news
ஞாயிறு தோழன்
ஆண்டின் பொதுக்காலம் 18-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) (03-08-2025) சஉ 1:1:2;2:21-23; கொலோ 3:1-5,9-11; லூக் 12:13-21

திருப்பலி முன்னுரை

நமது வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு அடித்தளமாக இருப்பது ஆன்மிகச் செல்வமாகிய இறைஞானமே என்பதைப் பற்றிச் சிந்திக்க இன்று நாம் அழைக்கப்படுகிறோம். செல்வங்களைக் கொண்ட வாழ்க்கைதான் உயர்வானது என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். இன்று செல்வந்தர்களுக்கே சென்ற இடமெல்லாம் மதிப்பும் மரியாதையும் கிடைக்கிறது. ஆகவே, உலகச் செல்வங்களான பணம், பதவி, பொன், பொருள், பட்டம் அதிகம் உள்ளவர்களை உயர்ந்த மனிதர்களாக நினைக்கிறோம். இன்று சொத்துத் தகராறில் எத்தனை குடும்பங்கள் உறவுகளை இழந்து நிற்கின்றன? சொத்துக்காக உடன்பிறப்புகளையே  உதாசீனப்படுத்தியவர்கள்தானே? உலகச் செல்வங்களைச் சேர்க்க வேண்டும் என்பதற்காக அல்லும் பகலும் அயராது உழைக்கிறோம். இன்னும் சேர்க்கவேண்டும் என்று பேராசைப்படுகின்றோம். இவ்வுலகச் செல்வங்கள் அனைத்தும் நிரந்தரமில்லாதவை. அவை நமக்கு நிம்மதியைத் தருவதில்லை.   ஆகவே விண்ணுலகச் செல்வங்களாகிய அன்பு, நீதி, உண்மை, நேர்மை, விட்டுக்கொடுத்தல் போன்ற மதிப்பீடுகளைத் தேடுவோம். உலகச் செல்வத்தைவிட இறைஞானம் சிறந்தது. மண்ணகச் செல்வங்களை இழந்து விண்ணகச் செல்வங்களைச் சேர்த்தவர்கள்தான் புனிதர்கள். அழிந்துபோகும் செல்வங்களை விடுத்து, அழியாத நிலைவாழ்வைப் பெற்றிட வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

உண்பதற்கும் உறங்குவதற்கும் நேரமின்றி உழைக்கிறோம். விருந்தினர்களை, உறவினர்களை உபசரிக்க நேரமின்றி உழைக்கிறோம். அருகில் வாழும் மனிதர்களின் இன்ப-துன்பங்களைப் பகிர்ந்துகொள்ள நேரமின்றி உழைக்கிறோம்கடவுளைத் தேடுவதற்கும், குடும்பமாய் செபிப்பதற்கும், குடும்பத்தோடு உறவாடுவதற்கும் நேரமின்றி உழைக்கிறோம். 24 மணி நேரமும் செல்வம் சேர்ப்பதில் கவனமாக இருக்கிறோம். ‘இவையெல்லாம் வீண்என்கிறார் சபை உரையாளர். ஆண்டவனின் அருளைத் தேடி, ஒளியின் பாதையில் வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

