news
ஞாயிறு தோழன்
இலாத்தரன் பெருங்கோவில் நேர்ந்தளிப்பு விழா (09-11-2025) எசே 47:1-2,8-9,12; 1கொரி 3:9-11,16-17; யோவா 2:13-22

திருப்பலி முன்னுரை

அன்பானவர்களேஇன்று நாம் தூய இலாத்தரன் பெருங்கோவில் நேர்ந்தளிப்பு விழாவைக் கொண்டாடுகிறோம். இந்த நாளில் இறைவனின் உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்ட நாம், இறைமையை வெளிப்படுத்துவது நம் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும். நம் உடல் இறைவன் வாழும் இல்லம். ஊழியூழி காலமாகத் திரு அவையின் வழிகாட்டுதலாலும், திருமுழுக்குஒப்புரவு, நற்கருணை போன்ற அருளடையாளங்கள் வழியாகவும், கிறிஸ்துவின் உடலாலும் இரத்தத்தாலும் நம் உடலே இறைவனின் இல்லமாக அர்ச்சிக்கப்பட்டுள்ளது.   இறைவனின் இல்லமாகிய இந்த உடலின் புனிதத்தை மாசுபடாமல் பேணிக்காப்பதும், பெற்ற அருளை வீணாக்காமல் பாதுகாப்பதும் நம் கடமையாகும். நம் சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும் பார்வையாலும் உள்ளம் என்னும் ஆலயத்தை மாசுபடுத்தாமல் பாதுகாப்போம். நமது இதயத்துடிப்பாக இருந்து நம்மை இயக்குவிக்கின்ற தூய ஆவியின் குரலுக்குச் செவிகொடுத்து வாழ்வோம். நம் உடல் என்னும்  ஆலயத்தை அன்பு, அமைதி, சமத்துவம். சகோதரத்துவம், உண்மை, நீதி, நேர்மை, மன்னிப்பு போன்ற மதிப்பீடுகளால் அழகுசெய்வோம். நம்மிலும் மற்றவரிலும் வாழ்கின்ற இறைவனைக் கண்டுகொள் வோம்நாம் அமர்ந்திருக்கும் இந்த ஆலயத்தையும் நமது உள்ளத்தையும் அமைதி என்ற புண்ணியத்தால் பாதுகாத்து, ஆலயத்தின் மகத்துவம் அறிந்து கடவுளை அனுபவித்து வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

ஆலயம் என்பது ஆண்டவன் வாழும்  தூய இல்லம். இந்த ஆலயத்தை நோக்கி வருகின்றபோது திருச்சிலுவையிலிருந்தும் நற்கருணையிலிருந்தும் அன்பையும் அருளையும் ஆசிரையும் பெற்றுக் கொள்கிறோம். இறைவனின் அருள் வழிந்தோடும் இந்த ஆலயத்தில், அவர் அருளைப் பெற்று இறைவனுக்குச் சான்றுபகர்ந்து வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

நாம் அனைவரும் கடவுள் எழுப்பும் கட்டடம். இயேசுவே இக்கட்டடத்திற்கு அடித்தளமாய் இருக்கின்றார். நம் உடலுக்கு உயிராக இருக்கின்ற தூய ஆவியின் குரலுக்கு அன்றாடம் செவிகொடுத்து வாழும்போது, நமது வாழ்க்கை சான்றுபகரக்கூடியதாக அமையும் என்பதில் ஐயமில்லை. இறைவனின் கோவிலாகிய நாம் நம்முள் இருக்கும் இறைவனைக் கண்டுகொள்ள அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிகொடுப்போம்.

