news
ஞாயிறு தோழன்
சனவரி 01, 2026, புனித மரியா கடவுளின் தாய் - எண் 6: 22-27; கலா 4: 4-7; லூக் 2: 16-21

திருப்பலி முன்னுரை

இறை இயேசுவில் அன்புள்ள சகோதர-சகோதரிகளே! 2025-ஆம் ஆண்டு முழுவதும் நாம் பெற்றுக்கொண்ட நன்மைகளுக்கு நன்றிகூறி, 2026-ஆம் ஆண்டு மகிழ்வின் ஆண்டாக அமையும் என்ற நம்பிக்கையோடு உங்களை வாழ்த்தி திருப்பலிக்கு அன்போடு அழைக்கிறோம்அன்னையாம் திரு அவை இன்றுஅன்னை மரியா கடவுளின் தாய்என்ற விழாவைக் கொண்டாடி மகிழ நமக்கு அழைப்புவிடுக்கிறது.

அன்னை மரியா அருள் மிகப்பெற்றவர்; அழகு நிறைந்தவர்; இயேசுவைத் தம் கருவில் சுமந்த நற்கருணைப் பேழை; வாழ்வோர் அனைவரின் தாய்; மீட்பு வரலாற்றின் உன்னத உயிர்! இம்மாபெரும் தாயின் அரவணைப்பு ஆண்டு முழுவதும் தொடர அன்னையின் பரிந்துரையை நாடுவோம். இப்புத்தாண்டில் இரட்டிப்பான அருள்வரங்களைப் பெற்று நலமோடு வாழ நம்பிக்கையோடு இறைவனை வேண்டுவோம்.

இந்தப் புத்தாண்டில் அன்னையின் வழிகாட்டுதலும் பரிந்துபேசுதலும் நிரம்பக் கிடைக்கட்டும். ஆண்டவர் எல்லாத் தீமையினின்றும் நம்மைப் பாதுகாப்பார்; அனைத்து வளங்களையும் நலன்களையும் கொடுத்து நம்முடன் பயணிப்பார் என்ற நம்பிக்கையோடு இந்த 2026-ஆம் ஆண்டு முழுவதும் ஆண்டவருக்கு உகந்தவற்றைச் செய்வோம். அன்னை மரியாவின் துணையை நாடி நாமும், நமது பங்கிலுள்ள அனைத்துக் குடும்பங்களும் வாழ வரம் வேண்டி மகிழ்வோடும் உற்சாகத்தோடும் இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

நம்மைப் பாதுகாக்கும் ஆண்டவர் இந்தப் புத்தாண்டு முழுவதும்  நமக்கு ஆசி வழங்கி நம்மைக் காப்பதாகவும்தம் திருமுகத்தை நம்மேல் ஒளிரச்செய்து, அருள் பொழிந்து, நமக்கு அமைதியைக் கொடுத்து, அனைத்து நலன்களாலும்  நிரப்புவதாகவும் வாக்குறுதி தருகிறார். வாழ்வு தரும் இறைவனின் ஆசிரைப் பெற அழைக்கும் முதல் வாசகத்திற்கு நாம் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

இந்த உலகில் வாழும் அனைவருமே கடவுளின் குழந்தைகள். ‘அப்பா தந்தையேஎன்று அழைக்கும் உரிமையையும் கடவுள் நமக்குக் கொடுத்துள்ளார். தேவையான நேரத்தில் குறிப்பறிந்து கொடுக்கும் தந்தையின் பேரன்பைச்  சுவைத்து வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிகொடுப்போம்.

மன்றாட்டுகள்.

