news
ஞாயிறு மறையுரை
பொதுக்காலம் 25-ஆம் ஞாயிறு (20.09.2026) எசா 55:6-9; பிலிப் 1:20-24,27; மத் 20:1-16 - மனிதனின் நீதியும் இறைவனின் நீதியும்

பழைய ஏற்பாட்டில் ஏழைகளையும் பாதிக்கப்பட்டவர்களையும் ஒதுக்கப்பட்டவர்களையும் பொருளாதார ரீதியாக-சமூக ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களையும் நிலமற்றவர்களையும் அதிகாரமற்றவர்களையும், தங்களுக்கென்று ஒன்றுமே இல்லாத மனிதர்களையும்அனாவிம்என்று அழைத்தார்கள். அவர்கள் அனைத்திலும் கடவுளைச் சார்ந்தவர்களாகவே இருந்தார்கள். தங்கள் வாழ்வில் கடவுளை முற்றிலும் சார்ந்து வாழும் ஏழை, எளிய, புறம்பே தள்ளப்பட்ட, முன்னுரிமை வழங்கப்படாத மக்களின் சார்பாக இறைவன் வெளிப்படுத்தும் தாராள உள்ளமும் நிலைப்பாடும் இன்றைய நற்செய்தியின் சாராம்சமாக அமைகின்றது.

கடவுளின் கருணையை, அவர் தரும் ஆசிரை நமது செயல்களினால் மட்டுமே நாம் பெறுவதில்லை. அவை அனைத்தும் கடவுளின் பராமரிப்பின் அடையாளங்கள். அவரின் ஆசிரைப் பெறுவதற்கு நாம் தகுதியற்றவர்களாக இருப்பினும், தமது மிகுந்த கருணையினாலும், தாராள உள்ளத்தினாலும் செயல்பாட்டினாலும் நம்மைத் தகுதிப்படுத்துகின்றார். மத்தேயு நற்செய்தியில் மட்டுமே திராட்சைத் தோட்ட வேலையாள்களின் உவமையை நாம் படிக்கின்றோம். இந்த உவமையில் திராட்சைத் தோட்ட உரிமையாளர் வேலையாள்களை வேலைக்கு அமர்த்த ஐந்து முறை வெளியே செல்கின்றார். இன்றைய நற்செய்தி, திராட்சைத் தோட்ட உரிமையாளர் வேலையாள்களைத் தேடிச்செல்லும் ஐந்து கால நேரங்களைக் குறிப்பிடுகின்றது அவை: விடியற்காலை, காலை ஒன்பது மணி, பன்னிரண்டு மணி, மதியம் மூன்று மணி, மாலை ஐந்து மணி.

திராட்சைத் தோட்டத்தில் பணிபுரியும் பணியாளர்கள், அதிகாலை முதல் மாலை ஆறு மணிவரை பணி செய்வார்கள். மாலையில் அவர்களுக்கு உரிய கூலி வழங்கப்படும். திராட்சைகளை அறுவடை செய்யும் காலம் கோடைகாலமாகவே அமையும். சூரியன் உதிக்கும் நேரம் முதல் அது மறையும் வரை வேலையில் ஈடுபடுவார்கள். ‘அனாவிம்(Anawim) எனப்படும் ஏழைகளுக்கு, அவர்களின் அன்றாடக் கூலி மட்டுமே குடும்பத்தின் உணவிற்கான, அடிப்படைச் செலவினங்களுக்கான ஒற்றைவழி (இச 24:15). அன்றாட வேலையில்லையென்றால் குடும்பங்கள் பசி, பட்டினியுடன் அன்றைய இரவைக் கழிக்கவேண்டும்.

பணியில் அமர்த்துதல், அதிகாரப்படுத்துதல், அங்கீகாரம் அளித்தல்: இன்றைய நற்செய்தியில் மதியம் மூன்று மணி, மாலை ஐந்து மணிக்கு பணியில் அமர்த்தப்பட்டவர்களை மற்ற திராட்சைத் தோட்ட உரிமையாளர்கள் வேலைக்கு அழைக்காததால் அவர்களின் திறமை மற்றும் உழைப்பின்மீது நம்பிக்கையில்லாமல் இருந்திருக்கும். மாலை வரை வேலையின்றிக் காத்துக்கிடக்கும் அவல நிலை ஏற்பட்டிருக்கும். பலம் நிறைந்தவர்கள், திறமையானவர்கள், அனுபவமிக்கவர்கள், அறிமுகமானவர்கள் எனப் பல அளவுகோலின்படி உடனடியாக மற்றவர்கள் வேலைக்கு அழைக்கப்பட்டிருக்கலாம். மற்றவர்கள் திறமையற்றவர்களாகக் கருதப்பட்டு விடப்பட்டிருக்கலாம். திராட்சைத் தோட்ட உரிமையாளர் பிறரின் கவனங்களை ஈர்க்காத, புறக்கணிக்கப்பட்ட பணியாளர்கள் மேல் தனது கவனத்தைச் செலுத்துகின்றார். தனது திராட்சைத் தோட்டத்தைவிட இத்தகையோரின் அடிப்படைத் தேவையையும், அவர்களின் குடும்பங்களையும், பிள்ளைகளையும் மிக முக்கியமாகக் கருதினார். நாள் முழுவதும் வேலைக்கு அமர்த்தப்படாமல் நின்று காத்துக்கிடப்போரை வேலைக்கு அமர்த்தி, அவர்களுக்கு உரிய மாண்பை வழங்குகின்றார். ஒருவருக்கு வேலை வழங்குவது அவரை அங்கீகரிப்பதன் அடையாளம். ஒருவரை வேலைக்கு அமர்த்தாமல் புறக்கணிப்பது அவரது மாண்பைப் புறக்கணிப்பதற்குச் சமம்.

இரு முரண்பாடுகள்: இவ்வுவமையின் முரண்பாடான கதைக் கருவே அவர்களுக்குக் கூலி வழங்குவதில் அமைந்திருக்கிறது.  1. திராட்சைத் தோட்ட உரிமையாளர், கடைசியில் வந்தவருக்கு முதலில் கூலி வழங்கவேண்டும் என மேற்பார்வையாளரிடம் கூறுகின்றார். ஒரு மணி நேரம் மட்டும் உழைத்த- மாலை ஐந்து மணிக்கு பணிக்கு அமர்த்தப்பட்டவருக்கு, முதலில் கூலி வழங்குவது விநோதமாக உள்ளது. 2.     பன்னிரண்டு மணி நேரம் உழைத்தவருக்கும், ஒரு மணி நேரம் உழைத்தவருக்கும் ஒரு தெனாரியம் கூலி. அதிகாலை முதல் பணியாற்றிய வேலையாள்கள் முணுமுணுக்கின்றார்கள். தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக உணர்கின்றார்கள். ஆனால், தோட்ட உரிமையாளர் அவர்களுக்கு உரிய கூலியை வழங்கினாரே தவிர, அநீதி இழைக்கவில்லை; மாறாக, கடைசியாகப் பணிக்கு அமர்த்தப்பட்ட பணியாளர்களின் தேவைகளை அறிந்து கூலியை வழங்குகின்றார். கடைசியில் வந்தவர்கள்தான் அதிக தேவையில் இருந்திருக்கக் கூடும். எனவேதான் அவர்களுக்கு முதலில் கூலி வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில், அவர்கள்தான் கடைநிலையில் மறக்கப்பட்டவர்கள், கவனிப்பாரற்றுச் சந்தையில் காத்துக் கிடந்தவர்கள். கடவுளின் இறையாட்சிப் பணியில் விருப்பத்தோடு பணிசெய்யும் பொழுது, இறைவன் நமக்குக் கூலி வழங்குவதில்லை; மாறாக, கொடையை அருளாக, மழையாகப் பொழிகின்றார். அவர் தருவதில்லை; அமுக்கி, குலுக்கி, சரிந்து விழும்படியாகக் கொட்டுகின்றார்.

இறைவனின் பொருளாதாரத் தத்துவம்: கடவுளின் பெருங்கருணையை இன்றைய நற்செய்தியின் உவமை எடுத்துரைக்கின்றது. நேரத்தை அளவிட்டு, உழைப்பை மதிப்பீடு செய்து கூலி வழங்குபவரல்லர் நம் இறைவன்; மாறாக, மனிதர்கள் வாழ வேண்டும் என்பதற்காக, பல்வேறு வழிகளில் அதனை நிறைவேற்றிடத் துடிப்பவர். அவர்களால் படைக்கப்பட்ட, அவரின் சாயலாக இருக்கும் மனிதர்களாகிய நாமே அவரின் முன்னுரிமை. வர்த்தகச் சட்டமும், உலகின் அளவுகோலும் இன்றைய நற்செய்தியில் பின்னுக்குத் தள்ளப்படுகின்றது.

இறைவனின் பொருளாதாரத் தத்துவம் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது. கடவுள் நாம் நினைப்பதற்கும் சிந்திப்பதற்கும் மேலாகவே நமக்கு அருளை பொழிபவர். சந்தைவெளியின் அளவுகோலும் கணக்குகளும் இறைவனின் கணக்கினைப் புரிந்துகொள்வதில்லை. மனிதரின் தேவைகளே அவர் கண்முன் எப்பொழுதும் இருக்கின்றன. அவர் நம்மைத் தேடிவந்து, பணி அமர்த்தி வேண்டியவற்றைச் செய்யும் கடவுளாகவே உள்ளார். நாம் செய்யவேண்டியது ஒன்று மட்டுமே. அவருக்குச் செவிமடுத்து அவரின் இறையாட்சித் தோட்டத்தில், வாஞ்சையோடு பணிபுரிவோம். நமது பணிகளுக்கு உழைப்பிற்கும் மேலாகவே பல மடங்கு ஆசிரைக் காண்போம்.

இறைவனின் வழிமுறைகளும் எண்ணங்களும்: இன்றைய முதல் வாசகத்தில் எசாயா இறைவாக்கினர் இறைவனை வாய்ப்பு உள்ளபோதே தேடும்படிப் பணிக்கின்றார். அவரைத் தேடிச் செல்லும் பொழுது, அவரின் எண்ணங்களைப் போல நமது எண்ணங்களும் மாற்றம் பெறும் என்பதும், நமது தேவைகள் சந்திக்கப்படும் என்பதும் உறுதி. இதனையே இன்றைய பதிலுரைப்பாடல் (திபா 145:2-3,8-9, 17-18) எடுத்துரைக்கிறது.  