மன்றாட்டுகள்

1. ‘நானே உங்களைத் தேர்ந்து கொண்டேன்என்று மொழிந்த ஆண்டவரே! திரு அவையை வழி நடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், இல்லறத்தார் அனைவரையும் உமது தூய ஆவியினால் தூய்மையாக்கிக் காத்திட வேண்டுமென்று   இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

2. எம்மோடு வாழ்கின்ற ஆண்டவரே! எம் நாட்டுத் தலைவர்கள் அனைவரும் மக்கள் நலனில் அக்கறை கொண்டு வாழவும், மக்கள் என்ற சொத்தைப் பேணிக்காக்கவும்  தேவையான  ஞானத்தையும் விவேகத்தையும் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. அன்பான ஆண்டவரேஇறைமக்களாகிய நாங்கள் ஒவ்வொருவரும் இறைவன் குடியிருக்கும் இல்லம் என்பதை உணர்ந்தவர்களாய் தூய உள்ளத்தோடு வாழ தேவையான அருள்வரங்களைத் தந்து காத்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

4. எம் வாழ்வின் அடித்தளமே இறைவா! சோர்ந்து போன இதயங்களுக்கு ஆறுதலளிக்கும் உமது வாழ்வு தருகின்ற வார்த்தையான நீரூற்றைக் கண்டுகொள்ளவும், அந்த நீரைப் பருகி, அதில் நிலைத்திருந்து நிலைவாழ்வுக்குக்  கடந்து செல்லக்கூடிய வழியை எமக்குக் காட்டிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
இறந்த நம்பிக்கையாளர் அனைவர் விழா (மூன்றாம் ஆண்டு) (02-11-2025) சாஞா 3:1-9; உரோ 5:5-11; யோவா 6:37-40

திருப்பலி முன்னுரை

இன்றைய நாளில் அன்னையாம் திரு அவை இறந்த நம்பிக்கையாளர்களை நினைத்து அவர்களுக்காகச் செபிக்கவும், நிலையற்ற இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், நிலையான வாழ்வைத் தரக்கூடிய ஆண்டவரில் நம்பிக்கை கொண்டு வாழ நமக்கு அழைப்புவிடுக்கிறது. இன்று நாம் நம்மோடு பயணித்தவர்கள், நமக்கு வாழ்க்கையைக் கற்றுத்தந்தவர்கள், நம்மைப் பெற்றவர்கள், நமது துன்பங்களில் துணையிருந்தவர்கள் என எத்தனையோ உறவுகளை இழந்திருப்போம். அவர்களின் இறப்பு ஆழ்ந்த வலியையும் வேதனையையும் தந்தாலும் அவர்கள் கடவுளின் மாட்சியில் பங்குகொள்ள நம்பிக்கையோடு செபிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

வாழ்க்கை என்பது இறைவன் நமக்குத் தந்துள்ள உன்னதமான கொடை. இந்த மதிப்புமிக்க மண்ணக வாழ்வில் நாம் செய்யும் நற்செயல்கள் விண்ணக வாழ்வின் பரிசாகின்றன. இன்று நம் முன்னோர்களை நினைத்துப் பார்க்கும் நாளிலே, அவர்கள் விட்டுச் சென்ற மதிப்பீடுகளை நமதாக்குவோம். எதிர்நோக்கின் திருப்பயணிகளாகப் பயணித்துக் கொண்டிருக்கும் நாம் இயேசுவின் விழுமியங்களை வாழ்வாக்குவதன் வழியாக இம்மையில் நிறைவையும் மறுமையில் நிலைவாழ்வையும் கொடையாகப் பெற்றிட முயல்வோம்.

இன்றைய நாளில் சிறப்பாக, யாரும் நினையாத ஆன்மாக்களுக்காக நாம் திருப்பலி ஒப்புக்கொடுத்து அவர்களுக்காக இறைவனிடம் மன்றாடுவோம். இறப்பு கற்றுத்தரும் பாடங்களை உணர்ந்து நமது வாழ்க்கைப் பாதையைச் சரிசெய்வோம். இறைவனடி சேர்ந்த நமது உறவுகள் அனைவரும் இறைவனின் பேரின்பவீட்டில் இளைப்பாற இத்திருப்பலியில் சிறப்பாகச் செபிப்போம்.