1. ஆசியளிக்கும் ஆண்டவரே! எம் திரு அவைத் தலைவர்கள் அனைவருக்கும் நல்ல உடல் சுகத்தையும், ஆற்றலோடு பணி செய்வதற்கு மனவலிமையையும் ஞானத்தையும் தந்து காத்திடவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. வல்லவரான ஆண்டவரே! இப்புதிய ஆண்டில் உடன் வாழும் சகோதர-சகோதரிகளின் தேவையை அறிந்து உதவி செய்து ஆசியை வழங்கும் மக்களாக வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. பாதுகாக்கும் ஆண்டவரே! அன்னை மரியை எமது தாயாகக் கொண்டுள்ள நாங்கள் அனைவரும் எம் தாய் மரியைப் போன்று இறைத்திட்டத்திற்குப் பணிந்து வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. எம்முடன் வாழும் ஆண்டவரே! இப்புத்தாண்டில் நாங்கள் ஒருவர் மற்றவருக்கு ஆசி நிறைந்த மக்களாக வாழவும், எல்லாச் சூழலிலும் நீர் எங்களோடு இருக்கின்றீர் என்ற நம்பிக்கையில் வளரவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
டிசம்பர் 28, 2025, திருக்குடும்ப விழா - சீஞா 3:2-7,12-14; கொலோ 3:12-21; மத் 2:13-15,19-23

திருப்பலி முன்னுரை

இயேசுவின் அன்பும் அருளும், தூய கன்னி மரியின் எளிமையும் தாழ்ச்சியும், புனித யோசேப்பின் உழைப்பும் நேர்மையும் உங்கள் குடும்பங்களிலும் ஒளிர்ந்திட வாழ்த்தி, திருக்குடும்ப விழா திருப்பலிக்கு வாஞ்சையோடு அழைக்கிறோம்.

குடும்பம் உறவுகளின் இருப்பிடம், அன்பின் சங்கமம், நகைச்சுவை மைதானம், அறிவுப்பள்ளி, இன்பத்தோட்டம், மகிழ்ச்சியின் ஊற்று, நம்பிக்கையின் விளைநிலம், பண்புகளைக் கட்டியெழுப்பும் பல்கலைக்கழகம். குடும்பம் என்ற குட்டித் திரு அவையே திரு அவைக்கும் நாட்டிற்கும் அடித்தளமாக உள்ளதுதிருக்குடும்பத்தில் அன்னை மரியும் புனித யோசேப்பும் தங்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட இன்னல்கள், துயரங்கள், தனிமை அனைத்திலும் இறைவனின் திட்டத்தை அறிந்து அமைதியோடு வாழ்ந்தார்கள். தன்னலமற்ற அன்பையும் தன்னிகரற்ற அமைதியையும் திருக்குடும்பம் உலகில் வாழ்ந்துகாட்டியது. துன்பங்களையும் பாடுகளையும் சுமந்து இல்லறத்தின் புனிதம் காத்தது. இறுதிவரை கடவுளோடு ஒன்றித்திருந்தது. எனவேதான் திருக்குடும்பம் சிறந்த முன்மாதிரியான குடும்பம் என்று அழைக்கப்படுகிறது

இன்றைய நாளில் திருக்குடும்பத்திடம் விளங்கிய புனிதமான அர்ப்பணமும் முழுமையான தியாகமும் ஆழமான புரிதலும் நிறைவான அன்பும் நமது குடும்பங்களிலும் நிலைத்திருக்க வரம் வேண்டி இணைந்து செபிப்போம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

தந்தை, தாய் மற்றும் பிள்ளைகளின் கடமையைப் பற்றி முதல் வாசகம் தெளிவாகக் கூறுகிறது. பெற்றோரைப் பேணிக்காப்பது நமது கடமை. பெற்றோரை மதிக்காமலும் பாதுகாக்காமலும் இருந்தால், நாம் ஆசியை இழந்துவிடுவோம் என்று கூறி பண்போடு வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