ஆன்மாவிற்குக் கேடுவிளைவிக்கும் ஒழுக்கக்கேடு, பரத்தமை, தீயநாட்டம், தனிமனிதச் சிலைவழிபாடு, குறிபார்ப்பது, சகுனம் பார்ப்பது, பழிவாங்குதல், பொய் என்று தெரிந்தும் உண்மைபோல் பேசுவது, களவு, பேராசை, தவறு செய்வதற்குப் பயப்படாத உள்ளம், ஆணாதிக்கம், சந்தேகம், கெட்டநடத்தை போன்ற செயல்களிலிருந்து விடுபட்டு, புனிதத்தில் வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. நல்ல ஆயனே இறைவா! எம் திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் மற்றும் பொதுநிலையினர் அனைவரையும் ஆசிர்வதியும். இவர்கள் தங்கள் தலைமைப் பொறுப்பில்  நல்ல ஆயன்களாக இருந்து மக்களை இறையாட்சியின் மதிப்பீடுகளின்படி வழிநடத்தவும், நிலையான செல்வமாகிய உம்மைப் பற்றிக்கொண்டு வாழவும் தேவையான அருள்வரங்கள் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. ‘நான் உங்களோடு இருக்கிறேன்என்று மொழிந்த ஆண்டவரே! உமது பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் அழிந்துபோகக்கூடிய செல்வத்தின்மீது பற்று வைக்காமல், இமைப்பொழுதும் எம்மைவிட்டு  நீங்காத உம்மீது நம்பிக்கை கொண்டு வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எம்மோடு வாழும் ஆண்டவரே! எங்கள் பங்கில் உள்ள குடும்பங்களுக்காக வேண்டுகிறோம்அன்பு, மன்னிப்பு, உண்மையான பாசம், விட்டுக்கொடுத்தல், சமத்துவம் போன்ற பண்புகளில் எங்கள் குடும்பங்கள் வளர்ந்திடவும், ஒருவர் மற்றவருக்குச் சாட்சிய வாழ்வு வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. எம்மோடு பயணிக்கும் ஆண்டவரே! பாவம் என்று அறிந்தும் பயமின்றி வாழும் தீய செயல்களிலிருந்து விலகி புனித வாழ்வு வாழவும், இறைவன் கொடுத்த இந்த மகத்தான வாழ்க்கைக்காக நன்றிகூறி, கடவுளின் திருவுளம் அறிந்து தூய்மையான வாழ்வு வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
ஆண்டின் பொதுக்காலம் 17-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) (27-07-2025) தொநூ 18:1-10; கொலோ 1:24-28; லூக் 10:38-42

திருப்பலி முன்னுரை

செபத்தின் முக்கியத்துவத்தையும் மகத்துவத்தையும் பற்றிச் சிந்திக்க ஆண்டின் பொதுக்காலம் 17-ஆம் ஞாயிறு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நமக்கும் கடவுளுக்கும் உள்ள உறவே செபம். கடவுளோடு தங்குவதும், அவர் பேசுவதைக் கேட்பதும், அவரது உடனிருத்தலை உணர்வதும், கடவுளைச் சுவைப்பதும், நாம் இறைவனோடு இருக்கவேண்டும் என்று விரும்பி நமது எண்ணத்தையும் இதயத்தையும் இறைவன்பக்கம் திருப்புவதும் செபமாகும். புனித ஜான் மரிய வியான்னி, “கடவுள் உலகை ஆள்கின்றார்; செபிக்கத் தெரிந்த மனிதனோ கடவுளையே ஆள்கின்றார்என்கிறார். செபத்தால் ஆகாதது எதுவுமே இல்லை. இயேசு கற்றுக்கொடுத்தவிண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையேஎன்ற செபம் இயேசு கற்றுத்தந்த செபங்களுக்கெல்லாம் முதன்மையான செபமாகக் கருதப்படுகிறது. இச்செபத்தில் நாம் ஒரு குழந்தையைப்போலதந்தைஎன்ற உரிமையுடன் கடவுளிடம் கேட்க வேண்டும் என்றும், கடவுள் கொடுப்பார் என்ற ஆழ்ந்த நம்பிக்கையோடு செபிக்க வேண்டும் என்றும், இறைத்திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து வாழவேண்டும் என்றும் இயேசு கூறுகின்றார். ஆகவே, அவர் நமக்குக் கற்றுத்தந்த செபத்தில் எப்போதும் நிலைத்திருந்து, செபத்தால் வெற்றி காண வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை: நம் கடவுள் இரக்கமுள்ள தந்தை, பரிவுள்ள கடவுள். நம்முடைய செயல்களின்படி தண்டிக்காமல் தமது பேரிரக்கத்தால் நம்மைக் காப்பவர். நாம் அனைவரும் வாழவேண்டும் என்று விரும்பும் உன்னதர். மன்னிப்பைத் தடையின்றி தாராளமாகத் தருபவர் என்று கூறி இறைவனின் இரக்கத்தை உணர அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை: கடவுள் நம்மீது கொண்டுள்ள அன்பினால் நம்முடைய குற்றங்களைப் பெரிதுபடுத்தாமல் தமது இரக்கத்தால் நம்மை வாழ வைக்கிறார். சிலுவையில் தாம் சிந்திய இரத்தத்தால் நம் அனைவரையும் மீட்டு தம் சொந்த பிள்ளைகளாக்கியுள்ளார். அளவில்லாது மன்னித்து, நிபந்தனையின்றி நம்மை அன்பு செய்து காக்கும் இறைவனின் பேரன்பைக் கூறும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! எம் திரு அவைத் தலைவர்கள் அனைவரும் அழைத்த உம்மில் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழவும், செபத்தில் நிலைத்திருந்து உமது பணியைத் துடிப்புடன் செய்யவும், தேவையான மனவலிமையைத் தந்து காத்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. காத்து வழிநடத்தி வரும் ஆண்டவரே! உமது பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் தேவைக்காக மட்டும் செபிப்பவர்களாக இல்லாமல், எங்கள் தேவையே செபமாக மாறவும், எப்போதும் செபத்தில் நிலைத்திருந்து உம் அன்பைச் சுவைக்கவும் தேவையான அருள்வரங்களை எமக்குத் தந்து வழிடத்த வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. அன்பின் ஆண்டவரே! நீர் எங்களுக்குக் கற்றுக்கொடுத்த செபத்தின் பொருள் உணர்ந்து செபிக்கவும், அந்தச் செபம் உணர்த்தும் கருத்துகளை வாழ்வாக்கவும், மனச்சோர்வு ஏற்படுகின்ற நேரத்தில் நம்பிக்கையோடு தொய்வின்றிச் செபிக்கவும் தேவையான மனவலிமையை எமக்குத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. அன்பின் இலக்கணமே எம் இறைவா! எம் மறைமாவட்டத்திலும் பங்கிலும் குடும்பத்திலும் உள்ள குழந்தைகள் அனைவரும் இளம் வயதிலிருந்தே உம்மீது நம்பிக்கை கொண்டு வாழவும், கடவுளைப் பற்றிய அறிவில் நாளும் வளரவும் தேவையான ஞானத்தை எமது குழந்தைகளுக்குத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
ஜூலை 20, 2025, ஆண்டின் பொதுக்காலம் 16-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) தொநூ 18:1-10; கொலோ 1:24-28; லூக் 10:38-42