முதல் வாசகம் முன்னுரை

இந்த உலகில் பிறர் வாழ்வு பெறுவதற்காக உழைத்த நீதிமான்களின் ஆன்மாக்கள் கடவுளின் கையில் உள்ளன. கடுந்தொல்லை எதுவும் அவர்களைத் தீண்டாது. தனக்காக மட்டுமே வாழ்வோர் இறைவனைக் காண்பது, அவரது பேரின்பத்தைத் துய்ப்பது கடினம் என்று கூறி நமது உள்ளத்தையும் உறவுகளையும் புதுப்பித்து, தூயவர்களாய் வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

இயேசு ஒளியாக நம்மோடு பயணிக்கிறார். நாம் தூயவர்களாய் வாழ நம்முடைய தூய வாழ்வால் வழிகாட்டுகின்றார். அன்புறவில் நாம் நிலைத்து வாழ அன்பிற்காக உயிரையும் கொடுத்து அன்பை இவ்வுலகில் நிலைத்திடச் செய்தார். அவரின் வாழ்க்கைப் பாதையை நமதாக்கி வாழும்போது அவரோடு பேரின்பத்தில் இருப்போம் என்பதில் ஐயமில்லை என்று கூறி இயேசுவோடு இணைந்து வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! எம் திரு அவையின் வளர்ச்சிக்காய் உழைத்து மரித்த திருத்தந்தை, ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவிகள் அனைவருக்கும் விண்ணகப் பேரின்பத்தைத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. கருணையின் தெய்வமே! நிலையற்ற இந்த உலகில் அழிந்து போகக்கூடிய செல்வங்களில் அதிக நாட்டம் கொள்ளாமல், நிலையான அமைதியைத் தரக்கூடிய உம்மில் வாழத் தேவையான ஞானத்தைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. கருணையின் தெய்வமேஎம் குடும்பங்களில் இறந்த பெற்றோர்கள், உடன்பிறப்புகள், உறவுகள் அனைவரின் தவறுகளை எல்லாம் நீர் மன்னித்து, உமது பேரிரக்கத்தால் நிலையான இளைப்பாற்றியைத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. அன்பின் இறைவா! எமது நாட்டின், எமது பங்கின், எமது குடும்பத்தின் வளர்ச்சிக்காய் உழைத்து மரித்த அனைத்து நம்பிக்கையாளரும் யாரும் நினையாத ஆன்மாக்களும் உம்மை முகமுகமாய்த் தரிசிக்கும் பேற்றினைக் காணவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
ஆண்டின் பொதுக்காலம் 30-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) (26-10-2025) சீஞா 35:12-14,16-18; 2திமொ 4:6-8,16-18; லூக் 18:9-14

திருப்பலி முன்னுரை

இறைவன் முன்னிலையில் நம்மைத் தாழ்த்தி, அகந்தையில்லாத மனத்தோடு ஆண்டவரோடு உறவாட ஆண்டின் பொதுக்காலம் 30-ஆம் ஞாயிறு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இன்றைய நற்செய்தியில் இயேசு இறைவேண்டல் செய்யும்போது நமது மனநிலை எப்படி இருக்கவேண்டும் என்பதைத் தெளிவாகக் கூறுகின்றார். பரிசேயர் நேர்மை உள்ளவராகவும், மற்றவர்களைவிட உயர்வானவராகவும் நினைத்துக் கொண்டுதான்என்ற அகந்தையோடு செபிக்கின்றார். ஆண்டவரை அனுபவிக்க முடியாமல் ஆலயத்திலிருந்து  பாவியாகத் திரும்பிச் செல்கின்றார். வரி தண்டுவோரோ தான் பாவி என்ற மனநிலையோடும் தூய்மையான உள்ளத்தோடும் செபிக்கிறார். நேர்மையுள்ளவராக, ஆசிரைப் பெற்றவராக ஆலயத்திலிருந்து வெளியே செல்கிறார். நாம் உள்ளத்தில் இறுமாப்புடன் இருந்த பரிசேயராக இருக்கின்றோமா? அகத்தை தாழ்ச்சி என்ற புண்ணியத்தால் அழகு செய்து, ஆண்டவர் முன் தன்னைத் தாழ்த்திட்ட வரிதண்டுவோராக இருக்கின்றோமா? எனச் சிந்திப்போம். உதட்டால் செபிப்பவர்களாய் இல்லாமல் உள்ளத்தால் செபிப்பவர்களாய் மாறிடவும், ஆலயத்தில் மட்டுமல்ல, அடுத்தவரிலும் இறைவனைக் கண்டிடவும், செபமே செயலாக மாறிடவும் வரம் வேண்டுவோம். சிந்தனையிலும் சொல்லிலும் செயலிலும் வாழ்க்கையிலும் உயர்ந்தவர்களாய் வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