தூய ஆவியின் கனிகளான இரக்கம், கனிவு, பொறுமை மற்றும் இயேசுவின் நற்பண்புகளான அன்பு, பரிவு, நல்லெண்ணம், மனத்தாழ்மை, ஆகியவற்றால் நம்மை அணிசெய்து, குடும்பத்திலும் சமூகத்திலும் புதிய மனிதர்களாக வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! நீர் உருவாக்கிய திரு அவை என்ற குடும்பத்தின்  உறுப்பினர்களாகிய நாங்கள் அனைவரும் திரு அவை எமக்குக் காட்டுகின்ற நெறிகளில் வாழவும், எங்கள் திரு அவைத் தலைவர்களோடு இணைந்து செயல்படவும் தேவையான அருள்வரங்களை எமக்குத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. அன்பின் இறைவா! எமது குடும்பங்களில் அன்பு, அமைதி, பொறுமை போன்ற பண்புளைக் கடைப்பிடித்து, குடும்பம் என்ற குட்டித் திரு அவையைப்  பேணிப்பாதுகாக்கவும், வயது முதிர்ந்த பெற்றோரை வீட்டில் வைத்துப் பராமரிக்கவும் தேவையான நல்மனதை எமக்குத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. அன்பின் இறைவா! எமது குடும்பத்தில் பலவிதமான நோய்களால் துன்பப்படும் அனைவருக்கும் நற்சுகத்தைத் தந்து காத்திடவும், புரிதல் இல்லாமல் பிரிந்திருக்கும் குடும்பங்களில் அமைதி ஏற்படவும், குடும்பங்கள் சிறக்க தேவையான ஆசிகளைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. அன்பின் இறைவா! எம் பங்கில் உள்ள குழந்தைகள் அனைவரும் பெற்றோருக்கும், வயதில் மூத்தோருக்கும் மதிப்புக் கொடுத்து வாழவும், மெய்ஞானமாகிய கிறிஸ்துவை அறிவதிலும் அன்பு செய்வதிலும் ஆர்வம் கொள்ளவும் தேவையான மனப்பக்குவத்தை எம் குழந்தைகளுக்குத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
டிசம்பர் 25, 2025, ஆண்டவருடைய பிறப்புப் பெருவிழா - எசா 9:2-4,6-7; தீத் 2:11-14; லூக் 2:1-14

திருப்பலி முன்னுரை

விண்ணகத் தேவன் மண்ணகம் இறங்கி வந்த  மாபெரும் விழா கிறிஸ்து பிறப்பு விழா! கிறிஸ்துமஸ் என்றாலே ஒருவருக்கொருவர் அன்பையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொள்ளும் விழா. பாவத்தில் வீழ்ந்துவிட்ட மானுடத்தை மீட்பதற்காக, இருளின் பிடியில் சிக்கியிருந்த உலகை ஒளியின் பாதையில் வழிநடத்துவதற்காக இறைவன் தம்முடைய ஒரே மகனை இவ்வுலகிற்குப் பரிசாகக் கொடுத்த உன்னதமான நாள். இப்பெருவிழா திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் அன்போடு வாழ்த்தி வரவேற்கின்றேன். ‘இம்மானுவேல்என்றால்கடவுள் நம்மோடுஎன்பது பொருள். இயேசு விருந்தினராக அல்லர்; மாறாக, நம்மை விட்டு எப்போதும் நீங்காத உறவாக வாழ மனிதராகப் பிறந்திருக்கிறார். அவர் வியப்புக்குரியவர். “நம் ஒவ்வொருவர் வாழ்விலும் எதிர்பாராத நேரங்களில், எதிர்பாராத நிகழ்வுகளை நிகழ்த்தி நம்மை வியப்புகளில் ஆழ்த்துபவர் நம் கடவுள்என்றார் திருத்தந்தை பிரான்சிஸ். மாட்டுத்தொழுவத்தில், கந்தைத் துணியில் விந்தையாய் பிறந்து நம் அனைவருக்கும் வாழ்வு கொடுக்கும் இயேசு பாலனுக்கு நாம் என்ன கொடுக்கப் போகின்றோம்? தம் நிலையிலிருந்து இறங்கி வந்து வாழ்வு கொடுத்த இயேசுவைப் போன்று நாமும் இறங்கி வந்து ஏழைகள், கைவிடப்பட்டடோர், தெருவோரத்தில் வாழும் நம் சகோதர-சகோதரிகள், தனிமையில் வாடுவோர், முதியோர் இல்லத்தில் வாழும் மூத்தோர் அனைவரையும் தேடிச்சென்று உதவி செய்வோம். பிறந்திருக்கும் பாலன் இயேசுவுக்கு நமது தூய்மையான வாழ்வைப் பரிசாகக் கொடுப்போம். நம்மோடு வாழ வந்திருக்கும் இயேசு பாலனோடு எப்போதும் நாம் வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்