உலகின் நீதிக் கொள்கையும், இறைவனின் நீதிக் கொள்கையும்: உலகின் நீதிக் கொள்கை ஒவ்வொருவருக்கும் உரியது. அவரவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்னும் நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. இறைவனின் நீதிக் கொள்கையில் ஒவ்வொருவருக்கும் சிறந்ததை வழங்கவேண்டும். குறிப்பாக, கடைநிலையினயிருக்கு முன்னுரிமை என்னும் நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. கடைசியாகப் பணியமர்த்தப்பட்டவருக்கு வழங்கப்படும் கூலி மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்ட முன்னுரிமை செயலினைக் குறித்து அங்கலாய்த்துக் கொண்ட முதலில் பணியமர்த்தப்பட்ட பணியாளர்கள் அச்செயலினை வரவேற்கவில்லை. தங்களுக்கு அவர்களைவிட அதிக முன்னுரிமையும், சிறப்புக் கவனமும், கூடுதல் கூலியும் நீதியும் கிடைக்க வேண்டும் என எதிர்பார்த்தனர். இங்குத் திராட்சைத் தோட்ட உரிமையாளர் நீதியோடு கலந்த அன்பினால் செயல்படுகின்றார்.

மனித உரிமை போராட்ட வீரர் மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் வரிகள் இங்கே பொருத்தமாய் அமைகின்றது: “அன்பிற்கு எதிராக நிற்கும் அனைத்தையும் சரிசெய்வதுதான் நீதியின் உன்னத நிலை. அதுவே சிறந்த அன்பு.” இன்றைய நற்செய்தியில் இறைவன் நீதியை, இரக்கத்தினால் சுற்றி, அதில் அன்பு என்னும் நறுமணத்தை ஊற்றுகின்றார். இதுவே, இறைவனின் நீதிக் கொள்கை.

ஒளி மங்கும் வேளையில், தேடிவரும் இறைவன்: திராட்சைத் தோட்ட உரிமையாளர், ஐந்தாம் முறையாக மாலை ஐந்து மணிக்கு சந்தைவெளிக்குச் சென்று அங்குப் பணிக்காகக் காத்திருப்போரை அழைத்து, அவரது தோட்டத்தில் வேலையில் அமர்த்துகின்றார். இறைவனுக்கு எதுவும் தாமதமில்லை. மிகவும் தாமதமான நேரங்களில் கூட அவர் நம்மைத் தேடிவரத் தயங்குவதில்லை. நமது வாழ்க்கையின் கடைசி ஒளி மங்கும் வேளையிலும், இறைவன் நம்மைத் தேடி வருகின்றார். அவரது இறையாட்சியின் திராட்சைத் தோட்டத்தில் அனைவருக்கும் உரிமையும் கடமையும் உண்டு. நமது உழைப்பால், உடனிருப்பால் அதனை இன்னும் வளமையாக்குவோம். எவரும் அவரது அன்பிலிருந்து, பார்வையிலிருந்து தொலைவில் இல்லை

நம் உடன் உழைப்பாளர்களை மதிப்போம்நமது உழைப்பாளர்களை மாண்புடனும் அக்கறையுடனும், அவர்களின் தேவைகளை உணர்ந்து, குடும்பச் சூழ்நிலை அறிந்து, அவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்திட மறந்திட வேண்டாம். இறைவன் நம்மிடம் தாராள உள்ளத்தினை, அருளினை வழங்குவது போன்று, நாமும் நம் சகோதர உடன் உழைப்பாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைக் கண்முன் கொண்டு அவர்களின் தேவைக்கேற்ப தாராளமாய் வழங்குவோம். “வறியவரும், எளியவருமான கூலியாளர்கள், உன் இனத்தவராயினும் சரி, உன் நகர்வாயிலுக்குள் உள்ள அந்நியராயினும் சரி, அவரைக் கொடுமைப்படுத்தாதே. அவரது கூலியை அந்தந்த நாளில் கொடுத்து விடு. கதிரவன் மறையுமுன்னே கொடு. ஏனெனில் அவர் வறியவராய் இருப்பதால், அவரது பிழைப்பு அதில் அடங்கியுள்ளது (இச 24:14-15) என்னும் இறைவார்த்தையை நினைவில் கொள்வோம். பிழைப்பிற்காக உழைக்கும், உழைப்பாளர்களின் உயிரை உறிஞ்ச வேண்டாம். உள்ளுணர்வு கொண்டு, உளமார மதித்து, அவர்களின் உழைப்பை, உணர்வை, உயர்த்திப் பிடிப்போம்.

news
ஞாயிறு மறையுரை
பொதுக்காலத்தின் 24-ஆம் ஞாயிறு (13.09.2026) சீராக் 27:30,28:7; உரோ 14:7-9; மத் 18:21-35 (மன்னிப்பிற்கு எல்லைகள் இல்லை! மன்னிப்பிற்கு எண்ணிக்கைகள் இல்லை!)

மன்னிப்பின் அளவுகோல் என்பது அளவுகோலின்றி மன்னிப்பது. இவ்வுலகின் எதிர்காலமும், திரு அவையின் எதிர்காலமும் மன்னிப்பவர்களின் கரங்களில் உள்ளன. கடந்த வார நற்செய்தியில் அன்பு நிறைந்த உள்ளத்துடன் சகோதரனை வாஞ்சையோடு சந்தித்து, நல்வழிக்குக் கொணரும் பணியை இறைச்சமூகம் செய்திடவேண்டும் என அறிவுறுத்திய இயேசு, இவ்வார நற்செய்தியில் கிறித்தவச் சமூகத்தைக் கட்டமைக்கும் பணியில் மிக முக்கியமான பண்புநலனாகிய மன்னிப்பை வலியுறுத்துகின்றார். நாம் ஆழமாகச்  சிந்தித்தால், பிறருக்கு நாம் தரவேண்டிய மன்னிப்பைவிட, நமது செயல்களால் நாம் காயப்படுத்திய நபர்கள், நமக்குத் தரவேண்டிய மன்னிப்பு எண்ணிலடங்காதவை. “ஏழு முறை மட்டுமல்ல, எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்எனக் கணக்கிலடங்கா முறையில் மன்னிக்க வேண்டும் என்பதை இயேசு பணிக்கிறார்.

மன்னிப்பின் அளவுகோல் எது?’ என்னும் கேள்விக்குப் பதில், அளவுகோலின்றி மன்னிப்பதே. இவ்வுலகிற்கும், நம் சகோதர-சகோதரிகளுக்கும், நம் குடும்பத்தினருக்கும் நாம் வழங்கிடும் மிகப்பெரும் பரிசு, கொடை, ஆசிர் என்பது நமது மன்னிப்பாக மட்டுமே அமைந்திட முடியும். பிறரின் மன்னிப்பை நாம் கோருவதும், நாம் பிறருக்கு மன்னிப்பு வழங்குவதும் கோழைத்தனமான செயல்பாடு அல்ல; மாறாக, அது சகோதரத்துவ வாழ்வின் ஆணிவேர் என்பதை இன்றைய நற்செய்தி உரக்கக் கூறுகிறது. கெடுபிடியாய் வாழ்வது வீரமல்ல; பலம் அல்ல; பிறரின் சூழ்நிலைகளைப் புரிந்து நாம் அவர்களுக்கு வழங்கிடும் மன்னிப்பில்தான் நமது குணநலன்களும் ஆளுமையும் பலமும் அடங்கியுள்ளது. அதிகாரம் அடக்கி ஆள அல்ல; அடக்கமாய் வாழ்ந்திடவே.

கடன்பட்ட இரண்டு பணியாளர்கள்: இயேசு கடன்பட்ட இரண்டு பணியாளர்களைக் குறித்த உவமையை விளக்குகின்றார். முதல் பணியாளரின் கடன் பத்தாயிரம் தாலந்து. அன்றைய காலங்களில் ஒரு நாட்டின் ஓராண்டு வரவு-செலவு திட்டங்களுக்கான மொத்தத்தொகை. அப்பெரும் கடனை உடனே ரத்து செய்ய இயலாது. இன்று நாட்டின் கதைகள் வேறு. பெரும் முதலாளிகள் தங்களின் தொழிலை விரிவாக்கம் செய்ய பெற்றிடும் மிகப்பெரும் கடனை உடனே ரத்து செய்து, கடன் வட்டியைக் கணிசமாகக் குறைத்து, சலுகைகளை வாரி வழங்கும் அரசு ஒருபுறம்; சிறு குறு விவசாயிகளின் குரல்வளையை நெரித்து, கடன் வசூலைக் கறாராக முழுவதும் வசூல் செய்யும் வங்கிகளின் நடவடிக்கைகள் மறுபுறம். ஆனால், அரசன் தன் பணியாளரிடம் இரக்கம் கொண்டு, அவன் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்கின்றார். தனது கஜானா காலியாகிவிடும் என அறிந்தும், பரிவு கொண்டு தலைவன் அத்தகைய செயலைச் செய்கிறார். அவரது இரக்கத்தைப் பெற்று, மகிழ்வுடன் திரும்பும் அப்பணியாளர், தன்னிடம் கடன் பெற்ற உடன் பணியாளரின் கழுத்தை நெரிக்கிறான். ஆலயத்திற்குச் சென்று இறைவனின் மன்னிப்பைக் கோரி, அவரது திருவுடலைப் பெற்றுத் திரும்பும் நாம், வீடு திரும்பியவுடன் நாம் பெற்ற மன்னிப்பை மறந்து, நம் சகோதரனை வெஞ்சினத்தோடு நோக்குவது போன்று உள்ளது இந்நிகழ்வு. நூறு தெனாரியம் கடனையும் உடனே திரும்பக் கேட்கின்றான்.

நூறு தெனாரியம் என்பது அன்றைய நாளில் நூறு நாள்களின் கூலிக்குச் சமம். பத்தாயிரம் தாலந்து எங்கே? நூறு தெனாரியம் எங்கே? பணியாளரின் துன்பத்தைத் தனது துன்பமாகக் கண்ட அரசன், கடன் சீட்டைக் கிழித்தெறிந்து, பரிவு கொண்டு செயல்படுகிறார். ஆனால், பரிவு பெற்ற பணியாளரின் செயல்பாடு அவருக்கு மிகுந்த வருத்தமளித்தது. பணியாளர் தனது சக பணியாளரிடம் 100 தெனாரியத்தைத் திருப்பி அளிக்கும்படி கோரியது நீதியானதுதான்; ஆனால், அந்நீதியில் கனிவு இல்லை. கனிவுடன் கூடிய நீதியே (equity) இவ்வுலகை வாழ வைக்கும். பிறரின் தேவைகளை, துயரத்தை, வாழ்வு சூழ்நிலையை உணராத நீதி, இவ்வுலகில் எவ்வித மாற்றத்தையும் வழங்கிடாது.