திருப்பலி முன்னுரை

இயேசுவோடு உடனிருந்து சீடத்துவ வாழ்வில் சிறந்து விளங்க, ஆண்டின் பொதுக்காலம் 16-ஆம் ஞாயிறு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இன்றைய நற்செய்தியானது விருந்தோம்பல் என்பது உணவளித்து மகிழ்வதில் மட்டுமல்ல; மாறாக, விருந்தினர்களோடு உளமார உரையாடி உறவை வளர்ப்பதும், அவர்களின் இன்ப-துன்பங்களைப் பகிர்ந்துகொள்வதும் சிறந்த விருந்தோம்பலாகும் என்பதை நமக்கு அறிவுறுத்துகிறது. மார்த்தா-மரியா இருவரும் இயேசுவின்மீது கொண்டிருந்த நம்பிக்கை அசாத்தியமானது. மார்த்தாவிற்கு இயேசுவுக்குப் பணிவிடை செய்யும் பாக்கியமும், மரியாவிற்கு இயேசுவின் காலடியில் அமர்ந்து அவரது போதனையைக் கேட்கும் பாக்கியமும் கிடைக்கிறது. மார்த்தாவும்-மரியாவும் இயேசுவை அன்புடன் உபசரித்தனர். இருவரும் ஆண்டவரில் மகிழ்ந்திருந்தனர். இயேசுவே இவர்களின் இல்லத்தைத் தேடிச்சென்று மகிழ்ச்சியைக் கொடுக்கின்றார், உறவை வலுப்படுத்துகின்றார். மார்த்தா-மரியா இல்லம் சென்ற இயேசு நம் இல்லத்திற்கு வரவேண்டுமென்றால் அன்றாடம் நமது வாழ்க்கையில் ஏழைகள், அனாதைகள், கைவிடப்பட்டவர்கள் அனைவரிலும் உள்ள இயேசுவைக் கண்டு, அவர்களுக்கு உணவு கொடுப்போம். அன்றாடம் திருப்பலி, இறைவார்த்தை, ஆராதனை இவற்றின் வழியாக அனுபவிக்கும் இயேசுவை உடன் வாழும் அனைவரும் அனுபவிக்கச் செய்வோம். நமது உள்ளத்தை இயேசு தங்கும் ஆலயமாக்குவோம். அன்பிலும் பகிர்விலும் உறவிலும் விருந்தோம்பலிலும் இறைவேண்டலிலும் நாளும் நமது குடும்பங்கள் வளர்ந்திட வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

விருந்தோம்பல் உறவை வளர்க்கும் உன்னதப் பண்பாகும். விருந்தினரைப் போற்றுதல் அறிவுடைமைக்கு அழகு. விருந்து கொடுப்பது பெறக்கூடிய பேறுகளுள் நற்பேறாகும். நமது இல்லத்தைத் தேடிவரும் அனைவருக்கும்  மனமகிழ்ச்சியோடு  அன்பாக உணவிடும்போது இரட்டிப்பான ஆசிகளைப் பெற்றுக்கொள்கிறோம் என்பதை விளக்கிக் கூறும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.  