முதல் வாசக முன்னுரை

நமக்காக ஓர் ஆண்மகவு கொடுக்கப்பட்டுள்ளது. அவர் நம் அனைவருக்கும் விடுதலையைக் கொடுப்பவராகவும் வியத்தகு ஆலோசகராகவும் வலிமை மிக்கவராகவும் அமைதியின் அரசராகவும் இருந்து நம் அனைவருக்கும் மீட்பைத் தந்து காத்திடுவார் என்ற நம்பிக்கை செய்தியைக் கூறும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

ஆண்டவரின் அருளைச் சுவைத்து, கடவுளின் திட்டத்தை அறிந்து, அவர் நமக்குக் காட்டுகின்ற நெறிகளில் நடக்கும்போது துன்பம் நம்மை நெருங்காது. தீயவை எதுவும் நம்மைத் தீண்டாது எனக் கூறி, அவர் கட்டளைகளைக் கடைப்பிடித்து, தூய்மையான மக்களாக வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிகொடுப்போம்.

மன்றாட்டுகள்

1. ‘நல்ல ஆயன் நானே  என்று மொழிந்த இறைவா! எம் திரு அவைத் தலைவர்கள் அனைவரும் உமது பிறப்பு விழா கொண்டுவந்த அன்பையும் நம்பிக்கையையும் சுவைத்து, அதை வாழ்வால் அறிவிக்கத் தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. எம்மோடு வாழ பாலனாகப் பிறந்த இறைவா! எம் பங்கில் உள்ள அனைத்துக் குடும்பங்களையும் ஆசிர்வதித்துக் காத்திடவும், நீர் கொண்டுவந்த மகிழ்வைப் பிறரோடு பகிர்ந்து வாழவும், அனைவரிலும் கடவுளைக் காணவும் தேவையான ஞானத்தை எம் அனைவருக்கும் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எமக்கு வாழ்வு கொடுக்க மனிதனாகப் பிறந்த இறைவா! எம் நாட்டில் பஞ்சம் நீங்கிடவும், நோய்கள் ஒழிந்திடவும்போர், பகை அழிந்து மக்கள் மகிழ்வோடு வாழ்ந்திடவும், எம் நாட்டில் நிலவும் பிளவுகள் அனைத்தும் நீங்கி மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்திடவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. மகிழ்ச்சியாக வந்துதித்த இறைவா! போரினால் பெற்றோரை இழந்த குழந்தைகள் அனைவரும் உம் மீது அளவுகடந்த நம்பிக்கை கொண்டு வாழவும், அவர்கள் நலனில் அக்கறை கொள்பவர்களாக நாங்கள் மாறவும் தேவையான ஞானத்தைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
திருவருகைக் காலம் நான்காம் ஞாயிறு (முதல் ஆண்டு) (21-12-2025) எசா 7:10-14; உரோ 1:1-7; மத் 1:18-24

திருப்பலி முன்னுரை

இயேசுவின் பிறப்பை அண்மையில் கொண்டாடவிருக்கின்ற நாம், இந்த நான்காம் ஞாயிறு திருப்பலியில் அன்பின் மெழுகுதிரியை ஏற்றுவதன் வழியாக இயேசுவின் அளவற்ற அன்பை நம் வாழ்வில் உணர நம்மைத் தயார்படுத்துவோம். அன்னை தெரேசா கூறுவார்: “அன்புதான் உன் பலவீனம் என்றால், இந்த உலகின் மிகச்சிறந்த பலசாலி நீதான்.” ஆம், நாம் எவ்வளவு கொடுக்கிறோம் என்பதல்ல; நாம் எவ்வளவு அன்பாகக் கொடுக்கிறோம் என்பதில்தான் நிறைவு இருக்கிறது.