நமது உரிமைகளைத் துல்லியமாக, அளவுகோலுடன் அளந்து பிறரிடம் அதிகாரத்துடன் கோரிக்கையிடும் அதே சூழலில், நமது கடமைகளை வெகுசுலபமாக மறந்து வருகின்றோம்; பிறர் அறிந்துகொள்ள இயலாதபடி மறைத்துவிடுகின்றோம்மன்னிப்பு - நம்பிக்கையின் செயல்பாடு. இதயத்தின் செயல்பாடு; நுண்ணறிவின் செயல்பாடு அல்ல! நம்பிக்கையோடு நாளைய தினத்தையும் எதிர்காலத்தையும் உற்றுநோக்கியே நாம் பிறருக்கு மன்னிப்பை வழங்கிடவேண்டும். பிறரின் செயலால் காயப்பட்ட ஒருவர் தனது கடந்தகாலக் கசப்பான நிகழ்வுகளை உற்றுநோக்கினால்நிச்சயமாக மன்னிப்பைப் பரிசளிக்க முடியாது.

மன்னிப்பு - நலமற்றப் பிணைப்புகளின் கயிறுகளை அறுத்தல்மன்னிப்பைக் கிரேக்க மொழியில்அஃபியிமி(aphiemi) என்று அழைப்பார்கள். இதன் பொருள் விடுவித்தல், விடுதலை பெறுதல், தீங்களிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் பிணைப்புகளின் கயிறுகளை அறுத்துவிடுதல். நான் பாவங்களிலிருந்து விடுதலை பெற்று, என்னைக் கட்டி பிணைக்கைதியாக வைத்திருக்கும் சூழ்நிலைகளை அறுத்தெறிய நான் செய்யவேண்டியது ஒன்றே; அதுவே மன்னிப்பு!

இன்றைய முதல் வாசகத்தில் சீராக் புத்தகத்தின் வரிகள் நமக்கு இதையே நினைவூட்டுகின்றன. “உனக்கு அடுத்திருப்பவர் செய்த அநீதியை மன்னித்து விடு; அவ்வாறெனில் நீ மன்றாடும்போது உன் பாவங்கள் மன்னிக்கப்படும் (28:2). நாம் நலம்பெற வேண்டுமென்றால், நாம் சினம் கொள்வதைத் தவிர்த்து, இரக்கம் காட்டவேண்டும்; மன்னிப்பு வழங்கிடவேண்டும் என இறைவாக்கினார் அறிவுறுத்துகின்றார் (28:3).

மன்னிப்பு - நிபந்தனையற்ற அன்பு: மன்னிப்பு என்பது மறப்பது அல்ல; மாறாக, ஒருவரை நான் உண்மையாகவே மன்னித்த பிறகு, அவரைப் பற்றி, அவரது கடந்தகாலச் செயல்பாடுகளைப் பற்றி நான் நினைக்கும்பொழுது மனம் வருத்தமுற்றாலோ அல்லது கலக்கம் அடைந்தாலோ அது உண்மையான, ஆத்மார்த்த மன்னிப்பாக அமையாது.

மன்னிப்பு என்பது அநீதிக்கு எதிரானது அல்ல; மனக்காயங்களை உதறித் தள்ளுவதும் அல்ல; குற்றமிழைத்தோரின் சார்பாக எடுக்கும் நிலைப்பாடும் அல்ல; ஒருவரின் நிலையான கோபத்தை மறைப்பதும் அல்ல; எதிர்பார்த்துச் செயல்படுவதும் அல்ல; சுமை அல்ல; மெத்தனப் போக்கு அல்ல; கட்டாயப்படுத்தி அமைவது அல்ல; அது தனி ஒரு நிகழ்வு அல்ல; என்னுடைய மாண்பை, ஆளுமையைப் புறக்கணிப்பது அல்ல; அது கோழைத்தனம் அல்ல; மாறாக, மன்னிப்பு என்பது நிபந்தனையற்ற அன்பு; குணமளிக்கும் செயல்பாடு, கொடை, பிறருக்கு வழங்கும் பரிசு; எனக்கு நானே அருளும் ஆசி. மன்னிப்பு என்பது தொடர் முயற்சி. சினத்திலிருந்தும், பழிவாங்கும் எண்ணத்திலிருந்தும் பெறும் விடுதலை. உள்ளார்ந்த அமைதியையும் நம்பிக்கையையும் அன்பையும் அனுபவிக்கச் செய்யும் ஆகச்சிறந்த செயல்பாடு.

மன்னிப்பு என்னை அதிகாரப்படுத்தும். மன்னிப்பு என்னை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்யும் மறக்கமுடியாத அனுபவத்தைத் தரும். மன்னிப்பு அதனைப் பெறுவோரைத் தொற்றிக்கொள்ளும் தன்மை உடையது. மன்னிப்பு என்னைக் கபடற்ற, ஒளிவுமறைவற்ற மனிதனாக மாற்றும் (திபா 103). நமது குற்றங்களுக்கு ஏற்ப இறைவன் நம்மைத் தண்டிப்பதில்லை. அவரிடம் மன்னிப்புக் கோரி நிற்கும் நம் ஒவ்வொருவருக்கும், பிறருக்கு மன்னிப்பு வழங்கவேண்டிய கடமை உண்டு. அவர் பார்வையில் நாம் பாவிகள் அல்லர்; மாறாக, அவரது பிள்ளைகள்!

புனித பிரான்சிஸ் அசிசியார்-யூபிலி: கடந்த 2023, மே  3-ஆம் தேதி முதல் இந்நாள் வரை மேலாக இனத்தின் (பெரும்பான்மையான கிறித்தவர்கள்) வாழ்விடமும் வழிபாட்டுத்தளங்களும் வாழ்வாதாரங்களும் அழிக்கப்பட்டன. அப்பொழுது கிறித்தவர்களின் சாட்சிய வார்த்தைகள் இவ்வாறாக அமைந்தது. “நாங்கள் கிறித்தவர்களாகத் திருமுழுக்கு பெறாமல் இருந்திருந்தால் வாளும் ஆயுதமும் ஏந்தி போராடி இருப்போம்; ஆனால், கிறித்தவர்கள் என்பதால், அறவழியில் போராடுகிறோம். எங்களின் உறவுக்காரர்களைக் கொன்றழித்தவர்களுக்கு நாங்கள் தருவது மன்னிப்பு மட்டுமே. இவற்றை எங்களின் இதயத்திலிருந்து வழங்குகின்றோம்.” எவ்வளவு ஆழமான மன்னிப்பின் வார்த்தைகள்!

2026, சனவரி 10 முதல் 2027 சனவரி 10 வரை நாம் புனித பிரான்சிஸ் அசிசியாரின் 800-ஆம் ஆண்டு விண்ணகப் பிறப்பை யூபிலி ஆண்டாகக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம். ஒருமுறை புனித பிரான்சிஸ் அசிசியாரிடம் தனது சக துறவற சகோதரர்களைப் பற்றி அங்கலாய்த்துக் கொண்ட இல்லத்தலைவரிடம், அவர் இவ்வாறாகக் கூறினார்: “உங்களது மன்னிப்பை உங்களது கண்களில் வெளிப்படுத்துங்கள். அக்கண்கள், கடினமான மனநிலையைப் பிரதிபலிக்காமல் மன்னிப்புப் பெறும் மனிதரைப் புதிய பார்வையோடு, புதிய எண்ணங்களோடு உற்றுநோக்கினால், நீங்கள் காணும் பார்வையில் அவர் ஒரு புதிய மனிதனாக உங்களுக்குத் தோன்றுவார். இப்படிப்பட்ட மனநிலை கொண்ட பார்வைகள் உங்களுக்கு மன அமைதியைத் தரும். மன்னிப்பவர்கள் கடவுளின் கண்களை, பார்வையைக் கொண்டுள்ளார்கள். ஏனென்றால், அவர்கள் மட்டுமே குளிர்காலங்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் வசந்த காலத்தைக் காண முடியும். பாவிகளுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் புனிதத்தைக் காண முடியும். கல்லுக்குள் மறைந்திருக்கும் ஈரத்தைக் காண முடியும்.”

புனித பிரான்சிஸ் அசிசியாரின் அர்த்தம் செறிந்த இவ்வார்த்தைகளையும் செபத்தினையும் இந்நாள்களில் நினைவுகூர்ந்து, நாம் அனைவரும் அமைதியின் கருவிகளாக மாறிட முயற்சிப்போம்.

news
ஞாயிறு மறையுரை
பொதுக்காலம் 23-ஆம் ஞாயிறு (06-09-2026) எசே 33:7-9; உரோ 13:8-10; மத் 18:15-20 - சகோதரத்துவமும் சமூக நட்பும்

அக்டோபர் 4-ஆம் நாள் 2020-ஆம் ஆண்டு, புனித பிரான்சிஸ் அசிசியாரின் திருநாளன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்அனைவரும் உடன்பிறந்தோர்(Fratelli Tutti என்னும் சமூகச் சுற்றுமடலை வெளியிட்டார். சகோதரத்துவமும் சமூக நட்பும் இவ்வுலக வாழ்வின் சுழற்சியில் பொருளற்றதாக மாறிவரும் சூழலில், சகோதரத்துவத்திலும் சமூக அக்கறையிலும் திறந்த இதயத்தோடு நம் சகோதர-சகோதரிகளை அணுகும் சமூக நட்புறவை மீண்டும் உயர்த்திப்பிடிக்க, தாங்கிப் பிடிக்க திருத்தந்தை அழைப்பு விடுக்கின்றார். நாம் அனைவரும் உடன்பிறந்த சகோதர-சகோதரிகள்; நாம் உறவுச் சமூகத்தின் ஓர் அங்கம், என்னும் தவிர்க்க முடியாத தும் ஆசிருக்கும் விழிப்புணர்வை இச்சமூகச் சுற்றுமடல் வழியாகத் திருத்தந்தை நம்மிடையே ஏற்படுத்தியுள்ளார்.

பிணக்குகளும் உறவு விரிசல்களும்: முன்பெல்லாம் சகோதர-சகோதரிகளின் அல்லது அருகாமையில் வாழ்வோரிடையே ஏற்படும் பிணக்குகள், உறவு விரிசல்கள், குழாயடிச் சண்டைகளாக, ரேஷன் கடைச் சண்டைகளாக, காய்கறிகள் வாங்குமிடத்தில், வாழ்விடத்தில் ஏற்படும் சண்டைகளாக அமைந்திருந்தன. இப்பொழுது உறவுச்சண்டைகளும், உறவு விரிசல்களும், இணையத்திலும், புலனம் (Whatsapp), Twitter (கொடுக்கி), Facebook (முகநூல்), Instagram (படவரி) போன்ற செயலிகளிலும், தொலைக்காட்சியிலும் நடைபெறுவதை நாம் மறுக்க இயலாது. முன்பெல்லாம் நான்கு சுவர்களுக்கு உள்ளாகப் பேசப்பட்ட கருத்து முரண்பாடுகள் இன்று பொதுவிவாதப் பொருளாகி, குற்றம் சாட்டப்பட்டவரின் ஆளுமையைச் சிதைத்து, பொதுத்தளங்களில் வெளியிடப்படுகிறது. அது இன்றைய நற்செய்தியின் படிப்பினைகளுக்கு எதிராகவே அமைகின்றது. இன்றைய நற்செய்தியின் தொடக்க வரிகள், “உங்கள் சகோதரர்-சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது, அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது. உங்களது உறவு தொடரும் (மத் 16: 15-16) இவ்வாறு அமைகின்றன.