இரண்டாம் வாசகம் முன்னுரை

கிறிஸ்து நமக்காக உலகிற்கு வந்தார். உயிரைக் கொடுத்து உலகத்தை மீட்டார். நாம் அனைவரும் கிறிஸ்துவின் இரத்தத்தால் விலைகொடுத்து மீட்கப்பட்டவர்கள். அவரது சாயலைப் பெற்றுள்ளோம். நமக்குள் வாழும் கிறிஸ்துவை நற்செயல்களின் வழியாக அறிவிப்பது நமது கடமை. கிறிஸ்துவோடு இணைந்து, அவரின் அன்பைச் சுவைத்துப் பலமடங்குப் பலன் கொடுத்து வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! எம் திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், அருள்பணியாளர்கள் மற்றும்  துறவிகள் அனைவரும் உம் குரலுக்குச் செவிசாய்த்து வாழவும், இறையொளியின் பாதையில் வழிநடத்தவும் தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. எம்மோடு பயணிக்கும் ஆண்டவரே! நாங்கள் அனைவரும் எம்மைச் சந்திக்கும் மற்றும் நாங்கள் சந்திக்கும் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் அமைதியையும் கொடுக்கக்கூடிய வகையில் எமது சொற்களும் செயல்களும் அமைந்திடத் தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எமக்கு வாழ்வு கொடுக்க வந்த ஆண்டவரே! உம் பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் மரியாவைப் போன்று உம் பாதத்தில் அமர்ந்து ஆசையோடு உம் வார்த்தையைக் கேட்கவும், மார்த்தாவைப் போன்று எங்களை நாடிவரும் அனைவருக்கும் அன்போடு விருந்தளிக்கவும் தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. எம்மைப் படைத்துக் காத்துவரும் ஆண்டவரே! எம் பங்கில் உள்ள குழந்தைகள் இறைவார்த்தையை ஆர்வத்தோடு படிக்கவும், மறைக்கல்வி வகுப்பில் தவறாது கலந்து கொண்டு திரு அவை கற்பிக்கும் வழியில் வாழவும் தேவையான ஞானத்தை எம் குழந்தைகளுக்குத் தந்து வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
ஆண்டின் பொதுக்காலம் 15-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) (13-07-2025) இச 30:10-14; கொலோ 1:15-20; லூக் 10:25-37

திருப்பலி முன்னுரை

ஆண்டின் பொதுக்காலம் 15-ஆம் ஞாயிறான இன்று அன்னையாம் திரு அவை நல்ல சமாரியனாக வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறது. ஆலயத்தில் மட்டுமல்ல, அடுத்தவரிலும் ஆண்டவரைக் கண்டு உதவி செய்து வாழும் நல்லோர்களால்தான் இன்றும் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. எருசலேமிலிருந்து எரிகோ செல்லும் பாதையில் ஒருவர் கள்வர் கையில் அகப்பட்டுக் குற்றுயிராகக் கிடக்கிறார். குருவும் லேவியரும் அந்த நபரைக் கண்டும் காணாமல் செல்கின்றனர். மனிதன் கடவுளின் சாயல். உடன் வாழும் அனைத்து மனிதரிலும் கடவுளைக் கண்டு எதையும் எதிர்பார்க்காது, தேவையறிந்து உடனே உதவி செய்பவரே கடவுளைப் பிரதிபலிக்கும் நல்ல சமாரியர். உடன் வாழும் சகோதரர்கள் துன்பப்படும்போது அதைக் கண்டுகொள்ளாமல் இருப்பது பாவம். நல்ல சமாரியராக வாழ வீதிகளுக்குச் சென்று உதவத் தேவையில்லை; நம்முடைய வீடுகளில் உள்ள நோயுற்றோரை, முதியோரை நாம் கவனிக்கிறோமா? நம்முடைய தாத்தா-பாட்டி, மாமனார்-மாமியார், தாய் மற்றும் தகப்பனை முதியோர் இல்லத்தில் தவிக்கவிடாமல் இருப்பதே நல்ல சமாரியர்களாக வாழ்கிறோம் என்பதை உறுதிப்படுத்தும் சான்று. அன்புக்காக, உறவுக்காக, உடனிருப்பிற்காக, உள்ளத்துச் சுமைகளை இறக்கி வைப்பதற்காக, மனம்விட்டுப் பேசுவதற்காகக் காத்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நல்ல சமாரியனாக இருந்து உதவிடுவோம்இயேசுவைப் போன்று நம்முடைய சிந்தனையால், சொல்லால், செயல்களால் நல்ல சமாரியனாக வாழ்ந்திட வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