மனித இனத்தின்மீது கொண்ட எல்லையில்லாத அன்பினால் கடவுள் தன்மையில் இருந்த இயேசு தம்மையே வெறுமையாக்கி, முழுவதுமாக மனிதச்சாயல் ஏற்று, மனித வடிவில் பிறக்கவிருக்கிறார். ‘இம்மானுவேல்என்றால்கடவுள் நம்மோடுஎன்பது பொருள். நம் கடவுள் ஆண்டுதோறும் கிறிஸ்து பிறப்பு விழாவிற்கு மட்டும் வந்துபோகும் விருந்தினர் அல்லர்; மாறாக, நம் அன்றாட நிகழ்வுகளில் நம்முடன் இருந்து நம்மை வழிநடத்துபவர், நம்மோடு கூட வாழவிழைபவர்.

மரியா கருவுற்றதை அறிந்திருந்தும் அவரை இகழ்ச்சிக்கு உள்ளாக்காமல், அன்னை மரியாவை ஏற்று அன்பு செய்து, ஆண்டவரின் தூதர் தனக்குப் பணித்தவாறே இறைத்திட்டத்தை நிறைவேற்றியவர் புனித யோசேப்பு. விண்ணகத்திலிருந்து மண்ணகம் இறங்கி வந்து அன்பை விதைத்தவர் இயேசு. இயேசுவின் அன்பால் மீட்கப்பட்ட நாம், ‘நான்என்பதிலிருந்து இறங்கிவந்து எல்லாரையும் அன்பு செய்வோம். அன்பு என்ற ஒளியை ஏற்றியிருக்கும் இந்த வாரத்தில், அன்பின் தூதுவர்களாக வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்

முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா, கடவுள்இம்மானுவேலாக - நம்மோடுஎன்ற வார்த்தையை ஆணித்தரமாக எடுத்துக்காட்டுகிறார். அவர் இறைமகனாய் பிறப்பெடுத்தும், தம் உயர்வான நிலையினை விடுத்து மண்ணகம் இறங்கி வந்து மனிதரின் மீட்பிற்காகப் போராடுவார் என்பதை அவர் பிறக்கும் முன்பே இறைவாக்காக முன் மொழிந்த இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

கடவுள் அன்புமயமானவர்; ஆதலால்தான் உங்களுக்கு அருளும் அன்பும் அமைதியும் தருவதாக கடவுள் தம் இறைவாக்கினர் வழியாக வாக்களித்தார். கடவுளின் சாயலைக் கொண்ட நாம் அனைவரும் அன்புடன் வாழ அழைக்கப்படுகிறோம். பிற இனத்தவராகிய உரோமை இனமக்கள் கடவுள் மீது நம்பிக்கை கொண்டு திருத்தூதுப்பணி செய்வதற்குரிய அருளைப் பெற்றுக்கொண்டது போல, நாமும் திருத்தூது பணியாற்றுவதில் கிறிஸ்துவிற்கு உரிய மக்களாய் வாழ அருள் வேண்டி இரண்டாம் வாசகத்தில் இணைவோம்

மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா, திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், அருள்பணியாளர்கள். துறவறத்தார், இல்லறத்தார் அனைவரும் இறையாட்சியின் மதிப்பீடுகளை வாழ்வாக்கவும்இயேசுவின் ஒளியைக் கண்டுணரவும் அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. நன்மையே உருவான இறைவா! தேர்தலை எதிர்நோக்கியுள்ள எம் நாட்டு மக்களை ஆசிர்வதியும். மக்களின் நலன் கருதி பணிசெய்யும் நல்ல தலைவர்களைத் தேர்ந்தெடுக்க, தேவையான ஞானத்தை எங்களுக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. ஒளியின் சுடரே இறைவா! அன்பின் மெழுகுதிரி எரியும் இந்நாளில் எம் குடும்பங்களில் அமைதி, ஒற்றுமை, மன்னிப்பு, விட்டுக்கொடுத்தல், ஏற்றுக்கொள்ளுதல் போன்ற பண்புகள் வளர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. அன்பின் இறைவா, நாங்கள் கொண்டாடவிருக்கும் கிறிஸ்து பிறப்பு, உண்மையான மகிழ்ச்சியையும் அமைதியையும் தரக்கூடிய விழாவாக இந்த விழா அமையவும், அன்பு, இரக்கம், பரிவு போன்ற நற்பண்புகளால் எம்மவரின் இதயம் நிறைக்கப்படவும் அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறு (முதல் ஆண்டு) (14-12-2025) எசா 35:1-6,10 யாக் 5:7-10; மத் 11:2-11

திருப்பலி முன்னுரை

திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறான இன்று மகிழ்ச்சியின் திரியை ஏற்றி, நிலையான மகிழ்ச்சியைத் தரக்கூடிய ஆண்டவரில் நிலைத்து வாழ, அன்னையாம் திரு அவையோடு இணைந்து இத்திருவழிபாட்டிற்கு உங்களை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம். இயேசுவின் வருகை பார்வையற்றோருக்குப் பார்வையையும், கால் ஊனமுற்றோருக்கு நடக்கும் ஆற்றலையும், தொழுநோயாளருக்குச் சுகத்தையும், காது கேளாதோருக்குக் கேட்கும் திறனையும், இறந்தோருக்கு உயிரையும், இல்லாதோருக்கு வாழ்வையும் கொடுத்தது. இயேசுவின் பிறப்பிற்காக நம்மைத் தயாரிக்கும் நாம் பொருளைத் தேடுவதில் மகிழ்ச்சிகொள்ளாமல், இயேசுவின் அருளைத் தேடுவதில் மகிழ்ச்சி காண்போம். யோவானையும், யோவானின் சீடர்களைப் போன்றும் மெசியாவைக் கண்டுகொள்வோம்.

கிறித்தவ வாழ்வின் மகிழ்ச்சி என்பது கடவுளை அறிவதிலும், அவரை அன்பு செய்வதிலும்தான் உள்ளது. நமது மகிழ்ச்சியிலும் துக்கத்திலும் நோயிலும் தனிமையிலும் ஆண்டவர் நமக்குத் துணைவராகவும் நண்பராகவும் நம்முடன் இருக்கின்றார். இமைப்பொழுதும் நீங்காது காத்துவரும் இறைவனின் பேரன்பில் மகிழ்ச்சி காண்போம். நாம் சந்திக்கும் அனைவருக்கும் வாழ்க்கையாலும் வார்த்தையாலும் உடனிருப்பாலும் மகிழ்ச்சியைக் கொடுப்போம். நாம் வாழும் சமுதாயத்தில் பல்வேறு பிரச்சினைகளால் உள்ளம் சோர்ந்திருக்கும் அனைவருக்கும் கிறிஸ்துவிடமிருந்து பெற்றுக்கொண்ட மகிழ்ச்சியைப் பகிர்ந்துவாழ்வோம்வாழ்க்கையில் எல்லா நிலைகளையும் கடந்து செல்ல கடவுள் துணைநிற்கிறார் என்ற மகிழ்ச்சியில் இணைவோம் இத்திருப்பலியில்

முதல் வாசகம் முன்னுரை

ஆண்டவரின் வருகை இவ்வையகத்திற்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும். ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்ட அனைவரும் அற்புதங்களையும் அதிசயங்களையும் காண்பார்கள்; அவர் கொண்டு வந்த மீட்பை அனுபவிப்பார்கள். ஆண்டவரின் பிள்ளைகளாகிய நாமும் அவர் கொண்டு வந்த அன்பையும் மகிழ்ச்சியையும் சுவைத்து வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

