news
ஞாயிறு தோழன்
பொதுக்காலம் 18 -ஆம் ஞாயிறு (04-08-2024)

விடுதலைப் பயணம் 16:2-4.12-15; எபேசியர் 4:17.20-24; யோவான் 6:24-35

திருப்பலி முன்னுரை

தெய்வீக உணவைப் பெற்றுத் தரும் தெய்வீக விருந்துக்கு அன்போடு அனைவரையும் வரவேற்கின்றோம். ‘குருத்துவம் என்பது இயேசுவின் இதயத்தின் அன்பைப் போன்றது. குருவைப் பார்க்கும்போது இயேசுவைப் பார்ப்பதற்குச் சமம்’ என்கிறார் புனித ஜான் மரிய வியான்னி. இன்று குருக்களின் பாதுகாவலர் புனித ஜான் மரிய வியான்னியின் திருவிழாவைக் கொண்டாடுகின்றோம். குரு என்பவர் வழிபாட்டின் தலைவர் மட்டும் அல்லர்; வாழ்வின் தலைவர். வாழ்வை எவ்வாறு வாழ வேண்டுமென்று நமக்கு வழிகாட்டும் தலைவர். அவர் இயேசுவின் மீட்புத் திட்டத்தின் பங்கேற்பாளர். ஆயனாக இருந்து, மக்களைப் பாவத்திலிருந்து மீட்டு, உண்மையான வழியில், இறைவனின் வழியில் வழிநடத்தும் நல்லதொரு வழிகாட்டி. தன்னை மறுத்து, தன் வழியாக இறைவனை மக்களுக்கு வெளிக்காட்டுவது குருவின் தன்னலமற்ற பணி. “பாலைநிலத்தில் உங்களுக்கு உணவளித்தது மோசே அல்ல; என் தந்தையே” என்கிறார் இயேசு. அதுபோல, இறைவனின் திட்டத்தை நிறைவேற்றும் பணியாளர்கள் அவர்கள். “கிறிஸ்துவை யாரும் காண முடியாது; ஆனால், ஒவ்வொருவரும் குருவைப் பார்க்கிறார்கள்; அவர் மூலமாக அவர்கள் இறைவனைக் காண விரும்புகிறார்கள்; இறைவனுடைய மகத்துவம் மகத்தானது; குருக்களின் கம்பீரமும், கண்ணியமும் அளப்பரியது” என்கிறார் திருத்தந்தை இரண்டாம் யோவான். குருத்துவத்தின் மகத்துவம் உணர்ந்து, குருக்களின் பணி சிறக்கத் தேவையான அருளையும், ஆற்றலையும், வல்லமையையும் இறைவன் குருக்களுக்குத் தரவேண்டுமென்று நாம் அனைவரும் இணைந்து செபிப்போம், இறையாசீர் பெறுவோம்.

முதல் வாசக முன்னுரை

இஸ்ரயேல் மக்கள் பசியால் மாண்டு போக, அந்தப் பாலைநிலத்திற்கு அழைத்து வந்ததாக மோசேவுக்கும், ஆரோனுக்கும் எதிராகக் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், கடவுளுக்கு எதிராக முறுமுறுக்கின்றார்கள். முறுமுறுத்தல் என்பது கடவுளை வசைபாடுகின்ற எதிர்மறையான, நம்பிக்கையின்மையின் அடையாளம். கடவுளுக்கு எதிரான முறுமுறுத்தலை, நம்பிக்கைக்கு எதிரான திட்டமாகவும், தண்டிக்கப்பட வேண்டிய துரோகமாகவும் விடுதலைப் பயண ஆசிரியர் பதிவு செய்கின்றார். அதனைக் கவனமுடன் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

இரண்டாம் வாசகம் கிறிஸ்தவப் புதுவாழ்வைப் பற்றிப் பேசுகின்றது. புனித பவுல் பழைய வாழ்க்கை முறையை மாற்றச் சொல்கிறார். இந்தப் பழைய வாழ்க்கை முறை என்பது கிறிஸ்தவர்களாக மாறுவதற்கு முன் வாழ்ந்த கிரேக்க-உரோமைய வாழ்க்கை முறையைக் குறித்துக் காட்டுகின்றது. மக்களின் மனப்பாங்கு புதுப்பிக்கப்பட வேண்டும். கடவுளது சாயலாகப் படைக்கப்பட்ட புதிய மனிதருக்குரிய இயல்பு. அவ்வியல்பு உண்மையான நீதியில் வெளிப்படுகிறது. நாமும் இறைவன் விரும்பும் புதுவாழ்வை வாழ வேண்டும் என்ற உணர்வோடு வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டு