கடவுளின் திட்டத்திற்குப் பணிந்து வாழும்போது நாம் கேட்பவை அனைத்தையும் ஆண்டவர் நமக்கு அருள்வார். உள்ளத்தில் தூய்மையானவற்றைச் சிந்திக்கும்போதும், மற்றவருக்கும் நமக்கும் பயன்தரக்கூடியதைக் கேட்கும்போதும் ஆண்டவர் நமக்குக் கட்டாயம் கொடுப்பார். தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு இறைவனை நோக்கிச் செபிக்க அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்

இரண்டாம் வாசகம் முன்னுரை

ஆண்டவர் உயர்ந்தவர். நாம் வேண்டுவதற்கும் மேலாகவே கொடுக்கக்கூடியவர். எத்தீங்கும் அணுகாது நம்மைக் காப்பவர். தம்முடைய தூதர்களைக் கொண்டு தாங்குபவர். நமக்கு முன்பாகச் சென்று அனைத்து இடர்களையும் தகர்த்துவிடுபவர்திருத்தூதர் பவுலின் நற்செய்தி அறிவிப்புப் பணியில் ஆண்டவர் எவ்வாறு கூடவே இருந்து வழிநடத்தினார் என்பதை எடுத்துக்கூறும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! எம் திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர் அனைவரும் இறுதிவரை உம்மில் நிலைத்திருந்து பலன்கொடுக்கவும், மக்களை நம்பிக்கையின் பாதையில் வழிநடத்தவும் தேவையான அருள்வரங்களை வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. ‘நானே நல்ல ஆயன்என்று மொழிந்த ஆண்டவரே! எம் நாட்டுத் தலைவர்கள் அனைவரும் தன்னலமின்றி மக்கள் நலனில் அக்கறை கொண்டு வாழ்ந்திடவும், ஏழைகளின் வாழ்வு வளம் பெறுவதற்குத் தேவையான சட்டங்களைக் கொண்டு வரவும் வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எம்மை விட்டு நீங்காத ஆண்டவரே! எம் பங்கில் உள்ள அனைத்துக் குடும்பங்களில் நம்பிக்கையும் அன்பும் வளர்ந்திடவும், எத்தகைய சூழ்நிலையிலும் மனம் தளராது செபிக்கவும், தேவையான நல்ல மனத்தை  எமக்குத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. எம்மோடு பயணிக்கும் ஆண்டவரே! நாங்கள் கிறிஸ்துவை எங்கள் வாழ்க்கையால் அறிவிக்கவும், செபத்தில் நிலைத்திருக்கவும், வாழ்வுதரும் வார்த்தையை அன்றாடம் படிக்கவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. இமைப்பொழுதும் நீங்காத ஆண்டவரே! எம் பங்கில் உள்ள இளையோர் அனைவரும் கணினி உலகத்தில் ஆன்மாவைத் தொலைத்துவிடாமல் மெய்யான இறைவனாகிய உம்மில் நம்பிக்கை கொண்டு வாழ வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
அக்டோபர் 19, 2025, ஆண்டின் பொதுக்காலம் 29-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) விப 17:8-13; 2திமொ 3:14-4:2; லூக் 18:1-8