நம் வாழ்க்கையில் அமைதி நிலைக்கவும், உறவுகள் வளரவும், மனது இலகுவாகவும், ஆரோக்கியத்துடன் வாழவும் அவசியமாக இருப்பது பொறுமை. ஆயிரம் துன்பங்கள் வந்தாலும் ஆண்டவர்மீது கொண்டுள்ள நம்பிக்கையில் தளர்ச்சி இல்லாது, வாழ்க்கையில் வருகின்ற இன்னல்கள், இக்கட்டுகள் அனைத்தையும் பொறுமையாக ஏற்றுக்கொண்டு, அனைத்திலும் இறைவனின் திருவுளம் அறிந்து வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அன்பின் ஆன்டவரே! எம் திரு அவையை வழிநடத்திவரும் திரு அவைத் தலைவர்கள் அனைவரும் உமது மதிப்பீடுகளைத் தொய்வின்றி  விதைக்கவும், இயேசு என்ற ஒப்பற்ற செல்வத்தை தங்களின் வாழ்க்கையால் எடுத்துரைக்கவும், தேவையான ஞானத்தையும் ஆற்றலையும் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. எம்மோடு வாழும் ஆண்டவரே! மகிழ்ச்சி என்ற திரியை ஏற்றி இருக்கும் நாங்கள் அனைவரும், இயேசு என்ற பேரொளியால் ஒளிர்விக்கப்பட்டு மகிழ்வோடும் மனநிறைவோடும் வாழவும், ஒருவர் மற்றவருக்கு மகிழ்ச்சியின் தூதுவராகச் செயல்படவும் தேவையான நல்மனத்தை எங்களுக்குத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. அன்பின் இறைவா! எம் நாட்டுத் தலைவர்கள் அனைவரும் சுயநலம் அகற்றி, மக்கள் நலனில் அக்கறை கொண்டு வாழவும், எம் நாட்டில் உள்ள பிரிவினைச் சக்திகள் அனைத்தும் அழிந்து மக்கள் மகிழ்வோடு வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. ஞானத்தின் ஊற்றே எம் இறைவா! எம் பங்கிலுள்ள குழந்தைகள் அனைவரும் ஞானத்திலும் இறைநம்பிக்கையிலும் நாளும் வளரவும், நாங்கள் அனைவரும் அவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
திருவருகைக் காலம் இரண்டாம் ஞாயிறு (முதல் ஆண்டு) (டிசம்பர் 07) எசா 11:1-10; உரோ 15:4-9; மத் 3:1-12

திருப்பலி முன்னுரை

அன்பின் காலமான இந்தத் திருவருகைக் காலத்தின் இரண்டாம் ஞாயிறு, மனமாற்றம் பெற்று நல்மக்களாய் வாழ திருமுழுக்கு யோவான் வழியாக நமக்கு அழைப்புவிடுக்கிறது. குறைகள் இல்லாத மனிதன் இல்லை; அதைக் குறைக்கத் தெரியாதவன் மனிதனே இல்லை. மனமாற்றம் நம் வாழ்க்கை புனிதத்தை நோக்கிச்செல்லப் பேருதவியாக இருக்கிறது. நம் உள்ளத்தில் புதைந்து கிடக்கும் பொறாமை, கோபம், தவறான எண்ணங்கள், ‘தான்என்ற ஆணவம், சுயநலம், தவறு என்று தெரிந்தும் துணிந்து செய்தல், பிறர்நலனில் அக்கறையின்மை போன்ற மனிதத்தைச் சிதைக்கும் செயல்களிலிருந்து விடுபட்டுநமது வார்த்தைகளில், வாழ்க்கையில், சிந்தனைகளில், பார்வையில் மாற்றம் பெற்று, தூய வாழ்வு வாழ இந்தத் திருவருகைக் காலத்தில் முயற்சி எடுப்போம்.