சகோதரத்துவ உரையாடல்: சகோதரத்துவ உரையாடலே நம் சமூக உறவை உயிர்ப்பிக்கும் என்பதே இன்றைய நற்செய்தியின் ஒற்றை வரிச் செய்தி. இன்றைய நற்செய்தியை வாசிக்கின்றபொழுதுபிறரின் தனிப்பட்ட வாழ்வில், தனிமைக்கான உரிமையில் (Right to privacy) - தனிப்பட்ட வாழ்க்கையில் (Private life) தலையிட எனக்கு உரிமை உள்ளதா?’ என்னும் கேள்வியை எழுப்புகின்றது. பிறரின் தனிப்பட்ட வாழ்வில் நான் குறுக்கிட்டு, அவரை வாஞ்சையோடு அணுகி, அவரை நல்வழிப்படுத்திடும் முயற்சியில் எனக்கு எங்கிருந்து அதிகாரம் தரப்படுகின்றது? எத்தகைய அதிகாரம் நான் பெற்றிருக்கிறேன்? இவ்வன்பு முயற்சியில், உறவை உயிர்ப்பிக்க நாம் எடுக்கும் முதல் அடியில் அடிநாதமாய் இருப்பதுஅவர் என் சகோதரன்/சகோதரி.’ ஏனென்றால், அவர்கள் இயேசுவின்  மறுமுகம் என்பதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.

நம் சகோதர-சகோதரிகளைப் பற்றிய பொறுப்புணர்வையும், அவர்களுக்குச் செவிமடுக்கும் திறந்த மனப்பான்மையையும் நாம் இழந்து கொண்டிருக்கின்றோம். என்னுடைய சகோதரன் எனக்கு எதிராகத் தவறு செய்தால் அதனால் வெறுப்பையும் பகைமையையும் மனத்தில் நிறுத்தி, அறையில் நான் தாழிட்டு முடங்கிவிடாமல், சகோதரனைச் சந்தித்து, யார் சரி? யார் தவறு? யார் பக்கம் நியாயம்? என்று விவாதிக்காமல், ‘தவறிழைத்த சகோதரனைத் தேடிச் செல்என்று இயேசு அறிவுறுத்துகின்றார்.

நமது சகோதரத்துவ எண்ணங்களே நமது உரையாடலின் தொடக்கமாய் அமைந்திடவேண்டும். பிரதிபலன்களையும், தன்னிலை வாழ்விற்கான பலன்களையும், அரசியல் நோக்கத்தையும், எதிர்பார்த்து இவ்வுரையாடல்கள் அமைந்திடக்கூடாது. என் சகோதரர்-சகோதரியின் வாழ்வில் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தந்து, கண்ணீரைத் துடைத்து, புதிய மறுமலர்ச்சியை அன்பினால் வழங்கிட முடியும் என்னும் மனநிலையைத் தாங்கியே நாம் அவர்களின் தவறுகளைத் திருத்தும் முன்னெடுப்புகளை எடுக்கவேண்டும்.

முதல் வாசகம்: இன்றைய முதல் வாசகத்தில் எசேக்கியல் இறைவாக்கினரிடம் கடவுள் கூறுவதுபோல, நாம் சகோதர-சகோதரியின் வாழ்வில் மாற்றத்தை / திருத்தத்தைக் காண உதவிடவில்லையென்றால் நாம் அவர்களின் அழிவிற்கு ஒரு காரணராகின்றோம். அவ்வாறு செய்யும்பொழுது நமக்குள் பல பயன்கள் ஏற்படுவதுண்டு, நான் இவ்வாறு பிறரைத் திருத்த முற்படும்பொழுது எப்படிப் பிறரால் புரிந்துகொள்ளப்படுவேன்? என்னை ஏற்றுக்கொள்வார்களா? என்னை ஏமாளி, அதிகப் பிரசங்கி, பிழைக்கத் தெரியாதவன், கோழை என்று முத்திரையிடுவார்களா? போன்ற கேள்விகளும் பயங்களும் இயல்பாக நம்மில் எழுவதுண்டு. இக்கேள்விகளை, மனக்குழப்பங்களைத் தாண்டி செயல்படுவதே கிறித்தவ வாழ்வு.

இறைத்தந்தை சிறந்த முன்னுதாரணம்: தவறிழைத்த சகோதரனைத் திருத்துவதில் இறைத்தந்தையே ஆகச்சிறந்த உதாரணம். படைப்பின் தொடக்கத்தில் ஆதாம் விலக்கப்பட்ட கனியை உண்டு, வெட்கமுற்று, இறைவனின் பார்வையிலிருந்து ஓடி ஒளிகின்றான். இறைவன் அவனைத்  தேடிச் செல்கின்றார். “ஆதாமே, நீ எங்கே இருக்கின்றாய்? என்ன செய்தாய்?” என அவனைக் காண, உரையாட விரும்புகின்றார் (தொநூ 3:8-9). தவறிழைத்தவர்கள் குற்ற உணர்வோடும் பய உணர்வோடும் பொது இடங்களில் மனிதர்களோடு உரையாடுவதற்கு அஞ்சி, பொது இடங்களில் தங்களின் பிரசன்னத்தைக் குறைத்து, மறைந்து வாழவே முற்படுவார்கள். எனவேதான், தவறிழைத்து வருந்துகின்ற சகோதரனைத் தேடிச்செல்ல நற்செய்தி அறிவுறுத்துகின்றது. ‘என் சகோதரனுக்கு நான் என்ன காவலாளியா? அவனை நான் ஏன் தேடிச் செல்லவேண்டும்?’ என்னும் காயினின் கேள்வி நமது உள்ளத்தில் எழுவது கிறித்தவ மதிப்பீட்டிற்கு எதிரானது.

எனவே, தவறிழைத்த என் சகோதரனைத் தேடிச் சென்று அவரோடு அமர்ந்து அவருக்குச் செவிமடுத்தால், அதுவே அவரை நமது இறைச்சமூகத்திற்கு வரவேற்பதற்கான முதன்மையான செயல்பாடாக அமையும். ஒரு சகோதரன், தான் சார்ந்திருக்கும் இறைச்சமூகத்தை விட்டு விலகி நிற்கும்பொழுது, இயேசுவின் மறையுடலாகிய திரு அவையின் உறுப்பினராகிய அவர் பிரிந்து வாழும்பொழுது முழு உடலும், அதன் எல்லா உறுப்புகளும் துன்புறும் என்பதை நாம் நினைவில்கொள்ளவேண்டும். உடலின் ஒரு பகுதி நோயுற்றால், செயலிழந்தால் உடல் முழுவதும் அவ்வலியை உண்டாக்குமல்லவா? எனவே, கிறிஸ்துவின் உடலாகிய எந்த ஒரு தனி மனிதனும் உறுப்பினரும் நலமுடனும் மகிழ்வுடனும் அமைதியுடனும் சமாதானத்துடனும் வாழத் திரு அவையின் அனைத்து உறுப்பினர்களும் பொறுப்பேற்கவேண்டும் (1கொரி 12:25-26).

இருவரும் தனித்து இருக்கும் பொழுது அவரை நல்வழிப்படுத்தவேண்டும். தனிமையில் இருக்கும் பொழுதுதான் ஆதாமை ஆண்டவர் கண்டிக்கின்றார். அன்பினால் உந்தப்பட்டு ஒருவரின் குறைகளைத் தனிமையிலும், நிறைகளைப் பொதுவிலும் கூற நாம் பழகினால் நமது உறவுகள் பலம்பெறும். பல நேரங்களில் இது மாற்றாகவே நடைபெறுகின்றது. ஒரு மனிதனின் குறையை, தவற்றை, தீமையான செயல்பாடுகளை ஊர் முழுக்கப் பேசிப் பெரிதாக்கும் நமக்குப் பிறரின் நிறைகளைக் காண நேரமில்லை. உரோ 13:10-இல் குறிப்பிடுவதுபோல அன்பு  எந்த ஒரு மனிதனையும் காயப்படுத்துவதில்லை.

உறவு ஒன்றில் இறைப்பிரசன்னம்: உறவு ஒன்றிப்பை முதன்மைப்படுத்திச் செயல்படும் இறைச்சமூகத்தில் இறைவன் பிரசன்னமாயிருக்கின்றார். இரண்டு மூன்று பேர் கூடியிருக்கும் பொழுது ஆண்டவர் அவர்கள் மத்தியில் செப நேரங்களில் மட்டுமல்ல, உறவு உயிர்ப்பிற்கான முன்னெடுப்புகளிலும், நீதிக்கான போராட்டங்களிலும், விளிம்பு நிலை மக்களுக்கான நிலைப்பாடுகளிலும் நாம் ஒன்றுகூடி, ஒருமனத்தவராய் செயல்படும் பொழுது இறைவன் அவர்களின் மத்தியில் உடனிருக்கின்றார். இவ்விறைச்சமூகம் கூடிவருவது தற்செயலாகவோ, தனிப்பட்ட தேவைகளுக்காகவோ, வன்முறைக்காகவோ, ஏமாற்றுதலினாலோ, சுயநலத்தினாலோ, பயத்தினாலோ அல்ல; மாறாக, இயேசுவின் பெயரினால் ஒன்றுகூடி இறையாட்சி சமூகத்தை உருவாக்குவதே இதன் மைய நோக்கம்.

இயேசுவின் பெயரினால் கூடி வருவோம்: இயேசுவின் பெயர் என்பது வாழ்வைத் தருகின்ற பெயர். இயேசுவின் மனநிலை மன்னிப்பின், அன்பின், இரக்கத்தின் மனநிலை. எனவே, இயேசுவின் பெயர் நம் மத்தியில் ஒன்றிப்பையும் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் ஏற்படுத்த வேண்டும். இங்குப் பிரிவினைகளுக்கும் பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கும் இடமில்லை. எனவே, நமது கூடுகைகள், ஒன்றிப்புக் கூட்டங்கள், விழாக்கள் இவையெல்லாம் சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும். எனவே, சகோதரத்துவ உறவில் முதலீடு செய்வோம். உலகில் சகோதரத்துவமும் சமூக அன்பும் செழித்தோங்கும் இடமாகக் கிறித்தவச் சமூகம் வளர்வதில் நம் அனைவருக்கும்  பொறுப்பும் கடமையும் உண்டு. நம்பிக்கை நிறைந்த நம் இறைச்சமூகத்தில் சகோதர-சகோதரிகள் மீதும் அக்கறைகொள்வோம்.

news
ஞாயிறு மறையுரை
பொதுக்காலம் 22-ஆம் ஞாயிறு (30-08-2026) எரே 20:7-9; உரோ 12:1-2; மத் 16:21-27 (என்னைப் பின்பற்றுங்கள்!)