1. வழிகாட்டும் வல்லமையான இறைவா! திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் ஆகியோரை நிறைவான ஆசிரால் நிரப்பியருளும். மக்களை ஆன்மிகத்திலும், முழுமையான வளர்ச்சியிலும் வழிநடத்தத் தேவையான அருளைத் தர இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

2. ‘நீதியை நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் நிறைவு பெறுவர்’ என்று கூறிய இறைவா! அநீதி நிறைந்த உலகில் உண்மையையும், நீதியையும் அழியாமல் காக்கும் நபர்களுக்காக மன்றாடுகிறோம். நீதியைக் காக்கப் போராடும் மக்களுக்குத் தேவையான வல்லமையையும், ஆற்றலையும் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

3. அழியாத உணவை அளித்த அன்பு ஆண்டவரே! மக்கள் பசியால் இறக்கக்கூடாது என்று உழைக்கும் மக்களுக்காக மன்றாடுகிறோம். தங்களிடம் இருப்பவற்றை இல்லாதவர்களுக்குப் பகிர்ந்தளிக்கும் மக்களுக்கு, நிலையான அழியாத மகிழ்ச்சியை அவர்களுக்குத் தந்து அருள்புரிய இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

4. எங்களுக்காக இரத்தம் சிந்திய உன்னதமான இறைவா! நோயாளிகளுக்கும், விபத்தில் சிக்கிய நபர்களுக்கும், தேவையில் இருப்பவர்களுக்கும் தங்களின் இரத்தத்தைக் கொடையாகக் கொடுக்கும் நபர்களுக்காக மன்றாடுகிறோம். அவர்களின் தன்னலமற்ற மனப்பான்மையைப் போல பலரும் முன்வந்து குருதிக் கொடை தர இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

news
ஞாயிறு தோழன்
பொதுக்காலத்தின் 17 -ஆம் ஞாயிறு (28-07-2024)

2அர 4:42-44; எபே 4:1-6; யோவான் 6:1-15

திருப்பலி முன்னுரை

பகிரும் பண்பை வளர்க்கும் தெய்வீகத் திருப்பலிக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். “மக் களை வரவேற்பதிலும், அவர்களுடன் உணவு, நேரம், நம் வீடுகளில் சிறிய இடத்தைப் பகிர்ந்து கொள்வதில் நாம் தாராளமாக இருக்கும்போது, நாம் இனியும் ஏழைகளாக இருப்பதில்லை என்பது மட்டுமல்ல, நாம் செல்வந்தர்களாக இருக்கிறோம்” என்கிறார் நம் திருத்தந்தை பிரான்சிஸ். நாம் பணத்தால் செல்வந்தராக இல்லையென்றாலும், நம்முடைய பகிர்வுத்தன்மையால் செல்வந்தராக இருக்க முடியும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். பசித்தவனுக்கு உணவைப் பகிர்ந்து கொடுப்பது அவர்களை அன்பு செய்வதற்கு இணையானது. உணவற்றவருக்கு உணவு கொடுப்பது, அவர்களுக்கு வாழ்வு கொடுப்பதற்கு இணையானது. “நான் ஆடுகள் வாழ்வைப் பெறும் பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன்” என்கிறார் இயேசு. மேலும், “நானே வாழ்வு தரும் உணவு” என்று கூறி நற்கருணை வழியாகத் தம்மையே நமக்கு ஆன்மிக உணவாகக் கொடுக்கிறார். முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எலிசா உணவைப் பகிர்ந்து கொடுத்து, அனைவரும் வயிறார உண்டனர் என்பதைப் பதிவு செய்கின்றார். இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் பகிர்வதற்கு ஒற்றுமையே சிறந்த வழி என்பதை எடுத்துரைக்கிறார். நற்செய்தி வாசகத்தில் இயேசுவும் உணவை மக்களுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார். இந்த நிகழ்வு இயேசு மிகப்பெரிய இறைவாக்கினர் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. தந்தையாம் கடவுளின் செய்தித் தொடர்பாளராக இருப்பதன் மூலமும், அவருடைய செய்தியை மக்களுக்கு அறிவிப்பதன் மூலமும் இறைவாக்கினர் பங்கை நிறைவேற்றினார். இறுதியாக, உணவைப் பகிர்ந்து கொடுத்து, மக்களை நல்வழிப்படுத்தி உன்னத இறைவாக்கினராகத் திகழ்கிறார். இறைவாக்கினர் இயேசுவைப்போல பகிர்ந்து கொடுக்கும் மனநிலையை இறைவன் நமக்கு நிறைவாகத் தர வேண்டும் என்று இந்தத் திருவழிபாட்டில் மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை

இறைவாக்கினர் எலிசா வடநாட்டில் இறைவாக்குப் பாரம்பரியத்தின் மிக முக்கியமான இடத்தைப் பிடித்தவர். எலிசா என்றால் ‘கடவுளின் மனிதர்’ என்பது பொருள். புதுமைகளைப் பொறுத்தவரையில் அதிகமான புதுமைகளை எலிசா இறைவாக்கினர் செய்திருக்கிறார். கோணிப்பையில் இருந்த வாற்கோதுமை அப்பங்களை, தானியங்களை எலிசா சொன்னபடியே அனைவரும் வயிறார உண்டனர். இந்த வல்ல செயல் எலிசாவின் புனிதமான வாழ்க்கையைக் காட்டுகிறது. எலிசா என்ற மனிதர் இயற்கையின்மீது அதிகாரம் உள்ள இறைமனிதர் என்பதற்கு முதல் வாசகமே சாட்சி. அதனை ஆர்வத்தோடு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

புனித பவுல் தன்னைக் கைதியாக அறிமுகப்படுத்துகிறார். அவர் அரசியல் கைதியாகச் சிறையில் இருக்கும் போது எழுதப்பட்ட திருமுகம் இரண்டாம் வாசகமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் ஒரே எதிர்நோக்கு, ஒரே உடல், ஒரே ஆவி, ஒரே திருமுழுக்கு, ஒரே தந்தை என்ற உணர்வோடு அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற அழைப்பை விடுக்கின்றார். ஒற்றுமையே நமது பலம்; ஒற்றுமையே நமது மிகப்பெரிய ஆயுதம் என்று எடுத்துரைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம். 

மன்றாட்டு

1. அன்பு இறைவா! ஆன்மிக வழிகாட்டியாகவும், அனுபவத்தின் ஆசானாகவும், அன்பு செய்வதில் கடல் அலை போலவும் இருக்கும் எங்கள் தாத்தா, பாட்டிக்காக மன்றாடுகிறோம், எங்களுக்கு நம்பிக்கையை ஊட்டிவளர்த்த அவர்களுக்கு நல்ல ஆரோக்கியமான மன நிலையையும், உடல் நிலையையும் தர வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

2. உண்மையை எடுத்துரைக்கும் இறைவா! உண்மையை மட்டும் பேசி, உண்மையான வாழ்வு வாழும் நபர்களை ஆசீர்வதித்து, போராட்டம் நிறைந்த வாழ்வில் உண்மையாக வாழ்வது என்பது சவால் நிறைந்தது. அனைத்துச் சவால்களையும் எதிர்கொண்டு உண்மையாக வாழும் மக்களுக்கு ஆற்றலைத் தர வேண்டுமென்று ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.

3. இயற்கையில் உறையும் இறைவா! உலக இயற்கை பாதுகாப்புத் தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில், நாங்கள் அனைவரும் இயற்கையை நேசித்து, இயற்கையைப் பேணிப் பாதுகாக்கத் தேவையான அறிவையும், ஆற்றலையும், வல்லமையையும் தந்து அருள்புரிய வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

4. தம்மையே எங்களுக்கு உணவாகக் கொடுத்த எம் இறைவா! நாங்களும் எங்களிடம் இருப்பதைப் பகிர்ந்து கொடுத்து, உண்மையான இறைவனின் மக்களாக வாழ, அருள்புரிய வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.