திருப்பலி முன்னுரை

ஆண்டின் பொதுக்காலம் 29-ஆம் ஞாயிறு நம்பிக்கையோடு செபிக்கவும் செபத்தில் நிலைத்திருக்கவும் அழைப்பு விடுக்கிறது. நமது ஆன்மிக வாழ்வுக்கு அடித்தளமாக இருப்பது செபம்இறையோடும், சகமனிதரோடு நல்லுறவில் வாழவும், வாழ்க்கையின் அர்த்தத்தை உணரவும், கடவுளின் அளவற்ற இரக்கத்தில் நிலைக்கவும், ஆன்மிக வாழ்வில் ஆழம்பெறவும் செபம் நமக்கு அவசியமாகிறது. செபம் எல்லாத் தடைகளையும் துன்பக் கட்டுகளையும் சிறைகளையும் உடைக்க வல்லதுஆழமான நம்பிக்கையோடு கேட்கும்போது கட்டாயம் பெற்றுக்கொள்வோம். ஆண்டவர் இயேசுவின் பெயரை உச்சரித்தவர்கள், அவரது ஆடையைத் தொட்டவர்கள், ‘இயேசுவே, தாவீதின் மகனேஎன்று நம்பிக்கையோடு அறிக்கையிட்டவர்கள், ‘ஆண்டவரே, என் தேவனேஎன்று சரணடைந்தவர்கள் அனைவரும் வாழ்வு பெற்றனர். நாமும் இத்தகைய உள்ளம் கொண்டு ஆழ்ந்த நம்பிக்கையோடு செபிப்போம். தேவைக்காக மட்டும் ஆண்டவரைத் தேடிவராமல் ஒவ்வொரு நிமிடமும் அவரது உடனிருப்பை உணர்வோம். பெற்றுக்கொண்ட நன்மைகளுக்கும் கற்றுக்கொண்ட அனுபவங்களுக்கும் நன்றி கூறுவோம். நமது விருப்பம் விடுத்து, இறைத்திட்டம் அறிந்து வாழ வரம் வேண்டுவோம். ‘இல்லைஎன்று சொல்லாத இறைவனிடம் பிள்ளைகளுக்குரிய பாசத்தோடு கேட்டுக்கொண்டே இருப்போம். பேரன்பால் நம்மைக் காக்கும் இறைவனிடம் முற்றிலும் சரணடைவோம். இறைவனிடம் கேட்பவர்களாய் மற்றும் இருந்துவிடாது, அவரது அன்பையும் பாதுகாப்பையும் இரக்கத்தையும் சுவைத்து நம்பிக்கையின் திருப்பயணிகளாக வாழ்ந்திட  வரம்வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

ஆண்டவரிடம் நம்பிக்கையோடு தொடர்ந்து கேட்கும்போது கட்டாயம் பெற்றுக்கொள்வோம் என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துக்கூறுகிறது. உள்ளத்தை உயர்த்தி உரிமையோடு கேட்கும்போதும் செபத்தில் நிலைத்திருக்கும்போதும் வெற்றியை மட்டுமே அனுபவிப்போம். மோசே கரம் விரித்துப் பல மணிநேரம் செபித்ததால் இஸ்ரயேல் மக்கள் வெற்றி பெற்றனர். நாமும் செபத்தால் வெற்றி காணவும், செபமனிதர்களாக வாழவும் அழைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