இன்றைய நற்செய்தியின் படிப்பினைகள் நமக்கு முரண்பட்டதாகவே தோன்றக்கூடும். ஆனால், இயேசுவின் நிலைப்பாடு சிலுவையில் தன்னை இழப்பதினால் மட்டுமே மக்களுக்கு வாழ்வை வழங்கிட முடியும் என்பதில் உறுதிப்பட இருந்தது.

இன்றைய நற்செய்தி இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது:

1. மத் 16:21-23- இயேசு தனது பாடுகளை முதன் முறையாகத் தமது சீடர்களுக்கு வெளிப்படுத்துதலும் சீடர்களின் பதில் செயல்பாடும்.

2. மத் 24-27- இயேசு தன்னைப் பின்பற்ற விரும்பும் சீடர்களுக்கு வழங்கிடும் நிபந்தனைகள்.

நற்செய்தியின் முதற்பகுதியில் தனது பாடுகளை முதன்முறையாக இயேசு அறிவித்தபொழுது, சீடர்களுக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. அவரின் வலப்பக்கமும் இடப்பக்கமும் அமரவேண்டும் என்ற கனவு தவிடுபொடியானதுகடந்த வார நற்செய்தியில், ‘நீங்கள் என்னை யார் என்று சொல்கிறீர்கள்?’ என்னும் இயேசுவின் கேள்விகளுக்கு மிகப் பொருத்தமான பதிலை பேதுரு வழங்கினார். “நீர் மெசியா, வாழும் தந்தையின் இறைமகன்என்னும் பதில் மொழிக்கு இயேசு அவரைப் புகழ்கின்றார். ஆனால், இன்றைய நற்செய்தியில் இறைமகன் எதிர்கொள்ள இருக்கும் துன்பத்தைப் போன்று, அவரது சீடர்களாய் தங்களுக்கும் துன்பம் உண்டு என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. பேதுருவின் (சீடர்களின்) பதில் மொழியும், உடன் வெளிப்பட்ட எதிர்வினையும் (reaction) இயேசுவின் (எதிர்கால) மீட்பின் செயல்பாட்டிற்கும், இறைத்தந்தையின் விருப்பத்திற்கும் எதிராக  அமைந்திருந்ததால், இயேசுவின் கண்டிப்பிற்கு பேதுரு உள்ளாகிறார்.

சாத்தான் - தடைக்கல்

இப்படி உமக்கு நடக்கவே கூடாதுஎன்று பேதுரு இயேசுவை நோக்கிக்  கூறியவுடனே இயேசு அதனை ஆமோதிக்கவில்லைஉடனடியாக அச்சிந்தனையை அவரது உள்ளத்திலிருந்து தூக்கி எறிகின்றார். “என் கண்முன் நில்லாதே சாத்தானேஎன்று பேதுருவை நோக்கிக் கூறுகின்றார்பேதுருவை இயேசுசாத்தான்என்று நற்செய்தியில் குறிப்பிடுவது, அவர் பேயினால் ஆட்கொள்ளப்பட்டவர் என்று பொருள் கொள்ளக்கூடாது.

அரமாயிக்  மொழியில்சாத்தான்என்பதற்குத்தடைக்கல்என்னும் பொருள்படும். அதாவது, ஒருவரின் செயல்பாட்டிற்கு முட்டுக்கட்டையாய் இருப்பது; ஒருவரின் ஆர்வத்தைக் குறைப்பது; எதிர்மறை எண்ணங்களை ஒருவரின் உள்ளத்தில் விதைப்பது போன்ற செயல்களை உள்ளடக்கியது. எனவேதான், இயேசு பேதுருவை அவரின் தடைக்கல்லாய் மாறிடாதபடி உடனடியாகச் செயல்படுகின்றார்.

எதிர்த்துருவ எண்ணங்கள் - முரண்பட்ட மனக் கணக்குகள்

இயேசு சிலுவைச்சாவு, பாடுகள், துன்பங்கள், உயிர் இழப்பு ஆகியவை மூலம் மீட்பின் விலையை வழங்கிட விரும்புகின்றார்மக்களுக்கு வாழ்வைஇழந்த மீட்பை மீண்டும் கொணர்ந்திட விரும்புகின்றார். ஆனால்சீடர்களின் எண்ணங்களும் மனக் கணக்குகளும் எதிர்துருவத்தில் அமைந்திருந்தன. சீடர்கள், மெசியா என்பவர் தனது அதிகாரத்தினாலும் ஆட்சியினாலும் வலிமையினாலும்  படைகளினாலும் புதுமையினாலும் மக்களை மீட்கவேண்டும் என எண்ணினர். இயேசு அந்த மனநிலையை நிராகரிக்கின்றார். இயேசுவின் மீட்பின் ஆயுதம் அன்பு மட்டுமே. அங்கே அதிகாரத்திற்கு இடமில்லை. இயேசுவின் பணிவிடை செய்யும் மனநிலையும் ஏழ்மையும் இரக்கமும் நீதியின் மீதிருந்த தாகமும் பரிவும்  உடனிருப்பும் இயேசுவின் மீட்பின் சின்னங்களாக மாறின.

மூன்று நிபந்தனைகள்

இன்றைய நற்செய்தியில் இரண்டாவது பகுதி, சீடர்களின் உள்ளத்தை இன்னும் அதிகமாக உலுக்கியது. இயேசு மேற்கூறிய மீட்பின் சின்னங்களை, சிலுவைகளைச் சுமந்துகொண்டு மீட்பைப் பெற்றுத் தரப்போவதில்லைஇன்னும் அதற்கு வழி சேர்க்கும் பொருட்டு, யாரெல்லாம் அவரைப் பின்பற்ற விரும்புகிறார்களோ அவர்களும், மீட்பின் சின்னங்களைச் சுமந்து கொண்டு சாட்சியாக வாழ்ந்திடவேண்டும். மேலும், தம்மைப் பின்பற்ற பின்பற்ற மூன்று நிபந்தனைகளைத் தருகின்றார். என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும்... 1. தன்னலம் துறந்து, 2. தம் சிலுவையைத்  தூக்கிக்கொண்டு, 3. அவரைப் பின்பற்றவேண்டும்.

1. தன்னலம் துறந்து...

தன்னலம் துறத்தல்என்பது தன்னையே வருத்திக்கொள்வதோ அல்லது தனது திறமைகளையோ, ஆற்றலையோ வீணடிப்பது அல்ல; மாறாக,  “நான்தான் மையம்  என்கிற மனநிலையைத் தாண்டி பிறர் மட்டும் போதும் என்கின்ற மன நிலையையும்அணுகுமுறையையும் ஏற்பதுதான் முதல் நிபந்தனை. பணம், புகழ், தற்பெருமை, ‘நான்தான்என்னும் அகந்தை ஆகியவற்றின் சிறையிலிருந்து வெளியேறி, இவ்வுலகைப் பிறரின் கண்கொண்டு காண்பதே சீடத்துவத்தின் முதல் நிலை. என் எண்ணங்களும், என்னைப் பற்றி மட்டும் சுழல்வதை நிறுத்துவதும்தாம் தன்னலம்  துறப்பது.

2. தம் சிலுவையைக் தூக்கிக்கொண்டு...

இன்றைக்கு சிலுவை என்றாலே துன்பங்கள் மட்டுமே எனப் பொருள் கொள்கின்றோம். வேதனை, நோய், இழப்பு, மனப்போராட்டம், சோகங்கள், இறப்பு, அன்றாடச் சுமைகள், உடல் சோர்வு, உடல்நலக்குறை பாடுகள், பணியிலுள்ள கவலைகள்... இவற்றையெல்லாம் நமது அன்றாட சிலுவைகள் எனக் கருதுகின்றோம்.

ஆனால், இயேசுவின் மனநிலையில் சிலுவை என்பது விண்ணையும் மண்ணையும் இணைக்கும் வழிகள்; மன்னிப்பின் செயல்பாடுகள்; இரக்கத்தின் செயல்கள். சுருங்கக்கூறின், அவை அன்பின் செயல்பாடுகள். சிலுவையின் மறுபெயர்தான் அன்பு. அது கனமான சுமைகள் அல்ல, வெறுக்கத்தக்க பொருள் அல்ல; மாறாக, இறைவனின் உச்சகட்ட அன்பின் அடையாளம். சிலுவையினால் இயேசு நம்மை மீட்டார் என்று கூறுவதைவிட, இறைத்தந்தை நம்மீது கொண்ட பேரன்பினால் இயேசுவழியாக நம்மை மீட்டார் என்று கூறலாம்.

இன்றைய நற்செய்தியில்சிலுவைஎன்ற வார்த்தைக்குப் பதிலாகஅன்புஎன்ற வார்த்தையைப் பொருத்திப் பார்ப்போம், என்னைப் (இயேசுவை) பின்பற்ற விரும்பும் எவரும் தம் அன்பை தூக்கிக்கொண்டு அன்பு செய்யும் அனைத்து ஆற்றலையும் வலிமையையும் திறந்த உள்ளத்தையும் தாங்கிக் கொண்டு, என்னைப் (இயேசுவை) பின்பற்றட்டும் என இயேசு அழைக்கின்றார். சிலுவையே அன்பின் தற்கையளிப்பு எனப் புரிந்துகொள்ள வேண்டும்.

எரேமியாவின் அனுபவம்

இன்றைய முதல் வாசகத்தில், இறைவன் தமது அன்பினால் எவ்வாறு எரேமியா இறைவாக்கினரை ஆட்கொண்டதையும் இறைவனின் அன்புச் சொல்லினால் அவரது இதயத்தில் ஏற்பட்ட ஆழமான மாற்றத்தையும், அதனைத் தனக்குள்  அடக்கி வைத்துக்கொள்ள இயலாச் சூழலையும் எடுத்துரைக்கின்றது.

பவுலின் வேண்டுகோள்

இன்றைய இரண்டாம் வாசகத்தில், நமது உடலையும்  ஆன்மாவையும் இறைவனின் அன்பையும் பெறபுதுப்பிக்க, பவுல் உரோமை இறைச்சமூகத்திற்கு வேண்டுகோள் விடுக்கின்றார். அன்பினால் புதுப்பிக்கப்பட்டவர்கள் சரியானவற்றைத் தேர்ந்து தெளியும் ஆற்றலைப் பெறுவார்கள். அதுவே இயேசுவை நெருக்கமாகப் பின்பற்ற வழிவகை செய்யும்.

3. என்னைப் பின்பற்ற வேண்டும்...