ஆண்டவரின் கட்டளைகள் அனைத்தும் அன்பை அடித்தளமாகக் கொண்டவை. நம் வாழ்வுக்கு அகவொளியைத் தருபவை. ஒளியின் பாதையில் பயணிக்க உதவுபவை. எனவே, ஆண்டவரின் பிள்ளைகளாகிய நாம் இருளின் செயல்களான பகை, கோபம், வெறுப்பு, மன்னிக்காமை போன்றவற்றை விடுத்து, நாளும் ஆண்டவரின் அன்புக் கட்டளையில் வளரவும், இறைவார்த்தையைப் படித்து அதை வாழ்க்கையால் அறிவிக்கவும் அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

இவ்வுலகில் உள்ள அனைத்தையும் தமது சாயலில் படைத்த இறைவன், தமது மகனை இவ்வுலகிற்கு அனுப்பி மானுட வாழ்வுக்கு மீட்பைக் கொடுத்தார். வேற்றுமைகளைக் களைந்து இறைவனால் படைக்கப்பட்ட அனைத்தையும்- அனைவரையும் ஒப்புரவாக்கினார். கடவுளின் மீட்பைப் பெற்றுள்ள நாம் இவ்வுலகில் உள்ள அனைத்து உயிர்களிலும் இறைமையைக் காணவும், நம் வாழ்க்கையின் வழியாக இறைசாயலை வெளிப்படுத்தவும் அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்

மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! உமது அன்புப் பணியைச் செய்வதற்கு நீர் தேர்ந்துகொண்ட எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் அனைவரும் உமது அளவில்லாத அன்பைச் சுவைத்து, காலத்திற்கேற்ப கருத்தாய்ப் பணிபுரிந்திட தேவையான ஞானத்தைக் கொடுத்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. நல்ல சமாரியராக இருந்து எம்மைக் காக்கும் ஆண்டவரே! நாங்கள் உடன்வாழும் சகோதர - சகோதரிகளின் தேவையறிந்து உதவி செய்திடவும், மற்றவர்களின் காயத்திற்கு மருந்தாகிடவும் தேவையான நல்ல மனத்தை எமக்குத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. நல்ல ஆயனே! எம் நாட்டுத் தலைவர்கள் மக்களின் தேவையறிந்து கொடுக்கும் நல்ல ஆயர்களாக வாழ்ந்திடத் தேவையான நல்மனத்தைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. அன்பின் ஆண்டவரே! அனைத்துக் குழந்தைகளும் பகிர்ந்து வாழ்வதிலும், குறிப்பறிந்து உதவி செய்வதிலும், அன்பாகப் பழகுவதிலும் வளரத் தேவையான வரங்களைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
ஆண்டின் பொதுக்காலம் 14- ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) (06-07-2025) எசா 66:10-14; கலா 6:14-18; லூக் 10:1-12, 17-20