திருமுழுக்கு யோவான் நீதியின், உண்மையின், சமத்துவத்தின், தூய வாழ்வின் குரலாகச் செயல்பட்டு, கிறித்தவர்களாகிய நமது வாழ்வு எவ்வாறு அமைந்திடல் வேண்டும் என்பதைத் தெளிவாகக் கூறுகின்றார். இச்சமூகத்திலும் வாழும் தளங்களிலும் இறைவனின் குரலாக நாம் மாறுவோம்; உண்மையான மனமாற்றத்தை நமது செயல்களால் அறிவிப்போம். உள்ளம் என்னும் ஆலயத்தை ஒப்புரவு அருளடையாளத்தால் தூய்மை செய்வோம். அல்லவைகள் அகற்றி, நல்லவற்றில் நிலைத்து, மனமாற்றம் பெற்று வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

ஆண்டவரின் வருகை மகிழ்ச்சியையும் அமைதியையும் விதைக்கும். பிளவுகள், பிணக்குகள் அனைத்தையும் வேரறுத்துச் சமத்துவத்தை ஏற்படுத்தும், ஏற்றத்தாழ்வுகள் அனைத்தும் களையப்பெற்று, அனைத்து மக்களும் வாழ்வு பெறுவர். இல்லாதோர்-இயலாதோர்-தாழ்நிலையில் உள்ளோர் அனைவரும் ஆண்டவரின் மீட்பை அனுபவிப்பர் என்றுகூறி ஆண்டவரின் வருகையின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

கடவுளின் பிள்ளைகளாகிய நாம் அனுதினமும் அளவற்ற நன்மைகளை ஆண்டவரிடமிருந்து பெற்றுக்கொள்கிறோம். நாம் வேண்டுகின்ற, விரும்புகின்ற அனைத்தையும் தேவையான நேரத்தில் நிறைவேற்றி, எக்குறையுமின்றிக் காத்துவருகின்றார். எத்தனைமுறை தவறுகள் செய்தாலும் மன்னித்துத் தாயன்போடு ஏற்றுக்கொள்கின்றார். தந்தைக்குரிய அன்போடும் வாஞ்சையோடும் வழிநடத்தி வரும் இறைவனின் பேரிரக்கத்திற்கு நன்றிகூற அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அன்பின் ஆண்டவரே! எம் திரு அவையை வழிநடத்திவரும் திரு அவைத் தலைவர்கள் அனைவரும் திருமுழுக்கு யோவானைப் போன்று கிறிஸ்துவின் வருகையை வீரியத்துடன் விதைக்கவும், சான்றுபகரும் வாழ்க்கை வாழவும் தேவையான வரம் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. இரக்கத்தின் ஆண்டவரே! உமது வருகைக்காகத் தயாரித்துக் கொண்டிருக்கும் நாங்கள் அனைவரும்  எமது உள்ளத்திலுள்ள கோபம், பகை, போட்டி, தூய்மையற்ற வார்த்தை, வேறுபாடுகள் அனைத்தையும் களைந்து, தூய வாழ்வு வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. நீதியின் ஆண்டவரே! எம் நாட்டுத் தலைவர்கள் அனைவரும் தன்னலம் துறந்து, மக்கள் நலனில் அக்கறை கொண்டு வாழவும், ஏழை மக்கள் வாழ்வு பெறுவதற்கு ஏதுவான திட்டங்களைக் கொண்டு வரவும், மக்கள் அனைவரையும் சமத்துவத்தோடு வழிநடத்தவும் தேவையான ஞானத்தைத் தந்து காத்திடவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. ஞானத்தின் ஊற்றான ஆண்டவரே! எம் பங்கில் உள்ள குழந்தைகள் அனைவரும் ஆண்டவரைப் பற்றிய அறிவில் நாளும் வளரவும், ஆன்மிகத்தில் வளரவும், திரு அவை கற்பிக்கும் நெறிமுறைகளில் வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.