் நம் பலவீனங்களை அறிந்தே நம்மை வழிநடத்துகிறார். ஒரு தலைவர் தன் மக்களின் தேவைகளை அவர்கள் சொல்லாமலேயே உணர்ந்திருக்கவேண்டும் என்பதற்கு இதுவே சான்று.
இரண்டாவதாக, ஒரு நல்ல ஆயர் தன் மந்தையோடு ஆழமான நல்லுறவு கொண்டிருப்பவர். “ஆயர் ஆடுகளுக்கு முன்பாகச் செல்வார்; ஆடுகளும் அவரைப் பின்தொடரும்; ஏனெனில், அவரது குரல் அவற்றிற்குத் தெரியும்” (யோவா 10:4). இங்கே ஆயருக்கும் மந்தைக்குமான உறவு அதிகாரத்தால் உருவானது அல்ல; அது அன்பால்-நம்பிக்கையால் பிணைக்கப்பட்டது. அவர் ஆடுகளைப் பின்னால் இருந்து விரட்டுவதில்லை; மாறாக, முன்னே சென்று வழிகாட்டுகிறார். ஒரு சிறந்த தலைவர் முன்மாதிரியான வாழ்வால் மக்களை ஈர்க்கவேண்டுமே தவிர, கட்டளைகளால் அல்ல. அந்த உறவுதான் ஆடுகளுக்குப் பாதுகாப்பை வழங்குகிறது.
மூன்றாவதாக, ஒரு நல்ல ஆயர் தன் மந்தையைக் காப்பாற்றுபவர். “நல்ல ஆயன் ஆடுகளுக்காகத் தன் உயிரைக் கொடுப்பார்” (யோவா 10:11). ஆடுகளை ஓநாய்களிடமிருந்து காக்க ஆயர் தன் உயிரையும் பணயம் வைக்கிறார். கூலிக்கு வேலை செய்பவன் ஓநாயைக் கண்டதும் ஆடுகளைக் கைவிட்டு ஓடிவிடுவான். ஆனால், நல்லாயன் தன் ஆடுகளின் பாதுகாப்பிற்காகத் தன்னுயிரையே அரணாக மாற்றுகிறார். எந்த ஒரு சூழலிலும் தன்னைப் பற்றிச் சிந்திக்காமல், மற்றவர்களையே எண்ணி வாழ்வதைப் போன்ற ஓர் உயர்வான வாழ்வு உலகில் இல்லை. ஆபத்து, துன்பம் என்று வரும்போது தன்னைக் குறித்து ஒருவர் கவலைகொள்வதும், தன்னைக் காத்துக்கொள்ள முயல்வதும் வெகு சாதாரண மனித இயல்பு. அந்த இக்கட்டான சூழல்களிலும் தன்னைப் பற்றிய கவலை இல்லாமல், அடுத்தவரைப் பற்றிக் கவலைப்படும் மனம், மலைபோல் உயர்ந்த மனம்.
இன்றைய உலகத் தலைவர்களைச் சற்று உற்றுநோக்குவோம். மேலாண்மைத் திறமையும் இராணுவப் பலமும் கொண்ட பல தலைவர்கள் மந்தையைப் பேணுவதற்குப் பதிலாக மந்தையை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். உக்ரைன் முதல் ஈரான் வரை நடக்கும் போர்களில் அதிகார வெறிகொண்ட தலைவர்கள் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர்களைப் பலி கொடுக்கிறார்கள். சொந்த நாட்டு மக்களே அகதிகளாக அலைவதையும், குழந்தையர் பசியால் மடிவதையும் கண்டும் காணாமல் இருக்கும் கூலிக்கு வேலை செய்யும் தலைவர்களே இன்று மலிந்து கிடக்கிறார்கள். வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், சாதி-மத மோதல்கள் என மந்தை சிதறிக் கிடக்கும்போது ‘தங்களையே மேய்த்துக்கொள்ளும்’ (எசே 34:2) சுய நலத் தலைவர்களே அதிகாரப் பீடங்களில் அமர்ந்திருக்கிறார்கள். இந்தச் சூழலில் கிறிஸ்துவின் ‘நல்லாயன்’ உருவம் ஒரு மிகப்பெரிய எச்சரிக்கையாகவும் அழைப்பாகவும் இருக்கிறது.
அதிகாரம் என்பது அடக்கி ஆள்வதற்கல்ல; அரவணைப்பதற்கே! உலகியல் பார்வையில் அதிகாரம் என்பது ஏணியின் உச்சியில் ஏறி நின்று மற்றவர்களைக் கீழே பார்ப்பது. ஆனால், கிறிஸ்து காட்டும் தலைமைத்துவ ஏணி தலைகீழானது. அங்கே அதிகாரம் என்பது மற்றவர்களை அரவணைத்துத் தூக்கி விடத் தகுந்தவாறு குனிந்து தாழ்ந்திறங்குவதாகும். அதிகாரம் செலுத்துவதைவிட, மற்றவர்களின் காயங்களுக்கு மருந்தாகும் கனிவை நாம் கொண்டிருக்கவேண்டும்.
இன்றைய மின்னணு மற்றும் சமூக ஊடக உலகில் ‘போலி மேய்ப்பர்களின்’ இரைச்சல் அதிகமாக உள்ளது. நுகர்வு கலாச்சாரம், வெறுப்பு அரசியல், சுயநலம் போன்ற கவர்ச்சிகரமான குரல்கள் நம்மைத் திசைதிருப்புகின்றன. இவற்றிற்கு மத்தியில், மென்மையான கனிவும் நீதியும் கொண்ட கிறிஸ்துவின் குரலை நாம் கண்டறியும் ஞானத்தைப் பெறவேண்டும். அமைதியான செபத்தில்தான் அந்த மெல்லிய குரலை நாம் தெளிவாகக் கேட்க முடியும்.
இந்த இறையழைத்தல் நாளில் நாம் இறைப்பணிக்காகச் செபிப்பது என்பது ஒரு கடமை மட்டுமல்ல, அது திரு அவையின் உயிர்நாடி. நம் இல்லங்களில் வளரும் இளைஞர்கள் உலகியல் இலாபங்களைத் துறந்து, அருள்பணியின் உன்னதத்தை உணர்ந்து இறைவனின் அழைப்பைத் துணிவுடன் ஏற்க நாம் தூண்டுதலாக இருக்கவேண்டும்.
நல்லாயன் ஞாயிறு நமக்கு வழங்கும் செய்தி எளிமையானது. அன்பே அதிகாரம், தியாகமே தலைமை. அதிகாரத்தை விட அன்பும் பதவியை விடப் பணிவுமே ஒருவரை உண்மையான மேய்ப்பராக மாற்றுகிறது. நாமும் அந்த உன்னதப் பாதையில் பயணிக்கத் தொடங்குவோம்.