நமது கிறித்தவ வாழ்வின் உயிர்நாடியாக இருப்பது இறைவார்த்தை. உலகம் கொடுக்கமுடியாத அமைதியைக் கொடுக்க வல்லது இறைவார்த்தை. நமது வாழ்வை அருள்நிறைந்த வாழ்வாக மாற்றுவது இறைவார்த்தை. இறைவார்த்தையை அன்றாடம் வாசித்து, நம்முடைய வார்த்தையாலும் வாழ்க்கையாலும் இயேசுவை அறிவிக்க அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! எம் திரு அவைத் தலைவர்கள் அனைவரும் உம்மில் நம்பிக்கை கொண்டு வாழவும், உமக்காகப் பணிசெய்து கொண்டும், இறையரசின் மதிப்பீடுகளை விதைத்துக்கொண்டும் இருக்கும் இவர்களுக்கு நீரே துணையாக இருந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. அன்பின் இறைவா! உமது பெயரால் கூடியுள்ள நாங்கள் அனைவரும் உம்மீது கொண்டுள்ள நம்பிக்கையில் ஆழப்படவும், எம்மை விட்டுப் பிரியாத உம் அன்பில் நிலைத்திருக்கவும், உம்மோடு இணைந்து வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. பாசமுள்ள ஆண்டவரே! எங்கள் பங்கின் குடும்பங்களில் அமைதியும் மகிழ்ச்சியும் வளர்ந்திடவும், எங்கள் குடும்பங்கள் அனைத்தும் செபிக்கும் குடும்பங்களாக மாறிடவும், வாழ்வு கொடுக்கும் வார்த்தையான இறைவார்த்தையைத் தவறாது படிக்கவும் தேவையான ஞானத்தை அனைவருக்கும் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. காக்கும் தெய்வமே இறைவா! அருகில் வாழும் மனிதரில் உம்மைக் கண்டிடவும், எங்கள் குழந்தைகளைத் திருமறை கற்பிக்கின்ற நெறிமுறைகளில் வளர்க்கவும் பெற்றோர்களாகிய நாங்கள் எங்கள் குழந்தைகளுக்கு எடுத்துக்காட்டாக வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
பொதுக்காலத்தின் 28 -ஆம் ஞாயிறு, (மூன்றாம் ஆண்டு) (12-10-2025) 2அர 5:14-17; 2திமொ 2:8-13; லூக் 17:11-19

திருப்பலி முன்னுரை

நன்றிகூறும் நல்ல மக்களாக வாழ இந்த ஞாயிறு நமக்கு அழைப்புவிடுக்கிறது. “கடவுளுக்கு இரண்டு உறைவிடங்கள் உள்ளன. ஒன்று, விண்ணகம்; மற்றொன்று நன்றி நிறைந்த இதயம்என்கின்றார் வால்ட்சன். இறைவன் நேரிடையாகவும், பல மனிதர்கள் வழியாகவும் பல அருள்செல்வங்களையும் பொருள் செல்வங்களையும் வாரி வழங்குகின்றார். இறைவனிடமிருந்து நாம் இலவசமாகப் பெற்றுக்கொண்ட இந்த வாழ்க்கைக்காகவும், குடும்பம் மற்றும் சமூக உறவுகளுக்காகவும், அன்றாடம் நாம் உயிர்வாழ அனைத்தையும் தானமாகக் கொடுக்கும் இந்த உலகிற்காகவும் நன்றி கூறுவோம். நாம் பெற்றுக்கொண்ட அனுபவத்திற்காகவும், உறவுகளின் உடனிருப்பிற்காகவும், தக்க நேரத்தில் உதவி செய்து நம்மைத் தாங்கிப்பிடித்த மாமனிதர்களுக்காகவும் நன்றி கூறுவோம். நன்றி என்ற உன்னதமான வார்த்தையை அடிக்கடிப் பயன்படுத்தும் போது இந்த வாழ்க்கையின் அற்புதம் புரியும்; மகத்துவம் தெரியும். ஆண்டவரைத் தேடிவந்து முகங்குப்புற விழுந்து நன்றி கூறிய சமாரியரைப் போன்று இதயத்தால் நன்றி கூறுவோம். இவ்வுலகில் அனுதினமும் எவ்விதக் குறையுமின்றிக் காத்து வருகின்ற இறைவனுக்கு நன்றி கூறி, நன்றி நிறைந்த இதயத்தோடு இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