இயேசுவைப் பின்பற்றுதல் என்பது சீடத்துவத்தின் மூன்றாவது சிந்தனை. இயேசுவின் அடிச்சுவட்டில் நாம் செல்கின்றபோது இயேசு நம் அருகில் இருக்கின்றார்நம்மைப் பலப்படுத்துகின்றார்; இறையாட்சியின் விழும்பியங்களுக்காக எடுக்கப்படும் முயற்சியில் விளிம்புநிலை மக்களின் சார்பான நிலைப்பாட்டில் இயேசு நம்முடன் இருக்கின்றார்; அல்லது அவரை நெருக்கமாகப் பின்பற்றும்பொழுது அறுசுவை விருந்தில் நிறைவடைவதுபோல் நமது உள்ளமும் நிறைவடையும் (இன்றைய பதிலுரைப் பாடல்).

பிறருக்காக நான் அன்பைச் (சிலுவையை) சுமந்துகொண்டு இயேசுவைப் பின்பற்றும்பொழுது வாழ்வும் மகிழ்ச்சியும் என் அருகில் உள்ளது; என்னுள் உள்ளது. அனைத்தையும் அதற்காக இழந்தாலும்  ஆன்மாவின் மகிழ்ச்சியும், உண்மையான வாழ்வும் நமது வசமாகும். ஏனென்றால், இறையாட்சிக்காக அன்புப்பணி செய்யும்பொழுது, நாம் இழப்பது அனைத்தும் நமக்கு ஆதாயமே. அவற்றின் வழியாக இயேசுவை ஆதாயமாக்கிக்கொள்கின்றோம்.

இயேசுவைப் போன்று பிறருக்காகத் துன்புறுபவரும் எவரும் இல்லை; சிலுவையைச் (அன்பை) சுமந்தவரும் எவரும் இல்லை; இயேசுவைப் போன்று இறைத்தந்தையின் மகிழ்ச்சியில் முழுமையாகப் பங்கு கொண்டவரும் எவரும் இல்லை. இயேசுவைப் பின்பற்றுவோரும் கட்டாயப்படுத்தப்படுவதில்லை. விருப்பத்தோடுஆர்வத்தோடுமகிழ்வோடு இயேசுவைப் பின்பற்றுவோம். இறை மகிழ்ச்சியை நமது உடைமையாக்குவோம்அதற்காக நாம் அனைத்தையும் இழப்பதுநம்மை வாழ்விற்கு இட்டுச்செல்லும். அச்செயல்கள் வாழ்விற்கான மூலதனங்கள்.

news
ஞாயிறு மறையுரை
பொதுக்காலம் 21-ஆம் ஞாயிறு (23.08.2026) எசா 22:19-23; உரோ 11: 33-36; மத் 16:13-20 - இயேசுவுக்கு நான் யார்? எனக்கு இயேசு யார்?

யூத போதகர்கள், ரபிக்கள் கேள்விகளை எழுப்பி, சீடர்களுக்குப் போதிப்பது வழக்கம். கல்விப் போதனையில் இதனைசாக்ரடீஸ் முறைஎன்று அழைப்பார்கள். ஒரு சிறந்த சிந்தனையை வழங்கும்முன் அதனையொட்டிய கேள்வியை ஆசான்கள் எழுப்பி, அதற்கான விடையைத் தேடிடும் ஆர்வத்தை மாணவர்களிடம் தூண்டியெழுப்புவது ஒரு சிறந்த ஆசிரியரின் பயிற்றுவிக்கும் விதம். கேள்விகள் ஆழமாக இருக்கும்பட்சத்தில், அதனையொட்டிய சிந்தனைகளும் பதில்களும் ஆழமான உண்மையை, தெளிவான மனநிலையை, உறுதியான நிலைப்பாட்டை, அசைக்கமுடியாத உண்மையை நோக்கி இட்டுச்செல்லும்.

இன்றைய நற்செய்தியானது மத்தேயு 16-ஆம் அதிகாரத்தில் ஏறக்குறைய நற்செய்தியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இரண்டு கேள்விகளைச் சீடர்களை நோக்கி இயேசு எழுப்புகிறார்: 1. ‘மானிட மகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?’ 2. ‘நீங்கள் நான்  யார் என்று சொல்கிறீர்கள்?’

முதல் கேள்வியில்மானிட மகன்என்று குறிப்பிடும் இயேசு, இரண்டாவது கேள்வியில்நீங்கள் நான் யார் என்று சொல்கிறீர்கள்?’ என வினவுகின்றார். நற்செய்தியின் மையப்பகுதியில் இக்கேள்விகள் இயேசுவைப் பற்றிய ஆழமான புரிதலைச் சீடர்களுக்கும், அவரைப் பின்பற்றுபவர்களுக்கும் வழங்குகின்றன. அதன் மூலம் இயேசுவின் மீட்புப் பணி எவ்வாறு தொடர்ந்து நிறைவுறும் என்பதை இயேசு இந்நற்செய்திகளுக்குப் பின்வரும் பகுதிகளில் விளக்க இருக்கின்றார். எனவேதான் இவ்விரு கேள்விகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.

இயேசுவின் பல்வேறு மலைப்பொழிவுப் போதனைகள், உவமைகள் குறிப்பாக, விதைப்பவன் உவமை, புதையல், விலையுயர்ந்த முத்து, வலை, வயலில் தோன்றிய களைகள், புளிப்பு மாவு, கடுகு விதை, இறையாட்சி பற்றிய இயேசுவின் நிலைப்பாடு, பசித்தோருக்கு உணவளிக்கும் நிகழ்வு, கடலில் தத்தளித்த சீடர்களைத் தேடிச்சென்ற நிகழ்வு, கானானியப் பெண்ணுடனான சந்திப்பு... இவற்றையெல்லாம் வழங்கிய பிறகு மத்தேயு நற்செய்தியாளர் இயேசுவைப் பற்றிய கேள்வியை எழுப்புகிறார். மேற்கூறிய நிகழ்வுகளில், இயேசுவின் போதனைகளில், சந்திப்புகளில், குணமளித்தலில், உரையாடல்களில் இயேசுவுக்கு மிக அருகில் நின்று அவருக்குச் செவிமடுத்து, உணர்ந்து அனுபவித்த சீடர்களின் புரிதலை, மானிட மகனைப் பற்றிய தெளிவினை வழங்க இயேசு இக்கேள்விகளை எழுப்புகின்றார்.

ஒரு மாணவன் தனது மறைக்கல்வி ஆசிரியரிடம் கேட்டான்: “ஆசிரியர் அவர்களே, உலகத்தில் மிகக் கடினமான கேள்வி எது?” ஆசிரியர் புன்னகையுடன், “இவ்வுலகில் மிகக் கடினமான கேள்வி, உன்னைப் பற்றிநீ யார்?’ என்று கேட்பதும், இயேசுவைப் பற்றிஅவர் உனக்கு யார்?’ என்று கேட்பதும்தான்என்றார்.

இயேசுவின் முதல் கேள்விக்குச் சீடர்கள் கூறிய பல்வேறு பதில்கள்: “திருமுழுக்கு யோவான், எலியா, எரேமியா, இறைவாக்கினர்களில் ஒருவர்.” மக்கள் இயேசுவைப் பற்றிய புரிதல்களை, மற்றவர்கள் கூறிய சொல்லாடல்கள், செவிவழியாக அறிந்துகொண்ட செய்திகள் இவற்றின் அடிப்படையில் சீடர்கள் பதில் அளிக்கின்றார்கள். அவர்கள் கூறிய பதில்கள் மேலோட்டமான பதிலாக அமைந்திருந்தன.

இயேசுவின் இரண்டாம் கேள்விஆனால்என்று தொடங்குகின்றது. இக்கேள்வி சீடர்களுக்கு மிகப்பெரும் சவாலாக அமைந்திருந்தது. ஆனால், ‘நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?’ எனும் இயேசுவின் இரண்டாவது கேள்விக்குச் சீடர்கள் உடனடியான பதிலைத் தந்திருப்பார்களா? நிச்சயமாக அவர்களுக்குள் அமைதி நிலவியிருக்கும். ‘மக்கள் என்ன சொல்கிறார்கள்?’ என்னும் கேள்வியிலிருந்துநீங்கள் என்னை யார் என்று சொல்கிறீர்கள்?’ என்னும் கேள்வி சீடர்களைச் சிந்திக்கவைத்தது. இதன் பதில், ஒருபொழுதும் உதட்டளவிலிருந்து உதித்துவிடாது. உள்ளத்தை ஆராயவேண்டும், உறவுகளை எண்ணிப் பார்க்கவேண்டும். தங்களது இறைநம்பிக்கையை, கேட்டறிந்த படிப்பினைகளை, இயேசுவுடன் பயணித்த நாள்களை, அவருடனான உறவினை எண்ணிப்பார்த்துப் பதிலளிக்கவேண்டும். இயேசுவின் இக்கேள்வியைச் சீடர்கள் எதிர்பார்க்கவில்லை. திக்குமுக்காடிப் போனார்கள். இயேசுவின் மீதான நம்பிக்கையை, புரிதலைப் பரிசோதித்துப் பார்க்கும் கேள்வியே இக்கேள்வி!

நம்பிக்கையின் பதில் - நம்பிக்கையான பதில்

மரபு சொல்வதை மட்டும் ஏற்றுக்கொள்வதும்பிறர் சொல்வதை மட்டும் மீண்டும் மீண்டும் கூறுவதும் நம்பிக்கை அல்ல; பெரும்பான்மையினரின் கருத்தோடு இணைந்து நிற்பதும் நம்பிக்கை அல்ல; நம்பிக்கை என்பது ஒரு தனிப்பட்ட சந்திப்பு. அது ஒரு தனிப்பட்ட அனுபவம்; அது ஒரு தனிப்பட்ட உறவு.

இயேசு தம் சீடர்களை நோக்கி இக்கேள்வியை எழுப்பும்பொழுது, தம்மைப் பற்றிய சரியான இறையியல் வரையறையை அவர் எதிர்பார்க்கவில்லை. மற்ற இறைவாக்கினர்களைவிட, திருமுழுக்கு யோவானைவிட தாம் உயர்ந்தவரா? என்பதை அறியவும் அவர் விரும்பவில்லை. இயேசு தேடிய பதில், உறவின் அடிப்படையில் அமைந்திடவேண்டும்; அனுபவத்தின் அடிப்படையில் அமைந்திடவேண்டும். “என்னைச் சந்தித்த பிறகு உன் வாழ்க்கையில் என்ன மாற்றம் நிகழ்ந்தது?”, “என் வார்த்தைகளால் நீ தொடப்பட்டாயா?” இதற்கு நாம் எத்தகைய பதிலை அவருக்கு வழங்கமுடியும்? இந்தக் கேள்விக்குப் பதில் வழங்கிட நமது புத்தகங்களை மூடிவிட்டு, அவரைப் பற்றிய இறையியல் வரையறைகளைச் சற்றே தள்ளி வைத்துவிட்டு, நம் வாழ்க்கையை உற்றுநோக்கும்பொழுது, ‘இயேசு எனக்கு யார்?’ எனப் பதில் கூறமுடியும்.