திருப்பலி முன்னுரை

ஆண்டின் பொதுக்காலத்தின் 14-ஆம் ஞாயிறை இன்று சிறப்பிக்கின்றோம். இன்றைய நற்செய்தியில் இயேசு தம்முடைய சீடர்களிடம், “நீங்கள் எந்த வீட்டிற்குள் சென்றாலும்இந்த வீட்டுக்குள் அமைதி உண்டாகுகஎன முதலில் கூறுங்கள்என்கிறார். “இறைவா, எங்களை நீர் உமக்காகப் படைத்திருக்கின்றீர். நாங்கள் உம்மை அடையும் வரை எங்களிலே நிம்மதி கிடையாது, அமைதி கிடையாதுஎன்கிறார் புனித அகுஸ்தினார். இறைவனோடு இணைந்திருந்தால் மட்டுமே அமைதியை அனுபவிக்க முடியும்; மற்றவர்களுக்கும் கொடுக்க முடியும். வாழ்க்கையில் அமைதி இல்லாமல் வாடும்போதும், துன்பத்திற்கு மேல் துன்பம் வரும்போதும், கவலைக்குமேல் கவலை வரும்போதும் ஆண்டவரிடம் தஞ்சம் புகுவோம். அவர் நமக்குக் கேடயமாக, மீட்பாக இருந்து நம்மை அமைதியின் பாதையில் வழிநடத்துவார். ஆண்டவரில் அமைதியைச் சுவைத்து அதை எடுத்துச்செல்வோம். பணத்தையோ, அதிகாரத்தையோ, பதவியையோ கொண்டு அமைதியை வாங்க முடியாது. ஆண்டவரிடம் நம்மையே கொடுக்கும்போதுதான் அமைதியைப் பெற்றுக்கொள்ள முடியும். இயேசுவின் சீடர்கள் தங்களையே இயேசுவிடம் ஒப்படைத்தார்கள், இயேசுவிடம் சுவைத்த அமைதியை அவர்கள் சென்ற இடமெல்லாம் கொடுத்தார்கள். நாமும் ஆண்டவர் வழங்கும் அமைதியை அனுபவித்துஅனைவருக்கும் கொடுத்து உயிருள்ள சாட்சிகளாய் சீடத்துவ வாழ்வில் சிறந்து  வாழ வரம்வேண்டி இத்திருப்பலியில் இணைவோம்.

முதல் வாசகம் முன்னுரை

நமது கடவுள், அவருடைய பிள்ளைகளாகிய நாம் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்வதையே விரும்புகின்றார். நலமும் வளமும் அன்றாடம் கொடுத்து நம்மை மகிழ்ச்சியின் பாதையில் வழிநடத்தி வருகின்றார். நன்மைகளாலும் நலன்களாலும் நிறைத்து, நிறைவோடு வாழவைக்கும் இறைவனில் மகிழ்ந்திருக்க அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

நம்முடையதுஎன நாம் நினைத்துக்கொண்டிருக்கும் அறிவு, திறமை, ஆற்றல், வாழ்க்கை, குடும்பம், சொத்து, சுகம் இவற்றில் நாம் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். ஆனால்சிலுவையைச் சுமந்து நமக்குப் புதிய வாழ்வைக் கொடுத்த இயேசுவின் பிள்ளைகள் நாம் என்பதில்தான் பெருமை கொள்ள வேண்டும். நமக்கு வாழ்வு கொடுத்த சிலுவையின்மீது நம் கண்களைப் பதிய வைத்து, துன்பங்களைத் துணிவோடு ஏற்று வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அமைதியின் தெய்வமே எம் இறைவா! எம் திரு அவைத் தலைவர்கள் அனைவரும் உம்மில் நிலைத்து, உம் அன்பைச் சுவைத்து வாழவும், அவர்களின் பணிவாழ்வில் நாங்கள் துணைநிற்கவும் தேவையான அருளைத் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

2. ‘நான் உங்களோடு இருக்கிறேன்என்று மொழிந்த ஆண்டவரே! நாங்கள் உம்மில் நிலைத்திருந்து பல மடங்கு பலன் கொடுத்து வாழவும், உம்மீது கொண்ட நம்பிக்கையில் ஆழம்பெறவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எம்மோடு வாழும் ஆண்டவரே! ஒப்பற்ற செல்வமாகிய உம்மை அனைத்திற்கும் மேலாகத் தேடவும், மற்றவர்களில் வாழும் கடவுளைக் கண்டு கொள்ளவும் தேவையான ஞானத்தை எமக்குத் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. ஞானத்தின் ஊற்றான ஆண்டவரே! எம் மறைமாவட்டத்திலும் பங்கிலும் உள்ள குழந்தைகள், கடவுளைப் பற்றி அறிவதில் ஆர்வம் காட்டத் தேவையான ஞானத்தைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
புனிதர்கள் பேதுரு, பவுல்: திருத்தூதர்கள் (மூன்றாம் ஆண்டு) (29-06-2025) திப 12:1-11; 2திமொ 4:6-8, 17-18; மத் 16:13-19