சிரியா நாட்டுப் படைத்தளபதியான நாமான் தொழுநோயால் பாதிக்கப்பட்டபோது  தனது நாடான சிரியாவைக் கடந்து, தன் நாட்டின் எல்லையைக் கடந்து, தனது எதிரி நாடான இஸ்ரயேலின் கடவுளையும் இறைவாக்கினர் எலிசாவை அணுக முடிந்தது; ஆண்டவரின் வல்லமையை அனுபவிக்க முடிந்தது. தன்னுடைய நிலையிலிருந்து இறங்கியதால் குணம்பெற்ற நாமானைப் போன்று, நாமும்நான்என்ற நிலையிலிருந்து இறங்கி வந்து உடல்நலமும் மனநலனும் பெற அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

ஆன்மிக வாழ்விலும் அகவாழ்விலும் அனுதின வாழ்விலும் முதிர்ச்சி பெற்ற மனிதர்களால் மட்டுமே வாழ்வின் அனைத்து நிலைகளிலும் ஆண்டவருக்கு நன்றி செலுத்த முடியும். ஆண்டவரை நம்பி நாம் தொடங்கும் அனைத்திலும் வெற்றி காண்போம். தமது உயிரைக் கொடுத்து நமக்கு வாழ்வு கொடுத்த இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டும், அவரது வார்த்தையில் பற்றுறுதி கொண்டும் பயணிக்க அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! எம் திரு அவையை வழி நடத்த நீர் கொடுத்த திரு அவைத் தலைவர்கள் வழியாக ஒவ்வொரு நாளும் உமது அன்பையும் பாசத்தையும் அனுபவித்து, வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் உமக்கு நன்றி கூறும் நல்ல மக்களாக நாங்கள் வாழ்ந்திட வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. பாசமுள்ள ஆண்டவரே! அழகான இந்த உலகில் ஆனந்தமாய் நாங்கள் வாழ நீர் எமக்குக் கொடுத்த  இந்த வாழ்வுக்காகவும், நாங்கள் அனைவரும் பெற்றுக்கொண்ட அனைத்து நன்மைகளுக்காகவும் உமக்கு நன்றி கூறும் நல்ல மனத்தை எங்கள் அனைவருக்கும் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. பாதுகாக்கும் ஆண்டவரே! நாங்கள் கேட்பது கிடைக்காதபோது மனம் சோர்ந்து போகாது, எங்கள் தேவையறிந்து சரியான நேரத்தில் கொடுப்பீர் என்ற நம்பிக்கையில் நாளும் வளரவும், உள்ள உறுதியோடு வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. பத்துத் தொழுநோயாளர்களுக்குக் குணம் கொடுத்த ஆண்டவரே! அச்சம் தரும் அனைத்துவிதமான நோய்களினின்று எம்மையும் எமது குடும்பத்தையும் எம் பங்கிலுள்ள மக்களையும் இவ்வுல மக்களையும்  காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
அக்டோபர் 05, 2025, ஆண்டின் பொதுக்காலம் 27-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) அப 1:2-3; 2:2-4; 2திமொ 1:6-8,13-14; லூக் 17:5-10