நமது இக்கட்டான சூழலில், நோயில், வேதனையில், மகிழ்வில், இருள் சூழ்ந்த தருணங்களில், வாழ்வின் உயர்வு - தாழ்வில்இயேசு எனக்கு யார்?’ இயேசு எனது ஒளி; அவரே வழிகாட்டும் விளக்கு; என் வீழ்ச்சியில், தொய்வில்என்னை உயர்த்திப்பிடிக்கும் கரம், என் வாழ்வு பாய்மரத்தை இயக்கும் காற்றும், துடுப்பும்; என் காயங்களுக்கு மருந்து; என் வாழ்வின் அர்த்தம் என்று பதில் கூற நம் வாழ்வையும், இயேசுவின் கேள்வியையும் ஆழ்ந்து சிந்திப்போம்.

இயேசு மெசியா எனக் கண்டறியலும், நமது அடையாளமும்

மேற்கூறிய அனைத்தையும் சுருக்கி ஒற்றை வார்த்தையில் பேதுரு மிக எளிமையாக, ஆழமாகப் பதிலளிக்கின்றார்: “நீர் மெசியா; வாழும் கடவுளின் மகன்.” இயேசு யார் என்று உலகிற்கு அடையாளப்படுத்துகின்றார். இத்தகைய பதில் அனுபவத்தினால் உருவாகிய அழகிய பதில்மொழி. இயேசு வாழும் கடவுளின் மகன்; அவர் வாழ்விப்பவர்; வாழ்வை வழங்குபவர். வாழ்வு நசுக்கப்படும்பொழுது குரல் எழுப்பி நிலைப்பாட்டை வெளிப்படுத்துபவர். பிறர் வாழ்வதற்காகவே தன் வாழ்வை வழங்குபவர். நான் வாழ்கிறேன் நீங்களும் வாழ்வீர்கள் என்று தனது உயிர்ப்பின் நம்பிக்கையின் வாழ்வைத் தருபவர் என்றும் புரிதலை, பேதுருவின் பதில் வழங்குகின்றது. இயேசு எனக்கு யார் என அடையாளப்படுத்தினால் நாம் யார் என்ற அடையாளம் நமக்குக் கிடைத்துவிடும்.

பேதுருவின் அடையாளமே நமது அடையாளம்

இயேசு எனக்கு யார் என்பதை நான் உணர்ந்தால், நமது அடையாளமும், திரு அவையில் நமது பொறுப்புணர்வும் கண்டறிதல் மிகச் சுலபமே. பேதுரு இயேசுவை மெசியா என்றும், கடவுளின் மகன் என்றும் அடையாளம் காண்கின்றார். உடனே இயேசு அவரைப் பாறை ‘Caipha’ என்றும் இந்தப் பாறையின் மீது திரு அவையைக் கட்டுவேன் என்றும் பேதுருவின் உண்மையான தன்மையை அடையாளப்படுத்துகின்றார். இதுவே நம் வாழ்க்கையிலும் நடக்கின்றது. நாம் இயேசுவை உண்மையாக அறிந்துகொள்ளும் பொழுது, நம்மையும் நாமே உண்மையாக அறியத் தொடங்குகின்றோம். நான் யார்? எனது அழைப்பு என்ன? என் வாழ்வின் பொருள் என்ன? எதற்காக நான் பிறந்துள்ளேன் என்னும் கேள்விகளுக்கு வாழ்வின் பதிலைக் கண்டறிவோம்.

நாமும் திரு அவையைத் தாங்கும் பாறைகளே!

இயேசுவே திரு அவையின் மூலைக்கல். திருத்தூதர்களை அடித்தளமாகக் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடம். நாம் அனைவரும் திரு அவையின் உறுப்பினர்கள். அதன் வளர்ச்சியில் பங்காளிகள், உடன் உழைப்பாளர்கள். இயேசுவுக்கு அன்று பேதுருவும் சீடர்களும் திரு அவையை அமைக்க அவசியமானவர்கள். நாமும் இத்திரு அவையில் அவசியமானவர்களே. இயேசு எச்சிறிய கல்லையும் இக்கட்டடத்தில் இருந்து ஒதுக்குவதில்லை. மாறாக, சிறிய கல்லைக் கொண்ட சிற்பி தனது படைப்பை உருவாக்குவதுபோலும், குயவன் களிமண்ணைக் கொண்டு பானையை உருவாக்குவது போன்றும் இறைவன் நம் பலவீனங்களோடும் காயங்களோடும் மனித இயல்போடும் நம்மை ஏற்றுக்கொண்டு திரு அவையை கட்டுகின்றார். நமது பங்களிப்பால் நாமும் திரு அவையின் சிறிய பாறைகள் என்பதில் பெருமிதம் கொள்ளவேண்டும்.

பேதுருவின் அதிகாரமும் எலிசாவின் அதிகாரமும்

இன்றைய முதல் வாசகத்தில், எசாயா இறைவாக்கினர் வழியாக தாவீது அரசின் அரண்மனைப் பொறுப்பாளனும் அதிகாரியுமாக ஆணவத்துடன் செயல்பட்ட செபுனாவை அப்பதவியிலிருந்து இறக்கி, இலக்கியாவின் மகனான எலியாக்கிமையை அதன் பொறுப்பாளனாக இறைவன் நியமிக்கின்றார். அவனது தோலில் தாவீது குடும்பத்தாரின் திறவுகோலை வைத்து அதனைத் திறக்கவும் பூட்டவும் அதிகாரம் வழங்குகின்றார். இவ்வார்த்தைகள் Typological வழிமுறையில் பேதுருவிற்கு மிகச் சிறந்ததாக பொறுந்துகின்றது.

திரு அவையின் அதிகாரத்தில் உள்ள அனைவரும் பொறுப்பாளர்களாக, பணியாளர்களாக, ஊழியர்களாகச் செயல்படவே பணிப்பொறுப்பு வழங்கப்படுகின்றது என இன்றைய முதல் வாசகமும் நற்செய்தி வாசகமும் அறிவுறுத்துகின்றது.

திரு அவையின் பாறைகளாகிய நாமும் நமது பணிப்பொறுப்பில், குடும்பப்பொறுப்பில், துறவற வாழ்வில் பொறுப்புணர்வுடன் செயல்பட இயேசு நமக்கு யார் என்பதையும், இயேசுவுக்கு நாமனைவரும் அவரது அன்புப் பிள்ளைகள் என்பதையும் அறிந்துகொள்ளும் பொழுது, நமது வாழ்வின் பொருளும் பொறுப்புணர்வும் மிகுதியாகும்.

news
ஞாயிறு மறையுரை
பொதுக்காலம் 20-ஆம் ஞாயிறு (16.08.2026) எசா 56:1,6-7; உரோ 11:13-15;29-32; மத் 15:21-28 - தாழ்ச்சியும், மிகுந்த நம்பிக்கையும்

கடவுள் வித்திட்ட இறையாட்சி அனைவரையும் உள்ளடக்கியது. இறையாட்சியின் அறிவிப்பும், அதன் எல்லைகளும் ஒரு குறிப்பிட்ட இனத்திற்குள், சமூகத்திற்குள் சுருக்கிக்கொள்வது ஓர் எதிர்சாட்சியச் செயல். இந்த ஞாயிறு இறைவார்த்தை, எவர் ஒருவரையும் மதிப்பற்றவராகப் புறம்பே தள்ளிவிடாமல் அனைவரையும் ஏற்று, மாண்புடனும் அக்கறையுடனும் அணுகிட நமக்கு நினைவுறுத்துகின்றது.

1997-ஆம் ஆண்டு சென்னை சாந்தோமில் அமைந்திருந்த புனித தோமையார் இளங்குருமடத்தில் தங்கி, இலயோலா கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு பயின்ற காலத்தில், ஆகஸ்டு மாதத்தின் மூன்றாம் வாரத்தில் ஒரு ஞாயிறன்று இன்றைய நற்செய்தி வாசிக்கப்பட்டது. அவ்வாசகத்தின் வரிகள் எனக்குள் எண்ணற்ற கேள்விகளையும் குழப்பத்தையும் ஏற்படுத்தின. இயேசுவிற்கும் கானானியப் பெண்ணிற்கும் அமைந்திருந்த உரையாடல்களின் வரிகள் என்னைத் துளைத்துக்கொண்டே இருந்தன. உடனடியாக அப்பொழுது எங்களுக்கு ஆன்மிகக் குருவாகப் பணியாற்றிய விவிலியப் பேராசிரியர் அருள்பணி. S.J. அந்தோணிசாமி அவர்களைச் சந்தித்து என் கேள்வியை எழுப்பினேன்.

தந்தையே, ஏன் இயேசு கானானியப் பெண்ணை நோக்கி, ‘பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் (அன்றைய விவிலிய மொழிபெயர்ப்பில் இவ்வார்த்தைநாய்கள்என மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருந்தது) போடுவது முறையல்லஎனக் குறிப்பிடுகின்றார். தன் மகளின் உடல் நலத்திற்காக இயேசுவை அணுகி, விடாது முயற்சி செய்து, அவரது கவனத்தை ஈர்த்து, அவரிடம் மன்றாடும் பெண்ணிற்கு இயேசு இப்படிப்பட்ட கடினமான பதிலைக் கூற காரணம் என்ன? இது அவமதிக்கும் செயல் போன்று தெரிகின்றதே...” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினேன். அவரின் பொறுமை மிகுந்த பதிலும், நற்செய்தியின் விளக்கமும் என் மனத்தில் பசுமரத்து ஆணிபோல் பதிந்துள்ளன.

இயேசுவின் இறையாட்சிப் பயணம் - மத்தேயு நற்செய்தியின் பின்புலம்

யூதமக்கள் கிறித்தவத்தைத் தழுவிய காலங்களில் மத்தேயு நற்செய்தி எழுதப்பட்டது. யூதர்களைத் தவிர்த்து, பிற இனத்து மக்களும் கிறித்தவத்தை ஏற்றுக்கொண்டு நம்பிக்கை வாழ்வை ஏற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்து, அதனைப் பின்பற்ற விரும்பிய காலச்சூழலில், இன்றைய நற்செய்தியின் பின்புலத்தை நாம் அறிந்து கொள்ளவேண்டும்.

யூத மக்கள் அவர்களின் ஆன்மிக, வழிபாட்டு வழக்கமுறைகளையும், அன்றாட வாழ்வின் செயல்பாடுகளையும் மட்டுமே உயர்ந்தவையாகக் கருதினார்கள். தாங்கள் மட்டுமே இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இனமாக மார்தட்டிக் கொண்டார்கள். ஆகவே, மற்ற இனங்களைச் சார்ந்த அனைவரையுமே ஆன்மிகமற்றவர்களாக, இழிவானவர்களாகக் கருதினார்கள்.