திருப்பலி முன்னுரை

அகில உலகக் கத்தோலிக்கத் திரு அவையின் இருபெரும் தூண்களாகிய புனித பேதுரு, புனித பவுல் இவர்களின் விழாவினை இன்று நாம் கொண்டாடுகிறோம். மீனவரான பேதுரு இயேசுவால் நேரடியாக அழைக்கப்படுகிறார்; யூதச்சட்டங்களைக் கற்றுத் தேர்ந்தவரான பவுல், கிறித்தவர்களைச் சிறைப்பிடிக்க தமஸ்கு நகர் செல்லும் வழியில் உயிர்த்த இயேசுவால் தடுத்தாட்கொள்ளப்படுகிறார். பேதுரு யூத மக்களுக்கு மத்தியில் கிறிஸ்துவைப் போதிக்கிறார். பவுலடியாரோ பிற இனத்தாருக்கும் கிறிஸ்துவைக் கொண்டு செல்கின்றார். பேதுரு இயேசுவைநீரே மெசியா, வாழும் கடவுளின் மகன்என அறிக்கையிட்டார். பவுலடியார், “வாழ்வது நானல்ல, கிறஸ்துவே என்னில் வாழ்கின்றார்என்று முழக்கமிட்டார். பேதுரு இயேசு கிறிஸ்துவுக்காகச் சிலுவையில் தலைகீழாக அறையப்பட்டு இரத்தம் சிந்தி உயிர்விடுகிறார். பவுலடியார் இயேசுவுக்காகத் தலை வெட்டப்பட்டு இரத்தம் சிந்தி உயிர்விடுகிறார். இருவரும் இரத்தம் சிந்தித் திரு அவையை வளர்த்தவர்கள். இந்நாளில் நாம் அனைவரும் இயேசுவின்மீது ஆழ்ந்த நம்பிக்கைகொண்டு வாழவும், இயேசுவை நம் வாழ்க்கையால் அறிவிக்கவும், இயேசுவுக்காக உயிரையும் கொடுக்கும் சீடத்துவ வாழ்வில் சிறக்கவும் வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

இயேசு தம் பணிக்காகத் தேர்ந்துகொண்ட மக்களை ஒருநாளும் கைவிடமாட்டார். அவர்களுக்கு அரணாகவும் கோட்டையாகவும் இருந்து காத்திடுவார். தம் தூதர்களைக் கொண்டு அவர்களைத் தாங்கிடுவார் என்பதை எடுத்துக்கூறும் இன்றைய முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்

இரண்டாம் வாசகம் முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகம் நாம் எவ்வாறு வாழவேண்டும்? எதை நோக்கி நாம் பயணிக்க வேண்டும்? என்பதையும், ஆண்டவருக்காக வாழும்போது அனைத்து வகையான அச்சத்தினின்றும் அவரே நம்மைக் காப்பார்  என்பதையும் தெளிவாக உணர்த்தும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! திரு அவையின் மாபெரும் தூண்களாகிய புனித பேதுரு, புனித பவுல் இவர்களின் பெருவிழாவைக் கொண்டாடும் இந்நாளில், எம் திரு அவைத் தலைவர்களுக்காகச் செபிக்கிறோம். இவர்கள் நற்செய்தியைத் தொய்வின்றி அறிவிக்கவும், நம்பிக்கையில் நிலைத்துச் சிறந்த சீடர்களாக வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. இரக்கத்தின் ஆண்டவரே! இத்திருப்பலியில் கலந்துகொண்டுள்ள எங்கள் அனைவரையும் ஆசிர்வதியும். நற்செய்தி அறிவிப்பதில் புனிதர்கள் பேதுரு, பவுலைப் போன்று துணிவுள்ளவர்களாக வாழத் தேவையான மனவலிமையை எங்களுக்குத் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3.  நம்பிக்கையின் ஆண்டவரே! நாங்கள் அனைவரும் திருப்பலி, நற்கருணை ஆராதனை, அன்பியக் கூட்டங்கள் அனைத்திலும் தவறாது கலந்துகொண்டு, உடன் வாழும் மக்களுக்கு உயிருள்ள இயேசுவை அறிவிக்க வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. பாதுகாக்கும் ஆண்டவரே! இன்றைய புனிதர்களின் நாமத்தைத் தாங்கிய அன்பர்களையும் ஆலயங்களையும் உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம். அனைவரையும் ஆசிர்வதித்து, இயேசுவின்மீது நம்பிக்கையில் வளரத் தேவையான வரங்களைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.