திருப்பலி முன்னுரை

நான் உங்களோடு இருக்கிறேன்என்று கூறி  நம்முடன் பயணிக்கும் இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டு வாழ ஆண்டின் பொதுக்காலம் 27-ஆம் ஞாயிறு நமக்கு அழைப்புவிடுக்கிறது. நம்பிக்கை மட்டுமே இந்த உலகத்தையும் உள்ளங்களையும் உயிர்களையும்  நம்மையும்  நகர்த்திக் கொண்டிருக்கிறது. நம்பிக்கை நமது வாழ்வின் அடித்தளமாக இருக்கும்போதுதான் ஆண்டவரையே அனுபவிக்க முடியும். இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டவர்கள், நம்பிக்கையோடு அவரது பெயரை உச்சரித்தவர்கள், இயேசு குணம் கொடுப்பார் என்று நம்பியவர்கள், ‘இயேசுவே நீரே வாழும் கடவுளின் மகன்என்று சரணடைந்தவர்கள் அனைவருக்கும் இயேசு வாழ்வு கொடுத்தார். ஒதுக்கப்பட்ட தொழுநோயாளர்களைத் தேடிச்சென்று சுகம் கொடுத்து நம்பிக்கையை மிகுதியாக்கினார். நம்பிக்கை இருந்தால்தான் கடவுளின் வல்லமையை உணரமுடியும்; நம்பிக்கை இருந்தால் மட்டுமே ஆண்டவரின் அளவில்லாத அன்பைச் சுவைக்க முடியும். ஆழமான நம்பிக்கை இருந்தால் நம்மாலும் அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்ய முடியும். இன்றைய நற்செய்தியில் சீடர்கள் இயேசுவிடம் கேட்டது போன்று நாமும்ஆண்டவரே! எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்என்று கேட்போம். வாழ்க்கையில் எந்த நிலையிலும் இயேசுவின்மீது கொண்ட நம்பிக்கையில் தளர்ச்சி அடையாது வாழ வரம் வேண்டுவோம். இமைப்பொழுதும் விலகாமல் நம்மோடு வாழும் இயேசுவோடு நாம் வாழ்வோம். நமது தாய் அன்னை மரியாவைப் போன்று ஆண்டவர்மீது அளவு கடந்த நம்பிக்கை கொண்டு வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்

முதல் வாசகம் முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் அபக்கூக்கு, பாபிலோனியர் கொடுமை செய்வதையும் கொள்ளையடிப்பதையும் கண்டு மனம் வெதும்பி ஆண்டவரை நோக்கிக் கேள்வி எழுப்புகின்றார். அபக்கூக்கின் இக்கேள்விக்குக் கடவுள், தாம் குறித்த நேரத்தில் தண்டனைத் தீர்ப்பை நிறைவேற்றுவதாகவும், நேர்மையுடையோர் கடவுள்மீது கொண்ட நம்பிக்கையால் வாழ்வர் என்ற நம்பிக்கையையும் கொடுக்கிறார். கடவுள்மீது நம்பிக்கை கொண்டு வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

கடவுள் நமக்கு தமது வல்லமையையும் அருளடையாளங்களையும் கொடுத்து வழிநடத்தி வருகின்றார். நாம் சோர்ந்து போகும் நேரங்களில் தூய ஆவியார் வழியாக நம்மைத் திடப்படுத்துகின்றார். நம்பிக்கை வாழ்வில் சோர்வு ஏற்படும்போது, தம்முடைய ஆற்றல் மிக்க வார்த்தையால் நமக்கு நலம் தருகின்றார். நம்மைக் காக்கும் ஆண்டவரிடம் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு வாழ வரம் வேண்டி இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்

மன்றாட்டுகள்

1. ‘நானே நல்ல ஆயன்என்று மொழிந்த ஆண்டவரே! எம் திரு அவைத் தலைவர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களை நம்பிக்கையின் பாதையில் வழிநடத்தவும், நம்பிக்கை கொண்டு உறுதியோடு உழைக்கவும் தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. ‘நான் உங்களோடு இருக்கின்றேன்என்று மொழிந்த ஆண்டவரே! உமது உடனிருப்பை அனுபவித்து வாழும் நாங்கள், ஒருவர் மற்றவருக்கு நம்பிக்கையின் தூதுவர்களாக வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. உலகிற்கு ஒளியான ஆண்டவரே! கல்வி என்ற அறிவொளியை இவ்வுலகில் ஒளிர்வித்துக் கொண்டிருக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் நற்சுகம் தந்து வழிநடத்தவும், கருத்தாய் பணிசெய்வதற்கான விவேகத்தையும் தந்து காத்திட வேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்;.

4. நலம் கொடுக்கும் நல்லவரான ஆண்டவரே! எம் நாட்டிலும் பங்கிலும் குடும்பத்திலும் தீராத நோய்களால் துன்பப்படும் அனைவருக்கும் நல்ல சுகத்தைக் கொடுத்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.