இன்றைய நற்செய்தியில் இயேசு இஸ்ரயேல் மக்கள் வாழும் இடங்களிலிருந்து கடந்து தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் செல்கின்றார். புற இனத்து மக்கள் வாழும் பகுதிகளில் விருப்பத்துடன் இயேசு செல்கின்றார். தம் சீடர்களுக்கு மட்டுமல்ல, விளிம்புநிலை மக்களுக்கும் இறையாட்சியைப் பற்றி அழுத்தமாகப் பதிவு செய்கின்றார். யூதர்களின் முன்சார்பு எண்ணங்களையும் தவறான கருதுகோள்களையும் இயேசுவின் கானானியப் பெண்ணுடனான சந்திப்பு உடைக்கின்றது.

எல்லைகள் கடந்த, சமூக வேர்களைக் கடந்த இறையாட்சி

எல்லாருக்கும் உரிய இறையாட்சியைக் கொணர்ந்திட இறைவன் விரும்புகின்றார். இறையாட்சியின் அறிவிப்பும், அதன் எல்லைகளும் ஒரு குறிப்பிட்ட இனத்திற்குள், நாட்டிற்குள், சமூகத்திற்குள் அடங்கிவிடுவது எதிர்சாட்சியச் செயல். இயேசு தீர்-சீதோன் பகுதிகளுக்குள் சென்று அச்சமூகத்தின் மனிதர்களோடு உரையாடுவதும், அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதும், அவர்களின் நம்பிக்கையைப் பாராட்டுவதும் ஒரு புவியியல் சார்ந்த குறியீடு மட்டுமல்ல; அதில் விடுதலை இறையியலும் நிறைந்துள்ளது. யூதர்களால் அதிகமாக வெறுக்கப்பட்ட புற இனத்து மக்களின் இடத்தில் இறையாட்சியின் மதிப்பீடுகளும் நம்பிக்கையும் உயர்த்திப் பிடிக்கப்படுகின்றது. கானானியப் பெண்ணின் மூதாதையரை, அவ்வினத்தை யூதர்கள் அதிகமாக வெறுத்தனர். ஆனால், அவ்வினத்தைச் சார்ந்த ஒரு தாயை நம்பிக்கையின் தாயாக இனம் கண்டு கொள்கின்றார்.

இன்றைய நற்செய்தியில் இவ்விருவரின் உரையாடல் கூர்ந்த கவனத்திற்குரியது. மூன்றுமுறை கானானியத் தாய் பேசுகின்றார்: “ஐயா, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்.”

ஐயா, எனக்கு உதவியருளும்.”

ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறுதுண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே.”

இந்த மூன்று உரையாடல்களும் வேண்டல்களும்ஐயாஎனத் தொடங்குகின்றது. மூன்று உரையாடல்களிலும் கானானியப் பெண் தாழ்ச்சியோடும் ஆனால், மிகுந்த நம்பிக்கையோடும் மனவுறுதியோடும் இயேசுவிடம் வேண்டுகின்றார். இயேசுவின் பதில்மொழி மௌனத்துடன் தொடங்குகின்றது. கனமான உரையாடலாக வலுப்பெறுகின்றது. இறுதியில் நலமிக்க வார்த்தைகளுடன் நிறைவுபெறுகின்றது.

தாவீதின் மகனே எனக்கு இரங்கும்எனக் கதறிய தாய்க்கு இயேசு உடனடியாகப் பதில்மொழி கூறவில்லை. இயேசுவின் மௌனம் அப்பெண்ணின் தேவைக்குச் செவிமடுக்க மனமின்மையால் அல்ல; பாராமுகமும் அல்ல; புறக்கணிப்பும் அல்ல! இயேசுவின் மூன்று உரையாடல் வரிகள்:

இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்.”

பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல.”

அம்மா, உமது நம்பிக்கை பெரியது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்.”

கானானியப் பெண்ணின் தாழ்ச்சியும், நம்பிக்கையான வார்த்தைகளும் இயேசுவின் இதயத்தைத் தொடுகின்றன. ஒருவரின் தாழ்ச்சி மலைகளையும் தகர்க்கும் வலிமையுடையது. தற்பெருமையும் பெருமிதமும் ஒருவரின் வாழ்வைச் சரிக்கக்கூடியது.

நாய்க்குட்டிகளும் மேசையிலிருந்து விழும் அப்பத்துண்டுகளும்

இயேசு புற இனத்து மக்களுக்கான தமது பணியை மிகச் சூசகமாகத் தெரிவிக்கின்றார். யூத இனத்தால் இழிவாக, தரம் குறைவாகக் கருதப்பட்ட இவ்வினத்தை இயேசு, அவர்கள் இறைவனின் பிள்ளைகள் - இறைவனின் பந்தியில் அமரும் சம உரிமை பெற்றவர்கள் என்பதை நற்செய்தியின் நிகழ்வில் உறுதிப்படுத்துகிறார்.

இன்றைய நற்செய்திநாய்க்குட்டிகளும், மேசையிலிருந்து விழும் அப்பத்துண்டுகளும்என்னும் உருவகத்தைச் சுற்றியே நகர்கின்றது. ‘பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது நல்லதல்லஎன்னும் யூதர்களின் சமத்துவமற்ற சித்தாந்தத்தை இயேசு மாற்றுகிறார். இறைவனின் கரங்களிலிருந்து வருகின்ற இரக்கமும் அருளும் சிறிய அளவே ஆயினும், சிறிய துண்டுகளாய் இருப்பினும், அதுவே தங்களுக்கு மீட்பளிக்கும் என கானானியத் தாய் நம்பினார். ஏனென்றால் இறைவன் தம் ஆசிரை, அருளை, இரக்கத்தை வழங்கும்பொழுது, அவரைவிடக் குறைவாக எதையும் அவர் தம் பிள்ளைகளுக்குத் தருவதில்லை; இறைவனின் கரங்களிலிருந்து வரும் சிறு அப்பத்துண்டுகளும், சிறிய அருளும் எங்களுக்குப் பேரருளாய், ஆற்றலாய், நம்பிக்கையாய், உடல்நலமாய் மாறும் என அத்தாய் நம்பினாள்.

அம்மா, உம் நம்பிக்கை பெரியதுஎன இயேசு புகழும் கானானியப் பெண் தொழுகைக்கூடங்களுக்குச் செல்லவில்லை; இறைவார்த்தையை அங்குக் கேட்டிருக்க வாய்ப்பில்லை. வேற்றுத் தெய்வங்களை வழிபட்டிருப்பினும், இயேசுவை - தாவீதின் மகனை அடையாளம் காண்கின்றார். அவர் இறைவழிபாட்டில் பங்கெடுக்கவில்லை. ஆனால், இறைவன் தங்களுக்கும் உரியவர் என்பதில் உறுதியாய் வெளிப்படுத்துகின்றார். நம்பிக்கை அறிக்கையை அவர் அறிந்திருக்கவில்லை; இறையியலாளர்களின் போதனைகளை அறிந்திருக்கவில்லை. ஆனால், அவரது மகளின் வேதனையை அறிந்திருந்தார். அவளுக்காகத் தாவீதின் மகனிடம் மன்றாடுகின்றார். பிறரின் வேதனையை அறிந்து, அத்துன்பத்தை, இன்னலை அகற்றும் பரிவுள்ளம் அவளிடம் இருந்தது. இப்பரிவு உள்ளத்தினால் உந்தப்பட்டு நம்பிக்கையோடு வேண்டுகின்றார்.

இறைவனின் பார்வையில் சமயமோ, அதனை அச்சுபிசகாமல் பின்பற்றும் மக்களினமோ முன்னுரிமை பெறுவதில்லை. இறைவனின் பார்வையில், அவரது மக்களின் குறிப்பாக, கடைநிலையினரின் வேதனையும், துன்பமும் தேவையும் முன்னுரிமை பெறுகின்றன. இனத்தின் அடிப்படையில் முன்னுரிமை கோருவதை இறைவன் நிராகரிக்கின்றார். வேதனையையும் துன்பத்தையும் இழிநிலையையும் சந்திக்கும் மக்களினங்களின் அருகில் இறைவன் இருக்கின்றார். அவர்களின் நம்பிக்கையே சிறப்பான பெருமிதமிக்க நம்பிக்கை.

இன்றைய முதல் வாசகத்தில் எசாயா இறைவாக்கினர் இறைவனின் வேட்கையை, விருப்பத்தைப் பதிவிடுகின்றார். தமது இல்லம் எல்லா மக்களினங்களின் இறைவேண்டலின் வீடாக மாறுவதே இறைவனின் விருப்பமும் கனவும். எல்லாரும் வேறுபாடுகளின்றி பலிகளை ஒப்புக்கொடுத்து அவரது பந்தியில் அமர்வதும், இறைப்புகழ்ச்சியில் பங்கெடுப்பதும் இறைவனின் அவா. பசியையும் வேதனையையும் புறக்கணிப்புகளையும் மாற்றி, பசியாற உணவு, ஆறுதல், உடனிருப்பு, மனித மாண்பு, மதிப்பு இறையாட்சியின் கனவு. இறைவனின் கனவு மெய்ப்பட இன்றே செயல்படவேண்டும்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் புற இனத்தவர்களின், மறக்கப்பட்ட இனத்தின் திருத்தூதராகப் பணியாற்றுவதில், அவர்களுடன் தனது நெருக்கத்தை வெளிப்படுத்துவதில் பெருமிதம் கொள்கின்றார். திரு அவை எல்லாருக்குமானது; திரு அவையின் பணியாளர்கள் அனைவருக்குமானவர்கள்; கடைநிலையினருக்கும் நெருக்கமானவர்கள்.

இறைவனின் பேரிரக்கமும் பரிவும் மறுக்கப்படும் சமூகத்திற்கு அதிகமாய் வழங்கப்படுவதே நற்செய்தி. சமூகத்தின் அவலச் செயலால் சமூகத்தின் நிலைகளிலிருந்து கீழே தள்ளப்பட்டு (மேசையிலிருந்து கீழே நிறுத்தப்பட்டு/தள்ளப்பட்டு) வாழும் சமூகத்தை நோக்கி நாம் அனைவரும் குனிந்து, அவர்களை உயர்த்தி, மேசையில் அமரச்செய்து, பணியில் பங்கெடுத்து பிள்ளைகளுக்குரிய மாண்பை வழங்குவதும், அவர்களின் உரிமைகளை நிலைநாட்டுவதும் நமது வாழ்வியல் ஆன்மிகமாக மாறவேண்டும். அப்பொழுது நாம் பெருமிதத்துடன் கூறலாம். நாங்கள் வழிபடும் இறைவேண்டலின் வீடு அனைவருக்கும் உரிய இறைவேண்டலின் வீடு. அங்கே அனைவரும் இறைவனின் பிள்ளைகளே!